Normal view

Received before yesterday

புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம்

          பொழுது விடிந்ததும் வாசல் தெளித்துக் கொண்டிருந்த மல்லிகாவின் நினைவில் மார்கழி மாதக் குளிர் தாண்டி மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. 


என்ன செய்வது….  என்ன செய்வது….  என ஓயாது மனம் புலம்பிக் கொண்டிருந்தது.
         

முகக் குறிப்பறிந்து…. என்னாச்சசு மல்லிகா?  எனக் கேட்ட கணவனின் கேள்விக்குப் பதில் தராது தண்ணீர் தெளிப்பதை  இன்னும் வேகப்படுத்தினாள். 
         

என்னாச்சாம் …  என்னாச்சு… இவர் சரியாக இருந்தால் இந்தக் கவலை இருக்குமா?
         

தன் ஆற்றாமையை வெளிப்படுத்த  தண்ணீர் தீர்ந்த ஈயக்குண்டாவைத்  தூர வீசினாள் மல்லிகா.
         

வீசிய வேகத்தில் குளிருக்கு ஒடுங்கிப் படுத்திருந்த நாய் மீது பட்டவுடன் அது வள்ளென்று குரைத்து வலியில் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடியது.
         

சோறாக்க அடுப்புப் பற்ற வைத்த கரும் புகையுடன் இவள் கண்ணீரும் கலந்து முகத்தை மேலும் கருப்பாக்கியது.  
         

வழக்கம் போல்  என்ன செய்வது..?  என்ன செய்வது..?  என வாலருந்த பல்லியாய் மனது துடிதுடித்தது.
         

மகளுக்குத் திருமணமாகி இதோ முதல் பண்டிகையாய் பொங்கல் வருகிறது.
         

என்ன செய்வது?
         

ஆடு மாடு விற்றும் அடுப்பில் இருந்த அண்டாவையும் அடகு வைத்துக் கல்யாணம் செய்தாயிற்று. இனி சீருக்கு என்ன செய்வது? மகளுக்கு இல்லையென்றாலும் மருமகனுக்காவது ஏதாவது செய்ய வேண்டுமே!
         

பொன் வைக்கும் இடத்தில் பூ வை என்பார்கள்.  இன்று பூ வாங்குவதற்குக் கூட காசு இல்லாதவளாய் ஆனேனே!
         

யோசித்து யோசித்து எதுவும் செய்ய வழியின்றியும் பொறுப்பற்ற கணவனை நினைத்தும் அடுப்பங்கரையில் வெந்து கிடந்தாள் மல்லிகா.
         

பணம் நம்மளோட பிரச்சனை. அதுக்காகப் பொங்கலுக்கு மகளக் கூப்பிடாம இருக்க முடியுமா? என்றது மனது.
         

பெரியாசுபத்திரியில் மருத்துவம் பார்க்கும் தனக்குத் தெரிந்த டாக்டர் வரச்சொல்லி அழைப்பு வந்ததால் தன்னினைவை அடுப்பங்கரையிலிலேயே இறக்கிவைத்து விட்டு ஓடினாள்.
         

இதோ பொங்கலுக்கு அழைக்க மகள் வீட்டுக்குப் புறப்பட்டாள் மல்லிகா


பாரதி….. மகளைக் கூப்பிட்டவாறே கதவு திறந்து உள்ளே சென்றாள்.


எதிர்பாராத  வரவால் மகிழ்ச்சியில் தாயை அனைத்துக்கொண்டு அப்பா வரலை…. எனக் கேட்டதுக்குப் பதில் தராது
நல்லாயிருக்கியா? மாப்பிள்ளை எங்கே? எனக் கேட்டவாறே  கண்களால் தேடிக்கொண்டிருந்தாள்..


