Normal view

Received before yesterdayமுனைவர் மு.இளங்கோவன்

மலேசியாவில் முத்தமிழ்ப் படிப்பகம் …

 

முத்தமிழ்ப் படிப்பகம் வாயில்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வாழ்ந்த நெல்லை இரா. சண்முகம் அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஆழமாகச் சிந்தித்தவர்; தம் எண்ணங்களை எழுத்துகளாக்கி, இதழ்களில் வெளியிட்டவர்.  1951 - 52 ஆம் ஆண்டுகளில் தொல்காப்பியம் குறித்த பல ஆழமான கட்டுரைகளை வரைந்து, சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழில் வெளியிட்டவர். இவ்வுண்மைகள் தெரியத் தொடங்கிய நாளிலிருந்து மலேசியாவில் வாழ்ந்துவரும் ஆசான் மன்னர் மன்னன் மருதை, இசைத்தென்றல் நா. மாரியப்பனார், எழுத்தாளர் செ. குணாளன் முதலானவர்களைத் தொடர்புகொண்டு இரா. சண்முகனார் குறித்த மேலதிக விவரங்களைப் பெற்று வருகின்றேன். இரா. சண்முகனாரின் நூல்கள், கட்டுரைகளைத் தொகுப்பதும், அவரின் வாழ்வியலைத் தெரிந்துகொள்வதும் என் முதன்மை நோக்கமாக இப்பொழுது உள்ளது. 

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்ந்துவரும் மூத்த அறிஞர்கள் பலரிடம் இரா. சண்முகம் குறித்து வினவிப் பார்த்தேன். எனினும் நான் எதிர்பார்த்த அளவுக்குச் செய்திகள் அவர்களிடமிருந்து கிடைத்தில. அடுத்து, மலேசியாவில் உள்ள நூலகங்களில் இரா. சண்முகனாரின் நூல்களும் அவரைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளும் இருக்கும் என்ற நம்பிக்கையில் அங்குள்ள நூலகங்களைப் பற்றித் தேடத் தொடங்கினேன். அப்பொழுதுதான் கோலாலம்பூரின் செந்தூல் பகுதியில் முத்தமிழ்ப் படிப்பகம் என்னும் பெயரில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருவதை அறிந்தேன். முத்தமிழ்ப் படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்று, இரா. சண்முகனாரின் நூல்கள் தங்கள் படிப்பகத்தில் உள்ளனவா? எனவும் அவர் குறித்த மேலதிக விவரம் கிடைக்குமா? எனவும் கேட்டேன். நூலகப் பொறுப்பாளரைக் கேட்டு மறுமொழி தருவதாகத் திருவாளர் பெ. இராமன் அவர்கள் தெரிவித்தார்கள். எளிமையாகத் தொடர்புகொண்டு, உதவிபெறும் வகையில் பெ. இராமன் அவர்களின் நட்பு கிடைத்தமை மகிழ்ச்சியளித்தது. 

முத்தமிழ்ப் படிப்பகம் அறுபத்தேழு ஆண்டுகளுக்கு(1958) முன்னர்த் தொடங்கப்பட்ட படிப்பகம் எனவும், இங்கு அரிய நூல்கள் பல பாதுகாக்கப்படுகின்றன எனவும் நண்பர்கள் வழியாக அறிந்தேன். எனவே இந்த நூலகத்தைப் பார்வையிட வேண்டும்  என்ற எண்ணம் நெஞ்சில் மேலெழுந்தவண்ணம் இருந்தது. அதற்குரிய நாளுக்காகக் காத்திருந்தேன்.

அண்மையில் முத்தமிழ்ப் படிப்பகத்தைப் பார்க்கும் சூழல் கனிந்தது. படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் ஐயாவுக்கு என் வருகையைத் தெரிவித்தேன். நூலகப் பார்வைக்காக மலேசியாவுக்குச் செல்லத் திட்டமிட்டேன். கோலாலம்பூர் அருகில் உள்ள பெட்டாலிங்கு செயாவில் அமைந்துள்ள அருக்காணி மையத்தில் இரவில் தங்குவதற்குரிய உதவியை மருத்துவர் செல்வம் செல்லப்பன் செய்திருந்தார். அதன்படி இரவு சென்று அருக்காணி மையத்தில் ஓய்வெடுத்தேன்.  ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களும் நானும் திட்டமிட்டபடி மறுநாள் காலைப்பொழுதில் சந்தித்தோம். காலையில் பசியாறிவிட்டு, மகிழுந்தில் செந்தூல் பகுதியை அடைந்து, நூலக வாயிலில் காத்திருந்தோம். சில நொடிப்பொழுதில் பெ. இராமன் அவர்கள் வந்து, எங்களை வரவேற்றுப் படிப்பகத்துக்கு அழைத்துச் சென்றார். அழகிய மாடிக்கட்டடத்தில் முத்தமிழ்ப் படிப்பகம் இயங்குவதை அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன். பேழைகளில் தமிழ் நூல்கள் பாதுகாக்கப்படுவதும் ஆர்வலர்கள் வருகைபுரிந்து, நூல்கள், செய்தி ஏடுகளைப் படிப்பதும் வழக்கமாக உள்ளதை அறிந்தேன். நூல்களின் பட்டியல் கணினி வடிவப்படுத்தும் முயற்சி நடந்து வருவது பாராட்டத்தக்கது.

பெ. இராமன் அவர்களைச் சிறப்பிக்கும் மு.இளங்கோவன். 
அருகில் மன்னர் மன்னன். 

முத்தமிழ்ப் படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் அவர்களின் முன்னோர் ஊர் காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ஆகும். இவர் மலேசியாவின் பெட்டாலிங்கு செயாவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை மலேசியாவில் முடித்து, கல்லூரிப் படிப்பைத் தமிழகத்தில் நிறைவுசெய்தவர். நீண்ட காலமாக மலேசியாவில் வாழ்ந்து வரும் இவர் தணிக்கைத் துறையில் மிகுதியான பட்டறிவுகொண்டவர். முத்தமிழ்ப் படிப்பகத்தில் தணிக்கைப் பணிகளில் ஈடுபட்டு, உழைத்தவர். பின்னாளில் முத்தமிழ்ப் படிப்பகத்தைத் தலைமை தாங்கி, மிகச் சிறப்பாக வழிநடத்தும் பெரும்பணியைச் செய்து வருகின்றார். முத்தமிழ்ப் படிப்பக வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு பெருந்துணையாக உள்ளது. படிப்பகத்துக்குப் புதுப்புது வசதிகளை ஏற்படுத்தித் தருவது, புதுப்புது நூல்களை வாங்கிச் சேர்ப்பது, அறிஞர்களை வரவேற்று, நூலகச் சிறப்புகளை எடுத்துரைத்து விருந்தோம்பி, வழியனுப்புவது, இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது, மாணவ, மாணவியர்கள் நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில்  அவர்களுக்கு உரிய வழிகளைக் காண்பது என்று முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். 

முத்தமிழ்ப் படிப்பகம் 14.04.1958 ஆம் ஆண்டு, இரயில்வே பட்டறையில் பணியாற்றிய 19 தமிழார்வலர்களால் கீற்றுக் கொட்டகையில் தொடங்கப்பட்டது என்று அறிந்தேன். மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவராக விளங்கிய திருவாளர் மா. சொக்கலிங்கம் அவர்கள்தான் “முத்தமிழ்ப் படிப்பகம்” என்ற பெயரைச் சூட்டினார் என்றும் அறிந்தேன். 

முத்தமிழ்ப் படிப்பகத்தின் நோக்கங்கள்: 

1.   மலைநாட்டில்  தமிழ் மொழியின் நிலையை உயர்த்துவதற்கு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்த்தல்

2.   அரசியல் கலப்பில்லாத தமிழ்ச் சங்கங்களுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து பணிசெய்தல்

3.   மலைநாட்டுத் தமிழ் மக்களிடையே தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குப் பரப்புரை செய்தல்

4.   நன்கொடையாக நிதியையும் நூல்களையும் வழங்கும்படி உறுப்பினர்களையும் நலன் விரும்பிகளையும் ஊக்குவித்தல்

5.   படிப்பகத்தில் நூல்களைப் படிப்பதற்கும் இரவல் பெற்றுச் சென்று வாசிப்பதற்கும் உறுப்பினர்களையும் நலன் விரும்பிகளையும் ஊக்குவித்தல்

6.   கூட்டங்கள், கொண்டாட்டங்கள், போட்டிகள், சொல்லாடல்கள், விழாக்கள், காட்சிகள், நாடகங்கள் முதலியவற்றை நடத்துதல்

7.   மேற்கண்ட நோக்கங்களைச் செயலாக்க, நடைமுறையில் உள்ள அரசாங்க விதிகளுக்கேற்ப மாத, வார, தினசரி அச்சுத் தாள்களைத் தயாரித்து வெளியிடுவதுடன், துண்டுப் பிரசுரங்களையும் உறுப்பினர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகித்தல்

 


முத்தமிழ்ப் படிப்பகம் என்ற பெயரில் 20.03.1959 இல் இப்படிப்பகம் பதிவுசெய்யப்பட்டது. 1960 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி, தைப்பூசம் போன்ற நாட்களில் உண்டியல் ஏந்தி காசு, திரட்டிப் படிப்பகத்தைப் படிப்படியாகத் தமிழார்வலர்கள் வளர்த்தெடுத்தனர். இசைக்கச்சேரிகள், இலக்கிய நிகழ்வுகள் நடத்தியும், திரைப்படங்களை வெளியிட்டும் காசு திரட்டினர். தன்னலம் கருதாமல் தமிழ்நலம் கருதி உழைத்த, அப்பெருமக்கள் யாவரும் நம் நன்றிக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள். 27.06.1971 இல் முத்தமிழ்ப் படிப்பகம் 65, ஜாலான் செந்தூல் என்ற முகவரிக்கு இடம் மாறியது. இந்தக் கட்டடத்தின் உரிமையாளரான சீனர் ஒருவர் இந்தக் கட்டடத்தை 48, 250 ம.ரி. விற்க முன்வந்தார். இதனைப் பயன்படுத்திப் படிப்பகத்தின் அறங்காவலர்களும் பொறுப்பாளர்களும் பல வழிகளில் முயன்று படிப்பகத்திற்காக இக்கட்டடத்தை வாங்கியுதவினர். ஒவ்வொரு ஆண்டும் படிப்பகத்தின் பொறுப்பாளர்கள் கூடி, பொதுக்குழுவைக் கூட்டுவதையும், புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதையும் வழக்கமாகச் செய்து, படிப்பகத்தை நல்ல நிலையில் நிர்வாகம் செய்துவருகின்றனர். படிப்பகத்தின் சார்பில் மாமாங்க மலர், வெள்ளி விழா மலர், மணிவிழா மலர் முதலியன வெளியிடப்பட்டுள்ளன. முத்தமிழ் என்னும் பெயரில் செய்தி மலரும் வெளியிடப்பட்டுள்ளது. முத்தமிழ்க் கதிர் என்னும் பெயரில்  காலாண்டுச் செய்தி இதழ் ஒன்றும் வெளிவருகின்றது.

 

நூல் பேழைகளின் அருகில் மு.இளங்கோவன்


மு.இளங்கோவனை வரவேற்கும் தலைவர் பெ. இராமன், 
அருகில் ஆசான் மன்னர் மன்னன்


முத்தமிழ்ப் படிப்பகம் நூலகமாகச் செயல்படுவதுடன் மாணவர்களுக்குக் கல்விக்கூடமாகவும் செயல்படுகின்றது. மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்குக் கணினிக் கல்வியை இலவசமாக வழங்குவதற்கு உரிய வசதிகளும் இப்படிப்பகத்தில் உள்ளது. 

முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு மலேசியாவுக்கான இந்தியத் தூதர்களும், இலங்கைத் தூதர்களும் வருகைபுரிந்துள்ளனர். அவர்களால் இயன்ற பங்களிப்புகளை இந்தப் படிப்பக வளர்ச்சிக்கு வழங்கியுள்ளனர் என்பதை அறிந்தபொழுது மகிழ்ச்சி ஏற்பட்டது. அதுபோல் மலேசியாவின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், தமிழறிஞர்கள் வருகைபுரிந்து, முத்தமிழ்ப் படிப்பகத்துக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து செல்லும் தமிழறிஞர்கள் பலரும் முத்தமிழ்ப் படிப்பகத்தின் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டியுள்ளனர். அவ்வகையில் சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம், உவமைக்கவிஞர் சுரதா, பாவலரேறு பெருஞ்சித்திரனார்(09.05.1974), முனைவர் தமிழண்ணல், முனைவர் மு. தமிழ்க்குடிமகன், முனைவர் கு. ஞானசம்பந்தன், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், இரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், தீபம் பார்த்தசாரதி, மருத்துவர் இரா. கலைக்கோவன், எம்.எஸ். உதயமூர்த்தி, முதலானவர்கள் வருகைபுரிந்த பெருமை இம் முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு உண்டு.

 பாவலரேறு பெருஞ்சித்திரனார் கையொப்பம்


உவமைக் கவிஞர் சுரதா கையொப்பம்

முத்தமிழ்ப் படிப்பகத்தில் சற்றொப்ப இருபத்தைந்தாயிரம் நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றுள் தமிழ் நூல்கள் 22519 எனவும், 2013 நூல்கள் ஆங்கில நூல்கள் எனவும், 1055 மலாய் நூல்கள் எனவும் புள்ளிவிவரங்கள் உள்ளன. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அச்சான நூல்களுடன் தமிழகத்தின் புகழ்பெற்ற பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் வெளியிட்ட நூல்களும் இங்கு உள்ளன. நான் எழுதிய சில நூல்களையும் அன்பளிப்பாக நூலகத்துக்கு வழங்கினேன்.  இரா. சண்முகம் குறித்த அரிய நூல்கள், விளக்கங்கள் சிலவற்றை இப் படிப்பகத்தில் படித்துப் பயன்கொண்டேன். தேவையான குறிப்புகளைப் படமாக்கிக்கொண்டேன். இந்த நூலகத்தின் நினைவுகளைச் சுமந்துகொண்டு பெட்டாலிங்கு செயாவில் மாலையில் நடைபெறும் அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமானேன்….

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு – 2025


  


 தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து பன்னாட்டு இசைத்தமிழ் மாநாட்டினை 2025 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 26 ஆம் நாள் முதல் 31 ஆம் நாள் வரை நடத்துகின்றன. இசைவிழா, ஆய்வரங்கம், பயிலரங்கம், நூல்கள் வெளியீடு, இசைக்கருவிகள் வழங்கல் என்னும் அமைப்பில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

 தமிழிசைக் காவலராக விளங்கிய அண்ணாமலை அரசரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அவர்களின் தமிழிசைப் பணிகளை நினைவில் ஏந்தி, இந்த இசைத்தமிழ் மாநாடு நடைபெறுவது தமிழிசைத் துறைக்கு மிகப்பெரிய ஆக்கமாகும். தமிழிசை ஆர்வலர்கள், ஆய்வறிஞர்கள், மாணவர்கள் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியும், மாநாட்டில் பங்கேற்றும் சிறப்பிக்கலாம். 

ஆய்வுக்கட்டுரைகள் அளிக்க இறுதிநாள்: 15.06.2025 

பேராளர்களின் வசதிகளுக்கு ஏற்பாகப் பேராளர் கட்டணமும் உண்டு. 

 இசைத்தமிழ் மாநாடு குறித்து அறியவும், விளக்கம் பெறவும் விரும்புவோர் கீழ்வரும் தொடர்பு எண்களில் தொடர்புகொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். 

முனைவர் நா. கிரிஷ்குமார் +91 98941 95962

முனைவர் கி. சிவகௌரி +91 99941 88964

திரு. கி. அறவாழி +65 86260944

முனைவர் இரா. கா. குமார் +91 9443651216

முனைவர் ந. வெங்கடேசன் +91 9442190730 

மின்னஞ்சல்: [email protected] 

இணையம்: https://www.thamizhisai.net/

தொல்காப்பிய மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் வெ. முருகன்


முனைவர் வெமுருகன் 

[முனைவர் வெ. முருகன் தருமபுரி மாவட்டம் கூச்சனூர் ஊரினர்; ஆங்கிலப் பேராசிரியர்; தொல்காப்பியம், கலித்தொகை முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழக நிறுவனத்திற்காக ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதியினைத் தொகுத்தவர். பேராசிரியர் வை. சச்சிதானந்தம் அவர்களின் வழியாக ஒப்பிலக்கிய ஆய்வுகள், அகராதிப் பணிகள், மொழிபெயர்ப்புத் துறைகளின் திசைகளை அறிந்தவர். செம்மொழி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழக அகராதிப் பணிகளில் பணியாற்றியவர்] 

சில திங்களுக்கு முன்னர்(25.03.2025) அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற அகராதி நாள் விழாவில் கலந்துகொண்டு அறிஞர்களின் உரைகளைச் செவிமடுக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தது. பேராசிரியர் . அருளி ஐயாவின் உரையும் அறிஞர் வெ. முருகன் அவர்களின் உரையும் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்தது.  முன்னவர் உரை தனித்தமிழின் சிறப்புரைக்கும் வகையில் செழித்திருந்தது. அடுத்து அமைந்த அறிஞர் வெ.முருகன் அவர்களின் உரை தமிழ் அகராதிகளின் நிலைகளை எடுத்துரைப்பனவாகவும், ஆக்சுபோர்டு நிறுவனத்திற்காகத் தாம் உருவாக்கிய அகராதிகளின் சிறப்புகளை எடுத்துரைப்பனவாகவும் இருந்தன. 

அறிஞர் வெ. முருகன் அவர்களை இலண்டன், இலிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரை நிகழ்த்தியபொழுதே நேரில்கேட்டுச் சுவைத்தவன். அவர் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ள பெரும்பணியை முன்னரே அறிந்து, அந்த மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழ் தெரியாத என் பிறமொழி நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 

இலங்கையில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் தொல்காப்பியத்தைப் பலவகை ஆராய்ச்சி நுட்பங்களுடன் பதிப்பித்தும், படிப்பித்தும் உயர்பணிகளைச் செய்திருந்தாலும் அவர்கள் தம்முடன் வாழும் சிங்களமொழி அறிஞர்களுக்குத் தொல்காப்பியத்தைச் சிங்களத்தில் பெயர்த்து அறிமுகம் செய்திருக்கலாம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. யான் அறிந்தவகையில் தொல்காப்பியம் சிங்களமொழிக்கு அறிமுகம் ஆகவில்லை என்று உணர்ந்தேன்(அறிந்தோர் அறிவிப்பின் ஏற்பேன்). அதனால் என் நண்பர் தம்மிக விக்கிரமசிங்கே அவர்களுக்கு முனைவர் வெ.முருகனின் மொழிபெயர்ப்பில் அமைந்த தொல்காப்பியம் நூலொன்றை (ஆசியவியல் நிறுவனம் வெளியீடு) வாங்கிச் சென்று கொடுத்து, எம் மொழியின் இலக்கண அமைப்பைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்து மக்களுக்கு அறிமுகம் செய்யுங்கள் என்று பலவாண்டுகளுக்கு முன்னர் கொடுத்துவந்தேன். அந்த வகையில் தொல்காப்பியத்துக்கு மொழிபெயர்ப்புப் பெரும்பணி செய்த பேராசிரியர் வெ. முருகன் அவர்களின் மீது தனிப்பட்ட அன்பும் மதிப்பும் எனக்கு உண்டு. 

பேராசிரியர் வி. முருகன் அவர்கள் ஆங்கில இலக்கியம் பயின்ற அறிஞர் ஆவார். தமிழ் அறிஞர்களுடன் தொடக்கம் முதல் நல்ல தொடர்பில் இருப்பவர். தம் ஆங்கில அறிவின் துணையைக்கொண்டு, தமிழுக்கு உயர்ந்த தொண்டாற்ற வேண்டும் என்று தம்மை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டு உழைப்பவர். தமிழின் சிறப்பும், தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட செவ்வியல் நூல்களின் சிறப்பும் இன்னும் உலகத்தார் ஏற்கும் வகையில் கொண்டுசேர்க்கப்படவில்லை என்பது அறிஞர் வெ. முருகனின் எண்ணமாக உள்ளது. அதற்குத் தகுந்த பணிகளைச் செய்துவரும் வெ. முருகன் அவர்களின் பணிகளுள் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தமை, கலித்தொகையை ஆங்கிலத்தில் பெயர்த்தமை, தமிழுக்கு ஆக்சுபோர்டு நிறுவனம் வழியாக அகராதியை வெளியிட்டமை இவரின் வாழ்நாள் சாதனைப் பணிகளாகும். 

கொள்கைத் தெளிவும் குறிக்கோள் நோக்கும் கொண்டு தமிழுக்கு ஆக்கமான பணிகளைத் தொடர்ந்து செய்துவரும் வெ. முருகன் அவர்களின் தமிழ்ப்பணிகளையும் வாழ்வியலையும் சுருக்கமாக எடுத்துரைப்பதில் மகிழ்கின்றேன். இவர் போலும் தன்னலங் கருதாமல் தமிழ்நலம் கருதி உழைக்கும் அறிஞர் பெருமக்களை உலகத் தமிழர்கள் உச்சிமேல்வைத்துப் போற்றுவது முதன்மைக் கடமையாகும். 

வெ. முருகனின் தமிழ் வாழ்க்கை 

பேராசிரியர் வெ. முருகன் அவர்கள் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கூச்சனூர் என்னும் ஊரில் 05.06.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் வெள்ளையன், குப்பம்மாள் ஆகும். தம் ஊருக்கு அருகில் உள்ள வேப்பம்பட்டி என்னும் ஊரில் அமைந்திருந்த அரசு இடைநிலைப் பள்ளியில் இடைநிலை வகுப்பினையும் அதனையடுத்து உயர்நிலைக் கல்வியை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றவர். திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் புகுமுக வகுப்பினை நிறைவுசெய்த(1968) வெ.முருகன் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள வளனார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயில நினைத்தவர். ஆனால் அங்குப் பயில்வதற்கு இடம் கிடைக்காத காரணத்தால் தருமபுரி அரசு கல்லூரியில் இளம் அறிவியல் – கணக்குப் பாடத்தினை எடுத்துப் பயின்றவர்(1968-1971). 1971 முதல் 1973 ஆம் ஆண்டு வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  பேராசிரியர் சுந்தரராசன் தலைமையில் இயங்கிய ஆங்கிலத்துறையில் முதுகலையைப் பயின்று, பட்டம் பெற்றவர். 

தம் முதுகலைப் படிப்பிற்குப் பிறகு 1973 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அரசு கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியில் இணைந்தவர். அதனை அடுத்து விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி, குடியேற்றம் திருமகள் கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி முதலான கல்லூரிகளில் பணியாற்றியவர். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர் பணியைத் தொடங்கித், துறைத்தலைவர் வரை  உயர்ந்து 2009 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றவர். 

பேராசிரியர் வெ. முருகன் தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ளும் நோக்கிலும் ஆராய்ச்சித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வியல் நிறைஞர் வகுப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைந்து, ஒப்பிலக்கிய அறிஞர் சச்சிதானந்தன் அவர்களின்  மேற்பார்வையில் ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்டவர்(1976-1977). அறிஞர் வை. சச்சிதானந்தனின் நெறிகாட்டல் ஆய்வுப்பட்டத்துக்கு மட்டும் என்று அமையாமல் வாழ்நாள் முழுமைக்கும் அமைந்துவிட்டது. ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைபுலமை பெறுவதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகப் படிப்பு மிகுந்த உதவியாக இருந்தது. அறிஞர் தமிழண்ணல், அறிஞர் மு.சண்முகம் பிள்ளை போன்றவர்களின் நெறிகாட்டலும் நட்பும் இவரைத் தமிழின் பக்கம் திருப்பியது. பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

பேராசிரியர் வெ. முருகன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தினார் (அறிஞர் அன்னி தாமசு அவர்களும் பேராசிரியர் பிரபாகர ரெட்டி அவர்களும் இவ்வாய்வில் துணைநின்ற அறிஞர்கள் ஆவர்). 

வெ.முருகன் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றிருந்தும், தமிழ் இலக்கியங்களின் அறிமுகம் நன்கு அமைந்திருந்தும் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களை மொழிபெயர்க்க வேண்டுமெனில் இருபதாம் நூற்றாண்டு மொழியியல் செய்திகள் அறிமுகம் ஆகியிருத்தல் வேண்டும் என்ற தெளிவுடன் ஐதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகள் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ், பட்டய வகுப்புகளில் இணைந்து மொழியியல் செய்திகளைக் கற்று, உண்மைகளை அறிந்தவர். சங்க இலக்கியப் பின்புலம் இல்லாமல் தொல்காப்பியத்தை முழுமையாக அறிந்துகொள்ள இயலாது என்று சங்க இலக்கியங்களையும் பிற தமிழ் இலக்கியங்களையும் உரையின்றிப் படித்து நிறைபுலமை பெற்றவர். அதன் பிறகு ஈராண்டுகளுக்கும் மேல் முழுமையாக உழைத்து, தொல்காப்பியத்தை மொழிபெயர்த்து ஆசியவியல் நிறுவனம் சார்பில் வெளியிட்டவர். பின்னர் இந்த நூல் செம்மையாக்கம் செய்யப்பெற்று செம்மொழி நிறுவனத்தின் வழியாகவும் வெளிவந்துள்ளது அதுபோல் செம்மொழி நிறுவனத்தின் வாயிலாக இவரின் கலித்தொகை மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது. 


வெ. முருகன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்து அகராதியின் விரிவாக்கப் பதிப்பிலும் பணிபுரிந்தவர். இதுவரை இவர் மொழிபெயர்ப்பிலும் ஆசிரியத் தன்மையிலும் 34 நூல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வரைந்துள்ளார். இவர் மேற்பார்வையில் எண்மர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவி பெற்று ஆராய்ச்சிப் பணிகளை நிறைவுசெய்து அளித்துள்ளார். ஆசியவியல் நிறுவனத்திலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலும் சிறப்பு நிலை அறிஞராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இவர்தம் மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டி இரண்டு முறை விருதளித்துப் பாராட்டியுள்ளது. 

பேராசிரியர் வெ. முருகன் அவர்கள் 1976 ஆம் ஆண்டு தேன்மொழி அவர்களை இல்லறத் துணையாக ஏற்றவர். இவர்களுக்கு முல்லை, பாரி என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இவர்கள் உயர்கல்வி பெற்று அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். 

மொழிபெயர்ப்புப் பணியிலும் அகராதிப் பணியிலும் ஆராய்ச்சிப் பணியிலும் ஈடுபட்டுத் தமிழுக்கு அல்லும் பகலும் அயராது உழைத்துவரும் பேராசிரியர் வெ. முருகன் என்னும் இப் பெருமகனாரைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டுதல் தலைக்கடனாகும். 




பேராசிரியர் வெ. முருகன் அவர்களின் அறிவுக்கொடை 

Books Published 

1. Oxford English – English – Tamil Dictionary. (1650 pages), New Delhi: Oxford

University Press, 2009. 

2. Oxford Compact English – English – Tamil Dictionary. (1000 pages), New

Delhi: Oxford University Press, 2015.

3. Oxford Mini English – Tamil Dictionary. (654 pages), New Delhi: Oxford

University Press, 2021. 

4. Oxford Dictionary of the Tamil Language (Tamil-Tamil-English). New Delhi:

Oxford University Press (under compilation) 

5. Applied Linguistic Readings of Tolkāppiyam. Central Institute of Classical

Tamil, 2023 

6. A Dictionary of Tamil Literary and Critical Terms (Tamil – English)

(6000 words). Chennai: Institute of Asian Studies, 1999. 

7. Pals Tamil e-Dictionary (Tamil – Tamil – English) (49000 words) Chennai:

Palaniappa Brothers, 2004. 

8. Pals Tamil – Tamil – English Dictionary, Chennai: Palaniappa Brothers, 2009.

9. Lexicographic Practice in Tamil: Problems and Prospects (dictionary

criticism) (370 pages) Chennai: Institute of Asian Studies, 2006. 

10. Tolkappiyam in English (with complete text, transliteration, illustrative notes

and glossary) (711 pages). Chennai: Institute of Asian Studies, 2000. 

11. Kalittokai in English (with critical introduction, text, transliteration, notes and

glossary) (738 pages), Chennai: Institute of Asian Studies, 1999. 

12. Tirukkural in English, Chennai: New Century Book House, Third Edition, 2015.

13. Narrinai in English (Editor and prose translator) (1970 pages). Chennai: Central

Institute of Classical Tamil, 2011. 

14. Paripatal in English, (prose translation), Chennai: Central Institute of Classical

Tamil 2022. 

15. Kulothungan's Journey of Man (Maanuda Yaathirai in English), Chennai: New

Century Book House, 2013. 

16. Shower of Poetry (Selected Poems of Kalaignar M. Karunanidhi) Coimbatore:

Bharathiar University, 2009. 

17. Selected Poems of Bharathidasan (in English) (310 pages) Chennai:

International Institute of Tamil Studies, 1994.

18. An Unending Ascent (Selected Poems of Kulothungan (V.C. Kulandaiswamy) in

English, for VCK Educational and Research Foundation). Chennai: Pavai

Publications, 2002. 

19. The Wandering Voice (Translation of Three Tamil ballads into English) Chennai: Institute of Asian Studies, 1988.Best Translation Award winner. 

20. The Art of Drumming (Translation of a musical treatise into English) Chennai:

Institute of Asian Studies, 1989. 

21. The Dateless Muse (Translation of Tamil ballads into English) Chennai: Institute of Asian Studies, 1989. Best Translation Award winner. 

22. The Unsung Melodies (Translation of Tamil ballads into English) Chennai:

Institute of Asian Studies, 1990. 

23. Contribution to Subramania Bharati (English Translation). Vols I & II. Vol.I

2016; Vol II 2017. New Delhi: Sahitya Akademi. 

24. English Grammar Just for you (with grammatical concepts and rules translated

into Tamil for the benefit of learners in Tamil medium institutions). Trans: V.Murugan, New Delhi: Oxford University Press, 2015 

Editorial Work

 

1. Editor, Narrinai in English, Central Institute of Classical Tamil, Chennai, 2011. 

2. Editor, Tolkappiyam in English, Central Institute of Classical Tamil, Chennai.

2021 

3. Editor Kalittokai in English. Central Institute of Classical Tamil, 2023 

4. Editor. Rev. G.U.Pope : Thirukkural in English (along with a non metrical verse

translation, transliteration and introduction) (850 pages). Chennai: Institute of

Asian Studies, 2018. 

5. Co-editor. Kalaignar Karunanidhi in English Translation. 12 volumes.

Bharathiar University, Coimbatore 2009. 

6. Editor, Siddha Medicine, Vols I to VII. Chennai : Tamil Valarchi Kazhagam,

2010-16. 

7. Associate Editor, The Encyclopaedia of Tamil Literature. Vol. I. Chennai:

Institute of Asian Studies, 1990 

8. Associate Editor, Journal of Asian Studies (from 1986 to 1989) Chennai:

Institute of Asian Studies. 

9. Associate Editor, Papers on Tamil Studies, Chennai: International Institute of

Tamil Studies, 1981.


*** குறிப்பு: இக் கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

திருவாசக உரையாசிரியர் மு. சன்னாசி

 

புலவர் மு. சன்னாசி 

[புலவர் மு.சன்னாசி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பிறந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். தமிழாசிரியராக முப்பத்தேழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். திருவாசகம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட நூல்களுக்கு உரை வரைந்தவர். சமய இலக்கியங்களிலும் இலக்கணத்திலும் பெரும் புலமைகொண்டவர்] 

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி எண்ணற்ற தமிழறிஞர்களை உருவாக்கிய கல்விச் சாலையாகும். இந்நிறுவனத்தில் பணியாற்றியவர்களும், பயின்றவர்களும் தமிழுக்கு ஆற்றிய பணிகள் தனித்து ஆராயத்தக்கவையாகும். கே.எம். வேங்கடராமையா, தமிழ்நூற்கடல் தி.வை.கோபாலையர் முனைவர் கு. சுந்தரமூர்த்தி, தா.ம.வெள்ளைவாரணம், மு.சுந்தரேசம் பிள்ளை, ம.வே.பசுபதி, ச. திருஞானசம்பந்தம் உள்ளிட்ட பேராசிரியர்களும் இவர்களிடம் பயின்ற பலநூறு மாணவர்களும் பல்வேறு நிலைகளில் தமிழ்த்தொண்டாற்றியுள்ளனர். அவ்வகையில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவரும் திருவாசகம் நூலுக்கும், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலுக்கும் உரை வரைந்தவருமான புலவர் மு.சன்னாசி அவர்களின் தொடர்பு அண்மையில் எனக்குக் கிடைத்தமை என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பேறு எனலாம். 

அண்மையில் தினமணி நாளேட்டின் இணைப்பு வெளியீடான தினமணிக் கதிரில் என் பணிகளை அறிமுகம் செய்து, எழுத்தாளர் அருள்செல்வன் அவர்கள் அரியதொரு கட்டுரை வரைந்திருந்தார்(11.05.2025). அக்கட்டுரை தமிழகத்தில் உள்ள அறிஞர்கள் பலரின் பார்வைக்குச் சென்றது. அதனைக் கண்ணுற்ற பெருமக்கள் என் தொடர்பு எண்ணைப் பெற்று என் முயற்சியைப் பாராட்டி, ஊக்கப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை வித்துவான் வகுப்பில் பயின்றவரும் மதுரையை அடுத்துள்ள சமயநல்லூரில் வாழ்ந்துவருபவருமான புலவர் பெருந்தகை மு. சன்னாசி ஐயா என்னுடன் தொடர்புகொண்டு, உரையாடி, தம் கல்வி பயின்ற காலத்துப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். தம் படிப்புக் காலத்து நினைவுகளையும், தம் தமிழ்ப்பணிகளையும், தமிழ் இலக்கியங்களில் தமக்கிருக்கும் புலமையையும் என்னுடன் உரையாடியபொழுது உணர்த்தினார்கள். திருவாசகத்திலும் சமய நூல்களிலும் மிகப்பெரும் புலமை பெற்ற அப்பெருமகனார் போலும் தமிழ்ச்சுரங்கங்கள் பலர் நம் பார்வைக்கு வராமல் உள்ளனர். புலவர் மு. சன்னாசி அவர்களின் தமிழ் வாழ்க்கையையும் தமிழ்ப் பணிகளையும் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்கின்றேன். 

புலவர் மு. சன்னாசி அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

மு. சன்னாசி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் 15.12.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் முத்திருளன் - பேச்சியம்மாள் என்பதாகும். புலவருடன் உடன் பிறந்தவர்கள் ஐந்து ஆண்கள், ஒரு பெண் ஆவர். மு. சன்னாசி அவர்கள் ஆத்தூரில் இருந்த மாவட்டக் கழகத் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையும், கழக உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 11 ஆம் வகுப்பு வரையும் பயின்றவர். 

ஆத்தூரில் பள்ளியிறுதி வகுப்பு நிறைவுற்றதும் 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் பயின்று பட்டம் பெற்றவர். 1971 முதல் 1972 வரை(ஆறு திங்கள்) குமாரபாளையம் அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பயிற்சி பெற்றவர். அப்பொழுது குமாரபாளையம் கல்லூரியை வழிநடத்திய முதல்வர் பெருந்தகை சந்தானம் என்னும் பேராசிரியர் ஆவார். தமிழ்த்துறையில் சற்குணபாண்டியனாரும் தாணுமாலையபெருமாள் அவர்களும் ஆசிரியர்களாக அருந்தமிழ்ப் பணியாற்றினர். 

மு. சன்னாசி அவர்கள் 1972 ஆம் ஆண்டு சூலைத் திங்களில்  தேனி மாவட்டம், இராயப்பன்பட்டி, சவரியப்ப உடையார் நினைவு மேனிலைப் பள்ளியில்  தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கியவர். முப்பத்தேழு ஆண்டுகள் பணியனுபவம் கொண்ட புலவர் மு. சன்னாசி அவர்கள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய பட்டறிவுகொண்டவர். 2009 மே மாதம் பணி நிறைவு பெற்றவர். தம் பணிக்காலத்தின் இடையில் 1978 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலைப் பட்டம் பெற்றவர். 1979 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக எம்.எட். பட்டமும் பெற்றவர். ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினை 1990 இல் பெற்றவர். ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு இவர் தேர்ந்த தலைப்பு “திருவாசகத்தில் வாய்மொழி இலக்கியத்தின் தாக்கம்” என்னும் தலைப்பாகும். 

    பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் பயிற்றுவிப்பதில் தன்னிகரற்று விளங்கிய புலவர் மு. சன்னாசி அவர்கள் மேடைப்பேச்சிலும் வல்லவர் ஆவார். அறிவாராய்ச்சியாக நடைபெற்ற அக்காலத்துப் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, முனைவர் மு. தமிழ்க்குடிமகன், முனைவர் சோ. சத்தியசீலன், பேராசிரியர் இராதாகிருட்டினன் (தேசியக்கல்லூரி) முதலானவர்களின் தலைமையில் உரையாற்றிய பெருமைக்குரியவர். தமிழ்ச்சமயம் சார்ந்து பொழிவாற்றுவதில் நிகரற்றவர்.  பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் இலக்கணத்தையும், அடிப்படை மொழியியலையும் ஆர்வமுடன் பயிற்றுவித்து வருபவர். 

மதுரையில் அமைந்துள்ள நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெறும் செந்தமிழ்க் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் இவருக்குத் "தமிழ்த்தென்றல்" என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர். திரு மகேந்திரபாபு அவர்களின் துணையுடன் பைந்தமிழ்த் தொலைக்காட்சியில் சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் குறித்த உரைகளைப் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார். அவ்வகையில் சிலப்பதிகாரம் முப்பது காதைகளுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளன. உ. வே. சா. வின் என் சரித்திரம் 65 பிரிவுகளில் பிரித்துப் பாடமாக வலையொளியில் தரப்பட்டுள்ளது. 

இல்லற வாழ்க்கை 

மு. சன்னாசி அவர்கள் 23.05.1977 இல் தம் இல்லறவாழ்வின் துணைவியாகத் திருவாட்டி மங்கையர்க்கரசி அவர்களை ஏற்று,  மூன்று மக்கள் செல்வங்களைப் பெற்றவர். அவர்கள்: 1. ச.அருள்முருகன், 2. ச.சிவபாரதி 3. ச. மாணிக்கவாசகம் ஆவர். 

மு.சன்னாசி அவர்களின் தமிழ்க்கொடை: 

1.   பொற்றாமரையும் திருவாசகமும் – 2021

2.   திருவாசகத்தில் வாழ்வியல் ஆலோசனைகள் - 2019

3.   மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் – உரையாசிரியர் - 2021

4. அருள்மிகு திருக்காளத்தீசுவரர் ஞானாம்பிகை திருக்கோவில் – திருத்தல வரலாறு – 2005

5.   திருக்கழுகுமலைச் சிவபெருமான் இரட்டை மணிமாலை உரை – 2023

6.   கழுகுமலைப் பதிகம் உரை – 2023

7.   2022 முதல் 2025 வரை தொடர்ந்து மீனாட்சியம்மை – சொக்கநாதர் திருமணத்தை முன்னிட்டு, திருமுறைப் பாடல் தொகுப்பு நூல் புலவர் மு.சன்னாசி உரையுடன் திருக்கோவில் சார்பில் வெளிவருகின்றது. 

புலவர் மு. சன்னாசி அவர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், மொழிவளர்சிக்கும் தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும் என்பதும் தமிழ் இலக்கியங்களை மக்கள் மனங்களில் பதிவுசெய்தல் வேண்டும் என்பதும் நம் எதிர்பார்ப்பாகும். புலவர் பெருந்தகை மு.சன்னாசி ஐயா நீடு வாழி என வாழ்த்துகின்றேன்.





 

டைம்சு ஆப் இந்தியா (TIMES OF INDIA) நாளேட்டில் பாரதிதாசன் பரம்பரை குறித்த கட்டுரை

           




       பாரதிதாசன் பரம்பரை என்னும் தலைப்பில் என் முனைவர் பட்ட ஆய்வு நிறைவுற்றுச் சற்றொப்ப முப்பதாண்டுகள் ஆகின்றன. அவ்வாய்வின் விளைபயனாகப் பொன்னி என்னும் இலக்கிய இதழினைப் பல முனைகளில் ஆய்வுசெய்து, தமிழுலகுக்கு நினைவூட்டியுள்ளேன். அதன் ஆசிரியர் முருகு. சுப்பிரமணியனாரின் நூற்றாண்டு விழாவாக இந்த ஆண்டு அமைகின்றது. 

    இந்நிலையில் அண்மையில் தமிழ்நாட்டரசு பாவேந்தரின் பிறந்தநாளையொட்டித் தமிழ்மொழி வாரம் அறிவிப்பினை வெளியிட்டுப் பாவேந்தர் பற்றாளர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவேந்தரின் பெருமைகளை நினைவுகூரும் வகையில் இன்றைய(02.05.2025) TIMES OF INDIA நாளேட்டில் திரு. வினோத்குமார் அவர்கள் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் என்னையும் புலவர் செந்தலை ந. கவுதமனாரையும் நேர்கண்டு, அழகிய கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். 

    பாவேந்தர் பாரதிதாசனாரின் சிறப்புகளை நான் மாணவப்பருவத்தில் அறிந்துகொள்ள வாய்ப்பு நல்கிய பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும், என் நெறியாளர் முனைவர் எழில்முதல்வன் அவர்களுக்கும் இன்றைய கட்டுரையாளர் திரு. வினோத்குமார் அவர்களுக்கும் நன்றியன்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள்

 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன்

[பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் மொழியியல் அறிஞர். அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். புதுவைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிப்பதில் பெரும்புலமை கொண்டவர். இதுவரை ஆங்கிலத்திலும் தமிழிலும் 23 நூல்களை எழுதியுள்ளார். அசாம், நாகாலாந்து பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் மொழி குறித்த அகராதியை உருவாக்கியவர்]

 பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் புதுச்சேரியில் வாழ்ந்த சந்தனசாமி – செயமேரி ஆகியோரின் மகனாக  13.07.1948 இல் பிறந்தவர். புதுச்சேரியில் உள்ள பாத்திமா பள்ளியில் தொடக்க, உயர்நிலைக் கல்வி பயின்ற பின், திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரியில் இளம் அறிவியல் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பயின்றவர். அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆசியவியல் மொழியியலும், மொழியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

புதுவை அரசிலும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் கல்வித்துறைப் பணிகளில் ஈடுபட்டு, பணியாற்றியவர். மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (CIIL) ஆய்வு உதவியாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்(1972-1977). நாகாலாந்து, அசாம் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் பேசும் தங்கூல் (Tangkhul) மொழியை ஆராய்ந்து, அம்மக்களின் மொழிக்கு இலக்கணமும், அகராதியும் எழுதியவர். பண்பாட்டுத் தளத்திலும் பல ஆய்வுகளை நிகழ்த்தியவர்.

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, புதுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், புல முதன்மையராகவும், தேர்வுநெறியாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியவர். அயல்நாட்டு மாணவர்களுக்கும் புதுவை அரசுப்பணியில் உள்ள பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அதிகாரிகளுக்கும் தமிழைப் பயிற்றுவிப்பதில் பெரும்புலமை கொண்டவர். 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் பல்வேறு ஆய்வு நிறுவனங்களிலிருந்து நிதிநல்கைகள் பெற்று ஆய்வறிஞராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய சிறப்பிற்குரியவர். அவ்வகையில் செர்மனி நாட்டின் மூனிச்சு நகரில் உள்ள பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தங்கூல், இந்தி, பிரெஞ்சு முதலிய மொழிகளை அறிந்தவர். இவர் மேற்பார்வையில் 11 பேர் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர்; 40 பேர் இளம் முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்தியுள்ளனர். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கலந்துகொண்டு வழங்கியவர்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபத்து மூன்று நூல்களையும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்கள் தொல்காப்பியத்தின் சிறப்புரைக்கும் வகையில் மொழியியல் நோக்கில் தொல்காப்பியம், மொழியியல் நோக்கில் தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வுகள் ஆகிய நூல்களைப் படைத்தளித்துள்ளார். தொல்காப்பியத்தை மொழியியல் நோக்கில் ஆராய்ந்துரைக்கும் பெருந்திறன் பெற்றவர். இவர்தம் தொல்காப்பியப் புலமை, ஆய்வு ஆளுமையைப் போற்றும் வகையில் இன்று(18.04.2025) புதுச்சேரியில் நடைபெறும் விழாவில் இவருக்குத் “தொல்காப்பிய ஆய்வறிஞர்” என்னும் உயரிய விருதளித்துப் போற்றுவதில் உலகத் தொல்காப்பிய மன்றம் பெருமைகொள்கின்றது. 

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன் அவர்களின் இலக்கியக் கொடைகள்:

  1. (2025) Le Tour De Pondy (Pondicherry Tourist Guide book), Author’s Publication.
  2. (2012) Spoken Tamil for Foreigners: A-Team Info Media Publishers, Chennai
  3. (1996) Tangkhul Naga Dictionary: Central Institute of Indian Languages (CIIL), Mysore.
  4. (1988) Language Use in Mass Media: Creative Publishers, New Delhi
  5. (1987) Tangkhul Grammar: CIIL, Mysore
  6. (1986) Seminar on Dialectology (edited): Tamil University, Thanjavur
  7. (1982) Tangkhul Folk Literature: CIIL, Mysore
  8. (1981) Tamil clitics: Dravidian Linguistics Association, Trivandrum
  9. (1980) Tangkhul Phonetic Reader: CIIL, Mysore
  10. (2024) Nenjin Alaikal (நெஞ்சின் அலைகள்), Author’s Publication, Pondicherry.

  11. (2024) Piranjchiyar Aatchiyil puducherry. (பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி), Author’s Publication, Pondicherry.

  12. (2014) Puthucheery maavaTTa TheevaalayangkaL (புதுச்சேரி மாவட்டத் தேவாலயங்கள்), Nanmozhi Pathippakam, Pondicherry

  13. (2009) Mozhiyiyal Nookkil Tolkappia, Sanga Ilakkiya Aayvugal. (மொழியியல் நோக்கில் தொல்காப்பிய, சங்க இலக்கிய ஆய்வுகள்), International Institute of Tamil Studies, Chennai.

  14. (2001) Moliyiyal Nookkil Tolkappiam (Linguistic View on Tolkappiam), (மொழியியல் நோக்கில் தொல்காப்பியம்), Oriental Longmans, Ltd.: Chennai.

  15. (1993) Thagaval thodarpiyal (Mass Communication) (தகவல் தொடர்பியல்), Muthu Patippagam, Villuppuram.

  16. (1993) Moliyiyal Sinthanaikal (A Collection of Articles in Tamil Linguistics): (மொழியியல் சிந்தனைகள்). Maniam Patippagam, Kurichipadi

  17. (1992) Ilakkiya Saaral (a Collection of Articles in Tamil Literature): (இலக்கியச் சாரல்). Manian Patippagam, Kurinchipadi.

  18. (1990) Karaikal - Putucheri Teruppeyar Aayukal (A Study on the Street Names of Pondicherry and Karaikal): (காரைக்கால் புதுச்சேரி தெருப்பெயர் ஆய்வுகள்), Muthu Patippagam, Villupuram

  19. (1989) Vinnai Totum Vilutual (Collection of Free Verse Poems): (விண்ணைத் தொடும் விழுதுகள்). Muthu Patippagam, Villupuram

  20. (1988) Samuga Moliyiyal Agaraati (A Glossary of Tamil Sociolinguistics): (சமூக மொழியியல் அகராதி). Muthu Patippagam,Villupuram

  21. (1987) Iru Moliya Aayvukal (Bilingual Studies in Tamil): (இருமொழிய ஆய்வுகள்), Muthu Patippagam, Villupuram

  22. (1987) Kilai Molikal (Dialectology in Tamil): (கிளை மொழியியல்), Muthu Patippagam, Villupuram

  23. (1986) Moliyiyal Irattai Valakku (Diglossia in Tamil): (மொழியியில் இரட்டை வழக்கு), Manivasagar Patippagam, Madras.

முனைவர் மு. இளங்கோவனின் இணைய ஆற்றுப்படை, தொடரும் தொல்காப்பிய மரபு நூல்கள் வெளியீட்டு விழா! தொல்காப்பிய அறிஞர்களுக்குப் பாராட்டு விழா!

 


நாள்: 18.04.2025, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி - 8.30 மணி 

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்

முன்னிலை: பேராசிரியர் மு.பா. இராமானுசம் I திரு. தூ. சடகோபன் I பாவலர் ஆறு. செல்வம் I I முனைவர் உரு. அசோகன் I  பேராசிரியர் இரா. கோவலன் I

நூல்கள் வெளியீடு: மாண்புமிகு பேரவைத் தலைவர் 

ஏம்பலம் திரு அரங்க. செல்வம்

நூலின் முதல்படி பெறுதல்: திரு. க. குணத்தொகையன் I “தாமரைத்திரு” வில்லியனூர் கி. முனுசாமி I திரு. அ. சக்திகுமார்  I பேராசிரியர் செ. பெரியாண்டி I திரு. மு. அருள்செல்வம் I திரு. செ. திருவாசகம்

விருதுகள் வழங்கி, அருளாசியுரை: 

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்,

இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம்

பாராட்டுப்பெறும் தொல்காப்பிய அறிஞர்கள்

“இலக்கிய மாமணி” அறிஞர் இரா. கலியபெருமாள், தஞ்சாவூர்

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன், புதுச்சேரி

பேராசிரியர் பொ. நா. கமலா, சிவகாசி

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன், சிங்கப்பூர் 

நூல்கள் அறிமுகவுரை

பேராசிரியர் பா. பட்டம்மாள் I மருத்துவர் க. கலைவேந்தன்

நன்றியுரை: பேராசிரியர் வேல். கார்த்திகேயன்

அழைப்பின் மகிழ்வில்

உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி – 605 003

தொடர்புக்கு: +9442029053






தமிழ்ச் செம்மல் புலவர் வே. பதுமனார்

புலவர் வே. பதுமனார் 

[புலவர் வே. பதுமனார் வேலூர் மாவட்டம், குடியேற்றம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் என்ற அமைப்பினை ஏற்படுத்திக் குடியேற்றத்தில் தமிழ்ப்பணியாற்றி வருபவர். வள்ளலார் நெறியைப் பின்பற்றுபவர்; பன்னூலாசிரியர்; சொற்பொழிவாளர். தமிழியக்கம் என்ற அமைப்பின் பொருளாளராகவும் விளங்குபவர்] 

வேலூர் மாவட்டம் குடியேற்றத்தை நினைக்கும்பொழுதெல்லாம்முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்” என்னும் இலக்கிய அமைப்பை நிறுவித் தமிழ்த் தொண்டாற்றிவரும் புலவர் வே. பதுமனார் அவர்கள் என் நினைவில் நிலைபெறுவார்கள். அவ்வமைப்பை நேர்த்தியாக வளர்த்தெடுத்து, ஆண்டுதோறும் அறிஞர் பெருமக்களை அழைத்து ஒரு கிழமை இலக்கியத் திருவிழாவைப் புலவர் வே. பதுமனார் அவர்கள் செம்மாப்புடன் நடத்தி, சீர்த்திபெறுவது வழக்கம். 

நான் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது புலவர் வே. பதுமனார் அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டுமுறை முத்தமிழ்ச் சுவைச்சுற்ற இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு, அவர்களின் அன்பைப் பெற்றுள்ளேன். நாட்டுப்புறப் பாடல்களைத் தரையிசைப் பாடல்கள் என்னும் தலைப்பமைத்து மக்கள் மன்றத்துக்கு அறிமுகம் செய்யும் பேறு புலவர் வே. பதுமனார் அவர்கள் வழியாகக் கிடைத்தது. 

இலக்கிய நிகழ்வுகளில் புலவர் வே. பதுமனார் அவர்களைச் சந்திப்பதோடு அமையாமல் என் அன்பிற்குரிய மாணவர் சுகுமார் இல்லம் செல்லும்பொழுதும் (சுகுமார் அவர்களின் ஊரும் குடியேற்றமாகும்) மறவாமல் வே. பதுமனார் அவர்களைக் காண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். விருந்தோம்பலில் புலவர் கைதேர்ந்தவர். அன்புடன் வரவேற்றுப் போற்றுவார். சிலபொழுது சந்திக்கும் வாய்ப்பு அமையாத நிலையில் தம் மாணவர்களை அனுப்பிக் குடியேற்றத்தில் என்னை வரவேற்று மகிழ்வதையும் புலவர் அவர்கள் பலமுறை செய்துள்ளார்கள். கடந்த கால் நூற்றாண்டுக் காலம் பதுமனாருடன் பழகும் வாய்ப்புப் பெற்றமையை நினைத்து மகிழ்கின்றேன். 

  புலவர் பதுமனாரின் “முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்” இலக்கிய அமைப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் குடியேற்றம் பகுதியில் அரிய தமிழ்ப்பணிகளைச் செய்து வருகின்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய விழாவில் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொண்டு அருமையான இலக்கியப் பொழிவுகளையும் பட்டிமன்றங்களையும் நிகழ்த்துவது உண்டு. பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் பலரும் முத்தமிழ்ச் சுவைச்சுற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளனர். அவ்வகையில் சாலமன் பாப்பையா, அப்துல் ரகுமான், அப்துல் காதர், கு. ஞானசம்பந்தன், நெல்லை கண்ணன் திருவாரூர் சண்முகவடிவேல்  உள்ளிட்ட பெருமக்களின் உரைகளால் குடியேற்றத்தில் தமிழ்ப்பயிரின் விளைச்சல் அதிகம் எனலாம். புலவர் வே. பதுமனாரின் மாணவர்கள் இந்த விழாக்களை மிகச் சிறப்பாக நடத்தித் தம் ஆசிரியருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தருவதைக் கண்ணாரக் கண்டுகளித்துள்ளேன். 

புலவர் வே. பதுமனார் அவர்கள் மிகச் சிறந்த ஆசிரியர் ஆவார். மிகச் சிறந்த சொற்பொழிவாளர்; மிகச் சிறந்த தமிழ்ப்பற்றாளர்; நூலாசிரியர்; தமிழியக்கம் என்னும் அமைப்பின் பொருளாளர்; முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் நிறுவுநர். வள்ளலார் வழியில் வாழ்க்கையை நெறிப்பட அமைத்துக்கொண்டவர். தம் தந்தையார் வழியில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை மிகச் சிறப்பாக நடத்திவருபவர். இத்தகு பெருமைக்குரிய வே. பதுமனார் அவர்களின் சிறப்புகளை இவண் தொகுத்து வழங்குவதில் மகிழ்கின்றேன்.

புலவர் வே. பதுமனாரின் தமிழ் வாழ்க்கை

புலவர் வே. பதுமனார் அவர்கள் 02. 04. 1936 இல் குடியேற்றத்தில் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் சாமி. கு. வேலாயுதம் - இராசம்மாள் என்பனவாகும். வே. பதுமனாரின் இயற்பெயர் வே. பத்மநாபன் என்பதாகும். தொடக்கக் கல்வியைக் குடியேற்றம் நகராட்சி தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியைக் குடியேற்றம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், ஆசிரியர் பயிற்சியை ஆர்க்காடு அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் பயின்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகத் தமிழ் வித்துவான், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாகக் கல்வியியல் இளையர்(B.Ed.) பட்டம் பெற்றவர். 1961 முதல் 1994 வரை  33 ஆண்டுகள் குடியேற்றம் திருவள்ளுவர் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகவும்,  தமிழாசிரியராகவும்,  முதுகலைத் தமிழாசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். பல்லாயிரம் மாணவர்களுக்குப் பாடம் பயிற்றுவித்த பெருமை இவருக்கு உண்டு. 

புலவர் வே. பதுமனார் அவர்கள் ஜெயக்கொடி அம்மையாரை 20.08.1964 இல் மணந்து, இல்லறப் பயனாய்ப் பொற்கொடி (இளநிலைப் பொறியாளர்), பவளக்கொடி(தமிழாசிரியர்), விசுவநாதன் (முதுநிலைப் பொறியாளர், இந்து ஆங்கில நாளேடு) ஆகிய மக்கள் செல்வங்களைப் பெற்று மாண்புற வாழ்ந்துவருகின்றார். 

புலவர் வே. பதுமனார் வகுப்பறைக்குள் பாடம் நடத்துவது மட்டும் தம் பணி என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் மக்கள் மன்றங்களில் உரையாற்றி, தமிழுணர்வு பரப்பிய தகைமிகு செம்மல் ஆவார். சங்கப் பனுவல்கள், திருக்குறள், வள்ளலார் பாடல்கள், பாவேந்தரின் தமிழுணர்வுப் பாடல்களை மக்களிடம் கொண்டுசேர்த்த அறிநெறிச் செம்மல் இவர். வானொலிகளில் இவர்தம் உரைகள் உலகை வலம் வந்துள்ளன. தொலைக்காட்சிகளில் தோன்றிப் பட்டிமன்றங்களைத் தலைமை தாங்கி நடத்திய பாங்கும் இவருக்கு உண்டு. 

விருதுகளும் பெருமைகளும் 

புலவர் வே. பதுமனார் அரசு சார்பிலும் பல்வேறு தகுதிமிகு அமைப்புகள் சார்பிலும் வழங்கப்பெற்ற விருதுகளை ஏற்று, அந்த விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர். அவ்வகையில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பெற்ற தமிழ்ச்செம்மல் விருது(2017), தூய தமிழ்ப் பற்றாளர் விருது(2020) குறிப்பிடத்தகுந்தவை ஆகும். வாணியம்பாடி முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வழங்கப்பெற்ற தமிழ்ப்பணிச் செம்மல் விருது, கவிக்கோ விருது(2022), புதுக்கோட்டை கம்பன் கழகம் வழங்கிய இலக்கிய மாமணி விருது முதலியன குறிப்பிடத்தகுந்த விருதுகளாகும். 

அயலகச் செலவு 

புலவர் வே. பதுமனார் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஏற்றமிகு உரைகளையும் பொழிவுகளையும் வழங்குவதற்குச் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து முதலிய நாடுகளுக்குச் சென்றுவந்தவர். 

தமிழ் மொழிக்கும் இன மேம்பாட்டுக்கும் பயன்படும் வகையில் இவர் பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதித் தமிழ்ப்பணியாற்றியமை போல் பல்வேறு சிறப்பு மலர்களையும் வெளியிட்டுத் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். அவ்வகையில் இவர் உழைப்பில் வள்ளுவர் வழிநடப்போம்(1998), வெட்டுவானம் திரு. வி. க. நூற்றாண்டு விழா மலர்(1999), இந்தியக் குடியரசு பொன்விழா மலர்(2000), திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி பொன்விழா மலர் (2002), வி.ஐ.டி.வேந்தர் விசுவநாதனின் கல்வியின் மேலாண்மை (2007),  குடியேற்றம் வள்ளலார் பள்ளிப் பவளவிழா மலர்(2010), மு. வ. நூற்றாண்டு விழா மலர் (2013), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழா மலர் (2018), கல்விக்கோ கோ. விசுவநாதனின் முத்துவிழாக் கவிமலர் (2018), குடியேற்றம் முத்தமிழ்ச் சுவைச்சுற்றம் அறக்கட்டளை வெள்ளிவிழா மலர் (2022) முதலிய மலர்களை வெளியிட்டுத் தமிழக வரலாற்றின் சில பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. 

வேலூரில் வாழ்ந்துவரும் கல்விக்கோ கோ. விசுவநாதன் ஐயா நிறுவிய தமிழியக்கம் அமைப்பு உலகு தழுவிய அமைப்பு ஆகும். இதன் பொருளாளராக இருந்து, புலவர் வே. பதுமனார் அவர்கள் தம் முதுமைப் பருவத்தும் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார். நூற்றாண்டு விழாவினைக் கண்டு, தமிழன்னைக்குப் புகழ்சேர்க்குமாறு புலவர் பெருந்தகை வே. பதுமனாரைப் போற்றி வணங்குகின்றேன். 











வே. பதுமனார் தமிழ்க்கொடை 

1.   பொன்முடி தமிழ்த்துணைவன் 11 ஆம் வகுப்பு – 1978

2.   பொன்முடி தமிழ்த்துணைவன் 12 ஆம் வகுப்பு – 1980

3.   கட்டுரைத் தீங்கனிகள் – 1984

4.   நடுத்தெரு நாகரிகம் – 1988

5.   வள்ளுவர் வழி நடப்போம் உரைநூல் - 1989

6.   பதுமனார் தமிழ்த்துணைவன் – 1990

7.   அம்பலம் - 1997

8.   கீத தாகம் – 1998

9.   மாசுபடா மாரியம்மன் தாலாட்டுப் பாமாலை - 1998

10. தலைமேடை நாடகம் – 1998

11. வள்ளலார் வழங்கிய நித்திய கருமமும் சத்திய தருமமும் - 2000

12. ஆசிரியர் நேற்று இன்று நாளை - 2001

13. சிறுகதைச் செல்வம் - 2001

14. நாக்கு நாகரிகம் - 2001

15. குடியேற்றம் கரும்புலியீசுவரர் தல வரலாறு - 2004

16. எது ஏது ஏதேது – 2004

17. தமிழ்ச்சிமிழ் கவிதைத்தொகுப்பு - 2007

18. வாரியார் வழங்கிய வளர்தமிழ் - 2007

19. திருக்கோயில் திருநெறி - 2007

20. திருக்குறள் சொற்பொருள் அகராதி - 2013

21. கம்பன் கவியே கவி - 2013

22. இப்படியும் மனிதர்கள் - 2013

23. கல்வியின் மேலாண்மை - 2013

24. வேர்வையின் வெற்றி – 2013

25. வி.ஐ.டி வேந்தர் முத்துவிழா மலர் – 2000

26. சூட்டி மகிழத் தெளிதமிழ்ப் பெயர்கள் – 2014

27. வடமொழி வழக்கு தெளிதமிழ்ச் சொல் அகராதி – 2014

28. வியர்வையின் வெற்றி – 2014

29. சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் – 2019

30. விழித்தால் விடியும் - 2019

31. வந்தவாறு வருமாறு (புலவர் தன் வரலாறு) - 2022

32. சிறகுகள் எங்கும் செந்தமிழ் மகரந்தம் – 2022

33. புறநானூற்று விழுமியங்கள் – 2022

34. அரனார் அருள்வேட்டல் – 2022

35. மணித்தமிழ்க் கட்டுரைகள் – 2024

36. நீதிக் கலங்கரை விளக்கம் - 2024

37. இது இப்படிதான் - 2024

38. கற்றதும் பெற்றதும் – 2025 

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகள், படங்களை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.

முனைவர் சி. இலட்சுமணன்

 

முனைவர் சி. இலட்சுமணன்

 

முனைவர் சிஇலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித் துறை, அரிய கையெழுத்துச் சுவடித்துறை முதலியவற்றில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். களப்பணியில் பல ஓலைச்சுவடிகளைத் தொகுத்து, தமிழ்ப் பல்கைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியவர். நூலாசிரியர்; கட்டுரையாசிரியர்; தமிழ் ஆய்வறிஞர். தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழினை நடத்திவருபவர். பதிப்புப் பணிகளில் ஆழங்கால்பட்ட அறிவுடையவர்.]

 

    புதுவைப் பல்கலைக்கழகத்தில் நான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாகப் பயின்றபொழுது(1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற தலைப்பில் ஆய்வுசெய்யும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது ஆய்வுக்குரிய நூல்களைப் பார்வையிடவும் அறிஞர்களைச் சந்தித்து, தரவுகளைத் தொகுக்கவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் செல்வது வழக்கம். இளையோர்களாகிய எங்களுடன்  அந்நாளில் உரையாடி, எங்களுக்கு வேண்டிய உதவிகளை மகிழ்ச்சியாகச் செய்தவர் சி. இலட்சுமணன் ஆவார். ஓலைச்சுவடித்துறை, அரிய கையெழுத்துச் சுவடித் துறையில் அவர்கள் பணியாற்றிய காலத்தில் பலமுறை சந்தித்து உரையாடிய நினைவுகள் மேலிடுகின்றன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கட்டுரை படிக்கச் செல்லும்பொழுதெல்லாம் அவரைக் கட்டாயம் கண்டு, உரையாடுவது வழக்கம். பலவாண்டுகளுக்கு முன்னர் இவர் ஆய்வுத்துறையில் உழைத்தமை போன்று இன்றும் தொடர்ந்து உழைத்து வருவதை அறிந்து மகிழ்கின்றேன். நாகர்கோவிலில் வாழ்ந்த அறிஞர் சி. சுப்பிரமணியம் ஐயா அவர்களைப் பற்றி அறிவதற்குத் தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தொடர்புகொண்டு, உரையாடிய சுற்றில் மீண்டும் பலவாண்டுகளுக்குப் பிறகு சி. இலட்சுமணன் அவர்களுடன் உரையாடி, அரிய செய்திகளை அடிக்கடிப் பெற்று வருகின்றேன். அவர்தம் தமிழ் வாழ்வினைத் தமிழுலகின் பார்வைக்குக் கொண்டு வருவதில் மகிழ்ன்றேன். 

சி. இலட்சுமணன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

முனைவர் சி. இலட்சுமணன் நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள மதுசூதனபுரம் என்னும் ஊரில் 1953 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் தி. சின்ன நாடார், இல. சுப்பம்மை ஆகும். இவருடன் பிறந்தவர்கள் நால்வர் ஆவர். 

சி. இலட்சுமணன் குளத்துவிளை என்னும் ஊரில் முதல் ஐந்து வகுப்புகள் வரை பயின்றவர். ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை புத்தளம் என்னும் ஊரில் அமைந்துள்ள இலண்டன் மிசனரிகளால் தோற்றுவிக்கப்பட்ட(LMPCH) உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். புகுமுக வகுப்பினை நாகர்கோவில்  இந்துக் கல்லூரியில் (1970-71) பயின்றவர். இளங்கலைப் பட்ட வகுப்பினைப் பொருளாதாரப் பாடத்தினை முதன்மைப் பாடமாக எடுத்து, ஆங்கில வழியில் பயின்றவர். முதுகலைத் தமிழ்ப் பாடத்தினை இந்துக் கல்லூரியில் பயிலும்பொழுது பேராசிரியர் சி. சுப்பிரமணியன் அவர்கள் இவருக்குத் தொல்காப்பியம் கற்பித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக அஞ்சல் வழியில் இளங்கலைக் கல்வியியல் பயின்றவர். 

சி. இலட்சுமணன் தம் முதுகலைக் கல்வியை முடித்தவுடன் மதுரையில் உள்ள இறையியல் கல்லூரியில் பணியாற்றினார். இக்கல்லூரியின் சார்பில் இயங்கிய அச்சகத்தில் பதிப்புப் பணிகளைக் கவனித்து வந்தவர். 1983 இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியம் அவர்கள் பணியாற்றியபொழுது, சி. இலட்சுமணன் தொகுப்பூதியத்தில் அங்குப் பணியில் இணைந்தவர். 1994 முதல் தொழில் நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்தவர். 

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது, திரு புட்பம் கல்லூரியில் இணைந்து பகுதி நேரமாக ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வினைப் “பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி” என்னும் தலைப்பில் செய்து, ஆய்வறிஞரும் பேராசிரியருமான மு. சண்முகம் பிள்ளையின் பன்முகத் தமிழ்ப்பணியினை உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். 

தஞ்சையில் வாழ்ந்த இலக்கண அறிஞரும் கரந்தைக் கல்லூரிப் பேராசிரியருமான ச.பாலசுந்தரம் அவர்களின்  உரைச்சிறப்பினை ஆராயும் முகமாகத் தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பும் உரைகளும் (பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை) என்னும் தலைப்பில் தம் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்து பட்டம் பெற்றவர். இவ்வாய்வில் தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளிலிருந்து பாவலரேறு ச. பாலசுந்தரம் உரை வேறுபடும் திறத்தினை மதிப்பிடுவது ஆய்வாளரின் நோக்கமாக இருந்தது. 

சி. இலட்சுமணன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபொழுது ஓலைச்சுவடித் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களின் வழியாக ஆய்வுப்புலத்தில் நல்ல பயிற்சிபெற்றார். ஓலைச்சுவடிகளைத் தொகுத்தல், பாதுகாத்தல், பதிப்பித்தல் முதலிய பணிகளில் ஆர்வமுடன் செயல்பட்டவர். எட்டாண்டுகள் இப்பணியில் இருந்து, பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து, அரிய ஓலைச்சுவடிகள் பலவற்றைத் தொகுத்து, பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு வழங்கியுள்ளார். 

மு. சண்முகம் பிள்ளை, அடிகளாசிரியர், த.கோ.பரமசிவம் உள்ளிட்ட அறிஞர்களுடன் சி. இலட்சுமணன் பணியாற்றி, ஆய்வு நுட்பங்களை அறிந்துகொண்ட பெருமைக்குரியவர். அவ்வகையில் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகைப் பதிப்புக்குச் சொல்லடைவு தயாரித்தமை, கலியுகப் பெருங்காவியம் என்னும் மூவாயிரம் பாடல்கள் கொண்ட நூலுக்குப் பாடவேறுபாடுகளைக் கண்டுணர்ந்து எழுதியவர். சித்த மருத்துவ வாகட நிகண்டு பணியினையும் செய்துமுடித்தவர். அறிஞர் த.கோ.பரமசிவம் அவர்களின் பணிக்காலத்தில் உருவான சுவடி விளக்க அட்டவணை ஐந்தாம் தொகுதியையும் எழுதி, முடித்தவர். 

தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய பல்வேறு சான்றிதழ் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தியும் தமிழகத்தின் பல ஊர்களில், பல பொருண்மைகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கியும் தம் தமிழ்ப்பணியினைச் செய்தவர். 

சி. இலட்சுமணன் இல்லற வாழ்க்கை 

சி. இலட்சுமணன் அவர்கள் 11.12.1981 ஆம் ஆண்டில் சரசுவதி அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அமுத சுவாமிநாதன், அபிரேகா ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். சி. இலட்சுமணன் அவர்கள் தம் பிறந்த ஊரில் தமிழியல் ஆய்வுகள் பதிவு மையம் என்னும் பெயரில் ஆய்வு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். தமிழ் ஆய்வுலகுக்குப் பெரும் பங்களிப்பு நல்கிய அறிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் வெளியிடுவதை இந்த மையம் சிறப்பாகச் செய்து வருகின்றது. தமிழாய்வுக் களஞ்சியம் என்னும் இதழின் ஆசிரியராக இருந்து, அந்த இதழினைச் சிறப்பாகவும் நடத்திவருகின்றார். 

முனைவர் சி. இலட்சுமணன் தமிழ்நூல் கொடை: 

1.   சுவடி விளக்க அட்டவணை, ஐந்தாம் தொகுதி(தொகுப்பாசிரியர்),1989

2.   வாழ்வியல் சிந்தனை,1995

3.   பேரா.மு. சண்முகம் பிள்ளையின் பதிப்புப் பணி, 2003

4.   தமிழக வரலாற்றறிஞர்கள், 1993

5.   காகிதச்சுவடி ஆய்வுகள், 2000

6.   பதிப்பு நிறுவனங்கள், 2002

7.   சுவடிப் பதிப்பாசிரியர்கள், 2003

8.       பதிப்பியல் நெறிமுறைகள், 2003

9.       ஆய்வுலகு போற்றும் தமிழறிஞர்கள்

10.   வாழ்க்கையின் வெற்றியில் தன்னம்பிக்கை

 

 

மொழியியல் பேராசிரியர் மோ. இசரயேல்

 


பேராசிரியர்  மோ. இசரயேல்
(24.12.1932 - 18.09.2022) 

    [மோ. இசரயேல் மொழியியல் பேராசிரியர் ஆவார். ஒடிசாவின் பழங்குடி மக்களின் மொழியான குவி மொழி குறித்து ஆய்வு செய்து, நூல் எழுதியவர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் முதுமுனைவர் பட்ட ஆய்வு செய்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர்] 

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகில் உள்ள செம்பொன்விளை என்னும் சிற்றூரில் 24.12.1932 பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் மோட்சக்கண் என்பதாகும். மோ. இசரயேல் எட்டாம் வகுப்பு வரை பள்ளியில் முறைப்படி பயின்றவர். தம் முயற்சியின் துணைக்கொண்டு தமிழ் வித்துவான் தேர்வெழுதித் தமிழாசிரியராகத் தம் பணியைத் தொடங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். தம் முனைவர் பட்ட ஆய்வினைப் பேராசிரியர் மு. வரதராசன் அவர்களின் நெறிப்படுத்தலில் 1965 இல் செய்தவர். இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு “Treatment of Morphology in Tolkappiyam” என்பதாகும். 

நாகர்கோவில் இந்துக்கல்லூரி, இசுகாட் கிறித்தவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பிறகு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 1968 இல் பணியில் இணைந்தவர். பின்னர் அப்பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராக உயர்ந்தவர். இங்கிலாந்து, அமெரிக்கா, செர்மனி, உருசியா, பிரான்சு ஆகிய நாடுகளுக்குச் சென்று மொழியியல் சார்ந்த பேரறிவினைப் பெற்றவர். இவர்  இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டி. பர்ரோ அவர்களின் மேற்பார்வையில் தம் முதுமுனைவர் பட்ட ஆய்வினை நிகழ்த்தியவர்(1973-74). அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும், இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். 

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்களின் நெறிப்படுத்தலில் 31 பேர் முனைவர் பட்ட ஆய்வு செய்து, பட்டம் பெற்றுள்ளனர். ஆறு நூல்களையும் 175 ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஒடிசாவின் பழங்குடி மக்கள் பேசும் குவி(Kuvi) என்னும் மொழியை ஆராய்ச்சி செய்து, அம் மொழிக்கு இலக்கணமும் அகராதியும் உருவாக்கியவர். இது இவர்தம் மிகச் சிறந்த அறிவுத்துறைப் பங்களிப்பாகும். இந்த ஆய்வு பின்னாளில் நூல் வடிவம் பெற்றது(1979). இந்த நூலுக்கு இசரயேல் அவர்கள் வரைந்துள்ள முன்னுரையும், பேராசிரியர் டி.பர்ரோ எழுதியுள்ள ஆய்வுரையும் குறிப்பிடத்தக்கன. இந்த நூலைத் தம் நெறியாளரும், பேராசிரியருமாகிய மு.வ. அவர்களுக்குப் படையல் செய்துள்ளமை மோ. இசரயேல் அவர்களின் நன்றியுணர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் தம் பல்கலைக்கழகப் பணியோய்வுக்குப் பிறகு தொடர்ந்து மொழியாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிலும் பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரிப் பாடத்திட்டக் குழுக்களிலும் இணைந்து பங்களிப்பு நல்கியவர். திராவிட மொழியியல் கழகத்திலும் பொறுப்பு ஏற்றுத் திறம்படப் பணியாற்றியவர். என்சைக்கிளோபீடியா ஆப் பிரிட்டானிக்காவிலும் இவர்தம் திராவிட மொழிகள் குறித்த கட்டுரை இடம்பெற்றுள்ளது. சென்னை ஆசியவியல் நிறுவனத்திலும் இவர் ஆட்சிக்குழுவில் இருந்துள்ளார். 

பேராசிரியரும் அவர்தம் துணைவியாரும்(இளமைத் தோற்றம்)

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்கள் கெலன் எமரால்டு அவர்களை 1962 இல் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு அருள் அரசு, அருள் அறம் என்னும் இருவர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் இருவரும் பேராசிரியர்களாக உயர்ந்துள்ளனர். 

பேராசிரியர் மோ. இசரயேல் அவர்களின் தமிழ்க்கொடைகளுள் சில: 

1.   இலக்கண ஆய்வு- பெயர்ச்சொல், சிந்தாமணி வெளியீடு, மதுரை, 1976

2.   இலக்கண ஆய்வு- வினைச்சொல், சிந்தாமணி வெளியீடு, மதுரை, 1976

3.       இடையும் உரியும், சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை, (1977)

4.   A Grammar of THE KUVI LANGUAGE (1979)

 





நன்றி: பேராசிரியர் வி. இரேணுகாதேவி, மதுரை

 

"தொல்காப்பிய விருதாளர்" மும்பை கு. இரெ. சீனிவாசன்

 

மும்பை கு.  இரெ. சீனிவாசன் 

[கு.  இரெ. சீனிவாசன் மும்பையில் வாழும் தமிழ் எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் பிறந்தவர். மும்பையில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியில் இணைந்து, பின்னர் வங்கித் தேர்வெழுதி, எழுத்தராக - மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து ‘‘கனிந்த கனவுகள்என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்]. 

மும்பை மாநகரம் தமிழ் மக்களுக்கு மிகச் சிறந்த வாழ்விடமாக உள்ளதை அண்மையில் மும்பை சென்றிருந்தபொழுது அறிய முடிந்தது. மும்பையில் தமிழர்கள் பன்னெடுங்காலமாகத் தங்கி, பணியாற்றியும் பல்வேறு தொழில்களை நடத்தியும், தமிழமைப்புகள், பள்ளிகள் பலவற்றை உருவாக்கியும் தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். எனினும் தாயகமாம் தமிழகத்துடன் தொடர்பில் இருந்து, நல்லுறவைப்பேணி வருகின்றனர். தமிழறிஞர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பலரைத் தமிழகத்திலிருந்து அழைத்துத் தங்கள் தமிழ்ப்பற்றைப் புதுப்பித்தவண்ணம் உள்ளனர். அத்தகு மும்பைத் தமிழ் அன்பர்களுள் கு.ரெ.சீனிவாசன் குறிப்பிடத்தகுந்தவர். கே. ஆர். சீனிவாசன் என்ற பெயரில் நன்கு அறிமுகமான இப்பெருமகனார் பன்மொழி அறிஞராகவும் எழுத்தாளராகவும் இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். இவரின் தமிழ்ப்பற்றையும், எழுத்துத் திறனையும் எழுத்தாளர் சு. குமணராசனார் வழியாக அறிந்து அவர்தம் வாழ்வியலைப் பதிந்துவைக்க முனைகின்றேன். 

