Normal view

Received before yesterdayசெல்லினம்

மொழி ஒலிம்பிக்ஸ்

15 May 2025 at 13:30
polyglot

மொழி மீது ஆர்வமுள்ளவர்களுக்காக பன்மொழி ஒலிம்பிக்ஸ் என்ற போட்டி நடத்தப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தில் பன்மொழியாளர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியும் அதிக ஊதியமும் வழங்கப்படுகிறது.  

polyglot

ஆங்கிலத்தில் பாலிகிளாட் (Polyglot) என்ற ஒரு சொல் உண்டு.  பன்மொழிகளை அறிந்தவர்கள் பாலிகிளாட் என அழைக்கப்படுகிறார்கள். பன்மொழி என்றால் பல மொழிகளைச் சரளமாகப் பேசவும், எழுதவும், புரிந்துகொள்ளவும் திறன் உடையவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் பன்மொழியாளர்களாக அறியப்படுகிறார்கள். இது ஒருவரின் மொழிக் கற்றல் திறன் மற்றும் மொழிப் புலமை ஆகியவற்றைக் குறிக்கிறது. எத்தனை மொழிகளை அறிந்தவரை பன்மொழியாளர் என்பது என்ற வரையறை ஏதும் இல்லை, பொதுவாக நான்கைந்து மொழிகளாவது தெரிந்திருக்க வேண்டும். 

அமெரிக்க ராணுவத்தில் பன்மொழியாளர்கள்

அமெரிக்க ராணுவத்தில் பன்மொழியாளர் என்பது மிக முக்கியமான பொறுப்பாகக் கருதப்படுகிறது. எதிரி அல்லது வெளிநாட்டு மக்கள் பேசும் மொழிகளைப் புரிந்து மொழிபெயர்த்தல், வெளிநாட்டுத் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், பேச்சுகள், செய்திகளைப் புரிந்து கொள்வது மற்றும் போரிலோ அல்லது அமைதி நடவடிக்கைகளிலோ பொதுமக்கள் பேசும் மொழியில் பேசி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக இந்த பன்மொழியாளர்கள்  பயன்படுத்தப்படுகிறார்கள்.

ராணுவத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு மொழி நிறுவனம் என்னும் இடத்தில் பல்லாயிரம் ராணுவ வீரர்கள் வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி பெறுகிறார்கள். உலகிலேயே மிகப்பெரும் மொழிப் பயிற்சி மையமாக இது செயல்படுகிறது. அரபி, பாஷ்தோ, உருது, ரஷ்யம், சீனம், கொரியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்கு அமெரிக்க ராணுவத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது தவிரப் பிற மொழிகளைக் கற்பது, கற்பவரின் விருப்பம். 

மொழி ஒலிம்பிக்ஸ்

பன்மொழியாளருக்கான ஒலிம்பிக்ஸ்ல் பங்கேற்பவர்கள் பல மொழிகளில் உள்ள பணிகளைச் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக மொழிபெயர்ப்பு, கேட்பது, புரிந்துகொள்வது, வாசித்து விளக்கம் தருவது அல்லது உரையாடல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். பங்கேற்பாளர்களின் பன்மொழி திறமையைச் சோதிப்பதே இந்த போட்டியின் நோக்கம். 

இந்த போட்டியில் என்ன நடக்கும்?

ஒரு மொழியில் கொடுக்கப்பட்ட உரையை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும்.  ஒரு மொழியில் பேசும் ஒலி அமைவைக் கேட்டு அதைப் புரிந்து எழுத வேண்டும். பல மொழிகளில் உரையாடல் நடத்தும் திறன் சோதிக்கப்படும். பல மொழிகளில் உள்ள உரைகளை வாசித்து அதன் பொருளை விவரிக்க வேண்டும். 

பன்மொழி ஒலிம்பிக்ஸ் என்பது மொழி ஆர்வலர்கள், மொழியியல் மாணவர்கள், மொழி கற்க விருப்பமுள்ளவர்கள் இடையே புகழ் வாய்ந்தது. இதில் ராணுவ வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்பார்கள். 

வணிகத்திலும், கல்வியிலும், கலாச்சார பரிமாற்றத்திலும், பாதுகாப்பு அமைப்பிலும் மொழித் திறமையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மாதிரியான போட்டிகள் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன.

The post மொழி ஒலிம்பிக்ஸ் appeared first on செல்லினம்.

அனுப்பினால் போகாத பணம்

14 May 2025 at 13:30
UPI

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) கடந்த சில வாரங்களாக அவ்வப்போது செயல்படாமல் போகிறது. இதனால் நாடு முழுவதும் நிதிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஏப்ரல் 12-ம் தேதி ஏற்பட்ட செயலிழப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் நடந்த மிக நீண்ட நேரச் செயலிழப்பாகக் கருதப்படுகிறது. அன்று சுமார் ஐந்து மணி நேரம் வரை பாதிக்கப்பட்டிருந்தது. 

UPI

இதன் காரணமாக, இந்தியாவின் மென்பொருள் நிதி சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள பணப்பரிவர்த்தனை இடைமுகம் அடிக்கடி ஏன் செயலிழக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த குழப்பங்களுக்குப் பின்னணியில் உள்ள காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். 

எப்படிச் செயல்படுகிறது?

இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India – NPCI) உருவாக்கிய பணப்பரிவர்த்தனை இடைமுகம், எளிய இரண்டு கட்ட அங்கீகார செயல்முறையின் மூலம், ஒரு நபருக்கும், வங்கிகளுக்கும் இடையே பணப் பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இந்த அமைப்பு செயல்பட முதலில் வங்கிகள் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகத்துடன் இணைக்கப்பட வேண்டும். அதேபோல் வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்குகளை ஒரு பதிவு செய்யப்பட்ட திறன்பேசி எண்ணுடன் பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலி (PSP) உடன் இணைக்க வேண்டும். 

ஒவ்வொரு ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகமும் தேசிய கொடுப்பனவு கழகத்தால் வழிநடத்தப்படுகிறது. இது கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான வங்கி தகவல்களைக் குறியாக்கம் செய்து பாதுகாப்பாகப் பரிவர்த்தனை விவரங்களை வாடிக்கையாளரின் வங்கிக்கு அனுப்புகிறது. எனவே தேசிய கொடுப்பனவு கழகத்திடம் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த குறியாக்கத் தகவல்களை வங்கிகள் பெற முடியாது இதனால் பரிவர்த்தனைகள் தோல்வியடைகின்றன. 

நீண்ட நேரச் செயலிழப்புக்கான காரணம்

பொதுவாக ஒரு பரிவர்த்தனைக்குப் பின் பயனாளியின் வங்கியிலிருந்து உறுதிப்படுத்தல் வராதபட்சத்தில் வங்கிகள் பரிவர்த்தனை சரிபார்ப்புக் கோரிக்கையை அனுப்புகின்றன. இது பெரும்பாலும் பயனாளி வங்கியின் சேவையகம் செயல்படவில்லை என்றால் மட்டுமே ஏற்படும். தேசிய கொடுப்பனவு கழகத்தின் வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கையை அனுப்ப வேண்டும். 

ஆனால் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் நீண்ட நேரம் செயல்படாமல் இருந்ததற்கு இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கைகள் மிக அதிக அளவில் அனுப்பப்பட்டதே காரணமாகக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலி வங்கியின் பதில்கள் வருமுன் பலமுறை இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கைகளை அனுப்பி தேசிய கொடுப்பனவு கழகத்தின் சேவையகத்தில் அதிகமாய் சுமை ஏற்க வைத்தன. இந்த பெரிய அளவிலான சிக்கலே நீண்ட நேரச் செயலிழப்புக்கு வழிவகுத்தது. 

தேசிய கொடுப்பனவு கழகம் இந்த பிரச்சனையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலியின் உறுதிப்படுத்தல் அம்சத்தை உடனடியாக நிறுத்தச் சொல்லியது. அதைத்தொடர்ந்து பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் ஏற்பட்ட சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வு கொண்டுவரப்பட்டது. இந்த நடவடிக்கைகள் விரைவாகச் செய்யப்பட்டிருந்தாலும் அதற்குள் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம், உலகிலேயே மிக வலுவான மென்பொருள் பரிவர்த்தனை அமைப்பாக இருந்தாலும் சமீபத்திய செயலிழப்புகள்,  சேவை வழங்கும் வங்கிகள் விதிகளைக் கடைப்பிடிக்காததில் உள்ள பிழைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. வங்கிகள், சேவை வழங்கும் செயலிகள் மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் இடையே சிறந்த ஒத்துழைப்பு மற்றும் நேரடி கண்காணிப்பு அம்சங்களை உறுதி செய்தால்தான் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுக அமைப்பின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த முடியும்.

  • சத்யா கோபாலன்

The post அனுப்பினால் போகாத பணம் appeared first on செல்லினம்.

முதலீட்டு முதல்வன் வாரன் பஃபெட்

Tim-Cook-and-Warren-Buffett

வாரன் பஃபெட் பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, பங்குதாரர்களையும் பொருளாதார உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த முக்கியமான அறிவிப்பு, ஒமாஹாவில் நடந்த வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் வளர்ச்சியை வழிநடத்தி வந்த பஃபெட், தனது வாரிசுக்காக இப்பதவியை விட்டுவிலக்கினார்.

Tim-Cook-and-Warren-Buffett

2026 முதல், துணைத் தலைவர் கிரெக் ஏபல் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கிறார். 94வது வயதிலும் பஃபெட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் தொடர, ஏபல் நிர்வாகத் திறமையால் பஃபெட்டின் நம்பிக்கையையும், டிம் குக்கின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

பஃபெட் ஒரு காங்கிரஸ் மன்ற உறுப்பினரின் மகனாக 1930-இல் பிறந்தவர். ‘ஓமாஹாவின் தீர்க்கதரிசி’ என அழைக்கப்படும் இவர், பெஞ்சமின் கிராஹாமின் வழிகாட்டலில் முதலீட்டு கொள்கைகளைப் படித்து, ஒரு நிதி நெருக்கடியில் இருந்த ஆடை நிறுவனத்தை மிகப்பெரிய முதலீட்டு வல்லரசாக மாற்றினார்.

பஃபெட் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டை தவிர்த்து வந்தாலும், 2016-இல் ஆப்பிளில் முதலீடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆப்பிளை ஒரு வாடிக்கையாளர் நம்பிக்கையுடன் கூடிய நுகர்வோர் நிறுவனமாகக் கண்டு முதலீடு செய்த பஃபெட், பெர்க்ஷைருக்கே மிகப்பெரிய லாபத்தை பெற்றுத்தந்தார். ஆனால் 2023-24 காலப்பகுதியில் 515 மில்லியன் பங்குகளை விற்றது பலரிடத்தில் கேள்விகளை எழுப்பியது. இதை அவர் வரி திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்தை குழப்பங்களை எதிர்நோக்கிய நடவடிக்கையாக விளக்கியுள்ளார்.

நன்றாக நிர்வாகிக்கப்படும், மதிப்பை விட குறைவான விலையில் உள்ள பங்குகளை நீண்டகாலத்திற்கு வாங்கி வைத்திருப்பதே பஃபெட்டின் முதலீட்டு தத்துவம். கோகா-கோலா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள், அவரது கோட்பாடுகளுக்கு ஏற்ப, பெர்க்ஷைர் போர்ட்ஃபோலியோவில் நீண்ட காலமாக உள்ளன. ஸீஸ் காம்பனி, ஃப்ரூட் ஆஃப் த லூம், டெய்ரி க்வீன் போன்ற நிறுவனங்களை முழுமையாக வாங்கினாலும், அவற்றின் நிர்வாகத்தை தொடர அனுமதித்துள்ளார்

பஃபெட் முதலீட்டாளராக மட்டுமல்ல, மாபெரும் நன்கொடை வழங்குபவராகவும் உலகத்தை ஈர்த்தவர். 2006 ஜூனில், தனது பெரும்பாலான செல்வத்தை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்தது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அறக்கட்டளை உலக சுகாதாரம், நூலகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட சமூக நலப்பணிகளில் கவனம் செலுத்துகிறது. இது உலகின் மிகப்பெரிய வெளிப்படையான நன்கொடையாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. பதவியில் இருந்து விலகினார் என்றாலும், பஃபெட்டின் சிந்தனையும் செயல்முறையும் உலகின் மிக முக்கிய முதலீட்டுத் துறையிலேயே தொடர்ந்து ஒளிவீசும்.

  • நவீனா

The post முதலீட்டு முதல்வன் வாரன் பஃபெட் appeared first on செல்லினம்.

செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப்

whatsapp

வாட்சாப்பில் நிரம்பி வழியும் செய்திகளால் அவதிப்பட்டது உண்டா? முக்கியமான தகவல்களைப் பெற பல மணி நேர உரையாடல்களில் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை என்கிறது வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய அம்சம்.

whatsapp

நம்மில் பலரிடம் வீட்டு ஜன்னல்களைக் காட்டிலும் அதிக அளவில் வாட்ஸ்ஆப் குழுக்கள் இருக்கும். முக்கியத் தகவல் பரிமாற்றம், அரட்டை, செய்திப் பகிர்வு, சமூக நல்லிணக்கம் என அனைத்தையும் நாம் அதன் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சில குழுக்களை நாம் முதன்மையாக (Pinned) வைத்திருக்கிறோம், சிலவற்றை நிரந்தரமாக அமைதி (Mute) ஆக்குகிறோம். ஆனால் அவற்றிலிருந்து முக்கியத் தகவல்களை நாம் தேட நேர்ந்தால், பல செய்திகளைத் தொட்டு நகர்த்தித் துழாவ வேண்டியிருக்கும். இந்தச் சவாலை எதிர்கொள்ள வாட்சாப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

வாட்சாப்பின் செய்திச் சுருக்கம் 

பலநாள் திறக்கப்படாத உரையாடல்கள், குழுக்களில் ஒளிந்திருக்கும் முக்கியமான தகவல்களை இனி எளிதில் கண்டுபிடித்து விடலாம். செயற்கை நுண்ணறிவை அதற்காக மெட்டா நிறுவனம் பணியமர்த்தி இருக்கிறது. தேவையான தகவல் இருக்கும் என நினைக்கும் (அல்லது) படித்தறிந்து கொள்ள வேண்டிய குழுவின் செய்திகளை செயற்கை நுண்ணறிவு முற்றிலுமாகப் படித்துவிட்டு, ஒரே செய்திச் சுருக்கமாக (summary) கொடுக்கும் அம்சம் வாட்சாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாட்சாப்பில் செயல்பாட்டில் இருக்கும் மெட்டா செயற்கை நுண்ணறிவுதான் இந்த வேலையை நமக்காகச் செய்து தருகிறது. இந்தப் புதிய அறிமுகம், அதிக செய்திகளைப் படித்தறிய நேரமில்லாதவர்களுக்குப் பயனளிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எப்படி இயக்குவது? 

செய்திகளைச் சுருக்கும் அம்சம் இப்போதைக்கு ஆண்டிராய்டு வாட்சாப் முன்னோட்டப் (Android Whatsapp Beta) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு உரையாடலின் அடிப்பகுதியிலும் சிலருக்கு “மெட்டா உதவியுடன் சுருக்கவும்” (Summarize using Meta AI) என்ற அமைப்பு காட்டும். அதைச் சொடுக்கினால் நொடியில் நம் தகவல்களைச் செயற்கை நுண்ணறிவு சுருக்கிக் கொடுத்துவிடும். இது மேம்பட்ட தனியுரிமை (Advanced Privacy) அம்சத்தை வைத்திருக்கும் உரையாடல்களில் வேலை செய்யாது. இதை பயனர்களின் விருப்பப்படி இயக்கவோ முடக்கவோ முடியும்.

செய்திகளை மெட்டா படிக்குமா? 

மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதும், நமது செய்திகளை செயற்கை நுண்ணறிவு படிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்தது.  இது பயனர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கருதுகின்றனர். ஆனால், செய்திகள் அப்படி வாசிக்கப்படாது என்று மெட்டா நிறுவனம் உறுதி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவில் தனிப்பட்ட செயலாக்க முறைப்படி இந்த அம்சம் செயல்படுத்தப்படுகிறது. அது அனுப்புநர் மற்றும் பெறுநருக்கு முற்றிலும் குறியாக்கம் (Encrypted) செய்யப்பட்ட வகையில்தான் பரிமாறப்படும் என்றும், அதை யாராலும் வாசிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சுருக்கம் செய்யும் தகவல்களும் பாதுகாப்பான இடைமுகத்தில் செயல்படுகிறது என்று மெட்டா உறுதி அளிக்கிறது. 

எங்கும் செயற்கை நுண்னறிவு

இந்த அம்சத்தை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற செயலிகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் சுருக்க அம்சம் மூலம் தகவல்களை விரைவில் புரிந்து கொள்ள முடியும். பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, பயன்பாடு அனுபவத்தை உயர்த்த முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை விரைவில் முடிக்க முடியும். தொழில்நுட்ப உலகின் புதிய தாரகச் சொல்லான “எங்கும் செயற்கை நுண்ணறிவு” என்ற நோக்கத்திற்கு இம்முயற்சி வலு சேர்க்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். 

  • விவேக்பாரதி

வாட்ஸ்ஆப் செய்திச் சுருக்கம் குறித்த செய்தி

The post செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப் appeared first on செல்லினம்.

பயணம் எளிதாகும்

Google maps

பயணத் திட்டமிடலுக்காக எடுத்துவைக்கப்படும் திரைபிடிப்புப் (screenshot) படங்களை ஆய்வு செய்யும் அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் வரைபடங்கள் செயலி.

Google maps

கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, விடுமுறையைக் கழிக்க பல்வேறு சுற்றுலாத்தலங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடல் பயணக்கட்டுரைகள், யூடியூப் காணொளிகள், இன்ஸ்ட்டாகிராம் குறுங்காணொளிகள் எனப் பல வகைகளில் நீள்கிறது. ஒவ்வொருமுறையும் நாம் பார்க்கும் இடங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது கொஞ்சம் கடினம்தான். ஒருவேளை அவற்றை திரைபிடிப்பு செய்துவைத்துக்கொண்டால் இந்த வேலை எளிதாகும் வாய்ப்புள்ளது.

ஆனால் அதிகமான இடங்களை திரைபிடிப்பு செய்துவைத்தால் குழப்பம்தான் ஏற்படும். இந்த குழப்பத்தையெல்லாம் தீர்த்து நமது பயணத் திட்டமிடலை எளிமைப்படுத்த புதிய அம்சம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் வரைபட செயலி. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் எடுத்த திரைபிடிப்பு படங்களை ஆராய்ந்து அதில் உள்ள இடத்தை குறித்துவைத்துக்கொள்ள முடியும்.

இதனைப் பயன்படுத்தக் கூகுள் வரைபட செயலிக்குள் சென்று, அதில் உள்ள “நீங்கள்” பக்கத்தைத் தொடவேண்டும். அதில் திரைப்பிடிப்புகள் என்ற பக்கம் காணப்படும். அதனைத் தொட்டால் இந்த அம்சம் செயல்படும் விதம் தொடர்பான காணொளி ஒன்று ஒளிபரப்பப்படும். அதனைப் பார்க்கும்பொழுது இந்த அம்சத்தைப் பற்றிய எளிமையான புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.

காணொளியைப் பார்த்தபிறகு கூகுள் வரைபட செயலி உங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கேட்கும். நீங்கள் அனுமதியளித்துவிட்டால் போதும். அடுத்த முறை நீங்கள் செய்யும் பயணம் தொடர்பாக திரைபிடிப்பு செய்தால் அந்த படத்தைக் கூகுள் வரைபடங்கள் ஆராயத் தொடங்கிவிடும். அந்த படமானது நீங்கள் செல்ல விரும்பும் இடத்தைப் பற்றிய குறைந்தபட்சத் தகவல்களையாவது கொண்டிருக்க வேண்டும்.

படம் ஆராய்ந்து முடிக்கப்பட்ட பிறகு மறுபார்வை (Review) என உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதைத் தொட்டால் நீங்கள் விரும்பிய இடத்தைப் பற்றிய தகவல்கள் தோன்றும். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதனைப் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். இவை அனைத்துமே தானாகவே நடக்கும். ஒருவேளை உங்கள் திரைபிடிப்பு படங்களைக் கூகுள் ஆராய்வதை நீங்கள் விரும்பாவிட்டால் அதற்கும் வழி இருக்கிறது. நீங்கள் உங்களுக்குத் தேவைப்படும் திரைப்பிடிப்புகளை மட்டும் கூகுள் வரைபட செயலியில் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம்.

இது பற்றிய மேலதிகத் தகவல்களைக் கூகுள் வெளியிட்டுள்ள வலைப்பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து.

கூகுள் வலைப்பக்கம்

The post பயணம் எளிதாகும் appeared first on செல்லினம்.

அன்னையர் நாள் பரிசுப் பரிந்துரைகள்

10 May 2025 at 13:30
Mothers day

அன்னையர் நாளுக்கு, வீட்டு உபயோகப் பொருள்களை பரிசளிக்கும் வழக்கம் குறைந்திருக்கிறது. குடும்பத்துக்குத் தேவையானவற்றைக் கொடுக்காமல், புடைவை, ஆபரணங்கள் என்று அம்மா தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் பரிசுகள் வழங்குவது நல்லதுதான். அதோடு காலத்துக்கு ஏற்ற வேறு சில பரிசுகளையும் தர முயற்சி செய்யலாம். அப்பரிசுகளால் உங்கள் இருவருடைய மகிழ்ச்சி, இரட்டிப்பாகும்தானே.

அன்றாட வாழ்வில் பயன்படும் வகையில் பல விலை வரம்புகளில் இருக்கும் சில சுவாரஸ்யமான தொழில்நுட்பக் கருவிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். பரிசு கொடுக்க இந்தப் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.

Mothers day
  • தொலைக்காட்சித் திரையைவிடச் சிறியது, திறன்பேசித் திரையைவிடப் பெரியதுமான அமேசான் எகோ ஷோ 8, கூகுள் நெஸ்ட் ஹப் போன்றவை நல்ல தேர்வு. இச்சிறிய தொலைக்காட்சிகளை பல்வேறு விதமாகப் பயன்படுத்தலாம். தானியக்க தொழில்நுட்பக் கருவிகளை குரல் கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்ளப் பயன்படும். வலைபரப்பு, பிடித்த நிகழ்ச்சிகளை வீட்டுக் கூடத்தில் இருக்கும் தொலைக்காட்சியில்தான் பார்க்கவேண்டும் என்கிற அவசியமின்றி எங்குவேண்டுமானாலும் பார்க்க இக்கருவி உதவும். இரு கைகளும் வேலையாக இருக்கும்போது, தொடுதல் இல்லாமல் திறன்பேசி அழைப்புகளைப் பெறப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வானிலை முன்னறிவிப்புகளைக் கூடப் பார்க்க முடியும்.
  • உடல் நலனைப் பேணிக்காக்க உதவும் திறன்கடிகாரங்களைப் பரிசாகக் கொடுப்பதன் மூலம் அம்மாவின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வலியுறுத்தலாம். கார்மின் வெனு 3S, ஆப்பிள் கைக்கடிகாரம் 9 ஆகியவை பல புதிய பாணிகளில், பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணர்திறன்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக இவற்றின் மூலம் இரத்த ஆக்சிஜன் அளவையும், இதயத் துடிப்பு வீதத்தையும் கண்காணிக்கலாம். 10 நாள்கள் வரை மின்னேற்றம் செய்ய அவசியமின்றிப் பயன்படுத்த முடியும். மேலும் மிகுந்த பாதுகாப்பான கண்ணாடிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உடல்நலத்துடன் மன மகிழ்ச்சியும் முக்கியம். வாசிப்பு ஆர்வமுள்ள அம்மாக்களுக்கு அமேசான் கிண்டில், கோபோ மின்படிப்பான் சிறந்த பரிசுகளாக இருக்கும். இதில் வரம்பற்ற சந்தா மூலம் பல நூல்களை வாசிக்கலாம். அதன் 6 அங்குல திரை, வாசிப்பை மேலும் எளிமைக்கும். மேலும் மின்கல அடுக்கு 6 வாரங்கள் வரை நீடிக்கும். ஒலிப் புத்தகங்களாகக் கேட்கும் வாய்ப்பும் இருக்கிறது.
  • சாம்சங் கேலக்ஸி A55 5G, கூகுள் பிக்சல் 9a ஆகிய திறன்பேசிகள் சிறந்த திரையுடன் வருகின்றன. டென்சர் G4 மின்னணு கூறுகள், 8GB அளவு தரவு சேமிப்பு கொண்டது. இதன் மின்கலன் 2 நாள்கள் வரை நீடிக்கும். சிறந்த புகைப்படகருவி மூலம் வாழ்வில் முக்கியமான தருணங்களை சேமிக்கலாம். கூகுள் பிக்சல் 7 ஆண்டுகள் வரை மென்பொருள் புதுப்பிப்புகளை வழங்குகிறது. 

இந்த பரிசுகள் உங்கள் அம்மாவின் அன்றாட வாழ்க்கையைக் கொண்டாட்டமானதாக்கக் கூடும். அன்னையர் நாள் வாழ்த்துகள்.

  • சத்யா கோபாலன்

The post அன்னையர் நாள் பரிசுப் பரிந்துரைகள் appeared first on செல்லினம்.

வீட்டை இயக்கும் கூகுள் ஹோம் செயலி

Google home

மனிதர்களின் வேலைகளை எளிதாக்கப் பல கருவிகள் வந்துவிட்டன. ஆனால் அதற்கும் நேரமில்லாத மனிதர்களுக்காக அவர்களின் வேலையை இன்னும் எளிதாக்கியுள்ளது கூகுள். வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களையும் நிர்வகிக்கவும் தானியக்கமாக்கவும் கூகுள் ஹோம் உதவும். வீட்டில் பயன்படுத்தும் பொருள்கள் பலவற்றை இச்செயலி மூலம் கட்டுப்படுத்தலாம். சாவி தேவைப்படாத எண்ணிமப்பூட்டு, கூகுள் தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, வீட்டின் பாதுகாப்புக்காக வைக்கப்படும் படக்கருவி (CCTV) போன்ற பல திறன்கருவிகள் இதில் அடங்கும். இணையத்துடன் இணைந்து இயங்கும் திறனுள்ள எல்லா பொருள்களையும் இச்செயலி மூலம் கட்டுப்படுத்த இயலும்.

Google home

எப்படியெல்லாம் இச்செயலியைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தங்கள் நிறுவனத்தில் வேலைசெய்பவர்களிடமே கருத்து கேட்டுள்ளது கூகுள். அதைத் தங்கள் வலைப்பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்கள். 

1. அன்பான வரவேற்பு

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் பணியைத் தலைமையேற்று நடத்துபவர் ஸ்பரதரா. அவர் வீட்டில் விருந்தினர்களை வரவேற்க கூகுள் ஹோம் செயலியைப் பயன்படுத்துவது தனக்கு விருப்பமானது என்கிறார். பொழுது விடிவதற்கு முன்போ, மாலை நேரத்தில் இருள் கவிந்த பிறகோ யாராவது அவர் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அடித்தால் உள் முற்றத்தில் உள்ள விளக்குகள் ஒளிரத் தொடங்கும். இதன் மூலம் விருந்தினர்கள் இருண்ட நடைபாதையில் தட்டுத்தடுமாறாமல் நடக்க முடியும்.

2. உடற்பயிற்சி நேரம் 

தயாரிப்பு மேலாளராக இருக்கிறார் கேத்ரின் மெக்கின்லி. திங்கட்கிழமைகளில் மாலை 6 மணிக்குத் தன் வீட்டு அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியின் உதவியால் ‘இது உடற்பயிற்சி நேரம்’ என்ற நினைவூட்டலைப் பெறுகிறார். அதுமட்டுமல்ல, இந்த நேரத்தில் தன் வீட்டு அலுவலகத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டு உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள விளக்குகள் தானாகவே எரியத் தொடங்கும்படி செயலி மூலம் கட்டுப்படுத்துகிறார். வேலையை நிறுத்திவிட்டுப் போய் உடற்பயிற்சி செய் என்பதை வலியுறுத்தும் இந்த விளக்கு மாற்றத்தால், தான் தவறாமல் உடற்பயிற்சி செய்வதாகத் தெரிவிக்கிறார். 

3. தாகமுள்ள தாவரங்கள்

மென்பொருள் பொறியாளர் கிறிஸ்டினா காங்கின், இச்செயலி மூலம் தான் செய்யும் பணியில் விருப்பமானது, வீட்டுச் செடிகளுக்குத் தண்ணீர் தெளிப்பதுதான் என்கிறார். நாள்தோறும் மாலை நேரத்தில் தானாகவே செடிகளுக்குத் தண்ணீர் தெளிக்கும் திறன்மிக்கத் தெளிப்பான்களை வைத்திருக்கிறார் இவர். கூகுள் ஹோம் செயலி மூலம் இவர் குறிப்பிடும் நேரத்துக்குத் தாவரங்களுக்குத் தண்ணீர் கிடைத்து அவற்றை நன்கு வளர்க்க உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

4. பாதுகாப்பான வீடு

மென்பொருள் பொறியாளர் ஜிம் லியின் குழந்தைகள் அவ்வப்போது அவரது வீட்டின் பின் கதவுகளைத் திறந்துவிட்டு மூடாமல் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இதை கண்டுபிடித்த ஜிம், தானியக்கம் மூலம் இரவு 11 மணிக்கு மேல் அவரது வீட்டில் ஏதேனும் கதவு, ஜன்னல்கள் திறந்திருந்தால் அவரது திறன்பேசிக்குத் தகவல் வரும்படி செய்துள்ளார். அதிலிருந்து அவர் கதவுகளைப் பூட்டத் தவறவிட்டதே இல்லையாம்.

5. குழந்தைகளின் கண்காணிப்பு

பொறியியல் மேலாளர் காயத்ரி சுப்பிரமணியனின் குழந்தைகள் அவருக்கு முன்னதாகவே வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நினைத்த அவர், குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அறிமுகமில்லாத நபர்கள் அவரது வீட்டு அழைப்பு மணியை ஒலித்தால் உடனடியாக அந்தத் தகவல் தனக்குக் கிடைக்கும்படி செய்துள்ளார். இதனால் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறுகிறார். 

6. படுக்கைக்குச் செல்லுங்கள்

மென்பொருள் பொறியாளர் ஜேம்ஸ் வுட், இரவு 11:55 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் தொலைக்காட்சியையும் உடனடியாக அணைக்கும்படி செய்துள்ளார். இது அவருக்கு உறங்கும் நேரத்தை நினைவூட்டி அதிக நேரம் கணினித் திரையையோ, தொலைக்காட்சித் திரையையோ பார்ப்பதைத் தடுத்து தன்னை படுக்கைக்குச் செல்லக் கட்டாயப்படுத்துவதாகத் தெரிவிக்கிறார். 

  • சத்யா கோபாலன்

The post வீட்டை இயக்கும் கூகுள் ஹோம் செயலி appeared first on செல்லினம்.

பொன்மாலைப் பொழுது

Muthu Nedumaran talk

(இந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது) முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன், மே 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரையாற்ற இருக்கிறார்.

Muthu Nedumaran talk

ஒன்பது தளங்களில் லட்சக்கணக்காக நூல்களுடன் சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் செயல்படுகிறது. தமிழ் நூல்கள், குழந்தைகள் நூல்கள், ஆங்கில நூல்கள் என அனைத்தும் தனித்தனிப் பிரிவுகளாக உள்ளன. சொந்தமாகத் தங்களுடைய நூல்களை எடுத்துவந்து படிப்பதற்கென்றும் இங்கே இடம் உள்ளது. பார்வைச் சவால் கொண்டோருக்கான பிரிவு இந்நூலகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. இவர்கள் பயன்படுத்தத்தக்க வகையில் பிரெய்லி நூல்களும், குறுந்தட்டுகளும் இப்பிரிவில் உள்ளன. மேலும் இந்நூலகம் யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது.

நூலகத்துக்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும்பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நூலகம் நடத்துகிறது. வார இறுதி நாள்களில் நடத்தப்படும் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சி அதில் ஒன்று. துறைசார் வல்லுநர்கள், கலைஞர்கள் ஒரு தலைப்பில் உரையாற்றுவார்கள். மே 17 ஆம் தேதி, முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.

எழுத்துலா, எழுத்துருப் பயிலரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றின் வழியாக முத்து நெடுமாறன், இளம் தலைமுறையினர் எழுத்துருத் துறையில் அதிகம் பங்கெடுக்க ஊக்கமளித்து வருகிறார். எழுத்துருத் துறை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக எழுத்துருவின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “எழுத்துருவும் கதை சொல்லும்” என்கிற தலைப்பில் உரையாற்றப் போகிறார்.

மே 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கருத்தரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

The post பொன்மாலைப் பொழுது appeared first on செல்லினம்.

யாழ் வடிவில் உணர்ச்சிக்குறி

Apple Emoji

ஆப்பிளின் ஐஓஎஸ் 18.4 இயங்கு தளத்தில், தெறிக்கும் ஊதா வண்ணம், யாழ், காய்ந்த மரம் என எட்டு புதிய உணர்ச்சிக்குறி வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Apple Emoji

உணர்ச்சிக்குறி என்பவை மின்னணு தகவல் தொடர்பில் உணர்வுகளை, கருத்துக்களை அல்லது பொருள்களை வெளிப்படுத்தப் பயன்படும் சிறிய சின்னங்கள் ஆகும். இவை உரை அடிப்படையிலான செய்திகளை மேம்படுத்தக்கூடிய காட்சி வழித் தகவல் தொடர்பு முறையாகும். ஆரம்பக்காலத்தில் எளிமையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகத் தோன்றி, தற்போது பல்வேறு கருத்துக்களை அடையாளப்படுத்தும் வகையில் பரிணமித்துள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் நமது உணர்வுகளுக்கு வண்ணம் பூசும் தூரிகைகள்தாம் உணர்ச்சிக்குறிகள்.

இப்போது ஐஓஎஸ்18.4 இயங்குதளத்தில் புதிதாக எட்டு உணர்ச்சிக்குறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கண்களுக்குக் கீழே பைகள் கொண்ட முகம், கைரேகை, தெறிக்கும் ஊதா வண்ணம், வேர் காய்கறி, இலையற்ற மரம், யாழ், மண்வெட்டி, சார்க் கொடி என நீள்கிறது இந்த வரிசை. முதல் உணர்ச்சிக்குறி உங்கள் சோகத்தையும், சோர்வையும் உங்கள் நண்பர்களுக்குப் பகிர நிச்சயம் உதவும்.

பட்டியலில், இறுதியாக உள்ள உணர்ச்சிக்குறி சார்க் நாட்டின் தேசியக்கொடியாகும். சார்க் என்பது ஒரு தீவு நாடு. இது பிரான்ஸிற்கு அருகே அமைந்துள்ளது. வெறும் ஐந்நூறு மக்கள் மட்டுமே வசிக்கும் இந்நாட்டில் பல்வேறு வித்தியாசமான விதிகள் இருக்கின்றனவாம்.‌ இன்றுவரை இந்நாட்டில் மகிழுந்து ஓட்டுவதற்கு அனுமதி இல்லையாம். மாறாக இந்நாட்டு மக்கள் மிதிவண்டி, குதிரை வண்டியையே போக்குவரத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த புதிய உணர்ச்சிக்குறிகள் யூனிகோடின் செப்டம்பர் 2024 பரிந்துரைகளின் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர சில உணர்ச்சிக்குறிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நாம் அறிந்ததுதான். புதிய அரசாங்கம் பழைய தேசியக்கொடியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதைப் பின்பற்றிய ஆப்பிளும் புதிய அரசாங்கம் வெளியிட்டுள்ள கொடியைக் கொண்டுவந்துள்ளது.

பழைய கொடியில் மூன்று நிறப்பட்டைகள் இருந்தன. அவை முறையே சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகும். நடுவிலிருந்த வெள்ளை நிறப் பட்டையில் இரண்டு நட்சத்திரங்கள் இருந்தன. இப்போது உள்ள புதிய கொடியில் சிவப்பு நிறம் பச்சை நிறமாக மாற்றப்பட்டுள்ளது. அதோடு நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள புதிய உணர்ச்சிக்குறிகள் பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

  • மு.‌இசக்கிமுத்து

The post யாழ் வடிவில் உணர்ச்சிக்குறி appeared first on செல்லினம்.

கடவுச்சொல், நினைவில்கொள்

Microsoft Authenticator

கணினி, திறன்பேசிகளில் கடவுச்சொல்லைத் தானாக உள்ளிட்டுக் கொள்ளும்படி சேமித்து வைப்பது நம்மில் பலருக்கு வழக்கம். அதற்கு உதவும் மைகோசாப்ட் ஆதன்டிகேட்டர் செயலியில் இருந்து கடவுச்சொல் சேமிக்கும் வசதி, தானியங்கு நிரப்பு வசதியை நீக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது.

Microsoft Authenticator

உலகில் கிட்டத்தட்ட அனைத்தும் கணினி மயமாகிவிட்ட நிலையில், வலுவான கடவுச்சொல் மிக முக்கியமானது. இணையத்தில் பாதுகாப்பான பயன்பாடு அனுபவத்தைப் பெறக், கடினமான கடவுச்சொல்லை அமைத்தல், அடிக்கடி கடவுச் சொல்லை மாற்றுதல் போன்ற பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றி நாம் என்னதான் வலுவான கடவுச்சொல்லை வைத்திருந்தாலும், நம்மில் பலருக்கு இணையத்தில் தானியங்கு நிரப்பு (Autofill) அம்சத்தில் கடவுச்சொற்களைச் சேமிக்கும் வழக்கம் உண்டு. அதன்மூலம் ஒரே சொடுக்கில் நம் கணக்குகளுக்குள் நுழைய முடியும். பயன்பாட்டை எளிமையாக்கும் இந்த அம்சம் ஆபத்தானது என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் தன் கடவுச்சொல் சேமிப்பு அம்சத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 

இரட்டை நிலை அங்கீகாரம் 

நமது கடவுச்சொற்களை நாம் இணைய உலவிகளில் சேமித்து வைக்கிறோம். அதிலுள்ள தானியங்கு நிரப்பு அம்சம் மூலமாக ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் உள்ளிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக கணக்குகளுக்குள் நுழைகிறோம். ஆனால் இதே எளிமையான வழியைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களும் நமது தகவல்களைத் திருடிவிட முடியும். கடவுச்சொற்கள் கசிவதால் ஏற்படும் இந்த சவால்களை இரட்டை நிலை அங்கீகாரம் (Two Fator Verification) மிகச் சிறந்த வழியில் தடுக்கிறது. புதிய கணிப்பொறியில் நமது கணக்குக்குள் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்தால், ஒரு முறை பயன்படுத்தும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் ரகசியக் குறியீட்டுச் சொல் கேட்கப்படும். இதை வரைமுறைப்படுத்தும் புதிய செயலியாக மைக்ரோசாப்ட், ஆதன்டிகேட்டர் (Authenticator) என்ற செயலியைக் கொண்டு வந்தது. உயர் பாதுகாப்பு கோரும் தகவல்கள் அடங்கிய பயனர்களுக்கு இந்தச் செயலி பயனுள்ளதாக அமைந்தது. ஆனால் இதிலும் கடவுச்சொல் சேமிக்கும் வசதி அமைக்கப்பட்டிருந்தது. 

தற்போது ஆதன்டிகேட்டரில் இருந்து கடவுச்சொல் சேமிக்கும் வசதி, தானியங்கு நிரப்பு வசதியை நீக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. 2025 ஜூலை மாதத்துடன் இந்த அம்சங்கள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் அறிவிப்புப்படி ஜூன் மாதம் முதல் புதிய கடவுச்சொற்களை ஆதண்டிகேட்டர் செயலியில் சேமிக்க முடியாது. ஜூலை மாதம் தானியங்கு நிரப்பு அம்சம் நிறுத்தப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று தெரிய வருகிறது.

ஏன் இந்த மாற்றம்?

கடவுச்சொல் இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன் மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடவுச்சொல்லுக்கு பதிலாக ஒரு முறை பயன்படுத்தும் குறுஞ்செய்தி (OTP), நுழைவுக்குறி (Passkeys), முக அடையாளம், விரல்ரேகை உள்ளிட்ட உயிரளவியல் அம்சங்கள் (biometric) பயன்படுத்தப்படும். இதன் மூலம் கடவுச்சொல் இல்லாத பாதுகாப்பான இணைய அனுபவத்தை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் கடவுச்சொல் திருட்டு தவிர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

செய்ய வேண்டியது என்ன? 

நீங்கள் ஆதன்டிகேட்டர் செயலியைப் பயன்படுத்துவராக இருந்தால், விரைவில் அதில் சேமித்து வைத்திருக்கும் கடவுச்சொற்களை உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆதன்டிகேட்டர் செயலிக்கு நிகரான கடவுச்சொல் நினைவுச் சேவையை, மைக்ரோசாப்ட் எட்ஜ் வழங்குகிறது. தரவிறக்கி வைத்திருக்கும் தகவல்களை எட்ஜுக்குள் தரவேற்றலாம். இதனால் எட்ஜ் வழங்கும் தடையற்ற கடவுச்சொல் மேலாண்மை வசதியைப் பெறலாம். அதேபோல் இணையத்தில் கடவுச்சொல் மேலாண்மைக்கு தனியார் செயலிகளும், மென்பொறிகளும் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் பொதுவாக கடவுச்சொற்களைப் பொருத்தளவில் தானியங்கு சேமிப்பு வசதிகள் எதனிலும் சேமிக்காமல் இருப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள். 

ஆதன்டிகேட்டர் என்ன ஆகும்? 

கடவுச்சொற்களைச் சேமிக்கும் வசதி மட்டும்தான் ஆதன்டிகேட்டர் செயலியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஆதன்டிகேட்டர், இரட்டை நிலை அங்கீகாரம் (Two Factor Verification), நுழைவுக் குறிகள் (Pass Key), ஒற்றைத்தொடுதல் அங்கீகாரம் (One – Tap Verification) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக வழங்கும். இதனால் அந்தச் செயலியை நீக்க வேண்டிய அவசியம் கிடையாது. மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள இம்மாற்றம், கடவுச்சொல் சேமிப்பு வசதியைப் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு சிரமம் ஏற்படுத்தும்போதிலும், இணையத் தரவுகளின் அடுத்தகட்ட பாதுகாப்பு நோக்கம் அவசியமானது. உங்கள் கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் பயன்படுத்தும் இணைய உலவி உட்பட எந்த இடத்திலும் அதைச் சேமிக்காமல் இருப்பதும், அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதும் பயனளிக்கும். 

