சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம் – சுகுமாரன்
சிறார் இலக்கியத்தில் விமர்சனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிறார் இலக்கியம் சிறார்கள் மீது செலுத்தியிருக்கும் தாக்கத்தைத் தெரிந்துக் கொள்ள விமர்சனம் அவசியம். தரமான சிறார் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவும் மேம்படுத்தவும் விமர்சனம் உதவுகிறது.
சிறார் இலக்கியத்தின் உள்ளடக்கம், பாத்திரங்கள் பற்றிய விமர்சனம் சிறார்களின் பார்வையில் அமைவது முக்கியம். சிறார் இலக்கியம் உலகத்தைப் புரிந்துக் கொள்ள சிறார்களுக்கு உதவி இருக்கிறதா? என்பதை விமர்சகர் பார்க்க வேண்டும். சிறார் இலக்கிய விமர்சகர்களாக வரலாற்றில் இதுவரை ஆசிரியர்கள், நூலகர், கல்வியாளர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழ்ச் சிறார் இலக்கிய விமர்சன இலக்கியத்தைப் பொறுத்தவரை ஆசிரியர்கள், நூலகர், கல்வியாளர்கள் விமர்சகர்களாக இருந்திருக்கிறார்களா என்பதை தேடி பார்க்க வேண்டியிருக்கிறது.
விமர்சனம் ஒரு நூலின் நிறை குறைகளை எடுத்துக் கூறுகிறது. விமர்சனத்தை தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் விமர்சனங்கள் வேறுபடும். இப்போது குழந்தைகள் வாசிப்பதில்லை. பாலபுரஸ்கார் விருது இல்லையென்றால் குழந்தை இலக்கியம் படைக்க ஆளில்லை. நூலகத்தில் புத்தகங்கள் எடுத்து சிறார்கள் படிப்பதில்லை. சிறார் இதழ்கள் படிக்கப்படுவதில்லை போன்ற மேம்போக்கான, நம்பிக்கையற்ற விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை.
1950 முதல் 2025 வரை தமிழச்சிறார் இலக்கியம் குறித்து தகவல்களுடன் மெல்லிய விமர்சனத்துடன் இவ்வளவு நூல்கள் வந்திருப்பது நம்பிக்கையூட்டும் விஷயமாகும். [என் பார்வையில் படாத நூல்கள் இருக்கக் கூடும்].
- வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் – அழ வள்ளியப்பா
- தமிழில் குழந்தை இலக்கியம் – ஓர் மதிப்பீடு – தொகுப்பு: ரேவதி
- குழந்தை இலக்கிய வரலாறு – பூவண்ணன்
- வளர்ச்சிப் பாதையில் குழந்தை இலக்கியம் – கவிஞர் செல்லகணபதி
- சிறார் இலக்கியம் – அதிசய உலகம் – பூவண்ணன்
- சிறுவர் இலக்கியத்தில் ஆர்.வி. படைத்த கண்ணன் நாவல்கள் – ரேவதி
- கி. வா. ஜ. படைத்த சிறுவர் இலக்கியம் – ரேவதி
- சிறுவர் இலக்கியத்தில் அகிலனின் படைப்புகள் – ரேவதி
- தமிழ்க் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும் – சுகுமாரன்
- தமிழ்க் குழந்தை இலக்கியம் இன்றும் இனியும் – சுகுமாரன்
- சிறார் இலக்கியமும் சில சிந்தனைகளும் – கிருங்கை சேதுபதி
- சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும் – இடைமருதூர் முனைவர் மஞ்சுளா
- சிறார் இதழ்கள் – அன்றும் இன்றும் – ஆர். வி. பதி
- சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? – பவள சங்கரி
- பால சாகித்ய புரஸ்கார் விருதும் விருதாளர்களும் – ஆர்.வி. பதி
- பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள் – ஞா. கலையரசி
- தமிழில் சிறார் இலக்கியம் – முனைவர் ப. இப்ராஹிம்
- தமிழ்ச்சிறார் இலக்கியம் யதார்த்தமும் எதிர்காலமும் – ஆதி வள்ளியப்பன்
- நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் நோக்கமும் அதன் பாதையும் – தொகுப்பு ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு.
