Normal view

Received before yesterdayவல்லமை

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!

அண்ணாகண்ணன்

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடலைச் சின்மயி, தீ ஆகிய இருவரின் குரல்களிலும் கேட்டேன். சின்மயி பாடியதே சிறப்பு எனப் பலரும் எழுதியதையும் படித்தேன். இது ஒரு வகையில் கலை மதிப்பீடாக வடிவம் பெற்றதைக் கண்டு மகிழ்ந்தேன்.

இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக இனிது. குழுவினரின் சேர்ந்திசையும் சிறப்பு. பின்னணி வாத்திய இசையும் மாறவில்லை. சின்மயி, தீ ஆகிய இருவருக்கும் இவை அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. ஆனால், சின்மயி வழங்கிய பாட்டனுபவம் தனி இனிமை உடையதாக இருக்கிறது. காரணம், அவர் பாத்திரத்தை மனத்தில் இருத்தி, சூழலுக்குள் தன்னை நிறுத்தி, வரிகளை உள்வாங்கி, அந்த உணர்வுடன் பொருந்தி, அனுபவித்து லயித்துப் பாடினார். அதுவே அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டது.

இதில் வேறு ஒரு கோணமும் இருக்கிறது. தீ பாடியதை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுப் படத்திலும் இதர இசை ஓடைகளிலும் அங்கீகரித்துவிட்டார். தீயின் வடிவத்தில் இன்னும் ஆழம் போதவில்லை, பாவம் சரியில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, அது சரியாக வரும் வரை ரஹ்மான் அவரை மீண்டும் பாடச் செய்திருக்க வேண்டும். ஆனால், இது போதும் என ஏற்றுக்கொண்டதால் பாடலின் அனுபவத்தில் குறை ஏற்பட்டது. இது, தீயின் பிழை இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் பிழை. இவர் மட்டுமில்லை, இதர இசையமைப்பாளர்களும் இந்த பாவத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆனால், இங்கு ரஹ்மானின் நல்ல குணம் ஒன்றையும் பாராட்ட வேண்டும். இளையராஜா பங்கேற்ற சில மேடை நிகழ்ச்சிகளில் அவர் பாடகர்களையும் வாத்திய இசைக் கலைஞர்களையும் பாடலை இடையில் நிறுத்தி, திருத்துவதைக் கண்டேன். இது என் பாட்டு, இது இப்படித்தான் இருக்க வேண்டும் எனப் பாடல் முழுமை அடைவதற்குள் பற்பல குறுக்கீடுகள். பாடல் ஒரு கூட்டு முயற்சி என்ற உணர்வை விடுத்து, நானே பெரியவன் என்ற எண்ணம் அவருள் ததும்பி இருக்கக் கண்டிருக்கிறேன். முத்தமழைப் பாடலில் தீயின் வடிவத்தைச் சின்மயி அழகுற மேம்படுத்திப் பாடியிருக்கிறார். இதை ஏ.ஆர்.ரஹ்மான் கைத்தட்டிப் பாராட்டுவதைக் கண்டேன். இப்படி மனம் திறந்து சிறந்ததை ஏற்றுக்கொண்டால், அடுத்த பாடலில் இந்தப் பிழை நேராமல் ரஹ்மான் கவனமாக இருப்பார்.

சின்மயி அர்ப்பணிப்பு உள்ள பாடகர். தான் பாட வேண்டிய பாடலைப் பல முறைகள் பாடிப் பார்த்து, தொடர்ந்து மேம்படுத்துகிறார். அந்தப் பாத்திரத்துடன் மனம் ஒன்றிப் பாடுகிறார். அவரது ஆற்றலும் ஆளுமையும் ஒருசேர இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளன. இவரிடமிருந்து இந்த இயல்புகளைப் புதிய பாடகர்கள் கற்க வேண்டும்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு சிலிர்த்து எழுந்துள்ள சின்மயியின் உன்னதம், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டுகிறது. இதே எழுச்சியை ஓவியத்தில் ரோஹிணி மணியிடமும் நடனத்தில் ருக்மிணியிடமும் காண்கிறேன். வீறு மிகுந்த உங்களுக்குத் தோல்வி என்பதே கிடையாது. இன்னும் இன்னும் வெற்றிகள் பெறுக! புதிய நட்சத்திரங்களாய்ப் புவி மீது எழுக!

காகத்தின் நுண்ணறிவு!

காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் காலையில் காக்கை, குருவிகளுக்கும் அணிலுக்கும் உணவளிப்பது வழக்கம். காகங்கள் மிக புத்திக் கூர்மையுள்ள பறவைகள் என்று படித்திருந்தாலும் அதை இன்று நேரில் அறியும் வாய்ப்பு அமைந்தது. தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நம் வாழ்வோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த ஒரு பறவையினம் இது. இன்று காலை இட்லிதான் வைத்தேன். அதுவும் நேற்று இரவு உணவு விடுதியில் வாங்கி வந்த இட்லி என்பதால் காலையில் அது சற்று கெட்டிப்பட்டுவிட்டது. சிறிய துண்டுகளாக கிள்ளிப்போட்டுதான் வைத்தேன். ஆனாலும் வெகு நேரம் தலையை ஆட்டி ஆட்டி பார்த்துக்கொண்டே இருந்ததே தவிர ஒரு துண்டுகூட எடுக்கவில்லை. என்ன நினைத்ததோ, சற்று நேரத்தில் ஒரு இட்லித் துண்டை எடுத்து அதை அருகில் இருக்கும் தண்ணீரில் போட்டது. ஒரு நொடியில் மீண்டும் அதை எடுத்து உண்டது. இப்படியே இரண்டு மூன்று முறை செய்துவிட்டு ஒரு துண்டு இட்லியை அதேபோல் தண்ணீரில் நனைத்து எடுத்துக்கொண்டு பறந்துவிட்டது. குட்டிக்கு எடுத்துச் சென்று ஊட்டும் போல. உண்மையில் எனக்கு அப்படியொரு ஆச்சரியமாக இருந்தது. காக்கைதானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது, மனிதர்களைவிட புத்திசாலியாக இருக்கிறேன் என்று உணத்ர்த்திவிட்டுச் சென்றுவிட்டது. இன்று முழுவதும் காக்கை பற்றிய நினைவே சுற்றி சுற்றிச் வருகிறது.
நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை.
பழங்காலத்தில் கடற்பயணம் மேற்கொள்பவர்கள் காக்கைகளை கூண்டில் அடைத்து உடன் எடுத்துச் செல்வர். கரைக்குச் செல்லும் வழி அறியாத நேரத்தில் அந்தக் காகத்தை எடுத்து பறக்க விடுவார்கள். அந்தக் காகம் செல்லும் திசையைப் பின்பற்றிச் சென்று கரையை அடைந்துவிடுவார்களாம். அப்போது அந்தக் காகம் கரைந்து கொண்டே கரையையும் அடையும். கரையோரத்தில் வாழும் மக்கள் வழிமாறிய கப்பலில் பயணிகள் பசியுடன் வருவார்கள் என்பதறிந்து அவர்களுக்கு விருந்து சமைத்து வைத்துக்கொண்டு உபசரிக்கக் காத்திருப்பார்களாம்…. அதனாலேயே இன்றும் காகம் கரைந்தால் உறவினர் வருவார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. உலகின் பழமையான நாகரிகங்களின் ஒன்றான மெசப்பத்தோமியா நாகரிகத்தின் நாணயங்களிலும், ஓவியங்களிலும் ஒரு மாலுமி காக்கையை பறக்கவிடுவது போன்று பொறிக்கப்பட்டுள்ளதும் இதன் பழமைக்கு ஆதாரமாக உள்ளது. ஆகா எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!

” விருந்து வரக் கரைந்த காக்கை” எனும் குறுந்தொகைப் பாடல் மூலம் இதை அறியலாம். சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர் காகத்தைப் பற்றிப் பாடியே இப்பெயரைப் பெற்றுள்ளார். அவர்தான் காக்கைக் கரைந்தால் விருந்தாளி வருவர் என்ற பொருளில் ஓர் அகப்பாடல் புனைந்துள்ளார். முல்லைத் திணைக்குரிய பாடலிது. தோழி கூறுவதாக அமைந்துள்ள அப்பாடல் ..
திண்டேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே              (குறுந். 210)

ஐங்குறுநூற்றிலும் காக்கை குறித்த நம்பிக்கை கொண்ட இன்னொரு பாடல் வந்துள்ளது.

மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளை யோடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே
(ஐங். 391)
காகம் கரைதலைக் கண்ட தலைவி அதனை விரட்டித் துரத்துகிறாள். ஏனென்றால் காகம் கரைதல் தன் தலைவனுடைய வருகைக்கு நன்னிமித்தம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்நேரத்தில் ஊடலில் இருப்பவள் போலும் அவள் அதை நம்பவில்லை. கோபமாக காகத்தைத் துரத்திக் கொண்டே இருக்கையில் தலைவனைக் காணாது வருத்தத்தில் இருந்த தனது மெலிந்த கைகளிலிருந்த வளையல்கள் பாதி கழன்று தரையில் விழுந்தன. ஆனால் உண்மையில் திடீரென்று தன் தலைவன் வருவதைக் கண்ணுற்ற அந்தத் தலைவியின் உடலும் கைகளும் மகிழ்ச்சியில் பருத்துவிடுகின்றன. அதன் விளைவாக அவள் கையிலிருந்த மீதி பாதி வளையல்கள் உடைந்து சிதறிவிட்டனவாம். முதலில் காகம் தனக்குப் பொய்யான நம்பிக்கையூட்டுகிறதே என்ற கோபத்தில் தலைவி காகத்தை விரட்டுகிறாள்.
இப்படி தலைவனைப் பிரிந்த தலைவியின் உடல் மெலிவதும் அதனால் கைவளைகள் நெகிழ்ந்து மண்ணில் விழுவதும் அகப்பாடல்களில் அடிக்கடி காணமுடிகிறது. மெலிந்தபோது கழன்று விழும் வளையல்கள் தலைவனைக் கண்டவுடனே கைகள் பருத்ததால் வெடித்துச் சிதறின என்பதும் செறிந்தன என்று சொல்வதும் மிகைபடக் கூறல் என்றாலும் இலக்கியச் சுவைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அல்லவா இருக்கிறது!

அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கும் உண்டு. புனைவுகளிலும் இலக்கியங்களிலும் அண்டங்காக்கை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப்பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள், புனைவுகளின் படைப்பாளர்களால் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகின்றது. அண்டங்காக்கை துர்மரணத்திற்கும், இறப்புக்கும் இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாதக் கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும்,
நம்பப்படுகின்றது. இந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்குப் படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
· மிகுந்த சக்தி வாய்ந்த இந்துத் தெய்வம் சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. மகாவித்தைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்துத் தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்தரிக்கப்படும் இத்தெய்வம் பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின்மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

சாதுரியம் (சிறுகதை)

28 May 2025 at 03:35

லோ. பாலமுருகன் 

ட்ரீங்..ட்ரீங்” போன் ஒலித்தது.’ராமின் மனைவி கலா, “என்னங்க நான் அடுப்பு வேலையா இருக்கேன், உங்க போன் அடிச்சுகிட்டே இருக்குது என்னன்னு தான் பாருங்களேன்”.

தனது ரூமின் கதவை உள் பக்கமா சாத்திக்கொண்டு ஃபைலை தேடும் போது, அவனுக்கு தன் மனைவி சத்தம் போட்டு கூப்பிட்டது கேட்கவே  “சரி கலா நான் பார்க்குறேன்”. என்றான். அறையிலிருந்து அவசர அவசரமாக வெளியே வந்து ரிஸீவரை எடுத்து ஹலோ! என்றான்” ராம்.

“சார் நான் அசோக் பேசுறேன்”. ‘சொல்லுங்க என்ன?”

“நீங்க வீட்டுமனை ஏதாவது பார்க்கிறீங்களா?” ‘ஆமாம் நாங்க பார்த்து வருகிறோம் அதுகென்ன இப்போ?’

“ஒன்னுமில்ல, உங்களுடைய ரிபரன்ஸ் எனக்கு எங்க கம்பெனி அனுப்பியிருந்தாங்க. அதான் உங்களுக்குப் போன் போட்டுப் பார்த்தேன்”.

“ஓக்கே எந்த இடத்தில் இருக்கு நீங்க சொல்ற இடம்?”

“அசோக் நகர் தெரியுமா சார்?” ‘தெரியும் சொல்லுங்க’.

“அங்கே 7ஆம் அவின்யூவில் ஒரு கிரவுண்ட் இருக்கு”.

“எவ்வளவு சொல்ராங்க?”

“அதெல்லாம் நாம இடத்தைப் பார்த்த பிறகு பேசிக்கிலாமே?”

“உங்க இடத்தின் லொகேஷன் கொஞ்சம் ஷேர் செய்ய முடியுமா?”

“இதோ இப்பவே அனுப்புறேன் சார்” போன் துண்டிக்கப்பட்டது “…………” இரண்டு மூன்று நிமிடம் ஒரே மௌனம் நிலவியது வீட்டில்.

கலா, “என்னங்க யாரு போன்ல?” அது ஒன்னுமில்ல. நாம இடம் பார்க்கிறோமில்ல அது சம்பந்தமாகத் தான் அசோக் என்பவர் பேசியிருந்தார். “ நான் அவரிடம் இடத்தின் லொகேஷனை கேட்டிருக்கேன்”.

“அப்படியா எப்போ நாம போய்ப் பாக்கலாம்?” “உனக்கு இந்த வாரம் சனி கிழமை கம்பெனியில் வேலை உள்ள தா?”

“இல்லை” என்றாள் கலா”.

‘சரி அப்படினா நான் அசோகிடம் நாங்க இந்த வாரம் சனி கிழமை மத்தியம் வருகிறோம் என்று சொல்லிடுறேன்.

***

ராம், ஒரு கார் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இன்ஞினியராகப் பணிபுரிகிறான். கலா, சாப்ட்வேர் கம்பெனில் புரோகிராமராக வேலை செய்கிறாள். நல்ல வருமானம் இருவருக்கும், சுமார் வருடம் ஏழு லட்சம் சி.டி.சி வாங்குறான் ராம். கலாவும் இவன் வாங்கும் அறவிற்கு தான் பெறுகிறாள். வருடத்திற்குப் பார்க்கப் போனால் இருவரது சம்பளமும் பிடித்தம் போகச் சுமார் பன்னிரண்டு லட்சம் கைக்கு வரும். அதனாலேயே அவர்கள் ஒரு சொந்த வீடு இருந்தால் நல்லா இருக்கும் என்று பல வருடங்களாகத் இடம் தேடி வருகின்றனர்.

தற்போது இருவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 500 ஸ்கொயர் ஃபீட் இடத்தில் அவர்களது வாழ்வை நடத்திவந்தனர். அவர்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை, அதனாலேயே அவர்கள் இப்போது  மும்முரமாக வீட்டுமனை வாங்க முயலுகிறார்கள், அதில் ஒரு சிறிய வீடு கட்டவேண்டும் என்று ஆசை.

‘பிள்ளைகள் பிறந்தவுடன் அனைவரும் புது வீட்டில் வசிக்கத் துடங்கிடலாம் என்று யோசித்திருந்தனர்’.

“ஏண்டிமா கலா கிளம்பியாச்சா?”

“என்னங்க சும்மா தொனத்தொனன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தா எப்படிக் கிளம்ப முடியும்?”

“சரி நான் இனி உன்னைக் கூப்பிடல, கொஞ்சம் சீக்கிரம் ரெடியாயிட்டு வெளியே வந்தா போதும்”

“இதோ இரண்டு நிமிஷம் கொடுங்க வந்துடுறேன்”.

அறையின் கதவு திறக்கப்பட்டது, கலா அறையினுள்லிருந்து வெளியே வந்தாள். “ வாங்க போகலாம், ஏன் இன்னும் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கீங்க?”

ராம், அவளை அப்படியே கண்ணோடு கண் பார்த்தான். “……” ‘சில விநாடிகள் இருவரிடத்திலும் மௌனம் நிலவியது’. அடுத்த அடுத்த விநாடிகளில் இருவரும் வீட்டின் முகப்பு கதவை தாளிட்டு சாத்தி விட்டு வெளியே வந்தனர்.

ராம் ஸ்கூட்டரை உதைத்தவுடன் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகிவிட்டது, “டப்பு..டப்பு..ட்ரூ..ட்ரூ” சத்தம் எழுப்பியது வண்டி. கலாவும் ஸ்கூட்டர் பின் புறம் அமர்ந்துகொண்டாள். ஸ்கூட்டர் விரைந்தது அந்த இடத்தின் லொகேஷனை நோக்கி. ஒரு மணி நேரம் வண்டியில் பயணம் செய்து பார்க்க வேண்டிய இடத்தை வந்து அடைந்தனர் இருவரும்.

“ஹலோ சார்!” “ஹலோ மேடம்!”

“நான் அசோக்”

“ஹலோ ஹவ் ஆர் யூ?”

“சார் ஐ அம் ஃபைன்”

“சொல்லுங்க எந்த இடம்?” இதோ இப்படி வாங்க, இங்க பாருங்க மொத்தம் ஒரு கிரவுண்ட் இருக்கு.” “உங்களுக்கு வேண்டுமானால் நீங்க அரைக் கிரவுண்ட எடுத்துக்கலாம்”.

‘இதில அட்வான்டேஜ் ஒன்னு இருக்கு யார் முதலில் நிலத்தை வாங்குகுறாங்களோ! அவர்கள் நிலத்தின் முகப்பு பகுதியை வச்சுக்கலாம். பிறகு வாங்குபவர்களுக்கு நிலத்தின் பின் புறம் தான்’.

***

ராம் மற்றும் கலாவிற்கு இடத்தைப் பார்த்த உடனே அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, அசோகிடம் விலை என்ன என்று கேட்டனர். “சார் இடத்தின் ஓனர் ஒரு கிரவுண்டு என்றால் ஒரு விலை சொல்ராரு, பாதிப் பாதியாக வாங்கினால் வேறு விலை”.

“ஓக்கே சொல்லுங்க என்ன விலை ஒரு முழுக் கிரவுண்டுக்கு?” ஸ்கொயர் ஃபீட் 6000 ரூபாய், “உங்களுக்கு எத்துணை ஸ்கொயர் ஃபீட் வேண்டும்?””எங்களுக்கு அரைக் கிரவுண்டு வேண்டும்”.

“அப்படினா மொத்தம் நீங்க 1200 ஸ்கொயர் ஃபீட் கேட்கிறீங்க”.

“ஆம் சரியே எங்களுக்குப் பாதிக் கிரவுண்டுதான் வேண்டும், அதுவும் முகப்பு பகுதி”.

“ஆல்ரைட் சார் முழுக் கிரவுண்டை நான் சப்-டிவிஷன் செய்ய வேண்டும் முதலில்”. 1200 ஸ்கொயர் ஃபீட், இரண்டா பிரிக்க வேண்டும். டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தா நான் அடுத்த வேலையை ஆரம்பித்து விடுவேன்.

ராம் மற்றும் கலா இருவரும் தங்களின் முகத்தை ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ராம், கேட்டான் என்ன கலா இடம் புடிச்சிருக்கா?” ‘அவள் “இவ்வளவு வருஷமா பார்த்ததுல” இந்த இடம் கொஞ்சம் நல்லா இருக்கிற மாதிரி தெரியிது, அதனால் பேசாம இந்த இடத்தை முடித்து விடுங்க என்றாள்’.

“முடிவா ஸ்கொயர் ஃபீட் ரேட்டை ஃபைனல் செய்யுங்க, நாங்க இந்த அரைக் கிரவுண்டை வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.” என்றான் ராம்.

“சார் அதான் நான் முதலிலே சொன்ன மாதிரி ஸ்கொயர் ஃபீட்6000 ரூபாய்”

“ஸ்கொயர் ஃபீட்6000 ரூபாய் ரொம்ப அதிகம் கொஞ்சம் குறைத்து சொல்லுங்க”.

“இதில் எனக்கு ஒன்னும் லாபமில்ல ஓனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் உங்களுக்குச் சொன்னேன்”.

“முடிவாக ‘எவ்வளவு’ன்னா கொடுப்பார்”.

“ஸ்கொயர் ஃபீட் 5800 ரூபாய் என்றால் கொடுப்பார் சார்”.

“நல்ல யோசித்த பிறகு சொல்றேன் ஸ்கொயர் ஃபீட் 5500 ரூபாய் என்றால் உடனே நாங்க இந்த இடத்தை வாங்கிக் கொள்கிறோம். வேண்டுமானல் போன் போட்டு ஓனரிடம் பேசி ஒரு முடிவு எங்களுக்குச் சொல்லுங்க”.

***

தொலைப்பேசியில் பேசிய பிறகு அசோக் இவர்களிடம் ஸ்கொயர் ஃபீட் 5500 ரூபாய் ஓக்கே என்று கூறி விட்டார் ஓனர் என்றான்.. இவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, இருந்து இருந்து ஒரு நல்ல இடம் அமைய போகிறது என்று மனதில் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.

“சார் டோக்கன் அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்குறீங்க?”

“உங்க ஜீ.பேவில் டோக்கன் அட்வான்ஸ் 5000 ரூபாய் உடனே செலுத்துகிறேன்”.

“உங்களுக்குக் கம்பெனி ரூல்ஸ் தெரிவிக்கிறேன். ஏனெனில் முதலில் சப்-டிவிஷன் செய்ய வேண்டும். அதற்குச் செலவாகும், அதை ஓனர் கொடுக்க மாட்டார்”. நீங்கள் தான் இந்தக் கிரவுண்டை வாங்கும் பணத்திலிருந்து சப்-டிவிஷன் சார்ஜை செலுத்தவேன்டும்.

“சப்-டிவிஷன் செய்வதற்குக் குறைந்தது எவ்வளவு செலவாகும்?” அரசாங்க வேலை அல்லவா குறைந்தது ஒரு லட்சம் ஆகும்”.

“நீங்கள் எனக்கு இரண்டு தவனையாகச் செலுத்துங்க., நான் மற்ற காரியங்களைப் பார்கிறேன்”.

“இல்லை முதலில் இடத்துடைய பத்திரத்தின் நகல் எங்களுக்கு வேண்டும்”. அதை நாங்கள் எங்கள் அட்வகேட் இடம் காண்பித்து வில்லங்கம் ஏதேனும் உள்ள தா என்று சரி பார்த்த பிறகு நீங்க கேட்ட தொகையைக் கொடுக்க முடியும்”.

“அதுவும் சரியே, இன்று சாயங்காலம் நான் உங்களிடம் இந்த இடத்தின் பத்திரத்தின் நகலை தருகிறேன்”. இதற்குப் பிறகு ராம் மற்றும் கலா தங்களுடைய ஸ்கூட்டரில் கிளம்பி வீடு வந்தடைந்தனர்.

***

சாயங்காலம் அசோக் சொன்னபடி பத்திரத்தின் நகலை ராமிடம் கொடுக்க. அதை வாங்கிப்பார்த்தான் ராம், எங்களுக்குக் குறைந்தது மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும். இந்தப் பத்திரத்தின் நகலை எங்களுடைய அட்வகேட் இடம் கொடுத்து வில்லங்கம் சரிபார்த்த பிறகு, நான் உங்களுக்குத் போன் போட்டு பேசுறேன் சரியா?”.

அடுத்த நாள் அட்வகேட் இடம் பத்திரத்தின் நகலை கொடுத்து சரி பார்க்க சொன்னான் ராம். அட்வகேட் பத்திரத்தை வாங்கிப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு ஓரல் கன்சல்டேஷன் வேண்டுமா? அல்லது ரைட்டப்பில் வேண்டுமா என்று கேட்டார்”.

“அட்வகேட் சார் எங்களுக்குக் கிளியரன்ஸை ரைட்டப்பில் கொடுத்துடுங்க அதான் சரியாக இருக்கும்”.

“அப்போ போயிட்டு இரண்டு நாள் கழித்து வாங்க என்னுடைய டீம் இதை அனைத்தையும் ஸ்கூர்டனைஸ் செய்து எனது பார்வைக்கு வைப்பார்கள். நான் அதை ஒரு தடவை பார்த்துவிட்டு உங்களுக்கு ரைடிங்கில் கொடுத்துடுறேன்.“

இரண்டு நாள் ஆனவுடன் ராம் அட்வகேட் இடம் போன் போட்டுப் பேசினான். அட்வகேட் இன்னும் இரண்டு நாள் வேண்டும் என்று அவனிடம் கூற. அவனும் சரியென்று கூறினான். இதற்கிடையில் அசோக் போன் போட்டு “சார் என்ன ஆச்சு?”

“எங்களுக்கு, அட்வகேட் இன்னும் பேப்பரை கொடுக்க வில்லை இன்னும் இரண்டு நாள் தவனைக் கேட்டிருக்கிறார்கள். மேலும் இரண்டு நாட்கள் வேண்டும் என்றான்” ராம்.

ஆனால் மறு முனையில் அசோக் கூறினான். “சார் பேப்பர் வரது வரட்டும், நீங்க கொடுக்க வேண்டி அட்வான்ஸ் அமௌன்ட் கொடுத்தா நல்லா இருக்கும். நிறைய நபர்கள் வந்து இதே இடத்தைப் பார்த்துவிட்டுப் போய்யிருக்கிறார்கள்”.. அவர்கள் எல்லாம் டோக்கன் அட்வான்ஸா லட்ச கணக்கில் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். “நான் தான் உங்களிடம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கியதால் ஒன்றும் பேசாமல் இருக்கிறேன் என்றான்.”

“எப்படிப் பேப்பர் வராமல் கொடுப்பது?”

“இந்த இடம் எந்த வில்லங்கமும் இல்லாத இடம். என்ன நம்பி பணத்தைக் கொடுங்க, நான் உங்களுக்கு ரிசிப்ட் தருகிறேன் என்றான்” அசோக்.

ராம் சிறிது நேரம் யோசித்து விட்டு “சரி நான் உங்களுக்குப் பார்ட் பேமென்ட் தரறேன் அதற்கு ரிசிப்ட் கொடுங்க என்றான்.” ‘எப்போதும் முடிவெடுக்கும் முன்னர்க் கலாவிடம் ஒரு வார்த்தை கேட்பான் ராம். ஆனால் இந்த முறை ஏனோ அவன் அவளிடம் கேட்கவில்லை.’

***

மறுநாள் காலை எழுந்தவுடன், “கலா நான் உன்னிடம் கேட்காமலே அட்வான்ஸ் அமௌன்ட் கொடுப்பதாகச் சொல்லிவிட்டேன் அசோகிடம்.” ‘அவள் ஒரு வினாடி யோசித்தாள் “……” மௌனம் நீலவியது அங்கு. பிறகு குளித்து முடித்த பின்னர்க் காலை உணவு உண்ட பிறகு, நேரே லாக்கரில் உள்ள காசோலையை எடுத்து அதில் அட்வான்ஸ் அமௌன்டை எழுதி தன் பையில் வைத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான்.’

செல்லும் வழியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது, ‘ஒரு முறை ஏன் நாம் அட்வகேட் இடம் நேரே சென்று பார்க்க கூடாது. முடிந்தால் அவர்களிடம் நேராக ஒபினியன் வாங்கி விடலாம். பிறகு அசோகிடம் போய் அட்வான்ஸ் அமௌன்டை கொடுக்கலாம் என்று மனதில் எண்ணியவுடன் நேரே ஸ்கூட்டரை அட்வகேட் இடத்திற்குச் செலுத்தினான்.’ “அங்கு வந்து அவர்களிடம் நேரே கேட்டான்”., “பதில் அவர்கள் சாதகமாகச் சொன்னார்கள்.” அதாவது பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை என்று. நாளை வாங்க ரைட்டப்பில்  கொடுத்துவிடுகிறேன் என்று அட்வகேட் கூறினார் ராமனிடத்தில்.”

உடனே காசோலையை எடுத்துக்கொண்டு அசோக்கை பார்க்க சென்றான் ராம். கிளம்பும் முன்னர் மறுபடியும் ‘ஒரு முறை அட்வகேட் இடம் சார் எல்லாம் சரி தானே? ஏனெனில் நான் அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறேன்.’

“எவ்வளவு அட்வான்ஸ் அமௌன்ட கொடுக்கப் போறீங்க?”

“முதல் தவனையாய் 25000 ரூபாய் கொடுக்கப் போகிறேன், பிறகு படிப்படியாகப் பணத்தைக் கொடுத்துவிடுவேன்”.

“ஓக்கே பணத்தைக் கொடுங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை அதனால் நீங்க கொடுக்கலாம்”.

“நன்றி சார்” நாளை வந்து ரைட்டப்பில் வாங்கிக்கொண்டு போறேன்”.

ஸ்கூட்டர் கிளம்பி நேரே அசோக் இருக்கும் இடத்திற்கு வந்து அடைந்தது. ராம் தன் பையில் உள்ள காசோலையை எடுத்து அசோகிடம் கொடுக்க, அதை அசோக் முக மலர்சியுடன் பெற்றுக் கொண்டான். பின் அசோகிடம் லோன் வாங்கித் தான் இந்த இடத்தை வாங்குறோம் என்றான் ராம்.

“,நாங்கள் எங்களுக்குத் தெரிந்த வங்கியில் லோன் ஆர்கனைஸ் செய்திடுவோம்”.

“இல்லை எனக்குத் தெரிந்த நபர் இருக்கிறார் அவர்

மூலம் நான் லோன் பெற்றுக் கொள்வேன்”. என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான் ராம்.

போன் போட்டு தனக்கு தெரிந்த லோன் கொடுக்கும் நபரிடம் அப்பாயின்மென்ட் கேட்டுப் பேசினான். அவரு ஒரு தேதி சொல்லி ராமை அவரிடத்திற்கு வரச் சொன்னார். இரண்டு மூன்று நாட்கள் அப்படியே சென்றது. மீண்டும் அட்வான்ஸ் அமௌன்டை கேட்டு அசோக் போன் போட்டு ராமிடம் கேட்க இப்ப தான் கொடுத்தேன் அல்லவா என்று ராம் சொல்ல.

“நான் தான் அரசாங்க வேலை என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா பணம் இருந்தால் மட்டும் காரியம் நடக்கும் இல்லை என்றால் அப்படியே போட்டு விடுவார்கள்.”

“சரி நாளை உங்களைப் பார்க்றேன் நான் உங்களைப் பார்க்கும் போது ஒரு பார்ட் பேமென்ட் செய்றேன்”. என்றான் ராம்.

***

டுத்த நாள் காலை அலுவலகம் செல்லும் முன்னர் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து ஒன்பதிலிருத்து பத்து மணிக்குள் அசோக் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் முன்னரே சொல்லியிருந்த மாதிரி அவன் எடுத்து வந்த பணத்தை அசோகிடம் கொடுத்துவிட்டு சப்-டிவிஷன் பேப்பர் எப்போது கைக்கு வரும் என்று கேட்டு விவரம் அறிந்து கொண்டு நம்பிக்கையுடன் அலுவலகம் கிளம்பும் முன்னர். “ட்ரிங்..ட்ரிங்” தொலைப்பேசி மணி அடித்தது. யார் என்று பார்க்கையில் அந்தப் பக்கம் அவனது நண்பர் அவர்தான் வங்கி லோன் ஆர்கனைஸ் செய்து பொடுப்பவர் என்று அறிந்துகொண்டவுடன்.

“ஹலோ சார் எப்படி இருக்கீங்க?””

“கடவுள் புன்னியதில் நல்லா இருக்கிறேன் ராம்”

“நீங்க சிறிது நேரம் என்னுடைய ஆபீஸுக்கு வர முடியுமா?”

“அதற்கு என்ன சார், கட்டாயம் வருகிறேன்” பக்கத்தில் தான் உள்ளது உங்க ஆபீஸு”. நண்பரின் ஆபீஸுக்கு விரைந்தான் ராம். அங்கு அவரைப் பார்த்து லோன் சம்பந்தமாகச் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பும் சமயத்தில் ராமின் நண்பர் “ எந்த இடம் என்று சொன்னீர்கள்?”

“அதான் சார் அசோக் நகர் 7வது அவின்யூ “. “………” ‘சிறிது நேரம் ராமுடைய நண்பர் மௌனமாக இருந்தார்’

‘மௌனத்தை உடைக்கும் வகையில் ராம் அவரிடம் ஏன் சார் மௌனம் என்றான்.

“ஒன்னுமில்ல பத்திரத்தையெல்லாம் சரிவர அட்வகேட் இடம் கொடுத்து சரிபார்த்தாச்சா?”

“அதெல்லாம் அட்வகேட் அவர்கள் சரி வில்லங்கமெல்லாம் இல்லை என்று சொன்ன பிறகுதான் அட்வான்ஸ் அமௌன்ட் எல்லாம் கொடுத்திருக்கேன்.”

“சுமார் எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்க”.

“சார் அது வந்து வந்து”

“சும்மா சொல்லுங்க”

“சுமார் ஒரு லட்சம் கொடுத்திருக்கேன் சார்”

“நான் சொல்றதை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.” நீங்க சொன்ன இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழே வரும் போல் தோன்றுகிறது.”

“ஒரு முறை முனிசிபல் கார்ப்பரேஷன் போய் அந்த இடத்தைப் பற்றி விசாரிங்க.” பிறகு மற்ற ஃபார்மாலிடீஸ் எல்லாம் செய்யலாம்”.

“என்ன சார் பயமுறுருத்துறீங்க”.

“பயப்பட வேண்டாம் முதலில் போய் விசாரிங்க, ஒரு வேளை அந்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட கீழ் வரவில்லை என்றால் நல்லதுதானே!”

“சரி சார் நான் முதலில் போய் விசாரிக்கிறேன்”. ஸ்கூட்டர் நேரே மறுபடியும் அசோக்கிடம் வந்து அடைந்தது.

“எனக்கு இப்போதுதான் தெரியவந்தது நீங்க எங்களுக்குக் காண்பித்த இடம் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ் வருகிறதாமே?”

“அப்படியா சார்” “அப்படி இருந்தால் நாங்க உங்களுக்கு என்.ஓ.சி வாங்கிக் கொடுத்திடுவோம்”

“யாரிடமிருந்து என்.ஓ.சி வாங்கிக் கொடுப்பீர்கள்”

“அரசாங்கத்திடமிருந்து தான்” குழப்பத்துடன் அலுவலகம் செல்லாமல் வீடு திரும்பினான் ராம்.

***

ண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தது இந்த விஷயம். ராம் யோசீக்கத் தொடங்கினான், எங்குக் கேட்பது யாரை நாடுவது என்று இருக்கையில். அவனுக்கு ஒரு யோசனை உதித்தது. ‘ஏன் கூகிலில் தேடி பார்க்க கூடாது. அதில் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டைப் பற்றித் தகவலிருந்தால்! ‘ஏன் நாம் அதிலிருந்து எடுத்து அவர்களிடம் உதவி கேட்க கூடாது?’ பெரிய போராட்டத்திற்குப் பிறகு தகுந்த நபரின் விவரங்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு. அவரிடம் மின் அஞ்சல் மூலம் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கேட்டான்.’

இரண்டு தினங்களுக்குள் ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்டிலிருந்து பதில் வந்திருந்தது. பதிலை படித்தவுடனே கவலையில் ஆழ்ந்தான் ராம். ஏனெனில் பதில் அவனுக்குச் சாதகமாக இல்லை. இவர்கள் அட்வான்ஸ் கொடுத்து வாங்க போகும் இடம் சரியாக ஆர்க்கியாலஜி டிபார்ட்மென்ட் கீழ்தான் வருகிறது.. அந்த மின் அஞ்சலில் தாங்கள் இடத்தை வாங்க வேண்டாம், ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் நிலத்தைத் தோண்டி பார்க்க வாய்ப்பு உள்ளது என்று எழுதியிருந்தது. அடுத்த நாள் காலை அவன் முனிசிபல் கார்ப்பரேஷன் சென்று அங்கும் விசாரித்தான். அவர்களும் இடத்தை வாங்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள். பதற்றத்துடன் அட்வகேட் இடம் வந்து நிலவரத்தை சொன்னான்.

“அதற்கு அட்வகேட் நாங்க பத்திரத்தில் வில்லங்கம் ஏதேனும் உள்ள தா என்று தான் பார்ப்போம். மற்றது எல்லாம் நீங்க தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்”. என்ன செய்வது என்று தெரியாமல் அசோகிடம் வந்து பணத்தைத் திருப்பித் தரும்படி சொன்னான்.

“சார் வேறு இடம் வேண்டுமானாலும் நான் காட்டுகிறேன் என்று ராமிடம் சொல்ல.”

“வேறு வழியின்றி இரண்டு இடத்தைப் பார்வையிட்டனர் ஆனால் எதுவும் அவர்களுக்குப் படிக்கவில்லை”

“பணத்தைத் திருப்பிக் கேட்டனர்”

“சப்-டிவிஷன் செய்வதற்குக் கொடுத்து விட்டேன், இந்த நிலத்தை விற்றுதான் உங்களுக்குப் பணம் தர முடியும் என்று கூறி விட்டான் “அசோக்.

வருஷங்கள் உருண்டோடியது ஒன்ற, இரண்டு, மூன்று….. என வருடங்கள் சென்றது தான் மிச்சம். இவர்களது பணம் இவர்கள் கையில் திரும்பி வரவில்லை.

“எப்ப அசோகிடம் கேட்டாலும் நிலத்தை விற்றுதான் பணத்தைத் தர முடியும் என்று ஒரே பதிலை கூறிக் கொண்டு வந்தான்.

எவ்வளவோ முயற்சி செய்து பார்த்த பின்பு ராம் ஒரு கட்டத்தில் அசோக் பொய் மேல் பொய் சொலிக் கொண்டுதான் இருக்கிறான். அவனிடத்திலிருந்து ‘பணத்தைத் திருப்பிக் வாங்குவது என்பது முடியாத காரியம்.’ ‘எப்படி இவனிடமிருந்து இந்தப் பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளவது’. ‘போலீஸிடம் செல்லலாமா?’ இல்லை அவர்களிடம் சென்றால் நாம் அலைய வேண்டியது இருக்கும். ‘அப்படி அவர்களிடம் செல்லவதாக இருந்தால் முதல் வருடத்திலேயே போயிருந்திருக்கலாமே.’ என்ன செய்யலாம்? இந்த மூன்று வருஷங்களாக யோசித்துக் கொண்டிருந்த ராம்.. கடைசியாக அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது ஏன் நாம் முகநூலில் அசோக் கொடுத்த ரிஸிப்ட் எல்லாத்தையும் சேர்த்து அவனுடைய போட்டோவும் அதனுடன் இணைத்து, இந்த மாதிரி இவன் என்னை ஏமாற்றி விட்டான்.’ ‘அனைவரும் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.’ ‘இந்த நபரிடம் பணம் கொடுக்கும் முன் ஒரு தடவைக்கு மேல் யோசித்து விட்டுப் பணத்தைக் கொடுங்க என்றெல்லாம் அதில் எழுதி முகநூலில் பகிரிந்தான் ராம்’.

மூன்று வருஷங்களாக போராடிய ராமுக்கு ஒரு மாதத்திற்குள் ஒரு போன் வந்தது.

“சார் நான் அசோக் பேசுறேன்”

“என்ன அசோக் மூன்று வருஷமாக நாங்க தான் போன் போட்டு உன்னுடன் பேசுவோம்.” “ முதல் முறையாக நீ எங்களுக்குப் போன் போட்டு பேசிக் கொண்டிருக்க. என்றான் ராம்.

“சார் நான்தான் தருகிறேன் என்று சொல்றேன் அல்லவா பிறகு ஏன் முகநூலில் என்னைப்பற்றிப் பகிர்ந்தீர்கள்?”

“நாங்க ஒன்னும் பொய் சொல்லவில்லை மூன்று வருஷங்களாகப் போராடி பார்த்தோம் ஆனால் உன்னிடமிருந்து ஒரு பைசா கூட வாங்க முடியவில்லை அதான் எல்லா ஆதாரத்தையும் இணைத்து முகநூலில் பகிர்ந்தேன். என்னைப் போன்று வேறு யாரேனும் இது போன்று மாட்டிக் கொள்ளக் கூடாதுனு தான்.”

“சார் முகநூலிலிருந்து அந்தப் பதிவை நீக்குங்கள்”. “நான் உங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்”. ‘நீங்கள் போட்ட இந்தப் பதிவால் என் வேலை பறிபோனது எனது கம்பெனியிக்கு யாரும் வர மாட்டேங்கிறாங்க’.

“சரி பணத்தைக் கொடு நான் பதிவை நீக்கி விடுகிறேன்” என்றான் ராம். இதற்குப் பிறகு ராம் மற்றும் கலாவிற்குச் சிறிய தெம்பு வந்தது.

அவர்களுடைய பணம் அவர்களிடம் திரும்பி வந்து விடுமென்று.”

பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

பாரதி வந்தார் பற்பல பாடினார்
பண்டிதர் ஒதுக்கினார் பாமரர் ஏந்தினார்
காரிருள் போக்கிடும் கதிரவன் ஆகினார்
கன்னித் தமிழின் காவலன் ஆனார்

பாட்டில் புதுமை பதத்தில் புதுமை
ஊட்டியே கவிதை உவப்பாய் அளித்தார்
நாட்டை நினைத்து நல்லன மொழிந்தார்
நாடே அவரின் உயிராய் இருந்தது

பாரதி காலம் கவிமணி இருந்தார்
நாமக் கல்லின் நற்கவி இருந்தார்
எட்டய புரத்து பாரதி மூச்சை
சுப்பு ரத்தினமே சுவாசித்து நின்றார்

நாமக் கல்லார் நற்கவி ஆவார்
கவிமணி தமிழின் கற்கண் டாவார்
பரதி தாசனாய் வந்தார் ஒருவர்
அதுவே அவரின் ஆசியே ஆகும்

சுப்பு ரத்தினம் எழுந்தார் தாசனாய்
சுப்பிர மணிய பாரதி வாழ்த்தினார்
வாழ்த்திய வாழ்த்து வளர்ந்தே வந்தது
மாநிலம் பாரதி தாசனைப் பெற்றது

அன்னிய ஆட்சியில் பாரதி வாழ்ந்தார்
அடிமை என்பது அனலாய் கொதித்தது
அனலை அகற்றப் பாரதி பாடினார்
அடிமைக் கெதிராய் படைப்புகள் ஈந்தார்

பாரதி தாசனின் காலமோ வேறு
அடிமை அகன்று சுதந்திரம் மலர்ந்தது
தமிழே ஆட்சி தமிழே தலைமை
அதனால் தமிழை அமுதம் என்றார்

பாரதி தமிழை தேனாய் ஆக்கினார்
அவரின் தாசனோ உயிராய் ஆக்கினார்
பரதி வழியில் பயணந் தொடரினும்
அவரின் சிந்தனை புதிதாய் மிளிர்ந்தது

கல்வியை இருவரும் கண்ணே என்றனர்
பெண்ணின் கல்வியை பெரிதாய் எண்ணினர்
குருவின் கருவை மனத்தில் கொளினும்
அவரின் சிந்தனை அகன்றே நின்றது

பாரதி உள்ளம் புதுமைகள் இருந்தும்
பக்தியை பாரதி பக்குவம் என்றார்
பாரதி தாசனோ பக்தியைப் பாரா
புரட்சிக் கவியாய் ஊர்வலம் வந்தார்

பாரதி பாடல்கள் திரைக்கு வந்தன
பாரதி தாசனே திரைக்குள் நுழைந்தார்
நாடகம் எழுதினார் நடிக்கவும் செய்தார்
நாட்டுப் பாடலை நயமுடன் அணைத்தார்

புரட்சிக் கவிஞராய் இருவரும் எழுந்தார்
புதுமைகள் புகுத்தி கவிஞராய் ஒளிர்ந்தார்
பாரதி வாழ்த்திய கவிஞராய் அமைந்தார்
பாவேந்த ரெனவே பாரினில் திகழ்கிறார்

கங்கைகொண்ட சோழபுரம்

 

நம் தமிழ்நாட்டின் முக்கியப் பெருமைகளில் ஒன்று என்றால் அது நம் வரலாற்றுச் சின்னங்களும், பிரம்மாண்டமான பழமையான ஆலயங்களும்தான். அந்த வகையில் 1090 ஆண்டுகள் பழமையான  கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. யுனெசுகோ பாரம்பரிய தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள இக்கோவில் சோழர் கட்டிடக்கலையின் ஒரு அற்புத அடையாளம்.
இராசராச சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் பிறந்தவன் மதுராந்தகன் என்ற இராசேந்திர சோழன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்று “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றவன்.
தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, பெரிய சிவலிங்கத்தையும் நந்தியையும் உருவாக்கியவன் தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீசுவரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டியுள்ளான். தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து கும்பத்திற்கு அபிசேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது. புனித நன்னீராட்டு நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன்மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தவன், கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்துக்கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வது வழக்கமாம். இக்கோவில் முழுவதும் வெண்மையாகக் காட்டியளிப்பதற்குக் காரணம் கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. தமிழகத்திலேயே மிகப்பெரிய இலிங்கம் இங்கு தான் உள்ளது. ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். 250 ஆண்டுகள் சோழர் பேரரசின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த கோயில், பிரமாண்டமான கலை, சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றான இக்கோவில் ஐராவதேசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில் எனப் போற்றப்பட்டு யுனெசுகோவின் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இதன் பிரம்மாண்டமான கோபுரத்தின் உயரம் 55 மீட்டர், அதாவது 180 அடி. 170 மீ உயரமும் 98 மீ அகலமும் கொண்ட ஒரு அழகான முற்றம் உள்ளது. பிரதான மூலவர் தெய்வம் 13 அடி உயரத்துடன் பிரம்மாண்டமாக நின்று அருள்பாலிக்கிறார். கட்டமைப்பின் முக்கிய பகுதி 341 அடி உயரமும் 100 அடி அகலமும் கொண்டது.

60 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.

கருவறையில் சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கிறது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி . பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.

அண்மையில்தான் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது.
முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர், பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம்  இக்கோயிலில் அமைந்துள்ளது.

கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான பொ.ஊ. 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த  முதலாம் குலோத்துங்க சோழனால் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும், தக்கயாகப்பரணியிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணமுடிகின்றது.  சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ள இக்கோவிலில், இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற பற்பல கலாச்சார நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால்   ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு சரசுவதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் “ஞான சரசுவதி, ஞான லட்சுமி” என அழைக்கப்படுகின்றனர்.
9 வயது சிறுமியின் வடிவில் புன்னகைத்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிடாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். மிக அபூர்வமான இக்கோலத்தைக் கொண்டவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள இலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சி. அதேபோல் 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது.
கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும்.  இக்கோவிலின்  வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன.  அவை முறையே  “வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும்.  வட கைலாய கோவிலில்  பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை  ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது.

சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே ‘மாளிகைமேடு’ ஆகும். செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி, விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியவை இங்கிருந்து பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததும் இக்கோவில்தான்.
கங்கைகொண்டசோழீசுவரம் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் சயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவிலின் பல பகுதிகளில், குறிப்பாக, பிரதான மண்டபத்தில் அற்புதமாகச் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள் உள்ளன.

ஆந்திரா, கர்நாடகா, வங்காளம் போன்ற பல இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிற்பங்கள் இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

 

 

கடவுளாய் (சிறுகதை)

முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

கணவன் பூமிநாதன் இறந்தபிறகு அவருடைய கனவை எப்படியாவது நெறவேத்தனும்னு நெனச்சு இலங்கையிலிருந்து கடல் வழியாக வந்து டூரிஸ்டு பஸ்ஸில ஏறி இராமேஸ்வரம் சிவன் கோயிலுக்கு வந்து இன்னயோட அஞ்சு நாட்களாச்சு. ‘இராவணன கொல செஞ்ச பாவத்த இராமரே இங்கேதா தீர்த்துகிட்டாராம். அரக்கன் தானே இராவணன். தப்பு செஞ்சதுக்குதானே தண்டனை. இதிலென்ன பாவம் இருக்கு. ம்ம் அதுவும் சரிதா அடுத்தவ பொண்டாட்டிமேல ஆசப்படறது தப்புதா. இருந்தாலும் இராவணன் கண்ணியமா இருந்தாரே. ஆனா இப்போ நடக்கறத பாத்தா எத்தன பொம்பளப்புள்ளக  பலியாகுதுக பாவம். எல்லாத்தயும் செஞ்சிட்டு யோக்ய சிகாமணிகளா ஒருசிலரு ஊருக்குள்ள சுத்திகிட்டுத்தானே இருக்கானுக. இதெல்லா எப்போ சரியாகப்போகுது. நமக்கு இங்க மூணுவேள சோத்துக்கே வழியக்காணோ.  நம்ம ஒலக நடப்பப்பத்தி யோசிச்சு என்ன பண்ணப்போறோம். அன்னதானம், வாழைப்பழம், பிரசாதம் என எப்படியோ வயறு நெறஞ்சுடுது.  இனியும் இப்படி எத்தன நாட்களுக்கு இந்தப்பொழப்பு, தூணில சாஞ்சு கண்களை மூடி யோசிச்சிட்டிருந்தாள் இலட்சுமி.  குலசேகரன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தான்.  இந்த ஐந்து நாட்களாக யோசித்ததில் அவளுக்கு  ஒரு யோசனை தோன்றியது.

இராமேசுவரம் வந்த அன்று அவள் பார்த்த காட்சிகளைச் சிந்தையில் தெளிய விட்டாள். கடலில் மூழ்கி குளிக்கின்ற பலராலும் கழட்டிவிடப்பட்ட ஆடைகள்.  பலராலும்  கழட்டிவிடபட்ட  உள்ளாடைகள், துண்டுகள் என ஆங்காங்கே குவிந்து கிடந்தன.  குளித்து முடிந்ததும் ஆடைமாற்றிவிட்டுதான் கோயிலுக்குள் செல்லவேண்டும்.   இலட்சுமி, பையனை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு பெண்கள் ஆடைமாற்றும் இடத்திற்குப் போனாள்.  தனித்தனியாக அறை அறையாக இருக்கும் என்று   எதிர்பார்த்தாள்.   சுத்திலும் மறைக்கப்பட்ட   மதிற்சுவர்  மட்டுந்தான் உயரமாக இருந்தது.  உள்ளே அப்படியே வெட்டவெளி. ஒருத்தர் உடைமாற்றுவதை  மற்றவர் பார்க்கலாம். ஆனால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வலைபோன்ற  கூடை வைக்கப் பட்டிருக்கிறது.

கழட்டிய  பயனற்ற  ஆடைகளை இடுவதற்காக.  ஆனால் கடலில் மூழ்கிக் குளித்துவிட்டு பாவங்களை களைந்தபிறகு, கழட்டிய ஆடைகளை மீண்டும் தொட்டால் பாவம் ஒட்டிக்கொள்ளும் என நம்புகின்றார்கள். அதனால் அந்த ஆடைகளை பலர் அப்படியே ஈரத்துடன் கழட்டின இடத்திலேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். ஈரமான ஆடைகள் ஆங்காங்கே கிடந்தன.  இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் சுத்தம் செய்வார்களோ என்னமோ அந்த ஆடைகளை எடுத்துச் சென்றாலும் யாரும் கேட்க மாட்டார்கள். அதில் நல்ல ஒரு சேலையை எடுத்து அலசி காயப்போட்டாள்.   காய்ந்த பிறகு அந்த சேலையை மடிப்பு எடுத்து அழகாகக் கட்டினாள். குலசேகரனுக்கும் அதே போலச் சட்டை ஒன்றை  ரெடிபண்ணி மாத்திவிட்டாள்.  இப்போது இவர்களைப் பார்த்தால் யாருக்கும் எந்த ஐயமும் வராது.

அங்குக் கிடந்த ஆடைக்குவியல்களில் சில நல்ல ஆடைகளையும் துடைக்கும் துண்டுகளையும் எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தாள். அங்கேக் கிடந்த சோப்புத்துண்டுகளைப் பொறுக்கிப்போட்டு நன்றாகக் கசக்கினாள். கொஞ்சதூரத்தில் ஒரு பைப்பும் இருந்தது. நன்றாகத் துவைத்து ஆங்காங்கே காயப்போட்டு எடுத்தாள். ஆழகாக அழுத்தி அழுத்தி அயர்ன் போட்டது போல மடக்கி எடுத்தாள்.

உடம்பில் தெம்பு இருக்கும் போது நாம் பிறரிடம் கையேந்தி பிச்சை கேட்கக் கூடாது. அது உண்மையிலேயே இயலாத ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டத்தொழில். கைகால்கள் நன்றாக இருக்கும் போது நாம் பிறரிடம்  கையேந்தப் பழகினால் அது நம்மை மனதளவில் முடமாக்கி விடும். செய்யக்கூடாது  என்று தலையை அசைத்தாள்,  கோயிலின் நுழைவு வாயிலிருந்து கடலுக்குச் செல்லும் வழி எங்கும் பல கடைகள் இருந்தன. பூசைசாமான்கள், மலர்கள், அலங்காரப் பொருட்கள் பிரசாதம், சடங்குப் பொருட்கள், சந்தனமாலைகள், துணிகள் விற்கும் கடைகள்  எனப்பல கடைகள். அதில் சில கடைகளுக்கு முன்பு வேட்டி, துண்டு போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  அதில் சிறிய ஒரு கடையைப் பார்த்து நடந்தாள்.  வயதான ஒரு தாத்தா உட்கார்ந்திருந்தார்.

“தாத்தா இந்தத் துண்டு, துணியெல்லா யாரோ பயன்படுத்தினதுதா. ஆனா நல்லா தொவச்சிருக்கே. இதெ வாங்கிக்கோங்க. வாங்கி உங்க கடையில வையுங்க. விக்க வேண்டா. வாடகைக்கு.” என்று தயங்கித் தயங்கி கூறினாள்.  “யாராவது மாத்திக்கத்துணி எடுக்க மறந்தவங்களுக்கு இந்த வாடகைத் துணி ரொம்ப ஒதவியா இருக்கும்.” என்று கெஞ்சிக் கொண்டு நின்றாள் இத்தோடு இது நான்காவது கடை. ஒரு வழியாக அவரைப் பேசி சம்மதிக்க வைத்தாள்.

“இப்படி  வேணும்னா செய்யலா  தாத்தா. எனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு துணிகள் வெளியில போகுதோ அதப்பொறுத்து காசு கொடுங்க.” என்று மறுபடியும் கெஞ்சினாள். ஒத்துக்கொண்டார் கடைக்காரர். நன்றி நிறைந்த மனதோடு கையெடுத்துக் கும்பிட்டாள். உத்வேகம் பிறந்தவளாய் அடுத்த ஆடைகளை அலசச் சென்றாள்.

கோயிலுக்கு வருகின்ற பலரும்  வாடகைக்கு ஆடை கேட்டு வந்தார்கள். வார்த்தை தவறாமல்   வந்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கடைக்காரர் லட்சுமிக்கும் கொடுத்தார். அவளது கையில் அன்றாடச்  செலவுக்கு பணம் புழங்கத் தொடங்கியது. பல நேரங்களில் கோயில் பிரசாதமே உணவாக இருந்ததால் காசு அதிகம் செலவாகவில்லை. அது போகக் கோயிலுக்கு போகின்ற வழியில் இருக்கின்ற சில கடைகளுக்கு முன்னால் கூட்டிப்பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிடுவாள். கோயிலுக்குள் செல்பவர்களின் செருப்புகளைக் காவல் காப்பாள். யாரிடமும் கைநீட்டி இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க மாட்டாள். அவர்களாகக் கொடுக்கின்ற பணத்தை வாங்கிக் கொள்வாள்

அமாவசை முடிந்து வருகின்ற புதன்கிழமையன்று அப்துல் கலாம் ஐயா படித்த பள்ளிக்குப் போகவேண்டும் என்று எண்ணியிருந்தாள்.  திட்டமிட்டபடியே பள்ளிக்குச் சென்றாள். எப்படியாவது கையில காலில விழுந்தாவது குலசேகரன பள்ளில சேர்க்கணும்  தலைமையாசிரியரை பார்க்கணும் காலை 8 மணிக்குப் பள்ளிக்குச் சென்றாள் மதியம் 12.30 மணி வரை காத்திருந்தாள். தற்போது அப்பள்ளியின் தலைமையாசிரியர் பெயர் வைத்தியநாதன். அவர் இப்பள்ளியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன.

“ஐயா வணக்கம்.”

“வணக்கம். வாங்க  என்ன விஷயம்?”

“ஐயா  எம்புள்ள பேரு கலாம். கலாம் ஐயா படிச்ச பள்ளில என் பையனும் படிச்சு பெரிய ஆளா வரணும்ங்குறது அவ அப்பாவோட கனவு. என் பையன உங்க பள்ளியில சேர்க்கணு  சார் .”

“எந்த வகுப்பு?”

“நாலாம் வகுப்பு ஐயா.”

“மூணாவது வரை படிச்ச டி.சி கொடுங்க”

“இல்ல ஐயா அது வந்து….. வந்து ……நாங்க வேற ஊர்ல படிச்சோம் ஐயா. அங்க கொடுத்த டி. சி தொலைஞ்சு போச்சு”

“டி.சி இல்லாம சேர்க்க முடியாதுமா.  இனி ஒரு மொற அந்த பள்ளில போய் கேட்டுப் பாருங்க.  நீங்க இதுக்கு முன்னாடி இங்கே வந்திருக்கீங்களா?”

“இல்லீங்களே.  ஐயா திரும்ப அந்தப் பள்ளிக்குப் போக இயலாது. அங்க ஒரு தகராறு செய்துட்டோம். வேற ஏதாவது வழி இருக்கா ஐயா. நீங்க வேணா இவன மூணாம் வகுப்பு பாடங்களக் கேட்டு பாருங்களேன். இல்ல ஏதாவது எழுத வெச்சுப் பாருங்களேன்.

‘இயலாது’ இந்த வார்த்தை வைத்தியநாதனுக்கு மண்டைக்குள் ஏதோ குடைந்து கொண்டிருந்தது. இந்த அம்மாவ வேறு எங்கேயோ பார்த்து இருக்கோமே யோசித்துப்பார்த்தார்.

“சரிமா ஒரு எழுத்துத் தேர்வு வைக்கிறேன் சரியா எழுதினா பார்ப்போம் இல்லனா வேற வழி இல்லம்மா இங்க சேர்த்த முடியாது.      நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க.”

மேசை மேல இருந்த மணியை தட்டினார்.  “காளி அண்ணே இங்க வாங்க. இந்தப் பையன கீதா டீச்சர்கிட்ட கூட்டிட்டுப் போய் நாலாம் கிளாசுக்கு டெஸ்ட் வைக்கச் சொல்லுங்க.” என்றார்.

இலட்சுமி வெளியில்  காத்திருந்தாள். வைத்தியநாதன் நெற்றியைத் தடவிக்கொண்டு  நாற்காலியில் குனிந்தபடி உட்கார்ந்து எதையோ யோசித்தான். திடீரென ஞாபகம் வந்தவனாய் பீரோவில் உள்ளிருந்து ஒவ்வொரு பைல்களாக தூக்கிப்பார்த்தான். ஒரு ஃபைலுக்குள் இருந்து ஒரு கவரை எடுத்தார்.  அதில் இலட்சுமியின் குடும்பப் புகைப்படம் இருந்தது.

வைத்தியநாதனின் தந்தை துரைசாமி எழுதின  ஒரு கடிதமும் உடன் இருந்தது.

‘மகனே வைத்தியநாத என்னைப்போலவே ஏதோ ஒரு காரணத்துக்காக இயக்கத்தில சேர்ந்தவன்தான் பூமிநாதன். அவன் ரெண்டுதடவ கடல் கடந்து தமிழகத்திற்குச் சென்றுவிட்டா. அகதிகள் முகாமில வெச்சு  விசாரணைக்கப்பறம்  மீண்டும் சூழ்நிலைக்கைதியாக இங்கேயே வந்து மாட்டிக்கொண்டார. என்ன செய்ய?  இதேபோல நான் ஒரு முகாமில் தங்கி இருந்தபோது உன்னை யார் என்று தெரியாதுன்னு உன் எதிர்காலத்தை யோசிச்சு  சொன்னே. அப்போ   இவ காணாம போன எம்பையனு   மீனவ முத்தையானு ஒருத்தரு சொன்னாரு. முத்தையா போல ஒருத்தரும்  இவனக் காப்பாத்த  வரல. சொன்ன  மாதிரியே முத்தையா  தன்னுடைய கடைசி காலம் வர உன்ன அவரு மகனாவே படிக்க வச்சு இப்படி ஒரு பதவியும் வாங்கி கொடுத்தாரு. பூமிநாத ரொம்ப நல்லவன். அவன் இயக்கத்தில தனக்குக் குடும்பம் இல்லைன்னு சொல்லி இருக்கிறா. அவனுக்குக் குடும்பம் இருப்பது எனக்கு மட்டுந்தான் தெரியும். அவனுடைய கனவு, இலட்சியம், சிந்தனை,  ஆசை, விருப்பம் எல்லாமே அவனுடைய பையனப் படிக்க வைக்கணுங்கறது  மட்டுந்தா. அவனுடைய குடும்ப ஃபோட்டோவை உனக்கு அனுப்பித் தர்றே. இந்த கடிதம் உன் கைக்குக் கிடைக்கும்போது நானும் அவனும் உசுரோட இருப்போமா இல்லையான்னு தெரியாது. இந்த கடிதத்த மிகவும் சிரமப்பட்டுத் தான் உனக்கு கொண்டு சேர்த்துள்ளேன் இந்த புகைப்படத்தில் இருக்கிற பையனுக்கு எப்படி யாவது படிக்க வழி பண்ணுப்பா. இப்படிக்கு உன் வளர்ச்சிக்காக உன்னைப் பிரிந்து வாழும் உன்னுடன் உன் அப்பா.’ என்று முடிந்திருந்தது   கடிதத்தை மடக்கிவைத்துவிட்டு போட்டோவை திரும்ப ஃபைலுக்குள்ளேயே வைத்தார்.

“காளி அண்ணே அந்த  அம்மாவை கூப்பிடுங்க டீச்சர்கிட்ட இருந்து டெஸ்டு பேப்பரையும் வாங்கிட்டு வாங்க.”

காளி அண்ணன் நடையும் ஓட்டமுமாக வந்தார்.  விடைத்தாளை வாங்கி பார்த்தார்  வைத்தியநாதன்.

“ம்மா பைய  நல்லா படிக்கிற பையனா இருக்கா. நாங்க சேர்த்துக்கறோம்” என்றார்.

அவள் கண்களில் தண்ணீர் வழிகிறது என்பதை ரவிக்கைக்குள் நீர் வழிந்து ஓடிய போது தான் உணர முடிந்தது.

“ அவ அப்பா எங்கே?”

“அவ அப்பா ஆக்சிடென்டில எறந்துட்டாருங்க ஐயா”

‘உங்களுக்கு வீடு எங்கே?”

“இங்க தாங்க ஐயா. இராமேஸ்வரம் கோயில் பக்கம்.”

“உன் பேரு இலட்சுமி. பையன் பேரு கலாம் எப்படி?  கலப்பு திருமணமா?”

“இல்லங்க ஐயா இவன் பேரு சேகர். அவன் அப்பாவுக்கு இவன் அப்துல் கலாம் ஐயா மாதிரி பெரிய ஆளா வரணும்னு ஆசை அதுனால பையன அப்படித்தான் கூப்பிடுவாரு. அதனால அந்த பேரையே வெச்சிரலாம்னு விட்டுட்டேன் சார்.”

பூர்விகமாகவே நீங்க இங்க தானா மா? எவ்வளவு வருஷமா இங்க இருக்கீங்க?”

“ஐயா அது வந்து எங்க பாட்டிக்கு அம்மா காலத்தில இருந்தே இங்கதான்யா. அவரு எனக்கு ஒன்னு விட்ட மாமா மொற ஆகுது. அவிக வீடும் இங்கதான் கோவிலுக்கு மேவரம். பூ வியாபாரம்.” கேட்ட கேள்விகளுக்கும் கேட்காத கேள்விகளுக்கும் சேர்த்து பதில் அவன் வெளியில் நீட்டிக்கொண்டிருந்த இலட்சுமியின் குடும்பப் புகைப்படத்தை உள்ளே தள்ளிவிட்டார்.

“உங்க வீட்டுக்காரர் பேரு?”

“அவரு  பேரு மயில்சாமி  ”

ஆனால் சரிபார்க்கப்பட்ட விடைத்தாளில் மாணவன் பெயருக்கு நேராக குலசேகரன் என்றும் தந்தை பெயருக்கு நேராக பூமிநாதன் என்றும் எழுதி இருப்பதைப் பார்த்தார்.  ஏன் இவனுக்கு நான் இனியொரு முத்தையாவாக இருக்கக்கூடாது.

மௌனமாகச் சிரித்துக்கொண்டே சேர்க்கை அட்டையில் கையெழுத்திட்டார்.

அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா 

அம்மையே அப்பாவென் றழைத்தார் வாசகர்
அன்னையும் பிதாவும் என்றார் ஒளவையார்
அன்னையைத் தொட்டே ஆரம்பம் என்பதை
அனைவரும் அகத்தில் இருத்திடல் வேண்டும்

அன்பின் உருவாய் அன்னையே இருக்கிறாள்
அவளே பொறுமையின் இருப்பிடம் ஆகிறாள்
உண்ண மறப்பாள் உறங்க மறப்பாள்
ஒரு கணமேனும் பிரியவே மறக்காள்

பத்து மாதம் பாடாய் படுவாள்
பசியும் பார்க்காள் ருசியும் பார்க்காள்
கருவை எண்ணியே உருகியே நிற்பாள்
காத்துக் கிடப்பாள் புதுமலர் கண்டிட

பட்ட வேதனைகள் பஞ்சாய்ப் பறந்திடும்
பச்சிளம் குழந்தை முகத்தைக் கண்டதும்
கட்டித் தழுவுவாள் கண்ணீர் பெருகும்
இட்டமாய் அணைப்பாள் இன்பத்தில் மூழ்குவாள்

அன்னையே என்று ஆனந்தப் படுவாள்
அனைத்தும் கிடைத்ததாய் அகநிறை வடைவாள்
பெண்மையே முழுமை பெற்றதாய் நினைப்பாள்
பெரு வரமாகவே எண்ணியே மகிழ்வாள்

நீள நினைப்பாள் நெஞ்சில் சுமப்பாள்
ஆழ அறிவை ஊட்டிட விளைவாள்
வாழ்வை வளமாய் ஆக்கிட முனைவாள்
வழித் துணையாக இருப்பாள் அன்னை

நல்ல குருவை நாடியே  நிற்பாள்
வல்ல பிள்ளையாய் ஆக்கிட முனைவாள்
கற்றவர் முன்னே வந்திட வேண்டி
கைகூப்பிக் கடவுளை வேண்டியே நிற்பாள்

துன்பம் வந்தால் துடித்துப் போவாள்
அன்பைப் பொழிந்து அவளும் உருகுவாள்
சிரிப்பைக் கண்டால் சிறகை விரித்து
சிட்டுக் குருவாய் வானில் பறப்பாள்

தாழ்ந்து விடாமல் தாங்கியே நிற்பாள்
வீழ்ந்து விடாமல் வேராய் இருப்பாள்
ஏணியாய் ஆகி ஏற்றியே விடுவாள்
என்றும் அன்னை துணையே ஆவாள்

அன்னை என்பள் ஆருயிர் போல்வாள்
அவளின் உணர்வே பிள்ளையே ஆகும்
அவனியில் அன்னை தெய்வமாய் தெரிகிறாள்
அவளைப் போற்றுவோம் அவழடி தொழுவோம்

குறளின் கதிர்களாய்…(517)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(517)

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

-திருக்குறள் -895(பெரியாரைப் பிழையாமை)

புதுக் கவிதையில்…   

ஆற்றல் மிக்க
அரசனின் சினத்துக்கு
ஆளானவர்
அவனிடமிருந்து தப்பிக்க
அவனியில்
எங்கு சென்றாலும்
ஆகிறார்
உயிர் பிழைக்க
இயலாதவராய்…!

குறும்பாவில்…

ஆளும் அரசனின் சினத்திற்கு
ஆட்பபட்டோர் அதிலிருந்து தப்பிக்க எங்கு
சென்றாலும் உயிபிழைக்க இயலாதவரே…!

மரபுக் கவிதையில்…

ஆற்ற லுடனே நாட்டினையே
ஆளும் வல்ல அரசனவன்
சீற்றம் கொள்ளும் வகையினிலே
சீண்டி விட்ட ஒருவர்தான்,
ஆற்றா அச்சம் கொண்டேதான்
அதனில் நின்றும் தப்பிக்க
மாற்ற மாக எங்குபோயும்
மண்ணில் வாழ இயலாரே…!

லிமரைக்கூ…

ஆள்வான் சிறப்பாய் நாட்டை,
அவ்வரசன் சினமுற வைத்தோர் எங்கொளித்தும்
அடைவார் உயிரிழக்கும் கேட்டை…!

கிராமிய பாணியில்…

ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு..

நல்ல மொறயில
நாட்ட ஆளுற ராசாவே
கோவிச்சிக்கிற அளவு நடந்தவன்,
பயந்து
தப்பிச்சி எங்க போனாலும்
அவனால
உயிரோட இருக்கமுடியாதே..

அதுனால
ஒழுங்காயிரு ஒழுங்காயிரு
தப்புசெய்யாம ஒழுங்காயிரு,
ஒன்னவிட ஒசந்தவங்ககிட்ட ஒழுங்காயிரு…!

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . 303

சக்தி சக்திதாசன்
லண்டன்

அன்பான வாசகர்களுக்கு, அன்பு வணக்கங்களுடன் அடுத்தொரு மடலோடு உங்கள் மத்தியில் வருவதில் மகிழ்கிறேன்.

அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலைகளிலும் தினமும் ஏதோவொரு நாடகம் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது.

இங்கிலாந்து மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன ?

எனது கடந்த மாத மடலுக்கும் இந்த மடலுக்குமிடையில் பல அரசியல் அதிர்வுக் காட்சிகள் இங்கிலாந்து மேடையிலே அரங்கேறி விட்டன.

அது என்ன அதிர்வுகள் ? எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுந்திருக்கும்.

பத்து வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சி எனும் அரசியல் கானகத்தில் அடைபட்டுக் கிடந்தது தொழிற்கட்சி.

தொடர்ந்து  தேர்தல் வெற்றிகளை சந்தித்து அரச அதிகாரத்தில்  12 வருடங்களாக இருந்தது கன்சர்வேடிவ் கட்சி.

அவர்களின் அரசியல் ஆணவம் மக்களின் வாழ்வாதாரச் சிக்கலைச் சிக்கும் வழிகளை கண்டறிய விடவில்லை.

அவ்விரக்தி மக்கள் மனதிலே கொடுத்த மாற்றம் லேபர் கட்சியை அதீத பெரும்பான்மை பலத்துடன் அரச கட்டிலில் அமர்த்தியது.

இதுவெல்லாம் நீங்கள் அறிந்ததே !

ஆனால் ஏதாவது மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து தொழிற் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

ஏனேனில் அதிரடியான மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்துவதற்கு ஏதுவான ஒரு பொருளாதார ஸ்திர நிலையை வெளியேறிய கன்சர்வேடிவ் கட்சி விட்டுச் செல்லவில்லை.

விளைவு !

பொருளாதார ஸ்திரத்தை ஏற்படுத்த  மக்களுக்கு அதிருப்தி அளிக்கக்கூடிய சில கடினமான பொருளாதார நிலைப்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவை அரச அதிகாரத்திலுள்ள தொழிற்கட்சிக்கேற்பட்டது.

அதன் காரணமாக பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த ஒரு அரசின் பிரதமர்களில் மிக வேகமாக செல்வாக்கு சரிவைச் சந்தித்த முதலாவது பிரதமர் எனும் சாதனையை தனதாக்கிக் கொண்டார் நமது பிரதமர் கியர் ஸ்டாமர்.

அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை எனது அரசின் பதவிக்காலமான 5 வருட முடிவில் என்னைப் பற்றியும் எனது அரசின் கொள்கைகள் பற்றியும் கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார் பிரதமர்.

இதனிடையே பலகாலமாக இங்கிலாந்து அரசுக்கு தலையிடியாக இருந்துவருவது வெளிநாட்டவரின் அரசியல் தஞ்சம் கோரும் சட்டவிரோத குடியேற்றம்.

குறிப்பாக பிரெஞ்சு நாட்டிலிருந்து கள்ளத்தோணியில் இங்கிலாந்துக் கால்வாய் வழியாக உள்ளே நுழையும் வெளிநாட்டுகாரர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இங்கிலாந்தில் தீவிர வலதுசாரக் கொள்கையுடைய கட்சிகளின் கூக்குரல் இங்கிலாந்தின் பொருளாதர , வாழ்வாதாரச் சிக்கல்களுக்கு வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய குடியேற்றமே காரணம் என்று கூவியது.

மக்களின் கருத்துக் கணிப்புகளும் இங்கிலாந்தின் வெளிநாட்டவரின் குடியேற்றம் பற்றிய சர்ச்சையின் எதிரொலியாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று ப்ரசாரம் செய்து வெற்றி கண்டவர் நைஜல் வராஜ் .

இப்போ இங்கிலாந்தின் மறுமலர்ச்சிக் கட்சி  Reform Party எனும் கட்சியின் தலைவராக கடந்த தேர்தலில் முதன்முறையாக வெற்றியீட்டி பாரளுமன்ற எம்.பி ஆக உள்ளார்.

இவர் அமேரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் ஆதரவாளர்.

ட்ரம்ப் அவர்களின் பரிபூரண ஆதரவும் இவருக்கு உண்டு.

இன்றைய இங்கிலாந்து அரசியல் சூழலில் கன்சர்வேடிவ் கட்சியையே இவர் இல்லாமல் ஆக்கி விடுவாரோ எனும் வகையில் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்த சூழலில் தான் இம்மாத ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் இடம் பெற்றது.

இதுவரை இங்கிலாந்து அரசியல் மேடை கண்டிராத மிகபெரிய அதிர்வலைகளை இத்தேர்தல்கள் ஏற்படுத்தியது.

ஆமாம் இதுவரை இங்கிலாந்து தேர்தல்களம் சந்தித்திராத ஒரு புதுவிதமான முடிவை அள்ளி வீசியது.

காலகாலமாக இங்கிலாந்து தேர்தல் களத்தில் அதிமுக்கிய கட்சிகளாக விளங்கிய கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி இரண்டு கட்சிகளுமே அதிர்ந்து போகக்கூடிய வகையில் நைஜல் வராஜ் அவர்களது ரிபோர்ம் கட்சி Reform Party அதிக அளவிலான கவுன்சில்களையும், கவுன்சிலர்களையும் பெற்று பெருவெற்றி ஈட்டியுள்ளது.

கன்சர்வேடிவ், லேபர் இரண்டு கட்சிகளுமே அத்திவாரத்தில் ஆட்டம்.கண்டுள்ளன.

இங்கிலாந்தில் இதுவரை நடந்து வந்த இரு கட்சி ஆட்சிமுறை மாற்றம் காணப்போகிறதோ எனும் ஐயப்பாடு முதற்தடவையாக அரசியல்.அவதானிகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

இதன் பிரதிபலிப்பு இதுவரை லேபர் கட்சி பிரதமராக இருக்கும் ஒருவரிடமிருந்து எதைக் கேட்க முடியாது என்று எண்ணிருந்தார்களோ அதைக் கேட்கும்படியாகி அவர்களின் நம்பிககைக்கு ஒரு பெருத்த அடியைக் கொடுத்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களில் பெரும்பான்மையோர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்று ஆராயும் நிலைக்குக் கட்சிகளைத் தள்ளியுள்ளது.

காலகாலமாக வெளிநாட்டவரின் குடியேற்றத்தை ஆதரிக்கும் கொள்கைகளை முன்வைக்கும் லேபர் கட்சியின் தலைவர் வெளிநாட்டவரின் அளவுக்கு மீறிய வருகையால் இந்நாட்டு மக்கள் தம் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர் எனும் தாழ்வு மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று பேசியுள்ளார்.

இதுவே ஒரு லேபர் கட்சித் தலைவர் முதன்முறையாக வெளிநாட்டவரின் வருகைக்கு எதிராக பேசிய முதல் பேச்சு என்று அரசியல் மட்டத்தில் கருதப்படுகிறது.

அதிரடியாக வெளிநாட்டவருக்கு கொடுக்கும் பணிகளுக்கான விசா , மற்றும் மாணவர்களுக்கான விசா ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன.

இதைத்தான் கவியரசர் ” மாற்றம் ஒன்றே மாறாதது ” என்று கூறியிருந்தாரோ ?

சரி இனி எமது பிரதமர் நாட்டின் பொருளாதாரச் சீரமைப்புக்காக எடுத்த நடவடிக்கைகளைப் பார்ப்போம்

வெளிநாட்டு வர்த்தக உடன்பாடுகள் பலவற்றை பிரதமர் கியர் ஸ்டாமர் எட்டியுள்ளார்.

அவரது இணக்கப்பாடுகள் இந்தியா , அமேரிக்கா , மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பனவற்றுடன் எட்டப்பட்டுள்ளன.

இது எமது பிரதமரின் சர்வதேச அளவிலான நிலையினை ஸ்திரப்படுத்தியுள்ளது எனும் கருத்துக்கு வலுச் சேர்க்கிறது.

குறிப்பாக அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் எமது பிரதமர் ஸ்டாமருக்கும் , அதிபர் ட்ரம்ப்புக்குமிடையிலான உறவைப்பற்றி  எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் பிரதமர் கியர் ஸ்டாமர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமேரிக்காவுடனும் , அதன் அதிபருடனும் ஒரு சுமுகமான உறவைப் பேணி வருகிறார்.

அடுத்து யூக்கிரேனுக்கும், ரஸ்யாவுக்கும் இடையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளுக்கு கியர் ஸ்டாமர் பக்கபலமாக இருப்பது போலத் தோற்றமளிக்கிறது.

சமீபத்தில்.பாலஸ்தீன)ன் பகுதியான காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தடைகளைக் கண்டித்து மிகவும் காரசாரமான ஒரு செய்தியை இஸ்ரேலுக்கு இங்கிலாந்து சார்பில் கியர் ஸ்டாமர் விடுத்துள்ளார்.

இந்த ஒருமாத காலத்துக்குள் பல காட்சிகள் அரங்கேறியுள்ளன இவை இனிவரும் நாட்களில் எமது அரசியல் அரங்கில் மேடையேற்றப்போகும் காட்சிகளை அடுத்த மடலில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து – ஆண்டாள் எழுதியது சரிதானா?

அண்ணாகண்ணன்

நள்ளிரவு 2.40 மணி. தாகத்தால் விழித்தேன். தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் படுத்தேன். அப்போது திடீரென இந்த வரி, நினைவுக்கு வந்தது. ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர. இதில் முன்னிலை, படர்க்கை சார்ந்து ஒரு சிக்கல் இருப்பது போல் தோன்றியது.

பாடல் முழுவதும் முன்னிலையில் இருக்க, ஒளித்து என்பது மட்டும் படர்க்கையில் இருக்கிறது. பிறந்து, வளர, பிழைப்பித்து, நெருப்பென்ன நின்று, உன்னை, பறைதருதி எனப் பெரும்பாலும் முன்னிலையாகவே இருக்கின்றன. ஒளித்து என்பது மட்டும் படர்க்கையாக இருக்கிறது. அதாவது, இந்த இடங்களில் எல்லாம் அவர் தாமாகவே செய்கிறார். ஒளித்து என்பதில் மட்டும் இன்னொருவர் வந்து ஒளித்து வைக்கிறார்.

இங்கே, ஒளித்து வளர என்பது சரியாக ஒட்டவில்லை. ஒன்று, ஒளிந்து வளர என இருக்க வேண்டும். அல்லது, ஒளித்து வளர்க்க என இருக்க வேண்டும். ஒளித்து வளர என்கிற போது, வசுதேவர் வந்து ஒளித்து வைக்கிறார். ஆனால், கண்ணன் தானாகவே வளர்கிறான், யசோதை வளர்க்கவில்லை எனப் பொருள் தோன்றுகிறது.

ஆண்டாள், ஒளித்து வளர என எழுதியது சரிதானா? உங்கள் கருத்து என்ன?

மலைசூழ் கோவைப் பதிவாழ்க

மலைசூழ் கோவைப் பதிவாழ்க – வண்ண
மயில்சூழ் கோவைப் பதிவாழ்க
முகில்சூழ் கோவைப் பதிவாழ்க – இன்
மொழிசூழ் கோவைப் பதிவாழ்க
கலைசூழ் கோவைப் பதிவாழ்க – மிளிர்
கவின்சூழ் கோவைப் பதிவாழ்க
மரம்சூழ் கோவைப் பதிவாழ்க – நல்ல
மனம்சூழ் கோவைப் பதிவாழ்க

நறுநீர்க் கோவைப் பதிவாழ்க – உயர்
நலம்சேர் கோவைப் பதிவாழ்க
முறுவல் பூக்கும் முகம்வாழ்க – வாழ்வில்
முழுமை சேர்க்கும் அகம்வாழ்க
பொருள்சேர் கோவைப் பதிவாழ்க – வளர்
புதுமை சேர்க்கும் புலம்வாழ்க
அருள்சேர் கோவைப் பதிவாழ்க – தினம்
அணிசேர் கோவைப் பதிவாழ்க

வயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பெரும்
வளம்சேர் கோவைப் பதிவாழ்க
செயல்சூழ் கோவைப் பதிவாழ்க – பசும்
செழுமை சேர்க்கும் செகம்வாழ்க
இதம்சேர் கோவைப் பதிவாழ்க – இயற்கை
எழில்சேர் கோவைப் பதிவாழ்க
குறையொன்று இல்லாக் குடிவாழ்க – தூய
குளிர்சேர் கோவைப் பதிவாழ்க

– அண்ணாகண்ணன்

தண்ணீரும் காவிரியே!

தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே!
மண்ணாவதும் சோழ மண்டலமே! – பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் -தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு!

இது கம்பர் தொடங்கி, ஒளவையார் முடித்த பாடல். முதலிரண்டு அடிகளைக் கம்பரும் அடுத்த இரண்டு அடிகளை ஒளவையாரும் பாடினார்கள் எனக் குறிப்பு இருக்கிறது.

தண்ணீர் என்றால் அது காவிரிதான். வேந்தன் என்றால் சோழன்தான் எனப் போற்றும் பாடல். அடுத்த அடியில், மண்ணாவதும் சோழ மண்டலமே என்பதற்கு மண் என்றால் அது சோழ மண்டலம்தான் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இதன் இன்னொரு பொருளை எண்ணித் துணுக்குற்றேன். மண்ணோடு மண்ணாவது என்றால் அது சோழ மண்டலம் என்ற பொருளும் இருக்கிறது. சோழன் மீது இருக்கும் காழ்ப்பில், பாண்டியர், சேரர் யாரேனும் இப்படி வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடிவிட்டார்களா?

16ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

வல்லமை மின்னிதழ், 15 ஆண்டுகளை நிறைவுசெய்து 16ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தமிழின் முதல் மின்னிதழ். பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற ஆய்விதழாக இரண்டு ஆண்டுகள் இருந்தது. தொடர்ந்து நடுநிலையுடன் படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்தப் பதினைந்து ஆண்டுகளில் வல்லமை, 19,831 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,949 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. தொடர்ந்து பங்களிக்கும் படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் மதிப்பீட்டாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம். அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

வாழ்க்கை ஒரு வட்டம்  

 

வாழ்க்கை முழுவதும் பணம், பதவி, செல்வாக்கு என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ஒருவருக்கு ஒரு தருணத்தில் சற்று நின்று மூச்சுவிட நேரம் கிடைத்தபோது அவர் மனதில் மிகப்பெரிய வினா ஒன்று எழுந்தது. என்னதான் நேர்மையாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் தம் இறுதிக்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சம் எவருக்கும் இருப்பது இயல்புதானே? அப்படித்தான் அவருக்கும் அப்படியொரு ஐயம் எழுந்துவிட்டது. அதாவது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஒருவருக்கு எதிலெல்லாம் அதிகம் ஈடுபாடு இருக்கும்? சொத்து, குடும்பம், ஆரோக்கியம் அல்லது சமுதாயம் – இவற்றில் எதன் மீது அதிக நேசம் ஏற்படும் என்ற ஐயம் ஏற்பட்டுவிடுகிறது. யாரிடம் போய் இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது என்று வெகு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அன்று தம் ஊருக்கு ஒரு மகான் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சென்று சந்திக்கிறார். தன்னுடைய ஐயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள அந்த மகானிடம் சென்று தன்னுடைய வினாவை முன்வைக்கிறார்.

அந்த மகானும் புன்னகையுடன், “உனக்கு குழந்தை இருக்கிறதல்லவா? அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவைன்னு சொல் பார்க்கலாம் ” என்று அவரையே திருப்பிக் கேள்வி கேட்டார்.

சற்று யோசித்தவர், வயிற்றுக்கு உணவு, பாதுகாப்பான தாயின் மடி அல்லது தந்தையின் தோள், அன்பு, பாசம், விளையாட்டு போன்றவையைத் தவிர பெரிதாக வேறு ஒன்றுமிருக்காதே என்றார்.

உடனே அந்த மகான், வாழ்க்கை என்ற இந்த வட்டத்தில் முதலும், முடிவும் ஒன்றுதான். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலும் அந்த ஆரம்பக்கட்டத் தேவைகளைத் தவிர வேறு தேவைகள் ஏதுமிருக்காது. உணவு, தண்ணீர், மருந்துகள், வசதி, அன்பானவர்களின் பாசமும் அவர்களின் அருகாமையும் மட்டும்தான் அவர்களின் தேவையாக இருக்கும். ஆடம்பரம், பகட்டு, செல்வம், சொத்துபத்துகள், வங்கி இருப்பு, நகைகள், ஈகோ, ஆசைகள், சமூகம் போன்ற வெறும் மாயையாக இருந்த அனைத்தும் எண்ணங்களிலிருந்து மறைந்துவிடும் என்றார்.

அப்படியானால் பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவருக்கும் எந்த வேறுபாடுமே இல்லையா சாமி’ என்று மீண்டும் கேட்டதற்கு அவர்,

‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யப்போகும் ஒருவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்ன தெரியுமா?

அதுவரை தாம் வாழ்ந்த வாழ்க்கையில் தாம் பெற்ற அமைதியும், மன நிறைவும் தரும் ஒரு சில நேசத்துக்குரிய நினைவுகள் மட்டுமே பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளவருக்குமான வேறுபாடு’ என்றார்.

அந்த மகான் சொன்னதைக் கேட்டவரின் மனதில் ஏதோ பொறிதட்ட ஊர், உலகம் ஆயிரம் சொல்லலாம், பெற்ற மனம் பித்தானாலும், பிள்ளை மனம் கல்லாகாது. தெளிவுபடுத்திய மகானுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவர், தன் வாழ்க்கை வட்டத்தின் அடுத்த கட்டத்தை எண்ணியபடியே நகர்ந்தார்.

 

குழந்தையின் பெயர் (சிறுகதை)

நிர்மலா ராகவன்

“குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?”

“நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ, புன்னகையோ இருக்கவில்லை. எதையோ யோசிப்பதுபோல் இருந்தாள் என்றுதான் பட்டது அவனுக்கு.

முதலிலேயே யோசித்துவைத்திருந்தது நல்லதாகப்போயிற்று என்ற மகிழ்வுடன், “விட்டல், இல்லாட்டி கோகுல்,” என்று சற்று உரக்கவே சொன்னான்.

“கிருஷ்ணர் பேரா,” என்று இழுத்தாள்.

“அதேதான்!”

“அவருக்கு நிறைய பெண்களோட சகவாசமில்ல?”

அவனுக்குப் பெருமையாக இருந்தது. பிறக்கப்போகிற மகன் உத்தமபுத்திரனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதில் என்ன தவறு?

கிருஷ்ணன் இல்லாவிட்டால் ராமன். “ராமசந்திரன்,” என்றான் அழுத்தமாக.

“MGR வாத்தியாரா?”

“இல்லே. தசரதகுமாரன். ராமாயணத்திலே..”.

“எனக்கும் தெரியும்”. சற்று சூடாக வந்தது அவள் பதில்.

“ராமர்தான் ஏகபத்தினி விரதன்,” என்றான் சமாதானமாக.

“சுகமா அரண்மனையில இருக்கிறதை விட்டுட்டு, அப்பா சொல்றார்னு காட்டுக்குப்போய் கஷ்டப்பட்டாரே! அதைச் சொல்லமாட்டீங்களே!” என்று சாடினாள். “கொஞ்சம் சொந்த புத்தியை உபயோகிச்சிருக்கவேண்டாம்?”

மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரண்டின் நாயகர்களும் சரிப்படவில்லை. வேறு யாரைச் சொல்லலாம்?

“நடராஜன்?”

“சிவன் பேரு. ஒங்களுக்கு பஸ்மாசுரன் கதை தெரியுமில்ல?”

`இவள் எங்கே போகிறாள்?’ என்று சற்று அயர்ந்தான் பிரசாத்.

அவளே சொன்னாள்: “தன்னோட கையை யார் தலையில வெச்சாலும் அவங்க சாம்பலாகணும்னு வரம் கேட்டானாம் அந்த அசுரன். யார்கிட்டே? சிவன்கிட்டே”.

