Normal view

Received yesterday — 6 June 2025கிழக்கு டுடே

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள்

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும் – பழமொழி

சூக் சியாங் கூட்டுக்கொலை

1942இன் பி்ப்ரவரி மாதம்.

18ஆம் தேதி யப்பானிய இராணுவ நிருவாகம் சிங்கப்பூரில் ஒரு அறிவிக்கை செய்தது. இந்த அறிவிக்கை, துண்டறிக்கைகளாக ஒட்டப்பட்டும், இராணுவ வீரர்களால் ஒலிபெருக்கி வழியாகவும் அறிவிக்கப்பட்டன. 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட சீன ஆண்கள் அனைவரும் தீவின் குறிப்பிடப்பட்ட ஐந்து இடங்களில் சோதிக்கப்படுவதற்காக வரவேண்டும் என்று அந்த அறிவிப்பு சொன்னது. சிங்கப்பூர் தீவில் இருந்த ஒரு யப்பானிய இராணுவப் பிரிவுக்கு கெம்பெய்டாய் (Kempeitai) என்ற பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் பிரிவுதான் சிங்கப்பூரில் சோதனைகள், தண்டனைகள் போன்றவற்றை நிறைவேற்றும் பொறுப்பை வைத்திருந்தது. அறிவிப்பின்படி சீன ஆண்கள் வந்து சேரவில்லை என்று தோன்றினால் வீட்டுக்கு வீடு சோதனையிட்டு சீன ஆண்களை முகாம்களுக்கு அள்ளிக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். இந்த ஆண்கள் அனைவரும் விக்டோரியா பள்ளியின் விளையாட்டுத் திடல்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நான்கு அல்லது ஐந்து பெரிய பாரமேற்று மோட்டார் வாகனங்கள் அங்கு வந்தன. அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆண்கள் அனைவரையும் அந்த நான்கைந்து வண்டிகளில் ஏற்றிக் கொண்டு தானா மேரா(Tanah Merah) அருகே இருந்த கடற்கரைக்குக் கொண்டு போனார்கள் கெம்பெய்டாய் பிரிவினர்.

தடுக்கப்பட்டு வைத்திருந்த அனைவரின் கைகளைப் பின்புறம் வைத்து, கயிறுகளால் பிணைத்து நீண்ட வரிசையில் அவர்கள் கட்டப்பட்டார்கள். அங்கு கடற்கரை மணலில் இறக்கிவிடப்பட்ட அவர்கள் கடலைநோக்கி வரிசையாக நிற்குமாறு பணிக்கப்பட்டார்கள். பின்புறம் கைகள் பிணைக்கப்பட்ட, நீண்ட வரிசைகளில் நின்ற அவர்கள் கடலை நோக்கி ஒரே அளவில் நடக்குமாறு சொல்லப்பட்டார்கள். அவர்களது பின்புறம் வந்து நின்ற கெம்பெய்டாய் படை, தானியங்கித் துப்பாக்கிகளால் (machine guns) சட சடவென்று அவர்களைச் சுட்டது. அத்தனை சீன ஆண்களும் சிங்கப்பூர் கடற்கரையில் கொத்துக் கொத்தாக விழுந்தார்கள். அப்படி விழுந்தவர்களில் இறந்தும் இறக்காமல் இருந்தவர்களை, துப்பாக்கிக் கட்டையின் கத்திகளால் குத்திக் கொன்றார்கள் கெம்பெய்டாய் பிரிவினர். அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று உறுதி செய்யப்பட்டபின், இயங்கு வாகனங்கள் சென்று விட்டன. கடற்கரையில் கூட்டுக் கொலை செய்யப்பட்ட சீன ஆண்களின் பிணங்கள் காக்கைகளும் வல்லூறுகளும் சிதைக்க, கிடந்து அழுகின. முறையான ஒரு அடக்கம் கூட செய்யப்படவில்லை. யப்பானியர்கள் இந்த சூக் சியாங் நடவடிக்கையால் ஏறத்தாழ 6000 சீன ஆண்களைக் கொன்றதாக பின்னாட்களில் ஒப்புக் கொண்டனர். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னரும், இளமையும் வலிமையும் கொண்டிப்பதாகக் கருதப் பட்ட சீன ஆண்கள் வளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். [1] மேற்கண்டவாறு யப்பானிய கெம்பெய்டாய் கொடுங்கோண்மைப் படை செய்த கூட்டுக் கொலைகள் பலவற்றை வரலாறு பின்னர் பதிவு செய்திருக்கிறது.

Syonan Years – Mass Clensing

இந்த நடவடிக்கைகளை யப்பானிய இராணுவம் அந்த நாட்களிலும், பின்னாட்களிலும் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்காக மேற்கொண்டதாக நியாயப்படுத்தியது. ஆனால் சூக் சியாங் படுகொலை இரண்டு மூன்று நாட்கள் இடைவெளிக்குள் நடந்தது. யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த சிங்கப்பூரில் ஒட்டுமொத்தமாக, மூன்றாண்டுகளில் ஐம்பதாயிரத்திலிருந்து லிருந்து ஒரு இலக்கம் (50,000 – 1,00,000) வரையான சிங்கப்பூரிய சீன ஆண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கணக்கீட்டை தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலில் திரு லீ க்வான் யூ அளிக்கிறார். சிங்கப்பூரின் சிங்லாப், பூங்கோல், சாங்கி போன்ற இடங்களின் கூட்டுப் புதைகுழிகளில் பல பிணங்கள் இட்டுப் புதைக்கப்பட்டன. [2].

அந்தப் புதைகுழிகளில் பலவற்றை, அந்தக் கட்டுப்பட்டவர்களைக் கொண்டே வெட்டுவித்தார்கள் யப்பானியர்.

அரிதானது உணவு

சிங்கப்பூர் ஒரு தீவு என்றும் அது ஒரு துடிப்பான துறைமுக வணிக நகரமாக இருந்தது என்றும் நாம் அறிவோம்; யப்பானிய ஆக்கிரமிப்புக்கு உள்ளான பிறகு போரின் மீது ஏற்பட்ட இயல்பான அச்சத்தால் வணிகப் போக்குவரத்து குறைந்தது. யப்பானிய நிருவாகம் தீவின் மக்களுக்கும் படைகளுக்கும் தேவைப்படும் உணவுப் பொருள்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. உணவுப் பொருள்களின் வரத்து இயல்பாகவே குறைந்தது. தீவிலேயே வசித்த மக்களுக்கு மீன், இறைச்சி போன்ற உணவுப் பொருட்கள் அரிதாயின. வெளியில் கிடைத்த பொருட்களை யப்பானிய இராணுவமும் படைகளும் முதன்மையாக எடுத்துக் கொண்டார்கள். செயலாக இருந்த சீன ஆண்கள் மொத்த, மொத்தமாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகளோடு, தமது குடும்பத்தின் ஏனையவர்களின் உணவுக்குப் பெண்களும் குழந்தைகளும் உடல் வலிந்து பணி செய்ய வேண்டிய தேவை எழுந்தது.

உணவுக்குத் தவிப்பு

சூழலில் இது மேலும் மேலும் நிச்சயமற்ற தன்மையையும், தினப்படி வாழ்வியல் அழுத்தத்தையும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு ஏற்படுத்தியது. பொருள் கொடுத்தாலும் இராணுவ நிர்வாகம் கொடுக்கும் உணவு அளவுக்குட்படுத்தப்பட்டதாகவே இருந்தது ( rationed supplies). ஒரு ஆணுக்கு ஒரு மாதத்திற்கு சுமார் 12 கிலோ அரிசி என்ற கணக்கில் மட்டுமே தானியம் கொடுக்கப்பட்டது; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் குறைவான அளவு தானியம் கிடைத்தது. தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட இந்த அளவு, போர் தொடரத் தொடர, படிப்படியாக குறைக்கப்பட்டு 1945இல் கிட்டத்தட்ட பாதியாகி ஒரு ஆணுக்கு சுமார் 5 கிலோ அரிசி மட்டுமே ஒரு மாதத்திற்குக் கிடைத்தது. மக்கள் தீவில் மரவள்ளிக் கிழங்கை அதிகம் பயிரிடத் தொடங்கினார்கள். அவித்த மரவள்ளிக்கிழங்கு, கம்போங்குகளில் நீர்நிலைகளில் கிடைக்கும் மீன் போன்ற உணவுகள் வழக்கமான உணவாயின. மக்கள் அவ்வாறு பயிரிட்டாலும் அதனை யப்பானிய இராணுவத்தினர் பறித்துக் கொண்டு போவார்கள் என்ற அச்சத்தினால், நகரத்தை விட்டு வெளியேறி மலாய் பகுதிகளுக்கு மக்கள் செல்லத் தொடங்கினார்கள். இருந்த மக்களை விவசாயம் செய்து விளைபொருட்களை உற்பத்தி செய்யும்படி, தீவின் இராணுவ நிருவாகம் வற்புறுத்தியது. தவறுகள் குற்றங்களாகக் கருதப்பட்டன; குற்றங்களுக்குக் கொடிய தண்டனைகள் அளிக்கப்பட்டன.

மொழி, கல்வி, பொது நிருவாக நிலை

யப்பானியர் அவர்களது மொழியான யப்பானிய மொழியை பள்ளிக் குழந்தைகள் முதல் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பள்ளிகளில் யப்பானிய மொழி அறிமுகப்படுத்தப்பட்டது.யப்பானிய மொழி கற்றுக் கொள்ளத் தனிப்பள்ளியையும் யப்பானிய இராணுவ நிருவாகம் தொடங்கியது. தினமும் சங்கொலி முழங்கியவுடன், மக்கள் பொது இடங்களில் குழுமி யப்பான் இருக்கின்ற திசை நோக்கி மண்டியிட்டு, யப்பானிய தேசிய கீதத்தை இசைக்க பணிக்கப்பட்டார்கள்.

யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்த சிங்கப்பூரில் ஒவ்வொரு மாதமும் சுமாராக 50 கைக்குழந்தைகள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள், குழந்தை ஏசு தேவாலயத்தின் வாசலில் அநாதையாக விடப்பட்டன என்ற ஒரு புள்ளிவிவரம் தரும் அதிர்ச்சியிலிருந்து சமூக நிலை எவ்வாறு இருந்தது என்பதை உணரலாம்.

குற்றங்களுக்குக் கடும் தண்டனைகளும், சிறைவாசமும் வழங்கப்பட்டாலும், சிறைக் கைதிகள் மிக மோசமான நிலைமையில் இருக்க வேண்டியிருந்தது. பொது சமூகத்துக்கே தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஒன்றும் கிடைக்காத நிலையில் சிறைக் கைதிகளின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்? ஆரோக்கியமான மனிதனுக்கு 2200 கலோரி உள்ள உணவுப் பொருள் தேவைப்பட்ட நிலையில், சிறைக்கைதிகளுக்கு சுமார் 1000 கலோரி அளவுள்ள உணவுப் பொருள் மட்டுமே அளிக்கப்பட்டது.

போதிய பராமரிப்பு இல்லாதது, அளவுக்கதிகமான நெருக்கடி, ஊட்டமற்ற உணவு போன்றவற்றால் சிறைகளில் தொற்று நோய்கள் பெருகின. ஆடை, செருப்பு போன்றவற்றிற்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏறத்தாழ 14000 சிறைக்கைதிகள் இந்தக் காலகட்டத்தில் மரணமடைந்தார்கள்.

கைதிகளின் கோரநிலை

சிங்கப்பூரின் பணவிடை மாற்றப்பட்டு, யப்பானியப பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பூக்களின் படமும், வாழைமரத்தோடு கூடிய வாழைத்தார் இருக்கும் படமும் இருந்ததால் அது ‘வாழைப்பழநோட்டு’ என்ற பொருளில் பனானா கரன்சி என்று பொதுமக்களால் அடையாளப்படுத்தப்பட்டது.

விண்ணைத் தொட்ட விலைவாசி

சிங்கப்பூரில் ஏற்கனவே இருந்த பிரித்தானிய காலனி நிருவாகம் வெளியிட்டிருந்த பணவிடை முற்றாக யப்பானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது; எனினும் தென்கிழக்காசிய வட்டாரத்தின் மற்ற இடங்களில், அந்தப் பணவிடைக்குச் செலாவணி இருந்ததால் அது பெரிதும் மதிப்பில் விழவில்லை. ஆனால் வாழைப்பழ நோட்டுக்கு அந்த செலாவணிப் பெறுமதி சிங்கப்பூரில் இல்லையாதலால், அந்தப் பணவிடைக்கு சந்தை மதிப்பு இல்லாதிருந்ததோடு, நாள் செல்லச்செல்ல மேலும் அதன் மதிப்பு வீழ்ந்தது; அதனை வாங்குவார் அருகினார்கள். விளைவாகப் பொருட்களின் விலை விண்ணுச்சத்திற்குப் போனது. போர் தொடங்குவதற்கு முன்னர் சிங்கப்பூரில் 100 காடிக்கான (60 கிலோ) அரிசியின் விலை சுமார் 5 வெள்ளியாயிருந்தது. அதே பொருள் யப்பானிய ஆக்கிரமிப்பின் 1944 ஆம் ஆண்டு சுமார் 5000 வெள்ளிக்கு உயர்ந்தது![3]

இந்தக் காரணங்களால் ஆக்கிரமிப்புச் சிங்கப்பூரில் கள்ளச்சந்தை துடிப்பாக இயங்கியது.

பிரித்தானிய பணத்தாள்
யப்பானிய வாழைப்பழப் பணத்தாள்

கள்ளச் சந்தையில் தங்க நகைகள், மற்றும் உணவுப் பொருட்கள் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் பெற்றன. லீ க்வான் யூ தனது தி சிங்கப்பூர் சுடோரி நூலிலும் அந்நாட்களில் கள்ளச் சந்தை எவ்வாறு இயங்கியது என்றும், அப்போது பதின்மத்தில் மாணவனாக இருந்த தான் எவ்வாறு கையில் இருந்த பணத்தைக் கொண்டு, செலாவணி ஆகக் கூடிய சிறு தங்கத் தோடு போன்றவற்றை வாங்கி, பின்னர் சில நாட்கள் கழித்து விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை, எவ்வாறு தனது குடும்பத்தின் உணவு சம்பாத்திய தேவைக்குப் பயன்படுத்த முடிந்தது என்பனவற்றை விவரித்து எழுதியிருக்கிறார்.

இரணகளத்திலும் யப்பானியர்களுக்கான கிளுகிளுப்பு

சிங்கப்பூரின் வசதி படைத்த சமூகங்கள் வசித்த பல பகுதிகளில் இருந்த வீடுகள் ‘சொகுசு நிலைய’ங்களாக யப்பானிய இராணுவத்தினரால் மாற்றப்பட்டன. வீட்டுச் சொந்தக்காரர்கள் தாமே ஓடிப்போயிருந்தார்கள் அல்லது சில இடங்களில் விரட்டியடிக்கப்பட்டார்கள். கொரிய, மலாய், தாய்லாந்து மற்றும் சீனப் பெண்கள் அந்த வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள். யப்பானிய இராணுவப் படையின் காமத் தேவைகளைத் தீர்த்து வைக்கவேண்டுவதே அவர்களது பணி. அந்தப் பெண்களில் 14 வயதேயான இளஞ்சிறுமிகளில் இருந்து 35 வயது வரையான பெண்கள் வரை பலர் இருந்தார்கள். வார இறுதி நாட்களில் இந்த வீடுகள் இருந்த பகுதிகளில் நெடும் வரிசைகளில் படையினர் சாரிசாரியாகக் காத்து நிற்பார்கள். அந்த வீடுகள் இருந்த பகுதிகள் மரப் பலகைத் தடுப்புகளால் அரண் போல அமைக்கப்பட்டன. ஒரு பெண், ஒரு நாளில் ஏறக்குறைய 30 லிருந்து 40 ஆண்களுக்கு காமப்பணி செய்யவேண்டியிருந்தது. இந்த கொடும் சுமையில் பெண்கள் நோய்ப்படுவதும் இறப்பதும் பெரும் எண்ணிக்கையில் நடந்தன. அந்த எண்ணிக்கை கொரியா, பர்மா, தாய்லாந்து போன்ற இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய பெண்களால் மீண்டும் நிரப்பப்பட்டன. இந்த நிலையங்களில் சில யப்பானியப் பெண்களாலும் நிரப்பப் பட்டன; அவர்கள் யப்பானிய இராணுவ அதிகாரிகளின் தேவைக்காக மட்டும் வேலை செய்தார்கள். பெரும் சமூக அவலமாக இது நடந்தாலும், இந்த வடிகால் ஏற்பாட்டினால் ,பொது சமூகத்தில் இராணுவத்தினரால் ஏற்படும் கற்பழிப்புகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததாக சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

ஆக்கிரமிப்பின் ஆவணங்கள்

சிங்கப்பூர் யப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த நாட்களை அதிகாரப் பூர்வமாக விவரிக்கும் நூல்களில் முக்கியமானது லீ கெயோக் போய் (Lee Geok Boi) எழுதிய தி சியானன் இயர்சு (The Syonan Years – Singapore under Japanese rule 1942-1945) என்பது. இது இந்தக் கொடுங்காலத்தை மிகச் சரியாக ஆவணப்படுத்துகிறது. இது தவிர லீ க்வான் யூ அவர்களின் தி சிங்கப்பூர் சுடோரியின் ஒரு அத்தியாயம் பல செய்திகளை நேரடி சாட்சியாக ஆவணப்படுத்துகிறது. அப்போது லீ அவர்கள் பதின்ம வயது பள்ளி மாணவர். இன்னும் சில ஆவணங்கள், அந்த நாட்களின் சாட்சியாயிருந்தவர்கள் பலரை, பின்னாட்களில் சந்தித்து அவர்களது அனுபவத்திலிருந்த பல செய்திகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை சிங்கை மரபுடைமை ஆவணக் காப்பகம் மற்றும் சிங்கை தேசிய நூலகத்தின் கருவூலங்கள் போன்றவற்றில் காணக் கிடைக்கின்றன. இந்த ஆவணங்கள் பொதுவான நோக்கில் பின்வரும் நான்கு விதமான வகைப்பாட்டில் இந்த கொடுங்காலத்தின் உண்மைகளைப் பதிவு செய்கின்றன. 1. சமூக, பொருளாதார நோக்கில் கள்ளச்சந்தை, கூட்டுக் கொலைகள் போன்றவற்றை ஆவணப்படுத்துவது; 2. புவியியல் நோக்கில் வாழ்வியல் இடங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், இடப்பெயர்வுகள்; 3. சிங்கப்பூரில் மற்றும் தென்கிழக்காசியாவில் அக்காலகட்டத்தில் இருந்த இந்தியர்களுக்கு யப்பானியர்கள் கொடுத்த அணுசரனையான சலுகை, பதவிகள், வாய்ப்புகளால் சுபாசு சந்திர போசின் இந்திய தேசியப் படையும் அதன் இயக்கம் இந்திய விடுதலைப் போரில் செலுத்திய தாக்கம் பற்றிய செய்திகள்; 4. யப்பானிய மொழியை திறந்த மனத்தோடு கற்றுக் கொண்ட சிங்கப்பூர் சமூகத்தின் சிலரோடு சமூக அளவில் யப்பானியர்கள் எந்த அளவு ஒன்ற முடிந்தது என்பது பற்றியும், அது விளைவித்த சமூக மென்மாற்றங்கள் பற்றியும்; என இந்த நான்கு நிலைகளில் இந்த ஆய்வுக் குறிப்புகள் அக்காலகட்டத்தின் நிகழ்வுகளையும், விளைவுகளையும் ஆவணப்படுத்தியிருக்கின்றன.

(தொடரும்)

__________

1.  The Singapore Story – Memoirs of Lee Kuan Yew – From the part of ‘The Japanese Invaders’.
2. Syonan Years – யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தின் நேரடிச் சாட்சிகள் விவரித்த சம்பவங்களில் இருந்து தொகுக்கப்பட்ட சிங்கை தேசிய ஆவணக் காப்பக குறிப்பேடுகளில் இருந்து
3. https://en.wikipedia.org/wiki/Japanese_occupation_of_Singapore – விக்கிபீடியா தளம் தரும் குறிப்பில் இருந்து.

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #6 – கொடுங்கனவின் தீற்றல்கள் appeared first on கிழக்கு டுடே.

Received before yesterdayகிழக்கு டுடே

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள்

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வசித்துவந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த சந்தைக்குச் சென்று விறகு வெட்டிக் கொடுத்து சம்பாதித்து வந்தான். ஒருமுறை அவனுடைய ஊரை அடுத்து இருந்த இன்னொரு ஊரின் வாரச்சந்தைக்குச் சென்றிருந்தான். அங்கு பூக்கடை வைத்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து மனத்தைப் பறிகொடுத்தான். அதற்குப் பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே அந்த ஊரில் நடைபெற்ற சந்தைக்கு ஒவ்வொரு வாரமும் செல்லத் தொடங்கினான். அந்தப் பெண்ணிடம் எப்படியோ பேச்சுக் கொடுத்து அவள் மனத்தில் இடம் பிடித்துவிட்டான்.

இருவரும் பேசிப்பேசி தம் காதலை வளர்த்துக்கொண்டனர். அவனுக்கும் பெற்றோர் என சுட்டிக்காட்ட ஒருவரும் இல்லை. அவளுக்கும் பெற்றோர் இல்லை. அதனால் அவர்களுடைய காதலுக்குத் தடை சொல்ல ஒருவரும் இல்லை. அதனால் அவர்களாகவே ஒரு நல்ல நாள் பார்த்து ஒரு கோவிலில் தெய்வத்தின் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் ஒரே ஊரில் வசித்தார்கள். ஒவ்வொரு பொழுதும் ஆனந்தமாகக் கழிந்தது. அவன் காலையில் எழுந்ததும் கோடரியை எடுத்துக்கொண்டு விறகுவெட்டக் கிளம்பிவிடுவான். அவளும் பூந்தோட்டத்துக்குச் சென்று பூக்களை வாங்கிவந்து மாலையாகக் கட்டி விற்பதற்காகக் கிளம்பிவிடுவாள். அவர்கள் சம்பாதித்துக் கொண்டுவரும் பணம் அவர்களுடைய தேவைக்குப் போதுமானதாக இருந்தது. இருவருடைய இல்வாழ்க்கையும் இனிமையாகக் கழிந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் நேசத்தோடு பார்த்துக்கொண்டனர். திருமணமாகி ஐந்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை பிறக்கவில்லை. அது ஒன்றுதான் அவர்களுக்கு மனக்குறையாக இருந்தது.

அக்கம்பக்கத்தில் உள்ள எல்லாக் கோவில்களுக்கும் அவர்கள் சென்று குழந்தைக்காக வேண்டிக்கொண்டனர். ஓராண்டுக்குப் பிறகு ஒரு வழியாக அவள் கருவுற்றாள். அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தைக்கு நான்கு வயது நடக்கும்போது, திடீரென அவள் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். விறகுவெட்டிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

நான்கு வயது பிள்ளையை தனியாக வளர்க்க அவன் படாத பாடுபட்டான். விறகு வெட்டச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அச்சிறுவனையும் அவன் அழைத்துக்கொண்டு செல்லவேண்டியதாக இருந்தது. அவனால் விறகு வெட்டுவதிலும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை. சிறுவனையும் சரியான முறையில் பார்த்துக்கொள்ள முடியவில்லை. கடைசியாக வேறு வழி தெரியாமல், சிறுவனைப் பார்த்துக்கொள்வதற்காக இன்னொரு பெண்ணைத் தேடி திருமணம் செய்துகொண்டான்.

தாயில்லாத சிறுவனுக்குத் தாயாக இருந்து நல்லவிதமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பல விதங்களில் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துத்தான் அவன் அந்தத் திருமணத்தைச் செய்துகொண்டான். புதிதாக வந்த மனைவியும் தொடக்கத்தில் அச்சிறுவனிடம் மிகுந்த பாசத்தோடு இருந்தாள். சிறுவனும் அந்தப் பெண்ணிடம் கிடைத்த தாய்ப்பாசத்தில் மகிழ்ந்து கவலையில்லாமல் இருந்தான். சித்தியாக இருந்தாலும் அம்மா என்றே அழைத்து மகிழ்ந்தான்.

எல்லாமே அவளுக்கு என ஒரு குழந்தை பிறக்கிறவரை சரியாகத்தான் இருந்தது. அதற்குப் பின் அவள் குணம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அந்தச் சிறுவனை அவள் வெறுக்கத் தொடங்கினாள். அற்பமான விஷயங்களுக்கெல்லாம் அவன்மீது கோபம் கொண்டு வசைபாடினாள். அவனுடைய தேவைகளை உதாசீனம் செய்யத் தொடங்கினாள். அச்சிறுவன் வயதில் சின்னவனாக இருந்தாலும் தன் சித்தியிடம் ஏற்பட்டிருக்கும் வேறுபாட்டை எளிதாகப் புரிந்துகொண்டான். அதனால் தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு அவள் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்தான். அவள் அச்சிறுவனை ஓர் அடிமை போல நடத்தினாள்.

ஒருநாள் அவளை அவன் அம்மா என்று அழைத்தபோது ‘இனிமேல என்னை அம்மான்னு கூப்புடாத, புரியுதா? நானா உன்ன பெத்தேன்? யாரோ ஒருத்தி உன்ன பெத்துட்டு என் தலையில கட்டிட்டு போயிட்டா. ஒழுங்கா சித்தின்னு கூப்புடு’ என்று கடுமையான குரலில் சொன்னாள். அவனும் அன்றுமுதல் அம்மா என்று அழைப்பதை விட்டுவிட்டான். தனிமையில் இருக்கும்போது அதை நினைத்து அவனுக்கு அழுகையாக வரும். சிறிது நேரம் அழுது மனவேதனையைக் குறைத்துக்கொள்வான்.

சிறுவன் பத்து வயதைத் தொடும் வரை அவள் அமைதியாக இருந்தாள். பிறகு ஒருநாள் கணவன் நல்ல மனநிலையில் இருந்த சமயத்தில் ‘இன்னும் எத்தனை நாளுக்கு இவனை இப்படியே வீட்டுக்குள்ள வச்சிருக்கறது? பத்து வயசு ஆயிடுச்சி. இப்பவே உலகத்தைப் புரிஞ்சிக்கறதுக்கு அவனைப் பழக்கினாதானே நல்லது’ என்று சொன்னாள்.

‘சரி, அதுக்கு இப்ப என்ன செய்யலாம்?’ என்று கேட்டான் கணவன்.

‘நீ வேலைக்குப் போற இடத்துக்கு அவனையும் அழைச்சிட்டு போய் நாலு விஷயங்களை கத்துக் கொடுக்கறதுதான் நல்லது.’

‘விறகுவெட்டக் கத்துக் கொடுக்கணும்னு சொல்றியா?’

‘அதுல என்ன தப்பு? மெல்ல மெல்ல பழகினாதான எல்லாத்தயும் கத்துக்க முடியும்.’

‘அதுக்கென்ன இப்ப அவசரம்? அவனால ஒழுங்கா கோடாலியை தூக்கி நிறுத்தமுடியுமான்னு கூட தெரியலை. உடம்புல சக்தி வேணாம? இன்னும் கொஞ்சம் நாள் போவட்டும். பார்ப்போம்.’

ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பேச்சு தொடங்கியது.

‘வயசுப்பிள்ளை இப்படி ஒரு வேலையும் செய்யாம சுத்திட்டு சுத்திட்டு வந்தா, எதிர்காலத்துல எதுக்கும் உருப்படியில்லாம போயிடுவான். நான் சொல்றத கேளு. ஏதாவது ஒரு வேலைக்கு அவனை அனுப்பு. அதுதான் அவனுக்கும் நல்லது. நமக்கும் நல்லது.’

‘அனுப்பலாம். அனுப்பலாம். இரு. கொஞ்ச நாள் போவட்டும்.’

‘பெத்தவளா இருந்தா, இப்படி ஒன்னுத்துக்கும் உதவாதவனா வளர்ப்பாளா? மாத்தாந்தாயா இருந்ததாலதான் இப்படி தறுதலையா வளர்த்திருக்கான்னு எதிர்காலத்துல என்னை யாரும் விரலை நீட்டி சொல்லிடக் கூடாது. அந்த பயத்தாலதான் நான் சொல்றேன். அத நீ புரிஞ்சிக்கணும்.’

‘சரி, அவனை இப்ப என்ன வேலைக்கு அனுப்பலாம். அதையும் நீயே சொல்லு.’

‘எங்கயும் அவன் வேலைக்குப் போவவேணாம். யாருகிட்டயும் கைகட்டி வேலை செய்யவும் வேணாம். இங்க பாரு. நம்மகிட்டயே ஏழு பசுமாடுங்க இருக்குது. அந்த மாடுங்களை தினமும் விளையாட்டா ஏரிப்பக்கமோ, காட்டுப்பக்கமோ, மலையடிவாரத்துக்கோ ஓட்டிட்டுப் போய் மேய்ச்சிட்டு வந்தாவே போதும். அதுவும் ஒரு வேலைதான?’

அவள் எடுத்துச் சொன்ன விதம் அவனுக்கும் ஏற்புடையதாகத் தோன்றியது. ‘சரி, ஏதாவது செய்’ என்று அவளுடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டான்.

அடுத்தநாள் காலையில் அவள் தொழுவத்தில் இருந்த ஏழு பசுமாடுகளையும் அழைத்துவந்து அவனிடம் கொடுத்தாள். ‘ஊருக்கு வெளியில மலையடிவாரத்துல பச்சைப்பசேல்னு நல்ல புல்வெளி இருக்குது. அங்க கொண்டுபோய் மேய்ச்சிட்டு வா’ என்று சொன்னாள். மதிய உணவுக்காக ஒரு பாத்திரத்தில் பழைய சோற்றை நிரப்பிக் கொடுத்து அனுப்பிவைத்தாள்.

மலையடிவாரத்தின் பக்கமாக நல்ல பசுமையான புல்வெளி இருந்தது. அந்தப் புல்வெளியின் பக்கம் பசுக்களை மேய விட்டுவிட்டு, அவற்றின் பின்னாலேயே பாட்டுப் பாடி திரிந்தான். ஒவ்வொரு பசுவுக்கும் அவன் ஒரு பெயர் சூட்டியிருந்தான். அந்தப் பெயரைச் சொல்லித்தான் அவன் அந்தப் பசுவைக் கூப்பிட்டான். எந்தப் பசுவையும் அவன் பசுவாகவே நினைக்கவில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களாகவே அவற்றை அவன் நினைத்தான். ஏழு பசுக்களும் அவனுக்கு ஏழு நண்பர்கள்.

மதிய வேளையில் வெயில் உச்சிக்கு ஏறியதும் பசுக்களை பக்கத்தில் இருந்த குளத்துக்கு அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்கவைத்தான். பிறகு மெதுவாக அவற்றை ஓட்டி வந்து நிழலில் உட்கார்ந்து இளைப்பாறவைத்தான். அதற்குப் பிறகுதான் அவன் தான் கொண்டுவந்திருந்த தூக்குவாளியைத் திறந்தான். தூக்குவாளியில் நிறைந்திருந்த நீராகாரத்துக்குள் கையை விட்டு சோற்றைப் பிசைந்தான். அப்போது அருகில் இளைப்பாறிக்கொண்டிருந்த பசுக்கள் எல்லாம் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தன.

‘என்னங்கடா, சோறு சாப்புடறீங்களா?’ என்று கேட்டான். அவை தலையசைத்ததைப் பார்த்துவிட்டு அவை ஆமாம் என்று சொல்வதாக அவன் நினைத்துக்கொண்டான். ‘ஆகா, உங்களுக்கும் சோறு சாப்பிடணும்ன்னு ஆசை வந்துடிச்சா?’ என்று கேட்டுக்கொண்டே ஏழு பசுக்களுக்கும் நடுவில் சென்று உட்கார்ந்துகொண்டான்.

முதலில் அவன் ஒரு கை நிறைய சோற்றை அள்ளி சாப்பிட்டான். அடுத்து மீண்டும் கை நிறைய சோற்றை அள்ளி முதல் பசுவின் வாய்க்குள் ஊட்டினான். அந்தப் பசு பழைய சோற்றை ருசித்துச் சாப்பிட்டு அசைபோட்டது. இப்படியாக அவனும் ஏழு பசுக்களும் சாப்பிட்டு முடித்தார்கள். அதற்குப் பிறகு அவன் அவற்றுக்கு கதைகள் சொன்னான். அவற்றின் முன்னால் பாட்டுப் பாடி ஆடினான். அவையும் அவன் சொல்வதையெல்லாம் புரிந்துகொண்டதுபோல தலையை உயர்த்தி ம்மே ம்மே ம்மே என்று விதம்விதமாக குரலெழுப்பி உடலைக் குலுக்கின.

அவன் சாப்பிட்ட பழைய சோறு கொஞ்ச நேரத்துக்குக் கூட தாங்கவில்லை. அடுத்து சிறிது நேரத்திலேயே மறுபடியும் பசிக்கத் தொடங்கியது. ஆயினும் சாப்பிட வழி இல்லாத இடத்தில் அதைப்பற்றி நினைப்பதால் ஒரு பயனுமில்லை என்ற எண்ணத்துடன் மெளனமாக பசுக்கள் பின்னால் நடந்துசென்றான்.

அவனுடைய மெளனத்தைக் கொண்டே அவனுடைய மனநிலையை உணர்ந்துகொண்ட ஒரு பசு, அவனுக்குப் பின்னால் வந்து அவனை முட்டி தலையாலேயே தள்ளிக்கொண்டு சென்றது. இன்னொரு பசுவுக்கு அருகில் வந்ததும் அவனைக் கீழே தள்ளியது. அவன் அந்தப் பசுவின் பால்மடிக்கு அருகில் விழுந்தான். அதன் மடியில் பால் குடி என்பதுபோல தன் கொம்பால் அவனை முட்டி முட்டி உணர்த்தியது. முகத்துக்கு அருகில் பால்மடியைப் பார்த்ததும் பசு சொல்லவருவது என்ன என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அடுத்த கணமே அவன் அதன் மடியில் பால் அருந்தத் தொடங்கினான். பால் வயிற்றில் நிறையத் தொடங்கியதும் அவன் பசி அடங்கியது. அதற்குப் பிறகு பசிக்கிற வேளையில் எல்லாம் அவனுக்கு பசுவின் பாலே அமுதமானது.

அவனுக்கு பழைய சோற்றைக் கொடுத்து அனுப்பும் அவனுடைய சித்தி, தன்னுடைய சொந்தப் பிள்ளைக்கு மட்டும் பலவிதமான கறிகளோடு ருசியாக சோறு சமைத்துப் போட்டு, அவன் சாப்பிடுவதை பக்கத்தில் உட்கார்ந்து அழகு பார்த்தாள்.

இரவிலும் அவனுக்கு எல்லோரும் சாப்பிட்டு எஞ்சிய சோறுதான் கிடைத்தது. அவன் எதைப்பற்றியும் எந்தக் குறையும் சொன்னதில்லை. பசி அடங்க ஏதோ ஒரு சாப்பாடு என்பதுதான் அவன் கணக்கு. சாப்பிட்டு முடித்ததும் பசுக்களோடு சேர்ந்து தொழுவத்திலேயே படுத்துக்கொண்டான்.

கஷ்டம் கொடுத்தால் அவனாகவே வீட்டைவிட்டு ஓடிப் போய்விடுவான் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எல்லாக் கஷ்டங்களையும் அவன் சகித்துக்கொள்வதைப் பார்க்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

என்றைக்காவது அவன் மனச்சோர்வில் முகம்சுருங்கி உட்கார்ந்துவிட்டால், ஒவ்வொரு பசுவாக அவனை நெருங்கிவந்து அவன் முதுகில் முட்டும். அவன் தோள்பட்டையை நாவால் நக்கும். எழுந்து வா என்று சொல்வதுபோல ம்மே என்று குரல் கொடுக்கும்.

பழைய சோறு சாப்பிட்டாலும் அவன் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவே இருந்தான். சத்தான உணவுகளைப் பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுத்தாலும் அவள் பெற்ற சிறுவன் எலும்புத் தோற்றத்துடன் குச்சியாகவே இருந்தான். அதைப் பார்க்கப் பார்க்க அவளுடைய எரிச்சல் பலமடங்கு கூடுதலானது. மனத்தில் பொறாமைத்தீ பற்றி எரிந்தது.

அந்தப் பொறாமைத்தீயிலேயே அவள் மனம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வெந்து கொதிப்பேறியது.

அவன் இருபது வயது இளைஞனாக வளர்ந்து நின்றான். ஐந்து வயதில் இருந்த அமைதியைவிட அப்போது இன்னும் கூடுதலான அமைதி அவனிடம் குடிகொண்டிருந்தது. அவன் வீட்டுக்குள் செல்வதே குறைந்துவிட்டது. சாப்பிடுவதற்கு மட்டுமே அவன் வீட்டுக்குள் சென்றான். மற்றபடி பகல் முழுக்க மலையடிவாரத்துப் புல்வெளியிலும் மரத்தடியிலும் இரவு முழுக்க மாட்டுத்தொழுவத்திலும் கழித்தான்.

அவனுடைய வாட்டசாட்டமான தோற்றத்தையும் மகிழ்ச்சியான முகத்தையும் பார்க்கப்பார்க்க அவள் மனச்சங்கடம் பெருகியது. தான் பெற்ற மகன் அதுபோல இல்லையே என்று நினைத்துப் பொறாமைப்பட்டாள். அவனை எப்படியாவது அந்த வீட்டைவிட்டு வெள்யேற்றினால்தான் நிம்மதியாக இருக்கமுடியும் என்று அவள் நினைத்தாள்.

அடுத்தநாள் காலை. கோடாலியை எடுத்துக்கொண்டு சந்தை நடைபெறும் ஊருக்கு விறகு வெட்டுவதற்காக அவன் புறப்பட்டான். அப்போது அவள் கட்டிலிலேயே படுத்துக்கொண்டு வலிப்பதுபோல முனகியபடி இருந்தாள். ஒரு கருப்புத்துணியை எடுத்து நெற்றியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு வலியால் துடிப்பதுபோல நடித்தாள்.

‘ஏன், என்னாச்சி?’ என்று அவளுக்கு அருகில் வந்து கேட்டான் விறகுவெட்டி.

‘தலையே வெடிக்கிற மாதிரி வலிக்குது.’

அவன் அவள் நெற்றியைத் தொடுவதற்காகக் குனிந்தான். ‘ஐயையோ, தொடாதீங்க. வலி தாங்க முடியலை’ என்று கண்ணீர் விட்டு அழுதாள்.

‘சரி, கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ. நான் ஓட்டமா ஓடிப்போய் நாட்டு வைத்தியரை அழைச்சிட்டு வரேன்.’

‘அதெல்லாம் வேணாம், இங்க பக்கத்திலயே இரு.’

‘பக்கத்திலயே நின்னுட்டிருந்தா, எப்படி குணமாவும் சொல்லு. பைத்தியமா நீ?’

‘நான் சொல்றதை கோபப்படாம கேக்கறதா இருந்தா, இத எப்படி குணப்படுத்தறதுன்னு நானே சொல்றேன். இதுக்கு என்ன மருந்துன்னு எனக்கு நல்லா தெரியும்.’

‘என்ன மருந்து, சொல்லு. எங்க இருந்தாலும் தேடிப் பார்த்து வாங்கியாறேன்.’

‘கண்டிப்பா எடுத்துவரேன்னு சத்தியம் பண்ணு. அப்பதான் சொல்வேன்.’

‘உன் தலைவலி நல்லாவறதைவிட வேற எது எனக்கு முக்கியம்? எதை எடுத்துட்டு வரணும்னு சொல்லு. ஒரே ஓட்டமா ஓடிப் போய் எடுத்துட்டு வரேன்.’

‘சத்தியம் பண்ணு.’

‘எதுவா இருந்தாலும், எங்க இருந்தாலும் சத்தியமா எடுத்துட்டு வரேன். போதுமா? சொல்லு. எங்க இருக்குது மருந்து?’

‘உன் பெரிய பையனை கொன்னு, அவனுடைய ரத்தத்தை எடுத்துட்டு வா. அதைக் கொண்டுவந்து என் நெத்தியில பூசு. அப்பதான் என் வலி சரியாவும். இதை நீ செஞ்சா, இங்க உன் கூட நான் இருப்பேன். இல்லைன்னா என் புள்ளைய தூக்கிகிட்டு என் அம்மா வீட்டுக்குப் போயிடுவேன்.’

‘என்ன சொல்ற நீ? கைக்கு உசந்த புள்ள அவன். அவனைப் போய் எப்படி கொல்றது?’

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவனைக் கொன்னு ரத்தத்தை எடுத்துவந்த பிறகு எங்கிட்ட பேசு. இப்ப கெளம்பு.’

என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்த மனைவியை ஒருமுறை அவன் பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சோடு கோடாலியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். அவனுடைய கால்கள் தாமாகவே மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கின. அவனுடைய முதல் மனைவியின் முகமும் மகனுடைய முகமும் மாறி மாறி அவன் நெஞ்சில் எழுந்து மறைந்தன.

கோடாலியோடு நடந்து வந்த விறகுவெட்டியை பசுக்கள்தான் முதன்முதலில் பார்த்தன. அவனுடைய வருகையின் நோக்கத்தை அவை எப்படியோ தம் நுண்ணுணர்வால் புரிந்துகொண்டன. ஒரு அப்பாவாக இருந்துகொண்டு இந்தக் காரியத்தை செய்யத் துணிந்துவிட்டானே என்று நினைத்து அவன் மீது அருவருப்பு கொண்டன. உடனே அந்த மரத்தடியில் நிழலில் உட்கார்ந்திருந்த இளைஞனை அவன் சுலபமாக நெருங்கி விடாதபடி அரண்போல சுற்றி வளைத்துக்கொண்டு நின்றன.

பசுக்களுக்கு அருகில் நெருங்கி வந்த பிறகு விறகுவெட்டி தன் மகனைப் பெயர் சொல்லி அழைத்தான். தன் அப்பா தன்னைத் தேடி மலையடிவாரத்துக்கு வந்திருப்பதை உணர்ந்த அந்த இளைஞன் ஆச்சரியத்தோடும் குழப்பத்தோடும் எழுந்து நின்று பார்த்தான். அவரை நெருங்குவதற்காக அடியெடுத்து வைத்தான். ஆனால் பசுக்கள் அவனை அடியெடுத்து வைத்து விடாதபடி முதுகாலும் கொம்பாலும் முட்டிமுட்டித் தடுத்தன. அவை தன்னைத் தடுக்கவேண்டுமென்றால் ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்பதை அவன் புரிந்துகொண்டு நின்ற இடத்திலேயே நின்றான்.

ஏழு பசுக்களும் ஆக்ரோஷமாக விறகுவெட்டியைப் பார்த்து குரலெழுப்பின. நெருங்கி வந்துவிடாதபடி கொம்பைச் சுழற்றி மிரட்டின. அதைப் பொருட்படுத்தாமல், மகனைக் கொல்லும் ஆவேசத்துடன் கோடாலியை உயர்த்திப் பிடித்தபடி முன்னோக்கி நடந்துவந்தான்.

அக்கணமே ஒரு பசு கண்ணைமூடி கண்ணைத் திறக்கும் வேகத்தில் அவனை நோக்கி அடியெடுத்துவைத்து முன்னால் சென்று தன் கொம்பால் அவனை முட்டித் தள்ளியது. இன்னொரு பசு முன்னேறி வந்து அவன் கால்களை மிதித்தது. மற்றொரு பசு வேகமாக வந்து அவனுடைய தோள் மீது காலால் உதைத்தது. கோடாலி ஒருபக்கம் நழுவிவிழ, அவன் இன்னொரு பக்கம் விழுந்து உருண்டான். நீண்ட கொம்புடைய ஒரு பசு அவனைத் தன் கொம்பாலேயே முட்டிக்கொண்டு சென்று உருட்டிவிட்டது. இன்னொரு பசு காலால் எட்டி உதைத்து தள்ளிவிட்டது. அவன் உருண்டோடி கீழே விழுந்தான். அடுத்த கணமே விறகுவெட்டி மீண்டும் நெருங்கிவிடாதபடி இளைஞனை தன் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு மலை உச்சியை நோக்கி நடந்தது பசு. பிற பசுக்களும் அந்தப் பசுவுக்குப் பாதுகாப்பாக சுற்றிவளைத்தபடி கூடவே நடந்தன.

பசு முட்டி உருட்டிவிட்டதால் ஏற்பட்ட சோர்வும் அவமானமும் விறகுவெட்டியைப் பாடாய்ப் படுத்தின. பசுக்கள் சூழ தன் மகன் தப்பித்துச் செல்லும் திசையையே ஒருவித இயலாமையோடு பார்த்தான். ‘சரி, இதுவும் நல்லதுக்குத்தான்’ என மனத்துக்குள் ஆறுதலாக நினைத்துக்கொண்டான். அப்போதுதான் தன் மனைவி ரத்தம் எடுத்துவரச் சொன்ன கோரிக்கை அவனுடைய நினைவுக்கு வந்தது. மகனே தப்பித்துப் போய்விட்ட பிறகு, ரத்தத்துக்கு என்ன செய்வது என நினைத்துக் குழம்பினான்.

அப்போது அவன் விழுந்துகிடந்த மரத்தைச் சுற்றி இரண்டு அணில்கள் ஓடி விளையாடுவதைப் பார்த்தான். உடனே அவற்றை நோக்கி தன் கோடாலியை வீசினான். கோடாலியின் கூர்மையான பகுதியில் வெட்டுப்பட்டு ஓர் அணில் அந்த இடத்திலேயே இறந்தது. அந்த ரத்தம் கோடாலியின் கூர்மையான பகுதியில் படிந்து சொட்டியது. விறகுவெட்டி இறந்துகிடந்த அணிலை நோக்கி வேகமாகச் சென்றான். தன்னிடம் இருந்த துணியை அணிலின் ரத்தத்தில் தோய்த்து நனைத்தான். பிறகு அத்துணியைப் பாதுகாப்பாக தன் பைக்குள் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் தொலைவில் வரும்போதே அவன் வருகையை உணர்ந்துகொண்ட அவனுடைய மனைவி வேகவேகமாக கட்டிலுக்கு அருகில் சென்று படுத்துக்கொண்டாள். அம்மா அம்மா என்று வலியில் முனகுவதுபோல முனகத் தொடங்கினாள்.

அவளைப் பெயர் சொல்லி அழைத்தபடி வீட்டுக்குள்ளே வந்த விறகுவெட்டி ‘இதோ, நீ கேட்ட ரத்தம். அவனைக் கொன்று எடுத்துவந்துட்டேன்’ என்று ரத்தம் தோய்ந்த துணியை எடுத்து நீட்டினேன்.

‘நீங்களே நெத்தியை சுத்தி கட்டிவிடுங்க. வலி தாங்கமுடியலையே’ என்று கிணற்றிலிருந்து பேசுவதுபோல பேசினாள் அவள். கட்டிலில் அவளுக்கு அருகில் உட்கார்ந்த விறகுவெட்டி ரத்தம் படிந்த துணியை அவளுடைய நெற்றியைச் சுற்றி கட்டினான்.

சில நிமிடங்களிலேயே ‘அப்பாடி, இப்பதான் வலி போச்சி’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள் அவள்.

மலை உச்சிக்கு இளைஞனை அழைத்துச் சென்ற பசுக்கள் அங்கிருந்த ஓர் ஆலமரத்தின் நிழலில் இறக்கிவிட்டது. ஒவ்வொரு பசுவையும் கட்டியணைத்து அதன் நெற்றியில் நன்றியோடு முத்தம் கொடுத்தான் அவன். இனி வீட்டுப்பக்கம் செல்வதில் பொருள் இல்லை என்று அவன் மனம் நினைத்தது. பசுக்களுக்கும் அந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனமில்லை. இந்த பூமியில் வாழ்ந்த காலம் போதும் என அவை நினைத்தன.

ஏழு பசுக்களும் ஒருகாலத்தில் தம் முன்னோர்கள் வாழ்ந்த காமதேனுவின் உலகத்துக்குச் செல்லப் போவதாக அவனுக்கு வெவ்வேறு குரல்மாற்றத்தின் மூலம் உணர்த்தின. ‘கவனமாக இரு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது’ என்று அவனை வாழ்த்தின. பிறகு இரு புல்லாங்குழல்களைப் பரிசாகக் கொடுத்தன.

‘நாங்க வேற உலகத்துல இருந்தாலும் உன்னை எப்பவும் நினைச்சிட்டிருப்போம். நீ எங்களுக்குப் புள்ளை மாதிரி. நீ மகிழ்ச்சியா இருக்கற சமயத்துல இந்தப் புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அந்த இசையைக் கேட்டு நீ சந்தோஷமா இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். நீ துக்கமா இருக்கற சமயத்துல இந்த இன்னொரு புல்லாங்குழலை எடுத்து வாசிக்கணும். அதைக் கேட்டு நீ துன்பத்துல இருக்கறத நாங்க புரிஞ்சிக்குவோம். உன் உதவிக்கு உடனே நாங்க வந்து உன் துன்பத்தைப் போக்குவோம்’ என்று மூத்த பசு சொன்னது.

பிறகு அவனை அந்த ஆலமரத்தடியில் உட்காரவைத்துவிட்டு, அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு தம் உலகத்துக்குச் சென்றன. அவன் அந்த மரத்தடியையே தன் உலகமாக மாற்றிக்கொண்டு வாழ்வதற்குக் கற்றுக்கொண்டான். பசிக்கும் நேரங்களில் மலைப்பகுதியில் இருக்கும் செடிகளிலும் மரங்களிலும் பழுத்துத் தொங்கும் கனிகளைப் பறித்துச் சாப்பிடுவான். எதுவுமே கிடைக்காத நேரத்தில் துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய புல்லாங்குழலை எடுத்து வாசிப்பான். சில நொடிகளில் ஏழு பசுக்களும் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து அவனுக்குத் தன் பாலையே உணவாகக் கொடுத்து பசியாற்றிவிட்டுச் செல்லும். சந்தோஷமான நேரங்களில் அவன் வாசிக்கும் புல்லாங்குழலின் இசையைக் கேட்டு, அவையும் சந்தோஷத்துடன் அவனை நினைத்துக்கொள்ளும்.

ஏறத்தாழ இப்படியே ஒரு ஆண்டுக்கும் மேல் காலம் நகர்ந்துவிட்டது. ஒருநாள் அந்த மலைத்தொடரின் வேறொரு பக்கத்தில் ஆட்சி செய்துவந்த ஒரு சிற்றரசனின் மகள் தன் தோழிகளோடு விளையாடிபடியே அந்த மலையடிவாரத்துக்கு வந்தாள். அங்கே ஒரு கிணறு இருந்தது. விளையாடிய களைப்பில் அனைவரும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அருந்தினர். ஒருத்தி வாளியைச் சாய்த்து நீரை இறைக்க இன்னொருத்தி கைகளைக் குவித்து அந்த நீரை வாங்கி அருந்தினாள். இளவரசி நீரருந்த வந்தபோது அவளுடைய நெருங்கிய தோழி வாளியைச் சாய்த்து நீரை ஊற்றினாள்.

அவள் தண்ணீர் அருந்தும்போது பொன்னிறமான ஓர் இழை குவிந்த கைக்குள் விழுந்ததைப் பார்த்தாள். உடனே தண்ணீர் அருந்துவதை நிறுத்திவிட்டு, அந்தப் பொன்னிழை என்ன என்று பார்த்தாள். அது என்ன என்று யாருக்குமே தெரியவில்லை. எங்கிருந்து பறந்து வந்திருக்கும் என சுற்றுமுற்றும் திரும்பித்திரும்பிப் பார்த்தாள். அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அதைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தம் அரண்மனைக்குத் திரும்பி நடந்தாள். அவளைத் தொடர்ந்து அனைவரும் நடந்தனர்.

சிறிது தொலைவு நடந்த பிறகு ஏதோ ஒரு உள்ளுணர்வின் தூண்டுதலால் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அப்போது அவள் கண்களுக்கு ஆலமரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருக்கும் இளைஞனின் உருவம் தெரிந்தது. அவனுடைய தலைமுடி பொன்னிழைகளைப்போல படிந்திருப்பதையும் பார்த்தாள். அக்கணமே மணந்தால் அவனைத்தான் மணக்கவேண்டும் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தாள்.

வீட்டுக்குச் சென்றதுமே ஒரு கருப்புத்துணியை எடுத்து தன் நெற்றியைச் சுற்றி இறுக்கமாகக் கட்டிக்கொண்டு படுத்துவிட்டாள் இளவரசி. அவள் சோர்ந்து படுத்திருக்கும் செய்தி அப்போதே அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அரசன் அவளுடைய அந்தப்புரத்துக்கு ஓடோடி வந்தான். அரசனுக்கு அவள் ஒரே மகள். தாயில்லாமல் வளர்க்கப்பட்ட செல்ல மகள். அவளை படுக்கையிலிருந்து எழுப்பி உட்காரவைக்க அரசன் மிகவும் முயற்சி செய்தான். ஆனால் அவள் எழுந்திருக்கவே இல்லை.

‘என்னம்மா, உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி படுத்திருக்கே? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. உனக்குத் தேவையானது எங்க இருந்தாலும், அதைக் கொண்டுவந்து உன்கிட்ட சேர்க்கறேன்’ என்றான் அரசன்.

அவள் அதைக் கேட்ட பிறகு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள். ‘நம்ம நாட்டு எல்லைக்கு வெளியே இருக்கிற மலையடிவாரத்துல ஒரு ஆலமரம் இருக்குது. அந்த மரத்து உச்சியில ஒரு இளைஞன் உட்கார்ந்திருக்கான். அவனை நான் பார்த்தேன். அவன் தலைமுடி தகதகன்னு தங்கம் மாதிரி மின்னுது. அவன் ரொம்ப அழகா இருக்கான். அவனை எப்படியாவது எனக்கு கல்யாணம் செஞ்சி வைங்க. நீங்க செஞ்சு வைக்கறேன்னு எனக்கு சத்தியம் செஞ்சாதான், நான் இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பேன்’

‘அவ்ளோதானே? அதுக்கு ஏன் இப்படி அடம் பிடிக்கணும்? இப்பவே ஆளுங்கள அனுப்பி அவனை அழைச்சிட்டு வரச் சொல்றேன். ஒரு இளவரசியே ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லும்போது, வேணாம்ன்னு சொல்றவங்க இந்த உலகத்துல இருக்கறாங்களா என்ன?’

‘அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல எனக்கு நீங்க சத்தியம் பண்ணுங்க. அப்பதான் எனக்கு நம்பிக்கை வரும்.’

‘சத்தியமா அவனை உனக்கு கட்டிவைக்கறேன். போதுமா? எழுந்திரும்மா.’

உடனே அரசன் நம்பிக்கைக்கு உரிய ஏழு வேலைக்காரர்களை அழைத்து விவரத்தைச் சொல்லி ‘அந்த இளைஞனை எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சி உடனடியா அழைச்சிட்டு வாங்க’ என்று கட்டளையிட்டான். வேலைக்காரர்கள் அனைவரும் கூட்டமாக மலையடிவாரத்தை நோக்கிச் சென்றனர்.

அவர்கள் முதலில் அரசன் குறிப்பிட்ட கிணற்றை அடைந்தார்கள். அதற்குப் பின் அந்த ஆலமரத்தை நோக்கிச் சென்றார்கள். உச்சிக்கிளையில் இளைஞன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த பிறகுதான் அவர்கள் நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கினார்கள்.

அந்த இளைஞனை கைதட்டி அழைத்து ‘உன் கூட ஒரு விஷயம் பேசணுமாம். ராஜா உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னாரு’ என்றார்கள்.

‘அதெல்லாம் வரமுடியாது. போங்க’ என்று பதில் சொன்னான் அந்த இளைஞன். அரசனின் அழைப்பை ஒருவன் மறுப்பான் என்பதையே அவர்களால் நம்பமுடியவில்லை. எதை எதையோ சொல்லி கெஞ்சியும் பார்த்தார்கள். ஆனாலும் அவன் இறங்கி வரவில்லை. அவனைப் பிடிப்பதற்காக அந்த மரத்தின் மீது ஏறத் தொடங்கினார்கள்.

அதைப் பார்த்ததும் துன்ப நேரங்களில் இசைக்கும் புல்லாங்குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான் இளைஞன். அந்த இசை விண்ணுலகத்தில் இருக்கும் பசுக்களுக்குக் கேட்டது. தம் மகன் ஏதோ சிக்கலில் இருக்கிறான் என்பதை அவை புரிந்துகொண்டன.

அக்கணமே ஏழு பசுக்களும் கூடி ஆலமரத்தை நோக்கி வந்தன. அரசனின் பணியாட்கள் இளைஞனிடம் வம்பு செய்துகொண்டிருப்பதைப் பார்த்தன. உடனே அந்த ஆட்களோடு அவை மோதின. தம் கொம்புகளால் அவர்களை முட்டி கீழே தள்ளின. அவர்கள் தரையில் விழுந்து உருண்டார்கள். திடீரென நிகழ்ந்த தாக்குதலால் திகைத்த வேலைக்காரர்கள் அக்கணமே தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் அரண்மனைக்கு ஓடினார்கள். பசுக்கள் எல்லாம் கூடி இளைஞனுக்கு ஆறுதல் கூறின. அவன் பசிக்கு பால் கொடுத்துவிட்டு, விண்ணுலகத்துக்கு விடைபெற்றுக்கொண்டு சென்றன.

அரண்மனைக்கு ஓடிய வேலைக்காரர்கள் அரசனிடம் நடந்த விவரங்களையெல்லாம் சொன்னார்கள். ‘இது என்ன, விசித்திரமா இருக்குதே’ என்று குழம்பினான் அரசன்.

பிறகு முப்பது பேரை அழைத்துக்கொண்டு அவனே நேரில் அந்த இடத்துக்குச் சென்றான். அவர்கள் கூட்டமாக தன்னை நோக்கி வருவதை மர உச்சியிலிருந்து இளைஞன் பார்த்துவிட்டான். உடனே வழக்கம்போல துன்பத்தில் இருக்கும்போது வாசிக்கவேண்டிய குழலை எடுத்து இசைக்கத் தொடங்கினான். உடனே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் அந்த இடத்துக்கு விரைந்துவந்தன. ஒரு சிறிய படையே தன் மகனை எதிர்ப்பதற்குத் திரண்டு வருவதைப் பார்த்த பசுக்கள் அவர்களை எதிர்கொண்டன. ஒவ்வொருவரையும் கால்களால் உதைத்து கீழே உருட்டிவிட்டன. கொம்பால் முட்டி காயப்படுத்தின. அந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அரசனின் படை வேறு வழியில்லாமல் பின்வாங்கி அரண்மனைக்குத் திரும்பியது.

அரசன் தோல்வியோடு அரண்மனைக்குத் திரும்பிவந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இளவரசி நிராசைக்குள்ளானாள். மனவேதனையுடன் எழுந்திருக்க விருப்பமில்லாமல் படுக்கையிலேயே படுத்திருந்தாள். அந்தச் செய்தியை அறிந்த அரசனின் மனம் துயரத்தில் மூழ்கியது.

அந்தப் பிரச்சினையை எப்படி கையாள்வது என்று புரியாமல் இரவு முழுதும் தூக்கமின்றி அரண்மனைத் தோட்டத்தில் உட்கார்ந்தபடி யோசனையில் மூழ்கியிருந்தான் அரசன்.

அப்போது பொழுது விடிந்தது. சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையைத் தொடும் முன்பே தோட்டத்தில் இருந்த மரங்களில் காகங்கள் கூடி கரையும் சத்தம் எழுந்தது. வானத்திலும் சில காகங்கள் கூட்டம்கூட்டமாகப் பறந்து செல்வதைப் பார்த்தான். காகங்களின் காட்சியும் அவற்றின் சத்தமும் அச்சமயத்தில் அவனுக்கு ஆறுதலாக இருந்தன.

