Normal view

Received before yesterdayபா.செயப்பிரகாசம் [சூரியதீபன்]

கிராமியத்தைக்‌ கண்டறியும்‌ அகழ்வாராய்ச்சி


(நல்லம்மா (நாவல்‌) - சூரங்குடி அ.முத்தானந்தம்‌

விலை : ரூ. 125, அருவி வெளியீடு, 5-D, பொன்னம்பலம்‌ சாலை, கே.கே.நகர்‌, சென்னை-78, கைபேசி: 9444302967, விற்பனை உரிமை: தோழமை வெளியீடு)


அறுபது வயதுப்‌ பெரிய முதலாளிக்கு மூன்றாந்தாரமாய்‌ கழுத்தைக்‌ கொடுத்தவள்‌ நல்லம்மா. மூத்தவடியாள்‌ ரெண்டுபேருக்கும்‌ பிள்ளை இல்லையென்று, மூன்றாவதாய்‌ கட்டிவைக்கப்பட்ட சொந்தத்‌ தங்கச்சி மகள்‌ “சொந்தமான சொந்தம்‌”.

எங்கள்‌ ஊர்‌ மேலத்தெருவில்‌ ஒரு சிறுமி; நிலபுலன்களோடு எப்போதும்‌ தாளிதம்‌ செய்யப்பட்டு வாசனை ஜோராய்‌ வரும்‌ வாழ்க்கை; சேட்டை கூடுதல்‌ - சிறு பிராயத்துக்‌ குறும்பு என்று சொல்லக்கூடாது. அக்குறும்பு என்று சொல்வார்கள்‌. செழுப்பமான வீட்டுப்‌ பிள்ளைகளுக்கு இது வரைமுறை இல்லாமல்‌ எகத்தாளிபோடும்‌. சிறுவர்‌, பெரியவர்‌, ஆம்பிளை, பொம்பிளை என்ற பேதமில்லாமல்‌ கேலி செய்து சீண்டுதல்‌ செய்வாள்‌.

தெரு முக்கில்‌ பந்தாவாய்‌ நின்று பேசிக்‌ கொண்டிருந்தது ஒரு இளவட்டம்‌. “அது நிக்கிற 'ஷோக்கைப்‌' பாரு. ராஜா வீட்டு வேலைக்காரன்‌ மாதிரி. போய்‌ வேட்டியை இழுத்துப்‌ போட்டு வாடி”

குமரிகள்‌ தூண்டிவிட்டார்கள்‌. பராக்குப்‌ பார்ப்பது போல்‌ பக்கத்தில்‌ போய்‌ வேட்டியை இழுத்து விட்டு விட்டு ஓட்டம்‌ கிண்ணிவிட்டாள்‌ இந்தக்‌ கோட்டிச்சி.

சேட்டைகள்‌ செய்கிற - தராதரம்‌ இல்லாமல்‌ வம்படிக்கிற அந்தச்‌ சிறுமி மல்லம்மா.

சொந்த பந்தமும்‌ சொத்துபத்தும்‌ விட்டுப்‌ போகக்‌ கூடாதென்றுசெய்து வைத்த கல்யாணம்‌. கல்யாணமான பிறகும்‌ அதே மாதிரி கட்டுப்பாடில்லாமல்‌ ஊர்‌ சுற்றி வருகிற இந்தச்‌ சிறுபெண்ணின்‌ பெயர்‌ நல்லம்மா. முதலாளியைக்‌ கைப்பிடித்த கொஞ்ச நாளிலேயே நல்லம்மா ஒரு பிடி உயரம்‌ (!) வளர்ந்து விட்டாள்‌; உருப்பட்டு விட்டாள்‌. கடைத்‌ தெருவுக்குப்‌ போனால்‌ கண்ட கண்ட சாமான்களையெல்லாம்‌ வாங்கி வருவாள்‌. அடிக்கடி பஸ்‌ ஏறிப்போய்‌ சினிமா பார்த்து வருவாள்‌ - அஞ்சாறு தண்டித்‌ தரத்துப்‌ பிள்ளைகளைச்‌ சேர்த்துக்‌ கொண்டு! யாராவது தப்பித்‌ தவறி கேட்டுவிட்டாலோ ஒரு அகப்பை கறிக்குப்‌ பிடுங்கி விடுவாள்‌.

அவளை முன்வைத்து ஆரம்பிக்கிற நாவல்‌ பலபேரைக்‌ கொண்டுவந்து தனக்குள்‌ சேர்க்கிறது. அந்த ஒரு வாழ்க்கையில்‌ தொடங்கி சுற்றியுள்ள பல வாழ்க்கையையும்‌ வளைக்கிறது. அந்த வாழ்வுக்குள்‌ கிராமிய கலாச்சார அம்சங்களையெல்லாம்‌ விரிவாய்‌ முன்வைக்கிறது.

வேளாண்மை அழிவாகிக்‌ கொண்டு வருகிறது. அதன்‌ சங்கிலியான உறவு வகை, கூட்டுணர்ச்சி, பழக்க வழக்கம்‌, பண்பாடு இன்று அறுபட்ட வாலாய்த்‌ துடிக்கின்றன. புள்ளிவிவரத்‌ துறைபோலவோ அல்லது போனான்‌ வந்தான்‌ கதை போலாவோ பட்டியலிடுவதில்‌ கிடைப்பதைவிட ஒரு நாவலின்‌ அனுபவமாய்‌ பதிவு செய்யப்படுகிற போது அதற்கு ஒரு தனி வெளிச்சம்‌ கிடைக்கிறது. இரு கைகளிலும்‌ ஏந்தி ஏந்திக்‌ குடிக்கும்‌ பதநீர்‌ போல்‌ சுவை தருகிறது.

ஆதிகாலத்து வெண்கலக்‌ கும்பாவைக்‌ கழுவி எடுத்துவந்து மீனாட்சி பானையைத்‌ திறந்து, அதில்‌ நல்லா மூணு கை கம்பஞ்‌சோறு வைத்து, புருசனுக்கு முன்னால்‌ வைக்கிறாள்‌. களிமண் போல இருக்கும்‌ சோற்றை சமதளப்படுத்தி அதன்‌ நடுவே கலையாக ஒரு பெரிய குழியும்‌ உண்டு பண்ணினார்‌ சம்முகம்பிள்ளை. அது நல்ல பதியம்‌ போடுவதற்கு ஆக்கப்பட்ட இடம்‌ போலிருந்தது. அதில்‌ ஓர்‌ அகப்பை கீரைக்குழம்பை ஊற்றினாள்‌ மீனாட்சி.

கும்பாவிலுள்ள சோற்றில்‌ ஒரு பக்கமாக இருந்து ஒரு பருத்திக்காய்‌ அளவு எடுத்து கீரைக்குழம்பில்‌ நன்றாக முக்கிப்‌ புரட்டிவிட்டு வாயில்‌ அண்ணாக்கப்‌ போட்டு 'களக்‌'கென்று முழுங்கினார்‌ சம்முகம்பிள்ளை. இப்படி களக்‌, களக்கென்று ஒரு கும்பாச்சோறும்‌ பல்லிலே ஒட்டாமல்‌, அடி நாக்கில்‌ மட்டும்‌ பட்டு உள்ளே போன மாயம்‌ தெரியவில்லை. பசு வெண்ணை போலிருக்கிறது. அந்தக்‌ கம்மஞ்சோற்றுக்கு கீரைக்குழம்பு வாசத்துக்கும்‌ நாமும்‌ புள்ளிக்கு ஒரு கும்பாச்சோறு தின்னலாம்‌. வேறு வெஞ்சனம்‌ (தொடுகறி) அதுக்குத்‌ தேவையில்லை என்பதுபோல்‌ இருக்கும்‌.

சம்முகம்பிள்ளை சாப்பிடுவதையே உன்னிப்பாகக்‌ கவனித்துக்‌ கொண்டிருந்த நல்லம்மா கேட்டாள்‌, “அண்ணே, நீங்க சோத்துல குழம்பு ஊற்றிப்‌ பிசைஞ்சு சாப்பிட மாட்டிளா?”

“ஒங்க விட்ல நெல்லுச்சோறு. அதை அப்படிப்‌ பிசைஞ்சுதான்‌ சாப்பிடனும்‌. இது கம்மஞ்சோறு. இதை இப்படி களக்‌, களக்குன்னு குருட்டுக்‌ கோழி தவிட்டை முழுங்குற மாதிரித்தான்‌ முழுங்கணும்‌.”

“ஆமா தொட்டுக்கொள்றதுக்கு வேறு ஒண்ணும்‌ வேண்டாமா?”

“வேண்டாம்‌. இந்தக்‌ கீரக்குழம்பு இல்லாவிட்டாலும்‌ பரவாயில்ல. ஒரு பட்ட மொளகா வத்தலும்‌, ரெண்டு உப்புக்கல்லும்‌ இருந்தாப்‌ போதும்‌. ஒரு கலயம்‌ கஞ்சியா இருந்தாலும்‌ கூட உள்ள பேகிற போக்குத்‌ தெரியாது சரசரன்னு.”

"அவியல்‌, பொறியல்‌, பச்சடி, கூட்டு, சாம்பார்‌, ஈசல்‌, புளிக்கறி, மோர்‌ எல்லாம்‌ நீங்க சாப்பிடதில்லையா?”

“சாப்பிட்டிருக்கோம்‌; இழவு வீடு, கல்யாண வீடுகள்ல”

இருவேறு வர்க்கங்கள்‌ உரையாடுகின்றன. மேட்டுப்‌ புஞ்சையிலிருந்து சிறு பொன்‌ குஞ்சும்‌ பள்ளத்தாக்கிலிருந்து தின்று கொட்டை துப்பிய அனுபவசாலியும்‌.

ஒன்றுக்கொன்று எதிரான இந்த வர்க்கங்கள்‌ உணவு வகைகளில்‌ பழக்க வழக்கங்களில்‌ முட்டிக்‌ கொள்கின்றன. அதையும்‌ வெகு கவனமாய்‌ நிதானத்துடன்‌ ஆவணப்படுத்துகிறார்‌ முத்தானந்தம்‌.

கீ காடுகள்ல சில மொதலாளி மார்க வீடுகள்ல மொதலாளி வீட்டார்க்கு ஒரு சாப்பாடும்‌, வேலைக்காரர்களுக்கு ஒரு சாப்பாடும்‌ நடக்கிறது. மொதலாளியின்‌ இனத்தச்‌ சேர்ந்தவர்களுக்கு குதிரைவாலிச்‌ சோறும்‌ பருப்புக்‌ கறியும்‌; மத்தவங்களுக்கு கம்மஞ்‌ சோறும்‌ கீரக்‌ குழம்பும்‌; அவங்களுக்கு நெல்லரிசித்‌ தோசைன்னா, இவுகளுக்குக்‌ கம்பரிசித்‌ தோசை. இல்லாட்டா சோளத்தோசை. இட்டிலியோ, வடையோ கூலிக்காரர்களுக்குக்‌ கிடையாது. மொதலாளிமார்களுக்கு கேரட்‌, பீன்ஸ்‌, தொடுகறி; இவுகளுக்கு கானப்‌ பருப்புத்‌ துவையல்‌ மட்டும்‌. அவுகளுக்கு அவியல்‌, பச்சடியின்னா, இவுகளுக்கு பச்ச மொளகாயும்‌, உப்புக்கல்லும்‌. பாலும்‌, மோரும்‌ அவுகளுக்கு; நீச்சுத்‌ தண்ணியும்‌ புளிச்ச தண்ணியும்‌ இவுகளுக்கு. அவுகளுக்கு சில்வர்‌ கிளாஸ்‌, இவுகளுக்கு ஈயக்‌ கிளாஸ்‌. தாழ்த்தப்பட்டவர்களுக்கு சிரட்டை. அவுகளுக்கு வீட்டுக்குள்ளே சாப்பாடு; இவுகளுக்கு வெளியே வானம்‌ பார்த்த இடத்தில்‌.

இன்றுபோல்‌ தனி டம்ளர்‌ கூட இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொட்டங்குச்சி என்று சொல்லப்படும்‌ சிரட்டையில்‌ வழங்கினார்கள்‌.

ஐம்பது வருசங்களுக்கு முந்தி நடந்த இவை இன்னும்‌ வித்தியாசப்‌பட்டுப் போகவில்லை. தமிழகத்தில்‌ இரண்டாயிரம்‌ கிராமங்களில்‌ இரட்டைத்‌ தம்ளர்‌ முறை இருக்கிறது என்று சட்டப்பேரவையில்‌ கேள்வி எழுப்பப்பட்டபோது, இல்லை இரண்டே இரண்ட ஊர்களில்தான்‌ இருக்கிறது என்று சமகால இழிவைத்‌ தாங்கிப்‌ பிடிப்பவராக பதிலளித்தார்‌ முதலமைச்சர்‌ கருணாநிதி.

கடந்த காலம்‌ பதிவு செய்யப்பட்டால்‌ அது வரலாறு - கடந்த காலம்‌ நிகழ்காலத்துக்கு ஏதொரு பங்களிப்பும்‌ செய்யாதபோது வரலாற்றுக்‌ குறிப்பாக இழிவைச்‌ சுமந்து நிற்கிறபோது அந்த நிகழ்வில்‌ நாம்‌ ஒரு மனிதக்‌ கூறாக இருந்தோம்‌ என்பது எத்தனை கேவலம்‌.

***

கூட்டாக வாழுதல்‌ கிராமிய சமுதாயப்‌ பண்பாடு. இணைந்து ஒருத்தருக்கொருத்தர்‌ ஒத்தாசையாக இருத்தல்‌ அல்லாமல்‌ வேளாண்மைச்‌ சமுதாயம்‌ இயங்க முடியாது. விதை போடுதல்‌ முதல்‌ வெள்ளாமை வீடு வந்து சேருகிறவரை அவரவர்‌ உழைப்பு இருந்தாலும்‌ இந்தக்‌ கூட்டுதான்‌ வேளாண்மையை முழுமையாக்குகிறது. வேளாண்மை அடிப்படையில்‌ கட்டப்பட்டது அவர்களின்‌ உறவு. அதனால்‌ உறவுகள்‌ நெருக்கமாக இருக்கின்றன. வீடுகளும்‌ வீதிகளும்‌ நெருக்கமாய்‌ கூட்டு வாழ்க்கையை அடையாளப்படுத்துகின்றன.

கொண்டாடுதலுக்கும்‌ நடத்துதலுக்கும்‌ வித்தியாசம்‌ உண்டு. ஒன்றை ஒருவர்‌ நடத்துகிறார்‌ என்றால்‌, தன்முயற்சியால்‌ மேற்கொண்டு செலுத்துகிறார்‌ என்று பொருள்‌. ஒரு தொழில்‌ அல்லது ஒரு காரியம் அல்லது ஒரு குடும்பம்‌ அல்லது ஒரு இயக்கம்‌ ஒருவர்‌ நடத்துகிறார் என்கிறபோது அவருடைய உழைப்பால்‌, முயற்சியால்‌ நடத்தப்படுகிறது என்று அர்த்தமாகிறது. (இப்போது இயக்கங்கள்‌ தனியொரு மனிதனாலேயே நடத்தப்படுகின்றன) ஆனால்‌ கொண்டாடுதல்‌ அதுவல்ல. கொண்டாடுதல்‌ கூட்டமாக செய்யப்படுவது.

கிராமிய சமுதாயத்தில்‌ திருமணம்‌ நடத்தப்படுவதில்லை. கொண்டாடப்பட்டது. ஊர்கூடி திருமணத்தைக்‌ கொண்டாடியது.

சம்முகம்பிள்ளை வீட்டில்‌ குத்துவிளக்கை ஏற்றி வெறும்‌ குலவைச்‌ சத்தத்தோடுதான்‌ 'சிம்பிளாகக்‌' கல்யாணம்‌ என்று முதலில்‌ பேச்சு. ஆனால்‌ அந்த ஊர்‌ இளவட்டப்‌ பையன்களும்‌, சம்முகம்‌ பிள்ளையோடு சேர்ந்து உழுபவர்களும்‌ மொத்தத்தில்‌ அந்தக்‌ கிராமமே சேர்ந்தும்‌ திட்டத்தை அடியோடு மாற்றிவிட்டிருந்தார்கள்‌.

கல்யாணத்தப்போ, ஊரிலுள்ள வாரிவளைகளையும்‌, தென்னந்‌ தட்டிகளையும்‌ பொறுக்கி வந்து விசாலமான பந்தல்‌ போட்டார்கள்‌. ஏரோப்ளேன்‌ பந்தல்‌. ஊருக்கு வெளுப்பவர்கள்‌ வண்ண வண்ணச்‌ சீலைகளைக்‌ கொண்டுவந்து “மாத்துக்‌” கட்டினார்கள்‌. இளநீர்க்‌ குலைகள்‌, பூவிரிகள்‌ தொங்க விடப்பட்டன. பனை ஓலையால்‌ விதவிதமாகச்‌ செய்யப்பட்ட தோரணங்களைப்‌ பந்தலில்‌ கட்டினார்கள்‌. வண்டி மாடு வைத்திருக்கும்‌ ஒருவர்‌ வாழை மரத்துக்குப்‌ போய்விட்டு வந்திருந்தார்‌. பலசரக்குக்‌ கடைக்காரர்‌ பாலமுருகன்‌ வேண்டிய அளவு சாமான்களை வாங்கிக்‌ கொள்ளச்‌ சொல்லியிருந்தான்‌. மொய்‌ எடுத்து அவனுக்குப்‌ பணம்‌ அடைத்தால்‌ போதும்‌. காய்கறிச்‌ செலவை கந்தம்மா டீச்சர்‌ ஏற்றுக்‌ கொண்டார்‌. ரேடியோ செட்டுக்காரன்‌ திருப்பதி இலவசமாகக்‌ குழாய்களைக் கட்டி அவிழ்த்துப்‌ போவதாகச்‌ சொன்னான்‌. கோல்டன்‌ என்டர்பிரைஸின் கல்யாணி கவரிங் அயிட்டங்களும் ரெடி. திருமாலுகந்தான்‌ கோட்டை மேளமும்‌ வந்து இறங்கிவிட்டது. பள்ளிக்‌ கூடத்திலிருந்து வந்து  குவிக்கப்பட்டிருந்த பெஞ்சு, நாற்காலிகளில்‌ ஏகப்பட்ட கூட்டம்.

