மலேசியாவில் முத்தமிழ்ப் படிப்பகம் …
முத்தமிழ்ப் படிப்பகம் வாயில்
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வாழ்ந்த நெல்லை இரா. சண்முகம் அவர்கள் தொல்காப்பியம் குறித்து ஆழமாகச் சிந்தித்தவர்; தம் எண்ணங்களை எழுத்துகளாக்கி, இதழ்களில் வெளியிட்டவர். 1951 - 52 ஆம் ஆண்டுகளில் தொல்காப்பியம் குறித்த பல ஆழமான கட்டுரைகளை வரைந்து, சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழில் வெளியிட்டவர். இவ்வுண்மைகள் தெரியத் தொடங்கிய நாளிலிருந்து மலேசியாவில் வாழ்ந்துவரும் ஆசான் மன்னர் மன்னன் மருதை, இசைத்தென்றல் நா. மாரியப்பனார், எழுத்தாளர் செ. குணாளன் முதலானவர்களைத் தொடர்புகொண்டு இரா. சண்முகனார் குறித்த மேலதிக விவரங்களைப் பெற்று வருகின்றேன். இரா. சண்முகனாரின் நூல்கள், கட்டுரைகளைத் தொகுப்பதும், அவரின் வாழ்வியலைத் தெரிந்துகொள்வதும் என் முதன்மை நோக்கமாக இப்பொழுது உள்ளது.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்ந்துவரும் மூத்த அறிஞர்கள் பலரிடம் இரா. சண்முகம் குறித்து வினவிப் பார்த்தேன். எனினும் நான் எதிர்பார்த்த அளவுக்குச் செய்திகள் அவர்களிடமிருந்து கிடைத்தில. அடுத்து, மலேசியாவில் உள்ள நூலகங்களில் இரா. சண்முகனாரின் நூல்களும் அவரைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளும் இருக்கும் என்ற நம்பிக்கையில் அங்குள்ள நூலகங்களைப் பற்றித் தேடத் தொடங்கினேன். அப்பொழுதுதான் கோலாலம்பூரின் செந்தூல் பகுதியில் முத்தமிழ்ப் படிப்பகம் என்னும் பெயரில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருவதை அறிந்தேன். முத்தமிழ்ப் படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்று, இரா. சண்முகனாரின் நூல்கள் தங்கள் படிப்பகத்தில் உள்ளனவா? எனவும் அவர் குறித்த மேலதிக விவரம் கிடைக்குமா? எனவும் கேட்டேன். நூலகப் பொறுப்பாளரைக் கேட்டு மறுமொழி தருவதாகத் திருவாளர் பெ. இராமன் அவர்கள் தெரிவித்தார்கள். எளிமையாகத் தொடர்புகொண்டு, உதவிபெறும் வகையில் பெ. இராமன் அவர்களின் நட்பு கிடைத்தமை மகிழ்ச்சியளித்தது.
முத்தமிழ்ப் படிப்பகம் அறுபத்தேழு ஆண்டுகளுக்கு(1958) முன்னர்த் தொடங்கப்பட்ட படிப்பகம் எனவும், இங்கு அரிய நூல்கள் பல பாதுகாக்கப்படுகின்றன எனவும் நண்பர்கள் வழியாக அறிந்தேன். எனவே இந்த நூலகத்தைப் பார்வையிட வேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் மேலெழுந்தவண்ணம் இருந்தது. அதற்குரிய நாளுக்காகக் காத்திருந்தேன்.
அண்மையில் முத்தமிழ்ப் படிப்பகத்தைப் பார்க்கும் சூழல் கனிந்தது. படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் ஐயாவுக்கு என் வருகையைத் தெரிவித்தேன். நூலகப் பார்வைக்காக மலேசியாவுக்குச் செல்லத் திட்டமிட்டேன். கோலாலம்பூர் அருகில் உள்ள பெட்டாலிங்கு செயாவில் அமைந்துள்ள அருக்காணி மையத்தில் இரவில் தங்குவதற்குரிய உதவியை மருத்துவர் செல்வம் செல்லப்பன் செய்திருந்தார். அதன்படி இரவு சென்று அருக்காணி மையத்தில் ஓய்வெடுத்தேன். ஆசான் மன்னர் மன்னன் மருதை அவர்களும் நானும் திட்டமிட்டபடி மறுநாள் காலைப்பொழுதில் சந்தித்தோம். காலையில் பசியாறிவிட்டு, மகிழுந்தில் செந்தூல் பகுதியை அடைந்து, நூலக வாயிலில் காத்திருந்தோம். சில நொடிப்பொழுதில் பெ. இராமன் அவர்கள் வந்து, எங்களை வரவேற்றுப் படிப்பகத்துக்கு அழைத்துச் சென்றார். அழகிய மாடிக்கட்டடத்தில் முத்தமிழ்ப் படிப்பகம் இயங்குவதை அறிந்து பெரும் மகிழ்ச்சியுற்றேன். பேழைகளில் தமிழ் நூல்கள் பாதுகாக்கப்படுவதும் ஆர்வலர்கள் வருகைபுரிந்து, நூல்கள், செய்தி ஏடுகளைப் படிப்பதும் வழக்கமாக உள்ளதை அறிந்தேன். நூல்களின் பட்டியல் கணினி வடிவப்படுத்தும் முயற்சி நடந்து வருவது பாராட்டத்தக்கது.
