அ.முத்துலிங்கத்தின் நாளை
பேசாப்பொருளைப் பேசும் கதைகள்
உதயசங்கர்
காலமும் சமூகமும் தான் தனக்கான படைப்பாளிகளை உருவாக்குகிறது. படைப்பாளிகள் இந்தச் சமூகத்தின் அசைவியக்கத்தை அதன் இயங்கியலைச் சரியாக முன்னுணரும்போது அவர்களது படைப்புகளில் சமூகயதார்த்தம் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. சமூக யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட படைப்பாளிகளே சமூகம் எத்திசையில் செல்கிறதென்பதையும் எத்திசையில் செல்லவேண்டுமென்பதையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். யதார்த்ததை தங்களுடைய பகுத்தறிவின் மூலம் கட்டுப்படுத்தி வழிகாட்டுகிறார்கள். சமூகயதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத படைப்பாளிகள் சமூகத்தின் சமன்குலைந்த நிலையையே சமன்நிலையென்று மயங்கி விடுகிறார்கள். அதையே தங்களுடைய படைப்புகளிலும் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் சமூக அக்கறையுள்ள படைப்பாளி தன் சமூகத்தை உற்று நோக்குகிறார். படைப்புகளில் இதுவரை கவனிக்காத இருள்வெளிகளின் மீதும், சாம்பல்நிறப்பகுதிகளின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார். புனைவின் வலிமையான மாயாஜாலத்தினால் தன்னுடைய படைப்புகளில் கவனப்படுத்துகிறார். கூருணர்வுள்ள சமூகம் அந்தப் படைப்புகளின் வழியே தன்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறது.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் வாழ்க்கையை பெண்கள் எழுதியதைவிட ஆண்களே அதிகம் எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புகளில் பெண்கள் துயர்மிகு வாழ்வினை வாழ்ந்து தீர்ப்பவர்களாக, அவலத்தினால் அனுதாபம் கோருபவர்களாக, கையறுநிலையில் கதறுபவர்களாகவே அன்பே உருவானவர்களாக, தியாகதீபங்களாக, சிறு சலனங்களையும் பெரும்பூகம்பமாக உணர்பவர்களாக, சில சமயம் உறுதிமிக்கவர்களாக, பிரச்னைகளைச் சமாளித்து எழுந்து நிறகும் வல்லமை கொண்டவர்களாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் பெண்வாழ்வை ஒரு பெண் எழுதும்போது இதுவரை தெரிந்த மொத்தச்சித்திரமும் தலைகீழாக மாறுகிறது.
இதுவரை ஆண்களின் கண்கள்வழியே பெண்வாழ்வைப் பார்த்த பெண்களுக்கே கூட புதியதொரு தரிசனம் கிடைக்குமென்று சொல்லலாம்.
ஆகாத தீதார் என்ற முதல் சிறுகதைத்தொகுப்பின் வழியே தமிழ்ச்சிறுகதையுலகில் தன்னுடைய இலக்கிய இடத்தை வலுவாகப் பதிவு செய்த ஆமீனா முகம்மத் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான நிஹாடு மூலம் புதியதொரு உயரத்திற்குச் சென்றிருக்கிறார். தமிழில் பொதுவாகவே பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை விகிதாச்சார அடிப்படையில் மிகவும் குறைவு. அதிலும் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்கள் அரிதினும் அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்போதும் இப்போதுமாக ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல மின்னி மறைந்து விடுவார்கள். சித்தி ஜூனைதா பேகம், ரொக்கியா பேகம் என்ற பெயர்களுக்கப்புறம், சமீபகாலமாகத் தான் இஸ்லாமியப்பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பார்க்கமுடிகிறது. அவர்களில் ஒளிவீசும் புதிய வண்ணங்களோடு எழுந்து வந்திருக்கிறார் ஆமினா முகம்மத்.
பொதுவாக சமூகத்தில் வாழும் பெண்களின் நிலைமை அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எப்படி இருக்கிறதென்பதைச் சாதாரணமாகச் செய்தித்தாள் வாசிக்கிற எல்லாருக்கும் தெரியும். சொல்லித்தீராதது பெண்களின் பாடுகள். பிறந்ததிலிருந்து இறப்புவரை எந்தச் சுதந்திரமுமின்றி, எந்தச் சுயசிந்தனையுமின்றி, யாரையாவது சார்ந்து, யாராவதொருவரின் பாதுகாப்பில், எல்லாரையும் எல்லாவற்றையும் அனுசரித்து வாழ்ந்து மடிந்து விடும் பெண்களின் வாழ்க்கை, என்ற கருத்தியலில் மிகப்பெரும் உடைப்பை ஏற்படுத்தும் கதைகளாக நிஹாடு தொகுப்பிலுள்ள கதைகளிருக்கின்றன.
வைகையால் உறிஞ்சப்படாத உயிர் அல்லது தற்கொலையின் நாட்குறிப்பு என்ற கதையில், வெளிநாடு சென்ற கணவனின் துரோகம் தெரிந்த கனியம்மா கரைபுரண்டுவரும் வெள்ளத்தில் தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறார். ஆனால் ஆமினா முகம்மதின் கலையுணர்வு அவரை ஆண்கள் மட்டுமே நியாயம் வழங்குகிற பஞ்சாயத்தில் அத்தனை பேரையும் சமாளிக்கிற வலிமையுள்ள பெண்ணாக மாற்றுகிறது.
உசுரு கருப்பட்டி கதையில் வரும் கச்சம்மா கதையில் ஆமினா முகம்மதின் மொழிநடை புதிய உச்சத்தைத் தொடுகிறது. கூட்டுவண்டியில் சாமான்களுடன், குரோதம், வஞ்சம், எல்லாம் பயணப்பட்டு வந்ததாகச் சொல்வதாகட்டும், தற்கொலை செய்ய நினைக்கும் கச்சம்மாவிடம் சிட்டம்மா தண்ணியை அழுக்காக்கிறாதே என்று சொல்லி ஞானம் போதிப்பதாகட்டும், கச்சம்மா கடைசிவரை தான் சாபம்விட்டவர்களின் வீட்டில் ஒருவாய்த்தண்ணீர் குடிக்கவில்லை என்ற முடிவுவரை இதுவரை சொல்லப்படாத கதையாக இருக்கிறது.
வாழவேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால் ஆயிரம் வழி இருக்கிறது என்ற வார்த்தைகளில் தான் பிடாரியம்மாளில் வரும் தங்கம்மாளின் மூர்க்கம் இருக்கிறது. எல்லாரையும் வந்துபாரு என்கிற அவருக்குத் துணையாக நாகூர் அனிபா தன்னுடைய பாடல்களின் வழியே ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தாரென்ற விவரிப்பின் எள்ளல் தொனி தங்கம்மாள் என்ற கதாபாத்திரத்துக்கு வலுவூட்டுகிறது.
காதலினால் மதம் மாறித் திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டில் தன்னை நிரூபிக்கப் போராடும் வாழ்க்கையைப் பற்றிய கதை அம்மு. இதுவரை யாரும் பேசாத கதை இது. இந்தக் கதையில் வரும் அமுதவள்ளி என்ற அமீராவின் போராட்டங்கள் மனம் உருகும் வண்ணம் ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் ஆமீனா முகம்மத்.
ஒவ்வொரு கதை குறித்தும் விரிவாக எழுதிவிட மனம் துடித்தாலும் முன்னுரையில் அதற்கு இடம் கொடுக்கக்கூடாதென்ற நடைமுறையை நினைத்து சுருக்கமாகச் சொல்ல நினைக்கிறேன்.
சாஜிதா மாமி கேஸ் மனதை உருக்கும் கதை. கதையை வாசித்தவுடன் சாஜிதா மாமி ஒரு செவ்வியல் கதாபாத்திரமாக மாறியிருப்பதை நாம் உணரமுடியும். மாமனாரின் ஆவி கதையில் வரும் ராசாத்தி செய்யும் பழிவாங்கல், அசனம்மாளின் தற்கொலைக் குறிப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றும் அசனம்மாளின் தந்திரம், இரகசிய அறை கதையில் கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் இரட்டை நடைமுறை, கடைசிவரியில் ஒரு பெண்வாழ்வின் சுமையை நம் மீது ஏற்றிவிடும் வல்லமை கொண்ட கதையாகத் திகழ்கிறது. மகனுக்காகத் தன்னைப் பலிகொடுத்த தாயைப் பழிவாங்கும் பெண்ணின் சாதுரியம் என்று தொகுப்பு முழுவதும் பெண்களே நிறைந்து நிற்கிறார்கள்.
.ஆமீனா முகம்மத்தின் கதைகளில் வரும் பெண்கள் பழி வாங்குகிறார்கள், தந்திரம் செய்கிறார்கள், தன் சொந்தங்களின் மீதே சாபம் விடுகிறார்கள். வன்மத்தைப் போற்றி வளர்க்கிறார்கள், நாடகம் ஆடுகிறார்கள், அதிகாரம் செய்கிறார்கள், பிறழ்மனநிலை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள், அடிக்கடி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள், பிடிவாதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருத்தலைத் தக்கவைத்துக் கொள்ள என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையையும் செய்பவர்களாக, ரத்தமும் சதையுமாக நம் முன்னால் உலவித்திரிபவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வின் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமாக ஆண்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக்குகிறார் ஆமீனா முகம்மத்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் இயங்கியல்ரீதியாக தனித்துவமாகவும் முழுமையாகவும் கதைக்குள்ளே பரிணாமவளர்ச்சி பெறுபவர்களாகவும் வருகிறார்கள். பெண்ணெழுத்துகளில் நகைச்சுவையும் எள்ளலும் கேலியும் கிணடலும் மிக அரிது. ஆமீனா முகம்மத் மிக இலகுவாக தன்னுடைய மொழிநடையில் அதைக் கொண்டு வருகிறார். வாழ்க்கையை விலகி நின்று பார்க்கும்போது மட்டுமே கிடைக்கிற அபூர்வமான நோக்கு. புதுமைப்பித்தனிடம், வைக்கம் முகமது பஷீரிடம் அத்தகையை எழுத்து முறையைப் பார்க்கலாம். ஆமீனா முகம்மது இயல்பாக எழுதிச் செல்கிறார். இதில் தான் அவருடைய கலை வெற்றியடைகிறது. .
ஒரு புதிய காட்சி தெரிகிறது. புதிய உணர்வுகள் தோன்றுகின்றன. புதிய கோணத்தில் இந்த வாழ்வு துலங்குகிறது. பெண்களின் வாழ்க்கை குறித்த பழமையான சிந்தனைகள் தகர்கின்றன. பெண்கள் இப்படித்தான் சிந்திப்பார்களென்ற ஆண்களின் அனுமானங்கள் வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன. பெண்கள் பேராளுமையாக, பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் நீங்களாகவும் இருக்கலாம். உங்கள் வீட்டிலும் இருக்கலாம்!
தமிழ்ச்சிறுகதைக்கு புத்தம் புதிய காற்றாய், பேசாப்பொருளைப் பேசத் துணிந்தவராய், அபூர்வமான கதைகளுடன் மீண்டும் வந்திருக்கிற ஆமீனா முகம்மத் மிக விரைவில் இன்னும் சிறந்த படைப்புகளைத் தருவார். தமிழின் சிறந்த படைப்பாளிகளிலொருவராக மாறுவார்.
குழந்தையின் கிறுக்கல்கள்
உதயசங்கர்
1. ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள் மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத்தொடங்குகின்றன.
2. குழந்தைகள் கிறுக்குவதில் ஒரு சுதந்திர உணர்வை அடைகின்றனர். படைப்பூக்கத்தின் ஆரம்பவெளிப்பாடு தான் அந்தக்கிறுக்கலகள்.
3. கிறுக்கல்களில் கிடைக்கும் சுதந்திரம் குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னால் ஒரு காரியத்தைச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தருகிறது.
4. கிறுக்கல்கள் குழந்தையின் மூளையில் முளைவிடும் சிந்தனாசக்தியின் துவக்கம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
5. கிறுக்கல்கள் குழந்தைகளின் மனஎழுச்சியின் வெளிப்பாடு. ஒழுங்கற்ற அந்தக்கோடுகள், கட்டங்கள், முக்கோணங்கள், வட்டங்கள், அரைவட்டங்கள் எல்லாம் குழந்தைகளுக்குப் பரவச உணர்வைத் தருபவை.
