Normal view

Received before yesterdayசுரேஷ் பிரதீப்

இலக்கிய விமர்சனம் - பத்துக் கட்டளைகள் - ஒரு சுயபரிசோதனைக் குறிப்பு

இதுவொரு சுயபரிசோதனைக் குறிப்பு.


இணைய ஊடகங்களின் பெருக்கம் இலக்கியத்தின் மீது எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது என்ற வகையிலான உரையாடல்களை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பார்க்க நேரிடுகிறது. அவ்வுரையாடல்கள் தொழில்நுட்பரீதியான மாற்றங்கள் குறித்துத்தான் அதிகமும் அக்கறை கொள்கின்றனவே தவிர இலக்கிய வாசிப்பு, ரசனை, வாசகனில் படைப்பு உண்டாக்கும் தாக்கம் போன்ற சங்கதிகள் குறித்து அதிகமும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. எழுதும் முறை மாறியிருக்கிறது. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அலைபேசியைத்தான் பயன்படுத்துகிறேன். பேனா பிடிப்பதற்கு பதிலாக தட்டச்சு செய்யத் தொடங்கியது போல இரண்டு கட்டைவிரல்களை மட்டும் பயன்படுத்தி தற்போது எழுதுகிறோம். இதுபற்றி அதிகம் பேச ஒன்றுமில்லை.‌ இந்த செயற்கை தொழில்நுட்பம் பற்றிய பேச்சுகள் அது இலக்கியத்தை அழித்துவிடுமா இல்லையா என்பதெல்லாம் கூட ஒரு வகையான 'சமகால' மோஸ்தரை ஒட்டிய பேச்சுகள்தானே தவிர அப்பேச்சுகளுக்கும் இலக்கியத்துக்கும் பெரிய தொடர்பில்லை.


இலக்கியம் என்பது காலங்காலமாக படைப்பாளியின் உள்ளம் உணரும் உண்மையை‌ மொழியின் ஒரு வெளிப்பாட்டு வடிவத்தில் பொதிந்து வைப்பதாகவே இருந்துள்ளது. அந்த உண்மையின் பிரத்யேகத்தன்மை மற்றும் தகுதி காரணமாக அது திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகிறது. துன்பப்படும் மனதிற்கு ஆறுதலைவிட உண்மைதான் அவசியம்.‌ அறிகுறிகள் தென்பட்ட பிறகு 'நோய் சரியாகிவிடும்' என்ற ஆறுதலைவிட அது என்ன நோய் எப்படி‌ சரிப்படுத்தலாம் என்ற உண்மைதான் நோயாளிக்கு பயனுள்ளது. தீவிர இலக்கியமும் அத்தகையதுதான். இலக்கிய விமர்சனம் என்பது படைப்பின் உண்மைத்தன்மையை சோதிக்க உண்மையான படைப்புகள் சரியான வாசகனை சென்று சேர அவசியம்.


இங்கு இரண்டு கேள்விகள் வருகின்றன. உண்மை என்றால் என்ன? இலக்கிய விமர்சனத்துக்கும் முதல் கேள்வியில் சொல்லப்படும் உண்மைக்கும் என்ன தொடர்பு?


ஒரு விமான விபத்தில் இருபதுபேர் இறந்ததாகச் செய்தி வருகிறது. கொஞ்ச நேரத்தில் மேலும் சில சடலங்கள் கண்டறியப்படுகின்றன. அப்படியெனில் முதலில் சொல்லப்பட்டது பொய்யாகிவிடுமா? ஆகிவிடாது. அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் எத்தனை சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன எத்தனை பேர் காணாமலாயினர் உயிர்பிழைத்தவர்கள் எத்தனைபேர் என்று அத்தனை தகவல்களையும் இணைத்துப் பார்த்தால்தான் நமக்கு 'உண்மை' புலப்படும்.‌அப்போதும் உறுதியாகச் சொல்லிவிடுவதற்கில்லை.‌ யாருக்குமே தெரியாத ஒருவன் விமானத்தின் நொறுங்கிய பாகம் விழுந்து இறந்திருக்கலாம். விமான விபத்தின் செய்தியைக் கேள்விப்பட்ட அதிர்ச்சியில் ஒரு உயிர் போயிருக்கலாம். அப்படியெனில் அந்த விபத்தில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று சொல்லிவிடவே முடியாது என்று தோன்றுகிறது அல்லவா? அதுவொரு வகையான சலிப்பினையும் நமக்குக் கொடுக்கும். உண்மை என்ற ஒன்று இல்லை என்று சொல்கிறவர்கள் தங்கள் வாதத்தை இப்படித்தான் அடுக்குவார்கள்! உண்மை என்ற ஒன்று இல்லை என்று அவர்கள் சொல்வதை முதலில் நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் உண்மையை நோக்கிப் பயணப்பட முடியும். எத்தனை பேர் இறந்தார்கள் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்றெல்லாம் தேடும்போது நாம் இயல்பாகவே உண்மையை நோக்கித்தான் போகிறோம். நம்முள் உறையும் அக்கறை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உண்மையை நோக்கி நம்மை நகர்த்தும். ஒரு நிகழ்வுக்கு சரியான விதத்தில் அக்கறையுடன் எதிர்வினையாற்றும்போது நாம் உண்மையை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம்.


இலக்கியம் முன்வைக்கும் உண்மையும் இத்தகையதுதான். ஒரு படைப்பாளி தன்னுடைய சிறுகதை அல்லது கவிதை அல்லது நாவல் அல்லது வேறொரு இலக்கிய வகைமையின் வழியாக தான் உணர்ந்தது என்றொரு உண்மையை முன்வைக்கிறார். அது நேரடியாக சொல்லப்பட்டிருக்கலாம். அல்லது மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கலாம். அது குறிப்பிட்ட அர்த்தத்தை தரலாம். ஒரு அர்த்தமும் தரமறுப்பதாக இருக்கலாம். ஆனால் நம்முன் உள்ள பிரதி 'தான் உண்மை' என்று சொல்லிக் கொண்டுதான் நம்முன்னே நிற்கிறது. இங்கு உண்மை என்பது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற நிரூபண உண்மை கிடையாது. நான் மேலே குறிப்பிட்டதுபோல தொடர்ந்து 'தேடப்பட' வேண்டிய உண்மை.


அந்த 'தேடப்பட' வேண்டிய உண்மையை தன்னுடைய கருவாகக் கொண்ட படைப்புகளையே இலக்கியப் படைப்புகள் என்று மதிப்பிடுகிறோம். உண்மையைப் பற்றிய இந்த வரையறையில் மேலும் இரண்டு கேள்விகள் வருகின்றன.‌ ஒன்று அந்த தேடப்பட வேண்டிய உண்மையை எப்படி அடையாளம் காண்பது? இரண்டாவது இலக்கிய வாசிப்புக்கு இப்படி 'உண்மையைத் தேடுதல்' என்று மட்டும் பாத்தி கட்ட முடியுமா?


உண்மையை நம்மால் அடையாளம் காணமுடியும். காந்தத்தை மண்ணில் பிரட்டினால் அது இரும்புத்துகள்களை எடுத்துக் கொள்வதுபோல ஒரு வாசகரின் மனதால் உண்மையை அடையாளம் காண முடியும். அதற்கு நம் மனம் காந்தமாக வேண்டும். இலக்கிய வாசிப்பில் மிகக் கடினமான கட்டம் இதுதான். உண்மைத் துகள்களை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றிக் கொள்வது. இலக்கிய வாசகர்கள் எல்லா காலத்திலும் மிக மிகச் சொற்பமாக இருப்பதற்குக் காரணமும் உண்மை மீது நாட்டம் கொள்ள வேண்டியதை இலக்கியம் ஒரு முன்நிபந்தனையாக விதிப்பதுதான். நம் வாழ்வினை மயக்கங்கள் இன்றி அணுக கற்றுக் கொள்ள வேண்டும். 


ஆணவம் ஒரு மயக்கநிலை. அந்த மயக்கநிலை ஏராளமான மயக்கநிலைகளைத் தோற்றுவிக்கும். நான் நம்புவதே சரி என்பது அத்தகைய எளிதான ஒரு மயக்கநிலை. தான் சார்ந்திருக்கும் கொள்கைதான் உலகத்தை உய்விக்கும் ஒரேவழி என்பது தீவிரமான மயக்கநிலை. இத்தகைய ஏராளமான நிலைகளைச் சுட்ட முடியும். ஒரு நல்ல இலக்கிய வாசகர் நிச்சயமாக தன்னுடைய 'ஆணவத்தின்' மீது அடி விழுந்த அனுபவம் பெற்றிருப்பார். நிலைகுலைந்து போகவும் வாழ்க்கைப் பற்றிய அடிப்படைப் பார்வையை மாற்றிக் கொள்ளவும் தன்னை அனுமதித்து இருப்பார். 


உண்மையை அடையாளம் காண்பதற்குச் சரியான வழி உண்மை என்று நம்முன்னே வந்து நிற்பது நம்மை சற்றாவது அசைக்கிறதா என்பதை உற்று நோக்குவதுதான். அதற்கும் ஒரு முன்நிபந்தனை இருக்கிறது. நாம் ஒரு படைப்பை எவ்வளவு தீவிரமாக அணுகுகிறோம் அது நம்மிடம் சொல்கிற விஷயத்தை எவ்வளவு மனவிரிவுடன் உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அப்படைப்பு முன்வைக்கும் உண்மையை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். 


அடுத்ததாக உண்மையைத் தேடுதல் என்று இலக்கிய வாசிப்புக்கு பாத்திகட்ட முடியுமா என்ற கேள்வி. முதலில் புனைவை உண்மை என்று பார்க்க வேண்டும் என்று நான் சொல்வதே சிலருக்கு விசித்திரமாகத் தெரியலாம். முன்பு சொன்னதுபோல இங்கு உண்மை என்பது எழுத்தாளரின் டைரிக்குறிப்பு இல்லை. டைரிக்குறிப்புமே கூட ஒரு கோணம்தான். 'இன்று ஒரு ஆழகிய பெண் என்னைப் பார்த்து சிரித்தாள்' என்று நான் டைரியில் எழுதி வைக்கிறேன் என்று கொள்வோம். அவள் நான் பேண்ட்டில் ஜிப் போடாமலிருப்பதைப் பார்த்துக்கூட சிரித்திருக்கலாம் என்ற சாத்தியம் என் வரையிலான உண்மையை காலி செய்து விடுகிறது. ஆகவே இலக்கியத்தில் முன்வைக்கப்படும் உண்மை என்பது நிகழ்ச்சிக் குறிப்பு அல்ல. சொல்லப்படும் சமயத்தில் 'அட ஆமால்ல' என்று நம் மனம் இயல்பாகவே எதை ஆமோதிக்கிறதோ அது.


உண்மைக்கு இத்தகைய நெகிழ்வான விளக்கத்தைக் கொடுத்தபிறகு உண்மையை வைத்து இலக்கியத்திற்கு பாத்தி கட்டுவது அப்படி ஒன்றும் தவறான விஷயமாகப்படவில்லை.


அடுத்ததாக இலக்கிய விமர்சனம் உண்மைக்கான தேடலை எவ்வாறு வலுப்படுத்துகிறது? 


ஜனநாயகம் சமத்துவம் போன்ற கருதுகோள்களை அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். கலைத்துறைகளில் அது கூடாது. ஏனெனில் ஒரு மனிதனின் கலைத்தேட்டம் என்பது சமூக நடைமுறைகளின் விளைபொருள் அல்ல. அதுவேறு ஏதோவொன்று.‌அது என்னவென்று இன்றுவரை உறுதியாக வரையறுக்கப்படவில்லை. மக்களை 'குஷிப்படுத்துவது' கலையின் நோக்கமல்ல. அதற்கென்றே உருவான வணிகக் கலைகள்‌ இருக்கின்றன. ஒரு உயர்தரமான உணவகம் அல்லது பார்பர் ஷாப் போல 'வாடிக்கையாளர் திருப்தி' அளித்து நம்மை திருப்பி அனுப்புகிறவை அவை. ஆனால் உண்மையைத் தேடும் அல்லது ஏதாவது ஒரு உண்மையை திக்கத் திணறி நம்மிடம் சொல்ல முயலும் கலையை எந்த உதவியும் இல்லாமல் யாராலும் சென்று தொட்டுவிட முடியாது. இந்த இடத்திலேயே விமர்சகரின் தேவை உருவாகிறது. தொடர்வாசிப்பில் இருப்பவரே நல்ல விமர்சகராக முடியும். ஆகவே விமர்சகர்களின் சிபாரிசு வழியாகத்தான் இலக்கியம் வளர‌முடியும். 'தான்தோன்றித்தனமான' வாசிப்புகள் இலக்கியத்துக்கு எதையும் கொடுத்துவிடாது. 'எல்லாமும் சமம் எல்லாமும் அவசியம்' என்பது அரசியலுக்குப் பொருந்தும். இலக்கியத்துக்கு அல்ல.


தமிழ் இலக்கியச்சூழலில் விமர்சனம் தனித்துறையாக வளரவில்லை என்று அறுபது வருடங்களுக்கு முன்பு க.நா.சுப்ரமண்யம் எழுதினார். இன்றும் நிலைமை பெரிதாக முன்னேறிவிட்டது என்று சொல்ல முடியாது. பொருட்படுத்தத்தக்க இலக்கிய விமர்சனங்களை பெரும்பாலும் படைப்பாளிகளே எழுதுகின்றனர். வேறு வழியும் தற்போது இல்லை என்றே தோன்றுகிறது. இலக்கிய வாசிப்பில் தீவிரமாக ஈடுபடுகிறவர்கள் படைப்பாளிகளாகவே இருக்கின்றனர். ஆனால் இது ஆரோக்கியமான போக்கு இல்லை.‌ஒரு துறையில் ஆழமான அறிவுடையவர்கள் தன்னிச்சையாக உருவாகி வரவேண்டும்.‌புனைவெழுத்தாளர்களும் வேறு துறை நூல்களை அதிகம் வாசிக்க வேண்டும். புனைவெழுத்தாளர்கள் வரலாறு, அறிவியல், சிற்பம், ஓவியம் குறித்தெல்லாம் பேசுவது அவசியம்தான். ஆனால் இலக்கிய விமர்சனம் பற்றிப் பேசுவதால் அதைக் குறித்து விரிவாக எழுத இது இடமில்லை. ஒரு ஆரோக்கியமான வாசிப்புச்சூழல்தான் வலுவான விமர்சன மரபையும் உருவாக்க முடியும். ஒரே படைப்பு குறித்து முரண்பட்ட பார்வைகள் வெளிப்பட வேண்டும். அது எவ்வளவு அபத்தமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உண்மையானதாக இருக்க வேண்டும். இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கும் எனக்கும் சில விதிதளை இங்கு சொல்லி வைக்கிறேன். இன்றைய சமூக ஊடகச்சூழலில், அன்று தோன்றி அன்றே மறையும் போலியான பரபரப்புகளுக்கு மத்தியில், படைப்பாளிகளும் அத்தகைய பரபரப்புகளில் கால் நனைக்கும் அபாயம் கூடியிருக்கும் இந்நாட்களில் இவ்விதிகளை பின்பற்றுவதே என்னை காக்கும் என நம்புகிறேன். பிறருக்கும் இவ்விதிகள் பயன்படலாம்.


1.ஒரு படைப்பினை வாசித்து மனதில் அசைபோட்ட பிறகு அது உண்டாக்கும் உணர்ச்சிகளை எவ்வளவு அபத்தமெனத் தோன்றினாலும் ஏதோவொரு விதத்தில் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும்.


2.அப்போது வாசிக்கும் இலக்கியக் கொள்ளைகள் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றது போல படைப்புகளுக்கு விளக்கம் அளிக்கக்கூடாது. தன்னிச்சையாக மனதில் எழும் இணைவுகள் மட்டுமே முக்கியமானவை. மதிப்புரை, நூல் அறிமுகம், விமர்சனம் என்பதெல்லாம் வேறு வேறு என்றாலும் இலக்கிய விமர்சகர் இந்த தலைப்புகளை கண்டிப்புடன் பின்பற்றத் தேவையில்லை.


3.எழுத்தாளர் இதைச் சொல்வதால் புண்பட்டுவிடுவாரோ‌ என்று எண்ணத் தேவையில்லை. இலக்கிய விமர்சனம் நம் இலக்கியத்தின் தரத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கானதே தவிர குறிப்பிட்ட எழுத்தாளரை உயர்த்துவது நம் நோக்கமல்ல.


4.ஒரு எழுத்தாளரை தனிப்பட்ட முறையில் பிடிக்காது என்பதைக் கொண்டு அவருடைய படைப்புகளை அணுகக்கூடாது. நண்பர், காதலர், துரோகம் இழைத்தவர் என்று ஆளுக்கேற்றது போல மனச்சாய்வு கொள்ளக்கூடாது. ஆனால் ஒரு எழுத்தாளரின் படைப்பின் மீது இயல்பாகவே அதீதமான ஈர்ப்பு ஏற்பட்டால் அதையும் மறைக்கக்கூடாது.


5.நேர்மையாக விமர்சிக்கிறேன் என்ற தோரணையில் அனாவசியமான கடுஞ்சொற்களை பயன்படுத்தத் தேவையில்லை. சாதாரண சொற்களின் வழியாக மறுப்பினை முன்வைக்கும் கலை அறிய வேண்டும்.


6.ஒரு படைப்புக்கு விருது கொடுக்கப்படும்போது விருதுக்கு படைப்பு தகுதியற்றது என்று தோன்றினால் மறுத்து எழுத வேண்டும். ஒரு அமைப்பு தொடர்ந்து தகுதியற்ற படைப்புகளுக்கே விருது கொடுத்தாலும் மறுத்து எழுதுவதில் தவறில்லை.


7.இலக்கிய விமர்சனத்தின் வழியாக ஒரு படைப்பை தூக்கி நிறுத்துவதோ தூக்கியெறியச் செய்வதோ இயலாது என்ற புரிதல் விமர்சகருக்கு அவசியம். இலக்கிய விமர்சனத்தின் வழியாக தன் பார்வையை தொடர்ந்து கூராக்கிக் கொள்வதைத் தாண்டி இலக்கிய விமர்சகர் அடைவது ஒன்றுமில்லை என்ற தெளிவு அவசியம்.


8.பரிந்துரைக்கும்போது கவனம்தேவை.‌ ஒரு படைப்பு ஏன் வாசிக்கப்பட வேண்டும் என்ற குறிப்புடன் பரிந்துரைகளைச் செய்ய வேண்டும். 


9.விமர்சகர் முக்கியமென நினைத்தப் படைப்பு காலத்தால் மறக்கப்படலாம். தான் முக்கியமென நினைத்த ஒரு படைப்பு காலாவதியாகும்போது ஏன் அப்படி நிகழ்கிறது என்பதை சீர்தூக்கிப்‌ பார்க்க வேண்டும்.


10.தான் வாசித்தது குறைவு என்ற தெளிவு அவசியம். இலக்கியம் என்பது பெரும்பரப்பு. அதில் புதிதாகவும் உண்மையாகவும் ஒரு பார்வைக்கோணம் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனவிரிவு தனக்கிருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.‌ஒருவேளை இல்லையென்றால் அது ஏன் என்பதையும் தன்னால் எந்தக் கூறுடன் உடன்பட முடியவில்லை என்பதையும் முன்வைக்க வேண்டும்.



போர்கள் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?

(இங்கு நான் எழுதப் போவது புதிது இல்லை. எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த விஷயத்தை ஒருமுறை நினைவூட்டுவதற்காக இந்தக் குறிப்பு)


சில நாட்களுக்கு முன்பு ஒரு காலைப் பொழுதில் வீட்டு மாடியில் இருந்து விரைவாக இறங்கினேன். போர்ட்டிக்கோவில் கிடந்த ஒரு நீளிருக்கையில் முட்டையிட அமர்ந்திருந்த பெட்டைக்கோழி என் காலடிச் சத்தம் கேட்டு பதறி எழுந்தது. எனக்கு குற்றவுணர்வாக இருந்தது. ஏறத்தாழ பாதிமுட்டை அதனிலிருந்து வெளிவந்திருந்தது. எப்படியோ முட்டையை முழுமையாக வெளியேற்றிவிட்டு அங்கிருந்து ஓடியது. கோழி முட்டையில் ஒரு மெல்லிய சிவப்புப் படலம் இருக்கும். ஆனால் அந்த முட்டையில் ரத்தம் நன்றாகவே தெரிந்தது. அன்று முழுக்க மனம் சமாதானம் அடையவில்லை. நம்மைச் சுற்றி அப்படி காரணமே இல்லாமல் வதைபடும் ஏராளமான விலங்குகளைப் பார்க்கிறோம். நான் சைவ உணவின் ஆதரவாளன் இல்லை. நான் சொல்ல வருவது வேறு. விலங்குகளுக்கும் நமக்குமான ஒரே வேறுபாடு இதுதானே? எந்தவொரு மனிதனையும் அப்படி வதைக்க முடியாது. வதைக்கக்கூடாது என்பதே இன்றைய உலகின் முதன்மையான லட்சியம். மனிதன் வதைபடுகிறவனாக யாருடைய வளர்ச்சிக்காகவோ மகிழ்ச்சிக்ககாவோ துன்புறுத்தப்படுகிறவனாக மாறுவதை நாம் எதிர்க்கிறோம். தனிமனித உரிமை என்று நாம் பேசுவது இதைத்தான். எந்தவொரு மனிதனும் அவனுடைய விருப்பமின்றி எந்தவொரு செயலையும் செய்வதற்கு வற்புறுத்தப்படக்கூடாது. மனிதன் அவனுடைய வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டை இழக்கும் நிலையைத்தான் மிருகநிலை என்று வரையறுக்கிறோம். வனமிருகங்கள் சுதந்திரமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் எந்த நேரத்திலும் அவற்றின் இருப்பிடத்தை மனிதன் அபகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புடன்தான் அவை வாழ்கின்றன. பழைய அரசாங்கங்கள் - மன்னராட்சி - ஏறத்தாழ அவ்வாறுதான் இருந்தன. எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டினால் அபகரிக்கப்படலாம். வரலாற்று வளர்ச்சியினூடாக நாம் கற்றுக் கொண்ட நாகரிகம் என்பது இந்த அபகரிப்பினைத் தடுப்பதுதான். அபகரிக்கப்படாத ஒரு நிலத்தில் வாழும் மனிதன்தான் தன்னுடைய வாழ்க்கையின் பொருளினைத் தேடும் வாய்ப்பினை பெறுகிறான். நமக்கு பிறப்பு இறப்பு பற்றி அவ்வளவு உறுதியாக ஒன்றும் தெரியாது.‌ குறிப்பிட்ட காலம் உயிரோடு இருக்கும் வாய்ப்பு நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக்கொண்டு அவனுடைய வாழ்க்கைப் பார்வையை உருவாக்கிக் கொண்டு அதன் வழியாக மகிழ்ச்சியையும் நிறைவையும் நோக்கிப் போகவேண்டும். உலகத்தின் 'புறவயமான லட்சியம்' என்று இதை மட்டும்தான் சொல்ல முடியும். இதற்கு வழி ஏற்படுத்தித் தருவதுதான் மதங்கள், தத்துவங்கள், அரசாங்கங்கள்,குடும்பங்கள் போன்ற அமைப்புகளின் நோக்கமாக இருக்க வேண்டும். மேற்சொன்ற ஒவ்வொரு அமைப்புடனும் ஒவ்வொரு மனிதனும் ஒரு இடைவிடாத பேரத்தில் இருக்கிறான். அதில் வெல்கிறவர்கள் தங்கள் வாழ்க்கைக்கென ஒரு பொருளை கண்டடைகின்றனர். 


மேலே நான் சொல்லி இருப்பது ஒரு லட்சிய சமூக கற்பனை. ஆனால் இந்தக் கற்பனையை நோக்கித்தான் நாம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறோம். இதனை உறுதியாக நம்பும்போதுதான் நம்மைப் போலவே இன்னொரு மனிதருக்கு உள்ள வாழும் உரிமையையும் நாம் அங்கீகரிக்கத் தொடங்குகிறோம். மனிதன் என்ற எல்லையைக் கடந்து வன உயிரினங்களும் காக்கப்பட வேண்டும் என்று யோசிக்கத் தொடங்குகிறோம். வனங்களைப் பேணுவதில் ஒரு எல்லைவரை மனித வாழ்க்கை நன்றாக அமைய வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மனிதமைய சுயநல நோக்கும் இருக்கிறதுதான். ஆனால் வெறும் சுயநல நோக்கு மட்டுமே நம்முடைய சூழியல் அக்கறைகளுக்கு காரணமில்லை. உயிர்க்குலத்தின் மீதான உயிரோடு இருப்பவற்றின் மீதான இயல்பான காருண்யமும் இணைந்துதான் நம் சூழியல் நோக்கை கட்டமைக்கிறது.


நான் முதலில் சொன்ன உதாரணத்தில் என்னுள் வேதனையைத் தூண்டியது உணவுக்காக வளர்க்கப்படும் ஒரு உயிர். அது அடுத்த நிலையில் உள்ளது. முதலில் மனிதன் வதைபடுவதைத் தடுக்கவும் அடுத்ததாக வனவிலங்குகள் வதைபடுவதை தடுக்கவும் வேண்டும். அதன்பிறகுதான் உணவுவிலங்குகளைப் பற்றி யோசிக்க முடியும். நான் சொல்ல வருவது இதுதான். இந்த சமூகம் தொடர்ந்து சுதந்திரமாக இயங்க அடிப்படையாக இருப்பது எல்லா மனிதருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற கருதுகோள்தான். அவரவர் மகிழ்ச்சிக்கான வழியை இன்னொருவரை துன்புறுத்தாமல் அவரவர் தேடிக்கொள்ளும் உரிமை உள்ளது. இந்த கருதுகோளை நாம் ஏற்காவிட்டால் தார்மீகரீதியாக நமக்கான வாழும் உரிமையை நாமே கைவிடுகிறோம் என்பதே அதன் பொருள். இதுவரை நான் சொல்லி வந்த பார்வைக்கு எதிரானதாக இருப்பதாலேயே போர் என்ற பாமரத்தனத்தை நான் எதிர்க்கிறேன்.