குழந்தை இலக்கிய வரலாறு நூலில் பூவண்ணன் இரண்டு முக்கிய விமர்சனங்களைத் தந்துள்ளார்.
சங்க காலத்தில் குழந்தை இலக்கியம் இல்லை. குழந்தைகளைப் பற்றிய பாடல் குழந்தை இலக்கியம் ஆகாது. (உ-ம்) தாலாட்டு வகைப் பாடல்கள்.
தொல்காப்பியர் குறிப்பிடும் ‘பிசி’ (விடுகதைகள்) குழந்தை இலக்கியம் ஆகாது.
வாய்மொழி இலக்கியமாக (நாடோடிப் பாடல்கள், நாடோடிக் கதைகள்) தோன்றிய குழந்தை இலக்கியம் ஏட்டில் மலர்ந்தப் பிறகே தமிழில் ‘குழந்தை இலக்கியம் உருப் பெறுகிறுது.
ஆத்தி சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் போன்ற நீதி நூல்கள் குழந்தை இலக்கியமாகாது என்பது முக்கிய விமர்சனமாகும்.
‘இந்நூல்கள் சிறுவரை நினைத்து எழுதப்பட்டவை அல்ல. அவை சிறுவர் நூல்கள் அல்ல’ என்று அழ. வள்ளியப்பா ஆணித்தரமாக கூறியுள்ளார்.
வள்ளியப்பாவின் கருத்தை முதல் முதலில் கூறியவர் டாக்டர் வரதராசனார் ஆவார்.
‘ஆத்தி சூடியில் வடிவம் குழந்தை இலக்கியத்திற்கு உரியது. அவற்றின் பொருள் குழந்தை மனத்தை எட்டாதது.’ – டாக்டர் மு.வ.
ஆத்தி சூடியும் கொன்றை வேந்தனும் சிறுவர்கள் படிக்கலாம் என்று ‘பாரதிபாடம்’ நூலில் ஜெயகாந்தன் கூறுவதும் கவனத்திற்குரியது.
குழந்தைப் பாடல்களை 14 நிலைகளாக பிரித்து பூவண்ணன் விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனத்தில்.
கவிமணி, பாரதி, அழ. வள்ளியப்பா பாடல்களின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
1000 பாடல் நூல்கள் வந்துள்ளன. அவைகளைப் பற்றிய திறனாய்வு அவசியம் என்று பூவண்ணன் வற்புறுத்தியுள்ளார். இப்போது அவைகளெல்லாம் எங்கே? காலவெள்ளத்தில் கரைந்துப் போயினவா? என்று கேட்கத்தோன்றுகிறது.
பாடல்களுக்கு அடுத்து குழந்தைகளைக் கவருவது கதைகளாகும்.
மாயா ஜாலக் கதைகள், தேவதைக் கதைகளை அறிவியலுக்கும் நடப்பியலுக்கும் முரணானவை என்ற விமர்சனம் 1950-60 களிலே ஒரு சாரார் வைத்ததை பூவண்ணன் குறிப்பிடுகிறார்.
கதைகளோ, நாவல்களோ குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை கூற வேண்டும். தீய கருத்துகளைப் பரப்பக் கூடாது என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்வாணணின் துப்பாக்கிக் கதைகளைப் பற்றி அழ. வள்ளியப்பா விமர்சனம் வைத்தார். அந்த காலத்தில் இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையானது. குழந்தை எழுத்தாளர் சங்கம் பிளவுப்பட்டு புதிய சங்கம் தோன்றும் அளவிற்குச் சென்றது.
