Normal view

Received before yesterdayநர்சிம்

காட்சிப்பிழை

“அந்த மூத்த, முக்கியப் படைப்பாளி, உங்கள் பெயர் உட்பட இன்று இருக்கும் சிலரின் பெயர்களைத் தவிர்த்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அவர் எப்போதும் குனிந்தே பார்ப்பதால், தன் காலடியில் கிடப்பவர்களையே அவரால் பார்க்க முடிகிறதுபோல. கொஞ்சம் நிமிர்ந்தால் எதிரில் நிற்பவர்களும் தென்படுவார்கள். நிமிரக் காலதாமதமானால், நன்றாக நிமிர்ந்து வளைந்து வான் நோக்கிப் பார்க்கும்போது, நான் தெரிவேன்.”

“கட்… கட்…” என்ற சத்தம் கேட்டதும் அதுவரை இருந்த இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்ட அரங்கம், இயக்குநரின் கரவொலியைத் தொடர்ந்து கலகலவென ஆர்ப்பரித்தது.

இயக்குநர் “எங்கய்யா நம்ம டயலாக் ரைட்டர்” என முகமெல்லாம் சிரிப்பாகக் கேட்க, சற்றுத் தள்ளி, உதவி இயக்குநரோடு நின்றிருந்த முத்து அங்கிருந்தே கையைக் காட்டி நெஞ்சில் பதித்துச் சிரித்தான்.

இயக்குநர் அவனிடம் கட்டை விரலைக் காட்டி, “என்னய அவாய்டு பண்ணுன எல்லாருக்கும் இதான்ய்யா பதில்ன்ற மாதிரி இந்த சீன்ல வச்சுட்டேன், ரொம்ப நல்லா வந்துருக்கு தம்பி, திரைவீரன் சொன்னான் உங்களப்பத்தி, சூப்பர்” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு நகர்ந்தார்.

அடுத்த காட்சியை எடுக்க எப்படியும் மூன்று மணி நேரம் ஆகிவிடும் என்பதை இந்த இரண்டு மூன்று வருட அனுபவங்களில் அறிந்திருந்த முத்து, தன்னுடன் நெருக்கமாக இருக்கும் உதவி இயக்குநர் திரைவீரனுடன் தேநீர் அருந்த ஒதுங்கினான்.

‘‘சார்” என திரைவீரனை நோக்கி சற்று பயத்துடன் இழுத்தவருக்கு வயது எப்படியும் ஐம்பதுகளின் மத்தியில் இருக்கும். அவரைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்து யோசிக்க, “பா…ஸ்கரன் சார், டாக்டர் சார் சொல்லிவிட்டாரே…” என்றார்.

“பாஸ்கரன். ஆமா… பாஸ்கரன்… இப்ப புரொடக்‌ஷன் சாப்பாடு வந்துருச்சு பாருங்க, போய் சாப்ட்டு வெய்ட் பண்ணுங்க, கூப்புடுறேன்.”

“காலைல இருந்து அஞ்சுதடவ சாப்ட்டேன் சார்” எனச் சிரிக்க, அதற்கு எவ்வித அதிர்ச்சியும் அடையாத திரைவீரன், “போய் டீ சாப்டுங்க” என்றான். அவர் பதிலுக்குக் காத்திராமல் முத்துவுடன் இணைந்து நடக்கத்தொடங்கினான். நான்கைந்து அடிகள் எடுத்து வைத்த முத்து, மெதுவாகத் திரும்பிப் பார்த்தான்.

“இன்னும் நம்மளையே பாத்துட்டு நிக்கிறானா அந்தாளு?”

திரைவீரன் தன் கையில் இருக்கும் பரீட்சை அட்டையில் சொருகப்பட்ட தாள்களைப் பார்த்து, கேட்டுக்கொண்டே நடந்தான்.

காட்சிப்பிழை..! - சிறுகதை
காட்சிப்பிழை..! – சிறுகதை

“ம்ம்.”

“அப்ப அந்தாளு சினிமாக்கு சரிப்பட மாட்டான்.”

தேநீரிலிருந்து எழுந்த மென் ஆவி மடங்கி மடங்கி மேல் எழுவது விளக்கிலிருந்து கிளம்பும் புகை போல் தெரிந்தது முத்துவிற்கு. கூடவே, திருக்கார்த்திகை அன்று வரிசையாக அகல் விளக்குகளை வைத்து ஒரு திரியின் நெருப்பிலிருந்து தொட்டுத் தொட்டு தீ வளர்த்த அருணாவின் முகம் நினைவில் சுடர்ந்தது.

“யோவ், குடிய்யா… அந்தாள யோசிச்சுக்கிட்டு இருக்கியா?”

“சேச்சே… என் ஆள” முத்துவிற்குச் சொல்லும்போதே சிரிப்பும் சிறு நாணமும் படர்ந்தது.

“லவ் மூட் ஸ்டார்ட் ஆகிருச்சா” எனச் சிரித்த திரைவீரன் அனிச்சையாகத் திரும்பிப் பார்க்க, அதே இடத்தில் நின்று இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் பாஸ்கரன். அவர் பார்வையிலிருந்து சட்டெனத் திரும்பிக்கொண்டான்.

“நீ எழுதுனதுலயே இன்னைக்கு எடுத்த சீன் வசனம்தான் முத்து டாப்பு.”

ஆமோதிப்பது போல் தலையை ஆட்டிய முத்து, தேநீரை சுவைத்தான். வழக்கத்தைவிட கூடுதலாக ருசித்தது. மனம் நிறைவாக இருந்தது.

“ஆமா எழவு, பத்து இருவது பேரா சேர்ந்து தனக்கான ஆளுகள மட்டும் புரமோட் பண்ணிக்கிட்டே இருக்கானுக நம்ம பீல்டுல.”

முத்து ‘இல்லை’ என்பதுபோல் தலையாட்டி, தேநீரின் அடிக்கசடில் கொஞ்சமாய் ருசித்துவிட்டு மீதியை வைத்துக்கொண்டே சொன்னான்.

“சினிமால மட்டும் இல்ல தெர, உலகத்துல இருக்குற எல்லாத் துறையிலயும் இது இருக்கு. அந்தந்த துறைல யார் மூஞ்சில முழிக்கிறோம்றதப் பொறுத்து அவனவன் பேரு புகழ், நாசம், சர்வநாசம் எல்லாம் நடக்கும்.”

“மூஞ்சில முழிக்கிறதா?”

“ஆமா, அந்தா, அவரு… உம் மூஞ்சில முழிச்சிருக்காரு பாரு. யாரோ ஒனக்குத் தெரிஞ்சவரு சொல்லி, படத்துல எப்பிடியாவது ஒரு சீன்லயாச்சும் நடிச்சிரணும்னு காலைல இருந்து இங்கயே நிக்கிறாருல்ல.”

“ஓ… இப்ப புரியுது. இப்ப நான் பாத்து ஒரு சீன்ல உள்ள நொழச்சுவிட்டு, அதுல கொஞ்சம் பேரு வந்துச்சுன்னா நமக்குத் தெரிஞ்ச ஆட்கள் குரூப்புக்குள்ள புகுந்த பிஸி ஆகிருவாருன்ற, அதான, சரியாப் புடுச்சனா நீ சொல்றத.”

“பக்கா, நடுவுல `நமக்குத் தெரிஞ்ச ஆட்கள் குரூப்பு’ன்னு சொன்னியே, அதான் மூஞ்சில முழிச்சு, குரூப்புக்குள்ள சுத்துறது.”

“சர்த்தான்” என்றவன் சீன் பேப்பரைப் பார்த்து, ‘‘ஐயய்யோ, இதுவா அடுத்து எடுக்கப்போறோம்! இங்க பாரு, ஷாட் பிரிக்கிறதுக்குள்ள அந்துரும் போலயே, வா வா” என அட்டையைக் காட்ட, இருவரும் ஒரு திடீர் பரபரப்புக்குள் ஓடிப் புகுந்தார்கள். அந்த இடமும்தான்.

காலிசெய்யப்பட்ட திருமண மண்டபத்தின் மணமகள் அறையில் மறந்து விடப்பட்ட கண்ணாடி வளையல், கூட்டும்போது சுழன்று நிலைபெற்று உடைவது போல் நின்றிருந்தார், பாஸ்கரன்.

அவரைச் சுற்றிலும் இருந்த அனைத்துப் பொருள்களையும் சுருட்டி நிமித்தி எடுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். அந்த இடம் மீண்டும் வெட்டவெளியானது. இருள் சூழ்ந்து இருந்த இடத்தின் ஓரத்தில் சிறிய மஞ்சள் விளக்கு ஒன்று பரிதாபமாக வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது.

பாஸ்கரன் ஒவ்வொரு இடமாகப் பார்த்தார். ஒளிப்பதிவுக் குழு மட்டும் எஞ்சி இருந்தது. அவர்களும் எல்லாவிதமான உபகரணங்களையும் பெரிய பெரிய மூட்டைப்பைகளில் வைத்துக் கட்டிப் புறப்படத் தயாரானார்கள். அதில் ஒருவர் பாஸ்கரன் நிற்பதைப் பார்த்து, “என்னா, மீட்டர் போடலயா” எனக் கேட்டார்.

பாஸ்கரன் புரியாமல் குழப்பமாகப் பார்த்ததும், “காசு வாங்கலயா, புரொடக்‌ ஷன்ல எல்லாரும் போய்ட்டாங்களே” என்றார். அப்போதும் ஒன்றும் புரியவில்லை பாஸ்கரனுக்கு. எங்கிருந்தோ திரைவீரனின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க, அதுவரை அடைபட்டிருந்த இனம்புரியாத ஒன்றிலிருந்து கொஞ்சம் விடுபட்டு, திரைவீரன் பேசிக்கொண்டிருக்கும் திசை நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓடினார்.

அங்கே திரைவீரன் தன் முன்னால் நின்று கொண்டிருந்த சிலரைத் திட்டி, மறுநாள் அப்படியான தவறுகள் ஏதும் நிகழக்கூடாது என விளக்கிக்கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி ஒரு நாற்காலியில் அமர்ந்து, அலைபேசியில் டார்ச் வெளிச்சம் ஏற்படுத்தி தன் கையில் இருந்த தாள்களைப் படித்துக்கொண்டிருந்தான் முத்து.

பாஸ்கரனுக்கு முத்துவிடம் போய்ப் பேசவேண்டும் போல் இருந்தது. இன்ன காரணம் என்று எதுவும் தெரியவில்லை அவர் மனதிற்கு. ஏனோ திரைவீரனைவிடவும் முத்துவைப் பிடித்துப்போனது. மெதுவாகச் சென்று அருகில் நின்றார். அவரைப் பார்த்ததும் முத்துவிற்கு ஒருமாதிரி ஆகியது. அருகில் கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டான். அவர் பதறிப் பின்வாங்க, “அட, ஒக்காருங்க சார்” என்றான்.

அவர் தயக்கமாக அமரப்போக, திரைவீரன் பேசி முடித்துத் திரும்பியவன் அவரைப் பார்க்க, அமரப் போனவர் அப்படியே அதே பாகையில் இடுப்பை அரை நொடி வைத்திருந்து சட்டென நகர்ந்து நின்றார்.

திரைவீரனுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சற்றுக் கடுகடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டே அருகில் வந்து அந்த நாற்காலியில் அமர்ந்தவன், “சார், நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணணும், சரியா!” என்றான்.

அவர் ‘சரி’ என்று சொல்லித் தலையாட்டினார். ஆனால் அந்த சரி என்ற சொல் அவரிலிருந்து வெளியேறி எவருக்கும் கேட்கவில்லை.

ஒருவித அமைதி சூழ்ந்தது. அவ்வளவு வெளிச்சமும் பரபரப்புமாக இருந்த இடம் இப்போது இருளும் அமைதியும் சூழ்ந்து சூன்யத்தன்மையைக் கொண்டுவந்திருந்தது, பாஸ்கரன் மனதிற்குள்.

தொண்டையைச் செருமிக்கொண்ட திரைவீரன், “நீங்க ஒரு ரெண்டு நாள் கழிச்சு வாங்க, எங்க வரணும்னு சொல்றேன்.”

பதில் வரவில்லை. ஏதேதோ திட்டங்கள் வகுத்துக்கொண்டிருந்த மனதிற்கு, அதற்கு நேரெதிராக ஒன்றைக் கேட்க நேரிட்டதும், தடுமாறியது.

முத்து அவரை ஏறிட்டான். தனக்கு இடப்பக்கமாக கவிழ்த்து வைக்கப்பட்ட ஸ்டூலை நிமிர்த்தி, அவர் பக்கமாகத் தள்ளினான்.

இம்முறை சட்டென சரிந்து அமர்ந்துகொண்டார்.

“சார், வண்டி வந்துருச்சு” என்ற குரல் கேட்க, திரைவீரன் அமர்ந்தவாறே சோம்பல் முறித்தான். அன்றைய நாளின் அவ்வளவு அலுப்பும் சடசடசென உடலில் இருந்து உடைந்துவிடுபட்டன.

“கிளம்பலாமா முத்து, இல்ல நீ உன் வண்டில வந்திட்டியா?”

“ஆமா வண்டில வந்துட்டேன், நாளைக்கு என்ன, நைட்ஷூட்தான?”

“ஆமாப்பா முத்து. நாளைக்குத்தான் நம்ம வாழ்க்கையே இருக்கு, கரெக்ட்டா வந்துரு.”

முத்து சிரித்தான். “அட கொஞ்சம் அமைதியா இருங்க இயக்குநர் சார். நாளைக்கு நீ எப்பிடியும் சொல்லி அசத்திருவ அவங்கள, நியூஸ்ல சூப்பர் ஹீரோயின் நடிக்கும் திரைவீரனின் புதிய படம்னு அப்பிடியே பத்திக்கும்ல ஊரு.”

நடிகையின் பெயரைக் கேட்டதும் பாஸ்கரன் சட்டென கண்கள் விரிய, மகிழ்ச்சியாக இருவரையும் பார்த்தார்.

“ஆமா முத்து, இதுக்காகத்தான இவ்வளவும். நாளைக்கு மட்டும் ஓகே ஆகிருச்சுன்னா, அந்தம்மாவோட புரொடியூசர் ரெடியா இருக்காரு” கையைச் சொடுக்கிக்கொண்டே, “அடிச்சு மேல வர்றோம், முதல் அடியே அப்பிடி வைக்கிறோம் முத்து.”

மிகுந்த நம்பிக்கையும் உற்சாகமுமாகச் சொன்னவன், பாஸ்கரனைப் பார்த்ததும் சற்றுக் குரலைத் தாழ்த்தி, இரண்டு விரல்களைக் காட்டி, “ரெண்டு நாள்ல சொல்றேன், வாங்க” என நினைவூட்டி விட்டுப் போனான்.

திரைவீரன் போவதை சற்று வெறுப்பாகப் பார்த்தார் பாஸ்கரன்.

“சார், என்ன ஆச்சு?”

பாஸ்கரன் முத்துவை நிமிர்ந்து பார்த்தார்.

“டாக்டர் சார்தான் ‘சும்மா ஒரு சீன் தானாம்… போய்ப்பாரு, ரொம்ப ஆசப்படுறயே’ன்னுதான் சிபாரிசு பண்ணுறேன்னாரு, இப்ப ரெண்டு நாள் எங்க போறதுன்னு தெரில, ஊருக்குப் போக இப்ப பஸ் இருக்குமா தம்பி?”

“நைட்டு என் ரூம்ல தங்கிக்கோங்க. காலைல பாக்கலாம் என்ன ஏதுன்னு.”

பெரிய கூடம் போன்ற நீளமான இடம். தனியாக அறை என்று ஏதுமில்லை. குளித்து முடித்து வந்த முத்து, கட்டிலில் சரிந்து, பக்கவாட்டில் திரும்பி கையைத் தலைக்கு வைத்து பாஸ்கரனைப் பார்த்தான். எதிரே சுவரில் சாய்ந்து, கால்களை நீட்டி அமர்ந்திருந்தார். அருகில் படுக்கை சுருண்டு இருந்தது. எந்நேரமும் தூங்கிவிடலாம்.

காட்சிப்பிழை..! - சிறுகதை
காட்சிப்பிழை..! – சிறுகதை

“ரொம்ப நன்றி தம்பி. ரெண்டு நாள்னு சொன்னதும் கொஞ்ச நேரத்துல தல சுத்திருச்சு எனக்கு.”

முத்து மெலிதாகச் சிரித்தான்.

“இப்பிடி ஒங்களமாதிரி இந்த சுவத்துல எத்தன பேர் சாய்ஞ்சு இதச் சொல்லிட்டுப் போயிருக்காங்க தெரியுமா? சினிமா மேல இருக்குற ஆசைல இதப்பத்தி பெருசா எதுவும் தெரியாம வந்துர்றது. அப்பறம் என்னன்னு தெரிஞ்சு, தாக்குப்பிடிக்க முடியாமப் போயி, ஏதாவது தப்பா சொல்றது.”

“ஆமா தம்பி, ஆசதான். ஒரே ஒரு சீன்லயாச்சும் தலையக்காட்டிட்டா நம்ம திறமையால அப்பிடியே மேல வந்துரமாட்டமான்னுதான். வந்துட்டா எங்க ஊருக்குல்ல கெத்தா சுத்தலாம் தம்பி.”

முத்து அமைதியாகப் பார்த்தான்.

“அப்பா எங்கூரு நாடகத்துல எல்லாம் நடிப்பாரு தம்பி. எப்பிடியாச்சும் சினிமால நடிச்சிரணும்னு வந்து நெனச்சத சாதிக்கவும் செஞ்சுட்டாரு.”

முத்துவிற்கு ‘அட’ என்ற வியப்புத் தட்டியது.

“என்ன படத்துல நடிச்சாரு, பேரு?”

“அங்கதான் விசயமே, ரெண்டு படம் நடிச்சாரு. ஒருபடத்துல இந்தா ரெண்டு பக்கமா தெறக்குற அறைக்கதவு இருக்கும்ல, போலீஸ் ஸ்டேஷன்ல அதிகாரி அறை வாசல்ல. அதுல நிப்பாரு. கால் மட்டும்தான் தெரியும். இன்னொரு படத்துல போர்ல செத்துக்கெடக்குற ஆள்ல ஒருத்தரா, முதுகுல அம்பு பாஞ்சு அப்பிடியே கெடப்பாரு.”

முத்து ஒன்றுமே சொல்லாமல் அவரைப் பார்த்தான்.

“இப்ப வர ஊர்ல எங்கப்பாக்கு சினிமாக்காரர்னுதான் பேரு தம்பி. நானும் ஊர்ல கோயில் திருவிழால எல்லாம் நடிச்சிருக்கேன். எனக்கும் சினிமாக்காரன்னு பேர் வாங்கணும் தம்பி, அவ்ளோதான்.”

