நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்
கதை சொல்லும் குடிகள்
எம்மில் கீழோர் மேலூர் இல்லை
ஏழைகள் யாரும் இல்லை
செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வினில் தாழ்வொன்றுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா”
“எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;”

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. என்னுடைய சிறிய வயதில் எனது தாத்தா-பாட்டி சாதி, மதம், மொழி என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பாடிய கனியன் பூங்குன்றனாரின் வரிகளைத்தான் எனக்குள் விதைத்தார்கள். இன்றும் இந்தப் பாடல் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. நமது மீது அன்பு செலுத்த வெறும் குடும்ப நபர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது வாழ்வில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தூய்மையான அன்பைக் கொடுத்தவர்கள் நான் சொன்ன இந்தப் பட்டியலில் இல்லாதவர்கள்தான். எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியம் என்றால் எனது வாழ்வில் அது நித்தமும் சாத்தியமாகிறது என்றே கூறலாம். அப்படி எனது தேசாந்திரி பயணத்தில் எத்தனையோ பேர் அவர்களில் ஒருவராக என்னை நினைத்து என்னிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்த்தார்கள், பதிலுக்கு அவர்களும் அப்படியே இருந்து வருகிறார்கள். இந்த சமூகத்தில் மக்கள் எல்லோரும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே யாருடனாவது போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இச்செயல்முறை காலப்போக்கில் பெரும் சீரழிவைக் கொண்டு வருவது உறுதி. எப்போதும் ஓர் அவசர நிலைப் போக்கிலேயே இருப்பது முடிவில்லா சுழற்சி வட்டத்துக்குள் நம்மைத் தள்ளிவிடும்.

எப்போதும் போல எனது ஆறுதல் மண்டலத்தை விட்டு ஒரு தேசாந்திரி பயணம்… ஆம்,”இருளர்களோடு ஒரு வாழ்க்கை”, இருளர் என்றாலே இந்த சமூகத்தில் மிகவும் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கா நாட்டில் சதுப்பு நிலங்களில் ஒருவகை கொக்கு இனங்கள் வசிக்கின்றன. இவை உடளவில் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். என்னுடைய சிறிய வயதில் நான் கலசப்பாக்கம் என்ற ஊரில் வசிக்கும்போது இருளர்கள் தெரு வீதியில் பாம்புகளைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்டு செல்வார்கள். ஒரு அழகிய மாலைப் பொழுதில் எனது நண்பர்கள் பத்மப்ரியா, ராஜவிக்னேஷ் ஆகியரோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, எனது தாத்தா-பாட்டி என்னை அழைத்து நமது வீட்டிற்கு, “இருளர் பாம்புகளோடு வந்திருக்கிறார்” என்று கூப்பிட்டார்கள். எங்கள் வீட்டு வாசற்படியில் ஒரு பெரிய பாம்பை விட்டார் அந்த இருளர். பிறகு, நாங்கள் அந்த இருளரை வராண்டாவில் அமரவைத்து உணவு உபசரித்து அனுப்பினோம். அந்த இருளர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். அப்போதிருந்தே இருளர்களது வாழ்வியல் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அப்படி பல ஆண்டுகளுக்கு முன்பாக அமுதன் பச்சைமுத்து, தன்ராஜ், பாண்டு என்ற 3 நபர்கள் என்னை இருளர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முதலில், நான் அக்கிராமம் ஏதோ பசுமையானதாக இருக்கும் என நினைத்தே சென்றேன். முட்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தோம். போகும் வழியில் தன்ராஜ் மற்றும் பாண்டு இருவரும் நான் பேசும் ஒவ்வொன்றிற்கும் கவிதை வடிவில் பதில் கூறிக்கொண்டே வந்தார்கள். எல்லோரும் பாட்டுப் பாடிக்கொண்டே சென்றோம்.

