குழந்தையின் பெயர்
“குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?” “நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ,...
The post குழந்தையின் பெயர் appeared first on சிறுகதைகள்.
“குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?” “நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ,...
The post குழந்தையின் பெயர் appeared first on சிறுகதைகள்.
நிர்மலா ராகவன்
“குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?”
“நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ, புன்னகையோ இருக்கவில்லை. எதையோ யோசிப்பதுபோல் இருந்தாள் என்றுதான் பட்டது அவனுக்கு.
முதலிலேயே யோசித்துவைத்திருந்தது நல்லதாகப்போயிற்று என்ற மகிழ்வுடன், “விட்டல், இல்லாட்டி கோகுல்,” என்று சற்று உரக்கவே சொன்னான்.
“கிருஷ்ணர் பேரா,” என்று இழுத்தாள்.
“அதேதான்!”
“அவருக்கு நிறைய பெண்களோட சகவாசமில்ல?”
அவனுக்குப் பெருமையாக இருந்தது. பிறக்கப்போகிற மகன் உத்தமபுத்திரனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதில் என்ன தவறு?
கிருஷ்ணன் இல்லாவிட்டால் ராமன். “ராமசந்திரன்,” என்றான் அழுத்தமாக.
“MGR வாத்தியாரா?”
“இல்லே. தசரதகுமாரன். ராமாயணத்திலே..”.
“எனக்கும் தெரியும்”. சற்று சூடாக வந்தது அவள் பதில்.
“ராமர்தான் ஏகபத்தினி விரதன்,” என்றான் சமாதானமாக.
“சுகமா அரண்மனையில இருக்கிறதை விட்டுட்டு, அப்பா சொல்றார்னு காட்டுக்குப்போய் கஷ்டப்பட்டாரே! அதைச் சொல்லமாட்டீங்களே!” என்று சாடினாள். “கொஞ்சம் சொந்த புத்தியை உபயோகிச்சிருக்கவேண்டாம்?”
மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரண்டின் நாயகர்களும் சரிப்படவில்லை. வேறு யாரைச் சொல்லலாம்?
“நடராஜன்?”
“சிவன் பேரு. ஒங்களுக்கு பஸ்மாசுரன் கதை தெரியுமில்ல?”
`இவள் எங்கே போகிறாள்?’ என்று சற்று அயர்ந்தான் பிரசாத்.
அவளே சொன்னாள்: “தன்னோட கையை யார் தலையில வெச்சாலும் அவங்க சாம்பலாகணும்னு வரம் கேட்டானாம் அந்த அசுரன். யார்கிட்டே? சிவன்கிட்டே”.
சுவாரசியமாக இருந்தது கதை.
“எவ்வளவு கெட்ட குணம்!” என்று அவளை ஊக்கினான்.
“ரொம்ப யோசிக்காம, சிவனும் அவன் கேட்டதைக் குடுத்துடரார். நைச்சியமா பேசறவங்களுக்கு ரொம்ப யோசிக்காம எதையாச்சும் குடுத்தா, குடுக்கறவங்களுக்குத்தான் கஷ்டம்”.
சிவன் அப்படி என்ன கஷ்டத்தை அனுபவித்தார் என்று கேட்கவேண்டும்போல இருந்தது அவனுக்கு. `இதுகூடத் தெரியாதா!’ என்று ஏளனம் செய்துவிடுவாள். வேண்டாம்.
“முருகன்? சிவகுமார்னு வெச்சா, நாகரிகமா இருக்கும்”. அவன் குரல் பலகீனமாக ஒலித்தது. இதற்கு என்ன ஆட்சேபம் தெரிவிக்கப்போகிறாளோ!
“சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு, பெத்தவங்களை விட்டு எங்கேயாவது போயிடுவான். ரெண்டு பொண்டாட்டிவேற!”
அவன் மௌனமாக இருந்தான்.
“வேற ஏதாவது பேசலாமா?” என்றாள்.
அவன் வாயே திறக்கவில்லை.
அவளே கேட்டாள்: “பிறக்கிறது பெண்குழந்தையா இருந்தா?”
“சீதா,” என்று சொன்னவன், அவள் முகத்தைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். பழங்காலப் பெயராக இருக்கிறது என்பாளோ?
“ஜானகின்னு பேர் வெச்சுட்டு, ஜானுன்னு செல்லமா..,” என்றவனை இடைமறித்தாள். “கட்டினவர் காட்டுக்குப் போனபோது, அவ எதுக்கு அவரோட கல்லிலேயும் முள்ளிலேயும் போய் திண்டாடினா? `நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்’னு போயிருக்க வேண்டியதுதானே?”
அதற்குமேல் அவனுடைய கற்பனை ஓடவில்லை.
மறுபடியும் அவளே கைகொடுத்தாள். ”பார்வதி புத்திசாலி. சிவனோட ஒடம்பிலே பாதி அவளுக்கு. சக்தி இல்லாட்டி சிவன். ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும். துணை இல்லாம நான் இல்லேன்னு ஒவ்வொருத்தனும் தவிக்கணும்”.
“ஏண்டா பிரசாத்து? ரெண்டுபேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்களே! `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ அப்படின்னு தரகர்கிட்ட சொல்லிவிடவா?” தாய் கேட்டாள்.
“எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்மா”.
“அதான் ஏன்னு கேக்கறேன். `நான் நாகரிகமானவ. தமிழெல்லாம் படிக்கிறதில்லே’ன்னு சில அரைகுறைங்கமாதிரி அலட்டிக்காம, ஆன்மிகப் புத்தகங்களெல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சிருக்கா. ரொம்ப புத்திசாலிடா!”
“எனக்கு இவ்வளவு புத்திசாலியான பொண்ணு வேண்டாம்மா. பெண்ணியம் பேசறா. எல்லாத்தையும் அலசறா”.
“அதான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கா”. அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.
“அவளோட ஆராய்ச்சியை வேலையோட வெச்சுக்கட்டும். கோயிலுக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமான்னு இருக்கிற சராசரி பொண்ணுதான் எனக்குச் சரிப்படும்”.
மனதுக்குள் சொல்லிக்கொண்டான், `கல்யாணம் ஆகி, பிறக்கப்போகிற குழந்தைக்குப் பெயர் வைப்பதில்கூட எங்களுக்குள் ஒற்றுமை இல்லையே! இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எதிரும் புதிருமாக இருந்தால் வாழ்க்கை நரகமாக இருக்காதா!’
“அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சுவிட்டுக் கொண்டாள். “நான்...
The post பெயரின் முதல் எழுத்து appeared first on சிறுகதைகள்.
நிர்மலா ராகவன்
“அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
“நான் வேலை செஞ்சாத்தான் நாம்ப சாப்பிட முடியும், ஒன்னைப் படிக்கவைக்க முடியும். ஒனக்குத் தெரியாதா, அஞ்சனா?” கங்காவின் குரல் கெஞ்சியது.
“நான் ஒன்னைக் குத்தம் சொல்லலே. இன்னிக்காவது சொல்லிடும்மா. நெத்தியிலே பொட்டு இட்டுக்கறே. கழுத்திலேயும் இருக்கு. ஆனா, ஒனக்குத் தாலி கட்டினவரை நான் பாத்ததே இல்லே. அப்படி ஒத்தர் இருக்காரா, இல்லே..”.
கங்கா பதறினாள். “என்ன வார்த்தை சொல்றே! நான் அப்படிப்பட்டவ இல்லேடி. சட்டப்படி என்னை ஒத்தர் கல்யாணம் பண்ணிண்டார். அவருக்குப் பிறந்தவதான் நீ.”
“பின்னே ஏன் அவர் நம்பகூட இல்லே?”
“என்னத்தச் சொல்ல! எங்க கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அவருக்கு என்னப் பிடிக்காம போயிடுத்து”.
“நீ அப்படி என்ன பண்ணினே?”
“நான் ஒரு தப்பும் பண்ணலே”. மகள் சற்றும் எதிர்பாராவிதமாக, கங்கா தன் புடவையைத் தூக்கினாள். “பாத்தியா? இதுதான்..!” அவள் சுட்டிய இடத்தில் சருமத்தின் நிறம் மாறியிருந்தது.
“`குஷ்டரோகம் இருக்கிற பொண்ணை எல்லாருமா சேர்ந்து என் தலையிலே கட்டியிருக்கேள்!’ அப்படின்னு கத்திட்டுப் போனவர்தான். எங்கப்பா, `இவளுக்குச் சின்ன வயசிலேருந்து இப்படி ஒரு தழும்பு இருக்கு. இது வியாதியில்லே, மாப்பிள்ளை,’ அப்படின்னு அவர் காலைப் பிடிச்சுண்டு எவ்வளவோ கெஞ்சினார். அந்த மனுஷன் மசியலியே!”
தனக்கு வேறு எந்த விவரமும் தெரியாதே என்று நினைவிலெழ, “முக்கியமானதை விட்டுட்டியேம்மா. ஒன்னை நிர்கதியா விட்டுட்டுப் போனவரோட பேரு?”
கங்கா மௌனம் சாதித்தாள்.
அஞ்சனா மேலும் துருவினாள். “என் பேருக்கு முன்னாடி G ன்னு தலைப்பெழுத்து போட்டியே. அது ஒன்னோட பேரோட முதல் எழுத்துதானே?”
“அவரோட பேரும் அதிலதான் ஆரம்பிக்கும்”. சொல்லியபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கங்கா, இதற்குமேலும் இதைப்பற்றிப் பேசத் தான் தயாரில்லை என்பதை உணர்த்துவதுபோல்..
அதற்குமேலும் அம்மாவைக் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை அஞ்சானாவுக்கு. “இன்னிக்கு ஏதாவது சினிமா பாத்துட்டு, அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாமா?” என்று பேச்சை மாற்றினாள்.
`அதுக்கெல்லாம் காசு கொட்டியா கெடக்கு?’ என்று முன்போல் சொல்ல முடியவில்லை கங்காவுக்கு. அவர்கள் உரையாடலால் அவள் மனமும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கும். பாவம்!
“இரு. புடவையை மாத்திண்டு வரேன். நீயும் பௌடர் அடிச்சுண்டு வா,” என்று சிரிக்க முயன்றாள்.
அஞ்சனாவின் மனம் படத்தில் செல்லவில்லை.
G என்ற எழுத்தில் என்னென்ன பெயர்கள் இருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தாள். கணேசன், கணபதி? கங்காதரன்?
அதற்குமேல் யோசிக்க முடியவில்லை.
படத்தில் கதாநாயகன் நாலைந்து தடியன்களை அடித்து உதைத்துக்கொண்டிருந்தான். பின் எப்படித்தான் கதாநாயகியின் மனதில் இடம் பிடிப்பது?
அஞ்சனா முகத்தைச் சுளித்தாள். இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் திரையில் பார்க்கத்தான் சுவாரசியமாக, கிளுகிளுப்பாக இருக்கும். நடைமுறையில் அம்மா மாதிரி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ!
“ஒரே சத்தமா இருக்கு,” என்று முணுமுணுத்துவிட்டு, மெல்ல எழுந்தாள். இருண்டிருந்த தியேட்டரின் கதவிலிருந்து வெளிப்பட்டவளுக்கு ஒரு சிறு கும்பல் கண்ணில்பட்டது.
`என்ன நடக்கிறது இங்கே?’
ஒருவர் தரையில் கிடந்தார். முகம் நீல நிறமாக மாறியிருந்தது. கைகள் விறைத்திருக்க, கண்கள் என்னவோ திறந்தபடிதான் இருந்தன.
அருகில் வேதனை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தவர் அவரது நண்பர் போலும்! “இருதயச் சிகிச்சை நடந்து ஒரு மாசம்கூட ஆகல,” என்று பொதுவாகத் தெரிவித்தார்.
“நகருங்கள், ப்ளீஸ். என்னால் உதவ முடியும்,” என்றபடி, அவர் அருகில் சென்றாள் அஞ்சனா.
அவர்களிருவரும் வீடு திரும்புகையில், கங்கா விசாரித்தாள்: “பாதி படத்திலே எங்கேடி போயிட்டே?”
“நான் போனதும் நல்லதாப்போச்சு. ஒரு உசிரைக் காப்பாத்தினேன்”. நடந்ததை விவரித்தாள். “இந்த reflexology-யால ஒடனே பலன்! அவர் கையில சில எடங்களை அழுத்திப்பிடிச்சேன். ரத்த ஓட்டம் சீராகி, எழுந்து நடந்து போனார். `பை’ அப்படின்னு கையை ஆட்டினார்னா பாத்துக்கயேன்!”