பெரியசாமி தூரன் எழுதிய குழந்தை இலக்கியம், நூலில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதைக்குறித்த விமர்சனங்கள் உள்ளன.
சிறப்புகளை கூறுவதும் விமர்சனம்தான். அந்த காலத்தில் குழந்தைகளுக்கு 50-க்கும் மேற்பட்ட இதழ்கள் வந்தன. அவைகளைப் பற்றிய விரிவான அறிமுகமும் சுருக்கமான விமர்சனத்தையும் பூவண்ணன் செய்திருக்கிறார். குழந்தை இலக்கிய வரலாறு நூலில் சிறுவர் இதழ்கள் சிறுவர்களுக்கு ஏற்ற விதத்தில் அமைய வேண்டும்.
சிறுவர் நூல்கள், சிறுவர் நூலகங்கள் பற்றியும் விமர்சனப்பூர்வமான செய்திகளை பூவண்ணன் தந்துள்ளார்.
தமிழில் குழந்தை இலக்கியம் – ஒரு மதிப்பீடு எனும் நூல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிவிழா (1975) வின் போது வெளியிடப்பட்டது. குழந்தைக்களுக்காக வெளிவந்த கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, அறிவியல், பத்திரிகை, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றைப் பற்றி விரிவான தகவல்களும் விமர்சனங்களும் இந்நூலில் வைக்கப்பட்டிருந்தது.
அழ வள்ளியப்பாவின் வழிகாட்டுதலால் ரேவதி இந்நூலிலுள்ள கட்டுரைகளைத் தொகுத்திருந்தார்.
கட்டுரைகளை எழுதுவதற்காக குழந்தை இலக்கியம் வெளியிடும் பதிப்பகங்கள் நூல்களை சங்கத்திற்கு அனுப்பி உதவிடுமாறு அழ வள்ளியப்பா வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்க செய்தியாகும்.
குழந்தை இலக்கியம் குறித்து சிங்கப்பூர் அரசு நடத்திய பயிலரங்கு காரணமாக குழந்தை இலக்கிய வளர்ச்சி பற்றி தான் சிந்தித்தாக செல்ல கணபதி கூறுகிறார்.
‘வளர்ச்சிப் பாதையில் குழந்தை இலக்கியம்’ (1994) கவிஞர் செல்ல கணபதி எழுதிய நூல் குழந்தைப் பாடல்களில் உவமைச் சிறப்பு, குழந்தை இலக்கியம் படைப்பது, குழந்தைகளிடம் வாசிப்புத் திறமை வளர்ப்பது பற்றி பேசுகிறது.
‘கி.வா.ஜ. படைத்த சிறுவர் இலக்கியம்’, ‘சிறுவர் இலக்கியத்தில் ஆர் வி படைத்த கண்ணன் நாவல், சிறுவர் இலக்கியத்தில் அகிலனின் படைப்புகள் ஆகிய மூன்று நூல்களும் சிறார் இலக்கிய திறனாய்வு என்ற முறையில் இதற்கு முன்னும் பின்னும் இல்லாத வகையில் வெளிவந்தவை. இவைகளை எழுதிய முன்னோடி சிறார் எழுத்தாளர், ‘கோகுலம்’ சிறுவர் இதழின் முன்னாள் ஆசிரியர், பால சாகித்ய புரஸ்கார் விருதாளர் ரேவதி ஆவார்.
இந்த மூன்று நூல்களிலும் சிறார் இலக்கியத்தை விமர்சிப்பதற்கான முறையியலையும் தந்துள்ளார்.
