Normal view

Received before yesterdayமுரளி கண்ணன்

தக் லைஃப்

87 சமயத்தில் எங்கள் ஊர் பகுதியில் கல்லூரிகள் இல்லை. பெரும்பாலும் மதுரையில் இருக்கும் அமெரிக்கன், மெஜூரா, தியாகராஜா ஆர்ட்ஸ் மற்றும் வக்ஃப் போர்டு கல்லூரிகளில் தான் எங்கள் ஊர் காரர்கள் சென்று படிப்பார்கள். ஹாஸ்டலில் தங்கி இருக்கும் அவர்கள் சனி ஞாயிறு வரும்போது, அவர்கள் பார்த்த படங்களைப் பற்றி சொல்வது தான் எங்களுக்கு முதல் தகவல் அறிக்கை. ஏனென்றால் எந்த படமாக இருந்தாலும் எங்கள் ஊருக்கு நூறு நாள் கழித்து தான் வரும். 87 தீபாவளி சமயத்தில் போடப்பட்ட ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், மனிதன் படத்தின் வானத்தைப் பார்த்தேன் பூமியை பார்த்தேன், உழவன் மகன் படத்தின் செம்மறியாடே செம்மறியாடே பாடல்கள் கொடுத்த தாக்கத்தை, நாயகனின் நான் சிரித்தால் தீபாவளி கொடுக்கவில்லை. என்னடா பாட்டு வரியே காதுக்குள்ள போக மாட்டேன் என்கிறதே என்பதுதான் அப்போது பேச்சாக இருந்தது. தீபாவளி முடிந்து அதிரசம் முறுக்கு ரவா லட்டு வாளிகளோடு ஹாஸ்டல் சென்ற சீனியர் அண்ணன்கள், திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தோம். நான் கமல் ரசிகன் என்பதால் அண்ணே நாயகன் எப்படி இருக்கு என்று எல்லோரிடமும் போய் கேட்டேன். டேய் அதை கதை மாதிரி சொல்ல முடியாதுடா. அது பாட்டுக்கு போகும். கவனமா பாக்கணும். அவ்வளவுதான் என்றார்கள். சிலர் படம் புரியவில்லை என்றும் சொன்னார்கள். எங்கள் ஊருக்கு படம் வந்தபோது, ஊர் தியேட்டரில் சுமாரான சவுண்ட் சிஸ்டம். சில டயலாக்குகள் காதில் கேட்கவே இல்லை. ஆனால் அதன் பின்னர் ஒவ்வொருவராக நாயகனை பற்றி பேச ஆரம்பித்ததும் தான் அந்தப் படத்தின் பிரம்மாண்டம் உறைத்தது. அந்தப் படம் அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த பல பென்ச் மார்க்குகளை உடைத்து போட்டு புதிதாக பலவற்றை நிறுவியது. ஆர்ட் டைரக்சன் எப்படி இருக்க வேண்டும், ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டும் முக்கியமாக வயதானவர் என்று காட்ட வேண்டும் என்றால் தலை முடிக்கு சுண்ணாம்பு அடித்து விட்டு ஒரு கோட் மாட்டி விடக்கூடாது. உருவம்,குரல், நடை முதற்கொண்டு அப்படியே மாற வேண்டும் என்று தமிழ் சினிமாவிற்கு பாடம் எடுத்தது. சினிமா என்பது காட்சி ஊடகம். முடிந்தவரை வசனங்கள் குறைவாக இருக்க வேண்டும். அந்த வசனங்களும் அம்பு போல பாய வேண்டும். என்று பலவற்றை சொல்லாமல் சொல்லியது. அதன் பின்னர், மணிரத்னம் கமல் அடுத்து இணைவார்களா என்ற எதிர்பார்ப்பிற்கு, பதிலாக வந்தது ஆனந்தம் திரைப்படம். அதில் நானா படேகரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் கமல் - மணி creative difference காரணமாக, கமல் அதிலிருந்து விலகினார். நானாவும் விலகினார். பின்னர் அதே ஸ்கிரிப்ட்டை, மோகன்லால் பிரகாஷ்ராஜ் வைத்து இருவர் என இயக்கினார் மணி. கிட்டத்தட்ட நாயகன் வெளியாகி முப்பத்தி எட்டாவது வருடம். எவ்வளவோ மாற்றங்கள். அந்த சமயத்தில் பிறந்தவர்கள் தற்போது சினிமா பார்க்க தியேட்டருக்கு செல்ல வேண்டுமா என்று தயக்கம் கொள்ளும் அளவிற்கு காலம் மாறி விட்டது. வெகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முரட்டுத்தனமான இயக்குனர்- நடிகர் காம்போ. இன்று மாலை 5 மணிக்கு Thug life படத்தின் டிரைலர் வருகிறது. மீண்டும் அந்த மேஜிக் நடக்க வேண்டும் என்பது ஒரு கமல் ரசிகனாக எதிர்பார்ப்பு. அன்று ஒவ்வொரு அண்ணனாக சென்று, படம் எப்படி இருக்கிறது என்று கேட்ட மனம், இன்று ஜூன் 5ஆம் தேதி வரும் ஆன்லைன் விமர்சனங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

நானும் மகனும்

ஞாயிறு பிற்பகலில் வைகை எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கி, மகன் தங்கி இருந்த திருவல்லிக்கேணி மேன்சனை சென்றடைந்த போது, அவன் தூங்கிக் கொண்டிருந்தான். நான் சாப்பிட்டு விட்டேன். நீங்கள் பக்கத்தில் ஏதும் சென்று சாப்பிட்டு வருகிறீர்களா? என்றான்.ட்ரெயின்ல வரும்போது சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லி அறையில் இருந்த மகனின் ரூம் மேட் பெட்டில் படுத்து கொண்டேன். ஐம்பதை கடந்தாகி விட்டது. இதுவே 5-10 வருடம் முன்னால் என்றால் கூட, இப்படி வைகையில் இருந்து இறங்கினால் நாயர் மெஸ் அல்லது ஒரு நல்ல ஆந்திர மெஸ்ஸில் சாப்பாடு. முடித்தவுடன் அப்படியே பொடி நடையாக நடந்து தேவி தியேட்டரில் நாலு மணி ஷோ. படம் முடிந்ததும் சின்ன சமோசாவும் இராணி டீயும். இப்போது படுத்தால் போதும் என்று இருக்கிறது. ஆறு மணி அளவில் எந்திரித்தேன். மகன் லேப்டாப்பில் அவன் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு டீ சாப்பிட்டு வருவோமா? கிரவுண்டுக்கு எதுத்தாப்புல ஒரு கடையில நல்லா இருக்கும் என்றேன். நீங்க போய் சாப்பிட்டு வாங்க எனக்கு வேலை இருக்கிறது என்றான். டீ சாப்பிட்டு வந்ததும் பையில், குறிப்பு எடுத்து வைத்திருந்த பேப்பர்களை புரட்ட துவங்கினேன். நல்லா பிரிப்ஃபேர் பண்ணிட்டீங்களா? நாளைக்கு கிடைச்சிருமா? என்றான் மகன். 25 வருஷமா பார்த்துக்கிட்டு இருப்பது தானே? இப்ப லேட்டஸ்ட் அட்மினிஸ்ட்ரேஷன் அப்டேட் மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கேன் என்றேன். இரவு 8 மணி ஆனது. ஏதாச்சும் ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிடலாமா என்று கேட்டேன்‌. அரை மனதுடன் உடன் வந்தான். சாப்பிட்டு முடித்ததும், அப்படியே பீச்சுல போய் கொஞ்சம் அலைகளை பார்த்துட்டு காத்து வாங்கிட்டு வரலாம் என்றேன். சரி என்று தலையசைத்து உடன் நடக்க துவங்கினான். அப்போது சிறிய மகனிடம் இருந்து அழைப்பு. சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டான். ஆச்சு நீ என்ன பண்ற ..என்ன.. அவனிடம் பேசிக் கொண்டே நடந்தேன்... கடற்கரையை நெருங்கி மணலில் நடக்க ஆரம்பித்தோம். அப்போது மகன் கேட்டான். என்னை விட அவன் மேல தானே உங்களுக்கு பாசம் அதிகம் என்று. எனக்கு ரெண்டு பேர் மீதும் ஒரே பாசம் தான். உனக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம். உனக்கு நாங்கள் செய்ததெல்லாம் உன்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தம்பிக்கு செய்ததை நீ பார்த்துக் கொண்டு இருந்தாய். அதனால் உனக்கு அப்படி தோன்றுகிறது என்றேன். அது மட்டும் வச்சு சொல்லல. ஒரே செயலுக்கு நீங்க என்ன தண்டிக்கிற விதமும், அவன தண்டிக்கிற விதமும் வேற. அவ்வளவு ரியாக்ஷன் மாறுறது பார்த்திருக்கிறேன் என்றான். சில நிமிடம் எங்களுக்குள் ஒரு அமைதி நிலவியது. அப்படி இல்லடா. நான், நீ வளர்ந்து வரும் போது என் அப்போதைய வயதோடு உன்னை கம்பேர் செய்து பார்த்தேன். நான் செய்வது போலவே வேலைகள், ஒழுங்காக படிக்க வேண்டும், சேட்டை செய்யக் கூடாது என்று. அதனால் உன் மேல் எனக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு அது நடக்காத போது மிகக் கேவலமாக கூட உன்னை அடித்திருக்கிறேன் ‌ அத நெனச்சு இப்போ தினமும் மனசு கஷ்டப்படுகிறேன். ஆனால் உன் தம்பி வளர்ந்து வரும் போது உன்னைத்தான் அவனுக்கு பெஞ்ச் மார்க்காக மனம் நினைத்தது. அவன மாதிரி தானே இருக்கான் அல்லது அவனைவிட பரவாயில்லை என்று தோண ஆரம்பித்தது. அதனால், நீ செய்த அதே தவறுக்கு அவனை குறைவாக தண்டித்திருக்கிறேன் ‌ என்னுடைய தவறுதான் என்றேன். நாளை காலை உங்களுக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ என்று கேட்டான். பத்து மணிக்கு அங்கே இருக்க வேண்டும் என்றதும், சீக்கிரம் தூங்குங்க ட்ரெயின் டயர்ட் வேற இருக்கும். காலைல எந்திரிச்சு சீக்கிரம் கிளம்பனும் என்றான். திரும்பி ரூமுக்கு வரும்போது, நான் நல்லாத்தான் உங்கள பாத்துகிட்டேன், எங்க அப்பாவ கம்பேர் பண்ணும் போதெல்லாம் நான் எவ்வளவோ மடங்கு மேல் என்றேன். ஆத்திரமான குரலில் பேச ஆரம்பித்தான். இப்படி கம்பேர் பண்ணாதீங்க. அவர் அந்தக் கால ஸ்டாண்டர்டுக்கு உங்கள பாத்துகிட்டார். நடத்தினார். ஒரு தலைமுறை தாண்டி எவ்வளவோ மாறிவிட்டது. நீங்கள் அவரை விட கொஞ்சம் பெட்டர் என்று தான் சொல்லலாமே தவிர, இந்தத் தலைமுறை பெற்றோர்களோடு ஒப்பிட்டால் நீங்கள் மோசம் தான் என்றான். இப்படித்தான் தாத்தா அந்த காலத்தில், பாட்டியை நடத்தியதை விட நான் நல்லாத்தான் வச்சிருக்கேன் என்று என் அம்மாவையும் நீங்கள் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. உங்கள் ஒப்பீடு இந்த தலைமுறையில் தங்கள் மனைவியை, குழந்தைகளை பார்ப்பவர்களோடு இருக்க வேண்டுமே தவிர போன தலைமுறையோடு அல்ல என்றான். மேன்சனை நெருங்கினோம். அப்படியே, இந்தப் பக்கம் ஒரு கடை இருக்கும் இல்ல அங்க பால் குடிச்சிட்டு போயிடலாம் என்றேன். இதுதான் இதுதான் உங்ககிட்ட பிடிக்காதது. வந்ததுல இருந்து உங்க சுகத்தை பத்தியே தான் யோசிக்கிறீங்க, பேசுறீங்களே தவிர, எனக்கு என்ன வேணும்? எனக்கு என்ன பிடிச்சிருக்கு? சாப்பிடறியான்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா என்றான். இல்லப்பா நான் நல்லதா தானே செலக்ட் பண்ணி சொல்றேன். அது உனக்கும் பிடிக்கும்ல என்றேன். அதுதான், எல்லாத்தையுமே உங்க கோணத்திலேயே தான் பாக்குறீங்க. ஒரு தலைமுறை மாறிடுச்சு. என்னோட விருப்பம் என்ன?எது தேவையா இருக்கும்னு கூட உங்களுக்கு தோணல. அதுதான் இந்த குடும்பத்தை இப்படி சரியில்லாம வச்சிருக்கு. இந்த வயசுலயும் இருக்கிற வேலையோடு சேர்த்து வேற என்ன சம்பாதிக்கலாம்னு நினைக்காம, சம்பளம் பத்தல, மெட்ராஸ்ல வேலை தேடுறேன்னு வர்றீங்க. குடும்பத்தோடையும் இப்ப இருக்க சூழலில் வர முடியாது. அப்படி வந்தா பத்தவும் செய்யாது. இங்க மேன்சனில் தங்கிட்டு வீட்டுக்கு கொஞ்சம் பணம் அனுப்பிவிட்டு ஜாலியா இருக்கலாம் என்று தான் உங்கள் மனசு சொல்லுது என்றான். சத்தியமா இல்லடா. அங்க குடுக்குற சம்பளம் பத்த மாட்டேங்குது. விலைவாசி கூடிக்கிட்டே போகுது. சம்பளம் ஏறுற மாதிரியே தெரியல. உன் தம்பியை இன்னும் நாலு வருஷம் எப்படியும் படிக்க வைக்கணும். அதனாலதான் இந்த முயற்சி என்றேன். இந்த யோசனை எல்லாம் வயசு காலத்தில் இருந்திருக்கணும். அப்ப சுகமா ஊரிலேயே இருந்து நல்லா தின்னுட்டு இப்ப பத்தல பத்தலன்னா எப்படி என்றான்? ரூமுக்கு திரும்பி சிறிது நேரம் படித்துக்கொண்டிருந்தேன். அவன் முறைத்துப் பார்ப்பது போலவே உள்ளுணர்வு சொல்லியது. காலை எழுந்ததும், இப்ப டிஃபன் எங்க நல்லா இருக்கும் என்ற கேள்வி நாக்கு வரை வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனுடனேயே சென்றேன். அவன் வழக்கமாக சாப்பிடும் இடத்தில் ஒரு தோசை வாங்கி கொடுத்து பஸ் ஏற்றி விட்டான். இன்டர்வியூ முடிந்தது. பெரிய திருப்தி இல்லை. மேன்சனுக்கு திரும்பி, அவன் வரவுக்காக காத்திருந்தேன்.‌ வேலை முடிந்து களைப்பாக வந்தான். நைட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணிக்கு. இப்போ கிளம்பி போனா சரியா இருக்கும். கிளம்புகிறேன் என்றேன். ஸ்டேஷனுக்கு நான் வருகிறேன் என்றான். உங்களுக்கு சங்கீதா தானே பிடிக்கும் இங்கே சாப்பிடுவோம் என்றான். இல்ல உனக்கு பிடிச்ச இடத்தில் சாப்பிடுவோம் என்றேன். பரவாயில்ல சங்கீதாவே போவோம் என்றான். சாப்பிட்டு பிளாட்பாரத்திற்கு வந்தோம். நான் ஒரு சூப்பர் அப்பான்னு நினைச்சுகிட்டு நிறைய தப்பு பண்ணிட்டேன். ரொம்ப ஸாரி என்றேன்.‌ அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒன்றும் சூப்பர் மகன் இல்லை. எனக்கு சூப்பர் அப்பாவும் தேவையில்லை. எங்க அப்பா மாதிரி இல்ல நான். எல்லாத்தையும் உங்களுக்காக விட்டுக் கொடுத்தேன் என்று மட்டும் இனி நினைத்துக் கொள்ளாமல் முக்கியமாக சொல்லாமல் இருங்கள் போதும் என்றான். சரி என்று கம்மிய குரலில் சொல்லிவிட்டு, தலை குனிந்தவாறு ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தேன். ட்ரெயின் கிளம்பியதும் ஹெட் செட்டில் பாடல் கேட்போமே பேக்கை திறந்தேன். எனக்கு பிடித்த பாஷா அல்வா பாக்கெட் இருந்தது.

மீனாட்சி சுடர்விழி

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றி ஒரு வாரம் கழித்து, மீனாட்சி பட்டாபிஷேகம் நடக்கும் நாளில் இருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரை எங்கள் செட் பசங்கள் எல்லோரும் கீழ சித்திரை வீதி,மேல சித்திரை வீதி, அம்மன் சன்னதி பகுதிகளில் தான் சுற்றிக்கொண்டே இருப்போம். அந்த டீன் ஏஜ் பருவத்தில், மீனாட்சி அம்மனைப் பற்றி பேசுகிறோமோ இல்லையோ, மீனாட்சி சுடர்விழியைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டோம். மீனாட்சி என்பது மதுரையில் சாதாரணமாக வைக்கப்படும் பெயர் என்றாலும், மீனாட்சி சுடர்விழிகள் அரிதாகத்தான் இருப்பார்கள். அவர் தந்தை எப்படி இந்தப் பெயரை அவருக்கு வைத்தார் என்று எங்களுக்கு இன்னமுமே ஆச்சரியம் தான். அவர் அப்போது மதுரை பி ஆர் சி யில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். சில சிவன் கோயில்களில் கருவறை சிறியதாக இருக்கும். மின்விளக்கு கூட இருக்காது. வேறு எந்த அலங்காரமும் இல்லாமல் லிங்கம் மட்டும் இருக்கும். அதிகபட்சம் தண்ணீரால் கழுவி மட்டும் தான் விட்டிருப்பார்கள். அந்தக் கருவறையில் தொங்கும் ஒரு விளக்கில் ஒரு சுடரை ஏற்றி இருப்பார்கள். அந்த சுடர் தீர்க்கமாக எரிந்து, அந்தக் கருவறையையே அழகாக்கும். சிவனை தரிசிப்பதை விட அந்த சுடர் நம் மனதை இழுக்கும். அப்படிப்பட்ட கண்களை உடையவள் தான் மீனாட்சி சுடர் விழி. பிறந்த போது எல்லாம் அப்படி ஒரு தீர்க்கம் அவள் கண்களில் தென்பட்டதில்லை. பருவ வயதை அடைந்த பின்னர் அவளைப் பார்க்கும் யாராலும் அவள் கண்களை விட்டு அகல முடியாதபடி அழகு சுடர் விடும் கண்கள் அவளுக்கு அமைந்தன. எல்லா நாளும் மீனாட்சி மீது கிரேஸோடு அலைந்து கொண்டிருந்த எங்கள் தெரு பையன்கள், மீனாட்சி பட்டாபிஷேகத்தன்று இன்னும் ஒரு படி மேலே சென்று விடுவார்கள். மதுரையின் ராணியாக இன்று முடி சூட்டிக் கொண்டாயே என் இதய ராணியாக என்று முடி சூட்ட வருகிறாய் என்று கவிதை எழுதுவதில் துவங்கி, மீனாட்சி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இன்னைக்கு பட்டாபிஷேகமாமே? எங்கே கிரீடத்தை காணோம் என்று கமெண்ட் அடிப்பது வரை அவரவர் ஸ்டைலில் கவர முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். கண்களின் தீர்க்கம் அவள் படிப்பிலும் இருந்தது. பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றாள். எங்கள் தெரு பையன்களுக்கு எல்லாம் அவளால் வலுவாக வீட்டில் திட்டு விழுந்தது. ஒரு பொம்பள புள்ள, வீட்டு வேலை எல்லாத்தையும் அவங்க அம்மா கூட சேர்ந்து பார்த்துகிட்டு, ஸ்கூல் ஃபர்ஸ்ட்டும் எடுக்குறா? கொட்டிக்கிற வேலை மட்டும்தான் உனக்கெல்லாம் கொடுத்து இருக்கு. எங்க போச்சு உனக்கு அறிவு? எங்க தல விதி உன்னைய பெத்துட்டோம். என்பது அப்போது மீனாட்சியால் எங்கள் தெரு பையன்கள் எல்லோர் வீட்டிலும் அவரவர்களுக்கு கிடைத்த திட்டு. சில தந்தைகள் இருப்பார்கள். அவர்களை ஏதாவது ஒரு அதிகாரி அல்லது மருத்துவர் போன்றோர் கவர்ந்திருப்பார்கள் ‌ தங்கள் பிள்ளை அதேபோல வர வேண்டும் என்று அதற்காகவே மெனக்கிடுவார்கள். சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். மீனாட்சி சுடர்விழியின் தந்தையை அப்படி வசீகரித்தவர், அவரது சொந்த ஊரில் ஸ்டேட் பாங்க் பீல்ட் ஆபிசராக இருந்த ஒரு பெண் அதிகாரி. நல்ல காட்டன் சேலை கட்டிக்கிட்டு, கையில லெதர்வாட்ச் கட்டிக்கிட்டு, சின்ன கண்ணாடி போட்டு கிட்டு ஜீப்ல எல்லா ஊருக்கும் சுத்தி சுத்தி வந்து லோன் கொடுப்பாங்க. பீல்ட் ஆபிசர் வராங்க பீல்ட் ஆபிசர் வர்றாங்கன்னு எங்க ஊரே காத்து கிடக்கும். அது மாதிரி ஒரு பேங்க் ஆபீஸரா மீனாட்சியை ஆக்கிரனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்காகவே மீனாட்சி, தான் பிஎஸ்சி அக்ரி படிக்க வேண்டும் என்று, பிளஸ் ஒன் பிளஸ் டூவில் வெறித்தனமாக படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் என்ட்ரன்ஸ் தேர்வுகள் இருந்தன. அதற்கான கோச்சிங் கிளாசிற்காக தினமும் காலையில் மீனாட்சியை கூட்டிக்கொண்டு போய்விட்டு கூட்டி வருவதற்காகவே அவர் தந்தை இரண்டு மாதம் விடுமுறை எடுத்தார். மீனாட்சி எதிர்பார்த்தபடியே பிஎஸ்சி அக்ரி கிடைத்தது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் அவர் தந்தை மீனாட்சியை சேர்த்து விட்டார். தன்னுடைய கனவு நனவாக அதற்கடுத்தும் ஏராள முயற்சிகளை மீனாட்சியின் தந்தை எடுத்தார்.அவரது வேலை நாள் போக மற்ற நாள்களில் வேன் ஓட்டுவது, திருவிழா, டூர் பஸ்கள் ஓட்டுவது என்று எந்நேரமும் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார். பேங்க் எக்ஸாம் படிப்புக்கும் கோச்சிங் எல்லாம் இருக்கு. நல்ல சென்டர்ல சேர்த்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவரது அம்மாவும் சளைத்தவர் இல்லை. அந்த சமயத்தில் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ஏராள கடைகள் இருந்தன. அதில் ஒரு கடையில் கேஷியராக பணிபுரிந்தார். நானும் எங்கள் செட் பையன்களும் டிகிரியை ஒரு வழியாக முடித்தோம். மதுரையை சுத்துன கழுதை வேறு எங்கேயும் போகாது. அதனால இங்கேயே இருந்து சுகம் கண்டுறாதிங்க என்று எங்கள் எல்லோரையும் சென்னைக்கு பேக் பண்ணி அனுப்பி வைத்தார்கள். தீபாவளி,பொங்கல், சித்திரை திருவிழா இவற்றிற்க்கு மட்டுமே வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டோம். அப்படி ஒரு சித்திரை திருவிழாவிற்கு வந்த போது, மீனாட்சி பட்டாபிஷேகம் அன்று எங்கள் தெரு பையன்கள் அனைவரின் கண்களும் தேடியது மீனாட்சி சுடர்விழியைத் தான். ஒருவேளை பேங்க் வேலை கிடைத்து போய்விட்டாரா என்று விசாரித்த போது தான் தெரிந்தது. மீனாட்சிக்கு யாரோ செய்வினை வைத்து விட்டார்கள், அதனால் அவள் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.‌ செய்வினை எடுப்பதற்காக அவரது பெற்றோர்கள் அவரை சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் என்று. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள். எங்கெல்லாம் செய்வினை எடுக்கிறார்கள் என்று தகவல் வருகிறதோ அங்கெல்லாம் மீனாட்சி சுடர்விழியை அழைத்துச் சென்றனர் அவர் பெற்றோர்கள். நாகூர் தர்கா, பிரத்தியங்கரா தேவி, படவேடு அம்மன் என எல்லா திசைகளிலும் சென்றார்கள். எந்தப் பயனும் ஏற்படவில்லை. பின்னர் அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி, பேய் விரட்டும் ஆட்களிடம் தொடர்ச்சியாக அழைத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். பேய் ஓட்டுபவர்கள் வேப்பிலையால் அடி அடி என்று அடித்து மயக்கம் அடையவே செய்து விடுவார்கள். பின்னர் மயக்கம் தெளிந்து விழித்த பின்னரும் மீனாட்சி அப்படியே தான் இருந்தார். மீனாட்சிக்கு அப்போதைய அந்த ஏரியா அதிகபட்ச திருமண வயதான 30 தாண்டியது. அவரது தந்தையும் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணிக்கு சேர்ந்தார். ஒரு நாள் மீனாட்சியை பார்க்க சென்று இருந்தேன். அவர் தந்தை நீண்ட நேரம் என்னிடம் மனம் விட்டு பேசினார். காலேஜ் முடிச்சு வந்த உடனே, என் காதில் ஏதோ குரல் கேட்கிறது கேட்கிறது என்று சொன்னாள். முதலில் ஈ என் டி டாக்டரிடம் கூட்டி போனேன். அவர் காதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார். அவள் தொடர்ச்சியாக, என்னை வெளியில் இருந்து ஒருவன் பேசி மயக்க பார்க்கிறான், என்னை தப்பானது எல்லாம் செய்யச் சொல்கிறான், இல்லாவிட்டால் என்னை சாகச் சொல்கிறான் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். திடீர் திடீரென இரவில் எந்திரித்து உட்காருவாள். சில நாட்கள் தற்கொலைக்கு முயன்றாள். எனக்கு எதுவும் புரியாமல் செய்வினை தான் வைத்து விட்டார்கள் என்று சில வருடங்கள் வீணடித்தேன். பின்னர் பேய் பிடித்து இருக்கும் என்று சிலர் சொன்னதை நம்பி அதில் பல வருடங்களை வீணடித்தேன் ‌ பின்னர், என் மேனேஜர் தான் சொன்னார் இது மனநோயாக இருக்கும். சீஷோபெர்னியாவாக இருக்கலாம் என்று. மீனாட்சிக்கு இப்படியான சில வருடங்களிலேயே ஒருவர் இதை சொன்னார். நான் தான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் மனநோய் என்று வெளியில் சொல்லி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் அவளுக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று பயந்தேன். செய்வினை, பேய் பிடித்து இருக்கிறது என்பதை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. எனவே என் மனமும் அதை நோக்கியே சென்றது. இப்போதுதான் ஆனது ஆகட்டும் என்று மனநல மருத்துவரிடம் காட்டி வருகிறேன் என்றார். 10- 12 ஆண்டுகள் மீனாட்சி அனுபவித்த வேதனை நரகத்திற்கு இணையானது. ஒருவனுக்கு கை கால் அடிபட்டால் அல்லது மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். எல்லோருக்கும் சொல்கிறார்கள். ஆறுதல் சொல்ல அனைவரும் வருகிறார்கள். ஆனால் மனநோய் என்பதை மூன்றாவது ஆள் அறியாமல் பூட்டி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்னும் நம் சமுதாயத்தில் இருக்கிறது. உடல் குறைபாடை போலத்தான் அதுவும் என்பதை யாருமே ஏற்றுக் கொள்வதில்லை. சீஷோபெர்னியா பாதித்தவர்களை குடும்பம் மூன்றாம் நபர் அறியாமல் பொத்தி பாதுகாக்க நினைக்கிறது. அதனால் பல கஷ்டங்களை எதிர்கொள்கிறது. அந்தக் கஷ்டங்களை வேதனைகளை வேறு வேறு யாரிடமும் காட்ட முடியாமல் அந்த நோயாளியின் மீது காட்டும் அவலமும் நடைபெறுகிறது. ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு மீனாட்சியின் பெற்றோர் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்க துவங்கினார்கள். இந்த சமயத்தில், திடீரென வீட்டில் இருந்து கிளம்பி அருகில் இருக்கும் கடைகளுக்கு மீனாட்சி செல்வார். அங்கே போய் உட்காருவார். ஒரு ஆண் அப்படி போகும்போது பெரிய பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் ஒரு பெண் அப்படி போய் உட்காருவது சமுதாயத்தில் கேலி பொருளானது. மாத்திரைகளின் வீரியம் அவரை தூங்க வைத்துக் கொண்டே இருக்கும். மீனாட்சியின் பெற்றோரும் வயது முதிர்வின் காரணமாகவும், இவ வீட்டுக்குள்ளேயே இருந்தா போதும் என்ற நிலைப்பாட்டின் காரணமாகவும், தூங்கிட்டே இருந்தா கூட போதும் என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்கள். மீனாட்சி நன்றாக சாப்பிடுவார். மாத்திரை போட்டுக் கொண்டு நன்றாக தூங்குவார். இதனால் உடல் பருமன் அதிகமாகிக் கொண்டே போனது. உடல் பொலிவு இழந்தது. மீனாட்சியின் தாயாரால் ஓரளவிற்கு தான் அவருக்கு சிருட்சைகள் செய்ய முடிந்தது. சில வருடங்களில் மீனாட்சியின் தந்தையார் காலமானார். அவரது தாய் மட்டும், நானும் போயிட்டா இவ என்ன ஆவா? என்கிற மனநிலையில் வைராக்கியமாக தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஏழு எட்டு வருடங்களாக நான் மதுரைக்கே வரவில்லை. மிகவும் ஆச்சரியமாக தந்தை அழைத்தார். இந்த வருஷம் மண்டகப்படி நம்ம பங்காளிகள் செய்ய வேண்டியது. ஏற்பாடுகள் எல்லாம் நிறைய இருக்கிறது, நிச்சயம் குடும்பத்தோட வந்துவிடு என்றார். வந்து இறங்கிய நாள் மீனாட்சி பட்டாபிஷேகம். ரெண்டு நாள் கழிச்சு தேரோட்டம். நம்ம கீழ சித்திர வீதி,மேல சித்திர வீதி ஆட்கள் எல்லாம் இருந்தா இந்த தடவை வடம் பிடிப்போம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில்தான், என்னப்பா இப்படி ஆகிப்போச்சு என்ற குரல் கேட்டது. மீனாட்சி இறந்துவிட்டார் என்று தகவல் சொன்னார்கள். உடனடியாக அவர்கள் வீட்டிற்கு போனோம். அவரது தாயார் அழுவதற்கு கூட சக்தியற்று சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். மீனாட்சியில் முகத்தைப் பார்த்தேன். சிவன் கோவில் கருவறை சுடர் போல ஒரு காலத்தில் ஒளிந்த அந்த கண்கள், எந்த ஜீவனும் இல்லாமல், பீளையோடு நிலைகுத்தி இருந்தது. கனத்த மனதோடு கண்களை மூடிய போது, பக்கத்து வீட்டு டிவியில் லோக்கல் கேபிள் சேனலில் மீனாட்சி பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