முத்து சிரித்தான். ஆனால் அந்தச் சிரிப்பு அவரைக் காயப்படுத்திவிடக்கூடாது என மிகக்கவனமாகத் திரும்பிக்கொண்டான்.

“ஒண்ணு சொன்னா என்னய தப்பா எதுவும் எடுத்துக்க மாட்டீங்களே தம்பி?”

முத்துவின் பார்வையில் நம்பிக்கை வந்து தொடர்ந்தார்.

“டாக்டர் சார்தான் தம்பி இந்தத் திரைவீரன் குடும்பத்துக்கு அவ்ளோ உதவிங்க செஞ்சவரு. அவரு சொல்லிவிட்டா அப்பீலே இருக்காதுன்னுதான் வந்தேன். ஆனா சினிமா அந்தப் பையன மாத்திருச்சில்ல. பெரிய டைரக்டர்ட்ட இருக்கோம்ன்ற `இது’ தெரியுது. அந்த இது தெரிஞ்சது தம்பி. அடுத்து அவரே ஏதோ படம் பண்ணுறாரு… அதுவும் நாளைக்கு நம்ம ஹீரோயினிய வேற பாக்கப்போறீங்க, இன்னைக்கு சாப்பாடு போட்ட எடத்துல அதான் ஒரே பேச்சு. அப்ப சர்த்தான் இனிமேல்ட்டு தலகீழாத்தான் நடப்பாருன்னு தோணுச்சு, எல்லாம் சினிமா படுத்துற பாடு.”

முத்து சிரித்தான். அவர் கண்களை நோக்கிச் சிரித்தான். பாஸ்கரன் அமர்ந்திருக்கும் இதே இடத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு முத்துவும் திரைவீரனும் அமர்ந்திருந்த காட்சி அவன் கண்களில் தெரிந்தது.

“நீ எழுது, நான் எடுக்குறேன்” என்ற சொற்கள்தான் திரைவீரன் முத்துவிடம் அதிகம் சொன்னவை.

இருவரும் ஒருவருக்கொருவர் முழித்துக்கொள்ள உதவியது, தங்கவேலு அண்ணன்தான். மூத்த உதவி இயக்குநர், இணை இயக்குநர் என இயக்கத்தின் அத்தனையிலும் முக்கியமாகச் சுழன்றவர். முத்துவின் சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு அவனைத் தேடிப்போய்ப் பார்த்துப் பேசி சினிமா எனும் உலகத்தை அவனுக்குத் திறந்து வைத்தவர். அந்த உலகில் ஓரிரு நாட்கள் முன்னர் புகுந்திருந்த திரைவீரனையும் தங்கவேலு அண்ணன்தான் முத்துவுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

“நாம எழுதுறதப் படிக்கிற ஒரே ஒரு ஆளாவது ஒரே ஒரு சின்ன விசயத்த கத்துக்கிட்டா, தன்ன மாத்திக்கிட்டாப் போதும்” என்ற முத்துவின் சொற்கள்தான் திரைவீரனின் லட்சியமும் என்பதால் ஒன்றானார்கள். இன்று வரை ஒன்றாகவே பயணிக்கிறார்கள். வானத்தில் நிற்பார்கள். அடுத்த நொடி பள்ளத்தில் கிடப்பார்கள். எல்லாமே ஒன்றுதான் அவர்களுக்கு. எல்லாமே அந்த அரைநொடித் திரையில் தென்படும் பெயருக்காகத்தான்.

சொல்லப்போனால் முத்துவிற்கு சினிமா அவ்வளவு பிடித்தம் இல்லை. எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பான். ஆனால் திரைவீரனுக்கு நினைப்பும் மூச்சும் சினிமாதான். வந்த புதிதில் ஆறு நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடக்க நேரிட்டதை அடிக்கடி சொல்லுவான். ஆனால் ஒருமுறைகூட சினிமாவைப் பழித்ததில்லை. அருண் என்ற பெயரை திரைவீரன் என்று மாற்றி வைத்துக்கொண்டதன் காரணம், ஏதே ஓர் இயக்குநர், “ஆமாடா ஊர்ல இருந்து பெரிய வீரனுக மாதிரி கிளம்பி வந்துருங்க, இங்க இருக்குற ஆளுங்களே சிங்கி அடிக்கிறோம்” எனத் திட்டி அனுப்ப, அந்த வீரன் எனும் சொல் சட்டெனப் புகுந்துகொண்டது என்று முத்துவிடம் சொல்லிச் சிரிப்பான்.

“ஏன் சினிமாக்கு வந்தன்னு கேட்டா, அதுக்கு எந்த பதிலும் இல்லைன்னு சொல்றான் பாரு, அதுதான் உண்மை. அவன்தான் உண்மையான சினிமாக்காரன். இதுக்காக, அதுக்காகன்னு காரணத்தோட எல்லாம் சினிமாவுக்கு எவனுமே வரமாட்டான். நாஞ்சொல்றது, உண்மையான கலைஞன் காரணத்தோட வரமாட்டான். அது ஒருமாதிரி நம்மள இருக்க விடாது, ‘போ, இங்க என்ன பண்ணுற, போடா, இது உன் இடம் இல்ல, சினிமாதான் உனக்கு’ அப்டீன்னு தொரத்தும். ஏன்னு கேட்டா பதில் இருக்காது… இருக்கக் கூடாது” என ஒவ்வொரு முறை திரைவீரன் சொல்லும்போதும் முத்துவிற்கு அவன் தோளைத் தொட்டு அணைத்துக்கொள்ளத் தோன்றும்.

“ஆக, சினிமாக்காரன்னு ஊர்ல உங்கள சொல்லணும், அதுக்காக ஒரு சீன்ல நடிக்கணும்” பாஸ்கரனைப் பார்த்து முத்து சிரித்தான்.

“நீங்க மனசு வச்சா நடந்துரும் தம்பி, அவரு மேல நம்பிக்க இல்ல, இன்னைக்கு நாள் முழுக்க, சாப்டுங்க, டிபன் தின்னுங்க, டீ குடிங்கன்னு ஓட்டிட்டாப்ளயே என்னய… சினிமாவுல இம்புட்டு திமிர் கூடாதில்ல தம்பி, அதுவும் பழச மறக்கக்கூடாதில்ல, அந்த டாக்டர் எம்புட்டு முக்கியம் தெரியுமா?”

முத்து பதில் சொல்லாமல் நிமிர்ந்து மேற்கூரையை நோக்கினான். தூங்கிப்போனான்.

மிகப்பெரிய வளாகத்தில் வெளிச்சம் அளவிற்கு அதிகமாக இருந்தது. முத்துவிற்காகக் காத்திருந்த திரைவீரன், முத்துவைப் பார்த்துக் கையைத் தூக்கினான். பதற்றமாக இருக்கிறான் என முத்துவிற்குத் தெரிந்தது.

முத்துவிற்கு அருகில் நடந்து வரும் பாஸ்கரனைப் பார்த்து லேசாகக் குழப்பம் அடைந்தான்.

“ரெண்டு நாள்தான, அதான் ரூம்ல இருக்கச் சொன்னேன். நேத்து நாம பேசிட்டு இருந்தத கேட்டுருப்பார் போல, அந்த நடிகைய தூரத்துல இருந்தாவது ஒரு தடவ பார்த்துக்குறேன்னாரு” முத்து சிரித்தான்.

திரைவீரன் பாஸ்கரனை ஏற இறங்கப் பார்த்தான். பாஸ்கரனின் உடல்மொழியில் முந்தைய நாள் இருந்த பதற்றம் சற்றுக் குறைந்து இருந்தது போல் பட்டது.

திரைவீரன் அப்படித் தன்னைப் பார்த்தது பாஸ்கரனுக்கு சற்று உள்ளூர சினத்தை ஏற்படுத்தியது.

ஊரிலிருந்து கிளம்பி வரும்பொழுது திரைவீரன் எனும் பெரும் பிம்பம் ஒரே நாளில் அவருக்கு வேறு விதமாக மாறியிருந்தது போல் நினைத்தார். திரைவீரனைத் தவிர்த்து முத்துவைப் பார்த்து, “தம்பி இந்தாங்க” எனத் தேநீரை நீட்டினார்.

‘‘உள்ள போய்ட்ருக்கு, ஏழாவது டேக்காம், ப்ச்”

திரைவீரன் பதற்றமாகச் சொல்ல, முத்து உள்ளே எட்டிப்பார்த்தான். தென்னிந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை, அங்கே அவ்வளவு அருகில் இருப்பதை, தான் அங்கு நிற்பதை பாஸ்கரனால் நம்பமுடியவில்லை. முகம் மலர எட்டிப்பார்த்தார்.

திரைவீரன் நடிகையின் மேலாளரைத் தேடினான். எங்கிருந்தாலும் தெரியும்படி வண்ணமயமான சட்டை அணிபவர் என்பதால் சட்டென கூட்டத்தில் தெரிந்தார். அருகில் போய்ச் சொல்லிவிட்டு முத்துவிடம் வந்தவன்,

“முத்து, நீயே சொல்லிரு, அந்தம்மா கேரக்டர மட்டும் சொல்லிரு, சீக்கிரம் சொல்லி முடிச்சிரு, சரியா. நான் இன்னைக்கு சொதப்பிருவேன்” என்றான்.

அவன் தோளைத் தொட்ட முத்து, “அட தெர என்னாச்சு, முதல் படம்னதும் ஒனக்கே இப்பிடி ஆகுது பாத்தியா, அதான் சினிமா” என்றான்.

கலர்சட்டை கைகாட்ட, முத்துவும் திரைவீரனும் கேரவன் நோக்கிப் போனார்கள்.

சரியாக இருபது நிமிடங்கள் நடிகையிடம் விளக்கினான் முத்து. அவர் சிரித்துக்கொண்டே, ‘‘நீங்க ரைட்டர்தான, டைரக்டர் மாதிரி சொல்றீங்க” எனச் சொல்லி, திரைவீரனைப் பார்த்துச் சிரித்தாள்.

“எனக்கு ஓக்கே, மேனேஜர்ட்ட பேசிருங்க” என்றதும் முத்துவிற்கு “ஆ…” எனக் கத்தவேண்டும் போல் இருந்தது. திரைவீரனைப் பார்த்தான். “தேங்க்ஸ் மேடம்” என்று சொன்ன திரைவீரன் கீழே இறங்கினான்.

முத்துவின் குதூகலம் வெளியில் காத்திருந்த பாஸ்கரனையும் தொற்றிக்கொண்டது.

“சூப்பர் தம்பி, ஆக வச்சுட்டீங்களா… நீங்க சூப்பர் தம்பி” சொன்ன பாஸ்கரனை சட்டை செய்யாமல்,

‘‘ஆமா தெர, இதுவே பாதி ஜெயிச்ச மாதிரி… இவங்க பேரப்போட்டாலே போதும்ல. வா, இன்னைக்கு நான் பார்ட்டி வைக்கிறேன்” என திரைவீரனின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

பாஸ்கரன் ஏதோ தானே வென்றுவிட்டதாக முத்துவின் கைகளைப் பற்ற எத்தனித்தார்.

“முத்து” என்றான் திரைவீரன்.

நிமிர்ந்து திரைவீரனின் முகத்தை உற்றுப்பார்த்த முத்து,

“சொல்லு தெர.”

“ஒண்ணும் இல்ல… காலைல கிளம்பி வரும்போது போன் வந்துச்சு, அப்பா எறந்துட்டாருன்னு. இவ்ளோ நாள் காத்திருந்தது இந்தம்மாட்ட சொல்றதுக்குத்தான். அதான்… உங்கிட்ட சொல்லிருந்தா, நீ இப்ப சொன்னமாதிரி கதைய சொல்லியிருக்க மாட்டன்னு தெரியும். என்னய ஒரே அழுத்துல ஊருக்குக் கூட்டிப்போய் விட்ர முடியுமா, அப்பாவப் பாக்கணும்” என்று சொல்லிக்கொண்டிருந்த திரைவீரனைத் தரதரவென இழுத்துக்கொண்டு போனான் முத்து.

திகைத்து, திரைவீரனின் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தார் பாஸ்கரன்.

**

நன்றி : ஆனந்த விகடன்

ஓவியங்கள் : எம்.ஜெயசூரியா.

நதி

“ஒன்னயப் போலிஸ் தேடுச்சே ! என்னா விவரம்?”

சக்கரத்தை ’சல்ல்’ என சுழற்றிவிட்டு கோட்டம் பார்த்துக்கொண்டே அய்யப்பனிடம் கேட்டார் ஃப்ராங்க்ளின் அண்ணன்.

சைக்கிள் கடையின் இடது ஓரத்தில் போடப்பட்டிருந்த அல்லது நானே எனக்குத் தோதாக போட்டுக்கொண்ட டயர்களால் ஆனா நாற்காலியில் அமர்ந்து மும்முரமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கேட்ட மாத்திரத்தில் அய்யப்பனுக்கு முகம் மாறிவிட்டது.

“எப்..ப? என்னாவாம்?”

ஒரு கண்ணை மூடி, சக்கரத்தின் சுழற்சியில் எங்கேனும் தடுமாற்றம் இருக்கிறதா, விளிம்பின் வட்டப்பாதையில் விலகல் ஏற்படுகிறதா என்பதைப் பார்த்துக்கொண்டே,

“என்னாவாம்னு இங்க வந்து கேட்டா ?, தேடுனாக, சொன்னேன்.”
சொல்லிக்கொண்டே எழுந்தார் . இரண்டு மூன்று தப்படிகள் லேசாக குனிந்தவாறே நடந்து பின் நிமிர்ந்தார்.

“வீல் பெண்ட எடுக்குறதுக்குள்ள நம்ம பெண்டு நிமிர்ந்து போகுது கருமம்”
நான் அய்யப்பனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் கழுத்துப்பகுதில் படர்ந்த வியர்வையைத் துடைத்துவிட்டு என்னைப் பார்த்தான்.

நான் நிலமையை உணர்ந்து, “ என்னா அய்யப்பா, நைட்டு என்னமும் சம்பவம் கிம்பவமா?”
உடனே பதறியவன், “அட ஏண்டா நீ வேற, நானே ஆத்தக் கண்டனா அழகரக் கண்டனான்னு கெடக்குறேன். சம்பவமாம்..”

ஃப்ராங்க்ளின் அண்ணன் எங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்த சைக்கிளை எடுத்து கவிழ்த்துப் போட்டார்.

அப்போது புல்லட் சத்தம் டுபுடுபுடுபுவென காதை அடைத்துக்கொண்டு எங்களைச் சமீபித்தது. அய்யப்பன் கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தான். எனக்குள் கலவரம் குடிகொள்ளத் துவங்கியது. ஏனெனில் ஊருக்குள் வந்திருக்கும் இந்த புதிய இன்ஸ்பெக்ட்டரின் அதிரடிகள் அப்படி.. ‘காட்டடி கர்ணன்’ என்று பட்டப் பெயரை வழங்கி கெளரவித்ததும் இதே அய்யப்பன் தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு பிரச்சனையில் பஸ் ஸ்டாண்டில் இருந்த மலைச்சாமி கடையை நொறுக்கி தன் பராக்கிரமத்தை நிலைநாட்டியவன் அய்யப்பன். ஆனால் இந்த புதிய இன்ஸ்பெக்ட்டர் வந்ததில் இருந்து ஊருக்குள் அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை என்பதில் என்னைப் போன்ற வேடிக்கை மனிதர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். வேலையை விட்டு வரும்போதும் சரி, வேலைக்குப் போகும்போதும் சரி, ஒரு எட்டு ’ஓம் முருகா’ சைக்கிள் கடையில் அமர்வது என் அன்றாடம். சுந்தரா மெடிக்கல்ஸில் இருந்து எங்கள் ’டாப்’ என சொல்லப்படும் ஜாகையை மாற்றியது ரகு தான்.

“போய் ஒக்காந்ததும், டீ சொல்லு, டிபன் வாங்கிட்டு வான்னு வேல வாங்குறாய்ங்கடா அங்கன.. நம்ம என்ன இன்னும் சின்னப்பயலுகளா?” என்பது எனக்கும் ஏற்புடைய காரணமாய் இருந்தது ஒரு காரணம் எனில், ஃப்ராங்க்ளின் அண்ணனின் பேச்சு முழுமுதற் காரணம். மெடிக்கல்ஸில் ’மூத்த செட்’ அமர்ந்து கொண்டு எங்களை ’இடக்கை டீலிங்’ செய்வார்கள். ஆனால் ஃப்ராங்க்ளின் அண்ணன் வயது வித்தியாசம் ஏதுமின்றி ஒருபோலப் பேசுவார் என்றெல்லாம் பூசி மொழுகுகிறேன், ஆம்., உண்மையான ஒரே காரணம், கெளரி. சைக்கிள் கடை அமைந்த இடம், பஸ் ஸ்டாண்ட்.. பேருந்தில் இருந்து இறங்கிப் போகும் எவரும் கடையைக் கடந்தே ஆகவேண்டும். கெளரியும் என்னைத் தாண்டித்தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

ஃப்ராங்க்ளின் அண்ணன் எப்பேர்ப்பட்ட திறமையானவர் என்பதை மூன்றாம் நாளே உணரச் செய்துவிட்டார். நான் கெளரிக்காகத்தான் அங்கு டாப் அடிக்கிறேன் என்பதை ரகுவே கண்டுபிடித்திருக்கவில்லை. ஆனால் அண்ணன், “இன்னிக்கு சீக்கிரமே 6674 வந்துருச்சுயா, சும்மா ஓக்காந்து கெடக்குறதுன்னா ஒக்காரு, உன் ஆளு போயிருச்சு”

அந்த ’ஓக்காந்து கிடப்பது’ என்பதில் அவர் கொடுத்த ஓங்காரம்தான் அவரின் லந்துப் பேச்சு. பேருந்து வழித்தட எண்களைச் சொல்லமாட்டார். 6674, 8047 என பதிவெண்களை வைத்தே சொல்வார். பைக், கார் என எல்லாவற்றையும் பதிவெண்கள்தான் அவரின் அடையாளம்.
“ஒம் பேரு ஃப்ராங்க்ளின், கட பேரு ஓம் முருகாவா?” என எவரேனும் ஒரு புதிய ஆள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கேட்டுவிடுவார். அவரும் சளைக்காமல் சொல்வார்.

