Normal view

Received before yesterday

‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதை மஞ்சும்மல் பாய்ஸ்

‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல். 

இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.


இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம். 

இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன.  சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. 

‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட. 

உண்மை நாயகர்கள் சிஜூ, சுபாஷ்

‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்

இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’

‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

‘கமன்’

 ஜப்பானின் ஹைக்கூ கவிதைகள் பிரபலமானது போல் நம்மிடையே கமன்’ பிரபலமாகவில்லை. இது ஜப்பானியக் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு தத்துவம். வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு முழுமையான அணுகுமுறை என்றும் சொல்லலாம்.

எதிர்பாராத ஒன்று நடக்காமல் இருப்பதில்லை. ஏதோ ஓர் இழப்பு, ஒரு துரோகம், தோல்வி என்று அவ்வப்போது நம்மை உண்டு இல்லை என்று செய்துவிடுவது வாழ்க்கையின் இயல்பு.

அப்படி ஒன்று நடக்காமல் தடுக்க நம் யாராலும் முடியாது. ஆனால், அதை எப்படிக் கையாள வேண்டும் என்கிற முடிவும் தேர்வும் நம்முடையது. பொறுமையாக அந்த விஷயத்தை எதிர்கொள்வது, காத்திருப்பது என்று கமனைச் சுருக்கிக் கொள்ள இயலாது.

நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, சூழ்நிலைகளை அமைதியாக எதிர்கொள்ளும் திறனைக் கமன் கற்றுத் தருகிறது. தற்காலிக இன்பதுன்பங்களைத் துறந்து நீண்டகால இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் ஒரு மனநிலையை ’ கமன்’ தரும்.

நம் மனம் கவலைகளைப் பெரிதுபடுத்திப் பார்க்கும் இயல்புடையது. அந்த இயல்பிலிருந்து விடுவித்துக் கொள்ள கமன் அவசியம். அது மட்டுமல்ல, கமன் கற்றுத்தரும் முக்கியப் பாடம் பொறுமையே வெற்றியின் திறவுகோல். ஆனால், இன்றைய விரைவான உலகில், பொறுமையுடன் செயல்படுவது கடினமாகத் தோன்றலாம். ஆனால், உண்மையான,நிலையான வெற்றிக்கு இது அவசியம்.

கமனைக் கற்றுக் கொள்ள மனத் திடம் இருந்தால் போதும்இந்த 10 வழிகள் பலனளிக்கும்.

1. முதல் படி நமது சிந்தனை முறையை மாற்றுவது. தோல்விகளைத் தாண்ட முடியாத சுவர்களாகப் பார்க்காமல்நமது பாதையில் வரும் தற்காலிகத் தடைகளாகப் பார்க்க வேண்டும்.

2. ஏமாற்றத்தை உணரலாம்ஆனால் அதிலேயே மூழ்கிவிடக் கூடாது. சச்சுவின் சூழலில் அடுத்த வேலைகளுக்கு விண்ணப்பித்து நல்ல வேலை வரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். அதுதான் கமன்.

3. எரிச்சல்கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகள் எழும்போதுஆழ்ந்த மூச்சு எடுத்துஎதிர்வினையாற்றுவதற்கு முன் சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. உணர்வுகளை அடக்குவது அல்ல கமனின் நோக்கம். மாறாகஅவற்றைப் புரிந்துகொண்டுஅமைதியாகக் கையாள்வதே கமன்’ கலை. ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வதுஅமைதி தரும் இசையைக் கேட்பது போன்றவை பயன் தரும்.

5. நீண்டகால வெற்றிக்குக் கட்டுப்பாடும் கவனமும் மிகவும் அவசியம். நாம் தெளிவான இலக்குகளை நிர்ணயித்துஅவற்றைச் சிறியசாதிக்கக்கூடிய படிகளாகப் பிரித்துமுன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும்.

