Normal view

Received before yesterday

நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்

கதை சொல்லும் குடிகள்

எம்மில் கீழோர் மேலூர் இல்லை
ஏழைகள் யாரும் இல்லை
செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வினில் தாழ்வொன்றுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா”

“எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;”

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. என்னுடைய சிறிய வயதில் எனது தாத்தா-பாட்டி சாதி, மதம், மொழி என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பாடிய கனியன் பூங்குன்றனாரின் வரிகளைத்தான் எனக்குள் விதைத்தார்கள். இன்றும் இந்தப் பாடல் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. நமது மீது அன்பு செலுத்த வெறும் குடும்ப நபர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது வாழ்வில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தூய்மையான அன்பைக் கொடுத்தவர்கள் நான் சொன்ன இந்தப் பட்டியலில் இல்லாதவர்கள்தான். எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியம் என்றால் எனது வாழ்வில் அது நித்தமும் சாத்தியமாகிறது என்றே கூறலாம். அப்படி எனது தேசாந்திரி பயணத்தில் எத்தனையோ பேர் அவர்களில் ஒருவராக என்னை நினைத்து என்னிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்த்தார்கள், பதிலுக்கு அவர்களும் அப்படியே இருந்து வருகிறார்கள். இந்த சமூகத்தில் மக்கள் எல்லோரும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே யாருடனாவது போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இச்செயல்முறை காலப்போக்கில் பெரும் சீரழிவைக் கொண்டு வருவது உறுதி. எப்போதும் ஓர் அவசர நிலைப் போக்கிலேயே இருப்பது முடிவில்லா சுழற்சி வட்டத்துக்குள் நம்மைத் தள்ளிவிடும்.

எப்போதும் போல எனது ஆறுதல் மண்டலத்தை விட்டு ஒரு தேசாந்திரி பயணம்… ஆம்,”இருளர்களோடு ஒரு வாழ்க்கை”, இருளர் என்றாலே இந்த சமூகத்தில் மிகவும் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கா நாட்டில் சதுப்பு நிலங்களில் ஒருவகை கொக்கு இனங்கள் வசிக்கின்றன. இவை உடளவில் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். என்னுடைய சிறிய வயதில் நான் கலசப்பாக்கம் என்ற ஊரில் வசிக்கும்போது இருளர்கள் தெரு வீதியில் பாம்புகளைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்டு செல்வார்கள். ஒரு அழகிய மாலைப் பொழுதில் எனது நண்பர்கள் பத்மப்ரியா, ராஜவிக்னேஷ் ஆகியரோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, எனது தாத்தா-பாட்டி என்னை அழைத்து நமது வீட்டிற்கு, “இருளர் பாம்புகளோடு வந்திருக்கிறார்” என்று கூப்பிட்டார்கள். எங்கள் வீட்டு வாசற்படியில் ஒரு பெரிய பாம்பை விட்டார் அந்த இருளர். பிறகு, நாங்கள் அந்த இருளரை வராண்டாவில் அமரவைத்து உணவு உபசரித்து அனுப்பினோம். அந்த இருளர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். அப்போதிருந்தே இருளர்களது வாழ்வியல் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அப்படி பல ஆண்டுகளுக்கு முன்பாக அமுதன் பச்சைமுத்து, தன்ராஜ், பாண்டு என்ற 3 நபர்கள் என்னை இருளர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முதலில், நான் அக்கிராமம் ஏதோ பசுமையானதாக இருக்கும் என நினைத்தே சென்றேன். முட்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தோம். போகும் வழியில் தன்ராஜ் மற்றும் பாண்டு இருவரும் நான் பேசும் ஒவ்வொன்றிற்கும் கவிதை வடிவில் பதில் கூறிக்கொண்டே வந்தார்கள். எல்லோரும் பாட்டுப் பாடிக்கொண்டே சென்றோம்.

