ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு
ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு
எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க
எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.
கல்யாணிப்பசு என்ன ஒரு அழகு!
நீண்ட அழகியக் கண்கள்! வெள்ளை நிறம்,
நெற்றியில் ஒரு சுழி, நீண்ட வால், என்ன ஒளி, அப்படிப் பார்த்து பார்த்து பொறாமை
அதிகமாகிக் கொண்டே போனது. எலிக்குட்டி ஓடி வந்து கல்யாணிப்பசுவின் மூக்கை ஒரு கடி
கடித்தது.
கல்யாணிப்பசுவுக்கு அதிர்ச்சி. உடனே
அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆகா! இந்த எலிக்குட்டிக்கு இவ்வளவு திமிரா? இதுக்கு
ஒரு பாடம் கற்பித்துவிட்டு தான் வேறு வேலை என்று நினைத்தது. தட்டுத்தடுமாறி
எழுந்து எலியின் பின்னால் ஓடியது.
எலிக்குட்டி சுவரிலுள்ள ஒரு பொந்தில்
போய் ஒளிந்து கொண்டது. கல்யாணிப்பசு சுவரை முட்டி மோதிக் கீழே தள்ளிவிடப்
பார்த்தது.
இந்த சத்தம் கேட்டு சின்னுவும்
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஓடிவந்தார்கள். நாய்க்குட்டி குரைத்தது.
பூனைக்குட்டி எலிக்குச் சவால் விடுத்தது. இந்தக் களேபரத்துக்கிடையில் எலி வேகமாக
ஓடி வந்து இன்னொரு தடவை கடித்து விட்டு ஓடி ஒளிந்து விட்டது.
பசு மறுபடியும் சுவரில் முட்டியது.
பூனைக்குட்டி அந்தப் பொந்துக்குள் கையை விட்டுத் துழாவியது. பூனைக்கும் ஒரு கடி
கிடைத்தது.வேதனையில் கையைப்
பின்னுக்கிழுத்துக் கொண்டு அழுதது. நாய்க்குட்டி பயங்கரமாகக் குரைத்தது.
இந்த கலவரத்துக்கு மத்தியில் எலி அவர்களுக்கு இடையில் புகுந்து ஓடித் தப்பித்து
விட்டது.
ஒரு முறை மெகர்பா கோழி கதைப்பாட்டியிடம்
பிடிவாதம் பிடித்தது. ஊர் சுற்றிப் பார்க்கப் போக வேண்டும் என்று சொல்லியது.
“ மற்ற பறவைகளைப் போல என்னால்
பறக்கமுடியாது.. அதனால் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும்
கல்யாணிப்பசுவும் கதைப்பாட்டியும் கூட வரவேண்டும்.. நான் எப்போதும் முட்டைகள்
கொடுக்கிறேன்..இல்லையா? எனக்காக இதைச் செய்யக்கூடாதா? “
சின்னு சொன்னாள்,
“ஐய்யோ நான் ஸ்கூலுக்குப் போகணும்..”
பூனைக்குட்டி சொன்னது,
” நான் வந்தால் ஆல்பெர்ட்டினுடைய சட்டையை
எலி கரும்பித் தின்று விடுமே..” என்று பூனைக்குட்டி சொன்னது.
“ அப்படியென்றால் ஆல்பெர்ட்டும் கூட
வரட்டும்..” என்றது கோழி.
“ ஐய்யோ ஆடுகளைக் நீலகண்டன் குள்ளநரி
கொன்று விடுமே? “ என்றான் ஆல்பெர்ட்.
கல்யாணிப்பசு சொன்னது,
“ நான் வந்தால் இந்தக் கிராமத்தில் உள்ள
குழந்தைகளுக்கு யார் பால் கொடுப்பார்கள்? தண்ணீர் சேர்த்தாலும் கூட யாரும்
வேண்டாம் என்று சொல்வதில்லை..”
அதைக் கேட்ட கோழி, தரையில் விழுந்து
புரண்டது.
