ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன்
காலை நேரம் சூரியன் இப்போதுதான் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருந்தான். ஆற்றோரம் அமர்ந்துகொண்டு ப்ளாப் … ப்ளாப் … ப்ளாப் … எனத் தண்ணீரில் தன் கால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தது ப்ராங்கி என்ற அந்தத் தவளை. தன்னுடைய குழந்தைகளான தலைப்பிரட்டைகள் வேகமாக நீந்துவதை கவனித்துக் கொண்டிருந்தது.
பட … பட … பட்… பட … சிறகடித்துக் கொண்டு ப்ராங்கி இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் வந்து நின்றது அந்த வெண்புறா. கண்கள் கூசுமளவிற்கு வெண்மை. ப்ராங்கி புறாவைக் கண்டது. புறாவின் பேரழகும் பளீர் வெண்மையும் ப்ராங்கியை வியப்பில் ஆழ்த்தியது. புறா மிகவும் தாகத்தோடு இருப்பது போலத் தெரிந்தது.. காரணம் தன் சிவந்த சிறிய அலகால் தண்ணீரை வேகவேகமாகப் பருகியது.
அதே நேரம் ப்ராங்கியின் குழந்தைகளில் இருவர் ப்ராங்கியிடம் நீந்தி வந்து “அம்மா, அந்தப் பறவை எங்களை அலகால் தீண்டிவிட்டது எங்களுக்கு வலிக்கிறது” என்று தங்களின் வால்பகுதியைக் காட்டி முறையிட்டன. காயத்தோடு வந்த தன் குழந்தைகளைக் கண்ட ப்ராங்கிக்கு கோபம் தலைக்கேறியது. துள்ளிக் குதித்து புறா நின்ற இடத்திற்குச் சென்றது.
“ஏய்… நீ யார்? எங்கிருந்து வருகிறாய். இந்த ஆற்றங்கரையில் இதுவரை உன்னை நான் கண்டதில்லை” என்று புறாவிடம் கேட்டது ப்ராங்கி.
“என் பெயர் டிப்லர், நானும் என்னுடைய தோழிகளும் பல மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் பந்தயப் பறவைகள். என் தோழிகள் சற்று தொலைவில் இளைப்பாறுகின்றார்கள். நான் தாகத்திற்குத் தண்ணீர் தேடி இங்கே வந்தேன்” என்றது டிப்லர் என்ற அந்த வெண்புறா.
“வந்தது சரி, நீர் பருகும்போது கவனமாக இருக்கக்கூடாதா? பார் … நீ உன் அலகால் என் குழந்தைகளைக் காயப்படுத்தி விட்டாய்” என்று அழுதுகொண்டிருந்த தன் குழந்தைகளைக் காட்டியது ப்ராங்கி.
“நான் நீர் அருந்தும்போது அவர்கள் குறுக்கே வந்துவிட்டார்கள்” என்றது டிப்லர் மிகச் சாதாரணமாக.
“அவர்கள் விபரமறியாத சிறு பிள்ளைகள் நீதானே கவனமாக இருக்க வேண்டும்?” என்றது ப்ராங்கி.
“அடடா ரொம்பப் பேசாதே நான் நீர் அருந்துகையில் எனக்கு இடைஞ்சலாக வந்தது அவர்களின் குற்றம்” என்று குரலை உயர்த்தியது டிப்லர்.
“கவனக் குறைவாக இருந்துவிட்டு மேலும் உன் தரப்பில் தவறில்லை எண்பது போலப் பேசுகிறாயே?”
“போதும் நிறுத்து. நானும் என் தோழிகளும். இது போல் பல நீர் நிலைகள் கண்டு கடந்து வந்தவர்கள். எனக்கு நீ கவனத்தைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம். நீயும் உன் பிள்ளைகளும் இந்த அழுக்கு சேற்றுப் பகுதியை விட்டால் வேறிடம் அறியாதவர்கள்.”