வாழ்வின் ரகசியங்களை அறிந்துகொண்டே இன்று வரையிலும் ஒரு தேசாந்திரியாக மட்டுமே சுற்றித் திரிகிறேன். முதலில், என்னைப் பார்த்தபடியே ஒரு பாட்டி அருகினில் வந்தார். அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். பிறகு, எனக்கு, “கங்கா” என்று ஒரு பெயர் வைத்தார். “கங்கா என்றால் என்ன?” என்று அந்தப் பாட்டியிடம் கேட்டேன். “கங்கா என்றால் கங்கா நதி, நீ ஒரு நதி” என்றார். பள்ளிக்கூட வாசலையே மிதித்ததில்லை, ஆனால், அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு ஞானம். பிறகு காட்டுக்குள்ளே செல்லும்போது, ஒரு இருளர் செம்மரி ஆடுகளை மேய்த்துக் கொண்டபடியே சென்றார். உள்ளே செல்லச் செல்ல புதிதாக ஓர் உலகத்திற்கு நுழைவது போல் தோன்றியது. வெறும் ஓலைக்கீற்று கொட்டாய்தான் முழு வீடுமே. அதனுள் ஒரு அக்கா அழகான சின்ன சின்ன ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றார். எனது கையை அவர் கைகளோடு இணைத்து கொண்டேன். அவரது மௌனமும், கண்ணீர்த்துளிகளும் மட்டுமே எனக்கு பதில் அளித்தன. அங்கு நடக்கவே முடியாதபடி சேரும் சகதியுமாக இருந்தது. மிக அருகிலேயே ஒரு ஓடையும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலும் தத்தித் தத்தி தாவிக் கொண்டே பாட்டுப் பாடிச் சென்றேன். பின்பு, ஒரு பெரிய மீசை வைத்த தாத்தா, (ஊரிலே பெரியவர்) எங்கள் நான்கு பேரையும் வரவேற்றார். அங்கிருக்கும் வயல்வெளிகளை எல்லாம் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னை முழுவதுமாக யாரோ பின்னிருந்து அணைத்துக் கொண்டது போல் உணர்ந்தேன். யாரென்று பார்த்தால் இரண்டு சின்ன பெண் பூக்கள்(குழந்தைகள்). ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் என்னிடம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, “எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?” என்று. பிறகு, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதை. “என்னைச்சுற்றி பூக்கள் மலராவிட்டால் என்ன? பூக்கள் பூக்கும் இடத்திற்கு நான் சென்றிடுவேன்”. ஏனென்றால்,அந்த இரண்டு குழந்தைகளும் எனது விரல்களைப் பிடித்த ஆரம்பத்திலிருந்து, நான் அங்கே விடைபெற்றுப்போகும் வரையிலும் என்னை விடவேயில்லை. முகத்தில் அவ்வளவு நாணம்(வெட்கம்). “இருளர்கள் என்று ஏன் அழைக்கிறார்கள்?” என்பது என்னுள் விடையில்லா வினாவாகவே இருந்து வந்தது. இருளர்கள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர் சமூகமாகும். இவர்கள் பாரம்பரியமாக காடு மற்றும் இயற்கை வளங்களின் மீது நம்பிக்கை வைத்து வேட்டையாடுதல், மூலிகை சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நான் நேரடியாக அந்தக் காட்டினுள் செல்லச் செல்ல நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. அடர்ந்த இருட்டான காடுகளில் வாழ்ந்து வருவதால் இவர்களை, ‘இருளர்கள்’ என்று அழைக்கின்றனர். நான் சந்தித்த அந்த இரண்டு பெண் சிறுமிகளும் என்னிடம், எங்கள் ஊரில் இருப்பவர்களை, ‘காவல்காரன்’, ‘பாம்புக்காரன்’, ‘வேடவர்’, ‘வேடுவர்’, ‘வில்லி’, ‘காட்டுக்காரன்’ என்று தான் அழைப்பார்கள் என கூறினர். பிறகு, அக்கா ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க போல,வா அக்கா போலாம்” என்று கைப்பிடித்தபடியே அவர்கள் வசிக்கும் ஓர் சின்னஞ்சிறிய ஓலைக் குடிசைக்கு என்னை அழைத்துச் சென்று இளநீர் கொடுத்தனர். “எங்களுக்கு இதுதான் அக்கா சொர்க்கம்” என்று கூறினர். வரிவடிவமே இல்லாத அவர்களின் மொழி பேரழகு. “ஏன், இவர்களின் பேச்சு வித்தியாசமாக உள்ளது?” என்று கேட்டேன். “ஏரவல்லம், எருக்கா, இரவா, இருளிக்கா, கோரவா” என்ற பெயர்கள் இவர்கள் பேசும் மொழி எனக் கூறினர். இந்த மனிதர்கள் எல்லோரும் எனக்கு மிக தனித்துவமாகவே தெரிந்தார்கள். இச்சமூகத்தில் இருப்பவர்களுக்கு இவர்களின் பண்பாட்டையே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். காட்டில் வாழ்கிறார்கள் என்பதற்காகவே இவர்களுக்கு நாகரிகம் தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தி எவ்வளவு பொய்யாக இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்துகொண்டேன். பிறகு, நானும் அவர்களோடு ஒன்றாகிவிட்டேன். தொடர்ந்து “கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழி” போன்ற விஷயங்கள் எல்லாம் நடந்தேறின. வெளியுலக மனிதர்களைக் காட்டிலும், இவர்களிடம் உள்ள பாலின சமத்துவம் வியக்க வைத்தது. அங்கே சில குழந்தைகள் கொம்பாட்டம், குச்சியாட்டம் போன்ற நடனங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நானும் ஆடி மகிழ்ந்தேன்.

பிறகு, மீண்டும் ஒருநாள் இருளர்களைப் பார்க்க வேறு கிராமத்திற்குச் சென்றேன். சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், பழங்குடியினரைச் சேர்ந்த இருளர் மக்களும் அதிகமாக வசித்து வருவதை நேரடியாகக் காண முடிந்தது. தோட்டத்தொழில் செய்யும் இருளர்கள் அங்கே பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் படாத தலை முடி, சுத்தத்தை மறந்த துணிகள் என்று மிகவும் வறிய கோலத்தில் இருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் மிகவும் மன மகிழ்வோடு மட்டுமே இருந்தார்கள் .இங்கே வாழும் இருளர் சமூகத்தினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவ வசதிகளின் குறைபாடு மற்றும் போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாததால்,நோய் பரவல் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. பணம், அதிகாரம், கவன ஈர்ப்பு, வெற்றி போன்ற நவீன வாழ்க்கை நம்முடைய உண்மையான இயல்பிலிருந்து நம்மை மேலும் மேலும் அநியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் நாம் அர்த்தமற்ற வெறுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் சென்ற நிறைய இருளர் கிராமங்களில் இன்னும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் ஆதரவின் பற்றாக்குறையால் சமூக முன்னேற்றம் மந்தமாக உள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. இந்த சிக்கல்களைச் சமாளிக்க, அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடரும்…
The post நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .