Normal view

Received before yesterdayகுரு அரவிந்தன்

 ஆய்வுஎழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு - சிவகலை சிவப…

 






ஆய்வு

- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி - 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை. -

ஆய்வுச்சுருக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு தனித்துவமானது. இவர் எழுதிய புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதை ஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதுடன் இவரது சமூகம் பற்றிய பிரக்ஞையையும் வெளிக்கொணர்வதாகும். பண்புநிலை அடிப்படையில் விபரண ஆய்வு முறையினூடாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரைக்குரிய தரவுகள் ஆசிரியருடைய சிறுகதைகள், நூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.

திறவுச் சொற்கள்:- குரு அரவிந்தன், புல்லுக்கு இறைத்த நீர்(விகடன்), பனிச்சறுக்கல், நங்கூரி (விகடன்), உறவுகள் தொடர்கதை.

அறிமுகம்

குரு அரவிந்தன் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், புலம்பெயர் தேசமாகிய கனடாவில் வசிப்பவருமாகிய கணக்காளர், ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்கள் படைப்பிலக்கியத்தில் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளியாவார். ஆழ்ந்த புலமைப் பின்புலம் கொண்ட மகாஜனாக் கல்லூரியின் அறிவேற்றமும், ஆழ்ந்த புலமையும், ஆழ்ந்த வாசிப்பும் இவரின் ஆக்கங்களின் வேர்களோடு தொடர்புபட்டுள்ளன. எட்டுச் சிறுகதைத் தொகுப்புக்கள், ஏழு நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், சினிமாக் கதை, வசனம், சிறுவர் இலக்கியம், நாடகங்கள் என்ற பன்முகத்தளங்களில் கால்பதித்து நிற்கும் அவரது ஆளுமையின் உறுபண்பு (trait ) அறிவு நிலையிலும், ஆக்க நிலையிலும் அவர் மேற்கொண்ட செறிவான ஊடாட்டங்களின் வெளிப்படுத்துகையாயின. சர்வதேச தமிழர் மட்டத்தில் இவரது வாசகர் வட்டம் மிகப்பெரிய அளவில் பரிணாமம் அடைந்து கொண்டிருப்பதற்கு இவரின் கனதியான இலக்கியப் பங்களிப்பே காரணமாகின்றது.

இவரது புனை கதைகள் பல பிறமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டும், குறும் படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலைமகள் விருது, விகடன் விருது, உதயன் தங்கப்பதக்க விருது, தமிழர் தகவல் விருது, தமிழ்மிரர் விருது, ஞானம் விருது, சிறுகதைவித்தகர் விருது, சிறந்த ஊடகவியலாளருக்கான கவர்னர் விருது, சிறந்த திரைக்கதை வசனத்திற்கான ஜனகன் பிச்சேஸ் விருது, வடஅமெரிக்க தமிழ்ச்சங்க விருது, மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவருக்கான சாதனையாளர் விருது போன்ற பல பரிசுகளையும் விருதுகனையும் பெற்றிருக்கிறார். உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலும் ஒளியுண்டாதற் போல அவர் நோக்கம் தெளிவுற அமைவதனால் அவர் ஆக்கங்களும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டவையாக அமைகின்றன.

                - எழுத்தாளர் குரு அரவிந்தன் -

சிறுகதை

சிறுகதை என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்பு. அதில் நிறைய நிகழ்ச்சிகள்,விபத்துக்கள், திடீர்த்திருபப்ங்கள், எதிர்பாராத வளர்ச்சி மூலம் உச்சக்கட்டத்தை அடைதல், நிறைவான முடிவு போன்றவை இருக்க வேண்டும் என்பார் ஹியூக் வாவ்போல். ஒரு சிறுகதை மூலக்கருத்து ஒன்றையும் ஓரே ஒரு கதைப் பொருள் கூறையும் கொண்டிருப்பதால் அது நாவலிலிருந்து வேறுபடுகின்றது. கதாாசிரியரின் சிந்தனையில் பிறந்து அது வாசகனின் சிந்தகனையில் நிறைவு பெறுகிறது . சிறுகதையின் அமைப்புச் சிறப்படைவதற்கு சிறந்த தலைப்பு, தொடக்கம், நேர்த்தியான கருப்பொருளும் கதைப்பின்னலும், மனத்தினின்று அகலாத பாத்திரங்கள், நுட்பமாகக் கதைகூறல், சிறுகதையின் கால இடஅமைவு, பாத்திரப் பேச்சு, சிறந்த முடிவு என்பவை இன்றியமையாதவை. இவற்றின் தளங்களில் நின்றே ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுகதைகளும் திறனாய்வு செய்யப்படுகின்றன.

முதலாவதாக குரு அரவிந்தனின் ‘புல்லுக்கு இறைத்த நீர்’ என்பதனை எடுத்துக் கொள்வோம். தள்ளாத வயதிலுள்ள ஆசிரியர் தான் கற்பித்த சிறந்த மாணவர்களைச் சந்திக்கும் போது ஏற்படும் விகசிப்பையும், எதேச்சையாக சமூகப் பிறழ்வுகளுக்குள் அகப்பட்டுக் கொண்ட மாணவனைச் சந்தித்ததால் அவரடைந்த ஆதங்கத்தையும் எடுத்தியம்புகிறது. அந்த மாணவனின் சமூகப்பிறழ்வுக்கு யார் காரணமென்பதே கதையின் கருவூலம்.

அடுத்த கதையாகிய ‘நங்கூரி’ என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டால் இக்கதை 1983ம் ஆண்டு சிங்கள இனவாதத்தால் தமிழினத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தால் அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களைச் சுமந்து கொண்டு தமிழ்க் கரையோரப் பிரதேசங்களூடாகக் காங்கேசன்துறையைச் சென்றடையும் நங்கூரி எனும் கப்பலில் நிகழும் சோகக்கதையைப் பேசுகிறது. பயணக் காலமான அந்த இரண்டு நாட்களில் தான் எத்தனை பாத்திரங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், எத்தனை விவாதங்கள், எப்படிப்பட்ட தீர்வுகள், அது ஓர் துன்பியல் நாடகம் என்பதை ஆசிரியர் யதார்த்தபூர்வமாக எழுதியுள்ளார்.

மூன்றாவது சிறுகதையாகிய ‘பனிச் சறுக்கல்’ என்பது, பனிச்சறுக்கல் விளையாட்டை புலம்பெயர் மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டுப் புனையப்பட்டதாகும். மனவிருப்பமன்றிக் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஈழத்துப் பெண் புலம்பெயர் நாட்டு மணமகனைத் திருமணம் செய்து அந்த நாட்டிற்குச் சென்ற பின் அங்குள்ள இயற்கைச் சூழலுக்கு மேலாக, சமூகச் சூழலுக்கு இசைவாக்கமடையும் போது அவள் பட்ட துன்பத்தையும், அவளுக்கேற்பட்ட சோக நிகழ்வையும் எடுத்தியம்புகிறது.

நான்காவது சிறுகதையாகிய ‘உறவுகள் தொடர் கதை’ என்பதாகும். ஈழத்தில் நடந்தேறிய யுத்ததாண்டவத்தின் கோரப்பிடியில் சிக்கிய தனயன் உயிரைக் காப்பாற்ற தாயின் விருப்பத்துடன் கனடாவில் தஞ்சமடைகிறான். ஈழத்தில் தனியாக வாழ்ந்த தாய் யுத்தம் காரணமாக நிகழ்ந்ந இடப்பெயர்வுகளில் எங்கு போனாள் என்றறியாத தனயன் பல காலங்கள் கழித்து யுத்தம் தளர்த்தப்பட்ட சூழ்நிலையில் அவளைத் தேடித் தனது குடும்பத்தாருடன் தாய் நாட்டிற்கு வருவதையும் அதன் பின் நடந்தேறிய தொடர் சம்பவங்களையும் சித்தரிப்பதாகும்.

கதைகளின் தலைப்புகள்

சிறுகதைக்குப் பொருத்தமான பெயரும் அதன் கவர்ச்சியுமே வாசகர்களுக்கு முதலில் அறிமுகமாகின்றன. ஒரு கதைக்கு ஒரே ஒரு சரியான பெயர்தான் இருக்க முடியும். அந்தப் பெயரைத் தேடிப் பிடிப்பதில் தான் சிறுகதையாசிரியரின் தனித்திறமை அடங்கியிருக்கிறது.சிறுகதைக்குத் தலைப்பிடும்போது அதன் தொடக்கம், அதன் முடிவு, அதன் பிரதான பாத்திரம், அக்கதை கூறும் பொருள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக்கொண்டு தலைப்பிடலாம். குரு அரவிந்தனின் புல்லுக்குிறைத்த நீர் சிறுகதையானது அங்கு கூறப்படும் பொருளை வைத்து உட்கருத்தை உள்ளடக்கித் தலையிடப்பட்டுள்ளது. நங்கூரி, பனிச்சறுக்கல் ஆகிய சிறுகதைகளின் தலைப்பானது கதையின் தொடக்கமாக அமைந்திருக்கின்றது. உறவுகள் தொடர்கதை என்ற கதை அக்கதையின் முடிவைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. ஆக, சிறுகதைகளுக்குப் பெயரிடுவதில் குரு அரவிந்தன் அவர்கள் தனது தனித்திறமையை நிலைநிறுத்தியுள்ளார்.

சிறுகதையின் தொடக்கம்

மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளுக்குமே கதைப் பொருளுக்கும் கதைக்கருவிற்கும் ஏற்ற தொடக்கங்கள் அமைந்துள்ளன. கதாசிரியர் சிறுகதைகளின் ஆரம்பத்திலேயே வாசகரின் கவனத்தையும் ஆவலையும் தூண்டுவதாகவே கதைகளைப் புனைந்துள்ளார் .

கதைக்கருவும் கதைப் பின்னலும்

எந்தவொரு நிகழ்ச்சியின் மேல் சிறுகதை பின்னப்பட்டுள்ளதோ அந்த நிகழ்வு சிறுகதையின் கருவாகும். கரு கதையின் சிறப்புக்கு மூல காரணமாக அமைகின்றது. கருவில் திரு இல்லையேல் கதையிலும் வளமிருக்காது. சிறுகதை, ஆசிரியரின் அனுபவத்திலிருந்து முகிழ்கின்றது. ஆசிரியர் எங்கோ எப்போதே பார்த்த ஒரு நிகழ்ச்சி கேட்ட சம்பவம் அவருக்கு நேரிட்ட சில அனுபவங்கள் இவையே நினைவாகிச் சிறுகதையாகின்றன. வேறு வேறு காலங்களில் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் கதாசிரியர் கற்பனையுடன் கலந்து அவற்றைக் கோர்த்து விடுகிறார். இதுவே கதைப்பின்னலாகும்.

விகடனில் வெளிவந்த ‘புல்லுக்கு இறைத்த நீர்’ மனதைத் தொடும் கதை. கதைத் தலைவனாக தள்ளாத வயது ஆசிரியர் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார். இவரின் வாழ்வின் நிகழ்காலத்திலிருந்து சம்பவங்கள் பின்னோக்கிப் பின்னப்பட்டிருக்கின்றன. தன்னிடம் கல்வி பயின்று சமுதாயப் பிறழ்வில் சிக்குண்ட மாணவனொருவனைச் ஏதேச்சையாக கதைத்தலைவன் சந்திக்கும் போது அவரிடம் ஏற்படும் உணர்வுகளின் ஆதங்கத்தை கதாசிரியர் நுட்பமாக விபரித்திருக்கின்றார். . பிள்ளைகள் தமது இலக்குகளை அடையாளம் காணும் போது பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொள்வதே முக்கியம். மாறாகத் தமது சொந்த இலக்குகளைப் பிள்ளை மீது திணித்ததால் அப்பிள்ளை எவ்வாறு சீரழிந்துள்ளான் என்பதனையும் ஆசிரியரும் தானும் அதற்கொரு காரணமாக இருக்குமோ என்று ஏங்குவதையும் கதாசிரியர் சமூகத்திற்கு இக்கதையின் வாயிலாக எடுத்தியம்புகின்றார்.

விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த ‘நங்கூரி’ என்ற கதையை எடுத்துக் கொண்டோமானால் இக்கதையானது 1983ம் ஆண்டு பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டதாகும். காடையர்களால் கற்பழிக்கப்பட்ட் பெண்ணும் அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவளில் பழிபோடும் கையாலாகாத கணவனும், அவர்களை ஆற்றுப்படுத்தும் பெண் ஆசிரியரும் நங்கூரி என்ற கப்பலில் அகதிகளோடு அகதிகளாகக் காங்கேசன்துறைக்குக் கொழும்பிலிருந்து இரண்டு நாட்கள் பயணிக்கிறார்கள். மனைவி காடையர்களால் கற்பழிக்கப்பட்டமை அருவருப்போடு நோக்கும் கணவன் மானங்கெட்டுவிட்டதாகத் தற்கொலைக்கு முயல்கின்றான். மனைவியம் கணவனின் சுடுசொற்கள் தாங்காமல் தற்கொலைக்கு முயல்வாள் என்று பீதியுற்ற பெண் ஆசிரியர் அவர்களை ஆற்றுப்படுத்தி அனைவரும் கரையைச் சென்றடைகின்றனர். நெருக்கீட்டிற்குப் பின்னரான மனவடுவால் கணவன் மனநோயாளியாகிவிடுகிறான். மனைவி தான் பட்ட அவலத்திலிருந்து மீண்டு வந்து முதியோர் இல்லத்தில் கடமையாற்றுகின்றாள். ஆசிரியரின் மகள் இனப் பிரச்சினையால் ஏற்பட்ட அவலங்களைக் கேள்வியுற்று விடுதலைப் போராளியாகி மாவீரராக மரணிக்கிறாள்.

கதை ஆரம்ப கட்டத்திலிருந்து முன்னோக்கிப் பின்னப்பட்டுள்ளது. கதாசிரியர் இங்கு பெண் கதாப்பாத்திரங்களை எந்தச் சவால்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் உயிர்ப்பான பாத்திரங்களாகச் சிருஷ்டித்துள்ளார் .ஆற்றுகைப்படுத்திய ஆசிரயர் தனது மகள் மரணிப்பிலும் பெருமை கொள்கிறாள் எனக் கூறுமவர் அப்பெண் பாத்திரத்தின் மன வலிமையை இறுக்கமாகச் சித்தரித்துள்ளார்.

பனிச்சறுக்கல் சிறுகதையில் சித்தரிக்கப்படும் பெண் பாத்திரம் தாய் நாட்டிலிருந்து புலம் பெயர் நாட்டுக்குத் திருமணமாகிச் செல்கிறாள். அங்குள்ள பண்பாட்டுச் சூழலுக்கு இசைவாக்கமடைய எண்ணி அருந்திய மென்பானத்தில் யாரோ கலந்து கொடுத்து மதுபானத்தால் அவள் தன்னிலை மறக்கக் கணவனல்லாத யாரோ ஒருவனால் பாலியல் பலாத்காரத்துக்கு இரையாகி கின்றாள். கதையின் உச்சம் அடுத்து அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதுதான். எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் இப் பாத்திரத்தைப் படைத்துள்ளார். செய்யாத குற்றத்திற்குத் தண்டனையாக ஒரு பாத்திரத்தை நசுக்க முடியாது. பாதிரத்தைப் படைப்பது பெரிதல்ல, அதில் எழுத்தாளரின் பரிவுணர்ச்சியும் இருக்க வேண்டும். அந்த வகையில் கதாசிரியர் அப் பெண் பாத்திரத்தின் உள்ளக்கிடக்கையை பனிச்சறுக்கல்களால் ஏற்படும் விபத்துக்கள் குடும்ப எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதுடன் ஒப்பிட்டு அப்பாத்திரத்துக்கு புதிய வலிமையையும், நம்பிக்கையையும் அளித்து வாழ வைத்திருக்கிறார்.

அடுத்து உறவுகள் தொடர்கதை என்ற கதையை எடுத்துக் கொண்டால் தாய் நாட்டில் நிகழ்ந்த யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து உயிர் பிழைக்க புலம்பெயர் நாட்டில் தஞ்சமடைந்த தனயன், தனியாக விட்டுச் சென்ற தாயைத் தேடும் படலமாகும். தனியாக இருந்த தாய் இடம்பெயர்ந்து எங்கு சென்றிருப்பாள்? அல்லது உயிருடன் இருக்கின்றாளா? என ஏங்கிய தனயன் யுத்தம் தளர்வடைந்த போது தாய் நாட்டிற்குத் தனது குடும்பத்துடன் புறப்படுகிறான். அவனுடைய அன்பு மகள் புலம்பெயர் நாட்டில் பிறந்திருந்தாலும் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றால் அங்கு கருணை இல்லத்திலுள்ள உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறாள். தனயன் எல்லா இடங்களிலும் தாயைத் தேடி இறுதியாகக் கருணை இல்லத்துக்கு வருகிறான். அங்கும் தாய் இல்லாமையால் ஆதங்கப்படுகிறான். ஆனால் அந்தக் கருணை இல்லத்தில்தான் தாய், எல்லாம் மறந்த நிலையில் இருந்தாலும் தனயனால் அடையாளம் காணப்படவில்லை. அவனது மகள் அடையாளம் காணுகிறாள். உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை என்பது போல் தனயனின் தாய் பற்றிய உணர்வலைகளை எழுத்தாளர் எட்ட நின்று விபரித்தது போல் தோன்றுகிறது. தனயன் பாத்திரத்தின் உணர்வுகளை அவருடைய மனதினூடாகவும் காட்டியிருந்தால் கதை இன்னும் மிக நன்றாக இருந்திருக்கும்.

புலம்பெயர் நாட்டில் பிறந்த மதலையின் மனிதத்துவம் மெச்சத்தக்கது. இச் செயற்பாடு அங்கு பிறந்த ஏனைய குழந்தைகளுக்கு முன்னுதாரமாகும் என்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். மேற்கூறப்பட்ட கதைகளில் ஆசிரியர் கதைகளின் கருப்பொருளை விரித்துக் கூறி அவர் உணர்த்த விரும்பும் இலட்சியத்தை அக்கருப் பொருட்களினூடாக அதனின்று மாறுபடாமல் வெளிக்கொணர்ந்துள்ளார். வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களைக் கோர்வையாக்கி ஒழுங்குபடுத்தி மையக்கருவுடன் பின்னிக் கதைகளை நகர்த்தியது மட்டுமல்லாமல் கதைகளை எங்கே உச்சம் தொட வைப்பது, எங்கே திடீரென்று ஆச்சரியத்தைப் புகுத்துவதென்று துல்லியமாகக் கணித்து வாசகர்களின் மனதைத் தொட்டுள்ளார்.

கதையின் கால அமைவு

நவீன உலகம் இயந்திரமாகிவிட்டது. இத்தகைய வாழ்க்கைச் சூழலில் ஆழ்ந்து படித்கது அனுபவிக்கக்கூடிய பொறுமை மக்களுக்கில்லை. கதைகள் படிப்பது பொழுதுபோக்கு என்ற நிலைமாறி அவர்கள் குறுகிய நேரத்தில் புதுமையைக் காணத்துடிக்கின்றனர். சிறுகதையில் காலம் - அக்கதையை வாசிக்க எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதென்பது மட்டுமல்ல அது அதிலமைந்த உட்பொருளைப் பொறுத்ததாகவும் கையாளும் விதத்தைப் பொறுத்ததாகவும் அமையும் . சிறுகதையின் காலம் கற்பனையாகவே கையாளப்படுவது ஆசிரியரின் திறமைக்குச் சான்றாகும்.

கதாசிரியர் இந்தவகையில் மேற்கூறப்பட்ட நான்கு கதைகளையும் வாசகர் குறைவாகவும் இல்லை, மிகையாகவும் இல்லை என்று கூறுமளவிற்கு தான் சொல்ல வந்த கதையின் கருப்பொருளை கலைக்காமல் காலத்தைக் கற்பனையாகக் கையாண்டு செம்மையாக அதிக நீட்சியில்லாமல் நிறைவு செய்திருக்கிறார்.

பாத்திர அமைப்பு

படைப்பில் முன்னிலை வகிப்பது பாத்திரங்களாகும். சிறுகதை என்பது சிறியகதை. ஆதலால் அதில் அவசியமற்ற பாத்திரங்களைப் படைக்க முடியாது. ஆசிரியர் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தே படைக்க வேண்டும். சிறுகதையில் குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்கள் அமைவதே சிறப்பு. படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களுக்காக அநேக விதமான மனித இயல்புகளையும் தெரிந்த வைத்திருக்க வேண்டும். குரு அரவிந்தன் அவர்கள் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நான்கு கதைகளிலும் பாத்திரங்களை கச்சிதமாகக் கையாண்டுள்ளார்.

புல்லுக்கிறைத்த நீர் என்ற கதையில் ஆசிரியர், மாணவன் ஆகிய இரண்டு பாத்திரங்களும், நங்கூரியில், அக்கா, கணவன், மனைவி அவர்களின் மகன் மற்றும் அக்காவின் மகள் ஆகிய ஐந்து பாத்திரங்கள் படைக்கப்பட்டாலும் அக்கா என்ற பாத்திரத்தைத் தவிர மற்றைய பாத்திரங்களின் இயங்கு நிலைகளை மட்டுப்படுத்திக் கதையை திறம்பட நகர்த்தியுள்ளார். பனிச்சறுக்கல்கள் கதையில் கணவன், மனைவி பிரதான பாத்திரங்களாகக் காண்பிக்கப்பட்டு அதேநேரம் நண்பர்கள் பாத்திரங்களை தேவைக்கேற்ப கையாண்டு கதையை நிறைவு செய்திருக்கிறார். உறவுகள் தொடர்கதை என்ற கதையில் தாய், மகன், மனைவி இவர்களின் மகள் என்றவாறு நான்கு பாத்திரங்களுடன் கதையை நகர்த்தியுள்ளார். மேற்கூறப்பட்ட பாத்திரங்களுக்கு ஏற்ப அவர்களுக்குரிய குணச்சித்திரங்களையும் எடுத்துக் காட்டி ‘இந்த மனிதரை எங்கோ பாத்திருக்கிறோம்’ என்று வாசகர் சொல்லுமளவுக்கு பாத்திரங்களைச் சிருஷ்டித்துள்ளார்.

பாத்திரப் பேச்சு

ஒரு பாத்திரத்தின் பண்பை விளக்கிக்காட்டும் சிறந்த கருவிதான் பேச்சாகும். ஆசிரியர்கள் பாத்திரங்களின் தரத்துக்கு ஏற்ப பேச்சை அமைக்க வேண்டும். படிக்கின்றவர் இந்தப் பாத்திரம் இப்படித்தான் பேசும். இதைத் தவிர வேறு வகையாகப் பேச முடியாது என்று கருத வேண்டும். மேற்குறிப்பிட்ட நான்கு கதைகளிலும் பாத்திரப் பேச்சானது யாழ்ப்பாணப் பேச்சு வழக்காக இருந்த போதும் கதாசிரியர் இலக்கணம் சார்ந்த பேச்சு முறையே அதிகமாகக் கையாண்டுள்ளார். இந்த மொழிநடையைத் தமிழ் அறிஞர்கள் தாயகத் தமிழ்நடை, புலம்பெயர் தமிழ்நடை என வகைப்படுத்துகின்றனர். (சதிவிரதன், ப – 15 முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்). இது தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சி நிலையெனக் கருதப்படுகின்றது. வாசகர்களும் புரிந்து கொள்ளக்கூடிய இவரது இத்தகைய வகைப்பாட்டை ஊடகங்களும் பேணிவருகின்றன.

கதை கூறும் முறை

பெரும்பாலும் யார் மூலமாகக் கதை கூறப்படுகிறது? ஆசிரியனுக்கும் கூறுகிறவருக்குமுள்ள தொடர்பு என்ன? என்பதே கதை கூறும் முறையாகும். ஆசிரியர் கதை கூறும் போது தான் எங்கேயும் உரைதராமல் படர்க்கையில் நின்று கதை கூறுவது சிறந்த முறையாகும். பனிச்சறுக்கல்கள் கதையில் கதாசிரியர் இந்த முறையைக் கையாண்டுள்ளார். புல்லுக்கிறைத்த நீர் என்ற கதையில் கதாசிரியர் தான் ஆசிரியர் என்ற பாத்திரமாகவும், நங்கூரியில் தம்பி என்ற பாத்திரமாவும், உறவுகள் தொடர்கதையில் தனயன் என்ற பாத்திரமாகவும் நின்று கதைப்போக்கிற்கு உதவுகிறார்.

சிறுகதை முடிவு

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கதைகள் அதன் வளர்ச்சிக்கேற்ப நிறைவு செய்யப்பட்டுள்ளன. இப்படித்தான் முடியப்போகிறது என்று படிப்போர் தெரிந்து கொள்ளாத வகையிலும், முடிந்த பின்னர் சிந்தித்து இது தான் சரியான முடிவென்று அவர்கள் ஒப்புக் கொள்ளும் வகையிலும் கதைகளை ஆசிரியர் நிறைவு செய்துள்ளது சிறப்பானது. சிறுகதைகள் என்றால் எப்படி அமையவேண்டும் என்பதற்குக் குரு அரவிந்தனின் இந்தச் சிறுகதைகள் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

முடிவுரை

புலம்பெயர் தமிழர் இலக்கியத்துக்கு குரு அரவிந்தனின் பங்களிப்பு இன்றியமையாதது. இவருடைய சிறுகதைகள் இவருடைய நேரான அனுபவத்தின் சித்திரிப்பாகத் திகழ்கின்றன. இவர் கதைகளில் கையாளும் கதைமாந்தர்கள் நமது அன்றாட வாழ்க்கையில் காணப்படுகிறார்கள். பெண்களின் பாத்திரச் சித்தரிப்பை மிகவும் கச்சிதமாகச் செய்திருக்கிறார் . ஆசிரியர் புலம்பெயர் நாட்டுச் சூழல்கள் கதைக் களங்களாகும் போது அங்கு சித்தரிக்கப்படும் பெண் பாத்திரங்களை முன்னேற்றச் சிந்தனையுள்ளவர்களாகப் படைத்தாலும், அவர்கள் மனிதவிழுமியங்களின் பெறுமானத்தை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டுமெனக் கூறாமல் கூறும் பண்பு நியாயிக்கத்தக்கது.

‘நங்கூரி’ என்ற கதை தாயகத்தின் முக்கியமான வரலாற்று ஆவணமாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. ஆக, சிறுகதை ஆக்கம் என்பது பொறுப்புள்ள சமுதாயப் பணி என்ற கருத்தை முன்னிறுத்தி எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தமது கதைகளால் வாசகர்களுக்கு உணர்வலைகளை ஏற்படுத்தும் அதேசமயம் இதுபோன்ற இன்னும் பல புதிய யுக்திகளைப் புகுத்தினால் மேலும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. புலம்பெயர் நாட்டுத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினருக்கு இவருடைய படைப்புகள் ஓர் ஆவணமாக, தாயக வரலாற்றை எடுத்தியம்புவனவாகவும், இவரது ஆக்கங்கள் மேலும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தி முக்கிய பங்காற்றுவதில் துணை நிற்பனவாகவும் அமைந்திருக்கின்றன என்பதற்கு இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

உசாத்துணை நூல்கள் :

குரு அரவிந்தன் (2019 ), சதிவிரதன்.மணிமேகலைப் பிரசுரம்-சென்னை

Kurunovelstory.blogspot.com

கோகிலா மகேந்திரன் (2014) ,சிறுகதையென்பது. கலை இலக்கியக் கழக வெளியீடு.

மு.முருகேஷ் – குரு அரவிந்தனின் மனதைத் தொட்ட எழுத்தின் பக்கங்கள்.





Kumudini Boat

 



                                          


Hello,

I would like to express my heartfelt gratitude to the following publications and media friends who have stood by me in sharing the suffering and sorrow of the Tamil people:

  • Vikatan Deepavali Malar (Nangoori)

  • Kalaimagal (Thayumanavar)

  • Kalki (Bodhi Maram)

  • Kumudham (Even if you forget, your heart will not forget)

  • Canada Udhayan (Kumudini)

  • Yugamayini (Mother's Children)

  • Thinnai (With the Dream of the Motherland)

  • PathivukalIniya Nandavanam, and all other supporting media outlets

Since justice has not been served even after 40 years, I am sharing this sorrowful story so that the younger generation will understand and remember.

வணக்கம். தமிழ் மக்கள் பட்ட அவலங்களைசோகத்தை எடுத்துச் சொல்ல என்னோடு துணைநின்ற விகடன் தீபாவளி மலர் (நங்கூரி) கலைமகள் (தாயமானவர்) கல்கி (போதிமரம்) குமுதம்  (மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா) கனடா உதயன் (குமுதினி ) யுகமாயினி (அம்மாவின் பிள்ளைகள்) திண்ணை (தாயகக் கனவுடன்) பதிவுகள் இனிய நந்தவனம் மற்றும் ஊடக நண்பர்களுக்கும்  இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

40 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காததால்,இளையதலைமுறையினர் அறிந்து கொள்ள இச்சோகக் கதையைத் தருகின்றேன்.

 

குமுதினி

குரு அரவிந்தன்



 
பார்வையிட்டோர்: 75,562

 

 

 

பகுதி-1 

செம்பைக் கையில் எடுத்தபோது கை நடுங்கியது. நெஞ்சின் படபடப்புத்தான் கையில் இறங்கியிருந்தது. நெற்றி வியர்வையைச் சால்வைத் துண்டால் துடைத்துக் கொண்டேன். கொஞ்ச நாட்களாக இப்படியான அதிகாலைக் கனவுகள் என்னை அடிக்கடி பலவீனப் படுத்திக் கொண்டே இருக்கின்றன. ‘நைட்மெயர்’ என்பதன் அர்த்தம் என்வென்று அனுபவப் பட்டபோது புரிந்தது.

 

இவளுக்காகவாவது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காலத்தை ஓட்ட வேண்டும் என்ற அற்ப ஆசையில் கொஞ்சம் கூடக் குறையவில்லை. கொஞ்சக் காலத்தை ஓட்டிவிட்டால்எப்படியாவது இவளை யாருடைய கையிலாவது ஒப்படைத்து விட்டு நிம்மதியாகப் போய்விடலாம் என்ற நப்பாசைதான் இன்றுவரை என்னை நடைபிணமாக வாழவைத்துக் கொண்டிருக்கின்றது.

அதிகாலைத் தூக்கம் கெட்டுப் போனதால் சாய்மனைக் கதிரையில் சரிந்தேன்.

இரவு முழுவதும் இரைச்சலோடு கொட்டிக் கொண்டிருந்த மழை சற்று ஓய்ந்திருப்பது போலத் தெரிந்தது. இப்பொழுதெல்லாம் மழையில் நனையவே பிடிப்பதில்லை. படுத்துக் கிடந்தால் பார்ப்பதற்கு யாருமில்லையே என்ற தனிமையின் விரக்தி வேறு. பிடிப்பே இல்லாத வாழ்க்கையாய் எதுவும் நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை என்றாகி விட்டது.

 

சாய்மனைக் கதிரையைவிட்டுமெல்ல எழுந்து யன்னலைத் திறந்து வெளியே பார்வையைப் படரவிட்டேன். கீழ்வானம் கறுத்தே இருந்ததால் மழை இன்னமும் ஒரு பாட்டம் அடிக்கலாம் என்பதுபோல தூரத்து மின்னல் பயம் காட்டிக் கொண்டிருந்தது. முற்றத்தில் விழுந்த தாழ்வாரத் தண்ணீர்பள்ளக்காணி நோக்கி மெல்லிய நீரோடையாய் நெளிந்து கொண்டிருந்தது.

 

மழைவா வெய்யில் போ’ சின்னவயதில் சிறுவர்களாக இருந்த காலத்தில் கூட்டமாக ஒன்று சேர்ந்து வகுப்பறை வாசலில் நின்று பாடிய பாடல்கள் மழையைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தன. வாடைக் காற்று வந்தால் அந்த வெட்டை வெளியெல்லாம் ஓடியோடிப் பட்டம் பறக்கவிடுவதும்புழுதியில் புரளுவதும்மழை பெய்தால் மழையில் நனைந்து வெள்ளம் அலம்புவதும் சிறுவர்களாய் இருந்த எங்களின் அன்றாட நிகழ்வாய்ப் போய்விடும்.

சில சமயம் சிறுமிகளும் எங்களுடன் இணைந்து கும்மாளம் போடுவதுண்டு. அந்தநாள் ஞாபகம் அடிக்கடி வரும்போதுபல இனிய நினைவுகளும் கூடவே பின்னிப் பிணைந்து வரும். தைப்பொங்கல்வருடப்பிறப்புதீபாவளிகார்த்திகை விளக்கீடு என்று பண்டிகைகள் வந்தால் சிறுவர்களாக இருந்த எங்களுக்குத்தான் கொண்டாட்டம். புத்தாடை அணிவதுபட்டாசு வெடிப்பதும்உறவினர் வீடுகளுக்குச் செல்வதும்ஊஞ்சல் ஆடுவதுபோர்த்தேங்காய் அடிப்பதும் எங்களுக்குப் பிடித்த முக்கிய நிகழ்வாக இருக்கும். அந்த நாட்கள் இனி வருமா என்ற ஏக்கம் அடிமனதில் இன்னமும் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றது.

 

யாராலுமே மறக்க முடியாத பள்ளிப் பருவத்து இனிய வசந்த காலங்கள் ஒருபக்கம்யுத்தம் வந்து எங்களிடம் பறித்தெடுத்த எங்கள் இளமைப் பருவத்தின் நினைவுகள் மறுபக்கம் என்று வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு இன்று இந்த வாழ்க்கையை வாழப்பழகிக் கொண்டாகி விட்டது.

 

இங்கே எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. மரக்கிளைகளில் கூடு கட்டிக் குதூகலமாய் வாழ்ந்து வந்த குருவிகளின் கூடுகள் எல்லாம் புயல் வந்து அடித்து உடைத்துக் கலைக்கப்பட்டது போல இனக்கலவரம் என்ற போர்வையில் ஈழத்தமிழர்களின் கூடுகள் எல்லாம் சிதைக்கப்பட்டதால்அமைதியான இந்த மண் இப்போது பிணம் தின்னிக் கழுகுகளின் சுடுகாடாய் போய்விட்டது. கடந்த காலத்தை இரைமீட்டிப் பார்த்தால்பள்ளிப் பருவத்து இனிய நினைவுகளைத்தவிரஅதன்பின் வேறு எதுவுமே மனம்விட்டுச் சொல்லிச் சந்தோஷப்படும் படியாக இதுவரை அமையவில்லை. மனதில் ஏதோ இனம்புரியாத பயம் குடிகொண்டதால் எதையுமே மகிழ்வோடு பார்க்க முடிவதில்லை.

காலவோட்டத்தில் எல்லோருமே அமைதியாகிவிட்ட பிரமை எனக்குள் ஏற்பட்டிருந்தது. ஆட்சியாளர்களைத் தவிர வேறுயாரும் வாயைத் திறக்கப் பயப்பட்டார்கள். அமைதியாய் வாழ்ந்த எங்கள் இனிய குடும்பங்களை சின்னாபின்னமாகச் சிதைத்தவர்கள் யார் என்பதைக் கூட அறிந்து கொள்ள இடம் தராத நிலையில் இந்த நாட்டு ஜனநாயகம் தூங்கிக் கொண்டிருந்தது. இல்லைஇல்லை தூங்குவதுபோலஇங்கே எதுவுமே நடக்காதது போலஉலக நாடுகளுக்கு நடித்துக் கொண்டிருந்தது.

 

தாத்தா எனக்கொரு கப்பல் செஞ்சுதாங்கோ’ சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தேன். கையிலே ஒரு காகிதத்தைப் பிடித்தபடி அருகே வந்து நின்றாள் எனது பேர்த்தி தரணி.

மேசையிலே சாப்பாடு எடுத்து வைச்சேனே சாப்பிட்டியாம்மா?’

சாப்பிட்டேன் தாத்தாஇப்ப எனக்கு ஒரு கப்பல் செஞ்சு தாங்கோ’ கையிவே இருந்த காகிதத்தை மீண்டும் நீட்டினாள்.

காகிதத்தை வாங்கி இரண்டாக மடிக்கத் தொடங்கினேன். காகிதத்தில் கப்பல் கட்டும் கலையைச் சின்ன வயதில் பள்ளியில் கற்றுக் கொண்டது இப்போது பயன்பட்டது. காகிதத்தை வாங்கி அதை இரண்டாக மடிக்கும் போதுதான் மங்கிய பார்வையில் அந்த வரிகள் கண்ணில் பட்டதுஅதில் இருந்த எழுத்துக்கள்அதை நிச்சயம் செய்வதற்காகக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு மீண்டும் பார்த்தேன். அதேதான்..!

 

என்னூர்க் கொண்டைச் சேவலும்

காக்கையும் கூட மார்பில்

அடித்து மரண ஓலமிட்ட நாளது…!’

 

இந்த வரிகளை ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் மயிர்க்கூச்செறியும்பழைய நினைவுகளை மீட்டுஇதயத்தை உறைய வைக்கும். எப்படி மறக்க முடியும் என் வாழ்வில் வாழ்நாள் எல்லாம் வலியைப் புதைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்?

எங்கை எடுத்தனி இந்தப் புத்தகத்தை’ பதட்டத்தோடு குரலை உயர்த்தி நான் கேட்கவே தரணி பயந்து போனாள்.

முகத்தைப் பயந்தது போல வைத்துக் கொண்டுபுத்தகம் அடுக்கியிருந்த அலுமாரியை நோக்கிக் கையை மட்டும் நீட்டிக் காட்டினாள். புத்தக அடுக்குக் குலைந்து சில புத்தகங்கள் நிலத்தில் விழுந்து கிடந்தன.

என்னம்மா இது நான் பத்திரமாய் எடுத்து வைச்ச புத்தகமெல்லேஅதை எடுத்துக் கிழிக்கலாமா?’ என் குரலில் சற்று கடுமை இருந்தது.

அவள் மிரண்டுபோய் என்னைப் பார்த்தாள். தவறு செய்து விட்ட உணர்வில்அழப்போவதற்கான அறிகுறிகள் அவள் முகத்தில் தெரிந்தன.

சொறி தாத்தா’ விம்மலூடாக வார்த்தைகள் உதிர்ந்தன. தாயில்லாப் பிள்ளை என்று இவளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டேனோ?

இனிமேல் என்னைக் கேட்காமல் அதில இருந்து ஒண்டும் எடுக்கவேண்டாம்’

கொஞ்சம் கண்டிப்போடு கூறவேசரி என்று தலையை மட்டும் அசைத்தாள் தரணி.

நான் புத்தக அலுமாரியில் கவனமாக அடுக்கி வைத்த புத்தகங்களைப் பார்த்தேன். நாட்டார் பாடல் இடம் பெற்றிருந்த வடஅமெரிக்க தமிழ் சங்கத்தின் ஆண்டு மலர் ஒன்று கீழே விழுந்து கிடந்;தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்.

நாங்கள் இருந்த இடம் நாலு பக்கத்தாலும் தண்ணீர் சூழ்ந்திருந்ததால் படகுகளுக்கும் எங்களுக்கும் நிறையவே தொடர்பு இருந்தது. வல்வெட்டித்துறை பாய்மரக் கப்பல்கள் அந்த நாட்களில் இங்கே வந்து போவது பற்றி அந்த நாட்டார் பாடல் குறிப்பிட்டிருந்தது. அதுமட்டுமல்லகாற்று மாறும் நாட்களில் பாதுகாப்பிற்காக இங்கே கொண்டு வந்து படகுகளைக் கரையில் கட்டுவாதாகவும் குறிப்புகள் அதில் இருந்தன. முக்கியமான நாட்டார் பாடல் என்பதால் ஆவணமாக இருக்க வேண்டும் என்று இப்படியான புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தேன். அந்தப் பாடலை மீண்டும் படித்துப் பார்த்தேன்.

 

வல்வெட்டித்துறைப் பாய்மரக்கப்பலில்

வந்து குவியுது பண்டமடி

வாய் நிறையத் திண்டு வெத்திலை போடலாம்

வாருங்கோ கும்மி அடியுங்கடி

வத்தை சலங்கு கட்டுமரம் தோணி

வள்ளங்கள் வந்து குவியுதடி

எத்தனை பண்டங்கள் ஏந்தி வருகுது

எல்லாமே கொள்ளை லாபமடி!

கோலாட்டம்காவடிகும்மிகரகாட்டம் என்று எங்கள் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் நடனங்கள் பற்றியும்அந்த நாட்களில அனேகமாக முதியோர்கள் வெற்றிலைபாக்குப் போடுவது வழக்கமாக இருந்ததைப் பற்றியும் இந்த நாட்டார் பாடல் எடுத்துச் சொன்னது.

அக்காலத்தில் சிகரட் பாவனையில் இல்லாததால் முதியவர்கள் சிலர் புகையிலையில் செய்யப்பட்ட கருப்பு நிறமான சுருட்டைப் புகைத்தார்கள். புகையிலைவெற்றிலை யாழ்ப்பாணத்தில் நன்றாக விளைந்தது. வத்தைசலங்குதோணிவள்ளம்கட்டுமரம்டிங்கிமச்சுவா என்றெல்லாம்

படகுகளைச் செல்லமாகப் பெயர் சொல்லி அழைப்பர். அதிலிருந்த ‘அன்னபூரணி’ கப்பலின் படம் கப்பல் கட்டிய தமிழர்களையும்கப்பலோட்டிய தமிழர்களையும் அவர்கள் படைத்த சாதனைகளையும் நினைவுக்குக் கொண்டு வந்தது.

கட்டுமரம்அணைக்கட்டு போன்ற பல சொற்கள் தமிழில் இருந்துதான் ஆங்கில் மொழிக்குச் சென்றன என்பதை அகராதியில் உள்ள குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

இலங்கையின் வடபகுதியில் இருக்கும் மிகப்பழமை வாய்ந்த மாவிட்டபுரம் கோயில் மிகவும் பிரபலமானது. சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லி யாழ்ப்பாணம் வந்து வழிபட்ட இடம் மட்டுமல்ல வெற்றிலைக்குப் பெயர்போனதாகவும் இருந்தது. குதிரைமுகநோய் காரணமாக குதிரையின் முகவடிவம் போல முகக்கட்டிகளால் நீண்டு இருந்த முகத்தை மூலிகை மருந்தின் உதவியோடு நகுலேஸ்வரத் தீர்த்தத்தில் தினமும் குளித்து அழகிய முகத்தைப் பெற்றது போன்ற ஐதீகக் கதைகள் நிறையவே உண்டு. அதனால்தான் மா என்றால் குதிரை என்று பொருள் படும் என்பதால், ‘மா – விட்ட – புரம்’ என்ற பெயர் இந்தத் தலத்திற்குக் கிடைத்தது. சோழநாட்டில் இருந்து மாவை முருகக்கடவுளின் ஊருவச் சிலை வந்து இறங்கிய கசாத்துறை என்ற துறைமுகப் பட்டினம் காங்கேயன் துறையானது. தமிழர்கள் இப்படியான உண்மைச் சம்பவங்களை ஆவணப்படுத்தத் தவறியதால்தான் இவை எல்லாம் ஆய்வுகளுக்கு எடுபடாமல் ஐதீகக் கதை வடிவிலேயே விடுபட்டு விட்டன.

 

நான் கவனமாகச் சேகரித்து வைத்திருந்த இன்னுமொரு நூலான அந்த மாவிலிமலரில் இருந்துதான் அந்தக் காகிதத்தை அவள் கிழித்து எடுத்திருக்கிறாள். அந்த மலரின் அருமை இந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஈழத்தமிழரின் சோகவரலாறு ஒன்றைவாழ்நாள் எல்லாம் மறக்க முடியாத துயரத்தை ஆவணமாக்கிய புத்தகமது. அதைக் கவனமாகப் பாதுகாத்து அடுத்த தலை முறையிடம் ஒப்படைக்க வேண்டியது எங்கள் கடமையல்லவா. அதற்காகத்தான் அதைப்பத்திரமாகப் பாதுகாத்து வைத்தேன். ஆனாலும் குழந்தை மேல் கோபப்படுவதில் அர்தமில்லை என்பதால்அவளைச் சமாதானப் படுத்தி வேறு ஒரு காகிதத்தை எடுத்து அவள் கேட்டபடியே கப்பல் செய்து கொடுத்தேன்.


குமுதினி

 

 

பகுதி-2

 



 

காகிதக் கப்பலைக் கையிலே வாங்கிக் கொண்டு முற்றத்தில் ஓடும் வெள்ளத்தில் மிதக்கவிடுவதற்காகத் துள்ளிக் கொண்டு வெளியே ஓடினாள் தரணி. மழையில் நனைந்து வருத்தத்தைத் தேடிக் கொள்வாளோ என்ற பயத்தில் எட்டிப்பார்த்தேன். அவளோ படியில் இருந்தபடி ஓடும் வெள்ளத்தில் எட்டிக் கப்பலை மிதக்க விட்டாள். அந்தக் காகிதக் கப்பல் மெல்ல அசைந்தாடி வெள்ளத்தில் மிதந்து செல்வதைப் பார்த்து தரணி மகிழ்ச்சியில் கைதட்டிச் சிரித்தாள். வெள்ளை மனசு படைத்த அந்தக் குழந்தை உள்ளத்தின் சோகம் அந்தச் சிரிப்பில் கரைந்து போயிருந்தது.

கள்ளம் கபடமற்ற அந்தக் குழந்தையால் எல்லாவற்றையும் மறந்து சிரிக்க முடிகின்றதுஆனால் நடந்த சம்பவங்களை என்னால் முடியவில்லையே!

காகிதக் கப்பல் முற்றத்து வெள்ளத்தில் தத்தளிப்பதைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் எரிமலைபோல் குமுறிக் கொண்டு வெளியே வந்தன. இதேபோலத்தான் தரணியின் அம்மா செல்வியும் சின்னவயதிலே ஏதாவது செய்துவிட்டு ‘அப்பா இங்கே பாருங்களேன்’ என்று கைகெட்டிச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பில் மயங்கிய அந்த நாட்கள் எங்கே?

அப்போது நான் அரசாங்க உத்தியோகம் காரணமாக கொழும்பிலே இருந்தேன். எல்லா இனத்தவரும் வேற்றுமை இன்றி ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். அரசியல் வாதிகளால் பேரினவாதம் பேசினால்தான் அரசாள முடியும் என்றதொரு நிலை நாட்டில் உருவாக்கப்பட்டது. அது உச்சக் கட்டத்தை அடைந்த போது, 1958ம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி எங்களால் மறக்க முடியாத ஒரு தினமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பத்து வருடங்கள் கூட முடியாத நிலையில் பேரினவாதம் நாட்டில் தலை தூக்கியிருந்தது. பேரினவாதிகளால் தமிழ் இன ஒழிப்பு நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டபோதுஉத்தியோக நிமிர்த்தம் வெளி மாகாணங்களில் தங்கி இருந்த நிராயுத பாணியான தமிழர்கள் பலர் பாதிக்கப்பட்டது போலநானும் எனது மனைவியும் நிறையவே பாதிக்கப்பட்டோம். உயிருக்குப் பயந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒளித்து ஓடினோம்.

ஓளிவதற்கு இடம் கிடைக்காததால்அகதி முகாமில் தஞ்சம் புகுந்தோம். சற்றுக் கலவரம் ஓய்ந்ததும் வடக்கே இருந்த எங்கள் சொந்த மண்ணுக்கு எங்களை அனுப்பி வைத்தார்கள். அன்று எல்லாவற்றையும் இழந்து அகதிகளாய் வெறுங்கையோடு சொந்த மண்ணுக்கு வந்த நினைவுகள் இன்னமும் எங்கள் மனதை விட்டு அகலவில்லை. நிம்மதியாய்க் குடியிருக்க வடக்குக்கிழக்கில் நாங்கள் பரம்பரையாய் வாழ்ந்த சொந்த மண்ணாவது இருக்கிறதே என்ற ஒரே ஒரு ஆறுதல்தான் அப்போது எங்களுக்கு மிஞ்சி இருந்தது.

வேலையை இழந்து வடக்கில் இருந்த சொந்த மண்ணில் வந்து குடியிருந்தோம். இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும்கொஞ்சம் ஆறுதல் தருவதுபோல அந்த நிகழ்வு அமைந்தது. ஆமாம்எத்தனையோ பாதிப்புகளுக்கு மத்தியில் நகர்ந்து

கொண்டிருந்த எங்கள் குடும்ப வாழ்க்கையின் வசந்தமாய் ஆசை மகள் செல்வி வந்து பிறந்தாள்.

எங்கள் குடும்பம்எங்கள் வாழ்க்கைஎங்கள் இனம்எங்கள் மொழி என்று நாங்கள் சொந்த மண்ணில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தோம். காலம் கனிந்ததும் மகள் செல்விக்குத் திருமணம் செய்து வைத்தோம். அவர்களும் அரச உத்தியோகம் என்பதால் கொழும்பில் குடியேறினர். காலம் மெல்ல நகர்ந்ததுஆனால் பேரின வாதிகளால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்கதைபோல 1958; ஆம் ஆண்டு எங்களுக்குக் கொழும்பில் என்ன நடந்ததோ, 1977 ஆம் ஆண்டு எங்கள் நண்பர்களுக்கு என்ன நடந்ததோஅதே கதைதான் எனது மகளுக்கும் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் மீண்டும் நடந்தது. அதனால்தான் அந்த மாதத்தைக் ‘கறுப்பு யூலை’ என்று உலகமே சொல்கிறது. தொடக்கத்தில் தமிழர்களின் உடமைகளைக் கொள்ளை அடித்தவர்கள் 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் உயிர்க் கொலைகளிலும் ஈடுபட்டனர்.

தாய்மை அடைந்த நிலையில் இருந்த செல்வியும்அவளது கணவனும் மீண்டும் அடைக்கலம் தேடி ஓடவேண்டி வந்தது. இறுதியில் அகதி முகாமிற்குச் சென்று தஞ்சமடைந்தார்கள். தரைவழிப்பாதை ஆபத்து நிறைந்தது என்பதால்இந்தியாவில் இருந்து உதவிக்கு வந்த ‘நங்கூரி’ என்ற கப்பலில் கொழும்பில் இருந்து வடமாகாணத்தில் இருந்த துறைமுகப்பட்டினமான காங்கேயன்துறைக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். அழகன் முருகனுக்கு காங்கேயன் என்றொரு பெயரும் இருக்கின்றது. மாவையில் குடிகொண்டிருக்கும் மாவைக்கந்தன் இங்கே வந்து கரை இறங்கியதால்இந்த இறங்குதுறை காங்கேசந்துறை என்று பெயர் பெற்றது.

நாட்டில் அமைதி திரும்பி மருமகன் மீண்டும் உத்தியோக நிமிர்த்தம் கொழும்பு சென்றார். செல்வியோ கொழும்பு செல்ல மறுத்து விட்டாள். 1983 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் அவள் நேரடியாகப் பாதிக்கப் பட்டதால்அது அவளை நிறையவே மனரீதியாகப் பாதித்திருந்தது. மகள் செல்வியும்பேர்த்தி தரணியும் எங்களோடு ஊரில் இருந்ததால் எங்களுக்கும் பொழுது நன்றாகவே சென்றது. விடுமுறைகள் கிடைக்கும் போதெல்லாம் மருமகன் கொழும்பில் இருந்து ஓடியோடி வருவார்.

சொந்த மண்ணிலே எந்தப் பயமும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்த போதுதான் மீண்டும் ஆக்கிரமிப்பு இராணுவம்கேட்பார் யாருமில்லை என்ற துணிவில் தமிழரின் சொந்தபாரம்பரிய மண்ணில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. விரும்பிய இடமெல்லாம் முகாம்களை அமைத்துஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும்இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் தமிழர் வாழ்ந்த நிலங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு அரசும் ஆட்சி மாறும் போதெல்லாம் சிறுபான்மையினரான தமிழர்கள் தான் பெரிதாகப் பழி வாங்கப் பட்டார்கள்.

கொழும்பிலே தனித்துப் போயிருந்த கணவனை நினைத்து செல்வி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். இப்படித்தான் அன்று இரண்டாவது குழந்தையை வயிற்றிலே சுமந்து கொண்டிருந்த செல்வியின் மனசும் உடம்பும் சோர்ந்து போயிருந்தது. தாய்மை என்பது ஒரு பெண்ணுக்கு ஆயிரமாயிரம் கனவுகள்கற்பனைகளோடு வாழ்ந்து சாதிக்கும் ஒரு மகிழ்ச்சியான காலம். அதைக்கூட நிம்மதியாய் அனுபவிக் முடியாமல் எத்தனை பெண்கள் இந்த மண்ணில் அல்லற்பட்டார்கள் என்பதைக் காலம்தான் எடுத்துச் சொல்லும்.

என்னம்மா செல்விஏன் படுத்திருக்கிறாய்சுகமில்லையா?’

இல்லையப்பா ஒன்றுமில்லை!’ செல்வி மெல்ல எழுந்து உட்கார்ந்தபடி பதிலளித்தாள். செல்வி ஒருநாளும் இப்படிச் சோர்ந்து போய்ப் படுத்திருந்ததில்லை. அவள் முகம் வாடிப்போயிருந்தது.

கொண்டுபோய் வைத்தியரிடம் காட்டு என்று சொன்னால் கொஞ்சமும் கேட்கிறாள் இல்லைநான் சொல்லி அலுத்துப்போச்சு. நீங்களாவது சொல்லுங்கோ..!’ மனைவி சமையலறையில் இருந்தபடி முணுமுணுத்தாள்.

செல்வியின் வேதனை எனக்குப் புரியும். தாய்மைக் காலத்தில் கணவன் அருகே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எவ்வித தப்பும் இல்லை. ஆனாலும் என்ன செய்வது பொருளாதார நிலை காரணமாக அவ்வப்போது கணவனைப் பிரிந்தே இருக்க வேண்டிவந்தது.

மனைவியிடம் தரணியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு செல்வியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். எவ்வளவோ கஷ்டப்பட்டு விருப்பம் இல்லாமல்த்தான் அவள் வெளிக்கிட்டு என்னோடு வந்தாள். எங்கள் வீடு இருந்த இடம் வசதி குறைந்த சிறிய தீவு என்பதால்வைத்திய சாலைக்கு நீண்ட தூரம் படகு மூலம் செல்ல வேண்டும். எங்கள் தீவு ஒடுங்கிய நீண்ட தீவாக இருந்ததால்நெடுந்தீவு என்ற காரணப் பெயர் வந்தது. வீட்டிற்கு அருகே உள்ள மாவிலித்துறையில்தான் நாங்கள் படகேறினோம்.

படகுச் சவாரி என்றால் செல்விக்கு கொள்ளை ஆசை. படகுச் சவாரி என்றதும் தான் தாய்மைக் கோலத்தில் இருப்பதைக்கூட மறந்து ஒரு துள்ளல் துள்ளிக் கொண்டு வந்தாளே அன்றுஅந்தக் காட்சிதான் இன்றும் என் கண்ணுக்குள் நிற்கிறது. மகிழ்ச்சியின் எல்லை தொட்ட அவளை நான் பார்த்த கடைசிப் பார்வை அதுதான் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஐயா வாங்க’ என்று வரவேற்ற படகோட்டி வழிவிட்டு விலகி நின்றான். ஊரிலே எங்கள் குடும்பத்திற்கு மதிப்பிருந்ததால் எங்கு சென்றாலும் இப்படியான

மரியாதைகள் அடிக்கடி கிடைப்பது வழக்கம். நாங்கள் படகில் ஏறி உட்கார்ந்தோம். தெரிந்த பல முகங்கள் எங்களைப் பார்த்து குசலம் விசாரித்தன. செல்வியின் சிரித்த முகத்தைவிட தாய்மையின் வெளிப்பாடுதான் அங்கே அதிகம் தெரிந்தது.

என்ன பிள்ளையாம்?’

தெரியாது!’

வயிற்றைப் பார்க்க ஆம்பிளைப் பிள்ளை போலதான் இருக்குஆசைக்கு ஒரு பெண் பெத்திட்டாய்இனியென்ன ஆஸ்திக்கு ஒரு ஆண் கிடைத்தால் போதும்தானே?’

 

செல்வியின் முகம் வெட்கத்தால் சிவந்தது. இரண்டு தலை முறையாக ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை என்பதால் அதை நினைத்துசெல்வி வெட்கப்பட்டுச் சிரித்தாள்.

 

குமுதினி என்ற பெயரைக் கொண்ட இந்தப் படகைத்தான் தினசரி போக்குவரத்திற்குப் பயன்படுத்தினார்கள். சாதாரண ஒரு படகின் பெயர் இன்று எல்லோராலும் அறியப்பட்ட பெயராக இருப்பதற்கு அன்று நடந்த ஒரு சம்பவம்தான் காரணமாக இருந்தது. நிறையப்பேர் உட்கார்ந்து பயணம் செய்யக்கூடிய வசதி படைத்ததாகப் படகு இருந்தது. காற்றிலே பறக்கும் விமானம் போல தண்ணீரைக் கிழித்துக் கொண்டு குமுதினி மிதந்து செல்லும் அழகே அழகுதான் என்று இதில் பயணம் செய்தவர்கள் சொல்வதுண்டு. ஒரு தாயைப்போல எங்களைத் தினமும் சுமந்து செல்வதால்தான் குமுதினி என்று பெண்ணின் பெயரை அந்தப் படகிற்கு வைத்தார்களோ தெரியாது.

 

அலைகளின் தாலாட்டில் குமுதினி மெல்ல ஆடி அசைந்து தண்ணீரைக் கிழித்துக் கொண்டு அருகே இருந்த நயினாதீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நயினாதீவில்தான் புகழ்பெற்ற நாகபுசணி அம்பாள் குடியிருந்தாள். கடல் காற்று இதமாக முகத்தைத் தழுவசெல்வியின் கூந்தல் முன் நெற்றியில் விழுந்து முகத்தை மறைக்கஅதை லாவகமாக அவள் பின்தள்ளி விட்டாள். காலை நேரத்து தெளிந்த வானம்போலதாய்மையின் பூரிப்பு அவளது முகத்தில் பளீச்சென்று தெரிந்தது. அதைவிட அவளது புன்னகைஎன்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாததுஅப்படி ஒரு வசீகரம்.

 

வசதிகளோடு கூடிய வைத்தியசாலை ஒன்றும் அருகே இல்லாததால்தான் நீண்ட தூரம் படகில் பயணம் செய்துதான் யாழ்ப்பாண நகரத்தில் இருந்த பெரிய ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய நிலை இந்த ஊர் மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. சிரித்த முகங்களோடு கலகலப்பாய்ப் படகில் பயணம் செய்த அவர்களுக்கு நடுக்கடலில் விதி என்ற மாயை காத்திருந்தது அப்போது தெரியாது.



குமுதினி

 

பகுதி-3 

 



 

 

நெடுந்தீவு என்றதும் எல்லோருக்கும் மட்டக்குதிரைதான் ஞாபகம் வரும். இங்குள்ள ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு தென்னிந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் அதாவது 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அழகான தீவு என்பதால் தென்னிந்திய மன்னராட்சிக் காலத்தில் அடிக்கடி சேரசோழபாண்டியர்களின் படைஎடுப்புக்கள் நடந்தபோது இந்தத் தீவுதான் முக்கிய போக்குவரத்து மையமாகவும்தளமாகவும் இருந்தது. முற்காலத்தில் இங்கு மேற்குக் கரையில் இருந்த பெரியதுறை என்ற இடத்தில் இருந்து இந்தியாவிற்குக் கடல் வழிப்பாதை இருந்தது. ஆனால் ஓல்லாந்தர் காலத்தில் அவர்களால் இது தடைசெய்யப்பட்டது.

வசதிகள் அதிகம் இல்லாததால்படகு மூலம் பயணித்துத்தான் வெளியுலகோடு தொடர்பு கொள்ள வேண்டியதாக இருந்தது. சுமார் 18. 3 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவில் இருந்துயாழ்ப்பாண பட்டணத்திற்குச் செல்வதென்றால் புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவானுக்குப் படகில் சென்று அங்கிருந்து பண்ணைப் பாலம் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது.

செல்விக்குக் கதை கேட்பதென்றால் நிறையவே ஆர்வம் இருந்தது. சரித்திரமாஅரசியலாசினிமாவாவிளையாட்டா எல்லாத் துறையிலும் அறிவை வளர்த்திருந்தாள். அவளது சின்ன வயதில் இருந்தே அவளுக்கு ஆவணப் படுத்தப்படாத எங்கள் சரித்திரத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றேன். கேள்வி மேல் கேள்வி கேட்பாள்நானும் சலிக்காமல் பதில் சொல்வேன்.

நாகர் என்றால் யார்நாகவழிபாட்டுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு எல்லாளன் எங்கேயிருந்து ஆட்சி செய்தான்பொலநறுவைக்காலம் என்றால் என்னபொலநறுவையில் உள்ள இந்துக் கோயில்கள் ஏன் கவனிக்கப்படாமல் அழிந்த நிலையில் இருக்கின்றனமன்னராட்சியில் இருந்துபோத்துக்கேயரின் ஆக்கிரமிப்பு தொடக்கம்சங்கிலியன்பண்டாரவன்னியன்எல்லாளன் என்று இன்றுவரை அவள் எங்கள் சரித்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்தாள்.

இலங்கையை ஆண்ட தமிழ் அரசர்களிடம் இருந்து போத்துக்கேயரால் கைப்பற்றப்பட்ட தமிழர் வாழ்ந்த பிரதேசங்கள் எல்லாம் எப்படி ஒல்லாந்தரின் கைகளுக்குச் சென்றடைந்தனஅதன்பின் ஒல்லாந்தரிடம் இருந்து ஆங்கிலேயரிடம் எப்படி சென்றடைந்தன என்பதை எல்லாம் படித்தும் கேட்டும் அறிந்திருந்தாள்.

பஞ்சஈஸ்வரங்களில் ஒன்றான இந்துக்களின் தொண்டீஸ்வரம் எப்படி போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு கத்தோலிக்கரின் கைவசமாகிப் பின் பௌத்தர்களிடம் சென்றது என்பதை எல்லாம் சொல்லி இருக்கின்றேன். ஆங்கிலேயர் தங்களின் நிர்வாக வசதிக்காக இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் எதற்காகக் கொண்டுவந்தனர்,

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர மடைந்தபோது தமிழர்களின் நிர்வாகப் பகுதிகளைத் தமிழரிடம் பிரித்துக் கொடுக்காமல் ஜனநாயகம் என்ற பெயரில் சிங்களவரிடமே கொடுத்து விட்டுச் சென்றதனால் எப்படிச் சிறுபான்மை இனத்தவர் பாதிக்கப்பட்டனர்இதனால்தான் ஜனநாயக நாடு என்று சொன்னாலும்காலப்போக்கில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்கள் பெரும்பான்மை இனமான சிங்களவர்களால் வஞ்சிக்கப்பட்டு எப்படி ஓரம் கட்டப்பட்டனர் என்பதை எல்லாம் செல்வி அறிந்து வைத்திருந்தாள்.

1983ம் ஆண்டு நடைபெற்ற தமிழின ஒழிப்பில் பாதிப்படைந்து நொந்துபோயிருந்த தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருந்தது. 1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி ஈழத் தமிழர்களால் மறக்க முடியாத ஒரு சோகதினம். என்ன நடக்கப் போகிறதுமானிடர்கள் எதுவும் செய்யத் துணிந்தவர்கள் என்பது கூடத் தெரியாமல்ஆதவனின் இதமான அணைப்பில் கடலன்னை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அன்று காலைதான் நானும் எனது மகள் செல்வியும் குமுதினி என்று பெயர் சூட்டப்பட்ட படகில் நெடுந்தீவில் உள்ள மாவிலித்துறையில் இருந்து காலை நேரம் நயினாதீவு நோக்கிப் பயணம் செய்தோம். வழமைபோல படகு தண்ணீரைக் கிழித்துக் கொண்டு ஆடியசைந்து சென்றது. உல்லாசப் படகுப் பயணம் போல செல்வி வெண்நுரையாய்ப் பிரிந்து செல்லும் கடலலையின் அழகை இரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

திடீரென எங்கள் படகின் வேகம் குறைந்தது. ஏன் படகின் வேகம் குறைக்கப் பட்டது என்பதை அறியும் ஆவலோடு வெளியே எட்டிப் பார்த்தேன். கடற்படைக்குச் சொந்தமான கண்ணாடிப் படகு ஒன்று எங்கள் படகைச் சுற்றித் தண்ணீரில் வட்டமடித்தது. சாதாரணமாக கடற்படையின் கண்காணிப்புக்குள் உட்பட்ட கடலாகையால் வழமைபோல அவர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள் என்று எல்லோரும் அசட்டையாக இருந்தார்கள். பொதுவாக அவர்கள் கையசைத்துக் காட்டிவிட்டுப் போய்விடுவார்கள். இன்று ஒருநாளும் இல்லாத அதிசயமாய் எங்கள் படகு நடுக்கடலில் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டது. என்ன நடந்திருக்கும் என்ற ஆவலில் வெளியே எட்டிப் பார்த்தேன்.

கண்ணாடிப் படகில் கடற்படைச் சிப்பாய்கள் சிலர் சிரித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவனின் கையிலே மதுப்புட்டி ஒன்று  இருந்தது. சிலர் நீல நிறத்தில் நீண்ட காற்சட்டை அணிந்திருந்தார்கள். வேறு சிலர் நீலநிறத்தில் கட்டைக் காற்சட்டை அணிந்திருந்தார்கள். கடற்படையினர் சாதாரணமாக கடமையில் இல்லாத ஓய்வு நேரத்தில் அணிந்திருக்கும் ரீசாட்டை அவர்கள் எல்லோரும் அணிந்திருந்தார்கள். சுத்தமான சிங்கள மொழியில் பேசிக்கொண்டு ஒவ்வொருவராகப் படகிலே ஏறி உள்ளே வந்தார்கள்.

அந்தச் சிறுமிக்கு எட்டு வயதிருக்கும்ஒன்று இரண்டு மூன்று என்று உள்ளே வந்தவர்களை ஒவ்வொருவராக தமிழில் எண்ணிக் கொண்டிருந்தாள். எட்டிப் பார்த்தேன்கண்ணாடிப் படகில் இருவர் தங்கி இருந்தார்கள். நான் மனசுக்குள் எண்ணிஆறும் இரண்டும் ‘எட்டு’ என்றேன். மொத்தம் எட்டுப்பேர் அந்தப் படகில் வந்திருந்தார்கள்.

மேலே ஏறிவந்த சிப்பாய் ஒருத்தன் எல்லோரையும் நோட்டம் விட்டான். பெண்கள் அதிகம் உட்கார்ந்திருந்த பக்கம்தான் அவனது பார்வை அடிக்கடி சென்று திரும்பியது. நல்ல நோக்கத்தோடு அவர்கள் உள்ளே வரவில்லை என்பதை அவனது கண்களே காட்டிக் கொடுத்தது.

பாப்பா எங்கே போறது?’ என்று அந்தச் சிப்பாய் கொச்சைத் தமிழில் அந்த சிறுமிக்கு முன்னால் மண்டியிட்டுக் கேட்டான். பதும வயதைத் தொடப்போகும் பூரிப்போடு அந்தச் சிறுமி இருந்தாள்.

சிறுமிக்கு அருகே உட்கார்ந்திருந்த சிறுமியின்தாய்சற்று நிறமாய் இளமையாய் எடுப்பான நாசியோடு அழகாக இருந்தாள். தாயின் அழகு மகளிடமும் குடியிருந்தது.

பாப்பா என்னோட வாறதா?’ என்று கையை நீட்டினான்.

சிறுமி மறுத்து தலை அசைத்தபடி தாயின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

சிறுமியின் தாயைத் தன்பக்கம் கவருவதற்கு என்ன செய்யலாம் என்று அவன் ஒரு கணம் யோசித்தான். அவன் குடித்திருந்ததால் சுவாசத்தில் கலந்த மது வாடை குப்பென்று வீசியது. இக்கட்டான அந்த சூழ்நிலையில்எப்படிச் சமாளிப்பது என்ற தாயின் தவிப்பு முகத்தில் தெரிந்தது.

பாப்பா என்னோட கீழே வாறது நான் சுவீட் தாறது’ என்று சொல்லிக் சிறுமியின் விருப்பமில்லாமலே கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு கீழ்த் தட்டிற்கு படிவழியே இறங்கிச் சென்றான் அந்தச் சிப்பாய்.  அவனது மறு கையில் ஏகே 47 ஒன்று சிறகொடிந்த பறவைபோலசிறைப்பட்டிருந்தது.. சிறுமி வேறுவழியில்லாமல் தாயைப் பரிதாபமாகப் பார்த்தபடி அவனுடன் சென்றாள். அவன் தள்ளாடியதில் இருந்து குடித்திருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

கட்டாயப் படுத்திச் சிறுமியைக் கீழ்த் தட்டிற்குக் கொண்டு சென்றதால் சிறுமியின் தாயார் பதட்டமடைந்தாள். தாய்மையின் பரிதவிப்பை சுற்றியிருந்தவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. துப்பாக்கியும் கையுமாக இருக்கும் அவனிடம் யாரால் யாசிக்முடியும்?

போம்மா போய்க் கூட்டிக் கொண்டுவா’ தாயாரின் பதட்டத்தைப் பார்த்த யாரோ தாயாரிடம் மெதுவாகச் சொன்னார்கள்.

சின்னப்பிள்ளை எண்டும் பாக்கமாட்டாங்கள்இவங்கள் என்னவும் செய்வாங்கள். போவம்மாகெதியாய்ப் போய்க் கூட்டிக் கொண்டுவா.’ அவர்கள் சொன்னதைக் கேட்டுமகளைத் தேடிப் பதட்டத்தோடு கீழே சென்றாள் அந்த இளம் தாய்.

கீழே சென்றவள் நீண்ட நேரமாய் திரும்பி மேலே வரவில்லை. உபதேசம் செய்தவர்களின் வார்த்தைகளே அவளுக்குப் பொறியாப் போனது. ஏன் இன்னும் அந்தச் சிறுமியின் தாய் திரும்பி வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுகீழேயிருந்து அந்தப் பெண்ணின் அவலச்சத்தம் கேட்டது. எல்லோரும் ஒரு கணம் அப்படியே உறைந்து போயிருந்தனர். கீழே சென்று பார்க்க அந்த நேரம் யாருக்கும் துணிவு வரவில்லை.

நடக்கக் கூடாதது ஏதோ நடந்து விட்டது போலமனசு பதட்டத்தோடு எதையோ கணக்குப் போட்டது. படகில் ஏறி உள்ளே வந்த கடற்படையினரைப் பார்த்தபோதே யாருமே நல்லவர்கள் போலத் தோன்றவில்லை.

சிறுமியைக் கீழே இழுத்துச் சென்றது தாய்க்குப் பொறி வைக்கத்தான் என்பது சட்டென்று புரிந்தது. இதற்கிடையில் ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும்அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராகக் கீழே வாருங்கள் என்று கொச்சைத் தமிழில் படிகளில் நின்றபடி ஒரு சிப்பாய் மேலே இருந்தவர்களை கீழே வரும்படி அழைத்தான்.

இருங்கஇருங்க நாங்க போய்க் கதைக்கிறோம்’ என்றபடி முதலில் படகோட்டிகள்தான் கீழே சென்றார்கள். அப்படி அவசரப்பட்டு கீழே சென்ற படகோட்டிகளை முழங்காலில் இருத்தி வைத்திருந்தார்கள்.

அவர்களைத் தொடர்ந்து ஆண்களையும் ஒவ்வொருவராகக் கீழே வரச்சொன்னார்கள். அவர்களுடைய பெயரையும்அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் அவர்கள் இப்போ எங்கே போகிறார்கள் என்பதையும் உரக்கக் கத்திச் சொல்லும்படி சிப்பாய்கள் வற்புறுத்தினார்கள்.

அவர்கள் கத்திச் சொன்னது எங்கள் செவிகளில் விழுந்தது. ஏன் அப்படிக் கத்திச் சொல்லச் சொல்கிறார்கள் என்பது முதலில் யாருக்கும் புரியவில்லை. இவர்கள் ஒவ்வொருவராகச் சொல்லச் சொல்ல அவர்கள் வேடிக்கையாகப் பெரிதாகச் சிரித்தார்கள்.

எனக்குள் ஏதோ பொறி தட்டியது. மேல் தட்டில் வைத்தே வழமைபோல அடையாள அட்டையைப் பார்த்திருக்கலாமேஏன் இன்று வழமைக்கு மாறாகக் கீழே வரச்சொல்கிறார்கள். நான் கவனமாகக் கீழேயிருந்து அவர்கள் உரக்கக் கத்திச் சொல்வதை கிரகித்தேன்.

அந்தச் சத்தத்திற்குள் ஏதோ வலி மிகுந்த இனம்புரியாத அவலம் ஒளிந்திருப்பதை அந்தக் கணத்தில் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அப்படி உரக்கச் சொன்ன ஒவ்வொருவரையும் தனித்தனியே படகின் பின் பகுதிக்கு அழைத்துச் செல்வதையும் அவதானித்தேன்.

அப்படிச் சென்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததாகவும் தெரியவில்லை. முதலில் ஆண்கள் தான் ஒவ்வொருவராக முன் சென்றதால்எனது முறை வந்தபோது நான் மகளைப் பார்த்தேன். போகவேண்டாம் என்பதுபோல அவள்

எனது கையை இறுகப் பற்றியிருந்தாள். பற்றிய அவளது கைகள் மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன்.

துப்பாக்கியோடு மேலே நின்ற கடற்படைச் சிப்பாய் என்னை முறைத்துப் பார்த்து ‘யண்டக்கோ’ என்று தனது மொழியில் கத்தினான். எனக்கு அவனது மொழி தெரியும்என்னை அவமதிப்பது போல இருந்தாலும்குடிகாரனோடு முரண்பட விரும்பவில்லை. எனது தயக்கத்தை அவதானித்த அவன் ஏதேதோ சொல்லக்கூடாத வார்த்தைகளால் கடுமையாகத் தனது மொழியில் திட்டினான்.

வேட்கையில் கிடந்த சிங்கம் ஒன்று எழுந்து நின்று தலையை உசுப்பி உறுமுவது போல அந்தக் காட்சி இருந்தது. நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனது மகளுக்கு ஆபத்து வரலாம் என்பதால்பற்றியிருந்த என் மகளின் கையை மெல்ல விடுவிக்க முனைந்தேன். சஞ்சலப்பட்ட அவளோ மேலும் இறுகப் பற்றினாள்.

பயப்படாதேஇந்தக் கிழவனை என்ன செய்யப் போகிறார்கள்’ என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டுகைகளை விலக்கிக் கொண்டு மெல்ல எழுந்தேன்.

அப்பாபிளீஸ் கீழே போகதீங்கப்பா’ செல்வி மெல்ல விம்மினாள். அவளது தவிப்பை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நிராயுதபாணியான என்னால் என்ன செய்ய முடியும்?

ஒண்டும் ஆகாதம்மாஅடையாள அட்டையைப் பாத்திட்டு விட்டு விடுவாங்கம்மா’ என்று சொல்லி அவளைச் சமாதானப் படுத்தி விட்டு நான் கீழே இறங்கிச் சென்றேன். விதி என்னைத் துரத்துவது எனக்கு அப்போது தெரியவில்லை.

 

குமுதினி

 

 

பகுதி-4

 

மகளைச் சமாதானப் படுத்தி விட்டு படிக்கட்டில் இறங்கிச் செல்லும்போது கீழேயிருந்து குப்பென்று ஏதோ துர்நாற்றம் வீசியது. மது வாடையோடு சேர்ந்த உப்புக் காற்றோ அல்லது இரத்தவாடையாகவோ இருக்கலாம் என நினைத்தேன்.

 



 

 

கீழே ஏதோ தப்பு நடக்கிறது, ‘கவனமாயிரு’ என்று உள்மனம் என்னை எச்சரித்தது. காலம் கடந்த எச்சரிக்கை என்றாலும் கால்கள் மேற்கொண்டு நகராமல் தன்னிச்சையாய்த் தயங்கின. படிக்கட்டில் நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தேன்.

கீழே நின்ற சிப்பாய் ‘என்டக்கோ’ என்று உள்ளே வரும்படி உரத்த குரலில் என்னை அழைத்தான். அவனைப் பார்த்ததும்; ‘இவனா’ என்று ஒரு நிமிடம் தயங்கினேன். எங்கேயோ அடிக்கடி பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது. ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாத ஒரு முகம் என்பதால் அவனை நான் ஞபகத்தில் வைத்திருக்க விரும்பவில்லை.

இவனை நயினாதீவு நாகபூசணி அம்பாள் தரிசனத்திற்குப் போகும்போதெல்லாம் அருகே இருந்த கடற்படை முகாமில் கண்டிருக்கிறேன். பொழுது போகாவிட்டால் கோயில் வாசலிலேயே இவனது கூட்டாளிகளோடு எப்பொழுதும் நிற்பான். நிற்பது மட்டுமல்லஎப்பொழுதும் கோயிலுக்குத் தரிசனத்திற்காக வரும் பெண்கள் மீதே அவனது வெறித்த பார்வை பதிந்திருக்கும். வக்கிரப்பார்வை பார்த்தபடிசீருடை இல்லாமல் சிகரட் புகைத்தபடி நிற்பதைக் கண்டிருக்கின்றேன்.

கீழே நின்ற அவனது சிவந்த முழியைப் பார்த்ததும்திட்டமிட்டுத்தான் இவர்கள் வந்திருக்கிறார்கள்கீழே ஏதோ தப்பான காரியம் நடக்கிறது என்பதை உடனே ஊகித்துக் கொண்டேன். அவனிடம் ஏனோ துப்பாக்கி இருக்கவில்லை. ஏன் இவன் துப்பாக்கி ஏந்தவில்லை என்பதே என்னைச் சிந்திக்க வைத்தது.

நம மொகத்த?’ என்று தயக்கத்தோடு நின்ற என்னைப் பார்த்து எனது பெயரை அவன் கேட்டான். அவனது மொழி புரிந்தாலும்புரியாதது போல நான் மௌனமாக நின்றேன். இவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று உள்மனம் கணக்குப் போட்டது.

சிங்களம் தெரியமா?’ என்றான்.

இல்லை!’ என்று தலையசைத்தேன்.

பேரு என்ன?’

தில்லைநாதன்.’

எங்க போறது?’ என்றான்.

கோயிலுக்கு!’ என்றேன்.

கோயிலுக்காஇங்கினய போயிடு’

என்று கத்திக் கொண்டுதிடீரென பின்னால் மறைத்து வைத்திருந்த சிறிய கோடரியை உயர்த்தி எனது தலையிலே ஓங்கி வெட்டினான். ஏதோ நடக்கப் போகிறது என்ற எச்சரிக்கையோடு நான் இருந்ததால் சட்டென்று கையை உயர்த்தித் தடுத்தேன். வெட்டுப் பலமாக தலையிலே விழவில்லை ஆனாலும் வெட்டுக் காயத்தில் இருந்து இரத்தம் நெற்றியில் வழிந்தது. இந்த நேரம் பார்த்து இன்னுமொருவன் அருகே வந்தான். அவனது கையிலே பாளைக் கத்தி பளபளத்தது. ‘அம்மட்ட…!’ சொல்லக்கூடாத வார்த்தையால் திட்டிக் கொண்டே சதக் கென்று வயிற்றிலே கத்தியைப் பாய்ச்சி உருவினான். தலையில் பட்ட வெட்டுக் காயம் காரணமாகத் தலையிலே கையை வைத்திருந்த என்னால் வயிற்றிலே குத்திய போது மற்றவனைத் தடுக்க முடியாமல் போய்விட்டது. நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அம்மா என்று கத்திக் கொண்டு கீழே விழுந்தேன். அவன் எட்டிக் காலால் என்னை உதைத்தான். அப்படியே உருண்டு படகின் அடியில் சுருண்டு போய் விழுந்தேன். கண்கள் இருட்டிமயக்கம் வருவது போல இருந்தது.

மேலே தனித்து விடப்பட்ட செல்வியின் ஞாபகம் உடனே வந்தது. அவளை எப்படியும் இந்தக் கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றியே ஆகவேண்டும் என்று மனம் துடித்தது. வயிற்றிலே குழந்தையோடு அவளால் இங்கிருந்து தப்பி ஓடமுடியுமாஅப்படி ஓடுவதானால் எங்கே ஓடுவதுசுற்றியிருக்கும் கடலில் தானே குதிக்க வேண்டும்செல்வியால் முடியுமாகுதித்தால் மட்டும் விட்டு விடுவார்களா?

செல்வி தப்பி ஓடிவிடுஉன்னைக் கொல்லப் போறாங்கள்’ என்று உரத்துக்கத்த வாய்திறந்தேன். வார்த்தைகள் வெளியே வரவில்லை. கண்கள் செருகிக் கொண்டு வந்தன. மேலேயிருந்த பெண்களின் அழுகுரல் ஓலம் காதில் விழுந்தது. தடுப்பதற்கு ஆண்கள் இல்லை என்ற துணிவில் இவர்கள் தயக்கமின்றி எதுவும் செய்வார்கள். வேட்டை நாய்களிடம் சிக்கிய முயல்கள போல பரிதாபக் குரல்கள் மரண ஓலமாய்க் கேட்டது.

யாருடையதோ தெரியவில்லைஓலத்தைத் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட கையொன்று எனக்கருகே கீழே வந்து விழுந்து துடித்தது. அந்தத் துண்டிக்கப்பட்ட கையில் இருந்து சீறிய இரத்தம் என் முகத்தில் பட்டுத் தெறித்தது.

அவர்களால் வெட்டித் தாக்கப்பட்டு மேலேயிருந்து தள்ளிவிடப்பட்டயாரோ ஒருவரின் உடம்பு எனக்குமேலே வந்து விழுந்து என்னை மூச்சுத் திணற வைத்தது. கையில் ஏதோ பிசுபிசுத்ததுஇரத்தமாய் இருக்கலாம். படகின் அடியில் விழுந்து கிடந்ததால் இருட்டுக்குள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. இயலாமையின் உணர்வில் நினைவு தப்புவதும் திரும்பி வருவதுமாய் ஒரே மயக்கமாக இருந்தது.

நினைவு திரும்பும் போதெல்லாம், ‘மகளே.. செல்வி.. ஓடு.. ஓடு..!’ வார்த்தைகள் வராமல் வாய் மட்டும் திரும்பத் திரும்ப முணுமுணுப்பதை உணர்ந்தேன். இரத்தம் பெருகியதில் எதுவுமே செய்ய முடியாமல் அனுங்கிக் கொண்டே மயங்கிப்போனேன். அப்புறம் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கண் விழித்தபோது ஆஸ்பத்திரியில் இயக்கமின்றிக் கிடந்தேன். தலையில் வயிற்றில் கையில் காலில் என்று கட்டுப் போடாத இடமேயில்லை. திரும்பிக்கூடப் படுக்கமுடியாமல்டாக்டர் தொட்ட இடமெல்லாம் வலி தாங்க முடியாமல் உயிர் போய் வந்தது.

செல்வி…!’ என்னையறியாமலே எனது வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

கண் விழித்த போதுஎதிரே சில மாணவர்கள் நின்றார்கள். யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இறுதியாண்டு மாணவர்கள்தான் அவர்கள். இதுவரை என்னைக் கவனமாகப் பார்த்துக் கொண்டது அவர்கள்தான். அத்தனை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் வலியவந்து எனக்கு வேண்டிய சிகிட்சை எல்லாம் செய்தார்கள்.

ஒருவராவது கட்டாயம் உயிரோடு தப்பவேண்டும் என்பதற்காக நாங்கள் கடவுளை வேண்டிக் கொண்டோம்எங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லைபலித்து விட்டது!’ என்றார்கள்.

நல்லதுஎன்னைக் காப்பாற்றுவதில் உங்களுக்கு அப்படி என்ன அக்கறை?’ மெல்ல முணுமுணுத்தேன்.

ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமைஆனால் ஒருவராவது உயிரோடு இருந்தால்தானே படகில் என்ன நடந்தது என்ற உண்மையை உலகிற்குத் தெரியப்படுத்தலாம்அதற்காகத்தான் கஷ்டப்பட்டு நம்பிக்கையை

இழக்காமல் உங்களைக் காப்பாற்ற மணிக்கணக்கில் கடைசிவரை போராடினோம்!’ என்றார்கள்.

அப்படி என்றால் என் மகள் செல்வி…?’

நான்கு நாட்களாக நினைவில்லாமல் நான் வைத்திய சாலையில் மயங்கிக் கிடந்ததாகச் சொன்னார்கள். எனது மகள் செல்வியைப் பற்றி விசாரித்தேன்.

எனது மகள் செல்விக்கு என்ன நடந்தது என்பதை முதலில் சொல்ல மறுத்தவர்கள்நான் பிடிவாதமாக வேண்டிக் கொண்டதைப் பொறுக்க முடியாது மெல்ல மெல்ல நடந்ததைச் சொன்னார்கள்.

கேள்விப்பட்டதும்ஒரு கணம் என் இயக்கமே நின்று விட்டதை உணர்ந்தேன். எல்லாவற்றையும் இழந்துவிட்ட விரக்தி என்னைச் சூழ்ந்து கொண்டது. என்னை அறியாமலே மயங்கிவிட்டேன்.

என்னை மட்டும் ஏன் காப்பாற்றினீர்கள்.’ மீண்டும் கண் விழித்தபோதுவிரக்தியோடு கேட்டேன்.

ஒன்றா இரண்டா எத்தனை உடல்கள். எண்ணிக் கணக்குச் சொல்லி ஊரைக்கூட்டி விடுவோமோ என்ற பயத்தில் துண்டு துண்டாக வெட்டிப் பேட்டிருந்தார்களாம்.

தூக்கிவர முடியவில்லைஅள்ளிக் கொண்டு வரத்தான் முடிந்தது என்றார்கள். எப்படி மனம் வந்து இவர்களால் இப்படிக் கொலை செய்ய முடிந்தது. இன்று பணத்திற்கு ஆசைப்பட்டுஎல்லாவற்றையும் மறந்து விட்டு சாத்தான் வேதம் ஓதுபவர்கள் எல்லாம் அன்று நடந்த இந்தக் காட்சியைப் பார்த்திருக்க வேண்டும்.

என்னுயிர்த் தங்கைகளின்

அழகான கனவுகள் பற்றி

இன்னமும் அவர்கள்

வாழவிரும்பிய வாழ்க்கை பற்றி

பலமாதமாய்பவித்திரமாய்உருவாகி

கணப்பொழுதில் கருவுடனேயே

சிதையில் எரிந்த என் நண்பனின்

மனைவி பற்றி…!’

எழுதுவதற்கே வார்த்தைகள் வரவில்லை என்று அதிர்ந்துபோனஎன் மருமகனின் அருமை நண்பன் கவிஞன் சித்திவினாயகம் அந்தக் கொடூரக் காட்சியைச் சகிக்கமுடியாமல் அழுதழுது கவிதையாய் அந்த மலரில் வரைந்திருந்தான்.

பட்டப்பகலில் இந்தக் கொடூரக் கொலைகளை யார் செய்தார்கள் என்று நிரூபிக்கப் போதிய சாட்சியங்கள் இல்லாததால்எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை என்றுஒரு ஜனநாயக நாட்டில் பெருந்தன்மையோடு அறிவித்து அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார்கள்.

நடந்ததை எல்லாம் வெளியே சொன்னால் அதை இனத்துவேஷம் என்று முத்திரையும் குத்தி விடுகின்றார்கள். அதனால் மௌனமாக வாய் மூடி இருக்க வேண்டி வந்தது. மொழியின் பெயரால்மதத்தின் பெயரால் எவ்வளவு காலத்திற்குத்தான் அரசியல் நடத்தப் போகிறார்களோ யாரறிவார்?

மனமுடைந்துபோன மருமகன் வேலைக்குத் திரும்பிச் செல்லவில்லை. உயிருக்குயிரான மனைவியைமுகங்காணாக் குழந்தையை இழந்த சோகத்தில் மருமகன் உடைந்து போய்விட்டான். பாதி உயிர் போனதுபோலஒவ்வொரு கணமும் அவனது இழப்பின் அந்த வலி அவன் முகத்தில் தெரிந்தது. அவனது வேதனையைப் புரிந்து கொள்ள யாரும் இருக்கவில்லை. புரிந்து கொண்டாலும் அதற்குப் பரிகாரம் இருக்கவில்லை. அந்த இழப்பை ஈடுசெய்ய யாரால் முடியும்என்ன செய்ய முடியும்யாரை நோக முடியும்?

கேள்விகள் எல்லாவற்றுக்கும் ஒரு ஜனநாயக நாட்டில் துப்பாக்கிகளே பதில் சொல்லின. திறந்த வாய்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன.

வீட்டை விட்டு வெளியே போன மருமகன் திரும்பி வரவில்லை. முதலில் காணாமற் போய்விட்டான் என்று சொன்னார்கள். சோகத்தைச் சுமந்து

கொண்டு மணலாற்றுக் களமுனையில் போராளியாக நிற்பதாகவும் கேள்விப்பட்டேன். அதன்பின் மருமகனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லைஎந்தத் தொடர்பும் எங்களுடன் இல்லை. இன்று இருக்கிறானா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை.

மகளையும்பேரப்பிள்ளையையும் இழந்த துயரம் தாங்க முடியாமல் நோயாளியாக மாறிப்போன என் மனைவியும்தீராத நோய்வாய்ப்பட்டு எங்களை விட்டு நிரந்தரமாகவே பிரிந்து விட்டாள். அவளது தீராத துயரத்திற்கு மரணம் ஒன்றுதான் அவளுக்கு அருமருந்தாக இருந்தது.

சிட்டுக் குருவிகளாய்சுதந்திரப் பறவைகளாய் வானத்தில் சிறகடித்துத் திரிந்த இது போன்ற அழகிய குடும்பங்களைச் சிதைத்தது யார்தானும் தன்பாடுமாய் இருந்த மருமகனைப் போராளியாக மாற்றியது யார்ஆயுதம் ஏந்த வைத்தது யார்?

பேரினவாதிகள் இந்த நாட்டில் உள்ளவரை இப்படியான இனப்படுகொலைகள் காலாகாலமாய் தொடரத்தான் செய்யும். அது அவர்களின் அரசியல் தந்திரம் ஒருவகைச் சூதாட்டம்இது இவர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த வாழ்க்கைப் போராட்டம்! இந்தச் சுழிக்குள் அகப்பட்டுக் கொள்வதும் தப்பிக் கொள்வதும் அவரவரின் கெட்டித்தனத்தைப் பொறுத்தது. ஆனாலும் அப்பாவிகளே எப்பொழுதும் நிரந்தரமாக மாட்டிக் கொள்கிறார்கள்.  யாரையே நம்பிச் சரணடைந்தவர்கள் எங்கே என்று இதுவரை தெரியவில்லைஇனியும் தெரியப் போவதில்லை. மௌனமே பதிலாகிவிடுகிறது.

பேர்த்தியைக் கவனமாக வளர்த்து யாருடைய கையிலாவது ஒப்படைக்க வேண்டும். அதுவரை உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு நடைபிணமாகவேனும் வாழவேண்டும். இதுதான் என்னுடைய கடைசி ஆசை. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதால் எப்படியோ வாழ்கிறோம்.

ஏன் என்ற கேள்வி எப்போதும் எழாவிட்டால்எல்லோரும் ஒற்றுமையாய் அநீதியைத் தட்டிக் கேட்காவிட்டால்இது போன்ற அர்த்தமில்லாத அநியாய மரணங்கள் பெரிய அளவில் எங்கள் மண்ணில் இன்னும் தொடரத்தான் செய்யும்!

அகிம்சை எங்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்ததுதான் ஆனாலும்ஒரு இனமே அழிந்து போவதைவிடஒரு சிலரின் அளப்பரிய தியாகங்கள்விலை மதிக்க முடியாததாய் கையெடுத்துக் கும்பிடவைப்பதாய் மீண்டும் மாறிவிடலாம்!

மொழியும்மதமும் ஒவ்வொருவருடைய தனிச் சுதந்திரம்அதை அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும்!

(முற்றும்)


குரு அரவிந்தன் வாசகர் வட்டம் -இரண்டாவது பரிசு-2024-25

 




                                                    குரு அரவிந்தன் வாசகர் வட்டம்

இரண்டாவது பரிசு பெற்ற கட்டுரை.

குரு அரவிந்தனின்  சிறுகதைகள்  பன்முகப்பார்வை

author
May 13, 2025
0 minutes, 9 seconds Read
This entry is part 3 of 7 in the series 11 மே 2025

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை.

முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா

பெரியகுளம், தேனி. தமிழ்நாடு.

A person wearing a pink and red dress

AI-generated content may be incorrect.



குரு அரவிந்தனின்  சிறுகதைகள்  பன்முகப்பார்வை

முன்னுரை

குரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது.

வாழ்வியல் விழுமியங்கள்

படைப்பாளர்களின் முக்கிய நோக்கம் படைப்பு வழியாக மனித வாழ்வியலை வடித்தெடுப்பதே ஆகும். விழுமியம் என்பதற்கு மதிப்பு, சிறப்பு, உயர்வு போன்ற பொருள்களையே அகராதிகள் தருகின்றன. குரு அரவிந்தனின் சிறுகதைகளிலும் வாழ்வியல் விழுமியங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

காதலும் அன்பும் 

‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் தன் அத்தை மகள் பிரியா மேல் ஏற்பட்ட காதல் உணர்வை அப்பா தனது மகளுக்குக் கூறுவதிலிந்து இளம் வயதில் ஏற்படும் அன்பும் பாசமும் காலங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்பதை அறிய முடிகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதை, கதைக்கு உயிரூட்டம் அளிப்பதாக உள்ளது.

“உயிரோடு அவள் அருகே இருந்தபோதே அவர் தனது அன்பைக், காதலை மனப்பூர்வமாகப் பலவிதமான முறையில் அவளிடம் வெளிக்காட்டியிருந்தார். மேலை நாடுகளில் புரிந்துணர்வோடு ஒருவருக்கொருவர் துணையாகக் கடைசிவரை வாழ்வதென்பது ஆச்சரியமானதுதான், அப்படியான புரிந்துணர்வுள்ள ஒரு வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்” என்பதன் மூலம் மேலைநாட்டினரின் குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மத்தியிலும், இணைந்து வாமும் குடும்பத்தினரின் மேன்மையையும், நோய்நொடியிலும் இறுதிவரை அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்துப் பாதுகாக்கும் உறவின் உன்னத நிலைகளை ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

குடும்ப வாழ்வு

குடும்ப சூழல் காரணமாக, திருமணம் செய்து தாய் நாட்டிலிருந்து அயலகம் சென்ற பெண்ணின் குடும்ப வாழ்வு ‘பனிச் சறுக்கல்’ என்ற சிறுகதையில் வெளிப்படுவதை, “வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கிராக்கி அதிகம் என்பதால் கனடா மாப்பிள்ளை என்றதும் எல்லோரும் வாயைப் பிளந்தனர். … தங்கைகளைக் கரைசேர்க்க வேண்டுமே என்று தியாகம் செய்வதாக நினைத்து அவள் கண்ணை மூடிக்கொண்டு ராஜனுக்கு வாழ்க்கைப்பட்டாள்”, என்று புதிய வாழ்க்கை, புதிய நாடு என்று எல்லாமே கொஞ்ச நாட்களுக்கு இரசிக்கக் கூடியதாக அமைந்தாலும், பின்பு கணவன் ஒரு பெரும் குடிகாரன் என்பதை அறிந்து வருந்தும் பெண்ணின் அவல நிலை புலப்படுகிறது. குடும்பம் என்பது ‘சரஸ்வதி இருக்க வேண்டிய இடம்’ என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதோடு, குடும்பத்தைக் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கவும், தங்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவம் இக்கதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வியின் சிறப்பு

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் கலிஸ்ரா எனும் பண்ணை வீட்டுக்கார மகள் ஓய்வு நேரத்தில் வண்டி ஓட்டுவதையும், படிக்கச் செல்வதையும், ஆண்கள், படிக்கும் பெண்களை ஊக்குவிப்பதையும், படிக்கவில்லை என்றால் அதனைச் சுட்டிக்காட்டுவதை, “உன்னைப் போலவா அவள், அவள் உன்னைவிட உயர் வகுப்பில் படிக்கிறாள், ஓய்வு நேரத்தில் மட்டும்தான் வருவதாகச் சொன்னாள், படிக்கிற பிள்ளைகளைக் குழப்பக்கூடாது, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” எனும் வரிகள் கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.

 ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் தவறு நேர்ந்தது என்று அறிந்தபின்பு “படித்தவள், புத்திசாலி என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் செயல்பட்டாள்” என்பதன் மூலம் பெண் தான் பெற்ற கல்வியின் அறிவால் தனது அவலமான நிலையில் முடிவெடுப்பதும், தன்னைச் சமநிலைப்படுத்தி, தெளிவாக நடந்து கொண்ட போக்கும், பெண்கள் தங்கள் தன்மானத்தைத் தவறாகப் பயன்படுத்தும் சூழலுக்கு உட்படும் நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இச்சிறுகதை உணர்த்தியுள்ளது.

“நான் படித்துக் கொண்டிருந்தேன். மாணவப் பருவம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது”… “மாணவர்கள் போராட்டம் என்றால்தான் உலகமே திரும்பிப் பார்க்கும்” என்று ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையும் கல்வியின் சிறப்பை வலியுறுத்தி அமைகின்றது.

தொழிலின் மேன்மை

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் வரும் விவசாயக் குடும்பத்திலுள்ள நிக்கோலாஸ் என்பவர் பிக்கப், டிராக்டர், பெரிய வண்டிகள் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் பெரியதொரு விவசாயப் பண்ணையில் வண்டி ஓட்டும் வேலை செய்ததையும், நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ரா இருவரும் கனடா வந்தபின்பு இயற்கை விவசாயம் செய்து நல்ல வருமானம் பெற்று பூந்தோட்டங்களையும், காய்கறித் தோட்டங்களையும் பராமரித்து வாழ்ந்துள்ள தகவல்களும், கற்ற தொழில் முறையைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த நாட்டிலும் நல்ல முறையில் வாழ்ந்துள்ள வாழ்க்கை அனுபவங்களும், தொழில் பயணமாகப் பிற நாடுகளுக்குப் பயணிப்போர்க்கு அனுபவப் பதிவாக அமைந்துள்ளது. 

தாய் மண்மேல் பற்று

ஈழப்போரின் விளைவாக ஆண்களும் பெண்களும் நாட்டிற்காக உழைக்க வீட்டை விட்டு செல்வதைத் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “பிரியா வீட்டைவிட்டுப் போய்விட்டதாகவும், விடுதலைப் போராட்டத்தில் அவளுக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவள் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. பிரியாவா.. எப்படி..? தாய்மண்ணை நேசித்த வயது வந்த ஒரு பெண் என்பதால் அவளது விருப்பத்தை யாராலும் தடுக்க முடியவில்லை”எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன. புலம்பெயர்ந்து பிறநாடுகளில் குடியேறினாலும், தாய்மண்மேல் கொண்ட பற்றும் பாசமும் நீங்காத நினைவுகளாக உள்ளன.

பெண்ணின் பெருமை

குரு அரவிந்தன் தனது சிறுகதைகளில் பெண் பாத்திரப் படைப்புக்களை உயர்வாகப் படைத்துள்ளார். ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் வயது பெண் நாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பெண் என்பவள், “பள்ளியின் பாட்மின்டன் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். பல மாணவிகளுக்குப் பயிற்சியாளராக இருந்திருக்கின்றார். வலைப்பந்தாட்டக் குழுவுக்கும் பயிற்சியாரளாரக் கடமையாற்றி வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவர்” என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும், இக்கதையில் வரும் கலிஸ்ரா எனும் பெண் வண்டி ஓட்டக்கூடியவராகவும், ஆண்கள், படிக்கும் பெண்களுக்கு மதிப்புக்கொடுப்பதையும் ஆசிரியர் எடுத்துரைக்கும் விதம் சிறப்புக்குரியது. 

‘பனிச் சறுக்கல்’ கதையில் வீட்டில் நடந்த விருந்தில் விஜி என்ற பெண் களங்கப்படுத்தப்பட்டாலும், குடும்பம் என்ற வாழ்விற்குள் நுண்ணறிவோடு செயல்படுபவளாகப் பெண் பாத்திரப்படைப்பு அமைந்துள்ளதை, “நல்லவளாய் நடந்து கொண்டு தனது எதிர்கால வாழ்க்கையில் சேற்றைப்பூச அவள் தயாராகவில்லை. தான் தவறு செய்யாவிட்டாலும், பெண் என்பதால் நடந்தது வெளியே தெரிந்தால் தன்மீது தீராப்பழி சுமத்தக் கணவனே தயங்க மாட்டான் என்பதை அனுபவ மூலம் அவள் அறிந்தே வைத்திருந்தாள். காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பத் தன்னை காப்பாற்றிக் கொண்டுஇ இருத்தலுக்காய் வாழ்வதே இப்போதைய தேவை என்ற நிலைப்பாட்டோடு அவள் செயற்பட்டாள்” எனும் வரிகள் இதனை எடுத்துரைக்கின்றன.

மூத்தோர்களின் வாழ்வியல் நெறி

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் முதியோர்களின் வாழ்வைக் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. “நிக்கோலாஸ் உரையாடிக் கொண்டிருக்கும் போது, தனக்கு என்ன வயது இருக்கும் என்று சொல்லுங்க பார்க்கலாம் என்றார். என்ன, ஒரு 73 – 74 -க்குக் கிட்ட இருக்கும் என நினைக்கிறேன் என்றேன். அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் இல்லை எனக்கு 84 ஆச்சு என்று. அவரை இளமையாகப் பத்து வயது குறைத்து நான் காட்டியதில் அவருக்குள் மகிழ்ச்சி இருந்தது. அவரது மனைவி கலிஸ்ராவுக்கு 78 வயது ஆகிறது என்றார்” இதன்மூலம் முதிர் வயதிலும் கணவன், மனைவியைக் கவனித்துக் கொள்ளும் நற்பண்பும், நட்புறவோடு பழகும் பண்புகளும் வெளிப்படுகின்றன. வயது போகும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்தும், அதனால் ஏற்படும் வேதனைகள்இ இளமையில் அழகுடன் இருந்த உறுப்புக்களின் மாற்றங்கள் குறித்தும் இச்சிறுகதை எடுத்துரைக்கிறது. மேலும், “பிறப்பு என்று ஒன்றிருந்தால், இறப்பு என்றும் ஒன்றிருக்கும், உலகே மாயம், இதுதான் இந்த உலகம்” என்ற வாழ்வியல் படம் இம்மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தியாக அமைந்துள்ளது. 

‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ எனும் சிறுகதையில் 80 வயது ஆப்பிரிக்கா நாட்டு முதியவர், “ஆரோக்கியமானவர் போல இருந்தார். அன்று சரித்திரத்தை மாற்றிப் படைத்த போராளிகளில் ஒருவர் என்பதால் என் மதிப்பில் உயர்ந்து நின்றார்”எனும் வரிகளும், அந்த முதியவர் வெள்ளை இனத்து மக்களிடம் தாங்கள் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாற்றைப் பதிவு செய்யும் விதமும், கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடி பெற்றுக் கொண்ட உரிமைகளை எடுத்துரைக்கும் விதமும் வரலாற்று உண்மைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

பண்பாடும் பழக்கவழக்கமும்

பண்பாடென்பது ஒரு தலைமுறையினர், சென்ற தலைமுறையினரிடம் பெற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாகும். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை அறிந்து கொள்வதற்குப் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் அடிப்படைக் கருவிகளாக அமைகின்றன.

உணவு

இலங்கை மக்கள் உண்ணும் உணவு குறித்த தகவலை ‘தாயகக் கனவுடன்’  சிறுகதை வெளிப்படுத்துவதை, “அத்தை பிட்டு பரிமாறினாள். பிட்டுக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ச் சம்பல். வறுத்த மிளகாயை இடித்து தேங்காய்த் துருவலுடன் உப்பும் புளியும் கலந்து தயாரிப்பதுதான் சம்பல்”,எனும் வரிகளால் அறியலாம்.

பூப்பெய்தல்

பெண்களைப் பூப்பெய்த பின்பு வீட்டின் இருட்டறையில் அமரவைத்தல், அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகள், பூப்பெய்த பின்பு முன்பு போல் குழந்தைகளோடு இணைந்து விளையாடக் கூடாது, பெரியபிள்ளையானல் தனிமைப் படுத்தப்படுதல், குமரப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற சமூக நிலையை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “அவளைக் கிணற்றடிக்குக் கொண்டு சென்று தலையிலே தோயவார்த்தனர். இன்று இவள் இந்த அறையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாள். அத்தை நல்லெண்ணையும், முட்டையும் எடுத்துக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குப் போவதை அவதானித்தேன்” எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன.

விளையாட்டு

சண்டிலிப்பாய் வயல் வரம்பு வழியே ஓடிப்பிடிப்பது, இலுப்பங்கொட்டை பொறுக்குவது, வானரப்படைகளோடு ஒல்லித்தேங்காய் கட்டிப் பூவல் குளத்திலே தாமரைக் கொடிகளில் சிக்காமல் நீச்சலடிப்பது, ஐயர் வீட்டு வளவிலே கொய்யாப்பழம் பறிப்பது, வேப்பமர நிழலில் மாங்கொட்டை அடிப்பது, மாட்டுவண்டில் சவாரி விடுவது, இப்படி குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளாக ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை வெளிப்படுத்துகிறது. 

கொண்டாட்டம்

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பண்ணை வீட்டுப்பெண்ணின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டாம் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுடன் நடந்துள்ளதையும், அக்கொண்டாட்டத்தில் இடம் பெற்ற கேக்வெட்டுதல், மதுஅருந்துதல், நடனம் ஆடுதல் போன்ற மேலைநாட்டுக் கலாச்சாரத்தை அறிய முடிகிறது. 

‘பனிச் சறுக்கல்’ சிறுகதையிலும் வீட்டில் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதையும், மதுபானங்களுடன் விருந்து பருமாறும் நிகழ்வு நடைபெற்றாலும், அயல்நாட்டில் வாழ சென்ற வீட்டின் இல்லத்தரசி விஜி மதுபானங்களை வெறுப்பதையும், ஆனாலும் அவர்கள் வீட்டில் நடைபெற்ற விருந்தில் ஆடல் பாடல்களுடன் அவளையும் குடிக்கவைத்து, அலங்கோலப்படுத்திய மேலைநாட்டு கலாச்சார சீரழிவை ஆசிரியர் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

பொழுதுபோக்கு

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பிசியோதொரப்பி வைத்தியரிடம் தனது மனைவியை அழைத்து வந்த நிக்கோலாஸ் என்பவர் ‘றீடேஸ் டையஸ்ட்’ என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த தகவல் இடம் பெற்றுள்ளது. மேலும். இக்கதையில் புலம் பெயர்ந்த பெண்கள் பலர், கனடாவில் பொழுது போக்குவதற்காகத் தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் சங்கீதம், நடனம், விளையாட்டு என்று ஈடுபடுவதையும் அறிய முடிகிறது.

“குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையின் மூலம் மேலை நாட்டு மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.

போரின் அவல நிலை

போருக்குப் பின் ஈழ நாட்டின் அவல நிலையை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை“ஏனைய வீடுகள் போல அத்தையின் வீடும் யுத்தத்தின் அவலத்தை எடுத்துக் காட்டியது. செல் குண்டுகள் வந்து விழுந்ததில் கூரை முற்றாகவே தூர்ந்து போயிருந்தது. செடி கொடி பற்றைகளுக்கு நடுவே வீடு ஒன்று இருந்ததற்கு அடையாளமாய் ஆங்காங்கே இடிந்து போன சுவர்கள் தலை தூக்கி நின்றன” எனும் வரிகள் எடுத்துரைகின்றன.

புலம்பெயர்தல்

ஈழப் போரின் காரணமாகப் புலம்பெயர்ந்துள்ளதை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “மகளின் பிரிவால் மட்டுமல்ல, யுத்தம் காரணமாக அவர்களின் குடும்பமும் சொல்லெனாத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு சொந்த வீட்டைவிட்டு இடம் பெயரவேண்டி வந்தது” எனும் வரிகளால் அறியலாம். ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ், கலிஸ்ரா இருவரும் காதலால் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த செய்தி இடம் பெற்றுள்ளது.

அடிமை நிலையும் போராட்ட உணர்வும்

‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையில், ஆப்பரிக்கா மக்கள் எவ்வாறு வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு, சுதந்திரம் பெற்றார்கள் என்ற வரலாற்றைக் கூறும்போது, “எமது முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள்.  அவர்கள் இவர்களுக்கு அடிமைகளாக இருந்ததால், எங்களையும் அப்படியே நடத்தினார்கள். எங்களால் என்ன செய்யமுடியும், சட்டம் அவர்கள் பக்கம் இருந்தது. 1600 -களில் தொடங்கிய அடிமை முறை 1865 வரை நடந்தது. கறுப்பினப் பெண்களை வேலைக்காக மட்டுமல்ல, அடிமைகளின் இனப்பெருக்கத்திற்காகவும் அவர்கள் பாவித்தார்கள். ஆறு, ஏழு தலைமுறையினர் அடிமைகளாகவே இருந்தார்கள்”என்று கறுப்பின மக்களின் அடிமை வரலாற்றைக் கூறுவதோடு, அவர்கள் கண்டு மகிழ்ந்த நாட்டிய நாடகத்தின் கருத்துக்கள் போராட்ட உணர்வினை ஏற்படுத்தியுள்ளதை, “அந்த நாட்டிய நாடகத்திலே வந்த பாடலில் சில வரிகள் எங்கள் உணர்வுகளை எழுப்பிவிட்டன. … எங்களுக்குள் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எங்க உரிமையை நாங்கதானே வென்று எடுக்க வேண்டும், முடியாது என்று நினைத்தால் எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடும்” என்ற உணர்வுடன் போராடி, 1962 ஆம் ஆண்டு ரெட் காபோட் என்பவர், “கறுப்பினத்தவர் கடலில் குளிப்பது குற்றமாகாது, இந்த மண்ணில் அவர்களுக்கு அதற்கான சுதந்திரமிருக்கிறது என்று அவர் தீர்ப்பு வழங்கியது சரித்திரத்தில் முக்கியமாக எழுதப்பட வேண்டியது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

“இதனால் இன்று நாங்கள் எல்லாம் சுதந்திரமாகக் கடலில் இறங்கிக் குளிக்க முடிகின்றது. 60 வருடங்களுக்கு முன் ஆபிரிக்க அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் அமைதியான வழியில் போராடி வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்தத் தீர்ப்பினால்தான் இன்று பிறவுண் நிறத்தவர்களான நாங்களும் மியாமிக் கடலில் குளிக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த எங்களுக்கு இந்த வரலாறு தெரியாவிட்டாலும், அவர்கள் பெற்றுத் தந்த இந்த சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிட்டல் நாங்களும் மியாமிக் கடற்கரையில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டி வந்திருக்கும்”  என்ற வரலாற்று உண்மை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். எங்குச் சென்றாலும் ஒவ்வொரு இடத்திலும் நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், யாரோ எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்ததுதான். இது போன்ற சில விடயங்களை வரலாறு பதியத் தவறிவிடுகின்றது. சுதந்திரம் என்பது இலவசமாகக் கிடைப்பதில்லை, போராடித்தான் பெறவேண்டும் என்ற உண்மையும் இக்கதையில் பதிவு செய்துள்ள விதம் சிறப்புக்குரியதாகும்.

உத்தி

படைப்பாளன் தான் சொல்ல வரும் கருத்தையும், படிப்போர் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு படைக்கும் இலக்கிய முறைகளே உத்திகள் எனப்படும்.

தலைப்புப் பொருத்தம் 

தாயகக் கனவுடன்’ என்ற சிறுகதையில் புலம்பெயர்ந்து பிறநாடுகளுக்குச் சென்றாலும், தாயக மண்ணின் கனவுகளைச் சுமந்து வாழ்வதையும், தாய்நாட்டிற்காக ஆண்களும் பெண்களும் தங்களையே அர்ப்பணிக்கும் போக்கிலும் தலைப்புப் பொருத்தம் வெளிப்படுகிறது.

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் தலைப்பை ஓட்டியே கதையின் போக்கு அமைந்துள்ளது. ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் பனிச் சறுக்கல் ஏற்பட்டு எதிர்படும் விபத்துக்கள் போன்று குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ கதையில், “ஆபிரிக்க கறுப்பின அடிமைகள் தப்பி ஓடினால் வேட்டை நாய்களை வைத்துத்தான் வெள்ளையின முதலாளிகள் அவர்களைத் தேடிப் பிடித்தார்கள். தண்ணீரில் மோப்ப நாய்களால் மோப்பம் பிடிக்க முடியாது.” “தண்ணீரைக் கண்டால் விலகிநில் என்று எமது பெற்றோர் அறிவுறுத்துவார்கள். தண்ணீரைக் கண்டால் விலகிப் போகாதே, நீச்சலடிக்கக் கற்றுக் கொள் என்று வெள்ளையினப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவார்கள்” எனும் வரிகளைக் கொண்டு கதையின் தலைப்புப் பொருத்தம் சிறப்பாக அமைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். 

முன்னோக்கு உத்தி

   கதையின் பிற்பகுதியில் நடக்கும் ஒன்றைக் கற்போர் ஏற்றுக்கொள்ளும் வகையில் கதையின் முற்பகுதியிலே கூறுவது முன்னோக்கு உத்தியாகும். “முளைத்துப் பூத்திருந்த கார்த்திகைச் செடியின் பூதான் … மஞ்சள் சிகப்பு நிறத்தில் பளீச்சென்று கண்ணில் பட்டது. பழைய நினைவுகள் எல்லாம் திடீரெனக் கண்முன்னால் வந்து நின்றன. … குடியிருந்த அந்த வீட்டைப் பார்க்கவே எவருக்கும் அழுகை வரும், ஆனால் நான் அழுதது அதற்காக அல்ல, என் அத்தை மகள் பிரியாவுக்காகத்தான்” எனும் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையின் வரிகள்; முன்பு நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டுவதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள கனிகளில் மாம்பழத்தின் வகைகளைக் குறிப்பிட்டுக் கூறுவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதையைக் கூறும் நிகழ்வு, முன்பு நடந்த நிகழ்வை நினைவுக் கூர்ந்து மகிழ்வதாக உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த பழைய நினைவுகளை மீண்டும் மீள்பதிவு செய்வதாக ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகத்தின்’ சிறுகதை அமைந்துள்ளது.

இலக்கிய இன்பம்

படைப்பாசிரியர் இலக்கியங்களைத் தனது படைப்புகளுக்குள் பயன்படுத்துவதன் மூலம் படைப்பாசிரியரின் இலக்கிய ஆர்வத்தை அறிந்து கொள்ள முடிகிறது. “எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிவ்வீடே.. அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே..” என்று ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் இலக்கிய வரிகளின் பயன்பாட்டைக் காண முடிகிறது.

“யானைக்கும் ஒரு நாள் அடிசறுக்கும்” என்று பழமொழிகள் பயன்படுத்தியுள்ளதை ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் காண முடிகிறது. 

“சாக்கடையில் தவறி விழுந்து விட்டது போன்ற உணர்வில் ஒரு கணம் நிலை குலைந்தாள்” என்பதன் மூலம் உவமை பயன்படுத்தியுள்ளதோடு ‘பனிச் சறுக்கலை’ குடும்ப வாழ்வோடு ஒப்புமைப்படுத்தி ஆசிரியர் தான் கூறவந்துள்ள கருபொருளைக் குறித்துக் கூறியுள்ள விதம் படிப்போரின் சிந்தனைத் திறனைத் தூண்டுவதாக உள்ளது.

மெய்பாடுகள்

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப” (தொல்.மெய். 3)

என்று தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்பாடுகள் குருஅரவிந்தனின் சிறுகதைகளில் வெளிப்படுகிறது.

“அழாதீங்கப்பா, அத்தைப் பாட்டியோட வீடு மட்டுமல்ல, இங்கே எல்லா வீடும்தான் சிதைந்து போச்சு, மெல்ல மெல்லத் திருத்தியிடுவாங்க” எனும் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் அழுகை மெய்பாடு வெளிப்படுவதைக் காணலாம். மகிழ்ச்சி என்பது எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்றாகும். 

“போருக்கு முன்னைய நாட்கள், மனதைவிட்டகலாத எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை என்பதால் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தேன்” என்று ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையின் வரிகள் எடுத்துரைப்பதைப் போன்று ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் தனது வயதையும், தனது மனைவியின் வயதையும் குறித்துக் கூறும் போது மகிழ்ச்சியை வெளிப்டுத்துகின்றார். தனது காதல் கதையைக் கூறும் நிகழ்விலும் மகிழ்ச்சி வெளிப்படுகிறது.

மெய்ப்பாடுகளில் கோபம் என்பது, வெகுளி என்றும் சொல்லப்படும், எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்றாகும். ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் கலிஸ்ராவைக் காதலிக்கும் முன் அவளைக் குறித்து முழுமையாக அறியாமல் கோபம் கொள்வதைக் காண முடிகிறது.

“ஏமாற்றப்பட்ட இனத்தைச் சேர்ந்த இவள் இருக்கிறாளா இல்லையா என்பது கூட உறவுகளுக்குத் தெரியாத ஒரு அவலம்” என்பது ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் அவலச்சுவை வெளிப்படுகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’  சிறுகதையில் மனைவியின் இறப்பு அவலச் சுவையை வெளிப்படுத்துகிறது. ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் விஜிக்கு நேர்ந்த இழிவான செயல் மூலம் அவலச் சுவையைக் காணலாம். ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ கதையில் ஆப்பிரிக்க மக்களின் வரலாற்றைக் கூறும் நிகழ்வில் மூன்று தலைமுறைகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அவல நிலை வெளிப்படுகிறது.

முடிவுரை

   பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட, குரு  அரவிந்தனின்  சிறுகதைகளில் தான் வாழும் நாடுகளில் நடக்கின்ற நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டு சிறுகதைகளைப் படைக்கும் திறன் வெளிப்படுகிறது.  சிறுகதைகளில் வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்வியல் விழுமியங்களை இலக்கிய சுவையுடன் அனைவரும் படிக்கும் விதத்தில் எடுத்துரைக்கும் ஆசிரியரின் நடையமைப்பு சிறப்புக்குரியதாகும். சங்க இலக்கியத்தில் இருந்து அறிவியல் வரை, ஆய்வுகளை மேற்கொள்வோருக்குப் பயன்பெறும் விதத்திலும், சமூகத்திற்குப் பலவித நற்கருத்துக்களை அறிவிக்கும் போக்கிலும், தீமைகளைச் சுட்டிக்காட்டும் பண்புகளிலும் இவரது சிறுகதை இலக்கியம் இவ்வுலகிற்குப் பயனுள்ள  படைப்பாக அமைந்திருப்பது பாராட்டுகுரியது.



Series Navigationஎழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு

ஓநாய்களின் ஊளைச்சத்தம்

 





மீண்டும் ஓநாய்களின் ஊளைச்சத்தம்

குரு அரவிந்தன்

இந்த உலகத்தில் இருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன் முற்றாக அழிந்து போன டயர் வூல்வ் (Dire Wolf) என்று சொல்லப்படுகின்ற ஓநாய்களின் ஊளைச் சத்தம் சமீபத்தில் மீண்டும் பூமியில் நிஜமாகவே இயற்கையாகக் கேட்டது என்றால், எங்கிருந்து இந்த ஓநாய்கள் உயிருடன் வந்தன என்று ஆச்சரியப்படுவீர்கள். இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். முடியாது என்று நாங்கள் நினைத்திருந்த இந்த அதிசயத்தை கோலோசல் பயோசயன்ஸ் நிறுவனத்தின் (Colossal Biosciences) அறிவியல் நிபுணர்கள்தான் சாதித்துக் காட்டி இருக்கிறார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஓநாயின் புதைவடிவங்களில் இருந்து எடுக்கப்பட்ட மரபணுக்களைப் பயன்படுத்தி மறுகட்டமைப்பின் மூலம் நவீன தொழில்நுட்ப குளோனிங் முறையின் உதவியுடன் அவர்களால் இதைச் சாதித்துக் காட்ட முடிந்திருக்கிறது. இந்த ஓநாய்கள் கனடாவின் வடக்கேயும், வெனிசுலாவின் தெற்கிலும் நீண்ட காலத்திற்கு முன் வாழ்ந்ததாக புதைபடிவ சான்றுகள் காட்டுகின்றன. முதலில் இந்த மரபணுக்களை சாம்பல் ஓநாய் செல்களாக மாற்றினார்கள். அதன்பின் ஓநாய்கள் போன்ற பெரிய உருவம் கொண்ட வேட்டை நாய்களை இரவல் தாய்களாகப் பயன்படுத்தினார்கள். அப்படி 1-10-2024 ஆம் ஆண்டு பிறந்த இரண்டு குட்டிகளுக்கு ரோமுலஸ், ரெமுஸ் என்றும் அதன்பின் பிறந்த பெண் குட்டிக்கு கலீசி என்றும் பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

பழங்கால உரோமானிய புராணங்களில் வரும் இரட்டைச் சகோதரர்களின் பெயரில் இருந்து ஆண் குட்களின் இந்தப் பெயர் எடுக்கப்பட்டது. ஓநாயிடம் பால் குடித்து அவர்கள் வளர்ந்ததாகப் புராணக்கதை கூறுகின்றது. கலீசி என்ற பெண் பெயர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டினின் ஏ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் தொடரின் பிரபஞ்சத்தில் டோத்ராக்கி போர்வீரரின் மனைவிக்கு வழங்கப்பட்ட பெயராகும்.

மரபணு திருத்தப்பட்ட இந்த ஓநாய் குட்டிகள் பரந்த தலைகள், அதிக சக்தி வாய்ந்த தாடைகள் மற்றும் தோள்களைக் கொண்டிருக்கின்றன. புதைபடிவ மரபணுவில் கண்டுபிடிக்கப்பட்ட நிறமி மரபணுக்களுடன் இணக்கமான வெள்ளைத் தோல் ஆகியவற்iயும்; கொண்டுள்ளன. வீட்டில் வளர்க்கும் நாய்கள் அல்லது சமூகமயமாக்கப்பட்ட சாம்பல் ஓநாய்கள் போலல்லாமல், இந்த ஓநாய் குட்டிகள் மனித பாசத்தில் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்று அதன் காப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

இதுபோன்று இப்படிக் காலத்தால் அழிந்துபோன விலங்குகளை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிக்கு இது ஒரு படிக்கல்லாக அமைந்திருக்கின்றது. இதேபோல மறைந்த உயிரினங்களான நீண்ட தந்தங்களைக் கொண்ட யானை போன்ற உருவம் கொண்ட கம்பளி மம்மத், டோடோ மற்றும் டாஸ்மேனியன் புலி போன்ற இனங்களுக்கும் பழைய மரபணுவைப் பயன்படுத்தி தொழில்நுட்ப வசதிகளோடு உயிரூட்ட கோலோசல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் கம்பளி மம்மத் குட்டியையும் எதிர்பார்க்கலாம். டைனசோக்களும் அறிமுகமாகலாம். வீட்டில் நாய்க்குட்டி, பூனைக்குட்டி வளர்ப்பது போல இவற்றையும் நீங்கள் விரும்பினால் வீட்டில் வளர்க்கலாம்.


சோவியத் விண்கலம்

 


பூமியில் விழப்போகும் சோவியத் விண்கலம்




குரு அரவிந்தன்

சோவியத் ஒன்றியத்தால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட விண்கலம் ஒன்று தோல்வியடைந்ததால், மீண்டும் பூமியை நோக்கி அதிவிரைவாக வருவதாகவும், இந்த வார இறுதியில் பூமியில் வந்து விழலாம் என்றும் விண்வெளி நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.  ஆனால் அது எந்தப்பகுதியைத் தாக்கப் போகிறது என்பது இன்னும் தெளிவாகக் கணிக்கப்படவில்லை.


காஸ்மோஸ் 482 என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் 1972 ஆம் ஆண்டு வீனஸ் என்று சொல்லப்படுகின்ற வெள்ளிக் கிரகத்தை நோக்கி ஏவப்பட்டது. அப்போது இரண்டு விண்கலங்கள் ஏவப்பட்டாலும், ஒன்று தோல்வியடைய மற்றது வி71 - 670 வீனஸ் கிரகத்தைச் சென்றடைந்தது. ஆனாலும் வி71 - 671 என்ற இந்த விண்கலம் வீனஸ் பரிமாற்றப் பாதையில் செல்வதற்கு போதுமான வேகத்தை அடையவில்லை என்பதால், பூமியின் சுற்றுப்பாதையை விட்டு அதனால் வெளியேற முடியாமல் பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தது.


இது உடைந்த போது, இரண்டு பெரிய துண்டுகள் பூமியின் உயர்ந்த சுற்றுப்பாதையில் சிக்கிக்கொண்டன. அவற்றை விண்வெளிக் குப்பை என்று சொல்வார்கள். அவற்றில் சுமார் 1,100 இறாத்தல் எடையுள்ள ஒரு துண்டுதான் மே மாதம் 10 ஆம் திகதி வரையில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காஸ்மோஸ் 482 தரையில் மோதினால், அது 52 டிகிரி வடக்கு மற்றும் 52 தெற்கு அட்சரேகைகளுக்கு இடையில் பூமியில் விழ  வாய்ப்புள்ளது.

பூமியை விட 90 மடங்கு அடர்த்தியான வீனஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைவதற்கு ஏற்றவகையில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டதால், பூமிக்குத் திரும்பும் போது வளிமண்டல உராய்வு காரணமாக எரிந்து போவதற்கான சாத்தியம் மிகக் குறைவானது என்றே கருதுகின்றனர். தற்போது 1.2 மில்லியன் குப்பைகள் விண்வெளியில் இருப்பதாகக் கணித்திருக்கின்றனர். தற்செயலாக உங்கள் பகுதியில் விழுந்தால் அதற்கு அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

காஸ்மோஸ் 482. மே 10, 2025 அன்று பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு மேற்கே இந்தியப் பெருங்கடலில் இது விழுந்ததால், ஆபத்து தவிர்க்கப்பட்டது.

அன்னையர் தின வாழ்த்துக்கள்

 



அம்மா


குரு அரவிந்தன்


காலை நேரம் மெல்ல அணைத்து

என்னை எழுப்பும் அம்மா

சாலை ஓரம் ஒதுங்கி நின்று

பள்ளி அனுப்பும் அம்மா!

 

படிக்கும் போது பக்குவமாய்ச்

சொல்லிக் கொடுக்கும் அம்மா

உண்ணும் உணவை ஆசையோடு

ஊட்டிவிடும் அம்மா!

 

தவறு செய்தால் கனிவுடனே

திருத்திவிடும் அம்மா

இரவு வேளை கதைகள் சொல்லி

உறங்க வைக்கும் அம்மா!

 

Short Story Review Contest-2025 திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்:

 






குரு அரவிந்தன் வாசகர் வட்டம்

குரு அரவிந்தன் வாசகர்வட்டம்திறனாய்வுப்போட்டி - 3

2025 ஆண்டு திறனாய்வுப் போட்டி- 3 இல் பரிசு பெற்றவர்களின் விவரம்:

இந்தப் போட்டிக்கு 134 திறனாய்வுக்கட்டுரைகள் இந்தியாஇலங்கைபிரித்தானியாமலேசியாபிரான்ஸ்ஜெர்மனிடென்மார்க்அவுஸ்ரேலியாகனடாஅமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து கிடைத்திருந்தன. எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாகவே இருந்தன. ஆனாலும் இறுதிச்சுற்றுக்காகப் 18 கட்டுரைகள் தெரிவாகிஅவற்றுக்குப் பரிசுகள் கிடைத்திருக்கின்றன. பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.

போட்டியின் நடுவர்களாகப் பேராசிரியர் கரு முத்தயா (தமிழ்நாடு)ஆய்வாளர் முனைவர் வாசுகி நகுலராஜா (கனடா)ஆய்வாளர் டாக்டர் மேரி கியூரி போல் (கனடா)எழுத்தாளர் கே. எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா) ஆகியோர் பணியாற் றினார்கள். இவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.


முதலாம் பரிசு: சிவகலை சிவப்பிரகாசம்வவுனியாஇலங்கை.

இரண்டாம் பரிசு: சகோதரி அருள் சுனிலாதேனிதமிழ்நாடு.

மூன்றாம் பரிசு: மரு.வெ. மாலாபாரதி. ஆரணி. தமிழ்நாடு.

நான்காம் பரிசு: வரதராஜன் ஜூனியர்தேஜ் சீர்காழிதமிழ்நாடு.

ஐந்தாம் பரிசு: (1) திவானி கந்தசாமிவவுனியாஇலங்கை.

                            (2) சீ. கவிதாராணிபாசறைஇலங்கை.  

  

பாராட்டுப்பரிசுகள்: 

சிவநேஸ் ரஞ்சிதாகெக்கிராவ. இலங்கை. எஸ். ராமேஸ்வரன்கொழும்பு -5. திருமதி பவானி சச்சிதானந்தன்வத்தளைஇலங்கை. பி.பி. புஸ்பராஜாகொழும்பு -1. சந்திரகௌரி சிவபாலன்ஜெர்மனி. சிந்துஜா சிவகுமார்அவுஸ்ரேலியா. த.வேல்முருகன்ஈரோடுதமிழ்நாடு. க.பூமணிசென்னைதமிழ்நாடு. இக்பால் அலிபரகஹதெனியாஇலங்கை. விமலாதேவி புசுப்பநாதன்ரொறன்ரோகனடா. தீபரதி குபேந்திரன்வாணியம்பாடிதமிழ்நாடு. பன்னீர்ச்செல்வம் கருப்பையாகோலாலம்பூர்மலேசியா.

சுலோச்சனா அருண் ([email protected])

செயலாளர்குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.


Story - Creeper

 



ஏங்கித்துவளும் கொடியொன்று..!






குரு அரவிந்தன்

காதலர் உழையராகப் பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற,
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலம்பு இல் போலப் புல்லென்று
அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.




‘நிலா, நிலா..!’ வாசலில் நின்று குரல் கொடுத்தாள் ரதி.
குரல் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த நிலா, பக்கத்து தெருவில் வசிக்கும் ரதி வாசலில் நிற்பதைக் கண்டாள். இரண்டோ மூன்று முறை கோயிலில் சந்தித்ததால் சினேகிதமாகியிருந்தாள்.
‘என்ன ரதியக்கா? உள்ளே வாங்கோ!’
‘நாய் குரைக்குது, கடிக்குமா?’
‘இல்லையக்கா, கட்டியிருக்குது, தெரியாதவையைக் கண்டால் குரைக்கும், அவ்வளவுதான்!’

ரதி கேற்ரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள்.
‘குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லுவினம்..!’
‘நீங்கள் இதை சொல்லுறீங்க, போனகிழமை அவர் பயணத்தால வீட்டை வரேக்கையும் அவரை வாசல்ல கண்டிட்டு, யாரோ என்று நினைத்துக் குரைக்கத் தொடங்கி விட்டுது..!’

பெரிய காணியின் நடுவே கட்டப்பட்ட பெரியகல்வீடு பார்ப்தற்கு அழகாக இருந்தது. வீட்டின் இரு பக்கமும் சோலை போல வாழை, மா, பலா என்று பழமரங்களால் நிறைந்திருந்தது. முன்பக்கத்தில் பல வர்ணங்களில் அழகான ரோஜாக்கள், செவ்வரத்தைகள், நந்தியாவட்டை என்று பூச்செடிகள் அழகாகப் பூத்திருந்தன. குழாய்க் கிணற்றுத் தண்ணீர்த்தாங்கியும் உயரமாகத் தெரிந்தது.

நாயைக் கட்டிப் போட்டிருந்ததால், பயமில்லாமல் அணில்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தேனருந்தத் தேனீக்கள் ரீங்காரமிட்டுப் பொருத்தமான பூக்களைத் தேடிக்கொண்டிருந்தன. பழங்களைத் தேடிக் குருவிகள் கிளைகளில் தாவிக்கொண்டிருந்தன. ஆளிருந்தும் ஆளரவம் இல்லாத வீடுபோல காட்சி தந்தது.

பத்து பன்னிரண்டு வயதிருக்கும், ஒரு பையன் கட்டைக் காற்சட்டையோடு பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.
அப்பகுதியில் கொஞ்சம் படித்தவர்கள் ‘துபாய்வீடு’ என்று இதற்குப் பெயர் வைத்திருந்தார்கள், வசதியற்றவர்கள் ‘வட்டிக்கார அம்மாவீடு’ என்று அழைத்தார்கள். அவசரமாகக் கொஞ்சப் பணம் தேவைப்பட்டதால், நகையை அடைவு வைத்துப் பணம் வாங்கவே ரதியும் வீடு தேடி வந்திருந்தாள்.
நகையைக் கொடுத்துப் பணத்தை வாங்கிக் கவனமாகக் கைப்பையில் வைத்துக் கொண்டாள் ரதி.

‘அக்கா, மாசாமாசம் வட்டிக்காசைக் கட்ட மறந்திடாதையுங்கோ..!’ நினைவூட்டினாள் நிலா.
‘வட்டிக்கார அம்மா’ என்று நிலாவைச் சொன்னாலும், அவளுக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகியிருந்தன. இளமையாகவும், அழகாகவும் இருந்தாள். அவள் அணிந்திருந்த சுடிதார் அவளது அழகுக்கு அழகு சேர்த்தது.

பணம், பணம் என்று அலையும் அவளது கணவன் துபாயில் தொழில் பார்த்தான். திருமணமான கையோடு துபாய்க்குப் போனவன்தான், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நினைத்ததால் கிடைத்த வேலையை அப்படியே விட்டுட்டு வர விரும்பவில்லை. இந்தா அந்தா என்று மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. எல்லா வசதிகளும் கிடைத்தாலும் வெளியே யாருக்கும் சொல்முடியாத சில குறைகள் நிலாவின் அந்தரங்கத்தில் இருந்தன.
சினேகிதி என்ற முறையில் பேசிக் கொண்டிருக்கும் போது, கதையோடு கதையாக, ‘எப்படி நிலா உனக்குப் பொழுது போகிறது?’ என்று விசாரித்தாள் ரதி.

‘எனக்கென்ன குறை, விடுமுறைக்கு வந்து பத்துநாள் நின்று, போன வாரம்தான் திரும்பி துபாய்க்குப் போனாரு. அதுக்குத்தான் பொழுதுபோக்க எனக்குப் பெரிய கலர் ரிவி வாங்கித் தந்திருக்கிறாரே, போதாதா?’ என்றாள். அவளது பேச்சில் எதையோ இழந்து விட்டுத் தவிக்கும் தனிமையின் விரக்தி தெரிந்தது.
‘தனிய இந்த வீட்ல பேச்சுத்துணை இல்லாமல் காலம் கழிப்பது உங்களுக்குக் கொஞ்சம் ‘போறிங்கா’ இல்லையா?’ என்றாள் ரதி

‘நான் என்ன செய்ய, ஓடியோடி உழைச்சது போதும், எங்களுக்கு இருக்கிற பணமே போதும், வேலையை விட்டிட்டு வாங்க, தனிய என்னாலே முடியல்ல, என்று ஜாடைமாடையாய் அவரிட்ட சொல்லியும் பார்த்திட்டேன்.’
‘அதுக்கு என்ன சொன்னாரு?’

‘தனியாயிருக்க கொஞ்சம் கஷ்டமாய்த்தானிருக்கும் என்று சொல்லி, தொட்டாட்டு வேலைக்கு, தூரத்து உறவாம், பையனுக்கு அம்மா இல்லையாம், கஷ்டப்படுறாங்க என்று சொல்லி இந்தப் பையனை இங்கே கொண்டு வந்து விட்டிட்டுப் போயிட்டார்.’

‘நீங்க அதிஸ்டசாலிதான் நிலா. எல்லா வசதிகளும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை, கொடுத்துவெச்சனீங்க, எல்லாருக்கும் இந்த அதிஸ்டம் கிடைக்காது’ என்றாள் ரதி.
‘அதிஸ்டக்காரியா, நானா? என்ன சொல்றீங்க, வருசத்தில ஒரு தடவை தான் வருவார், துணிமணி, நகை என்று எல்லாம் கொண்டு வந்து திருப்திதானே என்று கேட்பாரு, பத்து நாள் கழிச்சு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி திரும்பிப் போயிடுவாரு.’

