தமிழில் பெண் எழுத்தின் மரபையும் தொடர்ச்சியையும் முதன்முதலாக விசாரணைக்கு உட்படுத்தி எழுதியவர் எழுத்தாளர் அம்பை. 1984-ல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘The Face Behind The Mask’ என்ற நூலில் அதுவரை தமிழில் பெண்கள் எழுதியதில் புதிய, அசலான வெளிப்பாடு என்று ஒன்று ஏன் உருவாகவில்லை என்ற கேள்வியை எழுப்பி விரிவாக ஆராய்ந்தார். வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இந்தக் கேள்வியை ஆராய்ந்ததோடு, பல பெண் எழுத்தாளர்களை நேர்முகம் கண்டு அவர்களுடைய பதில்களையும் அனுபவங்களையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த காலகட்டம் பற்றிய துல்லியமான சித்திரமும், அன்று பெண்களின் சுய வெளிப்பாட்டின் மேல் இருந்த மெய்யான சில அழுத்தங்களில் இந்த நூலில் பதிவாகியுள்ளது. அதே போல், அவ்வெழுத்தாளர்களின் எல்லைகளும் பதிவாகியுள்ளது.
இந்த நூல் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இந்நூலை ஒட்டி, ‘முகமும் முகமூடியும்’ என்ற பெயரில் ஒரு சிறிய கட்டுரைத் தொடர் சுரபி இதழில் இடம்பெறவுள்ளது. தமிழ் பெண் எழுத்தின் ஆழ்தொடர்ச்சியை அறிய இந்தத் தொகுப்பும் வாசிப்பும் உதவும் என்று நம்புகிறேன். அதன் முதல் பாகம் சென்ற இதழில் வெளியானது. இரண்டாம் பாகம் இந்த இதழில்.
~
2
19-ஆம் நூற்றாண்டின் இறுதி என்பது இந்தியாவின் மறுமலர்ச்சி காலகட்டம். அப்போது தான் நவீன இந்தியாவும், தத்துவம், அறம், தேசம், மதம், கடவுள் என்று அதன் அனைத்து மதிப்பீடுகளும் மறுவரையறை செய்யப்பட்டன. நவீன மனிதன் வரையறுக்கப்பட்டான். அதன் வழியாக நவீன பெண்ணும் வரையறுக்கப்பட்டாள்.
சென்ற கட்டுரையில் விவாதித்தது போல், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீனப் பெண் பொதுவெளிக்குள் நுழைந்த அதே சமயம், “நவீனப்பெண்” என்று சிந்தனையாளர்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பமும் பொதுவெளிக்குள் நுழைந்தது. ஆகவே பெண் மீது இரண்டு எதிர்-எதிரான அழுத்தங்கள் நிலவியது. புறவுலகில் இடம் அமைய அவள், அப்போது எழுந்து வந்த பிம்பங்களுடன் சமரசம் செய்ய வேண்டி இருந்தது. அதே சமயம் தன் சுயவெளிப்பாட்டை நிகழ்த்த வேண்டி இருந்தது. அம்பை தன்னுடைய புத்தகத்தில் இந்த முரணை சித்தரிக்கிறார்.
இந்த முரண் இசையிலும் நாடகத்திலும் வெளிப்பட்ட அளவுக்கே — அல்லது மேலும் வெளிபப்டையாக — எழுத்தில் நிகழ்ந்தது. இந்த காலகட்டத்தில் பெண் என்ற பிம்பம் முதன்மையாக எழுத்து வழியாகவே கட்டமைக்கப்பட்டது. அம்பை இதை விவாதிக்கிறார்.
அம்பையின் விவாதத்திலிருந்து நாம் அந்தக் காலக்கட்டத்தின் எழுத்துக்களை இவ்வாறு தொகுக்கலாம்:
1. பெண்களைப்பற்றி ஆண் எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்கள்.
2. பெண்களை நோக்கி ஆண் எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்கள்.
3. பெண்கள் எழுதிய எழுத்துக்கள்.
இவற்றை ஆராய்வதன் மூலம் இந்த முரணை மேலும் சற்று ஆழமாக அணுகலாம்.
1. பெண்களைப்பற்றி ஆண் எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்கள்.
ஆரம்பகால எழுத்துக்களில் தோன்றிய லட்சிய (அல்லது லட்சியத்துக்குப் புறம்பான) பெண் கதாபாத்திரங்கள் ஆண் எழுத்தாளர்களின் சிருஷ்டிகளாகவே அமைந்தன. அவை அந்த ஆண்களின் கனவுப்பெண்கள் என்று அம்பை கூறுகிறார். பெண்ணின் நவீன பிம்பங்களை கட்டமைப்பதில் இந்த வகை எழுத்து பெரும் பங்கு ஆற்றியது.
அம்பை இதைச சில ஆரம்ப தமிழ் நாவல்களை ஆராய்வதன் வழியாக நிறுவுகிறார். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி சரித்திரம், பி. ஆர். ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம், ஆ. மாதவைய்யாவின் முத்து மீனாட்சி, பத்மாவதி சரித்திரம் ஆகிய நாவல்களை அலசுகிறார். இந்நாவல்கள் பெண்கள் அன்று சந்தித்த பிரச்சனைகளை விரிவாகவும் தீவிரமாகவும், பேசினாலும் கூட, அடிப்படையில் அவை யார் நல்ல பெண், யார் இலட்சியப் பெண் என்ற வரையறையை முன்வைத்துக்கொண்டே வந்தன என்கிறார் அம்பை.
பொதுவாக இலட்சியப்பெண்ணானவள் தைரியமாகவும் புத்திக்கூர்மையுடனும் இருக்கவேண்டும், கல்விகற்றவளாகவும் பேசத்தெரிந்தவளாகவும் இருக்க வேண்டும்; மேலும் வங்காள நாவல்களில் வரும் பெண்களைப்போல் தாங்கள் விரும்பும் ஆண்களுக்குக் கடிதம் எழுத வேண்டும், பாட்டுப் பாட வேண்டும் போன்ற எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. அதே சமயம் அவள் ஆணைச் சார்ந்து இருக்க வேண்டும், ஆணின் முதன்மைநிலையை அவள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள். சீர்திருத்தப் பேச்சுப் பேசினாலும், ஆண் காட்டியக் கோட்டில் நின்று மட்டுமே பேச வேண்டும், அதை மீறக்கூடாது என்றார்கள். பெண்ணை ‘உடல்’ என்றும் (ஆகவே அவள் புத்தி ஸ்திரமற்றது என்றும்), ஆணை ‘புத்தி’ என்றும் (ஆகவே அவன் ஸ்திரமானவன் என்றும்) வரையறுத்தார்கள். ஆணின் வழிநடத்தலில் தைரியமாக செயல்படும், அவன் இலட்சியங்களுக்குத் துணை புரியும் கற்புள்ள பெண்ணே அன்றைய பொதுவான இலட்சியப் பெண் பிம்பமாக விளங்கினாள் என்று அம்பை கூறுகிறார்.
இந்த காலகட்டத்து நாவல்கள் பால்ய விவாகத்தின் சீர்கேட்டை பேசினாலும், விதவை மறுமணமத்தை ஆதரித்தாலும், அடிப்படையில் அந்த நிலைப்பாடு பெண்ணுக்கு ஆணும் அவன் வழிகாட்டலும் தேவை என்ற கருத்திலிருந்து தான் உருவானது என்கிறார் அம்பை. ஏனென்றால் நல்ல குடும்ப வாழ்க்கையில் மட்டும் தான் பெண் நிறைவை அடைய முடியும் என்றும், அதுவே சமூகத்துக்கு நல்லது என்றும் அவர்கள் கருதினார்கள். அந்தப் பாதைக்கான வாய்ப்பு இல்லாத பெண் ‘கெட்டுப்போகவே’ வாய்ப்பிருந்ததாக அவர்கள் நம்பினார்கள், அது அன்றைய நிதர்சனமாகவும் இருந்ததாகவும் தெரிகிறது.
ஆனால் இந்த சிந்தனைமுறையின் விளைவாகவே வாழ்க்கைமுறை சார்ந்து ‘நல்லப்பெண்’ என்றும் ‘கெட்டப்பெண்’ என்றும் இரு மாதிரிகள் வரையறுக்கப்பட்டன. அந்த வரையறைகளை பெண் உருவாக்கவில்லை. அந்த காலகட்டத்து ஆண், நவீனத்தில் தான் தன்னை சுதந்திரமாக வரையறுத்துக்கொண்டது போல் பெண் தன்னை வரையறுக்க வெளியளிக்கவில்லை. மாறாக பெண்ணின் நடத்தையை தொடர்ந்து கண்காணித்துத், தன் இலட்சிய பிம்பத்துக்கு உட்பட்டு நடந்தவளை நல்லவள் என்றும், அவ்வாறு நடக்காதவளை கெட்டவள் என்றும் வரையறுத்தான். நவீனப் பெண் இந்த கலாச்சார கருத்தாக்க வெளியில் தான் பிரவேசிக்க வேண்டியிருந்தது. உத்தரா சுயம்வரம் தான், ஆனால் உத்தரை தன் வரனை சுயமாக தேர்ந்தெடுக்கவில்லை.
இந்த வரையறுத்தல்கள் பரப்பிலக்கியம், திராவிட இலக்கியம், சீரிய இலக்கியம் என்று எல்லா வகை எழுத்திலும் வெவ்வேறு வகைகளில் நிகழ்ந்ததாக அம்பை கூறுகிறார். கு.பா.ராவின் ‘வேரோட்டம்’, லா.ச.ராவின் ‘பாற்கடல்’, சிதம்பர சுப்ரமணியத்தின் ‘வேலையும் விவாகமும்’ போன்ற கதைகளை சுட்டிக்காட்டுகிறார். அவை தன்னளவில் முழுமையான, நல்ல கதைகளாக இருந்தாலும் அவற்றில் இந்த வரையறுத்தல் செயல்படுவதை குறிப்பிடுகிறார்.
இவ்வகையான வரையறுத்தலை காங்கிரஸ், திராவிடம் என்று அரசியல் இயக்கங்கள் சார்ந்து உருவான எழுத்துக்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்றும் அம்பை கூறுகிறார். இலட்சியப் பெண் கற்பு, அழகு, புத்திக்கூர்மை, தாய்மை, கூடவே தன் ஆணின் அரசியலுக்கேற்ப தேசப்பற்றோ மொழிப்பற்றோ கொள்கைப்பற்றோ கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அந்த எழுத்துக்கள் வெளிப்படுத்தின. அகிலனின் ‘பெண்’ இந்த கனவெழுத்து வகைமையின் ஓர் உச்சம் என்கிறார் அம்பை.
ஜனரஞ்சக பத்திரிக்கை எழுத்தில் உருவானது வேறொரு பிரச்சனை என்கிறார் அம்பை. அவை நகைச்சுவை என்ற பெயரில் பெண்கள் சந்தித்த உண்மையான சிக்கல்களை கேலிச்செய்தன என்றார். பெண் அதிகம் படித்துவிட்டாள், வரன் கிடைக்கவில்லை என்பது ஒரு நகைச்சுவைத் தலைப்பாகக் கருதப்பட்டது. பெண் படித்தால் சமைக்க மாட்டாள், வீட்டுவேலை செய்ய மாட்டாள் போன்ற அபிப்பிராயங்கள் நகைச்சுவை துணுக்குகளாக வாரப்பர்ரிதிக்கைகளில் வெளியாயின. இதுத்தவிர பணியில் இருந்த பெண்களை பற்றிய நகைச்சுவைகள் — டைப்பிஸ்ட், நர்ஸ் காமெடிகள். இவை எல்லாமே பெண் யார், அவள் இடம் என்ன என்று ஆண்கள் வெவ்வேறு வகைகளில் வரையறுக்க முயன்ற யத்தனங்கள் என்று அம்பை வகுக்கிறாள். பெண் பொதுவெளிக்கு வந்த அதிர்ச்சியை சாமானிய சமூகம் எதிர்கொண்ட ஒரு வழிமுறை, என்று இவற்றைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அவை பெண்களின் சுய பிம்பத்தையும், சமூக இடத்தையும் வடிவமைத்தன என்பது நிதர்சனமான விஷயம்.
2. பெண்களை நோக்கி ஆண் எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்கள்.
பெண்கள் பழைய கட்டுப்பாடுகளை உதறி, கல்விக்கற்று பொதுவெளிக்கு வருவதைப் பற்றி எழுதப்பட்ட இலட்சிய எழுத்துக்களுக்கு அடுத்தக்கட்டமாக, பெண்களிடமே உரையாடல் நிகழ்த்தும் வகையில், பெண்களை வாசகர்களாக உத்தேசித்து ஆண் எழுத்தாளர்கள் பத்திரிக்கைகளில் எழுதத்தொடங்கினார்கள்.
இந்த முன்னெடுப்புகளும் இலட்சிய நோக்குடன் தொடங்கப்பட்டன என்பதை மறுப்பதற்க்கில்லை. ஏனென்றால் அப்போது தான் பெண்கள் எழுதப்படிக்கவே கற்றிருந்தார்கள். அவர்களில் கல்விகற்றவர்கள் உரையாடலுக்குள் வருவது அன்றைய தேவையாக இருந்தது.
அதே சமயம், ஆண் ஒரு படி மேலே நின்று, புரவலனாகவும் ஆசிரியனாகவும் பெண்களிடம் இந்த ஊடகங்கள் வழியாக பேச நேர்ந்தது, என்கிறார் அம்பை. இவை பெண்களுடன் உரையாடின, பெண்ணுக்கு உபதேசமும் செய்தன. இலட்சியப் பெண்ணின் பிம்பத்தை தொடர்ந்து வலியுறுத்தின. இந்த உரையாடல்களையும் உபதேசங்களையும் எதிர்கொண்டே தமிழில் பெண்களின் வெளிப்பாடு உருவானது.
ஆண் எழுத்தாளர்கள் பெண்களிடம் இரண்டு வகைகளில் உரையாடினார்கள். பிரபல பத்திரிக்கைகளில் பெண்களுக்கான பத்திகள் என்று தனிப்பகுதிகள் எழுதினார்கள். பெண்களுக்கென்றே ஆண் எழுத்தாளர்கள் பிரத்யேக இதழ்களை தொகுத்து வெளியிட்டார்கள்.
ஆனந்தவிகடனில் வா.வே.சு. ஐயர் பெண்களுக்காக எழுதிய ஒரு தனிப்பத்தி அவர் மறைவுக்குப் பின் வெளியானதை அம்பை குறிப்பிடுகிறார். இதுபோலவே கல்கி இதழில், ‘அனசூயை’ என்ற பெயரில் பெண்களுக்கான பத்தி எழுதியவர் ‘துமிலன்’ என்ற பெயரில் எழுதிய ஓர் ஆண் எழுத்தாளர். வா.வே.சு. ஐயர் பெண்கள் புத்தகம் படித்து தங்கள் மனதை கெடுத்துக்கொள்ளாமல் தாயமும் பல்லாங்குழியும் ஆடி தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். ‘அனசூயை’ பெண்கள் படிக்கட்டும், ஆனால் ஏன் டைப்பிஸ்டு வேலைக்கெல்லாம் வரவேண்டும்? தாயம் விளையாடும் பெண்களுக்கு இயந்திரங்களைப் பற்றி என்ன தெரியும்? என்கிறார். இந்த அறிவுரைகளில் உள்ள முரணை அம்பை சுட்டிக்காட்டுகிறார்.
பெண்களுக்கான இதழ்களில் முன்னோடியாக வெளிவந்தது 1891-ல் தொடங்கப்பட்ட ‘பெண்மதி போதினி’ என்ற இதழ் என்கிறார் அம்பை. இதன் ஆசிரியர் பெண்ணா ஆணா என்று கண்டடையமுடியவில்லை, ஆனால் கட்டுரைகள் பலதும் பெண்கள் எழுதியவை என்கிறார். முதல் இதழில் பெண்களுக்கான நூறு உபதேசங்கள் உள்ளடக்கிய ஒரு கட்டுரை வெளியானது என்று குறிப்பிடுகிறார். பொறுமை, நிதானம், கணவனைத் தொழுதல் போன்ற கருத்துக்களை முன்வைத்தது.
தொடர்ந்து பெண்களுக்கான பல இதழ்கள் வெளிவந்தன. பாரதி ஆசிரியத்துவத்தில் வெளியான ‘சக்ரவர்த்தினி’ பிரபலமானது. 1905-ல் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போது பாரதி புதுமைப்பெண்ணை கண்டடையவில்லை போல. ஆண்களைக் கவரவும், ஆண்களுக்கு நல்ல பத்தினிகளாக விளங்கவும், பொருட்களுக்கு ஆசைப்படாமல் இருக்கவுமே பெண்களுக்கு கல்வி தேவை என்று அவர் எழுதினார். வெளிநாடுகளில் அப்போது உருவாகிக்கொண்டிருந்த பெண்களுக்கான ஓட்டுரிமை சார்ந்த பேச்சுகளை, அவை அழகற்ற, கணவனும் குடும்பமுமற்ற பெண்களின் கோரிக்கை என்றார். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கு அத்தகைய ஆசைகள் தோன்றாது, என்றார்.
இந்த இதழ்களிலும் வெகுஜன இதழ் பத்திகளின் அதே போக்கு தென்பட்டது என்றார் அம்பை. உதாரணத்துக்கு, சக்ரவர்த்தினி இதழில், பெண்களுக்குப் போதிய கல்வி அளிக்கப்படாததால் தான் அவள் புத்தி ஆண் அளவுக்கு விரிவடையவில்லை என்ற விவாதம் உருவாகிறது. ஆனால் அடுத்த இதழிலேயே, பெண்களுக்குறிய கல்வி என்று வெளியான கட்டுரையில், பெண்ணுக்குக் கல்வியென்றால் தோட்டக்கலையும் நீச்சல்பயிற்சியும் போதும் என்ற பரிந்துரை இடம்பெறுகிறது. அதற்கு மேல் கல்விகற்றால் அவள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டாள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த இருநிலையை அம்பை சுட்டிக்காட்டுகிறார்: பெண்ணுக்குக் கல்வி தேவை — ஆனால் “மீறிப்போகக்” கூடாது என்ற ஜாக்கிரதை தொனித்துக்கொண்டே இருந்ததை குறிப்பிடுகிறார்.
3. பெண்கள் எழுதிய எழுத்துக்கள்.
இந்தப் பின்னணியில் தான் பெண்களின் எழுத்து நிகழ ஆரம்பித்தது என்கிறார் அம்பை. ஒரு பக்கம், சில பெண்கள் உலகத்துள் நுழைய வேண்டும், தங்களை பல களங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று துடிப்புக்கொண்டிருந்தார்கள். மறுபக்கம், பெண்ணின் சிந்தனையும் நடத்தையும் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், இலட்சியப்பெண் யார் என்ற வரையறைகள் சூழலில் உருவாகிக்கொண்டே இருந்தன. தெரிந்தோ தெரியாமலோ, இந்தச் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாகவே ‘நல்லப்பெண்’ யார், ‘கெட்டப்பெண்’ யார் என்ற பிரிவினையை வலியுறுத்துக்கொண்டே இருந்தன. இந்த அழுத்தத்தை எதிர்கொள்ளவேண்டியதன் தேவை, பெண்களின் வெளிப்பாட்டை பெருமளவுக்குச் செதுக்கியது.
நவீன தமிழ்ச் சுமூகத்தின் முதல் நூறு ஆண்டுகள், இந்தக் ‘கெட்டப்பெண்ணின்’ வரையறையை அளப்பதில் பெரும் ஆற்றலை செலவழித்தது என்றால் மிகையல்ல. பெண் கல்வி கற்பதே கெட்ட விஷயம் என்பதில் தொடங்கி, அவள் கல்லூரிக்குப் போவது, வேலைக்குப் போவது, தனியாக வாழ்வது, பொதுவெளியில் பயணம் செய்வது, காதல் செய்வது, விவாகரத்து செய்வது, மறுமணம் செய்வது என்ற பல நடைமுறைகள் முதலில் ‘கெட்டவை’ என்று கருதப்பட்டு, மெல்ல மெல்ல அந்த பட்டியலிலிருந்து விலக்கப்பட்டு வந்துள்ளது.
பெண் கலைகளில் ஈடுபடுவது, ஆணைச் சாராமல் தனக்கான தேடல்கள் கொண்டிருப்பது, அவளுக்கான தனி உலகத்தை உருவாக்கிக்கொள்வது போன்ற விஷயங்களும், ஓர் உயிரின் ஆன்மீகத் துடிப்பின் வெளிப்பாடு என்றல்லாமல், ஒழுக்க பங்கம், இலட்சியத்திலிருந்து வழுவல் என்றே நோக்கபப்ட்டன. பெண்கள் அந்தத் தேடலை தன்னளவில் நிகழ்த்தாமல், ‘இது அவ்வாறல்ல, நாங்கள் ஒழுக்கமற்றவர்கள் அல்ல’ என்று திரும்பத் திரும்பச் சொல்ல பெரும் எதிராற்றலை செலவழித்துச் செயல்பட்டார்கள் என்றாலும் மிகையல்ல. மிகச்சில விடுபடுதல்களுடன், இந்த நூறுவருட தமிழ் பெண் எழுத்தின் வரலாறையே அவள் ஒழுக்கத்தைப் பற்றியான கேள்விக்கான எதிர்வினை என்றே வகுக்கலாம் என்று தோன்றுகிறது.
*
தமிழில் பெண்களின் எழுத்து வெளிப்பாட்டின தொடக்கம் பெரும்பாலும் இதழ்கள் சார்ந்தே நிகழ்ந்தது. இதழ்கள் சார்ந்து பெண்கள் இரண்டு வகைகளில் இயங்கினார்கள். ஒன்று, பிரபல பத்திரிக்கைகளில் பெண்களுக்கான பகுதிகளை நடத்தினார்கள். இரண்டு, பெண்களே தங்களுக்கான இதழ்களை நடத்தினார்கள்.
பிரபல பத்திரிக்கைகளின் பெண் பகுதிகள் என்பவை பெண்கள் நடத்தினாலும் ஆண்கள் பெண்களை நோக்கி எழுதியதன் நீட்சியாகவே அமைந்தன என்கிறார் அம்பை. பெண் நல்லவளாக, இலட்சியமானவளாக அமைய என்னென்ன செய்யவெண்டும் என்ற உபதேசங்கள் — ஆனால் அதை இப்போது பெண்களே அளித்தனர்.
சுதேசமித்திரன் இதழில் குகபிரியையும், கலைமகளில் கே. விசாலாட்சி அம்மாள்யும் பெண்கள் பகுதிகளை தொகுத்தார்கள். இருவருமே அப்பகுதிகளை பெண்களுக்கான அறிவுரைகளால் நிறைத்தனர் என்கிறார் அம்பை. பல்சுவை பகுதிகள் போன்றவை இடம்பெற்றாலும் அதில் சுவாரஸ்யமான செய்திகளை விட, புடவை, நகை, சமையல்குறிப்புகள் போன்ற பெண்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சமாச்சாரங்களே இடம்பெற்றன என்கிறார். கல்கியில் இடம்பெற்ற ‘பெண்கள் உலகம்’ என்ற பகுதியிலும் இதே கூறுகள் விளங்கியதை சுட்டிக்காட்டுகிறார். ஒரு வேளை ஒரு வெகுஜனப் பத்திரிக்கை செய்யக்கூடுவதும் அது தான் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் 1900-களின் தொடக்கம் முதலே, பெண்கள் தங்களுக்கான இதழ்களை தொடங்கி நடத்தினார்கள். இதில் பல முயற்சிகள் ஆண்களின் பரவலான கருத்துக்களை அடியொட்டியே நிகழ்ந்தனவென்றாலும், சில முயற்சிகள் தனித்துவமான விளங்கின என்கிறார் அம்பை. 1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிதாகாரிணி (ஆசிரியர் – கி. விசாலாட்சி அம்மாள்) முதல் வகையில் அமைந்திருந்தது. ஆனால் சிஸ்டர் பாலம்மாள் (வி. பாலம்மாள்) நடத்திய ‘சிந்தாமணி’ பெண்களின் அறிவை வளர்ப்பதை தன் குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்ட பத்திரிக்கை என்கிறார் அம்பை. இந்திய வரலாற்றின் வீராங்கனைப் பெண்களின் சரித்திரங்களும், மார்க்கோ போலோவின் பயணங்களும், புராண கதைகளும் அதில் இடம்பெற்றன என்கிறார்.
வை.மு. கோதைநாயகியின் ‘ஜகன்மோகினி’ போன்ற பத்திரிக்கைகள் வெளிவந்தன. ஆனால் 1930-களில் மரகதவல்லி அம்மாள் ஆசிரியத்துவத்தில் வெளியான ‘மாதர் மறுமணம்’ என்கிற பத்திரிக்கை மேலும் முக்கியமான முன்னெடுப்பு என்று அம்பை சுட்டிக்காட்டுகிறார். இளம் விதவையின் மறுமணத்தை வலியுறுத்தும் விதமாக, பெண்கள் ஆண்குரலில் எழுதிய உரையாடல்களும் பாடல்களும் பத்திகளும் அதில் இடம்பெற்றன என்கிறார். அதாவது இந்த விஷயத்தை ஒரு பெண் எழுதினால் சமூகம் ஏற்காது என்பதை அறிந்து, ஆண்பெயரில், ஆண்குரலில், ஆண் கதாபாத்திரம் பேசுவது போலச் சித்தரித்தார்கள். இதை ஓர் படைப்பூக்க நிலை என்றே இன்று என்னால் காண முடிகிறது.
அன்றைய பெரும்பாலான பெண் -நடத்திய-பெண்-இதழ்கள் காந்திய சார்பு கொண்டிருந்தன. பெண்களைப் பற்றி காந்தி வெளிப்படுத்திய கருத்துக்களை முரண்பாடு இல்லாமல் அப்படியே பிரசுரித்தன. காந்திய அரசியலில் ஈடுபட்டிருந்த பெண்களைப் பற்றி எழுதின.
ஆனால் ‘சாதாரணப்’ பெண்களுக்கு ஓட்டுரிமையோ, அரசியல் பிரக்ஞையோ தேவையற்றது, குடும்பத்தில் சச்சரவு உண்டாக்கும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்தன.
குகபிரியையின் ஆசிரியத்துவத்தில் வெளியான ‘மங்கை’ மற்றும் ‘புதுமைப்பெண்’ இரண்டும் இந்த நம்பிக்கையை கொண்டிருந்த இதழ்கள். பெண்களுக்கு வீடும், குடும்பமும் முதன்மை என்பதே அவற்றின் கருத்து. மற்ற எல்லாமே இரண்டாம்பட்சம் தான். இதழியலே கூட குகப்பிரியைக்கு இரண்டாம்பட்சம் என்கிறார் அம்பை. வீட்டுவேலைகள் போக மதிய ஓய்வு நேரத்தில் மட்டுமே அவர் இதழ்வேலைகளை செய்ததாகக் குறிப்பிடுகிறார். குடும்பம் இதழ்வேலை வேண்டாம் என்று சொன்னால் நிறுத்தவும் சித்தமாக இருந்தார்.
இதன் பிறகு, 1940-களில் வெகுஜன பத்திரிக்கைகளின் எழுச்சி நிகழ்ந்தது என்கிறார் அம்பை. 1984-ல் ‘The Face Behind The Mask’ புத்தகம் எழுதப்பட்ட சமயம் வெகுஜன பத்திரிக்கைகளே கோலோச்சின. பெண்கள் அதிகமும் வாசித்தது இவற்றைத்தான். இவை பெண்களின் ஆற்றலால் நடத்தப்பட்ட விற்பனை இயந்திரங்கள் என்றால் மிகையல்ல.
இவற்றுக்குப் பெண்களின் சிந்தனைகளை மாற்றுவதிலோ, பெண்களின் சுயவெளிப்பாட்டை ஊக்குவிப்பதிலோ, எந்த ஆதாய நோக்கமும் இல்லை. விற்பனையே நோக்கமாக இருந்தது. ஆகவே அவை ஆக்கச்சக்திகளாக அல்ல, நிலைசக்திகளாக செயல்பட்டன என்கிறார் அம்பை.
இந்த பத்திரிக்கைகளில் உலகச்செய்திகள் வெளியிடப்படாமல் இல்லை. ‘சாதனைப் பெண்கள்’ போன்ற பகுதிகள் இடம்பெற்றன. பெண் உரிமைக்காக போராடியவர்களைப் பற்றிக் கூட பத்திகள் வெளியாயின. ஆனால் இவை ‘தெரிந்துகொள்வதற்கான’ செய்திகள் மட்டுமே என்று உணர்வையும் அளித்தன என்கிறார் அம்பை. இதழின் வாசகிகள் அவர்களை முன்மாதிரிகளாகக் கொள்ள ஊக்குவிக்கப்படவில்லை. இல்லத்தையும் குடும்பத்தையும் பேணுவதே அவர்களுடைய முதன்மை பொறுப்பு என்ற வலியுறுத்தலே ஓங்கியிருந்தது. அந்தப் பொறுப்புகளுக்கு துணையாற்றலாம் என்ற அளவிலேயே பெண்களுக்கான வாசிப்பு ஊக்குவிக்கப்பட்டது. ஒரு ‘சாதனைப் பெண்ணை’ப் பற்றிய குறிப்பிலும், அவள் எப்படி ஒரு நல்ல அன்னையாக, நல்ல மனைவியாக விளங்கினாள் என்ற கருத்தே ஓங்கியிருந்தது என்கிறார் அம்பை.
இந்த விவாதத்தை அம்பை இவ்வாறு முடிக்கிறார். அன்றைய ‘நல்லப் பெண்’ அடிப்படையில் குடும்பப்பெண். குடும்பத்தையே தன் முதன்மை பொறுப்பாக கொண்டிருந்தார். பெண்களுக்கான இதழ்களை வாசித்தார். அவற்றில் எழுதி அவற்றை தொகுக்கவும் செய்தார். ஆனால் அத்தனையும் குடும்பப் பொறுப்பு போக கிடைத்த நேரத்தில், குடும்ப நலனை எண்ணிக்கொண்டே, குடும்பம் என்னும் அமைப்பை வலியுறுத்தும் வகையில் செய்யப்பட்ட பணிகளாகவே இருந்தன. வணிக இதழ்களில் எழுதிய பெண் எழுத்தாளர்களும், அதன் விற்பனையை விருத்தி செய்ததன் திருப்தியுடன் அமைந்தனர். அதற்காக அன்றைய பொதுவெளி ஆண்களிடம் ‘நல்லப்பெண்’ ‘இலட்சியப்பெண்’ என்ற பாராட்டுக்களை பெற்றனர். ‘நல்லப்’ பெண்ணைப் போலவே, ‘நல்லப்’ பெண் எழுத்தாளரும் ஒரு பிம்பமாக உருவாகிவிட்டாள்.
[மேலும்…]
***
பின்குறிப்பு:
இந்த விவாதம் அந்தக் காலக்கட்டத்து இதழியல் வரலாற்றுடன் நேரடியாக சம்பந்தப்பட்டது. ஆகவே மேலதிகத் தகவலுக்காக இவை அளிக்கப்படுகின்றன. தமிழ் விக்கி தளத்துக்கும் நிர்வாகத்துக்கும் நன்றி.
இந்த காலகட்டத்தில் வெளிவந்த பொது இதழ்களை அம்பை பட்டியலிடுபவை:
சாம்பு உடனே பர்ர்ர்ரென்றான். சற்று நேரம் சிற்சிறு வெடிப்புகளாக தனக்குள்ளே சிரித்து அடங்கினான்.
1896-ஆம் ஆண்டு ஐப்பசி மாதம், ஒரு தெளிவான வளர்பிறை ஏகாதசி ராத்திரியில், பஞ்சநதீஸ்வரக்ஷேத்ரம் என்ற திருவையாற்றிலிருந்து, திருநெய்த்தானம் என்ற தில்லைஸ்தானத்துக்குப் போகும் வழியில் காவிரிக்கரையை ஒட்டி, ஒரு எட்டுக்கால் கல் மண்டபத்தினுள் அம்மூவரும் அமர்ந்திருந்தார்கள். நிலா உச்சிக்கு வந்துவிட்டிருந்தது. அதைச்சுற்றிய ஒளிவட்டத்தில் வானம் இளநீலமாக வெளுத்துக் காணப்பட்டது. அவர்களுக்கு நடுவே சிறிய கண்ணாடிக் குடுவைக்குள் மண்ணென்னை வாசத்தைக் கமழவிட்டபடி திரிவிளக்கு நீலமாக ஒளிவிட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அந்த வேளையின் நீண்ட வெள்ளி நிழல்களுக்கு மத்தியில் அது வெளிச்சமென்றே தோன்றவில்லை.
மீனாட்சிநாதன் காவிரியை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முன்னால் இருந்த லோட்டாவை அவன் தொடவே இல்லை என்பதை ராமுடு கவனித்தார். அவன் முகத்தைப் பார்த்தார். வெள்ளி வெளிச்சத்தில் நதி உருகிப் பெருகிச் சென்றுகொண்டிருந்தது. அந்த ஒளி அவன் முகத்தில் ஆடியது. அவன் முக அங்கங்களும் பழைய உருகிய வெள்ளியால் ஆனதுபோலத் தோன்றியது.
தொண்டையை இடரிவிட்டு, “சாப்ட்றா,” என்றார். தன் அருகே இருந்த கூஜாவை எடுத்துத் தன்னுடைய கோப்பையில் இன்னொரு சிறிய மிடரை விட்டுக்கொண்டார். இரவின் நிலா வெளிச்சத்தில் அந்தத் திரவம் செம்பருத்திப் பூவிதழின் சொகுசான மென்மையோடு வளைந்து உள்ளே விழுந்தது.
“டேய் உனக்கு?”
அவர்களில் இளையவனான சாம்பு என்கிற சாம்பசிவன் இளித்துக்கொண்டே தன் சிறிய சொம்பை நீட்டினான். வாங்கித் தூக்கிப்பிடித்து மளமளவென வாயில் அருவி மாதிரி விட்டுக்கொண்டு சொம்பை கீழே இறக்கினான். அவன் உடல் சிலிர்த்தது. இரண்டு முறை உலுக்கிக்கொண்டு ஒரு காதை பலமாக சிலமுறை அடித்தான். கழுத்தை ஒடித்தான். பிறகு சமநிலைக்கு வந்த நிலைகடிகாரம் போல் மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்துக்கொண்டிருந்த பெரியவரை நோக்கி வாஞ்சையாக புன்னகைத்தான்.
“பட்டனத்துல கம்பெனிக்காரன்னுட்ட வாங்கினது,” என்றான் சாம்பு. “எப்படி?” அவன் குரல் சறுக்கிச் சறுக்கி வந்தது.
தில்லைஸ்தானம் ராமுடு மிகச்சிறிய மிடரைப் பருகி இலேசாக பின்னால் சாய்ந்திருந்தார். “இந்த மாதிரி ஒரு ராத்திரில்ல இந்த வாயில வாங்கிக் கண்ண மூடினா உள்ளுக்குள்ள வெள்ளியும் சுவர்ணமுமா ஜாலம் ஆடுதேறா.”
“நெருப்பு இல்லையாண்ணா? அக்னி…” என்றான் சாம்பு. ஒரு முறை விக்கினான்.
“கம்பெனிக்காரனுக்கு எல்லாமே கெம்பு தான்,” என்றார் ராமுடு. ஏதோ உச்சிலிருந்து இறங்கிவருவது போல் மிதந்து வந்தது அவர் குரல். “உடுப்பும் செகப்பு. தோலும் செகப்பு. வடிச்சுக் குடிக்குறதும் செகப்பு, பிடிச்சு கட்டிக்கிட்டு வந்திருக்கானே, அந்தத் தடிச்சப் பொம்மனாட்டியும் செகப்பு…”
சாம்பு பெரிய நகைச்சுவையை கேட்டது போல ஹாஹாஹாவென்று சிரித்தான். மீனாட்சி அவனைத் திரும்பிப் பார்த்தான்.
“அவனுக்கு எல்லாமே கெம்பும், தங்கமும் தான்,” ராமுடு தொடர்ந்தார். “நாமதான் ராத்திரி, வெள்ளின்னு இப்படி கருப்ப விழுந்து விழுந்து மோகிக்கறோம். நமக்கு கிருஷ்ணனும் கருப்பு. ராமனும் கருப்பு. ஆவாடு மேகவர்ணுடு. ஈவாடு ஹரிதவர்ணுடு.”
மீனாட்சி சாம்புவைப் பார்த்து புன்னகைத்தான். “டேய் மீனாட்சி, தெலுங்கு வர ஆரம்பிச்சுருத்துறா,” சாம்பு ரகசியமாக கிசுகிசுத்தான். களிப்பில் அவன் கண்கள் பிரகாசம் அடைந்தன.
“நா கொடுக்கா. ஈ நதியொக்க ஆ மேகமு, ஆ ஹரிதபர்வதமு கூட ராத்ரிதேவிக்கி சிருஷ்டிகளு. ஏமி தெல்ச்றா நீக்கு ? இந்த மாதிரி ஒரு ராத்திரில அதோ அந்த மேகத்துக்குள்ள என்ன நடக்குதுன்னு நினைக்கற? மலையில, இதோ, இந்தக் காவேரில்ல, என்ன நடக்குதுன்னு நினைக்கற? ரஜதகேளி…”
சாம்பு கிளுகிளுவென்று சிரித்தான். அவன் கண்கள் சிவப்பாக மின்னின. “ராமுடுண்ணா. உமக்கு அந்த ஆட்டமெல்லாங்கூட தெரிஞ்சுபோச்சா?” என்றான். அவன் முகம் நன்றாக சிவந்திருந்தது அந்த வெளிச்சத்தில் தெரிந்தது.
தில்லைஸ்தனம் ராமுடு பதில் கூறாமல் புன்னகைத்து அவன் கண்களை நோக்கியவாரே உதட்டை மட்டும் நனைப்பது போல் அந்தத் திரவத்தின் இன்னொரு சிறிய மிடரை பருகினார்.
“போட்டும்டா, வேளை வரட்டும்,” என்றார் ராமுடு. அவர் கண்கள் மின்னின.
“அப்படீன்னா ஒரு கதை. சொல்லுங்கோண்ணா. யார் அந்த நிறஞ்சவ? திருவாரூர் நாகரத்தினமா? புதுக்கோட்டை அம்மிணியா? இல்ல நீங்க சொல்வேளே, பழைய தஞ்சாவூர் ரமாவாணி, அவ பேத்தி பாலா…மணியா?” அவன் நாட்டியமாடுவதுபோல் அபினயம் பிடிக்க மீனாட்சிநாதன் சிரித்தான்.
தில்லைஸ்தானம் ராமுடு வெற்றிலைச்செல்லத்தைத் திறந்தார். கொட்டைப்பாக்கு, புகையிலை, ஜவ்வாது என்று கலவையான வாசனைகள் எழுந்தன. இரண்டு தாள் வெற்றிலையைப் பிரித்து சுண்ணாம்பைத் தடவி இதற வஸ்துக்களை பக்குவமாக அடுக்க ஆரம்பித்தார். பையன்கள் இருவரும் அவர் முகத்தையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கண்ணை காரியத்திலிருந்து ஏற்றாமல் அவர் சொன்னார்.
“டேய்… எத எடுத்தாலும் பொம்மநாட்டிப் பேச்சுக்குக் கொண்டுப்போ, கொண்டுப்போன்னு உள்ள இருக்குற நாய் குரைச்சுக்கிட்டிருக்குற பிராயம் உனக்கு. அது வாசம் கண்டிருச்சு, கடிக்கற வரையிலும் விடாது. அது அப்படித்தான். ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோ… மூத்தவனா, முன்னும்பின்னும் விஷயங்களத் தெரிஞ்சவனா சொல்றேன். பெண்டுக்காரி எவள்ட்டையும் அப்படி ஒண்ணும் ஒரு விசேஷமும் கிடையாது. இது சத்தியம். பொறிச்சு வெச்சுக்கோ.
“உனக்குள்ள இருக்குற நாய்க்குத் தீனிப்போட உனக்கு ஒருத்தி வேணும். அந்தத் தீனியவே விதவிதமா கல்பனை பண்ணீண்டு முகமும் வாசனையும் கொடுத்து அதையே சுத்திச்சுத்தி வர. தன் வாலையே சுத்திச்சுத்திக் கடிக்க முடியாம தவிக்குற ஸ்வானசிருஷ்டி தான் மனுஷன்னு விட்டலதாசர் பாட்டுல ஒரு வரி உண்டு.
“இதோ, இந்த ராத்திரியில வெள்ளி ஓடித் துள்ளி விளையாடிப் போறாளே, இந்த காவேரிய உண்மையில ஒரு வாட்டிப் பாத்தாச்சுன்னா வால் நிமிர்ந்துடும். அதுக்கப்பறம் எந்தப் பொண்ணும் நிறையாது. பொண்ணு என்ன. இந்த மண்ணுல எதுவுமே நிறையாது. கனுகொண்டவாடுனிகி ஷாபம் என்று என்னுடைய குருநாதர் சொல்வார். கண்டுட்டவனோட சாபம். அம்பு பட்டுத் திரை கிழியறா மாதிரி அது.” ராமுடு இன்னொரு மிடரை அருந்தி கண்களை மூடினார். உள்ளே கண்கள் உருண்டுகொண்டிருந்தன.
2
அவர் பேசி நிறுத்திய மௌனத்தில் ஆற்றொழுக்கின் ஓசை கூடி வந்தது. மீனாட்சிநாதன் ஆற்றைப் பார்த்தான். ஆறு மொத்தமும் ஒரே மூச்சு போல் மௌனமாகப் பெருத்துத் தணிந்தது. அங்காங்கே சிறிய அலைகள் எழுந்து ஏதோ சொல்ல வருவதுபோல் துள்ளின. ஆனால் பேச நிற்கவில்லை. வெள்ளி கலந்து கலந்து ஒழுகிச்சென்றது. ஒலியும் காட்சியும் ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்வது போல் இருந்தது. மௌனத்தை நிறப்ப ஆற்றிலிருந்து மண்டபத்துக்குக் காற்று எழுந்து வருவது போல் தோன்றியது அவனுக்கு. ராமுடு கண்ணைத் திறந்தார். முன்னே தயராக இருந்த வெற்றிலையை பக்குவமாக மடித்து பொட்டலமாக்கி வாயிலிட்டுக்கொண்டார். அவர் அதைச் சவைக்கும் ஒலி எழுந்தது.
சாம்பு அவரைப் பார்த்தான். சாம்புவின் முகம் நன்றாகக் கனன்று கண்களில் சிவப்பு வரிகள் பழுத்துத் தெரிந்தன. அவன் கொழுத்தக் கன்னத்தில் இதழோரம் சற்றே கீழிறங்கியது.
“அண்ணா, ஒரு கேள்வி கேட்டா தப்பா நினைச்சுக்கப்படாது.”
கேளு, என்பது போல் கைக்காட்டினார் ராமுடு.
“இதைச் சொல்றேளே, உங்களுக்குப் பொம்மனாட்டி அனுபவம் இருந்திருக்கா?” என்றான். மீனாட்சி துணுக்குற்று அவனை நோக்கினான். இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
பெரியவர் சாம்புவின் கண்களை பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அவர் வெற்றிலையை குதப்பும் ஓசை ஏறிக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் எழுந்து மண்டபத்தின் மறு ஓரத்துக்குச் சென்று கீழே குனிந்துத் துப்ப வெற்றிலைச்சாறு வளைந்து சென்றது. ராமுடு வேட்டியை இறுகி ஏற்றிவிட்டுக்கொண்டு வந்தபோது மீனாட்சி அவர் அமர்ந்திருந்த பாயைத் தட்டி அவர் இடத்தை அமைத்துக் கொடுத்தான்.
ராமுடு அமர்ந்தார். பேசவில்லை. தூரத்தைக் கண்ட அவர் முகம் நிலவொளியில் உறைந்ததுபோல் இருந்தது. வயதோடிய முகத்தில் சுருக்கங்கள் ஆழமாகத் தெரிந்தன. வெற்றிலைச்சாற்றால் உதடு கருத்துக் கல் போல் தோன்றியது. அவர் பேச வாய் திறந்த போது கற்சிலை ஒன்று வாய்த்திறக்கும் உணர்வு மீனாட்சிக்கு ஏற்பட்டது. தன்னை அறியாமல் பின்னால் அகன்றான்.
“சாம்பு, நா துடுக்கா…” என்றார். சீவலும் புகையிலையும் வெற்றிலையும் உட்கொண்டதில் அவர் குரலில் ஓர் ஆழம் உருவாகியிருந்தது. “நான் தில்லைஸ்தானம் ராமுடுவாக்கும். நன்றாகக் கேட்டதா? என் பெயர் தில்லைஸ்தானம் ராமுடு. தில்லைஸ்தானம் ராமைய்யர் இல்லை. தில்லைஸ்தானம் ராமைய்யா பிள்ளை இல்லை. டேய், நான் ராமைய்யனாவோ ராமைய்யா பிள்ளையாகவோ பிறந்திருந்தேன்னா இந்த நடுஜாமத்துல ஏன் உங்கக்கூட உக்காந்து கங்காசாகரத்த மாந்தீண்டிருக்கப்போறேன்?
“நாய்ப்பிறவின்னு சொன்னேனில்ல? எங்கப்பா தில்லைஸ்தானம் ராகவய்யரைப் பத்தி அதத் தாராளமாவே சொல்லலாம். என்னடா பெத்தத் தகப்பன இப்படிச் சொல்றானேன்னு நினைக்க வேண்டாம். எம் பிறப்புக்கு மட்டும் என்ன, நாய்க்குணம் குறைச்சலா? அந்த அந்தஸ்துல சொல்றேன். மனுஷ பிறப்புடா, சாம்பா, மனுஷப் பிறப்பு.
“அப்பாவுக்கு அம்மா மேல பெரிய ஆசை. ஊர் ஒலகத்துல இல்லாத ஆசை. அம்மா தில்லைஸ்தானம் ராஜலட்சுமி. அற்புதமா பாடுவோளாம். புதுக்கோட்டை சமஸ்தானத்துல பதக்கம் வாங்கியிருக்கா. அப்பேற்பட்ட எங்க அம்மா இரண்டு வருஷத்துக்கு எனக்குத் தாலாட்டுப் பாடுறதத்தவிர குரலே எடுக்கலன்னு பெரியம்மா சொல்வள். எனக்கு நினைவில்ல. எனக்கு மூணு ஆண்டு நெறையறத்துக்கு முன்னாடியே போயிட்டா.
“இந்த மாதிரி இக்கட்டுல சாதாரணமா என்ன அம்மா வழியிலேயே விட்டுற்றது தான் வழக்கம். அங்க போயிருந்தா என் வாழ்க்கை அந்த மாதிரி இருந்திருக்கும். ஆனா சொன்னேனே? ஆசை. அப்பா சண்டப்போட்டு என்னைத் தூக்கீண்டு அவர் அகத்துக்கே வந்துட்டர். என்னோட பெரியம்மா – சிவகாமு பெரியம்மான்னு தான் அவ முக்தியாறவரை அவள நான் கூப்பிடறது – வேத்துபுத்தி இல்லாதவள். அவள் நாலு பிள்ளைக்கும் ஆறு பொண்களுக்கும் போடற அதே மோறுஞ்சாததையும் புளிஇஞ்சியையும் எனக்கும் ஒரு ஓரமா வைப்பள். ஆனால் போகப்போக பிள்ளைகளுக்கு நான் இருந்தது ஒத்துக்கல. அக்காக்களுக்கு கலியாணப்பேச்சு வந்தபோது தொடங்கினது. மொதல்ல தீட்டுக்கொட்டாய்க்குப் பக்கமா தங்கிக்கச் சொன்னாங்க. அப்புறம் வைப்பறையில பாய விரிச்சுப் படுக்கலாம்னு வந்தது. ரொம்பப் பாதகமில்லை, பாத்துக்கோ. டேய் தேவடியாப் பயலேன்னு கூப்பிட்டா ஓடி வரணும். கொடுத்த வேலையெல்லாம் செய்யணும். வயலுக்கும் சந்தைக்கும் அலையணும். இதுத்தவிர வீட்ல தினப்படி. மாடுகளுக்கு தண்ணிக்காட்டி, சாணி அள்ளி, வெட்டவெளியில அடுப்ப மூட்டி ஆமணுக்கு எண்ணையெடுத்து, சீயக்காயக் குத்திப் பொடிச்சு… பெண்டுகளுக்கு அதுனால என்ன ரொம்பப் பிடிக்கும். அவங்க வேலையெல்லாம் நானே செய்வேன், பாரு?
“அப்பா ரொம்ப நாள் இல்ல. ஏதோ ஒட்டுவியாதி தான். சீக்கிரமே படுத்துட்டர். எனக்குப் பன்னிரெண்டு இருக்கறப்ப போயிட்டார். பெரியம்மாவும் ரொம்ப நாள் தங்கல. அப்பறம் சித்தம் போக்கு சிவம் போக்கு தான். ஆத்தங்கரை மண்டபத்துல தங்கறது நாள்ப்பாடு வாரப்பாடுன்னு தொடங்கி ஒரு நாள் அண்ணா நீ அங்கேயே தங்கிக்கோன்னு சொல்லிட்டான். ஆனால் வயித்தக் காயப் போடல, அது மட்டுக்கும் பிழைச்சேன். காலையில வீட்டுக்குப் போனா வேலை. ஒரு வேளைச் சோறு. அப்புறம் மண்டபவாசம் தான். கோயில் மண்டபம். இல்ல ஆத்தங்கரை மண்டபம். திருவிழாவுல பந்தல் கட்டுறது, பூக்கட்டுறதுன்னு கிடைச்ச வேலைகளைச் செய்வேன். பாட்டும் நாயனமும் கேட்டுகிட்டு எங்கெயாவது நின்னுட்டிருப்பேன். பாகவதர் உபன்யாசத்துல போய் உட்காருவேன். இல்ல கோயில் மண்டபத்துல சதிர்க்கச்சேரி நடந்தா ஓர் ஓரமா நின்னு வேடிக்கைப் பார்ப்பேன்.
“முடிஞ்சதும் அவங்ககிட்ட போய், பெரியம்மா, சித்தி, நான் தில்லைஸ்தானம் ராஜலட்சுமி மகன் ராமன், என்பேன். ஆனால் அவங்களுக்கு அப்பா என்னை எல்லா முறைகளையும் மீறி அப்படிக் கூட்டிக்கொண்டு போனதுல கோபம். இல்லியே? நீ பெரியக்கோயில் தெரு ராகவைய்யர் ஆத்மஜன் ராமுடு தானே? என்று வெகு சாமர்த்தியமா திருப்பிவிடுவாங்க. நான் கோபியும் தரிக்கல, பூணூலும் அணியலன்னு அவங்கக் கண்ணுக்குத் தெரியாமலா இருந்தது? ஆனால் அக்ரகாரத்தில் எப்போதும் ஒரே விளி தான். ‘போகம்வாளுனிக்கொடுக்கா!’ திருவிழாவுல பந்தல் கட்டுறது, பூக்கட்டுறதுன்னு எங்கியா போய் நுழைஞ்சுக்குவேன். ஒரு கட்டத்துல வயல்ல இறங்கினேன். வேதக்காரங்க கிட்டக் கூடி போயி கொஞ்ச நாள் இருந்தேன். சக்கரம் கொஞ்சம் சேர்த்தேன். ஆனால் எங்கெயுமே ரொம்ப தூரம் உள்ளப் போக முடிஞ்சதில்லை.
“இந்த நிலையில எனக்குப் பெண்டுன்னு ஒருத்தி எப்படி வரவா? எனக்கு அகமும் இல்ல. குடும்பமும் இல்லை. வம்சமும் இல்லை வழியும் இல்லை. பொம்மனாட்டி அனுபவம் மட்டும் எப்படிக் கிடைக்கும்?” தில்லைஸ்தானம் ராமுடு அதைச் சாதாரணமாகச் சொன்னார்.
சாம்புவின் வாய் இலேசாகத் திறந்திருந்தது. “அப்போ தாசிகள்? இத்தன தாசிக்கதை சொல்றேள், நான் நினைச்சேன்…”
“எப்படி? என்னுடைய அம்மாக்கள் இல்லையா அவங்க?” ராமுடு புன்னகைத்தார். “என்னோட அப்பாவும் அண்ணன்களும் அந்த பந்தத்த நிலைநாட்டத் தங்களால் முடிஞ்சதையெல்லாம் செஞ்சாங்க. பகலில் அவர்களைப் பார்க்கவேண்டும். கோபிநாமமும் தோரணையுமா. ஹரி நாம ஜபம். ஆச்சாரியர்கள் சேவை. வேத பாராயணம். சாஸ்திரோக்தம், சம்பிரதாயம். ஆனால் பகல் விழுந்து போச்சுன்னா அங்க உள்ளது வேற ஆளு. ராவணனும் ஹிரண்யனும் நரகாசுரனும் அரிதாரமில்லாமலேயே பார்க்கலாம்.”
3
சாம்பு அவர் உருவத்தைப் பார்த்தான். கருத்த, ஒற்றை நாடித் தேகம். கலைந்த நரைத்தத் தாடி. மொத்தமும் பரதேசிக் கோலம். ஆனால் கண்கள் மட்டும், பெரிய புருவங்களுக்கடியில், இரு கங்குகளென. அவருக்குப் பின்னால் நதி வெள்ளி மின்ன ஓடியது.
திடீரென்று, “அண்ணா, பேசாம நீங்க என்னோட பட்டனத்துக்கு வந்திருங்கோ. அங்க நீங்க இருக்க நான் இடம் பண்ணித்தரேன்,” என்றான். மீனாட்சி திரும்பிப் பார்த்தான்.
ராமுடுவின் புன்னகை விரிந்தது. “சரிதான்… வரணும்,” என்றார். பிறகு, “ஏன், அங்க இப்படியெல்லாம் இல்லையோ?” என்றார்.
நிழல்கள் நீளத் தொடங்கியிருந்தன. நிலவு மேற்குப்பக்கமாகச் சாயத் தொடங்கியிருந்தது. ராமுடு கூஜாவை எடுத்தார். திரவத்தை மூன்று குடுவைகளிலும் சமபங்காக அளந்து பிரித்தார். இந்த முறை எல்லோருமே குடித்தார்கள். நிதானமாக, சாயுஜ்யமாக.
“அங்க நீ என்ன படிப்பு படிக்கற?” மீனாட்சிநாதன் சம்புவைக் கேட்டான்.
“பி.ஏ.ஹிஸ்டரி. சரித்திரம்.”
“அதுக்கு என்ன உத்யோகம் கிடைக்கும்?” என்றான் மீனாட்சிநாதன் சந்தேகமாக.
“ஏன், சர்க்கார் உத்யோகமே கிடைக்குமே?”
“சரி. நீ முதல்ல படிப்ப முடிச்சு என்ன உத்யோகத்துக்குப் போறியோ போ. விவாகமும் நடக்கட்டும்,” என்றார் ராமுடு. “அப்புறம் நான் வரேன். பட்டனத்துலையும் என்ன தான் இருக்குன்னு பார்த்திடுவோம்”
“உங்க வெற்றிலையும் காவிரியும் இல்லாம தவிச்சுப் போயிட மாட்டீங்க?” என்று மீனாட்சி கேட்டான்.
ராமுடு யோசித்து, “அதுவும் உண்மை தான்,” என்று தலையை ஆட்டினார். யோசிக்கும்போது தலையை உருட்டி ஆட்டுவது அவர் வழக்கம். காவிரியைப் பார்த்தபடி மெல்ல தன் பானத்தைப் பருகினார். அவர் குரல் இயல்பாக பாடலுக்குள் புகுந்தது.
‘ஸாரி வெடலின ஈ காவேரி சூடரே!’
அவர் மேலே பாடுவார் என்று சாம்பு ஆர்வமாகப் பார்த்தான். ஆனால் அந்த ஒரு வரியை தனக்குள் என்பது போல் முணுமுணுத்தாரே தவிர, பாடவில்லை.
“டேய் மீனாட்சி, கொடுக்கா,” திடீரென்று சிந்தனை அறுந்தது போல் மீனாட்சிநாதனிடம் திரும்பினார் ராமுடு. “நாங்க இரண்டு பேரும் பட்டனத்துக்குப் போயிட்டா நீ மட்டும் இங்க என்னடா பண்ணுவ? நீயும் பேசமா வந்துடு.”
“அங்க ஏதாவது பழைய வீட்டுப் பரன்ல பனையோலை அடுக்கிக் கெடக்குன்னு சொல்லுங்கோ, வந்துருவான்,” என்றான் சாம்பு.
மீனாட்சி சிரித்து குனிந்து நெளிந்தான். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, கிராப்பு வெட்டின தலை, கோடு மீசை. என்றாலும் அவன் முகத்தில் ஒரு பெண் சாயல் இருந்தது.
“என்னடா சொல்றாறு உங்க ஐயறு? ஏண்டா அவருக்கு இந்த பொழப்பு? ஏதோ சவுண்டி பிராமணன மாதிரி. கண்டவாளோட பரன்ல்லையும் செத்த பழசையெல்லாம் போய் நோண்டீண்டு… அதுல அப்படி என்னடா இருக்கு? ஏதாவது அபிச்சாரம் பிடுச்சுண்டா என்னத்துக்காறது?” என்றான் சாம்பு.
“அது பழசு இல்லியாடா?” மீனாட்சி அதைச்சொல்ல சிரமப்பட்டான். காற்றில் அவன் விரல்கள் அலைந்தன. “அத்தன பழசா ஒண்ணு இருக்குன்றதுலியே அதுக்கு ஒரு இது இருக்கு. இதுன்னா…ஒரு வசீகரணம். அதாவது…காலம்ன்னு ஒண்ணு இருக்கில்ல… காலத்தோட அழுத்தம் ஒவ்வொண்ணையும் மங்கி உதிர்த்திட்டிருக்கு. அதை மறைய வச்சிட்டிருக்கு. ஆனா அத்தன மங்கலோடையும் சிதிலத்தோடையும் இது மட்டும் மறையாம இருக்கு… மறையாம இருக்குறது மட்டும் தான் நம்ம கையில கிடைக்குது. அது மறையாம இருக்குங்கறதே அத காலத்த மீறின ஒரு ஒளியோட தூக்கிக் காட்டுது…”
“ம்,” என்றார் ராமுடு. அவர் விரல்களைக் கோத்துத் தாடையை அதன் மேல் வைத்திருந்தார். மீனாட்சியை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்தார்.
மீனாட்சி சொன்னான். “நமக்கு ஒண்ணு தெரியலன்னு அது நம்மள பிடுச்சு இழுக்குமில்ல… அந்த மாதிரி ஒரு மாயம். ஆதீனத்துல எங்க அய்யா சபாபதி முதலியார் சொல்வாறு. நமக்குள்ள இருக்குறதுதான் அங்க அந்த சுவடியில இருக்குன்னுட்டு. நம்மள்ள உள்ள இருக்கு. அது நமக்குத் தெரியல. அது தான அங்க வெளிய எழுத்தா இருக்கு. ரெண்டையும் இணைக்குற ஒரு திரி கண்ணுக்குத் தெரியாம இத்தனைக் காலத்தையும் தாண்டி வந்திட்டிருக்கு. நமக்குள்ள அந்தத் திரி ஒரு துளை வழியா ஓடுறா மாதிரி அதுக்குள்ளேயும் ஓடுது. அதான் அதைப் பார்த்த உடனே நமக்குள்ள அதைப் பிடுச்சுக்கணும்னு இருக்கும். ஓலையில உள்ள அதை உண்மையிலேயே புரிஞ்சுக்கிட்டா இங்க நம்மள்ள உள்ள இத புரிஞ்சுக்கிடலாம்பாரு.”
சாம்பு “அபிச்சாரமே தான்,” என்றான். “இதுக்கு பொம்பள சகவாசமே தேவலைண்ணா. பொம்மனாட்டி மோகம் நீங்க சொல்றா மாதிரி மூணு நாளோ, முப்பது நாளோ. அவனவனுக்குத் தலையில எழுதின கணக்கு. இதென்ன ஜன்மஜன்மாந்தரமா பின்னாடி வர விஷயமால்ல படறது? டேய், உங்க ஐயருக்கு இப்ப என்ன அறுபது இருக்குமா? அந்த முதலிக்கு?”
“ஆதீனத்துல உள்ள சிவமூப்புகள் பலத்துக்கும் இப்ப இந்த பித்து தான் பிடிச்சிருக்குன்னு கேள்வி,” என்றார் ராமுடு.
“போடா. நான் அவர பட்டனத்துக்கு வரச் சொன்னா, நீ என்னடா ஒண்ணும்மே தெரியாத பழங்காலத்துக்குக் கூட்டிப் போகப் பாக்கற?” என்றான் சாம்பு.
“நீயும் காலேஜுல சரித்திரம் தானடா படிக்கற?”
“இந்த மாதிரி பழங்குப்பையெல்லாம் அதுல ஒண்ணும் கிடையாது பாத்துக்கோ. நாங்க படிக்கறது நவீன சரித்திரம். மாடர்ன் ஹிஸ்டரி.”
மீனாட்சி பெருமூச்சு விட்டான். “அது இருக்கலாம்டா. ஆனா எனக்கு இங்க இந்த மதியொளியில காவிரிய பாத்துட்டிருக்கறது தான் பிடிச்சிருக்கு. ராமுடு அண்ணா சொன்னது தான் சரி. எனக்கு இங்கிலீஷ்காரனோட பகட்டும் வெளிச்சமும் ஒண்ணும் பிடிக்கல. இந்த இருட்டு தான் எனக்கானது. பழைய சுவடிகளப் பார்க்கும்போதும் அது இத்தனை நாள் இருந்த இருட்டு தான் முதல்ல மனசுல தோணுது. எத்தனைப் பழைய வார்த்தைகள்! அதெல்லாம் ஒரு மனுஷக் குரல் சொல்லி எத்தனை நூறு ஆண்டு ஆகியிருக்கும்! உதட்டக் குவிச்சு அதைச் சொல்றப்ப நெஞ்சு பதைக்குதுடா.”
“அதுக்காக? எல்லாரும் உன்னை மாதிரி பித்துப்பிடிச்சு இருப்பாங்கன்னு நினைப்பா?” என்றான் சாம்பு. ராமுடு நீட்டிய கட்டிலிருந்து இரண்டு தாள் வெற்றிலையை பெற்றுக்கொண்டான். “உனக்கு தோது ஆனாலும், இல்லன்னாலும், காலச்சக்கரம் முன்னால ஓடீண்டு தாண்டா இருக்கப்போறது. எங்க புரொஃபெஸர் த மார்ச் ஆப் ஹிஸ்டரின்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. படை மாதிரி அப்படியே அடுச்சுட்டுப் போயிட்டிருக்கும் நம்மள.”
“ஆமா. குடியானவங்கள்ளாம் வேதக்காரனாக்கிட்டிருக்கு அந்தப் படை,” என்றார் ராமுடு.
“நீங்களும் வேதக்காரனாகலாமேண்ணா?” என்றான் சாம்பு.
“ஆகலாம் தான். தஞ்சாவூருல்ல மாதாகோவில்ல ஒரு வேதக்கார பாகவதர்ட்ட கொஞ்சநாள் பாட்டுப்படிச்சேன். அவரு என்ன வேதம் மாறச் சொல்லிக் கேட்டுக்கிட்டே இருந்தாரு. அப்புறம் அவங்க ஈசனோட மாதாவும் நம்ம தள்ளையப் போலன்னு சொன்னாங்க. ஹெஹெ. சரிதான், இவன் நம்ம சகோதரன், சாமியில்லன்னு இருந்துட்டேன்.”
“காலேஜுல என்னையும் பாதிரிமாரெல்லாம் எங்கக்கிட்ட வந்துடு வந்துடுன்னு சொல்றா,” சாம்பு சொன்னான். தன் குடுமியை தொட்டு, “குறைஞ்சது இதை எடுக்க வைக்கணும்னு ஆனமுட்டும் பிரயத்தனப் படறா. ம்ம்ஹும், மாட்டவே மாட்டேன்னுட்டேன். அப்பாக்கு நான் பட்டனத்துக்கு படிக்கப் போனதுல அதான் பெரிய பயம். டேய், மூத்தப் பிள்ளைடா, நீதான் சம்ஸ்காரம் பண்ணனும், அனுஷ்டானம் மறந்துடாதேடான்னு ஒரே பிலாக்கணம்.”
“அப்புறம் என்னத்துக்கு பட்டனம் அனுப்பினாராம்?”
“அது என்னவோ. நீ என்ன காலத்துக்கும் இங்க என்ன மாதிரி மரக்கால்ல நெல்ல அளந்துண்டு குடியானவனோட போறாடீண்டு காலம்தள்ளப்போறியான்னும் அவரே தான் கேட்டார். அவருக்கு நான் வெள்ளைக்கார சர்க்காருல சேரணுமாம். சூட்டு போடணுமாம். இங்கிலீஷ் பேசணுமாம். பட்டனத்துல விட்டத்துலருந்து தேளு விழாத மச்சுவீடு கட்டணுமாம்.”
“உனக்கு என்ன தோணுது?”
“எனக்கு பட்டணம் தான் பிடிச்சிருக்கு. இனிமே எல்லாமே பட்டனம் தாண்டா. பட்டனத்துல என்னென்ன வந்திருக்குன்னு நினைக்கற? உறஞ்சுபோன உன் சுவடிகளையே நீ பாத்துக்கிட்டிரு. அங்க இன்னும் கொஞ்சநாள்ல தூரதேசத்து மனுஷாள்ளாம் பண்றத இங்க இருந்தபடியே பார்க்கறபடிக்கி ஒரு சாதனம் வரப்போறதாம். ஒரு திரை. அதுல மனுஷா ஆடுவாளாம், பாடுவாளாம், பேசுவாளாம், இன்னும் பலதும் செய்வாளாம்… ”
“இது மட்டும் அபிச்சாரம் இல்லையா?” என்றான் மீனாட்சி.
“சரி, அபிச்சாரம் தான். ஆனா உன் அபிச்சாரத்துக்கு என் அபிச்சாரம் தேவலை. இது புதுவித அபிச்சாரமில்லையா?”
“டேய் கவிராயா, நான் உன்ன மாதிரி இதெல்லாம் உக்டார்ந்து யோசிக்கற ஆளு இல்லடா,” என்றான் சாம்பு. “அப்பாவுக்கு அந்த பயம் நிறையவே இருக்கு. சுக்ரீவன் வந்து வாலிய அடிச்சுட்டுப் போனா மாதிரி இந்த இங்கிலீஷ்காரனோட அலை நம்மளை அடுச்சுத் தூக்கீண்டு போய்டப்போறதுடான்னு அப்பப்போ சொல்றார்.”
“போகட்டுமே?” என்றார் ராமுடு. பின்னால் நதியின் மாறாத சலனம் கேட்டது. “இது கலியில்ல?” அண்ணனும் தம்பியும் மல்லாடணும்னு இருந்தா ஆடட்டும். வல்லவனுக்கு ஜெயம். பழசோட கசடெல்லாம் போகட்டும். ஒரு புது காலம் திரண்டு வரட்டும். போராட்டமும் ரத்தமும் கண்ணீரும் தான் அதுக்கான வழின்னா நாம என்ன செய்றது? அதுக்குக் குறைச்சலான போராட்டத்தையும் ரத்தத்தையும் கண்ணீரையுமா இந்தக் கலி நம்ம ஒவ்வொருத்தர்ட்டையும் வாங்கிக்கிட்டிருக்கு?”
சாம்பு அவரைப் பார்த்தான்.
“உன் தகப்பனாருக்கு பத்து வயசுல விவாகம் ஆகியிருக்கும். உனக்கு இப்போ பதிநேழு. மனசு பூராவும் பொம்பள நினைப்பு. இன்னும் உனக்கு விவாகம் பண்ணாம ஏன் உங்கப்பா தாமதிக்கறார்? ஏன் உன்ன பட்டனத்துக்கு படிப்புக்கும் உத்யோகத்துக்கும் அனுப்பறர்?” என்று தொடர்ந்தார் ராமுடு. “ஆசைடா. மனுஷ மனசு உள்ள புழுமாதிரி அவனுக்கே தெரியாம துளை போட்டுட்டிருக்கற ஆசை… அதோட வக்கிரத்துக்கும் வசீகரத்துக்கு அளவே இல்லை. காலம்பூராவும் அதுமேல நின்னுக்கிட்டு வாலியும் சுக்ரீவனும் தொடர்ந்து துவந்தம் பண்ணிட்டிருக்காங்க. அவங்க துவந்தம் நடக்கற களம் வேறெங்குமில்ல, மனுஷ மனசு தான்.”
நதியின் மூச்சுக்காற்று போன்ற அதன் சிலம்பும் ஓசை மட்டும் கேட்டது. சாம்புவின் முகம் ஆழ்ந்த சிந்தனை போன்ற பாவனையில் உறைந்திருந்தது. அது அவனுக்கு அத்தனைப் பழக்கமில்லை என்று அவன் முகம் காட்டியது.
“ராமுடு அண்ணா… ஆனா சுக்ரீவன் அவனா ஜெயிக்கலல்ல? வாலிய ராமபாணம் தாக்கி அவன் விழுந்ததனாலத்தானே சுக்ரீவன் ஜெயமானான்?”
ராமுடு சாம்புவைப் பார்த்தார். அவர் கண்களில் ஏதோ அறியாத யுத்தமொன்றில் வெற்றிபெற்றதுபோல் சிறிய ஒளிப்புள்ளிகள் தெரிந்தன.
“ஆமாம். ஒவ்வொரு யுத்தத்திலேயும் ராமனுக்கு ஓர் இடம் உண்டு,” என்றார் தில்லைஸ்தானம் ராமுடு. “ராமபாணத்துக்கு ஓர் இடம் உண்டு.”
4
மீனாட்சி அவரைப் பார்த்தான். “உங்களுக்கே ராமஜபம் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்,” என்றான்.
ராமுடு அவனை ஏறிட்டுப் பார்த்தார். “இருக்கலாம்,” என்றார். “எனக்கு எந்த கர்மாவும் கிடையாது. பக்தியும் கிடையாது. ஏன், மரியாதையும் கிடையாது. அப்பாவையும் அண்ணாக்களையும் பார்த்தே தெளிஞ்சுகிட்டேன் – பகவான் நாமம் பகல்ல எங்க இருக்கு, ராத்திரில்ல எங்க இருக்குன்னுட்டு. கார்த்தால காவேரியில முங்கி அவள்ட்ட வாங்கிப்பாங்க. சாய்ங்காலம் முங்குறப்ப நீயே பத்திரமா வெச்சுக்கோம்மான்னு திருப்பிக் கொடுத்துறுவாங்க. இல்லன்னா போற இடத்துல அதைவேற எங்க செறுகிறது? இது அவங்க ஜபமாலையில ஒரு மணி நகர்ந்தாமாதிரி.”
அதுவரை இல்லாத திடீர் கசப்பு மீனாட்சிநாதனை ஏதோ செய்தது. “அண்ணா, அப்படீன்னா நீங்க ஏன் விடாம நாமம் சொல்றீங்க?” என்றான் மீனாட்சி.
ராமுடு தோள்களைக் குறுக்கி தூரத்தில் மின்னிக்கொண்டிருந்த காவிரியைப் பார்த்தார். “என்ன சொல்லட்டும்? மீனாட்சிநாதா, நீ ஏன் பழைய ஏடுகளையும் சுவடிகளையும் ஓலைகளையும் தேடித் தேடி அலையற? அந்த பழைய குப்பையில என்ன கிடைக்கும்ன்னு நினைக்கற? உனக்கு ஏதோ கிடைக்குதில்ல?” என்றார்
மீனாட்சி யோசித்தான்.
“சொல்லு.”
மீனாட்சி சொன்னான். “ஒரு சுவடியில சின்னச்சின்னதா, உருண்டு நீண்டு எழுத்து பொறிச்சிருக்கிறதுங்கறது… ஏதோ பழைய மாயாலோகத்துக்கான துவாரத்தோட சாவித்துளை மாதிரில்ல. பூதங்களோட, வித்யாதரர்களோட, கின்னரகந்தர்வ புருஷர்களோட, யக்ஷினிகளோட உலகம் அந்தப்பக்கம் இருக்கு. வசீகர சௌந்தர்ய உலகம் ஒண்ணு. சில சமயம் அந்த எழுத்துருக்கள் மேல கண்ண ஓட விடறப்ப, அந்தப்பக்கத்துலெருந்து கண்கள் என்னைப் பார்க்கறா மாதிரி இருக்கு,” என்றான். சரியாகச் சொன்னோமா என்று சாம்புவைத் திரும்பிப் பார்த்தான். அவன் ராமுடுவை பார்த்துக்கொண்டிருந்தான்.
“ராமநாமமும் அந்த மாதிரித்தான்,” ராமுடு சொன்னார். “எனக்கு ராமனோட பராகிரமங்கள் மேலையோ, அவன் உருவத்துமேலையோ விசேஷமான மோகலெல்லாம் ஒண்ணும் கிடையாது. இதோ, இங்க கும்பகோணம் தொட்ட வழுவூர் இருக்கு. அங்க உள்ள ராமனுக்குப் தினப்படி கைங்கரியம் பண்ற ரங்கநாத பட்டனுக்கு அடியேன் ஒரு உபகாரம் செய்ய வேண்டி வந்தது. அதுக்கு பரோபகாரமா அவன் ஒரு வாட்டி எனக்கு அந்த ராமனை நிர்மால்யம் எடுக்கற வேளையில் யாருக்கும் தெரியாம திறந்து காட்டினான். அந்த உருவத்தைப் பார்த்தா உள்ளுக்குள்ள ஏதாவது ஆகுமோன்னு நினைச்சேன்.
“பேரழகான உருவம் தான். உங்களால நினைக்கவே முடியாத அழகுன்னு கல்பனைப் பண்ணிக்கோங்களேன்… ஆனால் என்ன அழகுன்னாலும், ஒரு மனுஷ தேகத்தை பார்க்கறோம்ன்ற உணர்வு மட்டும் விட்டு அகலவே இல்ல. அந்த உணர்வ என்னால ஒரு நொடிக்கூட மறக்க முடியல. இங்க ஆத்தங்கறைக்கு உச்சிவேளைக்கு வந்தா தெய்வானை கள்ளச்சி தன்னோட இரண்டு வயசுப் பிள்ளைய நிக்க வைச்சுக் குஞ்சாமணி ஆடக் குளிப்பாட்டிட்டிருப்பா. அந்தக் குழந்தையப் பாக்குறதும் வழுவூர் சந்நிதியில ராமனோட உருவத்தைப் பார்க்குறதும் எனக்கு அத்தனை வேத்துமையாத் தெரியல. பெருமாளுக்கு பாட்டாலும் இசையாலும் கைங்கரியம் பண்ணின அடியார்களெல்லாம் அந்த உருவத்தைக் கண்டு கண்ணீர் மல்கியிருக்காங்க. ஆனா எனக்கு அப்படி ஒண்ணும்மே நடக்கல. ஒரு மாதிரி வெறுமனே இருந்தது உள்ளுக்குள்ள. போயும் போயும் இந்த மனுஷரூபத்தையா நைச்சியமா அழகுபடுத்திக் கொண்டுவந்து கோயில்கொண்டு நிறுத்தணும், அப்படீன்னு.
“டேய் பயலே, நரதேகம்ங்குறது ஆடியில புதுப்புனலா வர்ர காவிரி மாதிரி. புதுசாத்தான் வருது. ஆனால் வெள்ளம் எறங்கி வர வர ஆவணிக்குள்ள எத்தனை அழுக்கையும் சீலத்தையும் கொண்டு வர்ரது? டேய், இந்த நிலா வெளிச்சத்துல இந்த நதி மினுங்குற மினுக்கப் பார்த்து நாம மயங்கலாம். விடியும்போது எறங்கி “நர்மதா சிந்து காவேரி”ன்னு முங்கி எழலாம். ஆனால் உள்ளுக்குள்ள என்ன இருக்கு? அதை ஒருமுறை பார்த்தவன் மறக்க முடியுமா? அப்படிப்பட்ட நரதேகத்திலேயா தெய்வ ரூபம் இருக்கு?
“இங்க எத்தனை பஜனை கோஷ்டிகளுக்கு தம்பூரா மீட்டியிருக்கேன், சப்ளா தட்டியிருக்கேன். ராமா ராமா ராமான்னு ஒரே ஆராவாரமா, களேபரமா இருக்கும். பேறு தான் பஜனை, கோஷ்டிகானம். ஆனா அசப்புல என்னவோ தன் குரல ஒசத்தினா தன்னோட பக்தி மட்டும் ராமனுக்குத் தனியா தெரியும்ன்னு ஒவ்வொருத்தனும் நினைச்சுப் பாடற ஒரு ஏற்பாடு. அதுக்கு பிரம்மமுகூர்த்தத்துல முழிக்கணும், முந்தாநாள் ராத்திரி விரதம்ன்னு கணக்கு. முந்தாநாள் பகல் அவங்க சாப்பிடற சாதத்துக்கும் நெய்க்கும் கணக்கு இருக்கா? அதுக்கு முந்தானாள் ராத்திரி தலைமறைவா உண்ட மத்யம் அதுக்குள்ள மூத்திரத்திலும் மலத்திலும் பிரிஞ்சு வந்திருக்குமா? இதெல்லாத்தையும் உருவத்துல தாங்கிக்கிட்டு ஓங்கித்தாங்கி நடந்து வர்ரது. பகலெல்லாம் ராமா ராமா ராமான்னு கைத்தட்டும் கூப்பாடும். எச்சில் தெறிக்க, உடம்பெல்லாம் வெப்பநீரும் வேர்வையும் சொட்ட, தோள்ல தொங்கற துளசிமாலையும் கற்பூரமும் அந்த கந்தத்தைத் தாங்க முடியாம மறைக்க… அப்படியே வீட்டுக்குப் போயி பாரியாள் மேல விழுந்து அவ சதையில பூசி பஜனைப் பலனை சகதர்மிணியோட பகிர்ந்த திருப்திய அடஞ்சு… சுபம், மங்களம். நா கொடுக்கா, இவா சொல்ற ராமனை பக்தியுடன் நினைத்துக்கொள்ள எனக்கு எந்தக் காரணமும் இல்ல.
“ஆனா என்னுடைய குருநாதர் அந்தப் பெயரை எனக்குக் கொடுத்துவிட்டார். அவர் எனக்குக் கையளிச்ச ஒரே விஷயம் அந்த நாமம் மட்டும் தான். அதை என்னால விட முடியல. எங்கியோ பொறுக்கின கல்லச் சும்மா உள்ளங்கையில திருப்பிக்கிட்டே இருக்கறா மாதிரி அந்த பெயரச் சொல்ல ஆரம்பிச்சேன்.
“தொடங்கினப்ப உருட்டி உருட்டித்தான் சொன்னேன். ஏன் சொல்றேன்னே தெரியாம சொன்னேன். ஆனால், பயல்களா, யோசித்துப்பாருங்க. அது எத்தனைப் பழைய பெயர்! ஆதிகவி வால்மீகி முப்பத்துமூணு கோடி முறை சொன்னதாக ஐதீகம். அதிலேயும் அவர் ராமா ராமா என்று சொல்லல்ல. மாறா மாறான்னு தான் சொன்னார். மாறனோட பெயர்! மாறனோட பெயர் ராமனோட பெயரோட பழசு இல்லையா? மாறன் ராமனுக்கு ஒரு நொடி மூத்தவன் இல்லையா? ஏன்னா மாறனோட பெயரைச் சொல்லப்போனதுல தான ராமனோட பெயரே வால்மீகிக்கு வந்தது?
“நானும் ஒரு கட்டத்துல மாறா மாறான்னு சொல்ல ஆரம்பிச்சேன். ராத்திரியெல்லாம் மாறா மாறான்னு சொன்னா பகல்ல ராமா ராமான்னு மாறிடாதான்னு ஒரு ஆசை. ராத்திரி பழமா இருக்குறது பகல்ல சாராயமா வடிச்சு வர்ரதில்லையா? டேய் சாம்பா, பொம்பளை அனுபவமில்லியான்னு கேட்டியே? ஆமாண்டா, எனக்கு பொம்பளை தேகம்ன்னா என்னன்னு தெரியாது. அதுக்குன்னு மாறனத் தெரியாதுன்னு இல்லை. மாறனத் தெரியாதவன் ஒரு மனுஷன் இல்லை இந்த உலகத்துல. ஆனா எனக்கு அவன் தம்பி ராமனைத் தெரியாது. எங்கிட்ட இருக்கப்பட்டது அந்தப் பெயர் மட்டும் தான்.
டேய் மீனாட்சி, அந்தப் பெயரும் சுவடியில பொறிச்ச ஒரு பழைய வார்த்தைன்னு புரிஞ்சுக்கோ. அந்தச்சுவடி நம்ம சித்தம் தான். அந்த இரண்டு எழுத்து மட்டும் தான் அந்தச் சுவடியில செதுக்கப்பட்டிருக்கு. ஆனா எத்தனை ஆழமான செதுக்கு! நீ சொல்றா மாதிரி அதோட கண்ணுக்குள்ள ஒவ்வொரு நாளும் நோக்க வேண்டியதுதான். ஒரு நாள் அது திரும்ப நம்ம கண்ணப் பார்க்கும்ன்ற நம்பிக்கையில. பாத்துக்கிட்டிருக்கேன், ஒவ்வொருநாளும் பாத்துக்கிட்டிருக்கேன். இதுதான் என் அனுபவம்.”
“நீங்க ரொம்ப அனாச்சாரமான சமாச்சாரங்களா பேசறேள்!” சாம்பு இடைமறித்தான். “ராம விக்ரகத்துல ராமர் எங்க இருக்காருன்னு உங்களுக்குத் தெரியலன்னா உங்க பார்வை சரியானதில்லன்னு அர்த்தம். இத்தனக்கோடிப் பேர் பூஜிக்கற பகவான் உங்களுக்கு மட்டும் தெரியிலன்னா உங்கள்ளத்தான் குறை.”
ராமுடு அவனை பேசாமல் பார்த்தார். “இருக்கலாம்,” என்றார்.
“சரி, ராமனோட பெயருக்குப் பின்னால ராமன்னு ஒருத்தன் இருக்காங்கற நம்பிக்கை மட்டும் எங்கிருந்து வருது உங்களுக்கு? அந்த நம்பிக்கை இல்லன்னா, நீங்க ராமனோட பெயரைக் கூட சொல்லாண்டாமே?”
“லேதுறா. ராமன் இருக்கான். இதை நம்பிக்கைன்னு சொல்லல்ல. கண்ணு பார்க்கற பார்வையா சொல்லல. பாம்பு பக்கத்துல இருந்தா மூக்கு எப்படியோ அறியுறதுல்ல? அந்த மாதிரி சொல்றேன்.
“நா கொடுக்கா, என் குருநாதர் சொல்வார். நம்மளால ராமனக் காண முடியாது. அனால் சில சமயம் அவனோட அம்பைக் கண்டுற முடியும். புராணத்துல வருமே? மரத்துக்குப் பின்னாலெருந்து காத்து மாதிரி சீழ்க்கையூதிகிட்டே வந்து சரியான இடத்துல தெச்சு நிக்குற ராமபாணம். அந்த ராமபாணத்தப் பார்க்குறப்ப நமக்குத் தெரியும். அங்க ராமனோட கை இருக்குன்னு. ராமனோட கை தெரிஞ்சிருச்சுன்னா ராமன் ரொம்ப தூரமாவா இருக்கப்போறான்?”
5
நதி வெள்ளி கரைந்து சென்றது. எழுந்துவந்த வாற்றில் மீனாட்சிநாதனின் தலைமுடி அசைந்தபோது அதன் இழைகள் வெள்ளி கொண்டு மின்னின. நிலாவெளிச்சத்தில் அவன் முகம் கருமையிலிருந்து நீண்ட ஒரு தாமரைமொட்டெனத் தோன்றியது. நிறைந்துக், கூம்பி, எந்நேரமும் நீர்த்தெறிக்க அலர்விரியும் என்பது போல்.
“அண்ணா.”
‘ம்?”
“நான் பார்த்திருக்கேன்.”
“என்னடா?”
“நீங்க சொல்லவர்ரது எனக்குப் புரியுது,” அவன் குரல் இலேசாக நடுங்கியது.
மீனாட்சிநாதன் சொன்னான். “இரண்டு வருஷத்துக்கு முன்னால கபிஸ்தலத்துக்குப் பக்கத்துல ஒரு சதுர்வேதிமங்கலத்துல உள்ள ஒரு பழைய அகத்துல நிறைய சுவடிகள் இருக்குன்னு கேள்விப்பட்டுப் போனோம். நானும், ஐயரும், ஆதீனத்திலெருந்து சிவனடியார் பிள்ளையும், பக்கிரிசாமி முதலின்னு ஒரு சினேகிதனும்.
“அந்த வீடே மொத்தமும் கைவிடப்பட்டிருந்தது. அதுல இருந்தவ ஒரே ஒரு மூதாட்டி. சீத்தம்மான்னு பேரு. அவங்களுக்கு நிலம் உண்டு, ஆனால் தாயாதிகள் யாரோ அதுக்கு உரிமை எடுத்துட்டாங்க. இவங்களுக்கு கொஞ்சூண்டு நெல்லும் காய்கறியும் மட்டும் அப்பப்ப அனுப்பிவைப்பாங்கன்னு ஏற்பாடு. அது எப்ப வரும்ன்னு சொல்ல முடியாது. பட்டினி தான். நாங்க சுவடிகள தேடறோம்ன்னு எபப்டியோ கேள்விப்பட்டு அத வித்தா நாலு சக்கரம் கிட்டலாம்னு செய்தி சொல்லி அனுப்பினாங்க. போனோம்.
“ஐயரு சொன்னாரு. இதுல ஒண்ணும் காணறதுக்கில்ல. இத அடுக்கி ஒரு வழிக்குக் கொண்டு வர அளவுக்கு நேரமோ செல்வமோ நம்மக்கிட்டக் கிடையாதுன்னு. அவர் அப்படியே கிளம்பச் சித்தமா இருந்தாரு. சிவனடியார் பிள்ளைக்குத்தான் மனசு கேட்கல. கொஞ்சமாவது பார்ப்போம்ன்னு கெஞ்சினாரு.
“அவங்க பேசிக்கிட்டிருந்த சமயத்துல விடாம நானும் பக்கிரியுமா சும்மா ஒவ்வொண்ணையா எடுத்து நோக்க ஆரம்பிச்சோம். ஒரு கால் மணிநேரம் தான் இருக்கும். பக்கிரி கண்ல தான் அது மொதல்ல பட்டது. ‘என்னடா இது?’ன்னான்.
“அந்த ஓலையில, மேற்புறம் இடதுபக்கமா, பிள்ளையார்ச்சுழி போடுவோமே, அந்த இடத்துல, ஒரு துளை. பூச்சி அரிச்சது தான். ஆனால் பூச்சி எப்பவும் அரிக்குறது போல பொடுசா இல்லாம, அழுத்தமா ஒரு சின்ன பொட்டு வைச்சா மாதிரி இருந்தது.
“அந்த ஓலையப் படிச்சேன். அண்ணா, அது நாங்க தேடிட்டிருந்த நாகசூடாமணி காப்பியத்தோட நூன்முகச் செய்யுள். வேறொரு சுவடியில இருந்த மேற்கோளோட சரியா பொறுந்தியிருந்தது. போய் காண்பிச்சோம். ஐயறு பதறிட்டாறு. டேய், இது போட்டத் துளை மிச்சதுல இருக்கும் பாருன்னார்.
“அந்த நாள் முழுக்க அந்த ஓலைகளை பிரிச்சு அறிஞ்சோம். மாலைக்குள்ள காப்பியமே கையில கிடைச்சிருச்சு. மொத்தம் ஏழு கட்டா எழுநூத்து நாற்பத்தஞ்சு ஓலைகள். சேர்த்து அடுக்கியிருந்த ஏதோ காலத்துல பூச்சி மொத்தத்துலேயும் துளை போட்டு மறுபக்கத்துக்கு போயிருக்கு. கண்ணுக்குத் தெரியாத கோணி ஊசி மாதிரி கண்ணுக்குத்தெரியாத திரியால ஏடுகளை தைச்சிருக்கு.
“‘ஒரே தாய்க்குப் பிறந்த ஏழு பையனுங்க உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் அவ பேரைச்சொன்னா இணையுறா மாதிரி இந்தத்துளை எல்லா சுவடிகளையும் சேர்த்திடுச்சுடா,’ என்றார் சிவனடியார் பிள்ளை. அப்போ ஐயர் என்ன வார்த்தை சொன்னார் தெரியுமா? அது ஏழு மரத்தைத் துளைச்சுட்டுப் போன ராமர் சரம், என்றார். அப்படித்தான் நாகசூடாமணி காப்பியத்த எங்க ஐயா கண்டுபிடிச்சு பதிப்பிச்சாரு.”
மீனாட்சிநாதன் சொல்லி முடித்தான். தீவிராமாகவும் உணர்ச்சிகரமாகவும் அதுவரை காற்றை நிறைத்த அவன் குரல் ஓய்ந்த இடத்தில் வெறுமை குடிகொண்டது. சாம்பு அவனைக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ராமுடு பெருமூச்சு விட்டு கூஜாவில் இருந்த கடைசி பங்கு திரவத்தை மூன்று பாகமாகப் பிரித்து ஊற்றினார். மீனாட்சி அதை வெறுமனே பார்த்தான். சாம்புவும் குடிக்கவில்லை. ராமுடு மட்டும் தன் வழக்கத்தின் படி ஒரு சிறு மிடரை அருந்திச் சாய்ந்து கண்ணை மூடினார்.
“பயலுகளா, இப்போ ஒரு பெத்த வார்த்தை சொல்லப்போறேன். மன குருகாரு, அவர் சொன்ன வார்த்தை. வாடுக்கி நாதபிரம்ம சுவாமி மீதா சால பக்தி. சால பிரேமா. அன்னி சௌஜன்யமு. வாரு – எவரு? திருவையாறு நாதபிரம்ம ரிஷிகாரு – ஶ்ரீராமன குறிச்சி செப்பாரு. ஒக நாம, ஒக மாட, ஒக பாண, ஒக பார்ய.
“நா கொடுக்கா, இந்த உலகத்துல எது வேணாலும் பொய்யாப் போகலாம். ஆனால் ராமனோட பேரும், அவன் சொல்லும், அவன் அம்பும், அவன் மாங்கல்யத்த தரித்தவள் மேல கொண்ட காதலும் பொய்ப்பிச்சே போகாது. இது என்னோட குருநாதரோட வாக்கு. அவரோட குருநாதர் அவருக்குக் கொடுத்த வேதம். இந்த உலகத்துல நாம பிடிச்சுக்கக்கூடிய பற்றுன்னு எதுவுமில்ல. எல்லாம் மட்கி உதிர்ந்து போகர சமாச்சாரம். ஆனால் ஒரு பெயரும் ஒரு சொல்லும் ஓர் அம்பும் ஒரு பெரும் காதலும் இங்க இருக்கு. எல்லாமே உதிந்துபோனப்பிறகும் மிஞ்சி இருக்குற ஒண்ணு தான் அது.”
6
திடீரென்று அவர் குரல் உசந்தது.
“ஜகத்து சாரா ராம் கீ சர்கா மே
பீன் ஹுஆ ஜீனி சதரியா!
முதல் வரியை ஓங்கலாக, நீட்டி, இழுத்துப் பாடினார். ஆனால் பீன் ஹுஆ, என்ற இரண்டாம் வரிக்கு வந்த போது அவர் குரல் தாழ்ந்தது.
அப்படியே ‘ஜீனி’, ‘ஜீனி’, ‘ஜீ…னி’ என்று வெகுநேரம் வெண்ணையை வழிப்பது போல் கொஞ்சி, வருடி, மெல்ல இறகு போல் இறங்கி வந்து நிறுத்தினார் – ‘ச-த-ரி-யா’. மீனாட்சிநாதனுக்கு அந்த வார்த்தை சீனி… சீனி… என்று இனித்தது.
அவருடைய குரலை மீனாட்சி முன்னால் கேட்டிருந்தாலும் அந்த நைந்துபோன உடலுக்குள் அத்தனைப்பெரிய குரல் எப்படி இருக்க முடியும் என்ற துணுக்குறலை அவன் மீண்டும் அடைந்தான். சாம்புவைப் பார்த்தான். அவன் வாய் திறந்திருந்தது. மந்திரித்து விட்டதுபோல் இருந்தது அவன் முகம்.
ராமுடு ஓங்கிப் பாடத் தொடங்க, செல்லப்பெட்டியில் அவர் கை தானாக தாளம் தட்ட ஆரம்பித்தது.
“ராம் பாண் சே பீன் ஹுஆ ஹே
ஜகத்து சாரா கா ஜீனி சதரியா!
ராம் நாம் சே லிகா ஹுஆ ஹே
மானூஷ் கா லிக், ஜீனி சதரியா!
ஓ, ஜீனி சதரியா, ஜீனி சதரியா,
ஜீனி சதரியா, ஜீனி சதரியா,
ராம் நாம் சே லிகா ஹுஆ ஹே
மானூஷ் கா லிக், ஜீனி சதரியா!
ராம் பாண் சே பீன் ஹுஆ ஹே
ஜகத்து சாரா கா ஜீனி சதரியா!”
“ஜீனி… ச-த-ரி-யா” என்ற பதத்தில் நிரவல் போல் அவர் எடுத்தபோது அது வானென்றும் நட்சத்திரங்களென்றும் நதியென்றும் வெடித்துக் கண்ணுக்குத்தெரியாதத் திவல்களாகத் தெறித்தது போல் இருந்தது மீனாட்சிக்கு. அவர் குரல் மெல்ல தாழ்ஸ்தாயிக்கு இறங்கி வந்து மறைந்தபோது அந்த அமைதியில் வானுமும் நட்சத்திரங்களும் நதியும் நீடித்திருந்ததைக் கண்டு அவன் துணுக்குற்றான். இது மாயத்தோற்றமென்பது போலவும், அப்போது கண்ட அந்தத் தெறிப்பின் கணம் தான் நிஜமென்றும் தோன்றியது அவனுக்கு.
அந்த அமைதியில் ராமுடு மீண்டு வந்து இன்னொரு மிடர் அருந்தினார். அதுவரை மலை போல் ஒங்கியிருந்த அவர் உடலில் சிறிய நடுக்கம் தோன்றியதை மீனாட்சி கவனித்தான்.
“அப்படீன்னா என்னண்ணா?” என்றான். “ஜீனி சதரியா?”
“துணி. மிக மிருதுவான, காத்து மாதிரியான துணி,” என்றார் ராமுடு. அவர் குரல் இப்போது மிகமிகத் தாழ்ந்திருந்தது. “ராமன்ற தறியில ராமபாணத்தால ராமநாமத்தோட நூலால நெய்யப்பட்டத் துணியில அவர் மைய்யால மனுஷ வாழ்க்கை எழுதப்பட்டிருக்குன்னு போகுது பாட்டு.”
“என்ன பாஷை இது?” என்றான் சாம்பு.
“இந்துஸ்தானி. நாகப்படினத்துல ஒரு முஸல்மானி பாடிக் கேட்டுக் கத்துக்கிட்டேன். ஒரு ஸ்த்ரீ.”
“ஸ்த்ரீயா?” என்றான் சாம்பு.
“பரதேசி ஸ்த்ரீ. செய்யிது தாஹிரா பீவி ‘மஸ்தானி’ன்னு பேரு. குண்ணங்குடியில இருந்த ஒரு பரதேசியோட வழிவந்தவன்னு சொன்னா. அதான் அந்தப் பேர வெச்சுக்கிட்டாளாம். அங்க அவள எல்லாரும் மாலிகான்னு கூப்பிடுவாங்க. அவ மட்டும் ‘இந்த மஸ்தானி’ன்னு தன்னச் சொல்லிக்குவா.” மிக ஆழமான இடத்திலிருந்து வந்தது அவர் குரல். “அவ கிட்டையும் கொஞ்சகாலம் இருந்து பாட்டுப் படிச்சேன். மனோன்மணிக்கண்ணியும் பராபரக்கண்ணியும் திருப்புகழும்… இப்ப சொன்னேனே, நாதப்பிரம்ம பாகவதர்? வாடுனிகி கானகளு கூடா மொதமொதல்ல அவங்கக்கிட்டத்தான் படிச்சேன். ஆ ஸ்திரிக்கி அன்னி தெல்சு,” என்றார்.
காவிரியிலிருந்து காற்று பெருக்கெடுத்து வந்தது. மீனாட்சியின் தலைமுடி பறந்தது. அவன் வேட்டி பறக்கவே பிடித்துவைத்துக் கொண்டான். ராமுடுவின் கந்தலான ஆடைகளும் பறந்தன. ஆனால் அவர் அதைத் கண்டது போலவே தெரியவில்லை.
ராமுடு பெருமூச்சு விட்டார். “இந்த ஜென்மத்துல நான் பார்க்கல. இதுவரை பார்க்க வாய்க்கல எனக்கு. ஆனால் பார்த்த ஒருத்தரை எனக்குத் தெரியும். வேணும்னா அவரோட கதைய சொல்றேன்,” என்றார்.
7
தில்லைஸ்தானம் ராமுடு சொன்னார்:
“அடியேனோட கதை, இதோ இப்போ சொல்லிக்கிட்டிருந்தேனே, அந்த ஶ்ரீபாத பஞ்சநாத பிரம்மம்ங்கற திருவையாறு நாதபிரம்ம பாகவதர பற்றியானது. நூறு வருஷத்துக்கு முன்னால இங்கே வாழ்ந்த ஒரு சங்கீத விதூஷகர் அவர். மகானுபாவுலு.” கைக்கூப்பினார்.
“பழைய திருவையாறு ராமாமிர்த பிள்ளை, தன் கடைசி காலத்துல எங்கிட்ட சொன்ன கதை இது. அப்போ நான் சின்னப் பையன். உங்கள மாதிரி கொடுக்கன். நான் கேட்டத அப்படியே உள்ளுக்குள்ள சேமிச்சு வெச்சுகிட்டேன். இன்னிக்கி, அவர் எங்கிட்டச் சொன்ன கதைய, அப்படியே, பிசகில்லாம, வார்த்தை மாறாம, உங்கக்கிட்ட சொல்லப்போறேன்.”
மேகங்கள் எங்கிருந்தோ வந்துவிட்டிருந்தன. நிலா மறைய வெளிச்சம் குறைந்திருந்தது. விடிய சற்று நேரமே இருந்தது. இருந்தாலும் இரவு பலமடங்கு ஆழ்ந்ததுபோல் தோன்றியது. அந்த இருட்டிலிருந்து தில்லைஸ்தானம் ராமுடுவின் குரல் மட்டும் அடர்ந்து, ஒரு பழைய, நன்கு தெரிந்த வாசனை போல் மிதந்து வந்தது.
“நீங்க சின்னப் பசங்க, உங்களுக்குத் திருவையாறு ராமாமிர்த பிள்ளையத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. அவர் இப்போ இல்ல. இறந்து கொஞ்ச வருஷம் ஆறது. அவர், இதோ, இங்க இப்படியே காவேரிய ஒட்டிக் கிழக்கால போனா வர்ர பெரிய அரசமரத்தத் தாண்டியுள்ள மசாணத்துலதான் எரிஞ்சார். இந்த மாதிரி இராத்திரியில நீங்க கூர்ந்து கேட்டா அந்த அரசமரத்தோட நாக்குகள் பேசர செய்தியெல்லாம் கேட்கும். நாசியத் தீட்டி முகர்ந்தா அங்க இப்போ எரிஞ்சிட்டிருக்கற சிதையோட வாடைக்கூட காத்துல வரும். எனக்கு வருது. அவரை சிதைமூட்டியது நான் தான்.
“அப்படிப்பட்டவங்களுக்குப் பிறந்த ராமாமிர்தம் சின்ன வயசுலேயே பழைய திருவாலங்காடு நயினார் மாதிரி வருவார்ன்னு பேச்சு இருந்தது. ஒரு கனகம்பீரமான சாரீரத்துக்கு எல்லா சாத்தியத்தையும் இருந்த குரல். அந்த மகாபுருஷரே இந்தச் சின்ன கொடுக்கன் பாடினதக் கேட்டு அவன் காதைத் தொட்டு ஆசீர்வாதம் பண்ணினாராம். அந்த நம்பிக்கை வீண்போகாம இருக்கணும்னு ஒரு குறையும் வைக்காம அவருடைய தள்ளையும் வாத்தியார்மாரும் அவருக்குச் சாதகம் கொடுத்தாங்க.
“எல்லாம் கூடி வந்துட்டிருந்த வேளையில, உதட்டுக்கு மேல மயிர் அரும்பற காலத்துல, அவருக்குக் குரல் போச்சு. குரல் போச்சுன்னா… டேய், பயலுகளா, பாட்டுக்காரனுக்கு குஞ்சே போனாலும் பரவால்ல. ஆனா குரல் போகக்கூடாது. அதுவும் திருவாலங்காடு நயினார் பாட்டக் கேட்ட, அவரைப் பார்த்த, அவரோட கைத்தொடுகைய ஆசியா அறிஞ்ச இளசுக்குக் குரல் போறதும் உயிர் போறதும் ஒண்ணு தான்.