பதிலுக்கு பதில் பேசும் டிப்லரிடம் பேசிப் பயனில்லை என்றுணர்ந்தது ப்ராங்கி. தன் காயப்பட்ட குழந்தைகளை அழைத்து கரையோரம் இல்லாமல் தூரமாகச் சென்று விளையாடும்படி சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர எண்ணியது.
“நாளை நானும் என் தோழிகளும் இங்கே வந்து நீராடிவிட்டு புறப்படுவோம். அப்போது நீயும் உன் பிள்ளைகளும் இன்றுபோல வந்து தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கட்டளையிட்டுச் சொன்னது டிப்லர்.
அமைதியாகச் சென்ற ப்ராங்கியை வீணாக வம்பிழுப்பதுபோல இருந்தது டிப்லரின் கட்டளை. ப்ராங்கி மௌனம் களைந்து, “நீங்கள் வந்து நீராடிவிட்டு செல்லுங்கள் அதற்காக நாங்கள் இருப்பது தொந்தரவு என்று எப்படி நீ சொல்லலாம்?” என்று படபட வென தன் ஆதங்கத்தைக் கொட்டியது.
“ஏய் … நாங்கள் ஒரு புதிய பந்தயத்திற்கு தயாராகிறோம். எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் முழு கவனத்துடன் நாங்கள் செயல்படவேண்டும். உனக்கு பந்தயம் என்றால் என்னவென்று தெரியுமா? எப்படித் தெரியும்? பறப்பதற்கு உன்னிடம் இறக்கைகள் இருந்தால்தானே நீ பந்தயங்களில் கலந்துகொள்ள முடியும்? உன் அழுக்கு நிறமெங்கே … என் வெண்மை நிறமெங்கே … என் அழகுக்கும் திறமைக்கும் நீ சிறிதும் இணை இல்லை. வழியை விடு … சொன்னதை கவனத்தில் கொள்” என்று சொல்லிவிட்டு பட படவென சிறகடித்துப் பறந்தது டிப்லர்.
அன்று முழுவதும் அமைதியற்ற மனநிலையில் திரிந்து கொண்டிருந்தது ப்ராங்கி. மாலை நேரம். சூரியன் தன் வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தான். மௌனமாகக் கரையோரம் அமர்ந்திருந்தது ப்ராங்கி. முகத்தில் சோகம் நிறைந்திருந்தது. மீலு முதலை வசிக்கும் ஆற்றுப்பகுதியில்தான் ப்ராங்கியும் வசித்து வருகின்றது. தனது முதுகுச் சவாரிக்கு விலங்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மீலு சலனமில்லாமல் அமர்ந்திருக்கும் ப்ராங்கியைக் கண்டது.
“ஏய் ப்ராங்கி … எப்பவும் மகிழ்ச்சியா துள்ளிக் குதிச்சிட்டிருப்ப… இப்ப என்ன … முகத்தை உம்முன்னு வச்சிருக்க? உன் குழந்தைகள் எல்லோரும் நலம்தானே?” என்று ப்ராங்கியின் மௌனத்தை விசாரித்தது மீலு.
“என் குழந்தைகள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் மீலு …” என்று கூறிவிட்டு சற்றுநேர மௌனத்திற்குப் பின் “ஏன் மீலு, நான் ரொம்ப அசிங்கமா, விகாரமா இருக்கேன் இல்ல?” என்று கேட்டது. விட்டால் கண்ணீர் விட்டு அழுதுவிடும் அளவிற்கு ப்ராங்கி தனக்குள் சோகத்தைப் பொத்தி வைத்திருந்ததைப் புரிந்துகொண்டது மீலு. ப்ராங்கி கேட்ட கேள்விக்கு என்ன பதில்சொல்வதென்று தடுமாறியது, காரணம் ப்ராங்கி எப்போதும் போலத்தான் இப்போதும் இருக்கிறது. ஏன் இந்தத் திடீர் மன உளைச்சல் என்றறிய முற்பட்டு, “நீ ஒண்ணும் அப்படி இல்ல … சரி நான் கேட்பதற்கு பதில் சொல்”
“என்ன?” என்று சோகம் மாறாமல் வினவியது ப்ராங்கி.
