Normal view

Received before yesterdayவிமர்சனம்

நெருங்கிப் பேசும் எடையற்ற சொற்கள்


நாம் சொல்ல நினைப்பதையே சொற்கள் பொதியெனச் சுமக்கின்றன. சமயங்களில் சொல்லாதவையுங்கூட கேட்பவர் அல்லது வாசிப்பவர் உபயத்தில் இதில் ஏறிக் கொள்கிறதும் நடப்பதுதான். சொல்வதைச் சொல்ல சொல்பவர் தேரும் சொற்கள் எப்படிப்பட்டவை என்பதில் நாம் கவனங்கொள்கையில் அது அந்த எழுத்தாளுமை குறித்தும் நிறையவே சொல்லத் துவங்குகிறது. புத்தம் வீடு புதினத்தில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அவர்கள் கையாண்டிருக்கும் எழுத்தை அப்படியாக அணுகுவது புதினத்தின் வாசிப்புச்சுவையை இன்னும் கூட்டுகிறது. 

வாழ்ந்து கெட்ட ‘பெரிய’ குடும்பங்களின் கதையை – சரிவின் விளிம்பிலிருந்து மெதுவாக புதைமணலில் இறங்கிக் கொண்டிருக்கும் அதன் சித்திரங்களை – நாம் பலவிதங்களில் வாசித்திருக்கலாம். மிகை சோகமும், கடந்த காலம் குறித்த நினைவுகளில் மட்டுமே படிந்திருக்கும், உருகியழிந்துவிட்ட, மீண்டும் உயிர்ப்பிக்கவியலாத அவர்களின் கனவுகளும் பகட்டுகளும் நம் முன்னால் வரிசைகட்டும். அதிகாரத்தின் கொம்புத்தேனை சுவைத்துப் பழகிய அக்குடும்பங்களின் ஆண்களினுடைய நாவுகள் இன்னும் அதனை அசைபோடுகிற, அதற்கு ஏங்கியே காலம் கழிக்கிற கதைகளும் அதனுள் நிறைந்திருக்கும். 

அதிகாரச் சண்டை பெரும்பான்மையாக ஆணுலகிற்குள் இருக்கிற ஒரு சிறுபான்மை விகிதத்தினரின் வஸ்து. அதனைக் கைக்கொள்வதற்கான பிரயத்தனங்களிலும், கிடைத்ததைத் தக்கவைத்துக் கொள்வதற்கான பெருமுயற்சிகளிலுமே அவர்களுடைய வாழ்காலத்தின் பெரும்பகுதி கரைந்துவிடுகிறது. காலவோட்டத்தில் நீர்த்துப் போய்விட்ட தமது அதிகாரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை என்று தத்தமது ஆணவங்களை நம்பச் செய்திடும் பொருட்டு அதனை தம் வீட்டுப் பெண்களிடமே பிரயோகித்து, அவர்களை உழற்றியெடுக்கிற ஒரு கோட்டுச் சித்திரம் இக்கதைக்குள் இருக்கிறது. 

பனைவிளை கிராமத்தின் புத்தம் வீட்டின் தலைவராக இருக்கிற கண்ணப்பச்சி, முடிந்த தலைமுறையின் மீதம். புத்தம் வீட்டின் அடிச்சுக் கூட்டில்தான் அவரது அரசவை. ஒரு காலத்தில் ஊர் கோவிலின் டீக்கனராக இருந்தவரின் அதிகார எல்லை நாளடைவில் அவ்வீட்டோடு சுருங்கிப் போகிறது. இரண்டு புதல்வர்களின் குடும்பசகிதமாக அங்கு வாழும் கூட்டுக் குடும்பமே அவரது பிரஜைகள். மூத்தவர் பொன்னுமுத்து கள்ளுக்கடையில் குடித்தனம் நடத்துவது வீட்டின் துருவேறி ‘அழிந்து கொண்டிருக்கிற’ பெருமையின் குறியீடு போல துருத்திக் கொண்டிருக்க அவரது மகள் லிஸியை மையமிட்டே கதைப்பின்னல் இருக்கிறது. முன்னோரின் சொத்துகளில் குளிர்காயும் அவர்களது வீட்டின் ஒரே உத்தியோகஸ்த புத்திரன் இளையபிள்ளை பொன்னுத்தம்பி. அவரது மகள் லில்லியுடன் சேர்த்து அவ்வீட்டில் லிஸியின் பாட்டி கண்ணம்மை, லிசியின் தாயார், அவளது சித்தி என ஐந்து பெண்கள். 

நாவலின் மையச்சரடு முன்சொன்னது போல மதிப்புமிக்க ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியையே தீட்டிச் செல்கிறது எனினும், அதனாழத்தில் ஒரு பெண் பார்வை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிகழுகிற அத்தனையையும் அது தனது கண்கள் வழியே பார்த்து மிகச் சிக்கனமான மொழியில் அதனை விரித்துக் காட்டுகிறது.  

உலகையையே ஒரு விளையாட்டுப் பொருளென கையாண்ட ஒரு சிறுமிக்கு, பூப்பெய்திய பின்னர் தலைகீழாகும் வாழ்க்கையில் கசப்பின் முதல் மிடறை அருந்துகையில் எப்படி இருக்குமவளுக்கு என்பதாகட்டும், சடுதியில் அவளைச் சூழ்ந்து கொள்கிற கடைபிடிக்க வேண்டியவைகள் அடங்கிய பெரும்பட்டியலை அவள் எதிர்கொள்ள நேர்கையில் அவளுள் எழுகிற குழப்பங்களாகட்டும், படிப்போ பள்ளிக்கூடமோ கனவத்தனையும் துடைத்தெறிந்துவிட்டு, அவளின் கரங்களுக்குக் கைமாற்றப்படும் குலப்பெருமை காக்கும் பொறுப்பு தருகிற அயற்சியாகட்டும், அத்தனையும் மிகச் சிக்கனமான மொழியிலேயே வெளிப்படுகிறது. எந்த இடத்திலும் எச்சொல்லும் எரிவதில்லை; ஒரு மெல்லிய பெருமூச்சோடு அயர்ந்து உதிர்கிறது. 

“…கதவு மறைவில் பாதி முகம் வெளியில் தெரியும்படி குற்றவாளிபோல் எட்டிப்பார்க்கிற பரிதாபத்துக்கு இத்தனை சடுதியில் வந்துவிடுகிறதே, இந்த வாழ்க்கைத் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!” [பக்:34]

“… அவள் பெரிய வீட்டுப் பெண். பனைவிளை புத்தம் வீட்டுக் குலவிளக்கு. ஆகையால் அவள் பலர் காண வெளியில் வருவது கொஞ்சக்கூடத்தகாது…” எனச்சொல்லிச் செல்கிற எழுத்து தொடர்ந்து “அது அவள் விலையைக் குறைப்பதாகும்…” [ப: 35] என நமுட்டுச் சிரிப்பும் சிரிக்கிறது. இப்படியான சிறிய விசயங்களுக்குள் ஆசிரியர் நுட்பாக பகடியை வைக்கிறார். 

எல்லா அத்தியாயங்களும் தனித்தலைப்புகளிடப்பட்டுள்ளன. மேற்சொன்ன யாவும் வருகிற ஐந்தாவது அத்தியாயத்தின் பெயர் சிறைவாசம். வெளியேற வழியற்ற ஒரு சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்ட கதாபாத்திரங்கள் பகடியின் நிழலில் ஒதுங்குகின்றன. ஒரு வகையில் பார்த்தால் விரக்தியின் உச்சிக்கு அப்பாலிருக்கும் மறுபக்கத்தின் சரிவு தான் அப்பகடி.

பொதுவாக கதை சமைத்தலின் இலக்கணங்களில் உச்ச தருணங்களை ஒத்த திருப்பங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கதையோட்டத்தின் சுழிப்பு மாறும் போதெல்லாம் எழுத்தின் வன்மையும் அதிகரிப்பது வழமையான எழுத்து முறைமை. ஆனால் ஹெப்சிபாவின் நடை நாடகியமான தருணங்களைக் கூட அலைகள் அடித்தெழாது அமைதிகாக்கிற நீர்ப்பரப்பின் குணம் கொள்கிறது.  புத்தம்வீட்டின் பனைகளில் ஏற வருகிற பனையேறியின் மகன் தங்கராசு துணிந்து லிஸியின் மீதான தனது காதலைத் தெரிவிக்கையில், அதனை உள்ளூற விரும்பி மனந்துள்ளும் லிஸியின் எதிர்வினைகள் அவிழும் தருணங்களில், ஒரு கட்டத்தில் இதனை அறிந்து கொள்ளும் சித்தப்பாவின் மகள் லில்லியின் சாடல் லிஸியைத் துளைக்கும் தருணமென எதுவும் – ஏன் கதையோட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக நிகழுகிற ஒரு கொலையும் கூட – ஆர்ப்பாட்டமற்ற மிகை மொழி துறந்த எளிமையோடேதான் மொழிப்படுகிறது.

 காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவந்த இப்பதிப்பிற்கு (மூன்றாம் பதிப்பு, 2014) அம்பை அவர்கள் மிகச் சிறப்பாக எழுதியுள்ள முன்னுரையில் சுட்டியிருப்பதைப் போல இதனை ஒரு பனையேறிகளின் வாழ்வியல் குறித்த புதினம் என்றோ, இன்னுமொரு காதல் கதை மட்டுமென்றோ சுருக்கிவிட இயலாது. மாறாக ஹெப்சிபாவின் எழுத்தாழம், அதிகார ஆண்களின் புடைசூழ பெண்ணடிமைத்தனத்தின் நுண்ணிய வலைப்பின்னலுக்குள் இருந்து சன்னமான முணங்கலாய் வெளிப்படும் பெண் குரல்கள் பேசுகிற மிகக் குறைவான, மிக எளிய சொற்களின் வழியாகவே நயமாய் நமக்கு அவர்தம் வலியைக் கடத்திவிடுகிறது. ஒரு வாசகராய், படைப்பை வாசித்து முடித்து அசைபோடுகையில், ஏதோ ஒரு வகையில், அந்த எளிமைதான் நம்மை மிகவும் தொந்தரவு செய்கிறது. வெளியாகி அறுபது ஆண்டுகளாகியும், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்திப் போகிற ஆக்கமாகவே புத்தம் வீடு புதினத்தின் கதை இருக்கிறது. அதன் கூறுமுறையும் புத்திளமையுடன் மிளிர்கிறது. 


நூல் தகவல்:

நூல் : புத்தம் வீடு

வகை : நாவல்

ஆசிரியர் : ஹெப்ஸிபா ஜேசுதாசன்

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

வெளியான ஆண்டு:  2014

பக்கங்கள் : 160

விலை:  ₹  200

  

The post நெருங்கிப் பேசும் எடையற்ற சொற்கள் appeared first on Vimarsanam Web.

நிரலி


மூன்று அறைகள். மூன்றே மூன்று மனிதர்கள்; மேலும் திரையில் தோன்றிப் பேசும் ஒரு சிறுமி. இவ்வளவு மினிமலான செட் பீஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு, நம்மை சிந்திக்கத் தூண்டும் அளவிற்கு ஒரு அறிவியல் புனைவுக் கதையை சுவாரசியமாகத் தந்துவிட முடியுமா? 