வாழ்வின் ரகசியங்களை அறிந்துகொண்டே இன்று வரையிலும் ஒரு தேசாந்திரியாக மட்டுமே சுற்றித் திரிகிறேன். முதலில், என்னைப் பார்த்தபடியே ஒரு பாட்டி அருகினில் வந்தார். அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். பிறகு, எனக்கு, “கங்கா” என்று ஒரு பெயர் வைத்தார். “கங்கா என்றால் என்ன?” என்று அந்தப் பாட்டியிடம் கேட்டேன். “கங்கா என்றால் கங்கா நதி, நீ ஒரு நதி” என்றார். பள்ளிக்கூட வாசலையே மிதித்ததில்லை, ஆனால், அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு ஞானம். பிறகு காட்டுக்குள்ளே செல்லும்போது, ஒரு இருளர் செம்மரி ஆடுகளை மேய்த்துக் கொண்டபடியே சென்றார். உள்ளே செல்லச் செல்ல புதிதாக ஓர் உலகத்திற்கு நுழைவது போல் தோன்றியது. வெறும் ஓலைக்கீற்று கொட்டாய்தான் முழு வீடுமே. அதனுள் ஒரு அக்கா அழகான சின்ன சின்ன ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றார். எனது கையை அவர் கைகளோடு இணைத்து கொண்டேன். அவரது மௌனமும், கண்ணீர்த்துளிகளும் மட்டுமே எனக்கு பதில் அளித்தன. அங்கு நடக்கவே முடியாதபடி சேரும் சகதியுமாக இருந்தது. மிக அருகிலேயே ஒரு ஓடையும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலும் தத்தித் தத்தி தாவிக் கொண்டே பாட்டுப் பாடிச் சென்றேன். பின்பு, ஒரு பெரிய மீசை வைத்த தாத்தா, (ஊரிலே பெரியவர்) எங்கள் நான்கு பேரையும் வரவேற்றார். அங்கிருக்கும் வயல்வெளிகளை எல்லாம் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னை முழுவதுமாக யாரோ  பின்னிருந்து அணைத்துக் கொண்டது போல் உணர்ந்தேன். யாரென்று பார்த்தால் இரண்டு சின்ன பெண் பூக்கள்(குழந்தைகள்). ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் என்னிடம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, “எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?” என்று. பிறகு, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதை. “என்னைச்சுற்றி பூக்கள் மலராவிட்டால் என்ன? பூக்கள் பூக்கும் இடத்திற்கு நான் சென்றிடுவேன்”. ஏனென்றால்,அந்த இரண்டு குழந்தைகளும் எனது விரல்களைப் பிடித்த ஆரம்பத்திலிருந்து, நான் அங்கே விடைபெற்றுப்போகும் வரையிலும் என்னை விடவேயில்லை. முகத்தில் அவ்வளவு நாணம்(வெட்கம்). “இருளர்கள் என்று ஏன் அழைக்கிறார்கள்?” என்பது என்னுள் விடையில்லா வினாவாகவே இருந்து வந்தது. இருளர்கள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர் சமூகமாகும். இவர்கள் பாரம்பரியமாக காடு மற்றும் இயற்கை வளங்களின் மீது நம்பிக்கை வைத்து வேட்டையாடுதல், மூலிகை சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நான் நேரடியாக அந்தக் காட்டினுள் செல்லச் செல்ல நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. அடர்ந்த இருட்டான காடுகளில் வாழ்ந்து வருவதால் இவர்களை, ‘இருளர்கள்’ என்று அழைக்கின்றனர். நான் சந்தித்த அந்த இரண்டு பெண் சிறுமிகளும் என்னிடம், எங்கள் ஊரில் இருப்பவர்களை, ‘காவல்காரன்’, ‘பாம்புக்காரன்’, ‘வேடவர்’, ‘வேடுவர்’, ‘வில்லி’, ‘காட்டுக்காரன்’ என்று தான் அழைப்பார்கள் என கூறினர். பிறகு, அக்கா ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க போல,வா அக்கா போலாம்” என்று கைப்பிடித்தபடியே அவர்கள் வசிக்கும் ஓர் சின்னஞ்சிறிய ஓலைக் குடிசைக்கு என்னை அழைத்துச் சென்று இளநீர் கொடுத்தனர். “எங்களுக்கு இதுதான் அக்கா சொர்க்கம்” என்று கூறினர். வரிவடிவமே இல்லாத அவர்களின் மொழி பேரழகு. “ஏன், இவர்களின் பேச்சு வித்தியாசமாக உள்ளது?” என்று கேட்டேன். “ஏரவல்லம், எருக்கா, இரவா, இருளிக்கா, கோரவா” என்ற பெயர்கள் இவர்கள் பேசும் மொழி எனக் கூறினர். இந்த மனிதர்கள் எல்லோரும் எனக்கு மிக தனித்துவமாகவே தெரிந்தார்கள். இச்சமூகத்தில் இருப்பவர்களுக்கு இவர்களின் பண்பாட்டையே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். காட்டில் வாழ்கிறார்கள் என்பதற்காகவே இவர்களுக்கு நாகரிகம் தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தி எவ்வளவு பொய்யாக இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்துகொண்டேன். பிறகு, நானும் அவர்களோடு ஒன்றாகிவிட்டேன். தொடர்ந்து “கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழி” போன்ற விஷயங்கள் எல்லாம் நடந்தேறின. வெளியுலக மனிதர்களைக் காட்டிலும், இவர்களிடம் உள்ள பாலின சமத்துவம் வியக்க வைத்தது. அங்கே சில குழந்தைகள் கொம்பாட்டம், குச்சியாட்டம் போன்ற நடனங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நானும் ஆடி மகிழ்ந்தேன்.