6. குழந்தைகள் கிறுக்கும்போது அதன் முகத்தைக் கவனியுங்கள். அப்படி ஒரு தீவிரத்தன்மை தெரியும். அந்தத் தீவிரம் அந்தக்குழந்தையிடம் ஒருமையுணர்வை ஏற்படுத்தும்.
7. குழந்தைகளைக் கிறுக்கவிடுங்கள். அந்தக் குழந்தை ஆளுமைத்திறன் கொண்டதாக மாறிவிடும்.
8. சுவற்றிலோ, புத்தகத்திலோ, நோட்டிலோ, கிறுக்கியதற்காக ஒருபோதும் குழந்தைகளைத் திட்டாதீர்கள். குழந்தைகளிடம் முளைவிடும் படைப்பூக்கம் கருகிவிடும்.
9. குழந்தைகள் கிறுக்குவதற்கென்று கரும்பலகை, நோட்டு, வெள்ளைத்தாள்களைக் கொடுங்கள். கிறுக்கும்போது தலையிடாதீர்கள். இப்படி எழுதவேண்டும், இப்படி வரைய வேண்டும் என்று திருத்தாதீர்கள்.
10. குழந்தைகள் இயல்பிலேயே கற்றுக்கொள்வதில் தீராத பற்றுக் கொண்டவர்கள். பிறந்தநாளிலிருந்து ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்களை ஒழுங்குபடுத்துவதாக நினைத்து அவர்களுடைய படைப்புத்திறனைத் தடைசெய்யக்கூடாது.
11. கிறுக்குகிற எல்லாக்குழந்தைகளும் ஓவியத்தைத் தங்கள் தொழிலாகக் ( பொதுவாக நமது சமூகம் கலை இலக்கியம் மீது கொண்டுள்ள அசூயை தான் காரணம் ) கொண்டுவிடுவார்களோ என்று பெற்றோர்கள் பயப்படவேண்டாம். அது தன்னை வெளிப்படுத்தும் ஒரு துவக்கநிலை. பல குழந்தைகள் வேறு வேறு ஆர்வத்தைக் கைக்கொண்டுவிடுவார்கள்.
12. குழந்தைகள் கிறுக்குவதற்கு ஏற்ற வகையில் ஆபத்தில்லாத சுலபமாக அழிக்கக்கூடிய வண்ணப்பென்சில்களையோ, கிரேயான்களையோ கொடுங்கள்.
13. தான் கிறுக்கியதைக் காட்டும் குழந்தையைக் கவனியுங்கள். அந்தக்கிறுக்கலை அங்கீகரியுங்கள். ஆமோதியுங்கள். பாராட்டுங்கள். குழந்தைகள் அங்கீகரித்தலை ( பெரியவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? ) மிகவும் விரும்புவார்கள்.
14. குழந்தைகளை பழக்கப்படுத்தப்படாத விலங்குகளாக நினைக்காதீர்கள். அவர்களைப் பழக்கப்படுத்துவது, ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம், சொல்லித்தரவேண்டியது பெற்றோர், ஆசிரியர் கடமை என்று கற்பிதம் செய்யாதீர்கள். நீங்கள் அந்த ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம் இவற்றில் சரியாக இருங்கள். குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
15. குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்துங்கள். ஆர்வத்தைத் தூண்டுகிற புறச்சூழலை உருவாக்குங்கள். அழுத்தம் தரவோ, கண்டிக்கவோ, திட்டவோ, அடிக்கவோ செய்யாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர்ச்செயல் உண்டு.
16. குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்று எப்போதும் கவனம் வையுங்கள்.
நன்றி - குழந்தைகளின் அற்புத உலகில்
வெளியீடு - வானம் பதிப்பகம்
தொடர்புக்கு - 9751549992
ந
ந்
காலம் கேட்ட கதைகள்
உதயசங்கர்
( காலம் சென்ற எழுத்தாளர்.ஜமிலுதீனின் புதுச்சட்டை சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை )
வாழ்க்கையின் எந்தப்பருவத்தில் எப்படிப்பட்ட உறவுகள் வந்து சேரும் என்று யாருக்கு தெரியும்? சுழன்று விரியும் புதிர்ப்பாதையில் எப்போதும் புதிதாக சிலர் இணந்து கொள்வதும், சிலர் பிரிந்து செல்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. பல சூழ்நிலைக்காரணங்களால் என்னால் உறவுகளை சரிவரப் பராமரிக்க முடிந்ததேயில்லை. கையாலாகாத நிலையில் மிகுந்த கவலைப்படுவேன். அதற்கான முழுப்பொறுப்பும் என்னை மட்டுமே சாரும். அப்படி உறவுகளைத் தொடர முடியாத என்னுடனும் சில நண்பர்கள் தொடர்ந்து நட்பைப் பேணி வருகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பொறுமைசாலிகளாவும், பெருந்தன்மை மிக்கவர்களாகவும், பேரன்பு மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட நண்பர்களில் முக்கியமானவர் எழுபத்தியைந்து வருட இளைஞர் திரு.ப.ஜமீலுதீன்.
எப்பொதாவது சில புதிய நண்பர்கள் தாங்கள் எழுதிய கதைகளைக் கொண்டு வந்து வாசிக்கக் கொடுப்பார்கள். நானும் வாசித்து விட்டு என்னுடைய பாராட்டுகளையும், அபிப்பிராயங்களையும் சில விமரிசனங்களையும் சொல்லுவேன். புதிய எழுத்தாளர்களைப் பார்த்தால் எனக்கு உற்சாகம் பொங்கிவிடும். அவர்களுடைய கதைகளை வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எப்படி புதிது புதிதாக கதைக்களனில் எழுதுகிறார்கள்? அப்படி ஒரு நாள் மதுரையிலிருந்து அலைபேசியில் திரு.ப.ஜமிலுதீன் பேசினார். செம்மலரில் வெளிவந்துள்ள அவருடைய கதையை வாசித்து விட்டு அபிப்பிராயம் சொல்லும்படி கேட்டார். அவர் தன்னை அறிமுகப்படுத்தியதிலிருந்து அவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்துவதில் நிபுணர் என்ற விவரத்தையும் அறிந்து கொண்டேன். கோவில்பட்டி எழுத்தாளர் பூமணி பணி செய்து ஓய்வுபெற்ற கூட்டுறவுத்துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்பதையும் பேச்சுக்கிடையில் அவர் சொன்னார். எல்லாவற்றிலும் மிகப்பெரிய ஆச்சரியம் அவர் இதுவரை சிறுகதை எதுவும் எழுதியதில்லை. இப்போது சமீபகாலமாகத்தான் எழுதத் தொடங்கியிருப்பதாகவும் சொன்னது தான். முதலில் சற்று அசட்டையாகத்தான் அவருடைய கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் வாசிக்க வாசிக்க அவருடைய ஆளுமை எனக்குள் மெல்ல மெல்ல வளர்ந்தது.
பல கதைகளை எழுத்துப்பிரதியாகவே எனக்கு அனுப்பி வைத்து எனது கருத்துக்களையும், இந்தக் கதையை எந்தப்பத்திரிகைக்கு அனுப்பலாம் என்ற விவரங்களையும் கேட்பார். என்னுடைய ஆலோசனைகளை அப்படியே செயல்படுத்தவும் செய்வார். அதில் புதுச்சட்டை என்ற கதை உயிரெழுத்து பத்திரிகையில் பிரசுரமானது மிக முக்கியமான நிகழ்வு. அதோடு அந்தக்கதை அந்த மாதம் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்ததாகவும் விருட்சம் பத்திரிகையாசிரியர் அழகியசிங்கரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக்கதை மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளெழுத்து என்ற பத்திரிகையில் பிரசுரமானது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திரு.ப.ஜமீலுதீன் அவர்களுடைய பெரும்பாலான கதைகளில் விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களே கதாபாத்திரங்களாக வருகிறார்கள். சாணை பிடிப்பவர், மெக்கானிக், பேப்பர் போடுகிற பையன், பிளாட்பாரத்தில் குடியிருப்பவர்கள் ஒரே ஒரு உடையுடன் இருப்பவர்கள், பிச்சைக்காரர்கள், என்று சாமானிய மக்களை கதைகளில் சித்திரிக்கிறார். அத்தனை கதைகளிலும் சிறுவர்கள் அல்லது இளைஞர்கள் கடுமையான உழைப்பாளிகளாக, முயற்சியுடையவர்களாக, பிறருக்கு உதவி செய்பவர்களாக, இரக்கமுடையவர்களாக, மார்க்கவழி பிறழாதவர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் இஸ்லாமிய இந்து மக்களின் உணர்வுகளின் ஊடாடல் நிகழ்கிறது. இன்றைய காலகட்டத்தின் அவசியமான மதநல்லிணக்கத்தினைச் சித்தரிக்கிற கதைகளும் இருக்கின்றன. அதிகாரவர்க்கத்தினை விமரிசிக்கிற கதைகளும், அரசியல்வாதிகளின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிற கதைகளும் இருக்கின்றன. சாதிவெறியர்களின் முகமூடியைக் கிழித்தெறிகிற கதைகளும் இருக்கின்றன.
திரு.ப.ஜமீலுதீனோடு நடத்திய பல உரையாடல்களின் வழியாக நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் திரு.ப.ஜமீலுதீன் தான் எழுதுவது என்னவென்று தெரிந்து, திட்டமிட்டு எழுதுபவர். தான் எழுதிய அத்தனை கதைகளுக்கும் உரிய நியாயத்தை அவர் வைத்திருக்கிறார். இது மிகவும் அபூர்வம். எனவே சிறுகதை இலக்கணம் சற்றும் பிசகாத கதைகளை அவர் எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.
இன்னுமொரு முக்கியமான பண்பாக திரு.ப.ஜமீலுதீனுடைய கதையில் வருகிறசிறுவர் சிறுமிகள், அவர்களுடைய மனநிலை, உளவியல், ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று. சமீபகாலத்தில் சிறுவர்களை இத்தனை கதைகளில் சித்தரித்த எழுத்தாளர் இவர் ஒருவராகத் தான் இருக்கமுடியும்.
எழுத்தின் மீதான தீராத பற்றின் காரணமாக இவ்வளவு சீக்கிரத்தில் ஒரு முக்கியமான சிறுகதைத்தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறார் திரு.ப.ஜமீலுதீன். அவர் ஒரு அநுபவச்சுரங்கம். அந்தச் சுரங்கத்தின் ஒரு துளியே இந்தச் சிறுகதைத்தொகுப்பு. இன்னும் இருக்கிறது கடலளவு. இன்னும் எழுதுவார்.. எழுதிக்கொண்டேயிருப்பார்….
காலம் தனக்கான படைப்பாளிகளை தானே உருவாக்கிக் கொள்கிறது. காலம் தனக்கான குரலை தானே உரத்துப்பேசுகிறது. காலம் தனக்கான பாடலைத் தானே பாடிக்கொள்கிறது. மதவெறி தூண்டிவிட்ப்பட்டு அதில் சாமனியர்களைப் பலியிட்டு குளிர்காயந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் உலவுகிற நடுநிசி நேரத்தில் மதநல்லிணக்கத்தை உரக்கப்பேசிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறார் திரு.ப.ஜமீலுதீன்! அவருடைய இந்தக்கதைகள் பெரிதும் பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சிவப்பு நிறச் செருப்பு
உதயசங்கர்
ஒரு ஒற்றைச் செருப்பு. இடது கால் செருப்பு. குப்பைத்தொட்டியில் கிடந்தது. யார் போட்டார்கள் என்று தெரியவில்லை. அதன் வாரும் அறுந்திருந்தது. ரொம்பப் பழைய செருப்பு. குப்பை பொறுக்கும் ஜெயக்கொடி அதைப் பார்த்தாள். மங்கலான சிவப்பு நிறத்தில் ஒரு பக்கமாய் தேய்ந்திருந்தது.
ஜெயக்கொடி அதைக் கையில் எடுத்தாள். இன்னொரு செருப்பு கிடக்கிறதா என்று தேடிப்பார்த்தாள். இல்லை. அந்தச் செருப்பு யாருக்கும் பயன்படாது. அவள் கால்களில் செருப்பு இல்லை. செருப்பில்லாமல் பகல் முழுவதும் அலைந்து குப்பை பொறுக்குவாள். அப்போது தான் ஐம்பதோ அறுபதோ கிடைக்கும்.
போனவருடம் பள்ளிக்கூடத்துக்குப் போனாள். ஆனால் அப்பா இறந்தபிறகு அம்மாவுடன் குப்பை பொறுக்க வந்து விட்டாள். நிறம் மங்கிப்போன அந்தச் செருப்பைக் கையில் எடுத்துப் பார்த்தாள். தைத்துப் போடலாமா?
