Normal view

Received before yesterdayவாசகசாலை

நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்

கதை சொல்லும் குடிகள்

எம்மில் கீழோர் மேலூர் இல்லை
ஏழைகள் யாரும் இல்லை
செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வினில் தாழ்வொன்றுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா”

“எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;”

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. என்னுடைய சிறிய வயதில் எனது தாத்தா-பாட்டி சாதி, மதம், மொழி என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பாடிய கனியன் பூங்குன்றனாரின் வரிகளைத்தான் எனக்குள் விதைத்தார்கள். இன்றும் இந்தப் பாடல் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. நமது மீது அன்பு செலுத்த வெறும் குடும்ப நபர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது வாழ்வில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தூய்மையான அன்பைக் கொடுத்தவர்கள் நான் சொன்ன இந்தப் பட்டியலில் இல்லாதவர்கள்தான். எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியம் என்றால் எனது வாழ்வில் அது நித்தமும் சாத்தியமாகிறது என்றே கூறலாம். அப்படி எனது தேசாந்திரி பயணத்தில் எத்தனையோ பேர் அவர்களில் ஒருவராக என்னை நினைத்து என்னிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்த்தார்கள், பதிலுக்கு அவர்களும் அப்படியே இருந்து வருகிறார்கள். இந்த சமூகத்தில் மக்கள் எல்லோரும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே யாருடனாவது போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இச்செயல்முறை காலப்போக்கில் பெரும் சீரழிவைக் கொண்டு வருவது உறுதி. எப்போதும் ஓர் அவசர நிலைப் போக்கிலேயே இருப்பது முடிவில்லா சுழற்சி வட்டத்துக்குள் நம்மைத் தள்ளிவிடும்.

எப்போதும் போல எனது ஆறுதல் மண்டலத்தை விட்டு ஒரு தேசாந்திரி பயணம்… ஆம்,”இருளர்களோடு ஒரு வாழ்க்கை”, இருளர் என்றாலே இந்த சமூகத்தில் மிகவும் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கா நாட்டில் சதுப்பு நிலங்களில் ஒருவகை கொக்கு இனங்கள் வசிக்கின்றன. இவை உடளவில் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். என்னுடைய சிறிய வயதில் நான் கலசப்பாக்கம் என்ற ஊரில் வசிக்கும்போது இருளர்கள் தெரு வீதியில் பாம்புகளைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்டு செல்வார்கள். ஒரு அழகிய மாலைப் பொழுதில் எனது நண்பர்கள் பத்மப்ரியா, ராஜவிக்னேஷ் ஆகியரோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, எனது தாத்தா-பாட்டி என்னை அழைத்து நமது வீட்டிற்கு, “இருளர் பாம்புகளோடு வந்திருக்கிறார்” என்று கூப்பிட்டார்கள். எங்கள் வீட்டு வாசற்படியில் ஒரு பெரிய பாம்பை விட்டார் அந்த இருளர். பிறகு, நாங்கள் அந்த இருளரை வராண்டாவில் அமரவைத்து உணவு உபசரித்து அனுப்பினோம். அந்த இருளர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். அப்போதிருந்தே இருளர்களது வாழ்வியல் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அப்படி பல ஆண்டுகளுக்கு முன்பாக அமுதன் பச்சைமுத்து, தன்ராஜ், பாண்டு என்ற 3 நபர்கள் என்னை இருளர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முதலில், நான் அக்கிராமம் ஏதோ பசுமையானதாக இருக்கும் என நினைத்தே சென்றேன். முட்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தோம். போகும் வழியில் தன்ராஜ் மற்றும் பாண்டு இருவரும் நான் பேசும் ஒவ்வொன்றிற்கும் கவிதை வடிவில் பதில் கூறிக்கொண்டே வந்தார்கள். எல்லோரும் பாட்டுப் பாடிக்கொண்டே சென்றோம்.

வாழ்வின் ரகசியங்களை அறிந்துகொண்டே இன்று வரையிலும் ஒரு தேசாந்திரியாக மட்டுமே சுற்றித் திரிகிறேன். முதலில், என்னைப் பார்த்தபடியே ஒரு பாட்டி அருகினில் வந்தார். அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். பிறகு, எனக்கு, “கங்கா” என்று ஒரு பெயர் வைத்தார். “கங்கா என்றால் என்ன?” என்று அந்தப் பாட்டியிடம் கேட்டேன். “கங்கா என்றால் கங்கா நதி, நீ ஒரு நதி” என்றார். பள்ளிக்கூட வாசலையே மிதித்ததில்லை, ஆனால், அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு ஞானம். பிறகு காட்டுக்குள்ளே செல்லும்போது, ஒரு இருளர் செம்மரி ஆடுகளை மேய்த்துக் கொண்டபடியே சென்றார். உள்ளே செல்லச் செல்ல புதிதாக ஓர் உலகத்திற்கு நுழைவது போல் தோன்றியது. வெறும் ஓலைக்கீற்று கொட்டாய்தான் முழு வீடுமே. அதனுள் ஒரு அக்கா அழகான சின்ன சின்ன ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றார். எனது கையை அவர் கைகளோடு இணைத்து கொண்டேன். அவரது மௌனமும், கண்ணீர்த்துளிகளும் மட்டுமே எனக்கு பதில் அளித்தன. அங்கு நடக்கவே முடியாதபடி சேரும் சகதியுமாக இருந்தது. மிக அருகிலேயே ஒரு ஓடையும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலும் தத்தித் தத்தி தாவிக் கொண்டே பாட்டுப் பாடிச் சென்றேன். பின்பு, ஒரு பெரிய மீசை வைத்த தாத்தா, (ஊரிலே பெரியவர்) எங்கள் நான்கு பேரையும் வரவேற்றார். அங்கிருக்கும் வயல்வெளிகளை எல்லாம் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னை முழுவதுமாக யாரோ  பின்னிருந்து அணைத்துக் கொண்டது போல் உணர்ந்தேன். யாரென்று பார்த்தால் இரண்டு சின்ன பெண் பூக்கள்(குழந்தைகள்). ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் என்னிடம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, “எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?” என்று. பிறகு, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதை. “என்னைச்சுற்றி பூக்கள் மலராவிட்டால் என்ன? பூக்கள் பூக்கும் இடத்திற்கு நான் சென்றிடுவேன்”. ஏனென்றால்,அந்த இரண்டு குழந்தைகளும் எனது விரல்களைப் பிடித்த ஆரம்பத்திலிருந்து, நான் அங்கே விடைபெற்றுப்போகும் வரையிலும் என்னை விடவேயில்லை. முகத்தில் அவ்வளவு நாணம்(வெட்கம்). “இருளர்கள் என்று ஏன் அழைக்கிறார்கள்?” என்பது என்னுள் விடையில்லா வினாவாகவே இருந்து வந்தது. இருளர்கள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர் சமூகமாகும். இவர்கள் பாரம்பரியமாக காடு மற்றும் இயற்கை வளங்களின் மீது நம்பிக்கை வைத்து வேட்டையாடுதல், மூலிகை சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நான் நேரடியாக அந்தக் காட்டினுள் செல்லச் செல்ல நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. அடர்ந்த இருட்டான காடுகளில் வாழ்ந்து வருவதால் இவர்களை, ‘இருளர்கள்’ என்று அழைக்கின்றனர். நான் சந்தித்த அந்த இரண்டு பெண் சிறுமிகளும் என்னிடம், எங்கள் ஊரில் இருப்பவர்களை, ‘காவல்காரன்’, ‘பாம்புக்காரன்’, ‘வேடவர்’, ‘வேடுவர்’, ‘வில்லி’, ‘காட்டுக்காரன்’ என்று தான் அழைப்பார்கள் என கூறினர். பிறகு, அக்கா ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க போல,வா அக்கா போலாம்” என்று கைப்பிடித்தபடியே அவர்கள் வசிக்கும் ஓர் சின்னஞ்சிறிய ஓலைக் குடிசைக்கு என்னை அழைத்துச் சென்று இளநீர் கொடுத்தனர். “எங்களுக்கு இதுதான் அக்கா சொர்க்கம்” என்று கூறினர். வரிவடிவமே இல்லாத அவர்களின் மொழி பேரழகு. “ஏன், இவர்களின் பேச்சு வித்தியாசமாக உள்ளது?” என்று கேட்டேன். “ஏரவல்லம், எருக்கா, இரவா, இருளிக்கா, கோரவா” என்ற பெயர்கள் இவர்கள் பேசும் மொழி எனக் கூறினர். இந்த மனிதர்கள் எல்லோரும் எனக்கு மிக தனித்துவமாகவே தெரிந்தார்கள். இச்சமூகத்தில் இருப்பவர்களுக்கு இவர்களின் பண்பாட்டையே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். காட்டில் வாழ்கிறார்கள் என்பதற்காகவே இவர்களுக்கு நாகரிகம் தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தி எவ்வளவு பொய்யாக இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்துகொண்டேன். பிறகு, நானும் அவர்களோடு ஒன்றாகிவிட்டேன். தொடர்ந்து “கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழி” போன்ற விஷயங்கள் எல்லாம் நடந்தேறின. வெளியுலக மனிதர்களைக் காட்டிலும், இவர்களிடம் உள்ள பாலின சமத்துவம் வியக்க வைத்தது. அங்கே சில குழந்தைகள் கொம்பாட்டம், குச்சியாட்டம் போன்ற நடனங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நானும் ஆடி மகிழ்ந்தேன்.

பிறகு, மீண்டும் ஒருநாள் இருளர்களைப் பார்க்க வேறு கிராமத்திற்குச் சென்றேன். சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், பழங்குடியினரைச் சேர்ந்த இருளர் மக்களும் அதிகமாக வசித்து வருவதை நேரடியாகக் காண முடிந்தது. தோட்டத்தொழில் செய்யும் இருளர்கள் அங்கே பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் படாத தலை முடி, சுத்தத்தை மறந்த துணிகள் என்று மிகவும் வறிய கோலத்தில் இருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் மிகவும் மன மகிழ்வோடு மட்டுமே இருந்தார்கள் .இங்கே வாழும் இருளர் சமூகத்தினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவ வசதிகளின் குறைபாடு மற்றும் போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாததால்,நோய் பரவல் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. பணம், அதிகாரம், கவன ஈர்ப்பு, வெற்றி போன்ற நவீன வாழ்க்கை நம்முடைய உண்மையான இயல்பிலிருந்து நம்மை மேலும் மேலும் அநியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் நாம் அர்த்தமற்ற வெறுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் சென்ற நிறைய இருளர்‌ கிராமங்களில் இன்னும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் ஆதரவின் பற்றாக்குறையால் சமூக முன்னேற்றம் மந்தமாக உள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. இந்த சிக்கல்களைச் சமாளிக்க, அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடரும்…

[email protected]

The post நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

முதிரா இரவு – சுருளி காந்திதுரை

காலையில அஞ்சு மணிக்கு டான்னு எந்திரிச்சு… உடல் உபாதையை முடிச்சுட்டு… செம்புல தண்ணிய மோந்து குடிச்சிட்டு பெத்த பெருமாள் நடக்க ஆரம்பித்தார். ஒரு பொட்டை நாயிக்குப் பின்னே ஆறு ஏழு ஆண் நாய்கள். மெல்லக் கடந்து போனார். இப்படித்தான் காலையில பத்து நாப்பது பேருக்கு மேல் இருக்கும். நடந்தார்கள். வயது, வயிறு, உடைகள், மேக்கப்பு… பேச்சுத் தோரணை… இதில சுமார் இருபதுக்கு மேல, பட்டதாரிகள். மத்திய மாநில அரசிடம் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள்… அதில் பென்ஷன் பெறுபவர்கள் பெரும்பான்மையானோர்.

சாப்பாட்டுக்கு மொத்தமா பேசிக் காசக் கொடுத்துட்டா, இப்ப சாப்பாட்டுப் பிரச்சனையில்லன்னு மனஆறுதல் இவர்களுக்கு.

கால, மால இருவேளையும் நடக்க வேண்டியது. பேச்சு ஊர்ப் பேச்சு. உலகப் பேச்சு… சரியா ஏழரைக்கு வீட்டுக்குப் போயிக் குளிச்சிட்டுச் சாப்பிட வேண்டியது; பேப்பர மேய, பிறகு தொலைக்காட்சி சேனல மாத்தி மாத்தி ரிமோட் பட்டன் தேய்ஞ்சு போயிருச்சு. ஏதாவது போடுறாங்களான்னு தோணும். என்ன செய்ய வர்றதுதான் டிவியில வரும்.

வெளியில இருந்து பாக்கிறவுகளுக்கு, ஊர் உலகத்துக்கு பெருசுகளுக்கு என்ன கவல? பிள்ளைக நல்லா வைச்சுக்கிறாங்கன்னு பேச்சு.

மக்கமாரு, ராஜா மாதிரி வச்சுருக்காங்கன்னு போற வர்ற மக்க மனுசார் பேசுவாங்க. உறவுகளும் அப்படித்தான் நெனைக்கும்.

ஆனா, வீட்ல பெத்தப்பெருமாள் மாதிரியா இருக்கிற பெருசுகளுக்குத்தான் தெரியும். ஒரு நா என்பது ஒரு யுகம் மாதிரி போகும். மகன், மகள்… வீட்ல இருக்கிற பொருள பாதுகாக்கத் ‘திருடனுக்குப் பயந்து அப்பாவ முழுநேர வீட்டு வாட்ச்மேனா அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்காங்கன்னு…?’ வெளிய சொல்ல முடியுமா?”

தொனைக்கி நாயி வேற. அத வேற மேய்க்கனும். பெத்த பெருமாள் ரோட்ல படுத்திருக்கிற நாயிக்கு இருக்குற சுதந்திரம் நமக்குயில்ல?ன்னு முனங்கினார் பல நேரம்.

யோவ், பெத்த பெருமாள்… என்ன பலத்த யோசனை. உனக்கு எப்படி அப்படித்தான் இங்க இருக்கிற எல்லாத்துக்கும்… நாங்களும் அப்படித்தான் இருக்கோம்னு புரியணும்.

வா… வா… நம்ம எல்லார் கதையும் ‘ஒரே மாவுலச் சுட்ட இட்லி’ போலத்தான்னு புலவர் சந்தானம் சொல்லவும் எல்லோரும் தன்னை மறந்து சிரித்தார்கள்.

நடையில வேகமில்ல. கால்கள் மட்டுமல்ல மனங்களும் தளர்ந்து போயிருந்தன.

அறுபத்தைக்கும், எண்பதுக்கும் இடைப்பட்டவர்கள். ‘நம்ம ஒண்ணாத்தான் இருக்கம். இடையே நம்ம பிள்ளைக உலகம் வேறு, பாவம் அம்மாக்கள். நமக்கு என்ன கவல? ராஜேந்திரன் சொல்லுயா’ன்னு அய்யனாரைக் கேட்க.

‘பகவான் இருக்கும்போது எனக்கு என்ன கவல?’

‘போயிம் போயிம் அய்யனார்ட்டக் கேட்டா. அப்படித்தான் சொல்லுவார்!’ ஒரே சிரிப்பொலி….. எதிரொலித்தது.

***

பலத்த ஹாரன் சத்தத்துடன் சென்னையில இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் கூடல்நகர் ஜங்சனைக் கடந்து அதேவேகத்தில் நிக்காம போனது. பிள்ளைகளில் ஆண், பெண் இருவருமே ஒரே மனநிலையில் இருப்பதைப்போல ரெண்டு பக்கமும் பிளாட்பாரம் மிக அருமையா மேடு பள்ளமில்லாம சமதளமாக இருந்தது.

இங்க வாக்கிங் போகும் ஆட்களின் நடமாட்டம் அதிகம். இதில் பெண்களை விட ஆண்கள் அதிகம். மாலைநேரம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நாகமலைக்கு மேலே மஞ்சள் வெயில் மறையத் தொடங்கியிருந்தது. மழை பெய்வதற்கானச் சாத்தியக்கூறு, இதமான தென்றல் காத்து வீசியது. ஜங்சன் பாதையில் இருபக்கமும் வேப்பமரக் குளுமை. நேத்துச் சாயங்காலம் நல்ல மழை. மண் மனமும், தென்றல் காத்தும், கனமான இதயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு போனது. எல்லோரையும் ஆரத்தழுவி ஆனந்தமாக்கியது.

என்ன? இவுங்கள இளைஞர்கள்ன்னு சொல்லுறேன்னு நினைக்க வேணாம். ‘இளமை திரும்புகிறது.’ அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நகைகள், கடிகாரங்கள், செல்போன்கள், கேன்வாஸ்… எல்லாமே நல்ல வசதிக்கான அடையாளம். வாழும் காலத்தில் பல்ல கடிச்சுக்கிட்டு சுகத் துக்கங்களை மறைத்து, மறந்து பிள்ளைகளே உலகமுன்னு வாழ்ந்தவர்கள்.

பிள்ளைகள நல்லபடியா கரையேற்றிவிட்டாங்க. ஆனா பெத்தவங்க ‘தனிமைக் குளத்தில்’ தவிக்கிறார்கள். வீட்ல தனிமை? மெல்ல மெல்ல மனித நடமாட்டத்தை நாடி நடக்க வந்துவிடுகிறார்கள்.

ஜங்சன் இருக்கு. ஆனால், ரயில்கள் நின்னு போகல. அப்படித்தான் இவர்களின் வாழ்க்கையும். எல்லாமே இருக்கு. எதுவுமே இல்ல?

ஆஸ்தி, அந்தஸ்து, காசு, பணம், நகை நட்டு, காரு, பங்களா, வேலைக்கு ஆட்கள், காவலுக்கு ரெண்டு நாய் இவ்வளவும் இருந்தும், என்ன பயன்?

எல்லோருக்கும் எல்லாம் இருக்கு. பிள்ளைகளின் வாழ்க்கை முறை வேறு, இவர்களின் உலகம் இலையுதிர் காலத்து மரம் போல… எல்லாருக்கும் மனைவி, மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள்… என ‘உறவுகள்’ இருக்கிறார்கள். ‘கோலார் தங்கச் சுரங்கம் போல.’ ஆனால், மனிதனின் வாழ்க்கை பலத்த காற்றில் ‘குருவியின் கூடு பறந்து போனதைத் தேடும் குருவி போல…’ உறவுகளைத் தேடுகிறார்கள். இன்னும் தொலைத்த இன்பங்களைத் தேடியே… யாருக்காக வாழ்றோம்னு எதுவும் தெரியாது… இளைப்பாறுதல் இல்லா மனநிலையில்…? முதியோர்களின் பயணம்…

என்ன இருதயராஜ்… இந்த ஆண்டு ஜுன் மாசம் காவிரியில இருந்து தண்ணி வருமா? ஏன்ட்ட ஏன் கேட்குறீங்க…

நீ தானே பி.டபிள்யூ.டி. இஞ்சினியர்…

சும்மா இருக்க மாட்டீங்க புலவரே?

அவுக என்னைக்கி நமக்குத் தண்ணி கொடுத்தாங்க…

கேரளாவும், கர்நாடகாவும்… நல்ல பாம்பு அது; விரியன் பாம்பு இவுக.

நமக்கு பெரியாறிலிருந்து கம்பம் பள்ளத்தாக்குக்கும் காவேரில இருந்து தஞ்சை டெல்டாப் பகுதிக்குத் தேவைப்படும்போது தண்ணியத் தர மாட்டாங்கா? ஆனா, அங்க மழை பெய்யட்டும்…! மழை ச்சக்கப்போடு போடட்டும்…! அய்யோ “டேமப் பாதுகாக்கிறோம்ன்னு” “டேம் உடைகிற” மாதிரியா வரும்போது சத்தமில்லாம போன் பண்ணிட்டுத் தண்ணிய திறக்கிறோம்னு சொல்லுவாங்க. ஆனால், தண்ணியத் தொரந்துட்டுதான் போன் பண்ணுவாங்க.

புலவரே, ஆனா, பட்டம் தப்பி விடுற தண்ணி நமக்கு விவசாயத்துக்குப் பயன்படாது. நேராக் கடலுக்குத்தான் போகும். இங்க ரெண்டு பக்கமும் அதே நிலமதான்.

என்ன இஞ்சினியர் சார். நம்ம, “ஆம்பளப் பிள்ளையும், பொம்பளப் பிள்ளையும்… கேரளாவும் கர்நாடகாவும் ஒன்னுதான்னு சொல்லுங்க?

எத எதுலக் கொண்டாந்து பொருத்துறீங்க.

என்ன வம்புள மாட்டி விடுறீக. இதயராஜ் சொல்லவும்,

பெத்த பெருமாள், புலவர் சொல்லுறது சரிதான். ரெண்டு பிள்ளையும் அப்படித்தான் இருக்காங்க. அவுக நிலை. இது நம்ம நிலைமை. கால்கள் நடந்தன. மனங்கள் இறுகிப்போனது. நடந்தார்கள் நீண்டநேரம். மௌனத்தை உடைத்தார் அய்யனார். நான் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போறேன் நாளைக்கி. யாராவது வர்றிங்களா?

யோவ், எப்பப்பாரு கோயில் கோயில்…

அய்யனார் போயிட்டு வாங்க. கடவுள்ட்ட எங்கள காப்பத்த வேண்டான்னு வேண்டிக்கங்க! மாணிக்கம்.. நம்ம விதியை நொந்துக்கறாத விட்டு; அய்யனார் நீங்கப் போயிட்டு வாங்கன்ன… முடித்தார்.

என்ன எல்லாப் பிள்ளைகளுக்கும், அம்மாவைப்பி டிக்கிது. அடப்போங்கப்பா! அம்மா அடுப்படி வேலைக்குப் பிள்ள தூக்கும். அவுகளுக்குப் பிள்ள வளர்ற வரைக்கும் மகனும் மகளும் அம்மாவத் தாங்குறாங்க. இல்ல அம்மான்னு பாசத்திலத் தொங்குறாங்க.

இது தெரியாத அம்மாக்க, பிள்ளைகதான் பெருசுன்னு புருஷன விட்டுட்டுப் போய் மக வீட்ல மகன் வீட்ல இருந்துக்கிறாக. புரியும்போது அம்மாக்கள் புலம்புவாங்க.

பிள்ளைக திருமணம் முடிச்சாப் பத்தாநாள் தனிக்குடித்தனம்.

பாம்பு தன்னுடைய தோலக் கழட்டுற மாதிரி… தானா விலகிறவுகளும் இருக்காங்க. “முதுமை கஷ்டமாயிருக்கு எல்லாத்துக்கும்.”

பொஞ்சாதியின் துணையில இருந்துட்டு, இருந்த கணவன்களைத் திடீர்னு பொஞ்சாதி விட்டுட்டுப் போனாப் பலர் பித்துப்பிடித்துப் போய் டென்சன், பிரசர், எமோசன், சுகர்ன்னு மனநோயாளியாகவும் கணவன்மார்கள் போயிர்றாங்க. அத மறந்து பேச்சில காலத்தக் கடத்துவதாகவே வாக்கிங் கூட்டதில் சேர்வதும் அங்கப் பெரும் பேச்சு. நோயும், மாத்திரையும் டாக்டருமாத்தான் இருக்கு. ‘மருந்து’ நோய்க்கு மருந்தா? இல்ல மனசுக்கா?… மாத்திரைக்கும் டக்டருக்கும் வெளிச்சம்.

எல்லார்ட்டையும் புன்னகையோடு பேசினாலும்… சிரிப்ப வில கொடுத்து வாங்குவாங்கன்னு சொல்லுறது மாதிரிதான் இருப்பாங்க. “அவுககிட்டக் காசு இருக்கு. சிரிப்பு வாங்குவாங்க.. ஆனா, சிரிப்பு வரணுமே..

மதுரை திண்டுக்கல் பேசஞ்சர் ரயில் மெதுவாகக் கூடல்நகர்ல நின்னுபோனது.

மாதா கோயில் மணி அடித்தது. நேரம் சரியாக ஆறுமணி. “எல்லோரும் சுகமாக இருக்க கர்த்தருக்கு தோத்திரம்… உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன். (யாத்தி.23-26). ஆமேன்… ஆமேன்…

பேசஞ்சர் ரயில் மெல்ல தன் ஹாரன் ஒலியை எழுப்பியது. மூன்றாவது ஹாரன் ஒலி எழுப்பய உடனே கிளம்ப சிக்னல் கிடைச்சுருக்குப் புறப்பட ஆரம்பித்தது… மீண்டும் ஹாரன் சத்தம்…ஸ்ஸ்… டைசக்கு டைசக்கு டைசக்கு ரயில் புறப்பட்டுவிட்டது.

அய்யனார் சார், என்னய்யா, மணி ஆறாச்சு இன்னும் கிளம்பள. நாங்க இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கேம். அய்யா, கதிரவன் நீங்க போயிட்டு வாங்க.

பழைய பி.ஆர்.சி.யில செக்கார இருந்தவர் பெத்த பெருமாள்.

சுந்தரம், வீட்ல இருந்து எத்தன வாட்டி கடிகாரத்தையும் செவுத்தையும் பார்க்கிறது.

எவ்வளவு நேரம் பகல்லப் படுத்துக் கிடக்கிறது. உங்களுக்கு… என்ன?

ஜங்சனை விட்டுக் கிளம்பவே மணி ஏழரையாகும்.

நான், என்னங்க சார் கொசு கடிக்காதான்னு கேட்டேன்.

அமூட்டுதான் குறுக்கிட்ட சக்திவேல் சார்.

பேரப்பிள்ளைக தராத முத்தத்தக் கொசுவாவது கொடுக்கட்டும்னு சொல்லவும். எல்லோரும் கொல்லுன்னு சிரிக்க எனக்கு ஏன்டாக் கேட்டோம்ன்னுப் போச்சு.

டியூப்லைட் வெளிச்சம் இரவைப் பகலாக்கியது. கருக் கொண்ட மேகம் இவர்கள் மனம் போலவே அமைதியா இருக்கு.

மழை பெய்யவா? வேண்டாமான்னு யோசித்தது. பிள்ளைக வயதான அப்பா, அம்மாவ வெளியே கூட்டிட்டுப் போவம்மா, வேண்டாமான்னு பொஞ்சாதிகிட்டக் கேட்ட மாதிரி… மழை காத்தக் கேட்டு இருக்கு.

காத்து வேகமா அடித்தது. மழைக்குணம் மாறி மேகக்கூட்டம் கலைந்து போனது. இப்படித்தான் பல வீடுகளிலும் பேச்சுகள் தடுமாற்றத்தால் கூட்டுக் குடும்ப உறவுகள் கலைந்து போயின.

பெத்த பெருமாள் குடும்பத்தத் தெருவே பேசும். அவுகள மாதிரியா அண்ணன் தம்பி, தங்கை ஒண்ணாயிருக்க முடியாதுன்னு… கூட்டுக்குடும்பம்.

நல்லது கெட்டதுன்னா அவுக வீட்டு ஆளுக போதும். இப்ப வீட்டைப்பாரு, ‘மனுச வாடை அத்துப்போயிக்கிடக்கு’. வீடு மட்டுமே பெருசா? மனித மனங்கள் காஞ்சு போன வாழை இலை சுருண்ட மாதிரி சுருங்கிப்போச்சு.

இன்பத்துக்கும் துன்பத்துக்கும் இடையில… வாழ்க்கை; பழச மறக்க முடியாம, புதுச ஏத்துக்கு முடியல. முதியவர்கள் மனதளவில் போராடுகிறார்கள்.

ரெண்டு தண்டவாளம் போல, சேருமா? சேராது. ரயில் சேரணும்… ஆனா, சேராது. தண்டவாளம். தவளையும் ஓந்தியும் காதலர்கள். ஆனா, பார்வைக்கு ஒரே மாதிரியா இருக்கும். எங்கூட வான்னுத் தவளைத் தண்ணிக்குள்ளக் கூப்பிட, ஓந்தி இல்ல வா மேட்டுக்குன்னுத் தவளயக் கூப்பிட. இப்படியே ரெண்டு குளத்தம் கரைமேல நட்புச் சண்டை நடக்க, மேலே இருந்து பார்த்த பருந்து ரெண்டையும் சேத்து தூக்கிட்டுப் போயிருச்சு.

“தண்ணி தவளைக்கும் ஓந்தி மேடுக்கும் கதைதான் நம்மக் குடும்பங்களின் கதையும்.”

 “தயிர்பானையில விட்ட மத்தாட்டம். எல்லோர் நாவும் உறவுகளை உச்சரிக்கத் தொடங்கினா? ஆனால், யாரு வெண்ணை எடுக்கல…” வெயில் ஏறிப் போனால் மோர் பானையில வெண்ண திரளாது. அப்படித்தான் உறவுகளிடம் சுயநலம், கர்வமும், பணத்தாசையும் வரும்போது வெறும் நீர்மோராக உறவுகள் மாறிப்போயின…

மக வீட்டுக்குப் போன அப்பாக்கள், தன்னை மாமனார்ன்னு நினைக்காம.. மருமகன மகனா நினைச்சு ரெண்டு ஒரு வார்த்தை பேசிட்டாப் போச்சு. வெறும்பயலா இருந்தாலும் மருமகன், அவனுக்குப் பெண்ணும் கொடுத்து.. ஆண்டவன் அறுபதும் சீதனமாக் கொடுத்திருப்பாரு. மாப்பிள்ள, எதாயிருந்தாலும் ஆத்துலப் போட்டாலும் அளந்து போடுங்க இதுதான் சொல்லியிருப்பாரு… இங்க வந்தமா சாப்பிட்டமான்னு போகச்சொல்லு… எனக்கு புத்தி சொல்ல வர்றாரு… என்ன அவ்வளவு அறிவாளியா உங்க அப்பா? எங்க அப்பா பேச்சையே நான் கேட்டதில்ல மருமகன் எகிறுவாக.

மக வேப்பில இல்லாம சாமியாடுவா?

யம்மா, உம் புருஷன் வந்த வாயா வச்சுட்டு சும்மா இருந்தாத்தானே… என் விட்டுக்காரர்ட்ட என்னத்தயாவது சொல்ல. அவர் மனுசன், என்னை ராத்திரி கொண்டு எடுக்கிறார். தூங்கவிடாமா?

இதெல்லாம் நமக்கு எதுக்குங்கன்னா கேட்டாத்தானே அவரு அம்மா.

அம்மாவும்… மகளும்… அப்பனுக்கு குற்றப்பத்திரிகை வாசிக்க? வரட்டும் அவருக்குத் தேவையா? வந்தம்மா இருந்தம்மான்னு இருந்துட்டுப் போறத விட்டுட்டு…

வந்தமா பேசுனமா? இருந்தம்மானு போகவேண்டியது தானே. எதையாவது சொல்ல வேண்டியது. போயி, உங்க மருமகட்டச் சொல்லி பாக்கச் சொல்லும்மா உம் வீட்டுக்காரர? அங்க உங்கப் பருப்பு வேகாது. யார் அப்புராணி எம் புருஷன்தானே கிடைச்சாரா?

ஏன்டி, மரியாதையில்லாம பேசுற? நாங்க எல்லாம் அப்படியில்ல.

யம்மா, உங்க காலக்கதைய யார் கேட்டா? ஏதாவது கேட்ட மட்டும் பேசுங்க? தேவையில்லாம பேசாதீங்க.

அந்த மனுசன் இன்னும் உலகமே தெரியாம இருக்காரு…

சரிம்மா, நா போனு போடும் போதுச் சொல்லி வைக்கிறேன்.

இப்படிப் பலரும் பல நினைவுகளை அசைபோட்டு வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போனா.

டிபன் கேரியர்ல நாலு எருவாட்டியச் சப்பாத்தின்னு இருக்கும்.

பணம் கட்டியாச்சு, அவன் வைக்கிறதச் சாப்பிட்டாகனும்.

“வாய்க்கும் வௌங்காது, வந்தாரச் சிந்தாது.” தின்னதுபோக மிச்சத்தத் தூக்கி நாய்க்குப் போட்டா?

“நாய் மோந்து பாத்துட்டு… காலத் தூக்கிட்டுப் போகும்.”

மாணிக்கத்தின் மனத்திரையில் வந்துபோனது. எல்லோரும் ஒன்னாச் சேர்ந்து உக்காந்து, பேரன் பேத்தி எல்லாட்டையும் பேசிச் சிரிச்சு… சாப்பிட்ட நாட்கள் இனி வருமா, வரும்? ஏதாவது விசேஷகக் காலம்ன்னா?

வீட்ல போயி என்னத்தச் சாப்பிட.. அய்யோ கடவுளே! காலாகாலத்தில காப்பாத்துட்டா…! இந்த தனிமையில இருந்து காப்பாத்து உனக்குப் புண்ணியமா போகட்டும்…

பெத்தப்பெருமாள் மாதிரியான மனிதர்கள் எல்லாம் இருந்தும் எதுவுமில்லா மனநிலையில் பூமியைத் தேடிப் பூ நாளும் வாடிக் கிடக்கின்றனர். ஒவ்வொரு இரவும் முதிரா இரவாக…. ஆயிரம் பெத்தப் பெருமாள் நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். முதுமையை,

“கரையான் கட்டுனப் புத்துலக் கருநாகம் குடியேறுனது கணக்கா…” மெத்தையிலப் படுத்தாத் தூக்கம் வரமாட்டேன்னுது நாம வாங்கிய வரம்…

இராத்திரி ஒம்பது மணிக்குப் படுத்துப் பெறண்டு பெறண்டு படுத்தே தூக்கம் வர எப்படியும் பதினோரு மணிக்கு மேலாகும். ஆனா, டான்னுக் காத்தால மூன்றரைக்கு முழிப்பு வந்திரும். அதுக்கு மேலத் தூக்கம் பிடிக்க மாட்டேங்குது.

வெருக்கு வெருக்குன்ன ஒத்தக் கொரங்கா இருக்க வேண்டியிருக்கு.

இரவு நீண்ட இரவாப் போச்சுன்னு பெத்த பெருமாள் தனக்குத் தானே மெல்ல மனசுக்குள் பொலம்புறார்……

[email protected]

The post முதிரா இரவு – சுருளி காந்திதுரை appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

பெயராடல் – அசோக்

என்னிடம் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. என்னவெனில், இப்போது உங்கள் பெயர் முருகேசன் என வைத்துக் கொள்வோம். நான் உங்களை மறுமுறை பார்க்கும்போது ‘என்ன செல்வகுமார் எப்டி இருக்க?’ என்றுதான் அழைப்பேன். மறுமுறை ‘என்னப்பா கனகராஜ்?’ எனவும் அழைப்பேன். நியாயமாக, என்னால் ஒருவரின் பெயரை ‘பெயர்’ என்ற அடையாளத்துடன் நிறுத்த விருப்பமில்லை. கூடவே அதில் ஒரு மஜாவும் இருக்கிறது. நான் அப்படி அழைக்கையில் அவர்களுக்கு நிறைய பெயர்கள் என ஆகி விடுகிறது. எப்போதும் வலது கையால் முகம் கழுபவரா நீங்கள்? இம்முறை இடக்கையால் கழுவிப் பாருங்கள். புது முகம் சிக்கும். ஒவ்வொரு முறையும் உங்கள் ஒரிஜினல் தவிர மற்ற அனைத்து நாமத்தாலும் அழைப்பேன். ‘ஹலோ.. இல்லயில்ல. என் பேரு முருகேசன்ங்க’ என நீங்கள் என்னைத்திருத்தும்போது ஒரு புன்சிரிப்புடன் எதிர்கொள்வேன். மாறாக நீங்கள் சீற்றம் கொண்டால் அதில் உள்ள வேடிக்கையை இழப்பீர்கள்.