  • விவேக்பாரதி

ஆதன்டிகேட்டர் செயலியில் நீக்கம் குறித்த செய்தி

The post கடவுச்சொல், நினைவில்கொள் appeared first on செல்லினம்.

சென்னையில் எழுத்துருப் பயிலரங்கம்

Tamil Font Studio

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் முன்னெடுப்பில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மே 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழ் எழுத்துருப் பயிலரங்கமும் கருத்தரங்கமும் நடக்கவுள்ளன.

Tamil Font Studio

ரோஜா முத்தையா நூலகம், ஒண்மை அறவாரியத்தின் ஆதரவில், தமிழ் எழுத்துருக்களை உருவாக்குவதற்கென்றே கடந்தாண்டு ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. அதன் திறப்பு விழாவுடன் எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்தியாவில் எழுத்துருத் துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இயக்கமாக இத்துறை ஆர்வலர்களுடன் சேர்ந்து பயணம் செய்யும் வகையிலும் எழுத்துலா நடத்தப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு மீண்டும் ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இரு நாள் நிகழ்வில் ஒரு நாள் எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் மறுநாள் எழுத்துரு பற்றிய கருத்தரங்கமும் திட்டமிடப்பட்டுள்ளன.

மே 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் பயிலரங்கில் தமிழ் எழுத்துரு உருவாக்கும் வழிகளைப் படிப்படியாகக் கற்பிக்க உள்ளனர் வல்லுநர்கள். தமிழ் எழுத்துரு வல்லுநரும், முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனருமான முத்து நெடுமாறன் இப்பயிற்சியை வழங்குகிறார். மேக் கணினியுடன் கொஞ்சம் படைப்பாற்றலும் இருந்தால் போதும். ஆர்வமும் இருப்போர் பதிவு செய்துகொள்ளலாம். தனிக் கவனம் எடுத்துச் சொல்லிக் கொடுக்கப்போவதால் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே இடம். மேலும் அன்றைக்கு, “வாழும் வரிவடிவம் : எழுத்துருவியல் நுட்பத்தின் முன்னனியில் தமிழ்” என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் உரையாற்றுகிறார்.

மே, 17ஆம் தேதி சனிக்கிழமை நிகழ்வு தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்குமானது. இத்துறையில் தற்போதுள்ள முன்னேற்றம், சவால்கள், எதிர்காலத் தேவைகள், வாய்ப்புகள் குறித்துப் பேசவிருக்கிறார்கள். “தமிழ் வரிவடிவம் : தொன்மையின் தொடர்ச்சி” என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற இந்தியக் குடிமைப்பணி அதிகாரி ஆர். பாலகிருஷ்ணனும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் தலைவர் சுந்தர் கணேசனும் உரையாற்றவுள்ளனர். காலிகிராபி பற்றி பேராசிரியர் ஜி.வி. ஸ்ரீகுமார் உரை வழங்கவுள்ளார்.

இதோடு முடியவில்லை. விருந்து முடியும்போது வழங்கும் பாயாசம் மாதிரி, இதே நாளில் “பொன்மாலைப் பொழுது” நிகழ்ச்சியை அண்ணா நூற்றாண்டு நூலகம் ஏற்பாடு செய்துள்ளது. நூலகத்தின் தரைத்தளத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் மே 17ஆம் தேதி, மாலை ஆறு மணியளவில் இந்நிகழ்ச்சி தொடங்கும். “எழுத்துருவும் கதை சொல்லும்” என்கிற தலைப்பில் முத்து நெடுமாறன் பேசவிருக்கிறார்.

16ஆம் தேதி பயிலரங்கத்துக்கு முன்பதிவு செய்வது அவசியம். 17ஆம் தேதி நிகழ்ச்சியில் அனைவரும் முன்பதிவின்றி கலந்துகொள்ளலாம்.

முன்பதிவுக்கு விரைக.

The post சென்னையில் எழுத்துருப் பயிலரங்கம் appeared first on செல்லினம்.

கூகுள் போட்டோஸ் : தேடல் எளிது

Google photos

நம்மில் பெரும்பாலானோர் படங்களைச் சேமித்து வைக்க கூகுள் போட்டோஸ் பயன்படுத்துகிறோம். அதிலிருந்து யாருக்காவது குறிப்பிட்ட படங்களை அனுப்ப நேரும்போது அவற்றைத் தேடுவதற்காகவே நீண்ட நேரம் திரையைத் துழாவி அவதிப்பட்டிருப்போம். அந்தத் தொல்லை இனி இல்லை என்கிறது கூகுள். எப்படி? 

Google photos

காலம் கடந்து நிற்கும் நினைவுப் படங்களை முன்னர் புகைப்படத் தொகுப்புகள் சேமித்து வைத்திருந்தன. இப்போது எல்லாருக்கும் கூகுள் போட்டோஸ் செயலிதான். நம் திறன்பேசியில் கிளிக் என்று எடுக்கும் ஒளிப்படம், கண்ணிமைக்கும் நேரத்தில் கூகுள் டிரைவில் சேமிக்கப்படுகிறது. பின் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்க இணையத்திலேயே பத்திரமாய் இருக்கிறது. மக்கள் இதைப் பயன்படுத்தும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கும் கூகுள் நிறுவனமும் அவ்வப்போது புதிய சிறப்பம்சங்களை இதில் அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. ஆண்டு, மாதம், நாள் அடிப்படையில் படங்களைச் சேமித்தல், நினைவூட்டல், ஒரே நபர்களை அடையாளம் கண்டு தனியாக தொகுத்து வைத்தல், பின்னணி உட்பட படத்தில் எதையும் எளிதில் திருத்துதல் எனப் பல மேம்படுத்தல்கள் வந்துள்ளன. 

கூகுள் அப்படி ஒரு சிறப்பு மேம்படுத்தலைத் தன் போட்டோ பிக்கர் அம்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் போட்டோஸில் இருந்து படங்களைப் பகிரும்போது குறிப்பிட்ட படத்தைத் தேர்ந்தெடுப்பது சிரமமாக இருந்தது. ஆயிரக் கணக்கில் படங்கள் இருந்தால், நீண்ட நேரம் திரையை துழாவித் துழாவிச் சென்று எடுக்க வேண்டியிருந்தது. இதை போட்டோ பிக்கரின் புதிய அம்சம் மாற்றியுள்ளது.

கூகுள் போட்டோஸ் செயலியில் பதிவேற்றப்படும் படங்களின் தன்மைகளைப் புரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் இதற்கு உதவி செய்கிறது. அதாவது, நாம் திறன்பேசியில் தட்டச்சு செய்யும் இடத்தில் எமோஜிகளைத் தேடும் தேடல் பட்டை  இருப்பதுபோல போட்டோ பிக்கர் இடத்திலும் தேடல் பட்டை அமைக்கப்பட்டுள்ளது. அதில் “கார்” “பிறந்தநாள்” என்பது போன்ற குறிப்புச் சொற்களை நாம் உள்ளிட்டுத் தேடினால் அதற்குத் தொடர்புள்ள படங்களை போட்டோ பிக்கர் தனியே பிரித்துக் காட்டிவிடுகிறது. இப்புதிய தேடுதல் அம்சம் கூகுள் போட்டோஸ் பயன்பாட்டை மிகவும் எளிமை ஆக்கியிருக்கிறது. 

இத்தேடுதல் அம்சத்தால் பயனர்கள் ஆயிரக்கணான படங்களில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் விரைந்து எடுத்துவிட முடியும். பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலிகளை விட்டு வெளியேறாமல் படங்களை அனுப்பிவிட முடியும். கூகுளின் செயற்கை நுண்ணறிவு இந்த வேலையைத் துல்லியமாகச் செய்வதால் தனிப்பயனாக்கம் சிறந்த முறையில் நிகழ்கிறது. 

தற்போது வரை கூகுள் பிளே சிஸ்டம் வழியாக கூகுள் போட்டோஸை மேம்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே இவ்வம்சம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் புதிய ஆண்டிராய்டு மேம்படுத்தலில் அனைவருக்கும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் பிக்ஸல் மற்றும் சாம்சங் கருவிகளில் சோதனை நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் புகைப்பட தொகுப்புகள், கோப்புகள் பகிரப்படுவது, சமூக ஊடகப் பயன்பாடுகள் போன்றவை எளிமையாகிறது. நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கூகுள் இயல்பாக தரும் 15 ஜிபி நினைவகத்தையும் கடந்து பல ஜிபிகளுக்கு புகைப்படங்களைச் சேமித்து வைத்திருக்கும் பயனர்களுக்கு, இப்புதிய அறிமுகம் மிகுந்த பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

  • விவேக்பாரதி

கூகுள் போட்டோ பிக்கரின் தேடல் குறித்த செய்தி

The post கூகுள் போட்டோஸ் : தேடல் எளிது appeared first on செல்லினம்.

சொற்கட்டளையில் உருவாகும் காணொளி

AI

கூகுள் தனது ஜெமினி செயலி மற்றும் விஸ்க் எனும் பரிசோதனை கருவியின் உதவியுடன், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு காணொளி உருவாக்கும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பங்கள், கூகுள் டீப் மைண்ட் உருவாக்கிய “வியூ 2” எனும் காணொளி உருவாக்கும் மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை.

AI

ஏற்கெனவே இருக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, புதிதாக உருவாக்கும் திறனுடைய தொழில்நுட்பமான செய்யறிவு நட்பம் (Generative AI) உலகம் முழுக்க வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் கூகுள்  உருவாக்கிய வியூ 2, நாம் தரும் கட்டளையைக்கொண்டு தரம் வாய்ந்த காணொளிகளை உருவாக்கும் திறன் பெற்றது. எளிமையாக சொன்னால், நாம் என்ன  கற்பனை செய்கிறோமோ அதைச் சொற்களில் விவரித்தாலே வியூ 2  ஒரு காணொளியாக்கி காட்டும். யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) உட்பட பல சுருக்கமான காணொளி வடிவங்களுக்கு இது அடிப்படையாக விளங்குகிறது. இதன் மூலம், 8 விநாடி நீளமுடைய 720p தரமான, 16:9 விகிதத்தில் MP4 வடிவில் காணொளிகளை உருவாக்க முடிகிறது. இயற்கை காட்சிகள், திரைப்பட இயக்கம், காணொளிக்கருவி சுழற்சி போன்ற தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய காணொளிகளை விரைவாக உருவாக்கும் திறன் பெற்றது இந்த தொழில்நுட்பம்.

தூண்டுதல்களின் விவரங்களை புரிந்து கொண்டு, அவற்றை காணொளி உருவாக்கத்திற்கான பொருண்மை வரைபடமாக (semantic blueprint) மாற்றும் விஸ்க் ஒரு இயந்திரக் கற்றல் மாதிரியாக செயல்பட்டுகிறது. திரைப்பட இயக்கம், ஒளி அமைப்பு, காட்சி சூழல் போன்ற அம்சங்களை துல்லியமாக திட்டமிடுகிறது. தற்போது கூகிள் ஒன்ஏ ஐ பிரிமியம் (Google One AI Premium) சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் விஸ்க், உரையிலிருந்தும் (text-to-video) படங்களிலிருந்தும் (image-to-video) காணொளி உருவாக்குவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. விஸ்க் மற்றும் வீயூ 2 சேர்ந்து கலைமிக்க, அறிவுபூர்வமான காணொளிகளை உருவாக்குகின்றன.

இந்த சேவையை கூகிள் ஜெமினி அட்வான்ஸ்டு (Google Gemini Advanced) பயனர்கள் இணையம் மற்றும் திறன்பேசி  வாயிலாகப் பெற முடிகிறது. பயனர்கள் தெளிவான கட்டளைகளை வழங்கினால், அதற்கேற்ப பொருத்தமான காணொளிகளை உருவாக்குகிறது. வியூ 2 மூலம் உருவாக்கப்படும் அனைத்து காணொளிகளும், அவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை தெரிவிக்க ஒவ்வொரு காட்சியிலும் “சிந்த்ஐடி”  (SynthID) எனப்படும் கணிம முத்திரை பதிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, நாம் “பனிக்காற்றில் ஓடும் ஒரு முயல் ” என ஒரு உரைக் கட்டளையை வழங்கினால், அதனடிப்படையில் இயற்கையான பனிவிழும் சூழலில் முயல் இயல்பாக ஓடுவது போன்ற திரைப்படத்  தர காட்சியுடன் கூடிய காணொளி உருவாகும். ஒரு காணொளிக்கருவி இல்லாமல், திரைக்கதை எழுதாமல், வெறும் சொற்கள் மூலம் திரைப்படத்தின்  தரத்திற்கு காட்சிகளை உருவாக்க முடியும் என்ற புரட்சியை, கூகுள் தங்களின் விஸ்க் மற்றும் வியூ 2 போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இன்று நடைமுறையில் கொண்டு வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவின் உதவியால் உங்கள் கற்பனையை சொற்களில் பதித்து காணொளி உருவாக்கிப்பயன்பெறலாம்.

  • நவீனா

The post சொற்கட்டளையில் உருவாகும் காணொளி appeared first on செல்லினம்.

சகலகலா சாட்ஜிபிடி

ChatGPT shopping

இணைய உலகின் அண்மைக்காலச் செல்லக்குட்டியான சாட்ஜிபிடியில் பல புதிய அம்சங்களை ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே சகலகலா வல்லவனாக இருக்கும் சாட்ஜிபிடியின் அடுத்தடுத்த புதிய அம்சங்களும், அதுகுறித்துப் பரவும் அனுமானங்களும் வியப்பூட்டுகின்றன. 

ChatGPT shopping

மனித வாழ்க்கையைக் கணினிகள் மிக நெருக்கமாக புரிந்து கொண்டு உதவத் தொடங்கிவிட்டன. நண்பனாய், நல்லாசிரியராய் பதவி வகித்துக்கொண்டிருக்கும் இணையதளம், தன் அரியாசனத்தில் அடுத்ததாக செயற்கை நுண்ணறிவை அமரச் செய்திருக்கிறது. அதன் செயல்பாடுகள், நம் பணிகளை நாளுக்கு நாள் இலகுவாக்கி வருகின்றன. கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் தொடங்கி, படம் வரைவது, வரைவுகளை உருவாக்கித் தருவது, கட்டுரைகள், கதைகள் எழுதுவது, பரிந்துரைகள் வழங்குவது என்று செயற்கை நுண்ணறிவின் மொழிமாதிரியான சாட்ஜிபிடி செய்யாத காரியமே இல்லை. அது இப்போது அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

எதை வாங்கலாம்? சாட்ஜிபிடி!  

இனி நாம் பொருள்களை வாங்குவதற்கும் சிறந்த பரிந்துரைகளை சாட்ஜிபிடி தந்து உதவப்போகிறது. இணையத்தில் பொதுவாக நாம் வாங்க வேண்டும் என்று நினைக்கும் பொருளைப் பற்றி தேடுபொறிகளில் தேடுவோம். உடனே கூகுளில் விளம்பரப்படுத்தியுள்ள நிறுவனங்களின் தயாரிப்புகள் முன்னே வந்து நிற்கும். விளம்பர அடிப்படையில் இந்த உதவியைத் தேடுபொறிகள் செய்துகொண்டிருக்க, விளம்பரமில்லாப் பரிந்துரைகளை சாட்ஜிபிடி வழங்கவுள்ளது. நமக்காக இணையதளத்தைத் துழாவி, எதற்கு எது சிறந்தது என்று எடுத்து வைக்கிறது. தன் பரிந்துரைகள் மட்டுமன்றி, விலையுடன் கூடிய தகவல்கள், மதிப்பீடுகள், வாங்குவதற்கான இணையதள சுட்டிகள் என அனைத்தையும் சாட்ஜிபிடி நமக்கு வழங்கிவிடும். விரும்பிய பொருள்களில் சிறந்ததைப் பெற நாம் மதிப்பீடுகளைத் தேடி அலையத் தேவையில்லை. 

கூடுதல் அம்சமாக பயனர்களின் தனிப்பயனாக்கத்தை சாட்ஜிபிடி நினைவில் வைத்துக் கொள்வதால் பிடித்த நிறம், பிடித்த வகை போன்றவற்றுக்குப் பரிந்துரைகளில் முன்னுரிமை கொடுக்கப்படும். உலகப் பயனர்கள் அனைவருக்கும் திறக்கப்பட்டிருக்கும் இந்த அம்சத்தைக் கணக்கு தொடங்காமலும் யன்படுத்திக் கொள்ளலாம் என்று ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறுகிறது. 

வாட்சாப்-ல் பேசலாம் சாட்ஜிபிடி!

சாட்ஜிபிடியில் கொண்டு வரப்பட்டிருக்கும் முதல் அம்சமே பயனர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். இந்நிலையில், அடுத்தகட்டமாக அதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்சாப் செயலிக்குள்ளும் கொண்டு வந்துவிட்டது ஓபப்ன்ஏஐ. சாட்ஜிபிடிக்கு என்று தனித்துவமான அழைப்பிலக்கம் உள்ளது. (+1-800-242-8478) அதைச் சேமித்து வைத்துக்கொண்டு, அன்றாட செய்திகள் முதல் கிரிக்கெட் ஸ்கோர் நிலவரங்கள் வரை எதை வேண்டுமானாலும் உடனுக்குடன் கேட்டுப் பெறலாம். ஒரு படத்தை அனுப்பி விளக்கம் கேட்பது, குரல் வழிப் பதிவாகத் தகவல்களைக் கேட்டுப் பெறுதல் என அனைத்திற்கும் இந்தப் புதிய அம்சம் இடமளிக்கிறது. தனிச் செயலியாக உள்ள சாட்ஜிபிடியை வாட்சாப்புக்குள் கொண்டு வந்தது, மக்கள் பயன்பாட்டில் புதிய அணுக்கத்தை உருவாக்குகிறது. 

இது எப்படிச் சாத்தியமானது? 

உலகப் பயனர்களின் அனுபவத்தை மிக எளிமை ஆக்கியிருக்கும் இவ்விரண்டு மேம்படுத்தல்களுக்கான காரணத்தையும் ஓபன் ஏஐ கூறுகிறது. கேட்கப்படும் கேள்விக்கு, கட்டளைக்கு இணையத்தில் விடை தேடும் சாட்ஜிபிடி, பொதுவாகத் தான் துழாவிய இடங்களை எல்லாம் மேற்கோள் காட்டும். தற்போது, அதிக மேற்கோள்களைக் காட்டும் வகையில், அந்தத் தொழில்நுட்பத்தை இதில் மேம்படுத்தியுள்ளனர். அந்த விரிவாக்கமே இவ்வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்கிறார்கள். இதன்மூலம் சாட்ஜிபிடி வெறும் உரையாடல் மாதிரியாக மட்டுமல்லாமல் பயனரின் உதவியாளராக, திறன்மிக்க வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார்கள். 

கூகுள் கிரோமில் சாட் ஜிபிடி?

ஓப்பன்ஏஐ மேற்கொண்டுவரும் இந்த முயற்சிகள் அனைத்தும், கூகுள் குரோமை வாங்கும் நோக்கில் நிகழ்த்தப்படுவதாக கருதப்படுகிறது. கூகுள் தன் குரோம் உலவியை விற்கும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதை ஓப்பன்ஏஐ வாங்கிக் கொண்டால் எப்படி மைக்ரோசாப்ட் தன் எட்ஜ் உலவியில் கோபைலட் செயற்கை நுண்ணறிவைத் தகவமைத்துப் பயன்பாட்டை மேம்படுத்தியதோ அதற்கு நிகரான மாற்றங்கள் குரோமிலும் நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குரோம் பயன்பாட்டை இன்னும் எளிய தளத்திற்கு உயர்த்தும் என்றும் இணைய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  • விவேக்பாரதி

ஓபன் ஏஐ நிறுவனத்தின் அறிவிப்பு

வாட்ஸ்ஆப்பில் சாட்ஜிபிடி குறித்த செய்தி

சாட்ஜிபிடியின் பரிந்துரைகள் குறித்த செய்தி

The post சகலகலா சாட்ஜிபிடி appeared first on செல்லினம்.

தமிழில் பெயர் வைப்போம்

Tamil name

மலேசியத் தமிழ்க் கணினி வல்லுநர் முகிலன் முருகன்,  மே முதல் தேதி அன்று தமிழ்ப்பெயர் இணையச்செயலியின் இலவச முன்னோட்டப் பதிப்பை வெளியிட்டுள்ளார். 

Tamil name

முகிலன், தமிழ்ச் கணினித் துறையில் இருபத்தைந்தாண்டுகள் அனுபவம் கொண்டவர். செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் மொழியியல் துறையிலும் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செய்து வருகிறார். தமிழை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் வகையிலான தளங்களை உருவாக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மொழி தொடர்பான திட்டப்பணிகளைச் செயல்படுத்தியுள்ளார். மொழி என்கிற விளையாட்டு செயலிகள் தளத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன.

மலேசிய பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையுடன் இணைந்து இயங்கிவருகிறார். பல செயலிகள் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகின்றன. தற்போது அறிமுகமாகியுள்ள தமிழ்ப் பெயர்கள் செயலியும் மொழியியல் வல்லுநர்கள் ஆலோசனையுடனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடனும் உருவாகியுள்ளது.