“திடீர்னு உனக்கு ஏன் இந்த மனக்குழப்பம்?” என்று கேட்டது மீலு.
சிறிய மௌனத்திற்குப் பிறகு அன்றையதினம் காலைப் பொழுதில் ஆற்றங்கரைக்கு புதுவரவாக வந்த வெண்புறாவான டிப்லரைச் சந்தித்த கதையைச் சொல்லத் தொடங்கியது ப்ராங்கி. “இன்று காலை வரை எனக்கு இந்த குழப்பம் இல்ல மீலு. அந்த டிப்லர்தான் அவள் மிகவும் அழகானவள் என்றும், பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசு வாங்குவாள் என்றும் சொல்லி, நான் அழகில்லாதவள் என்றும் போட்டி பந்தயங்களில் பங்கெடுக்கும் திறனற்றவளேன்றும் சொன்னாள். யோசித்தேன், டிப்லர் சொல்வதும் உண்மைதானே. அவள் எவ்வளவு வெண்மையாக இருக்கிறாள் தெரியுமா? அப்படியே நிலாவில இருந்து இறங்கி நேரே இந்தக் கரைக்கு வந்தவள் மாதிரி இருந்தாள். என்னைப்பார் சேறும் சகதியோடும் செடி கொடிகள் மண்டிய இந்த ஆற்றோரம் வாழ்ந்து கொண்டு இருப்பதால் என் புறத்தோலும் ஏறக்குறைய அந்த அழுக்கு நிறத்திலேயே இருக்கிறது. மேலும் அவள் அளவுக்கு உயர உயரப் போகவோ பல மணிநேரங்கள் தொடர்ந்து பறக்கவோ என்னிடம் இறக்கைகள் கிடையாது. இருந்தால்தானே பந்தயங்களில் பங்கெடுக்க முடியும்?” என்று கூறி புன்னகை மறந்த தன் பார்வையை மீண்டும் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் மீது செலுத்தியது.
ப்ராங்கி சொன்னவற்றை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த மீலு பதில் பேசத் தொடங்கியது. “ப்ராங்கி, இப்பொ நான் எது சொன்னாலும் அதில் இருக்கும் உண்மை உனக்குப் புரியாது, மாறாக தற்காலிகமாக உனக்கு ஆறுதல் சொல்வது போலத்தான் தோன்றும். உன் மனமும் அமைதி கொள்ளாது. ஆனால், நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல். டிப்லர் நாளை இங்கே வருவாளா?”
“ஆமாம். அவள் ஒரு பந்தயத்திற்காகப் பறந்து வந்தவள் நீர் அருந்துவதற்காகக் காலையில் இங்கே வந்தாள். இந்த இடத்தில தண்ணீர் நிறைய இருப்பதைக் கண்டுவிட்டு தன் தோழிகளோடு நாளை மீண்டும் இங்கே நீராட வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறாள்.”
“சரி … உனக்கும் டிப்லருக்கும் எப்படி பேச்சு தொடங்கியது, என்னென்ன பேசினீர்கள் என்பதை தொடக்கத்திலிருந்து சொல்வாயா?” என்று கேட்டது மீலு.
“உன்னிடம் சொல்லாமலா … சொல்கிறேன் கேள்” என்று தொடங்கிய ப்ராங்கி காலையில் தனக்கும் டிப்லருக்கும் இடையில் நடந்த உரையாடல், குழந்தைகளுக்கு டிப்லரால் ஏற்பட்ட காயம், தனது கோபம், கொந்தளிப்பு, ஆதங்கம், டிப்லர் குறையாகச் சொன்ன தன் அழகு, நிறம், தன் இருப்பிடம் மற்றும் டிப்லரின் பந்தயம், தோழிகள், டிப்லரின் கட்டளை என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தது. நிறைவாக, “ஏன் மீலு, சேற்றுப் பகுதியில் வாழ்வது கேவலமா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டது ப்ராங்கி.
