Normal view

Received before yesterdayஸ்ரீதர் நாராயணன்

நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்

(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)

ன்றைய காலத்தில் இது போன்ற இலக்கிய அமர்வுகளின் தேவை நமக்கு அதிகமாகின்றது.  Literary arts எனும் படைப்பூக்க கலைகளும் சரி, Performing arts எனும் நிகழ்த்து கலைகளும் சரி, இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பெரும் மாறுதல் அலைக்கு உட்பட்டு அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனம்.  நேற்று ஒரு வேடிக்கையான நிகழ்வு நடந்தது.  ஒரு புத்தகக் குழுமத்தின் அட்மின், ஒரு கவிதைத் துணுக்கைக் குறிப்பிடு அதன் மீதான விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.  நானும் என்னுடைய பார்வையை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டேன்.  உடன் அந்த குழுமத்து நண்பர் ஒருவர், "இது ஏஐ மூலமாக பெறப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் அப்படியில்லையென்றால் மிகவும் அபாரமானதொரு கருத்து" எனக் குறிப்பிட்டிருந்தார்.  அவரென்னவோ அதை ஒரு பாராட்டாக சொல்லியிருப்பார் என்றே நாம் வைத்துக் கொண்டாலும், எப்படி மனிதனின் இயல்பை நெருங்கி செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பிரதிபலிக்கின்றன என்கிற நிலையிலிருந்து, அசலானதொரு கருத்தை நாம் முன்வைக்கும் போது, அது ஏஐ-களின் பதிவிற்கு நிகராக இருப்பதாக பாராட்டும் நிலைக்கு வந்திருக்கிறோம். 

இது போன்ற காலமாற்ற சந்திவேளையில் எஸ் ரா போன்ற தேர்ந்த இலக்கிய வித்தகர்களின் படைப்புகளை இப்படியானதொரு கூட்டம் கொண்டு பகுத்தாய்வது மிகவும் வரவேற்கதக்கதொன்று.  அதிலும் இந்த கூட்டங்களில் பல பேராசிரியர்கள் அகடெமிக்கலாக தங்கள் விமர்சனப் பதிவை முன் வைத்துப் பேசப் போகிறார்கள்.  உலக இலக்கிய எழுத்துடன் தமிழ் இலக்கியம் தன்னை உரசிப்பார்த்துக் கொள்ளும் வேளை என்றோ வந்துவிட்டது. 

இன்றைக்கு எழுத்திற்கான வெளி மிகவும் எளிதாக கைக்கு வந்து விடுகின்றது.  அவை புத்தகமாவதும், (கடந்தகாலத்துடன் ஒப்பிடுகையில்) எளிதாக நிகழ்கின்றது.  ஆனால் அந்தப் புத்தகம் ஒரு கவனம் பெறுவதும், அதன் நுணுக்கங்கள் மீதான விவாதம் நிகழ்வதும் மிகவும் அரிதாகிவிட்டன.  அந்நிலையில், இது போன்ற கூடுகைகளை அமைத்துக் கொடுக்கும் அஞ்சிறைத் தும்பி போன்ற இலக்கிய அமைப்புகளும்,  பேராசிரியர் வினோத் ஐயா போன்ற ஒருங்கிணைப்பாளர்களும் மிகவும் நன்றிக்குரித்தானவர்கள்.



இயற்கையின் வறட்சியாலும், வெக்கையின் உக்கிரத்தாலும் பீடிக்கப்பட்ட ஒரு சிறு கிராமம்.  வளமான வாழ்விற்கான சாத்தியங்களற்ற சூழலில் காலத்தை வென்றுவிடும் மூர்க்கத்தோடு உழலும் மக்கள்.   அப்படியான வேம்பலை கிராமத்தின் ஒரு பரிமாணத்தை பிரதி எடுத்ததுதான் 'நெடுங்குருதி' நாவல்.  ஒரு கிராமத்தை எப்படி வரையறுப்பது?  அதன் நிலவியல் எல்லைகளை வைத்தா, அதன் மக்களின் குணநலன்களை வைத்தா? அதன் பாழடைந்த தெருக்கள், இடுபாடுகளிடையேயான பழமையான வீடுகளை வைத்தா, அதன் தொன்ம வரலாற்று கதைகளை வைத்தா?  காலம் ஒரு கருணையற்ற மந்திரவாதி போல் அந்த ஊரை உருமாற்றிவிடுகிறது.  ஆனாலும் அந்த வேம்பு மரம் அந்த நிலத்தின் மீது பூக்களை சொரிந்தபடி நின்று கொண்டுதானிருக்கிறது.  பொதுவாக வேம்பு இந்திய நிலத்தின் தோன்றிய மரம் என்பார்கள்.  தெற்காசிய வறண்ட பூமியின் தனித்துவ பிரதிநிதி எனச் சொல்லலாம்.  வேம்பலை எனும் கற்பனை நகரத்தின் மணம் நெடுந்தூரத்திலிருந்து தன்னை நெருங்கி வருவதைப் பற்றி எழுத்தாளர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

கிட்டத்தட்ட ஐநூறு பக்கங்களும், ஒரு லட்ச சொற்களுக்குமாக இருக்கும் இந்த நீண்ட நாவல், 2003ம் ஆண்டிலே எழுதப்பட்டிருக்கிறது.  ஒரு வறண்ட வெயில் பிரதேச கிராமத்தின் வரலாறாக தொடங்கினாலும், நாயக பாத்திரமான நாகுவின் சரித்திரமாக, அதன் வழியே எழுத்தாளரின் தென் தமிழ்நாட்டின் நிலவியிலின் புத்திபூர்வ தகவமைப்பாக, மனித மனங்களின் சிடுக்குகளிடையே ஊடுருவிச் செல்லும் எழுத்தாக விரிந்து செல்கின்றது.

வேம்பலை போன்ற ஊர்கள் இது போன்ற புதினங்களில்தான் உறைந்து வாழ முடியும்.  நிஜத்தில் அவை காலத்தின் போக்கில் கரைந்து உருமாறி வேறோரு வடிவம் பெற்று விடுகிறது.  முன்பு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிரடி மாற்றங்கள் எல்லாம் இன்றைய தொழில்நுட்ப பிரவாகத்தில் பத்து பதினைந்து ஆண்டுகளிலே பெரு மாற்றங்களை பெற்று விடுகின்றன.   வேம்பலை ஓர் உதிரி கிராமம்.  எங்கோ இருக்கும் பெருநகரங்களின் தொடர் இயக்கத்தை நம்பி தொலைதூர விளிம்பில் உறைந்திருக்கும் கிராமம்.  காட்டு மூலிகைகளைக் கொண்டு சாயம் காய்ச்சி பெருநகரங்களின் பட்டறைகளுக்கு கொண்டு செல்லும் சாயக்கார குடும்பங்கள், சட்டி பானை செய்யும் குயவர்கள், இரண்டொரு தச்சு ஆசாரிகளின் குடும்பங்கள்,  பழமையான சுவடிகளை காத்து நிற்கும் ஒரு கோவில்மடம், ஊருக்கு ஒரு நாவிதன் என்றிருந்த சிறிய ஊரில், களவுத் தொழிலில் ஈடுபடும் வேம்பர்கள் வந்து சேர்கிறார்கள்.   பிறகு அவர்களையும் அந்த ஊரையும் பற்றி தொன்மக் கதைகள் உருவாகத் தொடங்குகின்றன.   கிழக்கிந்திய கம்பெனியர் காலத்தில் ஒரு வெள்ளைக்காரத் துரைக்கும், குரங்காட்டி வேம்பனுக்குமான ஒரு உளவியல் சண்டை பற்றிய கதை பிரசித்தமானதாக அந்த ஊரில் தற்போதும் வழங்கி வருகிறது.  

வேம்பலையின் கதைக்கு இணையாக நாகுவின் கதையும் நாவலின் ஓட்டத்தில் கலந்து வருகிறது.  வெக்கை நிலத்தின் விளைவாக நாகுவிற்கு அம்மை போடுவது, சமண துறவிகள் வேம்பலை கிராமத்திற்கு வந்து போவது, தொழுவத்தின் சட்டியில் வளர்ப்புப் பிராணியாக இருக்கும் ஆமை களவாடப்படுவது என்று கதைப் பின்னல் மாறி மாறிச் செல்கிறது.  சென்னி கிழவன் ஒரு காலத்தில் வழிபறிக் களவில் பிரசித்தமானவனாக இருந்திருக்கிறான்.  வடகுறிச்சி கோவில் பண்டாரத்தின் மகள் தேவானையுடனான சிங்கியின் காதல் ஒரு தனி கிளைக்கதையாக, சொல்லப்படாததொரு காதலைச் சொல்லிச் செல்கிறது.  மாட்டு வைத்தியம் பார்க்கும் குருவனுடன் பதினெட்டாம்புலி ஆட்டம் ஆடும் சிங்கியின் முதுமை வாழ்க்கை அந்த வற்றிப் போன வசந்தத்திற்கு மாற்றாக துயர் மிகுந்த வாழ்க்கையாக நகர்கிறது. போக்குவரத்து வண்டிகளை மறித்துக் களவாடும்போது சிறுமிகளின் கழுத்து காதில் இருக்கும் நகைகளைத் தொடாதவனாம் சிங்கி.  இந்த வேடிக்கை இயல்பை புரிந்து கொண்டு வழிபோக்கர்கள் அவனை ஏய்ப்பது ஒரு நல்ல சிறுகதைக்கான இயல்பு கொண்டது.  தென் தமிழகத்தின் குற்றப்பரம்பரைகளின் இது போன்ற பதிவுகள் சில தமிழ்த் திரைப்படங்களின் பகுதிகளாகவும் இடம்பெற்றிருந்திருக்கின்றன.  

இந்தப் பெரு நாவல் நான்கு பருவங்களாக - கோடை பருவம், காற்றடி காலம், மழைக்காலம், பனிக்காலம் எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் புத்தகத்தின்  கிட்டத்தட்ட சமபாதிக்கு கோடைப் பருவ கதைகள் வியாபித்திருக்கின்றன.  ஓரிரவில் நீலாவிற்கு உண்டாகும் மனோவியாகூலங்கள் அவளுடைய இறப்பிற்கான முன்னறிவிப்புப் போன்றொரு தோற்றத்தை அளிக்கும்படி அமைந்திருக்கிறது.  நாவலின் கதையோட்டத்துடன் ஒத்திசைந்து வரும் இது போன்ற விவரணை வடிவங்கள், புனைவெழுத்தின் மதிப்பை ஓரிரு புள்ளிகள் உயர்த்திக் கொண்டு போகின்றன.  பக்கீரின் வரவும் மறைவும், அதைத் தொடர்ந்து பக்கீரின் குடும்பம் வேம்பலையில் தங்குவது, காயாம்பூவின் கல்யாணம், , நாகுவின் தமக்கை நீலாவின் மரணம், பின்னர் வேணியின் திருமணம் என்று நாவலின் கோடைப் பருவம் முடிகிறது.  வேம்பலையை விட்டு நாகுவின் தாத்தாவுடைய ஊரான தாதன்பட்டிக்கு கிளம்புகிறார்கள். 

நாகுவிற்கு அதொரு புலம்பெயர்தல் போன்ற அனுபவம்.  வேம்பலையும், இறந்துபோன நீலா அக்காவும், அம்மாவும், வேம்பலை ஊரும் அவன் மனதில் எப்போதும் தளும்பிக் கொண்டிருக்கிறார்கள்.  காற்றடி பருவத்திற்கு ஏற்ப, நாகுவின் இளமைக்கால வாழ்க்கையும் அலைக்கழிகின்றன.  தாத்தாவுடன் ஊரூராக மாடுத்தரகு தொழில் செய்து வருவதற்கிடையே சாராயம், சீட்டு விளையாட்டு, திருவிழாக் கொண்டாட்டங்களில் பெண்பிள்ளைகள் சகவாசம், அடிதடி கத்திக் குத்து என பலதரப்பட்ட அனுபவங்கள் அமைகின்றன.  இடையே வேணி அக்காவின் குடும்பமும், சந்நியாசியாக அலையும் அப்பாவும் மீண்டும் வந்து சேர்கிறார்கள் நாகுவின் வாழ்க்கையில்.  சுற்றியலைந்த வாழ்க்கை வேம்பலைக்கு வந்து மீண்டும் மாட்டு களவு, துப்புக்கூலி என்று திசைமாறி நிற்கிறது.  தொடர்ச்சியாக குடிப்பழக்கம், கொலைமுயற்சி, மனச்சிதைவு என்று சுழன்றடிக்கும் சம்பவங்களிடையே, ரத்னாவதியின் வயிற்றிலே கரு உருவாகுவதும், அய்யாவு தாத்தா அவனுக்கு மல்லிகாவைத் திருமணம் செய்து வைப்பதும், போலிஸ்காரர்கள் வேம்பலையைச் சுற்றி வளைத்து, வேம்பர்க்களை தினமும் கச்சேரிக்கு ரேகை வைக்கச் செய்வதோடு, இறுதியில் போலில்ஸ் துப்பாக்கிச் சூட்டில் நாகு இறப்பதோடு காற்றடி காலம் நிறைவுடைகிறது.  ஒரு கவித்துவ முத்தாய்ப்பாக, நாகுவின் சிறுவயது தோழியான ஆதிலட்சுமி தன் மகனோடு வந்து  அவனை சந்திக்கும் காட்சி இருக்கிறது.  

வெயில் பருவத்தை விட, காற்றடி காலம் சம்பவங்களின் அடர்த்தியிலும், விவரிப்பிலும் செறிவாகவும் விறுவிறுப்பாகவும் செல்வதைப் பார்க்க முடிகிறது.  மூன்றாவது பகுதியான மழைக்காலம் முழுவதும் நாகுவின் வாரிசுகளான திருமால் மற்றும் வசந்தாவைப் பற்றிய கதைகள் மாறிமாறி இடம்பெறுகின்றன.  முதல் பகுதியில் வீட்டில் தங்காமல் சுற்றிக் கொண்டிருந்த நாகுவின் தந்தையான முருகு, நாகுவின் மரணத்திற்குப் பின்னர் முழுவதுமாக தன்னுடைய மருமகள் மல்லிகா, பேத்தி வசந்தா எனத் தங்கிவிடுகிறார்.  ஆனாலும் வேம்பலையின் கசப்பு நாக்கு தீரா விடாயுடன் அவரையும் காவு வாங்கிவிட, மல்லிகா வேம்பலையின் நீண்ட குருதித் தடத்தைப் பற்றி மருகிக் கரைகிறாள்.  வேம்பலையை வெறுத்து வெளியேறும் மல்லிகாவின் மகளுக்கோ ஒரு வேம்பன்குடியின் மகள் உற்ற தோழியாக அமைகிறாள்.  

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கும், புட்களும் சிலம்பின என ஆண்டாள் நாச்சியார் விவரிக்கும் பனிக்காலத்தில், உதிரித் திரிகளை இணைத்து இந்த பெரு நாவல் முடிவடைகின்றது.  நாகுவின் மகளான வசந்தா வேம்பலைக்கு திரும்பி வந்து வாழும் விருப்பம் கொள்கிறாள்.  புதியதாக பிறந்த குழந்தைக்கும் நாகு என்றே பெயரிட விரும்புகிறாள்.

இந்த பெருநாவலின் போக்கை மூன்றாகப் பிரிக்கலாம்.  முதல் பகுதியில் நாகுவின் பால்யப் பிராயமும், வேம்பலை கிராமத்தின் சூழலும் இயல்பாக பொருந்தி வருகின்றது.  அப்படியே நாகுவின் இளமைக்காலமும், அவன் வேம்பலையை விட்டகன்று பிறகு மீண்டு வருவதும்,  இறப்பு வரையிலுமான அவனுடைய பிற அனுபவங்களும் கோவையாக சொல்லப்படுகின்றன.  இடையே வரும் ரத்னாவதியின் பாத்திரம், பிறகு தனித் திரியாக பிரிந்து செல்கின்றது.  ரத்னாவதியின் வரலாறு, வேம்பலை கிராமத்தின் சூழலோடு இணையாது தனித்த கதையாகவே பயணிக்கிறது.  சொல்லப்போனால், ரத்னாவதியின் தொழில், அவளுடைய சுற்றம், நண்பர்கள் போன்றவை தனி நாவலாகவே கொள்ளப்பட்டிருக்கலாம்.  திருவிழாக் கொண்டாட்டங்களில் அறிமுகமாமின்ற நாகுவுடன் ஓரிரு காட்சிகள் பகிர்ந்து கொண்டாலும், ரத்னாவதியின் கதை மிகவும் சுவாரசியம் நிரம்பியதாக சொல்லப்படுகிறது.  எங்கோ சந்தித்தவனின் பிள்ளையை பெற்று வளர்க்கிறேன் என்று தீர்மாணிக்கும் ரத்னாவதிக்கு பின்னாளில் பூபாலனோடு காதல் தகைவதும், ஜெயராணியுடன் கொள்ளும் தீரா அன்பும், தன் வாழ்வின் தீராத் துயரச் சூழலை சமாளித்து வாழ்வில் தலைநிமிர்ந்தெழும் தோழியரின் வரலாறும் துலக்கமாக வந்திருக்கிறது. ரத்னாவதியின் மகன் திருமால் மிஷனரி பள்ளிகளில் பயின்று தனக்கானதொரு தனித்துவ வாழ்க்கையை அமைத்துக் கொள்வது ரத்னாவதியின் கதைக்கு பாந்தமான அனுபந்தம் எனலாம்.

மூன்றாவதாக நாகுவின் மகளான வசந்தியின் பள்ளிப்பருவம் அருமையானதொரு நெடுங்கதையாக இடம்பெற்றிருக்கிறது.  ரத்னாவதி ஜெயராணி நட்பை விட இன்னமும் இறுக்கமானதொரு நட்பாக வசந்தி ஜெயக்கொடி நட்பு வடிவம் கொண்டு எழுகிறது.  இரண்டு தோழிகளும் ஒருவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் சிறுவயது அபத்த சிந்தை எழும் அளவிற்கு அப்படியொரு இறுக்கமான நட்பு.  ஆனால் காலப்போக்கில் இரு நண்பிகளும் பிரிந்து போக, வசந்தியின் திருமண வாழ்க்கையிலும் அதன் பிரதிபலிப்பாக அமைந்து போகிறது.

நாம் எண்ணிய இலக்கிற்கு செல்லாது ஓடம் வேறு திசையில் திரும்புகின்ற போது, அத்திசையைப் பற்றிக் கொள்ள வசந்திக்கு, அவள் அய்யாவின் ஊரான வேம்பலை உதவுகிறது.  தன் வாழ்வின் தொடக்கத்தை வேம்பலைக்கு குடிபெயர்வதோடு இணைத்து, தான் கண்டேயிராத தந்தையை, புதியதாக பிறந்த மகவின் தோற்றத்திலிருந்து புதுப்பித்துக் கொள்கிறாள்.

ஓரிடத்தில் வேம்பலைக்கு நூதன கடிகாரம் ஒன்றை நிர்மாணிக்க தேவிப்பட்டினத்திலிருந்து மரைக்காயர் ஒருவர் வருகிறார், ஆறு மணி ஒலிப்பதற்கு ஆறு பொம்மைக் குரங்குகள் கடிகாரத்திலிருந்து வெளிப்படுவதைப் போல நிர்மாணிக்கிறார்.  அந்தக் குரங்குகள் ஊராரின் கவனத்தைப் பெறுவதோடு, வேண்டாத சிக்கல்களையும் உண்டாக்குகின்றன என்பதுபோன்ற் மிகுகற்பனை இடம்பெற்றிருக்கும்.  பொம்மைக் குரங்குகள் அடங்கிய நூதன கடிகாரம் போல், நெடுங்குருதி புதினம் காலத்திற்கு ஒரு தோற்றம் கொண்டு வாசிப்போரை வியக்க வைக்கின்றது.   

பூக்காத ஊமை வேம்பு மரமொன்று அக்காலத்தில் வேம்பர்களை தூக்கிலிட்டதற்கு சாட்சியாக இருக்கிறது.  இன்று அதுவே ஒரு தொன்ம வழிபாட்டு சின்னமாக மாறி, அதன் பிசினை அனுமதிக் கேட்டு வெட்டி எடுக்கும் தச்சர்களுக்கு வேம்பின் மணத்தோடு அளிக்கின்றது.  கசப்பின் எல்லையில் கணிந்து வரும் அந்த இனிமையான மணம், இந்த நாவலை முழுவதும் வாசித்து முடித்ததும் நம்மையும் நிறைக்கின்றது.    



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம்

 நம்பியின் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை படிப்பது 'இன்பமும் துன்பமும்' கலந்தது என்று போகன் சங்கர் வேடிக்கையாக குறிப்பிடுகிறார். படிப்பது இன்பம் என்றால், இது போன்ற ஆழ்ந்த கட்டுரைகள் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் காணப்படுவதில்லை என்ற நினைப்பு துன்பம் என நாம் அதைப் புரிந்து கொள்ளலாம்.

ரொபர்தோ பொலானோ (Roberto Bolaño), ராபர்ட் வாரன் (Robert Warren), மேக்ஸ் சீபால்ட் (W. G. Sebald), மார்சல் ப்ரூஸ்ட் (Marcel Proust), டி எஸ் எலியட் (T S Eliott), நைபால் (V S Naipaul), சால் பெல்லோ (Saul Bellow), ஆல்பர்டோ மாங்கெல் (Alberto Manguel), கொர்த்தாஸார் (Julio Cortázar) போன்ற உலக இலக்கிய படைப்பாளிகளைப் பற்றியும், பேகம் ருகையா, தாராசங்கர் பங்கோபாத்யாய, பாதல் சர்க்கார் போன்ற இந்திய இலக்கியவெளியில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்களை பற்றியும், சி சு செல்லப்பா, அசோகமித்திரனில் தொடங்கி சமகாலத்து கவிஞர்களான ந ஜெயபாஸ்கரன் மற்றும் இன்றைய இணைய தலைமுறையின் நட்சத்திரங்களான மயிலன் சின்னப்பன், போகன் சங்கர், சுனீல் கிருஷ்ணன், ரா கிரிதரன், காலத்துகள், எஸ் சுரேஷ் போன்றோரைப் பற்றியும் நம்பியின் பார்வையில் விரிவான விமர்சனக் கட்டுரைகள் வெளி வந்திருக்கின்றன.
ஓர் அரிய, அசந்தர்ப்ப தருணத்தில் என்னுடைய 'கால்பந்தாட்டம்' பற்றிய கவிதை ஒன்றைக் கூட சிலாகித்திருந்தார் நம்பி. அக்காலத்தில், ஞாலத்தின் மானப் பெரிய தருணங்களில் ஒன்று.
அப்புறம்தான் அது நிகழ்ந்தது. 'அரூ' என்றோர் அறிவியல்-புனைவுகளுக்கான பத்திரிகை தொடங்கப்பட, நம்பி 'புனைவாசிரியர்' அவதாரம் எடுத்தார். நகுலனின் வசனங்கள் என அவருடைய புனைவுலகம் ஒரு புதிர்பாதை (Maze track) என பேருரு எடுத்துக் கொண்டது.
விரிந்த வாசிப்பின் பின்னணியிலிருந்து, தன்னை ஒரு படைப்பாளியாக முன்னிறுத்திக் கொள்வோரின் ஆதார சிக்கல், அவர்களே அவர்களுடைய எழுத்தின் தீவிர விமர்சகராக இருப்பார்கள். அந்த அக்னி பரீட்சையைக் கடந்து அவர்கள் மேலெழுந்து வருவதே அவர்களுடைய முதல் வெற்றி.
சுனீல் கிருஷ்ணனின் தலைமையில், போகன் சங்கர் வெளியிட, கார்த்திகை பாண்டியன் பெற்றுக் கொள்ள நம்பி கிருஷ்ணனின் 'கடவுளும் கேண்டியும்' சிறுகதைத் தொகுப்பு, இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் சிறப்பானதொரு முறையில் வெளியாகி இருக்கிறது.
Nakulvacan had arrived. வாழ்த்துகள்.
('கடவுளும் கேண்டியும்' நூலின் முன்னுரை என அடியேன் எழுதியது, தற்போது சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கிறது. அதன் மறுபதிப்பு இங்கே)



ரு கதை அதனை எழுதியவரை விட்டு வாசகனை நோக்கிம் நகரும் வெளியில், அக்கதையின் ஆத்மா தன்னை நிகழ்த்திக் கொள்கிறது என்கிறார் நகுல்வசன்.  கேட்பதற்கு ஏதோ புரிவது போலவும், அதே சமயத்தில் புரியாதது போலவும் இருக்கிறது.  மேற்பட்ட வாசகம், இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘கடவுளும் கேண்டியும்’ என்கிற கதையில் இடம்பெற்றிருக்கிறது.  பார்த்தவுடன், வாசகர்கள் தாவிக் குதித்து தாண்டி ஓடும் பாண்டி ஆட்டத்து கட்டங்கள் போலத்தான் நகுல்வசனின் புனைவுகள் சுவாரசிய முகப்புகளைக் கொண்டிருக்கின்றன.  ஆனால் அவை சட்டென முப்பரிமான தோற்றம் கொண்ட புதிர் பாதைகளென (Mazes) நம்மை வெவ்வேறு திசைகளில் செலுத்துகின்றன.  திரும்பும் இடங்கள் எல்லாம் புதிய வாசல்களைக் கொண்டு வளைந்து வளைந்து செல்லும் புதிர்பாதைகள்.

கதைசொல்லிகளுக்கும் வாசகர்களுக்கும் ஓர் உணர்வுமயமான ஒப்பந்தம் அமைய வேண்டியிருக்கிறது.  ஆயுர்வேத பத்திரிகை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் கந்தசாமி பிள்ளை, ஒரு காலணாவிற்கு (1940களின் நாணயம். ஒண்ணரை பைசாவிற்கு சற்றே கூடுதலான மதிப்பு கொண்டது) கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு கடவுள் பிரசன்னமாகிவிடுகிறார். 

அவ்வளவே ஆன விவரணையுடன் புதுமைப் பித்தனுக்கு தனது புனைவு வெளியில் கடவுளை ஒரு கதாபாத்திரமாக்கி விட முடிகிறது. அதை வாசகர்களாகிய நாமும், அப்படியே ஏற்றுக் கொண்டு கதைக்குள் புகுந்து விடுகிறோம். நம்பிக்கை மாறுபாடோ, பாரபட்ச கண்ணோட்டமோ எதுவுமில்லாமல் பிள்ளையவர்களின் அனுபவத்திலிருந்து, அவருடைய கடவுள் பிம்பத்தை நாமும் ஒற்றியெடுத்து அனுபவித்து, ரசித்து சிரித்து வைக்கிறோம். 

“உங்களுடனெல்லாம் கூட இருந்து வாழ முடியாது” என்று ஒட்டுமொத்த மனிதர்களைப் பற்றியும் அங்கலாய்த்து விட்டு மறைந்து போன கடவுளை விட, அவருடன் சமத்காரமாக பேசி ஜீவிய சந்தாவை வசூலித்து விடும் கந்தசாமியை விட, ஊருக்குப் போய்விட்ட தாத்தாவைக் கேட்டுக் கொண்டே எழுந்திருக்கும் குழந்தையிடம் ஒரு மகத்தான உணர்வுப் புள்ளியை பொதிந்து வைக்கிறார் புதுமைப்பித்தன். பிள்ளைக்கு வரும்படி ஒரு ஜீவிய சந்தா என்றால், நமக்கு வரும்படி அந்தக் கதையின் அங்கதமும், வாசிப்புச் சுவையும், தத்துவப் புலங்களும், இது போன்ற உணர்வு மையங்களும். 

1940-களில் கட்டிய ஆயுள் சந்தாவிற்கு இன்றுவரை ஒரு சஞ்சிகையும் கிடைக்கப் பெறாத கடவுள், கந்தசாமி பிள்ளையின் ஆயுர்வேத கட்டுரை ஒன்றைத் தேடி, பிள்ளையவர்களின் பேரனின் முன்பு, அதே பிராட்வே, எஸ்பிளனேட் சந்திப்பில் பிரசன்னமாகிறார். இம்முறை, இந்த எஸ்பிளனேடு சந்திப்பு, பாஸ்டனில் இருக்கும் எஸ்பிளனேடு ஆற்றின் ஓரமாக இருக்கிறது. பேரப்பிள்ளையான கந்தசாமி (அமெரிக்க சூழலுக்கென ‘கேண்டி’), மெய்நிகர் கணிணியியல் சஞ்சிகை நடத்துகிறான். படைப்புக் கடவுளுக்கென புதிய படைப்புலகங்கள் திறக்கின்றன. 

கதாசிரியர் நகுல்வசனை நாம் சென்றடையும் முன்னர், ஓர் இலக்கிய விரிவுரையாளரின் பெருநிழலை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. நுட்பங்கள், உத்திகள், பாணிகள் என்று திறமைமிக்க இலக்கிய வித்தகரின் உலகு அது. புதுமைப் பித்தனின் மூன்றாம் தலைமுறை கதைசொல்லிகளென செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சினாப்டிக் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக விவரித்து கணிணியையும் கண்ணீர் மல்க வைக்க முடியும் என்கிறார் நகுல்வசன். 

நியூரோ மேப் வழியே கடவுளின் நினைவு அடுக்குகளை படம் பிடித்து அவருடைய உயிர்த்தெழலை, அதன் வழியே அவர் கொள்ளும் விழைவை காட்சிப்படுத்துகிறார் கதாசிரியர். தாத்தா கந்தசாமி பிள்ளையுடன் தத்துவ விசாரம் நிறைவு கொள்ளாது, விடைபெற்றுச் சென்ற கடவுளுக்கு, பேரன் கேண்டியின் வி ஆர் (Virtual Reality) சோதனைகள் வழியே அவருடைய விழைவுகள் நிறைவு கொள்கின்றன.  கேண்டி ஜாக்கிரதையாக, தாத்தாவின் நண்பருக்கென ஆண்டு சந்தாவை மட்டும் பற்று வைத்து, கடவுளுக்கு நல்ல மனுஷன் என்று சான்றிதழ் அளிக்கின்றார். 

தமிழ் இலக்கியத்தின் ஒரு சிறந்த புனைவை அதன் உணர்வுபுள்ளிகளின் தாக்கங்களை அடையாளப்படுத்தி, அறிவியல் புனைவு வெளியில் அதற்கென ஒரு நீட்சியை உருவாக்கியவர், அடுத்து, செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் கொண்டு “இறைவர்க்கோர் பச்சிலை” சிறுகதையில் தி. ஜானகிராமனை பற்றிக் கொள்கிறார்.  

செவ்வியல் சங்கீதத்திற்கான அடிப்படைகளை கணிணிமயமாக்குவதோடு, பாடகரின் மனோதர்ம கூறுகளை இணைத்து கச்சேரி செய்யும் ஏஐ பாடுகள் (AI Bots) என்று சுவாரசியக் களம். மெள்ள மெள்ள மணி ஐயர், அரியக்குடி ராமானுஜர், முசிறி சுப்ரமணியம், மகராஜபுரம் விஸ்வநாதையர் என்று பிரபலங்களின் பிரத்யேக நுணுக்கங்களை, திஜாவின் பாணியில், ஆங்காங்கே அலாதியான வர்ணனை வடிவங்களில் தூவிக்கொண்டு வருகிறார்.  காருகுறிச்சியாரின் பிர்காவைப் பற்றிய குறிப்புடன் கணிணியுடனான விவாதம் அப்படியே அறிவியல் புனைவு வெளியில் நம்மை நேரடியாக இறக்கி விட்டுவிடுகிறது.  நல்ல குரல்வளமும், திடமான சாகித்ய பாடமும், ஸ்வரபிரஸ்தாங்களில் தீர்க்கமும், ராக லட்சணங்களின் பூரண ஞானமும், இன்னமும் பல சங்கீத நுணுக்கங்கள் கைவரப் பெற்றிருந்தாலும், பிரவாகமென நிகழும் பாடலுக்கென ஒரு தருணம் அமைய வேண்டியிருக்கிறது.  சங்கரனின் பிலச்சுடேவையும், வதஸி யதி அஷ்டபதியையும் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆசிரியர் அமைத்து வைத்திருந்ததை வாசிக்க நமக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.  அந்த மனோதர்மத்தைத் தேடிச் செல்கின்ற சிஷ்யனுக்கு ஒரு சிறு உபதேசமென மோகமுள் பாபுவை உதாரணமாக காட்டுகிறார் சங்கரன்.  பாரம்பரிய செவ்வியல் கலைக்கும், முன்னேறிப் பாய்ந்து செல்லும் தொழில்நுட்ப பிரவாகத்திற்கும், யாவர்க்கும் ஒரு பச்சிலை கொண்டு பூஜிக்க வேண்டும் என்ற திருமூலரின் கூற்றைக் கொண்டு வழிபடுகிறார் ஆசிரியர்.  சங்கரன் தன் அகத்தில் ஒலிக்கும் ஆதார ஸ்வரத்தின் ரீங்காரத்துடன், இசைக்கு நெக்குருகி நிற்கும் மனைவியிடம் திருமந்திர வரிகளைக் முணுமுணுத்தபடி அமைதி அடைகிறார்.  அந்தக் கதையில்,  ஒரு சிறிய வரியில் ‘கைகளால் கடிதம் எழுதுவதில்’ இருக்கும் அலாதியான சுகம் பற்றி வருகிறது.  

அந்தப் புள்ளியை அப்படியே விவரித்துக் கொண்டு “அரூ அறிபுனைப் போட்டி #500” சிறுகதையில்.  நான்கு பகுதிகளாக, அறிவியல் நுட்பங்களின் கார்னிவெல் ஒன்றை நிகழ்த்துகிறார் நகுல்வசன்.  அதிவேக கணிணித் திறன் மானுடத்தை விஞ்சி, பூமியைக் கையகப்படுத்திய ஒரு காலத்தில், நுண்கிருமி தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட போதிலும், ஓர் எதிர்பாராத அபாயம் ஒன்று கனன்று கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகிறது.  அதிவேக கணிணிகள் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிக் கொண்ட காலத்தில், மூளைத்திறன் எனும் நுட்ப வேறுபாட்டிற்காக மானுடத்தனத்தை ஓர் அடையாளமாக மட்டும் கொள்ள, அதன் பக்கவிளைவாக பரந்து விரியும் கற்பனை வெளி எனும் வழூவை சீர் செய்வதாக  முடிகிறது அந்தக் கதை.

பாரம்பரிய கர்நாடக சங்கீத மரபு, தமிழிலக்கிய நுகர்ச்சியின் கிளர்த்தல்கள், இவற்றின் பின்னணி கொண்ட கதை மாந்தர்களைக் கொண்டு அறிவியல் புனைவு வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நம்மை, முற்றிலுமான வேறொரு அனுபவத்திற்குள் ஆழ்த்துகிறது “வூப்பிங்-பை’.  ஓர் அமெரிக்கக் குடும்பத்தின் வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு அசலான, யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான பதிவாக அமைந்திருந்தது.  நேரடி இந்தியப் புனைவுகளில் இதொரு குறிப்பிடத்தக்க முயற்சி.  பெக்மென் தம்பதியரின் வாழ்வில் ஒரு முக்கியமான காலக்கட்டம் அது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லவிருக்கும் மகனுடனான அவர்களுடைய நினைவு தொகுப்பு.  மகனுடைய பதினெட்டாவது பிறந்தநாளை சாக்காக வைத்து, தனக்குப் பிடித்த இசைத்தட்டுகளை, ஆடம்பரமான விலைக்கு தந்தை வாங்கி வருகிறார்.  இப்படித்தானே, பிள்ளைகளை முன்னிறுத்தி, அவர்களை மையப்படுத்தி, பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கை சக்கரத்தை சுழல விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  டிம்மிக்கு பிடித்தமான வூப்பிங்-பை சமைக்கும்போது, அது சரியாக வரவேண்டும் என்று சாரா தெய்வங்களிடம் வேண்டுதல் வைக்கின்றார்.  ஏனோ,  அவருடைய வேண்டுதல்களுக்கு அவை செவிசாய்க்கவில்லை.   கதையின் இறுதியில் சாராவிற்கே உண்டாகும் வூப்பின் பை-க்கான ஏக்கத்தையாவது அந்த தெய்வங்கள் மனமிரங்கி தீர்த்து வைக்கட்டும்.  

ஒரு கொடூர வன்புணர்வு அசம்பாவித்த மனநெருக்கடியிலிருந்து மீண்டெழும் மனப்போராட்டத்தில், நிஜக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் உறுதியுடன் தன்னை நடத்தி செல்லும் ஜென்னியின் அனுபவ பயணமாக இருக்கிறது ‘நிஜத்தின் நிழல்’.  எதிர்பாரா தருணத்தில் தன் மீது பாய்ந்து மிருகபலத்துடன் ஆக்கிரமிக்கும் ஒருவனை எதிர்த்து நிற்கும் அந்த தருணத்திலேயே ஜென்னியின் போராட்டம் தொடங்கிவிடுகிறது.   மோசமாக தாக்கப்பட்டு நினைவை இழப்பதற்கு முன்பு, அந்தக் குற்றவாளியின் அடையாளங்களை நினைவில் தொகுத்துக் கொள்ள முயல்கிறாள். அந்தக் கோரச் சம்பவத்தின், அருவெறுப்பான மனப்பாதிப்புகளையெல்லாம் கடந்து, போலிசார், வக்கீல்கள், கோர்ட்டார் என்று பல அமைப்புகளின் சட்ட நடைமுறைகளில் திடமான பங்கெடுத்து, குற்றவாளிக்கான தண்டனையை பெற வைக்கிறார்.  ஆனால் ஜென்னியின் பயணம் அங்கே முடியாமல், மற்றுமொரு திருப்பத்துடன் தொடர்கிறது.  இம்முறை, குற்றவுணர்ச்சி மிகுந்த மனப்போராட்டத்தின் வழியே.  ரயில்கள் ஓடாத, பழைய இருப்புப் பாதையில் ஓடிக் கொண்டிருக்கும் ஜென்னியின் பாதையின் இறுதியில் என்றாவது ஒரு விளக்கொளி எழக்கூடும்.  அந்த விளக்கொளியின் பின்னரும் ஒரு கரிய நிழல் படிந்துக் கொண்டிருக்கக் கூடும்.  

காந்தியின் வாழ்வனுபவங்களைப் பற்றி நாம் அறிமுகமாவதற்கு முன்பே அவரைப் பற்றிய மகாத்மா என்கிற பிம்பம் நம்மைப் பற்றிக் கொண்டு விடுகிறது.  ஆனால், அவரை ஒரு மனிதனாக அணுகி, அந்த வாழ்வனுபவங்களை நாம் உன்னிப்பாக படிக்கும்போது, சராசரி நிலையிலிருந்து உன்னதத்தை எட்டிப் பிடிக்கும் ஓர் இலட்சியவாத தத்தளிப்பைக் காண முடியும்.  தன் அன்னைக்கும், மனைவிக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் மனிதன், அந்த எளிய வாக்குறுதிகளிலிருந்து பிறழாமல் இருக்க அவர் கடைபிடித்த நிலையுறுதியின் வீச்சு, இந்திய சுதந்திர போராட்டத்தின் ஆணி வேராக நிலைபெற்றது.  டாக்குமென்டரி தரவுகளைக் கொண்டு, அகப் போராட்டப் புள்ளிகளை கட்டமைத்து எழுதிய  நுட்பமான வரலாற்றுப் பதிவு “இவன் மனிதன்’.  

ஒரு புனைவின் நீட்சியாக, அல்லது பக்கவிளைவாக மற்றொரு புனைவை உருவாக்கும் புதிர்பாதை விளையாட்டின் இன்னுமொரு வடிவம் ‘வழியனுப்புதல்’.  பதாகை பத்திரிகையில் ‘சம்பவம்’ என்கிற குறுங்கதை சட்டகத்தில், சிகந்தர்வாசி என்கிற எஸ். சுரேஷ் எழுதிய ‘ஹௌடா’ கதையின், இணை கோடாக நிகழ்கிறது வழியனுப்புதல்.  ‘ஹௌடா’விற்கு முற்றிலும் வேறான சூழல்களின் பின்னணி, கதை மாந்தர்கள், மனநிலைகள் என நிகழ்கிறது ‘வழியனுப்புதல்’.  இடையில் ஒரு புள்ளியில் இரு கதைசொல்லிகளும், இரயில் ப்ளாட்பாரத்தில் நிகழும் ஒரு அசந்தர்ப்ப சம்பவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கால்பந்து போட்டியின் மீது கவனத்தைத் திருப்புகிறார்கள்.  ஆனால் அந்த சம்பவத்தின் பாதிப்பு அவர்களுக்கு இருவேறு மனநிலைகளை அளிக்கிறது.  

சமூக ஊடகங்களில் தங்கள் சுய அனுபவங்களை, சுவாரசிய துணுக்குத் தெறிப்புகளிலிருந்து, ஒரு கேம்ப்ஃபயர் களியாட்டக் கூடலில் சுற்றியமர்ந்து கொண்டு சேர்ந்து உருவாக்கும் கேளிக்கை புனைவுகள்வரை பலவகையில் உருவாகி வருவதைக் காண முடிகின்றது.  மேலும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் கொட்டிச் செல்லும் அரைகுறை பிரதிகள் மலிந்த நவீன காலத்தில், புனைவெழுத்தின் எல்லைகளை நகுல்வசன் அநாயசமாக விரித்துக் கொண்டு செல்கிறார்.  வருங்கால குவாண்டம் கணிணிகளின் அதிவேக செயல்பாடுகளின் நுணுக்கங்களை புதிய கலைச்சொற்கள் கொண்டு அழகுதமிழில் விவரிக்கும் ஒரு கோடியிலிருந்ந்து, ஒரு நவீனக் கவிதையைத் திறக்கும் நுண்ணிய புள்ளியை விளக்கிக் காட்டும் மற்றொரு கோடியின் படைப்பூக்க நிலைக்கு பாயும் நகுல்வசனின் விஷய ஞானம் அபரிமிதமானது.  ஏழு கதைகளைக் கொண்ட இந்த சிறிய தொகுப்பு, நகுல்வசன் அமைக்கும் புதிர்பாதைகளூடே, ஒரு சிறந்த  புனைவுப் பயணத்தை நமக்கு அளிக்கின்றது.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

தமிழ் வாங்கிய தலை

(2024ம் ஆண்டு, ஆலன்டவுன் தமிழ்ச்சங்கம் சார்பாக நடந்த தமிழ்ப்புத்தாண்டு விழாவில் நடத்திய 'தமிழ் வாங்கிய தலை' என்ற தலைப்பில், சங்கப்பாடல்கள் வழியே வள்ளல் குமணனின் கதையை நாடகமாக நிகழ்த்தியதன் எழுத்து வடிவம்).

காட்சி 1:

(பாத்திரங்கள்: புலவர் பெருஞ்சித்திரனார், யானை பொறுப்பாளர், குதிரை பொறுப்பாளர், சிவிகைக்காரர், கருவூலத்தலைவர்)

குதிரைக்காரர்: யானைக் கொட்டடி எப்படி இருக்கிறது?

யானைக்காரர்:  காலையில் இருந்து நான்கு யானைகளை அனுப்பியாகிவிட்டது.  நீங்கள்?

குதிரைக்காரர்: ஏழு குதிரைகள்.  அதில் ஒரு புலவருக்கு செம்மண் நிறத்தில்தான் குதிரை வேண்டுமாம்.  அதுதான் அவர் ஊர் மண்ணின் நிறமாம்.

சிவிகைக்காரர்: சிவிகைகள் மட்டும் இன்று ஐந்து பரிசாக அனுப்பினேன். 

கருவூலத்தலைவர்:  அத்தனை சிவிகைகளுக்கும் கூடவே தூக்கிச் செல்ல ஆட்களும், அவர்களுக்கான பொருளும் சேர்த்துத்தான் புலவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஹ்ம்ம்ம்….

பெருஞ்சித்திரனார்: குடிமக்களே! அதிகாரிகளே! வருத்தம் கொள்ளாதீர்கள்.  அரசன் பொருளை அள்ளிச் சேர்ப்பது வலிமையின் அடையாளம்.  அவற்றை ஓரிடத்திலேயே தேக்கி வைக்காமல், வாரி வழங்குவது அவனுடைய  மாட்சிமைக்கு அடையாளம்.  புலவர்களுக்கு பரிசில் என்பது, அவர் வழியே எளிய மக்கள் அனைவருக்கும் போய்ச் சேரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

யானைக்காரர்: வணக்கம் பெருஞ்சித்திரனாரே! பாடுபட்டு படையும் அரசும் கொண்டு சேர்த்ததை எல்லாம் வள்ளலென இரவலர்க்கு அள்ளிக் கொடுப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது?

பெருஞ்சித்திரனார்: முள்தோள் மூடிய பலாப்பழங்கள் நிறைந்த இந்த முதிர மலையைப் பாருங்கள்.  தோல் நீக்கி இனிய சுளைகளை சுவைக்கும் கடுவன் குரங்கு, அதனை தம் துணைக்கும் பகிர்ந்துண்ண அழைப்பது போலத்தான் இரவலர்க்கு புரவலராய் இருக்கும் வள்ளல்கள்.  இதோ கொடைவள்ளல் குமணன் அவைக்கு நானும் புறப்பட்டுவிட்டேன், தமிழ்ச்சுவையை பரப்புவதற்கு.

[திரை]

 

காட்சி 2:

(பாத்திரங்கள்: மன்னன் குமணன், இளவரசர் இளங்குமணன், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர்)

அமைச்சர்1: பறம்பு மலையின் கோமான் பாரி.  கொல்லி மலை கோமான் ஓரி, மலையமான் திருமுடிக் காரி,  தகடூர் தலைவன் அதியமான் அஞ்சி, பொதினி அரசன் பேகன், மோகிப் புலவர் பாடிய ஆய், வள்ளல் கோன் நள்ளி இவர்கள் வரிசையில் என்றும் இருக்கக் கூடிய முதிர மலை அரசன் குமணன் அவர்களுக்கு வணக்கம்.

குமணன்:  தமிழுக்குத் தலை வணக்கம்.  நற்றமிழில் பாடினீர் அமைச்சரே. குடிகளும் மக்களும் சுற்றமும் உறவினரும் நலம்தானே.

இளங்குமணன்: (இடைபுகுந்து) புலவர்களின் கற்பனையை அமைச்சருமா பரப்புவது?  அள்ளித் தரும் கைகள் என்றும், அரசைக் காத்திடுமா?  வருவாயைத் தாண்டி பரிசுகள் என செலவிடும்  வள்ளல்தன்மையைக் கொண்டு எப்படி அரசு புரிந்துவிட முடியும்?

குமணன்:  இளையவனே.  தமிழுக்கு தொண்டாற்றுபவர்கள் புலவர்கள்.  நாம் அவர்களுக்கு என்ன அளித்தாலும் அது மொழிக்கும், மொழி சார்ந்த மக்களுக்குமாக பரவிச் செல்லும்.  வெகுளாதே.

படைத்தலைவர்: இளவரசரின் கவலையிலும் பொருள் உள்ளது அரசே.  கட்டுக்கோப்பான படைகளை உருவாக்கிவிட்டு, யானைகளையும் குதிரைகளையும் ஈகையென கொடுத்து விட்டால், நாளை அந்நிய படையெடுப்பை எப்படி தடுத்தாள்வது?

அமைச்சர்2: நம் அரசரின் வள்ளல் குணம் நம் நாட்டின் பெருமை.  ஈகை குணத்தால் பயன் பெறும் மக்கள் நலன் உயர உயர அரசின் கோல் உயர்கிறது.  நாடும் உயர்கிறது படைத்தலைவரே.

இளங்குமணன்: இது பொருளற்ற தர்க்கம்.  நிலத்தையும், அரசையும் காப்பதற்கு உரமான படைகள் தேவை.  தமிழ் தனியே நின்று இந்த தரணியைக் காத்திடுமா.

குமணன்: அப்படியா எண்ணுகிறாய்?  (யோசித்தவாறே நடந்து) கேள் தம்பி!  இன்றிலிருந்து இந்நாட்டை நீ காப்பாயாக.  எம் தமிழ்ப் பாசம் உன்னைத் தடைப்படுத்தாது.  இதோ என் உடைவாள் இருக்கிறது.  அதோ உறைந்து வாழ காடும் இருக்கிறது.  இடறின்றி இந்நாட்டை நீயேக் காத்து இன்புற்றிரு. 

(குமணன் உடைவாளை உயர்த்திக் காட்டிக் கொண்டு வெளியேறுதல்)

அமைச்சர்1:  புதிய அரசர் இளங்குமணன் நீடுழி வாழ்க.

இளங்குமணன்:  அண்ணனை திருத்தவே வாதிட்டேன்.  ஆனால் இந்த அரசினை இனி ஏற்று நடத்தும் பொறுப்பில் என்னை அர்பணிக்கின்றேன்.

படைத்தலைவர்: ஆனாலும், இன்றும் குடிமக்கள் அனைவரும் வள்ளல் குமணனையே அரசர் என பாராட்டுவர் இளவரசே.  உங்கள் ஆட்சி பலவீனமாகவே இருக்கும்.

இளங்குமணன்: அதற்கு? (குழம்பியவாறு) என்ன செய்யலாம் என்கிறீர்கள்?

[திரை]

காட்சி 3:

(பாத்திரங்கள்:  அறிவிப்பாளன், ஆவூர் பெருந்தலை சாத்தனார், வள்ளல் குமணன்)

அறிவிப்பாளன்: இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால்… மன்னர் இளங்குமணனுக்கு எதிராக அவரது அண்ணன் குமணன் கலகம் செய்ய முற்படுவார் என்பதால், குமணனின் தலையைக் கொண்டு வருபவர்க்கு, நூறு இலட்சம் பொற்காசுகள் பரிசு.  (இடைவெளி விட்டு) குமணனின் தலையை கொண்டு வருபவர்க்கு மன்னரின் பரிசு நூறு இலட்சம் பொற்காசுகள்.

(சொல்லிக் கொண்டே இம்முனையிலிருந்து அம்முனைக்கு செல்ல, எதிரே ஆவூர் பெருந்தலை சாத்தனார் வருகிறார்)

சாத்தனார்: ஆகா! இதென்ன துயரம்.  வள்ளல் குமணனின் புகழைக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்தால், அவர் நாடிழந்து காட்டில் உறைய, இப்போது அவர் தலைக்கு விலை வேறு அறிவிக்கின்றார்களே.  பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.

(எதிரே வரும் குமணன், புலவரை நிறுத்தி)

குமணன்:  தாங்கள் யார்? அறிவுசால் பெருமை கொண்ட புலவர் பெருமான் போலிருக்கிறதே.

சாத்தனார்: வள்ளல் குமணனைக் கண்டு எம் குறையைப் போக்கிக் கொள்ள வந்த அபாக்கியசாலி.  ஆவூர் முலங்கிழாரின் மகன் பெருந்தலை சாத்தன்.

குமணன்: தமிழைக் கற்றுணர்ந்தவர் எவரும் துரதிர்ஷ்டசாலி இல்லை ஐயா.  செல்லுமிடமெங்கும் சிறப்புதான்.  இதோ உங்கள் துயர் தீர, இந்த உடைவாளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

(குமணன் நீட்டிய உடைவாளைப் பெற்ற சாத்தனார், குழப்பமாகப் பார்க்கிறார்)

குமணன்: குழப்பம் வேண்டாம் புலவரே.  இதோ என் தலை.  வாளால் கொய்து எடுத்துக் கொண்டு எம் இளவலிடம் கொண்டு சேருங்கள்.  நூறு இலட்சம் பொற்காசுகளும் உங்களுக்கே. 

(அவர் முன் மண்டியிட்டு அமர்கிறான்)

சாத்தனார்: (உடைவாளையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கின்றார்) இரந்தோர் அற்றம் தீர்க்கும் வள்ளல் குமணரே! நீர் வாழ்க! மன்னா! உம் ஈகைத்திறத்தை என்னவென சொல்ல.  தமிழுக்கு தன் தலையை ஈந்த தன்னிகரில்லா கொடை வள்ளல் நீ.  (ஒரு கையை நீட்டி அவன் தலையில் கைவைத்து) உன் பரிசினை ஏற்றுக் கொண்டேன்.  இதோ தமிழ், உன் தலையை வாங்கிக் கொண்டு விட்டது.  இனி உன் தலை என் பொறுப்பு. (சிரிக்கிறார்)

[திரை]

காட்சி 4:

(பாத்திரங்கள்:  இளங்குமணன், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர், ஆவூர் பெருந்தலை சாத்தனார்)

அமைச்சர்1: இளவர….. அரசே! இதோ ஒரு செய்தி.  (துயரத்துடன் நிறுத்திக் கொள்கிறார்)

அமைச்சர்2:  ஆமாம் அரசே.  ஒரு துர் செய்தி (அவரும் மேலும் சொல்லாமல் நிறுத்திக் கொள்கிறார்)

(சாத்தனார் தன் கையில் துணியால் மூடிவைத்த தட்டுடன் வருகிறார்.)

படைத்தலைவர்: நம் அறிவிப்பிற்கு பதிலாக இந்தப் புலவர் வந்திருக்கிறார்.  (நிறுத்தி விட்டு) தங்கள் தமையனாரின் தலையை வாங்கி விட்டாராம்.  சாட்சியாக... (மேலே எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொள்கிறார்)

(உடனே பதறிய இளங்குமணன், முன்னே வந்து, தட்டை உற்றுப் பார்க்கிறான்.  ஓரிரெண்டு நொடிகளுக்குப் பிறகும் பதற்றம் விலகாமல் தட்டின் மேலிருந்த துணியை விலக்க, உள்ளே குமணனின் உடைவாள் வைக்கப்பட்டிருக்கிறது.)

இளங்குமணன்: ஐயோ! இது என் தமையனின் உடைவாள்.  இதை அவர் பிரிந்திருந்ததே கிடையாது.  (சாத்தனாரை நிமிர்ந்து பார்த்து) யாரடா, நீ பரதேசி.  அஞ்சா நெஞ்சனும், பெரும் வீரனுமான வள்ளல் குமணனின் உடைவாள் உன்னிடம் எப்படி வந்தது?

சாத்தனார்: அவரே இந்த வாளை என்னிடம் கொடுத்து தன் தலையை வாங்கிக் கொள்ளச் சொன்னார் இளவரசே

இளங்குமணன்: அப்படியானால்… அப்படியானால்… நீ அண்ணனைக் கொன்று விட்டாயா?  (கோபமடைந்து) யாரங்கே… படைத்தலைவரே, இக்கொடுமையை நிகழ்த்திய இந்தப் பரதேசியை இப்போதே கைது செய்யுங்கள்.  இத்தகைய மாபாதகத்திற்கு உத்தரவிட்ட நானும் பெருங்குற்றவாளி.  இக்கணமே நானும் அண்ணனைத் தேடிச் செல்கிறேன்.

(தன் இடையிலிருந்த வாளை உருவ முயல, சாத்தனார் முன்னே வந்து ஒரு கையால் அவனை ஆற்றுப்படுத்துகிறார்)

சாத்தனார்:  இளவரசே! நான் பரதேசியல்ல.  பல தேசமும் சுற்றி வரும் எளிய தமிழ்ப்புலவன்.  நான் மன்னரது தலையை கொய்யவுமில்லை.  உங்கள் சகோதரப் பாசத்தை தொட்டெழுப்பும் திறவுகோலென இந்த உடைவாளை மட்டும் கொண்டு வந்தேன்.  நான் பயின்ற தமிழ் என்றும் தலையை காத்திருக்கிறதே அன்றி அழித்ததில்லை.  இதோ மன்னர் வருகிறார்.

(வள்ளல் குமணன் உள்ளே வருதல்)

குமணன்:  மன்னித்துக் கொள் இளையவனே.  [சாத்தனாரைச் சுட்டிக் காட்டி] தமிழ் என் தலையை வாங்கிக் கொண்டு விட்டதால், அது அழைக்கும் இடந்தோறும் நான் செல்ல வேண்டியிருக்கின்றது.  அதனால்தான் உன்னிடம் கொடுத்த வாக்கை மதிக்காமல் மீண்டும் நாட்டிற்கு வந்தேன். [சிரிக்கின்றான்]

இளங்குமணன்:  (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு குமணன் அருகில் சென்று மண்டியிட்டு) உங்கள் மாட்சிமை புரியாமல் உங்களுக்கு எதிராக வாதிட்டேன்.  கொடும் உத்தரவு பிறப்பித்தேன்.  இப்போது அனைத்தும் புரிந்தது அண்ணா.  தங்களுக்கு என்றும் நான் தொண்டன்.

(குமணன் குனிந்து இளங்குமணனை எழுப்பி அணைத்துக் கொள்ளுதல்)

குமணன்: வருந்தாதே! நாம் இருவரும் தமிழுக்குத் தொண்டர்கள்.  தமிழ் பயின்று அதன் வழி நிற்கும் சான்றோர்க்கும் தொண்டர்கள்.  அன்னை மொழி நம்மை என்றென்றும் வாழ்த்தி நிற்கும் தம்பி.

[திரை]

இறுதிக் காட்சி:

(பாத்திரங்கள்:  குமணன், இளங்குமணன், பெருன்சித்திரனார், பெருந்தலை சாத்தனார், அமைச்சர்1, அமைச்சர்2, படைத்தலைவர், யானை பொறுப்பாளர், குதிரை பொறுப்பாளர், சிவிகைக்காரர், கருவூலத்தலைவர், அறிவிப்பாளர்)

(அனைவரும் ஒன்று கூடி வந்து நிற்க.  சாத்தனார் முன்னே வந்து)

சாத்தனார்: கார் கண்ட மயில் தோகை விரித்தது போல, நீர் பெற்று உயர்ந்து நிற்கும் நிறைவான நிலம் போல, முதிரமலை நாடு வள்ளல் குமணனைப் பெற்று வானுயர போற்றப்படும்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

சிகந்தர்வாசி கவிதைகள்

 "ஈ கபட லோகத்தில் ஆத்மார்த்தமாய ஒரு ஹிருதயம் உண்டாயதான் என்ட பராஜயம்".

சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் கவித்துவ வரிகள் மட்டுமல்ல, அவற்றை, ஒரு மடற்க்குழுவின் வழியே அறிமுகப்படுத்திய இரா. முருகன் (EraMurukan Ramasami ) அவர்கள் மட்டுமல்ல, இவை நிகழ்ந்த காலத்தில் இருந்த பெங்களூர்வாசமும் கவிதைகள் உலகிற்கு என்னை நெருக்கமாக கொண்டு சென்றவை. அப்போது ஒரு சென்னைவாசியான நண்பர், அந்த மடற்குழுவில் பிரசுரமாகியிருந்த என்னுடைய ஆதிகால கவிதையைப் படித்ததும் மெயிலில் தொடர்புகொண்டார். அதொரு இனிமையான நிகழ்வு. ஆனால் அவை அடிக்கடி நிகழ்வதில்லை.
கவிதை வடிவம் பற்றி எப்போதும் நமக்கு சில ஐயங்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அதுவும் இன்றைய வணிக சாத்தியங்கள் கொண்ட தொடர்புவலைகளை பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அபரிமிதமாக இருக்கும் காலக்கட்டத்தில் கவிதைகளின் வயது மிகவும் குறைவு. ஒரு மின்னல் தெறிப்போடு தேங்கி நின்று போனவை பல. முன்னர் ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப்பட்ட நண்பர் ஒருவர், "இது நன்றாக இருக்கிறதா?" எனக் கேட்டு அவர் எழுதிய கவிதை ஒன்றை அனுப்பியிருந்தார். நானும் வழக்கம் போல, கவிதை என்றாலே சப்ஜெக்டிவ்வான விஷயம். ஒரு சாராரிடம் அதொரு மேஜிக்கை விளைவிக்கலாம். வேறு சாராருக்கு அது ஒவ்வாமையைக் கொடுக்கலாம் என்றெல்லாம் விளக்கியிருந்தேன். அந்த நிலையைக் கடந்து செல்ல கால அவகாசம் தேவைப்படும் கலை வடிவம் அது. யாராவது மேடை போட்டு, உணர்ச்சி பொங்க கவிதைகளை வாசிக்கும் வீடியோ கிடைத்தால் வாட்சப்பில் ஃபார்வேர்டு செய்து கொண்டு அமைதியடையும் காலத்திற்கு வந்துவிட்டோம் இப்போது.
இருபத்திநாலு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு பெங்களூர் விஜயத்தில் நண்பர் எஸ். சுரேஷ் (Raaga Suresh) கவிதைகள் பற்றி சற்று விரிவாகப் பேச முடிந்தது. அதைக் குறிப்பிட்டு அவர் ஒரு ஃபேஸ்புக் பதிவும் எழுதியிருந்தார்.
பலருக்கும் மறந்து போயிருக்கக் கூடியது, அவர் 'சிகந்தர்வாசி' என்ற பெயரில் சில புனைவுகளும், கவிதைகளும் முன்பு எழுதியிருந்தார் என்பது.
சிகந்தர்ர்வாசியின் "மங்கலான ஒலி எல்லா பொருட்களையும் அழகாக மிளிரச் செய்கிறது" என்றொரு வரியை வாசித்தபோது, ஷெல்லியின் புகழ்பெற்ற வரிகள் நினைவிற்கு வந்தது.
As in the splendour of the Sun
All shapes look glorious thou gazest on!
('gazest' என்ற சொல்லெல்லாம் கிடையாது என்று இடக்குப் பண்ண காரணம் தேடாதீர்கள். ஷெல்லியின் Epipsychidion தொகுப்பில் காணப்படும் வரிகள் அவை).
இதை நேரடியாக ஷெல்லியிடமிருந்து படிப்பதற்கு முன்னால், பாரதியின் கட்டுரை ஒன்றில் "வெயிலொளி எந்தப் பொருள் மீது பட்டாலும் , அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென ஷெல்லி என்கிற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகின்றான்" என்று எழுதியிருந்ததைப் பார்க்கிறோம். பாரதி மீதான ஷெல்லியின் பாதிப்புப் பற்றித் தனியே ஒரு கட்டுரை எழுதலாம். அதுவும் பாரதியின் வரலாற்றில் அதிகம் விவரிக்கப்படாத அவருடைய மதுரை வாசத்தில் அவருக்குக் கிடைத்த பல தொடர்புகள் அவருக்கு உலக இலக்கியங்களைப் பற்றியும், அரசியலைப் பற்றியும் மிகவும் அழுத்தமான பாதிப்புக்களை உண்டாக்கியிருக்கின்றன. அப்போதுதான் அவர் பல அரசியல் கட்டுரைகளை ஆங்கில பத்திரிகையில் எழுதவும் தொடங்கினார்.
சிகந்தர்வாசி, அந்த அழகூட்டும் செயலை, இறையின் கருணையாக மாற்றிக் காட்டுகிறார் தன்னுடைய அடுத்த வரியில். "இறைவன் கடைக்கண்ணால் மிருதுவாக மனிதனை நோக்குகிறான்".
நாம் அடைந்த தோல்விகளுக்கோ, நிராகரிப்புகளுக்கோ, ஏமாற்றங்களுக்கோ விடை தெரியாமல் தவிக்கும்போது, அதற்கு நிவாரணமென ஏதேதோ கற்பிதங்களை உருவாக்கிக் கொள்கிறோம். ஜாகக பலன்கள், கிரகக் கோளாறுகள், சகுனத்தடைகள் என. ஆனால் இந்த கற்பிதங்களும் அபவாதங்களைத் தோற்றுவிப்பவர்களுக்கு நல்ல துணையாக அமைந்து விடுவதும் உண்டு. 'சகுனம்' என்கிற கவிதையை ஒரு சிறுகதை போல கச்சிதமாக கொடுக்கிறார் சிகந்தர்வாசி. திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணிடம், அவளுக்குப் பார்த்த வரன் பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறது. அது அவள் மனதில் திறந்து வைத்த மகிழ்ச்சிகள் ஏராளம். அவனுடன் பேச ஒரு சந்திப்பும் உருவாகிறது. என்ன செய்தோம் என்று புரியாதளவிற்கு அவள் மனதில் தடுமாற்றங்கள். பிறகு அந்த வரன் கூடிவரவில்லை. காரணம் என்ன என்றால் 'சகுனம் சரியில்லையாம்' என்று சொல்லி விடுகிறார்கள். நிராகரித்தலின் வலிகளை, கோபங்களை எல்லாம் மீறி மனதில் கிடந்து அரற்றும், 'ஏன்' என்ற கேள்வியை சகுனம் மட்டும் கொண்டு மறந்து விட முடிவதில்லை.
அந்தக் கவிதையின் காலம் முழுவதும் அந்தப் பெண் "ஏன் சகுனம் சரியில்லை" என்று கேள்விக் கேட்டுக் கொண்டிருப்பது போல, அதைக் காரணமாகக் குறிப்பிட்டவரும், தனக்கேற்பட்ட சகுணத் தடையை நியாயப்படுத்த காத்துக் கொண்டேயிருப்பார். இவளுக்கு உண்டாகும் எந்த துக்கமும், இவளை நிராகரித்தவனுக்கு, "நல்லவேளை, அவளைக் கட்டியிருந்தா இந்தக் கதிதான் நமக்கும்" என்ற குரூரத் திருப்தி உண்டாகியிருக்கலாம்.
இயற்கையின் சமிக்ஞைகளைப் பற்றி அதீத நம்பிக்கைக் கொண்டிருப்பவர்கள் அப்படியான மனநிலைக்கு கொண்டு செல்லக் கூடிய சாத்தியங்கள் உண்டு.
"கதவுத் தட்டும் சத்தம்" என்றொரு கவிதை. அப்படியாக என்னுடைய நினைவில் தங்கிவிட்டது. சிகந்தர்வாசியின் தலைப்பு 'வழித்துணை'. இல்லாத கதவை இல்லாத ஒருவள் தட்டுவதாக குறிப்பிடும் வரி இல்லாவிட்டாலும் இது ஒரு சர்ரியலிச அனுபவமாக விரிகிறது. எந்த நடையும் முழுமை அடைவதில்லையோ என்கிற கேள்வியை முன்பின்னாக அலசிச் செல்கிறது.
ஒரு திருமண விழாவில் தெரிந்த முகங்களைத் தேடுபவரைப் பற்றிய கவிதையில், மற்றொருவர் முகத்தில் தெரியும் 'பரிச்சயமானவர்' எனும் சந்தோஷம், தனித்திருப்பது போன்ற மனத் தயக்கத்தை போக்குகிறது. இந்த இடம் நமக்கானது என்று நாம் நம்புவதற்கு ஏதோ ஒரு திறவுகோல் தேவைப்படுகிறது. ஒரு சிறு முகக்குறிப்புக் கூட நமக்கு அதைக் கொடுத்து விடுகிறது. அல்லது அப்படியானதொரு நம்பிக்கையை நாம் உண்டாக்கிக் கொள்ளப் போதுமானதாக இருக்கிறது.
அத்வைத தத்துவ சம்பிரதாயத்தில் ஆசிரியர்களாக தட்சிணாமூர்த்தி, தத்தாத்ரேயர், நாராயணன், பிரம்மன் என்றொரு வரிசை உண்டு. வைணவ சம்பிரதாயத்தில் அந்த பெருமாளே முதல் ஆசிரியனாக இருக்கிறார். அடுத்து தாயார், சேனை முதலியார், நம்மாழ்வார் என்று தொடரும். ஓர் எளிய மனதிற்கு கடவுளிடம் நெருங்கிச் செல்லும் அனுபவத்தை மிக இயல்பாக காட்டுகிறது சிகந்தர்வாசியின் மற்றொரு கவிதை. கருவறைக் கடவுளும் முன் நிற்கும் பக்தரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். பக்தரின் அகம் முழுவதும் இறையின் தரிசனம் நிரம்புகிறது. புற அனுபவங்கள் எல்லாம் ஏதேதோ வடிவில் அவருக்கு இறையையே நினைவூட்டுகின்றன. கோவில் பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் கருவறைக் கடவுளைப் பார்க்கிறார். இப்போது கடவுள் வேறெங்கோ பார்ப்பது போல் இருக்கிறது.
பிரும்மத்தை அடைந்து மீண்ட பயணமென கவிதை முடிகிறது. பக்தனும் கரம் கூப்பி சேவித்து விட்டு வீடு மீள்கிறான்.
"எங்கோ வெறித்து பார்க்கும் கண்களில் இப்பொழுது தீ" என்கிற ஒரு வரியைத் தேடித்தான் சிகந்தர்வாசியின் கவிதைகளைப் புரட்டத் தொடங்கினேன். என் நினைவில் தங்கியிருந்த வடிவம் வேறு. நினைவேக்கத்தை தூண்டிவிடும் ஒரு சுவர்ப்படத்தைப் பற்றி என் மனதில் தங்கியிருந்தது. சுருக்கங்கள் நிறைந்த சருமம் கொண்ட மூப்பிலிருந்து ஒரு பிம்பம் தன் இளம் வயதிற்கு திரும்புகிறது. ஒளிரும் வெள்ளை மேகங்கள் அளிக்கும் பரவசங்கள் அப்படியேவாகவா இருக்கின்றன? கடந்து வந்த பாதைகளில் மலைகள் போன்ற தடங்கல்கள் இருந்தாலும் அவற்றைக் கடந்து வேறு மலைகளை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஒரு கட்டத்தில் பாதைகளும் மறைந்து போய்விட்டன. தளர்ந்த நடையில் தொடர்வது மட்டுமே நிஜமாய் நிற்கிறது.
ஒரு நாவலை எழுதுவதற்கு தேவைப்படும் உழைப்பும், தீர்க்கமும், பொறுமையும் ஒரு கவிதையுலகை படைக்கவும் தேவைப்படுகிறது. படைப்பூக்கத்தின் இத்தகைய பரிமாணங்களை தொலைத்து விடாமல் காலத்திற்கு காத்து நிற்பதற்கு இன்னமும் அதிக தீவிரம் தேவைப்படுகிறது.






உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

பரிபூரணம்

(நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் 2023ம் ஆண்டு விழா மலரில் வெளியான சிறுகதை.  அனுப்பிய விஷயமே மறந்து போய் ஆண்டு ஒன்றாகும் நிலையில், நண்பர் சுபா காரைக்குடி விழா மலரின் பிரதி ஒன்றை அனுப்பி வைத்து நன்றிக்குரியவராகிறார்).

"ப்ப இங்க எஸ்டிடி பூத் ஒண்ணு இருந்திச்சு.  பொன்னுசாமி நாடார்னு... ஏ பி என் -னு சொல்லுவாங்க.  அவர் கடை.  இப்ப நெல்லை-னு ஓட்டலாக்கிட்டாங்கப் போல"

காப்பி டபராவின் விளிம்பைப் பிடித்தபடி விசுவநாதன் சொல்லிக் கொண்டிருந்தார்.

நாச்சியாளுக்கு அவர் பேசுவதைப் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பு வந்தது.  கொஞ்ச நாளாக அப்படித்தான் இருக்கின்றது.  

"அப்பா, இங்க இருக்கிற அத்தனை ஷாப் பத்தியும் ஏதோ ஹிஸ்டரி சொல்லிட்டே இருக்கீங்க வந்ததிலேந்து.  இதில இந்த காப்பி வேற.  இரண்டு இஞ்ச் டம்ளர்ல பாலையும் சக்கரையும் கொட்டி.... இப்படியா குடிக்கிறது" 

"நான் எவ்வளவோ இடத்துல காப்பி குடிச்சிருக்கேன்.  ரோம், வியன்னா, இஸ்தான்புல், நியூயார்க், ஜோஹன்ஸ்பர்க், ஹெல்சிங்கி.... ஆனா எனக்கு காப்பின்னு அறிமுகமானது இந்த ஃபில்டர் காப்பிதாம்மா.  பாலோ சக்கரையோ கலந்த மாதிரியும் இல்லாம, காப்பியோட வாசமும் சுவையும் குறையாம.... இந்த பதத்துல குடிச்சுத்தான் பழகியிருக்கேன்.  பிரபஞ்சன் சொல்றார்.... இதான் பூலோகத்து அமிர்தம்னு..."

நாச்சியாள் நிமிர்ந்து, "யாரு பிரபஞ்சன்?" என்று கேட்கும் முன்னர் விசுவநாதன் காப்பியைக் குடித்து முடித்திருந்தார்.  

'அங்க ஒரு சின்ன ஜெனரல் ஸ்டோர் மாதிரி கடை இருந்தது.  கூட டெய்லி பேப்பர், மேகசின்ஸ்னு தொங்க விட்டிருப்பாங்க.  அப்ப யாரோ தொங்கிட்டிருந்த புக்கை காசு கொடுக்காம எடுத்திட்டுப் போயிட்டான்னு புடிச்சு வச்சு அடிச்ச கதையெல்லாம் ஞாபகம் இருக்கு.  நானும் கூட நின்னு ரெண்டு அடி போட்டிருக்கேன். பக்கத்துல ப்ளாட்ஃபார்ம்ல சேரெல்லாம் போட்டு ஒரு இராணியன் டீக்கடை.  சூடான சமோசாவாடோ பிரமாதமான இஞ்சி டீ. கப் அண்ட் சாசர்ல குடுப்பாங்க" என்றார்.

நாச்சியாள், அப்பாவின் முகத்தில் பிரகாசமான இளமை ததும்புவதைப் பார்த்தவாறு இருந்தாள்.  அசோக் நகரின் அந்த வணிக வளாகத்திற்கு வருவதற்கு முன்னர், வளசரவாக்கத்தில் பாட்டி வீட்டின் சுவரில் மாட்டியிருந்த படத்தைப் பார்த்தது நினைவிற்கு வந்தது.  கரும்பச்சை வண்ண பார்டருடனான அடர்த்தியான மஞ்சள் வண்ணப் புடவையில் பாட்டி அமர்ந்திருக்க, சுற்றி நின்றிருந்த மூன்று அத்தைகளும், அத்தனை பேருக்கும் இளையவராக இருந்த அப்பாவும் சேர்ந்திருந்த படம் பெரியதாக பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது.  பாட்டியின் பூர்ண சௌந்தர்யம் அத்தைகளின் முகங்களில் ஆங்காங்கே நிழல் போல படிந்திருந்தாலும் 


அப்பாவின் முகத்தில்தான் முழுவதுமாக நிலை கொண்டிருந்தது. மீசை அரும்பாத வயதோ, அல்லது வைத்துக் கொள்ளவில்லையோ, அப்பாவின் முகம் அப்படியே பாட்டியுடையது போல.  தலையைச் சுற்றி ஒரு துப்பட்டாவைப் போட்டு பாட்டிப் பக்கத்தில் அமர்த்தியிருந்தால், அப்படியே ஜெராக்ஸ் பிரதிதான்.

"முதல் மாடியில் ஒரு ப்ரௌசிங் செண்டர். எதிர்த்தாப்ல ஒரு லெண்டிங் லைப்ரரி.  அங்கிருந்து புக்கு எடுத்திட்டு வந்து இங்க ஒக்காந்து படிச்சிட்டு இருப்பேன்.  சும்மா நெட்வொர்க்கிங் கேபிள், மோடம் மேற்பார்வை பாக்கிறதுதான் வேலை.  அப்ப ரௌட்டர்லாம் கிடயாது. ராமசந்திரன்னு ஒருத்தர்தான் ஓனர்" ஓட்டலை விட்டு வெளிவந்து பக்கவாட்டில் மேலேறிப் போகும்  படிக்கட்டுகளைக் காட்டி சொல்லிக் கொண்டிருந்தார் விசுவநாதன்.

அந்த 'பரிபூர்ணம்' காம்பிளக்ஸ் மொத்தமே நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் சதுர அடியில் மூன்று மாடிகள் கொண்ட சிறிய வளாகம்.  அசோக் பில்லருக்கு அருகில் நூறடி தெருவை ஒட்டினாற்போல் அமைந்திருந்ததால் பரபரப்பான போக்குவரத்தைக் கொண்டிருந்தது.  சென்னை நகரின் தற்போதைய பெரும் மால்களுக்கு முன்னார் இதொரு சின்னப் பெட்டிக்கடை போலத்தான் தோன்றியது நாச்சியாளுக்கு.  அவள் பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜேஸ்டன்வில் மாலுக்குள் சென்னையின் அத்தனை மால்களையும் ஒன்று சேர்த்து கொட்டி வைக்கலாம்.  அவ்வளவு பெரிய விஸ்தீரணம்.  இந்த சிறிய வளாகத்தைப் பற்றி அப்பாவின் உணர்வுமயமான விவரணைகள் அவளுக்கு சிரிப்பாக இருந்தது. அந்த வாழ்க்கைப் பகுதியின் ஒரு வாஞ்சைமிக்க வாசகி போல சுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தாள்.  

"அப்போ எவ்ளோ வயசிருக்கும் உங்களுக்கு?  பாட்டி வீட்டு போட்டோல இருந்த மாதிரியா?" என்றாள், அப்பாவின் மீதான பார்வையை அகற்றாமல்.

"அந்த போட்டோவா..... அது சுனந்தா கல்யாணம் பேசிட்டிருந்த சமயம் எடுத்தது.  அப்போ நான் காலேஜ்தானே.  கல்யாணத்துலதான் முனீர் போட்டோ எடுக்க வந்தார்.  அப்பத்தான் இங்க ஃபர்ஸ்ட் வந்தேன்.  மேல ஒரு லேடி டிடிபி செண்டர் வச்சிருந்தாங்க.  அப்பல்லாம் பேஜ் மேக்கர்தான் யூஸ் செய்வாங்க. அவங்களுக்காக ரிச்சி ஸ்ட்ரீட் போய் சாஃப்ட்வேர் வாங்கிட்டு வந்திருக்கேன்.  எல்லாம் பைரேட்டட்தான். " மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினஅர்.  "ஒரு  ஜாடைல சௌகார் ஜானகி மாதிரியே இருப்பாங்க.  தடால் புடால்னு பேசினாலும் எப்பவும் ஒரு மென்சோகம் படர்ந்த முகம்" .

நாச்சியாளுக்கு யாரைப் பற்றி யாரோடு ஒப்பிட்டுச் சொல்கிறார் என்றெல்லாம் புரியவில்லை.  ஆனால் அப்பாவின் நனவோடை விவரணை ரசனையாகப் போய்க் கொண்டிருந்தது..

"ப்ரௌசிங் செண்ட்டரா? அப்படின்னா" என்றாள்.

எவ்வளவு சொல்லி இவளுக்கு விளக்குவது என்பது போலப் பார்த்தார் விசுவநாதன்.  இணையத்தில் மேய்வதற்கென ஒரு தனியிடம் அமைக்க வேண்டியிருந்தது என்பதைப் புரிய வைக்க முடியுமா? அதற்கு முன்னால் விசுவநாதன் அரைகுறையாக கற்றுக் கொண்டு கைவிட்ட தட்டச்சு, சுருக்கெழுத்து அனுபவங்களை எல்லாம் சொல்வதென்றால்.  சுருக்கெழுத்தருக்கான தகுதியை உறுதி செய்து கொள்வதிலிருந்து, பொருளாதார பட்டப் படிப்பு என்று வளர்ந்து  சிஎஃப்ஏ முதல் பேட்ச்சில் தேறி, எக்ஸியூட்டிவ் எம்பிஏ படித்து, பெரு நிறுவனங்களின் வணிக மேலாண்மை பொறுப்புகள் எனத் திரிந்து, இப்போது ஹெட்ஜ் முதலீட்டு நிறுவனத்தின் நிதித் தலைமை பொறுப்பில் வந்து நிற்கிறார்.  ஏதோ வெஸ்டர்ன் ஸ்பெகிட்டி கௌபாய் கதையில் வரும் குதிரை வீரன் பயணம் போல.  இப்போது நாச்சியாள் அப்படித்தான் இருக்கிறாள்.  சிறகு விரித்து காற்றில் ஏறிப் பறக்கக் காத்திருக்கும் அதிசயக் குதிரைப் போல.  அவள் எப்போதும் அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவின் பிம்பம் கரைந்து, தோழனாக தோள் சேர்ந்து நிற்கும் பருவத்தினூடே நிற்பது போலிருக்கிறது.  

முதல் மாடியை எட்டியதும் நாச்சியாள் கேட்டாள்.  "சொல்லுங்க.  உங்க துறுதுறுப்புக்கும், தேடலுக்கும் அந்தக் காலத்துல நிறைய ஃபேன்ஸ் இருந்திருப்பாங்களே", கையில் வைத்துத் துடைத்துக் கொண்டிருந்த பேப்பர் நாப்கினை, சுருட்டி விரித்து மடக்கி பறவை போல மூக்கு அமைத்துக் கொண்டிருந்த விசுவநாதன் சிரித்தார்.  அவளுடைய வேலை, அவளுடைய வாழ்க்கை, அவளுடையத் தேர்வுகள் என ஒரு தனி உலகு உருவாகி நிற்கிறது.  சுதந்திர உலகு.  தவசிமுத்து மாமாவின் வீட்டுக் கல்யாணத்தை சாக்காக வைத்துக் கொண்டு, நாச்சியாளுடனான இந்த விடுமுறைப் பயணத்தில், அவளுடைய உயரம் கூடி நிற்பது புரிகிறது.   

"அது ஒரு வயசுக் காலம்.  இப்ப நீங்கள்லாம் பரபரன்னு பறக்கறீங்களே அந்த மாதிரி.  என்ன... ஆழம் பார்த்து அட்வைஸ் பண்ண ஆளில்லாம திடுக்குன்னு தண்ணிக்குள்ள  நாங்க குதிச்சிருவோம்.  உங்களுக்கு அத்தனை உலகவிவரங்களும் விரல்நுனில வந்து உக்காந்திட்டிருக்கு" என்றார், அவளுடைய போனைச் சுட்டிக் காட்டி.


"இருங்க.  அப்படியே இந்த பேக்ரவுண்ட்ல உங்கள ஒரு போட்டோ எடுக்கிறேன்...", அவள் சொல்லி முடிக்கும் முன்னர், கைகளால் அவளை மறுத்துபடியே அந்தத் தளத்தை கண்களால் சுற்றிப் பார்த்தார்.

"அந்தக் மூலையில மல்ட்டி மீடியா கம்பெனி ஒண்ணு இருந்திச்சு.  சின்னச் சின்னதா படம் வரைஞ்சு அப்படியே கார்ட்டூன் ஸ்ட்ரிப்பா மாத்தி பின்னணி வசனம் சேர்த்து,டிவிக்கு கொடுக்கிறது. " 

அந்தத் தளம் முழுவதும் முற்றிலுமாக மாறியிருந்தது.  அப்பா விவரித்துக் கொண்டிருந்த லைப்ரரி, டிடிபி செண்டர், ப்ரௌசிங் கடை, மெடிகல் ஷாப் என்று எதுவுமே அங்கிருக்கவில்லை.  ஒரு பக்கம் ஏதோ வங்கிக் கிளை இயங்கிக் கொண்டிருந்தது.  மறுபுறம் தார்பாலின் மூடி மராமத்து பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.  

எந்தப் பக்கம் அப்பாவை நிறுத்தி போட்டோ எடுக்கலாம் என்று நாச்சியாள் சுற்றிப் பார்க்க, அந்த ஸ்டுடியோவின் கதவு திறந்தது. உள்ளிருந்து வெளியில் வந்த குட்டையான மனிதர், தலையில் அணிந்திருந்த தொப்பியின் விளிம்பைத் தூக்கி, 

"என்ன சார்? என்ன பாக்கறீங்க இங்க?" என்று கேட்டார் விசுவநாதனைப் பார்த்து.

அப்போதுதான் அவர் பக்கம் திரும்பியவர், "ஹா! முனீர் ஸ்டூடியோ. இதான். சொன்னேனே" என்று நாச்சியாளிடம் சுட்டிக் காட்டியவர், "உங்க அத்தை சுனந்தா மேரேஜுக்கு போட்டோ, வீடியோல்லாம்..." என்று சொல்லிக் கொண்டே வந்தவர், தொப்பி அணிந்திருந்த ஆளை உற்றுப் பார்த்து, "முனீர்.... நீங்களா" என்றார் ஆச்சர்யத்துடன்.

தன் தலையில் இருந்த தொப்பியை விலக்கியபடி இவர்களைப் பார்த்தவர், "நீங்க யார்னு தெரியலயே" என்றார்.  நரையோடிய தலைமுடியும், முகத்தின் அம்மை வடுக்களை மறைத்து அடர்ந்த தாடியுமாக அவருடைய முகம் முழுவதுமாகத் தெரிந்தது.  புஜத்தை அழுத்தப் பிடித்து அமைந்த டிஷர்ட்டும், பேண்ட்டிலும் அவருடைய கட்டுமஸ்தான உடல்வாகு நன்றாகத் தெரிந்தது.

"நான் விசு.  அங்க முன்னாடி இருந்த பிரவுசிங் சென்ட்டர்ல....." என்று விசுவநாதன் பழைய நினைவுகளின் கொந்தளிப்போடு அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"பிரவுசிங் செண்ட்டரா?  அதெல்லாம் மூடி பத்து பதினைந்து வருஷமாச்சும் ஆகியிருக்குமே.  அப்புறமா ஏகத்துக்கு மாறிடுச்சே.  இந்த பேங்க்கூட இரண்டு வருஷமாத்தான் இப்ப இருக்கு.  நான் மட்டுந்தான் எய்ட்டி ஃபைவ்லேந்து இங்க இருக்கேன்" என்றார்.

விசுவநாதன், முனீருக்கு பின்னாடி இருந்த போட்டோ ஸ்டூடியோவின் முகப்பைப் பார்த்துக் கொண்டே.... "ஆமா.  இது மட்டும் அப்படியேத்தான் இருக்கு நாச்சும்மா.  அந்த சௌகாரம்மாவோட டிடிபி கடை இதுக்கு அடுத்து இருந்தது" என்றார்.

முனீர் முகம் மலர்ந்தவராக, "ஜானகியம்மாவையா சொல்றீங்க.  அவங்க கடையும் ரொம்ப நாளைக்கு மாறாம இருந்துச்சு.  அப்புறம்தான் பையனோட சிங்கப்பூர் போறேன்னு போனாங்க.  பத்து, பன்னெண்டு வருஷம் ஆயிட்டிருக்கும்.  உங்களத்தான் நினைவுக்கு கொண்டு வர முடியல" என்று சொல்லிவிட்டு, நாச்சியாளைப் பார்த்தார். பளீரென ஒரு சிரிப்பு.

ஏதோ தயங்கிய விசுவநாதன்,  "நான் உங்க ஸ்டூடியோல போட்டோ கூட எடுத்திட்டிருக்கேன்.  சேவ்வி (Savvy) பத்திரிகைல ஒரு விளம்பரம் வந்திருந்தது.  அதுக்காக...." என்றார்.  ஏன் அதைச் சொன்னோம் என்று நினைத்தாரோ என்னவோ, சட்டென நிறுத்திக் கொண்டார்.

"என்ன விளம்பரம்..." என்றுக் கேட்ட முனீர், படீரென நினைவுக்கு வந்தவராக,

"அந்த மாடலிங் போட்டோ எடுத்தது.... ஆங்.... நீங்கதானா அது.... சந்திரன் செண்ட்டர்ல வேல பாத்தது..." விசுவநாதனின் தற்போதைய உடையலங்காரங்களைப் பார்த்து சற்று சுதாரித்துக் கொண்டவராக, "இப்ப நினைவுக்கு வந்துச்சு. சார், இப்பவும் சென்னைதானா" என்றார்.  அவசரமாக திரும்பி, "உள்ள வாங்க" என்று சொல்லிக் கொண்டே கடைக்குள் போனார்.

இதை விசுவநாதன் எதிர்பார்க்கவில்லை என்று நாச்சியாளுக்குப் புரிந்தது.  "மாடலிங் போட்டோவா.... என்ன டாடி?" என்று ஆர்வம் பொங்கக் கேட்டாள்.

"அதொண்ணுமில்ல.  சும்மா ஒரு விளையாட்டாம்மா" என்று ஸ்டூடியோவிற்குள் போகத் தயங்கினவரை, உள்ளிருந்து முனீரின் குரல் துரிதபடுத்தியது. "உள்ள வாங்க சார்.  ஜூஸ் குடிக்கிறீங்களா?" 

பின்னாடி சுவரில் பின் செய்யப்பட்டிருந்த வெவ்வேறு சைஸ் புகைப்படங்களுடன், சம்பிரதாய அமைப்புடன் இருந்தது வரவேற்பறை.  

"ஒரு ரிசப்ஷனிஸ்ட் போட்டிருக்கேன்.  இன்னிக்கு லீவ் போல" என்று இவர்களை நிமிர்ந்துப் பார்த்து. "வரல" என சிரித்தார்.




சின்ன ஃப்ரிட்ஜின் உள்ளிருந்து ஒரு மாம்பழச் சாறு பாட்டிலை எடுத்து, "மேங்கோ ஜூஸ் குடிக்கிறியாமா" என்றார்.

 விசுவநாதன் ஏதோ தாக்கப்பட்டவர் போல, "மைகாட்.  இந்த இடம் அப்படியே மாறாம இருக்கு முனீர்".  இடது பக்க கரும்பலகை போலிருந்த கதவைக் காட்டி, "இங்கதான போட்டோ எடுப்பீங்க. அப்பவே நீங்க டிஎஸ்எல்ஆர்எல்லாம் வச்சிருந்தீங்களே" என்றார்.

 சிறிய கண்ணாடி குவளைகளில் பழச்சாறைக் கொடுத்தபடியே, "நிக்கான் எஃப் ஈ 10. 96ல வாங்கினேன்.  அப்பவே மூணு லென்ஸ் தனியா வாங்கினேன்" என்றார்.

 "போட்டோ கத்துக்க நிறைய பசங்க வந்திருக்காங்க.  ஆனா மிட்ஷாட், லாங்ஷாட், க்ளோசப்புன்னு இந்த  ஸ்டூடியோல்ல மாடலிங் ஆல்பம்னு பண்ணது உங்களுக்குத்தான்.  இப்பல்லாம் கல்யாண ஃபங்ஷனே ஃபோட்டோ ஷூட் மாதிரி கிராண்டா பண்றாங்க" 

 விசுவநாதன் சற்றுக் கூச்சப்பட்டவராக, "சும்மா பொண்ணுக்கு பழைய இடமெல்லாம் காமிக்கலாமேன்னு வந்தேன்.  உங்கள மீட் பண்ணது ப்ளெசன்ட் சர்ப்ரைஸ்.  ரொம்ப சந்தோஷம் முனீர்" கிளம்புவதற்கு தயாரானவர் போல கை நீட்டினார்.  

 "அப்பா ஃபோட்டோஸ் இருக்கா உங்ககிட்ட" நாச்சியாள் ஆர்வம் கொப்பளிக்கும் கண்களுடன் பொறுக்க முடியாமல் கேட்டாள்.

 "எது.... ஃபோட்டோ...." என்று யோசித்தவர், "ஆர்கிவ்ஸ்ல இருக்கும்.  ப்ரிண்ட்டா வேணும்னா ஆஃப் அவர் ஆகும்.  மெயில்ல அனுப்பனும்னா இப்பவே எடுத்துத் தர்றேன்" என்று உற்சாகமானார்.

 நாச்சியாள் அப்பாவை குறுகுறுவென பார்த்தபடி, "நம்பவே முடியலப்பா.  கெசில்லியான் ஹெட்ஜ் ஃபண்ட் சிஎஃப்ஓ, ஒரு முன்னாள் விளம்பர மாடலா" என்றாள்.

 விசுவநாதன் சிரித்தார்.  "போட்டோ மட்டுந்தான் எடுத்தது.  எங்கயும் அனுப்பல. அதுக்குத் தைரியம் வரல" 

 விர்ரென ஓடும் ப்ரிண்டரில் புகைப்படங்கள் பிரதி எடுக்கும் ஓசைக் கேட்க, முனீர் பெரியதாக சிரித்தார்.  "இதுதான், அந்த ராக் ஸ்டார் போஸ்.  அன்னிக்கு நாந்தான் சொல்லித் தந்தேன்.  எப்படி போஸ் கொடுக்கிறதுன்னு ஒரே கன்ஃப்யூஷன்ல் இருந்தார்"

 இடது கையை நெஞ்சுக்கு நேரே மடித்துத் தூக்கி, வலது கையை நீட்டி, தலையை மேலே சாய்த்துக் கொண்டு பக்கவாட்டில் பார்த்தபடி முனீர் நிற்க, சட்டென அந்த இடம் பற்றிக் கொண்டது போலாகியது.  அவருடைய உடலின் நிமிர்வும், பளீரென சிரிப்பும், கைகளை இப்புறமாக திருப்பிவிட்டு மீண்டும் ஒரு விசையோடு மடித்து நீட்டியபடி நிமிர்ந்து நின்றார்.  விண்ணென நிமிர்ந்து, ஒரு ஆர்க் போல அவருடைய உடல் திரும்பி நின்றது. 

 விசுவநாதனும் நாச்சியாளும் வியந்து சிரித்தனர்.  ப்ரிண்ட் ஆகி வந்த போட்டோக்களில் விசுவநாதனின் முகம் சோபையே இல்லாமல் இருந்தது.  அதுவும் அந்த ராக் ஸ்டார் போஸில் மெலிந்த கைகள் வளைந்து நிற்க, எதையோ கண்டு மருண்டது போல பாவமாக இருந்தார்.

 "அப்பவே இந்த காம்ப்ளக்ஸுக்கு பேரு 'பரிபூரணம்'.  ஆனா இப்பப் பாத்தா கம்ப்ளீட்டா மாறிடுச்சு" படிகளில் இறங்கி வரும்போது விசுவநாதன் சொன்னார். நாச்சியாள் கைப்பையில் அப்பாவின் படங்களைப் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

 "முனீர் ஸ்டூடியோவும் மாறல்ல.  ", சில கணங்கள் இடைவெளிவிட்டு "அவனோட ராக் ஸ்டார் போஸும் மாறல்ல.  அதே பெர்ஃபெக்ஷன்" என்று சிரித்தார் விசுவநாதன் "பெர்ஃபெக்ட்லி கம்ப்ளீட்".

 அப்பா சொல்வது நாச்சியாளுக்கு முழுமையாகவேப் புரிந்தது.  முழுமைக்கு அருகில் செல்ல செல்ல, அந்தப் பயணம் நீண்டு கொண்டே போவதும், இருக்கும் இடத்திலே முழுமையை உள்ளடக்கி நிற்பதும் அதனதன் அளவில் அற்புதமானவை என்று நினைத்துக் கொண்டாள். 

அப்பாவின் கையைச் சுற்றி தன் இரு கைகளையும் பிணைத்துக் கொண்டு நடக்கவாரம்பித்தாள்.








உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

நிழலெனத் தொடரும் மொழி

(எக்ஸ்டன் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா (ஜூன் 15ம் தேதி, 2024) கொண்டாட்டத்தில் நான் நிகழ்த்திய உரையின் கட்டுரை வடிவம்)

முதலில், இந்த மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், மாணவச் செல்வங்களின் பெற்றோர்களுக்கும், மற்றும் தமிழ்ப்பள்ளியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் முக்கியமாக, தமிழ் கற்கும் ஆர்வத்துடன் இங்கு வந்துள்ள மாணவ மாணவிகளுக்கு எனது வணக்கங்கள். அவர்களை, இவ்வகை விழாக்களின் வேடிக்கை விநோதங்கள் பெருமளவில் ஈர்க்கலாம்.  ஆனால் அவற்றில் முதன்மையாக தமிழ் மொழியும் ஓர் ஈர்ப்பான அம்சமாக இருக்கிறது என்பது நமக்கு மகிழ்ச்சி தருவது.  இங்கிருக்கும் அனைவரையும் இணைக்கும் அடிசரடாக தமிழ் இருக்கின்றது.



 எங்களூர் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது.  தமிழ்ப் பள்ளியென்றால், எங்களூர் கோவிலின் ஞாயிறு வகுப்புகளின் ஓர் இணைப்பு வகுப்பாக நடக்கும் பள்ளி.  

அதில் ஒரு நிகழ்ச்சியாக, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், பரிபாடல், நாலடியார் என்று நீதி நூல்களின் தொகுப்பிலிருந்து சில பகுதிகளை தமிழிலும், ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் குழந்தைகள் சொன்னார்கள்.  பெற்றோர் முகங்களில் பெரும் பரவசம் குடிகொண்டதைக் காண முடிந்தது.  எத்திசை சென்றாலும், அத்திசையில் கற்பவர்க்கென ஒரு சபை இருக்க வேண்டும்.  அதுவும் தாய்மொழி சார்ந்ததாக இருப்பின் அது அடுத்த தலைமுறையின் சிந்தையை நெறிமுறைப்படுத்த மிகவும் அவசியமானது.  

"ஆத்தி (மலரைச்) சூடிய" சிவன் அல்லது பார்சுவநாத தீர்த்தரங்கரை வணங்கி கல்வி நூலை எழுதினார் ஔவையார் என்பார்கள் மொழி அறிஞர்கள்.  கொன்றை மலரும் சிவபெருமானுக்கு உரித்தானது.  அதனால் அந்த நூலுக்கு தலைப்பு கொன்றை வேந்தன்.

இவ்வகையிலான அரிச்சுவடி முதலிருந்தே கல்வி ஒழுக்கம் பாடும் நீதி நூல்கள் தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.  

தமிழ்ப்பள்ளிக்கான நிகழ்வு என்பதால், இப்படியானதொரு முன்னுரையுடன் தொடங்கவில்லை.  தாய்மொழி வழி சிந்தையைப் பற்றி பொதுவான புள்ளிகளாக மூன்று விஷயங்களைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

கலாச்சார தொடர்ச்சி

தாய்மொழி என்பது நம்முடைய கலாச்சார பின்னணியின் ஒரு முக்கிய கண்ணி.  இங்கே குழுமியிருக்கும் ஆசிரிய பெருமக்கள், தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்று பலரும் இங்கே குடியேறிய முதல் தலைமுறை தமிழர்களாக இருக்கும் வாய்ப்புண்டு.  நானும் அப்படித்தான்.  என்னுடைய கல்விப் பாடங்களை நான் ஆங்கில மொழி வழியாகக் கற்றிருந்தாலும், என்னுடைய வளர்ப்பு சூழ்நிலை முழுவதுமாக தமிழ்மொழி சார்ந்தது.  என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் படித்த பல புத்தகங்கள் என் சிந்தையை செழுமைப்படுத்த உதவின.  அவற்றில் பெரும்பாலானவை தமிழ் மொழியில் அமைந்தவை.  யாக்கோவ் பெரில்மென் (Yakov Perleman) எனும் ரஷிய அறிவியலாளரின் இயற்பியல் பாடம் பற்றிய ஒரு நூலை நான் தமிழ் மொழிபெயர்ப்பில் படிக்க நேர்ந்தது.  நாம் பள்ளியில் படிக்கும் இயற்பியல் பாடம்தான்.  ஆனால் அதை யாகோவ்வின் சரளமான கூறல்முறையில், தமிழில் படிக்கும்போது எனக்கு எழுந்த ஆனந்தம் அளவிட முடியாதது. நமது சிந்தை முறையில், நம் தாய்மொழியின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கது.  அதன் வழியே நாம் ஒரு கலாச்சார பின்னணியை, அதன் தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்கிறோம்.  இன்றைய அறிவியலிலும், தொழில்நுட்பங்களிலும், பிரபஞ்சவியலில் மனிதர்கள் நிகழ்த்தியிருக்கும் பெரும் பாய்ச்சலிலும், நம்முடைய மொழியும் அதன் கலாச்சாரமும் நம்மை சிறு நிழலெனத் தொடர்ந்து வருகிறது.  

இன்று இங்கிருக்கும் அடுத்த தலைமுறை மாணவர்கள் பலரும் தங்களுடைய வளர்ச்சிப் பாதையின் ஓரிடத்தில் தங்கள் மொழிசார்ந்த கலாச்சார பின்னணி பற்றிய ஒரு தேடல் முளைத்தெழும்.  அவர்கள் திரும்பிப் பார்க்கும் தருவாயில், இந்தப் பாதை சான்றோர் செறிந்த பாதையாக நிலைத்திருக்கும் வகையில் காப்பது நமது பொறுப்பாகிறது.  

இன்னமும் இருபது முப்பது ஆண்டுகளில், அந்நிய மண்ணிற்கு புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் தலைமுறையினர் தங்கள் அடுத்த தலைமுறைக்கு, தாய்மொழியின் இன்றியமையாமைப் பற்றியும் சிறப்புப் பற்றியும் பாடம் எடுப்பார்கள் என்றால் நான் வியப்படைய மாட்டேன்.  நமது தாய்மொழியான தமிழ், இரண்டாயிரம் ஆண்டுகளாக அப்படித்தான் ஒவ்வொரு தலைமுறையினர் வழியே கடந்து வந்திருக்கிறது.  நாம் மொழியை கற்கத்தான் செய்கின்றோம்.  ஆனால் மொழி நம்மை தலைமுறைகள் கடந்து கலாச்சார சங்கிலித்தொடரென இணைத்து நிறுத்தியிருக்கின்றது.  

இலக்கிய நுகர்ச்சி

ஒரு புத்தக பரிச்சயம் உங்களிடையே நிகழ்த்துவது ஒரு ரசாயன மாற்றம்.  அது உங்களை அப்புத்தகத்தின் பிரதியாக்குகிறது, ஓரளவிற்கு.  பிறகு உங்கள் போக்கில் அப்புத்தகம் உண்டாக்கிய தாக்கம், பிறிதொரு நகலாக, மற்றுமொரு புத்தகத்திற்கான தன்மையில் விரிவடையச் செய்கிறது.  இலக்கிய நுகர்ச்சி அப்படித்தான்.  தமிழ்மொழியின் இலக்கிய செழுமை அபாரமானது.  பொயுமு 2ம் நூற்றாண்டு சார்ந்த சங்க இலக்கியங்கள், பிறகு எட்டாம் நூற்றாண்டில் பெரும் இயக்கமாக உருவான பக்தி இலக்கியம், பிறகு பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி கண்ட, கம்பராமாயணம் முதலான பெரும் இலக்கிய செயல்பாடுகள், பிறகு 18ம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் பெஸ்கி போன்ற உலக அறிஞர்கள் தமிழிற்காக தங்களை ஒப்புக் கொடுத்து இலக்கிய பேணிய வரலாறு, என்று தொய்வில்லா தொடர்ச்சி கொண்ட மொழி.  இலக்கியத்தின் அறிமுகம் மனிதனின் ஆன்மாவிற்கு உரமேற்றக் கூடியது.   ஒரு கவிதை வரி கொண்டு தன் இலட்சியத் தேடலை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.   ஓர் இலக்கிய பாடலையோ, அல்லது மரபார்ந்த செய்யுளோ உங்களை ஆசுவாசப்படுத்தி, முறையான திக்கை நோக்கி உங்கள் பார்வையைத் திருப்ப வல்லது.

பென்சில்வேனியா புத்தக கிளப்கள் போன்ற வாசிப்புக் குழுக்கள் அப்படியான நூல்களைப் பற்றிய பரிச்சயம் ஒன்றை உண்டாக்குகின்றன.  நூல்களுடனான நெருக்கத்தை உண்டாக்குகின்றன.  புத்தகங்களின் வீச்சையும் தீர்க்கத்தையும் கண்டறிய உதவுகின்றன.  

கல்வி ஒழுக்கம்

கல்வி ஒழுக்கத்தின் அரிச்சுவடியை மொழிப்பாடத்திலிருந்து தொடங்கிய ஔவையைப் பற்றிப் பார்த்தோம்.  அதையே, புதியப் பொலிவோடு, இருபதாம் நூற்றாண்டில் பாரதி, 'புதிய ஆத்திசூடி'யெனப் பாடுகிறார்.  

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;

கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;

மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;

ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

என்று, நூல்களின் மரபுக்கேற்றபடி கடவுள் வாழ்த்தை, அனைத்து மதங்களும் உள்ளடக்கிய நெடும் வாழ்த்தாக பாடியதோடு நிறுத்தாமல்,

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

அனைத்து நிலையிலும் ஒளிபொருந்திய அறிவைக் கொண்டோர், அல்லல்களை அகற்றினார் என்று போற்றி, அத்தகைய அறிவின் அருள் கொண்டு அமரத்துவம் நிறைந்த வாழ்வை அடைவோம் என்கிறார் பாரதி.

 மறத்தைப் போதித்த மொழி, அறத்தின் வழிநின்ற மொழி, பக்தி மார்க்கத்தில் பக்குவப்படுத்திய மொழி, பாரதியின் சொற்கள் வழியே அறிவுச்சுடரென வழிகாட்டியாக நிற்கிறது இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

ரோர்ஷாக் சோதனை - மை சிதறலின் மனோதத்துவம்

"மருத்துவத்திற்கான படிப்பு படிக்கின்றாயா? அல்லது ஓவியக்கலையை பயில்கிறாயா?" என்று ஒரு கேள்வியை உங்கள் முன் வைத்தால், நீங்கள் பெரும்பாலும் முன்னதைத்தான் தேர்ந்தெடுப்பீர்களாக இருக்கும்.  காரணம் எளிதானது.  மருத்துவப் படிப்பில் எதிர்காலம் வணிகரீதியாக பயன் அதிகம் தரக்கூடியது.  நல்ல பணம் சம்பாதிக்கலாம். சமூகத்தில் நல்ல கௌரவமும் கிடைக்கும்.  நல்ல பிராக்டிஸ் அமைந்தால், உத்தியோக ஓய்வு என்பது உங்கள் விருப்பப்படிதான்.  இப்படி நிறைய அனுகூலங்களை பட்டியலிடலாம்.  

கடவுளின் படைப்பான மனித உடலை, அதன் இயக்கங்களை, அதற்கு நேரிடும் நோய் தாக்குதல்களை படிப்படியாக மனிதன் கற்றுணர்ந்து, நோய் நொடியற்ற வாழ்வை நோக்கி, அறிவியல் துணைகொண்டு ஒவ்வோர் அடியாக முன் வைக்கின்றான். இயற்கையின் இயக்கங்களை அறிவின் பார்வை கொண்டு புரிந்து கொள்வதன் மூலம் இறைக்கு அருகில் மனிதன் செல்ல முடிகிறது.  அவனுக்குரிய படைப்பூக்கத்திற்கு வடிகால் அமைத்துக் கொடுப்பது கலைகள்.  அதன்கண் வசப்படும்போது அந்த இறையாகவே தன்னை உணரும் அற்புதத் தருணங்களும் உண்டு.

அறிவியல் துறையின் மறுமலர்ச்சிக்கு முந்தைய காலத்தில் மனித மனம் அதன் போக்கில் இந்த பிரபஞ்ச புதிர்களை அளவிட்டுக் கொண்டிருந்தது.  விண்ணில் காணப்படும் நட்சத்திர கூட்டங்களிலிருந்து ஓர் ஓவியத்தைக் கண்டு அதன் மீது ஒரு கதை புனைந்து தங்கள் கடவுள்களை இனம் கண்டு கொண்டிருந்த காலம் உண்டு.  இன்றைக்கு வானியலில்,  தென் துருவம் பக்கமாக நாம் காணும் சென்டாரஸ் (Centaurus) நட்சத்திர மண்டலத்தின் முதன்மையான நட்சத்திர கூட்டமாக (alpha centauri) காணப்படும் 'மூன்று ஈட்டிகள்' போல் தோற்றமளிக்கும் நட்சத்திரங்களைத்தான் 'திரிசங்கு' என்று இந்திய வானியலில்  குறிப்பிடுகிறோம். 

வானில் கண்ட வடிவத்திற்கேற்ப திரிசங்கு எனும் இக்ஷ்வாகு குல அரசனின் கதை விரிகிறது.  திரிசங்கு சொர்க்கம் என்கிற புராண வழக்கும் உண்டாகிறது.  கிரேக்க, சுமேரிய, எகிப்திய மரபுகள் போல இந்திய மரபிலும் இது போன்ற பல கதைகள் கட்டியெழுப்பப் பட்டிருக்கின்றன.  

இதை இன்னமும் சற்று எளிதாக்கி, வருங்காலத்தை முன்னரே உரைக்கும் ஆரக்கிள்கள் போன்ற நிமித்த வல்லுநர்கள், மேகக் கூட்டத்தின் வடிவத்தைக் கொண்டோ, அல்லது உருட்டி விடப்படும் சோழிகளின் நிலைகள் கொண்டோ தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எதிர்வரும் பலன்களாக உரைப்பார்கள்.  இதனடிப்படியில்தான் Inkblot (மை சிதறல்) என்கிற ஒரு மறைபொருள் காணும் முறை முன்னர் தோன்றியது.  இது போன்ற கணித அபத்தங்கள், அறிவியல் தளங்களில் செல்லுபடியாகாது.  அங்கு காத்திரமான நிரூபணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.



சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்தில், ஸ்விஸ் நாட்டுக்காரரான ஹெர்மன் ரோர்ஷாக் (Hermann Rorschach)-கிற்கு இப்படியொரு கேள்வி இருந்ததாம்.  மருத்துவம் படிக்கலாமா அல்லது ஓவியர் ஆகலாமா என்று.  பிறகு அவர் மருத்துவத்துறையில் தேர்ந்து, மனோதத்துவத்தில் புகழ்பெற்ற Rorschach பரிசோதனை முறைகளை கண்டுபிடித்தார்.  மை சிதறியது போன்ற வடிவத்தில் இருக்கும் சில படங்களை, தங்கள் பேஷண்டுளுக்கு காண்பித்து, அதில் அவர்கள் காணும் சித்திரத்தை விளக்கச் சொல்லி, அதன் மூலம்அவர்களுடைய மனப்போக்கினை அறியும் ஒருவகை சிகிச்சை முறை தான் ரோர்ஷாக் சோதனை.  இன்றும் மனச்சிக்கல்களை கட்டவிழ்க்க, ரோர்ஷாக் சோதனைகளின் மூலம், நோயாளிகளின் சிந்தை மாறுதல்களையும், அதன் போக்குகளையும் கண்டறிந்து அதற்கேற்றார்ப் போன்ற கவுன்சிலிங் மற்றும் மருந்துகளை அளிக்கிறார்கள்.  

இந்த ரோர்ஷாக் சோதனை பற்றி ஒரு புகழ்பெற்ற ஜோக் உண்டு.  அண்மையில் பிள்ளைகளுடனான ஓர் உரையாடலின் போது, மிகவும் ஜாக்கிரதையாக, ரோர்ஷாக் சோதனை பற்றியும், அந்த வேடிக்கை ஜோக்கைப் பற்றியும் சாத்விகமான முறையில் மாற்றிச் சொல்ல, ஜூனியர் மிக அமெரிக்கையாக, "யா, ஐ நோ தட் ஜோக்" என்று என்னை அவுட் ஆக்கிவிட்டார்.  அந்த உள்ளங்கை அகல ஃபோன் எனும் சாளரத்தின் வழியே அவர்கள் கண்டடையும் விஷய ஞானத்துடன், போட்டி போடும் எளிய பெற்றோர்கள் நாங்கள் என்கிற கரிசனத்தாலோ என்னவோ, அவர் படித்த ஜோக்கை வெளிப்படையாகச் சொல்லவில்லை.  கோல்ஃப் ஆட்டத்தில் அளிக்கப்படும் ஹேண்டிகேப்கள் போல, இன்றைய மாணவ தலைமுறையிடமிருந்து இப்படியான சில சலுகைகளைக் கொண்டுதான் நாம் நம்முடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. 

இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கு அளிக்கும் சாதகங்களைக் கொண்டு நாம் துல்லியத்தின் துல்லியத்தைக் கூட நெருங்க முடியும்.  சென்ற ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு, ஒரு பில்லியனின் பில்லியன் பகுதியான ஆட்டோ நொடியின் (attosecond) துடிப்பை பதிவு செய்ய முடியும் என்ற நிரூபணத்திற்கு கிடைத்தது. இந்த முன்னேற்றத்தைக் கொண்டு எவ்வளவு பணம் பண்ண முடியும் என்கிற கணக்கை நீங்கள் துரத்தத் தொடங்கினால், உங்களுக்கு வணிக வெற்றிக் கிடைக்கலாம். வங்கிக் கணக்கு நிறையும்.

அந்தப் பின்னத்தின் பின்னமான நொடியையும் விஞ்சும் மனதின் துடிப்பை சிறிய கலைப்படைப்பில் உங்களால் புதைத்து வைக்க முடிந்தால், அந்தத் துடிப்பை நீங்கள் உணருந்தோறும் அது உங்கள் ஆன்மாவை நிறையச் செய்யும்.

ஒரு கலையைப் பயில்வது, அதை எவ்வளவு மேன்மையாகவோ, தாழ்மையாகவோ செய்தாலும், அது உங்கள் ஆன்மாவை வளர்க்கும் வழி.
புண்ணியமாகப் போகட்டும்.
குளிக்கும்போது பாடுங்கள்
ரேடியோவின் பாடலுக்கு நடனமாடுங்கள்
கதை சொல்லிப்பாருங்கள்.
நட்புக்காக ஒரு கவிதை எழுதுங்கள், ஒரு மோசமான கவிதையானாலும்.
உங்களால் இயன்றவரை அதைச் சிறப்பாக செய்துவிடுங்கள்.
- கர்ட் வானெகட்
(நாடற்ற மனிதனொருவன்)




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

மணியின்கண் மறைந்திருக்கும் ஒளி

'ஹெமிங்வேயின் "வெள்ளை யானைகளை ஒத்த மலைகள்" கதையில், அந்த அமெரிக்கனும் அவனுடன் கூட இருந்த பெண்ணும் எப்படி இருப்பார்கள்?'

'அதிகம் யோசிக்க வேண்டாம்.  "அவள் தன் தொப்பியைக் கழற்றி மேஜை மேல் வைத்திருந்தாள்" என்கிற ஒரே ஒரு வர்ணனையைத் தவிர வேறு பாத்திர விவரிப்புகள் அதில் கிடையாது' .  பாத்திரங்களுக்கான விவரணைகளை மிதமிஞ்சி செய்யக் கூடாது என்பதற்காக இப்படியொரு உதாரணத்தை கூறுகிறார் எழுத்தாளர் எல்மோர் லெனார்ட் (Elmore Leonard). வணிக ரீதியான வெற்றிகரமான எழுத்திற்கான பத்து விதிகளென 2001ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸில் எழுதியிருந்தார்.

"முதல் வரியிலேயே சொல்ல வந்த விஷயத்தைப் பற்றி கோடிட்டு காட்டிவிட வேண்டும்.  வானிலை அறிக்கை போல் வளவளவென எழுதிக் கொண்டே போகாதீர்கள்.  நீள பீடிகைகளை முடிந்த அளவில் தவிருங்கள். தேய்வழக்குகள் அறவே வேண்டாம். வட்டார வழக்குகளை குறைவாக பயன்படுத்துங்கள்.  வர்ணணைகளை விட, இயன்றளவு உரையாடலில் உணர்ச்சிகளைக் கொண்டு வாருங்கள். ஆச்சரியக் குறிகளை வாரியிறைக்காதீர்கள்" என்று நிறைய விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.  

இவற்றில் பலதும் விவாதத்திற்குரியவை என்றாலும், அவர் சொன்னதில் என்னைக் கவர்ந்த விஷயம் "இந்த விதிகள் அனைத்தையும் ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், நான் எழுதியதைப் படித்தால் 'எழுதியது' போலிருப்பதாகத் தோன்றினால், அதை நான் மீண்டும் மீண்டும் எழுதுவேன்" என்றதுதான்.  

எழுத்தைப் போல் அல்லாது எழுதுவதுதான் படிப்பதற்கு சுவாரசியமானதாக இருக்கும் என்கிறார் லெனார்ட்.  நடிப்பது போல் அல்லாது நடிக்கும் கலை போல.  அந்நிலையை அடைவதற்கு அத்தனை படிநிலைகளில் பட்டை தீட்ட வேண்டியிருக்கிறது.

லெனார்ட் சொல்லாமல் விட்ட விஷயத்தை இங்கே நான் சேர்த்துக் கொள்கிறேன்.  ஒளிமிக்க பிரகாசத்தை உள்ளேக் கொண்ட கச்சா வைரம் போல் எழுத்தின் உள்ளே விஷயம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது தீட்டப்படும்போது, பொலியும் வைரக்கல் என மேலும் பிரகாசம் பெறும்.  செயற்கை கண்ணாடி கற்களை விட்ட, அரிய வைர மணிகள் காலத்தில் நின்று ஒளிரும் இயற்கையான பிரகாசம் கொண்டவை.  

சைவ சித்தாந்த மரபில், அரிய கற்கள், மணிகளில் மறைந்திருக்கும் ஒளி போல இறைவன் நம் உள்ளத்தில் மறைந்து உறைவதாக உருவகங்கள் உண்டு. பாலில் இருக்கும் பசுநெய், விறகில் மறைந்திருக்கும் நெருப்பு, இவற்றைப் போல மாமணிகளில் ஒளிந்திருக்கும் பிரகாசம் போல என்று அப்பர் பெருமான் சிவனை வர்ணிக்கின்றார். "மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்" போல.

அதெப்படி மாமணிகளில் ஒளி மறைந்திருகும்? நன்றாக பிரகாசித்தால்தானே அது அரிய மணி என ஐயம் உண்டாகலாம். அரிய கற்களும், மணிகளும் அவற்றுக்கே உண்டான பிரத்யேக வகையில் தீட்டப்படும்போது அதன் பிரகாசம் மேலோங்குகிறது.

இதைத்தான் உரையாசிரியர்கள், 'மணியிடையே மறைந்திருந்த ஒளி சாணை தீட்டியவுடன் வெளிப்படுவது போல, உள்ளத்தினுள் உறைந்திருக்கும் இறைவன், அறிவின் துணை கொண்டு முறுகக் கடைய, நம் முன் வந்து நிற்பான்' என்கிறார்கள்.

Sanding Stone - என்பதை சாணைக் கல் என்பர். வெட்டும் கூரான ஆயுதங்களை அக்கல்லில் உரசி தீட்டிக் கொள்வது போல, அரிய மணிகளை பொலிய வைக்கும் பட்டை தீட்டுவதும் உண்டு.



பாரதியும் தன்னுடைய அம்மன் பற்றியப் பாடலில், "மணி வெளுக்க சாணை உண்டு எங்கள் முத்துமாரியம்மா" என்று பாடுகிறார். அரிய நவரத்தினங்களை பொலிய வைக்கும் சாணை போல், நம் மனதை பிரகாசமாக்கும் இறையருள் போன்றது முத்துமாரியம்மனின் அருள் எனப் பொருள்.

இதில் வியப்பு என்னவென்றால், பாரதியின் குறுகியகால வாழ்க்கையில், அவர் தன்னுடைய இருபதுகளில் கூட ஆசிரியப் பணி கொண்டுதான் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார். பிறகு பத்திரிகைத் துறைக்கு மாறி, அரசியல் கட்டுரைகள் எழுதி, கேலிச் சித்திரங்கள் வரைந்து, தேசபக்தி பாடல்கள் இயற்றி, காவியம் புனைந்து, ஆன்மிகத்திலும் பாடல்கள் புனைந்திருக்கிறார். அதிலும் 'மணி ஒளிர (வெளுக்க) சாணை (Sanding) உண்டு' என்பது தேவாரப் பாடலில் இடம்பெறும் சைவ சித்தாந்தத்தின் ஒரு கூறு எனலாம். இத்தனைக்கும் அவருடைய வாழ்க்கை அனுபவங்களின் பதிவுகளின்படி அவர் பக்தி இலக்கியங்களை அறிமுகம் செய்து கொண்டதே இருபதுகளின் இறுதிப் பகுதியில்தான்.

ஒரு பத்தாண்டுகள் அவர் தன் படைப்பூக்க உச்சத்தில் இருந்திருக்கலாம். அதற்கு மேல் காலம் அவரைக் காத்திருக்க வைக்கவில்லை. அவ்வளவு குறுகிய காலத்தில் பாரதி வெளிப்படுத்தியிருக்கும் விரிவான படைப்பூக்கத் திறனும், அதில் வெளிப்படும் கூர்மையான மரபுத் தொடர்ச்சியும், அவற்றை மானுடத்தின் முன்னோக்கிய வளர்ச்சிப் பாதைக்கு அர்ப்பணித்திருப்பதையும் பார்க்கும் போது பெரும் வியப்பு உண்டாகிறது.

சாணைக் கல் கொண்டு பொலியச் செய்வதோ, கூர்மை கொள்வதோ நம்முடைய செவ்விலக்கிய மரபில் பயின்று வரும் உவமைதான். தற்போது, ஒரு திரையிசைப் பாடலில் "வாளில் ஏற்று சாணை" என்ற வரியைக் கேட்டதும் வியப்பாக இருந்தது. சாணைப் பிடித்தல் என்று நாம் வழக்கில் குறிப்பிடுவதில், அச்சொல் தொழிலாகு பெயராக வருகிறது. இந்தப் பாடலிலோ, 'அடி இயைபு' விதிகளுக்கேற்ப ஆணைக்கும், சேனைக்கும் இணையாக சாணையைப் பிடித்துப் போட்டிருக்கிறார் பாடலாசிரியர். ஆனால் பொருள் மாறி பண்பாகு பெயராக வருகிறது. இந்த வேறுபாடுகள் எல்லாம் புரிந்துதான் இப்படி எழுதினார்களா என்பது நமக்குத் தெரியவில்லை.

ஒரு மொழியின் நெடும் பயணத்தில், சொற்கள் எப்படிப் புரண்டு, உருமாறி வருகின்றன என்பது நம் சிறுமதி கொண்டு அளவிட முடியாது. ஆனால் இது போன்ற பிறழ்ச்சிகள் உண்டாக்கும் கேள்விகள் கொண்டு, நம் சில அரிய மணிகளின் ஒளியை இன்னமும் பிரகாசமாக துலக்கிக் கொள்ள முடியும்.



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

நூல் வாசிப்பிற்கான நுனி

"இப்படி அபத்தமா, தப்புந்தவறுமா இங்க இருக்குன்னு சொல்லிட்டியே.... அப்ப இங்க இருந்து படிச்சு ஒரு புண்ணியமும் இல்லையா" என்று ஒரு நண்பர் வாட்சப் சேனலில் வெளியிட்டிருந்த "முதல்தர வேலைக்கு முந்துங்கள்" கட்டுரைக்கு பதிலாக கேள்விக் கேட்டிருந்தார்.

பாவம் புண்ணியம் எல்லாம் அவரவர் வினைக்குத்தானேத் தவிர, பாவம் எழுதுபவரை ஏன் நோவானேன். ஒரு புத்தக ஆர்வலானனாகவோ, வரலாற்று தரவுகளை சரிவர புரிந்து கொள்ளும் விருப்பமுள்ளவனாகவோ எனக்கு கற்பிதங்களும் தவறுகளும் மலிந்த சூழல் ஒருவகையில் உற்சாகமான சவாலை அளிக்கின்றது.

நமக்குக் கிடைப்பவற்றைக் கொண்டு அதன் பிறழ்வுகளை சரிப்படுத்தி நமக்கான ஊட்டமிகுந்த உணவாக்கிக் கொள்வதும் நிறைவான பணிதான். உதாரணத்திற்கு அண்மையில் நான் எதிர்கொண்ட சில அபத்தங்களையும், அதற்காக படித்த புத்தகங்களையும் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

வாடிவாசல் (சி. சு. செல்லப்பா):

முதல் பதிப்பு 1959ல். சி சு செல்லப்பா ஒரு தீவிர இலக்கிய செயல்பாட்டாளராக அறியப்பட்டவர். தீவிரம் என்றால், இறுக்கம் கலந்த தீவிரம். அவர் நடத்திய இலக்கிய கூடுகைகளில் அவருடைய தணியா ஆர்வம் பிறரால் கேலி செய்யப்படுமளவுக்கு தீவிரமானவர். வாடிவாசல் குறுநாவலின் முதல்பதிப்பை அவர் வணிகரீதியாக வெளியிடவில்லை. அவர் நடத்தி வந்த 'எழுத்து' பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு, விலையில்லாத புத்தகமாக அனுப்பி வைத்தார். நாற்பதுகளில் அவர் எழுதிய குறுநாவல், செல்லப்பாவின் எண்பத்தியாறாம் வயதில் மறுபதிப்பு காண்கிறது. பிறகு இந்தியா டுடே தன் பத்திரிகையில் வெளியிட்டதன் மூலம் கூடிய வாசகர் பரப்பைப் பெற்றது. இப்போது தமிழில் திரைப்படமாக எடுப்பதற்கான முயற்சி நடப்பதால், எழுபது வயதான இந்த புத்தகம் பற்றி அவ்வப்போது யாராவது பேசுகிறார்கள். அதில் ஒரு சினிமா செய்தியாளர், 'வாடிவாசல் நாவலில் வரும் வைத்தி பாத்திரம் இருக்கிறதல்லவா..." என்றுப் பேச, அட இதென்ன நாம் படித்த கதைக்கும் இவர்கள் பேசும் கதைக்கும் சம்பந்தமில்லையே, என சரிபார்க்க புத்தகத்தை மீண்டுமொருமுறை தேடிப் பிடித்தேன்.



சல்லிக்கட்டு காளை அடக்குதல் பற்றி அக்காலத்தில் தமிழில் பல கதைகள் வெகு யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. பெருமாள் முருகனின் முகவுரையில் அவற்றின் ஒரு வரிசையையும் குறிப்பிட்டிருக்கிறார். கிரா-வின் கோபல்லபுரத்து மக்கள் பற்றிய விரிவான பதிவுகளிலும் சல்லிக்கட்டைப் பற்றி படித்த நினைவிருக்கிறது.

ஒரு செருக்களன் போல அந்த சல்லிக்கட்டை கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் செல்லப்பா. அவ்வளவு இயல்பாகவும், புதுவகையாகவும் சொல்லப்பட்ட கதை. இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு நின்று பேசப்படக் கூடிய எழுத்து.

கதையின் நாயகனான பிச்சிக்கு இணையாக மருதனும், தகவல் சுரங்கமான கிழவனும் ஜமீந்தாரும், அம்புலியும் விரவி நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும், கூட நின்று சல்லிக்கட்டைக் கண்டுகளிக்க வந்திருந்த சனத்தையும் சேர்த்து எதிர்நாயகனாக ஜமீந்தாரின் காரி தாவிக் குதித்து விட்டது.

தில்லானா மோகனாம்பாள்:
(கலைமணி (எ) கொத்தமங்கலம சுப்பு)

வாடிவாசல் போன்ற ஆக்கங்கள் சென்று சேராத வாசகர் பரப்பை இந்த்த் தொடர்கதை சென்றடைந்தது. அன்றைய தமிழ் பெரும்பத்திரிகைகளுக்கு புதிய வாசகர் பரப்பை பல இடங்களிலும் உண்டாக்கிக் கொடுத்த பெருமையும் இதற்கு உண்டு. நாதஸ்வரக் கலைஞன், நாட்டியக் கலைஞர் என்கிற வெகுஜனக் கலையின் மாந்தர்களை முதன்மை வாசகர்களாகக் கொண்டதில் இதன் வாசகப் பரப்பு பெரியதாக விரிவடைந்தது.



ஒரு பேட்டியில் ஓர் எழுத்தாளர், 'தில்லானா மோகனாம்பாள், நாவலை திரைப்படமாக எடுத்தபோது, முலக்கதையின் சம்பவங்களை முன்பின்னாக மாற்றி சாமர்த்தியமாக செய்திருந்தார் ஏபிஎன்' என்று குறிப்பிட, மேலேக் குறிப்பிட்டிருந்த அதேக் குழப்பம் மீண்டும் ஏற்பட்டது. நாம் படித்த புத்தகத்தைத்தானா இவர்களும் குறிப்பிடுகிறார்கள் என.

அவர் குறிப்பிட்டிருந்தபடி இந்தத் தொடர்கதை இரண்டாயிரம் பக்கங்கள் எல்லாம் இல்லை. ஆனால் அப்படியானதொரு திட்ட வரைவு இருந்திருக்க முகாந்திரம் உண்டு. கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களில் முதல் பாகத்தை சுப்பு எழுதி முடித்துவிட்டார். பெருவாரியான வரவேற்பு இருந்ததால், இரண்டாம் பாகத்தைத் தொடங்கியும் விட்டார். முதல் பாகத்தில் சிக்கல் சண்முகசுந்தரத்திற்கும், தில்லானா மோகனாம்பாளுக்கும் இடையே இருந்த காதல் பிரச்னைகள் பெருமளவிற்கு தீர்ந்து, அவர்களுடைய கல்யாணமும் நிச்சயம் ஆகிவிடுவதால், சுப்பு புதிய களமாக சண்முகசுந்திரம் மீது கோர்ட் கேஸ் என்று கதையை வளர்க்கத் தொடங்கினார். இசைக் கச்சேரிகளால், முன்னதாக ஈர்க்கப்பட்டிருந்த வாசகர் தரப்பு, இந்தக் கோர்ட்டுக் கச்சேரிகளால் அதிகம் வசீகரிக்கப்படவில்லை. அதனால் சுப்பு இரண்டாம் பாகத்தை நானூறு பக்கங்களுக்கு பக்கமாக முடித்துக் கொண்டார். ஆக, இரு பாகங்களாக வந்த புதினத்தின் அளவு ஆயிரத்தைந்நூறு பக்கங்களுக்கும் குறைவுதான்.

இந்த நூலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், மிகக் கச்சிதமாக நாவலின் முதல் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தில் வரும் உச்சக்காட்சியான மைனர் நாகலிங்கம் கடத்தும் பகுதிதான் (இது இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில் இடம்பெறுவது) சிக்கலுக்கும் மோகனாவுக்குமான திருமணத்திற்கு முந்தைய பகுதி.

ஒருமுறைக்கு இருமுறை புரட்டிப் பார்த்தும் ஏபிஎன், மூலக்கதையிலிருந்து முன்பின்னாக மாற்றி திரைக்கதை செய்திருந்தார் என்பதற்கு எந்தவித நிரூபணமும் கிடைக்கவில்லை.

மீண்டும் வாசிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு சுவாரசிய பத்தி. சண்முகசுந்தரத்தை கைது செய்ய போலி கேஸ் கொடுத்த, வைத்தி, அவர்களுடைய திருமணத்திற்கு அழையா விருந்தாளியாக வருகிறார். அங்கே அவரைப் பிடித்து கேள்விக் கேட்கும்போது, தப்பிக்க பேசும் சமத்கார உரையாடல் பகுதி:

"என்ன வைத்தி, இவ்வளவு கெடுதலும் பண்ணிட்டு, இங்கே வேற எப்படிய்யா வரத் தோணிச்சு உனக்கு?"
"சட்டம் வேற, சம்பந்தம் வேற சார். ஜார்ஜ் ஃபிஃப்த் சக்ரவர்த்தியும், கெய்சரும் சண்டைதான் போட்டுக்கிட்டாங்க. அரண்மனையிலே ஒரு ஃபங்க்ஷன் வந்திடுத்து. ப்ளட் ரிலேஷன் இருக்குப் பாருங்கோ. க்வீன் விக்டோரியாக்கு குழந்தை பிறக்கும்போது ஹீ (Kaiser Wilhelm II) 
இஸ் த ஃபர்ஸ்ட் மேன்"

"என்னப்பா ஜெர்மனிக்கு போயிட்டே"

"வேர்ல்ட் இஸ்டரி தெரியனும் சார். ஊரிலே சொல்றாங்க. இஸ்ட்ரி வேண்டாம். ஜியாக்ரஃபி வேண்டாம். அப்படின்னுட்டு. அவன் என்ன பண்ணான். கெய்சர் அரண்மனைத் தோட்டத்திலே மீன் பிடிச்சிட்டிருந்தான். விக்டோரியாவுக்கு குழந்தை பிறந்திடுத்துன்னு சொன்னவுடன இரண்டு மீனை எடுத்து தங்கக் கிண்ணத்துல போட்டு அனுப்பிட்டான். பாவம் பிரசவிச்சவங்க சாப்பிடட்டுமேன்னு. ஆமா இங்க கல்யாணத்தில யாரு சமையல்? சாப்பாடு எப்போ "

அப்படியே உலக விஷயங்களைப் பற்றி அள்ளி விட்டுக் கொண்டே தடாலடியாக சாப்பாட்டு விஷயத்திற்கு தாவிவிடுகிறார். திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நாகேஷ் இது போன்ற சவடால் பேச்சுகளுக்கு கொடுக்கும் உயிரூட்டத்துடன் இதைக் கற்பனை செய்து பார்த்தால் சிரிப்புத் தாங்காது.

இதே உரையில் போனசாக, ஏபிஎன் -இன் திருவிளையாடல் படத்தை பெரிய புராணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கினார் என்று வேறு குறிப்பிட்டார். பாவம் பரஞ்சோதி நாயனார். அவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் மதுரையைச் சுற்றி சிவன் நிகழ்த்தியதாக சொல்லப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான் ஏபிஎன்னின் திருவிளையாடல் திரைப்படம்.

உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் கூட அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறான பெரிய புராணமும், பரஞ்சோதி நாயன்மாரின் திருவிளையாடல் புராணமும் வேறு என்று சுட்டிக் காட்டவில்லை.

ஒருபுறம் சைவ மரபின் தனித்துவத்தை மழுங்கடித்துக் கொண்டிருக்க, இப்புறமோ சைவ மரபின் எந்த அடிப்படையும் தெரியாமல் ஒரு சந்ததி உருவாகிக் கொண்டிருக்கிறது.

கான்சாகிப் சண்டை:
(பதிப்பாசிரியர்: நா. வானமாமலை)

சிவகங்கை கும்மி, கட்டபொம்மன் கதைப்பாடல், ராமப்பையன் அம்மானை - போன்ற நாட்டுப்புற கதைப்பாடல்கள் வழியேத்தான் நாம் சில வரலாற்றுப் போர்களைப் பற்றியும், அந்த அரசர்கள் பற்றியும் முதன்மையான தகவல்களை அறிந்து கொள்கிறோம்.




புகழ்பெற்ற மருது சகோதரர்களுக்கு தபால்தலை வெளியிட இந்திய அரசு முன் வந்தபோது, அவர்களுடைய வரலாற்று பெருமைக்கு முதன்மையான அத்தாட்சியாக இருந்தவை நாட்டுப்புற கதைப்பாடல்கள்தான்.

ஏதோ ஒரு பதிவில் "கட்டபொம்மன் ஒரு வழிபறி கொள்ளைக்காரன். திரைப்படங்கள் வாயிலாக கட்டபொம்மனை ஒரு விடுதலைப் போர் வீரனாக்கி விட்டார்கள்" என்றபோது சற்று திகிலாக இருந்தது. ஒருவேளை நமக்குத் தெரியாமல் ஏதோ வரலாற்றுத் தகவலை அகழ்வாயுகளில் வெளிக் கொண்டு வந்து விட்டார்களோ என்னவோ.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா, நா வானமாமலையின் நாட்டாரியல் திரட்டுகள் மீது மிகுந்த கவனம் கொண்டிருந்தவர். அவருடைய உந்துதலின் பெயரில்தான், 'மருதநாயகம்' என்கிற திரைப்படத்திற்கான முயற்சி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தொடங்கிய சில காலத்திலேயே, நமது தமிழ்ச்சூழலில், குறிப்பாக திரைத்துறையை சார்ந்த சில செல்வாக்கு மிகுந்தவர்களிடையே ஒவ்வாமையை உண்டாக்கி விட்டது. காரணம் கான் சாகிபின் வரலாறு அப்படியான மேல்கீழாக்கங்கள் கொண்டது. ஒரு புறம் பிரிட்டிஷ் இராணுவத்தில் சிறப்பான இடத்தைப் பெற்ற கமாண்டர் யூசுப்கான். நாட்டார் கதைப்பாடலில் 'கம்மந்தான்' என்று குறிப்பிடப்படுகிறான்.

ஆர்க்காடு நவாபின் ஆளுகையிலிருந்த தென்னிந்தியப் பகுதியில் பாளையக்காரர்களுக்கு வரிவசூலிக்கும் பாத்தியதை பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. பிறகு கிழக்கிந்திய கம்பெனி நவாபிடமிருந்து மொத்த வரிவசூலிக்கும் உரிமையையும் குத்தைகைக்கு எடுத்துக் கொள்ள, பாளையக்காரர்களிடமிருந்து வரிபெற்றுச் செல்லும் பொறுப்பில் யூசுப்கான் அமர்த்தப்பட்டான். பூலித்தேவர், கட்டபொம்மு நாயக்கர் (நமக்கு பெரிதும் அறிமுகமான ஜெகவீர் கட்டபொம்முவின் பாட்டனார் இவர்) போன்றவர்களுடன் போரிட்டு, கிழக்கிந்திய கம்பெனிக்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தவன் யூசுப்கான். இதற்காக மதுரை நகரின் சுபேதராக பதவி உயர்வு கிடைத்தது.

சிவகங்கை பாளையக்காரனான தாண்டவராயனோடு மோதல் ஏற்பட, தாண்டவராயன் ஆர்காடு நவாபின் நம்பிக்கையைப் பெற்று கான் சாகிபின் பதவிக்கு வேட்டு வைக்கிறான். இதனால் கோபமடைந்த கான்சாகிப் தானே மதுரையின் நாயகமாக முடிசூட்டிக் கொள்கிறான். இப்படித்தான் 'மருதநாயகம்' என்கிற வரலாற்று சித்திரம் உருவாகியிருக்கிறது.

இப்போதும் இளையராஜா இசையில் ஒலிக்கும் மருதநாயக திரைப்படத்திற்கென எடுக்கப்பட்ட பாடலின் தொடக்க வரிகள் "பொறந்தது பனையூர் மண்ணு...." இந்த நாட்டார் கதைப் பாடலிலிருந்து பெறப்பட்டதுதான்.

"மதனதுரை கானுகதை பாட
வரந்தர வேணுமடி மதுரை மீனாட்சி
கள்ளரை கருவறுத்த தீரன்
கனமான மதுரை நகராண்டிடுஞ் சூரன்"

என்று போகிறது பாடல் வரிகள்.

திரைப்படமெடுக்கவென இந்த நாட்டுப்புற கதைப்பாடல்கள் பேசப்பட்டதால், சில வணிக பத்திரிகைகள், ஒரு தொடராக கான்சாகிப்பின் வாழ்க்கையைப் பற்றி எழுதின.

வரலாற்றுப் பார்வை மட்டும் கொண்டு அகடெமிக்கலாக பாளையக்காரர்களின் காலத்தின் தெற்கத்திய நகரங்களின் கதைகளை ஒரு ஆய்வுநூலாக செய்தால் அது மிகப் பிரமாதமான ஒரு தொகுப்பாக அமையும்.

அனல் காற்று (ஜெயமோகன்)

இதுவும் ஓர் எழுத்தாளரின் பேட்டியில் கேட்ட அபத்தம்தான். தமிழ் புதினங்களிலிருந்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றிய உரையாடலில், பேசியவர் அழுத்தந் திருத்தமாக, "அனல் காற்று கதையை படமாக்கக் கூடாதுன்னு நான் சொல்லிட்டேன். அது இன்செஸ்ட் காதல் பற்றிய கதை. நாயகன் தன் சித்தியைக் காதலிக்கிறது போல வரும். தமிழ்ச் சமூகத்தில் எப்படி இதையெல்லாம் ஏற்றுக் கொள்வார்கள்?" என்று சொல்லிக் கொண்டே போக, எதிரில் பேட்டி எடுத்தவர் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்.


இந்த முறை எனக்குக் குழப்பமே எழவில்லை. ஏனென்றால், இந்த நாவலையும் தன்னுடைய வழக்கம் போல, ஜெயமோகன் அவருடைய இணையதளத்தில்தான் எழுதும்போது வெளியிட்டிருந்தார். ஒரு பொருந்தாத உறவிற்கும், புதியதாக முளைத்த காதலுக்கும் இடையே உழலும் நாயகனின் தடுமாற்றம்தான் கதையின் மையம். பொருந்தாதக் காதல் என்பது, கணவனை இழந்த மத்திம வயது பெண் ஒருவர் மீது இளம் வாலிபன் கொள்வது. அப்பெண்ணின் ஆளுமை மீதான மயக்கம் உலர்ந்து, அந்த உறவின் பொருந்தாமையை உணர்ந்த நிலையில், வேறொரு காதல் அவனுக்கு நிகழ்கிறது.

இன்னமும் ஒரு பத்தாண்டில் கலை நுகர்ச்சி என்பதே ஏறக்குறை காட்சி ஊடகமாக மட்டுமே என்கிற நிலைக்கு நாம் வந்துவிடுவோம்.

அப்போது, இது போன்ற பிழையான தகவல்கள், அபத்தமான உரைகள், அரைகுறை உளறல்கள் என்று ஏதாவது நம்மை புத்தக வாசிப்பை நோக்கி நகர்த்தும் என்றாலே அதுவே புத்தக சூழலுக்கு அளிக்கப்படும் பெரும் பேறு எனலாம். நூல் வாசிப்பின் நுனியாக எது இருந்தால் என்ன. அதைப் பற்றிக் கொண்டு ஒரு புத்தகத்திற்குள் புகுந்து கொள்ள வேண்டியதுதான்.


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

முதல்தர வேலைக்கு முந்துங்கள்

"என்னை ஒரு எடுபிடியாக (stooge) நடத்தினார்கள்"


"அவர்களைப் பார்த்து நான் பொறாமைப்பட்டேன்"

இப்படியெல்லாம் பேசிய ஒரு சொற்பொழிவைக் கேட்டதும், நமக்கு இயல்பாக ஒரு சுவாரசியம் தோன்றுகிறது. யாரோ தன்னுடைய அவமானம், பொறாமைப் பற்றியெல்லாம் பேசுகிறார்களே என. அவதூறான (Scandalous) விஷயங்கள் நம்மிடையே உடனடி கவனத்தைப் பெறுகின்றன. "அவதூறாளர்களின் செல்வாக்கு" என்று நான் பத்தாண்டுகளுக்கு முன்னர் என் தளத்தில் எழுதிய பதிவு மிக அதிகமான வரவேற்பு பெற்றது. ஒப்பீட்டளவில், நான் எழுதிய அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், செறிவான திரைப்பட விமர்சனக் கட்டுரைகள், வித்தியாசமான முயற்சிகள் கொண்ட படைப்பூக்க புனைவுகள் மிகமிகக் குறைவான பார்வைகளையேக் கொண்டிருந்தன.

பெரும் அங்காடிகளில், "Impulsive buying" என்ற வரிசைகள் இருக்கும். உங்கள் அத்தியாவசிய தேவைக்காக நீங்கள் வாங்க வேண்டியவை அலைந்து திரிந்து தேடி கண்டடைய வேண்டியிருக்கும்ப்போது, உங்கள் கைக்கு எட்டும் தொலைவில் வைக்கப்பட்டிருப்பவை உங்களை உடனடியாக வாங்கிவிடத் தூண்டும். சிலநொடிகள் பயனுக்குப் பிறகு அப்பொருட்கள் நமது ஈகோ சிஸ்டத்தில் (Eco System) உண்டாக்கிய டாக்ஸிக் (Toxic) கழிவுகளை துடைத்தெறிய பல மணி நேர உழைப்புத் தேவைப்படக் கூடும்.

இத்தகைய உடனடி நுகர்வுக் கலாச்சாரம் எல்லா சந்தைகளிலும் பரவியிருப்பதைப் போல, இணையத்தையும் வெகுவாக ஆட்கொண்டிருக்கிறது. அதிலொன்றும் பிரச்னையில்லை. சொல்லப் போனால், இக்காலத்தில் சமூகவலைத்தளங்களில் மலிந்து கிடக்கும் அபத்த பேட்டிகளையும், அசட்டுத்தனம் மேலோங்கிய கட்டுரைகளையும், வக்கிர வெளிப்பாடுகளையும், சந்தர்ப்பவாத வஞ்சகங்களையும், அறியாமையின் அகங்காரங்களையும் எதிர்கொள்ளும் நேரந்தோறும், இதற்கு எதிராக நாம் திடமாக நிற்க வேண்டும் என்கிற உரப்பு நமக்கு அதிகம் தோன்றுகிறது. இதுவும் ஒருவகை கிறுக்குத்தனம் என்றாலும், நச்சுத்தன்மை குறைவாகக் கொண்டது. அதிகம் இறுக்கம் கொள்ளாமல், மனதை இலகுவாகவும் அதே சமயம் அறிவுநோக்கிலிருந்து விலகாது நமது பாதையை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மனதை விட வலிமையானதொரு கருவியை (அ) ஆயுதத்தை மனிதன் இதுவரை கண்டடையவில்லை. வேட்டையிட்டு தன் உணவை சேகரித்த காலத்திலிருந்து, இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைக் கொண்டு தன்னை செழுமைப்படுத்திக் கொள்ளும் காலம்வரை, மனிதகுலம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம், 'தன்னால் சாதிக்க முடியும்' என்று மனம் நம்பியதால்தான். அந்த மனவலிமையின் எல்லைக்குட்பட்டு, சில்லறைச் சண்டைகளில் சாலக்கு காட்டுவதோ, மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதோ சாத்தியப்படுகிறது.

ரிச்சர்ட் ஹாமிங்கின் (Dr. Richard W. Hamming) 'நீங்களும், உங்கள் ஆராய்ச்சியும்' என்கிற உரையும் (86ம் ஆண்டு நிகழ்த்தியது), அதன் பின்னர் நடந்த கேள்வி பதில் பகுதியையும், எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் மிகச் சிறப்பான முறையில் மொழிபெயர்த்து, சொல்வனம் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். நான் இன்னமும் உரையை முழுமையாக வாசிக்கவில்லை. அதற்குள் பல்வேறு எண்ண உந்துதல்கள் தொடர்ந்து மனதை ஆட்படுத்திக் கொள்கின்றன. ஒரு சிறு நூல் அளவிற்கான கனமும், அளவும் கொண்ட உரையை, நமது கல்வி நிலையங்கள் நாளைய சந்ததியினரின் வாசிப்பிற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். ஒரு தனி நபர் தன்னுடைய நேரத்தையும், உழைப்பையும் கொட்டி, நமக்கு இலவசமாக கொண்டு வந்து கொடுக்கிறார். அதைப் படித்து அதனைப் பற்றி விவாதிப்பதே நாம் அவருக்கு சொல்லும் நன்றி.




அந்தப் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கும் எழுத்தாளர் பானுமதி நடராஜன்பண்பாட்டுவியலின் முன்னோடியான ரேமண்ட் வில்லியம்ஸ் (Raymond Williams) பற்றிய கட்டுரை தொகுப்பு ஒன்றை மொழிபெயர்ந்து அதே சொல்வனம் பத்திரிகையிலே வெளியிட்டிருக்கிறார். அவருக்கு நன்றி சொல்லும் வகையில் அந்தக் கட்டுரையையும் சிறுகச் சிறுக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.




தமிழ்ச்சூழல் என்றில்லாமல், உலகின் எந்த சமூகத்திற்கும், தங்களுடைய பண்பாட்டுத் தளம் பற்றி முறையான விவாதத்தளத்தை அமைத்துக் கொள்ள ரேமண்ட் போன்றோரின் அறிமுகம் மிகவும் அவசியம்.

ஹாமிங் தன்னுடைய உரையில் ஓரிடத்தில், ஒருவரது பணிச்சூழல் அவருடையக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிக் கூறுகிறார். அதற்கு ஒரு சுவையான நிகழ்வையும் குறிப்பிடுகிறார். நம் பணியில் நாம் கொள்ளும் அனுபவம், அதன் மூலம் ஈட்டிய வெற்றி, அதற்கான தரவுகள் என்று மெல்ல மெல்ல அந்தக் கட்டுப்பாடு ஒரு ஆர்கனிக் வளர்ச்சியாக அமைய வேண்டும். குறுக்கு வழியில், அதிகாரத்திற்கு வரத் துடிப்பவர்களுக்கு, இதன் ஆபத்தான பின்விளைவுகள் புரிவதில்லை.

என்னுடைய அனுபவத்தில், இது போன்ற குறுக்குவழி அவசரக்குடுக்கைகளின் குயுக்திகளால் பலவாறு அவதியுற்றிருக்கிறேன். நான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவிலும், அதன் பெரும்பாலான சேவைகள் இந்தியாவிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அமெரிக்க வாடிக்கையாளர்க்கு முகமாக இருப்பது அதிகார அடுக்கின் மேல் படி. பணிகளை செய்து முடிக்கும் திரளான வேலையாட்கள் அனைவரும் இந்தியாவிலிருந்தார்கள்.

இங்கே ஒரு நகரத்தின் பள்ளிக்கூடங்களின் கணிணிகளை எல்லாம் தொலைதூரத்தில் இருந்து பராமரிக்கும் சேவைக்கான ஒப்பந்தத்தை எங்கள் நிறுவனம் பெற்றது. என்னுடன் பணியில் இருந்த ஒரு சகா, தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டு அந்த சேவையை செயல்படுத்த ஆர்வமாக இருந்தார்.

என்னுடைய பொதுவான இயல்பின்படி, அவருக்கு உறுத்தாத வகையில் உறுதுணையாக இருந்தேன். ஆனால் அவர் பல நடைமுறைகளில் என்னை உள்ளாக்காமல் நிகழ்த்திக் கொண்டிருந்தார். வெற்றியை ஈட்டுவது மட்டுமல்லாது, அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

நான் செய்வதற்கு பல வேலைகள் இருந்தததால், இது போன்ற குறுக்குவழி போட்டிகளில் எனக்கு அதிகம் ஈர்ப்பு இல்லை. ஆனால் விதி அப்படியே இருக்க விடவில்லை.

இரவு நேரத்தில் செய்ய வேண்டிய சில கணிணி அப்டேட்டுகளை இந்தியாவிலிருந்து செலுத்தியவர்கள், , நேரக் குழப்படி காரணமாக, இங்கே பகல் நேரத்தில் செலுத்திவிட, வேலை நேரத்தில் பல கணிணிகள் திடீரென ரீபூட் ஆகத் தொடங்கின. பள்ளிக்கூட பயணாளர்களுக்கு பெருந்தொந்தரவாகிவிட்டது. அப்போதுதான் இது போன்ற சேவைகளை எங்கள் நிறுவனத்திற்கு தரத் தொடங்கியிருந்த நிர்வாகம், உடனே அதைப் பெரும் சேவைக் குறைபாடாக்கி பிரச்னை ஆக்கிவிட்டார்கள்.

வணிகளவில் பெரிய ஒப்பந்தத்தில் பிரச்னை என்பதால், அலுவலக பெருந்தலைகளின் கவனத்திற்கு உடனடியாக விசிறியடிக்கப்பட்டது. அவ்வளவுதான். அதுவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் முழுமையாக நடப்பதாகக் காட்டிக் கொண்டிருந்த நண்பர் ஒரு பெரும் மோசடியை நிகழ்த்தினார்.

இந்தியக் குழு தாங்கள் நிகழ்த்திய அந்த அப்டேட்டுகளுக்கு (தவறான நேரக்கணக்கில்) யாரிடம் ஒப்புதல் வாங்கினார்கள் என்ற கேள்விக்கு, அதுவரை தொடர்பில் இல்லாதிருந்த என் பெயரை, அநியாயமாக இழுத்து விட்டனர்.

வெற்றி என்றால் தன்னை முதன்மையாக நிறுத்திக் கொள்வதும், அதில் பிறழ்ச்சி உண்டானால் வேறொருத்தரை பலிகடாவாக்குவதும் கார்பொரேட் கலாச்சாரத்தில் நடப்பதுதான். நாம் எந்தளவிற்கு சாமர்த்தியமானவராக இருக்கிறோமோ அந்தளவிற்கு துரோகங்களை சமாளிக்கலாம்.

எனக்கு இந்த சிக்கலில் பெரிய சங்கடமாக இருந்தது, என்னுடைய சேவையை நான் முறையாக வழங்கத் தயாராக இருந்த நிலையில் அதைச் செய்ய விடாமல் தடுத்ததுடன், முறையற்ற வகையில் பழி போடும் அவருடைய சில்லறைத்தனம்.

அந்த பிரச்னையின் உடனடி வினையாக, என்னைக் கேள்விக்குட்படுத்தி சில விஷயங்கள் நடந்தன. அவற்றுக்கு பதிலளிப்பது எனக்கு கடினமாக இருந்ததில்லை. நான் சம்பந்தப்பட்ட அத்தனை தகவல் பரிமாற்றங்களையும் நான் முறையாக தொகுத்து வைத்திருந்ததால் மிக எளிதாக அந்தக் குற்றச்சாட்டை நான் முறியடிக்க முடிந்தது. அதை நான் மிக நாகரிகமாகவும் கண்ணியமாகவும் கையாண்டதற்கு சாட்சியாக, அடுத்த சில தினங்களில், இந்தியக் குழுவிலிருந்த நண்பர் ஒருவர், பொறுக்கமாட்டாமல் என்னிடம், அந்த அலுவலக சகாவின் பழி போடும் அநியாயம் பற்றி புலம்பித்தள்ளினார். நான் மிக ஜாக்கிரதையாக அவருடைய உரையாடலையும் எல்லைக்குள் வைத்துக் கொண்டேன். அதிகாரப் போட்டிகள் என்றும் நெடுங்காலத்திற்கு நல் விளைவுகள் தருவதில்லை என்பதில் நான் திண்ணமாக இருந்தேன்.

பிறகு எங்கள் பயணங்கள் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றுவிட்டாலும், ஒரு சமயம் அந்த நண்பரிடமிருந்து ஒரு கோரிக்கை வந்தது. அவருடன் நான் பணியாற்றிய காலத்தில் அவருடைய செயல்பாடுகளுக்கு டெஸ்டிமோனியல் அளிக்க வேண்டுமென.

குறுக்குவழி துரோகங்களுக்கான நியாயங்கள் அவருக்கு இருந்திருக்கலாம். காலம் சென்றபின் அந்த சம்பவங்களைக் கடந்து புதிய நட்பிற்காக அவர் கரங்களை நீட்டியிருக்கலாம். ஆனால் என்னுடைய கட்டுப்பாட்டு எல்லைகளை நான் உறுதிப்படுத்திக் கொள்ளாவிட்டால், என்னுடைய தலைமைப் பண்பின் சறுக்கலாகத்தான் அது முடியும். நாம் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் அதிகாரத்தை நெருங்கும் சாதனமாக ஆக்கிக் கொள்வதல்ல தலைமைப் பண்பு. அந்த சந்தர்ப்பங்கள் இயல்பாக நம்முடைய செயல்பாடுகளுக்கான வெளிகளாக உருவாக வேண்டும். அதுதான் நம்மை நம்முடைய செயல்பாடுகளுக்கான முழுப் பொறுப்பாளராக்கும்.

ஹாமிங்கின் அனுபவச் செறிவையும், தீர்க்க பார்வையையும், அறிவியல் துறைக்கு துணை நின்று, தன்னுடைய கணிணி செயல்பாடுகளைக் கொண்டு அவர் சாதித்த செயற்கரிய செயல்களையும் விட, அவ்வனுபவங்களிலிருந்து நமக்கான பாடங்களை மிக ஆழமாகவும், சுவையாகவும் தொகுத்து அளித்த திறன் அதி முக்கியமானது.  அதுவே அவர் நமக்களிக்கும் சிறந்த கொடை.

வெற்றியை ஈட்டுவதை விட, அதிகாரத்தைக் கைப்பறுவதை விட, 'முதல்தரமாக' வேலை செய்ய முந்துங்கள்.  மற்றவை போனஸாக தானாக வந்தமையும்


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

சுற்றிப் படரும் தீ

 "இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா.  இவங்களா எதையாவது எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.

யாப்பிலக்கணம், அணியிலக்கணம், ஓசைநயம், மரபு சார்ந்த பொருள் கூட்டுதல் என்று பலவகை வழக்கங்கள் இருந்தாலும், கவிதை என்று வரும்போது உரையாசிரியகளின் சிறகுகள் பெரியதாக விரியத் தொடங்கி விடுகின்றன.

மரபு கவிதைகளிலிருந்து, வசன கவிதைகளுக்கு ஒரு இயல்பான பாலம் அமைத்துக் கொடுத்த வகையில், பாரதியின் பங்கு தமிழ்மொழிக்கு இன்றியமையாதது. 

"பாரதிக் கல்வி" என்ற நூலில், அந்தக் கவிதைகளுக்குள் இன்னும் சில அடிகள் ஆழப் புகுந்து விடுகிறார், கவிஞர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன். "தீக்குள் விரல்வைத்தால், நின்னை தீண்டும் இன்பம் தோன்றுகிறதே" என்கிற ஒரு வரியைக் கொண்டு மோகனரங்கன் பாரதியை நெருங்கிச் சென்று அறிய முற்படும் தருணங்கள் மிகவும் தீர்க்கமானவை.

பாரதியின் பாடல்கள் நூலின் இரு பதிப்பை எடுத்துக் கொண்டு, மேற்குறிப்பிட்ட வரி ஒரு பதிப்பில் இடம்பெற்று அதற்கு முந்தைய பதிப்பில் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.  அதையொட்டி மோகனரங்கனின் ஆய்வுகள் பாரதியின் படைப்புகளைச் சுற்றிச் சுழன்று செல்கின்றன.

"துழாய் (துளசி) மலர் மணக்க, வளையல்கள் செறிந்த முன் கையுடன், சிறு மானைப் போன்ற என் பெண், தன் மேனி வேகாமல், அச்சுதனே என்று சொல்லி செந்தீயை தழுவுகிறாள்.  என் கோவிந்தனே எனச் சொல்லி குளிர்ந்தக் காற்றைத் தழுவுகிறாள். இப்படி அவள் செய்வது ஒன்றா இரண்டா..." எனத் தாயின் புலம்பலாக நம்மாழ்வாரின் பாசுரம் ஒலிக்கிறது.  கண்ணன் மீது பித்துக் கொண்ட அந்த சிறுபெண்ணிற்கு சுடுநெருப்பும், குளிர்காற்றும் ஒன்றே போலத்தானாம்.

இந்தப் பாசுரத்தை பாரதியின் ஆங்கில மொழியாக்கத்திலும் படிக்கும் வாய்ப்பும் நமக்கு இருக்கிறது.  நேரடியான புத்தகப் பிரதியாக இல்லை.  மைக்ரோஃபில்ம் பிரதியாக,நியூயார்க் லைப்ரரியில் கிடைக்கும் என்கிறார்கள்.  'பாரதி எனும் பற்றுக்கோடு' சிறுகதையில் வரும் புலவர் இரத்தினசாமி ஐயா இந்தப் புத்தகம் தன்னுடைய பாரதி சேகரிப்பில் இல்லையே என வருத்தப்படுவார்.  அதனால் என்ன.  இது போன்ற அரிய புத்தகங்கள் பற்றி சில அரிய பதிவுகளாவது நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றனவே என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன் 

கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன் 

பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் 

கீத மிசைக்குதடா நந்தலாலா;

தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் 

தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.



ஆண்டாள், தன்னுடைய நாச்சியார் திருமொழியில், பார்க்கும்  குயில்கள், மயில்கள், மலர்கள் என எல்லாவற்றிலும் கண்ணனின் நிறத்தையே காண்பதாக புலம்புவார். தொண்டரடி பொடியாழ்வார், முல்லை நிலத்து காட்டின் தெய்வமான கண்ணனை, அதன் பசுமையான நிறத்தோடு ஒப்பிடுவார்.  

இந்த மரபார்ந்த பொருட்செறிவோடு, பாரதி தன்னுடைய பாடலில், காக்கையின் சிறகை உவமையாகக் கொண்டு வருகிறார்.  அவ்வளவு அடர்த்தியான கருமை நிறம் என்பது எவ்வளவு ஒளி பொருந்தியதாக, காந்தியுடையதாக இருக்க வேண்டும்.  இந்திய பக்தி மரபில், துன்பங்கள் கொடுக்கும் கலியின் (சனி பகவான்) வாகனம் காக்கை என்பார்.  ஆண்டாளை ஒட்டியும், அப்படியே மரபை உடைத்துக் கொண்டும், காக்கையின் சிறகை காதல் கண் கொண்டு பார்க்கும் கவித்துவ மனம் பாரதிக்கு வாய்த்திருக்கிறது.

நம்மாழ்வாரின் பாசுரத்தில் வரும்  அச் சிறுபெண் குளிர்காற்றையும், சுடும்நெருப்பையும் கண்ணனின் நாமம் சொல்லி தழுவி நிற்கிறாள்.  பாரதிக்கு ஒரு விரல் கொண்டு தீயினை தீண்டினால் போதும்.  கண்ணன் அவரையேத் தழுவும் இன்பத்தை அப்படியே அளித்து விடுகிறான்.

தமிழ்வேதம் செய்வித்த பெருமை கொண்ட ஆழ்வார்களின் பாசுரங்களில், கண்ணனின் கீதையைப் பற்றி நேரடியான சுட்டுதல் இல்லை என்பார்கள் ஆய்வாளர்கள்.  ஆனால் கீதையின் சரணாகதி தத்துவத்தை சுட்டும் விதமாக நம்மாழ்வாரின் பாசுரத்தில் "வணக்குடைத் தவநெறி வழி நின்று" என வருவதாகச் சொல்வார்கள்.  

பாரதிக்கு கண்ணனின் வேய்ங்குழல் கீதம் ஒன்றே போதுமானதாக இருக்கிறது.  அது தத்துவம் சார்ந்த மொழியாற்றுகையாக இருந்தால் என்ன, மொழியற்ற குழலோசையாக இருந்தால் என்ன, கண்ணனின் கீதம் அவர் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

சுற்றிப் படரும் தீயை பாரதி தொடர்ந்து தனக்குள் உருவகித்துக் கொண்டே வந்திருக்கிறார்.  தசையினைத் தீச்சுடினும், சிவசக்தியைப் பற்றி பாடும் மனம் அவருக்குத் தேவையாக இருக்கிறது.  சிறு பொந்தினுள் வைத்த நெருப்புப் பொறி படர்ந்திழுத்து பஸ்மமாக பொசுகிக் கொள்ளக் காத்திருக்கும் காடுபோல ஒரு கவித்துவத் தருணத்தை நோக்கிக் காத்திருப்பது தவிர கவிஞனுக்கு வேறென்ன வேண்டும்?



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

சங்ககாலம்: இலட்சிய கனவு சமூகவெளி

அண்மையில் எல்லி க்ரிஃப்ஃபின் (Ellie Griffin) எனும் அமெரிக்க எழுத்தாளர் தன்னுடைய நியூஸ்லெட்டரில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்.  தற்காலச் சூழலில் அச்சுப்புத்தகங்கள் பதிப்பிப்பதன் சிக்கல்களைப் பற்றியதொரு நீண்ட கட்டுரை.  அதில் இருக்கும் பல சிக்கல்கள் நமக்குப் புதியனவை அல்ல.  புத்தக பதிப்பித்தல் என்பது ஒரு சில நிறுவனங்களின் தொழிலாக இருந்ததிலிருந்து, இன்றைய ஃபேஸ்புக் டிஜிட்டல் கண்டென்ட் காலம்வரை, வெற்றிப்பெற்ற புத்தகங்கள் என்பது மாயமானைத் துரத்துவது போன்றதொரு சவாலான செயல்தான்.  தற்காலத்தில், பெரும்பாலும் வம்புகளும், வல்லடிகளும், திரிபுவாதங்களும் நிறைந்த இணைய திரட்டில், அறிவுத்தளத்தில் நின்றோ, படைப்பூக்கம் மிகுந்த பித்துநிலை கொண்டோ, பக்கசார்புகளற்ற விவாதக் களங்களைக் கொண்டோ, காலத்தில் நின்று எதிர்செல்லும் வல்லமை கொன்ண்ட படைப்புகளை கண்டறிவது மிகவும் கடினமானது.  

மொழியைக் கையாள்வதற்கான திறன், எழுதுவதற்கான தளம், வாசகரிடம் கொண்டு சேர்வதற்கான நுட்பம், கருத்து பரிமாற்றங்களுக்கான வேகம் என்று பல சாதக அம்சங்கள் கொண்ட இக்காலத்தில் ஒரு படைப்பை உருவாக்குவது சுலபம்.  அது நிலைபெற்று நிற்பதில்தான் சவால்கள் அதிகம்.  

ஒரு 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு மொழியைக் கற்றுத்தேர்வதற்கே கடினமான சூழல் இருந்திருக்கின்றது. மொழித்திறன், கவித்துவம், இசைக்கலை, இலக்கியம் போன்ற தளங்கள் ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு முதன்மையானதாக இருந்ததில்லை.  ஓரளவிற்கு பதிப்பகத் தொழில் பரவலாக பயனிற்கு வந்ததே பொயு 13ம் நூற்றாண்டு எனலாம்.  அதற்கு முன்பாக படைப்பிலக்கியம் என்பது பெரும்பாலும் பக்தி சார்ந்த போற்றுதல்களுக்கும், அரசு சார்ந்த ஆவணங்களுக்குமாகத்தான் இருந்திருக்கிறது.  ஆனால் பொயு முதலாம் இரண்டாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக சொல்லப்படும் சங்கத் தமிழ் இலக்கியத் திரட்டு என்பது அறம், பொருள், காதல், அரசு முறைமை, மக்கள் பயன்பாடு என்று பலவகையில் அன்றைய காலத்தை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.  இது தமிழ்மொழிக்கான ஒரு பெருமைமிகு அடையாளம் என்பதை நாம் மறுக்கவியலாது.

பண்டைய தமிழ் மன்னர்களின் வீரம் மற்றும் கொடையைப் பற்றி விரித்து சொல்லப்படும் சித்திரங்கள் புறநானூற்றில் சிறு சிறு தொகுப்புகளாக நமக்குக் கிடைக்கின்றன.  இதில் புலவர் பெருஞ்சித்திரனார் என்பவர், பாடாண் திணையில், முதிர மலைநாட்டு தலைவன், குமணனைப் பற்றிப் பாடிய சில பாடல்கள் நமக்கு, வள்ளல்தன்மை சார்ந்த அரசு முறைமைப் பற்றி ஒரு பார்வையை அளிக்கின்றது.  



பரிசில் கடாநிலை:

இந்தப் பாடல்கள், 'பரிசில் கடாநிலை' துறையைச் சார்ந்தன என தமிழ்ச்சான்றோர்கள் வரையறுக்கின்றனர்.  காவுதல் என்றால் சுமத்தல்.  தூக்குதல். பெறுதல் எனலாம்.  'கா'வுதலிலிருந்து பிறந்த சொல்தான் காவடி.  அது போல, 'கடாவுதல்' என்றால் கோருதல். இரத்தல் என்று பொருள்.  புறம் 158வது பாடலில், தமிழ் சங்கத்திரட்டில் குறிப்பிடப்படும் கடையெழு வள்ளல்களைப் பற்றி ஒரு முழுமையான குறிப்பை அளிக்கின்றார்.  பறம்பு மலையின் கோமான் பாரி.  கொல்லி மலை கோமான் வல்வில் ஓரி,  மலையமான் திருமுடிக் காரி,  தகடூர் தலைவன் அதியமான் அஞ்சி என்னும் எழினி, பொதினி அரசன் பேகன், மோகிப் புலவர் பாடிய ஆய், வள்ளல் கோன் நள்ளி, முதலான வள்ளல்கள் மாய்ந்து போன பின்னர், தன்னைப் போன்ற புலவர்கள் தேடி வருவது முதிரமலை அரசனைத்தான் எனப் பாடுகிறார்.

அன்றைய முதிரமலை இன்றைய பழனியைச் சார்ந்தது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.  பலா மரங்கள் செறிந்த அந்த மலையில், முள் தோல் போர்த்திய அந்தப் பழங்களை அகழ்ந்து, அதன் இனிய சுளைகளை சுவைக்கும் கடுவன்கள் (ஆண் குரங்கு),  அதைத் தன் துணைக்கும் பகிர்ந்தளிக்கின்றன என்கிறார்.  ஒரு வள்ளலைப் போற்றிப் பாடத் தொடங்கும்போது, அங்கிருந்த நிலத்தில் பகிர்ந்துண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மிருகங்களை உருவகமாக ஏற்றிச் சொல்வது குறிப்பிடத்தக்கது.  

முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!
(புறநானூறு - 158)

கொள்ளேன்! கொள்வேன்!

அடுத்தடுத்து பாடல்களில் தன்னுடைய வறுமைநிலையை பலவாறாக எடுத்து வைக்கிறார் பெருஞ்சித்திரனார்.  வறிய தோற்றத்தில் இருக்கும் அன்னை, பிள்ளைகளுக்கு பாலூட்ட இயலாது வாடிய நிலையில் மனைவி என்று குறிப்பிடுபவர், அரசனிடம் இருந்து தான் பரிசு பெறுவதற்கென ஒரு கடப்பாடும் முன்வைக்கிறார்.

உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
(புறநானூறு - 159)

உயர்ந்திருக்கும் தந்தங்களைக் கொண்ட,  (கொல்லும்) வலிமையுடைய யானையைப் பெற்றாலும், நீ பாராமுகமாக அளிப்பாயானால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.  மனம் உவந்து சிறிய (குன்றி) அளவில் பரிசு அளித்தால் ஏற்றுக் கொள்வேன் என்கிறார்.  

இந்தப் பாடலின் பொருளுக்கு ஒரு பின்னணி கதையும் இருக்கிறது.  குமணன் போன்ற மற்றொரு அரசன் வெளிமான் என்பான், பெருஞ்சித்திரனாரிடம் மனம் நோகும்படி நடந்து கொண்டு விட்டிருக்கிறான்.  பெரியதாக ஒன்றுமில்லை.  பெருஞ்சித்திரனார், வெளிமானிடம் பரிசில் வேண்டிச்  சென்ற போது, அவருக்கு சரியாக முகங் கொடுக்காமல், தன் இளவலை (தம்பி) விட்டு பரிசுளித்துவிட்டான்.  மோப்ப குழையும் அனிச்சம் மலர் போல, புலவர், வெளிமானின் புரத்தலை மறுத்து திரும்பிவிடுகிறார்.

இன்மை துரத்த, வள்ளமை வரவேற்க

புலவரின் வீட்டு நிலையோ வறுமையில் மிகவும் மோசமாக இருக்கின்றது.   அடுத்த பாடலில் அதை விரிவாக விவரிக்கின்றார்.
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழுஞ் சோறுங் கடைஇ யூழின்
உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு
மறப்புலி யுரைத்து மதியங் காட்டியும்
நொந்தனளாகி நுந்தையை யுள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்
(புறநானூறு - 160)

அன்னையிடம் பெற பாலில்லை. அடுக்களை பாத்திரத்தில் கூழும் இல்லை.  பசியில் அழும் பிள்ளையை, 'புலி வந்து அடித்து விடும்' என மிரட்டியும், 'அம்புலி பார்' என்று வேடிக்கைக் காட்டியும் நொந்து போயிருக்கிறாள்.  எதற்கும் மசியாத அக்குழவியிடம், 'உன் தந்தையை எண்ணி, கோப முகம் காட்டுவாயே, பார்க்கலாம்" என்கிறாளாம், அவருடைய இல்லாள். 

அதற்கு மேல் வறுமை துரத்த, குமணனின் வள்ளமைப் பற்றிய புகழ் அவரை ஈர்க்க, காடு மேடு கடந்து, பலகாலம் பயணித்து முதிர மலைக்கு வருகிறார்.

வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின் அளந்து அறி-மதி பெரும என்றும்
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி
(புறநானூறு - 161)

தன் திறனும் வலிமை மிக்கது அல்லது குறைந்தது என்றாலும், தன் திறன் அளவை விட  குமணனது (வள்ளமைத்) திறனுக்கு ஏற்ற பரிசில், அவன் அளிக்க வேண்டும்.  பிற அரசர் நாண, பெரும் யானை மீது நீ அளித்த செல்வத்தைக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்கிறார். 

படு மோசமான வறிய நிலையிலும், தன்னுடைய கல்வித்திறன் மீது ஐயம் கொண்ட நிலையிலும், அவருக்கு அரசனது வள்ளல்த்தன்மை மீதான நம்பிக்கை மேலோங்கி நிற்கிறது.

இரவலர் உண்மையும், ஈவோர் உண்மையும்

பரிசில் கோரி வள்ளலைப் புகழ்ந்து பாடி, பெரும் செல்வம் பெற்றபின்னும், பெருஞ்சித்திரனார் தனக்கு ஒரு முக்கிய கடமை இருப்பதாக அடுத்த பாடலில் கூறுகிறார்.  முன்பு தன்னிடம் பாராமுகமாக இருந்த அரசன் வெளிமான் நாட்டிற்கு சென்று, அங்கே குமணன் தனக்கு அளித்த யானையை நிறுத்தி, 'இரவலரும், புரவலரும் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும்" என்கிரார்.   

இரவலர் புரவலை நீயு மல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையுங் காண் இனி இரவலர்க்
ஈவோர் உண்மையுங் காண் இனி நின்னூர்

கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்
கடுமான் தோன்றல், செல்வம் யானே
(புறநானூறு - 162)

தன்னுடைய வறுமைநிலையைப் போக்கக் கோரி, வள்ளலிடம் சென்று பாடல் பாடி இரப்போராக இருந்தாலும் அதற்கென கண்ணியமான கடப்பாடுகள் கொண்டிருப்பதையும், அந்த வள்ளல்களின் பெருமையைப் பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையையும் அக்கால புலவர்கள் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.  

 வல்லாங்கு வாழ்தும் என்னாது எல்லோர்க்கும் கொடுமதி

இந்த வள்ளல்கள்-புலவர்கள் பிணைப்பின் முக்கிய கண்ணியாக அடுத்த பாடல் காணப்படுகிறது.  தான் பெற்ற பரிசில் அத்தனையும் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையை உதறி, அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை நயமாக உரைக்கின்றார்.  

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்,

கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்,

இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி-மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.
(புறநானூறு - 163)

தன் மனைவியை நோக்கி, "நீ விரும்புபவர்க்கும், உன்னை விரும்புபவர்க்கும், வறுமையில் உதவி புரிந்தோர்க்கும், இன்னின்னார் என்றில்லாமல், என்னையும் கூட ஆலோசிக்க வேண்டியல்லாது, அரசன் குமணன் அளித்த இந்த செல்வங்களை, அனைவருக்கும் பகிர்ந்து கொடு" என்கிறார். 

இந்தப் பாடல் தொகுப்புகளில், பண்டையக்கால தமிழ் அரசர்களின் கொடைத்திறன் பற்றி மட்டுமல்லாது, அந்த வள்ளல்தன்மை எவ்வாறு ஒரு நாட்டின் அரசு முறைமையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது எனக் காண முடிகிறது.  மக்களிடம் இருந்து வரிபெற்று ஆட்சி நடத்தும் வழக்கத்திற்கு, ஈடாக, அரசுக் கருவூலத்திலிருந்து கற்றோர் வழியே அதே மக்களுக்கு அந்தச் செல்வம் சென்று சேரும் ஒரு சுழற்சி பொருளாதாரத்தை, அதன் பயனாக வேந்தர்கள் மக்கள்பால் கனிவான அரசை செலுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை, மற்றும் கற்றறிந்த சான்றோர் தங்கள் நிலை தாழாது கண்ணியத்துடன் நடத்தப்படுவதை முதன்மை நோக்காக கொண்டிருந்தார்கள் என்பதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

புலவர் பெருஞ்சித்திரனாரின் பாடல் தொகுப்பிற்கு அடுத்து, பெருந்தலை சாத்தனார் என்பவரின் பாடல்களிலும் குமணனது வள்ளத்தன்மை போற்றப்பட்டிருக்கின்றது.  

தன்னுடைய அரசு பறிபோன நிலையிலும், தன் தலையைக் கொடுத்தாவது தன்னை நம்பி வந்தவர்களின் துயர்தீர்க்கும் பண்பு கொண்டிருந்தான் என்பது அந்தப் பாடல்களில் பாடப்பட்டிருக்கும் அரிய பண்பு.  இந்தப் பாடலை ஒட்டி இக்கால தமிழறிஞர் சிலர் குமணனின் வள்ளல் மான்பை நாடக இலக்கியமாக எழுதியிருக்கின்றனர்.

சங்கப்பாடல் திரட்டு என்பது இது போன்ற பண்டைக்கால வாழ்வியல் சித்திரங்களை நாம் ஒன்றுகூட்டி அமைத்துக் கொள்ளும் சிறப்பு கொண்டிருக்கிறது.  அதிலிருந்து ஒரு துளியை நாம் சுவைத்துப் பார்க்க, ஓர் உடோபிய சமூகத்தின் பெருவெளியாக அது நம்மிடையே விரிந்து பரவுகிறது.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

மீனாட்சி திருக்கல்யாணம்

ஒரு நண்பர்கள் சந்திப்பின் போது, புதியதாக அறிமுகமான ஒருவர், "நீ பேசறதைக் கேட்டா அப்படியே மதுரைக்காரன் பேசறதைப் போலவே இருக்கு." என்றார். இத்தனைக்கும் மதுரையில் வாழ்ந்த காலத்தில் அந்த வட்டார வழக்கின் சுவடு அவ்வளவாக என் மீது படிந்திருந்ததாக நினைவில்லை. நாம் வளர்ந்த சூழலின் இயல்புகள் எங்கோ நம் மீது ஆழமான தாக்கங்களை விளைவிக்கின்றது. நாம் அச்சூழலிலிருந்து விலகி செல்லச்செல்ல நம் மனது அதன் மீதான பிடிப்புகளை இறுக்கிக் கொள்கின்றன போலும்.

அண்மையில் நடந்தேறி சித்திரை திருவிழா உற்சவங்கள் நமது நிலத்தின் பண்பாட்டு மையத்தை, நமக்கு அறிமுகமான வரலாற்று தகவுகள் அல்லது புராண உருவாக்கங்களைக் கொண்டு மேலும் நாம் ஆய்ந்தறிய உதவுகின்றன.



மூன்று தெய்வ வழிபாடு:

மீனாட்சி திருக்கல்யாண உற்சவத்தை ஒட்டி, கொண்டல் வண்ண கூடலழகரும், தழல் வண்ண சொக்கநாதரும் நின்றிருக்க இடையே மரகத வண்ணத்தில் மீனாட்சி இருக்கும், சிற்பம் ஒன்று iconographyல் முக்கியத்துவம் பெறுகிறது . இந்த மூன்று தெய்வ சிற்பமானது இந்திய நிலத்தின் பல பகுதிகளை ஒன்றிணைக்கும் ஒரு பண்பாட்டு அடையாளம் எனலாம். அந்தந்த பகுதியில் அதற்கான தொன்ம வரலாறு, பின்புலக் கதைகள் மாறி மாறி வழங்கப்பட்டாலும், வடக்கே பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து தெற்கே அண்ணன்மார் ஆலயம் வரை, இருள் வண்ண, ஒளிவண்ண தெய்வங்களுடன் ஒரு பெண் தெய்வம் இடம்பெற்றிருக்கும் மூன்று தெய்வ சிற்பங்களைக் காணலாம்.

தாய் தெய்வ வழிபாடு:


திரிபுரம் எரித்த விரிசடை இறையனார் சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்ததாக சங்க இலக்கியம் கூறுகின்றது. மதுரையைச் சுற்றி சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பற்றி புராணக் கதைகளில் ஒன்றாக அவர் மீனாட்சியை மணம் கொண்ட புராணமும் உண்டு. குமரக்கடவுளின் இரண்டு படைவீடுகள் மதுரையைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. அழகர் மலையில் உறையும் பரமன் தலம், வைணவ திவ்யத்தலங்களில் முக்கியமானது. கடவுள்களுக்கு இடையே இவ்வளவு போட்டிகள் இருந்தும், மதுரையின் அரசுரிமை காலத்துக்கும் மீனாட்சி தாய்க்குத்தான்.

சிலப்பதிகாரம் குறிப்பிடும் கோவில் வழிபாடுகளில் பெண் தெய்வம் சொல்லப்படவில்லை. ஆனால் அதன் முதன்மை நாயகியான கண்ணகி கொற்றவையின் ஒரு வடிவம் என்பதற்கு ஏற்ப, மதுரை நகரை தீயிட்டு அழிக்கிறாள். கண்ணகி எனும் பத்தினி படிமத்திற்கு முன்மாதிரியாக திருமாவுண்ணி எனும் பாத்திரம் சங்கப் பாடல்களில் பாடப்பட்டிருக்கின்றது.

பண்டைய இனக்குழு வழக்கங்களில் தாய் தெய்வ வழிபாடு முதன்மையானதாகவும், உக்கிரமானதாகவும் இருந்திருகின்றன. திரௌபதி, சாமுண்டி, துர்க்கை என்ற பல பெண் தெய்வங்கள் உக்கிரத்தின் உச்சத்திற்கு சென்று தங்களுக்கான பலியினைப் பெற்றுக் கொண்டதை இன்றும் வைபவங்களாகக் கொண்டாடப்படுகின்றன. மீனாட்சியோ பட்டாபிஷேகம் செய்யப்பட்ட அரசியாக எட்டுதிக்கிலும் சென்று வெற்றி கொண்டவள். ஓர் இனக்குழு, தங்களுக்கென கொண்ட காவல் தெய்வத்தின் மூலம் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வது போலத்தான் இந்த திக்விஜயங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

உக்கிர போர்களின் விளைவாக பலி கொள்ளுதலுக்கு மாறாக மீனாட்சியின் திக்விஜயத்தின் முடிவில் சொக்கநாதருடன் திருமணம் ஆகின்றது. பண்டைக்கால தாய்வழிச் சமூகம், தந்தைமை (Patriarchal) சமூகமாக மாறியதை உணர்த்தும் வைபவமாக இந்த திருக்கல்யாண உற்சவத்தைக் கொள்ளலாம்.

வைணவ சமயத்தை முதன்மையாக பின்பற்றிய நாயக்கர்கள் மதுரையை ஆண்ட காலத்தில், மக்கள் பண்பாட்டு தளத்தில் பல சீர்திருத்தங்கள் நிகழ்த்தியதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள். பிறகு நடந்த பல மாறுதல்களுக்கும் நாயக்கர் காலத்தை ஒரு காரணியாக பயன்படுத்துவதும் உண்டு.

அப்படியாக ஒன்றிணைக்கப்பட்ட பல்வேறு சமய வழிபாடுகளுக்கும், புனைந்து கொண்ட புராண கதைகளுக்கும் இடையே மதுரையின் அரசி பட்டம் மட்டும் அன்னை மீனாட்சியை விட்டகலவில்லை.

சாமி மனிதனாதலும், மனிதன் சாமியாதலும்:

அழகர் மலையை விட்டு இறங்கிவரும் சுந்தரராஜ பெருமாள், 'கள்ளர்' உருக் கொள்கிறார். தங்கையின் திருமணத்திற்காக பொருள் கொண்டு செல்வதால், கள்வர்களின் தாக்குதலை சமாளிக்க அந்த உபாயம் என்று அதற்கு ஒரு கதையும் சொல்லப்படுவது உண்டு. அதனால் கள்ளழகர் என்றப் பெயரும் பெறுகிறார்.
மற்றொரு தொன்மத்தில், கள்ளர் வேடமிட்டு சொக்கநாதர் மீனாட்சியை கடத்திக் கொண்டு போனதாக வரும்.

மதுரையிலும், அதன் சுற்றியிருக்கும் கிராமங்களிலும் இருக்கும் திரளான கள்ளர் சமுதாயத்தினர், மலையிலிருந்து இறங்கி வருபவரை அலை அலையாகச் சென்று எதிர்சேவை செய்து தங்களுக்கு பிரியப்பட்ட கள்ளழகராக கொள்கின்றனர்.

இராமன், மீனாட்சி, முருகன் என்று முழு ஒப்பனைகளோடும் நீர் நிறைந்த தோல்பையில் நீள் குழாயை வைத்து மக்கள் மீது நீரைப் பீய்ச்சியடித்தபடியும் செல்லும் சாமிகள் மற்றொருபுறம்.

மலையில் இருந்து இறங்கி வந்த சாமி மனிதனாகவும், அதற்கெதிரே செல்லும் மனிதன் சாமியாகவும் இந்தத் திருவிழாக்கள் ஒரு தலைகீழாக்கத்தை நிகழ்த்துகின்றன.

எதிர்காலத்தில் விண்கலமேறிப் போகும் மனிதனை எதிர்கொண்டு ஏதோ ஒரு கடவுளும் இது போல ஆசி அளிக்க நின்றாலும் ஆச்சர்யமில்லை.


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

அறிவியல் திருவிழா - 3

"சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருநூறு பேர்களின் தகவல்களை எடுத்துக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தியதில்..."

பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பதினாறு வயதுதான் இருக்கும். இதென்னடா, இத்தனை சிறுவயதில், இன்சுலினிக்கு ஏதோ மாற்று மருந்து கண்டுபிடித்து விட்டாளோ என நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் பக்கத்தில் இருந்தவரோ தன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் ஆய்வுகளில் பொழுதைக் கழித்து இப்போது ஓய்வு பெற்றபிறகும், பெரு நிறுவனங்கள் வலிய அழைத்து ஒப்பந்த பணிகளில் ஈடுபடுத்த வைக்கும் அளவிற்கு அறிவியல் ஆர்வலரான ஸ்காட்டிஷ்காரர். அவரும் ஆர்வமானார்.

"அந்த இருநூறு பேர்களின் தகவல்களைக் கொண்டு ஐயாயிரம் பேருகளுக்கான தகவல்கள் உருவாக்கி, செயற்கை பாட்களை தொடர்ந்து சோதனை செய்ய ஒரு டேட்டா மாடலை உருவாக்கி..."

நான் ஆர்வமாக பங்கேற்கும் சிறுவர்கள் அறிவியல் போட்டிகளில், கடந்த 2-3 வருடங்களான ஆய்வுகளில் பெரும்பாலும், சுற்றி சுற்றி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் வந்து நின்றுவிடுகின்றன. இந்தப் பிள்ளைகள் எல்லாம் இன்னும் ஒன்றிரெண்டு ஆண்டுகளில் கல்லூரிகளுக்கு படிக்கச் சென்றுவிடுவார்கள். அடுத்த பத்தாண்டுகளில் இவர்கள்தான் நமது மருத்துவத் துறையின் ஆய்வுகளின் போக்கை தீர்மானிக்கும் சக்தி கேந்திரங்கள். எதிர்காலத்தில் நம்முடைய நோய் நமது கவனத்திற்கு வருமுன்னரே இவர்களுடைய செயற்கை நுண்ணறிவு செயலிகள் அவற்றைக் குணப்படுத்த வல்லவையாக இருக்கும்.

இன்னொரு பையன், "நியூரோ நோய்களைக் கண்டறிய உதவும் மாடல்" என ஒரு பெரிய மாடலைப் பற்றி நுணுக்கமாக 10 நிமிடங்களில் பிரசன்டேஷன் செய்து முடித்தான். ஒரே சமயத்தில் பத்து பதினைந்து ரேடியோலஜிஸ்ட்டுகளின் பணியை செவ்வனே செய்து முடிக்கும் என்கிறான்.

"வழூ வரையறைப் பற்றி ஏதும் உன் ஆய்வில் அக்கறைக் கொண்டிருந்தாயா?" என்று கேட்டேன்.

அதெல்லாம் வெகு துல்லியமாக இருக்கும் என அடித்து சொன்னான். கோட் போட்டுக் கொண்டு கனவான் உடுப்பில் இருந்ததால், துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் செய்யாத குறை. அந்தப் பையன் ஒவ்வோர் ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகளுடன்தான் இந்த அறிவியல் போட்டிகளுக்கு வருகிறான். நானே அவனுடைய ஆய்வுகள் மூன்று நான்கினைப் பார்த்திருக்கிறேன். இதிலும் தன்னுடைய ஆய்வுகளுக்கான செயலிகளையும், அதற்கான மூலப் பிரதிகளையும் இணையவெளியில் பொதுவில் வைத்துவிடுவான். ஏதோ அவன் பிரசன்டேஷன் செய்யும் போது பார்த்துவிட்டு வந்துவிட்டீர்கள் என்றில்லாமல், ஆற அமர அந்த செயலிகளை இயக்கி எப்படி இயங்குகின்றன என்றெல்லாம் பார்த்துக் கொள்ளுங்களேன் என்கிற தன்னம்பிக்கை.




இன்னொரு பெண், "உங்கள் வீடு க்ரீனாக, அதாவது பசுமை நிலைக்கு சாதகமாக இருக்கின்றதா" என்றொரு சுவாரசியமான ஆராய்ச்சியை செய்திருந்தாள். உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும், சூழலியலை மாசுபடுத்தும் சாத்தியங்கள் கொண்ட உபகரணங்களும், அவற்றின் சூழலியல் ஃபுட்ப்ரிண்ட்களும் (கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேற்ற அளவுகள்) கொண்டும் உங்கள் வீட்டின் பரப்பளவை கொண்டும் ஓர் எளிய சமன்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியுமாம். அந்த சமன்பாட்டின்படி நாம் நம்முடைய சூழலியலுக்கு பாதகமாக இருக்கிறோமா அல்லது அதன் வரையறைக்குள் இருக்கிறோமா எனத் தெரிந்து கொள்ள முடியும் என்றாள்.

நாடுகளுடைய அணுசக்தி கொள்கைகளை விமர்சித்து பக்கம் பக்கமாக படித்து தலை சோர்ந்து போனவர்களுக்கு மாற்றாக இப்படியொரு சிந்தனைத் தரப்பு. தம் வீடுகள் சூழலியல் மாசுபடுதலை கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றனவா என்றக் கேள்வியை முன்வைக்கும் ஆய்வுகள்.

"இதன் அடிப்படையில் ஏதாவது டேட்டாக்கள் பெற முற்பட்டாயா? ஏதாவது சர்வே நடத்தி பங்கேற்பாளர்கள் எப்படி தங்கள் வீட்டின் பசுமை நிலையைப் பற்றிய நிலையைக் கண்டு கொள்ள முடியும் என்று நிறுவினாயா?"

அந்தப் பெண் சாமர்த்தியமாக அத்தகைய கணக்கெடுப்புகளைச் செய்யவில்லை. ஆனால் முழுநீளத்திற்க்கு நல்லதொரு பிரசன்டேஷன் செய்திருந்தாள். என்ன செய்வது. இது ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஃபோரம். அதனால் அப்பெண்ணிற்கு முழு மதிப்பெண்கள் அளிக்க இயலவில்லை.

"தோல் காயங்களைப் பற்றி ஆராயும் ஏ ஐ செயலி" என்றொரு பையன் விஸ்தாரமாகப் பேசினான்.

பெயர்தான் கணிணித் துறை ஆய்வறை. ஆனால் இவர்களின் ஆய்வுகளின் போக்கெல்லாம் மருத்துவத் துறையை மையமாகக் கொண்டிருந்தன என்பது புரிந்தது.

முன்னதாக, அந்நாளின் காலைப் பொழுதில் இடைநிலை பள்ளி மாணவர்களின் ஆய்வுகளில் அமர்ந்திருந்தேன். அவர்களின் நல்லூழோ, அல்லாததோ, அந்த ஆய்வறையின் ஜட்ஜ் நான் மட்டும்தான். இயற்பியலில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆய்வுகளை பிரசண்ட் செய்தார்கள்.

"எந்த மாதிரியான மெட்டீரியல்கள் கொண்டு ஒலி மாசை வெகுவாக குறைக்க முடியும்?"

"ப்ரொபல்லர்களின் அளவைக் கொண்டு ட்ரோன்களின் பறக்கும் சக்தியை எப்படி அதிகப்படுத்துவது?"

"கவண் வில்லின் நாணின் நீளம் எப்படியாக அதன் விசையை பாதிக்கின்றது?"

"காந்தங்கள் மீதான சீதோஷ்ண நிலைகளின் பாதிப்புகள்"

"விற்களில் நாண் இழுபடும் தூரம்"

"லேசரின் பொய்யாத்தன்மை"

"கால்பந்தாட்ட காலணிகளின் முளைகளின் மெட்டீரியல் விளையாட்டுத் திறனை பாதிக்குமா?"

"எவ்வகையான டார்ட்டுகள் தூரம் அதிகமாக பாய்கின்றன"

"கை போன்களின் திரைகாக்கும் அட்டைகள் எவ்வளவு பாதுகாப்பானவை?"

"எவ்வகையான உணவுகள் ஹைட்ரஜன் வெளிப்பாட்டை அதிகரிக்கின்றன"

இப்படி பல தலைப்புகளில் ஆய்வுகளிலும் தகவல்களிலும் என்னை மூழ்கடித்தனர்.

"ட்ரோன்களின் திறன்களை அதிகரிப்பதனால் என்ன சாதித்து விட முடியும் என நினைக்கிறாய்?"

"அடுத்த முறை என்னுடைய பிரசன்டேஷனுக்கு தோதாக ட்ரோன்கள் வழியே ஹேண்ட் அவுட்களை விநியோகிக்க முடியும்"

சமத்காரமான பதில்கள். தங்கள் ஆய்வுகளில் எந்தக் கேள்விக் கேட்கப்பட்டாலும் அதை தலைநிமிர்ந்து எதிர்கொள்ளும் திடம் மிகவும் கவர்ந்தது.

எங்கள் வீட்டு ஜூனியர், பயோ மெடிக்கல் துறையில், காய்கறிகள், பழங்களிலிருந்து மரபணுவை பிரித்தெடுத்துக் காட்டுகிறேன் என்றதொரு பிரசன்டேஷன் செய்திருந்தார். இளவரசியார், பற்களின் எனாமலை பாதிக்கும் குடிபானங்கள் பற்றி ஓர் ஆராய்ச்சி செய்திருந்தார்.

பிறகு ஒரு ரோபாட் காரை தானியங்கியாக ஓட்டிக் காண்பிக்கும் போட்டியில் ஜூனியர் பங்க்கேற்றார். கூடவே உயரத்திலிருந்து விழும் எடையின் சக்தியில் ஒரு வண்டியை ஓட்டிக் காட்ட வேண்டும் என்று மற்றுமொரு போட்டி. இதில் சவால் என்னவென்றால், வண்டியின் முனையில் ஒரு முட்டையைக் கட்டி விடுவார்கள். ஓடும் வண்டி தன் எல்லைக் கோட்டிற்குள் வந்து சரியாக நிற்க வேண்டும். எல்லைக் கோட்டின் மறுபுறம் ஒரு மதில்சுவர் இருக்கும். எல்லைக் கோட்டை சிறிது தாண்டிச் சென்றாலும் போய் முட்டிக் கொண்டு முட்டை உடைந்து தோல்விதான். இயல்பான பள்ளிக்கூட வேலைகளிடையே இந்தப் போட்டிகளுக்கு தயாராகி அதில் கலந்து கொள்வதே ஒரு தனி சவால்தான். போட்டிகளில் வெற்றி கிடைத்தால் அது போனஸ்.

இந்தப் பிள்ளைகளின் ஆர்வத்தின் வேகத்தை அணை போட்டு செழுமைப்படுத்தி பயன்படுத்தும் பொறுப்பினை இது போன்ற அறிவியல் திருவிழாக்களில் பொறுப்புணர்ந்த பெரியவர்கள்வசம் கொடுத்து விடுகிறார்கள்.

அமெரிக்கர்களிடையேயான அடிப்படை பண்புகளில் ஒன்று, அனைவருக்குமான வாய்ப்புகளை தடையில்லாமல் வழங்குவது. சிற்சில அரசியல் ஆதாயங்கள் பார்க்கும் போக்கு உண்டுதான். ஆனால் இந்தியர்கள் பொறுப்புகளில் அதிகரிக்கும்போதே, அவர்களுடைய பாரம்பர்ய அரசியலான செல்வாக்கானவர்களின் கால்களைக் கட்டிக் கொண்டு தங்களை உயர்த்திக் கொள்ள நினைக்கும் சில்லறத்தனங்கள் இதில் அதிகமில்லை. அதுவே இந்த சிறுவர்களுக்கு சுதந்திரமாக செயல்படும் உணர்வை மேலோங்கச் செய்கிறது.

அரங்கு முடிந்து என்னுடைய தீர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் போது எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வந்தான்.

"பிரமாதமான கேள்விகள் கேட்டீர்கள். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்?" என்றான்.

எதிர்பாராத திசையில் இருந்து வந்த பந்தை எதிர்கொள்ள சற்றுத் தடுமாறினேன்.

"உன்னுடைய ஆய்வுகளைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவியல் படித்திருக்கிறேன் தம்பி. இப்போது நிதி சேவைக்கான ஐடி குழுவில் பணிபுரிகிறேன்"

"ஓ, நிறைய எண்களை சமாளிக்கும் வேலை. வாழ்த்துகள் உங்களுக்கு" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

செயற்கை நுண்ணறிவு பாட்க்களின் எதிர்கால இடம் சந்தேகமானதுதான். இந்த சமத்கார சாதுர்ய சிறுவர்களுடன் அல்லவா அவை போட்டி போட வேண்டும்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

தமிழ்விடு தூது

(சிறார் இலக்கியம்: அமெரிக்காவில், ஆலன்டவுன் நகரில் உள்ள எங்கள் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கென, சங்கப் பாடல்களை மையம் வைத்து எழுதிய மூவங்க நாடகம். 23-ஏப்ரல்-2023ல் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. 

2023ம் ஆண்டின் சிறந்த அனுபவமாக, சிறார் நாடகம் ஒன்றை அரங்கேற்றியதைக் குறிப்பிடலாம். எங்கள் ஊர் தமிழ்ப்பள்ளியில் படிக்கும் சிறுவர்களைக் கொண்டு புறநானூற்று சித்திரம் ஒன்றை மூவங்க நாடகமாக சென்ற ஏப்ரல் மாதம் அரங்கேற்றினோம்.
நான்கு மாதங்களுக்கும் மேலாக அந்த நாடகத்திற்கான ஒத்திகை செய்தோம் என்றாலும், அந்தப் பளு தெரியாதவகையில், மாணாக்கர்கள் மிகச் சிறப்பான ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
தமிழ்ப்புலவர் ஔவைக்கும், தகடூர் அரசன் அதியமானுக்குமான நட்புறவு பற்றி புறநானூற்றில் அருமையான சித்திரம் ஒன்று கிடைக்கின்றது. இறவாவரம் கொண்ட அருங்கனியான நெல்லிக்கனியை அன்னைத் தமிழுக்கு ஈந்த கொடையையும் தாண்டி, ஔவை எனும் விறலியின் பெருமிதமும், கம்பீரமும் அந்தப் பாடல்களில் சிறப்பாக ஒளிர்கின்றன.
புறம் 206, தகடூர் அரண்மனையின் வாயிற்காப்போனிடம், கவிச்செருக்குடன், 'காவினம் கலனே! சுருக்கினம் கலப்பை! எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே' என்று பாடும் பாடல். அதில் தொடங்கி, புறம் 101, புறம் 91, புறம் 95 என்று பிற பாடல்களை கோத்து நாடகமாக உயிர்பெற்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களும், பெற்றோரும் மிகச் சிறப்பான ஒத்துழைப்பை நல்கினார்கள்.
நாடகம் மிகச் சிறப்பாகவே அரங்கேறியது. அதை யூட்யூபில் சேர்க்க இவ்வளவு காலம் காத்திருந்தேன். அயலகத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் இவ்வளவு இனிமையாக பைந்தமிழைப் பேசுவது என்பது மிக உவகையளிக்கும் அனுபவம். வசனங்களை சப்-டைட்டில்களாக வீடியோவில் சேர்த்து ஒலிகோப்பை சீர்படுத்தி இணைத்திருக்கிறேன். இன்னமும் சிறப்பான வீடியோ எடுத்திருக்கலாம். விழா கோலாகலத்தில் அதன் மீதான கவனம் சற்று பிந்திவிட்டது.

அடுத்த ஆண்டிற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென ஒரு நாடகம் தயாரிக்கும் யோசனை இருக்கின்றது. இவ்வளவு ஆர்வமுள்ள அணி இருக்கும்போது நமக்கென்ன சுணக்கம்.)


தமிழ்விடு தூது (சங்கச் சித்திரம் பேசும் சிறார் நாடகம்)

காட்சி 1:

(பாத்திரங்கள்: ஔவையார், வாயில்காப்போன்1, வாயில்காப்போன்2, வாயில்காப்போன்3, வாயில்காப்போன்4)

காவல்காரர்கள் 3 பேரும் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குரல்: வாயிலோயே! வாயிலோயே!

வா.கா.1: யாரோ உம்மை அழைக்கிறார்கள் போல.

வா.கா.2: இருமுறை கூப்பிட்டுவது போலிருக்கிறதே.  அப்படியானால் நம் இருவரையும்தான் அழைக்கிறார்கள் போல.

வா.கா.3: அப்படியானால் சரி.  என்னை யாரும் அழைக்கவில்லை. (நிம்மதியென கைகளைத் தூக்கிக் காட்டுகிறார்)

வா.கா.4: நான் வேண்டுமானால் உங்களை அழைக்கட்டுமா?

குரல் (மீண்டும்):  வாயிலோயே! வாயிலோயே!

வா.கா.1: ஏதோ பெண் குரல் போலிருக்கிறதே. 

வா.கா.2: குரலில் ஒலிக்கும் உறுதியும், இறுமாப்பும், ஏதோ தமிழ்ப்புலவர் போலிருக்கிறது.

வா.கா.3: கதவைச் சாத்துங்கள்! கதவைச் சாத்துங்கள்! புலவர்கள் என்றாலே எனக்கு சற்று பதட்டமாக ஆகி விடுகிறது.  நாம் இங்கே காய்ந்து கருகி காவல் காக்கிறோம் என்றால், இவர்கள் வெறும் வாயை வைத்துக் கொண்டு வித்தைக் காட்டி பிழைக்கிறார்கள்.

வா.கா.4: ஆமாம். ஆமாம்.

ஔவையார் அரங்கினுள் நுழைகிறார். காவல்காரகள் அமைதியாக இருக்கின்றார்.

ஔ:  வாயிலோயே! வாயிலோயே! செவிக்கு இனிய செய்யுள்களை யாத்து, கவிபுனைந்து பரிசு பெறும் புலவர்க்கு, மூடாத கதவுகள் தகடூர் அரண்மனையின் கதவுகள் என்பார். ஆனால் எனக்கு இவை மூடியே இருக்கின்றனவே. 

வா.கா.1: அது வந்து… அது வந்து….

வா.கா.2: அதுதான்…. அதுதான்…..

வா.கா.4: எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். 

வா.கா.3: உஷ்ஷ்ஷ்...! அரச உத்தரவு அன்னையே.  உங்களுக்கு…. இன்னும் அரச அழைப்பு வரவில்லை.

ஔ: (புரிந்து கொண்டவர் போல் தலையை ஆட்டிக் கொண்டு) அதியமானுக்கு தன் திறன் தெரியவில்லையா. அல்லது என் திறம் தெரியவில்லையா. 

வா.கா.3: அப்படியில்லை புலவரே.  அது அதற்கென ஒரு நேரம் வரவேண்டுமில்லையா.  நாட்டிற்கு முதன்மையாக படைகளும், பாதுகாப்பும் தேவை.  கலை இலக்கியம் எல்லாம் பொழுது போக்கத்தானே.  பொறுத்திருங்கள். பரிசில் கிடைக்காமலா போகும்

ஔ:  (சிரிக்கிறார்).  காடு திறந்திருக்கிறது காவலரே, தேடி வருபவர்க்கெல்லாம் மரம் ஒன்றைக் கொடுக்க.  இதோ, எம் யாழினை தூக்கினோம்.  செல்வோம் இப்போதே.  கற்றவர்க்கு எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே.

ஔவையார் அரங்கிலிருந்து வெளியேற முயல, அவரெதிரே அதியமான் வருதல்.

அதி: தவறு என்னுடையதுதான். தவறு என்னுடையதுதான். பரிசு பெற்றதும் தாங்கள் புறப்பட்டு விடுவீர்களே என, பொறுமைக் காத்தேன்.  தமிழ் இன்னமும் சிலகாலம் தகடூரில் தங்கியிருக்கட்டுமே அம்மா. அருள்கூர்ந்து நீங்கள் பொறுத்தருள வேண்டும்.

ஔ:  (மீண்டும் சிரிக்கிறார்). நானறியாததா மன்னா.  ஒரு நாளானாலும் சரி.  இரு நாட்களானாலும் சரி. பலநாட்களுக்கு பலருடன் வந்தாலும் சரி. உன் விருந்தோம்பல் முதல் நாள் போல என்றுமே சிறந்ததாகவே இருக்குமல்லவா.  காலம் தாழ்ந்தாலும், நீ கையளிக்கும் பரிசு எங்களுக்கு உறுதியானதுதானே.  மற்றவரும் புரிந்து கொள்ளட்டும் எனப் பாடினேன்.

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

வாயி லோயே! வாயிலோயே!
வாயி லோயே! வாயிலோயே!
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

(புறநானூறு: 206)

o0O0o

காட்சி 2:



(பாத்திரங்கள்: அதியமான், அமைச்சர்1, துணையமைச்சர்1, கருவூலத்தலைவர், ஔவையார்)

அமை1: கருவூலத் தலைவர் காத்திருக்கிறார். நீங்கள் அதிகம் கவலை கொள்ளாமல் ஆணையிடுங்கள்.  ஔவயாருக்கு உகந்த பரிசினை இப்போதே அளித்துவிடுவோம்.

அதி: ஔவையாருக்கு உகந்த பரிசு…. (சற்று நிதானித்து கருவூலக்காரரைப் பார்க்க)

கரு: பொன்னும் மணியும் புரவியும் பல்லக்கும் நிலமும் வீடும் ஆடைகளும் அணிகலன்களும் படையும் ஆட்களும் அனைத்தும் இருக்கின்றன.  உங்கள் உளவிருப்பத்தைச் சொன்னால் சித்தப்படுத்தி விடுகிறேன்.

அதி: ஓ! இதுதான் நீங்கள் ஔவையாருக்கு உகந்த பரிசென எண்ணியிருக்கிறீர்கள். இல்லையா.

ஔவையார் அரங்கினுள் நுழைகிறார்.

ஔ: வெற்றிகரமான வாளேந்தி, பகைவர்கள் அனைவரையும் போரில் வென்று, பொன் மாலை அணிந்து பொலிவுடன் திகழும் மன்னா, நீ வாழ்க!

அதி: (கையை முன்னால் நீட்டி) இந்த பரிசினை தமிழின் சார்பாக நீங்கள் ஏற்க வேண்டும். 

ஔவையார், அவன் கையிலிருந்த சிறிய நெல்லிக்கனியைப் பார்க்கிறார். சற்றும் தயங்காமல் அதைப் பெற்றுக் கொண்டு வாயில் போட்டுக் கொள்கிறார்.

ஔ: (மிகவும் மகிழ்ச்சியோடு) நீலநிற மணியை கழுத்தில் கொண்டது போலிருக்கும் அந்த சிவனைப் போல உன் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!

அதியமான் கரம் கூப்பி வணங்குகிறார். 

துஅமை1: அன்னையே, உங்களுக்கும் தகடூர் அரசருக்கும் உள்ள நட்புறவானது எங்கள் எளிய சிந்தையை எல்லாம் கடந்தது.  ஆனாலும் இப்போது…

அமை1: அட, அதிகப்பிரசங்கியே.

துஅமை1: இல்லை ஐயா.  சற்றுமுன்  கருவூலத் தலைவர் பட்டியலிட்டு சொன்ன பரிசில்கள் மதிப்பு அளப்பரியாதது.  இந்த சிறிய நெல்லிக்கனியை அரசர் ஔவைக்கு அளிப்பதும் அவர் அதற்கு வாழ்த்துவதும்… 

அமை1: நிறுத்தப்பா.

ஔ:  ஐயங்களை தெளிவதுதானே அமைச்சுப் பணி. தடுக்காதீர்கள் ஐயா. (பிறகு துணையமைச்சரின் பக்கம் திரும்பி) இதோ சொல்கிறேன்.  இத்தனை விலைமதிப்பற்ற பொருட்களைக் காட்டிலும், இந்த கனியை எனக்கு அளித்ததிலிருந்து புரியவில்லையா, இது ஓர் அருங்கனியாகத்தான் இருக்க வேண்டுமென.  பெறுவதற்கு அரியக் கனியை, பெருமுயற்சியுடன் பெற்ற அரசர், அதன் சிறப்பைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லாமலே, அன்னைத் தமிழுக்கே அது உகந்த பரிசென அளித்ததில் இருக்கிறது அவருடைய கொடை உள்ளத்தின் உச்சம்.

அதி: நாடும் நிலமும் கோலோச்சும் அரசனும் அவன் புகழும் காலத்தோடு மறைபவை.  ஆனால் மொழியும், இலக்கியமும் காலம் கடந்து வாழ்பவை.  அன்னைத் தமிழாகிய நீங்கள் நீண்டு வாழ்ந்தால், உங்கள் சொற்களில் நானும் நீண்டு வாழ்வேனம்மா.

ஔ: நன்று சொன்னீர்கள்!  நன்று சொன்னீர்கள்! தமிழ் இனி ஓரிடம் தங்காமல் செல்லட்டும் எண் திசையும்.  தமிழுக்கு எத்திசைச் சென்றாலும் அத்திசைச் சோறே.

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்ஆ காதே;

(புறநானூறு: 101)

o0O0o

 காட்சி 3:

(பாத்திரங்கள்: தொண்டைமான், ஔவையார், அமைச்சர்2, துணையமைச்சர்2)

தொ: புதிய படைக்கலன்கள் எல்லாம் வந்துவிட்டனவா அமைச்சரே? கூரிய வேல்கள், விரைவு அம்புகள், பொலிந்த வாட்கள்…

அமை2: ஆம்.  நன்கு பெரிய் பிடிகளுடன், எண்ணெய் பளபளப்புடன் படைக்கலன்கள் பொலிகின்றன. 

துஅமை2: (சற்று முன்வந்து) இப்போது படைப்புக்கடவுள் ஒருவரும் உங்களைத் தேடி வந்திருக்கிறார்.  ஔவையார் எனும் தமிழ்ப்புலவர்.

தொ: ஓ! ஔவையாரா.  அவர் அதியமானின் அவைக் கவிஞராயிற்றே.

அமை2:  ஆமாம்.  தகடூர் மீது படையெடுக்க வேண்டாம் என சமாதான தூது செய்தியுடன் அனுப்பியிருக்கிறார்களோ.

துஅமை2:  நாம் திரட்டியிருக்கும் படைபலத்தையும், கருவிகளையும் கண்டு பயந்துவிட்டிருப்பார்கள்.

தொ: ஆகா.  அரசர் ஆணைகளுக்கு புலவர்கள் தூதா.  புதியதாக இருக்கிறதே. அழைத்து வாருங்கள்.  என்ன சொல்கிறாரெனப் பார்ப்போம்.

ஔவையார் அரங்குள் நுழைகிறார்.

ஔ:  வாழிய மன்னா! வாழ்க நின் கொற்றம்!

தொ: தமிழைப் போற்ற, இந்த தொண்டைமான் என்றும் தயங்கியதேயில்லை அம்மா.  வணக்கம்!

ஔ: மகிழ்ச்சி.  இப்போதுதான் உன் படைக்கல அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.  அல்லது அப்படி நான் பார்க்க வேண்டுமென்பது உன் அமைச்சரின் எண்ணமாக இருக்கும். (சிரிக்கிறார்)

தொ: (புன்முறுவல் செய்தபடி) அப்படியெல்லாம் இல்லை.  இன்று புதியதாக வந்தவை அவை.  இன்னமும் முறையாக அடுக்கப்பட்டு படைவீடுகளுக்கு அனுப்பி, சிறப்பாக அணிவகுப்பில் சேர்க்க வேண்டும்.

ஔ:  ஆமாம்.  மயிலிறகு சூட்டி, மெருகு குன்றாமல் ஒளிர்கின்றன அனைத்தும்.  கண்ணைப் பறிக்கின்றன.

தொ: (பெருமையுடன்) ஆமாம். நாங்கள் வெகு சிரத்தையுடன் படைக்கலங்களை பராமரிப்போம்.  உங்கள் தகடூரில் அப்படி செய்வதில்லைப் போல.

ஔ:  அங்கே, இவ்வளவு பராமரிப்புகளுக்கு எங்கே நேரம்?  எப்போதும் போரிலேயே இருந்து கொண்டிருக்கும் வீரர்களின் வேல்கள், பகைவர்களைக் குத்தி, நுனி சிதைந்தும் முறிந்து,  கொல்லன் பட்டறைகளில் கிடக்கின்றன.  சீர்படுத்தியதும் அடுத்த போருக்கு கிளம்பிவிடுவார்கள்.  எப்போதும் போர்களிலே நேரங்கழிக்கும் அவர்களுக்க், படைக்கலன்களை அழகுபடுத்தி, மாலை சூட்டி அணிவகுப்புகளில் வைத்துப் பார்க்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

அமை2: இதென்ன பேச்சு? போர்த்தொழிலில் சிறந்தவர் அதியமான் என்பது போலல்லவா சொல்கிறீர்கள்?

துஅமை2: நீங்கள் நின்று கொண்டிருப்பது தொண்டைமானின் அவை என்பது நினைவில் இருக்கட்டும் புலவரே.

ஔ: போரில் மட்டுமல்ல.  தன்னிடம் பொருள் இருந்தால், மற்றவர்க்கு உணவளித்துவிட்டு தான் உண்பான்.  பொருள் இல்லையென்றல் தன் உணவையே பிறருக்கு அளித்துவிடும் ஈகைக் குணத்திலும் அதியமான் ஒப்புயர்வற்றவன்.

தொ: (பெரியதாக சிரித்து) கற்றோரின் சொற்திறம், எம் போர்த்திறம் விட சிறந்தது எனப் புரிந்து கொண்டேன்.  தமிழ் போற்றும், தமிழ்ப்புலவர் போற்றும் தகடூர் மன்னன் மீது போர்த்தொடுக்கும் எண்ணம் என் மனதை விட்டு நீங்கியது.  கவிச்சொல்லை விட பெருஞ்சொல் வேறு உண்டா?

ஔ: இதோ என் யாழை தூக்கிக் கொண்டேன்.  தமிழை துணையாக்கிக் கொண்டேன்.  செல்வேன் எத்திசையும்.  எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே.

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுடை வியனக சவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எங் கோமான் வைந்துதி வேலே

(புறநானூறு: 95)

o0O0o

இறுதிக்காட்சி:

அனைவரும் திரண்டு வந்து நிற்க, அதியமான் கூற்றுடன் நிறைவடைகிறது)

அதி: தமிழுக்கென ஒரு கனி ஈந்தேன்.  தமிழ் எனக்கு மங்காப் புகழை பதில் அளித்தது.  அன்னைத் தமிழுக்கு என்றென்றும் எம் வணக்கம். 

o0O0o

(காட்சி நிறைவடைய, பின்னணி பாடல் ஒலிக்கின்றது.

நீல மணிமிடற்றொருவன் போல்
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் திங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!

(புறநானூறு: 91)

o0O0o



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

கிணற்றை மூழ்கடித்த வெள்ளம்: ஜே ஜே சில குறிப்புகள்

(சிவகாசியைச் சேர்ந்த அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் "நூல் வாசிப்பு முற்றம்" சார்பாக, "ஜே ஜே சில குறிப்புகள்" நூல் பற்றிய எனது கருத்துரை, 9 நவ 2023, வியாழனன்று ஒளிபரப்பாகியது. அதன் எழுத்து வடிவம்)



1978க்கு முன்னால் எழுதப்பட்ட இந்த நூலைப் பற்றி 2023ம் ஆண்டில் நாம் பேசுவதற்கான தேவை இந்த நாவலிலேயே இருக்கின்றது.  இந்த நாவலின் எழுத்தாளரும், அதில் படைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளரும், அவர்களின் தீர்க்கதரிசனமாக முன்வைப்பது, 90களுக்கு பிறகு, தமிழ் இலக்கியம் தன்னுடைய குறுகிய எல்லைகளை கடந்து பரந்த வெளியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பதுதான்.  '21ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டிற்குள், ஒரு தவளை கூட கிணற்றுக்குள் இருக்க முடியாது.  அப்படி பிடிவாதமாக வெளிவராதவை உயிர் மூச்சற்று அழிந்து போகும்" என்கிறார் எழுத்தாளர்.  அதாவது கிணற்றுத் தவளைகள் உலகளாவியத் தவளைகளாக ஆகிவிடும் என்பது எழுத்தாளர் மற்றும் ஜேஜே-வின் முடிபு.  

இந்திய பண்பாட்டு விசாரமும், மேற்கத்திய தர்க்க சிந்தையும் ஜேஜே-யின் எழுத்தின் சாரமாக, பாலுவால் அடையாளப்படுத்தப்படுகின்றன.  

கோபாலகிருஷ்ண அடிகா, குட்டிக்கிருஷ்ண மாரார், என்று, இந்திய பெருநிலத்தின் ஒரு பெரும் முன்னோடி எழுத்தாளர் பரிவாரத்தை , மொழிகளைக் கடந்து இந்த சிந்தனைப் பிரவாகத்தை எப்படி இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற ஆற்றாமையின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் இந்த நாவல் என்று குறிப்பிடுகிறார்.  



இந்த நாவலில் இடம்பெறும் உதாரண எழுத்தாளரான ஜேஜே-விலிருந்து ஏனைய பல எழுத்தாளுமைகளுக்கு ஒரு முன்மாதிரி நிஜங்கள் உண்டு.  முல்லைக்கல் மாதவன் நாயர்,  முளங்காடு கிருஷ்ண வைத்தியர் ஐயப்பன். திருச்சூர் கோபாலன் நாயர் எனப் பலரும் மலையாள எழுததுலகின் உண்மையான முகங்கள் என்று பல விமர்சனக் குறிப்புகளிலிருந்து நாம் அறிகிறோம்.  அந்தவகையில் இதன் கதைசொல்லி பாலுவின் எண்ணவோட்டங்களுக்கு ஒரு தீர்க்கமான பின்புலம் நமக்குப் புலனாகின்றது. ஒரு அனுபவக் குறிப்பு, அல்லது பத்திரிகை செய்தி என எடுத்துக் கொண்டு அதை ஜேஜே-வின் பார்வையில் விவரித்துக் கொண்டே, பாலுவின் பார்வையினூடே செல்கிறது நாவல்.  பாலுவின் ஆதர்சம் ஜேஜே என்றால், ஜேஜே-யின் நிர்தாட்சண்யமான எழுத்துத் தீவிரம் பாலுவிடம் படிந்திருக்க வேண்டும்.  ஆனால் எழுத்தாளரால் அந்த இடத்தை விலகியிருந்து ஆராதிக்க மட்டுமே முடியும் என்பதால், ஜேஜே-வும் பாலுவுமாக இணைகோடுகளுக்கிடையே ஒரு தர்க்கபூர்வ உணர்ச்சி தத்தளிப்பை நிகழ்த்துகிறார் நாவலாசிரியர்.  இந்த அனுபவக் குறிப்புகளின் மேல் நிகழ்த்தப்படும் தத்துவ விசாரணைகள்,  அவை நிகழ்ந்த பின்புலன்கள் பற்றிய மேலதிக தகவல்கள், அவற்றிடையேயான எழுத்தாளரின் அகப்பயணம், இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கும் அழகியல் என்று ஒரு கலாபூர்வ நிறைவைக் கொண்டிருக்கிறது இந்த நாவல். 

நோயுற்றிருந்த இளம்பருவத்தில், புனைவுலகை அடைக்கலமாகக் கொண்ட, கற்பனாவாத இளைஞனுக்கு, ஜேஜேயின் ஆண்-பெண் உறவுப் பற்றியக் கட்டுரை ஒன்று பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.  மாய்மாலங்களும், பொய்முகங்களும், எவ்வித சமரசங்களும் அற்ற, ஏளனங்களும் நுண் கேலிகளும் செறிந்த அப்பட்டமான எழுத்து. ஒருவகையில் ஜேஜே-வின் பரிச்சயம் பாலுவை கற்பனாவாதச் சூழலிலிருந்து தரைக்கு இழுத்து வருகிறது.  அதொரு கிராஷ் லேண்டிங் போன்ற நிலைகுலையவைக்கும் தரையிறக்கம். அதைத் தொடர்ந்து  பாலு தன்னுடைய சிறுவயதில், தன் சகோதரியுடனான பால்ய விளையாட்டை பகுத்தாராய முற்படுகிறார்.  ஒரு நெருக்கடி நிலை அளிக்கும் உந்துதலும், அதை சமாளிக்க முற்படும்போது உண்டாகும் தீவிரத்தின் பரவச நிலையும் ஒரு பகுதி.  அதன் வழியே அடையும் வெற்றியினால் உண்டாகும் மகிழ்ச்சி.  இடையே அந்த பாவனை உலகு விலகி, கனவுகள் பிடுங்கப்படும்போது உண்டாகும் அவஸ்தை.  இந்த மூன்று பகுப்புகளை நம் வாழ்வின் எந்தவித பகுதிகளுக்கும் நாம் பொருத்திக் கொள்ள முடியும்.  நாராயண குருவின் சீடரான சத்தியானந்தரின் ஆசிரமத்தில் பாலுவின் உடல் நோய்களுக்கு சிகிச்சைகள் நடக்கின்றன.  சத்தியானந்தரின் மானுட சேவையில் தன்னை கரைத்துக் கொள்ளும் உன்னத நோக்கம் எவ்வளவு தூரத்திற்கு பயன்தரும் பெறுமானத்தைக் கொண்டது என்ற நிதர்சனம் பாலுவிற்கு உறைக்கிறது.  சத்தியானந்தரின் தீர்க்கமான ஒருமுகப்பட்ட நோக்கிற்கு எதிர்மாறாக, அனைத்திலும் அலைக்கழிக்கப்படும், எதிலும் கொஞ்சம் நம்பிக்கையும், தொடர்ச்சியான தேடுதலையும் கொண்டவனாக, தன்னை உணர்கிறார் பாலு, முக்கியமாக தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜேஜே-வால், அவனுடனான சந்திப்புகளால், அவனுடனான கருத்து பரிமாற்றங்களால் தன்னை நிறைவு செய்து கொள்ள முடியும் என பாலு நம்புகிறார்.  பதிலுக்கு இவரால் தமிழிலக்கியத்தின் உச்சத்தை ஜேஜே-விற்கு கடத்தி விட வேண்டும் என்பது பாலுவின் விழைவு.  

ஜேஜே-வை சந்திக்கச் செல்லும் எழுத்தாளர் மாநாட்டில் திருச்சூர் கோபாலன் நாயரை சந்திக்கின்றார்.  பாலுவின் ஆதர்ச எழுத்தாளர்கள் தளத்தில் இருப்பவரல்ல கோபாலன்.  முற்போக்கு சரித்திர நாவல் என்ற பெயரில் பிற்போக்கான படைப்பை உருவாக்கியவர் என்பது பாலுவின் கணிப்பு.  அதற்கேற்றாற்ப் போல அவருடைய ஆதர்சமான ஜேஜேவின் எழுத்து, கோபாலன் நாயருக்கு அந்நியமாக இருக்கிறது.  அங்கே ஒரு புத்தகக் கடையில் வைத்து ஜேஜே-வை முதன்முதலாக பார்க்கிறார் பாலு.  சேர்த்தலை கிருஷ்ண ஐயர் மற்றும் முன்ஷி வேலுப் பிள்ளை போன்றோரின் பேச்சுக்களை விட ஜேஜே-வின் பேச்சு இளைஞர்களை ஈர்க்கிறது.  பாலுவும் அறிமுகப் படுத்தப் படுகிறார்.  அப்பொழுதுதான் ஜேஜே-யின் புகழ்பெற்ற வாசகமான 'சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா?" கிண்டலை பாலு எதிர்கொள்கிறார்.  அது அன்றைய தீவிர இலக்கியச் சூழலில் எழுத்தாளர் கல்கியை கேலி செய்த போக்கின் எதிரொலி.  புதுமைப் பித்தனைப் பற்றி ஜேஜே-விடம் பாலு பிரஸ்தாபிக்க முற்படும்போது, முல்லைக்கல் மாதவன் நாயரின் வருகையோடு அந்த சந்திப்பு முடிந்து போகிறது.  

சூரியனை நோக்கி பறக்க முற்படுவதற்கும், கூரை மேலேறி கூவும் கோழியின் நிலைப் பற்றியுமான பாலுவின் விசாரம் தொடர்கிறது.  ஜேஜே தன்னுடைய நெருக்கடி காலத்தில் மிகுந்து உந்துதலோடு செயல்பட்டிருக்கிறான்.  ஆனால் வேதனைகளுக்கும், வறுமைக்கும் மத்தியில்தான் எழுத்து பரிமளிக்க வேண்டுமென்பதில்லை.  சிந்தனை பீறிடும் எழுத்தை படைப்பிலக்கியமாக ஏன் கொள்ள முடியாது என்பது பாலுவின் கேள்வி.  

ஜேஜேயின் எழுத்தில் எம் கே அய்யப்பனின் தாக்கத்தைப் பற்றி பாலு குறிப்பிடுகிறார்.  எம் கே மார்ச்கியவாதி.  இந்திய மரபு சிந்தனைக்கு மாறான போக்கைக் கொண்டவர்.  அதிர்ச்சி மதிப்பீடுகள் கொண்ட நிலைகுலைய வைக்கும் நோக்குடன் எழுதுவதை விட, ஒரு சமூக அமைப்பை மாற்றிப் போடும் விஞ்ஞான நோக்குடன் எழுதவேண்டிய அவசியத்தை பற்றி அவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்ததாக ஜேஜே-வின் நாட்குறிப்புகள் சொல்கின்றன என பாலு குறிப்பிடுகிறார்.  இந்த நாட்குறிப்புகள் பிற்பாடு பத்திரிகைக்கான எழுத்து பிரதிகளாக வடிவம் பெற்றிருக்கின்றன.  நேர் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட கேள்விகளின் மீது ஜேஜே-யின் எழுத்து விவாதங்களை கட்டியெழுப்புகின்றன.

வறுமையுற்ற சூழலில்தான் கலை படைப்பூக்கத்தின் உன்னதத்திற்கான வழி பிறக்குமென்றால், வறுமையும் வேண்டாம் கலையும் வேண்டாம் என்று ஆதுரத்துடன் சொல்லும் ஜேஜே கலையை காசாக்க மட்டுமே பயன்படுத்தும் வணிக மனநிலை மீது சிறிதும் மதிப்புக் கொள்வதில்லை.  இந்த சட்டகத்தை ஜேஜே வழியே பாலுவும், பாலுவின் வழியே கதாசிரியனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர்.  

கிருஷ்ண ஐயரின் ஒன்பது வயது பேத்தி, புல்வெட்ட வரும் கிழவன் ஒருவரின் சொந்தக் கதையைக் கேட்டுக் கொண்டே அவர் வேலையை முடித்துக் கொண்டு போகும்போது அவருடன் போய் விடுகிறாள். "அவர் ஒரு பாதி கதையை சொல்லி முடிப்பதற்குள் அவர் வேலை முடிந்து கிளம்பி விட்டார்.  மறுபாதியைக் கேட்க அவருடன் போய்விட்டு வந்தேன்" என்று அவள் விளக்குவதைக் கேட்காமல் வீட்டார் அந்த சிறுமியைப் போட்டு மொத்துகின்றனர்.  இந்த சம்பவத்தை ஜேஜேயின் நாட்குறிப்புகளிலிருந்து படிக்கிறார் பாலு.  கூடவே ஜேஜே-யின் மனைவி சரசம்மா "அந்தப் பெண் புத்திசாலி.  இன்னமும் கூட நேரம் கழித்து வந்திருக்க வேண்டும்" என்று சொல்கிறாள்.

ஏஜி சோமன் நாயரை சந்திக்க ஜேஜே வரும்போது பாலு வாசகநிலையிலிருந்து சற்று முன்னேறி சிறுகதைகள் எழுத்தாளனாகி விட்டார்.  இப்போது பாலுவிற்கு ஜேஜே-யுடன் முரண்படும் புள்ளிகளும், அப்படி முரண்படுவதற்கு அவருக்கான நியாயங்களும் தெரியத் தொடங்கிவிட்டன.  ஆனாலும் ஜேஜே-தான் தன்னை பழமைவாத வரம்புக்குள்ளிருந்து உந்தித் தள்ளி வெளிப்பட வைத்தது என்ற நம்பிக்கையில் மாற்றமில்லை.  அவர் உறக்கத்தைக் கலைத்து, சுரணைக் கெட்டத்தனத்தையும் தடித்தனத்தையும் குத்திக்காட்டி உணரச் செய்ததே ஜேஜே-வின் எழுத்துத்தான்.

அடுத்து ஓர் எழுத்தாளர் மாநாட்டைப் பற்றி பாலு விவரிக்கும்போது, பாலுவும் ஓர் எழுத்தாளனாக அங்கீகாரம் பெற்று அந்த மாநாட்டின் விருந்தினராக கலந்து கொள்கிறார்.  அப்போது ஆல்பேர் காம்யு இறந்த செய்தி வருகிறது.  தொடர்ந்து ஜேஜே-வின் மரணச் செய்தியும்.  இந்துசூடன், கே பி கங்காதரன், தாமரைக்கனி, பசவப்பா என பல்வேறு எழுத்துலக தொடர்புகளிடையே தன் ஆதர்சத்தின் இறப்பை எழுத்தாளர் கடந்து செல்லும் காட்சி சுவைபட சொல்லப்பட்டிருக்கின்றது.  அதுவரை ஜேஜே-வை மையமாக கொண்டு பாலுவின் அகப்பயணமாக நகரும் நாவல், மெல்ல பாலுவின் புறவுலகை அவருடைய சுயபச்சாதாபமும், அங்கதமும் கலந்த விவரணையில் வாசகர்களுக்கு புலனப்படுத்துகிறது.  ஜேஜே-வின் மறைவிற்காக தன்னுடைய இரங்கலை இவ்வுலகிற்குத் தெரிவிக்க தத்தளிக்கும் ஓர் எழுத்தாளனாக பரிணாமம் அடைகிறார்.

ஜேஜே-வுடனான எழுத்தாளரின் நினைவோடை தொடர்கிறது.  நாம் ஒரு சம்பவத்தை நினைவடுக்குகளில் இருந்து மீட்டெடுக்கும்போது அதன் மீதான புதிய புரிதல்களும் திறப்புகளும் உண்டாகின்றன.  பாலுவிற்கும் அவர் தகப்பனார் எஸ். ஆர். எஸ்ஸுக்கும் அறிமுகமாகியிருந்த சம்பத்தின் நாட்டகத்திற்கு செல்லும்போது ஜேஜே-வை பாலுவின் அப்பா பார்த்தது பற்றி அடுத்த அத்தியாயம் பேசுகிறது.  காலத்தின் இடைவெளியிலோ, அல்லது தூரத்தின் இடைவெளியிலோ ஒரு காட்சி நமக்கு நன்றாக துலக்கமடைகின்றது என்று ஜேஜே சொல்வது அசோகமித்திரனின் நாவலில் வரும் கூற்றை ஒட்டி இருப்பதாகத் தெரிகின்றது.  நெருக்கத்தில் புலனாகாத பல நுணுக்கங்கள் அகல்கையில் உயிர்பெற்று நம்மை இழுத்துப் பிடிக்கின்றன.  ஜேஜே-வை ஓர் ஓவியனாக எழுத்தாளர் கண்டடையும் இடம் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது.  இத்தனைக்கும் அவர் அப்பாவுடனான அந்த பயணத்தில் ஜேஜே இடம்பெறவில்லை.  ஒரு அப்ஸ்ட்ராக்ட் (நுண்புல) வகை ஓவியத்தை  காட்சிபடுத்தும் அத்தியாயம் ஒரு சிறிய அப்ஸ்ட்ராக்ட் உத்தியுடன் சொல்லப்பட்டிருக்கின்றது.  அது ஒரு சிறிய மறைமுக பொத்தான் (ஸ்விட்ச்) போல சரளமான விவரனைப் பகுதிக்கிடையே, அது மறைத்து பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றது எனலாம்.

பாலுவிற்கு ஜேஜே போல, ஜேஜேவிற்கு ஓர் பெரும் அகத்தூண்டுதலாக அரவிந்தாட்ச மேனன் நாவலில் சொல்லப்படுகிறார்.  இசை இலக்கியம் ஓவியம் என்ற கலைகளின் கூட்டுப் பரிமாணமாக அரவிந்தாட்சன் போன்ற ஆளுமைகள் பாலுவின் மனதில் எவ்வகை தாக்கம் செலுத்தினர் என்பதை இந்தப் பகுதி வழியே நாம் புரிந்து கொள்ளலாம்.   ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஜேஜே-விற்கு எதிரில் நின்றிருக்கும் தொழுநோய் பிச்சைக்காரனைப் பார்த்ததும், ஜேஜேவின் சிந்தைப் பிரவாகம் கட்டற்று ஓடுகின்றது.  பிச்சைக்காரன் மீது இரக்கப்படுவது என்பது இயல்பு.  ஆனால் அதில் நம்மை நாமே ஒரு படி மேலே ஏற்றிக் கொண்டு கொடையளிக்கும் பீடத்தில் நம்மை வைத்துக் கொள்ளும் ஒரு மறைமுக ஈகோ உணர்வும் எழுந்து விடுகிறது.  'தான் கொடையளிக்கிறோம்' என்ற உணர்வின்றி ஒருவருக்கு அவருடைய நிலைக்கு சமமாக, முடிந்தால் அதற்கும் கீழாக தன்னை வைத்துக் கொண்டு கொடயளிக்க இயலுமா என்ன?  அப்படி உதவி பெற்றுக் கொள்பவர் சற்றேனும் சிறுமை உணர்வு அடையாமல், அதை வேறு வக்கிர பிரயோகமாக கொள்ளாமல் அதைக் கடந்து போக முடியுமா? இது என்னைப் போன்ற சாமானியர்களின் சிந்தைப் போக்காக இருக்கலாம்.  ஜேஜேவிற்கு இந்த கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு குஷ்டரோகி பிச்சைக்காரனுக்கு உதவும் நிலை இன்னமும் பன்மடங்கு விரிவான பெரும் அகச்சிக்கலாக உருவெடுத்து நிற்கின்றது.  அந்த சிக்கலில் ஜேஜே உழன்று தவித்து, தெளியும்போது பல மணி நேரம் கடந்து விட்டிருக்கின்றது.  இப்போது உணர்ச்சி பிரவாகத்துடன் அந்த குஷ்டரோகி பிச்சைக்காரனைத் தேடி ஓடி வேறொரு குஷ்டரோகியைக் காண்கின்றான்.  அவனுக்கு முன்னால் ஒரு வெள்ளி நாணயத்தைப் போட்டுவிட்டு, அவனால் அந்த நாணயத்தை தரையிலிருந்து பற்றியெடுக்க முடியுமோ என்று உடனடி உந்துதலில் அந்த நாணயத்தை எடுத்துக் கொடுக்க குனிகிறான்.  அந்த இடைப்பட்ட பின்ன நொடியில் அந்தக் குஷ்டரோகி அந்த நாணயத்தை தன் காலால் அழுத்திக் காபந்து பண்ணிக் கொள்கிறான்.  இந்த சம்பவம் ஜேஜே-வை பெரும் அவமானத்திற்குள்ளாக்குகிறது.  'ஜென்மக் கணக்கு' எனும் சிறுகதையில் இப்படியானதொரு அனுபவச் சித்திரத்தை நானும் எழுதியிருக்கிறேன்.  பாலுவோ, ஜேஜே-வோ அடைந்த அனுபவம் போல் அந்த சித்திரமும் என் அனுபவத்தின்பால் உந்தப்பட்டு உருவானதுதான்.  தன்னுணர்வு அற்று பிச்சையளிப்பது பற்றிய அகக் கூச்சத்தில் தடுமாறும் ஒரு பாத்திரம்.  எதிரில் இருக்கும் பிச்சைக்காரி அவன் தடுமாற்றத்தை மறுதளிக்கும் அகந்தையாக புரிந்து கொண்டு அவளிடமிருந்த ஓர் இருபது பைசா நாணயத்தை இவனுக்கு கொடுத்துவிட்டு விலகிப் போவாள்.  அந்த சிறுமையை எப்படிக் கடப்பது என்று அவன் அல்லலுறுவான். 

தனிநபர் சுதந்திர சிந்தையின் அபத்த வெளிப்பாடுகள் இப்படியான நம்பமுடியாத முரண்களில் கொண்டு நிறுத்திவிடுகின்றன.  முல்லைக்கல் மாதவன் நாயர் போன்ற வெகுஜன வணிக படைப்பாளிகளின் சிந்தைக்கு அப்பாற்ப்பட்ட வெளியில் ஜேஜே நின்று கொண்டிருக்கிறான்.  சாமர்த்தியமான பெயர் உதிர்த்தல்கள், உலக இலக்கிய வாசிப்பனுபவம் என்கிற பீற்றல்கள், மைய நிரோட்ட இலக்கிய போக்கில் எதிராக தருக்கி நிற்கும் அகந்தை, இவையெல்லாம் முல்லைக்கல் மாதவன் நாயரை சீண்டுகிறது.  ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை.  அதனால் உண்டாகும் எரிச்சல்களும் கோபங்களும் கிளர்ந்தெழுகின்றன.  தங்கள் நிலையை காபந்து பண்ணிக் கொள்வதற்கென இலக்குகளை மாற்றியமைத்துக் கொண்டு சாமர்த்திய கேள்விகளை சாடிக் கொள்கின்றனர்.  இடையே ஜேஜே-வின் வாழ்க்கையின் காதல் பக்கம் ஒன்று வந்து போகின்றது.  ஜேஜே-யின் மனைவி சாராம்மாவின் பார்வையில் ஜேஜே மிகவும் திறமைசாலியான அரசியல்வாதியாக இருக்கிறார்.  

அரவிந்தாட்சனின் சொற்களில், பாலுவிற்கு தெரிவது ஜேஜே தன்னை ஒரு பெரும் இசையுலக பெர்ஃபெக்‌ஷனிஸ்டாக வைத்துக் கொண்டு, ஏனைய அபஸ்வரங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் வாழ்க்கை முழுவதும் கத்திக் கொண்டே இருந்திருக்கின்றான். ஜேஜே-வின் மீது தீவிர விமர்சனம் வைத்திருக்கும் பலருக்கும் அவன் மீதான அபிமானம் குன்றியதில்லை.  மாறாக ஜேஜே-விற்கு எதுவும் பிடிக்காமல் போய்க் கொண்டிருந்தன.   பாலு ஜேஜே-வின் பால்யக்காலம் பற்றி பிரஸ்தாபிக்க ஆரம்பிக்கின்றான்.  ஜேஜே-வின் எழுத்துலக பயணம் பற்றி விரிவான பல குறிப்புகள் சொல்லப்படுகின்றன.  அவனுடைய கால்பந்தாட்ட விளையாட்டு அனுபவங்கள் பற்றி அவ்விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி ஜேஜே எழுதிய கட்டுரைகள், அவனுடைய தொழிற்சங்க நல பங்களிப்புகள், அதனால் சிறை சென்றது, அவனுடைய இன்னபிற புத்தகங்கள் வெளியான ஆண்டு என்று அவனுடைய இறப்புவரை நுணுக்கமாக தொகுக்கப்பட்ட குறிப்புகளை நாம் காண முடிகின்றது.  இந்தக் குறிப்புகளின் தொகுப்பு இந்த நாவலுக்கு ஒரு வித்தியாசமான வடிவத்தை அளித்தாலும் ஜேஜே எனும் ஆளுமைப் பற்றியதொரு குறுக்குவெட்டுத் தோற்றம் அளிக்கப்படுகின்றது.  தன்னுடைய அன்றாட பணிகளுக்கென, தன் குடும்பத்திற்கு தேவையான இதர வேலைகளுக்கென ஒரு குற்றேவல் புரியும் தேவதையை அவன் மனம் நாடுகிறது.  அப்போதுதான் அவன் இந்த சமூகத்திற்கான மகத்தான பங்களிப்பை சுதந்திரமாகவும், தீர்க்கமாகவும் செய்ய முடியும்.  இதே போன்றதொரு பாதிப்பை பாரதியின் வாழ்க்கையிலும் நாம் காண முடிகின்றது.  எங்கோ இருக்கும் கரும்புத் தோட்ட ஊழியர்களுக்காக மனம் இரங்கி கவிபாடும் மனதை அன்றாடப் பசிப்பிணிக்கென அல்லாட வைப்பது நியாயமாகுமா.

ஜேஜே-வின் இறுதிக் காலங்களில் அவன் இந்த மனித சமூகம் மீது தொடர்ந்து நிராசைக்குட்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஓர் எழுத்தாளனை நேர்த்தியாக மதிப்பிடுவது போல், ஜேஜே-வின் மூன்று முக்கிய நூல்களைக் கொண்டு, ஓர் அனுபந்தமும் இந்த நாவலின் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.  இந்த நாவலுக்கு பின்னர் தமிழ்வெளியில் இது போன்ற நவீன போக்குகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் பல வந்திருக்கின்றன.  அந்தவகையில் ஒரு முக்கியமான போக்கை ஜேஜே சில குறிப்புகள் தொடங்கி வைத்திருக்கின்றன.

ஜேஜே-வின் மீதான பாலுவின் பிரேமை, மெள்ள மெள்ள ஜேஜே-வின் ஆதர்சமான அரவிந்தாட்ச மேனன் மீது சென்றடைகிறது.  பித்தேறிய படைப்பூக்க மனநிலையிலிருந்து, ஒழுங்கமைதி கொண்ட தாள லயத்துடனான செய்நேர்த்தியின் அடர்த்தி நோக்கி ஜேஜே நகர்கிறான்.  அரவிந்தாட்ச மேனன் பேனாவில் மை நிரப்பும் அன்றாடச் செயலின் தாள லயத்துடனான இசைவில் மையம் கொள்ளும் ஜேஜேவின் குறிப்புடன் நாவல் நிறைவடைகிறது.  

பாலுவோ, அல்லது ஜேஜே-வோ தீர்க்கதரிசனத்துடன் சொல்லிய கிணற்றுத் தவளைகள் தங்கள் சுவர்களை தாண்டி வெளியே வந்து வெட்டவெளியில் இனிய சங்கீதம் பாட ஆரம்பித்து விட்டனவா என்றால் அதொரு நீண்ட விவாதத்திற்குத்தான் நம்மை இட்டுச் செல்கிறது.  ஆனால் அந்த கிணற்றின் சுவர்களை அளந்து பார்க்க ஓர் அலகை இந்த நூல் நிச்சயமாக உருவாக்கித் தந்திருக்கின்றது.  இலக்கிய வெளி எனும் கிணற்றை மூழகடிக்கும் வெள்ளத்தின் தோற்றுவாய் என இந்த நூலைக் குறிப்பிட்டலாம்.



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

ஆசையை அறுக்கும் பெருந்துன்பம்

 


(விருதுநகர் மாவட்டத்து 'அஞ்சிறை தும்பி இலக்கிய வட்டம்' சார்பாக நடைபெற்ற, 'ஜெயமோகன் -100' நிகழ்ச்சியில் 8ம் அமர்வில் “போதி” என்கிற புனைவைப் பற்றிய சிற்றுரை)

ஜெயமோகனின் எழுத்துலகம் என்னைப் போன்ற இணையத்தில் அதிகம் வாசிப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது.  அவருடைய சிறுகதைகள், குறுநாவல்கள், பெருநாவல்கள், காவியங்கள் என பெரும்பாலானவற்றை இணையம் வழியே வெளியான சூட்டிலே வாசித்து விடலாம்.  இணைய வாசகர் பரப்பை மிக அற்புதமாக தன் எழுத்திற்கு கையாண்டவர்களில் ஜெயமோகன் மிகவும் முக்கியமானவர்.  இத்தனைக்கும் அவர் கட்டணச் சுவர் இல்லாமல் தன் இணையதளத்தை அனைவருக்குமானதாக வைத்திருக்கிறார்.  இன்றைய இணைய வெளியில் இப்படியொரு தளம், இலக்கிய வெளிக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே ஒரு சாதனை எனலாம்.

'போதி' சிறுகதை, ஓர் ஆன்மிக மடத்தின் முழு வார்ப்பை, அவற்றின் மேன்மையுடன் விவரித்துக் காட்டுகின்றது.  இடையே ஒரு சிறு முரண், அக்கதையின் இறுதி திருப்பத்தை முள்ளென பொதிந்து வைத்திருக்கிறது.  புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என நம்பப்படுவது போல், இந்த திருவதிகை ஆதீனம், கதைசொல்லிக்கு ஒரு ஞானத்திறப்பை விளைவிக்கின்றது.  எப்படியான ஞானத்திறப்பு என்றால், பூரண விசுவாவியாக இருந்தவன், அவிசுவாவியாகி மடத்தை விட்டு ஓடிப் போகிறான்.  அவிசுவாவியானவன் மீண்டும் மடத்திற்கு வருவதிலிருந்து கதை தொடங்குகிறது.  அவனைப் போன்ற எண்ணற்றோர் அந்த மடத்திற்கு வந்து தங்கிவிட்டு தொலைந்து போயிருக்கக் கூடும்.  கதை சொல்லியே தன் லௌகிக வாழ்க்கையில் தொலைந்து போய், அந்த மடத்தைத் தேடி வந்தவன்தான்.  மடத்தின் லௌகீகம் அவனை மீண்டும் புற உலகிற்கு விரட்டி விடுகிறது.

மடத்தின் வாயிலில் ஓர் ஆலமரம் இருக்கிறது.  முதன்முதலாக அந்த மடத்தில் அடைக்கலம் தேடி வந்தவனுக்கு அந்த ஆலமரம் ஒரு பெரும் பிரமிப்பை அளிக்கிறது.  இப்போது திரும்பி வரும்போது அந்த ஆலமரம் பிரமிப்பை அளிக்கவில்லை.  ஏனென்றால், அந்த ஆல் அளித்த ஞானம் அவ்வுணர்வுகளை கடந்து செல்ல வைத்திருக்க வேண்டும்.  மடத்தின் முகப்பு நவீனமாகியிருந்ததும் அவனுக்கு ஏற்பட்ட அந்த பழைய பிரமிப்பைத் தணித்திருக்கலாம். 

மகா சந்நிதானத்தை மிகக் குறைந்த வரிகளில் விவரிக்கிறார்.  பெரும் சுமையென ஜடாமுடி.  நரைகலந்த தாடி.  கழுத்தில் பல்வேறு உருத்திராட்ச மாலைகள்.  கையில் யோகதண்டம்.  தழைய கட்டிய காவி வேட்டி.  சிம்மம் போல் நடந்து வருகிறார்.  அருகில் நெஞ்சுவரை ஏற்றி கட்டிய வேட்டியுடன் காறுபாறு.  கிரகஸ்தனாக வந்து சேர்ந்த இவனுக்குப் பேட்டி அளிக்கிறார்.  முதல் சந்திப்பிலேயே குரு மகா சந்நிதானத்தின் யானைக்கால் வியாதியை கவனிக்கிறான் இவன்.  இவனுடைய மனதை குரு சந்நிதானம் துல்லியமாகவே கணித்து விடுகிறார்.  "என்னை பெரிய ஞாநியென நினைத்து வந்திருப்பாய்.  நான் ஒரு ரோகியெனத் தெரிந்ததும் ஏமாற்றமடைந்திருப்பாய்" என்று சொல்லி சிரிக்கிறார்.  

அவன் அந்த மடத்தில் தங்கியிருந்த காலந்தொட்டும், அவனுக்கு மகா சந்நிதானத்திற்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது.  மடத்தின் பொக்கிஷமான ஏட்டு சுவடிகள்தான் அதற்கு பாலம்.  சிவஞானபோதத்துக்கு இருபத்தியேழு உரைகள் இருக்கின்றன அந்த ஏட்டுச் சுவடிகளில்.  சங்கீத சாஸ்திரம், வைத்தியவிளக்கம், சைவ சித்தாந்தம், இலக்கணம் இலக்கியம் என்று ஒரு பத்தாயிரம் கிரந்தங்களாவது இருக்கும்.  அவை எவற்றையும் யாரும் பொருட்படுத்தியதில்லை.  கதையில் முதலில் அறிமுகமாகும் சின்ன சந்நிதானம் வரவு செலவு கணக்கில் முனைப்பாக இருக்கிறார்.  

குரு சந்நிதானத்துடனான உரையாடல் மிகவும் லயிப்புடன் செல்கிறது.  கவிதை வாசிக்கும் மனநிலையைப் பற்றி குரு சந்நிதானம் கிண்டலாக சொல்கிறார்.  ஆனால் அவர் கண்கள் பித்தேறி மினுக்குகின்றன.  ஏற்றுக் கொண்ட பொறுப்பை முடிக்க வேண்டும் என்கிறார் திடமாக.  சந்நியாசம் என்பதை பொறுப்பைத் துறப்பதுதானே.  சொல்லப் போனால், அந்த சந்நியாச மடத்தில் இப்போது முற்றும் துறந்த சந்நியாசி கதைசொல்லிதான்.  

ஒரு தீவிர சைவ சித்தாந்தவாதிக்கு அதுதான் முழுமையான வழி.  வைணவத்துடன் நெருக்கமாக இருந்தாலும் அது அயல் மதம்தான்.  இவை இரண்ட்டையும் இணைத்து பார்க்கும் விவேகாநந்தரை அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கிறார் குரு சந்நிதானம்.  "“மனிதனுக்கு மனிதத்தன்மை என்ற ஒன்றும் உடம்பு என்ற ஒன்றும் அவ்வுடம்பின் உறுப்புகளான பொறிகளும் அவை தரும் அறிவும் உள்ளவரை ஞானம் என்பது முழுமையடையவே முடியாது" எப்பேர்ப்பட்ட ஞானம் இது.  இந்தக் கதையை அப்படியே சுருக்கி இந்த இரண்டு வரிகளில் வைத்து விடுகிறார் கதாசிரியர்.  

புத்தக அறிவு கொண்டவனுக்கோ ஆன்மிகப் பசி.  ஆன்மிக குருவுக்கோ புத்தகப் பசி.  மடத்தின் சேகரிப்பில் இருக்கும் கிரந்தங்களை படியெடுத்து புத்தகங்களாக பிரசுரிக்கும்படி குரு இவனைக் கேட்கிறார்  

குரு சந்நிதானத்தின் பித்து மனம், அறிவு தீட்சண்யம், புலமை அனைத்தையும் தாண்டி அவருடைய ரோகம் இவனை அலைக்கழிக்கிறது.  ரோகத்தை சமாளிக்க குரு சந்நிதானத்திற்கு அபின் கஞ்சா பெதடின் என்று போதை மருந்துகள் தேவைப்பட்டன.  கட்டை விரலில் புண் உண்டான போதே வைத்தியர் அந்த விரலை எடுத்து விட வேண்டும் என பரிந்துரைக்கிறார்.  ஆனால் அங்கஹீணனாக மடத்து அதிபதி இருக்க முடியாது என்பதால் குரு சந்நிதானம் அந்த ஆம்புட்டேஷனை ஏற்கவில்லை.  அந்த விஷம் கால் முழுவதும் பரவி சீழ்பிடித்து இருக்கிறது இப்போது.  

இந்த பின்னணி புரிந்தவுடன், கதை சொல்லியால் அங்கே தங்க முடியவில்லை.  இன்னொரு தளத்தில் அவன் குரு சந்நிதானத்திற்கு மிக அமைதியான இறுதி வாழ்க்கை அமைய வேண்டுமென ஆழமாக விரும்புகிறான்.  அருகிலிருந்து சிசுருஷைகள் செய்து அவரை கடைத்தேற்ற அவன் மனம் துடிக்கிறது.  

அவனுடைய அதே ஆழ்மன பிணைப்பை குரு சந்நிதானமும் பிரதிபலிக்கின்றார்.  'எங்கும் போய்விடாதே.  யாருக்கும் என் மீது அன்பில்லை.  என்னைத் தூக்கி சாத்தி விட துடிக்கிறார்கள்' என்று ஏதேதோ சொல்கிறார் அவனுடனான இறுதி சந்திப்பின்போது.  

அவை எதுவும் அவனை பயமுறுத்தவில்லை.  சொல்லப் போனால், குரு சந்நிதானத்திற்கு பணிவிடை செய்ய அவன் மனம் முழு சித்தமாகவே இருந்தது.  ஆனால் அவன் மனதை புரட்டிப் போட்டது குரு சந்நிதானம் தன்னுடைய உடல் உபாதை எப்படி உண்டானது என்று விவரித்த கடைசி செய்தி.  

ஆசையே துன்பங்களுக்கு காரணம். ஆனால் ஆசையற்று இருக்கும் ஆசை பெருந்துன்பத்திற்கு காரணம்.   




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

காந்தி எனும் விடுதலை

 


(விருதுநகர் மாவட்டத்து 'அஞ்சிறை தும்பி இலக்கிய வட்டம்' சார்பாக நடைபெற்ற, 'எஸ்ரா -100' நிகழ்ச்சியில் 5ம் சுற்றில் 21ம் அமர்வில் “காந்தியோடு பேசுவேன்” என்கிற புனைவைப் பற்றிய சிற்றுரை)

புனைவிலக்கியங்கள் படைப்பது மட்டுமல்லாது, புனைவிலக்கியங்களைப் பற்றி உரையாற்றுதிலும் திரு எஸ்ரா அவர்கள் மிகவும் அலாதியான திறன் கொண்டவர் என்பதை அவருடைய உரைகளைக் கேட்டிருப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.  இதில் ஒரு முக்கிய பண்பு என்னவென்றால், அவரால் தஸ்தவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்களைப் பற்றியோ, டூமா-வின் த்ரீ மஸ்கிடியர்ஸ் பற்றியோ ஆற்றொழுக்குடன் பேசக்கூடிய தீவிரத்துடன், சமகாலத்து தமிழ்ச்சூழலின் இலக்கியங்களைப் பற்றி விரிவாகப் பேச முடியும்.  அவருடைய தணியாத வாசிப்பார்வம் அவரை அப்படி புத்துணர்ச்சியுடன், நடப்பு உலகின் இலக்கிய நிகழ்வுகளுடன் பிணைந்து வைத்திருக்கிறது.  அவரளவிற்கு இலக்கியம் பற்றிய பிரக்ஞையும் பிரேமையும் திறமையும் கொண்டு, தொடர்ந்து இலக்கிய உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுமைகள் தமிழுலகில் மிக அரிது.

அப்படியான ஒருவருடைய சிறுகதையான  "காந்தியோடு பேசுவேன்" பற்றி ஒரு காந்தி ஜெயந்தியன்று உரையாற்ற நேர்ந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இந்திய சுதந்திர போராட்டகாலத்தைக் காட்டிலும், தற்காலத்தில் காந்தியின் தேவை நமக்கு அதிகமாக இருக்கிறது.  மேற்குலகிலும் சரி, இந்திய பெருநிலத்திலும் சரி, காந்தி மீதான வகைதொகையற்ற பக்தியுணர்விற்க்கு இணையாக, காழ்ப்புமிழ்தலும், தூற்றுதலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு வருகின்றன.  இந்த மனித சமூகத்தின் மீது நேர்மையான, உன்னதமான அக்கறை கொண்டு காந்தி தன் முழு வாழ்க்கையும் ஒரு பரிசோதனை முயற்சியாக, உன்னதத்தை நாடும் ஒரு சீரிய முயற்சியாக முன் வைத்திருக்கிறார். அவருடைய கட்டுரைகளும் பத்திரிகை பதிவுகளிலும் அதை நாம் காண முடிகின்றது.

காந்தியின் மீதும், அவருடைய கொள்கைகள் மீதும் வைக்கப்படும் கேள்விகளையும் உள்ளிழுத்து, அவற்றுக்கான விளக்கங்களுடனே தன்னுடைய வாழ்க்கையை காந்தி ஒரு திறந்த நூலாகவே அமைத்துக் கொண்டிருந்தார்.  இன்றைக்கும் காந்தியத்தின் மீதான கருத்து வேற்றுமைகளை, விரிவாக விவாதிக்கும் பல கூறுகளையும் உள்ளடக்கியது காந்தியின் வாழ்க்கைப் பதிவுகள்.  தீவிர மதப்பற்றுடையவராகவும் ஆனால் மத அடிப்படைவாதத்தை தீர்க்கமாக மறுத்து வருபவருமான காந்தியை மேற்குலகு புரிந்து கொள்ளவே பல காலம் ஆனது.  1930களிலிருந்தே அவருக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அவரை ஒரு மதத்தலைவராக வரையறுத்து வைத்ததால், அவர் பெயர் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  இறுதியில் 1949ல் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது அதே மத அடிப்படைவாதம் காந்தியை காவு வாங்கி விட்டிருந்தது.

இன்றும் அரசியல் வெளியில் காந்தியின் மீது தோட்டாக்கள் செலுத்தப்பட்டுதான் வருகின்றன.

இலக்கிய வெளியில் காந்தியை நாம் அடையாளப்படுத்தும் போது, அவருடைய பரிமாணங்கள் புத்துருவாக்கம் கொள்கின்றன.  அதன் வழியே நாம், எளிய மக்கள், ஓரிரு அடிகளாவது எடுத்து வைக்க உறுதி உண்டாகின்றது.  அப்படியானதொரு படைப்பாக "காந்தியோடு பேசுவேன்" அமைந்திருக்கிறது.

இங்கிலாந்திற்கு, லண்டன் மாநகருக்கு புலம்பெயர்ந்த பேராசிரியர் லட்சுமணன், தன் அன்னையின் வாழ்க்கை வழியே காந்தியை தரிசிக்கும் நிகழ்வுதான், 'காந்தியுடன் பேசுவேன்' புனைவு.  காந்தி என்கிற பிம்பத்தின் மீதான வசீகரத்திற்கு இணையாக, இவ்வளவு மோசமான வசைகள், அவதூறுகள், தூஷணைகள் என்று எவர் மீதாவது கொட்டப்பட்டிருக்கிற்தா என்கிற கேள்வி லட்சுமணனை உறுத்துகின்றது.  அவரே காந்தியை நெருங்கிச் செல்ல தயங்குகிறார்.  அவ்வளவு மனத்தடைகளை இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது.  ஆனால் அவருடைய அம்மாவின் இளமைக் காலத்தில், கணவனின் காம இச்சைக்கான வெறும் உடலாக மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருந்த பெண்மணிக்கு காந்தி என்கிற ஆளுமை எவ்வளவு பெரிய விடுதலையை அளித்திருக்கின்றது என லட்சுமணனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்குகின்றது.

அரசுப்பணியில் இருந்த அவருடைய அப்பாவிற்கு, அம்மா ஒரு மனுஷி என்கிற பிரக்ஞை சிறிதும் இல்லை.  அப்பாவைத் தாண்டிய உலகம் என்று எதுவும் விதிக்கப்படாத நிலையில் லட்சுமணனின் அம்மா மெல்ல மெல்ல காந்தியைப் பற்றி அறிந்து கொள்கிறாள்.  சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும் தாண்டி அவளுக்கு காந்தியின் மீது பெரும் பிரேமை உண்டாகிறது.  ஒரு தருணத்தில் அந்த பிரேமையின் ஈர்ப்பு அவளை குடும்பத்தை விட்டு துறந்து வார்தாவில் உள்ள காந்தியின் ஆசிரமத்தைத் தேடி தனியே புறப்பட்டு செல்லத் தூண்டுகிறது.

மொழி புரியாத பிரதேசத்தில் அந்நிய மனிதர்களிடையே அந்த எளிய ஆசிரமத்தில் அவள் காந்தி என்கிற அற்புத மனதை மட்டும் நம்பி தன் வாழ்க்கையை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொள்கிறாள்.  என்னவொரு சித்திரம் பாருங்கள்.  அந்த லயிப்பு அவளுக்குப் பின்னால் லண்டனில் உள்ள லட்சுமணனைத் தேடிப் போகும்போதும் அப்படியே இருக்கிறது.  காந்தியை, காந்தியின் கண்கள் கொண்டு பார்க்கும் அற்புத வரம் அம்மாவிற்கு வாய்த்திருக்கிறது.

லட்சுமணனின் மனைவியான ராகேல் இன்னொரு காந்தியச் சித்திரம்.  காந்தியிடம் அம்மா கண்ட பூரண விடுதலையை, அம்மாவின் வழியே ராகேலுக்கும் சாத்தியமாகின்றது.  வெகு இயல்பாக.  இதை காந்தியின் சொற்களிலே எஸ்ரா ஓரிடத்தில் விவரிக்கிறார்.  அம்மாவைப் போன்ற பெண்கள் தனது செயல்பாடுகளின் மீது உருவாக்கி வைத்துள்ள நம்பிக்கைதான் அவரை உறுதியாக இருக்கச் செய்கின்றது.  அந்த நம்பிக்கையை ஏற்படுத்தி தந்தவர்கள் மீது அவருக்கு என்றும் நன்றி இருப்பதாக காந்தி சொல்கிறார்.

லட்சுமணனின் அம்மாவின் வாழ்க்கை நான்கு பகுதிகளாக நம் கண் முன்னே விரிகின்றன.  எளிமையான இயல்பு வாழ்க்கை கொண்ட சிறுமிப் பருவம்.  மோசமான வதையும், சிறுமையும், ஒடுக்குதலையும் கண்ட திருமணப் பருவம். காந்தியைப் பற்றி அறிந்து கொள்ள முற்பட்டு பிறகு அவரிடம் முற்றிலும் சரணடையும் சிஷ்யை பருவம்.  அதன் பிறகு ஒரு முழுமையான, தன்னிறைவு கொண்ட பெண்மணியாக உருக்கொள்ளும் அன்னைப் பருவம்.  லட்சுமணனுக்கு அம்மாவின் நான்காம் பருவம் மட்டும்தான் அதிகம் தெரிந்திருக்கின்றது.  பிறகு மெல்ல மெல்ல பின்னகர்ந்து ஆம்மாவின் வரலாற்றை உணரத் தொடங்குகிறார்.  

ஆனால் அவருடைய மனைவி ராகேலுக்கு அவ்வளவு காலமெல்லாம் தேவைப்படவில்லை.  காந்தியை படத்தில் பார்த்தே அவளுக்கு அவரைப் பற்றிய மனச்சித்திரம் துலக்கமாக உருவாகி விடுகிறது.  அதன்வழியே அவளால் அம்மாவை மிக இயல்பாக புரிந்து கொள்ள முடிகின்றது.  முடிவில் லட்சுமணனுக்கு காந்தி மீதும் உண்டாகும் தீவிர ஈர்ப்பைப் பற்றியும் எச்சரிக்கை அளிக்கின்றாள்.  "நீ வேகமாக அவரை அணுகும் போது, அதே வேகத்தில் அவரை விட்டு விலகவும் சாத்தியம் அதிகம்.  உன் அம்மா போல் காந்தியைப் புரிந்து கொண்டு அவரைப் போல வாழ முயற்சி செய்" என்கின்றாள்.

காந்தி தன் லட்சியங்களை, தன் ஆதர்சங்களை, தன் பரிசோதனைகளை கொண்டே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்.  காந்தியின் வழி செல்பவர்களும் அப்படியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.  லட்சுமணனின் அம்மாவிற்கு வார்தா ஆசிரம வாழ்க்கை முழுமையாக சித்திக்கவில்லை.  இரண்டரை மாதங்களிலே, லட்சுமணனின் அப்பா வார்தா வந்து அம்மாவை பலவந்தமாக அவர்கள் குடும்ப வாழ்க்கைக்கு மீட்டிழுத்துக் கொண்டு போகிறார்.  வீட்டை விட்டு ஓடியதற்கு தண்டனையாக வலது கையை முறித்தும் போட்டு விடுகிறார்.

ஆம்.  காந்தியத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்ட லட்சுமணனின் அம்மாவிற்கு பரிசாக அந்த கை முறிவு.  காந்தியை கண்டடைந்தால் கிடைக்கும் பூரண விடுதலைக்கு சமமாக அந்த முறிந்த கையும் அவருக்கு இருந்தது.

காந்தியுடன் ஆத்மார்த்தமாக பேசுவது என்பது ஏதோ இலகுவான, சொகுசான அனுபவமாக இருக்கப் போவதில்லை.  இருக்கவும் முடியாது.  அதொரு தீர்க்கமான ஆன்ம விசாரத்திற்கான பயணம்.  காலத்திற்கும் தன்மீது கொட்டப்படும் தூஷணைகளையும், தோட்டாக்களையும் தாங்கிக் கொண்டு புன்சிரித்தபடி இருக்கும் காந்தியின் பிம்பம் போல், முறிந்த கையுடன் காந்தி வாழ்ந்த இலண்டனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவைப் போல, உரத்துடன் நின்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஆன்மிகப் பயணம்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

பாறைகளை நனைக்கும் நதி

 


(2022ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியி அனுபவங்களைப் பற்றி சொல்வனம் எடிட்டோரியல் குழுவைச் சேர்ந்த  நம்பி கிருஷ்ணன் சொல்வனம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், 'கத்திக்காரன்' புத்தகம் பற்றியும் சிறு விமர்சனக் குறிப்பு சேர்த்திருந்தார்.  அப் பகுதி கீழே)

o0O0o

யாவரும் ஸ்டாலில் கத்திக்காரன் புத்தகம் எதேச்சையாகத் தென்பட்டது. பதாகை, சொல்வனம் இதழ்களுடன் பல வருடங்களாக தொடர்பில் இருப்பதால் அவற்றில் அவ்வப்போது வெளியாகிய ஶ்ரீதர் நாராயணின் கதைகளை நான் ஏற்கனவே படித்திருந்தேன். நண்பர். நாவல் எழுதப்போவதாக பல வருடங்களாக பயமுறுத்திக் கொண்டிருப்பவர். சோம்பேறி. மொழிவளம் மிக்கவர். ஓடைநீரைப் போல் தெள்ளிய நடை. ஒழுக்கில் எதிர்கொள்ளும் பாறைகளைப் பெயர்க்க முயலாது நளினமாக நனைத்துவிட்டு ஓடிச் செல்லும் நடை. அவரது கத்திக்காரன் தொகுப்பைக் கையிலெடுக்கையில் இந்நினைவுகளே மேலெழும்பி வந்தன. 

புத்தகத்தில் அதே கதைகளைக் கோவையாகப் படித்தது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பென்சில்வேனியாவின் கிழக்கு முனையிலிருக்கும் குவேக்கர்டவுன் நகரத்திற்கு அருகே ஜேஸ்டன்வில் என்ற ஒரு அழகான நடுத்தர நகரம், முற்றிலும் அவரால் கற்பனை செய்யப்பட்ட ஒரு நகரம், இக்கதைகளிலிருந்து திரண்டெழுந்ததே இவ்வாசிப்பில் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அமெரிக்க இலக்கியத்தில் பரவலாகப் பிரவேசிக்கும் சப்-அர்பன் நகரம் (ஜான் சீவர், அப்டைக், ஃப்ரான்சன், ரிச்சர்ட் யேட்ஸ், ரிச்சர்ச் ஃபோர்ட்… இவர்களின் sub-urbia-வை நினைத்துக் கொள்கிறேன்) ஒரு தமிழ்ப் புனைவில் ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகவும் இயல்பாகவும் கைப்பற்றப்பட்டிருப்பதே என் ஆச்சரியத்திற்கான காரணம் என்று புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் உணர்ந்து கொண்டேன். ஆனால், இந்த அமெரிக்க இலக்கியப் புறநகர்களைப் பற்றி யோசிக்கையில் அவற்றின் தனிமையும் வெறுமையுமே முதலில் நினைவிற்கு வருகின்றன. சீவரின் பிரசித்தி பெற்ற மேற்கோள் வார்த்தைகளில் கூறுவதானால்:

My God, the suburbs! They encircled the city’s boundaries like enemy territory and we thought of them as a loss of privacy, a cesspool of conformity and a life of indescribable dreariness in some split-level village where the place name appeared in the New York Times only when some bored housewife blew off her head with a shotgun. 

ஆனால், ஶ்ரீதரின் ஜேஸ்டன்வில் அப்படியெல்லாம் நம்மைப் பதற்றப்படுத்துவதில்லை, அதில் துப்பாக்கிச் சுடுதலால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் தலைப்பட்டாலும். அம்மாதிரியான சந்தர்ப்பத்திலும் அதில் மனிதத்தின் பிரிதொரு அணுக்கமான புள்ளியில்தான் அவரது கதைகள் தங்களைப் பிணைத்துக் கொள்ள விழைகின்றன. அவையே அவற்றின் பலமும் பலவீனமும் எனலாம். 

தொகுப்பின் தலைப்பைக் கொண்டிருக்கும் கதையின் நகர்ப்புறத்திற்கு ஒரு சர்க்கஸ் வருகிறது. அப்பா தன் நான்கு வயது மகளை அழைத்துச் செல்கிறார். சர்க்கஸிற்கே உரிய ஆரவாரமும் சுவாரசியமும் கதையில் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. சர்க்கஸ் வித்தைகளில் அச்சாரமாக விளங்கும் கத்தி எறியும் வித்தைக்குக் கதை வருகையில் அதன் முடிச்சுக்கான அஸ்திவாரங்கள் நுட்பமாகவும் வெகு இயல்பாகவும் கதையில் புகுத்தப்படுகின்றன. மகளைக் காட்டிலும் தந்தையே, அது ஒரு போதையூட்டும் ஆர்வமாக மாறும் வரையிலும், அதனால் ஈர்க்கப்படுகிறார். திகிரியில் இருத்தப்படும் பெண்ணை நோக்கி எறியப்படும் கத்தி அவளை ஒவ்வொரு முறையும் மயிரிழையில் தப்பும் கலைநேர்த்தி அவரை மிகவுமே கவர்கிறது. இங்கிருந்து தொடங்கி கலைத்திறனுக்காகக் கொடுக்கப்பட வேண்டிய விலை என்ன என்று புள்ளிக்கு நகர்வதில் அம்முடிச்சு அவிழ்கிறது. 

இந்தியாவில் வளர்கையில் அப்பா பள்ளிக்கூடத்திற்கு வந்த நினைவே எனக்கில்லை. அம்மாவாவது ஓரிரு முறை ஸ்போர்ட்ஸ் டே அன்றோ நான் பரிசு வாங்கிய ஆண்டு தினத்தன்றோ பள்ளிக்கூடத்திற்கு வந்திருக்கிறாள். அப்பாவிற்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை. அமெரிக்காவில் மகன் வளர்கையில் நானும் என் மனைவியும் எவ்வளவு முறை அவன் பள்ளிக்கோ அவன் விளையாட்டு பயிற்சிகளுக்க்கோ சென்றிருப்போம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. அதையும் அவன் நடுநிலைப் பள்ளிக்குச் செல்கையில் அவன் கையில் ஐ-ஃபோன் வந்துவிட்ட பின் அதனால் எங்களுக்கு ஏற்பட்ட பதற்றத்தையும் வானவில் என்ற கதை மீட்டெடுத்தது. தொழில்நுட்பம் நமக்கு நன்றாகப் பழகிவிட்ட போதிலும் பெற்றோர்களாக அதை எதிர்கொள்வதில் நமக்கின்னமும் இருக்கும் தயக்கத்தை இக்கதை நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது, நம் குழந்தைகள் வெகு இயல்பாகவே அதன் பாதகங்களைக் கடந்துவிடுகிறார்கள் என்பதையும். 

பிள்ளைகளுக்கான விளையாட்டுப் பயிற்சிகளைப் பற்றிக் கூறினேன் இல்லையா, அப்படிப்பட்ட, சிறுவர்களுக்கான கால்பந்தாட்டப் பயிற்சி மைதானம் ஒன்று, ஜேஸ்டன்வில்லிலும் இருப்பதை நாம் மைதானத்தின் மத்தியில் ஒரு கொலை என்ற கதை வழியே அறிந்துகொள்கிறோம். திறமை இருக்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் வாரம்தோறும் நிகழும் இப்பயிற்சிகளில் தன்னார்வலக் பயிற்சியாளார்களாக முன்வந்து நம்மையும் குழந்தைகளையும் படுத்துவார்கள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் அந்த நகரத்தின் விளையாட்டு வரலாற்றுத் தகவல்களைப் புகுத்தி கதை சுவாரசியமாக அமானுஷ்யத்தில் தன்னை முடித்துக் கொள்கிறது. 

ஸாக்கர் மட்டுமல்ல செஸ் மேட்ச் ஒன்றை மையமாக்கும் கதையும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. Insufficient material, underpromotion, najdorf, Ruy Lopez opening என்று செஸ் நுணுக்கங்களை லாகவமாகப் பயன்படுத்தியபடியே கை நழுவிய இராணி கதையை முன்னெடுத்தும் செல்லும் விதம் அலாதியானது. “கருப்பு ராணியை C8ல் கொண்டு வைத்தேன்…. B7லிருந்த வெள்ளை சிப்பாயை முன்னே B8க்கு நகர்த்தி புரமோட் செய்தான்” என்றெல்லாம் ஒரு தமிழ்க் கதையில் கதையுடன் ஒன்றும் விதத்தில் கொண்டுவருவது அவ்வளவு சுலபமல்ல. வெல் டன் ஶ்ரீதர். ராணிக்குப் பதிலாக இராணி என்றெல்லாம் தூய தமிழ் சேட்டை செய்திருந்ததுதான் சற்று நாராசமாக இருந்தது. 

ஓ ஹென்றி கதைகள் என்று இலக்கிய விமர்சனத்தில் முடிவில் திருப்பத்தைப் பொதித்து வைத்திருக்கும் கதைகளை வகைமைப் படுத்துவார்கள். அம்மாதிரியான முடிவை நோக்கிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதைகளும் இத்தொகுப்பிலுண்டு. யோகம், தொகுப்பை முடித்து வைக்கும் சிகப்பு நிறப்பை போன்ற கதைகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அதற்கு ஒரு பன்முகத்தன்மையை அளிக்கிறது. அதே போல், ஐன்ஸ்டீன் (ஐன்ஸ்டீனின் வீடு), பாரதி (பாரதி என்னும் பற்றுக் கோடு), காந்தி (பியாரி பாபு) என்று வரலாற்றுப் பிரசித்தி பெற்றோரின் உபரிச் சரிதைத் தகவல்களை அவர்கள் அபிமானிகளின் கதைகளைக் கொண்டு நமக்களிப்பது தொகுப்பிற்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது. 

இப்படிப் பலதரப்பட்ட சுவாரஸ்யான கதைகள் இருப்பினும் அவை எதுவுமே “யானை பிழைத்த வேல்களாக” இல்லை என்று ஆர்வக்கோளாறுமிக்க ஒரு இளம் விமரிசகர் குற்றம்சாட்டக்கூடும். அப்படிப்பட்ட விபரீத ஆசையெல்லாம் ஶ்ரீதருக்குக் கிடையாது என்பதே அதற்குச் சரியான பதில். மாறாக முயல் காதுகளும் (முயல் காதுகள்) எலிக் குஞ்சுகளுமே (ஹிப்போலிடா) அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. இன்று வரையிலும் என் மகனுக்கும் எனக்கும் காலணிகளின் லேஸ்களைச் சரியாகக் கட்டிக்கொள்ளத் தெரியாது. சனியன் எப்போதுமே ஆகாத நேரத்தில் அவிழ்ந்து காலை வாரிவிடும். ஷூலேஸ்களைப் பிணைப்பது போன்ற சின்னச் சின்ன அன்றாடங்களிலும் அழகியல் துளிர்க்கலாம். “அரவிந்தாட்ச மேனன் பேனாவுக்கு மை ஊற்றுவதைப் பார்த்திருக்கிறேன். சவரம் செய்துகொள்வதை, நகம் வெட்டிக் கொள்வதை, வேட்டியைச் சரிவரக் கட்டிக் கொள்வதைக் கவனித்திருக்கிறேன். தாளத்திற்கும் லயத்திற்கும் உள்ள இசைவையே அவரிடம் பார்த்திருக்கிறேன். இவரை ஒத்தவர்களே உண்மையான கலைஞர்கள்” என்ற ஜே.ஜே: சில குறிப்புகளின் பிரபலமான வரி நினைவிற்கு வந்தது. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையில்தான் ஶ்ரீதர் தன் கத்திகளை வீசிப் பார்க்கிறார். அவை பெரும்பாலும் வாசக நெஞ்சங்களில் மயிரிழை பிசகாமல் பாய்ந்துவிடுகின்றன என்பதே அவரது கலையின் வெற்றி. கத்திக்காரர் ஶ்ரீதரே, அந்த நாவலை எழுதி முடியுமய்யா! 



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

நிற்க கல்விக்கு தக

 கல்வி கற்பதும், வணிகம் செய்வதும் இருவேறு துருவங்கள் என்பது போல நீண்ட விவாதங்கள் கொண்ட பதிவுகளைக் காண நேர்ந்தது. இவ்வளவு மேம்போக்காக, இவ்வளவு அதீதமாக கொட்டி நிரப்பும் விவாதங்கள் மட்டுமே நமது தமிழ்ச்சூழலில் அறிவார்ந்த விவாதங்கள் என்று நம்பி அலைமோதுவதைக் காணும்போது அயர்ச்சியே எஞ்சியது.

கல்வி கற்பது, திறனை வளர்த்துக் கொள்வது போன்றவை எல்லாம் ஏன் வணிகம் செய்வதற்கு இடையூறாக இருக்கப் போகிறது? அல்லது வணிகம் என்பதை மட்டுமே நம்பும் சமூகம், எப்படி சமுதாயத்தை சீர்கேடாக்குகிறது? இது போன்ற அடிப்படை பிரக்ஞை எதுவுமில்லாமல், வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டுமே எதையாவது உருட்டி பிரட்டி கருத்துரைக்க வேண்டும் என்கிற அகநெருக்கடி ஏன் உண்டாகிறது?

JSTOR போன்ற தளங்களில் இது போன்ற அதிர்ச்சி மதிப்பீடாக எழுதிக் குவிக்கப்படும் கட்டுரைகளை நீங்கள் பார்க்கலாம். காந்தி ஏன் குடியை எதிர்த்தார் என்பதை காந்தியின் அத்தனை எழுத்துகளிலும் இருந்து புரிந்து கொள்ளாமல், ஏதாவது ஒரு மேல்நாட்டுக்காரர் திரிபுவாதமாக எழுதி வைத்திருப்பதை அப்படியே உருவி எடுத்து தமிழ்ச்சூழலில் உலவவிடுவது போன்றவை அறிவு செயல்பாடுகளுக்கு முற்றிலும் புறம்பானவை.


நமது சமூகத்தின் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் உள்ளனவா? மிக அதிக மனித வளம் கொண்ட நாட்டில், அனைவருக்கும் அடிப்படை கல்வியும், அதற்கு மேல் தரமான உயர்கல்வியும் அளிக்கும் சிஸ்டம் சாமானியமாக உருவாக்கப் படுவதில்லை. ஏகப்பட்ட கருத்து விவாதங்களின் மீது, கற்க வேண்டிய கல்வி வரையறுக்கப்பட்டு, மொத்த சமூகத்தையும் உள்ளடக்கிய ஒரு பரந்த திரளின் மீதான அதன் தாக்கத்தை எடைபோட்டு, இந்த கல்வித்திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் போக்கில் பல குறைபாடுகள் விளைந்து கொண்டேதான் இருக்கும். அவற்றை சீர்படுத்தி செப்பனிடுவதும் நமது பொறுப்புதான்.
மாறாக, வணிகம் மட்டுமே நோக்காக கொண்டு செயல்படும் சில சமூக்கத்தினரை உதாரணமாக காட்டி, 'அதுதான் உயர்ந்தது' என்று அடித்து விடுவதெல்லாம் அறிவுச்செயலுக்கு அடாதது.
வணிகம் மட்டுமே நோக்காக கொண்டவருடைய பார்வையில், இலாபம் மட்டுமே முதன்மையானதாக இருக்கும். சுரண்டல், வன்முறை, பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்க்கும் தடித்தனம், காரியம் சாதிக்க யாரையும் காவுகொடுக்கும் அடாவடித்தனம், சமூக சீர்கேடுகளைக் கண்டு கொள்ளாதிருத்தல் என பல எதிர்மறை குணங்களை, அதன் ஊறுகள் தெரியாமலே தன்னகத்தே கொண்டிருக்கும் அவலம் நிகழ்வதற்கு சாத்தியங்கள் அதிகம் உண்டு.
வள்ளுவரின் வாக்கில் சொல்வதானால், "கற்க வேண்டியவற்றை குறையில்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும்'. இதில் 'காசு பணம் சம்பாதிப்பதும்' உள்ளடக்கம்தானேத் தவிர, அது மட்டுமே 'கற்பவை' அல்ல. ஒரு குடிமைச் சமூகத்திற்கு தேவையான பரந்துபட்ட கல்வியைத்தான் வள்ளுவர் 'கற்பவை' எனக் குறிப்பிடுகிறார்.
அரசியல் வெளியில், சிறந்த ஜனநாயக முறை என்பது மிகவும் சர்ச்சைகள் கொண்ட, கருத்து மோதல்களுக்கு பரந்த இடமளிக்கக் கூடிய, கட்டுபாடான முன்னேற்றத்தை மட்டுப்படுத்தி கேள்விக்குட்படுத்தும் மக்கள் செயல்பாடுகள் எல்லாம் உள்ளடக்கியது. ஜனநாயக முறையின் திறனுக்கு, தீர்க்கமான அளவுகள் இல்லை.
ஆனால், ஜனநாயக முறைதான் நமது குடிமை அமைப்பிற்கு, குறைந்த ஊறுகளை விளைவிக்கும் சிறந்த அரசியல் முறை.
அது போலதான், வெறும் வணிக இலாபத்தை மட்டும் நோக்காக கொண்ட இனக்குழு செயல்பாடுகளைக் காட்டிலும், அனைத்தையும் உள்ளடக்கிய சீரான கல்விமுறைதான் சமூகத்திற்கு அத்தியாவசியமான ஒன்று.
நான் கற்ற கல்வியோ, பெற்ற செல்வமோ, அறிவுச்சமூகத்தில் வெறும் அடையாளங்கள்தான். அந்த கல்வியின் வழியே நான் என்னை நடத்திக் கொள்ளும் முறையே என் தகுதியை தீர்மானிக்கின்றது.
அப்படியல்லாது, வணிக இலாபங்களை புகழ்ந்தும், அறிவு செயல்பாட்டை இகழ்ந்தும் அடையாளப்படுத்துமானால், அந்த சமூகம் எனக்கானதல்ல. அடிப்படை மனித பண்புகள் கொண்ட எவருக்கானதுமல்ல.



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

❌