“பிரசவத்துல நானோ எங்க ஆத்தாளோ போய்ச் சேர்ந்துருவம்னு இருந்துச்சாம். ஆனா தெற்குவாசல் டாக்டர், ஃப்ராங்க்ளின் தான், தாய் வேற பிள்ள வேறயா பிரிச்சு ரெண்டு உசுரையும் காப்பாத்துனாராம். அதுனால எங்கப்பாரு, மதம் என்னத்த மதம்னு அவரு பேரையே வச்சுப்புட்டாராம்”

“இந்தாளு பொய் சொல்றாண்டா அப்து” என்று என் காதில் கிசுகிசுப்பான் ரகு.

புல்லட் எங்களுக்கு அருகில் வந்து, எங்களைக் கடந்து போனதும்தான் அய்யப்பன் மூக்கில் இருந்து மூச்சு வந்தது. ஆனால், முகத்தில் நிம்மதி வந்தது என்று எழுத முடியாதவண்ணம் முகத்தை வைத்திருந்தான்.

நான் அவனைப் பார்த்த விதம் அவனை ஏதாவது செய்திருக்க வேண்டும். சட்டென குரல் உயர்த்தி,

“மாப்ள, வண்டியக் குடு, டக்குபுக்குனு டேசனுக்கேப் போயி என்னா எவ்வடம்னு கேட்டு வந்துர்றேன்”

என்றான். நான் வண்டியைக் கொடுத்தாலும் போகமாட்டான் என்பதை அவன் உடல்மொழி உணர்த்தியது.

கினிங்கினிங்கினிங் என வெறுப்பேற்றுவது போல் சைக்கிள் பெல்லை அடித்துக் கொண்டே அருகில் வந்து நின்ற போஸ்ட் மேன், “ஏ, அய்யப்பா, ஒன்னய காலைல இருந்து ராவிக்கிட்டு இருக்கேன். மணியார்டர் வந்துருக்கு”

ஸ்பேனரை எடுத்து சைக்கிள் பார் கம்பியில் தட்டிய ஃப்ராங்க்ளின் அண்ணன், “அட, போஸ்ட்மேன்னு சொல்றதுக்குத்தான் போலிஸ்னு சொல்லிட்டேன் அய்யப்பா, ரெண்டும் ஒரே காக்கி ட்ரஸ்ஸா, லைட்டா கன்பிஸ் ஆகிட்டேன்”
அய்யப்பனுக்கு எப்படித் தன் உணர்வை வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. தன்னைக் கேலிப்பொருளாக்கிய ஃப்ராங்க்ளின் அண்ணன் மீது வந்த கோபத்தை விட, நல்ல வேளை போலிஸ் தேடவில்லை என்ற நிம்மதியே அவன் முகத்தில் தெரிந்தது. போஸ்ட்மேனோடு எதையோ பேசிக்கொண்டே போனவனைக் காட்டி, கண் அடித்துச் சிரித்தார். எனக்கும் சிரிப்பு வந்தது.
“இவென்லாம் ரெவுடின்னுக்கிட்டுத் திரியுறான், பகுமானமா” அண்ணன் மீண்டும் சொல்லிச் சிரித்தார்.
“பாவத்த, ஏன்ணே அவனப் போட்டு சத்தாய்க்குற, ஆனா போலிஸ்னதும் அரண்டு போய்ட்டான்”
ஃப்ராங்க்ளின் என்னை ஏற இறங்கப் பார்த்து, “ஒரு அடி, ஒரே ஒரு போலிஸ் அடிய வாங்குனா அப்புறம் ஆயுசுக்கும் மறக்க முடியாது” சொல்லிவிட்டு மல்லாந்து கிடந்த சைக்கிளை திருப்பி, நிறுத்தினார்.

கீழவாசல் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அங்கிருந்து பஸ் ஏறிய அரை மணி நேரத்தில் மதுரையைச் சுற்றி இருக்கும் சப்-அர்பன் களில் ஒன்றான எங்கள் ஊருக்குள் சென்றுவிடும். இன்று எப்படியும் கேட்டுவிடுவது என முடிவெடித்து என் வண்டியை ஓம் முருகாவிலேயே போட்டுவிட்டு, பஸ்ஸில் வந்துவிட்டேன். அவள் வரும் நேரம் நெருங்கியதும் சற்று பதற்றம் கூடியது. ஆனால் இன்று எப்படியும் கேட்டுவிட வேண்டியதுதான்.

தோழியோடு பேசிக்கொண்டே வந்தவள், என்னைப் பார்த்ததும் ஆச்சர்யமாய்ப் புருவம் உயர்த்தினாள். அங்கு ஊரில் சைக்கிள் கடையில் நான் அமர்ந்திருப்பேன் என்று நினைத்திருந்திருப்பாள். ஒரு நொடிதான். பின், தோழியோடு பேசிக்கொண்டே என்னைக் கடந்து, சற்றுத் தள்ளி நின்று, பஸ் வருகிறதா என்று எட்டிப்பார்த்தாள்.

நான், சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அருகில் சென்று, ‘எக்ஸ்கியூஸ்மீ’ என்று சொல்ல எத்தனித்து, முடியாமல் மீண்டும் பழைய இடத்திற்கே வந்துவிட்டேன். நான் அருகில் சென்று திரும்பியதை அவள் சாதாரணமாகத்தான் பார்த்தாள், ஆனால் எனக்கு அது அசட்டையாகப் பார்த்தது போல் பட்டது. அந்தப் பார்வை என்னைச் சீண்டியது போலும் இருந்ததால் நேராகப் போய் கேட்டேன்.

“கெளரி, நல்லா இருக்கியா?”

“என்னாது?”

“நான் பேசுறது கேட்கலயா?”

“நான் என்னாதுன்னு கேட்டது எதுக்குன்னு புரியலயா?”

கெளரியிடம் எனக்குப் பிடித்தது அவளுடைய கண்கள்தான். அவள் கண்கள், பார்ப்பதைத் தவிர எல்லாமும் செய்யும்.

“புரியல”

“ப்ச், எங்கிட்ட எதுக்குப் பேசுறீங்கன்னு கேட்குறேன், பஸ்சு வர்ற நேரம், ஊர்க்காரங்க நிப்பாங்க, ப்ளிஸ், கெளம்புங்க”

“அப்ப, நீயே ஒரு நாளும் எடமும் சொல்லு, உங்கிட்ட பேசணும். வெறும் பேச்சு இல்ல, முக்கியமான விசயம்”

அவள் பதிலுக்குக் காத்திராமல் நான் நகர்ந்தேன். முன்பே என் மனதிற்குள் திட்டமிட்டபடி, வந்த ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி பெரியார் பஸ் ஸ்டாண்ட் போய்விட்டேன். வீட்டிற்குப் போகும் வரை, கெளரி நல்லா இருக்கியாவில் ஆரம்பித்து கெளம்புங்க வரையிலான வார்த்தைகளை மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தேன். அவள் சொன்ன பதில்களில் இருந்து எனக்கான வார்த்தையை எப்படித் தேடியும் அடையமுடியவில்லை. ஆனால் அவள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் மொத்தமாகக் கலந்து ஒரு வீழ்படிவு போல என் மனதில் படிந்தது.

“ஒன்னய போலிஸ் தேடுச்சே ! என்னா விவரம்?”
ஃப்ராங்க்ளின் அண்ணன் கேட்டதும், சிரித்துக்கொண்டே அங்கு கிடந்த நாளிதழைக் கையில் எடுத்தேன்.

“ஏன்ணே காலங்காத்தால கட்டயக் குடுக்குற?, நான் என்ன அய்யப்பனா பம்முறதுக்கு”

“டேய், நெசமாடா, ஏண்டா யார் கிட்ட என்ன லந்து பண்றதுன்னு வரமொற இல்லாமலா இருக்கேன். ரெண்டு நாளுக்கு முன்னாடி கீழ வாசல்ல எதுவும் கிருத்துமம் பண்ணியா?”
புராணப் படங்களின் இடி இடித்த மாத்திரத்தில் காலுக்கடியில் பூமி பிளக்கும் நிகழ்வு, நிகழ்ந்தது எனக்கு.

“எதுவும் பண்..ணலயேண்ணே” நான் தட்டுத் தடுமாறிச் சொல்வதைப் பார்த்தவர், ஸ்டூலை எடுத்துப் போட்டு அமரச் சொன்னார். அந்தக் காலை வேளையில் தாகம் எடுத்தது. நாக்கு உலர்ந்து வார்த்தைகள் கடினப்பட்டு வெளிவந்தன.

“இப்ப என்ன பண்றதுண்ணே” தயங்கித் தயங்கி, அன்று கெளரியிடம் பேசியதைச் சொன்னேன்.
என் நிலையை உணர்ந்த ஃப்ராங்க்ளின் அண்ணன்,

“அட, என்னாடா, கொலையா பண்ணிப்புட்ட, செத்த பொறு, நம்மளே போய் கேட்ருவோம்”
அவர் சைக்கிள் கடையின் மேலே இருந்த பலகையில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தார்.

பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது உதறியதை கவனித்த ஃப்ராங்க்ளின் அண்ணன், என்னை லேசாக நெட்டி நகர்த்தி, தான் ஓட்டுவதாக உணர்த்தினார்.

ந்தவித பரபரப்புமின்றி அமைதியாக இருந்தது காவல் நிலையம். அதுவரையில்,எனக்கு அதுவும் ஒரு கட்டிடம் என்பதாக இருந்த ஒன்று. முகப்பில் சிறிய கோவில். பக்கவாட்டில் காவலர் குடியிருப்பு. பள்ளியில் படிக்கும்போது அங்கு கிரிக்கெட் விளையாடுவோம். பாபு, அருள்தாஸ் என போலிஸ் குவார்ட்டர்ஸ் நண்பர்கள். எங்கு எந்தப் புள்ளியில் இந்தப் பக்கம் வருவதை நிறுத்தினேன் என்பதையும், எப்போது அவர்களின் நட்பு தொலைந்தது என்பதையும் சரியாக நினைவில் கொண்டுவர இயலவில்லை. ஆனால் பாபுவோ அருள்தாஸோ தென்படுகின்றானா என்ற நப்பாசையில் என் கண்கள் அலைந்தன.

ஃப்ராங்க்ளின் அண்ணன் அமைதியாக மரப்பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் நான் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

“அட பதறாதடா, நான் பேசுறேன். நீ அமைதியா இரு.” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, புல்லட் சத்தம் தடதடவென அதிர்ந்து, அணைந்தது. எனக்குள் எல்லாமும் அடங்கி இருந்தது.

“எதுவும் பதில் சொல்லிறாத, ஒரு அடி வாங்கினா கூட, காலம் முழுக்க அந்த நெனப்பு ஒன்னய எதுவுமே பண்ணவிடாம அழிச்சுரும்”

போலிஸ் பூட்ஸ் கால் சத்தம் என திரைப்படங்களில் கண்டதை நேரில் செவிப்பறை கிழித்து உணர்த்தியது. அதுவும் மொசைக் தரையில் கிறீச் என ஆணியின் சத்தம் தேய்பட பற்கள் கூசின.
தன் அறைக்குள் போய் அமர்ந்தார். பத்து நிமிடங்கள் கான்ஸ்டபிள்கள் உள்ளே போவதும், வெளியில் போய் எதையோ பார்த்துவிட்டு வருவதுமாய், ஒருவித கலக்கம் ஏற்பட்டது. அதுதான் அவர்கள் அன்றாடம் என ஃப்ராங்க்ளின் அண்ணன் கிசுகிசுத்தார். அமைதியாக இருக்கச் சொன்னார்.

ஒரு மணி நேரம் கழித்து, கிட்டத்தட்ட நான் பயத்தில் மூர்ச்சையாகி இருந்த நேரம், முகமெல்லாம் திருநீற்றுப் பட்டைப் போட்ட பாபுவின் அப்பா, எங்களை உள்ளே அழைத்துப் போனார்.
நாங்கள் உள்ளே நுழைந்ததும் , “நீதானாடா அது, ஆமா, இவென் யாரு, ஒனக்கு பாடிகார்டா?, ஏட்டு, மொதோ அந்தாள வெளில தள்ளு”

என் மனதிற்குள் முழுமையாக தோன்றிவிட்டது. இன்றோடு முடிந்தோம். அன்னிச்சையாக ஃப்ராங்க்ளின் அண்ணனின் கையைப் பற்றினேன்.

“சார், சின்னப் பையன் சார், இப்பத்தான் வேலைக்கு சேர்ந்துருக்கான், என்ன விசயம்னு சொல்லுங்க, இனிமே நடக்காம பார்த்துக்குறேன்”

ஃப்ராங்க்ளின் அண்ணன் பேசப் பேச, இன்ஸ்பெக்ட்டர் எழுந்து, ஜன்னல் வழியாக வெளியே பார்த்துவிட்டு, அருகில் வந்தார்.

“இவென் பெரிய மன்மதன், இவனுக்கு வக்காலத்து வாங்க வந்துட்ட, ஒன்னயப் பார்த்தாலே அக்யுஸ்ட் மாதிரி இருக்கே, ஏட்டு, இந்தாளு என்ன பண்றான்”

எனக்குள் ஏதோ ஓர் உணர்வு. ஒரு வேதிமாற்றம். ஃப்ராங்க்ளின் அண்ணனை இவ்வளவு கேவலமாகப் பேசியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. போகவும், நான் போலிஸ் விசாரிக்கும் அளவிற்கு கெளரியிடம் எதுவும் பேசவில்லையே என்ற எண்ணம் எல்லாம் சேர்த்து, சற்று சத்தமாக வெளிப்பட்டது.

“சார், அப்பிடி என்னா சார் பண்ணிட்டேன்? ஜஸ்ட், பேசணும்னு”

நான் எதிர்த்துப்பேசிக் கொண்டிருக்கும் போதே, விரல்களை மடக்கி, என் முகத்திற்கு நேராய் ஒரே குத்..து.. விட வந்தவரை ஃப்ராங்க்ளின் அண்ணன் தன் இரண்டு கைகளாலும் பிடித்து நிறுத்தி இருந்தார். என் மூக்கிற்கு அருகே, இன்ஸ்ட்பெக்ட்டரின் கையை ஃப்ராங்க்ளின் அண்ணன் பிடித்திருந்த காட்சியை மூளையும் மனமும் ஏற்கமுடியாமல் குழம்பித் தவித்தன. ஆனால், இதயம், எவ்வித குழப்பமும் இல்லாத தொழில்சுத்தமாக, தன் துடிப்பை ஒரு நொடி நிறுத்தியது.
அப்படியே ஃப்ராங்க்ளின் அண்ணனை இழுத்துக்கொண்டு உள்ளே இருக்கும் அறைக்குள் போனார் இன்ஸ்பெக்ட்டர். கூடவே ஏட்டும் ஓடினார். நான் நிலைகொள்ளாமல் அமர்ந்துவிட்டேன்.

கெளரி, இன்ஸ்பெக்ட்டர் கர்ணனின் சொந்தக்காரப் பெண் என்பதும், ஃப்ராங்க்ளின் அண்ணனின் வலது கை முறிவும் இடுப்பு எலும்பு முறிவும் அவள் எவ்வளவு நெருங்கிய சொந்தம் என்பதையும் உணர்த்தியது. ஸ்டேசனில் கிடத்தி வைக்கப்பட்ட திருட்டு சைக்கிள் ஸ்பேர்பாட்ஸ் சம்பந்தமான விசாரணையில் வார்த்தை முற்றி அடிவாங்கிவிட்டதாக எல்லோரிடம் சொன்ன ஃப்ராங்க்ளின் அண்ணன்,வேலைக்கு ஒரு ஆளைப் போட்டு, கடைக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். பின் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவதையே நிறுத்திக் கொண்டுவிட்டார். நான்கைந்து ஆண்டுகளாக வெளியே வருவதில்லை.எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் என் திருமணத்திற்குக் கூட வரவில்லை.

நான் அவர் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தவர், மலர்ந்து, “வாடா பாய், வா”

நுழைந்தேன்.

“நல்ல வேள, பொண்ணு பொறந்துருமோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்ணே”

“அட முட்டாப் பயலே, ஏதோ ஒரு பொண்ணு ஒன்னய திரும்பிப் பார்கலேண்டு பொண்ணுங்கள தப்பா பேசுறதா? போற காலத்துல ஆணு பொண்ணுலாம் ஒன்னுதாண்டா, என்னா நிய்யி இப்பிடி பேசுற, உன்னய நல்ல பைய்யன்னு நெனச்சேன், இப்பிடி முட்டாப்பய மாதிரி பேசுறயே பாய்”

கோவமாய்க் கத்திக்கொண்டே நான் கொடுத்த இனிப்பை வாங்க மறுத்தவரை இடை நிறுத்தி சொன்னேன்.

“அட, அது இல்லண்ணே, பொண்ணு பெறந்தா எப்பிடி ஃப்ராங்க்ளின்னு பேரு வப்ப?”

நிமிர்ந்தார்.

ஆம் என்பது போல் தலை ஆட்டினேன்.
*
காமதேனு –
2018.

தாக்கணங்கு

காதல் தோன்றிய காலம் முதல் இன்று வரை, ஒரு பெண் தன்னைக் காதலிக்கிறாளா என்பதை அறிய இருக்கும் ஒரே வழி, அவள் தெருமுனையைக் கடக்கும்போது  திரும்பிப் பார்க்கிறாளா என்பதுதானோ என்பதுபோல் நின்று கொண்டிருந்தோம் நானும் ரகுவும்.

ரகு எனக்கு முன்னர் நின்று, தூரத்தில் போய்க்கொண்டிருக்கும் அருணாவைப் பார்த்துக்கொண்டே என்னிடம், “திரும்பிப் பாத்தான்னா அதாண்டா” என்றான்.

அருணா, அவள் தந்தை, மூர்த்தி அண்ணன் ஆகிய மூவரும் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் பத்து அடிகள் வைத்தால் தெருவின் முனை. பார்ப்போம்.

எட்டு, ஏழு, ஆறு என அடிகள் குறைந்து கொண்டிருந்தன. இரண்டு அடிகள் இருக்கும்போது மூர்த்தி அண்ணன் திரும்பிப் பார்க்க நாங்கள் சட்டென வேறு பக்கம் திரும்பிவிட்டு, மீண்டும் பார்த்தோம். இன்னும் ஓர் அடிதான் இருக்கும். ரகுவை விட எனக்குத்தான் ஆர்வம் அதிகமாய் இருந்தது.

ம்ஹூம்.

திரும்பிப் பார்பதற்கான எவ்வித அறிகுறியும் அருணாவின் முதுகில் தென்படவில்லை.

ஒரு நொடியில் அந்தத் தெருமுனையில் சூன்யம் குடிகொண்டது போல் இருந்தது. ஒரு சலனமும் இல்லை.

ரகுவிடம் நான் “ஏண்டா சென்னைல இல்லாத ஆளா அவளுக்கு இங்க மதுரைல” என ஏதோ ஆறுதல் கூறுவதாக நினைத்துச் சொன்னேன். ரகு அதை ரசிக்கவில்லை என்பது அவனின் முகத்தில் தெரிந்தது.

“அப்பிடி சொல்லலடா, அங்கல்லாம் இந்த மாதிரிலாம் கிடையாதாம்டா”

இது இன்னும் அதிகமாக அவனைப் பாதித்தது போல் தெரிந்தது. “அட விட்றா, இவன் வேற” என்றான்.

அப்போது எங்கள் மீது படர்ந்து நீண்டது நிழல். என் உள்ளுணர்வு மிகச்சரியாக உணர்ந்தது.

அருணா தேவி நின்றிருந்தாள்.

“ரகு, நீயும் வர்றியா, டவுன்க்கு”

”இ..ல்ல, இவன் கூட ஒரு எடத்துக்கு” என என்னைக் கையைக் காட்டினான்.

“அதெல்லாம் ஒன்னும் பெரிய வேலை இல்ல, இவன் வருவான், போடா” என நான் ரகுவைத் தள்ளினேன்.

“நீங்க போங்க.. கைலிய மாத்திட்டு வர்றேன்”.

 “நான் வெயிட் பண்றேன் சீக்கிரம் வா” என சொல்லிவிட்டுப் போனாள்.

இம்முறை வெகு நிதானமாய் நின்று திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள். ரகு என்னைப் பார்த்தான். உலகின் அத்தனைக் குழப்பமும் அவன் பார்வையில் தென்பட்டது.

டந்த சில நாட்களாக, சரியாகச் சொல்லப்போனால், பொங்கலில் இருந்தே இப்படிப் பிடிமாடு போலத்தான் சுற்றுகிறான். பொதுவாக ரகு நண்பர்களின் காதலுக்கு உதவும் நண்பன். துணை மாப்பிள்ளை.  பிறருடைய காதலுக்கு அவன் கொடுக்கும் யோசனைகளையும் திட்டஙகளையும் கேட்டால், இந்த உலகிலேயே அதிவீரன் ரகுதான் என்பது போல் இருக்கும். இன்று அவனே நாயகன் என்றதும் பயந்து நடுஙகுகிறான். வியர்த்து வழிகிறான்.

 “பயமால்லாம் இல்ல மாப்ள. லைட்டா டரியலா இருக்கு”

பயம் என்ற சொல்லின் உச்சம் தான் டரியல் என்பது அவனுக்கும் தெரியும். குழப்பமாகப் புலம்புகிறான். எனக்கு இது புதுமையான அனுபவம். அல்லது முதல் முறை. ஆம். இத்தனை ஆண்டுகளில் ரகு எந்தப் பெண் மீதும் மையல் கொண்டதில்லை. கடக்கும் வரை பார்த்து, கடக்கும்போதே கடந்துவிடும் மேகம் போன்றவன். இன்று முதல் மழை. (இன்றிற்கு அடுத்தா,முதல்க்கு அடுத்தா என்பதைக் காலம் தான் தீர்மானிக்கும் என்பதால் காற்புள்ளியை இடவில்லை).

எல்லாம் மூர்த்தி அண்ணனால் வந்த வினை.

மூர்த்தி அண்ணன், பொங்கல் பண்டிகைக்காகத் தம் சொந்தக்கார் பாண்டியனில் வருவதாகவும் தனக்கு மிக முக்கியமான வேலை (என்ன வேலைன்னு எங்களுக்குத் தெரியாது பாரு, மாலதியக்காவக் கோட்டிங் குடுக்கத்தான-ரகு) இருப்பதாகவும் அதனால் என்னைப் போய் அழைத்து வந்துவிடும்படியும் சொன்னார். தெருவில் எங்களுக்கு இருக்கும் தலையாயப் பிரச்சனை என்னவெனில் இப்படி எந்த வீட்டினரவாது ஏதாவது வேலை சொல்வதுதான். தேங்காய்ச்சில் வாங்கிவரச் சொன்ன காலங்கள் இப்போது மேம்பட்டு இப்படி டவுனுக்குள் போய் வரும் பதவி உயர்வு வேலைகள்.

” வர்றவனுக்கு ஆட்டோ எடுத்து வரத் தெரியாதாமா? நம்ம ஊர்லதாண்டா இப்பிடிக் கூத்துல்லாம் நடக்கும். அதேமாதிரி வீட்டுக்கு வந்தவன் கிளம்புனா..போய் பஸ் ஏத்தி விட்டு வரச் சொல்றதுலாம் கொலக்குத்தம்டா”

சரி, நம் கதைக்கு வருவோம். ரகுவின் காதல் கதை.

என்னோடு இரயில் நிலையம் வந்தவன் வேண்டா வெறுப்பாக நின்று இருந்தான்.  நான் எஸ் நான்காவது பெட்டியின் முன்புறம் நின்று சற்றுக் குனிந்து ஒவ்வொரு சாளரமாகப் பார்த்து அதில் ஒருவர் சற்று ஏறக்குறைய மூர்த்தி அண்ணன் வீட்டுக்காரர்களின் சாமுத்திரிகாவில் இருப்பதைக் கவனித்து அவர் பெட்டிக்கு உள்ளே நகர நகர நான் நடைமேடையில் அவருக்கு ஈடுகொடுத்து நடந்து வாயிலை அடைந்தால், அங்கு, தன் நெற்றியில் புரளும் மயிர்கொற்றையை நளினமாக நகர்த்தி கையில் இருக்கும் பெரிய இழுபெட்டியை எப்படி இறக்குவது என்பதுபோல் பார்க்க, ரகு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அப்பெண்ணிடம் இருந்து வாங்கி இறக்கி வைத்தான். அப்பெண் ரகுவிடம் நன்றி நவில்ந்து கொண்டிருக்கும்போதே மூர்த்தியண்னின் சொந்தக்காரர் என நான் நினைத்தவர் அப்பெண்ணிடம் “இன்னொரு பெட்டி எங்க” என ஏதோ கேட்க, ரகு கண்களாலேயே இவர்கள்தான் அவர்களா என என்னிடம் ஏக்கம் கலந்து கேட்பதுபோல் பார்த்தான். தெரியவில்லையே என உதட்டைப் பிதுக்கினேன்.

ரகு உடனே அவரிடம் “மூர்த்தி அண்ணன் சொன்ன..” இல்ல.. கிருஷ்ணா” என்றதும்  நான்  கொஞ்சம் குழம்பி யோசித்தேன். ஆனால் ரகு உடனே, ஆமா சார், ஆமா சார் கிருஷ்ண மூர்த்தி தான் என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெட்டியின் கைப்பிடியைத் தன் பக்கம் சட்டென உரிமையாக மீண்டும் இழுத்துக்கொண்டான். அப்பெண் சிரித்து மீண்டும் முடியைப் பின்னிழுத்துப் புன்னகைத்தாள்.  

அதன்பிறகு மூர்த்தியண்ணனிடம் போய் ஏதாவது கேட்பது, அல்லது மூர்த்தி இருக்கிறாரா எனக் கேட்பது என்பதாக இரண்டு நாட்களில் அருணா தேவியிடம் தயங்கித் தயங்கி பேசத் துவங்கியவன், இதோ இன்று அவளே வந்து அவனை அழைத்துப் போகும் வரை வந்திருக்கிறான்.

வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்ட அன்னை, தன் கைக்குழந்தையின் உறக்கம் கலையக் காத்திருக்கும் நொடிகள் போல, ரகுவிற்காகக் காத்திருந்த அன்றைய மாலை எனக்கு வெகு நீண்டதாகத் தெரிந்தது. இரண்டு முறை மந்தைக்குச் சென்று சுற்றிவரும் பேருந்துகளை வேடிக்கை பார்த்துவிட்டு வந்திருந்தேன். சரி மகிழ்ச்சியாக இருக்கட்டும் என நினைத்து, இரவு உணவிற்கு அமரும்போது ரகுவின் சத்தம் வாசலில் கேட்டது. தட்டை ஓரமாக வைத்துவிட்டு வெளியேறினேன்.

“நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லடா. அட ஒண்ணுமே இல்ல. சும்மா என்னத்தயோ பேசிட்டு நம்ம சுப்ரீம்ல தோசத் திருவிழாவுல சாப்ட்டு வந்துட்டோம், நாளைக்குக் காலைல வைகை. ஊருக்குப் போறாங்களாம், மூர்த்தியே ஸ்டேஷனுக்குப் போறாப்ளயாம்”

அவனுக்கு அவனுடைய ஏமாற்றத்தைக் கூடச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

ஆற்றின் போக்கில் எதிர்படும் சுழல், சுழன்று இறங்குவது அத்துணை அழகாக காட்சி தரும். ஆனால் அதில் சிக்குண்டால் தான் மூச்சுத் திணறுவது புரியும். இத்தனை நாட்களாக என்னுடைய மற்றும் நண்பர்களுடைய காதல்களுக்கு உதவும்பொழுது அத்தனை சிரிப்போடு வலம் வருவான். அவனுக்கு அப்போது காதல் அழகாகத் தெரிந்தது போல. இப்போதுத் திணறுகிறான்.

“அய்யய்ய, இதுக்குத் தாண்டா நான்லாம் இந்த எழவெல்லாம் வேண்டாம்னு இருந்தேன். இதெல்லாம் ஒரு பொழப்பாடா.. எப்பப்பாரு அவ இந்நேரம் என்ன பண்ணுவா, எந்திருச்சுருப்பாளா பல் தேய்ப்பாளா, காப்பி குடிச்சாளா, என்னய நினைச்சுப்பாளா என்ன கலர் ட்ரெஸ் போட்ருப்பானு.. எந்நேரமும் இப்பிடியா யோசனைல சுத்தி சுத்தி வருவா, ச்சை.. இந்தா.. இப்பப்பாரு, காய்ஞ்ச புண்ணுல இருக்க பொக்கத் தட்டிவிட்ட மாதிரி நாளைக்கு ஊருக்குப் போறோம்னு அவ்ளோ சந்தோஷமாச் சொல்றாடாங்குறேன்”

ரகுவைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் சிரிப்பு வந்தது.

”ஒங்கள எல்லாம் கேலி பண்ண பாவந்தாண்டா மாப்ள..இப்பிடி..ஆனா ஒண்ணுடா, இந்த மாதிரி , ஒரு மாதிரி எப்பப்பாரு மனசெல்லாம் நெறஞ்ச அதே சமயம் அவ்ளோ வெறுமையா ஒரே நேரத்துல..இப்பிடில்லாம் ஆனதே இல்லடா.. ஏண்டா இதான அது?”

“எதுடா?”

நான் நினைத்தேப் பார்க்கவில்லை ரகுவும் மறுநாள் அந்த அதிகாலையில்  ‘எதேச்சையாக’ ரயில்நிலையம் போவான் என்று. என்னிடம் கூட சொல்லவில்லை. மூர்த்தி அண்ணனோடு வண்டியில் வந்து இறங்கினான்.

“போய்ப் பார்த்து சொல்லிரலாம்னுதாண்டாப் போனேன். பார்க்கிங்லயே மூர்த்தியைப் பார்த்ததும் பயமா இருந்துச்சுடா. அதான் பம்மிட்டேன்”

 ”எங்கிட்டக் கூடவாடா சொல்லாமப் போவ, காலைல இருந்து தேடுனேன்”

“எதுக்கு?”

எங்களுக்குப் பின்னால் இருந்து குரல் வந்தது.

“நாந்தான் நீங்க எங்க இருக்கீங்கனு கேட்க சொன்னேன்.”

நான் சிரித்தேன். ரகு வியப்பாகப் பார்த்தான் அருணாவை.

நான் ரகுவிடம் “நேத்து அதான இதுனு கேட்டியே, இதான அது?” என்று கிசுகிசுத்தேன். மண்ண அள்ளிப் போட்றாதடா என்பதுபோல் பார்த்தான்.

ரகுவிடம் நான் நேற்று இரவு சொன்னது நினைவிற்கு வந்தது. யாரிடம் பேசும் போது ஓர் உள்ளீடற்ற குழல் போல், ஒரு பறவையின் எடையைப் போல் நம்மை இலகுவாக உணர்கிறோமோ அவர்களோடு இருக்க எந்தச் சமரசமும் செய்து கொள்ளலாம், அதன் பெயர் காதல் என்றேன்.

அதையே வெகு எளிதாக இப்படிச் சொன்னாள்,அருணா.

 ”ரகு, உன் கிட்டப் பேசினா ரொம்ப லேசா ஃபீல் ஆகுது. அதான் நான் போகல.”

ரகு என்னைப் பார்த்தான். உலகின் அத்தனை மகிழ்ச்சியையும் ஒருசேரக் குவித்து வைத்தது போல் இருந்தது  அவன் பார்வை. 

*

குமுதம்- காதலர் தினச் சிறப்பிதழ்

விழுங்கிய கவளம்

காட்ல எரியுரப்ப வீட்ல எரியக்கூடாதப்பா”

வெண்ணைத்தாழியில் காப்பியை நிரப்பி எடுத்து வந்திருந்தார் சேது. அந்த இடத்தில் மிச்சம் ஏதுமன்றி துக்கத்தின் மிடறுகள் விழுங்கப்பட்டிருந்தன. யாருக்கும் உடலில் திராணி இல்லை என்பது போல் அமர்ந்திருந்தார்கள். ஈரம் இன்னும் திட்டு வைக்க ஆரம்பித்திருக்கவில்லை. தரையெங்கும் சொதசொதப்பு. இதுவரையில் இங்கே இவ்வளவு ஈக்களைப் பார்த்ததில்லை.  நடக்க நடக்க கால்களில் அப்பின. பார்வதியம்மாள் இனி இந்த வீட்டில் இல்லை என்பதற்கான ஈரம் சொட்டச் சொட்ட நின்றிருந்தார்கள் பார்வதியம்மாளின் மகள்கள் இருவரும். பார்வதியம்மாளின் மருமகள், ரேணுகா,‘முறிச்சென்று’ காய்ந்த புடவையில், தலையில் ஈரத்துண்டை சுற்றி இருந்தாள்.  நேராக சேதுவிடம் வந்து ஒரு டம்ளைரை நீட்டியவள், வாங்கிக்கொண்டு மாடிப்படியில் அமர்ந்து நிதானமாகப் பருகத் துவங்கினாள். ஒருவித நிம்மதி அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது போல் இருந்தது.

இதே மாடிப்படியில்தான் சென்ற வாரம் அவ்வளவு பெரிய சண்டை நடந்திருந்தது. அதை சண்டை என்று சொல்லிவிடமுடியாது. ரேணுகாவின் கணவன் வெங்குடு அவளை அடித்த நிகழ்வு என்று சொல்வதே சரி.  ஏணி வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை என அப்பா சத்தம் போட்டுக்கொண்டிருக்க, வாங்கிப்போகலாம் என வந்தவன், ரேணுகாவின் நிலையை பார்த்து அதிர்ச்சி விலகாமல் அவள் கணவனைப் பிடித்து இழுத்து விலக்குவதற்குள் பெரும்பாடாகியிருந்தது.

“ஏண்ணே, என்னணே இது ச்செய், இப்பிடி கையெல்லாம் ஓங்கிட்டு, நீ உள்ள போக்கா மொதோ”

நான் அவ்வளவு சத்தமாகச் சொல்லியும் அத்தனை அழுத்தமாக நின்றிருந்தாள் அங்கேயே. அதுதான் வெங்குடுவை மேலும் மேலும் சீண்டியது போல் இருந்தது. என் பிடியை உதறிக் கொண்டு எகிறி எகிறிக் கத்தினார். நான் பிடியை இறுக்கி வெளியே இழுத்துப்போனேன்.  டீக்கடையில் வெங்குடு அண்ணன் காரணத்தைச் சொல்லும்வரையில் அவர் மீது ஒருவித ‘அட இவ்வளவுதானா நீயும்’ என்ற மனநிலையில் இருந்தேன். அவர் சொன்னதும் கொஞ்சமாக அவரின் கோபத்தை உணர முடிந்தது. ’வெளியே கூட்டிக்கொண்டு போ, எங்காவது ஓட்டலில் போய் சாப்பிடலாம், ஒரு பகல் பொழுதில் வெளியில் சுற்றலாம்’என இந்த இரண்டு வாரங்களாக நச்சரித்தார்களாம். அம்மாவை இப்படிப் படுக்கையில் வைத்துக்கொண்டு என்ன ஓட்டல் வேண்டிக்கிடக்கிறது இவளுக்கு, தன் மனநிலையைப் பற்றி கொஞ்சமாவது யோசிக்கிறாளா’ எனப் புலம்பினார். பாவமாக இருந்தது. கடந்த மூன்று நான்கு மாதங்களாக பார்வதியம்மாளுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரி இல்லைதான். ஆனால் இறந்துவிடுவார் எனும் அளவிற்கு எல்லாம் ஒன்று இல்லை என்பதுபோல் வழக்கமான இயல்போடுதான் தெருவில் நடமாடுவதும் அக்கம் பக்கத்தினரிடம் அன்றாடம் பேசுவதுமாக இருந்தார். கடந்த சில வாரங்களாகப் படுத்தப் படுக்கை, நேற்று இரவோடு அவரின் சகாப்தம் முடிந்தது.

சிறுவயதிலேயே கணவனை இழந்து, இரண்டு மகள்கள் ஒரு மகன் என அனைவரையும் இழுத்துப்பிடித்துக் கரை சேர்த்தவர் என பார்வதியம்மாளைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள்.