“அப்படியே புண்ணியம்!” தாய் மெச்சிக்கொண்டாள். “அவர் யாருன்னு கேக்கலியா நீ?”
“யாரா இருந்தா என்னம்மா? அவர் எழுந்து நடந்ததும், அங்கே இருந்தவாளெல்லாம் என்னைப் பாத்து சிநேகமா சிரிச்சதே சந்தோஷமா இருந்தது! ஒண்ணும் பேசாம நடந்துட்டேன்”.
வேடிக்கை பார்த்தபடி பேரங்காடியில் நடந்துகொண்டிருந்த அஞ்சனா குரல் வந்த திசையில் திரும்பினாள்.
“ஹலோ! அன்னிக்கு பேர்கூடச் சொல்லாம அவசரமா போயிட்டீங்களே! எனக்கும் கேக்கத் தோணல”.
அவள் முகத்திலும் சிரிப்பு படர்ந்தது. பெயரைச் சொல்லிவிட்டு, “சௌக்கியமா?” என்று விசாரித்தாள்.
“ஒங்க புண்ணியத்தால நல்லா இருக்கேன். வாங்களேன், காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”.
“ஒங்க பேரைச் சொல்லலியே, ஸார்?”
“கௌரிசங்கர்”.
G – யில் ஆரம்பிக்கும் பெயர்! இவருக்கும் தன் அப்பா வயதுதான் இருக்கும். ஒரு கணம் திகைத்தவள், தன்னையே கடிந்துகொண்டாள்.
இது என்ன பைத்தியக்காரத்தனம்?
`வேண்டாம்’ என்று அம்மாவைத் துரத்தியவரைப்பற்றி எதற்காக ஓயாது யோசித்து மூளையைக் குழப்பிக்கொள்வது? அந்த மனிதர் எங்கே, எவளுடன் இருக்கிறாரோ!
“மத்தவங்க எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னப்போ, நீதான் என்னை.,” மார்பில் கையைப் பதித்துக்கொண்டார். “ஒங்க அம்மாவும் அப்பாவும் ஒன்னை நல்லபடியா வளத்திருக்காங்க அஞ்சனா”.
ஏதோ சொல்லவந்தவள், தன்னை அடக்கிக்கொண்டாள். `எனக்கு அம்மா மட்டும்தான்’ என்பதை கண்டவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பானேன்!
“மனுஷனாப் பிறந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யட்டா எப்படி?” என்றாள் அடக்கத்துடன்.
“எனக்கு யாருமேயில்ல,” குழந்தைபோல, சுயபரிதாபத்துடன் கூறினார். “ரெண்டு கல்யாணம். ஒண்ணும் நிலைக்கலே”.
ஒரு முறை அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள். இவ்வளவு பெரியவரிடம் எப்படித் துருவித் துருவிக் கேட்பது!
தன் மனப்பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று காத்திருந்தவர்போல் அவரே தொடர்ந்தார்: “ஒருத்திக்குத் துரோகம் பண்ணினேன். தீர விசாரிக்காம அவளைத் துரத்தினேன்”.
அவரே பேசட்டும் என்று அஞ்சனா காத்திருந்தாள்.
“பெருநோய் அவ்வளவு லேசா பரவற வியாதியில்ல. ரொம்ப நாள், அதுவும் நெருக்கமா இருக்கிறவங்களுக்குத்தான் அந்த வியாதி வர வாய்ப்புண்டு. அது தெரிஞ்சதும், குத்த உணர்ச்சி உறுத்திக்கிட்டே இருந்திச்சு. எனக்கு அவசர புத்தி”.
`இப்போது இந்தப் பேச்சு எதற்கு?’ என்று அஞ்சனா கேட்கவில்லை.
“இன்னொருத்தியை ஏத்துக்க முடியல. அவ கேஸ் போட்டா. எனக்கு..,” தலையைக் குனிந்துகொண்டார். “நான்.. ஆம்பளையே இல்லேன்னு!”
அஞ்சனாவுக்கு அதற்குமேலும் சந்தேகம் இருக்கவில்லை.
`நீங்கள் ஆண்மகன்தான். உங்களுக்குப் பிறந்த பெண் நான்!’ என்று கூறிவிடலாமா?
`எதற்காக?’ என்று அவள் மனம் இடக்கு செய்தது.
துரோகமாம், குற்ற உணர்ச்சியாம்! என்னமாக அளக்கிறார்! பிரயாசைப்பட்டுத் தேடியிருந்தால் அம்மா இருக்கும் புதிய இடத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாதா?
இத்தனை வருடங்களாக அம்மா எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள்! ஏன், தானே கேட்கவில்லையா, `நீ முறையாகக் கல்யாணம் செய்துகொண்டவள்தானா?’ என்று?
இந்த மனிதர் நன்றாகத் துடிக்கட்டும்.
சே! இவருக்கா உதவி செய்தேன்! மற்றவர்களைப்போல, வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்திருக்கலாம்.
“என்னம்மா அஞ்சனா எழுந்துட்டே?”
“எனக்கு அவசரமா ஒரு எடத்துக்குப் போகணும். மறந்தே போயிட்டேன்,” என்றபடி அஞ்சனா அங்கிருந்து விரைந்தாள்.
அவள் போன திசையையே பார்த்தபடி இருந்தவருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. இவளைப் பெற்றவள் தான் கைவிட்ட கங்காதான். அதே சாயல்! வேறு ஒருவரை மணந்து, இவளைப் பெற்றிருக்கிறாள்.
தாலி கட்டிய பெண்ணுக்குத் துரோகம் செய்துவிட்டதாக எண்ணி இவ்வளவு காலமும் துடித்தோமே! எல்லாம் வீண்.
கௌரிசங்கருக்கு அழுகை வரும்போல இருந்தது.
வீடு திரும்புகையில், அஞ்சனா பலவாறாக யோசித்தாள்.
`அம்மா! நான் அப்பாவைப் பாத்துப் பேசினேன்’.
`அவர் யார் தெரியுமா? அன்னிக்கு ஒரு நாள் தியேட்டரில..’