ஆனால் இன்னொரு செருப்பு இல்லையே!
சும்மா காலில் போட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தாள். இடது காலில் செருப்பைப் போட்டாள். என்ன மாயம்!
வலது காலிலும் செருப்பு தோன்றியது. இரண்டு செருப்புகளும் புத்தம் புதிதாக இருந்தன. ஜெயக்கொடியால் நம்ப முடியவில்லை. செருப்பைக்கழட்டினாள். மறுபடியும் பிய்ந்த ஒற்றைச் செருப்பாக மாறிவிட்டது. திரும்பப் போட்டாள்.
இரண்டு சிவப்பு நிற புத்தம் புதிய செருப்புகள் அவளுடைய கால்களில் ஒளிவீசின.
அம்மாவிடம் காட்டினால் எப்படி இருக்கும்? என்ரு ஜெயக்கொடி நினைத்தாள். அடுத்த கணம் ஜெயக்கொடி பறந்து கொண்டிருந்தாள். அம்மா இருந்த இடத்துக்குப் போய் இறங்கினாள்.
அம்மாவுக்கு ஆச்சரியம். அம்மாவிடம் நடந்ததைச் சொன்னாள்.
“ செருப்பு கிடைத்து என்ன பயன்? நீயும் தம்பியும் பள்ளிக்கூடம் போய் படிக்க வேண்டும்.. கல்வி தான் நம்மைக் காப்பாற்றும்.. இந்த மாயாஜாலம் எல்லாம் எதுக்கு? “ என்றாள் அம்மா.
அடுத்த நிமிடமே அரசுப்பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்தாள். இப்போது புது யூனிபார்ம் போட்டிருந்தாள். அவளுடைய கால்களில் இருந்த சிவப்பு நிறச்சசெருப்பு யார் கண்ணுக்கும் தெரியவில்லை.
ஜெயக்கொடியின் தம்பியும் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்திருந்தான். அவர்கள் வீட்டுக்குப் போகும்போது குடிசை வீடு நல்ல காங்கிரீட் வீடாக மாறியிருந்தது. வீட்டில் டி.வி. பிரிட்ஜ், வாஷிங் மிஷின், என்று எல்லாப்பொருட்களும் இருந்தன.
ஜெயக்கொடிக்கும் அவளுடைய தம்பிக்கும் தனித்தனியே எழுத்து மேஜை மேஜை விளக்கு, ஒரு சிறிய நூலகம் என்று எல்லாம் இருந்தது.
ஜெயக்கொடிக்கு மகிழ்ச்சி.
காலையில் எழுந்து வெளியில் வந்தாள். அவளுடனே குப்பை பொறுக்கிய தேவமலர் கிழிந்த உடையுடன் குப்பை பொறுக்கப் போய்க் கொண்டிருந்தாள். முத்து மாமா ஓட்டை சைக்கிளில் பழைய பாத்திர மூட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய பையன் செல்வம் மிட்டாய் கேட்டு அழுது கொண்டிருந்தான்.
இதை எல்லாம் பார்த்த ஜெயக்கொடிக்கு வருத்தமாக இருந்தது. அவள் சிவப்பு நிறச் செருப்பிடம் கேட்டாள்,
“ எல்லாவற்றையும் மாற்ற முடியாதா? “
“ இல்லை.. ஜெயக்கொடி.. இந்தச் செருப்பு யார் காலில் பொருந்துகிறதோ அவர்களிடம் மட்டும் தான் மாயாஜாலம் செய்யும்..” என்று பேசியது சிவப்பு நிறச்செருப்பு.
ஒரு கணம் யோசித்தாள் ஜெயக்கொடி.
” எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.. அதற்கு உன்னால் மாயாஜாலம் செய்ய முடியுமா? “
என்று கேட்டாள் சிவப்பு நிறச் செருப்பு ,
..“ சிந்திக்க வேண்டும்.. எல்லாரும் சிந்திக்க வேண்டும்.. ஏற்றதாழ்வுகள் எப்படி வந்தன என்று சிந்திக்க வேண்டும்..அதற்குக் கல்வி கற்க வேண்டும் ” என்று சொன்னது.
ஜெயக்கொடி தன்னுடைய காலில் இருந்து சிவப்பு நிறச் செருப்பைக் கழட்டினாள். மறுபடியும் பிய்ந்த செருப்பாக மாறியது. அவளும் பழைய ஜெயக்கொடியாக மாறினாள்.
ஆனால் இப்போது அவளுடைய மனதில் ஒரு உறுதி தோன்றியது. எப்படியாவது பள்ளிக்கூடம் போக வேண்டும். படிக்க வேண்டும். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.
ஜெயக்கொடியை வாழ்த்தி மறைந்தது சிவப்பு நிறச்செருப்பு.
நன்றி - கூட்டெழுத்து
ஒரே ஒரு பட்டாணி சொன்ன கதை
உதயசங்கர்
குண்டுமணிப் பாட்டிக்கு யாரும் இல்லை. தனியாகக் குடிசையில் இருந்தார். குடிசைக்குப் பின்னால் ஒரு பட்டாணிச்செடி வளர்த்தாள். அந்தப் பட்டாணிச்செடி ஒரே ஒரு பூ பூத்தது. அந்த ஒரே ஒரு பூ ஒரே ஒரு காய் காய்த்தது. குண்டுமணிப்பாட்டி அந்த ஒரே ஒரு காயைப் பறித்து உரித்தாள். அதில் ஒரே ஒரு பட்டாணி இருந்தது.
குண்டுமணிப்பாட்டி அந்த ஒரே ஒரு பட்டாணியை ஒரு மண்சட்டியில் போட்டு மூடி வைத்தாள். மறுநாள் அந்த ஒரே ஒரு பட்டாணியைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று நினைத்தாள்.
இரவானதும் அந்த ஒரே ஒரு பட்டாணி தூக்கத்திலிருந்து முழித்தது. எப்போதும் பகலில் தூங்கி இரவில் முழித்து பட்டாணி தேசத்துக்குப் போய் ஆடி ஒடி விளையாடி விட்டு காலையில் திரும்பி வந்து செடியில் தூங்கும். இப்போது முழித்துப் பார்த்தால் ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்தப் பட்டாணிக்குத் தெரிந்து விட்டது. குண்டுமணிப்பாட்டி பறித்து உரித்து வைத்து விட்டாள்.
பட்டாணி தேசத்துக்குப் போக வேண்டும். என்ன செய்ய? அந்த ஒரே ஒரு பட்டாணி,
“ குண்டுமணிப்பாட்டி குண்டுமணிப்பாட்டி.. ”
என்று கூப்பிட்டது. உறங்கிக் கொண்டிருந்த குண்டுமணிப்பாட்டிக்கு யாரோ குசுகுசு என்று பேசுகிற சத்தம் கேட்டது.
களவாணிப்பயல் வந்துட்டானோ? அவர்,
“ யாரு? “ என்று குரல் கொடுத்தார். இப்போது பேச்சுச் சத்தம் கேட்கவில்லை. குண்டுமணிப்பாட்டி எழுந்து விளக்கைப் போட்டார். உள்ளே வெளியே தேடினார். யாரும் இல்லை. மறுபடியும் அந்தச் சத்தம் கேட்டது,
“ குண்டுமணிப்பாட்டி குண்டுமணிப்பாட்டி..”
அப்போது தான் குண்டுமணிப்பாட்டி ஒரே ஒரு பட்டாணியை மூடி வைத்திருந்த கிண்ணத்துக்குள்ளிருந்து சத்தம் வருவதைக் கேட்டாள். மெல்லப் பயந்து கொண்டே, ஒரே ஒரு பட்டாணியை மூடி வத்திருந்த மூடியை எடுத்தாள். அது தான் சரியான நேரம் என்று அந்தப் பட்டாணி துள்ளிக்குதித்தது. உருண்டு ஓடி மண்பானைக்குக் கீழே ஒளிந்து கொண்டது.
அது குண்டுமணிப் பாட்டிக்குத் தெரியாது. கிண்ணத்தில் ஒரே ஒரு பட்டாணி இல்லை. அவர் யோசித்தார். அங்கே தான் வைத்தோமா? என்று சந்தேகம் வந்து விட்டது. கீழே தரையில் அங்கும் இங்கும் தேடிப்பார்த்தார். கிடைக்கவில்லை.
சரி நாளைக்கும் குழந்தைகள் பட்டினி தான் என்று நினைத்துக் கொண்டே படுத்து விட்டார். அவர் தினமும் அந்த ஊரில் இருக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு உணவு கொடுப்பார். அவரிடம் என்ன இருக்கிறதோ அதைப் பகிர்ந்து கொடுப்பார். அவர் பேசியதைக் கேட்ட ஒரே ஒரு பட்டாணிக்கு வருத்தமாகி விட்டது. அடடா! குழந்தைகளைப் பட்டினி போடலாமா? என்று நினைத்தது.
தரையில் ஒரு குதி குதித்தது. உடனே அந்தக் குடிசையில் சமையலுக்கான காய்கறிகள் நிறைந்து விட்டன.
கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலைங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், முள்ளங்கி, கேரட், என்று காய்கள் எல்லாம் அணிவகுத்து நடந்து வந்தன. குண்டுமணிப்பாட்டி வைத்திருந்த சுளகில் போய் நல்ல பிள்ளைகளாய் உட்கார்ந்து கொண்டன.
ஒரே ஒரு பட்டாணி மெல்ல உருண்டு, பட்டாணி தேசத்துக்குப் போய் விட்டது. ஆடிப்பாடிக் கொண்டாட்டம் முடிந்து காலையில் குண்டுமணிப்பாட்டி வீட்டுக்கு வந்து அதே பானைக்குக் கீழே ஒளிந்து கொண்டது.
காலையில் கண்விழித்துப் பார்த்த குண்டுமணிப்பாட்டிக்கு ஆச்சரியம்.
“ யார் இவ்வளவு காய்கறிகளையும் கொண்டு வந்தது? “ என்று யோசித்தார். ஏதோ ஒரு அதிசயம் நடக்குது. பரவாயில்லை. எப்படியாவது குழந்தைகள் நன்றாகச் சாப்பிட்டால் போதும். சத்தமாக,
“ வெறும் காய் மட்டும் இருந்தால் போதுமா? தானியங்கள் இருந்தால் தானே பொங்கிச் சாப்பிட முடியும்? “
என்று சொல்லி விட்டு உறங்கி விட்டார். அதைக் கேட்ட ஒரே ஒரு பட்டாணி தரையில் மூன்று முறை குதித்தது. உடனே நெல், கேப்பை, கம்பு, குருதவாலி, சாமை, திணை, வரகு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, எல்லாம் வரிசை வரிசையாக வந்து குண்டுமணிப்பாட்டியின் குடிசையில் நிறைந்தன.
காலையில் எழுந்த பாட்டிக்கு அதிசயமாக இருந்தது. அன்று அவர் ஊரில் ஏழைக்குழந்தைகள் அறுசுவை சாப்பாடு சாப்பிட்டார்கள். சாப்பாட்டுக்குச் சிரமப்பட்ட அத்தனை பேரையும் அழைத்து சாப்பாடு போட்டார். அதுமட்டுமல்ல, தானியங்களையும் அள்ளி அள்ளிக் கொடுத்தார்.
அதன் பிறகு அவர் எப்போது என்ன வேண்டும் என்றாலும் வாய்விட்டுச் சொன்னால் போதும். அது நடந்து விடும். ஏனெனில் ஒரே ஒரு பட்டாணி அந்தப் பானைக்குக் கீழேயே தங்கி விட்டது.
ஆனால் ஒன்று. குண்டுமணிப்பாட்டி அவருக்காக எதையுமே கேட்டதில்லை. அதனால் தான் இத்தனை ஆண்டு காலமானாலும் பட்டாணி அங்கேயே இருக்கிறது. கொஞ்ச நாளில் குண்டுமணிப்பாட்டிக்கும் இதெல்லாம் அந்த ஒரே ஒரு பட்டாணியின் வேலை தான் என்று தெரிந்து விட்டது..
ஒரே ஒரு பட்டாணி இந்தக் கதையைத் தான் பட்டாணி தேசத்தில் சொல்லிக் கொண்டிருந்த போது கேட்டேன். அதைத் தான் உங்களுக்குச் சொன்னேன் குழந்தைகளா!
நான் எப்படிக் கேட்டேன் என்று நினைக்கிறீர்களா?
