Normal view

Received before yesterdayதமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கம்

சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம் – சுகுமாரன்

சிறார் இலக்கியத்தில் விமர்சனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிறார் இலக்கியம் சிறார்கள் மீது செலுத்தியிருக்கும் தாக்கத்தைத் தெரிந்துக் கொள்ள விமர்சனம் அவசியம்.  தரமான சிறார் இலக்கியத்தை அறிமுகப்படுத்தவும் மேம்படுத்தவும் விமர்சனம் உதவுகிறது.

சிறார் இலக்கியத்தின் உள்ளடக்கம், பாத்திரங்கள் பற்றிய விமர்சனம் சிறார்களின் பார்வையில் அமைவது முக்கியம். சிறார் இலக்கியம் உலகத்தைப் புரிந்துக் கொள்ள சிறார்களுக்கு உதவி இருக்கிறதா? என்பதை விமர்சகர் பார்க்க வேண்டும். சிறார் இலக்கிய விமர்சகர்களாக வரலாற்றில் இதுவரை ஆசிரியர்கள், நூலகர், கல்வியாளர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழ்ச் சிறார் இலக்கிய விமர்சன இலக்கியத்தைப் பொறுத்தவரை ஆசிரியர்கள், நூலகர், கல்வியாளர்கள் விமர்சகர்களாக இருந்திருக்கிறார்களா என்பதை தேடி பார்க்க வேண்டியிருக்கிறது.

விமர்சனம் ஒரு நூலின் நிறை குறைகளை எடுத்துக் கூறுகிறது. விமர்சனத்தை தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் விமர்சனங்கள் வேறுபடும். இப்போது குழந்தைகள் வாசிப்பதில்லை. பாலபுரஸ்கார் விருது இல்லையென்றால் குழந்தை இலக்கியம் படைக்க ஆளில்லை. நூலகத்தில் புத்தகங்கள் எடுத்து சிறார்கள் படிப்பதில்லை. சிறார் இதழ்கள் படிக்கப்படுவதில்லை போன்ற மேம்போக்கான, நம்பிக்கையற்ற விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை.

            1950 முதல் 2025 வரை தமிழச்சிறார் இலக்கியம் குறித்து தகவல்களுடன் மெல்லிய விமர்சனத்துடன் இவ்வளவு நூல்கள் வந்திருப்பது நம்பிக்கையூட்டும் விஷயமாகும். [என் பார்வையில் படாத நூல்கள் இருக்கக் கூடும்].

  1. வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் – அழ வள்ளியப்பா
  2. தமிழில் குழந்தை இலக்கியம் – ஓர் மதிப்பீடு – தொகுப்பு: ரேவதி
  3. குழந்தை இலக்கிய வரலாறு – பூவண்ணன்
  4. வளர்ச்சிப் பாதையில் குழந்தை இலக்கியம் – கவிஞர் செல்லகணபதி
  5. சிறார் இலக்கியம் – அதிசய உலகம் – பூவண்ணன்
  6. சிறுவர் இலக்கியத்தில் ஆர்.வி. படைத்த கண்ணன் நாவல்கள் – ரேவதி
  7. கி. வா. ஜ. படைத்த சிறுவர் இலக்கியம் – ரேவதி
  8. சிறுவர் இலக்கியத்தில் அகிலனின் படைப்புகள் – ரேவதி
  9. தமிழ்க் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும் – சுகுமாரன்
  10. தமிழ்க் குழந்தை இலக்கியம் இன்றும் இனியும் – சுகுமாரன்
  11. சிறார் இலக்கியமும் சில சிந்தனைகளும் – கிருங்கை சேதுபதி
  12. சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும் – இடைமருதூர் முனைவர் மஞ்சுளா
  13. சிறார் இதழ்கள் – அன்றும் இன்றும் – ஆர். வி. பதி
  14. சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? – பவள சங்கரி
  15. பால சாகித்ய புரஸ்கார் விருதும் விருதாளர்களும் – ஆர்.வி. பதி
  16. பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள் – ஞா. கலையரசி
  17. தமிழில் சிறார் இலக்கியம் – முனைவர் ப. இப்ராஹிம்
  18. தமிழ்ச்சிறார் இலக்கியம் யதார்த்தமும் எதிர்காலமும் – ஆதி வள்ளியப்பன்
  19. நவீன தமிழ்ச்சிறார் இலக்கியம் நோக்கமும் அதன் பாதையும் – தொகுப்பு ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு.

            குழந்தை இலக்கிய வரலாறு நூலில் பூவண்ணன் இரண்டு முக்கிய விமர்சனங்களைத் தந்துள்ளார்.

            சங்க காலத்தில் குழந்தை இலக்கியம் இல்லை. குழந்தைகளைப் பற்றிய பாடல் குழந்தை இலக்கியம் ஆகாது. (உ-ம்) தாலாட்டு வகைப் பாடல்கள்.

            தொல்காப்பியர் குறிப்பிடும் ‘பிசி’ (விடுகதைகள்) குழந்தை இலக்கியம் ஆகாது.

            வாய்மொழி இலக்கியமாக (நாடோடிப் பாடல்கள், நாடோடிக் கதைகள்) தோன்றிய குழந்தை இலக்கியம் ஏட்டில் மலர்ந்தப் பிறகே தமிழில் ‘குழந்தை இலக்கியம் உருப் பெறுகிறுது.

            ஆத்தி சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் போன்ற நீதி நூல்கள் குழந்தை இலக்கியமாகாது என்பது முக்கிய விமர்சனமாகும்.

            ‘இந்நூல்கள் சிறுவரை நினைத்து எழுதப்பட்டவை அல்ல. அவை சிறுவர் நூல்கள் அல்ல’ என்று அழ. வள்ளியப்பா ஆணித்தரமாக கூறியுள்ளார்.

            வள்ளியப்பாவின் கருத்தை முதல் முதலில் கூறியவர் டாக்டர் வரதராசனார் ஆவார்.

            ‘ஆத்தி சூடியில் வடிவம் குழந்தை இலக்கியத்திற்கு உரியது. அவற்றின் பொருள் குழந்தை மனத்தை எட்டாதது.’                                                           – டாக்டர் மு.வ.

            ஆத்தி சூடியும் கொன்றை வேந்தனும் சிறுவர்கள் படிக்கலாம் என்று ‘பாரதிபாடம்’ நூலில் ஜெயகாந்தன் கூறுவதும் கவனத்திற்குரியது.

            குழந்தைப் பாடல்களை 14 நிலைகளாக பிரித்து பூவண்ணன் விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனத்தில்.

            கவிமணி, பாரதி, அழ. வள்ளியப்பா பாடல்களின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

            1000 பாடல் நூல்கள் வந்துள்ளன. அவைகளைப் பற்றிய திறனாய்வு அவசியம் என்று பூவண்ணன் வற்புறுத்தியுள்ளார். இப்போது அவைகளெல்லாம் எங்கே? காலவெள்ளத்தில் கரைந்துப் போயினவா? என்று கேட்கத்தோன்றுகிறது.

            பாடல்களுக்கு அடுத்து குழந்தைகளைக் கவருவது கதைகளாகும்.

            மாயா ஜாலக் கதைகள், தேவதைக் கதைகளை அறிவியலுக்கும் நடப்பியலுக்கும் முரணானவை என்ற விமர்சனம் 1950-60 களிலே ஒரு சாரார் வைத்ததை பூவண்ணன் குறிப்பிடுகிறார்.

            கதைகளோ, நாவல்களோ குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை கூற வேண்டும். தீய கருத்துகளைப் பரப்பக் கூடாது என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்வாணணின் துப்பாக்கிக் கதைகளைப் பற்றி அழ. வள்ளியப்பா விமர்சனம் வைத்தார். அந்த காலத்தில் இந்த விமர்சனம் பெரும் சர்ச்சையானது. குழந்தை எழுத்தாளர் சங்கம் பிளவுப்பட்டு புதிய சங்கம் தோன்றும் அளவிற்குச் சென்றது.

            பெரியசாமி தூரன் எழுதிய குழந்தை இலக்கியம், நூலில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதைக்குறித்த விமர்சனங்கள் உள்ளன.

            சிறப்புகளை கூறுவதும் விமர்சனம்தான். அந்த காலத்தில் குழந்தைகளுக்கு 50-க்கும் மேற்பட்ட இதழ்கள் வந்தன. அவைகளைப் பற்றிய விரிவான அறிமுகமும் சுருக்கமான விமர்சனத்தையும் பூவண்ணன் செய்திருக்கிறார். குழந்தை இலக்கிய வரலாறு நூலில் சிறுவர் இதழ்கள் சிறுவர்களுக்கு ஏற்ற விதத்தில் அமைய வேண்டும்.

            சிறுவர் நூல்கள், சிறுவர் நூலகங்கள் பற்றியும் விமர்சனப்பூர்வமான செய்திகளை பூவண்ணன் தந்துள்ளார்.

            தமிழில் குழந்தை இலக்கியம் – ஒரு மதிப்பீடு எனும் நூல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிவிழா (1975) வின் போது வெளியிடப்பட்டது. குழந்தைக்களுக்காக வெளிவந்த கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, அறிவியல், பத்திரிகை, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றைப் பற்றி விரிவான தகவல்களும் விமர்சனங்களும் இந்நூலில் வைக்கப்பட்டிருந்தது.

            அழ வள்ளியப்பாவின் வழிகாட்டுதலால் ரேவதி இந்நூலிலுள்ள கட்டுரைகளைத் தொகுத்திருந்தார்.

            கட்டுரைகளை எழுதுவதற்காக குழந்தை இலக்கியம் வெளியிடும் பதிப்பகங்கள் நூல்களை சங்கத்திற்கு அனுப்பி உதவிடுமாறு அழ வள்ளியப்பா வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்க செய்தியாகும்.

            குழந்தை இலக்கியம் குறித்து சிங்கப்பூர் அரசு நடத்திய பயிலரங்கு காரணமாக குழந்தை இலக்கிய வளர்ச்சி பற்றி தான் சிந்தித்தாக செல்ல கணபதி கூறுகிறார்.

            ‘வளர்ச்சிப் பாதையில் குழந்தை இலக்கியம்’ (1994) கவிஞர் செல்ல கணபதி எழுதிய நூல் குழந்தைப் பாடல்களில் உவமைச் சிறப்பு, குழந்தை இலக்கியம் படைப்பது, குழந்தைகளிடம் வாசிப்புத் திறமை வளர்ப்பது பற்றி பேசுகிறது.

            ‘கி.வா.ஜ. படைத்த சிறுவர் இலக்கியம்’, ‘சிறுவர் இலக்கியத்தில் ஆர் வி படைத்த கண்ணன் நாவல், சிறுவர் இலக்கியத்தில் அகிலனின் படைப்புகள் ஆகிய மூன்று நூல்களும் சிறார் இலக்கிய திறனாய்வு என்ற முறையில் இதற்கு முன்னும் பின்னும் இல்லாத வகையில் வெளிவந்தவை. இவைகளை எழுதிய முன்னோடி சிறார் எழுத்தாளர், ‘கோகுலம்’ சிறுவர் இதழின் முன்னாள் ஆசிரியர், பால சாகித்ய புரஸ்கார் விருதாளர் ரேவதி ஆவார்.

            இந்த மூன்று நூல்களிலும் சிறார் இலக்கியத்தை விமர்சிப்பதற்கான முறையியலையும் தந்துள்ளார்.

            கதையின் சுருக்கம், கதை உணர்த்தும் கருத்து, உவமை அழகு, கதை மாந்தர், கதை நிகழும் இடங்கள், நெஞ்சையள்ளும் முடிப்பு ஆகிய தலைப்புகளில் ஒவ்வொரு படைப்பும் விமர்சிக்கப் பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

            2015-20 கால கட்டங்களில் சிறார் எழுத்தாளர் சுகுமாரன் ‘தமிழ்க்குழந்தை இலக்கியம்’-விவாதங்களும் விமர்சனங்களும், ‘தமிழ்க் குழந்தை இலக்கியம் இன்றும்..இனியும்’ ஆகிய இரண்டு குழந்தை இலக்கிய விமர்சன நூல்களைத் தந்துள்ளார்.

            தமிழ்க் குழந்தை இலக்கியத்திலுள்ள போதாமைகளைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்ட 29 கட்டுரைகள் இவ்விரண்டு நூல்களிலும் இடம் பெற்றிருந்தது.

            தமிழ்க் குழந்தை இலக்கியம் இன்னும் எட்ட வேண்டிய உயரத்தைப் பற்றியும் கடக்க வேண்டிய தூரத்தைப் பற்றியும் இவ்விரண்டு நூல்களிலும் விவாதங்கள் எழுப்பப் பட்டிருந்தன.

            தமிழ்க் குழந்தை இலக்கியம் அரைத்த மாவையே அரைத்து தளர்ச்சியடைந்திருக்கிறது. குழந்தை இலக்கியத்தின் உருவம், உள்ளடக்கங்களில் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை என்ற ஆக்கப்பூர்வமான விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.

            குழந்தை இலக்கியத்திற்குக் குறிக்கோள்கள் உண்டா?, தமிழ்க்குழந்தை இலக்கியத்தில் சோவியத் குழந்தை இலக்கியத்தின் தாக்கம், தமிழ்க்குழந்தை இலக்கியத்தில் பாலின வேறுபாட்டின் தாக்கம், தமிழ்க்குழந்தை இலக்கியத்தில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் ஆகிய நூல்களிலுள்ள கட்டுரைகள் சிறார் இலக்கிய ஆர்வலர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவை ஆகும்.

            பாலபுரஸ்கார் விருதுப் பெற்ற கிருங்கை சேதுபதி சிறார் இலக்கியம் சில சிந்தனைகள்’ எனும் நூலை எழுதியிருக்கிறார்.

            சிறார்களின் உள்ளங்களை மேன்மைப்படுத்தும் கூறுகள் சிறார் இலக்கியத்தில் இருக்க வேண்டுமென்பது அவரது சிந்தனை.

            இதனடிப்படையில் ஒளவையின் ஆத்தி சூடி, பாரதியின் ஆத்தி சூடி, திருக்குறள் ஆகிய நீதி இலக்கியங்கள் சிறார் இலக்கியமே என்பது அவரது கருத்து.

            பறவைகள், விலங்குகளுக்கு மனிதப் பண்புகளை ஏற்றி எழுதுவது சரியல்ல. இது அறிவியலுக்கும் அறவியலுக்கு மாறானது என்ற விமர்சனமும் அவரது நூலில் காணக்கிடக்கிறது.

            சிறார் இதழ்கள் குறித்து விரிவான தகவல்களும் நூலில் உள்ளன.

            இடைமறுதூர் முனைவர் கி. மஞ்சுளா எழுதிய சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும் என்ற நூலும் ஆர்.வி.பதி எழுதிய சிறார் இதழ்கள் அன்று முதல் இன்று வரை நூலும் தமிழ்ச்சிறார் இதழ்கள் குறித்து எழுதப்பட்ட தனி நூல்களாகும்.

            முனைவர் கி. மஞ்சுளாவின் நூல் சிறுவர் இலக்கியம் குறித்துப் பேசுகிறது. ”மூன்று வயதில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரமும், ஐந்து வயதில் குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மைப்பிள்ளைத் தமிழும் சிறுவர்களின் இலக்கியங்கள் ஆகும். பன்னிரண்டு வயதில் இயேசு சொற்பொழிவு இலக்கியம் படைத்தார். அதே போல வள்ளலாரும் சிறு வயதில் சொற்பொழிவுகள் ஆற்றினார். ஏழு வயதில் ஆதி சங்கரர் கனகதாரா தோத்திரம் பாடினார். மகாகவி பாரதியார் ஒன்பதாவது வயதில் கவிதை இயற்றினார். இவர்கள் அனைவரும் சிறுவர்களின் இலக்கிய முன்னோடிகள்”.

            இந்நூலில் சிறார் இலக்கியம் குறித்து எழுதப்பட்டுள்ள பல கருத்துகள் முரண்பாடுகள் உடையவை.

            ஆர்.வி.பதி எழுதிய சிறார் இதழ்கள் குறித்த நூல் ஒரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

            ஆர்.வி.பதி ‘பால சாகித்திய புரஸ்கார் விருதும் விருதாளர்களும் என்ற நூலையும் எழுதியுள்ளார், இந்நூலில் விருதுப் பெற்ற நூல்களின் சிறப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.

            ‘பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள்’ என்ற நூலை சிறார் எழுத்தாளர் ஞா. கலையரசி எழுதியுள்ளார். விருது வென்ற நூல்களைப் பற்றிய அறிமுகத்தை இந்நூல் தருகிறது.

            ‘தமிழில் சிறார் இலக்கியம்’ எனும் நூலை முனைவர் ப. இப்ராஹிம் எழுதியிருக்கிறார். தமிழ்ச் சிறார் இலக்கியத்தையும் தமிழ்ச் சிறார் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தும் நூல் இது.

            ஆதி வள்ளியப்பன் எழுதியுள்ள ‘யதார்த்தமும் எதிர்காலமும்’ என்ற நூல் தமிழ்ச் சிறார் இலக்கியம் பற்றிய விமர்சன இலக்கியம் என்றே கூறலாம்.

            முன்னுரையில் ச. தமிழ்ச்செல்வன் ஒரு விவாதத்தை இந்நூல் தொடங்கி வைத்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். விவாதம் விமர்சனத்தின் ஊற்றுக்கண் அல்லவா!

            2010-க்குப் பிறகு சமூகப் பிரச்சனைகளையும் குழந்தைகளிடம் பேசலாம் என்ற புரிதல் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கிறது என்று ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை இந்நூலிலுள்ள கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

            புதிதாக எழுத வந்திருக்கும் சிலரிடம் ஆர்வம் இருக்கும் அளவிற்கு ஆழம் இல்லை என்ற விமர்சனத்தையும் ஆதி வள்ளியப்பன் வைப்பது கவனத்திற்குரியது.

            அழ. வள்ளியப்பா, வாண்டுமாமா ஆகியோரின் இலக்கியப் போக்கு பற்றிய விரிவான அறிமுகத்தையும் ஆதி வள்ளியப்பன் தந்துள்ளார்.

            சிறார் இலக்கிய சாதனையாளர்கள் 10 பேருடைய சாதனைகள் பற்றிய சுருக்கமான அறிமுகம் காலத்தின் தேவை அறிந்து சரியான நேரத்தில் செய்யப்பட்ட ஒன்று.

            சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் இன்றைய பிரச்சனைகள் பற்றி குறிப்பு முக்கியமானது. விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்று. தமிழில் வெளியாகும் சிறார் நூல்களுக்கு முறையான மதிப்பீடு தேவை என்கிற கருத்து சிறார் இலக்கிய விமர்சனம் வரை வேண்டிய ஒன்று என்பதைச் சொல்லுகிறது.

            தமிழ்ச் சிறார் இலக்கியம் நாவில் தங்காத தித்திப்பு, சிறார் இலக்கியம் செல்லும் பாதை? பங்கிட்டுக் கொள்ளப்படும் அப்பங்கள், தமிழ்ச்சிறார் எழுத்து : எங்கே இருக்கிறது நம் கவனம்? சிறார் இலக்கியத்துக்கு அண்டரண்டப்பட்சியின் சிறகுகள் வேண்டும் (யூமா வாசுகி நேர்காணல்) பெற்றோரும் ஆசிரியர்களும் புதியவாசல்களைத் திறக்க வேண்டும் (உதய சங்கர் நேர்காணல்) தமிழ்க்குழந்தை இலக்கியம் – இன்றும் இனியும், சுகுமாரன் நூலுக்கான அணிந்துரை, யாரும் இங்கே தனி மரமில்லை, யூமா வாசுகி மொழிபெயர்த்த ‘மீளும் நிறங்கள்’ நூலுக்கான அணிந்துரை.

            நேர்காணல்களாகவும் அணிந்துரையாகவும் இருக்கின்ற மேற்காணும் எட்டு கட்டுரைகளும் தமிழ்ச்சிறார் எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் வாசித்து சிந்திக்க வேண்டியவை. வளரும் தமிழ்ச் சிறார் இலக்கியப் போக்குகள் குறித்தும் தமிழ்ச்சிறார் எழுத்தாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் அலசும் கட்டுரைகள் இவை.

            ‘நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியம் நோக்கமும் அதன் பாதையும்’ என்ற ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு தொகுத்த நூல் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர் சங்கம் நடத்திய கருத்தரங்க உரைகளாகும்.

            குழந்தைகளுக்குத் தேவையான கலை, இலக்கியம், விளையாட்டு போன்றவைகளின் வளர்ச்சி குறித்த அக்கறையான கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.

            தமிழ்க்குழந்தை இலக்கியத்தின் கடந்த காலம், தற்காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இத்தொகுப்பு.

            இத்தொகுப்பு புதிதாக எழுத வந்திருக்கும் பெண் எழுத்தாளர்களை பெயர் சொல்லி கொண்டாடுகிறது. தங்களுக்கான இலக்கியத்தை தாங்களே படைக்கும் சிறார்களை சிறப்பிக்கிறது. சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு உதவ முனைந்திருக்கும் கல்வித்துறையின் முயற்சிகளை பாராட்டுகிறது. தற்கால சிறார் இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிந்திக்கிறது. சமூகத்தில் நிலவி வரும் மதிப்பீடுகளைப் பற்றிய பார்வையை, உரையாடலை, விவாதத்தைக் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டுமென்ற நவீனச் சிறார் இலக்கியத்தின் நோக்கத்தை முன் வைக்கிறது. (உதய சங்கரின் கட்டுரையில் உள்ளவை).

            தமிழ்ச் சிறார் இலக்கியம் குறித்து வந்துள்ள நூல்கள் ஒரு மெல்லிய விமர்சன வெளிச்சத்தைத் தந்திருக்கிறது.

            இந்த வெளிச்சத்தின் உதவியோடு ஒரு காத்திரமான சிறார் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள் உருவாக வேண்டும் என்பது தேவை.

            அந்த தேவையை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன்னெடுக்க வேண்டும்.

            முதலில் தமிழில் வரும் சிறார் இலக்கிய நூல்களின் நூற்தொகை உருவாக்கப் பட வேண்டும்.

            விருது பெறும் சிறார் இலக்கிய நூல்களுக்கு பரவலான அறிமுகம் அவசியம். கறாரான மதிப்பீடும் அவசியம்.

            [உ.ம்: ஜி. மீனாட்சியின் ‘மல்லிகாவின் வீடு’ நூலை த.சி.எ.க. சங்கம் விமர்சித்தது. யூமா வாசுகியின் ‘தன்வீயின் பிறந்த நாள்’ நூல் பற்றிய கட்டுரை விஷ்ணுபுரம் சரவணனால் எழுதப்பட்டது.]

            சிறார் இலக்கிய பிரிவுகளான பாடல், கதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, அறிவியல், இதழ், திரைப்படம் ஆகியவைப் பற்றிய மதிப்பீடு ஆண்டுதோறும் செய்யப்பட்டு நூலாக வெளிவர வேண்டும்.

            இத்தகை செயல்பாடுகள் தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம் வரை உதவும்.

  • சுகுமாரன்

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்கள்  – இந்துமதி

முன்னுரை

            இவ்வுலகின் உயிர்ப்புக்கு மிக முக்கிய காரணம் மொழி கண்டுபிடிக்கப்பட்டதே. மொழியினும் எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதே நாகரிகம் தொடர்ந்து வளர்ந்து  இன்றைக்கு செயற்கை நுண்ணறிவாய் இயந்திர மொழியோடு இயங்கி கொண்டிருக்கிறது. இந்த எழுத்து வடிவ மொழியால் படைக்கப்படும் இலக்கிய வகைமைகள் பலவாய் அமைந்திருப்பதை காண முடிகிறது. அவ்வகையில் சிறார் இலக்கிய வகையும் தோன்றி தழைத்து வருகிறது. எனினும் பெரியோருக்கான இலக்கிய வகைமைகள் போல சிறாருக்கான இலக்கிய வகைமைகள் பல்கி பெருகி வேரூன்றவில்லை என்பதை அறிய முடிகிறது. இதற்கான காரணம் வளர்க்கும் பெற்றோரா, பள்ளிகளா, சமூகம் எனப்படும் அரசா  என்பதை ஆய்ந்து கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

            இத்தலைப்பானது சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்களை குறித்து ஆராய்வதாகவே அமைந்துள்ளன. ஆனால் உண்மையில் பள்ளிகளே கூட சிக்கலை ஏற்படுத்தும் இடத்தில் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஆய்வை அலச வேண்டியதும் அவசியமாகிறது.

யார் சிறார்

            சிறார்கள் எனப்படுபவர் யார் என்பதை அறிந்தாலே சிறாருக்கான இலக்கியம் எது என்பதை அறிய முடியும். அவ்வகையில் பார்ப்போமேயானால் பல்வேறு அறிவியல் அறிஞர்களும், தத்துவவாதிகளும்  சிறார் என்பதற்கு பல்வேறு வயது நிலையை குறிப்பிடுகின்றனர். இலக்கிய வகைமை சார்ந்தும்  சிறார் வயது மாறுபடலாம் என்கின்றர். அதாவது பாடலை 3 வயதில் இருந்தே  கற்று கொடுக்க முடியும், கட்டுரையை 8 வயதிற்கு பிறகு, நாடகத்தை எட்டு வயதிற்கு பிறகு, பேச்சாற்றலை 5 வயது முதல் என வகைப்படுத்துவதை அறிய முடிகிறது. பொதுவாக சிறார்களை 00-03 வயதினர் குழந்தைப் பருவம், 03-05 வயதினர் முன்பிள்ளைப் பருவம், 05-11 வயதினர் பிள்ளைப் பருவம், 11-15 வயதினர் முன்குமரப் பருவம், 15-18 வயதினர் குமரப் பருவம் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

            எனினும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படியும், ஐக்கிய நாடுகள் சபையின் படியும் சிறார் என்பவர் 0-18 வயது வரை உள்ளவர்கள் என அறிய முடிகிறது.

எது சிறார் இலக்கியம், எப்படி தோன்றியது

எந்த ஒரு இலக்கிய வகைமையும் நாட்டுப்புற இலக்கியங்களில் இருந்தே தோன்றியிருக்கிறது. வாய்மொழி இலக்கியங்களாய் இருந்து பின்னர்  எழுதப்பட்ட இலக்கிய வகைமையாய்  வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அவ்வகையில் சிறார் இலக்கியமும் நாட்டுப்புற இலக்கியங்களில் இருந்தே தோன்றியிருக்க வேண்டும். சிறுவர்களுக்காக சிறுவர்களே படைப்பதும், சிறுவர்களுக்காக பெரியவர்கள் படைப்பதும் சிறார் இலக்கியம் எனப்படுகிறது. அதே போல் நீதிக்தைகள், அறநெறி போதனைகள் தவிர்த்து சிறார்களின் மகிழ்ச்சி, ஆர்வம், கொண்டாட்டத்திற்கும் அவை இடம் அளிப்பதாக அமைபவை சிறார் இலக்கியம் எனப்படுகிறது.

”சிறுவர் இலக்கியம் உள்ளத்தைப் பண்படுத்தி அறிவூட்டுவதாக இருக்க வேண்டும். விவேகத்தைத் தருவதாக இருக்க வேண்டும். வேற்றுமை, பகைமை முதலிய தீமை சேராததாக இருக்க வேண்டும். கற்பனையைத் தூண்டிச் சிந்தனையைப் பெருக்குவதாக இருக்க வேண்டும். மனத்துக்கு மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருவதாக இருக்க வேண்டும். மனிதப் பண்புகளைச் சிறக்கச் செய்வதாய் இருக்க வேண்டும். ஆற்றலையும் தீரத்தையும் நேர்மையையும் நெஞ்சுறுதியையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும். இறையுணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் தருவதாக இருக்க வேண்டும்”1 இதுவே சிறார் இலக்கியம் என்கிறார்  குழந்தை எழுத்தாளர்அஆர். வி.

“காலத்தால் அலசப்பட்டுத் தெளிந்தெடுக்கப்பட்ட  அறச்சான்றுகளையே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொருத்திச் சிறுவர் இலக்கியம் படைப்போமானால் வருங்காலச் சமுதாயம் நம் நாட்டைக் பொன்னாடாக மாற்றிவிடும் என்பது உறுதி. நீதியை – நெறியை எழுத வேண்டும். அது அப்பட்டமான நீதியுபதேசமாகத் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.”2  என்கிறார் நாரா. நாச்சியப்பன்.

சிறார் இலக்கியத்தின் தோற்றம் குறித்து ஆயும்போது வாய்மொழி இலக்கியத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதை தெளிவாய் உணர முடிகிறது. உதாரணமாக மழை வருது மழை வருது…. ஒரு குடம் தண்ணீ ஊத்தி…. போன்றவற்றை குறிப்பிடலாம். இதனை குழந்தை எழுத்தாளர் நாரா. நாச்சியப்பன் அவர்கள் “தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கருதப்பட்ட சங்க காலத்திலோ, அதற்குப் பின்னதோ, இடைக்காலத்திலோ, மேற்கத்திய இலக்கியங்களின் தாக்குதல் ஏற்பட்ட வெள்ளையர் ஆட்சிக் காலத்திலோ சிறுவர் இலக்கியம் அல்லது குழந்தைகள் இலக்கியம் என்று ஒரு தனிப்பிரிவு இருக்கவில்லை. அந்தச் சிந்தனையே ஏற்பட்டதில்லை. தொடக்க காலத்தில் இலக்கியம் படைத்தவர்கள் யாரும் சிறுவர்களுக்கென்று தனியாக இலக்கியம் உருவாக்க வேண்டும் என்று கருதவில்லை. பள்ளிக்கூடம் நடத்தியவர்களும், பாடப்புத்தகம் தொகுத்தவர்களும்தாம் சிறுவர்களுக்குப் பயன்படுத்தத்தக்கவை எவை என்று தேடினார்கள். அவர்களும் சிறுவர்களுக்கென்று தனிப்படைப்புகள் வேண்டும் என்றோ நினைத்துப் பார்க்கவில்லை. அவர்கள் நடப்பில் இருக்கின்ற இலக்கியங்களில் சிறுவர்களுக்கு ஏற்றவை எவை என்று தேடிப்பிடித்துத் தங்கள் தொகுப்புகளில் சேர்த்துக் கொண்டார்கள். இப்படி தேர்ந்தெடுக்கும்போது, பெரியவர்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டியது நீதி ஒன்றுதான் என்று அக்காலத்தில் கருதினார்கள்.”3 என்ற நாரா. நாச்சியப்பன் அவர்களின் கருததில் இருந்து  வாய்மொழி இலக்கியத்திற்கு பின்னார் சிறுவர் இலக்கியமானது வாய்மொழியாய் வளர்ந்து நீதி நூல்கள் அற நூல்கள் வழியாக வளர்ச்சி பெற்று பின்னர் தனித்த துறையாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது.

            சிறுவர் இலக்கியங்களும் பெரியோர் இலக்கிய வகைமைகளைப் போலவே பல்வேறு வகைகளைக் கொண்டுள்ளது. அவை “தன் பிற்கால வளர்ச்சிக்கேற்ப பாடல், கதை, கட்டுரை, நாடகம், திரைபடம், பத்திரிகை முதலிய பல பகுதிகளாகப் பல்கிப் பெருகியுள்ளது”4 என்கிறார் சிறார் இலக்கிய எழுத்தாளர் பூ வண்ணன் அவர்கள். இவை தவிர்த்து விடுகதை, கதைப்பாடல், சித்திரக்கதைகள், நாவல்கள் என கிளை பிரிவுகளையும் கொண்டு இயங்குகிறது சிறார் இலக்கியங்கள்.

சிறார் இலக்கியத்தின்  தேவை

            சிறார்கள் மிகுந்த நாடாக இந்தியா விளங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவில் “18 வயதிற்கு கீழ் 472 மில்லியன் குழந்தைகள் உள்ளனர் என்பதும் இதிலும் தமிழ் நாட்டில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை என்பது இதில்22.29 சதவிதம்”5 என்கிறது  அரசு குறிப்பு. இது சிறார் இலக்கியத்தின் தேவையை நமக்கு உணர்த்துகிறது.

            ‘சிறுவர்களுக்கு நல்ல உணவு அளித்து, உடையளித்து, ஒழுக்கங்களைக் கற்பித்து கல்வியறிவு பெறச் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் அக்கறையுடன் கவனித்துச் செய்யாவிட்டால் சிறுவர்கள் மனிதர்களாகலாம். ஆனால் நல்ல குடிமக்களாக, வருங்கால உலகை வாழ்விக்கும் சான்றோர்களாக திகழ முடியாது”6 என்கிறார் பூவண்ணன். எனவே சிறார்கள் மீது அக்கறை செலுத்த வேண்டியது நமது கடமையாகும். எனவே அதிக அளவில் சிறார் இலக்கியங்கள் படைக்கப்படுவதும் படிக்கப்படுவதும் அவசியமான ஒன்றாகும்.

சிறார் இலக்கியம் சிறார்களிடம் செல்வதில் உள்ள சிக்கல்கள்

            சிறார் இலக்கியம் சிறார்களிடம் செல்வதில் பல்வேறு நிலைகளில்  சிக்கல்கள் ஏற்படுகின்றன. அந்த நிலைகளைக் கொண்டு 5 வகையாக பிரிக்கப்படுகிறது. அவை

  1. சிறார்களிடம் உள்ள சிக்கல்கள்
  2. பெற்றோர்களிடம் உள்ள சிக்கல்கள்
  3. பள்ளிகளில் ஏற்படும் சிக்கல்கள்
  4. சமூகம்/ அரசு சார்ந்த சிக்கல்கள்
  5. படைப்பாளர் சார்ந்த சிக்கல்கள்

எனலாம்.

சிறார்களிடம் உள்ள சிக்கல்கள்

  • தனது விருப்பத்தை சில நேரங்களில் சரியாக தேர்ந்தெடுக்க இயலாமை ஏற்படலாம்.
  • பெற்றோர்களின் திணிப்பு விருப்பத்தை முடிவு செய்யலாம்.
  • பெற்றோர்களை சாரந்தே இயங்க வேண்டி உள்ளதால் அவர்களின் ஒத்துழைப்பு தேவைபடலாம். (எங்கு செல்லவும்)
  • நவீன ஊடகத்தின் அடிமைத்தனத்தால் இலக்கியங்களோடு இயங்க முடியா நிலை ஏற்படலாம். (புலனம், முகநூல், படவரி, வலையொளி)
  • விளையாடும் வாய்ப்பு குறைந்து வருவதும் அவர்களின் முக்கிய சிக்கலே.(வகுப்பறை தாண்டி ஒத்த சிறார்களோடு விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி விளையாடினாலும் அவை கிரிக்கேட், செஸ், என்று அதுவும் இன்னொரு அழுத்தம் தரும் ஒன்றாகவே சிறார்களிடம் மாறி நிற்பதைக் காண முடிகிறது)
  • புத்தகம் வாங்க வேண்டும் என்றாலும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் புத்தகத்தையே வாங்க வேண்டி வரலாம்.

            “படிக்கத்  தெரியாத குழந்தை புத்தகத்தை வைத்துக் கொண்டு விளையாடத் தொடங்கும். உடனே “அப்படிச் செய்யக் கூடாது” என்று சிலர் தடுப்பதுண்டு. அது தேவையன்று. குழந்தைகளைப் புத்தகங்களுடன் விளையாட விட வேண்டும். முதலில் விளையாடும் குழந்தைதான் பிறகு விரும்பிக் படிக்கும். படிக்கும் பழக்கம் ஏற்படக் குழந்தைகளைப் புத்தகங்களுடன் பழக விட வேண்டும்”7என்றும் மேலும்

            “எதைக் கற்கவும் ஏற்ற பருவம் இளமையே! மொழியைப் பொறுத்த வரையில் ஒருவன் சிறுவனாக இருக்கும்போது கற்கும் அறிவே பெரிது என்று மொழி நூல் அறிஞர்கள் கூறுகின்றனர். இளமையில் கற்பது எளிதில் மனதில் பதியும்; பெரியவர்களாக மாறிய பிறகும் மறக்காமல் இருப்பவை இளமையில் கற்றவையே.

            இதனால்தான் “இளமையில் கல்” என்று புலவர்கள் கூறிச் சென்றனர். இளமையில் கற்கத் தவறுபவன் முதுமையில் கற்பது அரிது. கற்றல் என்பது வெறும் எழுத்தறிவை மட்டும் குறிக்கவில்லை; அது நற்பண்பையும் குறிக்கிறது. படிப்பையும் பண்பையும் இளமையில் பெறவில்லையேல் வாழ்க்கை பயனற்றதாகும். நல்லொழுக்கத்தை இளமையில் பயின்றால் அது இறக்கும் வரை இருக்கும். இதைத்தான் “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்னும் பழமொழி குறிக்கிறது. இளமை கழிந்த பிறகு முதுமையில் அவற்றைக் கற்றல் அரிது என்பதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்னும் முதுமொழி எடுத்து இயம்புகிறது.

            நற்குணங்களையும், விரத்தையும், விவேகத்தையும் இளமையில் சிறுவர்களுக்கு எளிதாகக் கற்றுத் தருவது ஒன்று உண்டு. அதுதான் நல்ல முறையில் உருவாகும் சிறுவர் இலக்கியம்.”8 என்பது சிறார்களை நாம் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை காட்டுகிறது.

பெற்றோர்களிடம் காணப்படும் சிக்கல்கள்

  • சிறார்களின் விருப்பத்தை  புரிந்துக் கொள்ளாமை
  • பிற சிறார்களுடன் தங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு  மனஅழுத்தம் பெறுதல்
  • டியூசன் என்ற பெயரில் நசுக்குதல்
  • கல்வி என்பது பாடப்புத்தகத்தை படிப்பதும் மதிப்பெண் எடுப்பதும் என்று நினைப்பது.
  • அவர்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் சிறார்களின் மேல் திணிப்பது.
  • நாடகம், நடிப்பு, இசை, பாட்டு போன்றவை அவர்களின் படிப்பிற்கு எதிரானவை என்ற மனப்போக்கு
  • போதுமான வசதியின்மை, குடும்ப சூழல் (பெற்றோர் புத்தகங்களை வாங்கித் தர

இயலாத நிலை)

                                    “தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

                                    மன்னுயிர்க் கெல்லாம் இனிது

            தம் மக்கள் தம்மினும் அறிவுடையவரானால் அது உலகத்து உயிர்கட்கெல்லாம் இனிதாகும் என்று திருவள்ளுவர் கூறினார். தம்மைக் காட்டிலும் தம் மக்கள் அறிவு பெற வேண்டும் என்றே பெற்றோர் விரும்புவர். அத்தகைய அறிவோ அவர்களைக் காட்டிலும் இந்த உலக உயிர்களுக்கெல்லாம் இனிது என்றது தமிழ் மறை. தம் மக்கள் அறிவு பெற வேண்டுமானால் அவர்களுக்குரிய இலக்கியம் வளர்ச்சியுற வேண்டும். செம்மை பெற வேண்டும் – இதனைப் பெற்றோர் மறத்தலாகாது. சிறுவர் இலக்கியத்தை உண்டாக்குபவர்கள் எழுத்தாளர்களே; அதற்கு புத்தக உருவளிப்பவர்கள் பதிப்பாளர்கள்; அதனைப் படித்து பயனைபவர்கள் சிறுவர்கள். ஆனால் அதற்கு வாழ்வு அளிப்பவர்கள் பெற்றோர்களே.

            சிறுவர்களுக்கான புத்தகங்களை வாங்கி கொடுக்காவிடில் நூல்கள் எவ்வாறு விற்பனையாகும்? நூல்கள் விற்பனையாகாவிடில் யாரோ அவற்றை வெளியிடுவார்? வெளியிட எவரும் முன்வராவிடில் எந்த எழுத்தாளர் தொடர்ந்து எழுதுவார்? எனவே புத்தகங்களை வாங்கித் தரும் பெற்றோர்களேதாம் சிறுவர்களாக இருந்தபோது பார்க்க முடியாத உயர்ந்த புத்தகங்கள், தங்கள் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கண்டு பூரிப்படைய வேண்டும்.  குறைந்தது மாதம் ஒரு புத்தகத்தையாவது தம் பிள்ளைகளுக்கு வாங்கித் தர வேண்டும்.

            பெற்றோர்களின் முழு ஆதரவு என்று கிடைக்கிறதோ அன்றுதான் சிறுவர் இலக்கியம் இலக்கிய அரங்கில் தன்னிகரற்று திகழும்! பெற்றோர்களே வருங்காலக் குடிமக்களாக உங்கள் குழந்தைகளைப் பண்படுத்தும் சிறுவர்இலக்கியத்தை வளரச் செய்ய வேண்டும். சிறுவர்களின் பிறந்த நாளின் போதும்,  திருவிழாக்களின் போதும் அவர்களுக்குச் சிறுவர் புத்தகங்களை வாங்தித் தர வேண்டும். சிறுவர் பத்திரிக்கைகளுக்குச் சந்தா செலுத்திட வேண்டும்.  இவற்றைப் பெற்றோர்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும்.”9 vன்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் குழந்தை கவிஞர் பூ வண்ணன் அவர்கள்.

பள்ளிகளில் காணப்படும் சிக்கல்கள்

  • மதிப்பெண்களை விரும்பும் பெற்றோர்களால் மதிப்பெண்களை நோக்கியே மாணவர்களை திசை திருப்புதல்
  • எல்லாவற்றையும் கலை இலக்கிய வடிவங்களைக் கொண்டே கற்பிக்க இயலாது.
  • ஒரு வேளை படிப்பை படிக்காமல் கொண்டாட்ட மனநிலையிலே சிறார்கள் நின்றுவிடுவார் என்ற பயம்.
  • கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள்
  • போதிய கால அவகாசமின்மை
  • கலை விழாக்களை கண் துடைப்பிற்காக செய்தல்
  • ஆசிரியர்களின் ஆர்வமின்மை
  • நிர்வாகத்தினரின் நெருக்கடிகள்
  • சிறார் இலக்கியம் குறித்த போதுமான அவதானிப்பு இல்லாமை
  • ஆர்வமாய் செயல்படும் ஆசிரியர்களை இருட்டடிப்பு அல்லது சக ஆசிரியர்களே கேலி பேசுவது
  • செயல்படும் ஆசிரியர்களுக்கும் போதிய ஊக்கமின்மை

            “தமிழ் நாட்டு உயர் நிலைப் பள்ளிகளில் நூலகம் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு இருக்கிறது. பள்ளிகளும் நூலகத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பணத்தில் நூல்கள் வாங்குகின்றன. இப்பொறுப்பு தலைமையாசிரியரிடம் உள்ளது. பொதுவாக இத்தலைமை ஆசிரியர்கள் பாதிப்பாளர்களிடமிருந்து நூல்கள் வாங்கும் முறை திருப்தியாக இல்லை என்று கேள்விப்படுகிறேன். இத்தகவல் பொய்யாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போதுள்ள தலைமை ஆசிிரியர்கள் இவற்றைப் பொய்யாக்க வேண்டும் என்றும் விரும்புகின்றேன்.

            பொது நூலகங்களைவிட இந்தப் பள்ளி நூலகங்கள் தாம் சிறுவர் நூல்களை ஆதரிக்க வேண்டும். இவை உண்மையான அக்கறையோடு சிறுவர் நூல்கள் வாங்க ஒதுக்கப்பட்ட தொகைக்கு நல்ல தரமான சிறுவர் நூல்களை வாங்கத் தொடங்கினால் போதும். சிறுவர் இலக்கியம் வளம் பெற்று விடும்.

            பள்ளி நூலகங்களைத் தலைமை ஆசிரியரின் அறைக்குள்ளே அடக்கி வைக்காமல் தனி அறையில் அமைக்க வேண்டும். அதோடு ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நூலகரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி நூலகம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும்.”10  என்று பள்ளிகளின் சிக்கலையும் காட்டுகிறார் கவிஞர்.

சமூகம் / அரசு சார்ந்த சிக்கல்கள்

  • அரசு சிறார் இலக்கியத்தின் மீது தனித்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
  • சிறார் படைப்பாளர்களுக்கு தேவையான ஊக்கத்தையும் ஊத்வேகத்தையும் அளித்திட முன் வர வேண்டும்.
  • போதி காலமின்மை என்பதை தவிர்க்க அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் (உதாரணமாக மாதத்தின் முதல் சனிக்கிழமை அரை நாள்  சிறார் இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளுக்கு என்பதாக)
  • சிறார்களின் உடல்/ உள்ள நலன்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இன்றைய  சிறார்களே நாளைய குடிமக்கள் என்பதால் சிறார்களின் நலனில் முதலீடு செய்வது அவசியமான ஒன்றாகும்.
  • ஆண்டிற்கு ஒரு முறை  சிறார்களுக்கான மாபெரும் நிகழ்வை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.

            “சிறுவர் நூலகங்களை ஊருக்கு ஒன்றாய்த் தோற்றுவிக்கப் பொது நூலக இயக்கம் முன் வர வேண்டும். இவ்வாறு அமையும் சிறுவுர் நூலகங்கள் வெறும் நூல்களை மட்டுமே கொண்டதாக அமைவது கூடாது. சிறுவர் நூலகத்தில் சிறுவர் விளையாட்டிற்கு இடம் இருக்க வேண்டும். சிறுவர்கள் பாட்டுப் பாட ஆடல், நாடகம் நிகழ்த்த வசதியிருக்க வேண்டும். சிறுவர் திரைப்படங்கள் அவ்வப்போது திரையிட்டுக் காட்டவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்ய முடியாவிட்டாலும் நிச்சயம் கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

            பொது நூலாக இயக்கம் நிறுவும் சிறுவர் நூலகங்களும் பள்ளிக் கூடத்து நூலகங்களும் மட்டும் போதுமானவை அல்ல. அறப்பணிகளுக்காக இருக்கும் அறக்கட்டளைகளும், பெருஞ்செல்வர்களும் ஊர்கள் தோறும் செயல்படும் இலக்கிய – பொது நல மன்றங்களும் கூட சிறுவர் நூலகங்களை அமைக்க முன்வர வேண்டும். குக்கிராமங்களும் சிறுவர் நூலகங்களின் பயனைப் பெற இயங்கும் (Mobile Childrens libraries) சிறுவர் நூலகங்கள்  அமைய வேண்டும்.”)11 என்று தீர்வும் சொல்கிறார் குழந்தை எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள்.

படைப்பாளர் சந்திக்கும் சிக்கல்கள்

  • 29% சிறார்களைக் கொண்ட  தமிழகத்தில் அவர்களுக்கான படைப்புகளை வழங்க போதுமான படைப்பாளர்கள் இல்லை
  • படைக்கும் படைப்பாளர்களின் படைப்புகளையும் பதிப்பகம் பதிக்க முன்வர தயங்குதல்( விற்பனை நிலைக் கருதி)
  • படைப்பாளர்களுக்கு தேவையான பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்காமை
  • படைப்பாளர்களுக்குள்ளும் ஒன்றுபட்டு வழிநடக்கும் நிலை ஏற்படாமை
  • இன்னும் பல வகைமை சார்ந்த படைப்புகளுக்கு படைப்பாளர் இன்மை
  • பெரியவர்களுக்கான  எழுத்தாளர்கள் கொண்டாடப்படும் அளவிற்கு சிறார் எழுத்தாளர்கள் கொண்டாடபடாமை.

“சிறுவர்களுக்கு எழுதுவது கடினம். சிறுவர்கள் நிறைந்த அறிவு பெறாதவர்கள். அவர்கள் அறிந்த சொற்கள் மிகக் குறைவே. அவர்கள் உள்ளமோ எதையும் நம்பும் இயல்புடையது. தீயவை நல்லவை என்று பகுத்தறிய முடியாதது. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு சிறுவர்களுக்கு எழுத முன்வரவேண்டும். சிறுவர்களுக்காக எழுதப்படும் எழுத்தோவியம்; எளிமை இனிமை என்ற இரண்டு குணங்களை பெற்றிருக்க வேண்டும். இவர்களின் கல்வி அறிவு எத்தகையது என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் எதையும் எழுத வேண்டும். எளிமையாக எழுதினால் மட்டும் போதாது? அதில் இனிமையும் இருக்க வேண்டும். விஷயத்தை சொல்லும் முறையில் ஒரு வேகமும் விறுவிறுப்பும் இருக்க வேண்டும். இதையே “இனிமை” என்று குறிப்பிடுகின்றேன். படித்தால் சுவை தருவதும், எளிதில் புரியக் கூடியதுமான கதை, கட்டுரை, பாடல்களை சிறுவர்களுக்காக எழுத வேண்டும்” என்ற பூவண்ணன் அவர்களின் கூற்றை நினைவில் நிறுத்த வேண்டும்.“12  என்று நீண்ட நெடிய விளக்கத்தையும் படைப்பாளர்களுக்கு வழங்குகிறார் கவிஞர்.

            வாசிப்பை இயக்கமாக்கி மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கு முன்பாக முதலில் கொண்டு சொல்லப்பட வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரிய பெருமக்களிடமே. பள்ளி படிப்பிற்கு பிறகு  பிற புத்தகங்களை படிக்காத பல ஆசிரியர்கள் தமிழகத்தில் இருப்பதை காண முடிகிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதுடன் ஆசிரியர்களை கொண்டு அந்த பள்ளியின் பெற்றோர்களுக்கான  ஒரு நாள் பட்டறையை முன்னேடுத்தால் நலமாய் இருக்கும். இந்த பட்டறையானது அவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தையும் சிறார் இலக்கியத்தின் அவசியத்தையும் தெள்ளிதாய் உணர்துவதாக அமைய வேண்டும்.

            ஆசிரியர் /பெற்றோர், சிறார்கள், கலை/அறிவியல்  என்று முக்கூட்டு சிறப்பாய் அமைவதே எதிர்காலத்திற்கு நலம் பயக்கும். ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை அவர்களின் மனஅழுத்தம், அதனை அதிகரிக்கும் குடும்ப உறுப்பினர், உறவினர் நிலைபாடுகள் ஆசிரியர்களை தேர்வுக்கான புத்தகங்களை வாசிக்க சொல்கிறதே அன்றி பிற புத்தகங்களை தொடவே மறுக்கின்றனர்.

            ”எந்த தனியார் பள்ளி ஆவது ஒராசிரியர் பள்ளி அல்லது ஈராசிரியர் பள்ளி என்று அறிவிக்கப்பட்டு இயங்குவதை பார்த்திருக்கிறீர்களா? என்னங்க கிறுக்குத்தனமா கேட்கிறீர்கள் என்று தானே தோன்றுகிறது ஆனால் அரசு பள்ளியில் அப்படி நிறைய இருக்கிறது அதுவும் அதிகாரப்பூர்வமாய் அரசாலேயே ஓராசிரியர் பள்ளி ஈராசிரியர் பள்ளி என்று அறிவிக்கப்பட்ட பள்ளிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது என்றால் நீங்களே சொல்லுங்கள் அரசின் இந்த அறிவிப்பை கிறுக்குத்தனம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல என்கிறார்.

2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் 20253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருக்கிறார் அப்பள்ளிகளில் மட்டும் 83 ஆயிரத்து 641 மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும் 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் தான் உள்ளனர் அதுமட்டுமல்ல 16 அரசு பள்ளிகளில் ஆசிரியரே இல்லை எனில் இதை அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பு என்று தானே சொல்ல முடியும்….. விளக்கி அவர் “அரசு பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒரு கணக்கு வைத்துக்கொள்ளலாம் மாணவர்கள் குறைவாகத்தானே உள்ளனர் என்ற காரணம் பொருத்தமற்ற வாதம் ஆகும்.”13 என்பதும் சிறார்கள் குறித்து அக்கறையுடன் நாம் சிந்திக்க வேண்டிய இடத்தை காட்டுகிறது.

இப்படிப்பட்ட பள்ளிகளில் எல்லாம் ஒரு சிறார் செயற்பாட்டாளரை அரசு நியமித்தாலும் மாணவர்களின் நலன் மேம்படும் என்பதை தெரிவிக்கவே இந்த விளக்கங்களை இங்கே பதிவிட செய்தேன்.

மாதத்தில் ஆசிரியர் வாசித்த புத்தகத்தை பதிவிட சொல்லலாம் அதன் வழி சிறார்களுக்கும் செய்தி சென்று சேரும் பொழுது அவர்களுக்கும் வாசிக்க வேண்டும் என்ற அவா எழும்.

அதிகமான அளவில் தன்னார்வ சிறார் செயற்பாட்டாளர்களை உருவாக்க வேண்டியதும் அவசியமானதாகும். (காந்தியானாலும் காமராசர் ஆனாலும் அவர்களை போல் சிறப்பான தலைமை இல்லாமல் தடுமாறி இருக்கிறது தமிழகம். சிறந்த ஆளுமைகள் தங்களுக்கு பிறகு குழுவை அல்லது செயற்பாட்டை வழிநடத்தி முன்னேடுத்து செல்ல அடுத்த தலைமுறை செயற்பாட்டாளர்களை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து உருவாக்க முயல வேண்டும்.)

செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சிகளும், பயிற்சிக்கு பின்பான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

முடிவுரை

சிறார்இலக்கியம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை இக்கட்டுரை வழி கண்டோம். இதன் வழி படைப்பாளரும் பள்ளிகளும் பெற்றோரும் கைக்கோர்த்து வழிநடத்தினால் மட்டுமே சிறார் இலக்கியம் சிறப்பு பெறும் என்பதை அறிய முடிகிறது.

சிறுவயதில் வாசிக்கும் பழக்கம் இருந்தாலே பெரியவர்கள் ஆகும்போதும் அவர்கள் வாசிக்க தொடங்குவார்கள் என்பதால் சிறுவயதிலே சிறார்களை வாசிக்க செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமம் தோறும் அரசால் நூலகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதும் அறங்காவலர், பெருஞ்செல்வர் போன்றோரும் நூலகம் தொடங்க உதவிட வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது.

திருவிழாக்களின் போதும் அவர்களுக்குச் சிறுவர் புத்தகங்களை வாங்தித் தர வேண்டும். சிறுவர் பத்திரிக்கைகளுக்குச் சந்தா செலுத்திட வேண்டும்.  இவற்றைப் பெற்றோர்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும்

            சிறார் செயற்பாட்டாளர்கள்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை உணர முடிகிறது. கதைச்சொல்லி, நாடகாசிரியர், பாடலாசிரியர், ஒவியர் என அனைவருக்குமாய் பள்ளி அமைந்திட வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறது. பள்ளிக்கு நூலகம் அவசியம் என்பதும் அவை நூலகமாய் நூலகரோடு இயங்க வேண்டியது அவசியம் என்பதையும் அறிய முடிகிறது.

                        அரசு பல்வேறு சிறார் மாநாடுகளை நடத்த வேண்டியதும், சிறார் புத்தக வெளியீட்டிற்கு உதவிடுவதும்,   சிறந்த படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும் அவசியம் என்பதையும் உணர முடிகிறது. ஆசிரியர்களிடையே வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.  ஊக்கப்படுத்தும் போது சிறார்களின் வாசிப்பும் மேம்படும். ஏனெனில் எதைக்குறித்து வாசிக்கிறோமோ அதைக் குறித்து நாம் உரையாடவும் செய்வோம்.

            சிறார் இலக்கியம் வளர்ப்போம் சீர்மிகு சிந்தனை பெறுவோம்!

            ஏற்றமிகு எதிர்காலம் கொள்வோம் எல்லோரும் இன்புறுவோம்!

            வாசிப்போம் வாசிப்போம் வாசிப்பை சுவாசிப்போம்!

துணை நூற்பட்டியல்

  1. ஆர்.வி. எழுதுவது எப்படி? தொகுதி I மகரம்(தொ.ஆ), ப -379
  2. நரா. நாச்சியப்பன். எழுதுவது எப்படி தொகுதி III மகரம்(தொ.ஆ), பக் 382-83
  3. மேலது பக் 373
  4. சிறுவர் இலக்கிய வரலாறு, பூவண்ணன், வானதி பதிப்பகம்
  5. சமூக நலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை, தமிழ்நாடு, ப – 21
  6. சிறுவர் இலக்கிய வரலாறு, பூவண்ணன், வானதி பதிப்பகம்
  7. மேலது
  8. மேலது
  9. மேலது
  10. மேலது
  11. மேலது
  12. மேலது
  13. இல சண்முகசுந்தரம் – எதுநல்ல பள்ளி வாங்க பேசலாம், பாரதி புத்தகாலயம
  • இந்துமதி

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

வரலாற்றின் திசைகளில் சிறார் இலக்கியம்! – துரை. அறிவழகன்

உலகத்தில் உள்ள மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் சிறார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது சிறார் கலை இலக்கிய செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் கடமை. சிறார்  செயல்பாட்டாளர் என்று வரும்போது கூடுதலான, நுட்பமான பார்வையும், சிறார்களின் நூதன உலகம் குறித்த புரிதலும் பன்மடங்காக இருத்தல் அவசியமாகிறது.

ஐம்பதுகள் அறுபதுகளில் அண்டரண்டப்பட்சியின் சிறகுகளைக் கொண்ட சிறார் செயல்பாட்டாளர்கள் தமிழ் சூழலில் இருந்ததை நாம் அறிய முடிகிறது. கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி என பயணித்து உருக்கொள்ளும் சிறார்களின் உலகை அன்றைய சிறார் செயல்பாட்டாளர்கள் உன்னதமான உலகமாக கட்டமைத்துள்ளார்கள். பின் வந்த காலங்களில் ‘அண்டரண்டப் பட்சியின்’ சிறகுகள் தேய்ந்து விட்டில் பூச்சியின் இறகுகளாக சுருங்கிப் போன அவலம் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்துள்ளது.

மாஸ்கோ நகரத்தில் நடத்தப்படும் கிளாசிக்கல் நாடகங்கள் உலக இலக்கியத்தைத் திறந்து காட்டும் வாயில்களாகக் குழந்தைகளுக்கு அமைந்திருப்பது போன்ற நிகழ்வுகள் தமிழக் சூழலில் அரங்கேற வேண்டும்.

தற்போது மாணவர்களுக்கு மனப்பாடம் செய்வது மட்டுமே இலக்காக இருக்கும் நேரத்தில் அவர்களின் திறன் மேம்படவும் சுயச்சிந்தனைத் திறன் மேம்படவும் விளையாட்டுக் கல்வி, கலைக் கல்வி, கதைக் கல்விப் போன்றவற்றின் தேவையை விளக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்து வருகிறோம்.

பின்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையை நாமும் புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும். எப்படி தம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு பள்ளியின் நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது என்கிறார் சுவீடனில் நானோ தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய் அசோகன்.

மாணவர்களின் திறனை மேம்படுத்துவது போலத்தான் பின்லாந்து கல்வி முறை உள்ளதே அன்றி மாணவர்களையே மதிப்பிடுவது போல இல்லை என்கிறார் பின்லாந்தில் பணியாற்றி வரும் செந்தில்கண்ணன். சுவீடன் கல்வி முறையும் இப்படியானதாகவே உள்ளது.

“குழந்தைகளுக்கான உணவு, உடை, படிப்பு ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பகுதியை, சிறார் கலை இலக்கியத்துக்கும் நாம் கொடுக்க வேண்டும். நம்மையறியாமலேயே சிறாரின் எல்லையற்ற படைப்பூக்கத்தை இல்லாமற்செய்து, அவர்கள் இயல்பின் மகிமைகளை நாம் அழித்துவிடுகிறோம். இந்தியாவில் இருக்கும் ஒரே சிறார் இலக்கிய அரசு நிறுவனம், கேரளத்தின் ‘பாலசாகித்ய இன்ஸ்டிட்யூட்’ மட்டுமே. அதுபோல் தமிழகத்திலும்  ஒரு சிறார் இலக்கிய அரசு நிறுவனம் அமைதல் சிறப்புமிக்கதாகும்.

பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் நவீன இலக்கியம், சிறார் கலை இலக்கியம் முக்கிய பாடப்பகுதிகளில் ஒன்றாக மாற வேண்டும். அதை நடத்துவதற்கு ஆசிரியர்கள் தகுதி பெற பயிற்சி வகுப்புகள் தேவை. “வாசிப்பு என்பது வெறும் மதிப்பெண் சமாச்சாரம் அல்ல. அது அன்புக்கும் சக மனித உறவுக்கும் சமூக, பிரபஞ்சப் புரிதலுக்குமான தோற்றுவாய்; அரசியல், சுற்றுச்சூழல், இலக்கியம், மனித வாழ்க்கை என அனைத்திலும் ஊடாடி, செல்வாக்கு செலுத்தக்கூடியது. எல்லையற்று வளரும் சாத்தியம் கொண்டது.” என்று ஒரு நேர்காணலில் யூமா வாசுகி முன்பு சொல்லியுள்ளார்.

உலக கல்வி முறையை மட்டும் அல்லாமல் உலக இலக்கிய வளங்களையும் நுட்பமாக அவதானித்து செயல்பட்ட தொடக்ககால குழந்தை எழுத்தாளர் சங்கம் மற்றும் அதன் செயப்பாடு குறித்த புரிதல், சமகாலத்தில் ஒரு சிறந்த சிறார் கலை இலக்கிய செயல்பாட்டிற்கு திறவுகோலாக அமையும் என்பது திண்ணம்.

1950-ஆம் ஆண்டு, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் முன்முயற்சியில், குழந்தை எழுத்தாளர் சங்கம் மலர்ந்தது. இச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ‘வை.கோவிந்தன்’ அவர்களும், துணைத் தலைமைப் பொறுப்பை அன்றைய சிறுவர் இதழான ‘கல்கண்டின்’ ஆசிரியர் ‘தமிழ்வாணன்’ அவர்களும் ஏற்றனர். சங்கத்தின் செயலாளர்களாக, ‘அழ.வள்ளியாப்பா’ மற்றும் ‘வானதி திருநாவுக்கரசர்’ ஆகியோர்கள் பொறுப்பேற்றனர்.

குழந்தை எழுத்தாளர் சங்கம், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டது. சிறுவர் புத்தகக் கண்காட்சி, குழந்தை எழுத்தாளர்கள் புகைப்படக் கண்காட்சி, நாடக விழாக்கள், நூல்கள் வெளியீடு எனப் பல்வகை செயல்பாடுகளை மேற்கொண்டது. 1951-ல் சென்னையில், குழந்தை எழுத்தாளர் சங்கம், முதல் புத்தகக் கண்காட்சியை நடத்தியது.

1956-ஆம் ஆண்டு டில்லியில், ‘சாகித்திய அகாதெமி’ ஏற்பாடு செய்த அனைத்திந்திய புத்தகக் கண்காட்சி, 1959-ஆம் ஆண்டு கொழும்பு நகரில் ‘இலங்கை குழந்தை எழுத்தாளர் சங்கம்’ ஏற்பாடு செய்த  அனைத்துலக புத்தகக் கண்காட்சி, 1961-ஆம் ஆண்டு ‘பம்பாய் தமிழ்ச் சங்கம்’ நடத்திய குழந்தை புத்தகக் கண்காட்சி போன்ற பல்வேறு புத்தகக் கண்காட்சிகளில் குழந்தை எழுத்தாளர் சங்கம் பங்கேற்று தமிழ் குழந்தைப் புத்தகங்களை காட்சிப் படுத்தியது.

“கருத்துக்களைக் காட்சிப்படுத்தும் சக்தி வாய்ந்த கலையினால்தான், அதுவும் நாடகம், திரைப்படம் ஆகிய கலைககளினால்தான் பண்பாட்டு விழுமியங்கள் வளரும் ” என்ற மாபெரும் நாடகக் கலைஞர் அவ்வை டி.கே. சண்முகத்தின் வார்த்தைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது குழந்தை எழுத்தாளர் சங்கம். 1955-ஆம் ஆண்டு குழந்தைகள் நாடக விழாவை நடத்தியது. ஒரு மணி நேரம் கொண்ட குழந்தைகளுக்கான, நிகழ்த்துக்கலையான நாடகங்கள் ஆறு சிறுவர் குழுவினரால் மேடை கண்டன. 

நேரு மகானின் பிறந்த தினத்தை  1957-ஆம் ஆண்டு முதல் குழந்தை இலக்கியத் திருநாளாக, குழந்தை எழுத்தாளர் சங்கம் நடதத் தொடங்கியது. குழந்தைப் புத்தகங்கள் வெளியீடு காணத் தொடங்கின. 1979-ஆம் ஆண்டு ஒரே நாளில் 77 குழந்தைகளுக்கான நூல்கள் வெளியீடு கண்டன. பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் உள்ள அறிஞர் பெருமக்கள், தமிழ் குழந்தை எழுத்தாளர்களை அறிந்து கொள்ளும் வகையில், “who’s who of Tamil Writers for Children” எனும் நூலை வெளியிட்டது. மேலும் அச்சிடப்பட்ட நூல்களுக்கே  பரிசுகள் வழங்கப்பட்டு வந்த நாட்களில், குழந்தைகளுக்கான படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கிப் புதுமையைப் புகுத்தியது குழந்தை எழுத்தாளர் சங்கம்.

குழந்தை எழுத்தாளர் சங்கம், எட்டு இலக்கிய மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இம்மாநாட்டு அரங்கங்களில் பெருமைமிகு நிகழ்வாக அந்நாட்களில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், சான்றோர்கள் என பன்முனை ஆளுமைகளின் குரல்கள் ஒலித்தன.

1976-ஆம் ஆண்டு கிண்டி ஆளுனர் மாளிகையில், அன்றைய பாரதக் குடியரசுத் தலைவர் ‘பக்ருதீண் அலி’ தலைமையில் ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ தன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது. 1957 முதல் 1991 வரை மொத்தம் 783 நூல்கள் ‘குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் மூலமாக வெளிவந்துள்ளது.

இடைப்பட்ட காலத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தாலும் குழந்தை எழுத்தாளர் சங்கம் செயல்பட்ட பொற்காலம் மீண்டும்  தற்சமயம் திரும்பத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தமிழகம் எங்கும் முப்பதிற்கும் மேற்பட்ட கிளைகள் விரித்து சிறப்பான செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. பல்வேறு தனிப்பட்ட அமைப்பினர்களும் சிறார்களுக்கான செயல்பாட்டில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். முன்பு குழந்தை எழுத்தாளர் சங்கம் என்று அழைக்கப்பட்டதன் சாராம்சத்தைக் கொண்டே இன்றைய  சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் செயல்படுகிறது.

பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்பு குழந்தைகளின் உலகத்தை விசாலமாக்கும்; அறிவை ஆழமாக்கும். அந்த வகையில் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் மதிப்பீடுகளைக் கடத்தவும் தமிழ்நாடு அரசு சார்பில் ‘இளந்தளிர் இலக்கியத் திட்டம்’ சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 5-8   வயது வயது வரையிலான குழந்தைகளுக்கு 100-150 சொற்களிலான கதைகள்,   9-11 வயது வயது வரையிலான குழந்தைகளுக்கு   500 சொற்களிலான கதைகள்,  12 – 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு  அதிகபட்சமாக 750 சொற்களிலான கதைகள் ஆகியவைகளை தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. முதல்கட்டமாக வெளியீடு கண்ட இவ்வகையிலான 119 நூல்கள் 48-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, 2025–யில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன. ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக, வயது வாரியாக சிறார் நூல்களை வெளியிட்ட இம்முயற்சி பெரும் பாராட்டுக்குரியதாகும்.  மேலும் நூற்றாண்டு காணும் ஆளுமைகள் வரிசையில் குழந்தைக் கவிஞர் ‘அழ.வள்ளியப்பா’ நினைவுத்தடம், திரு.முத்தையா வெள்ளையன் அவர்களால் தொகுக்கப்பட்டு, 848 பக்கங்களில் கெட்டி அட்டை பைண்டிங்கில் வெளியீடு கண்டது.

இவைகள் மட்டுமே போதுமானதில்லை.

* தமிழக அரசின் ஆதரவுடன் சிறார் புத்தக டிரஸ்ட் நிறுவப்பட வேண்டும்.

* ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் சிறுவர் கலையரங்கம் நிறுவப்பட வேண்டும். சிறுவர் கலை விழாக்கள் தொய்வில்லாமல் நடைபெற ஆவண செய்யப்பட வேண்டு.

* சிறார் நூல்களுக்கான புத்தகக் கண்காட்சி சென்னையில் ஆண்டுதோறும் நடைபெற வேண்டும். சிறார் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், பதிப்பகத்தார்கள் கௌரவிக்கப்பட வேண்டும்.

* சிறார் நூல்கள் வெளியிட அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்.

* பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் நவீன இலக்கியம், சிறார் கலை இலக்கியம் முக்கிய பாடப்பகுதிகளில் ஒன்றாக மாற வேண்டும். அதற்கான  ஆசிரியர்கள் தகுதி பெற, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

* சிறார் நூல்களை வெளியிடவும் அதை சிறார்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு பதிப்பகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

* மாஸ்கோவில் இருப்பது போல் தமிழகத்திலும் சிறார்களுக்கான அரங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். உலக கலை இலக்கியங்களை திறந்து காட்டும் வாயிலாக அது செயல்பட வேண்டும்.குழந்தைகளுக்கு அழகியலை கற்பிக்கும் அரங்கமாகவும் இது செயல்பட வேண்டும்.

* சிறார்களுக்கான இசை – நாட்டிய நாடகங்களை சிறார்களே எழுதி நடத்துவதற்கான வழிகாட்டுதல்களைக் கொடுக்க வேண்டும். அதற்கான மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

* இரண்டு முதல் நான்கு வயதிலான குழந்தைகளின் மனவளர்ச்சிக்கும், படைப்பூக்கத்திற்கும், ரசனையை வளர்ப்பதற்குமான அரசு பாலர் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளிடம் இருக்கும் அதிசய சக்திகளை கண்டுபிடிக்கும் வகையில் இப்பள்ளிகள் செயல்பட வேண்டும்.   

2024-ல்  இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் ‘மகிழ் – பதின் படைப்பாளர் படைப்பரங்கு மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்றது. இது ஒரு சீரிய முயற்சி. தொடர வேண்டும்.

இறுதியாக, தங்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் சிறார்களுக்கான செயல்பாட்டை முன்னிறுத்தி அனைத்து சிறார் செயல்பாட்டாளர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நம் சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞை உணர்வு மேலோங்கி இருக்க வேண்டும். குழு மனப்பான்மை இல்லாத மெய்யான உணர்வுச் செயல்பாடே சிறார் கலை இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும்.

தமிழில் சிறார் இலக்கியம் சிறகு விரித்திருப்பது மகிழ்ச்சியே; ஆனாலும் அச்சிறகுகள் பிற மொழிகள், உலக செயல்பாடுகள் ஆகிய எல்லையற்ற எல்லையைத் தொட வேண்டும். அதற்கான கூட்டு உழைப்பில் நாம் ஈடுபட வேண்டியது காலம் நம்முன் நிறுத்தியுள்ள கடமை மற்றும் பொறுப்பாகும். அரசு மற்றும் பிற தனிப்பட்ட செயல்பாட்டாளர்களின் பங்களிப்பைவிடவும் மிக முக்கியமான ஒன்று தமிழ் சிறார் எழுத்தாளர்களின் படைப்பாளுமை.

இன்றைய காலகட்டத்தில் அதிகமான சிறார் எழுத்தாளர்களின் பங்களிப்புகளால் தமிழ்ச்சிறார் இலக்கியம் நம்பிக்கையான திசையில் பயணிக்கிறது. என்றாலும் உன்னதங்களை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கே மேலும் மேலும் வலுப்பட வேண்டும்.

சமீபத்தில் சிறார் இலக்கிய கூட்டம் ஒன்றிற்கு வந்திருந்தார் நவீன இலக்கியத்தின் நம்பிக்கைதரும் படைப்பாளி ஒருவர். நிகழ்வில் அவர் முன் வைத்த கேள்வி முக்கியமாகப்படுகிறது.

“பிரெஞ்சு எழுத்தாளர் எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ போன்றோ நார்வே எழுத்தாளர் யொஸ்டைன் கார்டெரின்’சோஃபியின் உலகம்’போன்றோ தமிழில் சிறார் நாவல்கள் ஏன் வரவில்லை?”

குழந்தைகள் புத்தகம் என்று  அடையாளப்படுத்தப்படும் ‘குட்டி இளவரசன்’ நாவல் வாழ்வின் ஆழமான உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் தத்துவார்த்தமானவை. வாழ்வின் புதிர்தன்மையையும் அபத்தத்தையும் விவரிப்பவை. உலக ரகசியங்களை எளிமையாக நம்மை நெருங்கச் செய்பவை.இயற்கை மனிதனுக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறது. அதை மனிதர்கள் எப்படி கண்டுகொள்ளாமல் சிதைக்கிறார்கள் என்பதையே இந்நாவல் விவரிக்கிறது

பதினான்கு வயதுச் சிறுமி சோஃபிக்குள் எழும் கேள்விகளும் அதற்கான விடைதேடலும்தான் ‘சோஃபியின் உலகம்’.   ஒரு நாவலின் சுவாரசியத்தோடு எழுதப்பட்ட இந்நூலில் மனிதனின் ஆதிகால நம்பிக்கைகள் முதல் தத்துவமேதைகளாகிய சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹ்யூம், ஹெகல், மார்க்ஸ், லெனின், சார்த்தர், டார்வின், ஃப்ராய்டு என உலகத் தத்துவவாதிகள், கலிலியோ, கோபர்நிகஸ் எனும் வானவியலாளர்கள், நியூட்டன் போன்ற அறிவியல் விஞ்ஞானிகள், ஒற்றைப் பெருவெடிப்பைப்பற்றிப் பேசும் நவீன அறிவியலாளர்கள் வரை அனைத்து சிந்தனைகளும்வரை அறிமுகமாகின்றார்கள். 1950, 60-களில் தத்துவம் ஒரு கட்டாயக் கல்லூரிப்பாடமாக இருந்து வந்துள்ளதையும் அதுவே இன்று தேர்ந்தெடுத்து கற்கப்படும் ஒரு துறையாக மாறியுள்ளது என்பதையும்  இந்நூலின் முன்னுரையின் வழியாக அறிய முடிகிறது.

2009 ஆம் ஆண்டில், ஸ்வீடன் ஒரு புரட்சிகரமான கல்வி சீர்திருத்தத்தை மேற்கொண்டது. பாரம்பரிய பாடப்புத்தகங்களை வகுப்பறைகளில் கணினிகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளால் மாற்றியது. இந்த துணிச்சலான முயற்சி நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்குவதையும், அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்வீடிஷ் அரசாங்கம் தனது உத்தியை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி,  பள்ளிகளில் காகிதப் பாடப்புத்தகங்கள் இப்போது மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

கணினிகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டால் மாணவர்களின், வாசிப்பு மற்றும் எழுதுதல் போன்ற அடிப்படைத் திறன்கள் சரிவு கண்டன; மேலும்  நினைவாற்றல் திறனிலும் குறைபாட்டை அடைந்தனர்.   ஸ்வீடிஷ் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு, ‘அதிகப்படியான திரை நேரம் மாணவர்களின் சிக்கலான நூல்களை திறம்பட புரிந்துகொள்ளும் திறனைத் தடுக்கின்றன’ எனும் உண்மையை வெளிச்சப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஸ்வீடன், பாரம்பரிய கற்றல் முறைகளுக்கு மீண்டும் திரும்பும் முடிவிற்கு வந்துள்ளது. நூல் வாசிப்பு மாணவர்களின் அறிவாற்றலையும், படைப்பூக்கத் திறனையும் மேம்படுத்தும் என்ற உண்மையைத்தான் ஸ்வீடன் அரசின் கல்வி சீர்திருத்தம் நமக்கு உணர்த்துகிறது.

சமகாலத்தில், தமிழக அரசு மாணவர்களுக்கான நூல் வாசிப்பு இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. இது வரவேற்று கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களை சிறார்களுக்குப் பெரியவர்கள் அடையாளம் காட்ட வேண்டும். அதற்கான திறனைப் பெற்றவர்களாக பெரியவர்கள் இருக்க வேண்டும். நம் சூழல், குழந்தைகள், சிறார்கள், வளரிளம் பருவத்தினர் மற்றும் வளர்ந்த பெரியவர்கள் என அனைவரிடமும் வாசிப்பு ‘பிரக்ஞை’யை எதிர்நோக்கி நிற்கிறது.  வழிகாட்டலுக்கு அரிதாக, சிலர் மட்டுமே உள்ளனர்.

‘நித்ய சைதன்ய யதி’ அவர்களின் மூல நூலினை, தமிழ் மொழியில் “சின்னச் சின்ன ஞானங்கள்” என சாகித்திய அகாதெமி விருதாளர் ‘யூமா வாசுகி’ நமக்கு அளித்துள்ளார்.

“குழந்தைகளின் படைப்பாற்றல்” குறித்து ‘ஈஸ்ட் வெஸ்ட்’ பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன் ‘சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில்’ ஆய்வு செய்த “ஜோஸி” எனும் “ஜோஸலைன் வாரன்ஸரஸீனோ” சொல்வது “சின்னச் சின்ன ஞானங்கள்” நூலில் மிக முக்கிய பதிவாகும். “கதை சொல்வது, கதை உருவாக்குவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது ஆகிய திறமையெல்லாம் பெரும்பான்மையான குழந்தைகளிடம் உள்ளது. ஊக்கப்படுத்தினால் பெரும்பான்மையான குழந்தைகளிடம் இருந்து இது போன்ற திறன்களை வெளிக்கொணராம்”. ஒரு ஆய்வு ஆசிரியரின் இக்கருத்து நம் தேசத்து கல்வியியல் அறிஞர்களின் கருத்தோட்ட அடித்தளத்தில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்பது உறுதி.

இந்நூலில் பெரியவர்கள் படிக்க வேண்டிய தமிழ் எழுத்தாளர்களில் சிலரை பட்டியலிட்டுள்ளார் ‘யூமா வாசுகி’.  மகாகவி பாரதி தொடங்கி, மணிக்கொடி எழுத்தாளர்கள் தொடர, சமகால எழுத்தாளர்கள் ஜெயமோகன், பெருமாள் முருகன் வரை இதில் இடம்பெற்றுள்ளனர். இன்றைய பெண் சிறார் எழுத்தாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்கள் என சு. தமிழ்செல்வி, ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஆர். சூடாமணி, அம்பை, ஸெல்மா லாகர்லேவ் ஆகிய சிலரை குறிப்பிடலாம். உலக சிறார் இலக்கிய நூல்களின் சிறு பட்டியலையும் “சின்னச் சின்ன ஞானங்கள்” நூலில் கொடுத்துள்ளார் ‘யூமா வாசுகி’.

ஆகவே சிறார்களோடு இணைந்து பெரியவர்களும் தேர்ந்த வாசிப்பிற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா “குழந்தையும் மேதைதான்” என ஒரு சொற்றொடர் உண்டு.  கற்பனை விரிவையும் மொழி வளமையையும் உருவாக்கும் கதைகளே, நல்ல சிறுவர் கதைகள். தமிழ் சிறார் கலை இலக்கியப் படைப்பாளிகள் செயல்பாட்டாளர்கள் இதை மெய்யான அர்த்தத்துடன் உணர்ந்து செயல்பட வேண்டும்.  ஒரு மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் அங்குள்ள குழந்தைகளுக்கான படைப்பாளியாக மாற முடியும் என்பார்கள். கி ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள் ‘ என்ற குறு நாவல்தான் தமிழில் தீவிர இலக்கியவாதியால் எழுதப்பட்ட முதல் குழந்தை இலக்கியம் ஆகும் . ஒரு பயிரங்கில் மூத்த எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் அவர்கள் இரண்டு சிறுகதைகளை மொழி வளத்திற்கு உதாரணமாகச் சொன்னார். ஒன்று பிரபஞ்சனின் ‘மரி என்றொரு ஆட்டுக்குட்டி’. மற்றொன்று பூமணியின் ‘கோலி’.

வாண்டுமாமா அவர்கள் குழந்தைகள் விரும்பும் மந்திரக் கதைகள் மட்டுமல்லாது அறிவியல் நூல்களையும் எழுதும் வல்லமை பெற்றவர். வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா ஆகிய ஆளுமைகளின் படைப்பு எல்லைகளை இன்னும் நாம் கடக்கவில்லையோ? என்கிற சந்தேகம் எழுகிறது.

குழந்தைமையை இழந்துவிடாத ‘பஷீரின்’ கதைகள், ஸ்காண்டிநேவிய இலக்கியத்தின் மேன்மையை வெளிப்படுத்திய ‘ஸெல்மா லாகர்லே’வின் ‘விரோதி’, ‘தேவமலர்’ போன்ற படைப்புகள், வங்க எழுத்தாளர் ‘அதீன் பந்தோபாத்யாயா’வின் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’, பிரெஞ்சு எழுத்தாளர் ‘எக்சுபரி’யின் ‘குட்டி இளவரசன்’, போன்ற எழுத்துக்களை உணர்ந்து படித்த ஒருவரால் மட்டுமே ‘அண்டரண்டப் பட்சியின்’ சிறகுகளைப் பெற முடியும்.

சிறார் மொழியின் அடர்த்தியையும், அழகியலையும், கதா உத்தியையும், குழந்தைகளின் உளவியலோடு கலந்து ஒரு பிரதி உருவாகும் போது அது தமிழ் சிறார் இலக்கிய உலகில் ஒரு புது உண்மையான சிறார் படைப்பாக அடையாளம் கொள்ளும்; கனவினை சொல்லும் கலை பூரணத்துவம் பெற்ற அப்பிரதி “லூயி கரோலின்’ உருவாக்கிய ‘ஆலிஸின் அற்புத உலகம்’ போன்று தமிழ் சிறார் இலக்கியத்தில் நிலைத்து நின்று பேசப்படும் இலக்கிய படைப்பாக அமையும் என உறுதியாகச் சொல்லலாம். அதுவே சிறார் இலக்கிய சிறகுகள் விரிய வேண்டிய திசை.

  • துரை. அறிவழகன்

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

அரங்கம் வழி மாற்றுக் கல்வி – சிவபஞ்சவன்

நாடகக் கலை மாற்றுக் கல்வியின் நுழைவாயில். நாடகத்தை நாடு + அகம்= நாடகம் என்று சேர்த்து பிரித்து பார்த்து நாட்டு மக்களின் மன ஓட்டங்களை பிரதிபலிக்கும் கலை வடிவமே நாடகம் என பொருள் கொள்கின்றனர் அறிஞர் பெருமக்கள். நான் இதை சற்று வேறு விதமாக சிந்திக்கிறேன்  “நாடு” என்னும் சொல்  நாட்டத்தை, தேடும் வேட்கையை, தன் உள விருப்பத்தை, தன் அகத்தின் வழி உற்று நோக்கி அதிலிருந்து பெரும் அறிவை பகுத்தாய்ந்து பார்க்க உதவும் ஓர் உன்னதக் கருவி நாடகம் என்று புரிந்து கொள்கிறேன். இதுதான் அடிப்படைக் கல்வி. ஒவ்வொரு வகுப்பறையும் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் ஆரம்பக் கல்வியும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

குழந்தைகளின் ஆரம்பகால  கல்வியில் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் நாடகம்  ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது என்பது உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட ஓர் உண்மை. வகுப்பறைக்குள் சிறார் நாடகத்தை  இணைப்பதன் மூலம், குழந்தைகள் தங்கள் படைப்பாற்றல் (creativity), பச்சாதாபம்(Empathy) மற்றும் கலாச்சார விழிப்புணர்வை (Cultural awareness) வளர்த்துக் கொள்வார்கள், அதே நேரத்தில் கலைகள் மீதான ஆழமான பரந்துபட்ட பார்வையையும் பயிற்சியும் சிறார்களிடத்தில் வளர்ப்பதற்கு நாடகம் ஓர் சக்தி வாய்ந்த ஊடகம் ஆகும். 

உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தன்னிகரில்லா கன்னித் தமிழ் மொழி என்று நாம் தமிழை எண்ணும் போதும், எழுதும் போதும், உணர்வு ததும்ப பொருள் பொதிந்து பேசும்போதும் உயர் தனிச் செம்மொழியாகவும், நாட்டார் மொழியாகவும் பல மொழி கலப்பினும் இன்றைக்கும் இளமொழி என்றைக்கும் முதுமொழி நம் தமிழ் என்றும் தனிமொழி. தமிழ் மொழி மட்டும் இன்றைக்கும் இத்தனை சிறப்பு மிக்கதாக இருப்பதற்கு காரணம் நவீன தொழில் நுட்பங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு தானும் செழுமையாக தனித்து நிலைத்து நிற்பதுதான் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு. அதேபோல் மூன்றாம் தமிழாம் நாடகமும் இன்றளவும் எத்தனை நவீன ஊடகங்கள் மக்களிடையே விதவிதமாய் புழக்கத்தில் வந்த போதிலும் அத்தனையும் தன்னகத்தே எந்த தொய்வின்றி அப்படியே ஏற்றுக் கொள்கிற ஓர் அற்புத கலை வடிவம் நாடகம் மட்டும் தான். அது மட்டுமல்ல உலகில் உள்ள அத்துணை கலைகளையும் நாடகத்தில் பயன்படுத்தினாலும் தமிழ் போல தனித்தியங்கும் ஆற்றலுடையது நாடகம். அப்படிப்பட்ட நாடகக் கலையை தொடக்க கல்வி முதலே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

வகுப்பறைக்குள் நாடக செயற்பாடு திறம்பட நடந்தேறினால் குழந்தைகள் பெறும் நன்மைகளில் மிக முக்கியமானது படைப்பாற்றல் திறன் வளர்தல்.இவற்றோடு குழந்தைகளின் தனித் திறன் வெளிப்பாட்டையும் ஊக்குவிக்கும் தலைமைப் பண்பை வளர்க்கும். தீவிர நாடகச் செயற்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்ளும் குழந்தைகள் தங்களின் வளமான கற்பனை திறன் மற்றும் படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள் , இயலில் இடம்பெற்றுள்ள கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை மீட்டுருவாக்க கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் படைப்பாக்கத்திறன் வெளிப்பாடானது இலக்கியம் இசை மற்றும் நாடகம் போன்ற கற்றலின் பிற பகுதிகளுக்கும் பரிணாம வளர்ச்சி அடைய உதவுகிறது.

இந்தச் செயற்பாடானது மிக எளிமையான அரங்க விளையாட்டு களின் ஊடாக இயல்பாக குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகள் தங்கள் வயதிற்கு ஏற்ப,அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப பார்த்தும்,கேட்டும், படித்தும் பகுத்தறிந்தும் செயல்பாட்டு வடிவில் தனியாகவும் குழுவுடனும் இணைந்தும் கற்கும் சூழலைப் பெறுகின்றனர். இதுவே இச்சமுகத்தின் மாற்றுக் கல்வி.இக்கல்வியினால் குழந்தைகள் வெவ்வேறு கோணங்களில் பிரச்சினைகளை அணுகுவதற்கும், அவற்றிற்கான தீர்வை அவர்களே தீர்க்கமாக எடுப்பதற்கும். அதன் வழி பெறும் அனுபவத்தை தன் வாழ்நாள் முழுவதும் பொருத்திப் பார்க்க வழிவகை செய்கிறது நாடகம். குழந்தைகள் பறந்துபட்டு சிந்திக்கவும் வாசிக்கவும் இப்படியான நாடகப் பயிற்சி தொடக்க கல்வி முதலே அவசியமாகிறது.

அரங்க விளையாட்டுகளின் வழியாக கற்றலில் பெரும் மாற்றத்தை அதன் சுவாரசியத்தை குழந்தைகள் மிக விரைவாக புரிந்து கொள்கிறார்கள் அல்லது புரிந்துகொள்ள முற்படுகிறார்கள் அல்லது ஆசிரியர்களும் மாணவர்களும் ஒற்றைப் புள்ளியில் சிந்திக்கவும் அப்புள்ளியில் ஒருவரை ஒருவர் சந்திக்கவும் முயற்சிக்கிறார்கள்.  

நாடகம் பல்வேறு அரங்க விளையாட்டு கூறுகள் உள்ளடங்கிய ஓர் தொகுப்பு என்று கூறலாம். நாடகத்தின் அடிப்படை பயிற்சியில்  குழந்தைகளுக்கு உடல் மன இறுக்கத்தை போக்குவதற்காக உடல் தளர்த்துதல் பயிற்சி வழங்கப்படுகிறது (Ice Breaking Excercise). அவை படிப்படியாக மாணவர்களின் உடற் கூச்சம் மனக் கூச்சம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.

இப்பயிற்சி நீண்டு வளர்ந்து சிறார்களுக்கு ஏற்ற வகையில் சிறு சிறு வார்த்தை விளையாட்டுகள், புதிர் விளையாட்டு, ஓவியம், கதைசொல்லல் இன்னும் பல உளக்களிப்போடு தொடர்புபெறும் கற்றல் படிநிலையை தனியாகவும் கூட்டாகவும் கற்பதற்கு சிறார் அரங்கம் எப்போதும் புதிய உலகை திறந்தே வைத்திருக்கிறது. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் இயக்கிய சிறார் நாடகங்களில் மிக முக்கியமானவை தண்ணீர் தண்ணீர், யானை ராஜா,அக்கப்போர், மந்திர விளக்கு மற்றும் இன்னும் பல. சிறார் நாடகம் கல்வி வளாகம் மற்றும் பொது சமூகத்தில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை என் அனுபவம் கொண்டு ஆய்வு செய்ததில் ஒன்றை மிக நுணுக்கமாக அறிய முடிந்தது. உதாரணமாக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் “யானைக்கு என்ன ஆச்சு” சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்ட “யானை ராஜா” சிறார் நாடகம் பெரியவர்கள் குழந்தைகளுக்காக நடித்துக் காட்டிய ஓர் நாடகம். நாடகத்தில் இசை நடனம் பாட்டு மற்றும் கதை பின்னல் ஆகியவை பார்வையாளர்களாகிய குழந்தைகளை நாடகத்தோடு பங்களிப்பு செய்யுமாறு வடிவமைக்கப்பட்டது. நாடகம் கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகளை சென்றடைந்து இருக்கிறது. நாடகம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் காடு பற்றிய தகவல்களை, வனவிலங்குகள் பற்றிய அறிவையும் யானை காட்டு விலங்கு தான், வீட்டு விலங்கு அல்ல அதை பொதுவெளியில் மக்களோடு மக்களாக நாம் கொண்டு செல்லக்கூடாது என்றும் நமக்கு வீடு இருப்பதை போல யானைக்கும் வீடு இருக்கிறது.அது காடு தான் என்பதை ஒவ்வொரு முறையும் குழந்தைகள் நாடக நிறைவில்  பின்னூட்டத்தில் அழுத்தமாக தெரிவிக்கும் போது இந்த நாடகம் பாட புத்தகங்கள் எளிதில் செய்திடாத மிக நுண்ணிய அறிவு பெருவெளியை எளிய வழியில் குழந்தைகளிடத்தில் கடத்துவதாக அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதுமட்டுமல்லாது மந்திர விளக்கு என்னும் நாடகம் முழுக்க முழுக்க குழந்தைகள் குழந்தைகளுக்காக நடித்துக் காண்பிக்கப்பட்ட ஓர் நாடகம் இதில் நாம் அனைவரும் சமம் என்கின்ற ஒற்றை கருத்தை மிக எளிமையாக குழந்தைகள் இசையோடும் பாட்டோடும் நகைச்சுவை உணர்வோடும் இச்சமூகத்தின் முன்பு நடித்துக் காட்டும்போது பெரியவர்களுக்கும்  இப்பாடத்தை இச்சிறுவர்கள் மிகப் பொறுப்போடு கடத்துகிறார்கள் என்பதை இந்த சிறார் நாடகத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

 ஆகையால் கற்றலில் நாடகக் கலையை இணைப்பதன் மூலம், கல்வியாளர்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றிபெறத் தயாராகும் ஒரு நல்ல கல்வியை வழங்க முடியும்.கல்வி வளாகங்களில், இலக்கிய சந்திப்புகளில், புத்தகத் திருவிழாக்களில், இன்னும் பல அரசு மற்றும் அரசு சாரா நிகழ்வுகளில் சிறுவர் அரங்கம் வளம் பெற நடைபெற வேண்டும்.  அப்போது நம் குழந்தைகள் அறிவு பூர்வமான, ஆக்கபூர்வமான செயலை கலை மூலம் கண்டெடுப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

  • சிவபஞ்சவன்

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

கலையில் விரியும் குழந்தை மனம் – வசந்தன் சிவம்

புதுக்கோட்டை – தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அது. எங்களது ‘நடம்’ அமைப்பின் நாடகச் செயல்பாடுகள் அங்கிருந்துதான் தொடங்கும் என அப்போது தெரியவில்லை. நான் பயின்ற தொடக்கப்பள்ளியும் அதுதான் என்பதால் எங்கள் ஆசிரியர் விருப்பப்படி ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கலாம் என முடிவெடுத்தோம். நடனம், பாடல் என மற்ற அனைத்தையும் நண்பர் பார்த்துக்கொள்ள நாடகத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன்.

சரி, நாடகத்தில் நடிப்பவர்களை எப்படித் தேர்வு செய்வது? 60 மாணவர்கள் சூழ்ந்திருக்கும்போது 15 பேரை மட்டும் எப்படிப் பிரிப்பது என்ற கேள்வி எழுந்தது. 1,2,3-ம் வகுப்பு குழந்தைகளுடன் ஒரு நாள், 4,5-ம் வகுப்புக் குழந்தைகளுடன் ஒரு நாள் என இரு நாட்கள் நாங்கள் விளையாடினோம். அதன் பயனை இன்று நான் அந்தப் பள்ளிக்குச் சென்றாலும் பார்க்க முடிகிறது. நாடக விளையாட்டுகள் குழந்தைகளின் மனதில் இருந்த இறுக்கங்களை தளர்த்தின. அந்த சுதந்திர வெளியை மிகவும் விரும்பினர். ஒருவழியாக நாடகத்திற்கான குழந்தைகளை தேர்வுசெய்து பணிகளைத் தொடங்கினோம்.

இக்கட்டுரையில் இதனை குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணமாக ஒருவர் இருக்கிறார். அப்போது நான்காம் வகுப்பில் இருந்த அந்தக் குழந்தை மதிஇறுக்கம் (Autism) உடையவர். குழந்தைகள் நாடகம் என்றாலே விளையாட்டுகள் நிரம்பியிருக்குமல்லவா. அதனால் அவராகவே முன்வந்து விளையாட்டுகளில் இணைந்துகொண்டார். தியேட்டர் கேம்ஸ் எனப்படும் நாடக விளையாட்டுகளில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளுக்குள் சென்றோம்.

சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் ‘தேன் முட்டாயி’ கதையைத்தான் நாடகமாக்கினோம். கடந்த 2022-ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் பெட்டிக்கடையில் குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்க மறுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்தக் கதையை அதேபோன்ற கிராமச்சூழலில், நாடகமாக்கத் தயாரானோம். கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் கதை, கொஞ்சம் நடிப்பு என குழந்தைகள் தாங்களாகவே தங்களை மெருகேற்றிக்கொண்டனர்.

ஒட்டுமொத்த நாடகத்தின் போக்கையும் தீர்மானிக்கும் பாத்திரம் கோமாளிகளுடையது. அதற்கென இருவர் தயாராகினர். அதில் ஒரு குழந்தையின் அப்பா “என் பையன் கோமாளியாலாம் நடிக்க மாட்டான்” என்று கூறி அவரை அழைத்துச் சென்றுவிட்டார். தலைமையாசிரியர் உட்பட அனைவரும் முயற்சித்தும் அவரது மனம் மாறவில்லை.

பிறகு வேறொரு குழந்தை கோமாளியானார். மீண்டும் விளையாட்டு, கதை, காட்சி, நடிப்பு என நாட்கள் நகர்ந்தன. குழந்தைகள் ஒவ்வொருவரும் எல்லோருடைய வசனம், அசைவுகள், பொருட்கள் என அனைத்தையும் தெரிந்துவைத்திருந்தனர். யாராவது எங்காவது கொஞ்சம் யோசித்தால் அவர்களையும் அந்த இடத்தையும் சரி செய்ய தயாராகவே இருந்தனர். குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கும் அன்பும் ஒற்றுமைப் பண்பும் அப்படியான சூழலில் நம்மை பிரமிக்க வைக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கும்.

அதுதான் இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுகோலும்கூட. மதியிறுக்கம் உடைய ஒரு குழந்தை நான்காம் வகுப்பில் படிக்கிறார், அவரைப் பார்த்துக்கொண்டதில் பெரும் பங்கு அங்கு படித்த அத்தனை குழந்தைகளுடையதும்தான். அவர்கள்தான் எனக்கு மேலும் நம்பிக்கையூட்டினர்.

அனைவரையும் உள்ளடக்கிக்கொள்ளும் பண்பு கலைக்கே உரிய ஒன்றல்லவா! அது இங்கே நிகழ்ந்தது. நாடகத்தில் அந்தக் குழந்தை அனைத்துக் காட்சிகளிலும் இருக்கும்படிதான் கட்டமைத்தோம். அதையும் குழந்தைகள்தான் நிகழ்த்திக் காட்டினர். எல்லா காட்சிகளிலும் இந்த குழந்தையின் கைகளை ஏதாவது ஒரு குழந்தை பிடித்திருப்பார். ஓடும்போதும் விளையாடும்போதும் அவர் தவறி விழுந்து விடாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தினர்.

தொடக்கத்தில் ‘நீதிமணி’ அவர்கள் எழுதிய ‘நடைவண்டி’ பாடலைப் பாடிக்கொண்டே அனைவரும் மேடைக்கு வரவேண்டும். ஒருவர் பின் ஒருவராக முன்னிருப்பவரின் தோளில் கைகளை வைத்துக்கொண்டு அணிவகுத்து மேடைக்கு வருவார்கள். இவர்கள் அனைவரையும் அழைத்து வரும் பணி நடைவண்டி ஓட்டிவரும் கோமாளியுடையது. அனைவரும் வரத்தொடங்கினர் ஆம், அதுவரை மேடையேறாத அந்தக் குழந்தையும்தான். அப்படியொரு மகிழ்ச்சி அவரது முகத்தில் அந்தச் சிரிப்பு நாடகம் முடியும்வரை அனைத்துக் காட்சிகளிலும் படர்ந்திருந்தது. சின்னச்சின்ன செயல்களைத்தான் அவருக்கானதாக வடிவமைத்தோம். அந்த நாடகம் முடியும்வரையிலான ஒவ்வொரு நொடியும் அவரிடம் பேருற்சாகம் நிறைந்திருந்தது. இறுதியில் பார்வையாளர்களுக்கு தேன் முட்டாயி கொடுத்துவிட்டு குழந்தைகள் அனைவரும் இணைந்து நடனமாடுவார்கள். அதுவரை தூரத்தில் இருந்து நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தையின் அம்மா, நாடகம் முடிந்தபிறகு என்முன் வந்து நின்றார். சொல்வதற்கு அவரிடமோ என்னிடமோ வார்த்தைகள் இல்லை, அவரது பார்வை எனக்குள் ஆயிரம் விஷயங்களைக் கடத்தியது.

அந்தக் குழந்தையை ஊர்மக்கள் அனைவரும் கொண்டாடினார்கள். அவரைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அந்தக் குழந்தையின் புன்னகையின் தலாட்டில்தான் அன்று இரவு நான் உறங்கினேன்.

அடுத்த அனுபவத்தையும் இங்கு பகிர விரும்புகிறேன். திருவண்ணாமலையில் உள்ள மருதம் பண்ணைப்பள்ளியில் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. எப்போதும்போல் இந்தப் பயிற்சியிலும் ஒரு நாடகத்தை உருவாக்கி அரங்கேற்றுவதென முடிவெடுத்தோம். அதற்காக நாங்கள் தேர்வு செய்த புத்தகம்தான் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதிய ‘கயிறு’.

பள்ளி மாணவர்களிடம் ஜாதிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதில் இந்தக் ‘கயிறு’ முக்கியப் பங்கு வகிக்கிறது. ஸ்டைல், மாடல், கெத்து என்று எந்தக் காரணம் சொல்லி கயிறு கட்டிக்கொண்டாலும் சுலபமாக ஜாதியவாதிகளிடம் இணக்கமாகிவிடும் சூழல்தான் இங்கு உள்ளது. அதனை மாற்றும் நோக்கில் எழுதப்பட்டு அனைவராலும் பாராட்டுகளைப் பெற்றுவரும் நூல்தான் கயிறு.

அந்தக் கதையை நாடகமாக்கும் முயற்சியில் பங்கெடுத்த குழந்தைகளில் ஒரு சிறப்புக் குழந்தையும் இருந்தார். கயிறு கதை தொடங்கும்போதே ‘செழியன்’ வீட்டிற்குள் நுழைவது போன்ற காட்சி இருக்கும். நாடகத்தில் அப்படித் தொடங்காமல், அந்தக் குழந்தைகள் வாழும் சூழலிலிருந்து ஒரு காட்சியை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தோம். அந்த பள்ளி வளாகமே அவர்கள் உருவாக்கிய காடுதான். விதவிதமான மரங்கள், செடிகள், பூச்சிகள், பறவைகள் என பசுமைநிறைந்த பகுதி. அதனால், ஒவ்வொருவரும் மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உருமாறி மேடைக்குள் வரவேண்டும். வந்தபிறகு அனைவரும் இணைந்து ஒரு பெரிய ஆலமரத்தை உருவாக்கி பின்பு அப்படியே மேடையின் பின்புறம் சென்றுவிடுவார்கள். அதன்பிறகு கதைக்குள் நகர்வோம் என்று முடிவு செய்தோம்.

இந்த நாடக உருவாக்கத்தின்போதும் விளையாட்டுகள், கதைகள், குட்டித்தூக்கம், கற்பனைகள் என தொடர்ந்தோம். யாருக்கு என்ன கதாபாத்திரம், கோமாளி யார், என்பதையெல்லாம் குழந்தைகளே முடிவுசெய்துவிட்டனர். இதிலும் இரு கோமாளிகள் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆனால், கோமாளியாக நடிக்கவேண்டிய ஒரு குழந்தை நாடக அரங்கேற்றத்தின்போது பங்கேற்க முடியாமல் போனதால் ஒரு பெண் குழந்தையே கோமாளியாக கலக்கினார்.

கயிறு கதையில் வரும் ‘அம்பேத்’ கதாபாத்திரத்தை அந்த சிறப்புக் குழந்தைக்கு அனைவரும் வழங்கினர். அவர் குஷியாகிவிட்டார். நாடகத்தின் இடையே அனைவரும் விளையாடுவார்கள் ‘அம்பேத்’ படித்துக்கொண்டிருப்பார். ’அம்பேத்’தான் அனைவருக்கும் பாடல்களை சொல்லிக்கொடுப்பார். அவர் சொல்வதைக்கேட்டு மற்ற அனைவரும் திருப்பிச் சொல்வார்கள். அவர் சொல்லும்போது ஏதேனும் தவறிவிட்டால்? எந்த தடங்கலும் இல்லை, எந்த சிரிப்பும் இல்லை, மற்றவர்கள் அதனை சரியாகச் சொல்வார்கள். இந்த பிணைப்பு பார்வையாளர்கள் அனைவரையுமே பிரமிக்க வைத்தது. நாடகத்தின் இறுதியில் குழந்தைகள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்து கயிற்றை அறுத்து எறிவார்கள். நாடகம் பார்த்த குழந்தைகள் எல்லாவற்றையும் கொண்டாடினார்கள். பெரியவர்களுக்கோ நடித்த குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருந்தது. இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

மேலே நான் குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளுமே என் அனுபவத்திலிருந்து நான் நேரடியாகப் பார்த்தவை. இவை மட்டும்தானா என்றால் இல்லைதான், ஆனால், இந்தக்கட்டுரையில் இந்த இரு குழந்தைகளைப் பற்றியும் குறிப்பிடவேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன். இந்தக் குழந்தைகளை என்னுடன் இணைத்திருப்பது கலைதான். அதிலும் நாடகம் கலைவெளியில் தரும் சுதந்திரம் மிகமுக்கியமானது என்றே கருதுகிறேன்.

மேலே குறிப்பிட்ட இரு குழந்தைகளையும் அவர்களுக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடுத்துவது வன்முறைதானே! அந்த இடத்தை சரிசெய்யத்தான் நாடகம் நமக்கு உதவுகிறது. எல்லோரும் சீராக ஓடிக்கொண்டிருக்கும் காட்சியில் ஒரு குழந்தை மட்டும் அமைதியாக உட்கார்ந்து சிரிப்பதை நினைத்துப்பாருங்கள்! வசனங்கள் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு குழந்தை கீழே படுத்து ஓவியம் வரைவதை கற்பனை செய்து பாருங்கள்! கையில் துப்பாக்கிகளுடன் சுற்றி நிற்பவர்களுக்கு மத்தியில் ஒரு குழந்தை பேப்பரை சுருட்டிக்கொண்டிருப்பதை எண்ணிப்பாருங்கள்! இவையெல்லாம் ஒருவரால் யோசித்து எழுதப்பட்டு காட்சியாக உருவாக்கப்படும்போது தரும் ஆழமான அர்த்தத்தைவிடவும், மதியிறுக்கும் உடைய ஒரு குழந்தையோ அல்லது வேறொரு சிறப்புக் குழந்தையோ தானாக செய்யும்போது ஏற்படுத்தும் தாக்கம் பெரிது! அதைத்தான் சாத்தியப்படுத்துகிறது கலை!

அந்தக்கலையை ஒருமுறை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்திவிட்டால் போதும், அதன்பிறகு அவர்களாகவே அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றுவிடுவார்கள்.

மயிலாடுதுறை ‘குட்லக்’ பள்ளி மாணவர்களுக்கு நடிகரும் நாடகவியலாளரும் எனது இணையருமான அன்பரசி அவர்கள் நாடகப் பயிற்சி வழங்கினார். அப்போதும் ‘தேன் முட்டாயி’ கதையையே நாடகமாக்கினார். அந்தப் பள்ளி மாணவர்களின் ஈடுபாட்டுடன் உருவான அந்த நாடகம் முதலில் குறிப்பிட்டதைவிடவும் வேறுபட்டிருந்தது. அந்த நிலப்பகுதிக்கான விளையாட்டுகள் அதில் தானாக ஒட்டிக்கொண்டன. அதில் ‘கொல கொலயா முந்திரிக்கா’ விளையாட்டை வழிநடத்திய குழந்தை மற்ற நேரங்களில் அவ்வளவு அமைதியாக இருப்பவர். அந்தக் குழந்தையைத் தவிர மற்ற யாருக்கும் அந்த விளையாட்டு முழுவதுமாகத் தெரியவில்லை. நாடகம் நிகழ்த்தப்பட்ட பிறகுதான் இந்த தகவல்களெல்லாம் தெரியவருகிறது. ஒரு குழந்தையின் வாழ்க்கையில்  ஏதாவதொரு கலை வடிவம் நுழையும்போது அது அவருக்குள் இருக்கும் வேறொரு பரிமானத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தருகிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

கலையினூடாக இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கி இப்போது அந்தக் கலைவழியாகவே இந்தச் சமூகத்துடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றவனாக இருக்கும் என்னைப்போன்ற பலருக்கும் பெரும் நம்பிக்கையளிப்பது குழந்தைகள்தான்.

அனைத்தையும் பகுத்தாய்ந்து ஏற்றுக்கொள்வது குழந்தைகளின் இயல்பு. அதனை பாழாக்காமல், அவர்களை அவர்களாகவே கொண்டாடும் கலைச் செயல்பாடுகளை நம்மால் இயன்றவரை முன்னெடுப்போம். அதனை அனைவரும் இணைந்தே முன்னெடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்பதுடன் நிறைவு செய்கிறேன். தொடர்ந்து பயணிப்போம், நன்றி!

  • வசந்தன் சிவம்

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

இலக்கிய வாசிப்பும் தமிழகப் பள்ளிச் சூழலும்– வாகைசூடி

மின் நூல்கள், ஒலி வடிவங்கள் என தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப வாசிப்புத்தளங்கள் பெருகியிருக்கின்றன. வருடந்தோறும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் வாங்குவோர் எண்ணிக்கையும் கூடுகிறது. புதிய எழுத்தாளர்கள், கதைசொல்லிகள் உருவாகியிருக்கிறர்கள். இவையெல்லாம் ஆரோக்கியமான மாற்றங்களே!

எனினும், வாசிப்புப் பண்பைக் கொண்ட இளைய தலைமுறையினரை உருவாக்குவதில், அல்லது அந்த இலக்கை அடைவதற்கு நாம் இன்னும் நெடுந்தூரம் நடைபோட வேண்டியிருக்கிறது.

இளந்தலைமுறையினரிடம் வாசிப்புப் பண்பை உருவாக்குவதற்கு அவர்களது சமூக-பொருளாதார-கல்விச் சூழல், சமூகத்தின் வாசிப்பு பற்றிய புரிதல் என ஒரு முழுமையான பகுத்தாய்வு மேற்கொள்வதன் மூலமே சிக்கல்களைக் கண்டறிய முடியும்.

கற்பனைத் திறனைக் கொல்லும் கார்ட்டூன்கள்

வாசிப்பின் தொடக்கம் கதைகேட்பதாகும். கதைகளே கற்பனையை உருவாக்குகின்றன. இந்தக் கற்பனை ஆர்வத்தையும், தேடலையும் உருவாக்கும். இந்தத் தேடல் புத்தகங்களை நாடும்.

இங்கு கதைகள் யார் சொல்வது? இன்று கதை சொல்லிகள் இல்லை. வீட்டிலிருந்த தாத்தா-பாட்டி என்ற கதைசொல்லிகள் கூட தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதைகளுக்கு கண்ணீர் விடுவதால், அவர்களது கற்பனை குறைகிறது. மற்றோர்புறம் குழந்தைகளுக்கான பொழுது போக்குகளாக  கார்ட்டூன்கள் குப்பைபோல் குவிந்திருக்கின்றன. விளையாடக் கூடச் செல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இதுவும் போதாதென்று சோறு ஊட்டவும், அழாமல் வைத்திருக்கவும் திறன்பேசி-புலனங்கள் இருக்கின்றன.

 இந்தக் கார்ட்டூன் காட்சிகளைப் பார்க்கின்ற குழந்தைகளுக்கு, கற்பனைத்திறன் குறைகிறது, எதையும் காணொளிகளாகவே காண விரும்புகின்றனர்.  இவை குழந்தைகளை புத்தகங்களிலிருந்து விலகச் செய்கின்றன. இந்த அபாயத்தை முறியடிப்பது முதன்மையானதாகும்.

மதிப்பெண்களை நோக்கித் துரத்தும் கல்விச் சந்தையும் வீண்வேலையான வாசிப்பும்:

இந்தக் குழந்தைகள்தான் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிகளில் வாசிப்பு என்பது என்னவாக இருக்கிறது? பள்ளிகள் என்று பொதுவாக இருந்தாலும், இதில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற பிரிவுகள் பொதுவானவையாகும்.இதிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளிகள், மலைகிராமப்பள்ளிகள் இருக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று பொருளாதாரம்-விழிப்புணர்வு –வாய்ப்புகள் என்ற வகையில் பெரும் ஏற்றத்தாழ்வு கொண்டவையாக இருக்கின்றன. 

எந்தப் பள்ளிகளாக இருந்தாலும், பள்ளிகளில் பொதுவான சூழல்தான் நிலவுகிறது. வாசிப்புப் பற்றிய புரிதல்  பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு இல்லாமல் இருப்பது, கூடுதல் பணிச்சுமையாகக் கருதுவது போன்றவை பள்ளிகளில் நிலவும் பொதுவான சூழலாகும்.  அதாவது, ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கின்ற ஆர்வமற்றவர்களாக இருக்கின்றனர். வருடத்திற்கு ஒரு புத்தகம் படிப்பதோ அல்லது பாடத்திட்டத்திற்கு கூடுதல் நூல்களைத் தேடுவதுகூட கிடையாது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களது பணியைத்தாண்டி மாணவர் விவரங்களைப் பதிவிடுதல், அரசு நிர்வாகத்தில் கொடுக்கும் கூடுதல் பணிகள், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதால் ஏற்படும் கூடுதல் பணிகள் போன்றவை ஆசிரியர்களை வாசிப்பை நோக்கியோ அல்லது  பாடத்திட்டன்களை ஆக்கப்பூர்வமாக, விருப்பப்பூர்வமாக நடத்துவதற்கானஅறிவுத் தேடல்களை  நோக்கி நகர்த்துவதில்லை.   

அடுத்ததாக பள்ளிகளில், வாசிப்பு வட்டங்களை சில தன்னார்வலர்கள் உதவியுடன்  சில தனியார் பள்ளிகளில் முன்னெடுக்கின்றனர். இந்த முன்னெடுப்புகள் தனிப்பட்ட சிலரின் விருப்பம் மற்றும்  தனித்துவத்திற்கானதாகவும், கல்விச் சந்தையில் தங்களை சந்தையை நிலைநிறுத்திக் கொள்வதற்கானதாகவும் இருக்கிறது. இருந்தாலும், அவற்றை வீண் என்று கருதுகின்ற மனபோக்கே பெரும்பான்மை ஆசிரியர்களிடம் இருக்கிறது. பாடவேளையைத்  தவிர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபாடு காட்டுகின்றனர் என்ற எண்ணம் ஆசிரியர்களிடம் உள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கதைப் புத்தகம் படிப்பதால் என்ன பயன் என்ற கருத்து பெரும்பாலானோரிடம் மேலோங்கி இருக்கிறது. மேலும், இந்த வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்குமானதாக இருப்பதில்லை. பொதுத்தேர்வு இல்லாத வகுப்பு மாணவர்களுக்கு, அதிலும் குறிப்பாக  நன்கு படிக்கின்ற மாணவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

இவையெல்லாம் வெளிப்பாடுகள்தான். இதற்கான ஆணிவேராக இருப்பது இன்றைய கல்வி முறையாகும். நமது கல்வி முறையானது மாணவர்களை அவர்களது மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே  மதிப்பிடுகிறது. எத்தனை மதிப்பெண்கள் பெறுகிறார்கள், பெற வேண்டும் என்ற சிந்தனைதான் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் மேலோங்கி இருக்கிறது.