‘இறைவனுடைய படைப்புல நீங்க எல்லாம் ரொம்ப கொடுத்து வச்ச உயிரினம். எந்தத் துயரமும் இல்லாம ரொம்ப ஆனந்தமா இருக்கீங்க. என்னை மாதிரி எந்தக் கஷ்டமும் உங்களுக்கு இல்லை’ என்று மனத்துக்குள் நினைத்து பெருமூச்சுவிட்டான்.

அப்போது அவன் முன்னால் ஒரு காகம் வந்து உட்கார்ந்து அவனை நோக்கி குரல் கொடுத்தது. முதலில் அந்தச் சத்தத்தை அரசன் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. தொடர்ச்சியாக அந்தக் குரல் எழுந்ததும் ஆர்வத்துடன் அந்தக் காக்கையின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அந்தக் காக்கை தன்னை நோக்கித்தான் தலையை அசைக்கிறது என்று நினைத்துக்கொண்டு அதைப் பார்த்து புன்னகைத்தான்.

உடனே அந்தக் காக்கை அரசனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தது. அரசனின் மனம் வியப்பில் மூழ்கியது. ‘அரசே, உனக்கு என்ன கவலை? என்னிடம் சொல். என்னால் முடிந்த உதவியை உனக்குச் செய்கிறேன்’ என்று சொன்னது.

தன்னோடு பேசும் காக்கையைப் பார்த்து அவனுடைய ஆச்சரியம் பல மடங்காகப் பெருகியது. எல்லாம் கடவுளின் கருணை என நினைத்துக்கொண்டு மனத்துக்குள்ளேயே கடவுளுக்கு நன்றி சொன்னான். நடந்த விஷயங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் அந்தக் காக்கையிடம் விரிவாகச் சொன்னான் அரசன்.

‘அவன்கிட்ட அதிசயமான ஒரு புல்லாங்குழல் இருக்குது. எங்களைப் பார்த்ததும் அவன் அதை எடுத்து வாசிச்சான். உடனே எங்கிருந்தோ பெரிய பெரிய கொம்பு இருக்கிற பெரிய பெரிய பசுக்கள் ஆகாயத்துலேர்ந்து வந்து எங்களை முட்டி மோதி விரட்டியடிச்சிடுச்சி. அந்தப் புல்லாங்குழலை அவன்கிட்டேர்ந்து எப்படியாவது எடுத்துட்டோம்ன்னா, அவனை ரொம்ப சுலபமா நம்ம வழிக்குத் திருப்பிடலாம்.’

அதைக் கேட்டதும் ‘கவலைப்படாதே. என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது காக்கை. அரசனும் தன் தினசரி வேலைகளைப் பார்க்க நிம்மதியாக அரண்மனைக்குத் திரும்பினான்.

அரசன் குறிப்பிட்ட மலையடிவாரத்துக்குப் பறந்துசென்ற காக்கை, அங்கிருந்த ஆலமரத்தையும் அதன் உச்சியில் உட்கார்ந்திருந்த இளைஞனையும் பார்த்தது. ஒருகணம் அவன் அழகைப் பார்த்து ரசித்தது. ‘இப்படிப்பட்ட அழகன் மேல இளவரசி ஆசைப்பட்டதுல ஆச்சரியமே இல்லை’ என்று நினைத்துக்கொண்டது. அவன் உட்கார்ந்திருந்த கிளைக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு கிளைக்குச் சென்று சத்தம் காட்டாமல் அமர்ந்து அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தது.

அப்போது அவன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புல்லாங்குழலை இசைத்துக்கொண்டிருந்தான். அந்த இனிய இசை மயக்கம் தருவதாக இருந்தது. அந்த இசையில் மயங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்த காக்கைக்கு சில கணங்களுக்குப் பிறகுதான் தான் வந்த வேலை நினைவுக்கு வந்தது. ‘ஓ. இந்தப் புல்லாங்குழலை வச்சிகிட்டுதான் ஆகாயத்துலேர்ந்து பசுக்களை வரவழைக்கிறியா?’ என்று நினைத்துக்கொண்டு மெல்ல அவனுக்கு அருகில் பறந்துவந்து சட்டென அந்தக் குழலை தன் அலகால் கவ்விக்கொண்டு பறந்துபோனது.

சற்றும் அதை எதிர்பார்க்காத இளைஞன் அதிர்ச்சியில் மூழ்கினான். இப்படி ஏமாந்துவிட்டோமே என நினைத்து துயரத்தில் மூழ்கினான். சிறிது நேரம் என்ன செய்வது என்றே அவனுக்குப் புரியவில்லை. குழப்பத்தோடு அந்தக் காக்கை பறந்துபோன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகுதான் அவனுக்கு துன்பத்தில் இருக்கும்போது இசைக்கத்தக்க இன்னொரு குழலின் நினைவு வந்தது. உடனே அதை எடுத்து இசைக்கத் தொடங்கினான். அடுத்த கணமே விண்ணுலகத்திலிருந்து ஏழு பசுக்களும் இறங்கி வந்தன. ‘என்ன மகனே, என்ன துன்பம்?’ என்று கேட்டன. அவன் நடந்த செய்தியையெல்லாம் அவற்றிடம் சொன்னான்.

‘போகட்டும் விடு. நடந்ததை நெனச்சி கவலைப்படாதே. உனக்கு இன்னொரு புல்லாங்குழல் தரேன்’ என்று பசுக்கள் ஆறுதல் கூறின. புத்தம்புதிதாக இன்னொரு குழலை வரவழைத்து அவனிடம் அளித்தன. பிறகு அவனோடு சிறிது நேரம் கொஞ்சியிருந்துவிட்டு விண்ணுலகத்துக்குத் திரும்பின.

புல்லாங்குழலை எடுத்துச் சென்ற காக்கை அரண்மனைக்குச் சென்று அரசனிடம் கொடுத்தது. அரசன் அந்தக் காக்கைக்கு பலமுறை நன்றி சொன்னான். ‘கவலைப்படாதே அரசே. எந்த சமயத்தில் உனக்கு உதவி தேவைப்பட்டாலும் என்னை ஒரு நொடி நினைச்சிக்கோ. நான் வந்து என்னால முடிஞ்ச உதவியைச் செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்துபோனது. இனி, இளைஞனை வசப்படுத்தி அழைத்துவருவது எளிதான விஷயம் என நினைத்தான் அரசன்.

அடுத்தநாள் காலையில் ஏற்கனவே மலையடிவாரத்துக்குச் சென்று திரும்பிய வீரர்களை அழைத்து அந்த இளைஞனை அழைத்துவரும்படி சொன்னான். அவர்கள் அங்கு செல்லவே அஞ்சினர். ‘ஐயோ, அங்க அந்தப் பசுக்கள் வந்து முட்டுமே’ என்று நடுங்கிக்கொண்டே சொன்னார்கள். ‘அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. நான் சொல்றத நம்புங்க. போய் அழைச்சிட்டு வாங்க’ என்று அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தான்.

காலையில் சென்ற வீரர்கள் அனைவரும் மாலையில் காயங்களோடு ஓடிவந்து அரசன் முன்னால் நின்றார்கள். ‘நீங்க போ போன்னு சொன்னதால நாங்க கெளம்பிப் போனோம். நீங்க வரவே வராதுன்னு சொன்ன பசுக்கூட்டம் இந்த முறையும் வந்துடுச்சி. எங்களையெல்லாம் முட்டிமுட்டி விரட்டியடிச்சிடுச்சி. அந்த இளைஞன் ரொம்ப கெட்டிக்காரனா இருக்கான். அவன்கிட்ட ஏதோ மந்திரம் இருக்குது. ஒரு புல்லாங்குழல எடுத்து ஊதினா, எல்லாமே நடக்குது’ என்று முறையிட்டார்கள்.

அவர்களை அனுப்பிவிட்டு தனிமையில் உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசனையில் மூழ்கினான் அரசன். அவனுடைய புல்லாங்குழலை காக்கை எடுத்துவந்த பிறகு இன்னொரு புல்லாங்குழல் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று நினைத்துக் குழம்பினான்.

அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எப்படி என பல கோணங்களில் யோசித்துப் பார்த்தான். ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் காக்கையிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என முடிவு செய்தபடி அதை மனத்துக்குள் நினைத்து தியானித்தான். அடுத்து சில கணங்களிலேயே அவனுக்கு எதிரில் கா கா என கரைந்தபடி காக்கை தோன்றியது.

‘துக்கத்துக்கு என்ன காரணம்? இன்னும் பிரச்சினை ஓயவில்லையா?’ என்று கேட்டது. அரசன் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் காக்கையிடம் பகிர்ந்துகொண்டான்.

காக்கை எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் யோசித்தது. ‘ஏதோ ஒரு பிழை நடந்திருக்குது. ஒரு ரெண்டுநாள் பொறுத்துக்கோ. நானே கண்டுபிடிச்சி சரி செய்றேன்’ என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.

இளைஞன் உட்கார்ந்திருந்த ஆலமரத்தின் வேறொரு கிளையில் சத்தம் காட்டாமல் அமர்ந்தபடி அவனுடைய நடவடிக்கைகளை ஒன்றுவிடாமல் கவனிக்கத் தொடங்கிது காக்கை. நாலைந்து நாட்கள் அவனைக் கவனிக்கும் வேலை நீடித்தது. அப்போதுதான் அவனிடம் இரண்டு புல்லாங்குழல்கள் இருப்பதையும் துக்கமான நேரத்தில் இசைக்க ஒரு குழலையும் மகிழ்ச்சியான சமயத்தில் இசைக்க இன்னொரு குழலையும் அவன் மாறிமாறிப் பயன்படுத்தும் ரகசியத்தையும் அது கண்டுபிடித்தது. கடந்த முறை குழலை எடுக்கும்போது என்ன பிழை நடந்தது என்பதை காகத்துக்கு உடனடியாகப் புரிந்துவிட்டது. மேலும் ஒரு நாள் காத்திருந்து அவன் மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக இளைஞன் மகிழ்ச்சிக்குழலை இசைத்துக்கொண்டிருந்த சமயத்தில், சந்தடி காட்டாமல் அவனுக்கு அருகில் சென்று, அவன் தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த துன்பக்குழலைக் கவ்விக்கொண்டு பறந்துசென்றது.

விண்ணுலகத்திலிருந்த பசுக்கள் இளைஞனின் இன்பக்குழலின் இசையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தன. தன் மைந்தன் நலமாகவே இருக்கிறான் என நினைத்து மகிழ்ச்சியடைந்தன.

குழலின் இசையில் தன்னை மறந்து கண்ணை மூடி லயித்திருந்த இளைஞன் நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் கண்களைத் திறந்தான். சிறிது நேரத்துக்குப் பிறகுதான் தனக்கு அருகில் வைத்திருந்த துன்பக்குழலைக் காணவில்லை என்பதை அவன் உணர்ந்தான். கீழே எங்காவது விழுந்திருக்குமோ என அவனுக்கு சந்தேகம் வந்தது. மரத்திலிருந்து இறங்கிவந்து தரையெங்கும் தேடிப் பார்த்தான். கிடைக்கவில்லை. கிளையிடுக்குளில் சிக்கியிருக்குமோ என்ற சந்தேகத்துடன் ஒவ்வொரு கிளையாக ஏறி நின்று மீண்டும் தேடிப் பார்த்தான். அங்கும் கிடைக்கவில்லை. மனமுடைந்து மரத்திலிருந்து கீழே இறங்கிவந்தான்.

புதையலைப்போல தனக்குக் கிடைத்த அபூர்வமான குழலைத் தொலைத்துவிட்டோமே என அவன் மனம் துயரத்தில் மூழ்கியது. தான் குழலைத் தொலைத்த செய்தியை எப்படியாவது தன் பசுக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என நினைத்தான். ஆனால் தன்னிடம் துன்பக்குழல் இல்லாத நிலையில் அச்செய்தியைத் தெரிவிப்பது எப்படி எனப் புரியாமல் குழம்பினான். பித்துப் பிடித்தவனைப்போல மகிழ்ச்சிக்குழலை எடுத்து மீண்டும் மீண்டும் இசைத்தான் அவன். விண்ணுலகத்தில் இருந்தபடி அந்த இசையின் நாதத்தைக் கேட்ட பசுக்கள் தன் மைந்தன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பதைத் தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு அவையும் மகிழ்ச்சியில் திளைத்தன.

அப்போது தொலைவில் அரசன் அனுப்பிய ஆட்களின் கூட்டமொன்று ஆலமரத்தை நெருங்கிவருவது தெரிந்தது. அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் அவன் மரத்தடியிலேயே அமைதியாக நின்றான். அவனை நெருங்கிவந்த அரசனின் ஆட்கள் அவனைத் தூக்கி ஒரு சிம்மாசனத்தில் உட்காரவைத்து, அதைத் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி நடந்துசென்றனர். கடுமையான தாக்குதலை எதிர்பார்த்திருந்த அவன் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தபடி அரண்மனையின் வாசலிலேயே அரசன் நின்றிருந்தான். ‘வருக வருக’ என இளைஞனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.

அந்தப்புரத்திலிருந்த இளவரசியை தோழிகள் அழைத்துவந்தனர். அவளுக்கும் அவனுக்கும் அரசன் திருமணம் செய்துவைத்தான். அங்கிருந்த அவைப் பெரியவர்கள் அவனை மகிழ்ச்சியோடு வாழ்த்தினர்.

ஆசைப்பட்ட கணவன் கிடைத்ததை ஒட்டி இளவரசி மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். ஆனால் அந்த இளைஞனால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியவில்லை. அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என அவன் விரும்பினான். ஆனால் அதற்குச் சரியான வழி தெரியாமல் தவித்தான்.

ஒரு மாதம் கழிந்தது. அந்த இளைஞன் முகம் மலரவே இல்லை. குழல் இசைப்பதையும் விட்டுவிட்டான். ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்துக்குச் சென்று நெடுங்காலமாக தான் தங்கியிருந்த ஆலமரத்துக்கு அடியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவான். அவனிடம் மகிழ்ச்சிக்குழல் மட்டுமே இருந்தது. மகிழ்ச்சியே இல்லாத அத்தருணத்தில் அக்குழலை எடுத்து இசைக்க அவன் மனம் விரும்பவில்லை. அமைதியாக உட்கார்ந்திருப்பான். தன் அன்புக்குரிய பசுக்கள் எங்காவது தென்படுகிறதா என அங்குமிங்கும் தேடிப் பார்ப்பான். பிறகு ஏமாற்றத்தோடு திரும்பிவிடுவான்.

இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது. துயரம் படிந்த இளைஞனுடைய முகம் மலரவே இல்லை. இளவரசியோடு முகம் கொடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று அவள் கேட்டாலும் அவன் ஒரு பதிலும் சொல்வதில்லை.

ஒருநாள் அவன் வழக்கம்போல காலை உணவுக்குப் பிறகு மலையடிவாரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போது அவனுக்குத் தெரியாமல் அந்த இளவரசியும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள்.

விண்ணுலகத்தில் வசித்துவந்த பசுக்களும் இளைஞனிடமிருந்து ஒரு செய்தியும் இல்லையே என நினைத்து குழப்பத்தில் மூழ்கியிருந்தன. இன்பக்குழலின் இசையும் வரவில்லை, துன்பக்குழலின் இசையும் வரவில்லை என்பதால் ஏதோ ஒரு சிக்கலில் அவன் சிக்கியிருப்பதாக அவை நினைத்தன. எதுவாக இருந்தாலும் ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம் என நினைத்து அதே நாளில் அவையும் பூமிக்கு வந்து சேர்ந்தன.

வழக்கமாக இளைஞன் உட்கார்ந்திருக்கும் மரக்கிளையில் அவன் காணவில்லை. ஆலமரத்தைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் அவனைத் தேடிப் பார்த்தன பசுக்கள். எங்கும் அவன் தென்படவில்லை. ஆளுக்கு ஒருபக்கம் நடந்து சென்று தேடிப் பார்க்கலாம் என முடிவெடுத்து ஒவ்வொரு பசுவும் ஒவ்வொரு பக்கம் நடந்துசென்றது.

மலையடிவாரத்தை நோக்கி வந்த இளைஞன் மரத்தை நெருங்கிவரும் சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஒரு பசுவைக் கண்டான். தன் குழலோசை கேட்காமல் விண்ணுலகத்திலிருந்து தம் பசுக்கள் பூமிக்கு வர வாய்ப்பே இல்லை என நினைத்து முதலில் அப்பசுவை அவன் பொருட்படுத்தாமல் நடந்து போய்க்கொண்டே இருந்தான். சிறிது தொலைவு சென்ற பிறகுதான் தோற்றத்தில் தன் பசுவைப்போலவே அப்பசுவும் காணப்பட்டதால் ஒரு சின்ன சந்தேகத்துடன் நின்றான்.

ஒரு காலத்தில் பசுக்களை அழைக்க வழக்கமாக எழுப்பும் ஓசையை எழுப்பி அதை அழைத்தான். அவன் அழைப்புக்குரலைக் கேட்டதும் அந்தப் பசு திரும்பிப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டது. உடனே ஓடோடி வந்தது. அவனும் அதை நோக்கி ஓடினான். அதன் கழுத்தைப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டான். அதன் முதுகில் ஏறிப் படுத்தான். ம்மே ம்மே என வெவ்வேறு விதமாக குரலெழுப்பி அவனும் பசுவும் கொஞ்சினர். மறைவிடத்திலிருந்து அக்காட்சியைப் பார்த்த இளவரசி ஆச்சரியத்தில் உறைந்துபோனாள். முதன்முறையாக அந்த இளைஞன் முகம் மலர்ந்திருப்பதை அவள் பார்த்து மகிழ்ந்தாள். அவள் விழிகளிலிருந்து ஆனந்தக்கண்ணீர் வடிந்தது.

அந்தப் பசு எழுப்பிய குரலைக் கேட்டதும் வெவ்வேறு திசைகளில் அவனைத் தேடிக்கொண்டிருந்த பிற பசுக்களும் அந்த இடத்தை நோக்கி ஓடிவந்தன. இளைஞனைப் பார்த்ததும் அவையும் மகிழ்ச்சியில் துள்ளின. ஒவ்வொன்றும் ஓடிவந்து அவனை முட்டி தன் ஆனந்தத்தைத் தெரிவித்தது. ஏழு பசுக்களிடையில் அவன் ஒரு சிறுவன் போல மகிழ்ச்சியோடு நின்றிருந்தான்.

கொஞ்சல் எல்லாம் முடிந்த பிறகு அப்பசுக்களிடம் தன்னிடமிருந்த துன்பக்குழல் தொலைந்துபோன செய்தியைத் தெரிவித்தான் அவன். குழல் இசைக்காமல் போனதற்கு அதுதான் காரணம் என்றும் தெரிவித்தான். ‘கவலைப்படாதே’ என்று சொன்ன ஒரு பசு அவனுக்கு புதியதொரு குழலைக் கொடுத்தது. ‘இனிமேல் நீ இதையே துன்பக்குழலா பயன்படுத்தலாம்’ என்று தெரிவித்தது. ஒரு பெரிய புதையலைப் பெற்றுக்கொள்வதுபோல அவன் அக்குழலைப் பெற்றுக்கொண்டான்.

இளைஞனும் பசுக்களும் உரையாடலில் மூழ்கியிருந்த நேரத்தில் இளவரசி தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தாள். பசுக்களின் முன்னால் தோன்றி வணங்கினாள். இளைஞன் அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நடந்த விஷயங்களையெல்லாம் பசுக்களிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, அவளை பசுக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தினான்.

அவனுடைய குழல் தொலைந்துபோனதற்கு தானும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்துவிட்டதாகத் தெரிவித்து இளைஞனிடமும் பசுக்களிடமும் மனமார மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் அவள்.

‘அவன் மேல நான் வச்ச ஆசைதான் எல்லாத்துக்கும் காரணமே தவிர, எனக்கு வேற எந்த கெட்ட நோக்கமும் இல்லை.’

அவளுடைய முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்த காதலை அந்த இளைஞனும் புரிந்துகொண்டான். அந்தப் பசுக்களும் புரிந்துகொண்டன.

‘நூறாண்டு காலம் மாறாத அன்போடு நீடித்து வாழ்க’ என இருவரையும் பசுக்கள் வாழ்த்தின. இருவரும் பசுக்களின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.

‘குழல்களை பத்திரமா வச்சிக்கோ. எப்ப வேணும்ன்னாலும் எங்களை நீ கூப்பிடலாம்’ என்று சொல்லிக்கொண்டே விடைபெற்று ஆகாயத்தில் பறந்துசென்றன.

பசுக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய பிறகு இளவரசியும் இளைஞனும் வெகுநேரம் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து கதை பேசினார்கள். இளைஞன் தன் கதையை முழுமையாக அவளுக்கு விரிவாகச் சொல்லத் தொடங்கினான். பொழுது சாயும் வரைக்கும் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குப் பிறகு இருவரும் அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #9 – இரண்டு புல்லாங்குழல்கள் appeared first on கிழக்கு டுடே.

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் (திருக்குறள் 484)

தகுதியான காலத்தை ஆராய்ந்து, அதனை ஏற்ற இடத்திலும், உலகத்தையே வென்று கைக்கொள்ள நினைத்தாலும் அது இயலும் செயலே

அதிர வைத்த குண்டுகள்

1941ஆம் ஆண்டு, திசம்பர் திங்கள் 8 ஆம் நாள். அதிகாலை 4 மணி அளவு.

சிங்கப்பூர் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

யப்பானிய விமானங்கள் காகிதத்தினால் செய்தவை என்று சிங்கப்பூரில் இருந்த பிரிட்டானியப் படைத் தலைமை சொல்லிக் கொண்டிருந்தது என்று பார்த்தோம். அந்தக் ‘காகித விமானங்கள்’ வீசிய குண்டுகள் தட், தட்டென்று சிங்கப்பூரில் விழுந்தன! யப்பானியர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்தபோதும், தென்கிழக்காசியப் பகுதியின் தலைமைத்தளமாக அப்போது இருந்த சிங்கப்பூரின் காலனி நிர்வாகமோ, அங்கிருந்த பிரித்தானியப் படைகளோ எந்த வித ஆயத்தமோ, பயிற்சிகளோ கொண்டிருக்கவில்லை. ஆனால் இரண்டாவது உலகப் போரைத் தொடங்கிய ‘அச்சு நாடுகளின்'[1] முக்கியக் கூட்டாளியான யப்பானியர்களோ, தென்கிழக்காசியாவுக்கான தெளிவான திட்டமும், தீர்க்கமான தளபதிகளையும் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது உலகப் போரை செருமனி தொடங்கினாலும், அதன் முக்கியக் கூட்டாளிகளாக இத்தாலியும் யப்பானும் இருந்தன. இரண்டாவது உலகப் போரின் தொடக்கம் செருமனி போலந்தைக் கைப்பற்றியதன் மூலமே தொடங்கியது; யப்பான், தென்கிழக்காசியாவில் இந்த மூக்கூட்டணியின் பங்காளிப் பங்கை ஆற்றியது.

ஆக்கிரமிப்புத் தாக்குதலின் முக்கியப் பங்களிகளான இத்தாலிலியும், செருமனியும் பல கூட்டு ஒப்பந்தங்களை அறிவித்திருந்தன. இரண்டு நாடுகளின் தலைநகர்களான ரோம், பெர்லின் ‘இணைந்த அச்சின்’ இயக்கத்தில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே போரைத் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு நாடுகள் அச்சு நாடுகள் (Axis Countries) என்று அழைக்கப்பட்டன. இந்தத் தாக்குதலைச் சமாளித்து ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்த பிரித்தானியா,பிரான்சு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்த நாடுகள் (Allied Countries) என்று அழைக்கப்பட்டன.

’1941ஆம் ஆண்டு 8 ஆம் நாள் காலை 4 மணிக்கு இராபிஃல்சு பள்ளியின் ஈ பிளாக் விடுதியில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, மந்தமான ஆனால் அழுத்தமாகத் தட்டென்று கேட்ட குண்டு வெடிப்புச் சத்தம் என்னை எழுப்பியது. யப்பானோடு சண்டை தொடங்கிவிட்டது. அந்தக் குண்டுவீச்சு எதிர்பார்த்திருக்காத, வியப்பளித்த ஒன்றாக இருந்தது. தெரு விளக்குகளோ இன்னும் ஒளிர்ந்துகொண்டு இருந்தன! (போரை, தாக்குதலை எதிர்பார்த்திருக்கும் நாடு பொதுவாக இரவுகளில் விளக்குகளை அணைத்து விடும். அதனைக் குறிப்பிட்டே எந்த அளவு மெத்தனமாக சிங்கப்பூர் காலனி நிருவாகம் இருந்தது என்று சுட்டவே இதனைக் குறிப்பிடுகிறார் லீ க்வான் யூ) அந்தக் குண்டுகள் சிங்கப்பூரில் வீசப்படும் வரை, வான் தாக்குதலை எதிர்பார்த்துச் செய்யப்படும் அபாயச் சங்குகள் ஏதும் ஒலிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அந்தக் குண்டுவீச்சு 60 பேர்களைக் கொன்றிருந்தது; 130 பேர்களைக் காயப்படுத்தியிருந்தது; சிங்கப்பூரின் பிரித்தானிய காலனி நிர்வாகம் அந்த குண்டுவீச்சுத் தாக்குதலைப் பற்றி மிகவும் அடக்கி வாசித்தது.’ என்று அப்போது இராபிஃல்சு பள்ளியில் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த லீ க்வான் யூ, பின்னாட்களில் தனது ‘தி சிங்கப்பூர் சுடோரி’ (The Singapore Storey) நூலின் மூன்றாவது அத்தியாயத்தில்,[2] சிங்கப்பூரின் மீது நடந்த யப்பானியக் குண்டுவிச்சு பற்றிப் பதிவு செய்திருக்கிறார்.

எதிர்பாரா புதுவரவு- தளபதி யமாசிட்டா

தெற்கு நோக்கி முன்னேறும் யப்பானியப் படைகளைச் சமாளிக்க இயலாத பிரித்தானியத் துருப்புகள், தென்கிழக்காசியப் பகுதிகளில் இருந்த நிலைகளை விட்டுவிட்டு சிறிது சிறிதாகப் பின்வாங்கி, கப்பற்படைத் தளத்தையும், மூன்று விமான இறங்குமிடங்களையும் கொண்டிருந்த தென்கிழக்காசியப் பகுதியின் பிரித்தானியத் தலைமையகமான சிங்கப்பூரை அடைகின்றன. ஆனால் சிங்கப்பூரின் கப்பற்படைத் தளத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பிரித்தானிய வீரர்கள், போர் அனுபவமோ, போதுமான பயிற்யோ, களத்தின் தீரமோ இல்லாதவர்களாக இருந்தார்கள்.

இலண்டன் நிருவாகம் சிங்கப்பூரைக் காக்கவும், சிங்கப்பூர் படைகளுக்கு உதவவும் அனுப்பிய இரிப்பல்சு, பிரின்சு ஆஃப் வேல்சு (Ripples , Prince of Wales) என்ற இரண்டு போர்க்கப்பல்களும் யப்பானிய விமானங்களால் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. மலாயாத் தீபகற்பத்தைத் தாண்டி யப்பானியர்கள் மேலும் மேலும் முன்னேறி சிங்கப்பூரை நோக்கி வருகின்றனர். ’அவர்கள் தளவாடங்கள், மோட்டார் வண்டிகள் போன்றவற்றில் வரத் தாமதமாகும்; அவர்கள் வருவதற்கான சரியான வழி இல்லை’ என்று சிங்கப்பூரில் இருந்த காலனி நிர்வாகப் படை நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தே பார்த்திராத ஒன்று நடந்தது. யோகர் ஆற்றின் மறுகரையில் இருந்த காடுகளை ஊடறுத்துக் கொண்டு வந்த யப்பானியப் படை மிதிவண்டிகளில் சாரிசாரியாக யோகர் பாலத்தைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தது !!! (பார்க்க படம்) [3]

சிங்கப்பூருக்குள் நுழைந்த யப்பானியப் படைக்குத் தலைமை வகித்தவர் தளபதி யமாசிட்டா (Yamashitta). அவர்கள் அதிகமான வீரர்களுடனும், மிதிவண்டிகளில் மிகக் குறைந்த போர்த்தளவாடங்களோடும் பயணித்து வருவார்கள் என்று சிங்கப்பூரில் இருந்த காலனிப் படை நினைத்தும் பார்க்கவில்லை. வியப்பின் கூறோடு, சிங்கப்பூருக்குள் நுழைந்த யப்பானியப்படையின் முன்னர் ‘உலகின் வெல்லப்படமுடியாத’ நாட்டின் படையான பிரித்தானியப்படையால் ஏழு நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்க இயலவில்லை. சிறிது கூட அணியமற்று இருந்த பிரித்தானிய சிங்கப்பூர் காப்புப் படையும், கப்பற்தளமும் யப்பானியர்களிடம் ஏழாவது நாள் வீழ்ந்தது. ஏழுநாள் நடந்த கடுமையான, ஆனால் சிறிதும் நம்பிக்கை இல்லாத சண்டைக்குப் பிறகு பிரித்தானியப் படையின் தளபதியான ஏ.இ. பெர்சிவல், யப்பானியப் படைத் தளபதியான யமாசிட்டாவிடம் சரணடைந்தார். அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது அச்சம்; தீவில் இருந்த குடிநீர் தீர்ந்து போய்விடும் என்ற அச்சம்! நீரின்றிச் சாக விரும்பாத அவர்கள் 1942ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள், சீனப் புத்தாண்டின் முதல்நாள் சரணடைந்தார்கள். ஏழு நாட்களுக்குள் சிங்கப்பூரைப் பிடித்தது யப்பான்.

அகமும் முகமும் மாறியதே…

சிங்கப்பூரின் பெயர் சோனான் என்று யப்பானிய மொழியில் மாற்றப்பட்டது. அதன் பொருள் தெற்கின் ஒளி என்பது. ஆனால் சிங்கப்பூர் சந்தித்ததோ மறக்கவியலாததொரு கொடுங்கனவு. சிங்கப்பூரின் கடிகாரங்கள் தோக்கியோ நேரத்துக்குத் திருத்தி அமைக்கப்பட்டன. காலனித்துவ ஆக்கிரமிப்பிலிருந்து சக ஆசியர்களை மீட்க வந்தவர்களாக யப்பானியர்கள் தங்களை வரித்துக் கொண்டார்கள். அவ்வாறே அறிவிக்கவும் செய்தார்கள். ஆனால் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த சுமார் நான்காண்டுகளில் சிங்கப்பூர் குடிமக்கள் கொடும் சித்திரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. சீன இனத்தைச் சேர்ந்த வசதி மிக்க வணிகர்கள், போருக்கு முன்பாக யப்பானுக்கும், யப்பானிய முயற்சிகளுக்கும் எதிராகச் செயல்பட்டார்கள் என்பதை அந்தப் படை நினைவு வைத்திருந்தது. அவர்கள் குறிவைத்து ‘பாடம் கற்பிக்கப்’பட்டார்கள். நூற்றுக் கணக்கில் (ஆயிரக்கணக்கில் கூட இருக்கலாம் என்று சில செய்தி மூலங்கள் சொல்கின்றன) சீனர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்; அல்லது காணாமற் போகிறார்கள். யப்பானிய இராணுவ நடவடிக்கைகளுக்காக சீன வணிகர்களிடமிருந்து 50 மில்லியன் டாலர்கள் பணம் ‘வலிந்த நன்கொடை’யாக வசூலிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்த இந்தியத் தமிழர்களை மட்டும் சிறிது பரிவோடு அணுகுகிறார்கள் யப்பானியர். இந்தியாவும் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடுவதால் அவர்களை ஆதரிப்பதாக தங்கள் நிலையை முன்வைக்கிறது யப்பான். சிங்கப்பூரில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் கொடுமைப்படுத்தல்கள் இல்லாத கண்காணிப்பு வேலைகள் வழங்கப்படுகின்றன. இந்திய தேசியப்படையை அக்காலகட்டத்தில் உருவாக்கிக் கொண்டிருந்த இந்திய விடுதலைப் போரின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுபாசு சந்திர போசை ஆதரிக்கும்படி யப்பானிய மேலிடம் யப்பானியப் படைகளுக்கு உத்தரவிடுகிறது. இந்திய தேசியப்படையில் அதிக அளவில் சிங்கப்பூரிலிருந்த இந்தியத் தமிழர்கள் சேர்கிறார்கள். சிங்கப்பூரை பிரித்தானிய நிர்வாகத்திடமிருந்து வென்றுவிட்ட யப்பானிய இராணுவம், இந்த இந்திய தேசியப் படையின் சிங்கப்பூர்ப் பிரிவினரோடு இணக்கமாகவும், நீக்குப் போக்காகவும் நடந்து கொள்கிறது. பிரித்தானிய காலனி நிருவாகத்தின் கீழ் இருந்தபோது, சிங்கப்பூரின் இந்தியத் தமிழர்கள் நினைத்தும் பார்த்திருக்க இயலாத அதிகாரம் மிக்க பதவிகளில், யப்பான் இராணுவ நிருவாகம் அவர்களை அமர்த்துகிறது. இதே விதமான அணுசரனையாக போக்கை மலாய் இனத்தவர்களிடமும் யப்பானியப் படை காட்டுகிறது. மலாயாவின் மற்ற இடங்களில் இருக்கும் மலாய்க் காரர்கள், சிங்கப்பூரின் மலாய்க்காரர்களோடு தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். இது மலாய் இனத்தவர்களிடையேயும் யப்பானிய இராணுவப் படையைப் பற்றியும் நிருவாகத்தைப் பற்றியும் நம்பிக்கையைக் கொடுக்கிறது.

நடப்பதொரு கொடுங்கனவு

சிங்கப்பூர், யப்பானிய ஆதிக்கத்தின் கீழ் நான்காண்டுகள் இருக்கவேண்டியிருந்தது.யப்பானிய இராணுவம் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது சிங்கப்பூரில் இருந்த பலர், மலாயாவின் உள்பகுதிக்குள் சென்று விட்டால் போரின் இடர்களிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் யப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்த அதே நாள், மலாயாவின் கோத்தாபாருவிலும்(Kota Bharu) இறங்கினார்கள் என்ற செய்தி பின்னரே வந்தது. ஏற்கெனவே யப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய யோகர் ஆற்றின் மறுகரையின் சதுப்பு நிலங்கள் வழி மிதிவண்டிகளில் வந்தார்கள் என்று பார்த்தோம். இது பிரித்தானியர்கள் எதிர்பாராதது. அச்சத்தில் அப்பகுதிகளில் இருந்த பிரித்தானியக் குடும்பங்கள் பின்வாங்கி ஆற்றைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய வேண்டி வந்தது. அல்லது, தெறித்து ஓடித் தப்பிக்க வேண்டி வந்தது. மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் மத்திய கிழக்குப் பகுதிக்குச் செல்ல வேண்டிய சில ஆசுத்திரேலிய வீரர்களையும் மூன்று கலங்களில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தது இலண்டனின் காலனி நிருவாகம். அவர்கள் எதிர்பார்த்திருந்தது சிங்கப்பூர் விழுந்து விடாது என்பது. ஆனால் சிங்கப்பூரை முன்னிட்டு யப்பானிய இராணுவம் நடத்திய போரின் நான்காவது நாளில், அந்த வீரர்கள் தமது ஆயுதங்களைக்கூட சுமந்து கொள்ளப் பிரியப்படாமல் இருந்ததாக, அப்போது மாணவனாக இருந்த லீ க்வான் யூ தனது சிங்கப்பூர் சுடோரி புத்தகத்தில் பதிவு செய்கிறார். இச்சமயத்தில் பிரித்தானியப் பிரதமராக இருந்த, பின்னால் பெரும் புகழ் பெற்ற வின்சுடன் சர்ச்சில் சிங்கப்பூரின் வீழ்ச்சியை இவ்வாறு பதிவு செய்கிறார், ‘ சிங்கப்பூரின் வீழ்ச்சி பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகுந்த அவமானமிக்க தோல்வியும், கொடுமையான நிகழ்வும் ஆகும்’.

சமூக இனப் பிளவு

சிங்கப்பூரில் இருந்த ஆசிய இனத்தவர்கள், பிரித்தானியர்கள் இரு சமூகத்துக்குமே யப்பானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த சிங்கப்பூரின் மூன்றரை ஆண்டுகாலம் கொடுங்கனவாகவே இருந்தது. ஏனெனில் 1800கள் முதலே பிரித்தானியர்கள் தங்களது ஆதிக்கத்தை வன்மையுடன் மற்ற ஆசிய சமூகத்தினரிடம் செலுத்தி வந்தார்கள். ஆசிய இனத்தவர்கள் அனைவருக்கும் வெள்ளையினத்தவர் என்றால், அவர் ‘துரை’. வெள்ளையினப்பெண் என்றால் அவர் ‘துரைசானியம்மாள்’. நூறாண்டுக்கும் மேலாக சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலில் பழகிப் போயிருந்த இது யப்பானியர்கள் ஆக்கிரமிப்பில் சிங்கப்பூர் இருந்த மூன்றரை ஆண்டுகளில் தவிடுபொடியானது. பற்றாக் குறைக்கு இந்தியர்களை யப்பானியர்கள் கண்காணிகளாக நடத்தத் தொடங்கியது பிரித்தானியர்களுக்கு மேலும் சித்திரவதையாக இருந்தது. யப்பானியர்களின் கடுமை சீன இனத்தவரிடமும் பிரித்தானியர்களிடமும் மிகக் கடுமையாகவும், மலாய் இனத்தவரிடம் சிறிது கடுமை குறைந்தும், இந்தியத் தமிழர்களிடம் இன்னும் கடுமை குறைந்தும் காணப்பட்டது. இந்த வேறுபாடு பிரித்தானியர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்த விளைவு, பின்னால் மீண்டும் பிரித்தானிய ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் வந்தபோது தெரிந்தது.ஆனால் பொதுவாக சிங்கப்பூர் சமூகத்தைப் பொறுத்தவரை, யப்பானியர்களின் ஒட்டுமொத்தக் கடுமையும், பிரித்தானியர்கள் ஆசிய சமூகத்திடம் நூறாண்டுகளாகக் காட்டி வந்த கடுமையைவிட அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். ஒரே பகுதியைச் சேர்ந்த ஆசியர்கள் என்பதால் யப்பானியர்கள் சிங்கப்பூர் ஆசியர்களை எளிமையாகவெல்லாம் நடத்தவில்லை.யப்பானியர்கள் சிங்கப்பூரைப் பிடித்த தொடக்க சில நாட்களில் பிரித்தானியர்கள், சீனர்களின் தொழில் செல்வங்கள், வீடுகள் சூறையாடப்பட்டன. ஆனால் சீக்கிரமே யப்பானியர்கள் சிங்கப்பூரில் இவ்விதச் சூறையாடல்களுக்கு முடிவு கட்டினார்கள். சில சூறையாடிகள் பிடிக்கப்பட்டு அவர்களது தலைகள் கொய்யப்பட்டுப் பொது இடங்களில் கட்டிவிடப்பட்டன. தண்டனைகள் கொடுமையாக அரங்கேற்றப்பட்டன. கத்தியால் உடலின் மேற்தோல்கள் சீவப்பட்டதெல்லாம் தண்டனைகளாகக் கொடுக்கப்பட்டன.

யப்பானிய இராணுவம் குறிப்பிட்ட சமூகப் பெரியவர்கள், அமைப்புகளிடம் இருந்து தங்களுக்கு வேண்டியதை மிரட்டிப் பெற்றார்கள். வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்கள், தானியங்கள் போன்றவற்றை அள்ளிச் சென்றார்கள். சிங்கப்பூரில் எந்த உணவும் மிகுதியாக உருவாக்கவோ,பயிரிடவோ படவில்லையாதலால் உணவுப் பொருள்கள் அருமைப் பொருள்களாயின.

மக்களின் தினவாழ்வு கொடுமையானதாக மாறியது.

(தொடரும்)

__________

படம்: சிங்கப்பூருக்குள் நுழையும் யப்பானியப் படை – நன்றி சிங்கை தேசிய ஆவணக் காப்பகப் பக்கம்

1. https://www.britannica.com/topic/Axis-Powers
2. The Singapore Story – Memoirs of Lee Kuan Yew, chapter 3.
3. From Singapore Heritage Board resources – With thanks.

The post சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #5 – தொடங்கியதொரு கொடுங்கனவு appeared first on கிழக்கு டுடே.

கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள்

அடிமைத்தளை மனித இனத்துக்கு எதிரானது, அதை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை முதலில் ஆங்கிலேயர்களுக்குத்தான் தோன்றியது என வரலாறு தெரிவிக்கிறது. 1772இல் இங்கிலாந்தில் நடைபெற்ற வழக்கொன்றில் அந்த மண்ணில் வசிக்கும் அடிமையின் உரிமைகள் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது. 1778இல் ஸ்காட்லந்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில் 1772ஆம் ஆண்டின் வழக்குத் தீர்ப்பை முன்னோடியாகக் கொண்டு வேறொரு ஆப்பிரிக்க அடிமைக்கு விடுதலை வழங்கப்பட்டது.

1787ஆம் ஆண்டு மே 22ஆம் நாளில் அடிமை வாணிக ஒழிப்புச் சங்கம் இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இந்தச் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் குவேக்கர்கள் என அழைக்கப்பட்ட சமூகத்தின் நண்பர்கள் என்ற கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள். அமைதியான முறையில் எந்த வன்முறையுமின்றிப் பணியாற்றிய இந்தச் சங்கம் பின்னாளில் தோன்றிய மற்ற இயக்கங்களுக்கு முன்னோடியாக விளங்கியது. அடிமை வாணிகத்தின் தீமைகள் குறித்தும் ஆப்பிரிக்க மக்களின் துயர நிலை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துச் சொன்னது. சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகத்தைத் தடைசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

1806ஆம் ஆண்டில் பிரிட்டிஷ், அமெரிக்க அரசாங்கங்கள் அடிமைகளுக்கு மறுவாழ்வளிக்கவேண்டும் என்று எண்ணம்கொண்டன. அடிமை வர்த்தகத்தோடு தங்கள் நாடுகளுக்கு எந்தத் தொடர்புமில்லை என்று அறிக்கை வெளியிட்டன. அதையொட்டி பிரிட்டிஷ் பாராளுமன்றம் அடிமை வாணிகச் சட்டத்தை 1807ஆம் ஆண்டு இயற்றியது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகக் கண்காணிப்புப் படைகளையும் அமைத்தது. ஆங்கிலேயப் பேரரசு தன்னுடைய காலனி நாடுகளில் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் அடிமைத்தளையை மட்டுப்படுத்தவும் காலப்போக்கில் ஒழிக்கவும் 1823இல் சங்கமொன்று அமைக்கப்பட்டது. இந்தியாவைத் தவிர மற்ற பகுதிகளில் அடிமைத்தளையை ஒழிக்கும் சட்டத்தை 1833இல் இயற்றியது. இந்தியாவில் அடிமைப்படுத்தல் தொன்றுதொட்ட வழக்கமாக நிலவியதால் 1838ஆம் ஆண்டில்தான் அடிமைத்தளையை ஒழிக்கும் பணியை நிறைவேற்ற முடிந்தது. இந்திய அடிமைச் சட்டத்தை 1843இல் நிறைவேற்றியது.

உலகளவில் நடைபெற்ற அடிமை வாணிகத்தில் ஆங்கிலேயர்களின் பங்கு 41% வரை இருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பு நடவடிக்கைகளினால் அடிமை வாணிகம் பெரும்பின்னடைவைச் சந்தித்தது. காலனி நாடுகளுடன் தான் கொண்டிருந்த அரசியல் உறவின்மூலம் அடிமை வாணிகத்தை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தது இங்கிலாந்து. ஒப்பந்தத்தை மீறும் கப்பல்களைத் தடைசெய்யும் உரிமையையும் பெற்றது.

0

அடிமைத்தளை ஒழிப்பில் முக்கியப் பங்கு வகித்த எளிமை, சமத்துவம், அமைதி, சமூக நீதியைக் கடைபிடிப்பதில் உறுதியாகச் செயல்பட்டனர். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றுவதற்கான தூண்டுகோலாகச் செயல்பட்டனர். இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே 1670களில் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள பார்படோஸ் தீவில் அடிமைகளை நல்லவிதமாக நடத்தவேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். 1688இல் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட புதிய பிரிட்டிஷ் காலனியான பென்சில்வேனியாவில் நிலவிய அடிமைத்தளையை வெளிப்படையாக எதிர்த்தனர். ஜெர்மன்டவுன் என்ற ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் அடிமைத்தளைக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

அடிமைத்தளையை மறுத்து அமெரிக்காவில் பொதுவெளியில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கை இதுதான். உலகளவில் மனித உரிமையை வரையறுத்த முதல் ஆவணமும்கூட. அந்தக் காலகட்டத்தில் இந்தச் செயல்பாடு பரவலாகக் கவனிக்கப்படவில்லை என்றாலும் அடிமைத்தளை அறத்தின்பால் சார்ந்ததா என்ற கேள்வியை பென்சில்வேனியாவைச் சேர்ந்த குவேக்கர்களிடையே எழுப்பியது. அடிமை ஒழிப்பு குறித்த எழுத்துக்களும் செயல்பாடுகளும் தீவிரமடைந்தன.

1740ஆம் ஆண்டு முதல் புதிய தலைமுறையைச் சேர்ந்த குவேக்கர்கள் அடிமை வாணிகத்துடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர். 1775இல் பென்சில்வேனியா அடிமை ஒழிப்புச் சங்கம் உருவானது. அடிமை வாணிகத்தில் ஈடுபடுவது ஒழுக்கக்கேடான செயல் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்தினர். வட கரோலினா மாகாணத்தில் அடிமைகளை விடுவிப்பது தடை செய்யப்பட்டிருந்ததால் அங்கே வசித்த குவேக்கர்கள் வேறு மாகாணங்களுக்குச் சென்று அடிமைகளை விடுவித்தனர்.

அடிமைகள் தப்பிச் சென்று விடுதலைபெற உதவும் ’நிலத்தடி இருப்புப்பாதை’யை அமைத்து அதை வழிநடத்துவதில் குவேக்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். வட கரோலினாவில் வசித்த லீவை காஃபின் இளம்பருவ முதலே தப்பியோடும் அடிமைகளுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தார், பின்னாளில் ஒஹையோ-இண்டியானா மாகாணங்களின் நிலத்தடி இருப்புப்பாதையின் தலைவராக விளங்கினார். ஹாரியட் டப்மனும் இந்த நிலத்தடி இருப்புப்பாதையைப் பயன்படுத்திப் பல அடிமைகள் தப்பிச்செல்ல உதவினார்.

ஈலையஸ் ஹிக்ஸ் என்ற குவேக்கர் ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பினால் உருவான பொருள்களைப் பற்றிய நூலொன்றை 1811இல் எழுதினார். அப்படித் தயாரிக்கப்பட்ட பொருட்களை விலைகொடுத்து வாங்குவது தவறு என்று வலியுறுத்தினார். இவர்களைப்போல பல குவேக்கர்கள் அடிமைகளின் மேன்மைக்காகத் தன்னலமின்றி உழைத்தனர். இதனால் கோபமடைந்த அடிமை உரிமையாளர்கள் குவேக்கர்களைக் கொல்லவும் தயங்கவில்லை. குவேக்கர்கள் உயிருக்குப் பயந்து அமெரிக்காவின் மேற்குப் பகுதிக்குக் குடிபெயரவேண்டியிருந்தது.

0

என்லைட்டன்மெண்ட் எனப்படும் அறிவொளிக் காலம் தொடங்கி அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை அமெரிக்கர்களிடையே மேலோங்கியது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மஸசூஸெட்ஸ் மாகாணம் அடிமை வாணிகம் சட்டத்துக்குப் புறம்பானது என 1772இல் அறிவித்தது. 1764 முதல் 1774 வரையில் மஸசூஸெட்ஸ் மாகாண நீதிமன்றத்தில் சுமார் 17 அடிமைகள் தங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்கள்.

இதற்கிடையில் 1775இல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 13 அமெரிக்க மாகாணங்கள் தங்களின் விடுதலைக்காகப் போராடின. அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்கியது. 1783 வரையில் நடைபெற்ற இந்தப் போரின் முடிவில் பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து 13 மாகாணங்களும் விடுதலை பெற்றன. எல்லா மாகாணங்களும் ஒன்றிணைக்கப்பட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவானது. அதன் முதல் அதிபராகப் பதவியேற்றார் ஜார்ஜ் வாஷிங்டன்.

1794இல் அமெரிக்கக் கப்பல்களை அடிமை வாணிகத்துக்குப் பயன்படுத்துவதும் அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு அடிமைகளைக் கொண்டுசெல்வதும் தடை செய்யப்பட்டன. ஆனால் இதை நடைமுறைப்படுத்த எந்த முன்னெடுப்பும் இல்லை என்பதால் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவருவது தொடர்ந்து நடைபெற்றது. அடிமை ஒழிப்புக் குழுவினரின் இடைவிடாத முயற்சியினால் 1804இல் அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் அனைத்திலும் அடிமை வாணிகத்துக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டது. குறிப்பிட்ட வயதையடைந்ததும் அடிமைகள் ஒப்பந்தக்கூலிகளாக மாறிவிடுவர்.

1808இல் அமெரிக்கப் பாராளுமன்றம் அடிமைகள் இறக்குமதி தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால் உள்நாட்டில் அடிமைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து அதில் எதுவும் சொல்லப்படவில்லை. அமெரிக்காவில் அடிமைத்தளை தொடர்ந்து நடைமுறையிலிருந்ததால் அடிமைகளில் பலர் கனடாவுக்குத் தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே 1812இல் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது. இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லையென்றாலும் அமெரிக்கர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தித் தேசப்பற்றை விதைத்தது.

1793, 1850ஆம் ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட தப்பியோடும் அடிமைகள் சட்டம் அடிமைத்தளையிலிருந்து தப்பிக்க முயலும் அடிமைகளைச் சிறைப்பிடித்து மீண்டும் உரிமையாளர்களிடமே சேர்ப்பிக்கவேண்டும் என்றது. இதை அமெரிக்காவின் வடக்கு மாகாணங்கள் கடுமையாக எதிர்த்தன. தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த அடிமைகள் வடக்கு மாகாணங்களுக்கும் அங்கிருந்து கனடாவுக்கும் தப்பிச்செல்ல முயன்றனர்.

அமெரிக்காவிலிருந்த அடிமைகளின் மொத்த எண்ணிக்கை 40 லட்சம். அவர்களில் 95 சதவீதத்தினர் தெற்கு மாகாணங்களில் வசித்தனர். அடிமைத்தளையை ஆதரிக்கும் சட்டங்களையும் செயல்களையும் தெற்கு மாகாணங்கள் பின்பற்றின. அடிமை ஒழிப்பு இயக்கத்தினால் தங்களின் விவசாயத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பின. அடிமை ஒழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்த 11 தெற்கு மாகாணங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து தாங்கள் பிரிந்துசெல்வதாக அறிவித்தன. ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான அமெரிக்க ஐக்கிய நாடுகள் இதை ஏற்கவில்லை. அந்தப் பிரிவை எதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் 1861 முதல் 1865ஆம் ஆண்டு வரையில் நடந்தது. தெற்கு மாகாணங்கள் தோல்வியடைந்து மீண்டும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் இணைக்கப்பட்டன. அடிமைத்தளையை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

0

அமெரிக்காவின் விளைநிலங்களும் பண்ணைகளும் அடிமைகளின் உழைப்பை நம்பியிருந்ததால் அடிமைத்தளை ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்தது. கிழக்குக் கடற்கரையில் வசித்த ஆப்பிரிக்க அடிமைகள் பால்டிமோர், நியூ ஆர்லியன்ஸ் போன்ற மேரிலாண்டின் மற்ற பகுதிகளுக்கும் லூசியானா, கெண்டகி, மிஸ்ஸிசிப்பி போன்ற தெற்கு மாகாணங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பெரும் விற்பனையாளர்களும் இடைத்தரகர்களும் ரொக்கமாகப் பணம்கொடுத்து அடிமைகளை வாங்கிச் சென்றனர். அடிமைகள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தனர்.

‘10 முதல் 25 வயது வரையிலான ஆண், பெண் அடிமைகள் 50 முதல் 100 பேர் வரை தேவை. சந்தை விலைக்கும் அதிகமாக உடனடி ரொக்கம் கொடுக்கப்படும்.’

லூசியானாவைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் 12 முதல் 25 வயது வரையிலான அடிமைகளுக்கு நல்ல விலை தருவதாக விளம்பரம் செய்தார். கெண்டகியைச் சேர்ந்த ஜேம்ஸ் காக்ஸ் 6 மாதம் முதல் 31 வயது வரையிலான 38 குழந்தைகள், பெண்கள், ஆண்களை ஜான் ஹேன்ஸிடமிருந்து 6610 அமெரிக்க டாலருக்கு வாங்கினார். குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து விற்கும் அவலமும் நிகழ்ந்தது. இதுதவிர சிறிய நில உரிமையாளர்களும் நேரடியாகத் தாங்களே வந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்றனர். நேரடியாக வாங்கினால் 400 டாலர் என்றால் தரகர்மூலமாக விற்பனைக்கு வரும் அடிமைகளுக்கு 800 டாலர்வரை விலைகொடுக்க நேரிடும்.

அடிமை உரிமையாளர்களில் சிலர் தங்களின் கோட்டத்தைத் தாண்டியோ மாகாணத்தைத் தாண்டியோ விற்பதற்குத் தயங்கினர். தங்களின் அடிமைகளுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என்ற எண்ணமும் இரக்க குணமும் காரணம். மேலும் உறவுகளைப் பிரிந்து தூரமான இடங்களுக்குச் செல்லும் அடிமைகள் துயரத்துக்கு ஆளாவர்கள், அவர்களின் உழைப்புத்திறன் குறையும் என்று நினைத்ததும் காரணம்.

அடிமைகளை விற்பது தெரிந்தால் ஊருக்குள் தங்கள் பெயர் கெட்டுப் போய்விடுமென நினைத்து அடிமைகள் ஓடிப்போய்விட்டார்கள் என்ற பொய்யைக் கசியவிட்டார்கள் சிலர். ஆனால் சத்தமில்லாமல் அடிமைகளையும் கூடவே அடிமையல்லாதவர்களையும் சேர்த்தே வேறு இடங்களில் விற்றார்கள்.

எட்வர்ட் ப்ராடஸுக்கு குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதானது. பென் ராஸ் குடும்பத்தினரும் அவர்களின் உறவினர்களில் பலரும் ஏலத்தில் விடப்பட்டனர் அல்லது மற்ற வியாபாரிகளுக்கு விற்கப்பட்டனர். செலவுகளைச் சமாளிப்பதற்காக ஹாரியட்டின் மூத்த சகோதரியான மரியா ரிட்டியும் சகோதரன் ஜேம்ஸும் வேறொருவருக்கு விற்கப்பட்டனர். ஏற்கெனவே தந்தை பென் ராஸிடமிருந்து பிரிந்து வாழ்ந்த குழந்தைகள் இப்போது தாயிடமிருந்தும் உடன்பிறந்தவர்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டனர்.

அடுத்து லீனா, சோஃப் என்ற ஹாரியட்டின் இன்னும் இரண்டு சகோதரிகளை வேறு மாகாணத்துக்கு விற்றார் எட்வர்ட். வீட்டைத் திரும்பிப்பார்த்து அழுது அரற்றியபடி அவர்களிருவரும் அழைத்துச்செல்லப்பட்ட காட்சி சிறுமி மிண்டியின் மனதில் பதிந்துபோனது. பொதுவாக அடிமைகளை விற்கும்போது நீதிமன்றத்தில் புதிய உரிமையாளரின் பெயருக்கு அவர்களைப் பதிவுசெய்வது நடைமுறை. ஆனால் எட்வர்ட் வரி கட்டாமல் இருப்பதற்காக அதைச் செய்யவில்லை.

மிண்டியின் இன்னொரு சகோதரிக்குத் திருமணம் முடிந்து இரண்டு மாதக் கைக்குழந்தையோடு இருந்தாள். அவளையும் ஜியார்ஜியா மாகாணத்துக்கு விற்க ஏற்பாடு செய்தான் எட்வர்ட் ப்ராடஸ். அந்தச் சகோதரியின் கணவன் தனக்குத் தெரிந்த பெரிய மனிதர் ஒருவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். அந்த மனிதரும் உன் மனைவியை என் வீட்டுக்கு அனுப்பி வை, பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தார். ஆனால் சகோதரி வந்துசேர்ந்ததும் அந்தப் பெரிய மனிதர் எட்வர்டுக்குத் தகவல் சொல்லிவிட்டார். எட்வர்டும் தாயை மாத்திரம் பிரித்து ஜியார்ஜியா மாகாணத்துக்கு அனுப்பிவிட்டான்.

ரிட் ராஸுக்கு தன் குடும்பத்தினரைப் பிரித்த எட்வர்டின் மேல் கோபமிருந்தாலும் அப்போதைக்கு எதுவும் செய்யமுடியவில்லை. சில ஆண்டுகள் கழித்துத் தன்னுடைய இளைய மகன் மோசஸை விற்பனைசெய்தபோது அதைத் தடுக்க முயற்சி செய்தார். மோசஸை வாங்கியவர் ஜியார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர். அவனை அழைத்துச் செல்வதற்காக எட்வர்டின் பண்ணைக்கு குதிரை வண்டியில் வந்தார். வயலில் வேலைசெய்துகொண்டிருந்த மோசஸை குதிரையைப் பிடித்துக்கொள்ள கூப்பிட்டான் எட்வர்ட். ஆனால் மோசஸை விற்கப் போகிறார்கள் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு மகனுக்குப் பதிலாக ரிட் வந்தார்.

உரிமையாளர் பணத்தை எண்ணுவதைப் பார்த்த ரிட் பையனை எதற்காக அழைத்தீர்கள் என்று கேட்டார். எட்வர்ட் பதிலேதும் சொல்லாமல் குடிக்கத் தண்ணீர் எடுத்துவரச் சொன்னான். ரிட் போனதும் மீண்டும் மோசஸை உரத்த குரலில் கூப்பிட்டுக் குதிரையை வண்டியில் பூட்டுமாறு சொன்னான். மறுபடியும் மகனுக்குப் பதில் ரிட் வந்து என்ன வேண்டுமெனக் கேட்டார். உன்னைக் கூப்பிடவில்லை மோசஸைத்தான் கூப்பிட்டேன் என்று சொன்னான் எட்வர்ட். மூன்றாவது முறை மோசஸைத் தேடி தானே விவசாய நிலத்துக்கு வந்தான் எட்வர்ட். ஆனால் ரிட் தன்னுடைய உறவினர்களின் உதவியுடன் அவனை யாருக்கும் தெரியாத இடத்தில் சுமார் ஒரு மாத காலத்துக்கு ஒளிந்துகொள்ளச் செய்தார்.