கு. இரெ. சீனிவாசன் அவர்களின் தமிழ் வாழ்க்கை 

கு. இரெ. சீனிவாசன் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஊரினர். இவர்தம் பெற்றோர்  கு. இரா. இரெங்கநாயலு, இராதா ருக்மணி அம்மையார் ஆவர். பட்டு நெசவுத் தொழிலில் புகழ்பெற்ற குடும்பமாக இவரின் குடும்பத்தினர் விளங்கினர். 26.10.1948 இல் பிறந்த இவர் தம் பிறந்த ஊரான அய்யம்பேட்டைப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், அவ்வூர்க் கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரையிலான கல்வியையும் பெற்று, தஞ்சாவூர் பூண்டி திரு. புட்பம் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர். 

1969 இல் மும்பை சென்று, அங்கு வாழ்ந்த காந்திய நெறியாளரான இரெ. முருகையா அவர்கள் நடத்திய “சேவக்” அச்சகத்தில் மெய்ப்புப் பார்ப்பவராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் வங்கிப் பணிக்குரிய தேர்வெழுதி, எழுத்தராகப் பணியில் இணைந்து, மேலாளராகப் பணியுயர்வு பெற்றவர். அவ்வகையில் மும்பைத் தேனா வங்கியில் முப்பது ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். விளம்பரத் துறையிலும் ஈடுபட்டு உழைத்தவர். 

கு. இரெ. சீனிவாசன் 10.06.1981 இல் ஞானாம்பாள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர். ஞானாம்பாள் அவர்கள் வள்ளலாரின்  நன்னெறிக் கருத்துகளில் பேரீடுபாடு கொண்டவர். இவர்களுக்குக் கார்த்திக் என்னும் பெயருடைய மகன் உள்ளார். இவர் சென்னையில் பணியாற்றி வருகின்றார். 

எழுத்துப் பணி 

கு. இரெ. சீனிவாசன் வங்கி மேலாளராகப் பணியாற்றினாலும் தமிழின் மீதான ஈடுபாட்டுடன் விளங்கியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, சௌராட்டிரம் ஆகிய மொழிகளை அறிந்தவர். இவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மும்பை மற்றும் தமிழகத்து ஏடுகளில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் தமிழகத்து இதழ்களான கல்கி, கலைமகள், அமுதசுரபி, சௌராட்டிர மணி, மொதிரெத்து,   மும்பை இதழ்களான தமிழ் இலெமுரியா, தென்னரசு, மும்பை துடிப்பு, மராத்திய முரசு, போல்டு இந்தியா முதலான இதழ்களில் இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

    முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறு திரு. ஸ்ரீநிவாஸ் லட்சுமன் அவர்களால் (திரு. ஆர். கே.  லட்சுமன் அவர்களின் புதல்வர்) ஆங்கிலத்தில் Dreams to Reality என்ற தலைப்பில் எழுதப்பட்ட. நூலினைத் தமிழில் ‘‘கனிந்த கனவுகள் என்ற பெயரில் கு. இரெ. சீனிவாசன் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூல் சிறுவர் படைப்புகளை வெளியிடுவதில் புகழ்பெற்ற  நவநீத் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்துள்ளது. 

தமிழ்ப் பணிகள் 

மும்பையின் கோரேகான் தமிழ்ச் சங்கம் 1976 முதல் புத்துயிர் பெற்று, இயங்கி வருகின்றது. சற்றொப்ப 30 ஆண்டுகள் இத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்து கு. இரெ. சீனிவாசன் பணியாற்றியவர். தற்போது துணைத் தலைவராகவும் இவரின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

    7000 மாணவர்களைக் கொண்டுள்ள விவேக் வித்யாலயா, மற்றும் கல்லூரியை நடத்துகின்ற விவேக் கல்வி நிறுவனத்தின் நிருவாகக் குழுவில் உறுப்பினராக 30 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர்.    சிறிய தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் இயன்ற அளவில் சமூகத் தொண்டினையும் செய்துவருபவர். 

கு. இரெ. சீனிவாசனின் தமிழ்ப்பணியைப் போற்றும் வகையில் 25.01.2025 இல் மும்பையில் நடைபெற்ற தமிழ் இலெமுரியா அறக்கட்டளை விழாவில் இவருக்குத் “தொல்காப்பியர் விருது - 2024” வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது.


 கு. இரெ. சீனிவாசன் நீடு வாழ்ந்து, தமிழ்ப்பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு வாழ்த்தி மகிழ்கின்றேன்.

மு.இளங்கோவன், கு. இரெ. சீனிவாசன்

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன்

 

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் 

[துரை. முத்துக்கிருட்டினன் கரந்தைக் கல்லூரியில் தமிழ் பயின்று, சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பெரும்புலமையுடையவர். பன்னூலாசிரியர். குடந்தையில் பிறந்த இவர் சிங்கப்பூரிலும் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.] 

சிங்கப்பூரில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சிலவாண்டுகளுக்கு முன்னர் எனக்கு வாய்த்தது. அப்பொழுது அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றித் தம் நிறைபுலமையால் அவையினரை "மகுடிக்கு அடங்கும் பாம்புபோல்" அடக்கினார். அவர் உரையைத் தொடர்ந்து யான் உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது. சிலப்பதிகாரத்தில் ஈடுபாடுகொண்ட மாணவனாகிய எனக்கு இக்காலத்தில் இதுபோலும் சிலம்பினைக் குறித்து உரையாற்றும் பெருமக்கள் உள்ளனரே என்று வியப்புற்றேன். என் மகிழ்வை அவையில் வெளிப்படுத்திப் பேசினேன். நிகழ்ச்சியின் நிறைவில் துரை. முத்துக்கிருட்டினனாரின் உரைக்குப் பாராட்டுத் தெரிவித்து, விடைபெற்றுத் தமிழகம் திரும்பினேன். அதன் பின்னர் ஆண்டுகள் பல கடந்தன. 

தொல்காப்பிய மன்றத்தைச் சிங்கப்பூரில் கட்டியெழுப்புவதற்கு அருமை நண்பர் திரு. காமராசனாரின் பெருந்துணையுடன் ஓர் இலக்கியச் சந்திப்பைச் சிலவாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினோம். சிங்கப்பூர் அறிஞர் பெருமக்கள் பலரும் எங்கள் முயற்சிக்குப் பேருவகையுடன் ஆதரவு நல்கினர். அப்பொழுது மீண்டும் துரை. முத்துக்கிருட்டினனாரைச் சந்திக்கும் வாய்ப்பு கனிந்தது. அதுபொழுது அவர் கையுறையாக வழங்கிய அரும்பெரும் இலக்கண ஆய்வு நூலாகியஒருதலைக் காமம்” (கைக்கிளைதொல்காப்பியம்) என்னும் நூலின் படியைப் பெற்றுக், கொண்டுவந்தேன். வந்தவுடன் அந்த நூலின் ஆய்வுப்போக்கையும், நோக்கையும் படித்து மகிழ்ச்சியுற்றேன்

தொல்காப்பியரின் கைக்கிளை குறித்த கருத்தினைப் பிற்கால உரையாசிரியர்கள் எவ்வாறு பிழைபட உணர்ந்து, பொருளுரைத்துள்ளனர் என்பதையும் அந்தப் பிழைப்பட்ட பொருளைப் பிற்காலத்து அறிஞர்கள் தலைமுறைதோறும் தொடர்ந்து கடத்திவந்துள்ளனர் என்பதையும் அறிஞர் துரை. முத்துக்கிருட்டினனார் அந்த நூலில் சிறப்பாக விளக்கியிருப்பார்கள். இந்த நூல் இவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுக்குரிய இடுநூலாகும். அறுநூற்றுக்கும் மேற்பட்ட சான்றுகளைக் காட்டி, மிகச் சிறந்த ஆய்வு நூலாக இதனைப் படைத்திருப்பார். இந்த ஆய்வினை நெறிப்படுத்திய அறிஞர் பெருந்தகை பச்சையப்பன் கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் ஆவார்கள்

ஒருதலைக் காமம் (கைக்கிளைதொல்காப்பியம்) நூலின் அமைப்பு 1. நுழைவாயில், 2. மண்ணின் மணமும் பெண்ணின் குணமும், 3. கைக்கிளை இலக்கணம் உரைத்தவரும்- உரைத்தவறும், 4. கைக்கிளை ஒழிபும் பிழிவும், 5. மகளிர் மனத்தின் உறுதியும் மணத்தில் உறுதியும் 6. முடிவுரை என்றவாறு இயல் பிரிப்பினைக்கொண்டு, அமைந்துள்ளது. கைக்கிளை குறித்து, இலக்கண ஆசிரியர்களும், உரையாசிரியர்களும், பிற்காலத் தொல்காப்பிய ஆய்வாளர்களும் கொண்டிருந்த கருத்துகளைத் தொகுத்தும் வகுத்தும், தாம் கண்ட ஆய்வு உண்மைகளை நிறுவ இவர் எடுத்துள்ள முயற்சியும் சான்றுகளும் ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன. ஆய்வின் இயல் பிரிப்பினை மேலோட்டமாகப் பார்ப்பவர்க்குக் கூட, இந்த ஆய்வின் பெருமை தெற்றென விளங்கும். நூலினைப்  படித்த கையோடு, முத்துக்கிருட்டினரின்  நினைவு என் நெஞ்சில் நிலைத்துப் படிந்தது

தொடர்ந்த என் தொல்காப்பியத் தேடலில் முத்துக்கிருட்டினர் அவர்களை மீண்டும் நினைவுகூரும் வாய்ப்பு கனடாவில் நடைபெற்ற கனடா தொல்காப்பிய மன்றத்தின் ஆராய்ச்சி மாநாட்டின்பொழுது மீண்டும் துளிர்விட்டது. தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சிக்கு அவரின் படத்தை மீண்டும் தேடத் தொடங்கியபொழுது,  இப்பெருமகனாரின் வாழ்வியலும் பணிகளும் தமிழுலகின் கவனத்திற்கு வரவில்லையே என்று கவலைகொண்டிருந்தேன். அண்மையில் என் நண்பர் முனைவர் இரா. அருள்ராசு அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது  துரை. முத்துக்கிருட்டினனாரின்  பெருமையை இருவரும் அசைபோட்டோம். இவர்தம் ஆற்றலையும் பெரும்புலமையையும்  தமிழுலகுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் எதிர்காலத்திற்கு ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் என்றும் கருதி,  எழுதி, அறிமுகப்படுத்துவதில் மகிழ்கின்றேன்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழ் வாழ்க்கை

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொருக்கை என்னும் ஊரில் வாழ்ந்த உழவர் குடியைச் சார்ந்த துரைசாமி பிள்ளை, இலக்குமி அம்மாள் ஆகியோரின் மகனாக 01.06.1947 இல் துரை. முத்துக்கிருட்டினன் பிறந்தவர். தொடக்கக் கல்வியைப் பிறந்த ஊரில் பயின்றவர்.  ஆறு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை கும்பகோணத்தில் அமைந்துள்ள சிறிய மலர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். தம் கல்லூரிப் படிப்பைத் தஞ்சை- கரந்தையில் அமைந்துள்ள புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்றவர் (1966-1970). கண்டிப்புக்கும் புலமைக்கும் பெயர்பெற்ற பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் அப்பொழுது கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர்

கரந்தைக் கல்லூரியில் அப்பொழுது ஒவ்வொரு வகுப்பிலும் நூறு மாணவர்கள் படிப்பது வழக்கம். நான்கு ஆண்டு புலவர் படிப்பில் மொத்தம் நானூறு மாணவர்கள் தமிழ் படித்தனர். இணை வகுப்புகள் அமையும்பொழுது இருநூறு மாணவர்களை அமரச்செய்து ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவது வழக்கமாம். பேராசிரியர்கள் கு.சிவமணி, .பாலசுந்தரம் அடிகளாசிரியர், சி.கோவிந்தராசனார், சிவப்பிரகாச சேதுவராயர் முதலான பெரும்புலமைச் சான்றோரிடம் தமிழ் கற்ற துரை. முத்துக்கிருட்டினன் படிப்பிலும் விளையாட்டிலும் பெருந்திறன் பெற்றவராக விளங்கியவர்

துரை. முத்துக்கிருட்டினன் கரந்தையில் கல்வி பயிலும்பொழுது கடவூர் மணிமாறன்(முத்துசாமி), பிரபஞ்சன்(வைத்தியலிங்கம்) உள்ளிட்டவர்கள் உடன் பயின்றவர்கள். சைதாப்பேட்டை அசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபொழுது இவருடன் செந்தலைப் புலவர் கௌதமன் அவர்கள் உடன் பயின்றவர்

துரை. முத்துக்கிருட்டினன் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்த பிறகு பாபநாசத்தில் இருந்த பாவேந்தர் தமிழ்க் கல்லூரியில் 1970 முதல் 1972 வரை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அப்பொழுது(1972 இல்) அங்கு வந்திருந்த தந்தை பெரியாரைக் கண்டு உரையாடியவர். அவரிடம், தஞ்சையில் முன்பொருபொழுது உரையாற்றிய தந்தை பெரியார் “தமிழைக்  காட்டுமிராண்டி மொழி” என்றமைக்காகத் தம் மறுப்பைத் தெரிவித்து உரையாடினார். தந்தை பெரியார் அவ்வாறு சொன்னமைக்கான காரணத்தை முத்துக்கிருட்டினனுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கியமையை இன்றும் நன்றியுடன் நினைவுகூர்பவர்

காலத் தேவையறிந்த தொல்காப்பியர் திருவள்ளுவர் ஆகியோர் அவரவர் காலத்தில் நூல் இயற்றியமை போல் இக்காலத்தில் காலத் தேவையறிந்து மக்களுக்கு உதவும் நூல்களைத் தமிழ்ப் புலவர்கள் எழுதாமையால் தாம் அவ்வாறு கூற நேர்ந்தமையைத் தந்தை பெரியார் விளக்கியபொழுது நம் துரை. முத்துக்கிருட்டினன் அமைதியடைந்தார்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் 1972 முதல் 1980 வரை அரசியல் ஆர்வம்கொண்டு, பணிக்குச் செல்லாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு முயன்றும் அப்பணி தடைப்பட்டுக்கொண்டே இருந்தது. 1982 இல் சென்னை முத்தியாலுபேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து 2005 ஆம் ஆண்டு வரை அப்பள்ளியில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். 

பள்ளியில் பணியாற்றியபடியே தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள பி. லிட்., முதுகலை(M.A) கல்வியியல் இளையர் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) முதலிய  பட்டங்களைப் படித்துப் பெற்றவர். தம் ஆய்வியல் நிறைஞர் படிப்புக்காகக்  கைக்கிளைதொல்காப்பியம்” என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி அப்பட்டத்தைப் பெற்றவர்

துரை. முத்துக்கிருட்டினன் இல்லற வாழ்க்கை: 

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களுக்கு 1970 இல் வசந்தகுமாரி அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சிதம்பர பாரதி, சர்மிளா என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். சிதம்பர பாரதி தொழில்நுட்பம் பயின்று, தற்பொழுது சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றார்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு தமிழாராய்ச்சியில் ஈடுபட்டு, அரிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அரசியல் செல்வாக்கோ, அறிவைப் போற்றும் ஆளுமைகளோ இவருக்கு அமையாததால் இவர் பணிகள் குடத்துக்குள் ஏற்றிய விளக்காக உள்ளன

துரை. முத்துக்கிருட்டினன் தமிழ்க்கொடைகள்

1. ஒருதலைக் காமம் (கைக்கிளை -- தொல்காப்பியம்)     ஆய்வு நூல்

2. திருக்குறள் உரை

3. தமிழ் இலக்கணம்

4. மதுரையைக் கண்ணகி    எரிக்கவில்லை  (சிலப்பதிகார ஆய்வேடு)

5. நந்திக் கலம்பகம்   (நாடகம்)

6. அகல் விளக்கு    (கவிதை)

7. இரட்டை நவமணி மாலை   (கட்டுரைகள்




வெளியீடு காண இருப்பவை: 

8.  குறளறனும் மனுமுரணும்

 (1. "திருக்குறள் -- மனுதர்மத்திற்கு  எதிரானது;   2. பரிமேலழகர், தம் உரை          மூலம் வருணாச்சிரமத்    தர்மக் கோட்பாடுகளைத் திணிக்கிறர்;  3. பரிமேலழகரின் உரை      முரண்பாடுகள்;  என்பன பற்றிய விளக்கமும்  மற்றும்   4. திருக்குறட்குப் -- புத்துரையும்         அடங்கியது.)

9. சிலம்பிய சிலம்பும்     புலம்பிய சதங்கையும்

      (சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக்    கட்டுரைகள் -- விரைவில்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழாய்வு முயற்சிகளையும், எழுத்துப்பணிகளையும் போற்றி இவருக்கு உரிய சிறப்புகளையும் பெருமைகளையும் அளிப்பது தமிழர் கடமையாகும்.

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன்

 

மா.  வயித்தியலிங்கன்
(29.11.1935 – 22.05.2022)

 

[மா.  வயித்தியலிங்கன் குடந்தையில் பிறந்த  தமிழிசை அறிஞர்; திண்டுக்கல்லில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இராமலிங்கர் பணிமன்றத்தின் செயலராகப் பணியாற்றியவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் மாணவர். இலால்குடியில் இயங்கிவரும் நாடுகாண் குழுவினைச் சுந்தரேசனாரின் மறைவுக்குப் பிறகு வழிநடத்தியவர். இவர் பன்மொழி அறிஞர். வானொலி, தொலைக்காட்சிகளில் தமிழிசை குறித்து நிகழ்ச்சிகள் நடத்தியவர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலியவற்றை இசையுடன் பாடிப் பரப்பியவர்.] 

தமிழும் இசையும் அறிந்த அறிஞராக விளங்கியவர் பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் ஆவார். கும்பகோணத்தின் ஒரு பகுதியாக விளங்கும் பேட்டை நாணயக்காரத் தெருவில் வாழ்ந்த வயி. மாசிலாமணி செட்டியார் – மா. மீனாட்சி அம்மாள் ஆகியோரின் மகனாக 29.11.1935 இல் பிறந்தவர்.  (இவர்களின் குடிவழியினர் சோழபுரம் செட்டியார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள சோழபுரம் தெரு இவர்களின் உறவினர்கள் வதியும் தெருவாகும்). கும்பகோணத்தில் அமைந்துள்ள நகர உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்சு, முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். ஆய்வியல் நிறைஞர் படிப்பினை மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்றவர். திண்டுக்கல்லில் உள்ள G.T.N கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக 1965 முதல் 1994 வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழி அறிஞராக விளங்கியவர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரிடம் பண்ணிசையைப் பயின்ற பெருமைக்குரியவர். இவரின் உடன் பிறந்த தம்பி மா. கோடிலிங்கம் அவர்களும் தமிழிசை பயின்ற பெருமகனார் ஆவார். 

மா. வயித்தியலிங்கன் தமிழகத்தின் திருக்கோவில்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் அமைப்புகளில் இசை குறித்தும், சமயம் குறித்தும், கலைகள் குறித்தும் அறுபது ஆண்டுகளாகச் சொற்பொழிவுகள், கருத்துரைகள் இசைநிகழ்ச்சிகள் நல்கிய பெருமைக்குரியவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் இசைத்தமிழ் குறித்த பாடத்திட்டங்களை வகுத்து வழங்கிய அறிஞராகவும் போற்றப்படுபவர். 

சைவ சித்தாந்தத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். இராமலிங்கர் பணி மன்றம், பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றம், சென்னை இசைச் சங்கம், தமிழ் இசைக்கல்லூரிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து தமிழிசை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும், சிறப்புரைகள் வழங்கும் பேராசிரியராகவும் விளங்கியவர். இராணி மேரிக் கல்லூரியில் இசைத்துறைத் தேர்வாளராகவும் கடமையாற்றியவர். 

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் வழியில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றை இசையுடன் பாடி, மக்கள் மனத்தில் தமிழிசை உணர்வினை ஊட்டியவர். சென்னை வானொலியில் இவர்தம் இசையுரைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சன் தொலைக்காட்சி, செயா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, பொதிகைத் தொலைக்காட்சி, சங்கரா தொலைக்காட்சி, தென்றல் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழிசையைப் பாடி, இசைத்துறைக்குத் தொண்டாற்றியவர். 

செம்மொழி நிறுவனத்துக்காகப் பத்துப்பாட்டு, தொல்காப்பியம், திருக்குறள் முதலானவற்றை இசைவட்டுகளில் பாடி, உலகம் முழுவதும் தமிழிசை பரவுவதற்கு வழிசெய்தவர். 

தமிழ் வள்ளல் பொள்ளாச்சி அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் நிறுவிய இராமலிங்கர் பணி மன்றத்தின் செயலராகப் பதினெட்டு ஆண்டுகள் பணிபுரிந்து சென்னை, திருச்சிராப்பள்ளி, கோவை முதலிய ஊர்களில் தமிழிசை பரவுவதற்கும் வள்ளலார், காந்தியக் கொள்கைகள் பரவுவதற்கும் தொண்டாற்றியவர். 

மக்கள் காவலர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களால் நிறுவப்பட்ட பொங்கு தமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் ஆண்டு விழாக்களில் இசையறிஞர்களை அழைத்து, அந்த நிகழ்வுகளைத் திறம்பட நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 

சென்னைக் கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள இறைப் பணி மன்றத்தின் சார்பில் இறைத்தொண்டும் இசைத்தொண்டும் செய்தவர். 

இலால்குடி எனப்படும் திருத்தவத்துறையில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களால் நிறுவப்பட்ட நாடுகாண் குழுவின் பணிகளில் அவர் மறைவுக்குப் பிறகு இருபத்தைந்தாண்டுகளாகப் பணியாற்றியவர். கமலத் தியாகராசன் உள்ளிட்ட அறிஞர்களை அழைத்து விருதளித்துப் போற்றிய பெருமைக்குரியவர். 

தமிழர் பண்பாடு, ஓம் சக்தி, ஞானத்திரள் உள்ளிட்ட ஏடுகளில் தொடர்ந்து தம் எண்ணங்களை எழுத்துகளாக்கி வழங்கியவர். 

மக்கள் தொலைக்காட்சிக்காகப் பண் இசை வித்தகர்கள் என்ற தொடரினை டாக்டர் சுந்தர், இசைக்கவி இரமணன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கி மக்கள் மன்றத்துக்குப் படைத்தவர். இந்தத் தொடர் உலக அளவில் போற்றப்பட்ட இசைத்தொடாராகும். 

சிலப்பதிகாரத்தைப் பல்வேறு இசை வடிவங்களில் ஊடகங்களில் வெளியிட்டு, சிலப்பதிகார இசை பரவுவதற்குத் தொண்டாற்றியவர். 

திண்டுக்கல்லில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியபொழுது தெய்வ நெறி சங்கம் என்ற அமைப்பை நிறுவி, மாணவர்களின் துணையுடன் அனைவருக்கும் இலக்கிய ஆர்வம் ஏற்படும் வகையிலும் நன்னெறிக்கருத்துகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளையும் பட்டி மன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி, தமிழகத்து அறிஞர்களை அப்பகுதியில் வாழ்ந்த  அனைத்து மக்களும் அறியும் வகையில் தொண்டாற்றியவர். 

பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்தினம், நாடக அறிஞர் இராமானுஜம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து “கைசிகி நாடகம்” அரங்கேறுவதற்கு உதவியாக இருந்தவர். சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, “புறஞ்சேரி” என்னும் இசைநாடகம் புதிய நாடக உத்திகளுடன் இவரால் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் பல பகுதிகளில் நடிக்கப்பட்டது. 

ஆத்திரேலியா நகரின் சிட்னியில் இவருக்குத் திருக்குறள் தொண்டர் என்ற விருதினை உலகத் தமிழர் கழகம் வழங்கிப் பாராட்டியது. இவர்தம் இசையுரையைச் சிட்னியிலும் மெல்பர்னிலும் வாழும் தமிழார்வலர்கள் விரும்பிக் கேட்டனர். 

மா. வயித்தியலிங்கன்

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் அவர்கள் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் தம் தம்பி மா. கோடிலிங்கம் அவர்களுடன் சென்று, டெக்சாசு, மாநிலத்தின் முருகன் ஆலயத்தில் இசையுரை வழங்கியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகம், பாஸ்டன் காளிகாம்பாள் ஆலயம் உள்ளிட்ட இடங்களில் இவரின் இசைப்பொழிவுகள் நடந்துள்ளன. 

மா. வயித்தியலிங்கன் அவர்களின் இல்லற வாழ்க்கை: 

மா. வயித்தியலிங்கன் அவர்களுக்கு 1960   இல் திருமணம்  நடைபெற்றது. இவர் மனைவியின் பெயர் வயி. நாகரத்தினம் என்பதாகும். இவர்களுக்கு வயி.சிவசங்கரன், வயி. சிவகுமாரன், வயி. சிவசுப்பிரமணியன் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். 

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் பெற்ற விருதுகள்: 

பேராசிரியர் மா. வயித்தியலிங்கனின் இசைப்பணியையும், சமயப்பணியையும் போற்றிப் பல்வேறு நிறுவனங்களும் ஆதீனங்களும் விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கியுள்ளன. அவற்றுள் சில: 

1.   குன்றக்குடி ஆதீனம்: தமிழாகரர்

2.   திண்டுக்கல் சிவபுர மடம்: தமிழ் விரகர்

3.   கோவிலூர் மடம்: சிலம்பிசைச் செல்வர்

4.   சிருங்கேரி மடம்: சைவப் பேரிசைககடல்

5.   திருவாவடுதுறை ஆதீனம்: சம்பந்தர் தமிழ்நெறிச் செல்வர்

6.   சன்மார்க்க சங்கம், விழுப்புரம்: சன்மார்க்க நெறிபரப்பும் சீலர்

7.   கோவைத் தமிழ்ச்சங்கம்: தமிழ்நெறிச் செம்மல்

8.   இராமலிங்கர் பணி மன்றம்: இசைக்கலைச் செல்வர்

9.   ப. சு .நாடுகாண் குழு: பெரும்பாண நம்பி

10. பொங்குதமிழ் மன்றம், பண் இசை மாமணி

11. தமிழ்நாடு அரசு: இளங்கோ அடிகள் விருது…. 