இதை நான் என் நட்பு வட்டாரத்தில் எனக்கான தனிக்குணமாகவே வைத்து இருந்தேன். கில்லி படத்தில்கூட பிரகாஷ்ராஜ் ‘சிவசுப்பிரமணியன்’ என்ற போலிசின் பெயரை ‘கோயிந்தசாமி’ என விளிப்பார். அவர் கோபம் கொள்ள, “அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. நீ ஏன் சொல்ற?“ என்பார். அது என்னுள் ஆழ விதைந்துவிட்டதோ என்னவோ? அப்படி அடிக்கடி நான் பயன்படுத்தும் பெயர்கள் பார்த்தசாரதி, மகா கணபதி, திருச்செல்வம், யோகராஜ் போன்றன.

தமிழ் என்றொரு நண்பன் இருந்தான். முழுப்பெயர் தமிழரசன். சற்று பெருத்த உடல். முழுக்கை சட்டை மட்டுமே அணிவான். உளுந்து மூட்டையை மேலும் ஒரு சாக்கு கொண்டு சுற்றியது போல் இருப்பான். அவனை நிறைய பேர் உருவக்கேலி செய்வார்கள். நான் அப்படியில்லை. அவனுக்கு இதன்பால் என்னிடமும், என் இந்த பெயராடல் விசயத்திலும் பெரிய அன்பு மற்றும் கிரேஸ் இருந்தது. அவனின் நண்பர்களை நான் விசாரிக்கும்போதும் அவ்வாறே செய்தேன்.

‘ஒஹ்ஹ் நம்ம ராஜேஷா?’ என்பேன். உண்மையில் அவன் பெயர் சரவணனாக இருக்கும்.

‘ஜீ இப்ப நம்ம செல்வம் வருவான்,எதாச்சும் பேர் போட்டுவிடுங்க’ என வாலண்டியராக குதூகலிப்பான் தமிழ்.

சரி. இப்போ அதுக்கு என்ன? என்றால் ஒருமுறை எங்கள் சொந்த ஊர் சென்றபோது சுப்புராஜ் மாமா என்னை பார்த்து ‘என்னப்பா பாண்டி? என்ன பண்ற?’ என்றார். சொல்லில் ஒரு நக்கல். நானோ கிராமத்தில் கார்கோ க்ராக்ஸ் என கெட்டப்பில் இருந்தேன். சுற்றிலும் பார்த்து என்னைத்தான் சொல்கிறார் என்பதை தெரிந்து கொ ண்டேன்.திக் என்று இருந்தது. நம்மை அடிக்க சில விபூதிகள் காத்துக்கொண்டுதான் இருக்கும்போல்.

‘சொன்னேன் – எம் பேரு அசோக்கு.’

‘திருப்பரங்குன்றத்துல குளத்துல தவறி விழுந்த பின்னால நைட்டு நைட்டு எந்திரிச்சி எங்காச்சும் ஒடபோறேன் ஒடபோறேனு அரட்டிகிட்டே இருப்ப. வெளக்கமாத்தால ரெண்டு போட்டதுக்கு அப்புறம்தான் தூங்குவ. அப்ப உங்க தாத்தா வச்ச பேருதான் பாண்டி. பாண்டி சாமியோட பேரு. அந்த பேரு கொஞ்ச நாள்ல காணாமப் போயி வந்ததுதான் இந்த சோக்கு எல்லாம்’ – நீண்ட விளக்கம் கொடுத்து சுப்புராஜ் மாமா பீடியை காலால் போட்டு அமத்தையில் என் மஜா எல்லாம் அணைந்துவிட்டது போன்ற ஒரு நெருடல். ஆனாலும் இந்த பாண்டிக்கு முருகேசன்கள் எல்லாம் திருச்செல்வம்கள்தாம். யோகராஜ்கள்தாம். பெயரில் என்ன இருக்கிறது?

தமிழ்தான் ஒருமுறை கேட்டான் – ‘ஏன்ஜி என்ன மட்டும் அப்படி பேர் மாத்தி கூப்பிட மாட்றீங்க?’

‘செவ்வாழைகள் கிட்ட நா வச்சிக்கிறது இல்ல’ – என்றேன். ‘கூடவே இருக்கிற’ என்பதைப் போட்டு புரிந்து கொண்டான் தமிழ் என்கிற பரிகாசன். சின்னஞ்சிறு விசயங்களில் கூட பகடி தேடுவான். சில சமயங்களில் தானே ஒரு பகடியாக மாறுவான்.

‘ஜி, இந்த கேஸ்க்காரன் வேற இன்னைக்கு என்னப் பாக்க வாரானாம்’ -தமிழ்

‘எதுக்கு?’ – நான்

‘வேற எதுக்கு கேஸ் போடத்தான்’ – தமிழ்

மேலும், ‘நேத்துதான் அஞ்சு லட்சம் செக் பாஸ் பண்ணேன். ஒத்த ரூவாகூட கைல இல்ல’ – என புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவான். அவனின் பீடிகையைப் புரிந்து கொண்டு எனக்குள்ளும் ஜிபேயிலும் ஒரு பரிமாற்றம் நிகழும்.

‘யோவ் கேஸ்க்கு கொடுக்க காசு வேணும்னு கேக்கலாம்ல?’ என்றால், ‘அதுல ஒரு ஜாலி இருக்காது ஜி’ என்பான். பின்பு ஒருமுறை பார்க்கையில், ‘ஜி, அன்னைக்கு கேஸ்க்காரன் வந்தானா, அவன பார்த்தவுடன் உங்க ‘பிட்ட’ போட்டேன்’

புரியாமல் ‘என்ன?’ என்றேன். ‘ரெண்டு மாடி ஏறி களப்பா வந்து எறக்கி வச்சான். வச்ச அடுத்த செக்கண்டு என்ன பூங்குன்றன் இந்த வாட்டி லேட்டுன்னேன்.அவன் சிரிச்சிட்டே சொன்னான்.என் பேர் கண்ணன் ஸார். ஓ அப்டியான்னேன். களப்புலாம் கலைஞ்சி போன மாதிரி தெரிஞ்சான் ஜி அவன். அந்த நேரத்துல அவன் ஒருவாட்டியாச்சும் பூங்குன்றனா இருந்திருப்பான்லஜி?’

தமிழுக்கு இனமறியா குதூகலம். ‘ஆஆ…கண்டிப்பா’ என்றேன். கண்ணன்கள் பூங்குன்றன்கள் ஆவதில் என்ன பெரிய சிக்கல் இருந்துவிடப் போகிறது?

‘நீங்க அங்க இருந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க?’ என்றான். ‘அந்த நேரத்துல மனசுக்குள் என்ன தோணுதோ அதுதான் சொல்லியிருப்பேன்’ என்றேன்.இதை திட்டம் போட்டு செய்ய முடியாது. அது ஒருவித வன்முறை. ஒருவரின் பெயர் தங்கள் பெற்றோர்களால் ருசித்து வைக்கப்பட்டது. எனக்கெல்லாம் என் அப்பா அசோக் லேலண்டு லாரியில் பார்த்து ‘குமார்’ சேர்த்து வைத்தாராம். அதை உடைத்தல் என்பது சம்பந்தப்பட்ட நபரின் சாம்ராஜ்யத்தையே தகர்ப்பது போன்றது. சிறு போர் போன்றது. அந்த போருக்கு ஒரு சிறு நகைச்சுவை உணர்வும், கடந்து செல்லும் குணமும், சிறு கணமும் போதுமானது. ஒரு பாலகனிடம் இருக்கும் மிட்டாயை படக்கென பறித்து அதே நொடியில் படக்கென இன்முகத்துடன் திருப்பி அவனிடமே கொடுப்பதைப் போன்றது. சிறுவனுக்கும், அதனைப் பிடுங்கிய நமக்கும் ஏற்படும் ஒரு சிறு மனமாற்றம்தான் அந்த போரின் வெற்றி. நிறைய இடங்களில் பார்த்து இருப்போம்.

ஒருவரின் பெயரை மற்றவர்கள் எழுதுகையில் தவறு இருப்பின் அதை செவ்வனே திருத்தும் நபர்கள் உண்டு. கார்த்திக்கை ‘கார்த்தி‘ என்று எழுதினாலே குற்றம். பெயர் ஒரு அடையாளம். பெயருக்குள் ஒரு நபரின் உடல், குணம், அங்கீகாரம், நகை நட்டு, ஜாதி மதம், முடியில் எடுக்கும் வகுடு முதற்கொண்டு கலாச்சாரம், கத்திரிக்காய் என எல்லாமே அடங்கும். பெயரே அவராக இருக்கிறார்.

தமிழை சொல்லாமல் இக்கதை முடியாது. சில வருடங்கள் அவனைக் காண முடியவில்லை. ஓடும் பேருந்தின் இருபுறமும் சிதறும் செத்த இலைகள்தானே நாம். ஒருநாள் ஓர் இரவில் சர்ச் அருகில் வரச்சொன்னான். சீரான படுக்கைப்பட்டைகள் இருந்த புளு நிற ட்ஷிர்ட் போட்டிருந்தான். முழுக்கைச்சட்டைகள் எங்கே போயின? ஆனால், அதே உடல்.

சூடான இரவு. ஆனாலும், சூடான டீ குடித்தோம். ஏனோ மனுஷனுக்கு சூட்டில்கூட சூடுதான் கேட்கிறது. வினோதமானது மனசு மட்டும்தான்.

கழுத்தில் ட்ஷர்ட் மறைவில் ஒளியும் சிலுவை, சர்ச் வாசல் என இருந்தவனை கேட்டேன்.

‘ஆமா ஜி ஒன்னும் முடியல, இந்தப் பக்கம் வந்துட்டேன். ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. அம்மா உள்ளதான் வேல செய்றாங்க’ என சர்ச்சைக் காட்டினான். அந்நேரம் மணி ஒலித்தது. நிறைய பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்சம் கேட்டுக் கொண்டே இருந்தேன். பேச்சுக்கள் எங்கே இருந்து உற்பத்தி ஆகிறதோ அந்த இடமே உடலின் புனித ஸ்தலம். வாய்ல இருக்கு வார்த்த – என சொல்வாள் கோட்டையூரில் மெஸ் நடத்தும் மாமி.

‘ஜி, ஒன்னு தெரியுமா… இந்த ஏரியால நான்தான் இப்போ குட்டி அசோக். அதான்ஜி நீங்க. இங்க வந்த புதுசுல பெக்கேன்னு வேலை வீடு காசுன்னுதான் இருந்தேன். காசு இல்லாதப்ப போர் அடிக்கல. இப்போ காசிருக்கு. ஆனா, ஒரு துடிப்பே இல்ல. அதான் பார்த்தேன். உங்க ‘பிட்ட’ போட்டேன். ஒரு மாதிரி வொர்க் அவுட் ஆச்சி. ரெண்டு பொண்ணுங்களையே இப்போ கரெக்ட் பண்ணிருக்கேன் ஜி’ என்றானே பாருங்க தமிழ் என்னும் ‘டைசன் சேவியர்’.

ஆளையும் வாழ்வையும் மாற்றியிருக்கிறது பெயர். அப்படியென்றால் பெயரில் என்னதான் இருக்கிறது தேவையை விடவும்? என்றே எனக்குத் தோன்றியது. போரில் தோற்பவனும் வெற்றியை பெறுகிறானோ? எது தேவையோ அதுவே தர்மம் – என்று அச்சிட்ட காலண்டரை முன்பு ஒருமுறை தமிழ் வீட்டில் பார்த்து இருக்கிறேன். அதில் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு இருந்தார். இங்கே பின்புறம் மாதா அழகிய புன்னகையுடன் நிற்கிறார். இருவரின் சிரிப்பையும் எந்தப்பெயர் பிரிக்கும்?

பேசிக்கொண்டே இருக்கையில் கடந்து செல்லும் ஒருவனை பார்த்து தமிழ் சொன்னான். ‘என்ன செந்தூரப்பாண்டி,வேளைக்கு வர நேரமா இது?. அவனோ, ‘யோவ்.. போய்யா!’ என சிரிப்பளித்தான்.

‘அவர் சர்ச் வாட்ச்மேன் ஜி. பேரு ஆரோன். அவருக்கு நா டெய்லி இப்டி ஏதாச்சும் சொல்லி கூப்டனும். அப்படியே சிரிச்சிட்டே உள்ள போவாரு.’ என்றான் தமிழ். எப்போதும் தமிழ்தான் எனக்கு.

பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டு, ‘சரி ஜேக்கப்… வரட்டுமா?’ என்றேன்.

‘ஜீஈஈஈஈஈ..!’ என்றான்.

குளிர்ந்து மாறியது இரவு.

[email protected]

The post பெயராடல் – அசோக் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

கன்னக்குழி – ஜெயநதி

மூன்று தினங்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த தொழில்முறை அலைபேசி எண்ணை ஆன் செய்தாள் ரதி. பர்சனலாக ஒரு எண் வைத்திருக்கிறாள். அது அவளுக்கும் அவளுடைய அம்மா விசாலிக்கும் மட்டுமானது. கொஞ்ச நாட்களாகத்தான் அம்மாவுடன் பேசுகிறாள். அதுவும் அவளிடம் வளருகிற தன் குழந்தையின் பொருட்டு…

தானிழைத்த பெரிய தவறுக்காக ஒரு மன்னிப்பைக் கோரி நின்றவளை தாய் மன்னித்து வீட்டில் சேர்த்திருக்கலாம். ரதியும் படிப்பை தொடர்ந்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

தொலைபேசி எண்ணை ஆன் செய்ததும் தொடர்ச்சியாய் தவறின அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்து விழுந்தவண்ணமிருக்கிறது.

வந்தவைகளில் மஞ்சுவின் குறுஞ்செய்திதான் அதிகம். மஞ்சுநாதனை அழைத்தாள்.

‘”என்ன?” என்றாள்.

“எனக்குத் தெரியும் ரதி. மூனு   நாளைக்கு தொந்திரவு பண்ணக் கூடாதுன்னு.. ராஜ்மதன்னு புதுசு. நீதான் வேணும்னு காத்திட்டிருக்கான். இன்னைக்கு முடியுமா?”

“ம்ஹூம், முடியாதுப்பா…!” என்றாள்

“அப்ப நாளைக்கு.?….

“ம்..”

அந்தப் பக்கம் அவன் இளிப்பது தெரிந்தது.

காரைக் கிளப்பினாள். கண்ணாடியில்       முகம் பார்த்தாள். சாயமில்லாத உதடு வெளிறி இருந்தது. ரெடிமேட் மூக்குத்தி முகத்தின் வாட்டத்தை மறைத்து மின்னியது.

குதிரைவால் பின்னலை வளைத்து கொண்டையாக மாற்றியிருந்தாள். இளமையின் மீது விழுந்த நகக்கீறல்களாய் நரை அங்கொன்றும் இங்கொன்றுமாய். இன்னும் மெலிதான இரத்தப் புள்ளிகள் நாப்கினை நனைத்துக் கொண்டிருந்தது. நாளைக்கு சரியாகிவிடும்.

அப்புறம் கனஜோராய் தொழில் ஆரம்பித்து விடும். விடுபட்ட நாட்களுக்கும் சேர்த்து நுகர்வதும், கசங்குவதும், கசப்பதுமான இடிபாடுகளிடையே நொறுங்கிவிடாது

நகர்ந்து வருவது பெரும்பாடு.

ஏதாவது ஒரு முகம்

ஏதாவது ஒரு தருணம்

அழுவாச்சிக் காட்டி ஆட்டத்தைக் கலைக்கப் பார்க்கும். ஆனால், சென்டிமெண்ட்டெல்லாம் தொழில் தர்மமில்லையே!

காரிலிருந்து இறங்கி தள்ளாடி நடந்தாள்.

உலகத்தை எத்தி எத்தி பின்தள்ளி

முன் நகர்கிற இந்த தள்ளாட்டம் அவளுக்கு சுகமோ சுகம்..

வீட்டினுள் நுழைந்து கதவடைத்தாள்.

செருப்பைக் கழற்றியதும் அவளுக்காக காத்திருந்த பூனைக்குட்டி மெத்தென்று உரசி கால்களை நக்கியது.

எங்கிருந்தாலும் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்து விடுவது அவனுக்காகத்தான்..

“ச்சிலியோப்பா”… சீட்டா, லியோ, பேன்தர் மூன்றையும் கலந்து வைத்த பெயர்…அவள்பாட்டிலைத் திறக்கிற கண்ணாடி கோப்பைகள் உரசுகிற சத்தம் கேட்டாலே போதும் எங்கிருந்தாலும் ஆஜராகி விடும்.. அதற்கு மதுவை நக்குகிற பழக்கம்… அவளுடன் கட்டிலில் மல்லாந்து விடும். அவளுக்கு மனசு சுணங்கியிருக்கும்போது அதற்கு எப்படியோ தெரிந்து விடும். அவளை விட்டு விலகாது உரசிக்கொண்டு கூடவேஇருக்கும்…

“குட்நைட்…ச்சிலியோப்பா”…..என்றாள்.

வாயிலிருந்து குழறலாய் பனிப்புகை கிளம்பியது.

ஜெர்மனியின் பனிச் சூழ்ந்த மரப்பலகை வீட்டின் படுக்கையறை

ஹீட்டரில் கதகதப்பாயிருந்தது.

இந்த கசிகிற மெல்லிய வெளிச்சத்தில் மேற்கூரையை வெறித்தபடி படுத்திருப்பது நன்றாய்த்தானிருக்கிறது.

சில மெழுகுவர்த்திகள் நின்று எரிகிறது. சீக்கிரத்தில் அணைவதில்லை. அதன் தடிப்பு குறைவதுமில்லை….

அரக்கு ஒழுக்கி ஒட்டிய கடிதத்தை முனை கிழியாமல் பிரிப்பதும், அதில் ஏதும் சுவாரஸ்யம் இருக்குமாவென படித்துப் பார்க்கையில் ஒரு மண்ணுமில்லை என கசக்கிப் போடுவதுமாய்

வாழ்க்கை….!

“போங்கடா”….

நொறுங்கிவிடாது இவ்வளவு தூரம் வந்திருப்பதே விஷயம்தான்…

கொஞ்சம் வீறல்…

கொஞ்சம் விரிசல்…

ஆனாலும் எதை ஊற்றினாலும் கசிய விடாத

கண்ணாடிக் குவளை.

இன்னும்

மவுசு இருக்கிறது. போகிறவரை போகட்டுமே….

மறுநாள் விடுதியை அடைந்தபோது வாசலிலேயே மஞ்சு நின்றிருந்தான். வாயெல்லாம் பற்கள்.. சட்டைப்பை நல்ல கனத்திலிருந்தது. பெரியவருமானமாய் இருந்தால் மஞ்சு நேரிலேயே வந்துவிடுவான். இல்லையெனில் அலைபேசியிலேயே வியாபாரத்தை முடித்துவிடுவான். இன்று நல்ல வேட்டைதான்போல..

அறைக்கதவை தட்டிக்கொண்டு போனபோது, உள்ளே இருந்தவர் கதவோரம் இருந்த இருக்கையிலேயே அமரும்படி சைகை செய்துவிட்டு வீடியோ காலில் அசையாமல் “ம்” கொட்டிக் கொண்டிருந்தார். அப்படியென்றால் எதிரில் பேசிக்கொண்டிருப்பது அனேகமாய் மனைவியாய் இருக்கக்கூடும்.

இந்த ஆண்களுக்கு மனைவியிடம் நடிப்பதென்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி..

பேசி முடித்ததும் அருகில் வந்து அமரும்படி சைகைசெய்தார்.

“நேர்ல இன்னும் அழகாஇருக்கே…!”

சிரித்தாள்..

“ஒகே…கே…நான் நிஜத்தை சொன்னேன்…!” அவரும் சிரித்தார்.

“ஏதோ இருக்கு உன்கிட்டே… புகைப்படத்தைப் பாத்தப்பவே கணிச்சேன்.. இன்னைக்கு ஊர்ஜிதமாயிடுச்சு.. உன்கிட்ட ஏதோ வசியம் இருக்கு…ஹா…ஹா…”

“பெரிய மனுஷ தோரணையெல்லாம் படுக்கையில உதவாது.வா..வந்து இங்க உட்கார்” என்றபடி தொடர்ந்து, “ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா?” எனக் கேட்டார்.

“ம்.”..

“என்ன சொல்லட்டும்?”

“ஷாம்ப்பெய்ன்.. சப்பாத்தி.. மட்டன் கசண்டி”…- என்றாள்.

“ஆஹா ஜோர்…எனக்கும் இது ரசிக்கும். முதல்ல சாப்பிட்டு சவகாசமா பேசிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்…” என்றார்.

ரசனைக்காரன் தான்.

இன்று எல்லாப் பசிக்கும் தீனி கிட்டலாம்..

“ரதி…ஏதாவது பேசேன். உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லேன்?”

என்ன கன்றாவிடா இது…

ஏதாவது கவிஞன் எழுத்தாளனிடம் வந்து சிக்கிக்கொண்டுவிட்டேனா என்ன?…

வேலை முடிந்ததா அனுப்பி வைப்போமா என்றில்லாது, பைத்தியக்காரன்

“அதுவந்து”..

அவரே பேசினார்..

“எனக்கும் அலுப்பாயிருக்கு… நிறைய பாத்தாச்சு.. இன்னைக்கு அமைதியா பிடிச்சத சாப்பிட்டுக்கிட்டு, பேசிகிட்டு, ரூமுக்குள்ளேயே கதகதப்பா இருக்கத் தோணுச்சு. பாத்த போட்டோக்கள்ல நீதான் இதுக்கு சரியா வருவேன்னுபட்டுச்சு. அதுவும் இந்த சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ விழுகிற கன்னக்குழி….”

ஆழமாய் பார்த்தார்.

வெகுநேரம் ஓடிக்கொண்டிருக்கிறபோது மிகப் பிடித்த இடத்தைக் கடக்கையில் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவதைப்போல

திரில்லாக இருந்தது ரதிக்கு..

வித்தியாசமானவனாய் இருக்கிறான்.

“ம்… என்ன கேட்டீர்கள்? சரியாக கவனிக்கவில்லை” என்றாள்.

“காதலைப் பற்றி உன் அபிப்ராயம் என்ன? நீ லவ் பண்ணியிருக்கையான்னு கேட்டேன்?”

காதலன் இருந்தான். அவன்தான் காதலைச் சொல்லி படிப்பதிலிருந்து காதலுக்கு நகர்த்தி.. காதலிலிருந்து கர்ப்பத்திற்க்கு நகர்த்தி.. பின் கருக்கலைப்புக்கு நகர்த்தி.. ஆயிரம் சத்தியம் செய்து மறுபடியும் இன்னுமொரு கர்பத்திற்கு நகர்த்திவிட்டு ஒருநாள் அவனுக்கே அத்தனை சத்தியங்கள் சலித்திருக்கும் போல… ஓடிவிட்டான்.. திருட்டு ராஸ்கல்….இதுவரை எந்தத் தகவலுமில்லை.இவளும் தேடவில்லை..விட்டது சனியன் என்று..

இவனிடத்தில் எதற்கு இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும்…

“அது வந்து… காவியக் காதல் பண்ற அளவுக்கு யோக்கியமானவனை இதுவரைக்கும் நான் பாக்கவுமில்ல. காவியக் காதலியா இருக்கிற யோக்கியதை எனக்குமில்ல… பத்தொன்பது வயசுலயே இந்த லைனுக்கு வந்துட்டேன். சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்ல..

அப்புறம் ஒரு கால்கேர்ள் கிட்ட காதலைப் பத்தி விசாரிக்கிறிங்கன்னா நீங்க சுவரஸ்யமான ஆள்தான்.. காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?….”

கூர்மையானாள்.

“எனக்கு இப்ப வயசு அறுபத்தி ரெண்டு. இருபத்தி மூனு வயசுல ஒருத்திய பாத்தேன். ப்ரபை அவளுடைய பெயர். அவளாக வைத்துக் கொண்ட பெயர். தமிழ்நாட்ல ஒரு நூலக வாசல்ல… யாருக்கோ காத்திட்டிருந்தா..அப்பப்ப என்னைப் பாத்துசிரிச்சா.. கன்னக்குழிவிழ… எனக்கு முதல் பார்வையிலயே ரொம்ப பிடிச்சிருச்சு..போய்ப் பேச பயம்.. ஒரு கார் வரவும் கிளம்பிப்போயிட்டா. மறுநாள் அதே நேரத்துக்கு அந்த நூலகத்துக்கு போய் ரொம்ப நேரம் காத்திருந்திட்டு ஏமாந்து திரும்பி வந்தேன். அவ கன்னக்குழி சிரிப்ப மறக்க முடியல.சிரிச்சும் சிரிக்காம ஆரம்பிக்கிற போதே இடது கன்னத்தில் மட்டும் ஆழ குழி விழுகிற சிரிப்பு… மனசு எதுலயும் ஒட்டல. அதன்பிறகு எதேச்சையா ஒருநாள் ஒரு உணவகத்துல பார்த்தேன். முன்பைவிட இன்னும் அழகாயிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கிட்டிருக்கிறதை கவனிச்சு அவளே என்கிட்ட வந்து லேண்ட்லைன் எண்ணைத் தந்துவிட்டு மறைஞ்சுட்டா.

அந்த எண்ணுக்கு கூப்பிட்டபோது.. ரேட் இவ்வளவு என்று பேசினாள். எனக்கு முதலில் அதிர்ச்சியாய் இருந்தாலும் அவளை மறக்கமுடியாமல் திரிஞ்சேன். சில தினங்களுக்குப் பிறகு என் காதலைத் தாங்க முடியாமல் சொன்னபோது திக்குமுக்காடினாள்… குதூகலித்தாள். நிறைய பேசினோம். அவள் அதிபுத்திசாலி. கவிதையைப் பற்றி பேச ஆரம்பித்தால் ஜான்மில்டன் பற்றி பேசுவாள். ஷெல்லி பற்றி பேசுவாள். பாரதியைப் பற்றியும் பேசுவாள். வரலாறு, புரட்சி எதைப்பற்றியும் பரவலான அறிவிருந்தது அவளிடம். முக்கியமாய் பரதம்…. சுழன்றாடினாள்…

என்னை ஸ்திரமாய் நம்பினாள்.

நம்பவைத்தேன்.

சில நாட்களில் என் அண்ணனுக்கும் பின் அம்மாவுக்கும் எல்லாமும் தெரிஞ்சு போனது.. அம்மா அடித்துக் கொண்டு அழுதாள். அரிவாள் மனையை கழுத்தில் அழுத்திக் கொண்டு அறுத்துக் கொள்ளப் போவதாய் மிரட்டினாள்.

வேற வழியில்லாம அவளை தவிர்த்தேன். பாவம் ப்ரபை.. ஆனால், அதிபுத்திசாலியல்லவா.. நான் கைவிட்டதை புரிந்து கொண்டாள்.

பின்னாளில் எனக்கு கல்யாணமும் முடிந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு அவளை ஒரு ரெஸ்ட்ராண்ட்டில் பாத்தேன். ஒரு ஆணுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே

என்னைப் பார்த்ததும் சிரித்தாள். என்னை மன்னித்துவிட்டதாய் காட்டிக் கொண்டாள்… குற்ற உணர்வுடன் நான் திரும்பி விடக் கூடாதென்கிற அக்கறையோடு கன்னக்குழி விழ சிரித்துக்கொண்டே கடந்து போனாள். மனதாலும் அவ்வளவு அழகானவளை அப்புறம் பார்க்க நேராததுதான் அவளோடு இணைந்திருந்து குறுகிய நாட்களை அற்புதமான கவிதை வரியாக மாற்றியிருந்தது வாழ்வு.. ஜிகினா காகிதத்தில் அச்சிடப்பட்ட அற்புதமான பழுப்புக் கவிதை .

ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை நான் உணர்ந்தேன்.

உணவகத்திலிருந்து வெளியே வந்த போது மிக மெல்லிய காற்றுக்கே அங்கிருந்த போகன்வில்லா மரம் காகிதப்பூக்களை என் மீது ரோஸ் நிற வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றி மொய்க்கச் செய்தது.

அவள் மன்னித்துவிட்டாள்.

தெருவோரப் பைத்தியக்காரி ஒருத்தி என் முகத்தில் ஆசையாய் தடவிய விரல்களை அழுக்கு உதட்டில் வைத்து முத்தினாள்.

சத்தியமாய் ப்ரபை என்னை மன்னித்துவிட்டதை உணர்ந்தேன்.

ஆனால், என்னிடமிருந்து இன்றுவரை எனக்கு மன்னிப்பே கிடைகக்கவில்லை…

பிறகு மனம் நோகிற போதெல்லாம் அங்கிருந்து கிளம்பி இங்கே வந்துவிடுவேன்… இரண்டு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.

இன்று அவளை லைப்ரரியில் முதன்முதலில் பார்த்த தினம்..

அதைக்கொண்டாட அவளைப் போலவே ஒரு விலைமாதைத் தேடினேன்.  

எனக்கு வந்த புகைப்படங்களிலேயே நீதான் பழைய இடதுக் கன்னக் குழியோடு புது சிரிப்பை சிரித்துக் கொண்டிருந்தாய்!”

[email protected]

The post கன்னக்குழி – ஜெயநதி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன்

மெடிக்கல் காலேஜ் ரோட்டில் முதல் கேட்டிற்கருகே வரும் போது செல்போன் அழைத்தது. நல்ல வெய்யில் நேரம், மே மாத சூரியன் தன் முழுவீச்சை வெளிப்படுத்தும் நேரம், உச்சி வெய்யிலின் தாக்கத்தை விட சுற்றுப்புற அனலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வண்டியை நிழலான இடத்தில் நிறுத்தலாமென்றால், ரோட்டில் இருந்த மரத்தையெல்லாம் விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டியதால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரங்களே இல்லை.

முதல் கேட்டினுள்ளே நுழைந்தால் வலது புறம் பெரிய ஆலமரம், விழுதுகள் ஊன்றி நிழல் அளித்ததைக் கண்டு அதன் எல்லையில் நிறுத்தினான் திருப்பதி, அதற்குள்ளாக செல்போன் அழைப்பு நின்றிருந்தது.

செல்போனை எடுத்து அழைத்தது யார் என்று பார்த்தால் புதிய எண்ணாக தெரிந்தது. இதற்கு முன்பு இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக நினைவில் இல்லை. பொதுவாக அழைப்புகள் வரும் எண்களையும் பேசுபவர்கள் குரலையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவது வழக்கம். அந்த எண்ணிற்கு அழைத்தான் பிசியாக இருந்தது. சரி காத்திருப்போம் என அமேசானில் உலாவி புதியதாக வந்திருக்கும் டூல்ஸ்களை பார்வையிட்டான். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“சார், அதிர்ஷ்டம் கடையில ஒங்க நம்பர் கொடுத்தாங்க. நீங்க திருப்பதிதான? வாசிங் மிஷினுக்கு சரியா தண்ணீ வரமாட்டேங்குது. தொவக்க லேட்டாவுது. வந்து என்னான்னு பாக்க முடியுமா? இப்போ வர முடியுமா?”

“ஓகே பத்துடலாம். டேங்குல தண்ணீ ஃபுல்லா இருக்கா?”

“பார்த்துட்டேன் சார். மோட்டார போட்டு தண்ணிய ஃபுல்லா ஏத்தியும் பாத்துட்டேன். ரெம்ப கம்மியா வருது போல. தொவக்க ரெம்ப நேரம் ஆவுது. இதுக்கு முன்னாடி இது மாறி ஆனதில்ல. கொஞ்சம் சீக்கிரம் வாங்க. வெளிய போகனும்”

“சரி, அட்ரச சொல்லுங்க. வந்துர்றேன்.”

“அருளானந்த அம்மாள் நகர், புஷ்பம் காலனி, ஆறாவது தெரு, மொத மாடி வீடு, கத்தரி பூ கலர்ல பெயிண்ட் பண்ணது.”

“மெடிக்கல் காலேஜ் ரோட்டுல இருக்கேன். நேரா அங்கதான் வரனும் வந்துர்றேன்.”

தினமும் தஞ்சாவூரையே சுற்றி வருவதால் முகவரி நன்றாகத் தெரிந்தது. மனதிற்குள் அதற்குள் போக வேண்டிய பாதை வரைபடமாக விரிந்து வழிகாட்டியது. ஞாபக அடுக்குகளில் தெரு, கடைகள், திருப்பங்கள் எல்லாம் எப்படி பதிகிறது.. திரும்பவும் எடுக்கப்பட்டு பயன்படுகிறது என மனதின் வன்மையை நினைத்து வியப்படைத்தான்.

வாகனத்தை மெதுவாக இயக்கி பண்ணிரெண்டு நிமிடத்தில் புஷ்பம் காலனி ஆறாவது தெருவையடைந்தான். வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. தெருவின் முதல் வீடே அவர்களதுதான், வாகனத்தை நிறுத்திவிட்டு டூல்ஸ் பையுடன் கேட்டின் கதவருகே நின்று உள்புறமாக அழைத்தான்.

“சார், சார். வீட்டுல நாயிருக்கா?”

“இதோ வர்றேன் சார்” – என்றபடி முப்பத்தியைந்து வயதுடைய பெண் நைட்டியில் வந்தார்.

“வாங்க சார், நாய் கிடையாது. பயப்படாம வாங்க.”

“ஒகே, ஒகே. ரெண்டு மூனு தடவ கடி வாங்கி ஊசி போட்டதுல கொஞ்சம் பயம். அதான் கேட்டுக்கிட்டேன். வாசிங் மிஷின் எங்க இருக்கு?

“மொதல் மாடியில் இருக்கு. வாங்க காட்றேன்”

போர்டிகோவை ஒட்டி ஏறிய மாடிப்படியின் வழியே முதல் மாடியில் வலது புறம் இருந்த மிகப்பெரிய அறையைக் காட்டினார். “இதுல இருக்கு. நீங்க பாருங்க. நா காலேஜ்க்கு போவனும். டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்றவருக்கு நல்ல திருத்தமான முகம். மேக்கப் இல்லாமலே அழகாக இருந்தார். நன்றாகப் படிய வாரிய தலைமுடி பின்னால் பின்னி இடுப்புவரை தொங்கியது. நைட்டியிலேய உடலின் வளைவுகளும் திண்மையும், இளமையும் தெரிந்தது. சாந்தமான முகமும் புன்னகையும் ஒரு முறை பார்த்தவர்கள் மறக்க முடியாத வன்னமிருந்தது. கழுத்தில் தாலியும், காலில் மெட்டியுமில்லை. கற்பனையில் மனம் பறந்தது.