கதையின் சுருக்கம், கதை உணர்த்தும் கருத்து, உவமை அழகு, கதை மாந்தர், கதை நிகழும் இடங்கள், நெஞ்சையள்ளும் முடிப்பு ஆகிய தலைப்புகளில் ஒவ்வொரு படைப்பும் விமர்சிக்கப் பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
2015-20 கால கட்டங்களில் சிறார் எழுத்தாளர் சுகுமாரன் ‘தமிழ்க்குழந்தை இலக்கியம்’-விவாதங்களும் விமர்சனங்களும், ‘தமிழ்க் குழந்தை இலக்கியம் இன்றும்..இனியும்’ ஆகிய இரண்டு குழந்தை இலக்கிய விமர்சன நூல்களைத் தந்துள்ளார்.
தமிழ்க் குழந்தை இலக்கியத்திலுள்ள போதாமைகளைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்ட 29 கட்டுரைகள் இவ்விரண்டு நூல்களிலும் இடம் பெற்றிருந்தது.
தமிழ்க் குழந்தை இலக்கியம் இன்னும் எட்ட வேண்டிய உயரத்தைப் பற்றியும் கடக்க வேண்டிய தூரத்தைப் பற்றியும் இவ்விரண்டு நூல்களிலும் விவாதங்கள் எழுப்பப் பட்டிருந்தன.
தமிழ்க் குழந்தை இலக்கியம் அரைத்த மாவையே அரைத்து தளர்ச்சியடைந்திருக்கிறது. குழந்தை இலக்கியத்தின் உருவம், உள்ளடக்கங்களில் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை என்ற ஆக்கப்பூர்வமான விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.
குழந்தை இலக்கியத்திற்குக் குறிக்கோள்கள் உண்டா?, தமிழ்க்குழந்தை இலக்கியத்தில் சோவியத் குழந்தை இலக்கியத்தின் தாக்கம், தமிழ்க்குழந்தை இலக்கியத்தில் பாலின வேறுபாட்டின் தாக்கம், தமிழ்க்குழந்தை இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் ஆகிய நூல்களிலுள்ள கட்டுரைகள் சிறார் இலக்கிய ஆர்வலர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவை ஆகும்.
பாலபுரஸ்கார் விருதுப் பெற்ற கிருங்கை சேதுபதி சிறார் இலக்கியம் சில சிந்தனைகள்’ எனும் நூலை எழுதியிருக்கிறார்.
சிறார்களின் உள்ளங்களை மேன்மைப்படுத்தும் கூறுகள் சிறார் இலக்கியத்தில் இருக்க வேண்டுமென்பது அவரது சிந்தனை.
இதனடிப்படையில் ஒளவையின் ஆத்தி சூடி, பாரதியின் ஆத்தி சூடி, திருக்குறள் ஆகிய நீதி இலக்கியங்கள் சிறார் இலக்கியமே என்பது அவரது கருத்து.
பறவைகள், விலங்குகளுக்கு மனிதப் பண்புகளை ஏற்றி எழுதுவது சரியல்ல. இது அறிவியலுக்கும் அறவியலுக்கு மாறானது என்ற விமர்சனமும் அவரது நூலில் காணக்கிடக்கிறது.
சிறார் இதழ்கள் குறித்து விரிவான தகவல்களும் நூலில் உள்ளன.
இடைமறுதூர் முனைவர் கி. மஞ்சுளா எழுதிய சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும் என்ற நூலும் ஆர்.வி.பதி எழுதிய சிறார் இதழ்கள் அன்று முதல் இன்று வரை நூலும் தமிழ்ச்சிறார் இதழ்கள் குறித்து எழுதப்பட்ட தனி நூல்களாகும்.
முனைவர் கி. மஞ்சுளாவின் நூல் சிறுவர் இலக்கியம் குறித்துப் பேசுகிறது. ”மூன்று வயதில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரமும், ஐந்து வயதில் குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மைப்பிள்ளைத் தமிழும் சிறுவர்களின் இலக்கியங்கள் ஆகும். பன்னிரண்டு வயதில் இயேசு சொற்பொழிவு இலக்கியம் படைத்தார். அதே போல வள்ளலாரும் சிறு வயதில் சொற்பொழிவுகள் ஆற்றினார். ஏழு வயதில் ஆதி சங்கரர் கனகதாரா தோத்திரம் பாடினார். மகாகவி பாரதியார் ஒன்பதாவது வயதில் கவிதை இயற்றினார். இவர்கள் அனைவரும் சிறுவர்களின் இலக்கிய முன்னோடிகள்”.