நானும் ஒரு பட்டாணி. ஹா ஹா ஹா ஹா
நன்றி - வண்ணக்கதிர்
அஞ்சலி
எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன்
அவரில்லாத வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்பமுடியும் ---
உதயசங்கர்
1970-80 களில் அதுவரை கண்டிராதவகையில் கோவில்பட்டியில் அன்றாடம் புதிய புதிய கலை இலக்கியப் பண்பாட்டு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த காலம்.. உலகப்புகழ்பெற்ற ஸ்பானிய ஓவியரும் கம்யூனிஸ்டுமான பிக்காசோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாட்டிலேயே கோவில்பட்டியில் கொண்டாடினோம். குவெர்னிகா, சமாதானப்புறா, போன்ற புகழ்பெற்ற அவருடைய ஓவியங்களைக் காட்சிப்படுத்தி கோவில்பட்டியில் ஒரு புதிய இளைஞர் கூட்டம் கலை இலக்கியக்களத்தில் உருவாகியிருப்பதை அறிவித்த நிகழ்வு எனலாம். கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் போன்ற முன்னோடிகளைப் பின்பற்றி கோவில்பட்டியில் நவீன கலை இலக்கியக்களத்தில் இறங்கியிருந்தோம். கார்ட்டூன் கண்காட்சி, யுத்த எதிர்ப்புக்கண்காட்சி, உலக சமாதானக்கண்காட்சி, என்று கண்காட்சி வடிவத்தை அரசியல் வடிவமாக்கி வெகுமக்களிடம் கொண்டு செல்வதில் கோவில்பட்டி இளைஞர்களுக்குப் பெரும்பங்குண்டு. குறிப்பாக எங்களுடைய பள்ளி, கல்லூரித்தோழர், ஓவியர்.மாரீஸ் தான் அத்தகைய புதுமைகளைச் செய்தவர். அந்த இளைஞர் படையில் எங்கள் அன்புக்குரிய சமீபத்தில் மறைந்த எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன் முன்னணியில் இருந்தார்.
கடந்த 16-03-25 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், சிறந்த சிறுகதை எழுத்தாளரும், கதைசொல்லியும், உள்ளூர் வரலாற்றாய்வாளருமான தோழர்.இரா.நாறும்பூநாதன் தன்னுடைய 64 ஆவது வயதில் இயற்கையில் கலந்து விட்டார். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இராமகிருஷ்ணன் – சண்முகத்தம்மாள் தம்பதியருக்கு கடைசி மகனாகப் பிறந்த இரா.நாறும்பூநாதன் திருநெல்வேலியில் மறைந்த போது நெல்லை மாநகரமே அவருக்கு அஞ்சலி செலுத்தியது. மாநிலம் முழுவதுமிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும், நான்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களும், டி.ஐ.ஜி, உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
நெல்லையில் உள்ள அத்தனை இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இளைஞர்களும், குழந்தை எழுத்தாளர்களும் கண்ணீர் சிந்தினார்கள். வங்கியில் உள்ள நகை மதிப்பீட்டாளர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம் என்று தொழிற்சங்கங்கள் தங்கள் இறுதி வணக்கத்தைத் தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆளுமை மறைவின் போதும் நமக்குக் கற்றுக் கொள்ள சில செய்திகளை விட்டுச் செல்கிறார்கள். அந்த செய்திகளை அறிந்து கொள்வதும் அதைப் பின்பற்றுவதுமே நாம் அந்த ஆளுமைக்குச் செய்கிற மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
பள்ளிக்காலம் தொட்டே நாறும்பூநாதன் வாசிப்பில் ஆர்வமாக இருந்ததற்கு அவருடைய தந்தையார் தமிழாசிரியராக இருந்ததும், மூத்த சகோதரர்களான தோழர்.ஆர். எஸ்.மணியும் தோழர். ஆர்.குமரகுருபரனும் இடதுசாரிகளாக இருந்ததும் முக்கியக்காரணம்.. ஆரம்பக்கல்வி முடிந்து கோவில்பட்டிக்கு குடிவந்து கல்லூரி முடிக்கும் காலம் வரை கோவில்பட்டி என்ற இலக்கிய நகரம் அவருடைய ஆளுமையை உருவாக்கியதில் மிக முக்கியமான பங்கு வகித்தது. எப்போதும் வீட்டில் புத்தகங்களுடன் புழங்கிக் கொண்டேயிருந்ததால் அவருடைய சமவயது பிள்ளைகளை விட அதிகமான அறிவுக்கூர்மையும், கலைத்திறனும் ஓவியத்தில் ஆர்வமும் வாய்க்கப் பெற்றவராக இருந்தார் நாறும்பூ நாதன். நண்பர்களுடன் பேசும்போது புத்தகங்கள், கதைகள், செய்திகள், என்று உரையாடியதின் விளைவாக நண்பர்களையும் புத்தக வாசிப்பாளர்களாக மாற்றினார். பொதுநூலகத்தில் சந்திப்பதும் வாசிப்பதும் விவாதிப்பதும் தொடர்ந்தது. தனக்குக் கிடைத்த அறிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிற பெருங்குணம் நாறும்பூநாதனுக்கு பாலிய காலத்திலேயே இருந்தது. அதனால் தான் கல்லூரிக்காலத்தில் கையெழுத்துப்பத்திரிகை தொடங்கி அதில் நண்பர்களை எழுத வைத்து அழகு பார்த்தவர் நாறும்பூநாதன். அதனால் தான் 1970-கள் காலத்தில் உதயசங்கர், சாரதி, முத்துச்சாமி தொட்டு இப்போது 2020 - களில் இளம் எழுத்தாளர் ஆர்.சூடாமணி வரை எழுத்தாளர்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தார்.
1980-களில் அப்போது கோவில்பட்டியிலிருந்த எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், தேவதச்சன், கௌரிஷங்கர், சுவடி, வித்யாஷங்கர், ஓவியர்.மாரீஸ், இப்போது திரைக்கலைஞராக இருக்கும் சார்லி என்ற மனோகர், சாரதி, முத்துச்சாமி, உதயசங்கர், திடவை பொன்னுச்சாமி, ராம், அப்பாஸ், ஜோதிவிநாயகம், தமிழ்ச்செல்வன், கோணங்கி, அப்பணசாமி, போன்ற எழுத்தாளர்களுடனும் கலைஞர்களுடனும் சேர்ந்து தர்சனா என்ற நாடகக்குழுவிலும், சிருஷ்டி என்ற நாடக்குழுவிலும் பங்கேற்றார்.
அந்தக்காலத்தில் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தினமும் எழுத்தாளர்களின் உரையாடல்களைக் கேட்க நட்சத்திரங்களும் காத்துக் கொண்டிருந்தன. காரசாரமான விவாதங்களையும், விமரிசனங்களையும், உரையாடல்களையும் கரிசலின் சூடான காற்று கோவில்பட்டி நகரெங்கும் கொண்டு சேர்த்தது. அத்துடன் தோழர்கள் தேவப்பிரகாஷ், சுவடி, பாலு, ஜவஹர், இசக்கிமுத்து, ஆகியோருடன் அரசியல் விவாதங்களையும் தத்துவ உரையாடல்களையும் நடத்தவும் செய்தார் நாறும்பூநாதன்.
1981- ஆம் ஆண்டு வங்கிப்பணியில் சேர்ந்ததிலிருந்து வங்கி ஊழியர் சங்கத்தில் தோழர்.பால்வண்ணம் தலைமையில் தொழிற்சங்கப்பணிகளில் தீவிரமாக இயங்கவும், இடது சாரி இயக்கங்களில் பங்கெடுத்தார். 1986-ல் நெல்லைக்கு மாற்றலாகிப் போனபிறகு அவருடைய ஆளுமை பன்முகங்களில் ஒளிவீசியது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மாவட்டச்செயலாளராகப் பொறுப்பேற்று நெல்லையில் தமிழ்ச்செல்வனுடன் இணைந்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தினார். 1990 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15, 16, 17, ஆகிய தேதிகளில் நெல்லையில் நடந்த தமுஎசவின் ஐந்தாவது மாநில மாநாட்டின் பொருளாளராக இருந்தார் நாறும்பூநாதன். பல வகைகளில் அந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்ற மாநாடு. தெருக்கூத்துக்கலைஞர் ஓம் முத்துமாரி, சு.வெங்கடேசன், கவிஞர்.லட்சுமிகாந்தன், பவா.செல்லத்துரை போன்ற ஆளுமைகள் பங்கேற்ற முதல் மாநாடு. நான்கு நாட்களும் கலை இரவுகள் நடந்த மாநாடு. முதன்முதலாக கிராமியக்கலைஞர்கள் பங்கெடுத்த மாநாடு. நெல்லை மாநகரத்தையே ஜோல்னா பையர்களின் நகரமாக்கிய மாநாடு. அந்த மாநாட்டின் வெற்றிக்குப் பின்னால் நாறும்பூநாதனின் கடுமையான உழைப்பு இருந்தது.
அதன்பிறகு தமுஎகச வில் மாநிலக்குழு உறுப்பினராக, மாநிலச்செயற்குழு உறுப்பினராக, மாநிலத்துணைச்செயலாளராக, மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்து கொண்டிருந்தார். அமைப்பை உருவாக்குவதிலும், அமைப்பைத் தொடர்ந்து இயங்கவைப்பதிலும் கவிஞர்.கிருஷியுடன் சேர்ந்து அயராது முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
நெல்லையில் இருந்த தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சி., டேவிட் பாக்கியமுத்து, ஆர்.எஸ்.ஜேக்கப் வண்ணதாசன், சுகா, போன்ற இலக்கிய ஆளுமைகளுடன் அன்றாடம் பேசிப்பழகுகிற வாய்ப்பு கிடைத்தது. 1996- ஆம் ஆண்டு முதல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு மாற்றலாகி வந்த பண்பாட்டு ஆய்வாளர். தொ.ப. வுடனான நட்பு அவருக்குள் புதிய படைப்புப்பொறிகளைத் தூண்டி விட்டது.
வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வில் வெளிவந்த பிறகு அவருடைய இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. முழுமையாக ஒரு பண்பாட்டு ஆய்வாளராக, படைப்பாளியாக, ஒருங்கிணைப்பாளராக, இளம் எழுத்தாளர்களின் நிழற்பந்தலாகப் பரிணமித்தார் நாறும்பூநாதன். அவர் தடம் பதித்த எல்லாத்துறைகளிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பினைச் செய்தார்.
அவர் கிட்டத்தட்ட ஐம்பது சிறுகதைகளை எழுதியுள்ள நாறும்பூநாதனின் ஆரம்ப கால கதைகளில் எளிய மனிதர்களே வலம் வருகிறார்கள். தன்னந்தனியாக தன் வாழ்வைத் தானே விலகி நின்று பார்க்கும் ஆச்சிகளும், பழைய வாழ்க்கைக்கும் புதிய மாற்றத்துக்குமிடையில் ஊசலாடும் மனிதர்களும், அங்கீகாரத்துக்காக ஏங்கித் தவிக்கும் கலைஞர்களும், மூச்சுக்காற்றாய் வாசிப்பை நேசித்து அகாலமரணமடைந்து தன் தாயின் வழியே வாசிப்பைத் தொடரும் அபாக்கியசாலிகளும், வேலையில்லாமல் நாளையும் பொழுதையும் எரிச்சலில் கழிக்கும் இளைஞர்களும், தன் கையெழுத்தைத் தானே போடமுடியாத தமிழாசிரியர்களும், அப்பாக்கள், அம்மாக்கள், குழந்தைகளுமாய் நாறும்பூநாதனின் கதைகளில் உலவுகிறார்கள். வீடும் குடும்பமும் முக்கியக்களன்களாகத் திகழ்கின்றன. பாலியத்தின் சுவடுகளைப் பின்பற்றி நிறையக் கதைகளை எழுதிப்பார்த்திருக்கிறார்.
அவருடைய மரத்துப்போன சொற்கள் என்ற கதைத்தொகுப்பின் கதைகள் மிகுந்த கலையமைதியும் ஆழமும் கொண்டவையாக உருப்பெற்றிருக்கின்றன. நெல்லை வட்டாரமொழியில் மிக எளிதாக வாசகர்களைக் கட்டிப் போடும் திறன் பெற்றிருந்தாரெனலாம். தமிழ்ச் சிறுகதையுலகில் அவருக்கென்று ஒரு தனியிடத்தைத் தக்க வைத்திருக்கிறார். தட்டச்சுக்காலக்கனவுகள் என்ற குறுநாவலையும் வெளியிட்டிருக்கிறார்.