நானும் வெங்குடு அண்ணனும் செஸ் ஆடுவதன் மூலம் சற்று நெருக்கமாக இருந்தோம். பெரும்பாலும் அவர் வீட்டுத் திண்ணையில் தான் அமர்ந்து ஆடுவோம்.  ஒருசில ஆட்டம் எல்லாம் பிற்பகலில் ஆரம்பித்து மாலை வரை நீளும். நான் ஏதேனும் சிறந்த நகர்த்தைச் செய்துவிட்டால் சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு மிகச்சன்னமாக ‘ஓஹோ’ என்பார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். சொல்லப்போனால், செஸ் பயிற்சி மைய்யம் வைத்து அதையே முழுநேரத்தொழிலாக நடத்த வேண்டும் என்றுதான் விரும்பினார். என்ன காரணத்தினாலோ அதை இன்னும் செய்யாமல் இருக்கிறார். வார இறுதி நாட்களில் ’கோல்ச்சா காம்ப்ளக்ஸ்’ அருகில் இருக்கும் வீடுகளில் சென்று வகுப்பெடுக்கிறார். மற்றபடி அவர் அழுத்துக்கொள்வது போல “இந்த மருதைல எவெண்டா இதெல்லாம் பெருசா பாக்குறான்” என்பதுபோல் தான் செஸ் ஆட்டத்திற்கான வரவேற்பு இருந்தது. நானும் அப்படித்தான் கிரிக்கெட்டே கதி என்று இருந்தவன் தான். எப்போது எப்படி வெங்குடு அண்ணனோடு சேர்ந்து இந்த ஆட்டத்தைப் பழகி இப்படி அவருக்கு எதிராய் அமர்ந்து ஆடும் அளவு கைதேர்ந்தேன் என்பது புரியவில்லை. ஒருவேளை அவர் முதன்முதல் சொல்லிக்கொடுத்த அந்த நான்கே நகர்த்தலில் எதிராளியை வீழ்த்தும் வித்தையில் கவரப்பட்டு அதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, ராணிக்கு முன்னர் இருக்கும் சிப்பாய், பின்னர் ராணி, மந்திரி இவற்றை முன் கொணர்ந்து எதிரியுடைய ராஜாவின் பக்கவாட்டில் இருக்கும் சிப்பாயை வெட்டி ராணியை ராஜாவுக்கு அவ்வளவு அருகில் நிற்க வைத்து, ராஜா அந்த ராணியை எதுவும் செய்ய இயலாதவாறு பின்புலமாக மந்திரி ஒரே நேர்கோட்டில் நிற்க, ஆட்டம் முடிந்தது.  இதை செயல்படுத்தி எதிராளியை நான்கே நகர்த்தலில் வீழ்ந்தும்போதெல்லாம் பேருவகை கொண்டது மனம். ஒருவேளை எதிராளி இந்த வியூகத்தை ஆரம்பித்தால் அதை எப்படித்தடுப்பது என்பதையும் வெங்குடு அண்ணன் சொல்லிக்கொடுக்க, அந்த ஆட்டம் பிடிபட்டது. பிடிபடபிடிபட மிகப் பிடித்துப்போனது. அப்பா சொல்லும் ‘ஆட்டத்திற்கு அடிமையாவிட்டேன்’ சொற்பதத்தின் மீது நம்பிக்கை இல்லை. என்றாவது ஒருநாள் அமர்ந்து ஆடுவது. எதிராளியின் பலமும் ஆட்டத்திறனும் பொறுத்து அன்றை நாள் முழுக்க அமர்வது என்பதை அடிமையாகிவிட்டோம் என போதைப் பொருட்களுக்குச் சொல்வது போல் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஒரு நீண்ட நெடும் ஆட்டத்தை வென்று நிறைவுசெய்யும்பொழுதில் ஏற்படும் போதை அலாதியானதுதான். ஆழ்ந்த உறக்கத்தில் சிப்பாய் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி ராணியாக மாறும் படிமம் பலமுறை வந்துள்ளது. இன்னமும் வரக்கூடும்.

 மும்முரமன செஸ் ஆட்டத்தின்போது திண்பதற்கு முறுக்கோ அதிரசமோ ஒரு தட்டில் வைத்து எங்களுடைய ஆட்டத்தைப் பாதித்து விடாதவாறு அருகில் வைத்துவிட்டு மாடிப்படியில் அமர்ந்து கொள்வார்,பார்வதியம்மாள்.

காய் நகர்த்திவிட்டு அவருடைய நகர்த்தலுக்குக் காத்திருக்கும் நொடிகளை நன்கு அறிந்தவர் போல், “ஏண்டா ஒங்கம்மாக்கு இப்ப பரவால்லியா” போன்ற தகவல்களை வாங்கிக்கொள்வார்.

“இனிமே என்ன இருந்து என்ன ஆகப்போகுது.  விழுங்குன கவளத்துக்கு ருசி ஏது?”

எவ்வளவு உண்மை, இல்லையா!. ஆம் ஒன்று முடிந்துபோனபிறகு அதைப்பற்றிப் பேசி அங்கலாய்க்க ஒன்றுமே இல்லை. விழுங்கிவிட்ட பிறகு ருசி ஏதுமற்ற பண்டமாக ஆகிவிடுவது போலத்தான், கடந்துவிட்ட பிறகு அதன் நிலை.

ரேணுகா காப்பியைக் குடித்து விட்டு மாடிப்படியில் இருந்து எழுந்து

உள்ளே சென்றுவிட, நான் அதற்காகவேக் காத்திருந்தது போல் அங்கு போய் அமர்ந்துகொண்டேன். சாவிற்கு வந்தவர்களில் பேர்பாதி ஆட்கள் சுடுகாட்டிற்குப் போயிருந்தார்கள்.  இங்கேயே வாய்க்கரிசி போட்டவர்கள், கிளம்பிவிட்டார்கள். நெருங்கிய உறவினர்கள் என சிலரின் செருப்புகள் மட்டும் கிடந்தன படிக்கு அருகே.

உள்ளே இருந்து வெறும் பாத்திரத்தோடு வந்தார் சேது.

“அட நீ என்னப்பா இங்கன ஒக்காந்துட்ட, ஒனக்குக் குடுக்கலயே”

“அய்யய்ய”

சட்டென யோசிக்காமல் வந்துவிட்டது அந்த சொல். சாவு வீட்டில் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டும் என நினைக்கும்போதே எனக்குள் இருந்து வந்துவிட்ட உணர்வுதான் அந்த சொல். சேது ஏற இறங்கப் பார்த்தார். சமாளிக்கும் விதமாக,

“இன்னும் எம்புட்டு நேரம் ஆகும்ண்ணே”

மணிக்கட்டைப் பார்த்தார். “அம்புட்டுத்தான் வர்ற நேரந்தான். ”

வெளியே வாளியில் தண்ணீரை வைத்திருந்தார்கள். சுடுகாட்டில் இருந்து வெங்குடு வந்தவுடன் பார்த்துப் பேசிவிட்டுக் கிளம்பவேண்டும் என்று அமர்ந்திருந்தேன்.

“போடா போய் குளிச்சிட்டு சாப்புடு, நைட்டுல இருந்து இங்கதான் சுத்திட்டு இருக்க”

ரேணுகா அக்காவின் குரலில் ஒரு தீர்க்கம் தென்பட்டது.

“ல்ல, அண்ணன் வந்துட்டா பார்த்துட்டுப் போலாம்னு”

“வந்தா இங்கதான இருப்பாரு, அப்பறம் பாத்துக்கலாம், போ, உள்ள என்னமோ பேசிட்டு இருக்காங்க நேரா வந்து உங்கிட்டத்தான் வேலைய சொல்வாங்க, சத்தமில்லாமக் கிளம்பு”

சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.  இதுவரை என்னிடம் இப்படி எல்லாம் ரேணுகா அக்கா பேசியதில்லை. அமர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது வெங்குடு அண்ணனிடம் ஏதேனும் கேட்பார், அவர் ஆட்டத்தின் போக்கில் எதையேனும் சொல்லி கேள்விகளை வெட்டி முறிப்பார். என்னைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டுப் போவார். அந்த சிரிப்பில் கொஞ்சம் வெறுப்பும் சங்கடமும் கலந்தே இருக்கும் என்பதால் நானும் பெரிதாக அவரிடம் எதுவும் பேசுவதில்லை.

ஏனோ சம்பந்தமே இல்லாமல் “இனி செஸ் எல்லாம் முன்பு போல் இங்கு அமர்ந்து ஆட முடியாது” எனத்தோன்றியது.

சரி எழுந்து போய்விடுவோம் எனும் குழப்பத்தில் எழ நல்லவேளையாக வெங்குடுவும் இன்னும் சிலரும் வந்து சேர்ந்தார்கள். வெங்குடுவின் முகமே மாறிப்போயிருந்தது. அவர் வந்தபிறகு என்னவெல்லாமோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவரும் சரி நானும் சரி ஒரு சிறு பார்வை பார்த்துகொண்டதோடு சரி, நிறைவாகிப் போனது.

கருமாதி, படையல் என ஒருமாதிரி ஓடியது வெங்குடுவின் வீடு. அந்த துக்க வீட்டின் வாசம் எனக்கு ஒவ்வாமையானது என்பதை இரண்டாம் நாளில் இனம்கண்டு, போவதைத் தவிர்த்தேன்.

                                 ரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டிருந்தது செஸ் ஆடி. கூடத்தில் அமர்ந்து தனியாக ஆடிக்கொண்டிருந்தேன். வெங்குடு அண்ணன் கொடுத்திருந்த  ’கேரி காஸ்ப்ரோவ்’ ஆட்டங்களில் ஒன்றைத் தனியாக ஆடிக்கொண்டிருந்தேன். “நாஞ்சொல்லல பைத்தியம்தான் ஆவான்னு” என அப்பா சொல்லிகொண்டேக் கடந்தார். வெங்குடு அண்ணனிடம் தோற்ற ஆட்டம் ஒன்றின் நுட்பம் இந்த காஸ்ப்ரோம் நகர்த்தலில் கண்டு, இன்னொரு முறை ஆடினால் எளிதாக வென்று விடலாம் என நினைத்துகொண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ரேணுகா அக்காவைத் தவிர்க்கும் பொருட்டு அங்கு போவதே இல்லை. சரி நாந்தான் போகவில்லை, அவர் ஒருமுறை கூட அழைக்கவில்லை, தேடி வரவில்லையே எனவும் தோன்றியது. அம்மாவை இழப்பது துக்கம்தான். அதற்காக இனி அவ்வளவுதானா எல்லாமே எனத் தோன்றியது. சதுரங்கக் காய்களை மெதுவாக குவித்து பெட்டியில் போட்டவன் அப்படியே அம்மாவிடம் சென்றேன்.

”சாப்ட்டியாடா”

“எப்பப்பாரு சாப்பாடுதானாம்மா, இன்னைக்கு ஒரு கேம் பழகிருக்கேன், வெங்குடுவ அசால்ட்டா ஜெயிச்சிருவேன்”

“பார்வதி பொண்ணுங்கல்லாம் போயாச்சா, ரேணுகா ஆளையேக் காணமே இந்தப்பக்கம்”

“தெர்லம்மா, அந்த அக்காவப் போய்க்கிட்டு”

அம்மா என்னை ஒரு முறை பார்த்துச் சிரித்தாள். “பாவம்டா ரத்தசொந்தம் இல்லாத ஒருத்தரோட பீமூத்தரம் அள்ளிப்போடுறதுன்னா என்னான்னு நெனச்ச, நாளைக்கு ஒனக்கு ஒருத்தி வந்து அவங்க அப்பாவுக்கு இப்பிடின்னா நீ அள்ளுவியா”

அம்மா சொல்லும்போதே குமட்டிக்கொண்டு வந்தது. அம்மா என்று கத்தினேன். குளித்துவிட்டு சாப்பிடுவதாகத்தான் இருந்தேன். ஏனோ ஒருவித உமட்டலும் கசகசப்பு சேர்ந்துகொண்டது. வெளியே எங்காவது போய்விட்டு வரவேண்டும் போல் இருந்தது.

என்றைக்கும் இல்லாமல் வெய்யில் மிகக் கடுமையாக இருந்த உணர்வு. பாதித் தெருவிலேயே மீண்டும் வீட்டிற்குப் போய் குளித்துவிடலாம் எனத் தோன்றியது. வெங்குடு அண்ணனின் குரல் கேட்டது.  கையில் வாழை இலைக் கட்டை சுருட்டி வைத்திருந்தவர்,  “வாடா சாப்டலாம்”.

அம்மாவிடம் காட்டிய அதே உணர்வை, உமட்டலை, அய்யய்ய என்ற சொல்லை எல்லாம் கவனமாகத் தவிர்த்து, “இப்பத்தான்ணே சாப்ட்டேன்” என்றதும், “சரி வா, எனக்கு லேட் ஆகும் ஒரு ஆட்டத்தப் போடுவம் அதுவர”

சட்டென உற்சாகமானேன். கேரி காஷ்ப்ரொவ் ஆட்டத்தைத் தட்ட வேண்டும்.

வெங்குடு அண்ணனின் முகம் இப்போது கொஞ்சம் பழைய முகம் போல் ஆகி இருந்ததைக் கவனித்தேன்.

திண்ணையின் ஓரத்தில் இருந்த கூண்டில் இருந்து பலகையும் செஸ் காய்கள் இருந்த அட்டைப்பெட்டியையும் எடுத்து அடுக்கத் துவங்கியவர் இலைக்கட்டை என்னிடம் கொடுத்து உள்ளே கொடுக்கச் சொன்னார்.

தயக்காமக நுழைந்தேன். கூடத்தில் எப்போதும் பார்வதி அம்மாள் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருப்பார். அவருடைய நாற்காலி தட்டுப்படவில்லை. சங்கடம் செய்தது. உள்ளே நுழைந்தேன். அங்கே டிவிக்கு கொஞ்சம் முன்னால் அந்த நாற்காலி போடப்பட்டு அதில் ரேணுகா அமர்ந்து டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் இலைக்கட்டை என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற அந்த ஒருநொடியில் கிட்டத்தட்ட நூறு சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தாள். வினோதமாகப் பட்டது. ஆள் நிற்கும் நிழலாடியதும் திரும்பியவள், மலர்ந்து சிரித்தாள்.

“வாடா வா, இப்பத்தான் வழி தெரிஞ்சுச்சோ, என கையை நீட்டி இலைக்கட்டைக் கேட்டாள், அமர்ந்திருந்த வாக்கிலேயே. நான் அருகில் சென்று கொடுத்ததும் அதை வாங்கி நாற்காலிக்கு அந்தப்பக்கமாகப் போட்டாள். போடும்பொழுது கீழே நேரடியாக விழும் அதிர்வைத் தடுக்கும் பொருட்டு தன் கணுக்கால் பகுதியை இலை விழும் இடத்தில் வைத்து எடுத்தாள். நான் அவளையும் டிவியையும் பார்க்க,

“இந்த ரிமோட்டக் கைல வாங்கி ஒரு சேனல மாத்துறதுக்குள்ள அடேங்கப்பா என்னல்லாம் பேச்சு வாங்கணும் தெரியுமா” இடது உள்ளங்கையால் ஒரு தட்டுத் தட்டிகொண்டு மீண்டும் மாற்றினாள். கால்மேல் கால் போட்டு டிவியை நோக்கி ரிமோட்டை நீட்டி மாற்றும் விதம் கட்டளைகள் பிறப்பிப்பது போல் இருந்தது.

“நீ இன்னைக்கு சாப்ட்டுத்தான் போகணும்டா”

“சரிக்கா”

ஆட்டத்திற்குத் தயாராய் காய்கள் அடுக்கப்பட்டு இருந்தன.  காலையில் பயிற்சி செய்த நகர்த்தல்களை நான் ஆட ஆட என்னை நிமிர்ந்து பார்த்தவர், ’பார்றா’ என்று மகிழ்ந்தார். அவர் கண்களில் கவனம் பெறவிடாமல் ஓரத்தில் இருந்த சிப்பாய் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து ராணி ஆகும் நோக்கில் முன்னேறிக் கொண்டிருந்தது.

உள்ளே இருந்து வந்த குழம்பு கொதிக்கும் வாசம் பசியைக் கிளறியது.

*

கட்டக்கால் : தவளைக்கல் அதிர்வுகள்

10 January 2025 at 05:41

ரு நல்ல சிறுகதையை எழுதி முடித்தப்பிறகு மனதிற்குள் எழும் உணர்வு என்பது எழுதும் எவருக்கும் மிக மிக அலாதியான ஒன்று. ஆம். ஆதி இல்லாத, முடிவிலி மகிழ்வுணர்வது. அப்படியான ஒரு சிறுகதை, ‘தொக்கம்’. தொகுப்பின் முதல் கதை. சதிஷ் கிராவின் முதல் சிறுகதையும் இதுதான் என்று நினைக்கிறேன். அந்த உந்துதல் கொடுத்த நம்பிக்கையே இந்தத் தொகுப்பு எனலாம்.

வெவ்வேறு காரணங்களால், தொடர்புகளால் பேசப்படும் அல்லது பேசுபொருளாக ஆக்கப்படும் தொகுப்புகளைக் காலம் அவ்வந்த பொழுதுகளோட கழித்துவிடும். மாறாக, முதல் தொகுப்பு நன்றாக அமைந்து, கவனத்தைப் பெற்றுத் தருவது என்பது மிக அரிதாக நிகழ்வது. அவை தம்மைத்தாமே தகவமைத்துக் கொள்ளும். அப்படியான, கவனத்தை ஈர்த்த தொகுப்பு, சதிஷ் கிராவின் முதல் தொகுப்பாக வந்திருக்கும் இந்த ‘கட்டக்கால்’.

ஏழு வெவ்வேறு சிறுகதைக் களங்கள். ஒரே தாளலயக் கட்டமைப்பு என வந்திருக்கும் தொகுப்பு. சால்ட் பதிப்பகம் அதன் நேர்த்தியான வடிவமைப்பில் இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறது.

சடங்குகளை நகைப்போடு சாடுதல், மூடநம்பிக்கைகளை உதறுதல் போன்றவை நிகழ்ந்துகொள்ளும் கதைகளாக அதன்போக்கில் அமைந்தது பிடித்திருந்தது. ஏனெனில் பெரும்பாலும் இப்படியான கதைகளைச் செய்துவிடுவர் சிலர். அப்படிச் ‘செய்தல்’ என்பது கலையாக நிற்காது. இத்தொகுப்பில் வந்த கதைகள் எல்லாமும் இயல்பில் ஆகி வந்தவையே. ‘மோட்சம்’, ’புனர்வாழ்வு’ ஆகியவற்றை சிலகாலங்கள் கழித்து இதே சதிஷ் கிரா இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக எழுதக்கூடும்.