சுவாரசியமாக இருந்தது கதை.

“எவ்வளவு கெட்ட குணம்!” என்று அவளை ஊக்கினான்.

“ரொம்ப யோசிக்காம, சிவனும் அவன் கேட்டதைக் குடுத்துடரார். நைச்சியமா பேசறவங்களுக்கு ரொம்ப யோசிக்காம எதையாச்சும் குடுத்தா, குடுக்கறவங்களுக்குத்தான் கஷ்டம்”.

சிவன் அப்படி என்ன கஷ்டத்தை அனுபவித்தார் என்று கேட்கவேண்டும்போல இருந்தது அவனுக்கு. `இதுகூடத் தெரியாதா!’ என்று ஏளனம் செய்துவிடுவாள். வேண்டாம்.

“முருகன்? சிவகுமார்னு வெச்சா, நாகரிகமா இருக்கும்”. அவன் குரல் பலகீனமாக ஒலித்தது. இதற்கு என்ன ஆட்சேபம் தெரிவிக்கப்போகிறாளோ!

“சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு, பெத்தவங்களை விட்டு எங்கேயாவது போயிடுவான். ரெண்டு பொண்டாட்டிவேற!”

அவன் மௌனமாக இருந்தான்.

“வேற ஏதாவது பேசலாமா?” என்றாள்.

அவன் வாயே திறக்கவில்லை.

அவளே கேட்டாள்: “பிறக்கிறது பெண்குழந்தையா இருந்தா?”

“சீதா,” என்று சொன்னவன், அவள் முகத்தைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். பழங்காலப் பெயராக இருக்கிறது என்பாளோ?

“ஜானகின்னு பேர் வெச்சுட்டு, ஜானுன்னு செல்லமா..,” என்றவனை இடைமறித்தாள். “கட்டினவர் காட்டுக்குப் போனபோது, அவ எதுக்கு அவரோட கல்லிலேயும் முள்ளிலேயும் போய் திண்டாடினா? `நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்’னு போயிருக்க வேண்டியதுதானே?”

அதற்குமேல் அவனுடைய கற்பனை ஓடவில்லை.

மறுபடியும் அவளே கைகொடுத்தாள். ”பார்வதி புத்திசாலி. சிவனோட ஒடம்பிலே பாதி அவளுக்கு. சக்தி இல்லாட்டி சிவன். ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும். துணை இல்லாம நான் இல்லேன்னு ஒவ்வொருத்தனும் தவிக்கணும்”.

“ஏண்டா பிரசாத்து? ரெண்டுபேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்களே! `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ அப்படின்னு தரகர்கிட்ட சொல்லிவிடவா?” தாய் கேட்டாள்.

“எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்மா”.

“அதான் ஏன்னு கேக்கறேன். `நான் நாகரிகமானவ. தமிழெல்லாம் படிக்கிறதில்லே’ன்னு சில அரைகுறைங்கமாதிரி அலட்டிக்காம, ஆன்மிகப் புத்தகங்களெல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சிருக்கா. ரொம்ப புத்திசாலிடா!”

“எனக்கு இவ்வளவு புத்திசாலியான பொண்ணு வேண்டாம்மா. பெண்ணியம் பேசறா. எல்லாத்தையும் அலசறா”.

“அதான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கா”. அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.

“அவளோட ஆராய்ச்சியை வேலையோட வெச்சுக்கட்டும். கோயிலுக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமான்னு இருக்கிற சராசரி பொண்ணுதான் எனக்குச் சரிப்படும்”.

மனதுக்குள் சொல்லிக்கொண்டான், `கல்யாணம் ஆகி, பிறக்கப்போகிற குழந்தைக்குப் பெயர் வைப்பதில்கூட எங்களுக்குள் ஒற்றுமை இல்லையே! இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எதிரும் புதிருமாக இருந்தால் வாழ்க்கை நரகமாக இருக்காதா!’

பிராகுய் – தமிழ் உறவு | பலுசிஸ்தானிகள் நம் பங்காளிகள்

அண்ணாகண்ணன்

சென்னையிலிருந்து சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, பலுசிஸ்தான். அங்குப் பேசப்படும் பிராகுய் (பிராஹுய்) என்ற மொழியை, அழியும் நிலையில் உள்ள மொழியாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. பிராகுய், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழில் நாம் சொல்லும் அரிசி, பால் போன்ற சொற்கள், இதே பொருளில் பிராகுய் மொழியிலும் உள்ளன. இங்கு நாம் வா என்பதை, அவர்கள் பா என்கிறார்கள். இங்கு நாம் ஊர் என்பதை அவர்கள் உரு என்கிறார்கள். நாம் இரண்டு, மூன்று என்று சொல்வதை அவர்கள் ஈரத், மூசித் என்கிறார்கள். சிந்துச் சமவெளி நாகரிகம், தமிழ் நாகரிகம் என்ற கூற்றுக்கு இவை வலுச் சேர்க்கின்றன.

பாகிஸ்தானின் மிகப் பெரிய மாநிலம், பலுசிஸ்தான். இங்கு சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வசிக்கின்றனர். பலூச் விடுதலைப் படை, கடந்த 25 ஆண்டுகளாகத் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறது. மனித உரிமை மீறல், அடக்குமுறை போன்ற காரணங்களைக் கூறி, பாகிஸ்தானுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறது. இப்போது, தங்களைப் புதிய நாடாக ஐ.நா. அமைப்பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் வேர்களைக் கொண்ட பலுசிஸ்தான், தனி நாடு ஆவதை வரவேற்கிறேன். ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, இந்தியாவின் நட்பு நாடாக, சுதந்திர பலுசிஸ்தான் மலரட்டும். சமூக, சமய நல்லிணக்கத்துடன், அமைதியும் வளமும் வளர்ச்சியும் செழிக்கும் நாடாக, தனித்த மொழி, மரபு, பண்பாட்டு அடையாளங்களைத் தக்க வைத்து, இந்துஸ்தானின் சகோதர நாடாக எழுக பலுசிஸ்தான்.

#Balochistan #BLA #Pakistan #India #operationSindoor #Brahui #Brahvi #Brohi

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302

சக்தி சக்திதாசன்
லண்டன்

அன்பினிய வல்லமை வாசக இதயங்களே !

உங்களனைவருடனும் மீண்டும் ஒரு மடல் மூலம் இணைவதில் மகிழ்கிறேன்.

இங்கிலாந்தின் நிகழ்வுகள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எமது பொருளாதாரச் சிக்கலை தீர்ப்பது ஒருபுறமிருக்க சர்வதேச நாடுகளின் அரசியல் நகர்வுகளின் தாக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய தேவையில் இங்கிலாந்து நாடு இருக்கிறது.

குறிப்பாக யூக்கிரேன் , ரஸ்ய நாட்டுப் போரும் அதன் முன்னெடுப்புகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் நிலைப்பாட்டின் பக்க விளைவுகள் இங்கிலாந்துப் பிரதமருக்கு சங்கடத்தை விளைவித்தது.

ஆனால் சங்கடங்களில் சில சாதுரியங்களும் கிடைக்கும் சாத்தியக்கூறும் உள்ளதல்லவா ?

அது என்ன என்கிறீர்களா ?

இங்கிலாந்தின் உள்நாட்டு பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்கும் பொருட்டு பல சிக்கலான பொருளாதார திட்டங்களை முன்வைத்ததால் செல்வக்கு சரியக் கண்டார் பிரதமர் கியர் ஸ்டாமர்.

அந்நேரம்தான் அதிபர் ட்ரம்ப்பின் யூக்கிறேன் ரஸ்யப் போரின் மீதான திருப்பங்களின் தாக்கம் ஐரோப்பாவின் மீது விழுந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், அமேரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலைச் சமாளிக்கும் பாலமாகச் செயற்படத் தலைப்பட்டார் கியர் ஸ்டாமர்.

யூக்கிறேன் நாட்டிற்குச் சார்பாக செயற்பட்டு வந்த அமெரிக்க அரசியல் போக்கை மாற்றிய ட்ரெம்ப்பின் தாக்கம் ஏற்படுத்திய இடைவெளியை சமப்படுத்த இணக்கமுற்ற நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் தலமைப் பொறுப்பை கியர் ஸ்டாமர் ஏற்றார்.

சரிந்து கொண்டிருந்த அவரது அரசியல் செல்வாக்குக்கு முட்டுக் கொடுப்பது போல் அவர் மீது மக்களுக்கு ஒரு மதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

அதேநேரம் அமெரிக்க அதிபர் ஏற்படுத்திய இறக்குமதி வரி அதிகரிப்பினால் ஏற்பட்ட உலகச் சந்தையின் நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய ஒரு அரசியல் அவசியம் ஏற்பட்டது.

அந்த நிலையில் அமெரிக்க அதிபருடனான உறவினை மிகவும் மென்மையான ஒரு போக்கில் எமது பிரதமர் அணுகிய முறை அவரது கட்சியில் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகளிலும் அவருக்கு ஓரளவு ஆதரவை கொடுக்கும் ஒரு நிலையைத் தோற்றியுள்ளது.

அடுத்து பிரித்தானிய இரும்பு ஆலையின் நிலை பெரிய செய்தியாகியது.

பிரித்தானியாவின் தொழிற்சாலைகளில் பெயர் பெற்றிருந்த பிரித்தானிய இரும்பு ஆலை பிரித்தானிய தொழிலதிபர்களிடமிருந்து சீன முதலீட்டாளர்களின் கைவசத்திலிருந்தது.

அவ்வாலை இலாபகரமானதாக இல்லாமல் நட்டத்தில் ஓடுகிறது என்பதால் அதனை மூடப்போவதாக அதன் சீன முதலீட்டாளர்கள் அறிவித்தார்கள்.

பிரித்தானியாவின் அடையாளமாக கால காலமாக ஓடிக்கொண்டிருந்த தொழிற்சாலை மூடப்பட்டால் அதனால் ஏற்படும் சமூகத் தாக்கங்கள் கணக்கிலடங்கா

அதனைக் கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் அவசரச் சட்டத்தை அமுல் படுத்தி அவ்வாலையை தேசிய உடமையாக்கி அத்தொழிற்சாலையை உடனடி மூடுதலிலிருந்து காப்பாற்றியுள்ளது.

பிரித்தானிய அரசின் இந்நடவடிக்கையும் அனைவரினதும் ஆதரவைப் பெற்றுள்ளது.

அதிகாரத்திலிருக்கும் பிரித்தானிய அரசுகளுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுக்கும் பிரச்சனையாக சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரெஞ்சுக் கரையிலிருந்து நுழையும் “படகு அகதிகள்” இருந்து வருகிறார்கள்.

இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை தவிர்ப்பதற்கான பலவித நடவடிக்கைககை அரசு முடுக்கி விட்டாலும் அது குறைவதாகத் தெரியவில்லை.

அதற்கான லேபர் அரசின் முக்கிய நகர்வுகள் கொடுக்கப்போகும் விளைவுகளை எதிர்நோக்கியபடி அரசியல் அவதானிகள்.

அடுத்து இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை பாரிய மாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது.

சிலகாலமாகவே இங்கிலாந்தின் சுகாதார அமைச்சு பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

மருத்துவர் பற்றாக்குறை , தாதிகள் பற்றாக்குறை, மனநோய் பிரிவுகளுக்கான சேவைகளின் பற்றாக்குறையென பல குறைபாடுககௌச் சந்தித்தது.

சுகாதார அமைச்சர் பல மாதங்களாக நடாத்திய ஆய்வுகளின் பின்னர் தேசிய சுகாதார சேவையின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றுவதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய கட்டமைப்பின் கீழ் ஒரே நடவடிக்கைகள் பல பிரிவுகளினால் பல தடவைகள் மேற்கொள்ளப்படுவதால் தேவைக்கதிகமான உத்தியோகத்தர்களுடன் , அளவுக்கதிகமான நேரம் செலவிடப்படுவதாகக் கூறியுள்ளார்.

நோயாளிகள் சிகிச்சை பெறுவது இலவசமாகவே நடைபெறுவது என்பதை இன்றுவரை கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது.

ஆனால் இச்சேவையைபிதே கொள்கையில் தொடர்ந்தும் கடைப்பிடிக்க இத்தகைய மாற்றம் அவசியமானது என்கிறார் சுகாதார அமைச்சர்.

மருத்துவசேவை பிரித்தானியவாசிகளுக்கு இலவசம் என்றாலும் உல்லாசப் பிரயாணிகளாக வருவோரும், பிரித்தானியவாசிகளாக அல்லாதோரும் கட்டணம் அறவிடப்படுவார்கள் என்பது சிலகாலங்களின் முன்னாலிருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

கடந்த கன்சர்வேடிவ் கட்சி அரசிலிருந்த போது ஆரம்பிக்கப்பட்ட மருத்துவர்களின் வேலைநிறுத்தம் லேபர் கட்சி தேர்தல் வெற்றி பெற்று அரசமைத்ததும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கு மீண்டும் ஒரு சிறு சலசலப்பு ஏற்படுகிறது. மருத்துவ பதவிகளில் அதியுயர் பதவியான மருத்துவ விசேடத்துறை நிபுணர்கள் தமக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததினால் தாம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

அந்த முனைப்பில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்தின் அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சி அரசுக்கு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது.

அவர்கள் பொருளாதாரத்தைச் சீராக்கவென்று எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கப் போகிறதா இல்லையா என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கத் தொடங்கப் போகிறது.

இந்த இடைவெளியை அரசியல் , பொருளாதார விமர்சகர்கள் , நிபுணர்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லேபர் அரசாங்கமும் , அக்கட்சியின் தலைமைத்துவமும் தம் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

பொதுமக்களாகிய நாம் இப்புதிய அரசாங்கம் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்று கூறி பதவிக்கு வந்தவ்ர்கள் கொண்டு வந்த மாற்றங்கள் நம் வாழ்வாதாரத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துகிறதா என்று அதை நோக்கிய கணிப்பிலிருக்கிறோம்.

அதேநேரம் சர்வதேச அரங்கில் அமெரிக்க நாட்டின் தலைமைத்துவம் கொண்டுவரும் அதீத மாற்றங்கள் ஏற்படுத்தும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்தப்போகும் மாற்றங்களின் விளைவு என்ன ?

நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்களை தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்தில் நிறுத்துவேன் என்று சூளுரைத்து பதவிக்கு வந்த அதிபர் ட்ரம்ப் நூறு நாட்களாகியும் எந்தப் போரையும் நிறுத்த முடியாமல் தவிக்கிறார்.

அமெரிக்கா , சீனாவுக்கெதிரான வர்த்தகப் போரில் சிக்கிக்கொண்டு பல நாடுகள் அல்லாடுகின்றன.

மியான்மார் நிலநடுக்கத்தை ஏற்படுத்திய இயற்கையின் சீற்றம் காவு கொண்ட உயிர்கள் ஆயிரமாயிரம்.

ஆக மொத்தம் விடையில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும் சில வினாக்களின் விடைகளையாவது அடுத்த மடலில் பகிர முடியுமா பார்ப்போம்.

தொல்காப்பியம்

தொல்காப்பியம் யாருடைய அவையில் யார் முன் அரங்கேறியது?

தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. 1847-ல் தொல்காப்பியத்தை ஓலைச் சுவடி வடிவில் இருந்து அச்சு வடிவுக்கு முதன்முதலில் மாற்றியவர் மழவை மகாலிங்க ஐயர்.

நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்ற மன்னனது அவையில், அதங்கோட்டாசான் என்பவர் முன்னிலையில் அரங்கேறியதாக பாயிரம் கூறுகிறது. தொல்காப்பியர் பற்றி பனம்பரனார்,  ‘ஐந்திரம்’ என்ற நூலை நன்கு கற்ற புலவர் என்றும், பல்புகழ் நிறைத்த படிமையாளர் என்றும் புகழ்கிறார்.

பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

நிர்மலா ராகவன்

“அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

“நான் வேலை செஞ்சாத்தான் நாம்ப சாப்பிட முடியும், ஒன்னைப் படிக்கவைக்க முடியும். ஒனக்குத் தெரியாதா, அஞ்சனா?” கங்காவின் குரல் கெஞ்சியது.

“நான் ஒன்னைக் குத்தம் சொல்லலே. இன்னிக்காவது சொல்லிடும்மா. நெத்தியிலே பொட்டு இட்டுக்கறே. கழுத்திலேயும் இருக்கு. ஆனா, ஒனக்குத் தாலி கட்டினவரை நான் பாத்ததே இல்லே. அப்படி ஒத்தர் இருக்காரா, இல்லே..”.

கங்கா பதறினாள். “என்ன வார்த்தை சொல்றே! நான் அப்படிப்பட்டவ இல்லேடி. சட்டப்படி என்னை ஒத்தர் கல்யாணம் பண்ணிண்டார். அவருக்குப் பிறந்தவதான் நீ.”

“பின்னே ஏன் அவர் நம்பகூட இல்லே?”

“என்னத்தச் சொல்ல! எங்க கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அவருக்கு என்னப் பிடிக்காம போயிடுத்து”.

“நீ அப்படி என்ன பண்ணினே?”

“நான் ஒரு தப்பும் பண்ணலே”. மகள் சற்றும் எதிர்பாராவிதமாக, கங்கா தன் புடவையைத் தூக்கினாள். “பாத்தியா? இதுதான்..!” அவள் சுட்டிய இடத்தில் சருமத்தின் நிறம் மாறியிருந்தது.

“`குஷ்டரோகம் இருக்கிற பொண்ணை எல்லாருமா சேர்ந்து என் தலையிலே கட்டியிருக்கேள்!’ அப்படின்னு கத்திட்டுப் போனவர்தான். எங்கப்பா, `இவளுக்குச் சின்ன வயசிலேருந்து இப்படி ஒரு தழும்பு இருக்கு. இது வியாதியில்லே, மாப்பிள்ளை,’ அப்படின்னு அவர் காலைப் பிடிச்சுண்டு எவ்வளவோ கெஞ்சினார். அந்த மனுஷன் மசியலியே!”

தனக்கு வேறு எந்த விவரமும் தெரியாதே என்று நினைவிலெழ,  “முக்கியமானதை விட்டுட்டியேம்மா. ஒன்னை நிர்கதியா விட்டுட்டுப் போனவரோட பேரு?”

கங்கா மௌனம் சாதித்தாள்.

அஞ்சனா மேலும் துருவினாள். “என் பேருக்கு முன்னாடி G ன்னு தலைப்பெழுத்து போட்டியே. அது ஒன்னோட பேரோட முதல் எழுத்துதானே?”

“அவரோட பேரும் அதிலதான் ஆரம்பிக்கும்”. சொல்லியபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கங்கா, இதற்குமேலும் இதைப்பற்றிப் பேசத் தான் தயாரில்லை என்பதை உணர்த்துவதுபோல்..

அதற்குமேலும் அம்மாவைக் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை அஞ்சானாவுக்கு. “இன்னிக்கு ஏதாவது சினிமா பாத்துட்டு, அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாமா?” என்று பேச்சை மாற்றினாள்.

`அதுக்கெல்லாம் காசு கொட்டியா கெடக்கு?’ என்று முன்போல் சொல்ல முடியவில்லை கங்காவுக்கு. அவர்கள் உரையாடலால் அவள் மனமும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கும். பாவம்!

“இரு. புடவையை மாத்திண்டு வரேன். நீயும் பௌடர் அடிச்சுண்டு வா,” என்று சிரிக்க முயன்றாள்.

அஞ்சனாவின் மனம் படத்தில் செல்லவில்லை.

G என்ற எழுத்தில் என்னென்ன பெயர்கள் இருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தாள். கணேசன், கணபதி? கங்காதரன்?

அதற்குமேல் யோசிக்க முடியவில்லை.

படத்தில் கதாநாயகன் நாலைந்து தடியன்களை அடித்து உதைத்துக்கொண்டிருந்தான். பின் எப்படித்தான் கதாநாயகியின் மனதில் இடம் பிடிப்பது?

அஞ்சனா முகத்தைச் சுளித்தாள். இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் திரையில் பார்க்கத்தான் சுவாரசியமாக, கிளுகிளுப்பாக இருக்கும். நடைமுறையில் அம்மா மாதிரி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ!

“ஒரே சத்தமா இருக்கு,” என்று முணுமுணுத்துவிட்டு, மெல்ல எழுந்தாள். இருண்டிருந்த தியேட்டரின் கதவிலிருந்து வெளிப்பட்டவளுக்கு ஒரு சிறு கும்பல் கண்ணில்பட்டது.

`என்ன நடக்கிறது இங்கே?’

ஒருவர் தரையில் கிடந்தார். முகம் நீல நிறமாக மாறியிருந்தது. கைகள் விறைத்திருக்க, கண்கள் என்னவோ திறந்தபடிதான் இருந்தன.

அருகில் வேதனை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தவர் அவரது நண்பர் போலும்! “இருதயச் சிகிச்சை நடந்து ஒரு மாசம்கூட ஆகல,” என்று பொதுவாகத் தெரிவித்தார்.

“நகருங்கள், ப்ளீஸ். என்னால் உதவ முடியும்,” என்றபடி, அவர் அருகில் சென்றாள் அஞ்சனா.

அவர்களிருவரும் வீடு திரும்புகையில், கங்கா விசாரித்தாள்: “பாதி படத்திலே எங்கேடி போயிட்டே?”

“நான் போனதும் நல்லதாப்போச்சு. ஒரு உசிரைக் காப்பாத்தினேன்”. நடந்ததை விவரித்தாள். “இந்த reflexology-யால ஒடனே பலன்! அவர் கையில சில எடங்களை அழுத்திப்பிடிச்சேன். ரத்த ஓட்டம் சீராகி, எழுந்து நடந்து போனார். `பை’ அப்படின்னு கையை ஆட்டினார்னா பாத்துக்கயேன்!”

“அப்படியே புண்ணியம்!” தாய் மெச்சிக்கொண்டாள். “அவர் யாருன்னு கேக்கலியா நீ?”

“யாரா இருந்தா என்னம்மா? அவர் எழுந்து நடந்ததும், அங்கே இருந்தவாளெல்லாம் என்னைப் பாத்து சிநேகமா சிரிச்சதே சந்தோஷமா இருந்தது! ஒண்ணும் பேசாம நடந்துட்டேன்”.

வேடிக்கை பார்த்தபடி பேரங்காடியில் நடந்துகொண்டிருந்த அஞ்சனா குரல் வந்த திசையில் திரும்பினாள்.

“ஹலோ! அன்னிக்கு பேர்கூடச் சொல்லாம அவசரமா போயிட்டீங்களே! எனக்கும் கேக்கத் தோணல”.

அவள் முகத்திலும் சிரிப்பு படர்ந்தது. பெயரைச் சொல்லிவிட்டு, “சௌக்கியமா?” என்று விசாரித்தாள்.

“ஒங்க புண்ணியத்தால நல்லா இருக்கேன். வாங்களேன், காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”.

“ஒங்க பேரைச் சொல்லலியே, ஸார்?”

“கௌரிசங்கர்”.

G – யில் ஆரம்பிக்கும் பெயர்! இவருக்கும் தன் அப்பா வயதுதான் இருக்கும். ஒரு கணம் திகைத்தவள், தன்னையே கடிந்துகொண்டாள்.

இது என்ன பைத்தியக்காரத்தனம்?

`வேண்டாம்’ என்று அம்மாவைத் துரத்தியவரைப்பற்றி எதற்காக ஓயாது யோசித்து மூளையைக் குழப்பிக்கொள்வது? அந்த மனிதர் எங்கே, எவளுடன்  இருக்கிறாரோ!

“மத்தவங்க எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னப்போ, நீதான் என்னை.,” மார்பில் கையைப் பதித்துக்கொண்டார். “ஒங்க அம்மாவும் அப்பாவும் ஒன்னை நல்லபடியா வளத்திருக்காங்க அஞ்சனா”.

ஏதோ சொல்லவந்தவள், தன்னை அடக்கிக்கொண்டாள். `எனக்கு அம்மா மட்டும்தான்’ என்பதை கண்டவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பானேன்!

“மனுஷனாப் பிறந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யட்டா எப்படி?” என்றாள் அடக்கத்துடன்.

“எனக்கு யாருமேயில்ல,” குழந்தைபோல, சுயபரிதாபத்துடன் கூறினார். “ரெண்டு கல்யாணம். ஒண்ணும் நிலைக்கலே”.

ஒரு முறை அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள். இவ்வளவு பெரியவரிடம் எப்படித் துருவித் துருவிக் கேட்பது!

தன் மனப்பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று காத்திருந்தவர்போல் அவரே தொடர்ந்தார்: “ஒருத்திக்குத் துரோகம் பண்ணினேன். தீர விசாரிக்காம அவளைத் துரத்தினேன்”.

அவரே பேசட்டும் என்று அஞ்சனா காத்திருந்தாள்.

“பெருநோய் அவ்வளவு லேசா பரவற வியாதியில்ல. ரொம்ப நாள், அதுவும் நெருக்கமா இருக்கிறவங்களுக்குத்தான் அந்த வியாதி வர வாய்ப்புண்டு. அது தெரிஞ்சதும், குத்த உணர்ச்சி உறுத்திக்கிட்டே இருந்திச்சு. எனக்கு அவசர புத்தி”.

`இப்போது இந்தப் பேச்சு எதற்கு?’ என்று அஞ்சனா கேட்கவில்லை.

“இன்னொருத்தியை ஏத்துக்க முடியல. அவ கேஸ் போட்டா. எனக்கு..,” தலையைக் குனிந்துகொண்டார். “நான்.. ஆம்பளையே இல்லேன்னு!”

அஞ்சனாவுக்கு அதற்குமேலும் சந்தேகம் இருக்கவில்லை.

`நீங்கள் ஆண்மகன்தான். உங்களுக்குப் பிறந்த பெண் நான்!’ என்று கூறிவிடலாமா?

`எதற்காக?’ என்று அவள் மனம் இடக்கு செய்தது.

துரோகமாம், குற்ற உணர்ச்சியாம்! என்னமாக அளக்கிறார்! பிரயாசைப்பட்டுத் தேடியிருந்தால் அம்மா இருக்கும் புதிய இடத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாதா?

இத்தனை வருடங்களாக அம்மா எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள்! ஏன், தானே கேட்கவில்லையா, `நீ முறையாகக் கல்யாணம் செய்துகொண்டவள்தானா?’ என்று?

இந்த மனிதர் நன்றாகத் துடிக்கட்டும்.

சே! இவருக்கா உதவி செய்தேன்! மற்றவர்களைப்போல, வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்திருக்கலாம்.

“என்னம்மா அஞ்சனா எழுந்துட்டே?”

“எனக்கு அவசரமா ஒரு எடத்துக்குப் போகணும். மறந்தே போயிட்டேன்,” என்றபடி அஞ்சனா அங்கிருந்து விரைந்தாள்.

அவள் போன திசையையே பார்த்தபடி இருந்தவருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. இவளைப் பெற்றவள் தான் கைவிட்ட கங்காதான். அதே சாயல்! வேறு ஒருவரை மணந்து, இவளைப் பெற்றிருக்கிறாள்.

தாலி கட்டிய பெண்ணுக்குத் துரோகம் செய்துவிட்டதாக எண்ணி இவ்வளவு காலமும் துடித்தோமே! எல்லாம் வீண்.

கௌரிசங்கருக்கு அழுகை வரும்போல இருந்தது.

வீடு திரும்புகையில், அஞ்சனா பலவாறாக யோசித்தாள்.

`அம்மா! நான் அப்பாவைப் பாத்துப் பேசினேன்’.

`அவர் யார் தெரியுமா? அன்னிக்கு ஒரு நாள் தியேட்டரில..’

அம்மா என்ன சொல்வாள்?

`கையோட அப்பாவை அழைச்சிண்டு வந்திருக்கமாட்டியோடி?’ என்பாள். கண்களில் ஆர்வம் கொப்புளிக்கும்.

அவர் வந்தால், அம்மாவின் உலகத்தில் அவரும், அவருடைய உலகத்தில் அம்மாவும்தான் இருப்பார்கள், கடந்தகால இழப்பைச் சரிசெய்வதுபோல். இனி, அவளை யார் கவனிக்கப்போகிறார்கள்!

வேண்டாம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதுபோல் ஆகிவிடும். எனக்கு அம்மா வேண்டும்.

“எங்கே போயிட்டே, அஞ்சனா? ரொம்ப இருட்டிப்போயிடுத்தே! வேலை அதிகமா இன்னிக்கு?” அம்மாவின் உண்மையான கரிசனம் ஒரு கணம் அவளை நிலைதடுமாறவைத்தது. சட்டென்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.  `ஆமாம்மா. ரொம்ப வேலை!” என்றாள், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து. விசுவ(வா)வசு

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து.
விசுவ(வா)வசு

சத்தியமணி 14 04 2025
ராகம். ஆனந்த பைரவி

பிறந்தாளே பிறந்தாளே சித்திரை பூமியில்
விஸ்வவசு பெயரோடு தான்
மலர்ந்தாளே தவழ்ந்தாளே நித்திரை எழுப்பியே
விசுவாசம் மணம்வீசும் தான்

திங்கட் கிழமை திவிதியை நன்னாளில்
மங்களம் பொங்கிவர நம்வாசல் வந்தாள்
அங்கம் மினுக்கும் தங்கம் அணிந்து
சுவாதியில் சிற்றாடைப் பெண்ணாய் நுழைந்தாள்
தெய்வங்களும் அருள் கூட்டுமே
முன்னோர்களின் வரம் சேருமே
இந்நாளும் எந்நாளும் இன்பங்களே

வச்சிரம் யோகம் சைதுளைக் கரணமாய்
அச்சிராப் பள்ளி பிள்ளையும்
தடை போக்குவார்
மெச்சிப் புகழும் உச்சி குளிரும்
அன்போடு சுற்றமும்
களிப் பூட்டுவார்
மயிலோடு வேல் சிவனாருமே
உமையோடு ஏழு மலையானுமே
திருமகள் இல்லத்தில் அமர்ந்தார்களே

❌