அடிமைகளை வாங்கவரும் வாணிகர்கள் அந்த ஊரிலேயே ஓரிரு மாதங்கள் தங்கியிருந்து மொத்தமாகப் பல அடிமைகளை வாங்கிய பிறகு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்புவது வழக்கம். அதற்குள் எப்படியும் மோசஸைக் கண்டுபிடித்து ஜியார்ஜியாவுக்கு அனுப்பிவிடலாம் என்று முடிவுசெய்து வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்காமல் இருந்தான் எட்வர்ட். ஆனால் ரிட்டும் அவருடைய சமூக வலைப்பின்னலைச் சேர்ந்தவர்களும் மோசஸை இப்படி ஒளித்துவைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

எட்வர்டிடம் விசுவாசமாக இருக்கும் இன்னொரு வேலையாள் மரங்களடர்ந்த காட்டுப் பகுதியில் மோசஸ் ஒளிந்திருப்பதாகத் தகவல் சொன்னான். மோசஸைப் பிடிப்பதற்காக அங்கே சென்றபோது சிறுவன் தப்பிச்சென்றுவிட்டான். மீண்டும் இன்னொரு வெள்ளைக்காரரை ரிட்டின் குடியிருப்புக்கு அனுப்பிவைத்தான் எட்வர்ட். வாசலில் நின்றபடி சுருட்டைப் பற்றவைக்க நெருப்பு கேட்ட அந்த வெள்ளைக்காரரைப் பார்த்ததும் எதற்காக வந்திருக்கிறார் என்பது ரிட்டுக்குத் தெரிந்துவிட்டது. என் மகனைப் பிடிப்பதற்கு யாராவது வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தால் மண்டையைப் பிளந்துவிடுவேன் என்று மிரட்டினார். அவர்களும் பயந்து ஓடிப்போயினர். இப்படியே பல உத்திகளைச்செய்து அந்த ஜியார்ஜியா வாணிகர் ஊர்திரும்பும் வரையில் மோசஸைப் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

தன்னுடைய உரிமையாளரையும் அந்தப் பகுதியின் பெரிய மனிதர்களில் ஒருவரையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்றார் ரிட். தனது குழந்தைகளை ஒவ்வொருவராக இழந்த துயரத்தில் உயிரையும் பணயம் வைத்துத்தான் இதைச் செய்தார். இருந்தாலும் தானும் தன் குடும்பத்தினரும் எட்வர்டின் சொத்துகள் என்பதும் தங்களை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதும் தெரிந்திருந்தது.

சிறுமி மிண்டியையும் மற்ற குழந்தைகளையும் அவ்வப்போது வேறு உரிமையாளர்களின் வீட்டில் பணிசெய்ய அனுப்பிவைத்து அதற்கான விலையைப் பெற்றுக்கொள்வான் எட்வர்ட். தன்னருகில் இருக்கும் வரையில்தான் ரிட்டினால் மிண்டியைப் பாதுகாக்க முடிந்தது. பணியாற்றி இடத்தில் மிண்டியைச் சிலர் சாட்டையால் அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். அவளது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊறுவிளைவிக்கும் விதமாகக் கொடூரமாக நடந்துகொண்டனர்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #9 – அடிமை வாணிக ஒழிப்புக்கான முன்னெடுப்புகள் appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம்

வனத்துறையில் கால்நடை வைத்தியர் வேலைக்கு டாக்டர் கே விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரிதான் என்று நாம் பார்த்தோம். இந்தச் சூழ்நிலையில், நாம் கம்பத்தில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லாமல் விட்டால் இந்தப் பகுதி நிறைவடையாது. ஏனென்றால், போன வருடம் பாந்தவ்கரில் நிகழ்ந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் நடந்த நிகழ்வுகளின் நிழல்போலவே இருந்தது.

சில வருடங்களுக்கு முன் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கருக்கு ஒரு யானைக் கூட்டம் இடம்பெயர்ந்தது. அதுவரை மத்திய பிரதேசத்தில் யானைகள் கிடையாது. அதுதான் முதல் நிகழ்வு. அந்த யானைக் கூட்டத்தால் ஆரம்பத்தில் பெரிய பிரச்னைகள் ஏதும் வரவில்லை. ஓரிரு இடங்களில் விவசாய நிலத்தில் சேதங்கள் ஏற்பட்டதைத் தவிர. மக்களுக்கும் அவற்றால் பெரிய தொல்லை இல்லை.

நான் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் பாந்தவ்கர் போயிருந்தபோது ஒரு கொம்பனையும் சில பெண் யானைகளையும் புலிகள் சரணாலயத்தை அடுத்து பார்த்தேன். அன்று இதுபோல ஒரு சம்பவம் நிகழும் என்று நானும் எண்ணவில்லை. 2024 அக்டோபர் மாத இறுதியில், கிட்டத்தட்ட 15 யானைகள் அறுவடை செய்த வரகு போன்ற சிறுதானியத்தைத் தின்ற பின் நினைவிழந்து விழுந்து இறந்துபோயின. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. காரணம், தானியத்தைத் தின்று ஒரு தாவர உண்ணி இறக்குமா என்ற கேள்விதான். யாருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

அப்போது, பல ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது என்றும், அதுகுறித்து டாக்டர் கே எழுதி உள்ளார் என்றும் தெரியவந்தது. உடனே அதுபற்றி அறிய, சில வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதரைத் தொடர்புகொண்டனர். ஸ்ரீதர், டாக்டர் கேயின் மகன். அவரிடம் டாக்டர் கேயின் பழைய ஆவணங்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்பு கொண்டனர். அப்போதுஅவர்களுக்கு டாக்டர் கேயின் பழைய விஞ்ஞானக் கட்டுரை ஒன்று கிடைத்தது. கஜா (Gajah) என்ற விஞ்ஞான சஞ்சிகையிலும், மதராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியின் பிளாக் பக் (Black Buck) சஞ்சிகையிலும் அந்தக் கட்டுரை இடம்பெற்றிருந்தது.

யானைகளுக்கு வரும் துதிக்கை வாதம் (trunk paralysis) எனும் தாற்காலிக நிலைக்கு இதுபோன்ற தாவரங்களை உண்பதும் ஒரு காரணம் என்று டாக்டர் கே அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு நாம் அறிய வேண்டியது என்னவென்றால், இந்தத் துதிக்கை வாதம் ஒரு அறிகுறி தானே தவிர, இறப்புக்கு காரணம் அதுவல்ல. பின் இறப்புக்குக் காரணம்தான் என்ன? வரகு (சிறுதானிய) கட்டுகள் மழையில் நனைந்து பூஞ்சணம் பிடித்துப்போனதே.

அந்தப் பூஞ்சணம் யானைகளின் வயிற்றுக்குள் சென்று பல வேதிப்பொருட்களாகி அவை இறக்க வழி செய்துவிட்டன. பூஞ்சணம், மணமில்லாமல் போனதும் ஒரு காரணம். சற்றே வாடை இருந்திருந்தால் யானைகள் அவற்றைத் தின்றிருக்காது.

1933-ம் வருடம் டிசம்பரில், கம்பம்- குமுளி வழியில் அமைந்திருக்கும் காட்டில், வண்ணாத்திப் பாறை என்ற இடத்தில் 14 யானைகள் இதேபோல வரகு பயிரைத் தின்று இறந்ததாக சி. மோரிஸ் என்ற காப்பித் தோட்ட முதலாளி, பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க குறிப்பேடுகளில் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக உள்ளூர் மக்கள் இந்தப் பயிரை ‘கிறுக்கு வரகு’ என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1933-ம் ஆண்டு நிகழ்ந்த அந்த நிகழ்வு அத்துடன் நின்றுவிடவில்லை. 1970-ம் ஆண்டும் இதேபோல 17 யானைகள் கண்டமனூர் பள்ளத்தாக்கில் (கம்பத்தின் ஒரு பகுதி) மர்மமாக இறந்ததும், வழக்கம்போல டாக்டர் கே அது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர அனுப்பப்பட்டார். அப்போதுதான் அவர் மேற்சொன்ன கட்டுரையை எழுதினார்.

டாக்டர் கே எழுதிய அந்தக் கட்டுரையில், ‘1970-ம் ஆண்டில், கண்டமனூர் பள்ளத்தாக்கில் ஒரு குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகளின் இறப்பு குறித்து மதுரை மாவட்ட வன அலுவலரிடமிருந்து ஒரு அறிக்கை வந்தது. பல்வேறு வயதையும் பாலினத்தையும் சேர்ந்த 17 யானைகள் இறந்ததற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தினை பயிர்களை உட்கொண்டதால் பாஸ்பால்வ்ன் ஸ்க்ரோபிகுலாட்ரான் என்ற எர்கோட் (Ergot) இன்ஃபெக்ஷன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டது.

பெரும்பாலான விலங்குகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நினைவின்றி இருந்த பிறகு இறந்தன. இந்த யானைகள் பலவற்றில், (தும்பிக்கை முடக்கம்) துதிக்கை வாதம் காணப்பட்டது. 1952-ம் ஆண்டில் மதுரை மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சுருளிப்பட்டி கிராமத்திற்கு அருகில் 6 யானைகள் கொண்ட ஒரு கூட்டம், ‘வரகு’ என்று உள்ளூரில் அழைக்கப்படும் ஒரு வகையான தினை, ஆனால் எர்காட் பாதிக்கப்பட்ட தாவரத்தை உட்கொண்டதன் விளைவாக இறந்தன. இந்தப் புல்லை மொத்தமாக உட்கொள்ளும் விலங்குகள் (தண்டு முடக்கம் உட்பட) நோயுற்ற அறிகுறிகளைக் காட்டுவதால், இந்த தாவரம் உள்ளூரில் ‘கிறுக்கு வரகு’ (பைத்தியக்காரத்தனத்தை ஏற்படுத்தும் தினை) என்று அழைக்கப்படுகிறது. தடயவியல் ஆய்வக கண்டுபிடிப்புகள் இந்த விலங்குகளின் நோய்க்கான காரணத்தை எர்காட் விஷம் (கிளாவிசெப்ஸ் பர்பூரியா) காரணமானது என்று உறுதிப்படுத்துகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப் பல கள ஆய்வுகளில் டாக்டர் கே முன்னோடியாகத் திகழ்ந்தார். என்ன, அவரது 1970-ம் ஆண்டு உடற்கூராய்வு அறிக்கை கிடைத்திருந்தால் இன்னும் பல தகவல்கள் கிடைத்திருக்கலாம். மிகப் பழைய காலத்தது என்பதால் அது கிடைக்கவில்லை. இந்தக் காலத்தில் இதுபோன்ற ஆய்வுகளை எளிதில் செய்ய இயலும். அந்த அளவு உபகரணங்களும் பரிசோதனை வசதிகளும் பெருகி விட்டன; முன்னேறி விட்டன. 1970-ல் திசு பரிசோதனைக்குக் கூட சென்னை வர நேரிடும். பரிசோதனைக் கூடங்கள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இருக்கும். திசு மாதிரிகளை அவ்வளவு எளிதில் அனுப்ப முடியாது. இப்படிப் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு இடையில் நேர்த்தியான பணியைச் செய்தார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். உள்ளார்ந்த ஈடுபாடும், செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனோபாவமும்.

இதுபோன்ற பயிரை மேயும் விலங்குகளால் மோதல்கள் ஏற்படுவது நமது நாட்டுக்கோ அல்லது மாநிலத்திற்கோ புதிது அல்ல. மலை படு கடாம் காட்டும் வாழ்க்கையைக் கண்டால், அன்றும் இன்றும் ஒன்றுதான் என்று நினைப்போம். உதாரணமாக,

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை . . . .[205]

உரை: விளைநிலங்களில் குறவர்கள் பரண் மீது ஏறி விளைச்சலைத் தின்ன வரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர்.

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல்
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் . . . .[300]

உரை: யானை ஒலி – தன் கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை, கானவனின் விளைவயலில் புகுந்து உண்ணும்போது பரண்மீது இருந்துகொண்டு கானவன் ஓட்டுவதைப் பொருட்படுத்தாது தன் இனத்தை அழைக்க எழுப்பும் ஒலி சங்கூதுவது போன்றது.

இந்த மலை படு கடாம், சங்க கால நூலான பத்துப் பாட்டில் ஒன்று. அன்றே யானைகள் விளை நிலங்களில் புகுந்து தொல்லை தந்தன என்றால், இன்று அவை அவ்வாறே செய்வதில் வியப்பென்ன? காலம் காலமாக மனிதனும் விலங்கும் இயைந்து வாழ்பவை என்பதைப் புரிந்து கொண்டால், அது தொல்லையாகத் தெரியாது. எப்படித் தடுக்கலாம்? எப்படிச் சேதத்தைக் குறைக்கலாம் என்று புரியும். எனவே, யானைகள் தினையை உண்ண வந்ததில் எந்த வியப்பும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, பூஞ்சண நச்சால் இறந்ததுதான் சோகம். இன்றும், டாக்டர் கேயின் குறிப்புகள் வழிகாட்டியாக உள்ளன என்பது மேலும் ஒரு சிறப்பு.

இதேபோல, ஹெய்தி என்கிற மேல் நாட்டு கால்நடை வைத்தியருக்கு டாக்டர் கே உதவியது, அவரது ஆளுமையைப் பறைசாற்றும் மற்றொரு நிகழ்வு. திருமதி ஹெய்தி ரிடில், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆசிய யானைகள் குழுவின் உதவித் தலைமைப் பொறுப்பாளர். அவர் தனது கடிதத்தில், ‘நன்றி ஐயா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் ஏற்கெனவே பதிலளித்து விட்டேன் என்று நினைத்தேன். இந்த ஆய்வுக் கட்டுரை என் நினைவை மீண்டும் கிளறுகிறது. ஆசிய யானைகளில் முடங்கிய (முழு அல்லது பகுதி) தும்பிக்கைகள் தொடர்பான அவரது அனுபவத்தைப் பற்றி பேராசிரியர் சுகுமார் மூலம் உங்கள் தந்தையிடம் கேட்டிருந்தேன். 1994-ம் ஆண்டு பகுதியளவு முடங்கிய தும்பிக்கையுடன் (துதிக்கை வாதம் அல்லது முடக்கம்) ஒரு யானை எங்களுக்குக் கிடைத்தது. அப்போது அவளுக்கு (அந்த யானைக்கு) 40 வயது இருக்கும். சர்க்கஸில் இருந்த யானை. அவள் முதலில் இந்தியாவிலிருந்து வந்த யானை. இந்த முடக்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு படிப்படியாக வளர்ந்தது. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை. அவள் 2020-ல் 63 வயதில் காலமானாள். மற்றபடி அவள் வாழ்நாள் முழுவதும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தாள்.

வட அமெரிக்காவில் பகுதியளவு அல்லது கிட்டத்தட்ட முழு தும்பிக்கை முடக்கம் கொண்ட பிற யானைகள் இருந்தன. நாங்கள் கவனித்தது என்னவென்றால், அவை அனைத்தும் பெண் ஆசிய யானைகள். அவற்றில் பெரும்பாலானவை சர்க்கஸில் வரலாற்றைக் கொண்டு இருந்தன. பாலினம், இனங்கள் ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை விளக்க எந்த உறுதியான தொடர்பும் அடையாளம் காணப்படவில்லை. உங்கள் தந்தையின் தகவல் (இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி) மிகவும் சுவாரஸ்யமானது. வடக்கு அமெரிக்கச் சூழலில், அதற்கான காரணம் என்ன/எது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தும்பிக்கை முடக்கம். ஒருவேளை ஏதோ ஒரு வகையான காயங்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மலைப்பாங்கான நாட்டில் உள்ள யானைகளில், வளர்ப்பு, காட்டு யானைகள் இரண்டிலும் காணப்பட்டது என்பதையும், உங்கள் தந்தை அதற்குப் பல விளக்கங்கள் வைத்திருந்தார் என்பதையும் அறிந்து கொண்டது மிகவும் உதவியாக இருந்தது. யானைகளின் உடல்நலப் பிரச்னைகள் குறித்த தகவல்களின் அற்புதமான ஆதாரமாக அவர் இருந்தார்!’ என்று எழுதுகிறார்.

இந்தச் சம்பவம் நடந்தது பெங்களூருவில் இருந்த இந்திய அறிவியல் கழக வளாகத்தில். முனைவர் சுகுமாரின் அழைப்பின் பேரில் டாக்டர் கே சென்றிருந்தார். அப்போது திருமதி ஹெய்தி, சுகுமாரிடம் இந்தத் துதிக்கை வாதம் குறித்துக் கேட்கும்போது, அவர், ‘டாக்டர் கேவும் இங்குதான் இருக்கிறார். அவரிடம் கேளுங்கள்’ என்று தொலைபேசியை டாக்டர் கேயிடம் கொடுத்துள்ளார். டாக்டர் கே, உடனே துதிக்கை வாதம் குறித்து அவரது அனுபவங்களை விவரமாக எடுத்துரைத்துள்ளார். இதில் நாம் பாராட்ட வேண்டிய விஷயம், எந்தக் குறிப்பும் இல்லாமல், நினைவில் இருந்து பழைய சம்பவங்களையும், இந்த நோயின் தன்மையையும் மருத்துவ ஆலோசனையையும் தனிச்சையாக கூறினார் என்றால், எந்த அளவிற்கு டாக்டர் கேவுக்குத் தன் தொழிலின் மேல் ஈடுபாடு இருந்தது என்று அறியலாம். மூச்சே யானைகளின் நலம்தானோ என்று வியக்கும் அளவிற்கு அவர் எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் என்றே தோன்றுகிறது. இந்த ஈடுபாடுதான் அவரைக் கம்பம் பகுதியில் இத்தனை எளிதாகப் பணி செய்ய வைத்தது என்று நினைக்கிறேன்.

கேரளத்தின் புகழ் பெற்ற கால்நடை மருத்துவர் சீரன்,’ எனக்கு டாக்டர் கேவை அறிமுகப்படுத்தியது ஈஆர்சி தாவிதர். அப்போது தாவிதர் சொன்னது எனக்கு இப்போதும் நினைவில் உள்ளது. யானைகளைப் பற்றி முழுவதும் அறிந்தவர் டாக்டர் கே. யானைகளைப் பற்றி அவர் அறியாத தகவல்கள் உண்டெங்கில், அவை அறிய லாயக்கற்றவை என்று புரிந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிடச் சிறந்த ஒரு சான்றித்ழை யாராவது தர இயலுமா? அப்படி அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் (1953 -2002) யானைகள் பராமரிப்பில் தலை சிறந்து விளங்கினார். அந்த ஈடுபாட்டில் ஒரு 20 சதவிகிதமேனும் இன்றுள்ளவர்களுக்கு இருந்தால் நிலைமை இப்படி இருக்காது. இதேபோல தகுந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளின் முக்கியத்துவம் எவ்வளவு உபயோகமானவை என்பதும் புரியும். கூகுள் இல்லாத காலத்திலும், அறிவியல் சஞ்சிகைகள் இவற்றை வெளியிட்டதால் இன்று நம்மால் அவற்றை மேற்கொள் காட்ட இயலுகிறது. இல்லை என்றால் டாக்டர் கேயின் பல அற்புதமான செயல்கள் மறக்கப்பட்டு இருக்கும்.

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #7 – துதிக்கை முடக்கம் appeared first on கிழக்கு டுடே.

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #11 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 4

தெய்வங்கள் வாழும் நீதி மரம்

பேராசிரியர் வில்சன் துல்லியமாகப் பேசக்கூடியவர்; நடுநிலையான நபர். இவருடைய படைப்புகளைவிடவும் இந்தியர்களின் குண நலன்கள் தொடர்பான கர்னல் ஸ்லீமனின் படைப்பை நம்பகமானதாகவும் ஆதாரப்பூர்வமானதாகவும் ஏன் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்கக்கூடும். காரணம் மிகவும் எளியது. பேராசிரியர் வில்சன் பெரிதும் கல்கத்தாவில் மட்டுமே வசித்தார். மாறாக கர்னல் ஸ்லீமன் ஒட்டுமொத்த இந்தியாவையும் பார்த்திருக்கிறார். குறிப்பாக உண்மையான இந்தியர்கள் வாழும் உண்மையான இந்தியாவான கிராமப்புற சமூகங்களை அவர் நேரில் பார்த்திருக்கிறார். ‘தக்கி’ கொள்ளையர்களை அடக்கும் பொறுப்பில் பல ஆண்டுகள் காவல்துறை ஆணையராகப் பணிபுரிந்திருக்கிறார்.

‘தக்கி’கள் கொலை, கொள்ளையைத் தொழிலாகக் கொண்டவர்கள். அந்தக் கொலைகளையெல்லாம் மதக் கடமையாகப் பாவித்துச் செய்தனர். தொடக்கத்தில் அவர்கள் குழுவில் இருந்த அனைவரும் முஸ்லிம்களே. ஆனால் பின்னாளில் ஹிந்துக்களும் அவர்கள் குழுவில் இடம்பெற்றனர். என்றாலும் முஸ்லிம்களே இப்போதும் அந்த தக் கொள்ளையர் குழுவில் பிரதானமாக இருக்கிறார்கள் (கிறிஸ்தவமும் ஹிந்துயிசமும் என்ற நூலில் சர் ட்ரவெல்லியன் (1882, பக் 42).

இந்தக் கொள்ளைக்கூட்டத்தைப் பிடித்து அழிக்கும் நோக்கில் கர்னல் ஸ்லீமன் கிராமப்புறங்களில் வசித்திருக்கிறார். கிராம மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். அவர்களுடைய நல்ல மற்றும் கெட்ட குணங்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறார்.

‘இந்திய கிராமப்புறச் சமூகங்களைப் பற்றித் தெரியாதவர்களுக்கு இந்தியர்களைப் பற்றி எதுவும் தெரியாது’ என்று கர்னல் ஸ்லீமன் அடிக்கடி அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவந்திருக்கிறார். இந்த கிராம சமூகங்களை நாம் குலங்கள் என்று சொல்லலாம். இந்த கிராமப்புற குலங்களின் வாழ்க்கையே உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத விசேஷத் தன்மையை இந்தியாவுக்குத் தந்திருக்கின்றன. இந்திய வரலாறாக நாம் பார்ப்பவையெல்லாம் ராஜாக்கள், மஹாராஜாக்கள், சுல்தான்கள் இவர்களின் வரலாறாகவே இருக்கிறது. அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியா என்பது ஒரு கீழைத்தேய சாம்ராஜ்ஜியம் என்பதுபோன்ற தோற்றம் ஏற்படும். மையத்தில் அதிகாரம் குவிந்த அரசு இருப்பதுபோலவும் இங்கிலாந்தின் பெருமிதமாகச் சொல்வதுபோன்ற எந்தவொரு சுய ஆட்சி உரிமை உணர்வோ அமைப்புகளோ இல்லை என்பதுபோலவும் தோன்றும். ஆனால் இந்தியாவின் அரசியல் வரலாற்றைக் கூர்ந்து கவனித்திருக்கும் எவருமே உண்மை நிலவரம் இதற்கு முற்றிலும் மாறானது என்றே சொல்வார்கள்.

எத்தனையோ தொடர்ச்சியான அந்நியப் படையெடுப்புகள் நடந்திருக்கும் போதிலும் இந்தியாவின் அடிப்படையான அரசியல் அலகு அல்லது சமூகக் கட்டமைப்பானது இன்றும் அதன் கிராமப்புற சமூகமாகவே இருந்துவருகிறது. இந்த அரசியல் அல்லது சமூகக் குழுக்கள் சில நேரங்கள் ஏதேனும் பொது இலக்கின் அடிப்படையில் ஒன்று சேரும். எனினும் இவை தத்தமது தனித்தன்மையுடன் முழுமையான ஓர் அமைப்பாகவே இருக்கவும் செய்யும்.

மனுஸ்மிருதியில் பத்து, இருபது, நூறு அல்லது ஆயிரம் கிராமங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்படுபவருக்கு அந்தப் பகுதிகளின் வரி வசூலிக்கும் உரிமையும் கிராமங்களில் பொதுவான அமைதியையும் நன்னடத்தையையும் மட்டும் கவனித்துக்கொள்ளும் உரிமை மட்டுமே உண்டு என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பின்னாளில் உருவான 84 கிராமங்கள் செளராசி அமைப்புகள், 360 கிராமங்கள் சேர்ந்த அமைப்புகள் எல்லாமே நிதி, வரி வசூல் ஏற்பாட்டுக்கானவையாக மட்டுமே இருப்பதையும் பார்க்கமுடிகிறது.

ஓர் எளிய ஹிந்துவுக்கு அதாவது பெரும்பாலான 99% ஹிந்துக்களுக்குக் கிராமமே அவர்களுடைய முழு உலகம். அதுவே அவர்களுக்கான ஒரே பொதுவெளி. அதன் தாக்கமே அவர்கள் மீது முழுமையாக இருக்கும். ஒரு ஹிந்துவுக்கு அவருடைய கிராமத்துக்கு வெளியே இருக்கும் எந்தவொன்றின் தாக்கமும் இருக்காது.

இந்தியாவில் இருக்கும் கிராமங்கள், நகரங்கள் பற்றி டாக்டர் ஹண்டர் 14, ஆகஸ்ட், 1882-ல் குறிப்பிட்டிருக்கும் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். பிரிட்டிஷ் இந்தியாவில் மொத்தம் 4,93,429 கிராம, நகரங்கள் இருக்கின்றன. இவற்றில் 4,48,320 இடங்களில் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் வசிக்கிறார்கள். இவற்றை நாம் கிராமங்கள் என்று வகைப்படுத்தலாம்.

வங்காளத்தில் பிரிட்டிஷ் அரசு நிறுவனங்களின் உருவாக்கப்பட்டு நகர வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அங்கு 1,17,042 குடியிருப்புகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் சுமார் 200க்கும் குறைவானவர்களே வசிக்கிறார்கள். வங்காளத்தில் இருக்கும் 10,007 குடியிருப்புகளில் சுமார் 1000க்கு அதிக மக்கள்தொகை இருக்கின்றன. அதாவது 70-ல் ஒரு பங்குதான் நகரம். மற்றவையெல்லாம் தற்சார்பு கொண்ட கிராமப்பகுதிகளே. வட மேற்கு பிராந்தியங்களில் 1,05,124 கிராமங்கள் இருக்கிறன. ஆனால், 297 நகரங்கள் மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவில் இருக்கும் இப்படியான கிராமப்புறங்கள் பற்றி நம் கவனத்தைக் குவிக்கச் சொன்ன முதல் நபர்களில் முக்கியமானவர் கர்னல் ஸ்லீமன். பழங்காலத்திலும் நவீன காலத்திலும் இந்தியாவின் சமூக கட்டமைப்பில் இந்த கிராமங்களின் முக்கியத்துவத்தை அழுத்தமாகச் சொன்னவர் அவர். சர் ஹென்றி மைன் இந்த கிராமப்புறங்கள் பற்றி நிறையக் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும் கர்னல் ஸ்லீமனின் குறிப்புகள் சுவாரசியமானவை. அதிக விஷயங்களை உள்ளடக்கியவை. அவர் ஆரிய ஜனபதங்களில் எப்படியான சமூக, அரசியல் அமைப்புகள் உருவாகின என்பது தொடர்பான எந்தவொரு கோட்பாடுகளின் சாய்பும் சார்பும் இன்றி ஒரு பார்வையாளராக இருந்துகொண்டு இந்திய கிராமப்புறங்களைப் பார்த்து எழுதியிருக்கிறார்.

‘இந்தியா முழுவதுமே எண்ணற்ற கிராமப்புற சமூகக் கட்டமைப்புகளாகப் பொதிந்து காணப்படுகிறது’ என்ற கூற்றை முதன்முதலில் சொன்னது கர்னல் ஸ்லீமன் தான் என்று நான் சொல்லவரவில்லை. மெகஸ்தனிஸ்போன்ற ஆரம்பக்கட்டப் பயணிகூட ‘இந்தியாவில் வசிக்கும் விவசாயிகள் தமது மனைவி, குழந்தைகளுடன் எப்போதும் கிராமங்களிலேயே வசிக்கிறார். நகப்புறங்களுக்கு அவர் பெரிதும் போவதே இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஹிந்துக்களின் மரபான குண நலன்கள் எல்லாம் அவர்களுடைய கிராமப்புற வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை என்பதை முதலில் சொன்னவர் கர்னல் ஸ்லீமன்தான்.

ஆங்கிலேய அதிகாரிகளுக்குக் கிராமப்புற வாழ்க்கையோடு பரிச்சயம் மிக மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு பிரிட்டிஷ் இந்திய அதிகாரி கிராமத்துக்குச் செல்கிறார் என்றால் அந்த கிராமத்தின் இயல்பான அம்சங்கள் எல்லாமும் அந்த நொடியிலேயே மறைந்துபோய்விடும்.

‘அடிமட்டத்தில் இருப்பவர்கள் பொய் சாட்சிகள் சொல்வார்கள். ஹிந்து முஸல்மான்களில் இருக்கும் மேட்டுக்குடியினருடைய ஆதரவுடன் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இன்றி ஏதோ அது சாமர்த்தியம் போலவும் திறமை போலவும் மேற்கொள்ளப்படும்’ என்று சர் வில்லியம் ஜோன்ஸ் கலகத்தா நீதிமன்றத்தில் குறிப்பிட்டதாக இந்திய வரலாறு நூலில் பக் 324-ல் ஜேம்ஸ் மில் எழுதியிருக்கிறார்.

‘ஒரு பிராந்தியம் நம்முடைய ஆட்சியின் கீழ் எவ்வளவு காலம் இருக்கிறதோ அவ்வளவுக்கு அதிகமாகப் பொய் சாட்சிகள் பெருகுகின்றன’ என்று சர் ஜி.கேம்பல் சொன்னதாக, கீழைத்தேய மதங்கள் நூலில் எஸ்.ஜான்சன் மேற்கோள் காட்டியிருக்கிறார் (பக் 288).

ஓர் இந்தியரை அவருடைய கிராம சமூகத்திலிருந்து பிரித்துவிட்டால் சமூகத்தின் அத்தனை கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக்கியதாக அர்த்தம். அப்படியான நிலையில் அவர் தனது உள்ளார்ந்த தன்மையிலிருந்து வெளியேறிவிடுவார். ஆசைகாட்டல்களின் விளைவாக மரபான வாழ்க்கை மற்றும் மதிப்பீடுகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்வதிலிருந்து விலகி தவறுகள் செய்ய ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு கிராமங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களில் கூட வழக்கமான பொதுவான தார்மிக ஒழுங்குகள், கட்டுப்பாடுகள் முறையான அங்கீகாரம் பெறுவதில்லை.

ஒரு கிராமத்தில் கொள்ளையாக, திருட்டாகக் கருதப்படுவது தூர கிராமங்களில் செய்யப்படும்போது அருமையான சூறையாடலாக, போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. சொந்த, கிராம வாழ்க்கையில் ஏமாற்றாகக் கருதப்படும் ஒரு விஷயம் அந்நியரிடம் செய்யப்படும்போது ராஜ தந்திரமாகவும் அரசியல் சாமர்த்தியமாகவும் பார்க்கப்படுகிறது. விருந்தினருக்கான மரியாதை என்பது வேறு கிராமத்தைச் சேர்ந்தவருக்குத்தான் தரப்படும். சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விருந்தினராக அதிதியாகக் கருதப்படவேமாட்டார்.

கிராம சமூகத்தினரின் ஒழுக்கப் பண்புகள் பற்றி கர்னல் ஸ்லீமென் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இந்தியர்களின் பிரகாசமான மற்றும் இருட்டான குண நலன்கள் அனைத்தையும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு தக்கி கொள்ளையர்களை அடக்கும் பொறுப்பில் இருந்த காவல் ஆணையரான கர்னல் ஸ்லீமனுக்கு மிக அதிக அளவில் இருந்தது என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்தவிரும்புகிறேன்.

‘ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களிடையேயான வழக்குகளில், பேச்சுகளில் இந்தியர்கள் பொய் சொல்வதில்லை’ என்று கர்னல் ஸ்லீமன் அழுத்தமாகத் தெரிவிக்கிறார். உதாரணமாக, ‘மிகவும் பழமையான வனவாசிகளான கோண்டுகள், அண்டை கிராமத்தின் கிடையிலிருந்து எந்தத் தயக்கமும் இன்றி ஆடு மாடுகளைக் கவர்ந்துசெல்வார்களே தவிர என்ன மிரட்டினாலும் பொய் சொல்லவே மாட்டார்கள்’ என்று கர்னல் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வனவாசிகளுக்குப் பொய் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எதுவும் தெரிந்திருக்காது என்று சொல்லலாம். இருந்தும் இப்படியான ஆசிர்வதிக்கப்பட்ட அறியாமையையும் தேசத்தின் குண நலனின் ஓர் அம்சம் என்பதையும் கணக்கில் கொண்டாகவேண்டும். நான் கோண்டுகளுக்காகவோ பில்களுக்காகவோ சந்தால்களுக்காகவோ பிற ஆரியரல்லாத வனவாசிகளுக்காகவோ வக்காலத்து வாங்குவதாக நினைக்கவேண்டாம். ஆரிய குலங்கள் மற்றும் ஏகதேசம் அவர்கள் அளவுக்குப் பண்பட்டிருக்கும் இந்தியாவின் பிற குலங்கள் பற்றிய உண்மை விவரங்களைப் பேசுகிறேன்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களிடையே உரிமை, கடமை, நலன்கள் சார்ந்து மோதல்கள், வழக்குகள் ஏற்பட்டால், மிகவும் தீய குணம் கொண்டவர்கூட பொய் சொல்லமாட்டார். கடவுள் மீதான நம்பிக்கையும் பயமும் இன்னும் இவர்கள் மனதிலிருந்து அகலவில்லை.

பெரும்பாலான கிராமங்களில் அரச மரம் கட்டாயம் இருக்கும். அது அவர்களுக்குப் புனிதமானது. அந்த மரத்தின் இலைகளில் தெய்வங்கள் வசிப்பதாகவும் அதன் சல சல ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் நம்புகிறார்கள். சாட்சி சொல்பவர் ஓர் இலையைக் கையில் எடுத்துக்கொண்டு தெய்வத்தை மனதுக்குள் தியானிப்பார். ‘நான் சொல்வது பொய்யாக இருந்தால் என்னையோ என்னைச் சார்ந்தவர்களையோ நான் இந்த இலையைக் கசக்கிப் போடுவதுபோல் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடு’ என்று வேண்டிக் கொண்டு அந்த இலையைக் கசக்கிப் போடுவார். அதன் பின் தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்வார்.

அரச மரத்தில் ஹிந்து தெய்வம் உறைவதாக நம்பிக்கை. பிரமாண்ட இலவம் பஞ்சு மரம் பல பயங்கரமான தேவதைகள் வசிக்கும் மரம் என்றும் நம்பப்படுகிறது.

‘கிராமப் பஞ்சாயத்துகளில் சாட்சி சொல்பவர்கள் உண்மையே பேசுவார்கள். நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பார்த்திருக்கிறேன்; பல மனிதர்களின் சொத்து, சுதந்தரம் (சிறை போகும் வாய்ப்பு), உயிர் என எந்தவொன்றுக்குப் பாதிப்பு வருவதாக இருந்தபோதிலும் பொய்யை ஒருவர் கூடச் சொன்னதில்லை’ என்று கர்னல் ஸ்லீமன் குறிப்பிட்டிருக்கிறார்..

எந்தவொரு ஆங்கிலேய நீதிபதியும் இதுபோல் ஆங்கிலேயர் பற்றிச் சொல்லமுடியுமா?

அரச மரம் அல்லது இலவம் பஞ்சு மரத்தினடியில் நடக்கும் இந்தப் பஞ்சாயத்து வழக்குகளில் அந்த மரத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தின் பங்கு என்னவாக இருந்திருக்கும்? சாட்சி சொல்பவர் பொய் சொன்னால் அந்த மரத்தில் தனது மாய மர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வத்துக்குத் தெரிந்துவிடும். அவருக்குத் தெரிந்துவிட்டால் அதன் பின் பொய் சொன்னவருக்கு நிம்மதி தொலைந்துவிடும். அவருக்கோ அவருடைய உறவினருக்கோ ஏதேனும் விபத்தோ கஷ்டமோ வந்தால் அந்த தெய்வத்தின் கோபமே அதற்குக் காரணம் என்று நம்புவார்கள். எந்தத் தீங்கும் இழப்பும் நடக்காவிட்டாலும் இவருடைய கற்பனை மற்றும் பயத்தினாலேயே ஏதேனும் கெடுதல் நடந்துவிடும்.

இது ஓர் அற்புதமான மூல நம்பிக்கை. மரபான நூல்களில் இது அழகாக இடம்பெற்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சாட்சிகளின் முன்னோர்கள் மேலிருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். கேட்டுக்கொண்டிருப்பார்கள். இவர் சொல்வது உண்மையாக இருந்தால் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார்கள். பொய்யாக இருந்தால் நரகத்தில் தள்ளிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள்.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #11 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 4 appeared first on கிழக்கு டுடே.

பிரபலங்களின் உளவியல் #2 – எர்னஸ்ட் ஹெமிங்வே

Ernest Hemingway

ஜூலை 2, 1961-ம் ஆண்டு.

அன்று வழக்கத்திற்கு மாறாக விடியும் முன்பே விழித்துக் கொண்டார் அந்தப் பெரியவர்.

மனைவி மேரியை ஒருமுறை பரிவுடன் பார்த்துவிட்டு, வீட்டின் அடித்தளத்தை நோக்கி சோர்வுடன் நடந்துசென்றார். அங்குதான் வேட்டையாடுவதற்காக அவர் பயன்படுத்தும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவருக்கு மிகவும் பிடித்தமான கைத்துப்பாக்கி ஒன்று, முதல் வரிசையில் அவரின் வருகைக்காகக் காத்திருந்தது. நேராக அதனருகில் சென்றவர், இறுதியாக ஒருமுறை அதனைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

இந்நாள் வரை பறவைகளையும் விலங்குகளையும் மட்டுமே குறி பார்த்த அது, முதன் முறையாக முதலாளியின் தலையைக் குறி பார்த்தது.

சிறிது நேரத்தில் அங்கே கேட்ட பெருஞ்சத்தம், அந்தக் காலைப் பொழுதின் அமைதியை முற்றிலுமாக உருக்குலையச் செய்தது. முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, சத்தம் கேட்டு அவசர அவசரமாகக் கீழே வந்து பார்த்தபோது மூளைச் சிதறி பிணமாகக் கிடந்தார் உலகின் ஆகச் சிறந்த எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.

ஆம்! அவரது தந்தை கிளாரன்ஸ்போலவே தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார் ஹெமிங்வே!

நோபல் பரிசு பெற்ற, உலகின் முக்கிய எழுத்தாளராக வலம் வந்த ஹெமிங்வே, தற்கொலை செய்துகொண்டது ஏன்? அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகள் என்னென்ன?

பார்ப்போம்…

0

மூளை மடிப்புகளைப் போலவே ஹெமிங்வேயின் ஆரம்பகால வாழ்க்கை, பல சிக்கல்களைக் கொண்டது. அதற்குக் காரணம், அவருடைய பெற்றோர்கள்தான் என்றால் நம்ப முடிகிறதா?

ஹெமிங்வே 1899-ம் ஆண்டு, அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில் ஜூலை 21-ல் பிறந்தார். அவருடைய தந்தை, கிளாரன்ஸ். தாய், கிரேஸ்.

கிளாரன்ஸ் ஒரு மருத்துவர். மிகவும் கண்டிப்பு மிக்க தந்தையாகவே ஹெமிங்வேயிடம் இருந்திருக்கிறார். சிறு தவறு செய்தால்கூட அடி விழும். பொறுமை, கருணை, இரக்கம் போன்ற வார்த்தைகளுக்கு கிளாரன்ஸின் அகராதியில் இடமில்லை. அதனால், தந்தை கிளாரன்ஸைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார் ஹெமிங்வே. தந்தை மீதிருந்த பயம், விரைவிலேயே வெறுப்பாக மாறியது.

ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்த மனநல மருத்துவர் ஒருவர், ‘ஹெமிங்வேவிற்கு தன்னுடைய தந்தையைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே இருந்திருக்கிறது’ என்கிறார்.

கிளாரன்ஸுக்கு மன அழுத்த நோய் இருந்திருக்கிறது. 1928-ம் ஆண்டு அது தீவிரமடைய, தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனார் அவர்.

தந்தையின் தற்கொலை, ஹெமிங்வேயை நிறையவே பாதித்திருக்கிறது. சிறுவயதில் தனக்கு இருந்த தந்தையின் மீதான வெறுப்பு, அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு குற்றவுணர்ச்சியாக உருமாறியது.

‘தந்தையின் தற்கொலைக்குக் காரணம் நீ தான்…’ எனத் தாயான கிரேஸை வெளிப்படையாகவே பழித்தார் ஹெமிங்வே. இது ஒருவகையில், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு பாதுகாப்புக் கவசமே.

புகழ்பெற்ற அவருடைய சிறுகதைகள் பலவற்றில், தற்கொலை செய்துகொள்ளும் தந்தை கதாபாத்திரம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அவருடைய முக்கியமான நாவலான, For Whom The Bell Tolls (யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது)-ல் கூட, ராபர்ட்டின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.

தாய் கிரேஸுடனும் அவருக்கு எப்போதுமே இணக்கம் இருந்ததில்லை. ஹெமிங்வேயின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமாகிய ஜான் டோஸ் பாஸ்சோஸ், ஹெமிங்வேக்கும் அவர் தாய்க்கும் இருந்த உறவை இப்படிச் சொல்லியிருக்கிறார்.

‘தன்னுடைய தாயை உண்மையில் வெறுத்த, நான் அறிந்த ஒரே மனிதன் என்றால் அது ஹெமிங்வே மட்டும்தான்…’

தந்தை கண்டிப்பானவர், அதனால் பிடிக்கவில்லை சரி. தாயை ஏன் வெறுக்க வேண்டும்? அதற்குப் பல காரணங்களை முன் வைக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

கிரேஸ் எப்போதும் ஹெமிங்வேயைச் சுதந்திரமாக விட்டது இல்லை. இயல்பிலேயே ஆதிக்க குணம் கொண்டவர் கிரேஸ். அவர் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும்.

அக்காலத்தில் விக்டோரியா நாட்டின் வழக்கப்படி, ஆண் சிறுவர்களுக்குப் பெண்களைப்போல உடையணிவது வழக்கம். ஹெமிங்வே அதை வெறுத்தார். ஆனால்‌ கிரேஸ், ஹெமிங்வேவைக் கட்டாயப்படுத்தி அப்படிப்பட்ட ஆடைகளை அணிவித்திருக்கிறார். மேலும் அவர் அணிவித்த ஆடைகளோ‌ மிகுந்த பெண்மைத்தன்மை கொண்டதாக இருந்திருக்கின்றன. இதுபற்றி தாயிடம் சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்பது ஹெமிங்வேக்கு நன்கு தெரியும். எனவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு அமைதியாகி விடுவார் ஹெமிங்வே.

ஐந்து வயது முதல், பதின்ம வயது தொடக்கம் வரையிலான காலகட்டம்தான் பிள்ளைகளின் மனவளர்ச்சிக்கு முக்கியமான காலகட்டம். அப்போதுதான் அவர்களுடைய குணாதிசயங்கள் ஒருநிலைப்படும். இந்த நேரத்தில்தான் ஏகப்பட்ட உளவியல் சார்ந்த குழப்பங்கள் அவர்களுக்குள் உண்டாகும். அதைத் தீர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்களிடம் இருக்கிறது.

ஆனால், ஹெமிங்வேக்கு இந்தக் காலகட்டம்தான் பிரச்னையாகவே அமைந்தது. பெற்றோர்கள் மூலம் அவர் சந்தித்த நெருக்கடிகள் எல்லாமே, பின்னாளில் அவருக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்தன.

எனில், சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட இதுபோன்ற பிரச்னைகள்தான் ஹெமிங்வேயின் தற்கொலைக்குக் காரணமா?

அதுவும் ஒரு காரணமே தவிர, அதுதான் காரணம் என்றில்லை.

0

ஹெமிங்வேயின் தந்தை, மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்பதை முன்பே பார்த்தோம் அல்லவா? அவர் மட்டுமல்ல, ஹெமிங்வேயின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். (ஹெமிங்வேயையும் அவரது தந்தையையும் சேர்த்து).

மற்ற மூன்று பேருடைய விவரங்கள்:

1. லெய்செஸ்டர்: ஹெமிங்வேயின் இளைய சகோதரர். இவரும் ஓர் எழுத்தாளரே. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 67 வயதில் துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்துபோனார்

2. உர்சுலா: ஹெமிங்வேயின் சகோதரிகளுள் ஒருவர்‌. புற்றுநோயாளியான இவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 64 வயதில் அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு இறந்துபோனார்.

3. மார்காக்ஸ்: ஹெமிங்வேயின் பேத்தி. இவர் ஒரு நடிகை. தன்னுடைய 42 வயதில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் – மன அழுத்தம். தேர்வு செய்த வழி – அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டது.

இப்படி ஹெமிங்வேயின் குடும்ப மரபணுக்களிலேயே வாடகைக்குக் குடியிருந்திருக்கிறது ‘தற்கொலை’. ஆக, ஹெமிங்வேயின் தற்கொலைக்கு மரபியல் சார்ந்த விஷயங்களும் முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.

சரி, ஹெமிங்வேக்கு இருந்த நேரடி உளவியல் பிரச்னைகளைப் பற்றி பார்ப்போம்.

0

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மார்ட்டின் எனும் மனநல மருத்துவர், ‘Ernest Hemingway: A Psychological Autopsy of a Suicide’ என்ற தலைப்பில் நீண்ட ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில், ஹெமிங்வேக்கு இருந்த உளவியல் சிக்கல்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன.

ஹெமிங்வே, பைபோலார் டிசார்டர் (Bipolar Disorder) எனப்படும் மனநல நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார் மார்டின்.

இந்நோய் உள்ளவர்கள், சில சமயம் மன எழுச்சியாலும் சில சமயம் மனச் சோர்வாலும் பாதிக்கப்படுவர்.

எழுச்சியின்போது எல்லா விஷயங்களையும் அதிவேகமாக அவர்களால் செய்ய முடியும். உலகம் வண்ணமயமாகத் தெரியும். எந்நேரமும் அதீத ஆற்றலுடன் சோர்வே அடையாமல் வேலை செய்வர். தூக்கத்தைத் தூக்கித் தூர வைத்துவிடுவர். ரிஸ்க் எடுப்பதெல்லாம் இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்று. இதற்கு அப்படியே நேர் எதிரானது மனச் சோர்வின் நிலை.

ஹெமிங்வே இரண்டு வகையாலும் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறார்.

மன எழுச்சியின்போது, நேரம் காலம் பார்க்காமல் எழுதித் தள்ளியிருக்கிறார். ஹெமிங்வேயின் முதல் நாவலான ‘The Sun Also Rises’, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எழுதப்பட்டதுதான். 1924-ல் மட்டும் ஏழு சிறுகதைகளை அடுத்தடுத்து எழுதியிருக்கிறார் ஹெமிங்வே.

ஆனால், மனச் சோர்வின்போது அவரால் அப்படி இயங்க முடியவில்லை. தற்கொலை எண்ணம் மட்டுமே அவருடைய மூளை முழுக்கப் பரவியிருந்தது.

‘நான் மாபெரும் ரத்தம் தோய்ந்த வெறுமையையும் ஒன்றுமில்லாததையும் உணர்கிறேன். இனி எப்போதும் என்னால் எழுத முடியாது, சண்டையிட முடியாது, சாப்பிட முடியாது. இது என் மரணத்திற்கான ஆரம்பம்…’

மனச் சோர்வில் இருந்தபோது தன்னுடைய நண்பர் பாஸ்சோஸிடம், ஹெமிங்வே சொன்ன வார்த்தைகள் இவை.

இவருடைய மனநோய் பற்றி நன்கு அறிந்த நண்பர்கள் சிலர், ‘அவர் சில நேரம் நன்றாகப் பேசுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். சில நேரங்களில் பேசுவதே இல்லை. திடீரெனச் சிரிப்பார். திடீரென வெடித்து அழுவார். அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகள்‌, அவரைப் பாடாய் படுத்தின…’ என்கின்றனர்.

இதனாலேயே ஹெமிங்வேயால் யாருடனும் நீண்ட நாட்களுக்கு நட்பு பாராட்ட முடிந்ததில்லை. திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்வியுற்றார். மேரி, அவருடைய நான்காவது மனைவி.

மேலும், ஹெமிங்வேக்கு மற்ற எல்லா மேற்கத்திய எழுத்தாளர்கள் போலவும் மிதமிஞ்சிய குடிப்பழக்கம் இருந்தது. இது அவருக்கிருந்த உளவியல் பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தியது.

ஹெமிங்வேவுக்கு எத்தனை முறை விபத்துகள் நடந்திருக்கின்றன என்பது பற்றி, ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவுக்கு மரணத்துடன் ‘கபடி’ விளையாடியிருக்கிறார். மனைவியுடனான ஆப்பிரிக்கப் பயணத்தின்போது அவர் சென்ற விமானம் விபத்தில் சிக்கி, அதில் அவர் உயிர் பிழைத்தது அப்போதைய முன்னணிப் பத்திரிகைகளில் முதல் பக்கச் செய்தியாக வெளியானது.

காளைச் சண்டையிலும், வேட்டையாடுவதிலும் ஈடுபாடு கொண்ட ஹெமிங்வே, உடல் முழுக்கப் பல வீரத் தழும்புகளைப் பரிசாக வாங்கியுள்ளார். முக்கியமாகத் தலைப்பகுதியில் (ஹெமிங்வேயின் நெற்றியில் மினி இட்லி ஸைசில் இருக்கும் தழும்பைத் தேடிப் பார்க்கவும்).

இப்படி மாதத்திற்கு ஒருமுறை தவணை முறையில் தலையில் அடிபட்டதால், அவருடைய நினைவாற்றலில் சிக்கல் முளைத்தது. இதனால் எழுதுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார் ஹெமிங்வே.

தற்கொலைக்குச் சில மாதங்கள் முன்புதான், அமெரிக்காவின் புகழ்பெற்ற மயோ க்ளினிக் மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஹெமிங்வே. ஆனால், எவ்வளவு நாட்கள்தான் மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்?

தற்கொலை ஒரு நிழலைப்போல வாழ்நாள் முழுவதும் ஹெமிங்வேயைப் பின்தொடர்ந்திருக்கிறது. காலம் முழுக்க அவருடன் கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட அது, இறுதியாக அன்றைய விடியற்காலைப் பொழுதில் வென்றுவிட்டது.

0

சிறுவயதில் அவருக்கு ஏற்பட்ட உளவியல் சார்ந்த சிக்கல்கள், குடும்பத்தில் பிணைந்திருந்த தற்கொலைகள், குடிப்பழக்கம், தலையில் பலமுறை அடிபட்டது என இவையெல்லாம் சேர்ந்தே ஹெமிங்வேயின் உயிரைக் குடித்திருந்தன.

இறுதி வரையில் ஹெமிங்வேயின் மனைவி மேரி, ‘ஹெமிங்வே தற்கொலை செய்து கொள்ளவில்லை. துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது நடந்த விபத்தில்தான் இறந்தார்…’ என்றே நம்பி வந்தார்.

ஆனால் ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்தால், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

‘The Old Man and The Sea (கடலும் கிழவனும்)’ போன்ற மென்மையான நாவலை உருவாக்கிய ஹெமிங்வேயின் வாழ்க்கை, கடலைப்போலவே பல மர்மங்களை உள்ளடக்கியது.

ஹெமிங்வேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மைக்கேல் ரெனால்ட்ஸ், ‘ஹெமிங்வே ஆழமான கிணறு போன்றவர். அதில் குதித்துவிட்டால் மேலே ஏறி வருவது சிரமம்’ என்கிறார்.

உண்மை தான்.

(தொடரும்)

The post பிரபலங்களின் உளவியல் #2 – எர்னஸ்ட் ஹெமிங்வே appeared first on கிழக்கு டுடே.

அறிவியல் பேசலாம் # 3 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 3


அறிவு தலைமுறைத் தலைமுறையாகக் கடத்தப்படுமா? இந்திய அளவில் பிராமணர்கள் அறிவார்ந்தவர்கள் என்றும், உலக அளவில் எடுத்துக்கொண்டால் யூதர்கள்தான் புத்திசாலிகள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறதே, இதற்கு மரபணுக்களைக் காரணமாக முன்வைத்து பல கட்டுரைகள் இணையத்தில் இருக்கின்றன. இதை எப்படி எடுத்துக்கொள்வது?

அப்படிப் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. அறிவாற்றலுக்கு மரபணுச் சூழல் இரண்டுக்கும் பங்கிருக்கிறது. மரபணு அளவில் ஐகியூ கடத்தப்படும். ஐகியூ என நான் சொல்வது, அறிவாற்றல் கிடையாது. நுண்ணறிவு.

பெற்றோரின் நுண்ணறிவு அப்படியே வந்துவிடுமா?

அப்படியே வராது. ஓர் ஆய்வு 30 சதவிகிதம் என்கிறது. இன்னொரு ஆய்வு 32 சதவிகிதம் என்கிறது. அதையும் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. இந்தச் சதவிகிதம் அனைத்தும் நாம் எடுத்திருக்கும் தரவுகள் அடிப்படையில்தான். நாம் ஒரு 100 பேரை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும் 1000 பேரை எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? அதுமட்டுமில்லாமல் இங்கு ஆய்வுகள் அனைத்திலும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்துதான் சோதனை செய்வார்கள். சென்னை என்றால் சென்னை மட்டும்தான். இங்கு சென்னைக்கும் பெங்களூருவுக்குமே வேறுபாடுகள் இருக்கும். இதனால் நாம் உறுதியான முடிவுக்குவந்துவிட முடியாது. வேண்டும் என்றால் ஆரம்பகட்ட சோதனையாக இதைக் கருதலாம்.

ஐகியூ கடத்தப்படுவது உண்மை. ஆனால் கற்றல் கிடையாது. அறிவாற்றல் கிடையாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தால் புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்.

பத்து வருடத்திற்கு முன்னால் பிறந்த குழந்தைக்கும் இப்போது பிறந்த குழந்தைக்கும் புத்திசாலித்தனம் வேறுபடுவதாக தோன்றுகிறதே. பொதுவாக எல்லோருடைய குழந்தைகளுக்கும் புத்திசாலித்தனம் அதிகரித்திருகிறது என்று சொல்லலாமா? அல்லது குறிப்பிட்ட சமூகத்தை, வர்க்கத்தை சார்ந்த மக்களின் குழந்தைகளுக்கு மட்டுமா?

குறிப்பிட்ட சமூகம், வர்க்கம் என குறுக்க முடியாது. இது பொதுவான மாற்றம். ஐகியூ என்பது ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் இடையில் கட்டாயமாகக் கூடும். அதுவும் பிழைத்திருக்க ஒரு காரணம். சுற்றுச்சூழலுடன் பொருந்தி வாழ வேண்டும் என்றால் இந்தத் தொழில்நுட்பங்களை எல்லாம் அடாப்ட் செய்ய வேண்டும் அல்லவா? பொதுவாக அப்பா அம்மாவைவிட குழந்தைகள் அறிவில் ஒரு படி முன்னேறிதான் இருப்பார்கள். இது சூழல்சார்ந்தது எல்லாம் கிடையாது. கட்டாயம் முன்னேறிதான் இருக்க முடியும். காரணம், அந்தப் பத்துவருட இடைவெளியைத் தாண்டுவதற்கு, அப்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ள இயற்கை ஏற்படுத்தும் வழி இது.

சிறந்த மரபணுக்களை மட்டும் தேர்வு செய்து சிறந்த மனித தலைமுறையை உருவாக்குவோம் என சொல்லும் Eugenics பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

குறிப்பிட்ட சில பண்புகளை உயர்ந்த பண்புகள் என மனிதர்கள் நினைக்கிறார்கள். இதை மட்டும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தினால் போதும் எனச் சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தாக்கம் 19ஆம் நூற்றாண்டில் செல்வாக்கு பெற்று இன்றும் நிலவுகிறது. ஆனால் இது தவறானது. இயற்கை ஒரு பண்பைக் கொடுப்பதற்கு எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. கருப்பு நிற தோல் மட்டமானது என்பது Eugenics கருத்து. ஆனால் இயற்கைதானே அதையும் தேர்வு செய்திருக்கிறது. பிறகு எப்படி அதைக் குறைந்த பண்பாகச் சொல்ல முடியும்? Eugenics என்பது அறிவியலைத் துணைக்கு இழுத்துக்கொண்டு சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்த முயலும் கருத்து.

நாம் உளவியல் ரீதியாகவே வெள்ளை தோலால் ஈர்க்கப்படுகிறோம் என்று சொல்லலாமா?

கிடையவே கிடையாது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் யார் அதிகாரத்தில் இருந்தார்கள் என்றால் வெள்ளையர்கள். அவர்களை அடிப்படையாக வைத்தே நாம் வெள்ளையை வழிபட தொடங்கிவிட்டோம். இதை வேறு உதாரணங்களிலும் சொல்லலாம். பெண்களை ஏன் பலவீனமான பாலினம் என்கிறோம். அறிவியல் ரீதியாக அதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது. அது உளவியலால் வந்ததா? இல்லை. அதை ஒரு சமூகம் வலியுறுத்த வலியுறுத்த நாம் அதை ஏற்றுக்கொண்டுவிட்டோம். ஆப்பிரிக்கப் பெண்களைக் கீழ்மைப்படுத்தி Polyandry போன்ற விஷயங்களைக் கடைபிடிப்பதால் அங்கு பாலியல் ரீதியான நோய்கள் அதிகம்தான் வருகின்றன.

அப்போது ’உயர்தர’ என்கிற விஷயமே போதிக்கப்பட்டது என எடுத்துக்கொள்ளலாமா?

ஆம்.

அப்படிப் பார்த்தால் தூய இனம் என்ற ஒன்று கிடையாதா?

கிடையவே கிடையாது. நமது சருமம் ஆப்பிரிக்க வம்சாவளியில் இருந்து வந்தது. இதுபோல எப்படிப் பார்த்தாலும் ஏதாவது ஒரு பண்பு வேறோர் இடத்தில் இருந்துதான் வந்திருக்கும். மனித இனமே கலப்பினத் தொகுதிதான். தூய்மை என்பது கிடையாது.

அப்போது உயர் குலம், தாழ் குலம் என்று சொல்வது எல்லாம்?

உதார். எங்கள் ஆசிரியர், கெங்கிஸ்கான் டி.என்.ஏதான் வடக்கு முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பார். ஆனால் அவர்கள்தான் தங்களைத் தூய இனத்தினர் எனச் சொல்லிக்கொண்டு இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள்.
தூய இனம்போல் திறமையும் மரபு ரீதியாகத் தொடராது. ஒரு குறிப்பிட்ட சாதிதான் புத்திசாலியாக இருக்கும். குறிப்பிட்ட சாதி ஆளும் திறன் வாய்ந்தது. ஒரு சாதிக்குத் திறமையே கிடையாது என்றெல்லாம் சொல்லவே முடியாது. அதேபோல ரத்த உறவு (Consanguinity) தப்பு. பல மரபியல் நோய்களுக்கு இதுதான் காரணம்.

உறவினர்களுள் முதல் வட்டத்திற்குள் திருமணம் செய்வதற்கும், ஒரே தலைமுறைக்குள் திருமணம் செய்வதற்கும், ஒரு தலைமுறை மாற்றிச் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதாவது, தாய்மாமன் என்பது முதல் தலைமுறை. அக்காவுடைய பெண் என்பது இரண்டாவது தலைமுறை. இந்த இரண்டு பேருக்குள் திருமணம் செய்யக்கூடாது. அத்தைப் பெண் மாமா பெண் என்றால் இருவரும் ஒரே தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். ஒரே வயது அளவில்தான் இருப்பார்கள். ஆனால் அதில் செய்வதுமே பிரச்னை இருக்கிறது. ரொம்ப நெருக்கமான உறவுக்குள் திருமணம் செய்வது சிக்கல். ஆனால் கொஞ்சம் தூரத்து உறவினராக இருந்தால் பிரச்னை இல்லை. சொந்த அத்தை கிடையாது, சொந்த மாமா கிடையாது என்றால் பிரச்னை இல்லை.

அதேபோல இஸ்லாமியச் சமூகத்தில் அம்மா வழி சித்தி மகன்கள், தாய் வழியில் வரும் சகோதரியின் மன்களைத் திருமணம் செய்வார்கள். அதையும் செய்யக்கூடாது. Consanguity எதற்கு வந்தது என்றால், சொத்து போய்விடக்கூடாது. சொந்தம் போய்விடக்கூடாது என்பதால்தான். ஆனால் இப்போது அதுதான் பாரம்பரியம். பண்பாடு என்பதுபோன்று ஆகிவிட்டது.