முத்தமிழ்ப் படிப்பகத்தின் தலைவர் பெ. இராமன் அவர்களின் முன்னோர் ஊர் காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ஆகும். இவர் மலேசியாவின் பெட்டாலிங்கு செயாவில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை மலேசியாவில் முடித்து, கல்லூரிப் படிப்பைத் தமிழகத்தில் நிறைவுசெய்தவர். நீண்ட காலமாக மலேசியாவில் வாழ்ந்து வரும் இவர் தணிக்கைத் துறையில் மிகுதியான பட்டறிவுகொண்டவர். முத்தமிழ்ப் படிப்பகத்தில் தணிக்கைப் பணிகளில் ஈடுபட்டு, உழைத்தவர். பின்னாளில் முத்தமிழ்ப் படிப்பகத்தைத் தலைமை தாங்கி, மிகச் சிறப்பாக வழிநடத்தும் பெரும்பணியைச் செய்து வருகின்றார். முத்தமிழ்ப் படிப்பக வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு பெருந்துணையாக உள்ளது. படிப்பகத்துக்குப் புதுப்புது வசதிகளை ஏற்படுத்தித் தருவது, புதுப்புது நூல்களை வாங்கிச் சேர்ப்பது, அறிஞர்களை வரவேற்று, நூலகச் சிறப்புகளை எடுத்துரைத்து விருந்தோம்பி, வழியனுப்புவது, இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது, மாணவ, மாணவியர்கள் நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு உரிய வழிகளைக் காண்பது என்று முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார்.
முத்தமிழ்ப் படிப்பகம் 14.04.1958 ஆம் ஆண்டு, இரயில்வே பட்டறையில் பணியாற்றிய 19 தமிழார்வலர்களால் கீற்றுக் கொட்டகையில் தொடங்கப்பட்டது என்று அறிந்தேன். மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவராக விளங்கிய திருவாளர் மா. சொக்கலிங்கம் அவர்கள்தான் “முத்தமிழ்ப் படிப்பகம்” என்ற பெயரைச் சூட்டினார் என்றும் அறிந்தேன்.
முத்தமிழ்ப் படிப்பகத்தின் நோக்கங்கள்:
1. மலைநாட்டில் தமிழ் மொழியின் நிலையை உயர்த்துவதற்கு இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்த்தல்
2. அரசியல் கலப்பில்லாத தமிழ்ச் சங்கங்களுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து பணிசெய்தல்
3. மலைநாட்டுத் தமிழ் மக்களிடையே தமிழ்க் கல்வி வளர்ச்சிக்குப் பரப்புரை செய்தல்
4. நன்கொடையாக நிதியையும் நூல்களையும் வழங்கும்படி உறுப்பினர்களையும் நலன் விரும்பிகளையும் ஊக்குவித்தல்
5. படிப்பகத்தில் நூல்களைப் படிப்பதற்கும் இரவல் பெற்றுச் சென்று வாசிப்பதற்கும் உறுப்பினர்களையும் நலன் விரும்பிகளையும் ஊக்குவித்தல்
6. கூட்டங்கள், கொண்டாட்டங்கள், போட்டிகள், சொல்லாடல்கள், விழாக்கள், காட்சிகள், நாடகங்கள் முதலியவற்றை நடத்துதல்
7. மேற்கண்ட நோக்கங்களைச் செயலாக்க, நடைமுறையில் உள்ள அரசாங்க விதிகளுக்கேற்ப மாத, வார, தினசரி அச்சுத் தாள்களைத் தயாரித்து வெளியிடுவதுடன், துண்டுப் பிரசுரங்களையும் உறுப்பினர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகித்தல்
முத்தமிழ்ப் படிப்பகம் என்ற பெயரில் 20.03.1959 இல் இப்படிப்பகம் பதிவுசெய்யப்பட்டது. 1960 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி, தைப்பூசம் போன்ற நாட்களில் உண்டியல் ஏந்தி காசு, திரட்டிப் படிப்பகத்தைப் படிப்படியாகத் தமிழார்வலர்கள் வளர்த்தெடுத்தனர். இசைக்கச்சேரிகள், இலக்கிய நிகழ்வுகள் நடத்தியும், திரைப்படங்களை வெளியிட்டும் காசு திரட்டினர். தன்னலம் கருதாமல் தமிழ்நலம் கருதி உழைத்த, அப்பெருமக்கள் யாவரும் நம் நன்றிக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள். 