அவரைத் தொடர்பு கொண்டு புதிய செயலி பற்றிப் பேசினோம். “நிறைய பேருக்குத் தமிழில் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் சுருக்கமான எளிமையான பெயர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை தாம் விரும்பும்படி நவீன காலத்துக்கு ஏற்றதாக இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் எண் கணிதம், ஜோதிடம் இவற்றில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கின்றனர். இப்படி எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.

நம்பிக்கை இருப்போர், குழந்தையின் பிறந்த தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்தால் நட்சத்திரம், ராசி உள்ளிட்ட தகவல்களுடன் எந்த முதல் எழுத்தில் தொடங்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடும். பெயர்களையும் பரிந்துரைக்கும். எண்கணித முறைப்படியும் பெயர்களை வழங்கும். இவற்றில் நம்பிக்கை இல்லாதோர் நேரடியாக உள்ளே சென்று பெயர்களைத் தேடலாம்.

தேர்ந்தெடுக்கும் பெயர்களுக்கு உரிய பொருளையும், சிறப்புக் கூறுகளையும் வரலாற்றில் பதிந்த பெயர் எனில் அந்தத் தகவலையும் கொடுக்கும். இச்செயலி, செயற்கை நுண்ணறிவு நுட்பத்திறன் மூலம் இயங்கும். தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் உள்ளது. எனவே இளைய தலைமுறையினரும் ஆர்வமாகப் பயன்படுத்துவர். 60,000க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெயர்கள் இத்தளத்தில் உள்ளன. ” என்று தெரிவித்தார்.

கீழே இணைப்பைக் கொடுத்திருக்கிறோம். பயன்படுத்திப் பாருங்கள்.

tamilname இணையத்தள முகவரி

மொழி விளையாட்டுகள்

The post தமிழில் பெயர் வைப்போம் appeared first on செல்லினம்.

எல்ஜி பயனர்கள் கவனத்திற்கு

LG phone

திறன்பேசிகளின் தொடக்க காலத்தில், கோலோச்சியிருந்த எல்.ஜி நிறுவனம், தனது உற்பத்தியை அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொண்டது. இப்போது அதன் பயனர்கள் செய்துகொள்ள வேண்டிய முக்கியமானபணி ஒன்று மீதம் இருக்கிறது. என்ன தெரியுமா?

LG phone

உலகளாவிய திறன்பேசி சந்தையில் ஒரு காலத்தில் எல்.ஜி நிறுவனம் தனித்துவமான இடத்தைக் கொண்டிருந்தது. அதன் வெல்வெட், விங் போன்ற ரகங்கள் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தன. தொழில்நுட்ப தரத்திலும், வடிவமைப்பிலும் தனித்தன்மையோடு திகழ்ந்தன. சிறப்பான காட்சித்திறன், ஒலித்திறன்களோடு இருந்தன. குறிப்பாக 2010 முதல் 2015 வரையிலான காலத்தில் எல்ஜியின் ஜி மற்றும் வி ரக திறன்பேசிகள் அதிகம் விற்பனையாகின. வலுவான மென்பொருள் ஆதரவுக்கு எல்ஜி புகழ்பெற்றிருந்தது. ஆனாலும் அதன் பின் நிகழ்ந்த போட்டிகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் எல்ஜி திறன்பேசிகள் திணறின. 

புதுப்புது அறிமுகங்களும், அதில் கொண்டுவரப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்தல்களும் எல்ஜிக்கு நெருக்கடியாக அமைந்தன. அதன் விளைவாக 2021-ம் ஆண்டு, அந்நிறுவனம் பெரும் முடிவு ஒன்றை எடுத்தது. தனது திறன்பேசிப் பிரிவை முற்றிலுமாக மூடுவதாக எல்ஜி அறிவித்தது. இனி எல்ஜி திறன்பேசிகள் உற்பத்தி ஆகாது என்ற நிலை உருவானது. குளிர்சாதனங்கள், சலவை இயந்திரம், தொலைக்காட்சி போன்ற மற்ற மின்சாதன பொருள்களின் சந்தையில் சற்றும் குறைவின்றி தன் இடத்தை வெற்றிகரமாக தக்க வைத்திருந்த எல்ஜி, திறன்பேசியில் சறுக்கியதால் இம்முடிவை எடுத்தது. ஆனால் அப்போதும் பயனர்களை முற்றிலுமாக கைவிட்டுவிடவில்லை எல்ஜி. 

திறன்பேசி உற்பத்தியை முற்றிலுமாக மூடிவிட்டாலும், பயனர்கள் நலன் கருதி தேவையான காலக்கெடுவினை வழங்கியது. அதாவது, 2019-க்கு பிறகு வெளியான முக்கியமான திறன்பேசிகளான எல்ஜி வெல்வெட், விங் மற்றும் ஜி, வி தொடர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் வழங்கப்படும் என்று எல்ஜி அறிவித்தது. அந்த காலக்கெடு, இந்தாண்டு ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், எல்ஜி பயனர்கள் செய்துகொள்ள வேண்டிய முக்கியப் பணிக்கான நேரம் நெருங்கிவிட்டது. 

பயனர்கள், ஜூன் 30 2025-க்குள் எல்ஜி திறன்பேசியில் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன ஆண்டிராய்டு அம்சம் வரை தரவிறக்கி, உட்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஜூன் 30-க்குப் பிறகு எந்தவித மேம்படுத்தலோ, பாதுகாப்பு புதுப்பிப்புகளோ வழங்கப்பட மாட்டாது. அதேபோல், கணிப்பொறியுடன் எல்ஜி திறன்பேசிகளை இணைக்கும் தனித்துவமான மென்பொருளான எல்.ஜி பிரிஜ் சேவையையும் இதே காலக்கெடுவுடன் நிறுத்திக் கொள்ள எல்ஜி திட்டமிட்டுள்ளது.  

தனித்துவமான பயனர் இடைமுகம் (User Interface) வழங்குதல் உள்ளிட பல நவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக இருந்த எல்ஜி திறன்பேசி, இனி முற்றிலும் வரலாற்றின் அங்கமாகப் போகிறது.

  • விவேக்பாரதி

எல்ஜியின் மேம்படுத்தல் குறித்த உத்தரவாதம்

எல்ஜியின் அவகாசம் முடிவடைவது குறித்த செய்தி

The post எல்ஜி பயனர்கள் கவனத்திற்கு appeared first on செல்லினம்.

திறக்காத ஆண்டிராய்டு பூட்டு

30 April 2025 at 13:30
Android 16

ஆண்டிராய்டு 16 இயங்குதளத்தில், திறன்பேசிகளின் பூட்டுத்திரையில் யூஎஸ்பி வழியாகப் பரிமாற்றம் செய்வதை தடுக்கும் அம்சம் கொண்டுவரப்படவுள்ளது.

Android 16

ஆண்டிராய்டு 16 இயங்குதளம் வருகின்ற ஜூன் 3 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இதற்கான முன்னோட்டம் வெளியானதிலிருந்தே பயனர்கள் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இதன் பீட்டா 4 இயங்குதளம், பயனர்களின் கருத்துகளைப் பெறுவதற்காகக் கூகுள் பிக்சல் திறன்பேசிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் தங்கள் பலதரப்பட்ட கருத்துகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருகின்றனர். இவற்றையெல்லாம் கொண்டு மேம்படுத்தப்பட்ட வடிவமே அதிகாரப்பூர்வ வெளியீட்டின்போது வெளியாகும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், முன்னோட்டத்தில் வெளியான அம்சங்கள் பலவும் பயனர்களுக்குக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் பூட்டுத்திரையில் யூஎஸ்பி மூலம் தரவுகளைப் பரிமாற்றுவதைத் தடுக்கும் அம்சம். இது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழ வாய்ப்புள்ளது. பொதுவாகப் பலர் தங்கள் கருவிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தெரியாதவர்கள் வழங்கும் யூஎஸ்பிக்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர்.

ஏனெனில் அதில் ஏதேனும் துணைபொருள்கள் இருந்தால் உங்கள் கருவியின் தரவுகள் திருடப்படும் வாய்ப்புள்ளது. ஆண்டிராய்டு திறன்பேசிகளைப் பொறுத்தவரை, பூட்டுத்திரையிலும் அதனோடு யூஎஸ்பி இணைத்துப் பயன்படுத்த முடியும். ஒருவேளை உங்கள் திறன்பேசி திருடப்பட்டாலோ அல்லது காணாமல்போனாலோ கூட யூஎஸ்பியோடு இணைக்க முடியும்.

அவ்வாறு செய்தால் உங்கள் ஆண்டிராய்டு திறன்பேசியைத் திறக்காமலே அதன் தரவுகளை வேறொரு கருவிக்குப் பரிமாற்றம் செய்து அதனைப் பயன்படுத்த முடியும். இதனைத் தடுக்க முக்கியமான வழிகள் விரலியின் (Pen Drive) தரவு அலைகளை நிறுத்துவதும், பூட்டுத்திரையில் அதனை இணைக்க முடியாதவாறு தடுப்பதுமே ஆகும். இதற்காகத்தான் மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது செயல்படுத்தப்பட்டால் பூட்டுத்திரையில் யூஎஸ்பியோடு இணைக்க முடியாது. இணைக்கப்பட்ட பிறகு திரை அணைக்கப்பட்டாலும் பரிமாற்றம் தடுக்கப்படும்.

இதற்கு முன்னர் ஆண்டிராய்டு 12 இயங்குதளத்தில், யூஎஸ்பி தரவு அலைகளை முடக்கும் வகையிலான அம்சம் ஒன்று கொண்டுவரப்பட்டது. ஆனால் அது பயனர்களின் கரங்களை நேரடியாகச் சென்று சேரவில்லை. அதன்பின்னர் ஆண்டிராய்டு 15 இயங்குதளத்திலும் கூட அதன் நிலை மேம்படவில்லை. இப்போது இந்த மேம்பட்ட பாதுகாப்பு அம்சத்தை அனைத்து பயனர்களும் பயன்படுத்த முடியும். இதனைச் செயல்படுத்தினால் அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க முடியும். தரவுகளைப் பரிமாற்றம் செய்யும்பொழுது அதன் இயங்குநிலை தரவுகளைப் பாதுகாக்கும் நினைவக குறியிடல் நீட்டிப்பு அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இவை சிறிய மாற்றங்களாக இருந்தாலும் பயனர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.

  • மு. இசக்கிமுத்து.

The post திறக்காத ஆண்டிராய்டு பூட்டு appeared first on செல்லினம்.