அம்மா என்ன சொல்வாள்?
`கையோட அப்பாவை அழைச்சிண்டு வந்திருக்கமாட்டியோடி?’ என்பாள். கண்களில் ஆர்வம் கொப்புளிக்கும்.
அவர் வந்தால், அம்மாவின் உலகத்தில் அவரும், அவருடைய உலகத்தில் அம்மாவும்தான் இருப்பார்கள், கடந்தகால இழப்பைச் சரிசெய்வதுபோல். இனி, அவளை யார் கவனிக்கப்போகிறார்கள்!
வேண்டாம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதுபோல் ஆகிவிடும். எனக்கு அம்மா வேண்டும்.
“எங்கே போயிட்டே, அஞ்சனா? ரொம்ப இருட்டிப்போயிடுத்தே! வேலை அதிகமா இன்னிக்கு?” அம்மாவின் உண்மையான கரிசனம் ஒரு கணம் அவளை நிலைதடுமாறவைத்தது. சட்டென்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள். `ஆமாம்மா. ரொம்ப வேலை!” என்றாள், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.
நிர்மலா ராகவன்
வேதாவும் தினகரனும் ஒரே இடத்தில் வேலைபார்த்தவர்கள். குடும்ப பாரத்தைச் சுமப்பதால், அவளுக்குக் `கல்யாணம்’ என்ற எண்ணமே எழவில்லை என்றவரை அவருக்குத் தெரியும்.
அரசியல், சினிமா என்று பொது விஷயங்களைப்பற்றிப் பேசி நண்பர்கள் ஆனபோது, `நம் மனைவிக்கு இவளைப்போல் புத்திசாலித்தனமாகப் பேசத் தெரியவில்லையே!’ என்ற சிறு ஏக்கம் எழும். உடனே அடக்கிவிடுவார்.
“நான் எங்கம்மாவோட போயிடப்போறேன்,” என்றுவிட்டு, வேலைமாற்றம் வாங்கிக்கொண்டு வேதா போனபோது, `இவளுக்கு நம்மிடம் பிடித்தம் கிடையாதா!’ என்ற ஏமாற்றம் எழுந்தது.
ஒரு வாரம் சென்றபின், வேதா தொலைபேசியில் அழைத்தாள். “பொழுதே போகலே,” என்றாள்.
அப்படியே அவர்கள் தொடர்பு சில வருடங்கள் நீடித்தது. நோய்வாய்ப்பட்ட மனைவி கோகிலாவைப் பார்த்துக்கொள்வதைப்பற்றி தினகரன் விவரிக்க, ஆறுதலாக ஏதாவது கூறுவாள் வேதா.
மனைவி இறந்தபின்னும் இப்படியே பேசியபோதுதான் தினகரனுக்கு அந்த எண்ணம் எழுந்தது.
அவளை நேரில் சந்தித்தபோது, “நாம்ப ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா, வேதா மேடம்?” என்று கேட்டேவிட்டார்.
அவள் வெட்கப்படுவாள், குனிந்த தலை நிமிராது என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தவருக்கு ஏமாற்றம்.
“யோசிச்சுச் சொல்லட்டா?” என்று பதில் கேள்விதான் வந்தது.
`வருகிற வெள்ளிக்கிழமை நான் வேதாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போகிறேன்,’ என்று ஈ-மெயிலில் தெரிவித்ததோடு சரி. அதற்குப்பின் அப்பாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அழைப்பெல்லாம் கிடையாது.
“இந்த வயசிலே அப்பாவுக்கு இப்படிப் புத்தி போக வேண்டாம்!” பொறுமினான் எம்.லிங்கம்.
“அறுபதாம் வயசில ரெண்டாவது கல்யாணம் நடக்காத அதிசயமா என்ன!” என்று அப்பாவுக்குப் பரிந்து பேசினான் அவனுடைய தம்பி எம்.தேவன். அண்ணன், தம்பி இருவருமே தம் பெயரின் முதல் எழுத்தான `மகா’வைச் சுருக்கி விட்டிருந்தார்கள்.
“அப்படி ஒரு கல்யாணம் மொதல் சம்சாரத்தோட நடக்கிற சமாசாரமில்ல? இந்த மனுசரோ, எப்ப நம்ப அம்மா சாகப்போறாங்கன்னு காத்துக்கிட்டு, இப்படி ஒரு காரியத்தில எறங்கிட்டாரு! அம்மா இருந்த எடத்திலே இன்னொருத்தி!“
புற்றுநோயால் அம்மா அவதிப்பட்டபோது அப்பாதானே கவனித்துக்கொண்டார்!
`இந்த வீட்டிலே நிம்மதியே இல்லே!’ என்றுவிட்டு, மனைவி, இரு குழந்தைகளுடன் வேற்றூருக்கு வேலை மாற்றம் வாங்கிக்கொண்டு, தனிக்குடித்தனம் போனவனுக்கு இந்தக் கரிசனம் எப்படி வந்தது?
“ஏண்டா, தேவா? அம்பது வயசுக்குமேல ஆனவளுக்கு குழந்தை பிறக்காது. இல்லே?” அண்ணன் சந்தேகத்தை வெளிப்படுத்தியபோது, தேவனுக்குச் சிரிப்பு வந்தது. அப்பாவின் சொந்த வீடு, வங்கியில் ரொக்கம்—இதற்கெல்லாம் பங்கு கேட்க இன்னொரு வாரிசு வந்துவிடப்போகிறதே என்ற பயம் இவனுக்கு!
“வயசான காலத்திலே அப்பாவுக்கு பேச்சுத்துணைக்கு ஒருத்தர் வேண்டியிருக்குபோல!”
“பேச ஆள் வேணுமானா, ஏதாவது கிளப்புக்குப் போறது!”
அயல்நாட்டில் குடியுரிமையுடன் வேலை பார்த்துவந்த இளையவனுக்கு அலுப்புத்தட்டியது. “என்ன இருந்தாலும், வீட்டிலே ஒருத்தர் கூடவே இருக்கிறமாதிரி ஆகுமா? யாருமில்லாத வீடு `ஹோ’ன்னு இருக்கும். உள்ளே நூழையவே அலுப்பா இருக்கும். அதோட, தலைவலி, காய்ச்சலுன்னு வந்தா, `இப்போ தேவலியா?’ன்னு அனுசரணையா கேக்க..”. தன் சொந்த அனுபவத்தை வார்த்தைகளாக வடித்தான்.