“ க்கொக்கோ கொக்க்கோ “ என்று கூப்பாடு
போட்டது.
கடைசியாக கதைப்பாட்டி,
“ நாய்க்குட்டியை அழைத்துக் கொண்டு போ “ என்று சொன்னார்.
அப்படி மெகர்பா கோழியும்
நாய்க்குட்டியும் பயணம் புறப்பட்டார்கள்.
பல ஊர்களைச் சுற்றிப் பார்த்தார்கள். சில
ஊர்களில் மக்கள் சும்மா சுற்றித் திரிகிற கோழியைச் சூப்பு வைத்துக் குடிக்கலாம்
என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
நாய்க்குட்டி அவர்களை விரட்டியடித்தது.
இரவானதும் மெகர்பா உயரமான மரக்கொம்பில் உட்கார்ந்து கொள்ளும்.. நாய்க்குட்டி
மரத்தினடியில் உள்ள பொந்தில் படுத்திருக்கும்.
ஒரு நாள் கோழியைப் பார்த்த ஒரு குள்ளநரி, இரவில்
வந்து சொன்னது,
“ ஏ. அழகியே உன்னுடன் பேச
வேண்டும்..என்று ஆசைப்படுகிறேன்.. கீழே வாயேன்..”
அப்போது மெகர்பா சொன்னது,
“ குள்ளநரி அண்ணே.. நீ மேலே ஏறி வா..கீழே
என்னுடைய பாதுகாவலன் இருக்கிறான்.. தட்டி எழுப்பினால் மேலே வருவதற்கு வழி
சொல்லித்தருவான்..”
குள்ளநரியின் வாயில் எச்சில் ஊறியது.
ஆகா! எப்பேர்ப்பட்ட பேச்சு! என்ன ஒரு அழகு! அதன் இறைச்சி எவ்வளவு ருசியாக
இருக்கும்.ஆவல் அதிகமாகி கீழே படுத்துக்
கிடந்த நாய்க்குட்டியை எழுப்பியது.
“ ஏய்.. காவல்காரா! மேலே போவதற்கு வழியைக்
காட்டு..”
நாய்க்குட்டி ஒரே பாய்ச்சலில்
குள்ளநரியின் வாலைக் கடித்துத் துண்டாக்கியது.
அவ்வளவு தான். குள்ளநரி ஓடியே போய்
விட்டது.
அதோடு மெகர்பா கோழியின் ஊர் சுற்றும்
ஆசையும் முடிந்தது. காலை விடிந்ததும் நாய்க்குட்டியுடன் கதைப்பாட்டியிடம் வந்து
சேர்ந்தது.
மங்கலம்
என்ற ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் வாழ்ந்து வந்தார்கள். தினம் தினம் வேலை செய்தால்
தான் சாப்பிடமுடியும். ஒருநாள் தாத்தாவுக்கு உளுந்துவடை சாப்பிட வேண்டும் என்று ஆசை
வந்து விட்டது. உடனே தாத்தா பாட்டியிடம் சொன்னார். பாட்டிக்கும் ஆசை வந்து விட்டது.
உளுந்து இருக்கிறதா? தெரியவில்லையே. இருக்கும் டப்பாக்களில் தேடினார். ஒரு டப்பாவில்
ஒரு கைப்பிடி அளவு உளுந்து கிடந்தது. இரண்டு வடை சுடலாம். உளுந்தை தண்ணீரில் ஊற வைத்தார்
பாட்டி. தாத்தா அதை ஆட்டுரலில் ஆட்டிக் கொடுத்தார்.
ஆட்டுரலிலிருந்து
உளுந்து மாவை வழித்து எடுத்து ஒரு சட்டியில் போட்டார் தாத்தா.
“ . இரண்டு வடை தான் வரும்.. ஒரு
வடை உமக்கு ஒரு வடை எனக்கு.. என்ன தெரிஞ்சுதா..” என்று கத்தினாள் பாட்டி. ஏன்னா தாத்தாவுக்கு
காது கொஞ்சம் மந்தம்.