“அப்படியொன்றும் இல்லை. இயற்கையில் எல்லா இடங்களும் சமம்தான். மேலே பறந்து களிக்கும் டிப்லர் போன்றோரின் பார்வையில் வேண்டுமானால் பேதங்கள் இருக்கலாம். உயிர்கள் வாழும் இடங்களில் பேதங்கள் இல்லை.”
“ம்… நீ சொல்லிவிட்டாய். கேட்டுக்கொண்டிருந்த என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை” என்று ப்ராங்கி சொன்னபோது அதன் கண்களில் நீர் நிறைந்திருந்தது.
“அழாதே ப்ராங்கி. நாளை டிப்லர் வரட்டும். பேசுவோம்” என்ற மீலு தனது முதுகுச் சவாரிக்கு பயணிகள் யாரும் வருகிறார்களா என்று பாதையைப் பார்த்தது. ப்ராங்கி தன் தலைப்பிரட்டைகளை உணவு உண்ண அழைத்துக் கொண்டிருந்தது.
மறுநாள் அதிகாலையில் சொன்னதுபோல தன் தோழிகளுடன் ஆற்றங்கரைக்கு நீராட வந்தது டிப்லர். டிப்லரும் அதன் தோழிகளும் நீர்நிலையின் அருகில் வரிசையாக நின்று நீராட ஆயத்தமானார்கள். இதற்காகவே காத்திருந்த மீலு அங்கே வந்து, “வாருங்கள் விருந்தாளிகளே, … நீங்களெல்லாம் யார் … உங்களை நான் இதுவரை கண்டதில்லையே?” என்றது.
“என் பெயர் டிப்லர். நாங்கள் பந்தயப் பறவைகள்” என்றது டிப்லர்.
“சரி சரி… என்ன வேலையாக இங்கே வந்திருக்கிறீர்கள்?”
“நாங்கள் நீராட வந்திருக்கிறோம். நீராடிவிட்டு புதிய பந்தயத்திற்கு புறப்படப் போகிறோம்.”
“மகிழ்ச்சி… உங்கள் பந்தயம் சுகமாக இருக்கட்டும். ஆனால், இங்கே நீங்கள் நீராடுவதற்கு முன் எங்கள் ராணியாரிடம் அனுமதி பெற வேண்டும் பெற்றுவிட்டீர்களா?” என்று கேட்டது மீலு.
“ராணியா… யார் அது? அனுமதி பெறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாதே” என்றது டிப்லர்.
“கொஞ்சம் பொறுங்கள் எங்கள் ராணியார் இங்கேதான் இருக்கின்றார் நான் அழைக்கிறேன்” என்று கூறி “ப்ராங்கி மகாராணியாரே, கொஞ்சம் வெளியே வாருங்கள்” என்று உரக்கச் சொன்னது மீலு.
இதனைச் செவிகளில் வாங்கிய ப்ராங்கி வியப்புடன் தன் இருப்பிடத்திலிருந்து துள்ளிக் குதித்து வெளியில் வந்தது. டிப்லர் மற்றும் அவளின் தோழிகளையும் மீலுவையும் கண்டு அப்படியே நின்றது ப்ராங்கி.
மீலு தொடர்ந்தது, “மகாராணி, இவர்கள் இங்கே நீராடவேண்டுமாம் நீங்கள் அனுமதிப்பீர்களா?”
மீலுவின் இந்தக் கேள்வியால் குழப்பமடைந்தது ப்ரங்கி. தான் ராணியுமில்லை தன்னுடைய அனுமதியும் தேவையில்லை இருந்தாலும் மீலு ஏன் இப்படிக் கேட்கிறான் என்று ஒரு கணம் யோசித்தது, சரி இதில் ஏதோ பொருள் இருக்கிறது என்று புரிந்துகொண்ட ப்ராங்கி, “அதை நீ கேட்டால் போதுமா? நீராட வந்தவர்களல்லவா என்னிடம் கேட்க வேண்டும்!” என்றது.
டிப்லரும் குழப்பம் கொண்டது. மீலுவிடம், “இவர்தான் உங்கள் ராணியா? நான் நேற்று இவர்களிடம் பேசினேன் ஆனால், அப்போது அவர்கள் இதைச் சொல்லவில்லையே” என்றது.