“அப்பாவை விட்டுக்குடுக்க மாட்டியே! எப்பவுமே நீதான் அவரோட செல்லப்பிள்ளை! ஒன்கூடப் பேச வந்தேன் பாரு!” வெறுப்புடன், தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான் லிங்கம்.
கடந்த இரண்டு நாட்களாக குழம்பியிருந்த மனதிற்குச் சற்று ஆறுதல் அளிப்பான் என்று தம்பியை அழைத்தது தண்டம்.
`யாரோ, எப்படியோ தொலையட்டும்!’ என்று, தொலைக்காட்சியை முடுக்கி, அதில் ஆழ்ந்துபோனான்.
`மணப்பெண் மாதிரியா வந்திருக்கிறாள்!’ முகம் சுளித்தது. பண்டிகை நாட்களில் பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு, அவர் காலில் விழுந்து நமஸ்கரித்த கோகிலா மனதில் வந்துபோனாள்.
“ரெடி?” என்ற வேதாவின் முகத்தில் ஆர்வமோ, துடிப்போ இல்லை. ஏதோ காரியத்தை முடிக்கும் அவசரம்தான் தெரிந்தது.
கசங்கிய காட்டன் புடவை. எப்போதும்போல், கழுத்தில் ஒரு சிறு சங்கிலி. கையில் கடிகாரம். வளை இல்லை. என்ன நாகரீகமோ!
அதற்குமேல் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. “அழகா, கல்யாணப்பொண்ணா லட்சணமா பட்டுப்புடவை, தங்க வளையலுன்னு நீ வரக்கூடாதா, வேதா?”
`நீங்க மட்டும் ஜரிகைக்கரை போட்ட பட்டு வேஷ்டியிலேயா வந்திருக்கீங்க? பேண்ட்-சட்டைதானே! ஒங்க லட்சணத்துக்கு இது போதும்!’ வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள் வேதா.
தான் எது சொன்னாலும், செய்தாலும் புன்னகையுடன் ஆமோதித்த நீண்டகால நண்பன் இல்லை இவர். `மனைவி என்றால் தனது ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவள்’ என்று நம்பி நடக்கும் ஒரு சராசரி கணவர்.
`ஏமாந்துவிட்டேன்!’ என்றெழுந்த எண்ணத்தை ஒரு பெருமூச்சுடன் வெளியேற்றிவிட்டு, அவருக்குப்பின் நடந்தாள் புதுமனைவி.
நிர்மலா ராகவன்
பெண்களிடம் ஒரு விசேஷம். `பிரச்னை’ என்று எதையாவது சொல்ல ஆரம்பித்த உடனேயே அதற்குத் தீர்வு காணும் வழிகளை எடுத்துக் கூறமாட்டார்கள். தீர்வு காணவா பிரச்னைகளைப் பிறரிடம் கூறுகிறோம்? ஒரு விஷயத்தையே பலரிடமும் பலமுறை பகிர்ந்துகொண்டால் ஏதோ ஆறுதல். அவ்வளவுதான்.
பெண்களின் இந்த மனோபாவம்கூட ஆண்களுக்குப் புரிவதில்லை. மனைவியோ, பிற பெண்களோ அரைகுறையாக எதையாவது கூற ஆரம்பித்த உடனேயே அதை எப்படிச் சமாளிப்பது என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த இடைநிலைப் பள்ளியில் நாற்பது பேரில் இரண்டே இரண்டு ஆண்கள்தாம். அவர்களைப்பற்றி நமக்கென்ன! விடுங்கள்.
ஆசிரியர்கள் அறையில் பெண்களின் குமுறல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அங்கிருந்த சுவர்களுக்கு வாயிருந்தால், கதறி அழும்.
பிறரது வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்ள எல்லா ஆசிரியைகளும் ஆர்வம் காட்டினார்கள். நாளைக்கே அவர்களுடைய பிரச்னைகளுக்கு அனுதாபம் காட்ட யாராவது வேண்டாமா? பத்து பேராவது வகுப்பிற்குப் போகாத நேரமெல்லாம் வாய் ஓயாது பேசினார்கள். அனுதினமும்.
திங்கட்கிழமை
“நீ ஒண்ணும் எனக்குப்புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!” கோகிலாவின் குரல் கீச்சென்று ஒலித்தது. அவளுடைய மகள் அப்படித்தான் இரைந்திருப்பாளோ, என்னவோ!
சிறுவயது முதல் பாட்டி வீட்டில் அருமை பெருமையாக வளர்ந்திருந்தாலும், பெற்றவள் தன்னைக் கைகழுவி விட்டதாகத்தான் தாரா நினைத்தாள். அந்த வருத்தம்தான் கோபமாக வெளிப்பட்டது.
இடைநிலைப் பள்ளிக்கு வந்தபின், பெற்றோரிடம் திரும்ப வந்தது ஏதோ தண்டனைபோல் இருந்தது அவளுக்கு. தான் எது செய்தாலும் பாராட்டிய பாட்டி, தாத்தா எங்கே, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் அம்மா எங்கே!
`நீ ஒண்ணும் எனக்குப்புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!’ என்று அழுகைக் குரலில் கத்தத்தான் அவளால் முடிந்தது.
கோகிலா மகளைப் பற்றிய அதே கதையைச் சக ஆசிரியைகளிடம் எத்தனையோ முறை சொல்லிவிட்டாள். அவர்களும் குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டார்கள்.
“பாட்டி-தாத்தாகிட்ட வளர்ந்திருந்தா, அருமையாக இருந்திருப்பாங்க,” பொதுவாகக் கூறினாள் பூமா. “என் மகனுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லே. வேலைக்காரி போட்டிருந்தேன், பிறந்ததிலிருந்தே அவனை வளர்க்க!”
“ரொம்ப அடிச்சாளா?” கம்மிய குரலில் யாரோ கேட்டார்கள்.
அவள் பதில் சொல்வதற்குள் இருவர் குறுக்கிட்டுப் பேசினார்கள்.
“பிள்ளை பெத்து லீவு முடிஞ்சதும் நாம்ப வேலைக்கு வந்துடணும். வீட்டிலே குழந்தையைப் பாத்துக்க சொந்தக்காரங்க இல்லாட்டி என்ன செய்யறது?”