பிறகு பாட்டி வெங்காயம் பச்சைமிளாகாய்
கறிவேப்பிலை எல்லாம் பொடிப்பொடித் துண்டுகளாய் நறுக்கி மாவில் போட்டுப் பிசைந்தார்.
அடுப்பில் வாணலியை வைத்தார். கொஞ்சூண்டு இருந்த கடலை எண்ணெயை ஊற்றினார்.
மாவை எடுத்து உள்ளங்கையில் தட்டி
நடுவில் அழகாக ஒரு ஓட்டையைப் போட்டார். அதை எண்ணெய்ச்சட்டியில் போட்டு வேக வைத்தார்.
அவர் நினைத்த மாதிரி இரண்டு வடைக்குத்தான் மாவு இருந்தது. முதல் வடையை எடுத்து தட்டில்
வைத்து விட்டு இரண்டாவது வடையைப் போட்டார். போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது
தட்டிலிருந்த வடையைக் காணோம். சுற்றிச் சுற்றிப்பார்த்தார்.
” ..
இங்கன இருந்த வடையைப் பார்த்தீரா? “ என்று கேட்டார்.
தாத்தா
பதில் சொல்லவில்லை.
வாயைத்
திறந்தால் வாயில் வடை இருப்பது தெரிந்துவிடுமே. அப்படியே அமுக்கரான் மாதிரி உட்கார்ந்து
மெல்ல வடையை அசை போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாட்டிக்குத் தெரிந்து விட்டது.
“ கேட்டீரா..
இந்த வடை எனக்கு.உம்மரு கணக்கு முடிஞ்சுது .”
என்று
பாட்டி கத்தினாள். தாத்தாவுக்குக் கேட்டதோ கேட்கவில்லையோ. அவர் மேலே கூரையைப் பார்த்தபடி
அசை போட்டார். பாட்டிக்கு ஒரு சந்தேகம். ’ இந்த வடையையும் தாத்தா எடுத்துட்டார்னா..
என்ன செய்றது. வடையை எடுத்து தட்டில போடாம முந்தியில் முடிஞ்சுக்குவோம்னு’ நினைத்தாள்.
வடை வெந்ததும்
அப்படியே கரண்டியில் எடுத்து முந்தியில் போட்டாள். அட, போடும்போது வடை தவறி கீழே விழுந்து
விட்டது. விழுந்த வடை அப்படியே சக்கரம் மாதிரி ஓடியது. பாட்டி எழுந்து வடையின் பின்னால்
ஓடினாள். பாட்டி ஓடுவதைப் பார்த்த தாத்தாவும் வடையைப் பிடிக்க ஓடினார்.
வடை ஓடி
வீட்டு வாசலைத் தாண்டி விட்டது. அப்போது பாட்டி,
“ ஒழுங்கா
நில்லு இல்லைனா..அவ்வளதான்..” என்று மிரட்டினாள். வடை ஓடியபடியே,
“ ஓட்டைவடை
நான்
உளுந்து
வடை நான்
உலகம்
சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை
நான்..
குட்டிக்கரணம்
போட்டாலும்
குதித்து
குதித்து வந்தாலும்
பிடிக்கமுடியாது
என்னைப்
பிடிக்க முடியாது..”
என்று
பாடியது. பாட்டி ஓடினாள். பின்னால் தாத்தா ஓடினார். ஆனால் ரொம்பதூரம் ஓட முடியவில்லை.
அப்படியே நின்று விட்டார்கள்.
காடுமேடு
எல்லாம் ஏறி ஓடியது உளுந்துவடை.