முதலாளி வீட்டிலிருந்து சேலை, வேட்டி வந்திருந்தன. குமாரசாமிக்கு ஒரு வேட்டி துண்டோடு ஒரு சட்டையும்‌, சுப்பம்மா பிள்ளைக்கு ஒரு பாவாடையும்‌, சட்டையும்‌ எடுத்ததோடு பூ, சந்தனம்‌, குங்குமம்‌, வெத்தலை பாக்கு சகிதமாக ராசகோபால்‌ நாயக்கர்‌ வீட்டோடு வந்திருந்தார்‌. திருச்தெந்தூர்த்‌ தேவர்‌ தோட்டத்தில்‌ இருந்து வாழைத்தார்களும்‌ இலைக்கட்டுகளும்‌ வந்து இறங்கியிருந்தன. வியாபாரி நாயக்கர்‌ ரூபாயாகச்‌ செய்ய இருந்தார்‌. தாலிச்‌ செலவு மட்டும்தான்‌ சம்முகம்‌ பிள்ளையைப்‌ பொறுத்தது. அந்த ஆட்டுக்காரப்‌ பையன்கள்‌ கொம்பில்‌ பூச்சுற்றப்பட்ட ஒரு வெள்ளாட்டங்கிடாயோடு வந்து பந்தலில்‌ ஓரத்தில்‌ நின்றிருந்தார்கள்‌ - அன்பளிப்பாகக்‌ கொடுக்க.

- இது 2005ஆம்‌ ஆண்டு! ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய கிராமம்‌ கொண்டாடிய திருமணம்‌. சாதிகள்‌ தாண்டியும்‌ சாதிகள்‌ ஒன்றாகியும்‌ திருமணத்தை நடத்தினார்கள்‌. கல்யாண மாப்பிள்ளை சம்முகம்பிள்ளை என்ற உழைப்பாளி குற்றம்‌ குறை சொல்ல முடியாத ஆள்‌ என்பது கவனத்தில்‌ கொள்ள வேண்டிய ஒரு அம்சம்‌. எதற்கெடுத்தாலும்‌ அரிவாள்‌ தீட்டும்‌ சாதியக்‌ கலாச்சாரம்‌ தலைகாட்டுகிற இந்த நாளில்‌ சாதி தாண்டிய ஒற்றுமை எங்கும்‌ இல்லை.

முற்றத்தில்‌ புதுமணல்‌ பரப்பி, பசிய புதிய மூங்கில்‌ கழை நட்டு தென்னங்கீற்றுப்‌ பந்தல்போட்டு, பெரியவர்கள்‌ முன்னின்று நடத்திய திருமணம்‌ பற்றி சங்கப்பாடல்‌ தெரிவிக்கிறது. சங்கப்‌ பாடலிலக்கியம்‌ முதற்கொண்டு அ.முத்தானந்தத்தின்‌ 'நல்லம்மா' நாவலிலக்கிய காலம்‌ வரை திருமணங்கள்‌ அவரவர்‌ வீட்டு முற்றத்தில்‌ நடந்தன. ஊர்‌ கூடிச்‌ செய்தார்கள்‌.

ஊரார்‌ ஒன்று கூடி, பெரியோர்‌ முன்னிலையில்‌ நடந்த தமிழர்‌ பண்பாடு மறைந்து ஐயர் வைத்து திருமணம்‌ செய்யும்‌ ஆரியப்‌ பண்பாடு முன்னுக்கு வந்தது. கல்யாணமும்‌, அவரவர்‌ சாதியில்‌, அவரவர்‌ கூடிக்‌ குலாவுதல்‌ என்ற 'சாதிப்‌ பகுமாணங்கள்‌' (பெருமை) மேலே வந்தன.

தங்கம்‌, நகை, சொத்து, பணம்‌ என்ற கட்டுமானத்தில்‌ உருவான சமூகத்தில்‌ உறவுகள்‌ தூர ஒதுங்கிவிட்டன.

கிராமிய சமுதாயத்தில்‌ அட்டுப்பிடித்த, கறைபடிந்த பக்கங்களும்‌ உண்டு.

சாதாரணமாக அந்த வீட்டின்‌ நடுக்கூடத்தில்‌ ஒரு பெரிய கேங்கே கிடந்தது. எல்லாருமே முதலாளிமார்கள்‌ வீட்டு அம்மாக்கமார்களும்‌, பசையுள்ள பெரிய வீட்டுப்‌ புள்ளிக்காரிகளுமே ஆவார்கள்‌. வடக்கு வீட்டம்மா, மேல வீட்டம்மா, பிளஷர்‌ வீட்டுக்காரி, நடுவீட்டம்மா, மூணுமாடி முனீஸ்வரியம்மா, மயில்வீட்டம்மா, காரவீட்டுக்காரி, டாப்பு வண்டி சங்கரம்மா, கம்மாய்க்‌ கரை வீட்டம்மா, தானா கூனா தீனா மூனாவீட்டம்மா, மீயென்னாச்‌ சூனா பெண்டாட்டி, தோணி வீட்டம்மா, வேம்பாத்துக்காரி, சிங்கம்பட்டிச்‌ செல்லம்மா, ஜவுளிக்‌ கடைக்காரர்‌ பெண்டாட்டி, பெட்டி ஆபீஸ்‌ பிள்ளை வைப்பாட்டி, கீகாட்டுக்காரி, கிராம முன்சீப்‌ பெண்டாட்டி, பம்புசெட்டு பாப்பாத்தியம்மா, பாம்படக்காரி பாப்பு, பெரிய முதலாளி வீட்டு மருமகள்‌ மேல்‌ வண்டி ரங்கம்மா என்று இப்படியொரு பெரிய கூட்டம்‌ நல்லம்மா வீட்டு பொம்பளைக யாரும்‌ அந்தந்தக்‌ கூட்டத்தில்‌ எந்தக்‌ காலத்திலும்‌ கலந்து கொண்டது கிடையாது. அது அவர்களுக்குப்‌ பிடிக்காத விசயமும்‌ கூட.

இந்தப்‌ பெரிய வீட்டுப்‌ பொம்பிளைகள்‌ வேலை வெட்டி இல்லாதவர்கள்‌. வீட்டு வேலைக்கு ஆள்‌ வைத்திருப்பவர்கள்‌. வேளாவேளைக்கு பலகாரங்களும்‌ சோறும்‌, பாலும்‌, பழமும்‌ அவர்கள்‌ இருக்கும்‌ இடந்தேடி வரும்‌. தின்ன சோறு செரிக்கணுமே. அதற்காகத்தான்‌ பகலெல்லாம்‌ ஊர்ப்பொரணி பேசி நேரத்தைக்‌ கழிக்கிறார்கள்‌. அதுதான்‌ அவர்களது பிரதான சோலியும்‌ ஆகும்‌. இந்தக்‌ கீழ வீட்டு முதலாளி வீட்டை பொரணி மன்றம்‌ என்று ஊருக்குள்‌ பேசுவார்கள்‌. ஒருவரைக்கூட அவர்கள்‌ விட்டு வைப்பதில்லை பொரணி பேசுவதில்‌ (பக்‌. 159-160).

ஊர்ப்‌ பொரணி பேச ஒன்றுகூடல்‌ என்பது கிராமிய அம்சம்‌. காட்டு வேலை, வீட்டு வேலை எதுவும்‌ செய்யாமல்‌ சும்மா இருக்கிற காலத்தில்‌ வீட்டுப்‌ பெண்களின்‌ பழக்கம்‌ இது. உழைக்கும்‌ பெண்கள்‌ கூட வேலை இல்லாமல்‌ ஓய்வாக இருக்கிற காலங்களில்‌ ஊர்க்கதை பேசுவதுண்டு. கிராமிய வாழ்வு முறை ஒருவருக்கொருவரான நெருக்கம்‌ இதற்கான உந்து சக்தியாய்‌ இருக்கிறது.


தூரந்‌ தொலைவான இடங்களிலிருந்து வரும்‌ விவசாயிகள்‌ சந்தித்தால்‌ முதல்‌ விசாரிப்பு - ஒங்க ஊர்ல மழை எப்படி?

வேளாண்மை வானத்திற்குக்‌ கீழே நடக்கிற சூதாட்டம்‌ என்பது ருசுப்படுத்தப்பட்டு வருகிறது தமிழ்நாட்டில்‌. அது பற்றி முத்தானந்தம்‌ பேசுகிறார்‌,

போன வருசமாவது சம்சாரிகளுக்கு கால்‌ வெள்ளாமை, அரை வெள்ளாமை வந்து சேர்ந்திருந்தது. அந்த வெள்ளாமைகளையும்‌, காடு கரைகளில்‌ நக்கி நக்கி எடுத்து வந்த வரவும்‌ கூட தச கூலிக்கே சரிக்கட்டிப்‌ போனது. மிச்சத்துக்கு வழியில்லை. இடுப்பொடியாய்ப்‌ பாடுபட்டதுதான்‌ மிச்சம்‌.

இந்த வருசம்‌ அந்த வெள்ளாமையும்‌ கூடக்‌ கிடையாது.

வருண பகவான்‌ கரிசல்‌ காட்டு மக்களை நல்லாப்‌ போட்டு எடுத்துவிட்டான்‌.

பூமியில்‌ ஒரு பொட்டு மழை பெய்யவில்லை.

வானம்‌ பார்த்த பூமி ஏங்கித்‌ தவித்ததுதான்‌ கண்டது.

பச்சை என்பதே கண்ணுக்குத்‌ தெரியாமலே போயிற்று. எல்லா இடங்களிலும்‌.

கரிசல்‌ தாய்‌ கன்னங்கரேலென்று பிறந்த மேனியாகக்‌ கிடக்கலானாள்‌. செல்வம்‌ பொழியக்‌ கூடிய பிஞ்சைகள்‌ சீரழிஞ்சு கிடந்தன.

தங்கம்‌ விளையும்‌ பிஞ்சைகள்‌ கூடத்‌ தரங்கெட்டுக்‌ கிடந்தன.

கண்மாயில்‌ குருவி குடிக்கத்‌ தண்ணீர்‌ கிடையாது.

கிணறுகளில்‌ கருவாடு காயப்போடலாம்‌.

வருசம்‌ முன்னூத்து அறுபத்தஞ்சு நாளும்‌ வெள்ளை வெயில்‌ அடித்தால்‌ அப்படி?

பகவானுக்கல்லவா தெரியணும்‌!

அவன்‌ யார்‌ வீட்டில்‌ போய்‌ படுத்துக்‌ கொண்டானோ?

அவர்களுக்கும்‌ வைப்பாட்டி வீடுகள்‌ எல்லாம்‌ இருக்காமே?

ஜோசியர்கள்‌ கணக்குப்படி ரெண்டரை வருசம்‌, மூன்றரை வருசம்‌ என்று போய்‌ இருந்து கொள்வானாமே! (பக்‌. 59).

- ஜனங்கள்‌ புலம்பித்‌ தவித்தார்கள்‌.

பஞ்சத்தைப்‌ பேசியாயிற்று; மழைக்காலம்‌ எப்படி?

ரெண்டு வருசங்களாய்ச்‌ சும்மா கிடந்த கரிசல்‌ மண்ணில்‌ பெய்த மழையால்‌ சேறும்‌ சகதியும்‌ மண்டிப்‌ போய்க்‌ கிடந்தன. காலில்‌ ஒட்டிய களிமண்‌ அவர்களுக்கு “பூட்ஸ்‌” போட்டது மாதிரி இருந்தது. சில பேர்களுக்கு கரண்டைக்கால்‌ முங்க பிசுபிசுத்தது சேறு. அவர்கள்‌ மந்தைப்‌ புஞ்சைப்‌ பக்கம்‌ வெளிக்கப்‌ போய்வருவதுதான்‌ சங்கடம்‌. 'சக்‌'கென்று உட்கார்ந்து கொல்லைக்குப்‌ போக முடியாது. உட்கார்ந்தால்‌ பெருந்‌தொடை எல்லாம்‌ சேறாகிப்போய்விடும்‌. கொஞ்சம்‌ யோசனையும்‌ உள்ள கரிசல்‌ காட்டுக்காரர்கள்‌ கம்மந்தட்டை முடி ஒன்றைக்‌ கையில்‌ எடுத்துக்‌ கொண்டு போய்க்‌ கால்க்கெண்டை சதைக்கும்‌ தொடைக்கும்‌ இடையில்‌ வைத்துக்‌ கொண்டு சேறு ஒட்டாமல்‌ கொல்லைக்கு இருந்துவிட்டு வருவார்கள்‌. சிலருக்குச்‌ 'சீசீ' என்றிருக்கும்‌. அதற்காக மழை பெய்வதை வெறுக்க முடியுமா?” (பக்‌. 94-95)

அதற்காக அந்த வாழ்க்கையை வெறுக்க முடியுமா? இப்போதும்‌ கழிப்பறைகள்‌ இல்லாத பூமியாகத்தான்‌ நாறுகிறது. ஊரைச்‌ சுற்றி மந்தையை நோக்கி நடக்கும்‌ பாதைகளெல்லாம்‌ மனிதக்‌ கழிவால்‌ நாறிக்‌ கொண்டிருக்கிறது. மனிதக்‌ கழிவுகள்‌ காய்ந்தும்‌, காயாமலும்‌ ஊர்‌ முங்க முங்க வாசம்‌ வீசுகிற அங்கே கொக்கோ கோலாவும்‌, பெப்சியும்‌ கிடைக்கிறது.

***

ஊரின்‌ புறச்சூழல்கள்‌ மட்டுமல்ல. வாழ்க்கைக்கு உள்ளேயும்‌ நாறிப்போய்விட்டது நல்லம்மாவுக்கு! வீட்டு வேலையாளாய்‌ அமர்த்தப்பட்ட “கோணமண்ட மாப்ள” குமாரசாமியுடன்‌ சேர்க்கை கொண்டதால்‌ சொந்த மாமனான முதலாளிக்‌ கிழத்துக்கு மூன்றாந்‌தாரமாய்‌ வாழ்க்கைப்பட்டதை நல்லம்மா யோசிக்கிறாள்‌. இந்தத்‌ தப்புக்கான காரணங்களையும்‌ காரண கர்த்தாக்களையும்‌ அவள்‌ அறிவாள்‌.

“ஒவ்வொரு பொண்ணும்‌ கை நிறைஞ்ச பணத்தைக்‌ விடக்‌ கண்‌ நிறைஞ்ச புருசனைத்தானே விரும்புவா? பணமும்‌ சொத்தும்‌ நகையும்‌ இருக்குன்னு ஒரு வயசாளிக்கு என்னைக்‌ கொண்டு தானம்‌ கொடுத்துட்டாங்களே.. மொதலாளிக்குப்‌ புள்ள இல்லையின்னா இருக்கிற சொத்துக்கள இல்லாதவங்களுக்கு பகுந்து கொடுத்துட்டுப்‌ பேரும்‌ புகழுமாய்‌ போய்ச்சேர வேண்டியதுதானே. போகிற எடத்துலயாவது புண்ணியம்‌ கெடைக்கும்‌. புள்ள வேணுமாம்‌ புள்ள! புள்ள இல்லாட்டாக்‌ கொள்ளி வேகாதோ?” (பக்‌. 90)

உடைமை அடிப்படையில்‌ உறவைக்‌ கோர்த்துக்‌ கொள்வது கிராமிய அமைப்பு. உலகளாவிய தகவல்‌ தொழில்நுட்பம்‌ கூட அவர்களின்‌ கதவுகளைத்‌ தட்டி அசைக்க முடியவில்லை. நுகர்வுப்‌ பொருட்களின்‌ கூடாரமாக கிராமங்கள்‌ ஆக்கப்பட்டு வருவது தவிர, எந்தத்‌ தகவல்‌ தொழில்நுட்பமும்‌ வாழ்க்கை உறவுகளை மாற்றிப்போட முடியவில்லை.

நல்லம்மாளின்‌ யோசிப்பு சரியே. வேலைக்கார குமாரசாமியை நேசித்துக்‌ கூடிக்‌ குழந்தை பெற்றுக்‌ கொண்டதும்‌ சரிதான்‌. இந்த நடப்புக்கான மூல காரணங்களையும்‌ அதற்கான மூலகர்த்தாக்களையும்‌ யோசித்ததும்‌ சரியே!

நல்லம்மா சாயலிலேயே முதல்‌ இரண்டு குழந்தைகள்‌ இருக்க - இந்த மூணாவது குழந்தை குமாரசாமியை அப்படியே உறிச்சி வைச்சது மாதிரி பிறக்கிறது.

அதே கால்‌ வகுப்பு; அதே கைச்‌ சைஸூ. அதே இல்லிக்‌ கண்ணு. அதே சோணக்காது. அதே சப்பட்ட மூக்கு. அதே ஏரோப்ளேன்‌ மண்டை.

இந்த உடைப்புக்கான நியாயத்தை கட்டுப்பாடான கிராமிய சமூகம்‌ ஏற்க மறுக்கிறது. ஆனால்‌ அவள்‌ சார்பாக நியாயமான பேச்சுப்‌ பேசியவர்களும்‌ இருந்தார்கள்‌.

“இந்தச்‌ சின்னஞ்சிறு வயசுல அவ எப்படி இருப்பா? அவ என்ன மரக்கட்டையா? இல்ல தட்டைக்‌ கட்டா? செல கெழவங்க மாதிரி இந்தக்‌ கெழவன்‌ துள்ளி விளையாடுகிறவர்‌ மாதிரியா இருக்காரு”

“நல்லம்மா என்ன ஊர்ப்‌ பொதுக்கிணறு மாதிரியா இருக்கா? நாலு பேறு வாளி போட்டுத்‌ தண்ணி எடுக்கிறாப்போல? அவ ஒருத்தன்‌ கிட்ட உத்தமியா இருக்கா”

இங்கே அத்துமீறல்‌ ஒருவித நியாயமாகிவிடுகிறது. எப்போதும்‌ எதிர்க்கேள்வியை நிறுத்தி அத்துமீறல்‌ தன்னை நிலைநிறுத்திக்‌ கொள்கிறது.

“அவ விரல யாராலும்‌ மடக்க முடியுமா?.. ஒலகத்துல மீன்‌ திங்காத கொக்கு இருக்கவா செய்யுது?”

வித்தியாசப்பட்ட வாழ்க்கையைப்‌ பேசியிருக்கிறார்‌ படைப்பாளி. பல கண்களுக்கு இது விபரீதமான வாழ்க்கையாய்‌ தெரியலாம்‌. அருவறுத்து ஒதுக்க வேண்டியதாகப்‌ படலாம்‌.

இந்த வித்தியாசமான வாழ்க்கையினூடேயே அந்த நிலத்துக்கே உரித்தான பண்பாட்டுக்‌ கூறுகளை கோர்த்துத்‌ தருகிறார்‌.

புதைந்து போய்க்‌ கொண்டுள்ள கிராமியக்‌ கலாச்சாரத்தை அகழ்ந்து எடுத்து விரிக்கும்‌ வேலையை தன்‌ தோளில்‌ போட்டுக்‌ கொண்டு செய்கிறவராக முத்தானந்தம்‌ இருக்கிறார்‌.

மனுசன்‌ சொல்ல முடியாததை சொலவடைகள்‌ சொல்லி விடுகின்றன. ஒரு பழமொழி ஒரு முழுமனுசன்‌ மாதிரி; முழு ஆளை அப்படியே தத்ருபமாக காட்டி விடுகிறது. சொலவடையோடு சொல்லாடலும்‌ அள்ள அள்ள வற்றாமல்‌ வந்து கொண்டிருக்கிறது. (கிறங்கிக்‌ கிறுகிறுத்து, வேலை கெடக்கு ஒரு கோட்டைக்கு, வாயிழந்து கேட்பது, இருவாயும்‌ பொன்‌ சொரிய, சிப்பாணி அள்ளிக்‌ கொட்டுது, எக்கடையும்‌ எகடாசியும்‌ அத்தம்‌ தொத்தம்‌, பழசு பட்டை).

***

ஆனால்‌ சமகாலப்‌ படைப்புக்களின்‌ மொழி சாதுரியம்‌, குயுக்தி, வியூகம்‌ இவை பற்றி சில கேள்விகள்‌ எழுகின்றன. யதார்த்தம்‌ இன்று பல்வேறு எடுத்துரைப்பு முறை, கதை சொல்லல்‌, தொழில்‌ நுட்ப முயற்சிகளைத்‌ தனதாக்கிக்‌ கொண்டுவிட்டது.

எந்தக்கால வாழ்க்கையை விரித்து வைத்தாலும்‌ எந்தக்கால மனுசர்களைச்‌ சித்தரிப்பு செய்கிறபோதும்‌ சமகால நவீனப்‌ போக்கு வெளிப்பட்டுக்‌ கொண்டிருக்க வேண்டும்‌.

இலக்கிய வெளிப்பாட்டு மொழி ஒவ்வொரு காலகட்டமாய்‌ அதன்‌ வளர்ச்சிக்குப்‌ பொருந்த அமைகிறது. வளர்ச்சியை முன்னெடுக்கும்‌ நடையாக மாறுகிறது. ஒரு காலகட்டத்தின்‌ இலக்கிய மொழி - அடுத்த கட்டத்துக்குப்‌ பொருத்தமில்லாமல்‌ போகலாம்‌. ஆனால்‌ அது தன்னிடம்‌ தரப்பட்ட படைப்பு வேலையை பூரணமாக குறிப்பிட்ட காலத்தில்‌ செய்து முடித்திருக்குமானால்‌ அதுதான்‌ வெற்றி.

முத்தானந்தம்‌ கைக்கொண்டிருக்கிற நேரடிச்‌ சொல்முறை அதில்‌ ஒன்று.

வட்டாரக்‌ கலாசாரத்தைப்‌ பேச் வெவ்வேறு உத்திகள்‌ இருக்கின்றன. ஏகப்பட்ட வெளிப்பாட்டு முறைகள்‌ நவீனமாகிய கடலில்‌ 'கெத்கெத்‌'தென்று கிடக்கின்றன.

மண்சுவர்‌ வைத்து அதன்மேல்‌ நைப்புமணல்‌ பூசி தேய்ப்புப்‌ பலகை (தீத்துப்‌ பலகை) வைத்து தேய்த்து வீடு கட்டும்‌ பாணி இந்த எழுத்து முறை. இன்று விஞ்ஞானம்‌ கட்டடக்‌ கலையை எங்கோ உயரத்தில்‌ தூக்கிக்‌ கொண்டுபோய்‌ வைத்துவிட்டது.

காணாமல்‌ போய்விட்ட குமாரசாமி கிடைத்துவிட்டான்‌. அவனைக்‌ காணாமல்‌ போக்கடித்து கதையில்‌ ஒரு திருப்பத்தை கொண்டு வர வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே குடும்பக்‌ கட்டுப்பாடு பிரச்சினை திடீரென வந்து குதிக்கிது. அவன்‌ கிடைத்துவிட்ட சேதி கேட்டு மகிழ்ந்து போன நல்லம்மாவின்‌ இரண்டு கண்களும்‌ முகட்டைப்‌ பார்த்தபடியிருந்த அந்த யோசிப்பு - ஒரு நல்ல மனுசனை இந்த அலைக்கழிப்பு செய்திட்டமே என்ற வருத்தமாக மாறுகிறது. தன்பக்கம்‌ அதற்குப்‌ பண்ண வேண்டிய பரிகாரங்களைப்‌ பண்ணி முடிக்க வேண்டும்‌ என்று நினைத்தாள்‌. இது ஒரு முக்கியமான கட்டம்‌.

ஆம்பிளை மாதிரி கைவீசி நடந்தாள்‌. ராசகோபால நாயக்கர்‌ வீடு. அவருக்கு வலதுபுறம்‌ ஆட்டுகிடை கீதாரிக்‌ கோனார்‌. அவருக்கும்‌ பக்கத்தில்‌ மேகாட்டு வியாபாரி நாயக்கர்‌. இரும்புக்‌ கட்டிலில்‌ ராசகோபால்‌ நாயக்கர்‌ சம்சாரம்‌, தாயார்‌ இவர்களின்‌ சபையில்‌ தன்னால்‌ வாழ்வு தொலைந்த குமாரசாமியின்‌ மறுவாழ்வுக்கு தான்‌ செய்யப்போகிற ஏற்பாடுகளை வரிசையாய்‌ சொல்கிறாள்‌.

“நீ சொல்றதெல்லாம்‌ சரிதான்‌... இருக்கிற வரைக்கும்‌ நாலுபேருக்கு நல்லது செய்துட்டுப்‌ போகணும்னு சொன்ன பாரு. அது எனக்கு ரொம்பப்‌ பிடிச்சிருக்கு. யாரு கொறை சொல்லப்போறா?”

கடைசியாய்‌ ராசகோபால்‌ நாயக்கர்‌ சம்சாரம்‌ சொல்கிற இந்தச்‌ சொல்‌ வாழ்வாய்‌ காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்‌.

என்னென்ன செய்வதாகச்‌ சொல்கிறாளோ, அதை வாழ்வாய்‌ வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்‌.

சொல்வகையாக இல்லாமல்‌ நல்லம்மாவின்‌ அடுத்த கட்ட வாழ்வாக நடத்தப்பட்டிருந்தால்‌ முழுமையாகி இருக்கும்‌.

நல்லம்மாவின்‌ வாய்‌ வார்த்தையாக 'நாவலை' சட்டென்று முடித்துவிட்டார்‌.

இந்த இடத்தில்‌ கதை சொல்லலுக்கு ஏற்பட்ட பள்ளம்‌, கன்னத்தில்‌ விழுகிற குழி போல்‌, அழகுப்‌ பள்ளமாக இல்லை.

திரைப்படம்‌ பாணியில்‌, நாடக முறையில்‌ வேகவேகமாய்‌ முடிக்கப்‌ பெற்ற நல்லம்மா, இன்னும்‌ நாலு எட்டு நடந்திருக்க வேண்டும்‌.

- பா.செயப்பிரகாசம்‌, ஜூலை 2007

இருள்‌ என்பது குறைந்த ஒளி - முன்னுரை

(வெளியீடு: அகரம்‌, மனை எண்‌.1, நிர்மலா நகர்‌, தஞ்சாவூர்‌ - 613007, தொலைபேசி: 04362239289, விலை : ரூ. 75/-)


இரு ஆண்டுகள்‌ முன்‌ எழுத்தாளர்‌ சி.சண்முகசுந்தரம்‌ தஞ்சையில்‌ ஒரு இலக்கிய நிகழ்வுக்கு அழைத்திருந்தார்‌. அந்நிகழ்வில்‌ முத்துப்பேட்டை இரா.மோகன்ராஜன்‌ எனக்கு அறிமுகமானார்‌. அங்கிருந்து அவர்‌ முத்துப்பேட்டை திரும்ப இரண்டு மணிநேரமாகும்‌. அந்நிகழ்விலும்‌ அடுத்த ஆண்டு இலக்கிய நிகழ்வின்போதும்‌ கூட்டம்‌ முடியும் முன்னரே காணாமல்‌ போயிருந்தார்‌.

இப்படியான ஒரு படைப்பாளியை - பல ஆண்டுகள்‌ முன்னரே சந்தித்திருக்க வேண்டுமே. எத்தனை பெரிய இழப்பு இது என கையில்‌ ஏந்தி நிற்கிற சிறுகதைகளின்‌ தொகுப்பு உணர்த்துகிறது.

ஒவ்வொரு படைப்பும்‌ ஓவ்வொரு அதிசயத்தை தனக்குள்‌ சேமித்திருக்கிறது. வாசிக்க வாசிக்க முகிழ்த்து முகிழ்த்து மேலெழுந்து என்‌ வாசிப்பை, கிரகிப்பை விரிவடைய வைத்தது.

அங்கீகரிப்பு காலத்தில்‌ நிகழவேண்டும்‌. ஆடிப்பட்டம்‌ தேடி விதைக்க நாம்‌ போயாக வேண்டும்‌. என்னை எடுத்துக்கோ, எடுத்துக்கோ என கூவிக்கொண்டு விதை வராது. கூவி நம்‌ கைகளில்‌ தாவி உட்கார முயலுகிற விதைகள்‌ நல்விதைகள்‌ அல்ல. சோடை போனவை. நிலவொளி என்ற சிற்றிதழ்ப்‌ பட்டத்தில்‌ அவ்வப்போது இந்த விதை முளைத்து - பளிச்சென வளர்ந்து முகம்‌ காட்டியிருக்கிறது. இதுபோன்ற சிற்றிதழ்கூட - சிற்றிதழை தேடித்தேடி அலைகிறவர்களின்‌ பார்வைக்கு கிடைக்காமல்‌ போயுள்ளதே என்பது அவலம்‌.

இலக்கிய உலகின்‌ பிரபலங்களில்‌ பலரும்‌ இதுபோல்‌ சிற்றிதழ்களில்‌ காலூன்றி வந்தவர்கள்‌. சிற்றிதழ்கள்‌ எனும்‌ கணவாய்‌ வழியே காற்றாய் வீசி சமவெளியாய்‌ உருவானவர்கள்‌ அந்த அளவுக்கு அவர்களது விரல்களுக்குள்‌ எழுதும்‌ திறனும்‌ கட்டுண்டு, பெய்து கொண்டிருந்தது. வணிக இதழ்களுக்கு இடம்‌ மாறியதும்‌, குடிபெயர்வு அவர்களைக்‌ காணாமல்‌ போகவைத்து அவர்கள்‌ இருந்தார்கள்‌; எழுத்துக்கள்‌ இல்லை.

அறியப்பட்ட எழுத்தாளர்கள்‌ இளங்குருத்துக்களைக்‌ கண்டறிந்து வளர்த்துவிடாத தவறுகளை மீண்டும்‌ மீண்டும்‌ செய்கிறார்கள்‌. அதற்கான அக்கறையோ, அக்கறையின்மைக்கான வருத்தமோ இல்லை. அறியப்பட்ட படைப்பாளிகள்‌, புதிய பேனாக்காரர்களுக்கு காது கொடுத்து கைவாகு தந்து, வழிகாட்டி தூக்கிவிட கணிசமான நேரம்‌ ஒதுக்குவதை, கடமையாகக்‌ கொள்வோமாக. ஆனால்‌, எந்த வழிகாட்டுதலுக்கும்‌ திசைப்‌படாமல்‌, தன்னை முந்தி நிறுத்தும்‌ பேராசை கொண்டலையும்‌ சில பிரகிருதிகளும்‌ இருக்கிறார்கள்‌ என்பதைக்‌ குறித்துக்‌ கொள்கிறோம்‌.

கடிதங்கள்‌ கோர்த்து கதை எழுதலாமா? எழுதலாம்‌ என்கிற முன்‌ மாதிரிச்‌ சோதனைகள்‌ பிறமொழிகளிலே எடுத்துக்கொள்ளப்‌பட்டுள்ளன. சிறுகதை என்ற ஆதிவடிவமே - ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு வந்ததாகையால்‌, அதிலான பல்வேறு வடிவச்‌ சோதனைகளும்‌ நம்‌ தாய்மொழிக்குத்‌ தாவியுள்ளன.

கடிதங்களாலான புதுவகை படைப்புக்கள்‌ வரிசையில்‌ மோகன்ராஜ்‌ இருகதைகளைத்‌ தருகிறார்‌. பெயர்‌ அறியா ஒரு பறவை; வண்ணக்‌ கலவையில்‌ விழுந்து எழுநீது வந்ததுபோல்‌ ஜொலிக்கும்‌ ஒரு பறவை. இமயா என்று அதற்கு ஒரு பெயர்‌ கொடுத்து, அந்தப்‌ பறவையுடன்‌ கற்பனையான உரையாடுதலை (காதல்‌ வயமான - பேரன்பு வசமான என்றும்‌ சொல்லலாம்‌) நிகழ்த்துகிற தமிழ்‌ என்ற பிஞ்சு நெஞ்சின்‌ பாடல்‌ இசைக்கப்படுகிறது. பால்ய காலத்தின்‌ ஓவ்வொரு நகர்வும்‌ பறவையிடம்‌ பேசுவது போல்‌ வெளிப்படுத்தப்படுகிறது. கடைசியாய்‌ அது என்ன தமிழுக்கு அப்பா எழுதிய கடிதம்‌? கடிதமா? தன்னைக்‌ கால்‌ பிடித்து இழுத்துச்‌ சுருட்டிய பொருளாரார இழப்புக்களில்‌ மாட்டிக்கொண்ட தந்தை செல்ல மகனிடமிருந்து மட்டுமல்ல, உலககிலிருந்தும்‌ விடைபெற்றுக்‌கொள்ளும்‌ இறுதிக்‌ குறிப்புக்களா? என்னை மன்னிப்பாயா தமிழ்‌ என்று கடைசியாய்‌ கேட்பது என்ன? ரொம்ப ரொம்பப்‌ பூடகமாக வெளிப்படுத்துவதும்‌ கலைப்டடைப்பின்‌ ஒருவகைதான்‌.

பிஞ்சு நெஞ்சங்களின்‌ நினைவோட்டங்களுக்கும்‌, பெற்றோர்‌, குடும்பம்‌, கல்விநிலையம்‌, ஆசிரியர்‌, சமுதாயம்‌ இவைகளின்‌ செயல்களுக்குமான முரண்பாடுகளைச்‌ சித்தரிப்பதில்‌ மோகன்ராஜ்‌ கூடுதல்‌ அக்கறை கொள்கிறார்‌. இறகு விழும்‌ மண்‌, மின்மினியும்‌ சில வண்ணத்துப்‌ பூச்சிகளும்‌ சிட்டு, இமயா, அனாமிகா எனப்‌ பல கதைகள்‌.

குழந்தைமையைச்‌ சிதறடிக்கிற ஆங்கில ஆதிக்கம்‌ பற்றி - நம்‌ பிள்ளைகளை ஆங்கிலப்‌ பண்பாட்டுக்குள்‌ அடக்க முயலுகிற காண்வென்ட்‌ கலாச்சாரம்‌ பற்றி எவ்வளவோ எடுத்தெடுத்துப்‌ பேசிவிட்டோம்‌. ஆனால்‌ இன்னும்‌ இன்னும்‌ குழந்தைமைக்‌ கொலைகள்‌ நடைபெற்றுக்‌ கொண்டேயிருக்கின்றன. தம்‌ செல்லங்களின்‌ குழந்தைத்தனம்‌ கொலையாக பெற்றோர்களும்‌ களிப்போடு அனுமதித்துக்‌ கொண்டேயிருக்கிறார்கள்‌. தண்ணீர்‌ வேண்டும்‌ என்று சொல்லக்கூடாது; அது தப்பு, வாட்டர்‌ என்று சொல்லவேண்டும்‌. வகுப்பில்‌ அப்படித்தான்‌ கேட்க வேண்டுமென்று அம்மா சொல்லியனுப்புகிறாள்‌. இனிமேல்‌ அம்மான்னு எல்லாம்‌ கூப்பிடக்கூடாது. மம்மின்னுதான்‌ கூப்பிடனும்‌. அதையும்‌ அம்மாதான்‌ கண்டிப்பாகச்‌ சொல்கிறாள்‌. வணிக வியாபாரம்‌ நடக்கிறது. செய்கிறவர்கள்‌ குழந்தைப்‌ பலி கேட்கிறார்கள்‌. சிட்டு இதுபோல்‌ இவர்களுக்குக்‌ கொடுக்கப்பட்ட குழந்தைப்‌ பலி அனு என்ற அனாமிகா - ஒரு குளோனிங்‌ குழந்தை. மற்ற குழந்தைகளுக்கும்‌ அனுவுக்கும்‌ நிறைய வேறுபாடு உண்டு. அனு இயற்கைக்கு மாறான படைப்பு; மறுப்பான படைப்பு. மருத்துவம்‌ அனுவை மனித வாசனையே அண்டாத கட்டிடத்தில்‌ ஆய்வுக்கூடத்தில்‌ அடைத்து வளர்க்கிறார்‌.

குளோனிங்‌. பிரதியாக்கக்‌ குழந்தைகளோட குண வித்தியாசங்களை நிறம்‌ பிரிக்கவும்‌, அடையாளப்படுத்தி வரையறுக்கவும்தான்‌ இந்த ஆய்வு. அனு ஏன்‌ முக்கியம்னு இனி நான்‌ சொல்ல வேண்டியதில்லையல்லவா?

மருத்துவர்‌ விளக்குகிறார்‌. கண்ணாடித்‌ தொட்டிக்குள்‌ வளர்க்கப்படும்‌ போன்சாய்‌ செடி அது. அந்தச்‌ செடி தொட்டியின்‌ சிறு வெடிப்பில்‌ கசிந்த ஒளியைப்‌ பிடித்து, மேலே வளர்ந்து, சுய சந்திப்பில்‌ அய்க்கியமாகிறது. குளோனிங்‌ - சுயமாகச்‌ சிந்திக்கலாமா? அது வரைந்த ஓவியங்களும்‌, அதன்‌ காட்சிகளும்‌ மூடிவைக்கப்பட்ட அறைக்குள்‌ எந்தப்புற உலகிலிருந்து கிடைத்தன? சுயம்‌ அடக்கப்பட்ட அனு கொஞ்சம்‌ கொஞ்சமாய்‌ விரிந்து வார்த்தைகள்‌ ஓங்கரித்து அம்மா, அம்மா என்று விசும்பி, அலறலாய்‌ கதறலாய்‌, கதவு, சன்னல்‌ தாண்டி ஆகாயம்‌ நிறைத்து திடுமென அதிர்ந்து பின்‌ பெருகிற்று.

சோதனைக்காகக்கூட, சிலவற்றைச்‌ செய்யக்கூடாது என்பதை இப்படைப்பு உணர்த்துகிறது. தனது புலனடக்கத்தைச்‌ சோதனை செய்ய ஒரு - இளநங்கையுடன்‌ இரவு முழுதும்‌ நிர்வாணமாய்‌ இருந்து காந்தி செய்து பார்த்த 'சத்திய சோதனை' தான்‌ இது. எவரும்‌ தொடாததொரு கதைப்பொருளை எடுத்து, மிக நுட்பமான அறிவியல்‌ மொழியாய்‌ அதனைக்‌ கையாளுகிற மோகன்ராஜ்‌, நம்‌ புருவங்களை அவரை நோக்கி உயர்த்தச்‌ செய்துவிடுகிறார்‌.

கடித வகையிலான, குறிக்கப்படவேண்டிய இன்னொரு கதை - இராவணதேசம்‌. இனி அது இராவணதேசம்‌ அல்ல. இராசபக்க்ஷேக்களின்‌ தேசம்‌. இராவணன்‌ யார்‌ என்பதைத்‌ தெரிந்து கொண்டார்‌. தமிழ்ப்‌ பாரம்பரியத்தில்‌ வந்து ஆரிய ராமனை எதிர்த்துப்‌ போரிட்டவன்‌ என்ற புரிதல்‌ கொண்டால்‌, இந்த தலைப்பின்‌ அர்த்தத்தில்‌ பயன்படுத்தியிருக்கமாட்டோம்‌. சில சொல்லாடல்களை, உண்மை அறிந்து, பொருள் தெரிந்து பயன்படுத்துவோமாக. ஆரியக்‌ கலாச்சார, ஆதிக்கத்தை இன்னும்‌ ஊன்றி நிற்திறவர்களே இராவண வதம்‌ என ராம லீலா - என கொண்டாடுவார்கள்‌.

விடுதலை இயக்கத்தில்‌ தன்னை இணைத்துக்கொண்ட பெண்‌ போராளியின்‌ கதை. முத்துப்பேட்டையில்‌ வாழுகிற கோமதிக்கும்‌, சாவகச்சேரி, மாங்குளம்‌, பரந்தன்‌, 9ஏ-வன்னி நெடுஞ்சாலை, வவுனியா என்று ஒரு லெக்கு (இடம்‌) என்றில்லாமல்‌ பெயர்ந்து, பெயர்ந்து போராடிப்‌, போராடி போய்க்‌ கொண்டிருக்கிற ஊர்மிளை என்ற போராளிக்கும்‌ இடையிலான கடித உரையாடல்‌ கதையாய்‌ விரிகிறது.

விடுதலைப்‌ போருக்கு மக்களை அணியமாகும்படி ஆயிரக் கணக்கில்‌ அணிதிரட்டிய கவிதைகள்‌. ஊர்மிளையின்‌ வாழ்வினூடாகவே கூட்டம்‌ கூட்டமாக வருகின்றன. இனபேதம்‌, அடக்குமுறை, இன்னார்‌ இவர் யார்‌ என வேறுபாடில்லாத மனிதச்‌ சிதைப்பு, போராளி, போர்க்களம்‌ என நிலைமைகளின்‌ படிப்படியான தன்மைக்குப்‌ பொருத்தமாய்‌ கவிதைகளை தொகுத்துத்‌ தந்திருக்கிற முறைமை வெகுவாகக்‌ கவருகிறது. கோமதி, ஊர்மிளை இருவரும்‌ கவிதைகளால்‌ வாழ்பவர்கள்‌. ஊர்மிளை போர்க்கள இலக்கியமாகவே வாழ்கிறாள்‌.

மகன்‌ விமலனை டாக்டராக்க வேண்டுமென்பது அம்மாவின்‌ கனவு. ஈழத்தில்‌ வாழ்பவர்களுக்கு இப்படியொரு கனவு உண்டாகலாமா? தகாத கனவு. இந்தியாவுக்கு கரை தாண்டி விட்டால்‌ போதும்‌. நல்லூர்க்‌ கந்தையன்‌ அருளில்‌, அவனுடைய டாக்டர்‌ லட்சியத்தை யாராலும்‌ ஓன்றும்‌ செய்ய ஏலா. அம்மா மட்டுமல்ல; விமலனுமே நினைக்கிறான்‌. எண்டாலும்‌ கரை கண்ணுக்கு எட்டிய மட்டும்‌ மறைஞ்சிதான்‌ கெடக்குது? சிங்கள இராணுவ வெறியாட்டத்தில்‌ அவனுடைய மாமாவும்‌, மாமா குடும்பமும்‌, அவனுடைய மனதில்‌ வாழும்‌ ஆனந்தியும்‌ நசுங்கிச்‌ சப்பழிய, அவனுடைய டாக்டர்‌ கனவும்‌ நொறுங்கிப்போகிறது; தூரத்தில்‌ லாந்தர்‌ எரிய, இந்தியாவுக்கு கடத்திப்‌ போக தோணி வருகிறது; கரையில்‌ தோணிக்காக நின்றவன்‌ திரும்புகிறான்‌, டாக்டராகவில்லை. போராளியாகிறான்‌.

இருள்‌ என்பது குறைந்த ஒளி - என்பது இக்கதையின்‌ தலைப்பு. இருளே வழிநடத்தும்‌ ஒளியாக உள்ளது என்ற வித்தியாசமான பொருளைத்‌ தனக்குள்‌ அடக்கியிருக்கிறது. இந்தக்‌ கதை மட்டுமல்ல, இராவண தேசம்‌, சிறுகதை, இறகு விழும்‌ மண்‌ என்ற கதைகள்‌ ஈழதேசம்‌ பற்றிய படைப்புக்கள்‌. இந்த அனைத்தும்‌ ஈழத்‌ தமிழ்‌ மொழியிலேயே நடத்தப்படுகிறது. ஈழ மண்ணில்‌ கால்‌ பதித்து வந்தவரும்‌ இல்லை; ஈழத்தில்‌ வாழ்ந்தவரும்‌ இல்லை. ஈழத்தமிழர்‌ போலவே, பிரதேச மொழியைக்‌ கையாண்டிருப்பது ஆச்சரியம்‌ தருகிறது. முத்துப்பேட்டை, கோடிக்கரை எல்லாமும்‌ ஈழமக்களின்‌ அடைக்கலக்‌ கூடுகள்‌. போராளிகளும்‌, அகதிகளுமாய்‌ அங்கேயே தங்கியிருந்த மக்களுடன்‌ மக்களாய்‌ தன்னைக்‌ கரைத்துக்‌ கொண்டதும்‌, போராளிகளுள்‌ தன்னை இணைத்துக்‌ கொண்டதும்‌, அந்த மொழி லாவகமாய்க்‌ கையனையக்‌ காரணமாகலாம்‌. மொழி போலவே, கதைகளின்‌ கருக்களும்‌ அங்கிருந்தே கிடைத்திருக்கின்றன.

பள்ளிக்கூடம்‌ போகிறபோதே காணாமல்‌ போகிறார்கள். பள்ளிக்கூடத்திலிருந்தும்‌ காணாமல்‌ போகிறார்கள்‌. போராளியாக குழந்தைப்‌ போராளிகள்‌ பற்றிய மற்றொரு கதை.

மாஸ்றர்‌, நான்‌ ஒங்களுக்குச்‌ சொல்றதா எண்ணக்கூடாது. எண்டாலும்‌ மாஸ்றர்‌ நாங்களும்‌ கொஞ்சம்‌ யோசிக்க வேணும்‌. விதி, தலைவிதி யெண்டு ஒண்டுமில்லதானே.... இண்டைக்கு எங்கட மக்கள்‌ மேலே எதிரியானவன்‌ ஒரு முற்று முழுதான யுத்தத்தை திணிச்சு இருக்கான்‌. சண்டை நிறுத்தமென்பதெல்லாம்‌ வெறும்‌ கண்துடைப்பு. அவைகள்‌ (அவர்கள்‌) தம்மை போருக்குத்‌ தயார்‌ செய்யப்‌ போடுற நாடகம்‌. இதிலை தெரிஞ்சோ, தெரியாமலோ நாங்கள்‌ எங்கட ஆட்கள ஒவ்வொருத்தரையா பலிகொடுத்துக்‌ கொண்டிருக்கிறம்‌. இந்தச்‌ சமயத்தில எங்களக்கு என்ன எண்டு கிடந்தா, எங்கட மக்கள்‌ கதி? இனியெங்கட மக்கள்‌ அவையிண்ட தலைமுறையெண்டு கதைக்க ஆட்கள்‌ ஏதும்‌ காணாது போய்விடும்‌ மாஸ்றர்‌.

மாணவப்‌ போராளியாகிவிட்ட குமரன்‌ கதைக்கிறான்‌. அஞ்சு வயசிலை ஆமிக்காரன்‌ துண்டிச்ச கைவிரல்களோடும்‌, இரும்புத்‌ தகடு பொருத்திய கால்களோடும்‌ கெந்திக்‌ கெந்தி நடந்த குமரன்‌ சொல்வான்‌ மாஸ்றர்‌, கேளுங்கோ. ஆமிக்காரன்‌ ஊனமாக்கிப்‌ போட்டுப்‌ போனானெண்டு மூலையிலை முடங்கியா போயிட்டன்‌. இல்லை மாஸ்றர்‌. எண்ட அந்த வயசிலை நான்‌ யாருக்கு எதிரியா கிடந்திருக்க ஏலும்‌, கொல்லுங்கோவன்‌.

அறம்‌, தர்மம்‌, நியாயக்‌ கோட்பாடுகள்‌ பேசுகிற எவரிடமும்‌ இந்தக்‌ கேள்விக்குப்‌ பதிலுண்டா?

இன்னொரு முக்கியமான கேள்வி மாஸ்றருக்கு இருக்கிறது. அது கிடக்குது குமரன்‌ - அண்டைக்கு உம்முடைய சகோதரனை சுட்டுப்போட்ட ஆட்கள்கூட நீரும்‌ கிளம்பிப்‌ போனீறாரேமே?

குமரனுக்கு செல்லடி காயத்தில்‌ சயனைட்‌ வெச்சதுபோல்‌ கிடந்தது. எது மாஸ்றர்‌? அவன்‌ துரோக இயக்கத்திலை இருந்து எங்கட இனத்துக்கும்‌ மக்களுக்கும்‌ துரோகஞ்‌ செய்தவை. மற்றது, எமது இயக்க ஆட்கள்‌ முதுகிலயும்‌ குத்தினவை. ஆகையால்‌ எமது மக்களின்‌ விருப்பப்படியே தண்டனை குடுக்க வேண்டியதாகிப்‌ போச்சுது.

மாஸ்றரின்‌ அந்தக்‌ கேள்வி அவரது கேள்வி மட்டுமல்ல; விடுதலையை நேசிக்கிற நம்முடைய கேள்விகளும்தான்‌.

சகல இயக்கங்களும்‌ இணைந்து ஒரு பெரிய வேலைத்‌ திட்டத்தின்‌ அடிப்படையில்‌ ஒரு பொதுத்‌ தலைமையை உருவாக்குவதன்‌ மூலம்‌ எதிர்நோக்கும்‌ பிரச்னைகளைத்‌ தீர்க்கலாம்‌. 

(மு.திருநாவுக்கரசு, ஈழ அரசியல்‌, வரலாற்று ஆய்வாளர்‌ - நூல்‌: இந்தியாவும்‌ தமிழீழ விடுதலைப்‌ போராட்டமும்‌ - பக்‌.31),

ஒரு பொதுத்‌ தலைமையை உருவாக்க எந்தப்‌ போராளி இயக்கமும்‌ தயாரில்லை. தமிழக அரசியல்‌ தலைமைகள்‌ போலத்தான்‌; அத்தனை ஆயிரம்‌ பேரைக்‌ காவுகொடுத்த கடைசி நேரங்களிலும்‌ அவரவர்‌ இயக்க அடையாளத்தைக்‌ காப்பதிலும்‌ அவரவர்‌ தலைமையை முன்னிறுத்துவதிலும்‌ கவனமாகச்‌ செயல்பட்டனர்‌. பிரச்னையைத்‌ தீர்ப்பதோ, பிரச்னையோ பெரிதல்ல. மக்களோ, மக்களின்‌ பிரச்னைகளோ, எதுவாயினும்‌ மேலானதாய்‌ இயக்கம்‌ அவர்களை நடத்தியது.

போராளிக்‌ குழுக்களும்‌ அவ்வாறே! அவர்களின்‌ பேச்சுவார்த்தை மேசையில்‌ துப்பாக்கி நடுவில்‌ இருந்தது. துப்பாக்கி முன்னால்‌ உட்கார்ந்திருந்தது; போராளிகள்‌ பின்னால்‌ உட்கார்ந்திருந்தார்கள்‌.

இயக்கங்களுக்குள்‌ சனநாயகம்‌, இயக்கக்‌ கூட்டுக்குள்‌ சனநாயகம்‌, பொது தலைமைப்‌ பீடத்துள்‌ சனநாயகம்‌ என எங்கும்‌ சனநாயகம்‌ நிலவினால்தான்‌ - சனநாயக ரீதியாகத்‌ தீர்மானம்‌ எடுக்கப்பட்டால்தான்‌ சரியான வெற்றியை அடையமுடியும்‌. அல்லது தோல்வியைத்தான்‌ தழுவவேண்டி ஏற்படும்‌.

(மூ. திருநாவுக்கரசு, ஷ நூல்‌ பக்‌.31)

இந்த வாசகம்‌ முன்வைக்கப்பட்ட 1985லும்‌ எந்தக்‌ குழுவும்‌ கருத்தில்‌ கொள்ளவில்லை. இப்போதும்‌ அதேகாட்சி நீடிப்பதுதான்‌ அவலம்‌. இயக்க சனநாயகம்‌, இயக்கங்களுக்குள்‌ சனநாயகம்‌ என எவரொருவருமே அக்கறை கொள்ளவில்லை. அக்கறை கொண்டு முயற்சி மேற்கொண்டோரும்‌ புறமொதுக்கப்பட்டனர்‌ (முடிவிலாப்‌ பயணத்தின்‌ முடியாத வரலாறு - எஸ்‌.எம்‌.கோபாலரத்தினம்‌, நூல்‌ வெளியீடு, தோழமை பதிப்பகம்‌, சென்னை.)

பேனாவுக்குப்‌ பேனா தான்‌ பேசவேண்டும்‌; துப்பாக்கி பேசுதல்‌ கூடாது. அது அரச பயங்கரவாதம்‌; தாதாக்கள்‌ பயங்கரவாதம்‌. கவிஞர்கள்‌ செல்வி, சிவரமணி - கவிதைகளால்‌ விமரிசித்தவர்கள்‌ - உலலிருந்தே அகற்றப்பட்டு விட்டனர்‌. மனித உரிமைப்‌ போராளி - ரஜினியின்‌ கொலைச்‌ சேதியைக்‌ காற்றில்‌ பறக்கவிட்டாயிற்று. எங்கெல்லாம்‌ மனிதம்‌ துளிர்க்குமோ, துளிர்க்கச்‌ செய்ய எழுத்துக்கள்‌ பேசுமோ - அங்கு மனிதமும்‌ எழுத்தும்‌ துப்பாக்கியால்‌ மெளனிக்கப்‌பட்டன.

அவனை விதைத்த அடுத்த கணம்‌

அதோ

அடுத்தடுத்துள்ள கல்லறை நோக்கி

ஓடின கால்கள்‌

கண்ணீர்ப்‌ பூக்களைத்‌

தூவின கைகள்‌.


அவன்‌ விதை குழிக்கு

மண்ணிட்ட கரங்கள்‌

அனைத்துமே....

தத்தம்‌ மக்களுக்காய்‌

மண்ணிட்டிருந்தன.


எந்த மகனுக்காய்‌

என்‌ கால்களை நகர்த்த?

நேற்று விதையுண்டு போன

மூத்தவனுக்கா - இல்லை

இப்போதுதான்‌ விதைக்கப்பட்ட

என்‌ இளைய குஞ்சுக்கா?

எந்த மகனுக்காய்‌ என்‌ கால்களை நகர்த்த என்ற கவிதை - அ.காந்தா அன்னையாக எழுதியது; அன்னையருக்காக எழுதியது.

மகனையோ, மகளையோ இழக்கிற சோகம்‌ - தாய்க்குப்‌ பெரியது. எதிரியால்‌ அழிந்தாலென்ன? இயக்கங்களால்‌ அழிக்கப்‌பட்டாலென்ன? எதிரியைத்‌ தாய்க்கும்‌, தந்தைக்கும்‌ குடும்பத்துக்கும்‌ தெரியும்‌. ஆனால்‌ இயக்கமும்‌ உயிர்‌ எடுக்கும்‌ என்பது என்ன காரணமாயினும்‌ - சொந்த உயிர்களின்‌ மரணத்தைத்‌ தாங்க இயலுமா?

மனச்சாட்சியோடு பேச வந்தவர்களுக்கும்‌ ஆயுதமே பேசிற்று. ஆயுதங்களற்ற விமர்சனவெளி - கருத்துரைப்பு வெளி (Space) இப்போது உருவாகியிருக்கிறது. உருவாகியுள்ள இந்த சனநாயக வெளியை ஒற்றைப்‌ பிம்பப்‌ போற்றுதல்‌ முறையால்‌ அழித்துவிடல்‌ வேண்டாம்‌. எங்கும்‌ எதிலும்‌ சனநாயகம்‌ வேண்டியே எதிரிகளை நோக்கி போராடிக்‌ கொண்டுள்ளோம்‌. இங்கும்‌ இதிலும்‌, சனநாயகம்‌ என்ற முனைப்பு - வாசிப்பை, சந்திப்பை விரிவுபடுத்தும்‌; ஒற்றை வாசிப்ப்பு, ஒற்றைச்‌ சிந்திப்பு என்று அரசியல்‌ தலைமைத்துவங்களால்‌ நம் மீது ஏற்றப்பட்டுள்ள சுமையை வீசி எறிவது விடுதலைக்கு அவசியம்‌.

இப்போது அடைபட்ட கதவுகள்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாய்த்‌ திறந்து விமரிசனம்‌, சுய விமரிசனம்‌ என மேலெழுந்து வருகின்றன. அவை,

  • கோவிந்தனின்‌ - புதியதோர்‌ உலகம்‌ செய்வோமாக
  • செழியனின்‌ - வானத்தைப்‌ பிளந்த கதையாக
  • சேரனின்‌ - நீ இறங்கும்‌ ஆறு, ஊடறுவாக
  • கணேச அய்யரின்‌ - ஈழப்போரில்‌ எனது பதிவாகளாக
  • சயந்தனின்‌ - ஆறா வடுவாக
  • அ.ரவியின்‌ - வீடு நெடும்‌ தூரமாக

என்று சுயகுரல்கள்‌ கேட்கத்‌ தொடங்கியுள்ளன.

அது இயக்க அதிகாரம்‌, குழுவின்‌ அதிகாரம்‌, அரசதிகாரம்‌, தனிமனித அதிகாரம்‌ என்பன எங்கிருப்பினும்‌ சனநாயகத்தின்‌ சவப்பெட்டிகள்‌ மீது நடக்கின்றவைதாம்‌. சனநாயகமற்ற மனக்‌கட்டுமானம்தான்‌ ஆண்‌. நரிக்கு இடம்கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும்‌. சிங்கம்‌, புலி, கரடி - போன்ற மேல்வர்க்கம் மட்டுமல்ல; நரி போன்ற கொத்தனார்‌, மேஸ்திரி, கங்காணி, சூபர்வைசர்‌ போன்ற சாமானிய நிலைக்கு மேலே இருக்‌கிற கூட்டம் என்ன ஆட்டம்‌ ஆடும்‌ என்பதைச்‌ சித்தரிக்கிறது நிலாக்‌ காய்ச்சல்.

வேலை வழங்குபவர்தான்‌ அதிகாரம்‌ கொண்டவர்‌, இன்‌றைய அமைப்பில்‌, வேலை வாங்குபவனும்‌, வேலை வழங்குபவனாக தன்னைக்‌ கருதிக்‌ கொள்கிறான்‌. கொத்தனார்‌, மேஸ்திரி, கங்காணி எனப்படுபவர்களெல்லாம்‌ இடைநிலைக்‌ கூலிகள்‌. கீழிருக்கும் கூலிகளை மேய்க்கும்‌ அதிகாரம்‌ தம்கைகளில்‌ தரப்பட்டதும், அல்லது எடுத்துக்‌ கொண்டதும்‌ கள்‌ குடித்த குரங்காக ஆடுகிறார்கள். கீழிருப்‌பவர்கள்‌ எடுபிடிகள்‌ மட்டுமல்ல; அவர்கள்‌ வாழ்வும்‌ தம் கைப்பிடிக்குள்‌ அடக்கம்‌ என்றெண்ணுகிற கொத்தனார்களின் ஆட்சியில்‌ கணவனை இழந்து கர்ப்பமாயிருக்கிற இளம்‌ விதவை படும்பாட்டை - மிகைப்படுத்தலின்றி - இயல்பான எடுத்துரைப்பிலே சொல்லிப்‌ போகிறது - இது ஒரு நல்ல கதை.

மீண்டும்‌ எனது வருத்தத்தைப்‌ பதிவுசெய்துகொள்ள விரும்புகிறேன்‌. வாசிப்போரைத்‌ தனது கட்டுக்குள்‌ வைத்திருப்பது சாதாரணமானது அல்ல. பிரமாண்ட வடிவிலான கலை வெளிப்பாட்டுப்‌ பணியை கைக்குள்‌ வைத்திருக்கும்‌ மோகன்ராஜ்‌ போன்ற விதைகள்‌ ஏன்‌ அறியப்படவில்லை? எழுத்தில்‌ தொடர்ச்சியை ஏன்‌ வழங்காதிருக்கிறார்‌ அவர்‌?

வருத்தம்‌, நிதரிசனமாய்‌, வெளிப்படையாய்‌ தெரியும்‌ இழப்பிலிருந்து பிறக்கிறது. 

- பா. செயப்பிரகாசம்‌, ஏப்ரல் 2013

நாட்டார்‌ இயலின்‌ தெக்கத்தி ஆத்மா


“ஏலம்‌ கிராம்பே நீங்க

எனக்கு வாச்ச புத்திமானே,

சாதிக்‌ கிராம்பே நீங்க

தள்ளுபடி ஆகலாமோ,


நெல்லிலயும்‌ ஈக்கஞ்சம்பா, நீங்க

நிலத்திலயம்‌ முத்துவில்லை

குணத்திலையும்‌ அமிர்த குணம்‌

கூடுனது நல்கிரகம்‌


வீசினார்‌ கையை

வீச்சு விலைபெறுமோ

விலை ஆயிரம்‌ பொன்பெறுமோ

துன்னூர்‌ பூசிய நெத்தி

தொன்னுறு பொன்பெறுமோ"

பேராசிரியர்‌ நா.வானமாமலை தொகுத்த தமிழ்நாட்டுப்‌ பாமரர்‌ பாடல்கள்‌ என்ற அந்த நூல்‌ அக்டோபர்‌ 1960-ல்‌ வந்தது. தமிழ்நாட்டுப்‌ பாடல்கள்‌ என்ற அடுத்த தொகுப்பு ஜூன் 1964-ல்‌ வந்தது. இந்த இருநூல்களிலும்‌ சேகரித்தவர்‌ எஸ்‌.எஸ்‌.போத்தையா என்று முதலில்‌ அவர்‌ பெயர்‌ வந்தது.

1959-ல்‌ தங்கம்மாள்புரம்‌ உயர்நிலைப்‌ பள்ளியில்‌ பணியில்‌ சேர்ந்தார்‌. அப்போதே அவர்‌ பேரா. நா.வா.வின்‌ சித்தனைப்‌ பள்ளியில்‌ முதல்‌ மாணாக்கராக வசப்பட்டிருந்தார்‌. 'ஏழாம்‌ வகுப்பு ஸார்‌' என அழைக்கப்பட்ட இளவயது எஸ்‌.எஸ்‌.போத்தையா, வட்டார ஆணும்‌ பெண்ணும்‌ அரைமனசாயும்‌ முழுமனசாயும்‌, வெக்கப்பட்டும்‌, படாமலும்‌ கொட்டியவைகளையெல்லாம்‌ சேகரித்து பேராசிறியர்‌ நா.வானமாமலையிடம்‌ கையளிக்க, அவையெல்லாம்‌ தொகுப்புக்களாய்‌ வந்தன.

  • சந்நியாசிக்கும்‌ சாதிப்புத்தி போகாது
  • இருந்தா வெங்கலப்‌ பெண்டாட்டி, இல்லாட்டா வெறும்பய பெண்டாட்டி
  • முள்ளடிச்ச கம்பு முள்மேல
  • தேர்‌ செய்யற ஆசாரிக்கு, அகப்பை போடத்தெரியாது
  • மாமியா செத்து அறுமாசம்‌ கழிச்சி மருமகளுக்கு வாசல்‌ நிலைதட்டி அழுகை வந்திச்சாம்‌

கடல்வளம்‌ கண்மண்‌ தெறியாமல்‌ சூறையாடப்பட்டதால்‌ முத்துக்‌ குளித்தல்‌, சங்கு குளித்தல்‌ ஆகிய தொழில்கள்‌ அருகிப்‌ போய்விட்டன என்று குறிப்பிடுவார்‌ எஸ்‌.எஸ்‌. போ. முத்துக்குளித்தலுக்கும்‌ சங்கு குளித்தலுக்கும்‌ ஈடாக ஒரு பணி உண்டு. அது நாட்டுப்புறப்பாடல்கள்‌ சேகரிப்பது. நாட்டுப்‌புற வழக்காறுகள்‌ எனும்‌ கடற்சங்கமத்தில்‌ போத்தையா மூழ்கி முத்தெடுத்தார்‌. அந்த முத்துக்களும்‌ சங்குகளும்தான்‌ மேலே மூழ்கிக்‌ கண்டவை. இன்று கல்வியியல்‌ கல்லூறிகளிலும்‌ பல்கலைக்‌கழகங்களிலும்‌ நாட்டுப்‌ புறவழக்காறுகள்‌ ஆய்வு 'பேஷனாக' வருவதால்‌, எஸ்‌.எஸ்‌.போத்தையாவோடு சேகரிப்பும்‌ அருகிப்‌ போய்விட்டது எனலாம்‌.

சமுதாயத்தை நேராய்‌ வகிந்து தருகிற சொலவடைகளைத்‌ தொகுத்தார்‌ போத்தையா. அப்படி அவர்‌ தொகுத்தவைகளை யார்‌ யாரோ வாங்கிப்‌ போனார்கள்‌. “கடன்‌ வாங்கிக்‌ கடன்‌ கொடுத்தவனும்‌ கெட்டான்‌” என்று அவர்‌ சேகரித்த பழமொழிக்கு அவரே உதராணமாகப்‌ போனார். மக்களிடமிருந்து அவர்‌ கடன் வாங்கியதை, மற்றவர்க்குக்‌ கடனாகக்‌ கொடுத்ததாக அவர்‌ நினைத்திருந்தார்‌. அப்படித்தான்‌ ஒன்பது கம்பளத்தார்‌ (நாயக்கர்‌) வகையறாக்களின்‌ சடங்குகள்‌, ஒவ்வொரு சடங்கையும்‌ ஒவ்வொரு பிரிவினரும்‌ நடத்தும்‌ வித்தியாசம்‌, பயன்படுத்தும்‌ சொற்கள்‌, பழக்கவழக்கங்கள்‌ பற்றியெல்லாம்‌ சிறுகச்‌ சிறுகச்‌ சேகரித்து எல்லாவற்றையும்‌ (நான்‌ அந்த 'குறிப்பேட்டை' பார்த்துள்ளேன்‌) யாரோ ஒரு புண்ணியவாளன்‌ அல்லது புண்ணியவாட்டி ஆய்வு செய்கிறேன்‌ என்று வாங்கிக்‌ கொண்டு போனார்களாம்‌. இன்னார் எவர்‌ என்று போத்தையாவால்‌ கடைசிவரை ஞாபகத்துக்கு கொண்டுவர முடியவில்லை.

கி.ராஜநாராயணன்‌ தொகுத்த வட்டார வழக்குச்‌ சொல்லகராதி 31.12.1982-ல்‌ வெளியாயிற்று. வட்டார வழக்குச்‌ சொல்லகராதி என்று அருமந்தப்‌ பெயர்‌ வைத்தபோதும்‌, கரிசல்‌ வட்டார அகராதி என்றுதான்‌ இலக்கியவாதிகள்‌ அழைத்தார்கள்‌. அன்று சிறிய அளவில்‌, அன்னம்‌ பதிப்பக வெளியீடாக வந்த அகராதிக்கு, கவிஞர்‌ மீரா எழுதிய அறிமுகவுரையில்‌

“கால்நடை பராமரிப்புத்‌ துறையினருக்குக் கூட இந்த அளவு தெரியுமோ, என்னவோ, கி.ரா.வும்‌ போத்தையாவும்‌ மாடுகளைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்‌”

என்று அதிசயித்துப்‌ போனார்‌.

கரிசல் வாழ்க்கையின்‌ சகல கூறுகளையும்‌ எடுத்துரைக்கும்‌ பிற்சேர்க்கை வட்டார வழக்குச்‌ சொல்லகராதியில்‌ இருக்கிறது. மக்களின்‌ மண்வாசனையான கரிசல்‌ காட்டு விளையாட்டுக்களைத்‌ தொகுத்ததில்‌ கணிசமான பங்கு போத்தையாவுடையது. விளையாட்டுக்கள்‌ தொடர்பில்‌ விளக்கமாய்‌ விரிவாய்‌ எழுதிய கட்டுரை “கத்தாளங்‌ கருங்கப்‌” - என்பதாய்‌ தமிழரசு இலக்கிய மலரில்‌ 1997-ல்‌ வெளியாயிற்று.

பாடல்களுக்கும்‌, கொலவடைகளுக்கும்‌ அப்பாற்பட்டு,

  • முக்கா முக்கா மூணுதரம்‌,
  • பெரிய ஆரியவித்தை, பெரிய அல்லாவித்தை,
  • அத்த மாட்டாத பய,
  • சனியன்‌ பிடறியில இருக்கான்‌
  • அவரு சண்டாக்கிருவாரு,
  • அடிமண்டி இருக்கு,
  • புத்தியைக்‌ கடன்‌ கொடுத்திட்டான்‌,
  • சும்மா தாராம்‌ பூராண்ணு,
  • ஆமா, அதனாலதான்‌ ஓட்டையாப்‌ போயிருச்சாக்கும்‌,
  • தலையில வெள்ளிடி விழுந்திரும்‌.

போன்று இரண்டு, மூன்று வார்த்தைகளாலான முழு அர்த்தத்தை அடக்கிய சொல்லாடல்கள்‌ உண்டு. இந்தப்‌ புதிய வகையைக்‌ கண்டுபிடித்து தொடர்ந்து குறித்து வைத்துக்‌ கொண்டிருந்தார்‌.

நாட்டாரியல்‌ வழக்குகள்‌, சொற்கள்‌, சொல்லாடல்கள்‌, சொலவடைகள்‌, பாடல்கள்‌, விளையாட்டுகள்‌ என வண்டி வண்டியாய்‌ சேகரித்துத்‌ தந்த எஸ்‌.எஸ்‌. போத்தையா 79 வயதில்‌ 12.03.2012 அன்று நள்ளிரவில்‌ நம்மிடமிருந்து விடைபெற்றுக்‌ கொண்டார்‌

இன்றைய காலத்தில்‌ யாருக்கு என்ன நோய்‌, எந்த வயதில்‌ வருமென்று சொல்ல இயலாது. மனுசப்‌ பிறவி விசித்திரமான நோய்களுக்கு ஆளாகும்‌ காலநிலை இது. வெற்றிலை பாக்குப்‌ பழக்கமில்லை; புகையிலை தொட்டதில்லை; புகை பிடிப்பதும்‌ இல்லை. ஆனாலும்‌ ஒருவருக்குப்‌ புற்றுநோய்‌ வரும்‌. எஸ்‌.எஸ்‌.போத்தையாவுக்கு புற்றுநோய்‌ வந்து நுரையீரல்‌ சேதாரமாகியிருந்தது. எந்த நோய்க்கும்‌ கைப்பக்குவ மருந்து அவரிடம்‌ இருந்தது. ஊர்க்காரர்களில்‌ கணிசமானவர்கள்‌, அவரிடம்‌ நோய்‌ சொல்லி கைமருந்து வாங்கிச்‌ சென்றார்கள்‌. புற்றுநோய்‌ கண்டு, நுரையீரல்‌ அரித்திருந்தது என மருத்துவர்கள்‌ சொன்னதை இறுதிவரை அவரிடம்‌ தெரியப்படுத்த வேண்டாம்‌ என்று உறுதி கொண்டிருந்தோம்‌. கடந்த ஒரு மாதமாய்‌ அவருடன்‌ சாவு, வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது. மரணத்துக்குள்‌ நடந்து கொண்டிருக்கிறேன்‌ என பேச்சிலோ, நடமாட்டத்தலோ சிறு குறிப்பும்‌ அவரிடம்‌ தென்படவில்லை. உறவு, நட்பு என ஒவ்வொருவராய்‌ வந்து பார்த்துப்‌ போகிறார்கள்‌ என்ற சிறு சந்தேகம்‌ எழுந்திருக்கிறது. “உடம்புக்குச்‌ சேட்டமில்லாம இருக்கீங்க, எப்படியிருக்குன்னு கேட்டுப்‌ போக வர்றாங்க” என்றார்‌ மருமகள்‌ சீதா.

நான்‌ போயிருந்த நாளில்‌, ஒரு முதியவள்‌ வந்து பார்த்தார்‌; தன்னைப்‌ பார்க்க வந்த முதியவளிடம்‌ கட்டிலில்‌ படுத்தபடியே “வா, உக்காரு” என்று சொல்வார்‌. “நா உக்கார்றது இருக்கட்டும்‌; நீங்க படுத்திட்டீங்களே, சட்டமா கெடக்கீகளே” என்று சொன்னபோதில்‌, மூதாட்டியின்‌ ஒடுங்கிய கண்களில்‌ நீர்‌ தத்தளித்தது.

கரிசலும்‌ செவலும்‌ கலந்து மயங்கும்‌ ஊர்‌ தங்கம்மாள்புரம்‌. ஊரின்‌ கிழக்கு முடிந்தவுடனே செக்கச்‌ செவேல்‌ என்ற தேரிக்காடு ஆரம்பமாகிறது. காற்றடி காலத்தில்‌, ஆகாயம்வரை பறக்கும்‌ தேரிமண்‌ தீப்பிடித்து எரிவது போல்‌ தெரியும்‌. காற்றடி காலம்‌ முடிந்து பார்க்கையில்‌ தேரி மேடுகள்‌ இடம்‌ மாறி உட்கார்ந்து இருக்கும்‌.

நாடகக்‌ கலைஞர்‌ முருகபூபதி, போத்தையாவைப்‌ பிடித்து, அவர்‌ வழியாக தேறிக்காட்டுக்குள்‌ புகுந்து, நண்பர்களுடன்‌ நாடகப்‌ பயிற்சி மேற்கொண்டார்‌. உருண்டு, புரண்டு, உடல்மொழியை பூரணமாய்‌ வெளிப்படுத்த தேரிமணல்‌ இடம்‌ தந்தது. கூந்தல்‌ நகரம்‌, மணல்‌ மகுடி, போன்ற நாடகங்களின்‌ பயிற்சிக்களமாக தங்கம்மாள்புரம்‌ தேரிக்காடு ஆகியது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை எஸ்‌.எஸ்‌.போ செய்து கொடுத்தார்‌.

ஓயிலாட்டக்‌ கலைஞர்கள்‌ பற்றி, 'தெற்கின்‌ ஆத்மாக்கள்‌' என்றொரு சிறுகதை படைத்திருந்தேன்‌. அக்கதையில்‌ சித்திரித்தது போன்ற தெற்குச்‌ சமை மனிதர்களை எழுத முனைந்து ஜூனியர்‌ விகடனில்‌ வெளியாயிற்று 'தெக்கத்தி ஆத்மாக்கள்‌'. அந்த தெக்கத்தி ஆத்மாக்களைப்‌ படைக்க என்‌ எழுதுகோலுக்கு சேனைப்பால்‌ தொட்டு வைத்தவர்‌ - நாங்கள்‌ செல்லமாக அண்ணாச்சி என்றழைக்கிற 'நாட்டார்‌ வழக்காற்றியல்‌ கொடையாளி' - தங்கம்மாள்புரம்‌ எஸ்‌.எஸ்‌.போத்தையா அவர்கள்‌. “ஒருவர்‌ பின்‌, ஒருவராய்‌ அணி வகுத்துவந்த ஆத்மாக்களுக்கு அவர்‌ உந்து சக்தி” என்று எழுதிய வாசகத்துடன்‌ நூல்‌ அவருக்கு காணிக்கையாக்கப்பட்டது.

எஸ்‌.எஸ்‌.போத்தையா பா.செயப்பிரகாசம்‌, சூரங்குடி அ.முத்தானந்தம்‌

எழுத்தாளர்‌ சூரங்குடி அ.முத்தானந்தம்‌, அவருடைய மாணவர்‌. அ.முத்தானந்தம்‌ சொல்வது போல்‌ “ஏழாம்‌ வகுப்பு ஸார்‌" என்றுதான்‌ போத்தையா அறியப்பட்டார்‌. முத்தானந்தம்‌ கூறுவது போல்‌ கண்டிப்பான ஆசிரியர்‌. கிள்ளு வாங்குவதிலிருந்து தப்பித்த ஒரு காதும்‌ இருக்காது. பிரம்படி வாங்குவதிலிருந்து ஒரு கையோ, முதுகோ பள்ளிக்கூடத்தில்‌ தப்பியிருக்காது. தங்கம்மாள்புரம்‌ காசிநாதன்‌ நடுநிலைப்‌ பள்ளியில்‌ 40 ஆண்டுகள்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணி.

விளாத்திகுளம்‌ உயர்நிலைப்பள்ளியில்‌ படித்த வேளையில்‌ சுதந்திரப்‌ போராட்டம்‌ மும்மரப்பட்டுக்கொண்டிருந்த காலம்‌.

மாணவர்களைத்‌ திரட்டிப்‌ போராடினார்‌. அப்போது அணிய ஆரம்பித்த கதராடை, சாவுவரை அவர்‌ உடலைவிட்டுப்‌ பிரிந்ததில்லை.

இந்திய சுதந்திரத்துக்குப்பின்‌, 1950-களில்‌ உருவான இரு தலைமுறை இளைஞர்கள்‌ போலவே, போத்தையா திராவிட இயக்கங்களின்‌ கவர்ச்சிக்கு ஆளானார்‌. பின்னர்‌ எல்லோரும்‌ போலவே, விஞ்ஞான பூர்வ மார்க்சிய தத்துவத்தால்‌ ஈர்க்கப்பட்டு, இந்தியப்‌ பொதுவுடைமைக்‌ கட்சியில்‌ இறுதி நாட்கள் வரை பிடிமானம்‌ விடாமல்‌ நின்றார்‌.

பொதுவுடைமை இயக்க முன்னோடியான தோழர்‌ ஜீவா குற்றாலம்‌ அருவியில்‌ குளித்துக்கொண்டிருந்தார்‌. செய்தித்தாள்களில்‌, படங்களில்‌ ஜீவாவைப்‌ பார்த்திருந்த போத்தையா அன்றுவரை நேரில்‌ சண்டதில்லை. “நான்‌ போத்தையா" என்று தன்னை அறிமுகம்‌ செய்துகொண்டார்‌. ஏற்கனவே போத்தையாவைப்‌ பற்றிக்‌ கேள்விப்பட்டிருந்த ஜீவா கட்டித்‌ தழுவாத குறை. எங்கே தங்கியிருக்கிறீர்கள்‌ என்று கேட்டு, “எங்கேயும்‌ இல்லை, இப்போதுதான்‌ வருகிறோம்‌" என்று போத்தையா சொல்ல, “எங்கேயும்‌ அறை போட வேண்டாம்‌, என்னுடனேயே தங்குங்கள்‌” என்று சொல்லிய ஜீவா அவரைக்‌ கையோடு அழைத்துப்போனது நெகிழ்ச்சியான தருணம்‌! ஜீவா சும்மா வரவில்லை, இயக்கத்தினருக்கு வகுப்பு எடுக்க வந்திருந்தார்‌ என்பது அங்கு போன பின்பு தெரிந்தது. ஜீவாவும்‌, பேரா.நா.வானமாமலையும்‌ கூடுதலான இரு இதயங்களாய்‌ அவருக்குள்‌ இயங்கினர்கள்‌.

இந்தக்‌ கண்டிப்பான வாத்தியார், வீட்டிலும்‌ வாத்தியாராக தொடர்ந்தார். தொலைக்காட்சிப்‌ பெட்டி என்ற கலாச்சாரப்‌ படையெடுப்பை அவர்‌ வீட்டுக்குள்‌ அனுமதிக்கவில்லை. பேத்திகளும்‌, பேரனும்‌ படித்துக்கொண்டிருந்தார்கள்‌. படிப்பைக்‌ கெடுத்துவிடும்‌ என்று கம்பிவட (கேபிள்‌) தொலைக்காட்சியை தீண்டாமலே வைத்தார்‌. செய்திகள்‌ பார்க்கவாவது, தொடர்பு கொடுக்கலாமே என்று நான்‌ கேட்டபோது, "யார்‌ செய்தி பாக்கறாங்க? எல்லாம்‌ சீரியல்தான்‌ பார்க்கிறார்கள்‌” என்றார்‌.

பணி நிறைவுற்றபோதும்‌ அவர்‌ சும்மா இருந்ததில்லை. பழக்கதோசம்‌ மாதிரி நித்தமும்‌ பள்ளிக்கு வழக்கம்போல வருவதும்‌, வழக்கம்போல மாணவர்களுக்குப்‌ பாடம்‌ நடத்துவதும்‌, அறிவுரைகள்‌ சொல்வுதுமாக இருந்தார்‌. அதோடு மாலை மணி 6 முதல்‌ 8 வரை ஊர்ப்பொது மடத்தில்‌ முறைசாராக்‌ கல்வியை நடத்ததினார். அதற்காக யாரிடமும்‌ முக்காத்‌ துட்டு சம்பளமாக எதுவும்‌ பெறவில்லை. பள்ளிப்படிப்பை இடையில்‌ விட்‌டவர்கள்‌ - ஆடு மாடு மேய்ப்பவர்கள்‌ - வயது வந்தவர்கள்‌ அகியோர்களைக்‌ கூட்டி உட்காரவைத்து அவர்களுக்குப்‌ பாடம்‌ சொல்லிக்‌ கொடுப்பதில்‌ மன நிறைவு கொண்ட ஆத்மா அவருடையது.

இருதய அறுவைச்‌ சிகிச்கைக்காய்‌ கோவையில்‌ மருதமலையில்‌ மகன்‌ பாரதி வீட்டில்‌ தறித்து நின்ற அந்த ஆண்டில்‌, அவரால்‌ எட்டையபுரம்‌ பாரதி முற்போக்கு வாலிபர்‌ சங்க செயற்குழுக்‌ கூட்டத்தில்‌ கலந்துகொள்ள முடியாமலும்‌, அந்த ஆண்டு நடைபெற்ற பாரதியார்‌ விழாவில்‌ பங்குபெற இயலாமலும்‌ போனமைக்காக மிகவும்‌ நொந்துபோனார்‌. எது தவறினாலும்‌, பாரதிக்கு ஒவ்வொரு ஆண்டும்‌ செலுத்தும்‌ மரியாதையில்‌ அவர்‌ தவறியதில்லை.

பலசரக்குக்‌ கடையில்‌ சாமான்கள்‌ வாங்கினால்‌ ஒரு சிட்டையில்‌ குறித்துக்‌ கொடுப்பார்கள்‌. சிட்டை போல்‌ கையகலத்தாளை மடித்து வைத்துக்கொண்டு, நாட்டார்‌ வழக்காறுகளை நுணுக்கி நுணுக்கி எழுதி வைத்துக்‌ கொள்வார்‌. நோய்‌ பாடாய்ப்படுத்திய காலத்திலும்‌, இந்தப்‌ பழக்கம்‌ அவரைவிட்டுப்‌ போகவில்லை. மரணத்துக்கு ஒருவாரம்‌ முந்திகூட அவர்‌ நுணுகி, நுணுகி எழுதிய சிட்டைகள்‌ சட்டைப்பையில்‌ நிறைந்திருந்தன.

- பா. செயப்பிரகாசம்‌, தீராநதி - ஏப்ரல்‌ 2012

ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்…

தக்கலை ஜமாத்தாரும் ஒரு பத்வாவால் ஹெச்.ஜி.ரசூலை எதிரியாக்கி தீர்ப்புரைத்திருக்கிறார்கள். ஜமாத்துகளுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது..?

ஹெச்.ஜி.ரசூல் என்ன செய்தார்… மனிதனை விடுதலை செய்யும் புதிய கருத்துக்கள், நடைமுறைகள், உலகெலாம் எழுந்து வருகின்றன. பழமைவாத எதிர்ப்பு, மூடப் பழக்கங்களுக்கு எதிர்ப்பு, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை, மனித உரிமைகள் போன்றவை எல்லாம் மனிதனை விடுதலை செய்யும் கருத்தியல்கள். இந்த புதிய வெளிச்சத்தை ரசூல் தான்சார்ந்த மதத்தின் மீதும் பாய்ச்ச முயன்றார்.வெளிச்சத்தை கண்டு பயப்படுகிற மதவாதிகள் ஒன்றுகூடி அவரை விலக்கம் என்ற சவுக்குகளால் விளாசியிருக்கிறார்கள்.

கட்ட பஞ்சாயத்து அதிகாரங்கள் இன்று காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. அது எதன் பேரில் வந்தாலும் சரி. மதத்தின் பெயரில் வருகிற போதும் மனித உரிமைக்காக நிற்பவர்கள் அதை எதிர்த்து நின்றே தீர்வார்கள்.

உலகமெலாம் இஸ்லாத்தின் மீது பயங்கரவாதம் தீவிரவாதம் என்ற சேறு வீசியெறியப்படுகிறது. ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் கைகள் அசிங்கப்படுவது கூட கண்டு கொள்ளாமல் இந்த சேற்றை வீசி எறிகிறார்கள். அதை எதிர்க்க கடமைப் பட்டுள்ள இஸ்லாம் இப்போது உள்ளூர் பயங்கரத்தை விதைப்பதன் மூலம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு துணை போகிறதா…

கடைசியாக ஒரு கேள்வி. ஈரான் மன்னர் ஷாவை வீழ்த்தி புதிய இஸ்லாம் குடியரசு உருவான போது பென்கள் தங்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்த முன்வந்தார்கள். ஆனால் பழைய மன்னராட்சிக் காலத்தைவிட மோசமாக பெண்கள் மீது அடக்குமுறை செலுத்தியதுஇஸ்லாமிய குடியரசு.இதை எதிர்த்து குரல் எழுப்பிய எழுத்தாளர் மர்ஜானி கத்ரபி,கவிஞர் மினாஅஸாதி,பாடகி ஷிஷோ ஷத்தாரி ஆகிய மூன்று பெண்களும் ஈரானை விட்டு வெளியேறினார்கள். அது போல ஹெச்.ஜி.ரசூலை நாடு கடத்த விரும்புகிறதா ஜமாத்..?

- எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், செப்டம்பர் 20, 2007

புலமைத்துவத்தில் வேரூன்றியவர்

முன்னைய நாட்களில் முதுகலைத் தமிழ் பயின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். முதுகலை வகுப்புச் சேர்க்கையிலிருந்து அது தொடங்குகிறது. ஆங்கில இலக்கியப் பிரிவு மீதான  மோகம் தமிழிலக்கியத்தின் பால்   உருவாகவில்லை. மோகம் என்ன, அந்தக் கிறுக்கில் சிறுதுளியளவும்  தாய்மொழிக்கென முளைவிட்டதில்லை. நாட்டர் வழக்கில் சொல்வதாயின்,  ஆங்கில இலக்கியப் பிரிவுக்கு ’மவுஸ்’ கூடுதல். தமிழ் இலக்கியப் பிரிவு காற்றோட்டமாய் இருந்தது.  

எந்தப் பிரிவும் கிடைக்காதவர்கள் தமிழ்ப் பிரிவில் வந்து சேருவார்கள்.  முதுகலைத் தமிழில் எங்களுடன் ஒரு கூடைப் பந்தாட்ட விளையாட்டுக்காரர் (Basket Ball Player) பயின்றார். அவருக்கு தாய் மொழி தமிழ் அல்ல; சௌராட்டிரம் அவருடைய தாய்மொழி. மதுரைநகரில் தெற்கு மாசி வீதிகளை உள்ளடக்கிய வட்டாரத்தில் வாழும் பட்டுநூல்காரர்கள் (பட்டுநூல் நெசவாளிகள்) என்றழைக்கப்படும் சௌராட்டிர  இனத்தைச் சேர்ந்தவர்.

அவர் போல் வேறு பாடப்பிரிவில் இடம் கிடைக்காத - தொலைபேசி அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர் எங்களுடன் முதுகலைத் தமிழ் பயின்றார்: ஒரு துறையில் பணியாளராக இருந்து கொண்டு,  அதிலும் நடுவணரசுத் துறையில் பணியாற்றிக் கொண்டு - முறையான கல்லூரியில் (Regular College) பயில்வதெனில் சாத்தியமற்ற ஒன்று. மேலதிகாரிகளைத் தாங்கித் தடவி, முண்டியடித்து முதுகலைத் தமிழில் சேர அனுமதி பெற்றிருந்தார் என்பது அபூர்வமான செய்தி! அதிர்ச்சியான செய்தி!

ம.பெ.சீனிவாசனும் நானும் சுவரில் குறுக்காய் வளர்ந்த அரச மரக்கன்று அல்ல; முருசல் பாத்தியில் (முடுக்கலான  பாத்தி) முளைத்த தோட்டப் பயிர்களும்  அல்ல; தமிழ்ப் பற்று காரணமாய் முறையாகத் தேர்வானவர்கள். நான் புகுமுக  வகுப்பில் (Pre university course) சிறப்பு தமிழ் (Advanced Tamil) எடுத்துப் பயின்றவன்.  தொடர்ச்சியில் அதே தியாகராசர் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்று முதுகலைத் தமிழில் சேர்ந்தேன். ம.பெ.சீனிவாசன் சிவகங்கை மன்னர் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றவர். சிவகங்கைக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த தமிழின் முன்னணிக் கவிஞர் மீ.ராசேந்திரன் அவர்களால் “அன்பிற்குரிய இளங்கவிஞர்” என்று பாராட்டப்பட்டவர்.

1962 - இல்  மீ. இராசேந்திரன் ’சுவை’ என்றொரு கவிதை தொகுப்பு வெளிக் கொணர்ந்தார். தொகுப்பு அவருடைய கவிதைகள் அல்ல; மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ச் சிங்கம் என அழைக்கப்பட்ட சி.இலக்குவனார் தமிழ்த் துறைத் தலைவராக அமர்ந்திருக்க, அவ்வை சு. துரைசாமி, பேராசிரியர் அ.கி.பரந்தாமனார், முனைவர் மொ.துரை.அரங்கனார்,  முனைவர் மெ.சுந்தரம் போன்றோர் தமிழ் இருக்கைகளில் வீற்றிருக்க, மீ.மீராசேந்திரன், அப்துல் ரகுமான், தி.கு நடராசன், ஆல அச்சகம் பாலசுந்தரம் என தமிழ் முதுகலையில் பயின்றோர் படைப்பாளிகளாய்  முனைப்பு பெற்ற  காலகட்டம் அது.  

சிவகங்கைக் கல்லூரிக் கவியரங்கில் கவிஞர் முடியரசன் தலைமை ஏற்க,  நகை, அவலம், மருட்கை, அச்சம், இன்பம், வீரம் - என சுவைகள் பற்றிய தொகுப்பு நூல் மீ. இராசேந்திரன் தொகுத்து வெளியிட்டது. 

ஆனால் ‘சேந்தி  உடையநாதபுரம் ம.பெ. சீனிவாசன்’  தொகுத்து வெளியிட்ட நூல் ”இராசேந்திரன் கவிதைகள்” என்னும் முதல் தொகுப்பு. 1965-ல் முதல் பதிப்பு வெளியாகி பின்னர் பல பதிப்புகள் கண்டது. தோழமை நிலையம், தெப்பக்குள கீழ்க்கரை, சிவகங்கை என முகவரி கொண்டிருக்கும்.

ம.பெ சீனிவாசன் மீ.ராசேந்திரன் மாணவர் மட்டும் அல்ல: அணுக்க நண்பரும் ஆலோசகரும் ஆக பரிணமித்தவர். பாரதிதாசன், முடியரசன், பொன்னி வளவன் என தமிழ் எழுச்சியின் அடையாளங்கள் வரிசைப்படுத்தப்படுவதில்  மீ. இராசேந்திரன் ஒரு மைல்கல். அந்த வழியில் நான்  இராசேந்திரனை வாசித்து உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

”சாகாத வானம் நாம் வாழ்வைப் பாடும்

சங்கீதப் பறவை நாம்” 

போன்ற மீ.ராசேந்திரன் கவிதைகளை, பாவேந்தரின்

”பூட்டிய இரும்புக் கதவு திறக்கப்பட்டது, 

சிறுத்தையே வெளியில் வா” 

போல பலமுறை எழுத்தில், சொற்பெருக்காற்றுகையில் அதிகம் பயன்படுத்தினேன். அதே பொழுதில் ”ராசேந்திரன் கவிதைகளை”, தனித்தனி நட்சத்திரங்களாய் கண்டிருந்த என்னை முழுமையான நீலவானமாய்  தரிசிக்கச் செய்தவர் எனது நண்பர், முதுகலைத் தோழர் ம.பெ.சீனிவாசன். “என் கவிதைகளை எழில் மிகத் திரட்டி உதவிய என் மாணவர் இளங்கவிஞர் ம.பெ.சீனிவாசன்“ என பாராட்டி நன்றி தெரிவித்திருப்பார் மீ.ராசேந்திரன்.  

ம.பெ.சீ முதுகலைத் தமிழ் மாணவராய் மதுரைத் தியாகராசர் கல்லூரியில்  அறிமுகம் ஆகிறார். வகுப்புத் தோழனான எனக்கு அவர் தொகுத்த ராசேந்திரன் கவிதைகள் நூலினைக் கையளித்தார். அவர் வாசிக்க கையளித்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு.

எங்கள் இரு பேருக்கும் இயல்பாகவே படைப்பு மனம் உள்ளிருந்து பீறிட்டுக் கொண்டிருந்தது. படைப்புச் சிந்தனையை ஒருவர் பழம் இலக்கிய ஆய்வுகளிலும், மற்றொருவர் சிறுகதை, புதினம், உருவகம், கவிதை, கட்டுரை என (Creative writtings) என்று சொல்லப்படுகிற ஆக்கப் படைப்புகளிலும்  மடைமாற்றல் நிகழ்ந்தது.

ஆனால் இரு பேரும் சிந்திக்கிற சமுதாயம் பற்றிய புள்ளி ஒன்றாகவே இருந்தது. அவரவர் எழுத்தின் வெளிப்பாட்டு வழியாக இதனை அறிவித்துக் கொண்டோம். அவர் முன்னைய இலக்கியப் பரப்பின் மூத்த படைப்பாக்கப்  புலமைமையானார்; சற்று விலகி  நான் சமகாலப் படைப்பிலக்கியத்தின் உருவெடுத்து எழுத்தாளனாகினேன்.

பொதுவாக ஆய்வாளர்களை திறனாய்வு செய்கிறவர்கள் அவர்களைப்  படைப்பாளிகளாக ஏற்றுக் கொள்ளுதல் என்பது இயல்பில்லை; இதனையே  போல் மொழியாக்கப் படைப்பாளிகளுக்கும் நேருகிறது. ஆனால் நேரம், சிந்தனை, உழைப்பு என அத்தனையின் ஒட்டுமொத்த திரட்சியாகத் தான் திறனாய்வும் மொழியாக்கமும் உருவாகின்றன. ஆகவே முன்னை இலக்கிய ஆய்வும் மொழியாக்கமும் படைப்பாக்கங்களுக்குச் சமமாய் பல்லக்கு ஏறி ஊராங்கி புறப்பட்டு (பட்டணப் பிரவேசம்) வரவேண்டியவை. ஒன்றே ஒன்று இவைகளின் வெளிப்பாட்டில் சமகாலம் தென்படுகிறதா, அல்லது பழங்கருத்துக்களுக்குச் சார்பான சமரசப் போக்கு தென்படுகிறதா என்பது தான்.  

இவ்வகையில் நண்பர் ம.பெ.சீனிவாசன் தொகுத்துக் கையளித்த 'ராசேந்திரன் கவிதைகள்’ அவரின் சமகால உள்வாங்கலைக் கிரகிப்பாய் கொண்டிருந்தது. 

2

எங்கள் கல்லூரிக்காலம், புதுக்கவிதைகள்  ஒன்றிரண்டு பூக்கத் தொடங்கியிருந்த காலம். ஒரு பூக்காடாய்ப் பரந்து, பளபளப்பாகாத நாட்கள் அவை. பெரும்பாலான கவிஞர்கள் போல் தொடக்க நிலையில் மரபுக் கவிதைகளை எழுதினார் ம.பெ.சீ.

”ராசேந்திரன் கவிதைகள் - சிறு துளி பெருவெள்ளம்” என்ற உள்ளடக்கத் தலைப்புடன்  

  1. அமுத துளிகள் 
  2. தேன் துளிகள் 
  3. கண்ணீர்த் துளிகள்
  4. பன்னீர்த் துளிகள்
  5. மழைத் துளிகள் 
  6. குருதித் துளிகள் 
என உள்ளடக்கத் தலைப்புகளை பரப்பி இருப்பார் தொகுப்பாளர் ம.பெ.சீ. 

வாசிப்பு நாக்குக்கு அனைத்துத் துளிகளிலும் ஒரே சுவைதான்.

ராசேந்திரன் கவிதைகள் தொகுப்பில் “வள்ளலார் வருவாரா” (பக்கம் 50) என்னும் கவிதை. 

தைத்திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்

       தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும்

நெய்ப்பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சி கொள்வர்

        நிதி  படைத்த சீமான்கள்: என்றும் எங்கள்

கைதொட்டு வாய்பட்ட துண்டோ பொங்கல்?

         கண்மட்டும் ஓயாமல் பொங்கும்! பொங்கும்! 

தெய்வங்கள் திருநாட்கள் எங்கட் கில்லை;

        தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?

கவிதையின் இறுதி வரிகளை தனது திராவிட நாடு இதழில் அண்ணா எடுத்தாண்டு பாராட்டி எழுதியிருந்ததை ம.பெ.சீ என்னுடன் பகிர்ந்துள்ளார்.

ராசேந்திரன் எழுதிய மற்றொரு கவிதையை அண்ணா திராவிட நாடு இதழில்  வெளியிட்டுள்ளார். ராசேந்திரன் கவிதைகளின் மதிப்புக் கூட்டலுக்கான மூலதனமாயிற்று இந்த அறிமுகம் எனலாம்.

இளங்கவி ம.பெ.சீ, ராசேந்திரன் கவிதைகள் தொகுப்பால்  இலக்கிய உலகுக்கு  அறியப்பட்டார். அவர் தன்னை ஒரு தமிழ்ப் புலமையாக நிலை நிறுத்திக் கொண்டாரே தவிர தனது வெளியீடு என ஒரு கவிதைத் தொகுப்பை ஏன் கொண்டு வரவில்லை? அவர் ஆய்வுலகில் அறியப்பட்ட அளவு படைப்பாக்க  வெளியில் கால் பதிக்கவில்லை என்பது காரணமாய் இருக்கலாம்;  எவ்வாறாயினும் யார் யாரையோ எழுத்துலகப் பிள்ளையாக வளர்த்தெடுத்த கவிஞர் மீரா எப்படி இவரை விலக்கிப் போனார் என்பது  இன்று வரை விடை கிடைக்காத கேள்வியாக அலைகிறது.  

3

அக்காலத்தில் முதுகலைத் தமிழ் பயில வருகிற மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கைவிரல் எண்ணிக்கை என்பதால் எவரையும் தேர்வில் தோல்வியுறச் செய்வதில்லை என்ற மரபு நிலவுகிறது. இதற்கு  நாங்கள் ’தர்ம பாஸ்’ என்று பெயர் சூட்டியிருந்தோம். இந்த தர்ம பாஸில் என் போல் தேர்வாகி வந்த சிலருண்டு .  

இறுதித் தேர்வுக்குச் செல்லும்பொழுது நான் அவ்வாறு அலட்சியம் கொண்டிருந்தமைக்கு இரு காரணங்கள் உண்டு.

1967 ஏப்ரலில் திமுக பெரும்பான்மையாய் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தது. முன்னரே திமுக வெற்றி பெற்று ஆட்சி ஏற்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததால், திமுக சார்பான என் போன்றோர் முனைந்து பயின்று தேர்வு எழுதிட முன் வரவில்லை.   

இரண்டாவது - அண்ணா  முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்த ஆட்சியில், அதிலும் மனிதநேயம் கொண்ட ஒருவரின் கீழ் அனைவருக்கும் வேலை கிடைக்கப் போகிறது; எல்லோருக்கும் எல்லாமான சமுதாயம் உருவாகிவிட்டது - என்னும் பொருந்தாத மாயையில் இருந்தோம். ம.பெ.சீ போன்றோர் புலமைத்துவ தேர்ச்சி மட்டுமே முக்கிய என உணர்ந்து முனைப்புக் கொண்டு தம்மைத் தயார் செய்து கொண்டிருந்தனர். புலமைத்துவம் மட்டுமே வாழ்வெனக் கருதியோர்  தம்மைச் சுருக்கிக் கொள்ளவில்லை. கொப்பும் கிளையுமாய் பரந்து பெருமரமாய் ம.பெ.சீ திகழ்கிறாரெனில், புலமைத்துவமே அடிப்படை என்பதனை இன்றும் உணர்ந்து செயலாற்றுகிறார் என்பது காரணம்.

அந்தப் பெருமரத்தின் கிளகளெங்கும் பழந்தின்று விதைபோடும் பறவைகளின் கெச்சட்டம். அவருடைய எண்பதைக் கொண்டாடும் மாணவத் தோழமைப் பறவைகளின் முயற்சி வெல்லும், வெல்லட்டும் என வாழ்த்துகிறேன்.

பா.செயப்பிரகாசம், 22 ஆகஸ்ட் 2022

கி.ரா - ஞானபீடம்‌ - கடிதங்கள்

அன்புள்ள ஜெ.

கி.ராவுக்கு ஞானபீடம்‌ - இன்றைய தேவை.

கி.ரா அவர்களின்‌ தீவிர வாசகி என்ற முறையில்‌ கி.ரா.வுக்கு ஞானபீடம்‌ என்று தாங்கள்‌ விடுத்த அறைகூவல்‌ நிறைவாக இருந்தாலும்‌, இதைக்‌ கூடச்‌ சொல்லிச்‌ செயலாற்றவேண்டிய சூழலில்‌ இருக்கிறோமே என்ற கசப்புணர்வும்‌ சேர்ந்தபடி தான்‌ உள்ளது.

ஒரு மாபெபரும்‌ எழுத்தாளரைரக்‌ கொண்டுசென்று சேர்க்கவேண்டிய நிலை என்பதே சற்று அருவருக்கத்தக்க செயலாக எனக்குத்‌ தோன்றுகிறது என்று முதலில்‌ சொல்லிவிடுகிறேன்‌ - தவறென்றால்‌ மன்னிக்கவும்‌. நாடெங்கிலும்‌ இருந்து வாசிப்புப்‌ பசியும்‌ நுண்ணுணர்வும்‌ உள்ளவர்கள்‌ தானே கூட்டம்கூட்டமாக அவரைத்‌ தேடிவரும்‌ நிலை இருக்கவேண்டும்‌! கி.ரா.வின்‌ படைப்பாற்றலும்‌ மேதமையும்‌ சொல்லித்தான்‌ புரியவைக்கப்படவேண்டும்‌ என்றால்‌, அப்படிப்பட்ட வாசகப்பரப்புக்கு மூன்றாம்‌ தரக்‌ கவிஞர்களும்‌ அசட்டு எழுத்தாளர்களுமே நாயகர்களாக இருக்கட்டுமே. கி.ரா.வை அவரது வாசகர்கள்‌ நாம்‌ கொண்டாடிவிட்டுப்‌ போகிறோம்‌. அது நமக்குக்‌ கிடைத்த பெரும்‌ பேர்‌. ஏன்‌ அவரது அருமை புரியாதோர்‌ முன்னிலையில்‌ அவர்‌ ஆக்கங்களைக்‌ கொண்டுசெல்ல வேண்டும்‌ என்று உணர்வதாக முதலில்‌ பதிவுசெய்கிறேன்‌.

அதே நேரத்தில்‌, நீங்கள்‌ சொல்ல வருவதும்‌ நன்கு புரிகிறது. தேசிய அளவில்‌ தமிழ்‌ மொழி மீதுள்ள இளக்காரமும்‌ தவறான பார்வையும்‌ களைய வேண்டும்‌ என்றால்‌ நம்முடைய மூத்தோரை நாம்‌ முன்னிறுத்திப்‌ பேசி, ஞானபீடம்‌ போன்ற தரமான விருதுகள்‌ நியாயமாக அவர்களுக்கு வர வழிவகுக்கவேண்டும்‌. இப்படிப்பட்ட செயல்பாடுகளும்‌ இம்மொழியில்‌ நிகழ்கின்றன என்று உலகம்‌ காணவேண்டும்‌. அதைத்‌ தவிர, முக்கியமாக, இந்திய வாசகர்‌ பரப்புக்கு இப்படி ஒரு எழுத்தாளர்‌ இருக்கிறார்‌ என்று சுட்டிக்காட்ட வேண்டும்‌. நாடு முழுவதும்‌ உள்ள தேர்ந்த வாசகர்கள்‌ அவரை வாிக்கவேண்டும்‌. அந்தவகையில்‌, இது தேவைக்குரிய செயல்தான்‌ என்று ஒப்புக்கொள்கிறேன்‌.

மொழிபெயர்ப்புகள்‌, ஆங்கிலத்திலும்‌ இந்தியிலும்‌ வரவேண்டும்‌ என்று சொல்லியிருந்ததைக்‌ கவனித்தேன்‌. இது தொடர்பாக ஒரு பதிவு, இந்திய - ஆங்கிலச்‌ சூழல்‌ மீது அசூயை உருவாவதற்கும்‌, நான்‌ தீவிரமாக தமிழில்‌ வாசிக்க, எழுதத்‌ தொடங்கியதற்கும்‌ ஒரு காரணம்‌ இது. இந்திய மொழிகளிலிருந்து, குறிப்பாகக்‌ தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு நடப்பதில்‌ உள்ள அரசியலைப்‌ பற்றி நீங்கள்‌ அறியாததை நான்‌ புதிதாக ஒன்றும்‌ சொல்லிவிட முடியாது. ஆனால்‌ அரசியலையும்‌ தாண்டி, மொழியாக்கங்களை வாசிப்பவர்கள்‌ பலரது மனநிலையையும்‌ உளவியலையும்‌ இங்குப்‌ பதிவுசெய்ய நினைக்கிறேன்‌.

இந்திய மொழிகளில்‌ எழுதும்‌ எழுத்தாளர்களை, குறிப்பாகத்‌ தமிழில்‌ எழுதும்‌ எழுத்தாளர்களை, தலையில்‌ தட்டிக்கொடுத்துப்‌ 'பரவாயில்லை, நீயும்‌ நன்றாக எழுதுகிறாய்‌' என்ற கேவலமான பாவனை ஒரு புறம்‌. வட்டார மொழியில்‌ எழுதப்படுகிறது என்ற காரணத்தினாலேயே ஓர்‌ ஆக்கத்தைத்‌ தூக்கி நிறுத்தி, தங்களை இலக்கிய சிர்திருத்தவாதிகளாகக்‌ காட்டிக்கொள்ளும்‌ வாசகர்கள்‌ இன்னொரு புறம்‌. ஒடிசாவில்‌ நாற்பது பேர்‌ மட்டுமே பேசும்‌ ஒரு வட்டார வழக்கில்‌ முழுக்க முழுக்க ஒரு நாவல்‌ எழுதப்பட்டிருக்கு தெரியுமா? அதைப்‌ படிக்காதவனெல்லாம்‌ ஒரு வாசகனா? போன்ற பாவனைகள்‌. இத்தனைக்கும்‌ இவர்களில்‌ பெரும்பாலானோர்‌ தங்கள்‌ தாய்மொழியில்‌ ஒரு வரி கூட வாசிக்காதவர்கள்‌. அத்தனைக்கும்‌ ஆங்கிலம்‌ தான்‌ பாலம்‌. இவர்கள்‌ வட்டாரங்களை ரட்சிக்க வந்துவிட்டார்கள்‌. இன்னும்‌ சிலர்‌ பெரிய பதிப்பகத்தால்‌ ஆங்கிலத்தில்‌ மொழியாக்கம்‌ செய்யப்படுகிறது என்பதாலேயே ஒரு ஆக்கம்‌ அம்மொழியின்‌ சிறந்த நூல்‌ என்று நம்புகிறார்கள்‌. பெருமாள்‌ முருகன்தான்‌ இவர்களது கணிப்பில்‌ சமகாலத்‌ தமிழகத்தின்‌ தலைசிறந்த எழுத்தாளர்‌.

இவர்கள்‌ யாரென்றால்‌ ஆங்கில ஊடகங்களில்‌ இதழாளர்களாகவும்‌ கட்டுரையாளர்களாகவும்‌ இலக்கியப்‌ பக்கங்களை வடிவமைப்பவர்களாகவும்‌ பதிப்பகங்களில்‌ ஆசிரியர்களாகவும்‌ பணி செய்பவர்கள்‌. இவர்களில்‌ ஓரிருவர்‌ மட்டுமே தாய்மொழியில்‌ வாசிக்கப்பயின்றவர்கள்‌. எனக்கு யாதோரு தொடர்பும்‌ இல்லாத கன்னடமொழியை ஒரு ஆர்வத்தின்பால்‌ மட்டும்‌ எழுத்துக்‌ கூட்டிப்‌ படிக்கத்‌ தொடங்கியிருக்கிறேன்‌. தீவிரமாகத்‌ தொடர்ந்தால்‌ இரண்டாண்டுகளில்‌ கன்னடத்தில்‌ நாவல்கள்‌ வாசிக்கமுடியும்‌ என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இத்தனைக்கும்‌ இலக்கியமோ இதழியலோ என்‌ தொழில்‌ அல்ல. இவர்களால்‌ இதை ஏன்‌ செய்ய முடியவில்லை? இது ஒரு வித அலட்சியப்‌ போக்கு மட்டுமே. இந்த மனநிலையுடனும்‌ கூடத்தான்‌ நாம்‌ போராடவேண்டும்‌.

பத்து வருடங்களுக்கு முன்னால்‌ கி.ரா.வின்‌ நாட்டார்கதைகளின்‌ தொகுப்பொன்று ஆங்கிலத்தில்‌ வெளிவந்தது. நானும்‌ கி.ரா.வின்‌ உலககிற்குள்‌ இந்த நூல்‌ மூலமாகவே வந்தேன்‌. ஆனால்‌ அதன்‌ பின்‌ நான்‌ கி.ரா.வை வாசித்தது முழுக்கத்‌ தமிழில்‌. கோபல்ல கிராமம்‌ வாசித்தேன்‌. அவரது சிறுகதைகளை ரசிக்கத்‌ தொடங்கினேன்‌. குறிப்பாக 'பேதை', 'கோமதி', 'கனிவு' போன்றவை ஒரே நேரத்தில்‌ நாட்டார்‌ வாழ்வியலையும்‌ அழகியலையும்‌ பேசி, அதற்கு மேல்‌ ஒரு தளத்தில்‌ மனித மனத்தின்‌, வாழ்வின்‌ பிணைப்புகளும்‌ துக்கங்களும்‌ விடுபட்ட கணங்களையும்‌ காட்டும்‌ முறை என்னை உள்ளிழுத்தது. சாளரத்துக்கு வெளியில்‌ பனிபொழிகையில்‌ அவர்‌ கதைகளின்‌ மூலம்‌ கரிசல்‌ நிலத்தின்‌ மண்ணையும்‌ மணத்தையும்‌ வெப்பத்தையும்‌ விரிவையும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ உணர்ந்திருக்கிறேன்‌.

ஆனால்‌ இந்திய-ஆங்கில வாசகர்கள்‌ பலர்‌ மத்தியில்‌ கி.ரா இன்னமும்‌ கூட சுவாரஸ்யமான, கொஞ்சம்‌ விரசமான நாட்டார்கதைகளைச்‌ சேகரித்து எழுதிய ஒரு கிராமியத்‌ தாத்தா, அவ்வளவுதான்‌. அவர்களையும்‌ சொல்லிக்‌ குற்றம்‌ இல்லை. மொழியாக்கங்களை மட்டுமே நம்பி இருப்போருக்கு எது மொழியாக்கம்‌ செய்யப்படுகிறதோ அதுவே அந்தப்‌ பானை சோற்றின்‌ பதமாக ஆகிறது. மொழியாக்கம்‌ செய்தவரையும்‌ பதிப்பாளரையும்‌ கூடக்‌ குற்றம்‌ சொல்ல முடியாது. இவை சுவாரசியமான கதைகள்‌. நல்ல மொழியாக்கம்‌. முன்னுரை தெளிவாகத்தான்‌ இருக்கிறது. நாட்டாரரியலில்‌ ஆர்வம்‌ உள்ள யார்வேண்டுமானாலும்‌ படிக்கும்பாடியான நூல்‌, ஆனால்‌ கி.ரா.வின்‌ வேறு நூல்கள்‌ மொழியாக்கத்தில்‌ இல்லாதவரையில்‌ அவரைப்‌ பற்றிய இச்சித்திரத்தை எளிதில்‌ மாற்ற முடியாது (கோபல்ல கிராமம்‌ கூட மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால்‌ அதைப்‌ பற்றிய விமர்சனங்கள்‌ ஆங்கிலத்தில்‌ நான்‌ படித்ததாக நினைவே இல்லை. தேடிப்‌ பார்த்ததிலும்‌ பெரிதாக ஒன்றும்‌ கிடைக்கவில்லை). இச்சூழலில்‌ அலட்சியத்தைத்‌ தாண்டி கி.ரா.வுக்கு ஞானபீடம்‌ கிடைத்தால்‌ மிகப்பெரிய விஷயம்‌ அது. அதுவே ஒரு வெற்றி.

இந்தப்‌ பின்னணியில்‌ நீங்கள்‌ முன்வைக்கும்‌ அறைகூவல்‌ மிக முக்கியமானது. இந்தக்‌ குரலின்‌ முக்கியத்துவம்‌ இன்று பரவலாக கவனிக்கப்‌பட்டதா என்று தெரியவில்லை. என்வரையில்‌ நான்‌ செய்யக்கூடியது கி.ரா.வைப்‌ பற்றிப்‌ பேசுவது, எழுதுவது. அதைச்‌ செய்கிறேன்‌.

சில தனிப்பட்ட கருத்துக்களைப்‌ பகிர்ந்துள்ளேன்‌. ஆகவே என்‌ பெயரை வெளியிட வேண்டாம்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.

நன்றி

எஸ்‌



அன்புள்ள எஸ்‌,

தி.ரா.வுக்கு ஞானபீடம்‌ பற்றி ஏன் எழுதினேன்‌ என்றால்‌, ஞானபீடம்‌ தமிழுக்கு தவறிப்போகும்‌ போதெல்லாம்‌ அதையும்‌ 'தமிழன்‌ மீதான புறக்கணிப்பு' என ஆக்கிக்கொள்ளும்‌ குரல்கள்‌ எழுவதனால்தான்‌. எங்கே சிக்கல்‌ இருக்கிறது, என்ன செய்யவேண்டும்‌ எனச்‌ சுட்டிக்காட்ட, எனக்கு அக்கட்டுரை குறித்து வந்த ஒரே நல்ல கடிதம்‌ இது. பிற அனைத்துமே 'பக்கத்து இலைக்குப்‌ பாயசம்‌ கேட்கிறீர்கள்‌', 'கி.ரா தமிழரே அல்ல', 'தமிழ்‌ ரசனையைக்‌ குற்றம்‌ சொல்ல என்ன தகுதி உனக்கு? எது மக்களால்‌ ரசிக்கப்படுகிறதோ அதுவே மக்களுக்கான இலக்கியம்‌' என்னும்‌ வகையான எதிர்வினைகள்‌ மட்டுமே.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களின் 'காடு' சிறுகதைத் தொகுப்பு - வாசகர் மதிப்புரை


பொதுவாக எனது வாசிக்கும் ஆர்வம் வரலாற்று நூல்களிலும், கட்டுரைத் தொகுப்புகளிலும் இருக்கும் அளவிற்கு சிறுகதை தொகுப்புகளில் இருப்பதில்லை. (காரணம் கதைகளைப் படித்து முடித்ததும் அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதில் என்னால் வெளிவர முடிவதில்லை)

ஆனால், காடு சிறுகதை தொகுப்பின் முதல் கதையின் முதல் வரியைப் எதேச்சையாக படித்த போது அவ்வரியே அக் கதைக்குள் என்னை இழுத்துச் சென்றது.

"கடவுள் எவ்வளவு உயரம் இருப்பார் தெரியுமா?" என்ற அந்த வரியே
அட என ஆச்சரியப்பட வைத்து கதை முழுவதையும் வாசிக்கச் செய்தது.

சமூகத்தில் நாம் பார்க்கக்கூடிய, காதால் கேட்கக்கூடிய ஒரு  சம்பவம்தான் கதையின் மையக்கரு. ஆனால் ஆசிரியர் அதை சொல்லிய விதம் அடடே போட வைக்கிறது.

கதையில் இருக்கும் ஒரு பாராவை அப்படியே தருகிறேன் பாருங்கள் எத்தனை ரசனையுடன் எழுதி இருக்கிறார் என்று.

"கரிசல் பூமியில் ஆண்களும் கர்ப்பம் கொள்வது உண்டு. கொத்தமல்லி காடு வெளேரென்று பூக்கிற போது ஒவ்வொரு ஆணும் கர்ப்பம் கொள்கிறான். மசக்கையின் ஆயாசமும், களைப்பும் அவன் முகத்தில் தெரிகிறது.
பருவ மாறுதல்களால் தீட்டுப்படாமல் காடு விளைந்து விட வேண்டும் என்று அவன் கவலைப்படுகிறான். விளையப்போகும் மல்லி செடி அரும்பு காயாகி கனம் அதிகரிக்கின்ற கணமெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணின் முக அழகு வந்து விடுகிறது. பிரசவ வேதனையுடன் ஒவ்வொரு நாளும் காட்டை நெருங்குகிறான். நட்சத்திர துகள்கள் மண்ணில் உதிர்ந்து விட்டது போல் காடெல்லாம் கொத்தமல்லி பூத்திருக்கிறது".

எதையும் நாம் சொல்லும் விதத்தில் தான் அதன் ரசனை அமைகிறது. 

காலத்தில் கரையாது ஐயா தங்களின் எழுத்து.

- கௌரேஇ கணேசன் 

ஒரு படைப்பாளியின் கதைப் பெண்டிருக்காக கலங்கிய அரங்கம்



காலத்தில் கரைந்து போகாமல் காலமாகி நிற்கிற ஒருவரை நினைவுகூரும்  கூடுகைகளில் அவர் சந்தித்த சோதனைகளையும், வென்று காட்டிய சாதனைகளையும் பகிர்ந்திடும்போது பேசுகிறவர்களும் கேட்கிறவர்களும் உணர்ச்சிவசப்படுவது புதிதல்ல. ஒரு படைப்பாளியை நினைவுகூர்வதற்கான அந்தக் கூடுகையிலும் உரையாளர்கள், அவையினர் இரு தரப்பினரும் நெகிழ்ந்தார்கள். அவருடைய வாழ்க்கைத் தடங்களால் அப்படி உணர்ச்சிமயமாகவில்லை, மாறாக, அவருடைய எழுத்தாக்கங்களைச் சொன்னபோது, கதை மாந்தர்களை எடுத்துக்காட்டியபோது அரங்கத்தினரும், தாங்கள் சந்தித்த மனிதர்கள் பற்றிய நினைவுகள் கிளர்தப்பட்டவர்களாக ஆழ்ந்த உணர்வில் மூழ்கி எழுந்தார்கள்.

எழுத்தாளரும், மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றவருமான பா.செயப்பிரகாசம் நினைவு கருத்தரங்கில் இந்த மாறுபட்ட அனுபவம் வாய்த்தது. சமூகப் போராளி எளியோரின் வழக்குரைஞர் பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு இணைந்து அந்தக் கருத்தரங்கத்தை சனிக்கிழமையன்று (2025 மார்ச் 15), சென்னையின் ‘இக்சா’ வளாகச் சிறு கூடத்தில் நடத்தின,

பா.செ‘யின் படைப்புலகம் சார்ந்தே உரைத் தலைப்புகள். அவரது அல்புனைவுகளில் பெண்ணியம் மற்றும் சமூகப் பங்களிப்புகள் பற்றிப் பேசினார், இதே தலைப்பு தனக்கும் பொருந்தக் கூடியவரான கமலாலயன். சில பதிவுகளைப் பகிர்ந்தபோது சில மணித்துளிகள் தொடர்ந்து பேச இயலாமல் உறைந்தார். குறிப்பாக, இந்தித் திணிப்புக்கு எதிராக 1960களில் ஏற்பட்ட எழுச்சியில் ஒரு தளநாயகராகவே பா.செ பங்களித்தது பற்றிச் சொல்லி வந்தவர், தமிழக வரலாற்றின் அந்த மகத்தான அத்தியாயம் இலக்கியப் புனைவுகளில் கொண்டுவரப்படவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பதைக் குறிப்பிட்டபோது அடுத்த சொற்களுக்காகத் தவித்தார். தனது தொழிற்சாலை அனுபவங்கள், உயரரிகாரியின் எச்சரிக்கை, தொழிலாளர் போராட்டத்தில் முன்னின்றவர்கள் பழிவாங்கப்பட்டது குறித்த நினைவுகளையும் பா.செ கட்டுரைகள் கிளறிவிட்டதைத் தெரிவித்து, அத்தகைய பல போராட்டங்கள் புனைவுகளாக்கப்படாமல் இருப்பதன் வேதனையை ஒரு படைப்பாளிக்கே உரிய உறுத்தலுணர்வுடன் வெளிப்படுத்தினார்.


பா.செ புனைவுகளில் நடமாடும் பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்திப் பேசினார், உண்மை வாழ்க்கையின் அத்தகைய மனிதர்களைத் தேடும் உந்துதலை இளம் எழுத்தாளர்களுக்கு எப்போதும் வழங்குகிறவரான ச.தமிழ்ச்செல்வன். பா.செ வாழ்க்கையோடு கலந்த பாட்டியும் அம்மாவும் கரிசல் கிராமங்களின் உயிரோட்டமான பெண்களும் அவருடைய சிறுகதைகளில் வாழ்ந்துகொண்டிருப்பதை எடுத்துக்காட்டினார். அவர்களின் பாடுகளையும் வலிகளையும் அழுகைகளையும் எவ்வளவு துல்லியமாகக் கவனித்து உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார் என்று சொல்லிவந்தவர், ஒரு கதையில் சித்தரிக்கப்படும் அவலச் சூழலைப் பகிர்ந்தபோது கண்ணீர் முட்டிக்கொள்ள, பேச்சைத் தொடர முடியாமல் தடுமாறினார். தண்ணீர் எடுத்துக்கொடுக்கப்பட்ட பிறகு, அதைப் பருகிவிட்டு, மனதை ஆற்றிக்கொண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உரையைத் தொடர்ந்தார். நம் வீடுகளில், பக்கத்து வீடுகளில், தெருக்களில், ஊர்களில் இப்படிப்பட்ட பெண்களைப் பார்த்திருக்கிறோமே, இதே போலக் கவனித்திருக்கிறோமா என்ற குறுகுறுப்பை அவையினருக்குக் கடத்தினார் என்றால் மிகையில்லை.


சங்கத்தின் மாவட்டச் செயலாளர், நாடகக் கலைஞர் அசோக் சிங் நினைவுரையாற்றினார். பா.செ வாழ்க்கையின் நினைவுக் குறிப்புகளாக அல்லாமல், பா.செ பேச விரும்பிய பண்பாட்டுத் தளப் போக்குகளை நினைவில் கொண்டு புதிய கண்ணோட்டத்தில் விவாதிக்க வேண்டிய சிந்தனையை முன்வைத்தார். மொழி உள்பட எந்தவொரு பண்பாட்டு அடையாளத்தையும் நாம் எதிர்க்கவில்லை, ஆதிக்கத்தைத்தான் கேள்விக்கு உட்படுத்துகிறோம் என்றார். 

வரவேற்புரையோடு, தேர்ந்தெடுத்த தலைப்புகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்துரையாகவும் சுருக்கமாக வழங்கினார் மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு. இந்தத் தலைப்புகளைத் தேர்வு செய்ததே அவர்தான் என்று தெரியவந்தது. தலைப்புகளை மட்டுமல்ல, யாரிடம் அவற்றை ஒப்படைக்கலாம் என்று தேர்வு செய்ததிலும் அவருடைய அனுபவமும் அக்கறையும் பொதிந்திருக்கின்றன.


நன்றி நவில வந்த அறக்கட்டளைப் பொறுப்பாளர்களில் ஒருவருரான வழக்குரைஞர் அஜிதா, எழுத்தாளர், களச் செயல்பாட்டாளர் என்பதற்கெல்லாம் முன்பாக பா.செ தனது மாமா என்று தெரிவித்தார். பற்பல வாழ்க்கை நிலைகளுக்கு மாறினாலும் வர்க்க அடிப்படையில் எளிய மக்களின் பக்கம் நிற்பதில் ஒருபோதும் மாறாமல் நின்றார். அவரது கதாபாத்திரத் தேர்வுகளும் மொழிப்போராட்டம் புனைவாக்கப்படாதது பற்றிய மனக்குறையும் சேர்ந்து, பணியும் பணியில் சந்திக்கும் மக்களும் சார்ந்த எழுத்தாக்கங்களில் இனி தானும் ஈடுபடும் உறுதியை ஏற்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தினார்.


எண்ணிய எண்ணியாங்கு எய்தலாகும் என்ற நம்பிக்கையோடு அரங்கில் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார் முற்போக்குச் சிந்தனையாளர், மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன். 

மானுட மாண்பும் வர்க்க உணர்வும் வேறு வேறு அல்ல,  ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று உணர்த்திய நிகழ்வு எனப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் அங்கிருந்து விடைபெறும்போதே உதித்திருந்தது.

- நன்றி அசாக்

❌