இதற்கு அடிப்படை இந்தியாவில் கல்வி என்பது வியாபாரமாகியிருப்பதும், அதற்கான கொள்கைகளுமேயாகும். குறிப்பாக தமிழகம் அதில் முன்னேறிய மிகப்பெரும் கல்வி வியாபாரச் சந்தை கொண்டது.. இந்த கல்விச் சந்தையில்  பள்ளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றன.  100 சதவீத தேர்ச்சியை நோக்கி பள்ளிகள் ஓடுகின்றன. அரசுப் பள்ளிகளும் இந்தப் போட்டியில் இயல்பாகவே தள்ளிவிடப்பட்டுள்ளன.

இந்த சந்தைப் போட்டியில் ஆசிரியர்கள், மாணாவர்களும் பந்தயக் குதிரைகள் போல் மதிப்பெண்களை நோக்கி ஓடுகின்றனர்.  விளையாட்டு, கலை, தனித்திறன்கள், வாசிப்பு என இன்னபிற அனைத்தும்  தடைகளாகவும், தேவையற்றதாகவும் கருதப்படுகின்றன.

தேவை சிறார் இலக்கியங்கள் குறித்த விழிப்புணார்வு

இதன் தொடர்விளைவாக, புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் விற்றாலும், அவை பெரும்பாலும் சிறார் இலக்கியங்களாக இருப்பதில்லை.  குழந்தைகளை மதிப்பெண் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்துவதற்குரிய புத்தகங்கள், பொருட்களே விற்பனையாகின்றன.  சிறார் இலக்கியங்கள் குறித்தான அறிமுகமோ, விழிப்புணர்வோ பெற்றோர்கள்-ஆசிரியர்களிடம் இருப்பதில்லை.  க்ஷ்

குழந்தைகள், புத்தகம் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக நீதிநெறிக் கதைகள், பெரியவர்கள் படிக்கின்ற நூல்களை அறிமுகப்படுத்துவது போன்ற தவறுகள் நடைபெறுகின்றன. இவை வாசிக்க விரும்புகிற  குழந்தைகளின் ஆர்வத்தை சிதைக்கின்றன. இவற்றிற்கெல்லாம்  அடிப்படையாக இருப்பது குழந்தைகள் “குழந்தைகள்” என்பதை நம்மில் பலர் மறப்பதாகும். சிறுவயதிலேயே அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராசையுமாகும். எனவே, அவர்களது வயதுக்கு மீறிய புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறோம்.

கிராமப்புறங்களில்  இவற்றுடன்  நிதிச்சுமையும்  சேர்ந்து கொள்கிறது. புத்தகங்கள் வாங்குவதற்குகூட சிரமப்படும் நிலை இருக்கிறது. நூலகங்கள்-பள்ளிகள் தனித்தனியாகப் பிரிந்திருக்கின்றன. நூலகங்களுக்கு புத்தகம் வாசிக்க யாரும் வருவதில்லை என்பது பெரும்பாலான நூலகர்களின் புலம்பலாக இருக்கிறது. புத்தகங்களோ பழையதாக இருக்கிறது. குழந்தைகளுக்கான நூல்களும் குறைவாகவே இருக்கின்றன.

தீவிரமான செயல்பாடுகளே மாற்றத்தைக் கொண்டுவரும் !

எனவே இதை மாற்றியமைக்க வேண்டியது மிக முக்கியமானதும், அவசியமானதும், அவசரமானதும் கூட. எனினும், ஒரே நாளில்  மந்திரம் கொண்டு மாற்றிவிட முடியாது. மேலிருந்தும், கீழிருந்தும் மாற்றங்களுக்கானப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

 மாணவர்கள் நாளைய சமூகத்திற்கான தரமான நல்ல விதைகள், அவர்களைப் பண்படுத்தி வளர்த்தெடுப்பதே களமே  கல்வி நிலையங்கள், பராமரித்து வளர்த்தெடுக்கிற விவசாயிகளே ஆசிரியர்கள் என்ற புரிதலை நோக்கி ஒட்டுமொத்த சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருக்கிறது. இந்த மாற்றம் இங்கிருந்தே தொடங்கப்பட வேண்டும். நமது சமூகத்திலே இதற்கான கூறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. குழந்தமையை ஆராதிக்கிற ஆசிரியர்கள்-பெற்றோர்கள்-எழுத்தாளர்கள் இந்தப் பணியை தீவிரமாக முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. பள்ளிக்கு ஒரு வாசகர் வட்டம் அமைப்பது, குழந்தைகளுக்கான நூல்களை கல்வியாளர்கள், உளவியலாளர்கள், முற்போக்காளர்கள் கொண்டு தீர்மானிப்பது, இப்புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்குவது,  நூலங்கங்களை –பள்ளிகளுடன் இணைப்பது, வாசிப்பு வட்டங்களை ஊக்கமுடன் செயல்படுத்த ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பது, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது போன்றவற்றை  முன்னெடுப்பதற்கான கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

  • வாகைசூடி

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

சிறார் இலக்கிய எழுத்தாளர் ரேவதி மறைவு – கண்ணீர் அஞ்சலி.

தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் ரேவதி. ஹரிஹரன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் பரிந்துரையின்படி ரேவதி எனும் புனைப்பெயர் சூட்டிக்கொண்டவர். இவர், சிறாருக்காக 90க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய சாதனையாளர்.

நீதிக்கதைகள், புராணக் கதைகள் என்றிருந்த சிறார் இலக்கியத்தின் வழித்தடத்தை மாற்றி அமைத்த பெருமைக்கு உரியவர். வரலாற்றுச் சம்பவங்களையும், அவர் வாழ்ந்த காலத்தில் நேரில் கண்டவற்றை சிறார் இலக்கியத்தில் பதிவு செய்தவர். சமகால விஷயங்கள் குறித்து சிறுவர்களுடன் தம் படைப்புகள் வழியாக பெரும் உரையாடலை நடத்தியவர். 1930களில் குற்றால அருவியில் குளிக்க வந்த காந்தியடிகள், அங்கு தலித்துகள் குளிக்கக்கூடாது என்று இருந்த தடையைத் தெரிந்துகொள்கிறார். அதனால், அவர் குளிக்காமலேயே சென்றார் எனும் சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு ‘கொடிகாட்ட வந்தவன்’ எனும் நாவலை 1978ஆம் ஆண்டில் எழுதினார். அந்நாவல் 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

சிறுகதை, நாவல், அறிவியல் கட்டுரைகள் எனச் சிறார் இலக்கியத்தில் பல்வேறு தளங்களில் சிறப்பான பங்களிப்பு செலுத்தியவர். இவர் எழுதிய ‘பவளம் தந்த பரிசு’ எனும் சிறார் சிறுகதை நூலுக்கு 2013 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருது அளிக்கப்பட்டது. இதுபோல 30க்கும் மேற்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

சிறார் இலக்கிய முன்னோடிகளான அழ வள்ளியப்பா, வாண்டுமாமா, பாவண்ணன், தெய்வசிகாமணி உள்ளிட்டோர்களோடு இணைந்து செயல்பட்டவர். கோகுலம், பூந்தளிர் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியவர்.

இத்தகு பெருமைகளுக்கு உரிய எழுத்தாளர் ரேவதி, நேற்று இரவு (09/05/25) மரணம் அடைந்தார். அவரின் இழப்பு சிறார் இலக்கியத்திற்கு பேரிழப்பு. மகத்தான எழுத்தாளரான ரேவதி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்.

அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் –  ந. பெரியசாமி

வேப்பமர உச்சியில் நின்னு

பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப் போகும்போது

சொல்லி வைப்பாங்க – உந்தன்

வீரத்தை கொழுந்திலேயே

கிள்ளி வைப்பாங்க…

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ‘சின்னப் பயலே…’  பாடல் எக்காலத்துக்குமான பாடலாக இருக்கிறது. முட்டாள்தனங்கள் நிறைந்து கிடக்கும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் அவ்வளவு எளிதல்ல. ஆளுமைமிக்க சிந்தனைவாதிகளையும், தத்துவ வாதிகளையும் நம் சமூகம் கொண்டிருந்தபோதும் முட்டாள்தனங்களின் பெருக்கம் பன்மடங்காக இருக்கிறது நம் காலத்தின் துயரம். கிளி ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போ கனினியில் ஜோதிடம் பார்க்கிறோம். சாதிவாரியாக ஒன்றிணைய, ஒரே சாதியில் பெண்தேட என அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு நடக்கும் அசிங்கத்தின் கூத்துகள் நீண்ட பட்டியலைக் கொண்டது. இத்தகைய மோசமான சூழலில்தான் குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

தொழிற்சாலைகளில் பொருளை உற்பத்தி செய்து முறையான பாதுகாப்பில் வைத்து வானிக்கையாளர்களின் தேவைக்கு அனுப்பிவைப்பதைப் போன்று பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக வளர்த்து தாங்கள் விரும்பும் பள்ளியில் படிக்கவைத்து, தாங்கள் ஆசைபடும் மேற்படிப்பை கொடுத்து, தாங்கள் விரும்பும் மாப்பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதையே வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளனர். இப்படியானவர்களின் குழந்தைகளிடையே  அறிவியல் மனப்பான்மையை திட்டமிட்டு உருவாக்குவதே நம்முன் இருக்கும் பெரும் சவால்.

நமக்கு இருக்கும் ஒரே ஆதாரம் கலை இலக்கியம். குழந்தைகளிடம் கலை இலக்கியம் வழியாக கட்டாயம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க முடியும். பிஞ்சில் பதியச் செய்தல் நல் விளைவிப்பை உருவாக்கும். எழுத்தாளர்கள் சமூக பங்களிப்பாக கருதி ஒரு படைப்பையாவது சிறுவர்களுக்காக உருவாக்குவதை கடமையாக கொள்ள வேண்டும். சிறுவர்களுக்காக எழுதுவது எளிதல்ல. ஆயினும் முயற்சித்து படைப்புகளை உருவாக்குதல் அவசியம்.

சிறார்களுக்கான பாடல்கள், கதைகள், கவிதைகள் யாவும் தற்கால சூழலுக்கேற்ப மாற்றங்களை உருவாக்குதல் வேண்டும். புத்தி கூறுதல், நடைமுறைக்கு ஒவ்வாத சூப்பர் ஹீரோக்களை முன்னிறுத்தி சாகசங்களை புரியச் செய்தல், சாத்தியமில்லாத செயல்களை சாத்தியப்படுத்தும் தந்திரக் கதைகளை உருவாக்குவது, உண்மைக்கு மாறானவற்றை உண்மையாக்காது இருத்தல் என்பதில் மிக நுட்பமாக கவனித்து படைப்புகளை உருவாக்குதல் வேண்டும்.

அனுபவத்திலிருந்து விலகி இருத்தல், தனிமனித அந்தரங்கம், உள்ளுணர்வு வெளிச்சம், தன்னுலையைக் கூறும் படைப்புகள் எனும் போக்கை மாற்றி கற்பனைகளின் எல்லைகளைத் தாண்டி, யதார்த்தத்தை உற்று நோக்க பழக்கும் படைப்புகளை உருவாக்க வேண்டும். கலைகளும் அறிவியலும் பிணைந்து இருக்கும் படைப்புகளை உருவாக்கும் பயிற்சியை மேற்கொண்டு அதுசார்ந்த படைப்புகளை உருவாக்குதல் வேண்டும்.

சமீபத்தில் கு.ஜெயபிரகாஷ் என்பவரின் மரமும், மண்ணுத் தாத்தாவும் எனும்  நூல் ஒன்றை வாசித்தேன். ஒரு தாத்தா நிறைய்ய சிறார்களோடு பாடல்பாடி அவர்களின் போக்கில் உரையாடலை நிகழ்த்தி, அவ்வுரையாடலின் ஊடே ‘ஒளிச்சேர்க்கை’ எப்படி நிகழ்கிறது என கதையாக சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாக இருந்தது. இப்படி சின்னச் சின்ன அறிவியல் விசயங்களை எடுத்துக்கொண்டு கவிதையாகவோ, பாடலாகவோ, கதையாகவோ படைப்புகளை உருவாக்கலாம். அல்லது நாடகமாகக் கூட நிகழ்த்தலாம்.

கடைசி பெஞ்ச் தொகுப்புக்காக கவிதைகள் எழுத முனைந்தபோது அறிவுரை சொல்லும் தன்மையிலான கவிதைகள் வந்தன. ஐயோ இது கூடாதென கவிதைகளை தவிர்த்து காத்திருந்தேன். மாணவர்களின் உலகு குறித்து அறிந்துகொள்ள அவர்களின் உலகத்துள் பயணிக்க, சில திறப்புகள் உருவாகிட பின் கவிதைகள் வந்தடைந்தன. புத்தி சொல்லும் கவிதைகள், பிற்போக்கான கவிதைகள் அத்தொகுப்பில் இல்லை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. ஆசிரியர் மாணவர்கள் நெருக்கம், ஆண், பெண் குழந்தைகளிடையே சமூகம் காட்டும் பாகுபாடு, சூழல் குறித்த விழிப்புணர்வு, இழந்தவைகள் மீதான ஏக்கம், சிறார் விளையாட்டெனும் தன்மைகளில் கவிதைகள் இருந்தன. அடுத்தடுத்த தொகுப்புகளில் அறிவியல் செய்திகளை கவிதையாக்கும் நம்பிக்கைக்கான பயிற்சியாகவும் இத்தொகுப்பு எனக்கு அமைந்தது.

சிறார்களுக்கு ஏன் அறிவியல் மனப்பான்மை வேண்டும். வேதகால மூடப்பழக்கங்களுக்கு கொண்டு செல்லும் மூடர்கள் நிறைந்த உலகில் சிறார்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பிறர் சொல்வதைக் கொண்டு அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதன்மீது மாற்றுக் கருத்தை வைக்கவும், ஆய்வு நோக்கில் அணுகவும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் அவசியம்.

அறிவியல் மனப்பான்மை என்பது மனப்பாட பகுதியல் மதிப்பெண் பெறுவதற்கான குறிப்பு அல்ல. அது வாழ்க்கை முறை. அன்றாட பயிற்சி. நமக்கு நன்கு பரிச்சயமான நியூட்டனின் புவியீர்ப்பு விசையை எடுத்துக் கொள்வோம். ஆப்பிள் பழம் மேலிருந்து கீழே விழுந்த நிகழ்வு குறித்த நியூட்டனின் யோசனைதானே. அந்த யோசனையை அறிவியல் முறைப்படி சோதனை செய்து உலகுக்கு உணர்த்துவது. நியூட்டன் இன்றுவரை நினைவிலிருப்பதன் அதிசயத்தை கூறி ஆர்வப்படுத்துதல் வேண்டும். அதேபோல அறிவியலில் எதும் நிலையான கருத்தும் அல்ல. தொடர்ந்து மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதையும் அணு ஆய்வு மூலம் விபரிக்கலாம். ஒருகாலத்தில் அணு பிளக்கமுடியாதென நம்பப்பட்டது. பின்னர் அணு பிளக்கக் கூடியதென ஒப்புக் கொண்டதுதானே.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

எனும் திருக்குறளில் திருவள்ளுவர் அடிப்படையான அறிவியல் உண்மையை உலகுக்கு உணர்த்தி உள்ளார். நிலத்தில் மட்டுமல்ல, கடலிலும் நீரின் தன்மை குறித்து பேசியுள்ளது புதியது.

இன்று புதிதாய் பிறந்தோமெனும் பாரதியின் கூற்றுக்கேற்ப அறிவியல் தன்னை தினம்தோறும் புதியதாக புதுப்பித்துக் கொள்கிறது. பாம்பு தன்தோலை உரித்து கொள்வதைப்போன்று அறிவியலும் தன்னை புதிது புதிதாக பிறப்பித்துக் கொள்கிறது.

எந்தவொரு மாற்றமும் சட்னென நிகழ்ந்துவிடாது, சிறார்கள் மீது உண்மையான அக்கறையோடு இருப்பவர்கள் தங்கள் படைப்புகளில் கொண்டு வரும் சிறு சிறு மாற்றங்கள் எதிர்காலத்தில் அறிவியல் மனப்பான்மை கூடிய பெரிய வாசக வட்டத்தை உருவாக்க உதவும். வலதுசாரி அரசியல் மேலோங்கிய இக்காலத்தின் அவசியமான செயல்பாடாகவும் இது இருக்கும். 

  • ந. பெரியசாமி

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் – முனைவர்  பெ.சசிக்குமார்

வானில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் வரும்பொழுது நைல் நதிக்கு பிரச்சனை, அது அதிக வெள்ளத்தைக் கொண்டு வந்து நம்மை மூழ்கடித்து விடும் என்று ஒரு காலத்தில் மக்கள் நம்பினர். குறிப்பிட்ட பருவ காலத்தில் மழை  அதிகமாகப் பெய்யும், அந்தக் காலத்தில் தான் இந்த நட்சத்திரம் வருகிறது என்ற அறிவியல் தெரிந்த உடன் அந்தப் பயம் நீங்கியது. ஒரு செயலுக்குப் பின்னால் அது ஏன் நடைபெறுகிறது, அதனுடைய அறிவியல் என்ன என்பது தெரியாத வரை நாம் பயந்து கொண்டு தான் இருப்போம். மற்றவர்கள் கூறும் கட்டுக்கதைகளையும் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருப்போம்.

இதை மாற்ற வேண்டும் என்றால் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டியது மிக மிக முக்கியம். புதிதாக ஒரு மண்சட்டி செய்ய வேண்டும் என்றால், உடைந்து போன மண் சட்டியில் இருக்கும் சூடு செய்யப்பட்ட மண்ணை எடுத்துச் செய்ய இயலாது. அதே நேரத்தில் புதிய களிமண்ணை உபயோகித்து தேவையான உருவத்தில் தயாரித்து அதை சுட்டால் நமக்கு வேண்டிய மண் சட்டியை தயாரித்து விடலாம். அதுபோலத்தான் அறிவியல் மனப்பான்மையை, மூட நம்பிக்கைகளில் ஊறி திளைத்த பெரியவர்களிடம் கொண்டு செல்வது அரிது. அதற்கு பதிலாக நாளைய சமுதாயத்தின் தூண்களாக இருக்கும் குழந்தை செல்வங்களிடம் கொண்டு செல்வது எளிது. அதைவிட இந்த செயல் வளமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கட்டாய தேவையும் கூட.

“தலைகீழாகக் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரத்தைக் கொண்டு ஒரு பொட்டு நீர் கூட கொண்டு வர முடியாது” என்பது போல், மூடப்பழக்கம் ஏன் தவறு என்பதைப் பலமுறை உரக்க கூறினாலும் காது கொடுக்காத மனிதர்களிடம் பேசி பயனில்லை. அதற்குப் பதிலாகக் கள்ளம் கபடம் இல்லாத, அனைத்தையும் ஒரே தராசில் வைத்து பார்க்கும் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும்.

கோபேர்னிகஸ் சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்தபோது, சமுதாயம் அதை ஏற்க மறுத்தது. ஆனால் அறிவியல் மனப்பான்மையால் இன்று அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பல மூட நம்பிக்கைகள் பொய்யான புனைவுகள் எப்படி அறிவியலால் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிக்கொண்டே செல்லலாம். 

குழந்தைகளுக்குப் புரியும் வகையில் ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்றால் அது கதை வடிவில் இருக்க வேண்டும். கதையில் எந்தவித கட்டுக்கதைகளும், அறிவியலுக்கு முரணான செய்திகளும் இல்லாத கதை அமைப்பை உருவாக்க வேண்டும். இது முதல் படி என்றால், இரண்டாவது சவால் சொல்லக்கூடிய அறிவியல் கருத்துக்களை எளிமையாகப் புரியும் வகையில் உருவாக்க வேண்டியது.

இடையிடையே ஏன் இப்படி நடந்தது? என்ற ஐயத்தை உருவாக்கும் வகையில் இந்தக் கதைகள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கேள்வி கேட்கும் திறன் குழந்தைகளுக்கு வளரும். யார் என்ன கூறினாலும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? என்று பயம் இல்லாமல் கேள்வி கேட்பார்கள். சரியான பதில் கிடைக்கும் வரை, படித்தும், கேட்டும், பார்த்தும், முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

மூட பழக்க வழக்கங்களுக்கு எதிராகக் கேள்வி கேட்கத் தொடங்கினாலே அதைப் பேசுபவர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள். ஆயிரம் பேர் கூறினால் அது உண்மையாகத்தான் இருக்கும், என்று நினைத்து போலி அறிவியல் இப்பொழுது அதி வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. கைப்பேசி போன்ற நவீன ஊடகங்களின் வரவால் இது மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எது போலி? எது உண்மை என்பதைத் தெரிந்து கொள்ள அறிவியலை அறிய வேண்டும்.

“விதையுடன் சேர்த்துப் பழங்களை உண்டு விட்டால் வயிற்றில் மரம் முளைத்து விடும்” என்று யாராவது பயபடுத்தினால், சாப்பிடும் அனைத்து பொருட்களும் ஜீரணம் ஆகி விடுமே, என்ற பதிலைத் தர வேண்டும். அறிவியலை எளிமையாக எழுதிவிட்டால் மட்டும் போதாது எழுதிய செயல்களைச் சிறிய சிறிய சோதனைகள் மூலம் நடத்திக் காட்ட வேண்டும்.

“ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்” என்பது போல் “ஒரு பரிசோதனை ஆயிரம் படங்களுக்குச் சமம்”. அதைக் குழந்தைகளே செய்து பார்க்க தூண்ட வேண்டும். தண்ணீரில் உப்பை கரைத்து அந்த உப்பு தண்ணீரை வெயிலில் வைத்து, உப்பு எப்படி உருவாகிறது என்பதைச் செய்முறையாகக் கூறும்பொழுது உப்பளங்களில் இருந்து எப்படி உப்பு வருகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்வார்கள்.

நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களில் எது போலி என்பதைக் கண்டறிந்து அது போலி என்பதைத் தெரிவிக்கக் குழந்தைகள் தயங்க மாட்டார்கள். குழந்தைகளை அறிவியல் பக்கம் கொண்டு வந்து விட்டால் அவர்கள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என  உறவினர்கள் அனைவரும் குழந்தையின் மழலை பேச்சைக் கேட்டு அடடா இது தெரியாமல் இப்படித் தவறாகச் செய்துவிட்டோமே என்று அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வார்கள்.

தரவுகள் எவ்வளவு முக்கியம் அவை நமக்கு என்ன கற்றுத் தருகின்றன என்பதைக் கதைகளின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

அறிவியல் மனப்பான்மை என்பது, ஒரு விஷயத்தைக் கேள்வி கேட்கும் மனநிலை, பகுத்தறிவு சிந்தனை, ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுத்தல், மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் திறந்த மனதுடன் இருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது, மூடநம்பிக்கைகளையும், போலி அறிவியலையும் எதிர்த்து, உண்மையைக் கண்டறிய உதவும் ஒரு கருவி.

அறிவியல் மனப்பான்மை, புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. இது, சமூகத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு உதவுகிறது. அறிவியல் மனப்பான்மை, சமூகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்வு காண உதவுகிறது.