கல் மண்
பார்க்காமல் உருண்டோடியது. எதிரே ஒரு காகம் பறந்து வந்தது. உளுந்துவடையைப் பார்த்ததும்
ஆவலுடன் கொத்தி எடுக்க பாய்ந்து வந்தது. காகம் அருகில் வரும்வரை காத்திருந்து டக்கென்று
ஒரு புதருக்குள் ஓடி விட்டது உளுந்து வடை. புதருக்குள்ளேயிருந்து,
“ ஓட்டைவடை
நான்
உளுந்து
வடை நான்
உலகம்
சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை
நான்
பறந்து
பறந்து வந்தாலும்
பாடிப்
பாடி வந்தாலும்
பிடிக்கமுடியாது
என்னைப்
பிடிக்கமுடியாது “
என்று
உளுந்துவடை பாடியது. காகம் ஏமாந்து திரும்பிச்சென்றது. புதருக்குள்ளிருந்து பாய்ந்து
சென்றது உளுந்து வடை. புதரில் படுத்திருந்த குள்ள நரி பின்னாலேயே பிடிக்க வந்தது. குள்ளநரிக்குப்
பழைய பஞ்சதந்திரக்கதை ஞாபகம் வந்தது.
அப்போதே
வாயில் எச்சில் ஊறியது.
உளுந்து
வடை உருண்டு மரத்தின் மீது ஏறிக்கொண்டது.
“ ஓட்டை
வடை நான்
உளுந்து
வடை நான்
உலகம்
சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை
நான்
பாய்ந்து
பாய்ந்து வந்தாலும்
பாட்டுப்பாடச்
சொன்னாலும்
பிடிக்கமுடியாது
என்னைப்
பிடிக்கமுடியாது “
என்று
பாடியது.
கீழே இருந்த குள்ளநரி என்னென்னவோ நல்ல வார்த்தைகள் சொல்லிப்பார்த்தது.
வடை அசையவில்லை.
அப்போது
பெரிய காற்று அடித்தது. காற்றில் கிளைகள் வேகமாக ஆடின. வடை அப்படியே பறந்து போய் ஒரு
ஓலைக்குடிசைக்கு முன்னால் விழுந்தது. அங்கே படுத்திருந்த நாய் எழுந்து மோப்பம் பிடித்து
கவ்விக்கொள்ள ஓடி வந்தது.
உடனே
உளுந்துவடை எழுந்து மறுபடியும் ஓடியது. பின்னாலேயே நாய் துரத்தியது.
” ஓட்டைவடை
நான்
உளுந்து
வடை நான்
உலகம்
சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை
நான்
துரத்தித்
துரத்தி வந்தாலும்
நாலுகாலில்
வந்தாலும்
பிடிக்கமுடியாது
என்னைப்
பிடிக்கமுடியாது ”
என்று
பாடியபடியே ஓடியது.
ஓட்டம்னா
ஓட்டம். அப்படி ஒரு ஓட்டம். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு ஓடுவோம் என்று நினைத்தது உளுந்துவடை.
அப்படியே எதிரில் தெரிந்த வீட்டுக்குள் போய் தட்டில் படுத்து உறங்கியது.
உறக்கத்திலேயே,
“ . ஓட்டைவடை
நான்
உளுந்து
வடை நான்
உலகம்
சுத்திப் பார்க்கப்போகும்
ஓட்டைவடை
நான்
ஓடி ஓடி
விரட்டினாலும்
பறந்து
பறந்து வந்தாலும்
குதித்து
குதித்து வந்தாலும்
துரத்தித்
துரத்தி வந்தாலும்
பிடிக்கமுடியாது
என்னைப்
பிடிக்கமுடியாது ”
பாடியது.
எங்கே
போச்சு? எப்படி வந்தது? என்று ஆச்சரியப்பட்ட பாட்டிவடையை பிய்த்து வாயில் போட்டார் பாட்டி.
” என்னைப்
பிடிக்க முடியாது..” பாடிய படியே பாட்டியின்
வயிற்றுக்குள் பத்திரமாகப் போனது உளுந்துவடை.
சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியின்
கிராமத்தில் ஆல்பெர்ட் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். ஆல்பெர்ட்டுக்கு மனைவியும்
இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். ஞாயிறு தோறும் குடும்பத்தோடு சர்ச்சுக்கு
போகும்போது நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சர்ச்சின் முற்றம் வரை போகும்.
ஒரு நாள் ஆல்பெர்ட் ஓடி வந்தான்.
அவனுக்குப் பின்னால் ஒரு மலைப்பாம்பும் விரட்டிக் கொண்டு வந்தது. மலைப்பாம்பைப்
பார்த்தவுடன் சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் பாய்ந்து
கதைப்பாட்டியின் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்கள். நய்க்குட்டியின் வாலில்
தொங்கியபடி பூனைக்குட்டியும் ஓடியது.
நாய்க்குட்டி,
“ க்க்க்க்ர்ர்ர்ர் “ என்று உறுமியது.
கதைப்பாட்டிக்குப் பயந்து பெரிய சண்டை எதுவும் வரவில்லை. ஆல்பெர்ட் சொன்னான்,
“ கிராமத்து மக்கள் தீ வைத்துக்
கொளுத்திய போது, பாம்பைக் காப்பாற்றியது நான் தான் கதைப்பாட்டி.. இப்போது இது
என்னையே விழுங்க வருகிறது... இது சரிதானா? சொல்லுங்கள்..”
மலைப்பாம்பு சொன்னது,
“ பசித்ததனால் தான் கதைப்பாட்டி.. வயதான
காலத்தில் கவலைப்பட வேண்டாம்.. இந்த ஆலமரத்திடமும், அந்த ஆற்றிடமும்,
கல்யாணிப்பசுவிடமும் கேட்டால் போதும்.. மனிதர்கள் மனிதர்களுக்குச் சாதகமாகவே
சொல்வார்கள்.. அதனால் கதைப்பாட்டி நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம்..”
ஆல்பெர்ட் ஆலமரத்திடம் கேட்டான்.
கம்பீரமான காற்றின் சத்தத்தில் ஆலமரம் தீர்ப்பு சொன்னது,
“ மனிதன் தானே. அப்படித்தான் செய்வான்.. மனிதனை
விழுங்கினால் போதாது.. கடித்து சவைத்து சாப்பிட வேண்டும்.. சோர்வைப் போக்கும்
நிழல் தரும் மரத்தையே வெட்டி எறிகிற கெட்டவன்..”
கல்யாணிப்பசு மேய்ந்து கொண்டிருந்த
இடத்திலிருந்தபடி தலையைக்கூட உயர்த்திப் பார்க்காமல் சொன்னது,
“ பாலையெல்லாம் ஒட்டக்கறந்து அதில்
தண்ணீர் கலந்து விற்கிறவர்கள் மனிதர்கள்.. விழுங்கிவிடு.. மனித வர்க்கத்தை
அப்படியே விழுங்கணும்.. தெரிஞ்சுதா? “
ஆற்றிடம் கேட்டபோது, ஆறு மகிழ்ச்சியுடன்
கடகடவெனச் சிரித்து,
“ தாகத்துக்குக் குடிக்கும் தண்ணீரில்
அத்தனை குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டி மோசமாக்குவது மனிதர்கள் தான்..
நன்றியில்லாதவர்கள்.. விழுங்கிவிடு.. பாம்பே..”
என்று சொன்னது.
அப்போதுஆல்பெர்ட்டின் மனைவி கதறி அழுது
கொண்டே ஓடி வந்தார். அவர் பாம்பிடம்,
“ கணவரில்லாமல் நான் எப்படி வாழமுடியும்?
என்னை முதலில் விழுங்கி விடு..”
என்று சொன்னார்.
பாம்புக்குப் பரிதாபம் தோன்றியது. என்ன
ஆனாலும் பெண்ணல்லவா? பாவம். பாம்பு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தது. அதைச் சொல்லி
ஒரு துளி மண்ணை வாரிப்போட்டால் யாராக இருந்தாலும் இறந்து விடுவார்கள். இரண்டாவது மந்திரத்தைச்
சொல்லி மண்ணைப் போட்டால் அவர்கள் உயிர் பெற்று விடுவார்கள்.