பேராசிரியர் மா. வயித்தியலிங்கன் அவர்களின் நூல்கொடை:

1.   வடிவுடை மாணிக்க மாலை

2.   விண்ணப்பக் கலிவெண்பா

3.   அருள் விளக்க மாலை

4.   பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி உரை

5.   நலந்தரு பதிக உரை

6.   மூத்த பிள்ளையார் பிரபந்த திரட்டுத் தொகுப்பு 

அச்சில்:

7.   பண் வகுத்தது எப்படி?

8.   அய்யனார்

9.   மாரிமுத்தா பிள்ளை பிரபந்த திரட்டு

10. சைவ நியமம்

11. பெரிய புராணம் வினா-விடை

12. கட்டுரைத் திரட்டு 

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாருக்குச் சென்னையில்  நூற்றாண்டு விழா எடுத்தும் மலர் வெளியிட்டும், பண்ணாராய்ச்சி வித்தகர் பாடியிருந்த ஒலிநாடாக்களில் இருந்த பாடல்களை ஒலிவட்டில் தந்தும் தமிழிசைத்துறைக்குப் பெருந்தொண்டாற்றிய பெருமகனார் மா. வயித்தியலிங்கன் 22.05.2022 இல் இயற்கை எய்தினார். இவர்தம் தமிழிசைப் பங்களிப்பு உலகம் உள்ளவரை நினைவுகூரப்படும். 


தொடர்புடைய பதிவு இங்கு உள்ளது.

திருக்குறள் பெருமாள்

                                    

                                    திருக்குறள் பெருமாள் (15.11.1914 – 28.07.2005) 

[திருக்குறள் பெருமாள் புதுவை மாநிலத்தின் மூர்த்திக்குப்பம் ஊரினர். திருக்குறளையும் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் அனைத்தையும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர். கடலூரிலிருந்து தென்மொழி இதழ் வெளிவந்தபொழுது, அதன் ஆசிரியர் பெருஞ்சித்திரனாருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் உதவியாக இருந்தவர். இவரின் இல்லம் தனித்தமிழ் அன்பர்கள் தங்கிச்செல்லும் இடமாக இருந்துள்ளது. பிரெஞ்சிந்திய விடுதலைப்போருக்குத் துணைநின்றவர். பாரதிதாசன், திருக்குறள் முனுசாமி ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அஞ்சல்காரராகவும் ஆசிரியராகவும் பணியாற்றி, நல்ல தமிழ்த்தொண்டர் என அனைவராலும் பாராட்டப்படுபவர்.] 

திருக்குறள் குறட்பாக்களையும், பாவேந்தர் பாரதிதாசனார் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் பேரறிவு பெற்றிருந்தவர் திருக்குறள் பெருமாள் ஐயா. புதுவை மாநிலம் பாகூருருக்கு அருகில் உள்ள மூர்த்திக்குப்பம் என்னும் ஊரில் வாழ்ந்த நாகப்பன், அமிர்தம்மாள் ஆகியோரின் மகனாக 15. 11. 1914 இல் பிறந்தவர். 

ஐந்தாம் அகவையில் திண்ணைப்பள்ளியில் அரியாங்குப்பம் ஜெகநாத ஆசிரியரிடம் கல்வி பயின்றவர். “அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை” என்று ஓதிப் படிப்பைத் தொடங்கியவர். இரண்டாம் வகுப்பு வரை மட்டும் படித்தவர். அப்பொழுது இவருக்கு குறிலும் நெடிலும் அறிமுகம் ஆயின. பாகூர்ப் பகுதியில் மேலும் படிக்க வாய்ப்பு இல்லாததால் தந்தைக்குத் துணையாக உழவுத்தொழிலில் ஈடுபட்டவர். ஊரில் பெரியோர்கள் – சான்றோர்கள் செய்யும் சொற்பொழிவுகளைக் கேட்டு, அரிய செய்திகளை மனத்துள் பதித்ததால் திருக்குறள் படிக்கும் ஆர்வம் இயல்பாக இவருக்கு ஏற்பட்டது. 

மூர்த்திகுப்பத்துக்கு அருகில் உள்ள மணப்பட்டு என்னும் சிற்றூரில் 1944 முதல் 1950 வரை சிற்றூர்ப்புற மாணவர்களுக்குக் கல்வியைக் கற்பித்தவர். இவரிடம் பயின்ற பல மாணவர்கள் புதுச்சேரியில் ஆசிரியர்களாகவும் அதிகாரிகளாகவும் அமைச்சர்களாகவும் உயர்ந்துள்ளனர். “சத்திய சோதனை” என்னும் நூலினைப் படித்து, நாட்டு மக்களுக்காக உழைத்த பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட பாடலைப் பாடிக்காட்டியதை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு யாரோ தெரிவித்துவிட்டனர். இதனால் ழாந்தர்மேரி என்ற காவல்துறை அதிகாரி இவருக்குப் பல்வேறு தொல்லைகளை வழங்கியுள்ளார். அதனால் அருகில் உள்ள ஆங்கில இந்தியப் பகுதியான கடலூருக்குச் சென்றார். அங்கு இயங்கிய “பிரெஞ்சிந்திய விடுதலைப் போராட்டக்குழு”வில் 20.04.1950 இல் இணைந்து, கடலூருக்கு  அருகிலுள்ள புதுவைப் பகுதிகளில் விடுதலைக்குக் குரல்கொடுத்தவர். தொண்டர்படைத் தலைவர் நெதலாவுக்கும் புதுவை வழக்கறிஞர் செல்லான் நாயக்கர் அவர்களுக்கும் ஒற்றனாக இருந்து, விடுதலைப் போராட்டச் செய்திப் பரிமாற்றத்திற்குத் துணைநின்றவர். அப்பொழுது புதுக்குப்பம் சி. நாராயணசாமி அவர்களுக்கு உதவிபுரிந்தவர். 

திருக்குறள் பெருமாள் உடல் வலிமையும் மன உறுதியும் மிக்கவர். துணிச்சல் மிகுதியாக இருந்ததால் யாருக்கும் அஞ்சாமல் பொதுப்பணிகளில் ஆர்வமாக ஈடபட்டவர். 

திருக்குறளார் வீ. முனுசாமி அவர்களின் “குறள்மலர்”  என்ற வார இதழுக்குத் தொண்டாற்றியுள்ளார். இந்த இதழ் கடலூரிலிருந்து வெளிவந்தது. 1949 முதல் தொடங்கப்பட்ட திருக்குறள் அச்சகத்திலிருந்து இந்த இதழ் வெளிவந்தது. குறள்மலர்  இதழில் பணியாற்றியதாலும், திருக்குறளை மக்களிடம் தொடர்ந்து பரப்பியதாலும் இவர் “திருக்குறள் பெருமாள்” என்று அழைக்கப்பட்டார். குறள் மலர் அச்சகத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் வந்து தங்கும்பொழுது, “என்னா பெருமாள் சிங்கம்” என்று அன்பொழுக அழைப்பதுண்டு. திருக்குறளார் முனுசாமி நா. பெருமாள் அவர்களை நண்பர்களிடத்து அறிமுகம் செய்யும்பொழுது சித்தன் என்றும், தொண்டன் என்றும் திருக்குறள் தூதன் என்றும் அறிமுகப்படுத்துவது உண்டு. 

திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் விழுப்புரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1952 முதல் 1957 வரை கடமையாற்றியபொழுது திருக்குறளாருக்குத் தொண்டராகவும், பாதுகாவலராகவும் அவரின் வீட்டுக்குப் பொறுப்பாளராகவும் விளங்கிய பெருமை திருக்குறள் பெருமாள் ஐயாவுக்கு உண்டு. 

1955 ஆம் ஆண்டு பாவேந்தரிடம் சென்று அவர் பெயரால் இயங்கும் புதுவை வடக்குச் சுற்றுச்சாலையில் ஏழைகளுக்காக அமைந்திருந்த பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும் பாவேந்தரின் அச்சகத்தில் அச்சுப்பணியில் துணைநின்றவர். 

                                            குப்பம்மாள், திருக்குறள் பெருமாள்

03.07.1957 இல் திருக்குறள் பெருமாள் - குப்பம்மாள் திருமணம் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்கள், பெரியோர்கள் முன்னிலையில் தமிழ்த் திருமணமாக மூர்த்திக்குப்பத்தில் இவரின் திருமணம் நடைபெற்றது.  திருக்குறள் பெருமாள் அவர்களுக்குச் சூரியநாராயணமூர்த்தி, புகழேந்தி, குறிஞ்சி என்னும் மூவர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். சூரிய நாராயணமூர்த்தி என்பது தமிழின் செம்மொழிப் பெருமையை உலகுக்கு நினைவூட்டிய “பரிதிமாற்கலைஞர்” சூரியநாராயண சாத்திரியின் நினைவாக வைக்கப்பட்ட பெயராகும். சூரியநாராயண சாத்திரி என்பதில் சாத்திரி என்பதை நீக்கிவிட்டு, மூர்த்திக்குப்பம் ஊர்ப்பெயரின் முன்னொட்டை இணைத்து, சூரியநாராயண மூர்த்தி என்று திருக்குறள் பெருமாள் தம் முதல் மகனுக்குப் பெயரிடுமாறு சொல்லி, பாவேந்தர் இப்பெயரைச் சூட்டினார். சூரியநாராயணமூர்தியைப் பாவேந்தரும் அவர் மனைவியார் பழநியம்மாள் அவர்களும் அன்பொழுக வாழ்த்தியவர்கள் ஆவர். 

திருக்குறள் பெருமாள் அவர்களின் மனைவி குப்பம்மாள் அவர்கள் அன்பும் பண்பும் நிறைந்த பெருமைக்குரிய அம்மையார் ஆவார். தென்மொழிக் குடும்பமும், தனித்தமிழ் இயக்க அன்பர்களும் மூர்த்திக்குப்பம் வந்தால் கடல்மீனும் நண்டும் இறாலும் கொண்டு இனிய சுவைமிகு குழம்பினைப் படைத்து விருந்து புரப்பதை வழக்கமாகக் கொண்டவர். எண்பத்தைந்து அகைவைக்கு மேல் நலதுடன் வாழ்ந்துவரும் குப்பம்மாள் அவர்களை நல்ல நினைவாற்றலும் பார்வைப் பொலிவும் கொண்டு தம் கடந்த கால வாழ்க்கையை இன்றும் நினைவுகூர்கின்றார். தென்மொழி அன்பர்களுக்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குடும்பத்தினர்க்கும் தாம் ஆற்றிய தொண்டுகளை நினைவுகூர்ந்து தொடர்பினை நினைவூட்டுகின்றார். அதுபோல் இவர்களின் பிள்ளைகள் பாவலரேறு அவர்களின் குடும்பத்தின்மேல் கொண்டிருந்த பற்றினையும் அன்பினையும் கேட்கும்பொழுது இவர்களின் தமிழ்ப்பற்றும் பாசமும் வெளிப்படுகின்றது. அதனால்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் திருக்குறள் பெருமாளைப் போற்றிப் பாடியபொழுது குடும்பத்தலைவி குப்பம்மாளின் சிறப்பினை, 

“முப்பொழு திருப்பினும் முகங்கோ ணாத

குப்பம்மாள் எனும் குடித்தனக் காரிக்குச்

செப்பமாய் அமைந்த சிறப்பெலாம் என்னெனின்,

ஒப்புரைக் கில்லாத் தென்மொழி உழைப்பால்

உடலும் நெஞ்சமும் ஒருங்குறச் சோர்ந்து,

கடற்கரை நண்ணும் காலத்தி லெல்லாம்,

கையில் கிடைத்ததை, மடியில் நிறைத்ததை,

பையில், பானையில் கைவிட்டுத் துழவிக்

கொஞ்சங் கொஞ்சமாய்க் கூட்டிச் சேர்த்ததை

எஞ்சுத லின்றி எடுத்தெடுத் தீந்து

தென்மொழிக் குடும்பம் தின்று மகிழ்வதைத்

தன்விழிப் பருப்பால் தான்விழுங் குவதே! 

பெருமாள் பெற்ற பெருமை எல்லாம்

திருக்குறள் ஒன்று! தேய்விலா அன்பின்

குப்பம்மாள் எனும் குணக்குன்று ஒன்று!” 


என்று போற்றிப்பாடியுள்ளார்.

குப்பம்மாள்

திருக்குறள் பெருமாளின் தனித்தமிழ்ப் பற்று 

திருக்குறள் பெருமாள் தமக்கு அமைந்த திருக்குறள் புலமையாலும் திருக்குறளார் முனுசாமியின் தொடர்பாலும் பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பாலும் தமிழ் உணர்வுடன் இயங்கினார். அப்பொழுது(1959) கடலூரில் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ் தொங்கப்பட்டது. தமிழ் உணர்வாளர்கள் வந்து குழுமும் இடமாகக் கடலூர் மாறியது. தமிழ்ப்பற்று நிறைந்த திருக்குறள் பெருமாள் அவர்களின் குடும்பம் பெருஞ்சித்திரனாரின் குடும்பத்துடன் நன்கு பழகும் வாய்ப்பினைப் பெற்றது. அதுபோல் பெருஞ்சித்திரனாரும் தம் குடும்பத்தாருடன்  தென்பெண்ணை ஆற்றைக் கடந்து மூர்த்திகுப்பம் வந்து, தங்கி, விருந்துண்டு செல்லும் தொடர்பினைக் கொண்டிருந்தனர். பெருஞ்சித்திரனாரின் நம்பிக்கைக்குரிய பெரியோராகத் திருக்குறள் பெருமாளும் அவர் குடும்பத்தினரும் விளங்கினர். அதுபோல் பேராசிரியர் தங்கப்பா உள்ளிட்டவர்களும் திருக்குறள் பெருமாளுடன் நல்ல தொடர்பில் இருந்தவர். திருக்குறள் பெருமாள் இல்லத்துக்குத் தனித்தமிழ் அன்பர்கள் பலரும் வந்து செல்லும் சூழல் அக்காலத்தில் இருந்தது. ஓலை வேயப்பட்ட தோப்பும் துரவுமாக இருந்த இயற்கை எழில் கொஞ்சிய திருக்குறள் பெருமாளின் இல்லம் தனித்தமிழ் அன்பர்கள் வந்து, தங்கிச்செல்லும் வேடந்தாங்கலாக இருந்துள்ளது. 

திருக்குறள் பெருமாள் 1961 இல் அஞ்சல்துறையில் அஞ்சல்காரராகப் பணியில் இணைந்தார்.  26 ஆண்டுகள் இப்பணியில் இருந்தவர். இதனால் அஞ்சல்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும்பொழுது அனைவரிடமும் நல்ல தமிழில் உரையாடித் திருக்குறளைச் சொல்லி, அனைவரிடத்தும் திருக்குறள் ஈடுபாட்டினை ஏற்படுத்தியவர். மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் திருக்குறள் பற்றை ஏற்படுத்தியவர். முதியோர் பள்ளியில் உருவா 20 பெற்றுக்கொண்டு மாலைநேர ஆசிரியராகவும் பணியாற்றினார். 


திருக்குறள் பெருமாள் சிறப்பிக்கப்படுதல்



ம.இலெ.தங்கப்பாவுடன் திருக்குறள் பெருமாள்

திருக்குறள் பெருமாள் அவர்களின் நாட்டுப்பற்றினைப் போற்றும் வகையில் 02.08.1975 ஆம் ஆண்டு புதுச்சேரியின் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் “தியாகி” என்ற பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்துள்ளார். நிறுவனங்களில் வேலை,  கணக்கர் வேலை, சங்கிலி பிடித்து நிலம் அளக்கும் வேலை, மின்பணி, துறைமுக வேலை, ஆசிரியர் வேலை, உழவுத்தொழில், கொத்துவேலை, அச்சக வேலை எனப் பல வேலைகளைச் செய்தாலும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் தம் கண்களாகப் போற்றியவர். வறுமையிலும் எளிமையிலும் செம்மாந்த வாழ்க்கை நடத்திய இவர் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற பெருந்தகையாக வாழ்ந்துள்ளார். தம்மிடம் இருக்கும் கைப்பொருளைப் பிறருக்கு ஈந்துவக்கும் ஈகை உள்ளத்தினர். 

திருக்குறளிலும், பாவேந்தர் பாடல்களிலும் இவருக்கு இருந்த புலமையையும் பயிற்சியையும் அறிந்த தமிழ் உணர்வாளர்கள் தம் ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இவரை அறிமுகம் செய்து உரையாற்றச் செய்துள்ளனர். 

பாகூர் வீரப்பன் ஆசிரியருடன் திருக்குறள் பெருமாள் இணைந்துகொண்டு இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் புதுதில்லி வரை தேசிக்கொடியைக் கையில் ஏந்தியவாறு சென்று கோரிக்கை வைத்தனர். மேலும் திருக்குறள் பெருமாள் அவர்களும் கோவைத் தொழிலதிபரும் அறிவியல் அறிஞருமான ஜி.டி. நாயுடு அவர்களும் நட்புடன் பழகியுள்ளனர். 

பாவேந்தரின் சத்திமுற்றப்புலவர் நாடகத்தை முழுவதுமாக மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல்பெற்ற திருக்குறள் பெருமாள் பறம்புக்குடியில் நடைபெற்ற உலகத் தமிழ்க்கழக மாநாட்டில் அதனை நடித்துக்காட்டியவர். 

08.02.1985 இல் “நடமாடும் தமிழ்” என்ற பட்டம் வழங்கப்பெற்றவர். சென்னைப் பாவேந்தர் பாசறை அமைப்பினர்  “பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்” (29.04.1998) என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளனர். 

இவர்தம் தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில் 1990 செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கட்குப் புதுவை அரசின் கல்வித்துறை வழங்கும் உதவித்தொகையைப் பெற்றவர். 

தமிழ்நாடு அரசு புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவின் பொழுது(1991) பாவேந்தர் புகழ் பரப்புநர் என்று சான்று வழங்கிச் சிறப்பித்தது. 

பாவலரேறுவின் குடும்பமும் திருக்குறள் பெருமாள் குடும்பமும்
அமர்ந்திருப்பவர்கள்: தாமரை அம்மையார், பெருஞ்சித்திரனார், இறைக்குருவனார், பொற்கொடி
பின்வரிசை: குப்பம்மாள், திருக்குறள் பெருமாள், தென்மொழி மேலாளர்

திருக்குறள் பெருமாள் அவர்களின் தமிழ்ப்பற்றையும், பாவேந்தர் பாடல்களிலும் திருக்குறளிலும் இவருக்கு இருந்த புலமையினையும், மாண்புநிறைந்த பண்புநலன்களையும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மிகச் சிறந்த பாடல் ஒன்றியற்றி இவர்தம் பெருமையை நிலைப்படுத்தியுள்ளார். அப்பாடல் இதோ: 

திருக்குறள் பெருமாள்!

 

துருவுந் தூசியும் துவைந்த புழுதியும்

எருவுஞ் சேறும் இறுகக் காய்ந்தே,

உருளை ஓரத்தும், உட்புற அச்சிலும்,

இருகால் மிதியிலும், கம்பிகள் இடுக்கிலும்,

அடையடை யாக அப்பிக் கிடந்து,

கடகடத் தாடுங் கற்கா லத்துக்

கட்டை வண்டிபோல் காட்சி யளிக்கும்

குட்டை யான மிதிவண்டிக் கூடு. 

அமரும் இருக்கையில் ஆயிரம் கிழிசல்!

சுமைகள் வைத்திடுஞ் சுமப்பான் ‘தொட! தொட!’

கால்மிதிக் கட்டைகள் கழன்று கழன்று

சாலையில் ஆளைச் சாய்த்திடும் நாடகம்!

கிழிசல் வேட்டி ஓரத்தைச் சுருட்டி

மைசேர் பற்களால் மென்று குதப்பி

ஆளைத் தள்ளும் ‘அழகிய தொடரி!

ஏனிவ் விரைவென இடையிடை மடங்கி

ஊன்றிக் கொள்ளும் ஒற்றைக்கால் தாங்கி!

கணகணக் காத கருந்தலைப் பருமணி!

தொணதொணக் கின்ற தொடரிச் சக்கரம்!

உராய்ந்து கிரீச்சிடும் நெளிந்த உருளைகள்!

மரமரக் கின்ற மண்பொதி தடைகள்! 

இத்தகு பெருமையோ டெவ்விடத் தாகிலும்

தத்தட தடவெனும் மிதிவண்டி ஒன்று

சாய்ந்த நிலையில் சாலையோ ரத்துக்

காய்ந்த உடலொடு காண்பீ ராயின்

அந்த வண்டிதான் திருக்குறள் பெருமாள்

சொந்த வண்டி-எனச் சொல்லுக துணிந்தே! 

அந்த வண்டிக்கு அண்மையில் உள்ள

சந்திலோ பொந்திலோ சாலைக் கடையிலோ

எங்கோ தான்அவர் இருந்திடல் வேண்டும்!

இங்கவர் தோற்றம் எப்படி என்றால்,

இயம்பிடு கின்றேன்; மனத்தில் இறுத்துக;

நயம்படும் அவர்புகழ் நாற்புறம் நாட்டுக! 

கோணியில் தைத்த குப்பா யம்போல்

சாணி நிறத்தினில் தொளதொள சட்டை!

ஏறியும் இறங்கியும் ஏழெட்டுக் கிழிசலால்

மாறியும் மடிந்தும் தொங்கிடும் வேட்டி!

உழைப்பின் மிகுதியால் ஓதந் தாக்கிடும்

தலைப்புறம் மறைக்குமோர் தலைமுண் டாசு!

முண்டாசின் உட்புறம் கறுப்பும் வெளுப்புமாய்

உண்டு. இல்லை எனுமா றுரைக்குந் தலைமயிர்!

மொச்சைக் கொட்டைபோல் இருந்த பல்லெலாம்

பச்சுப் பச்சென விழுந்திட்ட பைவாய்!

வாய்மிசை மருங்கிலும் முகவாய்ப் புறத்திலும்

தோய்ந்த வெண்மயிர் துளிர்த்த ஒளிமுகம்!

தளர்ந்த மேனி; தளராத வீறு!

கிளர்ந்த நகைமுகம்; கிறக்கிடும் உரைத்திறன்

உருக்குலைத் திட்ட உடல்தான் என்னினும்

கருக்குலை யாத கழகத் தமிழ், அவர்!

சாறு பிழிந்த சக்கைதான் எனினும்

வீறு குறையாத் தீந்தமிழ் வேங்கை! 

பாரதி தாசனார் பாடல்கள் முற்றும்

ஊரதி ரும்படி உணர முழக்கித்

தெருத்தெரு வாகத் திண்ணை திண்ணையாய்த்

திருக்குறள் பயிற்றிடும் திறல்மிகு ஆசான்!

அலைவுறும் விழிகளால் அள்ளி விழுங்கி

உலைப்பட் டடைபோல் உருப்பல சமைக்கும்

அங்காந்த நெஞ்சம்! அயர்விலா விளைவு!

மங்காத உணர்வு! மலையாத துணிவு!

உருவுகண் டெள்ளாமை வேண்டும் என் குறட்கே

ஒருதனி உருவமாய் உலவுந் திருக்குறள்! 

சட்டைப் பையினுள் கைவிட் டெடுத்தால்

கற்றைப் பழந்தாள்; கணக்கிலாக் குறிப்புகள்!

கடைக்குறிப் பன்று! காலங் காலமாய்

இடையிடைக் கேட்டவை, எண்ணத் தெழுந்தவை,

பாக்களின் அடிகள், பற்பல கருத்துகள்,

நீக்கமற் றவரின் நினைவினில் தோய்ந்த

குறட்பா விளக்கம்-எனுந்தாட் குவியல்

வரவும் செலவும் சட்டைக்கு வாரா.

கைப்பிடி அறுந்து தொளையிட்டு முடிந்த

பையொன்று கையில்; அதனுள் பலபடி! 

மூர்த்திக் குப்பம் எனும்மூ தூரின்

சீர்த்திக் கிவருடைச் சிறப்பைக் கூறலாம்! 

அஞ்சற் காரராய் ஆற்றும் பணியுடன்

எஞ்சும் பொழுதெலாம் எந்தமிழ்த் தொண்டராய்

உலாவரு கின்றார்; ஊரவர் இவர்பால்

பலாப்பழந் தீக்களாய்ப் பறப்பதைப் பார்க்கலாம்! 

மடல்கள் கொடுப்பார்; மக்களைக் கண்டால்

சடக்கென இறக்குவார்; சாலையென் றாலும்,

சிற்றுண்டி, தேநீர்ச் சிறுகடை யெனினும்,

வெற்றிலை பாக்கு விற்பவர் என்னினும்,

அவலிடிக் கின்ற ஆயாள் எனினும்,

துவளாத நெஞ்சோடு துணிந்து, ஆங் கிறங்கி, 

நலங்கேட் பதுபோல் நாலைந்து குறட்பா

வலிந்து புகுத்தித், தமிழ்வர லாறு,

படிபடி என்னும் பாவேந்தர் பாடல்,

அடிதொறும் எதுகை அடுக்கி வரும், அவர்

சத்தி முத்தப் புலவரின் பாட்டுள்

ஒத்த நிகழ்ச்சிக் கோரிரண் டடிகள்

நொண்டி யடிப்பது போல் சில நொடிகள்

வண்டியை ஒருகையில் பிடித்த வாறே

கொட்டி விட்டுக் குபுக்கெனத் தாவி

ஒட்டு வண்டியை ஒட்டிச் செல்லுவார்!

தென்மொழிப் படைஞர்க்கு அடைவீடு அவர்மனை!

பன்மாண் திறலோ டிதழ்வினை பகிர்ந்து,

தேர்ந்து முடித்துத் திங்களில் ஒருமுறை-

காரியும் ஞாயிறும் கடற்கரை அடுக்கும்

முழுப்பொழு தெல்லாம் மூர்த்திக் குப்பம்

திருக்குறள் பெருமாள் சிறுகுடில் திண்ணை

தூளி படுக்கும்!

தென்மொழித் தம்பியர்

தோளொடு தோள்கள், தூய்தமிழ் நெஞ்சுகள்

கலந்துற வாடும் கருத்துப் பொழிவுகள்,

புலந்துண வுண்ணும் பொலிந்த காட்சிகள்,

நாட்டுதற் கியலா நாடக இலக்கியம்! 

ஊட்டுதற்கலையும் உள்ளமும் கையுமாய்

முப்பொழு திருப்பினும் முகங்கோ ணாத

குப்பம்மாள் எனும் குடித்தனக் காரிக்குச்

செப்பமாய் அமைந்த சிறப்பெலாம் என்னெனின்,

ஒப்புரைக் கில்லாத் தென்மொழி உழைப்பால்

உடலும் நெஞ்சமும் ஒருங்குறச் சோர்ந்து,

கடற்கரை நண்ணும் காலத்தி லெல்லாம்,

கையில் கிடைத்ததை, மடியில் நிறைத்ததை,

பையில், பானையில் கைவிட்டுத் துழவிக்

கொஞ்சங் கொஞ்சமாய்க் கூட்டிச் சேர்த்ததை

எஞ்சுத லின்றி எடுத்தெடுத் தீந்து

தென்மொழிக் குடும்பம் தின்று மகிழ்வதைத்

தன்விழிப் பருப்பால் தான்விழுங் குவதே! 

பெருமாள் பெற்ற பெருமை எல்லாம்

திருக்குறள் ஒன்று! தேய்விலா அன்பின்

குப்பம்மாள் எனும் குணக்குன்று ஒன்று!

தப்பில் லாமல் தமிழ்ப்பணி செய்யும்

திருக்குறள் பெருமாள் குடும்பம்

இருக்குநாள் எல்லாம் இருக்குமெந் தமிழே! 

-    பாவலரேறு பெஞ்சித்திரனார், கனிச்சாறு தொகுதி 3, பாடல் 132 

திருக்குறள் பற்றுடனும், தமிழ் உணர்வுடனும் வாழ்ந்த திருக்குறள் பெருமாள் 28.07.2005 இல் இயற்கை எய்தினார். புதுவையிலும் தமிழகத்திலும் வாழும் தமிழ் உணர்வாளர்களால்  இன்றும் இவரின் பணி நினைவுகூரப்படுகின்றது.

புதுவைத் தமிழறிஞர்கள் அனைவராலும் போற்றப்படும் திருக்குறள் பெருமாள் அவர்களின் புகழ்வாழ்க்கை நூற்றுப்பத்து ஆண்டுகளைக் கடந்துள்ளது. எனவே அவர் நினைவைப் போற்றும் வகையில் அவர் பெயரை ஏதேனும் ஒரு நிறுவனத்திற்குச் சூட்டி, அவர் பணிகளை என்றும் நிலைநிறுத்துவது  கற்றறிந்தோர் கடமையாகும்.


  மூர்த்திக்குப்பத்தில் உள்ள திருக்குறள் பெருமாள் வீடு(இன்றையத் தோற்றம்)

பெருமாள் பிறப்புச்சான்று

திருக்குறள் பெருமாள் திருமண அழைப்பிதழ்

குப்பம்மாள், மு.இளங்கோவன், பெ. புகழேந்தி


மு.இளங்கோவன், குப்பம்மாள்


திருக்குறள் பெருமாள் தொண்டர்படைச் சான்றிதழ்


திருக்குறள் பெருமாள் இறுதிச்சடங்கு அழைப்பு


 

நன்றி:

திரு. பெ. சூரியநாராயணமூர்த்தி

திரு. பெ. புகழேந்தி

திரு. திருநாவுக்கரசு (நண்பர்கள் தோட்டம்)

மும்பையில் கிடைத்த நெல்லை இரா. சண்முகம்(கோலாலம்பூர்) ஆவணங்கள்…

  

படத்தில்: தமிழப்பன், தமிழம்மாள், நெல்லை இரா.சண்முகம், அழகம்மாள், 
இலட்சுமி அம்மாள்

[நெல்லை இரா. சண்முகம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள அங்கமங்கலத்தில் பிறந்து கோலாலம்பூரில் வாழ்ந்தவர். தமிழறிஞர். பன்னூலாசிரியர். இரண்டாம் உலகப் போரின் பொழுது, நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்துக்காக வானொலி வழியாக எழுச்சியுரையாற்றி இளைஞர்களை இராணுவத்தில் சேர்வதற்கு ஊக்கப்படுத்தியவர். தந்தை பெரியார், தமிழவேள் கோ. சாரங்கபாணி, வினோபா பாவே (Vinoba Bhave) உள்ளிட்ட தலைவர்களுடன் பழகியவர். தொல்காப்பியச் சிறப்புரைக்கும் நூலெழுதிய பெருமைக்குரியவர். இவர்தம் வரலாற்றை அறிவதற்கு மும்பை சென்று ஆவணங்களைத் திரட்டிய முயற்சி இப்பதிவில் இடம்பெற்றுள்ளது]

மும்பையில் வாழ்ந்துவரும் பொறியாளர் சு. குமணராசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தொல்காப்பியத் திருவிழாவில்(25,26-01.2025) கலந்துகொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வானூர்திச் சீட்டினைப் பதிந்திருந்தேன். அந்த நேரத்தில்தான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்) அவர்களைப் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாகத் தெரியவந்தன

என் நண்பர் சித்தநாதபூபதி அவர்கள் வழியாக இரா. சண்முகம் அவர்கள் பிறந்து, வாழ்ந்த திருச்செந்தூருக்கு அருகில் உள்ள அங்கமங்கலம் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அந்த ஊர்தான் தொல்காப்பியத் தொண்டர் இரா. சண்முகனாரின் சொந்த  ஊராகும்.  திருச்செந்தூரில் வட்டாட்சியர் பணியில் உள்ள இரா. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பேருதவியால் அங்கமங்கலம் சென்றதும், சண்முகனாரின் குடிவழியினரைச் சந்திப்பதும் எளிதாக இருந்தது. இரா. சண்முகனாரின் இரண்டாம் மகளார் அழகம்மாள் மற்றும் உறவினர்கள் பொங்கல் திருவிழாவுக்காகப் பிறந்த ஊர் வந்திருந்தனர். அவர்களுடன் உரையாடிய பொழுது, இரா. சண்முகனாரின் தங்கைவழிப் பெயரன் மும்பையில் வாழ்ந்து வருவதாகவும் அவர் பெயர். . இளங்கோவன் என்பதும் தெரியவந்தது. அவரின் தொடர்புஎண்ணைப் பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினேன்

இரா. சண்முகனாரின் தமிழ்ப்பணிகளால் ஈர்ப்புண்டு கிடந்த நான் அவர்தம் வாழ்க்கையைக் குறித்து, தெரிந்த – அறிந்த  விவரங்களைக் கொண்டு ஒரு நினைவோட்ட உரையை வரைந்து என் வலைப்பதிவில் முன்பொருநாள் பதிந்தேன். வெளியிட்ட ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு, என் முயற்சியைப் பாராட்டியவண்ணம் இருந்தனர். அவ்வாறு திருவாளர் நீலகண்டன் ஐயா வரைந்தனுப்பிய பாராட்டுக் குறிப்பு இது

அடர்ந்த ஆளரவமற்ற வனத்தில் கிடைத்தற்கரிய ஒரு மூலிகைச் செடியினைத் தேடித் தேடி அயராது அலைகிற அர்ப்பணிப்பினை உங்களில் (கண்டு)வியக்கிறேன். தமிழ்த் தாய்க்கு(ப்) பெரும் பேறு” (19.01.2025). 

தொலைபேசியிலும், புலனத்திலும் நண்பர்கள் பாராட்டிய வகையில் கிடைத்த ஊக்கமொழிகளால் இரா. சண்முகனார் குறித்துத் தேடும் ஆர்வம் மேலும் பன்மடங்கு உயர்ந்தது. அந்த நிலையில்தான் வலைப்பதிவில் நான் எழுதியதைப் படித்து, மும்பையிலிருந்து இளங்கோவன் அவர்கள் தொலைபேசியில் அழைத்து, உரையாடி, இரா. சண்முகனார் குறித்து நான் தேடியலைந்து விவரம் திரட்டியமைக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன், தம்மிடம் மேலும் சில படங்களும், விவரங்களும் உள்ளன என்று குறிப்பிட்டதுடன் ஓரிரு படங்களை எனக்கு அனுப்பியும் வைத்தார்

அவருடன் அமைந்த உரையாட்டின்பொழுது, நான் மும்பைக்குத் தொல்காப்பியத் திருவிழாவுக்கு வர உள்ளமையைத் தெரிவித்தேன். அதுபொழுது அவரைச் சந்திக்க விரும்புகின்றமையையும் எடுத்துரைத்தேன். மும்பை . இளங்கோவனார் என்னைக் கண்டு உரையாட ஆர்வமாக இருப்பதைத் தெரிவித்ததுடன், வாய்ப்பு அமைந்தால் வானூர்தி நிலையத்தில் வரவேற்க ஆர்வமாக இருப்பதையும் தெரிவித்தார். அவருக்குத் தொல்லை தர விரும்பாமையால் நான் நேரடியாக விழாக்குழுவினரின் ஏற்பாட்டில்மும்பை  வானூர்தி நிலையத்திலிருந்து, நிகழ்வு நடைபெற உள்ள இடத்துக்கு அருகில் உள்ள விடுதிக்குச் சென்றேன்

மும்பை சென்ற என்னைக் காரை. இரவீந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். காரைக்குடியைச் சேர்ந்த காரை. இரவீந்திரன் நீண்ட காலமாக மும்பையில் தங்கியுள்ள தமிழ் ஆர்வலர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய பட்டறிவு கொண்டவர். மிகச் சிறந்த பண்பாளர் என்பதை உரையாடலின்வழித் தெரிந்துகொண்டேன். இருவரும் செட்டிநாட்டு விருந்தோம்பல் சிறப்பைப் பற்றி உரையாடியவண்ணம் மும்பையில்வாசி” என்னும் நகரப் பகுதிக்குச் சென்றோம். அங்குதான் தமிழ்த்தொண்டர் சு. குமணராசனாரின் அலுவலகம் உள்ளது

நாங்கள்வாசி”ப் பகுதியை அடைவதற்கும் குமணராசனார் தம் அலுவலகம் வருவதற்கும் சரியாக இருந்தது. நிகழ்ச்சிக்கு முதல்நாளும் நிகழ்ச்சி நாளன்றும் அனைவரும் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டோம். முதலில் நிகழ்ச்சி நடைபெற உள்ள தமிழ்ச்சங்கம் சென்று, அரங்கத்தைப் பார்வையிட்டோம். அடுத்ததாக என் கைச்சுமையை விடுதியில் வைத்துவிட்டு, தொல்காப்பிய ஆவணங்களைக் காட்சிக்கு வைப்பதற்கு உரிய வகையில் சு. குமணராசன் அவர்களிடம் ஒப்படைத்தேன். நெல்லை இரா. சண்முகனாரின் வாழ்க்கைக் குறிப்பைத் தேடி, . இளங்கோவன் ஐயாவைச் சந்திக்க விரும்பும் என் விருப்பத்தைச் சு. குமணராசன் அவர்களிடம்  தெரிவித்தேன். ஐயாவிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு, . இளங்கோவன் அவர்களுக்கு  என்னை வந்து, அழைத்துக்கொண்டு, அவர் இல்லம் செல்லுமாறு வேண்டிக்கொண்டேன்

திருவாளர் . இளங்கோவனார் அவர்கள் சற்றொப்ப இரண்டு மணிநேரத்தில் விடுதிக்கு வந்து தம் மகிழுந்தில் என்னை அழைத்துக்கொண்டு அவர் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.  மும்பையில் பரந்து விரிந்திருக்கும் சாலையோரங்களில் மிகப்பெரிய அடுக்குமாடி வீடுகளும், வளமனைகளுமாகக் கண்ணில் தென்பட்டன. சாலையெங்கும் இந்தி எழுத்துகளே மின்னி மிளிர்ந்தன. போக்குவரவு நெருக்கடி மிகுதியாக இருந்தது. மக்கள் அனைவரும் சாலை நெறிமுறைகளைப் பின்பற்றியமை மகிழ்ச்சியளித்தது. மகிழுந்துகளும், இரு சக்கர வண்டிகளும் சாலையோரத்தில் முறையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  

நாங்கள் . இளங்கோவன் அவர்களின் இல்லத்துக்குச் செல்வதற்குச் சற்றொப்ப நான்கு மணி நேரம் ஆனது. இரண்டு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவுதான் என்றாலும் நடுவண் அமைச்சர் ஒருவரின் வருகையால் சாலைகளில் போக்குவரவு மாற்றப்பட்டிருந்தது. மாலைநேரத்தில் அலுவலகம் முடிந்து அனைவரும் வீடு திரும்புவதும் இணைந்துவிட்டதால் போக்குவரவின் கடும் நெருக்கடியில் சிக்கிச், சென்றுகொண்டிருந்தோம்

நான்கு மணிநேரப் பயணத்தையும் பயனுடையதாக அமைத்துக்கொள்ளும் வகையில் . இளங்கோவன் அவர்களுடன் மகிழுந்தில்  அமர்ந்தபடி உரையாடி, நெல்லை இரா. சண்முகம் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பை ஓரளவு அறிந்துகொண்டேன்

இரா. சண்முகம் அவர்களை அவர்களின் தாய்மாமன் மலேசியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது சற்றொப்ப இருபத்தைந்து வயதுடையவராக இரா. சண்முகம் இருந்திருக்கலாம். அதன் பிறகு இரா. சண்முகம் தம் உறவினர்களை ஒவ்வொருவராக மலேசியாவுக்கு அழைத்துச்சென்று, கடைகளில் பணிபுரிய வாய்ப்பமைத்தார்

இரா. சண்முகம் அவர்களுக்கு வேலு என்ற தம்பியும் பிரமு அம்மாள் என்ற தங்கையும் இருந்தனர். இரா. சண்முகம் அவர்களுக்கு ஒரே மகன் தமிழப்பனும், மகள்களாகத் தமிழம்மாளும், அழகம்மாளும் பிள்ளைச் செல்வங்களாய் வாய்த்தனர். அதுபோல் வேலு அவர்களுக்குத் தமிழ்ச்செல்வம், முருகேசன், சுதந்திரம், தமிழரசன், பூங்கொடி என்று ஐந்து பிள்ளைச் செல்வங்கள் வாய்த்துள்ளனர். பிரமு அம்மாவுக்கு வைணவப்பெருமாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். முதல் பிள்ளை பெண்பிள்ளை ஆகும். அடுத்துக் கல்யாணசுந்தரம், அருணாசலம், செல்வராஜ் ஆகியோர் பிறந்தனர். 

1935 அளவில் தம் தங்கை மகன் கல்யாணசுந்தரத்தை இரா. சண்முகம் அழைத்துச் சென்று மலேசியாவில் பணியில் அமர்த்தினார். இவர்களின் கடை கோலாலம்பூர் நகரில் சிறப்பாக இயங்கியுள்ளது. நல்ல வருவாயும் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. அந்த நாளில்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது(1941 அளவில்). சப்பானியப் படைகள் மலேசியாவைக் கைப்பற்றின. மலேசியாவும் சிங்கப்பூரும் அப்பொழுது ஒரே நாடாக இருந்தன. சப்பானியர்கள் நம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்துக்கு ஆதரவாக இருந்தனர். சிங்கையிலும் மலேசியாவிலும் இருந்த தமிழர்கள்இந்தியர்கள் பெருமளவு நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து, அந்நாளில் போர்ப் பயிற்சி பெற்றனர்

இரா. சண்முகம், நடுவில் உறவினர், வலப்பக்கம் கல்யாணசுந்தரம்

இந்திய தேசிய இராணுவத்தில் (INA) இளைஞர்கள் இணைந்து இந்திய விடுதலைப்போருக்குப் பணிபுரிவதற்கு வானொலி வழியாக உரையாற்றி, இளைஞர்களை ஈர்த்தவர் நம் இரா. சண்முகம் என்ற செய்தியை இளங்கோவன் பகிர்ந்துகொண்டார். 1942 முதல் 1945 வரை இந்தப் பணியை இரா. சண்முகம் மேற்கொண்டிருக்கு வாய்ப்பு உண்டு. மேலும் க. இளங்கோவனின் தந்தையார் வை. கல்யாணசுந்தரம் அவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் பயிற்சிபெற்ற வீரர் என்ற செய்தியையும் பகிர்ந்துகொண்டார். இவர்களின் படங்கள் தம் இல்லத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியதால் என் மும்பைப் பயணம் பயனுடையதாக அமைந்துள்ளது  என்று நினைத்து ஊக்கம்பெற்றேன். 

. இளங்கோவன் அவர்கள் தம் தந்தையார் கல்யாணசுந்தரம் மலேசியாவில் பணிபுரிந்த சூழலையும், தம் குடும்பத்தை வளர்த்தெடுக்க கல்யாணசுந்தரம் எடுத்த முயற்சிகளையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். தம் தந்தையார் கல்யாணசுந்தரம் - தாயம்மாள் இணையரின் திருமணம் அங்கமங்கலத்தில் நடைபெற்றதையும்  நாங்கள் ஐந்து  பிள்ளைகள் (1.கோபால் 2. பூங்கோதை, 3. இளங்கோவன், 4. தமிழ்ச்செல்வி, 5. மதியழகன்) என்பதையும் என்னிடம் தெரிவித்தார். அனைவரும் அங்கமங்கலத்தில் பிறந்து கல்வி கற்றோம் என்று க.இளங்கோவன் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். மலேசியாவிலிருந்து கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அங்கமங்கலம் வந்தமையையும், ஓராண்டு வரை ஊரில் தங்கியிருந்துவிட்டு, மீண்டும் மலேசியா செல்வதையும் வழக்கமாகக் கொண்டவர். இறுதியாக 1999 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து திரும்பிய கல்யாணசுந்தரம் பின்னாளில் இயற்கை எய்தினார் என்ற விவரத்தையும் அவர் வழியாகத்  தெரிந்துகொண்டேன். மேலும் தாம் மும்பையில் கப்பல் பொறியியல் துறைசார்ந்த பணியில் முப்பதாண்டுகள் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றிய திறனையும் பகிர்ந்துகொண்டார். முன்பு தாம் மும்பையின்வாசி” என்ற பகுதியில் குடியிருந்ததையும் பின்னர் இப்பொழுது மேற்குப் போரிவலி (Borivali West) என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியுள்ளதையும் பகிர்ந்துகொண்டார்

நெல்லை இரா. சண்முகம், தந்தை பெரியார்(மலேசியா)



தந்தை பெரியாருடன் இரா. சண்முகம் உள்ளிட்ட தமிழன்பர்கள்(மலேசியா)

இரா. சண்முகனார் மலேசியாவில் வாழ்ந்தபொழுது, தந்தை பெரியார் மலேசியாவுக்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்துள்ளார். தந்தை பெரியார் அவர்களை  வரவேற்ற மலேசிய அன்பர்களில் நம் இரா. சண்முகனாரும் முதன்மையானவராக இருந்துள்ளார். தந்தை பெரியாருடன் இரா. சண்முகனார் அமர்ந்து எடுத்துக்கொண்டுள்ள படம் இதற்குச் சான்று என்று குறிப்பிட்டார். மேலும் அன்னை மணியம்மையார், தந்தை பெரியார், மலேசியத் தமிழன்பர்கள் அனைவரும் இயல்பாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபொழுது எடுக்கப்பட்ட படம் ஒன்று எங்கோ இடம் மாறி உள்ளது என்ற விவரத்தையும் சொன்னார்

பூமிதான இயக்கத் தலைவர் வினோபா பாவே (Vinoba Bhave) அவர்கள் தமிழகம் வந்தபொழுது திருச்செந்தூருக்கு அருகில் உள்ள குரும்பூரை அடுத்த அங்கமங்கலத்திற்கு வந்ததாகவும், தம் தாத்தா இரா. சண்முகனாரை இல்லம் தேடிவந்து வினோபாவா பார்த்து, இருவரும் உரையாடி மகிழ்ந்தனர் என்ற விவரத்தையும் க.இளங்கோவன் என்னிடம் பகிர்ந்துகொண்டார்

இரா. சண்முகனாரின் பரந்துபட்ட குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் அவர்கள் பணியின் பொருட்டுப் பல ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பது பற்றியும் அறிந்துகொண்ட நிறைவில் அவர் எழுதிய நூல்கள் ஏதேனும் இருப்பில் உள்ளதா? என்று கேட்டபொழுது, யாரிடமும் நூல்கள் இல்லை என்று குறிப்பிட்டார். நீண்ட உரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது க. இளங்கோவன் ஐயாவின் வீடு கண்ணில் தென்பட்டது…. 

பயணக்களைப்பால் இருவரும் சோர்ந்திருந்தோம். ஏழாம் தளத்தில் இருந்த இல்லம் சென்று, முகம் கழுவி, சோர்வு நீக்கினோம். ஓரிரு ஆரஞ்சுப் பழங்களை உரித்து, நீர்வேட்கையைத் தணித்துக்கொண்டேன். அதற்குள் மிகச் சிறந்த தேநீர்க் குவளையுடன் இளங்கோவன் வந்து அமர்ந்தார். தேநீரைச் சுவைத்து மகிழ்ந்தோம். என் கவனம் முழுவதும் இரா. சண்முகனார், வை. கல்யாணசுந்தரம் ஆகியோரின் படங்களைப் பார்ப்பதில்தான் இருந்தது. தம் மடிக்கணினியை எடுத்து, அதில் இருந்த படங்களை ஒவ்வொன்றாகக் காட்டி, இரா. சண்முகனாரின் வாழ்வியலையும் பணிகளையும் உயிரோட்டமாக எனக்கு விளக்கினார். அந்தப் படங்களை எனக்கு வழங்கியுதவுமாறு கேட்டுக்கொண்டேன். முழு மனத்துடன் வழங்கி என் ஆய்வு முயற்சியையும் தேடலையும் ஊக்கப்படுத்தினார். ஒரு மணி நேரம் தங்கியிருந்தோம். இரவு உணவுக்கு ஒரு விடுதிக்குச் சென்றோம். அரேபிய உணவு ஒன்றை அறிமுகப்படுத்தி, உண்ணச்செய்தார். உண்டு மகிழ்ந்தோம். என் ஆய்வுக்கு வேண்டிய விவரங்களைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் நவி மும்பை நோக்கி இரவு 11 மணியளவில் புறப்பட்டோம். 

நள்ளிரவுப் பொழுதானதால் இப்பொழுது சாலைகள் நெருக்கடி இல்லாமல் ஒரளவு இடைவெளியாக இருந்தன. நாங்கள் மீண்டும் உரையாடலைத் தொடர்ந்து, பேசியபடியே நவி மும்பை நோக்கி வந்தோம். நான் தங்கியிருந்த நவி மும்பை விளையாட்டுக் கழகத்துக்கு (Sports Association) உரிமையான விடுதியை அடையும்பொழுது நள்ளிரவு 12.30 மணியாகும். க. இளங்கோவன் அவர்கள் என்னைப் பாதுகாப்பாக விடுதியில் கொண்டு வந்து சேர்த்த மனநிறைவுடன் தம் இல்லத்துக்கு மீண்டும் பயணமானார். நான் மறுநாள் பேசுவதற்கு உரிய குறிப்புகளையும், கவியரங்கில் பாடுவதற்குரிய கவிதைகளையும் எழுதத் தொடங்கினேன்…

மு.இளங்கோவன், க. இளங்கோவன்


ஆவணங்களைப் பார்வையிடும் மு.இளங்கோவன்

மும்பையில் நடைபெற்ற தொல்காப்பியத் திருவிழா!

 

முகப்புப் பதாகை

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் அவர்கள் தொல்காப்பியக் கண்காட்சியைப் பார்வையிடுதல். அருகில் சு. குமணராசன், மு. இளங்கோவன்



மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன் அவர்கள் தொல்காப்பியக் கண்காட்சியைப் பார்வையிடுதல். அருகில் சு. குமணராசன், மு.இளங்கோவன்

    மும்பையில் அமைந்துள்ள இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் தொல்காப்பியத் திருவிழா  2025, சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் நடைபெற்றது. மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பல்வேறு தமிழமைப்புகளின் பொறுப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பெரிய அளவில் வருகைபுரிந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை “இலெமுரியா” நிறுவுநர் சு. குமணராசன் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். 

நவி மும்பை, வாசி, திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள  நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் முதல் தளத்தில் தொல்காப்பியக் கண்காட்சியும், இரண்டாம் தளத்தில் உள்ள ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அரங்கில் தொல்காப்பியத் திருவிழாவும் இரண்டுநாள் நடைபெற்றன.  

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொல்காப்பியக் கண்காட்சியைத் திறந்துவைத்து, அமைப்பாளர்களைப் பாராட்டினார். மேலும் தொல்காப்பியத்தின் சிறப்புகளை எடுத்துரைத்துத் தலைமையுரை ஆற்றினார். காரைக்குடி சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சேது குமணன் கலந்துகொண்டு மும்பையிலிருந்து வெளிவந்து, இடையில் நின்றுபோன தமிழ் இலெமுரியா இதழின் சிறப்புகளை எடுத்துரைத்து, மீண்டும் இந்த இதழைக் கொண்டவர வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்தார். 

பொறியாளர் சு. குமணராசன் எழுதிய Classical Tamil Literature: An Introduction  நூலும், முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொடரும் தொல்காப்பிய மரபு என்னும் நூலும் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டன. 

மு. இளங்கோவனைச் சிறப்பிக்கும் மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் அவர்கள். அருகில் சு. குமணராசன், முனைவர் சேது குமணன்.

மாணவர்களுக்குத் தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டி இந்த நிகழ்வை ஒட்டி  நடைபெற்றது. மும்பையில் பயிலும் தமிழ் மாணவர்கள் அறிவார்ந்த தலைப்புகளில் உரையாற்றிப் பரிசுகளைப் பெற்றனர். மேலும் பார்வையாளர்களுக்கான தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் அரங்கினரை மகிழ்ச்சிப்படுத்தின. பிறமொழியைக் கலவாமல் தூய தமிழில் பேசியவர்களுக்குப் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் நிறைவாக அரங்கில் உரையாற்றியவர்கள் பயன்படுத்திய பிறமொழிச் சொற்களுக்கு உரிய தனித்தமிழ்ச் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

இந்த நிகழ்வின் ஒரு கூறாகப் பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கும் மும்பைத் தமிழ்ப்பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன், மும்பை காவல்துறையின் இணைக் காவல் ஆய்வாளர் (நிர்வாகம்), சூ. ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். 

