மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #11 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 4

தெய்வங்கள் வாழும் நீதி மரம்
பேராசிரியர் வில்சன் துல்லியமாகப் பேசக்கூடியவர்; நடுநிலையான நபர். இவருடைய படைப்புகளைவிடவும் இந்தியர்களின் குண நலன்கள் தொடர்பான கர்னல் ஸ்லீமனின் படைப்பை நம்பகமானதாகவும் ஆதாரப்பூர்வமானதாகவும் ஏன் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்கக்கூடும். காரணம் மிகவும் எளியது. பேராசிரியர் வில்சன் பெரிதும் கல்கத்தாவில் மட்டுமே வசித்தார். மாறாக கர்னல் ஸ்லீமன் ஒட்டுமொத்த இந்தியாவையும் பார்த்திருக்கிறார். குறிப்பாக உண்மையான இந்தியர்கள் வாழும் உண்மையான இந்தியாவான கிராமப்புற சமூகங்களை அவர் நேரில் பார்த்திருக்கிறார். ‘தக்கி’ கொள்ளையர்களை அடக்கும் பொறுப்பில் பல ஆண்டுகள் காவல்துறை ஆணையராகப் பணிபுரிந்திருக்கிறார்.
‘தக்கி’கள் கொலை, கொள்ளையைத் தொழிலாகக் கொண்டவர்கள். அந்தக் கொலைகளையெல்லாம் மதக் கடமையாகப் பாவித்துச் செய்தனர். தொடக்கத்தில் அவர்கள் குழுவில் இருந்த அனைவரும் முஸ்லிம்களே. ஆனால் பின்னாளில் ஹிந்துக்களும் அவர்கள் குழுவில் இடம்பெற்றனர். என்றாலும் முஸ்லிம்களே இப்போதும் அந்த தக் கொள்ளையர் குழுவில் பிரதானமாக இருக்கிறார்கள் (கிறிஸ்தவமும் ஹிந்துயிசமும் என்ற நூலில் சர் ட்ரவெல்லியன் (1882, பக் 42).
இந்தக் கொள்ளைக்கூட்டத்தைப் பிடித்து அழிக்கும் நோக்கில் கர்னல் ஸ்லீமன் கிராமப்புறங்களில் வசித்திருக்கிறார். கிராம மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். அவர்களுடைய நல்ல மற்றும் கெட்ட குணங்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறார்.
‘இந்திய கிராமப்புறச் சமூகங்களைப் பற்றித் தெரியாதவர்களுக்கு இந்தியர்களைப் பற்றி எதுவும் தெரியாது’ என்று கர்னல் ஸ்லீமன் அடிக்கடி அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவந்திருக்கிறார். இந்த கிராம சமூகங்களை நாம் குலங்கள் என்று சொல்லலாம். இந்த கிராமப்புற குலங்களின் வாழ்க்கையே உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத விசேஷத் தன்மையை இந்தியாவுக்குத் தந்திருக்கின்றன. இந்திய வரலாறாக நாம் பார்ப்பவையெல்லாம் ராஜாக்கள், மஹாராஜாக்கள், சுல்தான்கள் இவர்களின் வரலாறாகவே இருக்கிறது. அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா என்பது ஒரு கீழைத்தேய சாம்ராஜ்ஜியம் என்பதுபோன்ற தோற்றம் ஏற்படும். மையத்தில் அதிகாரம் குவிந்த அரசு இருப்பதுபோலவும் இங்கிலாந்தின் பெருமிதமாகச் சொல்வதுபோன்ற எந்தவொரு சுய ஆட்சி உரிமை உணர்வோ அமைப்புகளோ இல்லை என்பதுபோலவும் தோன்றும். ஆனால் இந்தியாவின் அரசியல் வரலாற்றைக் கூர்ந்து கவனித்திருக்கும் எவருமே உண்மை நிலவரம் இதற்கு முற்றிலும் மாறானது என்றே சொல்வார்கள்.
எத்தனையோ தொடர்ச்சியான அந்நியப் படையெடுப்புகள் நடந்திருக்கும் போதிலும் இந்தியாவின் அடிப்படையான அரசியல் அலகு அல்லது சமூகக் கட்டமைப்பானது இன்றும் அதன் கிராமப்புற சமூகமாகவே இருந்துவருகிறது. இந்த அரசியல் அல்லது சமூகக் குழுக்கள் சில நேரங்கள் ஏதேனும் பொது இலக்கின் அடிப்படையில் ஒன்று சேரும். எனினும் இவை தத்தமது தனித்தன்மையுடன் முழுமையான ஓர் அமைப்பாகவே இருக்கவும் செய்யும்.