முகநூல் என்ற சமூக ஊடகத்தில் முதலிலிருந்தே அனுபவப்பதிவுகள், பழைய கால நினைவுகளின் துளிகள், வரலாற்றுச்செய்திகள், இதுவரை யாரும் கவனித்திராத சாமானியர்களின் விசித்திரங்கள், கண்டுகொள்ளப்படாத சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களென்று பல்வேறு வகைமைகளில் நாறும்பூநாதன் எழுதிக் கொண்டு வந்தார். அந்தப் பதிவுகளைத் தொகுத்து கண்முன்னே விரியும் கடல் என்ற தலைப்பில் இலக்கிய உலகில் முதன்முறையாக நூலாகக் கொண்டு வந்தவர் நாறும்பூநாதன். பிறகு யானைச்சொப்பனம் என்ற நூலையும் கொண்டு வந்தார். தமிழ் நாட்டில் முதலும் முடிவுமாக முகநூல் நண்பர்களின் சந்திப்பை, “ தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர் நாறும்பூ நாதன்.
அதன்பிறகு வேணுவன மனிதர்கள், பரணி வாசம், கனடா பயணம், திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். அதில் குறிப்பாக திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள் என்ற நூல் திருநெல்வேலியின் கடந்த கால வரலாற்று முக்கியத்துவத்தையும் சாதனைகளையும் காத்திரமாகப் பேசி நூல். அந்த நூலுக்காக 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை உ.வே.சா. விருதை அவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
வங்கியில் பணிபுரியும் போது வங்கி ஊழியர்களுக்கு உதவி செய்யும் விதமாக ஸ்டேட் பேங்க் ஊழியர் டைரி 1, ஸ்டேட் பேங்க் ஊழியர் டைரி 2, கடன் எத்தனை வகைப்படும்? ஒரு தொழிற்சங்கப்போராளியின் டைரிக்குறிப்புகள் போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
மெல்ல மெல்ல நெல்லையின் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் சரித்திர ரகசியங்களையும், தூசி படிந்து, அழுக்கடைந்து யாரும் கண்டுகொள்ளாத அல்லது கண்டும் காணாமலும் போய்க் கொண்டிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வெளிச்சம் பாய்ச்சினார். சாராள் டக்கர் கல்லூரி, சுலோசன முதலியார் பாலம், கிளாரிந்தா அல்லது பாப்பத்திக்கிணறு, பார்வையற்றோருக்கான முதல் பள்ளி, செவித்திறன் குறைந்தோருக்கான முதல் பள்ளி, பாரதியாரின் அப்பா சின்னச்சாமி ஐயரின் பெதப்புரம் ஸ்பின்னிங் மில் என்று தொடர்ந்து எழுதியெழுதி நெல்லையைப் பற்றிய எந்தத் தகவலாக இருந்தாலும் நாறும்பூநாதனிடம் கேட்டால் போதும் என்ற அளவுக்கு நெல்லையின் அடையாளமாக உயர்ந்தார்.
உள்ளூர்ச்சமூகத்துடன் இப்படித் தொடங்கிய உரையாடல் அவரைத் தமிழகமெங்குமுள்ள பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் அறிமுகப்படுத்தியது. புத்தகக்கண்காட்சி நிகழ்வுகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல புதுமையான முன்மாதிரியான இன்னும் சொல்லப்போனால் சென்னை புத்தகக்கண்காட்சியிலேயே செய்யத்துணியாத பல காரியங்களை முன்னெடுத்தவர் நாறும்பூநாதன்.
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்க புத்தகக்கண்காட்சி நடைபெற்ற பத்து நாட்களும், இருபத்திநான்கு மணி நேரமும் மாணவர்கள், வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள், பார்வையற்றோர் வரை ஒரே இடத்தில் தொடர்ந்து வாசித்த நிகழ்வானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிகழ்வாக மாறியது.
தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள சாகித்ய அகாடமி விருதுகளில் மூன்றில் ஒரு பங்கு விருதுகள் நெல்லை மாவட்ட எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்துக் கொண்டுமிருக்கிறது. அந்த எழுத்தாளர்களை தினமும் மரியாதை செய்யும் நிகழ்வையும், அவர்களைப் பற்றிய ஆவணப்படத்தையும் அவர்களைப் பற்றிய கண்காட்சியையும் ஏற்பாடு செய்ய வைத்தவர் நாறும்பூநாதன்.
புத்தகக்கண்காட்சி மேடைகளில் நினைவுப்பரிசாக நெல்லை மாவட்டத்தின் கலைச்சின்னங்களையே வழங்கும் யோசனையைச் சொன்னதோடு மட்டுமில்லாமல், கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் ரெட்டியார்பட்டி மலையில் நெல்லை மாவட்ட விலங்கான வரையாடு சிலை கம்பீரமாக நின்று கொண்டிருக்க வழிசெய்தவர் நாறும்பூநாதன்.
புத்தகக்கண்காட்சி நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் தமிழ் எழுத்தாளர்களை உரையாட வைக்கவும், அவர்களைக் கொண்டு பயிலரங்குகளை நடத்தவும் திட்டமிட்டவர் நாறும்பூநாதன்.
நவீன நாடகங்களை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியதும், சிறார்களுக்கான திரைப்படங்களைத் திரையிட ஏற்பாடு செய்ததும் நாறும்பூநாதன் தான். இப்படி எல்லாவகையிலும் முன்மாதிரியாகப் புத்தகக்கண்காட்சியை நடத்துவதில் முனைப்புடன் இருந்தது மட்டுமல்ல அதற்காக உடல்நலனையும் பொருட்படுத்தாமல் அலைந்து திரிந்தவர் நாறும்பூநாதன்.
நெல்லைமாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணப்படுத்துகிற நோக்கில், ஒரு நூற்றாண்டு கால நெல்லை மாவட்டச்சிறுகதைகளைத் தொகுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலக்கவிதைகள், ஒரு நூற்றாண்டு காலக்கட்டுரைகள், பெரிதினும் பெரிது கேள் என்ற சிறார்களுக்கான நூல் என்று தொகுப்பு நூல்களைத் தொகுத்து மாநிலத்துக்கே முன்மாதிரியாகச் செய்தவர். இப்போது அதைத் தொடர்ந்து விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இத்தகைய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்களென்றால் நாறும்பூநாதனின் இலக்கிய அர்ப்பணிப்பைப் புரிந்து கொள்ள முடியும்.
எப்போதும் இலக்கியத்தை முன்னிறுத்துபவராக, எல்லோரையும் பங்கெடுக்க வைப்பவராக, எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மீது பேரன்பு கொண்டவராக இருந்தவர் நாறும்பூநாதன்.
பொதுவெளியிலும் ஒரு இடதுசாரியாகத் தன்னுடைய சமூகக்கடமையைச் செய்தார். ஆட்டோ டிரைவர் கோபி கொலைசெய்யப்பட்ட துயரமான சம்பவத்துக்குப் பிறகு நிர்க்கதியாக நின்ற அவருடைய குடும்பத்துக்கு குடும்பநல நிதி சேகரிப்பதில் முன்னின்றவர். அந்தக் குழந்தைகளின் கல்விக்காக உதவிகள் செய்தார்.
பரியேறும்பெருமாள் திரைப்படத்தில் நடித்த கணியான் கூத்துக்கலைஞர் தங்கராஜ் அவர்களுக்கு தமுஎகச நாட்டுப்புறக்கலைச்சுடர் விருது வழங்கிய போது அவரைத் தேடிச் சென்ற நாறும்பூநாதன் வீடின்றி தவித்த தங்கராஜின் நிலை கண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு அவருக்கு புதிதாக வீடு கட்ட அரசு உதவி பெற்றுக் கொடுத்தார். அத்துடன் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த அவருடைய மகளுக்கு ஆட்சியர் அலுவலகத்திலேயே வேலையும் வாங்கிக் கொடுத்தார்.
நாங்குநேரியில் சாதிவெறி காரணமாக சின்னத்துரை என்ற மாணவன் சகமாணவர்களால் வெட்டப்பட்ட கொடூரம் நடந்தபிறகு நாறும்பூநாதன் அவனைச் சந்தித்து ஆறுதல் கூறி வேண்டிய உதவிகள் செய்ததோடு, திருநெல்வேலியில் வீடு பார்த்துக் கொடுத்து அவன் பள்ளியில் சேர்வதற்கும் உதவிகளைச் செய்தவர். அதுமட்டுமல்ல வீட்டு வாடகையையும், பள்ளிக்கல்விச் செலவையும் செய்தார்.
இப்படி இலக்கியவாழ்விலும் பொது வாழ்விலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் நாறும்பூநாதன் என்ற ஆளுமை. ஒற்றுமை, ஒருங்கிணைந்த தன்மை, அனைவரையும் சமமாகப் பாவித்தல், அக்கறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், தமிழ்ச்சமூகத்தை அறிவுச்சமூகமாக மாற்றுவதற்கான முன்முயற்சிகள், என்று தான் வாழ்ந்த நகரத்திலுள்ள பொதுச்சமூகத்துடன் உரையாடிக் கொண்டேயிருந்தவர் நாறும்பூநாதன் என்றால் மிகையில்லை. சமூகத்துக்காக, இலக்கியத்துக்காக நெல்லை மாவட்டம் மட்டுமில்லை தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மதுரை மாவட்டங்களிலும் நிர்வாகத்துடன் இணைந்து பங்களிப்பு செய்து கொண்டிருந்தவர் நாறும்பூநாதன்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை நடைமுறையில் கடைப்பிடித்தவர், எப்போதும் சிரித்த முகத்துடன், யாரையும் கடியாதவராக, அனைவரையும் அரவணைத்துச் செல்பவராக சகமனிதர்கள் மீது குறிப்பாக இளைய தலைமுறை மீது அக்கறை மிகுந்த மிகச்சிறந்த மாமனிதராக எழுத்தாளர்.நாறும்பூநாதன் இருந்தார். அவர் நாம் பின்பற்றுவதற்கு ஏராளமான வழிமுறைகளைக் காட்டிச் சென்றிருக்கிறார். அந்த வழிகளைக் கண்டடைவதும் அதை நடைமுறைப்படுத்துவதும் இன்றைய காலத்தின் தேவை..நெல்லை மாவட்டத்தில் இப்படியொரு ஆளுமை இதுவரை இருந்ததில்லை. இனிமேலும் அப்படியொருவர் வருவாரா என்பதும் உறுதியில்லை.
அவரில்லாத வெற்றிடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும்.
செவ்வணக்கம் தோழர்.எழுத்தாளர்.இரா.நாறும்பூநாதன்
நன்றி - புத்தகம் பேசுது
தங்க மூக்கு
ஒரு அடர்ந்த காட்டில் அபூர்வமான தங்கமூக்குப் பறவை ஒன்று இருந்தது. பகலில் சாதாரணமாக எல்லாப்பறவைகளைப் போல இருக்கும். இரவானதும் அதன் மூக்கு தங்கமூக்காகி விடும். பகலில் காட்டை விட்டு வெளியில் வராது.
காட்டின் நடுவில் உள்ள உயரமான பெரிய மரத்தின் பொந்தில் வீடு கட்டி வாழ்ந்தது. அந்த வீட்டுச் சன்னலில் இருந்து பார்த்தால் அந்தக் காடு முழுவதும் நன்றாகத் தெரியும். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும். இரவானதும் பறந்து அருகிலுள்ள கிராமத்துக்குச் செல்லும். அங்கே யார் வீட்டில் விளக்கு எரிகிறதோ அந்த வீட்டு முற்றத்தில் இறங்கும். தன்னுடைய தலையை ஒரு உலுப்பு உலுப்பும். உடனே தங்க மூக்கிலிருந்து தங்கத்துகள்கள் உதிரும். பிறகு அங்கிருந்து பறந்து விடும்.
மறுநாள் குடிசையில் இருப்பவருக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் தங்கத்துகள்களை விற்று வீட்டுக்கு உணவுப்பொருள்களை வாங்கிக் கொள்வார். இப்படி ஏழைகளுக்கு உதவி செய்து வந்தது தங்கமூக்குப் பறவை. இதுவரை யாரும் அதைப் பார்த்தது இல்லை. எப்படி தங்கத்துகள் வந்தது என்று யாருக்கும் தெரியாது.
ஒருநாள் குருசாமி என்பவரது குடிசை வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தது தங்கமூக்குப் பறவை. அவர் வீட்டு முற்றத்தில் சென்று மூக்கை ஆட்டியது. பறந்து விட்டது.