“பாட்டுக்காரனுக்கு குரல் உடையறதுன்றது பொம்பளையாளுக்கு மொத ராத்திரியில கன்னித்திரை உடையறாமாதிரி. தேங்காய் மாதிரி ஒரே போடுல ‘டுப்’ப்புன்னு உடையணும். விதி குறிக்கிட்டு உடையலைன்னா, வேதனை நீடிச்சு இழுக்கும். சங்கீதக்காரனுக்குக் குரல் வளைஞ்சு விளங்காமலே போயிடும்.
“அவருக்கு நடந்தது அது தான். அவருக்குள்ள சங்கீதம் புயலா அடிச்சுது. ஆனா குரல்ல ஏறாது. ஏறரா மாதிரி வரும். அப்புறம் அப்படியே போயிடும். மலை நிழலாடற பூமியில மேகம் கருக்கறா மாதிரித் திரண்டு ஒரு துளிக்கூட போடாம பசப்புக் காட்டிப் போகுமில்ல, அந்த ஏமாத்தத்த பெரியவரு தினம் தினம் அனுபவிச்சாரு.
“பாட்டும் விளங்கல. நட்டுவாங்கமும் தோது படல்ல. வாத்தியமும் கத்துக்க காலம் பிந்திருச்சு. இவரு வேதனையப் பார்க்க சகிக்காம அம்மா இறந்துட்டா. அப்புறம் அலைச்சல் தான். அவரும் கலியாணம் செய்துக்கலை. அரண்மனையில உத்யோகம் பார்த்தார். அப்போ கம்பேனிக்காரன் வந்துட்டான். பேருக்குத்தான் சிம்மாசனத்துல ராஜா, கோட்டையெங்கும் அவன் ஆட்சி தான். அப்புறம் அரண்மனை வாசம் பிடிக்காம வெலகிட்டாரு. அங்கேயும் இங்கேயும் தீர்த்தாடனம். ஒரு கட்டத்துல இதோ, இங்க நாம உட்கார்ந்திருக்கோமில்லையா, இதே மண்டபத்துல தான் அவர் வாசமிருக்கத் தொடங்கினார். சிறுசுகள் நாங்க வந்து சுத்தி உட்கார்ந்தா கதை சொல்வார். பாகவதக் கதைகள், புராணக் கதைகள். அவரே நேர்ல பார்த்த பழங்கதைகள். அந்தக் கதைகளே புராணக் கதைகளப்போலத்தான் இருக்கும்.
“அப்போதான் எங்க அண்ணாக்கள் என்ன விலக்கி விட்டிருந்தாங்க. எனக்கும் இந்த மண்டபம் தோதா இருந்தது. இந்த மாதிரி பல ராத்திரிகள இதோ, இதே மாதிரி இந்த காவேரிய பார்த்துகிட்டே திருவையாறு ராமாமிர்த பிள்ளையோடு நான் கழிச்சிருக்கேன். அவர் என்ன மகனைப் போல பார்த்ததுக்கு அதுவும் ஒரு காரணம். எனக்கு ராமுடுன்னு பெயர் போட்டதும் அவர் தான். சொல்லப்போனா எனக்கு ராமஜபத்த எடுத்து கொடுத்ததா சொல்றாங்களே ஒரு பரதேசி, அவர் வேறு யாரும் இல்ல, திருவையாறு ராமாமிர்த பிள்ளை தான். கனிச்சாறோட இனிமையும் அடர்த்தியும் கொண்ட சங்கீதமெல்லாம் அவரிட்டேருந்து பரிபோன பிறகு அதோட கொட்டை மட்டும் தான் தன்கிட்ட மிச்சம் இருந்ததா சொல்வாரு. அதான் ராமநாமம். அதைத்தான் அவர் எனக்குக் கொடுத்தாரு. அது எனக்குள்ள முளைக்கணும்னு சொன்னாரு.
“அதனால, இப்போ நான் திருவையாறு ராமமிர்தம் பிள்ளையோட பெயரச் சொல்றப்ப, காவிரிக்கரையில பிண்டமிடறத் தருணத்துல தனையன் தகப்பனோட பெயர சொல்ற பாவனையோடச் சொல்றேன். அப்படி அவர் பெயரைச் சொல்றப்ப அவருடைய ஆத்மா இந்த இரா காத்துல எழுந்து வந்து இங்கே இப்படி நம்ம பக்கத்துல உட்காரவும் செய்யலாம். ஏன்னா அவருக்கு உரிமையான நீரையும் எள்ளையும் பிண்டத்தையும் கொடுக்க இந்தக் கதைய நீட்டுறதத் தவிர எனக்கு வேற வழி இல்ல. அவர் எனக்குக் கொடுத்ததெல்லாம் இந்தக் கதைகளைத்தான். என் ரத்தத்துல பலம்னும் சக்தியுன்னும் கலந்ததெல்லாம் அது மட்டும் தான். அவருக்கு பலமும் சக்தியும் கொடுக்கணும்னா இந்தக் கதைகளைத்தான் திருப்பிக் கொடுக்கணும், எங்கிட்ட வேறு ஒண்ணுமில்ல.
“அய்யோ, சின்னா, பயந்துட்டிங்களா? இது பயப்பட வேண்டிய சமாச்சாரமில்ல, ரொம்ப மங்கலமான விஷயம், பாத்துக்குங்க. ராமன் கதைய எங்கல்லாம் சொல்றோமோ அங்கெல்லாம் அனுமனுக்கு ஒரு இடத்த விரிக்கிறதில்ல? அந்த மாதிரித்தான். இந்தத் திருவையாறு ராமாமிர்த பிள்ளை இருக்காறே, அவரும் ஒரு அனுமன் தான். அனுமன் ராமனைத் தன் கண்ணால பார்த்தா மாதிரி, அவரு பஞ்சநாத பிரம்மத்தத் தன் கண்ணால பார்த்திருக்கார். இப்போது கூட அந்த மகானுபாவுலுவோட கீதங்கள அகங்ககளிலும் க்ஷேத்திரங்களிலும் தீர்த்தங்களிலும் அவரோட சீடர்கள் பாடிக்கிட்டிருக்காங்க, தெரியுமா? ராமநாமநாத வெளி, அது. அப்பேர்ப்பட்ட பஞ்சநாத பிரம்மம்ன்ற நாதபிரம்ம பாகவதர என் குருநாதர் கண்ணோட கண் வெச்சுப் பார்த்திருக்காரு. அவர் கண்களை நான் பார்த்திருக்கேன், இப்போ என் கண்கள நீங்கப் பார்க்கரீங்க.
“பயல்களா, என் குருநாதர் பஞ்சநாத பிரம்மத்த மட்டும் காணல. குறைஞ்ச ஆயுசுலேயே மறைஞ்சதாகச் சொல்லப்படற அவருடைய அனுஜரான ஜப்யேச பாகவதரையும் அவர் கண்டிருக்கார். வாலி-சுக்ரீவன மாதிரியான அண்ணன்-தம்பிமார். அவங்களோட கதையத் தான் இப்போ நான் சொல்லப் போறேன்.
“காலாதீதமான கதைடா இது. ஏன்னா இது காலத்தோட கதையும் கூட. நீங்க என்னக் கேட்டிங்கல்ல, அந்த ராமபாணத்தை பார்த்ததுண்டான்னு. அதனோட கதை இது. அந்தப் புனிதமான கதையச் சொல்லத் தொடங்கறேன்.”
8
“நா கொடுக்கா, இந்தக் கதைய சங்கீதம் இல்லாம சொல்ல முடியாது. ஏன்னா நான் சொல்லப்போறது சங்கீதத்தோட கதையே தான். மனுஷ மனங்களுக்குள்ள ராமபாணத்த மாதிரி துளைப்போட்டு துளைப்போட்டு போகுதுடா சங்கீதம். இந்த ஏழேழு லோகத்தையும் மிக மிருதுவான, கண்ணுக்குத் தெரியாத துணி மாதிரி இணைக்குறது சங்கீதத்தோட இழைகளுன்னு என் குருநாதர் சொல்வார். அதைத்தான் பரதேசிகள் கண்டு பித்து ஏறிப் பாடறாங்க. அந்த வஸ்திரத்தத் தொட்டுவிட முடியாதாங்கறதுதான் ஒவ்வொரு சங்கீதக்காரனோட ஏக்கமும். கண்ணுல கட்டோட வெட்டவெளிப் பொட்டலெல்லாம் கேளாப் பாட்டுக்காக நாயா அலையணும்ன்றது அவன் விதி.
“நான் சங்கீதக்காரனில்லை. ஆனா அந்தச் சீலையோட அசைவ உணர்ந்த படுபாவி நான். இனிமே இந்த ஜென்மத்துல அந்த வாசம் என்னை விடாது. அப்பேற்பட்ட வஸ்திரத்த தொட்டவரு மட்டுமில்ல. உடலாப் போற்த்தி அதோட மடிப்புகள் படபடக்க வானத்துக்கும் பூமிக்கும் எழுந்து நின்ன மகானாக்கும், என் குருநாதர் தொண்டு பண்ணின திருவையாறு பஞ்சநாத சுவாமி என்கிற நாதபிரம்ம பாகவதர். அவர் அடியாருக்கு அடியாருக்கு அடியார் நாம.
“அவர் பாட்டப் பாடாம இந்தக் கதைய எப்படிடா தொடங்க முடியும்? ஆகவே கேளுங்க. அவருடைய பிரக்லாத விஜயமு நாடகத்தோட நாந்தி பாட்டப் பாடித் தொடங்கறேன். நம்ம கதையோட நாயகனும் அந்த காவியத்தோட பிரக்லாதனைப் போல பரம சாத்வீகன். பக்தன். ஹிரண்யனப்போல வீரதீர பராகிரமன். பகவானைப்போல அறிவுமூத்துத் தீவிழிச்செழுந்த சிம்மம்.”
நாட்டை ராகத்தின் சித்திரத்தைக் கொடுத்து எழுந்து விண்ணை முட்டியது அவர் குரல். உணர்ச்சிப் பொங்க, வீரமும் காதலும் தொனிக்க அவர் பாடினார்.
“ஜகதன்னிகி பிராண நாயகா!
ஜெய சத்குண காரகா!”
தில்லைஸ்தானம் ராமுடு சொன்னார்:
“அப்போ திருவையாறு ராமாமிர்த பிள்ளைக்கு மனத்துல பெருத்த சங்கீதம் ஓடினாலும் தஞ்சாவூர் அரண்மனை வாத்தியக்குழுமாருக்குத் ஜால்ரா தட்டுறதைத் தவிற வேற உத்யோகம் கிடைக்கல. ஆனால் அது அரச உத்யோகம். சக்கரமும் மத்ததும் உண்டு. தவிர, அவருக்கு அரண்மனையில ஓர் இடம் இருந்தது. ஏன்னா, அப்போத்தான், அவருக்கு ஒண்ணு தொட்டு சகோதரி முறை வேண்டி இருந்த ரமாவாணின்ற ராஜதாசி, அவளுடைய சொந்த பாட்டி ரமாபங்கஜம் அதுவரை வீற்றிருந்த இடத்தப் பிடிச்சு, சரபோஜி மகாராஜாவுக்கு ஆசைக்குறியவளா மூத்திருந்தா. சகலவிதமான கலாவித்யைகள்ள பூஷ்ணனா விளங்கி அரசகோலம் தரிச்ச சரபோஜிவாரு, சாரங்கத்தைத் தூக்கீட்டு கஸ்தூரிமானுக்குப் பின்னால போல ராமச்சந்திரமூர்த்தி மாதிரி, அவ ஒத்த வார்த்தையும் தட்டவே மாட்டார்ன்னே பேச்சு இருந்தது.
“விஷயங்கள் அப்படி இருந்தப்ப ஒரு நாள், தன் இனிய பேச்சுக்காக ரமாவாணின்னும் சுகவாணின்னும் ரமாவதூதின்னு பெயர் பெற்றிருந்த அந்த இளம் நங்கையானவ, ராமாமிர்த பிள்ளைய தன்வசம் அழைச்சாள். முந்தின வாரம் அரச தர்பார்ல பாடி, தன் பாட்டுக்குப் பதக்கம் வாங்கின ஜப்யேச பாகவதர்ன்ற புது உருப்படியப் பற்றி அவ பேசின பேச்சுக்களைக் கேட்டு, ராமாமிர்தத்துக்கு கிலி உண்டாயிருச்சு. அம்மா, நீ அரண்மனைவாசமா இருக்க, நினைவிருக்கட்டும்மான்னு எச்சரிச்சாரு. அரசூர்வலமா திருவையாறு கல்யாண்மகால்ல தாமசிச்சிட்டிருந்தப்ப அங்க அந்தக் கொடுக்கன் பாடறதக் கேட்டு, இவ தான் கட்சேரி தர்பார்ல அரங்கேற்றம் ஏற்பாடு செய்தவள்ன்ற சாமாச்சாரத்த அவர் பின்னால தான் அறிஞ்சாரு.
“அவருக்கு ஏது செய்வதுன்னு தெரியல. பலதும் சிந்திச்சாரு. பிறகு காவிரியில படகேறி, திருவையாத்துக்கே பிரயாணமானாரு. அங்க பூஜ்ய பிராமணன்னும் பரம சாத்வீகன்னும் பெயர் பெற்ற பஞ்சநாத பிரம்ம பாகவதர் தங்கியிருந்த இல்லத்துக்குப் போனாரு.
“ராமாமிர்த பிள்ளை அங்க போனப்போ, இலட்சத்தி எட்டு நாமம் சொல்லாம விரதத்த முறிக்கமாட்டேன்னு பஞ்சநாத பிரம்மம் ஜபப் பாராயணத்துல உட்கார்ந்திருந்ததா அவர் காரியங்கள்ள சகாயமா இருந்த சாமான்ற கொடுக்கன் சொன்னான். இவரு சரின்னு திண்ணையில காத்துக்கிட்டிருந்தாரு.
“மூணு நாளா விரதம் இருந்தவரு அன்னிக்கிக் கார்த்தால தான் பகவான் நாமத்தச் சொல்லீண்டே ஊஞ்சவிருத்தியாப் போயி கொஞ்சூண்டு அரிசியும் பருப்பும் வாங்கி வந்திருந்தர். ஆனால் அதையும் உடனே பொங்க வைக்காம, நாமஜபம் முடியறவரைக்கும் அரிசி உலையில ஏறக்கூடாதுடா சாமான்னு கண்டிப்பா சொல்லிட்டாராம். அவருடைய பாரியாள் கமலாம்பா இருந்திருந்தாள்ன்னா தன் ஏற்பாட்டுல எல்லாத்தையும் சாதிச்சிருப்பள். ஆனா அவளுக்கு தலைப்பிரசவம். பிறந்தகத்துக்குப் போயிருக்கா. இந்த விஷயமெல்லாம் சாமாவே தன் போக்குல ராமாமிர்த பிள்ளைட்ட சொன்னான்.
“சாமாவுக்குக் கொஞ்சம் புத்தி மந்தம்ன்னு இவருக்குத் தெரிஞ்சது. கொஞ்சம் போனதும் அவன் இவரப்பாத்து சிரிக்குறதும், இவர் காத்துக்கிட்டிருந்த வாசலுக்கு பக்கத்துலயே சாத்திக்கிடந்த இன்னொரு கதைவைப் போய் இவர் பார்க்கணும்றதுக்காகவே டபடபான்னு தட்டிட்டு வருதும்னு ஒரு களி ஆடத்தொடங்கினான்.
“அப்பத்தான் ராமாமிர்த பிள்ளை கவனிச்சாரு. அது ஒரே வீடு தான். ஆனால் இரண்டு வாசல் இருந்தது. இதென்ன ஏற்பாடுன்னு யோசிச்ச ராமாமிர்த பிள்ளை ஒரு மாதிரி விஷயத்த ஊகிச்சாரு. இருந்தாலும் சாமாவ அழைச்சு, டேய் சாமா, என்னடா கதவு இதுன்னு கேட்டிருக்காரு. அவன் பர்ர்ர்ருன்னு சிரிச்சு, தெரியாதாண்ணா, அது இவர் சோதரரோட கதவு, என்றான். சோதாரர் எங்கேன்னு இவர் கேட்டிருக்காரு. இண்ட்லோ லேதுன்னு சொல்லிருக்கான். அப்புறம் ஏண்டா தட்டற, என்றார். தட்டினாத்தானே திறக்கும், என்றானாம் அவன்.
அப்போ இந்த உள்ளேருந்து, சின்னூண்டு மூங்கில் குழாய ஊதினா வருமே, அந்த மாதிரி ஒரு குரல் ஒரு பாட்டெடுத்தது.
“ஆஜானுபாகுயுக ஶ்ரீஜானகிபதே!
பயோஜாக்ஷா!
ஈ ஹீனபந்த நுத சரணா!
துவாரமு தெரகொண்டிரா! – ஶ்ரீராமா
துவாரமு தெரகொண்டிரா.”
தூபவாசமும், கற்பூரமணமும் கமழ, கெஞ்சிப் பணிஞ்சு ஆசைக்காட்டின அந்தக் குரல் ராமாமிர்த பிள்ளையை வந்தடைந்தது. உயர்வான, மங்களமான மத்யமாவதி. அந்த மதுரத்துல ராமாமிர்த பிள்ளையோட மனசுல அதுவரை இருந்ததெல்லாம் கரஞ்சு போச்சு. அவருக்கும் அதைப் பாடணும்போல இருந்தது. ஆனால் தன் குரல் முனையாதுன்னு அவருக்குத் தெரியும். ஈ ஹீனபந்து–ன்ற பதம் அவருக்குக்குள்ள அலையடிச்சது. இந்த ஈனப்பிறவிக்கு இனி என்ன இருக்குன்னு தோணிடுச்சு அவருக்கு. சூடா ரெண்டு சொட்டு கண்ணீரு அவர் தொடையில விழுந்தது. நிமிர்ந்து அந்தப்பக்கம் சாத்தியிருந்தக் கதவப் பார்த்தாரு. வழியே இல்லியா, வழியே இல்லியான்னு இருந்தது அவருக்குள்ள. அப்போத்தான் இந்தக்கதவு திறந்து பஞ்சநாத பிரம்மம் வெளியில வந்தாரு.
“ஆனால் அவருடைய கண்கள்! ராமாமிர்த பிள்ளை சொன்னார், அவர் கண்கள் இந்த உலகத்துக்கே இல்லன்னு. அது நம்மைப் பார்க்கும் கண்களே இல்ல. நம்மளப் பார்க்கறப்பவும் நமக்குள்ள, நம்மள மீறி, நம்ம வழியா ஓடிப்போற எதையோ பார்க்குறா மாதிரி அவர் பார்வை துளை போடும் அப்படீன்னு சொன்னார். அன்று திண்ணையில் அமர்ந்தபடி தான் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டதாச் சொன்ன ராமாமிர்த பிள்ளை, ஆனால் அவர் கண்களில் அந்த பார்வை அகலவே இல்லை என்றார். தன்னைப் பார்க்கும் போதும் தன் வழியாக தூரத்தில் எதையோ பார்ப்பது போல அவர் வாய் சற்றே திறந்திருந்தது.
“ராமாமிர்த பிள்ளை சொன்னார், அன்னிக்கி அவர் கழுத்துல துளசிவிதை மாலை துவண்டு அமஞ்சிருந்தது. தோளல் அருவி மாதிரி யக்ஞோபவீதம். நார்மடிய பஞ்சக்கச்சமா கட்டிகிட்டிருந்தர். நெற்றியிலும் அதிகம் ரோமமில்லாத நெஞ்சுக்குழியிலும் கோபிக்குறி தரிச்சிருந்தாரு. நான் சொல்றதக் கேட்டு அவ்வப்போது நெஞ்சத்தொட்டு, ராமா, ராமா என்றார். பேசிக்கிட்டிருந்தப்ப அவரைத் தாண்டி அறைக்குள்ள என் கண்ணு ஒரு முறைப் பார்த்தது. அவர் மனையில் வைச்சிருந்த ராமரைப் பார்த்தேன். தூபப்புகைக்கு நடுவுல, வளஞ்ச வில்லும் குமிண் சிரிப்புமா. ஒரே ஒரு நொடி தான்.
“ராமாமிர்த பிள்ளை சொன்ன சமாச்சாரங்களையெல்லாம் பஞ்சநாத பாகவதர் கவனமா கேட்டுக்கிட்டாராம். அவர் முகம் கூம்பித் துயரம் போன்ற பாவனையில் ஆழ்ந்தது போல தெரிந்தது. அங்கே ஆடிய ஆசைவுகள ராமாமிர்த பிள்ளையால அப்போது அறிய முடியல. கொஞ்ச நேரத்துக்கு தன் நெஞ்சுக்குழியில கைய வெச்சுக்கிட்டு தூரத்துல எதையோ பார்த்துக்கிட்டிருந்தாராம். “ஹா! ராமா!” என்று அவர் ஒரு பெருமூச்சோடு கலைந்தப்ப ராமாமிர்த பிள்ளை எழுந்து கைக்கூப்பி நின்னுட்டாராம். சுவாமி, இப்ப என்ன பண்றது? நீங்களே ஒரு நல்ல வழியா சொல்லுங்கோ, என்றாராம்.
“பஞ்சநாத பிரம்மம் சொன்னாராம். ‘தம்முடு.இத்தனை ஜபமும் விரதமும் ஏன் செய்கிறேன் என்று நினைக்கிறாய்? என் சகோதரன் மனம் மாற வேண்டும் என்று தான். இத்தனை ஆண்டு காலமாக அதற்காகத்தான் பிரயத்தனப்படுகிறேன். ஆனால் இன்று வரை என்னால் அவனை அடைய முடியவில்லை,’ அவர் பேசிய உயரிய தெலுங்கையும் மீறி அவர் குரலில் இருந்த வலி தனக்குப் புரிந்தது என்று ராமாமிர்தம் பிள்ளை சொன்னார்.”
“‘எல்லாரும் நான் அண்ணா, அவன் தம்பி என்று நினைக்கிறார்கள். கிடையாது. நான் தான் தம்பி. அவன் எனக்கு ஒரு நொடி முன்னால பிறந்த அண்ணன். நானும் அவனும் எங்கள் தாயாரின் வயிற்றுல சேர்ந்து உருவான இரட்டைப் பிறவிகள். அவன் எனக்கு ஒரு நொடி முன்னால் இந்த அவனிக்குள் வந்தான். அவன் அழுத சத்தம் கேட்டு நான் உடனே வெளியில் வந்தேன் என்று என்னுடைய அம்மா சொல்வார். யார் அழுதாலும் முன்னால் முதலில் போய் நின்றுவிடுவான் இவன், என்று அம்மா எப்போதும் என்னை சற்று கிண்டலாகவே சொல்வதுண்டு.
“‘அப்பா ராமாமிர்தா, நாங்கள் ஒரே சமயம் இருவராக பிறந்துவிட்டோம் என்பதால் என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொருவராய் எங்களை வளர்த்தார்கள். பாகவதரான என்னுடைய அப்பா ராமபிரம்மம் பாகவத சங்கீதத்தில் என்னை ஆட்படுத்தினார். பகவான் நாமாவளியை சொல்லவும் அவற்றை பக்தியில் மூழ்கிப் பாடவும் நான் கற்றேன். ராம நாமத்தை அப்பாவிடமிருந்தே பெற்றுக்கொண்டேன்.
“‘ஆனால் ஜப்யேசனை என் அம்மா வளர்த்தாள். அம்மா பெயர் சீதம்மா. என் அன்னை சீதாதேவியின் பெயர் தான் அம்மாவுக்கு. சீதம்மா தரித்த அத்தனை நெருப்பும் என் சீதம்மாவுக்கும் உண்டு. அவளுடைய அம்மாவின் அப்பா காளஹஸ்தி கவி தஞ்சாவூர் கட்சேரியில் பல்லவி பாடி பதக்கம் வாங்கிய வித்வான். தன்னுடைய மகனும் அரசவையில் ஜ்வலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தன் தாத்தனிடமே அவனை விட்டுவிட்டார்.
“‘தம்முடு, எனக்கு புராண இதிகாச கதைகள் தெரியும். பாகவத சம்பிரதாயம் தெரியும். ஆனால் அவனுக்குத்தான் நாதம் கைவசமானது. ஒவ்வொரு சுவரத்தையும் ஒரு வஜ்ரமென திருப்பித் திருப்பி மெருகேற்றி அதன் ஆழங்களையெல்லாம் காண அவனால் தான் முடியும். அதன் நாகங்களையும் சூடிக்கொள்ள அவனால் தான் முடியும். சூர்யோதயத்துக்கும், சூர்யாஸ்தமனத்துக்கும், ககனத்தில் தோன்றும் ஒவ்வொரு வண்ணத்துக்கும் அவன் ராகம் பாடுவான். அதுதான் அவனுடைய சந்தியாவந்தனம்.
“‘அவன் ஒரு கந்தர்வன். நாரதரே முன் தோன்றி சுவார்ணவத்தைக் கொடுத்தார் தெரியுமா, என்று ஒரு முறை என்னிடமே வந்து செறுக்கிக்கொண்டான். என் குரலை சுருதிக்கு நிறுத்தவே எனக்கு சமயத்தில் சிரமமுண்டு. ஆனால் அவன் குரலோ நாபியிலிருந்து இடிபோல் எழும். மின்னலென இதயத்தில் தாமரையை மலரச்செய்து கண்டத்தில் நின்று பொழியும். நான் ஒன்றுக்கும் உதவாத கழுதை. அவன் புலி. நான் கைகளைக்கூட தலைக்கு மேல் தூக்க முடியாத ஹீனன். அவனோ மல்லனைப்போல் கட்டைச் சுற்றுவான். காவிரியை ஏழு முறை முன்னும் பின்னும் நீந்தி எழுவான். அப்படியே ஈர மணலில் பத்மாசனத்தில் புதைந்த்மர்ந்து சாதகம் செய்வான். என்னால் என் இருட்டரையில் அமர்ந்து இந்த விக்ரகத்தைப் பார்த்து ராமா ராமா என்று முனகுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. அவன் நினைத்தால் பலி மகாராஜாவைப்போல் இந்தப் பூவுலகையே வெல்ல முடியும். நான் என் ராமனிடம் சரணடையும் விபீஷணன். அவன் கைலாசத்தை வென்று அடக்கப் புறப்படும் ராவணன். சூரியனின் வெப்பத்தை உணராமல் அதை உரசுவேன் என்று எம்பிப்பறக்கும் அவன் ஜடாயு. அவன் மேல் என்றும் என் இறகுகளை விரித்துக் காக்கும் நான் சம்பாதி. ஒவ்வொரு நாளும் அவனால் சூடு படுபட்டுக்கொண்டிருக்கிறேன் நான்.
“‘வீடு அவனுக்கே வேண்டுமென்றான். சரி, பாகப்பிரிவினை செய்வோம், என்றேன். இப்போது இந்தப் பகுதியில் நான் இருக்கிறேன். அந்தப் பகுதியில், அவன். அவன் இப்போது அங்கே இல்லை… எங்கே இருக்கிறான் தெரியாது. அவன் இங்கு இருப்பதே இல்லை. எப்போதும் எங்காவது அலைந்துகொண்டிருப்பது தான் அவன் வழக்கம். உங்களைப்போல் ஊரார் வந்து அவன் பராக்கிரமங்களை சொல்வார்கள். அப்படியா என்று கேட்டுக்கொள்ளவேண்டும் நான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் சொல்வேன். நான் தம்பி தான். ஆனால் விபீஷணனைப்போல் நல்வழி தெரிந்தவன். தம்முடு சொல்கிறேன். அண்ணா, இங்கே உட்கார். உன் மனதை ராமநாமத்தில் நிலைக்கச்செய். உன் உள்ளத்தில் அந்த மதியொளி போன்ற வெள்ளம் நிறவதை அறி, என்று. அவனால் ஒரு கணம் உட்கார முடியாது. பித்தன், கிராதகன்! உடனே திரிணவர்த்தன் மாதிரி சுழலென புறப்பட்டுவிடுவான்.
“‘பின்னரவில் வருவான். பைத்தியக்காரன் மாதிரி விடிவது வரை பாடிக்கொண்டிருப்பான். நீள நீள ஆலாபனைகள்… பூதாகரமான பல்லவிகள். கன ராகங்கள். குதிரைகள், யானைகள், கரடிகள், சிம்மங்கள், எல்லாம் அந்தப் பக்கம் உருமிக்கொண்டிருப்பதை நான் இங்கே ராமா ராமாவென்று நடுங்கிக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பேன். இதெல்லாம் சிவனுக்கு அர்ப்பணமாம். அவன் சிவபக்தனாம். ராவணஜன்மம்! இதில் நான் என் ராமனுக்குப் பணிந்து கைங்கரியம் பண்ணுவதைப் பார்த்தால் அவனுக்கு பரிகாசம். ஜபம் என்றால் கிண்டல். உன் ராமன் அங்கேயா இருக்கிறான், என்கிறான். அவன் மட்டும் என்ன? சங்கருடு என்கிறான். லிங்கமும் கிடையாது, அபிஷேகமும் கிடையாது. கேட்டால் என் சுவரங்களில் உள்ளதுறா லிங்கம், என்று சிரிக்கிறான்! சப்தலிங்கம் இருக்கிறதாம் அவனுக்கு. துடுக்கா.
“அப்பா, நீ பக்குவக்காரனாய் தெரிகிறாய். அவன் மறுபடியும் அரண்மனைக்கு வந்தால் அவனிடம் விஷயங்களை எடுத்துப் பேசுகிறாயா?”
“இப்படித் திருவையாறு பஞ்சநாத பிரம்மம் தன்னுடைய சகோதரன் ஜப்யேச பாகவதரப் பத்திச் சொன்னத கேட்டு, மனம் கனத்துப் போயி, என்னுடைய குருநாதர் ராமாமிர்தம் பிள்ளை அவருக்கு வாக்குக் கொடுத்தார். சரி, உங்க சகோதரன் தர்பாருக்கு வந்தா அவர்ட்ட நல்லபேச்சு பேசி உங்கள வந்து பார்க்கும்படி சொல்றேன், என்றார். ஆனால் வாசல் திறக்கணும்னு நீங்கள் தான் அருள்கூறணும்ன்னு, புழுதியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அந்த மகானுபாவுலுவின் பாததூசியைத் தன் நெற்றியில் சூடிக்கொண்டார். அவர் நெடுமூச்சுடன் சுபமஸ்து, என்று வாழ்த்தினார்.”
9
“அடுத்த நாளே ஜப்யேச பாகவதர் தர்பாருக்கு வந்தார். சிவப்புப்பட்டுல தலைப்பாகையும், கழுத்துல சரம்சரமா முத்தும் பவளமும், கச்சப்பட்டும் உத்தரீயமும் தரிச்சுகிட்டு வந்தவரு மேகத்துமேல மிதந்து இறங்கினவரா தோன்றினார். நெருங்கினா ஜவ்வாது வாசம். சிவமூலி உண்டது கண்ணு செவந்துல தெரிஞ்சுது. நெற்றியில யாரும் போடாத விதத்துல திரிபுண்டரத்துக்கு நடுவிலே நெற்றிக்கண்ணு திறக்கறா மாதிரி குறி வரஞ்சிருந்தாரு.
“ஆனால் ராமாமிர்த பிள்ளைக்கு என்ன ஆச்சரியம்னா, அத்தன கோலத்துக்கு அடியில இருந்த முகம், பஞ்சநாத பிரம்மத்துடையதே தான். அதே ஒட்டிய கன்னம். மெலிஞ்ச உசரமான தேகம். நரையோடிய தாடி. அதே பளபளப்பான கண்கள். தன்னைப் பார்க்காத, தன் வழியாக இன்னொன்றை துளைப்போட்டுப் பார்க்கும் கண்கள். ஆனால் அவரப்போல் இல்லாமல், இவர் சிவந்த தோல்ல அத்தனை மினுக்கு இருந்துது. தேகம் அவ்வளவு தேஜஸ் கமழ்ந்தது.
“அவர் வந்தபோது ராமாமிர்தம் பிள்ளை தானாப் போய்த்தன்னை அடியேன், இன்னார்ன்னு அறிமுகம் செஞ்சுகிட்டாரு. ஜப்யேச பிரம்மம் அவர் தோள்ல கைப்போடுவாருன்னு அவர் நினைக்கல. ‘நீ ரமாபங்கஜம் மகள் ஞானத்தோட மகன் தானே?’ என்று கேட்டான். ஏன் அப்படிக் கேட்டான் என்று தனக்குப் புரியாம இல்ல, என்றார் ராமாமிர்தம் பிள்ளை. இருந்தாலும் அவர் கண்களிலிருந்த அந்தப் பார்வையை அவரால் தவிர்க்க முடியவில்லை. ராமாமிர்தம் பிள்ளை சொன்னார், அவர் கண்கள் எவ்வளவு நீண்டு, கரிய இமைச்செறிந்து தாழ்ந்து இருந்தன என்று அத்தனை அணுக்கமாக நின்ற போது தான் தான் கண்டார், என. அவை சிவந்து, தேனின் ஒளியும் திரவத்திரட்சியும் கொண்டு ஏக்கத்துடன் அவரை நோக்கியதாக அவர் சொன்னார். பயோஜாக்ஷ, ராஜீவாக்ஷ, நனித் தாமரைக் கண்ணா என்றெல்லாம் ராமனை ஏன் பாடறாங்கன்னு என்று தனக்கு அப்போது புரிஞ்சதுன்னார் ராமாமிர்தம் பிள்ளை.
“அவர் தன்னை விடுவிச்சுக்க முயற்சி பண்ணினார். ‘யாராவது பார்த்துடப் போறாங்க,’ என்றார். ‘அதுக்கென்ன? நேனுக்கூடா ஈவாடுனொக்க சங்கீதகாருடுன்னு சொல்வேன். அதே சத்யம் கதா? நேனு நாரதுனிக்கி புத்ருடு. மீரு மனமோகினியம்மைக்கி கூத்ருடு’ என்று சிரித்தார். தன்னையும் பெண்ணுனு நினைச்சுத்தான் பேசரார்ன்னு அவர் புரிஞ்சுக்கிட்டரு. ஆனால் அது அவருக்கு வித்தியாசமா படல.
“அவருடைய பற்கள் எவ்வளவு சிறியதாகவும் வெண்மையாகவும் வரிசையாகவும் இருந்ததென்றும், அவருடைய பிடி ஒரு மல்லனின் பிடியைப்போல் உறுதியாக இருந்ததென்றும் தான் அப்போது உணர்ந்ததாக ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். தன் பக்கத்துல இருந்தவரு தான் நினைச்சு வந்தவர் இல்லன்னு உணர்ந்தார். இவரிடம் என்ன பேசுவேன்னு தவிச்ச ராமாமிர்தம் பிள்ளை அவர் முகத்த நிமிர்ந்து பார்த்தபோது அவர் கண்கள் அலைவுகொண்டிருந்ததக் கண்டார். மாடத்தில் இருந்த ரமாவாணி இவரையும், இவர் அவளையும் பார்த்துட்டிருந்தாங்க.
“அன்னிக்கி ஜப்யேச பாகவதர் தர்பார்ல்ல அங்குமிங்கும் அலஞ்சு பேசுன பேச்சுக்கள ராமாமிர்தம் பிள்ளை தன் இடத்துல நின்னுட்டு பார்த்துக்கிட்டிருந்தாரு. ஒரு புயலு மாதிரி, ஒரு மலை மாதிரி, ஒரு கருத்த மேகம் நடந்து போறா மாதிரி அவர் உருவம் அங்கும் இங்கும் போய்வந்ததுன்னார். அவருக்கு எல்லாரையும் தெரிஞ்சிருந்தது. அப்போ இளசுகளா இருந்த சிவானந்தம் பிள்ளையும் வடிவேலுப் பிள்ளையும் இவர்ட்ட வந்து காலத் தொட்டுக் கும்பிட்டாங்க. வடிவேலு அப்போ கம்பெனிக்காரனுட்ட கற்றுவந்த சின்னவீணைய வாங்கிப் பார்த்தாரு. அரண்மனைக்கு மத்யம் புரந்த கங்காசாகர பட்டரக் கண்டதும் பெரிய பரிகாசம் கேட்டது போல இரண்டு பேரும் சிரிச்சு தழுவிக்கிட்டாங்க. மோதி ராவ், சம்பா ராவ், ஆனந்தரங்க முதலி, ஶ்ரீமுஷ்ணம் கேசவையங்கார், சாம்பசிவபிள்ளைன்னு அங்க இருந்த எல்லா பெரிய தலைகளையும் அவருக்குத் தெரிஞ்சிருந்தது. மகாராஜோவோட இங்கிலீஷ்கார அத்யாபகரு கூட அங்க அன்னிக்கி சாந்நித்யமா இருந்தாரு. மகாராஜாவே வந்தப்ப ஜப்யேச பாகவதர் அவருக்கு நேர்ல போய் நின்னு வந்தனம் சொல்லி வந்தாரு. ஆனால் இதெல்லாத்துக்கு நடுவுலையும் அவர் பார்வை அங்கேயும், இவ பார்வை இங்கேயுமா ஊசலாடிகிட்டிருந்தது.
“கட்சேரி ஒருங்கி வந்தது. தர்பாருல்ல சிம்மாசனத்துல சரபோஜி மகாராஜாவும், அவருக்கு நேர் எதிரா திண்டுல ஜப்யேச பாகவதரும் கொலு வீற்றாங்க. அன்னிக்கி ஜப்யேசர், அவர் புது உருப்படிகளா கோத்திருந்த ‘நௌகா நிரூபணம்’-ன்ற கேயநாடகத்திலிருந்து சில பாட்டுகள அரங்கேற்றம் பண்ணினாரு.
“இறவாவரம் பெற்ற கௌடதேசத்து மகாகவி ஜெயதேவரோட பாணியில அவர் சுந்தரத்தெலுங்குல அமைச்சிருந்த சார்தூலமும் தருவும் பாட்டும், ஶ்ரீகிருஷ்ணன் கோபிகாஸ்த்ரீகளோட யமுனையாத்துல நாவாய்ல பயணமான சரித்திரம் பற்றியானது. கதை இதுதான் – கோபிகைகள் ஶ்ரீகிருஷ்ணனை விளையாட்டா படகுல ஏத்தி அழைச்சுப் போறாங்க. குழந்தையான முகுந்தன கொஞ்சம் பயம்படுத்தி விளையாடலாம்ன்னு அவங்க நினைப்பு. ஆனா எல்லாமறிஞ்ச கிருஷ்ணன் பதிலுக்கு லீலையாடிடறான். புயல வரவழைக்கறான்.
“நதியில வெள்ளம் ஏற நாவாய் சுழலுது. அதோட அடிபாகத்துல துளை விழுத் தொடங்குது. பொட்டுப் பொட்டுப் பொட்டுப் பொட்டா, நூறு துளைகள், ஆயிரம் துளைகள். தண்ணீ உள்ள வர்ரது. ‘உங்க வஸ்திரங்களக் கொடுங்க, துளைய அடைக்கறேன்’னு ஶ்ரீகிருஷ்ணன் அவங்களோட வண்ண வண்ண வஸ்திரங்கள வாங்கி, துளைகளுக்குள்ள விட்டும் எடுத்தும் குறுக்கும் நெடுக்குமா வண்ணமயமான ஒரு நெசவப் பின்னறான். ஆடையிழந்த ஸ்த்ரீகளெல்லாம் தங்களோட துணியாலேயே பின்னிவளச்ச அந்த வண்ணநெசவுமேல நின்னபடி கிருஷ்ணனோட பார்வையிலிருந்து தங்களோட நிக்னத்த மறைச்சுக்க முயலறாங்க. அவங்களோட இனிமையான கூக்குரல்கள் கிளிகள மாதிரி எழுந்து ஒன்றை ஒன்று முட்ட, கெஞ்சிப்பாடி தயை கேட்கறாங்க. தங்க இடமிறிஞ்சு அவனோட ரட்சணைய வேண்டி நிக்கறாங்க. மனமிளகி ஶ்ரீகிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தைக் காட்டி, அவங்கள அணைச்சு பயம் போக்கி நௌகத்தக் கரை சேர்க்கறான்.
“ராமாமிர்த பிள்ளை சொன்னார், இந்தக் கதைக்கு அவர் தொடுத்த பாட்டுகள் ஒவ்வொண்ணிலும் சொல்லழகைக் காண்பதா, இசையழகைக் காண்பதான்னு அவருக்குத் தெரியலைன்னு. அவர் இசையறிஞ்சவர் இல்லிய்யா, தெரிஞ்சோ தெரியாமலோ அதோட நுட்பங்கள கவனிக்கற காதும் ஜிஹ்வமும் அவரு வாய்க்கப்பெற்றிருந்தாரு. ஜெயதேவரோட பாட்டுக்கள மாதிரி அவ்வளவு சிக்கலான சொற் பின்னலில்லாத மாதிரியும், ஒப்புனோக்க எளிமையா போட்டிருந்தா மாதிரியும் தோணிச்சுன்னர். ஆனா இடைப்பட்ட இடத்தையெல்லாம் இசையால பின்னிக் கோத்தாரு ஜப்யேச பாகவதர். அவர் ராமாமிர்த பிள்ளைட்ட அன்னிக்கி சாய்ங்காலம் போற வழியில சொன்னாராம், அவர் பாட்டாப் பாட முயற்சிக்குறது யமுனையில போன அந்த நௌகத்தையேதான்னு. நிறைய துளைகள் இருக்கணும், அதைத் தன் வண்ணங்களையெல்லாம் கொண்டு பின்னி நிறைக்கணும்ன்றது தான் அவர் கணக்குன்னு சொன்னார். அதிலே அவர அடிச்சுக்க ஆளே இல்லன்னார்.
“ஶ்ரீகிருஷ்ணன தன் வலையில விழவெச்சத கோபிகா ஸ்திரீகள் மமதையும் செறுக்குமா பாடினது ஜப்யேசர் தானே தன் சங்கீதத்தைப் பத்திப் பாடினா மாதிரி இருந்ததுன்னார் ராமாமிர்தம் பிள்ளை. ‘எவர் எமக்கு சமானம் இவ்வுலகில்?’ மேகம் வெடிச்சா மாதிரி அவரு தேவகாந்தாரிய பாடி நிறுத்தினப்ப கொட்டின கரகோஷமும் ஆராவாரமும் தஞ்சாவூர் ராஜதர்பார்ல அதுவரைக் கேட்ட ரகத்திலேயே இல்லன்னு ராமாமிர்த பிள்ளை சொன்னார். ‘ஆஹா!’ ‘சபாஷ்!’ன்னு தலைப்பாகைக் கட்டிய பெரியமனுஷாக்கள்ளாம் தலையசைச்சங்க. பட்டாம்பூச்சிமாதிரி பெரிய கல்லுவெச்ச மூக்குத்தியும் நெற்றயில சந்திரபிரபைக் குறியும் அணிஞ்ச மராட்டிமாரோட பெண்டுகளெல்லாம் மச்சுல ஜாலி பின்னால நின்னபடி ஆஹாகாரம் செஞ்சாங்க. விஷயஞானமுள்ள மகாராஜாவே ‘பலே’ சொன்னார்.
“ஆனா ராமாமிர்தம் பிள்ளை கண்டார். திருவையாறு ஜப்யேச பாகவதர் பாடி நிறுத்தினக் கணம், அவர் கண்ணு போனது சபாரசிகாள்ட்ட இல்ல, அங்கக் கூடியிருந்த சங்கீதக்காராட்ட இல்ல, மகாராஜா வசம் கூட இல்ல – அவர் தலைக்கு மேலே நின்ன மாடத்துக்குதான். அங்க ரமாவாணி முழுமதி மாதிரி நின்னுட்டிருந்தா.”
10
“ஜப்யேசர் படகுல ஏறிகிட்டிருந்தபோது ராமாமிர்தம் பிள்ளையும் ஓடிப்போய் இணைஞ்சுக்கிட்டாரு. படகுக்காரன் அவங்களுக்கு இடம்கொடுத்து, படக ஆத்துல செலுத்தித் துடுப்புப்போட ஆரம்பிச்சான். தண்ணி மெல்ல அலைகொடுத்துப் பிரிஞ்சது. காவிரி இரண்டுபக்கமும் நீள ஆரம்பிச்சது.
“ஆத்தொழுக்கோடு கிழக்குப்பக்கமா நகந்தது படகு. சூரியன் அவங்களுக்குப் பின்னால அணஞ்சுட்டிருந்த வேளை. மஞ்சளும் சிவப்பும் பழுப்புமா ஒவ்வொண்ணும் மாறியிருந்தது. ஆறு பொன்னா உருகிப்போச்சு. ராமாமிர்தம் பிள்ளை அவரை ஒன்றும்பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்ததக் கண்டு ஜப்யேசர் ‘என்னடா?’ என்றார். ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். அந்த வெளிச்சத்திலே, ஆறும் வானமும் எல்லையே இல்லாத மாதிரி நீண்ட அந்த வெளியில, ஒத்தைப் படகோட முனையில, தலையில பாகையும் கழுத்துல முத்துச்சரமும் கண்ணுல ஜ்வாலை மாதிரி ஒளியுமா, ஜப்யேச பாகவதரப் பார்க்க ஒரு ராஜா மாதிரி இருந்தாராம்.
“ஆனா தன் கடமை என்னன்னு மறக்காம தன்னை ஒருங்குதெரட்டி ராமாமிர்தம் பிள்ளை சாதுர்யமான வார்த்தை சொன்னாராம். ‘இல்லண்ணா. நீங்க உங்க தம்பி மாதிரியே இருக்கீங்கன்னு மொதல்ல நினைச்சென். அப்புறம் அப்படி இல்லன்னு தோணிப்போச்சு,’ன்னு
“ஜப்யேசைய்யர் சிரிக்க ஆரம்பிச்சார். ‘ஏன்டா, கொடுக்கா, என் சகோதரனைப் போய் பார்த்தியாக்கும்?’ என்றார்.
“‘சுத்தமான சங்கீதக்காரா யார்ன்னாலும் போய் பார்த்திருவேண்ணா,’ ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். ‘சங்கீதம்ன்னா எனக்கு உயிர்.’ அது உண்மை தான்றதுனால அவர் அதைச் சொன்னப்ப இயல்பா அவர் தேகம் நடுங்கியதுன்னும் குரல் தழுதழுத்ததுன்னும் சொன்னார். அதை ஜப்யேசர் உடனே கண்டுகொண்டதையும் உணர்ந்தாரு.
“‘ஏண்டா? பஞ்சநாத பிரம்மம் தான் உஙக்கு ஜாதியான சங்கீதக்காரனா? ம்?’
“‘அப்படீன்னு இல்லண்ணா. அவரைப் பார்த்தக் கையோட உங்களப் பார்க்க வந்தேன்ல்லையா?’
ஒரு நொடி விட்டு, ‘ரமாவாணி சொன்னா, நீங்க தர்பார்ல்ல பாடப்போறீங்கன்னு. அதான் உங்க சகோதரர ஒரு எட்டுப்போய் பார்த்துட்டு உங்களையும் கேட்டுடணும்னு வந்தேன்.’
ஜப்யேசர் தன்ன உன்னிப்பாக் காண்றத உணர்ந்துட்டு, ‘அவர் அனுப்பின தூதுக்கு பதில் தூது சொல்லணும். அதுக்குத்தான் இந்தப் படகிலேயே ஏறி திருவையாத்துக்குப் போறேன். பதில் கிடைச்சா உடனே சொல்லிடுவேன்’
“ஜப்யேசர் அவரை ஒரு பார்வை பார்த்துட்டு மளமளவென சிரிக்க ஆரம்பிச்சுட்டார். ‘நீ சாமர்த்தியக்காரன்தாண்டா,’ என்றார். ‘ராவணன் சபைக்கு அனுமன் தூது போனா மாதிரி நீ எங்கிட்ட வந்திருக்க, இல்லையா?’ அவர் தோளைத் தட்டி, ‘சரி, கொடுக்கா, என் சகோதரன்ட்ட போயி சொல்லு. ராவணன் கைலாச பராக்கிரமத்தையும் விட மாட்டான். சீதையையும் விட மாட்டான். இதுதான் என் பதில். நான் சொன்னேன்னு சொல்லு, போ!’
“ராமாமிர்தம் பிள்ளை அவர் பக்கத்துல நெருங்கி உட்கார்ந்தபோது. படகு இலேசா ஆடிச்சு. அவர் கெஞ்சலாக விண்ணப்பிச்சாரு. ‘இதென்னண்ணா ஒண்ணும் ஒட்டாத பேச்சு. அண்ணாவும் தம்பியும் ஒத்துமையா இருக்காம இப்படி பிளவுப்பட்டு இருந்தா எப்படி’ன்னு கேட்டாரு.
“ஜப்யேசர் ராமாமிர்தத்தை ஒரு பார்வை பார்த்து அவரை மேலும் அருகே இருத்தி, ‘ராமாமிர்தா, ஆறாத கீரல்களும் சிலது உண்டுடா இந்த லோகத்துல,’ என்றார்.
“அவருக்கு ஒரு படி கீழே அமர்ந்திருந்த ராமாமிர்தம் பிள்ளை அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். அஸ்தமனத்தை நோக்கி அமர்ந்திருந்த அவர் முகத்துல ஒளியாடியது. அவர் தாடி தீப்பொறிகளப்போல தெரிஞ்சது. ‘டேய் கொடுக்கா, நீ புத்தியுள்ளவன். ஆத்மாவுள்ளவன். இப்போ நான் சொல்லப்போறது இந்த லோகத்திலேயே உங்கிட்ட மட்டும் தான் சொல்றேன். மனம் திறந்து சொல்றேன். இத நான் இன்னொருத்தன்ட்ட சொல்ல முடியாது. ஏன் தெரியுமா? ஏன்னா நீயும் என்னமாதிரியான ஒரு சங்கீதக்காரன். திருவாலங்காடு நயினார் தொட்டெடுத்த உருப்படி தானேடா நீ? உனக்குக் குரல் போனது தெய்வங்களுக்கே அடுக்காத காரியம். வானத்துல உள்ள தெய்வங்கள் ஒவ்வொண்ணும் அதுக்கு ஒரு நாள் பதில் சொல்லும். சொல்லணும். நான் சொல்ல வைப்பேண்டா.’
தில்லைஸ்தானம் ராமுடு சொன்னார், “ஜப்யேச பாகவதர் அப்படிச் சொன்ன போது நீங்க என்ன நினைச்சீங்கண்ணான்னு என் குருநாதர் ராமாமிர்தம் பிள்ளை வசம் கேட்டேன். நினைப்பு என்ன நினைப்பு? உடைஞ்சு அழுதுட்டேன்னர். ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். அன்னிக்கித் தெரிஞ்சது, இந்த ஜப்யேச பாகவதரவிட நயமுள்ள மனுஷன ஏழு மேல் லோகத்திலேயும் ஏழு கீழ் லோகத்திலேயும் தேடினாலும் கிடைக்காதுன்னு. அவருக்கு என்னன்னாலும் செய்றதுன்னு முடிவானேன். அன்னிக்கிப் பிடிச்சக் காலடி தான். அப்புறம் விடவே இல்ல.
“அன்னிக்கி அந்தப் படகுல, ஜப்யேச பாகவதர் ராமாமிர்தம் பிள்ளைட்ட சொன்னார்:
‘நா கொடுக்கா. என் சகோரனப் போயி பார்த்தியே, ராமா ராமான்னு உயிர வாங்கியிருப்பான் இல்லையா? ஏதோ ராமன் அவன் தனிப்பட்ட சொத்துன்ற மாதிரி. டேய், எனக்கு மட்டும் ராமனைத் தெரியாதுன்னு நினைச்சியா?எங்கப்பா ராமப்பிரம்ம பாகவதர் தன் வீட்டையும் ராமனையும் அவனுக்கு மட்டும் கொடுக்கலை. எனக்கும் கொடுத்தாரு. நாங்க எப்போ நடக்க ஆரம்பிச்சோமோ அப்போத் தொட்டே எங்கையில ராமன் விக்ரகத்தையும் அவன் கையில ராமனுக்கான தூபத்தையும் புஷ்பத்தையும் சாமரத்தையும் கொடுத்து வீட்டச்சுத்தி ஊர்வலக்கோலம் வரச்செய்து கண்டு மகிழ்வாரு.
‘அதனால தம்பிக்கு என் கையில இருந்த ராமனோட உருவம் மனசுல ஏறிடுத்து. எனக்கோ ராமன தூபப்புகையாவும் சாமரத்தென்றலாவும் மலர்வாசமாவும் மணியோசையாவும் அறிய வாய்ச்சது. அப்படி பதினாறு – முப்பத்திரெண்டு – நாப்பத்தெட்டு – அறுபத்திநாலு ராமாக்கள்… எனக்குள்ள அதெல்லாம் இருந்ததுன்னே எனக்குத் தெரியாது.
என் குருநாதர்தான் அதை எனக்குத் திறந்து தந்தாரு. குருநாதர் முன்னால என்னிக்கி மொதமொதல்லா என் குரல் தம்பூருநாதத்தோட சுருதி கூடி ‘ஆ…’ ன்னு திறந்ததோ, அன்னிக்கி ராமனோட விளிய நான் அறிஞ்சேன். ராமாமிர்தா, அந்த விளி என் கர்ணத்திலேயும் நாசியிலயும் கலந்து, என் குரல்லியே ஏறி வந்ததுன்னா நான் என்னடா பண்ணுவேன்?
‘அந்தக் குரல் மொதல்ல என்ன பயம்படுத்திருச்சுடா. ராத்திரி கனாலெல்லாம் வரும். ஆ…ன்னு… சோகமா, உள்ளுக்குள்ள ஏதோ கஷ்ட துயரமா, மூச்ச அப்படியே முட்டி அழுத்தி உள்ள நிக்குறா மாதிரி… டேய், உன் நாபியிலும் நெஞ்சிலும் ஒரு பெரிய இருட்டான அலை எழுந்து உடையாம வெறுமனே நின்னுட்டிருந்தா எப்படிடா இருக்கும்? அந்த அழுத்தம் தாங்காது போறப்பத்தான் அது திரண்டு சுருளவிழ்ச்சுக் குரல்ல ஏறிக் வந்து வெடிக்கும்… ஒரு தங்க இழையில நெருப்பு ஏறி வர்ரா மாதிரி… அது சர்வ நரம்புகளையும் சுண்டு இழுக்கற ஒரு வலிதாண்டா. அப்போ அந்த சப்தம் எப்படித் தோணும் தெரியுமா? புராணத்துல வருமே, அம்புப்பட்டு தன் இணைய இழந்துதே கிரௌஞ்சப்பக்ஷி? அதனோட குரலாட்டமா தோணும். என்னத்த இழந்தேன்னு என் குரல்ல இத்தன வலியேறித்துடா?
“ராமாமிர்தா… படரவிட்டத் துப்பட்டித் துணிய கட்டையால ஒடச்சு ஒடச்சு காவிரிக்கு இந்தக்கரையில உள்ள தர்பார் மகாலிலிருந்து அந்தக்கரைக்கு அரண்மனைக்காரா செய்தி சொல்றத பாத்திருக்கியா? என் குரலையும் அப்படித்தான் வளச்சு ஒடச்சு அதில ராகங்களை வரவழைச்சாரு என் குருநாதர். ராகம்ன்னா என்ன? வர்ணம். நிறம். சுத்தமான வலிய வளச்சு ஒடச்சு வண்ணமாக்கி ஜாலமாக்குறதுதாண்டா சங்கீதம். அதோ வானத்தப் பாரு. அத்தனை வண்ணங்களக் கொண்டுவர எப்பேர்பட்ட வலியோட துடிச்சுக்கிட்டிருக்கணும் அந்த ககனவெளி?
“ஆனா எத்தனை அழகுடா! டேய்… ஒண்ணு தெரிஞ்சுக்கோ… வலியில்லாம அழகு இல்ல. உனக்குத் தெரியும் அது. சாதகம்ன்றது வலி தான். வலியும் ஒரு சாதகம் தான். நீ இரண்டிலும் அனுபவமுள்ள பாவி. க்ரௌஞ்சபறவை ராமான்னு கத்தற விளி உனக்குக் கேட்காம இருந்திருக்குமாடா?
“மனுஷனா பொறந்தவன் எல்லாத்தையும் ஏதாவது ஒரு தருணத்துல குத்துற அம்புடா அது. ஆனா சிலருக்கு மட்டும் தான் அந்த விளியக் கேட்கற விதியிருக்கு. ஒரு முறை கேட்டுட்டா வேறேதையும் கேட்க முடியாதுன்ற சாபம் உண்டாயிடும். டேய் ராமாமிர்தா, எனக்குள்ள சுவாசமா போற ஒவ்வொரு மூச்சும் வெளிய வரப்போ ஏக்கம் நிறைஞ்ச அந்த விளியாத்தான் வருது. ஒவ்வொண்ணிலும் அந்த விளி தான். அந்த அம்பு என்ன மொத்தமா குத்திக்கொன்றக் கூடாதான்னு இருக்கு.
“அந்த அம்ப நான் உணராத நொடியே இல்ல. என் சகோதரன் கேட்கரான், ஏண்டா உனக்கு அரண்மனையும் சபாவாசமும் சுகிப்பிச்சுப்போச்சான்னு. ஸ்வானன், அவனுக்கு புத்தி ஒத்தைப் பாதையில போறதாக்கும். டேய் ஊர்லையும் கோட்டையிலும் சந்தையிலும் அரண்மனையிலும், இந்தச் சோழ தேசத்துல கோபுரம் எழுந்த கோயில் ஒவ்வொண்ணிலேயும் ஆறு வேளையா நடக்கற பதினாறு உபசாரத்திலேயும், வர்ணமும் வாசமுமா நம்மள ஒவ்வொரு நொடியும் வந்து குத்துறது எல்லாமே ராமசரம்தான்டா. இதை உணராதவன் என்ன ராமபக்தன்? வலியால கணம்கணமா துடிச்சிக்கிட்டிருக்குடா இங்க ஒவ்வொண்ணும். சதிருல பதமாடறாளே, மாறன் கணைகள் தூவுறான்னு. அது ராமனோட கணைகளும் தாண்டா. மாறனோட கணையத் திருப்பினா ராமனோட கணை. சங்கீதக்காரன் தன் மேல் விழுற மாறன் கணையைப் பிடுங்கித், திருப்பி, ராமன் கணையா ஏவுறான். ஏவுறக் கணத்துல அவன் முகத்துல மாறனோட அஞ்சு மலரும் படிஞ்சு அவன் மூச்ச முட்டச் செய்றது. ஆனா ‘ராமா’ன்னு அம்பு வளஞ்சு போறது.
“உளர்ரேனாடா? என்னடா பண்ணட்டும்? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த வலிய வண்ணமாக்குற வித்த மட்டும் தான். வண்ணத்திலேயே மூழ்கறேன். வண்ணத்திலேயே குளிக்கறேன். வண்ணத்தையே உடம்புல பூசிக்கறேன். வண்ணங்களாலேயே கோயில் கட்டறேன். கோபுரமும் விமானமும் மேல்கலசமும், மண்டபமும் விதானமும் அலங்காரத்தூணுமா, விதவிதமா கட்டி நிறையறேன். டேய், ராமன் அவனோட அந்த பொம்மையிலேயா இருக்கான்? இதோ, இந்த வர்ணங்கள்ள இருக்கான். என் சுவரங்கள்ள இருக்கான். “சர்வேஷு ரமந்தே இதி ராமா”- ன்னு சும்மாவா சொல்லிருக்கு? ‘சமயானிக்கி தகு மாட்டலு’ அனிவாருரா மன ராமுடு. ஒரு நாள் நான் கட்டுற கோயில்கள்ள குடியமர்ந்திருக்கிற என் ராமன, ராமன்கள, நான் காண்பேன்.
“டேய் விடியும்போது காவிரிக்கரையில கிளியும் கீச்சானும் கரிச்சானும் குயிலும் கூவிப்போடற சப்தமெல்லாம் ஒவ்வொண்ணும் ஒரு வர்ணமில்லியாடா? அதை நிறஞ்சு கேட்டவன் நாரதகானம் அறிஞ்சவன். இதை என் சகோதரண்ட்ட சொன்னா பரிதாபமா பார்க்கறான். ஹீனன்… அவன மாதிரி ஹரிதாச கோலத்துல சப்ளாக்கட்டைய தூக்கீண்டு வந்து நின்னாத்தான் ஆமா, நீரு நாரதரு, உமக்கு வந்தனம்ன்னு ஏத்துக்கற ஸ்வான ஜன்மம். டேய், என் சங்கீதம்ன்றது சாமவேதாதிபதியான அந்த காளஹஸ்தீஸ்வர சங்கரனே எனக்குக் கொடுத்தது. ஹாலஹாலத்தக் கண்டத்துல நிறுத்தினவன். சர்ப்பமணிஞ்சவன். என் கண்டத்திலேயும் விஷம் இருக்குதுடா. நாக்கும், கொடுக்கும் இருக்கு. கண்ணமூடி புலன ஒடுக்கி ராமாராமான்னு ஜபம் பண்றதுக்கில்ல இந்தக் குரலும் சாரீரமும்.
“அந்த புத்திஹீனண்ட்ட நிறைய சொல்லியாச்சு. என் வழி தான் நல்ல வழி, இங்க வா, இங்க வான்னு பிடிச்சு இழுக்கறான், அந்த நல்லவன். அவன் பொம்மைய நான் ஆராதிக்கணுமாம். வெளித்தொடர்பெல்லாம் விட்டுட்டு, அவன மாதிரி ஊஞ்சவிருத்தி பண்ணி மேனி மெலிஞ்சு அங்கம் உதிர்ந்து ராமநாமாவ சொல்லி பாதம் அடையணுமாம். இப்படியே போனா ஒருநாள் ராமாராமான்னு அவன் கொஞ்சிக்களியாடற அந்த பொம்மையத் தூக்கிக் காவிரிலயே போட்டிருவேன். டேய் தூதா, பஞ்சநாதன் கிட்டப் போய் சொல்லு. அவன் பாதை அவனுக்கு. என் பாதை எனக்கு. குறுக்க வந்தான்னா அவன் ரொம்ப வறுத்தப்படுவான். இதான் என் தூது, போய்ச் சொல்லு, போ!’”
“ராமாமிர்தம் பிள்ளை சொன்னார், சூரியன் அணைஞ்சிருந்த நீலத்துல் ஜப்யேச பாகவதரோட முகம் சாம்பலும் கருப்புமா உருமாறியிருந்ததுன்னு. மலை மாதிரி அவர் பேசாமல் ஆயிருந்தார். கண்ணு சிவந்து, இங்குமங்குமா அலஞ்சிண்டு. அப்போ அலைகள் பிரிய படகு துறையணையத் தொடங்கிச்சு. துடுப்புக்காரன் படகத் திருப்பினான். திருவையாறு வந்திருச்சு.
“ராமாமிர்தம் பிள்ளை ஜப்யேச பிரம்மத்துக்கிட்ட கேட்ருக்கார். ‘அண்ணா, இதுதான் உங்கச் செய்தியா? போய் உங்க சகோதரர்ட்ட சொல்லலாமா?’ன்னு.
“அவர் உடனே, ‘ம். ஆனா இன்னிக்கி அவன் அகத்துல இருக்க மாட்டான். சத்தரத்துல தங்கிட்டு நாளைக்கு அவன் வந்ததும் சொல்லிக்கோ,’ன்னாறாம்.
“அப்போ ராமாமிர்தம் தயங்கி, ‘அண்ணா, இன்னொரு தூதும் இருக்கு,’ ன்னு சொல்லி, ‘இது அடியேனோட ஆத்மீகமான தூது,’ ன்னும் சொன்னாரு. ஜப்யேசர் ‘ம்’ – ன்னதும், ‘உங்க அரண்மனை அரங்கேற்றத்தை ஏற்பாடு பண்ணின ரமாவாணி எனக்கு சகோதரி முறையானவ. அரண்மனைவாசமா இருக்குறவ. அவ சங்காத்தம் வேண்டாம்,’ ன்னு துணிஞ்சு சொன்னாறாம்.
“ராமாமிர்த பிள்ளை சொன்னார். அப்போ ஜப்யேச பிரம்மம் அவரைத் திரும்பி நோக்கின பார்வையானது, தன் அகலமான இடையில, இறுக்கமான தசையில, கூறான தடியான அம்பு தெச்சக்கணம், தங்கப்புள்ளிமான் திரும்பித் தன்ன வீழ்த்தினவன நோக்குறப்போ அதோட உருண்ட விரிஞ்ச கண்ல தோன்றர பாவனைன்னு. அவர் படகுலெருந்து ஆத்துல குதிச்சுச் சரசரன்னு கரையேறி போனாரு. அவரு கால்லெருந்து ஈரம் வழிய அதை ஆவேசமா தட்டிவிட்டுட்டுப் போனாரு. அந்தியிருட்டுல மறஞ்சுபோன அவர் உருவத்தைப் படகிலேருந்து ராமாமிர்தம் பிள்ளை பார்த்துக்கிட்டு உக்காந்திட்டிருந்தாரு.”
11
“ரமாவாணி அங்க வருவான்னு ராமாமிர்தம் பிள்ளை நினைக்கல. ஆனா அடுத்தநாளே வந்தா. அரண்மனை மண்டபத்துல தங்கினவ, ராமாமிர்தம் பிள்ளைக்குச் செய்தி அனுப்பி, தர்மசம்வர்த்தியிய பிரார்த்திக்கணும், துணைக்கு வரணும்னு கேட்டுக்கிட்டா.
“ஒரு சேவகன் கூட வர, அவங்கக் கோயில நோக்கிப் புறப்பட்டப்ப, ராமாமிர்தம் பிள்ளைக்குத் தொண்டை வாயில ஏறிக்கிட்டே இருந்தது. ஆனால் வார்த்தை வரல. அவகிட்டப் பேசணும், அம்மா, உன்னக் காத்துக்கோன்னு எச்சரிக்கை பண்ணனும்ன்னு ஏதேதோ எண்ணம் நினைச்சாரு. ஆனா அந்த மங்களவதியோட அபராதமில்லாத, அபவாதம் தொடமுடியாத முகத்தைக் கண்டப்ப அவர் தொண்டை சிக்கிப்போச்சு. அன்னிக்கி அவ முழு அலங்காரமும் செய்துகிட்டிருந்தா. பூர்ணகும்பம் மாதிரி இருந்தா.
“அம்பாளக் கண்டாங்க. ரமாவாணி கண்ணை மூடி தலைக் குனிஞ்சு வேண்டிக்கிட்டா. அவ உதடு இரண்டும் சப்தமில்லாம அசைஞ்சது. ராமாமிர்தம்பிள்ளைக்கு மனசு பொங்கிப்போச்சு. இனி வருமா, இப்படி ஒரு கணம்ன்னு நினைச்சாரு. அந்தக் கணம் ஒரு கணையா அவர் நெஞ்சுல பாஞ்சது. முந்தின நாள் ஜப்யேச பிரம்மம் சொன்னத அப்போ அவரு தெளிவா அறிஞ்சாரு.
“அவங்க இரண்டு பேருமா கோயில் பிரகாரத்திலெருந்து வெளிப்பட்ட சமயம் எதிர்ப்பட்டவரை ராமாமிர்தம் பிள்ளை எதிர்ப்பார்க்கல. திருவையாறு பஞ்சநாத பிரம்மம் முழு ஹரிதாச கோலத்துல நேர்ல வந்தாரு. அவர் வாய் ஹரினாமாவா சொல்லிட்டிருந்தது. பின்னால சாமா நின்னுட்டிருந்தான்.
“ராமாமிர்த பிள்ளையப் பார்த்ததும், ‘தம்முடு? நா சோதருனிடி சூசாவா?’ன்னார். ராமாமிர்தம் பிள்ளை சொன்னார், பகலோட பளீரான வெளிச்சத்துல ஒரு நிமிஷம் கண்ல நிழலாடறா மாதிரி ஆயிடுச்சுன்னு. முன்னால நின்னவரு பஞ்சநாத பிரம்மமா, ஜப்யேச பாகவதரான்னு குழம்பிடுச்சுன்னு. அங்க நின்னவரோட நெற்றியில கோபிநாமத்துக்கு நடுவுல சிவக்கண்ணோட மென்மையான உருவம் தெரிஞ்சா மாதிரி தோணினதாம். ஆனால் அடுத்தக் கணமே அது தோற்றம்தான்னு தெரிஞ்சதா சொன்னாரு.
“‘என்னடா?’ன்னார் பஞ்சநாத பிரம்மம். ‘பார்த்தேண்ணா, பழம் கிடைக்கல,’ன்னு மட்டும் ராமாமிர்தம் பிள்ளை சொல்லிருக்காரு. ‘இன்னொரு வாட்டிப் பேசுடா,’ன்னு அவர் சொன்னாராம். அப்போதான் ராமாமிர்தத்துக்குப் பின்னால நின்ன ஸ்த்ரீயக் கண்டிருக்காரு. ஒரு எட்டு பின்னால வெச்சாரு.
“‘என் சகொதரனுக்கு அரண்மனையில ஸ்த்ரீ சகவாசம் உண்டுன்னு சொல்றாடா, என்றார். அவர் முகத்துல நீர்க்கோலம் மாதிரி நிழல் ஆடிச்சு. அவளப் பார்க்காமலேயே, ஆமா இவ யாருன்னு கேட்டாரு.
“ராமாமிர்தம் பிள்ளை சொல்லிருக்காரு. இவ தஞ்சாவூர் ரமாபங்கஜம் பேத்தி ரமாவாணி. எனக்குச் சகோதரி முறையானவன்னு. ராமாவாணிட்ட திரும்பி, இவர் திருவையாறு ஜப்யேச பாகவதரோட சோதரர், ஶ்ரீபாத பஞ்சநாத பிரம்மம்ன்னாரு.
“பஞ்சநாத பிரம்மம் முகமே ஒரு சுடரா எரிஞ்சா மாதிரி இருந்தது. ரமாவாணி கைக்கூப்பி வந்தனம் சொன்னப்ப அது காத்துப்பட்டது மாதிரி அலைய ஆரம்பிச்சது. அவர் உதடு துடிச்சுது. கண்ணு அசஞ்சது. அவர் நெஞ்சுக்குலை ஏறி இறங்கினது ராமாமிர்தம் பிள்ளைக்குத் தெரிஞ்சது.
“ரமாவாணி அவரைப் பார்த்தபடி நின்னா. ஆனா அவ மொகத்துல எந்த அசைவும் தென்படல. அப்போ, இமை மூடித் திறந்தா மாதிரி, அவளோட மேகலையோட ஒரு மணி சிணுங்கினது. அந்த சப்தத்துல கலஞ்ச பஞ்சநாத பிரம்மம், ராமாமிர்தப் பிள்ளையப் பார்த்தாரு. அவர் கண்கள் சிவந்திருந்தன.
“‘சர்வேஷு ரமந்தே இதி ராம:,’” என்றார். அனைத்திலும் ரமிப்பதால் அவன் ராமன். ராமான்னு நெடுமூச்சு விட்டு அவங்களைக் கடந்து, அவரோட நார்மடியோட சிறுநுனிக்கூட ராமாவாணி உடலைத் தொட்டுறக்கூடாதுன்ற சிரத்தையொட, வாயிலத் தாண்டி பிரணதார்த்திஹரனும் தர்மசம்வர்த்தினியும் குடிகொண்ட கோயிலுக்குள்ள நுழைன்சாரு. பின்னாலியே சாமா போனான்.
அவர் போறதப் பார்த்து ராமாமிர்தம் பிள்ளை மெல்ல, ‘இனி ஜப்யேசனைப் பார்க்கவேணும்,’ என்றார்.
ரமாவாணி இன்னும் மெல்லமாக, ‘தேவையில்லை, அவர் இருக்க மாட்டார்,’ என்றாள். அவள் குரல் இடறியிருந்தது.
12
“அன்னிக்கி சாய்ங்காலமே ரமாவாணி படகேறி தஞ்சைக்குப் புறப்பட்டா. ராமாமிர்தம் பிள்ளை மறுநாள் ஜப்யேசரைப் பார்க்கும் உத்தேசத்தோட திருவையாற்றிலேயே தங்கிட்டார்.
“ஆனால் ரமாவாணி சொன்னது தான் உண்மையாச்சு. அவர் ஜப்யேசரைப் பார்க்கலை. மறுநாள் விடிஞ்சிட்டிருக்கற சமயத்துல, அவர் தங்கியிருந்த சத்திரவாசல் முன்னாடி சாமா நின்னுண்டு ‘அண்ணா, அண்ணா’ன்னு குரல் கொடுத்துட்டிருந்ததைக் கேட்டு ராமாமிர்தம் பிள்ளை எழுந்து வந்தாரு.
“ஜப்யேசர் சும்மா பயம் காட்டல. உண்மையிலேயே அதை சாத்தியமாக்கிருந்தார். காலமே ரெண்டு சோதரருக்கு நடுவுல வாக்குவாதம் முத்திப்போச்சாம். ‘ரமந்தே! ரமந்தே!’ – ன்னு ஒரே கூச்சலாம். அப்போ, திடீர்ன்னு கதவைத் திறந்து வெளியில வந்த ஜப்யேசர், பஞ்சநாதரோட ராமர் விக்ரகத்தைக் கொண்டு போயி காவேரிக்குள்ள தூக்கிப் போட்டிருக்கார். பின்னாலயே பஞ்சநாதன் ஓடி வந்திருக்கார். ‘டேய் கடங்காரா…’ன்னு அவர் தொரத்திட்டு வர்ரத பார்த்து, ராக்ஷசத்தனமா கெக்களிச்சுட்டு மண்டபத்து மேல ஏறி ஜப்யேசர் தலைக்குப்புற காவேரிக்குள்ள குதிச்சிருக்கார்.
“ஆவணி மாசம். ஆத்துல வெள்ளம் கரைய முட்டி ஓடியது. ‘டேய், பஞ்சநாதா, ராமன் வேணும்னா வாடா, எங்கூட தோளுக்கு தோள் நின்னு மல்லாடுடா, வாடா!’ன்னு தோள அடிச்சு குப்புற விழுந்து நீந்திப்போனாராம் ஜ்யபேசர். பஞ்சநாத பிரம்மம் ஒரு நொடி திகைச்சுப் பார்த்திருக்கார். பிறகு ‘ஹரீ!’ன்னு ஒரு விளி. அப்படியே ஆத்துக்குள்ள குதிச்சுட்டார். பின்னால ஓடி வந்த சாமா இதக் கண்டிருக்கான்.
“அவங்க இரண்டு பேரு தலைகளும் உடம்புகளும் இரண்டு இராட்சசப் பாம்புகளாட்டம் தண்ணிக்குள்ள எழுந்து எழுந்து முங்கறத அவன் கண்டானாம். பிடிச்ச பிடி விடாம, தலையும் தோளும் கையும் காலும் அலைகளுக்கு நடுவுல தெரிஞ்சதாம், மறைஞ்சதாம். பிறகு உடம்பு இரண்டும் மொத்தமா மறைய ‘ராமா!’ ‘ராமா’ன்ற விளி மட்டும் கேட்டுதாம். அதுக்கப்பறம் அந்த விளிக்கூட மறஞ்சதாம்.
“ஆறு கொழுத்து எழுந்தது. ஒழுகிப்போச்சு. ஆத்தொழுக்குல வேற அசைவும் இல்ல, சப்தமும் இல்ல. என்ன பன்றதுன்னு தெரியாம சாமா ரொம்ப நேரம் ‘அண்ணா, அண்ணா’ன்னு விளிச்சு நின்றிருக்கான். பிறகு சத்தரத்துக்கு வந்திருக்கான்.
“ராமாமிர்தம் பிள்ளை அங்க ஓடிப்போனார். போற வழியில வீட்ட ஒரு எட்டுப் பார்த்தார். ஒரு வேளை அந்த இடைவெளிக்குள்ள அவங்க திரும்ப வந்திருக்கலாம்ன்ற பேராசையில. ஆனா இரண்டு வாசலும் சாத்தியிருந்தது. உள்ள யாருமில்லன்னு தெரிஞ்சது.
“செய்தி தெரிஞ்சு ஊர்லேருந்தும், அரண்மனைலேருந்தும் ஆட்கள் வந்து வலைப்போட்டுத் தேடினாங்க. வள்ளமும் படகும் விட்டு அவங்கப் பேரக் கூவிப் பார்த்தாங்க. ஆனா ஒண்ணும் கிடைக்கல. இனி செய்ய ஒண்ணுமில்லனு முடிவாய்ட்டாங்க. ஐயருமார ஆறு கொண்டு போய்டுச்சுன்னாங்க.
“‘ஐயரு நல்லவர்தான். என்ன, கொஞ்சம் கிறுக்கு.’ ‘எப்பப்பாரு ராமா ராமான்னு அந்த விக்ரகத்தையே கட்டிகிட்டிருப்பாரு.’ ‘ஆமா, அதையும் யாரையும் பார்க்க விடமாட்டாரு.’
‘அதான் அவரு அண்ணன்காரனே அதை ஆத்துல கொண்டு தூக்கிப் போட்டான்.’ ‘பின்னே? தானும் வாழாம, இவரையும் வாழ விடாம செஞ்சா?’’ ‘அதுக்குன்னு? சொந்த சகோதரனோட பக்தியக் கெடுக்கறதா?’’‘அதிலும் அவர் எப்படியாப்பட்ட பக்திமான்!ச்ச!இவன்ராக்ஷசப் பிறவி.’‘இல்லடா, இவரு பெத்தவாடு. எம்படகுல போறப்பப் பாடுவாரு.’‘அவரா?’ ‘சூடரே செல்லுலாரா யமுனா தேவி, சொகசெல்ல சந்தோஷமுன…’‘டேய், இதைத்தான் நேத்து தர்பாருல்ல பாடினாரு!’‘எம் படகுலேயும் பாடினார். எனக்காக.’ ‘ஆமா, குஹனுக்கு இல்லாத ராமனா?’‘ஆனா இப்படியொரு அண்ணா-தம்பிய எங்கயும் பார்க்க முடியாதுடா. பெரியவரு ஆத்துக்குள்ள குதிச்சா பின்னாலையே சின்னவரும் குதிக்கறாரு?’ ‘ஆமா, அவரு ராமரு, இவரு பரதரு.’‘அண்ணன் பாதுகையோட வெளிவரப் போறாரோ தம்பி?’
எல்லாரும் பலமா சிரிச்சாங்க. ஆனா வேடிக்கைப் பார்க்க ஒண்ணுமில்லன்னதும் கலஞ்சு போய்ட்டாங்க.
13
“அங்கக்கூடினவங்க பேசிக்கிட்டதெல்லாம் ராமாமிர்தம் பிள்ளையோட காதில் விழுந்தது. ஆனால் அவர் மட்டும் போகல. அங்க நடந்த துன்பத்துக்கு எப்படியோ தானும் துணையாயிட்டோம்ன்ற உணர்வு அவரைப் பீடிச்சிருத்து. மூணு ராவும் மூணு பகலுமா அவர் அங்கியே காவல் நின்னாரு.
“அப்போ அவருக்கு மனசுல பஞ்சநாதரோட முகமும் ஜப்யேசரோட முகமும் மாறி மாறி வந்து நின்னது. இரண்டு பேரும் சண்ட போட்டது ராமனுக்குத்தான்னா, அவங்க சமாதானமா ஒண்ணு கூடறதும் ராமனிலத்தான் நடக்கும்ன்னு அவருக்குத் தோணிப்போச்சு. அப்போ ராமன் வந்தா எல்லா சரியாயிடும்ன்னு அவருக்கு உள்மனசுல ஓர் எண்ணம் உதிச்சதா சொன்னார்.
“மெல்ல ராமா, ராமா, ராமான்னு பாட ஆரம்பிச்சாரு. அவர் மனசுல இருந்த விஸ்தாரத்தையெல்லாம் பாட ஒத்துழைக்காத அவர் குரல் அந்த இரண்டு எழுத்தையும் அவர் மனசுல இருந்த அத்தனை உணர்ச்சியோட மாறி மாறிப் பாடினத அவர் கண்டுகிட்டாரு. எத்தனைக்காலமா சங்கீதம் ஏறாத, சங்கீதத்துக்காக ஏங்கின குரல்! அந்த உணர்வே அவரைக் கொண்டு போச்சு.
“பாடிக்கிட்டிருந்தவரு, எப்போ அந்தச் சொல்லு வெறும் வாயசைவா ஆனதுன்னும், அந்த வாயசைவு எப்போ மனசோட அசைவுன்னு ஆச்சுன்னும் தனக்குத் தெரியிலன்னாரு. சங்கீதம் அப்படி ஒரே நாதமா ஆகமுடியும்ன்னு அவருக்கு அதுவரைத் தெரியாதுன்னார். மூணு நாளும் காவேரியாத்துல வெளிச்சம் மாறினத மட்டும் பாத்துக்கிட்டே இருந்தாரு.
“ராமாமிர்தம் பிள்ளை சொன்னாரு, நாலாம் நாள் அதிகாலை வானம் வெளுக்கற சமயத்துல அவருக்குத் தோணிடுச்சாம். இனியும் ராமன் வரலைன்னா, தானும் போய் காவிரில கலந்துடணும்ன்னு. ஏன் அப்படித் தோணிச்சுன்னு தெரியல, தன் கால்களை யாரு அசைச்சான்னு தெரியாமலே, ஆனா எழுந்து படித்துறையில இறங்கி ஆத்துல கால வெச்சுட்டிருந்தேன்னர். காதுல சப்தமே இல்ல. வெட்டவெளியா இருந்தது உள்ளத்துல. ராமான்னு தலைக்கு மேல கைகளத் தூக்கி இறங்கப் போனார்.
“அப்போ கீழைப்பக்கமா, ஆறு வளஞ்சுபோன இடத்துல தண்ணிக்குள்ள ஏதோ நகர்வது தெரிஞ்சது. ராமாமிர்தம் பிள்ளை அசைவும் மூச்சும் நின்னு பாத்திருக்கார். ராமா?
“அந்த நொடியில, ஆத்துத் தண்ணியப் பிளந்து, ஒரு மனுஷ உடம்பு கிளம்பிப் புறப்பட்டது. படித்துறையில ஏறிப்போனது அந்த உருவம். அது ஆடையேதும் அணியல. கொஞ்சம் தூரம்னாலும் ராமாமிர்தம் பிள்ளைக்கு அது நல்லாவே தெரிஞ்சது. அந்த உருவத்தோடக் கையில பெரிய தங்க விக்ரகம் ஒண்ணு இருந்தது.
“அதுவரைத் தன்னை ஆட்டிக்கிட்டிருந்த சரடெல்லாம் அருந்து போனது மாதிரி ராமாமிர்தம் பிள்ளை உயிர்க்கொண்டு பேதலிச்சு முழிச்சார். ஓ — ன்னு அவர் காதுக்குள்ள ஓசைகளெல்லாம் முழங்க ஆரம்பிச்சது. காத்து, வெளி, ஆற்றுவெள்ளம். அங்க தூரத்துல ஒரு பாட்டு.
“திடீர்ன்னு அவரும் ஓட ஆரம்பிச்சார். படிகள்ள ஏறி ஆத்துமணல்ல அந்த உருவத்த நோக்கி ஓடினார். அதுக்குள்ள அது மணல்வெளியக் கடந்து தெருவுக்குள்ள நுழைஞ்சிடிச்சு. ஒரு ஒத்த மனுஷக் குரல் பாடின, அதிசயமும் கோலாஹலமுமான ஒரு பாட்டோட நாதம் மட்டும் அங்கிருந்து வந்தது. நெருங்கினப்ப வார்த்தையா பிரிஞ்சு அவர் காதுல ஏறத் தொடங்கினது.
கனுகொண்டினி!
“வஸ்திரமேதும் அணியாம, கையில் பஞ்சநாத பிரம்மத்தோட ராம விக்ரகத்தை பிடிச்சபடி அந்த உருவம் ஜப்யேச பாகவதரோட ஆழமான மகத்தான குரல்ல அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு ஓடிநது. ராமாமிர்தம் பிள்ளை ஓடி வந்து பார்த்தபோது அது மறைஞ்சிருந்தது. ஆனால் ஒரு மனுஷனோட புத்தம்புதிய காலடிச்சுவடு ஆற்று மணலில் தெரிஞ்சது. பாடலோட இழை எங்கிருந்தோ மிதந்து வந்தது.
‘ராமபாணம் தைத்து – அதன்
மதுரம் ஆட்கொண்டு –
கட்டுகளெல்லாம் அறுந்து – என்
பாத்திரமும் உடைந்து
கண்டுகொண்டேனே!
ராமனை –
கண்டுகொண்டேனே!
“ராமாமிர்த பிள்ளை சொன்னார். அன்னிக்கி திருவையாத்துல பாகவதர்கள் ஓர் ஊர்வலம் எடுத்தாங்க. காவேரி தான் எடுத்துக்கொண்ட பாகவதரை ஊருக்கே திரும்பக் கொடுத்ததை அவங்க அதிசயத்திலும் அதிசயம்ன்னு சொன்னாங்க. அது காவேரியோட தியாகம்ன்னு சொன்னாங்க. கரையேறி வந்தவன தியாகப்பிரம்மமுன்னும், நாதபிரம்மமுன்னும், தியாகராஜன்னும் சொல்லு பாடி ஏத்தினாங்க.
“பஞ்சநாத பிரம்மத்தோட ராமன பூரண அலங்காரம் செஞ்சு அந்த பூஜ்ய பிராமணனோட கையிலேயே கொடுத்து கொண்டு போக வைச்சாங்க. அதைத் தூக்கிப் பாட்டுப்பாடிக் கொஞ்சின ஜப்யேச பாகவதரோட கனமான, இனிமையான குரலக் கேட்க ஊராரும் சுற்றத்தாரும் திரண்டாங்க. இந்தப் புது மனுஷனுல தியாகமானது யாரு, ஜப்யேசனா, பஞ்சநாதனான்னு யாராலும் சொல்ல முடியல. ஆனால் அவன் கையில ராமன் இருந்தான்.
“வீட்டுக்குளேருந்து விடுபட்டு வெளியில இறங்கின ராமனைப்பார்க்க வீடுவீடா வந்தாங்க. பாட்டாலேயே உபசாரம் நடந்தப்பெற்ற பரமனைப் பார்க்க பாரெல்லாம் வந்தாங்க. பெண்மக்களும் ஆண்மக்களும், எளியவங்களும் ஏத்தம்பெற்றவங்களும், அறிஞ்சவங்களும் அறியாதவங்களும், எல்லாரும் அவரைக் காண வந்தாங்க. அவங்க எல்லாருமே அந்த புது மனுஷன விரும்பினாங்க. அவன் நல்ல உள்ளத்த, அவன் நயத்த, அவன் சிரத்தாபக்திய, எல்லாருக்குமாக அவன் விளம்பிய அவன் சங்கீதத்தை.
“ஆனா பயல்களா. ஊரே அவனையும், அவனை மீட்டுக்கொடுத்த ராமபாணத்தையும் கொண்டாடின அந்த நன்னாள்ல, ஒருத்தி மட்டும் கொண்டாடாம இருந்தா. தஞ்சாவூர் அரண்மனையோட அந்தப்புரத்துக்குள்ள, பஞ்சும் பட்டுமா மெத்தையிட்ட கட்டிலில படுத்து, நெஞ்சே உலையுறா மாதிரி கெஞ்சி அழுதிட்டிருந்தவ, ஏன் அழுதான்னு கேட்டா அந்த ராமனாலேயும் சொல்லியிருக்கமுடியுமா? டேய், ஒக நாம ஒக மாட ஒக பாண் ஒக பார்ய-ன்னு சொல்றா. எல்லா சக்தியுமமஞ்ச அவனோட ராமபாணத்துக்கு அவன் உயிர்மூச்சான சீதையோட கண்ணீரத் தடுக்க சக்தியில்ல. இந்தத்துளைய எது அடைக்கும்ன்னு நமக்கென்னடா தெரியும்? நாமளோ ஈனமான, தீனமான மனுஷப்பிறவி.
“அன்னிக்கி சாய்ங்காலமே அரண்மனையிலிருந்து செய்தி வந்தது. தியாகராஜன்னு பெயர் ஏத்தப்பட்ட நாதபிரம்ம பாகவதர் அரண்மனைப் பாட்டுக்காரராவே இனி விளங்கலாம்ன்னு. ஆனா அவர் அதை மறுத்துட்டார். ‘இனி எனக்கு என் ராமனும் இருக்கான். சங்கீதமும் இருக்கு. இந்த இரண்டும் சேர்ந்து கிடைச்சது இந்த ஜகத்துல உள்ள அத்தனை சம்பத்துகளை விடவும் எனக்குப் பெரிய நிதி,’ என்றார்.
“ராமாமிர்தம் பிள்ளை சொன்னார். அதுக்கப்பறம், அவர் நாளெல்லாம் நாம ஜபமும் பூஜையும் பஜனையாவும் கழிஞ்சது. தன் ராமனைத் தூக்கிகிட்டு ஊஞ்சவிருத்தி போய், பாடி, தன்னுடைய ஒரு வேள ஆகாரத்த முடிச்சார். ஆனால் இராவெல்லாம், அவர் குரல் எழுந்து எங்கெங்கோ சஞ்சாரமாச்சு. பயலுகளா, இந்த மாதிரி வேளைகள்ள காதத் தீட்டிக் கேட்டா, பாட்டுக்களா நிறையாம பொழிஞ்ச அவர் குரல் இந்தக் காவிரி நதிக்கு மேல கேட்கும்னு ஐதீகம். காதுள்ளவனெல்லாம் அதைக் கேட்கலாம்.
“அவர் நில்லாம பாடின பாட்டுக்களையெல்லாம் அவருடைய சிஷ்யர்கள் மாறி மாறித் தூக்கம் ஒழிஞ்சு ரகசியமா நின்னு காதால கேட்டு வாயாலப் பாடி மனதால நிறுத்தி வைச்சுட்டாங்க. என் குருநாதர் திருவையாறு ராமாமிர்தம் பிள்ளை அவருக்கு சிஷ்யரில்லைன்னாலும் அவரும் அதைச் செஞ்சாறு. அவர் குரல் உசரலன்னாலும் அந்தப்பாட்டுகளை அவர் மனத்துல அறிஞ்சிக்கிட்டாரு. அவர் நினைவு கடல் மாதிரி. பயலுகளா, நீங்களும் நானும் அவர் நினைவுல மிதந்து வந்த கனவுஜீவிகள்.
“நாதப்பிரம்ம பாகவதரோட சிஷ்யர்கள் பகலெல்லாம் இந்தக் காவிரிக் கரையில நின்னு அவர் பாட்டுகள உருப்போடுவாங்க. அப்போ காவேரியே அவர் பாட்டுகள ராமா ராமான்னு எதிரொலிக்கும்ன்னு சொல் உண்டு. அது இன்னிக்கி வரை மாறாத சத்யம். இந்தக் காவேரியே அதுக்கு சாட்சி. அதுக்கு வந்தனம்.”
தில்லைஸ்தானம் ராமுடு அமைதியானார். கருக்கிருட்டில் காவேரியின் அலைச்சப்தம் ஒரே நாமத்தை மீண்டும் மீண்டும் ஜபிக்கும் குரல் போல் தோன்றியது. ஒரு சுருதி, ஓர் ஆதார ஷட்ஜம். இரவில் முனகும் ஓர் ஒற்றைக் கிரௌஞ்சப் பறவை. ராமுடு மிகமெல்லிய நாதமாக ஓர் இழை பாடினார். சுருட்டி. பிறகு சௌராஷ்டிரம்.
‘நீ நாம ரூபமுலகு நித்ய ஜெய மங்களம்’.
14
சாம்பு அவன் கனமான புருவங்களைக் கோர்த்து, தூரத்தில் நோக்கிக்கொண்டிருந்தான். ராமுடு எழுந்து மண்டபத்துக்குப் பின்னால் சென்று வந்தார். பிறகு தன் தோளைச் சுற்றிப் போத்தியிருந்தப் போர்வையை தரையில் விரித்துத், துண்டை திண்டாக உருட்டித் தலையை சாய்த்துப் படுத்தார். நிலா மேற்காக மறைந்துவிட்டிருந்தது. நதிக்கு மேல் விடிவெள்ளி பழுத்துத் தெரிந்தது. அவர் கண்களை மூடினார்.
சாம்பு அவர் பக்கத்தில் படுப்பதை தூக்கத்தில் எப்போதோ உணந்தார். அவர் மீண்டும் கண்களைத் திறந்தபோது ‘கவிராயன்’ மீனாட்சிநாதனைக் கண்டார். மூட்டுகளை கட்டிக்கொண்டு நதியை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் கண்களை மூடினார்.
அவர் மீண்டும் கண்திறந்தபோது நன்றாகவே விடிந்துவிட்டிருந்தது. வானம் சிவப்பும் ஊதாவுமாகத் தோன்ற, நதி இளம் நீல நிறத்தில் புதிய சித்தாடை உடுத்திக் காட்டும் கன்னிப்பெண் போலே மெல்ல மிதந்து சென்றது. அதன் சிறிய அலைகளின் முகடுகள் வெள்ளையாக முத்துக்களாகத் தெரிந்தன.
தில்லைஸ்தானம் ராமுடு எழுந்து தன் படுக்கையைச் சுருட்டினார். அவர் விழித்ததை உணர்ந்து சாம்புவும் எழுந்தான். நீண்டநாள் பழக்கம் போலே கைகளை உரசிக்கொண்டு கண்களில் ஒற்றினான். “கராக்ரே வசதே லக்ஷ்மி…”
ராமுடு மீனாட்சியிடம், “ஏண்டா? தூங்கல?” என்றார்.
“கதைக் கேட்டா தூக்கம் வர மாட்டேங்கறது அண்ணா,” என்றான் மீனாட்சி, அவரைப் பார்த்து. எழுந்து அவருடன் ஆற்றை நோக்கிப் போனான். சாம்புவும் இணைந்துகொண்டான். அவர்கள் இறங்கியபோது ஆறு நிறைந்து சுழன்று வந்தது. அவர்களுடைய காலைச் சுற்றியது.
சாம்பு நன்றாகக் குனிந்து ஆற்றைத் தொட்டுக் கும்பிட்டான். அவன் அப்போது கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யும் தீவிரத்தை மீனாட்சி கண்டான். கண்கள் மூடியபடியே சாம்பு ஆற்றில் இறங்கினான். அப்போது மீனாட்சியின் முகத்தைக் கண்டு ராமுடு “என்னடா?” என்றார்.
மீனாட்சி அவரைப் பார்த்தான். “இல்லண்ணா. ஓர் எண்ணம்.”
“ம்?”
“பஞ்சநாதரையும் ஜப்யேசரையும் கோத்த ராமபாணம், அவங்க இரண்டு பேரையும் உங்க குருநாதர் ராமாமிர்தத்தோடக் கோத்தது. அவங்க மூணுப் பேரையும் அந்த ரமாவாணியோடக் கோத்தது.”
“ம்?”
“அப்படிக் கோத்துக்கிட்டே போனா என்னண்ணா வரும்?”
ராமுடு மீனாட்சியை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆற்றில் நுழைந்தார்.
தனியாகக் கரையில் நிறுத்தப்பட்டான் மீனாட்சி. அவன் இருபக்கமும் பார்த்தான். இரண்டு பக்கமும் நீண்டு சென்றது நதி. தொடக்கமும் முடிவும் அற்றது போல். சென்றுகொண்டே இருந்தது.
அதன் தூரத்தை அவனால் மனத்தில் நிறுத்த முடியவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தவன் தான் அறியாத கணமொன்றில் பாய்ந்தான். நீரில் திளைத்தபடி திரும்பியவனின் முகத்தில் ஒரு புன்னகை குடிகொண்டிருந்தது.
அம்பையின் பலக்கதைகளில் உள்ளக் கலைக்குறைப்பாடு, அவற்றில் ஆசிரியரின் விழிப்புமனத்தை மீறி எதுவும் நிகழ்வதாகத் தோன்றுவதில்லை என்பது. அவருடைய ‘காட்டிலே ஒரு மான்’ தொகுதியில் உள்ள ‘கடற்க்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்’, ‘அன்னங்களும் பட்சிகளும் நெய்யப்பட்ட ஒரு ரோஜா வண்ணப் புடவை’ போன்ற கதைகள் இதற்கு உதாரணம். ஆனால் இதே தொகுப்பில் உள்ள ‘அடவி’ அப்படிப்பட்ட கதையல்ல.
‘அடவி’ ஒரு விசித்திரமான கதை. இன்றைய வாசகர் (அன்றைய வாசகரும் கூட) அதை வடிவத்தில் நிற்காதக் கதை என்று புறக்கணிக்கக்கூடும். பல இழைகளும் திரிகளுமாகக் கிளை பிரிந்து ஓடுகிறது. மேலும் அம்பையின் பல கதைகளில் காணக்கிடைக்கும் ஒரு கூர் இதிலும் உள்ளது — கவிதைகள், பாடல்கள், வரிகள், என்று கதைசொல்லியின் நினைவுமீட்டல்களாகச் செறிந்துக் கிடக்கிறது. இவை கதைக்குள் ஒட்டாமல் பிதுங்கி வழிகின்றன என்றும், ஆசிரியர் கூற்றாக தொனிக்கின்றன என்றும் ஒருவர் விமர்சிக்கக்கூடும். அவ்வாறு கடந்தகாலத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கதையில் அம்பையின் பிரத்யேக பெண் சார்பு நோக்கு இடம்பெறுகிறது. இதையும் ஒரு வாசகர் ஒற்றைநிலைச்சார்பு என்று விமர்சிக்கக்கூடும்.
ஆனால் இவை மூன்றுமே இன்று வாசிக்கையில் ‘கலைக்குறைப்பாடுகள்’ என்பதை விட, ‘கலைமுயற்சிகள்’ என்றே என்னால் வகுக்க முடிகிறது. அந்த முயற்சி தோல்வியடைந்ததாக ஒரு வாசகரோ விமர்சகரோ எண்ணலாம். ஆனால் அந்த முயற்சி முக்கியமானது என்றும், வரலாற்றுரீதியாக, அதற்கு முன்னால் எழுதிய 98% தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் வெளிப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் கதை முயலும் திசைகளே முக்கியமானவை என்றும் தோன்றுகின்றன.
அம்பை இந்தக்கதையில் செந்திரு என்ற சமகாலப் பெண்ணின் கதையுடன் சீதையின் கதையை இணைக்கும் வகையில் எழுதியிருக்கிறார். சொல்லப்போனால் செந்திருவே சீதையின் கதையை எழுதுகிறாள். அந்தக் கதைக்குள் சீதை தானே தன் அயனத்தை எழுதுவதாக குறிப்பு வருகிறது. பெண் தன் கதையையும் முடிவையும் எழுதும் கற்பனாவாதம் இக்கதைக்குள் உள்ளது — கதையே அவள் அகம் என்ற அடவிக்குள் நடக்கிறது என்று கொள்ளலாம். செந்திரு என்ற பெயரும் முக்கியமானது — அம்பை தன்னுடையை முன்னோடியான ஆர். சூடாமணியின் ‘செந்திரு ஆகிவிட்டாள்’ என்ற கதைக்குத் தன் தொப்பியை தூக்குகிறார். ‘செந்திரு ஆகிவிட்டாள்’ சூடாமணி எழுதிய முன்னோடி அம்பைக்கதை என்று சொல்லலாம்.
இந்தச் சிக்கலெல்லாம் படைப்புக்குள் நிகழ்கிறது. இந்தச் செந்திரு ஒரு வகையில் அந்த செந்திரு தான். இன்னொரு வகையில் சீதையும் தான். சீதையின் துன்பங்கள் இவளுடையதல்ல. ஆனால் இவள் வேறு வகையான அவமானங்களை, மெல்லிய புறக்கணிப்புகளை எதிர்கொள்ள நேர்கிறது. சீதை கானகத்திற்கு அனுப்பப்படுகிறாள். செந்திரு தானாக கானகத்திற்குச் செல்கிறாள்.
இவ்விரு கதாபாத்திரங்களின் தேடல் பல்வேறு வகையில் கதையை நிறைக்கிறது. செந்திரு அவள் தங்கியிருக்கும் காட்டு பங்களாவை ஒட்டி வாழும் மராட்டிய உழைக்கும்வர்க்கப் பெண்களுடன் பாராட்டும் நட்பு இந்தக் கதையின் மைய தவிப்புக்கு ஒரு கௌண்டர்பாயிண்ட். பெண்ணுக்கு ஆண் எங்கே, எந்த அளவுக்குத் தேவை என்ற கேள்வியின் விசாரத்தில் இந்த நட்பு தன்னளவில் ஒரு பதிலாக அமைகிறது.