பிறகு, மீண்டும் ஒருநாள் இருளர்களைப் பார்க்க வேறு கிராமத்திற்குச் சென்றேன். சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், பழங்குடியினரைச் சேர்ந்த இருளர் மக்களும் அதிகமாக வசித்து வருவதை நேரடியாகக் காண முடிந்தது. தோட்டத்தொழில் செய்யும் இருளர்கள் அங்கே பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் படாத தலை முடி, சுத்தத்தை மறந்த துணிகள் என்று மிகவும் வறிய கோலத்தில் இருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் மிகவும் மன மகிழ்வோடு மட்டுமே இருந்தார்கள் .இங்கே வாழும் இருளர் சமூகத்தினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவ வசதிகளின் குறைபாடு மற்றும் போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாததால்,நோய் பரவல் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. பணம், அதிகாரம், கவன ஈர்ப்பு, வெற்றி போன்ற நவீன வாழ்க்கை நம்முடைய உண்மையான இயல்பிலிருந்து நம்மை மேலும் மேலும் அநியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் நாம் அர்த்தமற்ற வெறுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் சென்ற நிறைய இருளர்‌ கிராமங்களில் இன்னும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் ஆதரவின் பற்றாக்குறையால் சமூக முன்னேற்றம் மந்தமாக உள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. இந்த சிக்கல்களைச் சமாளிக்க, அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடரும்…

[email protected]

The post நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

நான் – ஒரு போஹேமியன் பயணி;1 – காயத்ரி சுவாமிநாதன்

ஹரியானாவில் கிடைத்த உறவுகள்    

பயணங்களில் பல வகைகள் உண்டு. பல வருடங்களாக தேசாந்திரியாக இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டு வருகிறேன். என்னுடைய மிகப்பெரிய ஆசான் என்னுடைய அனுபவம் மட்டுமே. அப்படி என்னுடைய பயண அனுபவங்களை, சில நிகழ்வுகளைப் பகிர்கிறேன். அதற்கு முன்பாக, ‘பயணம்’ பற்றி சில தகவல்களைக் கூற விரும்புகிறேன். என்னைப் போல திட்டமிடாமல் தேசாந்திரியாகச் சுற்றி, அல்லது ஒரு நோக்கத்துக்காக நெடுந்தூரம் போவதுதான் பயணம். என்னைப் போல பயணம் செய்பவர்கள் பயணப்படுவதை எப்போதும் உலகத்திற்கு தெரிவிக்கமாட்டார்கள். ’லாங் வீக்என்ட்’ ஐ அனுபவிப்பதற்காக இணையதளத்தில் முன்கூட்டியே பெரும் வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டுச் செல்வதற்குப் பெயர்,  ‘சுற்றுலா’ (Tour/Trip).

சுற்றுலா என்பது உறவுகளும் உணவுகளும் சம்பந்தப்பட்டது. தேசாந்திரி பயணம் (Journey/Voyage) என்பது உணர்வுகள் சம்பந்தப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு என்னைப் போல எப்பொழுதும் ஒரு புதிய இடத்திற்குப் போய் அங்கே சில மாதங்கள் தங்கியிருந்து, அந்நிலப்பரப்பு, மக்கள், மொழி, உணவு, கலாச்சாரம் அத்தனையையும்  ஓரளவு கற்றுக் கொள்வதுதான் பயணம். அப்படி என்னுடைய பயணம்  எப்போதுமே என்னை செழுமையாக்குகின்றது, முழுமையாக்குகின்றது, செறிவான மனிதனாக்குகிறது மற்றும் பூமியைக் கடந்து பிரபஞ்சத்தையே கண்டடைய வைக்கிறது. எனது வாழ்வின் மிக முக்கியமான பயணமான, ’ஹிரியானா பயணம்’ பற்றி இக்கட்டுரையின் மூலம் பகிர்கிறேன்.