வாசிங் மிஷின் அறையில் உள்ளே அதன் அட்டாச்சுடு பாத்ருமை ஒட்டி நன்றாக வழிவிட்டு வெளியே இருந்தது. முதலில் மிஷினுடன் இணைந்த  குழாயின் வால்வை மூடிவிட்டு ஹோசை கழற்றினான். மீண்டும் வால்வைத் திருகினான். தண்ணீர் நன்றாக வேகமாக வந்தது. ஹோசின் மறுமுனை, மிஷினின் பின்புறம் இருந்ததைக் கழற்றிப் பார்த்த போது, சிறிய வலையில் அதிக அளவில் காய்ந்த தேக்குமரப் பூக்கள் நிறைய வடிகட்டும் வலையில் சிக்கி அடைத்திருந்தால் தண்ணீர் கொஞ்சமாத்தான் செல்லும். சுத்தமாக சிறிய வட்ட வலையை கழுவி சரியாகப் பொருத்தி பழையபடி ஹோசை மாட்டிவிட்டு வால்வைத் திறந்த போது நல்ல வேகமாகத் தண்ணீர் வந்தது. மிஷினை ஆன் செய்து பார்த்தான்.

தண்ணீர் உடனே வேகமாகப் பாய்ந்ததால் மிஷின் பழையபடி வேலை செய்தது. இப்போது விரைவாகத் துணிகளை துவைத்துவிடும் . பாத்ரூமில் கைகால்களை கழுவி வெளிவந்து டூல்ஸ்பையை எடுத்து சரிபார்த்து அறைக்கு வெளிய வந்தான்.

மேலும் ஐந்து நிமிடத்திற்கு பிறகே அழைத்த பெண் மாடிக்கு வந்தார்.

மிகப்பிரகாசமான ஒளிபரவ குறுகிய கால எளிய மேக்கப்பில் ஜொலித்தார். நெருங்கிய உறவினரைப் பார்பது போல தெரிந்தது. பெண்ணுக்கேயுரிய உடல் அமைப்பும் அதற்கேற்றார் போல உடையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஏதோ ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

“என்ன சார், சரியா இருக்கா இப்ப? என்னாச்சி என்ன காரணம் தண்ணீ சரியா வராததுக்கு?”

மேல இருக்குற தண்ணீர் டேங்க்குல, காஞ்ச தேக்குமர பூ கொட்டுறது உள்ள விழுந்து கீழ வர்ற பைப்பு வழியா வந்து, வாசிங் மிஷின்ல பில்டர்ல அடைச்சிகுது. அதுனால தண்ணீ உள்ள வேகமா வராம துணிய தொவைக்க ரெம்ப லேட்டாவது. அதான் காரணம்.”

“ஓ அப்டியா, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? மாடியில இருக்கும் டேங்க்க பார்த்துட்டு சொல்லுங்க. சுத்தப் படுத்திடலாம்.”

ஒரு வினாடி யோசித்தவன், “சரி, ஏறி பாத்துடுவேன். ஆனா, கிளீன் நா பண்ண மாட்டேன்.”

“ம். ஓகே சார்.”

மொட்டை மாடியில், வீடு கிழக்கு பார்த்த வாசல் என்பதால் இடது புறம் மூலையில் டேங்க் சிமெண்ட் செங்கல் , கலவையில் கட்டப்பட்டிருந்தது. பின் கட்டில் இடமிருந்ததால். நிறைய தேக்குமரங்கள் இருந்தன, இரண்டு மாடி தாண்டி வளர்ந்தவை. டேங்கின் மேல் ஏறிப் பார்த்தான். பிளாஸ்டிக் மூடியாததால் உடைந்திருந்தது. பாதிக்கும் மேல் திறப்பாக இருந்த பகுதி வழியே பூக்களும் இலைகளும் விழுந்து தண்ணீரில் குப்பையாக, அழுக்காக இருந்தது. கீழே வந்து. அப்பெண்ணிடம், “டேங்க் மூடி ஒடஞ்சிருக்கு. அத மாத்தனும், தொட்டிய சுத்தம் செய்யனும். ஒடஞ்ச பக்கமா தேக்குமர பூவும் இலையும் கொட்டி குப்பையா இருக்கு” என்றான்.

“ஒரு உதவி செய்யுங்க. நீங்க கிளீன் பண்ணிட்டு அதுக்கும் சேர்த்து காசு வாங்கிக்கோங்க” என்றார்.

“ஸாரி, அந்த வேலை என்னால முடியாது. வேற தெரிஞ்ச ஆள் இருக்கு நம்பர் அனுப்புறேன். சொன்னீங்கன்னா வந்து கிளீன் பண்ணிட்டு மூடியும் புதுசா போட்டு குடுத்துட்டுப் போவாரு. இந்த தடவ இரும்பு மூடியா போட்டுங்க.” என்றபடி நம்பரை அனுப்பினான்.

“சரிங்க நம்பர் தாங்க. பேசிக்குறேன். உங்களுக்கு ஜீபே இருக்கா? இருந்தா நல்லது. உடனே பணம் அனுப்பிடுவேன். கேஷ் வச்சிகிறது இல்ல, ஸாரி” என்றார்.

“அதபத்தி பேசுனா அரசியலாய்டும். பொதுவா நா பணம்தான் வாங்குவேன் .முடியலன்னா ஜீ பே பண்ணுங்க. உங்க பேர சொல்லுங்க. பணம் வந்துட்டா செல்லிர்றேன்” என்றபடி கூலித் தொகையையும் சொன்னான்.

“ஒகே, நீங்க நோட் பண்ணிக்குங்க. எம்பேரு அனுஸ்ரீ” என்று சொல்லியடி போனிலிருந்து பணம் அனுப்பினார்.

கேட்ட தொகையை அனுப்பியிருந்தார்.

“பணம் வந்துடிச்சிங்க. தாங்க்ஸ். அனுப்பின நம்பர்ல கூப்பிட்டு தொட்டிய பாத்துட்டு ,கூலிய பேசிட்டப்புறம் வேலை பாக்க சொல்லுங்க. அதான் நல்லது. சரி நா கெளம்புறேன்.”

“ஓகே, நானும் காலேஜிக்கு போனும்” என்று கீழிறிங்கினார். திருப்பதியும் பின்னால் இறங்கினான். ஏதோ உறுத்தலாகவே உணர்ந்தான். வீட்டின் வாசலில் வைத்த வாகனத்தை எடுக்கும் போது சிமெண்ட் கலர் குவாலிஸ் அர்பன் குருஸ்னர் வந்து நின்றது. அதிலிருந்து மாநிறத்தில் குள்ளமான நபர் இறங்கி திருப்பதியை பார்தபடி வீட்டினுள் போனார்.

“யாரு வந்துட்டுப் போறது? நா இல்லாத போது கண்ட ஆளெல்லாம் கூப்புடாதேன்னு எத்தன தடவ சொல்றது?” என்ற சப்தமாகப் பேசுவது கேட்டது. லேசாக மனதிற்குள் வெம்மையை உணர்ந்தான்.

“வாசிங்மிஷின் ரிப்பேர்னு சொல்லி ஒரு வாரமாவுது. நீங்க பாக்குற மாறி தெரியல. அதான் அதிர்ஷ்டம் கடையில் அவரோட நம்பர குடுத்தாங்க. வரச் சொல்லி சரி பண்ணினேன். அதுக்கு இப்ப என்னா? நீங்க செய்ய மாட்டீங்க.. செஞ்சா குத்தம் சொல்றது. சரி, எனக்கு நேரமாவுது” என்ற கோபக் குரலும் கேட்டது. ‘இது குடும்ப வெவகாரம். நாம தலையிடக் கூடாது’ என ஒன்றும் பேசாமல் புறப்பட்டுவிட்டான் திருப்பதி.

மூன்று நாட்களுக்கு பிறகு அனுஸ்ரீ போன் செய்தார்.

“சார், நீங்க கொடுத்த நம்பருக்கு போன் பண்ணேன். சிவானந்தம்னு வந்தாரு. டேங்க்க நல்லா சுத்தம் பண்ணதோட, புது இரும்பு மூடிய வாங்கிட்டு வந்து சிமெண்டால பூசி குடுத்துட்டுப் போனாரு. ரெம்ப தேங்க்ஸ்” என்றார்.

“அதுக்கு ஏங்க தேங்க்ஸ்? எங்க வேலையில் அதுவும் ஒன்னு.. அவ்ளோதான். உங்களுக்கு திருப்தினா சரிதான்”

“ஒகே சார். வச்சிடுறேன் பை” என்றார்.

அப்போதே  வாட்சப்பில் பூங்கொத்தும், ஸ்மைலியும் , ஹார்ட்டும் தேங்க்ஸும் வந்தது. அன்றிலிருந்து  தினமும் காலை வணக்கமும் , இரவு வணக்கமும் பத்து நாட்களுக்கும் மேலாக அனுப்பியிருந்தார். திருப்பதிக்கு உறுத்தலும், தவிப்பும் ஏற்பட்டு ஒரு மாதிரியானான். பதிலுக்கு எதுவும் அனுப்புவதில்லை.

கடையிலும், வெளியிலும் வேலையில்லாத நேரம். அம்மாதிரியான காலத்தில் புத்தகம் படிப்பதில் இறங்கும் பழக்கம். நாஞ்சிலாரின் இடமோ வலமோ தொகுப்பை படிக்கத் தொடங்கினான் திருப்பதி,

தவசிப்பிள்ளை, கும்பமுனியை வைத்து நகைச்சுவையுடன் நிதர்சனமான உண்மையைக் கலந்து தரப்பட்ட பதிவுகள். பாதிக்கும் மேல் படித்துவிட்டான். முகம் முழுவதும் புன்னகையுடனும் மனமும் நிறைத்திருந்தது. செல்போன் அழைப்பு வந்தது , சற்றே சலிப்புடன் போனை எடுத்தான். அழைத்தது அனுஶ்ரீ. மணி பன்னிரெண்டாகியிருந்தது

“சொல்லுங்க , என்னாச்சி?”

“வீடு முழுக்க எல்லா பைப்பிலும் தண்ணீர் வர மாட்டேங்குது. கொஞ்சம் அவசரம். உடனே வர முடியுமா?”

“எல்லா பைப்பிலும் வரலியா? பத்து நாளுக்கு முன்னாலதானே சுத்தம் பண்ணோம். திடீர்னு வரலயா?” என்றான்.

“ஆமாங்க காலையில கூட பாத்திரம் கழுவினேன். அப்பல்லாம் வந்ததே! வாசிங் மிஷின்ல துணிய தொவச்சி மாடியில காயப்போட்டேனே.” என்றார்.

“சரிங்க. ஒடனே வர்றேன்”

டூல்ஸ் பையுடன் வாகனத்தில் ஏறி உடனே அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டான்.

வீட்டை நெருங்கி வாகனத்தை சுற்றுச் சுவரின் அருகே பெரிதாக வளர்ந்திருந்த புங்க மரத்தினடியில் நிறுத்தி பூட்டினான். புங்க மரத்தின் நிழலும், பசுமையும், பச்சை வாசனையும் அற்புதமான குளுமையுடன் பரந்து விரிந்திருந்தது. தெருவில் நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது. வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. ஹாலைக் கடந்து இடது புறமிருக்கும் படுக்கையறைக்கும் சாமி அறைக்கும் நடுவில் நின்று மீண்டும் அழைத்தான். பதிலில்லை, படுக்கையறையிலிருந்து பிளாஸ்டிக் வாளியை நகர்த்தும் சப்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது.

மீண்டும் குரல் கொடுத்தான்.

படுக்கையறைக் கதவை மெதுவாக தயக்கத்துடனே தள்ளித் திறந்தான். அறையில் யாரும் இல்லை. பெரிய அறை. அலங்காரமான தேக்கு கட்டிலும் தலைப்பக்கம் விளக்குகள் வைத்து பிளஸ்டிக் பூக்களால் அலங்கரித்து அழகுடன் இருந்தது. ஒரு அடி உயரமுள்ள ஸ்பிரிங் மெத்தை மேலே காட்டன் போர்வையால் போர்த்தியிருந்தது. படுக்கையின் எதிரே ஐம்பத்தி மூன்று இஞ்ச் டிவியும் மரத்தால் அழகுற வடிவமைக்கப்பட்ட மையத்தில், முன்னும் பின்னும் இழுத்தும் ,சுவரில் சமமாக வைக்கும் விதத்தில் மாட்டியிருந்தனர். அறையின் இடது புற சுவரின் நடுவில் ஏசியும், மூன்று புற சுவரின் நடுவில் வண்ணமயமான விளக்குகளும் , வித்தியாசமான வடிவமைப்பில் சீலிங் பேனும் இருந்தது. வலது மூலையில் பாத்ருமின் கதவு லேசாகத் திறந்திருப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

மேலும் உள்ளே நுழைவதற்குள் பாத்ரும் கதவு திறக்கப்பட்டு முழங்கால் மூட்டு தெரிய தூக்கி மார்புப் பகுதி வரை கட்டியிருந்த உள் பாவாடையும், தோள் மேல் போர்த்தியிருந்த பெரிய தேங்காய் பூ துண்டுடன் அனுஸ்ரீ வெளியே வந்தார். திருப்பதியை பார்த்ததும் புன்னகைத்து, “வாங்க, பாதி குளிக்கும் போது திடீர்னு தண்ணீ வரல.. அதான் போன் பண்ணேன்” என்றார்.

வெட்கமும் பதற்றமுமடைந்த திருப்பதி திகைத்தான்.

“ஸாரி, கூப்பிட்டு பார்த்தேன். பதிவில்லை. அதான் உள்ளார வந்துட்டேன்.”

“அது பராவாயில்ல. என் தப்புதான். வெளியே இருந்துக்கனும். நீங்க இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்க்கல”

“வேலையில்லாம சும்மா புத்தகம் படிச்சிட்டிருந்தேன். அதான் உடனே வந்துட்டேன்.”

“புத்தகமெல்லாம் படிப்பீங்களா?”

“ம் , படிப்பேன். சரி, வந்த வேலைய பாக்கலாமா?”

கலகலவென சப்தமாகச் சிரித்தார்.

“ஓ..சாரி. வாங்க.. வந்த வேலைய பாருங்க” என்று பாத்ரூமுக்கு வழி விட்டார்.

பாத்ருமிற்குள் புகுந்து குழாய்களைத் திருகிப் பார்த்தால் சுத்தமாக தண்ணீரே வரவில்லை. சரி மாடி டேங்கில் தான் பார்க்க வேண்டுமென முடிவுக்கு வந்து திரும்பும் போது, தேங்காய்ப்பூ துண்டில்லாமல், மார்புப் பகுதியில் கைவைத்து முடிச்சிட்ட பாவடையை அவிழ்த்து கால்கள் வழியே நழுவ விட்டு அனுஸ்ரீ நிர்வாணமாக நெருங்கினார். சாதாரணமாக நல்ல உடையணிந்தாலே அழகாகத் தெரிவார். உடையில்லாமல் தினசரி பயிற்சி செய்த உடல் வனப்புடனும் ஈர்ப்புடனும் இருந்தார். எந்த ஆண்மகனும் தடுமாறும் நிலையில் மாசு மருவற்ற துல்லியமான, அருவருப்பில்லாத முழு உடல். சட்டென்று முதல் நாள் வேலைக்கு வந்த போது உறுத்தலாக உணர்ந்தது ஞாபகம் வந்தது. கண்கள் இரண்டும் வெகு ஆழமான, உறுதியான, சோகம் கலந்த அழைப்பு விடுத்ததை மனம் அறிந்தது வெளிப்பட்டது.

அந்நிலையில் திருப்பதியை கட்டிப் பிடித்தார்

ஒரு கணம் சபலம், மறுகணம் பதற்றமும் பயமும் தொற்றியது , திண்மையான மதர்த்த உடலின் அருகாமையும், ஹாமாம் சோப்பும் ஒருவித உடலின் வாசனையும் கலந்து தினறடித்தது, கைகளில், உடலின் உணர்ச்சியின் எழுச்சியால், உணர்ந்த திண்மையால் பாலுணர்வு தூண்டப்பட்டாலும் சில நொடிகளில் மனதை கட்டுப்படுத்தினான்

“விடுங்க.. என்ன இது? இப்படி உங்க வீட்டுக்காரர் பாத்தாருன்னா ரெண்டு பேருக்கும் கஷ்டம். எனக்கு கெட்டபெயரும் வந்துடும். கடைக்குத் தெரிஞ்சா வேலைக்கும் ஆபத்து, விட்டுங்க” என உதறினான். உதறுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. நல்ல பலமான பிடியாகத் தெரிந்தது. கைகளை உயர்த்தி விட்டுவிடும் படி கெஞ்சினான். ஒரு நிமிடம் வரை அவரின் இறுகிய பிடி விலகாமலிருந்தது. கையைத் தூக்கியபடியே திருப்பதியும் வெகு அமைதியாக நின்றான்.

என்ன நினைத்தாரோ சட்டென்று முற்றிலும் விலகியவர், கண்ணீருடன் பெரும் குரலெடுத்து அப்படியே பாத்ரும் தரையில் அமர்ந்து உடல் குலுங்க தலை குனிந்து அழுதார்.

“பிளிஸ்.. எனக்கு உதவி செய்யுங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!” என அழுதபடி இருந்தார்.

வெளியே போகலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர முடியாமல் தடுமாறினான் திருப்பதி . வெளியே வந்தவன் ஒரு முடிவெடுத்தான். போர்வையை எடுத்துக கொண்டு பாத்ருமிற்குள் நுழைந்து அனுவை முழுக்க போர்த்தி எழுப்பி ஆறுதலாக தட்டிக் கொடுத்து படுக்கையறைக்குள் மெத்தையில் அமரவைத்து, “நா வெளியே ஹால்ல சேர்ல உக்காத்திருக்கேன். டிரஸ் போட்டுகிட்டு வாங்க” என படுக்கையறையை விட்டு வெளியேறி ஹாலில் சேரில் அமர்ந்து என்னவாயிருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

இரண்டு நிமிடத்திற்குள் பெரிய பூப்போட்ட இறுக்கமான நைட்டியில் முகத்தை துடைத்தபடி வெளிவந்தவர், “உங்களுக்கு டீ யா, காபியா?” என்றார்.

“இப்பவா.. ம், சரி காபி போடுங்க. ப்ளாக் காபியா போடுங்க. சக்கரை பாதியா இருக்கட்டும்” என்றான்.

ஹாலிலிருந்து சமையலறை தெளிவாகத் தெரியும்படி கட்டப்பட்டிருந்தது. காபி போடுவதற்காக ஆயத்தம் செய்து கொதிக்கும் நீரை மௌனமாக உற்றுப் பார்ப்பது தெரிந்தது. ஆவி பறந்து முகத்தில் படிவதும் சில் அவுட் ஆக போட்டோ ப்ரேம் போலத் தெரிந்தது. ஆவி பறக்கும் காபியோடு வந்து முன்னாலிருந்த டீபாயில் வைத்து எனக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தார்.

“எனக்கும் ப்ளாக் காபியா போட்டுகிட்டேன். இன்னிக்கு குடிச்சி பாக்குறேன். டேஸ்டு எனக்கு ஓகேன்னா இனி ப்ளாக் காபிதான்” என்றார்.

சங்கடமான புன்னகையுடன், “கொஞ்சம் கசப்பாக இருக்கும். பழகிட்டம்னா நல்ல பலன் தரும். பால் கலக்காத காபி ரெம்ப நல்லது” என்றான்.

சற்றே கலகலப்பான சூழ்நிலை உருவானது . மெல்ல பேச ஆரம்பித்தார்

“நீங்க நெனக்கிறது போல அவர் என்னாட புருஷன் இல்ல. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறோம். அஞ்சி வருடத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில சென்னையில வேலை பாத்தோம். புடிச்சி போய் எங்களுக்குள்ள பேசி ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். கல்யாணம், குழந்தைங்க வேணாம். சேர்ந்து வாழலாம். நமக்குள்ள தோனுனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். ரெண்டு பேருக்கும் சென்னை புடிக்கல. வேலை நேரமும் முன்னாடி பின்னாடி இருந்திச்சி. அவரோட சொந்த ஊர் மன்னார்குடி. இங்க தஞ்சாவூர்ல அவருக்குத் தெரிஞ்சவங்க காலேஜ்ல எனக்கு வேலையும், அவரு ஒர்க் ப்ரம் ஹோமும் வாங்கிகிட்டு மூனு வருசத்துக்கு முன்னாடிதான் தஞ்சாவூர் வந்தோம்.

வந்த புதுசுல ஒன்னும் பிரச்சன இல்ல. நல்லாத்தான் இருந்தாரு. இப்ப கொஞ்சநாளா எம்மேல சந்தேகப்படுறாரு. கல்யாணமும் , குழந்தையும் வேணாம் கடைசி வரை இப்படியே இருப்போம்ன்னு சொல்றதோட, சில சமயம் கடுமையா செயல்படுறாரு. வர வர நம்பிக்கை இழந்துட்டேன். நீங்க வேலைக்கு வந்துட்டு போன நாளா என்னோட போன எடுத்து பாக்குறாரு. அன்னக்கும் எனக்கும் அவருக்கும் சண்டை. சொல்லிப் பாத்தேன். நம்பவே இல்ல. நா என்னா பண்றது? அப்பா அம்மாவ விட்டுட்டு இவர நம்பி வந்துட்டேன். ரெம்ப கஷ்டம். இவரோட இனி இருக்க முடியுமான்னு தெரியல. அவரு பாக்கனும்னுதான் தெனம் உங்களுக்கு மெசேஜ் போட்டேன். சென்னைக்கு போயிருக்காரு. வர ஒரு வாரம் ஆகும்.”

“சரி, அதுக்கு எங்கிட்ட ஏன் இப்படி நடத்துக்கனும்? போன்ல கேட்டுருக்கலாம், வாட்சாப்புல மெசேஜ் போட்டுருக்கலாம்” என்றான்.

“செஞ்சிருக்கலாம். ஆனா, நீங்க வந்துட்டு போனதும் ஏற்பட்ட சண்டையும் , நீங்க எங்கிட்ட நடந்துகிட்ட விதமும் புடிச்சிப் போச்சி. பத்து நாளா உங்களப் பத்தி விசாரிச்சேன். உங்க வயசு, வீடு, பொண்டாட்டி , புள்ளங்க எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். உங்க முழு விவரமும் இப்ப எனக்குத் தெரியும். பழைய கம்பெனிக்கும் பேசிட்டேன் வேலை தர்றேன் சொல்லிட்டாங்க. அவருக்குத் தெரியாம ஏற்பாடு செஞ்சிருக்கேன்.

அதுக்கு உங்களுக்கும் என்ன சம்பந்தன்னு யோசிக்கிறது தெரியுது.

நா உங்ககிட்ட கேக்க போறது ஒன்னே ஒன்னுதான். கொஞ்ச நாள்ல வெளியூர் போய்டுவேன். உங்கள உட்பட யாருக்கும் தெரியாத ஊருக்கு. எனக்குத் தேவை வாழ்க்கையில ஒரு நல்ல பிடிப்பும் வாழ வேண்டிய உத்வேகமும் தர்ற நல்ல விஷயம். சரி, புருவத்த சுருக்கி மண்டை காய வேண்டாம். பத்துநாளுக்கு மேலா யோசிச்சி இந்த முடிவுக்கு வந்தேன். உங்க மூலமா எனக்கு குழந்தை வேணும், குழந்தை உருவானவுடனே நா கெளம்பிடுவேன். அப்புறம் ஒங்க கண்ணுலயே படமாட்டேன். இது உறுதி. ஒரு தடவ பண்ண தப்ப இன்னொரு தடவ செய்ய மாட்டேன். உங்களயும் பிரச்சனையில இழுத்து வுடமாட்டேன்” என்றார். பெருமூச்சு விட்டபடி சேரில் சாய்ந்து ஆசுவாசமாக தளர்ந்து கண்ணை மூடினார். மனதிலிருந்தவைகளை கொட்டியதால் முகம் மேலும் பிரகாசமாக ஒளிர்ந்தது. எதிர்பார்ப்புடன் நிறைவாக, புன்னகையுடன் இருந்தது.

ஆழ்ந்து அனுவை பார்தபடி காபியை குடித்து முடிந்து டீபாயில் வைத்து கைளை கோர்த்து நெற்றியில் தட்டிக் கொண்டவன், பத்து நிமிடங்களுக்கு மேலாக ஒன்றுமே சொல்லாமல் மனதிற்குள் நடக்கும் போராட்டங்களை ரசித்துப் பார்த்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான்.

மெல்ல தலை நிமர்ந்தவன் அனு அவனயே பார்த்தபடி இருந்ததை கண்டு வெட்கமடைந்து எழப்போனான்.

“இருங்க.. எங்க கெளம்புறீங்க? ஒடனே பதில் சொல்லனும்னு இல்ல. ரெண்டு நாள் கழிச்சி சொன்னாலும் போதும். சமயத்த பயன்படுத்தாத ஆண்பிள்ள நீங்கதான். வேற யாராவது இருந்தா இந்நேரம் வேல முடிஞ்சி போயிருப்பாங்க. உங்க திடமான மனசும் உடலும் எனக்கு ஒரே ஒரு தடவை போதும். வாழ்நாள் முழுக்க வாழ்த்துடுவன். நல்ல முடிவா சொல்லுங்க. மூணு நாள் காத்திருப்பேன். அப்புறம் நீங்க நெனச்சாலும் என்ன பாக்க முடியாது..!”

“சரி, நா கெளம்புறேன்” என்றபடி டூல்ஸ் பையுடன் வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்து மணி பார்த்தான். இரண்டரை ஆகியிருந்தது. பசியே அப்போதுதான் தெரிந்தது. மனதின் யோசனையாலும் அனுவின் பேச்சைக் கேட்டதாலும் ஒடுங்கியிருந்தது முழு வீச்சாய் கிளம்பியது. வீட்டிற்கு வண்டியைத் திருப்பி வந்து சாப்பிட்டான். மனம் மட்டும் போராட்டத்தில் இருந்தது. மனைவி கூட, “என்ன பலமான யோசனை.. சாப்பிடுங்க” என்றாள்.

என்ன சொல்வது, எப்படி சொல்வது புரியாமல் தவித்தான். இரண்டு நாட்கள் இருக்கிறதே பார்ப்போம் என்று நினைத்தான்.

மூன்று மாதம் கழித்து அனுவிடமிருந்து போன் வந்தது. “வெளியூர் கிளம்புறேன். என்னால தெந்தரவு நிச்சயமா இருக்காது. குழந்தை பிறந்ததும் நல்லா வளர்த்து படிக்க வைப்பேன். நீங்கதான் அப்பான்னு சொல்ல மாட்டேன். உங்க மனவிக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும். அவங்களோட சம்மதம்தான் எனக்கு ஆசிர்வாதம். இந்த நம்பர் இனி வேல செய்யாது. பை”

ஆழ்ந்த மெளனத்தில் பதில் சொல்ல முடியாமல் தவித்தான், அதுவும் நல்லதே என மனதை திடப்படுத்த ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டான் திருப்பதி .

[email protected]

The post கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன்

ஒரு பெரிய மொத்த விலை மளிகைக்கடையில் மாதாந்திர சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தார் ராதா. சற்றுத் தொலைவில் தண்ணீர் பாட்டில், தலையணை, டோர் மேட், பாத்திரங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள் என அந்தக் கடையில் அடுக்கப்பட்டிருந்த பல்வேறு இதர சாமான்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் கிரிதர்.

“எங்க அம்மா அப்பாவுக்கு இந்த பித்தளை டபரா டம்ளர் செட் எடுத்திருக்கேன், எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே ராதா தள்ளிக் கொண்டிருந்த வண்டியில் அந்த பொருட்களைச் சேர்த்தார் கிரிதர். சற்று நேரம் பொறுத்து, “யார்ட்லி பவுடர் எடுத்திருக்கேன். போன முறை அப்பா நம்ம வீட்டுக்கு வந்தபோது நல்லா இருக்குன்னு சொன்னாரு” என்று ஒரு டப்பாவையும், “என்சூர் எடுத்திருக்கேன். எங்க அம்மாவுக்கு முட்டி வலி இருக்குல்ல, இது குடிச்சா நல்லதாம்” என்று மற்றுமொரு டப்பாவையும் அந்த வண்டியில் சேர்த்தார்.

“ஏம்பா, அவங்க கல்யாண நாளுக்கு ஏற்கனவே புடவை வேஷ்டி எடுத்தாச்சு, இதெல்லாம் எதுக்கு? சரி, என்சூர், யார்ட்லி பரவாயில்லை, அவங்க வீட்டுல இல்லாத டபரா டம்ளரா?” என்று கேட்டார் ராதா.

“இதோ பாரு, அவங்க கிட்ட இருக்கா இல்லையாங்கறது பிரச்சனை இல்ல, நம்ம அவங்களுக்கு நிறைய செய்யுறோமா என்பதுதான் அவங்க எதிர்பார்ப்பு. உனக்கு அது புரியாது” என்று கிரிதர் ராதாவிடம் விளக்கினார். அவர்கள் திருமணமான புதிதிலிருந்து அம்மா அப்பாவின் ஆசைகளை பூர்த்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறார் கிரிதர். அவருக்குத் திருமணமாகி இருபது வருடம் ஆகப்போகும் தருவாயில், இன்றும் ஒரு சிறிய குழந்தை போல, மதர்ஸ் டே துவங்கி, ஆங்கிலப் பிறந்த நாள், நட்சத்திர பிறந்த நாள், திருமண நாள், என்று அனைத்திற்கும் வாழ்த்துகளும் பரிசுகளுமாய் போய் நிற்கிறார் கிரிதர்.

“டேய் ரகு, நாங்க போய் தாத்தா பாட்டிய பார்த்துட்டு வந்துடறோம். ரெண்டு நாள்தான். உனக்கு எக்ஸாம் இருக்கறதால உன்ன இங்க விட்டுட்டுப் போறோம். வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வந்து கலாட்டா பண்ணக் கூடாது என்ன?”

“சரிம்மா, நான் பார்த்துக்கறேன். கவலைப்படாம போயிட்டு வாங்க! நான் என்ன குழந்தையா? அம்மா, ஹாவ் ஃபன்” என்று ராதாவை அணைத்து வழியனுப்பி வைத்தான் ரகு. கல்லூரிக்குச் செல்லும் மகன் இருந்தும், மாமியார் மாமனார் வீட்டிற்கு செல்வதென்றால் ராதாவிற்கு அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆரம்பத்தில் சில ஆண்டுகள் சேர்ந்திருந்த அவர்கள், கிரிதருக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைத்ததால் அங்கே குடிபெயர்ந்தனர். பல வருடங்கள் கழித்து சென்னை வந்த போது, மாமனார் வீட்டருகில், அதே சுற்றுவட்டாரத்தில், வேறு ஒரு வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர். சில ஆண்டுகள் முன்னதாக, திருச்சியில், ஓய்வூதியர்களுக்கான குடியிருப்பு ஒன்றில் சகல வசதிகளுடன் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே சென்று விட்டனர் ராதாவின் மாமியாரும் மாமனாரும்.

திருச்சியில் அவர்களைச் சந்தித்து அவர்கள் திருமண நாளன்று வாழ்த்து கூறி ஆசிகள் பெற கிரிதரும் ராதாவும் திருச்சியை நோக்கி காரில் பயணித்தனர்.

“குட் மார்னிங் மா! திருச்சி போயிட்டு இருக்கோம். ரகு தனியாதான் இருக்கான். அடச்சே… மறந்தே போயிட்டேன் பாரேன். ஹேப்பி பர்த்டே மா!” என்று தனது அம்மாவை வாழ்த்தினாள் ராதா.

“ஆண்டி பர்த்டேவையே மறந்துட்டியா நீ? வழக்கமா பொண்ணுங்கதானே இதெல்லாம் மறக்காம இருப்பாங்க? நீ ஏன்தான் இப்படி இருக்கியோ!” என்றார் நக்கலாக கிரிதர்.

“இதுல கூட ஆம்பளை, பொம்பளையா? நான் மறந்தா என்ன, என் அம்மாவே என்னை கால் பண்ணி உரிமையா அவங்க வாழ்த்தை வாங்கிக்கிட்டாங்க. உங்க அம்மா மாதிரி அடுத்த நாள் ஃபோன் பண்ணி திட்டல. அது என்ன உங்க அம்மா அப்பாவுக்கு கல்யாண நாளா இருந்தாலும் நம்மதான் முதல்ல வாழ்த்து சொல்லணும், நமக்கு கல்யாண நாளா இருந்தாலும் நாமளே கால் பண்ணி ஆசி வாங்கணும்? இந்த லாஜிக் எனக்குப் புரியல!”

“பெரியவங்களுக்கு, குறிப்பா, ஆண் குழந்தைகளை பெத்தவங்களுக்கு அவங்க பிள்ளைகள் மேல அதீத எதிர்பார்ப்பு இருக்கும். அவங்கள நாங்க எப்போதும் தாங்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எல்லா இடங்களிலும் அவங்கள முதன்மைப் படுத்தணும்னு ஒரு எதிர்பார்ப்பு. எப்படி நம்ம பிள்ளையாரை எல்லா பூஜைகளிலும் முதன்மையா வெச்சு வழிப்படறோமோ அந்த மாதிரி. என் அம்மா அப்பாதானே, செய்துட்டு போறேன் விடு!”

“அது இல்லைங்க… நீங்களும், உங்க அண்ணனும், உங்க பெத்தவங்களுக்காக எவ்வளவோ செய்யறீங்க! இருந்தாலும், அவங்க இன்னும் செய், எங்களுக்கு பாத பூஜை பண்ணு, இது உன் கடமை அப்டிங்கறது மாதிரி மிடுக்கா இருக்காங்க. அவங்களுக்கு பொருளாதார ரீதியா சுதந்திரம் இருக்கு, ரெண்டு பேருக்கும் பென்ஷன் நிறைய வருது, இல்லைன்னு சொல்லல. ஆனா, தன் சொந்த பசங்க, பேரன் பேத்தி மேல எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாம எப்படி இப்படி அவங்களால இருக்க முடியுது? அப்பப்போ வந்து ஐநூறு, ஆயிரம்னு பாக்கெட் மணி கொடுத்தா போதுமா?”

“இதெல்லாம் ரொம்ப யோசிக்காத ராதா! என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு நான் செய்துட்டுதான் இருப்பேன். என் வருத்தமே, அவங்க உரிமையா என்கிட்ட எதுவும் கேட்க மாட்டேங்கறாங்க அப்டிங்கறதுதான். நீ இப்போ இப்படி பேசற, நாளைக்கு ரகு கிட்ட எப்படி நடந்துக்கப் போறேங்கறத நானும் பார்க்கத்தானே போறேன்.”