டீனா மற்றும் ஏமஸ் எனும் ஸ்பெஷல் ஏஜெண்ட்கள் கேரத் எனும் ஒரு டெக்கியை விசாரிப்பதில் துவங்குகிறது கதை. அவர்கள் ஆன்லைனில் குழந்தைகளைக் குறிவைக்கிற பீடஃபைல்களைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தந்து டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள். தற்சமயம் கேரத் அவர்களது விசாரணை வளையத்தில் அகப்பட்டிருப்பதன் பின்னணி, அவர்களுக்கு எவராலோ அனுப்பி வைக்கப்பட்ட ஒரு ஹார்ட் டிரைவும் அதில் இருந்த செர்ரி (Cherry) எனும் சிறுமியின் படங்களும். அதனை கேரத் சாட் அறைகளில் பேசுகிற பீடஃபைல்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குற்றச்சாட்டு. அவனது பின்புலம் குறித்த சகலமும் அதிகாரிகளின் விரல்நுனியில். ஆனால் தொடர்ந்து தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார் கேரத்.

ஒரு கட்டத்தில் அந்த சன்னல்களற்ற அறையில் அதிகாரிகளின் கிடுக்குப்பிடி கேள்விகளில் இருந்து தப்ப வழியின்றி பெரியதொரு ரகசியத்தை அவர்கள் இருவரிடம் மட்டும் – கசியாமல் அது பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கிற பட்சத்தில் – பகிர்ந்து கொள்ள முன்வருகிறார். வழியின்றி ஒப்புக் கொள்ளும் அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. 

செர்ரி ரத்தமும் சதையுமான ஒரு சிறுமி அல்ல என்பதும் சிறுமியின் வடிவில் இருக்கிற செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு நிரல் மட்டுமே என்பதே அந்த ரகசியம். ஆன்லைனில் பீடஃபைல்களை கண்டுபிடித்து அவர்களது நிஜமான தகவல்களை செர்ரியின் உதவியுடன் தரவுகளாக்கி அவற்றை டீனா மற்றும் ஏமஸுக்கு அனுப்பி வைப்பதே அவன் தான் என்று புரிந்து கொண்டு அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். அடையாளமின்மையே தனது செயல்பாட்டிற்கான அடிப்படை பலம் எனவும் அதனை முன்னிட்டே இப்படை செயபடுவதாகவும் பகிர்கிறார். மேற்கொண்டு கேரத் சொல்கிற எதையுமே துவக்கத்தில் நம்ப மறுக்கிற ஏமஸ் பிற்பாடு செர்ரியின் உருவாக்கம் குறித்து கேரத் விரிவாக விவரிக்கவும் நம்பத் துவங்குகிறார். அது 3-டி மாடலாக உருவம் வார்க்கப்பட்டடையும், ஒரு சாட் பாட்டாக வடிவமைக்கப்பட நினைத்துத் துவக்கப்பட்டதையும் பின்னர் இயந்திரக் கற்றலின் (machine learning) விளைவாக செரி தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்ட செயற்கை நுண்ணறிவில் அடுத்த கட்டத்திற்கு (super intelligence) மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதைக் குறித்தும் அறிய வருகிறார். மூவருடைய குறிக்கோளும் ஒன்றென்பதால் கரம் கோர்க்கிறார்கள். 

ஆனால் கதையின் துவங்கும் விதம்தான் இதுவே ஒழிய அதன் போக்கு இது பற்றியது அல்ல. செயற்கை நுண்ணறிவு கொண்ட மீஅறிவு கொண்ட உயிரியான (!) செர்ரியின் பரிணாமம் குறித்த கற்பனையாக கதை விரிகிறது. இதிலுள்ள தத்துவார்ந்த கேள்விகளையும், இது சார்ந்த சிக்கல்களையும் முன்வைக்க முயலுகிறது. செயற்கை நுண்ணறிவுத் திறன் நிஜ மனிதர்களுக்கும் நிரல்வடிவிலுள்ள ஏ.ஐ களுக்குமுள்ள வேறுபாடு நாளடைவில் நீர்த்துப் போகச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கதை தன் இயல்பான போக்கில் எடுத்துக் காட்டுகிறது. 

மனிதர்களுக்கே சுதந்திர விருப்பம் (free will) இருக்கிறதா இல்லையா என்பது ஒரு தத்துவ விவாதத்திற்கு உட்பட்ட கருத்து என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏ.ஐ களுக்கு இத்தகைய விருப்பங்கள் வரும்பட்சத்தில் நமக்கும் அவற்றிற்குமான வேறுபடுத்தும் கோடு முற்றிலும் அழிந்து போகக்கூடும். மானுட வாழ்வில் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்துகிற நம்முடைய எல்லா டிஜிட்டல் தகவல்களையும் தரவுகளாக்கி உண்டு செரித்தே தனது நுண்ணறிவைப் பெருக்கிக் கொள்கிற ஒரு நிரல் மனித உணர்வுகளை, உணர்ச்சிகளை, உணர்வுப்பூர்வமாக சிந்திக்கிற ஆற்றலைப் இந்த மீப்பெரும் டேட்டா குவியல்களில் இருந்து கிரகித்துக் கொள்வதன் வாயிலாக எட்டவே முடியாது என நாம் எதை முன்னிட்டும் உறுதிபடச் சொல்ல இயலாது. இது நம் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான, நம்மிடம் பதிலேயில்லாத, ஒரு கேள்வியின் முன்னே நம்மை நிறுத்துகிறது.

******* 

ருடங்கள் ஓடுகின்றன. கேரத்தைத் தவிர்த்து குழுவின் மீதமிருவரும் மாண்டு போகின்றனர். அரை நூற்றாண்டு கால வளர்ச்சியில் செர்ரி தன்னை ஒரு ஹியுமனாய்ட் இயந்திர மனுஷியாக வனைந்து கொள்கிறாள். அவளுக்கும் கேரத்துக்கும் இடையில் நடைபெறுகிற அந்த இறுதி உரையாடல் மிக முக்கியமானது. வெறும் அறிவியல் சுவாரசியம் என்பதோடு நில்லாமல் செர்ரியின் உருவாக்கத்தில் கேரத் மறைக்கிற ஒரு ரகசியத்தையும் அவள் தானாகவே கண்டடைகிறதும், அதனையொட்டி உருவாகிற டிராமாவும், அதுவுமே மையக்கதையின் அறிவியல் தன்மைக்கு இயைந்து போவதும் அழகாய் பொருந்துகிறது. படமாக அது பார்வையாளருக்கு சுவாரசியம் கூட்டுகிறது. (முதன்முதலில் கேரத் விசாரணையில் சிக்குவதன் பின்னணியே சுவாரசிய அம்சம்தான்.) 

அறிவியல் புனைவு என்பதை விஷுவல் பகட்டுகளோடு மட்டும்தான் சொல்ல முடியும் என்பதல்ல. மாறாக அது முன்வைக்கிற மையக்கருத்து காத்திரமாக இருந்து, அதனை ஒரு திரைக்கதையின் வாயிலாக தெளிவுற எடுத்துச் சொன்னாலே போதுமானது என்று எண்ணச் செய்கிற படைப்பு இது. பலருடைய விருப்பப் படங்களுள் ஒன்றென விளங்கும் Alex Garland எழுதி இயக்கிய Ex Machina (2014) அறிபுனை படத்தின் களத்தை, அது பேச முனைகிற விடயத்தை – Franklin Ritch எழுதி, இயக்கி, நடித்தும் இருக்கும் (கேரத் பாத்திரத்தில் நடித்திருப்பது அவர்தான்) – இப்படம் வேறு ஒரு தளத்தில் இருந்து அணுகுகிறது. உரையாடல்களே இப்படத்தின் உயிர்நாடி. இரு வருடங்களுக்கு முன்பாக VoD முறையில் வெளியான இண்டி சினிமாவான இப்படம் நிச்சயமாக சிந்திக்கத் தீனியிடுகிற ஒரு சுவாரசியமான படம். 

எனக்கு தனிப்பட்ட விதத்தில் Shene Carruth எழுதி இயக்கிய Primer (2004) படத்தைப் பார்த்து (தோராயமாக வெறும் 7000 டாலர்களுக்குள் மொத்தமாக எடுத்து முடிக்கப்பட்ட படம் இது) வியந்து போன பார்வை அனுபவத்தை நினைவூட்டியது இப்படத்தின் பார்வையனுபவம். காட்சி பிரம்மாண்டங்களாக அல்லாமல் சிந்தனைப்பூர்வமாக நம்மை ஆட்கொள்கிற வகைப் அறிபுனை படங்களை நீங்கள் ரசிப்பீர்களெனில் இது நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.  


 

The post நிரலி appeared first on Vimarsanam Web.

நரன் எழுதிய “கேசம்” – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை

18 October 2024 at 16:16

பொதுவாக நரனின் கதையுலகம் பற்றிப் பேசுவதற்கு அவரது முழுப் படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும். முழுப் படைப்புகளையும் வாசிக்கும் வாய்ப்பு இன்னும் இல்லாததால் இந்தப் புத்தகம் பேசும் கதை மாந்தர்கள், சூழல்கள், கதையுலகம் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று தோன்றுகிறது. இந்தப் புத்தகம் பற்றி விரிவாகப் பேசவே நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது மற்றும் அவசியமானது என்று நான் கருதுவது அல்லது நான் கண்டடைந்தது என்று கூறினால் நரனின் கதை மாந்தர்கள் தொண்ணூறு சதவிகிதம் அதீத மனப்பிறழ்வுத் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதன் நீட்சியாகச் சாதாரண மனிதர்களிடம் இல்லாத வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மக்களோடு புழங்கும் அசாதாரண மனநிலை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். மேலும் இதிலொரு அழகு என்னவென்றால் தங்கள் பிறழ்வுகளை யாருமறியாது ஒரு ரகசியமாகவே அனைவரும் வைத்திருப்பது தான்.

அந்தக் கதாபாத்திரங்கள் யாருமே தங்கள் பிறழ்வு பற்றிய பிரக்ஞை அற்று ஒடுங்கிக் கிடக்கும் மனநிலை உடையவர்களாகவே இருக்கிறார்கள். பிறழ்வுகளில் பலவகை உண்டு. பிறழ்வடைந்த பலர் தங்களுக்கு ஏற்படும் புற, சமூகத் தீங்குகளின் காரணமாக அதீதக் கோபத்தில் மற்றவருக்குச் சமுதாயத்துக்குத் தீங்கு இழைப்பவர்களாக மாறுகிறவர்கள் ஒரு ரகம். அந்த அநீதியைத் தட்டிக் கேட்க வழியற்று தன்னை அழித்துக் கொண்டோ ஒடுங்கிக் கொண்டோ தங்களை அழித்துக் கொள்வது ஒரு வகை. நரனின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இரண்டாவது வகையில் வந்து நிற்கின்றன.

தங்களைத் தாக்கும் ஏதோ ஒரு சூழல், அதிலிருந்து மேடேற முடியாத தன்மை அதன் நீட்சியாகத் தீவிரத்தன்மைகள் தொடரத்தொடர அத்தகைய பிறழ்வுகளை ஒரு பிரச்சினையாக எந்த கதாபாத்திரமும் யோசிக்கவில்லை.

அதை அனுபவிக்கத் துவங்குகிறார்கள். இந்தக் கதாபாத்திரம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எந்த வாசகனும் சொல்லவே முடியாது. அப்படி இருந்தால் அது அப்படிதான் இருக்க முடியும் என்று தோன்றவைப்பதில் கைதேர்ந்த ஆசிரியராக இருக்கிறார். ஏன் நம்மோடு கூட இருப்பவர்கள் தானே அல்லது நாம் தானே இவர்கள் என்று கூட எடுத்துக் கொண்டால் சரி தவறு என்று எந்தத் தராசுகளையும் தூக்கிக் கொண்டு இல்லாமல் வாசிக்கலாம்.

இவர்களால் தீங்கு நேருமா என்றால் எப்படி வேண்டுமானாலும் திரும்பும் என்பதைத் தவிர வேறேதும் சொல்ல முடியாது. இந்தக் குற்றங்களின் அல்லது இவர்கள் அப்படி ஆகக் காரணமானவர்களை, சூழல்களை என்று யாரை நோக்கியும் நேரடியாகக் கைநீட்டி விட முடியாத படியான சிக்கலில் விழுந்து கொண்டவர்கள், விழவைக்கப்பட்டவர்கள்.

ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியுமா (அதாவது அது போல் நம்மோடு உலாவும்) என்றால் அதைத் தான் அவர்கள் துன்பமெனக் கருதுவார்களோ என்று தோன்றுகிறது. அந்தப் பிறழ்வின் உச்சங்களையே அவர்கள் விடுதலையென நம்புகிறார்கள். எனில் அவர்களை அப்படியே விட்டு விடுவதே வழி என்ற முடிவுக்கு நாமே நகர்ந்து விடுகிறோம்.

 

மொத்தம் பதினொரு கதைகள்.

திருகுமொழி வடிவம் கொண்ட மொழியமைப்பு பெரும்பாலும் இல்லை. ஓரளவுக்கு அல்லது நன்றாகவே புரிந்து கொள்ள வாய்ப்புடைய எளிமையான மொழிநடைதான். ஆனால் வலுவான கதாப்பாத்திரத்திர வடிவமைப்பு, பழக்கவழக்க, காட்சி வடிவமைப்பு, திடீரென ஏதேனும் ஓர் இடத்தில் இறுக்கி முடிச்சிட்டு அங்கேயே அவிழ்க்கும் நுட்பமான இடங்கள் இவற்றை எப்படியேனும் கண்டு கொண்டால் நரனின் கதைகளுக்குள் பதற்றமின்றி உலாவரலாம்.

1. மானேந்தி கதையில் ஸ்தபதியாக வந்து சிலையைப் புணரும் கணபதி, அவன் வீட்டில் சிலை கண்திறக்காது அம்மா மீது விழுந்து இறந்து போவது இதை இறை நம்பிக்கை உடையோர் தண்டனையாகக்கூட எடுத்துக் கொள்ள முடியும். அவ்வளவு சிலை செய்பவனுக்கு நன்றோ தீதோ அந்த எண்ணங்களைத் தோற்றுவித்து யார்?

2. பெண்காது கதை அடைக்கலராஜிற்கு இருப்பது யாரேனும் தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பிரச்சினையாக மாற அவன் முதல் மனைவி ஏன் அப்படி இருக்கிறாள், இவனால்தான் விவாகரத்து வாங்கிக் கொண்டாளா.. இப்போது வந்து கேட்பவள் எவ்வளவு காலங்களுக்குக் கேட்பாள். அவளுடைய தந்தைக்கு ஏன் தான் வேலை செய்த பஞ்சு மில்லின் சத்தங்கள் கேட்கமுடியாது மரணித்துப் போனார். காதுகளும் சத்தங்களும் நம்மை எவ்வளவு ஆக்கிரமிக்கின்றன‌ என்கிற பல கேள்விகளை உருவாக்கிய கதை.

3. தொகுப்பில் உடனே வாசித்த என்னால் மறக்க முடியாத‌ நான் மிகவும் ரசித்த கதை  ‘கேசம்’. ஆதியப்பனின் காலில் இருந்த புண்களைக் கண்டு கட்டிய மனைவியே வெறுத்து ஒதுக்குகையில் எங்கிருந்தோ வரும் ஆவுடைத்தங்கம் அந்தப் புண்களைக் குழந்தைகள் போல பாவித்து தன் முடிகளையே இறகாக்கி அவர் இருக்கும், இறக்கும் வரை விரும்பி மருந்திடும் கதை. ஆதியப்பனின் காம உணர்வை மனைவி கணபதியம்மாளிடம் ஏற்படுத்திக் கொள்ள முற்படுகையில் எறும்புகள் கீழிறங்கி ஓடுவது போலவும், அதே காம உணர்வை ஆவுடையிடம் உணரும் போது கடிவாய் இல்லாத கறுப்பு எறும்புகள் லட்சக்கணக்கில் ஓடுவது போலவும் அழகான குறியீடு.

4. சைக்கிள் கடையில் வேலை பார்த்தபடி உடலில் இருக்கும் சிறு ஊனத்தோடு தன் மனதைத் தன்னை விட மூத்தவளான மரியத்திற்கு தந்துவிட்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இறுதியில் அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடையில் வந்து துடைத்து மனதை ஆற்றில் படுத்திக் கொள்கிறான்.

மரியமோ ‘வா, உனக்கு என்ன தேவைனு தெரியும்’ என்று பழனிக்குப் பல வருடங்கள் கழித்துத் தன்னை தந்துவிட்டு எந்தவிதத் தாங்கல்களும் இல்லாது அவள் சைக்கிளைத் தந்துவிட்டு கணவனற்ற பாலையில் கையில் குழந்தையோடு பயணிக்க தொடங்குகிறாள். கிளிஷேவோ என்று யோசிக்கையில் முடிவு நம்மை இல்லை என்று சொல்ல வைத்துவிடுகிறது ’மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்’ கதை.

5.  ‘லயன் சர்க்கஸ்’ நலிந்து போன சர்க்கஸ் கூடாரங்களின் நுணுக்கமான உணர்வுகளைப் பேசும் கதை. லீலாவின் முதல் கணவன் காளி, அவனைப் பார்த்துக் கொண்டே லீசாவோடு வாழும் உதவியாளன் மாரீசன், தன் சர்க்கஸ் கூடாரத்திற்காக மாரீசன் கண்முன்னே கிழட்டு அதிகாரி அறைக்குச் செல்லும் கர்ப்பிணியான லீசா, வறுமையின் பிடியிலும் மானத்தை விடாத கணேசன், எதையேனும் செய்யத் துடிக்கும் குள்ளன், இரும்புக் கம்பிகளை விலைக்குப் போட்டு விலங்குகளுக்கு இறைச்சி வாங்கும் சிறுவன், மனம் உடைந்தவன் என்று உணரப்பட்ட காளி குரங்குக்குப் பதிலாகத் தன்னையே தின்னச்சொல்லி சிங்கங்களிடையே அமர்வது என்று மனித வாழ்வின் வெவ்வேறு சூழல்களில் அறமும், அற மீறல்களுமாய் மனதை அலைக்கழிப்பு செய்யும் கதை.

6. இதோ எனது சரீரம் கதை.

உணவகம் நடத்திய படி மூன்று ஓவியங்கள் மட்டும் வரைந்து விட்டு கடைசி ஒன்றை விற்காமல் இருப்பதற்குப் பின்புலமாக அகதி வாழ்வின் இரணங்களை அது குறிப்பதாக இறுதியில் கோர்ப்பது நல்ல இணைப்பு. பாட்டி, அம்மா, நாயகி எமி மூவரும் தோற்றமாயை துணையோடு இளைஞனின் புகைப்படத்தைக் காலங்காலமாகப் பரம்பரையாக முத்தமிட்டு ஒயின் அருந்தியபடி அவனது கவிதைகளை வாசித்துக் கிறங்கிக் கிடப்பது. பிணமாக இளைஞனைக் கண்டடைந்து ஆடைகளை அணிவிப்பது, காம உணர்வு கொள்வது. இறுதியில் எமி அவன் புகைப்படம் முன் நிர்வாணமாவது என்று நம்பமுடியாத நம்பவேண்டிய கட்டாயங்களை ஏற்படுத்தும் கதை.

7. ‘ரோமம்’ சிறுகதையில் தீயில் வெந்து கருகிப்போன தாயின் நினைவில் உழன்று அவளின் நீள முடிகளைப்பொசுக்கி நுகர்ந்து அவள் இருப்பது போலான பிரமை கணேசனை எவ்வளவு தூரம் தேடித் தூண்டுகிறது எத்தனை முடிகளைத் தேடி அலைகிறது இறுதியில் மழிக்கும் இடத்தில் முடிகளைத் திருடி அவன் மேல் கிடத்திக்கொண்டு கணேசன் என்னவானான்? குளியலறை முடிகளைத் தேடிப் பொசுக்குவது, ஓர் உணர்வு மனிதனை எவ்வாறு ஆழமாக செல்லச் செல்ல ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

8. ‘மூன்று சீலைகள்.’மூன்று சேலைகளைத் தூக்கிக் கொண்டு ஊரெங்கும் திரியும் ஆசிரியராலேயே பிறழ்வென்று ஊர் சொல்வதாகச் சொல்லப்படும் கணேசன். ஒரே வருடத்தில் குடும்பத்தின் நிகழும் மூன்று சாவு. மூன்று சேலைக்குள் ஒளிந்து நிற்கும் மூன்று உறவுகளை இழந்த வெறுமை. வேறெதுவும் செய்யத் தோன்றாது மூன்று சேலைகளையும் மறுபடி மறுபடி முடிச்சிட்டுத் தொங்கும் முடிவு நோக்கி தன்னை தள்ளிக்கொள்ளும் காசி. உச்சிவெயில் கருநாய் ஊளை என்று குறைவான மாயமும் தொடர்ச் சங்கிலியாகத் தொடர்கிறது. மனதின் புதிர்களை யாரறிவார்?

9. ‘செவ்வக வடிவப் பெண்கள்’ எனும் இறுதிக் கதையும் அதிகப் பாதிப்பைத் தந்தது. பெண்களின் வித்தியாசமான அக உலகம், அபிலாஷைகள், பொம்மையை உயிரிருப்பதாய்ப் பாவித்துத் தழுவுதல், முத்தமிடல், புணர்தல் என்று முற்றிலும் அந்தரங்கமான பெண்களின் வேறொரு உலகங்களை அலசுகிறது.

10. ‘வண்டுகள்’ காம உணர்வை புத்தப் பௌர்ணமி அன்று மலையுச்சியில் புணர்ந்து பூரணியோடு இணைந்து வெளிப்படுத்தும் வகையிலும், பிறகு ஒவ்வொரு ஜோடி வண்டுகளை நசுக்கி நாயகன் தன் உணர்வுகளைச் சொல்வதைக் குறியீடாகவும்,

11. ‘பரிராஜா’ கல்லூரிப் பேராசிரியர் ஆய்வுக்கு ஒவ்வொரு உயிரினமாகப் பயன்படுத்தி மீண்டும் அனுப்பும் விதமாகவும், வேலையில்லாதவர்கள் பணத்துக்காக, பணத்தைப் பார்க்கிற ஆர்வத்தில் ஒவ்வொரு கட்டமாக நகர்வதையும் அவர்களை நகர்த்தி தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதையும் சுருங்கச் சொல்லி நிறைய அர்த்தங்களைத் தேடவும் தரவும் செய்கின்றன.

எல்லாப் பிறழ்வுகளிலுமே ஆண்கள் பெண்கள் என்கிற வேறுபாடற்று நீதியோ போதனைகளோ அற்று அவரவர் உடல் சார்ந்த உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே கையாண்டிருப்பதால் அது ஆபாசக் கதைகளுக்குரிய தோற்றத்தைத் தராமல் மடைமாறி பிறழ்வு அதற்கான காரணிகள் மூலங்கள் தற்போது நடப்பது என்ற அளவில் உருமாறி நகர்ந்து விடுகிறது.

சாதாரணமான மனநிலையில் வாசிக்க முடியாத கதைகள் நிறைய இருக்கின்றன தொகுப்பு முழுவதும். ஆழ்ந்த மனநிலையில் வாசிக்கும் போது மட்டுமே அதன் வீரியங்கள் காணக்கிடைக்கின்றன. நுண்ணுணர்வு சார்ந்த, அதுவும் பாலுறவுகளின் பிறழ்வு சார்ந்த நுட்பமான விஷயங்களை அநாயசமாகக் கையாண்டு இருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.!


– சுபி.

நூல் தகவல்:

நூல் :   கேசம்

ஆசிரியர் : நரன்

வகை :   சிறுகதைகள்

வெளியீடு :   சால்ட் 

வெளியான ஆண்டு :   2018

பக்கங்கள் : 127

விலை : ₹  200

நூலினைப் பெற +91 93 63 00 74 57

The post நரன் எழுதிய “கேசம்” – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

இணை பிரதிகள்

(தங்கலான் திரைப்படத்தை முன்வைத்து)


பொழுதுபோக்கை முன்னிறுத்துகிற வணிகத் திரைப்படங்கள் ஒரு வகை. இதில் கேளிக்கையே பிரதானம். முழுக்க முழுக்க கலையை கைக்கொள்கிற வகைப் படங்கள் இன்னொரு வகை. இவ்வகைப் படங்கள் பார்வையாளர்களின் விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்து உருவாக்கப்படாதவை. சொல்ல விரும்புவதை, சொல்ல விரும்புகிற விதத்தில்/வடிவத்தில் சொல்பவை. இவ்வகைப் படங்களுக்கான பார்வையாளர்கள் எப்போதும் குறைவானவர்களே. இந்த இரண்டிற்கும் இடையில் இன்னொரு வகை உண்டு. அது வணிக எல்லைக்குள் நின்று கொண்டு, கலைப்பூர்வத்தையும் அதில் கலப்பவை. இவற்றை Middle Cinema என்று சொல்லலாம். தங்கலான் வணிக சினிமா மற்றும் மிடில் சினிமா என இரண்டின் சாயல்களையும் எடுத்துக் கொள்கிறது. 

கதை முன்வைக்கிற நேரடி மையம் ‘தேடல்’. அது தங்கலான் தலைமையில் வட ஆற்காடு மாவட்டத்தின் வெப்பூரின் பண்ணை அடிமைகளின் துணைகொண்டு ஆங்கில துரை கிளமெண்ட் குழுவினர் தேடுகிற தங்கம். இது ஒரு புறம் இருக்க அசரீரிகளால் அலைக்கழிக்கப்படுகிற, நாகர் குலத்தவளான ஆரத்தி எனும் சூனியக்காரியை (அப்படித்தான் தங்கலான் நம்புகிறான்) முன்வைத்து அவனைச் சுற்றி நிகழுகிற/நிகழ்த்தப்படுகிற, அவனாலேயே விளங்கிக் கொள்ள இயலாத குழப்பங்களுக்கு விடை தேடி முனைகிற தங்கலானின் தனிப்பட்ட தேடல். 

இந்த இரண்டு வகையான தேடல் கதைகளும் நமக்கு மாறி மாறி சொல்லப்படுகிறது. படம் பார்த்த பலரும் தங்களது பார்வையை எழுதி வருகின்றனர். கணிசமானோர் படம் புரியவில்லை என்று பகிர்வதை வாசிக்க முடிகிறது. நமது கதை கேட்கிற மரபு முழுமையான/ திருப்தியளிக்கிற முடிவை நோக்கி நகர்வது. மேலும் கிளைக்கதைகள் என பலவாறாக பிரிந்தாலும், முழுமையான கதையின் ஓர்மையைப் பிடித்தே பின்தொடர்ந்து பழக்கப்பட்டவர்கள் நாம். வாசகராகவும்/ பார்வையாளர்களாகவும் பெரும்பான்மையோர் நம்மில் இதையே எதிர்பார்க்கிறோம். சிதறடிக்கப்பட்ட கதைசொல்லல் நமக்கு கொஞ்சம் அந்நியமானது. தங்கலானின் இரண்டு விதமான தேடல்களையும் ஒரு புள்ளியில் பின்னிப் பிணைந்து ஒற்றை முடிவை நோக்கி நகர வேண்டுமென்ற நமக்குள் இருக்கிற கதை கேட்பவரின் எதிர்பார்ப்பை படத்தின் கதையாடல் முழுமையாக திருப்தியுறச் செய்யாததையே தங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று சொல்வதாக நினைக்கிறேன். 

மேலும் இக்கதையின் மாய யதார்த்தக் கூறுமுறை நமக்கு முற்றிலும் அந்நியமானது. மாய யதார்த்த கதை சொல்லலின் பெரிய வசதி அதன் நெகிழ்ச்சித்தன்மை. பார்வையாளர்கள் கதையை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு அது பல வாய்ப்புகளை வழங்குகிறது. இது அதன் பார்வை அனுபவத்தை முற்றிலுமாக தனிமனித அனுபவமாக (subjective experience) மாற்றும் திறனுடையது. கதையை அணுகுவதற்கு பல சாத்தியங்களை அது வழங்குவதால், நாம் எவ்விதமாக அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ அதைப் பொருத்து அது நல்ல/மோசமான பார்வை அனுபவமாக இருக்கும். இதுவே இவ்வகை கதைசொல்லலின் பலமும் பலவீனமும். 

குறியீடுகள் மூலமாக கதையை வளர்ப்பது, இயல்பிலேயே குறியீடுகளுக்கான அர்த்தமாக ஒருவர் எதனை எடுத்துக் கொள்கிறாரோ அதுவே ‘கதையின் அர்த்தமாக’ ஆகிப்போகும் சாத்தியத்தை உருவாக்குகிறது. அந்த அர்த்தப்படுத்தலுக்கு ஒரு தர்க்கரீதியான நியாயமும், தொடர்ச்சியும் இருக்கின்றபட்சத்தில் அந்த கதையின் பதிப்பு (that version of the story) அவருடைய கதையாக ஆகும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரே கதை பல்வேறு கதைப்பிரதிகளாகும் சுவாரசியமான வாய்ப்புண்டு. 

தொன்மக் கதைகளும், வரலாற்றுத் தரவுகளும், மாய யதார்த்தங்களும் பிசைந்து புனையப்பட்டிருக்கும் தங்கலான் கதையின் ‘எனது பிரதி’ இதுதான். 

நிலமும், வளங்களும் இயற்கையின் மூலக் கொடைகளாக இருப்பினும் அவை வெறும் மூலாதாரங்கள் மட்டுமே. அதில் மனித உழைப்பென்பது கலக்காதை வரை அது வெறுமனே கல்லும் மண்ணும். இவ்வளங்களை பயன்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் உருவாக இதனோடு சேர்கிற மனித வளமே (அதாவது அதன் உழைப்பே) அடித்தளம். எல்லோரும் பங்களிக்க வேண்டிய இந்த மனித உழைப்பை, இந்திய சமூகத்தின் வர்ணக் கோட்பாட்டின் திணிப்பான படிநிலை உருவாக்கம், ஒட்டு மொத்தமாக குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமேயானது என்று முழுச்சுமையையும் அவர்களின் மீதே சுமத்துகிறது. 

நிலத்தின் ஆதிக்குடிகளான அவர்களது நிலங்களை இதனை முன்வைத்தே அபகரித்துக் கொண்டு அவர்களது கரங்களில் ‘உழைக்கிற கடமையை’ மட்டும் திணிக்கிறது. இதில் உழைப்பென்பது கூட ஒட்டு மொத்த சமூகக் கடமையில் அவர்களது தரப்புப் பங்களிப்பாகவே இருப்பதனால், அதற்கான கூலி என்பதை உரிமையாகக் கோருவதையும் அது தந்திரமாக மறுக்கிறது. அவர்களிடமிருந்து உழைப்பை மட்டும் உறிஞ்சிக் கொண்டு அதனால் விளைந்த பலனை அவர்கள் அனுபவிப்பதற்கான நியாயமான உரிமை கூட மறுக்கப்படுகிறது. 

ஆரத்தி ‘என் கதையில்’ இந்த ஆதிக்குடியினரின் வளங்களின் ‘காப்பாள்’ மட்டுமல்ல அவள் அவர்களின் மூதாய். அதோடு மட்டுமல்லாமல் அவள் அக்குடியின் ஒட்டுமொத்த வரலாற்று இருப்பின் பிரதிநிதி. துவக்க காட்சிகளில் தங்கலான் தனது மகள்களுக்குச் சொல்கிற கதைகளில் அவனது மூத்தோன் காடையன் சந்திக்கிற ஆரத்தியின் இரத்தம் நிலத்தை நனைத்து பின்புதான் நிலம் தனக்குள் ஒளித்து வைத்திருந்த பெரும் வளத்தை எல்லோர் கண்களுக்கும் புலப்படுத்துகிறது. ‘தங்கம்’ இக்குடிகளின் அயராத உழைப்பால் விளைந்த பலன்களென்பதற்கான குறியீடு.  சுருங்கச் சொன்னால் உழைப்புச் சுரண்டலால் அவளின் குடிகள் ஒடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட கதையே ஆரத்தியின் கதையாக தங்கலான் வழியாக நமக்குச் சொல்லப்படுகிறது. உழைப்பைப் பங்களித்து வளங்களின் மதிப்பைக் கூட்டியவர்கள் ஒரு குழுவினராய் இருக்க அதன் பலன்களை மட்டும் ஆண்டு அனுபவிப்பவர்கள் வேறுவேறு குழுவினராய் இருக்கின்றனர். அடக்கியாள்பவர்கள் காலத்திற்கேற்றார்ப் போல ஆண்டைகளாகவும் ஆங்கிலேயத் துரைமாராகவும் இருக்க அடக்கப்படுபவரின் நிலை வரலாற்றின் காலக் கோடெங்கிலும் கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருக்கிறது. 

திரைக்கதையில் மாய யதார்த்த அம்சத்தின் பயன்பாடு கொஞ்சம் மிகையாகப் போய்விட்டதாகத் தோன்றியது. இருந்தபோதிலும் இவ்வித கதைசொல்லும் உத்தி தமிழுக்கு ரொம்பவே புதியது. இதற்கு முன்னர் ‘குதிரைவால் (2021)’ திரைப்படத்தில் இதுபோன்ற ஒரு அணுகுமுறை கையாளப்பட்டு இருப்பினும், அது ஒரு தனிமனிதனின் மன உலகத்தை பிரதிபலிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருந்தது. இங்கோ அது ஒரு சமூகத்தின் வலியைப் பேச முற்படுகிறது. மேலும் இது வரலாற்றுப் பூர்வமாகவும் மிக அதிகமான விசயங்களை கதையோட்டத்திற்குள் தொட்டிருப்பதால், கொஞ்சமாக வாங்கி வருவோம் எனும் எண்ணத்தில் கடைவீதிக்கு எடுத்துச் செல்லப்பட்ட துணிப்பை, மிக அதிகமாக வாங்கிவிட்டதால் பிதுங்கிக் கிழியும் அளவிற்கு எடை தாளாமல் தோய்ந்து விடுவது போல திரைக்கதை முன்வைக்கிற எல்லாவற்றையும் பார்வையாளரின் மனதில் பதித்துக் கொள்ள திணறும் விதத்தில் இருக்கிறது. 

நடிகர்களின் பங்களிப்பு நீண்ட காலம் நினைவுகூரத்தக்க ஒரு இறுக்கமான டிராமாவாக இப்படைப்பை மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. முதன்மைப் பாத்திரம் ஏற்றிருக்கும் விக்ரம் அவர்களின் பாத்திரம் கதையின் போக்கில் பெருகிப் பெரிதாகிவிடுவதால், அவருடையதற்கு  அடுத்தபடியான பார்வதி அவர்களின் பாத்திரத்தைத் தவிர்த்து ஏனைய பாத்திரங்கள் சுருங்கிப் போய்விட்டது போன்ற உணர்வைத் தந்து விடுகிறது. 