இல்லம்மா? இன்னக்கி  நேரத்திலேயே ஆபிஸ் கிளம்பிட்டாங்க. நீ வருவேண்ணு சொல்லியிருந்தா இருந்திருப்பாங்கம்மா…
மகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு கவலை முகத்தோடு இருப்பதைக் கவனித்த பாரதி.,

ஏம்மா எனக் கேட்க..
ஒன்னுமில்ல என வறண்ட பதில் தரும்போதே கண்கள் நீர்க்குளமானதைப் பார்த்ததும் பதறிப் போனாள் பாரதி.

ஏம்மா? என்னாச்சு? என அடுக்கிய கேள்விக்கு
பண்டிகைக்கு நேரமா வந்திடுங்க!  மாப்பிள்ளைகிட்டயும் சொல்லிரு .
முன்னாடி நாளே வந்திருங்க எனச் சொல்லிக் கொண்டே கையில் சுருட்டி வைத்திருந்த பணத்தை நீட்ட 

பணம் எப்படிம்மா கிடைச்சுது? யார் தந்தாங்க? எவ்வளவு வட்டிக்கு வாங்குன? எனக் கேள்வியால் தொடர…..


பதறாத பாரதி அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. பிரசவத்துல நிறைய ரத்தம் போகும் போது அவங்களுக்கு ரத்ததானம் செய்வேனில்லையா? இப்போ ஐம்பதாவது முறையா கொடுத்ததப் பாராட்டி இந்தப் பணத்தைக் கொடுத்தாங்க. வச்சுக்கோ என கைகளில் தினித்தாள் மல்லிகா.
அம்மாவின் சேவையையும் பொங்கலுக்கான பணத்தையும் கண்டு தாயைக் கட்டிக் கொண்டு அழுத மகளின் கண்ணீரைக் கண்டதும் தன் கண்களிலிருந்து தானாகவே வழிந்த கண்ணீரில் திருப்தியும் அன்பும்  வழிந்தது.


இந்த இருவருக்காக பொங்கலின் விடியலும் காத்துக் கொண்டிருந்தது பெருமையாக!


சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் நா.பரமசிவம்

தமிழ் இணைப் பேராசிரியர்,
 

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர் கல்லூரி),
 

திண்டல், ஈரோடு.

 

The post புதிய விடியல்|சிறுகதை|முனைவர் நா.பரமசிவம் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான்

    கொஞ்சும் குளிர் காற்று தரையில் படர்ந்தது. பறவைகள் விடியல் மகிழ்வில் ஒலி எழுப்பி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.


இரவுப்பொழுதில் ஆட்டோ ஓட்டிய களைப்பில் அல்லாபகஷ் மாமு கண் விழிக்க முடியாமல் காலை பஜர் தொழுகைக்கு எழுந்தார். மாமு எழுந்த அரவம் கேட்டு ஜெய்த்தூன் மாமியும் கண் விழித்தாள்.
 

சுபஹுத் தொழுகையை நிறைவு செய்து மாமு அஸ்ஸலாமு அலைக்கும்….. என்று கூறி வீட்டில் நுழைந்தார். ஏல நல்லா சூடா பால் காய்ச்சி எடுத்துட்டு வா! என்று மாமியிடம் சொன்னதும் மாமி இதோ கொண்டுவருகிறேன் என்று மாமு வரும் முன்பே  பால் காய்ச்ச தொடங்கியவள் ஆவி பறக்க
பால் செம்பினைக் கொடுத்தாள்.
 

ஐந்து வயது குழந்தையாக இருக்கும் போது தாய் தந்தையை இழந்தவர் மாமு. சிறுவயதில் மதுரையில் கோரிப்பாளையத்தில்
குடியிருப்பைக் கொண்டவர். ஆதரவற்ற நிலையில் தன் உடன் பிறப்புகளான சகோதரிகளை நம்பி வாழ்க்கை நிலையை  திருச்சிக்கு நகர்த்தினார்.