செந்திரு அதிபுத்திசாலியாக வலம்வருவதும், நான்கு பத்திகளுக்கு ஒரு முறை ஒரு பாடலையோ கவிதையையோ மேற்கோள் சொல்வதும், அவளுடைய குணச்சித்திர வார்ப்புக்கு அவ்வப்போது இடராக அமைந்தாலும், இத்தகைய எழுத்து வழியாக அம்பை என்ன செய்ய முயல்கிறார் என்று அறிய முடிகிறது. கல்லூரிப் பேராசிரியர்கள் ஊடுபிரதித்தன்மை (intertextuality) என்று அதை வகுக்கக்கூடும். அந்த முயற்சி வழியாக அம்பை அடைய நினைக்கும் தூரங்கள் என்ன என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. பாரதியின் சக்திப் பாடலுடன் அருணகிரிநாதரின் பாட்டை ஒப்பிட்டு மேற்கோள்கள் வருகின்றன. துகாராமையும் பஹினிபாயையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லவருவது புலப்படுகிறது. சில இடங்களில் இவை ‘சொல்லப்படுகின்றன’, அதை ‘உணர்த்தியே’ விட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இந்தக் கலைக்குறைப்பாட்டையும் மீறி, இந்தத் திரிகளை பிடிக்கும் போது அம்பையின் எழுத்தாளர் மனதில் புலப்படும் தேடலை நாம் கண்டுகொள்வது முக்கியமானது. அவர் உணர்த்தும் திசைகளெல்லாம் முக்கியமானவை.
இக்கதை பெண்சார்புடையது என்ற விமர்சனத்தை நான் ஓரளவு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதை முழுவதும் எதிர்மறையான விஷயமாக நான் பார்க்கவில்லை. செந்திரு காட்டுக்கு வருவது தன் கணவனுடன் கோபித்துக்கொண்டல்ல. ஓர் உடைவு ஏற்படுகிறது அவளுக்குள். ஆசிரியர் இதைத் தெளிவாக உணர்த்துகிறார். அப்படிப்பட்ட உடைவு ஏற்பட்டுத் துறவை பரிசீலிக்கும் மனிதருக்குண்டான வழிகளென்ன? — அந்த மனிதப்பிறவி பெண்ணாக இருந்தால் அவளுக்கான வழிகள் என்ன? — என்றே இக்கதை கேட்டுச்செல்கிறது. ஆணுக்கு இத்தனை வழிகள் இருக்க, பெண்ணுக்கு என்ன வழி என்ற கோபம் இந்தக் கதைக்குள் தொனிக்கிறது. அது முற்றிலும் நியாயமான சீற்றம் என்பதே என் கருத்து.
கதை நெடுக செந்திரு ‘விஸ்தீரணம் அடையணும்’ என்று சொல்கிறாள். அவள் கானுக்கு வருவது அதற்குத்தான். அதுவரை பெண்ணின் கடமையென்று அவள் கட்டிக்காத்து வளர்த்த அகமே அவளை அழுத்தும் இடமாக மாறிய பின், எனக்கான வழிகளே இல்லையா என்று அவள் கேட்கிறாள். இது ஒரு பெண்ணுக்கே உரித்தான அனுபவம் என்கையில், பெண் சார்பு தொனிப்பதும் புரிந்துகொள்ளக்கூடியது தான். கதை ஆணுக்கு மறுபக்கமாக ஒரு பார்வையும், பாதையும், ஏன் முடிவையும் எடுக்கிறது என்றால் — அது அம்பையின் வழி, அவ்வளவு தான். அந்த ஆசிரியரின் சிந்தனைப் பங்களிப்பு அது.
இந்த விமர்சனங்களை எல்லாம் மீறி இந்தக் கதை என்னிடம் பேசியது இரண்டு விஷயங்களால். ஒன்று, அதில் தென்படும் நிஜமான ஒரு வாழ்க்கைக்கேள்வி, தேடல். இரண்டு, ஆசிரியரின் உருவாக்கத்தையும் குரலையும் மீறி அக்கதையில் எழுந்து வரும் படிமங்கள்.
வாழ்க்கைக்கேள்வியைப் பற்றி மேலே குறிப்பிட்டேன். இந்தக் கதையின் படிமங்களில் முக்கியமானது இசை. செந்திரு தன் இசை ஆசிரியரை நினைத்துக்கொள்கிறாள். அவளுடைய அப்பா கனவில் வரும்போது சப்ளாக்கட்டையை அடித்துப் பாடும் பாகவதராக வருகிறார். செந்திருவே கள் குடித்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுமே தான் சுந்தந்திரமாகப் பாடியதை நினைவுகூர்கிறாள். செந்திரு சந்திக்கும் சூஃபி உஸ்தாதால் மட்டுமே அவள் தனிமைக்குள் சிறிது தூரம் வர முடிகிறது.
“ஸூர் என்கிறோம். அஸூர் என்பது யார்? கோணல் பல்லும் கொம்பும், பத்துத் தலைகளும் இருப்பவர்களில்லை. ஸூர் என்ற ஒன்றை அறியாதவர்கள். அ-ஸுர். ஸூர் என்ற ஒன்று ஒலித்துக் கொண்டே இல்லாமலிருப்பதால் தன் வேகம், பலம், பாதை எதுவும் கட்டுக்குள் இல்லாமல் ஒடுபவர்கள். ஸூர் என்ற லகானில்லாதவர் கள்” என்றார். “சுருதி சேர வேண்டும். கூடி வர வேண்டும். நாம் அத்தனைபேரும் அ-ஸுர்தான். சுருதியைப் பிடிக்க ஒடுபவர்கள்.”
செந்திருவின் இந்தச் சந்திப்பால் அவள் எழுதும் சீதை சென்று சேரும் இடம் முக்கியமானது. அவள் ராவணனின் இசை மாணவியாகிறாள். ஆனால் இவன் அஸூர ராவணன் அல்ல. இசை வழியாக தன்னை உன்னதமாக்கிக்கொண்டிருப்பவன். அவனே சீதைக்கு இசை நோக்கிய வாசலைத் திறக்கிறான். ஆண்களில் அவனால் மட்டுமே சீதைக்குத் தோழனாகவும் ஆசிரியனாகவும் இருக்க முடிகிறது. தேவியின் உடலின் உன்னத இசை வடிவான ருத்திரவீணையை அவன் சீதைக்கு அளிப்பதில் இந்த ஆழங்களெல்லாம் வெளிப்படுகின்றன.
அதுவரை கதை நெடுக ஓடும் குழப்பங்கள், சில்லரை சந்தேகங்கள் அனைத்துமே இந்த சாத்தியத்துக்கு முன்னால் தவிடுபொடி ஆகின்றன. இந்த இடத்தில் கதை முடிந்திருந்தாலே இந்தக் கதைக்கு அது ஓர் உயரிய முடிவாக அமைந்திருக்கும் என்பது என் எண்ணம்.
ஆனால் இங்கேயும் அம்பை தன் தனித்துவத்தைப் பேணுகிறார். அந்த வீணையை ராவணன் சீதைக்கு எடுத்துத்தரும் போது, நீ தர வேண்டாம், அதை நானே எடுத்துக்கொள்கிறேன், என்று சீதை கூறும் இடத்தில் கதை முடிகிறது. பெண்ணின் உடலை, ஆற்றலை, ஆண் (அல்லது மரபு) அறிந்தாலும் அதை வழிநடத்தும் இடத்தில் அவன் இருக்கக்கூடாது, அதை பெண்ணே வகுக்க வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்கிறேன்.
இதைச் சொல்வது ஆசிரியரின் விழிப்பு மனம் எனலாம். பெண் சார்பு நோக்கு, கலைக்குறைப்பாடு என்றெல்லாம் சொல்லலாம். நான் இப்படிப் பார்க்கிறேன். அம்பையின் நல்ல கதைகளில், அவருடைய ஆழ்மனமும் மேல்மனமும் மோதும் தருணங்கள் நிகழ்கின்றன. என்னைப்பொருத்தவரை அவை எல்லாமே முக்கியமானவை. ஏனென்றால் அவை நம் பண்பாட்டில் பெண்ணுக்குள் அன்றாடம் நிகழும் ஆதார மோதல்.
ஆகவே, ‘அடவி’ கலைக்குறைகளே அற்றக் கதை என்று சொல்லமாட்டேன். ஆனால் கலைமுயற்சி. சில பாதைகளை காட்டும் முக்கியமான, மேலும் விவாதிக்கப்பட வேண்டிய கதை.
காட்டில் ஒரு மான் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து கமலதேவியின் கட்டுரை: நீரெல்லாம் கங்கை
*
~
உண்மைக் காடுகள் அல்ல செந்திருவின் மனத்தில் இருந்தவை. அகநானூற்றுக் காடுகள். இருபுறமும் பெரிய பாறாங்கற்களிலிருந்து தேன்கூடுகள் தொங்க, இடையே பால்போல் அருவி விழும் காடுகள் காட்டிற்குப் போக வேண்டும். வாகன ஒலிகள், பேச்சொலிகள், நடை ஒலிகள், வீடுகளில் இயங்கும் மின்கருவி ஒலிகள் இவற்றை எல்லாம் விட்டுத் துரத்தே ஒரு காட்டுக்கு.
வானப்ரஸ்த முயற்சியா என்று சிலர் கேலி செய்தனர். ‘காடு வா வா வீடு போ போ’ என்று கெக்கலி வேறு. பிரம்மசர்யம், சம்சாரம், வானப்ரஸ்தம், சந்நியாசம் எல்லாம் வேறு வேறு கட்டங்களா என்ன? ஒன்றைக் கடந்துதான் இன்னொன்றில் நுழைய வேண்டுமா என்ன? எல்லாம் கலந்து இருக்கக் கூடாதா?
அவள் தந்தை காப்பி எஸ்டேட்டில் வேலைபார்த்தவர். பல காப்பி எஸ்டேட்டுகளின் உரிமையாளர் ஒருவரிடம் தலைமைக் கணக்கராக வேலைபார்த்தவர். பெங்களூரில் தாயுடன் தங்கிப் படித்துக்கொண்டிருந்த இவளும், இவள் தம்பியும் லீவு நாட்களில் அப்பாவிடம் போகும்போது அந்த மலைப்பகுதியின் காப்பித் தோட்டங்கள், மிளகு, ஏலத் தோட்டங்கள், மரங்கள் அடர்ந்த பகுதிகள் இவற்றில் புகுந்து ஓடியபடிதான் மத்தியானங்கள் கழியும்.
“பத்திரம். கரடி எல்லாம் வர்ற இடம்” என்று எச்சரித்தவண்ணம் இருப்பார்கள் எஸ்டேட் தொழிலாளர்கள்.
பிரசவ வலி எடுத்த பிறகு அம்மாவைச் சற்றுத் துாரத்திலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லும் போது, நடுவழியிலேயே வண்டியிலிருந்து இறங்க நேரிட்டதாம். அவசரமாக அவளை இறங்கவைத்து, கிளைகளைப் பரப்பி நின்ற ஒரு மரத்தினடியில் உட்காரவைத்த பத்து நிமிடங்களில் செந்திரு பிறந்துவிட்டாளாம்.
“நான் காட்டு வழியா போறப்போ ஒரு மரத்துக்கு அடியில நீ கிடந்தே. உன்னைத் துரக்கிட்டு வந்திட்டேன். உங்கம்மாவா உன்னைப் பெத்தா?” என்று கேலிசெய்து, இவளை வம்புக்கு இழுத்து அழ வைப்பது அப்பாவுக்கு ஒரு விளையாட்டு.
“நிசமாவாம்மா” என்று ஒவ்வொரு முறையும் கண்களில் நீருடன் அம்மாவிடம் போவாள்.
“ஆமாமாம். நீ கெடந்தே இவருதுக்கிட்டு வந்தாரு பெரிய ஜனக மகாராஜா பாரு இவரு” என்பாள் அம்மா.
தம்பி பெரியவனான பிறகு அவன் கேலி செய்யத் தொடங்கினான். “ஏ, மரத்தடியில பொறந்த பொண்னே’ என்று. அப்போது இவள் அழவில்லை. “புத்தர்கட மரத்தடியிலதான் பொறந்தார் தெரியுமா?” என்று பதிலடி கொடுப்பாள்.
“அப்ப நீயும் ஒரு போதி மரத்தைத் தேடிப் போயிடுவியா?” என்று பரிகாசம்செய்வான்.
மலைக் காட்டில் பிறந்து விளையாடிய பெண்தானே தான் என்று அவள் திருமலையிடம் கூறினாள். திருமலை உடன்படவில்லை. ஏதோ காட்டில் வாழும் வேடுவப் பெண்ணாய் அவள் தன்னைக் கற்பனை செய்துகொள்கிறாள் என்றான் அவன். கொஞ்சம் விட்டால் ஆலோலம் பாடிய வள்ளியாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு விடுவாள் என்று கேலிசெய்தான்.
அப்படி அவன் என்னதான் சொல்லிவிட்டான் கடுந்தவம் செய்யப் புறப்படுபவளைப்போல் அவள் காட்டிற்கு ஒட பல கிளைகள் கொண்ட வியாபாரத்தில் தன் கூட்டாளியாக அவளைச் சேர்த்துக் கொள்ள அவன் தயார்தான். அதில் அவன் ராஜா என்றால் அவள் ராணி என்றுதான் நினைத்திருந்தான். அவன் வியாபார சகாக்கள் இதற்கு உடன்படவில்லை என்றால் இதில் அவன் தவறேதும் உண்டா? இதில் அவனுக்கு வருத்தமில்லையா? அதற்காக மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவதா? காட்டைப் பார்க்க ஓடிவிடுவதா? உண்மைதான். சாதாரண நிலையிலிருந்து இங்கும் அங்கும் அலைந்து அவன் முன்னுக்கு வர முயன்ற ஆண்டுகளில் அவள் அவனுக்கு உறுதுணையாக இருந்தாள். அவன் மறுத்தானா அதை? இப்போது நிலைமை வேறில்லையா? வியாபார விஷயங்களிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கச் சொன்னால் இப்படி எல்லாவற்றையும் துறந்துவிட்டுச் செல்பவளைப்போல் ஆயத்தங்களைத் தொடங்க வேண்டுமா? அதுவும் காடு என்ன ஒரு இலக்கு? இவள் சரண் புகக் காடு காத்திருக்கிறதா என்ன? இதிகாசக் கனவுகளைக் காண்பவள்போல் இல்லையா அவள் செய்வது?
இதிகாசப் பெண்கள் கூட அவரவர் கணவன்மார்களுடன்தான் காட்டிற்குப் போயிருக்கின்றனர். வேட்டையாட, சம்ஹாரம் செய்ய என்று தனியாகப் போனவர்கள் இதிகாசப் புருஷர்கள்தான். வன வாசம் செல்லும்படி தந்தை உத்தரவிட்டால் வனம் செல்லும் ராமனுடன் செல்லும் சீதைப் பதவிதான் பெண்ணுக்கு. நளனுடன் நடக்கும் தமயந்தியாகத்தான் பெண்ணின் காட்டு விஜயம். ரிஷியான கணவனுடன் செல்லும் ரிஷிபத்தினி நிலைதான் பெண்ணுக்கு உரியது. தனியாகப் போனால் தவத்தைக் குலைக்கும் மேனகையாகப் போகலாம். இல்லாவிட்டால் பெண்ணுக்குக் காடு திக்குத்தெரியாத ஒன்று தான். தருக்கள், மான்கள், பூக்கள் அத்தனையும் அவளைத் திசை தப்பவைப்பவைதான். அவளை ரட்சிக்க ஒருவன் வரவேண்டும் பின்னாலேயே. பெண்ணுக்குக் காடு ஒரு தண்டனை. காட்டுக்குப் போவது அவளை அபலையாக்கி ஒதுக்கிவிடும் முயற்சி. இப்படித் தான் திருமலை வாதிட்டான்.
இதிகாசத்தை எல்லாம் மாற்றி எழுத வேண்டிய காலம் வந்தாகி விட்டது என்றாள் சிரித்தபடி அதற்குத்தானா இந்தப் புறப்பாடு என்று கேட்டான். அதற்கும்தான் என்றாள்.
அந்த வன இலாகா அதிகாரியைத் தொடர்பு கொண்டு அவள் செய்திருந்த விண்ணப்பத்துக்குப் பதில் வந்துவிட்டது. அந்த வனத்தின் அரசு விருந்தினர் விடுதியில் அவள் தங்கலாம் என்று கூறிக் கடிதம் வந்தாயிற்று. சாணிக்கலர் காகிதத்தில் ஒர் அனுமதிக் கடிதம், அதை அவனிடம் காட்டினாள். உச்சுக் கொட்டினான். அவளே எல்லாவற்றையும் தீர்மானித்துவிட்டு கடைசியில் அவனிடம் கூறுவதாகக் கூறினான். ஏதோ அவன் அவளை நாடு கடத்திவிட்டது போல் அவள் நடந்து கொள்வதாகக் கூறினான். வாதப்பிரதிவாதங்கள். மிரட்டல். கெஞ்சல். எல்லாவற்றிக்கும் பிறகு,
அண்ணாமலை அவளுடன் வந்தான். பேருந்து வரக் காத்திருந்த போது,
“அண்ணி, என்னை நீங்க தப்பா நினைக்கலியே?’ என்றான்.
“சே, சே, அப்படியெல்லாம் இல்ல அன்னு. நீ உங்கண்ணாவோட வேலை பார்க்கிறவன். அவர் சொல்றத நீ ஏத்துக்கிடனும், இல்லையா?” என்றாள்.
பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டாள். சன்னல் வழியாகப் பார்த்து கையை ஆட்டி விடைபெற்றுக்கொண்டாள்.
பேருந்து வேகம் எடுத்ததும், எதிர்க்காற்று முகத்தில் வந்து மோதியது சமரிடுவதுபோல. கூந்தலைக் கலைத்தது.
ஒட்டக மஞ்சள் அட்டையுடன், வெளேரென்ற பக்கங்களுடன் பெட்டியில் உடைகளுக்கிடையே கிடக்கும் நோட்டுப் புத்தகம் நினைவுக்கு வந்தது. அடர் கறுப்பில் எழுதும் பென்ஸில்கள் ஒரு டஜன் வாங்கியிருந்தாள். பென்ஸிலைக் கூர்செய்ய கூராக்கி அழித்தெழுத அழிப்பான்.
ஆரம்ப வரிகளைக் காற்று எழுதிவிட்டுப் போயிற்று.
***
ரதத்தில் பூட்டிய புரவிகள் காற்றுடன் மோதிக்கொள்வது போல் ஓடின. எதிர்காற்று உடலில் மோதியது. இரு பக்க விருட்சங்களும் கூடவே ஓடிவருவதுபோல் தோன்றியது. திடீரென்று தீர்மானித்த பயணம். அடவியின் ஒலிகளும், நிறங்களும் அவள் மனத்தைப் பிறந்தவீட்டுச் சீதனம்போல் நிறைக்கின்றன என்றாள் சீதை லக்ஷ்மணனிடம். அவன் பதில் பேசவில்லை. கைகட்டி காற்றை எதிர்கொண்டான். ரதம் நின்று ரதத்தை விட்டு இறங்கியதும் அண்ணன் உத்தரவு பற்றிக் கூறினான். இனி அந்தக் காடுதான் அவள் வாசஸ்தலம் என்று லக்ஷ்மணன் கூறியதும், சீதை அவனை ஏறிட்டு நோக்கிவிட்டுக் கூறினாள். லகஷ்மணன் அறியாதது அல்ல. மற்றவர்கள் துய்மையைச் சந்தேகிப்பதும், சோதிப்பதுமே அவன் அண்ணனின் தொழிலாகி விட்டது. தொட்டதற்கெல்லாம் சந்தேகம். சாட்சிகளிடம் விசாரிப்பு. சூரியனைக் கூப்பிட்டுக் கேட்பது. அவன் நான் இருக்கும் நேரத்துக்கு நான் சாட்சி, நான் இல்லாத நேரத்துக்கு நான் எப்படி சாட்சி சொல்லமுடியும் என்றால் சந்திரனிடம் கேள்விக் கணைகள். அவன் நான் வானத்தில் இருந்த நாட்களுக்கு நான் உத்திரவாதம் அளிக்க முடியும். அமாவாசை அன்று நான் இருப்ப தில்லை. அந்த இரவுக்கு நான் உத்திரவாதம் அளிக்க முடியாது என்றதும் உடனே நெருப்பை அழைப்பது புனிதத்தை உறுதிப்படுத்த லகஷ்மணனுக்கு இது நேர வில்லையா என்ன ? எப்படிப்பட்ட பிரம்மச்சாரி அவன்? எத்தகைய தேஜஸ் கூடிய தேகம் அவனுடையது? சில வனவாசிகள் கிங்ரி என்றழைக்கும் வாத்தியத்தை அவன் தொட்டதுமே, மெல்லமெல்ல, சுகந்தம்போல் எழுந்து பின்பு காட்டருவிபோல் கட்டுக்கடங்காமல் கொட்டும் இசைப் பொழிவில் சிக்காதவர்கள் இருக்கிறார்களா? அந்தக் கந்தர்வப் பெண்ணை லக்ஷ்மணனுக்கு நினைவிருக்கிறதா? இந்திரசபையின் இந்திரகாமினி லகஷ்மணனின் காமத்தைக் கிளப்ப முயன்று தோற்றதும், தன் வளையல் துண்டுகளையும் காதணிகளையும் சந்தேகம் தோன்றும் வகையில் படுக்கையில் சிதறவிட்டுப் போனவள். காலையில் அறையைச் சுத்தம் செய்ய வந்த சீதை அல்லவா அவற்றைப் பார்த்துவிட்டு ஓடோடிச் சென்று ராமனிடம் புறம் கூறினாள்: லக்ஷ்மணன் துய்மையானவன் அல்ல என்று உடனே குற்றம் சாட்டவில்லையா ராமன்? அந்தக் காட்டுக் கிராமத் தலைவனை அழைத்து அங்குள்ள அத்தனை பெண்களும் மீண்டும் சேர்க்கப் பட்ட வளையலையும், காதணிகளையும் அணிந்து பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஒரு பெண்ணுக்கும் அது பொருந்தவில்லை. “இன்னும் சோதனையில் பங்கெடுக்காத பெண் உண்டா?” என்று ராமன் வினவ, “இருக்கும் ஒரே ஒரு பெண் சீதாதேவி தான்’ என்று தலைவன் கூற, சீதையும் அணிந்து பார்க்க, அவளுக்குப் பொருந்தியது! இந்திரகாமினியின் சூழ்ச்சி. அண்ணனின் அடாத குற்றச்சாட்டுக்கு லக்ஷ்மணன் தந்த பதில் நினைவிருக்க வேண்டுமே அவனுக்கு? காட்டில் வாழும் ஒரு குடும்பத்தின் அன்று பிறந்த குழந்தையுடன் நெருப்பில் மூழ்கி எழவில்லையா தன் தூய்மையை நிரூபிக்க: இந்தத் தூய்மைப் பரிசோதனைகள் அவளுக்கு அலுத்து விட்டது. இருக்கட்டும். இந்த வனம் அவளுக்குப் புதியது இல்லை. பிடிக்காததும் இல்லை. போவதற்கு முன் லகஷ்மணன், சற்று மேடிட்டு இருக்கும் அவள் வயிற்றைப் பார்க்க வேண்டும். அவன் அண்ணனிடம் கூற வேண்டும் அவள் கர்ப்பவதி என்று. இல்லாவிட்டால் இன்னொரு அக்னிப் பரீட்சைக்கு ஆயத்தங்கள் தொடங்கிவிடும். நேர்க்கோட்டில் செல்லாத மனம் சிலருக்கு. மனம் முழுவதும் குஞ்சிதம் அயோத்தி ராஜனுக்கு.
ரதம் புறப்பட்டது. புரவிகளின் குளம்பொலி வெகு நேரம் வரை காதில் ஒலித்துப் பிறகு அமைதி. அவள் தனியளாய். வீசி அடித்த காற்று உடலில் புழுதியை ஏற்றியது. அவள் தனியளாய் எதிரே ஓடிய ஆற்றை வெறித்தபடி தன்னைப்பற்றி நினைத்தபடி தன் பிறப்பை உன்னியபடி. பனை ஒலையில் எழுத்தாணி அந்த வரியைக் கீறியதும் அருகே நிழல். நிமிர்ந்து பார்த்தாள் சீதை. எதிரே வால்மீகி முனிவர்.
“என்னம்மா எழுதுகிறாய்?” என்றார்.
எழுந்து நின்று வணங்கியபடி, “அயணம்” என்றாள். “சீதையின் அயணம்.”
“நான் எழுதிய ராமாயணம் ஒன்று போதாதா?’ என்றார். “இல்லை. இனி வரும் யுகங்களில் பல ராமாயணங்கள். பல ராமன்கள். பல சீதைகள்.”
பனை ஒலைகளைக் கையில் எடுத்து, “இது நான் எழுதாத சீதையா?” என்றார்.
“தாங்கள் அரசவைக் கவிஞர். சரித்திரத்தை உருவாக்குபவர். நான் அனுபவித்தவள். பலவித அனுபவங்களை உள்வாங்குபவள். என் மொழி வேறு.” என்றாள்.
“இது எங்கு அரங்கேறும்?”
“வனங்களில். வனவாசிகள் மனத்தில்.”
***
பெரிய அறை அல்ல அது. ஆனால் அதில் இருக்க வேண்டும் என்ற உணர்வைத் துண்டுவதுபோல் அமைந்திருந்தது. வலியைத் தணிக்க வைத்துக்கொள்ளும், வெந்நீர் நிரப்பிய ரப்பர் பையின் கதகதப்பின் சுகம் அந்த அறையில் இருந்தது. ஆத்திப் பழுப்பு நிறத்தில் கடும் சிவப்புப் பூக்கள் சொரிந்த கைத்தறி விரிப்புடன் ஒரு சிறிய கட்டில். அதனருகே ஒரு மேசை மற்றும் நாற்காலி. அடிப்படை வசதிகளுடன் ஒரு குளியலறை. எல்லாவற்றையும்விட முக்கியமாக அந்தச் சன்னல். மேசை எதிரே அமைந்த சன்னல் ஏற்றி இறக்கக் கூடிய சட்டங்களுடன் வெளியே திறக்கும் சன்னல்.
பேருந்து அவளை இறக்கும்போது அந்திவேளையின் இறுதிக் கணங்கள். அரசு விருந்தினர் விடுதிக்குப் போகச் சற்று நடக்க வேண்டும் என்று கூறினார்கள். ஒரு சிறு பையன் அவள் பெட்டியைத் துக்க முன்வந்தான். அந்தியொளியில் சிறுவன் வழிகாட்ட, மரங் களினூடே போடப்பட்ட பாதையில் நடந்து விடுதியை எட்டும்போது இருட்டிவிட்டது. அவள் தன்னை அறிமுகம் செய்துகொண்டதும், விடுதியில் பணிபுரியும் ஒருவர் இந்த அறையைத் திறந்து விட்டார். அவள் அறையை நோட்டமிட்டபடி இருந்தபோது, அந்த விடுதிப் பணியாளர் மேசையின் மேல் சாய்ந்து, எட்டிக் கை நீட்டி, சன்னல் கதவுகளை வெளிப்புறம் தள்ளினார். திடீரென்று அவள் கண்முன் ஒர் இருள் சூழ்ந்த வனம். பாம்பு போலவும் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்துப் போலவும் கிளைகள் தொங்கியும் உயர்ந்தும் விரிந்த வனம். இனம் புரியாத ஒலிகள். சன்னலின் நட்டநடுவே நூல் கட்டித் தொங்கவிட்டது போல் நன்றாகக் குறுகக் காய்ச்சிய பாலின் நிறத்தில் நிலா. ரகுநாத் பாணிக்ரஹியின் ஜீவன் சொட்டும் குரலில், “நான் தேடும்போது நீ ஒடலாமோ? ஏன் ஊடலோ வெண்ணிலாவே?” பாட்டு மனத்தில் ஓடியது.
இரவுச் சாப்பாடுபற்றி விசாரித்துவிட்டுப் பணியாளர் போனார்.
நிலவைப் பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்து, மேசை மேல் கைகளை ஊன்றிக் கொண்டாள். பிறகு மேசைமேல் ஏறி, கால்களைப் பக்கவாட்டில் தொங்கவிட்டபடி அமர்ந்து, தலையைத் திருப்பி நிலவையும் அதன் ஒளியைப் பூசிக்கொண்ட வனத்தையும் பார்த்தாள்.
இரவு படுக்கும்முன் ஒட்டக மஞ்சள் நோட்டுப் புத்தகம், ஒரு டஜன் பென்சில்களையும் மற்றவற்றையும் முதுகில் ஏற்றிக்கொண்டு மேசை மேல் அமர்ந்துவிட்டது. மூடிய சன்னல் கதவுகளின் ஏற்றப்பட்டச் சட்டங்களின் ஊடே நிலவு பல துண்டுகளாகத் தெரிந்தது.
***
தாமரை பூத்த தாடகம். அன்னை மடிபோல் அகன்று இருந்த பெரிய தாமரைகள். ஒவ்வொரு தாமரையும் ஆயிரமாயிரம் இதழ்களுடன். பாதுகாவலர்களும் வீரர்களும் புடைசூழ அந்தப் பக்கம் வந்த ராவணன் கண்களில் தாமரைகள் மிதந்த தடாகம் பட்டது. அவற்றின் வண்ணமும் வடிவமும் ஒன்றையாவது பறிக்க வேண்டும் என்ற இச்சையை ஊட்டின. தானே பறிக்க வேண்டும் என்று தோன்றியது. கையில் இருந்த வில்லையும் அம்பையும் அருகில் இருந்த வீரன் ஒருவன் கையில் கொடுத்துவிட்டு, பட்டுடை நனைய, தடாகத்தில் இறங்கியபோது, “நான் உன்னைக் கொல்வேன்’ என் றொரு குழந்தைக் குரல் கேட்டது. குரகத்தின் குரல் என்று நினைத்து, தடாகத்தில் அவை உள்ளனவா என்று நோட்டமிட்டான். பேசும் நீர்வாழ் புள் ஒன்றுகூடக் கண்ணில் படவில்லை. ஒவ்வொரு தாமரையைத் தொடும் போதும் அக்குரல் கேட்டது. எந்தத் தாமரையிலிருந்து ஒசை வருகிறது என்று கணிக்க முடியவில்லை. கைக் கெட்டிய தாமரைகளையெல்லாம் பறித்து வந்து, மண்டோதரியிடம் தந்து, தன் காதில் ஒலித்த குரல்பற்றிக் கூறினான். தரையெல்லாம் தாமரைகள். மண்டோதரி அமர்ந்து ஒவ்வொரு தாமரையின் இதழ்களையும் நீவி நீவித் திறந்தாள். கடைசியாக எஞ்சிய தாமரையின் அடி இதழ்களைப் பிரித்தபோது மெத்தென்ற நடுப் பகுதியில் ஒரு பெண் சிசு. மண்டோதரியைத் தன் கரிய விழிகளால் அண்ணாந்து பார்த்து, “நான் ராவணனைக் கொல்வேன்” என்று தெளிவாகச் சொல்லிவிட்டு, மலரச் சிரித்தபடி மீண்டும் சின்னஞ்சிறு குழந்தையின் அர்த்தமற்ற ஒசை களை எழுப்பத் துவங்கியது. மண்டோதரியின் அடி வயிறு கலங்கியது. குழந்தையை ஒரு மூங்கில் பெட்டியில் வைத்தாள். இரு சேடிகளுடன் கடல்புரம் சென்றாள். அலைகளுடே நடந்து மூங்கில் பெட்டியைக் கடலில் இட்டாள். அலைகள் மேல் ஆடியபடி அது சென்றது.
வெகு தூரம் சென்று ஒரு கரையைத் தொட்டது. அதைத் திறந்த முதல் நபர் கூச்சலிட, பலர் சூழ்ந்து கொள்ள, மகவு அவர்கள் தலைவனிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர்கள் தலைவன் பெயர் ஜனகன். சீதை என்று பெயரிட்டான் குழந்தைக்கு. சீதை பூவையும், கடலையும், மண்ணையும் தொட்டு வந்தவள்.
ராமன் பிறந்தவுடனேயே ஒரு ஜீவனுக்குத் துயர் விளைவித்தவன். அவன் பிறப்பைக் கொண்டாடத் தரப்போகும் விருந்தில் மான் மாமிசம் இருக்க வேண்டும் என்று கோசலை தீர்மானித்தாள். ஒரு பசிய மரத்தின் அடியே ஒர் ஆண் மானும் பெண் மானும் இளைப் பாறியபடி இருந்தன. பெண்மான் வாட்டமுற்று இருந்தது. “என்ன ஆயிற்று? பசுந்தழைகள் கிடைக்கவில்லையா? தாகமாக இருக்கிறதா?” என்றது ஆண் மான். “இல்லை. தாகம் இல்லை. வேடர்கள் வரும் ஒலி கேட்கிறது. நீ ஒடி விடு” என்றது பெண் மான். அருகே நெருங்கிவிட்ட வேடர்களிடம், “என்னை வேண்டுமானால் கொல்லுங் கள்” என்றது பெண் மான், “ஆண் மானின் மாமிசம் தான் ருசியானது” என்றுவிட்டு ஆண் மானைக் கொன்ற னர். கோசலையிடம் ஓடி, “என் இணைமானின் தோலை யாவது எனக்குத் தா. அதைப் பார்த்தபடி என் துயரை ஆற்றிக்கொள்கிறேன்” என்று இறைஞ்சியது பெண் மான். “அந்தத் தோலை எடுத்து நான் ஓர் அழகிய கஞ்சிரா செய்து, என் பிள்ளை விளையாடத் தருவேன்’ என்றுவிட்டாள் கோசலை.
ராமன் தவழ்ந்து வந்து கஞ்சிராவில் கைவைத்துத் தட்டி ஓசையெழுப்பி விளையாடும்போதெல்லாம் அந்த ஒலி பெண் மானின் உடலை அதிரவைத்தது. ஒலியின் அலைகள் அதன் செவியை எட்டும்போதெல்லாம், ‘கோசலை, என்னைப்போல் பிரிவில் நீயும் வாடு” என்று அரற்றியது பெண் மான்.
பனை ஒலையைக் கட்டிவிட்டு நிமிர்ந்தாள் சீதை சற்றுத் தூரத்தில் லவன் குசன் இருவருக்கும் புத்திரகாமேஷ்டி யாகம்பற்றியும், ராம, லக்ஷ்மண, பரத சத்ருக்கனன் பிறப்பு பற்றியும் கூறிக்கொண்டிருந்தார் வால்மீகி.
***
விடிகாலை எழுந்ததும் கால் சோர நடக்க வேண்டும் போல் தோன்றியது. உறுதியான காலணிகளை அணிந்துகொண்டாள். அறையை விட்டு வெளியே வந்ததும் விடுதிப் பணியாளர் எதிர்ப் பட்டார். தேநீர் கொண்டு வரச் சொல்லிவிட்டு, வெளியே வராந்தா வின் படியில் அமர்ந்துகொண்டாள். கடும் பச்சையும், இளம் பச்சையும், வெளிர் பச்சையும் அலையலையாய் விரிந்தது கண்ணுக் கெட்டிய தூரம்வரை இரண்டு பச்சைகள் மோதிக்கொண்ட ஒரு பிளவிலிருந்து சூரியனின் மென்சிவப்புக் கிரணங்கள் வெளிப்படுவதும் மறைவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தன.
தேநீர் வந்தது. வாங்கிக் கொண்டு ஊதிஊதிக் குடிக்கலானாள். துளசி மணமும் ருசியும் இதமாக இருந்தது. கோப்பையைத் திருப்பித் தரும்போது, அந்தக் காட்டின் விஸ்தீரணம், எங்கெங்கு நடக்கலாம், செல்லும் வழி இவைபற்றி விசாரித்தாள். கிழக்குத் திசையைத் தேர்ந்தெடுத்து, சூரியனை எதிர்கொள்ள விரைபவள்போல் நடக்க ஆரம்பித்தாள்.
பல கிளைப் பாதைகள் ஒன்றிலிருந்து ஒன்று விரிந்தன. அவற்றி னுடே நடந்து செல்லச்செல்ல, அடர்ந்து விரிந்த மரங்கள் நிழல்போல் கவிந்துகொண்டு ஆகாயத்தை மறைத்தன. சட்டென்று சிலசமயம் வைரப் பொட்டாய் ஒளிரும் ஒர் ஒளிக்கற்றை இலைகளினூடே விரையும். மறையும்.
திடீரென்று ஒரு தண்மை வந்து தொட்டது. எதிரே ஒரு நீரோடை அதை எட்டும் முன்னர், சடேரென்று நீலமும் பச்சையுமாய் வாலைத் தொங்கவிட்டபடி தாழ்வாகப் பறந்தது ஒரு மயில். அந்த அதிர்ச்சியி லிருந்து மீளும் முன்பு தரையை எட்டி இங்கும் அங்கும் நடந்து பின்பு எதிர்பாரா ஒரு கணத்தில் தோகையை முழுவதும் விரித்து தத்தித்தத்தி ஆடத் தொடங்கியது. அவளுக்கு மட்டுமான ஆட்டம். சிறு வட்டத்துக்குள் நகர்ந்துநகர்ந்து அவளைப் பார்த்தபடி ஆட்டம். சற்றுத் துரத்தில் ஒடை.
மயிலின் முன் மண்டியிட்டு அமர்ந்து மெல்ல விசிக்கலானாள். புரியவில்லை மயிலே இலக்கு புரியவில்லை. இலக்கு இருக்கிறதா? இடர்களை விட்டு வரத் தெரிகிறது. தேடல் புரியவில்லை. எதைத் தேட எப்படித் தேட தேடுகிறேனா? இன்னும் எவ்வளவு தூரம்: இவ்வளவு தூரம் வந்தும் கனம் இறங்கவில்லை தேகத்திலிருந்து என் தேகம் லேசாக வேண்டும். காலைத் தரையில் வைத்து ஊஞ்சலை ஆட்ட உந்துவதுபோல் உந்தியதும் நான் மேலே எழ வேண்டும்.
மயில் ஆடிக்கொண்டிருந்தது.
மயிலே, மயிலே, மயிலே, மயிலே . . .
சற்றுத் துரத்திலிருந்து குரல்கள் கேட்டன.
“ஆயிக! த்யா மோரால பக்!” என்று மயிலைப் பார்த்து ஆச்சரியப் பட்டு,
“கட்டாயம் ரெண்டு தூறலாவது போடும். மயில் தனியா ஆடுது பாரு’ என்று மராட்டியில் பேசியபடி பெண்கள் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். கைகளில் உணவு மூட்டைகள் ஆட வந்தார்கள். ஒடையில் முகம் கழுவினார்கள். தலையில் கட்டிய துணியை உதறி முகத்தைத் துடைத்துக்கொண்டார்கள். கண்ணில் இவள் பட்டதும் வியப்பைக் காட்டினார்கள். உணவு மூட்டைகளைப் பிரித்துவிட்டு அவளை அழைத்தார்கள்.
அவள் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள். கனமான தினைமாவு ரொட்டி செக்கச் செவேலென்று துவையல். பூண்டும், மிளகாயும், வறுத்த நிலக்கடலையும், கொப்பரைத் தேங்காயும் கல் உப்பும் போட்டுக் கரகரவென்று அரைத்தது. ரொட்டியைப் பிய்த்து, துவை யலை வைத்துத் தந்தாள் ஒருத்தி, வெங்காயத்தை இரு உள்ளங் கைகளில் வைத்து நசுக்கி பாதி வெங்காயத்தைத் தந்தாள் இன்னொ ருத்தி. நாலைந்து பச்சை மிளகாய்களை இவள் பங்கு ரொட்டி மேல் ஒருத்தி வைத்தாள்.
“இல்ல. பழக்கமில்ல. இது உடம்புக்கு நல்லதில்ல தெரியுமா?” என்றாள் செந்திரு.
செந்திரு என்ற பெயரைக் கூற முடியாமல் செந்தியாபாயி என்று இவளை விளித்து,
“ராவ்தே பாயி. உடம்புக்கு நல்லதில்லேனா இத்தனை ருசி அதுக்கு ஏன் அந்த தேவ் வெச்சிருக்காரு ?’ என்றாள். வாயில் சுரந்த உமிழ் நீரைத் துப்பினாள்.
செந்திருவின் அம்மா கூறும் அதே பதில். அம்மாவுக்கும் புகை யிலைப் பழக்கம் உண்டு. எங்கு சென்றாலும் ஒரு வெற்றிலை பாக்கு புகையிலைக் கடையைத் தேடி அவள் கண்கள் அலையும். “வாய் நமநமன்னு இருக்குது” என்பாள். “வேண்டாமே” என்றால், “நான் புகையிலை போட்டா உனக்கு ஏன் உறுத்துது?” என்பாள். அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். அவர்தான் சிகரெட் பிடிப்பவராயிற்றே! “தானிகி தீனி சரிப்போயிந்தி” என்பாள் அம்மா தெலுங்கில். தன் பெற்றோர்களுடன் பல இடங்களில் வசித்தவள். கேரளத்திலிருந்து புகையிலையும், ஆந்திரத்திலிருந்து இசைப்பற்றும் வந்தது என்பாள். “நல்ல வேளை செந்து, ஆந்திராவுலே சில இடங்கள்ல பெண்கள் பெரியபெரிய சுருட்டுப் பிடிப்பாங்களாம், அந்தப் பழக்கம் வரல உங்கம்மாவுக்கு” என்பார் அப்பா. “இப்பவும்தான் என்ன? க்யூபா லேந்து ஒரு ஹவானா சுருட்டுப் பெட்டி கொண்டாங்க. சுருட்டுப் பிடிச்சுக் காட்டுறேன்” என்பாள் அம்மா. அவளுக்கும் திருமலையின் அம்மாவுக்கும் இதில் ஏக ஒற்றுமை. இடையில் திருமலையின் அம்மாவுக்கு உடம்பு சற்றுச் சுகமில்லாமல் போனபோது செந்திரு அவள் புகையிலையை நிறுத்தினாள். வெற்றிலைப் பெட்டியைத்
திறந்து பார்த்துப்பார்த்துப் பொருமுவாள். “இங்க பாரு, ராசாத்தி. என்னைப் பட்டினி வேணா போடு. புகையிலை இல்லாம அடிக்காத” என்று தாடையைப் பிடித்துக் கெஞ்சுவாள்.
“ஏய் சவிதாபாயி! உன் புருஷனுக்கு அடுத்த பெண்டாட்டியா தேடறே கேள்வி மேல கேள்வியா கேட்டுக்கிட்டு ‘
“ஆமா. செந்தியாபாயிக்கு கல்யாணம் கட்டற வயசு, அந்தக் குடிகாரனுக்கும் இன்னொரு பெண்டாட்டிதான் கேடு! ” சவிதாபாயி எழுந்து உட்கார்ந்து கொண்டு தலையை அவிழ்த்து முடிந்து கொண்டாள்.
செந்திரு சிரித்தபடி எழுந்துகொண்டாள். குழந்தைகள் வெளி நாட்டில் படிப்பதாகவும், புருஷன், குழந்தைகள் எல்லோரையும் விட்டுவிட்டுத் தனியாக இருக்க வந்திருப்பதாகவும் கூறினாள்.
“அப்படியா? சரிதான்” என்றுவிட்டு அவர்கள் போக முற்பட்டார் கள். விடுதிப் பக்கம் வந்தால் அவளைப் பார்ப்பதாகக் கூறிவிட்டு, விறுவிறுவென்று நடந்து போனார்கள்.
மயில் எப்போதோ போய்விட்டிருந்தது. அதன் நடனம் மட்டும் நீலமும் பச்சையுமாய் மனதில் ஒடியது.
விடுதியை நோக்கி நடக்கலானாள்.
மயில்தான் திருமலையின் வியாபாரச் சின்னம். நீண்ட தோகையைத் தரையில் பரப்பிப் பக்கவாட்டில் நிற்கும் ஆண் மயில். திருமலையின் அப்பாவுக்கு விபூதி, குங்கும வியாபாரம்தான். அவர் கள் குடும்பத்தின் குரு போன்ற சாமியார் ஒருவர் தந்த சின்னம் மயில். மயில்கழுத்துப் பச்சை நிறத்தில் ஒரு துணிப்பையில் விபூதி பொட்ட லங்களும், குங்கும டப்பாக்களுமாகத்தான் முதலில் திருமலையைச் சந்தித்தாள். பம்பாயில் இவள் பெரியம்மா வீட்டில் கூடிய பெண் சங்க அங்கத்தினர்கள் ஆர்டர் தந்ததை கொண்டு வந்திருந்தான். மோட்டார் பைக்கில் வெகு துாரம் வந்திருக்க வேண்டும். களைத்திருந்தான். தண்ணிர் கேட்டான் குடிக்க ஒரு கிளாசில் ஜில்லென்ற நீரும், இன்னொன்றில் எலுமிச்சம்பழ சர்பத்தும் எடுத்துக்கொண்டு போய்க்கொடுத்தாள் பெரியம்மா கூறியபடி சகஜமாகச் சிரித்தபடி, “பம்பாய் சுத்திப் பார்க்க வந்தீங்களா?’ என்றான்.
“இல்ல. மேல படிக்க வந்திருக்கேன்” என்றாள். “என்ன படிக்க ?”
“எம்.எஸ்.ஸி. டெக்ஸ்டயில்ஸ்.” “செய்யுங்க.” கிளாசைக் கீழே வைத்தான். “நீங்க என்ன செய்யlங்க?’ என்றாள்.
“வியாபாரம்தான். அப்பாவோட பி. எஸ்ஸி வரைக்கும் படிச்சேன். அப்பாவுக்கு உடம்பு முடியலை. நான் எறங்கிட்டேன் இதுல என் தங்கச்சி எம். ஏ. பண்ணுறா.”
“எங்க ?”
“இங்கதான்” என்றான். பெரியம்மா வந்து, “என்ன திருமலை, அம்மாவையும் தங்கச்சி யையும் அழைச்சிட்டு வரக்கூடாதா?’ என்றாள். “இல்ல. அம்மாவுக்கு உடம்பு சொகமில்ல.” “என்ன சொகமில்ல? பாத்து ஒரு வருஷமாச்சுது” என்றாள். “சும்மா களைப்புதான். கூட்டியாரேன் ஒரு நாளு” என்றான். “இவ செந்திரு” என்றாள் பெரியம்மா. “பேசிட்டிருந்தோம்” என்றான். “வரேன்” என்றுவிட்டுப் போனான். மேம்போக்கான உரையாடல்தான். ஆனால் அவன் மனத்தில் நின்றான். நெடுநெடுவென்று உயரம். கரிய மேனி, பளிரென்ற வெள்ளைப் பின்னணியில் மினுமினுத்த கறுப்புக் கண்கள். உதட்டைச் சற்றே மறைத்த மீசை, கடைந்தெடுத்தாற்போல் உடம்பு. உப்பிப் பருக்காத அடக்கமான பிருஷ்டங்கள். கால்சராயின் பின்பாகம் பிதுங்கி வழியாமல், சற்றுத் தொளதொளத்ததுபோல் அதில் மடிப்பு விழச் செய்யும் பிருஷ்டங்கள். ஆண்களுக்குப் பின்பாகம் முறுக்கிக் கட்டினாற்போல் அமுங்கி இருக்க வேண்டும் என்பது இவள் அபிப்பிராயம்.
அப்பாவுக்கு எழுதினாள் அவனைப் பற்றி அவன் தன் சொந்த வியாபாரத்துக்காக உழைப்பது பிடித்திருக்கிறது என்றாள். அவன் ஆடம்பரமற்ற எளிமை அவளை ஈர்க்கிறது என்று எழுதினாள். கொல்லென்று பூத்த காப்பி மலர்களிடையே இருந்த அப்பாவுக்கு விபூதி குங்கும சமாசாரம் ஒத்துவரவில்லை. கண்டுகொள்ளாமல் இருந்தார்.
இவள் எம்.எஸ்ஸி முடிப்பதற்குள் திருமலையுடனும் அவன் குடும்பத்துடனும் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் அப்பாவுக்கு எழுதினாள். அப்பா தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
“என்ன செந்து, காதலா?”
“ம்.”
“மீசை இருக்கா அவனுக்கு ?”
“ம்.”
“என் வீட்டுல ஒரு வில்லு இருக்கு, வந்து முறிச்சாத்தான் கல்யாணம்னுட்டுச் சொல்லிடு.”
‘போங்கப்பா.’
“எப்படி இருக்கான் பாக்குறதுக்கு ?”
“பச்சைமா மலை போல் மேனி…” என்று மெல்லப் பாடினாள். அப்பா சிரித்தார்.
மத்தியான வெய்யில் தகிக்காமல் விருட்சங்கள் நிழல் பரப்பின. வேகநடை போட்டு நடந்தாள். மயில் கண்ணில் படவில்லை எங்கும்.
***
முற்றத்தில் தவழ்ந்த போதெல்லாம் குழந்தை சீதையின் கண்களில் பட்டபடி அது கிடந்தது. அந்த வில். கனமான வில். அதன் மேல் சாய்ந்தபடியும் அதைத் தொட்டபடியும்தான் அவள் நடை பயின்றாள். நினைவு வந்த நாளிலிருந்து அதை சிவன் வில் என்று அறிந்து கொண்டாள்.
பகலிலெல்லாம் காட்டினுள் ஒடியாடுவதுதான் பொழுதுபோக்கு. தேன்போல் இனிக்கும் நீர் உள்ள சுனை, அல்லியும் தாமரையும் பூத்த குளங்கள். நன்றாகப் பழுத்தப் பலாப்பழம் பிளந்து கிடக்கும் மரங்கள், மான்கள் நீர் பருக வரும் ஓடைகள், தேனடைகள் தொங்கும் பாறைகள், ஒய்வெடுக்க வாகான நிழல் பரப்பும் தருக்கள் இவை அனைத்தும் உள்ள இடங்கள் அவளுக்குத் தெரியும்.
ஒருநாள், வீட்டில் இருந்து அன்னைக்கு உதவ வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டாள். அன்னை ஒய்வெடுக்கும்போது பசுஞ்சாணம் கொண்டு பெரிய முற்றத்தை மெழுக ஆரம்பித்தாள். வில்லின் அருகில் வந்ததும், ஒரு கையால் வில்லைத் துக்கிப் பிடித்து, இன்னொரு கையால் அதன் கீழே மெழுக ஆரம்பித்தாள். மெழுகிவிட்டு வில்லைக் கீழே வைக்கும் போது தந்தை உள்ளே வந்தார். வியப்பில் விரிந்தன அவர் கண்கள்.
சாணக் கையுடன் இருந்த அவளை எழுப்பி நிற்க வைத்து அணைத்துக்கொண்டார்.
“யாரும் தூக்க முடியாத வில்லை என் மகள் ஒரு கையால் தூக்கிவிட்டாள். இதைத் தூக்கி முறிப்பவன் தான் உன்னை மணக்கலாம்” என்றார்.
வில்லைத் திரும்பிப் பார்த்தாள்.
