Normal view

Received before yesterdayசௌம்யா

தீராக்காதல் [சிறுகதை]

8 March 2025 at 01:30
அந்தத் தையலகத்தில் காத்திருந்தேன். இன்றோடு ஏழாவது முறை. பத்மா அக்கா தையல் இயந்திரத்தின் ஓர் உதிரி பாகமாவே மாறியதைப் போல் ஒன்றி தைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து விட்டுப் பாராதது போல் வந்திருந்த வாடிக்கையாளரிடம் பேசியபடி சில நிமிடம் போக்குக் காட்டினார். பின் நான் வந்ததறிந்து ஆச்சரியப்படுவது போல் “இன்னும் அண்ணன் கிட்ட பேசல.” என்றார். ஒருவாரமாகத் தேய்ந்த அதே பதில். ஏமாற்றமில்லை; ஆனால் சோர்விருந்தது.

“அக்கா, தினம் இதேதான் சொல்றீங்க…”

“நாளைக்கு நிச்சயம் கேட்டு சொல்றேன்.”

“ஃபர்ஸ்ட் டைம் இன்சூரன்ஸ் ஏஜென்சி எடுத்திருக்கேன். வழக்கமா உங்ககிட்டயேதான் துணி தைக்கறேன். நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்கன்னுதானே உங்ககிட்ட தினம் வரேன்” - என் குரலில் நான் இல்லை என்று நம்பிய ஏமாற்றம்தான் நிறைந்திருந்தது.

“நாளைக்கு வாயேன். பார்ப்போம்.”


வெறுப்பாய் நடந்தேன். என் கைப்பை நிறைய புதிதாக அச்சடித்த விசிட்டிங் கார்டுகள் இருந்தன. என் பெயரிட்டு எல்ஐசி அட்வைசர் என்று எழுதிய இளநீல வண்ண அட்டைகள். அட்வைசர் ஆகி பதினைந்து நாட்கள் ஆகி விட்டன. இன்னும் ஒரு பாலிசி கூட என் கணக்கில் சேரவில்லை. இதற்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன், உருப்படியாக வேறு வேலை தேடலாம் என்று தோன்றும் போதே எதிரே பைக்கில் அவன் வந்தான்.

எனக்குப் பரபரப்பும், பரவசமும் தொற்றிக் கொண்டது. என்னைக் கண்டு பைக்கை நிறுத்தியவன், மெல்லிய புன்முறுவலுடன் தலை அசைத்து விட்டு  கேட்டான். 

“என்னாச்சு? ஏதாவது பார்த்தீங்களா? டூ வீக்ஸ் ஆச்சே!”

“இப்பக் கூட ஒரு கஸ்டமரை பார்த்துட்டுதான் வரேன், ஸார்.”

“குட். எந்தப் பாலிசி? எவ்ளோ ப்ரீமியம்?”

“இன்னும் ஓக்கே சொல்லல. நாளைக்கு சொல்வாங்க.”

என் மனதில் நம்பிக்கையே இல்லை. ஆனாலும் அவனிடம் அப்படி நம்பிக்கை இன்றிப் பேசலாகாது. அவன் மனங்களைப் படிக்கப் பயிற்சி எடுத்தவன் போல் கேட்டான்.

“உங்ககிட்ட கான்ஃபிடன்ஸே இல்லையே! எவ்ளோ நாளா அவங்கள பாலோ பண்றீங்க?”

“ஏழு நாளாச்சு. தெரிஞ்சவங்கதான், ஸார். போட்ருவாங்க.”

“சரி, நாளைக்கு நான் இதே டைமுக்கு வரேன். பேசிப் பாப்போம்.”

சும்மாவே எனக்குச் சரியாகப் பேச வராது. இதில் இவன் வேறு கூட இருந்தால் விளங்கின மாதிரிதான்! ஆனாலும் மறுக்கவில்லை. நாளையும் அவனைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

பித்தேறிய மனதிற்கு ஒவ்வொரு சந்திப்பும் மருந்தாகும்; அதுவே மேலும் பித்தாக்கும்.

“சரிங்க, ஸார்.”

“ஒருத்தர்கிட்டயே கேட்டுட்டு இருக்காதீங்க, இன்னும் நிறையப் பேரைப் பாக்கணும். இப்படி வெயில்ல நடந்தே எத்தனை பேரைப் பார்க்க முடியும்? ஒரு வண்டி வாங்கலாம் செகண்ட் ஹாண்ட்ல. சீக்கிரம் அந்த அளவுக்காவது சம்பாதிக்க ஆரம்பிங்க…”

“...”

“முகத்துலயே வெயில் படுது பாருங்க. குடையாவது எடுத்துருக்கலாம்ல!”

அச்சொற்களின் அக்கறை அந்த வெயிலுக்கு இதமான பனிக்கட்டிகளாக‌ப் பொழிந்தன‌. 

“இப்படி வெயில்ல அலைஞ்சு ஸ்கின் டேனாகிக் களைச்சுப் போய் கஸ்டமரை எப்படி கேன்வாஸ் பண்ணுவீங்க? நம்ம வேலைக்கு நம்ம தோற்றம் ரொம்ப முக்கியம். அயர்ன் பண்ணாம, கசங்கின டிரெஸ்லாம் போட்டுட்டு யார்டயும் போய்ப் பேசாதிங்க…”

அவன் கண்கள் என்னை மேலும் கீழும் ஒருமுறை அலட்சியமாக அலசின‌. என் மொத்த உற்சாகமும், சந்தோஷமும் வடிந்து முகம் இருண்டது. அதைப் பற்றி அவனுக்கு எந்தக் கவலையும் இருக்காது என்பதும் எனக்குத் தெரியும். 

“சரி நாளைக்கு பாக்கலாம்” - கிளம்பினான். முன்பே இருந்த எரிச்சல் இன்னும் கூடியது. 

‘இதெல்லாம் தேவையா? அந்த மருந்துக் கம்பனியில் அக்கவுண்டண்ட் வேலைக்கே போயிருக்கலாம்.  என் விவஸ்தைக் கெட்ட புத்தி இவனைக் கண்டதும் பின்னால் ஓடி வந்து விட்டது. இதென்ன கண்டதும் காதலா? உண்மையைச் சொன்னால் காதலென்று உறுதியாக எனக்கே தெரியாவிடினும் இது கண்டதும் ஏற்பட்ட கிறுக்குதான். 

மருந்துக் கம்பெனிக்கு நேர்முகத்  தேர்வுக்கு சென்றவளை அங்கு மேலாளரிடம் ஊழியர்களுக்கான பல்க் பாலிசித் திட்டத்திற்காக காண வந்தவன் தயக்கமே இல்லாமல் அணுகினான். என்னைப் பார்த்ததும் புன்னகையா இல்லையா என்று சொல்ல முடியாத முறிந்த முறுவல் ஒன்றை வீசி விட்டு “கொஞ்சம் பேசணும்” என்றான். 

அப்போதுதான் அவனைக் கவனித்துப் பார்த்தேன். மாநிறத்திற்கு அடுத்த நிறம். மிடுக்கான உடை, சுத்தமாய் இருந்தான்.  தூய்மையை விட சிறந்த அழகு சாதனம் வேறில்லை. குறிப்பாக அந்தக் கருத்த விழிகள், அவனது விழியின் ஒளியிலா அல்லது விழியோரங்களின் கூடுதல் கருமையிலா, தெரியவில்லை - மிக மெலிதாக மை இட்டது போலொரு பிரமை தோன்றும் கண்கள். நான் அந்த விழிகளிலேயே தங்கி விட்டேன்.

நான் கேள்வியாய் பார்ப்பதைக் கண்டதும் மெல்லச்  சிரித்தான். “நான் கண்ணன். எல்ஐசி டெவெலப்மென்ட் ஆஃபீஸர். ஒரு பத்து நிமிஷம் ஒதுக்கலாமா பேச?”

ஏன் சம்மதித்தேன் என்று அதன் பிறகு பல முறை கேட்டுக் கொண்டும் தர்க்கமில்லாத பதில்தான் கிடைத்தது. அவனை எனக்குப் பிடித்திருந்தது. அவனுடன் பேசக் கிடைத்த அந்த சந்தர்ப்பத்தை நான் தவற விட விரும்பவில்லை என்பதுதான் ஒரே காரணம். 

“உங்களைப் பத்திச் சொல்லுங்க. பேரென்ன? இங்க பக்கத்துலதான் வீடா?”

“நான்ஸி. இல்ல, எனக்கு வீடே இல்ல. ஹாஸ்டல்ல இருக்கேன்.”

“ஓ!  இப்போ எங்க ஒர்க் பண்றீங்க?”

“இன்னும் ப்ராபரா ஒரு வேலைக்குன்னு போகல. இங்க ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தேன். அவங்க ஹாஸ்டல்லதான் தங்கி இருக்கேன். பிகாம் சிஏ படிச்சிருக்கேன். இப்போதைக்கு சில கடைகளுக்கு அக்கவுண்ட்ஸ் பார்க்கறேன். காலைல ஒரு கடை, சாயந்திரம் ஒரு கடை. இங்க வேலை கிடைச்சா மாறிடுவேன். அப்புறம் வேற ஹாஸ்டல் பார்க்கனும்.”

“குட். நல்ல பிஜி ஏதும் வேணும்னா சொல்லுங்க.”

இது வரையில் நான் இப்படி என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட யாரிடமும் உடனே வந்து முகத்தில் ஒட்டிக் கொள்ளும் காருண்யமோ, பரிதாபமோ இல்லாமல் அவன் என்னை இயல்பாக அணுகினான். அத்தனை ஆண்டுகளில் எனக்குஅது முக்கியத் தேவையாக இருந்திருக்கிறது என்பதே அப்போதுதான் புரிந்தது.

“இப்போ இந்த வேலைக்கு சேர்ந்தாலும், பத்தாயிரம் பன்னெண்டாயிரம் கிடைக்குமா? அதுல உங்க சாப்பாடு, பிஜி ரெண்ட் எல்லாம் போக  என்ன மிச்சம் வரும்? எல்ஐசில அட்வைசர் ஆக விருப்பம் இருக்கா? நல்ல வருமானம் கிடைக்கும். யோசிச்சுப் பாருங்க.”

அப்போது நான் அந்த அக்கௌன்டன்ட் வேலையை முயலாமல் தவிர்ப்பேன் என்றோ இன்ஸ்யூரன்ஸ் அட்வைசர் ஆக சம்மதிப்பேன் என்றோ நினைக்கவே இல்லை. ஆனால் அவனுடன் பேசிய அந்த பத்து நிமிடங்களில் என் உலகம் மிக அழகாய்த் தெரிந்தது.

இத்தனைக்கும் அவன் பேசியது முழுக்க அவனது வேலை  சம்மந்தமாக மட்டுமே. ஒரு வேளை அதுதான் என்னை ஈர்த்ததோ! எத்தனை முறை யோசித்தாலும் இன்னதுதான் காரணம் என்று குறிப்பிட்டுக் கூறவே முடியவில்லை. பார்த்த உடனே பிடிக்க வேறு என்னதான் காரணம் இருக்க முடியும்? நான் பெண், அவன் ஆண் என்பதைத் தவிர!

“ஸ்கில் பொறுத்து லட்சக்கணக்கில் கூட சம்பாதிக்கலாம். நானே சாட்சி!” - சிரித்தான்.

“எனக்கு அப்படி எந்த ஸ்கில்லும் இல்லைங்களே!” - என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. என் போதாமைகளை சங்கடம் இல்லாமல் யாரிடமும் சொல்லி விடுவேன். என்னைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் ஏற்படாமல் இருக்க அது உதவும் என்ற கணக்கு. 

“அதெல்லாம் நாமளா நினைச்சுக்கறதுதான். நான் கூட இருந்து ட்ரெய்னிங் தருவேன். ஒரு முறை நீங்க பாலிசி பிடிச்சாப் போதும். அப்பறம் அவங்க ப்ரீமியம் கட்டும் போதெல்லாம் உங்க அக்கவுண்ட்ல கமிஷன் வந்துட்டே இருக்கும். இது  எம்எல்எம் மாதிரி இல்லைனு புரியுதுல்ல. உண்மையாவே பல குடும்பங்களை வாழ வச்சுருக்கு. எத்தனையோ பாலிசிகள் குடும்பத் தலைவர் இறப்புக்கு பின்னாடி பெரிய பலமா இருந்திருக்கு. அவங்களுக்கும் நன்மை, நமக்கும் நல்ல வருமானம்.”

எனக்கு அப்படி பணத்தாசை எதுவும் இல்லை. ஆதரவற்ற விடுதியில் தங்கிப் படித்த எனக்கு  அந்த பத்து, பதினைந்தாயிரம் போதும். நல்ல  வேலை கிடைத்ததும் அந்த விடுதியில் இருந்து வெளியேறி என் செலவுகளை நானே பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் என்னை ஆளாக்கிய  அமைப்புக்கும் விடுதிக்கும் ஏதாவது உதவலாம் என்பதைத் தவிர எனக்கு லட்சியமோ பேராசையோ ஏதும் கிடையாது. ஆனாலும் அவனுடன் பணி புரியலாம் என்ற ஒரே காரணம் என்னை அசைத்தது.

நான் அத்தனை பலவீனமானவள் அல்லள். சில ப்ரோபோசல்கள் வந்திருக்கின்றன. மிக நல்ல வாய்ப்புகளை தவிர்த்திருக்கிறேன். இவனை விட தோற்றத்தில் சிறந்தவர்களும் அதில் உண்டு. ஆனால் இவன் வேறு விதமாகத் தெரிந்தான். ஓர் ஆணாக மிக ஆளுமை மிக்க கம்பீரம் இருந்தது. மிதமான உத்தரவிடும் தன்மையிலான அவனது பேச்சிற்கும் ரசிகையாகிப் போனேன். அதிகமோ குறைவோ இல்லாத அளவான‌ பேச்சு. ஒரு துளி அதிகம் சிரிக்கவில்லை, சிடு மூஞ்சியும் இல்லை. அப்படி ஒரு கோடு போட்டது போல், தராசின் முள்ளை நேராய் நிறுத்தியது போன்ற பார்வையும், அணுகுமுறையும் இருந்தது.

“நீங்க நல்லா சம்பாதிச்சா உங்கள மாதிரி நாலு குழந்தைகளைப் படிக்க வைக்கலாம்.”

அவன் சொன்ன விஷயங்களைக் காதில் வாங்கினேன். அவனது ஆண்மையை, அண்மையை மனதில் வாங்கினேன். அவன் சொன்ன படிவத்தில் கையெழுத்திட்டேன்.

“நாளைக்கு இந்த ஏரியா ப்ரான்ச் ஆபீஸ் வந்துருங்க. எங்கேன்னு தெரியும்ல‌? ஃபோட்டோ ரெண்டு வேணும். ஆதார் கார்டு இருக்குல்ல? அது இல்லைனா டிரைவிங் லைசன்ஸ் இருந்தாலும் போதும், பான் கார்ட் கட்டாயம். இதுவரை எடுக்காட்டி எடுத்துருங்க.”

அன்றிரவு அறையில் ஏற்கெனவே இருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். சுமாராகத் தோன்றியது. மறுநாள் இருந்ததில் சிறந்த உடை உடுத்திக் கொண்டேன். ஃபோட்டோ ஸ்டூடியோ போய் புதிதாக நிழற்படம் எடுத்துக் கொண்டு போனேன். 

இரண்டு புகைப்படங்களை எடுத்து மேசை மேல் வைத்ததை அவன் மேலோட்டமாகக் கூடப் பார்க்காமல் எடுத்து என் படிவத்தில் இணைத்தான். அப்போதுதான் கவனித்தேன். என்னைப் போலவே மேலும் ஆறு பெண்களும், இரண்டு பையன்களும் அஙகே இதே போல் புகைப்படத்துடன் வந்திருந்தனர். அதில் ஒருத்தி மிக அழகாக இருந்தாள். 

அவள் புகைப்படத்தை அவனிடம் தந்த போது என்னை மீறி அவன் முகத்தை உற்றுக் கவனித்தேன். அவன் அதையும் அதே அலட்சியத்துடன்தான் அணுகினான். நிம்மதி மூச்சொன்று வந்தது. அவள் அவனிடம் மேலும் ஏதோ கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். 

ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தவளை கூர்ந்து கவனித்தேன். “கண்ணா… கண்ணா…” என்று அழைத்தாள். அந்தக்  ‘கண்ணா’வில் ஒரு கொஞ்சல் இருந்தது. பெயரே கண்ணம்மா, கண்ணா என்று இருப்பவர்களை இயல்பாகவே கொஞ்சித்தான் அழைக்க முடியும் போல. வெறுப்பாக இருந்தது. நான் அதன் பின் பல முறை முயன்றும் அவனை ‘கண்ணா’ என்று அழைக்க முடிந்ததே இல்லை. அந்தக் கொஞ்சல் வராமல் என்னால் நிச்சயம் அழைக்க இயலாது என்பதாலேயே தவிர்த்தேன். ஸார், ஸார், ஸார்…

எங்கள் வகுப்புகள் ஆரம்பித்தன. பயிற்சி தர‌ அவன் வருவான் என்ற என் எதிர்பார்ப்பு நடக்கவில்லை. அதற்கென வேறு சிலர் வந்தனர். பல கிளைகளில் இருந்தும் சேர்ந்த நூறு இளைஞர்கள். தேர்வும் உண்டு.  நடுநடுவே அவன் வந்து அவனால் சேர்க்கப்பட்ட எங்கள் குழுவை விசாரித்தான். இப்போது என் குறிக்கோள் அவன் மெச்சுமளவு நல்மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதாக மாறி இருந்தது. தீவிரமாகத் தேர்வுக்குத் தயார் செய்தேன்.

ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். தேர்ச்சி பெற்றவர்களை அழைத்து தனிப்பட்டு அவன் செலவில்  சிறியதாக ஒரு தேநீர் உபசரிப்பு நடத்தினான். என் மதிப்பெண்தான் அக்கூட்டத்தில் அதிகம், என்னை அவன் பாராட்டும் கணத்திற்காகக் காத்திருந்தேன். 

“இந்த எக்ஸாம், மார்க்ஸ் இதெல்லாம் இதில் முக்கியமே இல்லை. இது நுழையறதுக்கு மட்டும்தான். இனி நீங்க‌ செய்யப்போற வேலைதான் முக்கியம். ஜஸ்ட் பாஸ் ஆனவங்க திறமையா பல பாலிசிகள் விற்கறவங்களா இருப்பாங்க. நூத்துக்கு நூறு வாங்கினவங்க வருடத்தின் டார்கெட் கூட முடிக்காம ஒதுங்கவும் செய்வாங்க. ரெண்டு வகை ஆளும்  பார்த்திருக்கேன். இங்க க்ரௌண்ட ஒர்க்தான் முக்கியம். சலிக்காம ஓடணும்.”

என் மதிப்பெண்கள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன‌. ஒரு வார்த்தை பாராட்டிச் சொன்னால்தான் என்னவாம்! குறைந்தா போய் விடுவான்? மனம் அடங்கவில்லை. பார்ட்டி முடிந்ததும் விடை பெரும் சாக்கில் “82% வாங்கிட்டேன் ஸார்!” என்றேன்.

“நாந்தான் பார்த்தேன்ல. நாளைல இருந்தே ஒர்க் ஸ்டார்ட் பண்ணுங்க, எப்போ என்ன டவுட்னாலும் என்னைக் கேளுங்க, எந்த நேரமானாலும் சரி. தயங்க வேண்டாம்.”

“ம்க்கும்.”

மறுநாளில் இருந்து அக்கம் பக்கம், சுற்றம் நட்பு என்று அணுக ஆரம்பித்தேன். முதலில் எனக்குப் பெரும் நம்பிக்கை இருந்தது. என்னைப் பிடிக்கும் பேரன்பு மக்கள் என்னைச் சுற்றி உள்ளனர் என்பதுதான் மூலக் காரணம். நான் புழங்கும் சிறுகடைகள், மெடிக்கல் ஷாப், டெய்லர் என்று ஆரம்பித்தேன். சின்னச் சின்ன தொகை ப்ரீமியமாக உள்ள பாலிசிகளையே என்னை சுற்றி உள்ள நடுத்தர மக்களிடம் அறிமுகம் செய்தேன்.

ஆரம்ப வாழ்த்தைத் தொடர்ந்து சொல்லி வைத்தது போல அனைவருமே “உனக்கெதுக்கு இந்த வேலை, அழகா ஆஃபிஸ்ல போய் வேலை பாக்கலாம்ல! வீட்ல எல்லாருமே முன்பே பாலிஸி போட்டிருக்கோம். இருந்தாலும் நீ கேட்டதால் யோசிச்சு சொல்றேன்” என்றனர்.

என்னைத் தவிர அனைவருமே ஒரு பாலிசியோடே வாழ்கிறார்கள் என அப்போதுதான் புரிந்தது. முதல் ஒரு வாரத்திலேயே இது  சிரமமான காரியம் என்பது புரிந்து போயிற்று. இதெல்லாம் வேண்டாம் என முடிவெடுக்கலாமா என்று யோசிக்கும்போது அழைத்தான்.

“என்னாச்சு? உங்ககிட்ட இருந்து ஒரு அப்டேட்டும் இல்லையே!”

“நாலைஞ்சு பேர்ட்ட சொல்லி வச்சுருக்கேன் ஸார். சொல்றேன்னு சொல்லி இருக்காங்க.”

“நாலைஞ்சு பேரா? ரொம்பக் குறைவு. ஒரு நாளைக்கு நீங்க புதுசா பத்து பேரையாவது மீட் பண்ணனும். பேசணும். அப்போதான் அதில் ஒருத்தர் சரிப்பட்டு வருவாங்க.”

“சரிங்க ஸார்.”

இவனிடம் மறுக்க எது என்னை தடுக்கிறது என்று தெரியவில்லை. அவன் பேசினாலே அடங்கி விடுகிறேன். அது பிடித்தும் இருக்கிறது. சரி, ஆனது ஆயிற்று இதில் இறங்கி முழு உழைப்பையும் போட்டு விடுவது என்று முடிவு செய்தேன். ஆனால் அப்படி இறங்கிய பின் இன்னும் சோர்ந்தேன். திரும்பத் திரும்ப ஒரே வாசகங்களை மனனம் செய்தது போல் அனைவரிடமும் சொல்லவும் கேட்கவும் கூச்சமாக இருந்தது. “நாளைக்கு வாங்க” என்று சொன்னதற்காக நாளைக்கே போவதா என்று அதற்கடுத்த‌ நாள்தான் போவேன். “நேத்தே வர சொன்னேன்ல. இப்போ காசு செலவாயிருச்சு. அடுத்த வாரம் பாக்கலாம்.” என்பர். சொன்ன தினமே போய் நின்றால், “இன்னிக்குனா இன்னிக்கே வருவேன்னு நினைக்கல. அடுத்த மாசம் சம்பளம் வரட்டும்.” என்பர். கதைகள், காரணங்கள்… 

இதோ இந்த டெய்லர் அக்காவிடம் பத்து நாளாக நடக்கிறேன். என் மேல யாருக்கும் பெரிய பிடித்தமெல்லாம் இல்லை. எல்லாம் வார்த்தைகள்தாம் என்று புரிந்தது போல் இருந்தது. இத்தனை கசப்புக்கும் நடுவில் அவனை நாளைக்கும் பார்க்கலாம் என்பது இனித்தது. உண்மையாகவே இந்த உணர்வை எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் என்னைத் தனிப்பட்டு மதித்ததாகக் கூடத் தெரியவில்லை. அவனுக்கு நான் அந்தக் குழுவில்  ஒருத்தி. இன்னும் சொன்னால் பத்தோடு பதினொன்று. எனக்கு என் சுயத்தின் மேல் சந்தேகம் வந்தது. என் எதிர்காலம் பற்றியோ, வாழ்வு பற்றியோ, வேலை சார்ந்தோ, சம்பாத்யம் சார்ந்தோ எந்தக்  குறிக்கோளும் இல்லாமல் பதின்மச் சிறுமி போல் செயல்படுகிறேன் என்பது உறைத்தது. இதைத்  தவிர்த்து விட வேண்டும். அவன் கூறும் அளவு வாடிக்கையாளர்களை நான் சேர்க்க முடியாதென்று எனக்கே தெரியும். அதிலிருந்து என் வாழ்வுக்கு தேவையான வருமானமும் ஈட்ட முடியாது. நாளை ஒரு நாள் பார்க்கலாம். பத்மா அக்கா இழுத்தடித்தால், அதையே காரணமாகக் கூறி விலகிடலாம்.

மறுநாள் நான் டெய்லர் கடைக்குச் சென்ற இரண்டு நிமிடங்களுக்குள் அவனும் வந்து விட்டான். என்னைத்  தெருவில் நிற்க வைத்து வேண்டா வெறுப்பாய்ப் பதிலளித்த அக்கா அவனைக் கண்டதும் எழுந்து நின்றாள். ஸ்டூல் போட்டு அமரச் சொன்னாள். அவன் பத்மாவிடம் “ஹாய் நல்லா இருக்கீங்களா?” என்று சிரித்து ஆரம்பித்தான்:

“நான்ஸி எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க அந்தப் பாலிசியை அவங்களுக்கு.”

“ஏற்கனவே சொல்லிட்டேன், ஸார்.”

“இல்ல, இப்போ ஒருக்கா சொல்லுங்க.”

நான் அந்த பாலிசி பற்றி இருபது நிமிடங்கள் எடுத்துச் சொன்னேன். அதன் பலன்களைச் சொல்லி விட்டு “அக்கா, ஃபர்ஸ்ட் பாலிசி நீங்க உங்க கையால ஆரம்பிச்சு வச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும். இன்னும் ஒரு பாலிசி கூட யாரும் போடலக்கா” என முடித்தேன்.

அவன் குறுக்கிட்டான். 

“பத்மா மேம், நீங்க இந்த ப்ளான்ல அடையப் போற லாபம் வெறும் பணம் மட்டுமில்ல. உங்க குடும்பத்துக்கே பாதுகாப்பு.  மற்ற ப்ரைவேட் பாலிசிஸ் போல இல்லை. எல்ஐசி அரசாங்க நிறுவனம், உங்க பணத்துக்கு கவர்மெண்ட் உத்தரவாதம். நீங்க வேற‌ ஊர் போனாலும் இந்தியாவில் எந்த ஊர்லயும் இந்த பாண்ட் வச்சு தொகை வாங்கிக்கலாம். பாலிசி போடறவங்களுக்கு ஏதும் ஆனாலும் முழுப்பணம் குடும்பத்துக்கு கிடைச்சிரும். ஆனா உங்க கையாலயே பணம் வாங்குவீங்கன்றதுதான் உண்மை. போட்டு விடுங்க.”

வசீகரமாக சிரித்தான். வாடிக்கையாளர்களுக்கென தனிச் சிரிப்பு வைத்திருக்கிறான்!

“சரிங்க ஸார், எங்க கையெழுத்து போடணும்?”

‘ஏன்டா உனக்கு இவ்ளோ சிரிக்கத் தெரியுமா?’

‘ஏன்டி, இதேதானேடி பத்து நாளா நான் உங்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்!’

என் மனம் குமுறும்போதே, என் பக்கம் திரும்பினான்.

“சைன்  வாங்குங்க. உங்க முதல் பாலிசி. முதல் கஸ்டமர்.”

இன்னும் சில மில்லிமீட்டர் விரிந்த‌ புன்னகை. அதற்கு மேல் எனக்கு வேறு சிந்தனைகள் இல்லை. கையெழுத்து வாங்கிக் கொண்டேன். முதல் பிரீமியம் தொகையையும்.

வெளியே வந்ததும் “ஐஸ்க்ரீம் சாப்டறீங்களா?” என்றான். வேகமாகத் தலையாட்டினேன்.

“போலார் பியருக்கு போலாம்.”

“அது எங்க இருக்கு?”

“இதே ஏரியாதானே நீங்க? இங்க மெயின் ரோட்லயே இருக்கே!”

இதுவரை நான் அப்படி உயர்தர பார்லருக்கு சென்றதில்லை. இங்கிருந்து ஐந்து நிமிட நடைதான். அவன் தன்னுடன் வண்டியில் வருகிறாயா என்று கேட்காமலே சொன்னேன்.

“நீங்க வண்டில போங்க. நான் வந்துடறேன்.”

“சரி வந்துடுங்க” - மறுக்கவோ அழைக்கவோ இல்லாமல் உடனே கிளம்பி விட்டான். 

அங்கே மெனு கார்ட் பார்த்து எது வேண்டுமென்று கூட சொல்லத் தெரியவில்லை. அவன் தேர்ந்த அதே ஐஸ் கிரீம் எனக்கும் சொல்லுங்க என்றேன். எனக்குக் கொஞ்சம் கர்வமாக இருந்தது. முதல் பாலிசி வெற்றிகரமாக முடிந்தது. இப்படி மாத‌ம் பத்து பாலிசி பிடித்தால் கணிசமான கமிஷன் வரும். நம்பிக்கையோடு அவனைப் பார்த்தேன். இன்றோடு இதை தலை முழுக நினைத்த என் அறியாமையை எண்ணி சிரித்துக் கொண்டேன்.

அவன் சம்பந்தமே இல்லாமல் அருகில் இருந்த பாத்திரக் கடையைப் பார்த்தான். 

“ஐஸ்க்ரீம் சாப்டுட்டு அந்தக் கடைக்கு போலாமா?”

எனக்கு புரியவில்லை. ஆனாலும் ‘பாத்திரம் வாங்க என்னைக் கூப்பிடறான்னா அப்போ அதானே இருக்கும்? என்று விவஸ்த்தையே இல்லாமல் ஒரு கணம் மின்னல் வெட்டியது.

“போலாம், ஸார். வீட்டுக்கு ஏதாவது பாத்திரம் வாங்கணுமா?”

“இல்ல, உங்களுக்குதான்.”

“எனக்கு எதுக்கு சார்? முதல் பாலிசிக்கு ஏதும் கிஃப்டா?” - இளித்தேன். 

“ஆமா ஒரு திருவோடு. ஒவ்வொரு கஸ்டமர் கிட்டயும் பிச்சை எடுக்கணும்ல…”

என் முகம் மாறியது. கண்கள் கலங்குவதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தான்.

‘கொஞ்சம் கூட கான்ஃபிடென்ஸ் இல்லாத பேச்சு உங்களோடது. விட்டா கால்ல விழுந்துருவீங்க போல. மொதல்ல இதுனால உங்களுக்கு என்ன நன்மைனு சொல்லி அவங்களக் கெஞ்சற டோன் மாத்துங்க. அவங்களுக்கு நீங்க உதவறீங்கன்னுதான் அங்க நிரூபிக்கணும். உங்களுக்காக அவங்க ஏன் பாலிஸி போடணும்?”

“…”

“எனக்கு முதல் பாலிசி. கொஞ்சம்  பாத்து போடுங்கனு நீங்க கேக்கறதுக்கும் காலைல இருந்து சாப்பிடல காசு போடு சாமினு சொல்றதுக்கும் என்ன வித்தியாசம்?”

“…”

“முதல்ல கான்ஃபிடன்ஸ் வளர்த்துக்கங்க. பேசும்போது மென்னு முழுங்காம தைரியமா பேசுங்க. மனுஷங்களைப் பார்த்ததும் அவங்க மனசைப் படிக்கத் தெரியணும். யார் கிட்ட எப்படி பேசினா வேலையாகும்னு புரியனும். நம்ம வேலைக்கு அதான் மூலதனம். நம்ம எந்த வேலை செய்யறோம்கறதை விட எதிலும் கெத்து விடாம இருக்கணும்.”

எனக்கு கண்களை மறைத்தது. அவன் அதைக் கண்டுகொண்டான்.

“சரி முதல் பாலிசி முடிச்சாச்சு. ஃப்ரெண்ட்ஸ்க்கு எதாவது ஸ்வீட் வாங்கிட்டு போங்க. இல்ல, நான் வாங்கித் தரவா?” - சமாதானப்படுத்தும் குழைவு லேசாய் கலந்து ஒலித்தது.

“வேண்டாம்.” - நான் பேசினால் அழுது விடுவேன் என்று புரிந்தது. 

“உங்கள ட்ராப் பண்ணனுமா?”

“வேண்டாம்.” – அவ்வளவுதான். கிளம்பி விட்டான். இப்படி இரக்கமற்ற ஒருவனுக்காக நான் இந்த வெய்யிலில் அலைந்து நாய் படும் பாடு பட வேண்டுமா? 

அறைக்கு வந்து யோசித்த போது “ஸ்வீட் வாங்கித் தரவா?” என்று அவன் கேட்டதை நினைத்துக் குளிர்ந்தது. ஆனால் உடனே திருவோடு வாங்கித் தருவதாகக் கூறியது குறுக்கே வந்தது. சிலர் அப்படித்தான். கடுமையாகத்தான் அவங்களுக்கு பேச வரும். நான் எனக்குள்ளே அவனுக்காக வாதாடி என்னைத் தோற்கடித்துக் கொண்டிருந்தேன். 

ஆனால் அப்படி இல்லை என்று எனக்குத் தெரியும். அவன் பத்மா அக்காவிடம் அந்தக் கடுமை காட்டவில்லை. மீட்டிங்கில் பேசும் போது காட்டுவதில்லை. காரியத்தை பொறுத்தே கடுமையும் இனிமையும். அதைத் தவறென்றும் எண்ண‌ முடியவில்லை. எனக்கு என்னமோ அந்த மதியத்தில் அப்படி ஒரு வைராக்கியம் வந்தது. இவன் மெச்சும்படி நான் இந்த வேலையில் நின்று காட்ட வேண்டும். சூளுரைத்தேன்.

யாருமற்ற நேரம் அறையில் இருந்த கண்ணாடி முன் நின்று அவனைப் போல் பேசிப் பார்த்தேன். கண்ணாடியில் இருந்த எனக்கு கை கொடுத்து அறிமுகப்படுத்தினேன். “ஹாய், நான் நான்ஸி, இன்ஸ்யூரன்ஸ் அட்வைசர்.” - அளவாய் சிரித்தேன். கொஞ்சம் அழகாய்தான் இருந்தேன். தன்னம்பிக்கை தரும் கம்பீரத்தை முதன் முறை கண்டேன். 

எங்கள் குழுவுக்கென ஒரு வாட்ஸாப் குரூப் ஆரம்பித்திருந்தான். தினப்படி அவரவர் முன்னேற்றத்தை அதில் தெரிவிக்க வேண்டும். அந்தச் சிங்காரி அதற்குள் நான்கு பாலிசிகள் சேர்த்திருந்தாள். இன்னும் சிலரும் இரண்டு, மூன்று எனத் த‌ம் பங்களிப்பை நிகழ்த்தி இருந்தனர். அப்படிப் புதிதாக சேர்த்த பாலிசிகளைப் பற்றிய விவரங்கள் அனுப்பும்போது அவன் அந்த செய்தியை தேர்ந்து ஒரு ‘Good!’ ரிப்ளை அனுப்புவான். 

நான் அந்த ‘Good!’க்காக ஓட  ஆரம்பித்தேன். யாருக்கு அவனிடம் ‘Good!’ கிடைத்தாலும் எனக்குப் பொறாமை எழுந்தது. என்னை நான் பக்குவமானவளாக நினைத்திருந்த பிம்பம் என்னாலேயே உடைக்கப்பட்டது. மெல்ல மெல்ல என் முன்னேற்றமும் நடந்தது.

அடுத்த ஒரு மாதத்தில் பத்து பாலிசிகள் சேர்த்தேன். பேசக் கற்றுக் கொண்டேனா அல்லது மனித மனங்களைப் படிக்கக் கற்றுக் கொண்டேனா என உறுதியாகத் தெரியவில்லை. எங்கள் குழுவிலேயே பலரும் பாராட்டினர். ஆனாலும் எனக்கு அவனது ஒற்றை ‘Good!’  தரும் மகிழ்ச்சியும் பரவசமும் தனி. ஒவ்வொரு ‘Good!’ கிடைக்கும் போதும் போலார் பியர் ஐஸ்க்ரீம் உண்டேன். எந்த மகிழ்வுச் செய்தியையும், இனிய தருணத்தையும் அங்குள்ள வெவ்வேறு ஐஸ்க்ரிம்கள் உண்டு கொண்டாடினேன். 

ஒரு மாதம் முடிந்ததும் கமிஷ‌ன் தொகை கணக்கில் ஏறியிருந்தது. எனக்கது கணிசமான தொகைதான். மறுநாள் புதிதாக வாங்கிய ஆடையை அணிந்து சென்றிருந்தேன். இதுவரை நான் வாங்கியதில் கொஞ்சம் விலை கூடிய தரம். “இது நல்லா இருக்கு. இப்படி கொஞ்சம் பளிச்சுனு கலர்ல உங்களை பார்த்ததே இல்லை இதுவரை. குட்.” என்றான். 

அவன் புத்தாடையை கவனிக்கிறான் என்பதே வியப்பைத் தந்த நிலையில் அந்த குட் பதற்றத்தைத் தந்தது. யாராவது பதற்ற நிலை நீடிக்க விரும்புவார்களா? நான் அது தந்த‌ பரவசத்தை விரும்பினேன். அவனுக்குத் தெரியவும் கூடாது. கண்ணாடி வளையல்கள் அணிந்து துளி சப்தம் வராமல் காக்கும் அவஸ்தைக்கு ஒப்பாக இருந்தது இந்த இம்சை. 

“நீங்க ஓரளவு பிக்அப் பண்ணிக்கற ஆள்தான். இன்னும் கொஞ்சம் ட்ரெயின் ஆகணும். ஒருத்தர்கிட்ட பேசும்போதே அவங்க நம்மகிட்ட பாலிசி போடுவார்களா இல்ல சும்மா அலைய விட்றவங்களானு கணிக்கத் தெரியணும். தினம் ஒரு மணி நேரம் என் ஆபீஸ் வாங்க. நான் சில டிப்ஸ் தரேன். வரவங்ககிட்ட நான் பேசறதை கவனிங்க. பேசும்போது என்ன கேட்கணும், எதெல்லாம் நமக்குத் தேவையில்லாத தகவல்னு புரிஞ்சுக்கோங்க.”

அவன் தனியே வாடிக்கையாளரை சந்திக்க ஒரு சிறிய அலுவலகம் வாடகைக்கு எடுத்து வைத்திருந்தான். எனக்கு வேலையை மீறி தினமும் அவனுடன் நேரம் செலவிட முடிவது குறித்த கிளர்ச்சி எழுந்தது. அதை அவன் முன் காட்ட முடியாத தவிப்பில் திணறினேன். தினம் ஒரு மணி நேரம் என்பது சில நாட்கள் அரை மணியானது, சில நாட்கள் இரண்டு மணி நேரங்களானது. பாடமென்றால் நடத்துவதில்லை. உற்று கவனிப்பதின் மூலம் கற்பது. பிடித்த எதிர்பாலினத்தை உற்றுக் கவனிப்பதை விட சுகமான‌ கற்றல் உண்டா!

“சுவாரஸ்யமா பேசக் கத்துக்கணும். சுருக்கமாவும். சில கஸ்டமர்ஸ் அவங்க மூதாதை காலத்து விஷயத்துல‌ருந்து ஆரம்பிப்பாங்க. கட் பண்றதே தெரியாமக் கத்தரிக்கனும்.”

“உங்கள மாதிரியா?”

“என்னது?”

“இல்ல, உங்கள மாதிரி சுவாரஸ்யமா பேசணுமா?”

அவன் முகத்தில் புன்னகை என்று உறுதியாகக் கூற முடியாத அளவில் இதழ்கள் லேசாய் விரிந்து அடங்கியது. நான் ஒரு நாளைக்கு நூறு கேள்விகள் கேட்டேன். உலகைக்  கற்றுக் கொள்ளும் குழந்தையின் ஆர்வத்துடன் பணிக்கு சம்பந்தம் உள்ளது, இல்லாதது என எல்லாம் கேட்டேன். சலிக்காமல் சொன்னான். சில நேரம் பதில் தெரிந்தும் கேட்டேன். பிடித்தவருடன் பேசிக் கொண்டிருக்க காரணங்கள் உருவாக்கப் படுகின்றன.

நாங்கள்  கொஞ்சம் நட்பாகி இருந்தோம். அன்று மாலை ஏதோ பணி இருப்பதால் மதியம் அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தான். நான் சென்று காத்திருந்தேன். தாமதமாக உள்ளே வந்தவன், “பைக் பிரேக் டௌன். அங்க மெக்கானிக்கும் இல்ல. கொஞ்ச தூரம் தள்ளிட்டு வந்தேன்” என்றவாறு மூச்சு வாங்கியபடி அமர்ந்தான்.

முதல் முறையாக வியர்த்திருந்த அவனைக் கண்டேன். நெற்றி, மார்பு, கழுத்து, மூக்கு நுனி என்று வியர்வையின் துளிகள். இதுவரை அவனை ரசித்ததிலிருந்து இந்த உணர்வு வித்தியாசமாக இருந்தது. ஒரு முறை நான் மலர்ந்து மூடினேன். இதுவரை எந்த ஆணைக் கண்டும் தோன்றாத உணர்வு. இவனைக் கண்டுமே இது நாள் வரை இப்படி ஒரு பூ பூத்ததில்லை. இதுவரை முகம் சுளித்தோ, கேலி செய்தோ கடந்திருந்த காமத்தை முதன் முறையாய் உணர்ந்தேன். இத்தனைக்கும் தொடுகை இல்லை, அதைப் பற்றிய பேச்சு கூட இல்லை. எனக்கும் வியர்க்கத் தொடங்கியது. இதற்கு மேல் அவனை அன்று வேறு எண்ணத்தில் காண முடியாது என்று தோன்றிய போது கிளம்ப முடிவு செய்தேன்.

“ஏற்கனவே லேட் ஆயிருச்சு. நீங்க வேற களைச்சு இருக்கீங்க. நான் நாளைக்கு வரவா?”

“இல்ல, இருங்க. இப்போ ஒரு கஸ்டமர் வருவாங்க. நீங்க இருந்து ஃபார்ம் பில் பண்ணுங்க. நம்ம வேலைல களைப்பெல்லாம் கணக்கில்லை. வந்தது பெண். கோதுமை நிறமும், மின்னும் தோலுமாய் இருந்தாள். மிக மென்மையானவள். மெலிந்த இடையும், விரிந்த தோள்களும் கொண்டவள். எனக்கு மனம் கோணியது. என்ன அபத்தம்! ஆணைப் பெண் விஷயத்தில் அடக்கி வைக்க முடியுமா? உலகப் பெண்களை ஒருவரிடமிருந்து ஒளித்து வைக்க முடியுமா? ரசிக்கத்தான் செய்யட்டுமே என்று சமாதானம் செய்து கொண்டேன்.

அவள் பேசிச் சென்ற பின் அவனை அறியாமல் முணுமுணுத்தான். 

“இப்படி அழகான புள்ளைக வரப்பதான் நான் இப்படி வியர்த்து போய் இருக்கணுமா?”

எனக்கு அவள் மேல் வந்த பொறாமையை விட அவனை விட்டுத் தர முடியாத அவசரம். என்னை மீறின சொற்கள்: “இன்னிக்குதான் நீங்க எப்போவும் விட அழகா இருக்கீங்க.”

“எது இதுவா? கசகசன்னு…”

நனைந்த சட்டையை பிடித்துக் காட்டினான். பிடித்த வேகத்தில் சட்டை விலகி அவன் மார்பு முடிகளின் முகப்பு தெரிந்தது. அவசரமாக பார்வையை விலக்கினேன்.

“ஆமா அதனால என்ன? இதான் ஒரு மாதிரி மேன்லியா இருக்கு.”

நிமிர்ந்து என்னைப் பார்த்தான். அதீதமாகப் பேசிவிட்டேனோ! என்ன கட்டுப்பாடற்ற‌ நாக்கு! நான் இம்முறை கிளம்புவதாக சொன்ன போது மௌனமாக தலை அசைத்தான். 

என் பேச்சும் அவன் மௌனமும் பற்றி அன்று இரவு திரும்பத் திரும்ப யோசித்த போது அவனுக்கு என் பேச்சு பிடிக்கவில்லை என்பது புரிந்தது. பேச்சு இல்லை; என்னையே பிடிக்கவில்லை. பிடித்திருந்தால் நான் சொன்னதற்கு கிஞ்சித்தேனும் மகிழ்ச்சி அவன் கண்களில் தெரிந்திருக்கும். நான் என் கற்பனைகளை, விருப்பத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். விருப்பமில்லாத ஒருவனை மனதில் நிறுத்தி ரசிப்பது முறை இல்லைதான்.

அன்று இரவு முதன் முறையாக என் கனவில் அவன் வந்தான். என்னை அதே வியர்வைச் சட்டையுடன் அணைத்துக் கொண்டான். நான் கனவிலிருந்து அதிர்ந்து விழித்த பின்னும் அக்காட்சி திரும்பத் திரும்ப ஓடியது. இது வெறும் ஈர்ப்பில்லை. தீவிரமடைந்து வருகிறது.

என்னை இது வரை யாருமே அணைத்துக் கொண்டதில்லை என்ற உண்மை உறைத்தது. யாருமற்று வளரும் பிள்ளைகளுக்கு சோறும் வீடும் கிடைத்து விடுவது போல் அன்பும் அணைப்பும் கிடைப்பதில்லை. கனவென்றாலும் அந்த அணைப்பு இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கலாமே என்ற ஏக்கம் எழுந்தது. இயற்கையின் நேரடிச் சங்கதியான காமம் தாண்டி மனிதன் ஏற்படுத்திக் கொண்ட காதல் வெற்றி பெறுவது இப்படிப்பட்ட நுண்ணுணர்வுகளால்தாம். எனில் எனக்கு வந்திருப்பது காதலா! காதல் என்றே வைப்போம். வெறும் காமம் என்றால் கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருக்கிறது.

இந்த ஏக்கமும் தவிப்பும் ஒரு பக்கம் மட்டுமே இருந்தால்  அதன் வலியை நினைக்கவே பயமாக இருந்தது. நான் இதிலிருந்து இருபதாவது முறையாக விலகத் தீர்மானித்தேன்.

அடுத்த சில நாட்கள் போகவில்லை.  கொஞ்சம் அதற்கு பழகி விட்டது போல் உணர்ந்து நிம்மதியாய் உறங்கிய ஒரு நாளின் விடியலில் குழுவில் அல்லாமல் தனிச்செய்தியில் “உடம்பு ஏதும்  சரி இல்லையா?” என்று அனுப்பி இருந்தான். சரியாகி இருந்த காய்ச்சல் திரும்பப் பற்றிக் கொண்டது. “இல்ல மனசுதான், இப்போ ஓகே.” என்று பதில் அனுப்பிய பிறகு, ‘மனசுக்கு என்ன?’ என்று கேட்டால் என்ன சொல்வதென்று நாக்கைக் கடித்தேன். ஆனால் அப்படி ஒன்றும் அக்கல் கரையவில்லை. “ஓகே. டேக் கேர்’ என்று பதில் வந்தது. அதானே! ஆனால் இடையில் வந்த‌ என் வீம்பும் வைராக்கியமும் மறைந்திருந்தது. நானே லேசானது போல் உணர்ந்தேன். அன்று அவனைச் சந்தித்தபோது புன்னகை செய்தான். 

“என்ன அதுக்குள்ள வந்துடீங்க? நார்மல் ஆயாச்சா?”

‘ஆக்கிட்டீங்க’ என்ற மனக்குரலை “ஆயிருச்சு” என்று மட்டுப்படுத்தினேன்.

அன்று நான் அழகாக இருந்ததாக எனக்கே தோன்றியது. என் சுயம் இத்தனை மோசமாக வீழ்ந்து அழிவதை நான் ரசிப்பதே அதிர்ச்சியாக இருந்தது. தினம் அவனிடம் ஏதாவது சந்தேகத்தைத் தூக்கிக் கொண்டு போவேன். அக்கேள்விகள் வேலை சம்பந்தப்பட்டதில் இருந்து மாறி அரசியல், சினிமா என்று விரிந்திருந்தன. சில நேரம் குழுவில் இருந்த மற்றவரைப் பற்றியதாகவும் இருக்கும். நெருக்கம் கூடக் கூட அவனது சொற்களில் எனக்கான சமிக்ஞைகள் ஏதும் முத்து போல் அரிதாக உதிர்கிறதா என நானே தேடித் தேடிப் பொருள் புரிந்து கொள்ள முனைந்தேன். திரும்பினால் இடித்துக் கொள்ளும் நெருக்கத்தில் இருந்தோம். திரும்புதல் எதேச்சையாக அமையத்தான் காத்திருந்தோம். 

நான் அமரும் மேசையில் பேனாவால் சிறுபிள்ளை போல என் முதல் எழுத்தையும் அவன் முதல் எழுத்தையும் கிறுக்கி வைத்திருந்தேன். ஒவ்வொரு முறை அவன் அந்த மேசைக்கு வரும்போதும் பார்த்து விடுவானோ என்ற பதற்ற‌மும், பார்த்து விட மாட்டானா என்ற ஏக்கமும் ஒன்று போல் எழும். ஆனால் அவன் கையில் எப்போதும் கோப்போ, மடிக்கணினியோ இருக்கும். வருபவன் நேராக என் கிறுக்கலின் மேல்தான் கோப்பை வைப்பான். அல்லது மடிக்கணினியை. ஒரு முறை கூட அவன் பார்வை எதேச்சையாகக் கூட அதில் பட்டதில்லை. என் காதலின் மேல் படாததைப் போலவே.

சட்டென எதையும் மறக்கும் எனக்கு அவன் ஒரு வாரத்தின் எந்தெந்த நாளில் எந்தெந்த நிற சட்டை அணிந்திருந்தான் என்பது அத்துப்படி. ஒரு பக்கம் எல்லாம் மறந்து விட இவனே மூளையின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டதும் காரணமோ என்று கூடத் தோன்றியது. அவனுக்கு  இப்படி நான் அணிந்து வரும் சுடிதாரோ ஜிமிக்கியோ கண்ணாடி வளையல்களோ நினைவிருக்குமா என்ற குறுகுறுப்பு எழும்போது அவனது கண்களில் தேடுவேன். எப்போதும் போல‌ அவை சலனமற்றே காணப்படும். பச்.

நான் தனியாக ஓராளாக  இல்லாமலே போனேன், அவன் பற்றிய நினைவுகளே நானாகி இருந்தேன். நட்பின் வழியாக‌ நானறிந்த ரசனையில் நாங்கள் இரு வேறு  துருவங்கள். அவன் ரசிக்கும் பெண்களின் சாயல் ஏதும் எனக்கில்லை. அவன் விரும்பும் நடிகர்கள் என் கோப்பையில் இல்லை. அவனது அறிவின் விசாலத்தை, தர்க்க விவாதங்களை எப்போதும் அண்ணாந்து கழுத்து வலிக்க எதிரில் நின்று பார்க்கும் ரசிகையாகத்தான் இருந்தேன். இணையாக உடன் நிற்கும் எண்ணத்திற்கு இவையே தடையாக‌ மாறின. 

என் முன் அமர்ந்து தட்டச்சும் அவன் விரல்கள் சுத்தமாக‌ நகங்கள் இன்றி இருப்பதை ரசித்துக் கொண்டே இருப்பேன். அந்தப் புறங்கை பகுதி தீரும் இடம் தொட்டு மெல்ல ஒரு வனத்தின் எல்லை போல் மெல்லிசாக‌த் தொடங்கும் கை ரோமங்கள் அடர்ந்து முழங்கை வரை பரவி இருக்கும். என் விரலால் என்றேனும் அந்த ரோமங்களை வருடித் தரும் ஆசை ஒவ்வொரு முறையும் எழும். அந்த கரத்தைப் பற்றிக் கொண்டால் அதன் அழுத்தமும், திண்மையும் எப்படி இருக்கும் என‌ மானசீகமாகக் கற்பனை செய்வேன். ஏதேனும் சாக்கிட்டு ஒரு கை குலுக்கல் நடத்துவது அப்படி ஒன்றும் பெரிய காரியம் இல்லைதான். ஆனாலும் செய்யவில்லை. தானாக அவன் கை நீளும் நாளுக்காகக் காத்திருந்தேன். 

குழுவாக இல்லாமல் அவனுடன் தனித்து ஒரு புகைப்படமும் எடுத்துக் கொள்ளவில்லை. அவனருகே நின்று அவன் உயரத்திற்கும் எனக்குமான வித்தியாசத்தை ஒருமுறையாவது அளந்து விட  விரும்பியே அந்தத் தோள்களை பார்ப்பேன். எல்லாமே சொன்னதும் கேட்டதும்  நடந்து விடக் கூடிய சமாச்சாரங்கள்தாம். ஆனால் நான் கேட்கவில்லை.

அவனுக்குத்  தோன்றாத ஒன்றை அழுத்தம் தந்து பெற எப்போதும் விரும்பவில்லை. முதலில் ஆண் தான் விருப்பத்தை கூற வேண்டும் என்ற கட்டுப்பெட்டித்தனம் இல்லை. அப்படிக் காதலாக நினைக்கத் தோன்றாத ஒருவனிடம் அதை வெளிப்படுத்துவது எத்தனை சங்கடத்தைத் தரும் என்பதுதான் என் தயக்கம். உண்மையில் அவனைத் தவிர்க்கவும் நானே காரணங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருந்தேன் என்று பட்டது.

அவனிடம் என் விருப்பம் சொல்லும் எண்ணம் ஒரு கட்டத்தில் முற்றாய் அழிந்திருந்தது. என் அன்பைப் பணத்திற்காகவோ, உதவிக்காகவோ வந்த காரியக் காதலாக நினைத்து விடுவானோ என்ற பயமும் இருந்தது. இது நட்பாகத் தொடரட்டும். என்ன குறைந்து விடப் போகிறது! இது காதல் இல்லை என்று நானே நம்ப விரும்பினேன். எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்திற்கு அஞ்சிய மனது, ஏமாற்றத்தையே எதிர்பார்ப்பாக்கிக் கொள்கிறது.

ஆனால் என் தீர்மானத்தை என் பள்ளி நண்பன் ஒருவன் குலைத்தான். பாலிசி பற்றி பேச அவனைச் சந்தித்தேன். பேசிக் கொண்டிருக்கும் போது “உன்னை அப்போல இருந்தே பிடிக்கும். அப்போ சொல்லல. இப்போ சொல்றேன். யோசிச்சு பாரேன்.” என்றான்.

எனக்கு அழுகை வந்தது. அதில் என்ன தவறு? இதற்கு முன்பு சிலர் இப்படி ப்ரபோஸ் செய்த போது வராத அழுகையும் ஆற்றாமையும் வரக் காரணம் இவனல்ல; அவன்தான். அவன்  இடத்தை இன்னொருவன் கேட்கிறான் என்பதை என்னால் தாங்க இயலவில்லை. 

“இல்லடா. அது வேணாம்.”

“வேற யாரையாவது லவ் பண்றிய?”

“தெரியல” - விரக்தியாய் சொன்னேன். 

அன்று அலுவலகத்தில் கண்ணனைப்  பார்த்ததும் என் கண்கள் நிறைந்தன. அவனுக்கு துளியாவது என் மீது ஆர்வம் உள்ளதா என்பதை அன்று அறிந்து விட நினைத்தேன்.

“இன்னிக்கு என் ஸ்கூல் பிரண்ட் கிட்ட பேசினேன். நிச்சயம் ஒரு யூலிப் போடுவான். ஐடி எம்பிளாயி. பெரிய பாலிசியா இருக்கும்.”

“குட். ஃபாலோ பண்ணிக்கோங்க.”

“ஆனா ஒரு சிக்கல். அவன் திடீர்னு ப்ரபோஸ் பண்ணிட்டான். அதான் மேற்கொண்டு பேசணுமான்னு இருக்கு…”

“ஓ! நல்ல விஷயம்தானே! நல்ல வேலைன்னும் சொல்றீங்க. அவர் ஃபோட்டோ இருக்கா?”

“…”

“எல்லாம் நல்லா இருந்தா ஓகே சொல்லலாம்ல! அடுத்த டைம் நான் வரேன் கூட.”

விட்டால் இவன் மண்டபம் புக் செய்து கேட்டரிங் அட்வான்ஸ் கொடுப்பான். நான் தான் இவனைக் கடக்கும் பெண்களிடம் கூட பொஸஸிவ்  ஆகிறேன். இவனுக்கு நான் யாரோ. இவனுக்கு இவ்வழியில் இன்னொரு பாலிசி கிடைத்தால் போதும். வெறுப்பாக இருந்தது.

“இல்ல. எனக்கு விருப்பம் இல்ல.”

“ஏன்?”

“ஏனோ விருப்பம் இல்லை. விடுங்க.”

“ஓகே.”

இதில் இவ்வளவுதான் அவனது எதிர்வினை.  திரும்பக் கூட்டுக்குள் சுருங்கினேன். 

உன் ரசனையும் 
என் ரசனையும் 
எதிரானவை என்பது 
உன்னை நானும் 
என்னை நீயும் 
ரசிப்பதிலிருந்தே தெரிகிறது!

என்று ஒரு நாள் வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்தேன். 

“என்ன இது?”

“சும்மா ஒரு முயற்சி. நல்லாருக்கா?”

“இதுக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. இந்த மாச டார்கெட் இன்னும் முடியல.”

“ஓகே ஸார்.”

அதை எழுதியதற்கு பென்ச் மேல் நிற்கச் சொல்லாமல் விட்டது வரை புண்ணியம். 

கொஞ்சம் மட்டுப்படுவதும் பொங்கி எழுவதுமாக என் உணர்வுகள் ஒரு நெளிவில் ஓடிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் அவன் திருமணப் பத்திரிகையை நீட்டினான். 

“கண்டிப்பா வந்துருங்க.”

இத்தனை நாளாக பார்த்து மாய்ந்து ரசித்த கரத்தை நானாகப் பற்றிக் குலுக்கினேன் இதுவரை அறிந்திராத அத்தொடல் என்னை பல நூறு துன்ப பிம்பங்களாக உடைத்தது. துயரம் காட்டாமல் சிரிப்பதென்பது வெறும் நடிப்பில்லை. நடிப்பென்பது வேறொன்றாய் மாறுவது. இச்சிரிப்பு நிஜமான‌ என்னை மறைப்பது. நடிப்பை விட சிரமமாக இருந்தது. இனி ஒரு போதும் சொல்லவியலா லவ் யூ என் நாவில் ஒரு துளி அமிலமாக மிடறி தொண்டையில் இறங்கிக் கொண்டது. 

“ரொம்ப சந்தோஷம்.”

ஆனால் அவனுக்கான என் மகிழ்ச்சி உண்மைதான். அதில் எந்தப் போலித்தனமும் இல்லை. என்னுடன் இல்லாவிடில் என்ன! என் மகிழ்ச்சியில்  அவன் நலமும் அடங்கும். 

“தேங்க்ஸ்.”

திருமணத்தன்று எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் போக முடியவில்லை. அது இயற்கையாகவே அப்படி அமைந்தது. அதில் நிம்மதி வந்தது. அதன் பின்னும் நான் அவ்வப்போது அவன்  அலுவலகம் சென்றேன். மதியங்களில் அவன் இப்போதெல்லாம் வீட்டிற்கு சென்று விடுகிறான். அவன் வரும் வரையில் வாடிக்கையாளர்களை நான்தான் சந்திக்கிறேன். அப்படிச் சேரும் பாலிசிகளை என்னுடைய‌ கணக்கிலேயே வைத்தான். என் வளர்ச்சியில் அவனது பங்கு மறுக்க முடியாதது. வேறு அறை எடுத்து விட்டேன்.

அதன் பிறகு அவனுடன் அத்தனை இணக்கமாகப் பேச முடியவில்லை. முன்பு மட்டும் என்ன இணக்கமாக‌ப் பேசி விட்டாய்? என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் இல்லை.

எங்கள் நட்பு தொடர்ந்தது. நானாக எண்ணிக் கொண்ட கிறுக்குத்தனங்களுக்கு அவன் எப்படிப் பொறுப்பாவான்? நான் இச்சூழலை ஏற்றுக் கொள்ள என்னை மெல்ல மெல்லப் பழக்கி வந்தேன். அலுவலகம் செல்லும்போதெல்லாம் அந்த மேசையில் அமர்ந்து நான் கிறுக்கி இருந்த எழுத்துக்களை வருடிக் கொள்வேன். அவை என் ப்ரியத்தின் பிள்ளைகள்.

ஒரு நாள் அந்த எழுத்துக்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த போது அவன் வந்தான். செய்ய வேண்டிய பணிகளைச் சொல்லி விட்டு எழுந்தவன், நின்று கேட்டான்:

“ஒன்னு கேட்கவா? ஒரு க்யூரியாசிட்டி.”

“கேளுங்க.”

“கல்யாணத்துக்கு முன் நான் ப்ரபோஸ் பண்ணி இருந்தா ஓகே சொல்லி இருப்பீங்களா?”

என் காதுகளை நம்ப முடியவில்லை – “என்ன? ஏன் திடீர்னு?”

“இல்ல, எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது. உங்களைக் கட்டிக்க நினைச்சேன். ஆனா உங்ககிட்ட அது மாதிரி ஒரு சின்ன சிக்னல் கூட தெரியல. தினம் உங்களை மட்டும் ஆஃபீஸ் வரச் சொன்னதெல்லாம் வச்சு என் மனசைப் புரிஞ்சுப்பீங்கனு நினைச்சேன். ஆனா நீங்க எதுமே சொல்லல. அதனால நானும்  தயங்கிக் கேட்கல. இருந்தாலும் அது உறுத்திட்டே இருந்தது.”

‘சேச்சே… அப்படிலாம் எண்ணம் இல்ல ஸார்’ மூளை உத்தரவிட்ட சொற்களைப் பேச‌ வந்தவளுக்கு அவன் கண்களின் தவிப்பு புரிந்தது.  இவ்வளவு நாளும் நான் கொண்டிருந்த அதே தவிப்பு! 'கட்டிக்க நினைச்சேன்' என்ற சொற்களைக் கேட்டதும் கனவில் அவன் கட்டிக் கொண்ட காட்சி நினைவில் சிலிர்த்தது. சொல்ல உத்தேசித்ததை மறுத்து, முக மலர்ச்சி அடக்கிச் சொன்னேன்:

“ஆமாம் எனக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சிருந்தது.”

அவன்  தவிப்பு குறைந்து நிம்மதி பரவியது. எனக்கும். 

நம் ப்ரியத்தின் பேராறு கரை புரண்டு ஒடுகிறது. மறுகரையில் நீ!

“சொல்லி இருக்கலாம்ல?”

“ஆமா, நீங்கதான் மனுஷங்க மனசைப் படிக்கறதுல மன்னனாச்சே! படிச்சுருப்பீங்கனு நினைச்சேன்.” - சூழலை இலகுவாக்க முயன்றேன்.

“…”

“சரி, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”

“ம்.”

“நானும் தனியா ஆஃபீஸ் போட்டுக்கலாம்னு முடிவு பண்ணி ஒரு வாரமாச்சு. சொல்ல நினைச்சுட்டே இருந்தேன். இன்னிக்குதான் ஃப்ரியா இருக்கீங்க. அதான் சொல்றேன்.”

“ஓ!”

“புது ஆஃபீஸ் வேலைகளைக் கவனிக்கணும். நாளைல இருந்து இங்க வரது கஷ்டம்.”

வெளியே வந்ததும் போலார் பியர் ஐஸ்க்ரீம் கடைக்குப்  போனேன். மனமும், உடலும் பூரித்திருந்தது. நாங்கள் அன்று அமர்ந்திருந்த இருக்கை இன்று காலியாக இருந்தது.

அங்கு போய் அமர்ந்தேன். அதே ஃப்ளேவர் ஆர்டர் செய்தேன். ரசித்து ருசித்து உண்டேன்.

*** 

உள்ளங்கை [சிறுகதை]

14 January 2025 at 02:10
ஷங்கர் அந்த ஜோடி கம்மல்களை தொட்டுத் தொட்டுப் பார்த்தான். வட்ட வடிவில் சின்னச்  சின்ன வேலைப்பாடுகளுடன் பழமைத்தன்மை கொண்ட ஆன்ட்டிக் என்ற வகையைச் சேர்ந்தது (இப்போதுதான் நம் சமூகத்தில் திடுக் என பழையவனவற்றுக்கு ஒரு மவுசு வந்து விட்டதே!) அதன் கீழ் ஒரு சிறிய‌ தொங்கல். வட்டத்தின் நடுவிலும், தொங்கும் துளி தங்கத்தின் முடிவிலும் ஒரு சன்னச் சிவப்புக் கல்.

‘ஸ்ரீக்குட்டிக்கு  பிடிக்குமா?’ என்ற யோசனையுடன் அந்தக் காதணியை ஸ்ரீ அணிந்து நிற்பது போல  மனதில் ஒரு சித்திரத்தை வரைந்தான். ஆணுக்குப் பெண்ணின் ஆபரண ஆடைத் தேர்வென்பது மானசீகமாகவோ, நேரிட்டோ அவளுக்கு அணிவித்து தேர்வது. வெறும்  ஆபரணத்தின் அழகென்பது காகிதப்பூதான். தேர்ந்தெடுக்கத்  திணறுவான்.


கடைக்காரப் பெண்ணிடம் கேட்டான். “இப்போ ட்ரெண்ட்ல‌ உள்ள  பேஷன்தானா இது?”

“ஆமா சார். இப்போல்லாம் ஆன்ட்டிக் ஜூவெல்லரிஸ்தான் விரும்பிப்  போடறாங்க. உங்க பொண்ணுக்கா சார்? என்ன வயசு?”

“மருமகளுக்கு” - சிறுபுன்னகை இயல்பாக வந்தது.

“ஓ! நீங்களே யங்கா இருக்கீங்க? உங்களுக்கு மருமகளா?”

சற்றே அசட்டுச் சிரிப்பு – “மருமகள்னா அக்கா புள்ளை. பெரிய மனுஷி ஆயிட்டா.”

“ஓ!”

அவளுக்கு அதற்கு மேல் உரையாடலைக் கொண்டு செல்ல வழி இல்லை. ஆர்வமும்.

“இது பார்த்ததுமே பிடிச்சுது. இதுவே இருக்கட்டும். எவ்ளோ வரும்னு சொல்லுங்க.”

‘இருபது கிராம் இருக்கும். இரண்டரை பவுன் வருது. பொதுவாவே  ஆன்ட்டிக் டிசைன்ஸ் சேதாரம் கொஞ்சம் அதிகம். வெயிட் பண்ணுங்க. கால்குலேட் பண்ணி சொல்றேன்.”

“ரொம்பக் கனமா இருக்குமா? புள்ளைக்கு காது வலிக்கப் போகுது.” - நெற்றிச் சுருக்கம்.

“இல்ல சார். சிரமமா இருந்தா ஜிமிக்கி கழட்டி தோடு மட்டும் போட்டுக்கலாம். எப்படியும் டெய்லி யூஸ்க்கு போட மாட்டாங்க. விசேஷத்துக்குதான். அது கஷ்டமா இருக்காது.”

கணக்குப் போட்டு “ஒரு லட்சத்து எண்பதாயிரம் வருதுங்க, சேதாரத்தோட சேர்த்து…”

“அவ்வளவா?”

“ஆமா. வேஸ்டேஜ் டுவெண்ட்டி த்ரீ பெர்ஸன்ட் வருது. இருங்க டிஸ்கவுண்ட் இருக்கும்.”

பேரம் பேசி, தள்ளுபடி எல்லாம் போக ஒரு லட்சத்து எழுபதாயிரத்தைக் கொடுத்து விட்டு நகையை வாங்கிக் கொண்டு இறங்கினான். நல்ல ஜவுளிக்கடையாகப் பார்த்து வண்டியை நிறுத்தி பதினைந்தாயிரத்திற்கு ஒரு பட்டுப் புடவை வாங்கினான். 

வீட்டுப் படி ஏறும்போதே வியர்த்தது. மனம் சஞ்சலத்துடன் பல கணக்குகள் போட்டுக் கொண்டிருந்தது. பாவனா சமையலறையில் இருந்து நாலே எட்டில் வாசலுக்கு வந்தாள்.

“என்னாச்சு என்ன வாங்கினீங்க? சின்னக் கம்மல்தானே?”

“ஆமா.”

வேகமாக ஷங்கர் கையில் இருந்த பையைக் கிட்டத்தட்ட பிடுங்கினாள். பிரித்தாள்.

“ஓ! ஆன்ட்டிக் டிசைன். எனக்கு  ஒரு புடவை வாங்கனும்  கூட வாங்கன்னா அதை பத்தி ஒன்னும் தெரியாது நீ போன்னு சொல்லுவீங்க. இப்போ அக்கா பொண்ணுக்குன்னதும் இவ்ளோ அழகா கம்மலும்,  புடவையும் செலக்ட் பண்ணத் தெரியுதா?”

“உன்னத்தான் கூப்பிட்டேன். நீ வர மாட்டேன்னுட்ட. நீ  செலக்ட் பண்ண கூட  இல்லைனு   எனக்கு எது பிடிச்சுதோ அதை வாங்கிட்டு வந்தேன். நீ பேசறது உனக்கே நியாயமா?”

“சரி சரி எவ்ளோ ஆச்சு? ஒரு லட்சம் பட்ஜெட்குள்ளதானே வாங்கினீங்க?”

“இல்ல, ஒன்னு எழுபதாயிருச்சு. புடவை எல்லாம் சேர்த்து ரெண்டுகிட்ட வந்துருச்சு.”

“என்ன பேசறீங்க? அஞ்சாயிரம், பத்தாயிரம் அதிகம்னா கூடப்  பரவால்ல. அப்படியே ரெண்டு மடங்கு. நம்ம நெலமைக்கு இப்போ அது சரியான்னு யோசிச்சீங்களா? அடுத்த மாசம் கவினுக்கு பீஸ் கட்டணும் நினைப்பிருக்குல்ல? இத்தனைக்கும் ஒங்கக்கா நம்ம கூட பேச்சு வார்த்தையும் இல்ல. உங்களுக்கே இது ஓவராத் தெரியல?”

“கோபப்படாம சொல்றதைக் கேளு. அக்கா பேசறாளோ இல்லையோ, ஸ்ரீ பாப்பாவுக்கு நான் தாய்மாமா. எங்க குடும்பத்தில் மாமா வகையா செயின் போடறதுதான் வழக்கம். இப்போ அது முடியாது. கம்மலாச்சும் பார்வைக்கு தெரியற மாதிரி போடனும்ல?”

‘என்ன அக்கறை வேர்த்து வடியுது உங்களுக்கு? மொத  ஒங்களுக்கு அழைப்பு இருக்கா? அதை மீறி நான் ஒரு லட்சத்துக்கு சம்மதிச்சதே உங்க மனசு வாடக் கூடாதுன்னுதான். அது உங்க அக்கா மேல நீங்க வச்சுருக்கற பாசத்துக்கான மரியாதை. ஆனா அதுக்காக என்னை இளிச்சவாயா நினைச்சா பொறுக்க மாட்டேன்.  உங்க அக்கா உங்களை அவமானப்படுத்தினதெல்லாம் மறந்துருச்சா? என்னமோ பண்ணுங்க, அஞ்சாம் தேதி கவினுக்கு ஃபீஸ் ஒரு லட்சத்து இருபதாயிரம் எடுத்து வைக்கணும். அதுக்கு வாயக் கட்டி சீட்டு சேர்த்த காசைத்தான்  இப்போ எடுத்துருக்கீங்கன்னு நல்லாத் தெரியும்.”

“ஏதாச்சும் பண்றேன்.”

“என்ன பண்ணுவீங்க? கடன் வாங்குவீங்க. அதானே? இப்படியே அழிங்க. கடைசில நானும் என் பையனும் நடுரோட்லதான் நிக்கணும்.”

“எப்படியாச்சும் வழி பிறக்கும்.”

“நல்லாப் பொறக்கும். நீயெல்லாம் பிச்சை எடுத்தாத்தான் திருந்துவ. என்ன எழவு ஒங்கூட சேர்ந்து நானும்ல திருவோடு தூக்கணும்…”

கத்தி விட்டு உள்ளே சென்று விட்டாள். ஷங்கர் பெருமூச்சு விட்டான்.  பாவனா அவ்வளவு கொடூர‌ம் இல்லை. கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலும் மனமும் தளர்ந்து மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது. அவளது ஆதங்கமும் நியாயம்தான். குடும்பச்  சூழல் அப்படித்தான் இருக்கிறது. இந்த நாற்பதுகளிலும் ஷங்கருக்கு இன்னும் சொற்ப சம்பளமே.  மாதக்கடைசியில் இழுபறிதான். பாவனா கட்டுசெட்டாகக் குடும்பம் நடத்துவதால் மோசமாகாமல் தப்பிக்கிறான். பைக் மாதத் தவணை, பெர்சனல் லோன் வட்டி,  வீட்டு வாடகை என்று சம்பளத்தின் பெரும்பங்கு முதல் வாரமே தீர்ந்துவிடும். மகனது பள்ளி ஆண்டு கட்டணத்திற்காக மாதச்  சீட்டு சேர்த்து எடுத்து வைத்திருந்த பணம்தான் நகைக்கு உபயோகிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் ஸ்ரீ பாப்பா  பெரியவளாகி விட்டாள் என்று கேட்டது முதல் ஷங்கர் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரே வரி, “நாளைக்கு எம்புள்ளைக்கு ஒன்னுனா நீதானேடா தாய்மாமன். விட்டுருவியா என்ன?” என்ற தனாக்காவின் குரல்தான்.

“இப்ப  இதான் முடியும்க்கா” - முணுமுணுத்துக் கொண்டான்.

ஆற்றாமையால் புலம்பிக் கொண்டே திரும்ப வெளியே வந்த பாவனா, “ஒங்கக்கா ஒனக்கு பண்ணினதெல்லாம் மறந்துருச்சா, ஒவ்வொன்னா  யோசிச்சுப் பாரு. அப்பவாது புத்தில உரைக்குதான்னு  பாக்கறேன்” என்று இரைந்து விட்டு திரும்ப உள்ளே சென்று விட்டாள். அவளால் சமாதானமாக முடியவில்லை. அப்படி சமாதானப்படுத்திக்கொள்ள முடியாத ஆங்கார சமயங்களில்தான் அவள் ஷங்கரை ஒருமையில் பேசுவாள்.

‘அக்கா பண்ணினதெல்லாம் மறந்துருச்சா?’ என்ற கேள்விக்கு அவளிடம் பதில் சொல்ல முடியாது. உண்மையில் அக்கா பண்ணின எதையும் மறக்கவில்லை என்பதால்தான் இத்தனை ஊசலாட்டமும். கண்களை மூடிக் கொண்டான் ஷங்கர்.

*

“ரோட்டு பைப்ல இருந்து நாலு குடம் தண்ணி மோண்டு ட்ரம்ல ஊத்தறக்கு ஒன்னால முடியாதா? எட்டு வயசு பயலுக்கு பிளாஸ்டிக் கொடத்தக்  கூட தூக்க தெம்பில்லாமலா இருக்கு? வேளா வேளைக்கு கொட்டிக்கறதெல்லாம் எங்க போகுது? புதுக்கொடம்…”

ஷங்கர் அரைஞாண் கயிற்றில் செருகிப் பிடிப்பு கொடுத்திருந்த டிரௌசரை ஒரு கையால் பிடித்திருந்தான்.

“ட்ரவுசர் கழ‌ண்டு விழப்  பாத்துச்சு சித்தி. அதான் டக்குனு பிடிய  விட்டுட்டேன்.”

“அது கழ‌ண்டா உன் மூத்திரக்  குண்டிய யார்ரா பாக்கப்  போறா?”

மூத்திரக் குண்டி என்ற வார்த்தையை கேட்டதும் தெருவில் சென்று கொண்டிருந்த சிறுமி சிரித்தபடி கடந்தாள். அவள் ஷங்கரின் வகுப்புதான். ஷங்கருக்கு அவமானத்தில் முகம் சுருங்கியது. சித்தியை எதிர்த்து பேச முடியாது. நாள் முழுக்க சொற்களால் குதறுவாள். கண்கள் கலங்கி நிற்கும்போதே சித்தி ப‌ல் கடித்தபடி  ஷங்கரை அடிக்க நெருங்கினாள்.

விழப் போகும் அடிக்கு மனம்  தயாராகி உடலைக் குறுக்கும்போதே முதுகில் பளாரென அறை விழுந்தது. சித்தி நின்று விட்டாள். ஷங்கர் திரும்பிப் பார்த்தான். தனாக்கா!

“ஒரு குடத்தை ஒழுங்கா தூக்க முடியாதா உனக்கு? இனி இப்படிப் பண்ணினா சூடு வச்சுருவேன். போ. ஸ்கூலுக்கு நேரமாச்சு. ஓடு.” ஷங்கருக்கு முட்டி நின்ற கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. தனா இன்னொரு குடத்தோடு குழாயடிக்குச் சென்றாள்.

அன்று மாலை தனா அவனைப் பூங்காவுக்கு அழைத்துச் சென்றாள். முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த ஷங்கர் கேட்டான், “சித்திக்குதான் என்னைப் பிடிக்காது, அடிக்குதுன்னா ஒனக்கும் என்னை பிடிக்க மாட்டேங்குது. அடிச்சுட்டேதானே இருக்க?”

“எனக்கு ஒன்னப்  பிடிக்கும், அதனாலதான் அடிச்சேன்.”

“பிடிச்சா யாரும் அடிப்பாங்களா?”

“அது ஒனக்கு இப்போப் புரியாது” - தனாக்கா அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

அக்காவின் கைகள் எப்போதும் தண்ணென்று குளிர்மையுடனே இருக்கும். அவளது உடலின் தன்மையே அந்தக் குளிர்ச்சிதானோ அல்லது அடுப்படி வேலை ஈரத்தில் ஏற்படும் குளுமையா என்று சந்தேகம் எழும். எப்போதும் அந்தக் குளிர்ந்த கரங்கள் அவனைப் பற்றிக் கொள்ளும்போது பாதுகாப்பாய் உணர்வான். அந்த உள்ளங்கைகளில் கன்னத்தை வைத்து அழுத்திக் கொள்வது அவனுக்கு உணர்வுபூர்வமான ஒன்று. 

அந்த வீட்டில் அவனது பாதுகாப்புக்கு நீளும் ஒரே கரம் அவளுடையதுதான்.  மொட்டை மாடி கைப்பிடிச் சுவர் மேல் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் தவறி விழப் போன போது  பாய்ந்து பிடித்த கரத்தின் இறுக்கம். தெருவில் விளையாடும்போது கவனிக்காமல் பந்தைப் பிடிக்க லாரியின் குறுக்கே புகுந்தவனை மின்னல் வேகத்தில் இழுத்து அணைத்துக் கொண்ட கரத்தின் பதற்றம். குளிப்பாட்ட, சோறூட்ட, தலை சீவ நீளும் கரத்தின் மென்மை. இரவுகளில் உறங்க தனாவின் கை அவன் மேல் கிடக்க வேண்டும். அந்த மெல்லிய கையின் அணைப்பு உலகின் அத்தனை பேய், பிசாசுகளிடம் இருந்தும், துர்கனாக்களில் இருந்தும் காப்பதாக நம்பினான்.  அதே கரம் பல முறை முரட்டுத்தனமாய் அடித்திருக்கிறது. 

வீட்டில் அப்பாவோ சித்தியோ ஷங்கரின் சேட்டைகளுக்கு  உதிர்க்கும் அர்ச்சனைகள் அடியாக  மாறப்போகும் கணம் அவர்களை முந்திக் கொண்டு  அக்காவிடமிருந்துதான் ஷங்கருக்கு அடி  விழும். ஒரு முறை கூட தனாக்கா அவனுக்குப் பரிந்து பேசியதில்லை. 

சில நேரங்களில் அது ஷங்கரின் தவறாக இருக்காது. தம்பி முகேஷின் குறும்பாகக் கூட இருக்கும். சித்தி தன் மகனைத் திட்டுவதற்கு பதில் அதற்கும் ஷங்கரையே திட்டுவாள். 

“அவன் சின்னக் கொழந்த. அவனுக்கு என்ன தெரியும். நீதான் அவனைக் கெடுக்கற…”

ஷங்கர் ஏக்கமாக தனாக்காவைப் பார்ப்பான். அவன் மேல தப்பில்லை என்று ஒரு முறையாவது அவள் சொல்லி விட மாட்டாளா என்று வெம்புவான். ஆனால் தனா கண்டு கொள்ளாமல் வேறு ஏதேனும் வேலையை ஏவி அவனை அங்கிருந்து அகற்றி விடுவாள். 

தனாக்காவுக்கும் சித்தியிடம் திட்டு விழும்.

“இவ்ளோ பாத்திரம் கழுவாமக் கெடக்கு. வயசுப்புள்ள இருக்கற வீடா இது?”

“செய்யறேன் சித்தி” என்பாள். அவ்வளவு நேரம் துணிகளை துவைத்துக் காயப் போட்டு வந்திருப்பாள். ‘இவ்ளோ வேலை செஞ்சுட்டு இப்போதான் வந்தேன்’ என்று கூடக் கூற மாட்டாள்.  தனக்காகவோ, அவளுக்காகவோ நியாயங்களை எடுத்துக் பேசாத தனாக்காவைப் புரிந்து கொள்ள எப்போதும் ஷங்கருக்கு குழப்பமாகவே இருக்கும்.

அந்த வீட்டில் அவனுக்கு அம்மா மட்டுமல்ல, அவனைப் பொறுத்தவரை அப்பாவும் சித்தியும் கூடக் கிடையாது. அவனுக்கு இருந்த ஒரே உறவு தனாக்காதான். அவளுக்கு இருபது வயதில் திருமணம் ஆனது. ஷங்கருக்கு அப்போது பத்து வயது இருக்கும். தனா சென்ற பின் ஷங்கரின் உலகம் வெறுமையானது. ஒரு மாதம் கழித்து தனா வந்த‌ போது ஷங்கர் தரையில் உருண்டு அழுதான் – “என்னையும்  ஒங்கூடக் கூட்டிட்டு போ…”

“அப்படிலாம் கூட்டிட்டு போக முடியாதுடா. அடம்  பிடிக்காம இரு.”

“நானும் கூட வருவேன்.”

“அது நம்ம வீடில்லடா ஷங்கர்.”

“அது நீ இருக்கற வீடுதானே. அப்போ ஒன் வீடுதானே?”

“ஆமா எங்க வீடு. ஆனா நம்ம வீடில்லை.”

அச்சொல்லின் ஆழம் புரியாவிட்டாலும் ஷங்கர் ஒரு நொடி திகைத்துப் பார்த்தான்.

மாமா அக்காவை அதட்டினார் – “சின்ன பையன்கிட்ட என்ன பேசற? நீ இங்க வாடா.”

தேம்பலுடன் மாமாவிடம் நின்றவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னார்.

“அடுத்த மாசம் உனக்கு பரீட்சை லீவு வருதில்ல. அப்போ ரெண்டு மாசம் அங்க வந்துரு. இப்போ எக்ஸாம்லாம் எழுதாம விட முடியுமா? டீச்சர் திட்டுவாங்கல்ல.”

ஷங்கர் ஒரு மாதத்தைக் கடந்ததும் கோடையில் வரப் போகும் வசந்தகாலத்துக்காக காத்திருக்க முடிவு செய்தான். கிளம்பும் முன் யாரும் பார்க்காத போது அக்கா ஷங்கர் கையில் ஐம்பது ரூபாயைத் திணித்தாள். 

“எல்லாத்துக்கும் சித்திய எதிர்பாக்காத. ஏதாச்சும் வேணும்னா இதுல வாங்கிக்கோ.”

கோபமாக இருந்த ஷங்கர் வாங்க மறுத்தான். கை பற்றி உள்ளங்கையில் காசைத் திணித்தாள். மென்மையாக அதே சமயம் உறுதியான அந்த பிடிப்பை அவனால் உதற முடியவில்லை. அக்காவின் கைகளுக்குள் இருக்கும் மாயம் அவனைக் கட்டி போட்டது. 

கோடை விடுமுறைக்கு அக்காள் வீட்டுக்கு பை நிறைய துணிகளுடன் வந்திறங்கினான் ஷங்கர். மாமா சென்று கூட்டி வந்தார். அக்கா சிரித்தபடி வரவேற்றாள். “வாடா ஷங்கரு.”

ஷங்கர் நீண்ட நாட்களுக்கு பின் தனத்தைக் கண்டதும் கண்களில் நீர் மல்கக்  கட்டிக் கொண்டான். அக்கா அணைத்துக் கொண்டாள். அவளது குளிர்ந்த கைகளுக்குள் நுழைந்ததும் நரகத்தில் இருந்து சொர்க்கத்துக்குள் பெயர்ந்து விட்டது போல் அப்படி ஒரு மலர்ச்சி கிடைத்தது. அவனுக்கு பிடித்ததாய்ச் சமைத்துப் போட்டாள் தனாக்கா. 

“உன் தம்பி வந்ததும் ரெண்டு பொரியல், தினம் அப்பளம்னு சமையல் நடக்குது போல” - அக்காவின் மாமியார் சிரித்தபடி ரெண்டு பொரியல் சேர்த்து பிசைந்து விழுங்கினாள். 

முதல் சோறு முடித்து மறுசோறுக்குக் காத்திருந்தவனைக் கவனிக்காமல் திரும்பி “கை காயுது பாரு. சீக்கிரம் போய்  கழுவு” என்றபடி சோற்றை எடுத்துச் சென்றாள் அக்கா.

“அவனுக்கு கொஞ்சம் சோறு வை.”

“இல்லத்த… அவன் அவ்ளோதான் சாப்பிடுவான். தட்டுல போட்டு வீணாக்கிட்டா கஷ்டம். திரும்ப பசிச்சாக்  கேட்பான்.” ஷங்கருக்குக் கண்கள் மளுக்கென தளும்பின. 

மாமியாருக்கு இருக்கும் கரிசனம் கூட தனாக்காவுக்கு இல்லை. சித்தியே தேவலாம். அவளது திட்டுக்கள் மரத்துப் போய் விட்டன. பாரம் சுமந்து சுமந்து புண் ஆறி சுரணையற்றுப் போன எருதின் கழுத்துத் தழும்பில் திரும்ப பாரம் ஏற்றுவதை போல மாறி விட்டன சித்தியின் கடும் சொற்கள். வலிப்பதில்லை. இது தாங்கமுடியாத ரணம்.

வயதை மீறி அவமானப்பட்டதாய் உணர்ந்தான் ஷங்கர். மாமா அன்று மாலை வரும் போது அவனுக்குத் தின்பண்டங்கள் வாங்கி வந்தார். தீனியைப் பார்த்ததும் அவமானக் கீறலின் எரிச்சல் குறைந்து ஆசையாய் வாங்கிக் கொண்டான். அக்காவின் மாமியார் எட்டிப் பார்த்து, “இத்துனூன்டு பையனுக்கு எதுக்கு இவ்ளோ? காசைக் கரியாக்கற நீ” என்றாள். மாமா ஜாடையாக தன் அம்மாவிடம் அமைதியாக இரு என கண் காட்டியதை ஷங்கர் பொருட்படுத்தவில்லை. அவன் கவனம் முழுக்க தீனியில்தான் இருந்தது. 

பை நிறைய இருந்தவற்றை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்த போதே தனாக்கா அவற்றை வாங்கினாள். அதிலிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை மட்டும் கொடுத்தாள். 

“எனக்கு அந்த முறுக்கு வேணும்.”

“அதெல்லாம் ராத்திரில தின்னா ஜீரணமாகாது. நாளைக்கு பார்த்துக்கலாம்.”

“எனக்கு இப்போவே தா. மாமா எனக்குதான் வாங்கிட்டு வந்தாரு. நீ சோறும் தரல. இப்போ முறுக்கும் தர மாட்டேங்கற. எனக்கொன்னும் இது வேண்டாம்.”

கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை வீசி எறிந்தான். மாமா அவனது நடவடிக்கையை கொஞ்சம் அதிர்ந்து பார்க்கும்போதே அக்கா அவனது கன்னத்தில் அறைந்தாள். 

“என்ன பழக்கம் இது? சாப்பட்ற பொருளை தூக்கி வீசறது?’ அவ்ளோ கொழுப்பாயிருச்சா?”

அக்காவின் மாமியாரும், மாமாவும் அவனைச் சமாதானப்படுத்தினர்.  மறுநாளே அக்கா அவனது துணி மணிகளைக் கட்டினாள். “நீ கிளம்பு போலாம்.”

“இன்னும் கொஞ்ச நாள் இருக்கேன்கா. இனிமே தீனி கூட கேட்டு அழ மாட்டேன். உன் கூட மட்டும் இருந்துக்கறேன்.”

“இல்ல, அது சரிப்படாது. நீ எப்போ நல்ல பையனா இருக்க முடியுதோ அப்போ வந்தாப்  போதும். ஊருக்குப் போ.”

“அவனை ஏன் விரட்டற? இருக்கட்டுமே.”

“இல்லைங்க. வேண்டாம். இப்படி அடம், அழுகைனு இருந்தா சரிப்படாது. நான்  கொண்டு போய் விட்டுட்டு வந்துடறேன்.”

ஊருக்கு செல்லும் வழி முழுக்கத் தேம்பினான். அக்கா இரங்கவில்லை. 

வீட்டுக்குச் சென்று துணிகளை எடுத்து வைக்கும்போது பார்த்தான். துணிகளுக்கு அடியில் எல்லா தின்பண்டங்களையும் மறைத்து வைத்திருந்தாள்.

*

பின் எப்போது அக்கா வீடு போனாலும் ஒரே நாளில் திரும்பிவிடுவதே வழக்கம். ‘ரெண்டு நாள் இருந்துட்டு போ’ என்ற பேச்சே அக்காவிடமிருந்து வராது. மாமா “இரேன்” என்று கேட்கும்போதே, “அவனுக்கு படிக்க வேண்டாமா?” என்று குறுக்கே புகுந்து விடுவாள். 

தனாக்காவின் நெருக்கம் ஷங்கருக்கு  கிட்டாத கனியாகி விட்டது. அதற்கான ஏக்கம் வளர்ந்து கொண்டே இருப்பினும் எதிர்பார்ப்பை ஷங்கர் குறைத்துக் கொண்டான். 

ஸ்ரீ பாப்பா பிறந்த போது கூட அக்கா பிறந்தகத்துக்கு வரவில்லை. சித்தியும் அதை விரும்பவில்லை. நிலைமை தெரிந்து அக்கா புகுந்த வீட்டிலேயே பிரசவத்தை முடித்துக் கொண்டாள். அப்பா பிரசவ செலவை மட்டும் ஷங்கரிடம் கொடுத்து அனுப்பினார். 

குழந்தையை அக்கா கைகளுக்குள் அடக்கி அணைத்திருந்தது பார்த்ததும் ஷங்கருக்கு ஒரு கணம் பெரும் பொறாமை எழுந்தது. ‘ச்சே என்ன இது பச்சக் குழந்தையை பார்த்து பொறாமைப் படறோம்’ என்று தன்னைத்தானே அதட்டிக் கொண்டான். அவனுக்கு அது சற்று பயமாக இருந்தது. முடிந்த அளவு அக்காவைச் சந்திப்பதைத் தவிர்த்தான்.

கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடி சென்னை வந்தபோது அக்கா வீட்டில் தங்கச் சொல்லி அப்பா அனுப்பினார். “அது சரிப்படாதுப்பா” - ஷங்கர் தயங்கினான். 

“இப்போ வேலை இல்லாம வெளிய தங்க காசு வேண்டாமா? என்னால கொஞ்சம்தான் அனுப்ப முடியும். முகேஷ் வேற காலேஜ் சேர்ந்துட்டான்ல. ஃபீஸ் அது இதுன்னு இருக்கு. நீ வேலை கிடைச்சு முதல் மாச சம்பளம் வர வரை தனா வீட்ல இரு. உன் செலவை நீ பார்த்துப்பேன்னு ஆனதும் ரூம் எடுத்துக்கோ.” அப்பா தனாவுக்கு தகவல் சொன்னார்.

அக்காவின் மாமியார் இப்போது இல்லை என்பது நிம்மதியைத்  தந்தது ஷங்கருக்கு. தையல் மெஷினில் இருந்த அக்கா “வாடா” என்று  சிரித்து வரவேற்றாள். அக்காவுக்கு இன்னும் அழகு கூடி இருந்தது. முப்பதுக்கு மேல் பெண்கள் தங்கள் உச்ச அழகை எட்டுவதாக எங்கோ படித்திருந்தான். அக்கா அந்தக் கட்டத்தில் இருக்க வேண்டும். அவளைக் கண்டதுமே அந்த விரல்களை பற்றிக் கொள்ள ஆவல் எழுந்தது. கண்ணாடி வளையல்கள் அணிந்த கைகளைப் பார்த்தான். ஆனாலும் இத்தனை வயசுக்கு மேல் சின்னக் குழந்தை போல விரல்களை பிடித்துக் கொள்ளக் கூச்சமாக இருந்தது.

“எப்பிடிடா இருக்க? அப்பா சித்தி எப்படி இருக்காங்க? முகேஷ்  எப்படி இருக்கான்?”

“எல்லாரும் நல்லாருக்காங்கக்கா. நீ என்ன தைக்கறியா இப்போ?”

“ஆமாடா. ஒரு பொட்டப்புள்ளையப் பெத்தாச்சு. நாலு காசு சேர்த்து வைக்கணும்ல!”

ஸ்ரீக்குட்டி ஓரமாக நின்றிருந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டான். புதிதாக ஒருவன் தூக்கியதும் ஸ்ரீ சிணுங்கி அழுதாள். அக்கா ஸ்ரீயை சமாதானப்படுத்திக் கொண்டே ஷங்கரின் தலையில் கை வைத்து ‘மாமாடி இது. மாமா சொல்லு.. ஷங்கர் மாமா’ என்று அவன் முடியை கோதினாள். அவ‌ள் தலையைத் தொட்டதும் ஷங்கர் உணர்ச்சிவசப்பட்டான். அழுது விடுவோமோ என்ற பயத்தில் ஸ்ரீயை அக்காவின் கைகளில் தந்து ஒதுங்கினான்.

அந்தத் தலைகோதலின் பரவசத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினான். நீண்ட நாள் காத்திருந்து கடவுளை எதிரில் கண்டது போல் ஆனான். அக்காள் ஸ்ரீயை இறக்கி விட்டதுமே கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டான். கன்னங்களில் ஒற்றிக் கொள்ள முயற்சித்தான். அச்செயல் அக்காவுக்கும் மாமாவுக்கும் என்ன உணர்வை ஏற்படுத்தும் என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவன் உணர்ச்சிவசப்படுவதை உணர்ந்தவ‌ள் சட்டெனக் கைகளை உதறிக் கொண்டாள். “என்னடா இதெல்லாம் லூசு?”

மாமா முகம் ஒரு நொடி மாறியதை போலவும் அல்லாதது போலவும் தோன்றியது.

மறுநாள் ஞாயிறு மதியம் உணவு பரிமாறும்போது “இன்னொரு மீன் வைக்கா” என்றான். அக்கா மெல்லிய குரலில் சொன்னாள் – “அளவாத்தான்டா செஞ்சுருக்கேன்.” மாமா எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். முள்ளேதும் இல்லாமலே அந்த மீனை விழுங்கி முடிக்க ஷங்கர் சிரமப்பட்டான். பாத்திரம் நிறைய வறுத்த மீன்கள் இருந்தன.

மாலை மொட்டை மாடியில் ஸ்ரீ பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அக்கா வந்தாள். சின்ன சம்படத்தில் மீன் துண்டங்கள் இருந்தன. “இங்கயே சாப்டுட்டு வந்துரு. டிபன் ஃபாக்ஸ யாரும் பாக்காம ஜலதாரில போட்ரு. மாமா தூங்கிட்டுருக்காரு.”

“இல்லக்கா… வேணாம்.”

“அட சாப்பிடு. மதியம் பத்தாதோனு நினைச்சேன்.”

அவள் முகத்தை நம்பாமல் பார்த்தான். எந்தச் சலனமும் இல்லை. 

“உனக்கேதும் பிரச்சனை இருக்காக்கா.”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இருந்தாலும் ஒனக்குப் புரியாது ஷங்கரு பொம்பளைங்க பாடு. நீ புரிஞ்சுக்கவும் வேண்டாம். சீக்கிரம் வேலை தேடி ஒரு ரூம் பார்த்திடு.” 

இடுப்பில் இருந்து ஐநூறு ருபாய் எடுத்து ஷங்கரின் சட்டைப் பையில் வைத்தாள் – 

“ஏதாச்சும் சாப்பிடணும்னு தோணினா வெளிய வாங்கி சாப்டுரு. என்னை எதிர்பார்க்காத. வெளிய வாங்கினாலும் இதுவும் அக்கா வாங்கித் தந்ததுதான்”

அன்று ஐம்பது, இன்று ஐநூறு. ஷங்கருக்குக் கொஞ்சம் புரிந்தது. வேலை கிடைக்கும் வரை அக்கா யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது சட்டைப்பையில் பணம் வைப்பாள். ஒரு கட்டத்தில் ஷங்கருக்கு அக்கா தைக்க ஆரம்பித்தது ஸ்ரீக்காகவா தனக்காகவா என்ற சந்தேகம் வந்து போனது. 

“எதுக்குக்கா? நீயே கால் நோகத் தைச்சு சம்பாதிக்கற?”

“எல்லாம் திரும்பி வாங்கிப்பேன். என் புள்ளைக்கு நீதானே தாய் மாமன். நாளைக்கு அவளுக்கு ஒரு சடங்கு, கல்யாணம்னா நீ விட்றவா போற?”
 
சில சமயம் மறுத்தும், பல சமயம் மறுக்காமலும் ஷங்கர் வாங்கிக் கொண்டான். வேலை கிடைத்து ரூமுக்குப் போகும்போது மாமா மட்டுமே வந்து பார்த்தார்.

“ஒரே ஊர்ல எதுக்கு நீ வேற ரூம்ல இருக்கணும்னே தெரியல. உங்கக்கா பிடிவாதமா வேணாம்னுட்டா. எது வேணும்னாலும் ஒரு கால் பண்ணுடா.”

“சரிங்க, மாமா.”

முதல் மாத சம்பளம் கிடைத்ததும் தனாக்காவைத் தேடித்தான் போனான் ஷங்கர். பாதி சம்பளததை அவளிடம் தந்தான். அக்கா மாமாவை நிற்கச் சொல்லி காலில் விழுந்தான்.

“என்னடா இதெல்லாம் டிராமா?”

“எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீதான்.”

மாமா சற்று நெகிழ்ந்தது போல தெரிந்தது. அக்கா சிரித்தாள். அந்தக் காசை ஷங்கரின் கைகளைப் பிடித்து திருப்பி வைத்தாள். விரல்களை அழுத்தி மூடி ஒரு முறை பற்றினாள். 

“நீ வச்சுக்கோ. பாத்து செலவு பண்ணு. ரூம் வாடகை, ஓட்டல்னு செலவு இருக்குல்ல.”

“பரவால்லக்கா நீ…”

“வச்சுக்கோ” - விரல்களைத் திறக்க விடாமல் அழுத்தினாள். அக்கரங்களின் உத்தரவை ஒருபோதும் மீறியதில்லை. அக்கா பேசுவதும் பார்ப்பதும் அவனுக்குச் சமயங்களில் புரியாது. ஆனால்  அந்த உள்ளங்கையின் அழுத்தம் புரியும். அது அவனுக்கான கட்டளை.

“சரிக்கா… நான் கிளம்பறேன்.”

ஞாயிறுகளில் தனாக்கா வீடு வந்து ஸ்ரீக்குட்டிக்கு எதாவது வாங்கித் தந்து விளையாடி விட்டுப்போவான். அப்படி வரும்போது பழக்கமான எதிர் வீட்டு பாவனாவைக் காதலித்து பிரச்சனை வெடித்தது. இரு வீட்டுக்கும் சண்டை மூண்டது. தங்கள் அறியா மகளை ஏமாற்றி வஞ்சித்து காதலிக்க வைத்து விட்டதாகப் பாவனாவின் பெற்றோர் குதித்தனர். மாமாவைப் பார்த்து பாவனாவின் தந்தை 'அவனுக்கு மாமான்றதை நிரூபிச்சுட்ட' என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டார். 

மாமா சீற்றத்துடன் பேசினார். “உன்னை நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு எங்க பேரைக் கெடுத்திட்ட. அப்பவே உங்கக்காகிட்ட உன் தம்பி நடந்துக்கறதே சரியில்லைனேன். என்னதான் அக்கா தம்பின்னாலும் அவ கையத் தொடாம பேச மாட்டியே நீ? இங்க உன்ன தங்க வைக்கக் கூடாதுனு அவளும் புரிஞ்சுகிட்டா, நல்லவேளை. இல்லேன்னா…”

“மாமா தப்பாப் பேசாதீங்க.” - பற்களைக் கடித்தான். விரலை உயர்த்தினான். பின் நிதானத்திற்கு வந்து “நானும் பாவனாவும் லவ் பண்றோம்” என்றான். அவரது அமில வார்த்தைகளுக்கு மனம் வேறு நல்ல பொருளை பல வழிகளில் தேட விரும்பியது.

“ச்சீய்… லவ்வாம். ஒன் ஒடம்பு அரிப்புக்கு லவ்னு ஒரு பேரு. ரெண்டு குடும்பமும் ஒன்னு மன்னா பழகிட்டு இருந்தோம். இப்போ நீ பண்ணி வச்ச வேலைல எவ்ளோ அசிங்கம்.”

ஷங்கர் அக்காவைப் பார்த்தான். அவள் அமைதியாகவே இருந்தாள். ஏமாற்றமாக இருந்தது. எத்தனை பெரிய வார்த்தைகளைப் பேசுகிறார் இந்த மனிதர். அக்காவின் அமைதி ஆபாசமானதாக‌ இருந்தது. ஷங்கர் அக்கோபமும் சேரக் கத்தினான்.

“மாமா அவ மேஜர்தானே. இதுல ஒரு தப்பும் இல்ல. அனாவசியமா நீங்க ஸீன் கிரியேட் பண்ணாதீங்க. நான் பாத்துக்கறேன் இத.” மாமா அந்த வார்த்தைகளை பெரும் அவமதிப்பாக நினைத்து விட்டார். “நான் ஸீன் கிரியேட் பண்றேனா? கேவலமான காரியத்தை நீ பண்ணிட்டு என்னைச் சொல்றியா? உன்னை எல்லாம் வீட்டுக்குள்ளேயே விடக் கூடாது. போடா வெளியே” என்று ஆவேசமாக அவனைப் பிடித்து தள்ளினார். 

ஷங்கர் கோபமாகத் திரும்பி மாமாவை முறைத்து நெருங்கினான். அடுத்த கணம் அவனுக்கு அக்கா கையால் அறை விழுந்தது. 

“என்னடா முறைக்கற? போ வெளிய. இனி உன்னை இங்க பார்க்கவே கூடாது.”

ஷங்கர் ஏற்கனவே தீவிர உளைச்சலில் இருந்தான். காதல் கை நழுவி போய் விடுமோ என்ற பதட்டம், தன் தரப்பை யாருமே புரிந்து கொள்ளாத வருத்தம். இப்போது இத்தனை வளர்ந்த பின் அக்கா அவனை அறைவதை - அதுவும் தன் தவறே இல்லாத விஷயத்தில்  மாமாவுக்காக அறைவதை - ஏற்க முடியாமல் கத்தினான். 

“நீ எப்போவாது எனக்காக கூட நின்னுருக்கியாக்கா? நாந்தான் நாய்க்குட்டி மாதிரி உன்னை அக்கா அக்கானு சுத்திட்டு வரேன். நீ பக்கா செலஃபிஷ். ஒனக்கு அப்பா, சித்தி கிட்ட நல்ல பேரு வேணும். ஒன்  மாமியார் பேச்சு முக்கியம், புருஷன் முக்கியம், புள்ள முக்கியம். நான் எப்படிப் போனா என்ன?  அனாதைன்னா என்னனு இன்னிக்கு முழுசா உணர்ந்துட்டேன். இனி இந்த வாசப்படி மிதிக்க மாட்டேன்” கோபமாக வெளியேறினான்.

அக்காவின் அழைப்பு முதுகின் பின்னால் ஒரு முறையாவது கேட்கும் என்ற எதிர்பார்ப்பு நடக்கவில்லை. முற்றிலும் தனியாய் உணர்ந்தான். அறைக்கு சென்று முகத்தில் அறைந்து கொண்டு அழுதான். தற்கொலை எண்ணம் வந்தது. பாவனாவை எப்படியாவது சந்தித்து தன்னை மறந்து நிம்மதியாக வாழும்படியாவது சொல்லி விட்டு சாகலாம் என்று தோன்றியது. அது சாக பயந்து மூளை செய்த தந்திரமாகவும் இருக்கலாம். மாமாவின் சொற்கள் வேறு ஆபாசமாக நினைவை அறுத்தது. 

மறுநாள் காலை அறைக்கதவு தட்டப்பட்டது. பாவனாவின் வீட்டிலிருந்து போலீசுடன் வந்து விட்டார்களோ என்று ஒரு நொடி அச்சமும் தொடர்ந்து வருவது வரட்டும் என்ற உறுதியும் சேர்ந்து கதவைத் திறந்தான். தனாக்கா வேகமாக உள்ளே வந்தாள். 

“பாவனாவை நாளைக்குத் தேனிக்கு கூட்டிட்டு போறாங்க. இன்னிக்கு நரசிபுரம் பத்ரகாளி கோவிலுக்குக் குறி கேட்க போயிருக்காங்க. அவங்கம்மாவும், அத்தையும் மட்டும்தான் கூட இருக்காங்க. நீ அங்க போ. நாள் கிழமை ஏதும் பாக்காத. அவளை கூட்டிட்டுப் போய் ஏதாவது கோவில்ல  தாலி கட்டிட்டு, எங்காவது போயிரு.”

நடப்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் ஷங்கர் விழிக்கும்போதே தனா தொடர்ந்தாள். 

“உன் மேல உண்மையா லவ் இருந்தா நீ கூப்பிட்டதும் அவ வருவா. கூட்டிட்டு ஓடிரு. இந்தத் தகவலை நாந்தான் சொன்னேன்னு கடைசி வரை யாருக்கும் தெரியக் கூடாது. கடைசி வரை. உங்க மாமா, பாவனா, ஸ்ரீபாப்பா யாருக்கும். இது ஸ்ரீ மேல சத்தியம்.”

அவனது உள்ளங்கையை இறுகப் பற்றி அழுத்தினாள். அழுத்திய கைகளுக்குள் கிழங்கு கோர்த்த மஞ்சள் கயிறும், பத்தாயிரம் ரூபாய் பணமும் இருந்தது. கிளம்பி விட்டாள்.

காளி  கோவிலுக்கு போன ஷங்கரை பார்த்ததுமே பாவனா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். சற்றும் யோசிக்காமல் அங்கேயே அவளது அம்மாவும் அத்தையும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ள, தாலியைக் கட்டினான் ஷங்கர். 

பெரும் கலவரத்திற்குப் பின் இரு குடும்பங்களும் ஒற்றுமையாகச் சபித்து ஒதுக்கி வைக்க ஷங்கரும் பாவனாவும் தனியாய்க் குடித்தனம் போனார்கள். அக்கா தந்த பத்தாயிரத்தில்தான் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தான் ஷங்கர். அதன் பிறகு அக்காவும், மாமாவும் ஷங்கரை பார்க்கவோ பேசவோ இல்லை. அக்காவைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தை அக்காவுக்காகவே முறித்துப் போட்டான். ஏற்கனவே ஒதுங்கி இருந்த அப்பா சித்தியும் இதைச் சாக்கிட்டு உலகறிய ஒதுக்கி விட்டனர்.

அவ்வப்போது பாவனா “உங்க அக்கா உங்களை வீட்டை விட்டு தொரத்தினவதானே!” என்று குத்தும்போது வாய் வரை வரும் உண்மையை அழுத்திக் கொள்வான்.

அப்பா படுக்கையில் விழுந்ததும் ஷங்கரின் அம்மாவின் நகைகளை தனாவுக்குக் கொடுத்தார். இருபது பவுன்கள். ஏற்கனவே   தனாக்காவுக்கு திருமணத்திற்கு ஓரளவு மதிப்பாகவே நகைகளைப் போட்டிருந்தார். வாடகை வீடுதான். ஆனால் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை விற்று ஷங்கரும், முகேஷும்  பகிர்ந்து கொள்ளச் சொல்லி இருந்தார். அப்பா படுக்கையில் இருந்ததால் அப்போது எல்லாரும் சம்மதம் என்று சொன்னார்கள்.

அப்பாவின் மரணத்துக்கு பின் நிலத்தை விற்க ஏற்பாடு செய்யும்போது பெண்ணுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்று மாமா அக்காவை வைத்து வழக்கு போட்டார். ஷங்கர் அடிக்கடி ஊருக்கு போகும் வண்ணம் சுமூக உறவும் இல்லாததால் அங்கே நடக்கும் பிரச்சனைகளே அவனுக்கு பெரிதும் தெரியவில்லை. முகேஷை ஒரு முறை சந்தித்து “மூனு  பங்கோ, இரண்டு பங்கோ எதுவானாலும் எனக்குச் சம்மதம். தனாக்காவுக்கு சேர வேண்டியதைக் குடுத்துறலாம். நீ யோசிச்சு  சொல்லு” என்று ஒதுங்கி விட்டான்.

பாவனா திட்டித் தீர்த்தாள். “என்ன பொம்பள‌? நல்ல வசதியாத்தானே இருக்கு உங்கக்கா? கல்யாணத்துக்கும் நகை போட்டு, இப்ப இருபது பவுனு நகையும் கொடுத்துருக்கு. இன்னிக்கு அதோட விலை என்ன ஆச்சு? இதுக்கு மேலயும் பேராசை போகுதான்னு பாரேன். தம்பி சிரமப்படறானேனு நினைக்கத் தோணுதா?”

“விடு பாவனா, சொத்தில் பெண்களுக்கு பங்கு இருக்கறது உண்மைதானே?”

“நீ அக்கான்னா பரிஞ்சுட்டு வந்துரு. அப்படி என்னத்த மயக்கமோ.”

“பாவனா…” - ஷங்கர் அடிக்கக் கை ஓங்கி அதட்டினதும், “தப்பா ஏதும் சொல்லல சாமி. உன் பாசத்தைச்  சொன்னேன்” என்றாள். மாமாவுக்கும் பாவனாவுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தோன்றியது. எல்லா மனிதர்களும் அற்பர்கள்தாம். சூழல் அதை நமக்கு வெளிக்காட்டும் சந்தர்ப்பத்தைத் தருகிறது அவ்வளவுதான்.

தனக்கெனக் குடும்பம் குழந்தை என்றான பின்னும் தன்னால் தனாக்காவை விட்டுத் தரவே முடியாமல் இருப்பது அவனுக்கும் ஆச்சரியம்தான். அப்படி ஒன்றும் பெரிதாய்த் தனக்குச் செய்யவில்லை அக்கா என்ற கோணத்தில் கூட சிந்தித்துப் பார்த்தான்.

அப்படி நினைக்கும்போதே அவனுக்குக் கண்கள் முட்டும்.

சொத்தை விற்று மூன்று பங்காக்கினார்கள். ஊரில் நில விலை சொற்பம்தான். அதில் ஒரு பங்கு வந்தது. வந்த வேகத்தில் பாவனாவுக்குக் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதும் அது புற்றின் ஆரம்ப நிலை என்றும் அறியப்பட்டு அறுவை செய்து அகற்றினார்கள். தொடர்ந்து அதையொட்டிய‌ சிகிச்சைகள் சோதனைகள் என வந்த காசு அதில் தீர்ந்தது. 

அதற்கு முன் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பாவனா அதன் பின் வேலைக்குப் போகவில்லை. ஷங்கர்தான் தடுத்தான். எல்லா இக்கட்டிலும் எப்படியாவது காத்த தனாக்கா இந்தச் சூழலில் வந்து பார்ப்பாள் என்று அவனை அறியாமல் மனம் எதிர்பார்த்தது. ஆனால் அவள் வரவில்லை. இனி அவ்வளவுதான் என்று புரிந்து விட்டது.

அவனும் அவளைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்ய‌வில்லை. கிட்டத்தட்ட அந்தப் பிரிவுக்குப் பழகிக் கொண்டான். யார் இல்லாவிடினும் எல்லாம் நடக்கும். கிடைத்த பலன்களின் சட்டென்ற இழப்பைத் தாங்காமல்தான் பிரிவென்று பிதற்றுகிறோம்.

இப்போது ஸ்ரீக்குட்டி பெரியவளாகி விட்டது தெரிந்ததும் ஷங்கர் மனதில் கேட்ட குரல்  ஒன்றுதான். “நாளைக்கு எம்புள்ளைக்கு ஒன்னுனா நீ விட்டுருவியா?” அது ஒரு கடன். ஸ்ரீயின் மேல் உள்ள பாசத்தை மீறி அக்கடனை அடைக்கும் உந்துதலே இருந்தது. அக்கா செய்தது யாருக்கும் தெரியாது, மாமாவுக்கு, பாவனாவுக்கு… ஆனால் தனக்குத் தெரியும்.

சீருக்கு அழைப்பில்லை. மாமா முறைக்கு முகேஷை அழைத்திருந்ததாகக் கேள்விப் பட்டான். உள்ளபடியே பொறாமையாக இருந்தது. முகேஷிடம் தான் வாங்கிய புடவை, நகையைக் கொடுத்தான். “நான் தந்தேன்னு கூட நீ சொல்ல வேண்டாம். நீயா கொடுத்தாலே சரிதான். சீர் நடக்கறப்போ இதைச் சொல்லி வீண் சச்சரவு வேண்டாம்.”

முகேஷ் சங்கடமாக வாங்கிக் கொண்டான். சீர் சிறப்பாக நடந்ததை அறிந்தான்.

மகனுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டும் கெடு நெருங்கி வந்த‌து. அலுவலகத்தில்,  நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தான். சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர். ஆனால் தேவையான பணத்தைப் புரட்ட முடியவில்லை. பாவனா ரௌத்திரமானாள். 

“தலைல அடிச்சுச் சொன்னேன் கேட்டியா? உங்கொக்கா வந்து இப்போ நொட்டுவாளா? இதுல இவருக்குப் பெரிய‌ தியாகின்னு நினைப்பு. கொடுத்ததே யார்னு தெரிவிக்காமக் கொடுப்பாராம். இப்போ மகனுக்கு ஃபீஸ் கட்டக்  கூட வழி இல்ல. நக்கிட்டுப் போச்சா?”

ஷங்கர் சப்தம் எழாமல் தன்னம்பிக்கையற்ற குரலில்  சொன்னான். 

“ஏதாவது வழி பிறக்கும், பாவனா.”

“மயித்துல பொறக்கும்.”

பாவனாவின் கத்தலை மீறி வாசலில் பெருங்குரல் கேட்டது 

“என் மக என்ன ஒன் விளங்காத சீர் செனத்திக்கு அலையற வக்கத்தவனு நினைச்சியா? நீ வரவே வேண்டாம்னுதானே அழைக்கவே இல்ல. யாரக் கேட்டு இதக் குடுத்தனுப்பிச்ச?”

குரல் கேட்டதும் ஓடினான். மாமா வண்டியில் அமர்ந்திருந்தார். அக்கா வாசல் கேட்டின் வெளியே நின்று கத்தினாள். பாவனா ஷங்கரை முந்திக்கொண்டு வேகமாகப் போனாள். 

“ரோட்ல நின்னு கத்தற  வேலைலாம் வெச்சுக்காத. மரியாதையா போயிரு.”

‘நீ யார்ரி குறுக்க. ச்சீ போ.” அக்கா கேட் திறந்து பாவனாவைத் தள்ளி விட்டு உள்ளே வந்தாள். கையில் ஷங்கர் முகேஷிடம் கொடுத்து அனுப்பிய துணிக்கடை கட்டப்பை. 

“இந்தா ஒன் சீரு. உன் சகவாசமே வேண்டாம்னு விட்டாச்சுல்ல. இப்போ என்ன ஒட்டிக்க பாக்கறியா? அவளுக்கு மாமன் சீரு முகேஷ் தந்துட்டான். வர வேண்டியது வந்துருச்சு.”

மிகப் பலவீனமாக உணர்ந்தான். பேச்சு வரவில்லை. கத்திக் கொண்டே தனாக்கா ஷங்கரின் கைகளைப் பற்றினாள். அதில் அந்தக் கட்டைப்பையைத் திணித்தாள்.

“நீயே வச்சுக்கோ. இதெல்லாம் என் புருசனுக்கு பிடிக்கல. உன்னால எங்களுக்குள்ள ஆயிரம் சண்டை. இத்தன வயசுக்கு மேல போராடத் தெம்பில்ல. என்னை நிம்மதியா விட்ரு.”

ஷங்கர் பிடி கொடுக்க மறுத்து கைகளை அசைத்தான். அவள் கைகளை அழுத்தினாள். அதே உள்ளங்கையின் குளிர் இறுக்கம். அவனுக்கு அதற்கு மேல் மறுக்க இயலவில்லை. பையை ஒப்படைத்து விட்டு கைகளை இழுத்துக் கொண்டாள். “வாங்க போலாம்” என்று வண்டியில் ஏறினாள். மாமா அவனை ஏளனமாகப் பார்த்து வண்டியைக் கிளப்பினார்.

“அவ்ளோ சொன்னேனே கேட்டியா? இப்போ நடுரோட்ல வந்து கத்திட்டு  போய்ட்டால்ல?”

பாவனாவின் கோபத்தின் பின் ஒரு குரூர மகிழ்ச்சி தெரிந்தது. 

ஷங்கர் பையைப் பிரித்தான். மேலாகவே கம்மல் வைத்துக் கொடுத்த நகைக்கடை பர்ஸ் இருந்தது. எடுத்துப் பிரித்தான். கம்மல் வைக்கும் அளவே இடமிருந்த அந்த சிறிய பர்சில் அவனது அம்மாவின் தாலிக்கொடி அழுத்தித் திணிக்கப்பட்டிருந்தது. ஏழு  பவுன்  இருக்கும். வேகமாக கட்டப்பைக்குள் பார்வையை நுழைத்தான். வைத்தனுப்பிய புடவைக்கு பதிலாக‌ வேறொரு பட்டுப் புடவையும், பட்டு வேட்டியும் இருந்தது.

***

பூமர் [சிறுகதை]

1 January 2025 at 01:30
மாலை பணி முடிந்து அலுவலகக் கேபில் ஏறிய‌ தீப்தி அவசரமாக‌ அலைபேசியில் வாட்ஸாப் திறந்தாள். Pencil என்று பதியப்பட்டிருந்த தொடர்பைத் திறந்தவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. காலையில் அனுப்பிய GM பார்க்கப்பட்டு பதில் இல்லை. ஸ்டேட்டஸில் Coolie Disco பாடலை வைத்திருந்ததைப் பார்த்ததும் கடுப்பானாள்.

‘இதுக்கெல்லாம் நேரமிருக்கு. எனக்கு ரிப்ளை பண்ண முடியாது?’ 

அச்செய்தியும் பார்க்கப்பட்டு பதில் வரவில்லை. பென்சில் தன் முகப்புப் படத்தை மாற்றி இருந்தான். அதைத் தொட்டுப் பெரிதாக்கிப் பார்த்ததும் கடுப்பு குறைந்தது. ‘கொஞ்சம் உடம்பு வந்துருச்சு எலும்பனுக்கு’ என்று மனதில் சொல்லிக்கொண்டாள்.


வீடு வந்திறங்கி முகம் கழுவி, நைட்டிக்கு மாறி, மறுபடி அலைபேசியைப் பார்த்த போது நான்கு செய்திகள் அனுப்பி அழித்திருந்தான். இறுதியாய் ‘இதுக்கெல்லாம் நேரமிருக்கு’ என்ற‌ செய்தியைத் தேர்ந்து, ‘ஆமா’ என்று பதில் அனுப்பியிருந்தான்.

தீப்திக்கு உச்சகட்ட எரிச்சலானது. அவனை அழைத்தாள். எடுத்தவன், "பிஸியா இருக்கேன். அப்பறம் பேசறேன்" என்று துண்டித்தான். அவளது கண்கள் கலங்கின.

கொஞ்சம் அப்படியே அமர்ந்திருந்தவள், MuttaKanni-யை அழைத்தாள். அது ஜனனி.

“ஏய் முட்ட, பென்சில் பேசவே மாட்டேங்கறான்டி. நாலு நாளாச்சு. அவாய்ட் பண்ணிட்டே இருக்கான். ரீஸ‌ன் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறான்."

"அவன அப்டியே விடுடி, பூமர். அவனே நார்மல் ஆனப்பறம் பேச வருவான்."

"ஏதும் கோவமோ, பிடிக்காம ஏதாச்சும் இருந்தாலோ என்கிட்ட கேட்ருவானே!"

"சரி, ஒவ்வொருத்தர் மூட், ஒவ்வொரு நேரம், ஒவ்வொரு மாதிரி."

"ம்."

"என்ன குரல் கம்முது? அழறியாடி? ஏய்..."

"இல்ல... விடு." துண்டித்தாள். அழுகை தாளவில்லை. தேம்பினாள்.

*

பென்சில் என்ற ராபர்ட் கல்லூரியில் தீப்தியின் வகுப்பு. முட்டக்கண்ணி ஜனனியும் அதே வகுப்புதான். அக்கூட்டத்தில் பத்து நண்பர்கள் இருந்தாலும் தீப்திக்கு ராபர்டும், ஜனனியும்தான் இரு கரங்கள், கண்கள். கேம்பஸ் இண்டர்வ்யூவில் ஐடி நிறுவனம் ஒன்றில் தேர்வாகி தீப்தி சென்னை வந்தாள். ஜனனி பெங்களூரு. கோவையிலேயே பகுதி நேரப் பணிக்குப் போய்க் கொண்டே மேற்படிப்பைத் தொடர்ந்தான் ராபர்ட். 

ஒல்லியான, ஆறடிக்கு மேல் வளர்ந்த ராபர்ட்டுக்கு பென்சில் என்று பெயர் வைத்தது தீப்திதான். அதுவே நட்புக்குழுவிலும் பெயராகிப் போனது. யாரும் யாரையும் அசல் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டதே இல்லை; பட்டப்பெயர்தான்.

கல்லூரி சேர்ந்த புதிதில் மாணவர்கள் தம்முள் சகஜமாகும் பொருட்டு வெள்ளிக் கிழமைகளில் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவர். ஃபன் ஃப்ரைடே! அப்படி ஒரு நாளில் மௌன நடிப்பில் திரைப்படத்தின் பெயர் கண்டுபிடிக்கும் Dumb Charades நடைபெற்றுக் கொண்டிருந்தது. தீப்தி தன் முறை வந்தபோது சீட்டை எடுத்தாள். ‘பொக்கிஷம்’. படித்தவள் தரையில் குழி தோண்டுவது போல் சைகை செய்தாள்.

"கல்லறை?"

மறுத்துத் தலைய‌சைத்து கைகளால் புதையல் அள்ளுவதைப் போல் செய்தாள். 

"குழி தோண்டி மண்ணள்ளிப் போட்றாங்களா? விவசாயம் சம்பந்தப்பட்ட படமா?"

முகத்தைக் கோணி விட்டு, பெருமகிழ்வுடன் அள்ளியணைப்பது போல் தன்னைத் தானே கட்டிக் கொண்டாள். கண்கள் செருகிப் பூரிப்பது போல் பரவசம் காட்டினாள்.

"ஓ! அந்த மாதிரி படமா? அதெல்லாமா எழுதிருக்கானுங்க! டேய்… எவன்டா அது?"

ராபர்ட் உரத்துக் கேட்கவும் கூட்டம் குபீர் சிரிப்புக்குப் போனது. தீப்திக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. "எரும... புத்தி போகுது பாரு. பொக்கிஷம்.” என்றாள்.

ஜனனி கிசுகிசுத்தாள்- “அதுக்கு ஏன்டி ஆர்கஸ‌த்துக்கு ஆக்ட் பண்ணிட்டு இருந்த?"

"ஏய்... அது அளப்பரிய பொக்கிஷத்தை அள்ளிகிட்ட மகிழ்ச்சி."

"எதே! அலப்பறையா?"

"உங்கிட்ட சொன்னேன் பாரு."
 
தீப்தி பிறந்தநாளுக்கு அவள் வீட்டுக்கு வந்த நண்பர்கள், அவளது அறைச்சுவரில்  இளையராஜாவும், கமல்ஹாசனும் ஒட்டப்பட்டிருந்தது கண்டு விழி விரித்தனர்.

“என்னடி இது?”

“ஏன்? உனக்கு ராஜாவையும் கமலையும் தெரியாதா?”

“தெரியும். ராஜாவுக்கு அப்பறம் ரஹ்மான், ஹாரிஸ் தாண்டி அனிருத் எரா வந்தாச்சு!”

“யார் வந்தாலும் இவர் லெஜெண்ட் ஆஃப் லெஜெண்ட்ஸ்டா, வெண்ண.”

அலமாரியில் ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு, வேள்பாரி நூல்கள் இருந்தன.

“எவ்ளோ குண்டு புக்கு. இதெல்லாம் ஃபுல்லா படிப்பியா? இதென்ன பொன்னியின் செல்வனா? மணி ரத்னம்னு ஒருத்தர் படமா எடுக்கப் போறதாச் சொன்னாங்களே!”

“பொன்னியின் செலவன்லாம் ஸ்கூல்லயே படிச்சாச்சு. இது அதோட ஸீக்வல் மாதிரி!”

“அடியே, உண்மையச் சொல்லு, உனக்கு வயசு நாப்பதுதானே! வளராம நாலடிலயே இருக்கறதால 2கே கிட்னு காலேஜ்ல வந்து சேந்துட்டியா? பூமர் பூம‌ர்...”. சிரித்தனர்.

அப்படிதான் பூமர் ஆனாள். படிப்பாளி என்பதால் எல்லோருக்கும் சொல்லித் தருவாள். பென்சில், முட்டக்கண்ணிக்கு தலையில் தட்டிக் கற்பிக்குமளவு நெருங்கினாள் பூமர்!

*

“பூமர், ஒண்ணு சொல்லனும். எனக்கு முட்டயப் பிடிச்சுருக்கு.” ஒரு நாள் கல்லூரிப் பேருந்தில் ராபர்ட் சொன்னதைக் கேட்டுச் சிரித்தாள். “என்னடா லவ்வா? சீரியஸ்லி?”

“ஆமா. நல்ல பொண்ணு. அமைதியா இருக்கா. முடி பாத்தியா, எவ்ளோ நீளம்?”

“சொல்லிட்டியா அவகிட்ட?”

“இல்லல்ல. உன்டதான் ஃபர்ஸ்ட் சொல்றேன்.”

“சொல்லிடு. நான் வேணா சொல்லவா?”

“ம். நீ என்னப்பத்தி ஏதும் தப்பா நினைக்கலைல?”

“இல்லடா. எனக்கு படிக்கற டைம்ல லவ்லாம் கேட்கவே அல்ர்ஜி. ஆனா அதுக்காக மத்தவங்கள ஜட்ஜ் பண்ண மாட்டேன். இதும் லைஃப்ல ஒரு...”

“ஆத்தா, நீ தப்பாவே நினைச்சுப் பேசாமக் கூட இரு. ஃபிலாசபி பேசி சாவடிக்காதே. நான் வேணா லவ் சொல்லாமலே பிரேக்-அப் பண்ணிக்கறேன்.”

“தொலை. என் அருமை உனக்கெல்லாம் புரியல.”

ஜனனியும் ராபர்டும் காதலில் தீவிரமாக விழுந்து, பின் ஜனனி இன்னொருவனுடன் அதிதீவிரமாக சாட் செய்வத‌றிந்து சண்டையிட்டுப் பிரிந்தனர். அப்புறம் ஜனனியும் ராபர்டும் பேசிக்கொள்வதில்லை. ஆனால் தீப்திக்கு இப்போதும் இருவரும் நட்புதான்.

“என்னை ஏமாத்திட்டா. நீ அதை தட்டிக் கேப்பேனு பாத்தா அவகூட கொஞ்சிட்டிருக்க? என்ன இருந்தாலும் பொண்ணுங்க ஒண்ணு சேர்ந்திடறீங்க‌. நாங்கதான் இனாவானா.”

“டேய், அவ என் ஃப்ரண்ட்டுடா. இப்போ நீ ஸ்கூல்ல ஏதோ புள்ளய லவ் பண்ணிட்டு  இருந்தே. ஸ்கூல் முடிஞ்சு அவளை மீட் பண்ணக் கூட ட்ரை பண்ணல. அவ வேற ஊர் போயிட்டான்னு காலேஜ்ல இவளை லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட. அப்படி இவளுக்கு இன்னொருத்தனப் பிடிச்சுருச்சு. அத நான் சப்போர்ட் பண்ணல. அவகிட்ட கேட்டேன். உங்கிட்ட பிரேக்-அப் பத்தி  சொல்ல டைம் பார்த்துட்டு இருந்தேன்னு சொல்றா...”

“அதுவும் இதுவும் ஒண்ணா? அது ஸ்கூல். மெச்சூரிட்டி இல்லாத டைம்.” 

“லவ் எப்போ வந்தாலும் மெச்சூரிட்டி இல்லாத டைம்தான்டா.”

“த்தூ...”

“நீ துப்பவோ திட்டவோ அடிக்கவோ செய். ஆனா மைனஸும் சேர்ந்துதான் அவ என் ஃப்ரண்ட். நீயும். நீ பேசறது உன் இஷ்டம். நான் எப்பவும் போல அவகிட்ட பேசுவேன்.”

அன்று கோபமாய்ப் போனவன், இரவே மெசேஜ் அனுப்பினான்- ‘நீ குட் கேர்ள்டி, பூமர்.’

‘சரி, மூடிட்டு படு. குட்நைட்.’

*

அப்படி எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவளைப் புரிந்து கொள்ளும் தோழன். ஒரு நாள் தாண்டி எச்சண்டையும் நீடிக்காது. அன்றைய நாளின் முடிவிலேயே அதைத் தீர்த்து விடும் புரிதல் இருந்தது. அவனது இந்த முகம் புதிது. தன்னைப் புறக்கணிக்கிறான் என்பதை விட அதற்குக் காரணம் தெரியாமல் இருப்பது உளைச்சலாய் இருந்தது.

‘கடைசியாக் கேக்கறேன். ரீஸ‌ன் சொல்லிரு. டிஸ்டர்ப் பண்ணாம போய்டறேன். இனி மெசேஜ் பண்ண மாட்டேன்.’ அனுப்பி விட்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘நீயே போய்டறேன்னு சொல்லிட்டேனா சந்தோஷம். போயிரு.’ என்று செய்தி வந்தது.

அலைபேசியை எறிந்து விட்டுப் படுக்கையில் குத்தினாள். ஜனனி அழைத்தாள். 

“இன்னும் அழறியா?”

“இல்ல, சொல்லு.”

“வாய்ஸ்லயே தெரியுது. அவன் பேச மாட்டேங்கறான்னா விடேன். ஏன் தொங்கற?”

“அதில்லடி. அவன் ஹர்ட் ஆகக் கூடாதுன்னு பாத்துப்பாத்துப் பேசறேன். கொஞ்சம் கூட யோசிக்காம எடுத்தெறிஞ்சு பேசறான். இஷ்யு எதுமிருந்தா சரி பண்ணனும்னு நினைக்கறேன். இப்ப‌டியே பேசாமப் பிரிஞ்சிருவோமோனு பயமா இருக்கு.”

“சரி, கடைசியா எப்போ நல்லாப் பேசினான்?”

“நாலு நாள் முன்னாடி கேப்ல வர்றப்ப‌ பேசினான். ஃபோட்டோஸ் அனுப்பினேன்.”

“ஆஃபீஸ்ல எடுத்தது எனக்கு அனுப்புனியே அதுவா?”

“ஆமா.”

“அந்த சாட் எனக்கு ஸ்க்ரீன்ஷாட் அனுப்பு.”

ஸ்க்ரீன்ஷாட்கள் அனுப்பப்பட்டு உரையாடலை ஆராய்ந்த பின் ஜனனி அழைத்தாள்.

“அந்த நாய் பொச‌ஸிவ்ன‌ஸ்ல காண்டாகிக் கிடக்குடி.”

“பொச‌ஸிவா!”

“நீ கிழவி மாதிரி பேசத்தான் லாயக்கு. பசங்க சைக்காலஜி புரியாது.”

“...”

“நீ அன்னிக்கு முதல்ல உன் ஃபோட்டோ அனுப்பி இருக்க. அது க்ளாரிட்டி செம்மையா இருக்கறது பார்த்து அவன் யார் ஃபோன்னு கேட்டதும் நீ என்ன சொன்ன?”

“ப்ரதீஷோட ஐஃபோன்னு சொன்னேன்.”

“அதுக்கு அவன் யாருன்னு கேட்டானா?”

“ஆமா. நான் ஃபோட்டோ அனுப்பினேன்.”

“அது டீம் ஃபோட்டோ. அதுல நீயும் ப்ரதீஷும் மட்டும் ஒரே கலர் டிரஸ்...” 

“ஓ! அதுவே இப்போ நீ சொல்லித்தான்டி யோசிக்கிறேன். ஸில்லி...”

“ரெண்டு பேரும் பேசி வச்சு ஒரே ட்ரஸ் போடற அளவு க்ளோஸ்னு நினைச்சிட்டான்.”

“சின்னபுள்ளத்தனமா இருக்கு நீ சொல்றது.”

“அவன் கூட ஆறு மாசம் லவ்வரா இருந்துருக்கேன்டி. நல்லாத் தெரியும்.”

“உன்கிட்ட அப்டி நடந்துகிட்டா நீ லவ்வர்னு காரணம் இருக்கு. என்கிட்ட ஏன்டி?”

“எனக்கென்னமோ அவன் உன்ன லவ் பண்றான்னு தோனுது. கொஞ்ச நாளாவே அவன் அத ஜாடைமாடையா சொல்லிட்டும் இருக்கான். இந்தப் பொசஸிவ்னஸை நீ புரிஞ்சுக்கணும்னுதான் பேசாம சீன் போட்டுட்டு இருக்கான். பேசாட்டி உனக்கு வலிக்குதில்ல. அழற‌ல்ல. அதுல அவன் லவ்வை உணரணும்னு நினைக்கிறான்.”

“என்னைக் கொழப்பாத, முட்ட. அவன் என் ஃப்ரண்டுடி.”

“ஒரு பாயும் கேர்ளும் வாழ்நாள் ஃபுல்லா ஃப்ரண்ட்டா மட்டுமே இருக்க முடியாது, பூமர். ஏதோ ஒரு டைம்ல அவங்களுக்குள்ள லவ் வரும், அட்லீஸ்ட் ஒருத்தருக்காவது. அதை சொல்றாங்களோ இல்லையோ, ஆனா அந்த எண்ணம் நிச்சயம் வரும். பென்சில்ட நானே அப்படித்தானே விழுந்தேன்! எனக்கு அவன் செட் ஆகல.”

“ம்ம்ம்.”

“நீயும் யோசி. இப்படிப் பேசாட்டி தேம்பி தேம்பி அழற அளவு அவனை மிஸ் பணறேன்னா சம்திங் சம்திங் உனக்குள்ளயும் இருக்கலாம்.”

“ஏய்...”

“சரி, நீ பாரு. நைட் ஷிஃப்ட். வொர்க் இருக்கு.”

*

அவன் பேசாததை நினைத்து அழுதவளுக்கு அது பொச‌ஸிவ் என்ற பதில் பெரும் நிம்மதியையும், அவனுக்கு தன் மேல் கோபம் இல்லை, தன் தவறு ஏதும் இல்லை என்பது ஆறுதலையும் அளித்தது. மெல்லிய சிரிப்பும், மகிழ்வும் கூட வந்தது.

காலை எழுந்து மெசேஜ் செய்தாள்- ‘டேய் உன்னைப் பார்க்கனும் போல இருக்கு. வீக்எண்ட் கோவை வரேன். எனக்கு உன்கிட்ட பேசியே ஆக‌னும். ப்ளீஸ், ராபர்ட்.’

‘ஓக்கே, தீப்தி.’

‘என்ன திடீர்னு பேர் சொல்ற?’

‘கொஞ்சம் மேல பாரு. நீ என்ன சொல்லிருக்கேன்னு’

‘ஸாரி. சரி, திரும்பப் பிரச்சனை வேணாம். இதை ஸார்ட்-அவுட் பண்ணனும் எனக்கு.’

‘எனக்கும்.’

‘பென்சில்.’

‘சொல்லு.’

‘மிஸ் யூ!’

நிம்மதியாய்ப் பணிக்குக் கிளம்பினாள். மாலை வீடு திரும்பியபோது ராபர்ட் வாசலில் காத்திருந்தான். இன்ப அதிர்ச்சியும் செல்லக் கோபமும் கலந்து எழுந்த உணர்வைக் கட்டுப்படுத்தி கைப்பையால் முதுகில் நான்கு அடிகள் வைத்தாள்.

“ஸாரி.”

“ஒண்ணும் வேணாம்.”

“வீட்ல கொஞ்சம் பிரச்னைடி. அதான் சரியாப் பேச முடில.”

“பொய். இதுவரைக்கும் வீட்ல எவ்ளோ ப்ராப்ளம்ஸ் வந்துருக்கு. எல்லாம் என்கிட்ட புலம்பித்தான் பழக்கம். இப்ப என்ன என்கிட்ட சொல்ல முடியாத பிரச்சனை?”

“அதான் மிஸ் யூ சொன்னதும் சாட்டர்டேக்கு வெயிட் பண்ணாம ஓடி வந்துட்டேன்ல.”

“...”

“என்கிட்டயும் பாயிண்ட் இருக்கு. போய்டறேன்னு சொல்லுவியா? வேற யாரும்னா சரிதான் போடின்னு சொல்லிருப்பேன். நீன்றனாலதான் வந்து உக்காந்திருக்கேன்.”

“நீ பேசாம இருந்ததாலதானேடா அதைக் கேட்டேன்!”

“எனக்கு ஒரு மாதிரி லோன்லியா இருந்துச்சு. பொறாமைன்னு கூட வையேன். நீ ஃப்ரண்ட்ஸோட இருக்கற ஃபோட்டோஸ் பார்த்தப்போ நம்ம யூஜி செட் நினைப்பு வந்துச்சு. இப்போ நீ இவங்க கூட செம்ம ஜாலியா இருக்கறாப்ல இருந்துச்சு. எனக்கு பிஜில அப்படி யாரும் செட்டாகல. அதுல கொஞ்சம் மூட் அவுட் ஆனேன். அப்பறம்...”

“அப்பறம்?”

“எனக்கு உன்னை லவ் பண்ணத் தோனுச்சு, கெழவி. எங்கே அத உளறிடுவேனோனு பேசறதையே அவாய்ட் பண்ணினேன்.”

“...”

“நீ யாரையாச்சும் லவ் பண்றியா, பூமர்?”

“அப்படியிருந்தா முதல்ல உன்கிட்டதான் சொல்லி இருப்பேன்.”

“ம்ம்ம். எனக்கென்னமோ நாம லவ் பண்றோம்னு தோனுது.”

“ஏன் அப்படித் தோனுது?”

“என்னால நீ மத்தவங்க கூட க்ளோஸா இருக்கறத தாங்கிக்க முடில.”

“ம்.”

“உனக்கு என்கூடப் பேசாம இருக்க முடில.”

தீப்தி ராபர்டின் அருகில் வந்து அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“உன்னை எனக்கு இவ்ளோ பிடிக்கும்னே நீ பேசாதப்பதான்டா தெரிஞ்சுகிட்டேன்.”

ராபர்ட் முகம் மலர்ந்தது. அதை முறிப்பது போல் தீப்தி தொடர்ந்தாள்.

“ஆனா நாம எப்போவும் இப்படியே ஒற்றுமையா பேசிட்டே இருக்கனும்னா நமக்குள்ள லவ், லஸ்ட்னு ஏதும் இருக்கவே கூடாது, பென்சில்.”

“என்னடி உளர்ற‌?”

“சீரியஸ்லி. இது லவ்வான்னு யோசிக்கறப்பவே இவ்ளோ பொச‌ஸிவ், கோபம், ஈகோ எல்லாம் வருது. ஃப்ரண்ட்ஸா நமக்கு இது எதுமே இருந்ததில்லை. எனக்கு நீ லைஃப் லாங் வேணும். என்கூட என்னை அவ்ளோ நல்லா புரிஞ்சுகிட்ட ஃப்ரண்டா வேணும்.”

“ஏன் அவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங் உள்ள என்னை நீ லவ் பண்ணக் கூடாது?”

“என்னால உன்னை லவ்வரா ஒரு நாள் கூட சகிக்க முடியலையேடா!”

“...”

“நாள் முழுக்க அழ வச்சு, ஹர்ட் பண்ணி, எங்கே நீ பேசாமலே போயிருவியோன்னு ரொம்பப் பயந்துட்டேன். எனக்கு நீ என் பென்சிலாவே என் கூட வேணும்டா.”

“ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ். அவ்ளோதான்ல?”

“அதென்ன‌ ஜஸ்ட்? ஃப்ரண்ட்ஸ்னா அவ்ளோ மட்டமா? நாம ஃப்ரண்ட்ஸ்தான் இவ்ளோ வருஷமா. காதலோட வேகமெல்லாம் காமத்திலயோ கல்யாணத்திலயோ தீந்துரும்.”

“...”

“நாளைக்கு எனக்கு கல்யாணம் பண்ணிப் புருஷனப் பத்தி புலம்பவும் நீ வேணும், சொல்யூஷன் சொல்லவும் நீ வேணும். உனக்கு நானும் அப்படித்தான்.”

“என்னடி, பாய் பெஸ்ட்டியாக்கப் பாக்கற?”

“த்தூ. கேளு. நாம லவ் பண்ணினாலும் முட்டக்கண்ணி மாதிரி ஆறு மாசம் கூட தாங்காதுடா. எனக்கு உன்னை பிரியக் கூடாது, பென்சில்”

கண்கள் நீர் தளும்ப அவன் கைகளை அழுத்தினாள். உணர்ச்சியற்றுச் சொன்னான்.

“ஸாரி”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல‌. இரு, உனக்குப் பிடிச்ச பிரட் ஆம்லெட் செஞ்சு தரேன்.”

“...”

“பிஜில ஒரு பொண்ணு ரூட் விடுதுன்னியே பேரென்ன, வானிலாவோ தேனிலாவோ?”

“வானிலா. அதுக்குள்ள உன் மேல ஒரு இதுவாகி சரியா ரெஸ்பான்ட் பண்ணல நான்.”

“பேசிப் பாரு. ஆனா ப்ளீஸ், பொச‌ஸிவ் ஆகிக் கொல்லாத. ‘லவ்வர்’ மணிகண்டன்னு நினைப்பா ஒனக்கு? கருமத்த உன் கூடெல்லாம் எப்படி ஒருத்தி வாழப் போறாளோ!”

“ரொம்பப் பண்ணாத. பேரென்ன பரதேசியா? அவன் ஐஃபோன்ல மேட்சிங் ட்ரெஸ் போட்டு ஃபோட்டோ எடுத்தா அழகி ஆகிருவியா? சிலிண்டர் சைஸில் இருந்துகிட்டு. உனக்கு ஒரு பரதேசி மாட்டும் போது எனக்கு வானிலா மாட்டாமலா போயிருவா?”

“டேய், அது பிரதீஷ். அவன் டீம்மேட். அவ்ளோதான். உனக்கு அதான் பிரச்சனையா?”

“அதெல்லாம் இல்ல...”

ஆம்லெட் உண்டபடி அவனை ஒட்டி அமர்ந்து வானிலாவிடம் அவன் எப்படி ப்ரபோஸ் செய்யலாம் என ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தவள், சட்டென முகம் மலர்ந்து, 

“டேய், கவனிச்சியா? நாம ரெண்டு பேரும் இன்னிக்கு ஒரே கலர் பேண்ட்.”

“அப்போ, இது லவ்தானே, ஜெஸ்ஸி?” - வெடித்துச் சிரித்தனர் இருவரும்.

***

(1.1.25 ஆனந்த விகடன் இதழில் வெளியானது)

களிற்றடி: முன்னுரை

25 December 2023 at 06:30
முதல் அடி

‘களிற்றடி’ என் முதல் சிறுகதைத் தொகுப்பு; என் முதல் அச்சுப் புத்தகம்; இலக்கேதும் வைத்துக் கொள்ள விரும்பாத ஓர் எளிய‌ நெடும்பயணத்தை உத்தேசித்த‌ முதல் அடி!

2016 முதல் 2023 வரை நான் எழுதிய சிறுகதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். எழுத்து கீழ்மையிலிருந்து உருவாகிறது என்பார்கள். என் விஷயத்தில் எழுத்து துயரங்களில் இருந்தே தொடங்கியது. என் வலிகளை, எனைச் சுற்றிய‌ வருத்தங்களை எழுதத் தொடங்கியதுதான் என் சிறுகதைகளின் தொடக்கப் புள்ளி. எல்லோரிடமும் பகிர முடியாதவற்றைப் புனைவுகளாக இறக்கி வைப்பதில் ஓர் ஆசுவாசம் கிட்டியது.

ஆக, இக்கதைகளின் உள்ளும் புறமும் என் சுற்றமும் சூழலும் உண்டு (உதாரணமாக அப்பாவுடனான ஓர் உரையாடலில் கருவான‌ கதை ‘களிற்றடி’). இதன் பக்க விளைவாக‌ இதில் பல கதைகளில் நாயகி பாத்திரம் நான்தான் என வரித்து வாசிப்போர் உண்டு. உதாரணமாக ‘துலாமுள்’ கீர்த்தனா, ‘துயில் துணை’ வசுதா. ஆனால் அதன் வழி பிரதி தரும் அனுபவத்தைச் சுருக்கிக் கொள்கிறார்கள் என்றே சொல்வேன். நான் கதைகளில் சுயசரிதை எழுத முற்படுவதில்லை. அதை மீறி எங்கேனும் என் சாயை தென்படலாம். புனைவில் தன் நிழலை விட்டுச் செல்லாத எழுத்தாளர்க‌ள் அரிது. அதை அடையாளம் கண்டால் புன்னகையுடன் கடப்பதைத் தாண்டி வாசகர் அதில் ஆராய ஒன்றுமில்லை.

சுயபுராணம் பேச புத்தக முன்னுரை வசதியான மார்க்கம். எனவே கொஞ்சம் முன்கதை.


 Ex ட்விட்டரான‌ X தளத்தில்தான் என் அறிமுகம் நிகழ்ந்தது. நிறைய‌ அரட்டைக்கு நடுவே - அதுதான் என் ஐடியின் பெயரே (@arattaigirl) - கை எழுதப் பழகியது அங்கேதான். என் முதல் எழுத்துப் பலகை Nokia 1208 என்ற புராதன பட்டன் ஃபோன். பல்பத்திலிருந்து பென்சிலுக்கு நகர்வதைப் போல் சில ஆண்டுகளில் ஆன்ட்ராய்டுக்கு மேலேறினேன். ட்விட்டரிலிருந்து ஃபேஸ்புக். 140 சொற்கள் என்ற கட்டுப்பாடு தளர்ந்தது முதல் மாற்றம். அதைத் தொடர்ந்து வலைத்தளம் தொடங்கிச் சின்னச் சின்னப் பதிவுகள், கவிதைகள் என்று எழுதிப் பார்த்தேன். ‘அம்மா’ என்றொரு கவிதைத் தொகுதி (மின்னூல்) வந்தது.

குறுகத் தறித்த ட்வீட்களுடன் புழங்கிக் கிடந்தவளுக்கு இரண்டாயிரம் சொற்களில் சிறுகதை என்பது, அதுவும் அலைபேசியில் தட்டச்சுவது பெரிய சவாலாய் இருந்தது. அத்தனை சிறுகதைகளையும் மூன்று அங்குலத் தொடுதிரை கொண்ட Samsung Galaxy Star Duos S5282 செல்பேசியிலும் பின் சமீப காலங்களில் ஆறரை அங்குல‌ Oppo A16K செல்பேசியிலும்தான் எழுதினேன் என்பதை யோசித்தால் எனக்குமே மலைப்புதான்!

இன்னொரு விஷயம். என் கதைகள் ஏதும் இதுகாறும் அச்சில் வெளியானதில்லை. நான் அச்சுப் பத்திரிக்கைக்கு அனுப்பியதே ஒரே கதைதான். மூன்று மாதங்களுக்குப் பிறகு விசாரித்த போது, ‘இன்னும் படிக்கவில்லை.’ என்றனர். எனவே அதை என் வலைதளத்தில் வெளியிட்டேன். அதன் பின் வேறு அச்சுப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பவில்லை. படித்து நிராகரித்திருந்தால் ஏற்கலாம்; கிடப்பில் போட்டு வைத்திருந்தது ஏமாற்றம். எனவே என் வலைதளத்திலேயே இக்கதைகளை வெளியிட்டேன். இந்தத் தற்சார்பு பிடித்திருக்கிறது.

காலக்கெடு ஏதுமற்ற‌, யாருக்கும் கையளித்தே ஆக வேண்டிய நிர்பந்தம் இல்லாத சுதந்திரத்தால் என் ஆரம்ப காலச் சிறுகதைகள் நத்தைத் துரிதத்தில் வெளியாகின‌.

இந்தக் காலகட்டத்தில் என்னை “எழுது எழுது” என அவ்வப்போது விரட்டிக் கொண்டே இருந்தவர் நண்பர் ரைட்டர் சிஎஸ்கே. 2016 - 2017 ஆண்டுகளில் மூன்று சிறுகதைகள், அதிலொன்று (‘வயிற்றுத் தீ’) அவர் நடத்திய‌ ‘தமிழ்’ மின்னிதழில் வெளியானது. பிரசுரம் கண்ட என் கதை அதுவே. ஆனால் பிறகு நான்காண்டுகளுக்கு ஒரு புனைகதையும் எழுதவில்லை. என் கதைகளுக்குக் கச்சா துயர்கள்தாம் என்று சொல்லியிருந்தேன், எனில் இந்த வருடங்களில் துயரே இல்லாத‌ சுக வாழ்வு வாய்த்ததா என்றால் அப்படி இல்லை, எழுத நேரமில்லாத அளவு துயர்களை அள்ளித் தந்திருந்தது வாழ்க்கை! :-)

கோவிட் இரண்டாம் அலை தீர்ந்த காலகட்டத்தில் வாழ்வு சற்று தெளிந்திருக்க, சிஎஸ்கே மறுபடி நச்சரிக்க ஆரம்பித்தார். முதலில் “எதுவும் எழுதலையா?” என்று கேட்டு வந்தவர் “இந்தக் குடியரசு தினத்திற்கு ஏதாவது எழுதுங்கள்”, “வரும் பிறந்த நாளுக்குள் ஏதாவது எழுதுங்கள்” என்று தொடர்ந்து சொல்ல‌ ஆரம்பித்தார். மெனக்கெட்டு எழுதி அனுப்பிக் கருத்துக் கேட்ட சிறுகதைகள் சிலவற்றை “ஆதி காலத்துக் கதை”, “தேய் வழக்கு நடை” என்றெல்லாம் முகத்தில் அடித்தது போல் கூறி இருக்கிறார். ‘சரி, நமக்குத்தான் ப்ராப்தம் இல்லையோ’ என்று கூட‌ ஒரு கட்டத்தில் சலிப்பாய்த் தோன்றி இருக்கிறது. ஆசிரியரைக் கண்டு நழுவும் சுமார் மாணவி போல் ஏதாவது காரணம் கூறிச் சமாளித்திருக்கிறேன். அப்படி ஓடும் மாணவியையும் அதட்டி எழுதத் தூண்டி, கொஞ்சம் தகுதிப்படுத்திய என் ஆசான் அவர். அப்படித்தான் 2022-ம் ஆண்டில் மட்டும் ஐந்து சிறுகதைகள் எழுதினேன்.

அடுத்து 2023-ன் தொடக்கத்தில் மாதம் ஒரு சிறுகதை வலைதளத்தில் வர வேண்டும் என்ற சவாலை சிஎஸ்கே அளித்தார். ஆரம்பத்தில் எனக்கு அதில் ஆர்வம், நம்பிக்கை இல்லை. இன்ன தேதிக்குள் கதை என்றெல்லாம் இலக்கு வைத்து எழுதியதே இல்லை. தோன்றினால் எழுதுவேன், திருத்தினால் வெளியிடுவேன் என்றே வாழ்ந்திருந்தேன். ஜனவரி ஒன்றுமின்றிக் கழிந்தது. மாதக் கடைசியில் "ஸ்கோர்: 0/1, வாழ்த்துக்கள்!" என அவர் குத்தலாக மெசேஜ் அனுப்ப, சீண்டப்பட்டு ஃபிப்ரவரி தொடக்கத்தில் ‘பரிசுத்தர்’ சிறுகதையை எழுதினேன். இலக்கு வைத்து எழுதுவதன் நுட்பமும் ருசியும் பிடிபட்டது.

ஒழுக்கம் குன்றாது தொடர்ந்து எழுதினேன். உள்ளடக்கம், கூறுமுறை மெருகேறியது. நானறிந்த‌ நிகழ்வுகளை, மனிதர்களைத் தாண்டி கற்பனைகளை முயற்சி செய்தேன். இவை முன்பைக் காட்டிலும் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தன - சராசரியாக 2,000 பார்வைகள் - ‘துலாமுள்’, ‘துயில் துணை’ கதைகள் 3,500 பார்வைகளைக் கடந்தன. ஃபேஸ்புக்கில் விடுப்பு எடுத்தாலே “அடுத்த கதை தயாராகிறதா?” என்று கேட்குமளவு ஆர்வமாய் எதிர்பார்த்தார்கள். ஃபிப்ரவரி முதல் செப்டெம்பர் வரை பத்து மாதங்களில் பத்துக் கதைகள் (அதில் நான்கு இன்னும் வெளியாகவில்லை). எழுத்தின் பொருண்மை, தரம் மட்டுமல்ல; பெரிதாகத் தடை, தொந்தரவு நேராமல் எழுத வாய்த்த அக‌ நிலை, புறச்சூழலையும் வைத்துச் சொன்னால் இவ்வாண்டு எனக்கு எழுத்தின் வசந்த ருது!

நான் எழுதுவேன் என்பதை என்னை விட அதிகம் நம்பியவர், நம்புபவர் சிஎஸ்கேதான்.  என் அத்தனை புனைகதைகளின் முதல் வாசகராக இருந்து ஆற்றுப்படுத்தியவர். என் எழுத்தின் ஆரம்பம் முதல் இப்போது இப்புத்தகமாக்கல் வரை அவரது ஊக்குவித்தல் உண்டு. அந்நன்றியுடன் எனது இந்த முதல் அச்சு நூலை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்.

என் கதைகளைப் படித்துப் பாராட்டி ஊக்கப்படுத்திய‌, விமர்சித்துச் சீராக்க உள்ளீடு சொன்ன நண்பர்கள் அநேகம். நற்சொற்களைப் போல் நன்றாய் இல்லை என்பதையும் முக தாட்சண்யம் பாராது சொன்னோரும் என்னை ஆக்கியோரே. ஒவ்வொருவரின் அன்புக்கும், அக்கறைக்கும் இந்தப் புத்தகம் வெளிவருவதில் மறைமுகப் பங்குள்ளது. 

‘துலாமுள்' என்ற‌ சிறுகதையை வாசிப்பை நேசிப்போம் 'சிறுகதையாடல்', எழுத்தாளர் மதுமிதாவின் 'சிறுகதை நேரம்' இணையக் குழும நிகழ்வுகளில் விவாதித்தார்கள். ‘ஊழ்’ சிறுகதையைப் படித்து விட்டு ஃபேஸ்புக் நண்பர் விக்னேஷ் விஜய்யின் அம்மா கைப்பட ஒரு கடிதம் அனுப்பி இருந்தார் - முப்பத்தைந்து வருடங்கள் வாசகியாக இருந்தும் முதன் முறை விமர்சனம் எழுதுவதாக. புத்தகமாய் வந்தால் மட்டுமே உங்கள் சிறுகதைகளைப் படிப்பேன் என்று பிடிவாதமாய் இருப்பதாக‌ ஃபேஸ்புக் நண்பர் இதயதுல்லா கூறி இருந்தார். இது போல நெகிழ்வு நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கத் தெரியாமல் திணறி இருக்கிறேன்.

