காந்தி புன்னகைக்கிறார் (சிறுகதை ) – மு. சாகுல் ஹமீது
நன்றி : காலச்சுவடு & சாகுல் ஹமீது

“சிந்திப்பதைக் குறை சொல்ல மாட்டேன். ஆனால் பெயரைக்கூடச் சொல்லாமல் வெறுமனே இப்படி உட்கார்ந்திருக்கும்போது எழுகிற சிந்தனைகள் ஆபத்தானவை. சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்” மீண்டும் அதே புன்னகை.
“என் பெயர் நாதுராம்… உங்கள் நகைச்சுவையுணர்வைப் பாராட்டுகிறேன் காந்தி. ஆனால் இதற்கு மேல் வேண்டாம்.”
“பெயர் நாதுராமென்றா சொன்னீர்கள்?”
“ஆம்.”
“நாதுராம்… ராம்… என் ராமனின் பெயர்.”
“உங்கள் ராமனா… எப்போதிருந்து? நீங்கள்தான் இந்து மதத்திலிருந்தே விலகிவிட்டீர்களே. ராமன் மட்டும் எப்படி உங்களவன் ஆனான்?”
“மன்னிக்கவும் நாதுராம். என் ராமனுக்கு எந்த மதமுமில்லை. ஏனென்றால் அவன் ஆலயங்களில் வசிப்பதில்லை. எல்லோருக்குள்ளும் இருக்கிறவன் நாதுராமுள்ளும் இருக்கிறான். இந்தக் கிழவனுக்குள்ளும் இருக்கிறான்.”
“உங்களால் எப்படி இப்படியெல்லாம் இருக்க முடிகிறது காந்தி? இந்த நாட்டின் மொத்த இந்துக்களுக்கும் துரோகம் செய்வதில் உங்களுக்கென்ன அவ்வளவு ஆனந்தம்?”
“இந்தக் கேள்வியை ஆயிரம் முறை கடந்துவந்துவிட்டேன் நாதுராம். இனி லட்சம் முறைகூடக் கேட்கப்பட்டாலும் பரவாயில்லை. பதில்களால் மனிதர்கள் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். பொய்க்குத்தான் தேவையே தவிர உண்மைக்குத் தர்க்கம் அவசியமில்லை. என் உண்மைக்குப் பல முகங்களுண்டு. ஆனால் முசல்மானின் முகம், பார்ஸியின் முகம், இந்துவின் முகம், சீக்கிய முகம் என்று எந்தப் பேதமும் அதிலில்லை. நீங்கள் என்னை இந்துவின் பக்கமா இல்லை முகமதியன் பக்கமா என்று கேட்டால், நான் மனிதர்களின் பக்கம்தான். எனக்குத் தெரிந்ததும் அது மட்டும்தான்.”
“இது வெறும் வார்த்தை ஜாலம். இதை நான் நம்ப மாட்டேன்.”
“என்னை நம்ப வேண்டுமென்று நான் யாரிடமும் சொல்லவில்லையே… இங்கு தன்னைத் தவிர வேறு யாரையும் யாராலும் முழுமையாக நம்பிவிட முடியாது.”
*
*
மு. சாகுல் ஹமீது: மூன்றாமாண்டு இளங்கலைத் தமிழ்த்துறை மாணவர், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம், தேனி. மின்னஞ்சல்: [email protected]