வில்லை முறித்தவனைத்தான் மணந்தாள். ஆனால் அவன் அவளுக்குப் புதியவனல்ல. ஒரு மாலை கனிமரங்கள் உள்ள தோட்டத்திற்குக் கனி கொய்யப் போனவள் அங்கு தருக்களின் நடுவே நின்றுகொண்டிருந்த ஒரு யுவனைப் பார்த்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவன் தன் கைகளை விரித்த போது தன்னையறியாமல் அவன் அணைப்பில் புகுந்து கொண்டாள். பிறகு, தன் கைவளையல்கள் இந்த அணைப்பில் உடைந்தால் அவள் என்ன விளக்கம் தரமுடியும் என்று கூறித் தன்னை அணைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டாள். வீடு நோக்கி ஓடினாள். வாயிலில் தயங்கி நின்றாள். அவள் கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன, அவள் முகம் ஏன் வாட்டம் கண்டி ருக்கிறது என்று கேட்டாள் அவள் அன்னை. அன்னை தன்னைக் கடிந்தாலும், தண்டித்தாலும், வீட்டை விட்டே வெளியேற்றினாலும் அதை ஏற்கச் சித்தமாகயிருப்பதாகக் கூறி, அவள் ராமனைக் கனிவனத்தில் சந்தித்ததையும், அவன் அணைப்பில் இருந்ததையும் வெளிப்படையாகக் கூறினாள். அதே ராமன்தான் வில்லை முறித்து அவளை மணக்கப்போகிறான் என்பது உறுதி என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் அன்னை.
வில்லை முறித்தான். சீதையை மணந்தான்.
விளக்கு ஏற்றும் நேரம் ஆகிவிட்டது. எழுந்துகொண்டாள் சீதை. லவனும் குசனும் தங்கள் வில் அம்புகளோடு உள்ளே ஓடி வந்தனர். ஒரு மான்குட்டியைத் தொடர்ந்து ஓடி, காட்டில் வெகுதூரம்வரை போய்விட்டதாய் மூச்சிறைக்கக் கூறினர். மான் எவ்வளவு அழகு, அதன் கண்களில் எவ்வளவு மருட்சி என்று வியந்துபோயினர். ஒடும் மானை ஓட விட்டுவிட வேண்டும், துரத்தக் கூடாது என்றாள் சீதை.
***
மாலையில் வந்த தேநீரில் இஞ்சி மணம் வீசியது. காலையில் மேற்கொண்ட நீண்ட நடை உடம்பில் ஒரு சுகமான அசதியை ஏற்படுத்தியிருந்தது. சூடான தேநீர் ஒத்தடம் போல் இருந்தது. மத்தியானத் துரக்கக் கிறக்கம் இன்னும் போகவில்லை.
விடுதிக்குத் திரும்பியவுடனேயே திருமலையுடன் பேச நேரிட்டது. மூன்று முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாகவும் அவள் இல்லையென்றதும் கவலைப்பட்டுவிட்டதாகவும் கூறினான்.
“கவலை ஏன் படனும் நான் கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்னுட்டுக் கிளம்பினேன். அப்படியே ரொம்ப துரம் போயிட்டேன்.”
“இப்பிடிப் பிசாசு மாதிரி ஏன் அலையனும்? அங்க ஏதாவது புளியமரம் இருக்குதா பாரு. அதுதான் உனக்குச் சரியான இடம்.”
“கார்மேகத்துக்குக் கனடா போகணுமாம் அடுத்த வார்ம். அங்க போறப்ப தங்கச்சியைப் பார்ப்பேன்னுட்டுச் சொன்னான். வள்ளியும் அண்ணன் வரப்போகுதுன்னுட்டுச் சொல்லிச்சு அம்மாவோட பேசணும்னாங்க ரெண்டு பேரும்.”
“வெச்சிடவா ?”
“ஏன் ?”
“பணம் செலவாகுது இல்ல?”
“எப்ப வரதாக’
“தெரியலை’ என்றாள். தனிமையில் அவனைப் பெயரிட்டு அழைப்பதுபோல மீண்டும் ஒருமுறை கூறினாள்: “தெரியலை திருமலை.” வேகமாக மூச்சை உள்ளிழுக்கும் ஒசை எதிர்முனையில் கேட்டது.
“என்னதான் நினைச்சுட்டிருக்க நீ?” “நான் லேசாகணும். நான் லேசாகணும்.”
“இங்க வந்திடு. வந்திடும்மா.”
“இல்ல. தனியாத்தான்.”
“தனியா அந்தக் காட்டுலயா?
“ஆமா. காட்டு வழியானாலும் கள்ளர் பயமானாலும்…”
மெளனம்.
தினமும் அழைக்கப் போகிறான். வந்துவிடு எனப் போகிறான். காலணிகளை அணிந்துகொண்டு மேற்குப் பக்கம் நடக்கத் தொடங்கினாள். பத்தாம் மாதமே அவள் நடக்க ஆரம்பித்துவிட்டாளாம். பதினோராம் மாதம் பம்பாயில் பெரியம்மா வீட்டுக்கு வந்திருந்த போது தெருவைக் கடந்து எதிரே சிவாஜி பார்க்கினுள்ளே தனியாகப் போய்விட்டாள். காக்கி உடை அணிந்த சிறுவர்கள் ட்ரில் செய்து கொண்டிருந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. எறும்புப் புற்றின் மேல் நின்றுகொண்டிருந்ததும், எறும்பு காலைக் கடித்ததும், அதன் வலியும் மறக்கவில்லை. ஏதாவது ஒன்று என்றால் விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்துவிடுவாள். “அவ காலை எறும்பு கடிக்குது. அதான் ஒடறா” என்று கேலிசெய்வார்கள் வீட்டில், அம்மா இறந்த போதும், அப்பா இறந்தபோதும் கால்கள் வீங்கும் வரை நடந்தாள். திரு மலையும், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தம்பியும் வலுக்கட்டாய மாகப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
எங்கு பார்த்தாலும் எறும்புப் புற்றுகள். சற்று வேறுவழியில் போய்விட்டால், சற்று விலகிப் போய்விட்டால் உடனே காலைக் கடிக்கும் எறும்புகள். பல ஊர்களில், வனாந்திரங்களில் பயமின்றி அலையவேண்டும். கிடைக்கும் திண்ணையில் படுக்கவேண்டும். இரவில் தாரகைகள் மின்னும் கரிய வானத்தைப் பார்த்தபடி உரத்த குரலில், அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பி, எந்த நோக்கமுமின்றி, எந்தக் கடவுளையும் நினைக்காமல், “பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வயிரம், நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி …” என்றோ, வார்த்தை ஒலிகள், தாளம் இவற்றின் சுகத்துக்காக, காவடிச்சிந்து மெட்டில், “காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது காளிசக்தியென்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டுலவுமொரு வண்டு” என்றோ பாடவேண்டும். கண்ணில் பட்ட குளத்தில் முங்கியெழ வேண்டும்.
திருமலையின் தந்தை,
தொந்தி சரிய மயிரே வெளிற நிறை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்க ஒருகை தடிமேல் வர மகளிர்
நகையாடி …
என்று ஆரம்பித்து,
மங்கையழுது விழவே யமபடர்கள்
நின்று செறுவ மலமே ஒழுக உயிர்
துஞ்சு பொழுது கடிதே மயிலின் மிசை
வரவேணும்
என்று உருகிஉருகிப் பாடுவார். எல்லாத் தரிசனங்களும், தேடல்களும், வயதான பிறகுதான். ஆண்களுக்குதான். இவள் ஆயிரம் விளக்கங்கள் தரவேண்டும். சாக்குச் சொல்ல வேண்டும். இல்லை கண்ணனையோ, சிவனையோ வரித்துவிட வேண்டும். “மோரேதோ கிரிதர கோபால”, “வாரணமாயிரம்”, “தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்று தஞ்சமடைந்துவிடவேண்டும். உடனே முக்தி ஒளியுடன் ஒன்றிப்போக லாம். புஷ்பக விமானப் பயணங்கள் எல்லாம் ஆண் பக்தர்களுக்கு. துகாராமுக்கு வரும். ஜனாபாயிக்குக் கிடையாது. ஸ்துல வடிவில் தரிசனங்கள், வானூர்தி என்று எந்த இலக்கும் இல்லை அவளிடம். ஏதோ ஒரு விஸ்தரிப்பை அவள் அடைய நினைத்தாள். எல்லா எல்லைகளும் உடைபடும் விஸ்தரிப்பு.
திருமலையின் அப்பா மனிதாபிமானம் உள்ளவர். நாணயஸ்தர். திருமலை ஏதாவது கேட்டால், “வாக்குக் குடுத்திட்டேன் தம்பி” என்பார். அது அவர் வாயிலிருந்து நிதம் வரும் சொல். திருமலையின் அம்மா ஜாடிக்கேற்ற மூடி அவள் மேற்பார்வையில்தான் விபூதி குங்குமம் தயாராகியது. இவர்கள் திருமணம் நடந்த உடனேயே பெரியவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.
“ஏம்பா, மகன் கல்யாணம் ஆனதும் பொறுப்புலேந்து வெலகிக் கிடுவேன்னுட்டு வாக்குக் குடுத்திட்டீங்களா யாருக்காச்சும்?” என்று கேலி செய்தான் திருமலை.
“ஆமா, குடுத்திட்டேன், உங்க அம்மாவுக்கு” என்றார். செந்திருவை அழைத்து, “இதப் பாரும்மா, ஒரு கதை சொல்வாங்க. தசரதன் கையில் முள்ளு குத்துகிச்சாம். விண்விண்ணுனுட்டு வலி தெறிக்கு தாம். தாங்க முடியாம துடிக்கிறப்போ கைகேயி வந்து, மெள்ளமெள்ள முள்ளை வெளியே எடுத்திட்டாளாம். உடனே, எது வேணா தரேன்னுட்டு வாக்குக் குடுத்திட்டாராம். அந்த மாதிரி உன் மாமி யார்க்காரி முதுகு தேச்சபோது, தலைக்கு எண்ணெய் வச்சபோது, தலைவலிக்குப் பிடிச்சுவிட்டபோதுன்னு ஏகப்பட்ட வாக்குக் குடுத்திட்டேன். இப்ப கழுத்தை நெருக்குறா. இப்படியே கொடக் கானல், ஊட்டி, குற்றாலம் அப்படீன்னு ஊர் சுத்தப் போவோங்கறா” என்று கூறிவிட்டுச் சிரித்தார்.
“வெக்கங்கெட்ட மனுசன்” என்று கூடச்சேர்ந்து சிரித்தாள் திருமலையின் அம்மா.
மெள்ளமெள்ள வியாபாரத்தைத் தயார் மசாலாப்பொடியின்புறம் திருப்பிப் பின்பு பட்டுத்துணி, ஆயத்த ஆடைகள் என்று பலவாறு விரிவடையச் செய்யத் திருமலையுடன் அயர்வின்றி உழைத்தாள். ஒட்டப் பந்தயத்தில் எல்லையைத் தொட ஓடுவதுபோல் வியாபாரக் காட்டினுள் ஒட்டம் ஒரு பதினான்கு ஆண்டுகள். கனடா வரை எட்டியாகி விட்டது. முற்றிலும் வேறுபட்ட தோல் வியாபாரத்தில் கடந்த எட்டு ஆண்டுகள் தோல்பை, பெட்டி, கைப்பை, தோள்பை, சில்லறை வைக்கும் சிறுபை என்று இவளாக முன்நின்று பெருக்கி னாள் வியாபாரத்தை அதில் அவளைச் சமபங்குக் கூட்டாளியாக்குவ தாகப் பேச்சு. அது முடியாமல் போயிற்று. உடனே ஒரு வெறி வந்தது நடக்க நீண்டநீண்ட தூரம் நடக்க வியாபாரத்திலிருந்து புறக்கணிக்கப் பட்ட அந்த நிகழ்வு ஒரு காரணமில்லை. நிமித்தம்தான்.
எதிரே சூரிய அஸ்தமனம் ஓர் ஒலியில்லா நாடகம் போல் நிகழ்ந்துகொண்டிருந்தது. வண்ணக் கலவைகளை வானில் பூசிவிட்டு, மிகமிக மெள்ள இறங்கிக் கொண்டிருந்த சிவப்பு உருண்டை திடீரென்று காணாமல் போயிற்று. வானில் அதன் ஈவு. உட்கார்ந்து கொண்டாள். நேரம் போனது தெரியவில்லை. பேச்சுக் குரல்கள் கேட்டன.
ருக்மணிபாயும், சவிதாபாயும் குடங்களோடு வந்து கொண்டிருந் தனர். வீட்டில் குடிக்கும் தண்ணிர் தீர்ந்து விட்டதாம். அவர்களுடன் நடந்தாள். அருகிலேயே ஒரு சிறு பள்ளத்தில் நீர். கட்டிவைத்தது போல், அசைவு இல்லாமல் தெளிவாய்த் தெரிந்தது. நிலா வெளிச் சத்தின் ஒளிக்கற்றைகள் சிதறிக் கிடந்தன. அதன்மேல் ஒளிக்கற்றை களின் இடையே நிலா சுத்தமாகத் தெரிந்தது. நிலவைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்றது நீர், ருக்மணிபாயி குடத்தை முக்கியதும் நிலவு கலைந்து சிதறி நீரெங்கும் ஓடியது. குடத்தை நிமிர்த்தி வைத்ததும் அதன் குறுகிய வாயினுள் நிலவு. சவிதாபாயி தன் குடத்தை முக்கி விட்டு நிமிர்த்தினாள். அதனுள்ளும் நிலவு மிதந்தது. பள்ளத்திலுள்ள நீர் மீண்டும் எந்த அசைவும் இல்லாமல் நிலவுடன் கிடந்தது.
சவிதாபாயுடனும் ருக்மணிபாயுடனும் திரும்பி விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவர்கள் இடுப்பில் இருந்த குடங்களில் மிதந்தபடி வந்தது நிலவு. இடையில் அவள் தாகம் என்றதும் ஏந்திய அவள் கைகளில் நீரை சவிதாபாயி ஊற்ற, நிலவு அவள் கைகளில் ஒரு வினாடி அடங்கி, சிறிது வாயினுள் போய், சிறிது விரல்களுடே வழிந்து போயிற்று. ஏந்திய கைகளில் உள்ள நீரில் நிலவை அவள் ஒரு வினாடி பார்த்துவிட்டு, தண்ணிரைக் குடித்த பின்பு பார்வையைக் குவிந்த கைகள் மேல் மீண்டும் ஓடவிட்டதும், சவிதாபாயி சிரித்தாள்.
ஆமாம். காட்டில் உள்ள சிறு வீடுகளின் திறந்த முற்றத்தில் உள்ள தண்ணிர்க் குடங்களிலோ, தண்ணிர் ஒழுகித் தேங்கிய குட்டைகளிலோ எண்ணற்ற நிலவுகள். ஒரு சிறு பாத்திரத்தை வைத்தால் அதில் கூட பைசா அளவு நிலவு மிதக்குமோ என்னவோ. தண்ணிர் இருக்கும்வரை மிதக்கும் நிலவுகள். அள்ள அள்ள நீரில் வந்து, ஒழுகஒழுக ஒடிவிடும் நிலவுகள் ஆகாயத்தினின்றும் இறக்கப்பட்ட நிலவு. விஸ்தரிப்பு. நிலவின் விஸ்தரிப்பு. உடலில் ஒரு தண்மை பரவியது. நிலவை உண்டவள் அவள். உண்டுவிட்டு, வானில் மீதமும் வைத்தவள்.
விடுதியை எட்டியதும் விடைபெற்றுக்கொண்டு விரைந்தனர் அவர்கள் இருவரும். சாப்பாட்டு அறையில் அவளுக்கான உணவு மூடி வைக்கப்பட்டு இருந்தது. சாப்பிட்டுவிட்டு அறைக்குப் போய் விளக்கைப் போட்டாள். மேசையின் முன் அமர்ந்தாள்.
***
வாழ்வின் பெரும் பகுதி அடவியில் கழிந்துவிட்டது சீதைக்கு. பூக்களையும், பழங்களையும் இலைகளையும் கொய்து விளையாடிய சிறுமிப் பருவத்தின் வனம் பல ரகசியங்களை உள்ளடக்கிய அற்புதமாக இருந்தது. பிறகு கணவனுடன் வாழ்ந்த புகலிடம் பல அனுபவங்களை உருவாக்கிய இடம். வெகுளிப் பெண் சீதை. குளத்தில் குளிக்கப் போனபோது, தெள்ளென்ற நீரில் தன் உரு வத்தைப் பார்த்து முதல் முறை ஒடோடி வந்து குளத்தினுள் நிலவும், தேனிக் கூட்டமும் இருப்பதாக வந்து கூற, ராமன் அவளுடன் வந்து, அது அவள் முகம், தேனிக்கூட்டம் என்று அவள் நினைத்தது சுருண்டு சுருண்டு பறந்த அவள் கூந்தல் என்று சொல்ல வேண்டிய தாயிற்று. இன்னொரு முறையும் அது நடந்தது. இந்த முறை தெளிந்த நீரில் தெரிந்த முகம் பிரகாசமாக இருந்தது. வனப்பு மிகுந்து இருந்தது. ராமனுடன் சண்டையிட ஒடினாள். ஏக பத்தினி என்று கூறுவ தெல்லாம் எவ்வளவு பொய், இன்னொரு பெண்ணை அவன் மறைத்து வைத்திருக்கிறான் என்று குற்றம் சாட்டினாள். ராமன் மீண்டும் அவளுடன் வந்து முதலில் அவளை நீரில் பார்க்கச் சொன்னான். அந்தப் பெண்ணின் எழிலுருவம் தெரிந்தது. அந்தப் பெண்ணின் மணாளனைக் காட்டுகிறேன் என்று கூறி அவன் அவள ருகில் வந்து நிற்க, அப்பெண்ணின் உருவத்தின் அருகே ராமனின் உருவம் தெரிந்ததும் தன் உருவம் புரிந்தது. வெட்கினாள். அவன் முழுவதும் தனக்குரியவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள். சிறையிருந்ததும் ஒரு வனம்தான். இப்போது அடைக்கலமாகி இருப்பதும் வனம்தான்.
எவ்வளவு தீவிரத்துடன், மகவின் பிடிவாதத்துடன் அவள் ராமனை மட்டுமே நினைத்திருந்தாள் அந்த வனச்சிறையில்: யுத்தம் முடிந்த அன்று போர்க்களத்தில் பலர் எதிரே ராமன் கூறியது என்ன? அனுமன் மூலம் அலங்கரித்துக் கொண்டு வரும்படி கூறியதும் அசோக வனத்தில் எப்படி இருந்தாளோ அப்படியே வருவதாகத் தானே அவள் கூறினாள் வற்புறுத்தி அலங்கரிக்கப் பட்டபோதுகூட அங்கிருந்த எதிலும் அவளுக்கு நாட்ட மில்லை. மரத்தின் கீழே அவள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே ஒரு கல் இருந்தது. உடலெல்லாம் வரண்டு போய், மீட்கப்பட்டு அயோத்தி செல்லும் நாளை எண்ணி ஏங்கும்போது, சந்தனம் அரைக்க அந்தக்கல் எவ்வளவு உபயோகமாக இருக்கும் என்று எண்ணியதுண்டு. அதை அனுமனிடம் கூறியதும் அவன் கல்லைக் கெல்லி எடுக்க முயன்றான். பெரியவர் ஜாம்பவான் தடுத்து, விபீஷணனி டம் நாட்டைத் தந்தாகி விட்டது, அதிலிருந்த எதுவும் அவள் கேட்காமல் பெறக்கூடாது என்ற பொருளில், கொடுத்துவிட்ட ஒன்றைத் திரும்ப வாங்கக் கூடாது என்றார். மானையும், கனியையும், பூவையும் இச் சித்த பெண் அவள். ராச்சிய சுகங்களைத் துறந்தவள். காட்டையே துணையாக்கிக் கொண்டவள். அத்தனை பெரிய இலங்கையிலிருந்து ஒரு கல்தான் வேண்டும் என்று கேட்டாள். ஒர் அரசகுமாரியின் கம்பீரத்துடன் அவள் நடந்துகொள்ளவில்லை என்று சொல்கிறாரோ என்று வெட்கப்பட்டாள்.
பலர் இறந்து கிடந்த பெரிய போர்க்களத்தில் அவள் கால்கள் பின்னிக்கொண்டன. தான் ஒருத்தி மீட்கப் படவா இத்தனை சாவு என்று எண்ணினாள் பலர் முன்னிலையில் ராமன் தன்னை ஒரு காட்சிப் பொருளாக்குவதாகத் தோன்றியது. யார் கண்ணிலும் படாமல் பாதுகாப்புடன் அசோகவனத்தில் இதுகாறும் இருந்தவள், எல்லாப்புறமும் திறந்து கிடந்த போர்க் களத்தில், சண்டையிட்ட களைப்புடனும், காயத்துட னும் நின்ற, அவள் அறியா பல ஆண்கள் நடுவே, அவளைப் பார்க்க முந்தும் கூட்டத்தின் இடையே எந்தத் துயரும் படாதவள் போல் அலங்கரித்துக் கொண்டு, மீட்கப்பட்டவள் நான் என்று பிரகடனப் படுத்திக்கொண்டு சென்றாள். அத்தனை அலங்காரமும் ராமனை மகிழ்விக்க அல்ல என்று பிறகு தெரிந்தது. அவளைச் சுற்றி எட்டுத் திக்குகள் இருப்பதாகவும் அவள் எந்தத் திக்கிலும் யாருடன் வேண்டுமானாலும் செல்ல லாம் என்றும் கூறினான் ராமன். அவன் போரிட்டது
அவளை மீட்க அல்ல, அவன் குலப்பெருமையைக் காக்க என்றான். லக்ஷமணன், பரதன், விபீஷணன், சுக்ரீவன் இவர்களில் யாருடன் வேண்டுமானாலும் அவள் வாழலாம் என்றான். அவளை அரசகுமாரிபோல் நடந்து கொள்ளப் பணித்த ஜாம்பவான்களின் நாக்கு அப்போது அசையவில்லை. தன் குலப்பெருமையை கூறியவன் அவளும் ஒரு பெருமை வாய்ந்த குலத்தவள் என்பதை மறந்துவிடவில்லையா? அவனுக்குப் போர் செய்ய வேண்டிய அவசியத்தை உண்டாக்கியது அவள் அந்தப் பெருமையைக் காக்க நினைத்ததால்தானே? இல்லா விட்டால், அவளை அன்னைபோல் கருதிய அனுமனின் தோளில் அமர்ந்து அவள் இலங்கையை விட்டு வந்திருக்கமாட்டாளா?
அனுமன் இலங்கைக்குத் தீ மூட்டினான். ராமனால் செய்யக் கூடியது துணைவி மனத்தில் தீ மூட்டுவதுதான். அத்தனை நாட்களின் பிரிவுக்குப் பின்பு தன்னைப் போற்றிய லகஷ்மணனிடம் அவள் கூறிய முதல் சொற்கள், “லகஷ்மணா, தீ மூட்டு” என்பதுதான்.
எழுதி முடித்த பிறகும் அந்தக் கணம் மனதில் கனத்தது. சற்றுத் தூரத்தே லவனும் குசனும் அகலிகை சாப விமோசனக் கதையை வால்மீகி சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஒரு நிகழ்வு, வதந்தி யாகி, கதையாவதற்குள் எவ்வளவு மாற்றங்கள் அகலிகையின் மனம் இறுகிப்போனது. ராமனின் பாதங்களை அவள் பணிந்ததும் அவள் மனம் இளகி மீண்டும் ஜீவ ஊற்றின் ரசங்கள் அதில் பொங்கின. ஆனால் கல்லைப் பெண்ணாக்குவதில் இன்னும் அதிக அற்புதம் கலந்த நாடகத்தன்மை இருக்கிறது என்று நினைத்தபடி எழுந்தாள்.
***
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு எல்லாத் திசைகளிலும் பல முறைகள் நடந்தாகிவிட்டது. நடக்கநடக்க முதுகின் அடியில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது ஏதோ ஒன்று முளைக்க முற்படுவது போல. இரவில் படுக்கும்போது அது உடம்பெங்கும் பரவித் தாலாட்டியது. கிழக்கே மயில் ஆடிய ஒடையைத் தாண்டி ஒரு சிற்றருவி இருப்பதாகச் சொன்னார்கள். ஒருநாள் சிற்றருவியைச் சந்திக்கப் புறப்பட்டாள். உலர்வதற்காகத் தொங்கவிடப்பட்ட கூந்தல்போல் அடக்கமான அருவி அமர்ந்து பார்த்தபடி இருந்தபோது அருவியின் முனையில் ஒரு முகம் தெரிந்தது. சூரிய ஒளியில் உடம்பு பொன்போல் தகதகக்க, நீர் குடித்துக்கொண்டிருந்தது ஒரு மான். சிறிது குடித்துவிட்டு, தலையை அசைத்து நாற்புறமும் பார்த்தது. பிறகு மீண்டும் குடித்தது. மீண் டும் நிமிர்ந்தபோது இவளைப் பார்த்து விட்டது. துள்ளியது. மஞ்சள் புயலொன்று சுழன்று செல்வதைப்போல் ஓடியது.
மெல்ல அருவி முனைக்குச் சென்று மான் குடித்த இடத்தில் குப்புறப் படுத்துக்கொண்டாள். வயிற்றை எக்கிக்கொண்டு அருவி நீரைக் குடித்தாள். மான் குடித்தது போலவே வயிற்றினுள் நீர் இதுவரை அனுபவிக்காத ஒரு பாதையில் ஓடியது. தாகம் தணிந்ததும் திரும்பிப் படுத்தாள். மேலே ஆகாயம் வெளிர் நீலமாய் தோளிலிருந்த துப்பட்டா துணி காற்றில் பறந்து முகத்தின் மேல் விழுந்தது. அதனுரடே ஆகாயத்தை வெறித்தாள். கண்ணைச் சொக்கியதுதுக்கம். ரயில் வண்டியைப் பிடிக்க ஓட்டம், பாதைகளெல்லாம் ஏன் இப்படி மலையும் மடுவுமாக இருக்கிறது? யாரோ துரத்துவதுபோல் பயம் மனத்தினுள். குளம்பொலி கேட்டது. இந்த நகர வீதியில் குதிரைகளா? ரயில் நிலையத்தை எட்டிவிட்டாள். கம்பிப் பிடியைப் பிடித்துக்கொண்டு ஏறியாகிவிட்டது வண்டிக்குள் மூச்சு இறைத்தது. அமரும் முன் இன்னொரு ரயில் நிலையம் வந்துவிட்டது. சன்னல் வழியாகப் பார்த்தபோது சற்றுத் தூரத்தில் ஒரு பெஞ்சின் மேல் அப்பா உட்கார்ந்திருந்தார்.
“அப்பா, அப்பா, எப்படிப்பா இங்க?”
“உனக்காத்தான் காத்திட்டிருக்கேன்.”
‘எனக்காகவா ?”
“ஆமா. அப்பா மூக்குக் கண்ணாடியை ஒரு கையால் சரி செய்தபடி அவளைப் பார்த்துச் சிரித்தார்.
“நான் எறங்க முடியாதுப்பா.” “ஏன் ?’ “சாமான் இருக்குதுப்பா.” அப்பா சிரித்தார். கையை நீட்டினார் அவள் பக்கம். அவர் கையை நீட்டியபடி இருக்க வண்டி நகரத் தொடங்கியது.
“அப்பா, அப்பா. . .’ திடீரென்று ஒரு வரி கூட சுஸ்வரமாகப் பாடத் தெரியாத அப்பா, சப்ளாக்கட்டையுடன் பாடுபவர்போல் அபிநயித்து, குதித்துக் கொண்டே பாட ஆரம்பித்தார். அவளுக்கு முதல்முதல் பாட்டுக் கற்றுக் கொடுத்த ராமச்சந்திர பாகவதரின் குரலில் பாட்டு வெளிப் பட்டது அப்பாவின் தொண்டையிலிருந்து பின்னணியில் வீணையின் ஒசை புரந்தரதாசரின் தேவர்.நாமா.
“நானேக்கே படவணு, நானேக்கே பரதேசி?” ரயில் நிலையம் ரயிலுடன் நகர்ந்து வந்தது. ராமச்சந்திர பாகவதர் குருடர். வீணையும் பாட்டும் வீடுவீடாகப் போய்க் கற்றுக் கொடுப்பார். முதலில் அவர் வந்தபோது அம்மா, “ஒரு பாட்டுப் பாடுங்க” என்றாள். அம்மைத் தழும்பு முகத்தில் ஒரு கீற்றுப் புன்னகை பரவியது. வீணையில் சுருதி சேர்த்து, பாடிக் கொண்டே வாசித்தார். “நானேக்கே படவணு, நானேக்கே பரதேசி” — நானா ஏழை நானா பரதேசி? புரந்தரவிட்டலன் எனும் அரிய செல்வத்தைப் பெற்ற நான் ஏன் ஏழை, நான் ஏன் பரதேசி? சிந்துபைரவியில் அமைந்த பாடல் ஏற்ற இறக்கங்கள், வளைவு சுளிவுகள் இவற்றின் ஜாலம் உடையது சிந்துபைரவி. இந்தப் பாடலில் எந்த ஜால வித்தையும் இல்லாமல் வழுக்கும் நேர்பாதை.
லீவு நாட்களில் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு உறங்க நினைக்கும் வேளையில்தான் அவர் வருவார். ஒரு பையன் கையைப் பிடித்து அழைத்து வருவான். மத்தியானத் துாக்கம் போன கோபத்துடன் பாவாடையை உதறிவிட்டு இசை பயில இவள் உட்கார்ந்ததும் வீணையை மீட்டுவார். “யாத்தக்கம்மா கோபா’ என்று அன்பொழு கும் குரலில் கேட்பார். தொப்பு தொப்பென்று ஒன்றன் மேல் ஒன்றாக மனத்தில் விழுந்தன அத்தனை விவரங்களும், நினைவுகளும். வெறும் சொற்களாகவும், பிம்பங்களாகவும், இணைந்தும், கலைந்தும், மிதந்தும். துண்டுதுண்டுகளாக உடைந்துஉடைந்து. சன்னல் வெளியே அப்பா பாடியபடி.
குதித்துக்கொண்டு பாடிக்கொண்டிருந்த அப்பா குருடர் போல் தடுமாறினார். ரயில் வண்டி வேகம் எடுத்தது. ரயில் நிலையம் ஒர் இடத்தில் நின்றுவிட்டது. காற்றைக் கையால் துழாவியபடி வெகு துரத்தில் ஒரு சிறு பொட்டாக அப்பா. பாட்டு மட்டும் செவியருகே, நானேக்கே, நானேக்கே என்று ஒலித்தபடி சன்னலின் வெளியே கையை நீட்டினாள், முகத்தைக் கம்பிகளின் மேல் அழுத்தியபடி.
“அப்ப . . . அப்பா …”
“பாயி, செந்தியாபாயி …” என்ற குரல் கேட்டது.
சட்டென்று விழிப்பு வந்தது. ருக்மணிபாயி, மீனாபாயி, சவிதாபாயி மூவரும் கீழே படுத்திருந்த அவளைக் குனிந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.
“காய் ஜால பாயி?” என்றாள் மீனாபாயி.
எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
அவர்கள் அவளைத் தேடிக்கொண்டுதான் வந்திருந்தார்களாம். அவளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப்போக விரும்பினார்கள். மூவரின் கணவன்மார்களும், குடும்பத்தினரும் ஊரில் இல்லையாம். நால்வருமாக நடக்க ஆரம்பித்தனர். கனவிலிருந்து முழுவதும் மீ ளாமலேயே நடந்தாள் செந்திரு. கனவின் நீட்சி போலவே தோன்றியது.
சவிதாபாயினுடைய வீடுதான் சற்றுப் பெரிய அறையைக் கொண் டது. அதனுள் நுழைந்தனர். விளக்கை ஏற்றினாள் சவிதாபாயி. பின் கதவைத் திறந்தாள்.
வீட்டைத் துப்புரவாக வைத்திருந்தாள் சவிதாபாயி. அறையின் வலதுபக்கம் இரண்டு டிரங்குப் பெட்டிகள். இடதுபக்க மூலையில் ஒரு ஸ்டவ்வும், விறகடுப்பும். பின்புறக் கதவு பாதி திறந்திருந்தது. வெளியே வாழை மரங்கள். செடியில் உலர்த்திய துணிகள். மீனா பாயும், ருக்மணிபாயும் அவரவர் வீட்டுக்கு ஒடினர் எதையோ கொண்டு வர சற்று நேரத்தில் வந்தனர். அதற்குள் ஸ்டவ் மூட்டி சவிதாபாயி தேநீர் தயாரித்துவிட்டாள். நால்வரும் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டு தேநீர் குடித்தனர். அன்றைக்கு என்ன விசேஷம் என்றதும், அதெல்லாம் ஒன்றுமில்லை என்றும், இப்படி எப்போ தாவது அவர்கள் கூடுவது வழக்கம் என்றும் சொன்னார்கள். மீனாபாயி, ருக்மணிபாயி இருவரின் கணவன்மார்களும் அவர்களை விட்டு இந்தப் பக்கம், அந்தப் பக்கம் நகர்வதே அபூர்வம் என்று கிண்டல் செய்தாள் சவிதாபாயி, பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி, அவர்கள் கூட தாத்தா பாட்டிகள் ஆகப்போகிறார் கள். அப்படியும் இப்படிப் பிடித்துக் கொண்டு அலையும் புருஷன் மார்கள் என்று பரிகாசம் செய்தாள்.
“சும்மா இரு” என்று அதட்டினாள் அவளை ருக்மணிபாயி செல்லமாக ஒரு தட்டு போட்டு மூடிக்கொண்டுவந்திருந்த சிறு அலுமினியப் பாத்திரத்தைத் திறந்தாள். மசாலா தடவப்பட்ட மீ ன் துண்டுகள் மஞ்சளும் சிவப்புமாய். சவிதாபாயி விறகடுப்பை மூட்டி ஆழமில்லாத வாணலி ஒன்றைப் போட்டு எண்ணெயை ஊற்றினாள். மீனாபாயி அடுப்பருகே நகர்ந்து மீன் துண்டுகளைப் பொறிக்க ஆரம்பித்தாள். சவிதாபாயி வெங்காயம், பச்சை மிள காய் இரண்டையும் அரிந்து ஒரு தட்டில் வைக்க ஆரம்பித்தாள். ஸ்டவ்வை இன்னொரு தடவை மூட்டி, சப்பாத்திக் கல்லைப் போட்டாள் ருக்மணிபாயி, மீனாபாயி பிசைந்து கொண்டுவந்திருந்த தினை மாவிலிருந்து மாவை எடுத்து உருட்டி அடுப்பில் இருந்த சப்பாத்திக்கல் மேல் வைத்து, அடிக்கடி தண்ணிரில் கையை முக்கி, தட்டித்தட்டிச் சுட ஆரம்பித்தாள் ருக்மணிபாயி, துவையல் அரைக் கும் வேலை செந்திருவினுடையது ஆகியது. துவையல் அரைத்தபடி ருக்மணிபாயி பாக்ரி தட்டுவதைப் பார்த்தாள். அவள் வாய் ஒரு பாட்டை முணுமுணுத்தபடி இருந்தது. உற்றுக் கேட்டபோது அது பக்தை பஹறினிபாயியின் அரே ஸ்ன்ஸ்ார, ஸன்ஸ்ார பாடல் என்று தெரிந்தது. சம்சாரம் என்பது அடுப்பில் வைத்த பாக்ரி சுடும் கல்; கையை முதலில் சுட்டுக்கொண்ட பிறகுதான் பாக்ரி கிடைக்கும் என்று பஹினிபாயி பாடியது. பாக்ரி சுடும் லயகதியிலேயே இருந்தது.
எல்லாம் முடித்த பின்பு, கோதுமை மாவை எண்ணெய் விட்டுப் பிசைந்து துணியால் மூடி வைத்திருந்த தாம்பாளத்தை இழுத்து நடுவில் வைத்தாள் சவிதாபாயி, மசித்த கடலைப் பருப்பும், வெல்ல மும், தேங்காயும் கலந்த பூரணத்தை எடுத்தாள். கும்மென்று ஏலக்காய் மணம் வீசியது. முதலிலேயே ஒத்திகை பார்த்து வைத்துக்கொண்ட வர்கள் போல எண்ணெயில் அவ்வப்போது விரலை முக்கி எடுத்து பூரன்போளி தட்ட ஆரம்பித்தனர் நால்வரும் கொஞ்சம் தட்டுவதும் போட்டு எடுப்பதுமாய் பரபரவென்று இயங்கினாள் சவிதாபாயி, வெல்லமும் தேங்காயும் காயும் மணம் அறையில் பரவியது. பூரன் போளிகளை ஒரு சிறு அடுக்கில் வைத்து மூடினாள் சவிதாபாயி, மற்ற இருவரும் பின்பக்கம் விரைந்தனர். கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் சத்தம் கேட்டது. செந்திருவும் பிடிதுணியில் கையைத் துடைத்துவிட்டு எழுந்தாள். மற்ற இருவரும் இடுப்பைச் சுற்றி இறுகக் கட்டியிருந்த புடவைத் தலைப்பை அவிழ்த்துப் பிரித்து, முகத்தைத் துடைத்தபடி வந்தனர். சவிதாபாயி பின்கதவை நோக்கிப்போனாள். ஒரு லோட்டா தண்ணிரைக் குடித்தாள் மீனாபாயி. செந்திருவும் ஒரு லோட்டா நீரைப் பருகுவதற்குள் சவிதாபாயி வந்துவிட்டாள். செந்திரு வீட்டின் பின்புறம் போனபோது உடன் வந்து ஒதுங்குவதற்கான இடத்தைக் காட்டினாள் சவிதாபாயி. கிணற்றடியில் ஒரு வாளியில் தண்ணிரும், கிணற்றுக் கைப்பிடிச்சுவரில் சோப்புத் துண்டும் இருந்தது. குளிர்ந்த நீரை முகத்தில் வாரிவாரி அடித்துக்கொண்டாள். சோப்பைக் குழைத்து முகத்தில் பூசி மீண்டும் தண்ணிரால் முகம் கழுவியதும் இதமாக இருந்தது. துப்பட்டா துணியால் முகத்தைத் துடைத்தபடி எதிரே பார்த்தபோது வாழை மரங்கள், செடிகள், மூலையில் நின்ற வேப்பமரம் எல்லாம் இருளில் கோட்டோவியங்கள் போல் தெரிந்தன.
“செந்தியாபாயி… ‘ என்று உள்ளேயிருந்து அழைப்பு வந்தது.
உள்ளே மூவரும் கூந்தலை இறுக்கி முடிந்தபடி இருந்தனர். நன்றாகக் கழுவிய முகத்தில் நெற்றியிலும், தாடையிலும் இருந்த பச்சைக்குத்து மினுமினுத்தது. கால்களை நீட்டிக்கொண்டு சுவரில் விக்ராந்தியாய் சாய்ந்துகொண்டனர். இவளும் உட்கார்ந்ததும் வறுத்த மீன் வைத்த தட்டை நடுவில் வைத்தாள் மீனாபாயி. ருக்மணிபாயி இரண்டு குப்பிகளை ஒரு பையிலிருந்து எடுத்து வைத்தாள் நடுவே.
“பனங்கள்” என்றாள்.
மற்ற இருவரும் கிளாஸ்களை வைத்தனர்.
“செந்தியாபாயிக்கு பனங்கள் குடிச்சுப் பழக்கம் உண்டா?” என்றாள் ருக்மணிபாயி,
முருட்-ஜஞ்ஜீரா கோட்டையைப் பார்க்கப் போன அந்த இரவிலும் பனங்கள் இருந்தது. இரண்டு கார்களில் நண்பர்களுடன் மற்றும் குழந்தைகளுடன் அலிபாக் போனார்கள். அங்கிருந்து முருட் – ஜஞ்ஜீராவுக்கு. கடல் நடுவே கோட்டை கடற்கொள்ளைக் காரர்களின் ராச்சியமாக இருந்த கோட்டைத் தீவு. கோட்டைக்குப் போகும் படகுகளில் ஏறப் படகோட்டிகள் இவர்களைத் துரிதப் படுத்தினார்கள். இரண்டு படகுகளில் கோட்டையை எட்டிவிட்டனர். பாழடைந்து கிடந்த கோட்டையைச் சுற்றிலும் மலைப்பாம்பு போல் கனத்த சங்கிலிகள். கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் சீக்கிரம் வரும்படி படகோட்டிகள் அவசரப்படுத்தினார்கள். வேகவேகமாய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு, திருமலையும் குழந்தைகளுமாக ஒரு படகு போய்விட்டது. பதினைந்து நிமிடங்களில் மற்றவர்கள் படகில் ஏற முயன்றபோது கடல் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது. துடுப்பால் வலிக்கப்படும் படகுகள். கடலின் கீழ் பெரிய பாறாங்கற்கள். படகோட்டிகள் படகை எடுக்கப் பயந்தார்கள். இன்னும் கொஞ்ச நேரம், கொஞ்சநேரம் என்று தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு, “இனி காலையில்தான்” என்றுவிட்டார்கள். அவளும் திருமலையின் சகாக்களுமாக கோட்டையின் மையப்பகுதியில் அமர்ந்து கொண்டனர். வீட்டுக்கு எடுத்துப்போக வைத்திருந்த மீன்களைப் படகோட்டி கள் எடுத்துவர, மூன்று கற்களைப் போட்டு அடுப்பு மூட்டி மீனை நெருப்பில் வாட்ட ஆரம்பித்தான் ஸ்டீவன். தங்கள் பங்கை எடுத்துக்கொண்டு படகோட்டிகள் போய்விட்டனர். அவர்களிட மிருந்து வாங்கி வைத்திருந்த ஒரு குப்பியைக் காட்டினான் லங்கேஷ். பனங்கள்ளுக் குப்பி, அண்ணாமலையும் அவனுமாக பைகளில் கிடந்த பிளாஸ்டிக் கிளாஸ்களில் ஊற்றினார்கள். கார்மேகம் சித்தப்பாவுக்கு உதவியாக இருந்து வினியோகம் செய்தான். ஒரு மசாலாவும் இல்லாமல் பதமாக வாட்டப்பட்ட மீன் வாயில் கரைந்தது. முதல்முதலாக ருசி பார்த்த பனங்கள் தலைக்குள் பல பாதைகளில் போய் பறக்க வைத்தது. மேலே வானம் நட்சத்திரங் களைக் கட்டிப்போட்ட கன்னங்கரேலென்ற மந்திரவாதியாய் லங்கேஷ் தன் மெளத் ஆர்கனை எடுத்தான். எஸ். டி. பர்மன், மன்னாடே, பங்கஜ் மல்லிக் ரசிகன் அவன்.
ஸுனு மேரே பந்துரே …
ஏ… ஸுனு மேரே மிதுவா…
ஸுனு மேரே ஸாதி … ரே
என்று எஸ். டி. பர்மனின் படகோட்டிகளின் பாடலை வாசிக்க ஆரம்பித்தான். நாட்டுப் பாடல். படகில் அமர்ந்து அசைவதுபோல் தோன்றியது. கார்மேகமும் ஸ்டீவனும் பீட்டில்ஸ் பாடல்களைச் சீட்டியடித்துப் பாட ஆரம்பித்தனர். கள்ளும், எஸ். டீ. பர்மனும், பீட்டில்ஸும் போதையை ஏற்றி மயக்கின. தரையில் மல்லாந்து படுத்து, அண்ணாமலைக்குப் பிடித்த, “சின்னச் சின்ன மூக்குத்தியாம் செவப்புக் கல்லு மூக்குத்தியாம்..” என்று பாட ஆரம்பித்தாள். பிறகு, அவள் மேல் சாய்ந்து கொண்ட கார்மேகத்துக்காக ஒரு நீலாம்பரித் தாலாட்டு, கள் ஏறிய குரல் வழுக்கிக்கொண்டு போயிற்று. விடிய விடியப் பாட்டு, பேச்சு.
விடிகாலையில் கடல் அடங்கியது. படகோட்டிகள் வந்து கூப்பிட் டார்கள். அக்கரையில் திருமலை தவிப்புடன் நின்றிருந்தான். இரவெல் லாம் காத்திருந்த களைப்பு முகத்தில் உறக்கமில்லாத இரவு கண்கள் சிவந்திருந்தன.
“ஆமாண்ணா. இனிமே தெனமும் குடுங்க அவங்களுக்கு அப்பத் தான் பாடவே குரல் வருது அவுங்களுக்கு” என்று சிரித்தான் அண்ணாமலை.
திருமலையும் சிரித்தான்.
அதற்குப் பின்பு இப்போது மீண்டும் மீனும், பனங்கள்ளும்.
“பழக்கம்தான்” என்றாள் செந்திரு.
சிலுசிலுவென்று காற்று வீசியது. கிளாஸ்களை நிரப்பினாள் ருக்மணிபாயி, மீனைக் கடித்துக்கொண்டு கள்ளை ஒரு வாய் விழுங்கியதும் தொண்டை கமறியது. பிறகு மெல்லமெல்லப் புகைப் படலம் போல் போதை மண்டையில் ஏறியது.
“ஆமா. ருக்மணிபாயிதான் நாங்க போராட்டம் எல்லாம் நடத்தினா பாடறது. பஹினிபாய் பாட்டும் வரும். அதிகாரிகளை கிண்டல் பண்ணுற பாட்டும் வரும்.”
பேசிக்கொண்டிருக்கும் போதே ருக்மணிபாயி வாய்விட்டு, உரத்த குரலில் பஹினிபாய் பாடலை மீண்டும் பாடினாள். பாடி முடித்ததும், “பாடறதும் ருக்மணிபாயிதான். எங்க சண்டையெல்லாம் தீத்து வைக்கிறதும் ருக்மணிபாயிதான்’ என்றாள் மீனாபாயி,
“என்ன சண்டை ‘
“ஒன்னுமில்ல” என்று விளக்க ஆரம்பித்தாள் ருக்மணிபாயி, “மீனாபாயியோட பேத்தியை அவ புருஷன் தள்ளி வச்சுட்டான். வயத்துல புள்ள நாலு மாசம். ஆம்பிளப் புள்ளையா பொறந்ததும் குழந்தை என்னுதுன்னான். நாலு பெரியவங்கள வெச்சுட்டு நல்லாக் கேட்டுட்டேன்.”
“என்னன்னுட்டு ‘
“இதபாரு, பாத்திரம் எங்களுது. பாலு எங்களுது. பிரை ஊத்த ஒரு சொட்டுத் தயிர் குடுத்தா, மொத்தத்தையும் ஆம்பிளைக்குத் துரக்கித் தந்திட முடியுமான்னுட்டுக் கேட்டேன்.”
“என்னது: பிரை ஊத்தவா,” கிளாஸைக் கீழே வைத்துவிட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள் செந்திரு.
அவர்களும் சேர்ந்து சிரித்தனர்.
அதன் பிறகு தினைமாவு ரொட்டியும் துவையலும் சாப்பிட்ட போது வயிறும் மனமும் நிறைந்தது. கை கழுவ எழுந்தபோது தலை கூரை நுனியில் ணங்கென்று இடித்தது. அதே சமயம் வீணை ஒலி கேட்டது. தியானத்தின் ஏழாவது நிலையில் வீணை ஒசை கேட்குமாம். கள்ளுக்குக்கூட ஏழாவது நிலை உண்டா என்ன? மீண்டும் வீணை ஒலி.
“என்னது அது சவிதாபாயி?” என்றாள்.
“பீன்” என்றாள் சவிதாபாயி. அருவிக்கு அந்தப் பக்கம் ஒர் ஆசிரமம் இருக்கிறதாம். அங்கு ஒர் உஸ்தாத் இருக்கிறாராம். எல்லோரும் அவரை ஸ்-ஃபி பாபா என்பார்களாம். ஷிiர்டி சாயி பாபா மாதிரி இருப்பாராம். அவர் சில சமயம் இங்கு தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் இருப்பாராம். அவர் வாசிக்கிறாராம். சில சமயம் இவர்கள் கூடப் போய்க் கேட்பதுண்டாம்.
கை கழுவிவிட்டு அவர்கள் படுத்தபோதும் வீணை ஒலி கேட்டபடி இருந்தது.
விடுதி அறை மேசை மேல் ஒட்டக மஞ்சள் நோட்டுப் புத்தகம் விரிந்து கிடந்தது. எழுதி முடித்த பக்கங்கள் மென்காற்றில் படபடத்த படி இருந்தன.
***
ராமனின் சகோதரி சாந்தி பல முறை கேட்டவண்ணம் இருந்தாள். “எப்படி இருப்பான் ராவணன் வரைந்து காண்பியேன். சீதையின் ஒவியத் திறமை எல்லோரும் அறிந்ததுதான். ஒரு நாள் அவள் வேண்டுகோளுக் கிணங்கி ஒரு காகிதத்தை எடுத்துத் துரிகையால் வரையலுற்றாள். கால், கை, உடம்பு அத்தனையும் வரைந்தபின்பு முகம் வரையத் துவங்கும்போது ராமன் அந்தப்புரத்திற்கு வந்துவிட்டான். ஒரு நிமிடம் குழம்பிப் போய் பின்பு நீண்ட புடவைத் தலைப்பால் ஒவியத்தை மறைத்தாள். முகம் வரையப்படாத அந்த ஒவியம் புடவைத் தலைப்பினடியே. சீதை நகர முடியாமல் தவித்தாள். ராமன் சென்ற பிறகுதானே அதைக் கிழிக்க முடியும்? ராமனுக்கு உணவிட்டபடி சாந்திதான் ஓவியத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள். “சிலருக்கு இங்கே ராவணன் நினைவுதான்” என்று தொடங்கி சொல்லிக் கொண்டேபோனாள்.
அதன் பிறகுதான் அந்த ரதப் பயணம்.
நண்பகல் நேரம். லவனும் குசனும் அவர்கள் பயிற்சிக்குப் பிறகு உணவு உட்கொள்ள வரும் நேரம் அது. எழுத்தாணியைக் கீழே வைத்தாள். லவனும் குசனும் விரைந்து வந்து இலையில் வைத்த உணவை உட்கொண்டனர். அவர்களைப் பார்த்தபடி இருந்தபோது, அவர்கள் இருவரும் பெண் குழந்தைகளாக இருந்திருந்தால் அவள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று கற்பனைசெய்தாள். அவர்களைக் கனிகளைக் கொய்து விளையாடவும், பூப்பறிக்கவும் விட்டிருப்பாளா? விட்டிருப்பாள் என்று தோன்றவில்லை. அவர் களையும் வீராங்கனைகளாகவே வளர்த்திருப்பாள். அவர்களை யாரும் கவர்ந்துசெல்ல முடியாது.