“நாப்கின் மாத்தற வேலையை அடிக்கடி வைக்கிறதுன்னு ஒரு சின்னக் குழந்தையைக் கொன்னுட்டாளாமே ஒரு ராட்சசி! பேப்பரில பாத்தீங்கல்லே?”
“கடவுள் புண்ணியத்திலே எங்க வீட்டிலே அப்படி எதுவும் நடக்கலே,” என்ற பூமாவின் குரலில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஒலிக்கவில்லை. “குழந்தையை அடித்தோ, திட்டியோ செஞ்சா வேலை போயிடும்னு பயம் அவளுக்கு. வீட்டுக்குள்ளே காமெரா போட்டிருந்தோமா! அதனால அவன் பெரியவன் ஆனதும்கூட என்ன தப்பு செஞ்சாலும் கண்டுக்கமாட்டா”.
சிறிது மௌனம்.
வேலைக்காரிகளிடம் வளர்ந்த பிள்ளைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பது அவர்கள் உத்தியோகத்தில் அறிந்ததுதான். இப்போது எல்லா மாணவ மாணவிகளும் அதனால்தானே யாருக்கும் அடங்காமல் இருந்தார்கள்!
“அன்னிக்கு க்ளினிக்கில பாத்தேன். ஒரு ஆறு வயசுப் பையன் ஹாண்ட்ஃபோனில் என்னவோ விளையாடிக்கிட்டு இருந்தானா! அவங்கம்மா அதைப் பிடுங்கப் பாத்தப்போ அவ கையைக் கடிச்சுட்டான்!”
`ஒன் பிள்ளையும் அப்படித்தானோ!’ என்ற ஏளனம் அந்தச் சமாசாரத்தில் தொக்கி இருந்தது.
சண்டை ஆரம்பமாவதற்குள் மணி அடிக்கவே, அவர்கள் கலைந்தார்கள்.
செவ்வாய்
“தோளெல்லாம் ஒரே வலி!” முனகலுடன் அரட்டைக் கச்சேரி ஆரம்பித்தது.
“என்ன ஆச்சு, லாய்?” அனுதாபத்தைவிட உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வமே அக்கேள்வியில் தொக்கி இருந்தது.
முதல் நாள் இரவு, கணவர் குடித்துவிட்டு, வீட்டு வாயிலிலிருந்த சாக்கடையில் விழுந்துவிட, நாலடி ஆழத்துக்குள் இறங்கி அவரைத் தன் தோளில் தாங்கியபடி மாடிவரை தூக்கிப் போனதை விவரித்தாள், தோளைப் பிடித்துவிட்டுக்கொண்டபடி, மிஸஸ் லாய் என்ற சீன ஆசிரியை.
`நானாக இருந்தால், அந்தக் குடிகாரரை அப்படியே விட்டுத் தொலைத்திருப்பேன்!’ என்று தமக்குள் எழுந்த எண்ணத்தை யாரும் வெளியிடத் துணியவில்லை.
“ஆண்கள் வளர்ந்துவிட்ட சிறுகுழந்தைகள்!” கசந்து வந்தது ஒரு குரல். “என் கணவர் எப்போதும் நண்பர்களுடன் கிளப்பில் குடித்துக்கொண்டு இருப்பார். அபூர்வமாக ஒருநாள் வீட்டில் தங்குவார். ஒரே இடத்தில் உட்கார்ந்துகொள்வார், எதையோ எதிர்பார்த்தபடி. அப்போது குழந்தைகள் அவரைக் கண்டுகொள்வதேயில்லை என்று ஆத்திரப்படுவார்”. அவள் அனுபவம் சிரிப்பில் முடிந்தது.
“பசங்களை வெளியில கூட்டிட்டுப் போய், நாலு விஷயத்தைப் பத்திக் கலந்துபேசி – இப்படியெல்லாம் செஞ்சாத்தானே அவங்களுக்கு நம்பளை மதிச்சுப் பேசத் தோணும்!”
“பெண் குழந்தைகள் ரொம்ப மோசம்!” என்றபடி மிஸஸ் கூ தன் கதையை ஆரம்பித்தாள். “நேத்து ராத்திரி என் மகளைப்பிரம்பால் அடிச்சேன். ராத்திரி பூராவும் `ஙொய் ஙொய்’னு அழுகை. சரியான நியூசன்ஸ். என் மகன் அப்படி இருந்ததே இல்லே. என்ன அடிச்சாலும் அழமாட்டான். சமர்த்து!”
பதினைந்து வயதான மகனுக்குப் பிறகு, அல்லோபதி, அக்யூபங்க்சர் என்று பல சிகிச்சைகளுக்குப் பிறகு கடந்த வருடம் பிறந்தது! ஒரே வயதான பச்சைப் பாலகியைப் பிரம்பால் அடிப்பார்களா!
இந்திய ஆசிரியைகள் அதிர்ச்சியுடன் எதுவும் பேசாதிருக்க, அது புரியாது, “பிரம்பால் அடிக்காத குழந்தை ஒழுங்கா வளராது,” என்று தன் வளர்ப்புமுறையைப் பாராட்டிக்கொண்டாள் மிஸஸ் கூ.
`நாம் நல்ல தாயாக இருக்கிறோமா?’ என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் எழ, அன்றைய கும்பல் கலைந்தது.
புதன்
“என் பொண்ணுக்கு மூணு வயசாகுது. நேத்து மத்தியானம் படத்துக்குக் கூட்டிப் போறதா இருந்தேன். `மழை வந்துடும். இல்லாட்டி வெயில் காயும். நம்ப காரை டிரைவரோட அனுப்பறேன்,’ அப்படின்னாரு ஹஸ்பண்ட்”. மூச்சு விட்டுக்கொண்டாள் நர்மதா.
எல்லாரும் சுவாரசியமாகக் கேட்டபடி இருந்தார்கள், அவர்கள் முன்னால் வைத்திருந்த நூடுல்ஸ் ஆறியதைப் பொருட்படுத்தாது.
“எப்பவும் காரிலேயே போனா, ஏழைபாழைங்க படற கஷ்டத்தை அவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறது? பஸ்ஸுக்காக வெயில்லே காத்துக்கிட்டு நிக்கறப்போ, `நான் பாவம்!’னு திரும்பத் திரும்பச் சொன்னா. `பாவம் இல்லே!’ன்னு நல்லா திட்டிட்டேன்”.