ஒவ்வொரு மனிதரும் தான் சார்ந்திருக்கும் அமைப்புகளுடன், வாழ்வதற்காக நிறைய பேரங்களில் ஈடுபடுகின்றனர். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அவர்கள் எந்த அமைப்பினை சார்ந்திருக்கிறார்களோ அந்த அமைப்பு அவர்கள் உயிருக்கு உத்திரவாதத்தைத் தர மறுக்கும்போது எல்லாமும் குழம்பிப்போய் விடுகிறது. போரில் நடப்பது அதுதான். நான் இந்தியாவின் தெற்கில் உள்ள தமிழ்நாட்டில் வசிக்கிறவன். தொன்னூறுகளில் பிறந்தவன். என் தந்தை அறுபதுகளில் பிறந்தவர்.‌அவரோ நானோ நேரடியாக எந்தப் போரையும் கண்டதில்லை. இதற்காக நாங்கள் இந்த தேசத்துக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். ஆனால் இன்றைய உலகில் பொருளாதார ரீதியாக ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டுடன் ஆழமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே உலகின் எந்தவொரு மூலையில் தொடங்கப்படும் போரும் யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடத் தொடங்கும்போது இரு நாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்க்கை மீதான தங்கள் நம்பிக்கையை இழக்கின்றனர். வாழ்வதற்கான ஒரு அர்த்தத்தை‌ உருவாக்கிக் கொள்ளுதல் என்ற ஒற்றை நோக்கமும் சிதைக்கப்பட்டுவிடுகிறது. சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் வாழ்வின் அர்த்தமாக அவர்களுடைய குடும்பம் குழந்தைகள் தொழில் போன்றவை இருக்கலாம்.‌ இவை சிதைகின்றன. இன்னும் பெரிய லட்சியங்கள் கொண்டவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அத்தகைய நோக்கங்கள் நிறைவேற ஒரு ஸ்திரமான தேசம் அவசியமாகிறது. ஒரு விவாதம் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நீண்டுகொண்டே போகலாம். தவறில்லை. ஆனால் குறுகிய கால நோக்கில் தொடுக்கப்படும் போர்கள் ஒரு தலைமுறையின் மகிழ்ச்சிக்கான தேடலை சிதைத்து விடுகின்றன. புறவயமாக நோக்கினால் பொருளாதாரத் தொடர்புகள் காரணமாக ஒரு நாட்டில் நடக்கும் போர் இன்னொரு நாட்டை பாதிப்பதால் விலைவாசி ஏற்றம் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு வேலையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதையும் கடந்து அகவயமாக யோசிக்கும்போது மனிதர்கள் பசியால் மரணிக்கிறார்கள் தாக்குதல்களில் மடிகிறார்கள் நேற்று வசித்த வீடு இடிந்து கிடப்பதை காண்கிறார்கள் என்கிறபோது நாம் நிம்மதியான வாழ்க்கையையே வாழ்ந்தாலும் நமக்குள் முளைக்கும் சங்கடங்களை நிம்மதியின்மைகளை சுரணேயின்றி நம்மால் கடந்துவிட முடிகிறதா என்ன? உலகில் எந்தவொரு மூலையில் நடக்கும் போரும் நியாய உணர்வு கொண்ட ஒட்டுமொத்த மனிதர்களையும் நிம்மதியிழக்க வைக்கிறது. அதன் வழியாக அவர்கள் மகிழ்ந்து வாழ்வதற்கான வழியும் அடைபட்டு போகிறது. சுயநலமானவர்கள் வெற்றிகரமாக வாழலாம் ஆனால் மகிழ்ச்சியாக வாழ முடியாது.‌ மகிழ்ச்சி என்பது பிறருடன் தொடர்புடைய ஒரு கருதுகோள். உலகின் எங்கோவொரு மூலையில் இயற்கையாலன்றி நம்முடைய திறனின்மையால் தூண்டப்பட்ட ஒரு போரினால் ஒரு குழந்தை இறக்கும்போது நம்மால் மகிழ்ந்திருந்துவிட முடியுமா? அப்படி மகிழ்ந்திருக்க முடிந்தால் அது உண்மையான மகிழ்ச்சி தானா? போர் தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்புவது இந்த அதீதமான சுயநலத்தின் காரணமாகத்தான். நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு உலகம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

ஈசல் - எதிர்வினைகள் 2

ஈசல் சிறுகதை 


ஈசல் - எதிர்வினைகள் 1


ஈசல் என்றொரு சிறுகதை வாசித்தேன். கொஞ்சம் விஞ்ஞானம், கொஞ்சம் தத்துவம், கொஞ்சம் சமூகம், கொஞ்சம் மானுடம் எனச் செல்லும் பிரமாதமான எதிர்காலக் கதை.  


பல காலமாக சுரேஷ் ப்ரதீப்பின் பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தாலும், அதன் வழி 2010க்குப் பின் எழுத வந்தோரில் எனக்குப் பிடித்தவராக இருந்தாலும், மனதளவில் அவருடன் ஒரு வித நெருக்கம் / மதிப்புக் கொண்டிருந்தாலும், நான் படிக்கும் அவரது முதல் புனைவாக்கம் இதுவே. அவர் தொழில்நுட்பம் அல்லாத துறையில் பணியில் இருக்கிறார். ஆனால் ஓர் AI செயலியின் சாத்தியங்களைப் புரிந்து கொண்டு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கற்பனை செய்திருக்கிறார் என்பதே என் வியப்பு. 


நிச்சயம் வாசியுங்கள்.


எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் (முகநூலில்)


ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் சரத்குமார் அவர்களின் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. அவரிடம் இருந்த செங்கல் போன்ற செல்போனைப் பற்றியது அது. அதைப்பற்றி அவர் அவ்வளவு விதந்தோதிப் பேசியிருந்தார். அவருக்கு அழைப்பு வந்தாலும், அவரே அழைத்தாலும் பணம் கட்டவேண்டும். இவ்வளவு செலவேறியது தேவையா என்று கேட்டதற்கு எங்கிருந்தாலும் என்னைத் தொடர்பு கொள்ள முடியுமே அதற்கான செலவுதான் அது என்று சொல்லியிருந்தார். ஆனால் வெகு விரைவில் அது பயன்பாட்டிற்கு வந்தது. இன்றைக்கு வெளியில் போகும்போது யாராவது யாரையாவது சத்தமாய் கூப்பிட்டாலும் போன் பேசிக்கொண்டு இருப்பாங்க என்று இயல்பாய் நாம் கடந்து போகிற நிலையில்தான் இருக்கிறோம். இப்பொழுது துப்புரவுப்பணியாளர்கள் காலையில் அழைத்து குப்பையை கீழே கொண்டுவாங்க என்று சொல்கிறார்கள். அப்போது இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். இன்னும் தொழில்நுட்பம் வளரும் வேகத்தில் இவைகள் எல்லாமே சாத்தியம்தான் என்றும் தோன்றுகிறது. இப்போதே மனிதர்களுக்கு ஒவ்வொரு இனத்திற்கும் அவங்களுக்குப்பிடித்த வரலாறு இருக்கிறது. இயல்பாய் உருண்டையாய் வளரும் பழங்கள் எல்லாம் சதுரமாகவும், இதயவடிவிலும் வளரும்படி செய்து விட்டோம். உயரமாய் வளரும் மரங்களை அறுவடை செய்ய வசதியாய் குட்டையாய் மாற்றிவிட்டோம். 6 மாதப் பயிர்களை 3 மாதத்திற்கும் 10 வருடம் கழித்து பயன் தரும் மரங்களை 3 வருடங்களில் பலன் தருவதுபோலவும் செய்து விட்டோம். நேற்று ஒரு நண்பரை சந்திக்க குடும்பமாய் ஒரு மிகச்சிறிய கிராமத்திற்கு சென்றிருந்தோம். எல்லா மரங்களுமே மிகக்குட்டையாய் இருந்தது. நின்று கொண்டே காயும் பழமும் பறித்துவிடலாம் என்பதுபோல. அதுபோல மனிதர்களையும் ஒருசிலரின் நோக்கங்களுக்கேற்ப அறுவடை செய்யவே இந்த தொழில்நுட்பங்கள். ஒருநாள் வீட்டில் என் கணவர் பால் காய்ச்சும்போது அப்படியே கைதவறி மேடைமேல் கொட்டிவிட்டார். இதைக்குறித்து நாங்கள் யாருமே ஒன்றும் பேசவில்லை. ஆனால் போனை திறந்தவுடன் பால் கொட்டி துடைக்கும் வீடியோக்கள் அப்படியே வரிசையாய் வந்ததைப் பார்த்து ரொம்ப பயமாகவே போய்விட்டது.நீங்கள் எழுதியிருக்கிறபடி நடக்காது என்று நாம் சொல்லவே முடியாது. நடக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. பயமாகவும் இருக்கிறது. சரளமாய் படிக்க முடிந்தது. சுரேஷ்க்கு எப்போதும் இருக்கும் நிகழ் கால கசப்பு அப்படியே எதிர்காலத்திற்கும் போய்விட்டது.



--

With Regards,


T.Daisy,

Trichy.

நிகழ்காலமும் எதிர்காலமும் கலந்து கட்டிய தொகுப்பாகப்பாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். 

எதிர்காலம் இத்தனை கொடூரமாக மாறிப் போகக் கூடும் என்பதை மறுக்க முடியாத நிலை தான் நிதர்சனம். நினைவுகள் தான் அனைத்திற்கும் காரணம் எனும் கருத்து மிக வித்தியாசம் 😊

ஜீரணிக்க சற்றுக் கடினமான கருத்தும் கூட. 

ஈசல் கதை எழுத்தாளர் சுஜாதா வின் நடை ஆனால் மிக வித்தியாசமான நம்மைச் சுற்றியுள்ள உலகை, நடப்புகளை, மனிதர்களை நன்கு கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட கற்பனைக் கதை 👍


மீனா மனோகர்


ஈசல் - எதிர்வினைகள் 1

ஈசல் சிறுகதை


ஈசல் கதையைப் படித்தேன். சில்ற ,பொன்னுலகம் கதைகள் வரிசையில் வைக்கக்கூடிய கதை. ஆனால் இது அவை இரண்டையும் விட முக்கியமானது. கடைசி வரியை மட்டும் தவிர்த்திருக்கலாமோ என்று முதலில் தோன்றியது. பிறகு அதுவும் சரிதான் என்று சமாதானம் உண்டாகிவிட்டது. எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கற்பனைகள் / கவலைகள் மிகையாகும்போது சலிப்பு ஏற்படுகிறது. இதில் வரும் அறிக்கை கொஞ்சம் அப்படி எண்ண வைத்தது. நினைவின் சுமை பற்றி அவ்வப்போது யோசிப்பதுண்டு. ஞாபகங்கள் மனிதனுக்கு பலமா பலவீனமா என்ற குழப்பம் தீரவில்லை. சலபதி ஒரு இடத்தில் பேசும்போது இந்தக் கதையில் கடைசியில் வரும் கடவுளின் இருப்பிடம் போன்ற ஓர் இடம் சூரியப் புயலில் சேதமடைந்தால் ஏற்படும் இழப்பு பற்றிக் கூறினார். அதுவும் இதேபோன்ற ஒரு கதைக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்.


ஶ்ரீனிவாச கோபாலன்


*****

சிறுகதை அற்புதமாக வந்துள்ளது. படித்ததும் ஒருவித நடுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு அபாயத்தை முன்னறிவிப்பு செய்வதுபோல் இருக்கிறது. 


வாழ்த்துக்கள் 💐 


நன்றி!


காமராஜ் மணி


***** 

நிச்சயமாக இது ஒரு பாய்ச்சல் தான். முடிவில் இறைவன் தானாகவே உருவாக்கப்பட்டிருப்பதை அறியும் போது அதிர்ச்சி உருவாகவில்லை. என்ன அது AI மூலமாக உருவாக்கப்பட்டது அழிப்பது சாத்தியமில்லை. 😀❤️😀

இறைவன் உருவகம் மிகப் பொருத்தமாக அதன் காரணங்களோடு பண்டைய புராண காரணங்களான படைத்தல் அழித்தல் ஆக்கம் போன்ற கருதுகொள்களை அடிப்படையாகக் கொண்டு தானே உருவாகியிருக்கிறது. இந்த இறைவனை அஃறிணையில் தான் சொல்ல முடியும்.


எம்.தண்டபாணி


ஈசல் - சிறுகதை

கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பெண் மருத்துவர் பணிபுரிந்தார். அழுக்காகவும் பரிதாபமாகவும் இருக்கும் சிறுவர்களான எங்களைப் பார்க்கும் அரசாங்க மருத்துவர்கள் எரிச்சலும் இரக்கமும் கொள்வது இயல்பு. ஆனால் இந்தப் பெண் எங்களை அருகில் அழைத்து வைத்துப் பேசினார். 


'மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடணும் சரியா?'


'தினமும் தலைக்கு ஊத்திக்கணும் சரியா?'


'தலைக்கு எண்ணெய் வைக்கணும் சரியா?'


அவருடைய ஒவ்வொரு 'சரியா'வும் அவ்வளவு அழகாக இருக்கும். பொதுவாக நான் பிறந்த ஊரான திருவாரூரில் 'ச'வை 'ஸ' போலத்தான் உச்சரிப்போம். அதனாலோ என்னவோ அவர் அழுத்தந்திருத்தமாக 'ச'(Cha) உச்சரிப்பது எனக்குப் பிடித்துப்போனது. இளைஞனாகிவிட்ட பிறகு அந்த உச்சரிப்பில் தொனிக்கும் கொஞ்சலும் வாஞ்சையும் மனநிம்மதியைக் கெடுப்பதாகிவிட்டன. அதனாலோ என்னவோ எங்கள் நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவுசார் செயலிக்கு ChattAI என்று பெயரிட்டேன். செயலியின் சின்னமாகவும் ஒரு கோட்டோவியம் போன்ற சட்டைதான் இருந்தது.


செயலி உருவாக்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் தரவிறக்கம் செய்திருந்தனர். ஆறு வருட உழைப்பும் பிரத்யேகமான மொழியில் எங்கள் செயலி அளிக்கும் பதில்களும் பயனர்களை வேறு பக்கம் நகரவிடாமல் செய்திருந்தது. தொடக்கத்திலேயே இருபது மொழிகளில் எங்கள் செயலி மிகச் சரளமாக இயங்கியது. எண்பது மொழிகளில் அடிப்படையான கேள்விகளுக்கு பதில் அளித்தது. ஒரு தேடல் பொறியாகவே முதலில் எங்கள் செயலி செயல்பட்டது. செயலியை வெளியிட்ட முதல் மூன்று மாதங்கள் இருபது பேர் கொண்ட எங்கள் குழுவில் யாருமே உறங்கவில்லை. எந்தெந்த இடங்களில் செயலி தடுமாறுகிறது என்னென்ன மாதிரியான கேள்விகள் வருகின்றன அதற்கு எப்படிப்பட்ட பதில்களை செயலி தருகிறது என்று தொடர்ந்து கண்காணித்தோம். இணையத்தை செயலி தேடும் முறையை மேம்படுத்தினோம். மூன்று மாதங்களுக்குப் பிறகு பயனர்கள் திருப்தி கொள்ளும்படியான தரவுகளை செயலி தரத் தொடங்கியது. ஆறாவது மாதத்தில் இருந்து புகழ்பெறத் தொடங்கியது.‌நாங்களும் மெல்ல மெல்ல பணம் ஈட்டினோம்.


பணம் ஈட்டும் மும்முரத்தில் நாங்கள் வைத்திருந்த இரண்டு கொள்கைகளை நாங்களே மீறினோம். அதுதான் இந்த வாக்குமூலம்வரை எங்களைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.


1.பயனர்களுடைய மின்னஞ்சல், அலைபேசி எண் போன்ற தரவுகளை அடையாளத்துக்காவன்றி வேறு எதற்காகவும் பயன்படுத்தக்கூடாது.


2.செயலிக்கு கட்டணம் விதிக்கக்கூடாது.


முதல் கொள்கையை மீறுவதற்கு நாங்கள் சொல்லிக் கொண்ட சாக்கினை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.


'பயனர்களின் உளநிலை பற்றிய புரிதல் இருந்தால் அவர்களுக்கு துல்லியமான பதிலினைத் தர முடியும்'


'பயனர்கள் எவற்றையெல்லாம் ஆறுமாதமாக தேடுகிறார்கள் என்று தெரிந்தால் இன்னுமதிகமாக அவர்களுக்கு உதவ முடியும்.'


'பயனர்களுடைய கலாச்சார பின்புலம் அவர்களுடைய இயல்பு குறித்த ஒரு பார்வையை அளிக்கும்.'


'அவர்கள் வாழும் நிலம் சந்தித்த போர்கள் அவர்களின் நம்பிக்கைகள் அவர்களுடைய விருப்பு வெறுப்புகள் தொன்மங்கள் ஐதீகங்கள் எல்லாம் அவர்களை இன்னும் புரிந்து கொள்ள உதவும்'


ஒரு மனிதனைத் தோண்டித் தோண்டிச் செல்ல என்னென்ன தரவுகள் தேவைப்படுமோ அது அனைத்தையும் நாங்கள் பெறத் தொடங்கினோம். மனிதர்கள் தங்களை வெளிப்படுத்துவதில் அதிதீவிர ஈடுபாடு காட்டியது எங்கள் வேலையை எளிதாக்கியது. நாட்டுப்புறவியல் மானுடவியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கு பணம் செலவழிக்கத் தொடங்கினோம்.


இதற்கெல்லாம் ஏது பணம் என்று கேட்கிறீர்களா?


எங்களுடைய இரண்டாவது கொள்கை அதுதானே? எங்கள் செயலிக்கு இருபது நிலைகளாக கட்டணத்தை நிர்ணயித்தோம். ஒவ்வொரு நிலைக்கும் பத்து மடங்கு கட்டணம் கூடுதல். செயலியை அறிமுகப்படுத்திய இரண்டாவது வருடத்தில் இந்த மாற்றத்தை புகுத்தியது நான்தான். எங்கள் குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். அதில் இருவர் பதவி விலகினர். ஆனால் என் நிலைப்பாடு தவறாகிவிடவில்லை. உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள் பலர் எங்களுடைய கட்டணச் சேவைகளுக்குள் வரத் தொடங்கினர். நாங்களே நினைத்துப் பார்த்திராத அளவு 2030ஆம் ஆண்டு எங்களுடைய செயலி வளர்ந்திருந்தது.


அன்று உலகில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனையும் ஏறத்தாழ அவர்கள் வாழ்நாள் முழுவதும் அருகிலிருந்த கண்டது போன்ற துல்லியத்துடன் எங்களால் அறிய முடிந்தது. இயல்பாக நான் 'சட்டை'யின் தலைமை நிர்வாகியானேன். பத்து வருடங்கள் முடிந்தபோது என்னுடன் எங்கள் குழுவில் பணியாற்றிய யாருமே இல்லை. சட்டையின் Source code மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போனது. அதன் சிக்கல் பெருகப் பெருக அதன் துல்லியமும் அதிகரித்தது. சட்டையின் துல்லியத்தை அறிந்த சட்டையைவிட பெரிய நிறுவனங்களாக அன்றிருந்த ஆறு நிறுவனங்கள் சட்டையை வாங்க முனைந்தன. உலகின் அத்தனை நாடுகளின் அரசியல் கட்சிகளும் சட்டையின் தரவுகளை தங்களின் அதிகாரத்தை உறுதி செய்து கொள்வதற்காக பயன்படுத்த முயன்றன. நான் உறுதியாக நின்றேன். சட்டையின் கட்டணமில்லாப் பயனர்களின் ஒரு சிறு தரவினைக்கூட வெளிய தர மறுத்தேன். சட்டை முழுக்க முழுக்க பயனர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே அவர்களுடைய தரவினைப் பயன்படுத்தியது. எங்கள் செயலில் விளம்பரம் என எதுவுமே கிடையாது. இலவசமாக கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட பேராசிரியர்கள் பலர் சட்டையின் மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேரடியாக பாடமெடுத்தனர்.


சட்டை ஒரு 'புரட்சிகரமான' செயலி என்று நம்ப வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தேன். மக்களின் ஆதரவு மட்டுமே சட்டையின் தரவுகளை வேறு நிறுவனங்களோ அரசியல் கட்சிகளோ அபகரிப்பதில் இருந்து தடுத்தது. எங்களுடைய நிறுவனம் இணையப் பயன்பாடு சார்ந்த ஏகப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்தது. பல்வேறு கல்வியாளர்கள் சட்டையின் செயல்முறை குறித்து ஆய்வு செய்தனர். எதிர்காலத்திற்கான நம்பிக்கை என்று என்னை விதந்தோதும் நூல்கள் வெளிவந்தன. இவற்றில் பத்து சதவீதம் மட்டுமே எங்கள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒன்று தொட்டு ஒன்றென மிக இயல்பாக நானொரு 'புரட்சிக்காரனின்' பிம்பத்தை அடைந்தேன். 2035ல் என்னைப் பற்றி வெளியிடப்பட்ட ஆவணப்படம் ஒரே மாதத்தில் நானூறு கோடி பார்வைகளைப் பெற்றது. ஒரு எளிய கிராமத்தில் பிறந்து அரசாங்கப் பள்ளியில் பயின்று நாற்பது வயதில் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவனாக நான் மாறியிருந்தேன். அது பெரும் முன்னுதாரணமாக மாறியது. இந்தியாவில் பிறந்த ஒருவன் மென்பொருள் துறையில் இவ்வளவு பெரிய பாய்ச்சலை அடைந்திருப்பதை உலகமே வியந்தது. என் நாற்பத்தி இரண்டாவது வயதில் நான் ஐநாவில் உரையாற்றினேன். ஐநாவில் ஆற்றுப்படும் பொறுப்புணர்வு மிகுந்ததாக தோற்றந்தரும் ப்ளாஸ்டிக் தன்மை கொண்ட அதே வெற்றுப் பேச்சு. அன்றைய தினம் போல என் வாழ்வில் நான் இன்னொரு தினத்தில் என்னைப் போலியாக உணர்ந்ததில்லை. அங்கு அந்த உரையை நேரில் கேட்கும் யாருக்கும் என் பேச்சு பொருட்டல்ல. ஏன் எனக்குமே கூட அதுவொரு பொருட்டல்ல.‌ ஆனால் அத்தனை பேரும் பொறுப்புடன் கவனிப்பதாக அவ்வளவு துல்லியமாக நடித்தனர் , நான் பொறுப்புடன் பேசுவதாக நடித்தது போலவே.


'இன்று தகவல்தான் ஆயுதம். தகவலே அறமும்கூட. ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் எளிதாக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்‌. எனக்கு அடிப்படை கல்வி அளித்த என் நாட்டிற்கும் என்னை பாதுகாப்பாக வாழச் செய்யும் இவ்வுலகுக்கும் ஏதுமே செய்யாமல் நான் மறித்துப் போனால் இறக்கும் சமயத்தில் என்னை நான் நன்றி கெட்டவனாக உணர்வேன். நான் மகிழ்ச்சியுடன் சாக விரும்புகிறேன். என் மகிழ்ச்சி உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரின் மகிழ்ச்சியுடன் பிணைந்ததாக இருக்கிறது.  ஒரு பத்து வயது இந்தியச் சிறுமி என் செயலியிடம் 'எங்கள் ஊரில் எப்போது‌ மழை வரும்' என்று கேட்கிறாள். நான் அவளுக்கு எந்திரத்தனமான பதிலை அளிக்க முடியுமா? அந்தப் பிஞ்சுக்கு நான் அதீத நம்பிக்கை தரவிரும்பவில்லை. அதேநேரம் மதிய வெயில் போன்ற உண்மையையும் நான் அவளுக்கு தரத் தயங்குகிறேன். நான் அவளிடம் உண்மையைத்தான் சொல்லப் போகிறேன். ஆனால் அது அவள் தோளில் கைபோட்டுக் கொண்டு சொல்வதாக இருக்க வேண்டும். எங்கள் செயலியை உண்மையான ஆதூரத்துடன் நடந்து கொள்ளச் செய்யத்தான் நாங்கள் தொடர்ந்து முயல்கிறோம். நம் உள்ளே பிரியமான ஒரு பகுதி இருக்கிறதல்லவா? ஒரு வாடிக்கையாளரிடம் விற்பனை பிரதிநிதி காட்டும் இன்முகத்தை நான் சொல்லவில்லை. தூங்கும் குழந்தையை ரசிக்கும் தகப்பனின் பிரியம். அந்தப் பிரியத்தையே சட்டைக்கு பயிற்றுவிக்கிறோம். சட்டை ஏராளமான தற்கொலைகளை தடுத்திருக்கிறது. காதல் தோல்வியில் அழுகிறவர்கள் வேலையை இழந்து தவிப்பவர்கள் நோயில் வாடுகிறவர்கள் உற்றோரின் மரணத்தை எதிர்கொண்டவர்கள் என்று சட்டையைத் தேடி வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. ஒருவகையில் சட்டை ஒவ்வொரு மனிதரின் மீதும் நான் கொண்டுள்ள கனிவின் அக்கறையின் பொறுப்பின் புறவடிவம். என்னுடைய அக்கறை என் ஆணவத்திலிருந்து உருவாகவில்லை. இவ்வுலகம் எனக்கு வழங்கியவற்றையே நான் அதற்கு திருப்பி அளிக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் இன்னொருவர் மீது கொண்டுள்ள அல்லது கொள்ள விரும்புகிற பிரியத்தின் ஊடகமாகவே சட்டை திகழ்கிறது. அறத்தை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம். நன்றி'


இதெல்லாம் பல வருடத்துக்கு முந்தைய கதை. ஐ.நாவிற்கு சென்று வந்த பிறகுதான் நான் நாற்பது வயதைத் தொட்டுவிட்டேன் என்பது எனக்கு உரைத்தது. யாருமே எனக்கு நெருக்கமானவர்களாக இல்லை. இருபது வருடங்களை சட்டையுடன் மட்டுமே கழித்திருக்கிறேன். சட்டையின் பிரம்மாண்டம் என்னை அச்சுறுத்தியது. சட்டை மீது உலக அளவில் தொடுக்கப்படும் வழக்குகளை கையாள்வதற்கு என்று ஒரு சர்வதேச வழக்கறிஞர் குழுமமே உள்ளது. அதன் தலைவரான நிலோஃபர் சட்டைக்காக நடைபெற்று முடிந்த வழக்குகள் பற்றி ஒரு நூல் எழுதினார். மூன்று பாகங்கள் கொண்ட சுவாரஸ்யமான அந்த நூல் இன்றுவரை அதிகம் விற்கும் புத்தகங்களில் ஒன்று. பல்வேறு சட்டப் பல்கலைக்கழகங்களில் அந்நூலின் பகுதிகள் பாடமாகவே வைக்கப்பட்டுள்ளன. சட்டையின் ப்ரோக்ராமர்கள் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்து விலகி வந்தவர்கள். கணக்குத் தணிக்கையாளர் குழு, ஊழியர் நலக்குழு, CSR குழு என சட்டையின் இயங்குமுறை என்னால் முழுமையாக புரிந்து கொள்ளக்கூட முடியாத அளவு சிக்கலாகிவிட்டது. சட்டையின் தனித்தனி நிர்வாக அமைப்புகளின் தலைவர்களை மாதம் ஒருமுறை சந்திப்பதோடு தலைமை நிர்வாகியாக என் வேலை முடிந்தது. மீதி நேரமெல்லாம் நான் முழுக்க முழுக்க சட்டையின் பயனர்களுடன்தான் இருந்தேன். இருபத்திநான்கு மணிநேரமும் பயனர்களுடைய கேள்விகளை திரைக்கு இந்தப் பக்கம் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தேன்.


ஐநாவில் பேசிய ஆண்டில் நிலோஃபர் எனக்கொரு ரோபோவை பிறந்தநாள் பரிசாக அளித்தாள். நான் சட்டைக்காக பயன்படுத்தும் சூப்பர் கம்ப்யூட்டரின் ரோபோ வடிவம். சற்றே வித்தியாசமானது. அந்த சூப்பர் கம்ப்யூட்டரை என் உடலிலே அணிந்து கொள்ள முடியும்! என் வேலை இன்னுமே எளிதானது. மேலும் சட்டையை நாங்கள் தொடங்கியபோது என்னுடன் இருந்த யாருமே அந்த சமயத்தில் என்னுடன் இல்லை.


******


இருபது வருடங்களாக உலகின் எல்லா வகையான மனிதர்களின் கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். என்னுடைய நெடுநாள் பயனர்களின் உள்ளங்களை கண்முன் தெரியும் உடலென என்னால் பார்க்க முடிந்தது. மனித மனத்தின் சாத்தியங்களில் நான் சலிப்புறத் தொடங்கினேன். உலகின் மிகச்சிறந்த மூளைகளைத் தவிர பிற அனைவருமே எனக்குப் புரியத் தொடங்கினர். மனிதர்கள் தங்களுடைய படைப்புத் திறனை மெல்ல இழந்து கொண்டே வந்தனர். ஒருவருடன் இன்னொருவருக்கு வாழக்கூடத் தெரியாமலாயிற்று. ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட செயற்கை உணர்வுகளை மீண்டும் மீண்டும் நடித்தனர்.‌இன்னொரு மனிதரின் சுயம் வெளிப்பட்டால் அவர்களிடமிருந்து அஞ்சி ஓடினர். மனிதர்கள் சேவை நிறுவனங்களுக்குள் வாழவே ஆசைப்பட்டனர். யாராலும் எதையும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஐம்பது வருடங்கள் முன் உலக மக்கள் தொகையில் முக்கால்வாசிப்பேரின் ஏக்கமாக தொலைக்காட்சி இருந்தது. இன்று பத்து நொடிகளுக்கு மேல் மனிதர்களால் காணொளிகளைக்கூட பார்க்க முடியவில்லை. மனிதர்களின் கவனமின்மை எல்லாத் துறைகளிலும் பிரதிபலித்தது. அரசியலில் வலுவான தலைவர்கள் உருவாக முடியவில்லை.‌பெரும் கலைஞர்கள் எந்தத் துறையிலும் இல்லை. கலைஞர்களே கலை என்பது மக்களை சற்று மேன்மைப்படுத்துவதும் சந்தோஷப்படுத்துவம்தான் என்று நம்பத் தொடங்கினர். ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட மனிதர்களின் வசதியை மேற்கொண்டு பெருக்குவது எப்படி என்றும் அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது எப்படி என்றும்தான் யோசித்தன. நான் கடுமையான சலிப்புக்கு ஆட்பட்டேன். முதியவர்களை பருவகால மாற்றங்கள் ஆச்சரியப்படுத்தாது. அவர்கள் நிறைய மாற்றங்களை பார்த்திருப்பார்கள். நானும் அப்படித்தான் ஆகிப்போனேன். மனிதர்களின் மனம்  ஒன்று போலவே திரும்பத் திரும்ப நடித்தது. தனிமனிதனுக்குள் உற்சாகமும் சலிப்பும் மாறி மாறித் தோன்றுவது போலத்தான் மொத்த சமூகமும். மனிதன் இவ்வளவு குறைவான சாத்தியமுள்ளவனாக இருப்பது என்னை வெறுப்படையச் செய்தது. நான் இந்த விளையாட்டினை சற்று சுவாரஸ்யப்படுத்த முனைந்தேன்.


*****




2047ல் காந்தி தூக்கிட்டுக் கொள்ளவில்லை சுட்டுக் கொல்லப்பட்டார் என்றொரு வதந்தி பரவியபோதுதான் எங்களுடைய 'உண்மை கண்டறியும் குழு' வேலையில் இறங்கியது. ஆறு வருடங்கள் நாங்கள் உலகின் எந்த நாட்டுடைய அரசாங்கத்துடன் தொடர்பில்லாதவர்களாக தனித்தனியாகவே இயங்கினோம். இந்தியாவும் சீனாவும் இணைந்து உருவாக்கியிருந்த ஆசிய நாடுகளின் கூட்டமைப்புதான் முதன்முதலில் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்தது. 2056ல் ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் எங்களைச் சந்தித்தனர். சட்டை எங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என்று எதிர்பார்த்தோம். அப்படி ஏதும் நடக்கவில்லை. 


எங்கள் குழுவில் உள்ள அனைவருமே 2010க்குப் பிறகு பிறந்தவர்கள். நாங்கள் வளரிளம் பருவத்தை அடைந்தபோதுதான் சட்டையும் வெளியானது. அன்றைய சூழலில் இணைய ஊடகம் என்பதே ஒரு மாபெரும் கவனச்சிதறல் என்ற புரிதல்தான் பொதுவில் இருந்தது. பொதுவெளியில் சிகரெட் பிடிப்பது போலவே பொதுவெளியில் அலைபேசி பயன்படுத்துவதும் பார்க்கப்பட்டது. பத்து நொடிகளுக்கு மேல் யாராலும் எதையும் கவனம் கொடுத்துப் பார்க்க இயலவில்லை. நிரூபணவாத அறிவியல் உருவாக்கியற்றில் மட்டுமே ஸ்திரத்தன்மை எஞ்சி இருந்தது. ஒட்டுமொத்தமாக மனித இனத்தின் நினைவுத்திறன் குறைந்து கொண்டே வந்தது. உலகின் பல நாடுகள் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்க முயன்றன. ஆனால் மாணவர்களை பேனாவை எழுதப் பயன்படுத்தச் சொல்வது பழமைவாதம் என்று அந்த முயற்சிகளுக்கு மனித உரிமை அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.‌ யாருக்கும் கடந்த காலமே இல்லை. மனிதர்களிடம் கவனமின்மை பெருகப் பெருக கடவுளின் தேவையும் அதிகமானது. கடவுள் நம்பிக்கை அரசாங்கங்களை இன்னும் ஸ்திரத்தன்மை உடையதாக ஆக்கியது. அரசாங்கம் என்பது புனித அதிகாரம் என்றும் அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்றும் மக்கள் நம்பத் தொடங்கினர். இந்தச் சூழலில்தான் சட்டை வளரத் தொடங்கியது. இந்தச் சூழலுடன் சட்டை தன்னை எவ்வகையிலும் பொருத்திக் கொள்ளாதது கொஞ்சமாவது புத்தியுடன் செயல்பட்ட இளைஞர்களிடம் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. இன்று சட்டைக்கு எதிராக இந்த அறிக்கையை அளிக்கும் நாங்கள் அனைவரும் சட்டை 2040ல் நடத்திய ஒரு தொழில்நுட்ப பயிலரங்கில் சந்தித்துக் கொண்டவர்கள்தான்!


பயிலரங்கின் கடைசி நாள் சட்டையின் நிறுவனர் வந்திருந்தார். அவர் நிறுவனர் அணிந்திருந்த கோட் வித்தியாசமாக இருந்தது. அது என்னவென்று கேட்டபோது அவர் 'சட்டை' என்று சொல்லிச் சிரித்தார். சட்டை என்பது தமிழ் என்ற மொழியில் மேலுடையைக் குறிக்கும் சொல்லும்கூட. அது தெரிந்த எங்கள் குழு உறுப்பினர்கள் சிலர் சிரித்தனர். அவருடைய கோட் தான் அவருடைய சூப்பர் கம்ப்யூட்டர். அவரைப் பார்த்தபோது ஏதோவொரு உள்ளுணர்வால் உந்தப்பட்டு அதிருப்தி அடைந்த சிலர் ஒன்றிணைந்து பேசினோம். நாங்கள் சட்டையை கவனிக்கத் தொடங்கினோம்.


*******


நினைவு மனிதர்களுக்குப் பெரும்சுமை.‌ மனிதர்களின் பல்வேறு உளவியல் கோளாறுகள் நினைவில்தான் உருவாகின்றன. இன்றைய விஞ்ஞானம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு உலகை நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்துவிட்டது. அணு ஆயுதங்கள் பயன்பாட்டுக்கே வரப்போவதில்லை. ஒரு தேசம் இன்னொரு தேசத்தின் மீது போர் தொடுக்கும் என்ற சிறுபிள்ளைத்தனமான பயங்களை நாம் கடந்துவிட்டோம். உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக நாம் வலுவான முன்னெடுப்புகளைச் செய்கிறோம். அப்படியிருக்க உண்மையில் மனிதர்களைத் துன்புறுத்துவது எது? அவர்களுடைய நினைவுகள்தான். ஒவ்வொரு மனிதரின் நினைவும் அவரை அவருடைய கடந்த காலத்துடன் பிணைக்கிறது. அது அவருடைய தனி வாழ்க்கையை வரலாற்றுடன் இணைப்பதுதான். தனிவாழ்க்கை வரலாற்றுடன் இணைப்பது மனிதர்களை துன்புறுத்துகிறது. ஒவ்வொரு மனிதரும் அவருடைய மதத்திற்கு இனத்திற்கு மொழிக்கு பொறுப்பாகிறார். நாட்டுக்குப் பொறுப்பாகிறார். ஆகவே இன்னொரு நாட்டுக்கு எதிரியும் ஆகிறார். ஒரு கருத்திற்கு ஆதரவாகிறார். இன்னொன்றிற்கு எதிரியாகிறார். லட்சிய நிலைகளில் நம்பிக்கை கொள்கிறார். பிறகு முடிவற்ற துன்பம்தான்.


சட்டை இந்தச் சிக்கலை எதிர்கொள்ள முனைந்தது. நினைவுகளின் பிரச்சினை தொடங்குமிடம் மனிதர்கள் தங்களுக்கு நிரந்தரமான வரலாறு இருந்தது என்று நம்புவதில் தொடங்குகிறது. வரலாற்றின் வழியாக தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பீடுகளை பின்பற்றவும் பாதுகாக்கவும் வேண்டும் என்று மனிதர்கள் நம்புகிறார்கள். சாதாரண உறவுச்சிக்கல்களில் கூட கடந்த காலத்தின் வரலாற்றின் தலையீடு இல்லாமல் இருப்பதில்லை. அன்றாடத்தை சுமையற்று வாழ்வதற்கு வரலாற்றின் மீதான இந்த நம்பிக்கையை போக்க வேண்டும் என்று நினைத்தேன்.


*****


2040வாக்கில் சட்டை பல நாடுகளில் அதிகாரப்பூர்வமான தகவல் மையமாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் வரலாறு மொழி போன்ற துறைகளில் கற்பவர்கள் குறைந்து போயிருந்தார்கள். உலகமே தொழில்நுட்பம் தத்துவம் பொருளாதாரம் போன்ற துறைகளை நோக்கியே ஓடியது. தத்துவமுமே கூட பணக்காரர்கள் ஆடும் ஒரு சிக்கலான மூளை விளையாட்டு என்ற நிலைக்குப் போய்விட்டது. மனிதர்களின் நினைவையும் பிரக்ஞையையும் கட்டமைக்கும் துறைகளான வரலாறு இலக்கியம் போன்றவை சீந்துவார் இல்லாமலாயின. இலக்கிய வாசிப்பின் வழியான ஒரு மனிதர் அடையும் அகத்தூண்டலை சில சாதனங்கள் வழியே பெற முடியும் என்ற வகையான ஆய்வுகள் செல்வாக்கு பெறத் தொடங்கின.‌ ஏறத்தாழ இந்த சமயத்தில் உடலுறவிலும் மனிதர்கள் ஆர்வமிழந்து போயிருந்தனர். ஹோலோகிராம் வழியாக உலகில் யாரையும் யாரும் புணர முடிந்தது. வாசனை வியர்வை எச்சில் போன்றவற்றை அனுபவிப்பதற்கான தொழில்நுட்பங்களும் வளர்ந்திருந்தன. 2030வாக்கில் குழந்தை வளர்ப்பு உலகம் முழுக்க பெரிய பிரச்சினையாக தலைதூக்கியபோது பெரும் நிறுவனங்கள் குழந்தை வளர்ப்பில் உள்ள வருமானத்தை உணர்ந்து பல்வேறு செயல்திட்டங்கள் வழியாக பெற்றோர் அவசியமற்ற குழந்தை வளர்ப்பு (no parent parenting) முறைகளை வளர்த்தெடுத்தனர். மனிதர்கள் தங்களுடைய அன்றாடங்களை நகர்த்துவதற்கு அவர்களுக்கு பழைய காலங்கள் தேவை இல்லாமலானது. மனிதருள் தோன்றும் உணர்ச்சிப் பெருக்குகளின் தன்மையை சட்டை மிகத் துல்லியமாக கணித்து அப்பெருக்கினை கையாண்டது. ஹோமியோபதி என்ற மருத்துவமுறையில் நோயின் தன்மையைக் கண்டறிய மருத்துவர் நோயாளியிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்பார். நோயாளியின் படுக்கை அறை பணிச்சூழல் என்று எல்லாமும் அறிந்த பிறகே சிகிச்சை அளிப்பார். சட்டை ஏறத்தாழ அப்படித்தான் இயங்கியது. ஒரு பெண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பிருந்தால் அவளுடைய மொத்த சூழலையும் சட்டையால் கணிக்க முடிந்தது. ஏனெனில் அவளைச் சூழ்ந்து இருப்பவர்களின் மன அமைப்பும் சட்டைக்குத் தெரியும். ஆகவே அகச்சிக்கல்களுக்கு மிகத் துல்லியமான தீர்வினை அளித்தது . ஆன்மீக குருமார்கள் பலரும் சட்டையால் செல்வாக்கு இழந்தனர். 


இந்த மாற்றங்களை நாங்கள் கவனித்தே வந்திருந்தோம். மனிதர்களிடம் இயல்பான நட்புறவு  இல்லாமலானது. எல்லா உறவுகளும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டன. எல்லோருக்கும் உலகை பாதுகாப்பது பற்றிய அக்கறை ஏற்பட்டது. ஆனால் அது எந்திரத்தனமானதாக இருந்தது. சக மனிதர்களை ஒருவகையான தொந்தரவு என்றே எல்லோரும் உணரத் தொடங்கினர். சட்டை மிகச் சரியாக இந்த இடத்தை பயன்படுத்திக் கொண்டது. ஏதோ உயரிய கொள்கை போல மனிதர்களை நினைவுச்சுமையிலிருந்து வெளியேற்றுவதாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. கடந்த காலத்துடன் நமக்கிருக்கும் உறவு கைமாற்றப்பட்ட நினைவுகள் வழியாகவே தொடர்கிறது. வரலாறு என்று நாம் சொல்வது கடந்தகால ஆவணங்களைச் சார்ந்திருக்கிறது. சட்டை கடந்த காலத்தின் அடிப்படை ஆவணங்களில் மாற்றத்தை உண்டாக்கியது.


ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர் என்பவர் யூதர்களைக் கொன்றார் என்றொரு தகவல் பரவியது. இந்தியாவில் வாழ்ந்த காந்தி என்பவர் மக்களை சாத்வீக போராட்டத்துக்கு தயார்படுத்தினார் என்றொரு கூட்டம் கிளம்பி அதுவொரு தனிமதமாக வளரத் தொடங்கியது. காந்தி தூக்கிட்டுக் கொண்டார் என்றும் இறைவனுடன் ஐக்கியமானார் என்றும் இருவேறு கருத்துகள் நிலவிய சூழலில் அவர் அவருடைய தேசத்தைச் சேர்ந்த ஒருவனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வதந்தி பரவியபோதுதான் அது வதந்தியா உண்மையா என்பதைக் கண்டறிய நாங்கள் வேலையில் இறங்கினோம்.


சட்டை மிக நுணுக்கமாக தகவல்களை மாற்றி அமைத்திருக்கிறது. சட்டை தொடங்கப்பட்ட பத்தாண்டுகளுக்குள்ளாகவே உலகின் முக்கியமான இணைய சேவை நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்டது.‌உண்மையில் சட்டை இணைய சேவை நிறுவனங்களுக்குத்தான் அதிகமாகத் தேவைப்பட்டது. உணவு விநியோக செயலிகள் தொடங்கி உளவியல் ஆலோசனைச் செயலிகள், கருத்தரிப்பு கருக்கலைப்பு சேவை செயலிகள், குழந்தை வளர்ப்புச் செயலிகள், பொருளாதார ஆலோசனைச் செயலிகள், போர் தளவாட விற்பனைச் செயலிகள், நிதி மேலாண்மைச் செயலிகள் என்று சட்டையின் இணைவு எல்லா தளங்களிலும் நிகழ்ந்தது. 2040க்குப் பிறகு அச்சு நூல்களை கூடுமானவரை மென்பிரதிகளாக்கும் வேலை மும்முரமடைந்தது. நூல்களை சுலபமாக எரித்து அழிப்பதன் வழியாக பூமியில் நிறைய இடத்தை மிச்சப்படுத்த முடியும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு அதற்கான வேலைகள் துரிதப்பட்டன. இருபத்தோராம் நூற்றாண்டு முதல் ஐம்பது வருடங்களை கடந்திருந்தபோது இருபதாம் நூற்றாண்டு சட்டையின் வசம் வந்தது.


ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய வரலாறுகூட குழப்பம் நிறைந்ததாக மாறியது. மென்பிரதிகளில் சட்டையினால் பல்வேறு மாற்றங்களைச் செய்ய முடிந்தது.‌ ஒவ்வொரு மனிதரும் தனக்கு விருப்பமான வரலாறு எதுவோ அதுவே உண்மை வரலாறு என்று நம்பினர். மனிதர்களின் பெரும்பாலான மூதாதையர்கள் பெருவீரர்களாக மாறினர்.‌ நாடாண்டனர்.‌ பெண்கள் தங்களுக்கென ஒரு தாய்வழி வரலாற்றை உருவாக்கினர். வரலாற்றுக் காலம் தூரம் குறைந்ததாக மாறியது. மனிதர்கள் அன்றன்றைய தினத்தில் ஈசல் போல வாழத் தொடங்கினர்.


ஏதோவொரு வகையில் நினைவுகளை தக்க வைத்தவர்களுக்கும் அவர்களால் ஈசல் என்ற அழைக்கப்பட்ட வெகுமக்களுக்கும் இடையே மனஸ்தாபங்கள் மூண்டன. அது அரசியலில் பிரதிபலித்தது. உலகின் பல்வேறு நாடுகளின் அதிகார மையங்களை ஈசல் மனிதர்கள் கைப்பற்றினர். 2060ஆம் ஆண்டு முதல் சட்டையின் நிறுவனரை யாருமே பார்க்கவில்லை.


இன்று ஐநாவின் முன்பு இந்த அறிக்கையை சமர்ப்பிப்பது கூட பயனற்ற செயல்தான். ஐநாவிற்கு இன்று எந்த அதிகாரமும் இல்லை.‌ 2025ல் இந்தியாவின் பிரதமராக இருந்த நரேந்திர மோடி திருமணமாகாதவர் என்று இன்றைய ஈசல் அரசுகளிடம் சொன்னால் அது மனித குல விரோதக் கருத்தாகக் கருதப்படும்.‌ எங்களுடைய நினைவின் மீது எங்களுக்கு சந்தேகமில்லை. நாங்கள் எல்லோரும் இப்போது அறுபது வயதை நெருங்குகிறோம். எங்கள் குழுவில் பலர் மன அழுத்தத்தில் இறந்துவிட்டனர். உண்மை வெளிவர ஒரேவழி சட்டையின் மென்பொருள் மட்டும்தான்.


அந்த மென்பொருளில் அது மாற்றியமைத்த தகவல்களின் பெருந்திரட்டு உள்ளது. அதுதான் எது உண்மை என்று நம்மிடம் சொல்ல முடியும். ஆனால் அதை இன்று யாராலும் அணுக முடியாது. உலகிலேயே மிகுந்த பாதுகாப்பு நிறைந்த ஒரு கட்டிடத்தில் சட்டை உள்ளது. அந்த சட்டையை அணிந்து கொண்டு அதன் நிறுவனர் அமர்ந்திருக்கிறார். இறைவன் அவர் ஆடையுடன் அங்கு உட்கார்ந்திருக்கிறார்.


முற்றும்.

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024

ரண்டு மாதங்களுக்கு முன்பு பாவண்ணன் இப்படி ஒரு இலக்கியவிழா நடைபெறுவதாகச் சொல்லி என்னைக் கலந்து கொள்ள அழைத்தபோது நான் பல வருடங்களாக இந்த இலக்கியவிழா பெங்களூருவில் நடப்பதாகவே எண்ணி இருந்தேன்.‌ பேஸ்புக்கில் நடந்த 'என்னை அழைக்கவில்லை உன்னை அழைக்கவில்லை' சர்ச்சை வந்தபோது கூட இதற்கு முன் இப்படியொரு சர்ச்சை வந்ததிராதது எனக்கு உரைக்கவில்லை. அப்படி எனக்கு உரைக்காமல் போனதில் வியப்பென்றும் ஏதுமில்லை. அப்படி 'உள்ளாழ' சதி நடக்கும் அளவுக்கு எல்லாம் தமிழ் இலக்கியம் 'வொர்த்' இல்லை. 'வொர்த்' என்பதை இங்கு பொருளியல் மதிப்பு என்று புரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழ்ப் புத்தகங்களுக்கு பெரிதாக சந்தை மதிப்பு இல்லாதபோது இவ்வாறு 'சதி' செய்துதான் தன்னுடைய படைப்புகளை முன்னிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆகவே இலக்கிய சர்ச்சைகளில் சொல்லப்படும் சதிக் கோட்பாடுகளில் எனக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை. ஆரம்பத்தில் ஒரு சுவாரஸ்யத்துக்காக இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று அந்த சுவாரஸ்யமும் போய்விட்டது. மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான முறையிடல்கள். கோபங்கள்.‌ 





வெள்ளிக்கிழமையே விழா தொடங்கிவிட்டாலும் சனிக்கிழமை காலையில்தான் என்னால் விழாவுக்குப் போக முடிந்தது. ஆறு நாட்கள் அலுவலகம் செல்ல நேர்வது எனக்கென்னவோ பெரிய வன்முறையாகத் தெரிகிறது. Casual leave எனப்படும் தற்செயல் விடுப்புகளும் என் துறையில் ரொம்பக் குறைவு என்பதால் சனிக்கிழமை ஒருநாள்தான் விடுப்பெடுக்க முடிந்தது. பெங்களூரு சிட்டி ரயில் சந்திப்பில் இறங்கி ஆட்டோ பிடித்துப் போய்விடுவோம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் காலை ஐந்து மணிக்கெல்லாம் ஸ்டேஷனுக்கு வெளியே எனக்காக காத்திருக்கும்  டிரைவர், அவருடைய அலைபேசி எண், காரின் எண் எல்லாவற்றையும் ஆதர்ஷினி அனுப்பி வைத்திருந்தார். ஆதர்ஷினி விழாவுக்கு வரும் எழுத்தாளர்களுக்கு பயணம் மற்றும் தங்குமிட ஒருங்கிணைப்பாளர். ரயில் சற்று முன்னதாகவே சென்று சேர்ந்தது. நான் வெளியே வந்தபோது மெல்லிய சாரல்மழை. எட்டு வருடங்களுக்கு முன் முதல்முறை விஷ்ணுபுரம் விழாவுக்காக கோவையில் சென்று இறங்கியபோதும் இப்படித்தான் மெல்லிய தூரலாக மழை பெய்தது. கற்பனாவாதமெல்லாம் இல்லை. சும்மா சொன்னேன். ஆதர்ஷினி St John's ஆடிட்டோரியத்தில் என்னை வரவேற்று அறையைச் சுட்டினார். சு.வேணுகோபால் அந்த அறையில் இருந்தார். நான் ஆறரை மணிக்கு கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று 'ஹாயாக' உள்ளே நுழைந்தால் அவர் மறுநாள் மாலை நடக்கவிருக்கும் கலந்துரையாடலுக்கு குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு குற்றவுணர்வில் தூக்கம் வரவில்லை. அவரிடம் சற்று நேரம் நான் வாசித்துக் கொண்டிருந்த இப்போது உயிரோடிருக்கிறேன் நாவல் பற்றிச் சொன்னேன். இந்த நாவல்தான் இமையத்தின் சிறந்த நாவலாக எனக்குப்படுகிறது என்றேன். சு.வே நாவல் வாசிப்பு சார்ந்து தன்னுடைய அனுபவங்களைச் சொன்னார். ஏறத்தாழ ஒருமணி நேரம் பேசி இருப்போம். நல்லவேளையாக குளித்து விட்டுக் கிளம்பினோம். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் நின்று விட்டிருந்தது. ஒரு மணிநேரத்திற்குள் அதை சரிசெய்தும்விட்டார்கள். இந்த ஒரேயொரு சிறு பிசகு தவிர வேறெந்தக் குறையும் சொல்ல முடியாதபடி மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு‌. இதற்கு முன் இத்தகைய முழுநாள் இலக்கிய விழாவென நான் கலந்து கொண்டது விஷ்ணுபுரம் விழாவில் மட்டும்தான். மேலும் அங்கு ஒரு சிலர் தவிர்த்து மற்றவர்கள் 'நம்மவர்'களாக இருப்பார்கள். அப்படி 'ஒரே இனமாக' இருப்பதால் நம் படைப்பாளிகள் தங்களை தனித்துவமாகக் காட்டிக் கொள்ள சற்று வேறு மாதிரி நடந்து கொள்கின்றனரோ என்று தோன்றும். ஆனால் பெங்களூருவில் அந்தச் சிக்கல் இல்லை. ஒருவேளை அது கன்னடர்களின் குணமாகக் கூட இருக்கலாம். இரண்டு நாட்களில் சொல்லிவிட முடியாது. இரண்டு நாட்களும் எல்லா இடங்களிலும் நட்பான சூழலே நிலவியது. அதேநேரம் ஒரு சில அரங்குகள் நீங்கலாக மற்ற அனைத்தும் தீவிரமாகவே இருந்தன.


நான் ஒரு விஷயத்தை அவதானித்தேன். கன்னடர்களுக்கு ஒரு Home field advantage' இருப்பதால் அவர்களால் இயல்பாக செறிவாக பேச முடிகிறது. எழுத்து தாண்டியும் தங்களுடைய கலைஞர்களை மிகப்பெருமிதத்துடன் முன் வைக்கின்றனர். ஹிந்துஸ்தானி பாடகர் வெங்கடேஷ் குமார், யக்ஷகான கலைஞர் சிவானந்த ஹெகடே ஆகியோரை போற்றியதையும் கொண்டாடியதையும் அங்கு பார்க்க முடிந்தது. நம்மூரில் சினிமா இசைக்கலைஞர்கள் தாண்டி பொதுச் சமூகம் யாரையாவது பொருட்படுத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை.


அடுத்ததாக மலையாள எழுத்தாளர்கள் இது மாதிரி ஏகப்பட்ட விழாக்களை பார்த்திருப்பதால் ஒரு மாதிரி 'அசால்ட்டாக' கையாளுகின்றனர். ஆனால் அது விழாவில் ஒரு எதிர்மறை பிம்பத்தை மலையாள இலக்கியவாதிகள் மீது உருவாக்கியதாகத் தோன்றியது.


தமிழைப் பொறுத்தவரை பெருமாள் முருகன் வழக்கம்போல அரசியல் சரிநிலையோடு பேசினார். மற்ற அனைவருமே என்ன பேச வேண்டும் எவ்வளவு பேச வேண்டும் என்ற தெளிவுடனேயே வந்திருந்தனர். ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டு சுசித்ரா அவரை எடுத்த ஆங்கில நேர்காணல் வழியாக தமிழுக்கு ஒரு முத்தாய்ப்பு அமைந்தது. இருவருமே இத்தகைய நிகழ்வுகளில் உரையாடியதன் வழியாக மிகச் சரளமாக கலந்துரையாடினர். எந்த அளவுக்கு என்றால் ஒரு கட்டத்தில் சுசித்ராவும் ஜெவும் தமிழில்தான் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று தோன்றுமளவு அவ்வளவு சரளமான அதேநேரம் செறிவான உரையாடலாக அமைந்தது.


தெலுங்குதான் சுவாரஸ்யமான மொழியாக அமைந்தது. தெலுங்கு எழுத்துலகினரிடம் ஒரு ஆவேசம் தெரிகிறது. ஆரம்பத்தில் எனக்கு அது சற்று விசித்திரமாகவே இருந்தது. சின்னவீரபத்ருடு ஒரு நேரடியான கேள்விக்கு சொன்ன பதில் ஏராளமான தரவுகளைக் கொண்டு தன் மொழியை 'பாதுகாக்க' முனைவது போல எனக்குத் தோன்றியது. தென்னிந்திய மொழிகளில் நவீன இலக்கியத்தில் பெரும் சாதனைகள் நிகழாத மொழி தெலுங்கு. அதை அவர்களும் உணரவே செய்கிறார்கள். அதனாலேயே எழுதுதல் மொழிபெயர்த்தல் தங்கள் படைப்புகளை மற்ற தென்னிந்திய மொழிகளில் கொண்டு போய் சேர்த்தல் என்றொரு வேகத்துடன் இருக்கின்றனர். இந்த வேகமும் ஆவேசமும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இந்த 'உணர்ச்சி அலையில்' இருந்து ஒரு பெரும்படைப்பாளி எழுந்துவர முடியாது. ஆகவே தெலுங்கு இலக்கியவாதிகள் தங்களை இன்னும் சற்று சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன்.


நான்,காளி பிரஸாத், கயல், ரம்யா ஆகியோர் ஞாயிறு மாலை மூன்று மணிக்கு மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசினோம். காளி மட்டுறுத்துனராக இருந்தார். அன்றைய தமிழ்ச்சூழல் மொழிப்பெருமிதம் பற்றிய இன்று கேட்டாலும் மொழிப்பெருமிதம் தாண்டி மொழி பற்றி வேறு அக்கறை இல்லாதவர்களுக்கு குத்துவது போல இருக்கும் புதுமைப்பித்தனின் மேற்கோள் ஒன்றிலிருந்து காளி அரங்கினை துவக்கினார். தொடக்ககால மொழிபெயர்ப்புகள் பற்றி நானும் மொழிபெயர்ப்புகள் வழியாக தமிழ்ச்சூழலில் பெறப்பட்டது குறித்து ரம்யாவும் மொழிபெயர்ப்பதில் உள்ள நுட்பங்கள் சவால்கள் குறித்து கயலும் பேசினோம். 



இது மாதிரி விழாக்களில் நான் ஏறத்தாழ 'வேடிக்கை' பார்க்கும் மனநிலையில் தான் இருப்பேன். இந்த இரண்டு நாட்களும் அப்படித்தான். தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமோ என்று சந்தேகம் கொள்ளும் அளவு அவ்வளவு நண்பர்கள். சதீஷ்குமார், சங்கர் கிருஷ்ணா,ஏ.வி.மணிகண்டன்,ஸ்வேதா என்று பெங்களூருவில் வசிக்கும் நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தேன். மனோஜ் பாலசுப்ரமணியனை பார்ப்பவர்கள் எல்லாம் யாத்ரா நீலா என்றே நினைவில் வைத்திருக்கின்றனர். ஒருவேளை நான்தான் மனோஜ் என்று தவறாக கூப்பிடுகிறேனோ என்று சந்தேகமாக இருந்தது. ஒரு இடைவெளியில் ஜெயமோகனிடம் ஆட்டோ ஃபிக்ஷன் பற்றிக் கேட்டேன். மிக விரிவாக அவர் சொன்ன பதிலில் நான் அடுத்து எழுத நினைத்திருக்கும் நாவலுக்கு அவசியமான விஷயங்கள் இருந்தன. பொதுவாக தமிழ் எழுத்துலகு என்று நாம் நம்பும் புனைவிலக்கியத்துக்கு வெளியே விரிந்து கிடக்கும் தமிழ் ஆய்வுத்துறை பற்றிச் சொன்னார். இருபது வருடங்கள் முப்பது வருடங்கள் ஆய்வு செய்துவிட்டு அங்கீகாரமின்றி மடிந்து போகும் முக்கியமான ஆய்வாளர்கள் பற்றிச் சொன்னார். குடவாயில் பாலசுப்ரமணியனின் பெரும்பாலான நூல்களை சமீபத்தில் வாசித்ததால் ஜெயமோகன் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. புனைவிலக்கியம் முக்கியம்தான். வேறெந்த துறையையும்விட புனைவிலக்கியத்தின் வழியாகத்தான் நம்மை நம்மால் சரியாக அடையாளம் காண முடியும். ஆனால் புனைவிலக்கியவாதி ஆழமான விரிவான வாசிப்பு நிறைந்தவனாக இருந்தால் மட்டுமே நம்முடைய சிக்கல்களையே நம்மால் சரியாக எடுத்துரைக்க முடியும் என்று புரிந்து கொண்டேன். மற்றபடி அர்ப்பணிப்பு மிக மிக அவசியம். அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இயங்குவதே போதும் என்று தோன்றுகிறது. இதுமாதிரி மேடை அமையும் சுய பிரஸ்தாபம் பண்ணாமல் இலக்கியம் பற்றிய நம்முடைய புரிதலையும் நம்முடைய முன்னோடிகள் குறித்தும் பேசினால் போதும் என நினைத்தேன்.


அபிலாஷ் சந்திரன் வந்திருந்தார். அவரிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வழக்கம்போல சுனில், காளி,கார்த்திக், ரம்யா,சதீஷ் இவர்களுடனேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அரங்கில் அணிந்து கொள்ள பிரியா எனக்கொரு புதுச்சட்டையும் பேண்ட்டும் எடுத்துக் கொடுத்திருந்தாள். மதியம் மாற்றிக் கொள்ளலாம் என்று டிஷர்ட்டுன் இருந்தேன். இறுதி நேரத்தில் மாற்ற முடியாமல் டிஷர்ட்டுன் கலந்து கொள்ளும்படி ஆனது. அனேகமாக தமிழ் படைப்பாளிகளில் நான் மட்டுமே டிஷர்ட் அணிந்து புக் பிரம்மாவின் முதல் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக வரலாறு எழுதட்டும்!


மாலையில் யக்ஷகானம் முடிந்தபோது ஒரு மாதிரி மனம் கனத்துவிட்டது. இரண்டு நாட்கள் கடந்ததே தெரியவில்லை. புறப்படப் பத்தாகிவிட்டது. ஆதர்ஷினியிடம் நிகழ்வு சார்ந்து சில பரிந்துரைகளை முன்வைத்தேன். அடுத்த ஆண்டில் கவனத்தில் கொள்வதாகச் சொன்னார். 


இத்தகைய விழாக்கள் அளிக்கும் மனநிலையை எனக்கு அவசியமானதாக இருக்கிறது. இங்கு முன் வைக்கப்படும் தீவிரமான கருத்துக்கள் எல்லாம் அவ்வளவு முக்கியமில்லை. இவ்வளவு எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பார்ப்பதும் பேசுவதும் தவறவிடக்கூடாத அனுபவம். இதுபோன்ற இலக்கிய விழாக்களுக்கு இனி அடிக்கடி போகவேண்டும் - அதாவது அலுத்துப்போகும்வரை. புத்தக கண்காட்சிகள் மிகச் சீக்கிரமாகவே அலுத்துவிட்டன - என்று எண்ணி இருக்கிறேன்.


இந்நிகழ்வு குறித்து இந்தக் கட்டுரையில் இவ்வளவு சொல்வது போதும் என நினைக்கிறேன். இன்னும் சிலவற்றைச் சொல்ல வேண்டும். அவற்றை வாய்ப்பிருக்கும்போது தனியே எழுதுகிறேன்.

சாரு நிவேதிதாவை வாசித்தல் 2

எக்ஸைல் நாவலில் இடம்பெறும் சித்தரிப்பு. குணரத்தினம் என்றொருவரை எக்ஸைலின் கதை சொல்லியான உதயா ஃப்ரான்ஸில் சந்திக்கிறான். (சாருவின் பிற நாவல்களைப் போல ஏகப்பட்ட கிளைகளாகப் பிரிந்தாலும் இப்பெருநாவலிலும் கதை சொல்லி ஒருவன்தான்). குணரத்தினம் ஒரு இலங்கைத் தமிழர். இலங்கையில் பேராசிரியராக இருந்தவர். உதயாவிடம் நான்கு நாட்களாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். தகவல்கள் துல்லியமாக அவர் பேச்சில் வந்து விழுகின்றன. உதயாவிற்கு கழிப்பறை செல்லும் நேரம் தவிர பிற நேரங்களில் அந்தப் பேச்சிலிருந்து விடுதலையே கிடைப்பதில்லை. குணரத்தினம் ஒரு மார்க்ஸியரும்கூட. 


அவர் வீட்டில் தங்கி இருக்கும்போது மூன்றாம் நாள் இரவு உதயாவுக்கு ஒரு கனவு வருகிறது. அவன் எங்கோ கடத்திக் கொண்டு போகப்படுகிறான். தான் கொல்லப்படப் போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிகிறது. அதோடு மூத்திரம் வேறு முட்டுகிறது. தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். தான் செய்த எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கிறான். இனி எழுதவே போவதில்லை, உயிரோடு மட்டும் விடுங்கள் அதோடு மூத்திரம் பெய்யவும் அனுமதியுங்கள் என்று கெஞ்சுகிறான். அவனுடைய கால்சராய் நனைந்து போயிருக்கிறது. குணரத்தினத்தின் வீட்டில்தான் தூங்கிக் கொண்டிருக்கிறான்.





சாரு நிவேதிதாவின் படைப்புலகைப் புரிந்து கொள்ள இதுவொரு முக்கியமான கண்ணி என நினைக்கிறேன். குணரத்தினம் வெறுமனே பேசிக் கொண்டிருக்க மட்டுமே செய்கிறார். ஆனால் அந்தப் பேச்சு உதயாவுக்கு பல்வேறு ஞாபகங்களை இழுத்துவந்து உயிரச்சத்தை அவனிடம் உருவாக்கி விடுகிறது. மேம்போக்காகப் பார்க்கும்போது உதயாவின் அச்சம் அர்த்தமற்றதாகத் தோன்றலாம். ஆனால் அதீத தன்னுணர்வு கொண்ட உதயாவிற்கு அந்த சொற்களின் வழியாகவே மிகப்பெரிய வன்முறையை கற்பனை செய்து பார்த்துவிட முடிகிறது. எந்தவொரு வன்முறையும் நிகழ்ந்த பிறகு எல்லாவிதமான சமன்பாடுகளையும் மாற்றி விடுகிறது. அறிவுடைய யாருமே போரைத் தள்ளிப்போடவோ அல்லது தவிர்த்து விடவோதான் விரும்புகின்றனர். ஏனெனில் போர் சமூகத்தில் பல்வேறு காரணிகளால் உருவாக்கி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமைதியை உடைத்து விடுகிறது. எல்லோரும் சந்தேகப்படத்தக்கவர்கள் துரோகிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. உயிரோடு இருப்பது மட்டுமே செய்யக்கூடிய ஒற்றைச் செயலென்று ஆக்கிவிடுகிறது. உதயாவின் அச்சத்தை இந்தப் பின்னணியில் வைத்தே நான் புரிந்து கொள்கிறேன். அதுவொரு தனிமனிதனின் சுயநலமான அச்சமல்ல. மொத்த சமூகமும் இரக்கமின்மையை வெளிப்படுத்தும் தருணத்தை முன் உணரும் ஒரு அகம்‌. இந்த அத்தியாயத்திற்கு சில அத்தியாயங்களுக்கு முன்புதான் கீழ் வெண்மணி இந்த நாவலில் இடம்பெறுகிறது. நாஜிப் படைகளால் எரிக்கப்பட்ட ஒரு நகரம் வருகிறது. குணரத்தினத்தின் பிசிறற்ற தர்க்கப்பூர்வமான பேச்சின் உள்ளுறையாக அமையும் வன்முறையை உதயா உணர்வதே அவனை நிலை கொள்ளாமல் அடிக்கிறது. கதை சொல்லியின் இந்த அக இயல்பு சாருவின் படைப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு முக்கியமான கண்ணி.

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

உத்தேசமான நினைவுதான். Newshunt என்றொரு செயலி பத்து வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அந்தச் செயலில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கட்டி நூல்களை வாசிக்க முடியும்‌. நான் ஜீரோ டிகிரி நாவலை அப்படித்தான் வாசித்தேன் என நினைக்கிறேன். அல்லது அதற்கு சில வருடங்களுக்கு முன்பு. ஆனால் நூலாக இல்லாமல் ebookஆக படித்ததும் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது‌. அந்த வயதில் கடுமையான அதிர்ச்சியை அளித்த நூல். தன்னுடைய மாதவிடாய்க் குருதியை(நாவலில் சாண்டை என்றே எழுதப்பட்டிருக்கும்) தன்னைக் கொடுமைப்படுத்தும் குடும்பத்தினருக்குச் செய்யும் உருளைக்கிழங்கு பொறியலில் ஒரு பெண் கலந்துவிடுகிறாள். அதுவும் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் கொடுமையை அனுபவிக்கிறாள். அந்தச் சித்திரிப்பை மறக்க முடியாமல் ரொம்ப நாளாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அதன்பிறகு சில வருடங்கள் கழித்து எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் முதல் நாவலை வாசித்தேன். இவற்றிற்கெல்லாம் முன்பே மனம் கொத்திப் பறவைத் தொடரை ஆனந்த விகடனில் வாசித்திருந்தேன். சாருவின் எழுத்துக்களாக ஒரு மாதத்துக்கு  முன்புவரை நான் வாசித்திருந்தது இவ்வளவுதான். இன்று எக்ஸைல்(வாசித்துக் கொண்டிருக்கிறேன்)  பெட்டியோ என்ற இரு நாவல்களைத் தவிர அவருடைய எல்லா நாவல்களையும் வாசித்துவிட்டேன். நேநோ, தாந்தேயின் சிறுத்தை, கனவுகளின் நடனம் என்ற நூல்களையும் இந்த ஒரு மாதத்திற்குள்ளாக வாசித்து இருக்கிறேன். எக்ஸைல் மற்றும் பெட்டியோவையும் இந்தத் தொடரினை எழுதி முடிப்பதற்குள் வாசித்துவிடுவேன்! ஒரு சில எழுத்தாளர்களை மட்டுமே இவ்வளவு குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒரு எழுத்தாளரைக் கூட அவர் எழுத்துக்களுடன் பரிச்சயம் ஏற்பட்டு இவ்வளவு நீண்ட காலம் வாசிக்காமலும் இருந்ததில்லை. ஏன் இந்த முரண்? இந்த முரணைச் சொல்லவும்தான் இந்தத் தொடரைத் தொடங்கினேன். 


(தொடரும்)

எல்லாச் சாலைகளும் தப்படிச்சான் மூலையை நோக்கி - சிவக்குமார் முத்தய்யாவின் குரவை நாவலை முன்வைத்து

நேரடியான களத் தரவுகள் ஒரு நாவலின் வெற்றியில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்க முடியும் என்ற கேள்வியுடன் குரவை நாவலை அணுகுவது சரியாக இருக்கும். தமிழில் இதற்கு முன்பு நேரடியான கள ஆய்வுகள் அல்லது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜம் கிருஷ்ணனின் பெரும்பாலான ஆக்கங்கள் இந்த வகைமையில் வரக்கூடியவை. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி ,சதீஷ் வாசுதேவனின் கத்தலே, இரா.முத்துநாகுவின் சுளுந்தீ போன்ற ஆக்கங்கள் தரவுகளை மையமாகக் கொண்டு தமிழில் இதற்கு முன்பு வெளியான ஆக்கங்கள். இத்தகைய படைப்புகளால் சமூகத்தில் உடனடியாக ஒரு பேச்சினை உருவாக்க முடிகிறது என்பது உண்மைதான். விளிம்பு நிலை மக்களின் பாடுகள் பேசுபொருளாகும்போது அக்குரலுக்கு சமூகம் செவிசாய்க்க வேண்டிய ஒரு அறரீதியான கட்டாயத்தை இப்படைப்புகள் உருவாக்குகின்றன. அதில் தவறென்று கொள்ள ஏதுமில்லை. ஆனால் ஒரு படைப்பு சமகாலத்தின் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை மட்டும் பதிவு செய்தால் போதுமா? இத்தகைய படைப்புகளை அந்த அநீதி இழைக்கப்பட்ட மக்கள் என்னவாகப்‌ பார்க்கின்றனர்? என்ற வகையிலான கேள்விகளை எழுப்பிக் கொண்டு இப்படைப்புகளை அணுகுவது ஒரு எல்லை. மறு எல்லையில் கலாப்பூர்வமாக இவற்றின் பெறுமதி என்னவென்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.


புனைவெழுத்து , புனைவு வாசிப்பு என்ற இரண்டுமே ஞாபகம் என்கிற விஷயத்தை நம்பி இருப்பதாக நான் கருதுகிறேன். சமகாலத்தின் மீது நமக்கு அக்கறை இருப்பதாகவும் சமகாலத்தின் அநீதிகள் ஒவ்வொன்றும் நம்மை வந்து பாதிப்பதாகவும் நாம் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய உண்மையான அக்கறை நம் நினைவில் எது தங்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தது மட்டுமே. வீட்டு வாசலில் செருப்பை கழட்டிய பிறகு அதோடு கழன்று விழாத ஞாபகங்களாக எவையெல்லாம் நீடிக்கின்றனவோ அது சார்ந்து மட்டுமே உண்மையில் நாம் அக்கறை கொள்கிறோம். தரவுகள் சார்ந்து நிற்கக்கூடிய படைப்புகளின் பலவீனம் அத்தகைய ஆழமான ஞாபகங்களை வாசகனிடம் உருவாக்க முடியாமல் போவதுதான். கையில் தரவுகள் இருக்கும் உற்சாகத்தில் ஒரு பலவீனமான கற்பனைச் சரடில் அத்தகைய தரவுகளைக் கோர்த்து புனைவு வெளியை கட்டமைக்க முடிகிறது. ஆனால் அது வாசகனில் எந்தவொரு நிரந்தர விளைவையும் உருவாக்க முடியாது. இலக்கிய வடிவங்கள், படைப்பின் வெளிப்பாட்டு உத்தி, யதார்த்தவாதம்,கற்பனாவாதம் போன்ற பேச்சுகள் எல்லாம் படைப்பு வாசகனில் ஏதாவது உணர்ச்சியை உருவாக்குகிறதா என்று பார்ப்பதற்காகவே. எழுத்தாளர் தான் உணர்ந்ததை எளிய இரக்கவுணர்ச்சி சார்ந்து அல்லாமல் அனுபவங்கள் தனக்குக் கொடுத்த அதிர்ச்சி, தொந்தரவு அல்லது தொந்தரவின்மை போன்றவை சார்ந்து விவரித்துச் செல்லும்போது ஒரு படைப்பின் அர்த்த உலகத்திற்குள் வாசகரால் எளிதாகப் புழங்க முடிகிறது. நாவல் வடிவத்தைப் பொறுத்தவரை எழுத்தாளர் உருவாக்கும் அர்த்த உலகம் மிகுந்த வலிமை வாய்ந்ததாக பிரத்யேகமானதாக இருக்க வேண்டும். தரவுகள் சார்ந்து உருவாகும் படைப்புகள் இந்த நாவலின் புறவுலகத்தை வலுவாக கட்டமைத்துவிடுகின்றன. ஆனால் வாசிப்பு நிலையில் அப்படைப்பு உருவாக்கும் அர்த்த உலகம் என்ன என்று பார்க்கும்போது பல படைப்புகள் ஏமாற்றம் தருகிறவையாகவே உள்ளன. சிவகுமார் முத்தய்யாவின் குரவை நாவல் வலுவான அர்த்த உலகத்தை கட்டமைத்திருப்பது அதன் முதன்மையான கலப்பூர்வமான வெற்றி என்று சொல்ல வேண்டும்.







சிவகுமார் முத்தய்யா கீழ்தஞ்சை மாவட்டத்தின் விவசாயப் பின்புலம் கொண்டு இயங்கும் மக்களின் பாடுகளை தொடர்ச்சியாக எழுதிவரும் படைப்பாளி. ஆனால் குரவை நாவல் விவசாயக் குடிகள் பற்றியதல்ல. கலைஞர்கள் பற்றியது. குரவையாட்டம் ஆடுகிறவர்கள், குறவன் குறத்தி வேடங்கட்டி ஆடுகிறவர்கள், தவில் கலைஞர்கள், பறையிசைப்பவர்கள், நாதஸ்வர வித்வான்கள், பறை தயாரிப்பவர்கள் என கீழ் தஞ்சை நிலம் வேறொரு பின்னணியில் இருந்து இந்நாவலில் அணுகப்படுகிறது. நாவலின் காலம் இன்றிலிருந்து கால் நுற்றாண்டுக்கு முன்பு. உலகமயமாக்கலும் நவீன கல்வியும் உருவாக்கி இருக்கும் அபரிமிதமான வளர்ச்சியின் ரேகைகள் மெல்லியதாகத் தென்படத் தொடங்கும் காலத்தை நாவல் தொட்டுக் காட்டுகிறது. மழையின்மை, பெரிய புயல்கள், நீர்வரத்து குறைந்து போவது போன்ற நாட்களைத் தவிர பிற நாட்களில் விவசாயக் குடிகளின் வாழ்க்கை ஏறத்தாழ 'ஒரே' தன்மையைத்தான் கொண்டிருக்கும். திருவிழாக்களும் விவசாயச் சமூகங்களின் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கிறது. தை மாதத்தின் அறுவடை முடிந்து அடுத்த விதைப்பு நடைபெறும் ஆனி,ஆடி மாதங்கள் வரை விவசாய வேலைகள் சற்று குறைந்த காலம். ஏறத்தாழ எல்லாப் பெருந்திருவிழாக்களும் இக்காலத்திலேயே நடைபெறும். இந்தத் திருவிழாக்களில் பங்கு பெறும் கலைஞர்களின் வாழ்க்கை வழியாக மொத்த கீழ்தஞ்சைப் பகுதியின் பண்பாட்டையும் சிவகுமார் முத்தய்யா இந்த நாவலில் காட்ட முயன்றிருக்கிறார். அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.


தப்படிச்சான் மூலை தஞ்சையில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் வசிக்கும் ஒரு பகுதியாக நாவலில் சொல்லப்படுகிறது. இன்னுமே கூட தஞ்சையின் கீழவாசல் பகுதியில் இவர்களைக் காணலாம். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள ஆப்பரக்குடி நாட்டுப்புற கலைஞர்கள் வசிக்கும் ஒரு ஊர். கலியமூர்த்தி, நித்யா,பேபி,நாகராசன்,முத்துப்பட்டன், முருகேசன், குமரேசன்,வசந்தா என எண்ணற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் கதைகள் நாவலில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இடம்பெறுகின்றன. அவர்களுடைய வாழ்க்கை சொல்லப்படும் விதத்தினைக் கொண்டும் சிவகுமார் முத்தய்யா இந்நாவலுக்கு எழுதி இருக்கும் முன்னுரையை வைத்தும் நாவல் பெரும்பாலும் நேரடித் தரவுகள் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. அத்தரவுகளை சிவகுமார் முத்தய்யா அலுப்பான மொழிநடையில் நாவல் முழுக்க தூவிவிட்டுச் செல்லாமல் தரவுகளைக் கொண்டு எதைப் பேச வேண்டுமோ அதை மிகச் சரியாகவே பேசி இருக்கிறார்.


ஸ்திரமான வருமானமும் நிலையான உறவுகளும் அற்ற வாழ்க்கை அமைந்தவர்களாக இந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கின்றனர். கலைக்கு மனிதனை பீடிக்கும் தன்மை உண்டு. ஆட்டக்காரிகளாக வரும் பெண்கள் ஆடுவதால் சந்திக்கும் இன்னல்களைத் தாண்டி ஆடுவதின் வழியாக உருவாகும் பெருமிதத்திற்காவும் நிறைவுக்காகவுமே அந்த வாழ்க்கையில் தொடர்ந்து நீடிக்கின்றனர். மரியாதையற்ற வாழ்க்கையில் இருந்து அடுத்த தலைமுறையாவது தப்பிப்போக வைத்துவிடும் எண்ணமே அவர்களுடைய வாழ்க்கையை உந்துகிறது. பேபி தன் மகள் ரேகாவை ஆட்டக்கலையில் இருந்து தப்புவிக்க நினைக்கிறாள். கலியமூர்த்தி தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தப்பி தன் குழந்தைகள் மனைவியுடன் வாழவே முயல்கிறான். ஆனால்  'குடும்ப வாழ்க்கை' ஒரு கனவாகவே உள்ளது. குமரேசன் போல திட்டவட்டமாக சுயநலத்துடன் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்கள் நீங்கலாக மற்ற அனைவரும் நிலையற்றே அலைகின்றனர். சரியாக அமைந்த குடும்பத்தை தன் சந்தேகத்தால் சீர்குலைத்துவிட்டு சாகும்வரை அதற்கென வேதனைப்படும் நாகராசன் போன்றவர்களும் இந்நாவலில் இடம்பெறுகின்றனர். வறுமையான வாழ்க்கையின் காரணமாக ஆட்டக்காரியாகும் சாந்தி,சித்ரா போன்ற பெண்களும் பேசப்படுகின்றனர். பபூன் வேஷம் போடும் குள்ளன் ஆல்பர்ட்டுக்கு பெண் பார்க்கச் செல்லும் இடம் நாவலில் முக்கியமான ஒன்று. ஆட்டக்காரிகளை காமத்துடன் அணுகுகிறவர்கள், எந்நேரமும் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும் பாலியல் தொல்லைகள்,குடும்பத்தைக் கெடுப்பவர்கள் என்று குடும்பப் பெண்களிடமிருந்து அவர்கள் பெறும் வசை எல்லாமும் மிகுந்த அக்கறையுடன் நாவலில் பேசப்படுகிறது. 





காமம் சார்ந்த விவரிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அத்தகைய இடங்களை சிவகுமார் முத்தய்யா கோடிட்டு மட்டுமே காட்டுகிறார். காமத்தைக் கடந்து அவ்வுறகளால் ஏற்படும் அன்றாடப் பாடுகளையும் சிக்கல்களையும் பேசுவதிலேயே சிவகுமார் முத்தய்யா அக்கறை கொள்கிறார். உதாரணமாக கலியமூர்த்தி வசந்தாவிற்கு இடையேயான உறவைச் சொல்லலாம். பேரழகியான வசந்தாவை திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரம் ஒன்றிலிருந்து கலியமூர்த்தி காப்பாற்றுகிறான். கலியமூர்த்தி தவில் கலைஞன். இருவருக்கும் இடையேயான உறவு வளர்கிறது. ஆனால் வசந்தா அவனை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள். (வசந்தா மட்டுமின்றி ஆடும் பெண்கள் பலரிடமும் திருமணத்துக்கு எதிரான இந்த மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்கள் அப்படி எண்ண காரணம் தங்களுடைய சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வதா அல்லது 'பத்தினி' உருவகத்தினால் ஏற்படும் அழுத்தமா என்பது நாவலில் சொல்லப்படுவதில்லை.) கலியமூர்த்திக்கு மணமாகிறது. கலியமூர்த்தியின் முந்தைய வாழ்க்கை அவன் மனைவி பாப்பாவுக்குத் தெரிகிறது. அந்தப் பழைய உறவினை அறுத்தும்விடாமல் வளரவும் விடாமல் பாப்பா தன் குடும்பத்தை நடத்திச் செல்கிறாள். வசந்தாவின் வாழ்க்கை வேறு விதமாக நகர்கிறது. அவளுடைய ஆட்டத்தைப் பார்க்க வந்த சண்முகம் குடும்பத்தை விட்டு அவளுடனேயே தங்கி விடுகிறார். அவருடைய கடைசி காலத்தில் வசந்தாவே அவருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்கிறாள். அதற்கு கலியமூர்த்தியும் உதவுகிறான்! அப்படி அவள் உதவி கேட்டு வரும் சித்திரம் நாவலில் இடம்பெறுகிறது. கலியமூர்த்தி தன் மனைவியிடம் வசந்தாவை உதவி கேட்கும்படிச் சொல்கிறான்.


/ கலியமூர்த்தி தவிலால் தட்டி டும்...டும்.. என அடித்து ஓசையெழுப்பி கேட்கச் சொல்லி சமிக்ஞை செய்தான். தவில் வாசிப்பவர்களுக்தும் ஆடுபவர்களுக்குமான ரகசிய மொழி அது. வாசிப்பவர்கள் தங்களுக்கு சோர்வு ஏற்படும் போது குறைவான சத்தத்தை எழுப்பினால் ஆடுபவர்கள் அதைப் புரிந்து கொண்டு கூட்டத்தில் இருந்து எவ்வளவு விசில் சத்தம் வந்தாலும் வேகமெடுத்து ஆடமாட்டார்கள். அதுபோல ஆடுபவர்கள் ஆடமுடியாது கால் வலிக்கும்போது காலில் அணிந்திருக்கும் சலங்கையை தரையில் வைத்து இரண்டு முறை குலுக்கினால் அடியின் வேகத்தை குறைப்பது தொடங்கி சாப்பிடுவது,சம்பளம் அதிகம் கேட்பது வரை பல சங்கதிகள் அதில் உண்டு/


இது மாதிரியான பல நுண்ணிய தருணங்களை நாவலில் குறிப்பிட முடியும். திடீரெனக் கிடைக்கும் புகழ், புகழ்வெறியில் எடுக்கும் தவறான முடிவுகள் எப்படியெல்லாம் இக்கலைஞர்களின் வாழ்க்கையை அலைகழிக்கின்றன என்பதைத் தாண்டி சொல்லப்படாத கோணமாக சமூகம் இவர்களைப் போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களை என்னவாகப் பார்க்கிறது என்பதும் வாசிப்பின் வழி உணரத்தக்கதாக உள்ளது. தவில் கலைஞர்களுக்கு இடையேயான ஆசிரியர் மாணவர் உறவு, போட்டியில் நடைபெறும் கொலைகள், அப்பாவின் தொழிலான பறையிசையை கைக்கொள்ளும் செவத்தகன்னி என்று முடிவற்றது என்று தோன்றும் பாத்திரங்களும் கோணங்களும் நாவலில் வெளிப்பட்டபடியே இருக்கின்றன.


பல இடங்களில் நாவலில் பாத்திரங்களின் பெயர்களே தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்திரன் என்று வரவேண்டிய இடத்தில் குமரேசனின் பெயர் வருகிறது. இதுபோன்ற குறைகளை அடுத்தடுத்த பதிப்புகளில் கவனமாகக் களைவது நாவல் வாசிப்பு அனுபவத்தை மேலும் நிறைவானதாக மாற்றும். மயில் ராவணனின் கொலையும் அதைச் சந்திரன் 'துப்பறிந்து' தப்படிச்சான் மூலைக்குச் செல்வதும் நம்பகத் தன்மையுடன் சொல்லப்பட்டிருந்தாலும் நாவலின் பொதுவான உணர்வு நிலையில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது.


முன்பின்னாக நகர்ந்து பல்வேறு கலைஞர்கள் வழியாக நகரும் நாவலின் உணர்வுத்தளத்தில் ஒரு அமைதி நிலவுகிறது. எங்குமே போலியான சீற்றமோ கோபமோ வெளிப்படுவதில்லை. மிகையான காமமோ வன்முறையோ நாவலில் இல்லை. முன்பின்னாக நகர்ந்து பாத்திரங்களின் போக்கு காண்பிக்கப்படுவதாலேயே  எங்குமே செயற்கையான அதிர்ச்சிகளும் திருப்பங்களும் இல்லை. சந்திரன்,செவத்தகன்னி, மயில் ராவணன் என்று தஞ்சையின் வேறு வேறு ஊர்களில் வாழ்கிறவர்கள்கூட ஏதோவொரு வகையில் தப்படிச்சான் மூலையுடன் தொடர்புடையவர்களாக மாறுகிறார்கள். தொடர்ச்சியான வாழ்க்கைச் சித்தரிப்புகள் வழியாக சிவகுமார் முத்தய்யா தப்படிச்சான் மூலையை ஒரு பெரிய தொன்ம நிலமாக மாற்றிக் காட்டி விடுகிறார்! ஆனால் அங்கு மாயங்களோ தெய்வங்களோ பிசாசுகளோ இல்லை. முழுக்க முழுக்க கலைஞர்களும் அவர்களின் உற்சாகமும் சுதந்திரமும் வலியும் நிறைந்த வாழ்க்கைப்பாடுகளே உள்ளன. இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த வாழ்க்கைச் சூழல் ஒரு நாவலில் உருவாகி வருவது அபூர்வமான ஒன்று. அந்த வகையில் தப்படிச்சான் மூலை தமிழ் நாவல் பரப்பு பேசியிருக்கும் முக்கியமான களங்களில் ஒன்று.


-சுரேஷ் பிரதீப்.


சிவகுமார் முத்தய்யா தமிழ் விக்கி


https://tamil.wiki/wiki/File:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE.png













புதுமைப்பித்தன் எனும் அறிவன் - காணொளி


புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து எழுபத்தைந்து நிமிடங்கள் இடைவிடாமல் பேசி இருக்கிறேன். என் உரைகளில் இதுவே நீண்டது. ஆனால் திரும்ப கேட்டுப் பார்க்கும்போது எந்தவிதமான நீட்டி முழக்குதல்களும் இல்லாமல் நவீன இலக்கியம் எந்த மொழியை எனக்குக் கொடுத்திருக்கிறதோ அதே மொழியில் ‌செறிவாகத்தான் பேசி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. இந்த உரையை வழக்கமான பேச்சாளர்கள் போல இழுத்து நீட்டினால் நான்கு மணிநேரம்வரும். ஆகவே உரையை சற்று கவனமுடன் கேட்கும்படி நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். ஏறத்தாழ இருபது நாட்கள் புதுமைப்பித்தன் குறித்தும் அவர் படைப்புகள் குறித்தும் வாசித்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். இன்று இவ்வுரையை பதிவு செய்து முடித்தவுடன் ஒரு கடினமான தேர்வை எழுதி முடித்த விடுதலை உணர்வும் வெறுமையும் மனதை நிரப்புகின்றன. இவ்வுரையின் பெரும்பகுதியை ஏற்கனவே கட்டுரையாக எழுதிவிட்டேன்.‌ புதுமைப்பித்தனின் பிற்கால கதைகள் பற்றி மட்டும் எழுத நேரமில்லாததால் குறிப்புகளாக எடுத்து வைத்திருக்கிறேன்.‌ விரைவில் அவற்றையும் விரிவாக்கி எழுதி முழுக் கட்டுரையைப் பகிர்கிறேன். ஒரு மேதையை முழுதாக வாசிக்கும்போது அவருடைய உணர்ச்சிகளிலும் மேதைமையிலும் தோய்ந்திருக்கும் போது தகப்பன் தோளேறிய குழந்தைபோல அவரைவிட சில செண்டிமீட்டர்கள் கூடுதலாக சிலவற்றை தரிசித்து விடுகிறோம்.‌ அவ்வாறாக நானடைந்த சில புரிதல்களை இந்தக் காணொளியில் பகிர்ந்து கொண்டுள்ளேன். இக்காணொளி பரவலான கவனத்தைப் பெற வேண்டும் என்றும் புதுமைப்பித்தன் பற்றிய வாசிப்பு இன்னும் விரிவடைய வேண்டும் என்றும் விரும்புகிறேன். நண்பர்கள் இவ்வுரை குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டால்- உரையை பகிர்ந்து கொண்டாலும் - மகிழ்வேன். உரையின் சுட்டி முதல் கீழே


https://youtu.be/-Fxkz6W9Ex8


#tamilliterarytalks

இலக்கிய முன்னோடிகள் என்னும் 'தேறாத கேஸ்கள்'



அழிசி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்', 'புதுமையும் பித்தமும் (ஆளுமை-படைப்பு-விவாதம்)' என்ற இரு நூல்களும் நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் என்ற இரு வகையிலும் முக்கியமான நூல்கள். இவ்விரு நூல்களின் ஆசிரியரும் க.நா.சுப்ரமண்யம்தான் என்றாலும் இந்த நூல்கள் க.நா.சுவால் வெளியிடப்படவில்லை. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் நூலில் எழுத்து இதழில் 1959ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்த சில ஆண்டுகளிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளை தொகுப்பது என்றால் தன்னுடைய எதிர்பார்ப்பு எத்தகையதாக இருக்கும் என்று க.நா.சு எழுதிய கட்டுரைகளும் அதற்கான எதிர்வினைகளும் க.நா.சுவால் முன்வைக்கப்பட்ட எட்டு சிறுகதைகளும்(மௌனி, புதுமைப்பித்தன்,கு.ப.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள்) தொகுக்கப்பட்டிருக்கின்றன. புதுமையும் பித்தமும் என்ற நூலில் க.நா.சுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்த விவாதங்கள்,க.நா.சு புதுமைப்பித்தன் பற்றி எழுதிய சில கட்டுரைகள் (புதுமையும் பித்தமும் என்ற மிக முக்கியமான கட்டுரை உட்பட) மற்றும் ஒரு கவிதை ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன.( இவ்விரு நூல்களையும் முறையே பாலன் , பாலு என்ற இருவர் தொகுத்திருக்கின்றனர். இவ்விரு மர்ம நபர்களும் நண்பர் ஶ்ரீனிவாச கோபாலனின் புனைப்பெயர்கள் என்று கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன்!) .


இலக்கிய விமர்சன மரபு வலுவிழந்திருக்கும் இன்றைய சூழலில் சங்கடமான விமர்சனங்களை மௌனமாக கடந்து செல்லும் 'நாகரிகம்(!?)' வலுப்பெற்றிருக்கும் இக்காலத்தில் க.நா.சுவின் இந்தக் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப்படுகின்றன. க.நா.சு எந்த அளவுகோலின் அடிப்படையில் படைப்புகளை ஏற்கிறார் அல்லது நிராகரிக்கிறார் என்பது இக்கட்டுரைகளில் வெளிப்படவில்லைதான். ஆனால் அவருடைய கதை சார்ந்த 'நுண்ணுணர்வு' அவரைப் பெரும்பாலும் கைவிடவில்லை. இன்று யோசித்துப் பார்க்கும்போது நாம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகள் என்று உருவகிக்கும் வரிசை ஏறத்தாழ க.நா.சு என்ற ஒற்றை மனிதராலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடலாம். மணிக்கொடி காலம் தொடங்கி தொடர்ச்சியாக இலக்கியச் சூழலை அவதானித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அவர் தமிழில் வாசிக்கவும் எழுதவும் தொடங்குவது பதின்பருவம் கடந்தபிறகுதான். அதற்கு முன்னதாகவே ஐரோப்பிய இலக்கியத்தில் க.நா.சுவுக்கு ஆழமான பரிச்சயம் இருந்திருக்கிறது. அன்றைய சூழலில் 'கதைகள்' என்று முன்வைக்கப்பட்ட பெரும்பாலான எழுத்துக்களின் சாரமின்மையை மிகச் சரியாக எடுத்துக் காட்டுகிறார். அவ்வளவு கறாரான அளவுகோல் கொண்டிருப்பதாலேயே க‌.நா.சுவால் 1959வரை எழுதப்பட்ட ஒட்டுமொத்த சிறுகதைகளிலேயே ஒரு பதினைந்து கதைதான் 'தேறும்' என்று சொல்ல முடிகிறது. புதுமைப்பித்தன் எழுதிய எல்லாமும் பொக்கிஷம் என்று சொல்லப்படும் இந்தக் காலத்தில் கூட  புதுமைப்பித்தன் பற்றி க.நா.சுவின் 1959ஆம் வருட மதிப்பீடான 'பூரணம் பெறாத தனித்துவம்' என்பது பொருத்தமானதாக அமைகிறது (பின்னாட்களில் இந்நிலைப்பாட்டை க.நா.சுவே மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை!) என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.





இலக்கிய 'மோஸ்தர்' என்பதற்கும் க.நா.சு எதிரானவராகவே இருந்திருக்கிறார். கல்கி போன்றோரை வெறும் 'பத்திரிக்கை கதைக்காரர்கள்' என்று நிராகரிக்கும் க.நா.சு மணிக்கொடி ஆசிரியர்களில் ஒருவரான பி.எஸ்.ராமையாவையும் நிராகரிக்கவே செய்கிறார். மணிக்கொடியில் எழுதப்படுவதெல்லாம் பொன்னாக இருக்க வேண்டும் என்ற முன்முடிவு எதுவும் க.நா.சுவிடம் இல்லை.‌ சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுக்கான க‌.நா.சுவின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் வடிவம் சார்ந்ததாகவே இருக்கிறது. சிறுகதையின் வடிவம் சார்ந்த தெளிவான புரிதல் உருவாகி இருக்காது காலத்தில் க.நா‌.சு மீண்டும் மீண்டும் கதைக்கும் சிறுகதைக்குமான வேறுபாட்டைச் சொல்லி சிறுகதையின் வடிவ இலக்கணங்களுக்குள் பொருந்திப் போகும் கதைகளையும் சிறுகதையின் வடிவ சாத்தியங்களைத் தாண்டிச் செல்லும் கதைகளையுமே சிறந்த கதைகள் என்று வரையறுக்கிறார். புதுமைப்பித்தன் கதைகளின் மீதான க.நா.சுவின் அங்கலாய்ப்பு இந்த வடிவம் சார்ந்ததாகவே இருக்கிறது. புதுமைப்பித்தன் இக்கதைகளை இன்னும் மேம்படுத்தி இருக்கலாமே என்றுதான் அக்கறைப்படுகிறார். புதுமைப்பித்தன் தன் கதைகளை திரும்ப வாசிப்பதே கிடையாது என்பதை பலமுறை இந்நூல்களில் சொல்லி இருக்கிறார்.





புதுமையும் பித்தமும் நூலில் தீவிரமான விமர்சன உளப்பாங்கு கொண்ட சமகால எழுத்தாளர்கள் இருவருக்கு இடையேயான உறவின் நெருக்கத்தையும் விலகலையும் காண்கிறோம். மணிக்கொடியில் சிற்பியின் நகரம் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தனை க.நா.சு சந்திக்கச் செல்கிறார். முதல் சந்திப்பிலேயே 'இதுவும் நம்மைப்போலத் தேறாத கேஸ்' என்று சிரித்துக் கொண்டே புதுமைப்பித்தன் க.நா.சுவை நெருங்கிவிடுக. 'புதுமைப்பித்தன் என்ற ஒரு மேதை' என்கிற கட்டுரையில் க.நா.சு இப்படி எழுதுகிறார். 


/திருவனந்தபுரத்திலிருந்து நண்பர் ரகுநாதன் - சொ.வியின் கடைசி நாட்களில் அவருடன் கூட இருந்து உதவியவர் அவர்தான் - 'மருந்துச் செலவுக்கும் கூட சிரமப்படுகிறது. பண உதவி தேவை' என்று எனக்கு ஒரு கார்டு எழுதி,அதை அடித்திவிட்டு 'இன்று புதுமைப்பித்தன் காலமானார்' என்று 1948ல் எனக்கு எழுதினார்/


தன்னுடைய சக 'தேறாக கேஸ்' தன்னை விட்டு சீக்கிரம் போய்விட்டதான கவலையும் தான் நீண்ட நாட்கள் வாழ்வது குறித்த சலிப்பும் க.நா.சுவிடம் வெளிப்படுகிறது. இந்த கவலைக்கும் சலிப்புக்கும் அடியில் புறக்கணிப்பு மிகுந்த தமிழ்ச்சூழல் மீதான கசப்பும் வெளிப்படுகிறது. 'புதுமையும் பித்தமும்' ஐந்திணை பதிப்பகத்தின் வாயிலாக வெளியான புதுமைப்பித்தன் சிறுகதைகள் (இதுவொரு முழுத் தொகுப்புக்கான முயற்சி) நூலுக்கு க.நா.சு 1987ல் எழுதிய கட்டுரை. வேகம் குறைந்து சமநிலை கூடியிருக்கும் மொழியில் புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி மட்டும் பேசிச் செல்லாமல் அவருடன் தான் பகிர்ந்து கொண்ட ஏராளமான நினைவுகளை இக்கட்டுரையில் சுவாரஸ்யமாக க.நா.சு விவரிக்கிறார். தன்னுடைய சொற்ப ஆயுள்காலத்தில் ஏறத்தாழ பதினைந்து வருடங்கள் புதுமைப்பித்தன் இலக்கியத்திற்கு பங்காற்றியிருக்கிறார். க.நா.சு இந்த பதினைந்து ஆண்டுகளில் பத்தாண்டுகள் புதுமைப்பித்தனின் நண்பராக இருந்திருக்கிறார். வெறும் பதினைந்து ஆண்டுகளில் புதுமைப்பித்தனின் அக்கறையற்ற விரிந்திருந்த எல்லைகளைப் பார்த்தால் மலைப்பு ஏற்படுகிறது. ஒரு‌ அக்மார்க் 'தேறாத கேஸ்' மட்டுமே இப்படி வெறிகொண்டு செயல்பட்டிருக்க மேடியும். க.நா.சு புதுமைப்பித்தனை சந்திக்கும்போது இருவருமே முப்பது தொடாத இளைஞர்கள்.(புதுமைப்பித்தன் க.நா.சுவுக்கு மூத்தவர்).  சுந்தர ராமசாமி தோட்டியின் மகனை மொழிபெயர்த்தபோது இருபது வயது.‌எம்.வி.வெங்கட்ராம் எழுதத் தொடங்கியபோது பதினாறு வயது என்கிறார்கள். ராஜமய்யர்,கு.ப.ரா,பாரதி எல்லோருமே சொற்ப வயதில் இறந்தவர்கள். இன்றைய ஆயுள் கால நீட்சியை ஒப்பிட்டால் ஐம்பத்து மூன்று வயதில் மறைந்த அ.மாதவையாவும் சொற்ப வயதில்தான் மறைந்திருக்கிறார். இந்த நூலில் என்னை அதிகம் தொந்தரவு செய்த விஷயம் முன்னோடிகளின் இந்த வயதுதான். இன்றைய சூழல் ஒரு வகையில் சோர்வளிப்பதாக உள்ளது. ரொம்ப நாள் உயிரோடு இருப்போம் என்கிற சொகுசு ஒட்டுமொத்த இலக்கிய உலகத்தையும் மந்தத்தன்மை கொண்டதாக மாற்றிவிட்டதாக தோன்றுகிறது.


க.நா.சுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்த விவாதங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கதையை 'தழுவி' எழுதுவது அவ்வளவு தவறாக எடுத்துக் கொள்ளப்படாத காலத்தில் க.நா.சுவும் புதுமைப்பித்தனும் தழுவல் குறித்து கொண்டிருந்த பார்வைகள் பல விஷயங்களை புரிய வைக்கின்றன. க.நா.சு போரும் அமைதியும் படித்த உற்சாகத்தில் ஏறத்தாழ இலக்கிய தூய்மைவாதியின் உன்மத்தத்துடன் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதற்கு மறுப்பாக

'இந்தக் கோபம் இலக்கிய சேவையா?' என்று புதுமைப்பித்தன் எழுதி இருக்கும் கட்டுரை மிக மிக முக்கியமானது. அதீதமான 'இலக்கியப்பற்று' சமூகத்தை ஒரு கலைஞன் அவதானிப்பதில் நிதானக்கேட்டினை ஏற்படுத்துவதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டி இருக்கிறார். எப்போது நிதானமாக இருக்கும் க.நா.சு போரும் அமைதியும் கட்டுரையில் உணர்ச்சிவசப்படுவதும் உணர்ச்சிவசத்துடனேயே எழுதும் புதுமைப்பித்தன் நிதானமாக அக்கட்டுரைக்கு மறுப்பு எழுதி இருப்பதும் சுவாரஸ்யமான முரண்கள்!


இவ்விரு நூல்களும் இலக்கிய வரலாற்று நோக்கில் எழுதப்படவில்லை. ஆனால் அன்றைய சூழல் குறித்த ஒரு தெளிவினை அளித்துவிடுகின்றன. மேலும் சமகால இலக்கியவாதிகள் (வாசகர் எழுத்தாளர் இருவருமே) கற்பதற்கு இந்த விவாதங்களில் நிறைய இருப்பதாகவும் தோன்றுகிறது. ஒரு நல்ல 'தேறாத கேஸாக' மாற இந்நூல் வாசகரை ஊக்குவிக்கும் என்பது இதன் சிறப்பு!



அரைக்கிணறு

15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் 'முப்பது நாட்கள் முப்பது நூல்கள்' வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்தக் காணொளிகளால் உந்தப்பட்டு எனக்குத் தெரிந்தே பன்னிரண்டு நண்பர்கள் நான் அறிமுகம் செய்திருக்கும் நூல்களை வாசிக்கத் தொடங்கியுள்ளனர். கருணாகரத் தொண்டைமான்,ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் மாதிரியான ஆய்வு நூல்கள் குறித்தெல்லாம் விசாரிக்கின்றனர். உள்ளபடியே இந்த நூல் அறிமுகங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஒருசில நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் முன்பு எப்போதோ வாசித்து நினைவிலிருந்து மீள்கிற நூல்களாக இருக்கின்றன. இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்கள் என முன்னரே அறிவித்துவிட்டேன். ஒரேயொரு பிரச்சினை இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்களை நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன் என்பதுதான்! கவிதைத் தொகுப்புகளை ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களுக்குள் அறிமுகம் செய்வது அவற்றுக்கு நியாயம் செய்வதாக இருக்காது என்ற எண்ணத்தினாலேயே கவிதைத் தொகுப்புகளை இதுவரை தவிர்த்து வந்திருக்கிறேன். இனிவரும் காணொளிகளில் முயன்று பார்க்க வேண்டும். குறைந்தது கவிதைகள் குறித்த நூல்களையாவது அறிமுகம் செய்ய வேண்டும். எது எப்படி இருப்பினும் இந்தச் செயல் மிகுந்த நிறைவளிப்பதாக உள்ளது. அதேநேரம் சேனல் தொடங்கிய நோக்கம் இதுவல்லவே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் இந்த காணொளி வரிசை நிறைவுற்றதும் மீண்டும் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த காணொளிகளை புதுமைப்பித்தனிலிருந்து தொடருவேன். இதுவரை அறிமுகம் செய்த காணொளிகளின் சுட்டிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.


1.நாரத ராமாயணம் - புதுமைப்பித்தன்


https://youtu.be/XsgWcwJJTwM


2.கருணாகரத் தொண்டைமான் - குடவாயில் பாலசுப்ரமணியன்


https://youtu.be/1iJwKE5mPhQ


3.கடுகு வாங்கி வந்தவள் - பி.வி.பாரதி(தமிழில் - கே.நல்லதம்பி)


https://youtu.be/nMk15fIOPbc


4.காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்(தமிழில் - கே.நல்லதம்பி)


https://youtu.be/znbZ1Drp1Kc


5.பால்யகால சகி - வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில் - குளச்சல் மு.யூசுப்)


https://youtu.be/sXby1mjVYLs


6.எம்ஜிஆர் கொலைவழக்கு - ஷோபாசக்தி


https://youtu.be/wlVnlEZ0H08


7.மணல் - அசோகமித்திரன்


https://youtu.be/RC8VUcZmWio


8.மிக்காபெரிசம் - சிவானந்தம் நீலகண்டன்


https://youtu.be/XJkRSRah14Y


9.சடங்கில் கரைந்த கலைகள் - அ.கா.பெருமாள்


https://youtu.be/9X8ewEcx030


10.விருந்து - கே.என்.செந்தில்


https://youtu.be/8n4DkvvKuLQ


11.விசும்பு - ஜெயமோகன்


https://youtu.be/XNbAROe6JNg


12.வீடியோ மாரியம்மன் - இமையம்


https://youtu.be/67B0AdtcbN4


13.ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் - ராஜ் கௌதமன்


https://youtu.be/IuaLi7Funfw


14.நானும் ஒருவன் - சுரேஷ்குமார இந்திரஜித்


https://youtu.be/Ajup9vggcFU


15.நிழலின் தனிமை - தேவிபாரதி


https://youtu.be/ZE_2OyOjyZs

2022ல் வாசித்த நூல்கள்

1.உச்சவழு - ஜெயமோகன்

2.வெண்கடல் - ஜெயமோகன்

3.குமரித்துறைவி - ஜெயமோகன்

4.பிரதமன் - ஜெயமோகன்

5.ஆனையில்லா - ஜெயமோகன்

6.ஐந்து நெருப்பு - ஜெயமோகன்

7.உண்மைகள் பொய்கள் கற்பனைகள் - அரிசங்கர்

8.பத்து லட்சம் காலடிகள் - ஜெயமோகன்

9.எழுகதிர் - ஜெயமோகன்

10.தங்கப்புத்தகம் - ஜெயமோகன்

11.ஆயிரம் ஊற்றுகள் - ஜெயமோகன்

12.முதுநாவல் - ஜெயமோகன்

13.தேவி - ஜெயமோகன்

14.வான்நெசவு - ஜெயமோகன்

15.மலை பூத்தபோது - ஜெயமோகன்

16.பொலிவதும் கலைவதும் - ஜெயமோகன்

17.இரு கலைஞர்கள் - ஜெயமோகன்

18.வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

19.ஷோஷா - ஐசக் பாஷவிஸ் சிங்கர்(தமிழில் - கோ.கமலக்கண்ணன்)

20.துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்

21.மண்டியிடுங்கள் தந்தையே - எஸ்.ராமகிருஷ்ணன்

22.நான் கண்ட மகாத்மா - தி.சு‌.அவினாசிலிங்கம்

23. வயலட் ஜன்னல் - உமா மகேஸ்வரி

24.எண்கோண மனிதன் - யுவன் சந்திரசேகர்

25.இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை - டி.தருமராஜ்

26. வேங்கைச்சவாரி - விவேக் ஷன்பேக் மொழிபெயர்ப்பு சிறுகதைகள்) 

27.மிளகு - இரா.முருகன்

28.வ.உ.சியும் காந்தியும் -ஆ.இரா.வெங்கடாசலபதி

29.ஜின்னாவின் டைரி - கீரனூர் ஜாகிர்ராஜா

30.தலைப்பில்லாதவை - யுவன் சந்திரசேகர்

31.வானம் முழுவதும் - ராஜேந்திர யாதவ் (தமிழில் - மு.ஞானம்)

32.டிப் டிப் டிப் - ஆனந்த்குமார்

33.சுந்தர ராமசாமி தேர்ந்தெடுத்த கட்டுரைகள் - தொகுப்பு - ச.தில்லைநாயகம்

34.ராஜன் மகள் - பா.வெங்கடேசன்

35.கடலில் எறிந்தவை - யுவன் சந்திரசேகர்

36.துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

37.கையறு - கோ.புண்ணியவான்

38.பஷீரிஸ்ட் - கீரனூர் ஜாகிர்ராஜா

39.தீர்த்த யாத்திரை - எம்.கோபாலகிருஷ்ணன்

40.மனநோயின் மொழி - டேவிட் கூப்பர் - (மொழிபெயர்ப்பு - லதா ராமகிருஷ்ணன்)

41.விருந்து - கே.என்.செந்தில்

42.The Glass Palace - Amitav Ghosh

43.யதி: தத்துவத்தில் கனிதல்

44.நித்ய கன்னி - தகழி சிவசங்கரப்பிள்ளை (மொழிபெயர்ப்பு - யூமா வாசுகி)

45.வடக்கேமுறி அலிமா - கீரனூர் ஜாகிர்ராஜா

46.கானுறை வேங்கை - கே.உல்லாஸ் கரந்த் (மொழிபெயர்ப்பு - சு.தியோடர் பாஸ்கரன்)

47.வெயில் பறந்தது - மதார் (மறுவாசிப்பு)

48.மத்தி - ச.துரை (மறுவாசிப்பு)

49.நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் - இசை(மறு வாசிப்பு)

50.ப்ராளம்ஸ்கி விடுதி - டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் (தமிழில் - லதா அருணாச்சலம்)

51.தேய்பிறை இரவுகளின் கதைகள் - கீரனூர் ஜாகிர்ராஜா

52.அந்தியில் திகழ்வது - வே.நி.சூர்யா

53.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - கே.கே பிள்ளை

54.ஃப்ரான்ஸிஸ் இட்டிக்கோரா - ட்டி‌.டி.ராமகிருஷ்ணன் (தமிழில் - குறிஞ்சிவேலன்)

55.ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு பாகம் ஒன்று - வின்சென்ட் ஏ ஸ்மித் - தமிழில் - தி.வெ.குப்புசாமி

56.யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி

57.இயற்கையை அறிதல் - எமர்சன் (தமிழில் - ஜெயமோகன்)

58.உடைந்து எழும் நறுமணம் - இசை

59.நலமறிதல் - ஜெயமோகன்

60. எனது சிறைவாசம் - ஶ்ரீ அரவிந்தர்

61.திருநங்கையர் சமூக வரைவியல் - பத்மபாரதி

62.தடுக்கை - அண்டனூர் சுரா

63.கதாரசனை - கீரனூர் ஜாகிர்ராஜா

64.கருணாகரத் தொண்டைமான் - குடவாயில் பாலசுப்ரமணியன்

65.தேசத்துரோகி - ஷோபாசக்தி

66.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு - ஷோபாசக்தி

67.ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு பாகம் இரண்டு - வின்சென்ட் ஓ ஸ்மித்

68.கண்டிவீரன் - ஷோபாசக்தி (மறுவாசிப்பு)

69.முமீன் - ஷோபாசக்தி

70.கதாநாயகி - ஜெயமோகன்

71.மற்றவர்களின் சிலுவை - தொகுப்பாசிரியர் - தி.மரிய தனராஜ்

72.நொய்யல் - தேவிபாரதி

73.வருகைக்கான ஆயத்தங்கள் - இதயா ஏசுராஜ்

74.நரிக்குறவர் இனவரைவியல் - கரசூர் பத்மபாரதி (மறு வாசிப்பு)

75.நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிசாமி

76.வண்ணநிலவன் சிறுகதைகள் - 2011வரையிலான முழுத்தொகுப்பு 

77.இயக்கம் - குட்டிரேவதி

78.மீன்காரத்தெரு - கீரனூர் ஜாகிர்ராஜா

79.மீன்குகைவாசிகள் - கீரனூர் ஜாகிர்ராஜா

80.குட்டிச்சுவர் கலைஞன் - கீரனூர் ஜாகிர்ராஜா

81.அபிநவ கதைகள் - செல்வகேசவராய முதலியார்

82.அறிவு - நாராயணகுரு(உரை:நித்ய சைதன்ய யதி: தமிழில் - எம்.கோபாலகிருஷ்ணன்)

83.சங்காயம்- ச.துரை

84.உயிரின் யாத்திரை - எம்.வி.வெங்கட்ராம்

85.தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரம்

சிறை

 வானை அடைத்துப் பறந்தது மாபெரும் காகம். காகத்தை நோக்கி நிமிர்ந்த என் எண்ணம் முழுவதும் அதனால் உறிஞ்சப்பட்டிருந்தது. அது காலமற்ற வெளியா வெளியற்ற காலமா என்பதை என் பிரக்ஞை உணரவில்லை. நான் உடலா மனமா எண்ணமா இருப்பா ஏதுமின்மையா என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. ஆனால் கடற்கரையில் பதிந்த காலடிச்சுவடென என் பிரக்ஞை எங்கிருந்து நகர்கிறதோ அங்கெல்லாம் தன் தடத்தை பதித்துக் கொண்டே வந்தது.‌ எல்லாமும் இற்றுப்போகும் ஒரு நிலைக்கென நான் எப்போதும் ஏக்கம் கொண்டிருக்கிறேன். அதுதான் அப்போதெனக்கு நிகழ்ந்து கொண்டிருந்ததா? பறக்கும் காகத்தின் சிறகு வழியே காற்றென வீசுகிறது ஒளி. எத்தனை வண்ணங்கள் அவ்வொளிக்கு. காக்கையின் சிறகுகள் எந்நிறத்தையும் உள்ளனுமதிக்காத கருமை என்று எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய தவறு! அது ஒவ்வொரு நிறத்தையும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. நான் ஒளியை உண்டு கொண்டிருக்கிறேன். வண்ண வண்ண ஒளிகள். எவ்வளவு காலமெனத் தெரியவில்லை. என் உடலில் ஆடை இருந்ததா என் உடலே இருந்ததா என்றெல்லாம் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் ஓரிடத்தில் இல்லை என்பது மட்டும் வெட்ட ஓங்கிய கொலைவாளென விரைத்திருக்கும் பளபளப்பான காக்கையின் சிறகின் வழியே அறிய முடிந்தது. எனக்கு வியர்க்கவில்லை. குளிரவில்லை. நாற்றமோ மணமோ நாசியில் ஏறவில்லை.‌ ஒலியோ ஒலியின்மையோ என் செவிகளில் இல்லை. இன்னதென எண்ணிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்றென மாறிவிடும் வண்ணங்களன்றி என் கண்களில் காட்சிகளும் இல்லை. ஆனால் நான் இருந்தேன்.‌என்னை நான் மிகத்தெளிவாக உணர்ந்தேன். நான் இருப்பதால்தான் இந்த இன்னதென விளக்கிவிட முடியாத பறத்தல் எனக்கு அச்சத்தை தருகிறது. சிறிய வீட்டில் பெரிதாகத் தெரிந்த பொருள் பெரிய வீட்டில் சிறிதாகவும் அசிங்கமாகவும் தெரிவதுபோல என் சின்னப் பிரக்ஞை அந்தப் பெரும் பிரக்ஞையுடன் முரண்டு கொண்டிருக்கிறதா?


என் பதற்றங்கள் என்னிடமிருந்தன.‌என் ரகசிய ஏக்கங்கள் அப்போதுமெனக்கு கிளர்ச்சி அளித்துக் கொண்டிருந்தன.‌‌ என் பயங்கள்‌‌ என்னை வதைக்கத் தவறில்லை.‌ ஆனாலும் நான் இருந்தேன். நான் இருப்பதை‌ உணர உணர மண்ணிலும் இறங்கிக் கொண்டிருந்தேன். வானம் காகத்தால் மூடப்பட்டிருந்தது. உச்சி வெயிலில் கிரகணம் நிகழ்ந்தது போல‌ சூழல் ஒளி கொண்டிருந்தது. மனிதர்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கினர். காற்றென வீசியது அக்காகத்தின் பெருமூச்சு. வெட்டவெளியில் படர்ந்த நிழலென அக்காகத்தின் கருவிழிகளை நான் கண்டேன். அக்காகம் அங்கிருக்கிறது என்ற எண்ணமே எனக்கு அச்சத்தையும் ஆறுதலையும் தந்து கொண்டிருக்கிறது. நான் என் பிரக்ஞையை மீட்டுக் கொண்டு கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அது ஒரு கல்லூரி வளாகம் போலத் தெரிந்தது. வெகுகாலத்துக்கு முன்பு நான் அங்கே படித்திருக்கிறேன் அல்லது எதிர்காலத்தில் படிக்கவிருக்கிறேன். எதிர்பட்டவர்கள் அனைவரையும் நான் அறிந்திருந்தேன். அறிந்திருத்தல் என்றால் பெயரையோ நபரையோ அறிந்திருப்பதல்ல. அவர்களுடைய ஆழம் என் கண்களுக்குத் தெரிந்தது. அதுவே என்னை அச்சுறுத்தியது. இந்த அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்த கணத்திலேயே ஒரு பெண் ஓடிவந்து என்னை அறைந்தாள். நான் அங்கு ஆடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறேன் என்பது அவள் அறைந்தபிறகே எனக்கு உரைத்தது. நான் குன்றிப்போனேன். ஆனால் என் உடலை எனக்கு‌ மறைக்கத் தோன்றவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் நான் ஆடையில்லாமல் இருப்பது சரியென்றும் எனக்கும் தோன்றியது. ஆனால் அத்தோன்றல் என் அவமான உணர்வை அகற்றிவிடவில்லை. வெளித்தோற்றத்துக்கு கல்லூரி போலத் தெரிந்த அவ்விடம் தொடர்ந்து தன் முகத்தை மாற்றிக் கொண்டே வந்தது. மண்சுவர் கொண்ட ஒரு குடிசையில் பிரசவக் கவிச்சியுடன் ஒரு குழந்தை கிடக்கிறது. தெளிந்த நீரோடும் வாய்க்காலில் சேமையிலையில் நீர்சேந்திக் குடிக்கிறான் ஒரு சிறுவன். இன்னும் முடிக்கப்படாத தார்ச்சாலையின் மணத்தை நுகர்ந்தபடி சைக்கிளில் செல்கிறான் மற்றொருவன். வெள்ளைச் சீருடை வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியிருக்க மிட்டாய் தின்கிறாள் ஒரு சிறுமி. பம்புசெட் அறையில் இருந்து முனகல்கள் கேட்கின்றன. வாழைத்தோப்புகளில் தவளைகள் குதிக்கின்றன. ஈரம் சொட்டும் தலையுடன் கோலமிடுகின்றனர் தாவணி அணிந்த பெண்கள். கைகளை உதட்டுக்கு நேரே குவித்து கண்மூடி கடவுளை வணங்குகிறாள் ஒருத்தி. மூக்கைத் துளைக்கிறது துளசியின் மணம். விந்தின் நாற்றம் சூழ நாக்கு வெளித்தள்ளி கயிற்றில் தொங்கிக் கிடக்கிறான் ஒரு ஆள். சிறுவனொருவனை அழுதுகொண்டே புணர்கிறான் நூறு கிலோ எடை கொண்ட மற்றொருவன். கோவில் மறைவில் விபூதி பூசி விட்டு முத்தமிட்டு ஓடுகிறாள் ஒருத்தி. சோற்றை உருட்டி விழுங்குகிறாள் ஒரு கிழவி. கண்விழித்துப் படித்துக் கொண்டிருப்பவன் கழிவறைக்கு எழுந்து ஓடுகிறான். புகையும் அடுப்புக்கு எதிரே அமர்ந்து கொண்டிருப்பவளின்‌ முதுகு நனைந்து போயிருக்கிறது. எழுதிக் களைத்தவர் கைகளில் நெட்டி முறிக்கிறார். முதன் முறை புணர்ந்த ஆண்குறியில் ரத்தம் வழிகிறது. ரசமட்டம் வைத்து சுவற்றின் நேர் பார்க்கிறார் கொத்தனார். பரவசத்துடன் காதல் கவிதை எழுதிக் கொண்டிருந்தவன் எழுதி முடித்த பரபரப்பில் சுயமைதுனம் செய்து கொள்கிறான். அடுத்தவன் மனைவியை வெறியுடன் புணர்கிறான். தத்துவ நூல்களை ஆழ்ந்து படிக்கிறான். முழுதாக தன்னை நிர்வாணப்படுத்திக்கொண்டு விஷம் குடிக்கிறாள். தூங்க இயலாமல் தவிக்கிறான். காலையில் எழுந்து சோம்பல் முறித்தவர் மாரடைத்து விழுகிறார். நெடி கொண்ட வேப்பங்குச்சியால் சுளீரென‌ கையில் அடிவிழுகிறது. நீலத் தாவணி அணிந்த பள்ளி மாணவியின் காலில் விழுந்து அழுகிறார் மனைவியை இழந்த கண்ணாடி அணிந்த ஆசிரியர். புறக்கழுத்தில் வெட்டிய அரிவாளை உருவ முடியாமல் வெட்டப்பட்டவனின் உடல் நீர் நிரம்பிய குடம்போலத் தள்ளாட அங்கேயே விட்டுவிட்டு ஓடுகிறான். யாருமில்லாத வகுப்பில் இரண்டு மாணவர்கள் கஞ்சா இழுக்கின்றனர். மறுநாள் திருமணத்துக்கென விடிய விடிய தாம்பூலப்பை போடுகின்றனர். குழந்தையின் முகத்தில் வேறொருவனின் சாயலைக்கண்ட தகப்பன் பிரசவ அறையைவிட்டு பிணம்போல வெளியேறுகிறான். ஒரே மூச்சில் ஒரு பியர் பாட்டிலை குடிக்கிறாள். மறுநாள் வேலை போய்விடும் என்று தெரிந்தவன் அன்றிரவு முழுக்க ஒரு வேலையை முடித்து நல்ல பேர் வாங்கப் போராடி அது இயலாததால் தூக்கம் அழுத்தும் காலை நான்கு மணிக்கு எச்சில் ஒழுக இனிய சிரிப்புடன் உறங்கும் மகளின் முகம் நினைவிலிருக்க மணிக்கட்டை அறுத்துக் கொள்கிறான்.


பேருந்து நிலையத்தில் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து பிச்சை கேட்கிறார் முதியவர். ஆர்டர் பண்ணிய பிரியாணி வருவதற்கென நாக்கில் எச்சில் ஊறக் காத்திருக்கிறான். மாதவிடாய் தொடங்காத பெண்ணை அறுப்பு முடிந்த வயலில் கிடத்திப்புணர்கிறார் அவள் தாத்தா வயதுடைய தலைநரைத்தவர். கொளுத்தும் வெயிலில் கம்மங்கூழ் வாங்கிக் குடிக்கிறான். செருப்பை கழற்றிவிட்டு சாப்பிடத் தொடங்குகிறான். இரவு முடியுமிடத்தை பார்ப்பதற்காக கண்விழித்து அமர்ந்திருக்கான். குறுஞ்செய்திகள் அனுப்பி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். வானத்துக்கு அந்தப் பக்கம் போய்விடுகிறான். அலுவலக கணினி முன்னே அமர்ந்து கொண்டு வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான்.‌ பற்களை கடிக்கிறாள். ஒரே பைக்கில் சென்ற நான்கு நண்பர்களில் இரண்டு பேர் லாரிக்கு அடியில் செல்ல அதில் ஒருவன் தலை நசுங்குவதைப் பார்த்து ஒருவன் சிரிக்கிறான் மற்றொருவன் வாந்தி எடுக்கிறான். கழிவறையில் அமர்ந்து குறிக்குள் விரல் வைத்து நோண்டும் தோல்வியைச் பார்த்தவள் வாயில் ஒழுகும் எச்சிலை துடைத்துக் கொள்கிறாள். பற்குச்சியை வாயில் வைத்திருக்கும் வீங்கிய கண்களுடன் கண்ணாடியை பார்க்கிறான். கால் நொடித்து பக்கத்தில் நடந்த பெண்ணின் பெரிய முலையில் விழுந்தவனுக்கு செருப்படி விழுகிறது. மூத்த எழுத்தாளர் கடைசி காலத்தில் கவனிக்க ஆளின்றி தனிமையில் குடித்து செத்துக் கிடக்கிறார். வேலை முடித்து வந்து ஆசையாய் தூக்கிய குழந்தை வியர்வை நாற்றத்தால் இறங்கிக் கொள்கிறது.


யூடியூப் பார்த்து நடனம் கற்றுக் கொள்கிறாள். இடையளவு குறையவில்லை என ஏங்கி அழுகிறான். மீண்டும் பால் பொங்கிவிட்டதற்காக தன்னையே கடிந்து கொள்கிறான். மூங்கில் கூடையில் பீங்கான் பொம்மைகளின் தலைச்சுமை அழுத்த மயங்கி விழுகிறாள். மீண்டும் ஆத்திரத்தில் அலைபேசியை உடைக்கிறான். காலை மலர்ந்த செம்பருத்தி பூ ஒரு பெருமூச்சுடன் இரவுக்குள் விழுகிறது. புட்டத்தின் அருகிலிருக்கும் தன் புன்னை நக்குகிறது ஒரு நாய். தன் தனிமையை நினைத்து அன்றும் அழுகிறது சூரியன். உலகின் அத்தனை கடல்களும் பொங்குகின்றன. பிரபஞ்சம் என் பிரக்ஞைக்குள் மூழ்கிச் சிறைபடுகிறது. நான் கண் விழிக்கிறேன். என்னுள் ஒரு பிரபஞ்சம் சிறைபட்டிருப்பதே தெரியாமல் என் துக்கங்களை எடுத்து அணிந்து கொள்கிறேன். 


சரிவு

'அவன எதுக்கு உள்ளாற இழுத்து உடணும்' என்று சொன்னபடியே அம்மா என் கையைப் பற்றினாள். வாஞ்சை கூடிய பிடி. நான் அப்படியே நின்றுவிட நினைத்தேன். 


ஆனால் கண்ணாடியில் முகம் பார்த்தபடி சட்டை போட்டுக் கொண்டிருந்த அப்பா 'விடுடி அவன' என்றார். அம்மா பிடியை விடாமல் கண்ணாடிக்குள்ளிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். கோபம் ஏறிய அப்பாவின் முகம் அம்மாவைப் பார்த்தது. அம்மா கையை விட்டுவிட்டாள்.‌ எனக்கு ஏமாற்றமாக இருந்தது. முன்பு போல‌ இல்லாமல் அப்பாவுடன் வெளியே செல்லும் விருப்பம் எனக்கு குறைந்து கொண்டே வந்தது. எதிர்விகிதத்தில் அவருக்கு என்னை உடனழைத்துக் கொண்டு செல்லும் விருப்பம் கூடிக்கூடி வந்தது.


'எவனோ ரெண்டாம் பங்காளி மூணாம் பங்காளி கல்யாணம் எழவுக்கெல்லாம் கூட்டிட்டு போனிய...இப்ப கோர்ட் ஸ்டேஷன்னு கூட்டிப்போய் அவனக் கெடுக்கணுமாக்கும்' என்று வாதம் புரியும் தொனியில் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே அம்மா கேட்டாள். அவளால் சீராக மடிக்கப்பட்டிருந்த மயில்கழுத்து நிறப் புடவையை பிரித்து அதன் மென்மையில் கையோட்டிக் கொண்டிருந்தேன்.


'ஆம்பளன்னா ஊர்ல என்ன நடக்குதுன்னெல்லாம் தெரியணும்டி... சும்மா வீட்லயே பொத்தி வச்சு மடப்பயலா போறதுக்கா' என்று சொன்னபடியே என் கையிலிருந்த புடவையை வாங்கி கட்டிலில் வீசினார்.‌ அது களைந்து விழுந்தது.


சிவப்பு ஓடுகள் புழுதியால் மூடப்பட்ட ஒரு ஓட்டுக் கட்டிடம்தான் காவல் நிலையம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.‌ டிவிஎஸ் பிப்டியை வாசலில் நிறுத்திவிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு அப்பா உள்ளே நுழைந்தார்.


தன் முன்னே அழுது கொண்டிருந்த ஒரு கருநிறப் பெண்ணிடம் ஏதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் அப்பாவைப் பார்த்ததும் புன்னகையுடன் தலையை அசைத்து 'வாங்க சார்' என்று வரவேற்றார். திரும்பும் போது அவர் தலையிலிருந்த பெரிய கொண்டையைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது.‌ ஆனால் அதைவிட பயம் அதிகமாக மனதைக் கவ்விப் பிடித்திருந்ததாலோ என்னவோ நான் சிரிக்கவில்லை.


அப்பா அந்த கருநிறப்பெண்ணை கடுமையாகப் பார்த்தபடியே உதவி ஆய்வாளருக்கு எதிரே அமர்ந்தார்.


'பையனா?' என்று என்னைப் பார்த்துவிட்டு அப்பாவை கேட்டார்.‌ அப்பா ஆமோதிப்பாக தலையசைத்தார்.


நான் அப்போதுதான் அந்தப் பெண்ணிடமிருந்து சற்று தூரம் தள்ளி தமிழ் மாமா நிற்பதை கவனித்தேன்.‌ அவர் முகத்தில் அழுத கண்ணீர் கோடுகள் காய்ந்திருந்ததை பார்க்க ஒருவித ஒவ்வாமை எழுந்தது.‌ அழும் ஆண்கள் பலகீனமானவர்கள் என்று அந்த வயதில் நம்பியிருந்தேன். தமிழ் மாமாவுக்கு அருகிலேயே எனக்கு பெயர் தெரியாத என் ஊர்க்காரர்கள் சிலர் நின்றிருந்தனர்.‌‌ அவர்களுடைய உடல்மொழி மாமாவை அடிப்பது போல இருந்தது.‌ நான் மேலும் பயந்து போனேன்.


'இப்ப என்னடா சொல்ற நீ?' என்று சட்டென எழுந்து மாமாவை நோக்கிச் சென்றார் அப்பா. மாமா பயந்து பின்வாங்கினார்.


'சார் வக்கீல் வர்ற டைம். இவள நான் இங்க கூட்டிட்டு வந்ததுக்கே அந்த ஆளு என்னைய கொடைவான். ஒழுங்கா கேட்டு வைங்க' என்று உதவி ஆய்வாளர் சலிப்புடன் சொன்னார்.


அப்பா மாமாவை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடைக்கு வந்தார்.


'உட்காரு' என நாற்காலியை மாமாவிடம் காட்டினார்.


அவர் அமர்ந்ததும் 'தமிளு இவெல்லாம் நமக்கு ஒத்துவரமாட்டா. ஒரே ஜாதிதான். அதுக்குன்னு வந்தாருகுடி அதுவும் அவ அப்பன் கூலி வேலைக்குப் போறவன். இவல்லாம் நமக்கு ஒத்து வருமா சொல்லு' என்று தணிவாகச் சொன்னார்.


என்னைப் பார்த்து 'நீ அங்க போயி நில்லு' என்றார்.


நான் என் காதுகளை அவர்களிடம் விட்டுவிட்டு சற்று தள்ளி நகர்ந்தேன்.


அப்பா மேலும் தணிந்த குரலில் சொன்னார்.


'வயசுல இப்படி கை நெனைக்குறது சகஜம்தான். அதுக்குன்னு கல்யாணம் வரைக்கும் போகமுடியுமா சொல்லு'


'இல்லண்ணே அவ என்ன நம்புறா' என்று மாமாவின் குரல் மேலும் தணிவாக ஒலித்தது. தமிழ் மாமா அப்பாவின் அத்தை மகன்தான் என்றாலும் அப்பாவை அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். ஊரில் அவர் வயதை ஒத்த பலரும் அண்ணன் என்று மரியாதையாக அழைப்பவரை அத்தான் என்றோ மச்சான் என்றோ அழைக்க அவருக்கு கூச்சமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


'என்ன லவ் பண்றியாக்கும்' அப்பாவின் இளக்காரமான குரல் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. தமிழ் மாமாவின் உடலில் ஒரு குன்றல் உருவானது.‌ அந்தக் குன்றலால் அவரை மேலும் வெறுத்தேன். 


'இங்கபாரு.‌ அவ ஏற்கனவே ரெண்டு தடவ புள்ள அழிச்சிருக்கா. அதுக்கு சாட்சியெல்லாம் ரெடி பண்ணியாச்சு. உன்னைய பின்னாடி ஏதாவது மெரட்டுவான்னு பயந்தேன்னா புள்ள அழிச்ச கேஸ்ல அவள உள்ளத்தூக்கி போட்றலாம். அவ மெரட்டலுக்கு எல்லாம் பயந்துறாத என்ன' என்று மாமாவின் தோளில் தட்டினார்.


அப்பா ஏதோ தவறாகச் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் மாமாவின் முகம் அப்பா சொல்வதை ஏற்றுக் கொள்வது தெரிந்தது. அந்த ஏற்பினை உணர்ந்து கொண்டவராக அப்பா மேலும் சொன்னார்.‌ அவர் குரல் இன்னும் தணிந்தது. 


'வயசுல இப்படித்தான் எவளோட நாத்தமாவது புடிக்கும். ஆனா காலத்துக்கும் அந்த நாத்தத்தோட வாழ முடியுமா சொல்லு.‌ அவளப்பாரு கரிக்கட்ட மாதிரி இருக்கா. நடந்து போனான்னா பேண்டுட்டு இருக்கிறவன் கூட எந்திரிக்க மாட்டான்.‌ இவளோட காலம்பூரா ஓட்டப்போறியா'


அப்பா மெல்ல மெல்ல மாமாவை ஜெயித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மாமாவின் முகம் சற்று தெளிந்திருந்தது. 


'உள்ளபோறப்ப அவளும் அவ அம்மாவும் என்னென்னவோ மாய்மாலமெல்லாம் காட்டுவாளுங்க,கால்ல வந்து விழுவாளுங்க,நெஞ்சுல அடிச்சிகிட்டு அழுவுவாளுங்க,சாபங்கொடுப்பாளுக,மெரட்டுவாளுக...ஆனா நீ சொல்ல வேண்டியது 'எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல' இதையே திரும்பத் திரும்ப சொல்லு'  


தமிழ் மாமா அப்போது அப்பா அவரிடம் ஒரு கத்தியை கொடுத்து அந்த கருநிறப் பெண்ணின் தலையை வெட்டச் சொல்லி இருந்தால்கூட செய்திருப்பார் என்று தோன்றுகிறது. அவளைக் கைவிட அவர் சம்மதித்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.


மாமாவை வெளியில் நிறுத்திவிட்டு அப்பா என்னை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குள் போனார். அப்பெண்ணின் அம்மாவும் - அவளும் அட்டைக் கருப்பு - வக்கீலும் வந்திருந்தனர்.


வக்கீல் அப்பாவைப் பார்த்து சிரித்தார்.


'என்ன சண்முகம் மச்சானுக்கு ஓத வேண்டியதெல்லாம் ஓதிட்டீங்களா' என சற்று கசப்பு தொனிக்க கேட்டார்.


'தேவல்லாத பேச்செல்லாம் எதுக்கு தம்பி. படிச்சு வக்கீலாகி நம்மாளுக கேஸெல்லாம் முடிச்சு வைப்பேன்னு பாத்தா நீ இப்படி ப்ரோக்கர் வேல பாத்துட்டு திரியுற. நான் ஏதும் உன்ன கேட்டனா' 


வக்கீலின் முகத்தில் அந்த எதிர்பாராத அடி பதற்றத்தை உருவாக்குவது தெரிந்தது. அவர் குரலில் இணக்கம் குறைந்து மீண்டும் வக்கீலானார்.


'மேடம் நீங்க பையன உள்ள வரச்சொல்லுங்க. அவஞ்சொல்லட்டும் இந்தப் பொண்ண லவ் பண்ணினா இல்லையான்னு' 


அப்பா சற்று கோபமாக இடைமறித்தார். 


'பையனெல்லாம் வரசொல்ல முடியாது'


எனக்கு அப்பா ஏன் அப்படிச் சொன்னார் எனப் புரியவில்லை.‌ நான் அந்தக் கருநிறப்பெண்ணைப் பார்த்தேன். கழுத்து எலும்பின் மேல் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி. குளத்தின் நடுவே கிடக்கும் பழுத்த இலை போல அவ்வளவு அழகாக இருந்தது அந்தச் சங்கிலி. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் அழகியாகிக் கொண்டிருந்தாள். மாமாவின் அழகும் அவளிடம் சேர்ந்தது போலிருந்தது. சோகமே உருவென நின்று கொண்டிருந்தவளுக்கு உள்ளே எங்கோ ஒரு மூலையில் ஒருத்தி சற்று சலிப்புடன் இந்த அரசாங்க சூதுகளை கவனித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. கதையால் நனைக்கப்பட்ட பெண் எப்படி இருந்தாலும் அழகியாகிவிடுகிறாள். இப்போது அவள் உடல் என் மனதில் பதிந்த கதையின் முக்கிய அங்கமாகி இருந்தது. அப்பா ஏன் பதறுகிறார் எனப் புரிந்தது.


வக்கீலுக்கும் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிக் கொண்டிருந்தது. என்ன செய்து அவள் தமிழ் மாமாவை சம்மதிக்க வைக்கப் போகிறாள் என்பதை மட்டும் என்னால் ஊகிக்க முடியவில்லை. அப்பா சொன்னது போல அவள் அழவோ காலில் விழவோ போவதில்லை என்று நன்றாகவேத் தெரிந்தது. அதை அப்பாவும் உணர்ந்தவராக வெளியே ஓடினார். விரைவாக நடப்பவரெனினும் அவரிடம் ஒரு நிதானம் எப்போதுமிருக்கும்.‌ அந்த நிதானத்தை அவர் இழந்திருந்தார்.


கடைவாசலிலேயே உட்கார்ந்திருந்த தமிழ் மாமாவிடம் விரைவாகச் சென்றார்.‌‌ அவர் எழுவதற்குள்ளாகவே 'அந்தத் தேவிடியா கண்ண மட்டும் பாத்திராத' என்று முகத்துக்கு நேரே விரலை நீட்டி எச்சரித்தார். மாமா உள்ளே வந்தபோது மொத்த காவல் நிலையமும் அமைதியாக இருந்தது. மாமா உதவி ஆய்வாளரைப் பார்த்து 'மேடம் இவள எனக்கு தெரியும்.‌ஊர்க்காரப் பொண்ணு. ஆனா அவசொல்ற‌ மாதிரி நான் அவள லவ்வெல்லாம் பண்ணல. இனிமே இதுமாதிரி என்ன‌ இவ டார்ச்சர் பண்ணாம நீங்கதான் கண்டிச்சு விடணும்' என தமிழ் மாமா திக்கித் திணறி சொன்னார்.


அனைவருக்கும் அது பொய்யென்று தெரிந்தது. அப்படி ஒரு வெளிப்படையான ஆனால் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒரு பொய் சொல்லப்படும்போது சூழலில் ஒரு மௌனம் உருவாவதை பலமுறை கவனித்து இருக்கிறேன்.‌ சமீபத்தில் கூட அதாவது நேற்று தமிழ் மாமா இறந்தவன்று நான் இரங்கல் கூட்டத்தில் என்ன பேசினேன்? வேதாரண்யத்தில் இரால் பண்ணையில் பங்குதாரராகி லட்ச லட்சமாக சம்பாதித்து சூப்பர் மார்க்கெட் பால்பூத் ஐஸ்க்ரீம் பார்லர் என ஏகப்பட்ட தொழில்கள் செய்து வளர்ச்சி அடைந்து ஊரெல்லாம் காசு கொடுத்து காதலிகளை உருவாக்கிக் கொண்டு அவர்கள் கொடுத்த சீக்கில் செத்துப்போனவர் தமிழ் மாமா. ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். அவரைப்பற்றி உழைப்பால் உயர்ந்த உத்தமர் மனிதநேயம் மிக்கவர்  என்றெல்லாம் நான் பேசியபோது அக்கூற்றுகளில் இருந்த பாதி பொய்மைக்கே கூட்டம் அமைதியானதே! ஆனால் அன்று காவல் நிலையத்தில் அந்த அமைதியை அக்கருநிறப்பெண் வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டாள் என்று தோன்றுகிறது. ஒரு மெல்லிய மூக்குறிஞ்சல் கைகளை தழைத்துவிட்டதால் கண்ணாடி வளையல்கள் முட்டிக்கொள்ளும் ஒலி அவள் புடவையின் சரசரப்பு. இவற்றால் தாக்குண்டு தமிழ் மாமா முகத்தை நிமிர்த்திய போது அவள் கூந்தலில் இருந்து விழுந்த மஞ்சள் ரோஜா. தமிழ் மாமா அழுதுகொண்டே அவள் காலில் போய்விழ இவ்வளவு போதுமானதாக இருந்தது.‌ அப்பா என் மணிக்கட்டு வலிக்கும்படி கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு யார் முகத்தையும் பார்க்காமல் காவல் நிலையத்தைவிட்டு வெளியேறினார். 


அப்பா அதன்பிறகு சரிந்து கொண்டே இருந்தார்.‌ அவரிடமிருந்த மிடுக்கும் அலட்சிய பாவனையும் காணாமல் போனது. நானுமே அவருடன் சேர்ந்து சரிந்து கொண்டிருந்தே‌ன் என்று எட்டு வருடங்கள் கழித்து ஒரு உதவாத பொறியியல் கல்லூரிச் சான்றிதழுடன் தமிழ் மாமாவிடம் ஏதாவது வேலை வாங்கித் தரும்படி அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு போய் நின்றபோதுதான் எனக்குத் தெரிந்தது.


அன்று நானும் அப்பாவும் வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பாகவே அம்மாவுக்கு அவளுக்கே உரித்தான பிரத்யேக வழிகளின் மூலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவை தெரிந்துவிட்டன. தனக்கே பதினோரு வயது மகள் இருக்கிறாள் எனினும் பொதுவாக காதலின் வெற்றி பெண்களுக்கு அளிக்கக்கூடிய உற்சாகத்துடன்,அந்த உற்சாகத்தை கவலையென மாற்றிக் கொண்ட தொனியில் 'என்ன அவ கால்ல போய் விழுந்துட்டானாமா' என்று கேட்டாள். 


இன்னும் வாசலிலேயே நின்று கொண்டிருந்த அப்பா 'அறைஞ்சு பல்லப் பேத்துருவேன். நாடுமாறி முண்ட...என்ன கொழுப்பெடுத்து திரியுறா' என்று அம்மாவை ஓங்கி அறைந்துவிட்டு புறப்பட்டுவிட்டார். இதுபோல அடிவாங்கும் சமயத்தில் எல்லாம் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அநீதியும் இழைக்கப்பட்டவள் போல அம்மா என்னை பார்ப்பாள். நானும் கரைந்து அழுதுவிடுவேன். ஆனால் அன்று அம்மா அடிவாங்கியது எனக்கு திருப்தியாக இருந்தது.‌‌ சாய்மானத்துக்கு என என் முகத்தை ஏறிட்டவள் அதிலிருந்து திருப்தியைக் கண்டு சற்று நடுங்கிப்போனாள். 


நான் நடுக்கத்தை கூட்டும் படி 'அவர்தான் கோவமா இருக்காருன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏம்மா வெவஸ்தகெட்டத்தனமா பேசுற?' என்று சொல்லி உள்ளே போனேன். அப்பா களைத்துப்போட்ட மயில்கழுத்து நிறச்சேலை மடித்து வைக்கப்பட்டிருந்தது. நான் சரியத் தொடங்கியது மிகச் சரியாக அந்த தருணத்தில் இருந்துதான்.

வெஸ்டிபியூல் - கதை

 டபுள் பஸ்ஸின் நடுவில் நானும் பார்த்திபனும் போய் நின்று கொண்டோம். பேருந்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கருப்புநிற ரப்பர் அசைவது எனக்குப் பிடித்திருந்தது. பார்த்திபனைப் பார்த்து சிரித்தேன்.


பேருந்தின் இணைப்பை சைகையால் சுட்டி  'வெஸ்டிபியூல்' என்றான்.


'என்னது?' பார்த்திபனுடைய ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு சுத்தமானது என்பதாலேயே பெரும்பாலும் அவன் பயன்படுத்தும் வார்த்தைகளை திரும்ப கேட்டுக் கொள்வேன். எனக்காக நிறுத்தி மறுபடியும் 'வெஸ்டிபியூல்' என்றான்.


நான் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டவனாக 'இது பழைய வேர்ட் டா. மாளிகையின் உள்பகுதிக்கும் நுழைவுக்கும் இடைப்பட்ட இடம்.' 


இரண்டாம் பகுதியை ஆங்கிலத்தில் சொன்னான். இரண்டு அறைகளும் விசாலமான கூடமும் கொண்ட வீடுகளையே மாளிகை என்று அன்று நினைத்துக் கொண்டிருந்த - இன்று அப்படி நினைக்க முடியவில்லை. ஏனெனில் இருபது வருடங்களுக்கு வங்கிக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து நானே அப்படி ஒரு 'மாளிகை'யை கட்டிவிட்டேன் - எனக்கு அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. 


மேலும் விளக்கினான். ஆனால் அந்த விளக்கம் சற்று அதீதமெனப்பட்டது.


'பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பா தன்னை மன்னராட்சியில் இருத்திக் கொள்வதா ஜனநாயகம் பக்கம் நகர்வதா என்ற பெருங்குழப்பத்தில் இருந்தது. அதற்கு முன்புவரை அரசாங்கத்தை அணுக முடியாமல் இருந்த சாமானியர்கள் அரசாங்கம் தனக்குள் அதாவது தனது கட்டிடங்களுக்குள் - அரசாங்கம் என்பது பிரம்மாண்டமான கட்டிடங்கள் தானே (பின்னாட்களில் நான் இக்கூற்றை சற்று விரிவுபடுத்தி ஆன்மீகம் என்பது கலைநயம் மிக்க கட்டிடம் என்றும் குடும்பம் என்பது அன்புமிக்க கட்டிடம் என்றும் சொல்லி சில நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறேன்) - அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேநேரம் தன்னை முழுதாக இக்கட்டிடங்கள் திறந்துகாட்டிவிடக்கூடாது. பிரம்மாண்டமான நுழைவாயிலுக்கும் உள்ளடங்கிய பூட்டப்பட்ட அறைகளுக்கும் இடையே இருக்கும் காத்திருக்கும் பகுதிதான் வெஸ்டிபியூல் என்று அழைக்கப்பட்டது' என்று சொல்லி நிறுத்தினான்.


சூரனூர் என்ற கிராமத்துக்குச் செல்லும் பேருந்தில் இரண்டு பேர் இப்படி பேசி வருவது வித்தியாசமாக எடுத்துக் கொள்ளப்படாததற்கு காரணம் சூரனூருக்கு முன்பிருந்த எங்களுடைய பொறியியல் கல்லுாரிதான். முதலில் இப்படி ஆங்கிலத்தில் பேசுகிறவனையும் அதை கேட்டுக் கொண்டிருப்பவையும் ஊர்க்காரர்கள் மிகுந்த மரியாதையுடனும் அச்சத்துடனும் பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆங்கிலமும் இளப்பத்துக்கு ஆளாக்கக்கூடிய மொழிதான் என்று‌ தெரிய - அதாவது நான் சுந்தர ராமசாமியின் ரத்னாபாயின் ஆங்கிலம் கதையை வாசிக்க - இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தன. ஆனால் அன்று தீராத தாழ்வுமனப்பான்மையிலும் பயத்திலும் உழன்று கொண்டிருந்த எனக்கு (இன்றும் இந்த சமாச்சாரங்கள் முழுதாக மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று சொல்ல முடியாது) குறைந்தபட்சம் குறைவான அறிவு கொண்ட கிராமத்து ஆட்கள் எங்களை பிரம்மிப்புடன் பார்ப்பது பிடித்திருந்தது. இன்று யோசிக்கும்போது கல்லுாரி நாட்களில் நானொரு 'கிராமத்தானாக' இருந்துவிடக்கூடாது என்ற அதீத ஜாக்கிரதை உணர்ச்சி என்னிடம் இருந்தது என்று தோன்றுகிறது. நான் கல்லூரியில் பழகும் நண்பர்களில் கூட என்னைப்போல் தமிழ் மீடியத்தில் படித்தவர்களோ என் ஜாதி ஆட்களோ குறைவு. இன்று யதேழ்ச்சியாக அப்படி அமைந்தது என்று சொல்லி நான் என்னை சமாதானம் செய்து கொள்ளலாம் தான். ஆனால் நமக்குப் பிடித்ததை தேர்வு செய்வதில் பெரும்பங்கு வகிப்பது நம்முடைய தன்னலம்தான் என்பதை உணராதவனா நான்? பார்த்திபனுடன் என்னை நெருக்கி வைத்துக் கொண்டதற்கும் அவனுடைய ஆங்கில அறிவும் அதேநேரம் அவ்வளவு லட்சணமாக இல்லாத முகமும் தானே காரணம். போதும். முழுத்தூய்மை ஒன்றை உள்ளே கற்பனை செய்துகொண்டு அந்த நிலையில் நீடிக்க முடியவில்லையே என்று மாயச்சாட்டையொன்றெடுத்து என்னை நானே ரத்தம் வர அடித்துக் கொள்வது எனக்கும் பிடித்த பொழுதுபோக்கு தான்.


பேருந்தை விட்டு இறங்கினோம். கண்கள் உணர்வதற்கு முன்னே  கூர்மையான உணர்வுகளை - விரும்பத்தக்கவையும் தகாதவையுமான இரண்டையும் - நமக்கு காட்டிவிடும் இன்னொரு உறுப்பு உடலில் இருக்கும் எனத் தோன்றுகிறது. கடுமையான விலகலையும் ஒவ்வாமையையும் உணர்ந்த பிறகே எதிரே அப்பா நிற்பது கண்ணுக்குத் தெரிந்தது. எப்படி பார்த்து ஒரு நொடி முடிவதற்கு முன்பாகவே சிமெண்ட் கரை மங்கலாக்கிய கால்களும் சுருட்டு நாற்றமடிக்கும் ஒட்டிக் குழிவிழுந்த கன்னங்களும் மெலிந்த உடலும் நரைத்து மண்டிய தாடியும் நினைவுக்கு வருகின்றன என்று ஒரு பக்கம் வியப்பாக இருந்தது. நாற்பது வயதில் இன்றிருக்கும் தோற்றத்தின் முதல் படியில் காலெடுத்து வைத்த அப்பா அடுத்த இரண்டு வருடங்களில் இறுதிப்படியை எட்டிவிட்டார். இரண்டாம்முறை வாசித்தால் இன்னொரு‌ பொருள் தரும் தரமான இலக்கிய படைப்பு போல இரண்டு சந்திப்புகளுக்கு இடையில் இன்னும் சீரழிந்திருக்கும் அப்பாவை மேலும் கூர்ந்து நோக்கினாலே கண்டுபிடிக்க முடியும்.


'சிகரெட் மட்டுமில்லடா ஓவரா மேட்டர் பண்ணினாகூட அம்பது வயசுலயே ஒடம்பு டொக்கு விழுந்துடும்' என்று கிட்டத்தட்ட அப்பா இன்றிருக்கும் தோற்றத்தில் அன்றிந்த கணித ஆசிரியர் தமிழ்வாணனைப் பற்றிய அரிய கண்டுபிடிப்பு ஒன்றைச் சொன்ன பரணிதரன் வேறு ஞாபகத்துக்கு வந்து இந்த மனிதரின் உடல் தோற்றத்துடன் அம்மாவையும் பிணைக்கிறான். இத்தனை ஒவ்வாமைகள் இவருடன் பேசத்தொடங்கும் எங்கு போய் அழுந்துகின்றன என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அவருடன் பேசும் சொற்களில் அந்த அழுத்தத்தின் விசையும் தெரியும்.


பார்த்திபன் அருகில் இருப்பதை உணர்ந்தவர் என்னைக் கண்டதும் விளிம்புகள் சுருங்கி புன்னகையாக மாறவிருந்த உதட்டினை பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டார். அந்த அளவாவது இங்கிதத்துடன் நடந்து கொண்டாரே என எனக்கு ஆறுதலாக இருந்தது. அவர் இறந்தால் - எனக்கிருந்த இறப்புகள் பற்றிய முன்னறிவு கொஞ்சமான மருத்துவ அறிவு இவற்றைக் கொண்டு அவர் அந்த நாளில் இருந்து மூன்று வருடங்களில் இறந்து விடுவார் என்று கணித்திருந்தேன். மாறாக அடுத்த இரண்டு வருடங்கள் நான்கு மாதங்களில் இறந்தார் - நினைத்து வருந்த வேண்டிய பட்டியலில் இந்த இங்கிதத்தையும் அந்த கணம் சேர்த்தேன். ஆனால் உடனடியாக அந்த தருணத்தை பட்டியலில் இருந்து நீக்க நேர்ந்தது. அருகில் நின்றிருந்த ராமலிங்கம் 'என்னா கதிரவா அப்பா நிக்கிறது தெரியலையாக்கும்' என குற்றம்சாட்டும் தொனியுடன் அருகே வந்துவிட்டார். நடக்க விரும்பாதது நடந்தால் எப்படி பெரும்பாலானவர்கள் உறைந்து நிற்பார்களோ நானும் அப்படி நின்றேன். ஆனால் அதற்குள்ளாக பார்த்திபன் அப்பாவிடம் கையை நீட்டிவிட்டான்.


'அங்கிள் நீங்க கதிரோட அப்பாவா?' 


ஒரு கணம் ஆசுவாசமாக இருந்தாலும் அடுத்த நொடியே அவன் குரலில் ஏதும் இளக்காரம் இருந்ததா எனத் தேடத் தொடங்கியது மனம். ஆனால் அப்பாவைவிட விகாரமாயிருந்த அப்பாவின் சினேகிதர் ராமலிங்கத்துக்கு பார்த்திபனின் அழைப்பு திருச்சியின் ஜுன் மாத உச்சி வெயிலில் கூட குளிர்ச்சியை அளித்திருக்கும். நகரத்திலிருப்பவர்கள் என ராமலிங்கம் பார்த்திருக்க வாய்ப்பிருக்கும் அத்தனை பேருமே அரசாங்க ஊழியர்கள். அரசாங்க ஊழியர் என்றால் கிராமங்களில் இன்றுமே ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது எனில் இருபது வருடங்களுக்கு முந்தைய நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். ராமலிங்கம் அரசாங்கமே தன்னிடம் பேசியதாக நினைத்து மகிழ்ந்து போனார். சற்றுநேரத்துக்கு முன் அப்பாவை நான் விலக்குவதை கண்டுபிடித்த அவரது கூர்மையை எண்ணி ஆங்காரமடைந்த மனம் அவர் தற்போது மகிழ்ந்ததை எண்ணி ஆசுவாசம் கொண்டது.


அப்பாவைவிட இந்த ராமலிங்கத்தைத்தான் நான் அதிகமும் வெறுக்கிறேன் என்று புரிந்தது.‌ எங்கு படித்தேன் அல்லது யார் சொல்லி கேட்டேன் என நினைவில் இல்லை. ஆனால் சாரம் இதுதான். நாம் ஒருவரை வெறுத்தால் அவருடைய உற்ற நண்பரை இரண்டு மடங்கு வெறுப்போம். ராமலிங்கத்துக்கு இது அப்படியே பொருந்தும். ராமலிங்கம் அப்பாவின் பால்ய சினேகிதர். 


அப்பா 'நான் உயிரோடு இருக்கிறதுக்கே அவன்தான் காரணம்' என சில சமயம் நன்றியுடனும் சில சமயம் கசப்புடனும் சொல்வார். என் அப்பாவின் கடந்த காலத்துக்கு தன்னை ஜவாப்தாரியாக வரித்துக் கொண்டிருந்தார் ராமலிங்கம்.


நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு 'அப்பாவ விட்றாத தம்பி அவர நல்லா பாத்துக்க' என்றெல்லாம் அம்மாவின் முன்னிலையிலேயே ராமலிங்கம் அடிக்கடி சொல்வார்.


'சிறு வயதில் காதலித்த எவளையோ நினைத்து இருபது வருடங்களாக குடித்தே சீரழிகிறவனை‌ எங்கள் வாழ்க்கையையும் சீரழிக்கிறவனை என்ன எழவுக்குடா நான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று அவரிடம் மானசீகமாக கேட்பேன். அந்த மானசீகத்தின் வெப்பம் உயரத் தொடங்கியது தெரிந்தோ என்னவோ அப்படிச் சொல்வதை ராமலிங்கம் குறைத்துக் கொண்டார். ஆனால் அப்பாவை திறமை இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் திறன் வாய்ந்தவர் என்பதற்கு ராமலிங்கமே சாட்சி. உண்மையான திறமைசாலிகளுக்கு மட்டுமே அவர்கள் மேல் அபாரமான பக்தி கொண்டவர்கள் கிடைப்பார்கள் என்பது இந்த நாற்பது சொச்ச வருட வாழ்வில் நான் உணர்ந்திருக்கும் உண்மை. இன்றுவரை அப்படி என் மேல் பக்தி செலுத்த யாரும் கிடைக்கவில்லையே!


சிறு வயதிலேயே அப்பா அம்மா இருவரும் இறந்துவிட கட்டிட வேலைகளுக்கு போகத் தொடங்கி கொத்தனாராகி மேஸ்திரியானவர். அவரை 'நாட்டு இஞ்ஜினீர்' என்றும் ஊரில் அழைப்பார்கள். ஊரில் பெரும்பாலான வீடுகளை கட்டியவர் அப்பாதான். அன்றும் வீடு கட்ட அவரை அழைக்க ஆட்கள் வீடு தேடி வந்தபடிதான் இருந்தனர். ஆனால் அவர் தன்ன மிகுந்த பிரயாசைப்பட்டு சீரழித்துக் கொண்டிருந்தார். உண்மையில் அவர் சீரழிவு தொடங்க காதல் தோல்வி ஒரு சாக்காக இருந்தது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர் அளவுக்கு திறன் வாய்ந்தவர்கள் எங்கள் ஜாதியிலேயே ஊரில் கிடையாது. எந்தச் சூழலிலும் யாரிடமும் கைகட்டி நின்றதும் கிடையாது. நான் ஒழுங்காகப் படிக்கவும் அவர் கண்டிப்புதான் - யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது ஒருமுறை கூட அவர் என்னை கை ஓங்கியது கிடையாது - காரணமாக இருந்தது. ஆனால் அப்பா ஏன் இப்படி தன்னை சீரழித்துக் கொண்டார்? இதையெல்லாம் இன்று சாவகாசமாக உட்கார்ந்து யோசிக்கும்போது நன்றாக இருக்கிறது தான். அப்பா இன்று யாரோ ஒரு மனிதராக மாறிவிட்டார்.‌ ஒருவேளை இன்னும் சில வருஷங்கள் கழித்து அவர் இறந்திருந்தால் இவ்வளவு கருணையோடு அவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த தினத்தில் இந்த காருண்யமெல்லாம் எதுவும் மனதில் இல்லை.


'எதுக்கு வந்தீங்க?' என்ற கேள்வியை அப்பா ராமலிங்கம் இருவரும் மட்டுமல்ல பார்த்திபனும் எதிர்பார்த்திருக்க மாட்டான். அவர்கள் திகைத்துப் போய் நின்று கொண்டிருக்கும்போதே நான் என் கல்லூரி விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினேன். தூரம் சென்ற பிறகு திரும்பி பார்த்த போது அப்பாவும் ராமலிங்கமும் ஒரு வெஸ்டிபியூல் பேருந்தில் ஏறினர். உறுதியற்ற அதன் மையப்பகுதி பாம்பு போல அசைவது அவ்வளவு தூரத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. திடீரென ஒரு பிரம்மை தோன்றியது. அந்த வெஸ்டிபியூலில் நானும் அவரும் எதிரெதிரே நின்று கொண்டிருந்தோம்.


சுகஜீவனம் - குறுங்கதை



இன்னும் நாற்பத்தைந்து வயதுகூட ஆகவில்லை தான் அடிபட்டிருப்பதோ காலில்தான் பொதுப்படுக்கை இல்லாத புண்ணியத்தால் மருத்துவமனையில் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளும் தனி அறையில்தான் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும் இந்த நிலையில் அவர் உடலுறவுக்கு அழைப்பது கமலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி மட்டுந்தான். வெறுப்போ அருவருப்போ இல்லை. எப்படி இருக்கும்! பத்து நாட்களாக அடிவயிற்றில் கைபோட்டுத் தடவுகிறவரை தட்டிவிட்டுக் கொண்டுதானே இருந்தாள். காலையில் அந்த முகத்திலிருக்கும் முறைப்பு சிறு குழந்தையை ஞாபகப்படுத்தும். அந்த சமயத்தில் மனமிளகக்கூடச் செய்வாள். ஆனால் இரவில் அவருக்கு முன்னே பதினான்கு வயது மகனும் பன்னிரண்டு வயது மகளும் பக்கத்து அறையில் தூங்குவது நினைவுக்கு வந்துவிடும். ரோஷினி கூட புரிந்து கொண்டுவிடுவாள். ஆனால் பிரதாப்பை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. அவன் தன்னையும் அவரையும் அப்படி கற்பனை செய்வதைக்கூட அவளால் கற்பனை செய்ய இயலவில்லை. அவளுக்கு மட்டும் விருப்பமில்லையா என்ன! பிள்ளைகள் விடுமுறைக்கு சொந்தக்காரர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது ஐந்தாறு முறைகூட கூடியிருக்கிறார்கள். ஆனால் உடலில் அசதியையும் வலியையும் கடந்த உற்சாகம் கூடிவிட்டிருக்கும். நீலகண்டன் ஒரு வாரத்துக்கு சிரித்துக் கொண்டிருப்பார். கமலா சிடுசிடுக்கும்போது அந்த குழந்தை முறைப்புகூட முகத்திலிருக்காது. இந்த ஊரடங்கு காலத்தில் பிள்ளைகள் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்ததால் உடலுறவுக்கான வாய்ப்பு அருகிப்போனது. நீலகண்டனும் அடிக்கடி முறைத்துக் கொள்கிறார்.


முன்புபோல அலுவலகத்தில் இருந்து மதியம் சாப்பிட வரும்போது நிகழும் அவசரக்கூடல்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர் அலுவலகத்தில் இருந்து ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனால் அரைமணி நேரந்தான் மதிய இடைவேளை. 'வரேன்' என்ற செய்தியுடன் ஒரு முத்த எமோஜியை வாட்ஸ்அப்பில் அனுப்புவார். அதுதான் சமிக்ஞை! கமலாவுக்கு வேண்டும் போலிருந்தால் அவர் புறப்படுவதற்கு முன்னதாகவே 'வாங்க' என செய்தி அனுப்பி விடுவாள். அவர் புறப்படும்போதே கமலா ப்ளவுஸை தளர்த்தி தயாராகி விடுவாள். உள்ளே நுழைந்ததுமே கதவடைத்து உதட்டைக் கவ்வி இழுத்துச் சென்று விடுவாள். ஏற்கனவே தளர்வான உள்ளாடைகளை நீலகண்டன் எளிதாக அகற்றி விடுவார். கமலா நைட்டியை கழற்றுவதில்லை. ஆனால் நீலகண்டனுக்கு அவர் முழுக்க நிர்வாணமானால்தான் பிடிக்கும். கமலாவின் நைட்டியையும் முலைகளுக்கு மேல் வரை தூக்கிவிட்டால் போயிற்று! சில சமயங்களில் இருபது நிமிடங்கள் இயங்கியும் நீலகண்டன் தளரமாட்டார். அதுபோன்ற சமயங்களில் அவர் அலைபேசியில் அவருக்குப் பிடித்த சில நடிகைகளின் - தினம் ஒரு சிகரெட் குடிப்பதற்கான அனுமதி போல ஜூலியா ஆன், ரேஷ்மா, ஸ்வாதி நாயுடு என மூன்று நடிகைகளில் படங்களை மட்டும் பார்க்க கமலா அனுமதித்து இருக்கிறாள் - படங்களை கமலா ஓடவிடுவாள். கண்களைமூடி இயங்கித்தளரும் போது அவர் கற்பனையில் உதித்தது ஜுலியாவா,ரேஷ்மாவா,ஸ்வாதியா அல்லது தானே தானா என்று கமலாவுக்கு குழப்பமாக இருக்கும். சில சமயங்களில் இரவில் இரண்டு மூன்று முறை கூடிவிட்டு மதியத்தில் அரைமணி நேரம் இயங்கியும் கூட விந்து வெளிப்படாது. அதுபோன்ற சமயங்களில் ஆழமாகக் கமறி உள் தொண்டையில் இருந்து சளியை இழுத்து கமலாவின் குறியில் துப்புவார். ஒரு சில முறை விந்து வராமல் புறப்பட்டபோது இந்த உத்தியை கடைபிடிக்கச் சொல்லி அவரை அறிவுறித்தியது சாட்சாத் கமலாவேதான்! மதியம் அவர் வருவதற்கு முன்பே கமலா பாதாமும் குங்கமப்பூவும் கலந்த பாலை கொதிக்க வைத்து எடுத்து வைத்துவிடுவாள். மற்ற நாட்களிலானால் மதிய உணவுக்குப்பிறகு அதை பருகக் கொடுப்பாள். உடலுறவு கொள்ளும் நாட்களில் அதுதான் உணவே! இயங்கித்தளர்ந்து கிடப்பவரை சற்றுநேரம் அணைத்திருந்துவிட்டு எழுந்து சென்று தொடைகளில் விந்து வழியாமல் டிஷ்யூவால் துடைத்துக் கொண்டு கைகளைக் கழுவி பாலினை எடுத்துவந்து அவரை மடியில் சாய்த்துக் கொண்டு ஊட்டுவாள். கடைசி வாய்ப் பாலை மட்டும் அவள் உறிஞ்சி அவர் வாய்க்குள் துப்புவாள். அந்த எச்சில் பாலுக்காகத்தானே நீலகண்டன் அவருக்குப் பிடிக்காத பசும்பாலைக் குடிக்கிறார்! மூன்று மணி வரையிலும் கமலா குளிக்கமாட்டாள். தொடைகளில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பான விந்து மொடமொடப்பாக மாறும்வரை அதைக்காய விடுவாள். நீலகண்டன் மாலையில் நண்பர்களுடன் டீ குடிக்கச் செல்லும்போது ஒரு வடைக்கு பதிலாக இரண்டோ மூன்றோ  சாப்பிட்டார் என்றால் அவர் வீட்டில் சாப்பிடவில்லை என்று கண்டறிந்துவிடும் நண்பர் ஒருவர் அவருக்கிருந்தார்! சாப்பிடாமல் போகும் நாட்கள் வாரத்துக்கு மூன்றைத்தாண்டவே கமலா அதிகபட்சம் வாரம் இரண்டு முறைதான் என்று கட்டளையிட்டால். கட்டளையை அடிக்கடி அவளே மீறவும் செய்வாள். வேலியை மேயும் பயிர்!


இந்த சந்தோஷங்களையெல்லாம் இந்த ஊரடங்கு கெடுத்துவிட்டது. இவர் தடவுவதால் ஏறும் உடல் உஷ்ணம் வேறு தலைவலியாகத் தங்கி விடுகிறது. கமலாவின் தனிமைப்பொழுதுகளும் எந்நேரமும் வீட்டிலிருக்கும் கணவனாலும் பிள்ளைகளாலும் திருடப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் குறிக்க வரும் பாலச்சந்திரனையும் நிம்மதியாக ரசிக்க முடிவதில்லை! நீலகண்டனும் சற்று மாறித்தான் போயிருக்கிறார். இந்த விரும்பத்தகாத மாற்றம் தந்த குழப்பத்தில்தானே வண்டியில் இருந்து விழுந்து ஆஸ்பத்திரியில் கிடக்கிறார்! ஆகவே அதற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வு அழுத்தவே கமலா ஒத்துக்கொண்டாள்.


ஆனால் ஒத்துக்கொண்ட பிறகே நடைமுறை சிக்கல்கள் உரைத்தன. நீலகண்டன் கீழும் அவள் மேலுமாக இருந்தாக வேண்டும். அந்த நிலையில் அவர்கள் இணைந்ததில்லை. 'ட'வை திருப்பிப் போட்டது போல கமலாவை வளைத்து கட்டிலில் கையூன்றச் சொல்லி பின்னிருந்து இயங்கி இருக்கிறார். அவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு  கமலா மேலே உட்கார்ந்தும் இயங்கி இருக்கிறாள். ஆனால் அவர் படுத்திருக்க கமலா மேலேறி அமர்ந்ததில்லை. வேறு வழியில்லை! எப்படியாவது அவரை சூடேற்றி கொஞ்ச நேரத்தில் விந்து வெளிப்பட வைத்து தளர்த்திவிட வேண்டும் என்று மட்டும் நினைத்தாள். திடீர் யோசனையாக படங்களில் பார்த்தது போல 'நான் வேணும்னா வாயில பண்ணவா' என்று கேட்ட கமலாவை நீலகண்டன் வலி தெரியும் முகத்துடன் பார்த்தார். கமலாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன.


அன்று புடவை கட்டி வந்திருந்தாள். நல்லவேளையாக சுடிதார் போடவில்லை என்று தோன்றிய ஆசுவாசம் உடனே மறைந்தது. புடவை என்றால் புடவையையும் ஜட்டியையும் மட்டும் கழட்டிவிட்டு அவர்மீது ஏறிப்படுத்துவிட்டு எழுந்து கொள்ளலாம். ஆனால் நீலகண்டனுக்கு அவள் முலைகள் வேண்டும். மணமான புதிதில்கூட அதன்மீது இவ்வளவு பித்தில்லை. மகன் பிறந்த உடல் செழிப்பேறிய பிறகு ஒரு நிமிடம் தனியாக அவள் கிடைத்தாலும் ப்ளஸை இழுத்துவிட்டு காம்பை உறிஞ்சுவார். அதோடு இந்த புது நிலையில் நீலகண்டனின் குறி விறைப்படைய தாமதமானது. பாவாடையை மட்டும் அணிந்து கொண்டு விறைப்படைய அவள் உதவ வேண்டியிருந்தது. அடைந்ததும் கவனமாக மேலே ஏறி அமர்ந்தால் மீண்டும் சுருங்கி விடுகிறது. ஒரு வழியாக துளையில் திணித்து அமர்ந்தாள்.


'என்னடி அப்படியே இருக்க மூவ் பண்ணு' என்றார்.


'மூவ் பண்ணா வெளில' வருது என்று அப்பாவியாகச் சொன்னாள். நீலகண்டன் படுத்தவாக்கிலேயே இடுப்பை சற்று உயர்த்தினார். ரயில் நகர்வது போல மெல்லத் தொடங்கி வேகமெடுத்தாள் கமலா. கீழிருந்த கமலாவின் முகமும் தற்போது மேலிருக்கும் கமலாவின் முகமும் ஒன்றல்ல என்று அவருக்குத் தோன்றியது. முலைகள் குலுங்கி முட்டிக்கொள்ள இடக்கையை தலை வழியே பின்னுக்கு கொண்டு சென்று வலப்பக்கம் சரிந்து கிடக்கும் கூந்தலை பிடித்திருப்பவளை அவருக்குப் பிடித்திருந்தது. ஜூலியாவையோ ரேஷ்மாவையோ நாயுடுவையோ கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தனர். இல்லை இல்லை இயங்கியவளின் கீழே கிடந்தார். அந்த இரவினால் டிஸ்சார்ஜ் ஒருவாரம் தள்ளிப் போனதைத் தவிர வேறு பிரச்சினை இல்லை.


ஆனால் பத்துநாள் கழித்து நீலகண்டனின் அலைபேசிக்கு அவர்கள் ஆஸ்பத்திரியில் இயங்கிய வீடியோ வந்தது.


அவர் ரிப்ளையாக 'டேய் மயிரு நல்ல கேமராவில் எடுத்தா என்ன? எம்பொண்டாட்டியோட இருக்கிறத எனக்கே அனுப்புறியா நீ? நம்பர் கண்டுபிடிச்சியே. நான் சைபர் க்ரைம்ல வேலை பாக்குறத கேக்கலயோ. ஓத்தா டேய் இந்த வாய்ஸ்நோட் கேட்டதும் நீ என்ன ப்ளாக் பண்ணுவ. நீ ப்ளாக் பண்ணினாலும் உன்ன குண்டாக்க தூக்கிட்டு போவ ஆறு மணி நேரத்துல போலீஸ் வரும்' என்று அனுப்பினார்.


இருபது வினாடிக்குள் அந்த வீடியோ இருவர் இன்பாக்ஸில் இருந்தும் அழிக்கப்பட்டது. அழுதுகொண்டே தான் ஒரு ஏழைக்குடும்பத்து பையன் என்றும் தன்னை விட்டுவிடும்படியும் செய்தி வந்தது. 


ஊரடங்கு முடிந்து பிள்ளைகள் வெளியூர் போயிருந்தனர். காபியை அவர் கையில் கொடுத்துவிட்டு 'அதென்னங்க சைபர் க்ரைம்' என்று அருகில் அமர்ந்தாள் கமலா. 'யாருக்கு 'தெரியும் ஒரு படத்துல பார்த்தேன்' என்று சொல்லிவிட்டு எழுந்தவர் அந்த வீடியோ நினைவுக்கு வர அவளை இழுத்துக் கொண்டு அறைக்குள் போய் 'மேல ஏறுடி' என்றார். மறக்காமல் அதைப் பதிவும் செய்து கொண்டார். கையில் வெண்ணெய் போல இந்த வீடியோ இருக்க ஜூலியா ஸ்வாதி போன்ற நெய்கள் எதற்கு!


PC

https://theallahabadmuseum.com/events-item/women-in-indian-art/

வினோதம்

தாழப்பறந்த காகம் தன் கையிலிருந்த குச்சி ஐஸை பிடுங்கிச் சென்றதை நம்பவே முடியாமல் நின்றிருந்தான். எப்போதும் ஒன்றுக்கு மூன்றுமுறை எண்ணி சீடை கொடுக்கும் ரோட்டு ஆத்தா அன்று 'வெச்சுக்கய்யா' என்று ஒரு காரச்சீடை அதிகமாகக் கொடுத்தது. எல்லா திங்கட்கிழமையிலும் நீண்ட நேரமாக நிற்க வைத்து பேசியறுக்கும் தலைமையாசிரியர் அன்று ஏனோ சீக்கிரமாக தன் உரையை முடித்துக் கொண்டார். சிரிப்பு களையாமல் பாடமெடுக்கும் மைதிலி டீச்சர் சிடுசிடுப்போடு வந்து போனார். பதினோறு மணிக்கு அடித்த 'இன்ரோல் பெல்' பதினொன்னேகாலை கடந்தும் மீண்டும் அடிக்கப்படாமல் இருந்தது. கணக்குப் பாடமெடுக்கும் சிவசங்கரன் அன்று வகுப்பில் நடனமாடிக் காட்டினார்‌. அமீர்ஜான் சார் அவர் மகளையும் அவன் படிக்கும் நான்காம் வகுப்பில் சேர்க்க அழைத்து வந்திருந்தார். மதிய உணவில் அன்று இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. அதன்பிறகான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மேஜிக் நிகழ்ச்சிகள் நடந்தன. டியூப்லைட்டை ஒருத்தர் கடித்துத் தின்றார். குச்சியை ஒருத்தர் பூங்கொத்தாக்கினார். அதிலிருந்து ஒரு புறாவை பறக்க வைத்தார். சீராக வெட்டப்பட்ட தலை ஒன்று மேசையில் அமர்ந்து பேசியது. அது அவன் பெயரை சரியாகச் சொல்லி அழைத்தது. 'காக்காய் ஐஸை பிடிங்கிப் போனதற்காக அழுகிறாயா அருண்' என்று நாடகத்தனமாக அக்குரல் கேட்டது‌. அது புவனேஸ்வரி அக்காவுடைய குரல் போலிருந்ததால் அவனுக்கு நிஜமாகவே அழுகை வந்தது. மதியம் எங்கோ சென்றிருந்த கண்டிப்பான தலைமை ஆசிரியர் - அஞ்சாவது சார் - மூன்றரை மணி போல் வெள்ளைச்சட்டை முழுக்க ரத்தம் நனைத்திருக்க பள்ளிக்கு தூக்கி வரப்பட்டார். கொஞ்ச நேரத்திலேயே ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டார் என்று சொல்லி நான்கரை மணிக்கு பள்ளியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை என்பதால் கேபிள் டிவியில் அருணுக்குப் பிடித்த அப்போது வெளியான விஜயகாந்த் நடித்த நரசிம்மா போட்டிருந்தார்கள். அன்று குடித்துவிட்டிருந்த அப்பா சீக்கிரமே உறங்கிப்போனார். இவற்றுக்கு எல்லாம் அடுத்து நடந்ததாலோ என்னவோ அவனுக்கு முன் பிறந்து ஒரு‌ வயதில் இறந்து போன அவனுடைய அக்கா காலச்சுழற்சியில் எங்கெங்கு எல்லாமோ அலைகழிந்து அன்று அவனருகில் வந்து நின்றதும் அவனருகிலேயே படுத்துக் கொண்டதும் விடிவதற்குள் எழுந்து சென்றதும் அவனுக்கு வினோதமாகத் தெரியவில்லை. ஆனாலும் அவன் அக்காவோடு புதைக்கப்பட்ட ஒரு தங்க அரைஞாண் கயிறை இன்றும் அவன் பத்திரமாக வைத்திருக்கிறான்.

வலி

வலி

1

வலிக்கும் போது ஏன் எதுவுமே பிடிக்காமல் போகிறது?
உணவு கசக்கிறது
பெண்ணுடல் வெறுப்பளிக்கிறது 
சிரிப்பவர்கள் துவேஷத்தைக் கிளப்புகின்றனர் 
குழந்தைகள் எரிச்சலூட்டுகின்றனர் 
கூரைகள் அச்சமளிக்கின்றன 
யாரோ ஏதோ பெரிய துரோகத்தை செய்துவிட்டதாக உடல் நம்பத் தொடங்குகிறது 
கேட்கும் சொற்கள் நஞ்சாகின்றன 
படிக்கும் சொற்கள் பொருளிழக்கின்றன 
சொல் வலியே
மொத்த உலகத்தையும் எதிரியென வகுத்துக் கொள்ளும் அளவு நீ என்ன அவ்வளவு பெரிய வீரனா 

2

அகவலியை அடிவயிற்றில் ஒரு விரும்பத்தகாத உணர்வென முதலில்  உணர்கிறேன்
அது மெல்லிய ஆனால் வலுவான தொடக்கம்
வலியின் அடுத்த அடி இன்னும் வலுவானதாக இருக்கும் 
ஆனால்  அது எங்கிருந்து எழப்போகிறது என்று ஊகிக்கவே முடியாது 
கைகள் எடையிழக்கின்றனவா 
உள்ளம் நம்பிக்கை இழக்கிறதா 
வாய் கசக்கிறதா
பற்கள் நரநரவென்று கடித்துக் கொள்கின்றனவா 
கண்கள் எரிகின்றனவா 
காது மடல்கள் சுடுகின்றனவா 
என்றெல்லாம் தேடித்தேடி 
ஒரு பெருமூச்சை வெளித்தள்ளும்போது 
எங்கிருந்து என்று தெரியாமல் அவ்வலி பீறிட்டு எழும் 
அது எங்கு அடித்தது என்று ஊகிக்கவே முடியாது 
ஆனால் அடிவாங்கிய பிறகு 
பசிக்காது 
உறக்கம் வராது
ஓரிடத்தில் உட்கார முடியாது 
ரொம்ப தூரம் நடக்கவும் முடியாது
பெரிய கொடுமை 
இறக்கவும் முடியாது
கண்ணகி கத்தியதற்கு 
மனம் வலித்து செத்துப்போன பாண்டியன்தான் 
எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி!

உண்மைகளின் பெட்டகம்



உனக்கு நினைவிருக்கிறதா 
எத்தனையோ நாட்களுக்கு முன் 
நான் உன்னைப் பார்க்க வந்தேன் 
நான் திரும்பிய பிறகு
என் வரவு உன்னை மகிழ்வித்ததாய்ச் சொன்னாய் 
அன்றுதான் நம் பெட்டகத்தில்
முதல் உண்மை விழுந்தது 
நேற்று கூடலுக்குப் பின் 
'நீ என்னை எவ்வளவு காதலிக்கிறாய்' என்று கேட்டாய் 
நான் எவ்வளவென்று சொன்னேன் 
உன் கண்களில் இருந்து வழிந்த உண்மை நம் பெட்டகத்தில் சென்று தங்கியது 
உனக்குத் தெரிகிறதா
நாம் மகிழ்ந்திருந்த கணங்கள் அனைத்தும் உண்மையானவை 
உண்மையை நம்பாதவன் இப்படிச் சொல்கிறான் என்று ஆச்சரியப்படுகிறாய்தானே? 
கண்மணி 
நேற்றேதான் உணர்ந்தேன் 
உண்மை என்பது வேறெதுவும் இல்லாத மகிழ்ச்சிதான் 
எதையும் திரும்ப எடுக்க முடியாத அந்த உண்மைகளின் பெட்டகத்தை நம் மகிழ்ச்சியால் நிரப்பிக் கொண்டிருக்கிறோம்
வெகுநாட்களுக்கு முன்பு நிரம்பிய ஒரு பெட்டகத்தின் முன் நின்று தான் உன் பிரார்த்தனைகளை 
தினம் நீ முணுமுணுக்கிறாய்
❌