‘இவ்வளவு வசதிகள் கிடைத்தும் உங்களுக்குத் திருப்தி இல்லையா?’
‘நான் என்ன ஜடமா?’ சட்டென்று சொல்லத்தான் நினைத்தாள். ஆனாலும் மரியாதை கருதிச் சிறிது நேரம் எதுவும் பேசாது மௌனமாக இருந்தாள். அவளது மனசுக்குள் வெளியே சொல்ல முடியாத பல போராட்டங்கள் நடப்பதை அவளது முகம் காட்டிக் கொடுத்தது.

‘அவர் நிற்கும்போது கொண்டாட்டமாயும், நல்ல சந்தோசமாயும் இருக்கிறது, அந்த சந்தோசம் நிலைக்காதா என்று எப்போதும் ஏக்கத்தோடு வேண்டிப்பேன். ஆனால் இப்போ ஏக்கம்தான் மிஞ்சியிருக்கு, அவர் போனதும் வீடே வெறிச்சுக் கிடக்குது, நான் தனிய என்ன செய்ய, இந்த அணில்களையும், குருவிகளையும் பார்த்துக் கொண்டே வாசல்ல காத்திருக்க வேண்டியிருக்கு, இன்னும் எத்தனை வருசத்திற்கு இப்படியே..?’ அவள் தனது மனக்குறையை எதிரே இருப்பது யார் என்றுகூடப் பார்க்காமல் கொட்டித் தீர்த்தாள்.

நிலாவின் நிலையைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. அழகான, இளமையான தேவதை ஒன்றின் சிறகுகளை உடைத்து, சமூகக் கட்டுப்பாடு என்ற சிறைக்குள் அடைத்து வைத்து வேடிக்கை பார்க்கும் நிலையில் நிலா இருப்பதையும், கொழுகொம்பு இருந்தும், அதைப்பற்றிப் பிடிக்க முடியாமல் அவள் தவிப்பதையும் ரதி புரிந்து கொண்டாள்.

‘பணமிருந்தென்ன, பணத்துக்கு மதிப்புக் கொடுக்கும் ஒருவன் தனது மனைவியின் உணர்வுகளுக்கு, தேவைகளுக்கு மதிப்பளிக்கத் தெரியாவிட்டால் எப்படி நல்லதொரு கணவனாக இருக்க முடியும்? கூழோ, கஞ்சியோ, ஓலைக்குடிசையோ நாங்கள் சந்தோசமாக இருப்பது போல இவளால் இருக்க முடியவில்;லையே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு விடைபெற்றாள் ரதி.

நிலாவுடைய புன்சிரிப்பிற்குப் பின்னால் இருக்கும் ஏக்கத்தையோ, அவளுடைய கோபத்திற்குப் பின்னால் இருக்கும் உணர்வு பூர்வமான காதலையோ, அவளுடைய மௌனத்திற்கான காரணத்தையோ புரிந்து கொள்ளும் நிலையில் அவளைத் தொட்டுத் தாலிகட்டியவனே இல்லை என்றான போது, வேறுயார்தான் அவளைப் புரிந்து கொள்வார்கள்..!

சாயந்தரம் மப்பும் மந்தாரமாயும் இருந்த வானம் இருட்டும் நேரம் பார்த்து மழையைப் பொழியத் தொடங்கியது. அதுவே மெல்ல மெல்ல அதிகரித்துச் சாமத்தில் இடி முழக்கத்தோடு காற்றும் சேர்ந்து பெருமழையாக மாறியது. மின்னல் ஒன்று மின்ன, அதைத் தொடர்ந்து வீட்டுக் கூரையில் வந்து விழுந்தது போன்று இடியோசை கேட்டது.

இடியோசைச் சத்தத்தில் அவள் திடீரெனத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். நெஞ்சு படபடத்தது. சின்ன வயதில் இருந்தே மின்னல், இடி என்றால் பயப்படுவாள். பிறந்த வீடாயிருந்தால் ஓடிப்போய்த் தாயைத்தான் கட்டிப் பிடிப்பாள். இங்கே என்ன செய்வது, அரைகுறை இரவாடையோடு இருந்தவள், தூக்கக் கலக்கத்தில் கட்டிலில் எழுந்திருந்தாள். யாரோ விக்கி விக்கி அழும் சத்தம் கேட்டது.

காது கொடுத்துக் கேட்டாள், படுக்கைஅறை வாசலில் படுத்திருந்த பையனிடம் இருந்துதான் அழும் ஓசை கேட்டது. எழுந்து அருகே சென்று பார்த்தாள்.
போர்த்து மூடியபடி போர்வைக்குள் குடங்கியபடி அழுதுகொண்டிருந்தவனைத் தட்டி  எழுப்பினாள்.

‘என்னாச்சு?’
‘பயமாயிருக்கு’ என்றான்.
‘கனாக்கண்டியா?’
‘இல்லை..!’
‘அப்போ..?’
மறுபடியும் மின்னலடித்து இடி முழங்கியது

‘பயமாயிருக்கம்மா’ ஒரு குழந்தைபோல, கைகளை மார்புக்குக் குறுக்கே இறுகக் கட்டிக் கொண்டு, பாசத்திற்கு ஏங்கும் குழந்தைபோல நடுங்கிக் கொண்டே அவன் அழுதான்.
அவளுக்குத் தனது சின்னவயது நினைவு வந்ததில், மனசு பரிதவித்தது. தண்ணீர்ச் செம்பை எடுத்து வந்து அவனுக்கு அருகே உட்கார்ந்து, ‘இந்தா தண்ணியை குடி..!’ என்றாள்.

எஜமானி அம்மா தனக்கருகே உட்கார்ந்து ஆதரவாய்த் தண்ணீர் கொடுத்ததை நம்பமுடியாமல், இது கனவா என்பதுபோல, அவன் திகைப்போடு அவளைப் பார்த்துக் கொண்டே தண்ணீரைக் குடித்தான்.

அவன் மடமடவென்று தண்ணீர் குடிப்பதை வாஞ்சையோடு பார்த்தாள் நிலா.
‘சரி, எழுந்துவா..!’ அவனது கையைப்பற்றிப் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள். கதவைச் சாத்திவிட்டு தன்னோடு படுக்கையில் படுக்கவைத்தாள்.
மின்னலும் இடியும் விட்டு விட்டுத் தொடர்ந்தது. அரைகுறைத் தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த அவள், பெரிதாக இடி முழங்கிய போது, பயத்தில் தன்னை மறந்து, அருகே படுத்திருந்த அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

 தாய்மையின் உணர்வு பீறிட்டு எழுந்ததில், ஒரு குழந்தையை அணைப்பது போல அவனைத் தனக்குள் இழுத்து அணைத்தபடி, அப்படியே தூங்கிப் போனாள். உறக்;கத்தில் ஒரு தாயின் இதமான அரவணைப்பைப் பையனும் அனுபவித்தான்.

காலையில் அவன் கண் விழித்த போது, எஜமானி அருகே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது தூக்கத்தைக் கலைக்காமல், கைகளை மெதுவாக விலத்திவிட்டு, மெல்ல எழுந்து, அறையை விட்டு வெளியே வந்தான். விடிந்து மழை விட்டிருந்தாலும், வானம் மப்பாய் இருந்தது. வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தவனது கண்ணில் சரிந்து கிடந்த அந்த ரோஜாக்கொடி கண்ணில் பட்டது.

செழித்து வளர்ந்து அழகாகப் பூத்திருந்த கொடி ரோஜா ஒன்று இரவு மழையோடு அடித்த காற்றில் சரிந்து போயிருந்தது. அம்மாவுக்கு ரொம்பப்பிடிச்ச ரோஜாக் கொடியாச்சே, ரோஜாவுக்கு அருகே கம்பு ஒன்றை எடுத்து ஊன்றி, முட்கள் குத்தாமல் மிகக் கவனமாக அந்தச் கொடியை நிமிர்த்தி அதனோடு சேர்த்துக் கட்டி விட்டான். அவசரத்திற்குப் பற்றிக் கொள்ள ஒரு கொழுகொம்பாவது கிடைத்த மகிழ்ச்சியில் கொடிரோஜா குளிர்ந்து போயிருந்தது.

நீண்ட நாட்களின்பின் நன்றாகத் தூங்கி நிம்மதியாக எழுந்ததில் அன்று முழுவதும் மனதில் மகிழ்ச்சியையும், முகத்தில் தாய்மையின் பூரிப்பையும் நிலா உணர்ந்தாள்.

‘அம்மா காபி..!’ குரல்கேட்டு சிந்தனை கலைந்தாள். எதிரே காப்பியோடு அவன் நின்றான். இதுவரை இல்லாத பாசவுணர்வு ‘அம்மா’ என்ற அந்த சிறுவனின் குரலில் கேட்டதை உணர்ந்தாள்.
‘நீ காப்பி சாப்பிட்டியா?’
முகம் நிறைந்த புன்சிரிப்புடன் அவன் தலையசைத்தான்.

அன்று பகல் முழுவதும் ஓய்ந்திருந்த வானம் இரவானதும் மீண்டும் அழத்தொடங்கியது. தொலைக்காட்சியில் ஏதேதோ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், அதில் ஈடுபட மனம் மறுத்தது. அதை நிறுத்திவிட்டுப் படுக்கை அறை நோக்கி வந்தாள் நிலா. படுக்கை அறைவாசலில் வழமைபோலப் பாய்விரித்து படுத்திருந்தான் சிறுவன். நின்று, நிதானமாக அவனைப் பார்த்தாள். தூங்குவது போலக் கண் மூடிப் பாசாங்கு செய்தாலும், அவன் தூங்கவில்லை என்பது தெரிந்தது.

படுக்கை அறைக்குள் வந்து படுக்கை அறைவிளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் சாய்ந்தாள். அறைக்கதவு சாத்தாமல் திறந்தபடியே இருந்தது. தூக்கம்வர மறுக்கவே, புரண்டு, புரண்டு படுத்தாள். நேற்று இரவுபோல, இன்றைக்கும் மின்னலோடு இடி இடித்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று இருவரின் மனதிலும் ஒரே நேரத்தில் சிந்தனை ஓடியது.

எதையாவது தொடர்ந்து நினைத்தால் நடக்கும் என்பது போல, எங்கோ தொலைவில் மின்னலைத் தொடர்ந்து இடிமுழங்கும் சத்தம் கேட்டது.
………………………………….


Story - இரவில் தெரியும் சூரியன்

 




இரவில் தெரியும் சூரியன்
 குரு அரவிந்தன்
‘இந்த விடுமுறைக்கு அலஸ்கா போவோமா?’ என்று வீட்டுக்குள் அடைந்து கிடைந்த மனைவி கேட்ட போது நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.
கோவிட் - 19 முடக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கண்டபடி வெளியே திரிவதைத் தவிர்த்திருந்தோம். ஆனாலும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்ட தைரியத்தில், ‘போனால் என்ன’ என்று உள்மனசு தவித்தது. மூடியிருந்த அமெரிக்க – கனடிய எல்லை திறந்ததால் கனடியர்கள் அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்ற அறிவிப்பும் அப்போதுதான் வந்தது.
அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணம் அலஸ்காதான் என்பதால் அதைப்பற்றி அறிந்து கொள்ளக் கணனியில் தேடிப்பார்த்தேன். கனடாவின் வடமேற்குப் பகுதியில்தான் அலாஸ்கா இருந்தது. இன்னுமொரு விடயம் எனது கவனத்தைக் கவர்ந்தது. அது என்னவென்றால் இப்போது ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கக்கூடியளவு பணத்தைவிடக் குறைவான விலையில்தான் அந்தப்பெரிய நிலப்பரப்பை 7.2 மில்லியன் டொலர்கள் மட்டுமே கொடுத்து ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அன்று வாங்கியிருந்தது.
இன்னும் சில காரணங்களுக்காக, அதாவது பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், இரவில் தெரியும் சூரியன், பல வண்ணம் கொண்ட நொதேன்லைட், உலகிலே உயிர் வாழும் மிகப் பெரிய திமிங்கிலங்கள், உறங்குநிலைக்குப் போகும் கரடிகள், கரிபோக்கள், பனிக்கட்டி வீட்டில் வாழும் எஸ்கிமோக்கள் என்று மாணவப் பருவத்து ஆசைகளை நிறைவேற்ற அலாஸ்கா செல்வது என்று முடிவெடுத்திருந்தேன்.
ஆனாலும் கோவிட் - 19 காரணமாக கட்டுப்பாடுகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. நேரடி விமானப் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், ரொறன்ரோவில் இருந்து சிக்காகோ சென்று, அங்கிருந்து அங்கரேய்ச் என்ற இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
அமெரிக்கா செல்வதென்றால், இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர்கள்தான் விமானத்தில் பயணிக்கலாம் என்ற செய்தி எனக்குச் சாதகமாக இருந்தது. காரணம் இரண்டு பைஸர் தடுப்பூசிகளையும் நான் ஏற்கனவே எடுத்திருந்தேன். பயணத்திற்கு முன் மூன்று நாட்களுக்குள் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்கள். நாசித்துவாரத்திற்குள் குச்சியை விட்டு, அந்தப் பரிசோதனையைச் செய்தார்கள். சொன்னபடியே கோவிட் பாதிப்பு எனக்கு இல்லை என்ற முடிவை மின்னஞ்சல் மூலம் அறிவித்திருந்தார்கள்.
எனது பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிந்திருந்தேன். விமான நிலையத்திலும், விமானத்திலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதனால் எல்லோரும் முகக் கவசம் அணிந்திருந்தார்கள்.
‘இன்னும் சில நிமிடங்களில் அங்கரேய்ச் விமான நிலையத்தில் தரை இறங்கப் போகிறோம்’ என்ற அலஸ்கா விமானியின் அறிவிப்பைத் தொடர்ந்து தொடர்ந்து அங்கரேய்ச் ரெட் ஸ்ரீவன்ஸ் விமான நிலையத்தில் காலடி பதித்தோம். அலாஸ்காவில் அதிக மக்கள் வாழும் இடமும் இதுதான். இரவு நேரம் போய் இறங்குகிறோமே, இடங்களைத் தேடிப்பிடிப்பது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வெளியே வந்த போது பகல்போல சூரிய வெளிச்சம் இருந்தது. அப்போதுதான் அலஸ்காவில் சூரியன் இரவிலும் தெரியும் என்பது நினைவில் வந்தது.
குளிருக்குத் தாக்குப்பிடிக்க ஆண்களைவிடப் பெண்களால் முடியும் என்றதொரு எண்ணத்தை அலஸ்காவில் சந்தித்த பெண்கள் உருவாக்கியிருந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து எங்களை அழைத்துச் சென்றவர் ஒரு பெண்மணிதான். வாடகை வண்டி எடுத்த இடத்திலும், பேரங்காடியான வோல்மாட்டில் காசாளராகத் தொழில் புரிந்தவர்களும் பெண்கள்தான். ஊபர் வண்டி ஓட்டியவரும் பெண்தான். எரிபொருள் நிலையத்திலும், உணவகத்திலும் பெண்கள்தான். விமான நிலையத்திலும் பெண் பயணிகள்தான் அதிகமாகக் காணப்பட்டார்கள். நான் சந்தித்த இவர்கள் எல்லோரும் அமெரிக்காவின் பல பாகங்களில் இருந்தும் தொழில் நிமிர்த்தம் இங்கே வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார்கள்.
கரவன் என்று சொல்லப்படுகின்ற ஆர். வி. வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து எங்கள் அட்டவணைப்படி செல்ல வேண்டிய இடங்கள் எல்லாம் சென்று பார்த்தோம். கோவிட் காரணமாக ஹோட்டலில் தங்குவதைத் தவிர்த்திருந்தோம். குளியலறை முதற்கொண்டு குளிர்சாதனப்பெட்டி வரை எல்லாவசதிகளும் வண்டியிலேயே இருந்தது. இதற்கான தரிப்பிடங்களில் மின்சார, தண்ணீர் வசதிகள் கிடைத்தன. எமக்குத் தேவையான பொருட்களை வோல்மாட்டில் வாங்கி வைத்திருந்தோம். சமையல் வசதிகள் இருந்தாலும், விரும்பிய நேரங்களில் உணவுச் சாலைகளில் உடனடியாகக் கிடைத்த கடல் உணவு வகைகளையும் சாப்பிட முடிந்தது.
வடக்கே உள்ள தெனாலி என்ற இடத்தில் மலைப்பகுதியில் அலாஸ்கா தேசிய பூங்கா இருந்தது. அவர்களது வண்டியில்தான் உள்ளே செல்ல முடியும் என்பதால்,  பஸ்வண்டியில் கொண்டு சென்று இடங்களைக் காட்டினார்கள். சுற்றிப் பார்க்க எட்டு மணித்தியாலம் எடுத்தது. உறங்கு நிலைக்குச் செல்லும் கரடிகளையும், கரிபோ என்று சொல்லப்படுகின்ற மான் வகைகளையும் காணமுடிந்தது. எஸ்கிமோக்கள் என்று நாங்கள் சிறுவயதில் படித்த, பனிக்கட்டிகளால் உருவான வீடுகளில் வாழ்ந்த முதற்குடி மக்களின் தலைமுறையினரை அங்கு சந்தித்து உரையாட முடிந்தது.
இங்கேதான் இந்தக்கதையின் நாயகியை நான் சந்தித்தேன். வண்டியில் எனது இருக்கைக்கு நேரான இருக்கையில் மறுபக்கத்தில் அமர்ந்து இருந்தாள். பதும வயது, பதினாறாய் இருக்கலாம். அவளிருந்த பக்கத்தில் கரிபோக்களைக் கண்டதும், ஓட்டுணர் வண்டியை நிறுத்தினார். ஏழு கரிபோக்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றை எல்லோரும் புகைப்படம் எடுத்தார்கள், நானும் எழுந்து நின்று வீடியோ எடுத்தேன். நாங்கள் சற்றும் எதிர்பாரத நேரத்தில், அருகே இருந்த புதரில் இருந்து பெரிய கருங்கரடி ஒன்று வெளிப்பட்டது. மெதுவாக கரிபோக்களை நோக்கி நகர்ந்தது. என்ன நடக்கப்போகிறது என்று எல்லோரும் திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தோம். கரிபோக்கள் அதைக்கவனிக்காமல் புல் மேய்ந்து கொண்டிருந்தன. கரடி மிக அருகே நெருங்கியிருந்தது. திடீரென ஒரு கரிபோ நிமிர்ந்து பார்த்தது, மறுகணம் அந்த இடத்தைவிட்டுத் துள்ளிக் கொண்டு ஓடத் தொடங்கியது. கரடி தான் இலக்கு வைத்த கரிபோவைத் துரத்திப்பிடிக்க, அந்தக் கரிபோ ஒரு குத்துக்கரணம் அடித்து, அதன் பிடியில் இருந்து தப்பிப் பாய்தோடியது.
கரடி கரிபோவைப் பிடிக்கப் பாய்ந்ததைப் பார்த்த, அருகே இருந்த இவள் ‘நோ’ என்று பலமாகக் கத்திக் கொண்டே கண்ணைப் பொத்தி, முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டாள். வன்முறைக்குப் பழக்கம் இல்லாதவளாக இருக்கலாம், பயணிகள் எல்லோரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.
சற்று நேரத்தால் கைகளை விலத்தி எழுந்து நின்ற என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
‘சொறி, உங்களை டிஸ்ராப் பண்ணீட்டேனா, பாவம் அந்த மான்’ என்றாள்.
நான் எதுவும் பேசாமல் இருந்தேன். கண்களை மூடியிருந்ததால், நடந்தது என்னவென்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
‘நீங்க பீல் பண்ணலையா?’ என்றவள், எனது முகத்தைப் பார்த்தாள்.
‘இல்லை, இதிலே பீல் பண்ண என்ன இருக்கு? இதுதான் இயற்கை, உணவுச் சங்கிலி என்பது இதைத்தான். எனக்கு இதெல்லாம் பழகிப் போச்சு’ என்றேன்.
‘என்ன சொல்றீங்க?’ என்றாள்.
‘எங்க நாட்டில மனுஷன் மனுசனை கண்முன்னாலே அடிச்சு, சுட்டு, எரிச்சுக் கொன்று போட்டதை எல்லாம் பார்த்ததால இந்தக் காட்சி எல்லாம் எனக்கு மரத்துப் போச்சு’ என்றேன்.
‘ஏன் என்ன நடந்தது, நீங்க எந்த நாடு?’ என்றாள்.
நான் சொன்னேன்.
அவள் என்ன நினைத்தாளோ அதன் பின் ஒன்றுமே என்னுடன் பேசவில்லை. ஒருவேளை இரக்கமே இல்லாதவன் என்றுகூட நினைத்திருக்கலாம். பேருந்துச்சுற்றுலா முடிந்து நாங்கள் ஆளுக்கொரு திசையாகச் சென்று விட்டோம். பேருந்து நட்பு அத்துடன் முடிந்து விட்டது.
அங்கரேய்ச்சிற்குத் தெற்கே உள்ள சீவாட் என்ற இடத்தில் படகுச் சவாரிக்கு முற்கூட்டியே பதிவு செய்திருந்தோம். றீசுரக்ஷன் குடாக்கரையில் இருக்கும், கினாய் பியோட்ஸ் நேசனல் பார்க் என்ற இடத்திற்குப் படகில் செல்வது இலகுவானது என்பதால், படகில் சென்றோம். ஆறு பயணிகள் பயணிக்கக்கூடிய படகு, சகல வசதிகளோடும் இருந்தது. எங்கள் இருவரோடு நால்வர் அடங்கிய வேறு ஒரு குடும்பமும் வர இருப்பதாகப் படகோட்டி சொன்னார். ஓட்டுனர் சுமார் 23 வயதான இளம் பெண்மணியாக இருந்தார். சற்று நேரத்தால், தகப்பன், தாய், ஒரு மகள், ஒரு மகன் மொத்தம் நாலு பேர் வந்தார்கள், படகுக்கு உள்ளே கபினுக்கு வந்ததும் படகோட்டிக்கும், எங்களுக்கும் ஒவ்வொருவராகக் ‘குட்மோணிங்’ சொன்னார்கள்.
நானும் குட்மோர்ணிங் சொல்லிவிட்டு, நிமிர்ந்து பார்த்தேன். சற்றும் எதிர்பாராத விதமாய் அவளும் அங்கு வந்திருந்தாள். எனது கதையின் நாயகியை மீண்டு இங்கேதான் சந்தித்தேன். அப்புறம் உரையாடும் போதுதான், மிச்சிக்கன் மாகாணத்தில் இருந்து குடும்பமாக அலஸ்காவைப் பார்ப்பதற்காக அவர்கள் வந்ததாகச் சொன்னார்கள். தனது பெயர் இஸபெலா என்றாள். கனடாவில் அனேகமான பிள்ளைகள் தாய் தகப்பனைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது வழக்கம். இவள் தகப்பனை ‘டாட்’ என்று முறைசொல்லி அழைத்தாள். ஆனால் தாயையும் தம்பியையும் பெயர் சொல்லி அழைத்தாள். ஒரு பொறுப்புள்ள குடும்பப் பெண்போல, தான் கொண்டு வந்த பையைத் திறந்து அதில் உள்ள சான்விச்சை நப்கினில் வைத்து முதலில் தகப்பனுக்கும் தம்பிக்கும் பரிமாறினாள், அப்புறம் முன்னிருக்கையில் இருந்த தாயாருக்குக் கொடுத்த போது அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். எங்களுக்கு நீட்டிய போது, நாங்களும் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லி மறுத்து விட்டோம். அதன் பின் அவள் ‘திஸ் இஸ் போ மீ’ என்று சொல்லித் தனது சான்விச்சை எடுத்து சுவைத்துச் சாப்பிட்டாள்.
சற்று நேரத்தில் தாய் எழுந்து தகப்பனையும் அழைத்துக் கொண்டு, கபினுக்கு வெளியே சென்றாள். பின்பக்கத்தில் இருவரும் கைகோர்த்தபடி நின்று வேடிக்கை பார்த்தார்கள். இருவரும் சேர்ந்தபடி கட்டிப் பிடித்து நிற்க, தாயார் பல கோணங்களில் செல்பி எடுத்தார். படகோட்டி, பெரிய அலைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் பயம் கொள்ளாது அலட்சியமாகப் படகைச் செலுத்தினாள். தினமும் போய் வருவதால் அவளுக்குப் பழக்கமாக இருக்கலாம். எங்களுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எந்த நேரமும் ரேடியோ தொடர்பு கொண்டபடி, எங்கள் படகு எங்கே இருக்கிறது என்பதையும் சொல்லிக் கொண்டே இருந்தாள். திடீரெனப் பெரிய அலை ஒன்று வேகமாக மோதவே தகப்பன் நிலை தடுமாறினார். தவறிக் கடலில் விழுந்து விடுவார் என்ற பயத்தில், பயந்துபோன இவள் ‘டாட் பிளீஸ், உள்ளவாங்க’ என்று கத்தினாள். ‘ஐ ஆம் ஓகே’ என்று அவர் அங்கிருந்தே பதில் சொன்னாலும், அவர் உள்ளே வரவில்லை. எங்களுக்கு வெறுப்பு ஏற்றுவது போல, தாய் அவரது கையை இறுகப் பிடித்தபடியே வெளியே நின்றாள்.
என்னாகுமோ என்று பயந்த இவள் பயந்தபடியே என்னைப் பார்த்தாள். ‘பிளீஸ் அவரை உள்ளே வரச் சொல்லுங்க’ என்றாள்.
‘ரெல் யுவ மம் ரு கம் இன்’ என்றாள் இதைக் கேட்ட படகோட்டி.
‘சீ வோன்ட் லிசின் மீ’ என்றாள் இவள்.
தாய்க்கும் மகளுக்குமான முரண்பாடாக இருக்கலாம். வேறு வழியில்லாமல் நான் எழுந்து கபின் கதவைத் திறந்து, ‘உள்ளே வாங்க, ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்’ என்றேன்.
சற்று நேரத்தால், அவர்கள் உள்ளே வந்தார்கள். தலையைத் துவட்டும்படி பையிலே இருந்த சிறிய டவலை எடுத்துத் தகப்பனுக்குக் கொடுத்தாள் இவள். தாய் மீண்டும் போய் முன் இருக்கையில் உட்காந்தார்.
‘அதிஸ்டம் இருந்தால் திமிங்கிலம் பார்க்கலாம்’ என்றார் படகோட்டிய பெண்.
சற்று நேரத்தால் படகை மெதுவாகச் செலுத்தி, தண்ணீரில் எதையோ தேடினார். படகு மெதுவாக அசைந்தது, திடீரென உணர்ச்சி வசப்பட்டவராய் ‘யு ஆர் லக்கி, ரென்னொக் குளக்’ என்றார்.
இந்த ‘ரென்னொக் குளக், திறியொக் குளக்’ எல்லாம் எனக்கு மனப்பாடமாய்ப் போயிருந்தது. காரணம் வடதுருவ ஐஸ்லாந்துக்குச் சென்ற போதும், இப்படித்தான் கடலில் திமிங்கிலம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டார்கள். அப்பொழுதே எந்தத் திசையில் சட்டென்று பார்க்க வேண்டும் என்பதைப் பழகிக் கொண்டேன். காரணம் ஒரு விநாடி தாமதித்தாலும் திமிங்கிலம் தண்ணீரில் மறைந்து விடும். பொதுவாக 20-25 நிமிடத்திற்கு ஒரு முறைதான் திமிங்கிலம் வெளியே வரும், சட்டென்று கிளிக் செய்தால்தான் தெளிவான படம் கிடைக்கும்.
அவர் சொன்ன திசையைப் பார்த்தோம், தண்ணீரின் சலசலப்பைத் தொடர்ந்து, கறுப்பு வெள்ளை நிறமாக, ராட்சத உருவம் தண்ணீருக்கு மேலே துள்ளிப் பாய்ந்தது. சட்டென்று கமெராவில் சிறைப்பிடித்தேன். படத்தில் கறுப்பும் வெள்ளையுமான அதன் பாதி உடம்பும் அதன் வாலும் வெளியே துருத்திக் கொண்டிருந்தது.
‘ஐ மிஸ்ட் தட், எங்கே பார்கணும் என்று எனக்குத் தெரியலை, அதால என்னால பார்க்க முடியலை, நீங்க படம் எடுத்தீங்களா?’ என்று ஆவலோடு கேட்டாள்.
கமெராவில் பதிந்த படத்தைக் காட்டினேன்.
‘வாவ் அமேசிங், யுஆர் கிரேட்’ என்றாள். அது வெறும் வார்த்தைகள் அல்ல என்பது அவளது கண்களில் தெரிந்தது. எனக்கு உச்சி குளிர்ந்த போலிருந்தது. புகைப்பட ரசிகையாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், தெனாலி பயணத்தின் போது, எடுத்த ‘கரடியும், மானும்’ வீடியோவையும் அவளுக்குக் காட்டினேன்.
‘அப்போ அந்த மான் தப்பி ஓடிச்சா’ எதிர்பாராத ஆச்சரியத்தில் அவளது முகம் மலர்ந்தது. முடிவு தெரியாமல் தவித்த அவளுக்கு வீடியோவைப் பார்த்ததும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
‘உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா?’ என்றாள். ‘கேளுங்க’ என்றேன்.
‘அதென்ன ‘ரென்னொக் குளக், எனக்குப் புரியலை’ என்று கேட்டாள்.
‘அதுவா படகின் முனையை பன்னிரண்டு மணி என்பார்கள், அப்படிச் சொன்னால் முன்பக்கம் பார்க்க வேண்டும். ஆறுமணி என்றால் பின்னால் பார்க்க வேண்டும்’.
‘அப்போ நைனொக்குளக் என்றால்?’ சந்தேகத்தைக் கேட்டாள்.
‘இடது பக்கம் பார்க்க வேண்டும்’ என்றேன்
‘இப்போது புரியுது, ‘திறீயொக்குளக்’ என்றால் படகின் வலது பக்கம் பார்க்கணும் சரியா?’ என்றாள்.
‘யூ கொட்டிற்’ என்றேன். அவள் வியப்போடு என்னைப் பார்த்தாள்.
‘தாங்ஸ், இலகுவாகச் சொல்லித்தந்திட்டீங்க, நீங்க லெக்சரரா?’ என்றாள்.
எக்ஸிற் கிளேஸர் என்ற பனிமலை இங்கு பிரபலமானது. பனிக்காலத்தில் இருந்து இந்த கிளேஸர் இருப்பதாகப் படகோட்டி சொன்னாள். 1815 ஆம் ஆண்டில் இருந்து வருடத்திற்குச் சராசரி 3 அடிவரை பனி உருகுவதாகக் கணக்கெடுத்திருக்கிறார்கள். அதன்பின் அருகே உள்ள பியர் கிளேஸர் என்ற கரடியின் பெயருள்ள பனிக்கட்டி சூழ்ந்த கிளேஸர் மலையைப் பார்க்கச் சென்றோம். பல வருடங்களாக உருகாமல் அப்படியே இருக்கின்றது. ஆனால் இப்போது சிறு துண்டுகள் உடைந்து தண்ணீரில் மிதப்பது தெரிந்தது. படகோட்டி படகின் பின் பகுதியில் இருந்த ரெலஸ்கோப்பி ஸ்பூன் மீன்பிடி வலையால் ஒரு பனிக்கட்டியை எடுத்துக் காட்டினாள்.
‘எங்கள் குடும்பத்தை ஒரு படம் எடுத்துத்தர முடியுமா?’ என்று அவள் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. குடும்பமாக அவர்கள் எல்லோரும் பனிக்கட்டியைப் பிடித்தபடி நிற்க நான் படமெடுத்திருந்தேன். 
‘சீக்கிரம் எடுங்க, கை விறைக்குது’ என்றார் தாயார். தாயார் அப்படிச் சொன்னது இவளுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ இவள் முகத்தைச் சுழித்தாள்.
அவள் தனது வாட்ஸ்அப் இலக்கத்தை தந்தாள், அந்தப் படத்தை அவளுக்கு அனுப்பிவிட்டேன். ‘நீங்களும் பிடிச்சிருங்க, நான் படம் எடுக்கிறேன்’ என்று எங்களைப் பார்த்துச் சொன்ன அவள், தனது செல்போனில் இரண்டு படங்களை எடுத்து எனக்கு அனுப்பி இருந்தாள்.
அதன் பின் மவுண்டன் கோட் என்று சொல்லப்படுகின்ற வெள்ளை நிற ஆடுகளை மலைச் சரிவில் பார்த்தோம். கோல்டன் ஈகிள் என்று சொல்லப்படுகின்ற கழுகுகளைக் கூடுகளில் பார்த்தோம். மலை அடிவாரத்தில் உள்ள பாறைகளில் ஓய்வெடுக்கும் பழுப்பு நிறமான சீல்களைப் பார்த்தோம். தண்ணீரில் கூட்டமாக மிதக்கும் கறுப்பு நிற அலாஸ்கா ஒட்டர்கள், சீஹள் என்ற வெள்ளைநிற, சங்க இலக்கியத்தில் வரும் குருகு போன்ற பறவைகள், நீர்க்காகங்கள், பபின்ஸ், தண்ணீரில் அவ்வப்போது துள்ளிப் பாயும் சில்வர் சமன், பிங்சமன் போன்ற கடல்வாழ் உயிரினங்களையும் பார்த்தோம்.  ரெயில் பயணம்போல, சுமார் ஆறு மணி நேரம் எங்கள் படகுச் சவாரி நடந்தது.
நேரம் நெருங்கியதாலும், அலைகள் வேகமாக அடிக்கத் தொடங்கியதாலும் படகுச் சவாரியை அத்துடன் முடித்துக் கொண்டோம்.
‘யூ ஆர் லக்கி, திமிங்கிலத்தை அருகே பார்க்கக் கிடைத்தது’ என்று படகோட்டி குறிப்பிட்டார். உண்மைதான், எதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்து வந்தோமோ அவற்றை எல்லாம் அன்று பார்க்க முடிந்தது.
படகு தரிப்பிடத்தில் நின்றதும், தாய்தான் முதலில் தனது பையை எடுத்துக் கொண்டு படகைவிட்டு வெளியேறி டெக்கிலே இவர்களுக்காகக் காத்து நின்றார். மகளோ பொறுமையாக எல்லா பொருட்களையும் பையிலே மறுபடி எடுத்து வைத்தார். அதன் பின் நாங்களும் எங்கள் பைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராக வெளியேறினோம்.
வெளி வாசல் ஓரம் நின்ற அவள் எங்களைப் பார்த்து நட்போடு விடைபெறும் புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.
‘உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்று மகளிடம் சொல்லி விடை பெறும்போது, ‘எப்படி படகுச் சவாரி இருந்தது, உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?’ என்று வினாவினேன்.
‘எனக்கு ரொம்ம்ப பிடிச்சிருந்தது, நல்லாய் என்ஜோய் பண்ணினேன், ஆனால்...?’
‘ஆனால் என்ன?’ என்றேன் அவசரமாக. அவளிடமிருந்து ஏக்கப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
‘எங்க அம்மாவும் எங்களோட வந்திருந்தால் இன்னும் ரசித்திருப்பேன்!’ என்றாள்.

Story- Spider- சிலந்தி - 2025

 

Kuru Aravinthan

 

 சிலந்தி

 குரு அரவிந்தன்
நிருஜா டென்னிஸ் விளையாடிவிட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தபோது நிமால் யாருக்காகவோ வாசலில் காத்திருந்தான். அவனைக் கடந்து போகும்போது அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு ‘பாய்!’ சொன்னாள். அவனும் ‘பாய்’ என்றான்.
அவள் தனது காரை எடுத்துக் கொண்டு வரும்போதும் அவன் அங்கேயே நின்றான். அவன் அவளது டென்னிஸ் மிக்ஸ்டபிள் பாட்னர்.
இளமை அவனிடம் நிறைய இருந்தது. புதிதாக வந்த அவளது ஆட்டத்தின் திறமையைக் கண்டு அவனாகவே வந்து தன்னோடு சேர்ந்து போட்டிகளில் ஆடமுடியுமா என்று கேட்டான். கடந்த சில ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டில் கொடிகட்டிப் பறப்பவன் நேரேவந்து கேட்டபோது அவள் மெய்மறந்து போனாள்.
ஆனந்த அதிர்ச்சியில் ‘ஆம்’ என்று சொல்லக்கூட முடியாமல் தலையை மட்டும் ஆட்டினாள். இந்த இரண்டு வாரங்களாக அவனோடு சேர்ந்து தான் டென்னிஸ் பயிற்சி செய்கின்றாள்.
அவன் விலையுயர்ந்த நாகரீகமான உடைஅணிவதும் பென்ஸ் காரில் வருவதும் அவளை அவனிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதாக நினைத்தாள். நிமாலோடு சோடியாக விளையாடுவது தனக்குக்கிடைத்த பெரும் அதிஷ்டம் என்று நம்பினாள்.
சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்ததால் அவளுக்குள் இப்படி ஒரு ஈகோ எப்பொழுதும் இருக்கும். அவளை அப்படி நினைக்க வைத்தது அவளது பொருளாதார நிலை. பிறந்தமண்ணில் பாடசாலை டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் பல பெற்றவள். திருமணமாகி இங்கே வந்த போது பல கனவுகளையும் சுமந்து வந்தாள்.
கணவனின் இரவுவேலையும், அதன்பின் பகுதிநேரவேலையும், அதுமுடிய பகலில் தூக்கமும் அவளைக் குடும்ப வாழ்க்கையில் விரக்தியடைய வைத்தது. எனவேதான் அந்த விரக்தியை விரட்ட பழையபடி டென்னிஸ் ஆடத் தொடங்கினாள். காரை அவனுக்கு அருகே நிறுத்தி,
‘உங்களுக்கு லிப்ற் தரவா நிமால்?’ என்று கேட்டாள். அவன் ஒரு நிமிடம் தயங்கினான். அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்டு
‘கம் ஐ வில் றொப்யூ’ என்று சொல்லி கதவைத் திறந்து விட்டாள்.
‘இவ்யூ டோன் மைன்ட்’ என்று நிமால் கேட்டுவிட்டு முன்சீற்ரில் அமர்ந்து தனது வீட்டிற்கு போவதற்கு வழிகாட்டினான். தனது காரை நண்பன் எடுத்துச் சென்று விட்டதாகச் சொன்னான்.
இறங்கிப் போகும்போது ‘உள்ளே வந்துவிட்டுப் போங்களேன்’ என்று அவள் இருந்த பக்கம் வந்து ஆர்வத்தோடு கேட்டான். அவன் உள்ளே தன்னை அழைப்பான் என்பதை எதிர்பார்க்காத அவள்,
‘இல்லை வேறு ஒருநாளைக்கு வருகிறேன்’ என்றாள்.
‘சரி உங்க இஷ்டம்! உங்க பொன்னானபாதம் பட எங்க வீடு கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான்’ அவன் முகம் சுருங்கியது. அவளுக்கோ என்னபதில் சொல்வது என்று தெரியாமல் அவனது வேண்டுகோளை மறுக்கவும் முடியாமல் சங்கடப்பட்டவள்,
‘சரி வர்றேன்!’ என்று அரைமனதோடு தலையை ஆட்டிவிட்டு காரைவிட்டு இறங்கி அவனோடு உள்ளே போனாள்.
‘வீட்டிலே யார் இருக்கிறாங்க?’ என்று கேட்டுக் கொண்டே உள்ளே காலடி எடுத்து வைத்தாள்.
‘மனைவி பிள்ளைகள்’ என்றவன் ‘உட்காருங்க’ என்று செற்றியைக் காட்டினான். செல்வச்செழிப்பு வீட்டிலே தெரிந்தது.
‘எங்கே யாரையும் காணோம்’ 
‘அவங்க பாடசாலை விடுமுறையாகையால் மியாமிக்குப் போயிருக்கிறாங்க’ என்று சொல்லிவிட்டு, ‘வட் டூயூ லைக்ருகாவ்’ என்று கேட்டான்.
‘இல்லை ஒன்றும் வேண்டாம்’ 
‘நோ நோ ஏதாவது சாப்பிடுங்க, கோக் ஓ யூஸ்’ என்று வற்புறுத்தினான்.
‘எனித்திங்’
‘எனித்திங்’ அவன் விழிகளை உயர்த்தி ஒருமாதிரியாய்ப் பார்த்தான்.
அவள் வெட்கப்பட்டு தன்னைச் சமாளித்துக் கொண்டு ‘கோக்’ என்றாள். ஐஸ் துண்டுகள் மிதக்க கோக் கொடுத்தான். அவள் அதை அருந்திக் கொண்டே ‘எத்தனை குழந்தைங்க’ என்றாள்.
‘ஒரு பையன் ஒரு பெண்! நாமிருவர் நமக்கிருவர்! இருங்க ஆல்பம் பாருங்களேன்’ என்று ஆல்பத்தை எடுத்தான்.
‘நிறுத்தீட்டிங்களா?’ சட்டென்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.
‘எனக்கு விருப்பம்தான், ஆனால் மனைவி சொல்லிட்டா இதுவே போதுமென்று!’
உயரே இருந்த ஆல்பத்தை எட்டி எடுக்கும்போது அவனது கண்ணுக்குள் தூசி விழுந்தது. செற்றியில் உட்கார்ந்து கண்ணைக் கசக்கினான்.
‘என்ன? என்னாச்சு உங்களுக்கு?’ என்று கேட்டபடி அருகே வந்தாள் பதட்டத்தோடு.
‘கண்னுக்குள் ஏதோ விழுந்து விட்டது’ என்றான்.
‘இருங்க’ என்று சொல்லி இயல்பாக அவனருகே குனிந்து கண்இமைகளைத் திறந்து கண்ணுக்குள் ஊதிவிட்டாள்.
‘இப்போ சரியா?’ என்றாள்.
அவன் ‘இல்லை’ என்று தலையாட்டினான்.
மீண்டும் கண்ணுக்குள் ஊதிவிட்டு ‘கண்ணைத் திறவுங்க’ என்றாள்.
அவன் திறந்து பார்த்து விட்டு ‘ஐயாம் ஓகே’ என்றான். அவளது ஸ்பரிசம் பட்ட இடமெல்லாம் அவனுக்குள் நெருப்பாய்ச் சுட்டன. ஆனால் அவளது சூட்டுக் காற்று கண்ணுக்கு இதமாயிருந்தது.
ஆல்பம் பார்த்த அவளுக்கு ஏனோ ஒருவித பொறாமை அவனது மனைவிமேல் வந்தது. யாரோ ஒரு பெண்ணுக்கு இவ்வளவு அதிஷ்டமா? மியாமியை அவளால் நினைத்தும் பார்க்கமுடியாது, அவளது கனவு உலகமாக அது இருந்தது. மியாமி வேண்டாம் இப்படி ஒரு வீடாவது? கற்பனை எங்கோ எல்லாம் பறந்து முடிவில் ஏக்கப் பெருமூச்சாய் வெளிவந்தது.
‘என்னிடம் சில டென்னிஸ் டெமோ வீடியோ கசெட் இருக்கு, போட்டுக் காட்டிறேன் பார்க்கிறீங்களா?’
‘பார்க்கஆசைதான் ஆனால் நேரம் போயிடிச்சு, வேறு ஒரு நாளைக்கு வந்து பார்க்கிறேனே!’அவள் விடைபெற்றபோது நிமால் அருகே வந்தான்.
‘யூ லுக் சுவீற்’ என்றவனது வார்த்தைகளில் மெய்மறந்து நின்றவளின் கன்னத்தில் சட்டென்று முத்தமொன்று கொடுத்து ‘பாய்’ சொன்னான்.
இதை எதிர்பாராத அவள் மிரண்டுபோய் மருட்சியுடன் அவனை மௌனமாய்ப் பார்த்தாள். விடைபெறும் போது முத்தம் கொடுத்துப் பிரிவதில் ஒன்றும் தப்பில்லை என்பது மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் அவர்களது கலாச்சாரத்தைமட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம் என்றெல்லாம் கணவனோடு அவள் வாதாடுவதுண்டு.
ஆனால் இப்போது அவளே அப்படி ஒரு சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட போது ஒரு அன்னியனின் முத்தத்தால் அவளது நெஞ்சுக்குள் இனம்கண்டு கொள்ளமுடியாத பீதி பிடித்துக் கொண்டது. அந்த முத்தம் ஒரு சாதாரண முத்தமில்லை வித்தியாசமானது என்பது அவளுக்குப் புரிந்தது.
திடீரென பயமும் கவலையும் அவளை வாட்டத் தெடங்கின. என்ன இது? என்னுடைய பலவீனத்தை இவன் தனக்குச் சாதகமாய்ப் பயன் படுத்துகிறானோ? அதற்கு மேல் அங்கே நிற்க விருப்பமில்லாது அவசரமாய் வெளியேறினாள்.
தொடர்மாடிக் கட்டிடத்திற்கு வந்து காரை நிறுத்திவிட்டு உள்ளே போனாள். எலிவேற்றருக்குக் காத்திருந்து ஆறாவது மாடிக்குப் போய்க் கதவைத்திறந்து உள்ளே போனாள். கணவன் அடித்துப் போட்டது போலக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. ஏழுவயது மகள் மேசையில் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அருகே போய்த் தலையைத் தடவிவிட்டாள்.
‘சாப்பிட்டியா, செல்லம்?
‘ஆமா, அப்பா போட்டுக் கொடுத்தார்’
‘என்ன எழுதிறாய்?’
‘புறஜெக்ற், ரீச்சர் ஸ்பைடரைப் பற்றிப் படம்கீறி எழுதிக் கொண்டு வரச்சொன்னா.’
‘எப்ப கொடுக்கணும்’
‘அடுத்தகிழமை’
பாத்திரங்கள் கழுவிவைத்தாள். இரவுவேலைக்கு போவதற்கு கணவன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அவனுக்குச் சாப்பாடு பரிமாறி வேலைக்குக் கொண்டு போவதற்குக் கோப்பியும் போட்டு கொடுத்தாள்.
அந்த ஒற்றைப் படுக்கையறை மாடிவீட்டில் தினமும் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிதான். ஆனாலும் இன்று ஏனோ அவளுக்கு ‘இது என்ன வாழ்க்கை’ என்ற எண்ணம் மனதில் எழுந்தது. 
இது எல்லாம் ஒரு அடிமைத்தனமான செய்கை போல இருந்தது. பணம் கொடுத்து மாப்பிள்ளை எடுத்து அவர்களுக்கு அடிமைத்தொழிலும் செய்யும் பெண்களின் அவலம் பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வாசித்தது ஞாபகம் வந்தது. இவனைத் திருமணம் செய்ததில் என்ன சுகத்தைக் கண்டேன் என்ற எண்ணம் கொஞ்சநாட்களாக அவள் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது.
உளரீதியாக மட்டுமல்ல, உடல்ரீதியாகவும் அவளை அவன் இதுவரை திருப்திப் படுத்தியதில்லை. திருமணமான புதிதில் ஆசை அறுபதுநாள் மோகம் முப்பது நாள் என்ற கணக்கில் தான் வாழ்க்கையே ஆரம்பித்தது. குழந்தை பிறந்தபின் அந்த சுகம்கூட அவளுக்குக் கிடைக்கவில்லை. அதன்பின் அவள் முழுமையாக எந்தவொரு இன்பத்தையும் கணவனிடம் இருந்து அனுபவிக்கவில்லை. சில நாட்களின் முன் வெட்கத்தை மறந்து கணவனிடம் பட்டும்படாமலும் வாய்விட்டுக் கூடச் சொல்லிப் பார்த்தாள்.
‘சும்மா இருந்து திண்டுபோட்டு உடம்பு திமிர் எடுக்குதோ? நண்டு கொழுத்தால் வளையில் இருக்காதாம்!’ ஒரே வார்த்தையில் அவன் அவளது வாயை மூடிவிட்டான்.
பக்கத்து அப்பாட்மென்ற் ஆன்ரி கவுன்சிலிங்குக்குப் போவதுண்டு. ‘உன்பிரச்சனை என்னவென்று எனக்குப் புரியுது. பயப்படாமல் என்கிட்ட சொல்லலாம்’ என்பது போல அவரது பார்வை நம்பிக்கை ஊட்ட ஒரு நாள் தனது நிலைமையை எடுத்துச் சொல்லி ஆலோசனை கேட்டாள்,
‘என்னைப் பொறத்தவரை கணவனுக்கு ஏற்ற மனைவியாய் அனுசரித்துப் போவதுதான் ஒரு குடும்பப் பெண்ணுக்கு நல்லது. நான் அதைத்தான் செய்கிறேன்! அதைத்தான் செய்வேன்! ஆனால் இந்த நாட்டிலே பெண்களுக்கு எல்லாச் சுதந்திரமும் இருக்கிறது. அந்த நாட்டிலே அன்று எங்களுக்கு இல்லாத சுதந்திரம் இன்று இந்த நாட்டிலே உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே உன்னுடைய விருப்பத்தை யாரும் தடுக்க முடியாது. உன் இஷ்டத்திற்கு நீ எதுவும் செய்யலாம். அதைத் தடுத்து நிறுத்த உன் கணவனுக்குக் கூட உரிமையில்லை!’
‘இந்த நாட்டில் நீ எதுவும் செய்யலாம்’ என்று ஆன்ரி சொன்னது அவளுக்குள் ஒருவித உற்சாகஊற்றை ஏற்படுத்தியது.
அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் சங்கடப்பட்டாள். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை இவனால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? கண்களில் ஈரம் படர்ந்தது.
இப்போதெல்லாம் அடிக்கடி அவர்களுக்குள் சின்னச் சின்ன விடயத்திற் கெல்லாம் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருசிலர் உறவு என்று சொல்லிக் கொண்டு எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.
‘என்னை எதுக்குக் கலியாணம் செய்தீங்க?’
‘என்ன இது நீயும் விரும்பித்தானே கழுத்தை நீட்டினாய்’
‘இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று தெரிந்திருந்தால் நிச்சயமாய் சம்மதித்திருக்க மாட்டேன். எனக்கு எல்லாமே அலுத்துப் போச்சு’
‘எப்படி ஒரு வாழ்க்கை? இப்ப உனக்கு என்ன குறை?’
‘செல்வாக்காய் இருப்பது போல நடிச்சு நீங்க என்னை ஏமாத்திட்டீங்க. யாருக்கு வேணும் இப்படி ஒரு பிச்சைக்கார வாழ்க்கை?’
‘ஏன் உனக்கு என்னைப் பிடிக்கலையா?’
‘பிடிக்கிறத்திற்கு என்ன இருக்கு? வீடிருக்கா, காசிருக்கா? எதைப்பிடிக்கணும்? இந்தத் தூங்குமூஞ்சியையா?’
‘ஓ.. கட்டினால் என்னைத்தான் கட்டுவன் என்று அமெரிக்கக் கனவோட ஒற்றைக்காலில் நின்ற உனக்கு இப்ப நான் பிச்சைக்காரனாய் தெரியிறன், அப்படித்தானே..?’
காலையில் எழுந்திருக்க மனம் வரவில்லை. மனசு வெந்து உடம்பு லேசாச்சுட்டது. நேற்றைய நினைவு மனசுக்குள் அரித்தது.
‘என்ன துணிச்சல் அவனுக்கு? முத்தம் கொடுக்க எப்படி அவனுக்கு தைரியம் வந்தது? எல்லையை மீறி அவனுக்கு இடம் கொடுத்து விட்டேனோ? இனிமேல் வேண்டாம் இந்தத் தொடர்பு. நான் நல்ல மனைவியாய் இருக்க வேண்டும்!’ மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அன்று டென்னிஸ் பயிற்சிக்கு அவள் போகவில்லை. மகளுக்கு ஸ்பைடர் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். 
‘Most female spiders spin webs, they do not stick to their own web. They make very clever traps.’
பெரும்பாலான பெண் சிலந்திகள் வலைகளை உருவாக்கினாலும் அவை அவற்றின் சொந்த வலையில் மாட்டிக் கொள்வதில்லை. அவைகள் மிகவும் புத்திசாலித்தனமான பொறிகளை உருவாக்கிவிட்டுக் காத்திருக்கின்றன.
தொலைபேசி அலறியது. எடுத்து ‘ஹலோ’ என்றாள்.
யாரை வெட்டிவிட நினைத்தாளோ அவனே மறுபக்கத்தில்!
‘நிமால்!’
‘சொறி இன்றைக்கு என்னாலே பயிற்சிக்கு வரமுடியாது’
‘ஏன்?’
என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லியாக வேண்டுமே!
‘வந்து..... கார் பழுதாய்ப் போய்ச்சு!’ தட்டுத் தடுமாறிச் சொன்னாள்.
‘பரவாயில்லை நான் வந்து கூட்டிக் கொண்டு போகிறேன்.’
‘இல்லை வேண்டாம்!’
‘ரெடியாய் இருங்கோ, அரைமணித்தியாலத்தில் அங்கே நிற்பேன்’
‘வேண்டாம்!’ அவசரமாய் மறுக்க முற்பட்டபோது தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.
இவன் என்ன என்னை வெருட்டுறான்?  கலவரத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தாள். கணவன் தூங்கிக் கொண்டிருந்தான். கோபம் கோபமாய் வந்தது. இவன் யார் என்னைக் கட்டாயப்படுத்த? கொஞ்சம் இடம் கொடுத்தால் ‘அட்வான்டேச்’ எடுக்கிறான்.
‘அவன் முத்தம் கொடுத்தபோது நான் மௌனமாய் இருந்தது தப்போ? என்னைப்பற்றி இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? வரட்டும்! இன்றைக்கு அவனுக்கு நல்லாய்க் குடுக்கவேணும்!’
மின்விசிறியை வேகமாகப் போட்டுவிட்டு கட்டிலில் விழுந்தாள். அவன் என்னதான் சொன்னாலும் நான் இனிமேல் டென்னிஸ் விளையாடப் போகப்போவதில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தைத் தணித்தாள்.
திடீரென அவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. அவன் மேலே தேடி இங்கே வந்து விடுவானோ என்ற பயத்தில் பரபரப்புடன் அவளே கீழே இறங்கிச் சென்றாள். அவன் பென்ஸ் காரை அருகே கொண்டு வந்து நிறுத்தி கதவைத்திறந்து விட்டான்.
‘இல்லை! நான் வரவில்லை! நீங்கள் போங்கோ!’
‘ஏன்?’
‘ஏனோ நான் வரவில்லை!’
‘சனிக்கிழமை முக்கியமான மாட்ச் இருக்கு! பயிற்சி எடுக்காமல் எப்படி வெல்றது?’
அவன் குரலை உயர்த்திக்  கண்டிப்போடு சொன்னான். அவள் அதற்குக் கட்டுண்டது போல, மனமில்லாமல் முன்ஆசனத்தில் ஏறி அமர்ந்தாள். அவன் ஒன்றும் பேசாமல் பயிற்சி முகாமை நோக்கிக் காரைச் செலுத்தினான்.
அவள் திடீரென்று அவனைப் பார்த்து,
‘உங்க மனைவி வந்திட்டாங்களா?’ என்றாள்.
‘இல்லை!’
‘இன்றைக்குக் கட்டாயம் பயிற்சி எடுக்கணுமா?’
‘ஏன் உங்களுக்கு வசதியில்லையா? ஆர் யூ நாட்..... பீலிங் வெல்?’
அவனைப் பார்த்து தலையாட்டினாள். ஆம் என்கிறாளா இல்லையா என்பது அவனுக்குப் புரியவில்லை.
‘ஐயாம் சொறி, பரவாயில்லை! அப்போ நாளைக்கு நாங்க பயிற்சி எடுக்கலாம்! நான் உங்களை உங்க வீட்டிலேயே விட்டுவிடுறேன்.’
நிமால் காரைத் திருப்பினான்.
‘இல்லை வேண்டாம்! உங்க வீட்டிற்கே போகலாம்!’ என்றாள் நிதானமாக.

Story Review Contest - 2025 - Tips

 




எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகளை திறனாய்வு செய்ய விரும்புபவர்கள் வெவ்வேறு கருப்பொருட்களைக் கொண்ட கதைகளை எடுத்தும் திறனாய்வு செயய்யலாம்.

விரும்பினால் பின் வரும் முக்கிய தலைப்புகளில் அவற்றை அணுகலாம்.
1.    சமூக, குடும்பக் கதைகள்.
2.    சங்க இலக்கியம் சார்ந்த கதைகள்.
3.    போர்க்காலச் சூழல் கதைகள்.
4.    காதல் கதைகள்.
5.    கொரோனா காலக் கதைகள்.
6.    பெண்ணியம் சார்ந்த கதைகள்.
7.    அறிவியல் கதைகள்.
8.         வெளிநாட்டுக் கதைகள்

உங்கள் எழுத்தாற்றலைக் காட்டுங்கள். முடிவு திகதி 
31-3-2025

பின் வரும் இணையத்திலும் குரு அரவிந்தனின் சிறுகதைகளை வாசிக்கலாம்.

மின்னஞ்சல்: [email protected]
இணையம்:

Story Review Contest - 1st Prize 2023-2024

 






குரு அரவிந்தனின் சிறுகதைகள் - பகுப்புமுறைத் திறனாய்வு

 

முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா 

 

(முதல் பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை)

குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். 'அணையா தீபம்' என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கி தமிழ் இலக்கிய உலகை அலங்கரித்து வருகிறார். அறிவியல் சார்ந்த படைப்புக்களையும் தந்துள்ளதோடு பல விருதுகளையும் வென்று குவித்த ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் ஆவார்.

குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதை ஒன்றை முதன் முதலில் சிறுகதைகளுக்காக திறக்கப்பட்ட வாட்ஸ்அப் (WhatsApp) குழுமம் ஒன்றிலேயே காணக் கிடைத்தது. அன்றிலிருந்து குரு அரவிந்தன் அவர்களுடைய சிஷ்யாய் அவருடைய சிறுகதைகளை தேடித் தேடி வாசிப்பதில் நேரத்தை செலவிட்டேன். அவர் கதையை தொடங்கியிருக்கும் பாங்கும் அதன் முடிவில் வைத்திருக்கும் எதிர்பாரா திருப்பமும் என்னை மிகவும் ஈர்த்தது. அனேகமான கதைகள் மிகவும் சுவாரஷ்யமாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்திச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டு சில நேரங்களில் ஆசிரியரின் கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே என்னை நான் மாற்ற முயற்சித்திருக்கிறேன். அந்தளவுக்கு அவரின் படைப்புக்கள் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின என்பதை மறுதலிக்க முடியாது. குரு அரவிந்தன் அவர்களினுடைய 'அப்பாவின் கண்ணம்மா' சிறுகதையானது என்னை மிகவும் ஈர்த்த ஒரு படைப்பாகும்.

அந்த வகையில் நான் எழுத விழைந்த இக்கட்டுரையின் பிரதான நோக்கம் குரு அரவிந்தன் அவர்களினுடைய ஏதேனும் ஒரு இலக்கியத்தில் உள்ள படைப்புக்களை பகுப்புமுறை அடிப்படையில் அலசுவதாகும். அதற்காக நான் சிறுகதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன். குரு அரவிந்தன் அவர்களினுடைய தமிழ்ப் புலமையை பகுப்பாய்வு செய்வதில் எவ்வித நியாயமுமில்லை. ஏனெனில் அதில் தவறுகளை காணவே முடியாத அளவுக்கு அவரின் கற்பனை மற்றும் சொல்லாடல் திறன் பரந்து விரிந்து இருப்பதாகும். இருந்தாலும் ஒவ்வொரு கதையின் மூலமும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் யதார்த்த மற்றும் கற்பனை விடயங்களை ஒரு ரசிகையாய் தானும் கற்றுக் கொள்ள முனைவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அந்த வகையில் குரு அரவிந்தன் அவர்களினால் செதுக்கப்பட்ட “புதிய வெளிச்சம் தெரிகிறது, முகநூல் காதல், யார் குழந்தை, ஆசை முகம் மறந்து போமோ?” ஆகிய நான்கு சிறுகதைகளும் பகுப்பு முறைத் திறனாய்வு அடிப்படையில் இக்கட்டுரையில் நோக்கப்படுகின்றன. தெரிவு செய்யப்பட்ட சிறுகதைகளில் ஆசிரியர் கூற விழையும் பிரதான கருத்துஃமையக்கருத்து,  கதையில் ஆசிரியர் பயன்படுத்திய மொழிநடைஃஉத்திகள், கதையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரப்படைப்பு,  கதையின் சிறப்பம்சங்கள் என்பன ஒவ்வொரு கதையைக் கொண்டு தனித்தனியாக ஆராயப்படுகின்றன.


புதிய வெளிச்சம் தெரிகிறது

      குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதைகளிலேயே புதிய வெளிச்சம் தெரிகிறது என்ற சிறுகதையானது ஒரு மைல்கல் என்று கூறுவதே பொருத்தமானது. அந்தளவுக்கு பல சிறப்பம்சங்களை ஆசிரியர் கதையினுள் கையாண்டிருக்கிறார். 

ழூ    ஈழ யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு நேர்ந்த துன்பங்களும் பின்னர் எவ்வாறு மன உறுதியோடு தனது வாழ்க்கையை வாழத் துடிக்கிறாள் என்பதுமே கதையின் கருவாக அமைந்துள்ளது.
ஆசிரியர் கூற விழையும் பிரதான கருத்துஃமையக் கருத்து :-
      இலங்கையில் ஏற்பட்ட முப்பது வருட கால யுத்தத்தின் போதும் பின்னரும் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன்னல்கள் மற்றும் அவலங்களை கச்சிதமாக ஆசிரியர் தெளிவுபடுத்தியிருக்கிறார். யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகள்,  சேதங்கள் என்பன எடுத்துக்காட்டப்பட்டுள்ளதோடு மனிதன் மட்டுமன்றி பறவைகள், விலங்குகள், மரஞ் செடி கொடிகள் உட்பட இயற்கை சூழல் முற்று முழுதாக பாதிக்கப்பட்டிருந்ததை துல்லியமாக விளக்கி நிற்கிறார். 
      முக்கியமாக இக்கதையில் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் அவசியம் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தை வாசகர் மனதில் உறுதியாக ஊட்டியிருக்கிறார். அடுத்த தலைமுறையினர் கல்வியின் மூலம் சிறக்க வேண்டும் என்ற ஆசிரியரின் எதிர்பார்ப்பு இக்கதையில் தெளிவுற விளங்குகிறது.

      ஆசிரியர்களின் குறைகள் மற்றும் அவர்களின் மனக்குமுறல்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் ஆழ்மனதில் கிடக்கும் சொல்ல முடியாத துன்பங்கள் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கதாசிரியரின் ஆதங்கம் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

      தமிழர்கள் மற்றும் தமிழ்ச் சமுதாயம் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் இருக்காமல் அவர்களுக்கும் சமூகத்தில் சகல உரிமைகளும் கொடுக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கதாசிரியரின் அவா ஏங்கி நிற்கிறது.

பாத்திரப் படைப்பு :-
      இக்கதையில் பெயர் குறிப்பிடப்படாத இளம் பெண் கதை முழுவதும் ஆட்சி செய்திருக்கிறார். இப்பாத்திரம் உயிரோட்டமுள்ளதாக படைக்கப்பட்டிருப்பது கதைக்கு உயிர் சேர்க்கிறது.

மொழிநடைஃஉத்தி :-
      ஆசிரியர் கதையில் எளிய மொழிநடையை உபயோகித்திருப்பதோடு கதையின் பிரதான கதாபாத்திரமான இளம் பெண் வாசகர்களுடன் நேரடியாக நின்று கதைப்பது போன்றதொரு பாங்கை பயன்படுத்தியிருக்கிறார்.
      மேலும் யாழ்ப்பாண பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் உபயோகித்திருப்பது கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. “எத்தனை இழப்புக்களை அவாவும் சந்தித்திருப்பா?”
      உவமானம், உவமேயம் மற்றும் வர்ணனை மூலம் கதையை சிறப்புற நகர்த்தியிருப்பதோடு சுற்றுச்சூழல் பற்றிய வர்ணனையையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

      மேலும் கதைக்கும் தலைப்புக்குமான பொருத்தப்பாடு நிரம்ப பொருந்தியிருக்கிறது. யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை புதிய வெளிச்சம் தெரிகிறது எனக் கூறியிருப்பது இதன் பொருத்தப்பாட்டை பூரணப்படுத்துகிறது.

சிறப்பம்சம் :-
      இச்சிறுகதையின் மூலம் பல படிப்பினைகளையும் தத்துவங்களையும் வெளிப்படுத்தி வாசகர்களை சிந்திக்கத் தூண்டியிருப்பது சிறப்புக்குரியது. மேலும் கதையின் மூலம் தமிழர்களின் நற்பண்புகள் விபரிக்கப்பட்டுள்ளதோடு தமிழ்ப் பெண்களின் வீரம், தளராத தன்மை, சொந்தக் காலில் நிற்கும் வைராக்கியம் என்பன அழுத்தமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
      மேலும் இச்சிறுகதையானது நட்பியல் சார்ந்த புனை கதை வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பை மெருகூட்டுகிறது.
      இச்சிறுகதையில் குரு அரவிந்தன் அவர்கள் பயன்படுத்திய கீழ்வரும் வரிகள் என்றும் என் நெஞ்சை விட்டு அகலாது வேரூன்றிய வார்த்தைகளாகும்.
“விழுந்தாலும் நாங்களும் எழுந்து நிற்போம் என்பதை அடுத்த தலைமுறைக்கு சாதித்துக் காட்ட வேண்டும் என்ற மன வைராக்கியம் எனக்குள் இருந்தது.”

முகநூல் காதல்

ழூ   முகநூலால் பெண் ஒருவருக்கு கிடைக்கும் ஆணின் நட்பும் முடிவில் இருவருக்கும் காத்திருக்கும் பேரதிர்ச்சியும் இக்கதையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 
ஆசிரியர் கூற விழையும் பிரதான கருத்துஃமையக் கருத்து :-
      தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களின் இலகு தன்மை அதேபோல அவற்றினால் ஏற்படும் இடர்பாடுகள் என்பன பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளன. 
      அதே போல் முகநூலினால் தற்காலத்தில் ஏற்படும் தொடர்புகள் மற்றும் ஒருவருக்கொருவர் ஏமாற்றும், ஏமாறும் தன்மைகள் இதன் மையக் கருவாக இருக்கும்படி கதாசிரியர் கதையை நகர்த்தியுள்ளார்.
      மேலும் அறைக்குள் இருந்தபடியே அகிலத்தை வலம் வர முடியும் என்பதோடு முன்னைய காலத்திற்கும் தற்கால நவீன பரிணாம வளர்ச்சிக் காலத்திற்குமிடையிலுள்ள பாரிய வித்தியாசத்தையும் காட்ட முனைந்துள்ளார்.
பாத்திரப்படைப்பு:-
      இச்சிறுகதையில் வரும் உமா, திரு ஆகிய இரு பிரதான பாத்திரங்களும் தமிழில் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவும் திரைப்படங்கள் மற்றும் சினிமாவை அதிகம் விரும்பக்கூடியவர்களாகவும் விமர்சிப்பவர்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு தமது எண்ணங்களை வெளிப்படையாக பேசாதவர்களாகவும் கதாசிரியர் வடிவமைத்துள்ளார்.
      கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பிரதான பாத்திரங்கள் உயிரோட்டமுடையதாய் நகர்ந்துள்ளமை சிறப்புக்குரியதாகிறது.
மொழிநடைஃஉத்தி :-   
      எல்லோருக்கும் புரியும்படி எளிய மொழிநடையிலான இலகு தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
      கதைக்கும் தலைப்புக்கும் இடையிலான பொருத்தப்பாடு சிறப்புற பொருந்தியிருக்கிறது.
      பேச்சு வழக்குச் சொற்களுடன் கூடிய ஒரு நடை இழையோடப்பட்டுள்ளது.
      இறுதியில் நகைச்சுவை உணர்வு மிக்கதாக கதையை ஆசிரியர் நிறைவு செய்துள்ளமை கதைக்கு வலு சேர்க்கிறது.
சிறப்பம்சம் :-
      இச்சிறுகதையானது தற்கால சமூகத்தில் நடக்கும் யதார்த்தத்தினை வெளிப்படுத்தியிருப்பதோடு கதையானது எதிர்பாராத திருப்புமுனையுடன் முடிவடைந்திருப்பது வாசகர்களை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது. 
      அத்தோடு தற்கால தொடர்பு சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்ற படிப்பினையையும் ஆசிரியர் குறிப்பிட முனைவதோடு அழகிய காதல் உணர்வு ஒன்று மறைமுகமாக வெளிப்படுத்தப்பட்டும் இருப்பது இதன் சிறப்பம்சங்களாகும்.