ஹரியானாவில், ‘Faridabad’ ல் சாலை ஓரமாக நண்பகல் 12மணி அளவில் பசியின் உச்சத்தில் சோர்வோடு நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சிறிய பையன் அவன் மொழியில் இளநீரை விற்றுக் கொண்டிருந்தான். பிறகு சாப்பிடலாம், முதலில் ஒரு இளநீர் குடிக்கலாம் என அவனை நோக்கிச் சென்றேன். அங்கே ஒரு சிலர் ஒரு இளநீரோடு வாங்கிக் கிளம்பிவிட்டனர்.  நான் அவன் வைத்திருந்த அனைத்து இளநீரையும் சீவி அதன் தண்ணீரை நான் வைத்திருந்த எனது பாட்டிலில் அடைத்துக் கொண்டேன். மேலும் அந்தத் தேங்காய்களை ஒரு டப்பாவில் வைத்துக் கொண்டேன். நான் போகும் வழியில் யாராவது சாலையோரம் இருப்பவர்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களுக்குக்  கொடுக்கலாம் என்று நினைத்தேன். அப்படியே நடந்தது. நான் ஏன் அனைத்து இளநீரையும் வாங்குகிறேன் என அந்த சின்னப் பையனும் மிகவும் அதிர்ச்சியாக என்னையே கூர்ந்து பார்த்தான். பிறகு அவனிடம் ஒன்று  சொன்னேன், “ஒன்றும் இல்லை, நீ வைத்திருக்கும் அனைத்தையும் எனக்குக் கொடு, ஏன் படிக்காமல் இருக்கிறாய்? போய் படி, என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்”. பிறகு அடுத்த சில மணித்துளிகளில் அக்கடையில் இளநீர் குடிக்க ஒரு வெள்ளைக்காரர் வந்தார். Home Care ஒன்று வைத்துள்ளதாகக் கூறினார். அப்பா-அம்மா இல்லாத குழந்தைகளுக்கு படிப்பு, தங்கும் வசதி எல்லாம் செய்து கொடுப்பதாகவும் கூறினார். மறு நொடியிலேயே இந்தப் பையனைப் பற்றி எடுத்துக் கூறினேன். உடனே சம்மதித்தார். அந்த ஒரு நொடியிலேயே அவன் வாழ்க்கை மாறியது. இறுதியில் அவன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டு அழுது முத்தமிட்டுச் சொன்னான், “ஒரு இளநீரை வாங்குவதே பெரிது, நீங்கள் நான் வைத்திருந்த அனைத்தையும் வாங்கி எனது பசியைப் போக்கிவிட்டீர்கள் மற்றும் எனக்கு வாழ்வு கொடுத்துள்ளீர்கள். I love you my Queen”. அவனைப் பார்த்த நிமிடத்தலே ஏதோ எனக்குள் தோன்றியது, அவனுக்கு ஏதாவது செய்திட வேண்டும் என்று. அப்படி ஒரு பாவப்பட்ட தோற்றம். அப்பா-அம்மா யாரும் இல்லை அவனுக்கு. வேறு யாரிடமோ இளநீர் வாங்கிக்கொண்டு இந்த இளநீரை விற்றுக் கிடைக்கிற காசை வைத்து வாழ்வதுதான் அவனது அன்றாட வாழ்க்கை. சில நேரம் இளநீர் விற்காமலும் போகும் எனச் சொன்னான் என்னிடம். பிறகு, ‘டாடா’ சொல்லிக் கிளம்பினேன்.

அடுத்ததாக நான் போகும் வழியில் எனது கண் முன்னே மிகப்பெரிய துணிக்கடை ஒன்று இருந்தது. அதற்குள் நுழைந்தேன். பிரமாண்டமான துணிக்கடை. ஆடம்பரமாக ஆடைகளை அணிந்துகொண்டு சாமானியர்கள் அங்கும் இங்கும் நடந்தேறிய காட்சிகள் ஆச்சர்யமாக இருந்தன. ஆனால் அங்கே நான் எனக்கு துணி வாங்குவதற்காகச் செல்லவில்லை.

கடையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே போகும்போது, ஓரே ஒரு இடத்தில் மட்டும் இருளாக இருந்தது. யாரிடமும் கேட்காமலே அங்கே சென்றேன். நான் எப்போதும் இருளில் வாழ்பவள். அதனால் இருள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு சின்ன அறை. அந்த அறை முழுவதும் சி்ன்னச் சின்ன பெண்கள். தங்கள் அன்றாட பிழைப்பிற்காக துணிகளை நெய்து வேலை செய்கிறவர்கள். அதில் ஒரு பெண் மட்டும் என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவள் அருகில் சென்று கண்ணத்தைக் கிள்ளினேன். முகத்தில் அப்படி ஒரு நாணம் கலந்த ஒரு புன்னகை. ஹிந்தியில் உரையாடினோம். என்ன வயது எனக் கேட்டேன். “எனக்கு வயது 13. அப்பா குடித்தே இறந்துவிட்டார். அம்மா உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். எனது பாட்டியுடன் இருக்கிறேன், அவருக்கும் வயதாகிவிட்டது, நான் வேலைக்குப் போனால்தான் அவர் உயிரோடு இருக்க முடியும்” எனக் கூறினார். அந்தப் பெண் தனது கைகளை மறைத்துக் கொண்டே இருந்தாள். துணி தைக்கும் கைகள் எல்லாம் புண்ணாகியிருந்தன. “மருந்து போடலாமல் ஏன் இருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன். “மருந்து வாங்கினால் எனக்கும் எனது பாட்டிக்கும் ஒருவேளை சாப்பாட்டிற்கான பணம் போய்விடும்” என்றாள். “சற்று இருங்கள், வருகிறேன்” எனச் சொல்லி, கடைக்கு வெளியே இருந்த மருந்தகத்தில் மருந்துகளை வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தேன். எனது கையைப் பிடித்து வாய்விட்டுச் சத்தமிட்டு அழுதாள் அந்தச் சிறிய பெண். அவளைப் போலவே அங்கே நிறைய பெண்கள், சிறுமிகள், வயதானவர்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருந்தனர். இக்கடையில் தினமும் அல்ல, ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகின்றனர். ஆனால் இங்கே ஒருவரும் வந்ததில்லை. எங்களைப் பார்த்ததில்லை. ஒருவேளை எங்களை வெளியே  யாரேனும் பார்த்தால் கூட முகம் சுழித்து ஏளனமாகத்தான் பார்ப்பார்கள்” எனக் கூறினார்கள். அப்படி அந்த அறைகளில் வேலை செய்யும் ஒவ்வொருவர்களின் கதைகளைக் கேட்டுக் கொண்டே நகர்ந்து சென்றேன். இறுதியில் ஒரு அக்கா திடீரென எனது கையைப் பிடித்து அவரது அருகில் இழுத்து அவர் முதுகையும் உடம்பில் உள்ள சிறு காயங்களையும் காண்பித்து அழுதார். எனது மணம் நொறுங்கியது. பகலில் துணிகளை நெய்வது, இரவில் பாலியல் தொழில் என மேலும் பல பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போனார்.