மாமுக்கு சின்ன வயசுல இருந்து வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டம்.  அல்லல் பட்ட பாடு.ரிக்ஷா ஒட்டுவதிலிருந்து தியேட்டர்ல டீ காப்பி விக்கிறது வரைக்கும் எல்லா வேலையும் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் நெறஞ்சமனசுசோட செய்தவர் மாமு. மாமுக்கு கோழி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். ஆடு, கோழி, வாத்து என்று ரகரகமாக  வளர்த்தார். மாமு வீட்டில் மீன் குழம்பு வைக்க வேண்டும் என்று சொன்னால் விரால் மீன், தேளி மீன் போன்றவற்றை வாங்கி வந்து ஓரிரு நாட்கள்  வளர்த்து அதை குழம்பிற்கு பயன்படுத்துவார். அப்படிப்பட்ட வகையில் இயற்கையின் மீது ஈடுபாடு கொண்டவர். நாச்சுவை கருதி உண்பதில் கெட்டிக்காரர்.
 

வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து கஷ்டத்தை பார்த்து வாழ்ந்த மாமு திருச்சிக்குத் திரும்பினார்.
மாமுவின் அக்கா அவள் தோழி  வீட்டிற்குச் செல்வது வழக்கம். அப்பொழுது அவர்  முதன் முதலாக  ஜெய்தூன் மாமியை ஒரு வேங்கை மரத்தடியில் கண்டதும் இருவருக்கும் காதல் வயப்பட்டது. மாமுவிற்கு வயது 16. மாமிக்கு வயது 14. இப்படிப்பட்ட பருவ காலத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது.


காதலில் பல்வேறு தடைகள் வந்தபோதும் மாமு  ஒருபோதும் கைவிடுவதாக இல்லை அப்படிப்பட்ட பலமானதாக இருந்தது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த காதல். பல சிக்கல்களுக்கு அப்பால் 50 ரூபாய் சீதனமும் ஒரு அண்டா சீரும் கொடுத்து மாமியை திருமணம் செய்து கொடுத்தார் மாமியின் தந்தை. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் மாமி. சோளம், கடலை,கம்பு,நெல், வாழை என்று பருவங்களுக்கு ஏற்ப விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவள். மாமியின் தந்தை ஏதோ ஒரு சூழலில் தன் நிலங்களை இழந்து ஏழ்மை நிலைக்கு ஆளானார். உடனே, துவரங்குறிச்சியில் இருந்தவர்கள் திருச்சியை நோக்கி குடிபெயர்ந்தனர்.


இருவரும் வேறு வேறு ஊரைச் சார்ந்துதான் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் கிருபை திருச்சியில் வைத்து இருமனதையும் ஒருமனமாக்கின்னான்.


காலப் பெருவெளி ஓட்டத்தில் மாமிக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.  தன்னுடைய அக்கா பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் நினைத்து பாதுகாத்து அரவணைத்து ஒற்றுமையுடன் வளர்த்து வந்தாள் மாமி.


ஒவ்வொரு மகன்களும் ஒவ்வொரு நிலைக்குச் சென்று வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை கடந்து வாழ்ந்து வந்தனர்.
 மாமு மிகவும் துடிப்பானவர். குடிப்பழக்கம் இல்லாத உத்தமர். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். திரையில் வெளியிடப்படும் எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு அதிக ஆர்வம். ஒரு திரைப்படத்தை 10 முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பதைப் போல் அனுபவம் கொள்பவர் மாமு.


எத்தனையோ தொழில்கள் செய்து லாப நட்டங்களை அடைந்து பின் ஆட்டோ வாங்கி ஓட்டினார். தினமும் மாமிக்கும் மாமுக்கும் ஒரே அன்பு சண்டைதான் வீட்டில் நடக்கும்.
 ஒருநாள் மாமுக்கு காலை 11 மணியளவில் ஆட்டோ சவாரி வந்தது அலைபேசியில். அவரும் வெளியே கிளம்பத் தயாரானார்.


ஏ மாமு! நில்லுயா!


என்னடி!


ஏய் பால் வாங்க காசு குடுயா!


ஒரு நாளைக்கு எத்தனை தடவைடி கேட்ப?
 

உனக்குத்தான் பால் வாங்குறோம் நாங்களா குடிச்சுக் கொண்டே இருக்குறோம்!


காலையில மதியம் சாயங்காலம் நைட் என 4 நேரம் நீதான் டீ கேக்குற..
 இதுல தயிர் வேற கேட்கிற!


இந்தா ஐம்பது ரூபாய் புடி இன்னு 50 ரூபாய் கொடு!


இல்ல முடியாது 50 ரூபாய் வைத்து எல்லாத்தையும் வாங்கு!


என்று சொல்லிவிட்டு மாமு சவாரிக்கு கிளம்பினார். அன்புச் சண்டைக்குப் பஞ்சமே இல்லை வீட்டில். வீட்டிற்கு வரும் பேரப்பிள்ளைகளுக்கு ஒரே சிரிப்பு தான் இவர்களின் சண்டையைப் பார்த்து. மாமு விற்கு மொத்தம் பத்துப் பேர பிள்ளைகள். அதில் நான்காவது பெயரன் சென்னையில் புகழ் மிகு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான். மாமிக்கும் மாமுக்கும் அந்தப்பெயரன் என்றாலே தனிப் பிரியம் தான். சொல்லும் வேலைகளை தட்டாமல் முகம் சுளிக்காமல் செய்வதால் யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்.
காலங்கள் ஓட ஓட மாமாவிற்கு எழுபத்தி ஆறு வயதை நெருங்கிக் கொண்டே மூப்பருவம் அடைந்தார். இருப்பினும் மனதில் மட்டும் ஊக்கத்திற்கும் மன உறுதிக்கும் அளவே இல்லை. 76 வயதிலும் ஆட்டோ ஓட்டி தான் தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டார். காப்பாற்றினார். தன் பிள்ளைகளிடம் சென்று காசு கேட்க அவருக்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட வைராக்கியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர் மாமு. ஒருநாள் காலையில் மாமு தயிர் வாங்க கடைக்குச் சென்று கொண்டிருந்தார். செப்பலை தத்தித்தத்திக் கொண்டு நடந்தார். அவ்வழியே காய்கறி வாங்க வந்த அவரின் நான்காவது பெயரன்  தன் பாட்டியாகிய ஜெய்த்தூன் மாமியிடம் 300 ரூபாய் கொடுத்து நல்ல செருப்பு மாமுவை வாங்கி   போடச்சொல்லு என்று சொல்லி விட்டு அவனும் சென்னைக்குப் புறப்பட்டான்.


15 நாட்கள் கடந்தன. ஒருநாள் திடீரென  மாமுவின் கண்கள் எல்லாம் மஞ்சள் நிறமாக மாறியது. மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தில் மாமுவிற்கு மஞ்சள் காமாலை இருப்பது உறுதியானது. நாட்டு மருந்து குடிக்கச் சென்றார். குடித்தும் பயனில்லை. எண்ணைய் தேய்த்துக் குளித்தும் பயனில்லை.  அடுத்த நாள் காலையில் திடீரென மயக்க நிலையை அடைந்து தலையை நிலத்தில் சாய்த்தார்.


“மாமு…..மாமு…. என்னாச்சு  மாமு….. மாமு… என்று மாமி அலறினாள்.


கையில் காசு இல்லாத கடுமையான சூழலில் கூட மாமுவின்  மகன்கள் தனியார் மருத்துவமனையில் வைத்து
மருத்துவம் பார்த்தனர்.


மருத்துவர்களோ இருபத்தி நான்கு மணி நேரம் கழிந்தால் தான் எங்களால் எதுவும் சொல்ல முடியும் என்று கைவிரித்து விட்டனர்.