வாசலில் நிழல் தட்டியது. ராமன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் லவனும் குசனும் காட்டில் அவரைப் பார்த்த தாகவும், அவர் இவர்கள் யார் என்று கேட்டதாகவும் அதற்கு எங்கள் தாயின் பெயர் சீதை, தந்தையின் பெயர் தெரியாது என்று கூறியதா கவும் கூறினார்கள். தங்களைப் பின்தொடர்ந்து அவர் வந்திருக்கலாம் என்றார்கள். “நல்லது’ என்றாள் சீதை. “உங்கள் தந்தையின் பெயர் ராமன். அவர் அயோத்தியின் அரசர் எதிரே நிற்பவர்தான் அவர்” என்றாள். ஒரு கணமும் தாமதிக்காமல் பாய்ந்து சென்றனர் இருவரும் தந்தையிடம், ராச்சியம் இருந்தது தந்தையிடம்தானே? பெண்மக்களாக இருந்திருந்தால் தாயையொட்டி நின்றிருப்பார்கள். தங்கள் தாயைக் காட்டில் விட்ட தந்தையைச் சந்தேகக் கண்களுடன் நோக்கியிருப்பார்கள்.
ராமன் இறைஞ்சத் தொடங்கினான். அவன் நிலைமையை சீதை உணரவில்லையா? அவளின்றி அவன் மகிழ்ச்சியுடன் வாழ்ந் தான் என்று அவள் நினைக்கிறாளா? அவன் பேசப்பேச அந்த பூமியே பிளந்துபோய் தன்னை உள்ளே இழுத்துக்கொள்ளக் கூடாதா என்ற ஓர் அதீத மன வேதனை ஏற்பட்டது. ராமனின் வேண்டு கோளை உறுதியுடன் மறுத்தாள். அவள் பயணம் வேறு திசையில் என்றாள். அதற்குப் பிறகு, பூமி பிளந்து தான் பூமியின் வெகு கீழே போய்விட்டதுபோல் ஒர் உணர்வு ஏற்பட்டது.
***
விடிகாலையில் கண் விழித்ததும் சவிதாபாயி எல்லோருக்கும் பாலும் சக்கரையுமில்லாத தேநீர் செய்து சுடச்சுடத் தந்தாள். மற்ற இருவரும் அவரவர் வீட்டுக்குப் போகக் கிளம்பினார்கள்.
இரவில் கேட்ட வீணை ஒலி இன்னும் மறக்கவில்லை. செந்திரு அருவியின் தெற்கே நடக்க ஆரம்பித்தாள். சற்றுத் துரம் நடந்ததும் நாலைந்து சிறு குடில்கள் போன்ற வீடுகள் தெரிந்தன. பிரதான குடில்போல் தெரிந்த ஒன்றின் கதவு திறந்திருந்தது. மெல்ல உள்ளே துழைந்தாள்.
ஒரு பக்கத்துச் சுவரின் ஒருபுறத்திலிருந்து இன்னொருபுறம் வரை வெள்ளை விரிப்புப் போட்ட கனமான மெத்தை மீது மூன்று ருத்ர வீணைகள் மூடப்படாமல் இருந்தன. அவற்றின் பக்கத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் மடியில் ஒரு ருத்ர வீணையுடன் உட்கார்ந்திருந்தார். வெண்தாடி இடையில் கட்டமிட்ட லுங்கி, மேலே குர்தா. பிருடையைத் திருகி, தந்திகளின் அருகே செவியைக் கொண்டு போய் சுருதியைச் சரிசெய்தபடி இருந்தார்.
இவள் நுழைந்ததும் அவளை அறிந்தவர் போல, “இங்கே வா பேட்டீ இதைக் கேளு. சரியா இல்லையா என்று சொல்” என்றார் சுத்த ஹிந்தியில்.
வாழ்நாள் முழுவதும் வீணையின் சுருதியைச் சரிபார்ப்பதையே நிதமும் செய்தவள் போல் இவளும் அருகே சென்று ஒலியைக் கூர்ந்து கேட்டுவிட்டு, “சரியாக இருக்கிறது” என்றாள்.
அவர் எதிரே அமர்ந்து கொண்டாள். “எல்லாமே சுருதிதான், இல்லையா?” என்றார். “ஸுர் என்கிறோம். அஸுர் என்பது யார்? கோணல் பல்லும் கொம்பும், பத்துத் தலைகளும் இருப்பவர்களில்லை. ஸுர் என்ற ஒன்றை அறியாதவர்கள். அ-ஸுர். ஸுர் என்ற ஒன்று ஒலித்துக் கொண்டே இல்லாமலிருப்பதால்தான் வேகம், பலம், பாதை எதுவும் கட்டுக்குள் இல்லாமல் ஒடுபவர்கள். ஸுர் என்ற லகானில்லாதவர்கள்” என்றார்.
தலையை ஆட்டினாள். “சுருதி சேர வேண்டும். கூடி வர வேண்டும். நாம் அத்தனைபேரும் அ-ஸுர்தான். சுருதியைப் பிடிக்க ஒடுபவர்கள்.”
‘அவ்வளவு சிரமமா சுருதி கூடுவதில்?” சிரித்தார். “அது பிடித்துப்போடும் விஷயம் இல்லையே? அலை அது. அதை அடக்கி அதன்மேல் படகோட்டும்போதே கவிழ்த்து விடும். பெரிய அலையாய் பிரமாண்டமாய் எழும்பும். நம் பக்கத்தில் வரும்போது நுரையாய்ப் போய்விடும். சேரும். குலையும். வரும். போகும். மூழ்கடிக்கும். துரக்கி எறியும்.”
அவர் பேசியதும் வீசும் கடல்போல் ஒலித்தது. “சங்கீதம் தெரியுமா?” “ஏதோ கொஞ்சம். கர்னாடக சங்கீதம்.” “ம். கொஞ்சம் பாடு. உங்கள் சங்கராபரணம் பாடு” என்றார். சங்கராபரண வர்ணத்தின் பல்லவியைப் பாடினாள் மெல்ல. ஓங்கிக் குரலெழுப்பாமல்,
‘ம்’ என்றுவிட்டு வீணையை மடியில் வைத்துக் கொண்டு தைவதத்தை அழுத்தி நரம்பைச் சுண்டுவது போல் இழுத்தார். சில ஸ்வரக் கோர்வைகளை வாசித்துவிட்டு மீண்டும் அந்த நரம்பைச் சுண்டும் இழுப்பு. தநீ…
“இது எங்கள் த்ருபத் சங்கீதத்தில் பிலாவல் ராகம்” என்றார். அவர் காலருகே குனிந்து மெத்தையின் நுனியில் தலையைப் பதித்தாள். தநீ… தநீ. தநீ… என்று மின்சாரம் ஒடியது உடம்பில். “என்ன வேண்டும் பேட்டி?” என்றார் தலையில் கை பதித்து. “தெரியவில்லை” என்றாள் தலை நிமிராமல், “புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. புரிந்தவுடன் புரியாமல் போகிறது.”
“அது அப்படித்தான்” என்றார் தலையில் தட்டித் தந்தபடி.
எழுந்து அமர்ந்துகொண்டாள். “நான் பம்பாயை விட்டு வந்துவிட்டேன்” என்றாள். “எல்லோருக்குமே இரண்டு தேர்வுதான். ஒன்று துறவு இன்னென்று துறவாமை. எது துறவு எது துறவாமை என்று புரிந்துவிட்டால் நான் ஏன் பீன் வாசிக்கிறேன், நீ ஏன் கேட்கிறாய்?” என்றார். சிரித்தார்.
“பம்பாயில் எனக்கு மூச்சு முட்டியது” என்றாள். “பம்பாய் உன்னுடன் இங்கே வரலாம். இந்தக் காடும் உன்னோடு பம்பாய் போகலாம்’என்றார்.
அவர் கண்களுள் பார்த்தாள். “அது அப்படித்தான்” என்றார். “பிலாவல் என் மாதாஜிக்குப் பிடித்த ராகம். பம்பாயில் முகமதுஅலி ரோட்டு நெருக்கடியில், அந்த சந்து வீட்டின் சன்னல் புறா க்கூம் க்கூம் என்றால் பிலாவலை ‘ரியாஸ்’ செய்கிறது என்பாள். எப்போதாவது பஸ் சத்தம், ரயில் சத்தத்தை மீறி ஒரு குயில் கூவுவது கேட்கும். “சரியான பிலாவல்” என்பாள். போன வருடம் இங்கே, இந்த இடத்தில்தான் காலமானாள். எண்பது வயது. வசந்தகாலம் அவள் சாகும்போது. இரவெல்லாம் துரக்கம் வராமல் கஷ்டப்படுவாள். விடிகாலை நான்கு மணிக்கு வெளியில் ஒரு நாற்காலி போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிடுவாள். எதிரே மாந்தோப்பு. ஒரு ஐந்துமணிவாக்கில் தினம்போல் குரல் கொடுப்பாள். “ஜலாலுத்தீன், ஏ. ஜலாலுத்தீன்! இங்கே வா. குயில் பிலாவல் பாடுகிறது” என்பாள். குயில் பாடும் ஸ்வரத்தைச் சொல்லுவாள். “சுத்தமான பிலாவல்” என்று பூரித்துப் போவாள். அவளுடைய பிலாவல் அவளுக்கு எங்கு பார்த்தாலும் கேட்டது.” மீட்டுத் தந்திகளின்மேல் விரல்களை ஒட்டினார். ஒலி நீர்விழ்ச்சி. எப்போதோ பள்ளியில் கற்றுக்கொண்ட பாடலின் வரிகள் மனத்தில் உயிர்த்தெழுந்தன. ஒலிருபத்துடன், ஜாலம் செய்யும் சிந்து பைரவியில்.
கட்டற்ற காற்றினைப்போல் கீழ் மட்ட ஸ்வரங்கள். உறுத்தாத சூரிய வெளிச்சம் வெளியே. உஸ்தாத்ஜி பிலாவலை ஆலாபனை செய்ய ஆரம்பித்தார்.
மதி கண்ட கடலினைப் போல்… கீழிருந்து மேலேறும் ஸ்வரங்கள். உஸ்தாத்ஜியின் மாணவர்கள் அறையில் மெல்லக் குழுமினார்கள். சுற்றிலும் அமர்ந்து கொண்டார்கள். மீண்டும்.மீண்டும் ருத்ரவீணை யின் நரம்பைச் சுண்டும் இழுப்புகள்.
கொட்டும் அருவியைப் போல். . . மேல் மட்டத்தை எட்டி வழியும் ஸ்வரங்கள்.
உஸ்தாத்ஜி வாசித்தபடி இருந்தார்.
ஜீவ குழலில் பாட்டிசைப்பாய்… அலைந்துவிட்டு வந்த பின்பு சீர்ப்பாதையில் ஸ்வரங்கள்.
பிலாவல் பாடும் குயில் மாந்தோப்பிலிருந்து கூவியது. தநீ தநீ தநீ .
எங்கும் பாடும் குயில் கேட்பவர் விரும்பும் ராகமாய் மாறும் குயில் பாட்டு.
எழுந்து, விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
***
சீதையின் தீர்மானத்தை ஆசிரமத்தில் யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. அயோத்தியின் அரசன் வந்து அழைக்கும் போது செல்ல மறுப்பது சரியில்லை என்றார்கள். அவள் இலக்குதான் என்ன? எதை நாடுகிறாள் அவள்: அனுமனின் தொடர்ந்த முறையீடுகள். மற்றவர்களின் கண்டனங்கள். பூமியின் அடியே, யாரும் எட்ட முடியாத வெகு ஆழத்தில் தான் சென்றுவிட்ட உணர்விலிருந்து அவளால் மீள முடியவில்லை.
எழுந்து நின்று குடிலைச் சுற்றி நோக்கினாள். இந்த முறை முற்றுந் துறவு. தனிப் பயணம் அறிந்தவர்கள். அன்புடன் பேசுபவர் கள், அறிவுரை கூறுபவர்கள் அனைவரையும் துறந்து வெகு தூரம், வெகு ஆழம் நோக்கி ஒரு பயணம்.
அவள் நடக்க நடக்கக் காடு நீண்டுகொண்டே போயிற்று. ஆற்றைக் கடந்து, அருவியைத் தாண்டி, மான்கள் நீர் பருகும் ஒடையைப் பார்த்து, மானைத் தின்னும் புலியைக் கண்டு அதிர்ந்து, கூட்டமாய்ச் செல்லும் யானைகளிடையே ஒடும் குட்டி யானைகளை ரசித்து, ஆந்தையின் கண்கள் ஒளிரும் இரவுகளை எதிர்கொண்டு, சூரிய ஒளிபட்டு தகதகத்த பச்சை இலைகளைப் பார்த்தபடி, வயிற்றில் குட்டியுடன் கிளையிலிருந்து கிளைக்குத் தாவும் குரங்கு களைக் கண்டு வியந்தபடி நடந்தவண்ணம் இருந்தாள். நடை. உற்சாகம். தளர்ச்சி. ஒய்வு.
மீண்டும் நடை.
அதிகாலையில் அந்தச் சந்திப்பு நேர்ந்தது. பறவைகளின் சத்தம் எழாத வேளை. சூரியன் வானுக்குள் ரகசியமாய் வெகு தூரத்தே ஒரு குடில் தெரிந்தது. அதனுள்ளே விளக்கின் மென்ஒளி அலைந்தபடி இருட்டைக் கிழித்தபடி வாத்தியம் ஒன்றின் ஒசை நெருங்க, நெருங்க அது வீணை ஒலி என்று தெரிந்தது. எப்போதோ கேட்ட இசைபோல் தோன்றியது. அருகில் வந்ததும் இசை கட்டிப்போட்டது, குடிலின் கதவு திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தாள். தபஸ்விபோல் தோற்றமளித்த ஒருவன் வீணை வாசித்துக்கொண்டிருந்தான். இவள் நுழைந்ததும் வரவேற்றான். அவன் வாசிப்பில் குறுக்கிட்டு விட்டாளா என்று வினவியபோது இல்லை என்று மறுத்தான். அவளுக்காகவே காத்திருப்பதாகக் கூறினான். “என்னைத் தெரியவில்லையா? நான் தான் ராவணன்,” என்றான்.
திடுக்கிட்டு ஒரடி பின்வாங்கினாள். “போரில் மடிந்து விட்டதாக…” “மாயாஜாலங்கள் நிறைந்த வாழ்க்கை இல்லையா இது? என் அரண்மனையில் இருந்த எல்லோரையும் ராமன் கொன்றபின் ஒரே ஒரு காவலாள் எஞ்சியிருந்தானாம். அவன் உயிர்ப் பிச்சை கேட்டானாம். தன் நண்பன் ஒருவனையும் உயிர்ப்பிக்கும்படி கேட்டானாம். ராமன் அவன் நண்பனை உயிர்ப்பித்துவிட்டு, இருவரும் லக்ஷ்மணன் வரும்முன் ஓடிவிடவேண்டும் என்றானாம். ஒடுவதற்குச் சக்தி இல்லை என்றதும் இருவருக்கும் சிறகுகளைத் தந்தானாம். அவர்கள் கருடனாகவும் கிளியாகவும் மாறிப் பறந்து போனார்களாம். சொல்கிறார்கள். அப்படி இந்த வனாந்திரங்களில் பறந்துகொண்டி ருந்த ஒரு கிளியாக நான் இருந்திருக்க முடியாதா? சீதையைச் சந்திக்கும் தருணத்தை எதிர்நோக்கியிருக்கும் கிளி. கிழட்டுக் கிளி.” “இன்னுமா என் மேல் மோகம்? எத்தனையோ சோகங்களை அனுபவித்துவிட்டேன். பகடைக்காய் வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். சோர்ந்துவிட்டேன். தளர்ந்துவிட்டேன். நாற்பது வயதைக் கடந்து விட்டேன்.”
“இப்போதுதான் ஒரு பெண்ணுக்கு நண்பன் தேவை. உடல் மாற்றங்களால் அல்லலுறும் அவளைத் தாங்க. அவளுக்குச் சேவகம் செய்ய உற்சாகமூட்ட தூரத்திநிேன்று அவளை ஊக்கப்படுத்த.”
சீதை கீழே அமர்ந்தாள். “எந்தத் தருணத்திலும் நான் நட்பை மறுத்ததில்லை. போருக்கு முன் பூசை செய்ய விரும்பினான் ராமன். இருவர்தான் பூசையை நடத்தித் தரமுடியும். ஒன்று வாலி. இன்னொன்று நான். வாலியைத் தன் கையாலேயே கொன்றாகி விட்டது. எஞ்சியது நான். எனக்கு அழைப்பு விடுத்தான். நான் சென்றேன். அவன் விருப்பப்படி பூசைசெய்தேன். வெற்றிபெற வாழ்த்தினேன்” என்றான்.
சீதை முதல் முறையாக அவனைப் பெயரிட்டு விளித்தாள்.
“ராவணா, சொற்கள் என்னைச் சோர வைக்கின்றன. மொழி என்னை முடக்கிப்போடுகிறது. உடலால் பிணைக்கப்பட்டு இருக்கிறேன்.”
ராவணன் சிரித்தான்.
“உடல்தான் சிறை. உடல்தான் விடுதலை,” என்றான்.
“பார்,” என்று தன் ருத்ரவீணையைக் காட்டினான். “பார்வதி மல்லாந்து படுத்திருந்தபோது அவள் இரு கொங்கைகளைக் குடங்களாக்கி அவற்றின் முகடுகளைத் தந்திகளால் இணைத்தால் ஒரு அபூர்வ வாத்தியம் அமையுமே என்று எழுந்த கற்பனையில் தோன்றிய இசைக்கருவி. இது தேவியின் உடம்பின் நீட்சி, சிவனின் வில்லையே ஒரு கையால் தூக்கியவள் நீ. இந்த வீணையை நீ எளிதாக ஆள முடியும். முயல்வாயா?”
“எனக்குக் கற்றுத்தர முடியுமா ?”
“உனக்காகப் போர்செய்து தோற்றவன் இசையையா தர மறுப்பேன் நிதமும் பயிற்சி தருகிறேன் உன் குருவாக இருந்து. இந்த வனமெங்கும் அந்த இசையின் ஒலி உடைப்பெடுத்துப் பாயட்டும். இதைச் சாதாரண வாத்தியமாக நினைத்து விடாதே. இதை உன் வாழ்க்கையாக எண்ணி இதை வாசி. இந்தா.”
ருத்ரவீணையைத் தன் மடியிலிருந்து எடுத்து அவள் பக்கம் நீட்டினான்.
“அது கீழே தரையிலேயே இருக்கட்டும்” என்றாள் சீதை.
“ஏன் ?”
“அது என் வாழ்க்கை இல்லையா? பல கைகள் பந்தாடிய வாழ்க்கை. அதை நானாகவே என் கையில் எடுத்துக்கொள்கிறேன்” என்றுவிட்டு ருத்ரவீணையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள் சீதை.
***
காட்டில் ஒரு மான் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து கமலதேவியின் கட்டுரை: நீரெல்லாம் கங்கை
இன்று எடுத்து வாசிக்கும்போது குமுதினியின் ‘அந்தப்புர தபால்’ என்ற வரிசையில் இடம்பெறும் இந்தக் கதையின் அன்றாடத்தன்மையே நம்மை முதலில் வந்தடைகிறது. சீதையை அன்றாட இல்லத்துப் பெண்ணாகக் கற்பனை செய்கிறது இந்தக் கதை. இதன் காரணமாகவே இந்தக் கதை அதிகம் பேசப்படாமல் போயிருக்கலாம். ‘பெண்கள் எழுதும் வழக்கமான கதை’ அல்லது ‘பெண்களின் வழக்கமான பார்வை’ என்று புறக்கணிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் ஒரு கதையின் ‘அன்றாடத்தனமான’ பார்வையே ஒரு எதிர்மறையான விஷயமா என்று பரிசீலித்துப் பார்க்கிறேன். அன்றாடத்தனத்தை விமர்சிக்கவும் கூட ஆசிரியர் அன்றாடத்தன்மையை ஓர் உத்தியாகக் கையாளலாம், இல்லையா? அன்றாடத்தன்மையை ஒரு பாவனையாகக் கடைப்பிடித்து அதன் வழியாகவே சில விமர்சனங்களை வெளிப்படுத்தலாம் இல்லையா? இந்த ஆரம்பக்காலக் கதையில் அதற்கான முயற்சி நடந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
இந்தக் கதையில் வரும் சீதை மரபு வழியாக நாம் அறிந்த சீதை அல்ல. புடவைகளை பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சீதை முதற் தோற்றத்துக்கு டம்பத்தனமான, சுயநலம்மிக்க ஒரு பெண்ணாகத் தோற்றமளிக்கிறாள்.
ஆனால் அதற்கடியில், புதிய மருமகளின் மிகுந்த வினயமான மொழியிலேயே, தன் குடும்ப அரசியலையும் அதன் மேலான தன் விமர்சனத்தையும் வெளிப்படுத்திக்கொண்டே வருகிறாள். பணிவான, ஆனால் கூர்மையான ஒரு பெண்ணின் குணச்சித்திரம் உருவாகிறது.
அப்படியென்றால் ஏன் இவ்வளவு புடவைப்பேச்சு? அது சீதையின் அலுப்பையே வெளிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று அம்மாவுக்கு எழுதும்போதும் கூட அந்த அலுப்பு வெளிப்படுகிறது அவள் குரலில். அந்த அலுப்பை வெல்லவே அத்தனை புடவைப்பேச்சும். இந்த உணர்வை ஆசிரியர் தன் கூர்மையான மொழி வழியாகக் கடத்துகிறார்.
*
புராண சீதைக்கு அலுப்பு உண்டாகியிருக்கலாம் என்று நாம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஏனென்றால் நாம் அவளுடைய ஆழத்தை எண்ணியே பழக்கப்பட்டுவிட்டோம். அந்த ஆழம் நமக்குள் சில விஷயங்களை அறிய, நிறுவ நமக்குத் தேவையாக உள்ளது.
ஆகவே தான் ‘மனிதத்தன்மை’ தலைப்படும் போது புராணக் கதைகள் ஒரு படி குறைவாதாக நாம் எண்ணுகிறோம். அந்த கதாபாத்திரத்தின் ஆழமும் வீச்சும் முழுவதுமாக பயன்படுத்தப்படவில்லை என்கிறோம். இந்தக் கதையைச் சொல்ல சீதை எதற்கு, பெரிய தெரு சிவகாமி போதுமே என்கிறோம்.
இருக்கலாம். ஆனால் மீண்டும் கல்லாக மாறும் அகலிகை போலவே, பட்டமிஷியாகக் காத்திருக்கும் சீதை, அரண்மனை அரசியல் மேல் அலுப்பு வெளிப்படுத்தும்போது, அது அந்த நடைமுறையின் மீதே ஒரு விமர்சனமாக அமைகிறது. ரகுகுலத்தின் ஆழத்தில் உள்ள பல பிரச்சனைகளை சீதை தன் அலுப்புப்பேச்சு வழியாகவே பூடகமாக வெளிப்படுத்திச் செல்கிறாள். அந்த அரசியலில் தன்னுடைய இடம் என்ன என்பதும் பட்டவர்த்தனமாக வெளிப்பாடு கொள்கிறது.
*
இந்தக் கதை பரவலாக ஓர் அங்கதக் கதையாகவும், ஒரு காந்தியக் கதையாகவும் வாசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குமுதினியின் காந்தியவாதம் பிரபலமானது. ஆனால் அதைத் தாண்டிய உள்ளடுக்குகள் இக்கதைக்குள் உள்ளதென்றே நினைக்கிறேன். முக்கியமாக, சீதையின் குரலில் உள்ள முன்பே சொன்ன அலுப்பும், அதனுடன் இணைந்து ஓடும் கசப்பும் இதை எளிய காந்தியக் கதையிலிருந்து வேறுபடுத்துகின்றன.
இறுதியில் அவள் புடவைகளை பற்றி யோசிக்காமல் இருப்பது நிம்மதி என்று சொல்லும் இடத்திலும் கூட, அங்கே வெளிப்படுவது உண்மையிலேயே அலுப்பை ஓரளவுக்கு வென்றதன் ஆசுவாசமா, அங்கதமா, அல்லது ஒர் ஆழமான கசப்பா என்று கூறமுடியவில்லை. இவை எல்லாமுமாகவும் இருக்கலாம். டம்பக்காரியாகத் தோற்றமளித்துக்கொண்டே அலுப்பின், கசப்பின் இழையை சீதையில் தொனிக்க வைத்தது தான் இந்தக் கதையின் தனித்தன்மை என்று நினைக்கிறேன்.
இந்த அம்சம் இது வழக்கமான பெண் கதை அல்ல என்ற உணர்வை எனக்கு அளிக்கிறது. குமுதினியை தமிழின் முதல் பெண் படைப்பெழுத்தாளர் (creative writer) என்று கூறலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது.
~
மிதிலாதிபதியான ஜனகரின் பட்டமகிஷிக்கு அயோத்தியிலிருந்து சீதாதேவி எழுதி விடுத்த கடிதம்.
அம்மாவுக்கு அநேக தண்டனிட்டு அடியாள் சீதை வணக்கத்துடன் விக்ஞாபித்துக் கொள்வது. உபயகுசலோபரி. நீ அனுப்பின ஆட்களும் ரதமும் வந்தன. தீபாவளிக்கு எங்கள் எல்லோரையும் மிதிலைக்கு வரவேண்டுமென்று நீ ஆக்ஞாபித்ததாகத் தூதுவன் கூறினான். இங்கே நிகழ்வதெல்லாம் அறிந்தால் அவ்விதம் நாங்கள் வருவது எவ்வளவு சிரமமான செய்கையென்று உணர்வாய். மாமனாரவர்கள் சதாகாலமும் ‘மாண்டவியின் மாமியார் கைகேயி தேவி’யின் கிருகத்திலேயே இருக்கிறார். என் மாமியாருக்கு ‘அசாத்தியக் கோபம்’. அதை வெளியே காண்பிக்காமல் பூஜையிலும் பிராம்மண போஜனத்திலும் இறங்கியிருக்கிறார். விடியற்காலயிலேயே எழுந்து ஸ்நாநம் செய்துவிட்டு அவருக்கு உதவி செய்யவேண்டியதாக இருக்கிறது. நாள் முழுதும் வேலை. சற்றும் ஓய்வு கிடையாது.
கலியாணமாகி வந்ததுமே மைத்துனர் பரதரை அவர் மாமா வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டார். சத்ருக்கனர் விஷயம் தெரிந்ததுதான், அண்ணாவின் பின் ‘வால்’. அவர்கள் திரும்பிவந்து, நாங்கள் எல்லோரும் அனுமதி பெற்றுக் கொண்டு மிதிலைக்குப் புறப்பட்டால் தீபாவளிக்கு வந்து சேர முடியுமோ என்னவோ தெரியாது. சந்தேகமாயிருக்கிறது.
எல்லாம் யோசித்ததில் தீபாவளியை அயோத்தியிலேயே கழிப்பது உத்தமம் என்று உன் மாப்பிள்ளை தீர்மானித்திருக்கிறார். இதைப் பற்றி மாமனாரவர்களிடமிருந்து அப்பாவுக்கு ஒரு கடிதம் வரும்.
எங்களுக்குப் பீதாம்பரங்களை இங்கே அனுப்பு. உன் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பட்டுதான் பிடிக்கிறது. ஆகையால் அதையே வாங்கி அனுப்பவும். இங்கே எங்கள் மாப்பிள்ளை ருச்யசிருங்கருக்குத் தீபாவளிக்காக ஒரு புதுமாதிரி சுவர்ண கங்கணம் செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. அந்த மாதிரி உன் பெரிய மாப்பிள்ளைக்கு ஒன்று அனுப்பு. இதைக் கொண்டு வரும் ஆட்களுடன் அவ்வித வேலை தெரிந்த தட்டான் ஒருவனைக் கூட்டியனுப்பியிருக்கிறேன். இந்த விஷயம் ‘நான் எழுதினதாகத் தெரியவேண்டாம்’.
எனக்கு சிந்தூர வர்ணப் புடவை தயாரித்திருப்பதாக எழுதியிருக்கிறாய். இங்கே அயோத்தியில் எல்லாரும் ரொம்ப நாகரீகமாக துணி உடுத்துகிறார்கள். யவன தேசத்து வர்த்தகர்கள் கொண்டுவரும் பீதாம்பரங்களாம். கரை சின்னதாகப் போட்டு மிக நேர்த்தியாயிருக்கின்றன. நாத்தனார் சாந்தை நீலாம்பர வர்ணத்தில் ஒன்று உடுத்தியிருந்தாள். எனக்கு அது மாதிரி வேண்டுமென்று விருப்பமாயிருக்கிறது. நீ எனக்குக் கலியாணத்தின்போது வாங்கிக் கொடுத்த புடவைகளுக்கெல்லாம் கரை அதிக அகலம். அவைகளை இப்போது எனக்கு உடுத்துவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. எல்லாரும் பரிகாசம் செய்கிறார்கள். அந்த மாதிரி வாங்கி அனுப்பாதே. பூஜ்யரான தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.
விநயத்துடன் இங்ஙனம்
சீதை
2
அம்மாவிற்கு விக்ஞாபனம். க்ஷேமம். உனக்குக் கடிதம் எழுதிய பிறகு நாத்தனார் சாந்தையைப் பார்த்தேன். நீலாம்பர வர்ணம் ஸ்திரமாக இருப்பதில்லையாம். ‘வெளுத்து’ விடுகிறதாம். ஆகையால் எனக்கு அந்த வர்ணத்தில் பீதாம்பரம் வேண்டாம். முதலில் உத்தேசித்தவிதம் சிந்தூரவர்ணப் புடவையையே அனுப்பு. அல்லது தாம்பர வர்ணத்தில் ‘வெளுக்காமலிருக்கும்’ என்ற உத்தரவாதத்துடன் பீதாம்பரம் அகப்பட்டால் வாங்கியனுப்பவும். ஒருமுறை உடுத்திய வர்ணத்தையே திரும்பத் திரும்ப உடுத்துவதென்றால் அலுப்பாயிருக்கிறது. உன் சௌகரியப்படி செய். நான் தொந்திரவு கொடுக்கவிரும்பவில்லை. நீலாம்பர வர்ணம் மட்டும் வாங்காதே..
அடியாள் சீதை
3
அம்மாவிற்கு விக்ஞாபனம். க்ஷேமம். திடீரென்று மாமனாரவர்களுக்கு யோசனை தோன்றியிருக்கிறது. உன் மாப்பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்யப் போவதாகச் சொல்கிறார். பந்தலில் உங்கள் ஆசீர்வாதத்துடன் புடவை வைக்கவேண்டுமே.. எந்த மாதிரி அனுப்புகிறாய்? நவமல்லி வர்ணம் நன்றாயிருக்குமா. பந்தலில் வைப்பதாகையால் நன்றாயிருக்கவேண்டும். ‘மான் புள்ளிகள்’ மாதிரி வேலைப்பாடு செய்த புடவைகள் சட்டென்று அகப்படுமா? அல்லது முன்னால் சொல்லிப் போடச் சொன்னால் மட்டும் கிடைக்குமா? குயில் வர்ணம் மயில் வர்ணமெல்லாம் மாமியாரவர்களுக்குப் பிடிக்கிறதில்லை. வ்யாக்ரவர்ணம் வேஷம் போட்டாற் போலிருக்கும். என்ன செய்யப் போகிறாயோ, எனக்குத் தெரியவில்லை. ‘இந்தப் புடவைகளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து என் மூளை கலக்கமடைந்துவிட்டது’. ஒரு ‘தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை’. உசிதப்படி செய்.
உன் பிரிய சீதை.
குறிப்பு:
அல்லது தீபாவளிப் புடவை, பட்டாபிஷேகப் புடவை இரண்டையும் சேர்த்து ஒரு பெரிய புடவையாக வாங்கி அனுப்பு.
4
அம்மாவிற்கு,
ஒரு புடவையும் அனுப்பவேண்டாம். ‘எல்லாம் தீர்ந்துவிட்டது’. நாங்கள் வனவாசம் செய்யப் போகிறோம். பரதருக்குத்தான் பட்டாபிஷேகம். இதைக் கொண்டு வருவபவன் எல்லா விவரமும் சொல்வான். எனக்கு ஒரே ஒரு ‘மரவுரி’தான் இருக்கிறது. காட்டில் மழையில் நனைந்துவிட்டால் கட்டிக் கொள்ள வேறு கிடையாது. ஆகையால் முடிந்தால் ஒரு மரவுரி அனுப்பு. சௌகரியப்பட்டால் வெத்தலும் அப்பளமும் அனுப்பு. உன் அப்பளந்தான் நன்றாயிருக்கிறதென்று மாப்பிள்ளை சொன்னார். நாங்கள் சித்ரகூடத்திற்குப் போகிறோம். இது ஒருவருக்கும் தெரியவேண்டாம். அவசரம்.
சீதை
குறிப்பு:
இனி புடவைகள் வர்ணத்தைப் பற்றி சிந்திக்கவேண்டாம். எனக்கு மனதில் அதிக நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. பெண்களெல்லாருமே வனவாசத்துக்குப் போனால் எவ்வளவு நலம் என்று தோன்றுகிறது. வாழ்க்கையின் கவலையில் பாதி குறைந்துவிடும்.
மறைமுகம் கதையை அது யாவரும்-ல் வெளிவந்தபோதே வாசித்திருந்தேன். நண்பர்களிடம் எண்ணங்களைப் பகிர்ந்தும் இருக்கிறேன். ஆனால் பதிவாகாத உரையாடல் என்பது பதிவுச் செய்யப்படாத மேடைப் பேச்சு போல காற்றில் கரைந்து விடுகிறது. மறைமுகம் குறித்து என் பார்வையை இங்குப் பகிர்கிறேன்.
அவனுக்கே வயது இருபத்தைந்துக்குள்தான் இருந்திருக்க வேண்டும். வனத்துறையில் பணிக் கிடைந்திருக்கிறது. முதற்குழந்தை என்பதால் அவளுக்கு பதினாறு/பதினேழை தாண்டியிருந்தால் அதிகம். சம்பாத்தியம் ஈட்ட வேண்டியவனின் மனமோ அதில் இலயிக்கவில்லை. எதை அவனுள்ளம் நாடுகிறது என்பது இங்கு முக்கியமல்ல. ஆண்களுக்கு எதை செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும், பொறுப்புடன்/பொறுப்பற்று, உள்ளேயிருந்துக் கொண்டோ அல்லது ஒரேடியாக வெளியேறி சென்றோ மனம் வேண்டுவனவற்றை வேண்டியபடி செய்வதற்கு சமுதாய அமைப்பிலும் புறவுலகிலும் இடங்களுண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியானதொன்றை சிந்திக்கும் (அசாதாரணர்கள் நீங்கலாக) சிந்தனைப் போக்குக்கான ஏது ஏதும் அப்போதில்லை.
அது ஆயிரத்துத் தொள்ளாயிரங்களின் முற்பகுதி. பொதுவாக தலைக்கு மேல் தொங்கும் மரணத்தின் தேதியுடன் தான் மனிதர்களின் நாட்கள் கழிகிறதென்றாலும் இப்போதைக்கு போல அப்போது நீண்ட ஆயுளில்லை. சிறு வயிற்றுப்போக்கு, டைஃபாயிடால் கூட ஒரு பெண்ணின் வாழ்வை அஸ்தமனம் செய்து விட முடியும். ஆம்.. பெண்ணின் வாழ்வு ஆணோடு பிணைந்திருக்கிறது. (இப்போதைக்கும் அத்தனை பெரிய மாற்றமில்லை என்பது ஒருபுறமிருக்க…). அதிலும் குறிப்பிட்ட குலம் சார்ந்த பெண்கள் கணவனின் மரணத்துக்கு பின் உயிருடன் மரணித்தவர்கள். இருந்தும் இல்லாதவர்கள். (சதி என்ற கொடுமை நிகழ்ந்த நாடும் நம் நாடே) ஆக, ஒரு பெண் தொங்க தொங்க வாழ்வதென்பது பூர்வஜென்ம பிராப்தம். இந்த பெண்ணுக்கு அந்த பிராப்தம் இல்லாமல் போகிறது, அதுவும் அசாதாரணமான காரணத்தால். வீட்டிலுமே அசாதாரண சூழ்நிலைதான். காணாமல் போனவனின் நாள்கணக்கே வயதிருந்த பெண்மகவு இறந்துப் போயிருந்தது. பிள்ளைப் பிறந்து அதை காண்பதற்கு கூட வராத கணவன், அவன் முகத்தைக் கூட சரியாக கண்டிராத அவள். சொல்லியழத் தாயில்லை. பெரிதாக பணமில்லை. எதுவுமே ஸ்திரமற்ற நிலை. ஆனால் அவை எதும் சலுகைகள் அல்ல. வீட்டில் போலீஸ் நுழைகிறது. அவள் கணவனின் மரணத்தை, அதற்கு முன் அவன் செய்த பெருங்குற்றத்தை கூறுகிறது. வீட்டை சோதனையிடுகிறது. எதையெதையோ எடுத்துச் செல்கிறது.
அந்த பெண்ணின் அகத்துக்குள்ளிருந்து கதை எழுகிறது. ஒரே மூச்சில் எழுதி விட்டு பின் ஆசிரியர் ஆங்காங்கே சில கூர்மைப்படுத்தல்களும் நீவல்களும் செய்திருக்க வேண்டும். அப்படிதான் தோன்றுகிறது. குழந்தை மரணித்திருந்தது, அதை கதை எடுத்து வைப்பதே காமாட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன்னை அது விடுவித்துக் கொண்டது என்றுதான். விடுவித்துக் கொள்ளல் என்பது எதிலிருந்து? பிறவியிலிருந்தா, பாவப்பட்ட பெண் ஜென்மம் என்ற நிலையிலிருந்தா? அதற்கென்ன அத்தனை அவசரம்? தன்னை இந்த பூலோகத்தில் பார்த்தறியாத தந்தையை மேலோகத்தில் வரவேற்க செல்லும் வேகமா? காமாட்சி பால் புகட்டுவதற்கு குழந்தையை(?) மாருக்கு எடுத்துச் செல்கிறாள். இனிமே அதை தெய்வம் பார்த்துக்கும் என்கிறாள் சீதா. எடுத்துக் கொள்ளும் பூமி திரும்பக் கொடுக்குமா…? என்கிறாள் இவள் தவிப்போடு. தைத்து வைத்தது போன்ற வார்த்தை பிரயோகம். தைலா பாட்டி பாலகனகனுக்கு என்ன வயசு அறுபதா? என்கிறாள். ஆனால் மரணத்துக்கு வயது அளவுக்கோலா என்ன?
அளவுக்கோல்கள் எல்லாம் பெண்களுக்குதான். தைலா பாட்டி தலையணை வைக்க மாட்டாள். கையை தலைக்கு வைத்துப் படுத்துக் கொள்கிறாள். வயதாகி விட்டதால் கொஞ்சம் கால்களை நீட்டி நீக்குபோக்காக அமர்ந்துக் கொள்ளலாம். சீதை நடுத்தர வயதுகாரராக இருக்க வேண்டும். மூலையில் சுருண்டுக் கொள்கிறாள். தவிரவும், அவள் ஆண் அல்லவே, நீட்டியும் நிமிர்த்தியும் படுத்துக் கொள்ள. பிள்ளைப் பெற்றவள் அமர்ந்திருக்கும் இடம் துணியால் மறைக்கப்பட்டிருக்க, காதுகள் கணவனுக்கு தாக்கல் சொல்லப் போன இடத்தில் கிடைத்த தகவலென்ன? என்பதை கூர்ந்துக் கொண்டிருந்தது போன்ற விவேரணைகள் காலத்தைச் சொல்வன. பாலகனகன் இறப்பை சொல்வதாக வருமிடத்தில், ‘அவனது தந்தை பயந்துப் போயிருந்தார். அத்தனை நெருக்கத்தில் அவர் தெய்வதத்தைதான் கண்டிருக்கிறார், போலீஸை அல்ல…’ என்ற வாக்கியம் வெறும் வாக்கியம் மட்டுமல்ல.
தனக்கும் கணவனுக்குமான பாலம் தன்னை விட்டு சிறிதுசிறிதாக தகர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணருகிறாள் அவள். மகளின் ஸ்பரிசம் கொடுத்த உணர்வை அதனை கொடுத்த கணவனிடம் சொல்ல எண்ணும் அவளின் தவிப்பு. கணவன் காணாமலேயே, கணவனை காணாமலேயே மகள் சென்று விட அதன் உடற்சூடு முழுவதும் தணிவதற்குள் கணவன் ஏதோ ஆங்கிலேயனைச் சுட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு.. எத்தனையை கிரகிக்க வேண்டும் அவள்? கிராமத்திலிருந்து இருபது மைல் என்ற ‘நீண்ட’ தொலைவை அவள் அப்போதுதான் பயணிக்கிறாள். கணவனின் சடலத்தை அடையாளம் காண. நேரில் இன்னுமும் கூட சரிவர பார்த்திராத கணவனின் முகத்தை வைத்து சடலத்தை அடையாளம் காண வேண்டும். ஆனால் அங்கும் அவளால் முகத்தை காண முடியாது. சுடப்பட்ட சிதைந்த முகம் அது. ஊரும் உறவும் சொன்னதை வைத்து மகள் தகப்பனையொத்திருக்கிறாள் என்று கணவனை மகள் முகத்தில் பார்த்தவள், இப்போது அவன் தான் இவன் என சொல்ல வேண்டி செல்கிறாள்.
தேடி தேடி பார்க்கிறாள். அவனை அவளுக்குத் ‘தெரியவேயில்லை’. அவள் பெண். தகப்பன், சகோதரன், கணவன், மகன் என கைமாறும் வஸ்து. அதோடு பலகாரத்துக்கு மாவரைப்பது, சகடம் ஒலிக்க நீர் இறைப்பது, நிறைப்பது, சமைப்பது, துவைப்பது, இருளில்-இரவில் எதுவென்றே அறியாத ஒன்றை எதுவும் அறிவதற்குள் அனுபவித்து அதனை வயிற்றிலும் நெஞ்சிலும் சுமப்பது. இதில் விடுதலை, அதற்கான உணர்வு, ஆங்கிலேயன், அடக்குமுறை என்பதெல்லாம் தெரிய நியாயமில்லை. (காந்தி வந்த பிறகு பெண்கள் ஓரளவு மனதளவிலும் சிறிதளவு உடலளவிலும் குறைந்தபட்சம் நகைகளை ஹரிஜன நிதிக்காக உவந்தளிப்பு செய்த வகையில் பங்கீட்டளவிலும் உள்ளே வந்திருந்தனர்).
அவளுக்கும் அவனுக்குமான இணைப்பு இங்கு அறுப்பட்டு ‘அங்கு’ செல்ல அவர்கள் மூவரில் இவள் ‘இங்கிருக்க’ பார்த்துக் கொள்ளாத இருவரும் அங்கு பார்த்துக் கொள்ளப் போகும் தருணத்தை எண்ணி இவள் இனி வாழ்வை சுமக்க வேண்டும். உணர்வின் உச்சமென முடிவு. நுட்பமாக என்பதை விட தெளிவாக கதை செல்வதாக கூறலாம், அதீத திணிப்புகளற்று. ஆழம் சொல்லப்படும் விதத்தில் மட்டுமல்ல, கதையிலும் என்பதால் நம்மை அதில் அமிழ்த்தி ஆழ்த்தி விடுகிறது.
அன்புடன்,
கலைச்செல்வி
அன்புள்ள கலைச்செல்வி,
ஜா. தீபாவின் ‘மறைமுகம்‘ கதை சார்ந்து உங்கள் வாசிப்பு மற்றும் சென்ற இதழில் வெளியான தாராவின் விமர்சனம் சார்ந்து சில எண்ணங்கள் தோன்றின. ஒன்று, முகமே அற்ற பாலகனகனின் முகம் என்ற படிமம் வழியாக ஆசிரியர் மிக வலுவான ஒரு விமர்சனத்தை வைக்கிறார். பெண்ணுக்கு ஆண் ஒரு non-person என்று சொல்ல வருகிறாரோ என்று தோன்றுகிறது. அவன் முகத்தை அவள் காணவில்லை, அவன் உலகத்தை அவள் காணவில்லை என்ற நிதர்சனங்களைத் தாண்டி, ‘கண்டாலும் என்ன’ என்ற இடத்துக்குச் செல்கிறதோ என்று தோன்றுகிறது.
இந்தக் கதையை வாசித்தப் பலரும் காமாட்சியால் பாலகனகனின் உலகுக்குள் நுழையமுடியாததை குறிப்பிட்டார்கள். ஆனால் அதுபோலவே பாலகனகனாலும் காமாட்சியின் உலகுக்குள் ‘உண்மையில்’ நுழைய முடியவில்லை, இல்லையா? பாலகனகனின் மூர்க்கம் அந்த பிளவுக்கான ஓர் குறியாட இக்கதையில் நிலைபெறுகிறது. அரசியலிலும் ஆண்மயமான மூர்க்கத்தின் இடத்தை இந்தக்கதை விமர்சிப்பதாகக் கூட வாசிக்க இடம் உள்ளது.
மேலும் ஆடு-புலி-புல்லுக்கட்டு என்பது போல் ஆண்-பெண்-குழந்தை மூவரும் இக்கதையில் மாறி மாறி இணைகிறார்கள். முதலில் ஆணும் பெண்ணும். அடுத்து பெண்ணும் குழந்தையும். இறுதியில், ஆணும் குழந்தையும். ஆனால் அந்தப் பெண் மகவு அங்கேயும் தந்தையை ஒரு முகமற்றவனாகவே அறிய நேரிடும். குழந்தைக்கு அவனைத் தெரியாது. அவனாலும் குழந்தையைப் பார்க்க முடியாது. ஆண் தன் மூர்க்கத்தினால் தானே தனிமைப்பட்டு, குடும்பமற்று, அடையாளமற்றுப் போகும் ஒரு சித்திரமாகவும் இக்கதையை வாசிக்க இடம் உள்ளது.
இந்த எண்ணங்களைத் தூண்டிய உங்கள் கடிதத்துக்கு நன்றி.
சுரபி மூன்றாம் இதழில் வெளியான தன்யாவின் அந்தி சிறுகதையை வாசித்தேன். முதல் கதை எனும் வகையில் ஓ.கேதான். என்றாலும், சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
”மருதாணியை அள்ளி உடல் முழுக்க பூசிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது” எனும் வாக்கியம் கதைக்கான சாரமாய் அமைந்ததைப் போல் இருந்தது.
”வீட்டின் உள்ளே பார்த்து முடித்து திரும்பும் போது அந்தி நெருங்கிக்கொண்டிருந்தது. வானம் முழுவதும் சிவந்திருந்தது.” எனும் வரிகளில் கதைக்கான நுண்ணுணர்வு மினுங்கிக் கொண்டு இருந்தது.
”கைகளைத் தொட வந்த தம்பியை கடிந்துகொண்டவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.” என்ற வாக்கியம் கதையைத் தட்டையாக்கியது போல் இருந்தது; அவ்வாக்கியத்தை வெட்டி இருக்கலாம் அல்லது அப்பத்தியைச் செப்பனிட்டு வெளியிட்டிருக்கலாம்.
எது எப்படியோ, தன்யாவின் அந்தி ஓரளவு சிவந்து என்னை ஈர்த்தே இருந்தது.
சக்திவேல்
கோபிசெட்டிபாளையம்.
அன்புள்ள சக்திவேல் அவர்களுக்கு,
‘அந்தி’ கதை மீதான உங்கள் வாசிப்புக்கு நன்றி.
“கைகளைத் தொட வந்த தம்பியை கடிந்துகொண்டவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்” என்ற வரி கதையை தட்டையாக்கியதாக எனக்குத் தோன்றவில்லை. மாறாக அந்தக் கதையின் சாராம்சம் அதில் உள்ளது. அம்மாவுக்கும் மகளுக்குமான ரகசிய உடன்படிக்கை ஒன்று அந்த புன்னகையில் பரிமாறப்படுகிறது. தம்பி அங்கே இயல்பாக வெளியே இருத்தப்படுகிறான். கதைக்குள் இந்த நிகழ்வு வலிந்து நுழைக்கப்படவில்லை. இயல்பான ஒன்றை ஆசிரியர் அவதானித்துப் போகிர போக்கில் சொல்கிறார். இது நல்ல கதை ஆவதற்கு இந்த அவதானமும் கூற்றும் ஒரு காரணம் என்பது என் எண்ணம்.
அன்புடன்,
சுசித்ரா
~
கடலூர் சீனு இக்கதை குறித்து தன்யாவுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இங்கே அனுமதியுடன் வெளியிடப்படுகிறது:
நான் சிறு வயது முதற்கொண்டு கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவன். அதன் இயல்பின் படி, எனக்கு யார் யாரோ உணவிடுவார்கள் யார் யாரோ என்னை பராமரிப்பாளர்கள். என் அண்ணா மூத்த பிள்ளை. என்னை விடவும் சவலை பிள்ளை என்பதால் அம்மாவுக்கு அவன் மேல் பிரியம் அதிகம். இறுதி தங்கை எங்கள் குல தெய்வத்தின் வடிவம். குல தெய்வத்தின் பெயரை இட்டு சீராட்டுவார்கள். இரண்டுபேரும் அம்மாவிடம் கொண்ட நெருக்கத்தை, எனக்கு தேவை என்ன என்று சொல்ல தெரியாமல் பார்த்திருப்பேன்.
தங்கை ருது ஆனபோது அன்று அவளுக்கு சிருஷைகள் செய்த அம்மாவை கண்டேன். அது அதுவரை நானறிந்த பாசமோ வெரோன்றோ அல்ல… ஒரு அம்மா பிறர் எவருக்கும் அல்லாது மகளுக்கு மட்டுமே அளிக்க இயன்ற ஏதோ ஒன்றை அளித்துக் கொண்டிருந்தார். அன்று பாதி அனாதை ஆனேன். மிக பின்னர் என் தங்கை தனது முதல் மகளை பெற்ற போது அம்மா உடன் இருந்தார்கள். என் தங்கை அவள் மகளை தூக்கி என் அம்மாவின் கையில் கொடுத்த போது ஒன்றை கண்டேன். எவராலும் அன்றி மகளால் மட்டுமே அன்னைக்கு தர முடிந்த ஒன்றை அன்று என் தங்கை அம்மாவுக்கு தந்து கொண்டு இருந்தார். அன்று முழு அனாதை ஆனேன்.
வாழ்வு என்பது இப்படி “வகுத்து சொல்ல இயலாத” ஆனால் “அங்கே இருந்து இயக்கும்” பல நூறு தனித்துவமான நுண் விசைகளால் ஆனது.
சிறந்த எழுத்துக் கலைஞன் இந்த நுண் விசைகளிலேயே தனது முதன்மை கவனத்தை கொண்டிருப்பான்.