இதேபோல சாதிக்குப் பொது பண்பு விதிப்பதும் மரபியல் ரீதியில் பொய். ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள்தான் குற்றவாளிகள், தீமை செய்வார்கள். இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்கள் நல்லவர்கள் என்று முத்திரை குத்துவதும் மரபியலுக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தாலே கெட்டவன் என முத்திரை குத்திவிடுகிறார்கள். அவர்களை நல்லவர்கள் என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்வது இல்லை. ஒருவன் குற்றச் செயல் செய்வது ரத்தத்திலேயே ஊறிப்போவது என்று சொல்வது தவறு. அதேபோல இறைச்சி சாப்பிடுபவர்கள் வன்முறையாக இருப்பார்கள் என்பதும் தவறு.

சில குறிப்பிட்ட சாதியினர் உயர்ந்த பதவியில் இருப்பதற்கும் மரபியல்தான் காரணம் எனச் சொல்வதும் உண்டு. உண்மையில் அவர்கள் எத்தனை தலைமுறையாக படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு சிறுவன் புதிதாகப் பள்ளிக்குச் செல்வதற்கும், பத்துத் தலைமுறையாகச் செல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இது மரபியல் கிடையாது. சூழல்தான் காரணம். புதிதாகச் செல்பவன் பள்ளியில்தான் படிக்க முடியும். ஆனால் பத்துத் தலைமுறையாக செல்பவனுக்கு சொல்லிக் கொடுக்கப் பத்துத் தலைமுறையும் இருக்கும். ஐகியூ மரபணுவில் இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த, Enhance செய்வதற்கான வாய்ப்பைச் சூழல்தான் தருகிறது.

நான் ஒரு என்.ஜி.ஓவில் பணியாற்றினேன். குற்றச் செயல் செய்த மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறேன். அவர்கள் நம்மிடம் எந்த வன்முறையும் காட்ட மாட்டார்கள். ஒன்றை எழுதி முடித்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்றால் அமைதியாக பயத்துடன் எழுதி காட்டிவிட்டுதான் செல்வார்கள். ஆனால் வெளிச் சூழலில் வன்முறை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இதற்குக் காரணம். அவர்கள் ஒரு மாணவனை ’நீ தத்தி’, ‘அப்பன் மாதிரி’ என்றெல்லாம் சொல்வதால் அவர்கள் உளவியலால் பாதிக்கப்பட்டு படிப்பு மேல் அக்கறையே இல்லாமல் போய்விடுகிறது.

வெறி, கோபம் எல்லாம் மரபணுக்களில் வெளிப்படுமா?

அதற்கான தன்மை மரபணுக்களில் இருந்தாலும் வெளிப்படுவது சூழலைப் பொறுத்து, வாழ்வியலைப் பொறுத்துதான் அமைகிறது. உளவியல், நடத்தை ஆகிய விஷயங்களை மரபணுவும் சரி, சுற்றுச்சூழலும் சரி சமவிகிதத்தில் பாதிக்கும்.

இவற்றில் எது அதிகம் தாக்கம் ஏற்படுத்தும்?

சொல்ல முடியவில்லை. மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள்கூடக் காரணமாக இருக்கலாம். இன்றைய மரபியல் உலகில் முக்கியமான விவாதமே அதுதான். மரபியல், சுற்றுச்சூழல், உளவியல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு.

நாம் நேர்மறை எண்ணங்களை விதைத்தால் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்களே?

கிடையவே கிடையாது. நமது உடலின் செயல்பாடுதான் மரபணு என்பது. நம் உடல் எப்படி இயங்குகிறது. நமக்கு வேண்டிய இன்சுலின் வெளியாகிறதா? கொலஸ்ட்ரால் சரியான அளவில் இருக்கிறதா என உறுதி செய்வதுதான் மரபணுவின் வேலை. பிழைத்திருத்தல், தகவமைத்தல், இயங்குதல் ஆகியவற்றுக்கானது மரபணு. அது பிறப்பிலேயே கடத்தப்படுகிறது. அவை இயங்குவதற்கு சுற்றுச்சூழல் பங்களிக்கிறது. ஆனால் எண்ணங்களால் மாற்றம் நிகழும் என்பதில் எல்லாம் உண்மை இல்லை.

தமிழ்ச் சமூகத்துக்கும் அறிவியலுக்கும் இருக்கும் தொடர்பு எத்தகையது?

தமிழ் சமூகத்துக்கும் ஆறிவியலுக்கும் இடையே தொடர்பு இருப்பது உண்மைதான். தொல்காப்பியத்திலேயே அதற்கான கூறுகள் இருக்கின்றன. இதை நான் என் நூலிலும் எழுதியிருக்கிறேன். அதேபோல பஞ்சாகத்தையும் சொல்லியாக வேண்டும். அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்றே ஆச்சரியமாக இருக்கிறது. அந்தக் காலத்து அறிவியலை அந்தக் காலத்துச் சூழலுடன் பொறுத்திப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அதை இப்போது கொண்டு வந்து நம்பச் சொன்னால் ஏற்க முடியாது. இதைச் சொல்லிதான் நிறைய போலி அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது.

மரபியலில் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதா?

மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா என்று கேட்டால் சந்தேகமே. ஆனால் ஆய்வு ரீதியாக வந்துவிட்டது. குறிப்பாக மூலக்கூறு அளவில் ஆய்வு செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. இப்போது நான் ஒரு விஷயம் கண்டுபிடிக்கிறேன் என்றால் அதைச் சார்ந்து இன்னொரு ஆய்வு நடைபெற்றால் அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக ஒரு புரதம் இன்னொரு புரதத்தோடு இணைந்து இயங்கும்போது எவ்வளவு வலுவாக ஊடாடுகிறது. எந்த இடத்தில் அந்த ஊடாட்டம் நிகழ்கிறது என்பதை எல்லாம் இதில் அறிய முடியும்.

செயற்கை நுண்ணறிவின் முக்கியமான நோக்கம் என்னவென்று கேட்டால், இப்போது என்னிடம் ஒரு புரதம் இருக்கிறது. அந்தப் புரதச் செயல்பாட்டைத் தடுப்பதற்கு என்னிடம் 100 தடுப்பான்கள் (Inhibitors) இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். பரிசோதனைக் கூடத்தில் ஒவ்வொரு தடுப்பானாகச் சோதித்துப் பார்த்தால் எது சரியான தடுப்பான் எனக் கண்டுபிடிப்பதற்கே 20 ஆண்டுகள் ஆகிவிடும். இந்த ஆய்வைத் துரிதப்படுத்துவதற்கு இப்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. அந்த நூறு தடுப்பான்களைக் கொடுத்து, அதன் தன்மை எல்லாவற்றையும் தந்து, இவற்றில் பத்து சிறந்த தடுப்பான்களைக் கொடு என்று கேட்டால் அதைச் செயற்கை நுண்ணறிவு ஊகித்துச் சொல்லிவிடும். அந்தப் பத்துத் தடுப்பான்களை நாம் எடுத்து சோதனை செய்யலாம். இதனால் நேரமும் குறையும். செலவும் குறையும். செயற்கை நுண்ணறிவு இருந்ததால்தான் கோவிட் போன்ற பெருந்தொற்றை வெகு சீக்கிரமாக நாம் தடுத்து நிறுத்தினோம்.

எதிர்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதாவது ஜெனிட்டிக் கிட் போன்றவை இருக்குமா?

இப்போதே இருக்கிறது. 23andme. நீங்கள் உங்கள் எச்சில் மாதிரியைத் தந்தால் போதும், அதில் உள்ள டி.என்.ஏவை ஆய்வு செய்து, உங்கள் மூதாதையர் யார், யாரெல்லாம் உங்கள் வழி வந்தவர்கள், உங்கள் நெருங்கிய உறவினர் எந்தப் பகுதிகளில் எல்லாம் இருக்கிறார்கள் என எல்லாவற்றையும் சொல்லிவிடும்.

ஆறு மாதத்தில் உங்களுக்கு இந்த நோய் வரப்போகிறது. ஒரு வருஷத்தில் இந்த நோய் வரப்போகிறது. கட்டாயம் இந்த நோய் வந்துதான் நீங்கள் சாகப்போகிறீர்கள் என்பதையெல்லாம் ஊகித்துச் சொல்லிவிடும். 23அண்ட்மீயின் முக்கியப் பயன்பாடு மரபணு சார்ந்த நோயை ஊகிப்பது. உங்கள் மரபணுவில் எந்த அளவு பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை வைத்து இதைச் செய்கிறது.

டி.என்.ஏவை ஆய்வு செய்யும்போது என்னவெல்லாம் கண்டடையலாம்? நோயைக் காண்டடைய மட்டும்தான் டி.என்.ஏவா?

நமது பண்புகளைக் கண்டுபிடிக்கலாம். அதேபோல குழந்தைக்கு யார் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் எனப் பல வழக்குகளில் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது. தடயவியல் துறையில் பயன்படுகிறது. கைரேகைபோல டி.என்.ஏவும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையுடன் இருக்கும் இல்லையா? இதனால் குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் டி.என்.ஏ தரவுகளை வைத்து நாம் கண்டுபிடிக்கலாம்.

கைரேகை தரவுகள் போல டி.என்.ஏ தரவுகள் இருக்குமா என்ன?

இருக்கிறது. NCBI எனும் இணையதளத்திற்குச் சென்று எல்லா தரவுகளையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் தரவுகள் மட்டுமே.

நாம் மூதாதையரைத் தெரிந்துகொள்ள இந்தத் தரவுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாமா?

இந்தியாவைப் பொறுத்தவரை கிடையாது. இந்தியாவில் யாரும் அதுபோன்ற ஆய்வுகளைச் செய்வதில்லை. இந்தியாவில் ஜனத்தொகையை மையப்படுத்தி செய்யும் ஆய்வுகள் அத்தனையும் நோய் சார்ந்தே இருக்கின்றன. அதையெல்லாம் அவர்கள் செய்திருந்தால் ஆரியர்கள், திராவிடர்கள் பஞ்சாயத்தே வந்திருக்காது.

மானுடவியல் பார்வையில் மரபியல் ஆய்வுகள் இந்தியாவில் எந்த அளவுக்கு இருக்கிறது?

சுத்தமாக எதிர்காலம் கிடையாது. ஒருசில ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் பெரிய அளவில் நடப்பதில்லை. மானுடவியல் மட்டுமல்ல, பொதுவாகவே மரபியலுக்குப் பெரிய எதிர்காலம் கிடையாது. இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது. இந்தியாவில் மரபியல் நோய்கள் அதிகம். ஆனால் ஆய்வுகள் குறைவு. இரண்டுமே இருக்கும் நிலை இந்தியாவில் தொடர்கிறது. அதற்கான நிதிகள் வருவதே இல்லை. அதேபோல நிறுவனங்களும் முக்கியத்துவம் இல்லை.

ஆனால், கோவிட் பெருந்தொற்றில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது‌. இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவ ஆய்வுகளில் பல நெறிமுறை கெடுபிடிகள் இருக்கின்றன. ஆனால், வளரும் நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஒரு முன்னுதாரணமாகத்தான் இருக்கிறது. இதுவே வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியா இன்னும் வெகு தூரம் போக வேண்டும்.

பெரும்பாலும் இந்திய ஆய்வுகள் இன்னும் நேரடி மக்கள் பயன்பாட்டை எட்டவில்லை. ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காகத்தான் இருக்கிறது. வெளிநாடுகளில் அப்படிக் கிடையாது. உதாரணமாக, ஐரோப்பாவில் மரபியல் ஆலோசனை என்பது மருத்துவத்தில் ஒரு பகுதி. இந்தியாவில் அப்படிக் கிடையாது.

ஏன் வெளிநாடுகளில் மட்டும் அதிகம்?

அவர்கள் குடும்ப அமைப்பு அப்படி. அவர்கள் குடும்ப அமைப்பே இடியாப்பச் சிக்கலைப்போன்றது. Half brother, Half sister, Step brother, Step Sister போன்ற உறவுகள் நிறைய இருக்கின்றன. மூலம் தெரியாத விதமாக அவர்களுக்குள் திருமணம் நடந்து, அவர்களுக்குக் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்கு மரபியல் குறைபாடு வரக்கூடாது என்பதால் அவர்கள் ஒவ்வொன்றையும் மருத்துவ ரீதியாக ஆய்வு செய்த பின்னரே தொடங்குகிறார்கள்.

ஆனால், இங்கு அப்படிக் கிடையாது. இங்கு இருக்கும் மூன்று தலைமுறை வரைபடத்தை வரைந்தோம் என்றால் அது நேரடியாக இருக்கும். வேறு எங்கும் இணைப்பே இருக்காது. அப்படி இணைப்பு இருந்தாலும் தாய்மாமன் வழியில் மட்டுமே இருக்கும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் அப்படிக் கிடையாது. இதனாலேயே வெளிநாடுகளில் மரபியல் ஆலோசனை படிப்பதற்கு பலரும் விரும்புகின்றனர். நிறையத் தெரிந்துகொள்ள முடியும். நிறையக் கண்டுபிடிக்க முடியும்.

இங்கு மரபியல் குறைபாடு இருக்கிறது என்றாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கருவைக் கலைக்க மாட்டார்கள். உணர்வே இல்லாத ஒரு குழந்தையைக் கலைப்பதற்கும் அதற்கு எல்லாவற்றையும் கொடுத்து வலியுடன் வாழ வைப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. உணர்ச்சிகள், கலாசாரக் கெடுபிடிகள் காரணமாக இங்குள்ள பெற்றோர்கள் அவ்வாறு செய்வதில்லை. வெளிநாடுகளில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதற்கு மரபியல் நோய் இருக்கப்போகிறது என்றால் யோசிக்காமல் கலைத்துவிடுவார்கள்.

இங்குள்ள கலாசார, மத ரீதியான நம்பிக்கைகளால் சிகிச்சை மட்டுமல்ல, சோதனைகளும் பாதிக்கப்படுகிறது. சிலர் பரிசோதனை செய்யவே முன் வருவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவின் மருத்துவக் கொள்கைகள் மரபியல் அடிப்படையில் இருக்கிறதா?

மரபியல் ஆய்வுகளுக்கு என்று தனிக் கொள்கைகள் இருக்கிறது. PCPNDT என்று தனியாக ஒரு சட்டம் இருக்கிறது. அதில் மரபியல் ஆலோசகரின் வழிகாட்டல், நெறிமுறைகள், யாரெல்லாம் மரபியல் ஆலோசனை வழங்கலாம், எங்கு செய்யலாம், எவை எல்லாம் மரபியல் குறைபாடுகள், அதில் எவை எல்லாம் சரி செய்ய முடியும் எனச் சொல்லியிருப்பார்கள்.

மரபியல் குறைபாடுடையவர்கள் எங்கு சென்று அணுக வேண்டும்?

Centres for Excellence என இடங்கள் இருக்கின்றன. சில மருத்துவமனைகளை அரசாங்கமே Centre for excellences என நிர்ணயித்திருக்கும். இங்கு சென்று மரபியல் நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, தமிழ்நாட்டில் ஹீமோபிலியா நோய்க்கு ராஜிவ் காந்தி மருத்துவமனை ஒரு சிகிச்சை மையம். கட்டணம் கிடையாது. அதேபோல AIIMS ஒரு சிகிச்சை மையம். இப்படிப் பல இடங்கள் இருக்கின்றன. குஜராத்தில் Gujarat State Biotechnology Mission. அங்கு சென்று நாம் டி.என்.ஏவை சீக்வென்ஸ் செய்துகொள்ளலாம். அதேபோல மாநில அரசுகளும் இதேபோன்ற மருத்துவமனைகளை அங்கீகரித்துள்ளன. இன்னொன்று Rare Diseases Registry என்று ஒன்று இருக்கிறது. அங்கு சென்று நாம் நமக்கு இருக்கும் மரபியல் நோயைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யும்போது அதேபோலக் குறைபாடுகள் உடையவர்களிடம் நம்மை அறிமுகம் செய்து வைப்பார்கள். இந்த நோய்களுக்கு உதவும் என்.எஜி.ஓக்கள், காப்பீடு நிறுவனங்கள், மருத்துவ நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைத்துவிடுவார்கள்.

பண்டையக் காலத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறதே உண்மையா?

நாம் அப்போது இருந்த ஆரோக்கியத்தையும், இப்போதுள்ள ஆரோக்கியத்தையும் ஒப்பிடத் தரவுகள் கிடையாது. மேலும் எதை வைத்து நம்மால் ஒப்பிட முடியும்?

மிக்சி, கிரைண்டர் எல்லாம் இல்லாத காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்ததாக ஒரு கருத்து நிலவுகிறதே?

எதை வைத்துச் சொல்கிறார்கள்? அப்போது கழிப்பறைகள் கிடையாது. சுகாதார வசதிகள் கிடையாது. மாதவிடாய் வந்தால் பயன்படுத்த நேப்கின்கள் கிடையாது. பல ஆரோக்கியப் பிரச்னைகள் இருந்திருக்கும். வயதாகி இறந்ததைப்போன்று பாம்பு கடித்து, பூச்சிகள் கடித்து இறந்தவர்களும் அதிகம். அதற்கான தரவுகளும் நம்மிடம் கிடையாது. இன்னொன்று கர்ப்பத்தின்போது, குழந்தை பிறப்பின்போது இறந்தவர்கள் அதிகம். இந்த இரண்டு வாழ்வியலையும் ஒப்பிட முடியாது.

இயற்கை மரணம் இப்போதுதான் அதிகம். இது எளிமையான லாஜிக்தான். அப்போது ஒரு நோய் வந்தால் குணப்படுத்த முடியாது. காலரா, பெரியம்மை, போலியோ போன்ற நோய்கள் வந்தால் இறந்துவிட வேண்டியதுதான். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது. மனித வாழ்நாள் நீண்டிருக்கிறது. இயற்கை மரணம் அதிகரித்திருப்பது இப்போதுதான். மேலும் நம்மிடம் இருக்கும் தரவுகள் அனைத்தும் நகரத்தை மையப்படுத்தியே இருக்கின்றன. கிராமங்களில் எப்படி இருந்தார்கள் என்பதற்கான தரவுகள் இல்லை. கிராமங்களில் மாசு கிடையாது என்கிறோம். என் அம்மா பிறந்த ஊரில் தொண்டையில் புற்றுநோய் வந்து 11 பேர் இறந்துள்ளனர். இதை எப்படி எடுத்துக்கொள்வது? நகரத்தில் இருக்கும் மருத்துவமனைகள் மட்டுமே தரவுகளைத் தருவதால் கிராமத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற தரவுகள் நமக்குக் கிடைப்பதில்லை.

மரபியல் மாற்றப்பட்ட உணவுப்பொருட்களால் நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்குமா?

நாம் ஒரே கோணத்தில் எதையும் அணுக முடியாது. நாம் செயற்கையாக ஏற்படுத்தும் ஒரு மரபியல் மாற்றத்திற்கு எதிராக இயற்கையில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. இதனால்தான் பிடி கத்திரிக்கா, பிடி காட்டன் போன்றவை மிகப்பெரிய பிரச்னையை விளைவிக்கக்கூடியவையாக இருக்கின்றன. அவற்றால் நேரடி நோய்கள் உடலுக்கு வராது என்று விஞ்ஞானிகள் வாக்கு கொடுக்கலாம். ஆனால் இவை உணவு சங்கிலியைப் பாதிக்கின்றன. அதனால் வேறு விதமான நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லா ஆய்வுகளும் மனிதர்களை மையப்படுத்தியே இருக்கின்றன. மனித நலனை நோக்கித்தான் இருக்கின்றன. அவை மற்ற உயிர்களுடனான சமநிலையை நோக்கி இருப்பதில்லை. இவைதான் நமக்கும் இயற்கைக்கும் இடையிலான வேறுபாடு. இயற்கை ஒரு மாற்றத்தை எல்லா உயிரினங்களை நோக்கிய சமத்துவ நோக்கில் பார்க்கிறது.

உதாரணம் சொல்கிறேன். பூச்சிகள் தாரவங்களைப் பாதிக்கிறது அல்லவா? தாவரங்களுக்கு இயற்கையாகவே பூச்சித் தாக்குதலைத் தடுக்கும் எதிர்ப்பு இயக்கமும் இருக்கும். அதேபோல அந்த எதிர்ப்பை உடைக்கும் குணமும் பூச்சிகளுக்கு இயற்கையாக வழங்கப்பட்டிருக்கும். இது ஒருவகை பொதுவான பண்பு. இது இயற்கையாக நடப்பது ஒரு பிரச்னையும் இல்லை. இது தவிர பூச்சிகள் மூலம்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. பூச்சிகள் இல்லை என்றால் செடிகள் எப்படிப் பெருகும்?

ஆனால் நாம் இந்தப் பூச்சித் தாக்குதலைத் தடுக்க, தாவரங்களின் மரபணுக்களில் இருக்கும் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்துவிடுகிறோம். ஆனால் இது உணவுச் சங்கிலிச் சமநிலையைக் குலைத்துவிடுகிறது. இதனாலேயே நீண்ட நோக்கில் பார்க்கும்போது அந்தத் தாவரத்தால் பிழைக்க முடியாது. சில சமயங்களில் அதை உண்ணும் நமக்கும் ஏதாவது ஒரு பிரச்னை வரும். இந்த எதிர் மரபணுப் பிறழ்வு எங்கு நடக்கிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் பெரிய வில்லங்கமே.

தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பண்பை நாம் வளர்த்தேடுப்பது. உதாரணமாக நெற்பயிற்கள் பயிரிடும்போது அதில் எந்த நெற்மணிக்கள் பெரிதாக இருக்குமோ, அதிக விளைச்சலைத் தருமோ அதை மட்டும் தேர்ந்தெடுத்து மீண்டும் பயிரிடுகிறோம். அதன்மூலம் நாம் அத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு தனி ரகத்தையே உருவாக்குகிறோம். இதுவும் பிரச்னைதான்.

இந்தத் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் எந்த அளவுக்கு செல்கிறது என்பதுதான் பிரச்னை. எதற்காக இயற்கை இரண்டு வகைகளை உருவாக்க வேண்டும்? குட்டைச் செடி, உயரமான செடி என்று இரண்டு இருக்கிறது என்றால் நாம் நம்முடைய தேவைக்காக உயரமான செடியைத் தேர்வு செய்துகொள்கிறோம். அது நமது தேர்வு. இயற்கையின் தேர்வு கிடையாது. இயற்கை இரண்டும் வேண்டும் என்பதால்தான் இரண்டு உயரத்திலும் செடிகளைத் தருகிறது. நாம் நமது தேர்வால் உயரமான செடியைத் தேர்வு செய்து அதை மீண்டும் மீண்டும் பெருக்குவதால் நமது உற்பத்தி அதிகரிக்கும் என்பது உண்மைதான். நிறையப் பேருக்கு உணவு வழங்கலாம்தான். ஆனால் அந்தக் குட்டைச் செடியில் என்ன நல்லது இருக்கிறது என்பதே நமக்குத் தெரியாமல் போய்விடுமே? இப்படிச் செய்துதான் கம்பு, சாமை, திணை எனப் பலவற்றை நாம் இழந்துவிட்டோம். அரிசியும் கோதுமையும்தான் பொருளாதாரரீதியாக பலன் தரக்கூடியது என்பதால் நாம் அதற்கு முக்கியத்துவம் தந்து மற்றவற்றைக் குறைத்துவிட்டோம்.

மரபணுக்களை எடிட் செய்யும் கிரிஸ்பர் (CRISPR) தொழில்நுட்பம் மூலம் நமது உடலில் உள்ள குறைபாடுகளை நீக்க முடியுமா?

நிறைய அறநெறி பிரச்னைகள் இருக்கின்றன.

அது இருக்கலாம். ஆனால் அறிவியல் பூர்வமாக முடியுமா?

சொல்ல முடியாது. நமது ஆய்வுகள் அனைத்தும் பரிசோதனைக்கூடத்திற்கு உட்பட்டது. பரிசோதனைக்கூடம் சார்ந்தது. நமது உடலிலும் அதுதான் நடக்குமா என்றால் சொல்ல முடியாது. உதாரணமாக நாம் இரண்டு புரதம் அல்லது இரண்டு மரபணுக்களின் இயங்கு விதத்தை மட்டும் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். இதுவே நம் உடலை எடுத்துக்கொண்டே அதே நேரத்தில் அதே மரபணுவுடன் / அதே புரதத்துடன் பத்தாயிரம் புரதங்கள், பத்தாயிரம் மரபணுக்கள் இணைந்து இயங்கிக்கொண்டிருக்கும். எதனுடைய தாக்கமும் எதன் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நமக்குத் தெரியாது.

நாம் இரண்டே இரண்டு மரபணுக்களை மட்டும் வைத்து ஆய்வு செய்வதற்கும் உடலுக்குள் நடப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. இது அறிவியல் சமூகத்திற்கும் தெரியும். இப்போது செய்றகை நுண்ணறிவு வந்தது ஒருவகையில் பலன் தரலாம். செயற்கை நுண்ணறிவு மூலம் நம் உடலின் வளர்ச்சிதை இணைப்பை (Metabolic Networks) செயற்கையாக உருவாக்கிவிடுகிறார்கள். நமது உடல் வெப்பத்தையும் செயற்கையாகக் கொடுத்துவிடுகிறார்கள். எல்லாமே கணினி மாதிரிகள்மூலம். கொடுத்துவிட்டு அதன் எதிர்வினை எப்படி இருக்கிறது எனப் பார்க்கிறார்கள். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் நமக்குப் பல பதில்கள் கிடைக்கின்றன.

ஆனால் இதையும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஓர் ஊகமாக வைத்துக்கொள்ளலாம். கிரிஸ்பரிலும் இதேதான் நடக்கப்போகிறது. நாம் செய்வது அனைத்தும் பரிசோதனை ரீதியாக நிரூபணமானது. ஆனால் நமது உடலுக்குள்ளும் இப்படித்தான் நடக்குமா என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் அது தெரியும். ஆனால் ஒரு இடத்தில் பதில் கிடைத்துவிடாதா என்றுதான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

புற்றுநோயை ஏற்படுத்துவதாக மொத்தம் 300 மரபணுக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் 300ஐயும் மொத்தமாக வைத்து யாரும் பணியாற்றுவது இல்லை. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு மரபணுவை வைத்து வேலை செய்கிறார்கள். அதிகபட்சமாக 10 மரபணுக்களை வைத்து வேலை செய்வார்கள். ஏனென்றால் நம்முடைய அறிவு அவ்வளவுதான். நம்மால் மூன்று பரிமாணத்தில் மட்டுமே அனைத்தையும் பார்க்க முடியும். அதைத்தாண்டி ஒரு பரிமாணத்தில் நம்மால் சிந்திக்க முடியாது. இன்னொன்று எல்லாமும் உடலில் ஒரே இடத்தில் நடந்தால் பிரச்னை இல்லை. ஆனால் நம் உடல் அப்படி இயங்குவதில்லை. நாம் தொடும் உணர்வே இங்கிருந்து நமது மூளைக்குச் சென்று திரும்பி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு அசைவிலும் ஒட்டுமொத்த உடலுமே ஈடுபட்டிருப்பதால் நம்மால் உறுதியாக கிரிஸ்பரால் பயன்பெற முடியுமா என்று சொல்ல முடியவில்லை. ஆனால், தீர்க்க முடியாத சில மரபணுக் குறைபாடுகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையலாம் என்பதால் தான் CRISPR/CAS9 தொழில்நுட்பத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நோயைக் குணப்படுத்த ஜீன் தெரப்பிகள் இருக்கின்றவே?

ஜீன் தெரப்பியின் வெற்றி விகிதம் நல்லவிதமாகத்தான் இருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட மரபணுவுக்கு மட்டும்தான். பெரிய அளவில் பல்வேறு மரபணுக்கள் ஈடுபடும்போது செய்யமுடியாது. அதுமட்டுமில்லாமல் எல்லா மரபியல் குறைபாடுகளுக்கும் இந்த தெரப்பி வேலை செய்யாது. உதாரணமாக சிஸ்டிக் பைப்ரோஸிஸ் எடுத்துக்கொண்டால் அதற்கு ஜீன் தெரப்பி இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆராய்ச்சி படிநிலையில்தான் இருக்கிறது. அதுவும் Puff வகையில். அதற்கென்று இன்ஹேலர்ஸ் இருக்கின்றன. அவை பாதிக்கப்பட்ட மரபணுக்களுக்குப் பதிலாகப் புதிய mRNAவை செல்களுக்குள் செலுத்தும். அதையும் முழு வெற்றியாகக் கருத முடியாது. எல்லாமே பராமரிப்பு நோக்கம்தான். அனைத்தும் ஆராய்ச்சிநிலையில்தான் இருக்கின்றன. ஆராய்ச்சியின் கட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுமே தவிர இன்னும் அதிகாரப்பூர்வமாக முற்றிலும் நோய் குணப்படுத்தலுக்கான சிகிச்சை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நோய்க்கான சில மருந்து கலவைகளை FDA அமைப்பு அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாவரங்களில்?

தாவரங்களில் கிரிஸ்பார் பயன்படுத்தலாம். ஆனால் இதையெல்லாம் செய்துதான் நாம் பிரச்னையை இழுத்து வைத்திருக்கிறோமே!

ஆயுர்வேத மருத்துவம் போன்ற Evidence Bassed மருத்துவம் இல்லாதவை மரபியல் நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறதா?

ஆயுர்வேதம் குணப்படுத்தாது. மக்களும் செல்வதில்லை. முதலில் மக்கள் மரபியல் குறைபாடுகள் இருப்பதையே ஒப்புக்கொள்வதில்லை. ஒப்புக்கொண்டால்தானே செல்வார்கள். அதுமட்டுமில்லாமல் அலோபதியே தள்ளாடும்போது ஆயுர்வேதத்தால் குணப்படுத்த முடியாது.
உண்மையில் ஆங்கில மருத்துவம் என்றால் என்ன என்றே தெளிவு பலருக்கு இல்லை. ஆங்கில மருத்துவம் என்றால் தரவுகள் சார்ந்த, ஆதாரங்கள் சார்ந்த மருத்துவம். அவ்வளவுதான். ஆனால் பலர் அதனைச் செயற்கை, வேதியியல் மருத்துவம் என்கிறார்கள். உண்மையில் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளே இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களை எடுத்து செய்வதுதான். உதாரணமாக ஆயுர்வேதத்தில் வேப்ப இலை சாப்பிட்டால் பாக்டீரிய எதிர்ப்பு தன்மை இருக்கிறது என்று சொல்கிறோம் இல்லையா? நமது மாத்திரைகளில் என்ன இருக்கிறது? அந்த வேப்ப இலையில் எந்த வேதிப்பொருளுக்கு பாக்டீரிய எதிர்ப்பு தன்மை இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொடுப்பதுதான் ஆங்கில மருத்துவம். இவர்கள் நினைப்பதுபோல கார்பன், ஆக்சிஜன், சல்பர் ஆகியவற்றை நாம் தனித்தனியாக எடுத்து கலந்து தருவதில்லை. Drug என்பதே இயற்கைக் கலவைதான்.

நாட்டுப் பப்பாளியில் இருக்கும் ஒருவகை கொழுப்பு சருமத்திற்கு நல்லது எனக் கண்டறிந்து பயன்படுத்துகிறோம். அது முதலில் ஏன் பப்பாளியில் இருக்கிறது தெரியுமா? பப்பாளியில் வட்ட, வட்டமாக ஒருவகை பரவல் இருப்பதைப் பார்த்திருப்போம். அது பப்பாளியைத் தாக்கும் ஒருவகை வைரஸ் பாதிப்பால் ஏற்படுவது. அந்த வைரஸ் கொடுக்குள்ள குட்டிப் பூச்சிகள் வழியாக ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்குப் பரவும். இதுபோன்ற வைரஸ் பரவல்களை ஏற்படுத்தும் பூச்சிகளை வெக்டர் என அழைப்பர். அந்தப் பூச்சிகளின் கொடுக்கை உள்ளே போக விடாமல் தடுப்பதற்கும் வைரஸிடமிருந்து பப்பாளியைக் காப்பாற்றுவதற்கும் அந்தக் கொழுப்பு பயன்படுகிறது என்பதைச் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். நமது காலில் எண்ணெய் தேய்த்தால் எப்படிக் கொசு கடிக்காதோ, அதேபோலதான் அந்தக் கொழுப்பும் பயன்படுகிறது.

இந்த கொழுப்பை மட்டும் எடுத்து, இந்த வைரஸுக்கும் வெக்டாருக்கும் இடையில் இருக்கும் ஊடாடலைத் தடுக்க முடியுமா என ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அவ்வாறு தடுக்க முடிந்தால் அந்தக் கொழுப்பை வைத்து அதற்கு ஏற்றாற்போல் ஒரு மருந்தோ பூச்சிக்கொல்லியோ ஸ்ப்ரேயோ தயாரித்துவிடுவோம். இது இயற்கையாக உள்ள பொருட்களை எடுத்து சோதனை செய்து தயாரிப்பது. நூறு சதவிகிதம் வேதியியல் கிடையாது. ஆனால் இந்தப் புரிதலே பலருக்குக் கிடையாது.

இதேபோல ஹோமியோபதி போன்ற மருத்துவங்களில் தடுப்பூசி எனும் கருத்தாக்கத்தையே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கேட்டால் நோய் என்ற ஒன்றே கிடையாது. அது ஒரு நிலைப்பாடு. எதற்காகக் குணப்படுத்த வேண்டும் என்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை தடுப்பூசி என்பது ஒரு கட்டுக்கதை. ஆனால் உண்மையில் அப்படியா இருக்கிறது?

உலகில் உள்ள பெரிய பெரிய நோய்களை எல்லாம் தடுப்பூசியை வைத்துதான் விரட்டியடித்திருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் பொதுவான நோயெதிர்ப்பு தூண்டுதலுக்கும் குறிப்பிட்ட ஒரு பிரச்னையைச் சரி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாகக் குப்பைமேனி இலையை உடலில் தேய்த்தால் சருமப் பிரச்னைகள் வராது. இது ஆயுர்வேதத்தில் சொல்லக்கூடிய ஒரு விஷயம். திருநீற்றுப் பச்சிலையைச் தேய்த்தால் பருக்கள் வராது என்பதும் ஆயுர்வேதம். ஆனால் ஒரு சரும நோய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அங்கேபோய் நாம் குப்பை மேனியைத் தேய்த்து என்ன பிரயோஜனம். அது எதனால் வந்தது என்றே நம்மால் சொல்ல முடியாது. அது வைரஸாக இருக்கலாம். பூஞ்சையால் இருக்கலாம். இங்கே பொது சிகிச்சை வேலைக்கு ஆகாது. ஆயுர்வேதத்தின் பிரச்னையே அதுதான். குறிப்பிட்ட நோய்காரணிகளுக்குப் பொது மருந்தைப் பரிந்துரைப்பார்கள். அதுவும் உலகளவில் ஒரே அளவை பயன்படுத்துவது கிடையாது‌. ஆனால் அலோபதியில் குறிப்பிட்ட நோய்களுக்கு என்று தனிப்பட்ட மருந்துகள் என்பதுதான் பயன்பாடு.

கபசுர குடிநீர் குடித்தால் டெங்கு வராது என்பது தடுப்புதான். ஆனால் குணப்படுத்த முடியாது. டெங்கு வந்தவர்களை அது குணப்படுத்தாது. அதேபோல பப்பாளி இலையைக் குடிக்கச் சொல்வார்கள். அது குடித்தால் வெள்ளை ரத்த அணுக்கள் ஜாஸ்தியாகும் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஆனால், கூடவே வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளைத் தடுப்பதற்கான மருந்தை எடுக்க வேண்டும். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். வெறும் பப்பாளி இலையைக் குடித்தால் முடிந்தது கதை.

இங்கே பொத்தாம் பொதுவாக ஒன்றை நல்லது என்று பார்ப்பதே தவறு. மஞ்சள் தேய்த்து குளித்தால் பருக்கள் வராது என்பது பொதுவாகச் சொல்வது. ஆனால் எனக்கு மஞ்சள் தேய்த்துக் குளித்தால் முகம் முழுவதும் பருக்கள் பூத்துவிடும். இதை எப்படி எடுத்துக் கொள்வது?

உங்கள் முனைவர் பட்ட ஆய்வு எதைப் பற்றியது? எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

என் முனைவர் பட்ட ஆய்வு புரதங்களின் ஊடாடலைப் பற்றியது. செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் பயன்படுத்தி புரதங்களின் ஊடாடலைக் கணிப்பது.

இயற்கை என்பது போட்டியா ஒத்துழைப்பா?

ஒத்துழைப்புதான்.

ஆனால் ஒன்றையொன்று அடித்து சாப்பிட்டால்தானே உயிர்கள் வாழ முடிகிறது?

அவை இரண்டுமே பிழைத்திருக்கதானே செய்கிறது. அதன் நோக்கம், நான் மட்டும்தான் உயிர் வாழ வேண்டும். நீ வாழக்கூடாது என்பதில்லையே. அப்போதும் அவை மொத்தமாக அழித்துவிடவில்லையே. ஆனால் மனிதர்கள் மட்டும்தான் போட்டிப் போட்டுக்கொண்டு நாங்கள்தான் உயர்ந்தவன், நாங்கள்தான் ஆல்ஃபா என எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது நடக்கும் போர்களே உதாரணம்.

அறிவியல் துறையில் இருக்கும் எல்லோரிடமும் நான் கேட்க விரும்பும் கேள்வி இது. உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

கடவுள் என்ற ஒன்று கிடையாது. ஆனால் இயங்கு சக்தி ஒன்று இருக்கிறது. இயக்கத்துக்கு ஏதோ ஒன்று காரணமாக இருக்கிறது. அதை இயற்கை என்றும் நீங்கள் கருதலாம். எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்து அழைத்துக்கொள்ளலாம். அது இருப்பதால்தான் எல்லாமே சமநிலையில் இருக்கிறது. கடவுள் என்பது தனிப்பட்ட அனுபவம். அதை எல்லோருக்கும் பொது என்று பொருத்திவிட முடியாது. கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் அதைச் சுற்றி இருக்கும் சடங்கு சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

இறுதியாகச் சில கேள்விகள். எழுதுவதில் ஆர்வம் வந்தது எப்படி?

எழுதுவதில் ஆர்வம் வந்ததற்குத் தமிழ் ஆர்வம்தான் காரணம் என நினைக்கிறேன். மூன்று வயதில் இருந்தே அப்பா எனக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பள்ளியில் நடக்கும் சிறுசிறு போட்டிகளில் கலந்துக் கொள்வது வழக்கம். சில நேரங்களில் பரிசுகளும் கிடைத்திருக்கின்றன. அதுவே தொடர்ந்து தமிழில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கான ஊக்கம். இது புத்தகமாக விரிந்தது. புத்தகம் எழுதுவது தற்செயலாக நடந்தது. அதுவும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் எழுதுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை. பெண்களின் கருப்பை நீக்கம் சார்ந்து எழுத்தாளர் மோனிஷா அவர்களுடனான ஒரு அழைப்பேசி உரையாடல்தான் நான் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கான ஆரம்பப்புள்ளி. அதன்பிறகு ஹெர் ஸ்டோரிஸ் அறிமுகம் கிடைத்து பதினைந்து அறிவியல் கட்டுரைகள் எழுதினேன். அதுவே தாயனை புத்தகமாக வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக சில மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் அறிவதுவே புத்தகமாக வெளிவந்தது.

இப்போது மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்ற பெண் அறிவியலாளர்களையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் மாணவர்களுக்கான புத்தகமாக எழுதலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.

0

The post அறிவியல் பேசலாம் # 3 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 3 appeared first on கிழக்கு டுடே.

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #10 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 3

ஒரு பரிந்துரை… ஓர் எச்சரிக்கை

கேம்பிரிட்ஜ் பல்கலையில் பிரிட்டிஷ் இந்தியக் குடிமையியல் பணிக்குத் தம்மைத் தயார்செய்துகொண்டுவரும் ஐரோப்பியர்களுக்கு, ‘இந்தியர்களைப் பற்றிய ஒரு முக்கியமான புத்தகம் இருக்கிறது. அதைப் படியுங்கள்’ என்று நான் தொடர்ந்து பரிந்துரை செய்து வந்திருக்கிறேன். இன்னொரு புத்தகம் இருக்கிறது. ‘அதைப் படிக்காதீர்கள்’ என்று எச்சரித்தும் வந்திருக்கிறேன். எனது பரிந்துரையும் எச்சரிக்கையும் சில நேரங்களில் நல்ல பலனைத் தந்துள்ளன.

மிகவும் மோசமான புத்தகமாக நான் கருதும் புத்தகம், இந்தியாவுக்கு நேர்ந்த மிக மிக மோசமான தீமைகள் சிலவற்றுக்கு முக்கிய காரணமாகியிருக்கிறது. ‘பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு’ என்ற ஜேம்ஸ் மில்லின் புத்தகம்தான் அது. பேராசிரியர் வில்சன் அந்த நூலின் விஷத்தை முறிக்கும் விஷ முறிவு மருந்தைக் கொடுத்திருந்தபோதிலும் ஜேம்ஸ் மில்லின் நூல் மிக மிக விஷமத்தனமானது.

நான் பரிந்துரைக்கும் புத்தகம் கர்னல் ஸ்லீமன் எழுதிய ‘ராம்பிள்ஸ் அண்ட் ரீகலெக்‌ஷன்ஸ் ஆஃப் அன் இந்தியன் அஃபிஷியல்’. இது 1835-1836-ல் எழுதப்பட்டு 1844-ல் வெளியானது. இந்தப் புத்தகத்தின் மலிவுப் பதிவு மீண்டும் வெளியிடப்பட்டு அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.

மில் எழுதிய பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு பற்றிய நூல் பிரிட்டிஷ் இந்தியக் குடிமைப் பணிக்குத் தயாராகும் உங்களுக்கு மிக மிக நன்றாகத் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த நூல் நீங்கள் படிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக ஆய்வுகளும் வைக்கப்படுகின்றன. இதை வருத்தத்துடனே சொல்கிறேன். அந்த நூலை நான் ஏன் ஏன் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதற்குச் சில உதாரணங்கள் தருகிறேன்:

ஹிந்துக்களின் குண நலன்கள் பற்றிய மில்லின் பார்வை, ஃபிரெஞ்சு மிஷனரி துபோய்ஸ் மற்றும் ஓர்ம், புக்கனன், டென்னட் மற்றும் வார்ட் ஆகியோர் எழுதியதையே பெரிதும் அடிப்படையாகக் கொண்டது. இவர்களில் எவருமே இதற்கான தகுதியுடையவர்களோ ஒரு விஷயத்தை நடுநிலையோடு அணுகுபவர்களோ அல்ல. இவர்கள் எழுதியவற்றில் இந்துக்களைப் பற்றி மிகவும் பாதகமாகச் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை மட்டுமே மில் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். இந்துக்களை முழுவதுமாக விமர்சித்து எழுதுவதை நோக்கமாகக் கொண்ட இவர்கள்கூட இந்துக்களிடம் இருக்கும் சில குணங்களைப் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். மில்லோ அவற்றையும் ஒதுக்கிவைத்துவிடுகிறார்.

‘ஒரு பிராமணர் என்பவர் பொய்கள் மற்றும் புரட்டுகளின் மர்மச் சுரங்கம்’ என்று வேடிக்கையாகச் சொன்னதை மில் உண்மைபோலவே நம்பி மேற்கோள் காட்டுகிறார். அடுத்ததாக இந்துக்களின் நம்பகத்தன்மை பற்றிப் பேசும்போது ‘அவர்கள் எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுக்கும் வம்புக்குணம் கொண்டவர்கள்’ என்று விமர்சிக்கிறார். அவர் எழுதுகிறார்: ‘இந்துக்களுடைய வன்மமும் பழிவாங்கும் குணமும் மிக அதிகமாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் வழக்குத் தொடுத்து அந்தக் கோபங்களுக்கு வடிகால் தேடிக் கொள்கிறார்கள்’.

இதே விஷயத்தை எந்தவித அவமானப்படுத்தும் உள்நோக்கமும் இல்லாமல் வேறு கோணத்தில் சொல்லவும் முடியும். ‘தமது கோபம் அல்லது வெறுப்பைக் கொலை செய்தோ விஷம் வைத்தோ வெளிப்படுத்தாமல் ஆங்கிலேய நீதிமன்றத்தை நம்பி அதன் சட்ட திட்டங்களை மதித்து அதன் முன்னால் வழக்குத் தொடுக்கிறார்கள்’ என்றும் இதைச் சொல்லமுடியும்.

‘இந்தியா பற்றிய வரலாற்று ஆய்வேடு’ என்ற தலைப்பில் டாக்டர் ராபர்ட்ஸன் எழுதிய நூலில் இந்துக்களின் வழக்கு தொடுக்கும் மனநிலையைக் காட்டுமிராண்டித்தனமாக அல்லாமல் அதி உயர்ந்த நாகரிகத்தின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டிருக்கிறார். இதையும் விமர்சிக்கும் மில், ‘மூர்க்கத்தனமான அயர்லாந்தில்கூட இப்படியான நிலை இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முஹமதியர்களின் நீதிமன்றங்கள், அரசபைகளில் லஞ்சமும் ஊழலுமே தீர்ப்புகளைத் தீர்மானித்துவந்தன. அப்படியான நிலையில் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய சட்ட திட்டங்கள், நீதியமைப்பு எல்லாம் ஹிந்துக்களுக்கு மிகவும் உவப்பானவையாக இருந்திருக்கும். இதில் நாம் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஆனால் ஹிந்துக்கள் பிற தேசத்தினரைவிட வழக்கு விவகாரங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பது உண்மையா?

மதராஸின் புகழ்பெற்ற கவர்னரான சர் தாமஸ் மன்ரோ என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ரயத்வாரி கணக்கு வழக்குகளை அவர் முழுமையாக ஆதரிக்கக்கூடியவர். அவற்றைப் பெருமளவில் கையாண்டவர். ‘ஹிந்துக்களை அத்தனை சந்தர்ப்பங்களிலும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர்கள் வம்பு வழக்கு விவகார எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்று உறுதியாகச் சொல்லமுடியும்’ என்றுதான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மனுஸ்மிருதி 8:43-ல், ‘மன்னரோ அவருடைய அரசவையினரோ தாங்களாகவே ஒரு வழக்கைத் தொடங்கவோ வேறொருவர் தங்கள் முன் கொண்டுவந்த வழக்கை முடக்கவோ கூடாது’ என்று சொல்கிறது.

‘பிராமணர் தன்னிடம் விசாரணைக்கு வரும் நபருக்கு மரண தண்டனை விதிப்பார்’ என்று ஓர் இடத்தில் மில் குறிப்பிடுகிறார். ஹிந்துக்களை மிக மோசமான குணங்கள் கொண்டவர்கள் என்று சுட்டிக்காட்டும் நோக்கில் மில் இதைச் சொல்கிறார். கர்னல் வான்ஸ் கென்னடி இதுபற்றி என்ன சொல்கிறாரென்றால் ‘ஒரு சமூகத்தில் இப்படியானவர்கள் (நீதி வழங்குபவர்களாக) இருந்தால் அந்தச் சமூகம் நிலைத்து நிற்கமுடியாது’.

இங்கிலாந்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 232 வழக்குகளில் 64-ல் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், வங்காளத்தில் 59 மரண தண்டனைத் தீர்ப்புகளில் 50 பேருமே தூக்கிலிடப்பட்டனர் என்று எல்ஃபின்ஸ்டன் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் இந்தியா பக் 219-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜேம்ஸ் மில், கர்னல் வான்ஸ் கென்னடி ஆகியோர் தமது கூற்றின் முழுப் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

ஒருவேளை ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும் அதிகாரம் பிராமணர்களுக்கு இருந்தது என்பதை உண்மையென்றே எடுத்துக்கொண்டாலும் அது அவர்களுடைய நல்லம்சத்துக்கான வலுவான சான்றாகவே கருதப்படவேண்டும். இங்கிலாந்தில் பத்தாயிரம் பேரில் ஒருவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. வங்காளத்திலோ பத்து லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. பிராமணர்கள் தம்மிடம் இருந்த நீதி வழங்கும் அதிகாரத்தை வைத்து மிகக் குறைவான மரண தண்டனையே தந்திருக்கின்றனர் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.

கர்னல் ஸ்லீமனின் ராம்பிள்ஸ் படைப்பு உரிய கவனத்தைப் பெறவே இல்லை. அவருடைய நூலிலிருந்து சில வரிகளை இங்கு தருகிறேன். அவருடைய பார்வைகள் எல்லாம் அவருடைய சகோதரிக்கு எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருக்கின்றன.

‘அன்புள்ள சகோதரி,

இந்தியாவில் இருந்தபோது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த விஷயம் எது என்று ஆங்கிலேயரிடம் யாரேனும் கேட்டால், இங்கிலாந்திலிருந்து தமது சகோதரிகள் அவர்களுக்கு அனுப்பிய கடிதமே மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது என்று பத்தில் ஒன்பதுபேர் பதில் சொல்வார்கள். அந்தக் கடிதங்கள் இப்படி எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு நில்லாமல் எங்களை இந்த மனித குலத்தின் நல்ல குடிமகன்களாக இந்த அரசாங்கத்தின் நல்ல பணியாளர்களாக ஆக்கவும் செய்கிறது. அவை இல்லாவிட்டால் நாங்கள் வேறு நபராகிவிட்டிருப்போம்.

இந்தியாவில் இருக்கும்போது நாங்கள் செய்பவையெல்லாவற்றையும் எங்கள் அன்பான சகோதரிகள் பாராட்டி வரவேற்பார்களா என்று மனதில் நினைத்தபடியே செய்துவருகிறோம். அப்படியாக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் ‘சம்பளம் பெறாத நீதிநிர்வாக அமைப்பாக’ அவர்களே இருக்கிறார்கள்.’

பழங்கால இங்கிலாந்தின் வீர தீர நாயக மரபில் சகோதரியின் வார்த்தைகளுக்குத் தரும் முக்கியத்துவம் இந்தக் கடிதங்களில் வெளிப்படுகின்றன. அந்த இனிய சகோதரிகளுடன்தான் குளிர்காலங்களைக் கழிக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள். கடிதங்களுக்குப் பதில் எழுதச் சோம்பலாக இருக்கிறது. நீண்ட கடிதங்கள் எழுத நேரமும் கிடைப்பதில்லை என்றெல்லாம் குறிப்பிடுபவர் இப்படியான சூழலில் வலிந்து எடுத்துக்கொண்ட ஓய்வில், நெர்பூதா (நர்மதா) நதிப்படுகையிலிருந்து இமய மலைச்சாரல் நோக்கிய பயண நேரத்தில் ஓய்வெடுத்தபடி இந்தியாவில் தனது அனுபவங்கள், செயல்பாடுகளைச் சகோதரிக்கு விவரித்து எழுதியிருக்கிறார்.

பிரதானமாகத் தன் சகோதரியையும் கூடவே குடும்ப உறுப்பினர்களையும் ஆச்சரியமும் ஆர்வமும் கொள்ளவைக்கும் நோக்கில்தான் இந்தியா பற்றிய விஷயங்களை எழுதியிருக்கிறார். என்றாலும் கொஞ்சம் முக்கியமான நோக்கமும் இதன் பின்னே உண்டு:

‘விவரணையிலும் நினைவுகூரல்களிலும் உரையாடல்களிலும் எதிலுமே நான் இதில் எதையும் கற்பனை கலந்து எழுதவே இல்லை. மற்றவர்கள் சொன்னதாக நான் குறிப்பிட்டிருப்பவை எல்லாம் உண்மையே. நானாகச் சொல்லியிருப்பவையும் அப்படியானவையே’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

1844-ல் தன் படைப்பை வெளியிட்டபோது ‘தனது நாட்டினர் (ஆங்கிலேயர்) இந்தியர்களைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கை அந்த தேசத்தில்தான் வாழப்படவிருக்கிறது. அவர்களைப் பாதிக்கப்போகிறது. அந்த இந்தியர்கள் மீது இவர்களுக்கு இதமான எண்ணங்களை உருவாக்குவதே இந்த நூலின் நோக்கம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

படம்: W.H. Sleeman

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #10 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 3 appeared first on கிழக்கு டுடே.

பிரபலங்களின் உளவியல் #1 – சார்லஸ் டார்வின்

கலை என்பது மனதின் வெளிப்பாடு. ஒருவரின் உள்ளார்ந்த உணர்வுகளை, அனுபவங்களை, சிந்தனைகளைப் படைப்பாற்றலாக மாற்றும் சக்தி கலைக்கே இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் பலர், தங்களது நேர்த்தியான படைப்புகள் மூலம் இன்றும் நினைவில் நிற்கின்றனர். ஆனால் அந்தப் படைப்புகளின் பின்புலத்தில் பலரும் எதிர்கொண்டுள்ள தனித்துவமான உண்மை ஒன்று இருக்கிறது – அது உளவியல் தொடர்பான சிக்கல்கள். மன அழுத்தம், மனச்சிதைவு, பதற்ற நோய், இருதுருவ நோய் போன்ற பலவிதமான உளவியல் பிரச்னைகள் அவர்களின் வாழ்விலும் கலைப்பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இத்தொடர், அக்கலைஞர்களின் வாழ்வையும், அவர்கள் சந்தித்த உளவியல் சார்ந்த பிரச்னைகளையும், அந்தப் பிரச்னை அவர்களது கலை உருவாக்கத்தில் எந்த வகையில் பிரதிபலித்தன என்பது பற்றியும் ஆராயப்போகிறது.

பிரபலங்களின் வாழ்க்கை வெளியுலகிற்கு ஜொலிப்பாக, பிரமிப்பாக, ஏக்கமூட்டும் ஒன்றாகத் தெரிந்தாலும் அந்த மாய ஒளிக்குமிழிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரிந்தால் அதிர்ச்சியே மிஞ்சும். திரைப்பட நட்சத்திரங்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள் என உலகம் மதிக்கும் பல பிரபலங்கள் தீவிர உளவியல் பிரச்னைகளுடன் போராடியவர்களே.

சிலர் அந்தப் பாதிப்புகளைத் திறமையாகச் சமாளித்தும், சிலர் அதனால் தங்களது வாழ்க்கையை‌ முழுமையாகத் தொலைத்தும் இருக்கிறார்கள்.

வின்சென்ட் வான் கோ, எர்னஸ்ட் ஹெமிங்வே, எட்வர்ட் முங்க், வேர்ஜினியா வூல்ஃப் போன்ற பிரபலங்களின் வாழ்க்கை இதற்கு உதாரணம்.

உண்மையில், உளவியல் சிக்கல்கள் என்பது யாருக்கும் வரக்கூடியதே. அது சாதாரண நபர்களுக்கும் பிரபலங்களுக்கும் வேறுபாடில்லாமல் தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் கலைஞர்களுக்கு, உணர்வுகளை வெளிக்கொணர்வதற்கான செம்மையான திறமை இருப்பதால், அவர்களுடைய மனநிலை கலைப்படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது. உளவியல் சிக்கல்கள் அவர்களின் படைப்புகளில் உயிர்பெற்று, உலகத்தைக் கவரும் படைப்புகளாக மாறுகிறது.

புதியதுபோலத் தோன்றினாலும், ‘கலையும் உளவியலும்’ ஓர் பழைய தேடல். நெடுங்காலமாகவே இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் தமிழில் இதுபோன்ற ஒரு முயற்சி புதிதாக இருக்கலாம்.

இத்தொடரில் வரப்போகும் பிரபலங்கள் பற்றிய உளவியல் பிரச்னைகள், பல்வேறு புத்தகங்களிலிருந்தும், பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இருந்தும் பெறப்பட்டவை. ஆதாரப்பூர்வமான தகவல்கள் கொண்டு எழுதப்பட்டவை. எங்கேயும் மிகைப்படுத்துதலுக்கு இடமில்லை. என்னுடைய ஒரே நோக்கம், இருக்கும் தகவல்களை சுவாரஸ்யமாகத் தருவது மட்டுமே!

அதேநேரம், ஒவ்வொரு பிரபலங்களையும் தேடிப்பிடித்து அவர்களுக்கு இருந்த உளவியல் பிரச்னைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது இத்தொடரின் நோக்கம் அல்ல.

எனில் இத்தொடரின் நோக்கம்தான் என்ன?

மனநலம், கலைக்கிடையிலான ஆழமான தொடர்பை இன்னும் சற்று விரிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியே இத்தொடரின் நோக்கம்.

ஆரம்பிக்கும் முன்…

‘கலை’, மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி என்றால், ‘உளவியல்’ அதன் உள் அடுக்குகளை ஆராயும் அறிவியல்!

இதைப் புரிந்துகொண்டாலே போதும், இந்தப் பயணத்தில் நீங்களும் எளிதில் என்னுடன் ஒட்டிக் கொள்ளலாம்.

இனி, பிரபலங்களின் உளவியலுக்குள்…

0

இவ்வளவு பெரிய கப்பலா? இதில் எப்படிப் பயணம் செய்யப் போகிறேன்?‌ அதுவும் இரண்டு ஆண்டுகள்! அடிக்கடி வரும் தலைச்சுற்றலை என்ன செய்வது? அதைக்கூடச் சமாளித்து விடலாம். அந்த வயிற்றுவலியை நினைத்தால்தான்…!

இல்லை. நான் கப்பலேறப் போவதில்லை.

நான் என்ன ஏறுவது? அவர்களே என்னைத் தகுதி நீக்கம் செய்து விடுவார்கள். என்னைப்போன்ற ஒரு நோஞ்சானைக் கப்பலில் சேர்த்துக் கொள்வார்களா என்ன?

ஒருவேளை சேர்த்துக்கொண்டால்?

சார்லஸ் டார்வினுக்கு பதற்றம் அதிகமானது. இதயம் படபடத்தது. உடலெங்கும் வியர்வை முத்துக்கள் முளைத்தன.

ஆனால் இது ஓர் அரிய வாய்ப்பு‌! எல்லோருக்கும் கிடைத்து விடாதல்லவா?

என்ன செய்யலாம்?

குழப்பமான இந்த மனநிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் துடித்தார் டார்வின்.

நண்பர்கள் பலரிடமும் இதைப்பற்றிப் பேசினார். நீண்ட யோசனைக்குப் பிறகே தீர்க்கமான அந்த முடிவை எடுத்தார்.

‘புறப்படலாம்…’

1831. டிசம்பர் 27.

ஹெச்.எம்.எஸ். பீகிள் எனும் பெயர் கொண்ட அந்தக் கப்பல், இங்கிலாந்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தது. அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தன்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைக்கப் போகும் பயணம் இதுவென்பது.

ஆம். பீகிள் அனுபவங்களைக் கொண்டுதான், ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘உயிரினங்களின் தோற்றம்’ புத்தகத்தை எழுதினார் டார்வின்.

இரண்டு ஆண்டுகள் என ஆரம்பித்து, மொத்தம் ஐந்து ஆண்டுகள் (1831-1836) நீடித்தது பீகிள் பயணம்.

ஆனால் பதற்ற நோயாளி என அறியப்படும் டார்வினால் இத்தனை ஆண்டுகள் எப்படிக் கடலில் பயணம் செய்ய முடிந்தது? உண்மையில் டார்வினுக்குப் பதற்ற நோய் இருந்ததா?

விடை தெரிய டார்வினின் இளமைக் காலம் நோக்கிப் பயணிக்க வேண்டும்.

0

சார்லஸ் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள ஷ்ரூஸ்பரி எனும் ஊரில் பிறந்தார். டார்வினின் தந்தை, ஒரு மருத்துவர்‌.

தந்தையின் தந்தையும் மருத்துவரே. வசதியான குடும்பத்தில் பிறந்த டார்வின், ஒன்பது வயதில் தாயைப் பறிகொடுக்கிறார். எனவே அவருக்கு எல்லாமுமாய் இருந்தவர்கள், உடன்பிறந்த சகோதரிகள் மட்டுமே.