அங்கே இருந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நினைத்து எனது மணம் கனத்துப் போனது. பிறகு எல்லோருமே ஒன்று சொன்னார்கள், “இங்கே இருக்கும் மனிதர்கள் தங்களை மிகவும் ஆடம்பரமாகக் காண்பித்துக்கொள்ள நாங்கள் நெய்த துணிகளை அணிகிறார்கள். ஆனால் எங்கள் வாழ்வில் நாங்கள் ஒருநாளும் நல்ல ஆடைகளை அணிந்ததே இல்லை”. அங்கே இருப்பவர்களில் என்னுடன் முதலில் பேசிய, ‘ஆஷா’ வின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. “ஒருநாள் கூட நான் இந்த மிகப்பெரிய கடையை முழுதாகப் பார்த்ததே இல்லை” எனக் கூறினாள். பிறகு அவளை கடைக்குள்  அழைத்துச் சென்றேன். அங்கே இருப்பவர்கள் அவர்களது, ‘LuxuryPeople’ என்ற  மிகப்பெரிய மட்டமான அடையாளத்தோடும் அதிகாரத்தோடும் என்னைத் திட்டினார்கள், “ஏன் இவளை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்?” என்று… நான் அவர்களிடம் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன், “She is my sister, u don’t have rights to say anything about her, I just want to buy some dress for her that’s நor else  I will call the Police” என்றுச் சொன்னேன்.பிறகு அவளுக்கு என்னால் முடிந்த அளவிற்கு ஆடைகளை வாங்கிக் கொடுத்தேன். அவள் விழிகளில் பரிதாபத்தை என்னால் உணர முடிந்தது. பிறகு அவளுக்கு ஆடையும் கிடைத்தது. அந்த அறையில் இருக்கும் எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன். நான் அங்கிருந்து கிளம்பும்போது ஒருத்தி மட்டும் மிகுந்த கவலையோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வேறு யாருமல்ல, ஆஷாதான். இறுதியாக, “நீங்கள் யார், எனக்காக ஏன் இதெல்லாம் செய்கிறீர்கள்?” என்று கேட்டாள். “நீ எனது தங்கை” என மறுபடியும் கூறினேன். “எப்படி?” எனக் கேட்டாள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என பதிலளித்தேன். அவளுக்குப் புரியவில்லை. ஹிந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னேன். அவள் எனது கையை விடவேயில்லை. “உங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன், நீங்கள் இங்கேயே இருக்கலாமே, அடிக்கடி உங்களை எனது வாழ்வில் நினைத்துக்கொள்வேன்” எனக் கூறினாள்.  வேறென்ன வேண்டும் இதற்கு மேல்? பிரியாவிடைப்பெற்றேன் அங்கிருந்து..

வாழ்வதற்குப் பொருள் வேண்டும்தான். இருந்தாலும், வாழ்வதிலும் பொருள் வேண்டும். நாம் சேர்த்து வைக்கும் பொருட்களிலும், சொத்துகளிலும் இல்லை மகிழ்ச்சி. நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது மகிழ்ச்சி.

பணத்திலேயே குறியாக இருக்கும் மனிதனால் அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள முடியாது. எந்த மிருகமும் அன்பைப் பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை, மனிதனைத் தவிர. யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை, யாரால் யார் மகிழ்விக்கப்படுகின்றோம் என்பதில்தான் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.

தொடரும்…

[email protected]

The post நான் – ஒரு போஹேமியன் பயணி;1 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

பயண இலக்கியம்

By:Para
4 May 2025 at 07:54

Pa Raghavan

குலசேகரபுர க்ஷேத்திரமென்னும் குரோம்பேட்டையிலிருந்து தெற்கே பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள காட்டாங்குளத்தூர் என்னும் தலத்துக்கு, பாலிய சிநேகிதன் ஒருவனது குமாரத்தியினுடைய கலியாண நிமித்தம் சென்று வர வேண்டியிருந்தது. முன்னொரு காலத்தில் வேதாசலபுரமென்றும் பின்னொரு காலத்தில் மறைமலை நகரென்றும் அழைக்கப்பட்ட காட்டாங்குளத்தூருக்கு சாலை மார்க்கமாக அல்லாமல் மின்சார இரயில் வண்டி மார்க்கமாகப் பயணப்பட முடிவு செய்தேன்.