சிறார் இலக்கியம், அறிவியல் கருத்துக்களை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறது. இது, மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

இன்றைய சமுதாயத்தில், ஜோதிடம், மாந்திரீகம், மற்றும் அறிவியல் அடிப்படையற்ற மருத்துவ முறைகள் போன்றவை பரவலாக நம்பப்படுகின்றன. இவை மக்களைத் தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்வதோடு, முன்னேற்றத்திற்குத் தடையாகவும் அமைகின்றன. இதை மாற்ற, அடுத்தத் தலைமுறையினரிடம் அறிவியல் மனப்பான்மையை விதைப்பது அவசியமாகிறது,

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க, சிறுவர்களுக்கு அறிவியலை சுவாரஸ்யமாகவும், எளிதில் புரியும் வகையிலும் வழங்குவது முக்கியம். உதாரணமாக, “நிலவில் ஏன் நீர் இல்லை?” அல்லது “பறவைகள் எப்படிப் பறக்கின்றன?” போன்ற கேள்விகளுக்குப் புனைகதைகள், சிறுகதைகள், அல்லது படக்கதைகள் மூலம் பதிலளிக்க முடியும். இதன் மூலம், அவர்கள் ஆர்வத்துடன் கேள்வி கேட்கவும், பதில்களை ஆராயவும் பழகுவார்கள்.

தமிழில், சிறார் இலக்கியம் மூலம் அறிவியல் கருத்துகளைப் பரப்பும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து, குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்கள், கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகின்றனர். இவை குழந்தைகளின் மனதில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவுகின்றன.

வேற்று மொழி ஆங்கிலக் கதைகளைத் தமிழில் எழுதுவதற்குப் பதிலாகத் தமிழிலேயே கதைகள் எழுத வேண்டும். அப்படி எழுதும் பொழுது தொழில்நுட்ப செய்திகளையும் அறிவியல் செய்திகளையும் நம்முடைய கதைகளின் ஊடே எளிமையாக எழுத இயலும். சமகால எழுத்தாளர்கள் பலர் தமிழில் அறிவியல் எழுதத் தொடங்கியுள்ளனர். இது எளிமையான முறையில் அறிவியல் கருத்துக்களைக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல உதவுகிறது.

அது மட்டுமில்லாமல் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தமிழில் எழுதவும் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மொழி அறிவு வளர்வதோடு, ஒவ்வொரு செயலுக்கும் ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதைப் புரிந்து கொள்ளவும் வழி வகிக்கிறது. அதனால் புதிய சிந்தனை உடையவர்களாகக் குழந்தைகளை அறிவியல் மனப்பான்மை மாற்றுகிறது.

இன்றைய நவீன தொழில்நுட்பத்துடன் போட்டி போட்டு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய தொழில்நுட்பம் என்ன? அறிவியல் என்ன என்பது முதலில் புரிய வேண்டும். பழைய பஞ்சாங்கத்தையே பாடிக் கொண்டிருந்தால், கண்ணை மூடிக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வது போல் ஆகிவிடும். அறிவியல் மனப்பான்மையின் மூலம் உலகம் எங்கே இருக்கிறது? என்ன தொழில்நுட்பம் எங்கே பயன்படுகிறது? என்ற புரிதல் முதலில் வரும். இரண்டாவது அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும் என்ற கேள்வியைக் குழந்தைகள் உருவாக்குவார்கள். அந்தக் கனவுகளை நனைவாக்க புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய அறிவியல் மனப்பான்மை குழந்தைகளுக்கு ஊன்றுகோலாக அமையும்.

அறிவியல் மனப்பான்மை இல்லாமல், நமது முன்னேற்றம் முடங்கி நிற்கும். இன்று நாம் சந்திக்கின்ற பல சிக்கல்களுக்கு ஒரே தீர்வு – அறிவியல் நோக்குடன் சிந்திப்பது, கேள்வி கேட்பது, உண்மையை அறிதல். சிறார் இலக்கியத்தில் அறிவியல் சார்ந்த கருத்துக்களைத் தமிழில் எழுதுவோம் புதியதொரு சிந்திக்கக் கூடிய தலைமுறை,  தவறுகளைத் தவறு என்று தைரியமாகச் சுட்டிக் காட்டக்கூடிய தலைமுறை, இது ஏன் போலி? எது உண்மை என்பதைத் தெளிவாக அனைவருக்கும் விளக்கக்கூடிய குழந்தைச் செல்வங்களை உருவாக்குவோம்.

  • முனைவர்  பெ.சசிக்குமார்

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

சிறார் இலக்கியத்தின் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு – லதா அண்ணாதுரை

முன்னுரை :

“ஓசையில்லாத கொண்டாட்டமான புத்தக வாசிப்பே சிறந்த கேளிக்கை என்கிறார் எமர்சன்.

மொழியைக் குழந்தைகளின் வசமாக்க, மொழியை எழுத்து வடிவத்தில் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் பாடத்திட்டத்திற்கு அடுத்தப்படியாக முதன்மைப் பங்கு வகிப்பது சிறார் இலக்கியம் ஆகும். சிறார் இலக்கியம் சிறப்பாக உள்ளச் சமுதாயமே மிகச்சிறந்த சமுதாயமாக வாழ முடியும். இன்றயை காலகட்டத்தில் சிறார் இலக்கியம் பரந்தபட்ட வளர்ச்சியையே அடைந்திருக்கின்றன.

சிறார் இலக்கியம் ஒரு பார்வை :

               பெரியவர்களுக்கானது என்றறிறிந்த காலத்தில் குழந்தைகளுக்காக எழுதிக் குறித்தவர் அழ. வள்ளியப்பா. இவர் எழுதிய “மலரும் உள்ளம்” பழக்கம் குழந்கைளின் இதயம் கற்பனையில் மலா்ந்து விரியும்.  தான் எழுதியதோடு மட்டுமன்றி, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து உற்சாகப்படுத்தி எழுதவும் வைத்தவர் பண்டைய தமிழ் இலக்கியத்தில் சிறார் இலக்கியத்திற்கான தடங்கள் இருந்த போதிலும்,

      16 ம் நூற்றாண்டில் ஔவையாரின் ஆத்திச்சூடி மூலம் தமிழில் குழந்தை இலக்கியம் தொடங்கியது. 19 ம் நூற்றாண்டில் இருந்து 20 ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது.

  • 1840 – பாலதீபிகை சிறுவர்களுக்கான முதல் இதழாக வெளிவந்தது.
  • 1901 – ல் கவிமணி சிறார் பாடல்
  • 1915 – ல் பாரதியின் பாப்பா பாட்டு வெளிவந்தன.
  • 1950 – குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் உதயம்
  • 1957 ல் வை ராமசாமி அவர்கள் நடத்திய சிறுவர் நூல் கண்காட்சி சிறார் இலக்கியத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தன.

சிறார் இலக்கியம் இன்றைய நிலை :

      கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறார் இலக்கியம், இலக்கியம் வெளியில் பேசு பொருளாசியிருக்கிறது என்கிறார். “ஆதனின் பொம்மை” என்ற குழந்தை இலக்கிய நூலிற்காக 2023 – ம் ஆண்டு பால சாகித்திய புரசுக்காா் விருது பெற்ற எழுத்தாள் உதயசங்கர்

      சிறார் இலக்கியம் தன்னுடைய இடத்தை அடைய எண்ணற்ற முயற்சிகள் நவீன எழுத்தாளா்களாலும் புதிய பதிப்பகங்களாலும் எடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

புத்தக பூங்கொத்து :

      வகுப்பறைக்கு ஒரு நூலகம், எனும் புத்தகப் பூங்கொத்து திட்டத்தை, அரசுப் பள்ளிகளில், மாணவா்களின் வாசிப்பும் பழக்கத்தை ஏற்படுத்த 2009 ல் கொண்டுவரப்பட்டது. இந்த புத்தகங்களில் கதை, புதிர் வினாக்கள், விடுகதைகள் நாடகப் புத்தகங்கள், சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. எங்கள் பள்ளியில் மாணவர்களின் கண்பார்வையில் படும்படி கொத்துகளாக தொங்க விட்டிருக்கிறோம். மாணவர்கள் விரும்பிய புத்தகங்களை அவர்களாகவே, வாசிக்க நினைக்கும் நேரத்தில், புத்தகங்களையும் படித்தனர். அதனால் வாசிப்புத் தறின் மட்டுமன்றி, அடிப்படை கணக்குகளையும் அறிந்து கொண்டனா்.

வாசிப்பு இயக்கம்:

     இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முறையாக பெரும் முயற்சியோடு, பள்ளி ஆசிரியா்கள், அறிவொளி இயக்கத் தொண்டர்கள், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள், எழுத்தாளர்கள். மாணவா்கள், கல்வி நிபுணர்கள் இணைந்து பாடபுத்தகங்களுக்கு மாற்றாக சுயவாசிப்பு உக்திகளை உருவாக்கியுள்ளனர்.  9 ம் வகுப்பு மாணவி முதல் 83 வயது கல்வியாளர் வரை வாசிப்பு இயக்கப் புத்தகங்களுக்கு பங்களித்துள்ளனர். (எ.கா ரமணி, முனைவர் வே. வசந்திதேவி அவர்கள்)

வாசிப்பு இயக்கத்தின் நோக்கங்கள் :

  • குழந்தைகளை சுயமாக வாசிக்க வைப்பதே (Independent reading) வாசிப்பு இயக்கத்தின் முதன்மை நோக்கம்.
  • கதை கேட்கும் குழந்தைகளைக் கதை வாசிக்கும் குழந்தைகளாக மாற்றுதல்.
  • தட்டுத்தடுமாறி வாசிக்கும் குழந்தைகளைத் தன்னம்பிக்கையோடு வாசிக்க வைத்தல்.
  • அரசுப் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத் தறினை மேம்படுத்துதல்.
  • குழந்தைகளை ஈர்க்கும் வகையில் வண்ணப் படங்களுடன் எளிமையான மொழியில் சிறு புத்தகங்கள் உருவாக்குதல்
  • எளிய வீட்டுக் குழந்தைகளிடம் புத்தகங்களை கொண்டு சோ்த்தல்
  • சிறு புத்தகங்களின் வழி வாசிப்பின் மீது ஆர்வத்தை தூண்டுதல்
  • தன்னால் சுயமாக வாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தல்
  • குழந்தைகளுக்கான புத்தகங்களை உருவாக்குவதோடு அவர்களையும் எழுத வைத்துப் படைப்பாளிகளாக்குதல்.

வாசிப்பு இயக்க கதைகளின் தனித்தன்மை :

  • ஒரு புத்தகத்தில் ஒரு கதை மட்டுமே இருக்கும்
  • ஒரு புத்தகம் 16 பக்கங்களைக் கொண்டிருக்கும்
  • மாணவா்களின் வயதின் அடிப்படையில் உருவாக்காமல், அவர்களின் வாசிப்புத் திறனுக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளன.
  • புத்தகங்கள் 4 வாசிப்பு நிலைகளாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டுள்ளன.
நிலை / Stagesவண்ணம் / Color Code
நுழை                நீலம்
நட                  மஞ்சள்
ஓடு                 சிவப்பு
பற                  பச்சை

ஓவ்வொரு புத்தகத்திலும் அட்டையுடன் வெளிப்பகுதியில் நான்கு நிலைக்குரிய நிறங்கள் தரப்பட்டுள்ளன. புத்தகங்களைப் பிரித்தறிவதும் அடுக்குவதும் எளிது.

பேச்சுமொழி, எழுத்து மொழி இரண்டிற்கும் இடையிலான குழந்தை மொழியில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குழந்தை மைய அனுகுமுறை :

  • பேச்சு மொழி அடிப்படையிலான எளிய மொழி வாசிப்பு மொழி பயன்படுத்தப்பட்டது. (எ.கா “வாங்க” என்பதற்கு முன் “வாருங்கள்” சோதனை செய்து நீக்கப்பட்டது.
  • சிறிய வாக்கியங்கள், மீண்டும் வரும் சொற்கள் தெளிவான படங்கள் மூலம் குழந்தைகளின் ஈடுபாடு உறுதி செய்யப்பட்டது.
  • படிக்கத் தயங்கும் குழந்தைகளும் ஓவியங்கள் மூலம் கதைகளின் கருத்தை உள்வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பெரியவா்கள் உதவியின்றி மாணவா்களே சரளமாக வாசிக்கும் வகையில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • கடினமான சொற்கள் மிகுந்த கவனத்தோடு தவிர்க்கப்பட்டுள்ளன.

வாசிப்பு இயக்கத்தின் வெற்றிகள் :

  • மாணவா்கள் ஆா்வத்துடன் வாசிக்கின்றனா்.
  • வாசித்த நூலைக்  கொண்டு, நாடகம், கதை, கதையோவியம், பொம்மலாட்டக் கதை, புத்தக விமர்சனம் போன்ற படைப்பாற்றல் மிக்க செயல்களை வெளிப்படுத்துகின்றனா்.
  • சோர்வில்லாமல் வாசிக்கின்றனா்.
  • விடைபெற்ற கூச்சம்
  • என்னாலும் வாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவா்களிடம் வாசிப்பு இயக்கம் விதைத்துள்ளது.
  • நான் நல்லா வாசிச்சுட்டேன் எனும் மாணவனின் பெருமிதம் – மெல்ல மலரும் மாணவா்களின் நம்பிக்கை விதை – வாசிப்பு இயக்க நூல்கள்.

தமிழ்நாடு அரசின் தேன் சிட்டு புது ஊஞ்சல் இதழ் :

     “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு பாவேந்தர்” பாரதிதாசனின் வார்த்தைகளுக்கேற்ப புதிய திட்டம், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒன்றை அவை, தேன்சிட்டு ஊஞ்சல், கனவு ஆசிரியா்.

      பாடப்புத்தகங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என கற்றலையும், கற்பத்தலையும், கட்டாயமாக்கிக் கொண்டு ஆசிரியர்களும், மாணவர்களும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,  சிறிது இளைப்பாறளாக, பாடப்புத்தகத்தைத் தாண்டி வெளி உலகத்தை அணுகும் ஒரு பாலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களன் கைகளில் இந்த மூன்று இதழ்களும்

      கனவு ஆசிரியர் இதழ் – ஆசிரியா்களுக்காக

      ஊஞ்சல் – நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக

      தேன்சிட்டு – ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்காக

ஊஞ்சல் இதழ் :

     மாதம் இருமுறை வெளிவரும் ஊஞ்சல் இதழில் மகிழ்ச்சிப் பாடல்கள், உயிதினங்கள் சொல்லும் சிறுக்கதைகள், சித்திக் கதைகள், ஓரிகாமி காகி மடிப்புக்கலை, ஓவியம் வரைதல் பயிற்சி, புதிர்கள கண்டுபிடித்தல், விடுகதைகள், புதிய நூல்களில் அறிமுகம், இரு மொழிக்கதைகள், நினைவுச் சி்ன்னங்கள், வயதினங்ள் குறித்து சுவராஸ்ய துணுக்குகள், மாணவர் படைப்புகள் சி்த்திர சோலையாக காட்சியளிக்கின்றன.

தேன்சிட்டு :

     அறிவியல் சார்ந்த கேள்வி பதில்கள், புதிர்கள், அறிவியல் சோதனைகள், தொல்லியல் வரலாறுகள், தலைவா்கள் வரலாறு, விளையாட்டுகள், ஆரோக்கியமான உணவு முறைகள், வரலாற்றின் இன்றைய நிகழ்வுகள் என இதழ் முழுக்க பொது அறிவுச் சுரங்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

      இந்த இதழ், சிறார் இலக்கியத்தின் ஒருமைல்கள். பிஞ்சிலே அமுதை  அளவிலும் நல் முயற்சி பாடப்புத்தகம் தாண்டிய சிறு அறிவை இந்த இதழ்கள் மாணவா்களிடத்தில் வளர்த்தெடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

முடிவுரை :

     பிறா் எழுத்தில் நேரத்தைசெலவிடுங்கள் அது உங்களை மேம்படுத்தும் என்கிறார் சாக்ரடீஸ். இப்படிப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற குழந்தைகளுக்கு சிறு வயது முதலே வாசிப்பில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும். எளிய வீட்டுப் பிள்ளைகளான அரசுப்பள்ளி மாணவர்களின் மீது தனிக்கவனம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சிறார் இலக்கியத்தில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. உண்மையில் தற்காலச் சிறார் இலக்கியம் வளற்முகத்தில் இருக்கிறது.

      இணையத்திலும் ஊடகங்களிலும் நாளுக்கு நாள் காட்சி வடிவினை சிறார் இலக்கியங்களின் எல்லை விரிந்துகொண் டே செல்கிறது. அதே வேளையில் எழுத்து வடிவிலான சிறார் இலக்கியங்கள் எனும் ஆணி வேரை சிறப்பான முன்னெடுப்புகளின் மூலம் சாத்தியப்படுத்துகின்றது.

சான்றாதாரம் :

  • இந்து தமிழ்திசை நாளிதழ்
  • கனலி இணையம்
  • தமிழ் விக்கிப்பீடியா
  • வாசிப்பு இயக்கத்தில் மாநில கருத்தாளராக பயணித்த என் அனுபவம்.

–  லதா அண்ணாதுரை, இடைநிலை ஆசிரியர், (தசிஎகச) நாமக்கல் மாவட்டச் செயலாளா்.

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

சிறார் இலக்கியக் கருத்தரங்கம் 2025 – தேர்வான கட்டுரைகளின் விவரம்

வணக்கம்,

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” நிகழ்வும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நெல்லையில் நடக்க இருக்கிறது. கருத்தரங்கிற்கு பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் கீழ்க்கண்ட கட்டுரைகள் தேர்வாகியுள்ளன என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம். கட்டுரையாளர்கள் அனைவரும் எங்களது வாழ்த்துகள்.

நிகழ்வில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எங்களது நன்றி.

தேர்வான கட்டுரைகள், வரும் நெல்லையில் நடக்கவிருக்கும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு விரைவில் அவை எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதையும் அன்புடன் தெரிவிக்கிறோம்.

நெல்லை நிகழ்விற்குத் தேர்வான கட்டுரையாளர்கள் நேரடியாகப் பங்குபெற்று கட்டுரைகளை வாசிக்க அன்புடன் அழைக்கிறோம்.

தேர்வான கட்டுரைகளின் விவரம்:

தலைப்பு: அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்

  1. பெ.சசிக்குமார்
  2. ந. பெரியசாமி

தலைப்பு: சிறார் இலக்கியத்தில் தமிழ்நாடு அரசின் பங்கு

  1. லதா அண்ணாதுரை

தலைப்பு: கலைகள்

  1. வசந்தன் சிவம்(கலையில் விரியும் குழந்தை மனம்)
  2. சிவபஞ்சவன்(அரங்கம் வழி மாற்றுக் கல்வி)

தலைப்பு: சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்கள்,

  1. முனைவர் அ. இந்துமதி
  2. வாகைசூடி.

தலைப்பு: வரலாற்றின் திசைகளில் சிறார் இலக்கியம்

  1. துரை. அறிவழகன்

தலைப்பு: சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம்

  1. சுகுமாரன்

நன்றி,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு – த.சி.எ.க.ச. அஞ்சலி

எழுத்தாளர், பேச்சாளர், கதைசொல்லியுமான தோழர் இரா.நாறும்பூநாதன் (64) காலமானார். இது கலை இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குக் கதை சொல்வதிலும், கதை எழுதுவதிலும், கூட்டங்கள்-செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதிலும் ஆர்வம் காட்டிய அவருக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் அஞ்சலி செலுத்துகிறது.

”வாசிப்பு ஒரு நீண்ட பயணம். பரந்த வாசிப்பு மூலமாக மட்டுமே சமூகத்தை புரிந்துகொள்ள முடியும். இதுதான் நிறைய ஞானத்தை கொடுக்கும். வாசிப்பின் மூலமாக மட்டும்தான் ஒரு சமூகம் பண்பட்ட சமூகமாக மாறும்” என்று நாறும்பூநாதன் கூறுவார். அதற்கேபவே தன் வாழ்க்கை, செயல்பாடுகளை அமைத்துக்கொண்டவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநில துணைச் செயலாளராக செயல்பட்டுவந்தார்.

வங்கிப் பணியில் விருப்ப ஒய்வு பெற்று, இலக்கியத் துறையில் ஈடுபட்டுவந்தவர் நாறும்பூநாதன். தொடக்கக் காலத்தில் ‘மொட்டுக்கள்’ என்னும் கையெழுத்து பத்திரிகையை கோவில்பட்டி நண்பர்களுடன் இணைந்து நடத்தியவர்.  அதில் அவரது ஓவியமும் எழுத்தாளர் உதயசங்கரின் கவிதையும், கட்டுரையும் வெளியாகிக்கொண்டிருந்தன. அவரது முதல் சிறுகதை ‘தொழில் தர்மம்’ மொட்டுக்கள் இதழிலேயே வெளியானது. ‘எண்ணங்கள்’, ‘த்வனி’ ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.

நண்பர்களுடன் இணைந்து ‘தர்சனா’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து ஸ்ருஷ்டி என்னும் நாடகக் குழுவில் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை தமிழகம் முழுவதும் சென்று நடத்தியுள்ளார்.

நாறும்பூநாதனின் முதல் புத்தகம் ‘கனவில் உதிர்ந்த பூ’ 2002ஆம் ஆண்டில் வெளிவந்தது. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பல வரலாற்றுத் தகவல்களை, பிரபலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அவரது முகநூல் கட்டுரைகள் பெருவாரி வாசகர்களைக் கவர்ந்ததன் காரணமாக, முகநூலில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ’கண் முன்னே விரியும் கடல்’, ’யானை சொப்பணம்’ என்ற இரு நூல்களாக வெளிவந்தன. தினமணி, இந்து தமிழ் நாளிதழ்களில் எழுதியுள்ளார். கரோனா பேரிடர் காலத்தில் தினம் ஒரு கதை என ஐம்பதற்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகளை வட்டார வழக்கோடு, முகநூலில் கதை சொல்லி பதிவிட்டுள்ளார். தமிழக அரசின் உவேசா விருதை பெற்றுள்ளார்.

‘குழந்தைகளுக்காக பிரேமாவின் புத்தகங்கள்’, ‘மகாகவி பாரதி’ (மாணவர் பதிப்பு) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறார் கதைகள் சிலவற்றை ‘இந்து தமிழ்’ மாயா பஜாரிலும், தனது முகநூல் பக்கத்திலும் எழுதிவந்தார். குழந்தைகளிடம் கதைசொல்லும் முயற்சியிலும் ஈடுபட்டுவந்தார்.

நெல்லையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக புத்தகக் கண்காட்சிகளை தமிழகமே திரும்பிப்பார்க்கும் வகையில் நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். திருநெல்வேலியில் கலை இலக்கியக் கூட்டங்கள், செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவும் வாசிப்புப் பண்பாடு வலுப்பெறவும் இடைவிடாது உழைத்துவந்தவர்.