குட்ட பெரியப்பா

எங்கள் செட் பங்காளி பையன்களால் குட்ட பெரியப்பா என்றும், சூப்பர் சீனியர் பங்காளிகளால் பொடி மட்ட என்றும், கட்சிக்காரர்களால் வதிலை அண்ணாத்துரை என்றும் அழைக்கப்பட்டவர் என்னுடைய பெரியப்பா. அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜா பிரஸ்ஸில் ஆல் இன் ஆலாக இருந்தவர். அப்போது தனித்தனியாக இருக்கும் எழுத்துக்களை கோர்த்து, பிரிண்டிங்கிற்கான மேட்டரை உருவாக்குவார் கம்பாசிட்டர். அதை ப்ரூப் பார்த்த பின்னர் அச்சடிக்க துவங்குவார்கள். விசேஷ பத்திரிகைகள், நோட்டீஸ் என எதுவாக இருந்தாலும், மேட்டரை தெளிவாக ரெடி பண்ணுவதில் பெரியப்பா கில்லாடி‌. எங்கே ஒற்று வர வேண்டும், ன, ண எங்கே வரவேண்டும் தமிழ் ஆண்டு, அவரவர் ஜாதிக்கு ஏற்ப போட வேண்டிய வாசகங்கள், தாய்மாமன், பெரியப்பா, சித்தப்பாமார் புரோட்டோகால்கள் என எல்லாவற்றையும் சரிபார்த்து கொடுப்பார். கட்சி நோட்டீஸ்கள் அடிக்கும் போதும், மாவட்டம், ஒன்றியம், கிளை பிரதிநிதி வரை சரியான புரோட்டோ கால் இருக்கிறதா என்று சரி பார்த்து பிழை திருத்தி கொடுப்பார். பேரை முன்னாள் போடவில்லை என்பதால் நின்று போன கல்யாணங்களும் வெட்டுக்குத்து வரை போன அரசியல் கட்சி கூட்டங்களும் எங்கள் ஏரியாவில் மிக அதிகம். எனவே எதற்கும் அவரிடம் ஒருமுறை சரிபார்த்து விடுவோம் என்று அவர் ஒப்புதல் அளித்த பின்னால் தான் அச்சுக்கே போவார்கள். நான் ஆறாம் வகுப்பிற்கு சென்றபோது, தெருவில் இருந்த அண்ணன் ஒருவரின் பழைய புத்தகங்களை தந்தை வாங்கி கொடுத்தார். புது புத்தகம் தான் இல்லை. பைண்டிங் ஆவது பண்ணிக் கொடுங்கள் அட்டை கூட இல்லாமல், அழுக்காக இருக்கிறது என்றேன். ராஜா பிரஸ்ல உங்க பெரியப்பா இருப்பாரு. பைண்டிங் எல்லாம் வேணாம். ஏதாவது ஒரு அட்டையை வைச்சு டொய்ன் நூல் போட்டு தைச்சு கொடுக்க சொல்லு என்று அனுப்பினார். புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவரை பார்த்தேன். நான்கரை அடி உயரம். சற்று பருமனான உருவம், மாநிறம். எப்போதும் அரை கை வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. வேட்டி இடுப்பு மடிப்பில் அவரது ஜீவ சக்தியான ஒரு பொடி மட்டை. எழுதும் பொழுதோ அல்லது ப்ரூப் பார்க்க துவங்கும் போதோ அந்த பொடி மட்டையை எடுப்பார். வலது கை பெரு விரலாலும் ஆட்காட்டி விரலாலும் ஒரு சிட்டிகை எடுத்து, இடது கை ஆள்காட்டி விரலால் இடது மூக்கை மூடிக்கொண்டு, வலது மூக்கில் பொடியை சர் என்று இழுப்பார். அடுத்த உடனே அடுத்த சிட்டிகை எடுத்து, வலது கை நடு விரலால் வலது மூக்கை மூடிக்கொண்டு, இடது முக்கால் பொடியை ஒரு இழு இழுப்பார். பத்மா சுப்ரமணியம் அவர்கள் சிருங்கார ரசம் காட்ட மூக்குத்தியை சுற்றி ஒரு அடவு காட்டுவார். அதற்கு இணையாக வெகு நளினமாக மூக்குப்பொடி போடுவார் பெரியப்பா. விவரம் சொன்னதும், ரோடு தாண்டி, டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடி கடை இருக்கும் அங்கே என் பெயரைச் சொல்லி பொடி வாங்கிட்டு வா என்றார். வாங்கி வருவதற்குள், ஒரு கெட்டி அட்டையை வைத்து டொய்ன் நூலால் அழகாக தைத்திருந்தார். கூடுதலாக ப்ரஸ்ஸில் மூன்று பக்கங்களிலும் அழகாக வெட்டி வைத்திருந்தார். அந்த அழுக்கெல்லாம் போய் புது புத்தகங்கள் போல இருந்தது. சந்தோசமாக வாங்கிக் கொண்டேன். காசு என இழுத்தேன். போடா போடா என்று விரட்டிவிட்டார். அதன் பின் அந்த வழியாக மேல்நிலை பள்ளிக்கு போகும் போது, அவ்வப்போது அவருக்கு பொடி வேண்டுமா என்று கேட்டு வாங்கி கொடுக்க தொடங்கினேன். எங்கள் இருவருக்கும் ஒரு நட்பு மலரத் துவங்கியது. அந்த ப்ரஸ்ஸில் ஏராளமான வேஸ்ட் பேப்பர்கள் வரும். ப்ரூப் பார்க்க எடுத்த பேப்பர்கள் நிறைய இருக்கும். அதில் மறுபக்கம் அச்சிட மாட்டார்கள். அதையெல்லாம் சேர்த்து, ஏதாவது கல்யாண பத்திரிக்கை ப்ரூப் எடுத்த அட்டையை போட்டு,தைத்து ஒரு நோட்டு போல தருவார். ரஃப் நோட் என்று அதை பெருமையாக எடுத்து எழுதுவேன். ஒருமுறை பொடிக்கடைக்கு சென்றபோது, கடைக்காரர், நீ தெற்கு தெரு பையன் தானே? பிரசிடெண்ட் வீட்டுல இந்த டப்பாவை கொடுத்துவிடு என்றார். அவருக்கு ஸ்பெஷல் பொடி. நேத்தே தீர்ந்து போச்சு. ‌ இப்பதான் திண்டுக்கல்ல இருந்து வந்துச்சு. அதை சொல்லிக் கொடு என்றார். வெள்ளியில் செய்யப்பட்ட அழகான ஒரு சிறிய பொடிடப்பா. எங்கள் தெருவில் இருந்தவர்கள் பிரசிடெண்ட் அம்மா என்ன வேலை சொன்னாலும் ஓடி செய்வோம். காரணம் அப்போது அவர்கள் வீட்டில் மட்டும் இருந்த கலர் டிவி. கடைக்கு போகிறவர்களை வீட்டில் உட்கார்ந்து பார்க்க அனுமதிப்பார்கள். அதனால் மிக மகிழ்ச்சியுடன், அதை வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன். அப்போது அவர்கள் செட் ஆட்கள் மட்டும் தான் பொடி போட்டுக் கொண்டிருந்தார்கள். என் சித்தப்பா செட்டெல்லாம் பீடி, சிகரெட் என மாறிவிட்டார்கள். அடுத்த முறை பெரியப்பாவை பார்த்தபோது, உங்க வாத்தியார் சொன்னார்டா நல்லா படிக்கிறியாமே என்றார். அசடு வழிய சிரித்தேன். நல்லா படிடா. உனக்கு ரப்பர் ஸ்டாம்ப் நான் தான் அடிச்சு தருவேன். நம்ம பங்காளிகள்ல யாருமே விசிட்டிங் கார்டு எல்லாம் அடிக்கல. உனக்கு அதுவும் நான் அடிச்சு தருவேன் என்றார். உடனே நானும், பெரியப்பா, நான் வேலைக்கு போன உடனே, உங்களுக்கு ப்ரெசிடெண்ட் வச்சிருக்கிற மாதிரி ஒரு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி கொடுக்கிறேன் என்றேன். வருடங்கள் கடந்தன. கல்லூரி விடுதியிலும் சேர்ந்து விட்டேன். ஒருமுறை கல்லூரி விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது, பிரஸ் பக்கம் சென்றால் அவர் இல்லை. போன வாரமே அவர் இறந்து போயிட்டாரே என்றார்கள். அதிர்ச்சி. அப்போது போன் போன்ற வசதி இல்லை என்றாலும் வீட்டிற்கு வந்தவுடன் கூட இதை யாராவது சொல்லி இருக்கலாமே என எனக்கு ஒரு ஆதங்கம். அவருடன் பணியாற்றிய பிரஸ் ஊழியரிடம் பெரியப்பாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன். வயசு ஆகுது இல்ல. சாப்பாடும் பல வருஷமாவே அவருக்கு சரி இல்லை. அவ்வளவுதான் உடம்பு தாங்கும் என்றார். பெரியப்பா பிறந்த சில மாதங்களிலேயே அவரது தாயார் இறந்துவிட, சரியான சாப்பாடு இல்லாமலேயே வளர்ந்தவர். படிப்பில் திறமைசாலி. அவர் வளர்ந்து வரும் நேரத்தில் அவர் தந்தையும் இறந்துவிட, கட்டிக் கொடுத்த அவரது மூத்த சகோதரிகள் வீட்டு பக்கமும் ஒதுங்க முடியாமல், கிட்டத்தட்ட அனாதை போலவே வாழ்ந்திருக்கிறார். அவருடன் படித்த நண்பருடைய பிரஸ் அது. அங்கேயே எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டு, இரவும் அங்கேயே தூங்குவார். காலை எழுந்ததும் எந்த பம்ப்செட்டில் தண்ணீர் வருகிறது என்று பார்த்து குளித்துவிட்டு அவர் வேட்டி சட்டையை அங்கே காய போட்டு விட்டு வருவார். வரும் வழியில் இருக்கும் நடைபாதை கடைகளில் ஏதாவது சாப்பாடு. பிரஸ் வந்த பின்னர் ஏதாவது வடை, டீ சாப்பிட்டு ஒட்டி விடுவார். இரவும் ஏதாவது ஒரு நடைபாதை கடை. இப்படியே 40 வருடங்களுக்கும் மேலாக ஓட்டியிருக்கிறார். பெற்றோர்களும் இல்லாமல், வசதி வாய்ப்பும் இல்லாமல், குட்டையாகவும் இருந்ததால் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய அவருக்கு வாய்ப்பு அமையவில்லை. அவரது நண்பர் மேலும் சொன்னார், எங்க பங்காளிகளிலேயே இந்த பையனத்தான் எனக்கு பிடிக்கும், எனக்கு வெள்ளி மூக்குப்பொடி டப்பா வாங்கி தரேன் என்று சொன்னான் என்று சொல்லி சிரித்தாராம். யாராவது கூப்பிட்டு விசேஷ நாட்களில் ஒரு வேளையாவது சாப்பாடு போடுவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாராம். எனக்கு அப்படி எதுவுமே தோணல, அந்த அளவுக்கு வீட்டுச் சூழலும் எனக்கு இல்ல என்றேன். நீ சின்ன பையன். ஆனா உங்க பங்காளிக யாராவது அவரை விசாரிக்கவாவது செஞ்சிருக்கலாம். 40- 50 வருஷமா எத்தனையோ பேருக்கு கல்யாண பத்திரிக்கை அடிச்சு கொடுத்தவரு. அவருக்கு கல்யாணமும் ஆகல. ஆயிரக்கணக்குல கருமாதி பத்திரிகை அடிச்சு கொடுத்தவரு. அந்தக் கருமாதி பத்திரிகை அடிக்கவும் அவருக்கு ஆள் இல்லாம போயிருச்சு. அனாத பொணம் மாதிரி மாதிரி தூக்கி போட்டு போயிட்டாங்க. ஒண்ணுமே நடக்காத ஒருத்தனுக்கு ஒரு கருமாதி பத்திரிக்கையாவது அடிச்சு அன்னைக்கு நாலு பேருக்கு சோறு போட்டு இருக்கலாம் என்று மிகவும் வருத்தப்பட்டார். இன்று பொடிக்கடைகள் எல்லாம் மிகவும் குறைந்து விட்டன. அந்த பழக்கம் தற்போது இளைய தலைமுறை இடம் இல்லாததால், பழைய ஆட்கள் மட்டுமே அந்த கடைகளுக்கு வருகிறார்கள். அது மாதிரி கடைகளை பார்க்கும் போதெல்லாம், எனக்கு பெரியப்பாவின் ஞாபகம் வந்து மனதை ரணமாக்கும். யாருக்கு எது தேவை என்பதை உணரும் ஒரு நுட்பமான மனம் தேவை. அந்த நுட்பமான மனம் இருக்கிறவர்கள், வாய்ப்பிருக்கும்போதே பிறரை மகிழ்விக்கிறார்கள். அது இல்லாதவர்கள் அதை உணரும் நாளில் வருத்தம் மட்டுமே அடைய முடிகிறது.

சுந்தர் கடை

நான் எதிர்கொண்ட அதிர்ச்சிகளிலேயே முக்கியமானது சுந்தர், கார்த்திகாவை திருமணம் செய்து கொள்ள ஊரிலேயே வசதியான அவர்கள் வீட்டார் கேட்டு வந்தபோது மறுத்தது தான். அமைதியானவன்,தெளிவானவன் என்று பெயர் எடுத்தவன். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்ததும், எங்கள் செட்டில் எல்லோரும் பிளஸ் ஒன்றிற்கு மருத்துவம், பொறியியல், அக்ரி என சேர வேண்டும் என்று அதற்கேற்ற குரூப்புகள் கேட்டு முட்டி மோதிக் கொண்டிருந்த போது, எனக்கு எக்கனாமிக்ஸ் குரூப் தான் வேண்டும். எனக்கு மேத்ஸ் சரியாக வராது, பயாலஜியும் வேண்டாம். படம் வரையவும் வராது, அவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் படிக்க வேண்டாம் என்று சொல்லி எக்கனாமிக்ஸ் குரூப்பில் சேர்ந்தான். பிளஸ் டூ முடித்ததும் அவனுடன் படித்த எல்லோரும் மதுரையின் முக்கிய கல்லூரிகளில் அட்மிஷனுக்கு அலைந்து கொண்டிருந்தபோது, ஊருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு கல்லூரியில் பி காம் சேர்ந்தான். என்னுடைய எய்ம், குரூப் 2 அல்லது குரூப் 4. அதற்காக மட்டும் தான் படிப்பேன் என்று, கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து படிக்க ஆரம்பித்தான். படிப்பாளி என்று சொல்லிவிட முடியாது தான். கல்லூரி முடிந்த உடனேயே அவன் செய்த செயல் எல்லோருக்கும் ஆச்சரியம். ஊரில் பஸ் ஸ்டாண்டுக்கு அருகே இருந்த ஒரு காம்ப்ளக்ஸின் தரைத்தளத்தில் பத்துக்கு எட்டு சைஸில் ஒரு கடையை பிடித்தான். பெரிய பிராண்ட் இல்லாத வேஷ்டிகள், துண்டுகள், சட்டைகள், சேலைகள், உள்ளாடைகள் என வாங்கி வைத்தான். காலையில் ஐந்தரை மணிக்கு கடையை திறந்து வைத்து விடுவான். அவனது காரணம், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இறங்கி தான் சுற்றியுள்ள எல்லா கிராமங்களுக்கும் செல்கிறார்கள். குழந்தை பிறப்பு, திருவிழாக்கள், தீச்சட்டி, பிற விசேஷங்கள், துக்க நிகழ்வுக்கு வருபவர்கள் மலிவான விலையில் தான் எதிர்பார்ப்பார்கள். பெரும்பாலும் ஒரு முறைக்கு செய்ய வேண்டியது. எனவே இந்தப் பக்கம் தேடுவார்கள்‌. இப்படி ஒரு கடை இருக்கிறது என்றால் காலப்போக்கில் தொடர்ந்து எல்லோரும் வருவார்கள் என்றான். கிட்டத்தட்ட ஒரு வருடம் பெரிய ஓட்டம் இல்லை. ஆனால் அவன், அங்கே போனால் காலை ஐந்தரையிலிருந்து இரவு வரை இந்த வகை துணிகள் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருந்தான். கடையிலும் எந்நேரமும் படித்துக் கொண்டே தான் இருப்பான். எல்லா தேர்வுகளையும் போய் எழுதி விட்டு வருவான். இந்த சூழலில் தான் எங்கள் செட்டில் எல்லோரும் சைட் அடித்துக் கொண்டிருந்த, ”தெற்குத் தெரு ஷோபனா” என்கிற பட்டப்பெயர் கொண்ட கார்த்திகாவிற்கு திருமணம் செய்ய அவர்கள் வீட்டார் முடிவெடுத்தார்கள். இது நம்ம ஆளு படம் வந்திருந்த நேரம், அப்போது நாங்கள் டியூஷன் படிக்கும் தெருவில் ஒரு கோலாட்டம் நடந்தது. அதில் பச்சை கலர் பாவாடை சட்டை, சிகப்பு கலர் தாவணி அணிந்து ஒல்லியாக, நல்ல சிவப்பாக கிட்டத்தட்ட ஷோபனா முகச்சாடையில் ஆடிய கார்த்திகாவை பார்த்து எல்லோரும் மனதை பறி கொடுத்து, அந்தப் பெயரை சூட்டியிருந்தார்கள். அப்படிப்பட்ட பெண்ணை, சுந்தருக்கு கேட்டு வந்தபோது அவன் மறுத்து விட்டான். பொதுவாக, எங்கள் ஏரியா பெரிய திருமணங்களில், ஒரு லாட்ஜில் பல ரூம்களைப் பிடித்து வைத்து, ஒரு ரூமில் ஃபுல்லாக சரக்கு பாட்டில்கள், இன்னும் இரண்டு ரூம்களில் சாப்பாடு என அரேஞ்ச் செய்வார்கள். சரக்கு போடுவதற்கு சில பல ரூம்கள். இந்த நிர்வாகப் பொறுப்பை திருமணம் செய்பவர்கள் நம்பிக்கையானவர்களிடம் கொடுப்பார்கள். கார்த்திகா திருமணத்திற்கு, எல்லா செட்டிற்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃபுல் பாட்டில்களை கொடுக்கும் பொறுப்பில் இருந்தவன் சுந்தர். இரவு கடந்து எல்லோரும் போதையில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவனிடம் கேட்டேன். ஏண்டா என்று. அவன் சொன்னான். என்னுடைய பெர்சனாலிட்டிக்கு, எங்கள் வீட்டு வசதிக்கு, இனிமேல் எனக்கு கிடைக்கும் வேலைக்கு என எந்த விதத்திலும் கார்த்திகா மேட்ச் கிடையாது. அவள் வாழ வேண்டியது வேறு சூழல். கழுகிற்கு தேவை பரந்த வானம். கோழிகளை வேண்டுமானால் என் வீட்டில் வளர்க்கலாம் என்று. பின்னர் அவனுக்கு திருமணம் நடைபெற்றது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் போராடிய சுந்தர் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றான். எல்லோரும் விஏஓ போஸ்டிங்கிற்கு போராடிக் கொண்டிருந்தபோது, எந்தவித மேல் வரும்படியும் வராத ஒரு டிபார்ட்மெண்டை தேர்வு செய்தான். அவனுடைய மச்சினன் என்னிடம் இது குறித்து புலம்பினான். அப்போது சொன்னேன் அவன் 300 பவுன் நகை,3 வீடு, 30 ஏக்கர் நிலத்தோடு கார்த்திகா வந்த போதே மறுத்தவன். உன் தங்கையை, உங்கள் குடும்பத்தை எப்படி நடத்துகிறான் என்பதில் குறை இருந்தால் சொல்லுங்கள் நான் பேசுகிறேன் என்றேன். எனக்குத் தெரியும் எல்லோருக்கும் பெய்யும் மழை போல அவன் எல்லோருக்கும் கொடுக்கும் சமமான மதிப்பு பற்றி. அடுத்த சில வருடங்களில் சுந்தருக்கு ஊரில் ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது. காலை ஐந்தரை மணிக்கு கடையை திறந்து விடுவான். கடைக்கு இரண்டு பேரை நியமித்திருந்தான். அவர்கள் 9 மணிக்கு வந்ததும் இவன் அலுவலகத்திற்கு கிளம்பி விடுவான். சாயங்காலம் அலுவலகத்தில் இருந்து வந்து அவர்களை ஆறு மணிக்கு அனுப்பி விடுவான். அதன் பின்னர் அவன் கடையை பார்த்துக்கொள்வான். வரை இருப்பான். இடையில் வீட்டிற்குப் போய் வர, துணைக்கு என அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் வசதி இல்லாத பையன்கள் யாரையாவது மாலையில் பார்ட் டைமாக வேலைக்கு வைத்திருப்பான். சுந்தர் கடை என்பது எப்போது போனாலும் சரியான விலையில் நமக்குத் தேவையான அவசர துணிகள் கிடைக்கும் என்கிற பெயரை பெற்றது. அதுபோக அவன் செட்டில் படித்து வெளியூர் சென்று இருந்தவர்கள் மற்றும் உறவுக்காரர்கள் எல்லோருக்கும் அது ஒரு மையமாக விளங்கியது. பொருட்களை கொடுத்து விடுவது, பேருந்து மூலம் வரும் பொருள்களை வாங்கி வைப்பது, அவ்வளவு ஏன் ஜாதகங்களைக் கொண்டு வந்து கொடுத்து இன்னொருவர் பெற்றுக் கொள்வது என சுந்தர் கடை என்பது எல்லோருக்கும் ஒரு அத்தியாவசிய மையமாக மாறியது. அதைவிட, மாலை வேலைகளில் எங்கள் செட்டு ஆட்கள், உறவினர்கள் எல்லோரும் தங்கள் மனக்குமுறலை கொட்டவும், டென்ஷனாக இருக்கும்போது வந்து உட்காரும் இடமாகவும் மாறியது. சொல்வதை அமைதியாக எந்த முக, உடல் சலனமும் இன்றி கேட்டுக் கொள்வான்.எந்தக் கருத்தும் சொல்ல மாட்டான். அதை யாரிடமும் பகிரவும் மாட்டான். கிளம்பும்போது எல்லாம் சரியாயிடும் பார்த்துக்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்புவான். எனவே சுந்தர் கடையில் மாலை வேலைகளில் வந்து உட்காருபவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. இந்த முறை ஊருக்கு சென்றபோது, சுந்தரை பார்த்துவிட்டு பஸ் ஏறலாம் என்று அவன் கடை பக்கம் போனேன். அங்கே கார்த்திகாவின் கணவர் உட்கார்ந்து, சுந்தரிடம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தார்.

ராகுல் ட்ராவிட்

எங்கள் தெருவில் செந்தில் என்று ஒரு அண்ணன் இருந்தார். அந்த சமயத்தில் எல்லா தெருக்களிலும் செந்தில்கள் இருந்தார்கள். இவர் படிப்பு செந்தில் என்று எங்களால் அழைக்கப்பட்டவர். காலையில் சேவலையே எழுப்பி இவர்தான் கூவ வைப்பார் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு விரைவாக எழுந்து படிப்பார். பத்தாம் வகுப்பில் ஒரு படத்திற்கும் அவர் சென்று பார்த்ததில்லை. தெரு கிரிக்கெட் விளையாட வந்தது இல்லை. தேர்வு முடிவுகள் வந்தபோது, ஒரு மார்க்கில் பள்ளி முதல் மார்க் எடுக்கும் வாய்ப்பை இழந்திருந்தார். அதனால் எல்லோருடைய வாழ்த்துக்களும் இவரை அனாதையாக விட்டுவிட்டு முதல் மார்க் எடுத்தவரிடம் சென்று விட்டன. இவர்களது உறவு வட்டாரத்திலும் வேறொரு ஊரில் படித்த இன்னொரு பையன் இவரை விட இரண்டு மார்க் அதிகம் எடுத்து விட்டதால், அங்கும் இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. 1987ல் 470 மார்க் பத்தாம் வகுப்பில் எடுப்பதெல்லாம் பெரிய சாதனை. ஆனால் அவர் தவறவிட்ட ஒன்று இரண்டு மார்க்குகளால் அவருக்கு எந்த புகழும் கிடைக்கவில்லை.அதோடு அவர் வெறிகொண்டு படிப்பதை நிறுத்திவிட்டார். சமீபத்தில் மறைந்த எம்டி வாசுதேவன் நாயரின் மிகப் புகழ்பெற்ற நாவல் இரண்டாம் இடம். மகாபாரதத்தை பீமனின் பார்வையில் இருந்து பார்த்தது. காலம் முழுவதும் அந்த இரண்டாம் இடம் பீமனை வருத்திக் கொண்டே இருக்கும். மதிப்பு,ஆட்சி என்று பார்த்தால் தர்மர். பலம் என்று பார்த்தால் அர்ஜுனன் அவரை விஞ்சி நிற்பார்கள். நவீன காலத்திலும் அது மாதிரியான கேரக்டர்களை நாம் வாழ்வில் கண்டு கொண்டே தான் இருக்கிறோம். அப்படி நவீன பீமன் என்று அழைக்கப்பட வேண்டியவர் ராகுல் டிராவிட். 96 - இங்கிலாந்தில் இரண்டாவது டெஸ்டில் கங்குலியும் டிராவிட்டும் இறங்குகிறார்கள். கங்குலி சதம் அடிக்கிறார். டிராவிட் 96 ரன்கள். ஆனால் கங்குலிக்கும் வாட்டர்ஷிப் கொடுத்து கீழ் உள்ள பேட்ஸ்மேன்களுடனும் ஆடி இந்திய அணிக்கு லீடு பெற்று தருகிறார். ஆனால் எல்லாப் புகழும் கங்குலிக்கே கிடைத்தது. 2001 கல்கத்தா ஈடன் கார்டனில் பாலோ ஆன் வாங்கி இந்திய அணி ஆடுகிறது. லட்சுமணனும் டிராவிட்டும் இணைந்து மிகப்பெரிய ஸ்கோர் எடுத்து அந்த மேட்சில் இந்தியாவை வெற்றி பெற வைக்கிறார்கள். அதிலும் லட்சுமணனுக்கே பெயர். 2006 - பாகிஸ்தானில் அவர்களுக்கு எதிரான டெஸ்ட். அவர்கள் 679 ரன்கள் குறிக்கிறார்கள். வலுவான பந்துவீச்சு. சேவாக்கும் டிராவிட்டும் ஓப்பனிங் இறங்கி 410 ரன்கள் குவிக்கிறார்கள். அதிலும் சேவாக்கிற்கே பெயர். எத்தனை ஆட்டங்கள். பலமுறை அணியை காப்பாற்றி, பலமுறை வெற்றிக்கு அழைத்துச் சென்று, அத்தனை ஆட்டங்களிலும் வேறு யாருக்காவது பெயர் சென்று கொண்டிருப்பதே டிராவிட்டின் சிறப்பு. நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாத நேரத்தில் டீம் பேலன்ஸிற்காக விக்கெட் கீப்பிங்கும் செய்தார். அபாரமான பேட்டிங் டெக்னிக், persistent என்றாலே நினைவுக்கு வரும் பெயர். அதிவேக பந்துவீச்சாக இருந்தாலும் சரி, SENA Swing ஆக இருந்தாலும் சரி, ஆசிய துணைக்கண்ட குழி விழுந்த பிட்ச்களில் பின் ஆக இருந்தாலும் சரி. டிராவிட்டின் ஒப்பற்ற டெக்னிக் அதை எளிதாக எதிர்கொள்ளும். அதைவிட மிகவும் பிரஷரான சிச்சுவேஷன்களிலும், அதை மனதில் எடுத்துக் கொள்ளாமல் தன் வழக்கமான ஆட்டத்தை ஆடுவார். அதுதான் பலமுறை இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றி இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் ஆடினால் தான் இந்த மேட்சை காப்பாற்ற முடியும் என்றால், முழு நாளுக்கும் நான் பிளான் செய்வதில்லை. இந்த செசன் மட்டும் எப்படியாவது ஆடிவிட்டால் போதும் என்று நினைப்பேன். ட்ரிங்ஸ் பிரேக்கில் அடுத்த செசன் ஆடினால் போதும் என நினைப்பேன். என் இலக்குகளை சிறியதாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாக வெற்றி கண்டு வருவேன் என்று ஒரு முறை சொல்லி இருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கேள்வி விளையாட்டாக அலுவலக விழாவில் கேட்கப்பட்டது. இந்த விக்கெட் விழுந்துவிட்டால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். அப்படி என்றால் எந்த இரு பேட்ஸ்மான்கள் உங்களுக்காக களத்தில் விளையாட வேண்டும் என்று. நான் சொன்னது ராகுல் டிராவிட் & ஸ்டீவ் வாவ். ஏனென்றால் அந்த அளவிற்கு தங்களுடைய விக்கெட்டை மதித்தவர்கள் இருவரும். ராகுல் டிராவிட்டிடம் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது, நம் தொழிலுக்கு தேவைப்படும் டெக்னிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து விடக்கூடாது. போராடும் களத்தில் இருந்து நாமாக வெளியே சென்று விடக்கூடாது. எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் அதை பிரித்து அதை நோக்கி போராட வேண்டும். முக்கியமாக நமக்கு உலகில் எந்த இடம் கிடைத்தாலும் அதைக் கண்டு மனம் விட்டுவிடக்கூடாது.

ஜாகிர் கான்

சிறு வயதில் முதன்முதலாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில், கேள்விப்படும் வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர்கள் எல்லாம் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தும்‌. தெருவில் இருந்த விக்டரி கிரிக்கெட் கிளப் அணி வீரர்கள் எப்பொழுதும் மற்ற நாட்டு வேகப் பந்துவீச்சாளர்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் பேச்சில் அடிக்கடி இடம்பெறும் பெயர்கள் மார்ஷல், கார்னர், லில்லி, தாம்சன், இம்ரான் கான், ஹாட்லி, போத்தம். நம்ம நாட்டுல அப்படி யாரும் இல்லையா என அவர்களிடம் கேட்கும் போது, கபில் ஒருத்தர் தான் நல்லா போடுவார். இப்ப சேட்டன் சர்மா என்று ஒருத்தர் வேகமாகப் போடுகிறார். ஆனா இவங்க அளவுக்கு எல்லாம் சேட்டன் சர்மா இல்லை என்று பதில் அளித்தார்கள். சில டெஸ்ட் மேட்சுகளில், கபில்தேவ் முதல் ஓவர் போடுவார், இரண்டாம் ஓவர் மொஹிந்தர் அமர்நாத் வந்து போடுவார். மிலிட்டரி மீடியம் என்று சொல்வார்கள் மிக மெதுவாக ஓடிவந்து கிரீசை அடைந்ததும் நின்று கொண்டு வந்து வீசுவார். இன்னொரு பவுலர் இருந்தார் மதன்லால். விவியன் ரிச்சர்ட்ஸ் ஒருமுறை, இவர் ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்து ஆப் ஸ்பின் போடுகிறார் என்று மதன்லாலை கிண்டல் செய்ததாக கூறுவார்கள். அந்த சமயத்தில் கபில்தேவும் தன்னுடைய வேகம் எல்லாம் குறைந்து ஒரு மீடியம் ஃபேஸ் பௌலராக தான் இருந்தார். அவராலும் பாட்ஸ்மென்கள் தவறு செய்தால் தான் விக்கெட் எடுக்க முடிந்ததே தவிர, விளையாடவே முடியாத பந்துகளை வீசி பேட்ஸ்மென்களை திணறடித்து, விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. ஸ்பின்னர்கள் வரும்போது தான் விக்கெட் கிடைக்கும். அதுவும் எதிரணி பேட்ஸ்மென்கள் அடித்து ஆடினால் தான். தங்களுடைய மெரிட்டில் விக்கெட்டுகளை எடுக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள் அப்போது மிகக் குறைவாகத்தான் இருந்தார்கள். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர்களை அடித்து மற்ற நாட்டு வீரர்கள் ஆட்டம் இழப்பார்கள்.டெஸ்ட் மேட்ச் ஆக இருந்தால், பெரும்பாலும் டிராவில் தான் முடியும். ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்சுகளில் மட்டுமே நாம் விக்கெட் எடுக்கும் நிலை இருந்தது.இது ஒரு கிரிக்கெட் ரசிகனாக, என்னடா இது மற்ற நாட்டு வேகப் பந்துவீச்சாளர்கள் போல் நம் நாட்டில் இல்லையே என்று சலித்துக் கொள்ள வைத்தது. முதல் முதலாகப் பார்த்த ஒரு நாள் போட்டிகள் சாம்பியன்ஷிப் என்றால் அது, 1986-87ல் சார்ஜாவில் நடந்த போட்டி தான். அதில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் விளையாடின. அந்தப் போட்டியில் தான் வால்ஷ் மற்றும் வாசிம் அக்ரம் என்கிற பெயர்கள் அறிமுகமானது‌. மேற்கிந்திய தீவு அணி வீரர்களும் பாகிஸ்தான் வீரர்களும் பந்து வீச வந்தாலே எங்கே விக்கெட் போய் விடுமோ என்று நகத்தை கடித்தபடியே பார்க்க வேண்டி இருந்தது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் வீசும் போது எவ்வளவு ரன் போகுமோ என்று பதட்டத்துடனே பார்க்க வேண்டி இருந்தது. அப்பொழுது என்னுடைய ஆசை எல்லாம், இந்தியாவிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பயம் கொள்ளும் அளவிற்கு ஒருவர் பந்து வீச வேண்டும் என்பதுதான். வாசிம் அக்ரம் எல்லாம் நம் டீமில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் அப்போதைய அதிகபட்ச கிரிக்கெட் கற்பனையாக இருந்தது. 1990 இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, மனோஜ் பிரபாகர் நன்றாக பந்து வீசினார் என்றார்கள். இம்ரான்கான், அவர் பந்தை சரியான பவுலிங் ஆக்‌ஷனில் வீசவில்லை என்றார். மனோஜ் பிரபாகரின் பந்து வீச்சும் பயம் கொள்ள வைக்கும் படி இருக்காது. 91-92 இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஜவஹல் ஸ்ரீநாத் வந்தார். அவர் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்.கபில்தேவும் அந்த தொடரில் ஓரளவு நன்றாக பந்து வீசினார். ஆனாலும் இந்த கூட்டணி யாரையும் மிரட்டும்படி இல்லை. நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவர்களிடம் இருக்கும்போது அதன் மீது நமக்கு வரும் ஆசை மற்றும் மதிப்பானது அதிகம். அப்படித்தான் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரு வலுவான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நமது இந்திய அணியில் இல்லாமல் இருந்தது. அதற்கு முன்னர் காலின் கௌட்ரி என்பவர் இடதுகை வேகப்பந்து வீசியதாகச் சொல்வார்கள். அதனால் வாசிம் அக்ரம் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும். இந்த சூழ்நிலையில், 2000 ஆவது ஆண்டு. வராது வந்த மாமணி போல இந்திய அணிக்கு வந்தார் தான் ஜாகிர் கான். ஒரு ரிதமான ரன்னப். பந்து வீசும் இடத்திற்கு வந்ததும் ஒரு அலட்டல் இல்லாத ஜம்ப். கால் லேண்ட் ஆகும்போது ஒரு அட்டகாசமான ரிலீஸ் என‌ உடனடியாக கவர்ந்தார் ஜாகிர் கான். பந்து வீச வந்த காலத்தில் நல்ல வேகம் கொண்டிருந்தார். தேவையான அளவு ஸ்விங். அவ்வப்போது யார்க்கர்கள். என ஒரு பக்கா பேக்கேஜாக வந்தார். ஆஹா நமக்கும் ஒரு அக்ரம் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சி வந்தது. அவர் பந்து வீசும் போது நிறைய பேட்ஸ்மேன்கள் பயந்தார்கள். 2003 ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்தன. தன் கேரியரின் கடைசி கட்டத்தில் இருந்த ஶ்ரீநாத் மற்றும் இன்னொரு இடதுகைப் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நேரா ஆகியோருடன் ஜாகிர் கான் இணைந்து ஒரு அருமையான வேகப்பந்து கூட்டணியை அந்த தொடரில் அமைத்தார். அப்போதைய ஆஸ்திரேலியா அணி மிகவும் பலம் வாய்ந்தது. வார்னே அவர்கள் ஊக்க மருந்து பிரச்சினையால் வெளியேறிய போதும் ,அது ஒரு பொருட்டே இல்லை என்று அசால்டாக எல்லோரையும் திணறடித்தது அந்த அணி. அந்த ஒரு அணியிடம் மட்டும் தான் தோற்றோம் மற்ற எல்லா போட்டிகளிலும் நமது கைதான் ஓங்கி இருந்தது அதற்கு முக்கிய காரணம் ஜாகிர் கான் தலைமையில் ஆன அந்த வேகப்பந்து கூட்டணி. 2011 உலகக் கோப்பை போட்டியிலும் நாம் 28 ஆண்டுகள் கழித்து அந்த கோப்பையை வெல்ல ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஜாகிர் தான். முக்கியமான விக்கெட்டுகளை எல்லாம் தேவைப்படும் நேரத்தில் எடுத்துக் கொடுத்தார். ஜாகிர்கானின் இன்னொரு சிறப்பு, அவர் இடது கை பேட்ஸ்மென்களை அவுட் ஆக்குவதில் கை தேர்ந்தவர். மேத்யூ ஹைடன், சங்காகரா, ஜெயசூர்யா, தென்னாப்பிரிக்க அணி முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித் ஆகியோரை பத்து முறைக்கு மேல் ஆட்டம் இழக்கச் செய்தவர். இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை வீழ்த்தும் போது, நமக்கு ஆட்டத்தில் அட்வாண்டேஜ் கிடைக்கும். ரிவர்ஸ் ஸ்வின் போடுவதிலும் விற்பன்னராக இருந்தார் ஜாகிர்கான். பந்து தேய்ந்த உடன், ஒரு டெஸ்ட் மேட்சில் ரிவர்ஸ் ஸ்விங் முறையில் இன்சமாம் உல் ஹக்கின் விக்கெட்டை அவர் எடுத்த காட்சி இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஜாகிர்கான் தன் கேரியரில், இன்னும் சிறப்பாக சாதித்து இருக்க முடியும். ஆனால் அவர் அடிக்கடி காயம் அடைந்து, பிரேக் எடுத்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற, முதல் 20-20 உலகக் கோப்பையில் அவர் பங்கு பெறவில்லை. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஆட்கள் ஏலம் போன போது ஜாகிர் கானுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த ஏலத்தில் பெரிய வெளிநாட்டு வீரர்கள், ஹிட்டர்கள் என்று தான் பலரும் கவனம் செலுத்தினார்கள். பந்து வீச்சாளர்களைப் பற்றியே யாரும் பெரிய கவனம் செலுத்தவில்லை.ஆனாலும் ஜாகிர் கானுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் மும்பை அணிக்கு விளையாடிய போது, அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக இருந்தார். ஜாகிர்கான் இந்திய கிரிக்கெட்டில் கொண்டு வந்த மாற்றம் என்னவென்றால், இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும், ஸ்டார் பேட்ஸ்மென்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் விதைத்தது தான். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து, நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் வரத் துவங்கினார்கள். ஐ பி எல் அணிகளில் அவர்களுக்கு கிடைத்த பொருளாதார ரீதியான ஊக்கமும் அதைத் தொடரச் செய்தது. அதன் பின்னர் கடந்த 10 - 15 ஆண்டுகளில் தொடர்ச்சியாக நமது அணிக்கு பும்ரா, சிராஜ் ஷமி என வேகப்பந்துவீச்சாளர்கள் சிறிய நகரங்களில் இருந்து வந்து கலக்கி கொண்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு அவர்கள் நாட்டிலேயே சவால் விடும் அளவிற்கு வேகப்பந்து வீசுகிறார்கள். இந்த மாற்றத்தில் ஜாகிர் கானுக்கும் ஒரு பங்கு உண்டு எனச் சொல்லலாம்..

உத்தம வில்லன்

அங்கீகாரம். இந்த ஒற்றைச் சொல் தான் உலகத்தில் உள்ளோர் ஓரிடத்தில் தேங்கி நின்று விடாமல் செயல்பட்டுக் கொண்டே இருக்கச் செய்யும் விசை. மனிதர்களின் ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் தேடுவது வேறாக இருக்கும். படிக்கும் பருவத்தில் முதல் மார்க், விளையாட்டுப் போட்டியில் வெற்றி, நண்பர்களிடத்தில் முக்கியத்துவம் என விருப்பம் இருக்கும். பதின்பருவத்தில் எதிர்பாலினத்தவர்களின் ஏகோபித்த தேர்வாக இருக்க வேண்டுமென ஆசையிருக்கும். வேலைக்கு சேர்ந்த பின் அங்கே தவிர்க்க இயலா ஆளாக இருக்க வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். ஓய்வு பெற்ற பின்னர் உறவினர், ஊர் வட்டாரங்களில் நம்மை யாரும் மறந்து விடக்கூடாது என்ற துடிப்பு இருக்கும். கோவில் விழாக்கள், திருமண விசேஷங்களுக்கு ஆர்வத்துடன் செல்லுதல், வாட்ஸ் அப் குரூப்பில் எல்லோருக்கும் செய்திகளை அனுப்புதல் என ஆளுக்குத் தகுந்தபடி மாறும். இது எல்லாவற்றிற்கும் ஆதாரம் மனிதனின் அங்கீகாரம் தேடும் மனது. தன் அந்திமக் காலங்களில் மனிதன், தன்னை யாரும் மறந்து விடக்கூடாது என பிரயத்தனப்படுவான். ஏனென்றால் அதுதான் அவன் வாழ்ந்தற்கான அங்கீகாரம். சுஜாதா சொன்னது போல “மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது”. கலைஞர்கள் இந்த அங்கீகாரம் தேடுவதில் இன்னும் ஒரு படி மேல். கை தட்டுக்களை சுவாசமாக கொண்டு வளர்ந்தவர்கள் அவர்கள். கை தட்டு நிற்கும் நாள் அவர்களைப் பொருத்த வரையில் அவர்களது கடைசி நாள். மக்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பது தான் அவர்களது ஒரே நோக்கமாக இருக்கும். தங்கள் வாழ்நாள் முடிவதற்குள் என்ன முடியுமோ அதைச் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற வேண்டுமென நினைப்பார்கள். என்றென்றும் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பது தானே உச்சபட்ச அங்கீகாரம்?. கிட்டத்தட்ட சாகாவரம். ஒரு கலைஞன், வாழ்க்கையில் சில தவறுகள் செய்தவன், திடீரென தனக்கு கேன்சர் இருப்பதையும், ஆயுள் சில மாதங்கள் தான் என்பதையும் அறிகிறான். மீதமிருக்கும் நாட்களுக்குள் மக்கள் தன்னை மறக்காமல் இருக்க இன்னுமோர் கலைப்படைப்பை கொடுத்து விட்டுச் செல்ல வேண்டுமென நினைக்கிறான். அவனது கடைசி மாதங்களை, அவன் ஏக்கங்களை, அவன் தன் தவறுகளைத் திருத்துவதை நமக்கு காட்சிப் படுத்தியதே உத்தம வில்லன் திரைப்படம். கமல்ஹாசன், மனோ ரஞ்சன் என்னும் நடிகராக இந்தப் படத்தில் வாழ்ந்திருந்தார். அவரது இளமைப்பருவத்தில் ஒரு காதலி, ஆனால் நிர்ப்பந்தங்களுக்காக தன்னை வைத்து தொடர்ச்சியாக படம் தயாரித்தவரின் மகளை மணம் செய்து கொள்கிறார். தனக்கு ஆரம்பத்தில் வழிகாட்டியாக இருந்த இயக்குநரிடமும் தன் மாமனாரால் பிணக்கு கொள்கிறார். அவரது தற்போதைய பெண் மருத்துவரிடமும் அவருக்கு காதல். இந்த சூழலில் தான் தன் முன்னாள் காதலி இறந்து விட்டதும், அவளுக்கு தன் மூலம் ஒரு பெண் இருப்பதும் தெரிய வருகிறது. மனோரஞ்சனுக்கு அதற்கடுத்த இடியாக, தனக்கு கேன்சர் என்பதும் இன்னும் சில மாதங்களில் இறக்கப்போகிறோம் எனவும் தெரிய வருகிறது. எல்லாவற்றையும் சரி செய்து கொண்டே, தன் கடைசிப்படத்தையும் முடிக்கிறான். குழந்தைகளுக்கான படம், இளைஞர்களுக்கான படம், குடும்பத்தோடு பார்க்கும் படம் என்பதைப்போல இது நாற்பது வயது ஆண்களுக்கான படம். நாற்பதுக்கு மேல் வயதான ஆண்கள் இந்தப்படத்துடன் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். அவர்கள் வாழ்வில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம் இந்தப்படத்தில் இருக்கும். அது இள வயது நிறைவேறாத காதலாக இருக்கலாம், நிர்ப்பந்தத்தால் தொடரும் மண வாழ்க்கையாக இருக்கலாம், வேலை அழுத்தத்தால் மகன் என்ன படிக்கிறான் எப்படி படிக்கிறான் என்று அறியாத நிலையாகவும் இருக்கலாம், நடுத்தர வயதில் இன்னொரு பெண்னால் ஈர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம், வாழ்வு முடிவதற்குள் குறைந்த பட்ச கடமைகளையாவது முடிக்க வேண்டுமென்ற எண்ணமாக இருக்கலாம். தங்கள் வாழ்வை மனோரஞ்சனோடு ஒப்பிட்டு ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளும் அளவுக்கு தேர்ந்த பாத்திரப்படைப்பு கொண்டது உத்தம வில்லன். உத்தம வில்லன் திரைப்படத்தின் ஆரம்பகாட்சியிலேயே எல்லோரும் இயல்பாக அவரவர் குணாதியங்களுடன் அறிமுகமாவார்கள். இவர் இன்னார், இவர் இவருக்கு இப்படி உறவு என்றாலும் வாய்ஸ் ஓவர் இருக்காது. கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களில் வாய்ஸ் ஓவர் இருக்காது. சினிமா என்பது காட்சி ஊடகம். காட்சி மூலமே எல்லாவற்றையும் பார்வையாளனுக்கு கடத்த வேண்டும் என்பது கமல்ஹாசனின் நிலைப்பாடு. விஸ்வரூபம் படத்தின் ஆரம்ப காட்சியில் இருவரின் உரையாடலிலேயே ஆரம்பக் கதை சொல்லப்படு விடும். உத்தம வில்லனில், மனோரஞ்சன் நடித்த ஒரு படத்தின் ப்ரீமியர் ஷோ ஒரு மாலில் உள்ள திரையரங்கில் நடக்கும். அதைக் கொண்டே எல்லா முக்கிய கேரக்டர்களும் அறிமுகமாவார்கள். என்ன, இன்னும் இப்படிப்பட்ட மசாலாப் படங்களில் நடிக்கிறாரே தந்தை என விசனப்படும் மகன் கேரக்டர் கூட அதன் போக்கில் அறிமுகமாகும். கமல்ஹாசன் திரைப்படங்களில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், புதிதான காட்சிகள். மற்ற திரைப்படங்களில் எண்பது, தொண்ணூறு காட்சிகள் இருக்கிறதென்றால் அவற்றில் வழக்கமான ஹீரோ, ஹீரோயின் அறிமுக காட்சி, நகைச்சுவைக் காட்சி, பாடல் காட்சி, சண்டைக் காட்சி தவிர கதைக்குத் தேவையான சம்பவங்கள் என ஏழெட்டுக் காட்சிகள் தான் புதிதாக மற்ற திரைப்படங்களில் வராத காட்சிகளாக இருக்கும். கமல்ஹாசன் திரைப்படங்களில் கதைக்குத் தேவையான சம்பவ காட்சிகள் மற்ற படங்களை விட சற்று அதிகமாகவே இருக்கும். அந்தக்காட்சிகள் தான் கமல்ஹாசன் படங்களை ஞாபகத்தில் வைத்திருக்க உதவுகின்றன. உத்தம வில்லனில் அதுபோல ஏராள காட்சிகள் இருந்தாலும், ஆறு காட்சிகள் என்றும் இந்தத் திரைப்படத்தை ஞாபகத்தில் வைத்திருக்கச் செய்பவை. முன்னாள் காதலியின் கணவர், உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள் எனச் சொல்லி அவளது புகைப்படங்களைக் காட்டுவது. தனக்கு கேன்சர் எனத் தெரிந்ததும் தனக்கு வழிகாட்டியாக இருந்த இயக்குநரை பார்க்கச் செல்வது, தன் வீட்டாரிடம் தன் நோயைப் பற்றிச் சொல்ல போகும் போது அவருக்கும் அவரது மகனுக்கும் நடக்கும் உரையாடல், தன் உதவியாளர், தன் காதலியிடம் தான் கொடுத்த கடிதத்தை கொடுக்காததும், காதலியிடம் இருந்து வந்த கடிதத்தை மறைத்தும் தெரிய வந்து, அந்த கடிதத்தை அவரையே படிக்கச் சொல்லும் காட்சி, தன் முன்னாள் காதலிக்குப் பிறந்த மகளை சந்திக்கும் காட்சி, தற்போதைய காதலியான மருத்துவருடன் காரில் பேசிக் கொண்டே வரும் காட்சி. மனோரஞ்சன் தன் இயக்குநருடன் சேர்ந்து கடைசியாக நடிக்கும் படத்தின் பெயராக உத்தம வில்லன் இருக்கும். அந்தப்படம் ராஜா ராணி கால படம். அதில் தெய்யம் கலைஞராக கமல் வேடமேற்றிருப்பார். தொடர்ச்சியாக நாட்டுப்புற கலைகளையும், மற்ற கலை வடிவங்களையும் தமிழ்சினிமாவில் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது கமல்ஹாசனின் ஆசைகளில் ஒன்று. அன்பே சிவத்தில் தெருக்கூத்து, விஸ்வரூபத்தில் கதக் என பல உதாரணங்கள் சொல்லலாம். உத்தம வில்லனில் வில்லுப் பாட்டையும், தெய்யத்தையும் பயன்படுத்தியிருப்பார். எடுக்கப்படும் காட்சிகளின் இடைவேளையில் தன் செயலாளருடன் சந்திப்பு, மகளுடன் சந்திப்பு போன்ற நுணுக்கமான காட்சிகள் வரும். மனோரஞ்சன் தான் அறிமுகமாகும் காட்சியில் நல்ல அழகுடன், தேஜஸாக இருந்து கடைசியில் முடி இழந்து உடல் வலுவிழந்து இறந்து போவான். ஆனால் தான் நடிக்கும் படத்தில், அறிமுக காட்சியில் தாடி மீசை, மோசமான சிகை அலங்காரத்தில் தோன்றி, படம் முடியும் தருவாயில் அழகாக தேஜஸாக மன்னர் வேடத்தில் தோன்றுவான். உடல் அழியக்கூடியது புகழ் அழியக்கூடியதல்ல சாகாவரம் கொண்டது என படம் முடியும். படத்தின் இயக்கம் ரமேஷ் அரவிந்த், இசை ஜிப்ரான். சில பாடல்களை கமல்ஹாசன் எழுதியிருந்தார். அதில் முக்கியமான பாடல் சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா என்ற பாடல். சாகாவரம் போல் கொடுமையானது ஒன்றில்லை. நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் கூட நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இழப்பு, நம்மை வேதனைப்படுத்த துவங்கி விடும். எல்லோரும் அந்த வரம் பெற்றுவிட்டாலும் அதற்கு சிறப்பு ஏதும் இல்லை. உடலால் சாகாவரம் பெறாமல் புகழால் பெறு என்பதே உத்தம வில்லனின் சாராம்சம். படத்தின் ஆரம்ப காட்சி முடிந்ததும், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெறுவார் மனோரஞ்சன். கை தட்டுகள் முடிந்ததும், நிகழ்ச்சியை நடத்திச் செல்பவர் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான சம்பவம் எது எனக் கேட்பார். உடனே மனோ ரஞ்சன் இந்தக் கை தட்டு தான். அடுத்து எப்போது கிடைக்கும் எனத் தெரியாது, கிடைக்காமலும் கூடப் போகலாம் என்பார். அது பெரும்பாலான கலைஞர்களுக்கு நடந்திருக்கிறது. உச்சத்தில் இருந்தவர்கள் பேச்சுத்துணைக்கு ஏங்கிய எடுத்துக்காட்டுகள் தனிழ் சினிமாவில் ஏராளம் உண்டு. அது ஐந்து வயது முதல் கைதட்டு வாங்கி வரும் கமல்ஹாசனுக்கு நன்கு தெரியும். குழந்தைப்பருவம் முடிந்து வாலிபனாக மாறும் வயது வரை கைதட்டல்கள் இல்லாமல் ஏங்கிக் கிடந்த காலம் இன்னும் அவர் ஞாபகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அந்தக் காலத்திலும் கை தட்டல் வாங்க நாட்டிய நிகழ்ச்சி நடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தார். பின் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து கை தட்டல் நிற்கா கலையுலகப் பயணம் அவருடையது. தற்போதைய கை தட்டலும் வேண்டும், தன்னை பிற்காலத்திலும் மக்கள் மறந்து விடக்கூடாது என்பதால் தான் காலத்தை மீறிய முயற்சிகளையும் அவர் தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருந்தார். அதில் ஒன்று தான் உத்தமவில்லன். காலத்தைக் கடந்து அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்.

1983 உலக கோப்பை இறுதி போட்டி

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு அரை வேலை நாள் இருந்த காலம் அது. மதியத்துடன் பள்ளிகள் முடியும் அந்த சனிக்கிழமைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். ஏனென்றால் மாலை வரை மைதானத்தில் விளையாண்டு கொண்டேயிருக்கலாம். அப்போது கிரிக்கெட் எல்லாம் எங்கள் ஊரில் பிரபலமாகாத காலம். பள்ளி விளையாட்டு ஆசிரியரின் அறையில் ஹாக்கி மட்டைகளும், பேஸ்பால் மட்டைகளும், வாலிபால்,பேஸ்கட் பால், கால்பந்துகளுமே பெரும்பான்மையாக இருக்கும். உள்ளூரில் ஒரே ஒரு தெருவைச் சார்ந்த கிரிக்கெட் அணி மட்டுமே இருந்தது. அவர்கள் மாவட்ட அளவிலான லீக் கிரிக்கெட்டில் பங்கு பெறும் அணியாகவும் இருந்தார்கள். அவர்களுக்கு என மைதானம் இல்லாததால் எங்கள் பள்ளி மைதானத்தில் தான் விளையாடுவார்கள். எப்போது பள்ளி முடியும் என காத்திருந்து உள்ளே வருவார்கள். சனிக்கிழமை பள்ளி அரை நாள் என்பதால் அவர்களும் மதியமே வந்து விடுவார்கள். அன்று நாங்கள் எங்களுக்கு கிடைத்த கால்பந்தை எடுத்துக் கொண்டு மைதானத்துக்கு வந்த போது ஒரு அதிர்ச்சி. சனிக்கிழமை தவறாது ஆட வந்து எங்களுக்கு இடப்பற்றாக்குறையை அளிக்கும் கிரிக்கெட் அணியினரைக் காணோம். ஆச்சரியத்துடன் கேட்ட போது, தெரியாதா? இன்று இந்தியா உலக கோப்பை பைனல் ஆடுகிறது. அதுதான் கமெண்டரி கேட்கவேண்டுமென்று யாரும் வரவில்லை என்றார்கள். ஆம். அன்றுதான் ஜூன் 25, 1983. இந்தியா தன் கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத நாளாக அது மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அணி சென்றால் எவ்வளவு அசுவராசியமாக இருப்போமோ, அதே அளவு அசுவராசியத்துடன் தான் அன்று இந்தியா இந்த மேட்சுகளை கவனித்துக் கொண்டிருந்தது. இந்தியா வெற்றி பெறும் என்றெல்லாம் யாரும் நினைக்கவில்லை. அப்போது பொதுவாக கிரிக்கெட் என்பதே ஒரு மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தரவர்க்கத்தினரின் ஆட்டமாகத்தான் கருதப்பட்டு வந்தது. இப்போது போல மேட்சுகளை தொலைக்காட்சியில் பார்ப்பதற்ககு வாய்ப்பேயில்லை. ஊரில் நான்கைந்து வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் இருந்தன. மற்றபடி ரேடியோவில் கேட்கும் கமெண்ட்ரி மட்டும் தான். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளின் வர்ணனை கேட்க வேண்டுமெனில் நான்கு பேண்ட் ரேடியோ வேண்டும். ஊரில் பெரும்பாலும் இரண்டு பேண்ட் ரேடியோக்கள் தான் இருக்கும். சில தெருக்களில் மட்டுமே பிபிசி, ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி ஒலிபரப்பை கேட்கும் படி நான்கு பேண்ட் ரேடியோக்கள் இருக்கும். அவர்களுக்கு மட்டுமே அப்போது கிரிக்கெட் ஆட்டம் பற்றி தெரிந்திருந்தது.ஏனையோருக்கு அது பற்றிய அவ்வளவு தெளிவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இந்தியா இங்கிலாந்திற்குச் சென்றிருந்தது. மேட்சுகளைப் பற்றி தமிழ் நாளிதழ்களில் சிறு அளவிலேயே கவரேஜ் இருந்தது. ஆங்கில நாளிதழ்களில் நன்றாக கவரேஜ் செய்தார்கள். இந்தியா இடம்பெற்றிருந்த குரூப்பில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. இன்னொரு குரூப்பில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. இந்தியா இருந்த குரூப்பில் எப்படியும் மேற்கிந்திய தீவுகளும், ஆஸ்திரேலியாவும் தான் நாக் அவுட்டிற்குச் செல்லும். இந்திய அணி இங்கிலாந்தைச் சுற்றிப் பார்த்து விட்டுத்தான் வரும் என்று அனைவரும் கணித்தார்கள். குரூப் ஸ்டேஜில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை ஆடவேண்டும். முதல் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை வென்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜிம்பாப்வே உடனான வெற்றி எதிர்பார்த்த ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியாவுடனும் மேற்கிந்திய தீவுகளுடனும் அடுத்தடுத்த மேட்சுகளில் தோற்கவும் எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது. இங்கிலாந்து ஆட்டக்களங்கள் சீம், ஸ்விங் பந்து வீச்சுக்கு உகந்ததாய் இருந்தது இந்திய அணிக்கு சாதகமாய்ப் போனது. கபில்தேவ், பின்னி, பல்விந்தர் சிங் சாந்து, மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் அனைவருமே இந்த முறையில் பந்து வீசக்கூடியவர்கள். யஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டில் இருவரும் வெளிநாட்டு ஆடுகளங்களிலும் துடிப்பாக ஆடக் கூடியவர்கள். கவாஸ்கர், அமர்நாத் குவாலிட்டி பேட்ஸ்மென்கள், ஸ்ரீகாந்த் அதிரடியாக ஆடக்கூடியவர். கபில்தேவ், இன்று வரை இந்தியாவில் உருவான ஒரே உலகத்தரமான ஆல்ரவுண்டர். பின்னி, மதன்லால் போன்றோர் பேட்டிங்கிலும் தாக்குப்பிடிக்க கூடியவர்கள். கிர்மானி நல்ல விக்கெட் கீப்பர் மற்றும் தாக்குப்பிடிக்கக் கூடிய பேட்ஸ்மென். எனவே எச்சூழலையும் சமாளிக்கும் சரிநிகர் சமானமான அணியாக இந்திய அணி இருந்தது. சிற்றூர்களில் அப்போது கிரிக்கெட் என்றால் இரண்டு பெயர்கள் மட்டுமே எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தது. கவாஸ்கர் மற்றும் கபில்தேவ். ஆனால் முதல் இரண்டு வெற்றிகளின் மூலம் மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த், பின்னி. மதன்லால், யஷ்பால் சர்மா போன்ற பெயர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்கத் துவங்கியது. ஜிம்பாப்வே உடனான முக்கிய மேட்சில் கபில்தேவின் ஹீரோயிசத்தால் ஜெயிக்க உத்வேகம் பெற்றது இந்திய அணி. அடுத்து ஆஸ்திரேலியாவையும் வென்று, செமிபைனலுக்குள் நுழைந்து இங்கிலாந்தை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்வாறு இந்திய அணி முதன் முதலாய் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது நல்ல பேச்சாக அடிபடத் துவங்கியது. அதற்கு முன்னதாக ஹாக்கியில் மட்டுமே நாம் உலக அளவில் வெற்றி பெறும் அணியாக இருந்தோம். மற்ற விளையாட்டுகளில் நாம் சவலைப் பிள்ளை தான். இன்னொரு விளையாட்டிலும் நம்மால் உலக அணிகளுக்கு இணையாக ஆட முடியும் என்று இந்திய மக்களை பெருமிதம் கொள்ள வைத்தது இந்த நிகழ்வு. மிக மிகக் குறைவான ஆட்களே எங்கள் ஊரில் அந்த இறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டார்கள். அதைவிட சற்று கூடுதலானவர்கள் வானொலியில் வர்ணனையை கேட்டார்கள். நாங்கள் கிரவுண்ட் ப்ரீயா இருக்கு என நன்றாக ஆடிக்களித்து விட்டு திரும்பும் போது, ஊரில் இருந்த ஒரே ஒரு ரேடியோ கடையில் சிலர் நின்று கமெண்டிரி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீகாந்த் நல்லா அடிச்சானாம்பா என்ற ஒரு வார்த்தை தான் அப்போது காதில் விழுந்தது. சில தெருக்களில் மட்டும் வீட்டிற்கு வெளியே ரேடியோவை வைத்து மாலையில் வர்ணனை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ரிச்சர்ட்ஸ் இருக்கிற வரை கஷ்டம் என்றார்கள். அப்புறம் கபில்தேவ் கேட்ச் பிடித்து அவர் அவுட்டானார் என்றார்கள். நடந்து கொண்டிருந்த சம்பவத்தின் முக்கியத்துவம் அறியாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலை இந்தியாவே ஆனந்தக் கொண்டாட்டத்தில் மூழ்கியது. கிரிக்கெட் ஆட்டம் பற்றி தெரியாதவர்கள் கூட, அதைப் பற்றியே பேசலானார்கள். நாம உலக அளவில் ஒரு போட்டியில் ஜெயித்து விட்டோம் என்பதே எல்லோருக்கும் பெரிய பெருமையைக் கொடுத்தது. திங்கள் அன்று பள்ளி செல்லும் போது அதே பேச்சு. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் டிவி இருந்தது. அவர் கிரிக்கெட் ரசிகரும் கூட. அவர் சொல்லி பள்ளி நோட்டீஸ் போர்டில் கொட்டெழுத்துக்களில் இந்திய வெற்றியைப் பற்றி எழுதியிருந்தார்கள். அவரும் பிரேயரில் இந்த வரலாற்றுச் சம்பவத்தைப் பற்றி நிறைய பேசினார். இந்த ஜூன் 25க்குப் பின் இந்தியாவே ஒரு மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை ஹாக்கி, புட்பால் விளையாடிக் கொண்டிருந்த இந்திய சிறுவர்கள் கிரிக்கெட்டின் பால் ஈர்க்கப்பட்டனர். ஹாக்கி விளையாட நல்ல ஹாக்கி மட்டை தேவை. புட்பாலுக்கு சாதா பந்து இருந்தாலும் இட வசதி தேவை. எந்த உபகரணமும் தேவையில்லை, சின்ன இடம் போதும், இரண்டு பேர் இருந்தாலும் ஆடலாம் என்ற கிரிக்கெட்டின் தன்மையால் பலரும் அதை நோக்கி இழுக்கப்பட்டனர். பிள்ளையாரை எப்படி தங்களுக்குப் பிடித்த வடிவங்களில் எல்லாம் பிடித்தார்களோ அது போலத்தான் கிரிக்கெட்டும். சிலையாகவும் வைக்கலாம், மஞ்சளில் பிடித்து வைக்கலாம், கைப்பிடி மண்ணிலும் பிடிக்கலாம் என்ற பிள்ளையாரின் சிம்ப்ளிசிட்டி கிரிக்கெட்டுக்கும் உண்டு. பேட், பேட்,பால் என எதுவும் தேவையில்லை. ஒரு கட்டை, அறுத்த சைக்கிள் ட்யூப் துண்டுகளைக் கொண்டு கூட பந்து செய்யலாம் என்ற எளிமையால் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவியது. ஆனால் பிள்ளையாருக்கு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கப்பட்டது போல, கிரிக்கெட்டில் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த உலகக் கோப்பை வெற்றி கொடுத்தது. இந்த வெற்றியை இந்தியாவிற்குச் சாத்தியமாக்கியது எது என்ற கேள்வி எழும்போதெல்லாம் மனதுக்கு தோன்றுவது அப்போது இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றார் போல் அமைந்த அணியும் கபில்தேவ் என்ற பெயரும் தான். பொதுவாக அப்போது இருந்த இந்திய அணிக்கு வெற்றி பெறும் ஆவலெல்லாம் இருக்காது. தங்கள் சாதனை, தங்கள் கேரியர் என்றே இருப்பார்கள். அணியின் ஒட்டுமொத்த வெற்றிக்குத் தேவைப்படும் அந்த அதிகப்படியான முயற்சியைச் செய்ய சுணக்கம் காட்டுவார்கள். கபில்தேவுக்கு அந்த அதிகப்படியான முயற்சியைக் கொடுக்கும் மனம் இயல்பிலேயே இருந்தது. அதுபோக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியும். அவருக்குள் இருந்த அந்த வெறிதான் இந்தியாவை கோப்பையை நோக்கி அழைத்துச் சென்றது. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளரே கிடையாது நீ வேகப்பந்து வீச்சாளர் என்கிறாயா என்ற கேலிகள், டிரஸ்ஸிங் ரூமில் பேட்ஸ்மென்களால் அவர் அடைந்த அவமானங்கள், கொச்சையாக ஆங்கிலம் பேசுகிறார் என்ற மும்பை மீடியாக்களின் எள்ளல்கள் என அனைத்தையும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வெறியாக மாற்றி அணியை வெற்றி பெறச் செய்தார். வெற்றி பெறுவோம் என்ற அவரின் நம்பிக்கையே எல்லோர் மனதிலும் புகுந்து உத்வேகம் கொடுத்தது. நம் நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கி தவிர்த்து இன்று வரை குழு ஆட்டங்களில் நாம் உலக அளவில் பெயர் சொல்லும் படியாக இருப்பது கிரிக்கெட்டில் தான். ஏன் தனி நபர் ஆட்டங்களில் கூட நம் நாட்டு சாதனையாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். 1983 கிரிக்கெட் உலக கோப்பை வெற்றிக்குப் பின் ஹாக்கி நம் மக்கள் மனதில் பெற்றிருந்த இடம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மும்பை முதல் மேற்கு வங்கம் வரை இந்தியாவின் எல்லா மூலைகளிலும் பரவியிருப்பது கிரிக்கெட் தான். அப்படி கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்க காரணமான நாள் ஜூன் 25, 1983 என்றால் அதற்கு அச்சாணியாய் இருந்தது கபில்தேவ் என்ற மனிதனின் வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் தான்.

ஜெயலலிதா

ஜெயலலிதா தமிழ்சினிமாவில் நடிகையாக உள்ளே நுழைந்த காலகட்டம் தமிழ்சினிமாவின் பொற்காலங்களில் ஒன்றான அறுபதுகள். எம்ஜியாரும், சிவாஜியும் முழுவீச்சில் வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எம்ஜியார், ப.நீலகண்டன், கே. சங்கர் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிகரமான பார்முலா படங்களைக் கொடுத்து வந்தார். சிவாஜி கணேசன் பீம்சிங் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பா வரிசை படங்களை (பாசமலர், பாவமன்னிப்பு போன்ற) கொடுத்து வந்தார். இயக்குநர் ஸ்ரீதர் அப்போதைய வழக்கத்தில் இருந்து ஒரு இயக்குநரின் படம் என்று தனித்துத் தெரியும் வகையில் அவருக்கான பிரத்யேக காட்சி அமைப்புகள், வசனம், இசை என தனிக்கவனம் செலுத்தி படங்களை இயக்கி வந்தார். கே பாலசந்தரும் தன் பயனத்தை அறுபதுகளில் துவங்கியிருந்தார். இது போக ஸ்க்ரிப்ட் ஒரியண்டட் இயக்குநர் கே கோபாலகிருஷ்ணன் தன் பங்கிற்கு சித்தி, கற்பகம் என அட்டகாசப் படங்களை கொடுத்து வந்தார். இவர்கள் போக ஏ பி நாகராஜன் திருவிளையாடல் போன்ற புராணப் படங்களை இயக்கி தன் பங்கிற்கு தமிழ்சினிமாவை அலங்கரித்துக் கொண்டிருந்தார். எஸ் எஸ் வாசன் அவர்களின் ஜெமினி, ஏ வி எம், விஜயா வாகினி போன்ற தயாரிப்பு நிறுவனங்களும் ஏராளமான படங்களை இந்தக் காலகட்டத்தில் தயாரித்து வந்தன. தேவர் பிலிம்ஸ், மேகலா பிக்சர்ஸ் போன்ற பட்ஜெட் படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவங்களும் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வந்தார்கள். இந்தக் கலைஞர்களுக்கெல்லாம் திரைப்படத்துறைக்கு உள்ளே நுழையும் கருவியாக இருந்தது நாடகங்கள் தான். ஒரு நாடகத்தில் சிறப்பாக நடிப்பதன் மூலம் படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கண்ணில் பட்டு அவர்களை தங்கள் திறமையால் கவர்ந்து வாய்ப்பு பெறுவது தான் முக்கிய வழியாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் சென்னையில் ஏராள நாடக கம்பெனிகள் இயங்கி வந்தன. கே பாலசந்தர்,சோ ராமசாமி, ஒய் ஜி பார்த்தசாரதி போன்றோர் தொடர்ச்சியாக நாடகங்களை நடத்தி வந்தார்கள். ஜெயலலிதாவின் தாயாரான சந்தியா சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டினாலும் இது போன்ற நாடக கம்பெனிகளில் அடிக்கடி நடித்து வந்தார். ஜெயலலிதாவும் இதைப் பின்பற்றி சோ, ஒய் ஜி பார்த்தசாரதி போன்றோரின் நாடகங்களில் பள்ளியில் நடிக்கும் போதே நடிக்க ஆரம்பித்தார். அப்போது தென்னக சினிமாவின் தலைமையகமாக சென்னை தான் விளங்கியது. ஏராளமான தெலுங்கு படங்கள் இங்கே எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சில கன்னட படங்களும். ஜெயலலிதாவிற்கு இதன் மூலம் சில தெலுங்கு, கன்னட படங்களில் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி விடுமுறையில் இப்படங்களை நடித்தார். 1965 ஆம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீதர் புதுமுகங்களை வைத்து வெண்ணிற ஆடை என்ற படத்தை துவக்கினார். அதில் நிர்மலா, மூர்த்தி ஆகியோர் அறிமுகமானார்கள். இன்னொரு நாயகி வேடத்திற்கு ஹேமமாலினி வரவழைக்கப்பட்டு ஸ்க்ரீன் டெஸ்டில் நிராகரிக்கப்பட்டார். அந்த வேடத்திற்கு 16 வயது ஜெயலலிதா பின்னர் தேர்வு செய்யப்பட்டார். வெண்ணிற ஆடை வெற்றி பெற்றது. நிர்மலாவும், மூர்த்தியும் வெண்ணிற ஆடை என்ற பெயருடன் சேர்த்து அழைக்கப் பட்டார்கள். ஆனால் ஜெயலலிதா அந்த அடைமொழியைப் பெறவில்லை. அதையெல்லாம் தாண்டி அவர் பலப்பல அடைமொழிகளைப் பெறுவார் என மற்றவர்களுக்குத் தோன்றியதோ என்னவோ. தன் முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார் ஜெயலலிதா. வெண்ணிற ஆடை வெற்றிக்குப் பின் ஜெயலிதாவிற்கு மிகப்பெரிய ஏற்றமாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன். சிவாஜி கணேசனை வைத்து பல படங்களை இயக்கிய பி ஆர் பந்துலு எம்ஜியாரை வைத்து இயக்கிய முதல் படம் ஆயிரத்தில் ஒருவன். அதில் கன்னித்தீவு இளவரசி வேடத்தில் நடித்தார். அப்போது எம்ஜியார் மிகப்பெரிய நாயகன். ஆனால் 17 வயது ஜெயலலிதா அவருக்கு இணையான நடிப்பை வழங்கி அந்த கேரக்டரை நிலைநிறுத்தி இருந்தார். ராஜா ராணி கால சரித்திர படமான ஆயிரத்தில் ஒருவன் இந்தக் கால பாகுபலி போல பெரு வெற்றி அடைந்த படம். அதன்பின்னர் ஜெயலலிதாவிற்கு ஏறுமுகம் தான். எம்ஜியாருடன் குடியிருந்த கோயில், ரகசிய போலீஸ் 115, அடிமைப் பெண், சிவாஜி கணேசனுடன் பட்டிக்காடா பட்டணமா, கலாட்டா கல்யாணம் என கிட்டத்தட்ட 15க்கும் அதிகமான படங்கள், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் என அப்போதிருந்த அடுத்த நிலை நடிகர்களுடனும் நிறையப் படங்கள் என தமிழ்சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார். தெலுங்கிலும் என் டி ஆர், நாகேஸ்வராவ் போன்ற முண்ணனி நடிகர்களுடனும், கிருஷ்ணா, சோபன்பாபு போன்ற அடுத்த நிலை நடிகர்களுடனும் பல வெற்றிப்படங்களில் நடித்தார். கன்னடத்திலும் பல வெற்றிப்படங்கள். நடிக்க வந்த முதல் 10 ஆண்டுகளில் பல மொழி வெற்றிப்படங்களின் மூலம் முக்கிய தென் இந்திய திரை நட்சத்திரமாக மாறினார். ஜெயலலிதா ஏற்று நடித்த பல்வேறு கேரக்டர்களின் மூலம் ஏராளமான தமிழக மக்களின் அபிமானத்தைப் பெற்றார். எப்படி அறுபதுகளில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களிடையே கடும் போட்டி இருந்தது போல நடிகைகளிடமும் கடும் போட்டி இருந்தது. பானுமதி, வைஜயந்தி மாலா செட்டில் வைஜயந்திமாலா இந்திக்குப் போய் இருந்தார். பானுமதி இன்னும் பீல்டில் இருந்தார். பத்மினி, சாவித்திரி, தேவிகா செட்டும் மிக ஆக்டிவ்வாக பீல்டில் இருந்தார்கள். ஜெயலலிதாவிற்கு சில வருடங்கள் முன் அறிமுகமாயிருந்த சரோஜா தேவி, கே ஆர் விஜயா தங்கள் கேரியரின் உச்சத்தில் இருந்தனர். ஜெயலலிதாவிற்குப் பின் அறிமுகமாகி இருந்த லதா, மஞ்சுளா போன்றோரும் கடும் போட்டியை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இத்தனை பேரையும் மீறி ஜெயலலிதா தனக்கான வெற்றிகளைக் குவித்தார். அவர் கணக்கில் ஏராளமான சில்வர் ஜூபிலி படங்கள் இருந்தன. பெருவாரியான திரைத் துறையினரின் முதல் தேர்வாக ஜெயலலிதா இருந்தார். அதற்கு முக்கிய காரணம் எந்த கேரக்டரையும் ஏற்று நடித்து அதைச் சிறப்பிக்கும் திறமை அவருக்கு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் துடுக்குத்தனமான நவநாகரீகப் பெண் வேடத்திற்கு போட்டியே இல்லாத தேர்வாக ஜெயலலிதா இருந்தார். அவர் இயல்பே அதுதான் என்பதால் அதை அசால்டாக செய்வார். இளவரசி வேடமும் அவருக்கு கனகச்சிதமாகப் பொருந்தும். அதற்கேற்ற தோற்றம், தோரணை, குரல் எல்லாம் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. அதே சமயம் நடுத்தர குடும்பப் பெண் வேடம், அப்பாவி கிராமத்துப் பெண் வேடம் போன்றவற்றையும் மிக எளிதாகச் செய்வார். இந்த பன்முகத்தன்மைதான் அவரை திரையுலகில் முண்ணனி நட்சத்திரமாக நிலை நிறுத்தியது. எம்ஜியாருடன் இணைந்து நடித்த ராமன் தேடிய சீதையில் எம் ஜி யாரை பல வேடங்கள் போட்டு ஏமாற்றும் கதாபாத்திரம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேடங்கள். அனாயாசமாக அதைச் செய்திருப்பார். முத்துராமனுடன் நடித்த சூரியகாந்தி திரைப்படத்தில் வேலைக்குச் செல்லும் பெண் உரிமையில் நம்பிக்கை கொண்ட கதாபாத்திரம் அதையும் செம்மையாக செய்திருப்பார். அதற்காக பெரியாரின் பாராட்டையும் பெற்றார். நகைச்சுவை வேடங்களும் அவருக்கு எளிது தான். கலாட்டா கல்யாணம் போன்ற படங்களில் அதிலும் கலக்கியிருப்பார். வழக்கமான கவர்ச்சி கதாநாயகி வேடங்கள் சொல்லவே வேண்டாம். ஏராளம். அதிலும் சிறப்புற நடித்திருப்பார். இது தவிர மனநிலை பாதிக்கப்பட்ட வேடங்கள் அவற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளார். நவரத்தினம், எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார். எந்த வகை வேடமாக இருந்தாலும் சரி, எந்த நாயகர்களுடன் நடித்தாலும் சரி. ஜெயலலிதா தனித்து தன் திறமையைக் காட்டத் தவறியதேயில்லை. 1970களின் மத்தி வரை ஜெயலலிதா வெற்றிகரமான கதாநாயகியாக இருந்தார். பின்னர் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரய்யா போன்ற புதிய அலை இயக்குநர்கள் வர ஆரம்பித்தார்கள். ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா போன்ற நாயகிகளின் வருகை, கமல்ஹாசன், ரஜினிகாந்த் தலை எடுக்க ஆரம்பிக்க ஜெயலலிதாவின் நாயகி அந்துஸ்து குறையத் துவங்கியது. இனி இரண்டாம் நாயகி, சகோதரி, அம்மா கேரக்டர்களில் தான் நடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அது போல சில குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1980ல் ரஜினியில் பில்லா படத்தில் அவருக்கு நெருக்கமான தயாரிப்பாளர் பாலாஜியால் ஸ்ரீபிரியா நடித்த வேடத்திற்கு முதலில் நடிக்க அழைக்கப்பட்டார். ஆனால் அதில் அவர் நடிக்க வில்லை. அதே ஆண்டில் அவர் நடித்த நதியை தேடி வந்த கடல் அவரின் கடைசிப் படமாயிற்று. அவர் உச்சத்தில் இருந்த பத்தாண்டுகளில் அவர் சேர்ந்து நடிக்காத பெரிய நடிகர்கள் இல்லை, வித்தியாச வேடங்கள் இல்லை. எந்தக் காட்சியிலும் அவர் தன் ரோலை மீறி நடித்தது இல்லை. அந்த கேரக்டருக்கு எவ்வளவு நடிக்க வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருந்தது. ஜெயலலிதா ஒரு காட்சியில் இருந்தாலே, அவரை மற்றவர்களை மீறி கவனிக்க வைக்கும் திறமையும் அவரிடம் இருந்தது.எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் அந்தக் கலாச்சாரத்திற்கு ஏற்ப, மொழிக்கு ஏற்ப முன் தயாரிப்பு செய்து பாவனைகளை கொடுக்கக் கூடியவர். இந்தத் திறமைகள்தான் அவருக்கு தென் இந்திய திரைத்துறையிலும் பொது மக்களிடையேயும் பெரிய மரியாதையைப் பெற்றுக் கொடுத்தது.

சேப்பாக்கம் டை டெஸ்ட்

எவ்வளவோ கிரிக்கெட் மேட்சுகளைப் பார்த்தாலும் சில கிரிக்கெட் மேட்சுகள் மட்டுமே நம் மனதை விட்டு அகலாது இருக்கும். மேட்சின் சுவராசியம் ஒரு காரணமாய் இருந்தாலும், நாம் அதைப் பார்த்த சூழ்நிலை, அந்த மேட்ச் அன்றைய நிலையில் நமக்குக் கடத்திய உணர்வு போன்றவையும் அதற்கு முக்கிய காரணமாய் இருக்கும். 80களில் கிரிக்கெட் ரசிகர்களாய் இருந்த பலருக்கும் அப்படி ஒரு மேட்ச் மறக்க முடியாததாய் இருக்கும். அந்த மேட்சைப் பற்றிய நினைவுகளே இந்தக் கட்டுரை. அது 1986ஆம் வருடம். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திற்குச் சென்று அவர்கள் மண்ணிலேயே வரலாற்றில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வந்திருந்தது. அந்த சூட்டோடு தன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியின் வருகைக்காக காத்திருந்தது. அப்போதைய ஆஸ்திரேலிய அணி தன்னுடைய நட்சத்திர ஆட்டக்காரர்களான க்ரெக் சாப்பல், இயன் சாப்பல், டென்னிஸ் லில்லி, தாம்சன் போன்றோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றிருந்ததால் நிறைய இளம் ஆட்டக்காரர்களுடன் இந்தியா வந்திறங்கியது. அணித்தலைவர் ஆலன் பார்டர், பூன், மார்ஷ் போன்றவர்களே அப்போது அதிகம் அறியப்பட்டவர்களாய் இருந்தார்கள். இங்கிலாந்தை அவர்கள் மண்ணிலேயே தலையில் தட்டிவிட்டு வந்தவர்கள், தங்கள் மண்ணில் ஆஸ்திரேலியாவை தலையில் கொட்டி அனுப்புவார்கள் என்றே பலரும் கணித்தார்கள். பலரும் கணித்தபடியே முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த போட்டியிலேயே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, எங்களை குறைத்து எடை போடாதீர்கள் என்ன இருந்தாலும் நாங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எனக் காட்டினார்கள். இந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்குப் பின்னர் சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. அப்போது பரவலாக தொலைக்காட்சிப் பெட்டிகள் ஊருக்குள் ஊடுருவிக் கொண்டிருந்த நேரம். இங்கிலாந்தில் இந்தியா பெற்ற வெற்றி அப்போது இன்னும் பலரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆக்கி விட்டிருந்தது. சென்னையில் மேட்ச் என்பதால் வானொலியில் தமிழ் வர்ணனை வேறு. ஒரு நாள் போட்டியில் வேண்டுமானால் நீங்கள் எனக்கு சமமாய் இருக்கலாம், ஆனால் டெஸ்ட் போட்டியில் நாங்கள் தான் என மார்தட்டி களம் கண்டது இந்திய அணி. ஆஸ்திரேலியா டாஸை வென்று பேட்டிங் எடுத்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதற்கு முன்னால் பல டெஸ்ட் மேட்சுகள் நடந்திருக்கின்றன. இந்தியாவிலே கல்கத்தா ஈடன் கார்டனுக்கு அடுத்த படியாக உருவான மைதானம் இந்த எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம். பொங்கல் சமயத்தில் ஒரு டெஸ்ட் மேட்ச் இங்கே நடத்துவதென்பது ஒரு ஐதீகம். சென்னை மார்கழி இசை விழா முடிந்ததும் இந்த பொங்கல் டெஸ்ட் பற்றிய பேச்சு சென்னை எலைட் வட்டாரங்களில் துவங்கும். மற்ற மாவட்டங்களில் இந்த மேட்ச் வானொலியில் வழங்கப்படும் அட்டகாச தமிழ் வர்ணனை மூலமே அறியப்படும். வாலாஜா முனை, பெவிலியன் முனை, வலது கை ஆட்டக்காரர், உதிரி ஓட்டங்கள், கால்காப்பில் பட்டு பைன்லெக் திசையை நோக்கிச் சென்றது பந்து என சொல்லப்படும் வர்ணனை மூலமே கிரிக்கெட் பழகப்பட்டு வந்தது. மேட்ச் தொடங்கி முதல் விக்கெட்டாக மார்ஷ் ஆட்டமிழந்த பின்னர் டேவிட் பூன் – டீன் ஜோன்ஸ் இணை ஆடத்துவங்கியது. அவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் கல்லூரி விடுதியில் இருந்து ஊருக்கு வந்த கல்லூரி கிரிக்கெட் டீம் ஆட்டக்காரர் தெரு பையன்களோடு எளிதாய் விளையாடுவது போல ஆடினார்கள். அப்போதுதான் இந்திய அணியின் பவுலிங் பலவீனம் புரிந்தது. வெளி நாட்டு பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். ஆனால் இந்திய ஆடுகளங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 211 ரன்களை எடுத்தது. அடுத்த நாள் ஆட்டத்தில் நான்காம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டீன் ஜோன்ஸும் ஆலன் பார்டரும் நிதானமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார்கள். டீன் ஜோன்ஸ்க்கு சென்னை வெயில் ஒத்துக் கொள்ளாமல் வாந்தியெல்லாம் எடுத்தார். ஆனாலும் விடாமல் விளையாடி 210 ரன்கள் எடுத்தார். மூன்றாம் நாளின் ஆரம்பத்தில் தான் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நம்மிடம் அன்று மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அவர்களாலும் ஏதும் பெரிதாக நடத்த முடியவில்லை. பின் இந்திய இன்னிங்ஸ் தொடங்கியது. வழக்கம்போல் ஸ்ரீகாந்த் அதிரடியாகவும். கவாஸ்கர் நிதானமாகவும் ஆட ஆரம்பித்தனர். 65 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டை இழந்தது இந்தியா. அசாருதீனும் ரவி சாஸ்திரியும் இந்தியா 200 ரன்களை எட்ட காரணமாய் இருந்தார்கள். ஐந்தாவது விக்கெட் விழுந்து கபில்தேவ் உள்ளே வரும் போது அணியின் ஸ்கோர் 206. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் விழ இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களுக்கு தள்ளாடத் துவங்கியது. அப்போதைய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தால் அடுத்து 50 ரன்களுக்குள்ளும், 7 வது விக்கெட் இழந்தால் அடுத்த 15 ரன்களுக்குள்ளும் தன் ஆட்டத்தை முடித்துக் கொள்ளும் என்றே எழுதி வைத்துக் கொள்ளலாம். அந்த அளவில் தான் நமது பந்து வீச்சாளர்களின் பேட்டிங் திறமை இருக்கும். இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 130 ரன்கள் தேவைப்பட்டன. வானொலியில் வர்ணனை செய்தவர்கள் இதை ஒவ்வொரு பந்து வீசப்படும் போதும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதன் மூலம் தான், முதன் முறையாக அப்போது கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு பாலோ ஆன் என்றால் என்ன என்று தெரியத் துவங்கியது. அந்தச் சூழ்நிலையில் தான் தன்னுடைய கேரியரின் மற்றுமொரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கபில் தேவ். சேட்டன் சர்மா, சிவலால் யாதவ், மனீந்தர் சிங் போன்றோரை மறுமுனையில் நிற்க வைத்து 119 ரன்களை எடுத்து, பாலோ ஆனைத் தவிர்த்தார்.அதில் 21 பவுண்டரிகள். பல பந்துகளை தானே சந்தித்து சுமாரான பந்துகளை தண்டித்து இந்த ரன்களை ஈட்டினார். நான்காம் நாள் இந்தியா அணி பாலோ ஆனைத் தவிர்த்து விட்டு ஆல் அவுட் ஆக ஆஸ்திரேலியா தன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 170 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. சரி அவ்வளவு தான் வழக்கம் போல இந்த டெஸ்ட்டும் ட்ராவை நோக்கித்தான் போகப்போகிறது என அனைவரும் நினைத்திருந்த வேளையில் நான்காம் நாள் ஆட்ட முடிவோடு டிக்ளேர் செய்தார் பார்டர். இந்தியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ஆட்டத்தின் கடைசி நாள். 348 ரன்கள் எடுக்க முடிந்தால் எடுத்து வெற்றி கொள் என்றார் பார்டர். ஏற்றுக் கொண்டார் கபில்தேவ். இந்திய வீரர்கள் களமிறங்கினார்கள். ரன்கள் குவிப்பதும், விக்கெட்டுகள் போவதுமாய் இருந்தது. கவாஸ்கர் ஒரு முனையில் நங்கூரமாய் நின்று 90 ரன்கள் எடுத்தார். கபில்தேவின் விக்கெட் விழுந்ததும் இந்திய ரசிகர்களுக்கு கலக்கம் ஏற்பட்டது. ஆனால் அப்போதைய மிஸ்டர் கூலான ரவி சாஸ்திரி நம்பிக்கை கொடுத்தார். 9 விக்கெட்டுகள் போய் விட்டன. 2 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் ரவி சாஸ்திரி ஒரு ரன் மட்டும் எடுத்து மறுமுனைக்குச் செல்ல. மனீந்தர் சிங் தன் விக்கெட்டை பறி கொடுக்க டை ஆனது டெஸ்ட். வர்ணனையாளர்கள் டிராவுக்கும் டைக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்கிக் கொண்டிருக்க, சேப்பாக்கம் மைதானத்தில் குமுழியிருந்த ரசிகர்கள் தங்கள் கண் முன்னால் நடந்ததை நம்ப முடியாமல் இருந்தனர். டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்களும், வர்ணனை கேட்டுக் கொண்டு இருந்தவர்களும் தான். அந்தக் கணம் அவர்களுக்குத் தெரியாது, நாம் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக இருக்கப் போகிறோம் என்று. ஏனென்றால் அதுவரை நடந்த டெஸ்ட் மேட்சுகளில் ஒரு டெஸ்ட் மட்டுமே டை ஆகியிருந்தது. அதிலும் ஆஸ்திரேலியா பங்கெடுத்து இருந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1960ஆம் ஆண்டில் ஒரு டெஸ்டை அவர்கள் செய்திருந்தார்கள். அதற்கடுத்து இதுதான். இந்த டெஸ்ட் முடிந்து 34 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதற்கடுத்து இன்னும் ஒரு டெஸ்ட் கூட டை ஆகவில்லை. இந்த டெஸ்ட்டின் முடிவு ஆஸ்திரேலியாவிற்கு உற்சாகத்தைக் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும் பந்து வீச்சாளர் மெக்டர்மெட்டும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அந்த அணியில் முக்கிய புள்ளிகளாக விளங்கினார்கள். அணியில் இடம் பிடித்திருந்த இளம் வீரரான ஸ்டீவ் வாவ் அடுத்த 15 ஆண்டுகள் அணிக்கு முக்கிய தூணாக இருந்தார். ஆனால் இவர்களை விட இந்தப் போட்டியில் சென்னை ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் க்ரெய்க் மாத்யூஸ் தான். இந்திய ஸ்பின்னர்களே விக்கெட் எடுக்க கஷ்டப்பட்ட பிட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், முதல் இன்னிங்ஸில் 44 ரன்கலையும் அடித்திருந்தார். அவரின் ஆட்டிட்யூட் மைதானத்தில் இருந்த எல்லோரையும் கவர்ந்தது. டிவியில் பார்த்தவர்கள் கூட யார்றா இது இப்படி துறு துறுவென்று இருக்கிறான் என்றே பார்த்தார்கள். பவுண்டரி லைனில் நின்றிருக்கும் போது எல்லா ரசிகர்களுடனும் அன்னியோன்யமாக சிரித்துக் கொண்டே இருந்தார். சென்னை வெயிலில் முகமெல்லாம் சிவந்து, பவுண்டரி லைனில் உருண்டு புரண்டு பீல்டிங் செய்ததால் அழுக்கான உடைகளுடன் முகமெல்லாம் சிரிப்புடன் இருந்த மேத்யூஸை அன்று மேட்ச் பார்த்தவர்களால் மறக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு கட்டத்தில் இந்தியாவின் கையில் இருந்த மேட்சை தங்கள் பக்கம் தன் பவுலிங்கால் திருப்பியவர் மாத்யூஸ். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் ஆட்டம் முடிந்தாலும் அதில் பங்குபெற்றவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும் இன்று வரை ஒரு திருப்தி. இதுவரை நடந்திருக்கும் 2000க்கும் அதிகமான டெஸ்ட்மேட்சுகளில் டை ஆனது இரண்டே மேட்சுகள் தான். அதில் ஒன்றில் நாம் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதே அது.

அசாருதீன்

1984 ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்தியப் பயணம் அறிவிக்கப்பட்ட போது, இந்திய கிரிக்கெட் அணி ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்தது. 1983ல் உலக கோப்பையைப் பெற்றுத்தந்த கபில்தேவ், அடுத்து வந்த தொடர்களில் வெற்றியைப் பெற இயலாதால், குறிப்பாக எங்களையா வென்று உலகக் கோப்பையை வாங்கினாய்? அதற்கு பதிலடி தருகிறோம் என வஞ்சினத்துடன் கிளைவ் லாயிட் தலைமையில் இந்தியாவிற்கு வந்த மேற்கு இந்திய தீவு அணியினர் நம்மை பந்தாடி விட, கபில்தேவிடம் இருந்த கேப்டன் பதவி கவாஸ்கருக்குச் சென்றது. கவாஸ்கர், தனக்குப் பிடிக்காத சில வீரர்களை எப்படியாவது கழட்டி விட வேண்டுமென்று மனதில் திட்டமிட்டுக் கொண்டே இருந்தார். அதனால் இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் ஒரு சுமுகமான நிலை அப்போது இருக்கவில்லை. அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி தன் பாதுகாவலர்களலேயே சுடப்பட்டு, அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராப் பதவியேற்று, உடனேயே தேர்தலையும் அறிவித்தார். அந்த நேரத்தில் தான் இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணமும் இங்கே துவங்கியது. எனவே இந்திய மக்கள், மீடியா இவற்றின் கவனம் முழுவதும் அரசியல் களத்தையே நோக்கி இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் 5 டெஸ்ட்கள், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட டேவிட் கோவர் தலைமையிலான இங்கிலாந்து அணி இங்கே வந்தது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. அடுத்த டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இந்த இரண்டாம் டெஸ்டில் சரியாக விளையாட வில்லையென கபில்தேவை (இத்தனைக்கும் அவர் முதல் இன்னிங்ஸில் 60 ரன்கள் அடித்திருந்தார்) மூன்றாவது டெஸ்டில் ஆடும் அணியில் சேர்க்காமல் வெளியே உட்கார வைத்தார் கவாஸ்கர். இலவச இணைப்பாக மக்களை கவர்ந்திழுக்கும்படி ஆடக்கூடிய சந்தீப் பாட்டிலையும். சந்தீப் பாட்டிலுக்கு அதுவே கடைசி டெஸ்டானது. மூன்றாவது டெஸ்ட் விளையாட கல்கத்தாவிற்கு பயனமாகின இரு அணிகளும். கபில்தேவ் இல்லாததால் அவரது ரசிகர்கள் கிட்டத்தட்ட இங்கிலாந்து அணிக்கு ஆதரவு கொடுப்பது போல், கவாஸ்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். முதல் மூன்று விக்கெட்டுகள் விழுந்த நிலையில், அந்தப் போட்டியில் சந்தீப் பாட்டிலுக்கு பதிலாக அறிமுகமான இன்னொரு வீரர் களமிறங்கினார். அவர் களத்தில் இறங்கிய உடனேயே இன்னொரு விக்கெட்டும் போக 127 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலை. ஒரு அறிமுக வீரருக்கு இது இக்கட்டான நிலை தான். ஆனால் அது பற்றி எந்த அழுத்தத்தையும் ஏற்றிக் கொள்ளாமல் தன் ஆட்டத்தை அவர் ஆடத் துவங்கினார். கிரிக்கெட் ரசனையுள்ள கல்கத்தா ரசிகர்கள், யார் இந்தப் புதுப்பையன்? ஆட்டம் வித்தியாசமாக இருக்கிறதே என கவாஸ்கருக்கு எதிராக கோஷம் எழுப்புவதை சற்று நிறுத்தி விட்டு ஆட்டத்தை கவனிக்கத் துவங்கினார்கள். வர்ணனையாளர்களும் இது இவரது முதல் போட்டி போலவே தெரியவில்லை என பேசத் துவங்கினார்கள். அந்த வீரர் வேறு யாருமல்ல. எம் எல் ஜெயசிம்மா, குண்டப்பா விஸ்வநாத் ஆகியோருக்கு அடுத்த படியாக மணிக்கட்டு திருப்பல்களை வைத்தே பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பக்கூடிய திறமைசாலியாக இந்திய அணிக்குள் உள்ளே வந்து மூன்று உலக கோப்பைப் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீன் தான். அடுத்த இரண்டு டெஸ்ட்களிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதமடித்து, இன்று வரை யாரும் உடைக்க முடியாத சாதனையாக இருக்கும் அறிமுகமான உடன் தொடர்ந்து மூன்று டெஸ்ட்களிலும் சதமடித்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்தச் சாதனையானது அவருக்கு உடனடியாக இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தது. அடுத்து வந்த பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலக கோப்பைத் தொடர், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்கள், ஷார்ஜா போட்டிகள், 1987 உலக கோப்பை என எல்லாவற்றிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது இருந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கும் அவருக்கும் பிட்னெஸ் லெவலில் பெரிய வேறுபாடு இருந்தது. கவாஸ்கர், வெங்சர்க்கார், அமர்நாத் ஏன் ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி கூட விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓட மாட்டார்கள். கபில் தேவ் ஒருவர் மட்டும் தான் வேகமாக ஓடக்கூடியவர். பவுண்டரி அடிப்பார்கள், இல்லையெனில் உள் வட்டத்தைத் தாண்டி அடித்து விட்டு நிதானமாக ஒரு ரன் ஓடுவார்கள். இரண்டு ரன்களே அரிதாகத்தான் ஓடுவார்கள். ஆனால் அசாருதீன் விக்கெட்டுகளுக்கு இடையே மின்னல் வேகத்தில் ஓடக்கூடியவர். அவர் அழைத்தாலும் யாரும் இரண்டாம் ரன் வரமாட்டார்கள், கபில்தேவைத் தவிர. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களைப் பற்றி சொல்லும் போது ஒன்று சொல்வார்கள். அவர்களுக்கு மட்டும் நல்ல ஸ்லிப் கேட்சர்கள் இருந்தால் இன்னும் அதிக வெற்றிகளைப் பெற்றிருப்பார்கள் என. அசாருதீனுக்கும் அதே தான். அவருக்கு மட்டும் முதல் ஆறேழு ஆண்டுகளில் நல்ல ரன்னிங் பார்ட்னர்கள் கிடைத்திருந்தால் இன்னும் அதிகமாகவே ரன்களைக் குவித்திருப்பார். அசாருதீன் பந்தை லேசாகத் தட்டிவிட்டு விரைந்து ஓட நினைப்பார். எதிர் முனை பேட்ஸ்மென்கள், ஆணியில் மாட்டிய காலண்டரைப் போல் இருப்பார்கள். இரண்டாம் ரன்னுக்கெல்லாம் மூச்சு வாங்கும் பேட்ஸ்மென்களைக் கொண்டது தான் அப்போதைய இந்திய அணி. மூன்று ரன்கள் ஓடிப் பார்த்த சம்பவங்கள் எல்லாம் மிக மிகக் குறைவு. அதே போல் ஸ்ட்ரோக் பிளேயிலும் அவருக்கும் மற்ற ஆட்டக்காரர்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அவரது லெக் சைட் ப்ளிக் யாராலும் மேட்ச் செய்ய முடியாத ஒன்றாக அப்போது இருந்தது.லெக் ஸ்டம்பிற்கு வரும் பந்தை ப்ளிக் ஆடுவது சுலபம். அதைக்கூட கடினமாக ஒன்றாக செய்வார்கள் மற்ற பேட்ஸ்மென்கள். ஆனால் மிடில் ஸ்டம்பிற்கு வரும் பந்தைக் கூட அலுங்காமல் குலுங்காமல், தன் ரிஸ்ட் ஒர்க்கால் லெக் சைட் அனாயசமாக கலை நுணுக்கத்துடன் ஆடும் திறமை வாய்த்திருந்தது அசாருதீனுக்கு. ஆப் ஸ்டம்பிற்கு வரும் பந்துகளைக் கூட லேசாக கால்களை நகர்த்தி பெரிய பிரயத்தனம் ஏதுமின்றி மிட் விக்கெட் திசைக்கு அனுப்புவதில் வல்லவர் அசாருதீன். பந்து வீச்சாளர்கள் கூட ஒரு நொடி நாம் ஆப் ஸ்டம்பிற்கு பந்தை வீசினோமா? இல்லை லெக் ஸ்டம்பிற்கு வீசினோமா என குழம்பி விடுவார்கள். எதிர்த் தரப்பு கேப்டனும் என்னடா இது லெக்ஸ்டம்பிற்கு பந்தைப் போடுகிறான் என்று பந்து வீச்சாளரைத் திட்டும் படி இருக்கும் அசாருதீனின் இயல்பான அந்த ஸ்ட்ரோக். அதே போல் ஸ்ட்ரெயிட் ட்ரைவ் அடிப்பதிலும் வல்லவர். பவுலர் ஆப் ஸ்டம்பிற்கு ஓவர் பிட்ச் போட்டாலே மிடான், மிடாப்பில் இருப்பவர்கள் பவுண்டரியைத் தடுக்க ஓட ஆரம்பித்து விட வேண்டியது தான். அப்படி ஒரு டைமிங்கில் ஸ்ட்ரெயிட் ட்ரைவ் ஆடுவார். ஆட வந்த புதிதில் லெக் சைட் வித்தகராக இருந்த அசாருதீன், சில ஆண்டுகளிலேயே ஆப் சைடும் சிறப்பாக ஆட ஆரம்பித்தார். எக்ஸ்ட்ரா கவர் அவருக்கு பிடித்த பிரத்யேக ஸ்பாட். பேட்டிங்கை விட பீல்டிங் திறமையால் தான் இந்தியர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்தார் அசார். இந்திய அணியில் சிறந்த பீல்டர்கள் என்ற இனமே இல்லாத காலகட்டம் அது. ஏக்நாத் சோல்கர் மட்டுமே சிறந்த பீல்டர் என அறியப்பட்டு இருந்தார். அவர் பார்வார்ட் சாட் லெக்கிலும் சில சமயம் சில்லி பாயிண்டில் பெரும் வித்தையைக் காட்டியவர். இந்தியா கண்ட அற்புத குளோஸ் இன் பீல்டர். ஆனால் அவருக்கு அப்புறம் பீல்டிங்கிற்காக யாரும் இந்தியாவில் அறியப்படவில்லை. அசாருதீன் வந்த பிறகு தான் இந்தியர்களும் இப்படி பீல்டிங் செய்வார்களா என எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அவருக்கு மிகவும் பிடித்த பீல்டிங் இடம் பாயிண்ட். பேட்ஸ்மென் ஸ்கொயர் கட் அடித்தால் அதி வேகமாக பந்து அங்குதான் வரும். அதை அசால்டாக கையாள்வார். எடுத்த கையாலேயே திருப்பி வீசவும் செய்வார். இதெல்லாம் இப்போது மிக சாதாரணம் என்றாலும் அப்போது வியந்து பாராட்டப்பட்ட திறமை. அதே போல் ஸ்லிப்பிலும் பல அட்டகாச கேட்சுகளைப் பிடித்தவர் அசாருதீன். 1987 உலக கோப்பைத் தோல்விக்குப் பின்னர் கபில்தேவ் கேப்டன் பதவியில் இருந்து விலக, வெங்சர்க்கார் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அவரும் தோல்விகளையே காண, ஸ்ரீகாந்த் கேப்டனாக்கப்பட்டார். அவரும் நிலைக்க முடியாமல் போக 1989- 90 நியூசிலாந்து தொடருக்கு கேப்டனாக நியமிக்கப் பட்டார் . அவருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டவர் விக்கெட் கீப்பராக இருந்த் கிரண் மோர். அந்தளவிற்கு சீனியர்கள் எல்லோரும் ஓய்வு பெற்றிருந்த நேரம் அது. இவர் எத்தனை நாள் நிலைப்பார் எனவே எல்லோரும் நினைத்தார்கள். அதனைப் பொய்யாக்கி 1992,96 மற்றும் 99 உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்திய அனிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு நீடித்தார். அசாருதீனின் கேப்டன் பதவி நீடிக்கக் காரணம் அவர் இந்திய பிட்சுகளில் பெற்ற டெஸ்ட் வெற்றியே. மீண்டும் இங்கிலாந்து அணியே அதற்கு விதை போட்டது. இங்கிலாந்து அணியின் 1993 இந்திய சுற்றுப்பயணத்தின் போது, தன் அணிக்கேற்ற பிட்சுகளை அப்போதைய மேனேஜர் அஜீத் வடேகரின் வழிகாட்டுதலுடன் போட வைத்தார் அசாருதீன். மூன்றாம் நாளில் இருந்து ஸ்பின்னர்கள் சொன்னபடி கேட்கும் பிட்சுகள். அதற்கேற்றாற்போல கும்ப்ளே,ராஜூ, சௌகான் என ஸ்பின்னர்கள். தேவையான ரன்னை எடுக்க சச்சின் டெண்டுல்கர் தலைமையில் பேட்ஸ்மென்கள் என ஒரு வியூகம் அமைக்கப்பட்டது.இது அட்டகாச பலனைத் தந்தது. அதுவரை ஏராளமான ட்ராக்களையே சந்தித்து வந்த இந்திய அணி வெற்றிகளைப் பெறத் தொடங்கியது. ஆனால் உள்ளூரில் புலியாகவும் வெளியூரில் எலியாகவும் அணி மாறத் துவங்கியது. இதனால் வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அசாரால் பெற முடியவில்லை. காலத்துக்கும் மறக்க முடியா பல இன்னிங்ஸ்களை அசாருதீன் ஆடியுள்ளார். ஈடன் கார்டனில் அவர் அடித்த 5 டெஸ்ட் சதங்கள், 1990ல் இங்கிலாந்திற்கு எதிராக பாலோ ஆனைத் தவிர்க்க அடித்த சதம், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டர்பன் டெஸ்டில் அடித்த சதம் எல்லாமே ஸ்ட்ரோக் பிளே எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டானவை. அதுவும் டர்பன் டெஸ்டில் அவர் ரன் அவுட் ஆகும் போது வர்ணனையாளர் சொன்னார், “வேறு எந்த வகையிலும் இவர் அவுட் ஆகியிருக்க முடியாது அப்பேர்பட்ட பார்மில் இவர் ஆடிக் கொண்டிருந்தார் என்று. ஒரு நாள் போட்டிகளிலும் ஏராளமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடியவர் அசாருதீன். ஒரு நல்ல பேட்ஸ்மனாக, சரிந்திருந்த இந்திய அணியை சிறிது நிமிர்த்திய கேப்டனாக அறியப்பட்டு கௌவரமாக ஓய்வு பெற்றிருக்க வேண்டிய அசாருதீன் தேவையில்லாமல் கிரிக்கெட் சூதாட்டப் புகாரில் சிக்கி கிரிக்கெட் உலகில் இருந்து வெளியேறினார். தன் கேப்டன்சிக்கு போட்டி இல்லாத தன் முதல் ஐந்தாண்டு காலத்தில் சில வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் நல்ல கேப்டனாக அறியப்பட்டிருப்பார் அசாருதீன்.

சோபர்ஸ்

80களின் மத்தியில் டிவியில் கிரிக்கெட் பார்க்கும் பொழுது, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் யாராவது சதம் அடித்தால் போதும். உடனே ஒரு ஸ்லைட் போடுவார்கள். ஒரு நாள் போட்டிகளில் யார் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் அடித்திருக்கிறார்கள் என. அதில் மகுடத்தின் உச்சியில் பதித்த வைரமாய் கபில்தேவ் 175* என்று இருக்கும். நம்மாளுடா என்று புளகாங்கிதப்பட்டுக் கொள்வோம். அதே போல டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் போது, யாராவது இரட்டை சதத்தை தாண்டிவிட்டால் போதும் டெஸ்ட் இன்னிங்ஸில் யார் அதிக ரன் எடுத்து என்ற ஸலைட் போடப்படும். அதில் பிராட்மென், லென் ஹட்டன் ஆகியோரது பெயர்களுக்கு மேலே முதலிடத்தில் கேரி சோபர்ஸ் 365* என்ற பெயர் இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் ஆளு, பாகிஸ்தானுக்கு எதிரா அடிச்சிருக்கார் என்றதும் இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும். அப்போது, டிவியில் உடன் பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் சீனியர்களிடம் யார் இவரு என்று கேட்போம். இப்போது போல கூகுள், யூ ட்யூப்பை தட்டி விட்டால் அவரது ஜாதகமே வரும் காலமல்லவே அது? இப்ப ரிச்சர்ட்ஸ் இருக்காருல்ல, அவரு மாதிரி அந்தக்காலத்தில் அவரு என்பார்கள். ரிச்சர்ட்ஸ் மாதிரி பேட்டிங் மட்டுமல்ல, லெப்ட் ஹேண்ட் பாஸ்ட் பவுலர், கூடவே பிங்கர் ஸ்பின்னும் போடுவார், ரிஸ்ட் ஸ்பின்னும் போடுவார். மிகப்பெரிய ஆல்ரவுண்டர் என்பார்கள். இப்ப இருக்கிற இம்ரான், கபில், ஹேட்லி, போத்தம் எல்லோரும் முதல்ல பவுலர்கள் அடுத்துத்தான் பேட்ஸ்மென்கள். ஆனா சோபர்ஸ் முதல்ல உலகத்தரமான பேட்ஸ்மென், அடுத்து பவுலர். பேட்டிங்குக்கு பெஞ்ச் மார்க் பிராட்மென்னா ஆல்ரவுண்டர்க்கு பெஞ்ச் மார்க் சோபர்ஸ் என்பார்கள். அப்போது ஒரு முதல் தர கிரிக்கெட் போட்டியில் ரவி சாஸ்திரி ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்ததைப் பற்றி வர்ணனையாளர்கள் சொல்லும் போதெல்லாம் சோபர்ஸின் சாதனையை சமன் செய்த சாஸ்திரி என்றே சொல்வார்கள். முதன்முறையாக ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்தது சோபர்ஸ் தான். ரிச்சர்ட்ஸ் காலம் முடிந்து, லாராவின் காலம் அப்போது ஆரம்பமாகியிருந்தது. ஆப் ஸ்டம்பிற்குச் சற்று தள்ளி விழுகும் பந்துகளை ஒரு பேக்லிப்ட் கொடுத்து ஒரு ட்ரைவ் ஆடுவார். டிபிகல் கரீபியன் ஸ்டைல் என்பார்கள். அந்தக்காலத்தில் இருந்து அப்போது வரை வர்ணணையாளராக இருந்த டோனி கோசியர், அப்படியே சோபர்ஸ் ஆடும் டிரைவ் போல இருக்கிறது என்றார். இன்னும் ஆர்வம் அதிகமானது சோபர்ஸ் பர்றி அறிய. அந்தக் கால கட்டத்தில் எப்போதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் பழைய கிளிப்பிங்குகளை போடுவார்கள். அதில் அரிதாகத்தான் சோபர்ஸின் ஆட்டங்கள் இடம்பெறும். அதில் இடம்பெற்ற பலரின் பேட்டிகள் மூலமாகத்தான் சோபர்ஸின் ஆளுமை அறிய வந்தது. சோபர்ஸ் அணிக்குள் நுழைந்த போது அவருக்கு 16 வயது தான்.ஓங்கி வளர்ந்த உருவம். முதலில் பந்து வீச்சாளராகத்தான் இடம் பிடித்தார். அப்போதைய கேப்டனுக்கு ஏற்பட்ட காயத்தால் துவக்க ஆட்டக்காராக இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய அணியில் மூவேந்தர்களாக இருந்தவர்கள் த்ரி டபிள்யூஸ் என அழைக்கப்பட்ட ப்ராங்க் வோரல், எவர்டன் வீக்ஸ், வால்காட். அணியில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடத்தில் இறங்குவார்கள். சோபர்ஸின் ஆட்டம் அவர்களுக்கு இணையாகத் தென்பட ஆரம்பித்ததும் அணியின் நிரந்தர உறுப்பினராக மாறினார். அதுவரை ஆங்கிலேயர்கள் கேப்டனாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதன் முறையாக மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த பிராங்க் வோரல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்வு சோபர்ஸ்க்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது எனலாம். அவர் சோபர்ஸின் நண்பர் என்பதும் இன்னொரு காரணம். இந்த சமயத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என எல்லா நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிராங்க் வோரல் ஓய்வு பெற, மூவேந்தர்களில் மற்ற இருவரான வால்காட், வீக்ஸ் தங்கள் கேரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்க, சோபர்ஸ் கேப்டனானார். துணைக்கு சோபர்ஸ் அறிமுகமான காலகட்டத்தில் அறிமுகமான இன்னொரு மிகச்சிறந்த பேட்ஸ்மெனான ரோஹன் கன்ஹாய் இருக்க கேப்டனாக சோபர்ஸின் பயணம் தொடங்கியது. முதன்முறையாக ஆஸ்திரேலியாவை மேற்கிந்திய தீவுகள் ஒரு டெஸ்ட் தொடரில் வென்றது சோபர்ஸ் கேப்டனான பிறகுதான். அடுத்து இங்கிலாந்திற்குப் பயணம் செய்து அங்கும் தொடரை வெற்றி கண்டார். 5 டெஸ்ட்களில் 700க்கும் அதிகமான ரன்கள், 20 விக்கெட்டுகள்,10 கேட்சுகளைப் பிடித்து ஒரு கம்ப்ளீட் ஆல்ரவுண்டராக ஜொலித்தார். பிரிட்டன் பத்திரிக்கைகள் அவரை கிங் கிரிக்கெட் என வர்ணித்தன. அதன்பின் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து இங்கேயும் வெற்றி. ஆனால் அதன்பின் அவ்வளவாக வெற்றிகள் கிட்டவில்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா என பல இடங்களில் மேற்கிந்திய அணி தோற்றது. ஒரு கட்டத்தில் ரோஹன் கன்ஹாய் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். சோபர்ஸ் பின் 1974ல் ஓய்வு பெற்றார். அணித்தலைமை கிளைவ் லாயிடுக்கு வந்தது. அந்த காலகட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு வலுவான வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைத்தார்கள். ஆண்டி ராப்ர்ட்ஸ், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், கோலின் கிராப்ட் என எதிரணி கொஞ்சம் கூட ரிலாக்ஸ் ஆகாமல் பந்துவீசக்கூடிய ஒரு கூட்டணி அமைந்தது. பேட்டிங்கில் பெரும்பலமாய் விவியன் ரிச்சர்ட்ஸ். இரண்டு உலக கோப்பைகள், பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் தொடரை இழக்காமல் ஆதிக்கம் செய்த ஒரு அணி உருவானது. இம்மாதிரி ஒரு அணி உருவாக சோபர்ஸின் காலகட்டம் ஒரு காரணமாக இருந்தது. சோபர்ஸ் அணிக்கு வருமுன் ஆஸ்திரேலியாவை வெல்லாத ஒரு அணியாகத்தான் மேற்கிந்திய அணிகள் அணி இருந்தது. பிராட்மென் தலைமையிலான இன்வின்சிபிள்ஸ் 1948 வரை எல்லாரையும் விரட்டி விரட்டி அடித்து வந்தார்கள். அவரின் ஓய்வுக்குப் பின் கிரிக்கெட்டில் ஒரு சமநிலை தோன்றியது. பின் மேற்கிந்திய அணி வளர்ந்து ஆஸ்திரேலிய அணிக்குச் சமமாய் சோபர்ஸ் காலத்தில் நின்றது. ஆனால் உலக கிரிக்கெட் அரங்கை ஆட்சி செய்ய முடியவில்லை. சோபர்ஸ், கன்ஹாய் இருந்தும் எதிரணியை அச்சுறுத்தக் கூடிய பந்து வீச்சாளர்கள் இல்லாதது ஒரு காரணமாய் இருந்தது. ஆனால் சோபர்ஸ் தன் ஆட்டக்காரர்களுடன் தொடர்ந்து வெளிப்படுத்திய ஆட்டம் பல திறமைகள் மேற்கிந்திய தீவுகளில் உருவாக காரணமாய் அமைந்தது. அடுத்த 15 ஆண்டுகள் உலக கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவு அணி சிம்மாசனம் போட்டு அமர சோபர்ஸ் ஏற்படுத்திய ஈர்ப்பு ஒரு காரணம் எனலாம். 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்களை தேர்ந்தெடுக்க விஸ்டன் ஒரு தேர்தலை நடத்தியது. கிரிக்கெட்டில் மதிக்கத்தக்க 100 பெருந்தலைகள் ஓட்டளித்தனர். அதில் பிராட்மென் 100 ஓட்டுக்களும் சோபர்ஸ் 90 ஓட்டுக்களையும் பெற்றனர். அடுத்த வந்த மூவர் ஜாக் ஹாப்ஸ், வார்னே, ரிச்சர்ட்ஸ். இவர்கள் மூவருமே முப்பதிற்குள் தான் ஓட்டு வாங்கியிருந்தனர். இதில் இருந்தே சோபர்ஸின் ஆட்டத்திறமையை அறிந்து கொள்ளலாம்.