“எங்கள் ராணியார் தற்பெருமையை விரும்ப மாட்டார்கள். நீங்கள் வந்த வேலையைப் பாருங்கள்” என்றது மீலு.
ப்ராங்கியிடம் தயங்கித் தயங்கி வந்தது டிப்லர். “வணக்கம் ராணியே” என்று தலை வணங்கியது “மன்னிக்க வேண்டும், நேற்று நான் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிட்டேன். இப்போது நாங்கள் இங்கே நீராட அனுமதி தருவீர்களா?” என்று கேட்டது.
“யாரையும் உதாசீனப்படுத்தும் பழக்கம் எனக்கில்லை. நீங்கள் நீராடி விட்டுச் செல்லலாம்” என்று சுருக்கமாகப் பதில் சொன்னது ப்ராங்கி.
டிப்லரும் தோழிகளும் நீராடிவிட்டு, மீலு மற்றும் ப்ராங்கி இருவரிடமும் புறப்படும் முன் விடை பெற்றார்கள். அவர்களை வாழ்த்தி வழியனுப்பினார்கள் மீலு மற்றும் ப்ராங்கி.
புறப்பட்ட சில நொடிகளில் தங்களின் சிறகுகளால் காற்றை உந்தித்தள்ளி மேலே மேலே பறந்து கொண்டிருந்தார்கள் டிப்லர் மற்றும் குழுவினர். டிப்லரின் சிறகுகள் அசைந்தாலும் சிந்தனை அசையாமல் நேற்றைய நிகழ்வை அசைபோட்டது “நேற்று நான் இத்தனை பேசியதற்கு என்னை அந்த ஆற்றில் நீராடக்கூடாது என்று சொல்லியிருக்கலாம் ஆனால், ப்ராங்கி அப்படிச் சொல்லவில்லை. பார்வைக்கு எளிமையாக இருந்தாள் ப்ராங்கி என்று என்னவெல்லாம் பேசிவிட்டேன். இனியொரு முறை யாரிடமும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே பறந்தது டிப்லர்.
டிப்லர் குழுவினர் சென்ற பிறகு மீலுவிடம் கேட்டது ப்ராங்கி “ஏய்.. மீலு, ஏன் என்னை ராணி என்று அவர்களிடம் சொன்னாய்?”
“நேற்று நீ அழுது கொண்டிருந்தாய், இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறாய். இந்த மகிழ்ச்சியை உன்னிடம் பார்க்கத்தான் அப்படிச் சொன்னேன்” என்றது மீலு.
“ஆனால், நீ சொன்னதில் உண்மை இல்லையே?”
“உண்மை இல்லை என்பது உனக்கும் எனக்கும் தெரியும், டிப்லருக்குத் தெரியாது. திரும்பிச் செல்லும்போது டிப்லர் ஒரு பாடம் படித்திருக்கும்” என்றது மீலு.
“அது என்ன?”
“நேற்று உன்னை உதாசீனப் படுத்திப் பேசிய அதே டிப்லர் இன்று உன்னை மதித்துப் பேசினாள். டிப்லருக்கு நீ யார் என்பது அவசியமில்லை அவளுடைய மதிப்பு உயர்ந்தது என்று உன்னிடம் காட்டவேண்டும் என்பதே அவளது நோக்கமாக இருந்தது. இன்று நீயும் மதிப்பில் உயர்ந்தவள் என்று தெரிந்தபோது உன்னிடம் பணிந்து பேசினாள்” என்றது மீலு.
“நானும் ஒன்றைப் புரிந்துகொண்டேன் மீலு”.
“அது என்ன?”
“டிப்லரின் மதிப்பைக் காண்பிக்கத்தான் அவள் என்னை உதாசீனப் படுத்தியிருக்கிறாள். அப்படியானால் உண்மையில் என்னிடம் ஒரு குறையுமில்லை. இது புரியாமல் நேற்று முழுவதும் அழுதுகொண்டே என் பொழுதை வீணாக்கிவிட்டேன்” என்று சிரித்தது ப்ராங்கி.
The post ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .