1. அறிவிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்டு வெளிப்படுவது எழுத்து. ஆனால் மனதின் ஆழத்திலிருந்து உணர்வு நிலைகளை வெளிப்படுத்துவது உரையாடல்.
2. உரையாடல் ஒருவரை பற்றி புரிந்து கொள்வதற்கும் அவருடைய சிந்தனைகளை எண்ணங்களை உணர்ச்சிகளை அறிந்து கொள்வதற்கும் மிக முக்கியமான கருவி.
3. உரையாடும்போது அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றது.
4. எந்த வயதினராக இருந்தாலும் உரையாடல் அவர்களின் மனதை தொடுகிறது.
5. உரையாடல் வழியே கருத்து வேறுபாடுகளை அங்கீகரித்து மதித்து அதை சரியான திசைவழியில் மாற்ற முடியும்.
6. உரையாடல் ஒருவரை ஆற்றுப்படுத்துகிற அற்புதமான மருந்து.
7. குழந்தைகளிடம் உரையாடுங்கள். மனம் திறந்து உரையாடுங்கள். அவர்களுக்கு புரியுமா புரியாதா என்று யோசிக்காமல் உரையாடுங்கள்.
8. குழந்தைகளுக்கு உரையாட இடம் தாருங்கள். அவர்கள் பேசும்போது கவனமாக கேளுங்கள். குழந்தைகள் உரையாடும்போது அவர்களை தொட்டுப் பேசுங்கள். அது ஒரு நெருக்கமான உணர்வை குழந்தைகளிடம் தோற்றுவிக்கும். அவர்கள் உயரத்திற்கு உங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
10. குழந்தைகள் உரையாடும்போது இடையில் குறுக்கீடு செய்யாதீர்கள். அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வர வேண்டும். அத்தகைய முகமொழியும் உடல் மொழியும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களுடைய சரி தவறுகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்.
11. நீங்கள் அப்படி உடனடியாக குறுக்கிடும்போது குழந்தைகள் தங்கள் உரையாடலை தணிக்கை செய்ய தொடங்கி விடுவார்கள் அல்லது எதை சொல்ல வேண்டும் எதை மறைக்க வேண்டும் என்று யோசிப்பார்கள்.
12. குழந்தைகளிடம் உரையாடும்போது எப்போதுமே அறிவுரைகளை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.
13. குழந்தைகளிடம் உரையாடும்போது எப்போதுமே கல்வி சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசாதீர்கள்.
14. குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதால் அவர்கள் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள் எப்படி உள்வாங்குகிறார்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதை எல்லாம் உரையாடும்போது நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
15. குழந்தைகளுக்கும் உலக அனுபவம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
16. உலகம் பற்றிய உங்கள் கருத்துக்களை தீர்மானங்களை அற உரைகளை நன்னெறிகளை குழந்தைகளிடம் திணிக்க முயற்சிக்காதீர்கள்.
17. குழந்தைகள் முன்னால் நீங்கள் முன்மாதிரியாக நடந்து காட்டுங்கள் குழந்தைகள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.
18. குழந்தைகள் சொற்களை அல்ல. செயல்களையே உடனடியாக புரிந்து கொள்கிறார்கள்.
19. உரையாடும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப நீங்கள் உரையாட வேண்டும். அவர்கள் தவறான விஷயங்களை மதிப்பீடுகளை கொண்டிருந்தால் அதை அவர்கள் உணரும்படி கதைகள் வழியாக உரையாட வேண்டும்.
20. குழந்தைகளுக்குத் தேவை கைகாட்டிகளே. யாராலும் குழந்தைகளின் விரல் பிடித்து அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அழைத்து ச் செல்ல முடியாது.
21. இந்த உலகைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் மட்டுமே சரியான விஷயங்களை உரையாடும் போது குழந்தைகளுக்கு சொல்ல முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
நல்ல கோடைகாலம். எப்படிப்பட்ட கோடையிலும் ஆலமரத்தின் அடியில் குளுமையாக இருந்தது. கதைப்பாட்டி கதைமூட்டையைத் தலைவைத்து மதிய நேரம் உண்ட மயக்கத்தில்
படுத்துறங்குவது வழக்கம். அப்போது சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும்
அங்கே ஆடு புலி ஆட்டம் விளையாடுவார்கள். பனையோலைப்பந்து செய்து தலைக்கு மேல் வீசி விளையாடுவார்கள். சில சமயம் கோலிக்குண்டும் விளையாடுவார்கள்.
ஆலமரத்தடியில்
கிராமத்தார்கள் ஒரு பெரிய பானையில் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள். கோடைகாலம் அல்லவா? வழிப்போக்கர்கள்
குடிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும். ஆறும் வற்றிய கடுங்கோடை.
ஒரு நாள், சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடிக்
கொண்டிருக்கும்போது கசுமலா காக்கா பறந்து வந்தது. அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து,
” கா கா கா கா கா “ இடைவிடாமல்
கரைந்தது.
நாய்க்குட்டி
கேட்டது,
“ என்ன காக்கா கத்திக்கிடேயிருக்கே.. காலில் எறும்பு கடித்து விட்டதா? “
பிறகும் காக்கா,
“ கா கா கா கா “ என்று கரைந்தது. பூனைக்குக் கோபம் வந்து விட்டது.
“ என்ன கசுமலா ஒளிந்து விளையாடுவதற்கு விட மாட்டேன் என்கிறாய்.. வாயை மூடவில்லையென்றால் நான் கடித்து விடுவேன்..”
என்று சொல்லிப்
பயமுறுத்தியபடி பாய்ந்தது. கசுமலா அலறிக் கொண்டே பறந்து போய் ஆலமரக்கிளையில்.அமர்ந்து கரைந்தது.
“ கா கா கா கா கா..”
கதைப்பாட்டி
விழித்துக்கொண்டாள். எழுந்து
உட்கார்ந்து காக்காவிடம்,
“ என்ன கசுமாலா ஏன் கரைகிறாய்? “
என்று கேட்டார். கதைப்பாட்டிக்கு விலங்குகளின் மொழி தெரியும். சின்னு கேட்டாள்,
“ காக்கா என்ன சொல்லுது கதைப்பாட்டி..”
“ காக்காவுக்குத் தண்ணீர் வேண்டுமாம்..” என்று சொன்னார் கதைப்பாட்டி.
சின்னு ஓடிப்போய்
தண்ணீர் இருந்த பானையை எட்டிப் பார்த்தாள். பானையில் கொஞ்சூண்டு தண்ணீர் தான் இருந்தது. காக்காவும் பறந்து வந்து எட்டிப் பார்த்தது.
“ கொஞ்சம் தான் தண்ணீர் இருக்கிறது இதை எப்படி காக்கா குடிக்கும்? “ என்று சின்னு கதைப்பாட்டியிடம் சொன்னாள்.
“ முன்னாடி ஒரு காலத்தில் கல்லைப் போட்டுத் தண்ணீர் குடித்தாய் அல்லவா? அதைப் போல குடித்துக்கொள்..”
பூனைக்குட்டி
கோபத்துடன் சொன்னது. காக்கா ,” கா கா கா” என்று கரைந்தபடி கதைப்பாட்டியைச் சுற்றிச் சுற்றி
வந்தது. கல்லை எடுத்து வந்து போட்டு தண்ணீர் மேலே வருவதற்கு
நாலைந்து நாட்கள் ஆகிவிடும். அவ்வளவு பெரிய பானை.
அப்போது
கதைப்பாட்டி,
“ பானைக்குள் பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ குதித்து கழுத்தளவுக்கு முங்கிக் கிடந்தால் தண்ணீர் மேலே வந்து
விடும்..” என்று சொன்னார்.
பூனைக்குட்டியின்
மீசை பயத்தில் நடுங்கியது.
“ ஐய்யோ.. ஒரு தடவை சுடுதண்ணீரில் விழுந்த பூனைக்குட்டி நான்..இனி எந்தத் தண்ணீரிலும் குதிக்க மாட்டேன்..”
என்று சொல்லியது. நாய்க்குட்டி துணிச்சலுடன் ஓடி வந்து ஸ்டைலாகப் பானைக்குள் குதித்து
கழுத்தளவுக்கு முங்கியது. தண்ணீர் பானையின் மேலே வந்தது.
காக்கா வந்து
உட்கார்ந்து ஆசைதீரத் தண்ணீர் குடித்தது. காக்காவின் தாகம் தீர்ந்தது. காக்கா அங்கிருந்து போனபிறகு நாய்க்குட்டி தண்ணீரில் இருந்து வெளியில் வந்தது. அப்படிக் குதித்தபோது பானை உடைந்து விட்டது.
“ பரவாயில்லை.... தாகமெடுத்தவருக்குத் தண்ணீர் கொடுக்க முடிந்ததில்லையா.. அது பெரிய புண்ணியம்..” என்று கதைப் பாட்டி சொன்னார்.
ஒரு நாள் நல்ல நிலா
வெளிச்சம். நீலகண்டன் குள்ளநரி சுவரேறிக் குதித்தது. மெகர்பா கோழி இருக்கும் கூட்டுக்கு அருகில் போனது. மெகர்பா கண்களை மூடித் தூங்குவதை கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தது. எந்த சத்தமுமில்லை. நாய்க்குட்டி எங்கே உறங்குகிறது என்று தெரியவில்லை. கர்வம் பிடித்த நாய்க்குட்டி தோணுகிற இடத்தில் உறங்கும். அது முழித்து விட்டால் கடித்துக் கொன்றுவிடுவான்.
கண்ணை மூடித்
தூங்குகிற மெகர்பா கோழியைப் பார்த்துப் பார்த்து குள்ளநரிக்கு வாயில் எச்சில்
ஊறியது. என்ன அழகான கால்கள்! பொரித்த கோழிக்காலைக் கடித்துத் தின்பதில் என்ன ஒரு சுகம்!
நீலகண்டன் குள்ளநரி
மெல்லப்பாடியது,
“ உன்னை யார் பார்த்தாலும் ஆசைவருமே கோழிப்பெண்ணே!
பிறகு ஏன் இன்றுவரை
உன்னைக் கலியாணம் முடிக்க யாரும் வரவில்லை?”
மெகர்பா விழித்து
விட்டது. தன்னுடைய கலியாணத்தைப் பற்றி நினைத்தபோது சோகம்
வந்தது. நீலகண்டன் அண்ணன் சொல்வது சரிதான். அந்தப்பக்கத்தில் இருக்கும் சேவலுக்கு நான்கு மனைவிகள் இருக்கின்றன.
நீலகண்டன் குள்ளநரி
இன்னும் கவனமாகப் பாடியது,
“ என்னுடன் நீ காடு சுற்றிப் பார்க்க வருகிறாயா கோழிப்பெண்ணே.. தோடு வாங்கலாம், மாலை வாங்கலாம்,, என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன்..”
நாய்க்குட்டி
அருகில் இருந்த வைக்கோல் குவியலில் படுத்திருக்கிறது என்று இரண்டு பேருக்கும்
தெரியாது. நாய்க்குட்டி விழித்தது. காது கொடுத்துக் கேட்டது. ஆகா! நீலகண்டன் குள்ள நரி தானே பாடுது...
மெகர்பா கோழி யோசித்துப்
பார்த்தது. நீலகண்டன் குள்ளநரி பாடுவதிலும் அர்த்தம் இருக்கிறது
என்று தோன்றியது. தோடு ஒன்று வாங்கவேண்டுமென்று வெகுநாட்களாக ஆசை
இருந்தது. கதைப்பாட்டியின் காதுகளில் அழகாகத் தொங்குகிற மாதிரி
வேண்டும்.
மெகர்பா
நீலகண்டனைப் பார்த்துப் பாடியது,
“ ஆலப்புழக்காரன் நீலகண்டன் மாமாவே நாளை எனக்கு ஒரு தோடு வேண்டும். தோடு வேண்டும். பிறகு தோடு வேண்டும் தோளில் தட்டுகிற மாதிரி தோடு
வேண்டும். ஆச்சியும் நானும் கோவித்துக் கொள்ளும்போது கூடவே
கோவித்து ஆடுகிற தோடு வேண்டும்..”
“ சரி.. வாங்கித் தருகிறேன்..” குள்ளநரிக்குத் தன்னுடைய தந்திரம் பலித்த மகிழ்ச்சியில் சொன்னது,
“ நீ வெளியே வா மெகர்பா.. நாம் காட்டைச் சுற்றிப் பார்க்கலாம்..”
நாய்க்குட்டி
எழுந்தது. பாய்ந்து குள்ளநரியின் கழுத்தில் கடித்தது. குள்ளநரி ஊளையிட்டு அழுதது. கோழி, க்க்கோ க்க்கோ க்க்கோ..” என்று சத்தம் போட்டது. வீட்டுக்காரர்கள் விழித்து விளக்கைப் போட்டார்கள். பூனைக்குட்டி சீறிப் பாய்ந்து குள்ளநரியின் முதுகில் நகங்களால் கீறி விட்டது.
நீலகண்டன் குள்ளநரி
ஓரே ஓட்டம் ஓடியது. ஆலமரத்துக்கு அருகில் கூடி ஓடும்போது கதைப்பாட்டியும்
ஒரு அடி கொடுத்தாள்.
ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு
ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு
எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க
எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.
கல்யாணிப்பசு என்ன ஒரு அழகு!
நீண்ட அழகியக் கண்கள்! வெள்ளை நிறம்,
நெற்றியில் ஒரு சுழி, நீண்ட வால், என்ன ஒளி, அப்படிப் பார்த்து பார்த்து பொறாமை
அதிகமாகிக் கொண்டே போனது. எலிக்குட்டி ஓடி வந்து கல்யாணிப்பசுவின் மூக்கை ஒரு கடி
கடித்தது.
கல்யாணிப்பசுவுக்கு அதிர்ச்சி. உடனே
அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆகா! இந்த எலிக்குட்டிக்கு இவ்வளவு திமிரா? இதுக்கு
ஒரு பாடம் கற்பித்துவிட்டு தான் வேறு வேலை என்று நினைத்தது. தட்டுத்தடுமாறி
எழுந்து எலியின் பின்னால் ஓடியது.
எலிக்குட்டி சுவரிலுள்ள ஒரு பொந்தில்
போய் ஒளிந்து கொண்டது. கல்யாணிப்பசு சுவரை முட்டி மோதிக் கீழே தள்ளிவிடப்
பார்த்தது.
இந்த சத்தம் கேட்டு சின்னுவும்
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஓடிவந்தார்கள். நாய்க்குட்டி குரைத்தது.
பூனைக்குட்டி எலிக்குச் சவால் விடுத்தது. இந்தக் களேபரத்துக்கிடையில் எலி வேகமாக
ஓடி வந்து இன்னொரு தடவை கடித்து விட்டு ஓடி ஒளிந்து விட்டது.
பசு மறுபடியும் சுவரில் முட்டியது.
பூனைக்குட்டி அந்தப் பொந்துக்குள் கையை விட்டுத் துழாவியது. பூனைக்கும் ஒரு கடி
கிடைத்தது.வேதனையில் கையைப்
பின்னுக்கிழுத்துக் கொண்டு அழுதது. நாய்க்குட்டி பயங்கரமாகக் குரைத்தது.
இந்த கலவரத்துக்கு மத்தியில் எலி அவர்களுக்கு இடையில் புகுந்து ஓடித் தப்பித்து
விட்டது.
குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்
வழியே இந்த பூமிக்கு வந்த இயற்கையின் படைப்புகள். அவர்கள் பெற்றோரின் தனிப்பட்ட சொத்தல்ல
என்று புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் சொல்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குழந்தையும்
தனித்துவத்துடன் திகழ்கிறார்கள். இயற்கை தன்னுடைய படைப்புகளனைத்துக்கு அத்தகைய தனித்துவமான
குணத்தைக் கொடையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரே மரத்தின் ஒவ்வொரு இலையும் ஒன்று
போல இருப்பதில்லையெனும்போது குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்று போல இருப்பார்கள்? அவர்களுடைய
தனித்துவமான ஆளுமையை வளர்ப்பதில் சமூகத்தின் மூன்றுவெளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முதலாவது குடும்பவெளி. அப்பா அம்மா
அண்ணன் தம்பி தங்கை அக்கா மாமா அத்தை சித்தி சித்தப்பா என்று நெருங்கிய உறவு முறைகளைக்
கொண்டது. இந்த உறவுமுறைகள் எல்லாவித உரிமைகளையும் எடுத்துக் கொள்கிற உறவுமுறைகள். குடும்பவெளியென்பது
குழந்தையின் அடிப்படையான உணர்வுநிலைகளைக் கட்டமைக்கக்கூடியது. எப்போதும் மிரட்டப்பட்டும்,
அதட்டப்பட்டும், அடிக்கப்பட்டும் வளர்க்கிற குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையையும் தன்னம்பிக்கையில்லாமலும்
வளர்வார்கள். எதைச் செய்தாலும் ஒரு தயக்கமும் பயமும் வந்து கொண்டேயிருக்கும். எங்கே
குழந்தைகள் எந்தவித அச்சுறுத்தலுமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அங்கே தான்
அவர்களுடைய படைப்பூக்கம் ( CREATIVITY ) சுதந்திரமாக மலரும். எனவே குடும்பத்தில் அவர்கள்
மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்களுடைய ஆளுமையும் மகிழ்ச்சியாக வளரும்.
ஏனெனில் ஒவ்வொரு வினையும் அதற்குச்
சமமான எதிர்வினையை உருவாக்கும். அப்படியென்றால் நாம் குழந்தைகளின் மீது செலுத்துகிற
வன்முறையை குழந்தையும் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது இந்தச் சமூகத்திடம்
திருப்பிக் கொடுப்பான். அல்லது சமூகத்தில் பயந்து நடுங்கி வாழ்வான். இது மொத்த சமூகத்துக்கே
பொருந்துமென்றாலும் குடும்பம் தான் குழந்தைகளின் முதல்வெளியாக இருப்பதால் குழந்தைகள்
அங்கிருந்தே அடிப்படையான அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள்., அந்த அனுபவங்களே அவர்களுடைய
உணர்வுவெளியைத் தீர்மானிக்கின்றவையாக இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை குழந்தைகள்
குடும்பத்தைச் சார்ந்தே வாழவேண்டும். குடும்பச்சூழ்நிலைகளுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்
கொள்ள வேண்டும். தன்னுடைய உணர்வுநிலைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிக்கட்டவோ வேண்டும்.
குடும்பம் என்பது குழந்தைகளின் ஆளுமைக்கான அடிக்கட்டுமானமாக இருக்கிறதென்பதைப் பெற்றோர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாகப் பள்ளிக்கூடவெளி.
நம்முடைய கல்விமுறைகளில் எத்தனையோ
மாற்றங்கள் வந்தாலும் இன்னமும் குழந்தைகள் முழுமையான மகிழ்ச்சியுடன் பள்ளி செல்வதில்லை.
ஏன் என்பதை யோசிக்க வேண்டும்? கற்றல் என்பது குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு கணமும்
செய்து கொண்டேயிருக்கிற செயல்முறை தான். அது உயிரின் இயல்பு. தன்னைத் தகவமைத்துக் கொள்ள
இயற்கை உயிர்களுக்குக் கொடுத்திருக்கிற கொடையென்று கூடச் சொல்லலாம்.
ஆனால் கற்றல் முறை தன்னார்வத்துடனும்,
மகிழ்ச்சியாகவும் நிகழும் போது கற்றலின் வழியே குழந்தைகள் புதிதாக இந்த உலகத்தைப் பார்ப்பார்கள்.
புதிய சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் நிகழும். ஆனால் அப்படியான சூழல் இந்தியக் கல்விக்கூடங்களில்
இல்லை. அதிகாரமும் அடக்குமுறைகளும் நிறைந்ததாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இன்னமும்
கூட பள்ளிகளில் பிரம்புகள் குழந்தைகளை அடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நேரடியாகவும்
மறைமுகமாகவும் அடித்தால் தான் ஒழுங்காகப் படிப்பார்களென்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.
எனவே தான் குடும்பத்துக்கடுத்தபடியாக அதிகாரமிக்கதாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.
இந்த அதிகாரமும் அடக்குமுறையும் குழந்தைகளின் ஆன்மாவை ஒடுக்கி அவர்களை சுயமரியாதை இல்லாதவர்களாக்குகிறது.
நம்முடைய கல்விமுறையில் பெரும்
மாற்றம் நிகழவேண்டும். குழந்தைகளின் கற்றல்வெளியென்பது பல்வகைப்பூக்கள் பூக்கும் பூந்தோட்டமாக
இருக்கவேண்டும். எல்லாக்குழந்தைகளையும் ஒரே மாதிரி ஜெராக்ஸ் பிரதிகளைப் போல உருவாக்காமல்
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறமையுள்ளவர்களென்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற
கல்விமுறைகளைக் கொண்டு வரவேண்டும். ஏனெனில் நம்முடைய கல்விமுறை ஆரோக்கியமானவர்களைச்
சேர்த்துக் கொண்டு நோயுற்றவர்களை விரட்டிவிடும் மருத்துவமனை போல விசித்திரமானதாக இருக்கிறது.
எந்தக் குழந்தைக்குக் கற்றல்குறைபாடு இருக்கிறதோ அந்தக் குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை
தரவேண்டுமென்ற அடிப்படைகளை மறுக்கின்ற கல்விமுறையாக இருப்பதனால் தான் இடைநிற்கும் குழந்தைகள்
அதிகமாகிறார்கள். அவர்கள் சமூகத்தின் உதிரித்தொழிலாளிகளாகவோ, கலகக்காரர்களாகவோ, சமூகவிரோதிகளாகவோ
மாறுகிறார்கள்.
எனவே நம்முடைய கற்றல்முறை மாறும்போது
குழந்தைகளின் ஆளுமை இன்னும் பிரகாசிக்கும். ஒரு குழந்தையின் ஆளுமையென்பது ஆன்மாவின்
வெளிச்சம். கலவிமுறை அந்த வெளிச்சத்தை அணைத்து விடக்கூடாது.
மூன்றாவது சமூகவெளி
நம்முடைய சமூகத்தில் குரலற்றவர்களாகப்
பெண்களும் குழந்தைகளுமே இருக்கிறார்கள். அவர்களைக்குறித்து கிஞ்சித்தும் அக்கறையின்றியே
தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அடியாத மாடு பணியாது, கறிவேப்பிலையை ஒடித்து
வளர்க்கணும் பிள்ளையை அடித்து வளர்க்கணும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. என்று
குழந்தைகளுக்கு எதிரான பொதுப்புத்தியுடன் தான் இன்னமும் இருக்கிறது. பொதுவெளியில் குழந்தைகளைச்
சமூகம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவில்லை. தங்களை விட சிறியவர்களை அரவணைப்பதில்லை.
மதிப்பதில்லை. பள்ளிக்குழந்தைகள் சாலைகளைக் கடக்கக் காத்திருப்பதைப் பார்க்கும் போதும்
அவர்களைப் பற்றிக் கவலையே படாமல் அவசர அவசரமாகச் செல்கிற இந்த சமூகம் குறித்து குழந்தைக்கு
என்ன விதமான பார்வை வருமென்று யோசிப்பதில்லை. அவர்களை அலட்சியப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ
கடந்து செல்கிறது. போட்டிகளை உருவாக்கி தோல்வியாளர்களை விளிம்புநிலைக்குத் தள்ளுகிறது.போட்டிகள் தனித்துவத்தை மறுப்பவை. வெற்றியாளர்களை
மட்டுமே கொண்டாடுபவை. எதற்கும் லாயக்கற்றவன் என்று குழந்தைகள் தங்களைத் தாங்களே அவமானப்படுத்த
உருவாக்கப்பட்ட சதியென்று கூடச் சொல்லலாம்.
சமவாய்ப்புகளையும் சமத்துவத்தையும்
குழந்தைகளுக்குத் தருகிற சமூகத்தில் மட்டுமே குழந்தைகளின் மகிழ்ச்சி உண்மையானதாக இருக்கும்.
இந்த வாழ்க்கை ஒரு பயணம். போட்டியல்ல. இந்தப்பயணத்தில் மனிதர்கள் வாழும்காலம் வரை ஒருவருக்கொருவர்
அன்பு செய்தும் உதவி செய்தும் சமூக மனிதர்களாக வாழவேண்டுமென்றால் குழந்தைகளின் மூன்று
வெளிகளிலும் மாற்றங்கள் நிகழவேண்டும்.
எந்தச் சமூகத்தில் குழந்தைகள்
மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த சமூகமே மகிழ்ச்சியான சமூகமாக இருக்கும். அப்படிப்பட்ட
சமூகமாக நம்முடைய சமூகமும் மாற குழந்தைகளைக் குறித்தும் அவர்களது உரிமைகள் குறித்தும் ஆழமான விவாதங்களும் உரையாடல்களும்
நடக்கவேண்டும்.
நடுப்பகலில், சின்னுவும்,
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கசுமலா காக்காவும் வட்டமாய் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருந்தனர். அப்போது பூனைக்குட்டி கசுமலா காக்காவிடம்,
“ நீ ஏன் இப்படிக் கருப்பாய்
இருக்கிறாய்? “
என்று கேட்டது. கசுமலா காக்காவுக்கு
சங்கடமாக இருந்தது. முன்பு ஒரு நாளைக்கு நான்கு வேளையும் தேய்த்துக் குளித்தும்
பார்த்து விட்டது. காக்கா குளித்தாலும் கொக்காக முடியாது என்று புரிந்து கொண்டது.
கசுமலா காக்கா தலையைக் குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் இருந்தது.
“ நான் எவ்வளவு வெள்ளையாயிருக்கிறேன்னு
பார்த்தியா? என்ன காரணம் தெரியுமா? முந்திய பிறவியில் நான் ஒரு இங்கிலீஷ்க்காரியாக
இருந்தேன்.. இங்கிலீசில் பேசுவேன்.. இங்கிலீஷிலே கனவு காண்பேன்.. இங்கிலீஷிலே
உறங்குவேன்..” என்று சொன்னது.
சின்னுவும், நாய்க்குட்டியும்,
கசுமலாக்காக்காவும் வாயைத் திறந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“ இங்கிலீஷ் என்றால் என்ன மொழி? “ என்று
காக்கா கேட்டது. நாய்க்குட்டி,
“ கம் ஹியர், ஸிட், கோ ஔவுட், இதுதான்
இங்கிலீஷ்..” என்று சொன்னது.
” ஏ பி சி டி ஒரு பீடி அது தான்
இங்கிலீஷ் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன்..” என்று சின்னு சொன்னாள்.
இதையெல்லாம் கேட்ட பூனைக்குட்டி விழுந்து
விழுந்து சிரித்தது,
“ இதுவா இங்கிலீஷ்? நான்
இங்கிலீஷ்காரியாக இருந்தபோது இங்கிலீஷ் வெள்ளம் மாதிரி கொட்டும்.. அதைக் கேட்டு
ராஜாவே என் நாக்கை அறுத்து விட்டார் தெரியுமா? “
“ அப்புறம்..” எல்லாரும் ஒன்றுபோலக்
கேட்டனர்.
“ பிறகு நான் கடவுளிடம் வேண்டி
வெள்ளைப்பூனையாகப் பிறந்து வந்தேன்..”
என்றது பூனைக்குட்டி. அப்போது
கசுமலாக்காக்கா,
“ கா காக்கா கக்கா கா கா “ என்று
சிரித்தது.