“நான் ரகுவை இப்போ எப்படி நடத்தறேனோ அப்படியேதான் அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நடத்துவேன். ஒரு வருத்தம்னா உடனே பேசித் தீர்த்துப்பேன். மனசுலயே வெச்சு புழுங்க மாட்டேன். அன்பையும் எப்போதும் போலதான் காட்டுவேன். ஐம்பது வயசானாலும் ரகு என் புள்ளதானே? என் புள்ள ஆறு வயசுல அவன் கைப்பட செய்து ஒரு பர்த்டே கார்டு கொடுத்தான், அதை இன்னும் நான் பத்திரமா வெச்சிருக்கேன். அஞ்சு வருஷம் கழிச்சு அவன் எனக்கு வைரத்தோடு போட்டா சந்தோஷப்படுவேன்.. இல்லன்னு சொல்லல. ஆனா, குறைந்தபட்சம் என் பிறந்த நாளை அவன் ஞாபகம் வெச்சுகிட்டு ஒரு ஃபோன் கால் பண்ணினாலும் சந்தோஷப்படுவேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் அவன் கிட்ட கிடையாதுங்க. ”

“ரொம்பப் பேசற… எல்லாத்தையும் நானும் பார்க்கத்தான் போறேன். சரி, சரி, வீட்டுக்கு வந்துட்டோம், அவங்க என்ன சொன்னாலும் நீ எதுவும் பேசாத, நான் பேசிக்கறேன். அமைதியா இரு!” என்று வழக்கம்போல அறிவுரைகள் கொடுத்துவிட்டு, ஒரு திரை விழுந்தது போல தன்னை உள்ளிழுத்துக் கொண்டார் கிரிதர்.

வீட்டிற்கு சென்றவுடன் இருவருக்காகவும் வாங்கியிருந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து ராதாவும் கிரிதரும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்தனர். “அம்மாவுக்கு அபிவாதயே சொல்லுடா! புள்ள அம்மாவுக்கு சொல்லலாம், உனக்கு தெரியும்ல?” என்று அபிவாதயே கேட்டு வாங்கிக் கொண்டார் கிரிதரின் அம்மா . “இந்த என்சூர் ரொம்ப நல்லதாமே, எனக்கு மாசா மாசம் ஒண்ணு ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக் கொடுத்திடு,” என்று சற்று உரிமையாக அவரது தாயார் கேட்டவுடன் கிரிதருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘எங்க அம்மா எப்படி கேட்கறாங்க பார்த்தியா!’ என்பது போல ராதாவைப் பார்த்துச் சிரித்தார் கிரிதர். “அடேங்கப்பா, நல்ல வாசனைடா இந்த பவுடர்!’ என்று அப்பாவும் அவர் பங்கிற்கு பவுடரை எடுத்து போட்டுக்கொண்டார். அதே சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பித்தளை டபரா டம்ளர்களில் சூடாக காபி எடுத்து வந்தார் கிரிதரின் அம்மா.

எல்லாம் சுமூகமாக போய்க்கொண்டிருக்க, “ராதா, உன் தம்பி சேகர் லண்டன்லதானே இருக்கான்? எப்படி இருக்கான் அவன்?” என்று ஆரம்பித்தார் கிரிதரின் அம்மா.

“நல்லா இருக்காம்மா. PR வேற கிடைச்சிடுச்சு அவனுக்கு.”

“ம்… ஆமாம், நீ எப்போ லண்டன் போற?”

“நான் ஏன் லண்டன் போகப் போறேன்?”

“யார் கிட்ட பொய் சொல்ற? நீ கூடிய சீக்கிரம் லண்டன் போயிடுவ, கிரிதர் உன்ன கூட்டிட்டுப் போயிடுவான். கல்யாணம் ஆன அன்னிக்கு உன் பக்கம் சாஞ்சவன்தானே அவன்? இன்னும் நிமிரவே இல்லயே! நீ ஆசைப்பட்டா என்ன வேணும்னாலும் செய்வான் அவன்” என்றார் கிரிதரின் அம்மா.

ராதா அதிர்ந்து போனாள். இன்றும் அவளை புதிய மருமகள் போல அவர்கள் நடத்துவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் உன் பக்கம் சாஞ்சுட்டான் போன்ற வார்த்தைகள் மிகவும் எரிச்சல் ஏற்படுத்தியது.

“என்னம்மா இது.. உன்கிட்ட சொல்லாம லண்டன் போவேனா என்ன? இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத பேசற?” என்று இடைமறித்தார் கிரிதர்.

“எனக்குத் தெரியும். நீங்க தாஜ் மகால் பார்கல? ஜெய்பூர் போகல? உங்க ஹனிமூனுக்கு கொடைக்கானல் போகல? என்ன உங்க கூட கூட்டிட்டு போனீங்களா என்ன? எனக்கு எல்லாம் தெரியும், நான் என்ன லூசா?” என்று திடீரென பல நாள் தேக்கத்தை வெளியே கொண்டு வந்து சீறினார் கிரிதரின் அம்மா.

“அம்மா, ஹனிமூனுக்கு உன்ன கூட்டிட்டு போக முடியுமா என்ன? சரி, அதை விடு, நீ கூட சிங்கப்பூர், மலேசியா, ஶ்ரீலங்கா , கைலாஷ் எல்லாம் போயிருக்க, என்ன கூட்டிட்டு போனியா என்ன? அண்ணா கூட நிறைய இடங்களுக்கு டிராவல் பண்ணியிருக்கார், அவன ஏதாவது கேட்டியா?” என்றார் கிரிதர் சற்று பொறுமையிழந்து.

“நாங்க ரிடயர் ஆகி எங்க பணத்துல போயிட்டு வந்தோம். நீ ஒண்ணும் எங்கள அழைச்சுட்டு போகல! இப்போ உன் அண்ணனைப் பத்தி பேசாத, நான் உன் கூடதானே பேசிட்டு இருக்கேன்!” என்றார் காட்டமாக கிரிதரின் அம்மா.

“அது எப்படி பேசாம இருக்க முடியும்? நாங்க லோக்கல்ல டிரிப் போனா உங்களுக்கு கோபம் வருது. அவர் வெளிநாடு போனா கூட உங்களுக்கு கோபம் வர மாட்டேங்குது, என்ன நியாயம் இது?” என்று தன்னையும் மீறி கேட்டார் ராதா.

“கொஞ்சம் சும்மா இருக்கியா லட்சுமி! இத பத்தி பேசற நேரமில்லை இது!” என்று கிரிதரின் அப்பா சற்று குரலை உயர்த்தவும், மற்ற மூவரும் கூட்டத்தை கலைத்து நகர்ந்தனர். ராதாவிற்கு படபடப்பு அடங்கவில்லை. அந்த குடியிருப்பின் கீழ்தளத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அப்போது அவள் அலைபேசியில் ரகு அழைத்தான்.

“ரகு, பாருடா, எதிர்பார்த்த மாதிரியே உங்க பாட்டி பிரச்சனை பண்ணிட்டாங்க!” என்று நடந்ததை ரகுவிடம் கூறினார் ராதா.

அவன் அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, “உன்ன நான் போகாதன்னு அப்பவே சொன்னேன். நீ கேட்கல. அப்பா மட்டும் போயிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது தெரியுமா?” என்றான்.

“அப்பா வருத்தப்படுவாருன்னுதான் போனேன். அவங்க அப்படி பேசினது கூட எனக்கு கஷ்டமா இல்ல ரகு. அப்பா மனசு எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் சொல்லு? அதைத்தான் என்னால ஜீரணிக்க முடியல. ஒரு கொழந்தை மாதிரி, எங்க அப்பாவுக்கு, எங்க அம்மாவுக்குன்னு பார்த்து பார்த்து வாங்கினார். கிட்ட தட்ட நானூறு கிலோ மீட்டர் வண்டி ஓட்டிட்டு வந்த அந்த மனுஷன் எதிர்பார்க்கறது எல்லாமே ஒரு அங்கீகாரம்தானே ரகு? அது கூட கிடைக்காட்டி எப்படி சொல்லு?”

“அம்மா, இப்படி யோசி, நம்ம படிச்ச ஸ்கூல்ல இருக்கற டீச்சர்ஸ்க்கு எல்லாம் நம்ம மேல ஒரு அபிப்பிராயம் இருக்கும். ஒரு இருபது வருஷம் கழிச்சு, அந்த ஸ்கூலுக்கு அவங்க எதிர்பார்க்காத ஒரு துறைல சாதிச்சுட்டு போனா அதை அவங்களால ஏத்துக்க முடியுமா சொல்லு? அப்படியே அவங்க ஏத்துக்கிட்டாலும், அந்த சாதனையை மனசார அங்கீகரிக்க முடியுமா? நிச்சயமா முடியாது.

அது மாதிரிதான் உங்க உறவும். கல்யாணம் ஆன புதுசுல அவங்க உன்னை எடை போட்டு வெச்சிருப்பாங்க. இருபது வருஷத்துல நீ என்ன தான் மாறினாலும் அவங்ககிட்ட இருந்து அங்கீகாரம் கிடைக்கிறது சிரமம். அதை முதல்ல நீ புரிஞ்சுக்க. அப்புறம், அப்பாவ நினைச்சு ரொம்ப கவலைப்படாத, ஹீ வில் பீ ஆல்ரைட். நீயும் நானும் போடாத சண்டையா? அதனால நான் என்ன மனசுடஞ்சா போயிட்டேன்? அப்பா இப்போ பாட்டி கையால தோசை சாப்டுட்டு இருப்பார். நீயும் பக்கத்துல உள்ள கிருஷ்ணா பவன்ல சாப்டுட்டு, கோபமா ராத்திரி படுத்துட்டு, சந்தோஷமா கார்த்தால எழுந்துக்கோ,” என்று தொண்டுக் கிழவன் போல அசாத்தியமான அறிவுரை கூறினான் ரகு.

அப்போது அருகிலிருந்த கோயில் மணியோசை கேட்க, “கடவுளே! அவர் அம்மா அப்பா கிட்டேயிருந்து கிரிதர் எதிர்பார்க்கும் அங்கீகாரம் அவருக்கு சீக்கிரம் கிடைக்கட்டும்!” என்று ஒரு பிராத்தனையை வைத்த வண்ணம் கிருஷ்ணா பவனை நோக்கி முகமலர்ச்ச்யோடு நடந்தார் ராதா.

[email protected]

The post அங்கீகாரம் – மஞ்சுளா சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன்

காலை நேரம் சூரியன் இப்போதுதான் மெல்ல மேலே ஏறிக் கொண்டிருந்தான். ஆற்றோரம் அமர்ந்துகொண்டு ப்ளாப் … ப்ளாப் … ப்ளாப் … எனத் தண்ணீரில் தன் கால்களால் தாளம் போட்டுக் கொண்டிருந்தது ப்ராங்கி என்ற அந்தத் தவளை. தன்னுடைய குழந்தைகளான தலைப்பிரட்டைகள் வேகமாக நீந்துவதை கவனித்துக் கொண்டிருந்தது.

பட … பட … பட்… பட … சிறகடித்துக் கொண்டு ப்ராங்கி இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் வந்து நின்றது அந்த வெண்புறா. கண்கள் கூசுமளவிற்கு வெண்மை. ப்ராங்கி புறாவைக் கண்டது. புறாவின் பேரழகும் பளீர் வெண்மையும் ப்ராங்கியை வியப்பில் ஆழ்த்தியது. புறா மிகவும் தாகத்தோடு இருப்பது போலத் தெரிந்தது.. காரணம் தன் சிவந்த சிறிய அலகால் தண்ணீரை வேகவேகமாகப் பருகியது.

அதே நேரம் ப்ராங்கியின் குழந்தைகளில் இருவர் ப்ராங்கியிடம் நீந்தி வந்து “அம்மா, அந்தப் பறவை எங்களை அலகால் தீண்டிவிட்டது எங்களுக்கு வலிக்கிறது” என்று தங்களின் வால்பகுதியைக் காட்டி முறையிட்டன. காயத்தோடு வந்த தன் குழந்தைகளைக் கண்ட ப்ராங்கிக்கு கோபம் தலைக்கேறியது. துள்ளிக் குதித்து புறா நின்ற இடத்திற்குச் சென்றது.

“ஏய்… நீ யார்? எங்கிருந்து வருகிறாய். இந்த ஆற்றங்கரையில் இதுவரை உன்னை நான் கண்டதில்லை” என்று புறாவிடம் கேட்டது ப்ராங்கி.

“என் பெயர் டிப்லர், நானும் என்னுடைய தோழிகளும் பல மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் பந்தயப் பறவைகள். என் தோழிகள் சற்று தொலைவில் இளைப்பாறுகின்றார்கள். நான் தாகத்திற்குத் தண்ணீர் தேடி இங்கே வந்தேன்” என்றது டிப்லர் என்ற அந்த வெண்புறா.

“வந்தது சரி, நீர் பருகும்போது கவனமாக இருக்கக்கூடாதா? பார் … நீ உன் அலகால் என் குழந்தைகளைக் காயப்படுத்தி விட்டாய்” என்று அழுதுகொண்டிருந்த தன் குழந்தைகளைக் காட்டியது ப்ராங்கி.

“நான் நீர் அருந்தும்போது அவர்கள் குறுக்கே வந்துவிட்டார்கள்” என்றது டிப்லர் மிகச் சாதாரணமாக.

 “அவர்கள் விபரமறியாத சிறு பிள்ளைகள் நீதானே கவனமாக இருக்க வேண்டும்?” என்றது ப்ராங்கி.

 “அடடா ரொம்பப் பேசாதே நான் நீர் அருந்துகையில் எனக்கு இடைஞ்சலாக வந்தது அவர்களின் குற்றம்” என்று குரலை உயர்த்தியது டிப்லர்.

“கவனக் குறைவாக இருந்துவிட்டு மேலும் உன் தரப்பில் தவறில்லை எண்பது போலப் பேசுகிறாயே?”

“போதும் நிறுத்து. நானும் என் தோழிகளும். இது போல் பல நீர் நிலைகள் கண்டு கடந்து வந்தவர்கள். எனக்கு நீ கவனத்தைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம். நீயும் உன் பிள்ளைகளும் இந்த அழுக்கு சேற்றுப் பகுதியை விட்டால் வேறிடம் அறியாதவர்கள்.”

பதிலுக்கு பதில் பேசும் டிப்லரிடம் பேசிப் பயனில்லை என்றுணர்ந்தது ப்ராங்கி. தன் காயப்பட்ட குழந்தைகளை அழைத்து கரையோரம் இல்லாமல் தூரமாகச் சென்று விளையாடும்படி சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர எண்ணியது.

“நாளை நானும் என் தோழிகளும் இங்கே வந்து நீராடிவிட்டு புறப்படுவோம். அப்போது நீயும் உன் பிள்ளைகளும் இன்றுபோல வந்து தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கட்டளையிட்டுச் சொன்னது டிப்லர்.

அமைதியாகச் சென்ற ப்ராங்கியை வீணாக வம்பிழுப்பதுபோல இருந்தது டிப்லரின் கட்டளை. ப்ராங்கி மௌனம் களைந்து, “நீங்கள் வந்து நீராடிவிட்டு செல்லுங்கள் அதற்காக நாங்கள் இருப்பது தொந்தரவு என்று எப்படி நீ சொல்லலாம்?” என்று படபட வென தன் ஆதங்கத்தைக் கொட்டியது.

“ஏய் … நாங்கள் ஒரு புதிய பந்தயத்திற்கு தயாராகிறோம். எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் முழு கவனத்துடன் நாங்கள் செயல்படவேண்டும். உனக்கு பந்தயம் என்றால் என்னவென்று தெரியுமா? எப்படித் தெரியும்? பறப்பதற்கு உன்னிடம் இறக்கைகள் இருந்தால்தானே நீ பந்தயங்களில் கலந்துகொள்ள முடியும்? உன் அழுக்கு நிறமெங்கே … என் வெண்மை நிறமெங்கே … என் அழகுக்கும் திறமைக்கும் நீ சிறிதும் இணை இல்லை. வழியை விடு … சொன்னதை கவனத்தில் கொள்” என்று சொல்லிவிட்டு பட படவென சிறகடித்துப் பறந்தது டிப்லர்.

அன்று முழுவதும் அமைதியற்ற மனநிலையில் திரிந்து கொண்டிருந்தது ப்ராங்கி. மாலை நேரம். சூரியன் தன் வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தான். மௌனமாகக் கரையோரம் அமர்ந்திருந்தது ப்ராங்கி. முகத்தில் சோகம் நிறைந்திருந்தது. மீலு முதலை வசிக்கும் ஆற்றுப்பகுதியில்தான் ப்ராங்கியும் வசித்து வருகின்றது. தனது முதுகுச் சவாரிக்கு விலங்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மீலு சலனமில்லாமல் அமர்ந்திருக்கும் ப்ராங்கியைக் கண்டது.

“ஏய் ப்ராங்கி … எப்பவும் மகிழ்ச்சியா துள்ளிக் குதிச்சிட்டிருப்ப… இப்ப என்ன … முகத்தை உம்முன்னு வச்சிருக்க? உன் குழந்தைகள் எல்லோரும் நலம்தானே?” என்று ப்ராங்கியின் மௌனத்தை விசாரித்தது மீலு.

“என் குழந்தைகள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் மீலு …” என்று கூறிவிட்டு சற்றுநேர மௌனத்திற்குப் பின் “ஏன் மீலு, நான் ரொம்ப அசிங்கமா, விகாரமா இருக்கேன் இல்ல?” என்று கேட்டது. விட்டால் கண்ணீர் விட்டு அழுதுவிடும் அளவிற்கு ப்ராங்கி தனக்குள் சோகத்தைப் பொத்தி வைத்திருந்ததைப் புரிந்துகொண்டது மீலு. ப்ராங்கி கேட்ட கேள்விக்கு என்ன பதில்சொல்வதென்று தடுமாறியது, காரணம் ப்ராங்கி எப்போதும் போலத்தான் இப்போதும் இருக்கிறது. ஏன் இந்தத் திடீர் மன உளைச்சல் என்றறிய முற்பட்டு, “நீ ஒண்ணும் அப்படி இல்ல … சரி நான் கேட்பதற்கு பதில் சொல்”

“என்ன?” என்று சோகம் மாறாமல் வினவியது ப்ராங்கி.

“திடீர்னு உனக்கு ஏன் இந்த மனக்குழப்பம்?” என்று கேட்டது மீலு.

சிறிய மௌனத்திற்குப் பிறகு அன்றையதினம் காலைப் பொழுதில் ஆற்றங்கரைக்கு புதுவரவாக வந்த வெண்புறாவான டிப்லரைச் சந்தித்த கதையைச் சொல்லத் தொடங்கியது ப்ராங்கி. “இன்று காலை வரை எனக்கு இந்த குழப்பம் இல்ல மீலு. அந்த டிப்லர்தான் அவள் மிகவும் அழகானவள் என்றும், பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசு வாங்குவாள் என்றும் சொல்லி, நான் அழகில்லாதவள் என்றும் போட்டி பந்தயங்களில் பங்கெடுக்கும் திறனற்றவளேன்றும் சொன்னாள்.  யோசித்தேன், டிப்லர் சொல்வதும் உண்மைதானே. அவள் எவ்வளவு வெண்மையாக இருக்கிறாள் தெரியுமா? அப்படியே நிலாவில இருந்து இறங்கி நேரே இந்தக் கரைக்கு வந்தவள் மாதிரி இருந்தாள். என்னைப்பார் சேறும் சகதியோடும் செடி கொடிகள் மண்டிய இந்த ஆற்றோரம் வாழ்ந்து கொண்டு இருப்பதால் என் புறத்தோலும் ஏறக்குறைய அந்த அழுக்கு நிறத்திலேயே இருக்கிறது. மேலும் அவள் அளவுக்கு உயர உயரப் போகவோ பல மணிநேரங்கள் தொடர்ந்து பறக்கவோ என்னிடம் இறக்கைகள் கிடையாது. இருந்தால்தானே பந்தயங்களில் பங்கெடுக்க முடியும்?” என்று கூறி புன்னகை மறந்த தன் பார்வையை மீண்டும் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் மீது செலுத்தியது.

ப்ராங்கி சொன்னவற்றை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த மீலு பதில் பேசத் தொடங்கியது. “ப்ராங்கி, இப்பொ நான் எது சொன்னாலும் அதில் இருக்கும் உண்மை உனக்குப் புரியாது, மாறாக தற்காலிகமாக உனக்கு ஆறுதல் சொல்வது போலத்தான் தோன்றும். உன் மனமும் அமைதி கொள்ளாது. ஆனால், நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல். டிப்லர் நாளை இங்கே வருவாளா?”

“ஆமாம். அவள் ஒரு பந்தயத்திற்காகப் பறந்து வந்தவள் நீர் அருந்துவதற்காகக் காலையில் இங்கே வந்தாள். இந்த இடத்தில தண்ணீர் நிறைய இருப்பதைக் கண்டுவிட்டு தன் தோழிகளோடு நாளை மீண்டும் இங்கே நீராட வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறாள்.”

“சரி … உனக்கும் டிப்லருக்கும் எப்படி பேச்சு தொடங்கியது, என்னென்ன பேசினீர்கள் என்பதை தொடக்கத்திலிருந்து சொல்வாயா?” என்று கேட்டது மீலு.

“உன்னிடம் சொல்லாமலா … சொல்கிறேன் கேள்” என்று தொடங்கிய ப்ராங்கி காலையில் தனக்கும் டிப்லருக்கும் இடையில் நடந்த உரையாடல், குழந்தைகளுக்கு டிப்லரால் ஏற்பட்ட காயம், தனது கோபம், கொந்தளிப்பு, ஆதங்கம், டிப்லர் குறையாகச் சொன்ன தன் அழகு, நிறம், தன் இருப்பிடம் மற்றும் டிப்லரின் பந்தயம், தோழிகள், டிப்லரின் கட்டளை என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தது. நிறைவாக, “ஏன் மீலு, சேற்றுப் பகுதியில் வாழ்வது கேவலமா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டது ப்ராங்கி.

“அப்படியொன்றும் இல்லை. இயற்கையில் எல்லா இடங்களும் சமம்தான். மேலே பறந்து களிக்கும் டிப்லர் போன்றோரின் பார்வையில் வேண்டுமானால் பேதங்கள் இருக்கலாம். உயிர்கள் வாழும் இடங்களில் பேதங்கள் இல்லை.”

“ம்… நீ சொல்லிவிட்டாய். கேட்டுக்கொண்டிருந்த என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை” என்று ப்ராங்கி சொன்னபோது அதன் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

“அழாதே ப்ராங்கி. நாளை டிப்லர் வரட்டும். பேசுவோம்” என்ற மீலு தனது முதுகுச் சவாரிக்கு பயணிகள் யாரும் வருகிறார்களா என்று பாதையைப் பார்த்தது. ப்ராங்கி தன் தலைப்பிரட்டைகளை உணவு உண்ண அழைத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் அதிகாலையில் சொன்னதுபோல தன் தோழிகளுடன் ஆற்றங்கரைக்கு நீராட வந்தது டிப்லர். டிப்லரும் அதன் தோழிகளும் நீர்நிலையின் அருகில் வரிசையாக நின்று நீராட ஆயத்தமானார்கள். இதற்காகவே காத்திருந்த மீலு அங்கே வந்து, “வாருங்கள் விருந்தாளிகளே, … நீங்களெல்லாம் யார் … உங்களை நான் இதுவரை கண்டதில்லையே?” என்றது.

“என் பெயர் டிப்லர். நாங்கள் பந்தயப் பறவைகள்” என்றது டிப்லர்.

“சரி சரி… என்ன வேலையாக இங்கே வந்திருக்கிறீர்கள்?”

“நாங்கள் நீராட வந்திருக்கிறோம். நீராடிவிட்டு புதிய பந்தயத்திற்கு புறப்படப் போகிறோம்.”

“மகிழ்ச்சி… உங்கள் பந்தயம் சுகமாக இருக்கட்டும். ஆனால், இங்கே நீங்கள் நீராடுவதற்கு முன் எங்கள் ராணியாரிடம் அனுமதி பெற வேண்டும் பெற்றுவிட்டீர்களா?” என்று கேட்டது மீலு.

“ராணியா… யார் அது? அனுமதி பெறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாதே” என்றது டிப்லர்.

“கொஞ்சம் பொறுங்கள் எங்கள் ராணியார் இங்கேதான் இருக்கின்றார் நான் அழைக்கிறேன்” என்று கூறி “ப்ராங்கி மகாராணியாரே, கொஞ்சம் வெளியே வாருங்கள்” என்று உரக்கச் சொன்னது மீலு.

இதனைச் செவிகளில் வாங்கிய ப்ராங்கி வியப்புடன் தன் இருப்பிடத்திலிருந்து துள்ளிக் குதித்து வெளியில் வந்தது. டிப்லர் மற்றும் அவளின் தோழிகளையும் மீலுவையும் கண்டு அப்படியே நின்றது ப்ராங்கி.

மீலு தொடர்ந்தது, “மகாராணி, இவர்கள் இங்கே நீராடவேண்டுமாம் நீங்கள் அனுமதிப்பீர்களா?”

மீலுவின் இந்தக் கேள்வியால் குழப்பமடைந்தது ப்ரங்கி. தான் ராணியுமில்லை தன்னுடைய அனுமதியும் தேவையில்லை இருந்தாலும் மீலு ஏன் இப்படிக் கேட்கிறான் என்று ஒரு கணம் யோசித்தது, சரி இதில் ஏதோ பொருள் இருக்கிறது என்று புரிந்துகொண்ட ப்ராங்கி, “அதை நீ கேட்டால் போதுமா? நீராட வந்தவர்களல்லவா என்னிடம் கேட்க வேண்டும்!” என்றது.

டிப்லரும் குழப்பம் கொண்டது. மீலுவிடம், “இவர்தான் உங்கள் ராணியா? நான் நேற்று இவர்களிடம் பேசினேன் ஆனால், அப்போது அவர்கள் இதைச் சொல்லவில்லையே” என்றது.

“எங்கள் ராணியார் தற்பெருமையை விரும்ப மாட்டார்கள். நீங்கள் வந்த வேலையைப் பாருங்கள்” என்றது மீலு.

ப்ராங்கியிடம் தயங்கித் தயங்கி வந்தது டிப்லர். “வணக்கம் ராணியே” என்று தலை வணங்கியது “மன்னிக்க வேண்டும், நேற்று நான் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிட்டேன். இப்போது நாங்கள் இங்கே நீராட அனுமதி தருவீர்களா?” என்று கேட்டது.

“யாரையும் உதாசீனப்படுத்தும் பழக்கம் எனக்கில்லை. நீங்கள் நீராடி விட்டுச் செல்லலாம்” என்று சுருக்கமாகப் பதில் சொன்னது ப்ராங்கி.

டிப்லரும் தோழிகளும் நீராடிவிட்டு, மீலு மற்றும் ப்ராங்கி இருவரிடமும் புறப்படும் முன் விடை பெற்றார்கள். அவர்களை வாழ்த்தி வழியனுப்பினார்கள் மீலு மற்றும் ப்ராங்கி.

புறப்பட்ட சில நொடிகளில் தங்களின் சிறகுகளால் காற்றை உந்தித்தள்ளி மேலே மேலே பறந்து கொண்டிருந்தார்கள் டிப்லர் மற்றும் குழுவினர். டிப்லரின் சிறகுகள் அசைந்தாலும் சிந்தனை அசையாமல் நேற்றைய நிகழ்வை அசைபோட்டது “நேற்று நான் இத்தனை பேசியதற்கு என்னை அந்த ஆற்றில் நீராடக்கூடாது என்று சொல்லியிருக்கலாம் ஆனால், ப்ராங்கி அப்படிச் சொல்லவில்லை. பார்வைக்கு எளிமையாக இருந்தாள் ப்ராங்கி என்று என்னவெல்லாம் பேசிவிட்டேன். இனியொரு முறை யாரிடமும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே பறந்தது டிப்லர்.

டிப்லர் குழுவினர் சென்ற பிறகு மீலுவிடம் கேட்டது ப்ராங்கி “ஏய்.. மீலு, ஏன் என்னை ராணி என்று அவர்களிடம் சொன்னாய்?”

“நேற்று நீ அழுது கொண்டிருந்தாய், இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறாய். இந்த மகிழ்ச்சியை உன்னிடம் பார்க்கத்தான் அப்படிச் சொன்னேன்” என்றது மீலு.

“ஆனால், நீ சொன்னதில் உண்மை இல்லையே?”

“உண்மை இல்லை என்பது உனக்கும் எனக்கும் தெரியும், டிப்லருக்குத் தெரியாது. திரும்பிச் செல்லும்போது டிப்லர் ஒரு பாடம் படித்திருக்கும்” என்றது மீலு.

“அது என்ன?”

“நேற்று உன்னை உதாசீனப் படுத்திப் பேசிய அதே டிப்லர் இன்று உன்னை மதித்துப் பேசினாள். டிப்லருக்கு நீ யார் என்பது அவசியமில்லை அவளுடைய மதிப்பு உயர்ந்தது என்று உன்னிடம் காட்டவேண்டும் என்பதே அவளது நோக்கமாக இருந்தது. இன்று நீயும் மதிப்பில் உயர்ந்தவள் என்று தெரிந்தபோது உன்னிடம் பணிந்து பேசினாள்” என்றது மீலு.

“நானும் ஒன்றைப் புரிந்துகொண்டேன் மீலு”.

“அது என்ன?”

“டிப்லரின் மதிப்பைக் காண்பிக்கத்தான் அவள் என்னை உதாசீனப் படுத்தியிருக்கிறாள். அப்படியானால் உண்மையில் என்னிடம் ஒரு குறையுமில்லை. இது புரியாமல் நேற்று முழுவதும் அழுதுகொண்டே என் பொழுதை வீணாக்கிவிட்டேன்” என்று சிரித்தது ப்ராங்கி.

[email protected]

The post ப்ராங்கி ராணியார் – மீ.மணிகண்டன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன்

வாக்குகள் சீட்டாக இருந்த காலம்

வாக்குப் பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த இயந்திரத்தை மனிதர்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் கொந்த (hack) முடியும். – சமீபத்தில் இப்படிச் சொன்னவர் ஓர் அறியப்பட்ட ஆளுமை. அவர் இந்தியாவின் எந்த எதிர்க்கட்சித் தலைவரும் அல்லர். அவர் அமெரிக்கர், தொழில்நுட்ப ஜாம்பவான்- எலான் மஸ்க்.

வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும்போதோ சீர்திருத்தும்போதோ உள்ளேயிருக்கும் ‘சிப்பு’களில் நிரல்களை ஏதேனும் ஒரு கட்சிக்கு சாதகமாக எழுதிவிடலாம் என்பது நாள்பட்ட குற்றச்சாட்டு. கொந்தல் சாத்தியங்கள் சமீபகாலங்களில் பரவலாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இப்போது எலான் மஸ்கே சொல்லுகிறார்.

1982-இல் கேரளத்தின் பரவூர் இடைத் தேர்தலில் மெல்லப் புகுந்தது இந்த இயந்திரம். அன்று முதல் நாளது வரை இதைக் குறித்த ஐயங்களுக்குக் குறைவில்லை. விளக்கங்கள், உறுதிமொழிகள், குற்றச்சாட்டுகள், வழக்குகள்- எவையும் நின்றபாடில்லை. இதற்கிடையே, இந்த இயந்திரம் படிப்படியாகக் கால் பரப்பி, புத்தாயிரமாண்டில் நாடு முழுக்க பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

நாம் அளிக்கிற வாக்குதான் இயந்திரத்தில் பதிவாகிறதா, பதிவாகிற வாக்குதான் எண்ணப்படுகிறதா என்று அறிந்துகொள்ள இந்த இயந்திரத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. தில்லுமுல்லு நடந்தால் கண்டறிய முடியாது. ஆகவே, வழக்காடவும் முடியாது. அதனால் இதைக் கறுப்புப் பெட்டி என்று அழைப்பவர் உண்டு. இதற்காக ஒரு காகிதச் சரிபார்ப்பு (Voter Verified Paper Audit Trial- VVPAT) முறை வந்தது. ஒருவர் வாக்களித்ததும் அது ஒரு காகிதத்தில் அச்சாகி கண்ணாடிச் சில்லின் வழி வாக்காளருக்கு ஒரு சில நொடிகள் காட்சி தரும். பிறகு அதை இயந்திரம் விழுங்கி விடும். இந்தக் காகித வாக்குகளை வாக்குச் சீட்டுகளாகக் கருதி அவற்றையே எண்ணலாம். ஆனால் அதற்குத் தேர்தல் ஆணையம் ஒப்பவில்லை. குறைந்தபட்சம் ஒரு இயந்திரத்தில் எத்தனை காகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்பதையாவது எண்ணலாம். அந்த எண்ணிக்கையை இயந்திரத்தில் பதிவாகியிருக்கிற  எண்ணிக்கையோடு ஒப்பு நோக்கலாம். 2016 மாநிலத் தேர்தல்களில் சில தொகுதிகளில் ஆணையம் இதைச் செய்து பார்த்தது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரேயொரு வாக்குச் சாவடியில் மட்டும் இந்தச் சோதனை நடந்தது. இந்த மாதிரியின் அளவு நிகழ்தகவு (propablity) சித்தாந்தத்தின்படி மிகக் குறைவு என்றனர் வல்லுநர்கள். ஆனால், ஆணையம் கேட்கவில்லை. பெரும் செலவில் வாக்குப் பதிவு இயந்திரத்தோடு இணைக்கப்பட்ட VVPATஆல் குறிப்பிடத்தக்க பலன் என்னவென்று தெரியவில்லை. ஆட்டம் தொடர்கிறது.

இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமில்லாத ஒரு காலம் இருந்தது. வளர்ந்த நாடுகள், வளராத நாடுகள் என்கிற வேறுபாடில்லாமல் எல்லா நாடுகளும் பயன்படுத்துகிற வாக்குச்சீட்டு நமது நாட்டிலும் பயன்பாட்டில் இருந்த காலம். அப்படியான காலத்தில், ஒரு தேர்தலில், ஒரு வாக்குச் சாவடியில் நான் தலைமை அலுவலராகப் பணியாற்றினேன். இந்த இயல் அதைப் பற்றியது.

ஆர்வெல்லின் ஆண்டில் நடந்த தேர்தல்

ஆண்டு: 1984. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984. அக்டோபர் மாதம் இந்திரா காந்தி சுடப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமரானார். அவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு எஞ்சி இருந்தது. என்றாலும் ராஜீவ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி. அவர் உடல் நலிவுற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். தமிழகத்திலும் ஆட்சிக் காலம் ஓராண்டு இருந்தது. எம்.ஜி.ஆரும் ராஜீவை அடியொற்றி  சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார். அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. எதிரணியில் திமுக- ஜனதா -கம்யூனிஸ்ட் கூட்டணி.