இந்நாள்களில் புறநகர் இரயிற் பயணங்களை மேற்கொள்வதென்பதே எனக்கு அரிதாகிப் போய்விட்டது. எங்கு செல்வதென்றாலும் இரு சக்கர வாகனத்திலோ ப்ளெசரிலோ செல்லும் வழக்கம் உண்டான பின்பு புறநகர் இரயிற் பயணம் நினைவை விட்டே அகன்றுவிட்டிருந்தது. ‘நீங்கள் அவ்வாறு இருத்தல் ஆகாது. மக்களோடு மக்களாகப் பயணஞ்செய்து திரும்புவதன் சந்தோஷத்தினை இழக்கின்றீர்கள். தவிர பிரயாண நெரிசலில் சிக்காது சென்று வரவும் அதுவே சரியான உபாயமுமாகும்’ என்று மனையாளும் பரிந்துரைத்தபடியினாலே காட்டாங்குளத்தூர் கலியாண வைபவத்துக்கு இரயில் பயணம் மேற்கொள்வதென்று தீர்மானஞ் செய்துகொண்டேன்.

விடிகாலை சூர்யோதயத்துக்கு மிகவும் முன்னால் ஐந்து மணி அளவிலேயே எழுந்து ஸ்நானபானஞ்செய்து, ஐந்தே முக்காலுக்குத் தயாரானேன். என் மனையாளே இரு சக்கர வாகனத்தில் என்னை ஏற்றிச் சென்று இரயிலடியில் இறக்கிவிட்டார். முன்னொரு காலத்திலே நான் குரோம்பேட்டை என்னும் குலசேகரபுரத்தின் இரயிலடிக்கு நாடோறும் படியேறி இறங்குபவனாக இருந்ததெல்லாம் நினைவைக் கவ்வி ஆக்கிரமித்துக் குதியாட்டம் போடத் தொடங்கியது. மூன்று பத்தாண்டுகள் கழிந்த பிற்பாடும் ரயிலடியின் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதைக் காண அதிசயமாயிருந்தது. இடப்புறமொன்றும் வலப்புறமொன்றுமாக இரண்டு நடைமேடைகள் புதிதாக எழுப்பப்பட்டிருந்தன. ஜனங்கள் விண்ணளாவிய படிகளில் ஏறி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவதிப்படாதிருக்கும் பொருட்டு சர்க்கார் எப்போதோ தானியங்கி மின்சாரப் படிக்கட்டுகளைக் கட்டுவித்திருக்க வேண்டும். அதை நமது கலாசாரப்படிப் பயன்கொள்ளத் தகாததாக உருமாற்றிக் கழட்டி வைத்திருந்தனர். நான் நீண்ட பெரும் படிகளேறி மேலே சென்று பயணச் சீட்டு வாங்குமிடத்தை அடைந்தேன்.

காட்டாங்குளத்தூருக்குச் சென்று திரும்பும் விதமான சீட்டொன்றைக் கோரி, நூறு உரூபாத் தாளினைச் சீட்டுப் பணியாளரிடம் நீட்டியபோது, ‘சில்லறையாக இருபது உரூபா இருந்தால் கொடுங்கள்’ என்று சொன்னார். இது எனக்குச் சிறிது வியப்பையும் மேலதிகக் குழப்பத்தையும் விளைவித்து, ‘எத்தனை உரூபா?’ என்று கேட்டு உறுதி செய்துகொள்ளப் பார்த்தேன்.

‘போகப் பத்தும் திரும்பி வருவதற்குப் பத்துமென ஆக மொத்தம் இருபது உரூபா’ என்று சீட்டுப் பணியாளர் மீண்டும் சொல்லவே, இருபது உரூபாக்களை எண்ணிக் கொடுத்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இரயில் வண்டி வந்து நிற்கும் நடைமேடையை நோக்கி இறங்கத் தொடங்கினேன்.

கால மாற்றத்தில் விலைவாசி எல்லாம் ஆகாசத் தொலைவினை நோக்கிச் சென்றுவிட்டிருந்தாலும் சாமானிய மக்கள் செலவுச் சுமையின்றிப் பயணஞ் செய்வதன் பொருட்டு இரயிற்பாதைக் கட்டணத்தை மட்டும் பெரிய அளவினிலே உயர்த்தாது விட்டு வைத்திருக்கும் சர்க்காரின் பெரிய மனத்தினை எண்ணிச் சிலாகித்த வண்ணம் இரயில் வருவதற்காகக் காத்திருக்கலானேன்.

சில மணித்துளிகளில் சென்னை கடற்கரையிலிருந்து திருக்கச்சி மாநகர் வரை செல்லும் இரயில் வண்டியொன்று வந்து நின்றது. ஏறியதும் சன்னலோர இருக்கை சித்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இவ்வாறு சன்னலோர இருக்கையில் அமர்ந்து இரயிற் பிரயாணஞ்செய்து நெடுங்காலமாகிவிட்டதை நினைத்துக்கொண்டேன். காலைச் சூரியனின் முதற் கிரணங்கள் படரத் தொடங்கிவிட்டிருந்தன. புள்ளினங்கள் வானில் விரைய, சில்லென்ற காற்று மேனியில் மோத, இரயிற் பயணம் ஆரம்பமானது.