குருசாமிக்கு ஆச்சரியம். அதை விட தங்கத்தை வாங்கிய ஊர்ப்பணக்காரரான நல்லதம்பிக்கு ஆச்சரியம். ஊரில் இருக்கும் ஏழைகளுக்கு மட்டும் தங்கம் எப்படி கிடைக்கிறது? அவர் இந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினான். தங்கம் கிடைத்தவரகளிடம் விசாரித்தான்.
பிறகு ஒரு குடிசை வீட்டைக் கட்டினான். இரவு முழுவதும் விளக்கை எரியவிட்டான். சன்னல் வழியே வெளியே முற்றத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
தங்க மூக்குப் பறவை வந்தது. அந்த இடமே வெளிச்சமாகி விட்டது. ஒளிவீசும் தங்கமூக்கை உலுப்பியது. தங்கத்துகள்கள் கீழே உதிர்ந்தன. பறந்து போய் விட்டது. இதைப் பார்த்த பணக்கார நல்லதம்பிக்குப் பேராசை வந்தது. அந்தப் பறவையைப் பிடித்து கூண்டில் அடைத்து விட்டால் தினம் தினம் தங்கம் கிடைக்கும். நாட்டில் பெரிய பணக்காரராகி விடலாம்.என்று நினைத்தான். அதற்கு அடுத்த நாளும் அதே போல குடிசை வீட்டில் விளக்கை எரிய விட்டான்.
ஆனால் தங்க மூக்குப்பறவை வரவில்லை. அப்போது தான் அவனுக்குப் ஒருமுறை வந்த குடிசைக்கு மறுமுறை தங்கமூக்குப் பறவை வருவதில்லை என்று புரிந்தது.. உடனே வேறு ஒரு குடிசையைக் கட்டினான். குருசாமி நல்லதம்பியிடம்,
“ ஐயா.. நீங்கள் நினைப்பது போல நடக்காது.. அற்புதங்களை நாம் கூண்டில் அடைக்க முடியாது.. தானாகத் தான் நடக்கும்..”
என்று எவ்வளவோ சொன்னான். ஆனால் நல்லதம்பி கேட்கவில்லை.
முற்றத்தில் கண்ணிவலை விரித்தான். அவன் நினைத்தபடியே தங்கமூக்குப் பறவை வலையில் மாட்டிக் கொண்டது. உடனே அதைப் பிடித்து ஒரு கூண்டில் அடைத்து அவனுடைய மாளிகைக்குக் கொண்டு போனான். உறங்கி எழுந்து காலையில் பார்த்தால் அந்தப் பறவையின் மூக்கு சாதாரணமாக இருந்தது. பணக்கார நல்லதம்பிக்குக் குழப்பம்.
என்ன ஆச்சு? என்று யோசித்தான். கூண்டுக்குள் அந்தப் பறவை வெளியில் வரப் போராடியது. கூண்டின் கம்பிகளில் முட்டி மோதியது. அந்தப் பறவையின் மூக்கு உடைந்தது. அது நல்லதம்பியைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பிறகு இரவோ பகலோ அந்த அபூர்வப்பறவையின் மூக்கு தங்கமாக மாறவில்லை.
நல்லதம்பி,
“ ச்சீ ச்சீ.. இந்தப் பறவைக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பது வீண்..”
என்று நினைத்தான். பிறகு நல்லதம்பி அந்தப் பறவையை கூண்டிலிருந்து விடுவித்தான்.
கூண்டை விட்டு வெளியேறியதும் அபூர்வப்பறவையின் மூக்கு தங்கமாக மாறியது.
நல்லதம்பிக்கு அப்போது தான் புரிந்தது.
” எங்கே சுதந்திரம் இருக்கிறதோ அங்கே தான் அற்புதங்கள் நடக்கும்..”
அதன்பிறகு அந்த அபூர்வத் தங்கமூக்குப்பறவை கிராமத்துப்பக்கம் திரும்பியே பார்க்கவில்லை.
நன்றி - பொம்மி
சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும்.
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
நல்ல கோடைகாலம். எப்படிப்பட்ட கோடையிலும் ஆலமரத்தின் அடியில் குளுமையாக இருந்தது. கதைப்பாட்டி கதைமூட்டையைத் தலைவைத்து மதிய நேரம் உண்ட மயக்கத்தில் படுத்துறங்குவது வழக்கம். அப்போது சின்னுவும், நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் அங்கே ஆடு புலி ஆட்டம் விளையாடுவார்கள். பனையோலைப்பந்து செய்து தலைக்கு மேல் வீசி விளையாடுவார்கள். சில சமயம் கோலிக்குண்டும் விளையாடுவார்கள்.
ஆலமரத்தடியில் கிராமத்தார்கள் ஒரு பெரிய பானையில் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள். கோடைகாலம் அல்லவா? வழிப்போக்கர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும். ஆறும் வற்றிய கடுங்கோடை.
ஒரு நாள், சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது கசுமலா காக்கா பறந்து வந்தது. அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து,
” கா கா கா கா கா “ இடைவிடாமல் கரைந்தது.
நாய்க்குட்டி கேட்டது,
“ என்ன காக்கா கத்திக்கிடேயிருக்கே.. காலில் எறும்பு கடித்து விட்டதா? “
பிறகும் காக்கா,
“ கா கா கா கா “ என்று கரைந்தது. பூனைக்குக் கோபம் வந்து விட்டது.
“ என்ன கசுமலா ஒளிந்து விளையாடுவதற்கு விட மாட்டேன் என்கிறாய்.. வாயை மூடவில்லையென்றால் நான் கடித்து விடுவேன்..”
என்று சொல்லிப் பயமுறுத்தியபடி பாய்ந்தது. கசுமலா அலறிக் கொண்டே பறந்து போய் ஆலமரக்கிளையில்.அமர்ந்து கரைந்தது.
“ கா கா கா கா கா..”
கதைப்பாட்டி விழித்துக்கொண்டாள். எழுந்து உட்கார்ந்து காக்காவிடம்,
“ என்ன கசுமாலா ஏன் கரைகிறாய்? “
என்று கேட்டார். கதைப்பாட்டிக்கு விலங்குகளின் மொழி தெரியும். சின்னு கேட்டாள்,
“ காக்கா என்ன சொல்லுது கதைப்பாட்டி..”
“ காக்காவுக்குத் தண்ணீர் வேண்டுமாம்..” என்று சொன்னார் கதைப்பாட்டி.
சின்னு ஓடிப்போய் தண்ணீர் இருந்த பானையை எட்டிப் பார்த்தாள். பானையில் கொஞ்சூண்டு தண்ணீர் தான் இருந்தது. காக்காவும் பறந்து வந்து எட்டிப் பார்த்தது.
“ கொஞ்சம் தான் தண்ணீர் இருக்கிறது இதை எப்படி காக்கா குடிக்கும்? “ என்று சின்னு கதைப்பாட்டியிடம் சொன்னாள்.
“ முன்னாடி ஒரு காலத்தில் கல்லைப் போட்டுத் தண்ணீர் குடித்தாய் அல்லவா? அதைப் போல குடித்துக்கொள்..”
பூனைக்குட்டி கோபத்துடன் சொன்னது. காக்கா ,” கா கா கா” என்று கரைந்தபடி கதைப்பாட்டியைச் சுற்றிச் சுற்றி வந்தது. கல்லை எடுத்து வந்து போட்டு தண்ணீர் மேலே வருவதற்கு நாலைந்து நாட்கள் ஆகிவிடும். அவ்வளவு பெரிய பானை.
அப்போது கதைப்பாட்டி,
“ பானைக்குள் பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ குதித்து கழுத்தளவுக்கு முங்கிக் கிடந்தால் தண்ணீர் மேலே வந்து விடும்..” என்று சொன்னார்.
பூனைக்குட்டியின் மீசை பயத்தில் நடுங்கியது.
“ ஐய்யோ.. ஒரு தடவை சுடுதண்ணீரில் விழுந்த பூனைக்குட்டி நான்..இனி எந்தத் தண்ணீரிலும் குதிக்க மாட்டேன்..”
என்று சொல்லியது. நாய்க்குட்டி துணிச்சலுடன் ஓடி வந்து ஸ்டைலாகப் பானைக்குள் குதித்து கழுத்தளவுக்கு முங்கியது. தண்ணீர் பானையின் மேலே வந்தது.
காக்கா வந்து உட்கார்ந்து ஆசைதீரத் தண்ணீர் குடித்தது. காக்காவின் தாகம் தீர்ந்தது. காக்கா அங்கிருந்து போனபிறகு நாய்க்குட்டி தண்ணீரில் இருந்து வெளியில் வந்தது. அப்படிக் குதித்தபோது பானை உடைந்து விட்டது.
“ பரவாயில்லை.... தாகமெடுத்தவருக்குத் தண்ணீர் கொடுக்க முடிந்ததில்லையா.. அது பெரிய புண்ணியம்..” என்று கதைப் பாட்டி சொன்னார்.
நன்றி - பறயாம் நமுக்கு கதகள்
ஒரு மின்னல் அடித்தது. இதுவரை அப்படியொரு மின்னலை ஊரார் யாரும் பார்த்ததில்லை. அந்த மின்னல் அத்தனை பெரிதாக, அத்தனை வலிமையாக, அத்தனை வெளிச்சமாக இருந்தது. எவ்வளவு வெளிச்சமாக இருந்ததென்றால் அந்த ஊர் அவர்கள் இதுவரை பார்த்திராத அழகில் ஒளிவீசியது.
கடந்தகாலம் மட்டுமல்ல எதிர்காலமும் தெரிந்தது.
அந்த மின்னலில் எல்லோரும் குளித்தார்கள். அந்த மின்னலை எல்லோரும் அருந்தினார்கள். அந்த மின்னலை எல்லோரும் சாப்பிட்டார்கள்.
அவர்களை மின்னலாக மாறினார்கள். மின்னல் அவர்களாக மாறியது. பிறகு எல்லாம் பழைய மாதிரி ஆகிவிட்டது.
2.
ஒளி
என் வாழ்நாளில் நான் ஒருபோதும் சந்தித்திராத ஒரு பெண்ணைச் சந்தித்தேன். தேவதையின் அத்தனை அம்சங்களும் அவளிடமிருந்தன. அவளுடைய ஒளிவீசும் புன்னகை என் ஆன்மாவில் சுடரேற்றியது. நான் ஒளியாக மாறினேன். என்னைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். எல்லோரையும் பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல மாறிவிட்டேன். என்னைப் பார்த்த எல்லோரிடமும் சுடரேற்றினேன்.
எல்லோரும் தேவதைகளானார்கள். குழந்தைகளுக்கு மாயாஜாலக்கதைகளைச் சொன்னார்கள். பறவைகளைப் போலப் பறந்து திரிந்தார்கள் குழந்தைகள்.
வயதான பெரியவர்கள் மேகங்களைப் போல மிதந்தார்கள்.
என் வாழ்நாளில் நான் ஒருபோதும் சந்தித்திராத அந்தப் பெண்ணுக்கு இதெதுவும் பிடிக்கவில்லை. அவளுடைய ஒளிவீசும் புன்னகை மாறியது. இருளின் குகையென அவள் கண்கள் இருண்டன.
என்னிடமிருந்த ஒளியை அந்தக் கருந்துளைகளால் உறிஞ்சினாள். நான் கரிக்கட்டையானேன்.
ஆனால் பாவம்! நான் ஒரு போதும் சந்தித்திராத அந்தப்பெண் அறியாள். என்னுடைய ஒளி இப்போது மக்களின் ஒளி.
3.
புல்ஷிட்
அவன் ஒரு திரைப்படம் பார்த்தான்.
அதில் இறந்தவர்கள் நடித்திருந்தார்கள். எல்லாரும் அவனுக்குத் தெரிந்தவர்கள். அவனுடைய நண்பர்கள் இருந்தார்கள். அவனைப் பிடிக்காதவர்களும் இருந்தார்கள். அவனைப் புகழ்ந்தவர்களும் இருந்தார்கள். இகழ்ந்தவர்களும் இருந்தார்கள். அவன் காதலித்த பெண்களும் இருந்தார்கள். அவனைக் காதலித்த பெண்களும் இருந்தார்கள். அவனுடைய பள்ளிநண்பர்கள் இருந்தார்கள். கல்லூரி நண்பர்கள் இருந்தார்கள்.
எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.
முதலில் புரியாவிட்டாலும் பிறகு புரிந்து விட்டது.
அவனைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவனும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனும் அவர்களுக்கருகில் உட்கார்ந்திருந்தான்.
அந்தத் திரைப்படம் பல விருதுகளைப் பெறுமென்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சொன்னார்கள்.
அவனுக்குத் தெரியும். அது வெறும் புல்ஷிட்...
நன்றி - புக் டே
மெகர்பா கோழியும் நீலகண்டன் குள்ளநரியும்.
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் நல்ல நிலா வெளிச்சம். நீலகண்டன் குள்ளநரி சுவரேறிக் குதித்தது. மெகர்பா கோழி இருக்கும் கூட்டுக்கு அருகில் போனது. மெகர்பா கண்களை மூடித் தூங்குவதை கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தது. எந்த சத்தமுமில்லை. நாய்க்குட்டி எங்கே உறங்குகிறது என்று தெரியவில்லை. கர்வம் பிடித்த நாய்க்குட்டி தோணுகிற இடத்தில் உறங்கும். அது முழித்து விட்டால் கடித்துக் கொன்றுவிடுவான்.
கண்ணை மூடித் தூங்குகிற மெகர்பா கோழியைப் பார்த்துப் பார்த்து குள்ளநரிக்கு வாயில் எச்சில் ஊறியது. என்ன அழகான கால்கள்! பொரித்த கோழிக்காலைக் கடித்துத் தின்பதில் என்ன ஒரு சுகம்!
நீலகண்டன் குள்ளநரி மெல்லப்பாடியது,
“ உன்னை யார் பார்த்தாலும் ஆசைவருமே கோழிப்பெண்ணே!
பிறகு ஏன் இன்றுவரை உன்னைக் கலியாணம் முடிக்க யாரும் வரவில்லை?”
மெகர்பா விழித்து விட்டது. தன்னுடைய கலியாணத்தைப் பற்றி நினைத்தபோது சோகம் வந்தது. நீலகண்டன் அண்ணன் சொல்வது சரிதான். அந்தப்பக்கத்தில் இருக்கும் சேவலுக்கு நான்கு மனைவிகள் இருக்கின்றன.
நீலகண்டன் குள்ளநரி இன்னும் கவனமாகப் பாடியது,
“ என்னுடன் நீ காடு சுற்றிப் பார்க்க வருகிறாயா கோழிப்பெண்ணே.. தோடு வாங்கலாம், மாலை வாங்கலாம்,, என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருகிறேன்..”
நாய்க்குட்டி அருகில் இருந்த வைக்கோல் குவியலில் படுத்திருக்கிறது என்று இரண்டு பேருக்கும் தெரியாது. நாய்க்குட்டி விழித்தது. காது கொடுத்துக் கேட்டது. ஆகா! நீலகண்டன் குள்ள நரி தானே பாடுது...
மெகர்பா கோழி யோசித்துப் பார்த்தது. நீலகண்டன் குள்ளநரி பாடுவதிலும் அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது. தோடு ஒன்று வாங்கவேண்டுமென்று வெகுநாட்களாக ஆசை இருந்தது. கதைப்பாட்டியின் காதுகளில் அழகாகத் தொங்குகிற மாதிரி வேண்டும்.
மெகர்பா நீலகண்டனைப் பார்த்துப் பாடியது,
“ ஆலப்புழக்காரன் நீலகண்டன் மாமாவே நாளை எனக்கு ஒரு தோடு வேண்டும். தோடு வேண்டும். பிறகு தோடு வேண்டும் தோளில் தட்டுகிற மாதிரி தோடு வேண்டும். ஆச்சியும் நானும் கோவித்துக் கொள்ளும்போது கூடவே கோவித்து ஆடுகிற தோடு வேண்டும்..”
“ சரி.. வாங்கித் தருகிறேன்..” குள்ளநரிக்குத் தன்னுடைய தந்திரம் பலித்த மகிழ்ச்சியில் சொன்னது,
“ நீ வெளியே வா மெகர்பா.. நாம் காட்டைச் சுற்றிப் பார்க்கலாம்..”
நாய்க்குட்டி எழுந்தது. பாய்ந்து குள்ளநரியின் கழுத்தில் கடித்தது. குள்ளநரி ஊளையிட்டு அழுதது. கோழி, க்க்கோ க்க்கோ க்க்கோ..” என்று சத்தம் போட்டது. வீட்டுக்காரர்கள் விழித்து விளக்கைப் போட்டார்கள். பூனைக்குட்டி சீறிப் பாய்ந்து குள்ளநரியின் முதுகில் நகங்களால் கீறி விட்டது.
நீலகண்டன் குள்ளநரி ஓரே ஓட்டம் ஓடியது. ஆலமரத்துக்கு அருகில் கூடி ஓடும்போது கதைப்பாட்டியும் ஒரு அடி கொடுத்தாள்.
நன்றி - பறயாம் நமுக்கு கதகள்
எலியும் கல்யாணிப்பசுவும்
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.
கல்யாணிப்பசு என்ன ஒரு அழகு!
நீண்ட அழகியக் கண்கள்! வெள்ளை நிறம், நெற்றியில் ஒரு சுழி, நீண்ட வால், என்ன ஒளி, அப்படிப் பார்த்து பார்த்து பொறாமை அதிகமாகிக் கொண்டே போனது. எலிக்குட்டி ஓடி வந்து கல்யாணிப்பசுவின் மூக்கை ஒரு கடி கடித்தது.
கல்யாணிப்பசுவுக்கு அதிர்ச்சி. உடனே அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆகா! இந்த எலிக்குட்டிக்கு இவ்வளவு திமிரா? இதுக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டு தான் வேறு வேலை என்று நினைத்தது. தட்டுத்தடுமாறி எழுந்து எலியின் பின்னால் ஓடியது.
எலிக்குட்டி சுவரிலுள்ள ஒரு பொந்தில் போய் ஒளிந்து கொண்டது. கல்யாணிப்பசு சுவரை முட்டி மோதிக் கீழே தள்ளிவிடப் பார்த்தது.
இந்த சத்தம் கேட்டு சின்னுவும் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஓடிவந்தார்கள். நாய்க்குட்டி குரைத்தது. பூனைக்குட்டி எலிக்குச் சவால் விடுத்தது. இந்தக் களேபரத்துக்கிடையில் எலி வேகமாக ஓடி வந்து இன்னொரு தடவை கடித்து விட்டு ஓடி ஒளிந்து விட்டது.
பசு மறுபடியும் சுவரில் முட்டியது. பூனைக்குட்டி அந்தப் பொந்துக்குள் கையை விட்டுத் துழாவியது. பூனைக்கும் ஒரு கடி கிடைத்தது. வேதனையில் கையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டு அழுதது. நாய்க்குட்டி பயங்கரமாகக் குரைத்தது.
இந்த கலவரத்துக்கு மத்தியில் எலி அவர்களுக்கு இடையில் புகுந்து ஓடித் தப்பித்து விட்டது.
நன்றி - புக் டே
குழந்தைகளின் வெளி
உதயசங்கர்
குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் வழியே இந்த பூமிக்கு வந்த இயற்கையின் படைப்புகள். அவர்கள் பெற்றோரின் தனிப்பட்ட சொத்தல்ல என்று புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் சொல்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவத்துடன் திகழ்கிறார்கள். இயற்கை தன்னுடைய படைப்புகளனைத்துக்கு அத்தகைய தனித்துவமான குணத்தைக் கொடையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரே மரத்தின் ஒவ்வொரு இலையும் ஒன்று போல இருப்பதில்லையெனும்போது குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்று போல இருப்பார்கள்? அவர்களுடைய தனித்துவமான ஆளுமையை வளர்ப்பதில் சமூகத்தின் மூன்றுவெளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முதலாவது குடும்பவெளி. அப்பா அம்மா அண்ணன் தம்பி தங்கை அக்கா மாமா அத்தை சித்தி சித்தப்பா என்று நெருங்கிய உறவு முறைகளைக் கொண்டது. இந்த உறவுமுறைகள் எல்லாவித உரிமைகளையும் எடுத்துக் கொள்கிற உறவுமுறைகள். குடும்பவெளியென்பது குழந்தையின் அடிப்படையான உணர்வுநிலைகளைக் கட்டமைக்கக்கூடியது. எப்போதும் மிரட்டப்பட்டும், அதட்டப்பட்டும், அடிக்கப்பட்டும் வளர்க்கிற குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையையும் தன்னம்பிக்கையில்லாமலும் வளர்வார்கள். எதைச் செய்தாலும் ஒரு தயக்கமும் பயமும் வந்து கொண்டேயிருக்கும். எங்கே குழந்தைகள் எந்தவித அச்சுறுத்தலுமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அங்கே தான் அவர்களுடைய படைப்பூக்கம் ( CREATIVITY ) சுதந்திரமாக மலரும். எனவே குடும்பத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்களுடைய ஆளுமையும் மகிழ்ச்சியாக வளரும்.
ஏனெனில் ஒவ்வொரு வினையும் அதற்குச் சமமான எதிர்வினையை உருவாக்கும். அப்படியென்றால் நாம் குழந்தைகளின் மீது செலுத்துகிற வன்முறையை குழந்தையும் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது இந்தச் சமூகத்திடம் திருப்பிக் கொடுப்பான். அல்லது சமூகத்தில் பயந்து நடுங்கி வாழ்வான். இது மொத்த சமூகத்துக்கே பொருந்துமென்றாலும் குடும்பம் தான் குழந்தைகளின் முதல்வெளியாக இருப்பதால் குழந்தைகள் அங்கிருந்தே அடிப்படையான அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள்., அந்த அனுபவங்களே அவர்களுடைய உணர்வுவெளியைத் தீர்மானிக்கின்றவையாக இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை குழந்தைகள் குடும்பத்தைச் சார்ந்தே வாழவேண்டும். குடும்பச்சூழ்நிலைகளுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய உணர்வுநிலைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிக்கட்டவோ வேண்டும். குடும்பம் என்பது குழந்தைகளின் ஆளுமைக்கான அடிக்கட்டுமானமாக இருக்கிறதென்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாகப் பள்ளிக்கூடவெளி.
நம்முடைய கல்விமுறைகளில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் இன்னமும் குழந்தைகள் முழுமையான மகிழ்ச்சியுடன் பள்ளி செல்வதில்லை. ஏன் என்பதை யோசிக்க வேண்டும்? கற்றல் என்பது குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு கணமும் செய்து கொண்டேயிருக்கிற செயல்முறை தான். அது உயிரின் இயல்பு. தன்னைத் தகவமைத்துக் கொள்ள இயற்கை உயிர்களுக்குக் கொடுத்திருக்கிற கொடையென்று கூடச் சொல்லலாம்.
ஆனால் கற்றல் முறை தன்னார்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் நிகழும் போது கற்றலின் வழியே குழந்தைகள் புதிதாக இந்த உலகத்தைப் பார்ப்பார்கள். புதிய சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் நிகழும். ஆனால் அப்படியான சூழல் இந்தியக் கல்விக்கூடங்களில் இல்லை. அதிகாரமும் அடக்குமுறைகளும் நிறைந்ததாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இன்னமும் கூட பள்ளிகளில் பிரம்புகள் குழந்தைகளை அடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் அடித்தால் தான் ஒழுங்காகப் படிப்பார்களென்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. எனவே தான் குடும்பத்துக்கடுத்தபடியாக அதிகாரமிக்கதாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இந்த அதிகாரமும் அடக்குமுறையும் குழந்தைகளின் ஆன்மாவை ஒடுக்கி அவர்களை சுயமரியாதை இல்லாதவர்களாக்குகிறது.
நம்முடைய கல்விமுறையில் பெரும் மாற்றம் நிகழவேண்டும். குழந்தைகளின் கற்றல்வெளியென்பது பல்வகைப்பூக்கள் பூக்கும் பூந்தோட்டமாக இருக்கவேண்டும். எல்லாக்குழந்தைகளையும் ஒரே மாதிரி ஜெராக்ஸ் பிரதிகளைப் போல உருவாக்காமல் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறமையுள்ளவர்களென்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற கல்விமுறைகளைக் கொண்டு வரவேண்டும். ஏனெனில் நம்முடைய கல்விமுறை ஆரோக்கியமானவர்களைச் சேர்த்துக் கொண்டு நோயுற்றவர்களை விரட்டிவிடும் மருத்துவமனை போல விசித்திரமானதாக இருக்கிறது. எந்தக் குழந்தைக்குக் கற்றல்குறைபாடு இருக்கிறதோ அந்தக் குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டுமென்ற அடிப்படைகளை மறுக்கின்ற கல்விமுறையாக இருப்பதனால் தான் இடைநிற்கும் குழந்தைகள் அதிகமாகிறார்கள். அவர்கள் சமூகத்தின் உதிரித்தொழிலாளிகளாகவோ, கலகக்காரர்களாகவோ, சமூகவிரோதிகளாகவோ மாறுகிறார்கள்.