ஆல்பெர்ட்டின் மனைவி மந்திரம் சொல்லி
மண்ணையள்ளி பாம்பின் மீது போட்டார்.
பாம்பு செத்துப் போய் விட்டது.
கதைப்பாட்டி இதையெல்லாம் பார்த்தும்
கேட்டும் மூக்கில் விரலை வைத்தபடி அப்படியே இருந்தார்.
சின்னுவும், நாய்க்குட்டியும்,
பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடும்போது கசுமலா காக்காவும் வந்தது. தன்னையும் விளையாட்டில்
சேர்க்க வேண்டும் என்று சண்டை போட்டது. கல்யாணிப்பசு சொன்னது,
“ உனக்கு வெட்கமாக இல்லையா கசுமலா..
இந்தச் சின்னப்பிள்ளைகளோடு விளையாட ஆசைப்படுகிறாய்..”
கசுமலாவுக்கு அது பிடிக்கவில்லை.
கோபம் கொண்ட கசுமலா பூனைக்குட்டியின் தலையில் ஒரு கொத்து கொத்தியது. பூனைக்குட்டி
‘ மியாவ் ‘ என்று அழுது கொண்டே நாய்க்குட்டியின் அருகில் சென்றது. நாய்க்குட்டி, ‘
பௌ ‘ என்று சின்னுவை அழைத்தது. சின்னு காக்கா மீது கோபப்பட்டாள். கசுமலா சிணுங்கிக்
கொண்டே ஆற்றங்கரைக்குப் போய் விட்டது. ஆற்றில் ஆழமில்லாத பகுதிகளில் நிறைய வாத்துகள்
நீந்திக் குளித்துக் கொண்டிருந்தன. நல்ல வெள்ளை நிறம். ஒரு அழுக்கு கூட இல்லை. தன்னுடைய
நிறமோ? கருப்பு. யாருக்கும் கருப்பு நிறம் பிடிக்கவில்லை. அதனால் தான் நிறையப் பேருக்கு
வாத்துகளை மிகவும் பிடித்திருக்கிறது.
காக்காவும் ஆற்றில் முங்கிக் குளித்தது.
பல நாட்களாக ஆலமரத்தடிக்குப் போகவில்லை. நிறைய நாட்களுக்குப் பிறகும் கருப்பு நிறம்
மாறவேயில்லை. அதை நினைத்துக் கவலைப்பட்டது கசுமலா காக்கா. நண்பர்களைத் தேடி திரும்பிச்
சென்றது. பூனைக்குட்டியும் நாய்க்குட்டியும் காக்காவின் குளியலைக் கேட்டு கை தட்டிச்
சிரித்தார்கள். காக்கா கவலையுடன் கதைப்பாட்டியிடம் கேட்டது,
“ கதைப்பாட்டி ஏன் நான் வெள்ளையாகவில்லை?
“
“ காக்கா குளிச்சால் கொக்காக மாறாது
கசுமலா.. எல்லோருக்கும் இயற்கை கொடுத்த சில அடிப்படையான விசயங்களை மாற்ற முடியாது...கருப்பு
நிறத்தை விட வெள்ளை நிறம் உயர்வு என்று நினைப்பதினால் தான் பிரச்னை.. கருப்பு நிறத்துக்கு
ஏழு நிறங்களும் அழகு கசுமலா காக்கா.. நமக்கு இயற்கை எதைக் கொடுத்திருக்கிறதோ அதை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டு நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளணும்.. “ என்று கதைப்ப்பாட்டி சொன்னார்.
அதைக் கேட்ட காக்காவின் கண்கள்
கலங்கின. அதைப்பார்த்த சின்னு ஓடிப்போய் கசுமலா காக்காவைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம்
கொடுத்தாள்.