படிப்பில் சுமார் ரகம். விளையாட்டில் பூஜ்ஜியம். இசை? இரைச்சல். ஓவியமா? அப்படியென்றால்? இப்படித்தான் பள்ளிக்காலம் ஓடியது.

தந்தையின் ஆசைப்படி மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அங்கே ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைப்பார்த்த டார்வின், ‘ரத்தம் ரத்தம்…’ என அலறி அடித்துக்கொண்டே ஓடி விட்டார். அத்தோடு டார்வினின் மருத்துவப் படிப்புக்கு சுபம் போடப்பட்டது. ‘எனக்கு மனுசங்க ரத்தம் பாத்தாதான் பயம். மத்தபடி ஐ லவ் ஹண்ட்டிங்…’ எனக் கண்ணில் படும் விலங்குகளை எல்லாம் வேட்டையாடினார் டார்வின்.

வேட்டையாடிய விலங்குகளை ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றைப் பதப்படுத்துவதிலும் நேரத்தைச் செலவிட்டார்.

படிக்கும் வயதில் இப்படியெல்லாம் செய்தால் யார் தான் அவரை மதிப்பார்கள்? குடும்பத்தின் மத்தியில் ‘உதவாக்கரை’ என்ற இமேஜே டார்வினுக்கு இருந்தது.

ஆனால் உலகின் தலைசிறந்த இயற்கை ஆர்வலராகக் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறிக் கொண்டிருந்தார் டார்வின். கிட்டத்தட்ட இந்த நேரத்தில்தான் டார்வினுக்கு பீகிள் பயண வாய்ப்பும் கிடைத்தது.

கடற்கரைத் தீவுகளை ஆய்வு செய்யவும், கடல்வழிப் போக்குவரத்து குறித்த முழுமையான பாதையைக் கண்டறியவும் ஆய்வுக் குழு ஒன்றை ஏற்பாடு செய்தது இங்கிலாந்து அரசு. அதாவது பல்வேறு துறைகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து, அவர்களைக் கப்பலில் அனுப்புவதுதான் திட்டம். அதில் டார்வினும் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பீகிளில் பயணம் செய்யத் தொடங்கியபோது டார்வினின் வயது என்ன தெரியுமா? வெறும் 22.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பயணத்தில் டார்வின் செய்த ஆராய்ச்சிகளெல்லாம் தனிக்கதை. இனி நம் கட்டுரையின் நோக்கத்திற்கு வருவோம்.

0

1997இல், ‘Journal of the American Medical Association (JAMA)’ வெளியிட்ட ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையில் டார்வினுக்கு இருந்த மனநலப் பிரச்சினைகள் குறித்து விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

‘பேனிக் அட்டாக் (Panic Attack)’ பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

பதற்றம், குழப்பம், நெஞ்சு படபடப்பு, நடுக்கம் எனச் சொல்லாமல் கொள்ளாமல் சுனாமிபோலத் திடீரென ஒருசேர வரும். சில நிமிடங்களுக்கு நீடிக்கும் இந்த அட்டாக், உயிர் பிரியும் பயத்தைக் கொடுத்துவிடும். ‘சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா…’ என இதனால் பாதிக்கப்படுவோர் நடுங்குவர்‌. இந்த ‘அட்டாக்’குகள் தொடர்ந்து வந்தால் அதுவே பேனிக் டிசார்டர் (Panic Disorder) எனப்படும்.

டார்வினுக்கு இந்த பேனிக் டிசார்டரோடு சேர்ந்து அகோராபோபியா (Agoraphobia) எனும் ‘அச்சம்’ சார்ந்த நோயும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அகோராபோபியாவும் பதற்ற நோயின் ஒரு வகைமைதான். அதாவது கடினமான அல்லது இறுக்கமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முடியாமல் போனால் உருவாகும் அதீத பயம்.

இதனாலேயே இந்நோயால் பாதிக்கப்படுவோர் வெளியே செல்வதற்கு அஞ்சுவார்கள். மற்றவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழக மாட்டார்கள்.

கூட்டத்தைக் கண்டால் பயம், தனியாக இருந்தால் பயம், லிஃப்ட் ஏறினால் பயம், லிஃப்ட் இறங்கினால் பயம்…(தெனாலி கமல் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)

டார்வின், தன்னுடைய மருத்துவப் பிரச்சினைகளைச் சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைத்திருக்கிறார்‌. அன்றாடம் அவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளை ஒரு டைரியில் எழுதி வைப்பது அவருடைய வழக்கமாக இருந்திருக்கிறது. அதுவே அவருக்கிருந்த பிரச்னைகள் குறித்த ஆதாரமாக இப்போது இருக்கிறது.

உதாரணத்திற்குச் சில வரிகள்:

‘என்னுடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என்னுடைய தலை அடிக்கடி சுற்றிச் சுழல்கிறது…’

‘என்னால் உடலையும் மனதையும் என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்லை. இரண்டுமே நான் சொல்வதைக் கேட்க மறுக்கின்றன…’

டார்வின் தன்னுடைய நெருங்கிய நண்பரான ஜோசப் ஹூக்கருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘தொடர்ச்சியான தாக்குதல்கள், என் வாழ்க்கையில் தாங்க முடியாத தொந்தரவாக இருக்கின்றன. என்னுடைய எல்லா வேலைகளையும் இவை நிறுத்துகின்றன…’

இதன் மூலம் டார்வினுக்கு இருந்த பதற்ற நோயின் தீவிரம் குறித்து அறிய முடிகிறது. இதில் ‘தாக்குதல்கள்’ என பேனிக் அட்டாக்கைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கக் கூடும்.

டார்வின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய ஆசானாக இருந்தவர் பேராசிரியர் ஹென்ஸ்லோ‌ (John Stevens Henslow). சொல்லப்போனால் அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் பீகிள் பயணத்தையே மேற்கொண்டார் டார்வின். ஹென்ஸ்லோவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த டார்வின், ‘எனக்குச் சமீப காலமாக உடல்நிலை சரியில்லை. இதயத் துடிப்பு அதிகமாக இருக்கிறது. அடிக்கடி வயிறு வலியும் உண்டாகிறது…’ எனக் கடிதம் எழுதியிருக்கிறார். இதையே காரணமாக வைத்து, புவியியல் துறையில் தனக்கு வழங்கப்பட்ட கௌரவப் பொறுப்பு ஒன்றையும் நிராகரித்திருக்கிறார் டார்வின்.

0

1859ஆம் ஆண்டு, தன்னுடைய கோட்பாடுகளை எல்லாம் தொகுத்து ‘The Origin of Species’ புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். அதுவரை, ‘கடவுள்தான் எல்லா உயிரினங்களையும் படைத்தார்…’ என்று நம்பி வந்த மக்களுக்கு அப்புத்தகம் அதிர்ச்சி குண்டை வீசியது.

‘உலகில் இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு மூதாதையர் மட்டுமே இருந்திருக்க வேண்டும். அவற்றிலிருந்துதான் வெவ்வேறு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கின்றன…’ என்கிற அறிவியல் கோட்பாட்டை மதவாதிகள் எதிர்த்தனர்.

‘படைப்புக் கொள்கை’ ஒருபக்கம், ‘பரிணாமக் கொள்கை’ ஒருபக்கம் என இரண்டு அணிகள் உருவாகின. படைப்புக் கொள்கைவாதிகள், பல்வேறு வகைகளில் டார்வினுக்கு அழுத்தத்தைக் கொடுத்தார்கள். எல்லா விமர்சனங்களையும் எதிர்கொண்டார் டார்வின், சிறிது பதற்றத்துடன்!

டார்வின் தன்னுடைய இறுதி நாட்களை, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு சிறிய கிராமத்தில்தான் கழித்தார். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருடைய மனைவியே அவருக்கு உறுதுணையாக இருந்தார். தனிமை விரும்பியான அவர், என்றுமே கூட்டத்தோடு கலந்ததில்லை. கடைசி வரையில் ஏதாவது ஓர் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தார்.

உயிரினங்களின் தோற்றம் பற்றி உலகுக்குச் சொன்ன டார்வின், ஏப்ரல் 19 1882இல் மறைந்தார். ஐசக் நியூட்டனின் சமாதிக்குச் சில அடி தூரத்தில் டார்வினின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

0

2025இல் இருக்கிறோம். இன்றும் மனப்பிறழ்வுக்குச் சாமியாரிடம் போகும் கூட்டம்தான் இங்கே அதிகம். எனில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த உலகைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மூடநம்பிக்கைகளுக்குள் மூங்கி நீச்சலடித்துக் கொண்டிருந்த காலம் அது.

‘உலகை உருவாக்கியவர் கடவுள்…’ என்கிற எண்ணம்தான் அப்போது எல்லோரிடமும் இருந்தது. அந்த நேரத்தில் இறைநம்பிக்கைக்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்க எவ்வளவு மன தைரியம் வேண்டியிருக்கும்?

ஆம்…அதை‌ வெளியிட டார்வின் தயங்கினார்தான். பல வருடங்களாக அவருடைய கோட்பாடுகள் பூட்டிய பெட்டிக்குள் பதுங்கிக்கொண்டுதான் இருந்தன. இருந்தும் இப்பேர்ப்பட்ட ஒரு கருத்தைப் பதற்ற நோயாளி என அறியப்படும் டார்வின்தானே உலகிற்கு அழுத்தமாக எடுத்துரைத்தார்?

சரி, விஷயத்திற்கு வருவோம். பதற்ற நோயும், அச்ச நோயும் கொண்ட ஒருவனால் இதெல்லாம் சாத்தியம் தானா?

இதுதான் டார்வினின் உளவியல் பிரச்னைகள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது எனக்குத் தோன்றியது.

பீகிள் பயணத்தின்போது பல்வேறு உடல் உபாதைகளை அனுபவத்தார் டார்வின். ஆனால் அவையெல்லாம் கடலுக்குள் செல்லும் யாருக்கும் ஏற்படக்கூடியதே. வயிறு வலி, தலைச்சுற்றல் போன்ற பயண ஒவ்வாமைதான் டார்வினுக்கு இருந்திருக்கிறதே தவிர பதற்ற நோய் பற்றிய விரிவான குறிப்புகள் ஏதும் இல்லை. அவையெல்லாம் பீகிள் பயணம் முடிந்த பிறகே டார்வினுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எது எப்படியோ, டார்வினின் ஒப்பற்ற வாழ்க்கையைப் படித்தபோது அவருக்கு இருந்ததாகச் சொல்லப்படும் பதற்ற நோய் குறித்து எவ்விதமான முடிவுக்கும் என்னால் வரமுடியவில்லை.

உலகமே எதிர்க்கும் எனத் தெரிந்தும் தன்னுடைய ஆய்வுகளை எவ்வித தயக்கமும் இன்றி மாபெரும் புரட்சி செய்த டார்வினை ‘பதற்ற நோயாளி’ என்று என்னால் சுருக்கிவிட முடியவில்லை.

அடுத்த வாரம், வேறொரு பிரபலத்தை ஆராயலாம்.

(தொடரும்)

The post பிரபலங்களின் உளவியல் #1 – சார்லஸ் டார்வின் appeared first on கிழக்கு டுடே.

அறிவியல் பேசலாம் # 2 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 2

மனிதப் பரிமாணம் ஏன் தாமதமாக நிகழ்கிறது?

மரபணு நோய்களுக்கு இந்தியாவில் சொந்தத்திற்குள் நடைபெறும் திருமணம் முக்கியக் காரணமா?

ஆம். சொந்தத்திற்குள் இல்லாவிட்டாலும் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் சில இடங்களில் மறைமுகமாகக் குடும்பத்தாருக்கு மரபியல் நோய்கள் இருப்பதைச் சொல்லாமலேயே திருமணம் செய்துவிடுகிறார்கள். சில விநோத வழக்குகளும் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து இரண்டு பேர் காதல் திருமணம் செய்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேருடைய மரபணுக்களுமே வெவ்வேறானவை. ஆனால் குழந்தைக்கு Recessive Disorder எனும் குறைபாடு இருக்கிறது. அந்தக் குறைபாடு பொதுவாகச் சொந்தத்துக்குள் திருமணம் செய்தால் மட்டுமே வரக்கூடியது. இதுவெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.

மரபியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கச் சிறப்பு பள்ளிகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. சென்னையிலேயே இருக்கிறது. ஆட்டிசம் போன்றவைக்குப் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் மரபியல் குறைபாடு உள்ளவர்களைப் பெரும்பாலும் பள்ளிகளில் சேர்த்துக்கொள்வதில்லை. எனது வீட்டின் அருகே இரண்டு சிறுவர்களுக்கு ஆட்டிசம் இருக்கிறது. இருவரையும் எந்தப் பள்ளிகளும் சேர்த்துக்கொள்ளவில்லை. அதேபோல வீட்டு உரிமையாளர்களும் வாடகைக்கு வீடு தர அனுமதிக்க மறுக்கிறார்கள்.

மரபியல் குறைபாடுகள் ஏற்படச் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவு பங்கு இருக்கிறது?

புற்றுநோய்களை எடுத்துக்கொள்வோம். 90-95% புற்றுநோய்கள் திடீர் பிறழ்வுகளால் வருபவை. 5-10% மட்டும்தான் பெற்றோர்களிடம் இருந்து வருபவை. இதில் இரண்டு வகை உண்டு. பொதுவாகப் பெற்றோர்களிடம் இருந்து நம் உடலுக்கு இரண்டு மரபணு வேறுபாடுகள் (Allele) வரும். அவற்றில் சிலவகை மரபணுக்களில் ஒன்று மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் நமக்கு நோய் வராது. இன்னொன்றும் பாதிக்கப்பட்டால்தான் நோய் வரும். இது முதல் வகை. இரண்டாம் வகை, சில குறிப்பிட்ட மரபணுக்களில் ஒரு மரபணு வேறுபாடு பாதிக்கப்பட்டாலே நோய் வரும்.

பிரச்னை என்னவென்றால் நாம் அதிகம் வேதிப்பொருட்களை எடுக்கிறோம். மாசு இருக்கிறது. இதில் எல்லாம் கார்சினோஜென் (Carcinogen) எனும் வேதிப்பொருள் அதிகம் இருக்கிறது. இவற்றை நாம் நுகர நேரும்போது புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. இதுதான் வாழ்வியல் புற்றுநோயை உருவாக்குகிறது. அதேபோல மைதா அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் கணையம் அடிவாங்கும். இன்சுலின் சுரத்தலில் மாறுபாடு ஏற்படும்.

மரபணுப் பிறழ்வுகளுகள் பிறப்பின்போது வருபவையா, சுற்றுச்சூழலால் ஏற்படுபவையா? எது ஆதிக்கம் செலுத்துகிறது? டார்வினின் கூற்றுப்படி பிறழ்வுகள் அனைத்தும் தன்னிச்சையாக நடைபெறுபவை. அதற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. அதில் எவை எல்லாம் பிழைத்திருக்க பயன் தருகிறதோ அவை மட்டும் நீடிக்கும். பிழைத்திருக்க பயன் தராத மாற்றம் நீக்கப்பட்டுவிடும். சரியா? ஆனால் நீங்களோ சூழலுக்கு ஏற்றவாறுதான் மாற்றம் அடைகிறது என்கிறீர்களே!

நீங்கள் சொல்வது சரிதான். அதேசமயம் நாம் எந்த அளவுக்குச் சூழலை வேகமாக மாற்றுகிறோம் என்பதும் இருக்கிறது. இரண்டும் ஒன்றை ஒன்று பாதிக்கிறது. நாம் தொழில்நுட்பத்தில் அதிகம் மாறுதலடைகிறோம். இதன்மூலம் சூழலை வேகமாக மாற்றுகிறோம். இதற்கு ஏற்றவாறு நம் உடலும் மாறுகிறது. பரிணாம மாற்றம் என்பது நேர்கோட்டில் நடைபெறாது. சுழற்சி முறையில் இயங்கக்கூடியது.

பொதுவாக மனித உடலில் ஏற்படும் மரபணு பிறழ்வுகள் தானாகப் போய்விடுமா அல்லது அதற்கு ஏற்றாற்போல் நாம் மாறிவிடுவோமா என்கிற கேள்வி இருக்கிறது.

இயற்கையாகவே சில குறைபாடுகள் நீங்கிவிடும். தொடராது. பொதுவாக 5-6 தலைமுறையிலேயே ஒரு மரபியல் நோய் போய்விடும். 2-3 தலைமுறை வேண்டுமானால் இருக்கலாம். அதற்கு மேல் அந்த Allele பிழைக்காது.

இதற்கு என்ன காரணம் எனக் கருதுகிறீர்கள்?

எதிர் மரபியல் பிறழ்வு (Counter Mutation). மனிதனின் வாழ்வியல், உணவு, சுற்றுச்சூழலை மையப்படுத்தி எதிர் மரபியல் பிறழ்வு நடைபெறும் அல்லவா? அதனால்கூட அவை போய்விடலாம் என இப்போதைய தரவுகளை வைத்து நாம் சொல்லிவிட முடியும்.

நாம் ஒரு பிறழ்வைத் தூண்டுகிறோம். இயற்கை கண்டிப்பாக ஒரு எதிர் பிறழ்வைத் தூண்டும். காரணம், இயற்கை என்பதே சமநிலைதானே? இயற்கை பிழைத்திருப்பதற்காக இதைச் செய்கிறது. இந்த எதிர் பிறழ்வு என்ன என்பது நமக்குத் தெரியாது. அதோட விளைவுகளும் நமக்குத் தெரியாது.

அதனால்தான் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களை (GMO) நம்மால் தார்மீக நெறியின் காரணமாக அனுமதிக்க இயலாது. நம்மால் இயற்கையில் இருந்து வெளிவந்து எதையும் செய்ய முடியாது. எந்தப் பிறழ்வுகளைத் தர வேண்டும் என்பது இயற்கையிடம்தான் இருக்கிறது.

ஆனால் இயற்கை எதையும் திட்டமிட்டு செய்வதில்லைதானே?

நாம் இன்னும் அதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒருவிஷயம் திட்டமிட்டு நடைபெறவில்லை என்றால் நாம் எப்படி Lactose Tolerantஆக இருக்க முடியும்.

அதாவது நம்மால் பாலில் உள்ள லேக்டோஸை கிரகிக்க முடியும். ஆனால் எல்லோருக்கும் அப்படிக் கிடையாது. பெரும்பாலும் ஐரோப்பிய மக்கள்தான் லேக்டோஸை முழுமையாகக் கிரகிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு (இந்தியர்கள் உட்பட) இன்னும் பால் ஆகாத விஷயம்தான். குழந்தையாக இருக்கும் வரைதான் நம்மால் பாலை எடுத்துக்கொள்ளமுடியும். இந்தத் பாலை ஜீரணிக்கும் தன்மை நமக்கு வந்ததற்குக் காரணம் மரபணுப் பிறழ்வு. ஆனால் இது எப்படித் தன்னிச்சையாக நடைபெற்றிருக்க முடியும்?

அது தன்னிச்சையாக இருக்க வாய்ப்பில்லை. அது தன்னிச்சையாக இருந்தால் சூழல் சார்ந்த, சுற்றுச்சூழலை அடிப்படையாக கொண்ட மரபணுக்கள் (genepool) நம்மிடம் இருக்காது. டார்வின் இருந்த காலகட்டத்தில் அந்தப் புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட புற்றுநோய் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எப்படிப் பரவுகிறது என்பதற்கு அவை தன்னிச்சையாகப் பரவுகிறது என்று சொன்னார்கள். எங்கெல்லாம் புற்றுநோய் செல்கள் போகின்றனவோ அங்கெல்லாம் இரண்டாம்நிலை கட்டிகள் வரும் என்பதுதான் முதலில் சொன்னது.

ஆனால் இப்போது Seed and soil எனும் கோட்பாடு சொல்லப்படுகிறது. இதன்படி எங்கு புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான போஷாக்குகள் இருக்கிறதோ அங்குதான் புற்றுநோய்கள் வரும். அதுபோல மரபணுக்கள் மாற்றமும் தன்னிச்சையாக நடைபெறாது என்பது என் கருத்து.

அப்படியென்றால் இயற்கை, சூழல் இரண்டுக்குமே சமமான பங்கிருக்கிறது என்று சொல்லலாமா? இயற்கையாகவும் நிகழலாம். சூழலும் பாதிக்கலாம். அப்படி எடுத்துக்கொள்ளலாமா?

குறிப்பிட்ட மக்கள் மட்டும் லேக்டோஸ் டாலரெண்டாக எப்படி மாறினோம்? இந்த மாற்றம் வேறொங்கும் நடைபெறவில்லைதானே? எத்தியோப்பியர்கள், திபெத்தியர்களுக்கு மட்டும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை ஏன் அதிகம் இருக்க வேண்டும்? அப்போது அது திட்டமிட்டதுதானே? இங்குமட்டும் அது நடக்கவேண்டும் எனத் திட்டமிட்டு நடத்தியதுதானே?

வைட்டமின் சி நமது உடலில் சுரக்காது. மனிதன் இறைச்சி சாப்பிட்ட வரை வைட்டமின் சி நமது உடலிலேயே சுரந்தது. நாம் என்றைக்குக் காய்கறி சாப்பிட ஆரம்பித்தோமோ அப்போதே உடலில் வைட்டமின் சி அளவு குறைந்துவிட்டது. இப்போது நாம் வெளியில் இருந்துதான் வைட்டமின் சி-ஐ எடுக்க முடியும். இது பரிணாம மாற்றம்.

இதுவே ஆடுகளை எடுத்துக்கொண்டால் அவையும் தாவரப் பட்சிணிதான். ஆனால் அவற்றின் உடம்பில் வைட்டமின் சி இன்னும் சுரக்கிறது. நமக்கு அந்தப் பண்பு போயிருந்தால் ஆட்டுக்கும் போயிருக்க வேண்டும்தானே?

அது ஏன் ஆகவில்லை? காரணம் ஆடு, பஞ்சத்தில் வாழக்கூடிய மிருகம் எனச் சொல்லலாம். எல்லா நேரத்திலும் அதற்குப் போதிய வைட்டமின் சி கிடைக்காது என்பதால் இயற்கை அதைத் தக்க வைத்துள்ளது. அப்படி என்றால் இவை தன்னிச்சையாக நடைபெறவில்லை என்றுதான் அர்த்தம்.

டார்வின் சொல்வது இயற்கைத் தேர்வு அல்லவா? தகுதி வாய்ந்த பண்பை மட்டும் இயற்கை தக்க வைத்துக்கொள்கிறது. மற்றவை நீக்கப்படுகிறது. அது வாழ்வதற்கான சூழல் இல்லாததால் அழிந்துவிடுகிறது. அதனால் தகுதியுள்ளவை மட்டும் அடுத்த தலைமுறைக்கும் பிழைக்கிறது அல்லவா? அதுபோல அந்தத் தன்மை பிழைத்திருக்கலாம்.

இதை ஒரு தவளைக்கோ எலிக்கோ பொருத்திப் பார்க்கலாம். காரணம், அவற்றின் இனப்பெருக்க எண்ணிக்கை அதிகம். ஆனால் மனிதர்களுக்கு எப்படிப் பொறுத்திப் பார்க்க முடியும்?

உயிரினங்களில் கீழே செல்லச் செல்ல மரபணுக்கள் பிறழ்வு அடையும் வேகம் அதிகரிக்கிறது. மேலே செல்லச் செல்லப் பிறழ்வு அடையும் எண்ணிக்கை குறைகிறது. அதனால்தான் நாம் பரிணாம மாற்றம் அடைய லட்ச வருடங்கள் எடுக்கிறது. ஒரு கொசு பரிணாமம் அடைய சில நாட்களே போதும்.

இன்னொரு விஷயம் டி.என்.ஏவில் எக்ஸான்ஸ் (Exons), இன்ட்ரான்ஸ் (Introns) என இரு பிரிவுகள் இருக்கின்றன. எக்ஸானில்தான் எழுதப்பட்ட தகவல் (குறியீட்டுத் தகவல்) இருக்கும் (Coding Part). இன்ட்ரானில் இருப்பது எழுதப்படாத தகவல்கள். நம் உடலில் நடைபெறும் அதிகமான மாற்றங்கள் இன்ட்ரானில்தான் நடைபெறுகின்றன. அதனால்தான் நாம் உடலை எப்படிக் கெடுத்துக்கொண்டாலும். அதாவது குடித்தாலும் வேறுவிதமான சீர்கேட்டில் ஈடுபட்டாலும் நாம் இன்னுமே ஆரோக்கியமான தலைமுறையைக் கொண்டிருக்கிறோம். எக்ஸானோடு ஒப்பிடும்போது இன்ட்ரானின் பங்குதான் அதிகம்.

ஒருவேளை எக்ஸானில் நடந்தால் என்ன ஆகும்? எக்ஸானில்தான் நம் உடல் எப்படி இயங்க வேண்டும் என்கிற தகவல் எழுதப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களை அடிப்படையாக கொண்டுதான் புரதங்கள் உடலில் உருவாகும். புரதம் மூலமாக செல்கள் உருவாகி உடல் இயங்குகிறது. எக்ஸான் அடிவாங்கினால் மொத்தமும் முடிந்தது கதை.

அதிர்ஷ்டவசமாக இன்ட்ரான்தான் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பதால் நாம் சாதாரண வாழ்க்கையை வாழ முடிகிறது. இல்லையென்றால் நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களுக்கு, சாப்பிடும் உணவுக்கு எல்லோருக்கும் புற்றுநோய் வந்திருக்க வேண்டும். ஆனாலும் சிலருக்குப் புற்றுநோய் வருவதற்கு எக்ஸானிலும் பிறழ்வு நடைபெற வாய்ப்புள்ளது என்பதுதான் காரணம்.

இதுவே பரிணாம மரத்தின்கீழ் பகுதியில் உள்ள உயிரினங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றின் மரபணுத் தொகுப்பே சிறியது. இதனால் பிறழ்வு எக்ஸானில்தான் நடந்தாக வேண்டும். அதனால் பரிணாம மாற்றமும் ஜாஸ்தியாக இருக்கிறது.

மனித உடலில் 2 சதவிகிதம் ஜீனோம்தான் (குறியீடு) எழுதப்பட்ட பகுதி என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மீதம் 98 சதவிகிதம் எதற்கு இருக்கிறது என்றே தெரியாது. அதாவது 98 சதவிகிதம் எதற்கானது என்பதை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதை நாம் கண்டுபிடித்தோம் என்றால் ஒரு விடை கிடைக்கலாம்.

நாம் தாமதமாகப் பரிணாமம் அடைவதற்கு மற்றொரு காரணம், நாம் டி.என்.ஏவை வெளியில் இருந்து எடுக்க மாட்டோம். ஆனால் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் அவற்றைச் செய்யும்.

பாக்டீரியா போன்ற உயிரிகள் சுற்றுச்சூழலில் இருக்கும் டி.என்.ஏவை எடுத்து தனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் அவை வேகமாகப் பரிணாம மாற்றம் அடைகின்றன. இவற்றை Horizontal Gene Transfer என்கிறோம்.

ஆனால் நம்மால் அப்படிச் செய்ய முடியாது. நாம் தலைமுறை தலைமுறையாகத்தான் டிஎன்ஏவைக் கடத்த முடியும். இதனை Vertical Gene Transfer என்கிறோம். இதுவும் நாம் பரிணாம மாற்றம் அடைவதற்குத் தாமதம் ஏற்பட காரணம். இதனாலும் மனிதப் பரிணாம மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை முழுமையாக நாம் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறோம்.

இன்றைய தம்பதிகளுக்குக் கர்ப்பம் தரிக்கும் தன்மை குறைவதற்கு மரபணுப் பிறழ்வு காரணமா?

பொதுவாகவே கருத்தரிக்கும் தன்மை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும். ஸ்வயர் சிண்ட்ரோம் போன்ற சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு கிட்டாது. அதற்கான வாய்ப்பு குறைவு. XXX சிண்ட்ரோம் போன்று அந்த உறுப்பே வளராமல் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு குறைவு. அவர்களைதான் sterile என்று சொல்ல முடியும். மற்றவர்களுக்குக் கருவுறச் சில காரணங்கள் இருக்குமல்லவா? அந்தக் காரணங்களில் ஏதோ பிரச்னை என எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் ஃபோலிக் ஆசிட் பலருக்கு இருப்பதில்லை என்கிறார்கள். ஆனால் இது மரபணுப் பிறழ்வால் வந்த பிரச்னை கிடையாது. சாதாரண ஊட்டச்சத்து குறைப்பாடுதான். இதுபோன்ற பொது சுகாதாரம் சார்ந்த காரணங்களே அதிகம் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்குக் காரணம். மரபணுக்கள் அல்ல.

அதேபோல பெண்களுக்கு அவர்கள் குழந்தையாக அம்மா வயிற்றுக்குள் இருக்கும்போதே கருமுட்டை தயாராகிவிடுகிறது. 25 வயதில் அந்தப் பெண் குழந்தைக்காகத் திட்டமிடும் பட்சத்தில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அந்த முட்டை அவர்களுக்குள் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் சாப்பிடும் எல்லா விஷயங்களும் உடலுக்குள் சேகரிக்கப்படும் இல்லையா? வயதாக வயதாக நிறையக் கசடுகள் சேகரிக்கப்படும்போது ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

அதற்காக 35 வயதுக்கு மேல் எல்லோருக்கும் குழந்தை பிறக்காது, ஆரோக்கியமாக இருக்காது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. மரபியலில் நிகழ்சாத்தியங்கள்தான் (Probability) அதிகம். முழு பதில் கிடையாது.

மனிதர்களுக்கு Y குரோமோசோம் குறுகிக்கொண்டு வருவதாகச் சொன்னீர்கள். இதை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

மனிதர்களிடையே ஆண் பாலினத்தை உருவாக்குவது Y குரோமோசோம்தான். அது சமீபத்தில் குறுகி வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அது உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. பல லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.

Y குரோமோசோம் இல்லாமல்போய்விட்டால் என்னவாகும்? இயற்கைக்கு ஆணே தேவை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி முழுமையாகச் சொல்லிவிட முடியாது. வேறு எதாவது மாற்றம் வரலாம். சொல்லப்போனால் Y குரோமோசோமே பெண்ணின் X குரோமோசோமில் இருந்து வந்ததுதானே.

Y குரோமோசோம் மறைந்தால் மனிதர்கள் அல்பாலீர்ப்பு (Asexual) கொண்டவர்களாக மாற வாய்ப்பிருக்கிறதா?

அப்படி ஆகவும் வாய்ப்பிருக்கிறது. இல்லை அர்த்தநாதிஸ்வரர் மாதிரி, ஆணும் நானே பெண்ணும் நானே என்றும் ஆகலாம். எதையும் நம்மால் ஊகிக்க முடியாது.

மரபியலில் வெறும் நோய்கள் சம்பந்த ஆய்வுகள் மட்டும்தான் இருக்கிறதா?

இந்தத் துறையில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு மற்ற துறையில் இருப்பதுபோன்று அதிகம் ஆய்வுகள் கிடையாது. தரவுகள் கிடையாது. இருக்கக்கூடிய தரவுகள் ஒரு நூற்றாண்டிற்கு உட்பட்டவை.

ஜனத்தொகையும் ஒரு பிரச்னை. தமிழ்நாடு என்றால் எல்லோரிடமும் தரவுகள் எடுக்க முடியாது. அவர்களாகத் தன்னார்வம் கொண்டு வந்தால் மட்டும்தான் எடுக்க முடியும். உதாரணமாக மூன்று பேர் மட்டும்தான் கிடைத்தார்கள் என்றால் அவர்களிடம் கவனிக்கும் மாறுபாடுகள், மரபணுப் பிறழ்வுகளை மட்டுமே நாம் பதிவு செய்ய முடியும்.

மரபியலில் ஆய்வு மிக மிகக் குறைவு. அதற்கான நிதி ஒதுக்கீடும் குறைவு. நான் இந்திய அளவில் சொல்லவில்லை. உலக அளவில் சொல்கிறேன். முதலில் புற்றுநோய்க்கு எப்படி நிதி வந்தது தெரியுமா? அமெரிக்காவில் ஆல்பர்ட் லாஸ்கர் என்னும் தொழிலதிபருக்கு புற்றுநோய் வந்தது, அதன் பிறகுதான் அவரது மனைவி மேரி லாஸ்கர் நீதிமன்றங்களில் வாதாடி இந்த நோய்க்கான ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்து 1971, புற்றுநோய்க்கான தனிச் சட்டத்தை (National Act of Cancer, 1971) இயற்ற முக்கியக் காரணமாக இருந்தார். இது தவிர லாஸ்கர் அறக்கட்டளை மூலம் மருத்துவ ஆய்வுகளுக்காக நிதியுதவியும் விருதுகளும் வழங்கினார். அதன்பிறகு புற்றுநோய் ஆய்வுக்கான நிதி அமெரிக்காவில் அதிகமாகியது. பிறகுதான் மற்ற நாடுகளுக்கு நிதி கிடைத்தது.

அப்போது புற்றுநோய் மிக அரிதாக இருக்கக்கூடிய நோய். ஆனால் இப்போது அப்படிக் கிடையாது. சராசரியாக பத்து பேரில் ஒருவருக்குப் புற்றுநோய் இருக்கிறது. மேலும், மரபியல் ஆய்வுக்குத் தம்மை உட்படுத்த முன்வரமாட்டேன் என்கிறார்கள். நாம் கேட்டால் யாரும் வருவதில்லை. அவர்கள் அனுமதி அவசியம் என்பதால் நம்மால் எதையும் செய்ய முடியாது. அதுமட்டுமில்லாமல் பல சட்டத்திட்டங்கள் இருக்கின்றன. ஆய்வுக்குக் கிடைக்கும் மாதிரிகளும் மிகக் குறைவாக இருக்கிறது. நாம் மரபியல் படிப்பில் 5-6 நாள் ஆகக்கூடிய நாட்டுக்கோழி முட்டையை ஆராய என்றால்க்கூட அனுமதி வாங்க வேண்டும்.

இயற்கையோடு வாழ்தல் என்றால் என்ன? நாம் இயற்கையைத் துண்டித்துவிட்டு வாழ்வதுதான் நோய்கள் ஏற்பட பிரச்னையே எனப் பலரும் சொல்கிறார்களே?

இயற்கை என்பது ஒரு செயல்பாடு. அதைப் பெரும்பாலானோர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்த இயற்கைச் செயல்பாடுக்கு ஒருங்கிணைந்து வாழ்வதே இயற்கையோடு வாழ்தல். ஆனால் கலாசாரக் காவலர்கள் சொல்வதுபோல் இயற்கையோடு வாழ்தல் என்பது மலை, வயல், காடு, ஆடு, மாடு ஆகியவற்றுடன் மட்டுமே வாழ்வது அல்ல. அப்படிப் பார்த்தால் அவர்களுக்கு வளர்ச்சியே கூடாது. தகவமைத்துக்கொள்ளும் செயல்பாடுதான் (Process of Adaptation) இயற்கை. இன்னொன்று சமநிலை. எங்கெல்லாம் சமநிலை குறைகிறதோ அங்கெல்லாம் இயற்கை ஒரு அதீத முயற்சி எடுக்கும். அப்போது சமநிலை சரிசமமாகும்.

சிலர் கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை இருப்பதைக்கூட இயற்கை என்று சொல்கிறார்களே. அது இயற்கை, சமநிலையை ஏற்படுத்த செய்யும் செயலாக எடுத்துக்கொள்வது சரியா?

எல்லா இடங்களிலும் அப்படி சொல்ல முடியாது. சில இடங்களில் கரு தானாக கலைந்துவிடும். இதற்குக் காரணம் குரோமோசோம்களின் எண்ணிக்கையாக இருக்கலாம். இதனை Ploidy என்பார்கள். குரோமோசோம் எண்ணிக்கையில் இடறுகள் ஏற்பட்டால் (இரட்டித்தல், மும்மடங்காதல்) அது பிழைக்கவே பிழைக்காது. IVF-ல் கூட. இதை நாம் என்ன செய்தாலும் கருவை உண்டாக்க முடியாது. ஆனால் அதற்காக IVF செய்பவர்களை எல்லாம் இயற்கைக்கு எதிரானவர்கள் எனக் குற்றம்சாட்டுவது தவறு.

இந்த ஐவிஎஃப் முறையில் ஆண்கள், பெண்கள் எந்த வகை பாதிப்பை உணர்கிறார்கள்?

பொதுவாக ஆண்களுக்கு பெரிய பாதிப்புகள் கிடையாது. ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. Super Ovalution என ஒரு செயல்பாடு இருக்கிறது. மிகவும் வலி மிகுந்தது. வழக்கமான மாதவிடாயின்போது ஒரு முட்டை வெளிவரும். ஆனால் இந்த சூப்பர் ஓவலியூஷனில் 6,7,…12 முட்டை வரை ஒரே நேரத்தில் வெளிவர வைப்பார்கள். அதைத்தான் சேகரித்து வைப்பார்கள். மாதம் ஒருமுறை ஒரு முட்டை வரும்போதே எத்தகைய வலியை பெண்கள் உணர்கிறார்கள். இதுவே சூப்பர் ஓவலியூஷன் என்றால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அவர்கள் மன ஆரோக்கியம் என்னவாக இருக்கும்? உடல் ஆரோக்கியம் என்னவாக இருக்கும்?

ஆனால் ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையாது. ஒருமுறை விந்தணுவை எடுத்தாலே பல லட்சம் விந்தணுக்கள் இருக்கும். பெண்களுக்குத்தான் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதிகமாக எடை போடும். இதில் சிறந்த முட்டையைத் தேர்ந்தெடுத்து, விந்தணுவைச் சேர்க்க விடுவார்கள். பிறகு அதைக் குறிப்பிட்ட செல் பிரிவு நடைபெறும்வரை சோதனை கூடத்தில் வைத்து, பிறகு பெண்கள் உடலில் வைப்பார்கள். அது வெளியில் வராமல் இருக்க தைப்பார்கள். என்ன இருந்தாலும் கருப்பை சூழல் சோதனைக்கூடத்தில் இருக்காது. அதற்கு ஏற்ற வேதிப்பொருட்கள் எதுவும் சுரக்காது. இதனால்தான் ஐவிஎஃப் வெற்றி விகிதம் குறைவாக இருக்கிறது.

ஐந்து, ஆறு நாள் கருவை சோதனைக்கூடத்தில் வைப்பார்கள் எனச் சொன்னீர்கள். அது சாத்தியமா?

முடியும். அவை செல்கள்தானே.

விந்தணு, கருமுட்டை என்றால் நீங்கள் சொல்வது சரி. அவை செல்கள். ஆனால் கரு வளர்ச்சி என்பது செயல்பாடு அல்லவா? செல் பிரிதல் எனும் செயல்பாட்டை எப்படித் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்?

முடியும். உதாரணம் சொல்கிறேன். புற்றுநோய் பற்றிய ஆய்வுகளில் செல்களைப் பயன்படுத்துவோம். அந்த செல்களை ஹீலா செல்கள் என சொல்வார்கள். அந்த ஹீலா யார் தெரியுமா? 72 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவர். 1951இல் 31 வயதான ஒரு பெண்மணியிடம் இருந்து எடுத்தது. அதைப் பதப்படுத்தி வைத்து இன்றைக்கும் பரிசோதனைகூடங்களில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை வருடம் ஆகிறது என்று பாருங்கள். அதனால் செல் இயக்கத்தை உறைய வைப்பது சாதாரணம்.

அப்படியென்றால் ஒருமுறை உறைய வைத்த செயல்பாடு திரும்பவும் தொடங்குமா?

தொடங்கும். அதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை நேரடியாக தண்ணிரில் உறைய வைக்க முடியாது. செல்கள் உடைந்துவிடும். அது உடையாமல் இருக்க, பாக்டீரியாவாக இருந்தால் கிளிசரால், மனித செல்களாக இருந்தால் அதற்கேற்ற வேதிப்பொருட்களை சேர்த்து உறைய வைப்பார்கள். அப்போது அது கிரிஸ்டாகாது. ஜெல்லி போன்று இருக்கும். அப்படிதான் சேகரிக்க முடியும்.

அதை மீண்டும் இயங்க வைக்க என்ன செய்ய வேண்டும்?

சாதாரண அறை வெப்பத்திற்குக்கொண்டு வந்தாலே போதும். சில நேரங்களில் அதைக் கைகளிலேயே தேய்த்து வெப்பம் உருவாக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது விரைவாக அது இயல்பு நிலைக்கு திரும்பும். இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு கிளிசரால் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, வேறு சில வேதிப்பொருட்களைச் சேர்த்து, விழிக்க வைக்க வேண்டும்.

செல் வாழ்தலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த திரவத்திற்கு மாற்ற வேண்டும். அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய வேண்டும். இல்லை என்றால் செல் இறந்துவிடும். ஆனால் எத்தனை வருடம் கழித்து அதை இயங்க வைக்கிறோம் என்பதும் அவசியம். கருவை உறைய வைக்கும்போது 5-10 ஆண்டுகளில் எடுத்து இயங்க வைத்துவிட்டோம் என்றால் பிரச்னை இல்லை. அதற்கு மேல் ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்பு குறைவு. இரட்டை குழந்தை ஒன்று 30 ஆண்டுகள் கழித்து பிறந்திருக்கிறது. ஆனால் அது போன்ற விஷயங்கள் அரிதானது.

பதப்படுத்திய ஒரு கருவை எடுத்து பல ஆண்டுகள் கழித்து பயன்படுத்தினால் அது காலத்திற்கு ஏற்ற மரபணு மாற்றத்தை அடைந்திருக்குமா?

சில பத்தாண்டுகள் கழித்து எடுத்துப் பயன்படுத்துவதால் பெரிய மாற்றம் எதுவும் வராது.

ஆயிரம் ஆண்டுகளை எடுத்துக்கொள்வோம். மனித இனமே புதிய பண்புகளை பெற்றிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்போது பழைய மாற்றமடையாத தன்மைதானே அந்தக் கருவிற்கு இருக்கும்?

அப்படி இருக்க நேர்ந்தால் அந்தக் கரு முதலில் உருவாகாது. ஆனால் அந்தக் கருவை வைத்து, அந்த விந்தணுவை வைத்து நாம் ஆய்வு செய்துகொள்ளலாம். ஒப்பிட்டுப்பார்க்கலாம். இப்படிப் பலவற்றை ஒப்பிட்டுத்தான் நாம் மனித பரிணாமம் பற்றிய புரிதலைப் பெற்றிருக்கிறோம்.

(தொடரும்)

The post அறிவியல் பேசலாம் # 2 – வைஷ்ணவி (மரபியல் ஆய்வு மாணவர், எழுத்தாளர்) – 2 appeared first on கிழக்கு டுடே.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல்

ஓர் ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். வாழ்நாள் முழுதும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அளவுக்கு அவர்களிடம் செல்வம் இருந்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து அவர்களுக்குச் சேவை செய்ய ஏராளமான சேவகர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய அரண்மனைக்குப் பின்னால் மாபெரும் தோட்டமொன்று இருந்தது. அங்கு ஏராளமான மரம், செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அவற்றுக்கு நடுவில் காகம், குருவி, கொக்கு, குயில் என ஏராளமான பறவைகள் பறந்து விளையாடின. தாமரைப்பூக்கள் பூத்திருக்கும் பெரிய குளமொன்றும் இருந்தது. எல்லாம் இருந்தும் அவர்களுக்கு ஒரே ஒரு குறை இருந்தது. பேர் சொல்லி அழைக்கவும் ஓடி விளையாடவும் ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அந்தக் குறை.

அரண்மனைக்கு வந்துபோகும் துறவிகளும் குருசாமிகளும் சொன்ன ஆலோசனைகளுக்கு ஏற்ப ஏராளமான விரதங்களையும் அவர்கள் செய்து பார்த்துவிட்டார்கள். தான தருமங்களும் செய்து பார்த்தார்கள். எந்தப் பயனும் இல்லை.

திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அதற்குப் பிறகும் அவர்களுக்குப் பிள்ளைப்பேறு உண்டாகவில்லை.

பிள்ளை இல்லை என்னும் கவலை ராணியை வாட்டியெடுத்தது. நாள் முழுதும் ராணி கவலையில் மூழ்கியிருப்பதைக் கண்டு ராஜாவும் வருத்தத்தில் ஆழ்ந்தார். எங்கு சென்றாலும் அந்தக் கவலையிலிருந்து அவரால் தப்பிக்க இயலவில்லை. ஒருநாள் அதே கவலையுடன் அரண்மனைக்குளத்தில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் இறைவனிடம் தன் கோரிக்கையை முன்வைத்து கடுமையான வகையில் தவமியற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.

அக்கணமே குளத்தங்கரை ஓரமாக இருந்த ஒரு வட்டப்பாறையை எடுத்து தன் தலைமீது சுமந்தபடி இன்னொரு வட்டப்பாறை மீது ஏறி கைலாசம் இருக்கக்கூடிய வடக்குத்திசையைப் பார்த்து நின்றார். ஒவ்வொரு நாளும் தான் பக்தியுடன் வணங்கும் சிவபெருமான் எதிரில் தோன்றி தனக்கு பிள்ளைவரம் அளிக்கும் வரையில் அந்த இடத்தைவிட்டு நகரப்போவதில்லை என்றும் தலைமீது வைத்த சுமையை இறக்கப்போவதில்லை என்றும் மனத்தில் முடிவெடுத்துக்கொண்டார்.

ராஜாவின் செயலைப் பார்த்த வேலையாட்கள் அந்த முயற்சியைக் கைவிடும்படி பயபக்தியுடன் கேட்டுக்கொண்டனர். இறைவனின் வரம் கிட்டும்வரை தன் தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என ராஜா அவர்களிடம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். உடனே வேலைக்காரர்கள் ஓடோடிச் சென்று ராணியிடம் அந்தத் தகவலைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்டு திகைத்த ராணி குளத்தங்கரைக்கு ஓடோடி வந்தாள். தலைமீது வட்டப்பாறையைச் சுமந்தபடி நின்றிருக்கும் ராஜாவின் கோலத்தைப் பார்த்து அச்சம் கொண்டாள்.

ராஜாவின் முன்னால் நின்று கைகுவித்து அவர் மேற்கொண்டிருக்கும் தவமுயற்சியைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டாள் ராணி. ராணியைத் தொடர்ந்து மூத்த அமைச்சரும் அரண்மனை குருவும் அடுத்தடுத்து வந்து அதே கோரிக்கையை ராஜாவின் முன் வைத்தார்கள். சிவபெருமான் நேரில் காட்சியளிக்கும் வரை தன் தவத்திலிருந்து பின்வாங்கமுடியாது என உறுதியாகத் தெரிவித்தார் ராஜா.

வேறு வழியில்லாமல் அனைவரும் ராஜாவைக் குளத்தங்கரையில் தனியாக விட்டுவிட்டு தத்தம் வேலைக்குத் திரும்பினர். ஒவ்வொரு கணமும் சிவபெருமானை மனமுருகும் வகையில் தன் கோரிக்கையை முன்வைத்து பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார் ராஜா. அவர் தலை மீதிருந்த பாறை பெருஞ்சுமையாக அவரை அழுத்தியது. பிள்ளை இல்லை என்னும் மனக்குறை அதைவிட பெருஞ்சுமையாக அவரை அழுத்தியது.

கைலாசத்தில் பார்வதிதேவியோடு அமர்ந்திருந்த சிவபெருமான் தன் ஞானக்கண் வழியாக வட்டப்பாறையைத் தலையில் சுமந்தபடி தவத்தில் மூழ்கியிருக்கும் ராஜாவின் கோலத்தைப் பார்த்தார். அதைப் பார்க்கப்பார்க்க அவருக்கும் மனச்சுமை பெருகியது. ஆனாலும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்.

பார்வதி தேவியால் அப்படி இருக்கமுடியவில்லை. அடிக்கடி சிவபெருமானுக்கு அந்த ராஜாவைப்பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். அந்த ராஜாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தூண்டிக்கொண்டே இருந்தாள். சிவபெருமானுக்கு அவன் வேண்டிய வரத்தைக் கொடுக்கலாமா, வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அவரால் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரமுடியவில்லை. அதனால் ‘இது எல்லாமே ஆரம்ப வேகம்தான். கொஞ்சநாள் இப்படி இருந்து பார்த்துட்டு அப்புறம் தானாவே விட்டுடுவான்’ என்று பார்வதிதேவியிடம் சொல்லிவிட்டு அமைதி கொண்டார்.

ஆனால் சிவபெருமான் நினைத்ததுபோல ராஜா பின்வாங்கிச் செல்பவராகத் தெரியவில்லை. அவர் எதிர்பார்த்ததைவிட அதிக மன உறுதி கொண்டவனாக இருந்தார். ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டு காலம் அவர் தீராத மனச்சுமையோடும் தலைச்சுமையோடும் நின்றிருப்பதைப் பார்த்ததும் ஒருநாள் சிவபெருமானின் மனத்தில் கருணை பிறந்தது. உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்து பூமிக்குச் செல்வதற்காக புறப்பட்டார்.

அவருடைய திடீர் பயணத்தைப் பார்த்த பார்வதிதேவி ‘இவ்வளவு அவசரமா எங்க கிளம்பிட்டீங்க?’ என்று கேட்டாள்.

அதற்கு சிவபெருமான் ‘அந்த ராஜாவுடைய பக்தி என் தலைமேல ஒரு பெரிய பாரமாக உட்கார்ந்துட்டிருக்குது. பன்னிரண்டு ஆண்டு கால பக்தியின் எடையை என்னால தாங்கமுடியலை. பாவம், அவன் ஒரு சாதாரண மனிதன். அந்தப் பாறையுடைய எடையை அவன் எப்படித்தான் தாங்கிட்டிருக்கானோ தெரியலை. முதல் வேலையா, அவனுக்கு அவன் கேக்கற வரத்தைக் கொடுத்துட்டு வரேன். அதுக்கப்புறம்தான் நானும் நிம்மதியா இருக்கமுடியும்’ என்று சொன்னார். ‘போய் வாங்க. போய் வாங்க. நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கீங்க’ என்று சொல்லி சிவபெருமானை வாழ்த்தி கைலாசத்திலிருந்து வழியனுப்பி வைத்தாள் பார்வதிதேவி.

கைலாசத்திலிருந்து நேராக அரண்மனைக் குளத்தங்கரைக்கு வந்து ராஜாவின் முன் காட்சியளித்தார் சிவபெருமான். ஒளிவேறுபாட்டின் காரணமாக சிவபெருமானின் இருப்பை உணர்ந்துகொண்ட ராஜா தன் கண்களைத் திறந்து சிவபெருமானைப் பார்த்தார். அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.

‘முதல்ல பாறையிலிருந்து நீ இறங்கி வா. தலைமேல வச்சிட்டிருக்கிற சுமையை கீழ எறக்கு’ என்று சொன்னார் சிவபெருமான்.

ராஜா தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ‘ஐயா சிவபெருமானே, முதல்ல எனக்கு வரம் கொடுங்க. அதுக்கப்புறம் நான் இந்தப் பாறையிலிருந்து இறங்கி வரேன்’ என்று தெரிவித்தான்.

சிவபெருமான் இரண்டுமூன்று முறை சொல்லிப் பார்த்தார். ஆனால் ராஜா அதைக் கேட்கவில்லை. தன் கோரிக்கையில் உறுதியாக இருந்தார். ‘முதல்ல வரம். அதுக்கப்புறம்தான் இறங்குவேன்’ என்றார்.

அவருடைய உறுதியைக் கண்டு சிவபெருமான் மனம் நெகிழ்ந்துபோனார். ‘ராஜா. என் சொல்லை நம்பு. நீ கேட்கிற வரத்தை நான் கண்டிப்பா கொடுப்பேன். ஆனால் இங்கு இல்லை. நாளைக்கு காலையில உன் அரண்மனைக்கே நேரா வந்து ராணியையும் சந்திச்சிட்டு வரம் கொடுப்பேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிவபெருமான்.

ஒரு கணம் ராஜா அமைதியாக சிவபெருமான் முகத்தைப் பார்த்தார். அவர் சொல்மீது அவருக்கு நம்பிக்கை பிறந்தது. ‘சரி சிவபெருமானே. உன் கருணைக்கு நன்றி. நீ சொன்னபடி செய்றேன்’ என்று சொல்லிக்கொண்டே தன் தலைமீது வைத்திருந்த பாறையை கீழே இறக்கிவைத்தார். பிறகு நின்றுகொண்டிருந்த பாறையிலிருந்து கீழே இறங்கி சிவபெருமானை நோக்கி நடந்துவந்தார். அவர் முன்னால் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து அவருடைய பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு எழுந்து நின்றார். ராஜாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தபடி இருந்தது.

‘இப்போ நிம்மதியா அரண்மனைக்குப் போ. நாளைக்குக் காலையில நான் அங்க வரேன். அப்போ விரிவா பேசிக்கலாம்’ என்று அவரை வழியனுப்பிவைத்தார் சிவபெருமான். ராஜாவும் மற்றொரு முறை அவரைக் குனிந்து வணங்கிவிட்டு அரண்மனையை நோக்கி நடந்து சென்றார்.

சிவபெருமானின் தரிசனம் கிடைத்த செய்தியை உடனடியாத் தன் ராணியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் மனம் துடித்தது. அவர் அரண்மனைக்குள் செல்லும்வரை பார்த்தபடி நின்றிருந்த சிவபெருமான் தனக்குள் புன்னகைத்தபடி அங்கிருந்து மறைந்தார்.

அரண்மனைக்குள் வரும் ராஜாவை முதலில் வேலையாட்கள்தான் பார்த்தார்கள். முதலில் ஒருகணம் அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. அஞ்சி ஒதுங்கினார்கள். பிறகு ராஜா அனைவரையும் பார்த்து ‘என்னப்பா, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஏன் என்னைப் பார்த்து எல்லாரும் மெரள்றீங்க?’ என்று கேட்டபடியே நடப்பதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஓடோடிச் சென்று அரண்மனை முழுவதும் அச்செய்தியைப் பரப்பினர். ஒருவன் வேகமாக அந்தப்புரத்துக்குச் செய்தி அனுப்பிவைத்தான். செய்தி கிடைத்ததும் ராஜாவை வரவேற்க ராணியே நேராக வாசலுக்கு வந்து நின்றாள். அதே சமயத்தில் ராஜா படியேறி உள்ளே வந்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் அவள்.

‘ராணி, எனக்கு சிவபெருமானின் தரிசனம் கிடைச்சிட்டுது. அவர் கருணையும் கிடைச்சிட்டுது’ என்றார்.

‘என்ன ராஜா? என்ன சொல்றீங்க? விளக்கமாச் சொல்லுங்க’ என்று கேட்டாள் அவள்.

‘ஆமாம். நான் சிவபெருமானை நேருக்கு நேர் பார்த்தேன். அவர் என் கண் முன்னால காட்சியளித்தார்.’

‘உண்மையாகவா?’

‘ஆமாம். நமக்கு பிள்ளைவரம் கொடுக்க சிவபெருமான் ஒத்துகிட்டாரு.’

‘அப்படியா? இந்த மகிழ்ச்சியை என்னால தாங்கவே முடியலை.’

‘நாளைக்கு காலை வேளையில நம் அரண்மனைக்கே நேருல வரேன்னு சிவபெருமான் சொல்லியிருக்காரு. அந்த சமயத்துல அந்த வரத்தை கொடுக்கறதா எனக்கு வாக்களிச்சிருக்காரு.’

ராஜாவை உச்சியிலிருந்து பாதம் வரை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு உடல்சிலிர்த்தாள் ராணி. ராஜாவை ஒருமுறை தழுவிக்கொண்டாள்.

‘நம்முடைய நீண்டகால ஏக்கம் நாளைக்கு காலையில நிறைவேறப்போவுது. சிவபெருமான் நம் அரண்மனைக்குள்ள வர சமயத்துல நீ நல்ல உடைகளை உடுத்திகிட்டு வரவேற்பு கொடுக்க தயாரா இருக்கணும். அதுக்கு முன்னால் இன்னைக்கே நம்ம வேலையாட்களை வச்சிகிட்டு அரண்மனையை முழுசா கழுவி துடைச்சி கோலம் போட்டு பளிச்சினு வச்சிருக்கணும். ஒருவேளை நம் அரண்மனையிலேயே அவர் காலை உணவைச் சாப்பிடக்கூடும். அவருக்குப் பேரீச்சம்பழங்கள்தான் ரொம்பவும் பிடிக்கும். நல்ல பழங்களை விதையை எடுத்துட்டு ஒரு தட்டில தயாரா வச்சிருக்கணும். அது போதும்.’

ராணிக்கு ராஜாவின் சொற்களை நம்புவதா, கூடாதா என குழப்பமாக இருந்தது. அவள் குழப்பத்தைப் புரிந்துகொண்டதும் ராஜா அவள் தோளைத் தொட்டு அசைத்து ‘பயப்படாதே ராணி. சிவபெருமான் எனக்கு வாக்களிச்சிருக்காரு. நிச்சயமாக அவரு நம்மைப் பார்ப்பதற்கு வருவாரு’ என்று ஆறுதலாகச் சொன்னார்.

அடுத்த காலை விடிந்தது. சிவபெருமான் கைலாசத்திலிருந்து ஆகாயமார்க்கமாக ஒரு சாமியாரின் தோற்றத்தோடு அந்த ஊரின் எல்லைக்கு வந்து சேர்ந்தார். அவர் தோளில் ஒரு பை தொங்கியது. ஒரு கையில் பிச்சைத்தட்டும் இன்னொரு கையில் ஓர் ஊன்றுகோலும் இருந்தன. ஊர் நெருங்கியதும், கண்ணுக்குத் தென்பட்ட முதல் வீட்டின் வாசலில் நின்று பிச்சை கேட்டார். அந்த வீட்டில் வசித்துவந்த ஒரு கிழவி முறத்தில் அரிசி எடுத்துவந்து நீட்டினாள். அவர் அதை தன் தோள்பையில் வாங்கிக்கொண்டு ஆசி வழங்கிவிட்டு அடுத்த வீட்டை நோக்கி நடந்தார். அந்த வரிசையில் இருந்த எல்லா வீட்டு வாசல்களிலும் நின்று பிச்சை வாங்கியபடி நடந்தார்.

தெருக்கள் கூடும் இடங்களில் நின்று எல்லோரும் பார்க்கும் வகையில் நடனமாடி குதித்தார். ஓங்கிய குரலில் ராகம் போட்டு பாடினார். சிறு பிள்ளைகளும் பெரியவர்களும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். சிவபெருமான் அவர்கள் அனைவருக்கும் பையிலிருந்து பழங்களை எடுத்துக் கொடுத்தார். இப்படி பிச்சை வாங்கியபடியே கடைசியாக அரண்மனையை அடைந்தார்.

ராஜாவும் ராணியும் அரண்மனை வாசலிலேயே சிவபெருமானுக்காகக் காத்திருந்தனர். வாசலில் வந்து நின்ற சாமியாரைப் பார்த்ததும் சிவபெருமான்தான் சாமியார் வேடத்தில் வந்திருக்கிறார் என்பதை ராஜா புரிந்துகொண்டான். ராணியின் பக்கமாகத் திரும்பி கண்ணசைவில் அந்த உண்மையை அவளுக்கு உணர்த்தினான். உடனே ராணி வாசலிலேயே மஞ்சள் கரைத்த நீரை நிறைத்துவைத்திருந்த குடத்தை எடுத்துவந்து சாமியாரின் பாதங்களில் ஊற்றி தூய்மை செய்துவிட்டு விழுந்து வணங்கினாள். ராஜாவும் ராணியோடு சேர்ந்து காலில் விழுந்து வணங்கினான். ‘சீரும் சிறப்போடும் சந்ததியோடும் நீடூழி வாழ்க’ என இருவரையும் வாழ்த்தினார் சாமியார்.