துரை வட்டாரத்தில தொக்கம் எடுப்பது என்பது ‘வயிற்றில் அடைபட்டுக் குடலோடு ஒட்டிக்கொண்ட திண்பண்டத்தைத் தட்டித் தட்டி எடுத்துவிடுவது ‘ எனும் நிகழ்விற்கு சொல்லும் பெயர். என்னுடைய ’உயிருதிர் காலம்’ சிறுகதையில் ஒரு வரியில் இது கடக்கும் என்று நினைவு. ’கட்டக்கால்’ தொகுப்பின் முதல்கதை ‘தொக்கம்’ வேறு ஒன்றை, வேறு பொருளை முன் நிறுத்துகிறது. எழுத்தாளர் எடுத்துக்கொண்டத் தன் ஊரின் களம் என்பதில் இந்தத் தொக்கம் சொல் பயன்பாடாக வரும் நிகழ்வு என்பது ‘வசிய மருந்து’ வைக்கப்பட்ட ஒருவனுக்கு அதை எடுத்து விடுவதான பொருளில் வருகிறது. இப்படி ஒவ்வொரு இடத்திற்கும், களத்திற்குமான வட்டாரமொழி என்பது வெவ்வேறு கோணங்களில், பொருட்களில் கையாளப்படுவதும், குறிப்பாக நாற்பது ஐம்பது மைல் தொலைவுகளுக்கு இடையிலேயே இம்மாதிரியான பாரிய வேறுபாடுகளைக் கொண்டு இயங்கும் சொற்களாக இருக்கின்றன. இப்படியான கதைகளால் மட்டுமே வெவ்வேறு மனிதர்களோடு பயணப்பட்டு சிறு வியப்பையும் வெவ்வேறு வட்டார வாழ்வியலையும் நமக்கு அரியத் தருகின்றன. அதனால்தான் நல்ல சிறுகதைகள் உலகம் முழுக்க கொண்டாடப்படுகின்றன. உலகின் எம் மூலையிலோ அமர்ந்து எவ்வாழ்வையோ எழுதிய ‘ஆண்டன் செக்காவை’ இந்த மூலையில், இந்தியாவில், தமிழகத்தில் என இண்டு இடுக்கில் வசிக்கும் இலக்கிய மனங்கள் வாசிப்பில் வைத்துக் கொண்டாடுகின்றன. வாழ்வியல் ஒப்பீடுகள், நிகழ்வுகளின் நிமித்தம் எழும் தரிசனங்கள் ஒருபோதும் சிறுகதை வாசிப்பாளர்களை சலிப்படையச் செய்வதில்லை. ’கட்டக்கால்’ தொகுப்பின் எக்கதையும் சலிப்படையச் செய்யவில்லை.

தொகுப்பின் முதல் மற்றும் இறுதிக் கதைகள் ஒருவித கச்சிதத்தன்மையோடு அமைந்து கொண்டுவிட்டபடியால், தொகுப்பைப் படித்து முடித்தவுடன் ஒரு நிறைவு ஏற்படுகிறது. பல்வேறு படிமங்கள், நிகழ்வுகள், குறியீடுகள் என மனதில் எழுந்து மடிகின்றன. மீண்டும் எழுகின்றன. 

ஒரு வெய்யில் நேரத்து மதியப்பொழுதில் சலனமற்று இருக்கும் குளத்தின் மீது வெகு நேர்த்தியாக வீசப்படும் தவளைக் கல், தத்தித்தாவி ஏற்படுத்தும் அரைவட்டதிர்வுகள் அடங்க சற்று நேரம் பிடிக்கும். ‘கட்டக்கால்’ தொகுப்பும் அப்படியான ஒன்று. 

திகைந்து வந்திருக்கிறது முதல் தொகுப்பு, வாழ்த்துகள் எழுத்தாளர், சதிஷ் கிரா. 

சால்ட் பதிப்பகம்.

ரூ.170/

மொழியின் பொலிவு : ‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’.

7 January 2025 at 06:15

யாயும் ஞாயும்’ என குறுந்தொகையில் ஆரம்பித்து, ‘நற்றாய் கூற்றுகள் வழி தாய்மையின் பதற்றங்கள், தவிப்புகள் கடந்து, அம்மா என்றழைக்காத பாடல் திரையிசை வரை ‘அம்மாக்களால்’ ஆனது இலக்கிய மற்றும் அன்றாடமும் ஆன உலகம். தீரத்தீர அம்மாவையும் தாய்மையையும் தொடர்ந்து புனிதப்படுத்தி,வியந்தோதியபிறகும், அவளின் அன்பைப்போலவே அவ்வுணர்வு உலகம் உயிர்த்திருக்கும்வரை உயிர்ப்புடன் தான் இருக்கும். அப்படியான ஓர் உயிர்ப்பு, இத்தொகுப்பு, ‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’.

இதுவரையிலான நாம் பார்த்த அம்மா, மென்மையன்புக்கவிதைகளை, அல்ல இப்படியும் என்று தலைகீழாக்கிக் கொடுத்திருக்கிறார் கவிஞர் கதிர்பாரதி. அதனால்தான் முதலில் 60 என இறுதிக் கவிதையில் இருந்து நகர்கின்றன, பக்கங்களும் படிமங்களும் நம் எண்ணங்களும். சர்ப்பத் தீண்டலில் சரசரவென கீழிறங்குவது போல் அறுபதிலிருந்து ஒன்றுக்கும் பின்னர் ஏணி ஏற்றம் போல் ஒன்றிலிருந்து அறுபதுக்குமாக இத்தொகுப்பு ஓரு பரமபத ஆட்டம்.

 சமீபத்திய நிகழ்வொன்றில் எழுத்தாளார் பா.வெ சொன்னது “கவிதைகள் நிகழ்வுகளில் அல்லாமல் நிச்சலனத்தில் இருந்து எழுந்தவையாக இருந்தன”. மிகப்பிரமாதமான அவதானிப்பு. கதிர்பாரதியின் கவிதைகளில் நிச்சலனம் என்பது படித்து முடித்த பிறகு ஏற்படும் ஒன்றாக, மனம் கனக்கச் செய்யும் ஒன்றாக நிகழ்ந்திருக்கிறது. சொற்களால் ஆனது கவிதை என்றிருந்த பொழுதில், அப்படி அல்ல, கருவில், பாடுபொருளில், நிலத்தில், நிஜத்தில் பட்டுத் தெறித்து எதிர்வெயில் மினுங்க பொலியும் கடல்போல் ஆனது என கவிதைகளோடு வந்தவர்தான் கதிர்பாரதி. ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தொகுப்பில் இப்பொலிவை நீங்கள் கண்டுகொள்ளலாம் எனில் இத்தொகுப்பில் அதை துய்த்துணரலாம். 

‘/அம்மாவை நிரம்பப் பிடித்த 

அப்பத்தா சொன்ன சித்திரம் இது’/

மொத்தத் தொகுப்பின் அச்சு இந்தச் சித்திரத்தில் செழுமைகொண்டு சுழல்கிறது, எனக்கு. இன்னதுதான் தாய்மைக்கான கவிதை பாடுபொருள் என்பதையெல்லாம் உதறிவிட்டு, நினைவில் இருக்கும் யாவையும் கச்சிதமான மொழியில் கவிதைகளாக்கிய விதம், மிகப்பிடித்தது. கச்சாப்பொருட்களை எந்த அலங்கரா ஆபரணங்களும் அல்லாமல் குவித்து வைத்தது போல் இருந்தது என்றும் சொல்லலாம். 

தொகுப்பு முழுக்கச் சொற்களின் லாகவம் அறுபதிலிருந்து ஒன்று, மீண்டும் ஒன்றிலிருந்து அறுபது எனப் பயணப்பட வைக்கிறது. 

அந்தி வேறு /அவளைப்போல் பற்றி எரிகிறது/

இப்படிப் பதறிப்பதறி பக்கங்களைத் திருப்பினால், இவ்வரிகள் பதற்றம் போக்கி மனதைத் தண் என்றாக்கியது

/அப்போது

அவள் பொன்மூக்குத்தி

வேப்பம் பூவாக மினுக்கம் காட்டியது/

மிகச்சிறிய தொகுப்பு, வெகுநாட்களுக்குத் தன்னுள் வைத்துக்கொள்ளும், காலம்.

நீங்கள் அம்மாவோடு வசிப்பவர்கள் எனில் தொகுப்பைப் படித்து முடித்ததும் ஏதேனும் பேசவேண்டும் என்ற உந்துதலில் அவர் முன் போய் நிற்பீர்கள், சொற்கள் தொலைத்திருப்பீர்கள். அம்மா ஊரில் இருக்கிறார் எனில் பேருந்தேறி ஊருக்கு விரையலாம், நிற்க,

அம்மா நினைவுகளில் மட்டும் இருக்கிறார் எனில், இத்தொகுப்பு அவரை சற்று நேரம் ரத்தமும் சதையுமாய் உங்களருகில் வலம்வரச் செய்யக்கூடும். 

கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் ‘முகவீதி’ (தமிழினி) தொகுப்பு தான் இதுவரை நான் பெரும்பாலும் நண்பர்களுக்குப் பரிசாக கொடுத்தப் புத்தகம். இனி இந்த ‘ அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக் கொண்டிருந்தது’ புத்தகமும் அதில் சேர்ந்து கொள்ளும். 

இத்தொகுப்பும் கதிர்பாரதியின் முந்தைய தொகுப்புகளைப் போலவே, நிறைய விருதுகளைப் பெற்றுத்தரும். அதற்கான தகுதியோடு வந்திருக்கும் கச்சிதமான தொகுப்பு இது.

நண்ப,கதிர்பாரதி. பொலிந்து திகழ்ந்திருக்கிறது உங்கள் மொழி. வாழ்க.

நாதன் பதிப்பக வெளியீடு

விலை- ₹100

பாரம்.

3 January 2025 at 02:56

குலை தள்ளத்துவங்கிய நாளில் இருந்து காய்களின் கனம் தாங்காமல் மரம் கொஞ்சம் கொஞ்சமாய் வளைந்துகொடுத்துக் கொண்டிருந்தது. சுவருக்கும் மரத்திற்குமான இடைவெளி மெல்ல விலகத்துவங்கியதைப் பார்ப்பதில்தான் காலைகள் துலங்கின. பச்சைப்பசுங்காய்களைத் தொட்டுப் பார்ப்பதும் லேசாகத் தட்டிப்பார்ப்பதும் நுட்பமாக அந்த ஓசையின் வேறுபாடுகளை அறிவதும் ஏதோ பெரிய விவசாய விஞ்ஞான அணுகுமுறை போல் பிரமையை ஏற்படுத்தியது. வாழைப்பூ மலர்ந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. சொல்லப்போனால் அந்த வாசம். நன்றாக நினைவிருக்கிறது, தூக்கம் பிடிக்காமல் வெளியில் வந்த இரவில் வாடைக்காற்றோடு குப்பென்று வந்தது அந்த முதல் பூ வாசம். பெருந்திரள் நீர் ஒன்று குவிந்து சொட்டத் தயாராக நின்றது போல் இருந்தது, வாழைப்பூ. விரல்களில் லேசான நடுக்கத்தோடும் மனம் முழுதும் பரவியிருந்த மகிழ்ச்சியோடும் தொட்டுத்தடவிப் பார்த்த நொடி, அனிச்சையாக விரல்களை முகர்ந்து பார்த்த அந்த லயிப்பு. சடசடவென சில நாட்களில் பூக்கள் விரிந்து வாசம் வீடு முழுக்க விரவத் துவங்கியது. சற்று சாய்வான கோணத்தில் கத்தியை வைத்து லேசாகத் தொட்டு அதன் கடினம் உணர்ந்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்த நொடியில் சட்டென கீழிறங்கிய பூவை பதறிப் பிடித்து, பிறந்த குழந்தையைத் தூக்கும் லாகவத்தில் கைகளில் தாங்கி உள்ளே எடுத்துப் போய் காட்டிய அதிகாலையில் இவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. தண்டிலிருந்து வழிந்த பால் பிசுபிசுப்பு தரையெங்கும் ஒழுகி இருந்தது, திரும்பி நடக்கையில்தான் தெரிந்தது. வெட்டிய இடத்தில் இருந்து இன்னும் பால் சொட்டிக்கொண்டிருந்தது. கீழே மணலில் அந்த ஈரத்தில் கட்டெறும்புகள் மொய்க்கத் துவங்கி இருந்தன. அன்றைய நாள் முழுதும் அந்தப் பிசுபிசுப்பு மனதில் அப்பி இருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

“காய் நல்லா கடுக்குனு இருக்கு” எதிர்வீட்டிலிருக்கும் வள்ளியம்மாள், கையில் பால் பாக்கெட்டுகளை வைத்துக்கொண்டு வாழைமரத்தையும், காயைத் தட்டிப்பார்க்கும் என்னையும் பார்த்துச் சொன்னார்.

தலையாட்டி ஆமோதித்தேன் தட்டுவதை நிறுத்தாமல். அமைதியாக நிமிர்ந்து பார்த்தார். நன்றாக வளர்ந்து இருந்தது மரம். நிமிர்ந்து, ஓர் இலை வான் நோக்கி சுருண்டு நீண்டு இருக்க மற்ற இலைகள் நன்றாக விரிந்து தளதளவென இருந்தன.

சட்டென நினைவுக்கு வந்தவனாய், “இப்ப சார்க்கு எப்பிடி இருக்கு” என்று கேட்டேன். மரத்தில் இருந்து பார்வையை விலக்காமல் தலையாட்டினார். பூனைக்குட்டியின் காதைப் பிடித்திருந்ததுபோல் பால் பாக்கெட்டுகள் இரண்டையும் பிடித்திருந்தவர், சட்டெனத் திரும்பி, வீட்டிற்குள் போய்விட்டார்.

காப்பியை எடுத்து வந்தவள், “அவங்க கிட்ட ஏன் கேட்குற, பாவம், நேத்துதான் ஒருபாட்டம் அழுதுட்டுப் போனாங்க” என்றவள் என் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே போய்விட்டாள்.

நாளிதழை விரித்து உதறி கடைசிப்பக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். தன்னுடைய லோட்டாவை எடுத்துக் கொண்டு வந்து எதிரில் அமர்ந்தவள், “நல்லா ஆத்திட்டேன் குடி” என்றாள்.

எதிர் வீட்டினரின் சொந்த ஊர் திருநெல்வேலியோ தென்காசியோ என்று சொன்ன நினைவு. ஆனால் சென்னைக்குக் குடியேறி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டனவாம். மகன், மருமகள் என இனி சென்னைதான் சொந்த ஊர் என்பதுபோல் ஆகிவிட்டது அவர்களுக்கு. ஏதோ அரசுத்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். எதிர்பட்டால் சிரிப்பார். அவ்வளவுதான்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர், அந்த கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு நடைபயின்று கொண்டிருக்க, சிகிச்சை நல்லபடியாக முடிந்ததா என்ற என் கேள்விக்கு,

“அதாவது சார், இத்தன நாளா இப்பிடி அழுக்கு வேட்டியா தர்றாங்களேனு நானே மதியம் துவைச்சு துவைச்சு காயப்போட்டுட்டு இருந்தேன். இப்போ ஆப்பரேஷன் முடிஞ்சதும் பாத்தா, தும்பப் பூ மாதிரி இருக்கு எல்லா வேட்டியும், அழுக்கும் இல்ல ஒண்ணும் இல்ல, கண்ணு அப்பிடி மங்களா மசமசனு இருந்துருக்கு” சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார். எனக்கும் சிரிப்பு வந்தது, ஆனால் அது மரியாதைக் குறைவாகிவிடும் என்ற நினைப்பில் மென்மையான புன்முறுவல் பூத்திருந்தேன்.

கடந்த ஓரிரண்டு வாரங்களாக உடல்நிலை சரி இல்லை என மருத்துவமனைக்கும் வீட்டிற்குமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் அவருடைய மருமகள், ஊரில் இருக்கும் அவர்களுடைய தூரத்துச் சொந்தக்காரர் வீட்டிற்கு அழைத்து விசாரித்திருக்கிறார். அந்த சொந்தக்காரர் வீட்டில் சமீபமாக யாரோ ஒரு பாட்டி இறந்து போயிருக்கிறார்களாம். இவருடைய மருமகள் அவர்களை அழைத்து, மரணம் நிமித்தம் ஏற்பட்ட செலவுகள், சடங்குகளுக்கு ஆன செலவுகள் எல்லாம் எவ்வளவு எனக் கேட்டிருக்கிறார். அந்த சொந்தக்காரப் பெண்மணி வள்ளியம்மாளிடம் அவர் மருமகள் கேட்ட விபரங்களைச் சொல்லி விபரம் விசாரித்திருக்கிறார். அதைக் கேட்டதில் இருந்து வள்ளியம்மாளுக்குத் துக்கம் தாங்கவில்லை. இப்படி எவரேனும் விசாரிப்பார்களா. அதுவும் அப்படி ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை, சரி ஆகிவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் இவள் இப்படி தயாராகிவிட்டாளே என சொல்லி அழுதிருக்கிறார்.

மேம்போக்காக நாளிதழ் வாசிப்பது போல் பாவனையில் இருந்தாலும் என் மனம் முழுக்க இவள் சொல்லிமுடித்த இந்த சங்கதிகள்தான் சுழன்று கொண்டிருந்தன. சற்றைக்கு முன்னர் அந்த அம்மாவிடம் அவரைப் பற்றி கேட்டிருக்கக் கூடாது எனத் தோன்றியது. இல்லை, இதெல்லாம் தானே கேட்க வேண்டும். எதிர்வீட்டில் இருந்தாலும் அவ்வளவாக பேசிக்கொள்ளாமல் அன்றாடங்கள் கடக்கும் ஊர்தான் இது என்றாலும் இதுபோன்ற தருணங்களிலாவது என்ன ஏதென்று விசாரிக்க வேண்டும்தான் எனத் தோன்றியது. இதெல்லாம் குறைந்தபட்சக் கடமை என்றெல்லாம் பெரிய பெரிய யோசனைகளாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. நான் குடித்துமுடித்துவிட்டால் டம்ளரை வாங்கிக்கொண்டு எழுந்து போகலாம் எனும் முஸ்தீபுகளோடு அமர்ந்திருக்கிறாள் என அவளை பார்த்ததும் புரிந்தது. அடியில் இருந்த காப்பி குளிர்ந்து கொடுத்திருக்க, வீழ்படிவாக இருந்த சக்கரையும் ஆறிய கசடுகளும் அதுவரை கொடுத்த ருசியை ஒரேடியாய் வீழ்த்தி உமட்டிக் கொண்டு வந்தது. ஒரு நொடி சுதாரித்து அதை உள்ளனுப்பி சகஜமாகி மீண்டும் நாளிதழைத் திறந்தேன்.