நான் மதுரையில் ஓர் அரசுத் துறையில் பணியாற்றினேன். தேர்தல் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தேன். அரசின் பழுப்புக் காகிதத்தில் நியமன ஆணை வந்தது. ‘145- சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி, அதனைச் சார்ந்த 24-மதுரை பாராளுமன்றத் தொகுதி, ஆகியவைகளுக்கு 24.12.1984-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு வாக்குச் சாவடியில் தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.’  (விருப்பம் தெரிவிக்காத சிலருக்கும் ஆணை வந்தது, அது வேறு.) வாக்குச் சாவடி  விவரம் பிற்பாடு இன்னொரு ஆணை  வழியாக வந்தது- ’52- சாந்தி வித்யாலயா நடுநிலைப் பள்ளி, விளாங்குடி’. வாக்குச் சாவடி எண்ணும் தொகுதி எண்களும் முக்கியமானவை. காரணம் எனக்குப் பின்னால் தெரிய வரும்.

ஒரு வாக்குச் சாவடிக்கு தலைமை அலுவலர் தவிர ஐந்து அலுவலர்கள். எல்லோருக்கும் பயிற்சி வகுப்புகள் நடந்தன. பத்து நாட்கள் நகரின் மூன்று-நான்கு இடங்களில் சாவடி எண்களின் வரிசைப்படி வகுப்புகள் நடந்தன. எங்கள் வகுப்பு கே.கே.நகர், சுந்தரம் திரையரங்கில் (இப்போது ஜாஸ் அர்ஸ் சினிமாஸ்) நடந்தது. மதுரை நகரின் வட்டாட்சி அலுவலர்களில் ஒருவர் வகுப்பை நடத்தினார். ஓர் ஆவணப்படமும் திரையிட்டார்கள்.

ஐவர் அணி

எங்கள் அணியில் முதல் அலுவலர் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். இரண்டாமவர் வேளாண் பொறியியல் துறையில் வரைவாளர். மூன்றாமவர் பள்ளிக் கல்வித் துறையில் கணக்காளர். நான்காமவர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி ஆசிரியர். ஐந்தாம் அலுவலர் வனத்துறையில் எழுத்தர். எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பணிகள் இருந்தன. அவை சற்றுப் பின்னால் வரும். என்னைத் தவிர எல்லோரும் நடுத்தர வயதினராய் இருந்தனர். எல்லோரும் ஆண்கள். ஏனெனில், வாக்காளர்கள் அனைவரும் ஆண்கள். அதே பள்ளியில் பெண்கள் சாவடியும் இருந்தது. அதில் அலுவலர்களும் வாக்காளர்களும் பெண்கள்.

வாக்குப் பதிவிற்கு முன்பு

தேர்தலுக்கு முந்தின நாள் ஞாயிற்றுக்கிழமை. தேர்தல் நடத்தத் தேவையான பொருட்களைத் தலைமை அலுவலரிடம் கையளித்தார்கள். எம் சாவடிக்கான பொருட்கள் பாத்திமா கல்லூரியில் வழங்கப்பட்டது.  பொருட்களின் பட்டியல் பெரிது. அவற்றில் முக்கியமானவை:

-வாக்குப் பெட்டிகள், அவற்றைப் பொதிய கித்தான் பைகள், முறுக்கு நூல், மென் கம்பி, நாடா, அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, வாக்குச் சீட்டுகளைத் தள்ளிவிட மரத் தள்ளுகோல்.

-அழியாத மை, நெகிழிக் குச்சி (மை தீட்ட), கந்தைத் துணி (வாக்காளரின் கைகளில் எண்ணெய்ப் பசை இருந்தால் துடைக்க).

-வாக்குச் சீட்டுப் புத்தகங்கள். இதில் அடிச்சீட்டும் இருக்கும். வாக்குச் சீட்டைக் கீழித்தெடுக்க இரும்புச் சட்டம்.

-தாள்கள், படியெடு தாள் (Carbon Paper), பேனா, குண்டூசி, பசை, பிளேடு, மையுறி தாள்.

-அலுவலர் அடையாள அட்டைகள், முகவர் அனுமதிச் சீட்டுகள்.

-வாக்குச் சீட்டில் குறியீடு செய்வதற்கான குறுக்கை அம்புக்குறியுள்ள ரப்பர் முத்திரை, எல்லா வாக்குச் சீட்டுகளின் பின்புறமும் பதிப்பதற்கான பிரித்தறி முத்திரை (இதில் வாக்குச் சாவடியின் எண்ணும் தொகுதி எண்ணும் இருக்கும்; எங்களது முத்திரைகள் சட்டமன்றத்திற்கு 52/145, நாடாளுமன்றத்திற்கு 52/24), மையொற்றுப் பெட்டகம் (ink pad).

-சுவரொட்டிகள்

-25க்கும் மேற்பட்ட படிவங்கள், உறைகள்

எனக்கு உதவியாக முதல் அலுவலரும் வந்தார். அவரிடம் ஸ்கூட்டர் இருந்தது. என்னிடம் சைக்கிள். இருவருமாக எல்லாப் பொருட்களையும் வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்து சேர்த்தோம்.

சாவடி அமைக்கப்பட்டிருந்த நடுநிலைப் பள்ளி ஒரு ஓட்டுக் கட்டடம். நன்றாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. துப்புரவாக இருந்தது. இரண்டு வகுப்பறைகளை இணைத்து ஒரு வாக்குச் சாவடி ஆக்கி இருந்தார்கள். அலுவலர்களுக்கான மேசை- நாற்காலி, முகவர்களுக்கான இருக்கை எல்லாம் கிரமமாக இருந்தது. இரண்டு  வாக்களிப்பு மேசைகள். அவை சற்று உயரத்தில் வைக்கப்பட்டிருந்தன. மூன்று பக்கமும் கனமான வெள்ளை அட்டையால் மறைப்பு இருந்தது. பெண்கள் சாவடியிலும் இதே விதமான ஏற்பாடுகள். இந்த வகுப்பறைகளில் இருந்த பெஞ்சுகளை வேறு அறைகளுக்கு மாற்றியிருந்தார்கள். வருவாய்த்துறை ஊழியர்கள் முந்தின தினமே வந்து பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு ஒழுங்கு செய்ததாக எங்களை வரவேற்பதற்காகக் காத்திருந்த பள்ளி ஆசிரியர் சொன்னார்.

பெண்கள் சாவடியின் தலைமை அலுவலருக்கு உதவியாக அவரது கணவர் வந்திருந்தார். இருவரும் பொருட்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டு விடை பெற்றனர். எங்கள் அணியின் முதல் அலுவலரும் விடைபெற்றுக் கொண்டார். அவர்களுக்கு வீட்டில் பிள்ளைகள் இருந்தார்கள், வேலைகள் இருந்தன. இப்போது இரண்டு சாவடிப் பொருட்களுக்கும் நான்தான் ராக்காவல். இரண்டு சாவடிக்கும் சேர்த்து ஒரு காவலர். முன்னாள் ராணுவ வீரர். அவரும் முந்தின நாள் வந்துவிட்டார். அவரது சீருடை விரைப்பாக இருந்தது. அதிலும் விரைப்பான சல்யூட் ஒன்றை எனக்கு வழங்கினார். அதை முறையாக அவருக்குத் திருப்பித் தர எனக்குத் தெரியவில்லை. காவலரும்  என்னுடன் பள்ளியில் தங்கினார். நான் ஒரு பயணப் பொதியில் மாற்று உடை, விரிப்பு, துண்டு, சோப்பு, சீப்பு முதலானவற்றை அடைத்துக்கொண்டு போயிருந்தேன். காலைக் கடன்களுக்கு என்ன செய்ய? பள்ளியில் ஒரு கழிவறை இருந்தது. பள்ளிக்கு அருகாமையில் ஒரு பொதுத் தண்ணீர்க் குழாய் இருந்தது. காலை ஆறு மணி முதல் தண்ணீர் வரும். பெண்கள் ஆறரை மணிக்கு மேல்தான் வருவார்கள். நீங்கள் இருவரும் அதற்கு முன்னர் குளித்துவிடுங்கள் என்று உள்ளூர்க்காரர் ஆலோசனை வழங்கினார். நாங்கள் அவ்விதமே செய்தோம்.

வாக்குச் சாவடி, தொகுதி முதலான விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும்,  பெரிதாக்கப்பட்ட வாக்குச் சீட்டின் மாதிரிச் சுவரொட்டிகளையும் சாவடிக்கு வெளியே ஒட்டினோம்.

சமயநல்லூர் சட்டமன்ற இடத்திற்கு அதிமுகவும் திமுகவும் மோதின. அதிமுகவின் சார்பாக ஏ.சிவக்குமார் என்பவர் போட்டியிட்டார். திமுக வேட்பாளார் எஸ்.செல்வராஜ். பின்னாளில் கலைஞர் அமைச்சரவையில் அங்கம் வகித்தார். மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், அப்போதைய எம்.பி.யான ஏ.ஜி.சுப்பராமனுக்கு டிக்கெட் கொடுத்திருந்தது. மார்க்சிஸ்ட் வேட்பாளர், நிறைவாழ்வு வாழ்ந்து சமீபத்தில் விடை பெற்றுக்கொண்ட என்.சங்கரய்யா. நான்கு கட்சிகளின் முகவர்களும் வாக்குப் பதிவு தொடங்கும் முன்னரே வந்தனர். வாக்குப் பதிவு  அலுவர்களும் வந்தனர்.

எல்லா வாக்குச் சீட்டின் பின்னாலும் தலைமை அலுவலர் ஒப்பமிடவேண்டும். ஒரு புத்தகத்தில் 50 சீட்டுகள் இருக்கும். நான் நான்கு புத்தகங்களில் முன்னதாக ஒப்பமிட்டு வைத்தேன். வாக்குப் பெட்டிகள் காலியாக இருப்பதை முகவர்களிடம் காட்டிய பிறகு அதை மூடித் தாழிட வேண்டும். வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்களை முகவர்களிடம் காட்ட வேண்டும். அதை அவர்கள் குறித்துக்கொள்ளலாம்.

வாக்குப் பதிவுக்கான நேரம் தொடங்கும் முன்னரே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்றனர். காவலர் வரிசையை ஒழுங்குபடுத்தினார். வாக்குப் பதிவு குறித்த நேரத்தில் தொடங்கியது. போலிசார் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தனர்.

அலுவலரின் பொறுப்புகள்

வாக்காளரின் அடையாளத்தை சரிபார்ப்பது முதல் அலுவலரின் பணி. வாக்காளர் அடையாள அட்டை புழக்கத்தில் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும். வாக்காளர்கள் பொதுவாக கட்சிகள் வழங்கும் அலுவல் சார்பற்ற அடையாளச் சீட்டைக் கொண்டு வருவார்கள். அதில் வாக்காளரது பெயர், பட்டியலில் அவரது தொடர் எண், பகுதி எண், சாவடி எண் ஆகிய விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டு இல்லாமலும் வரலாம். அவர்களிடம், பெயர், முகவரி விவரங்களைக் கேட்டறிந்து பட்டியலில் அவரது பெயரைக் கண்டறிய வேண்டும். பிறகு முதல் அலுவலர் வாக்காளரின் பெயரையும் மற்ற விவரங்களையும் உரத்த குரலில் அறிவிப்பார். முகவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம். அப்போது தலைமை அலுவலர் இடையிட்டு விசாரிக்க வேண்டும். தலைமை அலுவலர் மனநிறைவு கொண்டால் வாக்களிக்க அனுமதிக்கலாம். இதில் முகவர்களுக்கு எதிர்ப்பு இருந்தால் அதை அதற்கான படிவத்தில் பதிவு செய்யலாம். வாக்காளருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதை வாக்காளர் ஏற்கவில்லையென்றால் அவர் பிறிதொரு படிவத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யலாம்.

வருகை தந்த வாக்காளர்களின் எண்ணிக்கையையும் முதல் அலுவலர் குறித்து வைக்க வேண்டும். வாக்குப் பதிவு முடியும் முன்பு மூன்று முறை தேர்தல் அதிகாரியின் பிரதிநிதிகள் இந்த விவரங்களைப் பெற்றுச் செல்வார்கள். அலைபேசியும் கணினியும் இணையமும் இல்லாத காலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும்போதே பதிவான வாக்குகளின் கணக்கை ஆணையம் அறிவித்தது.

இரண்டாம் அலுவலரின் பணி அடையாள மை இடுவது. அரை நிமிடம் மை அழியாமல் இருக்கிறதா என்பதையும் இவர் கவனித்துக்கொள்வார்.

மூன்றாம் அலுவலரிடம் சட்ட மன்ற வாக்குச் சீட்டு இருக்கும். முதல் அலுவலர் பெயரையும்  விவரங்களையும் அறிவிக்கும் போது, பகுதி எண்ணையும் தொடர் எண்ணையும் அடிச்சீட்டின் பின்புறம் குறித்து வைப்பார். அதில் வாக்காளரின் ஒப்பம் அல்லது பெருவிரல் ரேகையைப் பெற வேண்டும். வாக்குச் சீட்டின் முனையில் பிரித்தறி சின்னம் (52/145) பதிக்கப்பட வேண்டும். வாக்குச் சீட்டுகளை தொடர் எண்களின் வரிசைப்படி வழங்கினால் முகவர்கள் குறிப்பிட்ட வாக்காளர் பெறும் வாக்குச் சீட்டின் தொடர் எண்ணைக் கணிக்கக் கூடும். இதைத் தடுப்பதற்குப் பயிற்சியின்போது ஒரு தந்திரம் சொல்லித்  தந்தார்கள்.  ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுப் புத்தகங்களை தயாராக வைத்துக்கொண்டு சீட்டுகளை வரிசை மாறி வழங்க வேண்டும்.

நான்காம் அலுவலர் இதே பணிகளைச் செய்து நாடாளுமன்றச் சீட்டை வழங்குவார்.

ஐந்தாம் அலுவலரிடம்தான் வாக்குச் சீட்டில் பதிக்க வேண்டிய குறுக்கை முத்திரை இருக்கும். இவர் மேசையின் மீதுதான் வாக்குப் பெட்டிகளும் இருக்கும். இவர் இரண்டு வாக்குச் சீட்டுகளையும் வாங்கி பிரித்தறி சின்னம் வெளித்தெரியும் விதமாக நீள வாக்கிலும் குறுக்கிலும் மடிப்பார். பிறகு சட்டமன்ற வாக்குச் சீட்டைப் பிரித்து அதனையும் முத்திரையையும் வாக்காளரிடம் கொடுப்பார். வாக்காளர் வாக்களிக்கும் அறைக்குச் சென்று முத்திரையைப் பதித்து, பிறகு சீட்டை மடித்து அலுவலரின் முன்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டியில் செலுத்த வேண்டும். அடுத்து நாடாளுமன்ற சீட்டுக்கும் இதே நடைமுறைதான்.

வாக்குப் பதிவுக்குப் பின்

அன்றைய தினம் 800 வாக்குகளுக்கு மேல் பதிவாயின. குறித்த நேரத்தில் வாக்குப் பதிவும் முடிந்தது. வாக்குப் பெட்டியைப் பூட்டி அரக்கு வைக்க வேண்டும். முகவர்கள் விரும்பினால் அதில் அவர்களது முத்திரையைப் பதிக்கலாம். நான்கு முகவர்களும். பித்தளை முத்திரைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். இளகி வரும் அரக்கின் சூடு ஆறுவதற்கு முன்பு தங்கள் முத்திரையைப்  பதித்தார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு முகவர்கள் இந்த முத்திரைகளைப் பரிசோதிக்கலாம்.

அடுத்து ஒரு முக்கியமான படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தச் சாவடிக்காக முந்தின நாள் நான் பெற்றுக்கொண்ட  வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், நீக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்கள் (இருந்தால்) இவ்ற்றை ஒரு படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இவற்றிலிருந்து பதிவான வாக்குகளின்  எண்ணிக்கையை கணக்கிட்டு அதையும் பதிய வேண்டும்.

இது வாக்குப் பெட்டியில் காணப்படும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையாக இருக்கும். இந்தப் படிவத்தில் தலைமை அலுவலர் ஒப்பமிட்டு முகவர்களுக்கு வழங்க வேண்டும். இதைப் பெற்றுக்கொண்டு முகவர்கள் விடை பெற்றனர். அவர்கள் வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது இதை சரிபார்க்கலாம்.

தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட படிவங்களை நிரப்பி அவற்றுக்கான உறையில் இட வேண்டும். எல்லாப் படிவங்களிலும், உறைகளிலும் தொகுதி எண்ணையும் சாவடி எண்ணையும்  நிரப்ப வேண்டும். அலுவலர்களுக்கான மதிப்பூதியம் ரொக்கமாக என்னிடம் தரப்பட்டிருந்தது. அதைப் பெற்றுக்கொண்டு அலுவலர்கள் அனைவரும் விடை பெற்றுக்கொண்டனர். இப்போது  வாக்குப் பெட்டிகள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகள், ஏராளமான உறைகள், திருப்பி அளிக்க வேண்டிய வாக்குச் சாவடிப் பொருட்கள் எல்லாவற்றையும்  முறையாக அடுக்கி வைத்துக்கொண்டு இரண்டு சாவடிகளின் தலைமை அலுவலர்களும் ஒரு காவலரும் காத்திருந்தோம். உள்ளுர்க்காரர்கள் எங்களுக்குத் துணையாக இருந்தார்கள். இரவு 9 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் வந்து, எங்களிடமிருந்து எல்லாப் பொருட்களையும் முறையாகப் பெற்றுச் சென்றார்கள்.

அன்றிரவு தல்லாகுளம் வைத்தியலிங்கா லாட்ஜூக்கு சைக்கிளில் திரும்பியபோது நகரமெங்கும் வீட்டிற்குள்ளும் வீதிகளிலும் தேர்தல் பேச்சாகவே இருந்தது. 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலைப் பற்றி தனது ‘India After Gandhi’ நூலில் ராமசாந்திர குஹா ஓர் இயலே எழுதியிருக்கிறார். 2,24,000 வாக்குச் சாவடிகள், 20 இலட்சம் வாக்குப் பெட்டிகள், 56,000 தலைமை அலுவர்கள், 2,80,000 துணை அலுவலர்கள், 2,24,000 போலிஸ் என்று பலர் இயங்கிய தேர்தல் அது. 1984 தேர்தலில் இன்னும் அதிகமான மனித வளம் பயன்பட்டிருக்கும். அதில் எனது பங்கு ஓர் அணிலைக்கால் குறைவாக இருக்கலாம். என்றாலும் நிறைவாக இருந்தது. வாக்கு இயந்திரம் வந்த பிற்பாடு அதைக் குறித்த சர்ச்சைகள் மேலெழும்போதெல்லாம் எனக்கு சமயநல்லூர் நினைவுக்கு வரும்

2024 தேர்தலில் பதிவான வாக்குகளை ஆணையம் பல நாட்கள் தாமதமாகத்தான் அறிவித்தது. அதுவும் தொகுதி வாரியாக அறிவிக்கவில்லை. கணினி இல்லாத காலத்திலேயே பதிவான வாக்குகளின் கணக்கை தொகுதி வாரியாக அடுத்த நாளே துல்லியமாக அறிவித்தது அந்நாளைய ஆணையம்.

Association of Democratic Return (ADR) என்கிற அமைப்பு, 2024 தேர்தலில், இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணப்பட்ட வாக்குகளையும் ஒப்பிட்டது. 543 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் மட்டுமே இவை ஒத்துப் போயின. 362 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகள் கூடுதலாக இருந்தன. மொத்தம் கூடுதல்: 5.5 லட்சம் வாக்குகள்! 176 தொகுதிகளில் குறைவாக இருந்தது. மொத்தம் குறைவு: 38,000 வாக்குகள். ADR வழக்குத் தொடுத்திருக்கிறது.

சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் கணக்கு அடங்கிய படிவத்தை இணையதளத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று கோரியது ADR. ஆணையம் மறுத்துவிட்டது. காகிதச் சரிபார்ப்பும் (VVPAT) முறையாக நடப்பதில்லை. இயந்திரத்தில் தில்லு முல்லு செய்யக்கூடிய சாத்தியங்களைப் பற்றிய உரையாடல் நடந்த வண்ணம் இருக்கிறது. இவையெல்லாம் இந்த இயந்திரத்தின் மீதும் ஆணையத்தின் மீதும் நமது நம்பிக்கையைக் குறைக்கிறது.

வாக்குச் சீட்டுகள் நம்பகமானவை. ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் தலைமை அலுவலரின் ஒப்பம் இருக்கும். சாவடி வாரியாகப் பதிவான வாக்குகளைத் தொடர் எண்களோடு சோதிக்கலாம். வாக்காளர் அளிக்கிற வாக்குதான் எண்ணப்படுகிறது என்பதை ஐயம் திரிபற அறிந்து கொள்ளலாம். உலகின் பல ஜனநாயகங்கள் இன்றளவும் வாக்குச் சீட்டுகளைத்தான் பயன்படுத்துகின்றன. நாம் வாக்குச் சீட்டுகளுக்குத் திரும்புகிற காலம் வரும். இந்த ஐயங்கள் அப்போது இல்லாமலாகும்.

(அனுபவம் தொடரும்)

[email protected]

The post காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

ஷினோலா கவிதைகள்

அந்தூரத்து நினைவு

சற்றும் நகர்த்த முடியா
இந்நினைவை
இழுத்து இழுத்து
இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்

இனி வெறும்
சறுக்குப் பாதைகளே
உருட்டி விட்டால்
சிதறுவதற்கு இருக்கின்றன
ஆயிரம் வழிகள்

அதில் எதிலாவது விழுந்து
எத்துண்டாவது உடைந்தாலும்
ஏழு ஜென்மத்துக்கும் மூச்சிழுத்து
பிழைத்துக்கொள்ள மாட்டேனா?

கரைசேரா கப்பல்கள்

தெருமுனை தாண்டிடாத
காகிதக் கப்பலை
தெருவெங்கும் விட்டு
யார் கப்பல் கரை சேரும் என்று
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்

அங்கும் இங்குமாய் அது தத்தளித்து
பார்க்கும் எங்களை அலைக்கழித்து
சாரல் மழையில் சற்றே சாய்ந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
முழுதும் தொய்ந்து
மூச்சுத் திணறி முங்கிற்று

நாங்களோ அடுத்த கப்பலுக்கு
காகிதம் கிழித்தபடி…

ஒரு தடித்த கீறல்

பாதி கழுவிய வலுவலுப்பில்
மங்கியொழுகும் குவளைகள்
அவசரத்திற்கு எப்போதும் கிடைத்திடாத
கரண்டிகள்
பொடிசுகள் தைரியமாய்
கையாள முடிந்த கத்திகள்
தண்ணீர் ஊற்றி சுத்தினாலும்
அரையாது அடம்பிடிக்கும்
தேங்காய் துண்டுகள்
எறும்பின் நகர்வு இல்லாது
சுவைத்திட முடியா திண்பண்டங்கள்
எப்போது போட்டாலும்
அட்டூழியம் பண்ணும்
தொலைக்காட்சி அமைப்புகள்
நாள் பூராய் துவைப்பதாய் சுழற்றிக்கொள்ளும்
சலவை இயந்திரம்

எல்லாம் அதனதன் போக்கில்
சோதிக்கும் சுதந்திரம் கொண்ட
பாட்டி வீட்டிலிருந்து
வெளியேறுகிறாள் சிறுமி ஒருத்தி
விழுந்து கிடந்த ஒற்றைப் பனம்பழம்
எடுக்க வந்த ஆசையுடன்.

[email protected]

The post ஷினோலா கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

ராஜேஷ்வர் கவிதைகள்

ஆல்கஹாலின் காதல் வாசம்!

இளைப்பாறுதல்
இடைமறிக்கும் பெருஞ்சித்திரம்
தோலுரிக்கும் புதுவானம்
க்ளோரோஃபில் நிரப்பப்பட்ட
முல்லை நிலம்
ஜெலட்டின் குச்சிகளாய்
வெடித்துச் சிதறும் தனிமை
யாவும் அவள் நினைவுகளின்
கிரகணத்துப் பசி!

இதழ் வலிக்கப் பருகும்
லிப்ஸ்டிக் சாயங்களில்
அமிலம் வேறு அவள் வேறாய்
கலைத்துவிடுகிறது
ஒரு கப் உறக்கத்தின்
உதட்டுச் சூடு!

இளைப்பாறுதல்
இன்புறுதல்
கிராமஃபோன் லூப் இசையில்
செத்து மடிதல்
பிணமாகி
நள்ளிரவு தாகத்தில் உயிர்த்தெழுதல்
மதுரம் பருகி
மற்றொரு கிரகணத்தின்
விரதம் முடித்தல்
யாவும்
ஆல்கஹாலின் காதல் வாசம்!

காற்றோடு மலர் வேய்ந்த கூடுகள்!

முல்லை விழுங்கும் திசைகளில்
ஆரோகணம்
ஒன்றிரண்டு மலர் சொரியும்
மணம் பரப்பி
காற்றின் கூடுகளை வேயும்

எங்கோ
தூரத்துக் கிளை முறியும்
மென் அதிர்வில்
மற்றொரு கணம்
வனம் விழித்துக்கொள்ளும்

பின்னிரவில்
கூடு திரும்பும் பறவைக்கு
முறிந்த கிளை
எவ்வகை நியாயம் கூறும்

காற்றோடு
மலர் வேய்ந்த கூடுகள்
மெல்ல சிணுங்கும்!
திறந்து கிடந்த முல்லையில்
ஏனோ
முகாரி ராகம்!

ஈரம் அவிழாத இத்யாதிகள்!

அர்ஜுனன் தேர் பத்து
என்றுதான் துவங்கும்
அந்நாட்களில்
ஓர் மழை இரவின்
பிரபந்தம்

சுவரெங்கிலும்
நிழல் ஓவியம்
சாளரங்களில்
துணுக்குகளாய் கசியும்
நீலப் பிரபஞ்சம்
சுவர் ஏறி
நிறம் சேர்க்கும்

ஒரு கைப்பிடி வெளிச்சம்
இருள் பசியாறும்
பிம்பங்களின்
நிரல் விரியும்

மழை ஓய்ந்த பின்னிரவில்
நீர் கூடி
நிலவை மடித்து
நிறை கூடும் நிலம்
மற்றுமொரு
சூரியப் பொழுதின்
திறவுகோல்!

[email protected]

The post ராஜேஷ்வர் கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

நான் – ஒரு போஹேமியன் பயணி;1 – காயத்ரி சுவாமிநாதன்

ஹரியானாவில் கிடைத்த உறவுகள்    

பயணங்களில் பல வகைகள் உண்டு. பல வருடங்களாக தேசாந்திரியாக இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டு வருகிறேன். என்னுடைய மிகப்பெரிய ஆசான் என்னுடைய அனுபவம் மட்டுமே. அப்படி என்னுடைய பயண அனுபவங்களை, சில நிகழ்வுகளைப் பகிர்கிறேன். அதற்கு முன்பாக, ‘பயணம்’ பற்றி சில தகவல்களைக் கூற விரும்புகிறேன். என்னைப் போல திட்டமிடாமல் தேசாந்திரியாகச் சுற்றி, அல்லது ஒரு நோக்கத்துக்காக நெடுந்தூரம் போவதுதான் பயணம். என்னைப் போல பயணம் செய்பவர்கள் பயணப்படுவதை எப்போதும் உலகத்திற்கு தெரிவிக்கமாட்டார்கள். ’லாங் வீக்என்ட்’ ஐ அனுபவிப்பதற்காக இணையதளத்தில் முன்கூட்டியே பெரும் வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டுச் செல்வதற்குப் பெயர்,  ‘சுற்றுலா’ (Tour/Trip).

சுற்றுலா என்பது உறவுகளும் உணவுகளும் சம்பந்தப்பட்டது. தேசாந்திரி பயணம் (Journey/Voyage) என்பது உணர்வுகள் சம்பந்தப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு என்னைப் போல எப்பொழுதும் ஒரு புதிய இடத்திற்குப் போய் அங்கே சில மாதங்கள் தங்கியிருந்து, அந்நிலப்பரப்பு, மக்கள், மொழி, உணவு, கலாச்சாரம் அத்தனையையும்  ஓரளவு கற்றுக் கொள்வதுதான் பயணம். அப்படி என்னுடைய பயணம்  எப்போதுமே என்னை செழுமையாக்குகின்றது, முழுமையாக்குகின்றது, செறிவான மனிதனாக்குகிறது மற்றும் பூமியைக் கடந்து பிரபஞ்சத்தையே கண்டடைய வைக்கிறது. எனது வாழ்வின் மிக முக்கியமான பயணமான, ’ஹிரியானா பயணம்’ பற்றி இக்கட்டுரையின் மூலம் பகிர்கிறேன்.

ஹரியானாவில், ‘Faridabad’ ல் சாலை ஓரமாக நண்பகல் 12மணி அளவில் பசியின் உச்சத்தில் சோர்வோடு நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சிறிய பையன் அவன் மொழியில் இளநீரை விற்றுக் கொண்டிருந்தான். பிறகு சாப்பிடலாம், முதலில் ஒரு இளநீர் குடிக்கலாம் என அவனை நோக்கிச் சென்றேன். அங்கே ஒரு சிலர் ஒரு இளநீரோடு வாங்கிக் கிளம்பிவிட்டனர்.  நான் அவன் வைத்திருந்த அனைத்து இளநீரையும் சீவி அதன் தண்ணீரை நான் வைத்திருந்த எனது பாட்டிலில் அடைத்துக் கொண்டேன். மேலும் அந்தத் தேங்காய்களை ஒரு டப்பாவில் வைத்துக் கொண்டேன். நான் போகும் வழியில் யாராவது சாலையோரம் இருப்பவர்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்களுக்குக்  கொடுக்கலாம் என்று நினைத்தேன். அப்படியே நடந்தது. நான் ஏன் அனைத்து இளநீரையும் வாங்குகிறேன் என அந்த சின்னப் பையனும் மிகவும் அதிர்ச்சியாக என்னையே கூர்ந்து பார்த்தான். பிறகு அவனிடம் ஒன்று  சொன்னேன், “ஒன்றும் இல்லை, நீ வைத்திருக்கும் அனைத்தையும் எனக்குக் கொடு, ஏன் படிக்காமல் இருக்கிறாய்? போய் படி, என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்”. பிறகு அடுத்த சில மணித்துளிகளில் அக்கடையில் இளநீர் குடிக்க ஒரு வெள்ளைக்காரர் வந்தார். Home Care ஒன்று வைத்துள்ளதாகக் கூறினார். அப்பா-அம்மா இல்லாத குழந்தைகளுக்கு படிப்பு, தங்கும் வசதி எல்லாம் செய்து கொடுப்பதாகவும் கூறினார். மறு நொடியிலேயே இந்தப் பையனைப் பற்றி எடுத்துக் கூறினேன். உடனே சம்மதித்தார். அந்த ஒரு நொடியிலேயே அவன் வாழ்க்கை மாறியது. இறுதியில் அவன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டு அழுது முத்தமிட்டுச் சொன்னான், “ஒரு இளநீரை வாங்குவதே பெரிது, நீங்கள் நான் வைத்திருந்த அனைத்தையும் வாங்கி எனது பசியைப் போக்கிவிட்டீர்கள் மற்றும் எனக்கு வாழ்வு கொடுத்துள்ளீர்கள். I love you my Queen”. அவனைப் பார்த்த நிமிடத்தலே ஏதோ எனக்குள் தோன்றியது, அவனுக்கு ஏதாவது செய்திட வேண்டும் என்று. அப்படி ஒரு பாவப்பட்ட தோற்றம். அப்பா-அம்மா யாரும் இல்லை அவனுக்கு. வேறு யாரிடமோ இளநீர் வாங்கிக்கொண்டு இந்த இளநீரை விற்றுக் கிடைக்கிற காசை வைத்து வாழ்வதுதான் அவனது அன்றாட வாழ்க்கை. சில நேரம் இளநீர் விற்காமலும் போகும் எனச் சொன்னான் என்னிடம். பிறகு, ‘டாடா’ சொல்லிக் கிளம்பினேன்.

அடுத்ததாக நான் போகும் வழியில் எனது கண் முன்னே மிகப்பெரிய துணிக்கடை ஒன்று இருந்தது. அதற்குள் நுழைந்தேன். பிரமாண்டமான துணிக்கடை. ஆடம்பரமாக ஆடைகளை அணிந்துகொண்டு சாமானியர்கள் அங்கும் இங்கும் நடந்தேறிய காட்சிகள் ஆச்சர்யமாக இருந்தன. ஆனால் அங்கே நான் எனக்கு துணி வாங்குவதற்காகச் செல்லவில்லை.

கடையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே போகும்போது, ஓரே ஒரு இடத்தில் மட்டும் இருளாக இருந்தது. யாரிடமும் கேட்காமலே அங்கே சென்றேன். நான் எப்போதும் இருளில் வாழ்பவள். அதனால் இருள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு சின்ன அறை. அந்த அறை முழுவதும் சி்ன்னச் சின்ன பெண்கள். தங்கள் அன்றாட பிழைப்பிற்காக துணிகளை நெய்து வேலை செய்கிறவர்கள். அதில் ஒரு பெண் மட்டும் என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவள் அருகில் சென்று கண்ணத்தைக் கிள்ளினேன். முகத்தில் அப்படி ஒரு நாணம் கலந்த ஒரு புன்னகை. ஹிந்தியில் உரையாடினோம். என்ன வயது எனக் கேட்டேன். “எனக்கு வயது 13. அப்பா குடித்தே இறந்துவிட்டார். அம்மா உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். எனது பாட்டியுடன் இருக்கிறேன், அவருக்கும் வயதாகிவிட்டது, நான் வேலைக்குப் போனால்தான் அவர் உயிரோடு இருக்க முடியும்” எனக் கூறினார். அந்தப் பெண் தனது கைகளை மறைத்துக் கொண்டே இருந்தாள். துணி தைக்கும் கைகள் எல்லாம் புண்ணாகியிருந்தன. “மருந்து போடலாமல் ஏன் இருக்கிறீர்கள்?” எனக் கேட்டேன். “மருந்து வாங்கினால் எனக்கும் எனது பாட்டிக்கும் ஒருவேளை சாப்பாட்டிற்கான பணம் போய்விடும்” என்றாள். “சற்று இருங்கள், வருகிறேன்” எனச் சொல்லி, கடைக்கு வெளியே இருந்த மருந்தகத்தில் மருந்துகளை வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தேன். எனது கையைப் பிடித்து வாய்விட்டுச் சத்தமிட்டு அழுதாள் அந்தச் சிறிய பெண். அவளைப் போலவே அங்கே நிறைய பெண்கள், சிறுமிகள், வயதானவர்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருந்தனர். இக்கடையில் தினமும் அல்ல, ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகின்றனர். ஆனால் இங்கே ஒருவரும் வந்ததில்லை. எங்களைப் பார்த்ததில்லை. ஒருவேளை எங்களை வெளியே  யாரேனும் பார்த்தால் கூட முகம் சுழித்து ஏளனமாகத்தான் பார்ப்பார்கள்” எனக் கூறினார்கள். அப்படி அந்த அறைகளில் வேலை செய்யும் ஒவ்வொருவர்களின் கதைகளைக் கேட்டுக் கொண்டே நகர்ந்து சென்றேன். இறுதியில் ஒரு அக்கா திடீரென எனது கையைப் பிடித்து அவரது அருகில் இழுத்து அவர் முதுகையும் உடம்பில் உள்ள சிறு காயங்களையும் காண்பித்து அழுதார். எனது மணம் நொறுங்கியது. பகலில் துணிகளை நெய்வது, இரவில் பாலியல் தொழில் என மேலும் பல பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போனார்.