வணிகத் திரைப்பட எல்லைக்குள் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய பொருட்செலவில், ஒரு படத்தை இயக்குவதற்கான துணிவு பா.ரஞ்சித் அவர்களுக்கு இருக்கிற அதே அளவிற்கு, படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இருந்திருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். ஏனேனில் தொழில்முறை சினிமாவைப் பொருத்தவரை இது மிகப் பெரிய அகலக்கால். 

நவீன நாடகங்களைப் பார்க்கிற பார்வை அனுபவத்திற்கு நிகரானதொரு திரையனுபவத்தை பெரிய திரையில் தங்கலான் நிகழ்த்திக் காட்டியிருப்பது புதிதாய் இருந்தது. படம் எல்லாத் தரப்பினருக்குமானதல்ல என்பது நிச்சயம் படத்தின் இறுதி வடிவத்தைப் பார்க்கிற கலைஞர்களுக்கே தெரிந்திருக்கும். இருப்பினும் இதில் புழங்கியிருக்கிற பெரும் பொருட்செலவு, அவர்களை அது குறித்து வெளிப்படையாகப் பேசிட அனுமதித்திருக்காது என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. 

திரைப்படத்தில் நிறைவளிக்கக் கூடிய முடிவுகளையும், முழுமை எய்திய உணர்வைத் தருகிற கதைகளையும் விரும்புகிற ரசிகர்களுக்கு ஏமாற்றைத்தையும், கதை தரத்தக்க நிறைவைத் தாண்டி அது தருகிற பார்வை அனுபவத்திற்காகவும் படம் பார்க்க விரும்புகிற தரப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராத ஒரு அனுபவமாகவும் இப்படம் இருக்கும். இந்த இரண்டு தரப்பில் உசத்தி தாழ்ந்தது என்று எதுவுமில்லை. ஒரு பார்வையாளராக நம் தரப்பு எதுவென்று ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் அதுவே போதுமானது. சொல்லவந்த கதை திரைக்கதையாக கலைமுழுமையை ஏய்த முடியாமற் போயிருப்பினும், தங்கலான் ஒரு மெச்சத்தக்க முயற்சி. 


 

The post இணை பிரதிகள் appeared first on Vimarsanam Web.

நாடிலி- கவிதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம்.


சிறப்பான அட்டைப்படம். வேலிக்குள்ளிருந்து எழுதும் கைகள்.

கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களின், ‘தொலைவான காலத்திலும்கூட நம்பிக்கையூட்டும் எதுவும் தென்படவில்லை’ என்னும் நடராஜா சுசீந்திரனின் மேற்கோளுடன் தொடங்கும், மிகச் சிறந்த அணிந்துரை.

நாடிலி – நாடற்றவன்;  ஏதிலி – அகதி.

இந்த சொற்களின் பொருள் எவ்வளவு வலியுடையது. கவிதைத் தொகுப்பு முழுக்க வலி, வலி, வலி…!

இத்தகைய வலியை சொற்களால் கடத்தியிருக்கிறார் கவிஞர். சொந்த நாட்டைவிட்டு வந்தால், வந்த நாட்டிலும் வலியே தொடர்வது எவ்வளவு பெரிய சோகம்..!

‘அவல முகாம்’ கவிதை இப்படி முடிகிறது:

“உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல
யாழினிகள் தெரியவில்லை!
அகதிகள் வீடடைதல் கவிதை நெஞ்சை உலுக்கும் அவலம்:
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெஸ்டாஸ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
….
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்”

  ‘அகதி வாழ்வு’ கவிதை அதிர்வு:

மஞ்சள் கனியொன்றின்
பற்குறியில்
உறைந்து கிடக்கும்
குருதியென வீச்சமடிக்கிறது
இந்த வாழ்வு”

‘நட்சத்திரங்களினூடே…’கவிதை சோகம்:

“அவனுக்குத் தெரிகிறது
எண்ண எண்ண
நட்சத்திரங்கள் மறைந்துகொண்டே வருவது”

‘இரவு’ கவிதையில் சிறப்பான படிமம்:

”தேவையற்று வளர்ந்துகிடக்கும்
புற்றுக்கட்டியைப் போல்
துருத்திக்கொண்டிருக்கிறது
என் விருப்பத்துக்கு மாறாய்
நிர்பந்தப்பட்டிருக்கும் இன்றைக்கான இரவு”

‘கொடிய நிழல்’ கவிதை நிதர்சனத்தின் வலி:

“சீவல் தொழிலற்று
சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை
பனை நிழலும் அற்றுப் போனான் ”

இந்த கவிதைத் தொகுப்பின் மொத்த செய்தியையும், ‘எம் வாழ்வின் மிச்சமாய்…’ கவிதை கடத்துகிறது. எனக்கு மிகவும் பிடித்த கவிதையும் கூட:

”காலைக் கதிரவன்
பின்காலைக்குள் செல்லும் வேளை
ஓய்ந்திருந்தது சுடுகுழல் சத்தம்
கனத்த மௌனத்தின்
பெரு வெளியில்
பதுங்கு குழி தாண்டியும்
பரவிக் கிடந்தன பறவையின் இறகுகள்
முறிந்த மரக்கொப்புகளோடு
பறக்க மறுத்து
சிதறிக் கிடந்த
ஒவ்வோர் இறகெடுத்து
எத்தனை கதைதான் நானெழுத
ஏன் என்னை அகதியாக்கினீங்கள்?”

கவிதையின் தலைப்பும் கடைசி வரிகளுமான விடையற்ற இக்கேள்வியை எல்லாக் குழந்தைகளும் தனது தந்தைகளிடம் கேட்பார்கள் தானே?

‘ஊமைக்காற்று’ கவிதை தகப்பனின் மற்றொரு வலி:

“மகள்
இப்போது
என் தாய்நாடு பற்றி வினவுகிறாள்
நான்
பிரபஞ்சத்தின் மேலிருந்து
ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன் ”

‘நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்’ கவிதையின் கோபத்தணலை யாராலும் தணிக்கவே இயலாது:

“நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்
யாதும் ஊருமில்லை
யாவரும் உறவு மில்லை”

‘உதிரிகளின் வாழ்வு’ கவிதை அகதிகள் உதிரிகளாகிப் போன அவலத்தைப் பேசுகிறது:

“நிச்சயமற்ற வாழ்வில்
பொய்த்துப் போகும் சொற்களுக்காக
ஒருபோதும் சபித்துவிடாதீர்கள்
கிளிகளை”

‘செவ்வரி பூத்த வானம்’ குறுங்கவிதைகளில், கீழ்க்கண்ட கவிதையின் கடைசி வரிகள் கன்னத்தில் அறைகின்றன:

“முன்னொரு
மழைநாளில்
வானம் செந்நிறமானது
தரையெங்கும்
சிதறிக் கிடந்தன
செங்காந்தளைச் சுமந்த உடல்கள்”

‘அகதி முகாமில் தீபாவளி’ கவிதை முகாம்களின் அவல நிலையை தெரிவிக்கிறது. எவ்வளவு கொடுமை:

“கந்து வட்டியில்தான் இந்த வருடமும்
எமக்கான தீபாவளி
அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது ”

‘புனித அப்பங்கள்’ கவிதை அதிகாரங்களின் துரோகங்களைப் பேசுகிறது:

“உங்களுக்கும் சேர்த்தே ஏற்றுக்கொண்டது பணிகளை
ஆணிகொண்டு அறையப்பட்ட குருதிக்கரங்கள்
இப்போது உங்களுக்கான
புனித அப்பங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
யூதாஸின் கரங்களால்”

‘மஞ்சள் நெருப்பு’ கவிதை துயரத்தின் நிறத்தைச் சொல்கிறது.

“நாடற்றவனுக்கு மஞ்சள் என்றும் துயரம்.
ஏனெனில் எரியும் நெருப்பு மஞ்சள்.”

‘கார்ட்டூன்களுக்குள் உலவும் அரசியல்’ கவிதை தகப்பனின் வலி:

“மகளிடத்து இன்னும் சொல்லாமல் வைத்திருக்கிறேன்
பிஸ்கெட்டை சுவைப்பதற்குள்
சுடப்பட்ட சிறுவனையும்
வனங்களுக்குள் கொன்றொழிக்கப்பட்ட சனத்தையும்
நினைவுகளில் சுமந்தபடிக்கு
நாடற்று அலையும் நாடோடியான
என் கதையை”

‘நவதிசை’ கவிதை அகதிகளின் தினசரி அவஸ்தை:

“எண்திசைகள் குறித்து
யாரும் அலட்டிக்கொள்வதில்லை
இடதுபக்கம் கருவேலங்காடும்
வலதுபக்கம் தைலமரக்காடும்
ஆண்டுகளுக்கும் பெண்களுக்குமான
வெளித்திசை என்பது
முகாம்வாசிகளின் ஒன்பதாவது திசை”

மழையைப் பார்க்கையிலும் தங்களின் கண்ணீர் தான் நினைவுக்கு வருகிறது கவிஞருக்கு:

“இப்படிப்
பொங்கி வழிந்தோடுகிறதே
நிலமெங்கும் வெள்ளமென
அகதிகளின் கண்ணீராய்”

 ‘அகதியின் பாதம்’ எப்போதும் தனது நிலத்தையே தேடுகிறது:

“கடல்மீதும்
சிறுதுண்டு நிலம்
தேடும்
அகதியின் பாதம்”

‘புலம்பெயராது இறந்திருக்கலாம்’ கவிதை நல்ல நாட்களை நம்பி வந்தவனின் ஏமாற்றம்:

“தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்
போர் நிலத்தில்
ஒருகணம்
இறந்தேபோயிருக்கலாம்
புலம்பெயராது”

‘காலப்பெருவெளியில்’ கவிதை அகதிகளின் நம்பிக்கை இழப்பு:

“இலையுதிர் காலத்தின்
மரங்களைப் போல்
என் நம்பிக்கைகள்
உதிர்ந்துகொண்டிருக்கின்றன”

‘அதிகாரத்தின் கசையடித் தழும்புகள்’ கவிதை, கவிஞரின் கவிதை மொழியின் கண்ணீர்ப் பிண்ணனி:

“பலநூறு கசையடித் தழும்புகளில்
எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்
என் மொழியை”

இப்படி 96 பக்கங்களில் ஒரு சமூகத்தின் வலி. படித்தபின் கண்கள் கலங்குவதை நிறுத்த இயலவில்லை. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் எவ்வளவு மதிப்புடையது என்று நமக்குத் தெரியவில்லை. படித்ததும் ஒரு சிறு குற்ற உணர்ச்சி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சிறப்பான வாசிப்பு அனுபவம்..!


நூல் தகவல்:

நூல் : நாடிலி

வகை :  கவிதைகள்

ஆசிரியர் : சுகன்யா ஞானசூரி

வெளியீடு : கடற்காகம்

வெளியான ஆண்டு:  ஜூன் 2021

பக்கங்கள் : 96

விலை:  ₹  110

 

  •  “நாடிலி” கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய முன்னுரை வாசிக்க  Click Here

 

The post நாடிலி- கவிதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம். appeared first on Vimarsanam Web.

வானம் பார்த்து துப்புதல்


ஷஹிதா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த ஜே.எம்.கூட்ஸியின் மானக்கேடு (Disgrace) நாவலை முன்வைத்து விமர்சனக் கட்டுரை. 