6. தோல்விகளைப் பார்த்துச் சோர்ந்துவிட வேண்டாம். மீண்டும் ஆரம்பிக்க மனத்தைத் தயாராக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய துவக்கம்தான். எத்தனை முறை தோற்றாலும் ஆரம்பிக்க ஆயத்தமாக இருங்கள்.

7. பெரிய புத்திசாலியாகஉழைப்பாளியாக இருப்பது பெரிதல்லஅவனிடம் பதற்றம் இருந்தால் மற்றவை அனைத்தும் தண்ணீரில் கரைந்த உப்பாகிவிடும். பதற்றத்தைக் குறைக்கச் செயலில் முழுக் கவனமும் பொறுமையும் தேவை.

8. இன்றைய சிறு துன்பங்கள் நாளைய பெரிய மகிழ்ச்சிக்கான விதைகள். இந்தப் புரிதலுடன் முன்னேறும்போதுஎந்தச் சவாலையும் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். இதுவே கமனின் ஆழமான பாடம், ’துன்பத்தில் அர்த்தம் காண்பது,அதன் மூலம் வலிமை பெறுவது.

9. பெரிய பிரச்சினைகளைப் பார்த்துப் புலம்புவதோ அல்லது மனம் தளர்வதோ தீர்வாகாது. மாறாகநாம் எந்தெந்த வழிகளில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிவதே அறிவுடைமை. நம்மால் முடிந்த சிறு மாற்றங்கள்கூடகாலப்போக்கில் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும்.

10. கமன் என்பது தனிமையில் போராடுவது அல்ல. உதவி கேட்பதும்நமது தேவைகளை வெளிப்படுத்துவதும் பலவீனத்தின் அடையாளம் அல்ல. மாறாகமன ஆரோக்கியத்திற்கு இவை மிகவும் அவசியம்.

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். அதில் வரும் சவால்களை எதிர்கொள்ள கமன் நமக்கு ஒரு வலிமையான கருவியாக அமைகிறது. பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்படுவோம்.

The post ‘கமன்’ appeared first on Naseema Razak.

ஷோஷின்

நம்மில் பலர் நான் சொல்லப் போகும் கதையைக் கேட்டிருப்பீர்கள். இருந்தாலும் இங்கு அதை ஞாபகப் படுத்துவது சரியாக இருக்கும். ஒரு கோப்பையில் பாதி அளவு காபி இருக்கிறது. ஆனால் எனக்குத் தர்ப்பூசணி ஜூஸ் குடிக்க வேண்டும். அதே கோப்பையைத்தான் உபயோகிக்க வேண்டும். அப்படியென்றால், மீதி இருக்கும் காபியைக் குடித்து கோப்பையைக் காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆறிவிட்ட காபியில் சுவை ஒன்றும் இருக்காது என்று கொட்டிவிட்டு, அதைச் சுத்தம் செய்ய வேண்டும்.

இதை எதையும் செய்யாமல் பாதி காபி இருந்த கோப்பையில் மேலும் ஒரு கோப்பை அளவு தர்ப்பூசணி ஜூஸை ஊற்றினால் என்ன ஆகும்? அது குடிப்பதற்கு லாயக்கற்றுப் போகும். நம்மில் பலர் பழைய ஏதோ ஒன்றின் மிச்சத்தை வைத்துக் கொண்டுதான் புதிய விஷயங்களை, செயல்களை அணுகுகிறோம்.

ஒன்று, என் வயதுக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணம். அல்லது எனக்குத் தெரியாத விஷயமா என்கிற அகம்பாவம். இவை புதிதாக எதையும் வாழ்க்கையில் கற்க விடாது. இந்தப் போக்கில் தனி மனிதர்கள் மட்டுமல்ல, பெரிய பெரிய நிறுவனங்களும் வீழ்ந்து போயுள்ளன. உதாரணத்திற்கு நோக்கியா, மொட்டரோலா என்று பட்டியல் நீளும்.