பிறகு பையிலிருந்து இரு மாம்பழங்களை எடுத்து ராணியிடம் கொடுத்தார். ‘இவற்றை சாப்பிடு மகளே. நீ நீண்ட காலமா பிள்ளை இல்லாத மனக்குறையோடு இருக்கறேன்னு எனக்குத் தெரியும். உன் குறையைத் தீர்க்கறதுக்காக பன்னிரண்டு ஆண்டு காலம் கடுமையா தவம் செய்த உன் கணவன் மிகவும் அன்பானவன். உங்க ரெண்டு பேருக்கும் நான் உதவி செய்யணும். உன் கணவன் கேட்ட வரத்தை அளிக்கறதுக்கு முன்னால உன்னிடமிருந்து ஒரு கேள்விக்கு பதில் எதிர்பார்க்கிறேன்’ என்று சொன்னார்.

‘என்ன கேள்வி ஐயா?’ என்று பணிவோடு கேட்டாள் ராணி.

‘உனக்கு பதினாறு ஆண்டுகள் மட்டுமே ஆயுள் உள்ள புத்திசாலிக்குழந்தை வேணுமா? நூறு ஆண்டுகள் வரை கெட்டியான ஆயுள் உடைய முட்டாள் குழந்தை வேணுமா? இந்தக் கேள்விக்கு நீ பதில் சொல்லிட்டால், என் வேலை எளிதாக முடிஞ்சிடும்’ என்றார் சிவபெருமான்.

‘ஐயோ, இது என்ன குழப்பம்?’ என்று தலையைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள் ராணி. ‘நான் என்ன பதில் சொல்வேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே’ என்று புலம்பியபடி அருகில் நின்றிருந்த ராஜாவின் பக்கம் திரும்பினாள். ராஜாவும் ஏதோ பதில் சொல்ல முற்பட்டான். உடனே கையை உயர்த்தி அவனைத் தடுத்த சிவபெருமான் ‘ராணியிடம் கேட்ட கேள்விக்கு ராணிதான் பதில் சொல்லவேண்டும்’ என்று உறுதியான குரலில் தெரிவித்தார். அதைக் கேட்டதும் ராஜா அமைதியடைந்தான்.

ராணி தன் கைகளை உயர்த்தி தன் தலைமீது பட்பட்டென்று அடித்துக்கொண்டாள். ‘ஐயோ, நான் என்ன செய்வேன்? இது என்ன சோதனை? நான் என்ன கேட்பேன்? எனக்கு ஒன்னுமே புரியலையே. இப்படி ஒரு இக்கட்டில சிக்கிகிட்டேனே’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள். அவள் விழிகள் சிறிது நேரம் வாசலருகில் புத்தம்புது பூக்களுடன் காற்றில் மெல்ல அசைந்தபடி நின்றிருந்த ஒரு செடியின் மீது பதிந்தன.

பிறகு எழுந்து நின்று சிவபெருமானைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி, ‘ஐயா, ஒரு முட்டாளைப் பெத்து நூறு ஆண்டுகள்வரைக்கும் வச்சிருக்கிறதால என்ன பயன் இருக்கப் போவுது. ராஜ்ஜியத்தையும் ஆட்சி செய்ய முடியாம, வீட்டையும் கவனிச்சிக்க முடியாம இருக்கற ஒரு முட்டாள் இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான் அல்லவா?’ என்று சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். சிவபெருமான் அவளை அமைதியோடு பார்த்தபடி நின்றிருந்தார்.

‘வீட்டைக் கவனிச்சிக்கிறதைவிட நாட்டைக் கவனிச்சிக்கிறதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். எனவே, பதினாறு ஆண்டுகள் வாழக்கூடிய புத்திசாலிக் குழந்தையே போதும்’ என்று சொன்னாள் ராணி.

‘முடிவாகத்தான் சொல்றியா?’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘ஆம் ஐயா’ என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள் ராணி.

‘அவசரப்பட வேணாம். நல்லா யோசிச்சி உன் முடிவைச் சொல். வரத்தைக் கொடுத்த பிறகு எக்காரணத்தைக் கொண்டும் என்னால மாத்தமுடியாது.’

‘எல்லாக் கோணங்களிலும் ஆராய்ச்சி பண்ணிட்டுதான் என் பதிலைச் சொல்றேன் ஐயா. எனக்கு பதினாறு ஆண்டு காலம் மட்டுமே வாழுறா புத்திசாலிக்குழந்தையே போதும்.’

சிவபெருமான் ஒருகணம் ராணியையும் ராஜாவையும் மாறிமாறிப் பார்த்தார். பிறகு இருவருடைய தலைமீதும் கை வைத்து கண்களை மூடி முணுமுணுத்தார். பிறகு ‘நீங்கள் கேட்ட வரத்தைக் கொடுத்துவிட்டேன். நீங்க நினைச்சபடியே ஆகட்டும். வாழ்வாங்கு வாழ்க’ என்று கூறிவிட்டு அரண்மனையைவிட்டு வெளியேறினார்.

அடுத்து சில நாட்களிலேயே ராணி கருவுற்றாள். அரண்மனை வைத்தியர் அவளுடைய கர்ப்பத்தை உறுதி செய்ததும், ராஜா ஊரில் உள்ள அனைவரும் வந்து உண்டுவிட்டுச் செல்லும் வண்ணம் அரண்மனை வாசலிலேயே பெரியதொரு பந்தல் போட்டு, ஓர் அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அனைவரும் விருந்துண்டு ராணியை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

பத்து மாதங்கள் நிறைவுற்ற தருணத்தில் ராணி அழகான ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். வம்சம் விளங்கப் பிறந்த குழந்தையைப் பார்த்து ராஜா பூரித்தார். அன்று மாலையே ராஜா ஊரிலிருந்த சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டு தெய்வத்துக்கு நன்றி சொன்னார். ஊரில் இருக்கும் எல்லா ஆலயங்களிலும் குழந்தையின் பெயரில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குழந்தைக்கு சென்னா என்று பெயரிட்டனர்.

சென்னா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தான். அனைவருடைய முன்னிலையிலும் வெளித்தோற்றத்துக்கு மகிழ்ச்சியாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டாலும் ராணி ஒவ்வொரு கணமும் உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தாள். சிவன் குறிப்பிட்டதுபோல தன் மகன் பதினாறு வயதுவரை மட்டும்தான் உயிர்வாழ்வானோ என நினைத்து துயரத்தில் மூழ்கியிருந்தாள்.

யாருக்கும் தெரியாமல் ஒரு ஜோதிடரை அரண்மனைக்கு வரவழைத்தாள் ராணி. குழந்தை பிறந்த நேரத்தையும் வரம் கொடுத்தபோது சாமியார் சொன்ன தகவலையும் சேர்த்துச் சொல்லி, குழந்தையின் எதிர்காலத்தைக் கணித்துக் கூறுமாறு கேட்டுக்கொண்டாள். ஜோதிடர் அங்கேயே உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு ராணியின் முகத்தைப் பார்த்தார்.

‘அம்மா, அந்தச் சாமியார் சொன்னது எல்லாமே உண்மை. இந்தக் குழந்தை நல்ல ஞானமுள்ளவன். வீரமும் நேர்மையுணர்ச்சியும் உள்ளவன். ஆனா பதினாறு வயசு நடக்கற சமயத்துல அவனுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்னு காத்திட்டிருக்குது. அது எப்படி முடியும்னு யாராலயும் சொல்லமுடியாது.’

ஜோதிடருக்கு தக்க தட்சணையைக் கொடுத்து அனுப்பிவைத்த ராணி, தன் சென்னாவை கண்ணை இமை காப்பதுபோல காத்துவந்தாள். சென்னா மெல்ல மெல்ல வளர்ந்து பாலகனான். அரண்மனையில் இருந்த அனைவருக்கும் அவன் செல்லப்பிள்ளை ஆனான். அவனும் எல்லோரோடும் அன்பாகப் பழகி, எல்லோருடைய மனத்திலும் இடம் பிடித்தான். சென்னா எங்கு சென்றாலும் அவனோடு ஒரு சிறுவர் கூட்டமும் பின்தொடர்ந்தது.

விளையாட்டுபோல பதினாறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அப்போதும் சென்னா பிற சிறுவர்களோடு சேர்ந்து ஏரிக்கரையிலும் குளக்கரையிலும் பந்து விளையாடி பொழுதுபோக்கினான்.

ஒருநாள் ஒரு சிறுவன் ‘நீ ராஜாவுடைய பிள்ளை. நீ ஏன் எங்களை மாதிரியான ஆளுங்களோடு சேர்ந்து இங்க வந்து பந்து விளையாடுற? காட்டுக்குப் போய் மான்வேட்டை ஆடறதும் புலிவேட்டை ஆடறதும்தான் உன்னைமாதிரியான இளவரசர்களுக்கு அழகு’ என்று குறிப்பிட்டான்.

‘மானையோ, புலியையோ வேட்டையாடிக் கொல்றதில என்ன அழகு இருக்கப்போவுது? நமக்குத் துன்பம் தராத உயிருக்கு நாம ஏன் துன்பம் தரணும்?’ என்று கேட்டான் இளவரசன் சென்னா.

‘கொல்வதில் அழகு எதுவும் இல்லைதான். ஆனால் கொல்வதுதான் வீரம். அப்படித்தான் நம் சாஸ்திரம் சொல்லுது’ என்றார்கள் சிறுவர்கள்.

அன்று வீட்டுக்குத் திரும்பிய சென்னா இரவு முழுக்க, பிற சிறுவர்கள் சொன்னதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருந்தான். அடுத்தநாள் காலையில் அவன் சிறுவர்களோடு விளையாடுவதற்குச் செல்லவில்லை. அவன் ஏதோ யோசனையில் மூழ்கியபடி அரண்மனையில் ஓர் அறைக்குள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க ராணிக்கு வருத்தமாக இருந்தது.

‘என்ன நடந்திச்சி மகனே?’ என்று பரிவோடு கேட்டாள். பிற சிறுவர்கள் அவனைப் பார்த்து சொன்ன சொற்களையெல்லாம் அவன் ராணியிடம் சொன்னான். ‘பாவம் அந்தச் சிறுவர்கள். அவுங்க பேச்சையெல்லாம் நீ ஏன் கேட்கிற? நீ உன் விருப்பம்போல நம் அரண்மனைத் தோட்டத்திலேயே விளையாடு. காட்டுக்குப் போறதுலாம் ரொம்ப ரொம்ப ஆபத்தான காரியம்’ என்று ராணி அவனை எச்சரித்தாள்.

‘இல்லை அம்மா. நான் காட்டுக்குப் போய் புலியைக் கொன்று என் வீரத்தை அனைவருக்கும் நிரூபிச்சிக் காட்டணும். கோழை போல ஒதுங்கி நிற்க எனக்கு விருப்பமில்லை’ என்று சொன்னான் சென்னா.

‘உன்னை கோழைன்னு இப்ப யாரு சொன்னாங்க? நீ எவ்வளவு பெரிய வீரன்ங்கறது எனக்குத் தெரியுமே. தினம்தினமும் நம் அரண்மனைத்தோட்டத்தின் உச்சிக்கிளையில தொங்கற மாம்பழங்களை உன் வில்லையும் அம்பையும் கொண்டு வீழ்த்தறதை என் கண்ணால ஒவ்வொரு நாளும் நான் பார்த்துட்டுதான இருக்கேன்’ என்று சென்னாவை அமைதிப்படுத்த முயற்சி செய்தாள் ராணி.

‘நான் வீரன்ங்கறது உனக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா? ஊரில இருக்கிறவங்களுக்குத் தெரியவேணாமா? காட்டுக்குப் போய் வேட்டையாட எனக்கு அனுமதி கொடுங்க. என் வேட்டையில புலிகளை வீழ்த்தி நான் யார்ங்கறதை இவங்களுக்குப் புரியவைக்கிறேன்.’

‘அவசரம் வேண்டாம் மகனே. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும். அப்போது உன்னை நானே காட்டுக்கு அனுப்பிவைப்பேன். அமைதியாக இரு. இனிமேல நீ வெளியே போய் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடவேணாம். அரண்மனைக்குள்ளயே இருக்கற சிறுவர்களோடு சேர்ந்து விளையாடு. அது போதும்’ என்று சொல்லிவிட்டுச் சென்றாள் ராணி.

அவளுக்கு திடீரென ஜோதிடர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்தன. பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்வான் என்று குறிப்பிட்ட சிவபெருமானின் சொற்களும் நினைவுக்கு வந்தன. என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு தன் அறைக்குத் திரும்பினாள்.

மறுநாள் விடிந்தது. காட்டுக்குச் சென்று வேட்டையாட வேண்டும் என சென்னாவின் மனம் துடித்தது. அரன்மனைக்குள்ளேயே அவனோடு நெருக்கமாகப் பழகுகிற சில வேலைக்காரர்களையும் மாடுகளைப் பராமரிக்கிற சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் காட்டுக்குப் புறப்பட்டான்.

எதிர்பாராத விதமாக, ராணி அந்த இடத்துக்கு வந்துவிட்டாள். அவன் நின்றிருக்கும் கோலத்தைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள். அவன் புறப்பட்டு நிற்பதைப் புரிந்துகொண்டதும் அவனை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என முயற்சி செய்தாள். அவனோடு பேசத் தொடங்கிய சில நொடிகளிலேயே அவன் மன உறுதியை அவள் உணர்ந்துகொண்டாள். அவனைத் தடுத்து நிறுத்துவது சிரமம் என்பதையும் புரிந்துகொண்டாள்.

ஒரு பெருமூச்சுடன் ‘உன் விருப்பம்போல காட்டுக்குப் போய் வேட்டையாடிட்டு வா. நான் உன்னைத் தடுக்கலை. ஒரே ஒரு கணம் நான் வெளியே போய் சகுனம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு வரேன். அதுக்கப்புறம் நீ கெளம்பலாம்’ என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றாள்.

அப்போது அவள் பார்வையில் கெட்ட சகுனங்களே தென்பட்டன. எண்ணெய்க்கூடைகளோடு ஒரு வண்டி சென்றது. கோடரிகளோடு விறகுவெட்டிகள் நடந்துபோனார்கள். எல்லாமே கெட்ட சகுனங்கள். அவற்றையெல்லாம் பார்த்து மனவருத்தத்தோடு ராணி திரும்பி வந்தாள். தான் பார்த்த குறிப்புகளையெல்லாம் மகனிடம் எடுத்துச் சொன்னாள். ‘ஒரே ஒரு நல்ல சகுனம் கூட என் கண்முன்னால தென்படலை. கொஞ்ச நேரம் காத்திரு. ஏதாவது ஒரு நல்ல சகுனம் அமையட்டும். அதுக்கப்புறம் நீ புறப்பட்டுச் செல்லலாம். நான் உன்னைத் தடுக்கமாட்டேன்’ என்றாள் ராணி. அவள் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது.

ஆனால் சென்னா மன உறுதியோடு நின்றிருந்தான். ஒருமுறை எடுத்த முடிவிலிருந்து பின்வாங்குவதிலை என்பதில் உறுதியாக இருந்தான். ‘அம்மா. நான் புறப்பட்டுட்டேன். இப்பவே ரொம்ப காலதாமதமாகிட்டுது. தயவுசெஞ்சி என்னைத் தடுக்காதே. என் கூட இத்தனை பேர் வரும்போது எதுக்கும்மா கவலைப்படறீங்க? நான் பாதுகாப்பா திரும்பி வருவேன்’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டான். அவனோடு அரண்மனையைச் சேர்ந்த ஆட்களும் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு பாதுகாப்புக்காக ராணி தன் சகோதரனையும் அவர்களோடு அனுப்பிவைத்தாள்.

ஆவேசத்துடன் காட்டுக்குள் புகுந்த சென்னா முதலில் ஒரு முயல்களின் கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட முயல்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றி அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். முயல்களின் உடல்களைச் சுமந்த வண்டியை ஒரு வேலைக்காரன் ஓட்டிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான்.

முதல் வேட்டையை எளிதாக நிகழ்த்திமுடித்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் தொடர்ந்து காட்டுக்குள் சென்றான் சென்னா. நீண்ட நேர பயணத்துக்குப் பிறகு ஒரு பெரிய குளத்தைச் சுற்றி திரிந்துகொண்டிருந்த ஒரு மான்கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை துள்ளியோடும் அழகைப் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொன்றாகக் கொன்று வீழ்த்தினான். பிறகு தன் வெற்றியைப்பற்றிய தகவல் தன் தாய்க்குத் தெரியவேண்டும் என்பதால் வீழ்த்தப்பட்ட மான்களையெல்லாம் ஒரு வண்டியில் ஏற்றினான். ஒரு வேலைக்காரனை அழைத்து வண்டியை அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். மான்களின் உடல்களைச் சுமந்த வண்டி அரண்மனையை நோக்கிச் சென்றது.

முயல்களையும் மான்களையும் வீழ்த்திய உற்சாகத்தோடு சென்னா தொடர்ந்து காட்டின் மையப்பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினான். நெடுந்தொலைவு பயணம் செய்த பிறகு ஒரு சிறிய குன்றைச் சுற்றி மரங்கள் அடர்ந்திருந்த ஒரு பகுதியில் திரிந்துகொண்டிருந்த ஒரு புலிக்கூட்டத்தைப் பார்த்தான். சிறிது நேரம் அவை அசைந்து அசைந்து நடக்கும் அழகையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமுடன் பாய்ந்து தாவி எழும் அதிசயத்தையும் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான். பிறகு குறிபார்த்து ஒவ்வொரு புலியாக கொன்று வீழ்த்தினான். பிறகு வழக்கம்போல புலிகளின் உடல்களையெல்லாம் திரட்டி ஒரு வண்டியில் ஏற்றினான். வண்டியை அரண்மனைக்கு ஓட்டிச் சென்று ராணியிடம் காட்டுமாறு சொன்னான். புலிகளின் உடல்களோடு வண்டி அரண்மனையை நோக்கிச் சென்றது.

முயல்களின் உடல்களையும் மான்களின் உடல்களையும் புலிகளின் உடல்களையும் சுமந்த வண்டிகள் அடுத்தடுத்து அரண்மனை வாசலுக்கு வந்து நின்றதைப் பார்த்ததும் ராணி ஓரளவு மனம் தெளிந்தாள். ‘உங்களை கவலைப்பட வேணாம்னு இளவரசர் சொன்னாரு’ என்று ஒவ்வொரு வண்டிக்காரரும் அவளிடம் சொன்னதைக் கேட்டதும் அவள் மனம் நிறைந்தது. தன் மகன் பெரிய வீரன் என்று நினைத்து மகிழ்ச்சியில் மூழ்கினாள்.

அதே நேரத்தில் அன்றைய வேட்டை வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்தான் சென்னா. அவனுக்குத் துணையாக நின்றிருந்த அவனுடைய மாமா ‘இன்றைக்கு இது போதும். நாம் வீட்டுக்குச் செல்லலாம்’ என்று சென்னாவுக்கு நினைவூட்டினார். சென்னாவும் அவர் சொற்களை ஏற்றுக்கொண்டான். மொத்த குழுவும் அரண்மனையை நோக்கித் திரும்பி நடந்தது.

பொழுது அடங்கி இருள் சூழ்ந்த நேரத்தில் வழியில் ஒரு கோவில் தென்பட்டது. அதைப் பார்த்ததும், முதல் வேட்டை வெற்றிகரமாக முடிந்ததை ஒட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக கோவிலுக்குச் செல்லவேண்டும் என சென்னாவுக்குத் தோன்றியது. மாமாவிடம் தன் எண்ணத்தைச் சொன்னான். அவரும் அவன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். உடனே அனைவரும் அந்தக் கோவிலுக்குள் சென்றனர்.

வெளியே இருந்ததைவிட கோவிலுக்குள்ளே கூடுதலான இருள் அடர்ந்திருந்தது. அக்கம்பக்கம் எதுவும் தெரியவில்லை.

‘உள்ளே எதுவும் தெரியலையே. எப்படிச் சென்று எப்படி வணங்குவது?’ என்று கவலையோடு கேட்டான் சென்னா.

அப்போது ஒரு வீரன் ‘கொஞ்ச நேரம் பொறுத்திருங்க இளவரசரே. என்னிடம் சிக்கிமுக்கிக்கல் இருக்குது. அதைத் தேய்ச்சி நெருப்பை உண்டாக்கறேன். வெளிச்சம் வந்த பிறகு செல்லலாம்’ என்றான்.

‘சரி’ என்று தலையசைத்த சென்னா ஓரமாக ஒதுங்கி நின்றான்.

வீரன் வேகவேகமாக வெளியே சென்று கைநிறைய சருகுகளைச் சேகரித்து எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் குவித்தான். தன் பையிலிருந்த சிக்கிமுக்கிக்கற்களை எடுத்து ஒன்றோடொன்று தேய்த்து நெருப்பை எழுப்ப முயற்சி செய்தான். ஆனால் நெருப்புப்பொறி விழவில்லை. அடுத்தடுத்து பல முறைகள் முயற்சி செய்தான். எல்லாமே தோல்வியில் முடிவடைந்தன.

விரைவில் அனைவரையும் அழைத்துக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பவேண்டும் என்ற கவலையில் இருந்த மாமாவைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

‘வெளிச்சத்துக்காகக் காத்திருக்கவேணாம். சீக்கிரமா நாம அரண்மனைக்குத் திரும்பியாவணும். இருட்டா இருந்தாலும் பரவாயில்ல. வாசலில் இருந்து பார்க்கிறமாதிரிதான் கருவறை இருக்கும். நூல் பிடிச்சதுபோல நேரா நடந்து போனா, தெய்வத்தின் முன்னால் போய் நின்னுடலாம். அதே இடத்துல நின்னு கண்ண மூடி வணங்கிட்டு சட்டுனு திரும்பிடலாம்’ என்று அவர் வழி சொன்னார்.

மாமா சொன்ன ஆலோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ‘மெதுவா…. மெதுவா…..’ என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டே ஒருவர் தோளை ஒருவர் பிடித்தபடி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து கருவறைக்கு முன்னால் சென்று நின்றார்கள். இருட்டுக்குள் நிழலாக தெய்வத்தின் கரிய உருவத்தைப் பார்த்து தலைகுனிந்து வணங்கினர். பிறகு சென்ற வழியிலேயே ஒவ்வொரு அடியாக வைத்து திரும்பி நடக்கத் தொடங்கினர்.

சிக்கிமுக்கிக்கற்களைத் தேய்ப்பதன் வழியாக நெருப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்தபடியே இருந்தான் வீரன். அவனே எதிர்பாராத வகையில் சட்டென ஒரு நெருப்புப்பொறி தோன்றி சருகுகளிடையில் விழுந்தது. அக்கணமே நெருப்பு பற்றிக்கொள்ள எங்கெங்கும் வெளிச்சம் பரவியது. எதிர்பாராத வெளிச்சத்தில் கண்கள் கூசின. அனைவரும் கண்களை மூடிமூடித் திறந்தனர்.

அந்த வெளிச்சத்தில் கருவறைத் தெய்வத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் சென்னா. தெய்வத்தின் பின்னால் சுவர்மீது ஒரு பெரிய புலியின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. பெரிய முகம். பெரியபெரிய பற்கள். பெரிய கண்கள். பெரிய உடல். பெரிய நகங்கள். பாய்வதற்குத் தயாராக இருப்பதுபோன்ற தோற்றம். அதைப் பார்த்த கணமே இனம்புரியாத அச்சத்தில் மூழ்கினான் சென்னா. காட்டில் நேருக்கு நேர் பார்த்த புலி எழுப்பாத அச்சத்தை அச்சுவரில் தீட்டப்பட்டிருந்த புலியின் சித்திரம் எழுப்பியது. அவனைத் தாக்கி வீழ்த்துவதற்காக அந்தப் பேருருவம் தக்க தருணத்துக்காகக் காத்திருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.

எந்தக் கணமும் அந்தப் புலி தன் மீது பாய்ந்து தன்னைத் தாக்கும் என சென்னாவுக்குத் தோன்றியது. அவனால் அப்போது மூச்சுகூட விடமுடியவில்லை. விரைவில் வெளியேறிவிடலாம் என நினைத்துக்கொண்டு வாசலை நோக்கிப் பாய்ந்தான். அவன் கண்கள் அவனையறியமால் சுற்றுச்சுவர்கள் மீது படிந்தன. அச்சுவர்களிலும் புலிகளின் அதே பேருருவம். அதே கண்கள். அதே தோற்றம். தன்னைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் புலிகள் சூழ்ந்து நிற்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. அச்சத்தில் சென்னாவின் உடல் நடுங்கியது. என்ன நிகழ்கிறது என்று புரிந்துகொள்வதற்கு முன்பேயே சென்னா அந்த இடத்தில் மயங்கி விழுந்தான்.

‘ஐயோ’ என அலறியபடி அவனை நோக்கி அவனுடைய மாமா ஓடினார். அவன் மயங்கியிருந்தான். சுய உணர்வு இல்லை. உடனே இரு கைகளாலும் அவனைத் தூக்கி ஏந்தியபடி வெளியே வந்தார். எல்லோரும் சென்னாவைப் பார்ப்பதற்காக அவனைச் சூழ்ந்து நின்றனர். அவன் கன்னத்தைத் தொட்டு அசைத்துப் பார்த்தார் அவனுடைய மாமா. எந்த அசைவும் இல்லை. மூக்கின் கீழே விரலை வைத்து மூச்சைப் பரிசோதித்துப் பார்த்தார். மூச்சின் தடமே இல்லை. ‘ஐயோ, என் மருமகனே. தவமாய்த் தவமிருந்து என் அக்கா பெத்த பிள்ளையை இப்படி பறிகொடுத்துட்டேனே’ என்று அழுதார்.

சுற்றி நின்றிருந்தவர்கள் அனைவருடைய கண்களிலும் கண்ணீர் தேங்கியது. சிறிது நேரத்துக்கு முன்புவரை அந்தக் கூட்டத்தினரிடையில் நிலவிய மகிழ்ச்சித்தடம் முற்றிலும் அழிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டது. உடனே நான்கைந்து பேர் அருகிலிருந்த மரங்களில் ஏறி பொருத்தமான கிளைகளை வெட்டி வீழ்த்தினார்கள். அக்கிளைகளை ஒன்றுடன் ஒன்றை இணைத்து கட்டிலைப்போல ஆக்கினார்கள். அதன் மீது சென்னாவின் உடலைத் தூக்கிக் கிடத்தினார்கள். பிறகு அதைச் சுமந்தபடி அரண்மனையை நோக்கி நடந்தனர். ‘ஐயோ, என் அக்காவுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே எனக்குப் புரியவிலையே…’ என்று சொல்லி வாய்விட்டுப் புலம்பியபடியே வந்தார் மாமா.

வேட்டையில் கொல்லப்பட்ட முயல், மான், புலி என விலங்குகளின் குவியல்கள் வாசலில் வந்து குவிவதைப் பார்த்துவிட்டு, வெற்றியோடு வருகை தரும் மகனுக்காகக் காத்திருந்த ராணி, மரக்கட்டில் மீது வைத்து சுமந்துவரப்பட்ட அவனுடைய உடலைப் பார்த்து மயக்கமுற்று விழுந்தாள். உடனே பணிப்பெண்கள் ஓடோடி வந்து அவளுடைய மயக்கம் தெளிய தேவையான சிகிச்சையைச் செய்தனர். ‘ஐயோ, அக்கா’ என்று வீறிட்டு தலையில் அடித்துக்கொண்டு அழுதார் அவளுடைய சகோதரர். செய்தி கேட்டு ஓடோடி வந்த ராஜாவும் சென்னாவின் உடலைப் பார்த்து இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். ‘எல்லாம் விதியின் பயன்’ என்று மனம் நொந்து பேசியபடி இருந்தார்.

மயக்கம் தெளிந்து எழுந்த ராணி, சென்னாவின் உடலை தன் மார்போடு சாய்த்துக்கொண்டு அழுதாள். குழந்தைவரம் கொடுத்த சிவபெருமான் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்து அவள் மனத்தை அழுத்தியது. ‘சிவனே. நீ சொன்னபடியே பதினாறு வயதில் என் மகனைப் பறிகொடுத்துட்டேனே’ என்று ஆற்றாமையோடு சொல்லிச்சொல்லி கண்ணீர் விட்டாள். ராஜாவால் எதுவும் பேச இயலவில்லை. ‘முட்டாளா இருந்தாலும் பரவாயில்லை, நூறு வருஷம் வாழற பிள்ளையைக் கொடுன்னு நாம கேட்டிருக்கலாம்’ என்று தனக்குத்தானே சொல்லி அழுதார்.

அரண்மனையில் இருந்தவர்கள் அனைவரும் இளவரசனின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். அதைக் கவனித்ததும் ராணி அவர்களைப் பார்த்து சத்தம் போட்டு தடுத்தாள்.

‘நான் அவனுக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவைக்ணும்னு மனசுக்குள்ள நினைச்சிருந்தேன். அது நடக்கலை. ஆனாலும் நான் என் ஆசையை நிறைவேற்றிக்காம விடமாட்டேன். அவனுக்கு ஒரு பெண்ணைத் தேடி திருமணம் செய்வேன். இது சத்தியம். இதை நான் செய்து காட்டுவேன். அந்தத் திருமணம் நடக்கும்வரை அவனுடைய உடலை அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லவோ, அடக்கம் செய்யவோ அனுமதிக்கமாட்டேன்’.

அவளுடைய சூளுரையைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். ‘இறந்துபோன ஒருவனுக்கு யாரு இந்த உலகத்திலே பெண் கொடுப்பாங்க?. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? ஏன் இந்த ராணி இப்படி பைத்தியக்காரத்தனமா பேசுறா?’ என்று நினைத்துக்கொண்டனர். ஆனாலும் அவள் ராணி என்கிற காரணத்தால் யாரும் எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் நெஞ்சிலேயே அடக்கிக்கொண்டனர்.

அரண்மனை கருவூலத்திலிருந்த தங்க ஆபரணங்களையெல்லாம் ஒரு பெரிய மூட்டையில் போட்டுக் கட்டி எடுத்துவரச் செய்தாள் ராணி. அந்த மூட்டையை ஒரு மாட்டுவண்டியில் தூக்கிவைக்கச் சொன்னாள். பிறகு தன் அண்ணனையும் அவனுக்குத் துணையாக இன்னும் சில வீரர்களையும் அந்த வண்டியோடு செல்லும்படி சொன்னாள்.

‘இந்த ராஜ்ஜியத்தையே ஒரு சுத்து சுத்துங்க. என் மகனுக்கு யாரு பொண்ணு கொடுக்க தயாரா இருக்கறாங்களோ, அவுங்களுக்கு வண்டியில இருக்கிற இந்த தங்கமூட்டையை பரிசா கொடுத்துட்டு, அந்தப் பொண்ணை வண்டியில ஏத்திகிட்டு வாங்க.’

ராணியின் பேச்சைத் தட்டமுடியாமல் அவளுடைய சகோதரனும் பிற வீரர்களும் வண்டியை ஓட்டிக்கொண்டு ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு தெருவாகச் சென்றார்கள். வண்டி நிற்கும் இடங்களிலெல்லாம் ராணியின் கோரிக்கையை அறிவித்தபடி சென்றார்கள்.

அந்த ஊர்க் கடைசியில் ஒரு ஏழைக் குடும்பம் வசித்துவந்தது. அவருக்கு ஏழு பெண்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கும் அவரால் திருமணம் செய்துவைக்கமுடியவில்லை. மிகுந்த மனவேதனையோடு நாட்களைக் கடத்திவந்தார். மாட்டுவண்டியோடு வந்தவர்களின் கோரிக்கை அவருடைய காதில் விழுந்தது. உடனே அந்த வண்டியை நிறுத்தி, அவர்களிடம் சென்று ‘இறந்துபோன இளவரசனுக்கு நான் என் பொண்ணை மனப்பூர்வமா கல்யாணம் செஞ்சி வைக்கறேன்’ என்று சொன்னார்.

கோரிக்கையின் விவரம் அந்தப் பெரியவருக்குப் புரிந்ததா, புரியவில்லையா என்று தெரியாமல், அவர்கள் நிதானமான குரலில் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார்கள். அந்தப் பெரியவர் ‘நீங்க சொல்றது எனக்குத் தெளிவாவே புரியுதுங்க ஐயா. நான் என் பொண்ணை அனுப்பிவைக்கத் தயாரா இருக்கறேன். வாங்க’ என்று அமைதியாகச் சொன்னார்.

வந்த வேலை இவ்வளவு சீக்கிரமாக முடிந்ததில் ஓரளவு ஆறுதல் கொண்ட அக்குழுவினர் மாட்டுவண்டியை அந்தப் பெரியவரின் வீட்டுக்கு ஓட்டிச் சென்றனர். பெரியவர் வண்டிக்கு முன்னால் வழி சொல்லிக்கொண்டே சென்றார். வீட்டை அடைந்ததும் திண்ணையைக் காட்டி ‘ஒரு நிமிஷம் இப்படியே உக்காந்திருங்க. நான் வீட்டுக்குள்ள போய் விவரத்தை சொல்லி பொண்ணை தயார் செஞ்சி அழைச்சிட்டு வரேன்’ என்று சொன்னார். வண்டிக்குழுவினர் திண்ணையில் உட்கார்ந்து இளைப்பாறினர்.

வீட்டுக்குள் சென்ற பெரியவர் தன் மனைவியிடமும் பெண்களிடமும் வாசலில் வண்டி வந்து நின்றிருக்கும் விவரத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து தன் ஏழு மகள்களையும் பார்த்து ‘இந்தக் கல்யாண ஏற்பாட்டுல உங்கள்ல யாருக்கு விருப்பம் இருக்குதோ, அவுங்க போகலாம். நான் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டேன். ஆனா, யாராவது ஒருத்தவங்க போனாதான் கிடைக்கப்போற இந்த செல்வத்தால நம்ம குடும்பம் மேல வரும்’ என்றார்.

பெண்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தைப் பார்த்தபடி எந்தப் பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் நின்றிருந்தனர். அப்போது எல்லோருக்கும் இளைய பெண்ணான சென்னவ்வா ‘அப்பா, நான் இந்தக் கல்யாணத்துக்குத் தயாரா இருக்கேன். என்னை அனுப்புங்கப்பா’ என்று முன்வந்தாள்.

அதுவரை திடமானவர் போல இருந்த அந்தப் பெரியவர் திடீரென உடைந்து அழத் தொடங்கினார். ‘நீ இந்த வீட்டுக்குக் குலதெய்வமா இருப்பம்மா’ என்று சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றார். மற்ற பெண்கள் அவளுக்கு நல்ல உடைகளை உடுத்தி வெளியே அழைத்துவந்தனர். வண்டிக்காரர்கள் வண்டியிலிருந்த தங்கமூட்டையை இறக்கி அந்த வீட்டுத் திண்ணையில் வைத்துவிட்டு, அந்தப் பெண்ணை உட்காரவைத்தார்கள். ‘போய்வா சென்னவ்வா. உனக்கு கொடுப்பினை இருந்தா சாவித்திரிக்கு செத்துப்போன புருஷன் உயிரோடு திரும்பவும் கிடைச்சமாதிரி உனக்கும் கிடைக்கட்டும்’ என்று கைகளை உயர்த்தி வாழ்த்தினார் பெரியவர்.

அடுத்த கணமே வண்டி புறப்பட்டது. அந்த வண்டி அந்தத் தெருவைக் கடக்கும்வரை கைகுவித்தபடி நின்றிருந்த பெரியவர் பிறகு ஒரு பெருமூச்சோடு வீட்டுக்குள் போனார்.

அரண்மனைக்குச் சென்றதுமே சென்னவ்வாவுக்குத் திருமண அலங்காரம் செய்தார்கள். செத்துப்போன சென்னாவுக்கும் மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டது. சிறிது நேரத்தில், எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களோடும் அந்தத் திருமணம் நடைபெற்று முடிந்தது. அனைவரும் அட்சதை தூவினார்கள். சென்னவ்வாவின் கழுத்தில் தாலி ஏறியது.

திருமணம் முடிந்த கையோடு சவ அடக்க ஏற்பாடுகளும் நடைபெற்றன. சென்னாவின் உடலைக் குளிப்பாட்டி, மாலையிட்டு பாடையில் கிடத்தினர். சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு, பாடையைக் தூக்குவதற்கு முற்பட்டனர். அந்த நேரத்தில் அங்கே நின்றிருந்த சென்னவ்வா மணப்பெண் கோலத்தோடு வேகமாக நடந்துவந்து அந்தப் பாடையில் சென்னாவின் உடலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள்.

அதைப் பார்த்து அனைவரும் ‘இப்படி நீ செய்யக்கூடாதும்மா. நீ வீட்டுலதான் இருக்கணும்’ என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் சொற்களைக் கேட்க சென்னவ்வா தயாராக இல்லை. அவள் மிகவும் உறுதியான குரலில் ‘நானும்தான் வருவேன். என்னை யாரும் தடுக்கமுடியாது. அவர் என்னுடைய கணவர். அவரைப் புதைக்கற இடத்துல என்னையும் சேர்த்துப் புதைங்க. அவர் இல்லாத உலகத்துல வாழ எனக்கு விருப்பமில்லை’ என்று தெரிவித்துவிட்டு உறுதியாக உட்கார்ந்துகொண்டாள்.

வேறு வழியில்லாமல் சென்னவ்வாவையும் சேர்த்து சுமந்துகொண்டு இடுகாட்டுக்குச் சென்றார்கள் பணியாட்கள். அவர்கள் இடுகாட்டை நெருங்கும் சமயத்தில் இடிமின்னலோடு கடுமையான மழை பொழியத் தொடங்கியது. இடுகாட்டில் பாடையை இறக்கிவைத்துவிட்டு, அனைவரும் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.

இரண்டுமூன்று மணி நேரங்களாக காத்திருந்தபோதும் மழை நிற்கவே இல்லை. கொஞ்சம்கொஞ்சமாக வலுத்து பேய்மழையாக மாறியது. புயல்போல காற்று வீசியது. கிழக்கு மூலையில் இருந்த ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெள்ளம்போல இடுகாட்டை நோக்கிப் புரண்டு வந்தது. அதைப் பார்த்து அச்சம் கொண்ட அனைவரும் இடுகாட்டைவிட்டு வெளியேறி தத்தம் வீட்டை நோக்கியும் அரண்மனையை நோக்கியும் ஓடத் தொடங்கினர்.

மெல்ல மெல்ல பொழுது அடங்கத் தொடங்கியது. எங்கெங்கும் இருள் சூழ்ந்தது. மழை ஓயவே இல்லை. அந்த நேரத்தில் கூட பாடையில் இளவரசனின் உடலுக்கு அருகிலேயே உட்கார்ந்திருந்தாள் அவள். மழை வெள்ளத்தில் அவளைச் சுற்றி சேறும் சகதியும் ஓடியது.

‘நான் என்ன செய்யறது? இதுதான் என் விதி’ என்று சொன்னபடி அந்தச் சேற்றில் கையை விட்டு அளைந்தபடி இருந்தாள் சென்னவ்வா. அவள் கைகள் தன்னிச்சையாக அந்தச் சேற்றை அள்ளிக் குழைத்து ஒரு உருண்டையாக உருட்டின. அந்த உருண்டையை மனம்போன போக்கில் அழுத்தியும் தட்டையாக்கியும் வெவ்வேறு வடிவமாக மாற்றி மாற்றிச் செய்தன. ஒருமுறை உருவாக்கிய வடிவம் சிவன் கோவில் நந்தியைப்போல இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

நந்தீஸ்வரா என்று மனத்துக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் சென்னவ்வா. அந்த நந்தியை தனக்கு முன்னால் நிற்கவைத்து, பல கோணங்களில் பார்த்து திருப்தியடைந்தாள். செத்துப்போன உடல்மீதிருந்த மாலையிலிருந்து பூக்களைப் பிரித்தெடுத்து அதன் மீது தூவினாள். தொடர்ந்து தனக்குத் தெரிந்த சிவன் பாடலை பக்தியோடு பாடத் தொடங்கினாள்.

அவள் பாடப்பாட அந்த நந்தி உருவம் தன் உடலை அசைப்பதுபோல இருந்தது. சில நொடிகளில் உண்மையிலேயே அவள் முன்னால் நந்தி உயிர்பெற்று எழுந்து நின்றது. ‘சென்னவ்வா, உன் பக்தி என்னை மெய்சிலிர்க்க வைக்குது. உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது. உனக்கு என்ன வேணும், கேள்’ என்று கேட்டது.

உடனே சென்னவ்வா கண்ணீரோடு தன் கதையையெல்லாம் நந்தியிடம் சொன்னாள். ‘என் புருஷனுடைய உயிர்தான் எனக்கு வேணும் நந்தீஸ்வரா. அவரோடு சேர்ந்து சிவபெருமான் பார்வதி மாதிரி நல்லவிதமா குடும்பம் நடத்தணும்’ என்று முறையிட்டாள். ‘உனக்காக நான் முயற்சி செய்றேன் சென்னவா, கவலைப்படாதே’ என்று ஆறுதல் சொன்னது நந்தி. அடுத்த கணமே அது மெல்ல அசைந்து கைலாசத்தை நோக்கிப் பறந்து சென்றது.

கைலாசத்தில் பார்வதியோடு உரையாடிக்கொண்டிருந்த சிவபெருமான் முன்னால் இறங்கி நின்று வணங்கியது நந்தி. உடனே சிவபெருமான் நந்தியை ஏறிட்டுப் பார்த்தார். உடனே ‘ஐயா, எனக்காக நீங்க ஒரு காரியம் செஞ்சிக் கொடுக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது நந்தி.

‘என்ன செய்யணும், சொல்’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘பூமியில நடக்கிற விஷயங்கள் எல்லாத்தையும் நீங்களும் பார்த்திருப்பீங்க. சென்னவ்வாவுடைய புருஷனுக்கு நீங்க மறுபடியும் உயிர் கொடுக்கணும். பாவம், ரொம்ப சின்ன பொண்ணு. செத்துப்போன வீட்டுக்காரன் பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்குது. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும்.’

‘அது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இப்படியெல்லாம் எடுத்த உயிரை கொடுத்துகிட்டே போனா, அதுக்கு ஒரு முடிவே இருக்காது. உனக்காக, அந்த சென்னவ்வாவுக்கு சின்னதா ஒரு சோதனை வைக்கலாம். அவளுடைய எதிர்வினை எப்படி இருக்குதுன்னு கவனிக்கலாம். அதுக்கப்புறம் நாம் உயிரைத் திருப்பிக் கொடுக்கிறதைப்பத்தி நாம ஒரு முடிவெடுக்கலாம்’ என்றார் சிவபெருமான். ‘சரி ஐயா’ என்று ஏற்றுக்கொண்டது நந்தி.

சிவபெருமான் அக்கணமே ஒரு புலியை சென்னவ்வா அமர்ந்திருக்கும் இடுகாட்டுக்குச் சென்று தாக்குதல் நிகழ்த்தும்படி ஏவிவிட்டார். இருளும் மழையும் சேர்ந்திருந்த அந்தப் பொழுதில் சிவபெருமான் ஏவிய புலி சென்னவ்வாவுக்கு அருகில் சென்று நின்று உறுமியது. சென்னாவின் உடலை இழுத்துச் சென்று தின்ன அது முயற்சி செய்தது. அதைப் புரிந்துகொண்ட சென்னவ்வா உடனடியாக இளவரசனின் உடலை மறைத்தபடி குறுக்கே படுத்துக்கொண்டு ‘புலி அண்ணா, புலி அண்ணா, உனக்குப் பசிச்சா நீ என்னை வேண்டுமானா அடிச்சிச் சாப்பிடு. தயவுசெஞ்சி என் கணவரை விட்டுடு’ என்று கைகூப்பிக் கெஞ்சினாள்.

அவள் கண்ணீரோடு கெஞ்சியதைப் பார்த்து அந்தப் புலியின் மனம் கரைந்துவிட்டது. இளவரசனின் உடலை நோக்கி முன்வைத்த காலை தயக்கத்தோடு பின்னால் எடுத்துக்கொண்டது. ஒருகணம் சென்னவ்வாவைப் பார்த்தது. ‘உன்னைப் பார்த்தால் பாவமா இருக்குது. நான் அவனையும் சாப்பிடலை, உன்னையும் சாப்பிடலை, போதுமா?’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.

மறுகணமே கைலாசத்துக்குத் திரும்பிவந்து சிவபெருமான் முன்னால் நின்று வணங்கியது. உடனே சிவபெருமான் புலியை ஏறிட்டுப் பார்த்தார். ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது புலி.

‘சொன்ன வேலையைச் செய்யவிடாத அளவுக்கு உன்னை எது தடுத்தது, சொல்’ என்று கேட்டார் சிவபெருமான்.

‘சென்னவ்வாவுடைய பக்திதான் பெருமானே. அந்தச் சின்ன பொண்ண பார்க்க ரொம்ப பாவமா இருக்குது. செத்துப்போன வீட்டுக்காரன் பக்கத்துல அது உக்காந்திருக்கிறத பார்க்கப்பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்குது. கொல்லறதுக்கு மனசே வரலை. அவுங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழ நீங்க ஒரு வழி செய்யணும் பெருமானே.’

‘அது அவ்வளவு சுலபமான காரியமில்லை’ என்று சொல்லிவிட்டு யோசனையில் மூழ்கினார் சிவபெருமான். தன் முயற்சி தோற்றுப்போனதை நினைத்து வருத்தத்தோடு ஒதுங்கி நின்றது புலி.

நீண்ட யோசனைக்குப் பிறகு சிவபெருமான் ஒரு சிங்கத்தை அந்த இடுகாட்டை நோக்கிச் செல்லுமாறு ஏவினார். அந்தச் சிங்கமும் சென்னவ்வாவின் கண்ணீரில் மனம் கரைந்து திரும்பி வந்து ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.

சிங்கத்தின் வேண்டுகோளைக் கேட்டு சலித்துப்போன சிவபெருமான் அடுத்து ஒரு யானையை ஏவினார். அந்த யானையும் சென்னவ்வாவின் கண்ணீரைக் கண்டு மனம் இரங்கி திரும்பி வந்து ‘ஐயா, நீங்க சொன்ன வேலையைச் செய்யாமலே கைலாசத்துக்குத் திரும்பிவந்துட்டேன். என்னை மன்னிக்கணும்’ என்று சிவபெருமானிடம் முறையிட்டது. மேலும் அதுவும் சென்னவ்வாவுக்காக வாதாடியது.

எல்லோரும் சென்னவ்வாவுக்காக வாதாடியதைக் கண்ட சிவபெருமான் தானே நேரில் பார்த்து நிலைமையைப் புரிந்துகொள்வதற்காக கைலாசத்திலிருந்து புறப்பட்டு இடுகாட்டுக்கு வந்தார். வழக்கம்போல ஒரு சாமியாரின் கோலத்தில் தோளில் ஒரு பிச்சைப்பையை மாட்டிக்கொண்டு இன்னொரு கையால் ஓர் ஊன்றுகோலை ஊன்றி ஊன்றி கொட்டும் மழையில் அவளுக்கு முன்னால் வந்து நின்றாள். ‘அம்மா, ஏதாவது தானம் செய்யுங்கம்மா’ என்று சென்னவ்வாவை நோக்கி கை நீட்டினார்.

இடுகாட்டில் மழையில் இறந்துவிட்ட உடலுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு ஒரு சாமியாருக்கு எதைத் தானமாகக் கொடுப்பது என்று புரியாமல் தவித்த சென்னவ்வா ஒருகணம் யோசனையில் மூழ்கினாள். மறுகணமே எவ்விதமான தயக்கமும் இல்லாமல் தன் கழுத்தில் தொங்கிய தங்கத்தாலியைக் கழற்றியெடுத்து சாமியார் நீட்டிய கையில் வைத்தாள்.

‘இதைக் கொடுக்கறேன்னு தயவுசெஞ்சி நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க ஐயா. இந்த இடுகாட்டுல உக்காந்துகிட்டு இந்த மழையில உங்களுக்கு வேற எதையும் கொடுக்கமுடியாத நிலையில இருக்கேன். என்னை மன்னிச்சிடுங்க’ என்று சொன்னாள் சென்னவ்வா.

சென்னவ்வாவின் செய்கை சிவபெருமானின் மனத்தைக் கரைத்துவிட்டது. உடனே அவர் அந்தத் தாலியை அவள் கழுத்திலேயே மீண்டும் அணிவித்துவிட்டு, இறந்துபோன இளவரசனை மீண்டும் உயிர்ப்பித்தார். ‘நூறாண்டு காலம் வாழ்க’ என்று சொல்லி இருவரையும் வாழ்த்தினார். தனக்கு அருகில் இருந்த இளவரசனின் உடலில் அசைவை உணர்ந்த சென்னவ்வா சாமியாருக்கு நன்றி சொல்லத் திரும்பினாள். அதற்குள் அவர் மறைந்துவிட்டார்.

அவர் சென்ற திசையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீரோடு நன்றியோடு கைகுவித்து வணங்கினாள் சென்னவ்வா. உயிர்பிழைத்த இளவரசன் சென்னா மெல்ல எழுந்து உட்கார்ந்தான். தான் இடுகாட்டில் இருப்பதையும் தனக்கு அருகில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பதையும் பார்த்து அவன் குழப்பமுற்றான். அவன் குழப்பம் தீரும் வகையில் சென்னவ்வா பொறுமையாக எல்லாவற்றையும் விரிவாக அவனுக்கு எடுத்துரைத்தாள். பிறகு இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தடிக்குச் சென்று ஒதுங்கி விடியவிடிய கதைபேசி மகிழ்ந்தனர்.

காலையில்தான் மழை நின்றது. வெள்ளத்துக்கு அஞ்சி இடுகாட்டிலேயே பாடையை வைத்துவிட்டு ஓடிவிட்ட அனைவரும் மீண்டும் இடுகாட்டுக்கு வந்தனர். அங்கே சென்னாவும் சென்னவ்வாவும் மரத்தடியில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்தனர். பிறகு அவர்களிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் இருவரும் பொறுமையாக விளக்கம் கொடுத்தனர். அரண்மனையிலிருந்து ஒரு புதிய வண்டியை வரவழைத்து, அதில் இளவரசன் சென்னாவையும் சென்னவ்வாவையும் உட்காரவைத்து அரண்மனைக்கு ஓட்டிச் சென்றனர்.

வழிநெடுக அந்த ஊர்மக்கள் நின்று அந்த மணமக்களை வாழ்த்தினர். அரண்மனை வாசலிலேயே நின்றிருந்த ராஜாவும் ராணியும் அவ்விருவரையும் நெஞ்சோடு தழுவி மகிழ்ந்தனர். இறைவனின் கருணையே கருணை என கைலாசம் இருக்கும் திசையை நோக்கி எல்லோரும் கையை உயர்த்தி வணங்கினர். பிறகு ‘வலது காலை வச்சி உள்ள வாங்க’ என உரைத்து, மணமக்களை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாள் ராணி.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #8 – திருவிளையாடல் appeared first on கிழக்கு டுடே.

மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல்

பகலிரவு பலவற்றையும், கடுமையான மழைக்காலங்களையும் கடந்து வந்த நிகோலா குழுவினர், சமர்கண்ட் பகுதியில் சகதை அரசனின் விருந்தினர்களாகச் சில நாட்கள் தங்கினர். மார்க்கோ போலோவின் உடல் நலம் பெற்றவுடன் பயணம் தொடர்ந்தது.

நிகோலோ குழுவினரின் வருகை ஒற்றர்களின் மூலமாக குப்ளாய்கானுக்குத் தெரிவிக்கப்பட்டது. வழியில் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரும்படி அந்தந்தப் பகுதி ஆட்சியாளர்களுக்கு குப்ளாய்கான் உத்தரவிட்டிருந்தார்.

பெரிய மலைகளை எல்லாம் கடந்து திபெத் பகுதிக்குள் நிகோலோ குழுவினர் சென்றனர். திபெத், எட்டு ராஜ்ஜியங்களையும், ஏராளமான நகரங்களையும் உள்ளடக்கிய பெரிய பரப்பளவாக இருந்தது. இந்தப் பகுதி முழுமையும் ‘கிரேட் கான்’ என்றழைக்கப்படும் குப்ளாய்கானுக்கு உரிய பகுதியாக இருந்ததால் எவ்வித சிரமும் இன்றி அவர்களுடைய பயணம் தொடர்ந்தது.

திபெத் பகுதி மக்கள் சிலை வழிபாடுகளில் ஆர்வமுடையவர்களாகத் திகழ்ந்தனர். அதிகமான வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்து வணிகத் தொழிலில் சிறந்து விளங்கினர். மலைகளால் சூழப்பட்ட இப்பகுதியைக் கடந்து மங்கோலிய அரசனைக் காண நிகோலோ குழுவினர் பயணப்பட்டனர்.

மங்கோலிய சாம்ராஜ்ஜியம் குறித்தும், செங்கிஸ்கான் வழிவந்த குப்ளாய்கான் பற்றியும், நிகோலோ தனது மகன் மார்க்கோ போலோவுக்கு எடுத்துரைத்தார். மங்கோலியப் பேரரசு, இராஜ்ஜியம் அமைத்த வரலாற்றைக் கேட்கத் தொடங்கினார் மார்க்கோ போலோ.

வெற்றி பெற வேண்டும் என ஓடத் தொடங்கியவர்களில் பாதிப் பேர், பயணத்தைத் தொடங்கிய இடத்திலேயே விட்டுவிடுகின்றனர். மீதிப் பேர் ஓடினாலும் வெற்றி என்பது எதிராளியை வீழ்த்தியவருக்குத்தான் கிடைக்கிறது. அப்படி வெற்றி பெற்றவரின் பூமியில் நாம் நடந்துகொண்டிருக்கிறோம் என்றபோது மார்க்கோ போலோ ஆர்வமுடன் கேட்கலானார்.

இன்றிலிருந்து சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் மங்கோலிய அரசை உருவாக்கிய செங்கிஸ்கான் பிறந்தார். செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. பல நாடோடிக் கூட்டங்களாக மங்கோலிய மக்கள் சிதறி வாழ்ந்து வந்தனர். இதனால் பல எதிரிக்கூட்டங்கள் மங்கோலிய நாடோடி மக்களைத் தாக்கி வந்தனர்.

நாடோடி குழுக்களின் சண்டையில், செங்கிஸ்கானின் தந்தையும் நண்பர்களும் கொல்லப்பட்டனர். 12 வயதிலேயே போருக்குத் தயாரானார் செங்கிஸ்கான். நாடோடி மக்கள் குழுக்களை ஒருங்கிணைத்து, ‘மங்கோலியா’ என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்று செங்கிஸ்கான் கனவு கண்டார். தமது கனவுக்குச் செயல் வடிவம் அளிக்கப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்.

செங்கிஸ்கான் மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றிணைத்து, மங்கோலியப் பேரரசைக் கட்டமைத்தார். வலிமையான இராணுவத்தை உருவாக்கி, வட சீனாவின் அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினார். இப்போது நாம் நடந்து செல்லும் பாதைகளை, நகரங்களை செங்கிஸ்கான் கைப்பற்றி மிக வலிமையான தேசமாகக் கட்டமைத்தார்.

உலகின் பெரும்பாலான நிலப்பகுதிகளை வென்றெடுத்து ஆட்சிபுரிந்த ஆசிய மன்னன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் செங்கிஸ்கான். ஐரோப்பாவின் சில பகுதிகளையும் செங்கிஸ்கான் தனது மங்கோலியப் பேரரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றார்.

தனது தந்தை கூறிவரும் மங்கோலிய அரசின் வெற்றிகளை ஆர்வமுடன் கேட்டு வந்த மார்க்கோ போலோ, இவ்வளவு பரந்த நிலப்பகுதியை எவ்வாறு வென்றெடுத்தார் என்று தந்தையிடம் கேட்டார்.

செங்கிஸ்கானின் மங்கோலிய அரசின் வெற்றிக்கு முக்கியக் காரணம், ராணுவத்தைக் கையாளும் முறை என்று தந்தை நிகோலோ கூறினார். செங்கிஸ்கான் மூன்று பிரிவாக இராணுவத்தை வைத்திருந்தார். ஒரு பிரிவு சண்டையிட்டால் இன்னொரு பிரிவு ஓய்வெடுக்கும். இன்னொரு பிரிவு மோதலுக்குத் தயாராக இருக்கும். எதிரிப் படைகளின் முழுமையான பலத்தை அறிந்து அவர்கள் சோர்வடையும்போது மிகத் தீவிரமாகத் தாக்கும் உத்தியை மங்கோலிய வீரர்களுக்கு செங்கிஸ்கான் பயிற்றுவித்தார்.

நாடோடி இனக்குழுவை இராணுவமாக மாற்றி, மங்கோலிய அரசை உருவாக்கி, மிகச் சிறந்த ஆட்சி அளித்த செங்கிஸ்கான், ஒரு போரில் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வரலாறு கூறுவதை நிகோலோ தனது மகனுக்குக் கூறினார்.

செங்கிஸ்கானுக்குப் பிறகு அவரது மகன்களில் ஒருவரான ஒக்தாயி என்பவர் மங்கோலிய அரசின் தலைமையை ஏற்று அவர் வழியிலேயே பல இராஜ்ஜியங்களை மங்கோலிய எல்லைக்குப்படுத்தினார். ஒக்தாயி, செங்கிஸ்கானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் என்பதால் எவ்விதச் சிரமமும் இன்றி இராணுவத்தை வழிநடத்தி செங்கிஸ்கானின் கனவுக்குத் துணை நின்றார்.

ஒக்தாயி ஒரு பெரிய படையெடுப்புக்கு ஆயத்தமான நிலையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் வழிவந்த தற்போதைய ககான் குப்ளாய்கான் மங்கோலிய அரசை வழிநடத்தி வருகிறார். சமவெளிகள், பாலைவனங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், கடல்கள் என அனைத்தையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வலிமையான அரசனாக குப்ளாய்கான் திகழ்கிறார்.

செங்கிஸ்கான் சீனாவின் ஒரு பகுதியை வெல்ல, அவரின் வாரிசுகள் அடுத்தடுத்த பகுதிகளை வெல்ல, குப்ளாய்கான் ஒட்டுமொத்தச் சீனாவையும் வென்று தன் மங்கோலிய அரசின் கீழ் கொண்டு வந்தார். உலகின் மிகச் சக்தி வாய்ந்த மங்கோலிய அரசன் குப்ளாய்கானின் தூதுவர்களாக நாம் இப்போது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற முறை நாங்கள் மங்கோலியப் பயணம் வந்தபோது நூறு கிறிஸ்தவ அறிஞர்களையும், இயேசுவின் புனிதக் கல்லறை எண்ணெய்யையும் கொண்டு வாருங்கள் என்று கேட்டதற்காக நாம் மீண்டும் குப்ளாய்கானைச் சந்திக்க வந்துள்ளோம்.

செங்கிஸ்கான் உருவாக்கிய மங்கோலிய அரசின் கனவை நனவாக்கி முழுமையான சீனாவையும் ஆட்சி புரியும் குப்ளாய்கானை நாம் காணச் செல்கிறோம் எனச் சொல்லி முடித்தார்.

வளமும் செல்வங்களும் நிறைந்த மங்கோலிய அரசனைக் காண மார்க்கோ போலோ சென்ற வழிகளில் நிறைய மரங்கள் நடப்பட்டுப் பேணப்பட்டு வந்ததை மார்க்கோ போலோ கண்டார். குப்ளாய்கான் ஆணையால் அடுத்த ஒரு மாதம் தங்களின் பயணம் இனிமையாக இருக்கும் என்று போலோக்கள் எண்ணினர்.

கிழக்கு நோக்கிய பயணத்தில் சரசென்ஸ், சாகன் ஆகிய நகரங்களைக் கடந்து ஷாங்டு என்ற நகரத்தை போலோ குழுவினர் அடைந்தனர். அந்த நகரத்தில்தான் தற்போது குப்ளாய்கான் இருப்பதாக வீரர்கள் கூற, நிகோலோ குழுவினர் மிக மகிழ்வோடு பயணித்தனர்.

மிக நீளமான அழகான அரண்மனையைக் கண்டு ரசித்துக் கொண்டே சென்றார் மார்க்கோ போலோ. பதினேழு வயதில் பயணத்தைத் தொடங்கிய மார்க்கோ போலோ தற்போது இருபத்தியோர் வயது இளைஞராகத் தன் தந்தையுடன் குப்ளாய்கானைச் சந்திக்க அரண்மனை மதிலுக்குள் நுழைந்து அரசவையை அடைந்தார்.

(தொடரும்)

The post மார்க்கோ போலோ #4 – மங்கோலியப் பேரரசு பற்றி அறிதல் appeared first on கிழக்கு டுடே.

யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை

அன்றைய கம்பம் கிட்டத்தட்ட ஒரு கலவர பூமியாகத்தான் இருந்தது. காரணம், அங்கு அனைவரும் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களாகவோ, அல்லது உரிமம் இன்றி துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களாகவோ இருந்தனர். வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற செயல்கள் அங்கு சர்வ சாதாரணம். சில சமுதாயத்தினரை வெள்ளையர்கள் அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பானவர்கள் (outlaws) என்று முத்திரை குத்தி இருந்தது. காடுகள் கேட்பாரின்றி வெட்டப்பட்டன; வன விலங்குகள் வேட்டை சர்வ சாதாரணமாக நடைபெற்றது. வனத்துறை அலுவலர்கள், தாணாக்காரர்கள் எல்லாம் பெரும் பயத்துடனேதான் பணி செய்து வந்தனர்.

குத்து, வெட்டு, கொலை என்பதெல்லாம் தினமும் நடக்கும். பெரியகுளத்தில் இருந்து கம்பம் அல்லது குமுளி வரையிலான பெரிய நிலப்பரப்பு அன்று மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. சின்னமனூரைச் சேர்ந்த பெரியவரிடம் பேசும்போது, அதற்கான காரணத்தைத் தெளிவாக எடுத்துச் சொன்னார். ‘அய்யா, அன்று மக்கள் படித்திருக்கவில்லை; மேலும், சரியான வாழ்வாதாரங்கள் கிடையாது; வெள்ளையர்களின் ஆளும் முறையில் ஒரு சில சமூகத்தினர் புறந்தள்ளி வைக்கப்பட்டனர்; இவற்றுக்கு இடையில் சாதிப் பிரிவினைகள் வேறு. எனவே, இது போன்ற நடவடிக்கைகள் வெகு சாதாரணமாக இருந்தன. தினமும் ஒரு வழக்கு காவல் நிலையத்தில் பதிவாகும். அரசாங்க வேலைக்காரர்கள் தவிர யாரும் திருட்டு பயமின்றி இருக்க இயலாத நிலை; வழிப்பறிக் கொள்ளைகள் சர்வ சாதாரணம். மாலையில், ஏழு மணிக்குப் பின் வீடு திரும்புதல் ஆபத்தான வேலை. இதன் காரணமாகவே பெரும்பாலானோர் போலீஸ் வேலைக்கோ, வனத்துறை வேலைக்கோ வரத் தயங்குவார்கள். காரணம், சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று தெரியாத மக்கள். என்று பிரசங்கம் செய்தார். இந்த இடத்திற்குத்தான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் வந்து சேர்ந்தார் டாக்டர் கே.

அந்தக் காலத்து காடுகளைப் பற்றியும், வன உயிரினங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள, மதுரை ஜில்லா கெஜட்டியரை நான் படித்தேன். ஏனென்றால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாரும் கிடைக்கவில்லை. எண்பது வயதான ஒரே ஒரு கால்நடை மருத்துவர், அதுவும் கம்பத்துக்காரர், கிடைத்தும் பயனில்லை. காரணம், அவர் பெரிய அளவில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்ததனால், டாக்டர் கேவைப் பற்றியும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தக்கால காடுகளைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. அவர் அங்கு வாழ்வது எப்படி ஒவ்வொரு நாளும் பெரும் சவாலாக இருந்தது என்பதை மட்டும் சொன்னார். அலுவலகம் விட்டால் வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று வெளி உலகே தெரியாமல் வாழ்ந்த கதையைத்தான் சொன்னார்.

கெஜட்டியர், பழனி மலையிலும், பெரியகுளத்தில் இருந்து குமுளி வரை படர்ந்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தாவர வளத்தையும், வன உயிரின வளத்தையும், வேட்டையாடிகளையும் ஓரளவு நன்றாகவே விளக்குகிறது. வெள்ளையர்கள் இந்தக் காடுகளை வியாபார ரீதியில் எப்படி அணுகினார்கள், மரங்களை எப்படி வளர்க்கலாம், வளர்த்த மரங்களை எப்படி அறுவடை செய்யலாம் என்றெல்லாம் சிந்தித்தார்கள் என்றும் தெளிவுபடுத்துகிறது. இங்கிலாந்தின் மரத் தேவையை எப்படி இந்தக் காடுகள் பூர்த்தி செய்தன என்றும் அறிய முடிகிறது. முக்கியமான விஷயம், இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பெரும்பாலான காடுகள் அன்று பல நிலச்சுவான்தாரர்களின் கைகளில், பல குட்டி ராஜாக்களின் சொந்த சொத்தாக இருந்தன என்பதுதான். எந்தக் கட்டுப்பாடும் மேற்பார்வையும் இல்லாமல் பல காலங்களாக அவை பராமரிப்பின்றிக் கிடந்ததே வேட்டையாடுதல் அதிகரித்ததற்கும், மற்ற குற்றங்கள் பெருகியதற்கும் மற்றொரு முக்கியக் காரணம்.

இந்தச் சூழலில், டாக்டர் கே. கம்பத்தில் இருந்த ஆடு வளர்ப்புப் பண்ணைக்கு கால்நடை மருத்துவராகப் பணி ஏற்றார். அந்தக் குறுகிய கால (1953-56) வாழ்க்கையைப் பற்றி எழுத, டாக்டர் கிரிஸ் வெம்மரின் குறிப்புகள்தான் எனக்குப் பெரிதும் உதவின. அவருக்கு வயது 80க்கும் மேல். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இருந்தாலும், நானும் ஸ்ரீதரும் இணைந்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு உடனே பதிலளித்தது மட்டுமல்லாமல், அவரும் டாக்டர் கேவைப் பற்றி எழுத உள்ளதாகத் தெரிவித்தார். அவரது பெருந்தன்மையும் ஆர்வமும் நாங்கள் தொடர்பு கொண்ட சிலரிடம் இல்லையே என்று நான் வருத்தப்பட்டது உண்மைதான். இத்தனைக்கும் அவர்கள் டாக்டர் கேவினால் பயனடைந்தவர்கள். அது அடிநாக்கில் தங்கிய கசப்பைப்போல ஒரு வெறுப்பைத் தந்தது. படிப்பும் பதவியும் பொருளும், வாழ்வில் நல்ல மனிதர்களை உருவாக்குவதில்லை என்ற உண்மையை உணர்த்தியது.

வழக்கமாக டாக்டர் கே-வின் நாள் காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள் தொடங்கும். அந்த ஆடு வளர்ப்புப் பண்ணை கம்பத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. டாக்டர் கே. சைக்கிளில் போவார். அங்கு உள்ள ஆடுகளுக்கு வைத்தியம் பார்க்க நேரிட்டால் (சிறு காயங்கள், உடல் நலக் குறைவு போன்றவற்றிற்கு), வைத்தியம் பார்ப்பார். அங்குள்ள ஆடுகளின் நலனை மேற்பார்வை செய்வார். இரண்டு மணி நேர உணவு இடைவேளைக்குப் பின் வேறு அலுவலகக் கோப்புகள், பொது மக்களின் கால்நடைகளுக்கு வைத்தியம் என்று பொழுதுபோகும். மாலை ஆறு மணிக்கு இரண்டு மூன்று மெய்க்காவலர்கள் துணையுடன் வீடு திரும்புவார். இல்லையேல் பாதுகாப்பு கிடையாது. ஆயினும், டாக்டர் கே அந்த ஊர் மக்களிடம் எளிதில் நல்லுறவு கொண்டுவிட்டார். காரணம், அவரது கடமை உணர்வு. அன்புடன் பழகும் தன்மை, யாரையும் கடிந்து பேசாத குணம், உதவத் தயங்காத மனம். ஆயினும், தேவையற்ற ரிஸ்க் எடுக்காமல், பிரசவத்திற்கு அவர் மனைவியைப் பிறந்த இடத்திற்கே அனுப்பி வைத்தார்.

யானைகளின்பால் அவர் ஈர்க்கப்பட்டதற்கு இந்தக் கம்பம் வாழ்க்கையும் ஒரு காரணமானது. அன்றைய நடைமுறைப்படி, காட்டில் இறந்த யானைகளைப் பிணக்கூராய்வு செய்த பின்னரே புதைக்க வேண்டும் என்று அரசாங்க ஆணை. யானைகள் பாதுகாப்பு சட்டம் 1876-ன் படி, இறந்த யானைகள், வேட்டையாடப்பட்ட யானைகளைப் பிணக்கூராய்வு செய்ய வேண்டும். அந்தப் பணி கால்நடை மருத்துவரைச் சார்ந்தது என்பதால், டாக்டர் கே அங்கு இறந்த யானைகளைப் பிணக்கூராய்வு செய்ய நேர்ந்தது. இப்படியாக, யானைகளுடன் அவர் தொடர்பு தொடங்கியது. கம்பம் காடுகளில் வண்ணாத்திப் பாறை, சுரங்கனாறு, குதிரையாறு போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம். வேட்டையாடிகள், அந்தப் பகுதிகளில்தான் பெரும்பாலும் யானைகளைத் தந்தத்திற்கு வேட்டையாடுவார்கள். பல நேரங்களில், இறந்த யானையை, வெகு தாமதமாகத்தான் கண்டுபிடிப்பார்கள். காரணம், உயிரைப் பணயம் வைத்து காட்டில் ரோந்து போக எந்த வனத்துறை ஊழியர் முன் வருவார்? டாக்டர் கே சொல்வதுபோல, பல சமயங்களில், காட்டில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்தான் இது போன்ற வன உயிர் இறப்பை துறைக்குத் தெரிவிப்பார்கள். பல நேரங்களில் யாரும் அறியாமல் போவதும் நிகழும். அப்படி வேட்டையாடப்பட்ட யானைகளின் உடல், பெரும்பாலும் அழுகிய நிலையில்தான் இருக்கும். மாமிசப் புழுக்கள் நிறைந்து உடல் முழுவதும் அப்பிக் கிடக்கும். தந்தங்களை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு, உடலை அப்படியே விட்டுச் சென்றிருப்பார்கள். ஜெயமோகனின் யானை டாக்டர் கதை நினைவில் வருகிறதா? அதன் வேர் இங்கேதான்.

இதைப் பற்றி டாக்டர் கே, வெம்மெரிடம் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘பெரும்பாலான இறந்த யானைகளின் உடல்கள் (பிணங்கள்) சேதமில்லாமல் அப்படியேதான் இருக்கும். தந்தங்கள் இருக்கும் கடைவாய் பகுதி தவிர. ஏனெனில், அவை வேட்டையாடப்படுவது தந்தங்களுக்காக மட்டுமே. எத்தனை நாட்களாக அழுகிப் போயிருந்தாலும், நாம் ஒரு நல்ல பிணக்கூராய்வு செய்யலாம். என்ன, அப்பிக் கிடக்கும் மாமிசப்புழுக்களை ஒரு துடைப்பம் கொண்டு பெருக்கித் தள்ளிவிட்ட பின், கிருமிநாசினி தெளித்த பின், கால்நடை மருத்துவர் பணியைத் தொடங்க வேண்டும். அது கால்நடை மருத்துவருக்கு அவரது திறமைக்கான சோதனை. அவருக்கு சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பணி செய்யும் திறனும், மிகுந்த மன உறுதியுடன் கடினமான வயிறும் வேண்டும். வாந்தி வராமல் இருக்கணுமே!

சில சரகர்கள், பணியாட்களுக்கு வாசனை திரவங்கள், ஊதுபத்தி, ஏன், சந்தனக் கட்டைகளைக்கூடத் தருவார்கள், அந்தக் கொடூர நெடியில் இருந்து விடுபட. எப்படி இருந்தாலும், ஒரு சில புழுக்கள் மேலே ஏறி விடும்; நெடி இரண்டு மூன்று நாட்களுக்கு நம் உடலை விட்டு விலகாது!’. இங்கு ஓய்வு பெற்ற டி.எஃப்.ஓ பத்ரசாமியின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. ‘டாக்டர் கே ஒரு சைவ மதத்தினர். மேலும் பிராமணர். ஆனாலும், அவரைப்போலப் பிணக்கூராய்வு செய்த ஒரு கால்நடை மருத்துவரை நான் என் 40 வருட சர்வீசில் பார்த்ததில்லை. அனாயாசமாக, யானையின் பிணத்திற்கு உள்ளே நின்றுகொண்டு முக்கியப் பாகங்களின் பகுதிகளை வெட்டி எடுப்பார். அங்கேயே நின்றுகொண்டு டீயும் பருகுவார். அவரைப் பொறுத்தவரை அது அவர் கடமை. விருப்பு வெறுப்புக்கு இடமில்லை!’ Anglia Productions ஆவணப்படம் யானையின் வயிற்றுக்குள் டாக்டர் கே இருக்கும் காட்சியுடன்தான் தொடங்கும்.

இதுகுறித்து மேலும் விளக்கும் டாக்டர் கே, ‘பிணக்கூராய்வு, வனத்துறையைப் பொறுத்தவரை, இறந்த யானை ஆணா, பெண்ணா என்று அறியவும், ஏதாவது தொற்று நோயால் இறந்ததா என்று அறியவும்தான் செய்யப்படுகிறது. குறிப்பாக ஆந்த்ராக்ஸ் நோய் (சிலர் அடைப்பான் என்றும் சொல்கின்றனர்) உள்ளதா என்பதுதான் பெரும் கவலை. ஏனெனில் அது ஓர் உயிர்க்கொல்லி நோய் மட்டுமல்ல, விரைவில் மற்ற மிருகங்களுக்கும் பரவக் கூடியது. இதற்காக, இறந்த உடலின் சில பாகங்களையும் திசுக்களையும் எடுத்த பின், பிணக்கூராய்வு முடிவடையும்.

ஒரு ஆழமான பிணக்கூராய்வு செய்ய குறைந்த பட்சம் 6 மணி நேரம் தேவை. தந்தங்களை எடுக்க வேண்டும் என்றால், மேலும் 2 மணி நேரம் தேவைப்படும். காரணம், அவற்றை எடுக்க மண்டை ஓட்டை ஒரு குறிப்பிட்ட முறையில் பிளந்து, தந்தங்களை அவற்றின் பற்குழியில் இருந்து சிதையாமல் எடுக்க வேண்டும். வேட்டையாடிகளைப்போல கோடரியால் தாடையில் வெட்டி எடுத்தால், முழுத் தந்தமும் கிடைக்காது. யானையின் மேல் தோலை அந்தப் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களால் கிழித்து ஒரு பாதை உண்டாக்குவார்கள். பின், நான் எனது உபகரணங்களைக் கொண்டு சில உடல் பாகங்களை அறுத்து எடுப்பேன்’ என்கிறார்.

டாக்டர் வெம்மர், அந்தப் பழங்குடி மக்களுக்கு நியாயமான சம்பளம் கிடைத்ததா என்றும், அவர்களுக்கு இந்த வேலைகளைச் செய்ய மது வழங்கப்பட்டதா என்றும் கேட்கும்போது டாக்டர் கேவின் பதில் அவரது பரந்த உள்ளத்தையும், பழங்குடிகளின் பால் அவருக்கிருந்த கரிசனத்தையும் வெளிக்காட்டுகிறது.

‘அவர்களை வரவழைப்பது சரகரின் வேலை. ஒரு சிலர் மது வேண்டும் என்று கேட்கலாம்; ஆனால் நான் அதை ஆதரிப்பதில்லை. தேவைப்பட்டால், யுடிகோலோன், யார்ட்லி போன்ற வாசனைத் திரவியங்களோ அல்லது சந்தனக் கட்டையை எரிக்கவோ பரிந்துரைப்பேன். அவர்கள் பெரும்பாலும் உடலில் விளக்கெண்ணெய்யைத் தடவிக் கொண்ட பின்தான் வேலையைத் தொடங்குவார்கள். கத்தியில் படியும் கொழுப்பை வெங்காயம் கொண்டு அகற்றுவார்கள். அதேபோல, அவர்களுக்கு சம்பளம் சற்று தாராளமாகக் கொடுங்கள் என்று சொல்வதோடு, கொடுக்கிறார்களா என்றும் உறுதிப்படுத்திக் கொள்வேன். ஆயினும், சரகர்களும் வன ஊழியர்களும் அவர்கள் என்ன பிணக்கூராய்வா செய்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புவார்கள். அவர்கள் செய்வது ஒரு நன்றி மறந்த வேலை. என்ன செய்ய? நான் என் வரையில் அவர்களுக்கு நல்ல வகையில் எல்லாம் கிடைக்க முயற்சி செய்வேன். அவர்களை நல்ல முறையில் நடத்துவேன்’ என்று டாக்டர் கே கூறுகிறார். ஆயினும், இன்றும் இந்த சமுதாயத்தில், கடைநிலை ஊழியர்களை நடத்தும் விதம் பெரிதாக மாறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்த நிலை சற்றே முன்னேறி உள்ளது என்றாலும், போதாது.

டாக்டர் கே பிணக்கூராய்வு பற்றி மேலும் கூறுகையில், ‘பெரும்பாலும் நான் பிணக்கூராய்வை நெஞ்சுப் பகுதியில் இருந்துதான் தொடங்குவேன். அதன்பின் வயிற்றுப் பகுதி, குடல், சீகம் அல்லது பெருங்குடல் வாய், பெருங்குடல், பின்னர் கல்லீரல் என செல்வேன். அதன் பின் தோராக்ஸ் பகுதியும் கபாலமும். சில நேரங்களில், இறங்கி, வயிற்றினுள் நுழைய வேண்டி வரும். அதற்கு இந்த முறைப்படி போக இயலாது. சில நேரங்களில், தலையில் இருந்து தொடங்கி ஆசனவாய், பிறப்புறுப்புகள் வரை பிறழ் முறையில்போக வேண்டி வரும். அந்தந்த நேரத்திற்கு ஏற்றாற்போல் நம் தேவையை ஒட்டி பிணக்கூராய்வு நடக்கும். கிட்டத்தட்ட 18 இறந்த யானைகளை நான் கம்பத்தில் இருந்தபோது பிணக்கூராய்வு செய்திருக்கிறேன். அவற்றில் 12க்கும் மேற்பட்டவை வேட்டையாடிகளால் தந்தத்திற்காகக் கொல்லப்பட்டவை. அவற்றில் ஒரே ஒரு யானையின் தந்தத்தை மட்டும் மீட்க இயன்றது. மற்றவை எல்லாம் திருடப்பட்டு விட்டன. இதற்கு முன் இரண்டு சர்க்கஸ் யானைகளுக்கு வைத்தியம் பார்க்க நேர்ந்தது. இந்தப் பிணக்கூராய்வுகள், யானைகளைப் பற்றிய என் அறிவை மேம்படுத்தின. இவற்றுடன் வேறு சில காட்டு விலங்குகளையும் பிணக்கூராய்வு செய்ய நேர்ந்தது. இவ்வாறு பணி சுறுசுறுப்பாக இருந்தாலும், எனக்கு வேலையில் ஒரு திருப்தி இல்லாமல்போனது. காரணம், என்னுடைய மேலதிகாரி ஒரு முசுடு. குறையை மட்டுமே கண்டுபிடிக்கும் இயல்பு கொண்டவராக இருந்தார் என்பதுதான்’ என்கிறார்.

மருத்துவர் கே இவ்வாறு இயங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், வனத்துறையில் வேலை பார்க்க கால்நடை வைத்தியர்கள் தேவை என்ற அறிவிப்பு வெளியானது!

(தொடரும்)

The post யானை டாக்டரின் கதை #6 – கால்நடை மருத்துவராக வாழ்க்கை appeared first on கிழக்கு டுடே.

கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள்

அடிமையல்லாத ஆப்பிரிக்கர்களின் மக்கள்தொகை காலப்போக்கில் அதிகரித்தது வெள்ளையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள், விதிகளை இயற்றி அவற்றைப் பல வழிகளில் நடைமுறைப்படுத்தினர். 1783ஆம் ஆண்டுக்கு முன் வரையில் ஆப்பிரிக்கர்களில் அடிமையல்லாதவர்களுக்கும் சொத்து வைத்திருப்பவர்களுக்கும் வாக்குரிமை இருந்தது. 1802 முதல் அந்த உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் சொத்துக்களற்ற வெள்ளையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1796 முதல் அடிமையல்லாத ஆப்பிரிக்கர்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்டது.

அடிமைகளை விடுவிக்கவேண்டும், அடிமைத்தளையை ஒழிக்கவேண்டும் என வலியுறுத்திய மெதாடிஸ்ட் சமயப் பிரிவும் பழைமைவாதத்துக்குத் திரும்பியது. அடிமை உரிமையாளர்களான பிரமுகர் குழுவின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்காக ஆப்பிரிக்கர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 1800ஆம் ஆண்டு முதல் பல சமூக, வர்த்தக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த ஆண்டு அடிமைகள் திட்டமிட்டிருந்த ஆயுதமேந்திய புரட்சியொன்று தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு நசுக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் வெள்ளையர்களைக் கொல்வதற்காகச் சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு ஆப்பிரிக்கர் தூக்கிலிடப்பட்டார். அடிமை ஆப்பிரிக்கர்கள் விடுதலை பெறுவார்கள் என்ற நம்பிக்கை பொய்யானது.

1810களில் மேரிலாண்டின் வர்த்தகமும் பொருளாதாரமும் பல்வேறு காரணங்களால் நலிவடைந்தன. டார்செஸ்டரின் முன்னணிக் குடும்பங்கள் பின்னடைவைச் சந்தித்தன. பல நூறு ஏக்கரில் பரந்து விரிந்த நிலங்களுக்கும் பல அடிமைகளுக்கும் உரிமையாளரான ஆண்டனி தாம்சன் கடனாளியானார். கடனைத் திருப்பித் தரமுடியாததால் 1817இல் சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும் தன்னுடைய பண்ணையில் விவசாயம் செய்வதையும் மர அறுப்புத் தொழிலையும் நிறுத்தவில்லை.

இன்னொரு புறம், மேரிலாண்டைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அடிமைகளை விடுவிப்பதற்குப் பதிலாக அலபாமா, மிஸ்ஸிசிப்பி, லூசியானா, ஃபிளோரிடா, டெக்சஸ் போன்ற மற்ற மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்கு விற்றனர். இதனால் பல அடிமைக் குடும்பங்கள் பிரிய நேரிட்டது. இது அடிமைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஹாரியட்டின் பெற்றோரும் தங்கள் குடும்பத்தில் யாரை எப்போது எங்கே விற்பார்கள் என்ற பதற்றத்துடன் இருந்தனர்.

பல நேரங்களில் அடிமைக் குடும்பங்களைத் தண்டிப்பதற்காகவும் இப்படிச் செய்தனர் வெள்ளையர்கள். பெற்றோரும் குழந்தைகளும் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டதால் அடிமைகளில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் அவதிப்பட்டனர். மூன்றில் ஒருவரின் மணவாழ்வு பாதிக்கப்பட்டது. அப்படிப் பிரிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இறந்துபோனதும் நடந்தது.

அடிமைத்தளையில் சிக்கிய ஆப்பிரிக்கர்களுக்குத் திருமணம் என்ற பந்தம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சாத்தியமில்லை என்பது தெரிந்திருந்தது. ‘இந்தப் பெண்ணை அல்லது இந்த ஆணை மரணம் அல்லது தூரம் பிரித்து வைக்கும் வரையில் உங்கள் இணையராக ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என மணமக்கள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகூட மாற்றிச் சொல்லப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட சொற்களின் பொருளைப் புரிந்துகொண்ட இணையர்கள் மணமுடித்த பிறகு வாழ்க்கையை நடுக்கத்துடனும் அச்சத்துடனும் நடத்தினர். தங்களின் மணவாழ்வைப் பேணுவதற்கு எதிர்கொள்ளவேண்டிய இடர்களை நன்றாக அறிந்திருந்தனர். என்றாலும் தங்களுக்கென ஒரு குடும்பமிருந்தால் அடிமை வாழ்வின் கடுமையைக் குறைக்கும், இணையர், குழந்தைகள், உறவுகளின் அருகாமை ஆறுதலைத் தரும் என நம்பினர். எனவே, மணவாழ்வு நீடித்திருக்கும் என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

திருமணம் என்பது சமயச் சடங்கு மட்டுமல்ல, குடிமுறை உரிமையும்கூட. ஆனால் சட்டபூர்வமான குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே உரித்தான உரிமை. சமூகத்தில் எந்தவிதமான உரிமையுமற்ற அடிமைகள் எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடமுடியாது. அதனால் அவர்களின் திருமணங்களும் சட்டத்தாலோ கிறிஸ்தவ சமயத்தினாலோ அங்கீகரிக்கப்படவில்லை, புனிதமானதாகக் கருதப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையைக் கடத்தினார்கள்.

ஆப்பிரிக்கர்களைத் தங்களின் மற்ற உடைமைகளைப்போலத்தான் வெள்ளையர்கள் நடத்தினர். அவர்கள் வாழ்வின் எல்லா முடிவுகளையும் வெள்ளை உரிமையாளர்கள்தான் எடுத்தனர். திருமணம் செய்துகொள்ளலாமா, எப்போது செய்யலாம், யாரைச் செய்யலாம் என்று அனைத்தும் அவர்கள் கையில்தான் இருந்தது. பல நேரங்களில் மனமொவ்வா ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயத் திருமணம்செய்து வைத்தனர். அடிமைகளாக இருக்கும் கொடுமையோடு பல வாழ்வியல், உள, உணர்வுச் சிக்கல்களுக்கும் ஆளாகினர் ஆப்பிரிக்கர்கள். அதிலும் அந்த ஆணோ பெண்ணோ வேறொருவரை விரும்பியிருந்தால் அவர்களின் வாழ்வே சீர்குலைந்துபோனது.

பணத்தேவையிருந்தால் இணையரில் ஒருவரை விற்கும் முடிவை எடுப்பதற்கும் தயங்கவில்லை வெள்ளை உரிமையாளர்கள். அடிமைகளின் மனைவியருடன் தங்களின் விருப்பத்துக்கேற்பப் பாலுறவுகொண்டனர். அவர்களைத் தங்களின் பல மனைவியரோடு ஒருவராக இருக்கச் செய்தனர். அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றவர்கள் அவர்களின் குடும்பத்தினரோடு வசிக்கவிடாமல் தடுத்தனர். அல்லது அவர்களை மீண்டும் அடிமைகளாக்கும் உத்திகளைச் செயல்படுத்தினர்.

ஒரு புறம் ஆப்பிரிக்கர்களை வெள்ளையர்களுக்குக் கீழ்நிலையிலும் விலங்குகளுக்குச் சற்று மேலேயும் இருப்பவர்கள் எனச் சொன்ன கிரேக்கப் படிமத்தை நம்பியதால் அவர்களுக்கு உணர்ச்சியோ சலனமோ கிடையாது, அதனால் நெருங்கிய உறவுகளைப் பிரிவது அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று கூறினார்கள். மற்றொரு புறம் உரிமையாளர்கள் அடிமைகளை இரக்கத்துடன் நல்லவிதமாக நடத்தினார்கள், உணவும் உடையும் தங்குமிடமும் தந்தனர் என்று சொன்னார்கள். தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் அந்த இரண்டு கூற்றுகளிலும் உண்மையில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அடிமைத்தளை ஆப்பிரிக்க குடும்பங்களைச் சிதைத்து மக்களின் உடலையும் உள்ளத்தையும் எப்படியெல்லாம் காயப்படுத்தியது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தங்களிடமிருந்து பிரித்து வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்ட உறவினர்களைத் தேடி ஆப்பிரிக்கர்கள் எழுதிய கடிதங்களையும் நாளிதழ்களில் வெளியிட்ட அறிக்கைகளையும் விளம்பரங்களையும் சேகரித்து அவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அந்தக் கடிதங்கள் அடிமைகள் அடிமை உரிமையாளர்களுக்கு எழுதியவை. நாளிதழ் விளம்பரங்களை அரசு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக வெளியிட்டனர். இவற்றோடுகூட ஆப்பிரிக்கர்களுக்கிடையே அமைந்த தகவல்தொடர்பு வலைப்பின்னலின் வழியே உறவுகளைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முயன்றனர்.

அடிமையல்லாதவர்களோ விடுவிக்கப்பட்டவர்களோ இன்னமும் அடிமைகளாக இருக்கும் தங்களின் இணையரையோ குழந்தைகளையோ விடுவிக்கவேண்டும் எனக் கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதங்களில் தங்களின் பிரிவுக்குக் காரணமானவர்களின்மீது பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது. கோரிக்கையாகவும் கட்டளையாகவும் இறைஞ்சலாகவும் விலைகொடுத்து வாங்கும் வணிகமாகவும் எனப் பல வழிகளில் அணுகுவதையும் பார்க்கமுடிகிறது.

பெரும்பாலான ஆப்பிரிக்கர்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதால் கடிதங்களையும் அறிவிப்புகளையும் எழுதுவதற்கு வெள்ளையர்களின் உதவி தேவை. அதற்காக அவர்களைப் பற்றி நல்ல வார்த்தை சொல்லிப் புகழவேண்டியிருந்தது. பல மாகாணங்களில் விடுதலை பெற்றவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் அல்லது அங்கே தங்குவதற்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அடிமைத்தளையில் இருப்பவர்கள் தப்பிக்க உதவிசெய்வது சட்டத்துக்கு எதிரானது என்பதால் அவர்களின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். இந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி உறவினர்களோடு மீண்டும் இணையவேண்டும் என்ற உள்ளார்ந்த உந்துதலால் அந்தச் சவால்களையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.

பிரிக்கப்பட்ட உறவினர்களைத் தேடும் முயற்சியில் இறங்கிய அடிமைகளில் சிலர் கிறிஸ்தவ சமயத்தின் கோட்பாடுகளை எடுத்துச்சொல்லி வெள்ளை உரிமையாளர்களின் உதவியைப் பெறுவதற்கு முயன்றார்கள். அவர்களைக் கீழ்ப்படியச் செய்யப் பயன்பட்ட அதே மதம் அவர்கள் தங்களின் தன்மதிப்பு, தன்னியக்கம், எதிர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை உணர்ந்துகொள்ள உதவியது. அவர்கள் எழுதிய கடிதங்களில் கடவுள், சொர்க்கம், மறுமை ஆகியவற்றில் தங்களுக்குள்ள நம்பிக்கையை முன்னாள் உரிமையாளர்களிடம் எடுத்துச்சொல்லித் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு முயற்சிசெய்தார்கள்.

ஜாக் ஹன்னிபல் என்ற ஆப்பிரிக்க அடிமை முன்னாள் உரிமையாளருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய குடும்பத்தினர் எங்கே உள்ளார்கள் என்று சமயத்தை முன்னிறுத்திக் கேட்கிறார். ‘வடக்கு கரோலினாவில் இருந்தபோது நீங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்த அதே கடவுளுக்கு உண்மையானவனாக இருக்கிறேன். மெதாடிஸ்ட் தேவாலயத்தின் உறுப்பினராக இருக்கிறேன்.’

1867இல் டெக்சஸைச் சேர்ந்த ஃபேனி என்பவர் தன்னுடைய சகோதரிக்கு கடிதம் எழுதினார். தன் குழந்தைகளை வேறொருவருக்கு விற்ற ப்ரூடஸ் ஸ்லேட் என்ற மனிதரிடம் ‘என்னுடைய குழந்தைகளைப் பிரிவதற்கு அவரே காரணம். அதற்காக அவர் கடவுளிடம் முழுமையாகப் பிரார்த்தனை செய்யவேண்டும். ஆனால், என் குழந்தைகளைக் கண்டுபிடிக்க உதவினால் கடவுள் அவர் செய்த பாவங்களை மன்னிக்கக்கூடும்.’

அர்கன்சஸ் மாகாணத்தில் வாழ்ந்த ஈஸ்டர் வேர் என்ற பெண் தன்னுடைய தந்தையான ஜேம்ஸ் வேர் என்பவரைத் தேடி நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டார். ‘தகவல் தேவை – அலபாமா டல்லேடேகா மாவட்டத்தில் என் தந்தை ஜேம்ஸ் வேருடன் 14வது வயது வரையில் வசித்தேன். பிறகு என்னுடைய எஜமானர் ஜிமிஸ் வேர் அவரை பென் ஆவரி என்பவருக்கு விற்றார். அவரைப் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் அவருடைய மகளிடம் தெரிவியுங்கள்.’

*

அட்ஹவ் பேட்டிசனைப்போலவே ஆண்டனி தாம்சனும் அவருடைய நண்பர்களும் அடிமைகளை விடுவிக்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அதே சமயம் உடனடியாகச் செயல்படுத்தாமல் படிப்படியாக நிறைவேற்றினர். 1830ஆம் ஆண்டில் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஆண்டனி தாம்சனிடம் 39 அடிமைகள் இருந்ததாகப் பதிவாகியுள்ளது. 1836இல் தான் இறப்பதற்கு முன்னர் தன்வசமிருந்த அடிமைகளை விடுவிக்கும் உயிலொன்றை எழுதினார். அதன்படி ஹாரியட்டின் தந்தை பென் ராஸ் 1840ஆம் ஆண்டு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றார். அவருடன் ஜெரி மனோகீ என்ற அடிமையும் விடுவிக்கப்பட்டார். இருவருக்கும் தலா 10 ஏக்கர் நிலத்தையும் வழங்கினார் ஆண்டனி தாம்சன். இவர்களைத் தவிர மற்ற அடிமைகளையும் எப்போது விடுவிக்கவேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டார். குழந்தைகளை 44 வயதாகும்போது விடுதலை செய்யலாம் என்று எழுதினார்.

அவர் பண்ணையைச் சேர்ந்த பெண் அடிமைகள் அருகிலிருந்த மற்ற பண்ணைகளில் வேலைசெய்த அடிமைகளையோ அடிமையல்லாதவர்களையோ மணந்தனர். சில நேரங்களில் கணவனும் மனைவியும் ஒரே உரிமையாளரின் பண்ணையில் வேலைக்கமர்த்தப்படுவதுண்டு. மனநிறைவோடு குடும்ப வாழ்க்கை நடத்தும் அடிமைகளை விளைநிலத்துக்கு அருகிலேயே குடிவைத்தால் நன்றாக வேலைசெய்வார்கள் எனச் சில உரிமையாளர்கள் நம்பியதுதான் இதற்குக் காரணம்.

இப்படி அருகருகே அமைந்த பண்ணைகளைச் சேர்ந்த அடிமைகள் மணவாழ்வில் இணைந்ததால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரும் வாய்ப்பு அதிகரித்தது, அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. வெள்ளை உரிமையாளர்களின் குடும்பங்களோடு சமூக, பொருளாதாரப் பரிமாற்றம் நடந்து அதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையே தொடர்பு வலுப்பட்டது.

*

ஆண்டனி தாம்சனை இரண்டாவதாக மணந்துகொண்ட அட்ஹவ் பேட்டிசனின் பேத்தியான மேரி பேட்டிசன் ப்ராடஸ் தாம்சன் எதிர்பாராதவிதமாக 1810இல் இறந்துபோனார். மேரியின் மகன் எட்வர்டையும் அவருக்குச் சொந்தமான சொத்தையும் அடிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஆண்டனி தாம்சன் ஏற்றார். அதே காலகட்டத்தில் தாம்சனின் பண்ணையில் வசித்த பென் ராஸ், ரிட் அடிமைத் தம்பதியினருக்கு அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள் பிறந்தன. அரமிண்டா என்னும் மிண்டி என்னும் ஹாரியட் 1822இல் பிறந்தார்.

எல்லா அடிமைகளையும்போலவே ஹாரியட் பிறந்த தேதியும் யாருக்கும் தெரியாது. அறுவடைக் காலம், பழங்களைப் பறிக்கும் காலம், இலையுதிர் காலம் என்று பருவங்களைக் கணக்கில்கொண்டு பிறந்த சமயத்தைக் குறிப்பிடுவதுதான் வழக்கம். 1822ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி ஹாரியட் க்ரீனின் மகப்பேற்றுக்காக ஆண்டனி தாம்சன் மருத்துவச்சிக்கு 2 டாலர்கள் கொடுத்ததாகக் கணக்குப் புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தக் குறிப்பின் உதவியோடுதான் ஹாரியட்டின் பிறந்த தேதியையும் ஆண்டையும் கணக்கிட்டனர் வரலாற்றாளர்கள்.

ஹாரியட் பிறந்த அதே வருத்தில் எட்வர்ட் ப்ராடஸுக்கு 21 வயது முடிந்தது. அதுவரையில் மாற்றாந்தந்தையின் பாதுகாப்பிலிருந்த தன்னுடைய சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றான். தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமையைப் பெற்றான். தாயின் அடிமைகள் இப்போது எட்வர்டின் உடைமைகளாயினர். அடுத்த ஓரிரு வருடங்களில் பக்டவுன் என்ற ஊரிலிருந்த தன்னுடைய பண்ணைக்குக் குடிபோனான் எட்வர்ட். பிறகு எலிசா ஆன் கீன் என்ற பெண்ணை மணந்துகொண்டான்.

1830இல் எட்வர்டிடம் ஒன்பது அடிமைகள் இருந்தனர். ரிட்டையும் அவரது குழந்தைகளையும் மட்டும் பத்து மைல் தொலைவில் பக்டவுன் என்ற ஊரிலிருந்த தன்னுடைய பண்ணைக்குக் கூட்டிச்சென்றான் எட்வர்ட் ப்ராடஸ். பென் ராஸ் ஆண்டனி தாம்சனின் பண்ணையில் வேலைசெய்தார். எட்வர்டுக்கு ரிட்டின் எல்லாக் குழந்தைகளையும் பராமரிப்பதில் நாட்டமில்லை. ரிட்டையும் அவர் குழந்தைகளையும் அக்கம்பக்கத்துப் பண்ணைகளுக்கு வேலைசெய்ய அனுப்பிவைத்துக் கூலியைப் பெற்றுக்கொண்டான் எட்வர்ட். அத்தோடு நிற்காமல் ரிட்டின் மூத்த மகள்களைச் சட்டத்துக்குப் புறம்பாக மிஸ்ஸிசிப்பியைச் சேர்ந்த நில உரிமையாளருக்கு விற்றான். நிலைத்தன்மையோடு அமைதியாக இருந்த ராஸ் குடும்பத்தினரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன, குடும்பம் சிதறுண்டது. இளவயதில் தாயை இழந்த எட்வர்டை வளர்ப்பதில் ரிட்டின் பங்கும் இருந்திருக்கும். எனினும் ரிட்டின் குழந்தைகளை அவரிடமிருந்து பிரிப்பதில் எட்வர்டுக்கு எந்த வருத்தமும் இருந்ததாகத் தெரியவில்லை.

சிறுமியான மிண்டியின் உள்ளத்தில் இந்த நிகழ்வுகள் பெரும்தாக்கத்தை உண்டாக்கின. ‘கண்ணை மூடினால் குதிரைகளின் குளம்படிச் சத்தமும் பெண்கள், குழந்தைகளின் அலறலும் அழுகையும்தான் மனதில் தோன்றி அச்சுறுத்தும்,’ என்று பின்னொரு காலத்தில் சொன்னார் ஹாரியட் டப்மன்.

(தொடரும்)

The post கறுப்பு மோசஸ் #8 – பிரிக்கப்பட்ட அடிமைக் குடும்பங்கள் appeared first on கிழக்கு டுடே.

டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர் சங்கங்கள் இருந்தன. இந்தச் சங்கங்கள் அறிவியல், சமூகம் தொடர்பான பல காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தன. அந்த வகையில் இயங்கிய ஒரு முக்கியமான சங்கம், பிளினியன் சங்கம். 1823-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் 1826-ம் ஆண்டு டார்வின் இணைந்தார்.

பிளினியன் சங்கத்தில் ஏராளமான சுயேட்சை ஆய்வாளர்கள் இருந்தனர். பலர் தன்னிச்சையாக உயிரியல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர், ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்.

கிரான்ட், டார்வினைவிடப் பதினாறு வயது மூத்தவர். பன்னிரண்டு ஆண்டுகள் மருத்துவராக இருந்துவிட்டு, கடல் உயிரிகளை ஆராய வேண்டும் என்பதற்காகப் பாதியில் வந்தவர். கிரான்டுக்கு அறிவியல், சமூகம் இரண்டிலும் ஆர்வம் இருந்தது. சமூகத்தின் பல சிக்கல்களுக்கு அறிவியல்தான் பதிலளிக்கும் என நம்பினார்.

இந்த கிரான்டைச் சந்தித்ததுதான் டார்வினின் வாழ்வில் பெரும் திருப்புமுனை. கிரான்ட்தான் முதன் முதலில் உயிரினங்களைப் பற்றியும் அவற்றின் தோற்றத்தைப் பற்றியும் பல கேள்விகளை டார்வினின் மனதிற்குள் விதைத்தார்.

0

கிரான்ட் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர். பரிணாமக் கொள்கையை முன்வைத்து ஏராளமான ஆய்வுகளைச் செய்துவந்தார்.

உண்மையில் உயிரினங்கள் எப்படித் தோன்றின என்கிற கேள்வி ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஒருபக்கம் கடவுள்தான் உயிர்களைப் படைத்தார் என்ற எளிமையான பதில் சொல்லப்பட்டு வந்தாலும், அனாக்ஸிமேண்டர், அரிஸ்டாட்டில் தொடங்கி பல சிந்தனையாளர்கள் உயிரினங்களின் தோற்றத்திற்குப் பின் இருக்கும் அறிவியலை ஆராய முற்பட்டனர். இவ்வளவு ஏன், டார்வினின் தாத்தா எராஸ்மஸ்கூட எல்லா உயிர்களும் ஒரே மூதாதையரிடம் இருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்கிற பார்வையைத் தனது நூலில் முன்வைத்திருக்கிறார். இப்படித் துண்டுத் துண்டாகப் பல விளக்கங்கள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் இணைக்கும் விதமாக முழுமையான பரிணாமக் கொள்கையை முன்மொழிந்தவர் பிரெஞ்சு அறிவியலாளர் ஜீன்-பாப்டிஸ்ட் லாமார்க். இவரைத்தான் கிரான்ட் தன் ஆதர்ச நாயகனாகக் கருதினார்.

லமார்க்கின் புரட்சிகர சிந்தனை, பிரெஞ்சு உலகில் கொண்டாடப்பட்டது. ஆனால் இங்கிலாந்திலோ பெரும் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக, திருச்சபை அதிகாரிகள் லமார்க்கின் பரிணாமக் கொள்கையை ஆபத்தானதாகக் கருதினர். அறத்திற்குப் புறம்பானதாக, சமூகத்தை அச்சுறுத்தும் கருத்தாகப் பார்த்தனர்.

பரிணாமக் கொள்கை, மனிதர்களும் விலங்குகள் வழி வந்தவர்கள் என்று சொல்லும் அதே நேரத்தில் கடவுள் மனிதனைத் தனது சாயலில் படைத்தார் என்கிற கிறிஸ்தவத்தின் அடிப்படையான கூற்றை மறுக்கிறது அல்லவா? இதுதான் பிரச்னை. அதேபோல கடவுள் மேலே, திருச்சபை ஊழியர்கள் நடுவே, சாமானியர்கள் கீழே என அதிகாரம் உருவாக்கி வைத்திருந்த சமூகப் படிநிலையையும் பரிணாமக் கொள்கை கேள்வி எழுப்பியது.

இதனாலேயே திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்த கல்விநிலையங்களில் பணியாற்றி வந்த பல அறிவியலாளர்கள், இயல்பாகவே பரிணாமக் கொள்கையை ஏற்காமல் அமைதி காத்தனர். கிரான்டைப் போன்ற சில தன்னார்வ இளைஞர்கள்தான் லமார்க்கின் சிந்தனையை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆய்வுகளைத் தன்னிச்சையாக முன்னெடுத்தனர்.

கிரான்ட், ஐரோப்பா முழுவதும் பயணித்தார். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பரிணாமக் கொள்கையை விவாதித்தார்.

இறுதியாக எடின்பர்க் திரும்பிய அவர், தாவரங்கள் – விலங்குகளுக்கு இடையேயான தொடர்பை ஆராய வேண்டி, கடற்பஞ்சுகள் (Sea Sponges) என அறியப்பட்ட உயிர்களை ஆராய்ந்தார். இந்த ஆய்வுக்கு அவர் தேர்ந்தெடுத்த உதவியாளர்தான் டார்வின். டார்வினுக்கும் கிரான்டின் கருத்துக்கள் மீது ஈர்ப்பு இருந்தது. அவருடன் சேர்ந்து பயணிப்பதை விரும்பினார்.

கிரான்ட், டார்வினை கடலுக்கு அழைத்துச் சென்றார். கடற்கரையில் ஆய்வுகள் குறித்து ஏராளமாக உரையாடினார். பல விஷயங்களை டார்வினுக்குப் போதித்தார். எப்படி ஆய்வைத் தொடங்க வேண்டும், எந்த மாதிரியான கேள்விகளை எழுப்ப வேண்டும், கண்டறிந்த விஷயங்களை எப்படி ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும் என ஆய்வின் அடிப்படைகள் அனைத்தும் டார்வினுக்கு கிரான்ட் வழங்கியதுதான்.

கிரான்ட், எடின்பர்க்கில் இருந்து சுமார் 10 மைல்கள் தொலைவில் ஒரு கடற்கரை வீட்டை வாடகைக்கு எடுத்தார். அங்கு ஓதநீர்க் குட்டைகளைக் கண்டறிந்து அதிலிருந்து கடற்பஞ்சுகளையும், கடலிறகுகளையும் (Sea-Pens), பவளப்புழு இனம் அமைக்கும் தட்டைப் பாறைகளையும் (Sea mat) சேகரித்தார். அந்த உயிரிகள் முட்டையில் இருந்து எப்படி வளர்கின்றன என்பதை நுண்ணோக்கிகளைக் கொண்டு ஆராய்ந்தார்.

தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் இருபது ஆய்வுக்கட்டுரைகளாக எடின்பர்க் ஆய்விதழில் வெளியிட்டார். இதுவே கிரான்டுக்கு ஐரோப்பா முழுவதும் பெரிய புகழைப் பெற்றுத்தந்தது.

கிரான்டின் வழிகாட்டலுடன் டார்வினும் கடல் உயிர்களை ஆராயத் தொடங்கினார். எடின்பர்க் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வெர்னியன் இயற்கை வரலாற்று சங்கம் என்ற அமைப்பு இயங்கி வந்தது. அங்கு சென்று உரைகள் ஆற்றுவது கிரான்டின் வழக்கம். இந்தக் கூட்டங்களுக்கு டார்வினையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார் கிரான்ட். சங்கக் கூட்டங்களில் பொதுவாக மாணவர்கள் உரையாற்ற அனுமதி கிடையாது. ஆனால் விருந்தினராகக் கலந்துகொள்ளலாம். இந்தச் சங்கத்தில் கடற்பஞ்சுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வாசித்த கிரான்ட், தனது கண்டுபிடிப்புகளில் டார்வின் பங்களிப்பையும் குறிப்பிட்டுப் பேசினார்.

இதுதான் டார்வினுக்கு பொதுவில் கிடைத்த முதல் அங்கீகாரம். அங்கே எழுந்த கரகோஷம் அவருக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. உண்மையிலேயே பூரித்துப்போனார். அப்போது, என் தந்தை சொன்னதுபோல் நான் உபயோகமற்றவன் இல்லையா? என்னாலும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியுமா? டார்வினுக்கு நம்பிக்கை துளிர்விட்டது. மேலும் புதிய விஷயங்களைத் தேடினார். தனியாக ஓர் ஆய்வை நிகழ்த்தத் திட்டமிட்டார்.

ஆனால் எந்த ஓர் ஆய்வும் அதற்கு முந்தைய ஆய்வின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் இல்லையா? அதனால் கிரான்ட் முன்னெடுத்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக, கடற்பாசி வகையைச் சேர்ந்த Flustra எனும் உயிரியை டார்வின் ஆராயத் தொடங்கினர். அதன் உடலில் உள்ள முடிபோன்ற (Cilia) அமைப்பைக் கண்டறிந்தார். தன் கண்டுபிடிப்பை வெர்னியன் இயற்கை வரலாறு சங்கத்தில் சமர்ப்பித்தார். இதுதான் டார்வினின் முதல் கண்டுபிடிப்பு.

தனியாகப் பார்க்கும்போது இது ஒன்றும் அத்தனை பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்று தோன்றலாம். ஆனால் கிரான்ட் மேற்கொள்ளும் ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

கிரான்ட் நிறுவ நினைத்தது இதுதான். தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் ஓர் இணைப்பு இருக்க வேண்டும். தாவரங்கள் பாசி வகையில் இருந்து வந்துள்ளன. பாலூட்டிகள் குழாயுடலி (polyps) எனப்படும் கடல் உயிர்களிலிருந்து தோன்றி இருக்கின்றன. இவை இரண்டின் முட்டைகளை ஆராய்ந்தால் ஒற்றுமை இருப்பது தெரியும். இவை இரண்டையும் இணைக்கும் பொது மூதாதையர் இருக்க வேண்டும். அந்த மூதாதையரைப் பின் தொடர்ந்து சென்றால் ஒருமைப் புள்ளி ஒன்று இருக்க வேண்டும். இந்த ஒருமைப்புள்ளிதான் உயிரற்ற பொருட்களையும் உயிர்களையும் இணைக்கும் புள்ளி. அதில் இருந்துதான் இன்றைய சிக்கலான உயிரினங்கள் பரிணமித்து வந்திருக்க வேண்டும். இதுதான் கிரான்ட் நிறுவ நினைத்தது. இந்தக் கருத்தை இப்போது டார்வினின் ஆய்வும் வலுப்படுத்தியது.

டார்வின் ஆராய்ச்சி செய்த ஃப்லஸ்ட்ரா எனும் உயிரி, பிரையோசோவா (bryozoa) என அறியப்பட்ட பாசி போன்ற உயிரினத்தின் பிரிவைச் சேர்ந்தது. அந்த உயிரினத்தை விஞ்ஞானிகள் தாவரம் என்றே கருதி வந்தனர். ஆனால் டார்வின் அதன் உடற்பாகங்களை ஆராய்ந்து சிலியா எனும் பாகத்தைக் கண்டறிந்தது மூலம் அது விலங்கினத்தைச் சார்ந்தது என நிரூபித்தார். காரணம், அந்தக் குறிப்பிட்ட பாகம் பொதுவாக விலங்குகளுக்கே உடையது.

இதையடுத்து ஒட்டுமொத்த பார்வையில் பார்க்கும்போது அந்தக் குறிப்பிட்ட உயிரினம், தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் புள்ளியாக இருக்கலாம். இதுபோன்ற உயிரினங்களில் இருந்து பிரிந்துதான் தாவரங்கள் தனியாக, விலங்கினங்கள் தனியாக பரிணமித்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவரது ஆய்வு முன்வைத்தது.

டார்வினின் கண்டுபிடிப்பைக் கேட்டறிந்த கிரான்ட், அகம் மகிழ்ந்துபோனார். எழுந்துவந்து டார்வினைக் கட்டி அணைத்துக்கொண்டார். டார்வினின் கண்டுபிடிப்பு பரிணாம கொள்கை குறித்த ஆய்வுகளுக்கு எத்தகைய பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது என்று விளக்கினார்.

‘ஒவ்வொரு விலங்கும் தனித்தனியாக படைக்கப்பட்டுள்ளது என்பது தவறு. இதனை உயிரினங்களுக்கு இடையேயான உடல் அமைப்புகளில் உள்ள ஒற்றுமையைப் பார்த்தாலே அறிந்துகொள்ளலாம். மனிதர்களில் இருந்து சிறிய நுண்ணுயிர்கள் வரை ஒரே வகையான உறுப்புகள்தான் இருக்கின்றன. இதனால் நாம் அறிவது ஒன்றுதான். எல்லா விலங்குகளுக்கும் தொடர்புண்டு. எல்லாம் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன. நுண்ணியிர்களிடம் எளிமையான உறுப்பாக இருப்பது, மனிதர்களிடம் சிக்கலான வடிவில் இருக்கிறது. அவ்வளவுதான். இதனால் நாம் கண்டடையும் உண்மை ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் தொடர்ச்சி இருக்கிறது. லமார்க் சொல்வதுபோல் உயிர்கள் ஒவ்வொன்றும் முந்தைய உயிரில் இருந்து பரிணாமம் அடைந்துதான் வந்துள்ளன. இதுதான் உண்மை.’ என்று கூறினார்.

டார்வின் கிரான்டின் உரையைக் கேட்டு மெய்மறந்து நின்றார். அவரால் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்கிறது என்று நம்பவே முடியவில்லை. அண்டம் விடுத்துள்ள மிகப் பெரிய மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்கப் பங்காற்றி இருக்கிறோம் என்ற எண்ணமே டார்வினைத் துள்ளிக் குதிக்கச் செய்தது. அவர் மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பி இருந்தது. உள்ளம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள்கூட நீடிக்கவில்லை.

கிரான்ட் தன் உரையை முடித்தவுடன் பிளினியன் சங்கத்தில் உறுப்பினராக இருந்த பிரவுன் என்பவர் எழுந்து, ‘இந்தக் கண்டுபிடிப்பு கடவுள் உயிர்களை படைக்கவில்லை என்பதை நிறுவுகிறது’ என்று கூச்சலிட்டார். அவ்வளவுதான். கொஞ்ச நேரத்தில் அங்கு கலவரமே வெடித்துவிட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த திருச்சபை அமைச்சர்கள் பிரவுனின் மேல் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பிரவுன் வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரைகளைக் கிழிக்கவும் முற்பட்டனர். டார்வினின் கண்களுக்கு முன்னாலேயே பிரவுனின் கண்டுபிடிப்புகள் தணிக்கை செய்யப்பட்டன. இனிமேல் இப்படியான ஆய்வுகள் வெளிவந்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்றும் திருச்சபை ஊழியர்கள் கூச்சலிட்டனர்.

நடப்பதைக் கண்டு டார்வின் அதிர்ந்துபோய் நின்றார். டார்வினுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. அண்டம் குறித்தான ஒவ்வொரு பதிலுக்கும் நேர்மறை விளைவுகள் மட்டுமல்ல, எதிர்மறை விளைவுகளும் உண்டு. அதையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் அது.

டார்வின் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து அமைதியாக வெளியேறினார்.

(தொடரும்)

 

______

படம்: ராபர்ட் எட்மண்ட் கிரான்ட்

The post டார்வின் #5 – முதல் கண்டுபிடிப்பு appeared first on கிழக்கு டுடே.

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2

Horace Hayman Wilson

கனவான் ஹிந்துக்கள்

இமயம் தொடங்கி இலங்கைவரை வாழும் இந்தியர்கள் மீது அள்ளி வீசப்படும் அவதூறுகளை மறுதலிக்க விரும்புகிறேன் என்பதால், இந்தியா குறித்த புனிதமான, லட்சிய தேசம் என்றொரு சித்திரத்தை நான் தீட்ட விரும்புவதாகவோ அதன் குறைகளையெல்லாம் மறைக்க விரும்புவதாகவோ நினைக்கவேண்டாம். அங்கு இருளே இல்லை; எங்கும் இனிமையும் ஒளியும் மட்டுமே நிறைந்திருப்பதாகச் சொல்ல முன்வரவில்லை.

இந்தியாவுக்கு நான் ஒரு நாளும் சென்றதில்லை. எனவே வரலாற்று ஆய்வு மற்றும் விமர்சனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பேசுவதற்கு எந்தவொரு வரலாற்று ஆசிரியருக்கும் உள்ள கடமை மற்றும் உரிமைகளின் அடிப்படையிலேயே என் கூற்றுகளை முன்வைக்கிறேன்.

பழங்கால இந்தியர்களின் தேசிய அடையாளம் மற்றும் உணர்வுகள் தொடர்பாக கிரேக்க எழுத்தாளர்கள், பழங்கால இந்திய இலக்கியங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருப்பவற்றையே என்னுடைய ஆய்வின் பிரதான சான்றுகளாக, தகவல் மூலங்களாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அதற்குப் பிந்தைய காலகட்டம் தொடர்பான தகவல்களுக்கு இந்தியாவைப் படையெடுத்து ஆக்கிரமித்த பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் எழுதியவற்றை எடுத்துக்கொண்டிருக்கிறேன். வெல்வது எளிதாகவும் ஆள்வது கடினமாகவும் இருந்த இந்தியர்கள் பற்றி இவர்கள் பரிவுடன் எல்லாம் எதையும் எழுதியிருக்கவில்லை.

கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தியா எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தியாவிலும் இந்தியர்கள் மத்தியிலும் தமது வாழ்வின் துடிப்பான காலத்தைக் கழித்தவர்கள் தமது அனுபவங்களின் அடிப்படையில் எழுதி அச்சிட்டிருப்பவற்றை ஆதாரமாக எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நான் சந்தித்துப் பேசிய மதிப்புக்குரிய குடிமைப் பணி அதிகாரிகள், இந்திய கனவான்கள் ஆகியோர் சொன்ன வாக்குமூலங்களையும் என் ஆய்வின் அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

வருங்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்யவும் நிர்வகிக்கவும் போகிறவர்களான உங்கள் மத்தியில்தான் இதைப் பேசுகிறேன் என்பதால் இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள் மத்தியில் இந்தியா மற்றும் இந்தியர் தொடர்பாக அழுத்தமாக நிலைபெற்றிருக்கக்கூடிய வெளிப்படையாக அதிகம் பேசப்பட்டிருக்கக்கூடிய முக்கிய விஷயம் பற்றி முதலில் பேசுகிறேன். அதாவது இந்துக்களின் உண்மைத்தன்மை (நம்பகத்தன்மை) அல்லது இந்துக்களுக்குத் தேவைப்படக்கூடிய உண்மைத்தன்மை பற்றி முதலில் பேசுகிறேன்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்குச் சென்ற குடிமையியல் பணி அதிகாரிகள், பழைய கிழக்கு இந்திய கம்பெனியின் சார்பில் பணிபுரிந்தவர்கள் ஆகியோர் இந்தியா பற்றிச் சொன்னதிலிருந்து ஆரம்பிக்கிறேன். அந்த ஐரோப்பியர்களை நான் இங்கிலாந்துக்கு முதலில் வந்தபோது பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவர்கள் இந்தியர்களின் வாழ்க்கை, உள்ளூர் நடைமுறைகள், உள்ளூர் மக்களின் குண நலன்கள் ஆகியவை குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று சிறப்பாகப் பணிபுரிந்துவிட்டு இங்கிலாந்து திரும்பியவர்களைவிட அதிகம் தெரிந்துவைத்திருந்தார்கள்.