ஆறு மணி நேரம் சென்ற பிறகு மாமாவிற்கு விழிகள் திறந்தது. இயல்புநிலை அடைந்து வார்த்தைகள் குழறியது. இருப்பினும் ஓரிரு வார்த்தைகளை தெளிவாகவே பேசினார்.


காமாலையின் முதிர்ச்சி என்பது மூளையை அடைந்தது என்பதால் அன்றிரவே மாமு இயற்கை எய்தினார். ஊர் கூடி வீடு அழுதது. எங்கு நோக்கினும் அழுகை சத்தம் தான்.


ராஜநடை கொண்டு இறுதி ஊர்வலம் திருச்சி துருப்பு  பள்ளியில் நல்லடக்கம் செய்தனர்.


மாமு மாமியை காதல் திருமணம் செய்தவர். இவர்களின் அன்பு என்பது ஒரு பரஸ்பரம் கலந்தது. மாமு இறந்த அன்று முதலாக புலம்புவதை நிறுத்தவே இல்லை மாமி.


மாமுவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை மகன்கள் சிறப்பாக செய்தனர். காலவோட்டத்தில் மாமிக்கு மாமு போனதை நினைத்து உடல் நலம் சரியில்லாமல் போனது. எந்த நேரமும் அவரின் சிந்தனைதான்.  அவரைப் பற்றியே எந்நேரமும் பேச்சு. உண்ணும் சோறு உடலில் ஒட்டவில்லை. மாமியின் பிள்ளைகள் மாமியை கவனிக்காத கவனிப்பே இல்லை. இருப்பினும் அவள் மனமும் உடைந்து. அவர் இல்லை என்பதை மனம் ஏற்கவில்லை.


மாமு இறந்த நான்கே மாதங்களில் உண்ணாது, உறங்காது அவளும் இயற்கை  மரணம் அடைந்தாள்.மாமுவின் குடும்பத்தினர் மனதால் அடையாத துக்கமே இல்லை. ஒரு இழப்பு இருந்த இடத்தில் இரு இழப்பானது.  மாமி  இறந்தப் பின்பு அவளின் கண்கள் மட்டும் மூடாமல் இருந்தது. இமைகள் திறந்து கொண்டே இருந்தது. யாரைக் காணவேண்டும் ஆசை இருந்தது என்று யாராலுமே அறிய முடியவில்லை. மாமிக்கு எப்போதுமே குடும்பத்தில் பிடிவாதம் அதிகம். தன் எந்த ஒரு குழந்தையும் விட்டுத் தரமாட்டாள். தன்னுடைய வீட்டில் மீன் குழம்பு,கறி குழம்பு என்று ஏதேனும் ஒன்று செய்தாலும் கூட நான்கு பிள்ளைகளுக்கும் பங்கு போட்டு அனுப்பிவிடுவாள். இப்படிப்பட்ட பிள்ளை அன்பு கொண்டவள் இந்த மாமி.


மருமகள்மார்களை மகள் போல் அனுசரிக்கும் அன்பு கொண்டவள். இதைப் பார்த்து பொறாமைப்படும் பெண்களோ அத்தெருவில் ஏராளம். குடும்ப உறவுகளை நேசிக்கும் தன்மை கொண்ட மாமியும் மாமாவும் இனி உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தவ்சில் கைகோர்ப்பார்கள்.


காலகட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. மறுமை நாள் நெருங்கி கொண்டே இருக்கின்றது. அர்ஷின் நிழலைத் தேடி……

சிறுகதையின் ஆசிரியர்

திரு.  மு. முகமது ருக்மான்,


உதவிப்பேராசிரியர்,


முதுகலைத்தமிழ் & ஆய்வுத்துறை,


புதுக்கல்லூரி (தன்னாட்சி ),
சென்னை – 14.