27.06.1971 இல் முத்தமிழ்ப் படிப்பகம் 65, ஜாலான் செந்தூல் என்ற முகவரிக்கு இடம் மாறியது. இந்தக் கட்டடத்தின் உரிமையாளரான சீனர் ஒருவர் இந்தக் கட்டடத்தை 48, 250 ம.ரி. விற்க முன்வந்தார். இதனைப் பயன்படுத்திப் படிப்பகத்தின் அறங்காவலர்களும் பொறுப்பாளர்களும் பல வழிகளில் முயன்று படிப்பகத்திற்காக இக்கட்டடத்தை வாங்கியுதவினர். ஒவ்வொரு ஆண்டும் படிப்பகத்தின் பொறுப்பாளர்கள் கூடி, பொதுக்குழுவைக் கூட்டுவதையும், புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதையும் வழக்கமாகச் செய்து, படிப்பகத்தை நல்ல நிலையில் நிர்வாகம் செய்துவருகின்றனர். படிப்பகத்தின் சார்பில் மாமாங்க மலர், வெள்ளி விழா மலர், மணிவிழா மலர் முதலியன வெளியிடப்பட்டுள்ளன. முத்தமிழ் என்னும் பெயரில் செய்தி மலரும் வெளியிடப்பட்டுள்ளது. முத்தமிழ்க் கதிர் என்னும் பெயரில் காலாண்டுச் செய்தி இதழ் ஒன்றும் வெளிவருகின்றது.
முத்தமிழ்ப் படிப்பகம் நூலகமாகச் செயல்படுவதுடன் மாணவர்களுக்குக் கல்விக்கூடமாகவும் செயல்படுகின்றது. மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்குக் கணினிக் கல்வியை இலவசமாக வழங்குவதற்கு உரிய வசதிகளும் இப்படிப்பகத்தில் உள்ளது.
முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு மலேசியாவுக்கான இந்தியத் தூதர்களும், இலங்கைத் தூதர்களும் வருகைபுரிந்துள்ளனர். அவர்களால் இயன்ற பங்களிப்புகளை இந்தப் படிப்பக வளர்ச்சிக்கு வழங்கியுள்ளனர் என்பதை அறிந்தபொழுது மகிழ்ச்சி ஏற்பட்டது. அதுபோல் மலேசியாவின் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், தமிழறிஞர்கள் வருகைபுரிந்து, முத்தமிழ்ப் படிப்பகத்துக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து செல்லும் தமிழறிஞர்கள் பலரும் முத்தமிழ்ப் படிப்பகத்தின் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டியுள்ளனர். அவ்வகையில் சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம், உவமைக்கவிஞர் சுரதா, பாவலரேறு பெருஞ்சித்திரனார்(09.05.1974), முனைவர் தமிழண்ணல், முனைவர் மு. தமிழ்க்குடிமகன், முனைவர் கு. ஞானசம்பந்தன், பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், இரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், தீபம் பார்த்தசாரதி, மருத்துவர் இரா. கலைக்கோவன், எம்.எஸ். உதயமூர்த்தி, முதலானவர்கள் வருகைபுரிந்த பெருமை இம் முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு உண்டு.
முத்தமிழ்ப் படிப்பகத்தில் சற்றொப்ப இருபத்தைந்தாயிரம் நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றுள் தமிழ் நூல்கள் 22519 எனவும், 2013 நூல்கள் ஆங்கில நூல்கள் எனவும், 1055 மலாய் நூல்கள் எனவும் புள்ளிவிவரங்கள் உள்ளன. மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அச்சான நூல்களுடன் தமிழகத்தின் புகழ்பெற்ற பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் வெளியிட்ட நூல்களும் இங்கு உள்ளன. நான் எழுதிய சில நூல்களையும் அன்பளிப்பாக நூலகத்துக்கு வழங்கினேன். இரா. சண்முகம் குறித்த அரிய நூல்கள், விளக்கங்கள் சிலவற்றை இப் படிப்பகத்தில் படித்துப் பயன்கொண்டேன். தேவையான குறிப்புகளைப் படமாக்கிக்கொண்டேன். இந்த நூலகத்தின் நினைவுகளைச் சுமந்துகொண்டு பெட்டாலிங்கு செயாவில் மாலையில் நடைபெறும் அடுத்த நிகழ்வுக்கு ஆயத்தமானேன்….