ஆகிய மூன்று இதிகாசங்களின் கதைகளைக் குவிகத்தில் தொடராக வெளியிட்டு பின்னர் அவை மூன்றையும் தனித்தனிப் புத்தகமாக வெளியிட்டோம்.
குழந்தைகளும் பெரியவர்களும் படிக்கும் புத்தகங்களாக இருக்கின்றன என நண்பர்கள் கூறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. காஞ்சிபுரத்தில் ஒரு அரசினர் பள்ளியில் நூலகத்திற்காக இந்த மூன்று புத்தகங்களையும் 10 பிரதிகள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தோம்.
நூற்றுக்கும் மேற்பட்டஇதிகாசங்கள் உலக அளவில் இருக்கின்றன. அவற்றிலிருந்து 10 தலை சிறந்த இதிகாசங்களைச் சுருக்கமாக நமது குவிகத்தில் தொடராக வெளியிட்டு பின்னர் புத்தகங்களாக வெளியிடவேண்டும் என்பது என் அவா.
பத்துக்கு மூன்று பழுதில்லை என்று சொல்லும்படி மேலே குறிப்பிட்ட மூன்று புத்தகங்கள் குவிகம் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துவிட்டன.
இன்னும் எழுதிய வேண்டியவை
வால்மீகியின் ராமாயணம்
வியாசரின் மகாபாரதம்
வர்ஜிலில் ஏனிட்
பிர்டௌஸியின் ஷா நாமா
ஓவிடின் மெடமார்பஸிஸ்
பியோ உல்ப்
அரிஸ்டோவின் அர்லான்டோ
இவற்றுள் ராமாயணம் மகாபாரதம் இரண்டும் நமது நாட்டில் அதிகம் எழுதப்பட்ட ,பேசப்பட்ட நூல்கள். இவற்றை எப்படி வித்தியாசமான எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அதற்கு முன் இலியட் ஓடிஸி இரண்டிற்கும் மிகவும் சம்பந்தமுள்ள ஏனிட் (Aeneid ) கதையை எழுதலாமே என்று தோன்றியதான் விளைவே இந்தத் தொடர்.
வர்ஜில் என்பர் எழுதியது ஏனிட் என்ற மகா காவியம்.
டிராய் யுத்தத்தில் கிரேக்கருக்கு ஆதரவாகப் போரிட்ட அக்கிலிஸின் கதையைக் கூறுவது இலியட். போரில் கிரேக்கர் வெற்றி பெற உதவிய ஓடிஸியஸ் என்று கிரேக்கர்களாலும் யுலிஸஸ் என்று ரோமர்களாலும் அழைக்கப்படும் வீரனின் கதையைக் கூறும் இதிகாசம் ஹோமரின் ஓடிஸி.
டிராய் நாட்டுக்கு ஆதரவாகப் போரிட்ட தெய்வ குமாரன் ஏனியஸ் ஏனிட் என்பவனின் கதையைக் கூறும் காவியம்தான் ஏனிட்.
ராமாயானத்தில் அயனம் என்றால் பயணம் என்று பொருள். ராமரின் பயணமே ராமாயணம். ஓடிசியஸின் பயணம் ஓடிசி . அதைப்போல இங்கே ஏனியஸின் பயணம் ஏனிட் என்று அழைக்கப்படுகிறது.
முதலில் வர்ஜில் என்னும் மாபெரும் கவிஞரைப்பற்றி சில வரிகள்.
வர்ஜில் அகஸ்டஸ் சீஸரின் காலத்தவர். அகஸ்டஸ் ரோம சாமராஜ்யத்தின் மாபெரும் tதலைவர். சக்கரவர்த்தி. ஜூலியஸ் சீஸரின் வளர்ப்பு மகன். ஆண்டனி கிளியோபாத்ரா ஆகியவர்கள் அகஸ்டஸ் சீஸர் காலம். ஜூலியஸ் சீஸர் பெயரில் அவர் பிறந்த மாதம் ஜூலை என்று அழைக்கப்படுகிறது. அதுபோல அகஸ்டஸ் பிறந்ததானால் அந்த மாதம் ஆகஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. வர்ஜில் கி மு 70 ஆம் வருடம் அக்டோபர் 15இல் பிறந்து கி மு 19 செப்டம்பர் 21 இல் மறைந்தவர். நமது திருவள்ளுவரும் இந்தக் காலத்தவர் என்று கருதப்படுகிறது.
“வர்ஜில் ஓர் எழுத்தாளரல்ல, ஒரு கலாசாரக் கனவை உருவாக்கிய கலைஞர். அவரது படைப்புகள் அரசியலையும் ஆன்மிகத்தையும் காதலையும், வீரத்தையும் ஒன்றாகக் குழைத்து எழுதப்பட்ட காவியங்கள். ” என்று என்று சொல்வர்.
இவரது கவிதை நடை மனதைக் கொள்ளை கொள்ளும் ஹோமரின் பாணியைப் பின்பற்றியது. அத்துடன் இவரது காவியத்தில் புராணச் சிறப்பும், வரலாற்று விளக்கங்களும், அரசியல் நுட்பங்களும் நிறைந்திருக்கின்றன. பிற்காலத்தில் வந்த ஷேக்ஸ்பியர் போன்ற பல பிரபல ஆங்கிலக் காப்பிய ஆசிரியர்கள் இவரது பாணியைப் பின்பற்றித் தங்கள் காவியங்களை அமைத்தனர் என்றால் இவரது பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ?
கி மு 20 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஏனிட் ஒரு முற்றுப் பெறாத காவியம். வர்ஜில் தான் இறக்கும் போது முடிவுறாத இந்தக் காவியத்தை அழித்துவிடும்படி வேண்டினார். ஆனால் அகஸ்டஸ் சீஸர் அதன் பெருமையை உணர்ந்து அழிக்காமல் அதனைத் தனது ரோம சாம்ராஜ்ஜியத்தின் தேசியக் காப்பியமாகப் போற்றினான். காரணம் ரோம சாம்ராஜ்யம் உருவாவதற்குக் காரணமானவன் ஏனியஸ் .அதன் புகழையும் சரித்திரத்தையும் நிலை நாடியவன் ஏனியஸ் . அன்றைய ரோம சாம்ராஜ்யத்தின் குறியீடாக அந்தக் காவியம் அமைந்திருந்தது. இலக்கிய நயத்தால் சிறந்தது. போர் பற்றிய சொல்லோவியங்களான வருணனைகளைக் கொண்டது. விரிந்த களப்பரப்பைக் கொண்டது. வீரத்தின் ஆற்றல் மற்றும் விதியின் வலிமையைக் கதைக் கருவாக முன்வைக்கிறது. ரோம் மக்களின் கடவுளர் பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும் பேசுகிறது
தனது நண்பரும் மிகச் சிறந்த அறிவாளியுமான புரூட்டசால் கொலை செய்யப்பட்டு ஜூலியஸ் சீசரின் மரணமடைகிறார். நாடு பல அரசியல் குழப்பங்களுக்கு உள்ளானது. மார்க் ஆண்டனி, அகஸ்டஸ் மற்றும் லெபிடஸ் மூவரும் சேர்ந்து மூவராட்சியை அமைத்தார்கள். ஆனால் அவர்களுக்குள் போட்டி பொறாமை சண்டை இருந்ததால் நாடு உள்நாட்டுப் பூசல்களால் பிளவுபட்டது. வீதிச் சண்டைகளும் கலவரங்களும் அதிகரித்தன. இச்சூழ்நிலையில் அகஸ்டஸ் தனது எதிரிகளை அழித்து சர்வ வல்லமை பெற்ற அதிகாரியாக உருவானான். சக்கரவர்த்தி என்ற பெயரைச் சூட்டிக்கொள்ளாமல் ஜன நாயக சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்தான்.
அப்போதுதான் வர்ஜிலுக்குத் தனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறந்தது. அகஸ்டஸின் ஆட்சிச் சிறப்பைப் போற்றும் காப்பியமாகவே வர்ஜில் ஏனியட்டைப் படைத்தார். ரோமானியர்கள் தங்கள் நாட்டின் வரலாற்றையும் வல்லமையையும் தொன்மக் கதைகளையும் பற்றிப் பெருமை கொள்ளும் விதத்தில் அமைந்தது இக்காப்பியம்.
கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் இடையே நடந்த ட்ரோஜன் போரின் (Trojan War) முடிவிலிருந்து தொடங்கும் கதையே ஏனியட். ட்ராய்(Troy) நகரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிதறுண்ட தனது மக்களை அழைத்துக் கொண்டு ட்ராயின் இளவரசன் ஏனியாஸ்(Aeneas) தெற்கு நோக்கிப் பயணம் செய்கிறான்.
செயல்வீரனான ஏனியாஸ், பிறப்பிலிருந்தே பெரும் புகழுக்குரியவன். இத்தாலியின் பேரரசு ஒன்றை நிறுவுவான் என்பதே அவனது விதி. ஆனால் அந்த வீதியை முறிக்க கடவுளர்கள் சதி செய்கிறார்கள். அவனுக்கு எதிராக இயற்கையின் சீற்றத்தை ஏவி விட ஏனியாஸ் அந்தச் சுழலில் சிக்கித் தவித்தான். கடவுளர்கள் தந்த இடர்களை மீறி அவன் எப்படி வெற்றி பெற்றான் என்பதை வீர தீர காவியமாகத் தந்தவர் வர்ஜில்!
ஏனியட்12 காண்டங்களைக் கொண்டது. முதல் ஆறு காண்டங்கள் ஏனியாஸ் தனது மக்களோடு புதிய நாடொன்றை அமைக்கத் தென்திசை நோக்கி மேற்கொண்ட பயணத்தை விவரிக்கின்றன. கடைசி ஆறு காண்டங்கள் ட்ரோஜன் மக்கள் ஏனியாஸின் தலைமையில் இத்தாலியில் நடத்திய பெரும் போரைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.
இந்த முன்னுரையுடன் அடுத்த இதழில் ஏனிட் கதைக்குள் செல்வோம்
காலையின் பரபரப்பில் தலைநகரின் அந்தச் சாலை முழுவதும் நிரம்பியிருந்த வாகனங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மெட்ரோ ரயில், சாலையை அகலப்படுத்துதல், மழைநீர் பாதை, நடைபாதை சீரமைப்பு என ஏதாவது ஒரு காரணத்தினால் நகரம் முழுவதுமே இப்படி எல்லா நேரங்களிலும் மெல்ல நகரும் போக்குவரத்துக்கு மக்கள் பழகி விட்டார்கள். இன்று காலை 6 மணிமுதல் தேவியும் அவள் நண்பர்களும் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் புரொபஸருடன் ரவுண்ட் போகும் பிராக்டிகல் வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறார் தேவி 3ஆம் ஆண்டு மருத்துவ மாணவி.
தன் முன்னால் போய்க்கொண்டிருந்த ஸ்கூட்டர் திடுமென்று தடுமாறி அலைபாய்வதை கவனிக்கிறாள். என்ன செய்கிறாள்? இந்தப்பெண் என்று எண்ணியபடியே அவளை நெருங்கிறாள். அதற்குள் அந்தப்பெண் ஸ்கூட்டருடன் சரிந்து விழுகிறாள். ஹெல்மெட் கழண்டு உருண்டு ஒடுகிறது. சட்டென்று தன் ஸ்கூட்டரிலிருந்து இறங்கி அந்தப்பெண்ணை தூக்க முயற்சிக்கிறாள். அவளால் எழுந்திருக்க முடிய வில்லை. மயங்கிச் சாய்ய்கிறாள். முகத்தின் நிறம் மங்கலாகயிருக்கிறது. கண்களின் இமைகளை விலக்கிப் பார்க்கிறார் தேவி விழிகள் அசைய வில்லை. நரம்பியல் மருத்தவ மாணவியான தேவிக்கு இது ஏதோ மூளையில் பாதிப்பு, தலையில் உள் காயம் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டுபோக வேண்டிய எமர்ஜென்சி என்ற எண்ணம் மனதில் பளிச்சிடுகிறது. மயக்கத்தில் ஆழ்ந்திருந்த அந்தப்பெண்ணின் மூச்சு மெல்லிதாகயிருந்தது. பல்ஸ் இறங்க வில்லை என்பதை கையைப்பிடித்து பார்த்த தேவி அவசரமாக எழுந்து, வரும் ஒரு ஆட்டோவை கைநீட்டி நிறுத்தி “ “அண்ணா ஒரு எமர்ஜென்சி இந்தப்பெண்னை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்கிறார்.
வினாடிகளில் நிலமையைப்புரிந்து கொண்ட அவர் ஏறுங்கம்மா போயிடலாம் என்கிறார். அதற்குள் அங்கு கூடிய கூட்டத்தில் ஆளாளாக்கு அட்வைஸ். “ஒரு சோடா கொடுங்க இந்த தண்ணியை மூஞ்சியில் அடிங்க” என்று வாட்டர் பாட்டிலை நீட்டியவர்கள். அவரை ஏதோ ஒரு கார் அடித்து போட்டுவிட்டது என்று முடிவெடுத்த விட்ட ஒருவர்” “இப்படித்தான் பொறுப்பில்லாம சின்னப் பையன்கள் காரை ஒட்டி அடுத்தவங்களை சாகடிக்கிறாங்க. போலீஸ் பிடிக்க மாட்டங்க! பிடிச்சாலும் பெரிய இடத்து கட்சிகாரங்க சிபார்சுலே விட்டுடுவாங்க. முதல்ல இந்த கவர்ன்மெண்ட் ஒழியணும்” என்று அரசியல் பேசினார்.. தேவி எவருக்கும் பதில் சொல்லமல் ஆட்டோகாரரிடம் “அண்ணா போகலாம் சீக்கிரம்!” என்கிறார்.. இந்த ரோடு முனையில் லெப்டில் காந்தி ஆஸ்பட்டலுக்கு போங்க நேர எமர்ஜென்சி வார்ட் கிட்டே போங்க என்கிறார். “இப்போ போயிடலாம் மேடம்” என்று ஆட்டோவை விரட்டிக்கொண்டு போகிறார் அவர்..
ஆனால், அந்தத் தெருமுனையில் அவர்களைத் தடுத்தது ஒரு இரும்புக் கோட்டை. “முதலமைச்சரும் அமைச்சர்களும் இது வழியாக ஒரு விழாவுக்கு வர்றாங்க. அதனால் இந்தப் பாதை மூடப்பட்டிருக்கு. வேற வழியா போங்க!” என்று காவலர் ஒருவர் கர்ஜித்தார். வேறுவழி என்பது அந்த பெரிய சாலையின் மறு முனை.அங்கு போய் பாதை மாறி வர 10-15 நிமிடம் ஆகும். அந்தப்பெண் கோல்டன் அவர் என்று சொல்லப்ப்படும் அதி அவசர நிலையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்த தேவி
“சார், ஒரு மூணு நிமிடத்துல பக்கத்திலிருக்கும் ஆஸ்பட்டலுக்குப் போயிடலாம். ஒரு உயிரு ஆபத்துல இருக்கு!” கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. என்றார் தேவி கெஞ்சும் குரலில். ஆனால், காவலர் பிடிவாதமாக, “முடியாது அம்மா. நான் என் டியூட்டியைத்தான் செய்றேன். நீங்க ஒண்ணு செய்யுங்க “ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க. வந்துடுவாங்க. நான் இப்போ விட முடியாது,” என்றார்.
ஆட்டோ டிரைவர் மாரிமுத்து கோபத்தில் கொதித்தான். “என்னய்யா, மனுஷன் நீ. நீயெல்லாம் எப்படி போலீஸானே? ஒரு உயிர் துடிக்கிறதுன்னு சொல்லாறங்க புரியல்லையா? என்று கத்தி சண்டையிட ஆரம்பித்துவிட்டான்.
. நிமிடங்கள் உயிரைப் பறிக்கும் வாளாக நெருங்கிக்கொண்டிருந்தன.. சற்று நேரத்திற்கு பின்னர் அந்தக் காவலர், “எங்க இன்ஸ்பெக்டர் காந்தி ஆஸ்பட்டல் முன்னாடிதான் இருக்கார். அவர்கிட்ட கேட்டுப்பாருங்க,” என்றபடியே கரகரப்புகிடையே இன்ஸ்பெக்டரிடம் தகவலைச்சொல்லி வயர்லெஸ் செட்டை நீட்டினார்.
தேவி, இன்ஸ்பெக்டர் ரவியிடம் பேசினார். “சார், ஒரு பொண்ணு மயங்கி விழுந்திருக்கு. எமர்ஜென்சி உடனே ஆஸ்பட்டல் அட்மிட் செய்யணும்!!”
மூன்றாவது நாளாக தொடர்ந்து விஐபி பாதுகாப்பு டியூட்டியிலிருந்த இன்ஸ்பெக்டர் ரவி, களைப்பான குரலில், “மேடம், சீப் மினிஸ்டர் கான்வாய் கிளம்பிருச்சுன்னு இப்போதான் மெசேஜ் வந்திருக்கு. . இந்தப் பாயின்டைக் கடந்ததும் கான்ஸ்டபிள் அனுமதிப்பார் என்று சொல்லிவிட்டு மைக்கை கான்ஸ்டபிள்கிட்டக் கொடுங்க என்றார். “ என்னய்யா ஏட்டு நீ? அறிவு இருக்கா? நிலைமை உனக்குத் தெரியாதா? இதெல்லாம் நீ சமாளிக்க வேண்டிய விஷயம் எதுக்கு பப்ளிக்கிட்ட வயர்லெஸ்ஸை கொடுக்கிறே? பொறுப்பில்லாதவரா இருக்கிங்க. என்னிக்குத்தான் கத்துக்கப் போறீங்க? என்று கத்துகிறார். அது தேவிக்கும் ஆட்டோ டிரைவர் மாரிக்கும் கேட்கிறது. தேவியின் இதயம் நொறுங்கியது. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக நீண்டது. அந்தப்பெண்ணின் பல்ஸ் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது.