 

The post லவ் பேர்ட்ஸ்|சிறுகதை|மு. முகமது ருக்மான் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

ஆண் தேவதை|சிறுகதை|ச.அபர்ணா

       திகாலை 4.30 மணிக்கு அலாரம் அடிக்கிறது. எதிர்பார்த்து காத்திருந்தவர் போல் எழுந்து அலாரத்தை அணைத்துவிட்டு, நடுங்கும் குளிரிலும் எழுந்து அரிசியை ஊற வைத்துவிட்டு பருப்பை வேக போட்டு, காப்பியுடன் மனைவியை எழுப்புகிறார் வீட்டுத் தலைவர் சரவணன்.
        

            சமையலுக்கு உதவி செய்துவிட்டு,  மனைவிக்கு குளிக்க சுடுநீர் போட்டு கொடுத்து, மதிய உணவை கட்டிக் கொடுத்து 6.10 மணி பேருந்துக்கு வண்டியில் ஏற்றி, பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பி சற்றே அமர்ந்தார். இளைய மகள் இனியாள் எழுந்துவிட்டால் தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு காப்பி தயாராக இருந்தது.
       

            மீதமிருக்கும் பாத்திரத்தை கழுவி விட்டு சற்றே அமர்கையில் இனியாளின் குரல் ‘போலாமா அப்பா? ‘  இனியாளுக்கும் நேரத்துடன் கிளம்புவதற்கும் ஏழாம் பொருத்தம் பேருந்துடன் ஓட்டப்பந்தயம் வைத்து தான் சென்று வருவாள். திரும்பி வந்து சரவணனுக்கும் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட தலை சுற்று 10 மணிக்கு மேல் வெயில் வந்துவிடும் தலை சுற்றலுக்கு மருந்தாய் ஒரு காபி குடித்துவிட்டு மனைவி மகளுடைய துணிகளை எடுத்துக் கொண்டு மாடி சென்று துவைக்கிறார்.
          

       அந்நேரத்தில், பக்கத்து வீட்டு சுந்தரம் ‘என்ன சரவணன் வேலையா ?’ சரவணனோ ‘ஆமாம்பா  வெயிலுக்கு முன்னாடி துவைக்கணும்ல  என்று சொல்வதைக் கேட்டு சுந்தரம் , ‘உண்மையில் நல்ல மனுஷன்யா நீ’ சிரித்தபடியே சென்றார். ‘சரியான இளிச்சவாயனா இருக்கான் சரவணன் எனக்கு எல்லா வேலையும் பொட்டச்சி மாதிரி பண்ணிட்டு இருக்கான்’  தன் மனைவியிடம் சொல்ல,  சுந்தரத்தின் மனைவியோ ‘ஆணாதிக்கவாதி’ என்னும் சொல் அறியாதவளாய் ‘ஆமாங்க’ என்று சொல்லி நகர்ந்தாள்.


            சில நேரம் கழித்து நியாயவிலை கடைக்கு சென்றார் சரவணன் ஆளே இல்லாத ஆண் வரிசையில் நின்று பொருள் வாங்கிக் கொண்டு திரும்புகையில், மங்களத்தின் குரல். ‘நல்ல ஆம்பளைக்கு அழகு வேலைக்கு போறதில்லையா?  பொட்டச்சி கணக்கா வரிசையில் நின்னு பொருள் வாங்கிட்டு நிக்கிறான் பாரு ‘  என்று தங்களுக்கென தள்ளப்பட்ட வேலையை செய்தபடியே சொன்னாள்.
       

     சரவணனுக்கு இது எதைப் பற்றிய கவலையும் இல்லை. இன்றா, நேற்றா ? எட்டு வருடங்களாக சமைக்கும்போதும், வாசல் கூட்டும் போதும்,  கடைக்கு செல்லும் போதும், துணி காய வைக்கும் போதும் என எத்தனையோ குரல்கள் அவர் காதுகளுக்கு பரீட்சையம் திருப்பிபப் பேச துளியும் விருப்பமில்லை.
 