உலகின் லேசான ஐபோன்

apple air

உலகின் மிக மெல்லிய திறன்பேசியாக ஐபோன் 17 ஏர் உருவாக இருப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும், தொழில்நுட்ப ஆர்வலர்களும் விமர்சகர்களும் அதுகுறித்த பல்வேறு ஆரூடங்களைக் கூறி வருகின்றனர். 

apple air

ஆப்பிள் தங்கள் திறன்பேசிகளில் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு புதுமையை, மேம்படுத்தலை, அறிமுகத்தைச் செய்துகொண்டே வருகிறது. செப்டம்பர் வந்தாலே புது ஐபோன் வெளியாகும் என்ற வழக்கத்திற்கு மக்கள் பழகிவிட்டார்கள். இதுவே ஆண்டுதோறும் ஆப்பிளின் அடுத்த அறிமுகம் என்ன என்று சந்தைக்குள் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் 2025-ம் ஆண்டுக்கான ஐபோன் எது என்ற விவாதத்தில் ஆர்வத்தைத் தூண்டும் பல வதந்திகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

மிக மெல்லிய ஐபோன் 

ஆப்பிள் நிறுவனம் 2025-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் போகும் திறன்பேசி வரிசை ஐபோன் 17. அது மிக மெல்லிய திறன்பேசியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, இதுவரை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் எஸ்.ஈ (Iphone SE) ரகங்களை விட மெல்லியதாக இருக்கும் எனப் பேசப்படுகிறது. ‘ஐபோன் 17 ஏர்’ (Iphone 17 Air) என்று அந்த மாதிரிக்கு பெயர் வைக்க வாய்ப்புள்ளதாம். வெறும் 5.5 மில்லிமீட்டர் தடிமன் மட்டுமே கொண்ட லேசான திறன்பேசியாக அதை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருகிறதாம். 

புதிய, பலமான வடிவமைப்பு 

ஐபோன் 17 ஏர் மாதிரியில் யுஎஸ்பி சி (USB C) வசதியுடன் மின்னேற்றி வழங்கப்படுகிறது என்றும், நீடித்து உழைக்கும் மின்கலம் இதில் பொருத்தப்படும் என்றும் சொல்கிறார்கள். அதனால் ஐபோன் 16 வரை உள்ள மாடல்களின் அதே திறன் மற்றும் அதிகப்படியான மின்கல ஆயுளுடன் ஐபோன் 17 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்லிய கணிப்பொறிகளின் புதிய அத்தியாயம்

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் மடிக்கணினி உலகில் மிக மெல்லியதான மேக்புக் ஏரை அறிமுகப்படுத்தி தனியிடம் பிடித்திருக்கிறது. இப்போது திறன்பேசியிலும் மெல்லிய மாதிரியைக் கொண்டு வந்து புதிய அத்தியாயத்துக்கு வித்திடும் என்கிறார்கள் தொழில்நுட்ப ஆர்வலர்கள். இந்த ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 மேக்ஸ் என 3 விதமாகஅறிமுகமாகும் என்பது வரைக்கும் இவர்கள் அடித்துக் கூறுகிறார்கள். மேலும் தற்போதுள்ள தகவல்கள்படி இதன் விலை 900 யூரோ முதல் 1,300 யூரோ வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. 

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். அந்த உலகளவையும் கைப்பிடிக்கும் மெல்லியதாய்ச் சுருக்கப் போகும் ஐபோனின் அடுத்த படைப்புக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

  • விவேக்பாரதி

மெல்லிய ஐபோன் – தொழில்நுட்ப ஆர்வலர்களின் விமர்சனங்கள்

The post உலகின் லேசான ஐபோன் appeared first on செல்லினம்.

நான் முதல்வன்

Naan Mudhalvan IAS

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வுகளில் இந்த ஆண்டு (2024-2025) தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதில், 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற்றவர்களாவர். இவர்களில் 18 மாணவர்கள் ‘நான் முதல்வன்’ உறைவிடப் பயிற்சி மையங்களின் பயனாளிகள். இத்திட்டத்தில் பயன்பெறுவோர்க்குத் தனித்துவமான வலைத்தளம் ஒன்றுள்ளது.

Naan Mudhalvan IAS

மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சிகள், வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் இணையதளம் வழங்குகிறது.​ இந்த வலைத்தளத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்துக் காண்போம். 

மாணவர்களின் இயல்பான திறனைக் கண்டறிந்து அவரவர் விரும்பும் துறையில் சிறந்து விளங்க அவர்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதே ‘நான் முதல்வன்’ திட்டம். தமிழ்நாடு அரசு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு, தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை, அரசு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களின் மூலம் வழங்குகின்றது. இந்த பயிற்சிகள், பொறியியல், கலை, அறிவியல், மருந்தியல் மற்றும் மருத்துவ அறிவியல் போன்ற பல துறைகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. காணொளிப் பயிற்சியாக இக்கல்வி கற்பிக்கப்படுகிறது. 

மேலும், “நான் முதல்வன் ஹேக்கத்தான்” எனப்படும் நிரல் திருவிழா, மாணவர்களின் தொழில்நுட்ப சிந்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில், தமிழகம் முழுவதும் நடைபெறும் பெரும் நிகழ்வாகும். இது கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான பாலமாக செயல்படுகிறது.
இளங்கலை இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் பங்கேற்கலாம். இது தொழில்துறை சிக்கல்களுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் வாய்ப்பு  இருக்கிறது.

பொதுவாக, வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும்  தேர்வுகளில், உளவியல் திறனை அளவிடும் சைக்கோமெட்ரி (Psychometry) பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பத் திறன்கள் மட்டுமல்லாமல், குழுவோடு வேலை செய்யும் திறன், மனத்திறன், அழுத்த நிலை, நடத்தை போன்ற அம்சங்களையும் இந்தத் தேர்வு மூலம் நிறுவனம் மதிப்பீடு செய்ய முடிகிறது. சரியான பணியாளரை தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்வுகள், நேர்முகத் தேர்விற்கு முந்தைய கட்டமாக நடத்தப்படுகின்றன. அத்தகைய சைகோமெட்ரி பரிசோதனைகளை மாணவர்கள் இந்தத் தளத்தில் பதிவு செய்வதன் மூலம் பயன்படுத்தி பலன் பெறலாம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள ஒரு முக்கியமான கல்வி மேம்பாட்டு முயற்சியாக “நான் முதல்வன் பள்ளிகள்” திட்டம் கருதப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்குகிறது.

மேலும்  “நான் முதல்வன் ஃபினிஷிங் ஸ்கூல்” (Naan Mudhalvan Finishing School) என்ற புதிய திட்டத்தின் மூலம், தொழில்நுட்பப் படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு, தொழில்முனைவோர் மற்றும் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

​நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்கள், 2023ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வான 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் – குடிமை பணிகள்) ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தேர்வுக்கான பயிற்சி மற்றும் வல்லுநர்களின் வழிகாட்டுதல் (Mentoring) பெறுகின்றனர்.

அரசுக் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் தகவல்களின் வழியாக மாணவர்கள் இத்தளத்தில் தங்களைப் பதிந்துகொள்ள முடியும். கல்லூரி கொடுக்கும் தகவல்களை வைத்து பயனர் கணக்கை உருவாக்கி மாணவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைக்கின்றனர். உதவி மையத்தினைத் தொலைப்பேசி வழியாக அழைத்தும் (9962220528) தகவல்களையும் உதவிகளையும் பெறவியலும். இணையத்தளத்தின் கீழ்ப்பகுதியில் தொலைப்பேசி எண்கள், முகவரி உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

  • நவீனா

தொடர்புடைய இணையப் பக்கங்கள்

நான் முதல்வன்

காணொளிக் கல்வி

The post நான் முதல்வன் appeared first on செல்லினம்.

மொழியோடு விளையாடு

27 April 2025 at 13:30
Google Translate

கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியில் தேடுதலை எளிமைப்படுத்தவும் , தெரியாத மொழியை எளிதாகக் கற்றுக்கொள்ளவும் புதிதாக இரு அம்சங்கள் வரவுள்ளன. 

Google Translate

கூகுள் மொழிபெயர்ப்பு என்பது இலவசமாகக் கிடைக்கும் இணையதளம் மற்றும் கைப்பேசி அடிப்படையிலான மொழிபெயர்ப்பு சேவையாகும். இது உலகளாவிய தகவல் தொடர்பை எளிமையாக்கிவருகிறது. ஒவ்வொரு பதிப்பிலும் இதன் தரம் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. கூகுளிடம் பலமான மொழிபெயர்ப்பு கட்டமைப்பு இருந்தாலும், அதன் மூலம் ஒரு தெரியாத மொழியை எளிதாகத் தெரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தித்தான் டியோலிங்கோ போன்ற செயலிகள் பயனர்களை விளையாட்டு அனுபவத்திலேயே வைத்துக்கொண்டு மொழியைக் கற்க உதவிபுரிந்தன. புரிகின்றன.

ஒரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு அதன் எளிமைப்படுத்துதல் மிக அவசியம். அதனால் டியோலிங்கோவைப் போன்றே அம்சம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளது கூகுள். பயிற்சி (Practice) என்ற பொத்தானின் மூலம் அதனைச் சாத்தியப்படுத்த விரும்புகிறது. பொதுவாக கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியில் நீங்கள் ஒரு சொல்லை உள்ளிட்டு அதன் பொருளை உங்களுக்குத் தேவையான மொழியில் தெரிந்துகொள்கிறீர்கள். அப்போது அந்த மொழிபெயர்ப்புப் பக்கத்தின் அருகே பயிற்சி என்ற புதிய பொத்தான் காண்பிக்கப்படும்.

அதனைத் தொட்டால் அந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்கான புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் சிறு சிறு செயல்பாடுகள், சொல் விளையாட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் எளிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்துவதற்கு உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்திருக்க வேண்டும். அதோடு கூகுள் மொழிபெயர்ப்பு செயலிக்கு ஒலிவாங்கிக்கான அனுமதியையும் வழங்க வேண்டும். இது மட்டுமில்லாது இன்னும் ஒரு மாற்றமும் வரவுள்ளது. 

தேடுதலை எளிமைப்படுத்தும் விதத்தில் இருக்கிறது இந்த அம்சம். ஒரு சொல்லைக் கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியில் உள்ளிடுகிறீர்கள். அப்போது அதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் உங்களுக்குத் தேவைப்படுகிறது எனில், அதே சொல்லை மீண்டும் தேடுதல் பொறியிலும் உள்ளிடுவீர்கள். இப்போதைய புதிய அம்சத்தில் உங்கள் மொழிபெயர்ப்புப் பக்கத்திற்கு அருகிலேயே கூகுளின் குறியீடு தோன்றும். அதைத் தொட்டால், நேரடியாகத் தேடுதல் பொறி வழங்கும் முடிவுகள் தோன்றும்.

இந்த இரு புதிய அம்சங்கள் பற்றிய குறிப்புகள் கூகுள் மொழிபெயர்ப்புச் செயலியின் புதிய பதிப்பான 9.7.102 வில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்பதிப்பு பயனர்களின் கைகளை வந்து சேரும்போதுதான் இதனைப் பற்றிய அனைத்து தகவல்களும் தெரியவரும்.

  • மு.‌இசக்கிமுத்து.

The post மொழியோடு விளையாடு appeared first on செல்லினம்.

❌