 

ருத்துவரை அணுகி ஆண்மை நீக்கம் செய்துகொண்டால் என்ன என்று சிந்திக்கும் அளவிற்கு கட்டடற்ற பாலியல் விழைவால் சிக்கலான வாழ்க்கையை வாழ்பவன்,  தன்னுடைய உயரம், தோற்றம், ஆலிவ் நிறச்சருமம், அலையாயும் கேசம், காந்தத்தன்மை இவைகளின் தீர்க்கத்தால் மோகிக்கும் பெண்களையெல்லாம் படுக்கையறைக்கு வரவழைத்து விடலாம் என்று நினைத்து அப்படியாகவே அதன் செயல்முறை வெற்றியில் பத்தாண்டுகள் வாழ்ந்து, இலையுதிர் காலத்தில் யுக்திகள் செல்லாக் காசாகும்போது அவன்  நாடிச் செல்வது பாலியல் விடுதிகளை.

பாலியல் இச்சையும் அதற்கான ஈர்ப்பும் இணக்கமும் எல்லோரிடமும் ஒரேமாதிரியாக அமைவதுமில்லை எழுவதுமில்லை. சொராயா ஒரு நிறுவனத்தின் பாலியல் தொழிலாளி. மகளின் வயதுடையவள் என்றாலும் ஒரு வருடமாக பிரதி வியாழன் மதியவேளைகளில் அவளை நாடிச் செல்வது அவனது வழக்கம். அவளை மட்டுமே நாடிச்செல்வதற்கு  இணக்கமும் ஈர்ப்பும் உபரியாக அவளிடமிருந்து அவனுக்கு கிடைப்பதால் இருக்கலாம். ஒருநாள் கடைத்தெருவில் பிள்ளைகளுடன் சேர்த்து அவளைபார்த்த பிறகு, அவளும் அவன் பார்ப்பதைப் பார்த்தப்பிறகு இருவருக்குமான தொடர்பு துண்டித்து போகிறது.  

இவன் பித்தத்தை அவள் தெளிவித்ததாலா? அல்லது இவனது பித்தம் அவளால் தலைக்கேறியதாலா? அவளை மறக்க முடியாமல் துப்பறியும் நிறுவனத்தின் உதவியால்  விலாசம் கண்டறிந்து அவள் முன்னால் போய் மீண்டும் நிற்கிறான்;

ஒரு பெண்நரியின் கூண்டுக்குள் அவளுடைய கன்றுகள் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்துவிட்ட கொன்றுண்ணி வேறு எதை எதிர்பார்க்க முடியும்? டேவிட் லூரிக்கு நேர்வதும் கிடைப்பதும் இந்தக் கேள்வியினால் முகிழும் பதில்.

நாவலின் முதல் அத்தியாயம் சிறுகதையாக முற்று பெற்றாலும், அடுத்தடுத்து அவனது உணர்வின் உணர்ச்சியின் அறிவின் ஒட்டுமொத்த திசையையும் யூகிக்க வைக்கிறது, வாசிக்கவும் நகர்த்துகிறது.  

இனம், மதம், சாதி, மொழி, பதவி, செல்வம், அறிவு, அதிகாரம், நிலப்பரப்பு போன்ற பாகுபாட்டால் மட்டும் வேற்றுமையின் நிராகரிப்பு ஏற்படுவதில்லை.  அது மனிதக்குலத்தில் ஆண் பெண்ணுக்கு இடையிலும் கூட நிலவுகிறது. குறிப்பாக ஆண்கள் பெண்களை பயன்படுத்திக் கொள்ளும் நைச்சியம் – இதில் பொதுப்படையானது அடிமைப்படுத்துதல், யார் யாரை அடிமைப்படுத்துகிறார்கள்? என்பதற்கான பதிலில் ஒருபக்கம் விடுதலைக்கான உணர்வு வெறியாகவும் இன்னொரு பக்கம் ஆளுமைக்கான ருசி வெறியாகவும்  தத்தம் நியாயங்களோடு சமர் புரிகிறது.

தன்னால் பிறருக்கு நேரும் அவமானங்கள் அறிவினாலும், பிறரால் தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தோருக்கு நிகழக்கூடிய அவமானங்களை உணர்ச்சியின் கண்கொண்டு பார்க்கப்படும்போது முதல் பிம்பம் அந்நியமாகவே தெரியும்.

எப்படி தன்னுடைய மகள் லூசிக்கு நேர்ந்தது விருப்பத்திற்கு மாறான வல்லுறவோ, 20 வயது கல்லூரி மாணவியுடன் 53 வயது பேராசிரியர் டேவிட் லூரி தன் இச்சையைத் தீர்த்துக் கொள்வதும் வல்லுறவே… மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர் நம்மிடம் சொல்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்பிற்கு போதிய அவகாசம் அவளுக்கு வழங்கப்பட்டதா? அங்கு ஒரு அத்துமீறல் நிகழ்த்தப்படுகிறது. அவளது விருப்பதைக் குறித்தெல்லாம் துளியும் கவலையில்லாது ஆக்கிரமித்து, உணர்ச்சிகள் வடிந்ததும் அகத்தாய்வு செய்து, தன்னுள் கிளர்ந்தெழும் இன்பத்தின் வேட்கை  போதாமையின் தவிப்பில்தான் என்று சமாதானமாகும் டேவிட் லூரி தன் அனுபவத்தின், அறிவின், மற்றவர்களின் சுதந்திரத்தின் மீதான ஞானம் சிறிதுமில்லாத முதியவனாகவே இருக்கிறார். 

புலன்கள் மரத்து போவதற்கு முன்பான இறுதி எழுச்சி மூளையை செயலிழக்க வைத்துவிடுமா என்ன?புலன்களுக்கான இனிய விருந்தின் இறுதி இருக்கையை விடாமல் பற்றிக்கொள்ளும் லூரியைப் போன்ற முதியவர்கள் அசூரத்தனமாக வளர்ந்து பலனளிக்கும் அவமானதை மட்டுமே விதைக்கிறார்கள். 

“செயலுறாத வேட்கைகளைப் பாதுகாத்து மறைத்து வைத்து வளர்ப்பதைக் காட்டிலும் குழந்தையாக இருக்கும் போதே அதைக் கொன்று விடுவது  நல்லது” என்கிற ப்ளேக்கின் வரிகள் வெற்றுபடிமமாக டேவிட் லூரியின்  மனதில் மேலோட்டமாகப் படிந்திருப்பதால்தான் என்னவோ பைரன் குறித்து அவரது ஆய்வும் புத்தகமும் எழுதப்படாத மனமயக்கமாக நிறைவேறாமல் போகிறது.

அவமானம் சமூகத்தின் பார்வையால் மட்டும் ஏற்படுவதில்லை, அகவுணர்ச்சியாலும் ஏற்படும். அதன் வல்லமை பாதிக்கப்பட்டவர் பாதிப்பை ஏற்படுத்தியவர் இருவரையும் காயப்படுத்தும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக காயம் ஏற்படுகிறது. அதை அவர்கள் கவனிக்காமல் போகும்போது அது சீழ்பிடித்து ரணமாகி உயிரையும் பறித்து விடுகிறது. நெருக்கமாக இருப்பவர்களின் மீதும் அதீத தாக்கத்தையும் ஏற்படுத்தும். எந்தளவிற்கு என்பது  அது கற்பனையினால் பாதிக்கப்பட்ட நபரின் காயத்தின் வடிவத்தைப் பார்த்து வலியை உருவகித்துக் கொள்ளல், உண்மையில் ஒருபோதும் ஒருவரின் வலியையும் அவமானத்தையும் தனதாக்கிக்கொள்ள இயலாது. கற்பனை ஒருபோதும் உண்மையாகாது. பாவனை பொய்மையை மட்டுமே விட்டுச்செல்கிறது. பேராசரியர் தன்மகளிடம் பிரயோகித்து தோற்றுப்போவதைப் போல.

இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் ஷஹிதா கூட்ஸி நாவலை மொழியாக்கம் செய்தது சவால் நிறைந்த பணியாக இருந்தது என்கிறார், மறுப்பதற்கில்லை. ஆனால் மொழிபெயர்ப்புக்கு தேர்ந்தெடுக்கும் சொற்கள் (தமிழைப் பொறுத்தவரை) வாசிப்பிற்கான இடறலைத் தந்துவிடும் வகையில் தேர்வுசெய்யக் கூடாது. மூலத்தின் நெருக்கத்திற்கு அது தடையை ஏற்படுத்துகிறது.  தமிழ் மொழியில் சொற்களுக்கா பஞ்சம்? கண்ணியப்படுத்துகிறாளில்லை, கழுவுகிறாளில்லை, நிகழ்கிறதில்லை… என்று சுய வழக்கு வழியே எழுதினால்  அது பொருந்தாத சாயலையே தருகின்றன. நாட்டுப்புற உழத்தி, இயக்காழி என்பதெல்லாம் பத்திகளோடு பொருந்திப் போகிறதா? நாவலில் புணர்ச்சி விதிகளுக்கு மாறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பல இடங்களையும்  காட்டலாம்…  ஆனால் இவ்வளவையும் மீறி இந்நாவல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்றால் கூட்ஸியின் எழுத்து வல்லமையை தன்னால் முடிந்தவரை பிரதிபலித்திருக்கும் மொழிபெயர்பாளர் ஷஹிதாவின் முயற்சி. வாழ்த்துகள் ஷஹிதா.

2003இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, இருமுறை புக்கர் பரிசு, மூன்றுமுறை CNA விருது பெற்றிருக்கும் நாவலாசிரியர், கட்டுரையாளர், பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஜான் மாக்ஸ்வெல் கூட்ஸி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் (1940) பிறந்து வளர்ந்தவர். அவருடைய தந்தை டச்சு பின்புலமும், தாயார் டச்சு-ஜெர்மன்-போலீஷ் மொழி பேசுபவராகவும் இருந்தனர். அவ்வப்போது ஆங்கில இலக்கிய உலகில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கூட்ஸி 2002இல் ஆஸ்திரேலியாவுக்கு குடிப்பெயர்ந்து 2006இல் அதன் குடிமகனாகி தற்போதுவரை அடிலெய்டில் வசித்து வருகிறார்.

பிரிவினைவாதத்துக்குப் பிந்தைய ஆப்பிரிக்க சமூகம் விலங்குகள் நலன் என்ற இரண்டு புறஎல்லைகளை மீறி சகிக்க முடியாத மனித மனங்களின்  உள்தரிசனத்தையும் இந்நாவல் தருகிறது. ‘உலகை மாற்றிய நூறு புத்தகங்கள்’ என்று பிபிசி பட்டியலிட்ட நாவல்களில் இதுவும் ஒன்று. எதிர் வெளியீடு இந்நாவலை தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள்.


நூல் தகவல்:

நூல் :  மானக்கேடு

ஆசிரியர் : ஜே.எம்.கூட்ஸி 

தமிழில்ஷஹிதா 

வகை :    மொழிபெயர்ப்பு - நாவல்

வெளியீடு :  எதிர் வெளியீடு

வெளியான ஆண்டு :  2022

விலை : ₹  399

நூலைப் பெற :  ethirveliyeedu.com/products/மானக்கேடு 

The post வானம் பார்த்து துப்புதல் appeared first on Vimarsanam Web.

இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை


நாம் பெரும்பாலும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகளுக்கு விடைச் சொல்லும் புத்தகம் தான் இது. உதாரணமாக, பேய் இருக்கா இல்லையா? சாதி என்றால் என்ன? மேல் சாதி, கீழ் சாதி என எதை வைத்துச் சொல்கிறார்கள்? மனசு எங்கே இருக்கு? என்பதைப் போல் அடிக்கடி நம் செவிகளும் கேட்ட கேள்விகளான உனக்கு மூளை இருக்கா? சமைப்பது யாருடைய வேலை?, நீங்க என்ன சாதி? என்ற கேள்விகளுக்குப் பதிலையும்;

கண்ணாடி முன்னால் நில்லுங்கள்!
கொஞ்சம் வரலாறு,
சாமி கண்ணைக் கெடுத்திடும்!
கொஞ்சம் புவியியல்,
இருட்டு எனக்குப் பிடிக்கும்
என்ற தலைப்புகளில் புதிய பல தகவல்களையும் சொல்லும் புத்தகமாய் எழுதப்பட்டுள்ளது.