எனவே நம்முடைய கற்றல்முறை மாறும்போது குழந்தைகளின் ஆளுமை இன்னும் பிரகாசிக்கும். ஒரு குழந்தையின் ஆளுமையென்பது ஆன்மாவின் வெளிச்சம். கலவிமுறை அந்த வெளிச்சத்தை அணைத்து விடக்கூடாது.
மூன்றாவது சமூகவெளி
நம்முடைய சமூகத்தில் குரலற்றவர்களாகப் பெண்களும் குழந்தைகளுமே இருக்கிறார்கள். அவர்களைக்குறித்து கிஞ்சித்தும் அக்கறையின்றியே தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அடியாத மாடு பணியாது, கறிவேப்பிலையை ஒடித்து வளர்க்கணும் பிள்ளையை அடித்து வளர்க்கணும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. என்று குழந்தைகளுக்கு எதிரான பொதுப்புத்தியுடன் தான் இன்னமும் இருக்கிறது. பொதுவெளியில் குழந்தைகளைச் சமூகம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவில்லை. தங்களை விட சிறியவர்களை அரவணைப்பதில்லை. மதிப்பதில்லை. பள்ளிக்குழந்தைகள் சாலைகளைக் கடக்கக் காத்திருப்பதைப் பார்க்கும் போதும் அவர்களைப் பற்றிக் கவலையே படாமல் அவசர அவசரமாகச் செல்கிற இந்த சமூகம் குறித்து குழந்தைக்கு என்ன விதமான பார்வை வருமென்று யோசிப்பதில்லை. அவர்களை அலட்சியப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ கடந்து செல்கிறது. போட்டிகளை உருவாக்கி தோல்வியாளர்களை விளிம்புநிலைக்குத் தள்ளுகிறது. போட்டிகள் தனித்துவத்தை மறுப்பவை. வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடுபவை. எதற்கும் லாயக்கற்றவன் என்று குழந்தைகள் தங்களைத் தாங்களே அவமானப்படுத்த உருவாக்கப்பட்ட சதியென்று கூடச் சொல்லலாம்.
சமவாய்ப்புகளையும் சமத்துவத்தையும் குழந்தைகளுக்குத் தருகிற சமூகத்தில் மட்டுமே குழந்தைகளின் மகிழ்ச்சி உண்மையானதாக இருக்கும். இந்த வாழ்க்கை ஒரு பயணம். போட்டியல்ல. இந்தப்பயணத்தில் மனிதர்கள் வாழும்காலம் வரை ஒருவருக்கொருவர் அன்பு செய்தும் உதவி செய்தும் சமூக மனிதர்களாக வாழவேண்டுமென்றால் குழந்தைகளின் மூன்று வெளிகளிலும் மாற்றங்கள் நிகழவேண்டும்.
எந்தச் சமூகத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த சமூகமே மகிழ்ச்சியான சமூகமாக இருக்கும். அப்படிப்பட்ட சமூகமாக நம்முடைய சமூகமும் மாற குழந்தைகளைக் குறித்தும் அவர்களது உரிமைகள் குறித்தும் ஆழமான விவாதங்களும் உரையாடல்களும் நடக்கவேண்டும்.
.
கசுமலா காக்காவுக்கும், பூனைக்குட்டிக்கும் சண்டை
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
நடுப்பகலில், சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கசுமலா காக்காவும் வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பூனைக்குட்டி கசுமலா காக்காவிடம்,
“ நீ ஏன் இப்படிக் கருப்பாய் இருக்கிறாய்? “
என்று கேட்டது. கசுமலா காக்காவுக்கு சங்கடமாக இருந்தது. முன்பு ஒரு நாளைக்கு நான்கு வேளையும் தேய்த்துக் குளித்தும் பார்த்து விட்டது. காக்கா குளித்தாலும் கொக்காக முடியாது என்று புரிந்து கொண்டது. கசுமலா காக்கா தலையைக் குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் இருந்தது.
பூனைக்குட்டி வெயிலில் உடம்பை நீட்டி படுத்துக் கிடந்தது. தன்னைத் தானே நக்கிக் கொடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டே,
“ நான் எவ்வளவு வெள்ளையாயிருக்கிறேன்னு பார்த்தியா? என்ன காரணம் தெரியுமா? முந்திய பிறவியில் நான் ஒரு இங்கிலீஷ்க்காரியாக இருந்தேன்.. இங்கிலீசில் பேசுவேன்.. இங்கிலீஷிலே கனவு காண்பேன்.. இங்கிலீஷிலே உறங்குவேன்..” என்று சொன்னது.
சின்னுவும், நாய்க்குட்டியும், கசுமலாக்காக்காவும் வாயைத் திறந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“ இங்கிலீஷ் என்றால் என்ன மொழி? “ என்று காக்கா கேட்டது. நாய்க்குட்டி,
“ கம் ஹியர், ஸிட், கோ ஔவுட், இதுதான் இங்கிலீஷ்..” என்று சொன்னது.
” ஏ பி சி டி ஒரு பீடி அது தான் இங்கிலீஷ் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன்..” என்று சின்னு சொன்னாள்.
இதையெல்லாம் கேட்ட பூனைக்குட்டி விழுந்து விழுந்து சிரித்தது,
“ இதுவா இங்கிலீஷ்? நான் இங்கிலீஷ்காரியாக இருந்தபோது இங்கிலீஷ் வெள்ளம் மாதிரி கொட்டும்.. அதைக் கேட்டு ராஜாவே என் நாக்கை அறுத்து விட்டார் தெரியுமா? “
“ அப்புறம்..” எல்லாரும் ஒன்றுபோலக் கேட்டனர்.
“ பிறகு நான் கடவுளிடம் வேண்டி வெள்ளைப்பூனையாகப் பிறந்து வந்தேன்..”
என்றது பூனைக்குட்டி. அப்போது கசுமலாக்காக்கா,
“ கா காக்கா கக்கா கா கா “ என்று சிரித்தது.
“ என்ன சிரிக்கிறாய்? “ என்று பூனை சந்தேகத்துடன் கேட்டது.
“ உன்னுடைய நாக்கை வெட்டி எறிந்த பிறகும் நீ இவ்வளவு பொய் சொல்கிறாயே.. நாக்கை அறுக்காமல் இருந்திருந்தால் என்னெல்லாம் பொய் சொல்லியிருப்பாய்..”
என்று கசுமலா காக்கா பதில் சொன்னது. அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.
பூனைக்கு அவமானமாகி விட்டது.
நன்றி - புக் டே
சூசனா செய்த கலாட்டா
உதயசங்கர்
ஒரு தடவை சூசனா ஆட்டுக்குட்டி சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி ஆகியோருடன் கள்ளன்போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தது. பூனை தான் போலீஸ். பூனை போலீஸ் பிடிக்காதிருக்கவேண்டும் என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசைக்கு ஓடினார்கள்.
சூசனா புதர்ச்செடிகளுக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள். நாய்க்குட்டி பாய்ந்து சென்று கதைப்பாட்டியின் பின்னால் போய் படுத்து உறங்கி விட்டது. அது கதைப்பாட்டிக்குத் தெரியாது. சூசனா பதட்டமாய் ஓடி ஓடி ஆற்றங்கரைக்கே சென்று விட்டது.
அப்போது தான் நீலகண்டன் குள்ளநரியும், ஒரு செந்நாயும், பல்லைக்காட்டிக் கொண்டு சூசனாவை நோக்கி வருவதைப் பார்த்தது. சூசனா ஒரே ஓட்டம். செந்நாயும் குள்ளநரியும் பின்னால் பாய்ந்து சூசனாவைப் பிடித்துக் கொண்டன.
“ சூசன்னா... எங்கள் அருமை பூங்குயிலே! உன்னுடைய நண்பன் தான் நான், நீலகண்டன் குள்ளநரி, என்னுடன் கூட இருப்பது பெரிய அறிவாளி் செந்நாய்ஜி. ஜங்கில் புக் ஜங்கில் புக் என்ற சினிமாவைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்தச் சினிமாவின் கதை, கதாநாயகன் வேடம் எல்லாம் செந்நாய்ஜி தான் செய்தது கண்ணு, சூசன்னா..”
சூசனா திரும்பிப் பார்த்தாள். செந்நாயின் கண்களில் தெரிந்த ஆசையைப் பார்த்ததும் அவளுடைய அனைத்துச் சந்தேகங்களும் தீர்ந்து விட்டன..அது ஒரு குதி குதித்து ஓடியது. முதலில் தெரிந்த தேவாலயத்துக்குள் நுழைந்து விட்டது. அங்கே திருப்பலிபூசை நடந்து கொண்டிருந்தது. பாதிரியார் ஓடிவந்த சூசனாவை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டார்.
தேவலாயத்தின் முற்றத்தில் நின்று நீலகண்டன் குள்ளநரி சத்தமாய் கத்தியது.
“ இறங்கி வந்துரு சூசனா.. தேவாலயத்தில் உன்னைப் பலி கொடுத்து விடுவார்கள்.. நான் சொல்லலைன்னு நெனைக்காதே..”
“ செந்நாய் கொல்வதைக் காட்டிலும் பலியாடாவது பரவாயில்லை..” என்று சூசனா சொன்னது.
செந்நாய்க்குக் கோபம் வந்தது. ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட கைவசப்படுத்த முடியாத முட்டாள்... குள்ளநரியால் என்ன பயன்? கோபத்தைத் தீர்க்க நீலகண்டன் குள்ளநரியின் காதில் ஒரு கடி கடித்தது.
நீலகண்டன் குள்ளநரி கூப்பாடு போட்டுக் கொண்டு ஓடியது.
நன்றி - புக் டே
கோழியும் குள்ளநரியும்
உதயசங்கர்
ஒருநாள் காலையில் நீலகண்டன் குள்ளநரி பதுங்கிப் பதுங்கி மெகர்பாவின் கூட்டுக்குப் பக்கத்தில் சென்றது. பிறகு சாதாரணமாகச் சொல்லியது,
“ மெகர்பா.. உன்னுடன் சேர்ந்து விளையாட வேண்டுமென்று எனக்கு தீராத ஆசை உணடு.. ஆனால் அந்த பாழாய்ப்போன நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒத்துக்கொள்ளவில்லை. கதைப்பாட்டி என்ற அந்த வயதான கிழவியும் ஒத்துக் கொள்ளவில்லை. எல்லாருக்கும் பொறாமை. நீ கூட்டைத் திறந்து வெளியில் வா..”
மெகர்பா கோழி பயந்து போய்,
“ க்கொ க்கொ க்கோ க்கொ..” என்று அழத்தொடங்கியது. அப்போது குள்ளநரி, கூட்டின் கதவைத் தட்டியபடியே,
“ஆகா! எத்தனை இனிமையான குரல் உனக்கு மெகர்பா..நீ வெளியில் வா.. நான் உன்னுடைய நண்பன் தானே.. உன்னை காட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்கிறேன்.. இந்த உலகத்தையும் மேல் உலகத்தையும் காட்டுகிறேன்..”
மெகர்பா சத்தமாக, “ க்கொ க்கொ க்கொ க்கொ க்கொ “ என்று அழத் தொடங்கியது.
அழுகையைக் கேட்டு ஓடிப்போன சின்னு குள்ளநரியின் வாலைப் பிடித்து இழுத்தாள். நாய்க்குட்டி பாய்ந்து ஒரு கடி கடித்தது. பூனைக்குட்டி வாலைக்கடித்தபடி தொங்கியது.
நீலகண்டன் குள்ளநரி வேதனை தாங்காமல் சத்தமாய் ஊளையிட்டபடி ஓடிவிட்டது. கிராமத்துமக்கள் எல்லாரும் கற்களை எறிந்துக் கொண்டும், கம்புகளை வீசிக்கொண்டும் பின்னாலேயே ஓடினார்கள். ஓடிய நீலகண்டன் குள்ளநரி ஆற்றின் கரைக்குச் சென்று சேர்ந்தது.
வேறுவழியில்லாமல் ஆற்றில் குதித்து நீந்தி மறுகரையில் கரையேறியது.
நன்றி - புக் டே