“என்ன சிரிக்கிறாய்? “ என்று பூனை சந்தேகத்துடன் கேட்டது.
“ உன்னுடைய நாக்கை வெட்டி எறிந்த பிறகும்
நீ இவ்வளவு பொய் சொல்கிறாயே.. நாக்கை அறுக்காமல் இருந்திருந்தால் என்னெல்லாம் பொய்
சொல்லியிருப்பாய்..”
என்று கசுமலா காக்கா பதில் சொன்னது.
அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.
ஒரு தடவை சூசனா ஆட்டுக்குட்டி சின்னு,
நாய்க்குட்டி, பூனைக்குட்டி ஆகியோருடன் கள்ளன்போலீஸ் விளையாட்டு விளையாடிக்
கொண்டிருந்தது. பூனை தான் போலீஸ். பூனை போலீஸ் பிடிக்காதிருக்கவேண்டும் என்று
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசைக்கு ஓடினார்கள்.
சூசனா புதர்ச்செடிகளுக்குப் பின்னால்
போய் ஒளிந்து கொண்டாள். நாய்க்குட்டி பாய்ந்து சென்று கதைப்பாட்டியின் பின்னால்
போய் படுத்து உறங்கி விட்டது. அது கதைப்பாட்டிக்குத் தெரியாது. சூசனா பதட்டமாய்
ஓடி ஓடி ஆற்றங்கரைக்கே சென்று விட்டது.
அப்போது தான் நீலகண்டன் குள்ளநரியும்,
ஒரு செந்நாயும், பல்லைக்காட்டிக் கொண்டு சூசனாவை நோக்கி வருவதைப் பார்த்தது. சூசனா
ஒரே ஓட்டம். செந்நாயும் குள்ளநரியும் பின்னால் பாய்ந்து சூசனாவைப் பிடித்துக்
கொண்டன.
“ சூசன்னா... எங்கள் அருமை பூங்குயிலே!
உன்னுடைய நண்பன் தான் நான், நீலகண்டன் குள்ளநரி, என்னுடன் கூட இருப்பது பெரிய
அறிவாளி் செந்நாய்ஜி. ஜங்கில் புக் ஜங்கில் புக் என்ற சினிமாவைக்
கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்தச் சினிமாவின் கதை, கதாநாயகன் வேடம் எல்லாம்
செந்நாய்ஜி தான் செய்தது கண்ணு, சூசன்னா..”
சூசனா திரும்பிப் பார்த்தாள். செந்நாயின்
கண்களில் தெரிந்த ஆசையைப் பார்த்ததும் அவளுடைய அனைத்துச் சந்தேகங்களும் தீர்ந்து
விட்டன..அது ஒரு குதி குதித்து ஓடியது. முதலில் தெரிந்த தேவாலயத்துக்குள் நுழைந்து
விட்டது. அங்கே திருப்பலிபூசை நடந்து கொண்டிருந்தது. பாதிரியார் ஓடிவந்த சூசனாவை
நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டார்.
தேவலாயத்தின் முற்றத்தில் நின்று
நீலகண்டன் குள்ளநரி சத்தமாய் கத்தியது.
“ இறங்கி வந்துரு சூசனா.. தேவாலயத்தில் உன்னைப்
பலி கொடுத்து விடுவார்கள்.. நான் சொல்லலைன்னு நெனைக்காதே..”
“ செந்நாய் கொல்வதைக்காட்டிலும் பலியாடாவது பரவாயில்லை..” என்று
சூசனா சொன்னது.
செந்நாய்க்குக் கோபம் வந்தது. ஒரு
ஆட்டுக்குட்டியைக் கூட கைவசப்படுத்த முடியாத முட்டாள்... குள்ளநரியால் என்ன பயன்? கோபத்தைத் தீர்க்க நீலகண்டன் குள்ளநரியின்
காதில் ஒரு கடி கடித்தது.
நீலகண்டன் குள்ளநரி கூப்பாடு போட்டுக்
கொண்டு ஓடியது.