இந்நூலில் சிறார் இலக்கியம் குறித்து எழுதப்பட்டுள்ள பல கருத்துகள் முரண்பாடுகள் உடையவை.
ஆர்.வி.பதி எழுதிய சிறார் இதழ்கள் குறித்த நூல் ஒரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.
ஆர்.வி.பதி ‘பால சாகித்திய புரஸ்கார் விருதும் விருதாளர்களும் என்ற நூலையும் எழுதியுள்ளார், இந்நூலில் விருதுப் பெற்ற நூல்களின் சிறப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.
‘பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள்’ என்ற நூலை சிறார் எழுத்தாளர் ஞா. கலையரசி எழுதியுள்ளார். விருது வென்ற நூல்களைப் பற்றிய அறிமுகத்தை இந்நூல் தருகிறது.
‘தமிழில் சிறார் இலக்கியம்’ எனும் நூலை முனைவர் ப. இப்ராஹிம் எழுதியிருக்கிறார். தமிழ்ச் சிறார் இலக்கியத்தையும் தமிழ்ச் சிறார் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தும் நூல் இது.
ஆதி வள்ளியப்பன் எழுதியுள்ள ‘யதார்த்தமும் எதிர்காலமும்’ என்ற நூல் தமிழ்ச் சிறார் இலக்கியம் பற்றிய விமர்சன இலக்கியம் என்றே கூறலாம்.
முன்னுரையில் ச. தமிழ்ச்செல்வன் ஒரு விவாதத்தை இந்நூல் தொடங்கி வைத்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். விவாதம் விமர்சனத்தின் ஊற்றுக்கண் அல்லவா!
2010-க்குப் பிறகு சமூகப் பிரச்சனைகளையும் குழந்தைகளிடம் பேசலாம் என்ற புரிதல் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கிறது என்று ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை இந்நூலிலுள்ள கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.
புதிதாக எழுத வந்திருக்கும் சிலரிடம் ஆர்வம் இருக்கும் அளவிற்கு ஆழம் இல்லை என்ற விமர்சனத்தையும் ஆதி வள்ளியப்பன் வைப்பது கவனத்திற்குரியது.
அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா ஆகியோரின் இலக்கியப் போக்கு பற்றிய விரிவான அறிமுகத்தையும் ஆதி வள்ளியப்பன் தந்துள்ளார்.
சிறார் இலக்கிய சாதனையாளர்கள் 10 பேருடைய சாதனைகள் பற்றிய சுருக்கமான அறிமுகம் காலத்தின் தேவை அறிந்து சரியான நேரத்தில் செய்யப்பட்ட ஒன்று.
சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் இன்றைய பிரச்சனைகள் பற்றி குறிப்பு முக்கியமானது. விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்று. தமிழில் வெளியாகும் சிறார் நூல்களுக்கு முறையான மதிப்பீடு தேவை என்கிற கருத்து சிறார் இலக்கிய விமர்சனம் வரை வேண்டிய ஒன்று என்பதைச் சொல்லுகிறது.
தமிழ்ச் சிறார் இலக்கியம் நாவில் தங்காத தித்திப்பு, சிறார் இலக்கியம் செல்லும் பாதை? பங்கிட்டுக் கொள்ளப்படும் அப்பங்கள், தமிழ்ச்சிறார் எழுத்து : எங்கே இருக்கிறது நம் கவனம்? சிறார் இலக்கியத்துக்கு அண்டரண்டப்பட்சியின் சிறகுகள் வேண்டும் (யூமா வாசுகி நேர்காணல்) பெற்றோரும் ஆசிரியர்களும் புதியவாசல்களைத் திறக்க வேண்டும் (உதய சங்கர் நேர்காணல்) தமிழ்க்குழந்தை இலக்கியம் – இன்றும் இனியும், சுகுமாரன் நூலுக்கான அணிந்துரை, யாரும் இங்கே தனி மரமில்லை, யூமா வாசுகி மொழிபெயர்த்த ‘மீளும் நிறங்கள்’ நூலுக்கான அணிந்துரை.