யார் குழந்தை

   பணத் தேவைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் ஒரு ஆண் அங்கு ஏற்படும் தவறுதலான ஒரு சூழ்நிலையால் ஒரு குழந்தைக்கு அப்பா என்ற பொய் வலைக்குள் சிக்குண்டு தவிப்பதும் பின்னர் அதிலிருந்து விடுபட தான் நிரபராதி என போராடுவதும் இறுதியில் அவருக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சியுமே இச்சிறுகதையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் கூற விழையும் பிரதான கருத்துஃமையக்கருத்து :-
      பணத்திற்காகவும் குடும்ப வருமானத்திற்காகவும் வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச் செல்லும் ஆண்களின் அவல நிலை எடுத்துக்காட்டப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு வாழ்க்கையால் ஒரு ஆண் தனது குடும்பம், மனைவி, பிள்ளைகள்,  சந்தோஷம் என அனைத்தையும் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதையும் ஆசிரியர் இக்கதையின் மூலம் கூற விழைந்துள்ளார்.
      மேலும் நவீன விஞ்ஞானத்தின் அல்லது அறிவியலின் வளர்ச்சி பெருமளவில் மனிதர்களுக்கு நன்மை தரக்கூடியது என்ற கருத்தையும் விளக்குவதோடு அரபு நாடுகளில் இருக்கும் கடுமையான சட்ட திட்டங்களையும் அவை மீறப்படும் பட்சத்தில் கிடைக்கும் தண்டனைகளையும் கதாசிரியர் தெளிவுற விரிவுபடுத்தி இருக்கிறார்.
பாத்திரப்படைப்பு :-
      இச்சிறுகதையில் வரும் பிரதான பாத்திரமான வெளிநாட்டில் வேலை செய்கின்ற ஒரு ஆண் தான் வேலை செய்யும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிப்பவராகவும் தன்னுடைய கஷ்டங்களை பாராமல் ஏனையோருக்கு உதவுபவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
      மேலும் மனிதநேயமிக்கவராகவும் தன் மனசாட்சிக்கு உண்மையாக நடப்பவராகவும் இப்பாத்திரம் அமைந்திருப்பதோடு தன் மனைவிக்கு உண்மையாக இருப்பவராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரதான கதாபாத்திரத்தின் மனைவி தன் கணவனுக்கு துரோகம் செய்தவளாகவும் தன் கணவனின் நண்பருடன் தகாத உறவில் ஈடுபட்டு கணவனின் நட்புக்கும் களங்கம் செய்தவளாகவும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேலும் கணவனிடம் பொய் அன்பை காட்டுபவளாகவும் பெற்றோர் நிச்சயம் செய்த திருமணம் ஆகையால் கணவனுடன் புரிந்துணர்வு இல்லாதவளாகவும் காணப்படுகிறாள். 
மொழிநடைஃஉத்தி :-
      கதை ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை பிரதான பாத்திரம் நகர்ந்துள்ளதோடு கதையின் இடையிடையே பிரதான பாத்திரம் வாசகர்களோடு நேரடியாக கதைப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
      கதையின் இறுதியில் வினா எழுப்பி வாசகர்களை சிந்திக்கத் தூண்டியிருப்பதோடு அதற்குரிய விடையை வாசகர்களிடமே கேட்டு கதையை நிறைவு செய்திருப்பதும் இச்சிறுகதையில் ஆசிரியர் கையாண்ட உத்திகளாகும்.
      வினா போன்றதொரு அமைப்பில் கதைக்குரிய தலைப்பை ஆசிரியர் தேர்வு செய்துள்ளதோடு பேச்சு வழக்குச் சொற்களும் உரையாடல்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.
சிறப்பம்சம் :-
      கதையின் இறுதியில் எதிர்பாராத திருப்பத்தை வைத்துள்ளதோடு சுவாரஷ்யமான வியக்க வைக்கும் முடிவாகவும் கதை அமையப்பெற்றுள்ளது. அத்தோடு வெளிநாட்டு வாழ்க்கைக்குள்ளும் வெளிப்படும் அழகிய மனிதநேயம் மற்றும் தன்னுடைய இன்னல்களை பெரிதாக கருதாமல் ஏனையோருக்கு உதவி செய்யும் மனப்பாங்கும் கதையின் சிறப்பம்சங்கள் ஆகும்.

ஆசை முகம் மறந்து போமோ?

  காதல் தோல்வியினால் மனமுடைந்து போன ஒரு பெண் பல அவலங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் எவ்வாறு திருமண வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறாள் என்பதே கதையின் பிரதான அம்சமாகும்.
ஆசிரியர் கூற விழையும் கருத்துஃமையக்கருத்து:-
      கடந்த கால வாழ்க்கையை எண்ணி கவலைப்படாது தன் நிகழ்கால வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதையும் கிடைக்காத ஒன்றை நினைத்து வருந்தாமல் இருப்பதை வைத்து வாழ்க்கையை அழகாக்க வேண்டும் என்ற படிப்பினையையும் ஆசிரியர் இச்சிறுகதையினூடாக எடுத்துக்காட்டியுள்ளார்.
       அத்தோடு இழந்து போன காதலை நினைத்து கண்ணீர் வடிக்காமல் எதிலும் நன்மை உண்டு என்றெண்ணி திருமணம் செய்து மனநிறைவுடன் வாழ்வதோடு எம் வாழ்க்கையில் அடுத்தவர்களின் தலையீட்டை தவிர்த்து தன் மனம் நினைத்ததை செய்வதே சிறப்பு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாத்திரப் படைப்பு :-
இளம்பெண் - தன் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவளாகவும் தனக்கு கிடைத்த வாழ்க்கையை அங்கீகரித்தவளாகவும் இச்சிறுகதையில் வரும் இளம் பெண் காட்டப்பட்டுள்ளார்.
தனது திருமணத்திற்கு முன்னர் தனது காதல் மீதும் காதலன் மீதும் அதிக நம்பிக்கை கொண்டவளாக காட்டப்பட்டுள்ளதோடு காதல் தோல்விக்கு பின்னர் காதலன் மீது அதீத வெறுப்பு கொண்டவளாகவும் இப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
      காதல் தோல்வியினால் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்ததோடு அதை ஏற்றுக் கொள்ள முடியாத மனப்பாங்கை உடையவளாகவும் இப்பெண் காட்டப்பட்டுள்ளார்.
துணைப் பாத்திரம் :-
சிறுகதையில் வரும் பிரதான பாத்திரமான இளம் பெண்ணின் கணவரான இவர் அனைத்தையும் சகஜமாக எடுத்துக் கொள்பவராகவும் மனைவியின் கடந்த கால மற்றும் நிகழ்கால உணர்வுகளை புரிந்து கொள்பவராகவும் கடந்த காலத்தை பற்றி அலட்டிக் கொள்ளாதவராகவும் செதுக்கப்பட்டுள்ளார்.
மொழிநடைஃஉத்தி :-
      சிறுகதையில் கதாசிரியர் பிரதானமாக பாரதியாரினுடைய அதிக கவிதை வரிகளை பயன்படுத்தியுள்ளார். “நேச மறக்கவில்லை நெஞ்சம்- எனில் நினைவு முக மறக்கலாமோ?”
             கதையின் தலைப்பை கதைக்குள்ளேயே இருந்து தெரிவு செய்திருப்பதோடு கதையின் தலைப்பை வினா அமைப்பில் சூட்டியிருப்பது பொருத்தமாகிறது.
      கதையின் அதிகமான பகுதிகள் வாசகர்களுடன் உரையாடுவது போன்று காட்டப்பட்டுள்ளதோடு உவமான உவமேயங்கள் மற்றும் சூழல் பற்றிய வர்ணனைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பம்சம் :-
      தற்கால சமூகத்தில் அதிகமாக நடக்கும் பிரச்சினைகளில் ஒன்றை இக்கதை வெளிப்படுத்தியுள்ளதுடன் படிப்பினை ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது.
      நேர் எண்ணங்களைக் கொண்ட பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டமை இக்கதைக்கு உயிர் சேர்க்கிறது.
      மேலும் இச்சிறுகதை ஒரு புத்துணர்வை ஊட்டுவதாகவும் புதிய வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும் எழுதப்பட்டுள்ளமை சிறப்புக்குரியது.

      மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளும் பிரதான பகுப்பு முறைக் கூறுகளை கொண்டு தனித்தனியாக திறனாய்வு செய்யப்பட்டுள்ளதோடு இக்கதைகளில் காணப்படும் பொதுவான சில அம்சங்களும் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவற்றைக் கொண்டு அலசுவதன் மூலம் குரு அரவிந்தன் அவர்களுடைய இலக்கிய அன்பை,  இலக்கியத் தொண்டை அளவிடக் கூடியதாக இருக்கும்.

 ஒரு சிறுகதையின் அமைப்பானது பொதுவாக 05 பக்கங்கள் தொடக்கம் 07 பக்கங்களுக்குள் உள்ளடக்கப்பட்டு விடக் கூடியதாக இருக்கும். அல்லது அரைமணியில் இருந்து முக்கால் மணி நேரத்துக்குள் ஒரே மூச்சில் படித்து விடக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் மேற்குறித்த நான்கு சிறுகதைகளிலும் கதாசிரியர் தேவையற்றஃ வேண்டா கருத்துக்கள், உரையாடல்களை நீக்கி கதைக் கருவுக்கு ஏற்ற வகையில் கதையின் அளவை வடிவமைத்திருப்பது அருமை. இது ஒரு சிறுகதைக்கே உரிய பண்பாகும்.

 குரு அரவிந்தன் அவர்களின் சிறுகதைகள் எளிய கருப்பொருளை கருவாகக் கொண்டவை. தனிநபர், குடும்பம், சமூகம், சூழல் சார் விடயங்களைக் கொண்டு அவை அமைக்கப்பட்டிருப்பதோடு “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற சித்தாந்தத்திக்கேற்ப நவீன விடயங்களை கதையில் உள்வாங்கியிருப்பது சிறப்புக்குரியது. அதற்காக அவர் பழமையை  மறந்து விடவுமில்லை. அதையும் கச்சிதமாக தேவையான இடங்களில் பிரயோகித்திருக்கிறார்.

 இவருடைய சிறுகதைகளில் வாழ்க்கையோடு ஒன்றித்துப் போகும் பல விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளன. யதார்த்த மற்றும் நடைமுறை ரீதியிலான விடயங்கள் உள்ளடங்குமாறு ஒவ்வொரு கதையும் சிறப்பாக ஆக்கப்பட்டுள்ளன.

 கதைக்குப் பின்னேயுள்ள கதாசிரியரின் கலையாற்றல், கற்பனைத் திறன்,  சொல்லாட்சி, அவர் சொல்ல விரும்பும் செய்தி என்பன தெட்டத் தெளிவாக விளங்குகிறது.

 சுருக்கமாகவும் செறிவாகவும் ஒரே மூச்சில் படித்து விடக் கூடியதாகவும் தன்னளவில் முழுமை பெற்றதாகவும் வாசகரின் புலன் முழுவதும் கதையின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டதாகவும் இருக்கும் வகையில் ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறார்.

 குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதை சொல்லாட்சியானது எடுத்த எடுப்பிலேயே படிப்போரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்து வைத்திருக்கும் தன்மை கொண்டதாக இருப்பதுடன் இடையில் சோர்வோ, தொய்வோ, சலனமோ இல்லாத வகையில் அமையப் பெற்றிருப்பது அவர் இலக்கிய உலகில் காட்டும் அதீத அக்கறைக்கு சான்றாகிறது.

 இவருடைய சிறுகதைகள் ஒரே ஒரு பாத்திரத்தின் நடவடிக்கையை பற்றியோ அல்லது ஒரு தனிச் சம்பவத்தைப் பற்றியோ அல்லது ஒரு தனி உணர்ச்சி பற்றியோ எடுத்து கூறுவதாக காணப்படுகின்றன.

 சிறுகதைகள் முழுக்க முழுக்க ஒருமுகப்பட்ட தன்மையோடு இயங்கி முற்றுப்பெறுதல் வேண்டும். கதையின் தொடக்கத்தில் எந்த உணர்வு காட்டப்படுகிறதோ அதே உணர்வு இடையிலும் முடிவிலும் வளர்ந்து முற்றுப் பெற வேண்டும். இதை உணர்ச்சி விளைவின் ஒருமைப்பாடு (Unity of Impression) என்று குறிப்பிடுவார்கள் திறனாய்வாளர்கள். இப்போக்கு குரு அரவிந்தன் அவர்களுடைய சிறுகதைகளில் காணப்படுவது மனதுக்கு இதமளிக்கிறது.

 குரு அரவிந்தன் அவர்களுடைய சிறுகதைகளில்,  கதைத் தலைப்பிலிருந்தே கதையின் உட்பொருளை உணரக்கூடியதாகவும் கதைகளை உடனடியாக படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவதாகவும் தலைப்புகள் அமையப் பெற்றிருக்கின்றன.

   இவரின் அனேகமான கதையின் தலைப்புக்கள் கூறும் பொருளை வைத்து அமைந்த தலைப்புக்களாகவும் (முகநூல் காதல், ஆசை முகம் மறந்து போமோ?) முடிவை வைத்து அமைந்த தலைப்புக்களாகவும் (யார் குழந்தை,  புதிய வெளிச்சம் தெரிகிறது) காணப்படுகின்றன.

குரு அரவிந்தன் அவர்களுடைய படைப்புக்கள் மற்றொரு படைப்பாளியிடமிருந்து தனித்து இனங்காணப்படுவதற்கான பிரதான காரணம் அவர் கையாளும் மொழிநடை உத்தி அல்லது படைப்பாக்க உத்தியாகும். அந்த வகையில் இவருடைய சிறுகதை நடையானது குரு அரவிந்தன் அவருக்கே உரித்தான தனித்த வெளிப்பாடாகும். 

 பாத்திரங்கள் இல்லாத கதைகள் இருக்கவே முடியாது. பாத்திரங்கள் தான் சிறுகதையின் அடிப்படை. அந்த வகையில் குரு அரவிந்தன் அவர்களினுடைய கதைகளில் வரும் பாத்திரங்கள் அன்றாட வாழ்வில் நாம் காணும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை முறைகளுமே பாத்திரங்களாக படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இப்பாத்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளதுடன் தேவைக்கு புறம்பாக எந்த ஒரு பாத்திரமும் கதையில் காணப்படவில்லை என்பது சிறப்புக்குரியது.

பெயின் என்ற திறனாய்வாளர் "ஒரு கதை இன்பியல் முடிவினாலோ அல்லது துன்பியல் முடிவினாலோ அழகு பெற்றுவிடாது. இவற்றுள் எது சரியான, பொருத்தமான முடிவாக உணரப்படுமோ அத்தகைய முடிவால் தான் அக்கதை வெற்றி பெற முடியும் என்கிறார்." இதுபோன்றே குரு அரவிந்தன் அவர்கள் கதைக்கு ஏற்றாற் போல வாசகர் மனமறிந்து கதையை நிறைவு செய்திருக்கிறார். அது மட்டுமல்லாது கதையின் நிறைவில் எதிர்பாராத திருப்பத்தை (Twist) வைத்து படிப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பது வாழ்த்துக்குரியது.

 தன்னுடைய கதைகளில் தன் தாய் மண்ணின் வாசனையையும் சூழல் வர்ணனைகளையும் மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

      மேற்கூறப்பட்டவைகள் தெரிவுசெய்த நான்கு கதைகளில் மட்டும் காணப்படும் பண்புகள் அல்ல. குரு அரவிந்தன் அவர்கள் தன்னுடைய அனைத்து சிறுகதைகளையும் இவ்வாறான பண்புகளைக் கொண்டே செதுக்கியுள்ளமை அவரின் புலமையை அறைகூவல் விடுப்பதாய் உள்ளது.  

      அத்தோடு இவருடைய சிறுகதைகளில் எவ்வாறு ஒரு சிறுகதைக்குரிய பண்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதோ அதேபோல நான் அவதானித்த சில எதிர்மறையான கருத்துக்களையும் இங்கு எழுத முனைகிறேன்.

 இவரின் சிறுகதைகளை உற்று நோக்கினால் கதையின் முடிவில் வரும் எதிர்பாராத் திருப்புமுனையை கதையின் நடுவில் அல்லது ஆரம்பத்திலேயே மறைமுகமாக கொடுத்திருப்பார். சில இடங்களில் வாசகர்கள் இதனை உணரக்கூடியதாக இருப்பதுடன் கதையின் முடிவில் வரும் எதிர்பாராத் திருப்பத்தை மங்கி விடச் செய்யும் ஒன்றாகவும் இது காணப்படுகிறது. இதற்கு 'யார் குழந்தை, முகநூல் காதல்" ஆகிய கதைகள் சாட்சியமளிக்கின்றன.

 சிறுகதை என்பது வாசிக்கும் அனைவரையும் தன் உணர்வுகளுக்குள் கட்டுப்பட வைப்பதாக அமைதல் வேண்டும்.  இவருடைய கதைகளில் அதிகம் பிறந்த மண்ணின் பண்புகள்ஃ நடைமுறைகள் காணப்படுவதால் ஏனைய பிரதேசத்தவர்கள் இக்கதைக்குள் எந்தளவு தூரம் பயணிக்க முடியும் என்பது கேள்விக்குறியே.

 மேலும் குரு அரவிந்தன் அவர்களினுடைய அநேக கதைகள் இலக்கண வடிவிலே அமைந்திருப்பதோடு கதைத் தலைப்புக்கள் அதிகமாக கதையின் மையக் கருத்தை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் குறியீட்டு முறையான தலைப்புக்களை காண்பது அரிதாக உள்ளது.

 அத்தோடு இவருடைய பாத்திரப்படைப்புக்கள் அகிம்சை வழியில் இருப்பதோடு புரட்சிகரமான, துணிகரமான  பாத்திரங்களாக படைக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

      எது எவ்வாறாயினும் குரு அரவிந்தன் எனும் ஒரு பொக்கிஷம் தன்னுடைய ஆழ்ந்த அறிவாலும் அர்ப்பணிப்பாலும் இலக்கிய உலகை அலங்கரித்துக் கொண்டிருப்பது எமக்கு இறைவன் அளித்த ஒரு வரமே. 

      குரு அரவிந்தன் அவர்களினுடைய இன்னும் பல இலக்கியங்கள் வெளிவந்து தமிழ் பேசும் மக்களுக்கு அமிர்தம் அளிக்கவேண்டும் என்பதோடு இவரின் புலம்பெயர் இலக்கியங்கள்  திறனாய்வு செய்யப்படவும் வேண்டும் என்பதே எனது ஆழ்ந்த அவா. 

குரு அரவிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

உசாத்துணைகள் :-

திறனாய்வுக் கட்டுரை முதற்பரிசு - 2021-2022

 





 

2021 Review Contest - 1st Prize Winner

(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி முதலாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)


எழுத்தாளர் குரு அரவிந்தன் சிறுகதைகள் ஓர் அலசல்

த. நரேஸ் நியூட்டன், கழுபோவிலை, இலங்கை.

அறிமுகம்

தமிழ் இலக்கிய படைப்புலகில் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களையும் அவருடைய தமிழ் இலக்கியயப்பணி மேலும் பல்லாண்டுகள் சிறக்க ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர் குரு அரவிந்தன் பற்றி தெரியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது. அதற்கு காரணம் தனது பல்வேறுவிதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ் காங்கேசன்துறை மாவிட்டபுரம் தந்த இலக்கியச் செம்மல். நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனாக்கல்லூரி, மற்றும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவர். ஈழத்து மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவற்றில் இவரது படைப்புக்கள் களம்பெற்றுள்ளதோடு பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளவர். நான் படித்த இவரது சிறுகதைத் தொகுப்புக்களில் சில சிறுகதைகளை தேர்வுசெய்து அவைசார்பான எனது ஆய்வை சமர்ப்பிப்பதில் நானும் சிறிதளவு பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.

சிறுகதைகள், நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் போன்ற பல்வேறு படைப்புக்களை தனக்கேயுரிய பாணியில் வாசகர் மனமறிந்து வழங்குவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று கூறலாம். இவர் பல்வேறு வகையான படைப்புக்களை வழங்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்தாலும் இக்கட்டுரை இவரது சிறுகதைளின் நான்கை மட்டுமே ஆய்வு செய்வதாக அமைகிறது. ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்பதற்கான ஒழுங்குமுறைகள் பல இலக்கிய கர்த்தாக்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் வாசித்து அவற்றை பின்பற்றி எழுதுகின்ற ஆற்றலை சிறப்பாக வளர்த்து வைத்திருக்கின்றார் என்பது இவரது ஒவ்வொரு சிறுகதையிலும் இளையோடிப் போயிருக்கும் கதையெழுதும் முறைமையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

இந்த திறனாய்வுக்காக “இதுதான் பாசம் என்பதா”, “ரோசக்காரி”, “அவளுக்கு ஒரு கடிதம்” மற்றும் “தங்கையின் அழகிய சிநேகிதி” என்ற நான்கு சிறுகதைகளை இவரது வெவ்வேறு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து தெரிவு செய்திருக்கிறேன்.

பொதுவாக குரு அரவிந்தன் அவர்கள் இந்த நான்கு சிறுகதைகளிலும் ஒரு சிறுகதைக்குரித்தான பொதுவான அம்சங்களை சரியாக பின்பற்றி சிறுகதை எழுதுவதில் தனக்கு இருக்கும் ஆற்றலை ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார். புலம் பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்ந்து வரும் இவர் அங்கு வாழ்ந்தாலும் தனது கதைகளில் தான் பிறந்த தாய் மண்ணின் வாசனையை மிகத்தத்ரூபமாக உள்ளே அசைபோட வைத்திருப்பதை ஒவ்வொரு கதைகளிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

கதைகளின் சுருக்கம்

“இது தான் பாசம் என்பதா” என்ற சிறுகதை ஒரு குடும்பச் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதையாக எழுதப்பட்டிருக்கிறது. இக்கதையில் மகளுடைய வருமானத்தில் தங்கி வாழும் குடும்பத்தின் நிலைமை முன்வைக்கப்படுகிறது. பெண் கதாபாத்திரமாகிய மகளுக்கு திருமணம் பேசப்படுகிறது. அவளது தந்தை அவள் திருமணமாகி சென்றால் குடும்பச்சுமையை எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்ற ஆதங்கத்தால் அவளுடைய திருமணத்தில் அவளுக்கு தெரியாமலே தடையாக இருக்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை காலம் கடந்து ஏதேச்சையான ஒரு சூழலில் அறிந்துகொண்ட மகள் தானே நிலைமையை உணர்ந்து திருமணத்தை தானாகவே முன்வந்து தள்ளி வைத்து தனது பாசத்தை வெளிக்காட்டும் நிலைமை. இதனை புரிந்துகொண்ட தந்தையின் பாசத் தவிப்பு என்று அவர்களுக்குள் இருந்த பாசத் தவிப்பையும் பாசப்போராட்டத்தையும் மிகவும் சாதுரியமாக கதையிலே வெளிக்கொணர்ந்திருக்கிறார் கதாசிரியர்.

அடுத்த கதையாகிய “ரோசக்காரி” என்ற சிறுகதையில் பொறியியல் படித்த பட்டதாரிப்பெண் திருமணம் செய்து கணவனுடன் வாழ்ந்துவருகிறாள். பட்டம் பெற்ற இவள் வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறார். கணவன் எவ்வளவு தடவை அவளது படிப்புக்கு பொருத்தமான வேலையை தேடி செய்யும்படி கூறியும் அவள் அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இறுதியில் அவளுடைய தந்தையின் ஆலோசனையின்படி கணவன் அவளது ரோசத்தை தூண்டிவிடும்படியான செயற்பாட்டில் ஈடுபட்டார். இது வெற்றியளித்ததா? அவள் வேலைக்குச்சென்றாளா இல்லையா என்பதை கூறுவதே கதை.

மூன்றாவது கதை “அவளுக்கு ஒரு கடிதம்” என்பது. இந்தக் கதையில் கல்லூhயில் கல்விகற்கும் மாணவன் அவனுடன் கற்கும் சக மாணவியை நீண்ட நாட்களாகவே தனது காதலுக்குரியவளாக மனதில் இருத்தி வைத்திருக்கிறான். கல்லூரி நாட்கள் நிறைவை அண்மித்துக்கொண்டிருந்தது. எப்படியாவது தனது காதலை அவளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என் முடிவு செய்கிறான். அவனது நண்பர்களும் உந்துதலளிக்கவே அடுத்து வந்த காதலர் தினத்தை அவளுக்கு தெரியப்படுத்தும் நாளாக குறிவைக்கிறான். அந்த நாள் வரவே நேரடியாக கூற தயக்கப்பட்டு ஒரு வாழ்த்து அட்டையில் தனது காதலை தெரிவித்து அவளிடம் கொடுத்து விடுகிறான். அவளும் அவன் அந்த அட்டையில் குறிப்பிட்டிருந்தபடி அவனைப்பார்த்து புன்முறுவல்செய்து அதனை ஏற்றுகொண்டது போல் காண்பித்தாலும் மறுநாள் அதிபரிடமிருந்து அவனுக்கு விசாரணைக்கான அழைப்பு வருகிறது. விசாரிக்கவும்படுகிறான். ஏன் இப்படி செய்தாய் என அவளிடம் கேட்டுவிட கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி அவளைத் தேடி செல்கிறான். அவளை சந்தித்து கேட்டானா? அவனது காதல் வெற்றி பெற்றதா? என்பதை கூறுவதே மிகுதிக்கதை. 

இறுதியாக இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நான்காவது கதை “தங்கையின் அழகிய சிநேகிதி” என்பது. இந்தக்கதையில் அண்ணன் தங்கை இருவருக்கிடையிலான அவ்வப்போது ஏற்படகின்ற சிறிய சிறிய செல்லச் சண்டைகள். தங்கையின் சிநேகிதி ஒருவர் அவர்களுடைய வீட்டிற்கு வந்தபோது ஏதேச்சையாக அவளை காண்கிறான் அண்ணன். அந்தக் கணமே அவளது அழகில் மயங்கி தன்னகத்தே காதல் வயப்படுகிறான். சிநேகிதிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடாகியிருக்கிறது ஆனால் அவளுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. அப்படியாயின் அந்த சிநேகிதியின் மனதில் இருந்தது என்ன? தங்கைக்கும் அண்ணனுக்கும் இடையில் நடந்த சண்டைகள் எவ்வளவு ஆழமாக தங்கையின் மனதில் பதிந்திருந்தால் அவள் அந்த உண்மையை தனக்குள் புதைத்துவைத்திருப்பாள். அண்ணனின் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதை மிகவும் சாதாரணமாக காரண காரியங்களுடன் இந்தக் கதையில் முன்வைக்கிறார் கதாசிரியர்.

கதைத் தலைப்புக்கள்

இவர் எழுதுகின்ற ஒவ்வொரு கதைகளையும் எடுத்து நோக்கும் போது சிறுகதை எழுதுவது எப்படி என்பது பற்றி பல எழுத்தாளர்கள் குறிப்பிடுவதுபோல் கதைத்தலைப்பிலிருந்தே கதையின் உட்கருப்பொருளை உணரக்கூடியதாகவும் அந்தக் கதைகளை உடனடியாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாகவும் கதையின் தலைப்புக்கள் மிகச் சிறப்பானதாகவும் பொருத்தமுடையதாகவும் ஒவ்வொரு கதைக்கும் தேர்வு செய்து சூட்டியிருக்கிறார். சில எழுத்தாளர்களின் சிறுகதையில் அவர்களது கதையின் கருப்பொருளுக்கும் கதைத் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லாமல் தலைப்பிடுவார்கள். ஆனால் இவருடைய கதைகளில் அப்படி ஒரு நிலைமையை காணமுடியவி;ல்லை. கதைத் தலைப்புக்கள் கதையின் இறுதிவரை நினைவில் நிற்கும்படியாக ஒவ்வொரு கதையின் கருவுடனும் பின்னிப் பிணைந்து இறுதிவரை நகர்கிறது.  

கதைக்கருவும் உள்ளடக்க அளவும்

வாழ்க்கை பற்றிய போதாமைகளைச் சொல்வது சிறுகதை என்பது ஒரு அறிஞரின் கருத்து அதேபோல சிறுகதைகள் அநேகமாக வாழ்கையோடு ஒன்றித்துப்போகும் பல விடயங்களை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன. சமூகம், கலை, கலாசர விழுமியங்கள், பண்பாடு, நாகரீகம் போன்றவற்றின் உள்ளார்ந்த நிலைமைகள் காலவோட்டத்தில் மாறுபடுகின்றபோது பழமை மற்றும் புதுமை என்கின்ற மாறுதல்கள் தோற்றம் பெறுகிறது. இந்த மாறுதல்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மனித வாழ்வியல் முறைமைகளிலும் பாரிய மாறுதல்களை ஏற்படுத்த விளைகின்றன. இந்த இடத்திலேதான் சிறுகதைகள் முன்நிலைபெறுகின்றன. சிறுகதைகள் மூலமாக அந்தந்த கால சூழ்நிலைகளை மையப்படுத்தி மாறுதல்களினால் ஏற்படும் பல்வேறு விதமான உள்ளக்குமுறல்களை வெளிக்கொணர்வதற்கு இவை களம் அமைத்துக்கொடுக்கின்றன. இந்த வகையில் எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன் அவர்களுடைய சிறுகதைகள் ஒவ்வொன்றும் சமூக வாழ்வியல் சார்ந்த குடும்பம் மற்றும் சமூகம் சார் பல்வேறு விடயங்களை வெளிக்கொணரும் வகையில் கதைக்கருவைக்கொண்டவையாக தோன்றுகின்றன.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் அவற்றை நன்கு உணரக்கூடியதாக இருக்கிறது. இவருடைய இந்த நான்கு கதைகள் மட்டுமன்றி மற்றய கதைகள்கூட அவ்வாறேதான் எழுதப்பட்டிருக்கின்றன.

இதுதான் பாசம் என்பதா என்ற இந்த ஆய்வின் முதற் கதையில் மிகவும் வசதி குன்றிய குடும்பத்தில் மகளின் வருமானத்தை நம்பியே வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் தந்தை மகள் திருமணமானால் எதிர்கால வாழ்வாதார நிலை என்னவாகும் என்ற தவிப்பில் இருக்க அந்த இடத்தில் மகளுடைய பாசம் எத்தகையது என்பதை வெளிக்கொணர்கிறார். இவ்வாறான சூழலில் வாழுகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முன்மாதிரிகையான அறைகூவலாக தனது கதையெழுதும் பாங்கின் மூலம் முன்வைத்திருக்கிறார் அரவிந்தன். அதுமட்டுமன்றி ஒரு குடும்பத்தினுடைய சுமையை முழுமையாக ஒரு பெண்ணாலும் கூட சுமக்க முடியும் என்பதையும் அதற்கு இந்தக் கதையில் வரும் மூத்த மகள் பாத்திரத்தை சிறந்த உதாரணமாக கையாண்டிருக்கிறார்.

இரண்டாவது கதையாகிய ரோசக்காரி என்ற கதையில் பெண்மை என்பது அமைதியாக இருப்பது மட்டுமல்ல அவளுக்குள்ளும் ரோசம் கோபம் போன்றவை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தனது ரோசம் கோபம் போன்றவற்றையும் வெளிக்கொணர்வாள் என்பதையும் அவளாலும் சாதனைகளை நிலைநாட்ட முடியும் என்பதையும் கதாசிரியர் வெளிப்படுத்துகிறார். அத்தோடு ஒரு கணவன் தனது மனைவியை சமூகத்தில் ஒரு அந்தஸ்துடைய சாதனைகளை நிலை நிறுத்தும் பெண்ணாக வெளிக்கொணர எத்தகைய ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பதையும் இந்த கதையில் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

அவளுக்கு ஒரு கடிதம் கதையிலே இன்றைய சமூகத்தில் சாதாரணமாக பாடசாலைகளில் நிகழும் காதல் முன்மொழிவை எடுத்து முன்வைத்து அதன்மூலம் காதலிப்பது தப்பில்லை ஆனால் காலகாலத்துக்கும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான சரியான மற்றும் உறுதியான அடித்தளத்தை இடுவதில் அக்கறைகாட்டி அதனை முன்னுரிமைப்படுத்துவது எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாசூக்காக எடுத்துக்காட்டியிருக்கிறார். 

அடுத்த கதையாகிய தங்கையின் அழகிய சிநேகிதி மூலமாக சமூகத்தில் பல குடும்பங்களில் உண்மையாகவே நிகழ்கின்ற சகோதரர்களுக்கிடையிலான சிறிய சிறய முரண்பாடுகளை புடம்போட்டுக் காட்டியிருக்கிறார். அதனைக் காட்டுவதன் மூலமாக இவ்வாறான சிறிய சண்டைகள் மற்றும் முரண்பாடுகள் அடிமனதில் ஆழமாக பதிந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய பாதிப்பையோ இழப்புகளையோ கூட பொருட்படுத்தாமல் பழிவாங்கும் சூழலை உருவாக்கிவிடுகிறது என்பதை அழகாக சுட்டிக்காட்டியிருக்கிறார். நெருக்கமான உறவுகளுக்கிடையிலும் வெவ்வேறு கராணங்களின் நிமித்தம் பழிவாங்கும் மனப்பாங்கு ஏற்படாமலில்லை என்பதையும் இக்கதை மூலமாக ஒரு எச்சரிக்கையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த ஒவ்வொரு கதைகளும் அவர் கூறவந்த குறிப்பிட்ட கருப்பொருளை தாண்டி அவசியமற்ற விடயங்களுக்குள் நுளைந்துவிடாது மிக கவனமாக கதைகளை நகர்த்திச்சென்றிருக்கின்ற கதையின்போக்கு மெய்சப்படவேண்டியதே. கதைக் கருவில் எந்தவொரு இடத்திலும் தொய்வோ சலனமோ காணப்படவில்லை என்பது இன்னும் கதையின் போக்கிற்கு வலுச் சேர்கிறது. ஒவ்வொரு கதையிலும் கதையினுடைய வேகம் பொருத்தமான சீரில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாக கதை தனது உச்சக்கட்டத்தை நோக்கி செல்லும்படியாக அடுத்து வரக்கூடிய காட்சிகளை தொடர்ச்சியான ஒரு கோர்வையாக ஒழுங்குபடுத்தியிருக்கிறார். இவற்றோடு ஒவ்வொரு கதையிலும் மிகப்பொருத்தமான இடத்திலே எதிர்பாராத ஒரு ஆச்சரியத்தை (ருவிஸ்ற்) கொடுத்து வாசகர் மனதில் அக்கதையை படிக்க ஆரம்பித்தபோது இருந்த கதைப்போக்கு கருப்பொருள் பற்றிய அவர்களின் கருத்து மற்றும் எதிர்பார்ப்பில் திடீர் மாற்றத்தை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி கதையை தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிடுகிறார்.