    திடீரென்று ஒரு நாள்,  ‘சரவணன் நல்லவன் பா. அவன் தனியான நின்னு இந்த குடும்பத்தையே காப்பாற்றினான்’ என்ற  சுந்தரத்தின் குரல்.
 ‘ பின்ன… மூத்ததை கட்டிக் கொடுத்து , இரண்டாவத படிக்க வைத்து வேலைக்கு சேர்த்து,  பையனையும் படிக்க வைத்திருக்கிறார் என்றால் சும்மாவா..? ‘ என்று மற்றொரு ஆண்.
 ‘இந்த பிள்ளைகளுக்கு மட்டும் ரெண்டு அம்மா, அப்படித்தானே பாத்துக்கிட்டாரு சரவணன் ? ‘ என்று மங்களம்.
 ‘சரவணன் போல ஒரு தகப்பன் இந்த உலகத்துல இருக்கவே முடியாது. இந்த குழந்தைக எல்லாம் புண்ணியம் பண்ண குழந்தைங்க ‘மனதார கூறினாள் ஒரே ஒரு பெண்.
 

     இப்போதும் சரவணனுக்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த முறை அவர்களை எல்லாம் ஏதாவது கேட்டு விட வேண்டும் போல் இருந்தது .
     

       அதற்குள் ஒரு குரல்,  நேரமாச்சு சொல்லிட்டீங்கனா பொனத்தை எடுத்துடலாம்.
  ஆண் தேவதை செல்லும் நேரம் வந்துவிட்டது.


சிறுகதையின் ஆசிரியர்

ச.அபர்ணா,


உதவிப் பேராசிரியை,


KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி,


அரசூர்.

 

The post ஆண் தேவதை|சிறுகதை|ச.அபர்ணா appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

அலைபேசியின் வாக்குமூலம்|சி.தெய்வானை  சிவகுமார்

📞 அலைபேசியின் வாக்குமூலம்

 

📞கண்களால் பார்த்து! ரசித்து,


கைகளால் தொட்டு! வருடி!


மார்போடு அனைத்து!


உன் மூச்சுக்காற்று


என் மீது பட


உன் இரு கைளால்


என்னை அணைத்தபடி


எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்..!


 

📞 நீ கேட்கும் ஒவ்வொன்றும்


என்னிலிருந்து நான் தருகிறேன்!


அது நன்மையாக இருக்கலாம்!

தீமையாக இருக்கலாம்!


 

📞 ஏனென்றால்!


கேட்பது நீயல்லவா!


நான் உன் கையில்


தவழும் போது


இந்த உலகமே  நான்தான்..!


 

📞 என்னுடன் பல விளையாட்டுகளை


விளையாடுகிறாய் – அவற்றில்


தோற்றும் போகிறாய் !


ஆனாலும் மீண்டும் மீண்டும்


தோற்றுப் போக ஆசைப்படுகிறாய்!


ஏன்! ஏனென்றால்


என்னில் உன்னை


மூழ்கடித்து விட்டதால்,


 

📞 இப்படி மூழ்கடித்து விட்டதால்


எத்தனையோ,

உயிர்களை  
குடித்திருக்கிறேன்.


 

📞 ஆனாலும்! உன் கைகளால்


இறுக்கிப் பிடித்து


என்னை  இறக்கி விட


முயற்சி செய்வதே இல்லை,.!


 

📞 உன்  தேவைக்கு ஏற்ப


என்னைப் பயன்படுத்தினால்


நான் உனக்கு சொர்க்கம்!


உன் ஆசைக்கு


என்னை பயன்படுத்தினால்


நானே உனக்கு நரகம்! 


 

கவிதையின் ஆசிரியர்

சி. தெய்வானை  சிவகுமார்


உதவி பேராசிரியர் 

தமிழ்த்துறை


ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி


பர்கூர்

கிருஷ்ணகிரி

 

The post அலைபேசியின் வாக்குமூலம்|சி.தெய்வானை  சிவகுமார் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

❌