யாராவது ஒரு வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால், உனக்கு மூளை இருக்கா? இல்லையா? என்று கேட்போம். அதே அந்த வேலையை ஒருவர் திறம்படச் செய்து விட்டால், “என்ன மூளை அவனுக்கு!” என்று சொல்வோம். சிறு பிள்ளைகளைத் திட்டும் பொழுது ” மூளை இல்லாத முண்டம்” என்றெல்லாம் திட்டுவதும் உண்டு. அப்படிப்பட்ட மூளையின் பங்கு என்ன? மூளை எங்கு உள்ளது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் மூளை இருக்குமா? இல்லை… இல்லை… மூளையின் அளவு எல்லோருக்கும் 1 கிலோ முதல் 1.4 கிலோ எடை அளவு தான் இருக்கும். ஆனால், ஓர் உறுப்பை எந்த அளவிற்குப் பயன்படுத்துகின்றோமோ! அந்த அளவிற்கு அதனுடைய வளர்ச்சியும், அதைப் பயன்படுத்தாமல் விட்டால் நாளடைவில் அது அழிந்தும் விடும் என்பதற்குச் சான்றாகச் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளுக்கும் காரணம் மூளை தான். அதனால், மனிதர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து மூளைகளும் “சமமாக நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்பட வேண்டும்.” பொது நன்மைக்காக நம்முடைய மூளைகள் யோசிக்க வேண்டும். புதிது புதிதாக நம் மூளை யோசிக்க வேண்டும். இல்லாவிடில் அது பழசாகிவிடும் என்பதை உணர்த்துகிறது.

சமைப்பது யாருடைய வேலை? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் முதலில் பெண்களைத் தான் சொல்வார்கள். ஆனால், சமையல் என்பது பெண்களுக்கான வேலை மட்டும் கிடையாது. ஆண்களுக்கும் நன்றாகவே சமைக்கத் தெரியும். அப்படித் தெரியாவிடினும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். வளரும் போதே ஆண் பிள்ளைகளுக்கும் சமைக்க கற்றுக் கொடுக்க வேண்டும். என்பதை ஒரு தெளிவான பார்வையுடன் சொல்லி, “நீ வீட்டில் சும்மா தானே இருக்கிறாய்? நான் தான் சம்பாதிக்கிறேன்.” என்று இனி பெண்களைப் பார்த்து ஆண்கள் கேட்டால், அதற்கு ஒரு பதில் சொல்லப்பட்டுள்ளது. அது, அப்பா வாங்கும் சம்பளத்தில் 1 பங்கு அப்பாவுக்கும், +0.8 பங்கு அம்மாவுக்கும், +0.6 பங்கு ஒரு குழந்தைக்கும், +0.6 பங்கு இன்னொரு குழந்தைக்கும் உண்டாம். இனி சட்டம் தெரியாமல் எந்த ஆணாவது பேசினால் இதைச் சொல்லிவிடலாம் பதிலாக!

நாம் யாரிடமாவது கொஞ்சம் நன்றாகப் பேசி பழகி விட்டால் போதும், அடுத்து அவர்கள் தெரிந்து கொள்ள நினைப்பது என்ன சாதி? என்றுதான். அந்தச் சாதிக்கான விளக்கம், சாதி வந்த கதைகளையெல்லாம் சொல்லிவிட்டு, இன்றைக்கு இரண்டு சாதி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவை மேல்சாதி, கீழ்சாதி என்பது சரிதான் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு சாதி. “முட்டாள் சாதி”.

சாதியாவது, கீதியாவது எல்லோருமே குரங்கின் பேரப்பிள்ளைகள் தான் என்பவர்கள் எல்லாம் ஒரு சாதி, மனிதச் சாதி அதாவது “அறிவாளி சாதி “.

இன்றைக்குத் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரக்கூடியதை நன்கு கவனித்தால்,
பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா?
முகப்பரு போக வேண்டுமா? உடம்பில் நாற்றம் வருகிறதா?
பல் பளிச்சிட வேண்டுமா?
என ஏதோ நாமெல்லாம் ஒட்டுமொத்தக் குறையுடன் பிறந்ததைப் போல, ஒவ்வொன்றையும் குறையாகக் காட்டி விளம்பரப்படுத்தப்படுகிறது. விளம்பரப்படுத்தப்படும் அனைத்தையும் சாடியுள்ள புத்தகம்.

மேலும், நிறம் என்பது அழகு அல்ல; உழைப்பும், படிப்பும் நல்ல பேச்சும், நல்ல பழக்கமும் தான் அழகு; என “கண்ணாடி முன்னால் நில்லுங்கள்” என்ற கட்டுரை சொல்லியுள்ளது.

‘வரலாறு’ என்றாலே ஓர் அறுவை என்பதைப் போல பள்ளி நாட்களிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. ஆம்! வரலாற்றில் ராஜா, ராணி, நாடு, போர், ஆட்சி மட்டும் இருந்தால் அறுவையாகத் தானே இருக்கும். ஒரு ராஜா நாட்டை ஆண்டு, அவன் ராஜபோக வாழ்க்கை வாழ அவன் உழைத்தானா? உழைத்தது மக்கள்; போரில் போராடி உயிரை விட்டது மக்கள்; அவர்கள்தான் வரலாறு. “ராஜாக்களை பேசுவது மட்டுமல்ல, மக்களைப் பேசுவதும் தான் வரலாறு” என்பதைச் சொல்லியவிதம் அருமை.

சிலர் சின்ன பிள்ளைகளிடம் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். “அப்படியெல்லாம் பேசக்கூடாது… சாமி கண்ணைக் கொத்திவிடும்…” என்று! அப்படி மூடநம்பிக்கையான, பாம்பு பால் குடிக்குமா?, பாம்பு டான்ஸ் ஆடுமா?, கிழமைகளில் நல்ல கிழமை, கெட்ட கிழமை என்று உண்டா?, ஏன் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமைக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள்? என இந்தக் கேள்விகளுக்கான தக்க அறிவியல் விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும், ஜோசியம் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து சில கேள்விகளைத் தொடுத்து, “அறிவியல் தான் இனி வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என தெளிவுபடுத்தியுள்ளார்.

பூமி எவ்வாறு தோன்றியது? 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கொதிக்கும் பாறைக் குழம்பாக இருந்தது பூமி. அங்கே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்ததால் பூமி நிரம்பிப் பல காலம் நீர்க்கோளமாகவே இருந்ததாகவும், பிறகு நீர் ஆவியாகி நிலப்பரப்பு வெளியில் தோன்ற ஆரம்பித்த பின்பு அதுதான் கண்டங்களாகவும், கடலாகவும் மாறியது என்பதையும், நிலப்பரப்பு தோன்றிய போது ஏழு கண்டங்களெல்லாம் கிடையாது. எல்லாம் ஒரே கண்டம் தான், அது “பாங்கீ கண்டம்” அப்போது மனிதன் கிடையாது.

அதன் பிறகு இரண்டு கண்டங்களாகப் பிரிந்தது. ஏனென்றால், பூமியின் மேற்பரப்பில் இருந்த “டெக்டோனியம் பிளேட்டுகள்” (பூமி முட்டை போல் இருக்க, அதன் ஓட்டின் மேல் தான் கடலும், கண்டமும் இருந்தது. அந்த ஓடு உடைந்து பத்துத் தட்டுகளாய் மிதந்தது. அதுதான் டெக்டோனியம் பிளேட்) நகர்ந்ததால் மேல் பகுதி “லாராஷிய கண்டமாகவும்”, கீழ்ப்பகுதி “கோண்ட் வானா” கண்டமாகவும் பிரிந்தது.

முன்பு இந்தியா நான்கு பக்கம் கடலாக இருந்ததையும், பிறகு மூன்று பக்கம் கடலைக் கொண்டதாக மாறிய நிகழ்வையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இந்தப் புத்தகம் அமைந்தது.

இப்படி உருவான இந்தப் பூமி எப்படியெல்லாம் கூறு போட்டு,
உன் நாடு, என் நாடு
உன் இனம், என் இனம்
உன் மொழி, என் மொழி
உன் சாதி, என் சாதி என்று மாற்றிய மனிதர்களுக்கு ஒன்று சொல்லியுள்ளார்.

“டெக்டோனியம் பிளேட் நகராத வரைக்கும் தான் இந்தியாவுல இருக்க முடியும். அதுவரைக்கும் வாய பொத்திக் கிட்டு இருக்கணும். வரலாறும் தெரியாம, புவியியலும் தெரியாம முட்டாள் தான் உன் நாடு, என் நாடு என்று சொல்லுவான்.” என்று இவர்களைப் போன்றவர்களுக்குத் தான் இந்த உண்மையைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வாசகர்களாகிய நமக்கு வைத்துள்ளார். நிறைவாக “இருட்டை எனக்குப் பிடிக்கும்” என்ற கட்டுரையின் வாயிலாக நமக்கும் இருட்டைப் பிடிக்க வைத்துள்ளார். உங்களுக்கும் பிடிக்க வேண்டுமா? படித்துப் பாருங்கள் புத்தகத்தை…


நூல் தகவல்:

நூல் : இருட்டு எனக்குப் பிடிக்கும் 

ஆசிரியர் :  ச. தமிழ்ச்செல்வன்

வகை :   கட்டுரை 

வெளியீடு :  வாசல் பதிப்பகம்

வெளியான ஆண்டு :  2017

பக்கங்கள் : 80

விலை : ₹  70

 

The post இருட்டு எனக்குப் பிடிக்கும் – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய “மார்க்சியம் என்றால் என்ன?” – ஒரு பார்வை


ப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் பற்றி மார்க்ஸ் சொல்லும்போது ” இன்னொரு நான்” என்றார் . மாற்றம் ஒன்றே மாறாதது என்கிற இயற்கை இயங்குவியல் தத்துவத்தை உலகிற்குச் சொன்ன தத்துவ மேதை.

ஞானப்பால் பருகாத ஞானி. ஊமை உழைப்பாளர்களின் உரிமைக் குரல். வறுமைyயையும் அறியாமையையும் பயன்படுத்தி மக்களைத் திசைதிருப்பச் செய்யும் சொர்க்கம் நரகம் என்ற கற்பிதங்களிலிருந்து மக்களை மீட்ட சமத்துவ போராளி.

ஒரு ஞானி உருவாக அசரீரியும் கேட்கவேண்டியதில்லை, ஞானப்பழம் அருந்த வேண்டியதில்லை, கலைகளில் ஆர்வமும் சமூக பார்வையையுமே ஒரு பண்பட்ட சமூக சேவகனை உருவாக்கச் செய்யும் என்பதற்குச் சிறந்த உதாரணம் மார்க்ஸ்.

சேக்ஸ்பியரின் மனித உணர்வைப் பொங்கச் செய்யும் எழுத்துக்களில் லயித்துப் போனதும், தொடர் வாசிப்புமே மார்க்ஸை தத்துவார்த்தமாக சமூகத்தை நேசிக்கச் செய்தது.