வண்டி சானடோரியம், தாம்பரம் என்கிற இரண்டு நிறுத்தங்களைக் கடந்து பயணப்படத் தொடங்கியபோது, காலை நேர ஆரோக்கிய உணவெனச் சொல்லி அவித்த நிலக்கடலை விற்றுக்கொண்டு வந்தார் ஒரு நாரி. முன்பெல்லாம் பழைய செய்தித் தாளில் பொட்டணம் மடித்துத் தருவார்கள். இன்றோவெனில் காகிதக் கிண்ணத்தில் அவித்த நிலக்கடலையைக் குவித்துத் தருகிறார்கள். அந்த விடிகாலைப் பொழுதினிலும் அவித்த கடலையை விரும்பி உண்ணும் மக்கள் இருப்பதைக் கண்டு மனத்தின்கண் குறித்துக்கொண்டேன். அவ்வண்ணமே புஷ்பங்கள் விற்கும் பெண்களும் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்குப் பயன்படும் பென்சில், பேனாக்களை விற்போரும் கூவி விற்றுச் சென்றதைக் கண்டேன். அவர்களைப் பொருட்படுத்தாது, பெட்டியிலிருந்தோர் அவரவர் கைப்பேசியில் கண்ணுங்கருத்துமா யிருந்ததையுங் கண்டேன்.

இரயில் வண்டி பெருங்களத்தூர் நிறுத்தத்தை நெருங்கியது. பண்டொரு காலத்தில் பிற்காலப் பல்லவர்களுக்கும் மிச்சம் மீதமிருந்த பிற்காலச் சோழர்களுக்கும் யுத்தம் மூண்டபோது அது நிகழ்ந்த பெரும் களமாக இருந்தபடியினாலே அந்தத் தலத்துக்குப் பெரும் களத்தூர் என்ற பெயர் உண்டானது. (இதனைத் திரித்து, சோழர்கள் ஆண்ட காலத்திலே பெரிய குளமொன்று இந்த இடத்தினில் இருந்தபடியினாலே இது பெருங்குளத்தூர் என அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அது மருவி பெருங்களத்தூரானதாகவும் சொல்வர். ஆயினும் அதற்கு சரித்திர சாட்சியங்கள் கிடையா. சரிதான், பல்லவ-சோழ யுத்த களேபரத்துக்கேனும் சரித்திர சாட்சியம் உண்டாவென்பீரானால் அதுவும் கிடையா.) ஆனால் இந்த ஊரினையும் கமலகாசன் என்னும் கலாவிற்பன்னர் உருக்கொண்ட களத்தூரினையும் போட்டுக் குழப்பிக்கொள்ளல் ஆகாது. வெறும் களத்தூர், முதுகளத்தூர், பெருங்களத்தூர், சிறுகளத்தூர் என மாகாணமெங்கும் பல போர்களின் நினைவாகக் களப்பெயர் பூண்ட தலங்கள் உண்டு.

பெருங்களத்தூரினின்று புறப்பட்ட இரயில் வண்டி அடுத்தபடியாக வண்டலூர் நிறுத்தத்தில் நின்றது. சுற்றிலும் வனம் அடர்ந்த மலைகளும் சிறியதொரு நதியும் ஓடிய பிராந்தியமாகப் பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் இத்தலம் திகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு வனம் சுருங்கி, மலைகள் நாலாபுறமும் பெயர்க்கப்பட்டு, நதி சேர்த்த வண்டலெல்லாம் கட்டுமானப் பணிகளுக்கென்று எடுத்துச் செல்லப்பட்ட பின்பு, நதியும் தீர்ந்துபோய் விடவே, சிறியதொரு கானுள்ள பிராந்தியமாகச் சுருக்கி வடிவமைக்கப்பட்டது. கால மாற்றத்தில் இவையெல்லாம் தவிர்க்க இயலாததன்றோ? இருப்பினும் நமது சரித்திரம் வேர் கொண்ட புவியியலினை முற்றிலுமாக மறந்துவிடுதல் தகாதென்ற எண்ணத்தில் சர்க்கார் இந்தத் தலத்தினிலே கானுயிர்களுக்கென ஒரு பூங்கா அமைத்துச் செம்மையாகப் பராமரித்து வருகின்றார்கள். சிங்கம், புலி போன்ற கொடுமிருகங்களிலிருந்து நாய் பூனை போன்ற மென்மிருகங்கள் ஈறான ஐயறிவினங்கள் இந்தப் பூங்காவிலே சௌக்கியமாக வாசஞ்செய்து வருகின்றன.