அங்கே இருந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நினைத்து எனது மணம் கனத்துப் போனது. பிறகு எல்லோருமே ஒன்று சொன்னார்கள், “இங்கே இருக்கும் மனிதர்கள் தங்களை மிகவும் ஆடம்பரமாகக் காண்பித்துக்கொள்ள நாங்கள் நெய்த துணிகளை அணிகிறார்கள். ஆனால் எங்கள் வாழ்வில் நாங்கள் ஒருநாளும் நல்ல ஆடைகளை அணிந்ததே இல்லை”. அங்கே இருப்பவர்களில் என்னுடன் முதலில் பேசிய, ‘ஆஷா’ வின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. “ஒருநாள் கூட நான் இந்த மிகப்பெரிய கடையை முழுதாகப் பார்த்ததே இல்லை” எனக் கூறினாள். பிறகு அவளை கடைக்குள்  அழைத்துச் சென்றேன். அங்கே இருப்பவர்கள் அவர்களது, ‘LuxuryPeople’ என்ற  மிகப்பெரிய மட்டமான அடையாளத்தோடும் அதிகாரத்தோடும் என்னைத் திட்டினார்கள், “ஏன் இவளை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்?” என்று… நான் அவர்களிடம் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன், “She is my sister, u don’t have rights to say anything about her, I just want to buy some dress for her that’s நor else  I will call the Police” என்றுச் சொன்னேன்.பிறகு அவளுக்கு என்னால் முடிந்த அளவிற்கு ஆடைகளை வாங்கிக் கொடுத்தேன். அவள் விழிகளில் பரிதாபத்தை என்னால் உணர முடிந்தது. பிறகு அவளுக்கு ஆடையும் கிடைத்தது. அந்த அறையில் இருக்கும் எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன். நான் அங்கிருந்து கிளம்பும்போது ஒருத்தி மட்டும் மிகுந்த கவலையோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வேறு யாருமல்ல, ஆஷாதான். இறுதியாக, “நீங்கள் யார், எனக்காக ஏன் இதெல்லாம் செய்கிறீர்கள்?” என்று கேட்டாள். “நீ எனது தங்கை” என மறுபடியும் கூறினேன். “எப்படி?” எனக் கேட்டாள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என பதிலளித்தேன். அவளுக்குப் புரியவில்லை. ஹிந்தியில் மொழிபெயர்த்துச் சொன்னேன். அவள் எனது கையை விடவேயில்லை. “உங்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன், நீங்கள் இங்கேயே இருக்கலாமே, அடிக்கடி உங்களை எனது வாழ்வில் நினைத்துக்கொள்வேன்” எனக் கூறினாள்.  வேறென்ன வேண்டும் இதற்கு மேல்? பிரியாவிடைப்பெற்றேன் அங்கிருந்து..

வாழ்வதற்குப் பொருள் வேண்டும்தான். இருந்தாலும், வாழ்வதிலும் பொருள் வேண்டும். நாம் சேர்த்து வைக்கும் பொருட்களிலும், சொத்துகளிலும் இல்லை மகிழ்ச்சி. நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது மகிழ்ச்சி.

பணத்திலேயே குறியாக இருக்கும் மனிதனால் அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள முடியாது. எந்த மிருகமும் அன்பைப் பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை, மனிதனைத் தவிர. யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை, யாரால் யார் மகிழ்விக்கப்படுகின்றோம் என்பதில்தான் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.

தொடரும்…

[email protected]

The post நான் – ஒரு போஹேமியன் பயணி;1 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

காயத்ரி சுவாமிநாதன் கவிதைகள்

கடலோரச் சிறகுகள்

மூங்கில் நிழலாய் விழும்,
கதிரவன் பூச்செவியில் நிசப்தம் பேசும் வானில்
நான் பார்த்தது ஒரு கடல்,
என் நாடுகளைக் கடந்து வந்த ஒரு மொழி.
அலைகள் என்னைத் தடவிக் கேட்டன,
“வந்த ஊர் எது?”
நான் பதிலளிக்காத நிஜங்களோடு
அவற்றின் மெல்லிய அசைவில் தேங்கி நின்றேன்.
பின்வட்டிய காலடிச் சுவடுகள்,
ஓர் அழியாத அடையாளமாய்
என் பயணத்தைப் பதிவு செய்தன,
புயல் தாண்டி எழுதப்பட்ட ஒரு கதையைப் போல.
இங்கு நான் யாருமில்லை;
ஆனால் கடலும் சூரியனும்
என்னை வாழ்த்தின
வலசையின் கவிதை எழுதியது
இங்கிருந்த கடற்கரைதான்.

*

அழிந்த நிலத்தில் அழகின் மொழி

பட்டுப்போன மரங்கள்
பழையதாயினும் புதுமையோடும் நிறைந்தவை,
பருவக்காலங்களைப் போலவே
அழிந்து, அழகடைந்தவை.

அவை நிறைந்திருக்கின்றன,
என் ஊரின் மலைசுற்றுப் பாதையில்…
வழி வழியாகச் சிதறியுள்ளன
இலைமலர் இலக்கணங்கள்.
ஒவ்வொரு கிளையும் ஒரு கதை,
ஒவ்வொரு வேரும் ஒரு காலச் செய்தி!

மழைத்துளி தொட்டுப் போன
பச்சை இலைக்கோணங்களில்,
பழைய காதல் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன
காற்று பிழைத்துச் சொல்கிறது அவற்றை
நேர்த்தியான சத்தமின்றி…

அந்தப் பாதையில்,
ஒரு பெண் நடக்கிறாள்
அவளோ ஒரே ஒரு நூல் நாயகி!
தோளில் துணிக்கட்டு, கண்களில் தீபம்,
நெஞ்சில் கவிதை, கால்களில் கதைகள்…
அவள் நடந்து செல்லும் ஒவ்வொரு அடியிலும்
மண் ஒரு பக்கம் பதிப்பாகிறது.

அவள் மீது விழுந்த கதிர்கள் கூட
உரைநடை பேசுகின்றன
“ஓ, நீதான் எங்கள் கதையின் கதைவளர்!”
பூக்கள் சிரித்துக்கொள்கின்றன,
வண்டுகள் மெல்லிசை வாசிக்கின்றன,
மலை மரங்கள் தலைகுனிகின்றன…
அந்தப் பாதை, ஒரு நூலகம் போல
நூல்கள் இல்லாத நூலகம்.
ஆனாலும், அவள் நடையே
ஒரு சிந்தனையின் தொகுப்பு,
முழுக் கவிதையின் வாசிப்பு!

*

மலையின் மனம்

பாறையின் மார்பைத் தழுவி,
அந்தி நிழலில் நிசப்தமாய் நிற்கும்
பழமையான குகை வாசல்
பேச மறந்த காலத்தின் மொழி அது.

வழி நடந்த பாதையில்
வெண்மணல் தடம் போலவே,
வெட்டியசைந்த கல்லடி படிகள்,
ஒவ்வொன்றும் ஒரு கதையைக் கூறும்.

இடப்பக்கமோ இலைக் கிளி,
வலப்பக்கமோ பசுமைக் கண்கூர்வு.
இரண்டின் நடுவே,
நானும், என் நினைவுகளும்.

எத்தனை காலங்களாய் இவள் காத்திருக்கிறாள்?
பூமியின் உள்மனம் போல,
இவளுள் மறைந்திருக்கும் பரம்பொருள்,
நம்மை நோக்கி ஒளிந்து பேசுகிறது.

கழல் போட்டு மேலேறும் ஒவ்வொரு படி,
ஒரு நெஞ்சில் சிந்தும் சங்கமம்.
கல் மட்டும் இல்லை இது,
நம் காலச்சுவடுகளுக்கான மௌனத் தூபி.

இலை மேல் இமைகள்
(ஒரு தேசாந்திரி பறவையின் கவிதை)

வெள்ளை அப்பா, வெள்ளை அம்மா,
அவர்கள் இருவருக்கும் நடுவிலே,
பசுமைக் கனவாக ஒரு சிறு வெள்ளை உயிர்.
மூவரும் ஓர் இலை மேல்,
சூரியனின் நிழலோடு சேர்ந்து,
காற்றின் இசையைக் காதுகளாக,
மௌனமே மொழியாக
அவர்கள் வாழ்ந்த பாதையைக் கொண்டு
ஒரு சிறு நினைவுப் பயணம்…
அந்த இலைக்கருகே,
நானும் ஒரு தேசாந்திரிப் பறவையாய்,
என் சிறகு சுருக்கி,
முதல்முறையாக உட்கார்ந்தேன்…
பறக்காமல், பார்க்கும் பயணம்
அவர்களை நோக்கி,
என்னை நோக்கிய பயணம்.
அவர்கள் கண்களில் புன்னகை இல்லை,
ஆனால் ஒரு நிம்மதி இருந்தது.
அவர்களது அமைதி,
என் உள்ளத்தின் கோலாரங்களைத் தொட்டது.
வாழ்க்கை என்பது ஒரு பறவைதான்,
ஆனாலும் அதற்கு இரவு
இரவில் மட்டும் தெரியும்
ஒரு இலை மேல்,
உறங்கும் முன்,
வாழ்ந்த எல்லா நிமிடங்களும்
பாடலாக மாறும்.

The post காயத்ரி சுவாமிநாதன் கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

ப.மதியழகன் கவிதைகள்

ஒரு கணம்

இதற்கு முந்திய நாட்களிலெல்லாம்
அப்படியொன்றும் நடந்துவிடவில்லை
மொட்டு விரிந்து மலராவதை
யாரேனும் பாரத்ததுண்டா?
இந்தவொரு இரவுக்காகத்தான்
இத்தனை இரவுகள் காத்திருந்தேன்
அணைக்கப்படாத விளக்குகளும்
நிறுத்தப்படாத தொலைக்காட்சியும்
கலைந்து கிடக்கும் உடைகளும்தான்
வீடுகளை வீடுகளாய் வைத்திருக்கின்றன
அழைப்பு மணி ஒலித்தவுடன்
அனிச்சையாக உடைகளைத்
திருத்திக் கொள்கிறாய்
உன்னில் நானும்
என்னில் நீயும்
ஏதோவொன்றைத் தேடிக்
கொண்டிருந்தோம்
பகல்பொழுது முழுவதும்
ஆறுதல் அளிக்கும் இரவுகளை
அழைத்துக் கொண்டிருந்தேன்
இரவு வானத்தில் எனக்காக
காத்திருக்கின்றன நட்சத்திரங்களும்
நிலவும்
நகரமே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்
இந்த நள்ளிரவு, என் மனதை
வேட்கை கொள்ள வைக்கிறது
அவளைக் கண்டவுடன்
அணையுடைத்துக் காட்டாறெனப்
பாயக்கிறது என் காமம்.

*

எனது தேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
உனது நிழலை முத்தமிட்டதை
இப்போது நினைத்துப் பாரக்கிறேன்
வாடிய மலர் கூட மகத்துவம் பெறுகிறது
உன் கூந்தலிலிருந்து விழுந்ததால்
அந்த ஒரு மழை நாளை
நம் இருவராலும் மறக்க இயலாது
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்
கடலாக வேண்டுமென்றால்
எழுந்து வா அலையில்
கால் நனைக்கலாம்
எனது துயரங்களைப்
பகிர்ந்துகொள்ள நிலவும்
நட்சத்திரங்களும் இருக்கின்றன
ஓய்வு நாளில் கூட
ஓய்வு கொள்ளாது
என்னைக் காண
வருகின்றன அவை
எனக்குள் நிரம்பி வழிகிறது
காதல்
வெந்து தணிந்தது காடு
உனது நினைவுகள் என்னைச்
சாம்பலாக்குகிறது
ஒருநாளும் என் மதுக்கிண்ணம்
காலியாக இருந்ததில்லை
எனது மரணத்தில் போது
காதலுக்காக மரித்தவர்களெல்லாம்
உயிர்த்தெழுவார்கள்
உன் தோளில் தலைசாய்த்துக் கொள்கிறேன்
என்னை அழ விடு
காதலுக்காக ஒருமுறையேனும்
கண்ணீர் சிந்த விடு
இதோ பூமழை தூவுகிறது
வானம்
எங்கள் காதலைப்
புனிதப்படுத்தும் விதமாக.

The post ப.மதியழகன் கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

செளமியா ஸ்ரீ கவிதைகள்

விளங்கிக்கொள்ள முடியாத
விசித்திரக் கதையின்
ஒவ்வொரு பக்கத்திலும்
உதிர்ந்து விழுகிறது இதயம்

நாவில் உமிழ்ந்த
பிரிவின் சோகம்
நஞ்சாய் நழுவி
எனக்குள் சென்று
உயிரைக் கொல்கிறது

வந்தீர்கள்
செல்கிறீர்கள்
உங்கள் இருப்பிற்கு பழக்கப்பட்டுவிட்ட
என் சிறுநெஞ்சை
எந்த மருத்துவரிடம் கொடுத்து
பழுது பார்க்க?

*

மன்னிப்பே கிடைக்காத
குற்றங்களை எல்லாம் செய்துவிட்டு
மானிட வேடத்தில்
திரிந்து கொண்டிருக்கிறாய்
தேவன் உன்னை எப்படி மன்னிப்பான்?
உனக்கு தண்டனை கொடுக்க
மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறான்
இந்த ஞாயிறன்று
உருகும் மெழுகை உற்றுப் பார்
அது மரித்துப்போன தேவனின்
தூய குருதி.

*

இழவிற்குத் தயாராகி வந்திருப்பவர்களின்
மலர்ச்செண்டுகள்
எப்படி குணமாக்கும்
ரணங்களை..?

*

சேர்ந்து ஒரு தேநீர் கூட அருந்தியதில்லை
அத்தனை சிறியதா நம் உறவு?

*

The post செளமியா ஸ்ரீ கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

கிருத்திகா கவிதைகள்

சற்றுமுன் பெய்து முடித்த
அடைமழையோ
சாலையில் தேங்கிக் கிடந்த
மழைநீரோ
மழைநீரில் பிரதிபலித்த
எதிர் வீட்டுக்கூரையோ
கூரையின் மேல் அமர்ந்திருந்த
பறவையோ
அந்தப் பறவை உதிர்த்த
ஒற்றைச் சிறகோ
இவற்றுள் எதுவோ ஒன்றில்
தொடங்கக் காத்திருந்தது
அந்த ஓவியரின் வரையப்படாத ஓவியம்.

*

ஒரு கொத்து மொட்டுகளில் மலர்ந்திருக்கும்
ஒரே ஒரு பூவைப் போல
ஒரு கூடை காய்களில் கனிந்திருக்கும்
ஒரே ஒரு பழத்தைப் போல
ஒரு வெற்று மரத்தில் துளிர் விட்டிருக்கும்
ஒரே ஒரு இலையைப் போல
நம் வாழ்வை அவ்வப்போது உயிர்பித்துச் செல்லும்
மனிதர்களை வணங்குவோமாக!

*

நான் அமர்ந்திருக்கும் படிக்கட்டில் இருந்து பார்த்தால்,
அந்தத் தங்க அரளி மரத்தின்
மேற்கிளைகள் நன்றாகத் தெரியும்
கூடவே அதில் கூடு கட்டி வாழ்ந்து வரும்
மைனாவும் அதன் சிறு குஞ்சுகளும்…
சுள்ளிகளும் சருகுகளும் சேர்த்துக் கட்டிய அக்கூட்டில்,
அவ்வப்போது மைனாக்களின்
மஞ்சள் நிற அலகுகள் மட்டும் தென்படும்
சிறிய தங்க அரளி மலர்கள் போல…
தினசரி இரை தேடி உண்ணும் மைனாக்களுக்காக
நான் படிக்கட்டில் விதைகள் விட்டுச் செல்வதுண்டு
இன்று ஏனோ மைனாக்களும் அதன் கூடும்
எவ்வளவு தேடியும் காணவில்லை!
நான் எப்போதும் அமரும் படிக்கட்டில் மட்டும் கிடந்தன,
சில சுள்ளிகளும் ஒரு காய்ந்த சருகும்.
*

[email protected]

The post கிருத்திகா கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

மேகலா கருப்பசாமி கவிதைகள்

மழைக்கால வேட்டை

குடைக்கும், மழை கோட்டிற்கும்
இருமலுக்கும், ஜலதோஷத்திற்கும்
ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்
மழைக்காலம் அது.
நானும் அப்பாவும் மட்டும்
வேட்டைக்குத் தயாராவோம்.

மன்னர்களைப் போல,
அம்மாவையும் தங்கையையும்
ஆச்சரியப்படுத்தும்
புலி வேட்டை;
நரிக்குறவர்களின் சாமர்த்தியத்திற்க்கு
இரையாகும்
முயல் வேட்டை;
பொந்தில் புகை மூட்ட
புறந்தள்ளி ஓடிவரும்
ஆடவர்களின் எலிப்பிடி வேட்டை – அல்ல
எங்கள் வேட்டை.

மழை பெய்த
ஈரமான தரையின் பதத்தை
சூரியன் உண்ணுவதற்குள்,
எங்கள் வீட்டு வடைச்சட்டியில் வதங்கி
என் தொண்டைப் பசியைப் போக்க
காத்திருக்கும் மழைக்காளானின் வேட்டை.

முடிவில், கைநிறைய மழைக்காளான்களுடன்
வந்தாலும் வருவோம் !
அன்றி, கண்ணார மரக்காளான்களை
இரசித்த நினைவோடும் வருவோம்.

*

சாபத்தின் சாயல்

இளரத்தம் கொதித்தெழும்
இருபதுகளின் ஆரம்பம் அன்று.
“நூறு வருஷம் நல்லா இரு”
என்ற அப்பா அம்மாவின் ஆசி போதாது போல
கோவில் முன் மண்டியிட்டது
மூளையின் மையத்தில்
மௌன ஊஞ்சல் ஆடுகிறது இன்றளவும்.

நெடு நெடுவென வளர்ந்து வளைந்த
கிழட்டு மூங்கிலில்
மல்லியின் மணம் வீசக்கண்டேன் – எந்தன் அல்லியவள்
நினைவு துளிர் விடும்போதெல்லாம்.

பால்ய சிநேகிதன் முகம்,
தாரத்தின் உரசல்,
ஐந்தாம் வகுப்பு ஆசிரியையின் அழகு,
இவற்றைத் துறந்து அல்ல, மறந்த
துறவியாய் அடியெடுத்து வைக்கிறேன்
தொண்ணூறாவது பிறந்தநாளில்.

மங்கலான கண்ணொளியிலும்
பிராகசமாய்த் தெரியும்
அந்த ஒற்றை விண்மீன்
உரக்க அழைக்கிறது என்னை.
பேத்தியை ஊன்றுகோளாக்கி
மீண்டும் அதே கோவில் முன் நிற்கிறேன்
‘விடைகொடு’ எனக் கண்களில் நீர் ததும்ப;
எந்தக் கடைசி கண்ணீர்த் துளி
முற்றுப்புள்ளி ஆகுமோ..!

[email protected]

The post மேகலா கருப்பசாமி கவிதைகள் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

மரகதப்புறா நூல் விமர்சனம் – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி

நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலப் பரப்பில் வீசும் மேகாற்று முகத்தை ஆரத்தழுவி பளிச் பளிச்சென்ற ஈர முத்தங்களை அள்ளித் தரும் போது எவ்வளவு பெரிய கொடிய மனதும் ஒரு சிறு கணத்தில் சில்லென்று ஆசுவாசப்படுகின்றன. இயற்கையின் பிடியில் அச்சுப்பிசிறாமல் இன்னுமிருக்கும் ஓர் நிலப்பரப்பு தேனி என்றால் அது மிகையாது!

இலக்கியத்தில் இளைப்பாறுவதென்பது தனிச்சுகமே. தான் பெற்ற அனுபவத்தையும் ரசனையையும் கற்பனையையும் எளிய மொழிநடையோடு குலைத்து படைப்புச் சோறாய் தமிழ் உலகின் கரங்களுக்கு ஆக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் தங்கேசுவரன். அப்படிப்பட்ட படைப்புச் சோறானது அகப்பையில் சோமாரி நாவில் வைத்து சுவைத்து சுவைத்து உண்டு இலக்கியப் பசியாற்றுமளவிற்கு இருக்கின்றது. 

சின்னமனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் தங்கேசுவரனின் கவிதைச் சொல்லாடல்கள் பீரங்கிகளாய் வெடிக்கும் என்பதை நான் அறிவேன். கவிதைப் பயணத்தை விட்டு விட்டு தடம் மாறி சிறுகதைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். தன் கண்ணெதிரே நடக்கும் சம்பவங்களும் மனக்குமுறல்களும் நூலாசிரியரைத் தூங்கவிடாமல் துரத்தி துரத்தி வந்திருப்பதைக் கதைகளில் காணமுடிகிறது. பள்ளிக்கூடங்களில் சமகாலங்களில் நடக்கும் நிகழ்வுகளும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே இருக்கும் உறவினைப் பற்றியும் விவரிக்கின்றன கதைகள். பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பு பள்ளிக்கூடச் சம்பவங்கள், ஆசிரியர்கள் மாணவர்களைச் சார்ந்தே இடம்பெற்றிருப்பதைக் காணலாம். 

இத்தொகுப்பில் முதல் கதை “மரகதப்புறா” என்ற தலைப்பில் ஆரம்பமாகிறது. மரத்திலிருந்து கீழே விழுந்த மரகதப்புறாவை மேல்நிலை வகுப்பில் படிக்கும் சசி என்ற மாணவன் பள்ளிக்கு எடுத்து வருவதையும், ஆசிரியர்களுக்களுமான உரையாடலைச் செம்மைப்படுத்தியும் பேசுகிறது‌. மாணவர்களின் பெருங்குரலால் தன் சருகுகளை பலப்படுத்தி தூவானத்தில் மெல்ல மெல்ல பறக்கும் மரகதப்புறாவை தன் கைகளில் ஏந்திய படி நின்ற சசி கலங்கும் போது நம் கண்களும் கலங்குகின்றன. இந்தக் கதை எனது பள்ளிக் காலத்து நினைவுகளைச் சுமந்து செல்கின்றது. அடைமழை பெய்து கொண்டிருக்கும் காலத்தில் எங்கள் ஊரைச் சுற்றி உழவும் நடவும் நடந்து கொண்டிருக்கும். சுடுகாட்டைத் தாண்டி நடந்து கொண்டிருக்கையில் வாவரக்காச்சி மரத்திலிருந்து பொத்தென்று விழுந்த செம்போத்துக் குஞ்சுவை விட்டுவிட்டுப் போக மனமில்லை. செம்போத்துக்குஞ்சுவை மஞ்சப்பைக்குள் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவிட்டேன். ஏழாப்பு டீச்சர் ராசம்மா வந்து கண்டு பிடித்து விட்டார். பதினோரு மணி இடைவேளையில் ஒட்டு மொத்த பள்ளிக் கூடமும் திரண்டு நின்றது. பிரிசிட்டம்மாள் சிஸ்டர் வந்து செம்போத்தை எடுத்துக் கொண்டு கான்வென்ட்டுக்கு சென்றது இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன நினைவுகளின் வெளியில். 

“இளநீர்” என்கிற கதையில் கண்களை இழந்து யாசகம் பெறும் கணவன் மனைவியின் பாடுகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார் கவிஞர் தங்கேஸ்வரன். கருவுற்றிருந்த தன் மனைவிக்கு ஒரு இளநீர் கேட்டு யாசகம் செய்யும் ஒருவனின் வேதனையை இந்தக் கதை பேசுகிறது. 

“காடை”- இந்தக் கதை முழுக்க முழுக்க ஒரு சம்சாரிக் குடும்பத்தைப் பற்றி விவரிக்கிறது. “களம் குடுத்து வளரத்தாலும் காடை காட்டுலதேன்”என்ற பழமொழியை அடிக்கடி மேற்கோள் காட்டி, கைவிட்டுப் போன புஞ்சையை மீட்டெடுக்கும் சம்சாரியின் வாழ்வு இதில் புலப்பகின்றது. செல்வச் செழிப்போடு இருந்தவன் பெண்களுக்காக சொத்தை இழந்தானோ, மீண்டும் ஒரு பெண்ணால் அந்த புஞ்சை திரும்பக் கிடைப்பதைக் கதைகளில் பார்க்க முடிகிறது. 

கைவிட்டுப் போன காணிகள் மீண்டும் ஒருசிலருக்கு கிடைத்துவிடும். பலருக்கு கிடைக்காது. எங்களின் காணி கைவிட்டுப் போன போது உணர்ந்த வலி இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தாத்தா ஈடான்குடும்பன் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது காலக்கட்டத்தில் வெள்ளையர்களின் மில்லில் வேலை பார்த்து உழைத்துச் சம்பாதித்த வாங்கிய காணி இன்று எங்களிடமில்லை. 

மதுரை விமான நிலைய விரிவாக்கத்தால் ஒரு கிராமமே களவு போனதையும் நம் கண்முன்னே பார்க்க முடிகிறது. புஞ்சைகளும் காணிகளும் காடுகளும் வயல்களும் தோட்டங்களும் கைவிட்டுப் போகும்போது நிலமே வாழ்வென கிடந்த சம்சாரிகளுக்கு உண்டான வலிகளுக்கு மருந்துகள் ஏதும் உண்டா என்ற வினாக்கள் எழுப்பத் தோன்றுகின்றது. 

கொரானாவில் பாதிக்கப்பட்டு உலகமே தத்தளித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வை “உயிர்ப்பு” என்ற தலைப்பில் கதையாக்குகிறார் எழுத்தாளர் தங்கேசுவரன். ஆதரவற்ற இல்லத்தில் இருந்து ஒரு அட்டையை வைத்துக் கொண்டு உதவி கேட்டு வரும் பெண்ணை வீதியில் விரட்டிவிடும் சம்பவம். பொதுவாக சிலர் உதவி கேட்பதாக வந்து வீடுகளை நோட்டம் பார்த்துவிட்டு வீடுகளில் ஆள்கள் இல்லாத நேரம் களவு செய்வதை பத்திரிக்கை செய்திகளிலும் நேரடியாகவும் காண முடிகிறது. இவள் அப்படியாக கூட இருக்கலாம் என்று விரட்டிவிடுகிறார்கள் வீட்டார்கள். 

இந்தத் தொகுப்பிலே மிகச் சிறந்த கதை “பயல்”. பிள்ளைப்பேறு பெற்ற கணித ஆசிரியரை, தனியார் பள்ளியில் வேலைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடும் கணவரின் இரக்கமற்ற செயலையும், தாய் சேய் உறவையும் ஆழமாகப் பேசுகிறது. 

அனைத்து பள்ளிகளிலும் நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் இந்த பள்ளியில் நடப்பது கொஞ்சம் வித்தியாசமாகவும் ரசனையாகவும் உள்ளது “பாடம்” என்ற தலைப்பில் அமையப் பெற்ற கதை. பள்ளிப் பாடவேளையில் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் பாட்டுத் தாத்தா பல திறன் கொண்ட வித்தகர். தலைமையாசிரியரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மிமிக்ரி, மேஜிக், பாட்டுப்பாடி அசத்துகிறார். நடிகர் விஜய் நடித்த ‘ரஞ்சிதமே’ பாடலைப் பாடி அசத்திய தாத்தாவால் பள்ளி முழுவதும் விசில் அடித்து அதிர்ந்தது. பாட்டுத் தாத்தாவுக்காக மாணவர்கள் கொடுத்த பரிசு ஆயிரத்து ஐநூற்றி எண்பது . தலைமையாசிரியர் கொடுத்த பரிசு ஐநூறு. 

தலைமையாசிரியருக்கு திருக்குறள் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்த தாத்தா, உதவியாளர் குமாரை அழைத்து டீக்கடைக்கு வரச்சொல்லி ஐம்பது ரூபாயை பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்து விடும் காட்சி நெஞ்சைப் பிசைக்கிறது. 

சமூகத்தின் அவலநிலையை “அடக்கம்”என்கிற கதையின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் தங்கேசுவரன். ஆக்கிரமிப்புகளால் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இடமில்லாமல் தவித்தலையும், இறப்பு வீடுகளில் நடக்கும் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களையும் விவரிக்கிறது இக்கதை. 

“ஏழையாக கூட பொறந்திரலாம்; எளிய சாதியா பொறக்கக் கூடாது” என்று உரக்கப் பேசுகிறார் இந்நூலாசிரியர். 

ஆதிக்கவாதிகளின் அதிகார ஆணவச் செருக்கால் இங்கே எளிய மக்களை வம்புக்கு இழுத்து சாதிப் பெயரைச் சொல்லி போராட்ட களத்துக்கு தள்ளும் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறார். சுடுகாட்டுக்கு இடவசதி கேட்டு நூறாண்டுகளாக போராடியும், அலைக்கழிக்கும் திராவிடக் கட்சிகளின் மெத்தனப் போக்கையும் அதிகார சாதிய அரசியலையும் தோலுரித்து காண்பித்திருப்பது கதைகளில் மலை முகடுகளாகத் தெரிகின்றது. இறந்த பின்னும் நிம்மதியாகப் போய் அடங்குவதற்குக் கூட சுடுகாட்டில் போதிய இடவசதி இல்லாமலும் பாதை இல்லாமலும் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். சமீபத்தில் திரையில் வெளியான நந்தன் திரைப்படமும், அனைத்துப் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியான,கடலூர் மாவட்டத்தில் இறந்தவரின் உடலை ஆற்றுக்குள் மூழ்கி இழுத்துச் செல்லும் காட்சியும் இந்தக் கதையில் அடங்கும். 

எழுத்தாளர் தங்கேசுவரனுக்கு கதை மொழி நன்றாக பிடிபட்டு விட்டது. முதல் சிறுகதைத் தொகுப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு கதைகள் நூலைச் செம்மைப்படுத்துகின்றன. வாழ்த்துகள் எழுத்தாளர் தங்கேசுவரன் அவர்களுக்கு.

கதையும் எழுதுக !

கவிதையும் எழுதுக!

வாழ்த்துகளுடன் 

எழுத்தாளர் அய்யனார் ஈடாடி 

நூல்: மரகதப்புறா 

வெளியீடு:பாரதி புத்தகாலயம் 

பக்கங்கள்:160

விலை:ரூ160

[email protected]

The post மரகதப்புறா நூல் விமர்சனம் – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து -பிரகாஷ் ராம் லக்ஷ்மி

எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பான “கூத்தொன்று கூடிற்று ” யாவரும் வெளியீடாக வந்துள்ளது.

தனிமனித உலகமாக மாறிக்கொண்டிருக்கும் காலகட்டங்களில் எழுதப்படும் கதைகளை எங்ஙனம் பகுத்தறிவது அல்லது அவைகள் நமக்கு வெளிப்படுத்தும் கூறுகளுக்குள் எப்படி உள்நுழைவது என்பதில் பெரும் சிக்கல் வாசகர்களுக்கு மட்டும் இல்லாது இக்காலகட்டங்களில் எழுதும் இளம் எழுத்தாளர்கள் பலருக்கு இருப்பதாகவே தெரிகிறது. அதனால் என்னவோ இங்கு பலர் எழுதும் கதைகள் அவர்களின் முன்னோடிகளின் வகைமைக்குள்ளேயே மாட்டிக் கொண்டது மட்டுமின்றி அவர்களின் மொழியும் அங்கேயே தேங்கி விடுகிறது. ஏனெனில் ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் அக்காலகட்டத்தை இயக்கும் விசைகளாகச் சிலவற்றை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. அப்போது ‘இப்படிதான்’ என்ற ஒன்றை அவர்கள் கைவிடவேண்டி இருக்கிறது. அதைத் திறமாக கைக்கொண்டவர்களைதான் காலம் தன்னில் தேக்கி வைத்திருக்கிறது.

வணிகம், போர் அதனிலிருந்து வெளிப்பட்ட தத்துவங்கள், அரசியல் , கலை, வெற்றி, தோல்வி போன்றவை மனித குலத்தின் சிந்தனை முறையை மாற்றியுள்ளது. அதே போல் இந்த நூற்றாண்டுக்கான விசையாக ‘தொழில்நுட்ப அகம்’ அனைவருக்கும் பிரத்தியேக உலகை உருவாக்கியிருக்கிறது. அதில் அவர்களுக்கான வரைமுறைகளை உண்டாக்கிக் கொள்ள சாத்தியங்களைக் கொடுத்திருக்கிறது. அங்கிருந்து ஒருவன் எதையும் தன்னிலை படுத்த முயன்றுகொண்டே இருக்கிறான். அப்போது கடவுள், மொழி, அரசியல், செல்வாக்கு, உணர்வுகள் என யாவற்றுக்கும் புது அர்த்தங்களை கைக்கொண்டு விடும் சாத்தியங்களை வழங்கியிருக்கிறது அதனிலிருந்து இயல்பாய் எந்த வித அவசரம் இன்றி கதைகளை கைக்கொண்டு நம்மிடம் அளிப்பதாகவே லட்சுமிஹரின் கதைகள் இருக்கிறது.அதனால் என்னவோ ‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை ஒரு முக்கியமான தொகுப்பாகச் சொல்லமுடியும்.

 தொகுப்பின் முதல் கதையான ‘மெழுகு’ ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்ட இளவயது உடைய ஒருவன் மருத்துவரைச் சந்திக்கச் செல்லும் பயணத்தில் நிகழும் தொடர்புகளைச் சுற்றி அமைந்துள்ளது. சர்ச், அங்கு அறிமுகமாகும் பேபி எனும் கதாபாத்திரம் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் உரையாடலில், சமூகம் அவனுக்கு கொடுத்துள்ள கடவுள் என்னும் பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கி தனது பிரார்த்தனைகள் வழியே தனக்கான கடவுளாக அதை உருமாற்றி, தனது நோயிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறான் என்பதே மீதி கதை. இக்கதை முதலில் வாசகர் மனதில் அதைக் கடந்து செல்லவே வலியுறுத்தும், ஆனால் இக்கதையைத் தொடர்ந்து செல்லும் வாசகன் பெறுவது அவர்களை ஆட்படுத்தி வைத்திருக்கிற விலங்குகளுக்கான பாதையை.

“வேண்டுதலின் உச்சரிப்பு என் சவத்திற்கு முன் இடப்படும் மலர் மாலைகள். அதில் அலங்காரம் என்ற எதுவும் இல்லை.

ஒருவரின் வேண்டுதலில் தலையிடுதல் எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த காகிதத்தைப் பிரிக்கும் போது நமக்கான வரைமுறை எதன் அடிப்படையில் என்பதிலிருந்தே இங்குப் பல கேள்விகள் தனக்கான கருவை உருவாக்கி மீள்கின்றன,

இந்த தூதனிடம் எத்தனையோ வேண்டுதல்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது..அவைகள் நிறைவேற்றப்பட்ட உடன் இங்கிருந்து அக்காகிதங்கள் தானாக மறையும் ..’ ”

                     —- மெழுகு கதையிலிருந்து…

பிரார்த்தனைகள் வழியாக உருமாற்றம் பெரும் கடவுள்கள் என்பது இந்த நூற்றாண்டு தனிமனிதனுக்கான கடவுளின் பிரத்தியேக வடிவம் என்பதில் இருந்து இத்தொகுப்புக்கான மற்ற கதைகள் தொடங்குகிறது.

இரண்டாவது சிறுகதையான ‘நிப்பாண காதை’ சிறுகதையும், வரலாற்று ஆன்மீக புதிர் பாண்டஸி கதையாக களம் மாறுகிறது, அதில் வரும் கதாநாயகி ஒரு ஜமீனின் மகள். தனது காதலால் வீட்டை விட்டு வெளியேறி கணவனை இழந்து, கைக்குழந்தையைக் கழுகு சதை பிண்டமாக நினைத்து கவ்விக் கொண்டு செல்ல, அதில் தன்னிலை இழந்து நிர்வாணமாக மீண்டும் தனது வீட்டிற்கு வரும் அவளை ஊர் மக்கள் அவளின் அப்பா கட்டிய வீட்டில் பூட்டி வைக்கிறார்கள். பிக்குணியின் பின்புல கதையில் புத்தன் ஆக நினைக்கும் ஒருவன் வரும் கதை. இவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடல் என்பது முக்கியமானது. அவள் தன் உடலை எவ்வாறு கற்பனை செய்கிறாள்; தன் உடலைக் கடந்து என்ன தேடுகிறாள் அல்லது எவ்வாறு உருவகித்துக் கொள்கிறாள் என்பதான தொடர் கேள்விகளை நோக்கி வாசகனை இழுத்துச் செல்கிறது. அவளின் கோவத்தை வெறும் உடல் சார்ந்த கோபமாக மட்டுமில்லாமல் வேறோதொன்றின் வெளிப்பாடாகக் கண்டடைந்து, தன் உடல் என்னும் கற்பனையை அவன் எவ்வாறு கடந்து சென்று எதை அடைகிறான் மற்றும் அதன் எல்லைகளை உணர்வது என்பதே மீதிக் கதை.

இக்கதை மட்டுமல்ல இத்தொகுப்பின் எல்லா கதைகளும் தனி மனிதன் மேல் ஏற்பட்ட சமூகத்தின் மதிப்பீடுகளை மறு உருவாக்கத்திற்கே இட்டுச் செல்கிறது.

‘எதன் பொருட்டு தனக்கு இப்படி நடந்தது என்ற கோபத்தை, எல்லாவற்றையும் துறந்து வந்த ஒருத்தனிடம் காட்டிவிட்ட திருப்தி அவளிடம் இருந்தது ‘

              — நிப்பாண காதை கதையிலிருந்து…  

இக்கதைகளைத் தொடர்ந்து இக்காலத்தின் இளைய தலைமுறைகள் தனக்கான சமூக மற்றும் தனிமனித பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவுடன், தனது சூழலில் கிடைக்கும் நட்புகளை நோக்கிக் கதை வளர்கிறது. நிஜத்திலிருந்து விடுபட அவர்கள் மேற்கொள்ளும் பயணங்களைக் கவனிக்க முடிகிறது. அப்படிச் செல்பவர்கள் அடைவது என்ன.. அல்லது அதிலிருந்து எதை எடுத்துக் கொண்டு மீண்டும் தனது ‘ரெகுலர் லைப்’ க்கு வருகிறார்கள் என்ற கேள்வியைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைகளாக ‘ஆன் தி ராக்ஸ்’ சிறுகதையும், கதவுச் சிறகு சிறுகதையும் அமைகிறது.

‘பறவைகளைக் காணும் முகாமிற்கு நான் புதிது, நான் அதிகமாகப் பார்த்த பறவை இனமே காக்கை தான் “ என்று சொன்னதும் அவர் சிரித்துக்கொண்டே, “எல்லா இடங்களுக்கும் ஒரு பறவை இனம் காக்கைகள் தான் “ என்று சொன்னார் .

                    —- கதவுச் சிறகு கதையிலிருந்து

தொழில்நுட்பம் சார்ந்த இந்த வாழ்கைச் சூழலில், தன்னை சுற்றியுள்ள சக மனிதனிடம் இருந்து நாம் விலகி இருக்கப் பழகிக் கொண்டோம். இந்த விலகல்களை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் மீண்டும் இத்தொழில்நுட்பம் உருவாக்கும் கேளிக்கை உலகில் பெரும்பாலோனோர் மாட்டிக் கொள்கின்றனர். அதில் விரும்பி மாட்டிக் கொள்வதே இச்சூழலின் இன்னொரு முகம். அவ்வாறு இருக்கும் ஒருவன் தன்னை வெவ்வேறு நிலப்பரப்பு பயணங்களில் தேடி, தனது வாழ்க்கையில் சந்திக்கும் பெண் எவ்வாறு மீண்டும் சகமனிதன் கொடுக்கும் சுவையை அறிய வைத்துவிட்டுச் செல்கிறாள் என்பதையும், தான் வாழும் சூழலில் நிகழும் நிறைவின்மையைப் போக்கிக் கொள்ள வெவ்வேறு நிலத்தைத் தேடி மேற்கொள்ளும் பயணங்களில் அவர்கள் அப்பயணத்திற்கு அளிக்கும் அச்சிறுகால அளவைக் கொண்டு சக மனிதன் தரும் சுவையை அறியமுடியாமல் கடைசியில் அப்பயணத்தில் அவர்கள் பெற்ற கேளிக்கை நினைவுகளை மட்டும் சுமந்து திரும்புவதால் அவர்களே அறியாத நிறைவின்மையை சுமந்தே மீள்கிறார்கள். இதற்குக் காரணமும் அப்பயணத்தில் எல்லோரும் காட்டும் அவசரம். என்னதான் அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் மனம் அதைச் சுற்றியே இருப்பதால் பயணத்திற்கும் மனதை அளிப்பதில்லை. இவ்விரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஊசலாட்டத்தையும் இக்கதைகளில் அறியமுடிகிறது.

‘சுவைகள் அனைத்தும் ஒன்றே; அது மனிதர்களைச் சார்ந்து மட்டும் பொருந்துவது அல்ல’

  • ஆன் தி ராக்ஸ் கதையிலிருந்து  

மெழுகு கதையின் அடுத்த அடி முன்னேறிய கதையாக ‘கித்தானுடைய வண்ணப் பேழை’ மரணத்தைப் பற்றி கூற்றைக் கேலியாக்குகிறது…

சினிமா நண்பன் பயணத்தின் போது ஓர் குழந்தையின் சவ ஊர்வலத்தைக் கவனிக்கிறான். அதில் அக்குழந்தையின் சவப்பெட்டி எப்போதும் இருக்கும் கருப்பு வண்ணத்தில் இல்லாமல் பல வண்ணங்களில் இருப்பதைப் பார்க்கிறான். இப்போது சினிமா துறையில் இருப்பவன் அதன் பாதிப்பில் தனக்கான கதையாக அதை மாற்ற முயல்கிறான், அதே போன்று சவப் பெட்டியைச் செய்யச் சொல்கிறான், சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளி சென்றதால் அச்சவப்பெட்டியைத் தான் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு எடுத்து வருகிறான். அங்கு அவனுடன் சேர்ந்து சினிமா துறை சாராத இன்னொரு நண்பனும் இருக்கிறான். அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் இக்காலகட்டங்களில் மரணத்திற்கான பகடியை கைக்கொள்கிறது.

‘முடிவுறா அவ்வண்ணங்களில் அவளின் முகத்தைத் தேட முற்பட்டேன். என்னிடமிருந்து மறைந்து விளையாட தொடங்கியிருந்தாள். அந்த வண்ணப்பேழையின் நிறம் மாறிக்கொண்டே இருந்தது. ’  

    -‘கித்தானுடைய வண்ணப்பேழை’ கதையிலிருந்து

மரணம் தன்னை கதவாக மாற்றிக்கொண்டு தான் சந்திக்கும் மனிதர்களிடம் தனக்கான சாவியை அளித்துவிட்டு, தனக்குப் பின்னால் பல வண்ணத்தினை மறைத்து வைத்துக்கொண்டு, தன்னை தைரியமாக அணுகும் மனிதனுக்காக காத்திருக்கிறது.

மேலும் கடந்த காலத்தில் வெற்றியாகக் கொள்ளப்பட்ட பெருவிசைகளின் நினைவுச் சின்னங்கள், மரபுகள், நம்பிக்கைகள், வழக்கங்கள் இக்காலத்தில் எவ்வாறு பொருள் கொள்ளப்படும், அதன் மதிப்பை எப்படி உணர்கிறோம் என்பதைத் தொட்டுச் செல்லும் கதைகளாக யுதிரம், கூடார கரிசனம் மற்றும், வேடிக்கையும் இன்ன பிறவும் போன்ற கதைகள் உள்ளது. இம்மாதிரியான கதைகள் தொன்ம பாணிக் கதைகளாக மட்டும் நின்று விடாமல் வலுவான மானுட தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.  

எதையாவது சாதித்தே ஆக வேண்டும் என்கிற பெரும் பொறுப்பை ஏற்றி இல்லையென்றால் அவனை மதிக்கத் தேவையில்லை என்று நினைத்து, அவன் மேல் அன்பு கொண்டு ஏற்றப்படும் மதிப்பின்மையை உணர்த்தும் கதையாக அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனையைக் கொள்ளலாம்.

“ஏன் மாமா இப்படி உன்ன கரிச்சுக்கொட்டிகிட்டே இருக்காங்களே உனக்கு கடுப்பாகல “

“கடுப்பாகி என்ன செய்ய போறோம் சொல்லு ..அதுல தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல..இது நான் வேணுன்னு எடுத்துகிட்டது அது அவங்களோடது…அவ்வளவுதான்..உன்னையும் இச்சமூகம் ஆசிர்வதிக்கட்டும்..”

       -அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனை கதையிலிருந்து

இந்த அரசியல் புரிதல்களை நான் மேற்கோள் காட்டிய அந்த சொல்லில் மட்டும் மதுவின் வாசனை கதையின் வரிகளில் இருந்து கவனிக்க முடியும். இச்சமூகம் சந்திரன் மாமா அவர்களின் மீது உருவாக்கும் பொருள்மயமாக்கலின் அழுத்தத்தை அவரின் மீது அன்பு கொண்டவர்கள்தான் உருவாக்குகிறார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டு இன்னொரு கதாப்பாத்திரற்கு சொல்லும் பதில்தான் முக்கியம். அதிலிருந்து அக்கதாபாத்திரத்தின் தேடல் எதை நோக்கியது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலேயே கதைகளில் வெளிப்படும் அகவுணர்வுகளின் விவரணைகள் எல்லாம் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஊடுருவிச் செல்வதால் நீண்ட வாக்கிய அமைப்புகள் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. மையக் கதாபாத்திரமான சந்திரன் தன் இயல்பில் இயங்கக் கூடிய பாத்திர வார்ப்பாய் அமைகிறது. அது லட்சுமிஹரை முதிர்ந்த கதை சொல்லியின் பாதைக்கு நகர்த்தியிருப்பதைக் காட்டுகிறது.  

மேலும் இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் வெறும் இந்த காலகட்டத்தைச் சார்ந்த விசைகள் உருவாக்கும் பிரச்சனைகளை தொட்டுக் காட்டும் கதைகள் மட்டும் அல்லாது இந்த தொழில்நுட்ப விசைகள் ஏற்படுத்தும் நிலையில்லா தன்மைகளினால் ஒருவனுக்கு தனக்குள் ஏற்படும் “தன்னை எங்ஙனம் இச்சமூகத்தில் பொருத்திக் கொள்வது, அதனால் ஏற்படும் கோபம், சோர்வு, பொருள்மயமாக்கலின் விளைவாக தன்னை இவ்வாறு காட்டிக் கொள்ளவேண்டும் என்கிற சமூகம் இடும் நிபந்தனை” ஆகியவற்றால் ஏற்படும் கேள்விகளை அலசும் கதைகளாகவும், தன்னை சுற்றியுள்ள நிலையின்மைகளில் எங்கு தன் சுயத்தை நிலைநிறுத்திக் கொண்டால் ‘உண்மை’ யை புரிந்துகொள்ள முடியும் என்கிற லட்சுமிஹரின் அல்லது அவரின் கதைமாந்தர்களின் தேடலின் விளைவான கதைகள்தான் இவை.

மேலும் இக்கதைகளில் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தனது உடல் மற்றும் மனம் சார்ந்த குறைந்தபட்ச புரிதல்கள் எது வென்ற உண்மைகளைப் புரிந்துகொள்ள முயல்கிறது.

அதனால் இக்கதாபாத்திரங்கள் அனைத்தும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் தனக்கான அரசியல் புரிதல் என்னும் நிலையில் நின்றுதான் உண்மையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. அதற்கு மாறான கதை மாந்தர்களின் வாழ்க்கையையும் லட்சுமிஹர் எழுதாமல் இல்லை. கதைக்கான உண்மையைக் கண்டறிய விளையும் மனநிலை கதைகள் எங்கும் நிரம்பி இருக்கிறது அவரது பலம். அது மட்டுமில்லாமல் பெரும்பாலான கதைகளில் உரையாடல் சிக்கல்கள் இருக்கிறது, அது மொழியின் அலட்சியம் அன்று, இன்றைய நவீன உரையாடல்கள் அவை என்று தெளிவாய் புரிகிறது. வாசகனை லட்சுமிஹர் அதிகமாக நம்பியே இக்கதைகளை எழுதி உள்ளதாகத் தெரிகிறது. அதனால் சிறு கருணை கூட காட்டாத அவரின் கச்சிதமான கதை சொல்லும் முறை சிலரைத் திணறடிக்கலாம். கதை சொல்வதிலேயே முழு கவனத்தையும் கதைகள் குவித்திருக்கிறது அதுவே இந்த கச்சிததிற்குக் காரணம் சில நேரங்களில் அக்கதையை சிதறடித்தலில் இருக்கும் பாங்கு கதையை வாசகனின் எல்லையை விரிவடையவே செய்திருக்கிறது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் ‘materialistic’ மன நிலையிலிருந்து முழுவதுமாக விலகி நின்று கதைகளை எழுதுகிறான், அது அவனின் தனிப்பட்ட முடிவாக அதைப் பார்க்க முடியாதவையாக அமைகிறது. இக்கதைகள் அதிலிருந்து மீண்டும் வர எழுதிய கதைகளாகவே இயற்கை என்னும் பரப்பில் தன்னை ஒன்றாக்குவதற்கான முயற்சியாகவே இருக்கிறது. பலரின் மாதிரிகள் அவை.

பல தரப்பட்ட களங்களில் பயணித்தல், கதை வடிவத்தில் பெரிதும் மாற்றங்கள் இன்றி கதை கூறலில் பல எல்லைகளை தன்வசப் படுத்தியிருக்கிறார். அப்படியான கதை கூறலில் உள்ளும், புறமும் இயல்பாய் அக்கதைகளை நகர்த்துதல் மட்டுமின்றி இடைப்பட்ட கதைகளை லட்சுமிஹர் தானாக மறைப்பதையும் நம்மால் உணர முடிகிறது. அப்படியாக ‘இடை நிறுத்தல் வாசிப்பு’ என்ற ஒன்றை லட்சுமிஹர் தன்னுடைய கதைகளில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. அவரது முதல் தொகுப்பிலிருந்து இப்போது வரை அதைக் காணமுடிகிறது. அவைகள்தான் இக்கதைகளுக்குப் பன்முகத் தன்மையையும் வாசிக்கும் சுவாரசியத்தையும் கொடுக்கிறது. அவைகள் பெரிதும் கருத்தியல் முரண்களை, சீண்டல்களை வாசகர்களுக்கு இடையே ஏற்படுத்தத் தவறவில்லை. அப்படியாக வாசகர்களை புதிய எல்லையை அடையும் போது சில நேரங்களில் செயற்கையாக அவைகள் இருக்கிறதோ என்கிற அச்சமும் எழுகிறது ஆனால், அதில் லட்சுமிஹர் வெளிப்படுத்தும் சிந்தனைகள் அதில் உழன்று திரிந்த ஒருவனால் மட்டுமே எடுத்து வரக்கூடிய ஒன்று என்பது விளங்குகிறது. அதன் அர்த்தமாய் இங்கு வினவப்படுவது புதிய ஒரு கோணத்தை எந்த வித அச்சமும், பயமும் இன்றிச் சொல்லும் கதைகள் உள்நுழையக் கஷ்டம் எனினும் புது அனுபவமே. கதைகளை வாசிக்கையில் யாருடைய அடிதொட்டு இக்கதைகள் இயங்குகிறது என்பதைக் கண்டடைந்து அதை வகைப்படுத்த முடியாத படியாக கதைத் தேர்வும் சொல்லும் முறைகளும் வேறுபட்டுக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து ஒன்றே நமக்குப் புலப்படுகிறது கதை அல்லது கதையற்ற தன்மைக்கு உதவும் மொழியினை மட்டுமே லட்சுமிஹர் கையாளுகிறார். எந்த வித பாசாங்கோ அல்லது பக்க அளவோ அவருக்குப் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. சில நேரங்களில் தத்துவ ஒழுங்கின் அவசியமும் அவற்றின் கேள்வியும் நம்முடைய நம்பிக்கையை கேலிசெய்யாது கேள்விகேட்கிறது.

இக்கதைகள் அனைத்தையும் வாசிக்கும்போது கதையை சரியாக ஆசிரியர் முடிக்கவில்லை, சிறுகதை புரியவில்லை, முடிவில் ஒரு ட்விஸ்ட் இல்லை என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட பலவற்றில் நாம் ஒத்துப் போகலாம். ஆனால், இக்கதைகள் அனைத்தும் லட்சுமிஹர் தொடங்கி வைக்கும் நமக்கான இன்றைய இளைய மனதின் பயணங்கள். இக்கதைகள் அனைத்தும் நாம் எதை பிடித்துக் கொண்டு அல்லது எங்கு நின்று கொண்டு உண்மையை அறியவோ அல்லது குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவாவது முடியுமா? என்கிற இயற்கையை நோக்கிய கைநீட்டலாகவே உள்ளது.

   இப்படியான கதைகள் தமிழில் மேலும் அதிகமாகவும் இன்னும் ஆழமாகவும் வருவதற்கு இத்தொகுப்பில் உள்ள கதைகள் தன்னுடைய வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறது என்று நம்புகிறேன்.

[email protected]

The post ‘கூத்தொன்று கூடிற்று’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து -பிரகாஷ் ராம் லக்ஷ்மி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

விந்தை நியாயங்கள் – ஹேமா ஜெய்

“பதினொன்னு ஆனாலும் குளிக்காம சுத்துவீங்க. இன்னிக்கென்ன அதிசயம் எட்டுக்கெல்லாம் குளிச்சு உடுத்தி நெத்தில பட்டை போட்டாச்சு” வேகமாகத் தயாராகிக் கொண்டிருந்த நவகீர்த்தனை விஜயா கேள்வியுடன் பார்த்தாள்.

“சுத்திலும் புல்லு மண்டிக்கிடக்குனு நீதானே புலம்புன. அதான் ஆளு சொல்லியிருக்கேன். அப்படியே மேலயும் ரூம் போடலாமானு யோசனை. நாளைப்பின்ன பேரன் பேத்தினு வந்தா இடம் பத்தாதுல்ல?”

“அடேங்கப்பா! நானும் எத்தனையோ முறை சொல்லியாச்சு. காதுலயே போட்டுக்கல. இப்பதான் ஐயாவுக்கு ஞானம் பிறந்திருக்காக்கும்” என்றாள் விஜயா நொடிப்புடன்.

“அட எவடா இவ? தோணாம என்ன? காசு செலவு பண்ண தயாராயிருந்தாலும் செய்றதுக்கு ஆள் அமைய வேண்டாமா? கூலி வேலைக்கு இப்ப எங்க ஆள் கிடைக்குறாங்க? நேத்து ரேஷன் கடைல பரசுவை பார்த்தேன். இன்சூரன்ஸ் வேலையோட இந்த மாதிரி ஆளு புடிச்சும் தர்றானாம். அவன்தான் நல்ல வேலைக்காரங்க இருக்காங்க, அனுப்புறேன்னான்”

“பரவால்லயே. ஏங்க, வர்ற ஆளுங்களை பிடிச்சு வச்சு ஒழுங்கா வேலை வாங்கப் பாருங்க, ஏதாவது குதர்க்கம் பேசி துரத்தி விடாம”

“அது எனக்குத் தெரியாது பாரு. போடி, போய் டிபன் எடுத்து வை. அவனுங்க வந்துட்டா கூட நின்னு கண்காணிக்கவே நேரம் சரியாயிருக்கும்” என்றவர், “ஆனா, வருவானுங்களோ என்னமோ? யாரு சொன்ன மாதிரி சொன்ன நேரத்துக்கு வர்றானுங்க?” என்றும் சொல்லிக் கொண்டார். ஆனால், அவருடைய சந்தேகத்திற்கு வேலை வைக்காமல் எட்டரைக்கே “சார்” என்ற குரல் கேட்டது வாசலில்.

பரசு சொன்னவிதத்தில் இருவர் நின்றிருந்தனர். “வேலைன்னு…..” என்றனர் இவர் பார்வை பட்டதும்.

“ம்”மென்ற உறுமலுடன் உள்ளே வருமாறு கைகாட்டினார் நவகீர்த்தன்.

கிரில் கதவு திறந்து அவரெதிரே வந்து நின்றவர்களைக் கண்கள் மேலும் கீழுமாக அளந்தன. ஒருவனுக்கு இளவயது. இன்னொரு ஆளுக்கு மத்திய வயதிருக்கும். அவர் எதிர்பார்த்தது போல அழுக்குச் சட்டையும், கழுவாத முகமும், வாயில் பான்பராக் கறையுமாக இல்லாமல், சுத்தமான பேண்ட் சட்டையில் நேர்த்தியாக உடையணிந்திருந்தனர்.

“தோட்டத்தை சுத்தம் பண்ணனும். செய்வீங்களா?” சுற்றிலும் சீர் கெட்டிருந்த நிலத்தைக் காட்டியவர், “அட! நான் வேற தமிழ்ல பேசுறேன். புரியுமா?” என்றார்.

“புரியுங்க சார்” என்றனர் ஒருமித்த குரலில்.

“பரவால்ல… வரும்போதே கத்துக்கிட்டு வந்திடுறீங்க” என்றார் நவகீர்த்தன் ஒருவித நக்கல் சிரிப்புடன்.

“உங்க ஆளுங்கதானே ரயிலு முழுக்க அடைச்சுட்டு வந்து இறங்குறீங்க. இப்பல்லாம் எதிர்ல பார்க்குற பத்துல நாலு உங்க மூஞ்சிதான். தெருவுக்கு நாலு பானிப்பூரி கடை வந்துடுச்சு. ஹோட்டலு, ஒர்க்ஷாப்னு எல்லா இடத்துலயும் உங்க ராஜ்ஜியம். ஹ… போறபோக்கை பார்த்தா வீடு நிலம்னு வாங்கி நீங்க இங்க டேரா போட, நாங்கதான் ஊரை காலி செஞ்சுட்டு போகணுமாட்டம் இருக்கு”

அவர் கீழ்ப்பார்வையும் ஏளன சிரிப்புமாகப் பேச, அத்தொனி பழகியதுதான் என்பது போல இருவரும் சலனமேயில்லாமல் நின்றிருந்தனர்.

“சரி, முதல்ல தோட்டத்தை சுத்தம் பண்ணுங்க. புதரெல்லாம் வெட்டி சமப்படுத்தணும். செடிங்களை ஒழுங்கு பண்ணி தண்ணியோடற பாதை கட்டணும். மேல ரூம் போடுற ஐடியா வேற இருக்கு. இருக்குற வாட்டர் டேங்க் தண்ணி போதல. இன்னொரு சின்டெக்ஸ் ஏத்தணும். கொத்தனார் வேலை, பிளம்பிங்கெல்லாம் தெரியுமா?”

“தெரியுங்க”

“இப்ப தலையாட்டிட்டு வேலை தெரியாம முழிச்சா தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு”

“இல்லைங்க சார். எல்லா வேலையும் செய்வங்க”

‘அப்பாடா! தனித்தனியாக ஆள் தேடி அல்லாட வேண்டாம்’ நிம்மதி பெருமூச்சுக்கிடையிலும் அவருடைய இடக்கு அடங்கவில்லை.

“அது சரி. காசு சொளையா கிடைக்குதுனா ஏன்பா செய்ய மாட்டீங்க? நமக்குதான் அங்க மவுசுனு எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு வந்துடுறீங்க, சாமர்த்தியம்தான்யா. சரி, வேலையை ஆரம்பிச்சிட்டு பாதில ஓடிடக்கூடாது. சாப்பிடுறதுக்கு ஒரு மணிநேரம், டீ குடிக்க ஒரு மணிநேரம்னு பொழுதைக் கழிக்காம வேலையை சட்டுபுட்டுனு முடிக்கணும். சரியா?”

“சரிங்க சார்”

“இருங்க. பரசுட்ட ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்” அவர் உள்ளே போய்விட்டு வெளியே வருவதற்குள் சட்டையைக் கழற்றி வைத்து இருவரும் தோட்டத்தில் இறங்கியிருந்தனர். ‘பரவாயில்லையே! முன்பணம் வேணும். டூல்ஸ் எடுத்துட்டு வரணும், நாளைக்கு வரேன்னு சாக்கு போக்கு சொல்லாம சட்டுனு இறங்கிட்டானுங்க. இவனுங்கள வெச்சே எல்லாத்தையும் முடிச்சுக்கணும்’ என்று கணக்கிட்டவர், “ஏய் விஜயா, வேறென்னென்ன சில்லறை வேலை இருக்குனு யோசிச்சு சொல்லு. அப்புறம் சிங்க் ஒழுகுது. பாத்ரூம் குழாய்ல தண்ணி வரலனு நாளைக்கு குறை படிக்காத” என்றார்.

எட்டிப்பார்த்த விஜயாவின் முகத்திலும் மெச்சுதல் வந்து போனது. “அட! அதுக்குள்ள பசங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்க”

“பஞ்சம் பொழைக்க வர்றவனுங்க… கிடைக்குற வேலையைத் தக்க வச்சிக்கிட்டா தான் உண்டுனு மடமடனு இறங்கிட்டானுங்க. சரி, கொஞ்சம் டீ வச்சு கொடேன். தாகமா இருக்கு. அடியேய்! நீ வேற அவனுகளுக்கும் சேர்த்து போடாத… பேசின காசை கொடுத்தா போதும். அதுக்கே சலாம் போட்டு வாங்கிட்டு போவானுங்க, புரியுதா?”

“புரியுது சாமி. புரியுது” விஜயா முனகிக்கொண்டே உள்ளே சென்றாள்.

அடுத்தவிரு மணி நேரங்களிலேயே புல்புதர்கள் அகற்றி செப்பனிடப்பட்டு, பாத்ரூமில் இருந்து வரும் தண்ணீர் வரத்து சரி செய்யப்பட்டு, ஓரமாய்க் கிடந்த செம்மண்ணை வெட்டி செடி கொடிகளுக்குப் பரத்தி எனத் தோட்டம் பளிச்சென்றானது. விஜயாவால் நம்பவே முடியவில்லை. “அட, நம்ம தோட்டமா இது?” என்று சுற்றிச் சுற்றி வந்தாள்.

மதிய உணவுக்குக் கூட அவர்கள் நேரம் எடுக்கவில்லை. பத்தே நிமிடத்தில் கொண்டு வந்த உணவை வேகமாகக் கொத்தி தின்றுவிட்டு, “அடுத்த வேலைங்க சார்” என்று வந்து நின்றனர்.

மாலை நான்கு மணிக்குள் விஜயா சொன்ன சமையலறைக் குழாய் அடைப்பு, காரை பெயர்ந்த இடங்களைப் பூசுவது, நெடுநாட்களாக ஒழுகிக் கொண்டிருந்த பைப்பை சரி செய்வது என்று நிறைய சில்லறை வேலைகளும் நடந்துவிட்டன. வேலை நேரம் முடிந்தும் செல்லாமல் மாடிக்குச் சென்று ரூம் அளவுகளை அளந்து குறித்து விட்டுதான் இருவரும் கிளம்பினார்கள்.

“மாடா உழைக்கிறானுங்க. ஒரு டம்ளர் டீ தர உங்களுக்கு மனசு வரல” விஜயா முனக, “கடைசியாக போகும்போது அஞ்சு பத்து சேர்த்து கொடுக்கலாம். நீ சும்மா இழுத்து விடாதே. அப்புறம் அதுவே வழக்கமாகிடும்” என்றார் நவகீர்த்தன்.

“சரியான கஞ்சமகாப்பிரபு!” நவகீர்த்தன் அவளைச் சட்டை செய்யாமல் சட்டையைப் போட்டிக் கொண்டவர்களிடம் சென்றார்.

“நாளைக்கு காலைல சீக்கிரம் வந்துடணும். வெயிலுக்கு முன்னாடி ஆரம்பிச்சாதான் வேலை ஒழுங்கா நடக்கும், புரியுதா? இப்ப கிளம்புங்க”


தலையாட்டியவர்கள் தயங்கி நின்றனர்.

“என்ன?”

“இன்னிக்கி கூலி…”

“பரசுட்ட கொடுக்கிறதாதானே பேச்சு. அவன்கிட்ட வாங்கிக்குங்க”

“சார்” அப்போதும் கிளம்பாமல் நின்றபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், அவருடைய கறார் முகம் கண்டு வேறுவழியின்றி புறப்பட்டனர்.

“பாதிக்குப் பாதி கொடுத்தா என்ன? ரொம்ப பண்றீங்க”

“உனக்கொன்னும் தெரியாது, சும்மா இரு. ஊர் பேர் தெரியாதவனுங்க யார் எப்படினு சொல்ல முடியாது. வாங்கிட்டு அப்படியே கழண்டுகிட்டா? நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்” விஜயாவிடம் வள்ளென்று விழுந்தவர், தூரத்தில் வரும் பழகிய ஸ்கூட்டர் சத்தத்தில் புன்னகைத்தார்.

“நம்ம கணேசன் வர்றான் போல”.

வந்தது அவர் நினைத்தது போலவே அவருடைய பால்ய நண்பர் கணேசன்தான். பணி ஓய்வுக்குப்பின் இந்த ஏரியாவிலேயே கணேசனும் அபார்ட்மெண்ட் வாங்கி வந்துவிட, வாரமொருமுறையாவது சந்தித்து விடுவார்கள்.

“எப்படி இருக்கப்பா?” நல விசாரிப்புகளுக்கு இடையே விஜயா தந்த காபியை அருந்தி அளவளாவியவர்கள் அப்படியே வாசலில் அமர்ந்துவிட்டார்கள்.

“இடம் ஜோராகிடுச்சே” செம்மையாகத் தெரிந்த சுற்றுப்புறத்தைக் காட்டிக் கேட்டார் கணேசன்.

“ஆளுங்க வந்தாங்க சுத்தம் பண்ண” என்ற நவகீர்த்தன், மாடியில் செய்யவிருக்கும் வேலைகள் பற்றியும் சொன்னார்.

“நல்லதுதான். கையோட செஞ்சுடு. பையனும் மருமகளும் நல்லா இருக்காங்களா? பாஸ்டன் எப்படி இருக்காம்?” என்றார் கணேசன்.

நவகீர்த்தன் சுரத்தில்லாமல் “ம்ம்”மென்றார்.

“லீவுக்கு வர்றாங்களா?”

“இல்லப்பா. இருக்குற விசா பிரச்சனைல அவன் வர்றது கஷ்டம். பார்க்கணும்னா நாங்கதான் போகணும் போல. அவனும் வர சொல்றான். போனமுறை எங்களுக்கு எடுத்த விசா காலாவதியாகாம இருக்குல்ல”

“சந்தோசமா போய்ட்டு வாங்களேன். என்னப்பா ஏதாவது விசேஷமா?”

“விசேஷமொன்னுமில்ல கணேசா. இப்பதான் குழந்தை பிறந்தாலும் அந்த ஊரு சிட்டிசன் இல்லன்னு சொல்றாங்களே. அதுவொரு கொடுமைனா இவன் வேலைலயும் சங்கடமான நிலைமை. போன வாரம் ரொம்ப மனசு கஷ்டப்பட்டு பேசினான். நீ ஒன்னும் கவலைப்படாத. எல்லாம் சரியாகும். நானும் அம்மாவும் வந்து கொஞ்ச நாள் இருக்கோம்னு தைரியம் சொன்னேன்”

“ஏன், என்னாச்சு? பிரமோஷன் வரப்போகுதுனு அன்னைக்கு சந்தோசமா சொல்லிட்டுருந்தியே?”

“அதுலதான்பா பிரச்சனையே. கடைசி நிமிஷத்துல அந்த ஊரு ஆளுக்கே குடுத்துட்டானுங்க போல. நம்ம பசங்களுக்கு என்ன திறமை இருந்தாலும்… ப்ச்.. நிறம் இருக்குது பாரு, நிறம். அதுதான் முன்ன வந்து பேசுது. இதெல்லாம் வெளில தெரியாதுப்பா. உள்ளுக்குள்ளயே ஊறுற விஷம். ப்ச்..எவ்வளவு உழைச்சாலும் அதுக்குரிய மதிப்பு கிடைக்கலையேன்னு ரொம்ப கவலை பையனுக்கு”

“என்னப்பா இது? அமெரிக்கானாலே ஆயிரத்தெட்டு பிரச்சினையா இருக்கு இப்ப”

“அதையேன் கேட்குற? இஷ்டத்துக்கு எல்லாத்துலயும் கைவச்சு மாத்த அமெரிக்கா என்ன இவனுங்க அப்பன் வீட்டு சொத்தா? எங்கெங்க இருந்தோ வந்த ஜனங்க கட்டமைச்ச நாடுதானே அது. வந்தேறிகள் உருவாக்கிய நாடுனு தான் சொல்வாங்களே. என்னமோ இவனுங்கதான் பூர்வக்குடி மாதிரியும், வெளிலருந்து வந்தவங்க அகதி மாதிரியும் தள்ளிவைக்கிறது என்ன மாதிரியான மனநிலை பாரு… சொல்லப்போனா ஆதிகுடிகளா இருந்த செவ்விந்தியர்களை விரட்டிட்டு முகாம் போட்டவங்கதான் இப்ப இருக்குறவங்க. இதுல அடுத்தவனுக்கு மட்டும் ஆயிரம் சட்டதிட்டம் சொல்லிட்டு…”

“அதைச் சொல்லு” கணேசன் ஆமோதித்ததில் நவகீர்த்தனின் ஆவேசம் அதிகரித்தது.