அதற்குச் சுலபமான தீர்வு ‘ஷோஷின்.’ ஜென் தரும் ‘ஷோஷின்’ விதியைப் பின்பற்றினால் வாழ்க்கையில் சுவாரசியம்கூடும். ‘ஷோஷின்’ என்பது ’புது மாணவரின் மனநிலை’ அல்லது ’ஆரம்ப மனம்’ என்று பொருள். இது வெறும் அறியாமை அல்ல, மாறாக, எல்லாவற்றையும் புதிதாக, ஆர்வத்துடன், திறந்த மனதுடன் அணுகும் ஒரு மேம்பட்ட மனநிலை என்கிறார்கள் ஜென்வாசிகள். இதனால் புதிதாகக் கற்க மனம் எப்போதும் தயாராக இருக்கும்.

ஔவை பாட்டி ஷோஷின் விதியை ஒரு பாடலில் சொல்லி வைத்திருக்கிறார். அதன் பொருள்,
’கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு.சும்மா நான் நிறைய கற்றவனா, நீ நிறைய கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள்.’

மாணவ மனநிலையில் இருக்கும் போது நமக்குள் ஓர் ஆர்வம் பிறக்கும். அதை விட்டுவிட்டு, என் அனுபவத்தில் சொல்கிறேன், இப்படிச் செய்தால் அப்படித்தான் நடக்கும் என்று முன் முடிவு செய்வதைத் தவிர்க வேண்டும். புதிதாக யோசனை செய்து சிறப்பான வழிகளைக் கண்டறிய ‘ஷோஷின்’ உதவும்.

அவ்வளவுதானே என்று மேலோட்டமாகப் புரிந்து கொள்ளாமல், ‘ஷோஷினைச் செயலில் கொண்டு வாருங்கள். அதற்குப் பத்து வழிகள்:

1. எல்லாம் தெரிந்திருந்தாலும் , புதிதாக என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்கிற ஆர்வம் எப்போதும் இருக்க வேண்டும்.

2. உடன் இருக்கும் அலுவலக நண்பர்களோ, குடும்பத்தாரோ எதையாவது சொன்னால், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்கிற கணக்கில் பேசாமல் திறந்த மனத்துடன் கேட்கப் பழகுங்கள்.

3. எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும் , முன் அனுபவத்தை வைத்துக் கொண்டு புதிய பார்வையைக் கொண்டு ஆரம்பியுங்கள்.

4. தெரிந்த விஷயத்துக்கு எதற்குப் புது வழி? தவறாகி விட்டால் ? எதற்கு வம்பு என்று இல்லாமல் தோல்வியை சகஜமாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

5. உங்களைச் சுற்றி உள்ள மக்களிடம் ஆர்வம் தரும் விஷயங்களைப் பேசுங்கள்.

6. தேவையற்ற கற்ற பழைய விஷயங்களை நிர்தாட்சண்யமின்றி உங்கள் மனத்திலிருந்து தூக்கி எறியுங்கள்.

7. காலத்துக்கு ஏற்றார் போல், உங்கள் எண்ணங்களை மேம்படுத்தப் புதிய புதிய விஷயங்களைக் கற்கத் தயாராகுங்கள்.

8. லாடம் கட்டிய குதிரை போல் செல்லாமல், காதுகளையும் கண்களையும் திறந்து வையுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் சுவாரசியம் கூடும்.

9. குழந்தையைப் போல் எந்த விஷயத்திலும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று தேடுங்கள்.
10. எப்போதும் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டே இருங்கள்.

எதையும் ஒரு நாள் செய்தால் பலனில்லை, சோஷினும் அப்படித்தான். அது வாழ்க்கை முறை. சோஷினைத் தொடர்ந்து செய்யும் போது மனம் தானாகப் புதிய வாய்ப்புகளை, வழிகளைக் கண்டறியும்.

The post ஷோஷின் appeared first on Naseema Razak.

❌