                 மாலை மூன்று மணி என்பது கடற்கரையைப் பொறுத்தவரை பெரும் சூன்யமான பொழுது எனத் தோன்றியது. வெய்யில் அதன் நிறத்தை இழந்து கொண்டிருந்தது. வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து ஆய்ந்து ஓய்ந்து கொஞ்சம் படுத்து உறங்கும் பேரிளம்பெண் போல் அசந்து கிடந்தது கடல். அலைகள் கூட மிக மிக சன்னமாக, சோம்பலாய் வந்து போய் கொண்டிருந்தன. யாரோ வீசியெறிந்துவிட்டுப் போன காய்ந்த கனகாம்பரத்தை நனைத்துப்போனது அலை. அது ஒரு அசூயைக் கொணர்ந்தது. நனைந்த நொடியில் அதில் சிக்குண்டிருந்த முடிகளும் சாயம்போன கனகாம்பரத்தின் பிசுபிசுப்புமென மனதை என்னவோ செய்தது போல் இருந்தது. சொல்லப்போனால் காலையில் இருந்து மனம் ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்பதால்தான் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குப் போகாமல் இப்படி கடற்கரைக்கு வந்து சற்று அமர்ந்துவிட்டு போகலாம் என வந்திருக்கிறேன். அவ்வப்பொழுது இந்த மதிய அல்லது முன்மாலையில் வீட்டிற்குப் போவது வழக்கம். அப்போதெல்லாம் எதிர்வீட்டு வள்ளியம்மாள் வெளியே அந்த இறங்குவெய்யிலில் சுவருக்கு அருகில் கிடக்கும் கல்லில் ஏறி நின்று மல்லிமொக்குகளைப் பறித்துக் கொண்டிருப்பார். “சாப்பாட்டுக்கா” என்று கேட்பார். வாழை மரத்தின் இலையைக் காட்டி லேசாகக் கீறி விடச் சொல்வார். “வீட்ல இன்னும் வரல போல, சாவி இருக்கா” என்பார். எப்படியும் எழுபது வயது இருக்கும், ஆனாலும் இப்படிக் காலை, மதியம் மாலை என வீட்டின் வெளியே இதுபோன்று சிறிதும் பெரிதுமான வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறாரே எனத் தோன்றும். இன்று அவரை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை. யாரோ எவரோ நமக்கு என்ன என்று கடக்க எவ்வளவோ முயற்சி செய்தும் ஏதேதோ நினைவுகளும் மாளாத துக்கமும் ஆட்கொண்டது போல் இருந்தது. கல்யாணம் என்றால் இதுபோன்று விசாரிப்பார்கள். எந்த மண்டபம் எவ்வளவு வாடகை, நகை நட்டு லொட்டு லொசுக்கு என செலவுக் கணக்கை உத்தேசித்துத் தயாராவார்கள். அந்தப் பெண், அவருடைய மருமகள் இப்படி ஒரு மரணத்திற்கு ஆகப்போகும் செலவுகளையும் அதை எதிர்கொள்ளத் தயாரான அந்த மனநிலையும் ஒருமாதிரி கசந்து எனில், அதை அறிந்து கொண்டுவிட்ட வள்ளியம்மாளை நினைத்த நொடியில் பிசைந்தது. சென்ற மாதத்தின் ஒரு மதியத்தில் கூட “இவரு கூட வந்து அம்பது வருசம் ஆகுது வீட்ல குடுத்துருப்பா” என எதையோ பாத்திரத்தில் வைத்து மூடிக் கொடுத்தார். தட்டின் விளிம்பில் வ.கோ. எனப் புள்ளிப்புள்ளியாக தேய்ந்து இருந்தது இன்னும் கண்களில் இருக்கிறது. வள்ளியம்மாள் போல் எப்போதும்  அதிர்ந்து பேசாத ஆட்களுக்கு மட்டும் ஏன் இப்படி பெரிது பெரிதாக தாங்கிக்கொள்ளவே முடியாதவை எல்லாம் நிகழ்கின்றன எனத் தோன்றியது. மரணமோ அவமானமோ நேரடியாக நிகழ்ந்துவிடும்பொழுது அதன்போக்கில் கடந்தும் விடுகிறது. ஆனால் இப்படி எதிர்பார்க்கப்படும் மரணம், ஒரு அவமானம் எந்நொடியில் ஏற்படப்போகிறது என எதிர்ப்பார்த்து இருக்கும் நாட்கள் இவை எல்லாம் அசாதாராணவை. நிகழக் கூடாதவை எனத் தோன்றியது.

துயில் களைந்தும் தூக்கம் மிச்சமிருக்கும் குழந்தையின் சின்னஞ்சிறு கொட்டாவியைப் போல் கடல் எழுந்து கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ பத்துப்பதினைந்து பதின்பருவப் பெண்கள் கடல் நோக்கி ஓடி, மணல்மேட்டிலிருந்து சரிந்து இறங்கிப்போய் ஈரம் படரத்துவங்கிய இடத்திற்கு சற்று முன்னர் நின்று கொண்டார்கள். அனிச்சையாக அவர்கள் கரங்கள் கோர்த்துக்கொள்ள ஒரு சீரில் மனிதச்சங்கிலி போல் நின்றார்கள். அலை வரும்பொழுது மொத்தமாகப் பின்வாங்கி மீண்டும் முன்னோக்கி அடி எடுத்து வைப்பதுதான் விளையாட்டு. அலை வரும்முன்னர் ஒரு சிறுமி முன்னோக்கி அடிகள் வைத்து இருபக்கமும் பிடித்திருந்த சிறுமிகளை இழுத்தாள். பக்கவாட்டில் இருந்து பார்க்க அந்த சிறுமிகளின் இந்த முன்னும் பின்னுமான நகர்வே அலையடிப்பு போல் இருந்தது. கால் நனைக்க வேண்டும் என்ற சிறுமிகளுக்கும் நீரிலிருந்து தப்பும் நோக்கில் பின்னோக்கி இழுக்கும் சிறுமிகளுக்குமான முன்பின் ஆட்டமும் ஒவ்வொருமுறை அது நிகழும்போது அவர்களிடம் இருந்து வந்த குதூகலச் சத்தமும் சிரிப்பை வரவழைத்தது. அவர்களை அழைத்து வந்திருந்த இரண்டு மூன்று பெண்கள் சற்று பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். வெய்யில் முற்றாக இறங்கிக் கடலுக்குள் கலந்து கொண்டிருந்தது. வெய்யிலை கரைத்துக் குடித்த கடல் கருநீலத்தை அடைந்திருந்தது. கால் நனைக்க வேண்டும் என்று முன்னோக்கி இழுத்த சிறுமி இம்முறை வெகு எளிதாக இருபக்கமும் பிடித்திருந்தவர்களின் கைகளை உதறிக்கொண்டு ஓரடி முன்னேற அலை அவளை முட்டி வரை நனைத்தது. திரும்பிப்பார்த்துச் சிரித்தாள். மற்ற அனைவரும் ஓடிப்போய் அவளைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். அலை அத்தனைக் கால்களையும் நனைத்தது. கைகளை இறுகப் பற்றி கால்கள் புதைந்து நின்று கொண்டார்கள். பத்து அலைகள் வரை அவர்களை நனைத்துப்போகும் வரை நின்றவர்கள் பின்னர் மெல்லப் பின் வாங்கினார்கள். சலித்துப் போயிருக்கலாம் அவர்களுக்கு. அலைகள் அங்கு வந்து வந்து போயின. ஓ வென கத்திக்கொண்டே இப்போது கடலுக்கு எதிர்புரத்தில் ஓடினார்கள். வான் நோக்கி எறியப்பட்ட பொம்மை மேலேறி விளக்கு வெளிச்சம் மினுங்கி மீண்டும் கீழிறங்கி வந்ததைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

                     ணற்துகள்களை தட்டி வெளியே விட்டுவிட்டு நுழைந்தேன். “என்ன சிரிச்சுட்டே வர்ற” என்று கேட்டவளைப் பார்த்து முகபாவனையை மாற்றினேன். என்ன என்றாள் மீண்டும். “பீச்சுக்குப் போயிருந்தேன். பசங்க ஆட்டத்தப் பார்த்துட்டு இருந்தேன்”. சுடச்சுட காஃபி வேண்டும்போல் இருந்தது. கொண்டு வந்தாள். அந்தச் சூட்டை கன்னத்திலும் நெற்றியிலும் வைத்து உருட்டிக் கொண்டேன். இதமாக இருந்தது. என்னை நினை என்னை நினை என ஒவ்வொன்றாக கிளர்ந்து வரும் இந்த நினைவுகளை எல்லாம் அந்த சிறுமி மற்ற கரங்களை உதறியதைப் போல் உதறிவிட்டு போய் நிற்கவேண்டும் போல் தோன்றியது. ”இப்ப எதுக்கு சிரிக்கிறனு சொல்லப்போறியா இல்லையா” என்றாள் மீண்டும். சிரித்தேன்.

                    வாழைக்காய்களின் முனைகளில் கருப்புக்கட்டத் துவங்கியது. தொட்டதும் கையோடு ஒட்டிக்கொண்டு உதிர்ந்தன கருமுனைகள். தாறு இறக்கி, தலைகீழாய்க் கிடத்தி சீப்பு சீப்பாய் பிய்த்து அலுவலக நண்பர்களுக்கு கொடுத்ததில் பெரும் திருப்தி கொண்டது மனம். மரத்தின் நடுப்பகுதி குழைந்து, தொட்டால் ஈரமாய் உள்வாங்கியது. இலைகள் பழுப்பேறத் தொடங்கின. தரையோடு தரையாக மரத்தைச் சாய்த்து, வாழைத் தண்டுகளைப் பிரித்துக் கொடுத்தார் தோட்ட வேலை செய்யும் ராமர். தெருவில் இருக்கும் வீட்டுத் தென்னை மரங்கள் பராமரிப்பு, கழிப்பு, காய் பறிப்பு என வீடு வீடாக தினமும் ஒரு வீட்டில் ஒரு வேலை என ராமர் எப்போதும் வேலையில் இருப்பவர். அனுபவம் நிறைந்தவர்.  ஓரத்தில் கிடத்தப்பட்ட இலைகளில் கழிவுகள் போக மிச்சத்தை வெட்டிக்கொடுத்தார். “எலைல யார் சாப்டப்போறாங்க இங்க”

“அம்மா கேட்டாங்க” எனத் தண்டுகள் மற்றும் இலைகளை சுருட்டுக் கொடுத்துவிட்டு, ஓர் இலையை வட்ட வடிவாக வெட்டிக்கொண்டு மரம் இருந்த இடத்தில் அமர்ந்தார். ஆர்வம் மேலிட அருகில் போய் நின்றேன்.

மரம் இருந்த இடத்தில் தரையோடு தரையாக வெட்டப்பட்ட பிறகு, மிச்சம் இருந்த பகுதியை கத்தியைக் கொண்டு சுற்றிலும் சுரண்டி சிறிய கோப்பை போல் செய்தார். அதன்மீது இலையை வைத்து மூடிவிட்டு இலை பறக்காமல் இருக்க மேலே சிறிய கல்லை பாரம்போல் வைத்துவிட்டு எழுந்தார்.

“காலைல தெறந்து பாருங்க, சாறு ஊறி இருக்கும். நல்ல சத்து, கொடல்ப்பைக்கு நல்லது”.

குப்பைக்கூளங்களை அள்ளித் துப்புரவாகக் கூட்டி எடுத்துப் போட்டுவிட்டுப் போய்விட்டார்.   மரம் இருந்த இடத்தில் இலையால் மூடப்பட்டக் குழி.

வாழை மர வேரை ஒரு கோப்பை போல் குடைந்து அதில் மரத்தின் நீர் ஊறும் என்பதைப் பார்க்கும் ஆர்வத்தில் தூக்கம் பிடிக்கவில்லை. தெருநாய் வேறு விடாமல் கத்திக்கொண்டிருந்தது. தினப்பாடுதான் போல, இன்று தூக்கம் வராததால் நமக்குக் கேட்கிறதுபோல எனத் தோன்றியது. மெதுவாக எழுந்து கையால் சுவரில் தேய்த்துக் கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தேன். நாய் குரைக்கும் சத்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது. சட்டென எதிர்வீட்டில் வெளிச்சம் ஏற்பட்டது. நாய் கத்துவதால் எழுந்துவிட்டார் போல. நாயை விரட்டும் நோக்கில் கல்லைத் தேடினேன். மரம் இருந்த இடத்தில் வைத்த இலையின் மீது இருந்த சிறிய கல்லை எடுத்து எறிவது போல் சைகை செய்ய, ஓடுவது போல் ஓடி நின்று மீண்டும் ஓ ஓவென குரைத்தது. பாரத்தை எடுத்துவிட்டதால், இலை காற்றில் ஆடிப் பறக்க, குழி திறந்துகொண்டது. அந்த இருளிலும் உள்ளே நீர் சுரந்து நிறைந்து இருந்தது, தண்டுகளின், கட்டெறும்புகளின் மிதவையில் தெரிந்தது. ஏதோ ஒரு வெளிச்சம் நீரில் மினுங்கியது. இரண்டு விரல்களால் தொட்டு நாவில் வைத்துப்பார்த்தேன். அதீத சுவையாக இருந்தது போல் தோன்றியது. எப்படியும் மூன்று நான்கு டம்ளர்கள் சுரந்திருக்கும். இவளை எழுப்பிச் சொல்ல வேண்டும் போல் இருந்தது. காலையில் சொல்லிக் கொள்ளலாம்.

இந்த நடு இரவில் எதிர்வீட்டில் இப்போது எல்லா விளக்குகளும் போடப்பட்டு வீடே ஜொலிப்பது போல் இருந்தது. அந்த ஜ்வலிப்பைப் பார்த்துப் பார்த்து பெருங்குரலெடுத்து குரைத்துக்கொண்டே இருந்தது, நாய்.  

 *

புத்தகத் திருவிழா.

29 December 2024 at 03:16

அப்பா இப்போது நலமாக இருக்கிறார். சென்ற வாரத்தில் தம்பியிடம் பேசும்போது, ‘அப்பாக்கு லேசான தொண்டை வலிதான் ஆனா’ என்று இழுத்தான். இந்த ‘ஆனால்’ எனும் சொல் ஒரு மாயை. அதனுள் நிறைய பொருட்களை பொதித்துப் புதைத்து ’மெத்தி’ விடலாம். போட்டது போட்டபடி என்பார்களே அப்படி, அந்த இரவில் கிளம்பிவிட்டேன். வண்டியை எடுக்கும்வரை நான் மட்டும் போவதாகத்தான் இருந்தது. பார்த்தால், தூங்கிக்கொண்டே அருகில் அமர்ந்தான். ‘நானும் வர்றேன்ப்பா’. “ஏண்டா ஒன்னும் இல்ல சும்மா தொண்டவலிதான் தாத்தாவுக்கு”. ”ம்ம்..ஆனா you’re not ok” அப்டீன்னான். ஓஹ் என்று தோன்றியது எனக்கு. நான் இயல்பாக இருப்பதாகத்தான் நினைத்திருந்தேன்.

பொதுவாக, நான் மாலை ஆறு மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைப் பயணங்களைத் தவிர்த்துவிடுவேன். அதிகாலை 5 மணிக்குக் கிளம்புவதே வழக்கம். ‘ஆனால்’ இம்முறை இருப்புக்கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு! ஆம். சமீபத்தியப் பெருமழையின் விளைவாக மிக மோசமான சாலைகள், சென்னை விழுப்புரம் வரை குண்டும் குழியுமான சாலைகள், போதிய வெளிச்சமற்ற விளக்குகள், அதிவெளிச்சமான எதிர்வரு வாகனங்கள் என, தவிர்த்திருக்க வேண்டிய இரவுப்பயணம்.

அதிகாலையில் வீட்டிற்குப் போனதும் வழக்கமான அந்தக் குரல் கொஞ்சம் பிசிறடித்தது போல் இருந்தது ‘இதுக்குத்தான் ஒங்கிட்ட சொல்லாதனு சொன்னேன்’. அவ்வளவுதான். 

ஒருவாரம் அவரோடுதான் இருந்தேன்..இதுவரை எதுவெல்லாம் இந்த சென்னை வாழ்வின் அன்றாட முக்கியங்கள் என்று இருந்தேனோ அவை யாவும் ஒன்றுமேயில்லை என்பது போல் ஒரு வாரம் ‘சும்ம்மா’ அவரோடு இருந்தேன். யோசித்துப் பார்த்தால் கடந்த 25 வருடங்களில் நான்கு ஐந்து நாட்கள் கூட தொடர்ந்து இப்படி ‘சும்மா’ அங்கு அவரோடு இருந்ததில்லை என்று தோன்றியது. சிலபல மருத்துவ சோதனைகள் முடித்து,  கிரிக்கெட் அரசியல் என எம் திண்ணை 20,25 ஆண்டுகளுக்கு முந்தையது போல் ஒரு வாரமும் போனது. போகட்டும். 

கிளம்பும்போது, ‘அப்ப இப்பிடி நாலஞ்சு நாள் இருக்கமாதிரி வரலாம்போலயே’ என்றார். ஆம். மீண்டும் சும்மா  போகவேண்டும். சும்மா சும்மா போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நிர்பந்தங்கள் ஏதுமற்ற பயணங்கள் அமைதல் வேண்டும். 

இந்த ஒருவாரத்தில் என்னவெல்லாமோ நடந்திருக்கிறது. ஆனானப்பட்ட அப்பா-மகன் அன்புமணியே அப்பாவை எதிர்த்து மைக்கைத் தூக்கி எறிந்தார் நேற்று. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கொடூரம், இழுக்கு. உடனடியாக நடவடிக்கை எடுத்து காலை உடைத்தது அரசு. நன்று. ஆனால் இவ்வளவு எளிதாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ‘இப்படி செய்யமுடியும் எனில்’. எனும் அச்சம் மக்களிடம் ஏற்பட்டதை என்ன செய்து நேர் ஆக்கப்போகிறார் முதல்வர் எனப் பார்ப்போம். இது நிகழ்ந்திருக்கக் கூடாது. 

சென்னையில் புத்தகத் திருவிழா ஆரம்பித்து விட்டது. சொல்லப்போனால் இதற்காகத்தான் ஓடி வந்தேன் என்று நினைக்கிறேன். பனுவல் அரங்கில் மிளிர் புத்தகங்கள் அடுக்கப்பட்டப் புகைப்படத்தைப் பார்த்ததும் இன்னும் ஆவல் உந்த, இதோ, சென்னை வந்தாகிவிட்டது.

இன்று காலை 11:30 மணியில் இருந்து மதியம் வரை பனுவல் அரங்கத்தில் (115) இருப்பேன்..வழக்கம்போல், வாய்ப்புள்ள, எதிர்படும் நண்பர்களே, சந்திப்போம்.