பிராட்மென்

1983ல் மேற்கு இந்திய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்திருந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்று, தன் அந்தஸ்தை கொஞ்சம் இழந்திருந்ததால் வெறியுடன் விளையாடினார்கள். ஆறு டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் 5 டெஸ்ட்களில் மூன்றில் வெற்றி பெற்று 3-0 என்று தொடரையே வெற்றி கண்டு, ஆறாவது டெஸ்டை விளையாட சென்னைக்கு வந்தார்கள். யார் வெற்றி பெறுவார், யார் நன்றாக ஆடப்போகிறார்கள் என யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. டெட் ரப்பர் என்ற அடைமொழியோடு அந்த மேட்ச் துவங்கியது. மேற்கு இந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும்,இந்தியாவின் பேட்டிங் தொடங்கியது. அந்த இன்னிங்ஸில் கவாஸ்கர், சதமடித்ததும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்ல, உலக கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் ஒரு அதிர்வு பரவியது. அவர் செய்தது மிகப்பெரிய சாதனை அல்ல. தன்னுடைய 30வது சதத்தை அடித்தது தான். இன்று அது இன்னும் மிகச் சாதாரணமாகத் தெரியும். ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், ட்ராவிட், லாரா , ஹாசிம் ஆம்லா என ஏராளமானவர்கள் 30 சதங்களுக்கு மேல் அடித்து விட்டார்கள். ஆனால் அன்று கவாஸ்கர் பெயர் உலகமெங்கும் உச்சரிக்கப்படக் காரணம், இன்றளவும் உலகின் சிறந்த பேட்ஸ்மெனாக எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் பிராட்மெனின் சாதனையை அவர் தாண்டியது தான். கவாஸ்கர் அந்த சாதனையை செய்தாலும், யாரும் அவரை பிராட்மனுடன் ஒப்பிடவில்லை. அதை ஒரு வரலாற்று சம்பவமாகத்தான் பார்த்தார்கள். கவாஸ்கர் மட்டுமல்ல அதற்குப் பின் நிறைய மகா பேட்ஸ்மென்கள் வந்து விட்டார்கள். யாரையும் பிராட்மெனுடன் ஒரே தராசில் கிரிக்கெட் உலகம் நிற்க வைக்கவில்லை. அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் தன்னுடைய ஆட்டத்தால், அசைக்க முடியாத யாரும் நெருங்க முடியாத ஆளுமையாய் இருப்பவர் பிராட்மென். பிராட்மென் தன் இரண்டாம் டெஸ்டில் சதமடித்தார். அதில் இருந்து 20 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தார். அந்த 20 ஆண்டுகளும் அவருடைய பார்ம் குறையவே இல்லை. அப்போது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள் எனில் கிரிக்கெட் ஆட்டத்தை உருவாக்கிய இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் என பிளவுபடாத பிரிட்டிஷ் கால இந்தியா. இவற்றுடன் மட்டுமே தன் 52 டெஸ்டுகளை விளையாடினார். அதில் அப்போதைய சிறந்த அணியான இங்கிலாந்துடன் தான் 75% மேட்சுகளை விளையாடியுள்ளார். அப்போது டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்த அணியான நியூசிலாந்துடன் இவர் ஆடவேயில்லை. எங்களுடன் விளையாடும் அளவிற்கு நீங்கள் இல்லை என்று ஆஸ்திரேலிய போர்டு மறுத்ததும் உண்டு. தேவையான அளவிற்கு வீரர்களுக்கு தர வேண்டிய அலவன்ஸ் கொடுக்காததாலும் என்று சொல்வார்கள். பிராட்மென் குவித்த ரன்களை விட, அவர் அதை எடுக்க எடுத்துக் கொண்ட நேரமே எதிர் அணிகளை கலங்கடித்தது. டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே விக்கெட்டை காப்பாற்ற எல்லோரும் முனையும் நேரத்தில் அனாயாசமாக அடித்து ஆடியவர் பிராட்மென். அவர் வேகமாக ரன் குவிப்பது, ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களுக்கு எதிர் அணி விக்கெட்டுகளை எடுக்க அதிக நேரத்தைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் இதனால் ஆஸ்திரேலியா தோல்வியே அடையாமல் வெற்றி மேல் வெற்றி பெற தி இன்வின்சிபிள்ஸ் என்ற பட்டத்தையும் இவர் காலத்திய அணி பெற்றது. இதனால் தான் ஒரு நாள் போட்டிகள் துவங்கிய பொழுதில், நல்ல வேளை பிராட்மென் இப்போது இல்லை. இருந்திருந்தால் ஒரு பந்து வீச்சாளர் இத்தனை ஓவர் தான் வீச வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்திருப்பதைப் போல ஒரு பேட்ஸ்மென் இத்தனை ஓவர்தான் விளையாட வேண்டும் என்ற விதியைக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.அந்த அளவிற்கு ஆட்டத்திறனும் சரி, விரைவாக ரன் எடுக்கும் திறனும் கொண்டவர் பிராட்மென். இங்கிலாந்து அணிக்கு, தீராத தலைவலியாய் இருந்தவர் பிராட்மென். இந்த ஒத்த ஆள் இல்லாட்டி நாம ஈசியா ஜெயிச்சுடலாம் என்றே அப்போது சொல்வார்கள். அவரை அவுட்டாக்க இங்கிலாந்து அணி ஒரு பிரத்யேக வியூகமே அமைத்தது. அதுதான் பாடிலைன் அட்டாக். ஸ்டம்புக்கு போட்டா அடிக்கிறார், ஸ்டம்புக்கு வெளியே போட்டா உக்கிரமா அடிக்கிறார். ஒரே வழி, பவுன்சர்களா நெஞ்சுக்கு போட வேண்டியது தான் என்ற வியூகத்துடன் களமிறங்கினர் இங்கிலாந்து அணியினர். அந்தத் தொடர் தான் வரலாற்றில் பாடிலைன் சீரிஸ் என அழைக்கப்படுகிறது. இதில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து ஆடினார் பிராட்மென். பிராட்மென் தன் முதல் டெஸ்டில் குறைந்த ரன்களே எடுத்தார். தன் கடைசி டெஸ்டை ஆட அவர் களத்தில் இறங்கிய போது, அவரின் டெஸ்ட் சராசரி 100 க்கு மேல் இருந்தது. நான்கு ரன்கள் எடுத்தால் போதும். அவர் தன் சராசரியாக 100 என்ற மேஜிக்கல் நம்பருடன் ஓய்வு பெற்றிருப்பார். ஆனால் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற, இன்னொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பிராட்மெனின் சராசரி 99.94 ஆனது. அவர் ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னும் அவரின் சராசரியை நெருங்க யாரும் பிறந்து வரவில்லை. அடுத்த சராசரியாக 63 தான் உள்ளது. சச்சின் டெண்டுல்கர் 90களின் ஆரம்பத்தில் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது, சில ஷாட்கள் பிராட்மென் போலவே ஆடுகிறார் என்றார்கள். சச்சினும் தன் ஆஸ்திரேலிய பயனத்தில் பிராட்மெனை சந்தித்தார். அப்போது பிராட்மென், என்னைப் போலவே சில ஷாட்கள் ஆடுகிறீர்கள் எனச் சொல்ல, சச்சினுக்கு அது மிகப்பெரிய அங்கீகாரமானது. சச்சினுமே, தான் வாங்கிய எல்லா விருதுகளையும் விட பிராட்மெனின் அந்த வார்த்தைகளைத் தான் பெரிதாய் நினைத்திருப்பார். உலகில் உள்ள எல்லா கிரிக்கெட் வீரர்களுக்குமே அவரிடம் அளப்பரிய பக்தி உண்டென்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலிய கேப்டன் மார்க் டெய்லர், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் தான் 334 ரன்களை எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்தார். ஏனென்றால் பிராட்மெனின் அதிகபட்ச ரன்னை தான் தாண்டிவிடக் கூடாதென. பிராட்மென் காலம் தொட்டு,ஆஸ்திரேலிய அணி இன்றளவும், அசைக்க முடியாத யாரும் சுலபமாக வெற்றி கொண்டுவிட முடியாத அணியாக இருந்து வருகிறது. அதற்குப் பின்னால் பிராட்மெனின் அளப்பரிய சாதனை இருக்கிறது. இப்பேர்பட்ட பிளேயர் இருக்கும் போது, நாம் எப்படி ஆட வேண்டும் என சக வீரர்களுக்கு பெரும் உந்துதலாக இருந்தவர் பிராட்மென். பின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் நாம் பிராட்மென் ஆடிய டீமில் விளையாடுகிறோம், அசால்டாய் ஆடி விடக்கூடாது என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இருந்து கொண்டே இருக்கும். பிராட்மென் ஆடத்துவங்கிய காலம் தொட்டு இன்று வரை ஆல் டைம் உலக லெவன் அணி போடுகிறவர்கள் யாருமே பிராட்மென் பெயரை விட்டு விட்டு போட்டதில்லை. இனியும் போட மாட்டார்கள். எத்தனையோ பேர் அதில் மாறி மாறி வந்தாலும், பிராட்மென் பெயர் அங்கே நிலையாகத்தான் இருக்கும். விஸ்டன் பத்திரிக்கை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களுக்கான கருத்துக் கணிப்பை 100 சிறந்த கிரிக்கெட் வீரர்களிடம் நடத்திய போது 100 பேருமே பிராட்மெனுக்கு தங்கள் வாக்கைச் செலுத்தினார்கள். பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் பாடத்தின் முதல் வகுப்பு. ஆசிரியர் உள்ளே நுழைந்ததும் சம்பிரதாயமாக எல்லோருடைய பெயரையும் கேட்டுவிட்டு, வகுப்பை ஆரம்பித்தார். இயற்பியலுக்கு அடிப்படை அலகுகள் நீளம், நிறை, காலம் இது மாதிரி ஏழு இருக்கு. அதில் நீளம் பற்றிப் பார்ப்போம் எனச் சொல்லிவிட்டு, இப்ப ஒரு மீட்டர்ங்கிறாங்க, அந்த மீட்டர் எவ்வளவு நீளம் இருக்கணும்னு ஒரு கணக்கிருக்கும்ல? அதுக்காகவே ஒரு ஸ்டாண்டர்டான தூரத்தை உருவாக்கி வச்சிருப்பாங்க. காலகாலத்துக்கும் ஒரு மீட்டர் தூரம்னா அதுதான். இதே மாதிரி மத்ததுக்கும் உண்டு என அவற்றை விளக்கி முடித்தார், மனதிலேயே தங்கிவிட்ட முதல் வகுப்பு அது. எப்போதாவது அனிச்சையாக அந்த வகுப்பின் ஞாபகம் வரும். அப்போதெல்லாம் பிராட்மெனின் ஞாபகம் வரும். கிரிக்கெட் பேட்ஸ்மென்களுக்கு இது போல் ஒரு ஸ்பெசிமன் மாடல் உண்டு என்றால் அது இவராய்த்தான் இருக்க முடியும் என்று தோன்றும். அவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து, இன்று வரை, ஒரு பேட்ஸ்மென் சிறப்பாக ஆடிவிட்டால், சிறப்பாக என்று சொல்லக்கூடாது மிக மிகச் சிறப்பாக ஆடினால் அடுத்த பிராட்மெனா இவர்?, சேச்சே அவர் கூடல்லாம் கம்பேர் பண்ண முடியுமா என்று சொல்லும் அளவில் தான் இருக்கிறதே தவிர பிராட்மெனை மிஞ்சிவிட்டார் இவர் என்று யாரும் சொல்வதில்லை. அந்த அளவிற்கு கிரிக்கெட் பேட்ஸ்மென்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க்காக, எட்டத்துடிக்கும் சாதனை எல்லையாக விளங்கிக் கொண்டிருக்கிறார் டொனால்ட் பிராட்மென்.

கிளைவ் லாயிட்

1971ல் தான் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது எனலாம். ஆஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஒன்று, முதல் மூன்று நாட்களுக்கு மழையால் தடைப்பட, வந்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க, ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள் எனக் கொண்டு அணிக்கு தலா நாற்பது ஓவர்கள் என நிர்ணயம் செய்து கொண்டு ஒரு போட்டி நடத்தப்பட்டது. இது நல்லாயிருக்கே என எல்லோருக்கும் தோன்றியது. ஏனென்றால் அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பார்வையாளர்கள் குறைந்து கொண்டிருந்த காலம். இப்படி ஒரே நாளில் மேட்ச் முடிந்தால் எல்லோருக்கும் நல்லதே எனத் தோன்ற அடுத்தடுத்த வருடங்களில் ஒவ்வொரு நாடாக நாங்களும் ஆட்டைக்கு வரலாமா என சேர்ந்து கொள்ள, 1975ல் உலக கோப்பை போட்டி ஒன்றை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. அந்தப் போட்டித் தொடரில் கலந்து கொண்ட அணிகள் எல்லாமே அதற்கு முன்னால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருந்தன. வெற்றிக்கான சூத்திரம் எது என யாருக்கும் தெரியாது. சில அணிகள் இதை டெஸ்ட் மேட்ச் போலவே ஆடின. குறிப்பாக இந்தியா. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் கவாஸ்கர் 174 பந்துகளைச் சந்தித்து 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் பெவிலியனுக்கு வந்தார். அந்த போட்டியில் இந்தியா 202 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அடுத்த நாள் டீம் மைதானத்திற்குச் செல்லாமல் ஹோட்டலிலேயே இருந்த போது, கவாஸ்கர், அணி மேனேஜரிடம் என்ன நாம இன்னும் மேட்ச்சுக்கு கிளம்பலை? எனக் கேட்டதாக கிண்டலாகச் சொல்வார்கள். அப்படியாப்பட்ட காலகட்டத்தில், பைனலுக்கு ஆஸ்திரேலிய அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் தகுதி பெற்று வந்தன. முதலில் மேற்கு இந்திய தீவு அணியின் பேட்டிங். 50 ரன்களுக்கு மூன்று விக்கெட் விழுந்த நிலையில் இறங்கினார் அவர். ஆறே கால் அடிக்கு மேல் உயரம். அதற்கேற்ற வலுவான உடல்கட்டு. அந்த உயரத்தால் லேசான கூன் விழுந்தாற் போன்ற நடை. மனதில் ஓடும் உணர்ச்சிகளை எளிதில் வெளிக்காட்டா முகம். தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். 85 பந்துகளில் 102 ரன்கள். ஆஸ்திரேலியாவை வெல்வதற்கு ஏற்ற ஸ்கோர் கிடைத்தது. மேற்கு இந்திய தீவு பந்துவீச்சாளர்கள் காரியத்தை கச்சிதமாக முடிக்க மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை வரலாற்றில் முதல் கோப்பையை வென்றது. லார்ட்ஸ் பால்கனியில் அந்த கோப்பையை வாங்கினார் சதமடித்த வீரரும் மேற்கிந்திய அணி கேப்டனுமான கிளைவ் லாயிட். அது தான் ஆரம்பம். அதில் இருந்து 10 வருடங்கள் கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக மேற்கு இந்திய தீவுகள் அணி விளங்கியது. சில திரைப் படங்களுக்கு முன்னர் சொல்வார்கள். படம் கன்பார்ம் ஹிட்தான். சூப்பர் ஹிட்டா, பிளாக் பஸ்டரா என்பது தான் கேள்வி என. அது போல மேற்கு இந்திய தீவுகள் அணி அப்போது களமிறங்கினாலே வெற்றி தான். எத்தனை ரன் வித்தியாசத்தில் அல்லது எவ்வளவு விரைவாக மேட்ச் முடியும் என்பது தான் கேள்வி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா உடனான டெஸ்ட் போட்டிகளை எல்லாம் எதிராளியின் மண்ணிலேயே போய் வெற்றி கண்டு வந்தது மேற்கிந்திய தீவுகள் அணி. தொடர்ந்து 27 டெஸ்ட் மேட்சுகளைத் தோற்காமல் வெற்றி நடை போட்டது. அடுத்த மகுடமாக 1979 உலக கோப்பையையும் மேற்கு இந்திய தீவுகளுக்கு லாயிட் பெற்றுத் தந்தார். 1983 உலக கோப்பையும் ஒரு அதிசயத்தால் அவருக்கு கிட்டாமல் போனது. எம்ஜியார் இறந்ததை எப்படி பல கிராம மக்கள் நம்பவில்லையோ அது போல மேற்கிந்திய தீவு அணியின் அந்த தோல்வியையும் உலகமே நம்பவில்லை. அந்த அளவிற்கு மேற்கிந்திய தீவுகள் அணியை உயர்த்தி வைத்திருந்தவர் தான் கிளைவ் லாயிட். கிளைவ் லாயிட் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு உள்ளே மிடில் ஆர்டர் பேட்ஸ்மெனாக வந்த காலத்தில் உலகின் சிறந்த ஆல் ரவுண்டர் கேரி சோபர்ஸ் அணித் தலைவர். உடன் ரோஹன் கன்ஹாய் என்ற சிறந்த பேட்ஸ்மெனும் இருந்தார். அவரின் ஆட்டத்தால் கவரப்பட்டுத்தான் கவாஸ்கர் தன் மகனுக்கு ரோகன் எனப் பெயரிட்டார். கிளைவ் லாயிட் ஒரு ஸ்டைலிஷான பேட்ஸ்மென் கிடையாது. ரசிக்க வைக்கும் புட் ஒர்க்கோ, ’அட’ போட வைக்கும் ரிஸ்ட் ஒர்க்கோ கிடையாது. அவரின் பெரும்பாலான ரன்கள் லெக் சைடில் தான் எடுக்கப்பட்டிருக்கும். லெக் அண்ட் மிடில் ஸ்டம்புக்கு வரும் பந்துகளை, காலை முன் நகர்த்தி மிட் விக்கெட்டிலோ, மிடானிலோ அடிப்பார். அவரின் ஆகிருதிக்கும் பலத்திற்கும் பந்து தெறித்து ஓடும். அவரின் உயரத்திற்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை அசால்டாக புல் மற்றும் ஹூக் செய்வார். ஆப் சைடில் பெரும்பாலும் மிட் ஆபில் அடிப்பார். ஸ்கொயர் கட், கவர் ட்ரைவ் போன்றவற்றை அதிகம் செய்ய மாட்டார். அதனால் பார்த்து பார்த்து ரசிக்கும் படி அவரின் ஆட்டம் இருக்காது. ஆனால் அவரின் ஷாட்கள் எல்லாம் பவர்புல்லாக இருக்கும். மைதானத்தில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் விளாசும் சத்தம் கேட்கும். மிடில் ஆர்டரில் கிளைவ் லாயிட் ஒரு டிபெண்டபிள் பேட்ஸ்மென். தன் விக்கெட்டின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த பேட்ஸ்மென். தேவையில்லாமல் அவுட் ஆக மாட்டார். பல இக்கட்டான சூழ்நிலைகளில் நிலைத்து நின்று ஆடி அணியைக் கரை சேர்ப்பார். கிளைவ் லாயிட் ஆடிய காலத்தில் ஆஸ்திரேலியாவில் ஸ்விங் கிங் டென்னிஸ் லில்லி, வேகப்பந்து வேதாளம் ஜெப் தாம்சன் இருந்தனர். பாகிஸ்தானில் சர்பராஸ் நவாஸ், இம்ரான் கான் இருந்தனர். இங்கிலாந்தில் போத்தம், பிரிங்கிள் இருந்தனர். நியூசிலாந்தில் ஹேட்லி, இந்தியாவில் கபில்தேவ் இருந்தனர். அத்தனை முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர்களின் நாட்டிலேயே ஸ்கோர் செய்துள்ளார் லாயிட். ஸ்விங் பவுலர்களை திறம்பட எதிர் கொள்வார். மேற்கு இந்திய தீவுக்காக 100 டெஸ்ட்கள் முதலில் ஆடிய வீரர் கிளைவ் லாயிட் என்பதிலேயே அவர் எந்த அளவிற்கு அணிக்குத் தூணாக விளங்கியிருக்கிறார் என அறிந்து கொள்ளலாம். கிரிக்கெட் வீரர்களில் சிலர் நடிகர்களைப் போல இருப்பார்கள். சிலர் பெரிய மீசை வைத்து மாபியா டான் போல இருப்பார்கள், சிலர் மேனேஜர்களைப் போல் இருப்பார்கள். சிலர் தங்கள் பாடி லாங்வேஜ், செயல்பாடுகள் மூலம் காமெடியன் போலத் தெரிவார்கள். முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் கிரெய்க் மாத்யூஸைப் பார்த்தால் காமெடியன் போல இருப்பார். கிளைவ் லாயிட் ஒரு மிடுக்கான ராணுவ உயர் அதிகாரி போல இருப்பார். இவர் கிரிக்கெட் பிளேயரா இல்லை, வி ஆர் எஸ் வாங்கி வந்த மேஜர் ஜெனரலா என்றுதான் பார்க்கும் போது தோன்றும். அணி வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தாலும் சரி, தோல்விப் பாதையில் இருந்தாலும் சரி முகத்தில் எந்த உணர்ச்சியுமின்றி களத்தில் இருப்பார். உடன் இன்னும் எதுவும் நடக்கவில்லை, நாம விளையாட்டை தொடர்ந்து ஆடுவோம் என்ற எண்ணமே அவர் முகத்தையும், உடல் மொழியையும் பார்த்தால் தோன்றும். பேட்ஸ்மென் கிளைவ் லாயிடை விட கேப்டன் கிளைவ் லாயிட்தான் எல்லோரையும் கவர்ந்தவர். இன்று வரை கூட மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் என்றாலே எல்லோருக்கும் கிளைவ் லாயிடின் முகமே ஞாபகம் வரும் அளவிற்கு முத்திரையைப் கிளைவ் லாயிட் கேப்டன்ஷிப்பில் அதிரடி வியூகங்கள், குயுக்திகள் இதெல்லாம் இருக்காது. எதிரணி பேட்ஸ்மென்களுக்கு எப்படி வியூகம் அமைப்பது, எதிரணி பவுலர்களுக்கு ஏற்ப அணி பேட்டிங் ஆர்டரை எப்படி மாற்றுவது போன்ற சிந்தனைகள் எல்லாம் இருக்காது. மேற்கிந்திய தீவுகள் அணி லாயிட் தலைமையில் களம் காணுவதே எதிர் அணிக்கு ஒரு கலக்கத்தைத் தரும். ஒரு ராணுவ அணிவகுப்பு போல மேஜர் ஜெனரல் கிளைவ் லாயிட் தலைமையில் அணியினர் உள்ளே வருவார்கள்.எதையும் தகர்க்கும் பீரங்கிப்படை போல வேகப்பந்து வீச்சாளர்கள் துடிப்போடு உள்ளே வருவார்கள். கிளைவ் லாயிடுக்கு அமைந்த வீரர்களைப் போல யாருக்கும் அமைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒரு மேஜர் ஜெனரலுக்கு வீரர்கள் அமைவதா ஆச்சரியம்? பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சில காலம் சலீம் மாலிக் இருந்த போது, அவர், உலகின் தலை சிறந்த இரண்டு பந்து வீச்சாளர்கள் (வாசிம் அக்ரம் & வக்கார் யூனிஸ்) எனக்காக விளையாடும் போது எனக்கென்ன கவலை என்பார். அப்படிப் பார்த்தால் கிளைவ் லாயிடுக்கு, உலகின் தலை சிறந்த பேட்ஸ்மென் ரிச்சர்ட்ஸ், எந்த அணியிலும் இடம் பிடிக்கும் அளவிற்கு ஆடக்கூடிய சிறந்த பேட்ஸ்மென்களான ராய் பிரடெரிக்ஸ், ஆல்வின் காளிச்சரண், கார்டன் கிரினீட்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் அகியோர்அவர் அணியில் ஆடினார்கள். இம்மாதிரி பேட்ஸ்மென்கள் கூட ஒரு கேப்டனுக்கு அமைவார்கள். அதற்கு முன்னர் கேரி சோபர்ஸ்க்கு கூட அப்படியாப்பட்ட பேட்ஸ்மென்கள் கிடைத்திருந்தார்கள். ஆனால் லாயிடுக்கு அமைந்தது மாதிரி வேகப் பந்து வீச்சாளர்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. மைக்கேல் ஹோல்டிங்,ஜோயல் கார்னர்,ஆண்டி ராபர்ட்ஸ், கோலிஸ் கிங், மால்கம் மார்சல் என எவ்வளவு பெரிய பேட்ஸ்மென்கள் உள்ள அணியையும் ஆட்டி வைக்கக் கூடிய பந்து வீச்சாளர்கள். இந்த வேகப் பந்து படையால் டெஸ்ட் அரங்கில் வீழ்த்த முடியாத அணியாக விளங்கியது. சிவாஜி கணேசன் நடித்த ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படம். அதன் இயக்குநர் கே சங்கர். படத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம் பெரிய ஜாம்பவான்கள். சந்திரபாபு, தேவிகா, பி எஸ் வீரப்பா, சித்தூர் நாகையா, ஏ வி எம் ராஜன். இசை விஸ்வநாதன் ராம மூர்த்தி, பாடல்கள் கண்ணதாசன் என சொல்லிக் கொண்டே போகலாம். படத்தில் சிவாஜி கணேசன் கல்லூரி பேராசிரியர். அவர் கல்லூரிக்கு நடந்து போகும் போது டைட்டில் கார்ட் போடுவார்கள். ட்ராபிக் போலிஸ்காரர் ஸ்டாப் என்ற சின்ன போர்டை காட்டும் போது இயக்கம் கே சங்கர் எனப் போடுவார்கள். என்னய்யா இது வித்தியாசமா இருக்கே எனக் கேட்ட போது, இயக்குநருக்கு பெரிய வேலை இல்லை. இவர்களின் பெர்பார்மன்ஸை கண்ட்ரோல் செய்தால் போதும். எனவே அந்த இடத்தில் தன் பெயரைப் போட்டுக் கொண்டார் என்பார்கள். போலவே கிளைட் லாயிடுக்கும் தன் அணி வீரர்களை பெர்பார்மன்ஸை கண்ட்ரோல் செய்தால் போதும் என்ற நிலையே இருந்தது. நீ பந்து போட்டது போதும். ரெஸ்ட் எடு. அடுத்த ஆள் வா என்பது தான் அவர் கேப்டன்சி. அதுவே வெற்றிகளைக் குவிக்க போதுமானதாக இருந்தது. பள்ளி, கல்லூரிகளில், வேலை இடங்களில் இருப்பவர்களில் சிலர், எல்லோருடனும் இனிமையாகப் பழகி கவர்ந்திழுக்கும் தன்மையுடன் இருப்பார்கள். சிலர் எல்லோரையும் விட மிகுந்த திறமைசாலியாக இருப்பார்கள், இதனால் அவர்கள் அங்கே பெயர் பெற்று விளங்குவார்கள். ஆனால் சிலர் தொடர்ந்து தங்கள் கடின உழைப்பை தந்து கொண்டிருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் மனதைத் தளரவிடாமல் தங்கள் பணியைச் செய்து கொண்டேயிருப்பார்கள். முதலில் அவர்களுக்கு எந்தப் பெயரும் கிடைக்காது. நாளடைவில் அவர்களின் மீது ஒரு நம்பிக்கை எல்லோருக்கும் உருவாகும். அந்த நம்பிக்கை அவர்களுக்கு எல்லாவிதமான ஏற்றங்களையும் தரும். ஏனென்றால் ஒருவரால் ரசிக்கப்படுவதை விடவும் ஒருவரின் நம்பிக்கையைப் பெறுவது என்பது பெரிய விஷயம். அது போல சூப்பர்ஸ்டார்கள் நிறைந்த மேற்கு இந்திய தீவு அணியில் எல்லோரின் நம்பிக்கையையும் பெற்றவர் லாயிட். அந்த நம்பிக்கை தான் சோபர்ஸும், கன்ஹாயும் ஓய்வு பெற்ற உடன் கேப்டன் பதவியை தேடி வரச் செய்தது. அத்தனை வீரர்களையும் கட்டுக்கோப்பாக அவரின் பின்னே நிற்க அவரின் ஓய்வுக்குப் பிறகு, இண்டர்நேசனல் கிரிக்கெட் கவுன்சில் பல உயர் பதவிகளை அவருக்கு கொடுத்து அழகு பார்த்தது. இன்று வரை ஐ சி சி மேட்ச் ரெப்ரி, உயர் அதிகாரி என்றாலே பலருக்கும் கிளைவ் லாயிடின் முகம் தான் மனதில் வரும் அளவிற்கு அப்படி ஒரு ஆளுமையைக் கொடுத்தது அவரின் எந்த சூழ்நிலையிலும் தளராமல் தொடர்ச்சியாக தன் உழைப்பை கொடுத்துக் கொண்டே இருந்த பண்பும் அதனால் அவர் மேல் எல்லோருக்கும் ஏற்பட்ட நம்பிக்கையும் தான்.

தோனி

1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, இந்திய சுற்றுப்பயணம் வந்திருந்த நேரம். அந்த அணியில் அலெக் ஸ்டீவர்ட் விக்கெட் கீப்பர். அவர் அந்த அணியில் இருந்த எந்த பேட்ஸ்மெனுக்கும் குறைந்தவர் அல்ல. அப்போது நம்முடைய விக்கெட் கீப்பர் கிரண் மோர். அவரை அம்மாதிரி சொல்ல முடியாது. கடைசி வரிசை பேட்ஸ்மென்களைப் போல தான் அவர் ஆடுவார். அதற்கடுத்து வந்த நயன் மோங்கியா, சபா கரீம் ஆகியோரும் அப்படித்தான். அதற்கு முன்னராவது நம்மிடம் பேட்ஸ்மென்களுக்கு நிகராக ஓரளவாவது ஆடக்கூடிய விக்கெட் கீப்பர்கள் இருந்தார்கள். ப்ரூக் எஞ்சினியர் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென். துவக்க ஆட்டக்காரராகவும் இறங்குவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சராசரி 31 வைத்திருந்தார். அவருக்கு அடுத்து வந்த சையது கிர்மானியும் ஓரளவு சமாளிப்பார். அவரும் சில சதங்களும், அரை சதங்களும் எடுத்தவர். கபில்தேவ் 1983 உலககோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்களைக் குவித்த போது மறுமுனையைக் காத்தவர். இவர்களுக்கு அடுத்து யாரும் சோபிக்கவில்லை. சதானந்த் விஸ்வநாத் என்பவர் அதிரடியாக ஆடக்கூடியவர் என்று இறக்கினார்கள். அவரும் நன்றாக ஆடவில்லை. சந்திரகாந்த் பண்டிட் நல்ல பேட்ஸ்மென். ஆனால் விக்கெட் கீப்பிங் சுமார். தொடர்ச்சியாக நன்கு ஆடமாட்டார். 1986ல் இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் அவரை பேட்ஸ்மென் ஆகவே எடுத்தார்கள். கிரண் மோர் விக்கெட் கீப்பிங் நன்றாகச் செய்ததால் , பேட்டிங் சுமாராக இருந்தாலும், வேறு வழி இல்லாமல் பல ஆண்டுகளுக்கு அவரை இந்திய அணி வைத்துக் கொண்டது. இந்த சமயத்தில் எல்லாம் மற்ற அணிகளில் எல்லாம் அணிக்கு சிக்கலான சூழலில் கை கொடுக்கும் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் உருவாகிக் கொண்டே இருந்தார்கள். மேற்கு இந்திய தீவுகளில் ஜெப்ரி துஜான், நியூசிலாந்துக்கு இயன் ஸ்மித், பாகிஸ்தானில் மோயின் கான், இலங்கையில் பிரண்டன் குருப்பு, இவர் இரட்டை சதமெல்லாம் அடித்தார். அவருக்குப் பின்னர் அதிரடி ஆட்டக்காரர் கலுவிரதனா. ஆஸ்திரேலியாவில் சொல்லவே வேண்டாம். இயன் ஹீலி இருந்தார். அவர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கும் கடைசி வரிசை ஆட்டக்காரர்களுக்கும் இடையே பாலமாக இருப்பார். அது தவிர பந்து வீச்சாளர்களுக்கும் டிப்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார். வார்னே பந்து வீசும் போது, அருகில் ஸ்லிப்பில் நிற்கும் கேப்டன் டெய்லரிடம் கூட எதுவும் சொல்லாமல், நேராக வார்னேவிடம் சென்று இப்படி போடு என்பார். இந்த சமயத்தில் 1996ல் நடந்த ஒரு டெஸ்ட் மேட்சில் ஆஸ்திரேலிய தேர்வாளர்களைத் திட்டி ஸ்டேடியத்தில் பதாகைகள். காரணம் அடுத்து ஆஸ்திரேலியா போகும் தென் ஆப்பிரிக்க பயணத்திற்கு புது விக்கெட் கீப்பர் களமிறங்குவார் என்ற செய்தியே. ஹீலிய விடவா ஒரு கீப்பர் என யோசித்தவர்களை வாயடைக்கச் செய்தார் வந்த புது கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட். முதல் வரிசை பேட்ஸ்மென்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்குப் பின் தென் ஆப்பிரிக்க அணிக்கு மார்க் பவுச்சர், இலங்கை அணிக்கு குமார சங்காகரா என புதுப்புது பலம் கூடிக் கொண்டே இருந்தது. நமது நாட்டிலோ அப்படி ஒரு ஆள் கிடைக்காமல், ஒரு நாள் போட்டிகளை சமாளிக்க உலகத் தரமான பேட்ஸ்மென் ஆன ராகுல் ட்ராவிட்டை கீப்பர் ஆக்கினார்கள். டெஸ்ட் மேட்சுகளுக்கு வழக்கம் போல விஜய் தாகியா, தீப் தாஸ் குப்தா என சுமாரான கீப்பர்கள். இதெல்லாம் போதாது என பால்வாடியில் இருந்து நேரே கிரிக்கெட் கிரவுண்டுக்கு வந்தவரைப் போன்ற தோற்றம் கொண்ட பார்தீவ் பட்டேல் வேறு. இந்தச் சூழ்நிலையில் தான் ஒரு வீரன் இந்திய அணியின் உள்ளே வந்தான். அட்டகாச உடல்கட்டு. அதற்கு முன்னான இந்திய கீப்பர்கள் எல்லாம் பிள்ளைப் பூச்சிகளைப் போலத்தான் இருந்தார்கள். நன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி விடுதியில் அந்த வீரன் விளையாடிய ஆரம்ப மேட்சுகளில் ஒன்றைப் பார்க்கும் போது, கூட்டத்தில் ஒருவன் என்னடா இவன் டார்ஜான் படத்தில நடிக்கிறவன் மாதிரி இருக்கான் என்றே கமெண்ட் அடித்தான். நீள முடி, இறுகிய முகம், தீர்க்கமான கண்கள். வேறு யார்? மகேந்திர சிங் தோனி தான். முதலில் அவர் ஆடிய சில மேட்சுகளைப் பார்த்தவர்கள் பரவாயில்லைடா, கிர்மானிக்கு அடுத்து ஒரு நல்ல விக்கெட் கீப்பர் நமக்கு கிடைச்சுட்டான் என்றே நினைத்தார்கள். அடுத்தடுத்த மேட்சுகளில் தோனி காட்டிய விக்கெட் கீப்பிங் திறமை, பவுண்டரிகளை விளாசும் வேகம், விக்கெட்டுகளுக்கு இடையேயான ஓட்ட வேகம் என வெகு சீக்கிரமே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார் மகேந்திர சிங் தோனி. நமது அணியிலும் கில்கிறிஸ்ட், சங்காகரா போன்றோருக்கு இணையான ஒரு வீரன் தோன்றி விட்டான் எனவே அப்போது பலர் நினைத்தார்கள். அப்போது தெரியவில்லை தோனியிடம் அவர்களைத் தாண்டிய பண்புகளும் உண்டு என்றென. நிறையப் பேரை, 2005ல் தோனி, இலங்கை அணிக்கு எதிராக முதல் விக்கெட் விழுந்ததும் இறங்கி அடித்த 183 ரன்கள் தான் அவரின் பெரிய ரசிகராக மாற்றியிருக்கும்.ஆனால் அந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் சேஸிங்குகளில் அவர் காட்டிய அணுகுமுறை தான் எல்லோரின் மனதிலும் இடம் பெறச் செய்தது எனலாம். அதற்கு முன் இந்திய அனியின் ஒரு நாள் போட்டி சேஸிங்குகளில், ரவி சாஸ்திரி, கபில்தேவ் ஆடிய காலகட்டத்தில், நான்கு விக்கெட் விழுந்த உடன் இவர்கள் வந்து சில பல பவுண்டரிகளை அடிப்பார்கள். இவர்கள் ஆட்டமிழக்காவிட்டால் அணிக்கு வெற்றி. மாறாக ஆட்டமிழந்தால் அவ்வளவு தான். இவர்களுக்குப் பின்னால் இந்திய அணியின் நிலைமை இன்னும் மோசமானது. நான்கு விக்கெட்டுகள் விழுந்தால்,நடையைக் கட்டு வேற வேலை பார்க்கலாம் என ரசிகர்கள் கிளம்பி விடுவார்கள். யுவராஜ் சிங் வந்த பின்னர் இந்த நிலைமை கொஞ்சம் மாறியது என்றாலும் இவர் அவுட்டாயிட்டா என்ற கேள்வி இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் தோனி வந்த பின்னர் தான் இந்திய அணியின் தலைவிதி மாறியது. ஐந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் பரவாயில்லை தோனி பக்குவமாக ஒன்றிரண்டாக எடுத்து அடுத்து விக்கெட் விழாமல் ரன்னைச் சேர்த்து அணியைக் காப்பாற்றி விடுவார் எனப் பார்க்கும் அனைவருக்கும் தோன்றியது. ஆஹா. ஆஸ்திரேலிய மைக்கேல் பெவன் மாதிரி நமக்கும் ஒரு பினிசர் கிடைச்சாச்சு என அனைவருக்கும் ஒரு நம்பிக்கை தோனியின் பக்குவத்தால் ஏற்பட்டது. இந்தப் பக்குவம் தான் ஆதி காலத்தில் இருந்தே இந்திய அணியில் இல்லாதது. ஏன் பெரும்பாலான இந்தியர்களுக்கே இல்லாதது. அழுத்தத்தை உணர்ந்தால் அவர்களின் பெர்பார்மன்ஸ் குறையும். உணர்ச்சி வேகத்தில் தவறிழைப்பார்கள். இன்னும் கொஞ்சம் நேரம் இந்த நிலையைப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும், சமாளித்து விடலாம் என்றால், அந்த சமாளிக்கும் நேரம் பெருந் தொலைவாய்த் தோன்றும். எவ்வளவு நேரம் இப்படியே இருப்பது? செய் அல்லது செத்து மடி என இறங்கி காட்டு சுத்து சுத்துவார்கள். ஆனால் தோனியிடம் அந்தப் பொறுமையும் பக்குவமும் இருந்தது. அதுதான் 2007ல் இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே அடி வாங்கித் திரும்பிய போது, அடுத்து யார் கேப்டனாக ஆக வேண்டும் என்ற கேள்வி வந்த போது, கிரிக்கெட் வாரியத்திற்கும், அணியின் மூத்த வீரர்களுக்கும் தோனியின் பெயரை கொண்டு சேர்த்தது. அதற்குப் பின் நடந்தது வரலாறு. 20-20 உலக கோப்பையில் இந்திய அணியை வெற்றி பெற வைத்த உடன் தோன்றியது பாகிஸ்தானின் இம்ரான் கானைப் போன்ற ஒரு கேப்டன் நமக்கு கிடைத்து விட்டார் என. 1992 உலக கோப்பையில் அரை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல இருந்த வழி 90% அடைக்கப்பட்ட நிலையில், போராடி அணியை கோப்பையை வெல்ல வைத்த இம்ரானுக்கு இணையான ஒரு தலைமைப் பண்பு தோனியிடம் தென்பட்டது. எந்த சூழலிலும் அலட்டிக் கொள்ளாமல், அனைவரையும் அரவணைத்து அணியை நடத்திச் செல்லும் பாங்கை தோனியும் தொடர்ந்தார். அடுத்தடுத்த பல வெற்றிகள், ஒரு நாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, டெஸ்டில் முதலிடம் என தோனி காணாத சிறப்புகள் இல்லை. இந்திய அனியில் கவாஸ்கர், சச்சின், ட்ராவிட் என மாபெரும் பேட்ஸ்மென்கள் இருந்திருந்தாலும் இந்திய அணியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் அல்லது அதற்கு பண்பு/ மதிப்பு கூட்டும் செயலில் ஈடுபட்டவர்கள் என்றால் முதலில் ஞாபகம் வருவது கபில்தேவ். நம்மாலும் போராடி ஜெயிக்க முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர். அடுத்ததாக கங்குலி. நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தை அணியினருக்கு ஏற்படுத்தியவர். அடுத்ததாக தோனி. எதுவும் கடந்து போய் விடவில்லை. எல்லாம் இன்னும் நம் கைவசம் தான் இருக்கிறது. நமக்குத் தேவை பொறுமையும், விடாமுயற்சியும், நிதானமும் மட்டுமே என உணர்த்தியவர். தோனியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முதலில் உடல் ஆரோக்கியத்தைப் பேணி வலுவாக இருத்தல். வலுவாக இருக்கும் போதுதான் நம்மால் எதுவும் முடியும் என்ற எண்ணம் தோன்றும். வலு குறைய குறைய அந்த எண்ணமும் குறையும். இரண்டாவது எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் இருத்தல். உணர்ச்சி வசப்பட்டால் எதையும் சரியாக யோசித்து செயலாற்ற முடியாது. உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் முடிவுகளின் வெற்றி நிகழ்தகவு 50-50 தான். மூன்றாவது தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது, கீழே உள்ளவர்கள் தவறு செய்தாலும், அவர்களை சுடுசொற்களாலோ, உடல் மொழியாலோ காயப்படுத்தாமல் அதைச் சரிப்படுத்த முயல்வது, தொடர்ந்து ஊக்கப்படுத்துவது. நான்காவது, எல்லாத் திறமையும் நம்மிடம் இருக்காது. இல்லாத திறமைக்கு ஏங்கி நேரத்தை வீணடிப்பதை விட, நம்மிடம் இருக்கும் திறமையால் நமது குறிக்கோளை அடைவது எப்படி என சிந்தித்து செயல்படுவது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள், இந்திய அணியின் தூணாக இருந்து, இந்தியர்களின் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் குன்றாமல் பார்த்துக் கொண்டவர். எங்கிருந்து வந்தாலும் திறமையும், விடா முயற்சியும், பக்குவமும் இருந்தால் சாதித்து விடலாம் என ஏராளமானோருக்கு நம்பிக்கை ஊட்டியவர். இந்த சிச்சுவேசன்ல தோனி இருந்தா என்ன செஞ்சிருப்பார்னு யோசித்தாலே போதும் தப்பிச்சிடலாம் என்று யோசிக்கும் முறையை வழங்கியவர். மனித குலம், அவ்வப்போது தோன்றும் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் மூலம் உள் வாங்கும் கருத்துருக்களைக் கொண்டே தன் வாழ்வியலை மெருகேற்றிக் கொள்கிறது. அது போல இந்தியர்களின் வாழ்வியலுக்கு சில முக்கிய கருத்துருக்களை வழங்கிச் சிறப்பித்தவராக தோனி என்றென்றும் ஞாபகத்தில் கொள்ளப்படுவார்.

70களின் கமல்ஹாசன்

கமலின் கலைப்பயணம் துவங்கி 65 ஆண்டுகள் ஆகி விட்டன. இதில் எந்தப் பத்தாண்டு கமல் உங்களை வசீகரிக்கிறார் என்பது எல்லா ரசிகர்களின் மனதிலும் இருக்கும் ஒரு சுவராசிய கேள்வி. 1980கள், தொண்ணூறுகள், இரண்டாயிரத்தில் எல்லாம் அவரின் படைப்புகள் தொடர்ந்து மெருகேறிக்கொண்டே வருகின்றன. ஆனால் என்னை இன்றும் வசீகரிப்பது என்னவோ எழுபதுகளின் கமல் தான். 70களின் கமலுக்கு அதிகபட்ச வயதே 25 தான். ஆனால் அந்த வயதில் கமல் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட அனுபவங்கள் தான் அவரை இன்றுவரை செலுத்திக் கொண்டே இருக்கிறது. கமல் கதாநாயகனாக அடியெடுத்து வைத்த போது தமிழ்சினிமா சூழலை கணக்கில் எடுத்துக்கொண்டால் அப்போது எம்ஜியார், சிவாஜி கணேசன் ஆகிய இருவருமே முண்ணனி நாயகர்களாக இருந்தார்கள். எம்ஜியார் 1972ல் அதிமுகவைத் தொடங்கிவிட்டதால் குறைவான படங்களிலேயே அப்போது நடித்துக்கொண்டிருந்தார். சிவாஜி ஆண்டுக்கு ஐந்து முதல் ஏழு வரையிலான படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஜெமினி கணேசன் தன் நாயகத்தன்மையை இழந்திருந்தார். ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார் என இரண்டாம் வரிசை நாயகர்களின் படங்கள் தான் அப்போது வெளியாகிக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் தான் புதுப்புனலென பொங்கிப் பிரவாகமெடுத்தார் கமல்ஹாசன். சொல்லப்போனால் அவ்வளவு இளமையான நாயகன், தனித்தன்மையான நடிப்புத்திறனுடன் கூடியவன் தமிழ்சினிமாவிற்கே புதிது. அதற்கு முன் நாயகர்களாக வந்தவர்கள் எல்லாம் நாடகப்பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். 25 வயதில் தான் நாயக வாய்ப்பு பெற்றவர்கள் என்றே இருந்தார்கள். நன்கு நடனம் ஆடக்கூடிய, சிறப்பாக முக பாவங்களை வெளிப்படுத்தக்கூடிய நாயகனாக அப்போதைய இயக்குநர்களுக்கு கிடைத்தார் கமல்ஹாசன். 70களின் முற்பகுதி வரை தமிழ்சினிமாவின் கதைக்களம் பெரும்பாலும் புராண கதைகள், காதல் கதைகள். குடும்பச் சிக்கல் கதைகள், பழிவாங்கும் ஆக்‌ஷன் கதைகள் என்றே இருந்தது. மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றோரின் வருகைக்குப் பின்னரே அவரவர் வாழ்வியல் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் கதைகள் தமிழ்திரையில் உருவாகத் தொடங்கின. இந்த நேரத்தில் கமல்ஹாசன் மலையாளத் திரைத்துறையிலும் குறிப்பித்தக்க நட்சத்திரமாக மாறத்துவங்கினார். தமிழ்சினிமாவில் வர்த்தக ரீதியாக கமலின் படங்கள் வெற்றி பெற்றாலும் அவருக்கு அது திருப்தி அளிக்கவில்லை. அப்போது இருந்த நாயகப் பஞ்சத்திற்கும், கமர்சியல் இயக்குநர், தயாரிப்பாளர்களின் பழக்கத்திற்கும் அவர் தொடர்ந்து வணிக ரீதியான படங்களிலேயே இயங்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவருக்குள் இருந்த தேடல் அவரை அதில் இருந்து அவரை வெளியே வரவே தூண்டியது. அப்போதைய மலையாளத் திரையுலகத்தை உன்னிப்பாக கவனித்தார். தகழி சிவசங்கரன் பிள்ளை, எம் டி வாசுதேவன் நாயர் அவர்களின் நாவல்கள் திரைப்படமாவதைக் கண்டார். இங்கும் அதுபோன்ற மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார். எனவே மகேந்திரன், ஆர் சி சக்தி, ருத்ரய்யா போன்றோரின் படங்களுக்கு ஆதரவளித்தார். சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, புஷ்பா தங்கதுரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, உமா சந்திரனின் முள்ளும் மலரும் என நாவல்கள் திரைப்படமாவதை ஆதரித்தார். அதுவே புதுக் கதைக்களங்கள் உருவாகும் வழி என்று அறிந்திருந்தார். அதனால்தான் ரா கி ரங்கராஜன் போன்றோரைக்கூட உங்களுக்கான களம் இப்போது திறந்திருக்கிறது ஆட வாருங்கள் என்று அழைத்தார். ஆனால் அவரோ 15 ஆண்டுகள் கழித்து மகாநதிக்குத்தான் வந்தார். கமலின் ஆழ்வார்பேட்டை வீடு உதவி இயக்குநர்கள், கதாசிரியர்கள் விவாதிக்கும் இடமாக அப்போது இருந்தது. பெரிய தயாரிப்பு நிறுவங்களின் கதை இலாகா போல வழக்கமான கதைகளை எப்படி மீண்டும் சுவராசியமாக கொடுப்பது என்று யோசிக்காமல் நாவல்களை எப்படி திரைக்கதையாக மாற்றுவது என விவாதிக்கும் இடமாக அது இருந்தது. தன் நடிப்புக்கு தீனி போடும் வேடங்கள்உருவாக வலுவான கதாசிரியர்கள் தமிழ் திரையில் வேண்டுமென்பது கமலின் எண்ணமாக இருந்தது. இத்தனை யோசனை, இத்தனை முன்னேற்பாடுகள், அவற்றை சாத்தியமாக்கியது எல்லாம் அவரின் 25 வயதிற்குள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் நல்ல திரைப்படங்களைக் கொடுத்த நடிகராக அவர் தன் 25 வயதிற்குள்ளேயே அறியப்பட்டிருந்தார். தனக்கான இரையே தானே தேடிக்கொள்ளும் சிங்கமாகவே அவர் அப்போது வலம் வந்தார். இத்தனைக்கும் அவர் ஏதும் யோசிக்காமலேயே களம் கொடுக்க கே பாலசந்தர் இருந்தார், அவர் உடலமைப்பு, முக லட்சனம் கண்டு அவருக்கு வாய்ப்பளிக்க சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். தாங்கள் மனதில் நினைப்பதை திரையில் பிரதிபலிக்க் கூடியவன் இவன் தான், இவனுக்காக கதை பண்ணலாம் என்று விருப்பம் கொண்ட பாரதிராஜா, பாலுமகேந்திரா இருந்தார்கள். மலையாள இயக்குநர்கள் காத்திருந்தார்கள். ஆனால் கமல்ஹாசன் எளிதாக இதில் நடித்துவிட்டுப் போகாமல், இத்தனையையும் மீறி புது கதைக்களங்கள்உருவாக தன்னையும் பலரையும் தயார் படுத்திக்கொண்டிருந்தார். இப்போது, மூன்று நாட்கள் ஒரு படம் ஓடுவதற்கு ஓராண்டு வரை முன்னோட்டம் கொடுக்கப்படுகிறது. நாயகன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது துவங்கி, முக்கிய ஆட்களை ஒப்பந்தம் செய்வது வரை விளம்பரப்படுத்தப் படுகிறது. பின்னர் டீசர், சிங்கிள், இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் என தொடர்ந்து இப்படி ஒரு படம் வரப்போகிறது என விளம்பரம் வந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான ரசிகர்கள்அந்தப்படத்தின் தகவல்களுடன் தயாராக இருக்கிறார்கள். மூன்றே நாட்கள் தான். பின்னர் அப்படம் அது பற்றி எந்த வித ஆக்கபூர்வமான விவாதங்களையும் ஏற்படுத்தாமல் மறைந்து விடுகிறது. ஆனால் எழுபதுகளில், ஒரு படம் வெளியாகும் போது வரும் விளம்பர சுவரொட்டி மூலமே அப்படி ஒரு படம் வருகிறது என்பதே பெரும்பாலனாவர்களுக்கு தெரிய வரும். அப்படி வெளியான படங்களே இன்று வரை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், மரோசரித்ரா, அவள் அப்படித்தான், கோகிலா,மன்மத லீலை என 45 ஆண்டுகள் கழித்தும் பேசப்படும் பல படங்களை அவர் அந்நாளில் கொடுத்திருக்கிறார். கமலின் எண்பதுகளின் படங்கள், தொண்ணூறுகளின் படங்கள், இரண்டாயிரங்களின் படங்களோடு ஒப்பிட்டால் கமலின் 70கள் சாதாரணமாக தெரியக்கூடும். ஆனால் அவருக்குள் ஒரு தேடலை விதைத்தது 70கள் தான். அடுத்த 45 ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்குவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததும் 70கள் தான்.

கபில்தேவ்

கபில்தேவ் இந்திய கிரிக்கெட்டிற்குள் ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில், அதுவும் அதுவரை இந்திய கிரிக்கெட் அணி கண்டிராத ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில் இந்திய அணி நம் பழைய குடும்ப அமைப்பை ஒத்திருந்தது. பேட்ஸ்மென்கள் கணவர்களைப் போல. வேலைக்குப் போய் வருவது மட்டுமே அவர்கள் வேலை மற்றவை அல்ல என்பதைப் போல ரன் எடுப்பதை மட்டுமே அவர்கள் வேலையாகச் செய்வார்கள். பீல்டிங் என்பதையே செய்ய மாட்டார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில் சிறு அழுக்குப் பட்டாலும் அது அவர்களுக்கு இழுக்கு என எண்ணுவார்கள். பந்து வீச்சாளர்கள் மனைவி போல. பந்து வீசி பீல்டிங் செய்வார்கள். ஆனால் ரன் எடுக்கமாட்டார்கள். அந்த சமயத்தில் வேலைக்கும் போய், வீட்டு வேலையும் செய்யும் நவநாகரீக மங்கையைப் போல் அணிக்குள் வந்தவர் தான் இந்தியாவின் இணையற்ற ஆல்ரவுண்டர் கபில்தேவ். கபில்தேவ் தன் 16 வயதில் ஹரியானா அணிக்கு ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடியபோதே பலரது கவனத்தை ஈர்த்தார். அவரின் பந்து வீச்சு வேகமும், பேட்ஸ்மென்களை திணறடிக்கும் லைன் அண்ட் லெங்த்தும் பேசு பொருளானது. பெரிய அணிகளுக்கு எதிராக எல்லாம் ஐந்து விக்கெட் சாதனையை அனாயாசமாக செய்து வந்தார். அவரை அணிக்குள் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் தேர்வாளர்களுக்கு வந்தது. தேசிய அளவிலான பயிற்சி முகாமில் காலையில் மாங்கு மாங்கென்று 20 ஓவர்களுக்கு மேல் வீசி விட்டு வந்தவருக்கு நான்கு சப்பாத்தியும் சப்ஜியும் காத்திருந்தது. நான் ஒரு வேகப்பந்து வீச்சாளன் எனக்கு இது எப்படி போதும்? என கேட்டதற்கு அதிகாரிகள் இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளன் என்ற ஜாதியே இல்லை என்று பதில் அளித்தார்கள். பொறுங்கள் அப்படி ஒரு ஜாதியை உருவாக்குகிறேன் என்று மனதிற்குள் சூளுரைத்திருப்பார். அந்த வெறி தான் இந்திய அணி கிரிக்கெட் உலகின் முக்கிய அணிகளுள் ஒன்றாக மாற காரணமாக அமைந்தது. 1978ல் தன் பத்தொன்பதாவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக கபில்தேவ் அறிமுகமானபோது,இந்திய ரசிகர்கள் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். இவ்வளவு வேகமாக துல்லியமாக பந்து வீச நம்மிடமும் ஆட்கள் உள்ளனரா என்பதே அனைவரின் ஆச்சரியமும். பாகிஸ்தானுக்கு எதிராக அவரின் பந்து வீச்சைப்பார்த்த உடன் பத்திரிக்கைகள் அவருக்கு வைத்த பெயர் ஹரியானா ஹரிக்கேன். போதாக்குறைக்கு அற்புதமான க்ளீன் ஹிட்டிங் வேறு. அதற்கு முன் நம் இந்திய பேட்ஸ்மென்கள், தன்னிடம் டியூசன் படிக்கும் மாணவர்கள் கிளாசில் தவறு செய்தால் பட்டும் படாமல் அடிப்பார்களே சில ஆசிரியர்கள் அதுபோலத்தான் அடிப்பார்கள். பவுண்டரி என்பதே குறைவாகத்தான் இருக்கும். ஓங்கி அடித்தாலும், எப்படியும் தடுத்து விடலாம் என எதிரணி வீரர்கள் நம்பிக்கையோடு விரட்டுவார்கள். ஆனால் கபில்தேவோ தன் மகளுக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவனை அடிப்பது போல் பளார் என்று அடிப்பார். அடித்த உடனே பவுண்டரி எனத் தெரிந்து எதிரணி வீரர்கள் பந்தைத் துரத்த மாட்டார்கள். இதனால் மக்களிடம் பெரும் அபிமானம் பெற்ற கிரிக்கெட் வீரராக மாறினார் கபில்தேவ். எண்ணி நான்கே ஆண்டுகளில் 82ல் அப்போதைய கேப்டன் கவாஸ்கர் ஓய்வு எடுத்த ஒரு தொடரில் கேப்டனாக பதவியேற்றார். பின்னர் அந்த ஆண்டு மேற்கிந்திய தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். 1983 உலக கோப்பைக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்த கோப்பையை வென்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவ காரணமானார். சூட்டோடு சூடாக மேற்கிந்திய அணி, இந்திய சுற்றுப்பயணத்திற்கு வந்து, பைனலில் தோற்ற பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்துவிட்டுப் போனது. அந்த படுதோல்வியின் காரணமாக கபில்தேவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கவாஸ்கரிடம் கொடுக்கப்பட்டது. மீண்டும் 1986ல் கபில்தேவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் அந்நாட்டை டெஸ்ட் தொடரில் வென்று சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவுடன் கிட்டத்தட்ட டெஸ்ட் தொடரை வெல்லும் வரை சென்றார். மழையினால் அது தட்டிப் போனது. பின் 1987 ரிலையன்ஸ் உலககோப்பையில் அரை இறுதி வரை அணியை இழுத்துச் சென்றார். அதனால் மீண்டும் கேப்டன்சியை இழந்து 93-94 சீசன் வரை விளையாடி ஓய்வு பெற்றார். யோசித்துப் பார்த்தால் அவர் இந்திய அணிக்கு கொடுத்ததற்கு ஈடாக எந்த பெரிய பலனையும் பெறவில்லை. அவரை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் இந்திய அணி நிர்வாகம் செய்யவில்லை. எவ்வளவு வெறி கொண்டு போட்டாலும் முட்டிக்கு மேல் பந்து எழும்பாத ஆடுகளங்கள் மட்டும் இருக்கும் நாட்டில் யார்தான் வேகப்பந்து வீச்சாளராக வர விரும்புவார்கள்? அப்படி ஒரு தன் முனைப்போடு வந்தவரை முடிந்தவரை தட்டிக் கழிக்கவே முயன்றார்கள். வேகப்பந்து வீச்சாளருக்கு இன்னொரு முனையிலும் நல்ல துணை இருந்தால் தான் பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து விக்கெட் வீழ்த்த முடியும். உதாரனத்திற்கு டென்னிஸ் லில்லி – ஜெப் தாம்சன் முதல் வாசிம் அக்ரம்-வக்கார் யூனூஸ், அம்புரோஸ்- வால்ஷ், அலன் டொனால்ட் – ஷான் போலக், மெக்ராத் – ப்ரெட் லீ என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் கபில்தேவ் தன் உச்சக்கட்ட பார்மில் இருந்த போது அப்படி ஒரு துணை அமையவே இல்லை. மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் போன்றவர்கள் தான் அவருக்கு அடுத்த ஓவரை வீசுவார்கள். ஒரு முறை விவியன் ரிச்சர்ட்ஸ், மதன்லாலிடம் சென்று, ஆப் ஸ்பின் போடுவதற்கு எதற்கு இவ்வளவு தூரம் ஓடி வருகிறீர்கள் எனக் கேட்டதாக கூடச் சொல்வார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ரோஜர் பின்னி, சேட்டன் சர்மா என வந்தாலும் அவர்களும் தங்கள் சிறப்பை தொடர்ச்சியாக கொடுக்கவில்லை. ஒற்றை ஆளாக தொடர்ந்து பந்து வீசி, காலில் அறுவை சிகிச்சை வரை போனது. அதனால் அவர் வேகம் குறைந்த போது அவுட் ஸ்விங்கர் என்னும் ஆயுதத்தை எடுத்தார். இந்திய மைதாங்களில் அது பெரும் பலனை அளிக்காவிட்டாலும் வெளிநாட்டு மைதானங்களில் நல்ல பலனைத் தந்தது.1991-92ல் அவரது கடைசி ஆஸ்திரேலிய பயணத்தில் கூட அலன் பார்டர் போன்ற முண்ணனி வீரர்கள் அலறும் படி இருந்தது அவரது பந்து வீச்சு. கபில்தேவ் ஓய்வு பெறும் போது டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் (434) எடுத்த பந்து வீச்சாளராக ஓய்வு பெற்றார். ஆறு ஆண்டுகள் கழித்தே அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இதில் பாதிக்கு மேலான விக்கெட்டுகளை உயிரற்ற இந்திய ஆடுகளங்களில் தான் வீழ்த்தினார். சக வீரர்களின் ஒத்துழைப்பின்மை, உடன் வீச தகுதியான பந்துவீச்சாளர் இல்லாதது, கிரிக்கெட் வாரியத்தின் பாரபட்சம் இத்தனையையும் தாண்டித்தான் அவர் இந்த சாதனையைச் செய்தார். 434 விக்கெட்டுகள் மட்டுமல்ல ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ரன்களையும் டெஸ்ட் மேட்சுகளில் அவர் குவித்திருந்தார். எப்பொழுதெல்லாம் இந்திய அணி தடுமாறுகிறதோ அப்பொழுதெல்லாம் தன் பங்களிப்பை சரியாக செய்து விடுவார். 1986ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு விளையாட வந்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அவர்கள் இமாலய ஸ்கோரை குவிக்க, அடுத்து விளையாடிய இந்திய அணி தடுமாறியது. கபில்தேவ், மனீந்தர் சிங் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களை அடுத்த முனையில் நிறுத்தி 119 ரன்களை குவித்து பாலோ ஆனில் இருந்து காப்பாற்றினார். 91ல் இந்தியா, இங்கிலாந்திற்கு சென்றிருந்த போது, பாலோ ஆனை தவிர்க்க 24 ரன்கள் தேவை, ஒரு விக்கெட் மட்டுமே கைவசம். அந்த ஒவரின் கடைசி நான்கு பந்துகளில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை அடித்து பாலோ ஆனில் இருந்து இந்தியாவை காப்பாற்றினார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் மறுமுனையில் நின்ற ஹிர்வாணி அவுட். 1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறிய போது 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்த ஒரு சம்பவமே அவர் பெயரை காலம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும். கபில்தேவின் பௌலிங், பேட்டிங் போல குறிப்பிட வேண்டிய ஒன்று அவரது பீல்டிங். 1983 உலக கோப்பை பைனலில் அவர் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிடித்த ரன்னிங் கேட்ச் உடனடியாக எல்லோரது நினைவுக்கும் வரும். அவுட்பீல்டில் சிறப்பாக பீல்ட் செய்யக்கூடியவர் கபில்தேவ். அப்போதைய இந்திய அணி வீரர்கள் பவுண்டரி லைனில் இருந்து பந்தை எறிந்தால் அது விக்கெட் கீப்பரிடம் வரும் பொழுது, ஸ்டேசனில் வந்து நிற்கும் பேசஞ்சர் டிரெய்னின் வேகத்தில் தான் வந்து சேரும். ஆனால் கபில்தேவ் ஒன் பவுன்ஸில் விக்கெட் கீப்பரின் இடுப்புக்கு வந்து சேரும் படி எக்ஸ்பிரஸ் வேகத்தில் எறிவார். கபில்தேவ் ஓய்வு பெற்ற பின்னும் அவருக்கு எந்த வித கௌரவமும் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுக்கவில்லை. இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ சி எல்) 20-20 போட்டிகள் நடைபெற முக்கிய காரணியாக இருந்தார். அதற்கு மைதானங்கள் கிடைக்க விடாமல் இடையூறு செய்ததோடு, அதில் விளையாடும் வீரர்களுக்கும் எதிர் காலத்தில் வாய்ப்பு இல்லை என BCCI மிரட்டியது. பின் தானே இந்தியன் பிரிமியர் லீக்கைத் தொடங்கியது. 1983க்குப் பின் மூலை முடுக்கெல்லாம் இந்தியாவில் கிரிக்கெட்டை மக்கள் ஆட ஒரு காரணமாய் இருந்தது, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நம்மால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் எனக் காட்டியது, எக்கச்சக்கமாக இல்லாவிட்டாலும் வேகப்பந்து வீசி நம்மால் சாதிக்க முடியும் என பலர் வர உந்து சக்தியாக இருந்தது, இப்போது கிரிக்கெட் வாரியம் ஐ பி எல் ஆரம்பித்து கோடி கோடியாய் சம்பாதிக்க ஒரு காரணமாய் இருந்தது என கபில்தேவின் சாதனைகள் பல. ஆனால் குயுக்தி, குள்ளநரித்தனம் எதுவுமில்லாத சுத்த வீரனான கபில்தேவிற்கு எந்த பெரிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அவரின் விளையாட்டே அப்படித்தான் இருக்கும். என் திறமைக்கு நான் பந்து வீசுகிறேன், நீ ஆடிப்பார். பந்தைப் போடுகிறாயா எப்படி அடிக்கிறேன் பார் என்றே இருக்கும். எதிர்மறை வியூகங்கள், எதிர் அணியை வெறுப்பேற்றுவது போன்ற செயல்களை செய்யாமல் கிரிக்கெட்டை நேசித்து ஆடிய வீரன் கபில்தேவ். நெஞ்சுக்கு பவுன்சர் போட்டால், குழி தோண்டி படுத்துக் கொள்கிற பேட்ஸ்மென்கள் இருந்த காலத்தில், பவுன்சரைக் கண்ட உடன் மாதக்கடைசியில் ஒன் வேயில் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வருபவரைக் கண்டால் எப்படி ட்ராபிக் கான்ஸ்டபிளுக்கு கண்கள் மின்னுமோ, அதுபோல் கண்கள் மின்ன, ஓரடி பின் சென்று, வலது காலால் மைதானமே அரை இன்ச் உள்ளே போகும் படி ஆக்ரோசமாக அழுத்தி, இடது காலை தூக்கி நடராஜர் நர்த்தனம் போல் நிறுத்தி சண்ட மாருதமாய் பேட்டை சுழற்றுவார் கபில்தேவ். அப்போது ஸ்கொயர் லெக்கிற்கும் பைன் லெக்கிற்கும் இடையே எத்தனை பீல்டர்களை நிறுத்தினாலும் பந்து அவர்களை முறியடிக்கும். அந்த நேரத்தில் அவரின் ஆட்டத்தைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளத்தில் கபில்தேவிற்கு ஓரிடம் இருக்குமே அதை எந்த நிர்வாகமும் அவருக்கு கொடுத்து விட முடியாது.

வார்னே

நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் சில விளையாட்டு வீரர்கள் அவதரிப்பார்கள். அவர்களுக்கு முன்னும் அப்பேர்பட்ட ஆட்டக்காரர்களை உலகம் சந்தித்திராது. அவர்களுக்குப் பின்னும் அந்த இடம் நிரப்பப்படாமலேயே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீரர்தான் இதுவரை உலகில் தோன்றிய லெக் ஸ்பின்னர்களிலேயே சிறந்தவரான ஷான் வார்னே. அவர் கேட்டிங்கிற்கு இங்கிலாந்தில் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்து எப்படி எல்லோரையும் திகைக்க வைத்ததோ அது போல அவரின் ஒவ்வொரு ஓவருமே பேட்ஸ்மனையும் எதிரணி பார்வையாளர்களையும் திகைப்பிலேயே வைத்திருக்கும். 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்குத்தான் ஷான் வார்னேவின் ஜாம்பவான் தன்மை முழுதாகப் புரியும். எல்லா பேட்ஸ்மென்களும் அவரை எதிர்கொள்ள பல தூக்கமில்லா இரவுகளைச் சந்தித்தார்கள். அவர் வீசும் ஒவ்வொரு டெலிவரியையும் வர்ணனையாளர்கள் நூறு கண் கொண்டு பார்த்தார்கள். பார்வையாளர்கள் அங்கிங்கு அசையாமல் ஒரு தேர்ந்த நடனத்தை எப்படி பார்ப்பார்களோ அப்படிப் பார்த்தார்கள். அது டெஸ்டோ, ஒன் டேவோ வார்னே பந்து வீசும் போது எதிர் அணியினரிடம் தோன்றும் இறுக்கமும் எதிரணி பார்வையாளர்களிடம் தோன்றும் பதட்டமும் எதாலும் அளவிட முடியாதது. வார்னேவின் அறிமுக ஆண்டு அவ்வளவு சிறப்பில்லாதது. 1991 ஆம் ஆண்டு இந்திய அணி அசாருதீன் தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு நெடிய பயணம் மேற்கொண்டது. ஐந்து டெஸ்ட், மேற்கு இந்திய தீவுகளுடன் சேர்ந்து ஒரு ஒருநாள் மும்முனைப் போட்டித் தொடர் அது முடிந்து 1992 ஒரு நாள் உலக கோப்பை. டெஸ்ட் சீரிஸில் முதல் இரண்டு டெஸ்ட்களில் அடி வாங்கி மூன்றாவது டெஸ்ட் விளையாட சிட்னிக்கு சென்றது. சிட்னி நமது அணி குறைவாக அடி வாங்கும் மைதானம். அந்த டெஸ்டுக்கு முந்தைய நாள் செய்திகளில் ஷேன் வார்னே என்ற லெக் ஸ்பின்னர் அறிமுகமாகப் போவதாக காட்டினார்கள். சிலிப் கேட்ச் பிராக்டீஸ் செய்யும் கிளிப்பிங் அது. டெஸ்ட் தொடங்கியது ரவி சாஸ்திரி இரட்டை சதம் அடிக்க, சச்சின் சதம் அடிக்க மேட்ச் ட்ராவானது. வார்னே150 ரன்னுக்கு மேல் கொடுத்து சாஸ்திரியின் விக்கெட்டை மட்டும் எடுத்திருந்தார். அடுத்த டெஸ்டில் விக்கெட்டே இல்லை. ஐந்தாவதி டெஸ்ட் வேகப்பந்து வீச்சின் சொர்க்கமான பெர்த்தில். அந்த மேட்ச்சுக்கு வார்னேவை கழட்டி விட்டுவிட்டார்கள். இப்படியாக தன் முதல் டெஸ்ட் தொடரில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார் வார்னே. ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடியிருந்த விதத்தைப் பார்த்து அடுத்தடுத்த இலங்கை, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து தொடர்களுக்கு அவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடர்களில் பெரிதாக அவர் ஏதும் சாதிக்கவில்லை. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு டெஸ்டில் அப்போது அவர்களின் கேப்டனாக இருந்த ரிச்சி ரிச்சர்ட்சனின் விக்கெட்டை ஒரு ப்லிப்பரின் மூலம் வீழ்த்தி இவருக்குள் ஏதோ இருக்கிறது என எல்லோரையும் எண்ண வைத்தார். 1993 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து மண்ணில் கால் வைத்தது. அப்போது யாருக்கும் தெரியாது. இந்த தொடர் முடியும் போது ஒரு உலக சாம்பியன் உருவாகியிருப்பார் என. முதல் டெஸ்டில் வார்னேவின் முதல் டெலிவரி மைக் கேட்டிங்கிற்கு. ஸ்பின்னர்களை நன்கு ஆடக்கூடியவர் அவர். ஆனால் அவரையும் ஏமாற்றி லெக் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்து பாம்பு போல சீறி கேட்டிங்கின் கால்காப்பு, பேட்டைத் தாண்டி ஆப் ஸ்டம்ப் பெயில்ஸை வீழ்த்தியது. கேட்டிங்கால் அதை நம்ப முடியவில்லை. அன்று தொடங்கியது வார்னேவின் ஆட்சி. அந்த தொடரில் உலகின் கவனத்தை ஈர்த்தார் வார்னே. எப்படி இந்திய கிரிக்கெட்டுக்கு மும்பையோ அப்படி உலக கிரிக்கெட்டுக்கு இங்கிலாந்து. அவர்களின் செயல்கள் பிரதானமாக பேசப்படும். மற்றவர்கள் மட்டம் தட்டப்படுவார்கள். அந்த இங்கிலாந்தில் எந்த சம்பவம் நடந்தாலும் உலக கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும். இந்த ஆஷஸில் வார்னேவின் பந்து வீச்சு எல்லோராலும் புகழப்பட்டது. அதற்கெல்லாம் மணி மகுடமாக கிரிக்கெட்டை அப்போது சரியாக கணிப்பவர் என்று பெயர் பெற்றிருந்த இம்ரான் கான் வார்னே 500+ விக்கெட்டுகளை எடுப்பார் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் அளித்தார். அப்போது வார்னே 50+ விக்கெட்டுகள் தான் எடுத்திருந்தார். பலத்த அதிர்ச்சி அலைகளை இம்ரான்கானின் அந்த ஸ்டேட்மெண்ட் கிளப்பியது. ஆனால் அதையும் தாண்டி 708 விக்கெட்டுகளை வீழ்த்தி இம்ரான்கானின் நம்பிக்கையை காப்பாற்றினார் வார்னே. வார்னேவின் சிறப்பு என நினைப்பது, ஒரு பேட்ஸ்மென் எந்த மைதானத்தில் விளையாடினாலும், அவர் எவ்வளவு செட்டில் ஆகியிருந்தாலும் வார்னே பந்து வீச வந்தால் ஒவ்வொரு பந்தையும் கணித்து மிகக் கவனத்துடன் தான் ஆட வேண்டியிருக்கும். லூஸ் பால் என்பதே பெரும்பாலும் இருக்காது. அப்படி போடப்படும் பந்து கூட பேட்ஸ்மெனை ட்ராப்பில் விழுக வைப்பதற்கான உத்தியோ எனவே எண்ன வைக்கும். அந்த பயத்தை தன் பந்து வீச்சுக்காலம் முழுவதும் பாட்ஸ்மென்களுக்கு கொடுத்து வந்தார் வார்னே. வார்னேவின் பந்து வீச்சில் நான்கு முக்கிய வெரைட்டிகள். முதலில் வழக்கமான லெக்ஸ்பின். மிடில் அண்ட் ஆப் ஸ்டம்பில் விழுந்து ஆப் ஸ்டம்பை நான்கு இஞ்சிற்குள் கிராஸ் செய்யும் டெலிவரி. பெரிய டீவியேசன் இருக்காது. மற்ற லெக் ஸ்பின்னர்களை அடிப்பது போல அசால்டாக ஸ்கொயர் கட் எல்லாம் செய்ய முடியாது. மீறி அடித்தால் விக்கெட் கீப்பர் அல்லது பர்ஸ்ட் சிலிப்பில் போய் உட்காரும். கவனமாக தடுத்து ஆடாவிட்டாலும் எட்ஜ் எடுத்து விடும். இரண்டாவது பிலிப்பர். நன்கு செட்டில் ஆன பேட்ஸ்மென்களை கூட மிரட்டி விடும் டெலிவரி இதுதான். பிட்ச் ஆன உடன் லோ பவுன்ஸில் நேராகவும் விரைவாகவும் வரும். பெரும்பாலான பேட்ஸ்மென்கள் எல் பி டபிள்யூ அல்லது போல்ட் ஆகி விடுவாகள். தென் ஆப்பிரிக்காவின் டேரில் கல்லினனை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அந்த டெலிவரி துரத்தியதாகச் சொல்வார்கள். மூன்றாவது கூக்ளி. ஷேன் வார்னேவின் சமகால ஆட்டக்காரரான முஷ்டாக் அகமது, தற்போதைய லெக் ஸ்பின் சென்சேசன் ரஷீத் கான் இவர்கள் எல்லாம் ஜெப்ரி பாய்காட் பாஷையில் சொல்வதானால் கூக்ளி மெர்சண்டுகள். அதுவும் முஷ்டாக்கை பற்றி சொல்லும் போது, அவர் கூக்ளி பவுலர் எப்போதாவது லெக் ஸ்பின் போடுவார் என்றே சொல்வார். ஆனால் வார்னே எக்கச்சக்கமாக கூக்ளி போட மாட்டார். அதை பேட்ஸ்மென்னை திகைக்க வைக்கும் அஸ்திரமாகத்தான் அரிதாக பயன்படுத்துவார். நான்காவது தான் வார்னே ஸ்பெசல். லெக் ஸ்டம்பிற்கு மிக வெளியே ஏழாவது எட்டாவது ஸ்டம்பில் விழுந்து, பேட்ஸ்மெனின் லெக் ஸ்டம்பை தகர்க்கும் டெலிவரி. எத்தனை பேட்ஸ்மென்கள் அதில் விழுந்திருக்கிறார்கள், கணக்கே இருக்காது. இயன் ஹீலே கீப்பராக இருந்த காலகட்டத்தில் இதை ஒரு ட்ரிக்காகவே செய்வார்கள். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எண்ணற்ற வெற்றிகள் பெறவும் ஒரு பதினைந்து ஆண்டுகள் யாராலும் வீழ்த்த முடியா அணியாகவும் இருந்ததில் வார்னேவின் பங்கு அளப்பரியது. ஒரு நாள் போட்டிகளிலும் வார்னே அணிக்கு பெரும் சொத்தாக இருந்தார். வார்னேவின் ஓவரில் முக்கிய விக்கெட்டுகள் விழுந்து விடக்கூடாது என கவனமாக ஆடுவார்கள். இதனால் தேவைப்படும் ரன் ரேட் கூடும். மற்ற பவுலர்களை தேவையில்லாமல் அடித்து அவுட் ஆவார்கள். 96 & 99 உலக கோப்பை செமி பைனல்களில் அவரின் பந்து வீச்சு மறக்க முடியாதது. 96 உலக கோப்பை பைனலில் அரவிந்த டி சில்வா & ரணதுங்கா இணை கவனமாக ஆட அந்தப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. 99ல் கோப்பையை வென்றனர். 2003 உலக கோப்பையில் ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக டோர்னமெண்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இல்லையென்றால் இரண்டு உலக கோப்பைகள் வாங்கிய ப்ளேயர்கள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பார். 20-20 கிரிக்கெட்டிலும் தன் முத்திரையைப் பதித்தார் வார்னே. ஐ பி எல்லின் முதல் கோப்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வாங்கித் தந்தார். இக்கட்டான சூழலில் நன்கு பந்து வீசியும் ஸ்டேட்டர்ஜிக்கலான முடிவுகளை எடுத்தும் சிறப்பாக ஆடினார். விஸ்டன் நடத்திய நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்கள் தேர்தலில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த லிஸ்டில் இருந்த ஒரே பவுலர் வார்னே தான். அப்போது ஆக்டிவ்வாக ஆடிக்கொண்டிருந்த வீரரும் அவர் தான். இத்தனை சிறப்புகள் இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை அவர் வகிக்காதது சிறு குறை தான். ஸ்டீவ் வாவ் ஓய்வு பெற்ற உடன் நீண்ட கால நோக்கில் யோசித்து ரிக்கி பாண்டிங்கை அணித்தலைவர் ஆக்கினார்கள். ஆனால் அதன்பின்னர் இரண்டு மூன்று ஆண்டுகள் வார்னேதொடர்ந்து விளையாடத்தான் செய்தார். ஒரு வேளை அவர் மீது இருந்த சில குற்றச்சாட்டுகளால் (ஒரு பெண் விவகாரம், புக்கிகளுக்கு இன்பர்மேசன் கொடுத்தது போன்ற) கேப்டன் ஷிப்பை தரவில்லையோ என்னவோ? என்ன நடந்திருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் கனவு உலக லெவன் அணியை தேர்ந்தெடுங்கள் என்று எந்த கிரிக்கெட் பிரபலத்திடம் கேட்டாலும் எப்படி ஒரு போருக்குப் புறப்படும் மன்னன் தன் முக்கிய ஆயுதமாகக் கருதும் ஒன்றை சரிபார்த்து விட்டே அடுத்தடுத்த ஆயுதங்களில் கவனம் செலுத்துவானோ அது போல வார்னேவை ஸ்பின்னர் இடத்தில் எழுதி விட்டுத்தான் அணியை செலக்ட் செய்யவே ஆரம்பிக்கிறார்கள். இது ஒன்றே போதும் வார்னேவின் திறனுக்கு. தன் உடன் நிலை மீது ஒரு நிலையில்லாத அக்கறை கொண்டவர் வார்னே. அவர் மீது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இடத்தில் புகை பிடித்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது உண்டு. தான் அதிக எடையுடன் இருப்பதால் திடீரென உடற்பயிற்சி ரொட்டீன்களை எடுத்துக் கொள்வார். அப்படி எடுக்கப்பட்ட ஒரு முயற்சியின் இடையே அவர் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறீர்கள் வார்னே.

லான்ஸ் குளூஸ்னர்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 21ஆண்டுகள் அவர்களுடைய நிறவெறி கொள்கை காரணமாக சர்வதேச போட்டிகள் விளையாடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை நீக்கப்பட்டு, இந்தியாவிற்கு அவர்கள் சுற்றுப்பயணம் வந்த போது, ஊர் திருவிழாவிற்கு வந்த வெளியூர் அங்கிள்கள் எல்லாம் ஒரு டீமாக சேர்ந்து உள்ளூர் இளைஞர்களுடன் ஆடுவது போன்று இருந்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த அலன் டொனால்ட் தவிர மற்றவர்கள் 35+. அந்த அணியின் அப்போதைய கேப்டன் கிளைவ் ரைஸ் 42 வயதுக்காரர். அவர் 1970 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற்ற போது சர்வதேச தடை அந்த அணி மேல் விழுந்தது. அந்த தடை நீக்கப்பட்ட போது, அவரே கேப்டன் பொறுப்பேற்று வந்தார். அவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அவர் மட்டும் அல்ல அப்போது அந்த அணியில் நான்கு ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்று இருந்தனர். முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை இழந்தாலும் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் அந்த ஆல்ரவுண்டர்கள் தான். அடுத்து 1992 உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, தன் முதல் போட்டியில் கோப்பையை வெல்லும் அணி என கணிக்கப்பட்டு இருந்த ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே சந்தித்தது. கிரிக்கெட் உலகமே ஆஸ்திரேலியா தான் வெல்லும் என எதிர்பார்த்தது. அதிர்ச்சி திருப்பமாக தென் ஆப்பிரிக்க அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அதிர்ச்சியில் இருந்து ஆஸ்திரேலியா மீள முடியாமல் அந்த உலக கோப்பை அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது. அந்த உலக கோப்பையில் எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, அப்போதிருந்த மட்டமான மழை விதியால் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனால் உலகெங்கிலும் உள்ள எல்லா கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் இந்த அணி ஒரு தரமான அணி என்ற நம்பிக்கையை விதைத்தது. அதற்கு காரணம் அந்த அணியின் அட்டகாச பீல்டிங் திறமை. அதிலும் குறிப்பாக உலக கிரிக்கெட்டின் பீல்டிங் தரத்தையே உயர்த்திய ஜாண்டி ரோட்ஸ் எல்லாவற்றுக்கும் மகுடமாக தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர்கள். மற்ற அணிகளுக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் அன்றைய நிலையில் முக்கிய வித்தியாசமாக இருந்தது அதன் ஆல்ரவுண்டர்கள் தான். அப்போது மட்டுமல்ல, இன்று வரை தென் ஆப்பிரிக்க அணியை ஏராளமான ஆல்ரவுண்டர்கள் அலங்கரித்து வந்துள்ளார்கள். பிரயன் மெக்மில்லன், அட்ரின் குய்ப்பர், ஹான்ஸி க்ரோன்யே, ஷான் போலக், ஜாக் காலிஸ் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ஆல்ரவுண்டர் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் 1997 இந்திய பயணத்தில் அறிமுகமானவர் லான்ஸ் க்ளூஸ்னர். தன் முதல் டெஸ்டை கல்கத்தா ஈடன் கார்டனில் விளையாடினார். கல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் அப்போதைய இந்திய அணி கேப்டனான முகமது அசாருதீனின் விருப்பமிக்க வேட்டைக் களம். அங்கே பல சதங்களைக் கண்டவர் அவர். குளூஸ்னரின் ஒரு ஓவரில் அவர் 5 பவுண்டரிகளை தொடர்ந்து அடிக்க, என்னடா இது, இந்த தென் ஆப்பிரிக்க டீமே பவுலிங்குக்குத்தான பேமஸ். என்ன இவன் இப்படி அடி வாங்குறான் என்றே இந்திய ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் அடுத்த இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி கொடுத்தார் குளூஸ்னர். அப்போதிருந்து வேகமெடுத்தது குளூஸ்னரின் பயணம். இந்தியர்களுக்கு நமது வீரர்கள் என்றால் மிகப் பிடிக்கும். அதற்கடுத்து மேற்கிந்திய தீவு வீரர்களைப் பிடிக்கும். ஆஸ்திரேலிய, இலங்கை, பாகிஸ்தான் வீரர்களைக் கண்டாலே ஆகாது. நியூசிலாந்து, இங்கிலாந்து வீரர்களை ஒன்றுவிட்ட பங்காளி வீட்டுப் பசங்களை ஒரு இடைவெளி விட்டுப் பழகுவது போன்ற மனநிலையில் பார்ப்பார்கள். இந்நிலையில் புதிதாக வந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மீது இந்தியர்களுக்கு பெரிய அபிமானம் ஏதும் வரவில்லை. 92 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ், அதற்கடுத்த பதவியேற்றுக் கொண்ட ஹான்ஸி குரோனியே இருவருமே இறுகிய முகத்துக்கு சொந்தக்காரர்கள். அணியினரும் அப்படித்தான் இருப்பார்கள். சிரித்த முகமாக வேற லெவலில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோட்ஸின் மீது மட்டும் ஒரு சாப்ட் கார்னர் இருந்தது. ஆனால் லான்ஸ் குளூஸ்னரை மட்டும் ஏராளமான இந்தியர்களுக்கு பிடித்துப் போனது. அப்போது கிரிக்கெட் பார்த்தவர்களை,உங்களுக்குப் பிடித்த தென் ஆப்பிரிக்க வீரர் யார் என்று கேட்டால் குளூஸ்னரைத்தான் பெரும் பாலானவர்கள் குறிப்பிடுவார்கள். அவரை மிகச்சிறந்த பந்து வீச்சாளர் என்று சொல்ல முடியாது. கிளாஸிக் பேட்ஸ்மென் என்றும் சொல்ல முடியாது. பீல்டிங்கில் வித்தை காட்டுபவர் என்றும் சொல்ல முடியாது. இறுகிப் போன தென் ஆப்பிரிக்க முகங்களுக்கு மத்தியில் ஒரு இயல்பான முகமாக தென்பட்டார் குளூஸ்னர். பொதுவாக தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களும் சரி, பவுலர்களும் சரி தங்கள் திறமையை எப்போதும் முழுக்க முழுக்க வெளிப்படுத்துவார்கள். அதனால் அவர்களின் மேக்ஸிமம் பொடென்சியலை மற்ற அணிகள் கணித்து விடுவார்கள். அதற்கேற்ப தங்களின் ஆட்ட வியூகத்தை மாற்றிக் கொள்வார்கள். கிரிக்கெட்டில் எக்ஸ் பேக்டர் என்பதும் ஒரு அணிக்கு முக்கியம். யாராவது தங்கள் திறமையை மீறி செய்யும் செயல் அணியை பல இக்கட்டுகளில் இருந்து காப்பாற்றும். தென் ஆப்பிரிக்க அணியில் அப்படிப்பட்ட எக்ஸ் பேக்டர்கள் குறைவு. லான்ஸ் குளூஸ்னர் அப்படிப்பட்ட ஒரு எக்ஸ் பேக்டர். இவரெல்லாமா இந்த பிட்சில் விக்கெட் எடுப்பார் என்று நினைத்தால் அங்கே விக்கெட் எடுப்பார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் ஒரே ரிதத்தில் பந்து வீசுவார்கள். அந்த ரிதம் பேட்ஸ்மெனுக்கு பிடிபட்டு விட்டால், அவர்களை எளிதாக ஆடிவிடுவார்கள். 1995-96ல் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தது. அதில் ஒரு டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் நாலாவது இன்னிங்ஸில் கிட்டத்தட்ட ஒன்றரை நாட்களுக்கு மேல் விளையாடி ஆட்டமிழக்காமல் 185 ரன்களைக் குவித்தார். அதனால் அந்த மேட்ச் ட்ராவானது. அதற்கு முக்கிய காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் ஒரே விதமான பந்துவீச்சை விமர்சகர்கள் குறை கூறினார்கள். ஆனால் லான்ஸ் குளூஸ்னர் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர்களிடமிருந்து வித்தியாசமானவர். ஸ்டம்பிற்கு அருகில் இருந்தும் வீசுவார். கிரீஸ் கார்னரில் இருந்தும் பந்து வீசுவார். கிரீஸை முழுக்க முழுக்க உபயோகப் படுத்துவார். அவரின் ஆக்சனும் எளிதாக மற்றவர்களால் மிமிக் செய்யும் படி இருக்கும். பந்து வீச்சை விட குளூஸ்னர் தென் ஆப்பிரிக்க வீரர்களிடம் இருந்து பெரிதும் வேறுபடுவது பேட்டிங்கில் தான். மற்ற தென் ஆப்பிரிக்க வீரர்களிடம் இல்லாத ஒரு நிதானமும், கால்குலேட்டிவ் பேட்டிங்கும் குளூஸ்னரிடம் உண்டு. அதை 1999ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் காட்டினார் குளூஸ்னர். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் சீட்டுக்கட்டு மாளிகை சரிவதைப் போல சரிவதில் புகழ்பெற்றவர்கள் தென் ஆப்பிரிக்கர்கள். அதிலும் முக்கியமான மேட்சுகளில் அப்படி நடந்து கொள்வதை வாடிக்கையாகவே வைத்திருந்தார்கள். 99 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதி வரை வர குளூஸ்னரே காரணம். தன்னுடைய கால்குலேட்டிவ் பேட்டிங் திறமையால் முக்கியமான மூன்று மேட்சுகளை ஜெயிக்க வைத்தார். அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தன் திறமையால் 99% வெல்ல வைத்து விட்டார். ஸ்கோர் சமமாக இருந்த நிலையில் வெற்றி ரன்னை எடுக்க. நிதானம் தவறி ஓடிய ஆலன் டொனால்டால் மேட்ச் பறிபோனது. இருந்தாலும் அந்த உலக கோப்பைப் போட்டியின் சிறந்த ஆட்டக்காராக தேர்ந்தெடுக்கப்பட்டார் குளூஸ்னர். குளூஸ்னர் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் போன்றவர். அவரை கேப்டன்கள் தேவையான போது, தேவையான இடத்தில் பயன்படுத்த வேண்டும். எந்தச் சூழலிலும் பதறாமல், கஷ்டமான பந்துகளைத் தவிர்த்து, எளிதில் அடிக்கக் கூடிய பந்துகளை விளாசி ஆட்டத்தை தன் அணிப்பக்கம் கொண்டு வந்து விடுவார். அவர் செட் ஆன பின் எத்தகைய பந்து வீச்சையும் பவுண்டரிக்கு வெளியே விளாசக் கூடியவர். மூன்று ஸ்டம்புகளையும் காட்டிய படி விலகி நின்று, வீசப்படும் எந்த லெந்த் பந்தையும் ஆப் சைடிலோ இல்லை லெக் சைடிலொ பறக்க விடக்கூடிய பலசாலி. பந்து வீசும் போதும், திடீரென பேட்ஸ்மென்கள் கணிக்க இயலா, விளையாட இயலா பந்துகளை வீசக் கூடியவர். குளூஸ்னர் அணிக்கு உள்ளே வந்த போது இருந்த கேப்டன் ஹான்ஸி குரோனியே. அவர் குளூஸ்னரை சாதுர்யமாக பயன்படுத்தினார். அவர் சூதாட்ட சர்ச்சையால் அணியில் இருந்து வெளியேற்றப்பட அடுத்த கேப்டன் ஆனவர் ஷான் போலக். அவர் சிறந்த வீரர். ஆனால் நல்ல கேப்டன் இல்லை. அவர் 2003 உலக கோப்பையில் அணியை சரியாக வழி நடத்தாமல் போக, க்ரீம் ஸ்மித் கேப்டன் ஆனார். அவருக்கு குளூஸ்னரின் ஸ்டைல் பிடிக்காது. அதனால் அடுத்த ஆண்டிலேயே குளுஸ்னர் அணியில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. அதனுடன் குளூஸ்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு கொடுத்து வந்த எக்ஸ் பேக்டரும் விடை பெற்றது. குளூஸ்னரை இந்தியர்களுக்கு பிடிக்க காரணம் என்னவென்று யோசித்தால் இந்த எக்ஸ் பேக்டர் தான் நினைவுக்கு வருகிறது. பெரும்பாலான இந்தியர்கள் உண்மையான அட்வெஞ்சரில் ஈடுபட்டவர்கள் அல்ல. எத்தனை பேர் செங்குத்தான மலையில் ஏறி இருப்பார்கள்? வனாந்தரங்களில் தனியே பயணித்திருப்பார்கள்? பங்கி ஜம்ப்பில் குதித்திருப்பார்கள்? அவர்கள் பாதுகாப்பு மிகுந்த தீம் பார்க்குகளில் ஜெயண்ட் வீலில் சுற்றுவதை தங்கள் வாழ்நாளின் உச்சபட்ச அட்வெஞ்சராக கருதுபவர்கள். அவர்களுக்கு தங்கள் வாழ்நாளில் கிடைக்கா அட்வெஞ்சரை விளையாட்டில் தேடினார்கள்.ஒரு நாள் கிரிக்கெட் அதற்கு தோதாக அமைந்தது. எப்படி தமிழக வாக்காளர்களுக்கு அழுது கொண்டே ஓட்டுப் போட்டால் ஒரு திருப்தி கிடைக்குமோ அது போல நகத்தைக் கடித்துக் கொண்டே கிரிக்கெட் பார்த்தால் தான் ஒரு திருப்தி. அதனால் தான் திருப்பங்கள் நிறைந்த ஒரு நாள் கிரிக்கெட்டை ஆதரித்தார்கள். 20-20 ஐ தங்கள் செல்லக் குழந்தையாக வரித்துக் கொண்டார்கள். தென் ஆப்பிரிக்க அணியினர் ஒரே நேர்கோடாக தங்கள் ஆட்டத்தை ஆடுபவர்கள். எதிர்பாராமல் சரிவதைத் தவிர அவர்களிடம் பெரிய அட்வெஞ்சர் இருக்காது. லான்ஸ் குளூஸ்னர் இந்திய மக்களுக்கு கொடுத்தது அந்த நகம் கடிக்கும் எக்ஸைட்மெண்டை. அதனாலேயே இவன் நம்மாளுடா என்ற நெருக்கம் குளூஸ்னரிடம் இந்தியர்களுக்கு வந்தது. தன் ஓய்வுக்குப் பிறகு கபில்தேவ் ஒருங்கிணைத்து நடத்திய இந்தியன் கிரிக்கெட் லீக்கில் கல்கத்தா அணிக்கு சில மேட்சுகள் ஆடினார் குளூஸ்னர். அவர் தவறவிட்டது ஐ பி எல்லை. ஐ பி எல்லில் குளூஸ்னர் ஆடியிருந்தால் அவரும் ஒரு தனிப்பட்ட நிறத்தை ஐ பி எல்லுக்கு வழங்கியிருப்பார்.
❌