தோழி நான்ஸி கிட்டத்தட்ட எல்லாக் கதைகளையும் வாசித்து விட்டுப் பேசியிருக்கிறார். மீனம்மா கயல் கதைகளைப் பகிர்ந்ததன் வழியாக பரவலாக வாசகர்களிடம் சேர்ந்தன‌. ட்விட்டர் நண்பர்கள் ஜெனுடப்பா மற்றும் விதானம் தவறாமல் வாசித்து இது சிறப்பு, இது உங்கள் வழமைத் தரத்தில் இல்லை என மனதில் பட்டதைப் பூச்சின்றிச் சொன்னார்கள். சிறுகதைக்கான அம்சங்களை எடுத்துச் சொல்லி, என் கதைகளின் நல்லவைகளையும், அல்லவைகளையும் தொடர்ந்து விரிவாகச் சுட்டி வந்தவர் நண்பர் கோகுல் பிரசாத். அனைவரின் விமர்சனங்களிலும் எனக்குச் சரி எனப் பட்டவற்றை ஏற்றுக் கொண்டேன். சிலவற்றை அடுத்த கதைகளில் சரி செய்தேன். இன்னும் நிறையக் கனிய வேண்டும்.

இருண்ட காலங்களில் எல்லாம் என் குடும்பம் என்னுடன் நின்றிருக்கிறது. அவர்களைப் பற்றி மீண்டிருக்கிறேன். இந்த நனிதருணத்தில் அவர்களை நினைத்துக் கொள்கிறேன்.

புத்தகம் கொணர வேண்டும் என நான் அணுகிய போது, என் அடையாளமிலிச் சிக்கல் தாண்டி, எழுத்தைப் பொருட்படுத்திப் புத்தகமாக்கச் சம்மதித்த ராம்ஜீ நரசிம்மனுக்கும், காயத்ரிக்கும் அன்பு. நூலை அழகான முறையில் வடிவமைத்துப் பதிப்பிக்கும் ஸீரோ டிகிரி ஊழியர்களுக்கு வந்தனம். வாங்கவிருக்கும் வாசகர்களுக்கு முன்கூட்டிய நன்றி!

மனக் களத்தில் நிகழும் தன்முனைப்புக்கும் அவையடக்கத்துக்கும் இடையேயான சமரினூடே திரும்பிப் பார்க்கிறேன். இச்சிறுகதைகளின் வழி எழுத்தின் தடுமாற்றம் முதல் ஓரளவு தொழிற்பட்ட‌ நிலை வரை பரிணாமம் உண்டு. எனவே இது ஓர் எழல்!

சௌம்யா
நவம்பர் 5, 2023

Game of Thrones: கதாபாத்திரங்களின் கலைடாஸ்கோப்

18 February 2023 at 16:38

2022 டிசம்பர் மாத மத்தியில் Game of Thrones பார்க்கத் தொடங்கினேன். மொத்தம் 8 சீசன், 73 எபிஸோட்கள். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் வேறு திரைப்படமோ வலைத்தொடரோ பார்க்கத் தோன்றாத அளவு தன்னுள் என்னை ஈர்த்துக் கொண்டது. இதில் தனிப்பட்டு நான் வியக்கும் விஷயம் முழுக்க ஆங்கிலத்திலேயே நான் பார்த்து முடித்த முதல் வெப் சீரிஸ் இதுதான். நண்பர்களின் உள்ளீடுகளோடு பல சந்தேக நிவர்த்திகளோடு பார்க்க ஆரம்பித்தாலும் போகப் போக எனக்கே புரியுமளவு அதன் கதையும், நடிகர்களின் உடல் மொழியும் எனக்கு பரிச்சயமாகி நெருக்கமாகிப் போனது நிச்சயம் அதன் வெற்றிதான்.


ஓர் இரும்புச் சிம்மாசனம். முள் கிரீடம் மாதிரி உறுத்தக் கூடிய ஓர் அரியணை. அதன் வடிவமைப்பே அரச பதவி என்பது எத்தனை மோசமான வலி தரும் போதை என்பதை உணர்த்துவது போல்தான் இருக்கிறது. அந்தச் சிம்மாசனத்திற்குத்தான் ஏழு அரச  குடும்பங்களுக்குள் போட்டி. ரத்தம் தெறிக்க வெறியுடன் நடக்கும் ஒரு மஹா சமர்.

தொடரின் முக்கிய அம்சம் அதன் பிரம்மாண்டம். மிக அதிக செலவு செய்து எடுத்த தொடராக GOT இருக்கும் என யூகிக்கிறேன். இன்னொரு முக்கிய அம்சம் நடிகர்கள் தேர்வு. மிகையாகத் தோன்றினாலும் - வழிபோக்கனாய்க் கடப்பவனைக் கூட அழைத்து ஆஸ்கார் தரலாம் எனுமளவு அத்தனை கதாபாத்திரங்களும் பொருத்தமான நடிப்பு.

GOT தொடர் எனக்கு மிகப் பிடித்திருப்பதால் அதன் நிறை குறைகளைப் பட்டியலிட்டு விமர்சிப்பது என்பதை விடவும் அதில் என்னை ஈர்த்த கதாபாத்திரங்களை நினைவு கூர்வதன் வழியே தொடரை மறுபடி மானசீகமாகப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

*

(1)
ஏழு ராஜ்யங்களுக்குள்ளான‌ (Kingdoms) போட்டி என்பதுதான் கதை என்றாலும் முக்கியப் போட்டி ஸ்டார்க் (Stark) குடும்பத்துக்கும் லானிஸ்டர் (Lannister) குடும்பத்துக்குமானது என்றே மனம் பதிவு செய்து வைக்கிறது. முதலில் அறிமுகமாவது ஸ்டார்க் குடும்பம். நம்மை அவர்  குடும்பத்தில் ஓராளாய் ஆக்குமளவு அதன் தலைவர் நெட் ஸ்டார்க்கின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நேர்மை, அறம், வாக்குத் தவறாமை என ஓர் அரசனுக்கான சகல‌ தகுதிகளோடும் மின்னும் மனிதர். அவருக்குப் பின் அவர் குடும்ப வாரிசுகள் சிலரின் குணநலன்கள் மாறிப் போன போதும் கூட கடைசி வரை ஸ்டார்க் வம்சம் மீது நிலைத்து விடும் ந‌ம் மரியாதைக்கு நெட் ஸ்டார்க்தான் முக்கியக் காரணம். நெட் ஸ்டார்ட் ஆக நடிகர் ஷான் பீன் வந்து, வாழ்ந்து நம்மை அசைத்து விடுகிறார்.

(2)
இச்சண்டையில் “சிம்மாசனம் ஆதி முதலே எங்களுடையது” எனக் களமிறங்குகிறாள் டார்கேரியன் (Targaryen) வம்ச டனேரஸ். கம்பீரமும், வீரமும் உடன் நற்குணமும் கலந்து செய்த பாத்திர வார்ப்பு கலீசி. சிறிய உருவம், சிறிய முகம். அப்படியான தோற்றமுடைய ஒருவர் அழுத்தமான வசனங்களைப் பேச தன்னம்பிக்கையும், கம்பீர உடல் மொழியும் வேண்டும். கலீசியாக வரும் எமிலியா க்ளார்க்கிற்கு அந்த இரண்டும் வாய்த்திருக்கிறது. குருவி தலையில் பனம் பழம் போல் இருந்தாலும் ‘ட்ராகன்களின் தாய்’ எனும் கனமான கதாபாத்திரத்தைச் சிறப்பாக ஏற்று நிற்கிறார். எல்லாம் தாண்டி ஒரு கள்ளமற்ற‌ சிரிப்பு வாய்த்திருக்கிறது எமிலியாவிற்கு. அவரிடம் ஈர்த்தவற்றில் அச்சிரிப்பு முக்கியமானது!

(3)
அடுத்து ஆர்யா ஸ்டார்க். தொடர் தொடங்குகையில் சின்னஞ்சிறுமியாய் அறிமுகமாகும் பாத்திரம். வாட்சண்டையிலும் அம்பெய்வதிலும் ஆர்வம்மிக்க துடுக்குத்தனமான சிறுமி. துரோகங்களை எதிர்கொள்ளும் ஓர் எளிய மனமுடைய‌ சிறுமியை, அதன் இன்னல்கள் காலப்போக்கில் அழுத்தி ஓர் ஆக்ரோஷமான நாயகியாக‌ ஆக்குகிறது என்பதற்கான உதாரணம் ஆர்யா. பணிப்பெண்ணாக ஊடுருவும் ஆர்யா ஸ்டார்க்குக்கும் டைவின் லானிஸ்டருக்கும் நடக்கும் உரையாடல்கள் அத்தனை சுவாரஸ்யமானவை. ஆர்யாவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார் மெய்ஸி வில்லியம்ஸ்.

(4)
சான்சா ஸ்டார்க் பேராசையும், சுயநலமும் கொண்ட இயல்பான பெண் கதாபாத்திரம். எவ்வளவு மோசமான பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த அழகை ரசிக்கவே அத்தனை அழிவையும் சந்திக்கலாம் என்று நாம் எண்ணுமளவு ஓர் அழகு. GOT தொடரில் மிக அழகான பெண் இவர்தான். பூ மாதிரி எனப் பெண்களை தமிழில் வர்ணிப்பதுண்டு. சான்சா பூவேதான். அது தாண்டி அப்பாத்திரம் அசாத்திய உயரம் கொண்டிருக்கிறது. சான்சாவின் ஆங்கில உச்சரிப்பு கவர்கிறது. கோபமாய்ப் பேசினால் வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்று கருணையுடன் அவள் பேசுவது போலிருக்கிறது. அப்பாத்திரத்தில் அழகாக நடித்திருக்கும் நடிகையான‌ சோஃபியின் பெயருமே அழகாய்தான் இருக்கிறது.

(5)
நெட் ஸ்டார்க் இறந்த பிறகும் ஒரு விதத்தில் அவரது வாரிசுகளின் வழி அவரது குணம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். எதிரில் லானிஸ்டர் குடும்பத்தின் வாரிசுகளின் குணங்களில் டைவின் லானிஸ்டர் தெரிந்து கொண்டே இருப்பார். ஒரு வயதேறிய‌ பாத்திரத்தை இத்தனை ரசிக்க முடியுமா என நானே என்னைப் பல முறை கேட்டுக் கொள்ளுமளவு அத்தனை பிடிக்கும். (அதன் விளைவுதான் ரஜினி இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டும் என்ற என் ஆசை.) ஒல்லியான உயரமான உறுதியான தேகம். What a man! என வாய் பிளக்க வைக்கும் கம்பீரம். வசன உச்சரிப்பில் வேகம், ஸ்டைல். ஒரு காட்சியில் பத்து பேர் இருந்தாலும் நம் கண்கள் இவரைத் தாண்டி வேறெங்கும் பாராது எனுமளவு ஆளுமை. டைவின் அறிமுகமாகும் காட்சியே அட்டகாசமான உரையாடல். மானின் தோலை உரித்துக் கொண்டே மகன் ஜெய்மியுடன் அவர் உரையாடும் அந்த கணமே “யார்ரா இந்தாளு!” என நிமிர்ந்து அமர வைக்கிறார். இன்னும் பல காலத்திற்கு என்னைக் கவர்ந்த பாத்திரமாக டைவின் லானிஸ்டர் இருப்பார். இந்தப் பாத்திரத்தில் நடித்திருப்பவர் சார்ல்ஸ் டான்ஸ். ருத்ரதாண்டவமே ஆடித்  தீர்த்திருக்கிறார் எனலாம்.

(6)
செர்சி எனும் நீலாம்பரி. லானிஸ்டர் வம்சத்தின் மூத்த வாரிசு. தொடரின் எதிர்மறை கதாபாத்திரங்கள் பலவற்றை நாளடைவில் ரசிக்க முடிந்தது. அதாவது எதிர்மறைக் கூறுகளின் நியாயங்களோடு ஏற்க முடிந்தது. ஆனால் கடைசி வரை வெறுத்த ஒரு பாத்திரம் செர்சி! அதுவே அவரது நடிப்பின் வெற்றி. அவர் தண்டனை பெற்று தெருவில் நிர்வாணமாய் நடந்து வரும் காட்சி ஒன்று உண்டு. அதைப் பார்த்த பின் எப்படி அப்படி நடித்தார் என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. காரணம் நிர்வாணம் மட்டுமல்ல. அந்த நிர்வாண நடையில் அவரது முக பாவமும் உடல் மொழியும். அவமானம் உழன்ற அந்த உடல்மொழி, அதன் பின்னான பழிவாங்கலை ஆலோசிக்கும்  முகம் என மிரட்டி இருந்தார். லீனா ஹேடி இந்தப் பாத்திரத்தில் நடித்து இதற்கு நியாயம் செய்துள்ளார்.

(7)
நெட் ஸ்டார்க்கின் எல்லா நல்ல‌ம்சங்களும் கொண்ட வாரிசு ஜான் ஸ்னோ. “நீ எப்படியாவது ஜெயிச்சுடறா” என மனம் மன்றாடும் அளவு பிடித்த ஹீரோ. ஆனால் இறுதியில் வாரிசு என்பதே முக்கியத் திருப்பமாகிப் போகிறது. சரி, நல்லவர்களைப் பற்றி அதற்கு மேல் கூற என்ன இருக்கிறது! இதில் கிட் ஹாரிங்டன் நடித்திருக்கிறார்.

(8)
நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு - கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே. இன்னொரு நம்பிக்கையும் உண்டு. உயரம் குறைவானோர் அதிபுத்திசாலிகளாய் இருப்பர். ஆனால் இந்த‌ இரண்டுமே நம் இந்திய படங்களில் வெளிப்படாது. உயரம் குறைந்தவர்களை வில்லனாகவோ, அதிபுத்திசாலியான கதாபாத்திரமாகவோ காட்டாமல் பெரும்பாலும் நகைச்சுவை அல்லது கோமாளி கதாபாத்திரங்கள்தாம் அவர்களுக்கு கிடைக்கும் (ஒரே விதிவிலக்கு ‘அபூர்வ சகோதரர்கள்’ கமல்). அதிலும் கூட நடிகர் உண்மையில் உயரம் குறைவானவர் அல்ல. ஆனால் இத்தொடரில் வரும் டிரியன் லானிஸ்டார் ஆச்சர்யப்படுத்துகிறார். டிரியன் நல்லவர், புத்திசாலி, குடும்பத்தால் வஞ்சிக்கப்படுபவர், காதலியால் துரோகம் இழைக்கப்படுபவர். இத்தனையும் தாண்டி பிழைத்திருக்க அவர் கையாளும் திட்டங்களும் புத்தி கூர்மையும் தொடர் நெடுக நம்மை வசீகரிக்கின்றன. ஆங்காங்கே இவர் அள்ளித் தெளிக்கும் பன்ச் டயலாக்குகள் சுவாரஸ்யம். எனக்கு பிடித்த எல்லா கதாபாத்திரங்களுடனும் டிரியன் பயணிக்கிறார். உதவுகிறார். இதில் நடித்திருக்கும் பீட்டர் டிங்க்லஜின் குரலும் கூடுதல் வசீகரம். அந்த உச்சரிப்புகளைக் கூட பெரும்பாலும் முக பாவத்திலேயே புரிய வைத்து விடுகிறார்.

(9)
ஜெய்மி லானிஸ்டர் இரட்டையராய் பிறந்த சகோதரியுடன் பிறழ் உறவு கொண்ட முகம் சுளிக்க வைக்கும் கதாபாத்திரமாக அறிமுகமாகிறார். கண்டதுமே வெறுக்கும் அளவு பிடிக்காமல் பார்க்க தொடங்கிய ஒரு கதாபாத்திரம் தொடர் நகர நகர தனக்குள் இருக்கும் நல்ல பண்புகளை சூழ்நிலைகளால் வெளிக் கொணர்கிறார். ஜெய்மிக்கும் ப்ரையனுக்குமான நட்பு அல்லது மெல்லிய ஈர்ப்பு அழகான கோடு. தன் அத்தனை நல்ல குணங்களையும் சகோதரியுடனான காதலின் காலடியில் வைத்துச் சரணடைந்து சாகிறார். டிரியன் தன் சகோதரனிடம் கூறும் ஒரு வசனம் இந்தக் கதாபாத்திரத்தின் சாரத்தை ஒற்றை வாக்கியத்தில் வெளிப்படுத்தும் - “நீ செர்சியிடம் ஏமாறவில்லை, அவள் ஏமாற்றுக்காரி என்பது தெரிந்தேதான் காதலித்தாய், காதலிக்கிறாய்”. தன்னை பயன்படுத்திக் கொள்வது தெரிந்தும் காதலுக்காக தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒரு கதாபாத்திரம். நிக்கோல் காஸ்டர்-வால்டவ் என்பவர் இப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

(10)
இந்த முக்கியமானவர்கள் தாண்டியும் ஏகப்பட்ட பாத்திரங்கள் எனக்குப் பிடித்திருந்தன‌. அதில் என்னை மிகக் கவர்ந்தவர் சர் ஜோரா. இன்னொருவர் சர் டோவஸ். மார்கரியின் பாட்டியாக வரும் பெண்மணியும் மிகப் பிடித்திருந்தது. கொடூர சைக்கோ பாத்திரமான ராம்சேவை பற்றி எழுதக் கூட பிடிக்கவில்லை என்னுமளவு சிறப்பாக‌ நடித்திருக்கிறார்.

*

நான் புரிந்து கொண்ட வரை Game of Thrones-ல் நல்லவர் - கெட்டவர் என்பதை விடவும் நல்லவை, கெட்டவவை பற்றிப் பேசுகிறது. துரோகம், கீழ்மை, அதனூடே வெளிப்படும் மனிதம் எல்லாம் கலந்ததுதான் மானுடம் என்ற கருத்து தொடர் நெடுகிலும் கடத்தப் பட்டுக் கொண்டே இருக்கிறது. அரச‌ பதவி என்பது தலைக்கு மேலேயும், இருக்கைக்கு கீழேயும் கத்திகளுடைய ஓர் அதிகார இருக்கை என்பதும் நமக்கு நன்கு உறைக்கிறது.

GOT ஒரு கதை என்பதை விட ஓர் அனுபவம் என்றே சொல்வேன். நிச்சயம் பார்க்கலாம்.

(பின்குறிப்பு: எண்ணற்ற நிர்வாணக் காட்சிகளும், வன்முறைக் காட்சிகளும் உண்டு.)

***

ராவணக் கற்பு

24 December 2022 at 11:26


1

தூர தேசமோ
அருகிருக்கும் சிற்றுரோ
வாகனப் பயணங்களின்
வலியும் அசதியுமாய்
வீடடைந்து கால் நீட்டி
வெயிலை வெறிக்கையில்
சின்னஞ்சிறு பறவை
பல ஊர் வானம் கடந்து
கீச்சிட்டபடி  பறக்கிறது

அடுத்தொரு வானத்திற்கு
இறகுகளுக்கு இளைப்பாறல்
பறத்தல் தான் போலும்.

*

2

தந்தை தோளிலிருந்து
இறங்கிய நாள் முதல்
பாரம் சுமக்கத் தொடங்கி
சுயம் தொலைத்தவன்

மற்றொரு தோளுக்கான
கண்ணாமூச்சி ஆட்டம்
வாழ்நாள் ஏக்கமாகக்
கண்களில் ஒளிந்திருக்கும்
 
பாரங்கள் இறக்கி வைத்த
ஒரு புனித நன்னாளில் 
அவனைச் சுமக்கின்றன
நான்கு தோள்கள்.

*

3

சிறிய வீட்டிற்குள்
தவறி நுழைந்து விட்ட‌
பட்டாம்பூச்சி ஒன்று
படபடத்து முட்டி மோதுகிறது
 
யன்னல் திறந்த கணம்
வெடித்த பலூனில் 
அடைந்திருந்த‌ காற்றாக‌
எகிறிச் சிறகடிக்கிறது
 
இந்த உடலின்
எந்தச் சன்னல் திறந்தால்
வெளியேறிப் பறக்கும்
உயிர் பட்சி!

*

4

பறவைகள் பரிதாபம் கொள்ளும்
இறகுகள் இல்லாதவனென்று

நாய்கள் நக்கலாய்ச் சிரிக்கும்
நான்கு காலற்ற‌ ஊனமென்று

நீரில் நீந்திக் களிப்பவனிடம்
மீனும் பாவப்படும் செதில் இல்லையென‌

தாவரம் கூட நினைக்கலாம்
நடந்தே சாகும் நரகப் பிறவியென‌

மனிதன் சொல்லிக் கொள்கிறான்
படைப்பில் உசத்தி என்று.

*

5

சொர்க்கமே என்றாலும்
கிடைத்த பின்
அலட்சியம் வருகிறது

காரணம் கேட்டால்
கிடைத்த பின்பே
அறிதல் வருகிறது

உண்மையில் 
எதுவும்
சொர்க்கமில்லை.

*

6

பத்து மூளைகளாலும்
இருபது கண்களாலும்
காதலித்தவனுக்கு
ஓருடலால் காமம் கொள்வதா
இயலாத காரியம்?

அது ராவணக் கற்பு!

*

7

எந்தக் குழந்தையாவது
'எப்போது கல்யாணம்' என்கிறதா?
எந்தக் குழந்தையாவது
'என்ன சம்பளம்' எனக் கேட்குமா? 
எந்தக் குழந்தையாவது
'ஏதாவது விசேசமா' என இளிக்கிறதா? 
எந்தக் குழந்தையாவது
'அவனோடு இவளுக்கு தொடர்பு' என கதைக்கிறதா? 

அடுத்த வீட்டினரிடம்
சாக்லேட் கேட்ட குழந்தையிடம்
'இது இங்கிதம் இல்லை'
என அறிவுரை சொல்வோரே!

*

8

நேரமின்மை மனமின்மை  
வேறு பணி உடல் பிணி
சோர்வு களைப்பு

இன்னும் எத்தனையோ
புனைப் பெயர்கள்
சோம்பலுக்கு

செயலுக்கு
ஒரே செல்லப் பெயர் -
வெற்றி.

*

9

இத்தனை வலி தந்து
பிறந்த பிள்ளையை
எத்தனை வெறுக்க வேண்டும்
அன்னை!

இத்தனை வலி தந்து
பெற்றவளை
எத்தனை விலக வேண்டும்
பிள்ளை!

பிறவியே முரண்!

*



ஒரு டஜன் காதல்

14 February 2022 at 08:33

01

ஆக்ரமிப்பென‌ அகற்ற முற்பட்டாலும்
வசதிமிக்க மாற்றிடம் கிட்டினாலும்
வெளியேறு என மிரட்டல் வந்தாலும்
நகர மறுத்துப் பிடிவாதம் காட்டும்
காதல் ஒரு பூர்வகுடி! 

*

02

ஆகாய‌த்தின் விரிவு
ஆழியின் ஆர்ப்பரிப்பு
தணலின் சுடர்
ஊதையின் குளிர்
ஞாலத்தின் ஈர்ப்பென

எல்லா உவமையிலும்
பொருந்திப் போகும்
இந்தக் காதலுக்கு 
இன்னும் துல்லியமான‌
வர்ணனை இருக்கிறது

காமத்தின் கனி.


*

03

அது அப்படித்தான்.

ஒரு கேலியிலோ
ஒரு வசவிலோ
ஒரு சண்டையிலோ
ஓர்  ஆறுதலிலோ
ஏன் ஒரு பிரிவிலோ கூடத்
துளிர்த்து மலர்ந்திடும் காதல்.

சமயத்தில் இன்னொரு காதல்.

*

04

நீ ஆறுதல் கூறியதே இல்லை;
தீர்வுகளே  உன் தேர்வு.

உன் ஆறுதலுக்கு ஏங்கும்
என் ஆசைக்கு என்ன தீர்வு?

*

05

தரை தொடுவதைப் போல்
பாசாங்கு காட்டித் தாழப் பறந்து,
வெடுக்கென இரை பிடித்து
மேல் எழும்பும் வல்லூறு போல் 
மேனி தழுவிப் பறக்கிறது
உன் காதல் கண் சுடர்

இரை பாழாய் போன
இந்த மனம்தான்.

*

06

கடவுளைப் போலவே
இல்லாக் காதலை 
காலங்காலமாய்ச்
சுமக்கிறது மானுடம்

கடவுளைப் போலன்றி
மாபெரும் மானுடத்தை 
யுகங்களாய்க் காக்கிறது
இல்லாத பொல்லாத காதல்.

*

07

உன் தேகத்துக்கு
இரவின் நிறம்
உன் சிரிப்புக்கு
கள்வனின் குணம்
உன் அறிவுக்கு
நீரின் தெளிவு
உன் காமத்திற்கு
அருவியின் வேகம்  
உன் காதலுக்கு
மருதாணியின் வாசம்

உனக்கு
என் தோஷம்.

*

08

காதல் தோல்வித் தழும்பு தேடி
நினைவுகள் வருடுவதென்பது
புண்ணைச் சொறிந்து கொள்ளும்
ரணத்திற்கும் சுகத்திற்கும்
சற்றும் குறைவில்லாதது.

*

09

எருமைக்கும்
தங்கத்திற்கும்
ஒரே அர்த்தம்தான்
செல்லப்பெயர் அகராதியில்.

*

10

சென்ட்டுக்கும் ப்ளூ டிக்குக்கும்
இடைப்பட்ட நொடிகள்
தசாப்தம்;
ப்ளூ டிக்குக்கும் டைப்பிங்குக்கும்
இடைப்பட்ட கணங்கள்
நூற்றாண்டு;
டைப்பிங்குக்கும் மெசேஜ் வருவதற்கும்
இடைப்பட்ட பொழுது
முழு யுகம்.

*

11

கையாலாகாத கோபத்தைப்
பிள்ளை மேல் காட்டும்
இளந்தாயைப் போல்
தரவியலா முத்தங்களை
நான் அள்ளிக் கொள்ளும்
எல்லாக் குழந்தைகளுக்கும்
தாரை வார்த்துக் கிடக்கிறேன்.

*

12

சொன்னால் வெட்கக்கேடு -

இழவு நிகழ்வொன்றில்
நீ சுமக்க முனைந்த
பூத உடல் கண்டபின்
செத்துப் போக
ஆசைப்பட்டேன்.

***

அம்மாச்சி - 2

10 December 2021 at 06:24

பிள்ளையைத் தனியே விட்டு
எங்கும் செல்லாத் தாயொருத்தி
எத்தனை தொலைவெனினும்
இடுப்பில் ஏற்றுத் திரிவாள்

சுமக்கின்ற‌ எடையைக்
குழந்தை கடந்த பருவத்திலும்
தரதரவெனக் கை பிடித்து
இழுத்தபடி அலைவாள்

என்றேனும் தவிர்க்கவியலாமல் 
அக்கம் பக்கம் விட்டுப் போனால்
காலில் வெந்நீர் ஊற்றியதாக‌ச்
சென்ற‌ வேகத்தில் திரும்புவாள்

எவரேனும் கேலி பேசினால்
சிரித்தபடி மழுப்புவாள் -
'நானில்லாட்டி அடங்காது கழுதை,
அழுது ஊரைக் கூட்டும்'

தாய் வரும் தினங்களில் மட்டும்
'அம்மாச்சிகிட்டயே இரு' என
ஆயிரம் முறை சொல்லி விட்டு
அரைநிம்மதியாய்க் கிளம்புவாள்

'ஊர்ல இல்லாத புள்ளயப் பெத்துட்டா'
அம்மாச்சி முறுவலுடன்
பேத்தியைக் கொஞ்சியபடி
மகளை நொடிப்பாள்

'உன் பேத்தி இருக்கே..'
என்று ஆரம்பித்து
புகார்களையே பெருமைகளாய் 
அடுக்குவாள் மகள்

'நீ இருந்த இருப்பு தெரியாதா..'
எனப் பதிலுக்கு
அம்மாச்சியும் சளைக்காமல்
அட்டவணை போடுவாள்

அம்மாச்சியைத் தவிர
யாரையும் நம்பாத மகராசி
தீ விபத்தொன்றில்
உயிரை அலைக்கழித்துக் கிடந்தாள்

'இனி பிழைக்க வாய்ப்பில்லை'
என மருத்துவர் சொல்லக் கேட்டு
சுற்றம் அழுதரற்றிய‌படி
மருத்துவமனையில் காத்திருக்க

சேதி கேட்டு அலறி ஓடி வந்த
அம்மாச்சி பேத்தியை
அணைத்து அழத் தொடங்கியதும்
கண் மூடிச் செத்துப் போனாள்.

*

அம்மாச்சி - 1

9 December 2021 at 03:32

அம்மாக்களின் அம்மாக்களை
அம்மாச்சி என்கிறார்கள்

அம்மாச்சிகளிடம் வளர்பவர்களுக்கு
ஒரு முன்கதை இருக்கும்

படிக்கும் பள்ளிக்குத்
தொலைவாய் வீடிருப்பது

அம்மா அப்பா இருவரும்
வேலைக்குப் போவது

அப்பாவின் வருமானம்
போதாமை அல்லது இல்லாமை

மேய்க்க இயலாத அளவு
பிள்ளைகள் பெற்றிருப்பது

பிள்ளை பேண அறியாப்
பிராயத்தில்  தாயாவது

அப்பாவைப் பிரிந்த
அம்மாவின் மறுதிருமணம்

நிறைய வலிக்காத‌
இவை போக‌

அம்மாவை இழந்த பிள்ளை
என்பதும் காரணமாக‌ இருக்கலாம்

அப்படித்தான் உண்டாகி இருக்க வேண்டும்
'அம்மாச்சி' என்ற பெயர்

அம்மாவின் இடத்திலிருந்து
ஆட்சி செய்பவள்!

*

சாகாவரம் - 3 [சிறுகதை]

24 November 2021 at 04:30
சாகாவரம் - 1: https://www.arattaigirl.com/2021/11/1.html
சாகாவரம் - 2: https://www.arattaigirl.com/2021/11/2.html

10

குமரேசனுக்கு உலகில் உள்ள எல்லோர் மீதும் பரிதாபம் பிறந்தது. சாகப் போகிறவர்கள் என்ற இரக்கம் பிறந்தது. நாமும்தான் என்று கழிவிரக்கம் வந்தது. யாரிடமும் எதிர்த்துப் பேசாத இயல்புக்கு விரும்பியோ விரும்பாமலோ மாறினான். அம்மாவிடம் தன் மனதைச் சொல்ல முயன்று தோற்று  ஒரு கட்டத்தில் அவளிடம் தன்னை மறைக்க ஆரம்பித்தான்.

வீட்டின் தன் ஆஸ்தான‌ மூலையில் பதுங்கி கொள்வது பாதுகாப்பாய்த் தோன்றியது. சதா அவன் மனம் இறப்பையே தியானித்துக் கொண்டிருந்தது. சாகாவரம் பெறுவது எப்படி என யோசிக்க ஆரம்பித்தான். அதை யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. 

சுமதி அவனைக் கவனித்தாள். கவலைப்பட ஆரம்பித்தாள். அக்கம் பக்கம், அலுவலகம் என விசாரித்து இது ஏவல் எனத் தீர்மானித்து மந்திரவாதியைப் பார்க்கப் போனார்கள்.


'எப்பவும் இப்படியே இருக்கியே. சும்மா பார்த்துட்டு வரலாம். மந்திரிச்சா சரியாவும்.”

மறுத்த குமரேசனை சமாதானம் செய்தும் வற்புறுத்தியும் மிரட்டியும் கூட்டிப் போனாள்.

குமரேசனின் நடவடிக்கையைச் சொன்னாள் சுமதி. கண்களில் கண்ணீர் முட்டியது கரடு முரடான தோற்றத்தில் இருந்த மந்திரவாதி குமரேசனிடம் தன்மையாக உரையாடினார்.

“உனக்கு பயமா இருக்கா?”

“இல்ல.”

“ஏதாச்சும் உருவம் கண்ணுக்குத் தெரியுதா?”

“இல்ல.”

“உங்கிட்ட யாராவது பேசறாங்களா?”

"இல்ல."

“நீ யார்கிட்டயாச்சும் பேசறியா?”

“இல்ல.”

அது பயனில்லை எனத் தோன்றியதோ என்னவோ சுமதியை பார்த்துக் கேட்டார்.

"காய்ச்சல் வருதா?"

“அப்படிலாம் இல்லைங்க. ஆனா தனியா போய் உட்கார்ந்துக்கறான். திடீர்னு ராத்திரில எழுந்து உக்காந்து எதோ கணக்குப்  போடறான்.  புள்ளைக்கு சாப்பாடு தூக்கமே சரியா இல்லாம ஆய்டுச்சுங்க, எப்போவும் நிம்மதி இல்லாம சும்மா அனத்திட்டே இருக்கான்.”

மந்திரவாதி குமரேசனை உற்றுப் பார்த்தார். பிறகு ஏதோ வாயில் முணுமுணுத்தார்.

“இது ஏதோ தப்பாத்தான் தெரியுதும்மா. பையன் தனியா இருக்கான்னா, எதோ துஷ்ட சக்தியை பார்த்து பயந்துருக்கான். அதோட பாதிப்புதான், பரிகார பூஜை செய்யணும்."

"என்ன செய்யணுங்கய்யா?"

பத்தாயிரம் செலவுக்குப் பட்டியல் சொன்னார். சுமதி தயங்குவதைப் பார்த்து விட்டுச் சில விஷயங்கள் தவிர்த்தால் ஐயாயிரத்துக்கும் முடியும், ஆனால் பையனுக்கு ஆபத்து என்றார். இறுதியில் ஏழாயிரத்துக்குப் பரிகாரம் முடிவானது. முன்பணம் கொடுத்தாள்.

அன்று உறக்கத்தில் மந்திரவாதி கேட்டது போல் சில கேள்விகளை யாரோ காதில் வந்து பேசினார்கள். ஒரு பெண் குரல் ‘எல்லாம் சரி ஆகிடும்’ என்றது. நிம்மதியாய் புன்முறுவல் பூத்தவனிடம் ' இல்ல‌, எல்லாரும் செத்துருவோம்' என்றது இன்னொரு குரல். திடுக்கென விழித்தான். கனவா என்று நிம்மதி ஆவதற்குள் திரும்ப காதுக்குள் 'ஆமா, செத்துருவோம்' என்று  மெல்லிசாய் ஒரு சப்தம் கேட்டது. கண் மூடி அம்மாவை இறுக்கிக்  கொண்டான்.

குமரேசனுக்கு இன்னொரு குழப்பம் வந்தது - ‘மந்திரவாதியும் ஒரு நாள் செத்துருவார்ல!’

*

11

அமாவாசையன்று மந்திரவாதி இரண்டு பை நிறைய பூஜைக்கான பொருட்களுடனும் ஓர் உதவியாளருடனும் வந்தார். உதவியாளர் ஒரு வளர்ந்த ஆட்டைக் கூட்டி வந்தார். அதைப் பார்த்ததும் குமரேசனுக்கு சுடுகாட்டில் தலை திருகப்பட்ட‌ சேவல் நினைவுக்கு வந்தது. 

குமரேசனை அமர வைத்து திருநீறு பூசினார் சாமியார். அவன் முன் செங்கற்களை அடுக்கி ஹோமம் வளர்த்து கண்கள் மூடி தியானம் போல் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தார். திடுமென சப்தமாக  மந்திரங்கள் ஓதத் துவங்கினார். குமரேசன் கவனம் அந்த மந்திரங்களில் செல்லவில்லை. அவன்  கண்கள் ஆட்டையே பார்ந்திருந்தன‌.

தீ வளர்ந்து புகை கனிந்து கண் எரிந்தது. என்னவோ பயமாக இருந்தது. வியர்த்தது.

இறுதியில் வீட்டு வாசலுக்குச் சென்று ஒரு சின்னக் கத்தி கொண்டு உதவியாளர் ஆட்டின் கழுத்தை அறுத்தார். சுமதி குமரேசன் கண்களைத் தன் உள்ளங்கையால் பொத்தினாள்.

ஆட்டின் துடிதுடிக்கும் கதறல் காதுகளில் தேய்ந்தது. மெல்ல அதன் உயிர் அடங்கியது.

"எல்லாம் சரியாய் போச்சு. இனி பையனுக்கு ஒரு கஷ்டமும் இல்லை." 

மந்திரவாதி குமரேசன் நெற்றியில் திருநீறு இட்டார். தலையில் கொஞ்சம் தெளித்தார்.

சாமியார் கிளம்பி செல்லும்போது அந்த‌ ஆட்டின் உடலையும் தலையையும் எடுத்துக் கொண்டார். அது ஆவி புகுந்த‌ தீட்டு, புதைத்து விட வேண்டும் என்று விளக்கம் போல் சொன்னார். சுமதி தலையாட்டினாள். மீதித் தொகை வாங்கிக் கொண்டு கிளம்பினார்.

இரு தினங்களுக்கு அதிர்ச்சியும் ஆட்டின் நினைப்புமாகவே கழிந்தது குமரேசனுக்கு. தனக்கு என்ன சரியானது என்று புரியவில்லை. இப்போதும் எல்லாரும் சாகத்தானே போறோம் என்று நினைத்தான். ஆடு துடித்து இறந்த ஒலியைக் கேட்டதில் இருந்து இன்னுமே அதிகமாய் மரணத்தின் நினைவு வருவதாய் அவனுக்குத் தோன்றியது.

சாகாவரம் பெறுவது பற்றி அந்த மந்திரவாதிக்குத் தெரிந்திருக்குமா என யோசித்தான்.

*

12

திடீரென அவனுக்கு அந்த எண்ணம் வந்தது. ஏன் மரணத்துக்கு இப்படிக் காத்திருக்க வேண்டும்? மாறாக நானே அதை நான் விரும்பிய வடிவில் அடைந்தால்? எப்போது போவோம், நோய் வாய்ப்பட்டு இறப்போமா, வலியில் துடிப்போமா என்ற பயங்களில் இருந்து நிரந்தர விடுதலை தரும் தீர்வைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கையிலிருக்கிறது.

அம்மா வருந்துவாள். ஆனால் சனிக்கிழமையைத் தேர்வு செய்து இறந்து போனால் சீக்கிரம் அம்மாவும் தன்னுடன் வரக் கூடும். இத்தனை எளிய வழி இருந்துமா தான் இவ்வளவு நாளும் குழம்பி வருந்தி உழன்றோம் என்று ஆயாசமாக இருந்தது அவனுக்கு.

எல்லாம் தெளிந்தது போல் இருந்தது, சாவதற்கான எளிய மார்க்கத்த யோசிக்கத் துவங்கினான் குமரேசன். விஷம், தூக்கு, மாடியிலிருந்து குதித்தல், பஸ் அல்லது லாரி முன் பாய்வது… எது சுலபம் என யோசித்தான். ரோட்டில் விழுந்து நசுங்கி மரணிப்பது நினைக்கவே கொஞ்சம் கோரமாகவும் வலி மிகுந்ததாகவும் தோன்றியது. விஷம் தான் சுலபம். சாணிப் பவுடர் குடித்து மரணம் என்ற செய்தியை அடிக்கடி கேட்டிருக்கிறான். 

அதை முயற்சிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான். சனிக்கிழமைக்காகக் காத்திருந்தான்.

வெள்ளிக்கிழமை வீடு மெழுகவென சாணிப் பவுடர் வாங்கி வந்தபோது ஒரு பாக்கெட் அதிகம் வாங்கி மறைத்து வைத்தான். வாசல் மெழுகின போது பச்சை வண்ணத்தை வெறித்து பார்த்தான். இத்தனை நாள் பசுமையாய் தெரிந்த வண்ணம் இன்று பயமாய் இருந்தது. வயிற்றுள் சென்று குடல் முழுவதும் இந்த வண்ணம் பரவும் என்று கற்பனை செய்து பார்த்தான். இனி இதெல்லாம் யோசிக்க கூடாது. இந்த யோசனைகள் மனதை மாற்றி  விடக்கூடும். இன்று ஒரு நாள் அம்மாவுக்குப் பிடித்த மாதிரி, எல்லோருக்கும் பிடித்த மாதிரி, எனக்குப் பிடித்த மாதிரி சந்தோஷமாக இருந்து விட வேண்டும்.

பழைய குமரேசனாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித்தான். எல்லாச் சிந்தனையும் ஒதுக்கி வைத்து மலர்ந்து சிரித்தான். கண்ணாடியில் அவனைப் பார்க்க அவனுக்கே அத்தனை அழகாய் தெரிந்தான். காலையில் குளித்து நன்கு சாப்பிட்டான். கவலை இல்லாத அவனது முகத்தில் குழந்தைமை மீந்திருந்தது. மந்திரவாதியின் பரிகாரப் பலன் என்று தோன்றியது சுமதிக்கு. வாஞ்சையுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.

மறுநாள் விடிந்தது. சனிக்கிழமை அவனை அன்போடு வரவேற்றது.‍ குளித்துத் தன் இறுதி நாளுக்குத் தயாரானான். அதை முன்பே கணித்தாற் போல் அம்மா அன்று அவனுக்குப் பிடித்த பூரி கிழங்கு செய்திருந்தாள். கண்கள் பனிக்கத் தின்று முடித்துக் கிளம்பினான்.

"அம்மா, விளையாடிட்டு வரேன்மா.”

*

13

மைதானத்துக்குப் போகும் முன் பிரவீனா வீட்டுக்குப் போனான். தூங்கிக் கொண்டிருந்த அவளது நெஞ்சில் காது வைத்துக் கேட்டான். இதயம் துடித்தது. அவனை வினோதமாகப் பார்த்தாள் பாப்பாவின் அம்மா. புன்னகைத்து குழந்தைக்கு முத்தமிட்டுக் கிளம்பினான்.

நெடுநாள் கழித்து வருகிறான் என்பதால் எல்லோரும் குமரேசனைக் கை கொடுத்தும், கட்டித் தழுவியும், புன்னகையுடனும், விளையாட்டாக‌ முதுகில் அடித்தும் வரவேற்றனர்.

மைதானத்திற்குச் சென்றதும் மகேஷ் அண்ணன் தான் முதலில் நினைவுக்கு வந்தான். ஒரு நொடி தலையை உதறி, ‘நாமும் அப்படித்தானே இன்று போய்ச் சேரப் போகிறோம். இப்போ எதுக்கு அதெல்லாம் நினைச்சுகிட்டு’ என்று விளையாட்டில் கவனமானான்.

மைதானத்திற்குள் கிழவி ஒருத்தி நுழைந்தாள் . மெல்லிய தேகம் என்று சொல்லக் கூடத் தாளாமல் வளைந்து விடக் கூடிய அளவு மெல்லிய தேகம். இடுப்பில் ஆரஞ்சு பழங்கள் நிறைந்த கூடை. அவள் முதுமைக்கு அந்தப் பாரம் அதீதம். முகம் முழுக்கச் சுருக்கங்கள். சூம்பிப் போன கை, கால்கள். ஜாக்கெட் அணியாத வெற்று மார்பு. மிக‌ வளைந்த முதுகு.

கூடையைச் சுமக்க இயலாம‌ல் சுமந்தபடி வளைந்த நிலையிலேயே நடந்து வந்தாள்.

நேரம் நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது. வெயில்  எரிமலைக்  குழம்பை எடுத்து ஊற்றுவது போல் மேனியை எரித்து கொண்டிருந்தது. வியர்த்து வழிந்த முகத்துடன் கிழவி மரத்தடியில் அமர்ந்தாள். பந்து எடுக்க ஓடி வந்த குமரேசன் அவளைப் பார்த்தான்.

‘இவங்களுக்கு என்ன வயசு இருக்கும். இன்னும் எவ்ளோ நாள் உயிரோட இருப்பாங்க?’ -
 வழக்கமான கேள்வி புத்தியில் எழுந்து விகாரமாய் சிரித்தது. உடனே தலை சிலுப்பி அந்த எண்ணத்தைத் தள்ளி போட்டு விட்டு பாட்டியைப் பார்த்துப் பரிவாய்ச் சிரித்தான்.

"ஆரஞ்சு வாங்கறியாப்பா?”
 
"பாட்டி, என்கிட்ட அஞ்சு  ரூபாதான் இருக்கு அதுக்கு எத்தனை பழம் கிடைக்கும்?"

"அஞ்சு ரூபாக்கு என்னனு சாமி தரது.. இந்தா இந்தப் பழத்தை  சாப்பிடு. காசு வேணாம்."

சிறிய ஆரஞ்சு ஒன்றை நீட்டினாள். குமரேசன் அதை வாங்கிக் கொண்டு சொன்னான்.

"பாட்டி பழத்துக்காக இல்ல‌. உங்களுக்காகத்தான் வாங்க நினைச்சேன். இந்தாங்க காசு."

சட்டைப் பையில் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நீட்டினான். கிழவி ஒன்றும் பேசாமல் வாங்கி கொண்டாள். குறுகுறுப்புத் தாங்காமல் அக்கேள்வியைக் கேட்டான். 

"உங்களுக்கு என்ன வயசு இருக்கும்?”

"அதெல்லாம் அந்தக்  காலத்துல யார் குறிச்சு வச்சா? எண்பது இருக்கும்.”

"ஏன் இந்த வயசுல இவ்ளோ கஷ்டப்படறீங்க? வீட்லயே இருக்கலாம்ல?”

"உடம்புல தெம்பு இருக்கற வரை முடியற வேலைய செஞ்சுட்டே இருக்கணும். சும்மா கிடக்கறது மாதிரி துயரம் உலகத்துல இல்ல. கண்டதும் யோசிச்சு கிறுக்காகிடுவோம்.”

பாட்டி தன்னைப் பற்றித்தான் சொல்கிறாளோ என்று சந்தேகம் வந்தது குமரேசனுக்கு.

முதலில் பேட்டிங் செய்த அணி அவுட் ஆகி இருந்தது. இடைவேளையில் பையன்கள் கிழவியிடம் ஆரஞ்சுச் சுளைகள் வாங்கிச் சாப்பிட்டார்கள். குமரேசன் எல்லாவற்றையும் நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

கிழவி கிளம்பினாள். கூடையைத் தூக்கித் தலையில் வைத்துத் திரும்புகையில் ஒரு பக்கமாய் அப்படியேச்  சரிந்தாள். அருகே நின்றிருந்த‌ குமரேசனுக்கு ஒரு கணம் பதற்றமும் பயமும் சூழ்ந்தது. விழப் போன பாட்டியை அப்படியே தாங்கினான்.

“ஐயோ பாட்டி…"

அவன் போட்ட கூச்சலில் மற்ற சிறுவர்களும் குழுமி விட கிழவியைப் படுக்க வைத்தனர்.

மயங்கி சரிந்த கிழவியின் கண்கள் மூடி மூடி திறந்தன. வாய் திறந்து ஏதோ சொல்ல வருவது போல் தோன்றியது குமரேசனுக்கு. ஒரு கணம் அப்படியே பாட்டியை கீழே போட்டு விட்டு ஓடி விட மனம் பரபரத்தது. பயமாய் இருந்தது. மாடு, மகேஷ் அண்ணா, கண் தெரியாத தாத்தா, சேவல், ஆடு என‌ எல்லாரும் கண் முன் வந்தனர். நிச்சயமாய் இன்னும் சற்று நேரத்தில் இந்தப் பாட்டியும் தன் மடியில் உயிர் விடப் போகிறாள்.

*

14

பயத்தில் குமரனுக்கு நா வறண்டது.  யாரிடமும் அவசரத்திற்குத் தண்ணீர் இல்லை. கோடை காலத்தின் காரணமாக கொண்டு வந்திருந்த பாட்டில்கள் எல்லாம் காலி.

இரண்டு  பையன்கள் அருகிருந்த வீட்டிற்கு தண்ணீர் வாங்க ஓடினர். சட்டென குமரேசன் கையிலிருந்த ஆரஞ்சை உரித்து கிழவி வாயில் சுளையை வைத்தான். அவள் மெல்லும் நிலையில் இல்லை. அடுத்த சுளையை எடுத்துப் பிழிந்து சாறை அவள் வாயில் விட்டான். 

"டேய் குமரா… என்னடா பண்ற? பசங்க‌ பெரியவங்கள கூப்பிட போயிருக்காங்க‌. வரட்டும்டா. அதுக்குள்ள‌ ஏதாச்சும் பண்ணிட்டு இருக்காத. கொஞ்சம் பொறு.”

"அவங்க வரட்டும்டா. அதுக்குள்ள கொஞ்சம் தண்ணியா ஏதாச்சும் கொடுப்போம்."

மூன்று நான்கு சுளைகளை பிழிந்து  ஊற்றிய பின் கிழவி தெளிவாய்க் கண் திறந்தாள் . இன்னும் இன்னும் எனச் சைகையில் மேலும் சில சுளைகளைக் கோரினாள். ஊட்டினான்.

பாட்டி மெல்ல எழுந்து அமர்ந்தாள். குமரேசனின் கன்னம் கிள்ளி முத்தம் கொஞ்சினாள். 

"எப்பிடி உனக்கு இந்த யோசனை வந்துச்சு?"

அதற்குள் பையன்கள் தண்ணீர் பாட்டில் சகிதம் வந்தனர். தண்ணீரை வாங்கி குடித்து மேலும் தெம்பானாள் கிழவி. பெரியவர்கள் சிலரும் வந்து கவனிக்க ஆரம்பித்தனர்.

"எனக்கு சக்கரை வியாதி  இருக்குப்பா. அப்பப்போ சர்க்கரை குறைஞ்சு மயக்கம் வரும். எதுனா முட்டாயோ ஜூஸோ க்ளுக்கோஸோ சாப்பிட்டா  சரியாய் போவும். இன்னிக்கு வெயில் உக்கிரமா இருக்கவும் களைப்பும் சேர்ந்துருச்சு போல. அதான் விழுந்துட்டேன்.”

குமரேசனுக்கு நன்றி சொன்னாள். கிழவிக்கு சரியாகி விட்டது தெரிந்ததும் பையன்கள் விளையாட்டைப் பார்க்கக் கிளம்பினர். சற்று நேரம் உட்கார்ந்திருந்து விட்டு எழுந்தாள்.

“அந்தக் கூடையை எடு, சாமி…"

“ஏன் பாட்டி இப்பவே போகணுமா? திரும்ப ஏதும் ஆகிட்டா?”

“இதெல்லாம் பழகிருச்சுப்பா. அடிக்கடி வரும். நானாவே சரி செஞ்சுப்பேன். இல்லைனா உன்ன மாதிரி யாராவது  அந்த நேரத்துல சாமியாட்டம் வந்து உதவுவாங்க. சாமின்னு தனியா ஏதும் இருக்கா என்ன? உதவற‌ மனுசங்க தான் சாமி. நானே போயிருவேன்.”

“உங்களுக்கு சாவு பத்தி எல்லாம் பயமில்லையா பாட்டி?”

“பயந்து? அதைய மாத்த முடியுமா? நிறுத்தத்தான் முடியுமா? நாம ஒரு விஷயத்துக்கு பயப்படறோம், கவலைபடறோம்னா அதுல ஒரு பிரயோசனம் இருக்கனும். நம்மால மாத்தவே முடியாத ஒரு விஷயத்தை பத்தி கவலைப் படறது எதுக்குப்பா? இப்போ நீ ஆரஞ்சு குடுப்பேன்னு நீயும் நினைக்கல நானும் நினைக்கல. ஆனா அந்த சமயத்துல உனக்கு தோணிச்சுல்ல. அதுதான் தேவை. ஒரு பிரச்சனை வரப்போ அந்த சமயத்துல என்ன செய்யணும்னு யோசிக்கணும். தீர்வு கண்டுபிடிக்கணும். சரியா அந்த நேரத்துல உன்னால என் விதியை மாத்த முடிஞ்சுது. அதுக்காக நீ பயந்தது நியாயம். ஆனா இனி போற‌ வழி பூரா நான் என்ன‌ பண்ணுவேன்னு நீ பயப்படறது வீண். அந்த நேரத்தில் அதைப் பார்த்துக்கலாம். நாம் ஜாக்கிரதையா இருக்கலாம். அவ்ளோதான் நம்மால முடிஞ்சது. அதுக்காவே ஒவ்வொரு நிமிசமும் பயந்து நாளை நரகமாக்கிக்கனுமா?“

“ஆனா எல்லோரும் சாவுன்னாலே பயப்படறாங்களே!”

“சாவு நிரந்தரம். வந்தே தீரும். மாத்த முடியாது. சாவை மறந்துட்டு வாழறதுதான் வழி. அந்தக் கணத்தை வாழனும். சாவைப் பத்தி யோசிச்சு என்னாகப் போகுது. உன்னால மாத்த முடியும்கறது பத்தி யோசி. அதையப் பண்ணு. முடியாத ஒன்னை யோசிக்காத."

“ம்ம்ம்.”

“சாகாவரம்ங்கறது சாகாம இருக்கறது இல்ல. சாவைப் பார்த்து பயப்படாம இருக்கறது. என்னைக் காப்பாத்தின மாதிரி உன்னால பலரையும் காப்பாத்த முடியும். அதைத்தான் நீ செய்யனும். உன் கையில் இல்லாத ஒரு விஷயம் பத்தியே யோசிச்சு மருகறது இல்ல.”

கிழவி சொல்லி விட்டு குமரேசன் உதவியுடன் கூடையைத் தலையில் தூக்கி வைத்து விட்டுக் கிளம்பினாள். அவள் போவதையே நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் கழுத்தில் மரணத் தேதி கொண்ட டேக் இருக்கவில்லை. அவளை மரணம் ஒன்றும் செய்ய முடியாது என்று குமரேசனுக்குத் தோன்றியது. வெயில் மிக‌ இதமாக இருந்தது.

*

15

வீட்டுக்கு சென்ற குமரன் எவருமறியாமல் சாணிப் பவுடரை சாக்கடையில் வீசினான். மாலை வீடு வந்த களைத்த‌ அம்மாவை ஓடிப் போய்க் கட்டிக் கொண்டு பேசினான்.

 "அம்மா நான் டாக்டர் ஆகணும்.”

“அதெல்லாம் ஆகலாம். மொத அஞ்சாவது தாண்டு…” 

அம்மா அலுப்பாய்ச் சொல்லிக் கொண்டே குளிப்பதற்கு ஆயத்தமானாள். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் உற்சாகமாய்ச் சிரித்தபடி அம்மாவின் கன்னம் கிள்ளி விட்டு ஒரு பாடல் வரியை முணுமுணுத்துச் சென்றவ‌னைக் கண்டு சுமதி வியந்தாள்.

“நான் செத்துப் பொழைச்சவன்டா… எமனைப் பார்த்துச் சிரிப்பவன்டா…”

***

(முற்றும்)

சாகாவரம் - 2 [சிறுகதை]

23 November 2021 at 04:30
சாகாவரம் - 1: https://www.arattaigirl.com/2021/11/1.html

5

அண்ணன் பிழைத்து விடுவார் என்று நல்லவிதமாகத் தோன்றவே இல்லையே எனக் குழம்பினான். இது குறித்து யோசிக்க பயமாய் இருந்தது. யோசித்தால் சாவு நிச்சயம் என நம்பினான். மண்டைக்குள் மாறி மாறிக் குரல்கள். காதைப் பொத்திக் கொண்டான். 

அதை மீறி சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் சப்தம் கேட்டது. தாவி வாசலுக்கு ஓடினான். மகேஷ் அண்ணன் வீட்டு வாசலில் நின்ற ஆம்புலன்சில் இருந்து உடல் இறக்கப்பட்டது.

“ஹாஸ்பிடல் போறப்பவே போயிடுச்சாம். சிவியர் அட்டாக்னு டாக்டர் சொன்னாரு…”

அது மகேஷின் பக்கத்து வீட்டு மாமாவின் குரல். மகேஷ் அண்ணனின் அம்மா அலறி துடித்தார். எதையும் காணாமல் வீட்டுக்குள் சென்று விட எண்ணித் திரும்பும்போதே ‘போய்ப் பாரு’ என உள்ளே குரல் கேட்டது. அவன் அச்சமும் ஆவலுமாக‌ச் சென்றான்.

மகேஷ் அண்ணனைப் போட்டு வைத்துச் சுற்றி நின்று அனைவரும் அழ மகேஷ் அண்ணனின் அம்மா அவனது நெஞ்சை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

“இதுக்குத்தான் கிரிக்கெட்டு கிரிக்கெட்டுனு ஆலாப் பறந்தியாடா? கடைசில அந்த‌ விளையாட்டே உன் உசுரக் காவு வாங்கிடுச்சே! தின்னுந்திங்காமப் போனானே…”


தன் மாரில் அறைந்து கொண்டாள். அதிலெல்லாம் ஏதும் கவனம் செல்லாமல் மகேஷின் உடலையே இமைக்காமல்  பார்த்து நின்றான் குமரேசன். மதியம் ஆட்டம் தொடங்கும் போது 'டேய்ய்ய் குமாரு…' என்று இறுதியாய் அழைத்தது காதில்  கேட்டது. தலையை உலுக்கினான். யாரோ ஒருவர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

“ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணி அடிச்சப்ப எதோ ஹார்ட்ட பாதிச்சுருச்சு போல. நிமிஷ நேரத்துல எல்லாம் முடிஞ்சுருச்சு பாருங்க… நெனச்சோமா? எல்லாம் விதிதான்.”

இனி விளையாடவே போகக் கூடாது என்று எண்ணியபடி வீடு வந்தான் குமரேசன்.
 
மாலை அம்மா வந்து மகேஷ் அண்ணனின் வீட்டுக்கு போனாள். அவன் போகவில்லை. 

*

6

மகேஷ் இறந்து இரண்டு நாள் ஆயிற்று. குமரேசன் அதன் பிறகு விளையாட மட்டுமல்ல எதற்குமே வீட்டை விட்டு வெளி இறங்கவில்லை. மகேஷ் போன‌ சோகத்தில் இப்படி இருக்கிறான் என்று சுமதி ஆரம்பத்தில் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இரண்டு நாட்களாகியும் குமரேசன் எதிலும் ஈடுபாடில்லாமல் ஏதோ யோசித்தபடியே இருந்தான்.

“டேய் குமாரு… எந்திரிச்சு வா… கடைக்கு போய் நாலு முட்டை வாங்கிட்டு வாடா… இன்னிக்கு வேற ஏதும் செய்யறதுக்கு நேரமில்ல‌, முட்டையைப் வறுத்துத் தரேன்…”

“நான் போவல.”

“ஏன்டா?”

“போலம்மா நான்…”

“இன்னும் மகேஷயே நினைச்சுட்டு இருக்கயா நீ?”

“ம்”

“இப்படி செத்தவனை யோசிச்சுட்டே உக்காந்தா இருக்கறவன் பொழப்பு தழப்ப எப்படி பாக்கறதாம். போறவங்க போவாங்க. நாம வாழ வேண்டாமாடா? செத்துப் போனாலும் சரி, விட்டுட்டுப் போனாலும் சரி. போ. போய் மூஞ்சியக் கழுவிட்டுக் கடைக்குக் கிளம்பு.”

“நான் மகேஷ் அண்ணனை நினைக்கலம்மா”

“அப்பறம்?”

“பொதுவா மனுசங்க எத்தனை வயசுல சாவாங்க?”
 
“அதெல்லாம் கணக்கில்லை. நேரம் வந்தாப்  போக  வேண்டிதான்.”
 
“வயசானாத்தான் சாவாங்கனு இல்லையா?”

“இல்லையே! ஏன் நீ இதுக்கு முன்ன வேற யாரும் செத்து பார்த்ததில்லையா!  எத்தனை படம் பாத்துருப்ப! தினம் எவ்ளோ நியூஸ் வருது. வயசானவங்க மட்டுமா சாகறாங்க?

“ம்ம்ம். அதெல்லாம் எங்கயோ நடக்குது. இப்போ இங்கயே இப்டிலாம் ஆகுதுல்லம்மா!”

“ஆமா. என்ன செய்யறது?”

“நீயும் செத்துருவல்ல?”

குமரேசனின் கேள்வியில் ஒரு கணம் குழம்பிப் போனாள் சுமதி. அதை உள்வாங்கி உள்ளூர அதிர்ந்து, பின் சுதாரித்து உதட்டில் லேசாய்ச் சிரிப்புட‌ன் பதில் அளித்தாள்.

“அது கடவுளுக்குத்தான் தெரியும். ஏன்டா இதெல்லாம் கேட்கற?”

“எனக்கு நீ செத்துருவியோன்னு பயமா இருக்கும்மா.”

கண் கலங்கினான். அதைக் கண்டு பொறுக்காமல் அவனை அணைத்து கொண்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆவாது. நீ கண்டதும் யோசிக்காம கடைக்கு போயிட்டு வா.”

அவனை விரட்டி விட்டு அலைபேசி எடுத்து அலுவலகத்திற்கு விடுப்பு சொன்னாள். அன்றைய நாள் முழுவதும் மகனுடன்  செலவிட்டாள். இருவரும் சேர்ந்து கேரம் ஆடினர். துணி துவைக்க அம்மாவுக்கு உதவினான் குமரேசன். மதியம் அம்மா மடியில் படுத்துக் கொண்டான். அவன் தலை கோதிக் கொண்டே நிதானமாகப் பேசினாள் சுமதி.

“அடுத்த வருஷம் ஆறாப்பு போயிருவ. பெரிய பையன் ஆகப் போற. இன்னும் இப்படி எல்லாத்துக்கும் பயந்துகிட்டு  இருக்கக் கூடாது. ஆம்பளைப் பையனா லட்சணமா இருக்க வேண்டாமா நீ? பெரிய படிப்பெல்லாம் படிச்சு நீயாச்சும் அம்மா மாதிரி கஷ்டப்படாம நல்ல வேலை, நல்ல சம்பளம்னு பெரிய ஆள் ஆகணும். அதை யோசி.”

“…”

“இப்படி முகத்த தூக்கியே வச்சுருந்தா யாரும் உன்கூட சேர மாட்டாங்க பாத்துக்க.” 

“…”

“என் ராசா இல்ல…”

அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அம்மாவின் நெருக்கமும் கொஞ்சலும் அவனை இளக்கியது. இந்த நொடி அப்படியே நீடித்தால் போதுமென்றிருந்தது அவ‌னுக்கு. 

“நீ என் கூடவே இருந்துரும்மா. என்னை விட்டு எங்கயும் போயிராத…”

தூக்கம் கண்ணைச் செருக அரற்றினான். “நான் எங்க போக போறேன்!” என்றபடியே அவனை தலையணையில் கிடத்தி விட்டு “இதெல்லாம் கொஞ்ச நாள்தான். அப்புறம் நீ பெரியவனாகி என்னைப் பார்த்துக்கணுமே!” என்று சிரித்தாள். சட்டென‌ எழுந்தமர்ந்த குமரேசன், “பெரியவனாவே ஆக வேண்டாம்மா. இப்டியே இருந்துடலாம். ஏன்னா சீக்கிரம் பெரியவன் ஆகிட்டா எல்லாரும் சீக்கிரம் செத்து போயிருவோம்” என்றான். 

அதைச் சொல்லும்போது அவன் உடல் நடுங்கியது. வியர்த்து ஊற்றியது. லேசாய் மூச்சு திணறியதாகத் தோன்றியது சுமதிக்கு. முதல் முறையாய் மகனைப் பயமாய் பார்த்தாள்.

*

7

குமரேசனுக்கு  உறக்கம்  பிடிக்கவில்லை. மதியம் உறங்கிப் பழக்கம் இல்லாதது ஒரு காரணம் இல்லை. அவன் இரவில் உறங்கியே இரண்டு நாட்களாயிற்று. அப்படியே அவனை  அறியாமல் உறங்கினாலும் மாடும், மகேஷும் நினைவில் வந்து எழுப்பினர்.

ஆனால் இப்போது குமரேசனின் சிந்தனை மாட்டையும் மகேசையும் தாண்டி இருந்தது. மனிதர்கள் சாகத்தானே பிறந்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உறுதிப்பட்டிருந்தது. அது நாளையோ இன்றோ அடுத்த நொடியே கூட தனக்கோ அம்மாவுக்கோ நேரலாம் என்கிற பீதி இருந்தது. அம்மா தன்னை விட்டு போய் விடக் கூடாது என்று ஏங்கினான்.

அம்மாவுக்குப் பின் தனக்கு யாருமில்லை என்ற எண்ணம் மட்டும் காரணம் இல்லை. அம்மா மரணிக்கக் கூடாது என மனதார விரும்பினான்.  அம்மாவுக்கு பதில் தன் உயிர் போனாலும் சம்மதம் என எண்ணினான். பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு அப்படி உயிர் கொடுத்ததாக படித்திருக்கிறான். எனில் அப்படி ஒரு தேர்வு இருக்கிறது. மனம் உருகி பிரார்த்தனை செய்தால் கடவுள் தன் கோரிக்கையையும் செவி சாய்ப்பார் என்று நம்பிக்கை பிறந்தது. என்னவோ ஒரு தற்காலிக‌ நிம்மதி தோன்றி உறங்கிப் போனான்.

அடுத்த இரு நாட்களும் குளித்து விட்டு சாமி படம் முன் நின்று மனம் உருகி வேண்டிக் கொண்டான். கண்ணீர் கூட வந்தது. பெரிய வரம் எதுவும் வேண்டவில்லை. அம்மா ஆயுளுக்கு ஒவ்வொரு ஆண்டாக அதிகப்படுத்தி தன் ஆயுளை ஒவ்வொரு ஆண்டாக குறைத்து கொள்ளக் கேட்டான். பதிலாக‌ தினம் ஐம்பது தோப்புக்கரணம் போடுவதாக நிர்ணயித்தான். முதல் நாள் தொடைச் சதை பிடித்துக் கொண்டு வெகுவாய் வலித்தது. நடக்கச் சிரமப்பட்டான். அம்மாவிடம் விளையாட்டில் விழுந்து விட்டதாய்ச் சொன்னான்.

அம்மாவுக்கு தும்மல், இருமல் வந்தாலும் பயந்தான். அதற்கு ஈடாக அன்றைய தினம் கூடுதலாக‌ப் பத்து தோப்புக்கரணம் போடுவான். அப்போதுதான் நிம்மதி வரும். இந்த வேண்டுதல்களும், அதை நிறைவேற்றும் விதமும் ஓரளவு நம்பிக்கையை தந்திருந்தது. 

ஆனாலும் பழையபடி விளையாடப் போகவில்லை குமரேசன். அக்கம் பக்கம் வீடுகளில் அவ்வப்போது விசாரித்தனர். அப்படி‍ப் பேசும் யாரை பார்த்தாலும் இவர்கள் எத்தனை வயதில் சாவார்கள் என்ற எண்ணம் தோன்றும். திடுக்கிட்டு போய் அவசரமாய் பதில் சொல்லி விட்டு நகர்வான். ஜவுளிக் கடையில் துணிகளில் ப்ரைஸ் டேக் இருப்பது போல் அவனைச் சுற்றிய மனிதர்கள் எல்லோருமே கழுத்தில் ஒரு டேகுடன் தென்பட்டார்கள். 

அதில் அவர்கள் மரண‌ வயது எழுதப்பட்டிருந்தது. அதைப் படிக்க முயன்றான் குமரேசன்.

*

8

குமரேசன் இருந்த காம்பவுண்ட் குடியிருப்பில் இரு வீடுகள் தாண்டி ஒரு கண் தெரியாத தாத்தா இருந்தார். மகள், மருமகன், பேத்தி என நான்கு பேர் கொண்ட குடும்பம். பேத்தி பிரவீனா தவழும் மழலை. அவளைக் குமரேசனுக்கு ரொம்பப் பிடிக்கும். அழகான, போஷாக்கான குழந்தை. தப்புத்தப்பாகத் தமிழ் பேசும். அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி போய் அதோடு விளையாடிக் கொண்டிருப்பான். அப்போது தாத்தா அவனிடம் பேசுவார். 

அவரிடம் எவருமே பேசுவதில்லையோ எனத் தோன்றுமளவு விடாமல் ஏதாவது பேசுவார். உட்கார்ந்த வாக்கிலேயே ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்து வீட்டிற்குள் நடமாடுவார். மருத்துவம் பலனளிக்கவில்லையா அல்லது மருத்துவம் பார்க்கவில்லையா எனத் தெரியவில்லை. 

ஒரு சனிக்கிழமை அதிகாலை. “அப்பா போய்ட்டியா?” என்ற அழுகுரல் கேட்டுத்தான் குமரேசன் கண் விழித்தான். அந்த அலறல் உலுக்கி போட்டது. பதறி எழுந்து வெளியே வந்துப் பார்த்தான். தாத்தாவின் மகளின் குரல் அது. அழுகை கூட இல்லை. அது ஓர் அலறல். சுமதி வெளியே வந்து எட்டி பார்த்து விட்டு அவர்கள் வீட்டிற்குள் ஓடினாள்.

பின்னாலேயே குமரேசன் வாலாய்த் தொடர்ந்தான். அதற்குள் அலறல் கேட்டு அக்கம் பக்கம் சில வீடுகளில் இருந்தும் எட்டிப் பார்த்தனர். சிலர் வீட்டிற்குள் வந்தனர். தாத்தா முன் அறையில்தான் படுப்பார். அவரது படுக்கை அங்கே தரையில்தான் எப்போதும் விரித்து வைக்கப்பட்டு இருக்கும். அதில் படுத்த வாக்கில் வாய் பிளந்து கிடந்தார்.

பார்க்க அசந்து உறங்குவது போலத்தான் இருந்தது. சில ஈக்கள் முகத்தில் அமர்ந்தும் பறந்தும் அலைக்கழிந்தன. ஒடுங்கி உள்வாங்கி இருந்த பார்வையற்ற கண்கள் வழி அவர் குமரேசனைப் பார்த்திருந்தார். குமரேசன் அம்மாவின் முந்தானை பின் ஒளிந்தான்.

“வாயைக் கட்டி மூக்கில் பஞ்சு வைக்கணும் இல்லைனா அப்புறம் மூட முடியாது.”

“தூக்கத்துலயே போயிருச்சு. நல்ல சாவு.”

சாவில் என்ன நல்லது? எல்லாச் சாவுமே கெட்டதுதானே ஏன யோசித்தான் குமரேசன்.

தாத்தாவின் மகள் அழுதபடியே இருந்தாள். மருமகன் துக்கம் ஏதுன்றி சோகமாக வைத்து கொண்ட முகத்துடன் வந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

“நைட் கூட நல்லா இருந்தார். இட்லி சாப்டார். பிரவீனாட்ட விளையாடினார். தூக்கம் வருதுன்னு படுத்தார். காலைல பார்த்தா இப்படி. எப்போ உசிர் போச்சுனே தெரில. பன்னெண்டு மணிக்கு முன்னா பின்னான்னு கூடச் சரியாச் சொல்ல முடியலைங்க‌.”

பிரவீனா விஷயம் புரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது அம்மா அழுவதைக் கண்டு தானும் அழுதாள். அவளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு குமரேசனுக்கு அளிக்கப்பட்டது. மரணம் பற்றிய சிந்தனைகளைத் தற்காலிகமாக‌ ஒத்தி வைத்து விட்டு உள்ள‌றைக்குப் போய் அவளுடன் விளையாட ஆரம்பித்தான் குமரேசன்.

அதிகம் தாமதம் செய்யாமல் மதியமே தாத்தா உடல் எடுத்துச் செல்லத் தயாரானது. 

“சனிப் பிணம் தனிப் போகாது. அதனால் ஒரு சேவலையும் கொண்டுட்டு போகணும்.”

யாரோ பெரியவர் ஒருவர் சொல்ல, பிண ஊர்தியில் அவசரமாய் வாங்கி வந்த ஒரு சேவலையும் சேர்த்து வைத்தனர். அது பறக்காமல் இருக்க கால்களை கட்டி தொங்க விட்டனர். ‘சனிப் பிணம் தனிப் போகாது’ என்பதன் அர்த்தம் புரிந்து பயந்த அவனுக்கு சேவலை  அப்படிக் கொண்டு செல்வது இன்னும் தாங்க முடியாத துக்கமாய் இருந்தது. 

“அது என்னம்மா பண்ணுச்சு! அதை கொண்டு போய்  என்ன செய்வாங்க?”

ஏற்கனவே மகேஷின் மரணத்தில் அவன் மனநிலை அறிந்த அம்மா, “அதெல்லாம் உனக்கு எதுக்கு! பெரியவங்க பார்த்துப்பாங்க. நீ உன் வேலையப் பாரு” என்றாள்.

குமரேசனுக்கு மனம் ஒப்பவில்லை. பிடிவாதமாக அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் ஊர்வலத்தின் பின் சென்றான். சுடுகாட்டில் நுழையும் போது கோழியின் கழுத்தைத் திருகி ரத்தம் சிந்த விட்டார்கள். அதைக் கண்டு திடுக்கிட்டு நின்றான் குமரேசன். அதற்கு மேல் நிற்க முடியாது வீட்டுக்கு ஓடி வந்து விட்டான். வழக்கமான மூலையில் ஒளிந்தான்.

*

9

குமரேசனுக்கு  இருந்த ஒரே ஆறுதல் தாத்தாவின் வயது எழுபதுக்கு மேல் என்பதுதான். அவனது மூளை உடனே ஒரு கணக்கு போட்டு சராசரியாக எழுபது வயது வரை ஒருவர் உயிருடன் இருக்க முடியும் என்று சமாதானம் அடைந்தது. ஆனாலும் இந்த ‘சனிப் பிணம் தனிப் போகாது; என்ற வாக்கியம் மட்டும் உறுத்தலாகவே இருந்தது. தான் ஒருவேளை இறந்தாலும் சனிக்கிழமை அது நடக்கக்கூடாது. அம்மா இறந்து விடுவாள்தானே!

பயத்தில் தினப்படி தோப்புக்கரணங்களை இருமடங்காக்கினான். ஞாயிற்றுக் கிழமை எனில் அம்மாவுக்கு தெரியாமல் குளியலறையில் தோப்புக்கரணம் போட்டான். 'எல்லா இடத்திலும்தான் சாமி இருக்கில்ல ' என்பதாகச் சமாதானம் சொல்லிக் கொண்டான்.

காணும் யாவருக்கும் எழுபதுவயது சராசரி என்ற கணக்கு ஓர் ஆறுதலாய் இருந்தது அவனுக்கு. யாரைக் கண்டாலும் மனதிற்குள் 'இவருக்கு இப்போ நாற்பது வயது இருக்கும். இன்னும் முப்பது ஆண்டுகள் உயிருடன் இருப்பார்'  என உத்தேசித்து பெருமூச்சு விட்டுக் கொள்வான்.  தலை நரைத்து தளர்ந்து போன பெரியோரைக் கண்டால் 'இவருக்கு அறுபத்தைந்து இருக்குமா! இன்னும் அஞ்சு வருஷம் தான்!' எனப் பரிதாபம் வரும். மனிதர்களின் மரண டேக் இன்னும் துலக்கமாகத் தெரிய ஆரம்பித்தது.

இடையில் நண்பன் ஒருவன் வாயிலாக ஒரு செய்தி அறிந்தான். சனிக்கிழமை இறந்த ஒரு பாட்டிக்கு இதே போல் கோழி வெட்டிச் சடங்கு செய்த பின்னும் அவளது பேரன் அடுத்த ஒரு மாதத்தில் இறந்து போயிருந்தான். குமரேசன் திடுக்கிட்டான். எனில் சடங்கு பயனில்லையா? தன் தோப்புகரணங்களாவது செல்லுபடியாகுமா எனக் குழம்பினான்.

அதைத் தாண்டி இன்னொரு பயம் வந்தது. எனில் பிரவீனா செத்துப் போய் விடுமா?

அவசரமாக அவள் வீட்டுக்கு ஓடினான். பிரவீனா தூங்கிக் கொண்டிருப்பதாக அவளது அம்மா சொன்னாள். நம்பிக்கை இல்லாமல் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தான்.

அன்று மாலை மீண்டும் போய் பிரவீனா உயிருடன் இருப்பதை உறுதி செய்தான்.

தற்காலிகமாக ஒரு நிம்மதி வந்தது. ஆனால் ப்ரவீனாவின் கழுத்திலும் டேக் இருந்தது. தேதியைத்தான் அவனால் படிக்க முடியவில்லை. அது அவனைத் தொந்தரவு செய்தது.

தினம் எழுந்ததும் போய் பிரவீனாவுக்கு உயிர் இருக்கிறதா எனப் பார்க்க ஆரம்பித்தான்.

*

(தொடரும்)

சாகாவரம் - 3: https://www.arattaigirl.com/2021/11/3.html 

சாகாவரம் - 1 [சிறுகதை]

22 November 2021 at 04:30
1

அது ஒரு கோடை விடுமுறைக்காலம். சூரியன் உக்கிரமேறியிருந்த‌ முற்பகல் வேளை.

குமரேசன் வீட்டருகே இருந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிய, பெரிய‌ பையன்களின் அடிதடியும் கும்மாளமுமாய் ஆட்டம் சூடு பிடித்திருந்தது. மகேஷ் அண்ணன் பேட்டிங். இழுத்தடித்த பந்து மைதான வேலி ஓரம் போய் விழுந்தது.

அந்த கூட்டத்திலேயே சிறுவயதுக்காரன் குமரேசன்தான். கிரிக்கெட் விளையாடப் போவதாக வீட்டில் சொல்லி விட்டு வந்தாலும் மைதானத்தில் அவனது கைவரிசை பெரும்பாலும் பந்து பொறுக்கித் தருவதாகத்தான் இருந்தது. மெலிந்த தேகமும், மாநிறமும், சூட்டிகையான‌ கண்களும், சுறுசுறுப்பான உடல்மொழியுமாய் பதினோரு வயது சிறுவனுக்கான மொத்தக்  கவர்ச்சியும் கொண்ட தோற்றம். ‘பொடியன்’ என அக்கம் பக்கத்து அண்ணன்கள் அழைப்பதில் வாஞ்சையும், செல்லமும் இருக்கும்.

வேலி ஓரம் போய் விழுந்த பந்தை எடுக்கச் சென்றான் குமரேசன். மைதானத்தை ஒட்டிய தெருவில் புதியதாய் அந்த வீடு கட்டத் துவங்கி சில நாட்களே ஆகி இருந்தன. மாடுகளை “ஹே ஹே” எனக் கூவி நிறுத்தினார் வண்டிக்காரர். பந்தை எடுத்து விட்டு மாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த குமரேசனை பின்னால் வந்த சிறுவன் தலையில் தட்டினான்.


“அங்க பாலுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீ என்றா பராக்கு பாத்துட்டு கெடக்க.” 

அவனிடம் பந்தைத் தந்து விட்டு திரும்ப மாட்டைக் கவனிக்க ஆரம்பித்தான் குமரேசன். அதில் ஒரு பரிவு இருந்தது. அவன் கிட்டத்தட்ட பந்தைப் பிடுங்கிக் கொண்டோடினான். 

மாடுகள் இழுத்து வந்த வண்டி முழுக்க இடைவெளியின்றி அடுக்கப்பட்ட‌ செங்கற்கள். பாட்டி ஒரு முறை கூறியிருந்தார் - “கடன் வாங்கித் திரும்பத் தராம செத்துப் போறவங்க காளை மாடாப்  பிறப்பாங்க. அவங்க கடனை உழைச்சே கழிக்கத்தான் கடவுள் இப்படி பண்றார். இருப்பதில் ரொம்ப கஷ்டப்பட்டப்  பிறவி காளை மாடாப் பொறக்கறதுதான். நாள் பூரா உழைக்கவும் வேணும். நாள் பூரா அடி வாங்கியும் சாகணும். அதனாலதான் நாம யார் கிட்டயும் கடன் வாங்கக் கூடாது. அப்படியே ஒருவேளை வாங்கினாலும் திருப்பிக்  கொடுத்துரணும். இல்லனா மறுபொறப்புல காளை மாடா பொறக்கணும்.”

இதைக் கேட்ட நாளில் இருந்தே காளை மாடுகளைக் காண்கையில் மிகுந்த பரிவும், இரக்கமும் தோன்றும் குமரேசனுக்கு. எங்கே எப்போது அவற்றைக் கண்டாலும் கவனிக்கத் தொடங்கி விடுவான். போன ஜென்மத்தில் யாரிடம் கடன் வாங்கியதோ, இப்படி பிறந்து விட்டது என அங்கலாய்ப்பாய் இருக்கும். அந்த நினைவின் நீட்சிதான் இப்போது விளையாட்டை மறந்து மாடுகளை வேடிக்கைப் பார்த்தபடி நிற்க வைத்தது.

பாத்துக் கொண்டிருந்த போதே இரண்டில் ஒரு மாட்டின் வாயில் நுரை தப்புவதாகத் தோன்றியது. அசை போட்டுக் கொண்டே இருப்பதால் அப்படித் தெரிகிறதோ என யோசனை ஓடிய‌ அதே நொடி அந்த மாடு நின்ற நிலையிலிருந்து சரிந்தது. கழுத்தைச் சுற்றி வண்டியுடன் கயிறு கட்டி இருந்ததால் வண்டி ஆட்டம் கண்டது. வண்டிக்காரர் முதலில் மாட்டை எழுப்பச் சாட்டையைப்  பிரயோகித்தார். அதன் விழிகள் மிரண்டு ஒரு முறை கால்கள் துடித்துத் தளர்ந்தன. மாட்டின் உடல் எடை தாளாமல் கயிறு அறுபட, மாடு தொப்பென மொத்தமாய் தரையில் விழுந்தது. அதன் மூச்சு பெரிய சப்தத்துடன் வெளிவந்தது. விழுந்த வேகத்தில் மாட்டின் முகத்தைச் சுற்றி இருந்த பகுதியில் மண் பறந்தது. அதன் பிறகு மாடு மூச்சு விடவில்லை. வண்டிக்காரர் காலால் தட்டிப் பார்த்தார்.

வேடிக்கை பார்க்க கூடிய கூட்டம் பாவப்படவும், தங்கள் மனிதநேயத்தை  மொத்தமாய் காட்டி உச்சுக் கொட்டவும் துவங்கி இருந்தனர். “தண்ணி வச்சியாய்யா மாட்டுக்கு?” எனக் கேட்டார் ஒருவர். மாட்டை மறைத்து கூட்டம் கூடவும் குமரேசன் வேலிக்குள் நுழைந்து சாலை ஏறி கூட்டத்திற்குள் புகுந்து கலந்து முன்னால் சென்று நின்றான்.

“வச்சனே…” எனச் சன்னமாக சொன்னான் வண்டிக்காரன். “பாத்தல்ல… வேகாத வெயில். மண்டையப் பொளக்குது. தண்ணி தவிச்சுதான் போயிருக்கும்.” என்றார் இன்னொருவர்.

பேச்சுக்கள் காதில் விழுந்தாலும் குமரேசன் கண்கள் மாட்டையே மொய்த்தன. அகண்ட கரிய நீள விழிகளை அகலத் திறந்தபடியே சாய்ந்திருந்தது. சுவரில் மாட்டிய சாமி படம் போல குமரேசன் எங்கு சென்ற போதும் அவனையே பார்த்தது அந்த ஒரு பக்கக் கண்.

மாடு இறந்து விட்டது தெரிந்த பின்னும் குமரேசனுக்கு அந்தக் கண்ணுக்குள் மண் புகுமே என அசட்டுக் கவலை தோன்றியது. சாவு இத்தனை சட்டென நிகழுமா? கண் முன்னால் காணும் முதல் மரணம். தாத்தா போன வருடம் ஊரில் இறந்த போது கூட சில நாட்களாய் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை. இப்படி நொடியில் நிகழவில்லை. வேறொரு வண்டி ஏற்பாடு செய்து மாட்டைத்  தூக்கி செல்லும் வரை பார்த்தபடி நின்றிருந்தான் குமரேசன்.

*

2

வீட்டிற்கு வந்து முகம் கழுவி தொலைக்காட்சி முன் அமர்ந்தான். மனம் அதிலும், எதிலும்  ஒன்றவில்லை. அம்மா வேலை விட்டு வந்ததும் சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தான்.

மாலை அவள் வந்ததும் ஓடி சென்று ‘அம்மா… இன்னிக்கு என்னாச்சு தெரியுமா?' என ஆர்வமும் சோகமுமாய்த் தொடங்கினான். களைத்து சோர்ந்து வந்தவ‌ள் சலிப்பாக  “என்னாச்சு?” என்றபடியே குளியலறைக்குள் மாற்று உடைகளுடன் நுழைந்தாள்.

“நான் கிரௌண்ட்ல கிரிக்கெட் விளையாடும்போது ஒரு மாடு செத்துப் போச்சும்மா…”

முகம் கழுவி உடை மாற்றி வெளி வந்தவளுக்கு இன்னும் களைப்புத் தீரவில்லை. சுமதி ஒரு கார்மெண்ட்ஸ் டெய்லராக பணி புரிகிறாள். நாள் முழுதும் இயந்திரத்தை மிதித்து மிதித்து முழங்கால் பாதம் எங்கும் வலியும் சோர்வும் ஆளை அடித்துப் போடும். வீடு வந்ததும் சமையல், பாத்திரம் கழுவுதல், துணி துவைப்பது என இத்யாதி கடன்கள்…

“அம்மா காபி போட்டுத் தர்றேன். நீ டிவி பாரு…"

“என்னம்மா நீ! மாடு செத்து போச்சுங்கறேன் நீ கண்டுக்கவே மாட்டேங்கற?”

“அதுக்கு நாம என்னடா பண்ண முடியும்? ஏதும் ஆக்சிடென்ட் ஆயிடுச்சா?”

“இல்லம்மா… நின்னுட்டே இருந்துச்சு அப்டியே விழுந்து செத்துருச்சு…”

அவன் குரலில் இன்னும் அதிர்ச்சியின் நடுக்கமும் அதை மேவிய துயரமும் இருந்தது.

“ஏதும் உடம்பு சரி இல்லாம இருந்துருக்கும்பா”

“இல்லம்மா செங்கல் வண்டி இழுத்துட்டு வந்துச்சு. நின்ன வாக்கிலயே விழுந்துருச்சு.”

“எல்லாரும் ஒருநாள் போக வேண்டியதுதான். மனுஷனே சாகறான். மாடு செத்தா என்ன!”

காபி கலந்தபடியே சொன்னாள். குமரேசன் அமைதியாய் முன்னறைக்குப் போனான்.

போன ஜென்மத்தில் கடன் வாங்கி மாடாகப் பிறந்தது மறுஜென்மத்தில் என்னவாகப் பிறக்கும்? எனக் கேள்வி எழுந்தது. அம்மா காபி டம்ப்ளரோடு உடன் வந்தமர்ந்தாள்.

“பாவம்லம்மா மாடு?” 

மீண்டும் கேட்டான். ஒரு மிடறு விழுங்கிய காபி தந்த தெம்பில் லேசாய் சிரித்தாள். 

“ஆமா குமாரு. ஆனா என்ன செய்யறது பொறக்கற எல்லாரும் சாகத்தான் வேணும். அதுக்கெல்லாம் பாவம் பாத்து அழுதுட்டு இருந்தா  நம்ம  வேலைய யார் பாக்கறது?”

“…”

“நீ காபி குடி”

அவனுக்கான டம்ளரை நீட்டினாள். வாங்கி கொண்ட குமரேசன் மெல்ல கேட்டான்.

“அப்போ நீயும் செத்துருவியாம்மா?”

 “எல்லாரும் சாவோம்டா. தாத்தா சாகல? அது மாதிரி தான்.”

“நானு…?”

“நீயும்தான். அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்கு. தொணதொணன்னு கண்டதும் கேட்டுட்டு இருக்காம கடைக்குப் போய் அம்மா சொல்ற சாமான்லாம் வாங்கிட்டு வா.”

சற்றே எரிச்சலாக பதிலளித்து விட்டு எழுந்து சமையலறைக்குள் மீண்டும் புகுந்தாள்.

*

3

அன்றைய இரவு கனவில் மாடு சரிந்து குமரேசன் மேல் விழுந்தது. குமரேசன் மாட்டு வண்டியை இழுத்துச் சென்றான். வண்டிக்காரன் சாட்டையால் குமரேசனை சுளீரென அடித்தான். துடித்து எழுந்தான். காலையில் பார்த்தபோது படுக்கை ஈரமாகி இருந்தது. 

“என்ன‌ வயசாகுது? இன்னும் படுக்கைல ஒண்ணுக்கு போய்ட்டிருக்க‌. வெக்கமா இல்ல?" 

சுமதி கடுமையாக கேட்டாள். அடித்து விடுவாளோ என்ற பயத்தில் மிரண்டு நின்றான்.

“இட்லி சுட்டு வெச்சிருக்கேன். பொடி வெச்சு சாப்ட்ரு.”

ஒன்பது மணிக்கு அம்மா கிளம்பி விட்டாள். காலை உணவை முடித்து விட்டு வீட்டை பூட்டிக் கொண்டு மைதானத்திற்குச் சென்றான். யாரும் இன்னும் வந்திருக்க‌வில்லை.  

கால் போன போக்கில் மைதானத்தைச் சுற்றி வந்தான். நேற்று மாடு விழுந்த இடத்திற்கு பார்வை சென்றது. சம்பவத்திற்கான எந்தத் தடயமுமின்றி சாலை புதிய‌தாய் இருந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த அக்காள்கள், அண்ணன்கள், மாமாக்கள் என்று யாருக்கும் மாட்டின்  நினைவு  இருந்ததாய்த் தெரியவில்லை. அனைவரும் சகஜமாய்ச் சிரித்துப் பேசியபடி பணியில் கவனம் காட்டினர். நேற்று இதே நேரம் உயிருடனிருந்த‌ மாடு தற்போது இல்லை. சாவு என்பது இவ்வளவுதானா என்று ஆச்சரியமாக‌ இருந்தது. 

இத்தனை நாளும் மரணம் என்பது காதில் விழும் செய்திகள் வழியும், கண்ணில் பட்ட‌ இறுதி ஊர்வலங்கள் வரையிலுமே அறிமுகமாகி இருந்தது. அவன் மனதில் மரணம் ஒரு நீண்ட நெடிய விஷயமாய் இருந்தது. எருமை மீதேறி எமன் வந்து கொண்டு செல்வான் எனப் பாட்டி கூறி இருந்தாள். பிணங்களின் அலங்காரங்கள், பல நாள் நோய்ப் படுக்கை, பாவ புண்ணியக் கணக்குகள் என அது ஒரு நீண்ட முன்தயாரிப்பு கொண்ட‌ விஷயம் என‌ மனதில் பதிந்து  இருந்தது.  முதன் முதலில் நேற்றுதான் மரணம் கண் முன் அதுவும் சில நொடிகளில் நடக்கக் கூடிய ஒரு சமாச்சாரம்தான் என்பதை அறிய நேர்ந்தது.

'அவ்ளோதான் சாவு’ என்பது அதிர்வும் அதே சமயத்தில் ஏமாற்றமும்  ஒரு சேரத் தந்தது. உண்மையில் அவன் வயதிற்கு புரியாத மொழியில் சொன்னால் ‘அவ்ளோதான் வாழ்வு’.

அடுத்த ஜென்மத்தில் அந்த மாடு யாராகப் பிறக்குமென்ற கேள்வி மீண்டும் மீண்டும் வந்தது. அடுத்த ஜென்மத்தில்  மனிதனாகப் பிறந்து தன்னை அடித்தவனைத்  திருப்பி அடித்தால் நன்றாக இருக்குமே என்ற  எண்ணம் வந்தது. அதற்கு இந்த வண்டிக்காரன் மாடாகப் பிறந்து, அந்த‌ மாடு மனிதனாகப் பிறந்த‌ வீட்டிற்கே  வண்டி ஓட்டப் போக வேண்டுமே என்று கேள்வி வந்தது. மனதிற்குள் இப்படியான‌ அர்த்தமற்ற அவசியமற்ற எதேதோ கணக்குகள் தோன்றின. அவனுக்கு தலை வலித்தது. ஏன் இதை எல்லாம் சிந்திக்கிறோம் என்று நினைக்கும் போதே விரும்பி இதை செய்யவில்லை என்பதும் சொல்லப்போனால் இதிலிருந்து வெளிவரவே  விரும்புகிறோம் என்பதும் உறைத்தது.

மைதானத்தில் நிற்பதே மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். “டேய்ய்… குமரா!” என்ற விளி உசுப்பித் திரும்பிப் பார்த்தான். “வாடா…” என்று மகேஷ் அண்ணா அழைத்தார்.

*

4

சூரியன் மேலேறிக் கொண்டிருந்தது. விளையாட்டு மும்முரத்தில் யாருக்கும் வெயிலோ தாகமோ பெரிதாய்த்  தெரியவில்லை. மதியம் வரை நீடித்த விளையாட்டில்  குமரேசன் தெருப் பையன்களின் அணி ஓரளவு ரன் தடுத்திருந்தது. மதிய‌ உணவு இடைவேளைக்கு எல்லாரும் வீட்டுக்குச் சென்றனர். குமரேசன் வீட்டுக்கு வந்து குளித்து விட்டு சாப்பிட என்ன இருக்கிறதென தேடினான். அடுப்படியில் தக்காளி சோறு  இருந்தது. தொட்டுக் கொள்ள ஏதும் இல்லை. சலிப்பாய் சோற்றை அள்ளி வட்டலில் போட்டுக் கொண்டான்.

அப்பாவின் நினைவு வந்தது. அப்பா இருந்த வரை அம்மா வேலைக்குப் போகவில்லை.  மூன்று வேளையும் சூடாய் உணவு கிடைக்கும். நிறைய நேரம் இருந்தது அம்மாவுக்கும் அவனுக்கும் - அம்மாவுடன் பேச, விளையாட, பள்ளியில் நடந்ததை விவரிக்க‌ என.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த தொடர்சண்டைகளின் முடிவில் அப்பா வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை அறிந்து கொண்டான்.

கோர்ட், கேஸ் என இன்னமும் அம்மா அலைந்து கொண்டு இருக்கிறாள். அப்பா வீடு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது. அதிலிருந்து வீட்டில் உணவு குறைந்தது, சிரிப்பு  குறைந்தது, பேச்சு குறைந்தது, ஓசையே குறைந்து குறைந்து இப்போதெல்லாம் வீட்டில் சின்ன சப்தம் கூட அலறலைப் போல் தோன்றுகிறது. அம்மா சிரித்துப் பேசி பல மாதம் ஆயிற்று. அவனது பிறந்த நாளுக்குக் கொஞ்சியது கடைசியாய். பாவம்தான் அம்மாவும். 

யோசித்தபடியே உண்டு முடித்து தட்டத்தை கழுவிக் கவிழ்த்து, நீர் அருந்தி, மறுபடியும் மைதானம் போனான். ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தனர். இப்போது குமரேசன் தெருப் பையன்கள் பேட்டிங். பீல்டிங்கிற்கு குமரேசனை வேலி ஓரம் நிறுத்தி இருந்தனர்.  எந்த அணி பேட்டிங் செய்யும் போதும் குமரேசனுக்கு மட்டும் இந்தப்  பணிதான் சாஸ்வதம். 

மகேஷ் அண்ணன் பேட்டிங் செய்யக் களமிறங்கினான். அணியின் சிறந்த பேட்ஸ்மேன். குமரேசனுக்கு வளர்ந்து மகேஷ் அண்ணன் போல் பேட்டிங் பண்ண வேண்டும் என்ற கனா உண்டு. மகேஷ் அப்போது பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதி இருந்தான். அந்த கூட்டத்திலேயே அவன் பெரியவன். கிட்டத்தட்ட அந்த அணிக்குக் கதாநாயகன் போல்.

நான்கும், ஆறுமாக மைதானத்தின் விளிம்புகளில் விளாசி கொண்டு இருந்த மகேஷ் உச்சமாக ஒரு சிக்ஸ் அடித்தான். மைதானத்தை விட்டு வெளிச்  சென்ற பந்தை எடுக்க சாலைக்கு ஓடினான் குமரேசன். பந்தை எடுத்து கொண்டு மைதானத்துள் நுழைகையில் எல்லோரும் மத்தியில் கும்பலாகக் கூடி நின்ற‌னர். நடுவே மகேஷ் அண்ணன் வியர்த்துப் போய் அமர்ந்து இருந்தான். இடது கையும் முதுகும் வலிப்பதாகக் கூறினான். அவசரமாக யாரோ பாட்டிலில் நீர் தந்தனர். இரண்டு மிடறு குடித்தவ‌ன் இடப்புறமாய்ச் சரிந்தான். 

கையில் பந்துடன் நின்று கொண்டிருந்த‌ குமரேசன் கண்ணில் மாடு சரிந்தது விரிந்தது. மிக நீளமாக‌  மூச்சை இழுத்து வெளியிட்ட மகேஷ் அப்படியே அசைவற்றுப் போனான்.

குமரேசனுக்கு ஒரு கணம் கண்கள் இருண்டன‌. யாரோ ஆம்புலன்சுக்கு அழைத்தனர். மகேஷை ஸ்ட்ரெச்சரில் ஏற்றுகையில் ஒரு நொடி மகேஷின் கண்கள் திறந்து மூடின.

அந்தக் கணத்தில் சரியாக‌ குமரேசனின் பார்வையைச் சந்தித்தான் மகேஷ். அந்தப் பார்வையில் நிலை குலைந்தான் குமரேசன். கையறு நிலையின் கடைசி பார்வை!

அவ்வளவுதான், இனி மகேஷ் அண்ணன் இல்லை எனத் தோன்றியது. அது விசித்திர பயமாய் இருந்தது. ஆம்புலன்ஸ் கிளம்பிச் சென்றதும் வீட்டிற்கு ஓடி வந்து மூலையில் நடுங்கியபடி அமர்ந்து கொண்டான். நா வறண்டது. தண்ணீர் அருந்தி விட்டு திரும்ப மூலைக்குச் சென்று தஞ்சமடைந்தான். எதற்காகவோ காத்திருக்க ஆரம்பித்தான்.

*

(தொடரும்)

சாகாவரம் - 2: https://www.arattaigirl.com/2021/11/2.html
சாகாவரம் - 3: https://www.arattaigirl.com/2021/11/3.html 

அலட்சியன்

14 November 2021 at 03:54

மோக முள்ளாய்க் குத்தி நிற்கும்
மூன்று தின‌ தாடி மழிக்கச் சோம்பிச்
சுந்தரனாய்ச் சுற்றித் திரிபவன்
சன்னமோ, திண்ணமோ அற்ற‌
மிதமான சாத்வீக மீசை வழி
சிரித்துப் பறிக்கும் சிருங்காரன்

மெருகேறிய பொன்நகைகளை 
அலங்கரிக்கப் பதியப்படுகிற‌ 
முத்துக்களும் பவளமும் போல்
வெண்பரிசுத்தச் சிரிப்பினில்
வெட்கத்தைச் சேர்த்து நிற்கும்
புன்னகையின் அதிபதியவன்

பளிச்சென்று வெளுக்காமல்
உறுத்தாத மென்கோபத்தை
எப்போதும் தாங்கியது போல்
மெல்லிய செவ்வரி உள்ளோடி
துல்லியமாய் வசீகரிக்கும்
மாயக் கண்கள் உடையோன் 

ஏறெடுத்து எவரையும் காண
ஒருபோதும் அவசியமற்ற‌
உயரத்தின் உரிமையாளன்
அமரும் இருக்கைகள் யாவும்
சிம்மாசனமாய்ச் தோன்றும்
கம்பீர உடல்மொழிக்காரன்

உள்ளங்கை வெள்ளைச்சூட்டில்
மயிலாஞ்சி இட்டுக்கொள்கையில்
விட்டு விட்டுரசும் தன் விரல் பட்டே
கெக்கிலித்துக் கூசிச் சிரிக்கும்
புத்தம் புதிய மென்குமரியின்
நாணம் களையத் தோதானவன்

இவ்வெல்லா இலக்கணங்களும்
பொருந்திப் போய்க் கிடப்பதை
தானறியா அப்பாவி அழகன்
அதையெல்லாம் இப்படி ஒருத்தி
சொல்லி இளித்து நின்றாலும்
சிரித்துக் கடக்கும் அலட்சியன்.

ஒரு மலர்

10 October 2021 at 03:38

இத்தனைக்குப் பிறகும்
ஒரு நெருக்கம் விரல் பிரித்து விலகுகிறது  
இத்தனைக்குப் பிறகும்
ஒரு துரோகத்தின் வாள் முதுகில் இறங்குகிறது  
இத்தனைக்குப் பிறகும்
ஓர் அன்புக்கு வெறுப்பு பரிச‌ளிக்கப்படுகிறது

இத்தனைக்குப் பிறகும்
வேளை தவறாமல் வயிறு பசிக்கிறது
இத்தனைக்குப் பிறகும்
நல்ல‌ நகைச்சுவைக்கு இதழ் விரிகிறது
இத்தனைக்குப் பிறகும்
எவர் மீதேனும் பிரியம் சுரக்கிறது

அத்தனை அத்தனை அத்தனைக்குப் பிறகும்
ஒரு மலர் முகிழ்க்கத்தான் செய்கிறது
யாரும் கவனிக்காத‌ கல்லறையில்!

முகங்கள்

13 September 2021 at 15:20


உட்சபட்ச அவமதிப்பொன்றிற்கு
பதிலற்றுத் தடுமாறிய‌ பொழுதில்
வந்த சொல்லை விட பதிலாகிய‌ 
என் மௌனம் தந்த‌ வலி பெரிது

பற்றாக்குறை தினங்களெனினும்
இன்னல் கூறி கடன் கேட்பவர்க்கு
இரங்கி உதவிய பின் ஒரு மனம்
மறுத்திருக்கலாமோ என மருகும்

செய்யாப் பிழை தரும் வசையை
மறுதலிக்கத் துடிக்கும் நாவினை
தடுத்து நிறுத்தும் வஸ்துவிற்குத்
தெளிவாய் ஒரு பெயர் இல்லை

உறங்கும் சகோதரனை விடுத்து 
களைத்து வீடு மீளுமென்னைக்
கடைக்கனுப்பும் குடும்பத்திடம்
பல் கடித்துப் புன்னகைத்த‌ நாட்க‌ள் 

அப்பாவி நல்லவள் உழைப்பாளி
பரோபகாரி பொறுமைசாலி என‌ 
நம் போதாமைகளுக்குத்தான்
பொதுவில் எத்தனை முகங்கள்!

இசை மலர்

4 June 2021 at 01:15

எஸ்பிபியின் குரல் வளம், பாடும் திறன் பற்றி நான் கூறித் தெரிய, தெளிய எதுவுமில்லை. ஆனாலும் இந்த மனம் சும்மாவா இருக்கிறது! அனுபவித்ததைச் சொல்வோம் என விழையத்தான் செய்கிறது! எனவே, எஸ்பிபியிடம் எனக்குப் பிடித்த அம்சங்களைத் குறித்து தொகுத்துக் கொள்ள முயல்கிறேன்.

*

முன்பே பலதரம் கூறியது போல் இசையையும் பாடல்களையும் ஒரு பாமரராய் ரசிக்க மட்டுமே எனக்குத் தெரியும் - நம்மில் பலரைப் போல். பாடல் என்பது மகிழ்விக்கும், அழ வைக்கும், காதலை மலர்த்தும், காமத்தை உணர்த்தும் ஒரு கடத்தியாகவே அனுபவம். அதைத் தாண்டி எந்த ராகம், என்ன ஸ்வரம் என்று ஆராயும் இசைய‌றிவு எனக்கில்லை. (சமூக ஊடகங்களின் புண்ணியத்தில் இப்போது பல்லவி, அனுபல்லவி, சரணம் தாண்டி Prelude, Interlude வரை வந்திருக்கிறேன்.)

ஆக, உணர்வுகளை எளிமையாக கடத்தும் ஒரு இசை, ஒரு பாடல், அதை வெளிப்படுத்தும் ஒரு குரல் - இவை மட்டுமே என் தேவை. இந்த மனிதர் அதில் கடவுள். இப்படிச் சொல்வது மிகையாகத் தோன்றலாம் - உண்மையில் இல்லாத கடவுளை இவருடன் ஒப்பிடுவது குறைதான். எனினும் கடவுள் என்றொருவர் இங்கிருந்தால் கண்மூடிக் கேட்கும் பாடல்கள் இவருடையதாகவே இருக்கும்.

50 ஆண்டுகளாய் நாட்பட நாட்பட மெருகேறி உச்சத்தில் ஒலித்தது ஒரு குரல் எனில் அதை இறை நம்பிக்கை இல்லாதோரும் தெய்வீகம் என்றே அடையாளப்படுத்துவ‌ர். எஸ்பிபி அவர்களின் குரல் ஒரு தெய்வீகம். 35 ஆண்டு கால செயின் ஸ்மோக்கர், சோஷியல் ட்ரிங்கர், கூல் ட்ரிங்க்ஸ், ஐஸ் வாட்டர் எனப் பாதிக்கும் சகல சங்கதிகளையும் தவிர்க்காமல் நுகர்ந்த‌ ஒருவரின் குரல் - எவ்விதத்திலும் குலையாமல், இனிமை குன்றாமல் இருந்தது இயற்கையின் அற்புதமன்றி வேறென்ன!

எனக்கு  எஸ்பிபி  அறிமுகமானது ரஜினி பாடல்கள் வழிதான். நினைவு தெரியத் துவங்கிய நாள் முதல் ரஜினி பாடல்களை ரஜினியின் சொந்தக் குரல் என்றே நம்பி வந்தேன். ஒரு விடுமுறை மதியம் என நினைவு. 'மன்னன்' படத்தில் ரஜினி சொந்தக் குரலில் பாடியிருக்கிறார் எனக் கேள்விப்பட்ட‌த‌ன் பொருட்டு (படம் வெளியாகி நான்கைந்து ஆண்டுகள் ஆகியிருந்தன‌) எனக்கு எழுந்த‌ "அப்போ இவ்ளோ நாள் பாடினது ரஜினி இல்லயா!" என்ற கேள்விக்குக் கேலிச் சிரிப்புகளுக்கு இடையில் "அது பாலசுப்ரமணியம்" என்றார் அப்பா. அப்படித்தான் அந்தப் பெயர் என்னை வந்தடைந்தது!

'அது யாரு?' என்ற கேள்வியில் தொனித்த ஏமாற்றத்தின் பின் கிடைத்த விளக்கங்கள்தாம் பாடல்கள், பின்னணி இசை பற்றி அரைகுறையாகவேனும் அந்த வயதில் வந்த‌ என் முதற்புரிதல். (பிற்பாடு 'அடிக்குது குளிரு' பாடலின் உள்ளடக்கம் பற்றிய புரிதல் தந்த‌ அதிர்ச்சி தனிக் கதை.) அப்படி அறிமுகமான பெயர் அந்தக் குரலோடு எனக்குள் பதிந்து விட்டது. பிறிதொரு நாளில் கமலுக்கும் இதே மனிதர் தான் பாடுகிறார் என்று அறிந்த போது 'கமலுக்கும் இவர் தான் பாடணுமா?' என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக எரிச்சல் எழுந்ததுண்டு. ஏனெனில் ரஜினி என்ற மனிதருக்காகவே படைக்கப்பட்டதைப் போல் ஒரு தனித்துவத்தை கொண்டிருந்தது அந்தக் குரல் .

ஆனால் நாளாக ஆக, அவரைக் கேட்க கேட்க, அனுபவமும், கொஞ்சம் அறிவும் வளர வளர, ரஜினி, கமல்  மட்டுமல்ல எம்ஜிஆர், சிவாஜி துவங்கி தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளி ராஜன் வரை எல்லோருக்கும் பொருத்தமாகப் பாட கூடிய ஒரு குரல் இவருடையதே எனத் தெளிந்தேன். இது எத்தனை பாடகர்களுக்குச் சாத்தியமானது என்பதை யோசிக்கலாம். இது பற்றி எஸ்பிபி சொன்னது:

"எப்படி நீங்க எல்லாருக்கும் பொருத்தமாய் பாடுகிறீர்கள், மிமிக்ரிலாம் தெரியுமா?"

"மிமிக்ரி லாம் தெரியாதுங்க. பாடறப்ப அந்த நடிகரின் முக பாவம், நடிப்பு, குரலுக்கு ஏற்ப ஸ்டைலை மாற்றி விடுவேன். கிட்டத்தட்ட அங்க நானும் நடிக்கத் துவங்கிடுவேன்."

அவர் இருக்கும் வரை அவரது பாடல்களில் ரஜினி, கமல், விஜய், அஜித் என நடிகர்களின் குரல்களையே கேட்டுக் கொண்டிருந்தேன். இறந்த பிறகு அனைத்தும் அவர் குரலாகவே ஒலிக்கின்றன‌. இருக்கும் போதே அவர் குரலாக கேட்டிருந்தால் இன்னும் கொண்டாடி இருக்கலாம் என குற்றவுணர்வும் எழுகிறது சில சமயம். மனதின் விசித்திரங்கள் அளப்பரியன!

எஸ்பிபியின் பாடல்களில் என்னை மிகக் கவர்ந்தது பாடல்கள் இடையே அவர் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகள். ஒரு நற்காதலன் மெல்லிசாய் எல்லை மீறும் சில்மிஷங்கள் போல்.

குறிப்பாக பாடல் நடுவே சிரிப்பு, ரஜினிக்கு எனில் குரலில் ஸ்டைலான அல்லது ஆக்ரோஷமான பாவங்கள், இது போல் இன்னும் பலவும். இதெல்லாம் நாளடைவில் புகழ் பெற்ற பிறகு சுதந்திரமும் கற்பனைத் திறனும் சேர்ந்து கொள்ள‌, ஆரம்பித்து இருப்பார் என நினைத்திருந்தேன். ஆனால் தன் முதல் பாடலிலேயே ('ஆயிரம் நிலவே வா') "சின்ன இடையில்... மலர் இதழ் பட்டாலும் நோகாதோ என்ன துடிப்போ அவள் நிலை... நீ உணர மாட்டாயோ" எனும் வரிகளில் ஒரு சிணுங்கலைச் சேர்த்திருப்பார். பாடலை ரசித்து அந்தச் சூழலுடன் தன்னைப் பிணைக்காத ஒரு கலைஞனால் ஆரம்பக் காலப் பாடலில், அதுவும் மிகப் பெரிய நடிகராக இருந்த எம்ஜிஆர் படத்தில் இதைச் செய்திருக்க முடியாது.  இதை அவர் திணிக்கவில்லை. இயல்பே அங்கனம் தான்.

அதே சமயம் அவரது பாடல்கள் ஆண்மையையும் அடையாளப்படுத்தியிருக்கிறது - கம்பீரமான ஒரு ஆணின் குரலுக்கு இலக்கணம் ஒன்று உண்டெனில் அது அவர் குரலே.

அடுத்தப் பிறவியில் நம்பிக்கை இல்லை, ஒருவேளை பிறவி இருப்பின் அதில் எஸ்பிபியின் குரலாக பிறக்க வேண்டும் என முன்பு கூறி இருக்கிறேன். குரலாக பிறக்க வேண்டும் என்பதைக் கேட்க முட்டாள்தனமாக தோன்றும். ஜீவனுள்ள எதுவாகவும் பிறக்க இயலும் எனில் இந்தக் குரலை விட உயிர்ப்புள்ள விஷயம் இப்பிரபஞ்சத்தில் வேறேது! பேசும் போதும் பாடும் போதும் சிரிக்கும் போதும் ரசிக்க வைக்கும் ஜீவன் தேக்கிய ஒரு குரல், ஒருபோதும் மரணமற்ற ஒரு குரல்.

*

எஞ்ஜினியர் ஆவதுதான் தன் கனவாக இருந்தது என்றவர் அதற்கு வாய்ப்பற்றுப் போனது நம் வரம். 

பருமனான தோற்றம் உள்ளவர்களுக்கு ஒரு குழந்தைமை இருக்கும். அது அவருக்கும் பொருந்தும். தோற்றம் மட்டுமின்றி செயல், பேச்சு, குணம் என அவர் வெளிப்படுத்தும் அனைத்திலும் அந்தக் குழந்தைத்தனம் நிறைந்திருக்கும். சமயங்களில் அவர் பாடல்களின் உற்சாகத்திலும்.

ஒரு நல்ல ரசிகனால்தான் நல்ல கலைஞனாகவும் இருக்க முடியும். எஸ்பிபி ஓர் அற்புதமான ரசிகர். இதை 'சூப்பர் சிங்கர்' போன்ற நிகழ்ச்சிகளில் காணலாம் 5 வயது, 7 வயது குழந்தைகள் பாடுவதைக் கூட அத்தனை ரசிப்பார். அவரது முகபாவம், உடல்மொழி, பேச்சு எதிலும் பொய் இருக்காது. ஆத்மார்த்த ரசிப்பும், நயமுமாக தனது  பேரப் பிள்ளைகளைப் பெருமையுடன் பார்க்கும் ஒரு தாத்தனைப் போல்தான் கொஞ்சிக் கொண்டிருப்பார். திரைத்துறையில் இருந்தும் நடிக்காதவ‌ர்!

எளிய மனிதர், அடக்கமானவர் என்றெல்லாம் சிலரைச் சொல்வோம். ரஹ்மான், தனுஷ் என நிறைய உதாரணங்கள் உண்டு. இந்த தன்னடக்கம் என்பது இரு வகைப்படும். தன் உயரம் தனக்கு தெரிந்தும் அடக்கமாக இருப்பது அல்லது நடிப்பது ஒரு வகை. (இங்கு நடிப்பு என்பது குறையில்லை; அப்படி இருக்கவும் ஒரு பக்குவம் வேண்டும்.) தன் உயரம் தெரியாமல் வெள்ளந்தியாகத் தன்னை தாழ்த்தி கொள்வது இன்னொரு வகை. எஸ்பிபி இந்த விஷயத்தில் தன் பலம் அறியா யானையைப் போல். யானை பலம் இருந்தும் த‌ற்பெருமை தலைக்கு ஏறாமல் குழந்தையைப் போல் நடமாடும் எஸ்பிபி தன் பலத்தைத் தானே ஏற்றுக்கொள்ளவில்லை; தலைக்கு ஏற்றியும் கொள்ளவில்லை. அவர் ஒருமுறை சொன்னது: "பாடல் போட்டி நிகழ்ச்சி அல்லது வேறு எங்கேனும் என் முன் யாரும் பாடினால் 'இது என்ன ராகம்?' என்று கேட்பேன். பலரும் நான் அவர்களைச் சோதிக்க ராகம் கேட்கிறேன் என எண்ணுவர். உண்மையில் நான் தெரிந்து கொள்ளவே அதைக் கேட்கிறேன்."

இத்தனை ஆச்சரியமான‌ பாடகர், 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் "கமல் ரேஞ்சுக்கு தன்னால் பாட முடியாது" என்கிறார். "கமல் குரல் தனித்திறமை. கமல் சுலபமான பாடல்களைப் பாட மாட்டார். அதில் ஒரு சவால் இருக்க வேண்டும். இருந்தால்தான் கமல் அப்பாடலைப் பாடுவார். அவரை போல் பாட முடியாது" எனத் தன்னைத் தாழ்த்தி கமலை உயர்த்துகிறார். கமல் திறமைசாலிதான். அதை இத்துறையில் இமயச் சாதனை புரிந்த‌ ஒருவர் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா! 'அட போதும்யா உன் தன்னடக்கம் ' என மனதுக்குள் செல்லமாய்க் கூறி கொண்டேன்.

இளைய‌ராஜா - எஸ்பிபி இடையே சிறுஊடல் இருந்தது சில காலம். எத்தனை மேடைகளில் அவர்களைப் பார்த்திருக்கிறோம்! என் புரிதல் அது சண்டையோ, கருத்து வேறுபாடோ கூட இல்லை. 'யாரோ எவரோவாக இருந்தால் கூட பரவாயில்ல. நீ என்னை புரிஞ்சிருந்திருக்கணும்ல!' என்ற நட்பின் உள்ளாடும் நெருக்கத்தின் ஆதங்கமாகத்தான் இருக்க முடியும். அதனால்தான் ஈகோ விட்டுச் சந்தித்த கணத்தில் கசப்புகள் மறைந்து இருவரும் சுலபமாக‌ மீண்டும் சேர்ந்து கொள்ள முடிந்தது. 

தான் வாடா, போடா என அழைக்கும் நெருங்கிய நண்பர்கள் குறித்து அடுத்தவரிடம் பேசும் போதும் போலி மரியாதைகளை திணிக்காமல் அவன் இவன் என்றே குறிப்பிட்டு பேசுவார் எஸ்பிபி. அவரது அசைவுகளில் எங்குமே போலித்தனம் இருந்ததில்லை. எது அசலான‌ அவரோ அதை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் எங்கும். "எல்லாரும் வயசாகியும் உங்க குரல் மாறலையேனு சொல்றாங்க, அது பொய், மாறி இருக்குன்னு எனக்குத் தெரியும்" என எளிமையாக கூறிக் கொள்கிறார். ஆம், பொய்தான். குரல் மாறியுள்ளது. மேலும் இனிமையாக, இன்னும் இளமையாக!

எஸ்பிபி யாரையாவது கடிந்து பேசியோ, கோப‌ப்பட்டோ, ஏன் ஒரு கிசுகிசு வெளிவந்தோ கூட கேள்விப்பட்டதில்லை. திறமை ஒரு பக்கம் இருக்க, சினிமா உலகில் எல்லாருக்கும் பிடித்த மனிதராக இருப்பது என்பது யாருக்கும் இயலாது. அவர் புகழ் பெற்றவர், அதனால எல்லாரும் அப்ப‌டி அவரிடம் இருந்திருப்பர் என சுலபமாய்ச் சொல்லி விடலாம். ஆனால் அவரது பேட்டிகளின் வழி நான் கண்ட எஸ்பிபி ஓர் அப்பழுக்கற்ற மனிதர். 'கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடலில் வீணை இசை, ஒரு மிமிக்ரி வாய்ஸ், பாடல் என அனைத்தும் குரல்களாகவே ஒலிக்கும். அவை அனைத்தையும் எஸ்பிபி தனி ஆளாகவே மேடை நிகழ்ச்சிகளில் செய்திருக்கிறார். ஒரு பேட்டியில் அவரிடம் "இதெல்லாம் நீங்களே பண்றீங்களே! அப்புறம் ஏன் படத்தில் வேற ஆட்கள் போட்டாங்க?" என்ற கேள்விக்கு "அதுல 4 பேர் பண்ணினோம், 4 பேருக்கு வருமானம் கிடைக்கும்ல!" என்கிறார்!

அஜித் சினிமா உலகில் நுழையக் காரணமானவர் எஸ்பிபிதான் என்பது எனக்குச் சில வருடங்கள் முன்புதான் தெரியும். தயாரிப்பாள நண்பர் ஒருவர் தன் படத்துக்கு ஒரு கதாநாயகனைக் கேட்க, தன் மகன் சரணின் வகுப்புத் தோழனான‌ அஜித்தை பற்றிக் கூறியிருக்கிறார். வேறு யாராக இருந்தாலும் தன் மகனுக்கு அந்த வாய்ப்பை பெற்றுத் தரத்தான் நினைத்திருப்பர். இதில் குறிப்பிடத்தக்க இன்னொன்று எஸ்பிபி இந்தச் சம்பவத்தை எங்குமே "அஜித் சினிமாவுக்கு வரவே நான்தான் காரணம்" எனத் தம்பட்டம் அடித்ததில்லை. யாரேனும் இந்தச் செய்தியை கூறி "உண்மையா?" எனக் கேட்கையிலும் "ஆமாங்க, சாக்லேட் பாய் லுக்கும், பார்க்க மேன்லியாவும் ஒரு பையன் வேணும்னு கேட்டாங்க, அப்ப இவர்தான் மனசுக்கு தோணினார், அதான் சொன்னேன்" என இந்தச் சம்பவத்தையும் அஜித்தை உயர்த்திச் சொல்லத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்.

இப்படி இருப்பவரை சக சினிமா நண்பர்கள் எப்படி வெறுக்க முடியும்? அவர் மீதான அன்பும் மறைந்த தினத்தில்  மக்கள் சிந்திய கண்ணீரும் பாடலுக்கானதாக மட்டும் இல்லை எனது தெளிவு.

*

சினிமா உலகில் யார் மரணமும் இதுவரை என்னை அழ வைத்தது இல்லை. சென்ற ஆண்டு வந்த முதல் அலையில் இப்போது போல மிக அதிக மரணங்கள் இருக்கவில்லை. நிகழ்ந்த மரணங்களும் பரிதாபத்தையும் பயத்தையும் தந்திருந்தனவே தவிர பர்சனல் இழப்பாக மனதை அசைத்திருக்கவில்லை. எஸ்பிபியை மிக பிடிக்கும்தான் எப்பொழுதும். ஆனால் எத்தனை பிடிக்கும் என்று உணர்ந்தது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு "நான் நல்லாத்தான் இருக்கேன்" என வீடியோவில் பேசிய தினத்தில்தான். இந்த மனிதருக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாதே என அப்போதே மனம் பதறத் துவங்கியது. அவர் மரணத்தின் உலுக்கலிலிருந்து நான் மீளச் சில மாதங்கள் ஆயின‌. பாடல்கள் கேட்பதையே தவிர்க்கத் துவங்கினேன். ஆனால் இத்துயரைக் கடக்கவும் நீயே சரணம்  என அவர் பாடல்களையே தேடிச் சரணடைந்தேன். நோய் தந்ததும் அவரே, மருந்தும் அவரே.

இதில் இன்னும் ஆதங்கமான விஷயம் நம்மில் பலரையும் போல் உயிர் மீது ஆசை இருந்தும் 'செத்தாலும் பரவாயில்லை வாழ்ந்து முடிச்சுட்டேன்' என்றெல்லாம் அவர் நடிக்கவில்லை. "நான் சாக விரும்பவில்லை, என் வாழ்வை மகிழ்ச்சியாக நெடுநாள் வாழ விரும்புகிறேன்" என் பேட்டிகளில் கூறி வந்தவர். ஒரு குழந்தையின் கையில் இருந்த பொம்மையை வெறிகொண்டு பறிப்பதைப் போல் அவரிடம் இருந்து உயிரைப் பறித்தது கொரோனா. நம்மிடம் இருந்து அவரையும்!

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதுவது புத்தியிலிருந்து அமையாது. மனதிலிருந்தே வெளிப்படும். அப்படித்தான் இந்தக் கட்டுரையும். இதில் கூறியது கூறல் இருக்கலாம்; கூறியவை மிகையாகத் தோன்றலாம். காதலைப் போல் மேலும் சில உணர்வுகளும் தன்நிலை இழக்கச் செய்பவை. எஸ்பிபி மீதான என் ப்ரியமும் அப்படியானது. அதனால்தான் அவர் மறைவு வெறும் செய்தியில்லை.

இந்த இழப்புக்கான ஆறுதலையும் அவரே முன்பே கூறி விட்டார்:

"இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... கேளாய் பூ மனமே..."

இசையாய் மலர்வீர்.

இசையாய் மணப்பீர்.

இசையாய் என்றும் வாழ்வீர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னிசையே! 🙏❤️

***

முகக்கவசம்

27 April 2021 at 19:20

வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன
சுடுகாடுகள் நெரிசலில் நிறைகின்றன

குடும்பங்குடும்பமாக நோயடித்து வீழ்த்துகிறது
கொத்துக்கொத்தாகச் சாவள்ளித் தின்கிறது

பச்சைக்காற்றில் பிரியம் கொண்டிருந்தோர்
உயிர்வளிக்கலன் தேடி அலைபாய்கிறார்கள்

மைதானங்களில் விளையாடிய குழந்தைகள்
மயானங்களில் கிடத்தப்பட்டிருக்கின்றன

ஒரு படுக்கையில் ஆறு நோயாளிகள்
ஒரு குழிக்குள் நூறு பிரேதங்கள் 

அரசாங்கத்தைக் குடிமக்களும்
குடிகளை அரசும் பழிகூறுகின்றன

வதந்திகள் பரப்பினால் தண்டனை
என்ற‌ அறிவிப்பை அறியாத உடல்கள்

வடக்கிலிருந்து தெற்கு வரை வாடை
பரப்பியபடி கருகிச் சாம்பலாகின்றன

தடுப்பூசியில்லை மருந்தில்லை
ஆக்சிஜனும் கையிருப்பில்லை 

இல்லைகளால் நிறைந்திருக்கிறது
இந்தக் குரூரக் கிருமி சூழ் உலகு

இத்தருணத்திலாவது யாரேனும்
உங்கள் கடவுள்களிடம் கூறுங்கள்

மூன்றடுக்குடைய முகக்கவசத்தை
கண்களுக்கு அணியக் கூடாதென.

*

ஃபகத் எனும் சாத்தான்

25 April 2021 at 03:21
ரஜினியைத் தவிர திரையில் இன்னொருவரை இத்தனை ரசிப்பேன் என‌ 'வேலைக்காரன்' படம் வருவதற்கு முன் எவராவது சொல்லியிருந்தால் நானே நம்பி இருக்க மாட்டேன். தலைவர் நடித்த‌ 'வேலைக்காரன்' இல்லை; தலைவன் நடித்த‌ வேலைக்காரன். தலைவர் ரஜினி; தலைவன் ஃபகத்!

சிவகார்த்திகேயன் நாயகனாக வந்து போன‌ 'வேலைக்காரன்' படத்தில்தான் எனக்கு ஃபகத் ஃபாசில் எனும் நடிகன் அறிமுகம். அதற்கு முன் நஸ்ரியாவின் கணவன் என்ற அளவில் நிழற்படங்களில் மட்டுமே பார்த்து எந்தக் கோணத்திலும் பெரிதும் கவராத ஒரு முகமாகவே மனப்பதிவு. 'வேலைக்காரன்' பார்த்த போதுதான் "என்னடா, இந்தாளு!" என்ற‌ புருவ உயர்த்தல் வந்தது.


பொதுவாவே மலையாளிகளின் தமிழ் உச்சரிப்பில் ஒரு கவர்ச்சி இருக்கும். அதுவும் ஆண்களுக்கு ஒருபடி அதிகமாகவே. அப்படி ஒரு குரல் வசீகரம்தான் நம்மை ஈர்த்திருக்கும் போல ("அட, அவளும் பெண்தானே!" மொமண்ட்) என‌ச் சுய‌சமாதானம் செய்து கடக்க முயன்றாலும் அதை மீறி சாத்தியமற்ற‌தொரு நடிப்பைக் கண்களில் கொண்டு வந்து நிறுத்திய கயவன் ஃபகத்.

அந்த படத்துக்கு பின்னும் கூட‌ ஃபகத் பற்றி அதிகமாக‌ யோசிக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான் 'தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும்' படம் தேசிய விருது பெற்று பரபரப்பாக சமூக இணைய தளங்களில் பேசப்பட்டது. "அட, இந்தாளா!" என‌த் தேடி பார்த்த பிறகுதான் மொத்தமாக‌ விழுந்தேன்.

'சிவா' படத்தில் ரஜினியைப் பாத்து ஷோபனா சொல்வார்: "நீயும் உன் பரட்டை தலையும் கருப்பு தோலும். ஆனா உன்கிட்ட என்னமோ இருக்குய்யா". அந்த‌ வசனத்தை ஃபகத்துக்கும் பொருத்தலாம். வெகுஜனம் பொதுவாய் சினிமா நாயகர்களிடம் எதிர்பார்க்கும் எதுவும் இல்லாதவர். சிக்ஸ் பேக் உடலோ, பெரிய உயரமோ, மாஸ் தோற்றமோ இல்லாத (அவ்வளவு ஏன், தலையில் கேசம் கூட இல்லாத) தோற்றம் கொண்ட‌ ஓர் ஆள். ஆனால் ரசிக்க வைக்கும் நடிப்பு. வினோதம் என்னவென்றால் அந்த நடிப்பை ரசிக்கத் துவங்கி, மெல்ல அந்த உருவத்தையும் ரசிக்க ஆரம்பித்து விடுவோம். ஆம். என்னமோ ஒண்ணு இருக்குய்யா... அந்தக் கண்களில்... அந்தச் சிரிப்பில்... ❤️

'தொண்டிமுதலும் த்ரிக்ஷாக்ஷியும்' படத்தில் இடைவேளைக்கு முந்தைய காட்சி. நகையை எடுக்கவில்லை என மறுத்துக் கொண்டிருக்கும் திருடன் ஃபகத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார்கள், சங்கிலி வயிற்றுக்குள் இருக்கும். அப்போது வரை பார்வையாளர்களான‌ நமக்கே கூட ஃபகத்தான் எடுத்தாரா, இல்லை வேறு எவர் கைக்கும் போய் விட்டதா என்ற குழப்பம் வருமளவு எடுக்கவே இல்லை எனச் சாதிப்பார். எக்ஸ்ரே காட்சிக்கு அடுத்ததாக‌ திருட்டுக் கொடுத்த பெண்ணைப் பாத்து ஒரு விஷ‌மச் சிரிப்பு உதிர்ப்பார். அத்தனை திருட்டுத்தனத்தையும் அந்த கண்கள் பிரதிபலிக்க, அப்படி ஒரு சிரிப்பு! ('பாபநாசம்' படத்தில் எருமையைத் தோண்டி எடுக்கும் காட்சியில் கமல் ஹாசனின் பார்வையை இங்கே ஒப்பிட்டு, எது இயல்பான‌ சிறந்த நடிப்பு என யோசிக்கலாம்.)



இப்படத்திற்குப் பின்பே ரசிகை என்ற சுழலில் சிக்கினேன். அடுத்ததாகப் பார்க்க வாய்த்த படம் நார்த் 24 காதம். முற்றிலும் வேறு ஒரு கதாபாத்திரம். ஓசிடி பிரச்சனையுள்ள, எதிலும் கண்டிப்பும் கறாருமாகச் சுத்தம், ஒழுக்கத்தை கடைபிடிக்கும் பாத்திரம். பாத்திரத்தை விடுங்கள், அது எல்லா நடிகர்களும் பற்பல வேஷ‌ம் கட்டுகிறார்கள், மணிக்கணக்கில் ஒப்பனை செய்கிறார்கள், சமயங்களில் சிறப்பாக‌ நடிக்கவும் செய்து விடுகிறார்கள். ஆனால் உடல்மொழி என ஒன்று இருக்கிறதல்லவா! அந்தந்த கதாபாத்திரத்துக்கு என அவர்கள் மெனக்கெட்டு ஒரு பாடி லேங்வேஜ் கொண்டு வந்தாலும் அதைத் தாண்டி அவங்களின் சொந்த மேனரிசம் வெளிப்பட்டு விடும். கமல், ரஜினி, தனுஷ் என்ற‌ நடிப்பு அசுரர்கள் கூட எந்தப் பாத்திரத்தில் வந்தாலும் எத்தனை சிரத்தை எடுத்தாலும் அதை மீறி அதில் கமலும் ரஜினியும் தனுஷம் தெரிவார்கள். அது அவர்கள் ஆளுமையாக‌ இருக்கலாம் அல்லது அவர்கள் பிம்பம் நம்முள் ஏற்படுத்திய‌ ஆழ்மன விருப்பத்தின் விளைவாகவும் இருக்கலாம். அது அக்கதாபாத்திரத்தைத் தாண்டி அந்த நடிகர்களாக அவர்களைப் பார்க்க வைத்து விடும். ஆனால் ஃபகத்திடம் மட்டும் அது நடக்காது. அந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி தாண்டி அதில் ஃபகத்தை பார்க்கவே முடியாது. திருடனா, சைக்கோவா, தாழ்வு மனப்பான்மை கொண்ட‌ ஒருவ‌னா எதுவென்றாலும் நாம் அந்தப்பாத்திரத்தை மட்டுமே பார்க்க முடியும். அந்தப் பாத்திரத்தையே நாம் விரும்புவோம், வெறுப்போம், பரிதாபப்படுவோம்; ஃபகத்தை அல்ல. நார்த் 24 காதம் படத்தில் அப்படி ஒரு பாத்திரமும், அதற்கேற்ற உடல்மொழியுமாய் ஃபகத் மேலான வியப்பு அதிகரித்தது. இதை மேலும் சிலபல படங்கள் பார்த்து உறுதி செய்து கொண்டேன். இது நம்பவியலாத அசாதாரணம்! (North 24 Katham காட்சிகள்: https://www.youtube.com/watch?v=0QZwmrB1qkM)

அப்பறம் ஆர்ட்டிஸ்ட் என்று ஒரு படம். ஒரு ஓவியன். பெருங்கலைஞன். அவனுக்கு ஓவியத்தை தவிர வேறேதும் முக்கியமில்லை. வரைவதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் துணிகிற‌வன், எந்தச் சமரசமும் இன்றி தன் கலையை முன்னெடுக்கிறவன். தன் மேல் அபாரத் தன்னம்பிக்கையும், தெனாவெட்டும் நிறைந்த‌ இளைஞன். அப்படிப்பட்டவன் வாழ்க்கையில் வரும் ஒரு பெண். எந்த வேலை வெட்டிக்கும் போகாம ஓவியம் வரைவதையே முழு நேரமும் செய்கிற‌ காதலனுக்காக ஓடி ஓடி உழைத்து கேன்வாஸூம், பிரஷூம் வாங்கித் தருகிறவள். ஒரு விபத்தில் கண் பார்வையை இழக்கிறான் நாயகன். ஓவியனுக்குப் பார்வை போனால் என்னாகும்? அந்த வலியை, அதன் சிக்கல்களை விரக்தியும் பகடியுமாக‌ வெளிப்படுத்தும் கதாபாத்திரம். ஒரு கட்டத்தில் "ச்சே... என்ன கருமம்டா இந்தாளு!" என‌ நம்மையே கடுப்பேற்றும் கேரக்டர். பார்வை போன பிறகும் ஓவியம் வரைவதை விடாத முயற்சியும், இயலாமையில் வெடிப்பதுமாக‌ சைத்தானாக‌ மாறி இருப்பார். படத்தில் கதாநாயகியான Ann Augustine-க்கும் கனமான பாத்திரம். அருமையான தேர்வு; அட்டகாசமான நடிப்பு. ஆனாலும் 'மூன்றாம் பிறை'யில் ஸ்ரீதேவி பாடுபட்டு நடித்ததை விட அசால்டாக‌ கமல் ஸ்கோர் பண்ணினதைப் போல ஃபகத் இதில் நம் மனதை அள்ளிப் போய் விடுவார்.

ஃபகத்தின் கண்கள் ஒருவிதமான கண்ணாடித்தன்மை கொண்டவை. பரிசுத்தமான துல்லிய ஒளியெறியும் கண்கள். அவர் ஏற்கும் கதாபாத்திரத்தைப் பெரும்பாலும் பிரதிபலிப்பவை அந்தக் கண்கள்தாம். ஆனால் பார்வையற்ற கதாபாத்திரத்தில் அப்படி கண்கள் வழி உணர்வுகளை வெளிப்படுத்துவது சிரமம்தானே! வெளிப்படுத்துவதைக் கூட‌ விடுங்கள், அப்படியே கண்களால் பேசி நடிக்கும் ஒருவனுக்கு அதை மறைப்பது இன்னும் சிரமம் அல்லவா! ஆனால் அந்த இருளிலும் வெளிச்சம் தந்திருப்பார் ஃபகத். (Artist ட்ரெய்லர்: https://www.youtube.com/watch?v=Ml2IAPNCdTY)

'மகேஷின்ட பிரதிகாரம்' படத்தில் வியந்த விஷ‌யம் ஒரு வரிக் கதையை இந்த மலையாளிகள் எப்படி முழுநீளப் படமாக்கி விடுகிறார்கள் என்பது. அதை விட ஆச்சரியம் அந்த ஒரு வரிக் கதைக்கு இந்த ஃபகத் படம் முழுக்கக் கொடுக்கும் முகபாவங்கள். தன் காதலியின் திருமணத்தின் போது வலியோடு லேசாய்ச் சிரித்த‌படி வண்டியில் அமர்ந்திருக்கும் காட்சி ஒரு சோற்றுப்பதம். ஒரு பழிவாங்கலுக்கான காத்திருப்புதான் படம். தொளதொளவென ஒரு சட்டையும் மடித்துக் கட்டிய‌ வேட்டியுமாய் சராசரி இந்தியக் குடிமகனுக்கான அப்பாவித்தனமும் வைராக்கியமும் நிறைந்த அப்பாத்திரத்துக்கு ஃபகத் செய்தது அநியாய‌ நியாயம். ('நிமிர்' என்ற பெயரில் இப்படம் பின்னர் தமிழிலும் வந்தது.)

சுமார் 50 படங்கள் வரை ஃபகத் நடித்திருப்பதாக அறிகிறேன். இதில் அன்னையும் ரசூலும், இந்தியன் பிரணய கதா, டயமன்ட் நெக்லஸ், காட்ஸ் ஓன் கன்ட்ரி, கும்பளாங்கி நைட்ஸ், வரதன், 22 ஃபீமேல் கொட்டாயம் தொடங்கி சமீபத்திய டிரான்ஸ், ஜோஜி வரை நான் பார்த்த படங்களில் படங்களின் சுவாரஸ்யம், உள்ளடக்கம் போன்றவற்றில் முன்பின் கருத்து மாறுபட்டாலும் ஃபகத்தின் நடிப்பில் குறை தோன்றியதே இல்லை. (Kumbalangi Nights காட்சிகள்: https://www.youtube.com/watch?v=rRwIsacio0M)

உருவத்தை வர்ணித்து விடலாம், ஆனால் உணர்வுகளைச் சொற்களில் கொண்டு வருவது ரொம்பச் சிரமமான காரியம், அனுபவித்தால் மட்டுமே முழுமை பெறும். போலவே, ஃபகத் நடிப்பின் சிறப்பை நான் எப்படி விலாவாரியாய் விவரித்து எழுதினாலும் நீங்கள் பார்க்கையில் கிடைக்கும் அனுபவம் இன்னும் ஆழமானதாக‌, வேறொன்றாக‌ இருக்கும். அதனால் நீங்களே பார்த்துத் தீர்மானியுங்கள்.

தேசிய விருது, மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் என‌ வாங்கிக் குவித்திருக்கும் ஃபகத் தனக்கு ரசிகர் மன்றங்கள் அமைக்கப்படுவதை அனுமதிக்கவில்லை. தொலைக்காட்சிப் பேட்டியொன்றில், "20 முதல் 30 வயதுக்குள்ளான இளைஞர்களே அதில் அதிகம் ஈடுபடுவார்கள், அவ்வயது அவர்கள் தங்களை உருவாக்கிக் கொள்ள‌ அத்தியாவசியமானது, அதை நான் எடுத்துக் கொள்ள‌ விரும்ப வில்லை, சினிமாவுக்கு ரசிகர்கள் போதும், நடிகனுக்கு வேண்டாம்" என்று ஃபகத் சொன்ன சமூகப் பொறுப்பை வியக்கிறேன். அவரழகில் ஒரு சிட்டிகை கூடிய கணம் அது!

நான் பார்த்த எந்த படத்திலுமே ஃபகத் ஓர் ஆக்ஷ‌ன் ஹீரோவாக‌ பன்ச் டயலாக் பேசியதில்லை. சமுதாயத்தை திருத்த முன் நிற்கும் எடுத்துக்காட்டான கதாபாத்திரமோ, கம்பீரம் மிக்க டான் / காட்ஃபாதர் பாத்திரங்களிலோ வந்ததில்லை. ரொம்ப ரொம்பச் சதாரண மனிதர்களையே, சராசரி மக்களையே பிரதிபலித்த கதாபாத்திரங்கள் ஃபகத்துடையவை. அவ்வகையில் ஃபகத் உங்களை, என்னைப் போன்ற உதிரிகளை திரையில் உயிரூட்டும் ஓர் அசலான மக்களின் கலைஞன்!

மாஸ் ஹீரோவான ரஜினியை ரசித்த எனக்கு ஃபகத்தையும் பிடிக்கிறது என்பதே ஆரம்பத்தில் ஆச்சரியமாக‌ இருந்தது. ரஜினி என்பது குதூகலம், மகிழ்ச்சி என்றால் ஃபகத் என்பது நிதர்சனம், யதார்த்தம். இரண்டும் இரு வேறு துருவங்கள். ஒன்றிலிருந்து மற்றதற்கு நகர்வது கனவிலிருந்து நனவுக்குள் புகுவது போன்ற அனுபவம்! மர நிழலின் மடியிலிருந்து வெயிலின் கதகதப்பில் நுழைவது போல்! கூடுதுறைப் படிக்கட்டிலிருந்து குளிர்ந்த‌ ஆற்று நீருள் பாதம் அமிழ்த்துவது போல்!

இரண்டும்தான் வேண்டும்.

*

S/O பொன்னி

20 March 2021 at 06:34
(ஆம். மிகத் தாமதம்தான். இன்று ஒருவர் பொன்னியின் செல்வனை வாசித்து எழுதினால் அது நகைச்சுவையாகப் படக்கூடும். ஆனால் இப்போதேனும் வாய்ப்பமைந்ததே என எண்ணுகிறேன்.)


கிட்டத்தட்ட 6 வருடங்கள் முன்பு பொன்னியின் செல்வன் படிக்கத் துவங்கி இரண்டு, மூன்று அத்தியாயங்களில் சோம்பல்பட்டு நிறுத்தினேன். அதற்குப் பிறகும் பல முறை படிக்க எண்ணி 'இவ்வளவு பெரிய புத்தகத்தை படிக்கணுமா? படித்தாலும் முடிக்க முடியுமா?' எனும் மலைப்பிலேயே முயற்சியை கைவிட்டிருந்த என்னைத் தன் யூட்யூப் சானல் (டி தியேட்டர்) வழி மீண்டும் 'பொன்னியின் செல்வன்' பக்கம் திருப்பினார் கனி. அவர் கதை சொல்லும் அழகில் ஈர்க்கப்பட்டு 'படிப்பதை விட கேட்பது சுலபம்' என்ற உப காரணத்துடன் நடைபயிற்சியின் போது பொன்னியின் செல்வனை கேட்கத் துவங்கினேன். வாரம் இரண்டு அத்தியாயங்களாக அவர் கூறி வந்த கதையை ஒரு வாரத்திற்குள் பதிவேற்றியிருந்த அத்தனை அத்தியாயங்களையும் கேட்டு முடித்து விட்டேன். அடுத்து என்ன ஆகும் என்ற ஆவல் உந்த, ஏழு நாட்கள் காத்திருந்து இரு அத்தியாயங்கள் கேட்பது என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போல் காணாமலாக, புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன். இதையொட்டி யோசிக்கையில் 1950-55 வாக்கில் கல்கி வார இதழில் இது தொடராக வெளியான‌ போது வாசகர்கள் எத்தனை பரபரப்புடன் காத்துக் கிடந்திருப்பார்கள் என யூகிக்க முடிகிறது!

மிக நீண்ட புதினம். 5 பாகங்கள். 290க்கும் மேற்பட்ட அத்தியாயங்கள்.

பொன்னியின் செல்வன் என்ற தலைப்பு ராஜராஜ சோழனைக் குறித்தாலும் கதையின் நாயகன் வந்தியத்தேவன்தான். வீரநாராயண ஏரியில் வந்தியத்தேவன் பயணத்தில் துவங்கும் கதை திரும்ப வீரநாராயண ஏரிக்கு வந்தியத்தேவன் வருகையிலேயே முடிவடைகிறது. இடைப்பட்ட காலத்தில் அவனது பயணத்தில் நடந்த சம்பவங்கள்தான் கதை எனச் சுருக்கமாக சொல்லலாம். நிஜமும், புனைவும் கலந்த ஏறக்குறைய ஓராண்டில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

எழுதப்பட்ட காலகட்டத்தை வைத்துப் பார்க்கையில் அமரர் கல்கியின் உழைப்பு அசுரத்தனமானது. காட்சிகளை அவர் விவரிக்கும் விதம் தேர்ந்த திரைக்கதைக்குச் சற்றும் குறையாதது. சோழ தேசத்தில் நாமே சஞ்சரிக்கும் உணர்வை வர்ணனைகளில் கொணர்ந்தருளி இருக்கிறார். தஞ்சையையும், திருவையாறையும், கோடிக்கரையையும் ஏன் ஈழத்தையும் கூட நம் கண் முன் நிறுத்துகிறார். குறிப்பாக‌ ஈழத்தில் நடக்கும் திருவிழாவை விவரிக்கும் அழகில் அத்தனை துல்லியம். இணையம் வழியே தகவல்கள் சேகரிக்க இயலாத காலகட்டத்தில் ஈழத்தின் பழக்க வழக்கங்களை அத்தனை கச்சிதமாகக் கூற அசாத்திய உழைப்பும், தேடலும் தேவை. மற்றுமோர் இடத்தில் வந்தியத்தேவன் கடல் நடுவே கப்பலில் சிக்கித் தவிப்பான். அவனது வலியை, பயத்தை நாமும் அனுபவிப்பது போன்ற நெருக்கமான எழுத்து. அதே சமயம் மாதிரியான‌ துல்லிய வர்ணிப்புகளே சில அத்தியாயங்களில் தூக்கமும் வர வைத்தது. எவ்வளவு நீளமென அவ்விடங்களில் அலுப்புத் தட்டியது.

பொதுவாக எல்லா காட்சிகளுக்கும் வேறொரு இடத்தில் நியாயமான காரணங்கள் வைத்திருக்கிறார். மூன்றாம் பாகம் படிக்கும் போது முதல் பாகத்தில் சில பகுதிகள் மறந்து திரும்ப படித்து நினைவுபடுத்திக் கொண்ட போது கல்கியிடம் 'எப்படிய்யா மறக்காம 5 வருசம் தொடர்பு விடாம எழுதினீங்க?' என மானசீகமாக கேட்டுக் கொண்டேன். எதேனும் ஒரு அத்தியாயத்தில் நிர்கதியாக விடப்பட்டதாக நினைத்து குழப்பத்துடன் நாம் கடந்து வந்த வரிகளுக்குப் பல அத்தியாயங்கள் கடந்த பின் ஒரு விடை வைத்திருந்தார்.

வரலாற்றுப் புதினம் என்பது என்னை ஈர்த்த முக்கியமான கவர்ச்சி. ஆம், நாவல் முழுக்க வரலாற்றின் கவர்ச்சி தான். அக்கவர்ச்சி தாண்டி ஓரிடத்தில் கூட 18+ விஷயங்கள் கிடையாது. நந்தினி என்னும் பேரழகியைப் பெரிய பழுவேட்டரையர் மோகித்து அடிமையாய் காலடியில் கிடப்பதைக் கூட இத்தனை சைவமாய்க் கூறி இருக்கிறாரே என்பது வியப்பு. ஆனால் இதுவே சில சாண்டில்ய ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் இருக்கலாம்தான்.

முதல் நான்கு பாகங்களில் சிதறிக்கிடந்த பல்வேறு சூழல்களை, கதைகளை, மாந்தர்களை, இடங்களை இறுதியில் நீண்ட ஐந்தாம் பாகத்தில் ஒன்று திரட்டி இருக்கிறார். புகழ்பெற்ற 'ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?' என்ற கேள்விக்கு விடை தராமலே கல்கி விட்டிருப்பது 'பொன்னியின் செல்வன் பார்ட் 2' எழுதும் திட்டம் இருந்திருக்குமோ என்ற‌ ஐயத்தை ஏற்படுத்தியது.

குந்தவை, வானதி எனப் பல‌ பெண்கள் நாவலில் உலவினாலும் நந்தினியும், பூங்குழலியும் தான் என்னை அதிகம் ஈர்த்தார்கள். ஆண்கள் அனைவரையும் தன் வதனத்தால் வணங்க வைக்கும் திறன் பெற்ற நந்தினி சமயத்திற்கு தகுந்தாற்போல் அப்பாவிப் பேச்சு பேசும் இடங்களில் புத்தியிலும் ஈர்க்கிறார். அழகாலும், புத்தியாலும், பேச்சு சாதுர்யத்தாலும் ரசிக்க வைத்த வில்லி. படையப்பா நீலாம்பரி போல் இறுதியிலும் வில்லியாகவே முடித்திருக்கலாமே என்றே தோன்றியது. இனி நந்தினி என்ற பெயருடைய பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் இவள் நினைவு ஒரு மைக்ரோ நொடியேனும் வந்து போகும்.

பூங்குழலியின் கதாபாத்திரம் கற்பனையெனினும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை தைரியமான, தான் விரும்பியதை செய்யத் துணிச்சல் நிறைந்திருந்த பெண்ணா எனப் புருவம் உயர்த்த வைக்கிறாள். அழகும், பாடலும், ஆடலும் விடுங்கள். சமுத்திரகுமாரி எனப் பெயர் கொண்டவளின் தைரியம், வேகம். வந்தியத்தேவன், அருள்மொழிவர்மனை ஆபத்துகளில் காத்த சாதுர்யம். வந்தியத்தேவனைப் போலவே நாமும் புரிந்து கொண்டு ஒரு வட்டத்தில் வைக்க இயலாமல் தடுமாறும் குணாதிசயங்கள் கொண்ட அற்புதம் பூங்குழலி. அத்தனைக் குழந்தைத்தனமானவள் காதலைக் கடந்து வந்த பக்குவம் தேவதைத்தனமானது.

ஆழ்வார்க்கடியான் நம்பி ஒரு கோமாளியைப் போல் அறிமுகமாகி, ஒற்றனாய் வலம் வந்து, புத்தி சாதுர்யனாய் மனதில் நிற்கிறான். அக்காலகட்ட சைவ - வைணவச் சண்டைகளை அவனது பாத்திரம் மூலம் வெளிப்படுத்தி இருப்பதாய் மேலோட்டமாய்த் தெரிந்தாலும் உண்மையில் இரு தரப்பும் சிலபல நாத்திக வசனங்களை எதிர்தரப்பைத் தாக்கும் போது உதிர்ப்பதாக எனக்குத் தோன்றியது.

தலைப்பின் நாயகனான அருள்மொழிவர்மன் யானைகளுக்குப் பிடித்தமானவன், அவன் பேச்சை யானைகள் கேட்கும் என்பதே அவனை எனக்குப் பிடிக்க போதுமான காரணமாக இருந்தாலும் 19 வயதில் ஈழத்துக்கு போர் தொடுத்து சென்ற வீரனை, அழகனை, இளகிய உள்ளமும், எதிரி நாட்டு மக்களாயினும் அவர்தம் நலனே முக்கியமெனக் கருதிய இளவரசனை யாருக்கும் பிடிககும்தான். இந்த அருள்மொழிவர்மன்தான் ராஜராஜ சோழனாக பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் தந்த அரசன் என்ற உண்மை லேசாகச் சுடவும் செய்கிறது. ஈழத்தில் கண்ட பிரம்மாண்ட புத்தர் சிலைகளால் ஈர்க்கப்பட்டு இதே போல் தஞ்சையிலும் ஒரு பிரம்மாண்டத்தை நிறுவ வேண்டும் என்ற அவாவினைத் தீயாக வளர்த்துக் கொண்டதன் விளைவுதான் பிரகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் பெரிய கோவில் எனப் புரிகிறது.

கதைமாந்தர்களில் பெரும்பாலானோர் வந்தியத்தேவன் மூலமே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அந்த அளவு கதையின் எல்லாப் புள்ளிகளையும் இணைக்கும் முக்கியக் கோடாகப் பயணிக்கிறான் வந்தியத்தேவன். சற்றே குறும்பு, ஆபத்தில்லாத பெண் பித்து, வீரன், அழகன், நகைச்சுவை உணர்வுள்ள இளைஞனாக ஒரு கதாநாயகனுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய வந்தியத்தேவன் குந்தவை மேல் கொள்ளும் காதல் அழகு. அவன் மேல் மணிமேகலை கொண்ட பித்து உருக்கம்.

ஆதித்த கரிகாலன் கொலையா தற்கொலையா என்கிற‌ குழப்பம் மட்டுமன்றி நாவலில் விடை தெரியாமல் குழப்பத்தில் நிற்கும் மற்றொரு விஷ‌யம் நந்தினி ஆதித்த கரிகாலனின் உறவுமுறை. காதலி என கரிகாலனால் கூறப்பட்டவள் அண்ணன் தங்கை முறையாகிறாள். நந்தினியின் தாய் மந்தாகினிக்கும் வீரபாண்டியனுக்குமான உறவென்ன?, எப்படி எந்தச் சூழலில் இந்த உறவு உண்டானது என்பது போன்ற எந்த விளக்கமும் இல்லாமல் விடையில்லாமலே நின்ற புதிராக நந்தினியின் பிறப்பும், உறவு முறைகளும் குழப்பத்திலேயே நிறைவடைந்திருக்கிறது. இந்த உறவுமுறையின் சிக்கலுக்கும் ஆதித்தன் கொலைக்கும் தொடர்பிருக்கலாமோ என்ற யூகமும் வந்து போகிறது. ஒருவேளை 1950களில் எழுதப்பட்டது என்பதால் வீரபாண்டியருக்கும் மந்தாகினிக்குமான உறவை வெளிப்படையாக குறிப்பிட இயலாமல் இப்படி மறைமுகமாக கூறியுள்ளாரா அமரர் கல்கி எனவும் ஐயம் எழுகிறது.

நீண்ட சோழ வரலாற்றினை அறிய பொன்னியின் செல்வன் மிக முக்கியமானதொரு துவக்கப்புள்ளி. இத்தனை கதாபாத்திரங்களை, அரச நடைமுறைகளை, சட்டதிட்டங்களை, விசுவாசங்களை, துரோகங்களை, பெண் மயக்கங்களை, தியாக‌ங்களை அறிந்து கொள்ள சுவாரஸ்யமானதொரு வழி பொன்னியின் செல்வன் புதினம். காலம் கடந்தும் வரலாறு வாழும் என்பதற்கு சோழ தேசம் மட்டுமல்ல கல்கியின் படைப்பும் ஒரு எடுத்துக்காட்டு.

*

கங்கு

20 March 2021 at 03:20
அம்மாவின் திதியன்று
காக்கை தின்ற மிச்சத்தில் 
நினைவில் மேலேறி வரும்
அவளுடனான பிணக்கில்
தட்டியெறிந்த வட்டலின்
பருக்கைச் சிதறல்கள்

பிணத்தை உற்று நோக்கி
முகம் ஆராயும் பழக்கம்
வெள்ளைப் பொட்டல‌மாய்
சாலையில் தலை நசுங்கிய‌ 
மாமாவைப் பார்த்ததில்
சட்டென நின்று போனது

எதிர்வீட்டுத் தாத்தாவைக்
குளிப்பாட்டிப் பட்டையிட்டு
மர நாற்காலியில் அமர்த்திக்
கட்டியிருந்த‌தைக் கண்ட‌பின் 
நாற்காலியில் சகஜமாயமர‌
நாட்கணக்கானது எனக்கு

தண்ணீர் காய வைத்து
எரிந்தடங்கிய அடுப்பில்
எஞ்சின‌ கங்கின் சிவப்பில்
உட்புறமாய்த் தாழிட்டுத்
தீக்குளித்த சினேகிதியை
மனம் மீண்டும் எரிக்கும்

பிராயத்தின் பிரயாணத்தில்
கட்டியழுதல் முடிந்ததும்
சட்டெனக் கண் காய்ந்தது
இழவுகளின் பொருட்டு
கனவுகளில் துயரேறித்
தூக்கமிழப்பது மறந்தது

துக்கமோ பயமோ இன்றி
மரணங்களைக் கடக்கத்
திறம்படக் கற்றிருந்தேன்
இற‌ந்தவர் நினைவு மீட்டு
நிதான அசை போடுவது
நிரம்பப் பழகி விட்டது

ஆனாலும்

பிள்ளை மரித்த வீட்டின்
கலையாத ஒழுங்கும்
கல்லறைத் தோட்டத்தின்
நேர்த்தியைக் குலைக்கும் 
சன்னமான சமாதியும்
சற்று அசைத்து விடுகிறது.

❌