கதையினுடைய உள்ளடக்கம் அதாவது நீட்சியை அநேகமாக ஒவ்வொரு கதாசிரியர்களும் தங்கள் கதைக்கேற்ப தாமே வகுத்துக்கொள்வதுண்டு. ஆனால் பொதுவாக ஒரு சிறுகதையானது 5 முதல் 7 (A 4) பக்கங்களுக்குள் அடக்கப்படவேண்டும் என்பது சிறுகதை பற்றிய அறிவார்ந்தோரின் கருத்து. அது உண்மையும் கூட. அதற்கு மேல் எழுதினால் வாசகர் பொறுமையிழந்துவிடுவர். அத்தோடு அது குறுநாவல் என்ற கட்டத்திற்கு நுளைந்துவிடும். போட்டிகள் என்று வரும்போது போட்டிக்கான அழைப்பு விடுப்பவர்களால் பக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இத்தனை பக்கங்களுக்குள் சிறுகதைகள் உள்ளடக்கப்படவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்படும். இங்கு எழுத்தாளர் குரு அரவிந்தனுடைய சிறுகதைகள் ஒவ்வொன்றையும் எடுத்து நோக்கினால் அவர் தனக்குத்தானே வரையறை ஒன்றை வைத்திருப்பது புலனாகிறது. ஒவ்வொரு சிறுகதையும் 6 பக்கங்களை தாண்டாமல் அதற்குள் அடக்கிவிடுகிறார். தனது கதையில் தான் கூறவந்த கதையின் கருவை மிகவும் நுணுக்கமாக இந்த பக்கங்களுக்குள் அடங்கிவிடுமாறு செய்திருக்கின்றார்.    

கதை எழுதும்போக்கு

கதையின் ஆரம்பம் கதையின் கருப்பகுதி அதன் முடிவுப் பகுதி போன்றவற்றை அவற்றுக்கான எல்லைகளை வகுத்து அந்த எல்லைகளுக்;குள் மட்டுப்படுத்தி குறிப்பிட்ட பகுதிக்குள் கதையின் ஒவ்வொரு பகுதிகளையும் கச்சிதமாக அநேகமாக அனைத்துக்கதைகளிலும் சிறைப்படுத்திவிட்டிருக்கிறார். அவசியமற்ற அலட்டல்களை அறவே தனது கதைகளுக்குள் நுளையவிடாது பார்த்திருக்கிறார். இது இவரது சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற அனுபவத்தை புடம்போட்டுக் காட்டுகிறது. 

இவரது கதையெழுதும் போக்கில் ஒரு கேள்வி என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது ஆகையால் அதை தவறவிட்டுவிடாது இங்கு குறிப்பிடுகிறேன். ஆதாவது இவருடைய இந்த நான்கு கதைகளிலும் இலக்கண முறையிலான எழுத்து முறைமையையே கூடுதலாக கையாண்டிருக்கிறார். பாத்திரங்களுக்கிடையிலான சம்பாசணைகளும்கூட இலக்கண முறை வழக்கிலேயே கையாளப்பட்டிருக்கிறது. அது ஏன் என்பது தான் எனது கேள்வியும் புரியாத விடயமாகவும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர்ந்து வேறு நாட்டில் வாழ்ந்து வருவதால் எல்லா நாடுகளிலும் இருக்கக்கூடிய இவரது அனைத்து வாசகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கோடு வெவ்வேறு வகைiயான பேச்சு வழக்குகளை உள்ளே நுளைத்துவிடாது இலக்கண முறைமையை கையாண்டிருப்பாரோ? இது இவ்வாறு இருப்பினும் இவரை அறியாமலே கதாபாத்திரங்களிடையிலான சம்பாசணைகளில் சில இடங்களில் பேச்சு வழக்கு இயல்பாகவே நுளைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

கதாபாத்திரங்களும் காட்சியமைப்புகளும்

இந்த ஆய்விற்குட்பட்ட எழுத்தாளர் குரு அரவிந்தனின் நான்கு கதைகளையும் எடுத்து நோக்கும்போது அவர் தனது ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான அதேவேளை கதைக்கருவின் தேவைக்கேற்ற வகையில் கதா பாத்திரங்களை மட்டுப்படுத்தியிருக்கிறார். கதைக்கருவை மிகைப்படுத்தும்படியான அல்லது கவர்ச்சியூட்டும்படியான தேவைக்குப் புறம்பான எந்தவொரு பாத்திரத்தையும் கதைக்குள் நுளையவிடாது கச்சிதமாக பாத்திர அமைப்புக்களை கையாண்டிருக்கிறார். முதலாவது கதையில் தந்தை, மகள் மற்றும் மகளுக்காக பார்த்த மாப்பிள்ளை என்ற மூன்று பாத்திரங்களையும் இரண்டாவது கதையாகிய  ரோசக்காரி எனும் சிறுகதையில் கணவன், ரோசக்கார மனைவி, அவளுடைய தந்தை மற்றும் தாய் என கதைக்கு அவசியமான அந்த நான்கு பாத்திரங்களையும் முன்நிலைப்படுத்தி கதையை சுவாரசியமாக நகர்த்தி முடித்திருக்கிறார்.

அவளுக்கு ஒரு கடிதம் என்ற மற்றய சிறுகதையில் கல்லூரியில் கற்கும் மாணவன், அவன் தனது காதலை முன் வைக்கும் பெண் மற்றும் கல்லூரியின் அதிபர் என்ற மூன்று பாத்திரங்களையும் முன்வைத்து நான்காவது பாத்திரமாகிய அவன் காதலிக்கும் பெண்ணின் தந்தை என்ற பாத்திரத்தை புதிதாக ஒருவரை நுளைக்காது கல்லூரி அதிபரையே ஒரு திருப்புமுனை பாத்திரமாக காண்பித்து அதே நேரம் நண்பர்களையும் காதலியின் தாயையும் பொதுவாக பயன்படுத்தி குறித்துரைக்கும்படியாக யாருக்கும் நடிபாகத்தை தராமல் விட்டு கதையை முழுமைப்படுத்தியிருக்கிறார். இறுதியாக வரக்கூடிய தங்கையின் அழகிய சிநேகிதி என்ற கதையிலும் பிரதான பாத்திரமாகிய கதையின் நாயகன், அவனது தங்கை, அவளுடைய சிநேகிதி மற்றும் அவனுடைய தாய் என்று இந்த நான்கு பாத்திரங்களை மட்டும் காட்சிகளுக்குள் நுளைத்து கதையை நகர்த்தியிருக்கிறார். 

மேற் கூறியவாறு ஒவ்வொரு கதையிலும் குறிப்பிட்ட 3 அல்லது 4 கதாபாத்திரங்களுக்கு மேற்படாதவாறு பாத்திரங்களை மட்டுப்படுத்தி சொல்ல வந்த கதைக்கருவை அழகாகவும் தெளிவாகவும் காண்பித்து தனது கதைகளை முடித்திருப்பதானது வாசகர்களும் பாத்திரங்கள் சார்பான அனாவசியமான குளப்பங்களுக்கு உட்படாது கதையை ஆர்வமாக படிக்க தூண்டிவிட்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

அதே வேளை அவர் உருவகித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் அவசியமற்ற சம்பாசணைகளை தராமல் கதைக்கு பொருத்தமான அதேவேளை அவசியமான சம்பாசணைகளை மட்டும் கனகச்சிதமாக வழங்கி அவசியமற்ற அலட்டல்களை ஒவ்வொரு கதையிலும் தவிர்த்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாக காணப்படுகிறது. 

முடிவுரை

எழுத்தாளர் குரு அரவிந்தனுடைய கதைகள் பலவற்றில் நான் படித்தவற்றுள் சில தொகுப்புகளிலிருந்து நான்கு கதைகளை இந்த திறனாய்வின்பொருட்டு தேர்வு செய்திருந்தேன். அவை சார்பான ஒரு சிறுகதையை எழுதும்போது பொதுவாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய பல விடயங்களை முன்நிலைப்படுத்தி இந்த ஆய்வை சமர்பித்திருக்கிறேன். இந்த கதைகளுக்;குள் நான்; மேலே குறிப்பிட்டிருக்கக்கூடிய நேரான பல விடயங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்த போதிலும் எதிர்மறையான வியங்களை காண்பது சற்று சவாலான விடயமாகவே காணப்பட்டது. இருப்பினும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இவருடைய சிறுகதைகள் அமைந்திருக்கும் என நான் கருதிய ஒரு சில விடயங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். இவற்றுக்கும் மேலாக சில சுவாரஸ்யம் தரக்கூடிய விடயங்களையும் இடையிடையே ஒவ்வொரு கதைகளிலும் சேர்த்திருந்தால் வாசகர்களுடைய வாசிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்குமோ என்பதை மேலதிகமான ஒரு கருத்தாக நான் இங்கு குறிப்பிடுகிறேன். பொதுவாக நான் படித்த ஏனைய கதைகளையும் வைத்துப் பார்க்கின்றபோது இவரது கதைகள் யாவும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக இருக்கும் இவர், மேலும் பல படைப்புக்களை தமிழ் இலக்கிய உலகிற்கு தரவேண்டும் என்ற வாஞ்சையுடனான பதிவையும் முன்வைத்து இவ்வாய்வை நிறைவு செய்கிறேன். 

உசாத்துணை:

‘இதூன் பாசம் என்பதா?’ – மணிமேகலைப்பிரசுரம். சென்னை.

‘தங்கையின் அழகிய சினேகிதி’ – இனிய நந்தவனம் பதிப்பகம். திருச்சி.

‘அவளுக்கு ஒரு கடிதம்’ - ஆனந்தவிகடன் காதலர்தினமலர் (14-2-99).

‘ரோஷக்காரி’ - https://kurunovelstory.blogspot.com/

Mr.P. Kanagasabapathy - Mahajana College

 





https://www.youtube.com/watch?v=QiUcZMfmwQc&ab_channel=Thaiveedu

அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் வாழ்வும், வரலாறும்.


குரு அரவிந்தன்


ஒருவரைப்பற்றி நினைவுகூரும் போது, அவர் பிறந்த நாளில் அதை செய்வதா அல்லது இறந்த நாளில் செய்வதா என்பதில் மாற்றுக் கருத்துகள் உண்டு. ஒருவர் சமூகத்திற்கு ஆற்றிய சேவை இனிக் கிடைக்காது என்பதால் மேலை நாடுகளிலும் அவர் இறந்த நாளையே இதுவரை காலமும் நினைவுகூரும் நாளாகப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் அவர் இப்படியான சேவைகளைச் சமூகத்திற்கு செய்வதற்கு அவர் இந்த மண்ணில் பிறந்ததுதானே காரணம், அதனால் அவர் பிறந்த நாளையே மகிழ்ச்சியோடு கொண்டாடுவது நல்லது என்று இன்னொருசாரார் கருத்தை முன் வைக்கிறார்கள். இன்னும் ஒரு காரணம் அவர் இறந்தது துக்கமான காரியம் என்பதால் ஏன் அவரது நினைவை துக்கமாகவே கொண்டாட வேண்டும் என்று கேட்பவர்களும் உண்டு. திடீரென ஒருநாள் வந்து ஒருவரை நினைவுகூருவோம் என்பது முக்கியமில்லை, அதற்குப் பதிலாக அவர் சமூகத்திற்கு விட்டுச் சென்ற சிறந்த பணியை எவ்வாறு நாங்கள் தொடர்கிறோம், அதைத் தொடர்வதற்கு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்.




இதை நான் குறிப்பிடதற்குக் காரணம், மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் அவரது நினைவாக நடப்பட்ட கென்ரகி கொபி மரக்கன்று நிழலில் (முநவெரஉமல ஊழககநந வுசநந) நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று (4-9-1935) செப்ரெம்பர் 4 ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் அந்தத் தினம் நினைவு கூரப்படுகின்றது. இந்த டிசெம்பர் மாதம் (24-12-2014) அவர் மறைந்த மாதம் என்பதால், பத்து வருடங்கள் எவ்வளவு விரைவாக ஓடிவிட்டாலும், அவரது நினைவுகள் எம்முடன் தங்கி இருப்பதால் அவரைப் பற்றிய சுருக்கமான எழுதப்பட்ட ஒரு கட்டுரைதான் இது.

இங்குள்ள நண்பர்களும், பழைய மாணவர்களும் இணைந்து அவரது நினைவாக, உள்ளுராட்சி மன்றத்தின் உதவியுடன் மல்வேன் பொதுப் பூங்காவில் ஒரு மரத்தை நட்டு, அதன் கீழ் ஒரு இருக்கையையும் வைத்திருக்கிறார்கள். இருக்கையிலும், நினைவு மரத்தின் கீழும் அவரைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பூங்காவுக்கு வரும் அத்தனை பேரும் அதை வாசித்துச் செல்லும்போது, நினைவுத்தூபி போல, தமிழர்கள் கனடாவில் வாழ்ந்த அடையாளத்தையும், அவர்கள் ஆற்றிய சேவையையும் அது சுட்டிக்காட்டி நிற்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு, அவர் தன்னலம் கருதாது ஆற்றிய பணிக்காகக் கிடைத்த பெருமையாக இது கருதப்படுகின்றது.




இந்த வருடம் ஏற்கனவே நடந்து முடிந்த நினைவுகூரும் நிகழ்வுபற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். இந்த நிகழ்வில் உரையாற்றும்படி என்னையும் அழைத்திருந்தார்கள். மகாஜனக்கல்லூரிக் கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. முதலில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆசிரியர் திரு. க. புவனச்சந்திரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பழைய மாணவர் சங்கத்தை கனடாவில் ஆரம்பித்து வைக்கக் காரணமாக இருந்த பெருமை மதிப்புக்குரிய அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களையே சேரும். அவர் மகாஜனாவில் கற்பித்த காலத்தில் நானும் அங்கு ஆசிரியராக இருந்தேன். கனடாவில் ‘அதிபர்’ என்று அழைத்தால், தனது சிறந்த பண்புகளால் எல்லோரையும் கவர்ந்த இவரைத்தான் குறிப்பிடுவதாக எல்லோரும் புரிந்து கொள்வார்கள். இவர் புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆற்றிய சேவையால், தமிழ் இனம் இன்று கனடாவில் தலைநிமிர்ந்து நிற்கின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார். அடுத்து முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியர் செ. சந்திரசேகரி, நெருங்கிய நண்பர் திரு. குமார் புனிதவேல், பழைய மாணவர்களான திரு. செல்வரத்தினம், திரு. முருகையா, திரு. க. முத்துலிங்கம், திரு. ஆர். ரவீந்திரன், திரு. குரு அரவிந்தன், மகன் மணிவண்ணன், மகள் மணிவிழி ஆகியோர் அவரைப் பற்றிய நினைவுரை ஆற்றினார்கள்.


குரு அரவிந்தன் தனது நினைவுரையில் அதிபரின் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களை எடுத்துரைத்தார். ‘1935 ஆம் ஆண்டு சண்டிலிப்பாயில் பிறந்த இவர், 1952 ஆண்டு ஸ்கந்தாவில் படித்து அதன்பின் உயர்கல்வியை திருச்சியிலும், சென்னையிலும் பெற்றார். அங்கு இவருக்கு விலங்கியல் பாடத்தில் ‘ஹோனேஸ் தங்கப்பதக்கம்’ கிடைத்தது. 1957 ஆம் ஆண்டு மகாஜனாவில் ஆசிரியராக இணைந்தார். 1970 ஏழாலை மகாவித்தியாலய அதிபராகவும், 1971 சோமஸ்கந்தா அதிபராகவும் பொறுப்பேற்றார் 1976 மகாஜனா அதிபராகப் பொறுப்பேற்றார். 1980 நைஜீரியாவுக்குப் பயணமானார். 1986 நைஜீரியாவில் இருந்து கனடா வந்தார். 1990 ஆம் ஆண்டு முதல் தமிழ் வகுப்பை நோர்த்யோக்கிலும், 1991 ஆம் ஆண்டு ‘கிரடிட்கோஸ்’ வகுப்புகளையும் ஆரம்பித்து வைத்தார். 1992 ஆம் ஆண்டு நோத்யோர்க்கில் 13 தமிழ் வகுப்புகளை ஆரம்பித்தார். 1994 நோத்யோர்க் கல்விச் சபைக்கான தமிழ் பாட நூல்களைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். 1995 ஆம் ஆண்டு இவரது மணிவிழா கொண்டாடப்பட்டது. 1998 ரொறன்ரோ கல்விச் சபையில் தெற்காசிய பல்கலாச்சார பிரிவின் பொறுப்பை ஏற்றார். 2010 ஆம் அ+ண்டு செம்மொழி மகாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். 2012 தனது ஐந்து நூல்களைச் சர்வதேச நாடுகளில் வெளியிட்டார். 2013 அதிபரைக் கௌரவிக்கும் முகமாக லான்ஸ்டவுனில் உள்ள தமிழ் கூட்டுறவு இல்லத்தினர் அங்குள்ள படிப்பகத்திற்கு ‘அதிபர் பொ. கனகசபாபதி நூலகம்’ என்று அதிபரின் பெயரைச் சூட்டியிருந்தனர். 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 ஆம் திகதி அவர் எங்களை விட்டுப் பிரிந்தார். 2015 ஆம் ஆண்டு மொன்றியல் மக்கள் நினைவஞ்சலி செலுத்திய போது மகாஜனாவின் சார்பில் இங்கிருந்து பலர் சென்று அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டோம். தமிழர் தகவல் விருது பெற்ற இவருக்கு, 2015 ஆம் ஆண்டு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து மதிப்பளித்திருந்தது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை அவரது பிள்ளைகள் பெற்றுக் கொண்டனர்.’ குரு அரவிந்தனின் உரையைத் தொடர்ந்து ரதி சாம்பவலிங்கத்தின் நன்றி உரையுடன் பிறந்த தினத்தில் நினைவுகூரும் நிகழ்வு சிறப்பாக முடிவுற்றது.




அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் பெயரில் நலன் விரும்பிகள் ஆரம்பித்து வைத்த நம்பிக்கைநிதியில் இருந்து அவரது துறையான விலங்கியல் துறையில் அதிக புள்ளிகள் எடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த, நிதி உதவி தேவைப்படும் தமிழ் மொழி மாணவர்களுக்கும், மகாஜனக்கல்லூரி மாணவருக்கும் நிதி உதவி செய்யும் திட்டம் முன் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப் படுவது பாராட்டப்பட வேண்டியது.

அதிபர் பல நூல்களை வெளியிட்டு இருந்தாலும், கடைசியாக இவர் ஆக்கியளித்த ‘எம்மை வாழ வைத்தவர்கள், ‘மரம் மாந்தர் மிருகம்’ என்ற நூல்கள் பலராலும் இன்றும் பேசப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு இவரது மணிவிழாவின் போது, ‘ஒரு அதிபரின் கூரிய பார்வை’ என்ற நூலும், 1998 இல் ‘பெற்றோர் பிள்ளைகள் உளவியல்’இ 2000 ஆண்டு மாறன் மணிக் கதைகள், 2008 ஆம் ஆண்டு மாறன் மணிக்கதைகள்-2, மனம் எங்கே போகிறது, திறவு கோல், ஆகிய, எங்கள் சமூகத்திற்குப் பலன்தரும் பல நூல்களும் இவரால் வெளியிடப்பட்டன. இதைவிட மகாஜனக்கல்லூரியின் மிகப் பெறுமதி மிக்க 100 ஆண்டு சிறப்புமலர் வெளியிட்டபோது, மலர்க்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அதிபர் அப்போது சர்வதேச இணைப்பாளராக இருந்து, பல பழைய மாணவர்களுடன் தொடர்பு கொண்டு சிறப்பாகச் செயற்பட்டார்.


அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் மறைந்த தினத்தை நினைவில் வைத்து வழமைபோல, பலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். அதிபர் மூலம் பலர் எனக்கு அறிமுகமானார்கள். குறிப்பாக தினமும் அவருடன் தொலைபேசியிலோ அல்லது நேரடியாகவே உரையாடிய டாக்டர் கதிர் துரைசிங்கம் குறிப்பிடப் படவேண்டியவர். மகாஜனக் கல்லூரியில் கதிர் அவரது முதலாவது மாணவன் மட்டுமல்ல, எனது அக்கா கௌரியைச் சம்பிரதாயமாகப் பெண்பார்க்க அவருடன் வந்த நண்பரும் ஆவர். நைஜீரியாவிலும் இவர்களின் நட்புத் தெடர்ந்தது. இதைவிட அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்வர்களில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், மகாஜனா க. முத்துலிங்கம் ஆகியோர் அடிக்கடி அவரை நலன் விசாரித்துக் கொள்வார்கள்.

திருமதி சிவஞானம், டாக்டர் கதிர் துரைசிங்கம், திரு. குமார் புனிதவேல், சிவபாலு மாஸ்டர், முனைவர் பார்வதி கந்தசாமி, சு. ராஜரட்ணம், அலக்ஸாந்தர் மாஸ்டர், செல்வா மாஸ்டர், ஞானம் லம்பேர்ட், ஜெசி, திரு எஸ். திருச்செல்வம், கவிஞர் கந்தவனம் மாஸ்டர், ஆர். என். லோகேந்திரலிங்கம், ஆர். ரவீந்திரன், டாக்டர்; செந்தில்மோகன் போன்ற கனேடிய சினேகிதர்கள் அவ்வப்போது வருகை தருவதால், அவரது வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். இவரது பூந்தோட்ட உதவியாளர் சின்னத்தம்பி மாஸ்டரும் குறிப்பிடப்பட வேண்டியவர். காங்கேசந்துறை குருவீதியில் எங்கள் வீட்டை  அதிபர் எப்படி ஒரு அழகான பூங்காவாக வைத்திருந்தரோ, அப்படியே கனடாவிலும் வைத்திருந்தார். விலங்கியல் கற்றவர் எப்படி மரங்களைப் பற்றி எழுதலாம் என்றும், விஞ்ஞானம் படித்தவர் எப்படித் தமிழ் கற்பிக்கலாம் என்றும், நானும் இலங்கையில் அதிபராகத்தான் இருந்தேன், என்னைப் பார்த்தால் அதிபராகத் தெரியவில்லையா என்றும் தங்கள் அறியாமையால் கேட்டவர்களும் இங்கே கனடாவில்தான் இருக்கிறார்கள்.

பூந்தோட்டத்தில் மட்டுமல்ல, அதிபர் ஒரு உணவுப் பிரியருமாவார், அதனால் இவர்கள் எல்லோரும் வரும் போது எதாவது சிற்றுண்டி கொண்டு வருவார்கள். இனிப்புப் பண்டம் என்றால் ஒன்றுக்கு மேல் சாப்பிட அவரது பிள்ளைகள் விடமாட்டார்கள். அதனால் ‘இங்கே இருந்தால் சாப்பிட்டு முடித்துவிடுவார், மாமி நீங்க கொண்டு போங்கள்’ என்று பிள்ளைகள் எனது மனைவியிடம் அதை அப்படியே கொடுத்து விடுவார்கள். எங்களுக்கும் அதில் பங்கு கிடைக்கும். உப்புக் காணாது என்றால், எதையும் மறைக்காது முகத்திற்கு நேரே நேரடியாகவே சொல்லிவிடுவார். அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அதைக் குறையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவரைப் பிரிந்து பத்து வருடங்கள் எவ்வளவு விரைவாக ஓடிவிட்டன என்பதை இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும், எமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சிகள் தொடங்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்து அதை நடைமுறைப் படுத்தியும் காட்டினார்.




அதிபரின் தந்தையும், எனது தாயாரும் சண்டிலிப்பாயைச் சேர்ந்த உறவினர்கள் என்பதால் அவரைச் சின்ன வயதில் இருந்தே எனக்குத் தெரியும். எங்கள் தந்தையை நான் மாணவப் பருவத்தில் இருக்கும் போதே இழந்து விட்டதால், எனது மூத்த சகோதரி கௌரி என்மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரும் உயர்கல்வியை திருச்சி கொன்வென்ரில் பெற்றிருந்தார். அக்கா கௌரியின் கணவராக எனக்கு அத்தானாக இவர் காங்கேசந்துறை, குரு வீதியில் உள்ள எங்கள் வீட்டிற்கு முதன் முதலாக வந்த போது, எப்படிப் பட்டவரோ என்று இவரிடம் மதிப்புக் கலந்த ஒருவித பயம் எனக்கிருந்தது. புரிந்துனர்வுள்ளவராக அத்தான் இருந்ததால் அவர் மீது இருந்த பயம் தானாவே போயிவிட்டது. எங்கள் தந்தையாரும் நடேஸ்வராக்கல்லூரி கனிஸ்டபாடசாலை அதிபராக இருந்ததால், எங்களின் வீட்டை அதிபரின் வீடு என்றுதான் அழைப்பார்கள். அந்த வழக்கம் இவர் வந்ததும் அப்படியே தொடர்ந்தது, எங்கள் படிப்பு முதற்கொண்டு எங்கள் திருமணம் வரை அவரே முன்னின்று நடத்தி வைத்தார். இவரது பிள்ளைகளான அப்பு, நணா, பிள்ளை, தேனு ஆகிய நால்வரும் குருவீதி வீட்டில்தான் பிறந்து வளர்ந்தார்கள். மணிவண்ணன், மணிமாறன் மகாஜனாவின் பழைய மாணவர்கள். புலம் பெயர்ந்த இந்த மண்ணிலும் கடைசிவரை எங்கள் உறவுப்பாலத்தை இவர் கட்டிக்காத்தார். எங்கள் குடும்பத்தில் மூத்தவராகையால் அவரது வீட்டில் நெருங்கிய உறவினர், நண்பர்கள்; எல்லோரும் ஆங்கிலப் புதுவருடம் பிறப்பதற்கு முன்பு 31 ஆம் திகதி சந்தித்து இரவு விருந்துண்டு அவரிடம் ஆசி பெறுவோம். அவருடைய மறைவால், அந்தப் பாக்கியம்; இப்போது எமக்குக் கிடைக்காமல் போய்விட்டது.


இவர் யாழ்ப்பாணம், நெல்லியடி போன்ற இடங்களில் தனியார் வகுப்புகளை எடுத்ததால் பல மாணவர்களும் அறிமுகமானார்கள். வார இறுதிநாட்களில் உயர்வகுப்பு மாணவர்கள் பலர் கூட்டமாக வீட்டிற்கு வருவதால், அக்கா கௌரியின் விருந்தோம்பல் காரணமாக வீடு கலகலப்பாக இருக்கும். குறிப்பாக சுபாஸ், அப்பு (மகாஜனா), கணநாதன், அதிபர் ஜெயரத்தினத்தின் மகன் குமார், ஆறுமுக மாஸ்ரரின் மகன் ரோசா, இ. எம். குமார், பத்மநாதன், சண்முகலிங்கன், தனபாலசிங்கம் மாஸ்டர், சாரதா, அனுசூயா, கோகிலா, மலர்விழி, சசிகலா, டாக்டர் சிவசுப்ரமணியம், மற்று ஆசிரியர்களான திரு, திருமதி சுந்தரராஜன், முருகையா மாஸ்டர், ஆறுமுகராஜா மாஸ்டர் (எனக்குத் தமிழறிவு ஊட்டியவர்), ஆசிரியர் சுந்தரமூர்த்தி ஐயர், ஆறுமுகம் மாஸ்டர், தியாகராஜா மாஸ்டர், கன்ரீன் சங்கரப்பிள்ளை போன்றவர்களின் பெயர்கள் இப்பொழுதும் நினைவில் நிற்கின்றது.


அதிபர் எங்களுக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக இருந்தார். இன்று கனடிய மண்ணில் தமிழ் மொழி தொடர்ந்தும் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். ஆரம்பகாலத்தில் இவரைப் போன்ற ஒரு சிலர் தன்னலம் கருதாது எடுத்த முயற்சியால்தான், எங்கள் தமிழ் மொழி மட்டுமல்ல, பண்பாடு, காலச்சாரமும் இந்த மண்ணில் இன்று நிலைத்து நிற்கின்றது. ‘கனடாத் தமிழரது வரலாற்றுத் தொடக்கத்தில் தமிழரது வாழ்வின் வடிவமைப்பில் ஆளுமை செலுத்திய சிற்பி இவர்’ என்று சான்றேரால் தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்யப்பட்டவர். இவர் நடுவழியில் எங்களைவிட்டுச் செல்லவில்லை. எங்களைத் தயார்படுத்தி விட்டுத்தான் பிரிந்தார். பலர் என்னிடம் கேட்டுக் கொண்டதால், இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன். அவர் காட்டிய வழியைத் தொடர்வோம். தமிழர் என்ற ஒரு இனமாய், யாவரும் போற்றும் வண்ணம், எங்களை வாழவைத்த நாட்டையும் மதித்து, இந்த மண்ணில் தலை நிமிர்ந்து நிற்போம்.


The 3rd Global Literary Review Competition - 2025

 









Luck Awaits – Win 1,50,000 Rupees!


The 3rd Global Literary Review Competition - 2025
Organized by the Kuru Aravinthan Fan Club

Celebrate the legacy of the renowned Tamil writer Kuru Aravinthan by participating in a Literary Review Competition dedicated to his novels and short stories. This competition aims to honor his contributions to Tamil literature and inspire the Tamil community to embrace the joys of reading and writing.

Prizes

A total of 15 prizes worth 1,50,000 Sri Lankan Rupees will be awarded:

  • First Prize: 30,000 LKR

  • Second Prize: 25,000 LKR

  • Third Prize: 20,000 LKR

  • Fourth Prize: 15,000 LKR

  • Fifth Prize: 10,000 LKR

  • 10 Honorable Mentions: 5,000 LKR each

How to Participate

Submit your review of at least 2 novels or 4 short stories by writer Kuru Aravinthan in Tamil or English. The review must:

  • Be a maximum of 5 pages or 1600 words

  • Be submitted in Unicode and Word format

  • Focus on literary analysis and critical appreciation

Note:

  • If you are a student, please mention it in your submission.

  • There is no age limit.

  • Each participant can submit only one review.

The Kuru Aravinthan Fan Club reserves the right to edit and publish the winning entries as a book.

Submission Guidelines

Please email the following details along with your review:

  1. Full name (in English)

  2. Clear postal address

  3. Email address

  4. Mobile phone number

Last Date to Submit: 31 March 2025
Results Announcement: 30 April 2025 on our official website

Email:       [email protected]
Website:    
https://kurunovelstory.blogspot.com/                        

                  https://canadiantamilsliterature.blogspot.com/

                  http://tamilaram.blogspot.com/

Join us in celebrating the timeless works of Kuru Aravinthan. Submit your reviews and make your mark in the world of Tamil literature!

Secretary, Kuru Aravinthan Fan Club -[email protected]


 


எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

 



 





          
ஆசிரியரைப் பற்றி..

 

குரு அரவிந்தன் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளர். எட்டுச் சிறுகதை தொகுப்புகள்ஏழு நாவல்கள்ஓலிப்புத்தகங்கள்நாடகங்கள்சினிமா கதைவசனம்சிறுவர் இலக்கியம் என இதுவரை நிறையவே படைத்திருக்கிறார். அவருடைய வாசக வட்டம் உலகளாவியது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வருடாந்த மலர்களில் இவருடைய புனைவுகள் பலதடவை வெளிவந்திருக்கின்றன. புனை கதைகள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டைப் பெற்றிருக்கின்றன. தமிழர் தகவல் விருதுயுகமாயினி பரிசுகலைமகள் பரிசுஉதயன் பரிசுசி.டி.ஆர் வானொலி பரிசுஜனகன் பிக்சேஸ் விருதுவிகடன் பரிசு போன்ற பல பரிசுகளையும்விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

 

2003ம் ஆண்டு என்று நினைக்கிறேன்தற்செயலாக குரு அரவிந்தனின் மழலைப் பாடல் குறுந்தகடு கையில் கிடைக்கிறது. தமிழ் நாட்டின் முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தக் குறுந்தகடு பற்றி வியந்து எனக்கு எழுதியிருக்கிறார். கடும் உழைப்பின் பின்னால் இந்த மழலைப்பாடலை எழுதிக் குறும்தட்டாக வெளியிட்ட குரு அரவிந்தனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

நான் சிறுவனாய் வளர்ந்த கிராமத்தில் ஐஸ்கிரீம்  அபூர்வமாக எப்போதாவது சாப்பிடக் கிடைக்கும்.  இதன் சுவையையும் சுகத்தையும் தாண்டி இது சாப்பிடும்போது ஒர் பதற்றம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் முடிந்துபோகும். சாப்பிடாமல் விட்டாலும் உருகி அழிந்துவிடும். சுவை இன்பத்தை நீடிக்க முடியாது. அதனால் கிடைக்கும் இன்பத்திலும் பார்க்க அது கொடுக்கும் ஏக்கமும் அவலமுமே கூடுதலாக இருக்கும்.

 

குரு அரவிந்தனின் புனைவுகளைப் படித்தபோது எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது. முடிந்துவிடுமோ என்று அடிக்கடி மீதிப் பக்கங்களை எண்ணிப் பார்க்க என்னைத் தூண்டியது. படித்தால் முடிந்துவிடும்ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் மனதை நிரப்பியிருக்கும். புனைவுகளில் சுவை முக்கியம். அதனிலும் முக்கியம் அவை வரலாற்றின் ஒரு கூறை பதிந்து அதை அழியவிடாமல் காப்பது. எங்கள் சரித்திரத்தை அவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இந்த இரண்டும் குரு அரவிந்தன் படைப்புகளில் நிறைந்து கிடக்கின்றன. கனடாவில் குரு அரவிந்தன் இந்த வேகம் குறையாமல் இன்னும் பல வருடங்கள் அவர் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.

 

 அ. முத்துலிங்கம் - கனடா.

Short Story Review Contest - 2025


 


For Details: விபரங்களுக்கு:

குரு அரவிந்தன் அவர்களின் படைப்புகளுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளை

உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2025

போட்டி முடிவுகள் 30 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2025 இணையத்தில் வெளியிடப்படும்.

மின்னஞ்சல்: [email protected]

இணையம்:

https://kurunovelstory.blogspot.com/

http://tamilaram.blogspot.com/

https://canadiantamilsliterature.blogspot.com/

இந்த அறிவிப்பினை நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!

செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். [email protected]

❌