“நீ ஒரு நல்ல அம்மா!” மிஸஸ் லாய் சிலாகிக்க, அதை ஆமோதித்து, எல்லாரும் தலையாட்டினார்கள் – வயிற்றெரிச்சலை மறைக்க ஒரு சிறு புன்னகையுடன்.
வியாழன்
“நேத்து எனக்கும், ரவிக்கும் ஒரே சண்டை,” ஆரம்பமே சூடு பிடித்தது. கணவன்-மனைவி சண்டை பூசலென்றாலே சுவாரசியம்தான்.
“எதுக்கு?”
“பின்னே என்ன? சமையல், வீட்டு வேலை, பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறது எல்லாம் என் தலையிலதான். புதன்கிழமை அவரோட முறை — குப்பையை வெளியே கொட்ட. அந்த ஒரு வேலைகூடச் செய்யாம டி.வி பாத்துக்கிட்டு இருந்தா? வந்த கோபத்திலே நல்லா கத்திட்டேன்”.
“திரும்பக் கத்தினாரா?”
“அதான் இல்லே. `இஸ்மயில் சொன்னான், இந்தப் பெண்களால எப்பவும் தொல்லைதான்’ அப்படின்னார், என்னை மட்டம் தட்டறதா நினைச்சுக்கிட்டு. `ரெண்டு பொண்டாட்டி கட்டினவனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்’னு பதிலடி குடுத்தேன்!”
அப்போது எழுந்த சிரிப்போசையில் சுவர்கள் நிமிர்ந்தன. `நாம்ப இப்படி பேசறமாதிரி, ஆம்பளைங்களும் நம்பளைப்பத்திப் பேசுவாங்களா?’ என்று அப்பெண்கள் மனத்தில் எழுந்த கேள்விக்கு விடையும் கிடைத்தது.
நிர்மலா ராகவன்
பல வருடங்களுக்குப்பின் அன்று சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன். நாகரிகமான தோற்றம். ஆனால், முகத்தில் ஏதோ கோபம், இல்லை, வருத்தம். தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் உடனே பிடிபடவில்லை. ஏன்தான் வயதாகிவிட்டதோ என்ற அர்த்தமற்ற எரிச்சல் பிறந்தது.
எப்போதும்போல் விளையாட்டு மைதானத்தில் பார்த்ததால், சற்று பொறுத்துத் தெளிவு பிறந்தது.
நோர்லேலா! என் மகளின் பால்யத் தோழி.
என்னைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொண்டாள். “ஆன்ட்டி!” என்று கூவியபடி சிமெண்டு பெஞ்சில் என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.
என் மகள் சுந்தரியைப்பற்றி விசாரித்தாள்.
“அதோ, ஊஞ்சல்ல ஒக்காந்து, சிவப்பு கவுன் போட்டிருக்கே, அவளோட பொண்ணுதான். இப்போ ரெண்டாவது பிரசவத்துக்கு வந்திருக்கா,” என்று தகவல் தெரிவித்துவிட்டு, “ஒனக்கு எத்தனை குழந்தைங்க?” என்று விசாரித்தேன்.
“நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லே,” என்றாள், சிரிக்காமல்.
“என்னது?”
“எனக்கு கல்யாணம் ஆகல,” என்று அலட்சியமாகச் சொன்னவள், “பண்ணிக்கவே போறதில்ல,” என்றாள் உறுதியாக.
மேலே ஏதும் கேட்டுவிடப்போகிறேனோ என்று பயந்தவள்போல், , “சும்மா காத்தாட நடந்துவந்தேன். ஒங்களைப் பாத்ததில சந்தோஷம்,” என்றபடி எழுந்து நடந்தாள்.
நான் மௌனமாக இருந்தேன்.
“யாரு பாட்டி?” என்று விசாரித்தாள் பேத்தி.
“ஒன்னைமாதிரி குட்டியா இருந்தப்போ, ஒங்கம்மாவோட ஃப்ரெண்ட்,” என்றேன்.
அப்போது அச்சிறுமிகள் இருவரும் சேர்ந்து விளையாடினாலும், நட்பு இருக்கவில்லை. அவ்வளவு ஏன், நோர்லேலாவுக்கு எவருடனும் இணைந்து விளையாடக்கூடத் தெரியவில்லை.
`நான்தான் ஃபர்ஸ்ட் வந்தேம்மா. நோர்லேலா என்னை இடிச்சுத் தள்ளிட்டு, ` நான்தான் ஃபர்ஸ்ட்!’ அப்படின்னு பொய் சொல்றா!” அழுகைக்குரலில் சுந்தரி கூறியது உண்மைதான் என்று அவர்கள் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் தெரிந்திருந்தது.
“போனாப்போறா, பாவம்!” என்று சமாதானப்படுத்தினேன்.
“பொய் சொல்றது தப்புதானேம்மா?” நான் சொல்லிக்கொடுத்த பாடத்தை எனக்கே புகட்டினாள் என் எட்டு வயதுப்பெண்.
“அவகூட தினமும் வராளே ஆரிஸ், அவ நோர்லேலாவை ரொம்ப அடிக்கறா, பாவம்!” அதற்குமேல் என்னால் சொல்ல முடியவில்லை.
நோர்லேலாவின் பெற்றோரை அங்கு எவரும் பார்த்தது கிடையாது. அந்த இந்தோனீசிய வேலைக்காரிதான் அவளுக்கு ஒரே துணை.
ஒருமுறை, நோர்லேலா ஓடிவர, என்மேல் மோதிக்கொண்டாள். நான் புன்னகைத்தேன். பின்னால் வந்துகொண்டிருந்த ஆரிஸ் அவள் கையைப் பிடித்திழுத்து ஒரு வயதே நிரம்பிய அந்தக் குழந்தையின் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள்.
“விடு, விடு,” என்று நான் அலறியபோது, “ஒங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவ ரொம்ப நாட்டி!” என்றாள். அடியை நிறுத்தவில்லை.
இந்த வன்முறை அடுத்த பத்து வருடங்கள் தொடர்ந்தது. `நமக்கெதற்கு வம்பு!’ என்று என்னைப்போலவே பல தாய்மார்களும், பாட்டிகளும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.