சொம்புநீர்ப்பூ

12 December 2024 at 09:07

மூன்றாவது முறையாக அப்படிச் செய்தாள் சுசி. இம்முறை இன்னும் கொஞ்சம் அருகில் குனிந்து ஆட்காட்டி விரலின் பின்பக்கத்தைக் குழந்தையின் மூக்கு நுனிக்கு அருகில் வைத்துப்பார்த்தாள். மிக மெலிதாக மூச்சுக் காற்று வந்தது. ஆனாலும் சற்று நேரம் வைத்திருந்து உறுதி செய்துகொண்டாள். அவ்வளவு அருகில் பார்க்கும்போதுதான் குழந்தையின் மார்பு மிக மெலிதாக விம்முவது தெரிந்தது. நல்ல உறக்கத்தில் இருக்கிறது குழந்தை. அவளுக்கு இப்போதெல்லாம் இப்படி அடிக்கடித் தோன்றுகிறது. உறங்கும் குழந்தை ஒருவேளை இறந்துவிட்டதோ என சோதித்துப் பார்ப்பதை ஏதோ அடுப்பில் காயும் வெந்நீர் பதத்தை விரல்விட்டுப் பார்ப்பதுபோல் செய்கிறாள். காரணமேயில்லாமல் அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்து ஓர் எட்டு சமையற்கட்டிற்குப் போய்விட்டு வருவது. வந்தவுடன் இப்படித் தொட்டுப் பார்ப்பது, சலனமே இல்லாமல் குழந்தை உறங்குவதையே வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது என அவளுடைய செயல்பாடுகள் இயல்பிலிருந்து சற்று விலகத் துவங்கி இருப்பதை அவளால் உணரமுடிந்தது. இன்றைக்குக் கொஞ்சம் கூடுதலாகவே ஒருவித பதற்றத்தை உணர்ந்து கொண்டு இருந்தாள். இந்தப் படபடப்பிற்குக் காரணம், இன்றைக்கு அவளைப் பார்க்க வரப்போகும் செந்தில்குமாரி. அடுத்தடுத்தத் தெரு, பால்வாடியில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அடுத்தடுத்து ஒட்டிக்கொண்டு அமர்ந்தே காலத்தை ஓட்டியவர்கள்.  மின்கம்பங்களில் இருந்து நீண்டு பாயும் மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் இரண்டு பறவைகளைப் போல்தான் இருவரும். சதாசர்வ காலமும் இணைந்தே சுற்றுவார்கள். நீண்ட மைதானத்தின் ஒருமூலையில் இருந்து மறுமூலைக்கு நடந்து சென்றுவருவார்கள். மதியவுணவு முடித்த கையோடு, தோளால் இடித்து விலகி பின்னர் தோள்களை ஒட்டிக்கொண்டு சிரித்துப் பேசிக் கடக்கும் அந்த மைதான நடையை ஒருபோதும் நடக்காமல் இருந்ததில்லை. சுசியின் வாயிலிருந்து ‘ப்ச்’ எனும் சத்தம் அனிச்சையாக எழுந்தது. சட்டென குழந்தையைப் பார்த்தாள். நல்லவேளை அவளுடைய ப்ச் சத்தம் குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கவில்லை. ஆனால், அவளிடம் இருந்து பெருமூச்சு லேசாகச் சலனம் ஏற்படுத்தியது. குழந்தையின் முகம் கொஞ்சமாய் சுருங்கி இயல்பிற்குப் போனது. சுசிக்கு சிரிப்பு வந்தது. அள்ளி எடுத்து மூக்கைக் கடிக்க வேண்டும் போல் இருந்தது. கன்னத்தைக் கடிக்க வேண்டும் போல் இருந்தது. இப்படி நேரங்கெட்ட நேரத்தில் உறங்குமா இந்தக்குழந்தை என்று தோன்றியது. ஒருவேளை அம்மாவோ அத்தையோ உடனிருந்தால் இதையெல்லாம் சொல்லியிருப்பார்கள். இப்படி யாருமே இல்லாமல் குழந்தையின் முன்னர் அமர்ந்திருப்பதை சற்று முன்னர் போல் அப்போதும் உணர்ந்தாள். அடிக்கடி இந்தத் தனிமையை அவள் உணர்கிறாள். வீட்டில் அத்தனைக் கூட்டத்திற்கு நடுவே இருந்தவள். வளர்ந்தவள். அப்போது கூட்டம் எனில் இப்போது தனிமை எனும் கணக்கை காலம் அவளிடம் நேர் செய்துகொண்டிருந்தது போலிருந்தது. காய்ய்ய்ய் எனும் சத்தம் மிக மெலிதாகக் கேட்டது. நான்கைந்து தெருக்கள் தள்ளி வந்து கொண்டிருக்கிறார் எனும் அறிவிப்பு. மணி மதியம் ஒன்று ஆகிவிட்டதா எனப் பார்த்தாள். நேரம் போகவே இல்லை என்று அதுவரை நினைத்தவளுக்கு சட்டென மதியம் ஆகிவிட்டது திகைப்பைத் தந்தது. மதியத்தின் அமைதியின் மீது கொஞ்சமாக காய்க்காரரின் விற்பனைச் சத்தம் படரத் துவங்கியது. குழந்தை தூங்கட்டும். வாசலில் போய் வாங்கிவந்துவிடலாம் என பக்கவாட்டில் திரும்பி கூடை இருக்கிறதா எனப் பார்த்தாள். கூடையில் முந்தைய நாள் வாங்கியவை கொஞ்சமாய்க் கிடப்பதைப் பார்த்தாள். சுவரில் சாய்ந்துகொண்டாள். செந்தில்குமாரி வரும் நேரத்தைச் சொல்லவில்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அவளை நினைத்த மாத்திரத்தில் சுசிக்கு சிரிப்பு வந்தது. ‘பறவை போல்’ எனும் சொல் அவள் தலைக்குள் சுழன்றது. அவளுக்குள் நிறைய கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன. மகிழ்ச்சிக்கும் திளைப்பிற்கும் ஏன் பறவையையே சொல்கிறார்கள் என்ற கேள்வி அவளை துரத்தியது. இவர்களிடம் எந்தப் பறவை வந்து சொன்னது?, பறவைகளுக்கு துக்கம் இருக்காதா? அது பறப்பது எல்லாம் மகிழ்ச்சியின் பாடலைப் பாடத்தானா? யார் உங்களிடம் அப்படிச் சொன்னது? கேள்விகள் கேள்விகள் என சுசியின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தன. எப்போதும் பறவைகள் அழுவதில்லை என்ற வரி எவ்வளவு அபத்தமானது என்ற சினம் ஏற்பட்டது. ஏனோ ஒரு துக்கித்தப் பறவையைக் கண்டறிந்து இந்த உலகிற்கு அதன் துக்கத்தைச் சொல்ல வேண்டும் என்ற வைராக்யம் பூத்தது அவளுக்குள். அப்போதேனும் இந்த உலகம் ’ஒரு பறவையைப் போல வாழ வேண்டும் என்ற  வாக்கியத்தை விட்டொழிப்பார்களா’ எனும் ஆத்திரம் மூண்டது. குனிந்து பார்த்தவள், ஆட்காட்டி விரலை குழந்தையின் மூக்கில் வைத்துப் பார்த்தாள். குழந்தை லேசாக அசைந்துகொடுக்க சட்டெனக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். செந்தில்குமாரி வருவதற்குள் இந்த அறையையாவது சுத்தம் செய்துவைக்கலாம் என்று நினைத்தாள். ஒருமுறை சுற்றிலும் பார்த்தாள். பெரிதாக ஒன்றும் குப்பை இல்லை. குழந்தைத் துணிகள். இரவிலும் காலையிலும் மலங்கழித்தத் துணிகள்தான். இவளுடையை நேற்றைய உடுப்புகள். அவற்றைத் துவைக்கப் போடவேண்டும் என்று நினைத்தாள். காலையில் சாப்பிட்டத்தட்டில் கைகழுவிவிட்டு சற்று நகர்ந்து அழும் குழந்தையை எடுத்துப் பால் கொடுத்திருந்தாள். அதனால் அந்தத் தட்டு அப்படியே இருந்தது. இவ்வளவுதான். எழவேண்டும் என்று நினைத்தவள் அப்படியே குழந்தைக்கு அருகில் படுத்தாள். குழந்தையிடம் இருந்து வந்த வாசனை அவளுக்கு ஒரு புன்முறுவலை ஏற்படுத்தியது. குழந்தையைத் தாண்டி தெரிந்த சந்திரனின் புகைப்படம் அந்தப் புன்முறுவலை இன்னும் அதிகமாக்கியது. திருமணம் எல்லாம் மிகக்கேவலமான ஒன்று, அசிங்கம். ஆண் பெண் இருவரும் ஒன்றாக ஒட்டுத்துணியில்லாமல் படுக்கக் குடும்பமே ஏற்பாடு செய்யும் வினோதம் என்றெல்லாம் செந்தில்குமாரியிடம் கோபமும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருந்த சுசி அதைத் தன் தந்தையிடமே சொல்வாள் என்று அவளே நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எங்கே ஓங்கி அறைந்துவிடப்போகிறார் என வீட்டினர் நினைக்க, அறைந்தாலும் பரவாயில்லை என அவர் முன் நின்றதை நினைக்கும்போதெல்லாம் சிரித்துக் கொள்வாள் சுசி. ஒரு அறைவிட்டிருந்தார் எனில் இப்போதுவரை தன் அத்தையைப் போல் தனக்கும் காது கேட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அன்று அவளுடைய அப்பா தலையை ஆட்டிக்கொண்டே உள்ளே நின்ற அம்மாவைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டது இன்று வரை அவளுக்கு வியப்புதான். செந்தில்குமாரி நம்பாமல் சுசியின் கன்னம் முதுகு என தேடிப்பார்த்தாள் அப்பாவின் கைத்தடத்தை. நம் கருத்தை நேரடியாகத் தெளிவாகச் சொன்னால் போதும் என்றெல்லாம் செந்தில்குமாரியிடம் அன்றைய நாளின் வாக்குவாதத்தைப் பற்றிச் சொன்ன அதே சுசிதான், சந்திரனின் புகைப்படம் என தன் தந்தைக் காட்டிய நொடியில் சரி என்று சொல்லிவிட்டிருந்தாள். ஏதோ ஒரு காரணத்திற்காக எங்கோ எத்திசையோ நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு பறவை சட்டெனெ கீழ்நோக்கித் தாழ்ந்து இறங்கி நீர்நிலையில் நங்கூரமிட்டு பருகிவிட்டு மேலேறித் தன் திசை நோக்கி போவதுபோல் இருந்தது அவளின் அந்தச்செயல். புகைப்படம் பார்த்த நொடியில் அவளுக்குள் திருமணம் நடந்தேறி இருந்தது என்று செந்தில்குமாரியிடம் சொல்லும்பொழுது அதிகாலை மரத்திலிருந்து அத்தனைப் பறவைகளும் ஒருசேர எழுந்து கிளர்ந்து பறந்து போவதுபோல் தென்பட்டது இருவருக்கும். செந்தில்குமாரியின் மேடிட்ட வயிறைத் தொட்டுத் தடவிக்கொண்டே தனக்கும் அதுபோல் இப்படி ஆகும் என்றதும் செந்தில்குமாரி அவளைக் கட்டிக்கொண்டாள். அதன்பிறகு இன்றுவரை  தனக்குக் கீழே செந்தில்குமாரியை சந்திக்கும் வாய்ப்பை அந்த வானம் வழங்கவேயில்லை. இவளுடைய திருமணத்தின் போது அவள் பிரசவம் கண்டிருந்தாள். தீட்டு என்றார்கள். சுசி முதல்முறை அழுதாள். பின்னர் சுசி இரண்டாம் முறை பெருங்குரலெடுத்து  அழுது அரற்றிய வைபவத்திற்கு செந்தில்குமாரி வரக்கூடாது என சடங்கும் சம்பிரதாயமும் சொல்லிவிட்டது. அவள் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சாவு வீட்டிற்குப் போகக்கூடாது என்றார்கள். சுசியின் அழுகையை, சந்திரனை இழந்த நாளில் சுசியின் கோலத்தைப் பார்க்க முடியாமல் போனது செந்தில்குமாரிக்கு. ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்குத் தாவும்பொழுது இடைவெளி விடும் பெருமூச்சிற்கான கணங்கள் கூட சுசிக்கு வாய்க்கவில்லை. எல்லாமே ஒன்றோடு ஒன்று பிணைந்துகொண்டது போல் தோன்றியது. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவிப் போய் அமரும் பறவையை நிறுத்தி, மரம் மாறியதற்கான காரணத்தைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அதே கிளை, அதே பசுமை. அதே கனி. கொஞ்ச நேரத்திற்குள் ஏன் வட்டமடித்துக்கொண்டு போய் எதிர்மரத்தில் அமர்கிறது? றெக்கை இருக்கும் ஒரே காரணத்தினால்தானா?.  குழந்தை சிணுங்கியது. தட்டிக்கொடுத்தாள். தன்னால் இப்படி இவ்வளவு மென்மையாக குழந்தைக்குத் தட்டிக்கொடுத்து தூங்க வைக்கவும் இயலும் என்று ஒருநாளும் அவள் நினைத்துப் பார்த்ததில்லை. குழந்தையைத் தடவிக்கொண்டு படுத்திருந்தாள். தம்பி எடுத்துக்கொண்டு வந்து தூக்கிப்பார்க்கச் சொன்ன பறவையின் உடல்தான் நினைவிற்கு வந்தது. பஞ்சுப்பொதிபோல் இருந்தது. உள்ளங்கையை விரித்து பறவையை அதில் இருத்திக் கையை மடிக்கையில் ’பொசுக்’  எனும் உணர்வு எழுந்தது. இறந்து போன பறவை என்பதால் அப்படி இருக்கிறது என்றும் உயிருள்ள பறவையை இப்படி கையில் வைத்துப்பார்ப்பது கடினம் என்றும் சொல்லிக்கொண்டே ஓடினான்.  உயிருள்ள பறவையை உள்ளங்கையில் தொட்டுத்தடவும் உணர்வை தன்னுள் வரவழைத்துக்கொண்டாள் சுசி. உள்ளங்கையை விரித்துப் பார்த்து முகர்ந்தாள். பாலுடன் அழுக்குக் கலந்த கலவையான வாடை கைகளில் அப்பிக்கொண்டிருந்தது. தூங்கியது போதும் என்பதுபோல் குழந்தையின் கன்னத்தை லேசாக வருடினாள். குழந்தை அசைவற்று உறங்கிக்கொண்டிருந்தது. காய்விற்பவரின் குரல் இப்போது சத்தமாகக் கேட்டது. அந்த சத்தம் அவளுக்காகத்தான். அவள் வீட்டின் முன் நின்றுதான். இன்னும் நான்கு முறை கத்தி உறுதி செய்துகொண்டு போய்விடுவார். கத்தட்டும். அப்படியேனும் குழந்தை எழுந்துகொள்கிறதா எனப் பார்த்தாள். எழுந்தவுடன் பால் கொடுத்துவிட்டு கொஞ்சம் விளையாடிவிட்டு, குளிக்க வேண்டும். குளிப்பாட்ட வேண்டும். செந்தில்குமாரி வந்துவிடுவாள். காய்கறிக்காரரின் சத்தம் வெகுக் குறைவாகக் கேட்டுத் தோய்ந்து கொண்டிருந்தது. அதுவும் நல்லதுதான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என அப்படியே அருகில் படுத்திருந்தாள். காலை சற்று மாற்றி மடக்கி நீட்ட வேண்டும் போல் இருந்தது. செய்தாள். அவள் காலடியில் இருந்த சொம்பு அரைவட்டமடித்து உருளத்துவங்க பட்டென எழுந்து சத்தம் எழாதவாறு அந்த சொம்பைப் பிடித்து நிறுத்தி எடுத்தவள் அதைத் தலைமாட்டிற்கு வைத்துக்கொண்டாள். கழுத்திற்கு சுகமாக இருந்தது. வெள்ளையம்மாக் கிழவியின் முகம் வழக்கம்போல அந்த சொம்பிலிருந்து எழுந்து வந்தது. அந்த சொம்புதான் அவள் மானங்காத்த சொம்பு என கிழவி இவளிடம் சொல்லுவாள். கிழவியின் கணவர், தன் தாத்தன் விபத்தில் இறந்துபோய்விட, சின்னஞ்சிறுவயது வெள்ளையம்மாள் அழக்கூடத் தெரியாமல் பிரமை பிடித்ததுபோல் அமர்ந்திருந்தாளாம். அவளுடைய பாட்டி ஏதேதோ சோதித்துப்பார்த்து அந்த சொம்பில் நீரை நிறைத்து அதை பிணம் கிடக்கும் வீட்டின் வெளியே வந்து நின்று கூட்டத்தின் முன் வைத்து ஒன்று இரண்டு மூன்று என பூக்களை அந்த சொம்புநீரில் மிதக்க விட்டாளாம். கூட்டம் ஓவென அரற்றி தங்கள் பரிதாபத்தைத் தெரிவித்ததாம். அதாவது அவன் இறக்கும் போது இவள் மூன்றுமாதம் கர்ப்பம் அதனால் அவள் குழந்தை பெறும்பொழுது எவன் அப்பன் எனும் கேள்வியைக் கேட்டுவிடாதீர்கள் என்ற அறிவிப்பாம். சொம்பு கழுத்தை அழுத்தியது சுசிக்கு. எடுத்து குழந்தைக்கும் அவளுக்கும் இடையில் வைத்துக்கொண்டாள். அந்த சொம்பை மெதுவாக நகர்த்தி குழந்தையை இடித்தாள். குழந்தை சுணங்கி நேரானது. சிரித்தாள். மீண்டும் அந்த விளையாட்டைத் தொடர்ந்தாள். குழந்தை கைகால்களை அசைத்து முறுக்கியது. கொஞ்சமாய் எழுந்து நன்றாக முகத்தைப் பார்த்தாள். பின்னர் கொஞ்சமாக விலகி நிமிர்ந்து நன்றாகக் கால்களை அகட்டி நீட்டிப் படுத்துக்கொண்டாள். சுகமாக இருந்தது. மின் விசிறி சன்னமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு வெய்யில்பொழுதில் மின்விசிறியின் றெக்கையில் குருவி ஒன்று அமர்ந்து இருக்க, பாவம் அது தூங்குகிறது என மின்விசிறியின் ஸ்விட்ச் அருகில் நின்றிருந்தாள். யாரையும் மின்விசிறியைப் போடவிடவில்லை அன்று மதியம். ஏன் இப்படி வியர்க்கிறது என அப்பா சத்தமாகக் கேட்டுக்கொண்டே வந்த நொடியில் குருவி விருட்டென்று பறந்துபோனது. அப்பாவின் மீது அன்று முழுதும் கோபத்தைக் காட்டினாள். மின்விசிறியின் சுழற்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் உறக்கம் தழுவத் துவங்கியது.  செந்தில்குமாரி இன்று வராமல் நாளை வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கண்களை மூடியபிறகும் மின்விசிறியின் சுழற்சி சன்னமாகத் தெரிந்தது. தூங்கலாம் என்று இரண்டு கைகளையும் வயிற்றின் மீது வைத்து இதமாக அழுத்திக் கொண்ட நொடியில் குழந்தை அழத் தொடங்கியது.

*

❌