மனுஸ்மிருதியில் பத்து, இருபது, நூறு அல்லது ஆயிரம் கிராமங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்படுபவருக்கு அந்தப் பகுதிகளின் வரி வசூலிக்கும் உரிமையும் கிராமங்களில் பொதுவான அமைதியையும் நன்னடத்தையையும் மட்டும் கவனித்துக்கொள்ளும் உரிமை மட்டுமே உண்டு என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பின்னாளில் உருவான 84 கிராமங்கள் செளராசி அமைப்புகள், 360 கிராமங்கள் சேர்ந்த அமைப்புகள் எல்லாமே நிதி, வரி வசூல் ஏற்பாட்டுக்கானவையாக மட்டுமே இருப்பதையும் பார்க்கமுடிகிறது.
ஓர் எளிய ஹிந்துவுக்கு அதாவது பெரும்பாலான 99% ஹிந்துக்களுக்குக் கிராமமே அவர்களுடைய முழு உலகம். அதுவே அவர்களுக்கான ஒரே பொதுவெளி. அதன் தாக்கமே அவர்கள் மீது முழுமையாக இருக்கும். ஒரு ஹிந்துவுக்கு அவருடைய கிராமத்துக்கு வெளியே இருக்கும் எந்தவொன்றின் தாக்கமும் இருக்காது.
இந்தியாவில் இருக்கும் கிராமங்கள், நகரங்கள் பற்றி டாக்டர் ஹண்டர் 14, ஆகஸ்ட், 1882-ல் குறிப்பிட்டிருக்கும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். பிரிட்டிஷ் இந்தியாவில் மொத்தம் 4,93,429 கிராம, நகரங்கள் இருக்கின்றன. இவற்றில் 4,48,320 இடங்களில் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் வசிக்கிறார்கள். இவற்றை நாம் கிராமங்கள் என்று வகைப்படுத்தலாம்.
வங்காளத்தில் பிரிட்டிஷ் அரசு நிறுவனங்களின் உருவாக்கப்பட்டு நகர வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அங்கு 1,17,042 குடியிருப்புகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் சுமார் 200க்கும் குறைவானவர்களே வசிக்கிறார்கள். வங்காளத்தில் இருக்கும் 10,007 குடியிருப்புகளில் சுமார் 1000க்கு அதிக மக்கள்தொகை இருக்கின்றன. அதாவது 70-ல் ஒரு பங்குதான் நகரம். மற்றவையெல்லாம் தற்சார்பு கொண்ட கிராமப்பகுதிகளே. வட மேற்கு பிராந்தியங்களில் 1,05,124 கிராமங்கள் இருக்கிறன. ஆனால், 297 நகரங்கள் மட்டுமே இருக்கின்றன.
இந்தியாவில் இருக்கும் இப்படியான கிராமப்புறங்கள் பற்றி நம் கவனத்தைக் குவிக்கச் சொன்ன முதல் நபர்களில் முக்கியமானவர் கர்னல் ஸ்லீமன். பழங்காலத்திலும் நவீன காலத்திலும் இந்தியாவின் சமூக கட்டமைப்பில் இந்த கிராமங்களின் முக்கியத்துவத்தை அழுத்தமாகச் சொன்னவர் அவர். சர் ஹென்றி மைன் இந்த கிராமப்புறங்கள் பற்றி நிறையக் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும் கர்னல் ஸ்லீமனின் குறிப்புகள் சுவாரசியமானவை. அதிக விஷயங்களை உள்ளடக்கியவை. அவர் ஆரிய ஜனபதங்களில் எப்படியான சமூக, அரசியல் அமைப்புகள் உருவாகின என்பது தொடர்பான எந்தவொரு கோட்பாடுகளின் சாய்பும் சார்பும் இன்றி ஒரு பார்வையாளராக இருந்துகொண்டு இந்திய கிராமப்புறங்களைப் பார்த்து எழுதியிருக்கிறார்.
‘இந்தியா முழுவதுமே எண்ணற்ற கிராமப்புற சமூகக் கட்டமைப்புகளாகப் பொதிந்து காணப்படுகிறது’ என்ற கூற்றை முதன்முதலில் சொன்னது கர்னல் ஸ்லீமன் தான் என்று நான் சொல்லவரவில்லை. மெகஸ்தனிஸ்போன்ற ஆரம்பக்கட்டப் பயணிகூட ‘இந்தியாவில் வசிக்கும் விவசாயிகள் தமது மனைவி, குழந்தைகளுடன் எப்போதும் கிராமங்களிலேயே வசிக்கிறார். நகப்புறங்களுக்கு அவர் பெரிதும் போவதே இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஹிந்துக்களின் மரபான குண நலன்கள் எல்லாம் அவர்களுடைய கிராமப்புற வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை என்பதை முதலில் சொன்னவர் கர்னல் ஸ்லீமன்தான்.
ஆங்கிலேய அதிகாரிகளுக்குக் கிராமப்புற வாழ்க்கையோடு பரிச்சயம் மிக மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு பிரிட்டிஷ் இந்திய அதிகாரி கிராமத்துக்குச் செல்கிறார் என்றால் அந்த கிராமத்தின் இயல்பான அம்சங்கள் எல்லாமும் அந்த நொடியிலேயே மறைந்துபோய்விடும்.
‘அடிமட்டத்தில் இருப்பவர்கள் பொய் சாட்சிகள் சொல்வார்கள். ஹிந்து முஸல்மான்களில் இருக்கும் மேட்டுக்குடியினருடைய ஆதரவுடன் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இன்றி ஏதோ அது சாமர்த்தியம் போலவும் திறமை போலவும் மேற்கொள்ளப்படும்’ என்று சர் வில்லியம் ஜோன்ஸ் கலகத்தா நீதிமன்றத்தில் குறிப்பிட்டதாக இந்திய வரலாறு நூலில் பக் 324-ல் ஜேம்ஸ் மில் எழுதியிருக்கிறார்.
‘ஒரு பிராந்தியம் நம்முடைய ஆட்சியின் கீழ் எவ்வளவு காலம் இருக்கிறதோ அவ்வளவுக்கு அதிகமாகப் பொய் சாட்சிகள் பெருகுகின்றன’ என்று சர் ஜி.கேம்பல் சொன்னதாக, கீழைத்தேய மதங்கள் நூலில் எஸ்.ஜான்சன் மேற்கோள் காட்டியிருக்கிறார் (பக் 288).
ஓர் இந்தியரை அவருடைய கிராம சமூகத்திலிருந்து பிரித்துவிட்டால் சமூகத்தின் அத்தனை கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக்கியதாக அர்த்தம். அப்படியான நிலையில் அவர் தனது உள்ளார்ந்த தன்மையிலிருந்து வெளியேறிவிடுவார். ஆசைகாட்டல்களின் விளைவாக மரபான வாழ்க்கை மற்றும் மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்வதிலிருந்து விலகி தவறுகள் செய்ய ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு கிராமங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களில் கூட வழக்கமான பொதுவான தார்மிக ஒழுங்குகள், கட்டுப்பாடுகள் முறையான அங்கீகாரம் பெறுவதில்லை.
ஒரு கிராமத்தில் கொள்ளையாக, திருட்டாகக் கருதப்படுவது தூர கிராமங்களில் செய்யப்படும்போது அருமையான சூறையாடலாக, போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. சொந்த, கிராம வாழ்க்கையில் ஏமாற்றாகக் கருதப்படும் ஒரு விஷயம் அந்நியரிடம் செய்யப்படும்போது ராஜ தந்திரமாகவும் அரசியல் சாமர்த்தியமாகவும் பார்க்கப்படுகிறது. விருந்தினருக்கான மரியாதை என்பது வேறு கிராமத்தைச் சேர்ந்தவருக்குத்தான் தரப்படும். சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விருந்தினராக அதிதியாகக் கருதப்படவேமாட்டார்.
கிராம சமூகத்தினரின் ஒழுக்கப் பண்புகள் பற்றி கர்னல் ஸ்லீமென் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இந்தியர்களின் பிரகாசமான மற்றும் இருட்டான குண நலன்கள் அனைத்தையும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு தக்கி கொள்ளையர்களை அடக்கும் பொறுப்பில் இருந்த காவல் ஆணையரான கர்னல் ஸ்லீமனுக்கு மிக அதிக அளவில் இருந்தது என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்தவிரும்புகிறேன்.
‘ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களிடையேயான வழக்குகளில், பேச்சுகளில் இந்தியர்கள் பொய் சொல்வதில்லை’ என்று கர்னல் ஸ்லீமன் அழுத்தமாகத் தெரிவிக்கிறார். உதாரணமாக, ‘மிகவும் பழமையான வனவாசிகளான கோண்டுகள், அண்டை கிராமத்தின் கிடையிலிருந்து எந்தத் தயக்கமும் இன்றி ஆடு மாடுகளைக் கவர்ந்துசெல்வார்களே தவிர என்ன மிரட்டினாலும் பொய் சொல்லவே மாட்டார்கள்’ என்று கர்னல் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வனவாசிகளுக்குப் பொய் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எதுவும் தெரிந்திருக்காது என்று சொல்லலாம். இருந்தும் இப்படியான ஆசிர்வதிக்கப்பட்ட அறியாமையையும் தேசத்தின் குண நலனின் ஓர் அம்சம் என்பதையும் கணக்கில் கொண்டாகவேண்டும். நான் கோண்டுகளுக்காகவோ பில்களுக்காகவோ சந்தால்களுக்காகவோ பிற ஆரியரல்லாத வனவாசிகளுக்காகவோ வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம். ஆரிய குலங்கள் மற்றும் ஏகதேசம் அவர்கள் அளவுக்குப் பண்பட்டிருக்கும் இந்தியாவின் பிற குலங்கள் பற்றிய உண்மை விவரங்களைப் பேசுகிறேன்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களிடையே உரிமை, கடமை, நலன்கள் சார்ந்து மோதல்கள், வழக்குகள் ஏற்பட்டால், மிகவும் தீய குணம் கொண்டவர்கூட பொய் சொல்லமாட்டார். கடவுள் மீதான நம்பிக்கையும் பயமும் இன்னும் இவர்கள் மனதிலிருந்து அகலவில்லை.
பெரும்பாலான கிராமங்களில் அரச மரம் கட்டாயம் இருக்கும். அது அவர்களுக்குப் புனிதமானது. அந்த மரத்தின் இலைகளில் தெய்வங்கள் வசிப்பதாகவும் அதன் சல சல ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் நம்புகிறார்கள். சாட்சி சொல்பவர் ஓர் இலையைக் கையில் எடுத்துக்கொண்டு தெய்வத்தை மனதுக்குள் தியானிப்பார். ‘நான் சொல்வது பொய்யாக இருந்தால் என்னையோ என்னைச் சார்ந்தவர்களையோ நான் இந்த இலையைக் கசக்கிப் போடுவதுபோல் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடு’ என்று வேண்டிக் கொண்டு அந்த இலையைக் கசக்கிப் போடுவார். அதன் பின் தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்வார்.
அரச மரத்தில் ஹிந்து தெய்வம் உறைவதாக நம்பிக்கை. பிரமாண்ட இலவம் பஞ்சு மரம் பல பயங்கரமான தேவதைகள் வசிக்கும் மரம் என்றும் நம்பப்படுகிறது.
‘கிராமப் பஞ்சாயத்துகளில் சாட்சி சொல்பவர்கள் உண்மையே பேசுவார்கள். நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பார்த்திருக்கிறேன்; பல மனிதர்களின் சொத்து, சுதந்தரம் (சிறை போகும் வாய்ப்பு), உயிர் என எந்தவொன்றுக்குப் பாதிப்பு வருவதாக இருந்தபோதிலும் பொய்யை ஒருவர் கூடச் சொன்னதில்லை’ என்று கர்னல் ஸ்லீமன் குறிப்பிட்டிருக்கிறார்..
எந்தவொரு ஆங்கிலேய நீதிபதியும் இதுபோல் ஆங்கிலேயர் பற்றிச் சொல்லமுடியுமா?
அரச மரம் அல்லது இலவம் பஞ்சு மரத்தினடியில் நடக்கும் இந்தப் பஞ்சாயத்து வழக்குகளில் அந்த மரத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தின் பங்கு என்னவாக இருந்திருக்கும்? சாட்சி சொல்பவர் பொய் சொன்னால் அந்த மரத்தில் தனது மாய மர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வத்துக்குத் தெரிந்துவிடும். அவருக்குத் தெரிந்துவிட்டால் அதன் பின் பொய் சொன்னவருக்கு நிம்மதி தொலைந்துவிடும். அவருக்கோ அவருடைய உறவினருக்கோ ஏதேனும் விபத்தோ கஷ்டமோ வந்தால் அந்த தெய்வத்தின் கோபமே அதற்குக் காரணம் என்று நம்புவார்கள். எந்தத் தீங்கும் இழப்பும் நடக்காவிட்டாலும் இவருடைய கற்பனை மற்றும் பயத்தினாலேயே ஏதேனும் கெடுதல் நடந்துவிடும்.
இது ஓர் அற்புதமான மூல நம்பிக்கை. மரபான நூல்களில் இது அழகாக இடம்பெற்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சாட்சிகளின் முன்னோர்கள் மேலிருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். கேட்டுக்கொண்டிருப்பார்கள். இவர் சொல்வது உண்மையாக இருந்தால் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார்கள். பொய்யாக இருந்தால் நரகத்தில் தள்ளிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.
(தொடரும்)
The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #11 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 4 appeared first on கிழக்கு டுடே.