அறிஞர் சீனிவாசன் அவர்களுக்குத் தொல்காப்பிய விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுதல்.

இலெமுரியா அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் சீனிவாசன் அவர்களுக்கு இருபத்தைந்தாயிரம் உருவா விருதுத்தொகையுடன் தொல்காப்பிய விருது வழங்கிப் பாராட்டப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் எட்டுத்தொகை என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. முனைவர் மு. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில், கவிஞர் புதிய மாதவி, கவிஞர் இறை ச. இராசேந்திரன், கவிஞர் இராசு. மாதவன், கவிஞர் பிரவீனா சேகர், கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன், கவிஞர். வ. ரா. தமிழ்நேசன், கவிஞர் நெல்லைப் பைந்தமிழ், புலவர் கார்த்தியாயினி ஆகியோர் எட்டுத்தொகை நூல்களின் சிறப்புகளை மிகச் சிறப்பாகக் கவிதையில் பாடினர். 

இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவுநர் சு. குமணராசன் தலைமையில் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட முனைவர் இ. வளனறிவு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் என்ற தலைப்பிலும் முனைவர் மு. இளங்கோவன் தொல்காப்பியம் - சொல்லதிகாரம் என்ற தலைப்பிலும் முனைவர் அரங்க. மல்லிகா தொல்காப்பியம் - பொருளதிகாரம் என்ற தலைப்பிலும் உரையாற்ற்றினர். 

இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியாகப் பரிசுபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், தமிழ்த்தொண்டு, சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

கண்காட்சியைப் பார்வையிட்டோர்(குழுப்படம்)


தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி

தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி


கண்காட்சியைப் பார்வையிடுவோர்


மாணவர்களின் நாட்டியம்

தொல்காப்பியம் குறித்து உரையாற்றிய அரங்க. மல்லிகா, இ. சூசை, மு.இளங்கோவன் சிறப்பிக்கப்படுதல்


பார்வையாளர்கள்


பரிசுபெறும் மாணவர்கள்

பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்ற மாணவி

"தொல்காப்பியத் தொண்டர்" நெல்லை இரா. சண்முகம் – கோலாலம்பூர் (1901 – 1983)

 

நெல்லை இரா. சண்முகம், கோலாலம்பூர் 

["தொல்காப்பியத் தொண்டர்" இரா. சண்முகம் நெல்லை மாவட்டம் குறும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் பிறந்து, கோலாலம்பூரில் வாழ்ந்தவர். தமிழ்ப்பற்றாளர்; திராவிட இயக்க உணர்வினர். தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். இவரின் கட்டுரைகள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு இதழில் வெளிவந்தவை. மலேசிய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கியவர்; தமிழ்நெறித் திருமணங்களை நடத்தியவர். இரா. சண்முகம் அவர்களின் மகன் மருத்துவர் தமிழப்பன் விருதுநகரை அடுத்த குன்னூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றியபொழுது பாம்பு கடித்து இறந்தமையால், அறிஞர் இரா. சண்முகனாரின் குடும்பம் பெருந்துயரத்தைச் சுமந்தது]

கனடாவில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில்(2024) தொல்காப்பியக் கண்காட்சி நடத்துவதற்குத் தொல்காப்பிய அறிஞர்களைப் பற்றிய ஆவணங்களைத் திரட்டும் பெரும்பணியில் நான் ஈடுபட்டிருந்தபொழுதுதொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம்” (1957) என்னும் நூலைக் கண்ணுறும் வாய்ப்பு அமைந்தது. அந்த நூலின் ஆசிரியர் நெல்லை இரா. சண்முகம், கோலாலம்பூர் என்று பெயர் இருப்பதைப் பார்த்து வியப்புற்றேன். உடனடியாக, மலேசியாவில் வாழும் ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களிடத்தும், எழுத்தாளர் நவீன் அவர்களிடத்தும் ஊடகவியலாளர் செ. குணாளனிடத்தும், இசைத்தென்றல் மாரியப்பனாரிடத்தும், இன்ன பிற தமிழார்வலர்களிடத்தும் இரா. சண்முகம் ஐயாவின் பெயரைக் குறிப்பிட்டு, தொல்காப்பியர் தமிழ் நிலையம், 126, பெரிய தெரு, கோலாலம்பூர், மலேயா என்னும் முகவரியில் வாழ்ந்துள்ள இப்பெருமகனாரைக் குறித்த மேலதிக விவரம் வேண்டும் என்று கேட்டேன். இரா. சண்முகம் ஐயாவைப் பற்றி முதலில் யாருக்கும் தெரியவில்லை. சில மணித்துளிகளில் இசைத்தென்றல் மாரியப்பனார் மட்டும் தொடர்புகொண்டு, மலேசியாவில் இரா. சண்முகம் ஐயா தமிழ்ப்பற்றுடன் வாழ்ந்துள்ளமையை அங்குள்ள அன்பர்களிடத்து வினவி, உறுதிப்படுத்தினார்கள். 

தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம்”  என்ற அந்த நூலின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள பினாங்கு அன்பர் கே. ஏ. பண்டிதர் குறித்து, என் பினாங்கு நண்பர் செ. குணாளன் அவர்களிடத்து மேலதிக விவரம் வேண்டினேன். அதன் வழியாக இரா. சண்முகம் ஐயா பற்றி அறியலாம் என்பது என் நோக்கமாக இருந்தது. நண்பர் குணாளனும் பண்டிதர் குறித்த தொடர்பினை அறிய, அவரின் பெயரன் அம்பிகாபதி அவர்களுடன் எனக்குத் தொடர்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் பயன் கிட்டவில்லை. 

தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் நூலில், இந்நூல் கிடைக்குமிடம் என்று, “தொல்காப்பியர் தமிழ் நிலையம், அங்கமங்கலம், குறும்பூர் அஞ்சல், திருநெல்வேலி” என்று ஒரு முகவரி இருந்தது. இது இரா. சண்முகம் ஐயாவின் ஊர் முகவரியாக இருத்தல் வேண்டும் என்னும் நோக்கில் நெல்லையில் வாழ்ந்துவரும் பேராசிரியர் பா. வளன் அரசு அவர்களிடம் விவரம் கேட்டேன். அவர்களுக்கு இரா. சண்முகம் பற்றிய அறிமுகம் இல்லை. அதனை அடுத்து, நெல்லை அன்பர் முனைவர் வே. ஆனந்தன் அவர்களிடம் குறும்பூர் அடுத்துள்ள அங்கமங்கலத்தில் இரா. சண்முகம் ஐயாவின் உறவினர்கள் யாரேனும் உள்ளனரா? என்று வினவிப்பார்க்குமாறும், தொடர்பு எண், முகவரி கிடைத்தால் அனுப்புமாறும் சொல்லியிருந்தேன். 

அருந்தமிழ்ப் பற்றாளரான வே. ஆனந்தன், அடுத்த சில மணி நேரத்தில், அங்கமங்கலத்தில் வாழ்ந்து வரும் இரா. சண்முகம் ஐயாவின் தம்பி மகன் வழியில் அமைந்த பேரனான மு. பாலகுமார் அவர்களின் தொடர்பு எண்ணை அனுப்பினார்கள். திருவாளர் மு. பாலகுமாரிடம் பேசும்பொழுது, இரா. சண்முகம் ஐயாவைப் பற்றிய விவரங்கள் தெரியத்தொடங்கின. இரா. சண்முகம் ஐயாவுக்கு மருத்துவர் ச. தமிழப்பன், ச. தமிழம்மாள், ச. அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி என்னும் மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர் எனவும் அதில் தலைமகனார் மருத்துவர் ச. தமிழப்பன் அவர்கள் மருத்துவப் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது பாம்பு கடித்து, இறந்துவிட்டார் என்ற விவரமும் தெரிந்தது. 

மருத்துவர் ச.தமிழப்பன்
தமிழம்மாள்


அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி

தலைமகனார் மருத்துவர் ச. தமிழப்பன் பாம்பு கடித்து இறந்த சோகத்தில் இரா.சண்முகம் அவர்களின் ஒட்டுமொத்த வளமார்ந்த குடும்பமும் நிலைகுலையத் தொடங்கியது என்ற விவரங்களை அறிந்து எனக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இவற்றைத் தவிரப் பிற விவரங்கள் எதனையும் அவர்களிடமிருந்து என்னால் பெறமுடியவில்லை. தமிழறிஞர் ஒருவரின் குடும்பக் கோபுரம் ஒன்று இவ்வாறு சரிந்து, நிலைகுலைந்தமை என் நெஞ்சை வாட்டத் தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களாக இரா. சண்முகம் ஐயாவின் பெரும்பணியை அறிந்துகொள்ள  அவர்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டத் தொடங்கினேன். 

இரா. சண்முகம் ஐயா சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு ஏட்டில் பல கட்டுரைகளை 1951-1952 ஆண்டுகளில் எழுதியுள்ளார் என்பது அறிந்து அந்த ஏடுகளைப் பார்ப்பதற்குச் சிங்கப்பூர் அன்பர் எம். இலியாஸ் அவர்களைத் தொடர்புகொண்டேன். அவரின் வழிகாட்டலின்படி தமிழ் முரசு பழைய ஏடுகளைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதுபோல் மலேசியா, கோலாலம்பூரில் வாழ்ந்த “சுதந்தர இந்தியா” நாளிதழ் ஆசிரியர் சி. வீ. குப்புசாமி அவர்கள் நம் இரா. சண்முகம் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளமையை அறிந்து அவரைப் பற்றி அறியும் முயற்சியும் நடந்தது. குப்புசாமியார் பற்றியும் விரிவாக அறியமுடியவில்லை. 

இரா. சண்முகம் ஐயாவின் மகனார் மருத்துவர் தமிழப்பன் அவர்களின் மறைவு அவர் குடும்பத்தை எவ்வாறு தாக்கியதோ அதுபோல் ஈடுசெய்ய இயலாத அவரின் இழப்பு என் மன அமைதியையும் கெடுத்தது. மருத்துவர் தமிழப்பன் எங்கு இறந்தார்? எந்த ஆண்டில் இறந்தார்? மருத்துவக் கல்வியை எங்குப் பயின்றார்? அவருடன் பயின்றவர்கள் – பணியாற்றியவர்கள் யாரேனும் உள்ளனரா? என்று தேடிக்கொண்டிருந்தேன். இரா. சண்முகனார் குறித்தோ, மருத்துவர் தமிழப்பன் குறித்தோ உரிய விவரங்கள் அவர் குடும்பத்தினருக்குச் சரியாகத் தெரியாமல் இருந்தன.

மருத்துவர் தமிழப்பன் குன்னூரில் இறந்தார் என்றும் அவருக்கு அந்த ஊர் மருத்துவமனையில் சிலை ஒன்று உள்ளது என்றும் ஒரு செய்தியைக் குடும்பத்தினர் பொதுவாகச் சொன்னார்கள். ஊட்டியை அடுத்த குன்னூரில் உள்ள மருத்துவமனையில் வினவிப்பார்த்தேன். அங்கு அதுபோல் சிலை எதுவும் இல்லை என்றனர். இராமநாதபுரத்தை அடுத்துள்ள குன்னூர் என்று குடும்பத்தில் ஓரிருவர் தெரிவிக்க, அங்கும் வினவினோம். அங்கும் விவரம் கிடைக்கவில்லை. சென்னையை அடுத்துள்ள குன்னூர் என்றதால் அங்கும் வினவினோம் அங்கும் தமிழப்பன் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. பின்னர்தான் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலை அடுத்த குன்னூர் என்ற ஊரில்தான் மருத்துவர் தமிழப்பன் பணியாற்றினார் என்ற விவரம் தெரிய வந்தது. 

துபாய் நாட்டில் பணியாற்றிவரும் என் அருமை நண்பர் பொறியாளர் சித்தநாதபூபதியிடம் தொடர்புகொண்டு, விருதுநகரை அடுத்துள்ள குன்னூரில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் உள்ளனரா? என்று வினவினேன். மருத்துவர் தமிழப்பன் குறித்த விவரம் தெரிவித்து மேலதிக விவரம் தெரிந்துகொள்ளும் என் விருப்பதைத் தெரிவித்தேன். என் நண்பர் சித்தநாதபூபதி அவர்கள் மருத்துவர் அந்த ஊரில்தான் பணியாற்றினார் என்ற விவரத்தை அவர்தம் உறவினர் வழியாக ஒரு மணி நேரத்தில் அறிந்து உறுதிப்படுத்தினார். மருத்துவருக்கு அங்குச் சிலை இல்லை எனவும், மாறாக ஒரு புகைப்படம் மட்டும் குன்னூர் அரசு மருத்துவனையில் இருந்தது எனவும் இப்பொழுது பராமரிப்புப் பணிக்காக அந்தப் படமும் கழற்றி வைக்கப்பட்டுள்ளது எனவும் அறிந்துகொண்டேன். 

அடுத்து மருத்துவர் தமிழப்பன் தம் மருத்துவப் படிப்பை எங்குப் படித்தார்? என்று வினவியபொழுது அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றவர் என்ற விவரம் தெரிந்தது. தஞ்சையில் உள்ள மருத்துவ வல்லுநர் குலாம் மொகைதீன் அவர்களிடம் தொடர்புகொண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் 1965- 1968 காலகட்டத்தில் மருத்துவம் பயின்ற மருத்துவ மாணவர்களுள் தமிழப்பன் பற்றி அறிந்தோர் யாரேனும் உள்ளனரா? என்று வினவிப் பார்த்தேன். மருத்துவர் குலாம் மொகைதீன் அவர்களும் தம் மருத்துவத் துறை தொடர்புகொண்டு, மருத்துவர் தமிழப்பன் அவர்களைப் பற்றி அறிவதற்குரிய முயற்சியில் துணைநின்றார். பயனொன்றும் விளையவில்லை. 

இரா. சண்முகம் ஐயாவின் உறவினர் பெங்களூரில் வாழ்ந்துவரும் திரு. சுதந்திரம் அவர்களிடம் உரையாடியபொழுது, மருத்துவர் ச. தமிழப்பன் அவர்களைப் பற்றி வினவியவுடன் ஐம்பதாண்டுகளைக் கடந்த பிறகும் தமிழ்ப்பன் நினைவு மேலிட்டுக் கண்ணீர் கரைபுரள, பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார். 

இரா. சண்முகம் ஐயாவின் முதல் மகள் தமிழம்மாள் இயற்கை எய்திவிட்டார்(2005). கடைசி மகள் அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி சென்னையில் தம் இளைய மகன் இலக்குமணன் அவர்களுடன் வாழ்ந்து வருகின்றார். அவரின் மூத்த மகன் இராம்குமார் நாகர்கோவிலில் உள்ளார். அழகம்மாள் அவர்களிடம் உரையாடித் தந்தையாரைப் பற்றிய சில விவரங்களைத் தொலைபேசியில் பேசித் தெரிந்துகொண்டேன். 

இரா. சண்முகம் என்ற தமிழறிஞரின் ஒரே வாரிசாக எஞ்சியிருக்கும் அழகம்மாள் அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் நாளுக்குக் காத்திருந்தேன். இரா. சண்முகம் அவர்களின் குடும்பத்தாருடன் தொடர்ந்து உரையாடுவதும் விவரங்களைத் திரட்டுவதுமாக இருந்தேன். அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் இருப்பதை உணர்ந்து, எப்பொழுது ஓரிடத்தில் ஒன்றுகூடுவார்கள் என்று காத்திருந்தேன். நல் வாய்ப்பாகப் பொங்கல் திருநாளில் அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்றும் அந்த நாளில் வந்தால் சந்திக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்கள் குறிப்பட்ட நாளில் திருவண்ணாமலையில் தமிழ் வள்ளலாக விளங்கும் சி.சி. துரை அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் திருவிழாவில் நான் உரையாற்ற வேண்டியிருந்தது. இது இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒப்புக்கொண்ட நிகழ்வு என்பதால் அதனை முடித்துக்கொண்டு 17.01.2025 காலை 10 மணியளவில் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள குறும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் அனைவரும் சந்திக்கத் திட்டமிட்டோம். 

திருச்செந்தூரில் யாரேனும் இரா. சண்முகனாரை அறிந்தவர்கள் இருப்பார்களா? என்ற நோக்கில் மதுரையில் வாழ்ந்துவரும் முனைவர் நேரு அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டேன். திருச்செந்தூரில் வாழ்ந்துவரும் தம் ஆங்கிலப் பேராசிரியர் ஆழ்வார் குறித்த, விவரங்களைச் சொல்லி, அவரின் தொடர்பு எண்ணையும் எனக்கு அனுப்பி உதவினார்கள். பேராசிரியர் ஆழ்வார் அவர்களுடன் தொடர்புகொண்டு உரையாடியபொழுது இரா. சண்முகனாருக்குத் திருச்செந்தூரில் பாவேந்தர் மன்றம் சார்பில் 1972 ஆம் ஆண்டில் பாராட்டு விழா எடுத்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். 

என் நண்பர் சித்தநாதபூபதி அவர்களுக்கு வழக்கம்போல் என் திருச்செந்தூர்ப் பயணத்திட்டம் பற்றி சொன்னேன். தொடர்வண்டி, பேருந்து யாவும் பொங்கல் திருவிழாவின் பொருட்டு, முன்பதிவாகிவிட்டதால் மகிழுந்தில்தான் செல்ல வேண்டும் என்று சொன்னேன். பயணத்திற்காக வாடகை மகிழுந்து சொல்லிவிட்டேன் எனவும் திருச்செந்தூரில் யாரேனும் தொடர்புடையவர்கள் இருந்தால் எனக்கு அங்கமங்கலத்திற்கு வழிகாட்டி உதவுமாறும் வேண்டிக்கொண்டேன். 

சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் என் நண்பர் கோ. சந்தன்ராஜ் அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபொழுது புதுச்சேரியிலிருந்து திருச்செந்தூர் சற்றொப்ப ஐந்நூறு கி.மீ. தூரம் எனவும் எனவே, தொடர்ந்து மகிழுந்தில் பயணிக்காமல் மதுரையில் உள்ள தம் விடுதியில் தங்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தினார். அத்துடன் தம் விடுதி மேலாளர் ரிச்சர்டு அவர்களிடம் என் வருகையைத் தெரிவித்தார்கள். திரு. ரிச்சர்டு அவர்களும் என்னை அன்புடன் வரவேற்க முன்வந்தார்கள். அவரிடம் அடுத்த முறை கட்டாயம் மதுரை வரும்பொழுது விடுதிக்கு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு, தொடர் பயணமாக ஒன்பது மணிநேரம் பயணித்து, திருச்செந்தூருக்கு 17.01.2025 வைகறை நான்கு மணிக்குச் சென்றுசேர்ந்தோம். 

முன்பே திட்டமிட்டவாறு விடுதியில் தங்கி, மூன்று மணி நேரம் ஓய்வெடுத்தேன். காலையில் குளித்து முடித்து, விடுதி வரவேற்பறையில் காத்திருந்தோம். 

என் நண்பர் சித்தநாதபூபதி அவர்களின் ஏற்பாட்டில் அவரின் குடும்ப நண்பரும் தமிழ்ப்பற்றாளருமான திருச்செந்தூரில் வட்டாட்சியராகப் பணியாற்றும் இரா. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எங்களை வரவேற்று, காலையில் விருந்தோம்பினார். 

    மேலும் என்னைத் திருச்செந்தூரில் வாழ்ந்துவரும் பேராசிரியர் ஆழ்வார் அவர்களின் இல்லத்துக்குக் கோபாலகிருஷ்ணன் அழைத்துச் சென்றார்கள். பேராசிரியர் ஆழ்வார் அவர்கள் நம் இரா. சண்முகனார் அவர்களுக்கு 1972 இல் ஒரு பாராட்டு விழாவைத் திருச்செந்தூரில் பாவேந்தர் மன்றத்தின் சார்பில் நடத்திய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். 

19.07.1981, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30  மணிக்குத் திருச்செந்தூர், சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில் தொல்காப்பியத் தொண்டர் இரா. சண்முகனார்க்குப் பாராட்டு விழா நடந்துள்ளது. ஆதித்தனார் கல்லூரியின் முதல்வரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான பேராசிரியர் இரா. கனகசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முனைவர் தி. வைத்தமாநிதி, முனைவர் ந. கல்யாணசுந்தரம், முனைவர் அ. அப்துல்ரசாக், பேச்சிமுத்து (தூத்துக்குடி), புலவர் மரியசூசை (நாலுமாவடி), பெ.மு.சுப்ரமண்யம்(சாத்தான்குளம்), பேராசிரியர் அ. பாஸ்கர பால்பாண்டியன், ஜி. இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் கேசவ ஆதித்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இச்செய்திகளை நாளிதழ்களும் படத்துடன் வெளியிட்டுள்ளன. 

பேராசிரியர் மா.பா.குருசாமி, பேராசிரியர் கி.ஆழ்வார் ஆகியோர் பாவேந்தர் மன்றம் சார்ந்த பொறுப்பாளர்கள் ஆவர். இரா. சரவணன் (திருச்செந்தூர்), பி. கெங்கை ஆதித்த நாடார் (நாலுமாவடி), நெல்லை நெடுமாறன் (நாலுமாவடி) ஆகியோர் பாவேந்தர் மன்றத்தின் புரவலர்களாக இருந்து இந்த விழாவினை நடத்தியுள்ளமையை அறிந்துகொண்டேன். 

அடுத்து நாங்கள் அம்மன்புரத்தில் வாழ்ந்துவரும் வழக்கறிஞர் மா. பாரிக்கண்ணன் அவர்களின் இல்லத்துக்குச் சென்றோம். வழக்கறிஞர் மா. பாரிக்கண்ணன் அவர்களின் தந்தையார் தமிழ்மாறன் என்னும் தமிழாசிரியர் பெருமகனார் ஆவார். தமிழ்மாறன் ஐயாவின் பேச்சைப் பலவாண்டுகளுக்கு முன் கேட்டு மயங்கிய பட்டறிவு எனக்கு உண்டு என்பதையும் அவர்தம் பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழை என்னிடம் உள்ளதையும் சொல்லிப் பாரிக்கண்ணன் ஐயாவுடன் உரையாடி மகிழ்ந்தேன். இரா. சண்முகம் ஐயா பயன்படுத்திய நூல்கள் பல அவர்களின் இல்லத்தில் பாதுகாக்கப்படுவது அறிந்து மகிழ்ந்தேன். 


இரா.கோபாலகிருஷ்ணன், மு.இளங்கோவன், மா.பாரிக்கண்ணன்

அந்த நூலகத்தில் இரா. சண்முகம் ஐயா எழுதிய நூல்கள் உள்ளனவா? என்று மோலேட்டமாகத் தேடிப்பார்த்தோம். ஒன்றும் கிடைக்கவில்லை. அவர்களிடம் மீண்டும் வருவதாக விடைபெற்றுக்கொண்டு, அருகில் உள்ள அங்கமங்கலம் சென்றோம். இடையில் எங்களுக்காக, சேரன்மாதேவியை அடுத்த சுத்தமல்லி ஊரைச் சேர்ந்தவரும், தற்பொழுது நியூசிலாந்து நாட்டில் பணியாற்றி வருபவரும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவருமான தங்கவேல் அவர்கள் தம் துணைவியார் தேவியுடன் எங்கள் பயணத்தில் இணைந்துகொண்டார். 

எங்களின் வருகையை அறிந்த இரா. சண்முகம் அவர்களின் குடும்பத்தினர் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுநின்று எங்களுக்கு வரவேற்பு நல்கினர். அவ்வாறு வரவேற்ற அவர்கள் அனைவரையும் அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அனைவரும் உரையாடி மகிழ்ந்தோம். உணர்ச்சியால் ஒன்றுபட்டு நின்ற நாங்கள் இப்பொழுது மீண்டும் இரா. சண்முகம் ஐயாவின் நினைவுகளையும் சிறப்புகளையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து அறிந்துகொண்டோம். 

அழகம்மாளும், குடும்பத்தாரும் சண்முகம் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தல்

இரா.சண்முகம் அவர்களின் குடும்பத்தாருடன் குழுப்படம்

குழுப்படம்

இரா. சண்முகம் ஐயாவின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் யாவரிடத்தும் தமிழ்ப்பணியாற்றிய அப்பெருமகனார் குறித்த முழுமையான விவரங்கள் எதுவும் இல்லை. பிறந்த நாள், மறைந்த நாள் விவரங்கள் கூட அவர்களிடம் இல்லை. அவர் இயற்றிய நூல்களும் இல்லை. சில புகைப்படங்கள், சில செய்தித்தாள் வெட்டுருவங்கள், அழைப்பிதழ்கள் மட்டும் இருந்தன. அவற்றையெல்லாம் என் அருமை நண்பர் தங்கவேல் அவர்களும் அவர்களின் துணைவியார் தேவி அவர்களும் எங்களுக்கு எங்கள் புகைப்படக் கருவிகளில் படியெடுத்தும் படமெடுத்தும் வழங்கினர். தங்கவேல் அவர்களின் தமிழ்ப்பற்றை எண்ணி எண்ணி வியக்கின்றேன். 

இரா.கோபாலகிருஷ்ணன், அழகம்மாள், மு.இளங்கோவன்

இரா. சண்முகம் ஐயாவின் மரபுவழியினர்களுடன் நாங்கள்

இரா. சண்முகம் அவர்களின் விரிவான வாழ்க்கையையும் பணிகளையும் எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்.  அவர் பற்றி நான் அறிந்துகொண்ட சில விவரங்களை முதன்முதலாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன். மேலதிக விவரம் தெரிந்தவர்கள் தெரிவித்தால் அவற்றை நன்றியுடன் பெற்றுப் பயன்கொள்வேன் (என் தொடர்பு எண் +91 9442029053, மின்னஞ்சல்: [email protected] ) 

இரா. சண்முகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

இரா. சண்முகம் அவர்கள் நெல்லை மாவட்டம் (தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம்) குறும்பூரை அடுத்துள்ள அங்கமங்கலத்தில் வாழ்ந்த இராமன், கனி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த ஆண்டு 1901 என்று தெரியவருகின்றது. இவருடன் பரமு அம்மாள், வேலு ஆகியோர் உடன் பிறந்தவர்கள். இரா. சண்முகம் அவர்கள் பர்மா, இலங்கை (கொழும்பு), மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். மலேசியாவில் நீண்டகாலம் தங்கி, தம் வாழ்க்கையைத் தொடர்ந்தாலும், தமிழகத்திற்கு அவ்வப்பொழுது வந்துசெல்லும் வழக்கம் உடையவர். தமிழ்ப்பற்றும், திராவிட இயக்க ஈடுபாடும் நிறைந்தவர். தந்தை பெரியாருடன் அமர்ந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் கிடைக்கின்றது. மலேசிய வானொலியில் உரையாற்றிய பெருமைக்குரியவர்.