வண்டலூர் நிறுத்தத்தினை அடுத்து வந்தது ஊரப்பாக்கம் இரயில் வண்டி நிறுத்தம். இது காலத்தால் மிகவும் பிற்பட்ட குடியிருப்புப் பிராந்தியமென அறியப்படுவது. மக்கட்தொகைப் பெருக்கம் மிகத் தொடங்கி, வடக்கே சென்னை மாநகரமும் தெற்கே செங்கற்பட்டு மாநகரமும் இடுப்பூதிப் போக ஆரம்பித்தபோது இரு பெரும் நகரங்களுக்கு இடைப்பட்ட மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பரப்பும் கானிழந்து ஆங்காங்கே மேகத் திட்டுகளைப் போலே கான்கிரீட்டெனும் கவின்மிகு கற்கோலம் பூணத் தொடங்கியதன் விளைவாக உற்பத்தியான நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இதனையடுத்த கூடுவாஞ்சேரி என்கிற இரயில் நிறுத்தப் பிராந்தியமும் அப்படியே உருவானது என்பதும் நினைவிற் கொள்ளத் தக்கது. இப்புதிய நகரங்களின் இறுதியொட்டாக வருகின்ற பாக்கம், சேரி போன்ற பதங்களைக் கூர்த்து நோக்குவோமானால் ஆதியிலே இவ்விடங்கள் எவ்விதமாக இருந்தனவென்பது தெள்ளெனப் புலப்படும்.

ஏழு மணி ஆவதற்கு எட்டு மணித்துளிகள் இருந்தபோது ஒரு வழியாக இரயில் வண்டி காட்டாங்குளதூர் நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தது.

இறங்கும்போதே காட்டாங்கொளத்தூர் என்ற பிழைபட்ட பெயர்ப்பலகை கண்ணில் தென்படவே, சிரித்துக்கொள்ளும்படியானது. பெருங்களத்தூரைப் பெருங்குளத்தூராக்கியதைப் போலவே காட்டாங்குளத்தூரைக் காட்டாங்கொளத்தூராக்கிவிட்டிருக்கின்றார்கள்!

முன்னொரு காலத்தில் இந்த ஊரின் சிறப்பைச் சொல்வதற்குச் சிவானந்த குருகுலம் எனும் ஓர் ஆசிரமம் இருந்தது. ஆசிரமம் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பெருங்காடாக மட்டுமே இருக்கும். மாலைப் பொழுதில் நரிகளைப் பார்வையிடலாம். சற்று உள்ளடங்கிச் சென்றால் வேறு சில காட்டு மிருகங்களும் காணக் கிடைக்கும் என்றாலும் மிருகங்களைத் துன்பப்படுத்தலாகாது என்னும் எண்ணத்தில் நான் சென்றதில்லை. பிற்பாடு மக்கள் இங்கெல்லாம் குடியேறத் தொடங்கிய பின்பு வீடுகளும் சாலைகளும் விளக்குகளும் வணிக வளாகங்களும் கலாசாலைகளும் இதர நவீனங்களும் ஆமைபோலப் புகுந்து நிறைந்துவிட்டிருக்கின்றன. மிருகங்கள் இருந்த இடமும் தெரியாமல், சென்ற இடமும் தெரியாமல் போய்விட்டன.

காணாத காட்சியெல்லாம் கண்டு ரசித்த வண்ணம் இரயில் நிலையத்தினின்றும் வெளியேறிச் சாலையை அடைந்தேன்.

கண்ணெட்டும் தொலைவிலேயே நான் போகவிருந்த கலியாண மண்டபம் இருந்தது. மகிழ்ச்சியுடன் அதனை எட்டிப் பிடித்து, வைபவத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு, பாலிய நண்பர்களையெல்லாம் சந்தித்துச் சிறிது நேரம் சல்லாபித்துக்கொண்டிருந்தேன். பிரிய மனமின்றிப் பிரிந்து மீண்டும் காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதாகியிருந்தது. செங்கற்பட்டிலிருந்து சென்னைக் கடற்கரை நோக்கிச் செல்லும் இரயில் வண்டி வந்ததும் ஏறிக்கொண்டேன்.

ஒன்றரை நாழிகைப் பொழுதுக்குள் குரோம்பேட்டை இரயில் நிலையத்தை வந்தடைந்துவிட முடிந்தது. பேசி வைத்திருந்தாற்போலே மனையாள் மீண்டும் இரு சக்கர வாகனத்துடன் இரயிலடிக்கு வந்து காத்திருந்தாள். எனவே அதிலேறி இல்லம் வந்தடைந்து, சென்று வந்த சங்கதிகளையும் க்ஷேமலாபங்களையும் அவளிடம் சொல்லிக் களித்தேன். குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு அவளொரு முத்தாய்ப்பு வைத்தாள். அதுவாவது:-

‘இருவது ரூவாய்ல மேட்டர் முடிஞ்சதுல கிளுகிளுப்பாகி இவ்ள பேசுற. இதே கார் வெச்சிகிட்டுப் போயிருந்தேன்னா ஆயிர்ருவா பழுத்திருக்கும். அப்ப இந்த வாயி திறக்கும்?’

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

❌