பதினைந்து நிமிடங்கள் கழித்து, அமைச்சர்களின் வாகனங்களின் அணிவகுப்பு ஆடம்பரமாகக் கடந்து சென்றது.. காவலர்கள் தடைகளை அகற்ற, காத்திருந்த வாகனங்கள் வெள்ளமாகப் பாய்க்கின்றன. மாரிமுத்து ஆட்டோவை ராக்கெட்டைப் போல கிளப்பினார். அதன் ஹாரன் ஒலியில் சாலையே அதிர, , பலரின் திட்டுகளை வாங்கிக்கொண்டு, காந்தி மருத்துவமனையின் வாசலில் நுழைந்த ஆட்டோ எமர்ஜென்சி வார்ட் முன்னே நின்றது. செவிலியர்கள் ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்தனர். தேவியும் செவிலியருடன் அதைத்தள்ளிக் கொண்டே உள்ளே ஓடினார்.
அதே நேரம், , மூன்றாவது நாளாக தொடர்ந்து விஐபி பந்தோபஸ்த்து டியூட்டினால் களைத்து வெறுத்துப்போயிருந்த இன்ஸ்பெக்டர் ரவி எதிரே இருந்த கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
.சைலண்ட்டிலிருந்த அவர் மொபைல் ஒளிர்ந்தது—மூன்று மிஸ்டு கால்கள், அவரது மனைவி கவிதாவிடமிருந்து. அவர் திரும்ப அழைத்தபோது, கவிதாவின் குரல் பதற்றத்தில் நடுங்கியது. “எங்க இருக்கீங்க? நம்ம ராதிகா ஸ்கூட்டர்லிருந்து மயங்கி விழுந்துட்டான்னு யாரோ காந்தி மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்களாம். அவங்க ஆபிஸிலிருந்து சொன்னாங்க. அவங்க மானேஜர் அங்கே வராராம் நான் இப்போ அங்க போய்க்கிட்டு இருக்கேன். நீங்களும் உடனே வாங்க!”
ரவியின் உலகம் தலைகீழானது. கையில் இருந்த டீ கிளாஸ் சாலையில் விழுந்து சிதறியது. “ஐயோ!” என்று அலறியபடி, எதிரே இருந்த மருத்துவமனையை நோக்கி ஓடினார். வாகன ஓட்டிகளின் திட்டுகளைப் பொருட்படுத்தாமல் சாலையை ஒட்டிக் கடந்து, மருத்துவமனை வாசலில் நுழைந்தார்.
அவர் ரிசெப்ஷனில் விசாரித்துக்கொண்டிருக்கும்போது அதே வாராண்டாவில் தேவி ஒரு டாக்டருடன் பேசிக்கொண்டே வந்தார்.. டாகடர் தேவியிடம் , “ஒரு மெடிகல் ஸ்டுடென்ட்டாக நல்ல மனசோடதான் நீங்க உதவி செஞ்சிருக்கிங்க. ஆனா அவங்களைக் கொண்டு வரும்போதே ஆல்மோஸ்ட் டெட். காப்பாத்த முடியல. MRIல பார்த்தேன். மூளையில ஒரு நரம்பு வெடிச்சு ரத்தம் கசிஞ்சிருக்கு. Intra cerebral hemorrhage (ICH), ஒரு ஐந்து நிமிஷம் முன்னாடி வந்திருந்தாலாவது ஏதாவது முயற்சி செஞ்சிருக்கலாம். சாரி.!
அவங்க பெயர், விலாசம் ஏதாவது தெரியுமா?” அதை ரிசப்ஷனில் சொல்லிடுங்க. அவங்க போலிஸுக்கு சொல்லிடுவாங்க.
தேவி, குரல் தழுதழுக்க, “அவங்க கழுத்துல இருந்த ஐடி டாக்கில் பார்த்து அவங்க கம்பெனிக்கு போன் பண்ணியிருக்கேன், டாக்டர்.
அவங்க பேரு ராதிகா.
அந்த வார்த்தைகள் இன்ஸ்பெக்டர் ரவியின் காதுகளில் இடியாக இறங்கின.. அவர் பதறியபடி டாக்டரின் அருகில் வந்து , “ராதிகா… என் மகள்…” என்று முணுமுணுத்தார். குரல் கேட்டு தேவி திரும்பிப் பார்த்தாள். ரவியின் முகத்தில் உறைந்திருந்த வலியைப் பார்த்தவளின் கண்களில் அவளறியாமல் கண்ணீர் வழிந்தது.
நிமிடங்களின் தாமதம் ஒரு உயிரைப் பறித்திருந்தது. ஆனால், அந்த நிமிடங்களுக்குப் பின்னால் நிழலாக இருந்தது மனிதர்களின் கடமைகள், பாதுகாப்பு விதிகள், மற்றும் விதியின் கொடூரமான கைகள்.
சாலையில் வாகனங்கள் மீண்டும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு பரபரப்பாக ஓடத் தொடங்கின. ஆனால், மெளனமாக நிற்கும் அந்த மருத்துவமனையின் வெளிப்புறச் சுவர்கள் ஒரு போலீஸ்காரரின் கடமையுணர்ச்சிக்கும், ஒரு தந்தையின் உடைந்த இதயத்திற்கும், ஒரு பெண்ணின் நல்ல மனத்திற்கும் என்றென்றும் சாட்சியாக நிற்கும்—
வர்ணாஸ்ரம் தர்மத்தில் வானப்ரஸ்தம் என்று ஒரு வார்த்தை உண்டு. அறுபது வயதுக்குப் பிறகு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் சொல் அது.
அறுபது வயதில் அனேகமாக பலரும் ஓரளவுக்கு வாழ்க்கையின் பெரும் பகுதிக் கடமைகளை முடித்தவர்களாகி விடுகிறார்கள். திருமணமாகி பிள்ளைகள் பெற்று அவர்கள் வளர்ந்து அவர்களுக்கும் பலர் திருமணம் செய்து பேரன் பேத்தி கூட எடுத்திருப்பார்கள். ஓரளவு பணம் சேர்த்து சொந்த வீடு சேமிப்பு என்று செட்டிலாகி இருப்பார்கள். குழந்தைகள் இல்லாதவர்களுக்கும் இது பொருந்தும். வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் ரிடையர் ஆகியும் இருப்பார்கள். ( பெண்களுக்கு ஏது ரிடையர்மென்ட் என்கிற மைண்ட் வாய்ஸ் கேட்கிறது) சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.
அந்தக் காலத்தில் இந்த பருவத்தைத் தான் வானப்ரஸ்தம் என்றார்கள். குடும்பப் பொறுப்புக்களைத் துறந்து கணவனும் மனைவியும் காட்டுக்குச் செல்லும் காலம். கிட்டத்தட்ட துறவறம் மாதிரி என்று சொல்லலாம். இந்தக் காடு, துறவறம் எல்லாம் இந்த காலத்துக்கு செட் ஆகாது என்றாலும் அறுபது வயது என்பது பொறுப்புக்களைக் கைவிடும் காலம் என்பது மட்டும் உண்மை தான்.
இன்றைய காலகட்டத்தில் அறுபது வயது என்பது ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி ஒரு செகண்ட் இன்னிங்ஸ் போல. காரணம், பிள்ளைகள் நகர்ந்து விடுகிறார்கள். பெரும்பாலும் பெற்றோரை எதிர்பார்ப்பதில்லை. நாமாகப் போய் சேர்ந்து கொண்டால் தான் உண்டு. ஓரளவுக்குப் பணம் இருக்கிறது. ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது. நேரம் நிறைய இருக்கிறது. இந்தப் பருவத்தை, அதாவது அறுபது வயது தாண்டிய பருவத்தைப் பலரும் மறுபிறவி எடுத்தாற் போல உற்சாகமாக வாழத் துவங்குகிறார்கள்.
தனக்குப் பிடித்ததை எல்லாம் செய்ய, இள வயதில் விட்டுப் போன, அனுபவிக்க முடியாத பலவற்றை வேக வேகமாக அனுபவிக்க ஆரம்பிக்கின்றனர். குழுவாகப் பயணம் செய்வது, நிறைய கேளிக்கைகளில் நேரம் செலவழிப்பது, பிடித்த உண்வகங்களுக்குச் செல்வது,க்ளப்,பார்ட்டி என்று கலந்து கொள்வது, கோயில் உறவினர் இல்லங்கள் என்று பயணம் செய்வது, வெளிநாடுகளுக்கு செல்வது, பிள்ளைகளுடன் சென்று தங்கி இருப்பது இப்படிப் பல.
இப்படி ஒரு ஐந்து வருடங்கள் ஓடி விடுகின்றன. பிறகு சில பல ஆரோக்கிய அச்சுறுத்தல்கள், மன உளைச்சல்கள் மெதுவாகத் தலை தூக்குகின்றன. இந்த பாதிப்பில் இன்னும் ஒரு ஐந்து வருடங்களும் ஓடி வாழ்க்கை எழுபதில் நிற்கிறது. அடுத்தது என்ன என்று கொஞ்சம் தடுமாற்றம் வருகிறது.
இது எல்லோருக்கும் நடப்பதில்லை. கொஞ்சம் கற்பனையாகத் தோன்றுகிறது என்று தோன்றலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் அறுபதுக்குப் பின் அனுபவிக்கலாம். ஆசைப்படலாம். அதில் தவறில்லை. அதற்கு நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதே நேரம் அறுபது வயது என்பது உடலும் மனமும் கொஞ்சம் தளரும் நேரம் என்பதும் உடல், மன ஆரோக்கியத்தில் நிறைய கவனம் செலுத்த வேண்டும் என்பதும் நமக்குப் புரிய வேண்டும். அதனால் தான் இந்த பருவத்தைப் பொறுப்புகளைத் துறந்து தள்ளி இருக்கும் காலம் என்றார்கள்.
அறுபது வயது என்பது எல்லாம் முடிந்து விட்ட காலமா, இனி மேல் என்னால் எதுவும் முடியாதா என்கிற எண்ணம் வேண்டாம். சொல்லப் போனால் அறுபது வயது தாண்டி தான் மனமும் உடலும் பொறுப்பு குறைந்து ரிலாக்ஸ் ஆகிறது என்பது தான் உண்மை.
இந்தக் காலத்து வானப்ரஸ்தம் எப்படி இருந்தால் நமக்கு நல்லது தெரியுமா? மனதளவில் குடும்பத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கப் பழக வேண்டும். குறிப்பாக பிள்ளைகளின் குடும்பத்தில் இருந்து அது மகனோ மகளோ. அவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு, கோப தாபப் பட்டுக் கொண்டு, விமர்சனம் செய்து கொண்டு, அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி, இவை போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நமக்கும் சரி, அவர்களுக்கும் சரி, நல்லது தான்.
பிறகு என்ன தான் செய்வது என்கிற கேள்வி வரும். இந்த செகண்ட் இன்னிங்ஸில் நமக்கென்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த திசையில் நம் நேரத்தை செலவிடுவது உத்தமம்.
ஓய்வு பெற்ற பலர், சில அதிகாரிகள், பொறுப்பான உத்தியோகத்தில் இருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். புத்தகங்கள் எழுதுவது, சில அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதில் குழுவாகச் செயல்படுவது, தோட்டம் அமைப்பில் ஆர்வம் கொள்வது, கோவில் பொறுப்புகள் இப்படி அவரவர் இயல்புக்கு ஏற்றபடி தங்கள் நேரத்தை வடிவமைத்துக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் ஆண்கள் தங்களுக்கேற்ற பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவிற்கு, பெண்கள் புதுப் பாதையை தேர்ந்தெடுப்பதில்லை என்று தோன்றுகிறது. அதனாலேயே மீண்டும் குடும்பப் பிரச்சினைகள் மன உளைச்சல்கள் ஆரோக்கியக் குறைச்சல் என்று கஷ்டப்படுகிறார்கள்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இது தான். அறுபது வயது என்பது ஒரு மைல் கல். அதற்குப் பின் நாம் நூறு வயது கூட நன்றாக வாழலாம்.
ஆனால் அதற்கான பாதையை, ஓய்வான பாதையை, மனமும் உடலும் அமைதியாகப் பயணிக்க கூடிய பாதையைப் புரிந்து கொண்டு தேர்ந்தெடுப்பது நமக்கு நல்லது.
பிடித்த பிடிகளை விட்டு விட்டுக் காட்டில் கனிகளைப் புசித்துக் கொண்டு வாழும் மனநிலையோடு உடலாலும், மனதாலும் எல்லோருக்கிடையே வாழக் கற்றுக் கொண்டு விட்டால் இந்தக் கால வானப்ரஸ்த வாழ்விலும் நிம்மதியாக வாழலாம்.
ஒரு மருத்துவ மனையில் ஒரு பிரசவ வார்டு. நான்கு படுக்கைகள். நாலு நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் படுத்திருக்கிறார்கள். டாக்டர்கள், நர்சுகள் வந்து போகிறார்கள். ஒருவருக்கு மாத்திரை கொடுக்கப் படுகிறது.
ஒரு பெண்ணின் பக்கத்தில் ஒரு 55/60 பெண் அமர்ந்து கொண்டு “ஜோசியரிடம் கேட்டு விட்டேன், ஆண் என்றுதான் சொல்கிறார். இந்த முறையாவது ஆணை பெற்றுக் கொடு. எத்தனை பெண்கள்… ஹூம்” என்று சொல்லிவிட்டுப் போகிறாள். “ஆண்டவனே ஆண் குழந்தையைக் கொடு.. ஏமாற்றி விடாதே” என்று வேண்டிக் கொள்கிறாள். அந்த பக்கமாக வரும் நர்சிங் ” ஆண் தானே பிறக்கும்? டாக்டர் என்ன சொன்னார்? “
அதற்கு நர்ஸ் “எத்தனை தடவை கேப்ப… யாருக்குத் தெரியும்? ” என்று கேட்டுவிட்டு முணுமுணுத்த படியே சென்று விடுவாள். (அப்போது எந்த கருவியும் கிடையாது).
சிறிது நேரத்தில் 4 வது பெட் பெண் பெரிதாக சப்தம் போட அவளை ஒரு ஸ்ட்ரெக்சரில் அந்த அறையை விட்டு அழைத்துச் செல்வார்கள்.
அடுத்த காட்சியின்போது மூன்று பெட்டிலும் பெண்கள் படுத்திருப்பார்கள். அனேகமாக மயக்க நிலையில் இருப்பார்கள்.
கொஞ்சம் நினைவு வந்து முனகுவாள் ஒரு நர்ஸ் ஒரு குழந்தையைக் கொண்டு பக்கத்தில் வைப்பாள். “என்ன குழந்தை என்று கேட்பாள்” அழகான பெண் குழந்தை. அந்த பாட்டியம்மா இந்தக் குழந்தையைப் பார்க்காமலே போய்விட்டாள்” என்று சொல்லுவாள். முகத்தை மூடிக் கொண்டு அழுவாள். அவளும் அந்த குழந்தை பக்கம்கூட திரும்பாமல் வேறு பக்கம் திருப்பிக் கொள்வாள். மீண்டும் மயக்கம் அடைவாள்.
அடுத்த காட்சி அவளுக்கு மீண்டும் நினைவு திரும்பும். தன் குழந்தை பக்கம் திரும்பிக் கூட பாக்காமல், “நர்ஸ் நர்ஸ் அந்த நாலாம் நம்பர் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறந்தது என்று கேட்பாள் ” ஆண் குழந்தை” என்று சொன்னதும் மேலும் கண்ணீர் வரும். “நீ மயக்கத்தில் இருந்ததால் உன் குழந்தைக்கு நாங்களே உணவு கொடுத்து விட்டோம் இனி அழும்போது நீயே பால் கொடுத்துவிடு ” என்று சொல்லிவிட்டுப் போவாள். குழந்தை பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்.
சிறிது நேரம் கழித்து வேறு ஒரு நர்ஸ் வரும்போது “அந்த 3 நம்பர் பெண் எங்கே? அவருக்கு என்ன குழந்தை என்று கேட்பாள். ” ஆண் குழந்தை…. ஆனால் அந்த பெண் இறந்து விட்டாள்” என்று சொல்வாள். திடுக்கிடுவாள். குழந்தை அழத் துவங்கும். அதைப் பற்றி கவலைப் படாமல்.. “இந்த இரண்டாம் நம்பர் பெண்ணுக்கு என்ன குழந்தை ? ” என்று கேட்பாள்.
“குழந்தை அழுது… அதை கவனிக்காம கேள்வி மேல கேள்வி கேட்கிற… அந்தக் குழந்தை இறந்தே பிறந்தது. எந்த குழந்தையாய் இருந்தால் என்ன” எண்பாள்.
“என்னது.. குழந்தை இறந்து விட்டதா? ” என்று கேட்டு விட்டு. “அடப்பாவமே.. என்று கூச்சலிட்டு விட்டு… என் கண்ணே..” என்று கூறி தன் குழந்தையை ஆசை ஆசை யாகத் தூக்கி முத்தம் கொடுத்து… பாலும்.. கொடுப்பாள்.
அப்படியே ப்ரீஸ் பண்ணி… சிறிது காட்டி விட்டு பின் மெதுவாக டைட்டில் போடுவார்கள்.
பொட்டில் அறிந்தது போல இருந்தது. கடைசி நொடியில் மையக் கருத்தை பளிச்சென்று சொல்லி முடித்தார்கள்.
தியேட்டர் அனுபவங்கள் இளம் வயதில் வித்யாசமானவை. அதுவும் பிரபல நடிகர் நடித்த படங்களின் ‘முதல் நாள், முதல் காட்சி’, நினைவில் நிற்பவை! என் அனுபவத்தை உங்களிடம் சொல்வதற்கு முன், ‘மதிநிறை அழகனை’ உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்;
திருச்சியில், அப்போது வயலைத் தூர்த்து மாரீஸ்(கள்) முளைத்துகொண்டிருந்த காலம். ரம்பா, மீனா பிறக்கவில்லை. கலையரங்கம் கௌரவர்’களுக்கான இடமாக இருந்தது.
ராக்ஸி, வெலிங்டன் என்ற இரட்டை தியேட்டர்களில், ஒன்றில் புது படமும் மற்றொன்றில் சுமார் படமும் போடுவார்கள். ஒன்று ஹவுஸ்புல் ஆனதும், விதியே, என்று பக்கத்து தியேட்டருக்குத் தாவுவார்கள். வாழ்வே மாயம் போன்ற படங்களைப் பார்த்துட்டு, தாய்குலங்கள் கர்சீப்..பும், கம்பலையுமாகச் சிவந்த கண்களுடன் வெளியே வரும் காட்சியைக் காணலாம்.
பழமையான முருகன், இன்னும் இளமையாக, பி.யு.சின்னப்பாவை காட்டிக் கொண்டிருக்க, இளமையான சிவக்குமார் ராமகிருஷ்ணா’வில் பெல்பாட்டத்தில் ஜெயசித்ராவை துரத்திக்கொண்டிருப்பார்.
வியாபார விஷயமாக திருச்சி வந்தவர்கள், பிளாசா’வில் புரியாத ஆங்கிலப் படத்தின் ஓரிரு அசந்தர்ப்ப காட்சிகள் முடிந்ததும், வெளிநடப்பு செய்து சொந்த ஊருக்குப் பஸ் பிடிப்பார்கள். ‘கெயிட்டி’யில் விடலைப் பையன்கள், தெருவுக்குத் தெரியாமல் ‘பாபி’ பார்த்தார்கள்.
நிற்க, மதி’யைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.
‘மதிநிறை அழகன்’ என் கிளாஸ் மேட். அவன் பெயரை இரண்டு துண்டாகப் பிரித்தாலும், அதன் அர்த்தத்திற்கும், அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கல்லூரி என்ற ஒன்று இருப்பதே வாழ்க்கையை அனுபவிப்பதற்கான கடவுளின் கொடை என்று நம்புபவன். ஆரம்ப நாட்களில், கல்லூரி சீனியர்களின் சுற்றி வளைப்பைக் கண்டு அசராமல், இரண்டு, மூன்று லோக்கல் தாதா’களின் பெயர்களைச் சொல்லி அவர்களைச் சிதற விட்டவன்.
‘மக்கள் திலகத்’தின் ஹார்ட்கோர் ரசிகன்! அதுவும் தலைவர் படத்தை முதல் நாள், முதல் ஷோவாக, பார்ப்பதை தன் தலையாயக் கடமையாகக் கொண்டவன்.
திருச்சியில், பொதுவாக ‘நடிகர் திலகத்தின் படங்கள் பிரபாத், ராஜா’விலும் , மக்கள் திலகம் படங்கள் பேலஸ் மற்றும் சென்ட்ரல் தியேட்டர்களிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.
இந்த இரண்டு இமயங்களின் படங்களை, என் போன்று சாதாரணர்கள் பார்க்க, குறைந்த பட்சம் 25 நாட்கள் கடக்க வேண்டியிருக்கும். அதற்கும் சைக்கிள் பாஸ் அல்லது லேடீஸ் டிக்கெட்டிற்காக அக்கா, தங்கைகளின் உதவியை நாட வேண்டியிருக்கும்.
மதி போன்றவர்கள், அதற்குள் பத்து முறையாவது பார்த்திருப்பார்கள். அதுவும், லெக்ச்சரர் வராத leisure period’களில், முதல் நாள், முதல் ஷோ’வின் ஆரவாரத்தை மதி வர்ணிப்பதே அழகு!
படத்தின் காதல் காட்சிகளைச் சொல்லும் விதமே தனி. வாத்தியாரின், ஒவ்வொரு அசைவுகளையும் அக்குவேர், ஆணிவேர் ஆகச் சொல்வான். கிளாஸ் மொத்தமும் சுற்றி அமர்ந்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும்!
‘மதி’க்கு என்னால் ஆக வேண்டிய காரியம் ஒன்று இருந்தது. அதுதான் அஸைன்மெண்ட்ஸ். பொதுவாக ஞாயிறு, அந்தி சாயும் நேரங்களில் அவனது மெய்காவல் படையை வீட்டுக்கு அனுப்புவான். அதாகப்பட்டது, எட்டிலிருந்து பத்தாங்கிளாஸ் படிக்கும் பையன்கள்.
“அண்ணன் உடனே வாங்கியாரச் சொன்னாரு” என்று கழுத்தில் கத்தி வைத்து வாங்கிப் போவார்கள். அதைக் காப்பியடித்து எழுதுவதற்குக் கூட அவனது ஜவுளிக் கடையில் ஒரு பையனை வைத்திருந்தான் என்று கேள்வி..
எனது நெடுநாளைய கனவான, வாத்தியார் படமொன்றை முதல்நாள், முதல் ஷோ பார்க்கவேண்டுமென்ற ஆசையை ஒரு நாள் மதியிடம், தயங்கி, தயங்கிச் சொன்னேன்.
அவன், ஏதோ பெரிய ஜோக் ஒன்றைக் கேட்டாற்போல் அதிர சிரித்து விட்டு,
“மவனே நீயெல்லாம் முதல் பெஞ்சில உட்கார்ந்துகிட்டு புரொபசர் கேள்வி கேட்டவுடனே, கைதூக்கிறதுக்குத்தான் லாயக்கு. சும்மா நினைச்சுக்காதே, அப்படியே 100 பேர் தோள்ல, அசால்ட்டா படுத்துகிட்டே நகர்ந்து போய் கவுண்டர்ல கையைவிட்டு டிக்கெட் வாங்கணும். தயிர்சாதம் சாப்பிடற நீ அந்த வேலைக்குச் சரியா வர மாட்டே” என்றான் அலட்சியமாக.
ஊரெங்கும் ‘உரிமைக்குரல்’. போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். ‘மதி’, பத்து நாட்களுக்கு முன்பாகவே, ‘MGR ரசிகன்’ போன்ற சினிமா புஸ்தகங்களைக் கிளாஸ்..க்கு கொண்டு வந்து போட்டு, பில்டப் கொடுத்து எங்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.
படம் ரிலீஸ் ஆன, அந்தத் திருநாளும் வந்தது.
என் கிளாஸ்மேட் வாசு காலை ஆறு மணிக்கே வீட்டுக்கு வந்துட்டான். “இன்னிக்குக் காலேஜ் கிடையாது. யாரோ ‘பிசிக்ஸ் ப்ரொபசர் திடீர்னு போயிட்டாராம்.. பாவம்”
” ஓ! அப்படியா !!”
“அது சரி, உடனே கிளம்பு”
“எங்க? அங்கெல்லாம் நான் வரல”
“ஏய் லூசு, அங்கில்ல, இன்னிக்கு ‘உரிமைக்குரல்’ படம் ரிலீஸ், முதல் நாள் ரசிகர் ஷோக்கு, ரெண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் மதி வைச்சிருக்கான். ஒன்னுல நான் போறேன், இன்னொன்னுல நீ வர்..ரையானு சொல்லு, லேட் ஆகும்னா, கணேச்சுவை கூட்டிப் போறேன்”
உடனடியாகக் கிளம்பி ஓடினேன்
தியேட்டர் வாசலில், மக்கள் திலகம், ஆந்திரா கட்டுக் கட்டி, பல ஆள் உயரத்துக்கான கட்டவுட்’டில் மிளிர, அதற்கு உபசரிப்புகள் பெரிய அளவில் நடக்க, ‘ரீல் பெட்டி’ ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியபடி வந்தான் மதி.
டிக்கெட் இல்லாதவர்கள் கேட்டில் மோத, என்னை அலேக்காகக் கவ்வி உள்ளே கொண்டுபோனான்.
படம் துவங்க, ஒரே கோலாகலம்!
மக்கள் திலகம், முகம் காட்டாமல் ரேக்ளா வண்டியில் சாட்டையுடன் ஒரே தாவலில் ஏற, கால்களை மட்டும் காண்பித்த கேமரா, கொஞ்சம் கொஞ்சமாக முழு உருவத்தையும் காட்ட, அதே சமயம் அந்த ரேக்ளா குதிரை, இரட்டை கால்ளையும் உயர்த்தி வானில் பறப்பது போல் எழும்ப, ஜனம், மகிழ்ச்சியில் தன்னிலை மறந்து, டிக்கெட்களையும், காசுகளையும் திரைமீது வீசியது.
“நேத்து பூத்தாளே ரோசா மொட்டு” என்று வாத்தியார் சீண்ட, ஜோடியாக நடித்த லதா இளமையுடன் சிணுங்க, ரசிகர் கூட்டம் கிறங்கியது. நம்பியார் அவர்கள், குரலை உயர்த்த, கூட்டம் அடங்கியது. ‘விழியே கதை எழுது’ மன்னர் உடையில் வர, கூட்டம் மயங்கியது. மற்றபடி வசனம் ஒரு வரி கூடக் காதில் விழவில்லை. அதைப் பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை. பக்கா செலிபிரேஷன்ஸ்! தன் ஹீரோவுக்காக அன்பை அள்ளிப் பொழியும் ரசிகர் கூட்டம்!
மதிக்கு, மதியம் லஞ்ச் ‘பத்மா’வில் சிறப்பித்தோம். எனக்கு வேலை இருக்குடா, என அவன் கிளம்ப, நாங்கள் மீதி நேரத்தைக் காவிரி அணை முக்கொம்பில் செலவழிக்க முடிவெடுத்தோம்..
மறுநாள் காலை, கிளாஸ் ரூம் நுழைந்ததுமே நல்ல வரவேற்பு!
“என்னடா ‘உரிமைக்குரல், முதல் ஷோ..வா? என்று சுற்றி வளைத்தார்கள்.
“என்ன மதி சொல்லிட்டானா?” எனக்குப் பெருமை பிடிபடவில்லை.
“ஆமா, நேத்திக்கு மத்யானமே கிளாஸ்..ல, சொன்னானே!”
“கிளாஸ்? அதுதான் கிடையாதே, ‘பிசிக்ஸ் ப்ரோபஸர்’……என்று இழுக்க அனைவரும் சிரித்தார்கள்.
என்னையும், வாசுவையும், கிளாஸ் கட் அடிக்க வைத்து, சினிமாவிற்குக் கூட்டிப் போகிறேன் பாரு! என்று, மதிநிறை அழகன் செய்த சதி என்று பிறகு தெரிந்தது.
அதனால் என்ன? அந்த வாய்ப்பு இல்லையெனில், வாத்தியார் படம், ‘முதல் ஷோ’ போய்ப் பார்க்கும் பாக்கியம் வாய்த்திருக்காது, என்றே தோன்றுகிறது..
வாழ்க்கை என்னும் சிலை, அனுபவம் என்ற உளி’யால் செதுக்கப்படுகிறது. அச்சிலையை அலங்கரிக்க இது போன்ற தருணங்கள் தேவையானதுதானே?
“ இதோ மாத்தறேன் “ என்று சொல்லிவிட்டு டிக்கியைத் திறக்க இறங்கினான்.
பின்னால் திரும்பிப் பார்த்தேன்.. நடராஜன் மடிமேல் வெள்ளைத் துணியால் கட்டுப் போடப்பட்ட தாமஸ் தலை சாயந்திருந்தது. கண்களை மூடியபடி இருந்த நடராஜனை நான் எழுப்ப விரும்பவில்லை. சென்ற இரவு எங்கள் யாருக்குமே தூக்கம் கிடையாது.
இரண்டு நாட்கள் முன்புதான், மறுபடியும் லீவு எடுத்துக் கொண்டு தாமஸ் சென்னை சென்று திரும்பினான். அவன் குழந்தைக்கு “பாப்டிஸம்” நிகழ்ச்சி. பெயர் சூட்டுவிழா. ஆண் குழந்தை. . பேரென்ன என்று கேட்டோம் . “ஜெரோம்” என்று சொன்னான். இப்போது போல அப்போதெல்லாம் மொபைல் இல்லாததால் புகைப்படம் எதுவும் அவன் எடுத்து வரவில்லை. உற்சாகம் குறைந்து காணப்பட்டான். என்னடா என்று கேட்டால்
“ஹேய் ஐ மிஸ் மை லிட்டில் ஜெரோம்” என்று சொல்லிவிட்டு அகன்றுவிட்டான்.
அன்று இரவு படுக்கையில் படுத்தபடி முனகிக் கொண்டு இருந்தான். காலையில் ஹை ஃபீவர் . வாந்தி எல்லாம். பல்கலைக்கழக மருத்துவர்கள் அவனை மதுரை மருத்துவ மனையில் சேர்க்கச் சொல்லிவிட்டனர். பலகலைக்கழகத்தின் தொடர்பிலுள்ள மிகப் பெரிய தனியார் மருத்துவமனை. அங்குதான் சேர்க்கப்பட்டான். லீவ் சொல்லிவிட்டு நானும் அவனோடு இருந்தேன். அன்று இரவு ஒன்பது மணி வரை மருத்துவ மனையில் அவனோடு இருந்தேன்.
“லாட் ஆஃப் ப்ளூயிட் லாஸ் “ என்று சொல்லி ட்ரிப்ஸ் ஏற்றினார்கள். இரண்டு முறை பாத்ரூம் செல்லவேண்டி இருந்தது. நான்தான் உடன் சென்று உதவி செய்தேன். மிகத் தளர்ந்து போயிருந்தான். இரவு முழுக்க இங்கேயே தங்கிவிடுகிறேன் என்றால் “வேண்டாம் நீ ஹாஸ்டல் போய்விடு “ என்றான். அங்கிருந்து 13 கிலோமீட்டர் என் ஸ்கூட்டரில் திரும்பிவந்தேன்.
என்னோடு உடன் இருந்த நண்பர்களுக்கு விஷயத்தை தெரிவித்து விட்டு பத்து மணி அளவில் உறங்கச் சென்றேன். விடுதியிலிருந்து மறுநாள் காலை தாமஸைப் பார்க்கப் போகலாம் என்று நாங்கள் ஐந்து நண்பர்கள் தீர்மானித்தோம்.
இரவு பதினோரு மணிக்கு யாரோ கதவைத் தட்டினார்கள். மருத்துவ மனையிலிருந்து ஃபோன் வந்திருப்பதாகவும் என்னைப் பேச அழைப்பதாகவும் சொன்னார்கள். செக்யூரிட்டி அறையிலிருந்த தொலைபேசியில் பேசினேன்.
“ஹலோ “
“ தாமஸ் என்கிற பேஷண்ட் கூட இருந்த அவர் ஃப்ரெண்ட் வி வி, சுப்பிரமணியன் நீங்கதானே “
“ ஆமாம் சொல்லுங்க”
“ நான் டியூட்டி டாக்டர் குமரேசன் பேசறேன். ஐயாம் சாரி டூ செ மிஸ்டர் தாமஸ் இஸ் நோ மோர் . ஹி பாஸ்ட் அவே டென் மினிட்ஸ் பேக் . காப்பாத்த முடியல. பாடி ரிசீவ் பண்ண நீங்களோ அல்லது அவங்க உறவுகாரங்களோ உடனே வாங்க. உங்க புரொஃபசர் கிருஷ்ணசாமி அவருக்கும் இன்ஃபார்ம் செய்துவிட்டோம்.”
“டாக்டர் என்ன சொல்லறீங்க ?நான் தாமஸை பாத்துட்டு இப்பத்தான் ஹாஸ்டலுக்குத் திரும்பினேன். நம்ப முடியல.. “ போனில் என்னால் மேலே பேச முடியல. தொலைபேசித் தொடர்பும் தூண்டிக்கப்பட்டு விட்டது.
இதற்குள் பல்கலைக்கழகத்தின் அலுவல் அறை திறக்கப்பட்டு அங்கிருந்த தொலைபேசி மூலம் முக்கியமான பலரை சீனியர் சூப்பரின்டெண்டன்ட் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானம் செய்யத் தொடங்கினர். என்ன நடந்தது என்று அப்போது எனக்குத் தெரியாது.
தனியாக இருக்கப் பிடிக்காமல் விடுதியில் நண்பர்களோடு இருந்த என்னை காலை ஆறு மணி அளவில் புரொஃபசர் எஸ். கே . அழைப்பதாக வாட்ச்மேன் வந்து சொன்னான், எங்கள் டிபார்ட்மெண்ட் லெக்சர் ஹாலில் எங்கள் வகுப்பு மாணவ மாணவியர் பலரும் வந்து அமர்ந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தது.
புரொஃபசர் எஸ். கே . உள்ளே நுழைந்தார்.
“ ஸ்டூடண்ட்ஸ் வி ஆர் சாரி டூ இன்ஃபார்ம் தெ சேட் டிமைஸ் ஆஃப் மிஸ்டர் தாமஸ். . மாணவராக இங்கே தங்கி படிக்கும் போது இந்த துர்மரணம் நிகழ்ந்ததால் பலகலைக் கழகத்திற்கு சில கடமைகள் உண்டு. தாமஸ் வீட்டாரோடு தொடர்பு கொண்டு செய்தியைத் தெரிவித்த போது, “பாடியை” உடனே சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். இறுதி சடங்குகள் அங்குதான் செய்யப் போகிறார்கள். ஆம்புலன்ஸ் கிடைக்க நேரம் ஆகும் என்பதால் நாங்களே ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்துள்ளோம். இன்னும் அரைமணி அளவில் அந்த டாக்ஸியில் தாமஸ் உடல் சென்னைக்குக் கொண்டு செல்லப்படும்.
“பாடியை”த் தனியாக காரில் அனுப்ப முடியாது, இங்கிருந்து பாடியுடன் யாரேனும் செல்லவேண்டும். டாக்ஸி டிரைவர் தனியாக சென்னைவரை பாடியை வைத்துக் கொண்டு போகமுடியாது என்று சொல்லிவிட்டான். மருத்துவனை மற்றும் போலீஸ் சர்டிபிகேட் இருக்கிறது. அதை கையில் வைத்துக் கொண்டு யாரேனும் கூடச் சென்றால்தான் போகும் வழியில் “செக் போஸ்ட்” களில் தடை ஏதும் இன்றி வண்டி செல்ல முடியும்.
ஐ ஹாவ் அ ரெகுஸ்ட் டூ மேக். அவர் வகுப்பைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் காரில் உடன் செல்லவேண்டும். என்றார்.
தாமஸுக்கு நெருங்கிய நண்பன் நான் என்பது மட்டுமன்றி அங்கு இருந்தவரில் நான் ஒருவன்தான் சென்னையைச் சேர்ந்தவன்.
நான் போகிறேன் என்று முன்னே வந்தேன். என் நண்பர்கள் “ விவிஎஸ் தனியாகப் போகவேண்டாம் துணைக்கு நாங்கள் செல்கிறோம்” என்று இன்னும் இருவர் முன்வந்தனர்.
?இரண்டு பேர் போகத்தான் இடமுண்டு. விவிஎஸ் பிளஸ் இன்னும் ஒருவர்” என்று புரொஃபசர் சொன்னவுடன் மதுரைக் கல்லூரியைச் சேர்ந்த நடராஜன் வந்து காரில் எறிக்கொண்டான். தாமஸ் தலையை மடியில் வைத்துக் கொண்டு பின் சீட்டில் அமர்ந்துவிட்டான்.
“சார் ! பஞ்சர் ஒட்டியாச்சு .பக்கத்துல பெட்ரோல் பங்க் போகணும் சார்! அப்படியே ஏதாவது சாப்பிட இங்கயே வாங்கிடனும் .. பாடியை வச்சுக்கிட்டு ஊருக்கு உள்ள போனா பிரச்சனை போலீஸ் தடுப்பான். நாம் ஹை வேஸ்ல போயிடலாம்” என்றான்.
பெட்ரோல் பங்கில் வண்டி நின்றதும் நானும் கீழே இறங்கினேன். அப்போதுதான் நாங்கள் வந்த டாக்ஸியை சரியாகப் பார்த்தேன். நம்பர் பிளேட்டிலிருந்து எல்லா இடங்களிலும் அங்கங்கே பெயிண்ட் போயிருந்தது, கதவு கண்ணாடி எல்லாம் லொட லொட. நாலு டயரும் மொட்டை. உள்ளே இருக்கும் சீட் கவரில் பல பகுதிகள் கிழிந்து கிடந்தன. எங்கள் வீட்டில் வண்டி உண்டு. நானும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவன். எனவே கார்கள் பற்றி ஓரளவு தெரியும். இந்த அசாதாரண சூழலில் , நான் காலையில் கிளம்பும் போது இவற்றையெல்லாம் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் அப்போதே சொல்லியிருப்பேன். சென்னை வரை இந்த வண்டி போகுமா என்பதே கேள்விக் குறி ! போனாலும் பெரிய ரிஸ்க் என்னடா இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே என்று மனம் எண்ணியது. ஆனால் அந்த வயதில் இதையெல்லாம் எதிர்கொள்ளும் துணிச்சலும் இருந்தது.
“ஏம்பா டிரைவர்! முத்து தானே ஒங்க பேரு “
“ஆமாம் சார் ! என்ன சொல்லுங்க?”
“ முத்து இந்த வண்டிய எப்படி செலக்ட் பண்ணி எடுத்துட்டு வந்தீங்க. பாத்தாலே தெரியுது.. அவ்வளவு கண்டிஷன் இல்ல.. நாலு டயரும் சரி இல்ல. ஸ்டெப்னியும் பழசு.. போக முடியுமா?”
“சார் ! நீங்க சொல்றது கரெக்ட் .. ஆனா வேற வண்டி எதுவும் கிடைக்கல .. எஸ் கே ஐயா சொன்ன அப்புறம் ஒரு மணி நேரம் வண்டி தேடினேன் சார்.. ஒருத்தனும் “பாடி” எடுத்துட்டு போக ஒத்துக்கல .. வண்டி வராதுன்னு சொல்லிட்டான் ஆம்புலன்ஸ் இல்ல. பாடிய ஒரு மணி நேரத்துல எடுத்துட்டு சென்னைக்குப் புறப்படனும் அப்படின்னு ஐயா சொல்லிட்டாரு .. நான் யூனிவர்சிட்டி டிபார்ட்மெண்ட் டிரைவர்.. கெடச்ச வண்டிய எடுத்துட்டு கெளம்பிட்டேன் பாத்துக்கலாம் .. நாம நல்ல காரியம்தான் செய்யுறோம் ஐயா ! ஆண்டவன் பாத்துப்பான். போய் உட்காருங்க..சார் ”
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நடராஜன் எதுவும் பேசாமல் ஆயாசத்துடன் தலையை சாய்த்து அமர்ந்திருந்தான். வண்டி ஓடத் தொடங்கியது.
திருச்சியை அவுட்டரில் விராலிமலைப் பாதையில் கடந்தோம். விழுப்புரம் திண்டிவனம் செங்கல்பட்டு மதுராந்தகம் என்று தாம்பரம் வருவதற்குள் நான்கு இடங்களில் வண்டியை நிறுத்தி பஞ்சர் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போ மாதிரி இல்ல. அப்ப ஒரு பஞ்சர் ஒட்டவே அரை மணி ஆயிடும். அதுமட்டுமல்ல; பஞ்சர் ஆனதும், இறங்கி டயரை மாற்றி பிறகு அருகிலுள்ள பஞ்சர் கடை தேடிப் போகவேண்டும்.
தாம்பரம் வரும்போது எட்டுமணி நேரம் ஆகிவிட்டது. அதாவது மாலை மூன்று மணி ஆகிவிட்டது. சாலைப் போக்குவரத்து அதிகமாகிவிட்டது. தாம்பரம் கடக்கும் போது இரண்டு போலீஸ் வண்டிகள் எங்களைத் தடுத்து நிறுத்தின.
தாமஸ் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். செல்வாக்கு உள்ள உறவினர்கள் உண்டு. ஒருவர் போலீஸில் உயர் பதவியில் இருப்பவர். காலை ஆறு மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பிய வண்டி இன்னும் சென்னை வந்து சேரவில்லை என்றதும் அவர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளார்கள். எங்கள் வண்டி நெம்பர் தெரியும் என்பதால், டிரேஸ் செய்து தாம்பரத்தில் பிடித்துவிட்டார்கள். பிறகு முன்னும் பின்னுமாக எங்களுக்கு வழி காட்டிக் கொண்டே அவர்கள் செல்ல, கீழ்ப்பாக்கத்திலுள்ள தாமஸ் வீட்டை அடைந்தோம். வழி நெடுக தெருக்காரர்களின் கூட்டம். வீடு முழுக்க உறவினர் கூட்டம்.
கலைந்த தலை கலங்கிய கண் கசங்கிய ஆடை பசித்த வயிறு என்று நாங்கள் இறங்கினோம். முதல் மாடியில் தாமஸ் வீடு. பாடி அங்குதான் எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி சடங்கு செய்ய ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. பெரிய ஹாலில் நாடு நாயகமாக வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் தாமஸ் உடல் கிடத்தப்பட்டது.
இறுகிய முகத்துடன் நின்றிருந்த தாமஸின் தந்தை எங்களிடம் ஏதோ கேட்கத் தொடங்கினார். ஆனால் அதற்கு முன் , அழுது வீங்கிய கண்களோடு இருந்த அவன் தாய் ( தாமசோடு என்னை ஒரு முறை பார்த்தவர்) எங்களைப் பார்த்துச் சொன்னாள்.
“அதெல்லாம் அப்புறம் ! நீண்ட கடுமையான பயணம் செய்து வந்திருக்கிறீர்கள் களைத்திருப்பீர்கள் .. முதலில் கை கால் முகம் கழுவிக் கொண்டு வாருங்கள். உள்ளே கேக் பிஸ்கட் உள்ளது சாப்பிடுங்கள்”
நான் நெஞ்சுருக நின்றேன். இத்தனை பெரிய இழப்புக்கு நடுவே அந்தத் தாயுள்ளம் எங்கள் வயிற்றுப் பசியை நினைவில் கொண்டு உபசரித்ததே ! ( இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த நினைவு என்னை நெகிழ வைக்கின்றது}
வெளியே ஹாலில் கூட்டம் எங்களுக்காகக் காதிருந்தது.
பாதிரியார் என்னிடம் “ யூ ஆர் அ குட் சமாரிடன் .. உங்கள் நண்பனுக்கான இறுதி யாத்திரையில் நீங்கள் செய்த பணி அற்புதமானது. பரமபிதாவின் அருள் உங்களுக்குக் கிட்டுவதாக ! அமரனாகிவிட்ட தாமஸின் கடைசி நேரங்களில் நீங்கள்தான் அவர் உடன் இருந்து சேவை செய்தீர்கள் எனறு அறிகிறோம்.அதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசுங்கள். எங்களுக்கு ஆறுதலாக இருக்கும்” என்றார்.
என்ன பேசினேன் என்று நினைவில்லை. பிறகு நான் ஏற்கனவே ஒருமுறை சந்தித்து இருந்த அவன் தாயையும் மனைவியையும் பார்த்து ஆறுதல் சொன்னது நினைவிருக்கிறது.
தாமஸ் மறைந்த முதலாண்டு நினைவு தினத்தன்று நான் அவன் வீட்டுக்குச் சென்று அவனது தாய் தந்தையரைப் பார்த்தேன். அவர்களுக்கு அது பெரும் ஆறுதல். மிக இள வயது கொண்ட தாமஸின் மனைவிக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயத்திருப்பதாகச் சொன்னார்கள். அவள் தன் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள் . போய்ப் பார்த்து வாழ்த்து சொல்லுங்கள் என்று முகவரியும் தந்தார்கள்.
பல மாதங்கள் அந்த முகவரி எழுதப்பட்ட காகிதத் துண்டு என் பர்ஸில் இருந்தது. ஏனோ நான் சென்று பார்க்கவே இல்லை.
சரித்திரம் பல எழுச்சிகளைச் சந்தித்திருக்கிறது. பல வீழ்ச்சிகளைச் சந்தித்திருக்கிறது. சாம்ராஜ்யங்களை வழங்கியிருக்கிறது. விழுங்கியுமிருக்கிறது. பாண்டியநாட்டின் பொற்காலக் கதை எப்படிப் போகிறதென்று பார்ப்போம்.
கி பி 1268: வெற்றி ஒன்றையே பார்த்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், தனது முடிவு நெருங்குவதை உணர்ந்தான். சிலவருடங்களுக்கு முன்னரே, தனது மகன் குலசேகரனை பாண்டிய நாட்டின் பட்டத்து இளவரசனாக்கியிருந்தான். தம்பி வீரபாண்டியனும், பாண்டியநாட்டின் ஒரு பகுதியை ஆண்டுகொண்டிருந்தான். அனைத்து இளவரசர்களையும் அழைத்துச் சொன்னான்: “பாண்டிய முத்துக்களே! என் கதை முடியும் நேரம் வந்துவிட்டது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாண்டிய சாம்ராஜ்யத்தை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லவேண்டும்” என்று கூறினான். கோரினான். இளவரசர்கள் அனைவரும் உறுதி அளித்தனர். சுந்தரபாண்டியன் மகிழ்ச்சியுடன் உயிர் விட்டான்.
அவனுடன் தனது வாழ்க்கையை முழுவதும் சேர்ந்து கழித்திருந்த தம்பி வீரபாண்டியன் துக்கித்து நின்றான். இளவரசன் குலசேகரனிடம், “மகனே குலசேகரா, நீ மதுரையில் முடிசூடி, அண்ணன் விட்டுச்சென்ற இந்த வளநாட்டைப் பொன்னாடாக்கு” என்று ஆசி கூறினான்.
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பட்டப்பெயருடன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்டான். சிற்றப்பன் வீரபாண்டியன், தம்பி விக்கிரமபாண்டியன் இருவரும் பாண்டிய நாட்டின் மற்ற பகுதிகளை ஆண்டனர்.
கி.பி. 1274: தந்தை சுந்தரபாண்டியன், முதலில் சேர நாட்டுத் தாக்குதலில் வென்றது போல, குலசேகரனும் சேரநாட்டைத் தாக்கினான். பாண்டியப் படைகள் விரைந்தது. சேரநாட்டின் மீது படையெடுத்துச் சென்று, வேனாட்டைத் தாக்கி, அந்நாட்டில் உள்ள கொல்லத்தை வென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் இவன் ‘கொல்லம் கொண்ட பாண்டியன்’ என்னும் பட்டப்பெயர் பெற்றான்.
கி பி 1284: ஈழ நாட்டின் மீது குலசேகரன் பார்வை படிந்தது. ஆரியச் சக்கரவர்த்தி என்ற படைத்தலைவன் தலைமையில், பெரும்படை ஒன்றை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். அப்படைத்தலைவன் ஈழத்தின் பல பகுதிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கி, நகரங்களைக் கொள்ளையிட்டுச் சுபகிரி என்னும் நகரில் இருந்த பெருங்கோட்டையைக் கைப்பற்றினான். இறுதியில், அந்நாட்டில் உள்ள பெருஞ்செல்வங்களையும், புத்தரது பல்லையும் கைப்பற்றிக் கொண்டு வெற்றியுடன் பாண்டிய நாட்டிற்குத் திரும்பினான். புத்தரின் பல்லை, ஈழ நாட்டார் புனிதப் பொருளாகக் கருதி வந்தனர். பாண்டியரோடு போர் புரிந்து, அப்பல்லைப் பெறுவதற்கு இயலாத நிலையில் இருந்தான் ஈழநாட்டு மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகு. நாட்டுமக்களும், மந்திரிகளும் மன்னனிடம் “பாண்டியன் நமது செல்வங்களைக் கவர்ந்தான். பல வீரர்கள் உயிர்களைக் கவர்ந்தான். இவைகள் அனைத்தையும் கூட நாங்கள் பொறுத்துக்கொண்டோம். ஆனால், புத்தரின் பல், புராதனமானது. எங்கள் உயிருக்கும் மேலானது. அதை எப்படியாவது மீட்டு வரவேண்டும்” என்று முறையிட்டனர். ஈழ மன்னன் முடிவெடுத்தான்.
பாண்டிய நாடு புறப்பட்டான். விலையுயர்ந்த பொருட்களைக் காணிக்கையாக எடுத்துக்கொண்டு மதுரைக்குப் பயணித்தான். குலசேகரபாண்டியனைப் பணிந்து நட்புரிமை கொண்டான். குலசேகரன் மகிழ்ந்தான். ஈழமன்னன் புறப்படும் நேரம் வந்தது. குலசேகரனும், விலையுயர்ந்த கொற்கை முத்துக்களை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தான். இலங்கை அரசன் ”பாண்டிய மன்னா! எங்கள் உயிருக்கு மேலான புத்தரின் பல்லை எங்கள் நாடு ஆயிரம் வருடங்களாகப் போற்றி வணங்கி வருகிறது. அதை எங்களுக்குத் தந்து அருளவேண்டும்“ என்று இறைஞ்சினான். மனம் நெகிழ்ந்த குலசேகரன், புத்தர் பல்லை இலங்கை மன்னனுக்குக் கொடுத்தான்.
கி பி 1279: போசளர், மட்டும் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரன் இருவரையும் சுந்தரபாண்டியன் தோற்கடித்தது நாம் அறிந்ததே. மீண்டும் பல வருடம் கழித்து, மீண்டும் இருவரும் சேர்ந்து பாண்டியனை எதிர்க்கத் துணிந்தனர். போசளர் ராமநாதனையும், மூன்றாம் ராஜேந்திர சோழனையும், போரில் குலசேகரன் ஒருசேர தோற்கடித்தான். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்த போசளர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. சோழன் பெயர் சரித்திரத்திலிருந்து மறைந்தது.
இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாடு உயர்நிலையில் இருந்தது. வெனிஸ் நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ, பாரசீக நாட்டைச் சார்ந்த இசுலாமிய வரலாற்றாசிரியர் வாசாப் என்பவரும் இவனுடைய காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தனர்.
சோழ நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகள் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இவனுக்கு முன் அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சியில் பாண்டியப் பேரரசின் கீழ் அடங்கியிருந்த எல்லா நாடுகளும் இவனது ஆட்சிக் காலத்திலும் இருந்தது. அங்ஙனமே சடையவர்மன் சுந்தர பாண்டியனைப் போலவே இம்மாறவர்மன் குலசேகரபாண்டியனும் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ குலசேகர பாண்டியன் என வழங்கப்பெற்றான். மேலும் இவன் தன் பேரரசிற்கு உட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் அமைதியாக இருத்தல் வேண்டித் தன் தம்பிமார்களான மாறவர்மன் விக்கிரமபாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆகியோரை அந்நாடுகளில் அரசப் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்து வருமாறு ஏற்பாடு செய்தான்.
குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார்.
இனி ஒரு சிறப்பான சரித்திரத் தகவலைச் சொல்லவேண்டும். நீங்கள் இதுவரை படித்த மன்னன் குலசேகரப்பாண்டியன் தான் தமிழகத்தின் கடைசிப் பேரரசன்! தமிழகத்துக்கு விபரீத காலம் வரும் நாள் வரப்போகிறது. அந்த விபரங்கள் இனி தொடர்வதற்கு முன்னர், ஒரு முக்கியமான விருந்தாளி ஒருவர் (உங்கள் ஊகம் சரிதான். அது இத்தாலியப் பயணி மார்கோ போலோ தான்) கதையைச் சொல்லியாக வேண்டும். அது விரைவில்.
விருட்சம் நடத்தும் அசோகமித்திரன் நினைவு சிறுகதைப் போட்டி அசோகமித்திரன் பெயரில் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமென்று என் நெடுநாள் விருப்பம். அவர் நினைவு நாளை (23.03.2025) ஞாபகப்படுத்தும் விதமாய் இத்திட்டத்தைச் செயல் படுத்த விரும்புகிறேன். போட்டிக்கு ஒரே ஒரு கதையை மட்டும் அனுப்ப வேண்டும். கதை 800 வார்த்தைகளிலிருந்து 1000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும். சரித்திர கதைகள், மர்மக் கதைகள் அனுப்ப வேண்டாம் யூனிக்கோடில்தான் கதை அனுப்ப வேண்டும். [email protected] என்ற இ மெயிலில் அனுப்ப வேண்டும். ஏற்கனவே பிரசுரமான கதையை அனுப்பக் கூடாது. தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு முதல் 3 பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் உண்டு. தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு முதல் 3 பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் ரூ10000 வரை வழங்கப்படும். கதைகளைக் குறித்து கடிதத் தொடர்போ தொலைப் பேசித் தொடர்போ கூடாது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எல்லாம் புத்தகமாக வரும். கதைகள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : 30.04.2025 கதையுடன் உங்கள் முகவரி, உங்கள் இ மெயில் முகவரி, தொலைப்பேசி எண் அனுப்ப வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தேர்ந்தெடுக்க முடியாத கதைகள் என்ற இரண்டு பிரிவுகளில் கதைகள் எடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் 13 கதைகள் தனியாகப் புத்தகமாக வரும். மற்ற கதைகள் daily.navinavirutcham.in என்ற மின் இதழில் பிரசுரம் ஆகும். அன்பன், அழகியசிங்கர்
அமைப்பாளர்களுக்கும், இணைப்பாளர்களுக்கும், பாடியவர்களுக்கும் , பகவான் கிருஷ்ணன் கதையை மனதை உருக்கும் வகையில் வழங்கிய ரம்யா வாசுதேவன் அவர்களுக்கும், இசைக் குழுவினருக்கும் , தொகுத்து வழங்கிய இந்திரா ராமநாதன் அவர்களுக்கும், நினைவில் நிற்கும் பரிசு வழங்கியவருக்கும் , கேட்டு ரசித்த நல்ல உள்ளங்களுக்கும், வயிறார உணவு அளித்தவர்களுக்கும், அரங்க அமைப்பு செய்தவர்களுக்கும், காணொளி மற்றும் புகைப்படம் பதிவிட்டவர்களுக்கும் குவிகத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழாவைப் பற்றி ரேவதி பாலு அவர்களின் தொகுப்பு :
இசைப் புதிது குழுவின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா துள்ளல் திரையிசையும் – பக்தி பரவச உபன்யாசமும்.
எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் பதிப்பாளர் என்று பன்முகங்களை உடைய திரு அழகியசிங்கர் அவர்கள் புதிது புதிதாக வாட்ஸப்பில் குழுக்களை ஆரம்பித்து வைத்து, சில வருடங்களாகவே கதை புதிது, சொல் புதிது, இசை புதிது, கலை புதிது போன்ற குழுக்கள், இலக்கியம், கவிதை, இசை பிற கலைகளுக்காக நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதில் ‘இசை புதிது’ குழு ஆரம்பித்த விதமே சுவாரசியமானது. திருமதி ரம்யா வாசுதேவன் தன்னுடைய ‘அண்டர் த ட்ரீ’ மூலம் சொல்லும் கதைகளில் ஒருமுறை தி.ஜா.வின் ‘செய்தி’ என்னும் கதையை சொன்னார். அதில் ‘சாமா’ ராகத்தில் அமைந்த ‘சாந்தமுலேகா’ கீர்த்தனையைப் பற்றிய விவரங்கள் கூறப்பட்டன. கதை புதிது, சொல் புதிது குழு உறுப்பினரான நாகேந்திர பாரதி அவர்கள் அதைப் பற்றி தன் சந்தேகங்களைக் கேட்கப் போக சாந்தி ரஸவாதி அதற்கு விளக்கம் அளிக்கும் முகமாக அழகியசிங்கர் மூலம் ‘இசை புதிது’ என்னும் குழு இரண்டு வருடங்களுக்கு முன் உருவானது.
இந்தக் குழுவில் கர்நாடக சங்கீதம், திரையிசை என்று இரண்டிற்கும் களம் அமைத்துக் கொடுத்து சாந்தி ரஸவாதியும், நாகேந்திர பாரதியும் இதை நிர்வகித்து வருகிறார்கள். அநேகமாக பணி ஓய்வு பெற்றவர்கள் அங்கத்தினர்களாக இருக்கும் இந்தக் குழுவில் தினமும் ஒரு ராகம் குறிப்பிடப்படும். அந்த ராகத்தில் அங்கத்தினர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களை பாடுவார்கள். தினமுமே காலை வேளையில் திருமுறைப்பாடல்களான தேவாரம், திருவாசகம், திருப்புகழ் எல்லாமே அங்கத்தினர்களால் ஆர்வத்தோடு இசைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இதைத் தவிர மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை. காலையில் கர்நாடக சங்கீதம், பக்திப் பாடல்கள், பிற்பகலில் திரையிசைப் பாடல்கள் என்று நெறிமுறை வகுத்துக் கொண்டு, அங்கத்தினர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு உலா வரும் குழு இது. அவர் உருவாக்கிய எல்லா குழுக்களிலும் ‘இசை புதிது’ தான் சுறுசுறுப்பான அங்கத்தினர்களைக் கொண்டு மிகவும் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாக அமைப்பாளர் திரு அழகியசிங்கரிடமே சான்றிதழ் வாங்கிய குழு இது. சமீபத்தில் ‘ராகம் புதிது’ என்று ஒரு புதிய குழு ஆரம்பிக்கப்பெற்று கர்நாடக சங்கீதத்தின் பால பாடமான சரளி வரிசையிலிருந்து, விரும்புவர்கள் கற்றுக் கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இசை புதிது குழுவின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா கடந்த 27.03.25 அன்று தி.நகர் மத்ஸ்யா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவை இரண்டு பிரிவாகப் பிரித்து முதலில் திரையிசைப் பாடல்கள் ஆர்க்கெஸ்ட்ராவோடு இணைந்து, ‘மாறும் குரல்களும் மயங்கும் ரசிகர்களும்’ என்னும் தலைப்பில் இந்திரா ராமநாதன் அவர்களின் அற்புதமான இணைப்புரையோடு நடைபெற்றது. கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.டி பாகவதர் பாடல்களில் ஆரம்பித்து டி.எம்.எஸ்., பானுமதி, சந்திரபாபு, ஜமுனா ராணி என்று பயணித்து மிக சமீப கால பாடகர்களான சித் ஸ்ரீராம், அனன்யா பட் போன்றவர்களின் பாடல்களையும் பாடி முடித்தார்கள் அங்கத்தினர்கள். இணப்புரை வழங்கிய இந்திரா ராமனாதன் இடையிடையே கொடுத்த தகவல்கள் நாம் கேள்விப்படாதவை, படு சுவாரசியமானவை. உதாரணத்திற்கு திருமதி கே.பி.சுந்தராம்பாள் தான் அரசியலில் பிரவேசித்த முதல் நடிகை என்றும் அவர் அந்த காலத்திலேயே மேல் சபை உறுப்பினராக இருந்திருக்கிறார் என்றும் கூறி வியக்க வைத்தார். இதே போல ஒவ்வொரு பாடகர், பாடகி, இசை அமைப்பாளர் பற்றிய மிக மிக சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து அவருக்கு குழுவில் செல்லமாக சூட்டப்பட்டிருக்கும் ‘பிலிம் ந்யூஸ் ஆனந்தி’ என்னும் பட்டப்பெயருக்கு ஏற்றவாறு ‘இந்தா பிடி!’ ‘இந்தா பிடி!’ என்று அரிய தகவல்களை வீசிப் போட்டார்.
அதன் பின் ஆரம்பித்தது இசை புதிது குழுவின் கர்நாடக சங்கீதப் பகுதி. இந்த வருடம் வித்தியாசமாக ‘அண்டர் த ட்ரீ’ மூலம் 2500 கதைகளுக்கு மேல் சொல்லி மிகப் பிரபலமான ‘கதை சொல்லி’யாக விளங்கும் ரம்யா வாசுதேவன் ‘கிருஷ்ண சரிதம்’ என்னும் தலைப்பில் இந்த ஆண்டு விழாவில் உபன்யாசம் செய்ய இசைந்தார். இடையிடையே உபன்யாசத்திற்குத் தகுந்தவாறு கர்நாடக இசைப் பாடல்கள் இசை புதிது குழுவினரால் பாடப் பெற்றது. முதலில் மேடையில் தன் சரிதத்தை சொல்ல வந்தவருக்கும், கேட்க வந்தவர்களுக்கும் ஆசி வழங்க ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா குழலூதும் கிருஷ்ணனாக பொம்மை வடிவத்தில் எழுந்தருளினார்.
பொதுவாகவே மனிதர்களுக்கு இருக்கும் தேடல் அவர்களை வாழ்க்கையில் அடுத்த உயரத்தை எட்ட வைக்கும். அந்த வகையில் ரம்யா வாசுதேவனின் ஆன்மிகத் தேடல் அவரை சிறந்த குருமார்களை தேடித் தேடி கண்டுபிடித்து பாகவதம், பகவத் கீதை, திவ்ய பிரபந்தம் போன்ற சிறந்த கிரந்தங்களை கற்க வைத்திருக்கிறது. தான் கற்று உள்வாங்கிய சத்தான விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக மேடையேறி உபன்யாசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். கிருஷ்ண சரிதத்தை கிருஷ்ணர் பிறந்ததிலிருந்து சொல்ல ஆரம்பித்து, பிறகு மிக அழகாக, பிருந்தாவன லீலைகள், காளிங்க நர்த்தனம் கோவர்த்தன கிரியை ஏந்தியது, ராசலீலைகள், குசேலர் கதை என்று தன் உரையின் மூலம் நம்மை பக்தி பரவசத்தில் கட்டிப் போட்டார் ரம்யா.
‘சிறந்த கதை சொல்லி’ என்று பெயர் பெற்ற ரம்யா வாசுதேவனின் இன்னொரு பரிமாணத்தை இதன் மூலம் இசை புதிது குழு எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு அல்லாமல், இந்தக் குழுவும் கர்நாடக சங்கீதத்தைத் தாண்டி ‘உபன்யாசம்’ என்னும் பரிணாம வளர்ச்சி பெற்றது என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் ஊனக் கண்களைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையில் அஞ்ஞானத்தில் உழன்று கொண்டிருக்கும் நம் ஞானக்கண்ணைத் திறக்கும் முயற்சியாக அமைந்தது இந்த உபன்யாசம் என்றால் அது சற்றும் மிகையில்லை.
மிகச் சிறப்பான ஆர்கெஸ்ட்ராவோடு உறுப்பினர்களின் துள்ளல் திரையிசை, பக்தி பரவசமாக உபன்யாசம் கர்நாடக இசைப் பாடல்களோடு, என்று பல்சுவையில் மிகக் கோலாகலமாக நடைபெற்ற இசை புதிது குழுவின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி மிக சிறப்பான இரவு விருந்தோடு முடிவுற்றது. இதற்காக பெங்களூரிலிருந்தும் திருவனந்தபுரத்திலிருந்தும் வந்த உறுப்பினர்கள் திருமதி மீனாட்சி பாலகணேஷ், திரு சாய் கணேசன் ஆகியோரின் ஆர்வமும், ஈடுபாடும் குறிப்பிடப்பட வேண்டியவை. சிறப்பு விருந்தினராக குவிகம் திரு சுந்தரராஜன் கலந்து கொண்டு இசை புதிது குழு உறுப்பினர்களை பாராட்டி வாழ்த்தினார்.
இசை புதிது குழுவின் 63 ஆக்டிவ் உறுப்பினர்களின் புகைப்படங்கள் கலை புதிது குழுவின் நிர்வாகி திருமதி சுகன்யா சம்பத்குமாரால் அற்புதமாக கொலாஜ் செய்யப்பட்டு அதன் பின்புறம் ஒரு காந்தம் அமைக்கப் பெற்று வீட்டில் குளிர் சாதனப் பெட்டியில் ஒட்டி வைக்கும்படி எல்லோருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
ஸ்மூல் திரை இசை
கர்நாடக இசை , திரை இசை இரண்டையும் இரண்டு கண்களாகக் கொண்டு இயங்கி வரும் அழகியசிங்கரின் இசை புதிது குழுவில் உள்ள உறுப்பினர்கள் சிலர் ஸ்மூல் திரை இசை தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள் .
அவற்றில் ஒன்று அரிமா. குமரன் அவர்களின் வி பிளாஷ் , பூந்தமல்லீ ஸ்டுடியோவில் 13 ஏப்ரல் ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணி முதல் இரவு ஏழு மணி வரை நடைபெற்றது . குமரன் அவர்களின் நண்பர் , குழு உறுப்பினர் சேகர் அவர்கள் அழைப்பை ஏற்று அதில் நமது இசை புதிது குழு உறுப்பினர்கள் சேகர் ஜி , அரிமா. சிவகுமார் ஜி ( குமரன் அவர்களின் நண்பர் ) , உஷா பாரதி , ஜானகி மகேஷ் , நாகேந்திர பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர் .
37 பாடகர்கள் பங்கு கொண்ட போட்டியில் , காலிறுதி , அரையிறுதி முடித்து இறுதிப் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று ‘சிறந்த குரல் ‘ என்ற பரிசைப் பெற்றவர் குழு உறுப்பினர் உஷா பாரதி மேடம் என்பதில் இசை புதிது குழு பெருமை கொள்கிறது .
நாம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் இலக்கிய அமைப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, ‘இலக்கியவாசல்’ என்று வைத்தால் எப்படியிருக்கும் என்று விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் கேட்க , கிருபாவும் நானும் ஆமோதித்த அந்த இலக்கிய வாசல் இன்று பத்து ஆண்டு முடிந்து 11 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
இதை ஒட்டி வருகிற 2025 ஏப்ரல் 20 ஆம் தேதி பத்தாண்டு நிறைவான மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஒரு அளவளாவல் நடத்த உள்ளோம். அனைவரும் வந்து வாழ்த்தியருள வேண்டிக்கொள்கிறோம்.
இலக்கிய வாசலின் முதல் நிகழ்வின் பதிவு 2015 மே மாதம் குவிகம் இதழில் வெளிவந்தது. அதை உங்கள் பார்வைக்கு மீண்டும் தருகிறோம். :
18.04.2015 அன்று சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் இலக்கிய சிந்தனையாளர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் குவிகம் இலக்கியவாசல் தொடக்க விழா இனிதே நடைபெற்றது !
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது !
குவிகம் இலக்கிய வாசலை முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் திறந்துவைத்தார் !
‘இலக்கியமும் நகைச்சுவையும்’ என்ற தனது முதல் நிகழ்ச்சியை “குவிகம் இலக்கிய வாசல்” முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் அரங்கேற்றியது !