முன்பைப் போல் இந்தியா, இப்போது சென்றடைய முடியாத தொலைவில் இருக்கும் தேசம் அல்ல. முன்பென்றால் அங்கு செல்லும் ஐரோப்பியர்கள் தனித்தீவில் தமக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்வதுபோல் (ராபின்சன் க்ரூஸோ போல்) கஷ்டப்படவேண்டியிருந்தது. இப்போது அப்படி அல்ல. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் குறுகிய காலத்துக்குள் எளிதாகக் கடல் வழிப் பயணம் செய்ய வழி பிறந்துவிட்டிருக்கிறது. கடிதப் போக்குவரத்து, தந்தி வசதிகள் எல்லாம் வந்துவிட்டன. எனவே மிகச் சிறிய புலம் பெயர்தல் என்பதாக இன்று இந்தியப் பயணமும் பணிகளும் ஆகிவிட்டன. இங்கிலாந்து பெண்கள்கூட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பைவிட அதிக எண்ணிக்கையில் எளிதில் சென்றுவர முடிகிறது. எனினும் புதிய நாட்டில் சென்று வாழ்வது தொடர்பான அடிப்படை சிக்கல்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். அவற்றைத் தவிர்க்கவே முடியாது. அவற்றை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இந்தியாவில் பணிபுரியப் போகும் புதிய குடிமைப் பணி அதிகாரிகளுக்கு உண்மை விஷயங்களை எடுத்துச் சொல்லி உற்சாகமூட்டுவதன் மூலம் அந்த நெருக்கடிகளை அவர்கள் எளிதில் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்.

ஆக்ஸ்ஃபோர்டில் சமஸ்கிருதத்துறை பேராசிரியராக இருந்த மறைந்த திரு பேரா.வில்சனை எனக்கு நன்கு தெரியும். இந்தியா குறித்த அவருடைய நினைவுகூரல்களை மிகுந்த ஆர்வத்துடன் பலமுறை கேட்டிருக்கிறேன்.

இந்தியாவில் அவர் சந்தித்த உள்ளூர் நண்பர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் பற்றி பேராசிரியர் வில்சன் சொல்லியிருப்பதை இங்கு மேற்கோள்காட்டுகிறேன்:

‘கட்டாயம் மற்றும் விருப்பம் என இரண்டின் பேரிலுமாக இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் வாழ்ந்திருக்கிறேன். பிற ஐரோப்பியர்களுக்கு எந்த அளவுக்கு அவர்களுடன் பரிச்சயம் ஏற்படுமோ அதைவிடப் பல மடங்குப் பரிச்சயமும் பழகும் சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்தன. கல்கத்தா சுங்கச் சாவடியில் ஏராளமான கைவினைக் கலைஞர்கள், எந்திர, வாகனத் தொழிலாளிகள், கூலிப் பணியாளர்கள் ஆகியோருடன் தினமும் நேரடியாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவர்கள் மிகவும் உற்சாகமாகச் சளைக்காமல் கடின உழைப்பில் ஈடுபடுவார்கள். தமது மேலதிகாரிகளுடன் நல்லவிதமாக நடந்துகொள்வார்கள். கூடுதல் நேரம் பணி செய்யும்படியோ வேறு என்ன விஷயங்கள் கேட்டுக்கொண்டாலும் அதை உடனடியாக உற்சாகமாகச் செய்ய முன்வருவதைப் பார்த்திருக்கிறேன்.

வேலைக்கு வருபவர்களில் ஒருவர் கூடக் குடித்துவிட்டு வந்ததை நான் பார்த்ததே இல்லை. ஒருவர் கூட மேலதிகாரியை எதிர்த்து எதுவும் பேசியதில்லை. முறையற்று நடந்துகொண்டதில்லை. நம்பிக்கை துரோகம் செய்யவில்லை என்று சொல்லமுடியாது. ஆனால் மிக மிகச் சொற்பமாகவே அப்படி நடந்துகொண்டனர். பிற நாட்டுச் சுங்கச் சாவடிகளில் இருக்கும் அளவுக்குக் கறாராக, கண்காணிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய அளவுக்கெல்லாம் இருந்திருக்கவில்லை. மிகவும் சொற்பமாகவே அற்ப விஷயங்களில் மட்டுமே அப்படி இருந்திருக்கின்றன.

இந்தியர்கள் திறமைசாலிகளாகவும் எளிதில் பணிந்து நடப்பவர்களாகவும் இருந்தனர். எந்தவிதமான அடிமைத்தனமும் இருந்திருக்கவில்லை. மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் பணிபுரிகின்றனர். எந்தவித பயமுறுத்தலும் இன்றி நம்பிக்கையுடன் பணி புரியும் இடங்களில் வெளிப்படைத்தன்மை மிகுதியாக இருக்கும். அந்த வெளிப்படைத்தன்மையை இந்தியர் அனைவரிடமும் கண்டிருக்கிறேன்.

தமது மேலதிகாரிகளின் நல்லெண்ணம் மற்றும் நற்குணம் பற்றி அவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வழிசெய்யுங்கள். மரியாதையை எந்தவகையிலும் இழக்காமல் நன்கு கலந்து பழகுங்கள்’.

அதன் பின்னர் மிக அதிக அளவுக்கு அவதூறு செய்யப்பட்டிருக்கும் இந்து பண்டிட்கள் பற்றி அவர் சொல்கிறார்:

‘ஓய்வு நேரங்களில் நான் படித்த புத்தகங்கள் இந்தியர்களில் கல்வி அறிவு பெற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வழிவகுத்தது. அவர்களும் சோம்பலற்று உழைக்கும் குணம், புத்திக் கூர்மை, உற்சாகம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இந்த பண்டிதர்கள் மற்றும் பொதுவாகவே ஹிந்துக்கள் எல்லாரும் குழந்தைத்தனமான எளிமை கொண்டவர்கள். அன்றாட வாழ்க்கையின் லெளகிக, பிற செயல்பாடுகள் குறித்து துளியும் பரிச்சயம் அற்றவர்கள். ஐரோப்பியர்களுடன் தொடர்பில் இருப்பவர்களிடம் மட்டுமே இந்தக் குணங்கள் மறைந்துபோயிருப்பதைப் பார்க்கமுடியும்.

இந்த பண்டிதர்கள் அல்லது ஹிந்து ஞானவான்களுக்கு ஐரோப்பியர்கள் பற்றி எதுவுமே தெரியாது. ஐரோப்பியர் மீது மிகுந்த பயமும் கொண்டிருக்கிறார்கள். ஹிந்து மற்றும் ஐரோப்பிய அறிஞர்களிடையே எந்தவிதக் கருத்துப் பரிமாற்றமும் இதுவரை நடக்கவில்லை. எனவே இரு தரப்பினரிடையேயும் தவறான புரிதல் நீடித்துவருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை’.

இறுதியாக, கல்கத்தாவிலும் பிற பகுதிகளிலும் இருக்கும் உயர் வர்க்கத்தினர் பற்றிச் சொல்லும்போது பேராசிரியர் வில்சன் சொல்கிறார்:

‘பண்பான நடவடிக்கைகள், தெளிவு, புரிதல், சுதந்தர மனோபாவம், சுதந்தரமான கொள்கை சித்தாந்தங்கள் ஆகியவற்றைக் கொண்டவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். எந்தவொரு தேசத்தில் இவர்களைப் பார்த்தாலும் கண்ணியமான கனவான்கள் என்று அங்கீகரிக்கவேபடுவார்கள்’. மேலும் சொல்லும்போது, ‘இப்படியான கனவான்கள் சிலருடன் எனக்கு நல்ல நட்பு உருவானது. அது என் வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக நீடிக்கும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் இருந்த தன்னுடைய நண்பர்கள் குறித்து பேராசிரியர் வில்சன் இதுபோலவே, சில நேரங்களில் இதைவிட அழுத்தமாக, புகழ்ந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன். கேசவ் சந்திர சென்னின் தாத்தாவான ராம் கமல் சென் இந்து பாரம்பரிய சம்பிரதாயங்களில் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டவர் (நிச்சயம் மத வெறி கிடையாது). பேராசிரியருக்கும் இவருக்கும் இடையிலான கடிதத் தொடர்புகள் சமீபத்தில் வெளியானது. அதில் என்னதான் ஆங்கிலேயரும் ஹிந்துக்களும் நெருங்கிய நட்புடன் இருந்தாலும் தேடிப் போய் நட்புறவை உருவாக்கியதும் பலப்படுத்திக் கொண்டதும் எல்லாம் ஆங்கிலேயராகவே இருந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை பெருமைப்படக்கூடிய இன்னொரு சம்ஸ்கிருதப் பேராசிரியர் இருக்கிறார். என்னைவிடவும் இந்த விஷயம் சார்ந்து மிகவும் அழுத்தமாகப் பேசமுடிந்தவர். ஹிந்துக்களிடையே நீங்கள் நண்பர்களைத் தேடிச் சென்றால் நிச்சயம் கிடைப்பார்கள். அவர்களை நீங்கள் நிச்சயம் நம்பலாம் என்று அவரைக் கேட்டால் நிச்சயம் சொல்வார். அநேகமாக உங்களிடம் பலமுறை இதற்கு முன்பும் அவர் சொல்லியிருக்கவும் கூடும்.

படம்: H.H. Wilson – first Boden Professor of Sanskrit at Oxford University.

(தொடரும்)

____________
B.R. மகாதேவன் மொழிபெயர்ப்பில் Max Mueller’s India: What can it teach us?’ – A collection of Lectures

The post மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #9 – ஹிந்துக்களின் நம்பகத்தன்மை – 2 appeared first on கிழக்கு டுடே.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம்

ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும் இருந்தன. ஒரு புதருக்கு அருகில் ஒரு சின்ன எறும்புப்புற்று இருந்தது. அந்தப் புற்றுக்குள் ஒரு அம்மா எறும்பும் ஒரு குட்டி எறும்பும் இருந்தன.

அந்தக் குட்டி எறும்பு அம்மா எறும்பைவிட எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு இடத்தில் ஒரு கணம் கூட அமைதியாகத் தங்கியிருக்காது. ஒரு புதரிலிருந்து இன்னொரு புதருக்கும் பிறகு அங்கிருந்து மற்றொரு புதருக்கும் ஊர்ந்து போய்க்கொண்டே இருக்கும். அதற்கு ஒரு வேலையும் கிடையாது. ஆனால் ஊர்ந்துகொண்டே இருக்கும் சுகத்துக்காகவே விழித்திருக்கும் நேரமெல்லாம் அப்படி தடதடவென ஓடிக்கொண்டே இருக்கும். அந்தக் குட்டி எறும்புக்கு அது ஒரு பொழுதுபோக்கு.

ஒருநாள் அது வேகமாக ஊர்ந்துகொண்டிருந்தபோது நிலம் வழுக்கி உருண்டு சென்று தண்ணீரில் விழுந்துவிட்டது. அதுவரை அச்சமென்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்துவிட்ட அந்தக் குட்டி எறும்புக்கு முதன்முதலாக அச்சம் ஏற்பட்டது. ‘அம்மா அம்மா, காப்பாத்துங்கம்மா’ என்று அம்மா எறும்பின் காதில் விழும் வகையில் அலறியது.

குட்டி எறும்பின் அலறலைக் கேட்டு அம்மா எறும்பு துடித்தது. தண்ணீரில் விழுந்து தவிக்கும் தன் குட்டி எறும்பின் நிலையைக் கண்டு அதன் உடல் நடுங்கியது. ‘சொன்ன பேச்சைக் கேக்காம இப்படி விழுந்து தானா துன்பத்தை வரவழைச்சிகிச்சே, இப்ப என்ன செய்வது?’ என்று நினைத்து வேதனைப்பட்டது.

‘ஐயோ, என் குட்டி எறும்பை யாராவது காப்பாத்துங்களேன்’ என்று அலறியது அம்மா எறும்பு. அதன் அலறலை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அந்த அம்மா எறும்பு தவித்தது. வேகவேகமாக ஊர்ந்து சென்று கரைக்குப் பக்கத்தில் நின்று கதறித் துடிக்கும் குட்டி எறும்பைப் பார்த்து ஆறுதல் சொன்னது. அடுத்த கணமே மேலேறி வந்து உதவிக்கு யாராவது கிடைக்கமாட்டார்களா என்று நான்கு பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றித் தேடியது.

அப்போது கரையோரத்தில் எங்கிருந்தோ ஒரு தவளை தத்தித்தத்தி குதித்தபடியே வந்து நின்றதை எறும்பு பார்த்தது. உதவிக்கு ஆள் கிடைத்துவிட்டதை நினைத்து அதன் மனம் ஆறுதல் அடைந்தது. உடனே வேகவேகமாக தவளைக்கு அருகில் சென்று வணக்கம் சொல்லிவிட்டு, ‘தவளையண்ணா, தவளையண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கேட்டுக்கொண்டது. ‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது தவளை. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. எப்படியாவது அதைக் காப்பாத்துங்க தவளை அண்ணா. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்’ என்று கெஞ்சியது.

அம்மா எறும்பின் குரல் காதில் விழுந்தபோதும், எதுவுமே கேட்காதமாதிரி அந்தத் தவளை நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது. பிறகு அலட்சியமாக தன் முகத்தைத் திரும்பி அம்மா எறும்பைப் பார்த்து ‘என்ன சொன்ன நீ? எனக்கு சரியா காதுல விழலை. இன்னொரு தரம் சொல்லு’ என்று கேட்டது. ‘என் குட்டி எறும்பு தெரியாத்தனமா மண் சரிவில சிக்கி தண்ணீருக்குள்ள விழுந்து உயிருக்குப் போராடுது. தயவுசெஞ்சி காப்பாத்துங்க தவளை அண்ணா’ என்று மன்றாடியது அம்மா எறும்பு.

‘உன் குட்டி எறும்பைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? அதனால எனக்கு என்ன லாபம்? பேசாம போ. போ. யாரையும் என்னால காப்பாத்த முடியாது’ என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டது தவளை.

‘தவளையண்ணா, தவளையண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் உதவி கேட்பேன். தயவுசெஞ்சி வந்து காப்பாத்து தவளை அண்ணா’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘ஐய, ஒருதரம் சொன்னா உன் காதுல விழாதா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது தவளை.

அதைத் தொடர்ந்து தவளையிடம் எதுவும் கேட்க விருப்பமில்லாத அம்மா எறும்பு அடுத்து யாரிடம் உதவி கேட்கலாம் என நினைத்து அக்கம்பக்கமாகப் பார்த்தது.

அப்போது கரையோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்தது. உடனே ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா’ என்று அழைத்தபடி அதற்கு அருகில் வேகவேகமாக நகர்ந்து சென்றது. அதற்குள் அந்தப் பாம்பு தன் புற்றுக்கு அருகில் சென்றுவிட்டது. ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா. கொஞ்சம் நில்லுங்க’ என்று கூவியபடி மூச்சு வாங்கியவண்ணம் பாம்பின் முன்னால் சென்று நின்றது எறும்பு. ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது பாம்பு. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்லி விரட்டியடிச்சிடுச்சி. நீ வந்து அந்த தவளையப் புடிச்சி தின்னு புத்தி புகட்டணும். வாங்க. உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்’ என்று மன்றாடியது.

பாம்பு ஒருகணம் அந்த எறும்பை விசித்திரமாகப் பார்த்தது. பிறகு ‘எனக்கு பசியே இல்லாத நேரத்துல நான் எப்படி யாரையாவது புடிச்சி சாப்பிடமுடியும். உனக்கு வேற வேலை இல்லையா? பேசாம போ. போ’ என்று அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டது.

‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது பாம்பு.

அதைத் தொடர்ந்து பாம்பிடம் எதுவும் கேட்க விருப்பமில்லாத அம்மா எறும்பு அடுத்து யாரிடம் உதவி கேட்கலாம் என நினைத்து அக்கம்பக்கமாகப் பார்த்தது.

அப்போது கரையோரமாக வசித்த ஒரு பாம்பாட்டியின் குடிசையைப் பார்த்தது. அவன் வீட்டுக்கு வெளியே கயிற்றுக்கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் சென்ற அம்மா எறும்பு ‘பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா’ என்று அழைத்தபடி கட்டிலுக்கு அருகில் வேகவேகமாக நகர்ந்து சென்றது. அதற்குள் பாம்பாட்டி தூக்கத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

‘பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டான் பாம்பாட்டி. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்லி விரட்டியடிச்சிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். எனக்கு இப்ப பசிக்கலை. நான் சாப்பிடமாட்டேனு பாம்பு சொல்லிடுச்சி. நீ இப்பவே வந்து அந்தப் பாம்பை மயக்கிப் புடிச்சி அடக்கி உன் தொழிலுக்கு எடுத்துக்கோ’ என்று சொன்னது.

எறும்பினுடைய திட்டத்துக்கு பாம்பாட்டி உடன்படவில்லை. ‘என்கிட்ட ஏற்கனவே ஒரு பாம்பு இருக்குது. புதுசா எனக்கு எந்தப் பாம்பும் தேவையில்லை. என்னைத் தொல்லை பண்ணாத. தூங்க விடு. போ’ என்று விரட்டியடித்துவிட்டு மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

‘பாம்பாட்டி அண்ணா, பாம்பாட்டி அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டினான் பாம்பாட்டி.

தன் திட்டம் தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என அதன் மனம் யோசனையில் மூழ்கியபடி அக்கம்பக்கம் பார்த்தது.

அப்போது ஒரு மரத்தடியில் நீண்டு செல்லும் வேர்களுக்கிடையில் ஒரு எலிவளையைப் பார்த்தது. உடனே அந்த வளைக்குப் பக்கத்தில் சென்று ‘எலி அண்ணா எலி அண்ணா’ என்று அவசரமாக அழைத்தது. நாலைந்து முறை குரல் கொடுத்த பிறகு வளையிலிருந்து எலி வெளியே வந்தது. அங்கே நின்றுகொண்டிருந்த எறும்பைப் பார்த்து ‘நீயா என்னைக் கூப்பிட்டாய்? என்ன விஷயம்?’ என்று கேட்டது.

‘எலி அண்ணா, எலி அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது எலி. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். அந்தப் பாம்பும் முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்தப் பாம்பை மயக்கிப் புடிச்சி எடுத்துக்கோன்னு பாம்பாட்டிகிட்ட சொன்னேன். அவனும் முடியாதுன்னு என்னை விரட்டி அடிச்சிட்டான். நீ அந்தப் பாம்பாட்டி வச்சிருக்கிற பாம்புக்கூடையைக் கடிச்சி பெரிசா ஒரு ஓட்டை போடணும். அந்தப் பாம்பு தப்பிச்சி ஓடிடும். அப்பதான் அந்தப் பாம்பாட்டிக்கு புத்தி வரும்’ என்று சொன்னது.

எறும்பினுடைய திட்டத்துக்கு எலி உடன்படவில்லை. ‘அவசியமே இல்லாம பாம்பாட்டி கூடையைக் கடிச்சி நான் ஏன் ஓட்டை போடணும். போ. போ. போய் வேற ஏதாச்சிம் வேலையைப் பாரு’ என்று விரட்டியது. பிறகு ‘நான் ஓய்வெடுக்கணும்’ என்று முணுமுணுத்துக்கொண்டே வளைக்குள் புகுந்துகொண்டது.

‘எலி அண்ணா, எலி அண்ணா. நீயே இப்படி சொன்னா, நான் வேற யாருகிட்ட போய் நிப்பேன்?’ என்று மறுபடியும் கெஞ்சியது அம்மா எறும்பு.

‘நான் சொல்றது உன் காதுல விழலையா? கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க உடு. சும்மா தொல்லை பண்ணாதே. அந்தப் பக்கமா போ’ என்று கடுமையான குரலில் எறும்பை விரட்டியது எலி.

தன் திட்டம் தொடர்ந்து தோல்வியடைவதைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என அதன் மனம் யோசனையில் சிறிது தொலைவு சென்றது.

ஒரு செடிக்குப் பக்கத்தில் ஒரு பூனை உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு நம்பிக்கையோடு, அந்தப் பூனைக்குப் பக்கத்தில் சென்று வணக்கம் சொன்னது. ‘என்ன விஷயம்?’ என்று கேட்டது பூனை.

‘பூனை அண்ணா, பூனை அண்ணா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கெஞ்சியது.

‘என்ன உதவி?’ என்று திரும்பிப் பார்த்துக் கேட்டது பூனை. ‘என் குட்டி எறும்பு தண்ணிக்குள்ள தவறி விழுந்திடிச்சி. அதைக் காப்பாதுங்கன்னு அந்தத் தவளைகிட்ட கேட்டேன். அந்தத் திமிரு புடிச்ச தவளை முடியவே முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்த தவளையப் புடிச்சி தின்னுன்னு பாம்புகிட்ட கேட்டேன். அந்தப் பாம்பும் முடியாதுன்னு சொல்லிடுச்சி. அந்தப் பாம்பை மயக்கிப் புடிச்சி எடுத்துக்கோன்னு பாம்பாட்டிகிட்ட சொன்னேன். அவனும் முடியாதுன்னு என்னை விரட்டி அடிச்சிட்டான். அந்தப் பாம்பாட்டி வச்சிருக்கிற பாம்புக்கூடையைக் கடிச்சி ஓட்டை போட்டு அவனுக்குப் புத்தி புகட்டுன்னு எலிகிட்ட சொன்னேன். அந்த எலியும் எதுவும் செய்யமுடியாதுனு சொல்லி விரட்டியடிச்சிட்டுது. நீ அந்த எலியைப் புடிச்சி கரகரனு கடிச்சி சாப்பிடணும்’ என்று சொன்னது.

எறும்பினுடைய திட்டத்துக்கு பூனை உடன்படவில்லை. ‘எந்தக் காரணமும் இல்லாம ஒரு எலியை நான் ஏன் கடிச்சிக் கொல்லணும்? போ. போ. போய் வேற ஏதாச்சிம் வேலையைப் பாரு’ என்று விரட்டியடித்தது பூனை.

தன் திட்டம் பூனையிடமும் தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என திட்டமிட்டபடி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு நாய் கரையில் ஏறி நிற்பதைப் பார்த்தது.

உடனே நம்பிக்கையோடு, அந்த நாய்க்குப் பக்கத்தில் சென்று வணக்கம் சொன்னது. ‘என்ன விஷயம்?’ என்று கேட்டது நாய்.

குட்டி எறும்பு தண்ணீரில் விழுந்த செய்தியில் தொடங்கி பூனை பாம்புக்கூடையில் ஓட்டை போட மறுத்த செய்தி வரைக்கும் எல்லா விஷயங்களையும் சுருக்கமாக அந்த நாயிடம் எடுத்துச் சொன்னது எறும்பு. பிறகு அந்த நாய்க்கு வேகமூட்டும் வகையில் ‘நாய் அண்ணா, நாய் அண்ணா, நீ அந்தப் பூனையை இந்த வட்டாரத்தைவிட்டே துரத்திடிக்கணும். அப்பதான் அதனுடைய திமுரு அடங்கும்’ என்று கேட்டுக்கொண்டது.

அந்த நாய் எறும்பைப் பார்த்து விசித்திரமாகச் சிரித்தது. ‘ஒரு பூனை உனக்கு உதவி செய்யலைன்னா, அது உனக்கும் பூனைக்கும் உள்ள பிரச்சினை. அந்தப் பிரச்சினைக்குள்ள நான் எப்படி நடுவுல வரமுடியும்? போ. போ. உன் பிரச்சினையை நீயே தீத்துக்கோ. நடுவுல என்னை இழுத்துவிடாதே’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டது.

தன் திட்டம் தோல்வியடைந்ததைக் குறித்து எறும்பு வருந்தியது. ஆயினும் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபடியே சிறிது தொலைவு சென்றது.

ஒரு மரத்தடியில் யாரோ எப்போதோ உடைத்துப் போட்ட ஒரு கிளை உலர்ந்து கிடந்தது. பார்ப்பதற்கு உருட்டுக்கட்டை போல இருந்தது. யாருமே தனக்கு உதவவில்லை என்கிற ஆற்றாமையோடு அந்தக் கட்டையிடம் சென்று ‘கட்டை அண்ணா, கட்டை அண்ணா. யாருமே எனக்கு உதவி செய்யலை. நீயாவது எனக்கு உதவி செய்வியா?’ என்று சொல்லிப் புலம்பியது. அதன் குரல் கட்டையின் காதில் விழுந்தது. ‘என்ன உதவி வேணும், சொல்’ என்று பரிவோடு கேட்டது கட்டை.

குட்டி எறும்பு தண்ணீரில் விழுந்த செய்தியில் தொடங்கி பூனையை விரட்டியடிக்க நாய் மறுத்த செய்தி வரைக்கும் எல்லா விஷயங்களையும் சுருக்கமாக அந்தக் கட்டையிடம் எடுத்துச் சொன்னது எறும்பு. பிறகு அந்தக் கட்டைக்கு வேகமூட்டும் வகையில் ‘கட்டை அண்ணா, கட்டை அண்ணா. எனக்கு உதவி செய்ய மறுத்த அந்த நாயை நீதான் ஓட ஓட அடிச்சி விரட்டணும். இந்த உலகத்துல யாருமே எனக்கு உதவி செய்யலை. நீயாவது எனக்கு இந்த உதவியைச் செய்யணும்’ என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டது.

எறும்பின் மனத்தில் இருந்த சீற்றத்தை கட்டை புரிந்துகொண்டது. ‘உனக்கு நான் கட்டாயமா உதவி செய்றேன். கவலைப்படாதே’ என்று நம்பிக்கையூட்டும் குரலில் ஆறுதல் சொன்னது. தொடர்ந்து ‘ஒரு விஷயத்தை நீ புரிஞ்சிக்கணும். நானா பறந்துபோய் யார்மேலயும் விழுந்து அடிக்கமுடியாது. யாராவது என்னைப் புடிச்சி அவுங்கள நோக்கி வீசணும். முதல்ல நீ என்னை எடுத்து அந்த நாயைப் பார்த்து வீசு. நான் போய் அடிக்கறேன்’ என்று சொன்னது. அதைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கியது அம்மா எறும்பு. ‘நான் இருக்கற அளவுக்கு உன் உருவத்தை என்னால தூக்கமுடியுமா? அதெல்லாம் நடக்கற காரியமா, சொல்’ என்று தளர்ந்த குரலில் பதில் சொன்னது. அதே சமயத்தில் அடுத்த என்ன செய்யலாம் அடுத்து என்ன செய்யலாம் என அதன் ஆழ்மனம் யோசனையில் மூழ்கியது.

சிறிது தொலைவில் ஆலமரத்தின் நிழலில் உட்கார்ந்து ஒரு சிறுவன் பாடம் படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய உரத்த குரலைக் கேட்டபிறகுதான் அவன் அங்கே இருப்பதை அம்மா எறும்பு உணர்ந்தது. உடனே அதன் மனத்தில் ஒரு திட்டம் உதித்தது. வேகவேகமாக அந்தச் சிறுவனை நோக்கி ஊர்ந்து சென்றது. பாடத்தில் மூழ்கியிருந்த சிறுவன் தன்னை நோக்கி ஒரு எறும்பு ஊர்ந்துவருவதைக் கவனிக்கவில்லை. அவனை நெருங்கி வந்த அம்மா எறும்பு ‘தம்பி, தம்பி, எனக்கு ஒரு உதவி செய்வியா?’ என்று கேட்டது.

பேசும் எறும்பைப் பார்த்து படிப்பதை நிறுத்திய சிறுவன் ‘உதவியா? என்ன உதவி?’ என்று கேட்டான். ‘அதோ, அங்க இருக்கற கட்டையை எடுத்து அந்த நாயை அடிக்கணும்’ என்று சுட்டிக் காட்டியது. ‘நான் எதுக்கு அந்த நாயை அடிக்கணும். போ. போ. எனக்கு படிக்கிற வேலை இருக்குது’ என்று சலித்துக்கொண்டான் சிறுவன். அவன் பதிலைக் கேட்டு அம்மா எறும்புக்கு துயரம் பொங்கியது. ‘உயிரே இல்லாத அந்தக் கட்டை என் துக்கத்தைப் புரிஞ்சிகிட்டு எனக்கு உதவி செய்ய தயாரா இருக்குது. ஆனா உயிரு இருக்கற நீங்க எல்லாருமே இரக்கமே இல்லாதவங்களா இருக்கறீங்க. உங்களைவிட அந்தக் கட்டை ரொம்ப மேல்’ என்று புலம்பியது.

‘நீ என்ன வேணும்ன்னாலும் சொல்லிக்கோ. எனக்கு பாடம் படிக்கிற வேலை இருக்குது’ என்று திரும்பி உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான் சிறுவன்.

‘இரு இரு. உனக்கு நான் சரியான பாடம் கத்துக் குடுக்கறேன்’ என்று சொன்ன அம்மா எறும்பு மனத்துக்குள் கறுவிக்கொண்டே மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று அவன் தொடையின் மேல் ஏறி நறுக்கென்று கடித்தது.

‘ஐயோ, இது என்ன? ஏன் இப்படி கடிக்கிற?’ என்று அலறினான் சிறுவன்.

‘எனக்கு உதவி செய்றேன்னு சொல்லு. அப்பதான் கடிக்கிறத நிறுத்துவேன்’ என்றபடி மீண்டும் அழுத்தமாக அவன் தொடையைக் கடித்தது அம்மா எறும்பு.

‘சரி சரி. உதவி செய்றேன். முதல்ல கடிக்கிறத நிறுத்து’ என்று அலறிக்கொண்டே எழுந்து நின்றான். அம்மா எறும்பு அவனைப் பார்த்தது.

‘என்ன செய்யணும், சொல்லு’ என்று கேட்டான் சிறுவன்.

‘எடு. அந்தக் கட்டையை எடு. எடுத்து அந்த நாயை அடி’ என்றது அம்மா எறும்பு.

அந்தச் சிறுவன் வேகமாகச் சென்று அருகிலிருந்த அந்தக் கட்டையை எடுத்து நாயை நோக்கி குறிபார்த்து வேகமாக வீசினான். நாயின் வயிற்றில் அந்தக் கட்டை சரியாகத் தாக்கியது. ‘ஐயோ’ என்று வலியால் அலறிக்கொண்டு எழுந்தது நாய் தனக்கு எதிரில் அம்மா எறும்பையும் அதற்கு உதவியாக ஒரு சிறுவனும் நின்றிருப்பதைப் பார்த்து அச்சம் கொண்டது. ‘ஐயோ, அடிக்காத. நான் என்ன செய்யணும், சொல்’ என்று வலியோடு கேட்டது.

‘போ. போய் அந்தப் பூனையை விரட்டிப் புடி’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே நாய் அந்தப் பூனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

நாய் விரட்டிவருவதைப் பார்த்ததுமே தப்பிப்பதற்காக அங்குமிங்கும் வளைந்து வளைந்து ஓடியது பூனை. எந்தப் பக்கம் சென்றாலும் பின்னாலேயே விரட்டிவரும் நாயைப் பார்த்து அச்சத்தில் மூழ்கியது. இறைக்க இறைக்க ஓடியபடியே அம்மா எறும்பைப் பார்த்து ‘ஐயோ, என்னை விரட்டவேணாம்னு சொல்லு. நான் என்ன செய்யணும். சொல்லு. அதைச் செய்யறேன்’ என்று அலறியது.

‘போ. போய் அந்த எலியை விரட்டிப் புடி’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே அந்தப் பூனை எலியை நோக்கி ஓடியது. பூனை தன்னை விரட்டி வருவதை உணர்ந்ததும் எலி நடுங்கியது. அங்குமிங்கும் ஓடி மறைந்துகொள்ள முயற்சி செய்தது. பூனையின் வேகத்தின் முன்னால் அதன் முயற்சி பலனின்றி தோல்வியில்தான் முடிந்தது. மூச்சிறைக்க ஓடி களைத்துப்போன எலி ‘ஐயோ. என்னை விரட்ட வேணாம்னு பூனைகிட்ட சொல்லு. நான் என்ன செய்யணும், அதைச் சொல்லு. நீ சொல்றபடி செய்றேன்’ என்று அம்மா எறும்பிடம் கேட்டது. ‘போ. அந்தப் பாம்பாட்டியுடைய கூடையில கடிச்சி ஓட்டை போடு’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு. அடுத்த கணமே தூக்கத்தில் மூழ்கியிருந்த பாம்பாட்டியின் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பாம்புக்கூடையில் ஒருபக்கமாக கடித்துக் கடித்து ஓட்டை போட்டுவிட்டுச் சென்றது.

பாம்பாட்டி அப்போதும் நல்ல உறக்கத்தில் மூழ்கியிருந்தான். பாம்புக்கூடையில் சுருண்டிருந்த பாம்பு ஓட்டை வழியாக மெல்ல வெளியே வந்தது. முற்றிலுமாக வெளியே வந்ததும் விடுதலை கிடைத்ததாக நினைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க நினைத்தது.

தன் முன்னால் நின்றிருந்த அம்மா எறும்பைப் பார்த்து பாம்பு ஒரு கணம் திகைத்து நின்றது. அம்மா எறும்பு தன் கதையை எல்லாம் அந்தப் பாம்பிடம் விளக்கமாகச் சொன்னது. அதைத் தொடர்ந்து ‘பாம்பு அண்ணா, பாம்பு அண்ணா, நீ விடுதலையாவறதுக்கு நான்தான் காரணம். நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்’ என்று கேட்டுக்கொண்டது.

‘என்ன செய்யணும், சொல்’ என்று இரக்கத்தோடு கேட்டது பாம்பு.

‘அங்க கரையோரமா ஒரு தவளை உக்காந்திட்டிருக்குது பாரு. அதை நீ ஒரே விழுங்கா விழுங்கணும்’ என்றது அம்மா எறும்பு.

‘ஆகா. நானும் ரொம்ப பசியோடு இருக்கேன். எங்கே இருக்குது அந்தத் தவளை. அதைக் காட்டு’ என்று தலையைத் திருப்பி உற்றுப் பார்த்தது பாம்பு. அம்மா எறும்பு அது உட்கார்ந்திருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டியது. உடனே பாம்பு அதை நோக்கி வேகமாகச் சென்றது.

தன்னை நோக்கி வேகமாக ஒரு பாம்பு வருவதையும் அதற்குப் பின்னால் அம்மா எறும்பு நின்றிருப்பதையும் பார்த்த தவளை அச்சத்தில் உடல் நடுங்கியது. அங்கிருந்தபடியே தப்பிக்க இடம் தேடி தத்தளித்தபடி ‘ஐயோ எறும்பே. நான் என்ன செய்யணும் சொல். என்னைக் கொல்ல வேணாம்’ என்று கதறியது. ‘சீக்கிரமா தண்ணியில குதிச்சி, உயிருக்குத் தவிச்சிட்டிருக்கிற என் குட்டி எறும்பைக் காப்பாத்தி கரைக்கு அழைச்சிட்டு வா’ என்று கட்டளையிட்டது அம்மா எறும்பு.

உடனே தவளை ஒரே பாய்ச்சலில் தண்ணீருக்குள் தாவியது. அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குட்டி எறும்பை நெருங்கி தன் முதுகில் ஏறி உட்கார்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டது. அதுவரை மூச்சுவிட தடுமாறிக்கொண்டிருந்த குட்டி எறும்பு வேகமாகச் செயல்பட்டு சட்டென அந்தத் தவளையின் முதுகில் ஏறி அமர்ந்தது. அப்போதுதான் அதற்கு போன உயிர் திரும்பிவந்த மாதிரி இருந்தது. நிம்மதியாக மூச்சு விட்டது. தவளை மெதுவாக கரைக்கு வந்து சேர்ந்தது. குட்டி எறும்பும் அதன் முதுகிலிருந்து இறங்கி வந்து அம்மா எறும்போடு சேர்ந்துகொண்டது.

பாம்புக்கும் தவளைக்கும் அம்மா எறும்பு நன்றி சொல்லிவிட்டு தன் புற்றை நோக்கி ஊர்ந்து சென்றது. குட்டி எறும்பைப் பாதுகாப்பாக புற்றுவரை அழைத்துச் சென்று தங்கவைத்தது. பிறகு தொடக்கத்தில் நின்றிருந்த இடத்துக்கு மீண்டும் தனிமையில் திரும்பி வந்தது. ஆபத்து சமயத்தில் தனக்கு உதவ மறுத்த பாம்புக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று அதன் மனம் திட்டமிட்டது.

தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த பாம்பாட்டி தனக்குப் பக்கத்திலேயே வைத்திருந்த பாம்புக்கூடையில் ஓட்டை இருப்பதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தான். கூடைக்குள் இருந்த பாம்பு தப்பித்துச் சென்றிருப்பதை உணர்ந்து திகைப்பில் மூழ்கினான். இது யார் செய்த வேலையாக இருக்கும் என்று தெரியாமல் அவன் குழப்பத்தோடு அமர்ந்திருந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு முன்னால் சென்று நின்றது அம்மா எறும்பு.

‘கூடைக்குள்ள இருந்த பாம்பு தப்பிச்சிடுச்சின்னு நினைச்சி கவலைப்படாதே பாம்பாட்டி அண்ணா. நான்தான் என்னுடைய சொந்தக் காரணத்துக்காக அதைத் தப்பிக்க வைச்சேன். அதுக்கு ஒரு காரணம் இருக்குது. உனக்கு வேற ஒரு பாம்பு கிடைக்க ஏற்பாடு செய்றேன். அந்தப் பாம்பு இருக்கற இடம் எனக்குத் தெரியும். நீ என் கூட வந்தா, நான் அந்த இடத்தைக் காட்டுவேன். நீ மகுடி ஊதி அதைப் புடிச்சி எடுத்துக்கலாம்.’

அம்மா எறும்பு சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது பாம்பாட்டிக்குப் புரிந்தது. மறுபேச்சில்லாமல் மகுடியோடும் புதிய கூடையோடும் அம்மா எறும்புக்குப் பின்னாலேயே சென்றான். சிறிது தொலைவு சென்றதும் அம்மா எறும்பு தனக்கு உதவிக்கு வராமல் ஏளனம் செய்த பாம்பு வசிக்கும் புற்றை அந்தப் பாம்பாட்டிக்கு அடையாளம் காட்டியது.

பாம்பாட்டி அந்தப் புற்றுக்கு அருகில் சென்று மகுடியை எடுத்து ஊதினான். புற்றிலிருந்து பாம்பு வெளியே வந்து படமெடுத்தபடி நின்றது. பாம்பாட்டி அதை லாவகமாகப் பிடித்து தன் கூடைக்குள் சுருட்டி வைத்தான். தொலைவிலிருந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மா எறும்பைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு புன்னகைத்தபடி தன் குடிசையை நோக்கி நடந்து சென்றான்.

0

The post நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #7 – எறும்பின் சாகசம் appeared first on கிழக்கு டுடே.

வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள்

தொடக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவது எளிது. விடை கண்டுபிடிப்பது கடினம். இருந்தும், மனித மனம் தீரா ஆர்வத்தோடு இது எப்படித் தொடங்கியது, அது எப்படித் தொடங்கியது என்று எல்லாவற்றைக் குறித்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது இயல்பானதுதான் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி.

வரலாற்றின் தொடக்கப்புள்ளி எது? வரலாறு உதித்தது இங்கேதான் என்று எந்த இடத்தையும் முதல் வரலாற்றுப் பிரதியை உருவாக்கியவர் இவரே என்று எவரையும் திட்டவட்டமாகக் குறிப்பிடுவது கடினம். வரலாற்றின் ஆரம்பப் புள்ளி என்று கற்பனையை வேண்டுமானால் குறிப்பிடமுடியும். கடந்த காலத்தின் நினைவுகளைக் கற்பனைக் கூட்டி வண்ணமயமான கதைப் பாடல்களாகவும் தொன்மக் கதைகளாகவும் பண்டைய மக்கள் உருமாற்றினர். அதுதான் அவர்களுக்கு வரலாறாகத் தோன்றியிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான நிகழ்வுகளை அழகிய கதைகளாகவும் பாடல்களாகவும் உருமாற்றும்போது நினைவில் வைத்துக்கொள்வது எளிது; மற்றவர்களுக்குச் சுலபமாகக் கடத்தவும் முடியும்.

எழுத்துமுறை கண்டுபிடிக்கப்படும்வரை வாய்வழிக் கதைகளே வரலாறாகத் தோற்றம் கொண்டிருந்தன. எழுத்தில் பதிவு செய்யும் முறையைச் சில சமூகங்கள் கடைபிடிக்கத் தொடங்கியபோது அது மேலதிகப் பயன் தருவதாக அமைந்தது. ஒரு கதையையோ பாடலையோ கேட்டு சிறிது காலம் கழித்து. நினைவிலிருந்து மீட்டெடுக்கும்போது பிசகுகளும் மாற்றங்களும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. எழுத்தில் பதிவு செய்யும்போது நிரந்தரத்தன்மை ஏற்பட்டுவிடுகிறது. தவிரவும், வாய்வழிக்கதைகள் சிறு குழுக்களிடையே தழைத்திருக்குமே தவிர தூர தேசங்களுக்கு அவ்வளவு எளிதில் சென்று சேராது. எழுதப்பட்ட கதைகளுக்கு எல்லைகள் கிடையாது. யாரெல்லாம் வாசிக்க முடியுமோ அவர்களுக்கெல்லாம் சென்று சேர்ந்துகொண்டே இருக்கும். மனிதப் பண்பாட்டு வரலாற்றில் எழுத்து, சந்தேகமின்றி ஒரு புதிய மைல்கல்.

0

வரலாற்று மரபு கிரேக்கத்திலிருந்து தொடங்குகிறது என்று ஐரோப்பியர்கள் பெருமிதம் கொள்வதுண்டு. ஆனால் எகிப்து, மெசபடோமியா, சிரியா ஆகிய பகுதிகளில் கடந்த காலத்தைப் பதிவு செய்யும் வழக்கம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. ஹோமருக்குச் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட ஒரு காவியம், கில்காமேஷ். எழுத்தில் கிடைக்கும் முதல் கில்காமேஷ் பிரதி பொஆமு 2100 ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சாகசம், வீரம், அறம், துயர் அனைத்தையும் உள்ளடக்கிய அபாரமான கதைப்பாடல் இது. கில்காமேஷ் நாம் அறிந்த முதல் நாயகனா என்று தெரியாது. ஆனால் முதல் துயர நாயகன் என்று சொல்லமுடியும் என்கிறார் கில்காமேஷை மொழிபெயர்த்த என்.கே. சாண்டர்ஸ். மெசபடோமியாவைச் சேர்ந்த உருக் எனும் சுமேரிய நகரின் மன்னர், கில்காமேஷ். பாதி கடவுள், பாதி மனிதன். எந்த அளவுக்கு மக்கள் அவரை நேசித்தார்களோ அதே அளவுக்கு அவரைக் கண்டு அஞ்சியிருக்கிறார்கள். தனது நண்பன் என்கிடுவின் மரணத்தால் பாதிக்கப்பட்ட கில்காமேஷ், சாகாவரம் வேண்டும் எனும் துடிப்போடு மேற்கொள்ளும் பயணம், மரணத்தை வெல்லமுடியாது எனும் கசப்பான உண்மையை ஏற்பதில் வந்து முடிவடைகிறது.

அக்காடிய மொழியில் இயற்றப்பட்ட இந்த முற்றுப்பெறாத காவியத்தை இலக்கியவாதிகள் மட்டுமின்றி வரலாற்றாளர்களும் ஆராய்ந்து வருகின்றர். காரணம், பல அசாதாரணமான செயல்கள் இடம்பெற்றிருந்தாலும் கில்காமேஷ் முழுக் கற்பனை கதையல்ல. சுமேரிய மன்னர்களின் பட்டியலில் கில்காமேஷின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் ஆண்டதாகச் சொல்லப்பட்ட காலம் (126 ஆண்டுகள்) அசாதாரணமானதாக இருக்கிறது.

0

யூத மரபுக்கென்று பண்டைய வரலாற்றெழுதியலில் ஓர் இடம் இருக்கிறது. விவிலியச் சட்ட நூல்களின் தொகுப்பான எபிரேய விவிலியம் (டனாக்) தனித்தன்மை வாய்ந்த ஒரு பிரதி. யூதர்களின் புனித நூல், கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு. பொஆமு 10 முதல் 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இயற்றப்பட்ட இந்தப் பிரதியில் வரலாற்றின் சில கூறுகளைக் காணலாம். உலகம் உருவான தருணத்திலிருந்து ஜெருசலேமின் வீழ்ச்சி (பொஆமு 586) வரையிலான நிகழ்வுகள் காலவரிசைப்படி விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு விரிந்த அளவில் ஒரு நிலப்பரப்பின் கதை இதற்குமுன்பு சொல்லப்பட்டதில்லை என்பதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும்போது எபிரேய விவிலயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியும். தேசங்களின் வரலாற்றை நவீன முறையில் எழுதும் வழக்கம் பின்னர் உருவாகி வந்த ஒன்று. அவ்வழக்கத்துக்கு முன்னோடியாக யூதர்கள் திகழ்ந்தனர்.

யூதர்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் மிகுதியாக இடம்பெற்றிருக்கின்றன என்றாலும் இன்னொரு பக்கம் தொன்மக் கதைகளும் தாராளமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதனிடம் முடிவடைந்தாலும் கடவுளிடமிருந்துதான் தொடங்குகிறது இப்பிரதி. கடவுள் எவ்வாறு உலகைப் படைத்தார் என்பது விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிப் பகுதியான ஜெருசலேமின் வீழ்ச்சியில் கடவுள் தோன்றவில்லை. பாபிலோனியாவால் ஜெருசலேம் முற்றுகையிடப்பட்டதும் வீழ்த்தப்பட்டதும் விவரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் நடந்ததுதான். கற்பனை மாந்தர்கள் ஒரு பக்கம் வருகிறார்கள். இன்னொரு பக்கம், பல வரலாற்று மாந்தர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

‘மனிதச் செயல்பாடுகளைவிடக் கடவுள்களின் செயல்பாடுகளே இப்பிரதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் குறித்து மனிதர்களுக்காக இயற்றப்பட்டவை என்பதைவிட மனிதர்கள் கடவுளைப் புரிந்துகொள்வதற்காக இயற்றப்பட்ட பிரதிகள் என்றுதான் இவற்றை அழைக்கமுடியும். இத்தகைய பிரதிகளை வரலாறு என்று அழைக்க இயலாது. பண்டைய சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, எபிரேயப் பதிவுகளை பகுதியளவிலான வரலாறு என்று வேண்டுமானால் அழைக்கலாம். உண்மையான வரலாறு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க முடியாது. வரலாறு எனும் சமூக அறிவியல் துறை ஒரு நவீன கண்டுபிடிப்பு ’ என்கிறார் ஆங்கிலேய வரலாற்றாளரும் தத்துவவியலாளருமான ஆர்.ஜி. காலிங்வுட்.

வரலாற்றுத் தகவல்கள் இருப்பதாலேயே இவற்றையெல்லாம் வரலாறாகக் கொள்ளமுடியாது. கதைகள் இருப்பதாலேயே இவற்றை வரலாற்றாளர்கள் புறக்கணிக்கவும் முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் கற்பனையும் உண்மையும் கலந்த பிரதிகள் உயிர்த்திருக்கின்றன. இப்பிரதிகளில் விருப்பு வெறுப்பற்ற அணுகுமுறை கிடையாது. வேண்டுபவர்களை உயர்த்தியும் வேண்டாதவர்களைத் தாழ்த்தியும் பார்க்கும் போக்கே நிலவியிருக்கிறது. கடந்த காலம் குறித்து என்ன எழுதப்பட்டிருந்தாலும் அதை வரலாறு என்று நாம் ஏற்றுக்கொண்டுவிடக்கூடாது. கிரேக்க வரலாற்றெழுதியல் தோன்றுவதற்கு முந்தைய பிரதிகளை இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் காலிங்வுட்.

0

மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்று கிரேக்கம் அழைக்கப்படுகிறது. இலக்கியம், ஜனநாயகம், வரலாறு, தத்துவம், அரசியல், அறிவியல் என்று தொடங்கி அனைத்துத் துறைகளும் கிரேக்கத்தின் மடியில்தான் பிறந்து, வளர்ந்து, தழைத்தன என்பது மேற்கத்திய சமூகங்களின் பொதுவான நம்பிக்கை.

மேற்கத்திய வரலாற்றுப் பதிவுகளை ஐந்து பிரிவுகளின்கீழ் தொகுக்கமுடியும். கிரேக்கச் செவ்வியல் பதிவுகள், கிரேக்க ரோமப் பதிவுகள், ரோமப் பதிவுகள், யூதப் பதிவுகள், கிறிஸ்தவப் பதிவுகள். கிரேக்கச் செவ்வியல் காலத்தின் தொடக்கத்திலிருந்து (பொஆமு 6-5ஆம் நூற்றாண்டு) ரோமப் பேரரசின் வீழ்ச்சி (பொஆ 6-5ஆம் நூற்றாண்டு) வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பதிவுகள் இவை. உருவானவை ஏராளம் என்றாலும் கிடைத்திருப்பவை குறைவுதான்.

நாம் பார்த்த பிற மரபுகள்போலவே கிரேக்க வரலாற்று மரபும் வாய்வழிக்கதைகளிலிருந்தே தொடங்குகிறது. சுமேரியர்களுக்கு கில்காமேஷ் என்றால் கிரேக்கர்களுக்கு ஹோமர் (பொஆமு 8ஆம் நூற்றாண்டு). கில்காமேஷ் போலவே ஹோமரின் இலியட், ஒடிசி இரண்டும் வாய்மொழிக் கதைகளாக நீண்டகாலம் மக்களிடையே புழங்கி பின்னர் எழுத்து வடிவம் பெற்றவை. கில்காமேஷ்போலவே இவற்றிலும் கடவுள்கள் வருகிறார்கள். கில்காமேஷை இயற்றியவர் யார் என்பது தெரியாது. ஹோமர் என்றொருவர் (ஒருவரா, சிலரா, பலரா?) இருந்தார் என்பதுகூட உறுதியானதல்ல. டிரோஜன் போர் எனும் உண்மை நிகழ்வுதான் இலியட், ஒடிசி இரண்டுக்குமான அடிப்படை என்றாலும் காலிங்வுட் வரையறுப்பதுபோல் இவை வரலாற்றுப் பிரதிகள் கிடையாது. கடந்த காலம் குறித்த நினைவுகளிலிருந்து கிளர்த்தெழுந்த செழிப்பான கற்பனைக் கதைகள்.

0

நாம் இதுவரை பார்த்த பிரதிகளில் சில பொதுப்பண்புகளைக் காணமுடியும். கடவுள்களும் அரைக் கடவுள்களும் அசாதாரண ஆற்றல்மிக்க ஆட்சியாளர்களும் பண்டைய படைப்புகளில் மிகுந்திருந்தனர். ஆட்சியாளர்களின் பட்டியல், குல வரிசை போன்றவற்றிலும் மிகை கலந்தே இருந்தது. கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் எந்த எல்லைக்கோட்டையும் அப்போதைய மக்கள் உருவாக்கிக்கொள்ளவில்லை.

கில்காமேஷ் தொடங்கி ஒடிசி வரையிலான படைப்புகளில் இயற்கை ஒரு முக்கியச் சக்தியாகத் திகழ்கிறது. இன்று நாம் இயற்கையிலிருந்து விலகி நிற்கிறோம். அப்போதைய மக்கள் இயற்கையைத் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகக் கண்டனர். இடி, மின்னல், மழை, வெள்ளம் அனைத்தும் அவர்களுக்கு இயற்கையின் உயிரோட்டமான செயல்பாடுகள்.

வரலாற்றுக்கு முந்தைய மக்களின் சிந்தனையோட்டத்தில் மூன்று பிரதான அம்சங்கள் காணப்படுகின்றன என்கிறார் நவீன வரலாற்றெழுதியல் குறித்த விரிவானதோர் அறிமுக நூலை எழுதியிருக்கும் சஷி பூஷன் உபாத்யாய். முதலாவது, காலம் குறித்த பார்வை. காலத்தைத் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருக்கும் சக்கரமாகக் அவர்கள் கண்டனர். முன்பொரு காலத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அவைதான் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. இனியும் நடக்கும். மேலே இருப்பது கீழே வரும், கீழே இருப்பது மேலே வரும். இதுதான் வாழ்க்கை.

இரண்டாவது, தொன்மத்தின்மீதான மரியாதை. கடந்த காலம் தொன்மங்களிலிருந்து தொடங்குகிறது என்று பண்டைய மக்கள் நம்பினார்கள். அசாத்தியங்களும் அதிசயங்களும் அவர்களைப் பொறுத்தவரை மனித வாழ்வோடு ஒன்று கலந்தவை, இயல்பானவை. மூன்றாவது, மனித ஆற்றல் குறித்த பார்வை. மனிதர்கள் ஆள்பவர்கள் அல்லர், ஆளப்படுபவர்கள். நன்மையும் தீமையும் மனிதர்களின் செயல்பாடுகள்மூலம் வருபவை அல்ல. கடவுள்களும் இன்னபிற இயற்கைச் சக்திகளும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். எனவே மனித ஆற்றல் எல்லைக்குட்பட்டது என்று அவர்கள் கருதினார்கள்.

இந்தப் பொதுத்தன்மைகளிலிருந்து பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல் உரித்து, விடுபடுவதற்கு நீண்ட அவகாசம் பிடித்தது வரலாறுக்கு. ஹெரோடோடஸின் வரவுக்குப் பிறகு வரலாறு ஒரு புதிய பாதையில் நடைபோட ஆரம்பித்தது.

(தொடரும்)

The post வரலாற்றின் கதை #3 – தொடக்கங்கள் appeared first on கிழக்கு டுடே.

மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில்

மார்க்கோ போலோ குழுவினர், குஹானன் நகரைத் தொடர்ந்து கடுமையான உடலை வருத்தும் பயணங்கள் மூலம் முலெவஹட், தலேகான், இஸ்காஷிம், படாசன் நகரங்களைக் கடந்தனர்.

படாசன் நகரத்தைக் கடக்கவே பதிமூன்று தினங்களை போலோ குழுவினர் செலவிட நேர்ந்தது. படாசன் நகரை ஆண்ட மன்னர் பரம்பரை, அலெக்சாண்டரில் இருந்து தொடங்குவதாக எண்ணி தங்கள் அரசை நடத்தி வருகின்றனர் என்றும், அந்தப் பகுதி அரசர்கள் சுல்கர்னைன் என்ற பட்டத்தைத் தங்கள் பெயருக்கு முன் சூடிக் கொள்கின்றனர் என்றும் போலோ அறிந்துகொண்டார்.

படாசன் என்ற நகரம் இயற்கையான கணவாய்களையும் கோட்டைகளையும் கொண்டு திகழ்வதால் இந்தப் பகுதியை மாற்று அரசுகள் படை எடுத்துத் தாக்குவது மிகவும் சிக்கலானது என்று நிகோலோ போலோ விளக்கினார்.

படாசன் நகரைக் கடக்கும்போது மார்க்கோ போலோ கடுமையான காய்ச்சலால் துன்புற நேர்ந்தது. ஏற்கெனவே இந்தப் பாதையில் நிகோலோ பயணித்திருந்ததால், அந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று தனது மகனின் காய்ச்சலுக்குத் தகுந்த மருத்துவ உதவியைப் பெற்றார்.

மார்க்கோ போலோவின் காய்ச்சல் குணமானவுடன் நிகோலோ குழுவினர் தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர். கடுமையான நிலப்பகுதிகளைக் கடந்து அடுத்ததாக அவர்கள் சென்றடைந்த பகுதி, காஷ்மீர். காஷ்மீரில் சிலை வழிபாடு மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. இந்தப் பகுதி மக்கள் தங்களின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட எதையும் செய்வதில்லை என்று மார்க்கோ போலோ தெரிந்துகொண்டார்.

வெனிஸ் நகரத்தில் இருந்து பல பொருட்களை, பட்டுப்பாதை வழியாக வணிகர்கள் மூலம் காஷ்மீரத்து மக்கள் பெறுகின்றனர் என்ற செய்தியும் மார்க்கோ போலோவுக்கு வியப்பைத் தந்தது. காஷ்மீரிலிருந்து பயணித்ததால் சில நாட்களில் பெருங்கடலை அடையலாம் என்ற தகவலையும் மார்க்கோ போலோ தெரிந்துகொண்டார். இந்தப் பகுதியை ஆட்சி செய்யும் அரசர்கள் துறவிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதை மார்க்கோ போலோவின் உறவினர் மாப்பியோ விளக்கினார்.

காஷ்மீரில் வசிக்கும் மக்கள் விலங்குகளைக் கொல்வதில்லை. மாறாக விலங்குகளைத் தங்களின் வழிபாட்டு நிலையில் வைத்து வணங்குகின்றனர். கெஷ்மீர் என்றழைக்கப்படும் இப்பகுதியில் வாழும் மக்கள் அரிசி, பால் பொருட்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பகுதி அதிகமான குளிரும் இல்லாமல், அதிகமான வெயிலும் இல்லாமல் இதமான தட்பவெப்பத்தைக் கொண்ட பகுதியாக இருக்கிறது எனப் பல விஷயங்களை மார்கோ போலோ தெரிந்துகொண்டார். வெனிஸிலிருந்து புறப்பட்டு சில ஆண்டுகள் பயணித்து, பல நகரங்களை மார்க்கோ போலோ குழுவினர் கடந்திருந்தனர்.

மார்க்கோ போலோவின் குறிப்புகளைக் கொண்டு காஷ்மீர் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள், அவருடைய சில குறிப்புகள் காஷ்மீரின் பதின்மூன்றாம் நூற்றாண்டை ஓரளவு வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிடுவது இங்கு பதியத்தக்கது.

இதற்கடுத்து காஷ்மீர் நகரிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்காமல், வடகிழக்குப் பாதையில் நிகோலோ போலோ குழுவினரின் பயணம் தொடங்கியது.

காஷ்மீரிலிருந்து பன்னிரண்டு நாட்கள் மலைகளுக்கு இடையே பயணித்து, படாசன் நகரை ஆட்சி செய்யும் அரசனின் சகோதரரால் ஆளப்படும் வகான் என்ற நகரை இக்குழுவினர் அடைந்தனர். அந்நகரில் மூன்று நாட்கள் பயணித்து, உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகளைக் கடந்து, கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் பயணம் தொடர்ந்தது. போலோர் நகரைக் கடந்து காஷ்கர் என்னும் பகுதியை நிகோலோ குழுவினர் அடைந்தனர். இந்தப் பாதைகளில் சில நாட்கள் குதிரைகளுக்கு உணவுகூட இல்லாமல் பயணிக்க நேர்ந்தது.

காஷ்கர், சீன ஆட்சிக்குட்பட்ட மேற்குப் பகுதி. ஒரு காலத்தில் காஷ்கர் தனித்த ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போது குப்ளாய்கானின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

காஷ்கர் பகுதி மக்கள் பல வகையான வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்பதை வணிகரான போலோவின் தந்தை விளக்கினார். மேலும், காஷ்கர் பகுதியில் முகமது கடவுளை வழிபடும் மக்களும், கிறித்தவக் கடவுளை வழிபடும் மக்களும் வாழ்வதை அறிந்துகொண்டார். இப்படிப் பல அனுபவங்களையும், நிலவியலால் பல தடுமாற்றங்களையும் கடந்து சமர்கண்ட் என்ற பகுதியை அடைந்தபோது நிகோலோ குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தனர்.

சமர்கண்ட் பகுதியை ஆட்சி புரிந்த சகதை என்பவர், கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிய அரசராக ஆட்சி புரிந்தார். சமர்கண்ட் பகுதியின் காவலர்கள் நிகோலோ குழுவினரை சகதை முன் அழைத்துச் சென்றபோது அரசன் மிகவும் மகிழ்ந்துபோனார். கிறிஸ்தவம் செழிப்பாக இருக்கும் நிலப்பகுதியில் இருந்து வந்திருந்த நிகோலோ குழுவினர் மிக மரியாதையாக அங்கு நடத்தப்பட்டார்கள்.

உலகின் சக்தி வாய்ந்த அரசனைச் சந்திக்கப் போகும் கனவில் தனது தந்தையுடன் பயணத்தைத் தொடர்ந்த மார்க்கோ போலோ, வழியில் பல சிரமங்களைக் கடந்து உடல் நலிவுற்று ஒருவழியாக அங்கு வந்து சேர்ந்திருந்தார்.

(தொடரும்)

The post மார்க்கோ போலோ #3 – காஷ்மீர் பாதையில் appeared first on கிழக்கு டுடே.

❌