ஒரு காதலால் என்ன செய்துவிட முடியும் என்கிற கேள்விக்கு எல்லா பதிலுமாக இருந்தார் மார்க்ஸ். ஒரு காதல்தான் அவரை கவிஞனாக்கி இருக்கிறது . ” ஜென்னி மட்டும் இல்லை என்றால் நான் சாதாரண மனிதனாகவே வாழ்ந்து இறந்திருப்பேன் ” என்கிறார் கவிஞன் மார்க்ஸ்.

ஏங்கல்ஸின் 44 ஆண்டுக்கால நட்பு தொழிலாளர் வர்க்க பேராற்றலை உலகிற்குத் தெரிய வைத்தது. ஆனால் ரஷ்யக் குடியுரிமையைத் துறந்த மார்க்ஸ் கடைசி வரை எந்த நாட்டின் குடிமகனாகவும் வாழ முடியாமல் தவித்ததுதான் பெரும் கொடுமை.

ஏழு குழந்தைகளைப் பெற்ற மார்க்ஸ் ஜென்னி தம்பதியர் நான்கு குழந்தைகளை இழந்தும், குழந்தைகள் பிறந்த போது தொட்டில் வாங்கவும், இறந்தபோது சவப்பெட்டி வாங்கவும் இயலாத வறுமை இருந்தபோதும் கூட ஒரு நாளும் அவர்களின் தத்துவார்த்தத்தைக் காவு வாங்காதது பேரதிசயம்.

” உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் !
“நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை பெறுவதற்கோ பொன்னுலகம் இருக்கிறது ! “

என்ற முழக்கங்கள் தான் இன்று வரை வர்க்கப் போர்களின் சங்கநாதமாக இருக்கிறது.

கலைகள் மீது நாட்டம் கொண்ட மனம் தான் நாகரீகமான மனநிலையை, பண்பாட்டை உருவாக்க ஒருவனை உந்தித் தள்ளுகிறது . ” உலகே மாயம் வாழ்வே மாயம் ” என வாழ்வை வெறுக்கச் செய்யும் பழைய தத்துவ வேதாந்தங்களைப் புறம் தள்ளி விடுகிறது. எந்த கடவுளும் கொடுக்காத வரமாய், தவமும் பண்ணத் தேவையில்லாத தத்துவமாய் இருக்கும் மார்க்ஸியம் பற்றி நாம் அறிந்துகொள்ள ஒரு தொடக்கநிலை கையேட்டைத் தந்திருக்கிற சு.பொ. அகத்தியலிங்கம் நூலாசிரியருக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும்.

ஜெர்மனின் தத்துவம், பிரிட்டிஷ் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் இவை மூன்றையும் உள்வாங்கிய மார்க்ஸியம் ஒரு சமூகத்தை ஊடறுத்துப் பார்க்கும் பொதுத்தன்மையை சமூகப்பார்வையை நமக்குள் விதைத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

எந்திரத்தனமாக எதையும் அணுகாமல் இயக்கத்தோடு இணைந்து பார்க்கும் பொருள்முதல்வாத தத்துவமே மார்க்ஸியத்தின் தனித்துவமாக நாம் அறிந்து கொள்ள இந்நூல் மிக எளிமையாக நமக்கு வழிகாட்டுகிறது. கருத்து முதல்வாதம் என்பது எந்த விமர்சனமும் இன்றி அப்படியே ஏற்றுக்கொள்ளும் ,அதாவது குருட்டு நம்பிக்கையின் உச்சபட்ச மூடத்தனம். பொருள் முதல்வாதம் எதையும் சந்தேகிப்பதும் கேள்வி கேட்பதுமே ஆகும். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் மழையை எதிர்பார்த்துக் காத்திருப்பது கருத்து முதல்வாதம், பொழிகின்ற மழைநீரை எக்காலத்திற்கும் சேகரிக்கக் குளம் வெட்டி வைப்பது பொருள் முதல் வாதம் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

தான் தன்னை அறிந்து தனக்குள் ஒடுங்கிக் கொள்ளச் செய்யும் ஆன்மீகத்தால் சமூகத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை. சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட மனிதக் குலம் தான் இதுவரை முன்னேறி வந்துள்ளது. இந்திய மண்ணிற்கு மிக அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பது புறத்தில் மட்டுமல்ல அகத்திலும் தான். நம் உடலிலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. பழைய செல்கள் அழிவதும் புதிய செல்கள் உருவாவதுமான இயக்கவியல் தத்துவம் விஞ்ஞானப்பூர்வமானது.

மாற்றம் நிகழும் என்றால் ஒழுக்கத்திலும் மாறுமா என்கிற கேள்வி மிக நுட்பமானது.. ஆம் மாறும்… என்பதே பதில். சாதிய ஒடுக்குமுறையும், பெண் அடிமைத்தனத்தையும் நிறுவிய போது சாஸ்திரச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவளாகப் பெண் இருந்தாள். ஒழுக்க ரீதியாக அனைத்து அடிமைத்தனத்திலும் மூழ்கிக் கிடந்தாள். ஆனால் இன்று அதுவும் மாறிக்கொண்டிருக்கிறது. ஒழுக்கத்தின்பால் சொல்லப்பட்ட கற்பிதங்களை உடைத்தெறிந்துவிட்டு தன் சுயத்தையும் அடைந்து சமூகத்திலும் தன்னை பங்கெடுத்துக்கொள்ளத் தயாராகிவிட்டதும் மாற்றமே.

மனிதக்குலமும் அதன் வளர்ச்சியும் கூட நூலில் முன்னிறுத்திச் சொல்லப்பட்டிருக்கிற விதமும் அருமை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமி நம்முடையது அல்ல பல கோடி பேர் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்ந்து மறைந்து இருக்கிற வரலாற்றைச் சுமந்து நிற்கும் நிலமே. நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விளைவும் நமக்கு முன்னால் வாழ்ந்துவிட்டுப்போன எச்சங்களே. ” நம் குழந்தைகள் நம் குழந்தைகள் அல்ல நம் வழியாகப் பூமிக்கு வந்தவர்கள் ” என்பதைப்போல ஒவ்வொரு தனி மனிதனும் தனியாகவும் சமூகத்தின் அங்கமாகவும் இருக்கின்றான் என்பதுதான் மெய்.

மொத்தத்தில் உலகமே மாயை என்கிற அஞ்ஞான பிதற்றைத் தவிடு பொடியாக்கும் மார்க்ஸியப் பார்வை கொண்ட இந்நூல் பல கற்பிதங்களைக் கட்டுடைக்கிறது. இரவில் தெரியும் நட்சத்திரம் பகலில் தெரியவில்லை என்றால் அது மாயை என்று பொருள் அல்ல , சூரிய பேரொளி தாண்டி நம்மால் பார்க்க முடியவில்லை என்பதே விஞ்ஞானம்.

ஒவ்வொரு விளைவுக்கும் காரணம் இருக்கிறது அவசியத்துக்கும் தற்செயலுக்குமான தொடர்பு பல நேரங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

சாராம்சம் மற்றும் தோற்றம் பற்றி விளக்கும்போது, பாலியல் துன்புறுத்தல் மிக மோசமானது. இது தோற்றம்தான் பாலின சமத்துவமின்மையே பெண்களைப் போகப்பொருளாகப் பார்க்கச் செய்கிறது என்பதே அதன் சாராம்சம் என்பது புரிந்து கொள்ளக்கூடிய விளக்கமாக இருக்கிறது.

மற்றொரு முக்கிய குறிப்பாக இந்நூலில் பார்க்க வேண்டிய அம்சமாக நான் நினைப்பது, வேத மறுப்பு என்பது தமிழர்களின் மரபாக இருக்கிறது என்பதை வலியுறுத்திச் செல்கிறது. அறிவென்பது ஏற்கனவே வடிவமைக்கப்பட்டதல்ல, சிந்தனை செய்தல், கற்பனை செய்தல், முடிவெடுத்தல், சரிபார்த்தல், என மனித வாழ்வின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அறிவு வளர்ச்சியடைகிறது இருளை விரட்டிய மின்சாரத்தைப் போல.

முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல என்கிற வாதம் எல்லா காலத்திற்கும் பொருந்தாது. அறிவும் அறிந்துகொள்வதும், மனிதக் குலத்தின் தொடர் முயற்சியினால் நடப்பது. அறியாமையும், வேதங்களும், இதிகாசங்களும், இறைவனால் படைக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிற வேத நூல்கள் மக்களைப் பிளவுபடுத்தியும் பெண்களை அடிமைப்படுத்தியும் பார்த்தன. அறிவும் ஆராய்ச்சியுமே மனிதப் பண்பை வளர்த்தது. வாழ்வை சமூகத்தை மேம்படுத்தியது. மொத்தத்தில் தமிழர் மரபு என்பது அறிவு சார்ந்தது அறிவியல் சார்ந்தது என்பதை அறிய வைத்திருக்கிறது இந்நூல். வர்க்கப் பேயை மார்க்ஸியமும் சாதிப் பேயை விரட்ட பெரியார் போன்றோரும் கையில் எடுத்த அறிவியலின் தேவையே இனிவரும் மனிதக் குலத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் சரியான மருந்து என்பதை உணர்வோம்.

மனிதக் குலத்திற்கு எதிரான பாசிசத்தையும் பிளவுபடுத்தும் மதவாதத்தையும் துடைத்தெறிவோம். கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகச் சேவகம் செய்யும் முதலாளித்துவப் போக்கு இந்தியத் தேசத்தை விலை பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதனால்தான் மூலதனம், கூலி, உழைப்பு ,லாபம், என பல்வேறு பொருளாதார கட்டுரைகளில் மார்க்ஸ் சொன்னது எதுவும் பொய்யில்லை என்பது எல்லா காலகட்டத்திலும் நிரூபணமாகிக்கொண்டிருக்கிறது.

மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தை ஊன்றிக் கற்பதும், அமைப்பாக ஒன்றிணைந்து செயல்படுவதுமே இன்றைய தேவை என்பதைப் புரிந்து அஞ்ஞானம் அகற்றி விஞ்ஞானம் நோக்கி விரைந்திடுவோம் தோழர்களே.


நூல் தகவல்:

நூல் : மார்க்சியம் என்றால் என்ன? -  ஒரு தொடக்கநிலைக் கையேடு

ஆசிரியர் :  சு.பொ.அகத்தியலிங்கம்

வகை :   கட்டுரை - அரசியல்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

வெளியான ஆண்டு :  2018

பக்கங்கள் : 136

விலை : ₹  120

நூலைப் பெற  : பாரதி புத்தகாலயம் இணையதளம் (Click Here)

 

The post சு.பொ.அகத்தியலிங்கம் எழுதிய “மார்க்சியம் என்றால் என்ன?” – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன்

10 September 2023 at 06:17

பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள்.

வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவை ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தியனின் கதை. இரு நடு வயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது.

தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேம்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீசுவரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குரியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுறும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான்.

கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்சை முறைகளை. புள்ளி விவரங்களை வரலாற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது.

கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ் வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றைத் திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர்.

கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது.

சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர் விழா பற்றிய நுண் விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக.

சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன.

பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன்.

இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஓர் அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன்.

சமூகமாக. சுமுகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம்.

காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீனத் தகவல்களும், இளந்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும்.

கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன்.

நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன்.


– மருத்துவர் க. கண்ணன்
கபிலா மருத்துவமனை, கரூர்.

நூல் தகவல்:

நூல் :  கர்ஜனை

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : வினிதா மோகன்

வெளியீடு :  எழிலினி பதிப்பகம்

 ஆண்டு :  முதல் பதிப்பு 2023

பக்கங்கள் : 160

விலை:  ₹ 300

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

The post வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன் appeared first on Vimarsanam Web.

❌