தனிநபர் புகழ்ச்சியை புறந்தள்ளி தமிழ்இலக்கிய நிகழ்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி குவிகம் இலக்கியவாசல் செயல்படும் என நம்பிக்கைத் தெரிவித்தும் அமைப்பாளர்கள் .சுந்தரராசன், கிருபானந்தன் அவர்களின் முயற்சியை ஊக்குவித்தும் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் தமிழ் இலக்கியங்களிலே புதைந்துகிடக்கும் நகைச்சுவை நயங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்
அடுத்துப் பேசிய முனைவர் வ வே சு அவர்கள் இலக்கியமும் நகைச்சுவையும் என்ற தலைப்பிலே தான் இயற்றிய கவிதைகளை மன்றத்தில் படித்து அனைவரையும் மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினார் !
தனது பள்ளிப் பருவத்திலே நடந்த மறக்கவொண்ணா நகைச்சுவை நினைவுகளை அவர் கவிதையில் வடித்துப் படித்தது அரங்கத்தினரின் கரவொலியைப் பெற்றது !
மூன்றாவதாய் பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் தனது கவிதைப் படைப்புகளில் இடம்பெற்ற நகைச்சுவைக் கவிதைகளை அரங்கத்தார் ரசிக்கும் வண்ணம் பகிர்ந்துகொண்டார் !
வாழ்வியலை ஒட்டிய அவரது கவிதைகள் அனைவரையும் ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன.
சுந்தரராசன் அனைவரையும்வரவேற்றார் !
இலக்கிய ஆர்வலர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது
நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கவிதைகள் படிக்கப்பெற்றுப் பாராட்டைப் பெற்றன !
கிருபானந்தன் நன்றி நவில தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது !
கடைசிப் பக்கம் என்று டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன் குவிகம் மின்னிதழில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்.
குவிகம் நடுப்பக்கத்தை திரு. சந்திரமோகன் தொடர்ந்து ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறார்.
சரி.. இவர்களுடன் பந்தயத்தில் ஓடினால் பத்தடி கடப்பதற்குள் நுரை தப்பிவிடும் என்ற உள்ளுணர்வு எச்சரிக்கையோடு ஏதாவது ஒரு பக்கத்தில் கிறுக்கலாம். என்று முடிவுக்கு வந்திருக்கிறேன்.
வேண்டுமானால் ஒன்று பண்ணலாம். நான் எந்தப் பக்கத்தில் கிறுக்கப் போகிறேன் என்று ஒவ்வொரு மாதமும் வாசகர்களுக்கு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நூறு டன் என் அன்பையும் பாசத்தையும் பரிசாக வழங்கலாம் என்ற பொன்னான திட்டத்தை விமர்சையாக அறிவிக்கலாம். பரிசளிக்க் நான் தயாராக இருக்கிறேன்.
கிறுக்கல்கள் என்று தலைப்பு இருப்பதனால் இன்னது என்று ஒரு வட்டம் போட்டுக் கொள்ளாமல் என் மனதை ஆக்ரமித்துக் கொண்ட ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கிறுக்கலாம் என்று இருக்கிறேன்.
நிச்சயமாக அரசியல் கிடையாது. நான் மேதாவி என்று காட்டிக்கொள்ள வரட்டு விமர்சனங்கள் இருக்காது.
வாழ்க்கையில் நான் சந்தித்த.. என்னை பாதித்த விஷயங்களைப் பற்றி எழுதப் போகிறேன்.
அதனால் ரொம்ப சீரியஸாக யோசிக்காமல் ஜாலியாகப் படித்துவிட்டு அடுத்த பக்கத்துக்குத் தாவுங்கள்.
வாழ்க்கையில் நமக்குப் பொறுமை அவசியம் இருக்க வேண்டும்.
Have patience in life, but first of all with yourself..
எப்போதே படித்தது. மனதில் பதிந்துவிட்ட வாசகம்.
பொறுமையைப் பற்றி சொல்லும்போது நான் சில வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு காணொளி நினைவுக்கு வருகிறது.
வெளிநாட்டில் ஒரு திரை அரங்கில் ஒரு புதிய திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கு முன்னும் உலகளவில் விருது பெற்ற பத்து நிமிட குறும்படத்தைத் திரையிடுவதாக அறிவித்திருந்தார்கள்.
மக்களும் விருது பெற்ற அந்தக் குறும்படத்தைக் காண ஆவலோடு வந்திருந்தார்கள். முதல் காட்சியே ஹவுஸ்-புல்.
குறும்படமும் திரையில் தோன்ற ஆரம்பித்தது.
ஒரு அறையின் உத்திரம் திரையில் தெரிந்தது.
உத்திரத்தில் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று பார்வையாளர்கள் ஆவலோடு பார்க்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.
ஒரு நிமிடம்.. இரண்டு நிமிடங்கள்..
இப்படியே ஐந்து நிமிடங்கள்வரை வெறும் உத்திரம் மட்டுமே திரையில் தெரிந்தது.
ஒருவேளை இயந்திரக் கோளாரோ.. அதனால்தான் கேமரா வேலை செய்யவில்லையோ என்று பார்வையாளர்கள் முதலில் நினைத்தார்கள்.
ஆனால் தொடர்ந்து உத்திரம் மட்டுமே திரையில் தெரிய அவர்கள் நெளிய ஆரம்பித்தார்கள். பொறுமை இழந்தார்கள்.
வெறும் உத்திரத்தைக் காட்டும் இந்தப் படத்துக்குப் போய் விருது கிடைத்திருக்கிறது. அதையும் திரையரங்கு உரிமையாளர் துணிந்து திரையிடுகிறார்.. இதை இப்படியே விடக்கூடாது என்று பார்வையாளர்கள் கொதித்தெழுந்து கூச்சல் போட ஆயத்தமானார்கள்.
அந்த ஒன்பதாவது நிமிடம் கேமரா உத்திரத்திலிருந்து மெதுவாக கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
இறுதியாக கட்டிலில் படுத்திருக்கும் இளைஞனைக் காட்டியது. அவன் உடல் முழுதும் செயலிழந்து மரக்கட்டைபோல்..
முகத்தில் மட்டும் சில அசைவுகள்..
அப்போது திரையில் ஒரு வாசகம்..
உங்களால் ஒன்பது நிமிடங்கள்கூட பொறுமையாக உத்திரத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லையே. இதோ கட்டிலில் படுத்திருக்கும் இளைஞனைப் பாருங்கள்.. ஒரு விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டு உடம்பு முழுவதும் செயலிழந்து கிடக்கும் இந்த இளைஞன் இருபத்தி நான்கு மணிநேரமும் உத்திரத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம். அவனுடைய நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..
இந்த வாசகத்தைப் படித்தவுடன் கொதித்தெழுந்த பார்வையாளர்கள் மௌனமாக மறுபடியும் இருக்கையில் அமர்ந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலிருந்தும் நீர் துளிர்த்தது.
இந்த காணொளியைப் பார்த்த எனக்கு அதிலிருந்து மீண்டுவர சில நிமிடங்கள் பிடித்தன.
இப்போதெல்லாம் நமக்கு வாழ்க்கையில் எதற்குமே பொறுமை இருப்பதில்லை. முக்கியமாக இளைஞர்களுக்கு.
டிவி ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு சேனலை இரண்டு நிமிடங்களுக்கு மேல் பார்க்கப் பொறுமை இல்லாமல் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
கடைக்குப் போய் பொருட்கள் வாங்க பொறுமையில்லாமல் எல்லாமே ஆன்லைனில் ஆர்டர் செய்து விடுகிறார்கள்.
வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் இரண்டு வார்த்தை பேசக் கூடப் பொறுமை இல்லாமல் காதில் ஹெட்-போனை மாட்டிக் கொண்டு நழுவுகிறார்கள்.
இவ்வளவு ஏன்.. காதலில் கூட பொறுமையைக் கடைப்பிடிக்காமல் அடிக்கடி “பிரேக்-அப்” களுக்கு ஆளாகிறார்கள்.
”நிறைவுடமை நீங்காமை வேண்டின் – பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்”
இது வள்ளுவன் வாக்கு.
இதற்கு பொருள் கூறும் மு. வரதராசனார்..
“நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்”
மறுக்க முடியாத உண்மை.
சோதனைகளைத் தாங்கி நிற்கும் பொறுமைதான் நிரந்தர வெற்றிக்கு அஸ்திவாரம்.
இதைப் பொறுமையாகப் படித்த உங்கள் பொறுமைக்கு வாழ்த்துகள்..
ஓரிடத்தில் குடல்மாமிசத்தைக் கண்டு தின்று கொண் டிருந்த ஒருநரி, பக்கத்தில் குதிரை தேர்ப்படைகளுடன் ஒருசேனை செல்வதைக் கண்டது. ”இங்கே சேனை செல்வதால் யுத்தம் நிகழும்; அங்ஙனமாயின் நமக்கு அதிகமான மாமிசம் கிடைக்கும்; போர்முடியும்வரை நாம் இவ்விடத்தில் இருக்க வேண்டும்; நாம் இப்படியே திரிந்தால் நம்மை எவரும் அடித்துத் துரத்துவார்கள் செத்தபிணம்போல் கிடந்தால் ஒருவரும் கவனிக்க மாட்டார்கள்; பின்னர் எழுந்து சண்டையில் மாய்ந்த பிணங்களைத் தின்னலாம்,” என்று கருதி அங்கே இறந்ததுபோல் கிடந்தது;
ஆனால் அது நினைத்தபடி அங்கே சண்டையொன்றும் நிகழவில்லை. போரிடவேண்டிய அளவுக்கு வலிமையான பகை இல்லாததால் அப்படை வேற்றிடம் சென்றுவிட்டது; அச்சமயத்தில் வழிப்போக்கன் ஒருவன் அங்கு வந்தான். அந்நரியைக் கண்டு அஃது இறந்தது என்று நினைத்தான். “இதன் செவி முதலியவை நமக்கு எதற்கேனும் உபயோகப்படும்,” என்று தீர்மானித்து உடனே அதன் செவியையும் வாலையும் கொய்து தோலையும் உரித்துச்சென்றான். அந்நரி உயிர் துறந்தது,” என்பதாகும்.
12.நாட்டில் நாம்உரைக்கப் பட்ட முழைநரி அனைய நீரார்
வலிமை பொருந்திய இம்மண்ணுலகத்திலே உணவை உண்ணுதலும், நித்திரை செய்தலும், பயப்படுதலும், மருவுதலும், ஒருசேர ஆராய்ந்து பார்த்தால், இவற்றை அனுபவித்தலிலே இங்கு வாழ்கின்ற மனிதர்களும் மிருகங்களும் சமமாம், ஆனாலும் இவற்றிலே நாம் விசேஷமாக ஆராய்ந்து அறிந்தது ஒன்றுண்டு. அது யாதெனில் நன்மையாகிய தருமங்களைப் பற்றிய தன்மையுடையவர்கள் மனிதர்களுக்குள்ளே பல கல்விகளைக் கற்ற அறிவும் உடையவராவர். மற்றைய மனிதர்கள் ஐந்தறிவுள்ள மாட்டைக் காட்டினும் கீழானவரே ஆவர்.
உலகத்தில் உண்ணல், உறங்கல், பயப்படுதல், புணர்தல், ஆகிய தொழில்கள் மிருகங்களுக்கும் உண்டு மனிதர்க்கும் உண்டு; இவற்றை ஆராயுமிடத்து மனிதரும் மிருகங்களும் ஒரே தன்மையர் ஆவர்; அப்படியிருக்க மனிதர் எதனால் உயர்த்திக் கூறப்படுகின்றார்கள் என்றால், ஐந்து அறிவுடனே ஆறாம் அறிவாகிய மனமும் உடைத்தாயிருத்தல் பற்றியே ஆகும். மனத்தைக்கொண்டு நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து நன்மைகளைச் செய்தால்தான் ஒருவன் ஆறறிவுடைய மனிதனென்று சொல்லப்படுவான், அங்ஙனம் செய்யாதவன் பகுத்தறிவற்ற ஐயறிவுயிராகிய மிருகமேயாவான். இதனாலேயே ஆசிரியர், ”அறங்களைப்பிடித்த நீரார் பண்டிதர் ஏனைமாக்கள் பசுவினுங்கடையர்,”என்று கூறினார்.
கடிமணக் கோல மாதர் காளைக்குக் காட்டி மீள்வர்
நடுவுஇடப் பட்டது எல்லாம் நயப்புறக் கேட்டு நாய்கன்
கெடியெனக் கூறி யாங்கே உணர்தலிற் கேட்டு வந்த
உடையதும் ஒருங்கு கொண்டே விடையமும் கடிவித் திட்டான்.
[கடிமணக் கோலம்=வாசனை மிகுந்த மணக்கோலம்; நடுவு=மூவுலகங்களில் நடுவில் உள்ள மண்ணுலகம்; நாய்கன்=வணிகன்; கெடியென=பயம் உடையதென; விடையமும்=நிலையற்ற உலகப்பொருள்; கடிவித்திட்டான்= நற்கதியடைந்தான்]
சுகுமாரன் எனும் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் துறவியாகப் போய்விடுவான் என்று ஒரு முனிவர் சொன்னார். அவனுடைய தாய் அதைக் கேள்விப்பட்டார். அங்ஙனம் போகாதிருக்கும் வண்ணம் அழகுள்ள முப்பத்திரண்டு மாதர்களை அவனுக்கு மணம் செய்துவைத்தார். அப்பெண்கள் அவனுக்கு கல்யாணக் கோலத்தை, தினந்தோறும் காட்டினார்கள். அவனைக் கலந்து அவன் மனத்தை மகிழச்செய்து, திரும்பிச் செல்வாராயினார்.
இப்படிச் செல்கின்ற காலத்திலே ஒருநாள் தபோதனர் ஒருவர் அவன் வசிக்கும் மாளிகைக்கருகிலுள்ள ஜினாலயத்திலிருந்து [ஜைனர் ஆலயத்திலிருந்து] நடுராத்திரியில் அவனுக்குக் கேட்கும்படி தேவ மானுட நரகலோக ஸ்திதிகளையும், பத்மகுலம் என்னும் விமானவிசேஷத்தையும் பற்றி உரைத்தனர்; அவர் அவ்வாறு சொல்லும்போது இம்மண்ணுலகில் கொடுக்கப்பட்ட மாயா சம்பந்தமான காரியத்தையெல்லாம், நன்மையாக, அவன் கேள்விப்பட்டான். அந்தவணிகன், இந்த உலக வாழ்வானது பயமுடையதாம் என்று, முனிவர் சொல்லியபடி, அறிந்ததால், தனக்கு நிலையான உடைமைப்பொருளாகிய ஞானத்தை மனத்தில் கொண்டு, நிலையற்றதாகிய உலகப்பொருளையும், மனத்தில் நீக்கித் துறவுபூண்டு நற்கதியடைந்தான். ஆதலால் அறிவுடையார் நிலையற்ற இவ்வுலகப் பொருள்களைத் தள்ளி நிலைத்த பொருளாகிய ஞானத்தைத் தேடவேண்டும்.
காமுப்பாட்டி என்கிற காமாட்சி பாட்டி அந்த குடும்பத்தின் ஆணிவேர். தொண்ணூற்று இரண்டு வயது தான் ஆகிறது பாட்டிக்கு. கைகால்கள் எல்லாம் இன்னும் கெட்டி. யாருடைய தயவையும் எதிர்பாராமல், தன் காரியங்களை தானே செய்து கொண்டு விடுவாள். வேளா வேளைக்கு சாப்பாட்டை மட்டும் மசித்து கொடுத்து விட்டால் போதும்.
போன தடவை அமெரிக்காவிலிருந்து வந்திருந்த போது, பாட்டியின் மூன்றாவது பையன் கோபு அவளுக்கு ஐ-பேட் வாங்கிக் கொடுத்திருந்தான். பாட்டி அதை நோண்டி வெகு சீக்கிரமே உபயோகிக்க கற்றுக் கொண்டுவிட்டது.
கண்ணுக்கருகில் ஐ-பேடை வைத்துக் கொண்டு, உலகில் நடக்கும் அத்தனை அக்கப் போர்களையும் அரைகுரையாக படித்துவிட்டு, தன்னுடைய விபரீதமான கற்பனையையும் சேர்த்து பாட்டி செய்யும் அலப்பறையை தாங்க முடியாமல் தத்தளித்தது கொண்டிருந்தது அந்த குடும்பம்.
அந்தப் பக்கமாக தண்ணீர் குடிக்க வந்த லல்லு என்கிற லலிதாவை, அவளுடைய பேத்தியை, “டீ லல்லு, இங்கே வா” என்று கூப்பிட்டாள்.
பேப்பரை படிக்காமலேயே அன்றைய ராசிபலன் அவளுக்குத் தெரிந்துவிட்டது.
“சுனிதா திரும்ப வந்துட்டாளாமே” என்றாள்.
“இல்லே பாட்டி, அடுத்த மாசம் தான் அவளுக்கு டெலிவரி டைம்.”
“நான் பக்கத்து வீட்டு சுனிதாவை சொல்லல்லேடி. சுனிதா வில்லியம்ஸ் பத்தி பேசிண்டிருக்கேன்.”
ஓ, அமெரிக்கா பக்கம் போய்விட்டது பாட்டி.
“ஆமாம் பாட்டி, இன்னைக்கி காத்தாலே தான் வந்ததா டிவிலே பார்த்தேன்”
“என்னமோ. 287 நாளைக்கு அப்புறம் அவளும், அவளோட புருஷனும் பத்திரமா ஒண்ணா வந்து சேர்ந்துட்டாளே. அதை சொல்லணும்.”
நம்பரையெல்லாம் கரெக்டாகத்தான் சொல்கிறது. மற்ற விஷயங்களில் தான் கொஞ்சம் வீக்.
“ஐயோ, பாட்டி. அது அவங்களோட புருஷன் இல்லை. அவங்க கூட போன இன்னொரு ஆஸ்ட்ரோனாட், அவ்வளவுதான்.”
“என்னமோ, வந்து சேர்ந்தாளே. எலான் ரஸ்க்கோட ‘டைமெக்ஸ்’ கேப்ஸ்யூல் தான் வந்தாளாமே.”
“அது ரஸ்க் இல்லே பாட்டி. மஸ்க். எலான் மஸ்க்”
“அது என்னவோ இருந்துட்டு போகட்டும். இனிமே இந்த ‘போயிங்’காரளா நம்பி ப்ரோஜனம் இல்லை. தப்பித்தவறிக்கூட அவாளோட ப்ளேன்ல இனிமே ஏறிடாதே. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா கஷ்டம்”
அடுத்த வர்ஷன் ஐ-பேட் தனக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற கவலை பாட்டிக்கு.
“அதெல்லாம் ஒண்ணும் அனுப்ப மாட்டா பாட்டி. டாகுமெண்ட்ஸ் இல்லாமே அங்கே போனவங்களை தான் திருப்பி அனுப்பறாங்க”
“டாரிப்ஃபை எல்லாம் வேறே ஏத்திட்டாளாமே. நம்ம ஊருலேயேயும் தக்காளி, வெங்காயத்திலேருந்து எல்லா வெலையும் இனிமே ஏறிடும்.”
“அதுக்கும் இங்கே தக்காளி, வெங்காயம் வெலைக்கும் ஒண்ணும் சம்மந்தம் இல்லே பாட்டி”
“உனக்கு தெரியாதுடி. இங்கே எல்லாரும் எதாவது ஒரு காரணத்துக்காக வெலையை ஏத்த காத்துண்டுருப்பா. நீ வேணா பாரேன்”
பாட்டி சொல்வதும் ஒரு வேளை நிஜமோ என்று தோன்றியது. ஒன்றும் இல்லாமலே எல்லா விலையும் எகிறிக் கொண்டிருக்கிறது.
“மாமாங்கம் மாமாங்கமா சண்டை போட்டுண்டிருந்தவா இப்போ ஒண்ணா சேர்ந்துட்டா பாத்தியா?”
“யாரை சொல்றே பாட்டி?”
“அமெரிக்காவையும் ரஷ்யாவையும் தான் சொல்றேன். இந்த ‘புதின்’ ரொம்ப சாமர்த்தியக்காரன். இவ்வளோ காலம் ஃப்ரெண்ட்ஸா இருந்த யூரோப்காரன் இப்போ பரம வைரி ஆயிட்டான்”
பாட்டி இந்தியன் ஃபாரிஸ் சர்வீசில் சேர்ந்திருந்தால், எல்லாரையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டிருப்பாள். தப்பித்தவறி சாம்பசிவையருக்கு வாழ்க்கைப்பட்டு அடுப்படியில் காலத்தை வேஸ்ட் செய்து விட்டாள்.
இது ஒரு ஆங்கிலப் படம் பெயர் “FEDORA”. ” பெடோரா”.. சத்தியம் தியேட்டரில் பார்த்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் அங்கு வேலையில் இருந்தார். அவருக்கு போன் செய்து இந்த படத்துக்கு 6 டிக்கட் வேண்டும் எடுத்து வைக்கவும் என்றேன். “நேரே வந்தே வாங்கிக் கொள்ளலாம் கும்பலே இல்லை வேறு ஏதாவது படம் டிக்கெட் வேணுமா? கமல் படம் புல் ஹவுஸா ஓடுது அதுக்கு வேண்டுமா” என்றார். ” இல்லை இந்தப் படம் தான் வேண்டும். நண்பர்களை நேரே தியேட்டருக்கு வரச்சொல்லி விட்டேன் “. என்று சொல்லிவிட்டுச் சென்றேன். நிறைய சீட் காலியாக இருந்தது. தப்பு செய்து விட்டோமோ, கமல் படம் போயிருக்கலாமோ .. என்று படம் ஆரம்பிக்கும் வரை தோன்றியது. நல்ல வேளை, நல்ல, மிக வித்தியாசமான படத்தை தவிர விட்டிருப்போம் என்று பேசிக் கொண்டோம்..
அதன் டிரைலர் இதோ:
ஒரு அழகான பெண் ஓடிப்போய் ப்ளாட்பாரத்துக்கு வந்து கொண்டிருக்கும் வண்டியின் முன் குதித்து தற்கொலை செய்து கொள்வதோடு படம் தொடங்கியது. டைடில் ஓடும்போது அது நடந்து விடும். பின்னர் பெரிய வரிசையில் நிறைய பேர் நின்று இறுதி அஞ்சலி செய்வதில் படம் தொடங்கும். பின்னர் ஒரு 50/55 வயது கதாநாயகனின் கோணத்தில் கதை நகரும்.
இறந்தது, “பெடோரா” என்னும், மிக மிகப் பிரபல நடிகை. அவள் அழகுக்கும், நம்ப முடியாத இளமைக்கும் பெயர் போனவர். இரண்டு முறை நடிப்பிலிருந்து திடீர் என்று விலகியவர்.
பல வருடங்களுக்கு முன் எல்லோரும் பிரமிக்கும் இளமையும் அழகும் கொண்ட, திரை உலகில் கோலோச்சிவந்த அவள் திடீரென்று ஒருநாள் நடிப்பதை நிறுத்திவிட்டு யாரும் காணமுடியாதபடி, அவளின் சொந்தமான, ஒரு தீவில் அரண்மனை போன்ற வீட்டில், வெளி உலகிலிருந்து யாரும் நுழைய முடியாதபடி வாழத் துவங்கினாள். அவளோடு, ஒரு டாக்டர், வேறு இரண்டு பேர் ஒரு பெண், ஒரு நர்ஸ், காவலாளி என்று ஒரு குறுகிய வட்டம் மட்டுமே இருந்தனர். அந்த கதாநாயகனின் ப்ளாஷ் பேக், அவ்வப்போது சில நிகழ்கால நிகழ்வுகள் என்று கதை நகரும். அதைப் பார்ப்போம்.
பெடோரா – மிக மிக மிகப் பெரிய, அழகான.. எல்லாவற்றிற்கும் மேல் இளமையாக கோலோச்சி வந்த நடிகை. அவளது இளமைக்காக ஒரு டாக்டர், அழகுக் கலை நிபுணர் (beautician / dietician), நர்ஸ் என்று ஒரு கூட்டமே வேலை செய்து கொண்டிருந்தது. அவளுக்கு ஒரு மகள் இருப்பாள். அவளை வெளி உலகுக்குத் தெரியாது. அவள் ஒரு ஹாஸ்டலில் இருப்பாள். யாருக்கும் தெரியாமல் போய் பார்ப்பாள். எத்தனை வசதிகள் செய்து கொடுக்க முடியுமோ செய்தி கொடுப்பாள். ஏராளமான பொருட்கள் வாங்கிக் கொண்டு போவாள். ஆனால் ரகசியமாகத்தான். அவளோடு எங்கும் செல்ல மாட்டாள். அந்த முறை அன்போடும், ஆசையோடும் .. “அம்மா…. ” என்று கட்டிக் கொண்டு எங்கேயாவது போக வேண்டும் நீ என் அம்மா என்று என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று கெஞ்சுவாள். “முடியவே முடியாது. ஏன் என்று இப்போது உனக்குப் புரியாது. ” என்று சொல்லுவாள். பெண் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு உள்ளே போய் விடுவாள். அவளுக்கு மகள் இருப்பது வெளி உலகுக்குத் தெரியாது.
ஒருமுறை அவளுக்கு முகத்தில் அழகுக்காக ஏதோ ஒரு கலவையைத் தடவி ( new variety of facial packing) வெகு நேரம் கழித்துக் கத்திரிக்கோல் கொண்டு இதை எடுப்பார்கள். அதை செய்யும் போத அந்த டாக்டரின் முகத்தை மட்டும் காட்டுவார்கள். அந்த எக்ஸ்பரஷன்… சூப்பர். என்னமோ தப்பு என்று தெரியும். அவளுக்கும் என்னமோ தப்பு என்று தெரியும். கண்ணாடியில் பார்த்துவிட்டு பெரிதாகக் கத்திக் கதறுவாள். முகம் ஒருமாதிரி வெந்து கோரமாக மாரி இருக்கும். இந்த முகத்தை ஒருவரும் பார்த்து விடக்கூடாது, தன் அழகான, இளமை முகம் மட்டுமே மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்று உடனே கண்காணாத தீவுக்குப் போய் விடுவாள்.
அவள் ஏன் அவ்வளவு முன்னணி நக்ஷத்திரமாக இருந்த போது விலகினாள், என்ன ஆயிற்று என்பது யாருக்கும் தெரியாத புதிர்.
கதையின் நாயகனுக்கு பலத்த சந்தேகம். என்னமோ வெளி உலகுக்குத் தெரியாத ரகசியம் இதில் இருப்பதாக எண்ணி அந்த தீவுக்குப் போக எண்ணி அங்கே போய் ஒரு ஹோட்டலில் தங்கி முயற்சிக்கிறான். அவன் பெரோடாவிடம் மிக நெருக்கமாக பழகிய காலம் உண்டு. அவள் மிகப் பிரபலமாக இருந்த காலத்தில் அவளோடு சில நாட்கள் ஒரு ரிசார்ட்டில் யாருக்கும் தெரியாமல் தங்கி இருக்கிறார்கள். எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணுகிறான்.
ஒருநாள் ஒரு காரில் பெரோடாவை ஏற்றிக் கொண்டு ஒருவன் வருவான். அவன் கீழே இறங்கி வெளியே வருவதற்குள் அவள் வேக வேகமாக அவன் கண்ணில் படாமல் ஒரு கடைக்குப் போய் கடைக் காரனிடம் ஒரு பாக்கெட் போதை மாத்திரை, மருந்து என்று ஏதோ கேட்பாள். சிறு வாக்கு வாதத்துக்குப்பின் கொடுப்பான். பணம் கேட்கும் போது “இப்போது இல்லை, இந்த வாட்ச்சை வைத்துக் கொள், பின்னர் தருகிறேன்” என்று மிக விலைமதிப்பு மிக்க வாட்ச்சை கழட்டுவாள். அவன் “பணம் இல்லை என்றால் பாக்கெட் இல்லை” என்று பிடுங்கி உள்ளே வைத்து விடுவான். அவளை தொடந்து அங்குவந்த நாயகன் “பெடோரா, நீ எப்படி இருக்கிறாய்? என்னை நினைவு இருக்கிறதா? ” என்று கேட்பான். ஒரு உணர்ச்சியும் இல்லாமல் ” கொஞ்சம் பணம் கொடுக்க முடியுமா? ” என்று கேட்பாள். பணம் பெற்றுக் கொண்டதும் அதைக் கொடுத்து அந்த பாக்கெட்டை வாங்கிக் கொண்டு. யாரையோ பார்த்து பயந்து ஓடுவாள். அந்த ஆள் அவளை கட்டாயப் படுத்தி காரில் ஏற்றிச் சென்று விடுவான்.
வேறு ஒருநாள் அந்தத் தீவிலிருந்து வெளியே போட்டில் வந்த ஒருவரிடம் ஒரு பைலைக் கொடுத்து “இதில் ஒரு கதை இருக்கிறது. பெரோடாவிடம் நடிக்கச் சொல்லி பேச வந்திருக்கிறேன் என்கிறான்.” அவன் பதிலேதும் சொல்லாமல் அதை எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.
அடுத்த நாள் அந்த ஹோட்டலுக்கு போன் வந்து அவனை அழைக்கிறார்கள்.
இங்கு பயங்கர பாதுகாப்பு… சக்கர நாற்காலியில் இருந்த ஒரு வயதான பெண் முகத்தில் சல்லாத்துணி அணிந்து கொண்டு வருவாள் அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கட்டளையாக ஏற்று எல்லோரும் செயல் படுவார்கள். அவள்தான் பெரோடாவுக்கு எல்லாமாக (care taker) இருப்பவள். இது திரை உலகுக்குத் தெரியும்.
“உங்கள் படத்தில் பெடோரா நடிக்க மாட்டாள். இந்தக் கதையின் முடிவில் இவள் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருக்கிறீர்கள். அது சரி இல்லை அவளுக்குப் பிடிக்கவில்லை” என்று சொல்வாள்.
அப்போது மாடி பால்கனியில் இருந்து பெடோரா “இல்லை இல்லை அது நல்ல முடிவு. எனக்குப் பிடித்த முடிவு” என்று உரக்கச் சொல்வாள்.
அந்த வயதான பெண். “அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போங்கள்” என்று கட்டளை இடுவாள். பின் அவன் பக்கம் திருப்பி. “நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விடுவாள். இவன் இறுதி அஞ்சலி செலுத்தும் வரிசையில் நிற்கும் போது அவனுக்கு இந்த நிகழ்வுகள், நினைவில் ஓடும். அவன் வரிசையை விட்டு தனியாக ஒளிந்து கொள்வான். நடுவில் அமர்ந்திருக்கும் வயதான பெண் வெளி கதவை மூடச் சொல்வாள். இதுவரை வந்தவர் வெளியேறிய உடன். மறை விலிருந்து அவனை வெளியே அழைப்பாள். “ஏன் ஒளிந்திருக்கிறீர்கள். என்ன காரணம் ? “என்ன நடக்கிறது. இறந்தது பெடோராவாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். என்ன மேக்கப் செய்தாலும் கைகளில் சுருக்கம் இருக்கும். இங்கு இல்லை.”
“நீங்கள் சரி. நான்தான் பெடோரா. என்னுடைய வெந்து போய் விகாரமாகிப் போன முகத்தைக் காட்ட விரும்பாமல் நான் உடனே விலகி விட்டேன். இளமையான, அழகான பெண்ணாகவே எல்லார் மனதிலும், நினைவில் நிலைக்க நினைத்தேன்.”
“உங்களைப்போலவே உள்ள இவள் யார்? “
” இது என் மகள். இவர் இவளின் அப்பா” என்று பக்கத்தில் உள்ள வரைக் காட்டுவார்.
“நான் இப்படி ஆனது பற்றி கேள்விப்பட்டு என் மகள் வந்தாள். என்னிடம் கோபித்துக் கொண்டு போனவள் என்னை க் கட்டிக்கொண்டு அழுது ஆறுதல் சொன்னாள். நாங்கள் உலகத்தின் பார்வையில் இருந்து விலகி வாழத் தொடங்கினோம். சில ஆண்டுகளுப்பின் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் போவதாக பரிசளிப்பும் கமிட்டி முடிவு செய்தது. நான் பரிசு வாங்கக்கூட போகவில்லை. வரமுடியாது என்று சொல்லிவிட்டேன். அதன் தலைவர் இங்கேயே வந்து பரிசைத்தர விளைந்த போது, என்ன செய்வது என்று தெரியாத போது, என் மகளை விட்டு அதை வாங்க வைக்கலாம், முகத்தை துணியால் மூடிக் கொண்டு வாங்க அனுப்பினேன். புகைப்படம் எடுத்தபோது காற்றால் துணி விலகி எடுக்கப் பட்ட படம் எல்லா இதழிலும் வெளி வந்தது. “பெடோரா இன்னும் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறாள்” என்று ஒரே பேச்சாக மாறியது. நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இப்போது தான் இந்த எண்ணம் வந்தது . அவளையே பெடோரா என்று நடிக்க வைத்தேன். இந்த வயதில் இவ்வளவு இளமையா, அழகா என்று என் வயதையும், இவள் அழகையும் இணைத்து ஆச்சரியப்படத் தொடங்கி வாய்ப்புகள் குவிந்தது. அவளும் இந்த இடத்தை விட்டு வெளி உலகில் சந்தோஷமாக இருந்தாள். “
“பின் என்ன ஆயிற்று? “..
” அவள் மேல் ஒரு நடிகருக்கு ஆசை உண்டானது. இவளுக்கும் பிடித்துப் போனது. வெளி உலகக் கணக்குப்படி இவளின் பாதி வயதுதான் அவனுக்கு. பெரிய கேவலமாகும் பெயர் கெட்டுப் போகும் என்று தடுத்தேன். அன்று முதல் பெடோரா என்ற பெயரையே வெறுத்து தன் பெயரை உபயோகிக்க ஆசைப்பட்டாள். பொய் வெளிப்பட்டால் எவ்வளவு அவமானம். அவளிடம் பேசினேன் உனக்கு எவ்வளவு புகழையும் பெருமையையும் நான் வாங்கிக் கொடுத்தேன். அதை ஏன் கெடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டேன். அது எனக்கு இல்லையே பெடோராவான உனக்குத் தானே என்று அழுதாள். மீண்டும் வெளி உலகில் இருந்து விலகினோம். இவள் போதைக்கு அடிமை ஆனாள். விபரீதமாக நடக்களானாள். டாக்டர் மூலம் சிகிச்சை அளித்தோம். (இத்தனையும் காட்சிகளாகக் காட்டப்படும். வெறும் பேச்சாக இல்லை).
அப்போதுதான் நீங்க ஒரு கதை கொண்டு வந்தீர்கள், படம் எடுக்க. அப்போது வெளியில் அவளைப் பார்த்துவிட்டு நான் என்று நினைத்து அவளிடம் பேசினீர்கள். இப்போ எல்லாம் முடிந்து விட்டது. நல்ல புகழையும், செல்வாக்கையும், செல்வத்தையும், ஏன் என்னையும் விட்டு விட்டு போய்விட்டாள். அதுவும் நீங்கள் கொண்டுவந்த கதையின் முடிவில் சொல்லியிருந்தபடி தற்கொலை செய்துகொண்டு” என்று சொல்லி கண் கலங்குவாள். அவனும் கண் கலங்கி விட்டு விலகு வான்.
பின்னர் மீண்டும் அவள் உடலுக்கு அஞ்சலி செலுத்த பெரிய வரிசையில் ரசிகர்களும், திரை உலகத்தவரும் வருவார்கள். அதில் அந்தப் பெண் காதலித்த அந்த மனிதனும் வருவான். கண் கலங்கி மலர் வளையம் வைத்து விட்டு நகர்வான்.
பின்னர் நம் கதாநாயகனின் குரலில் “சில மாதங்களுக்குப் பின், பெடோராவின் பாதுகாவலராக இருந்த (நிஜமான பெடோரா) இறந்த செய்தி பத்திரிகையில் வந்தது” என்று படம் முடியும்.
இந்த கருத்தை (plot) வைத்து ஏன் தமிழில் யாரும் படம் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.
முழுப் படத்தையும் பார்க்க விரும்பும் நண்பர்களுக்காக இதோ:
“வி. வி. எஸ் ! யூ ஸிட் இன் த ஃப்ரண்ட் ! யாரு கூட வராங்க ? நடராஜன்? சரி லெட் ஹிம் ஸிட் இன் த பேக். வொர்ரி பண்ணிக்காதீங்க .. ஜாக்கிரதை யூ ஆர் டூயிங்க் ஆ க்ரேட் சர்வீஸ். நம்ம டிபார்ட்மெண்ட் சார்பா நீங்க போறீங்க. ஓகே.. போய் சேர்ந்த பிறகு ஃபோன் போடுங்க.. காட் பி வித் யூ ! “
“புரொஃபசர் எஸ். கே. என் தோளை அணைத்து , மெதுவாக, பல்கலைக்கழக வளாகத்தின் போர்டிகோவில் நின்று கொண்டிருக்கும் பழைய அம்பாசடர் காரில் ஏறச் சொன்னார்.
காலை ஏழு மணி என்றாலும் ஒரு சிறிய மாணவ மாணவியர் கூட்டம் எங்களை வழியனுப்பியது.
இறுக்கமான முகத்துடன் டிரைவர் வண்டியை எடுத்தார். வண்டியில் டிரைவரைத் தவிர நாங்கள் மூன்று பேர். நான், நடராஜன், தாமஸ். நான் பின்னால் திரும்பிப் பார்க்க, என் கண்களை சந்திக்கக் காத்திருந்தவன் போல, நடராஜன் ஒரு கேவலுடன் விம்மி அழ ஆரம்பித்தான். அவனை சமாதானப் படுத்த, கொஞ்சம் வளைந்து பின் திரும்பி ஆறுதல் சொல்லத் தொடங்கினேன். இதையெல்லாம் கவனிக்காமல், இந்த சூழலுக்குக் காரணமான தாமஸ், நடராஜன் மடியில் பின்னிருக்கையில் உயிரற்ற சடலமாகப் படுத்திருந்தான்.
பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான வாயிலை விடுத்து, கார் நெடுஞ்சாலையில் திரும்பி மதுரை நோக்கி விரைய ஆரம்பித்தது. மதுரை பஸ் ஸ்டாண்டே இங்கிருந்து பதிமூன்று கிலோ மீட்டர். அதன் பிறகு கட்டபொம்மன் சிலையைச் சுற்றித் திரும்பி சென்னை போகவேண்டும். தலை இலேசாக வலிப்பது போலிருந்தது. இரவு முழுதும் தூக்கமில்லாததால் சிவந்திருந்த கண்களை மெல்ல முடிக்க கொண்டு இருக்கையில் சாயந்துகொண்டேன்.
நான் நடராஜன் தாமஸ் தவிர மொத்தம் இருபது பேர்கள் கொண்ட எங்கள் வகுப்பில் ஒருவரை ஒருவர் கடந்த மூன்று மாதங்களாகத்தான் அறிவோம். முப்பது வயதுக்கு உட்பட்ட கல்லூரி ஆசிரியர்களுக்கான நான்கு மாத பயோகெமிஸ்ட்ரி ஆய்வுப் பட்டயப் பயிற்சி வகுப்பு அது. மதுரைப் பல்கலைக்கழகம் நடத்துவது. உணவு, விடுதி வசதிகள் தவிர சம்பளத்தோடு கூடிய விடுப்பும் உண்டு என்பதாலும், ஆல் இந்தியா அளவில் தேர்வு என்பதாலும், போட்டி கடுமையாக இருந்தது.
தேர்ந்தெடுக்கப் பட்டபோது நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கோர்ஸ் முடித்த பிறகு அப்படியே பிஹெச்டி பட்டத்துக்கும் ரிஜிஸ்டர் செய்யலாம் என்றும் திட்டமிட்டேன். கல்லூரிப் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளே ஆகியிருந்தன. டிபார்ட்மெண்டில் நான்தான் கடைசி நபர். நான்கு மாதங்கள் நான் விடுப்பில் சென்றால் கல்லூரி வகுப்புகள் பாதிக்கப்படும் என்று, எனது துறைத் தலைவர் ஒரு தடை வைத்தாலும், ஆய்வுத் துறையில் உலகப் புகழ் பெற்றிருந்த எங்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் என். வெங்கடசுப்பிரமணியன், ஆய்வுப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு உடனே அனுமதி அளித்துவிட்டார்.
சனிக்கிழமை கல்லூரிப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ல் கிளம்பி மதுரையில் திங்கட்கிழமை விடியல் காலையில் போய்ச் சேர்ந்தேன். காலை பதினோரு மணிக்குத்தான் ரிப்போர்ட் செய்யவேண்டும். ( இடைப்பட்ட நேர அனுபவங்கள் வேறொரு கட்டுரைக்கு ரிசர்வ் செய்யப்படுகிறது)
கட்டபொம்மன் சிலையிருக்கும் மதுரை பேருந்து நிலையத்தில் பெட்டி படுக்கையுடன் பல்கலைநகருக்கு பயணச்சீட்டு எடுத்து, எப்படியோ கும்பலில் உட்கார இடம் கிடைத்து ,ஒருவழியாக பல்கலைக்கழகம் வந்து சேர்ந்தேன். நிறைய வெய்யில் , நிறைய நடை.: ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் இருந்தது ; பெரிய தார் சாலைகளின் இரு மருங்கும் மரக்கன்றுகள்; இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நிழல் தர ஆரம்பிக்கும்.
ஒருவழியாக “School of Biological Sciences “ என்று எழுதப்பட்ட கட்டடம் கண்ணில் பட்டது. வரவேற்பு ஹாலில் ஒரு கரும்பலகையில் “ Welcome to all C.C,B.C. participants. Go to Bio Chemistry Lab “ என்று எழுதப்பட்டிருந்தது. அங்கே நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி என் அழைப்புக் கடிதத்தையும். அடையாள அட்டையையும் சரி பார்த்துவிட்டு, ஒரு பெரிய ரிஜிஸ்டரில் கையெழுத்து இடச்சொன்னார்.
“ சார்! நீங்க பக்கத்தில இருக்கற ரூமில் போய் உட்காருங்க.. புரொஃபசர் ஜே. ஜே. வர இன்னும் அரைமணி நேரம் ஆகும்”
மூடியிருந்த அறையின் பெரிய கதவை தள்ளித் திறந்துகொண்டு கையில் பெட்டி படுக்கையுடன் உள்ளே நுழைந்தேன். ஐம்பது பேர் அமரக்கூடிய பெரிய அறை. நடுவே செவ்வகமாக ஒரு பெரிய நீ.. ள மேசை. சுற்றி இருபது பேர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு புறம் பெரிய செவ்வக வடிவில் சுவற்றில் பதிக்கப்பட்ட கண்ணாடிக் கரும்பலகை. பலகையின் மேற்புறத்தில் இரு ஓரங்களில் சிறிய ஃபோகஸ் விளக்குகள். பக்கத்தில் புரொஜெக்ஷன் செய்ய வசதியாக ஸ்டாண்டில் வெள்ளைத் திரை. இது ஒரு கான்பரன்ஸ் ஹால் என்று புரிந்துவிட்டது.
காலை பதினோரு மணி மதுரை வெய்யிலிலிருந்து நிழல் சூழ்ந்த ஏ. சி. அறைக்குள் நுழைந்தவுடன் சில நிமிடங்கள் உள்ளே எத்தனை பேர் அமர்ந்துள்ளனர் என்றே தெரியவில்லை. காலியாய் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்தேன். மொத்தம் ஆறு பேர் அமர்ந்திருந்தனர். ஒருவர் பெண். யாரும் பேசவில்லை. அமைதியாக யாரையோ எதிர்பார்ப்பது போலப் பதுமைகளாய் அமர்ந்திருந்தனர். நாலைந்து நிமிடங்கள் சென்றன,
பொதுவாக ஒரு நல்லிணக்கப் புன்னகையோடு “ஹலோ குட் மார்னிங் ஐ அம் சுப்பிரமணியன் ஃப்ரம் சென்னை” என்று ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பேசத் தொடங்கி அனைவருமே அறிமுகமாகிவிட்டோம். அப்போது தெரியவில்லை. பிறகே தெரிந்தது. அங்கிருந்த அத்தனை மாதங்களும், எங்கள் குழுவில் நான்தான் எதற்கும் முதலில் பேசுபவனாக ஆகிவிட்டேன்; அறிவிக்கப்படாத குழுத் தலைவனாகவும் மாறிவிட்டேன்.
உத்திரப் பிரதேசம் , கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்கள் தவிர தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும், மதுரையிலிருந்தும் பங்கேற்பவர் இருந்தனர். அங்கிருந்த நான்கு மாதங்களில் எத்தனை அனுபவங்கள் எத்தனை மறக்கமுடியாத நினைவுகள் !.
“ சார் ! மதுரை அவுட்டர்ல இருக்கம்.. பக்கத்துல ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. கண்ணாடிய ஏத்திட்டு அமைதியா இருங்க.. வண்டியில டெட் பாடி இருக்குன்னா போட மாட்டான்”
டிரைவர் குரல் கேட்க “ம்” என்று தலையாட்டினேன். கையில் உள்ள பையில் மதுரையின் சிறந்த ( பேர் சொல்ல விரும்பவில்லை) தனியார் மருத்துவமனை கொடுத்த இறப்பு சான்றிதழ். மற்றும் தாமஸ் தொடர்பான ஆவணங்கள் , எங்கள் அடையாள அட்டைகள் இருப்பதை பத்தாவது முறையாக உறுதிசெய்து கொண்டேன்.
பெட்ரோல் நிரப்பிக் கொண்ட வண்டி நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
வந்திருந்த இருபது பேரும் வெவ்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்கள்.
“ ஹேய் ஒண்லி வி டூ ஆர் ஃப்ரம் சென்னை. “என்று மலையாள வாசனையில் கை கொடுத்தவன் தாமஸ். ஒல்லியான உருவம்; நல்ல கறுப்பு. கொஞ்சம் உயரம். மிகக் கவர்ச்சியான சிரிக்கும் கண்கள். குறுந்தாடி. ஸ்டைலான டிரஸ். மொத்தத்தில் “கையில் கிடார் எங்கே “ எனக் கேட்கத் தோன்றும் உடல் நெளிவு. பார்த்தவுடனேயே எனக்கு அவனைப் பிடித்துவிட்டது. மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் பணிபுரிபவன்.
பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கட்டடம் ,துணைவேந்தர் அலுவலகம் உட்பட மிகப் பெரிது. அதைச் சுற்றிலும் பல துறைகளின் கட்டடங்கள். வலது புறத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆண்கள் விடுதி. துணைவேந்தர் அலுவலகத்தின் இடது புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெண்கள் விடுதி. அதன் எதிர்ப்புறம் விரிந்த காலனியில் பேராசிரியர்களின் குடியிருப்புகள். அதையும் தாண்டி அதன் பின்புறம் ஆராய்ச்சி மாணவர்களுக்கான “குவாரட்டர்ஸ்” . ஒரு ஹால் பெட்ரூம் சமையலறை கொண்டது. திருமணமான , ஆசிரியர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆய்வுப் பட்டத்திற்கு பயிலும் பேராசிரியர்களுக்குக் கொடுக்கப்படுவது.
மாணவர் விடுதியில் இடமில்லை என்பதால் இது போன்ற ஒரு வீடு நான், தாமஸ், பழனியைச் சார்ந்த சின்னு என்ற சின்னசாமி, பெல்காமில் இருந்து வந்த மயன்னவர் ஆகிய நால்வருக்கும் ஒதுக்கப்பட்டது. நானும் தாமஸும் இதனால் இன்னும் நெருக்கமாகிவிட்டோம். விடுதியை விட இங்கே இடம் அதிகம். மொட்டை மாடியில் ஏறிப் படுத்துக் கொண்டால் அசத்தலாகத் தூக்கம் வரும்.
ஆனால் ஒரு பிரச்சனை இருந்தது. உணவுக்கு நாங்கள் விடுதிக்குத்தான் செல்லவேண்டும். போக வர கிட்டத்தட்ட இரண்டரை கிலோமீட்டர். காலையில் ஓகே. சாப்பிட்டுவிட்டு அப்படியே டிபார்ட்மெண்டுக்கு போய் விடுவோம். இரவு நேரம் கஷ்டம். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, தாமஸ் வந்து எங்களிடம் ஸ்வீட் பாக்ஸை நீட்டி,
“ ஹாய் ஃபிரண்ட்ஸ் ஐ அம் ப்ளெஸ்ட் வித் எ பேபி சன்” என்று மகிழ்ச்சியோடு அறிவித்தான். எங்கள் கூட்டத்தில் இருந்த மணமான நால்வருள் அவனும் ஒருவன் என்றாலும் அவன் மனைவி “எக்ஸ்பெக்டிங் “ எங்களுக்குத் தெரியாது. “பார்ட்டி கொடு” என்ற நண்பர்களின் கூச்சலுக்கு இடையே
“நான் உடனே கிளம்பி சென்னை போகணும் டா! இன்னிக்கு வெள்ளிக்கிழமை. நான் சனி ஞாயிறு போய்ட்டு வந்திடுவேன். என் ப்ராஜக்ட் டேட்டா நீ தான் பாத்துக்கணும் “ என்று என்னிடம் கேட்டுக் கொண்டான். நாங்கள் மேற்கொள்ளும் பரிசோதனைகள் சில ஒன்று இரண்டு நாட்கள் தொடர்ந்த கண்காணிப்பில் இருக்கவேண்டும். நான்கு மணி நேர இடைவெளிகளில் ரீடிங் எடுக்கவேண்டும். பயோ கெமிஸ்ட்ரி பரிசோதனைகளுக்கு சனி ஞாயிறு தெரியாது. நான்கு மாத தீவிர பயிற்சி வகுப்பு என்பதால் இடையில் விடுப்பு எடுப்பது இயலாது.
“ ஓகே தாமஸ்.நீ போய்ட்டு வா! நான் டிபார்ட்மெண்டில் சொல்லிக்கறேன். உன் எக்ஸ்பெரிமெண்ட் பற்றிக் கவலைப்படாதே நான் பாத்துக்கறேன் ஒரு லெட்டர் எழுதி வச்சிடு! “
“ தாங்க்ஸ் டா .. ஆமாம் சென்னைல ஒன் ஸ்கூட்டர் இருக்கு இல்ல. ஒங்க வீட்டுல சொல்லு. நான் வரும் போது “ப்ரேக் வேன்” ல போட்டு டிரைன்ல எடுத்துண்டு வரேன். இங்க போக வர யூஸ் ஆகும் “ என்றான்.
மூன்று நாட்கள் கழித்து திரும்பிய போது என் ஸ்கூட்டர் அவனோடு வந்து சேர்ந்தது. அந்த ஸ்கூட்டரில் நாங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் மதுரையிலும் அலையாத இடமில்லை.
அதுதான் தாமஸ்!. தானே முன் வந்து உதவி செய்யும் இயல்புடையவன்; பாசக்கார நண்பன். பல ஆண்டுகள் பழகியவன் போல் ஒட்டிக்கொண்டுவிட்டான். பாவி! இவ்வளவு அவசரமாகப் போவதற்காகவா இத்தனை “ஈஷி”க் கொண்டாய்!. மனசு வலித்தது.
திடீரென்று “டமார்” என்று ஒரு சத்தம். கண் விழித்தால் எங்கள் கார் வளைந்து நெளிந்து சாலை ஓரத்தில் தஞ்சமடைந்திருந்தது.