அதற்கும் முடிவு வந்தது.
`வீட்டுக்குப் போகலாம், வா!’ என்று ஆரிஸ் அழைத்ததைச் சட்டைசெய்யாது நோர்லேலா விளையாடிக்கொண்டே இருக்க, `என்னையா அலட்சியம் செய்கிறாய்!’ என்று ஆத்திரத்துடன், அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள் ஆரிஸ். சிறுமியின் அலறல் மைதானம் முழுவதும் கேட்டது.
ஐந்து வயதே ஆகியிருந்த சீ சூனை அவனைப் பார்த்துக்கொள்ளவென்று நியமிக்கப்பட்டிருந்தவள் `உப்புமூட்டை’ தூக்கிக்கொண்டு வருவாள், அருமையாக. இப்போது அவன் நோர்லேலாவின் நிர்கதியைப் பார்த்து, பெரிதாக அழ ஆரம்பித்தான்.
ஒரு குழந்தைக்கு இருந்த மனிதாபிமானம்கூட நமக்கில்லையே என்று வெட்கமாகப்போயிற்று எனக்கு. இந்தக் கொடுமைக்கு எப்படி முடிவு கட்டுவது?
சற்று இருட்டியதும், நோர்லேலாவின் வீட்டுக்குப் போய், அழைப்பு மணியை அழுத்தினேன்.
“எஸ்?” கதவைத் திறந்தவளிடம், “நான் தினமும் பார்க்கில் உங்கள் மகளைப் பார்க்கிறேன். அந்தக் குழந்தையை வேலைக்காரி சித்திரவதை செய்கிறாள். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான்,” நான் முடிப்பதற்குள் உள்ளேயிருந்து வந்தவர் நோர்லேலாவின் தந்தையாக இருக்கவேண்டும். வயதானவராக தோற்றமளித்தார்.
“என்ன விஷயம்?” என்று விசாரித்தவுடனே, “உள்ளே வாங்களேன்!” என்று உபசரித்தார்.
“சும்மா பார்த்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்,” என்றபடி நடையைக் கட்டினேன்.
இவர்களிருவரையும் நான் பார்த்ததே இல்லையே என்று என் யோசனை போயிற்று. அதுதான் ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறோமே, இனி வேலைக்கு வந்தவள் பாடு என்று விட்டுவிட்டார்கள்!
அடுத்த சில நாட்கள் நோர்லைலா விளையாட வரவில்லை. அவள் வந்தபோது, அப்பா உடன் வந்தார். என்னைப் பார்த்ததும், முகம் சிறுத்துப்போயிற்று.
வாயை வைத்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. “ஆரிஸ் வரலியா?”
அவர் கையை வீசினார். “போயிட்டா!” குரலில் வெறுப்புடன் நிம்மதியும் கலந்து வந்தது.
பெற்ற குழந்தையைச் சரியாகப் பராமரிக்கத் தெரியவில்லையே என்று பிறர் கேலி செய்யும் அளவுக்கு நடந்துகொண்டுவிட்டோமே என்ற அவமானம். விரைவில் என்னைக் கடந்துபோனார்.
அதன்பின்னர் இருவரையுமே காணவில்லை. அப்பெண்ணை ஹாஸ்டலில் விட்டுவிட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள்.
நோர்லேலா கூச்சல் போட்டபடி விளையாடும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் ஏக்கம் என்று என் கற்பனை போயிற்று. அவள் என்று அப்படி மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறாள்?
நான் பேச்சை ஆரம்பித்தேன். “கல்யாணம்தான் வேண்டாங்கிறே. ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமே!”
“ஐயோ! வேண்டவே வேண்டாம். நான் வேலைக்குப்போறப்போ, எவகிட்டேயாவது விட்டுட்டுப் போகணும். அவ அடிச்சுக் கொல்வா!” சிறுவயதில் பட்ட துன்பங்கள் அவளை எவ்வளவு தூரம் காயப்படுத்தியிருக்கிறது!
பிறகு, மெல்லிய குரலில் சொன்னாள்: “ஆன்ட்டி! அன்னிக்கு நீங்க மட்டும் எங்க வீடு தேடி வந்து, அந்த அம்மாகிட்ட நான் அனுபவிச்ச கொடுமையைப்பத்தி சொல்லியிருக்காட்டி, என்னைக் கொன்னே போட்டிருப்பா அந்தப் பழிகாரி!”
அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. ஏன் பல வருடங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் எல்லாரும் என்கிறாளோ? உங்கள் குழந்தையை யாராவது படுத்தினால், பொங்கி எழமாட்டீர்களா என்கிறாளோ?
“குழந்தைங்க பாரம்னு நினைக்கிறவங்க தத்து எடுத்துக்கக் கூடாது”. அவள் குரலில் ஏக்க இறக்கம் இல்லை. இயந்திரம் பேசுவதுபோல் இருந்தது.
இவள் யாரைச் சொல்கிறாள்?
அவளே விளக்கமும் அளித்தாள். “நான் யாரோ அனாதையாம். எங்கேயிருந்து பொறுக்கினாங்களோ! சாப்பாடு போட்டு, படிக்கவும் வெச்சா அவங்க கடமை முடிஞ்சுட்டதுன்னு நெனைச்சாங்க எங்க வீட்டிலே!” அவள் குரலில் அளப்பற்ற வெறுப்பு. “நான் அன்பா வளரலே. சின்ன வயசில எனக்குக் கிடைக்காததை இன்னொரு குழந்தைக்கு என்னால எப்படி ஆன்ட்டி குடுக்க முடியும்?”
கண்கள் சொருகியிருந்தன. “எப்பவாவது, வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா நம்பகூட பேச ஒருத்தன் இல்லியேன்னு இருக்கும். ஆனா, அவனும் அடிக்க ஆரம்பிச்சா? எனக்கு வழிகாட்ட யாரும் இல்லியே! அதான் கல்யாணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம்னு இப்படியே இருக்கேன்!”
சம்பந்தம் இல்லாமல், “வீட்டுக்கு வாயேன், லேலா. சுந்தரி ஒன்னைப் பாத்தா சந்தோஷப்படுவா!” என்று ஏதோ சொன்னேன். மனம் கனத்திருந்தது.