“சொல்லப்போனா இந்தப் பூமிக்கு யாருப்பா எல்லைக்கோடு விதிக்க முடியும்? காத்தும், மண்ணும், மழையும், கடலும் எல்லாருக்கும்தானே சொந்தம். யாரும் எங்கயும் போய் பிழைக்கலாம். திறமையிருந்தா பெரிய இடத்துக்கு வரலாம். அதுதானே நியாயம். தர்மம். இவனுங்க யாரு இஷ்டத்துக்கு கோடு வரைஞ்சு ‘நீ வா, நீ வராதே, நீ கீழ போ, நீ மேல வா’னு சொல்ல? என்னவொரு அதர்மம் பாரு. நாள் போகப்போக மனுஷ புத்தி முன்னேறிப் போகாம பின்னாடிதான் இழுத்துட்டுப் போகுது. உலகமே பிற்போக்கா ஓடுற மாதிரியிருக்கு” அவர் பொரிந்து தள்ள…

வீட்டுக்குள்ளிருந்த விஜயா மட்டுமல்ல, அவரது பேச்சை வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்த மண்ணும், காற்றும், மரங்களும், அகன்ற ஆகாயமும் கூட, ‘அட! என்ன அறம்! இதுவல்லவோ அறம்!’ என்று தங்களுக்குள் தலையாட்டிச் சிரித்துக் கொண்டன.

[email protected]

The post விந்தை நியாயங்கள் – ஹேமா ஜெய் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

சிரார்த்தம் – கிருஷ்ணமூர்த்தி

“நமஸ்காரம். நான் சங்கரன் பேசறேன். ஞானவாபில நம்ம நம்பர் குடுத்தா. சார் வாசுதேவன் தானே?”

“திதி என்னிக்கு வருது?”

“கார்த்திகை மாசத்துல, பௌர்ணமி கழிஞ்ச பஞ்சமி திதியா?”

“நவக்கிரஹ ஹோமமுமா?”

“கம்ப்ளீட் பேக்கேஜா கேக்குறேளோ?”

“காசென்னன்ணா ஆகப் போறது? அப்பாக்கு மனசார செய்றதுலன்ணா ஷேமம். இந்த காலத்துல யார் பண்றா? எள்ளு வாங்க யோசிக்கற ஜெனரேஷன். என்னமோ சொல்றாலே… ஆங்.. ஜென்-ஸி!”

“ஞானவாபில அமௌண்ட் சொல்லிட்டாளா? பேருதான் ஞானவாபி. யதார்த்தமா அது ஞான லாபி. நீங்க அவா வழியா வந்தேள்னா ஆகறத விட என்கிட்ட நேரடியா சொன்னா முப்பது பெர்சண்ட் கம்மியாகும்”

“அதெப்படியா? ஜாமானுக்குனு ஒரு அமௌண்ட் சொல்லுவா. அது ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். அதுல பாதி ஜாமான் மிச்சமாகும். எல்லாம் ஞானவாபிக்கு போய்டும்! நானா இருந்தேன்னா என்ன தேவையோ அத மட்டும் வாங்கிண்டு வருவேன். அவா வழியா வர்றேள்னா எனக்கான தட்சணையும் பிடிச்சுண்டுதான் கெடைக்கும். நேரடியா எங்கிட்டயே சொன்னேள்னா கணக்கு வேற. ஒரு பிராமணா பசிய போக்குன கணக்காவும் உங்களுக்கு புண்ணியம் வரும்”

“பேஷ்! பண்ணிடலாம். ஜாமான் நானே வாங்கிண்டு வந்துடறேன். காலம்பற சாவகாசமா ஒரு எட்டரைக்கு ஆரம்பிச்சுடலாம். எட்டு மணிக்கு வந்துட்டா அரேஞ்ச் பண்ண வசதியா இருக்கும்”

“ஹோமத்துக்கு பதினாரு செங்கலும் அரை மூட்டை மணலும் வேணும். சவுரியமா?”

“ஒண்ணும் சிரமமில்ல. வர்ற வழில ஏற்பாடு பண்ணிடலாம்”

“பெரிய ரூல்ஸ் எல்லாம் இல்லை. பையனுக்கு ஒரு வேளைதான் சாப்பாடு. அதுவும் திதி முடிச்ச பெறகுதான். காலைல கண்டிப்பா கெடையாது. நைட் பசிச்சதுன்னா பட்சணம், ஸ்நாக்ஸ் சாப்டுக்கலாம். அப்பா ஆத்மா பசியார்ற வகைல சிறப்பா செஞ்சிடலாம்”

***

எட்டு மணிக்கு டி.வி.எஸ் – எக்ஸ்.எல்லை வீட்டின் வாசலில் நிறுத்தினார். பொறித்த அப்பளங்களும் சிறு பாக்கெட்களில் திண்பண்டங்களும் கொண்டு விற்பவனின் வண்டி போல அது பொருட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இரண்டடுக்கு வீட்டை மேலும் கீழுமாக பார்த்தார். தூசிக்கு இடமன்றி மிளிர்ந்து கொண்டிருந்தது. வராந்தாவில் நின்றுகொண்டிருந்த மினி கூப்பர் காரின் மீது படாமல் சாமான்களை வீட்டிற்குள் எடுத்து வந்தார். கொண்டு வந்த சாமான்களை வீட்டின் மைய அறையில் பரப்பி வைத்துக் கொண்டிருந்தார். கைகளின் லாவகத்திற்கு ஏற்ப கண்கள் வீட்டிலிருந்த பொருட்களின் மீது மேவின. பளபளக்காத மார்பில்களால் தரை பாவப்பட்டிருந்தது. பாதி திரையரங்கை நினைவூட்டும் தொலைக்காட்சியும், பார்த்த மாத்திரத்தில் அசதி நீங்கும் ரெக்லைனரும் பொறாமைத் தீயின் திரியைப் பற்ற வைத்தன. மனதிற்குள் தொகையை சற்று அதிகமாக கேட்டிருக்கலாமோ என்று யோசித்தார்.

சமையலறையிலிருந்து வந்த மைதிலி சங்கரனுக்கு வணக்கம் வைத்தாள்.

“டீ காபி எதாவது சாப்பிடுறீங்களா?”

மொழியில் பிராமண வாடை சிறிதும் வீசாமல் இருந்தது. சங்கரனுக்கு சின்னதான அசௌகரியமும் தொற்றியது.

“காலம்பற பட்டினிதான். திதி முடிச்ச கையோட சாப்பிடறேன். திதிக்கு சாப்பாடு என்ன செஞ்சிருக்கேள்?”

“வாசுதேவன் ஆர்டர் போட்டிருக்கார். லெவனுக்கு வந்துரும். டிலே எதுவும் இருக்காது”

“பேஷ்! நான் போய்ட்டு செங்கல்லும் மண்ணும் எடுத்துண்டு வந்துர்றேன். குக்கர்ல சாதம் மட்டும் வச்சிருங்கோ. குழைவா வந்தா பேஷ். இது படைக்கறதுக்காக கேக்கறேன்.”

வாசலில் வாசுதேவன் நடைபயிற்சி முடித்து திரும்பியிருந்தார். சங்கரனை அடையாளம் கண்டவராய் வணக்கம் வைத்தார். மைதிலியின் அதே கேள்விகளும், அதே விதமான பதில்களுமாய் உரையாடல் முடிந்தது. வாசுதேவன்-மைதிலி தம்பதியருக்கு வயது நாற்பதுகளில் இருக்கக்கூடும் என்று அனுமானித்தார். எந்த பிராமண வீட்டிற்கும் காரியமாக செல்லும்போதும் தன்னை ‘மாமா’ எனும் அடைமொழியுடன் அழைப்பது சங்கரன் அறிந்திருந்த வழக்கம். மரியாதை நிமித்தமாக அர்த்தம் பெறும் சொல். அதன் வழியே அந்த வீட்டுடன் சங்கரன் சகஜமாகி விடுவார். இங்கோ அந்நியமாகவே உணர்ந்தார். வாசுதேவன் குடும்பத்தாரின் வேர்கள் மட்டுமே பிராமண சம்மந்தமாக இருந்தது. பழக்கங்களும் வழக்கங்களும் அதன் சாயலை இழந்திருந்தன.

செங்கல்லும் மணலும் வாங்கிக்கொண்டு திரும்பினார். வரும் வழியிலேயே அன்றைய செய்தித்தாள் ஒன்றும் வாங்கிக்கொண்டார். மனதுள் கேள்விகள் ஓடின.

அந்த வீட்ல நியூஸ்பேப்பர் இருக்குமா?

அவாளப் பாத்தா நியூஸ் பேப்பர் படிக்கிறவா மாதிரி தெரியலையே?

அவா ஏன் நியூஸ் பேப்பர் படிக்கணும்? இவ்வளவு வருமானம் வந்தா வரி இல்லைனு வர்ற நியூஸ்ஸுக்கும் இவாளுக்கும் என்ன சம்மந்தம் இருக்கப் போறது? இவா எகனாமிக் டைம்ஸ் வாங்கறவாளா இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எதுக்கும் நாமளே வாங்கிண்டு போறது சாமர்த்தியம்!

அஷ்ட லட்சுமியும் ஒரே வீட்ல ஏன் குடியிருக்கா? நம்ம அட்ரெஸ்லாம் அவ கண்லயே படாதோ?

பகவான் பக்கத்துல ஆரத்தி எடுக்கறவாளுக்கும் ஸ்பெஷல் தரிசனத்துல வர்றவாளுக்கும் கடாக்‌ஷத்துல எப்பவுமே பாரபட்சம்தான்!

வண்டியை நிறுத்திவிட்டு வாசலை கவனித்தார். சாலை மூளியாக இருந்தது. ஒத்தாசைக்கு கிருஷ்ணமூர்த்தி இருந்தால் தேவலை என்று பெருமூச்சு விட்டார். கிருஷ்ணமூர்த்தி தங்கை மகன். தங்கை மற்றும் தங்கையின் கணவருடைய மறைவிற்கு பிறகு சொந்த மகனாக வளர்க்கிறார். சங்கரன் கிருஷ்ணமூர்த்திக்காக திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவனுக்கு படிப்பு வரவில்லை. பாடசாலையிலும் தத்தி. எடுபிடிக்காக இருக்கட்டும் என்று ஞானவாபிக்கு உடன் அழைத்துச் சென்றார்.

ஞானவாபி பிராமணர்களுக்கான சிறு நிறுவனம். வேதங்களைப் பயிற்றுவிக்கும் பாடசாலை. அத்துடன் பல்வேறு விதமான ஹோமங்களுக்கும், சிரார்த்த வேலைகளுக்கும், திருமண வைபவங்களுக்கான குருக்களுக்கும் பிராமணர்கள் ஞானவாபியை அணுகுவர். பிராமண உட்பிரிவுகளான நான்கு வேதங்களுக்கும் மந்திர உச்சாடனங்கள் மாறுபடும். அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தார் சங்கரன். தங்கை மரணிக்கும் வரை அனைத்து விதமான ஆசார அனுஷ்டானங்களையும் முன்னின்று நடத்தினார். மறைவிற்கு பிறகு சிரார்த்தம் மட்டுமே செய்ய ஒப்புக்கொண்டார். அவரின் இந்த முடிவு ஞானவாபியில் உள்ள பிற குருக்களுக்கு முதலில் அதிர்ச்சியளித்தது. ஆனாலும், சங்கரன் முடிவில் எந்த மாற்றமுமில்லை. சங்கரனின் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கப் போகிறார்கள் எனும் அர்த்தத்தில் பிற குருக்கள் விரைவிலேயே ஆசுவாசம் அடைந்தனர். சங்கரன் பணியற்று இருக்கும் நேரங்களில் தங்களுக்கு வரும் சிரார்த்த காரியங்களை அவருக்கு கொடுக்கவும் அவர்கள் தவறுவதில்லை. தொடர்ந்து கிடைத்த சிரார்த்தங்களில் சங்கரனுக்கு காலம் ஓடியது.

சங்கரனே முயன்று பார்த்தும் கிருஷ்ணமூர்த்திக்கு மந்திரங்களும் முறைமைகளும் மனனம் ஆகவில்லை. சங்கரன் கேட்காத வண்ணம் பலர் அசமந்தம் என்று குறிப்பிடுவர். சங்கரன் காதில் விழும்போது மனக்கிலேசம் அடைவார். அதற்காக யாரிடமும் முரண்பட்டதில்லை. சங்கரனும் வாய்ப்புள்ள நேரமெல்லாம் கிருஷ்ணமூர்த்தியை அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. ஞானவாபியிலுள்ள பிற குருக்களும், சிரார்த்தம் செய்கிறவர்களும் கிருஷ்ணமூர்த்தியையோ அல்லது எடுபிடிகளுக்காக இருப்பவர்களையோ அழைக்கும் போது தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை அளிக்க வேண்டும். சங்கரன் ஒரே வீட்டில்தானே வசிக்கிறோம் எனும் சலுகையைக் காட்டி கொடுப்பதில் குறைத்துக் கொள்வார். வாசுதேவன் வீட்டு வாசலிலிருந்தே அலைபேசியில் அழைத்துப் பார்த்தார்.

“கிட்டு, வரமுடியுமா?”

“இங்கதான் செகண்ட் அக்ரஹாரம் தாண்டி பங்களா தெருக்கு”

சிறுவயது முதலே அழைத்து வந்ததால் சங்கரன் மட்டும் கிட்டு என்று அழைப்பது பழக்கமானது. முன்னர் வாங்கி வந்த பொருட்களுக்கு அருகில் செங்கல்லையும் மணலையும் வைத்தார். வாசுதேவன் நடைபயிற்சி செய்த உடையுடனும், மைதிலி சுடிதார் ஒன்றிலும் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதற்கான சாத்தியம் கொண்ட பொருட்கள் எதுவும் பார்வையில் தட்டுப்படவில்லை. நேரம் எட்டரையாகியிருந்தது. வாசுதேவனின் அலைபேசியில் எட்டரைக்கு அலாரம் ஒன்று அடித்தது.

“ஆரம்பிக்கலாமா?”

வாசுதேவனுடைய குரலில்தான் எத்தனை தோரணை!

“நீங்க டிரஸ் மாத்திண்டு வந்துருங்கோ. கிட்டு வர்றேன்னு சொல்லிருக்கான். வந்தவொடன ஆரம்பிச்சிடலாம்”

மைதிலியைப் பார்த்து, “பஞ்ச பாத்திரம், வெண்கல சொம்பு, ஒரு அஞ்சு தாம்பாளம் வேணுமே?”

சமையலறையிலிருந்து தூசி படர்ந்திருந்த மூட்டையொன்றை தூசி மேலே படாதவாறு எடுத்துவந்து சங்கரனுக்கு அருகில் வைத்தாள்.

“போன வருஷம் செஞ்ச பாத்திரம். அப்படியே பேக் பண்ணி வச்சிட்டோம்”

“பேஷ்! நான் எடுத்துக்கறேன்”

கிட்டுவின் வருகை ஆசுவாசப்படுத்தியது. வாசுதேவன் அங்கேயே நின்று கொண்டிருந்தார். சங்கரன் பார்த்தவுடன் பள்ளி மாணவனைப் போல, “எனக்கு பஞ்சகச்சம் கட்டத் தெரியாது”

எத்தனை முறை கேட்ட சொற்கள் இவை. ஹோமங்களுக்கு செல்லும்போது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வயது நிரம்பிய தலைமுறையின் கோரிக்கை. பலருக்கு சங்கரனே கட்டி விட்டிருக்கிறார். வெற்றுடம்பும், தொந்தியும், சில நேரங்களில் வியர்வையும், இடுப்பற்ற ஒல்லியான தேகங்களும் நினைவில் மண்டின. கட்டிப் பழகிய சங்கரனின் கைகளுக்கு கட்டிவிடுவது பொருட்டே அல்ல. ஆனாலும் நினைவில் ஓர் வியர்த்தம். வாசுதேவனைப் பார்க்கும்போதும் மனதுள் குமுறல்கள் ஓடியது.

இவ்ளோ சம்பாதிக்கறா? மார்பிளால இழைச்சிருக்கா? ஒரு பஞ்சகச்சம் கட்டத் தெரியாதா? சம்பாதிக்க கத்துகிட்ட விஷயங்கள்ள கடுகளவு இருக்குமா பஞ்சகச்சம் கட்ற வேலை? காசு சேந்துட்டா பிராம்ணாவா இருக்கறது வேற ரூபம் எடுத்துடறது!

உள்ளுக்குள் ஓடும் உரையாடலிலிருந்து விடுவித்துக் கொண்டு வாசுதேவனைப் பார்த்தார்.

“பரவாயில்லை சார். வெறுமனே வேஷ்டி கட்டிண்டு வாங்கோ”

மைதிலிருக்கு நிச்சயம் மடிசார் கட்டத் தெரியாது என்று அனுமானத்திற்கு வந்திருந்தார். அதனாலேயே எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. ஹோமம் வைப்பதற்கான இடத்திற்கு அடியில் கண்யா கோலம் போடத் தெரியுமோ? ஏன் வீணாய் கேட்டுக் கொண்டு என்று மைதிலியைப் பார்ப்பதையே தவிர்த்தார். மைதிலி வைத்த மூட்டையில் பித்தளையும் செம்பும் நிறம்மாறத் துவங்கியிருந்தன.

“கிட்டு, இன்னிக்கு வேலை செத்த ஜாஸ்தி. சலிச்சுக்காம செய்யணும். கேட்டியோ?”

வேலைகள் செய்வதில் கிட்டு கெட்டிக்காரன். சங்கரனிடம் கெட்ட பெயர் வாங்கக்கூடாது எனும் வைராக்கியம் எப்போதும் அவனிடம் இருக்கும்.

“ஒரு கிண்ணத்துல புளியும், குடிக்க ஜலமும் கிடைக்குமா?”

கிருஷ்ணமூர்த்தியிடம் பணிக்கான கட்டளைகளை இடத் துவங்கினார். பாத்திரங்களை புளியை வைத்து சுத்தமாக்கி தருவதும் முடித்த கையுடன் ஹோமத்திற்கான கண்யா கோலமிடுவதும் முதற்கட்ட பணியானது. வீட்டில் எங்குமே பெரியவர்களின் புகைப்படம் இல்லாமலிருந்தது. அப்பாவின் புகைப்படத்தைக் கேட்டவுடன் உள்ளறையிலிருந்து வாசுதேவன் துடைத்துக் கொடுத்தார். நெற்றி நிறைய திருநீற்றுடன் அவர மிக அழகாகத் தென்பட்டார். அப்புகைப்படத்தை சங்கரன் ஒருமுறை துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு தரையில் அதனை நிற்க வைத்தார்.

கிருஷ்ணமூர்த்தி சுத்தம் செய்வதற்குள் சந்தனத்தில் பிள்ளையார் பிடிப்பதும், மலர்களை ஒழுங்கிபடுத்தி வைப்பதும் செய்து முடித்தார். பதினைந்து நிமிடத்தில் ஹோமத்திற்கான இடங்கள் அனைத்தும் ஏற்பாடாகின. வாசுதேவன் வந்தமர்ந்தவுடன் மந்திர உச்சாடனங்களுடன் சிரார்த்தத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு சொல்லிற்கும் கைகளை எங்கு வைக்க வேண்டும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் சிறுவனுக்கு சொல்வதைப் போல விரிவாக எடுத்துரைத்தார். வாசுதேவனுக்கு மந்திரங்கள் அட்சர சுத்தமாக சொல்ல இயலவில்லை என்பதும் சங்கரனுக்கு சங்கடமானது. அப்பாவிற்கு சிரார்த்தம் செய்ய வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதே எனும் சிந்தனையே அன்று நிகழும் சடங்கில் சங்கரனுக்கு சமாதானமாய் அமைந்தது.

“அப்பா பேரு?”

“நாராயணன்”

“அம்மா?”

“விசாலாஷி”

வாசுதேவனின் முகபாவத்தில் இருவரும் இல்லை என்பதை புரிந்து கொண்டார். அப்பா வழி மூத்தோர் இரண்டு தலைமுறைப் பெயர்களையும் விசாரித்தார்.

“தாத்தா-பாட்டி பேரு ஷேஷாத்ரி – ருக்மணி. அவங்க அப்பா அம்மா பேரு தெரியலையே”

சங்கரனுக்கு அடுத்த சங்கடம். மூன்றாம் தலைமுறையின் பெயர் தெரியாமல் இருப்பது அவர் செல்லும் வீடுகளின் மற்றொரு வாடிக்கை. அப்படித் தெரியாது என்று சொல்லும் இடங்களில், “ராமச்சந்திரா! என்ன ஜெனரேஷனோ. ஒண்ணும் சொல முடியாது. நாங்கல்லாம் அஞ்சு தலைமுறை பேரு தெரிஞ்சு வச்சிருப்போம். இப்ப ஒரு தலைமுறை ஞாபகம் வச்சுக்கறதே பெரிய விஷயமாப் போயிடுத்து!”

அதேபோன்று இன்றும் சொல்லத் தோன்றியது. ஆனால், தைரியம் வரவில்லை.

“நம்ம அப்பாவ வழியனுப்பி வைக்கறோம். மூணு தலைமுறைக்கு சேத்தாப்ல இந்த சிரார்த்தம். அப்பாக்கு செய்றப்போ கொள்ளு தாத்தா பரலோகம் போய் சேந்துடுவார். தெய்வத்தோட ஐக்கியம் ஆகிடறார். ஐக்கியமாற எடத்துல பேருக்கு அர்த்தம் என்ன இருக்கு! தெய்வத்தோட பேரே வச்சிடலாம். எல்லாம் தெய்வக் கணக்கு!”

வாசுதேவனின் கொள்ளுத் தாத்தா மற்றும் கொள்ளுப் பாட்டியின் பெயராக பெருமாள்-லக்ஷ்மி என்று குறிப்பிட்டார். லக்ஷ்மி எனும் சொல்லைக் கேட்டவுடன் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் கண்ணீர் துளிர்ப்பதைக் கவனித்தார்.

“சிரார்த்தம் முடியப் போறது. வாசல தெளிச்சு பெருசா கன்யா கோலம் போடணும். அதுக்குத் தேவையான ஜாமான எடுத்து வைடா கிட்டு”

கண்ணீர் தளும்புவதை பிறர் பார்க்க விரும்பாதவனாய் ஒதுங்கி, தலைகுனிந்தவாறு நடந்தான். கொள்ளுத் தாத்தா மற்றும் கொள்ளுப் பாட்டியின் பெயரை அடிக்கடி சொல்ல வேண்டிய நிர்பந்தம் சிரார்த்தத்தின் முறைமையில் ஏற்பட்டது. மூன்று கையளவு உருண்டையாக சோற்றைப் பிடிக்க வேண்டும் என்று மைதிலியிடம் கூறினார். சுடுசோற்றில் மைதிலியின் கைகள் நடுக்கமெடுத்தன. இரண்டொரு நிமிடம் காத்திருந்தார். பின் சாதம் இருந்த தாம்பாளத்தை தன் பக்கம் இழுப்பதாக பாவனை செய்தார்.

“எல்லாம் ஒரு பாவனைதான். நீங்கதான் பிடிக்கணும். உருண்டை செதறவும் கூடாது. அது பெரியவாளுக்கு ஆகாது. நான் உருண்டை பிடிச்சுடறேன். நீங்க கடைசியா ஒரு தடவ மேலாப்ல ஒரு தடவ உருட்டிட்டு வச்சாப் போதும்”

உள்ளங்கையில் எள்ளை வைத்துக் கொள்ளச் சொன்னார். பின் உத்தரீணியில் நீரை எடுத்து எள்ளை வழிந்து மூன்று உருண்டை சாதத்தின் மீது விழும் வகையில் செய்கையை பாவனை செய்தார். எள் சோற்றுருண்டையின் மீது படர்ந்தது.

“ஒவ்வொரு ஆத்மாவும் சாப்டதுக்கு சமம். அவா வயிறு நிறைய உங்க வீட்ல செல்வம் சேரும்”

ஒவ்வொரு உருண்டையின் மீது பாவனையை நிகழ்த்தும் போதும் அது யாருக்கானது என்று தம்பதிகளின் பெயரை உச்சரித்தார். கடைசி உருண்டையின் மீது செயல்படுத்தும்போது

“கேசவபெருமாள்-சீதா லக்ஷ்மிக்கு”

என்று கூறினார். சிரார்த்தத்தின் இடையே அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவனிடமும் மைதிலியிடமும் பெயர் மாற்றம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வாசல் கதவிடையே அடுத்தகட்ட பணிக்கான ஆணைக்காக காத்திருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் திடுக்கிடல் தென்பட்டது. சங்கரனைக் கோபமும் ஆதுரமும் கண்ணீரும் நிறைந்த பார்வையில் பார்த்தான். சங்கரன் கட்டுப்படுத்தி கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்காமல் பார்வையைத் தவிர்த்தார்.

“சிரார்த்தம் முடிஞ்சது. கிட்டு இத எல்லாம் ஒரு பக்கெட்ல எடுத்து வாசல்ல வச்சிரு. வாசல தெளிச்சு பெருசா கன்யா கோலம் போட்ரு. முடிச்சிட்டு சொல்லு. நவக்கிரஹ ஹோமத்தை ஆரம்பிச்சிடலாம்”

சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டு காபியைப் பருகினார். சத்தமான மந்திர உச்சாடனங்களுடன் ஹோமத்தை செய்து முடித்தார். வீட்டிலுள்ளவர்களை அவர்தம் ராசி நட்சத்திரங்களைக் கூறி ஆசிர்வதித்தார். தட்சணை அளிக்க வேண்டிய பகுதி வந்தது. முன் கூறிய பணத்தை ஏற்கனவே ரொக்கமாக எடுத்து வைத்திருந்தனர். அளிக்க முன்வரும்போது, “பண்ணதுலயே சிறப்பான நவக்கிரஹ ஹோமம் இதுதான். பகவான் அனுக்கிரஹம் நன்னா இருக்கறது. சரஸ்வதி என் நாக்குல சாஷ்டாங்கமா உக்காந்துட்டா. இல்லாட்டி அட்சரம் பிசகாம இப்படி ஸ்லோகம் வருமோ! ஏண்டா கிட்டு இத மாதிரி கணீர்னு ஒரு ஹோமத்த கடைசியா எப்ப பண்ணோம்?”

சத்தமாக சிரித்துக்கொண்டே, “பாருங்கோ மாமா, சின்னப்பயல் இந்த கிட்டு. எங்கூடதான் எல்லா ஹோமத்துக்கும் வர்றான். அவனால யோசிக்கவே முடியல. ஹோமம் பண்றச்ச அவன பாத்தேனே. கண்ல தண்ணியா கொட்றது. அதென்ன ஹோமப் பொகைனாலயா? அனுக்கிரஹம். சொன்னா என்னைய காமெடி பண்ணுவா. பகவானே பகடிதான் இந்தக் காலத்துல”

பேசிக்கொண்டே தட்சணை அளிக்க வேண்டிய தாம்பாளத்தை வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் சகிதமாக தயார் செய்தார். ரொக்கத்தை எப்படி இரண்டாகப் பிரிக்க என்று வாசுதேவன் காதில் கூறினார். அதை அவர்கள் பிரித்து வைக்கும்போது, “விட்டா நான் கண்டத பேசிண்டே இருப்பேன். சொன்னததான் தரணும்னு இல்லை. பாத்து செய்ங்கோ மாமா. எங்க வயித்துக்கும் உங்க தோப்பனார்தான் இன்னிக்கு அதிபதி”

வாசுதேவன் பர்ஸிலிருந்து மேலும் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை இரண்டு தட்டுகளிலும் சேர்த்தார். சிரித்துக் கொண்டே சங்கரனும் கிருஷ்ணமூர்த்தியும் பெற்றுக் கொண்டனர். ஹோமத்தின் கடைசியில் சங்கரன் தம்பதியை ஆசிர்வதித்தார். காகத்திற்கு சோறுவைத்து விட்டு வரச் சொன்னார்.

பிராமணனுக்கு அன்னமிடும் வழக்கத்தை சுருக்கிக் கொண்டு சிரார்த்தம் செய்பவருக்கு இட்டுக் கழிப்பதாக காலப்போக்கில் முறைமை மாறியிருந்தது. சங்கரனும் கிருஷ்ணனும் வரவழைத்திருந்த உணவை வயிறார சாப்பிட்டனர். கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து மட்டும் சாப்பிடும் போது அசௌகரியம் தென்பட்டது. மைதிலி அதைக் கவனித்தவாறு, “சாப்பாடுல ஏதவது கொறையா?”

சங்கரன் புரிந்துகொண்டவராய் பதிலளிக்க முந்தினார்.

“சாப்பாட்டா? இது அமிர்தம். அவன் வயிறு சுண்டக்காய் வயிறு. வீட்லயே காக்காய்க்கு வைக்கற அளவுக்குதான் அவன் சாப்பிடுவான். இவ்ளோ பட்சணம் பாத்தா கண்லயே பசியாறிடுமே. சாப்பிடறது கொஞ்சம் கஷ்டம்தான்”

சங்கரனின் பகடி சிரிப்பை வரவழைத்து சூழலை மாற்றியது. சாப்பிட்டவுடன் இலைகளை எடுப்பதில் மைதிலியிடம் விருப்பமின்மை தென்பட்டதால் கிருஷ்ணமூர்த்தியிடமே கூறி வாசலிலிருந்த முன்னோர்களுக்கான உணவுடன் சேர்க்கச் சொன்னார். சிரார்த்தம் முழுதுமாக முடிந்தவுடன் சின்ன இடைவெளிவிட்டு ஹோமம் நிகழ்ந்த இடத்தைச் சுட்டினார்.

“சாயங்காலம் அணைஞ்சிடும். அப்ப சுத்தம் செஞ்சிருங்கோ. செங்கல் ஓரமா வச்சிருங்கோ. வருஷா வருஷம் தேவைப்படும். சிரமமா இருந்தா சொல்லுங்கோ.. சாயரச்சே வந்து நானே எடுத்துண்டு போயிர்றேன்.”

“பரவாயில்லை” என்று கூறி வாசுதேவன்-மைதிலி தம்பதியினர் விடைகொடுத்தனர்.

வாசலில் இருந்த மூத்தோர்களுக்கான உணவை பொதுக்கழிவு நீருடன் கலந்தார்.

“ஆத்துல கரைச்சா கோடி புண்ணியம். ஆனால், ஆறு இருக்கவே ஊர்க்காரா கோடி புண்ணியம் செஞ்சிருக்கணுமே!”

முன்னோர்களின் உணவு வைத்திருந்த பக்கெட்டைக் கழுவி கிருஷ்ணமூர்த்தி ஒப்படைத்தவுடன் இருவரும் கிளம்பினர். வீடுவரை சங்கரனும் கிருஷ்ணமூர்த்தியும் பேசாமல் பயணித்தனர். வீடு வந்தவுடன் கிருஷ்ணமூர்த்தியை மட்டும் இறங்கச் சொன்னார். வாசல் கதவைத் திறக்கும் வரை காத்திருந்துவிட்டு வீட்டிற்குள் சென்றார். தங்கையின் குடும்பப் புகைப்படத்தின் முன் இருவரும் நின்றனர். தனக்கு அளித்த தொகையையும் சேர்த்து கிருஷ்ணமூர்த்தியிடமே கொடுத்தார். கிருஷ்ணமூர்த்திக்கு வெடித்து அழ வேண்டும் என்று தோன்றியது. சங்கரனுக்கு தங்கையின் புகைப்படத்தைப் பார்க்க மனமில்லாமல் வாசல்பக்கம் திரும்பினார்.

“அவா மட்டும் கொஞ்சம் கவனமா இருந்திருந்தா ஏன் பேர மாத்தி சொன்னீங்கன்னு கேட்ருப்பா?”

“நானா சொல்லல கிட்டு. தானா அப்படி வர்றது. சொந்த தலைமுறை பேரு தெரியாதவாளுக்கு லக்ஷ்மிக்கும் சீதா லக்ஷ்மிக்கும் என்ன வித்தியாசம் தெரிஞ்சுடப்போறது?”

“அம்மா பேர வேணும்னே சொன்னா மாதிரிதான் எனக்குத் தோன்றது!”

“வேணும்னு சொன்னதாவே வச்சுக்கோயேன்.”

முன்னிருந்த புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி, “ரெண்டு பேரையும் கொரோனா கொண்டு போனப்போ நியாயத்த யார் கணக்குல எழுதுவ? சீதாவ பாக்கக் கூட இல்ல. முகம் கடைசியா எப்படி இருந்துச்சுனு கூடத் தெரியாது. ஒவ்வொருத்தருக்கும் நான் செய்ற சிரார்த்தம், சீதாக்கு செய்றதாதான் எனக்குள்ள இருக்கு. சிரார்த்தத்தோட பயனே ஒருத்தர் போய்ட்டா அவா வீட்ல இருக்கற எல்லாரையும் ஒருத்தர் இல்லைனு நம்ப வைக்கறதுதான். இத்தன தடவ சிரார்த்தம் செய்றேன். ஆனா, சீதா போனதா மனசு நம்ப மாட்டேங்குது!”

சங்கரன் குரல் தடுமாறியது. காட்டிக்கொள்ள விரும்பாமல் தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.

“மாட்னானு கேட்டியே? மாட்னா என்ன! தெய்வத்து பேர்ல மாத்த வேண்டியதுதான். அவ்ளோ கோபம் இருக்கு. கொரோனா பேர்லயும் தெய்வத்தோட பேர்லயும். யார் மேல காட்ட முடியும். எல்லாம் என் கர்மா.”

கிருஷ்ணமூர்த்தியின் முன் அழ விரும்பாதவராய் அங்கிருந்து முன்னறைக்குத் கிளம்பினார். கிருஷ்ணமூர்த்தி பணத்தை கேசவ பெருமாள்-சீதாலக்ஷ்மி என்று பெயரிட்டிருந்த அப்பா-அம்மாவின் புகைப்படத்தடியில் வைத்துவிட்டு சமையலறை நோக்கித் திரும்பினான்.

“ஞானவாபி போய் தனியா உக்காந்து அழ வேண்டாம். வெயிட் பண்ணுங்கோ. காபியோட வர்றேன்”.

[email protected]

The post சிரார்த்தம் – கிருஷ்ணமூர்த்தி appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

❌