நேர்காணல்களாகவும் அணிந்துரையாகவும் இருக்கின்ற மேற்காணும் எட்டு கட்டுரைகளும் தமிழ்ச்சிறார் எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் வாசித்து சிந்திக்க வேண்டியவை. வளரும் தமிழ்ச் சிறார் இலக்கியப் போக்குகள் குறித்தும் தமிழ்ச்சிறார் எழுத்தாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் அலசும் கட்டுரைகள் இவை.
‘நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியம் நோக்கமும் அதன் பாதையும்’ என்ற ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு தொகுத்த நூல் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம் நடத்திய கருத்தரங்க உரைகளாகும்.
குழந்தைகளுக்குத் தேவையான கலை, இலக்கியம், விளையாட்டு போன்றவைகளின் வளர்ச்சி குறித்த அக்கறையான கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.
தமிழ்க்குழந்தை இலக்கியத்தின் கடந்த காலம், தற்காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இத்தொகுப்பு.
இத்தொகுப்பு புதிதாக எழுத வந்திருக்கும் பெண் எழுத்தாளர்களை பெயர் சொல்லி கொண்டாடுகிறது. தங்களுக்கான இலக்கியத்தை தாங்களே படைக்கும் சிறார்களை சிறப்பிக்கிறது. சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ முனைந்திருக்கும் கல்வித்துறையின் முயற்சிகளை பாராட்டுகிறது. தற்கால சிறார் இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிந்திக்கிறது. சமூகத்தில் நிலவி வரும் மதிப்பீடுகளைப் பற்றிய பார்வையை, உரையாடலை, விவாதத்தைக் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டுமென்ற நவீனச் சிறார் இலக்கியத்தின் நோக்கத்தை முன் வைக்கிறது. (உதய சங்கரின் கட்டுரையில் உள்ளவை).
தமிழ்ச் சிறார் இலக்கியம் குறித்து வந்துள்ள நூல்கள் ஒரு மெல்லிய விமர்சன வெளிச்சத்தைத் தந்திருக்கிறது.
இந்த வெளிச்சத்தின் உதவியோடு ஒரு காத்திரமான சிறார் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள் உருவாக வேண்டும் என்பது தேவை.
அந்த தேவையை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன்னெடுக்க வேண்டும்.
முதலில் தமிழில் வரும் சிறார் இலக்கிய நூல்களின் நூற்தொகை உருவாக்கப் பட வேண்டும்.
விருது பெறும் சிறார் இலக்கிய நூல்களுக்கு பரவலான அறிமுகம் அவசியம். கறாரான மதிப்பீடும் அவசியம்.
[உ.ம்: ஜி. மீனாட்சியின் ‘மல்லிகாவின் வீடு’ நூலை த.சி.எ.க. சங்கம் விமர்சித்தது. யூமா வாசுகியின் ‘தன்வீயின் பிறந்த நாள்’ நூல் பற்றிய கட்டுரை விஷ்ணுபுரம் சரவணனால் எழுதப்பட்டது.]
சிறார் இலக்கிய பிரிவுகளான பாடல், கதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, அறிவியல், இதழ், திரைப்படம் ஆகியவைப் பற்றிய மதிப்பீடு ஆண்டுதோறும் செய்யப்பட்டு நூலாக வெளிவர வேண்டும்.
இத்தகை செயல்பாடுகள் தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம் வரை உதவும்.
- சுகுமாரன்
குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.