மாணவர் சின்னதுரை வெட்டுப்பட்டவுடன் நேரில் சந்தித்து நிலைமையை உலகுக்கு எடுத்துச்சொல்லி ஆதரவாக மக்களைத் திரட்டுவதில் ஈடுபட்டவர். கணியான்கூத்துக் கலைஞர் நெல்லைத் தங்கராஜுக்கு வீடு கிடைக்கக் காரணமாக இருந்தவர். இப்படிக் கலை இலக்கியத் துறை மட்டுமல்லாமல் சமூகத்தின் எந்தத் தேவை, சிக்கல் எழுந்தாலும் உடனே அங்கே உதவிக்கரம் நீட்டுபவராக இருந்தார். சமூகத்துக்காகவும் மக்களுக்காகவும் செயல்படுவதற்காக அர்ப்பணித்துக்கொண்ட அவருடைய ஒவ்வொரு முயற்சியும் நாம் பின்பற்றத்தக்கது.

சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 2025இல் மாநில அளவிலான சிறார் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. கருத்தரங்கிற்குக் கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

தலைப்புகள்:

  1. சிறார் இலக்கியத்தில்‌ தமிழ்நாடு அரசின் பங்களிப்பு
  2. சிறார்களுக்கான கலைகளின்  அவசியம் – வளர்ச்சி மற்றும் மாற்றங்கள்
  3. பள்ளிக்குள் சிறார் இலக்கியம் செல்வதில் உள்ள சவால்கள்
  4. உலகச் சிறார் இலக்கியம்
  5. சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம்
  6. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்
  7. சிறார் இலக்கியம் சூழலியல் பிரச்சனைகளைச் சரிவரப் பேசுகிறதா?
  8. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்
  9. குழந்தைகளின் எழுத்துலகம் : ஒரு சுதந்திர வெளி
  10. சிறார் கலை-இலக்கியம் சார்ந்து விருப்பமான தலைப்பில்

விதிமுறைகள்:

  • கட்டுரைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஏபரல் 07, 2025
  • ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம்
  • கட்டுரை 1000 முதல் 1500 சொற்கள் வரை இருக்க வேண்டும்
  • யுனிகோட் (Unicode) முறையில் தட்டச்சு செய்யப்பட்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
  • கட்டுரைகள் சொந்த ஆக்கங்களாகவும், முன்னர் வேறு எங்கும் வெளிவராதவையாகவும் இருத்தல் வேண்டும்
  • [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் – கருத்தரங்கில் வாசிக்கப்படும் – பின்னர் சங்கத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும்.

கட்டுரை எதிர்பார்ப்புகள்:

  • சிறார் இலக்கியத்தில்‌ தமிழ்நாடு அரசின் பங்களிப்பு:  கடந்த காலங்களில் நடந்தவை: சிறார் இலக்கிய‌ மாநாடு, பிரத்தியேகப் புத்தகக் கண்காட்சி, சமகாலத்தில் நடப்பவை: பாடநூல் கழகம், நூலகங்கள், அரசு நடத்தும் இதழ்கள், வாசிப்பு இயக்கம், வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் அரசு எடுக்கும் முயற்சிகள் ஓர் ஒப்பீட்டுப் பார்வை, எதிர்காலத்தில் மேம்படுத்தல், அதற்கான வழிமுறைகள், யோசனைகள் – சிறார் இலக்கியத்திற்கான தனி ஆய்வு நூலகம், சிறார் இலக்கியங்களை அரசுடைமை ஆக்குதல். பல்கலைக்கழகங்களில் சிறார் இலக்கியத்திற்கு முக்கியமான இடத்தினை வழங்குதல்.
  • சிறார்களுக்கான கலைகளின்  அவசியம் – வளர்ச்சி மற்றும் மாற்றங்கள்:  சிறார்களுக்கான கலைகள் குறித்து முறையாக ஆவணப்படுத்துதல், பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுத்தல், கலைகளை மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாட்டாளர்களை உருவாக்குதல். தமிழ் நிலம் கடந்து வேறு நிலங்களிருந்து ஏற்றுக்கொண்ட கலைகள், அது நம் சிறார் உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள். அதன் மூலம் உலக வரலாற்றை எடுத்துக்கூறுதல். கலைகளின் வரலாறு, அதன் அவசியங்கள், அதன் வளர்ச்சி, எதிர்காலம் குறித்தும் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • பள்ளிக்குள் சிறார் இலக்கியம் செல்வதில் உள்ள சவால்கள்: வாசிப்புள்ள சமூகம் – எதிர்காலத்தின் அவசியம். வாசிப்பின் மீது மாணவர்களுக்கு, மாணவர்களைச் சுற்றியுள்ள ஆசிரியர்கள் & பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் தேவை. ஆனால், தேர்வு மதிப்பெண் எனும் ஓட்டத்தில் பள்ளிக்குள் வாசிப்பு என்பது எந்த நிலையில் உள்ளது? அங்கு வாசிப்பதற்கான சூழல் நிலவுகிறதா?  வாசிப்பை வளர்த்தெடுப்பதில் பெற்றோர், ஆசிரியர், சமூகத்தின் பங்கு என்ன? அதற்கான வழிமுறைகள் என்ன?
  • உலகச் சிறார் இலக்கியம்: தமிழ்ச் சிறார் இலக்கியம் உலக இலக்கியங்களுக்கு மிக முக்கியமான இடத்தினை வழங்கியுள்ளது. ஆங்கிலம், ரஷ்ய மொழிக் கதைகள், சீனக் கதைகள், இந்தியாவிலுள்ள மற்ற மொழிப் படைப்புகள், ஐரோப்பிய மொழிக் கதைகள் எனத் தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் அதிகளவில் வெளியாகியுள்ளன. அவை முன்னுதாரணப் படைப்புகளாகவும் விளங்குகின்றன. அதேபோல், வெளிநாடுகளில் சிறார் இலக்கியப் போக்குகள் குறித்தும், தமிழ்க் குழந்தைகள் வெளிநாடுகளில் இயல்பில் வாசிப்பை ஏற்றுக்கொண்டுள்ள சூழல் குறித்தும் நாம் கவனிப்பது அவசியம். சிறார் இலக்கியத்தில் குழந்தைகளின் வயதிற்கேற்ற வகையில் படைப்புகள் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. அதில் சொற்களின் தேர்வு முறைகளுக்கெனப் பரிந்துரைகளும் உள்ளன. உலகச் சிறார் இலக்கியத்தில் வளர்ச்சியைப் போலவே சில தடைகளும் உள்ளன. அமெரிக்காவில் சிறார் நூல்கள் பெரும் அளவில் தடைசெய்யப்படும் செய்திகளையும் நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறாக உலகச் சிறார் இலக்கியப் போக்குகள் குறித்துக் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம்: தற்காலச் சிறார் இலக்கிய எழுத்தாளர்களிடம் தென்படும் அடிப்படைச் சிக்கல்கள், AI வரவுக்குப் பின்னர் உலகளவில் எழுந்துள்ள தானியங்கிப் படைப்புகள், அதன் வழியே இலக்கியமற்ற எழுத்துகள், சிந்தனைத்தளமற்ற இலக்கியம் என நடக்கும் பாதிப்புகள், சிறார் இலக்கியத்தை விமர்சன ரீதியாக அணுகுதல், விமர்சன இலக்கியத்தை ஆக்கப்பூர்வமான தளத்திற்கு எடுத்துச் செல்லுதல். தாய்மொழிப் பயன்பாடு, தவிர்க்க வேண்டிய சொற்கள், காட்சி அமைப்புகள் என பல்வேறு விமர்சனங்கள் குறித்தும் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்: ‘ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையோடு இருப்பது அடிப்படைக் கடமை’ என வலியுறுத்துகிறது இந்திய அரசமைப்புச் சட்டம். ஆனால் சமகாலம் என்பது மூடநம்பிக்கைகள் & போலி அறிவியலில் சிக்கித் தவிக்கிறது. இந்தச் சூழலில் அறிவியல் மனப்பான்மையை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதில் சிறார் இலக்கியத்திற்கு மிக முக்கியப் பங்குள்ளது. தமிழில் நேரடியாக அறிவியலாளர்கள் தங்களது பங்களிப்பைச் செலுத்தி வரும் ஆக்கப்பூர்வமான போக்கு நம்பிக்கை தருகிறது.
  • சிறார் இலக்கியம் சூழலியல் பிரச்சனைகளைச் சரிவரப் பேசுகிறதா?: சூழலியல் பிரச்சனைகளை அறிவியல் ரீதியாகப் புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியமானது. பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்த பின்னரே அதற்கான தீர்வைச் சொல்ல முடியும். சூழலியல் என்றதுமே மரம் வளர்த்தல் என்ற ஒற்றைத் தீர்வை வழங்கும் கதைகளே அதிகம் எழுதப்படுகின்றன. பள்ளிகளில்கூட மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் என்றாலே எரியும் பூமிப் பந்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, “Save Nature” என ஒன்றுபோலவே ஓவியங்கள் வரையப்படுவதை 25 ஆண்டுகளுக்கு மேலாக நாம் காண்கிறோம். ஆனால், சூழலியல் சார்ந்த அடிப்படை புரிதல்கள் கூடக் கலை-இலக்கியங்களில் இடம்பெறவில்லை என்பதையே இவை உணர்த்துகின்றன. ஆனால், உலகச் சிறார் இலக்கியத் தளத்தில், “Eco-Ciriticism” என்ற வகைமையில் சூழலியல் எழுத்துகளைக் குறிப்பிடுகின்றனர். சூழலியல் என்ற தனித்தலைப்பிலே சிறார் இலக்கிய மாநாடுகள் நடைபெறுகின்றன.
  • பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்: ஒரு குழந்தையின் வளர்ப்பில் ஒரு பெண்ணின் பங்களிப்பு என்பது அதீதமானது.  ஆனால், சிறார் இலக்கிய வரலாற்றில் – ஆண்களின் பங்களிப்பே அதிகமாக இருந்துள்ளது. சமகாலத்தில் இந்நிலை மாறி வருகிறது என்பது மிகவும் ஆக்கப்பூர்வமான விசயம். சிறார் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் வகையில் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • குழந்தைகளின் எழுதுலகம் – ஒரு சுதந்திர வெளி:கொரோனாவிற்குப் பிறகு – குழந்தைகள் எழுதும் சிறார் இலக்கியம் பெரிதாக வளர்ந்துள்ளது. சிறுகதைகள், நாவல், பாடல்கள், கட்டுரைகள் எனப் பல்வேறு பிரிவுகளில் குழந்தைகளின் படைப்புகள் வெளியாகியுள்ளன. அதே நேரம் பெற்றோர்-ஆசிரியர்கள் எனப் பெரியவர்களின் தலையீடுகளையும் இந்தப் படைப்புகளில் காண முடிகின்றன. புகழ் தேடும் வழியாகவும் புத்தகங்களைப் பயன்படுத்தும் போக்கும் நிலவுகிறது. குழந்தைகளின் படைப்புலகை ஒரு சுதந்திர வெளியாக வளர்த்தெடுத்தல் குறித்த பார்வையில் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சிறார் இலக்கியம் பற்றி அறிந்துகொள்ள சிலப் பரிந்துரைகள்

நன்றி,

உதயசங்கர்(தலைவர்) & சாலை செல்வம் (செயலாளர்)

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம்

பரிந்துரைகள்: சிறார் இலக்கியம் குறித்து அறிந்துகொள்ள உதவும் நூல்கள்

வாசிப்பிற்கான சில பரிந்துரைகள்:

  1. நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும் (தொகுப்பு: பஞ்சு மிட்டாய் பிரபு, வெளியீடு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம்)
  2. தமிழ்ச் சிறார் இலக்கியம் – யதார்த்தமும் எதிர்காலமும் (ஆதி வள்ளியப்பன், வெளியீடு: பாரதி புத்தகாலயம்)
  3. தமிழ்க் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும் (சுகுமாரன் – வெளியீடு: தாமரை )
  4. நானும் கதாசிரியரே (விஷ்ணுபுரம் சரவணன் – வெளியீடு: தமிழ் திசை)
  5. வாசிப்புப் பேரியக்கம் – (விழியன் & விஷ்ணுபுரம் சரவணன் – வெளியீடு: பாரதி புத்தகாலயம்)
  6. வாசிப்பு இயக்கம் யாருக்காக? எதற்காக? (பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்)
  7. குழந்தை எழுத்தாளர் சங்கம் (முனைவர் தேவி நாச்சியப்பன், வெளியீடு : பழனியப்பா பிரதர்ஸ்)
  8. அழ. வள்ளியப்பா படைப்புகள் (இணையத்தில் வாசிக்க)
  9. சிறுவர் இலக்கிய வரலாறு (பூவண்ணன், இணையத்தில் வாசிக்க)
  10. உலகச் சிறார் இலக்கியம் : https://shorturl.at/GJ2f8
  11. குழந்தை இலக்கிய முன்னோடிகள்: ஆர்.வி. பதி
  12. பால சாகித்திய புரஸ்கார் விருதும் விருதாளர்களும்: ஆர்.வி. பதி
  13. தற்கால சிறார் எழுத்தாளர்கள்: ஆர்.வி. பதி
  14. குழந்தை இலக்கிய முன்னோடிகள்: ஆர்.வி. பதி
  15. புதுச்சேரி குழந்தை இலக்கிய வரலாறு: ஆர்.வி. பதி
  16. சிறுவர்களின் சிநேகிதர் அழ.வள்ளியப்பா 100: ஆர்.வி. பதி
  17. சிறார் இதழ்கள் அன்று முதல் இன்று வரை: ஆர்.வி. பதி
  18. வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம் : அழ. வள்ளியப்பா
  19. பால சாகித்திய புரஸ்கார்ர் விருது வென்ற படைப்புகள் 2010-2024: ஞா. கலையரசி,வெளியீடு: பாரதி புத்தகாலயம்
  20.  100 சிறந்த சிறார் கதைகள். – தொகுப்பாசிரியர். சுகுமாரன். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
  21. அழ.வள்ளியப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்) (பூவண்ணன், வெளியீடு: சாகித்திய அகாதமி)

இணையதளங்கள்:

  1. www.panchumittai.com
  2. chuttiulagam.com
  3. https://bookday.in/
  4. https://keetru.com/

அனைவரும் வாரீர்!

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், வரும் 04/01/2025(சனி) அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 25 சிறார் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. சென்னையிலுள்ள நண்பர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரையும் நிகழ்விற்கு அன்புடன் அழைக்கிறோம்.

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! – சோ.மோகனா

மிகவும் ஆழமாகத்  திட்டமிட்டு, தமிழ்நாடு குழந்தைகள் எழுத்தாளர்கள் சங்கத்தைத் துவக்கினீர்கள். இப்போது அதற்கான இணைய தளத்தையும் தொடங்க இருக்கிறீர்கள். இப்படி சமூக நோக்குள்ள மனித இதயங்கள் இணைந்து இதனைத் துவக்குவது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு.  பெரியவர்களுக்குக் கதை எழுதும் இந்த கால கட்டத்தில், எதிர்கால குடிமகன்கள்,குடிமகள்கள், எதிர்கால விஞ்ஞானிகள், எதிர்கால வரலாற்றாளர்கள், எதிர்கால சமூகவியலாளர்களைக்

 கருத்தில் கொண்டு அவர்களுக்காக எழுதும் மனிதர்கள் அற்புதமானவர்கள். குழந்தைகளை மனதில் வைத்து எழுதுவது என்பது பெரியவர்களுக்காக எழுதுவதை விடக் கடினமானது,நிறையக் கற்பனை வளம் கொண்டு, குழந்தைகள் மனப்பாங்கில், குழந்தைகளாகவே மாறி எழுதினால்தான் அதன் தன்மையும், உண்மை நிலையும் குழந்தைகளை ஈர்க்க முடியும். அப்படிப்பட்ட   ஒரு சிலர்களில் என் மனக்கண் முன்னே வருவது உதயசங்கர், விழியன், பிரபு ராஜேந்திரன், பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன் போன்றோர். நானும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், விஞ்ஞான துளிர் பத்திரிக்கைக்கு எழுதுவதால், அதிலுள்ள சூட்சுமம் தெரியும். மேலும் தாங்கள் கிட்டத்தட்டத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கிளைகளை வைத்துள்ளதும், அதில் 200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் என்பதும் ஆகப் பெருஞ்செயல்கள்தாம். வாழ்த்துகள்!

 குழந்தை எழுத்தாளர்களே! இனி நானும் உங்களோடு இணைந்து பயணிப்பேன். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் இணையதளம், சீரோடும், சிறப்போடும், பெருமை மிக்க நடை போடும் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்   வாழ்த்துகள் குழந்தை எழுத்தாளர்களே. 

என்றைக்கும் அன்புடன் 

சோ.மோகனா, 

பழனி, 

19.10.24

இணையதளம் புதிய சிகரங்களை வென்றெடுக்க அனைவரும் வாழ்த்துவோம்! – கண. குறிஞ்சி

“குழந்தையே, மனிதனின் தந்தை ” (The child is the father of man) என்றார் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் . குழந்தைப் பருவத்தின் பண்புகளும், நடவடிக்கைகளுமே பிற்காலத்தில் ஒரு மனிதனின் ஆளுமையையும், அடையாளத்தையும் உருவாக்குகிறது என்பது சரியே. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ்ச் சொலவடை. அதையே “Catch them young’ என்று ஆங்கிலமும் நமக்குக் கற்பிக்கிறது.

ஆனாலும் 18- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆங்கிலத்திலேயே சிறார் இலக்கியம் தோன்றியதைக் காண்கிறோம். இருப்பினும் சிறார் இலக்கிய வகையினம் ஆங்கிலத்தில் மிக வேகமாக வளர்ந்து இன்று கோடிக்கணக்கான டாலர்களை வாரிவழங்கும் ஜே.கே. ரவ்லிங்கின் ஹாரி பாட்டராக நெடிதோங்கி நிற்கிறது.

ஆங்கிலத்திலேயே அப்படி எனும் போது, தமிழில் மிகவும் காலதாமதமாகத்தான் இந்த இலக்கியவகை மெல்ல மெல்ல உருவாகி வந்துள்ளது. தகவல் வெடிப்பு மிக்க இந்த யுகத்தில், இன்னும் பஞ்சதந்திரக் கதைகளை வைத்துக் .கொண்டே காலத்தை ஓட்ட முடியாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது மாதா, பிதா, தொலைக்காட்சி தெய்வம் என்றாகி விட்ட காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே இந்த ஓட்டப் பந்தயத்தில் நாம் வெல்ல வேண்டுமெனில், சிறார் இலக்கிய வகையினத்தில் பெரும் பரிணாம வளர்ச்சி தேவைப்படுகிறது.

இந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்த காரணத்தால், காலப்பொருத்தப்பாடு கருதி 2021 – ஆம் ஆண்டில் தமிழ்நாடு சிறுவர் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உருவாக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக இச்சங்கத்திற்கு இணையதளம் தொடங்கத் துறைசார் படைப்பாளிகள் இப்பொழுது முன்முயற்சி எடுத்து வருகின்றனர். சிறார் இலக்கிய வானில் புனைவுகளும், அல்புனைவுகளுமாக ஆற்ற வேண்டிய பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தச் சமகாலச் சவாலை எதிர்கொண்டு, சிறார் இலக்கிய இணையதளம் புதிய சிகரங்களை வென்றெடுக்க அனைவரும் வாழ்த்துவோம்.

கண. குறிஞ்சி

குழந்தைகள் உலகில் புதிய நம்பிக்கை – வெற்றிச்செழியன்


குழந்தை உலகம் மகிழ்வானது; நம்பிக்கையில் ஆழ ஊன்றியது. குழந்தைகளின் உள்ளம் விரிந்தது. அதில் உறவுக்கும் நட்புக்கும் மட்டுமல்ல, உயிர்களுக்கெல்லாம் இடமுண்டு. ஏன் கல்லுக்கும் மண்ணுக்கும் கற்பனை உலகுக்கும் இடமுண்டு. அவர்கள் காற்றோடு பேசும் கலை கற்றவர்கள்; கடலலை பேசுவதைக் கேட்டு விளங்கிக் கொள்ளும் உள்ளம் படைத்தவர்கள். சிறகடித்துப் பறக்கும் எண்ணங்களுக்கும் புதிய தேடுதலுக்கும் சொந்தக்காரர்கள்.


இன்றைய காட்சி ஊடக உலகம், குழந்தைகளை, குழந்தைகளின் இயல்புக் கற்பனையை, இயற்கையோடும் இணைந்த மக்களோடுமான உறவை, மொழியோடான தொடர்பை, குழந்தமையை மெல்ல, களவாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்காகப் பொறுப்புடன் எழுதுவதும், கலையாக்கங்கள் படைப்பதும், குழந்தைகளுடன் இணைந்து அவர்களுக்காகச் செயல்படுவதும் மிகவும் இன்றியமையாத பணிகள். தமிழ் நாட்டில் இப்பணிகளில் இணைந்து கொண்டு இவற்றைச் செழுமையாக்கும் களப்பணியில் தமிழ் நாடு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் செயல்பட்டு வருவது பெருமகிழ்வு தரும் ஒன்று.


குழந்தைகள் தளங்களில் பணியாற்றும் பலரும் இணைந்து செயல்பட, தமிழ் நாடு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க இணைய தளம் பேருதவியாக, பெரும்பயனாக இருக்கும்.


வாழ்த்தி மகிழ்கிறோம்,
வெற்றிச்செழியன்.

இணையதளத்திற்கு வாழ்த்துகள்! – ஆயிஷா இரா நடராசன்

கண்டிப்பாக கொண்டாட வேண்டிய தருணம் இது 🌟

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் .. இன்னொரு சாதனை கல் எட்டப்பட்டுள்ளது . நாம் நமக்கான இணைய தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம் என்கிற செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் .

நம்முடைய முன்னோடிகளான அழ வள்ளியப்பா .. டாக்டர் பூவண்ணன் .. வாண்டு மாமா ஆகியோர்களின் காலத்தில் இருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் வேறு. இன்றைக்கு நாம் iPod சந்ததிக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம் .

இந்த சூழலில் நமக்கான இணையதளம் என்பது பல்வேறு வகைகளில் நம்மை குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு கண்டிப்பாக பயன்படும் . உலகெங்கிலும் உள்ள தமிழ் குழந்தைகளின் .. ஒப்பற்ற தோழனாக இந்த இணையதளம் விளங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்

வாசிப்பின் மீது அளவற்ற காதல் கொண்ட இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான குழந்தைகள் .. இந்த இணையதளத்தை நோக்கி தேனீக்களைப் போல மொய்த்தெடுக்கட்டும் . வருங்காலத்தின் விஞ்ஞானிகளை .. தத்துவ ஆசான்களை கவிஞர்களை கதாசிரியர்களை .. இன்னும் இன்னும் கலைஞர்களை .. உருவாக்குகின்ற ஒப்பற்ற பாதையை இந்த இணையதளம் அமைத்து தரட்டும் ..

வாழ்த்துக்கள்!

நன்றி,

ஆயிஷா இரா நடராசன்

❌