இரா. சண்முகம் அவர்களின் மனைவி பெயர் இலட்சுமி அம்மாள். இவர்களுக்கு மருத்துவர் தமிழப்பன்(1938 ? - 1971), தமிழம்மாள், அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி ஆகிய மூன்று மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். மருத்துவர் தமிழப்பன் அவர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப்பணியாற்றியபொழுது பாம்புகடித்து இயற்கை எய்தியவர் (10.12.1971). 

இரா. சண்முகம் அவர்களின் முதல் மகள் தமிழம்மாள், சென்னை, புரசைவாக்கத்தைச் சார்ந்த செல்வராசு அவர்களைத் திருமணம் செய்துகொண்டவர்(19.09.1969). இவர்களின் திருமணம் அங்கமங்கலத்தில் தமிழ்முறைப்படி நடந்தது. இத்திருமணத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் பலர் வருகைபுரிந்து, மணமக்களை வாழ்த்தினர். இவர்களுக்கு முரளி, சிவக்கொழுந்து, கல்யாணராமன், உமா மகேஷ்வரி என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். தமிழம்மாளின் திருமணச்செய்தி அந்த நாளில் பத்திரிகைச் செய்தியாகப் பதிவாகியுள்ளது. 

இரண்டாம் மகள் அழகம்மாள் என்ற சவுந்தரவல்லி அவர்களுக்குச் சுப்பிரமணியன் அவர்களுடன் திருமண வாழ்க்கை அமைந்தது. இவர்களுக்குச் சுபாஷினி, இராம்குமார், இலெட்சுமணன் என்னும் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். சண்முகனார் அவர்களின் பெருமையை நினைவுகூரும் வாரிசாக அழகம்மாள் அவர்கள் இருந்து, தந்தையாரின் பெருமைகளை நமக்கு நினைவுகூர்கின்றார். 

இரா. சண்முகம் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு ஏட்டில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் முரசு ஆசிரியர் கோ. சாரங்கபாணியுடன் நல்ல தொடர்பில் இருந்துள்ளார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அக்காலத்து அறிஞர்களின் கருத்துகளை மறுத்து எழுதியும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் குறித்த கட்டுரைகளை, நூல்களை எழுதியும் தமிழ்ப்பணியாற்றியுள்ளார். பல்வேறு தமிழ்த் திருமணங்களை மலேசியாவில் நடத்திவைத்துள்ளார். இரா. சண்முகம் அவர்களின் நூல்கள், வாழ்க்கைக் குறிப்புகள் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கும்பொழுது இவரின் தமிழ் வாழ்க்கை முழுமையாக நமக்குத் தெரியவரும். 

தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் என்ற தலைப்பில்இவர் இயற்றிய நூல் 1957 இல் வெளிவந்துள்ளது. 160+18 = 178 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் 2 ரூபாய் விலைகொண்டது. ரத்தினம்(கிளை) அச்சகம், 65 திருப்பள்ளி தெரு, சென்னை - 1 என்ற அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நூலில் 10 கட்டுரைகள் உள்ளன. இவற்றுள் பெரும்பான்மையான கட்டுரை சிங்கப்பூர் தமிழ் முரசில் வெளியானவை. ஒரு கட்டுரை மலேசியாவில் கோலாலம்பூரில் வெளியான தமிழ்ச்செல்வன் வார இதழில் 1934 இல் வெளிவந்துள்ளது. 



இந்த நூலில் நூலாசிரியர் படம், தொல்காப்பியர் படம், தொல்காப்பியம் அரங்கேற்றப்படும் அவையின் படம் என்று படங்கள் உள்ளன. 

1. தனித்தமிழ் ஆசிரியர்களும் “வ.ரா.” அவர்களும் 2. தமிழ் பாண்டிய மன்னர்களின் சொத்து 3. தொல்காப்பியர் உள்ளம் 4. தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் 5. எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி 6. தொல். பிறப்பியல் 7. எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை 8. தொல்காப்பியரும் நச்சினார்க்கினியரும் 9. தொல்காப்பியரும் குணவீர பண்டிதரும் 10. தொல்காப்பியரும் குணவீர பண்டிதரும் பவணந்தி முனிவரும் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரைகள் இந்த நூலை அழகுறச்செய்கின்றன. 

இரா. சண்முகம் அவர்களின் தமிழ்க்கொடை: 

1.       காந்தி அடிகளும் நாகரிகமும் (அல்லது) உலக அமைதிக்கு வழி

2.       தொல்காப்பியர் பொருளுக்கு இலக்கணம் வகுத்த தமிழ்ப் பெரியார்

3.       தமிழ் முரசின் சிறந்த தமிழ்த்தொண்டு

4.       தாயின் திருவடியில் தலை சாய்ந்தார் பண்டிதர்

5.       இளைஞர் வாழ்வு (அச்சில்)

6.       தொல்காப்பியரின் தொன்மைத் தமிழ் நெறி

7.       தொல்காப்பியம் மக்கள் வாழ்வின் இலக்கணம் (1957)

 

இவர்களுக்கு நன்றி:

  • பொறியாளர் சித்தநாதபூபதி (துபை)
  • இரா. கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியர், திருச்செந்தூர்
  • வழக்கறிஞர் மா. பாரிக்கண்ணன், அம்மன்புரம்
  • பொறியாளர் தங்கவேல், பொறியாளர் தேவி, நியூசிலாந்து
  • செ.குணாளன், மலேசியா
  • முனைவர் கோ. சந்தன்ராஜ், சிங்கப்பூர்
  • பாலமுருகன், ஓட்டுநர், புதுச்சேரி
  • இரா. சண்முகம் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள்

 

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகளையும் படங்களையும் எடுத்தாள நினைப்போர் எடுத்த இடம் சுட்டுங்கள். 

 

திருவண்ணாமலையில் அரிமா சங்கம் சார்பில் பொங்கல் விழா!

 



திருவண்ணாமலையில் அரிமா சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா வரும் 16.01.2025 (வியாழக் கிழமை) காலை 9 மணி முதல் கொண்டாடப்பட உள்ளது

திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் திரு. சி. சி துரை அவர்களின் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் R. அன்பரசு அவர்கள் விழாவைத் தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றுகின்றார். அரிமா சங்கத்தின் பொறுப்பாளர்கள் பலரும் வாழ்த்துரை வழங்க உள்ளனர். 

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின் சிறப்பு நிகழ்வுகளாக நடன அரங்கம், இயல் அரங்கம், இசை அரங்கம், நாடக அரங்கம், கலை அரங்கம் என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 

நடன அரங்கில் செல்வி சங்கரின் நாட்டிய நிகழ்ச்சியும், இயல் அரங்கில் பாவலர் வையவனின் உரைவீச்சும், இசை அரங்கில் முனைவர் மு. இளங்கோவனின் நாட்டுப்புற இசைப்பாடல் உரையும் நாடக அரங்கில் முனைவர் வேல. இராமமூர்த்தியின் மரத்தின் மடியில் உலகம் என்னும் நாடகமும், கீதபாரதி கலைக்கூடம் பாரதி வழங்கும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளன. 

தமிழ் ஆர்வலர்களை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அரிமா சங்கத்தின் தலைவரும், தமிழ்ப்பற்றாளருமான சி. சி. துரை அவர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள். 

மும்பை இலெமுரியா அறக்கட்டளை நடத்தும் தொல்காப்பியத் திருவிழா!

 

 

மும்பையில் அமைந்துள்ள இலெமுரியா அறக்கட்டளை தமிழின் முதல் இலக்கண நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு, தொல்காப்பியத் திருவிழாவினை 2025, சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் மும்பையில் நடத்துகின்றது. 

நவி மும்பை, வாசி, திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள  நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அரங்கில் தொல்காப்பியத் திருவிழா நடைபெற உள்ளது. முதன்மை நிகழ்வுகளாகத் தொல்காப்பிய ஆவணக் கண்காட்சி, கருத்தரங்கம், கவியரங்கம், நூல்கள் வெளியீடு நடைபெறுகின்றன. தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் தொடர்ந்து தொண்டாற்றிவரும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் திரு. த. சிவானந்தன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் தொல்காப்பியத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன் இ.ஆ.ப., மகாராட்டிர மாநிலத்தின் நிதித்துறைச் செயலாளர் டாக்டர் ந. இராமசாமி இ. ஆ. ப., மும்பை காவல்துறையின் இணைக் காவல் ஆய்வாளர் (நிர்வாகம்), திரு. சூ. ஜெயகுமார் இ. கா. ப.,  காரைக்குடி சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சேது குமணன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். 

இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவுநர் திரு. சு. குமணராசன் தலைமையில் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து முனைவர் இ. வளனறிவு, முனைவர் மு. இளங்கோவன், முனைவர் அரங்க. மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். 

முனைவர் சு. குமணராசன் எழுதிய Classical Tamil Literature: An Introduction  நூலும், முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொடரும் தொல்காப்பிய மரபு என்னும் நூலும் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளன. 

எட்டுத்தொகைக் கவியரங்கத்தில் கவிஞர் இசாக் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் மு. இளங்கோவன் தலைமையில் நடைபெறும் கவியரங்கத்தில், கவிஞர் புதிய மாதவி, கவிஞர் இறை ச. இராசேந்திரன், கவிஞர் இராசு. மாதவன், கவிஞர் பிரவீனா சேகர், கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன், கவிஞர். வ. ரா. தமிழ்நேசன், கவிஞர் நெல்லை பைந்தமிழ், புலவர் கார்த்தியாயிணி ஆகியோர் கவிதை பாடுகின்றனர். 

மாணவர்கள் பங்கேற்கும் தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டியும் நடைபெற உள்ளது. 

அனைவரையும் மும்பை, இலெமுரியா அறக்கட்டளை அன்புடன் அழைக்கின்றது.









 

பேராசிரியர் ப. மருதநாயகம்

 

பேராசிரியர் . மருதநாயகம் 

[ஆங்கிலம், தமிழ் என்னும் இரு மொழிகளிலும் ஆற்றல் பெற்ற முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்; பதிப்பாசிரியர்; உரையாசிரியர். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும் தமிழ் அமைப்புகளிலும் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர். இந்தியாவில் கன்னியாகுமரி தொடங்கி, காசுமீரம் வரை இந்தியக் கல்விப்புலங்களில் இவர் குரல் ஓங்கி ஒலித்துள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வுத் தகைஞராக இருந்து ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. தமிழிலும் ஆங்கிலத்திலும் முனைவர் பட்டம் பெற்றுள்ள  இவரின் நூல்கள் உலக அளவிலான ஒப்பியல் பார்வை கொண்டவை.] 

புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் க. ப. அறவாணன் அவர்களின் தலைமையில் இயங்கிய தமிழியல் துறையில் யான் இளம் முனைவர் பட்ட ஆய்வு மாணவனாக இருந்தபொழுது (1992-93) ஆங்கிலத்துறையில் பணியாற்றிய பேராசிரியர் ப. மருதநாயகம் ஐயாவின் சிறப்புகளை எம் உடன் பயிலும் மாணவர்களும் எங்களுக்குப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களும் வியப்புடன் பேசிக்கொள்வார்கள். பெயரளவில் மட்டும் மருதநாயகம் அவர்களை அக்காலத்தில் அறிந்திருந்தேன். அவர்களை நேரில் காணும் பேறு பெற்றிலேன். அவர் அமெரிக்க நாட்டில் ஹவாய்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதும் உலக நாடுகளில் வலம் வந்து தமிழ்ச் சிறப்பைப் பேசுபவர் என்பதும் இளம் மாணவர்களாகிய எங்களுக்கு மருதநாயகம் ஐயாவின் மேல் மிகப்பெரும் மதிப்பை உருவாக்கியிருந்தது. பின்னாளில் செம்மொழி நிறுவனத்தில் மருதநாயகம் அவர்கள் பணியாற்றிய காலத்தில் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. அவர்தம் பொழிவுகளைக் கேட்டது அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழாக்கள் பலவற்றிலாகும்.

ப. மருதநாயகம், மு.இளங்கோவன் (புதுவை இல்லம்) 

நானும் அமெரிக்காவிற்கு உரையாற்றச் சென்றபொழுது சில நேரங்களில் வானூர்திப் பயணம் ஒரே வானூர்தியில் இருக்கும். அதனால் தனிப்பட்ட முறையில் தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து ஐயா உரைக்கும் கருத்துகளைச் செவிமடுத்துள்ளேன். பின்னர் ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்களுடன் ப. மருதநாயகம் ஐயாவின் இல்லத்திற்குச் சென்று அவர்தம் பேச்சுகளைப் பல மணி நேரம் ஒளிப்பதிவு செய்து, இணையத்தில் பதிவு செய்துள்ளமையும், இணையம் ஏற்றப்பட வேண்டிய ஐயாவின் பேச்சுகள் தொடர்ந்து என்வழியாகப் பதிவாகி வருகின்றமையும் தமிழுக்கு ஆக்கமான வினைப்பாடுகளாகும். 

    பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள் நாம் வாழும் காலத்தில் நம்முடன் வாழும் பேரறிஞர் ஆவார். உலக இலக்கியங்களையும், தமிழ் இலக்கியங்களையும் ஒருசேர இணைத்துப் பேசும் பேராற்றல் பெற்றவர். தமக்கென்று தனித்த ஆய்வுப்போக்குகளையும் கொள்கைகளையும் கொண்டவர்.  எவ்விடத்தும் தம் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தும் பேராளுமைகொண்டவர். மிகச் சிறந்த தமிழ் ஆளுமையாக விளங்கும் ப. மருதநாயகம் அவர்களின் தமிழ் வாழ்க்கையை உலகத் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டு வருவதை என் தலையாயக் கடமையாக நினைக்கின்றேன். 

ப. மருதநாயகம் அவர்களின் தமிழ் வாழ்க்கை: 

பேராசிரியர் . மருதநாயகம் அவர்கள் திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக விளங்கும் உறையூரில் 03.06.1939 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் மூ. பரமசிவம்- வள்ளியம்மை ஆவர். இவருடன் பிறந்தவர்களுள் ஆடவர் நால்வர்; மகளிர் இருவர் ஆவர்.  பள்ளிப்படிப்பை உறையூரில் சேஷ ஐயங்கார் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். இளங்கலைப் பட்டப்படிப்பைத் தூய வளனார் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தவர். இவர் ஆங்கிலம், தமிழ், அமெரிக்க இலக்கியம் ஆகிய மூன்றிலும் முறையே சென்னைப் பல்கலைக்கழகம்(1975), மதுரை காமராசர் பல்கலைக்கழகம்(1982), அமெரிக்க நாட்டு ஹவாய் பல்கலைக்கழகம்(1975) ஆகியவற்றில் பயின்று, முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். தொன்மத் திறனாய்வு பற்றிய ஆய்வேட்டிற்காக ஆங்கிலத்தில் முனைவர் பட்டமும் தெ.பொ.மீ. பற்றிய ஆய்வேட்டிற்காகத் தமிழில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்ச் செவ்விலக்கியங்கள் – ஒப்பியல் பார்வை என்னும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுதிக்காகப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதல் டி. லிட். பட்டத்தைப் பெற்றவர். 

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிப் பல்லாயிரம் மாணவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளார். புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். பன்னிரண்டு ஆண்டுகள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வுத் தகைஞராகப் பணியாற்றறிய பெருமைக்குரியவர்.

மொரீசியசு நாட்டில் உள்ள மகாத்மா காந்தி உயர்கல்வி நிறுவனத்தில் பேரறிஞர் அண்ணா இருக்கைப் பேராசிரியராக முதன்முதல் அழைக்கப்பெற்று, அண்ணா பிறந்தநாள் சொற்பொழிவு வழங்கியவர். மேலும் அண்ணா பற்றிய நூல்கள் வெளிவருவதற்குரிய திட்டப்பணிகளை வடிவமைத்து வழங்கியவர். 

கனடாவில் கார்ல்டன் பல்கலைக்கழகம், பிரான்சு நாட்டில் ரென் 2 ( Rennes-2) பல்கலைக்கழகம், ரியூனியன் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம், ஜெர்மனியின் ஹைடல்பர்க்குப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு, சொற்பொழிவுகளை நிகழ்த்திய பெருமைக்குரியவர். 

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA) ஆண்டுதோறும் அமெரிக்க மண்ணில் நடத்தும் பேரவை விழாக்களில் பால்டிமோர் (2005), ராலே (2009), சார்ல்சுடன் (2011), வாசிங்டன் (2013), பால்டிமோர் (2017), டல்லஸ் (2018) ஆகிய நகரங்களில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் புறநானூறு, திருக்குறள், குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணிகள் போன்ற தலைப்புகளில் கட்டுரை வழங்கிய பெருமைக்குரியவர். 

ஆக்ஸ்போர்டு பாட்லியன் நூலகத்திலும், இலண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலும் எல்லீசரின் கையெழுத்துப் படிகளை ஆய்வுசெய்து, அன்னாரின் மூன்று அதிகாரத் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலையும், தமிழ் யாப்பிலக்கணம் குறித்த நூலையும் பதிப்பித்துள்ளார். சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள தொகுதிகளில் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், நாவல் பகுதிகள் பல இடம்பெற்றுள்ளன. இவருடைய ஆங்கில, தமிழ், அமெரிக்க, கனடா நாட்டு இலக்கியங்கள் குறித்த நூனூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் ஆய்விதழ்களிலும், மேல்நாட்டு ஆய்விதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவர் எழுதிப் பதிப்பித்துள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களும் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும் பதிப்பித்த பத்து நூல்களும் உலகளவிலான ஒப்பியல் பார்வையைக் கொண்டவை. 

பேராசிரியர் ப. மருதநாயகம் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருபவர்.

பேராசிரியர் மருதநாயகம் அவர்களின் இல்லறச் சிறப்பு:

    பேராசிரியர் ப. மருதநாயம் அவர்கள் கமலா அம்மையாரை 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரமேஷ், இரவி, அஷோக் என்னும் மூன்று ஆண் மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இவர்கள் மூவரும் மருத்துவர்களாக இங்கிலாந்தில் பணியாற்றுகின்றனர். 

பேராசிரியர் . மருதநாயகம் பெற்றுள்ள விருதுகளும் பரிசில்களும்: 

1.   கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (2022), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

2.    கலைஞர் மு. கருணாநிதி விருது(ஆங்கிலம்), தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம், 2021

3.   முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, தமிழ் வளர்ச்சித்துறை, 2018

4.    சிறந்த தமிழ்க் கல்வியாளர், வேலன் இலக்கிய வட்டம், இலண்டன் 2018

5.   குலோத்துங்கள் விருது, குலோத்துங்ககன் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை, 2017

6.   சிறந்த தமிழறிஞர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், கோவை, 2014

7.   செம்மொழிச் செம்மல், தமிழ்மொழி அகாதெமி, 2016

8.   மகா வித்துவான் நினைவுப் பொற்கிழி விருது, திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம்,2015

9.   தமிழறிஞர், சிகாகோ தமிழ்ச்சங்கம், அமெரிக்கா, 2020

10. தமிழறிஞர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், 2013

11. சாதனையாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, வட கரோலினா

12. தமிழறிஞர், மேரிலாந்து தமிழ்ச்சங்கம், அமெரிக்கா, 2005

13. தமிழறிஞர், புதுவைத் தமிழ்ச்சங்கம்,2021

14. சாதனையாளர், புதுவை நற்பணி மன்றம், 2008

15. இலக்கியத் திலகம், காஞ்சி காமகோடி பீடம், 2018

16. இலக்கியச் சுடர், காஞ்சி காமகோடி பீடம், 2022

17. மனோன்மணியம் சுந்தரனார் விருது, புதுவை சங்கரதாஸ் சுவாமிகள் இயல் இசை நாடக சபா, 2007

18. தமிழறிஞர் விருது, பாவாணர் கோட்டம், முறம்பு, 2018

19. எல்லீசர் விருது, தமிழக ஆளுநர்- 2024 

பேராசிரியர் . மருதநாயகத்தின் நூல்கள்:

1.            கிழக்கும் மேற்கும்        - 1991

2.            celebrations and Detractions: Essays in Criticism     - 1993

3.            Quest for Myth: LeslieFiedler”s Critical Theory and Practice   - 1994

4.            Across Seven Seas: Essaus in Comparative Literature       - 1994

5.            The Tamil Canon: Comparative Readings            - 1998

6.            Decolonoisation and After:Studies in Indian and Canadian Writings - 1999

7.            திறனாய்வாளர் தெ.போ.மீ. - 1999

8.            மேலைநோக்கில் தமிழ்க்கவிதை - 2001

9.            சங்கச்சான்றோர் முதல் சிற்பி வரை - 2003

10.          புதுப்பார்வைகளில் புறநானூறு -  2004

11.          பாரதி ஆறு பாரதிதாசன் பத்து  - 2004

12.          அயோத்திதாசரின் சொல்லாடல்  - 2006

13.          Sirpi: Poet as Sculptor  - 2006

14.          சங்க இலக்கிய ஆய்வு  தெ.போ.மீ. யும் மேலை அறிஞரும்:   - 2008

15.          வள்ளலார் முதல் சிற்பி வரை  - 2008

16.          ஒப்பில் வள்ளுவம் - 2008

17.          From Homer to Sri Aurobindo - 2008

18.          The Treasure – Trove of time and the Verse-Key; An English Translation of                                   Kalaignar  M. Karunanidhi’s   (காலப்பேழையும் கவிதைச் சாவியும்) - 2009 

19.          சிலம்பின் ஒலி: ஆறுபரல்கள்  - 2010

20.          நானும் என் தமிழும்  - 2011

21.          Ancient Tamil Poetry and Poetics  - 2011

22.          A New Star in the Epic Sky: Kulothungan’s Journey of Man, - 2012                                  

23.          பேராசிரியர் நன்னன்  - 2012

24.          Warning Kings and Wandering Bards: Studies in Puranaanuru - 2012                                

25.          தமிழின் செவ்வியல் தகுதி  - 2013

26.          Tolkappiar to Kulothungan:Dimensions of the Tamil Mind -  2013

27.          Kalaignar Karunanidhi:Hero as Artist   - 2013

28.          பாரதி பதினாறு - 2014

29.          பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம் - 2014

30.          மேலைமெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம் - 2015

31.          பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும் - 2015

32.          மேலைநோக்கில் குலோத்துங்கன் கவிதைகள் - 2016

33.          C.N. Annadurai: Statesman,Scholar and custodian of Social Justice  - 2016

34.          மேலைநோக்கில் புறநானுற்றுப் பாடல்கள் - 2017

35.          தேவநேயப்பாவாணர் சொல்லாய்வும் சொல்லாடலும்  - 2017

36.          உலகமொழிகளில் தூய்மை இயக்கங்கள் - 2018

37.          ஒப்பில் வள்ளுவம் (விரிவாக்கப் பதிப்பு)  - 2018

38.          The Glory that was Tamil Culture      - 2018

39.          மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் – 1  -  2019

40.          மேலைநோக்கில் தமிழ் நாவல்கள் – 2   - 2019

41.          மேலைத்திறனாய்வு அணுகுமுறைகள் தமிழ்ச் சான்றுகள்  - 2019

42.          வள்ளுவர் வாழ வைத்த உவமைகள்  - 2019

43.          தொல்காப்பியம்: முதல்முழு மொழிநூல்   - 2019

44.          தொல்காப்பியம்: எழுத்து(உரை) - 2019

45.          தொல்காப்பியம்: சொல்(உரை)  - 2019

46.          தொல்காப்பியம்: பொருள் (உரை)   - 2019

47.          சங்கச் சான்றோர் வழியில் தங்கப்பா -  2019

48.          வடமொழி ஒரு செம்மொழியா ? - 2020

49.          திறனாய்வாளராக உரையாசிரியர்கள்  - 2021

50.          Twelve Custodians of Tamil Culture  - 2021

51.          Overshadowed Tamil Classics  - 2022

52.          On Translating Tamil Classics - 2022

53.          ஒப்பில் தொல்காப்பியம்   - 2022

54.          உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் - 2022

55.          Tirukkural as the book of the world - 2022

56.          ஒப்பில் கம்பன்  - 2022

57.          Tamil Poetry since Bharati  - 2022

58.          தமிழும் வடமொழியும் மெய்யும் பொய்யும் - 2022

59.          ஹோமரின் இலியத் காப்பியம் மொழிபெயர்ப்பு - 2022

60.          திருக்குறள்: மூலமும் உரையும் - 2023

61.          தமிழின் தொன்மை: மேலை மொழியியலார் பார்வையில் - 2023

62.          The Greatest Books of the world  - 2023

63.          Tamil and Sanskrit: Myth and Reality - 2023 

64.          சங்க கால ஔவையார் - 2023

65.          பண்ணிசை மரபில் காரைக்கால் அம்மையார் - 2023

66.          தமிழ்க் காப்பிய மரபில் சிலப்பதிகாரம் – 2023

67.          தமிழ் மரபில் உவமை – 2023

68.          உரைச்சிந்தனை மரபு: நச்சினார்க்கினியர் – 2023

69.          உரைச்சிந்தனை மரபு: பேராசிரியர்        - 2023

70.          தமிழர் அழகியல்   - 2023

71.          சமஸ்கிருதத்தில் தமிழ்ச்சிந்தனை மரபு        - 2023

72.          இலத்தீனில் தமிழ்ச் சிந்தனை மரபு     - 2023









காணொலி: பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்களின் காணொலி இங்கே

குறிப்பு: இக்கட்டுரையின் குறிப்புகளை எடுத்தாளும் அன்பர்கள் எடுத்த இடம் சுட்டுங்கள்.

❌