‘அந்தி’ சிறுகதையும் எந்த நல்ல சிறுகதையையும் போலவே பிரிதொன்று இல்லாத தனித்துவமான நுண் விசை கொண்ட உணர்வு களத்தை சித்தரிக்கிறது.
மொழியாலும் நடையாலும் உள்ள பெண்தன்மை இந்த சிறுகதையின் ஆதார பலங்களில் ஒன்று.
மருதாணி சார்ந்த அனைத்தும் எந்த மேலதிக யத்தனமும் இன்றி கலாபூர்வம் எதுவோ அது தன் அடிப்படையில் கொண்ட இயல்பாக, கதை பேசும் மையம் எதுவோ அதன் குறியீடாக மாறி விடுகிறது. இதில் இருக்கும் ஒவ்வொரு படிமங்களும் அவ்வளவு அழகு. குறிப்பாக இவள் அத்தனை கொசு கடியிலும் பல் கடித்து சகித்துக் காப்பாற்றும் மருதாணி. பிறர் பாதியில் அதை உதருவது (அதன் பின்னுள்ள வயது வாழ்வு) மருதாணியை கை கழுவும் போது அது பொருக்குகளாக உதிர்ந்து நீரில் கரைந்து மறையும் சித்திரம்.
மூக்கு குத்தி கொள்ள அவள் கொள்ளும் விழைவு, கொசு கடிகளை அதன் தினவை தாங்கும் அவளது அந்த வயதுக்கே உரிய அந்த தன்மை. ஊசிகள் போல மழை தாரைகள் குளத்தின் உடலை தைப்பதாக வரும் சித்திரம்…
தனது பரிசுத்தம் மிகுந்த, மீண்டு மறுபடியும் நிகழ வகை இல்லாத, தான் கண்டு கடந்த வாழ்வின் உணர்வு தளம் ஒன்றை, அதே களதுக்குள் அவளது மகள் நுழையும் சித்திரம். அவள் முன்பு மருதாணி உதிர்ந்து வெளியே தெரியும் முதல் சிகப்பில் முத்தமிடும் தருணம் இங்கே இப்போது இயல்பாக பொருந்தி இதற்கு வேறு அர்த்தம் தந்து விடுகிறது.
எந்த நல்ல கதையும் அதை நல்ல கதை என்றாக்கும் இரண்டு கூறுகள் இந்த கதையில் மிக இயல்பாக நிகழ்ந்திருக்கிறது.
முதலாவது அது கையாளும் தனித்துவமான வாழ்க்கை தருணம்.
இரண்டாவது அது சொல்லப்பட்ட விதம்.
இத்தனை துல்லியமான, தேவை எவ்வளவோ அவ்வளவு மட்டுமே சொல்லும் புற வயமான சித்தரிப்புகள் வழியே, முற்றிலும் abstract ஆன ஒன்றை மிக லாவகமாக sub text இல் விரிய வைத்து விடுகிறது கதை.
சின்ன சின்ன சித்தரிப்புகள் வழியே நகரும் கதை, பற்றி எரியும் வண்ணம் நிற்கும் மருதாணி செடியில் கவித்துவ உச்சத்தை எட்டி விடுகிறது. மொத்த கதையும் அங்கே அனைத்தையும் விட்டு உதறி எழுத்து பறக்க தவிக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல் தனது கால்களை கழுவிவிடும் அப்பாவின் தோள்களை பற்றியபடி அவள் வானத்தில் காணும் நகரும் நட்சத்திரங்கள்… உலகின் எந்த மொழிக்கு இக்கதை சென்றாலும் அங்கே இதன் வாசகன் இந்த இடத்தில் மனம் நெகிழாது இந்த சித்திரத்தை அவனால் கடக்க இயலாது.
கச்சிதமான Craft ஆகவும், உன்னதமான art ஆகவும் மிக சரியாக கலவையில் அமைந்த கதை இது.
கடலூர் சீனு
~
பொதுக்கேள்விகள்:
அன்புள்ள சுசித்ரா,
விவாதத்தளம் என்றால் என்ன? சுரபியை ஏன் விவாதத்தளம் என்று சொல்கிறாய்?
இந்துமதி
அன்புள்ள இந்து,
பொதுவாகவே இலக்கியச் சிற்றேடுகளில் கடிதப் பகுதிகள் முக்கியமானவை. ஏனென்றால் அங்கு தான் பிரசுரிக்கப்படும் படைப்புகள் மீது வாசகனின் எதிர்வினை வெளிப்படுகிறது. இதைத்தான் ஒரு படைப்பு வெளியான பின் அது சார்ந்து நடக்கும் விவாதம் எங்கிறேன். இத்தகைய எதிர்வினை எத்தகைய கருத்தாகவும் இருக்கலாம். கதை மீதான ஒரு வாசிப்பை முன்வைக்கலாம். கதையில் தான் ரசித்தப் புள்ளிகளை குறிப்பிடலாம். இன்னொரு கதையுடன் ஒப்பிட்டு எழுதலாம். அல்லது விமர்சனமாக இருக்கலாம். வாசகர்களின் எதிர்வினைகள் வழியாகத்தான் இலக்கியம் வளர்கிறது. இலக்கியம் நிகழும் களம் வாசகரின் அகமே.
இன்று பல இணைய இலக்கியச் சிற்றேடுகளிலும் கமெண்ட் பகுதியில் இத்தகைய விவாதங்கள் நிகழ்கின்றன. கமெண்டுகள் வாசக எதிர்வினைகள் தான். அவற்றில் நல்ல விவாதங்கள் நடந்தேறுகின்றன. நீலி இதழிலோ, வல்லினத்திலோ, அகழ் இதழிலோ இதைக் காணலாம்.
ஆனால் கமெண்டுகள் அந்தப் பதிவோடு நின்று விடுகின்றன. அந்தப் பதிவை வாசிப்பவர்கள் அதைப் படிக்கலாம். இருந்தாலும் அவை பதிவோடு இணைந்துள்ளன என்பதால், ஒரு பொது விவாதம் வழியாக பதிவுக்கு அதிகப்படியான கவனம் என்ற நிகழ்வு நடப்பதில்லை.
இது ஓரளவு முகநூலில் நிகழ்கிறது. ஆனால் அங்கு வரும் எதிர்வினைகள் வெறும் கமெண்டுகள் தான். ‘கமெண்ட்’ என்ற சொல்லும் எதிர்வினை என்ற சொல்லும் ஒன்றல்ல. எதிர்வினையில் வினைச்செயல் உள்ளது. ஓர் ஊக்கமிகுதி உள்ளது. கமெண்ட் என்ற சொல்லிலேயே ஒரு விட்டேத்தித்தனம் உள்ளது. இந்த விட்டேத்தித்தனம் இலக்கியத்துக்கு எதிரானது.
ஆகவே சுரபி இதழில் கமெண்டு பகுதி இல்லாமல், கடிதங்களாக வெளியிட்டால் என்ன என்று பரிசோதனையாகச் செய்து பார்க்கிறேன். ஆகவே இதை ‘விவாதத் தளம்’ என்கிறேன்.
இதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உண்டு. கமெண்ட் என்றால் வாசித்ததும் எழுத வசதியாக உள்ளது. கடிதம் என்றால் மின்னஞ்சலில் எழுத வேண்டும். கமெண்ட் என்றால் படைப்புடன், அல்லது அதன் ஆசிரியருடன் உரையாடுவது போல் வாசகருக்குத் தோன்றலாம். கடிதம் என்றால் இதழுடன், அல்லது இதழாசிரியரிடம் உரையாடுவது போல் தோன்றக்கூடும். அதைச் சிலர் விரும்பாமல் இருக்கலாம், தவிர்க்கலாம்.
இருந்தாலும் இதுவே வழி என்று தோன்றுகிறது. ஆகவே சுரபி இதழ் நீடிக்கும் வரை, இதழுக்கு வரும் கடிதங்கள் இதே வடிவத்தில் வெளிவரும். இவ்விதழின் வாசகர்கள் படைப்புகளை வாசித்து கடிதம் எழுதினால் மகிழ்வேன்.
அன்புடன்,
சுசித்ரா
~
பலர் கேட்ட ஒரு கேள்வி – ஏன் என் படைப்பு நிராகரிக்கப்பட்டது?
சுரபி இதழ் தொடங்கப்பட்ட இந்த ஒன்றரை மாதத்தில் இதுவரை ஒன்பது படைப்புகள் அனுப்பப்பட்டன. ஒன்று மட்டுமே பிரசுரமாகியுள்ளது. இந்த இதழில் என் கதையை பிரசுரித்துள்ளேன். பிரசுரத்துக்கு முன் நான் மதிக்கும் இரண்டு வாசகர்களின் எண்ணங்களை பெற்றே பிரசுரித்தேன்.
இன்று வெளிவரும் சிற்றிதழ்களில் ஒரு குறைப்பாடென எனக்குத் தோன்றுவது அவற்றில் ஆசிரியர் தேர்வும் மதிப்பீடும் தீவிரமாகக் கையாளப்படுவதில்லை என்பது. சுரபி இந்த போக்கிலிருந்து விலகி நிற்க முற்படுகிறது.
சுரபியில் ஓர் ஆசிரியரின் சிறந்த வெளிப்பாடுகளை மட்டுமே பிரசுரிப்பது என்ற கொள்கை கொண்டிருக்கிறேன். நீங்கள் மேலும் சிறந்த கதைகள் எழுதியிருக்கிறீர்கள். அவற்றை மீள் பிரசுரம் செய்து அவற்றின் மீது விவாதம் மேற்கொள்ளவுள்ளேன். இந்தக் கதையில் மேலதிகமாகத் திரண்டு வரும் கலைக்கணம் ஒன்று நிகழவில்லை என்பது என் அபிப்பிராயம். ஆகவே நிராகரிக்க நேரிட்டது. ஒரு நல்ல சிற்றிதழ்களின் நிராகரிப்பு விகிதம் எப்போதுமே அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இது முற்றிலும் அகவயமான ஒரு தேர்வு, உண்மை தான். ஆனால் இலக்கியம் என்பதே பெரும்பாலும் அகவயமாக நிகழும் ஒரு செயல்பாடு தான் அல்லவா? ‘இது என் ரசனை’ என்று சொல்வது முதல் படி. ‘ஏன் என் ரசனை இப்படி இருக்கிறது’ என்று சொல்வது இரண்டாவது படி. இவற்றை வாசகர்கள் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். சுரபி என்னுடைய தனிப்பட்டக் கருத்துக்களால் வழிநடத்தப்படுகிறது. அது போன்று ஒவ்வொரு வாசகரும் அவருடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்த ஒரு தளம் தொடங்கி அதில் பதிவு செய்யலாம் அல்லவா? இன்று தனி உரையாடல்களில் இந்த பேச்சுக்கள் நிகழ்கின்றன. அவை பொதுவில் நடந்தால் நம் சூழல் இன்னும் நேர்மையாக, இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கும் என்பது என் கருத்து.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட வேண்டியே சுரபியைத் தொடங்கினேன். சுரபியில் வெளியாகும் படைப்புகள் மீது உங்களுக்குக் கருத்துகள், விமர்சனங்கள் இருந்தாலும் எழுதவும். இந்த உரையாடல் வழியாக நாம் மேலும் வளர்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
தன்யா 1998-ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார். எழுத்தாளர் ஜெயமோகனின் புத்தகங்கள் வழியாக சீரிய இலக்கியத்தின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து இந்திய, ரஸ்ய செவ்வியல் நாவல்களை வாசித்து வருகிறார். ‘அந்தி’ இவருடைய முதல் சிறுகதை. தன்யா நிதித்துறையில் பணியில் இருக்கிறார். 2023-ஆம் ஆண்டு எழுத்தாளர் அஜிதனை மணந்தார். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
சென்ற இதழில் ‘அன்னையை சுவீகரித்தல்‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றது. அதில், அம்பையின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்‘ என்ற கதையை ஒட்டி, மகள் அம்மாவை சுவீகரிப்பதைப் பற்றிய அந்தக் கதையின் பார்வை விவாதிக்கப்பட்டது.
அந்த விவாதத்திலிருந்து உத்வேகம் பெற்று தன்யா ‘அந்தி’ என்ற தன் முதல் சிறுகதையை எழுதியிருக்கிறார். அம்மாவை சுவீகரித்தல் என்பதையே, அதே கருவின் அமைப்பில், வேறொரு பார்வையோடு அணுகியிருக்கிறார். நல்ல கதையாக வந்துள்ளது. அதன் முற்றிலும் நேர்நிலையானப் பார்வை என்னை மலரச் செய்தது.
கன்னிமையை அன்னையிடமிருந்து மகள் சுவீகரிக்கிறாள், அல்லது அன்னையே அதை மகளுக்குக் கொடுக்கிறாள் என்ற பார்வை கதையில் வருகிறது. மேலும் அந்த பருவத்தின் அருமையும் சன்னமாக உணர்த்தப்படுகிறது. மருதாணியின் நிறமும் ஆழமும் அந்த அருமையான காலத்தை உணர்த்தும் படிமமாக கதையில் ஆர்பாட்டமில்லாமல் வருகிறது. ஒரு கட்டத்தில் மொத்த வாழ்வின் அருமையை உணர்த்தும் அளவுக்கு விரிகிறது.
ஒரு முன்னோடியின் கதையிலிருந்து தொடங்கி விவாதம் போல் இன்னொரு தளத்துக்குச் செல்லும் ஒரு கதை இயற்றப்படுவது மிகவும் படைப்பூக்கம் பொருந்திய ஒரு விஷயம். இந்த நிகழ்வு சுரபி தொடங்கப்பட்ட மிககுறுகிய காலத்தில் நடந்தேறியது நிறைவூட்டுகிறது.
சவிதா நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து கொஞ்சம் தாமதமாக வந்தாள். காலில் அணிந்த ஷூவில் சிவந்த மண் கரைகள். கறுத்து வியர்த்திருந்தாள். சென்று குளிக்கச் சொன்னேன். குளித்து முடித்து வழக்கம் போல துணியை சுருட்டி குளியலறையிலேயே போட்டிருந்தாள். சலிப்புடன் அதை எடுத்த போது கவனித்தேன். என் மகள் ருது அடைந்துவிட்டாள். தொண்டை அடைத்தது. அவளுக்கு அவ்வளவு வயதாகவில்லையே, இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்த தெருவில் வசித்த பெரியம்மாவிற்கு அழைத்தேன். பூரித்துப் போனார். உடனே வீட்டிற்கு வந்து எல்லா பொறுப்புகளையும் எடுத்துக்கொண்டார். சவிதாவிற்கு ஏற்கனவே கொஞ்சம் விபரங்களை கற்றுக்கொடுத்திருந்தாலும் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது. உருட்டி விழித்து எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
நான்காவது நாள் சில சடங்குகள் செய்ய வேண்டும். விருந்து சமைக்கவேண்டும். என் அம்மா களி, புட்டு என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். சவிதாவிற்கு மெஹந்தி இட்டு விட ஒரு பெண்ணை பெரியம்மா ஏற்பாடு செய்திருந்தார். இரண்டு தாத்தா பாட்டிகளும் வந்த பின்னர் தான் சவிதா கொஞ்சம் முகம் மலர்ந்திருந்தாள். அவளுடைய தம்பி அவள் அறைக்குள் ஓடுவதும் அவள் விரட்ட கீச்சென்று கத்திக்கொண்டே வெளியே வருவதுமாக விளையாடிக்கொண்டிருந்தான். அவனோடு மட்டும் தான் மெல்லிய குரலில் அவள் இயல்பாக பேசிச் சிரித்துக்கொண்டிருந்தாள். வேறு யார் உள்ளே சென்றாலும் மீண்டும் அதே குழம்பிய பார்வை.
எனக்கு என் தம்பியின் பூனூல் கல்யாண நிகழ்வு ஞாபகம் வந்தது. எப்போதும் நினைவில் நிற்கும் சில நாட்காளில் அதுவும் ஒன்று. நான் கல்லூரி முடித்திருந்த சமயம். சென்னையில் இருந்த நாங்கள் அந்த நிகழ்வுக்காக மதுரை சென்றிருந்தோம். இரண்டு நாள் நிகழ்வு அது. அதற்கு முன்பு நான் பூனூல் கல்யாணம் பார்த்ததில்லை. முதல் நாள் பூர்வாங்கம். பந்த கால் நட்டு, மந்திரங்கள் சொல்லி ஒன்பது நாந்தி பிராமணர்களை முன்னோர்களாக பாவித்து உணவளித்து உபசரித்து அனுப்பினார்கள். இரவு முழுவதும் பயணம் செய்து வந்ததால் மதியம் தூக்கம் வந்தது. ஆனால் அந்த மண்டபம் கொஞ்சம் பழையது. சிமெண்ட் தரையுடையது. வைகைப்பாலம் அருகில் இருந்தது. சுற்றிலும் கடைகள், சிறிய கோவில்கள்; சாலையில் மாடுகளும் குப்பைகளும் இருந்தன. மழைக்காலம் வேறு. அவ்வப்போது தூரல் இருந்தது. மிகவும் கசகசப்பாக உணர்ந்தேன். அம்மா, சித்தி, பாட்டி ஆகியோர் கீழே மண்டப கூடத்திலேயே படுத்து விட்டார்கள். எப்படித்தான் கூச்சம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். மாடியில் அறைகள் இருந்தாலும் அங்கு சென்று நான் மட்டும் எப்படி உறங்குவது என்று யோசிப்பதற்குள் மாலை ஆகிவிட்டது.
தாத்தா வீடும் மதுரையில் தான் இருந்தது. சூர்யா நகர் தாண்டிச் செல்லவேண்டும். அன்று என் நினைவெல்லாம் வீட்டில் தான் இருந்தது. தாத்தா நிமோனியா முத்திய நிலையில் இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. பேசும் சக்தியை கிட்டத்தட்ட முழுமையாக இழந்திருந்தார். அவரது ஒல்லியான தேகம் மேலும் மெலிந்திருந்தது. எனவே அதற்கு முந்தைய மாதம் தான் அவரை எங்கள் சென்னை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தோம். மதுரை வீட்டை பராமரிப்பு செய்து வாடகைக்கு விட ஏற்பாடாகியிருந்தது. இனி அந்த வீட்டிற்கு சென்று தங்க முடியாது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சித்திரைத் திருவிழா சமயத்தில் அழகர் வைகை நோக்கிச் செல்லும் வழியில் தான் எங்கள் வீடு. அதைப்பார்க்க காலை மூன்று மணிக்கு எழுப்பி முகம் கழுவ வைத்து தவளை சத்தத்திற்கு நடுவே டார்ச் விளக்கொளியில் தெருவின் முகப்பிற்கு அழைத்துச் செல்வார். ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போதும் ஒரே திட்டம்தான் வைத்திருப்பார். ‘’நாளைக்கு மீனாட்சி கோவில் போகலாம். அடுத்த நாள் அழகர் கோவில்”. ஒருமுறை நான் வேறு எங்காவது போகலாம் என்று சொன்னதிற்கு மிகவும் யோசித்து திருமலை நாயகர் மகாலை கண்டுபிடித்தார். பத்தாவது படிக்கும் சமயத்தில் இருந்து தேர்வு, வகுப்பு என்று காரணம் சொல்லி மதுரைக்கு வருவதை தவிர்ப்பேன். அப்போது சலித்திருந்தாலும் ஏனோ மனம் அவற்றை இனிமையான நாட்களாக உருவகித்துக்கொள்கிறது.
தாத்தா மண்டபத்தின் ஒரு அறையில் படுத்திருந்தார். இந்த பூனூல் கல்யாணமே அவர் காணும் கடைசி மங்கல நிகழ்வு என்று அவருக்கு தோன்றியிருக்கலாம். ஒரு நல்ல நிகழ்வை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அவர் முகத்தில் இருந்தது. எனவே ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து வந்தோம். அவரது ஒடுங்கிய கன்ன எலும்பின் வளைவுகளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த என்னை ’’கிளம்பு, மழை வர மாதிரி இருக்கு. அதுக்குள்ள கோவில் போயிட்டு வரலாம்’’ என்று அம்மா அவசரப்படுத்தினார்.
மாலை நானும், அப்பாவும், அம்மாவும் மட்டும் மீனாட்சி கோவிலுக்கு சென்று வந்தோம். அந்த வயதில் மீனாட்சி என் தோழியாக இருந்தாள். அவளோடு என் எல்லா ஆசைகளையும் பகிர்ந்து கொள்வேன். சுந்தரேஸ்வரரை அவள் காதலனாக அன்றி என்னால் பார்க்கமுடிந்ததில்லை. அவளுடைய மூக்குத்தி போலவே நானும் அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மீண்டும் அவளை கோவிலில் பார்த்தபோது தொற்றிக்கொண்டது. என் அம்மாவின் மூக்குத்தியையும் எதிரில் வந்த அத்தனை பெண்களின் விதவிதமான மூக்குத்திகளையும் பார்த்துக்கொண்டே வந்தேன். ’’உனக்கு செட் ஆகாது டி’’ என்று சொன்ன என் பள்ளித்தோழியின் நினைவு வந்து முகம் தொங்கிப்போய் பொற்றாமரைக்குளத்தில் அமர்திருந்தேன். ‘’முகத்த ஏண்டி இப்டி வெச்சிருக்க?” என்று அம்மா கேட்க “ஒன்னுமில்ல போ” என்று முகம் சுளித்தேன். அப்பா,’’என்னமா, எதாச்சும் வேணுமா?” என்று கேட்க ”நான் மூக்கு குத்திக்கவா?” என்று கேட்டு என் முகத்தை கொஞ்சம் சரியாக பார்த்துவிட்டுச் சொல் என்பது போல இரண்டு பக்கமும் லேசாக திருப்பிக் காட்டி உதடுகளை மூடி புன்னகைத்தேன். ”உனக்கு புடிக்கும் நா குதிக்கோமா. வலிக்குமே. அது பாதுக்கோ” என்றார். அம்மா ”குத்திட்டு புடிக்கலனு சொன்னா அப்புறம் மூக்குல வடு இருந்துடே இருக்கும்.அவசரப்படாத” என்று மேலும் குழப்பினார். ஒட்டிக்கொள்ளும் மூக்குத்தி இருக்கிறதா என்ற சிந்தனை பிறந்தபோது மழை பெரிய சொட்டுகளாக நாங்கள் அமர்ந்திருந்த கற்படிகளில் விழத்தொடங்கியது. நீண்ட ஊசிகள் துளைத்த உடலாக கரிய குளத்தில் நீர் தெறித்தது. ஆட்டோ பிடித்து மீண்டும் மண்டபம் வந்து சேரும் போது புழுக்கம் மேலும் அதிகமானது.
இரவு மண்டபத்தில் உணவருந்திவிட்டு உறவினர்கள் சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் அமர்ந்து கேட்டுகொண்டிருந்தேன். அப்போது என் பாட்டி உள்ளே தாத்தா படுத்திருந்த அறையிலிருந்து அழைத்தார். தூக்கம் கால்களை துவளச் செய்தது. அங்கு பாட்டி ஒரு கிண்ணத்தில் நிரம்ப மருதாணி அரைத்து வைத்திருந்தார். அது எங்கள் வீட்டின் முன்பகுதியில் வராண்டாவில் இருக்கும் மருதாணி மரத்தில் இருந்து எடுத்தது. அந்த தெருவில் இருக்கும் அனைத்துப் பெண்களும் பாட்டியிடம் சிரித்துப்பேசி கொஞ்சம் பறித்துச்செல்வது வழக்கம். எல்லா விடுமுறையும் அந்த மருதாணிக் கறையுடன் தான் சென்னை திரும்புவேன். சென்னையில் பள்ளிக்கு மருதானிக் கைகளுடன் செல்வது கூச்சமாக இருக்கும். ஆனால் அனைவரும் என் கைகளை பார்ப்பது தெரிந்து சில நாட்கள் என்னுள்ளிலிருந்து அபிநய மொழி அளவில்லாது பொழியும்.
பாட்டி வலது கையின் கட்டை விரலிலிருந்து தொடங்கி மூன்று விரல்களால் அதில் கொஞ்சம் கிள்ளி எடுத்து இடக்கையில் நகக்கூம்புகளைச் சுற்றி குப்பிகளாக அமைத்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் “வா” என்று மட்டும் சொன்னார். சென்று அவர் முன் அமர்ந்தேன். மருதாணியின் மனம் என் தூக்கத்தை கலைத்துவிட்டது. பாட்டியின் குப்பியிட்ட சுண்டுவிரலின் நுனியில் தெரிந்த ஆரஞ்சு நிறம் ரகசியம் வெளிப்படும் பதற்றத்தை அளித்தது. பாட்டி என் இடது உள்ளங்கையை காட்டச் சொல்லி அதன் மத்தியில் பெரிய உருண்டையை எடுத்து வைத்து வட்டமாக பரப்பினார். ஜில்லென்று அதன் குளிர்ச்சி என் கண்களை சுருங்கச் செய்தது. உள்ளங்கையின் விளிம்புகளில் எட்டு புள்ளிகளாலான வெளிவட்டத்தை அமைத்தார். விரல் குப்பிகளே எனக்கு மிகவும் பிடித்தமானவை. சரியான அளவு மருதாணியை எடுத்து கொஞ்சம் பந்து போல உருட்டி விரலின் மேல் நுனியில் இருந்து அதை கவிழ்த்து எல்லாப் பக்கமும் சரியான அளவில் பரப்பி எல்லா விரலிலும் ஒரே அளவு நீட்டத்தில் நிறுத்த வேண்டும். பாட்டியின் கை மிக இயல்பாக அதைச் செய்தது. நான் விரல்களை விரித்து குப்பியின் அனைத்து பக்கங்களையும் பார்க்க முயற்சித்தேன். என் உள்ளங்கையை ஒரு விரல் மீது மறு விரல் படாமல் விரைத்தது போல வைத்துக் கொண்டிருந்ததில் மனிக்கட்டில் இருந்து கட்டைவிரலுக்குச் செல்லும் எலும்பு வலிக்க ஆரம்பித்திருந்தது. பாட்டி எனது இருகைகளையும் அலங்கரித்து முடித்ததும் நான் எழுந்தேன். ‘’கால்லையும் போட்டுக்கோயேன், நலுங்கு மாதிரி வெச்சு விடறேன், இனிமே நாம எப்போ இங்க வருவோமோ தெரியலயே” என்றார். ஆம், இதுவே கடைசி முறை என்று தோன்றியது. மருதாணியை அள்ளி உடல் முழுக்க பூசிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. ’’சரி’’ என்று எனது இடது காலை முன் நீட்டினேன். கைகள் என் பாவாடை மீது படுவது போல் இருந்ததால் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் மடக்கி விரல்களை விரித்து நின்றிருந்தேன். தூக்கமின்மையால் கண்கள் துருத்தியிருக்க, அறையின் வாசற்கதவை வெறித்துப் பார்த்திருந்தேன். வேகமாய் உள்ளே நுழைந்த அம்மா, ஒரு கணம் திகைத்து நின்று “என்னடி…ஓ! காலிலேயும் மருதாணியா? எப்படி தூங்குவே?” என்றார். “அதெல்லாம் தூங்குவேன்” என்று சிணுங்கினேன். “இன்னிக்கி ஒரு நாள் தான, அப்றம் எவ்ளோ அழகா இருக்கும். விடு” என்று பாட்டி சொல்ல, என்னவோ செய் என்று பார்வையால் கூறிவிட்டு நாளைய நிகழ்வுக்கு தேவையான பொருட்கள், உடைகள் ஆகிவற்றை சரிபார்க்கத் துவங்கினார். பாட்டி ”முடிஞ்சுது” என்று சொல்லி தண்ணீர் இருக்கும் குவளையில் வலது கையை முக்கி கழுவிக்கொண்டார். அவரது வலது கை விரல்கள் அனைத்திலும் நல்ல கரை படிந்திருந்தது. ஆனால் அவை கச்சிதமாக இல்லாமல் அப்பியது போல படிந்திருந்தது. எப்போதும் இடக்கையில் மட்டுமே அவர் சரியாக இட்டுக்கொள்ள முடிந்தது. அது சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு குற்றவுணர்வைத் தரும். என்றாவது ஒரு நாள் அவருக்கு இரு கைகளிலும் சரியாக அலங்கரித்துவிட வேண்டும்.
ஒரு அடி எடுத்து வைத்தேன். பாவாடை அசைந்து மருதாணியிட்ட கால் கட்டைவிரல் மேல் உரசிச் சென்று வந்தது. அங்கேயே நின்றுவிட்டு ”அம்மா!” என்று கத்தினேன். ‘’என்னை ரூமுக்கு கூடிட்டு போ. பாவாடை தடுக்குது” என்றேன். “திடீர்னு ஏண்டி இப்டி கத்துற? வா இங்க..” என்று என் அருகே வந்து என் பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகி விட்டார். ”எனக்கு வேலை இருக்குடி. அப்பாவை வேனா கூட்டிட்டு போகச் சொல்றேன்” என்று மண்டப ஹாலில் இருந்த அவரை உடனே அழைத்துவிட்டார். அப்பாவும் சட்டென்று வந்துவிட என் கோலத்தைப் பார்த்து கண்கள் விரிய சிரித்துவிட்டார். என் முகத்தை எப்படி வைத்துக் கொள்வது என்று தெரியாமல் விழித்து உதட்டைப் பிதுக்கினேன். அம்மா என் நிலைமையை எடுத்துக் கூற அப்பா என்னை மாடி அறைக்கு அழைத்துச் சென்றார். மண்டப ஹாலில் மாமா, மாமிகள் என்று பத்து பேர் வரை அமர்ந்து பேசிகொண்டிருந்தனர். என்னை பார்த்து அவர்கள் கண்கள் மினுங்க புன்னகைத்தது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது.
அப்பா பின்னாலிருந்து என் தோள்களையும் முதுகையும் லேசாக பிடித்துக் கொள்ள குறுகிய மாடிப்படிகளில் தடுமாறியபடி ஏறிச் சென்றேன். மூன்று அறைகள் இருந்தன. ”கடைசி ரூம்ல நாம தங்கிக்கலாம். மத்த ரெண்டு ரூமையும் சொந்தக்காரங்களுக்கு கொடுத்துட்டோம்” என்று சொல்லிவிட்டு அப்பா அந்த அறையின் விளக்கைப் போட்டார். ஐந்து பேர் வரிசையாகப் படுக்கலாம். பாய்களும் போர்வைகளும் இருந்தன. ஆனால் மிகப் மிகப் பழையவை. சன்னல் திறந்திருந்தது. மூடினால் புழுக்கம் அதிகமாகும் என்பதால் அப்படியே விட்டுவிட்டு மின்விசிறி இருக்கும் இடத்தை குறிப்பார்த்து நின்றேன். அந்த இடத்தில் அப்பா பாய் விரித்து தலையணை போர்வை எல்லாம் வைத்து கால்களுக்கும் சில தலையணைகளை வசதிக்காக போட்டுக்கொடுத்தார். ஒரே சமயத்தில் மகாராணி போலவும் நோயுற்றவளைப் போலவும் உணர்ந்தேன்.
கீழே அமர முயற்சித்து கால்களைப் பின்னிய வேகத்தில் கொஞ்சம் தடுமாறி பொத்தென்று அமர்ந்துவிட்டேன். எலும்பில் வலி தெறித்தது. அதற்குள் அம்மா, சித்தி, சித்தப்பா, தம்பி எல்லோரும் படுக்க வந்துவிட்டனர். அனைவரும் பரபரப்பு தணிந்து படுக்க கொஞ்சம் நேரம் பிடித்தது. விளக்கை அணைக்கும் வரை அமர்ந்திருந்தேன்.
என் கால் முட்டிகளை தலையணையில் அழுத்தி ஒருக்களித்து படுக்க முயன்றேன். ஆனால் எப்படி படுத்தாலும் கால்களில் மருதாணி உரசிக் கொள்வது போல இருந்தது. பாதங்களை தரையில் பதித்து கால்களை மலை போல் மடக்கிய நிலையிலேயே மெதுவாகச் சாய்ந்தேன். இத்தனை நேரமும் கைகள் விரித்தவாறே இருந்ததை உணர்ந்து கொஞ்சம் தளர்த்திய போது தோள்பட்டையில் இருந்து மணிக்கட்டு வரை ஓர் நரம்பு அதிர்ந்து மீண்டது. கண்கள் மூடிக்கொள்ள கண்மணிகள் உள்ளே உருண்டு சென்று செருகிக் கொண்டன. ஐந்து நிமிடம் இருக்கும். நான் மீண்டும் விழித்துக் கொண்டேன். என் உடலெங்கும் ரத்தம் உறிஞ்சப்படுவது உணர்ந்து உதறிக்கொள்ள முயன்றேன். என்னால் நகர முடியவில்லை. இருட்டில் யாருக்கும் தெரியாமல் மண்ணுக்கு அடியில் அமிழ்ந்துகொண்டிருக்கும் ஓர் ஊனாக மட்டுமே என்னை உணர்ந்த போது திடுக்கிட்டு கண்களைத் திறந்தேன். நெஞ்சு விம்மி விம்மி அடங்கிக்கொண்டிருக்கும் போதே கைகளிலும் கால்களிலும் கொசுக்கள் தொடர்ச்சியாகக் கடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். சுற்றிலும் அம்மா, சித்தி எல்லோரும் கைகளை காற்றில் வீசிக்கொண்டு அரைத்தூக்கதில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டனர். சிறிது நேரத்தில் எல்லோருக்கும் முழுவதுமாக தூக்கம் கலைந்து விட்டது. சித்தப்பா எழுந்து சன்னலை மூடினார். ஆனால் உள்ளே இருக்கும் கொசுக்கள் மூர்க்கமாக கடித்துக்கொண்டே இருந்தன. என்னால் சொரிந்து கொள்ள முடியவில்லை. என் மருதாணி அழிவதை நான் விரும்பவில்லை. அம்மாவும் சித்தியும் படிந்தவரை போதும் என்று எழுந்து கழுவிக்கொண்டு வந்துவிட்டனர். அவர்கள் கைகளில் மட்டும் வைத்துக்கொண்டு வந்து படுத்திருந்தனர். கழுவிய கைகளில் மெல்லிய கரை மட்டுமே இருந்தது. எனக்கு அழுகை வந்துவிட்டது. நான் இரண்டு மணி நேரமாவது வைத்துக்கொண்டு தான் கழுவுவேன் என்று முணகினேன். கடிந்து கொள்ளும் நிலைக்குச் சென்ற அம்மாவின் முகம் சற்று தணிந்து, கோகுல் சான்டால் பவுடரை எடுத்து என் கைகளிலும் கால்களிலும் தடவினார். ”கொஞ்ச நேரம் கழிச்சு கழுவிட்டு நிம்மதியா படு. எத்தன நேரம் இப்படியே கொசுக்கடியோட சொரியமுடியாம அண்ணாந்து படுத்திருப்பே? என்றவாறு மீண்டும் உறங்கச் சென்றார். பவுடர் சற்று ஆறுதலை அளித்தாலும் அந்த நெடி தும்மல் வரச் செய்தது. கைகளால் காற்றில் கொசுக்களை சிதறடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். மருதாணி வாசம் கொசுக்களை ஈர்க்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் தோன்றியது. மற்றவர்களை விட்டு என்னைத்தான் இப்போது அவை சூழ்ந்து கொண்டன. சிறிது நேரத்தில் என் கைகள் ஓய்ந்தன. அவை என் கைகளை கடிப்பதைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். மருதாணி மரமாக என்னை நினைத்துக் கொண்டு அதில் ஊரும் எரும்புகள் என அந்த கொசுக்களை உருவகித்துக்கொண்டேன். எங்கு கடிக்கும் என்ற அவதானிப்பும் கண்டுபிடிப்புகளும் ஓர் விளையாட்டாக மாறியது. என் உடலின் ஒவ்வொரு அணுவையும் உணர்ந்து கொண்டிருந்தேன். விருந்துணவு உண்டு திளைத்த உயிர்களின் ஓசையில் அயர்ந்து தூங்கிப்போனேன்.
மூன்று மணியளவில் தூக்கம் கொஞ்சம் கலைந்தது. நான் தூக்கத்தில் நன்றாக ஒருக்களித்து படுத்திருக்கிறேன். ஆனால் மருதாணி நன்றாக காய்ந்து பாளம் பாளமாக ஆகியிருந்ததால் கவலை இல்லை. அந்த இடுக்குகளில் தெரிந்த சிவந்த கங்கு போன்ற கரை என்னை குதூகலிக்கச் செய்தது. நன்றாகவே காய்ந்து உதிர்ந்த வெளிவட்டப் பொட்டொன்றை ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டேன். என் அப்பாவும் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்திருந்தார். என்னிடம் அசைவுகளைக் கண்டு ‘’கை கழுவிக்கிறியா மா? இங்க தான் பக்கத்துல பைப் இருக்கு” என்றார். எனக்கும் உடல் மிகச் சோர்வாக இருந்தது. சிறுநீர் கழிக்க வேண்டும் போலவும் இருந்தது. கழுவிக்கொண்டு வந்தால் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தோன்றியது. சரி என்று எழுந்து கொண்டேன். அப்பா என்னை முந்தைய இரவு பிடித்துக்கொண்டதைப் போல இப்போதும் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நான் இயல்பாக நடப்பதை பார்த்துவிட்டு நிதானமடைந்தார். உடல் முழுவதும் வலித்தது. கண்களை பாதி திறந்தபடியே நடந்தேன்.
வராண்டாவில் இருந்து திறந்த மொட்டைமாடிக்கு சில படிகள் ஏறிச் சென்றோம். அங்குதான் குளியல் அறைகள், கை கழுவும் இடம் ஆகியவை இருந்தன. கோவில்களில் இருப்பது போல வரிசையாக நான்கைந்து குழாய்கள். அதில் முதலில் நான் இருகைகளையும் நீட்டி ஒன்றோடு ஒன்றை உரசிக் கழுவினேன். காய்ந்த திட்டுக்கள் நீரில் நனைந்து இளக குழாயை வேகமாகத் திறந்து அதில் கைகளைக் காட்டினேன். அவை பொருக்குகள் போல எடையற்று தண்ணீரில் மிதந்து சென்று மறைந்தன. அடுத்து கால்களைக் கழுவ முயன்றேன். ஆனால் ஒரு காலை வைத்து இன்னொரு காலை சரியாக அழுத்தி உரச முடியவில்லை. சிரிய பல்பு வெளிச்சம் மட்டுமே இருந்தது. கண்களை சுருக்கி நான் துழாவிக்கொண்டிருக்கையில் அப்பா சட்டென்று “இரும்மா, நான் கழுவி விடறேன்” என்று குந்தி அமர்ந்து என் கால்களை ஒவ்வொன்றாக நீரில் காட்டி தேய்த்துக் கழுவினார். நான் ஒரு கையை எதிர்சுவரில் ஊன்றி மறு கையை அப்பாவின் தோள்களில் வைத்திருந்தேன். அப்பா எனக்கு சிறு வயதில் குளிக்கும் போது சோப்பு தேய்த்துவிட்டது நினைவு வந்தது. என் கண்கள் கூசி நீர் நிரம்பியது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் நீரில் கரைந்து சிறு ஒடைகளாகி எங்கோ வழிந்து சென்றன.
அதிகாலை மீண்டும் சீக்கிரமாக எழுந்து குளித்து தயாராக வேண்டியிருந்தது. என் மருதாணியின் சிவப்பில் அவ்வப்போது நிலைமறந்து நின்றிருந்தேன். இளம் காலை ஒளியில் அவை பூத்த செம்பருத்திகள் போல் இருந்தன. விரல்களை குவித்தும் விரித்தும் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தேன். இரவு தூக்கம் போதாமையால் என் முகம் சற்றே வீங்கியிருந்தது. உடலில் வெப்பத்தை உணர்ந்தேன். நல்ல வெளிச்சம் வந்ததுமே கவனித்தேன். என் கைகள், குதிக்கால்கள் இரண்டும் முழுவதுமாக கொசுக்கடியில் சிவந்த திட்டுக்களாகி இருந்தன. இரண்டாம் நாள் நிகழ்வில் குருவின் உதவியுடன் தந்தை மகனுக்கு காயத்திரி மந்திரம் ஓதும் சடங்கு நடைப்பெற்றது. அதன் பின்னர் சித்தியும் சித்தப்பாவும் தம்பியுடன் அமர்ந்து கொள்ள சில சடங்குகள் நடைப்பெற்றன. முந்தைய நாள் கரைத்து வைத்த நவதானியப் பாலிகைக் குவியலை குடும்பத்தில் உள்ள சுமங்லிப் பெண்கள் கைகளால் எடுத்து மண் குடுவைகளில் இட்டு வேண்டிக்கொண்டார்கள். தாத்தா, படுத்திருந்த அறையில் இருந்தே கூடத்தில் நடந்த நிகழ்வை கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தார். அன்று மாலை சென்னை கிளம்பும் முன்னர் அப்பா அம்மாவுடன் சேர்ந்து கடைசியாக தாத்தா வீட்டிற்குச் சென்றேன். பராமரிப்பு வேலை பெரும்பாலும் முடிந்திருந்தது. இளம் பச்சை நிற வண்ணம் வீட்டை அடையாளம் காண முடியாதபடி மாற்றியிருந்தது. மழை மேகங்கள் நீங்கி வானம் தெளிவடைந்திருந்தது. வீட்டின் உள்ளே பார்த்து முடித்து திரும்பும் போது அந்தி நெருங்கிக்கொண்டிருந்தது. வானம் முழுவதும் சிவந்திருந்தது. மருதாணி மரம் தீத்திவலையில் எரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.
பெரியம்மா அழைத்துக்கொண்டே இருந்தார். சவிதாவிற்கு மெஹந்தி இட்ட பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும். ”ராத்திரி முழுக்க கழுவாதிங்க பாப்பா. அப்போதான் நல்லா கரையாகும்” என்று அவள் கூற சவிதா கைகளை அசைக்காமல் மிகப் பொறுப்பாக தலையை ஆட்டினாள். கைகளைத் தொட வந்த தம்பியை கடிந்துகொண்டவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
~
ஆசிரியர் குறிப்பு:
தன்யா 1998-ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார். எழுத்தாளர் ஜெயமோகனின் புத்தகங்கள் வழியாக சீரிய இலக்கியத்தின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து இந்திய, ரஸ்ய செவ்வியல் நாவல்களை வாசித்து வருகிறார். ‘அந்தி’ இவருடைய முதல் சிறுகதை. தன்யா நிதித்துறையில் பணியில் இருக்கிறார். 2023-ஆம் ஆண்டு எழுத்தாளர் அஜிதனை மணந்தார். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
தமிழில் பெண் எழுத்தின் மரபையும் தொடர்ச்சியையும் முதன்முதலாக விசாரணைக்கு உட்படுத்தி எழுதியவர் எழுத்தாளர் அம்பை. 1984-ல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘The Face Behind The Mask’ என்ற நூலில் அதுவரை தமிழில் பெண்கள் எழுதியதில் புதிய, அசலான வெளிப்பாடு என்று ஒன்று ஏன் உருவாகவில்லை என்ற கேள்வியை எழுப்பி விரிவாக ஆராய்ந்தார். வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இந்தக் கேள்வியை ஆராய்ந்ததோடு, பல பெண் எழுத்தாளர்களை நேர்முகம் கண்டு அவர்களுடைய பதில்களையும் அனுபவங்களையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த காலகட்டம் பற்றிய துல்லியமான சித்திரமும், அன்று பெண்களின் சுய வெளிப்பாட்டின் மேல் இருந்த மெய்யான சில அழுத்தங்களில் இந்த நூலில் பதிவாகியுள்ளது. அதே போல், அவ்வெழுத்தாளர்களின் எல்லைகளும் பதிவாகியுள்ளது.
இந்த நூல் தமிழில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இந்நூலை ஒட்டி, ‘முகமும் முகமூடியும்’ என்ற பெயரில் ஒரு சிறிய கட்டுரைத் தொடர் சுரபி இதழில் இடம்பெறவுள்ளது. தமிழ் பெண் எழுத்தின் ஆழ்தொடர்ச்சியை அறிய இந்தத் தொகுப்பும் வாசிப்பும் உதவும் என்று நம்புகிறேன். அதன் முதல் பாகம் இந்த இதழில்.
~
1
மகாபாரதச் சுயம்வரக் கதைகளிலேயே உத்தரா சுயம்வரம் தனித்துவமானது. பெயரளவில் சுயம்வரம் என்றாலும் உத்தரை தன் வரனை சுயமாகத் தேர்ந்தெடுக்கவில்லை.
நவீன யுகத்துக்குள் நுழைந்த பெண்களைப் பற்றிச் சிந்திக்கையில் அடிக்கடி இந்தப் படிமம் எனக்குத் தோன்றுவதுண்டு. அந்தப் பெண்களும் நவீனத்துக்குள் தீர்மானத்துடன் நுழைந்தனர். ஆனால் அவர்கள் நுழைந்த உலகம் அவர்கள் சுயமாக உருவாக்கிய ஒன்று அல்ல. ஏற்கணவே உருவாக்கப்பட்ட ஓர் உலகுக்குள் அவர்கள் புகுந்தார்கள். அவ்வாறு ‘புகுந்து’ வருபவர்கள் சந்திக்க நேரிடும் அனைத்து மோதல்களையும் சமரசங்களையும் அவர்களும் எதிர்கொள்ள நேரிட்டது. அம்பை, தன்னுடைய ‘The Face Behind The Mask’ என்ற நூலில் பெண்கள் நவீன யுகத்துக்குள் நுழைந்த வரலாற்றைப் பற்றிக் கூறுவதன் சாராம்சமும் இதுவே.
1984-ல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘The Face Behind The Mask’ நூலின் ஆதாரக் கேள்வியாக அம்பை எடுத்துக்கொள்வது இது தான். 1930-கள் தொடங்கி எழுதிய நவீன பெண்களின் வெளிப்பாடுகளில் மிகப்பெரும்பான்மையான அளவிற்கு ஏன் தனித்துவமான, அசலான – ஆம், சுயமான – வெளிப்பாடு நிகழவில்லை? ஏன் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களை மரபுவாதத்தின் தொடர்ச்சியாக மட்டுமே கட்டமைத்துக் கொண்டார்கள்? ஏன் ஒரே மாதிரியான முகமூடிகள் அணிந்தது போல் எழுதினார்கள்? இந்தக் கேள்விகளோடு அம்பை தன் நூலைத் தொடங்குகிறார்.
அம்பைக்கு முன்னால் பெண் எழுத்து சார்ந்து இக்கேள்விகளை வேறு எவரும் எழுப்பி ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. ஆகவே இது பெண் எழுத்தின் தொடர்ச்சியை பற்றிய வினா உள்ளவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய நூல். இந்த நூலில் அம்பை மேற்கொள்ளும் தேடல்களும் அவருடைய தீவிரமும் தனிப்பட்ட முறையில் எனக்கு அணுக்கமானவை. சுரபி வழியாக இன்று நிகழ்த்த எத்தனிக்கும் தேடலை அம்பை தன் காலகட்டத்தில் தன் வழியில் நிகழ்த்தியிருக்கிறார். இந்தத் தேடலின் வழியாகவே அம்பை தன் படைப்பாற்றலையும், தனிக்குரலையும் பெற்றார் என்றும் சொல்லலாம்.
இந்தக் கேள்வியை அம்பை எதிர்கொள்ளும் ஆய்வு அணுகுமுறை முதன்மையாக வரலாறு மற்றும் சமூகவியல் சார்ந்ததாக உள்ளது. வரலாற்று ரீதியாக பெண்கள் நவீனத்துக்குள் நுழைந்தபோது அவர்கள் கடந்துவர வேண்டிய சமூகக் கட்டுப்பாடுகள், தடைகள் இவற்றை விவரிக்கிறார் (நவீனம் என்ற சொல்லை modernity என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகர்ச்சொல்லாக இங்கே நான் பயன்படுத்துகிறேன்). இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அம்பை இந்த நூலை எழுதிய காலகட்டத்தில் பரவலாக அறியப்பட்ட பெண் படைப்பாளிகளில் பெரும்பான்மையோர் நகர்புரத்தையும், மேல்தட்டு என்று கூறப்படும் சாதிகளையும் சார்ந்தவர்கள். இன்றைய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் சித்தி ஜுனைதா பேகம் போன்றவர்கள் அம்பையின் அன்றைய நூலில் இடம்பெறவில்லை [பின்னாளில் அம்பையே அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்]. ஆகவே அவர் வழங்கும் வரலாற்றுப் பார்வை, பெருமளவில் மேல்தட்டு வகுப்புப் பெண்கள் நவீனத்துக்குள் வந்த வரலாற்றைச் சார்ந்தே அமைந்துள்ளது. ஆசிரியரும் இதைத் தன் நூலில் குறிப்பிடுகிறார். குழந்தை மணம், விதவைகளின் நிலை, தேவதாசி முறை, மறுமணத்துக்கான தடைகள், என்ற நிலைகளை மீறிப் பெண்கள் கல்வி கற்கத் தொடங்குகிறார்கள். சீர்திருத்தங்கள் நிகழ்கின்றன. இதில் காங்கிரசின், நீதிக்கட்சியின் பங்களிப்புகளை ஆசிரியர் அலசுகிறார். இவ்வாறு பெண்கள் பொதுவெளிக்கு வருகின்றனர்.
ஆனால் இத்தருணத்தில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. அம்பை தன் நூலில் இந்த வரலாற்றை நேரடியாகக் கூறவில்லை என்றாலும், நாம் இதைப் பொறுத்திப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலும் கடைசியிலும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் கண்டடையப்பட்டு புத்தகங்களாகப் பிரசுரமாகின. இதன் விளைவாக ஒரு முக்கியமான நிகழ்வு நடக்க நேர்ந்தது. பெண் பொதுவெளிக்கு நுழைந்த அதே சமயம் பெண்ணின் புதிய பிம்பமும் நுழைந்தாள். சங்க இலக்கியங்களிலிருந்தும், காப்பியங்களிலிருந்தும் எழுந்து வந்த அப்பிம்பங்களை அன்றைய எழுத்தாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் தங்கள் தேவைகளுக்கேற்பப் புனைந்து புதிய, நவீன பிம்பங்களை உருவாக்கினர். புதுமைப்பெண்ணும், தமிழ்த்தாயும், தமிழ்ப்பற்றுள்ள இல்லறப்பத்தினியும், தாசியும் அவ்வாறு தோன்றிய படிமங்களே.
இந்த படிமங்களின் உலகுக்குள் தான் பெண்கள் நுழைந்ததாக அம்பை கூறுகிறார். அப்போது அவள் மீது இரண்டு எதிர்-எதிரான அழுத்தங்கள் நிலவியதை புரிந்து கொள்ளலாம். ஒன்று, புறவுலகில் இடம் அமைய அவள் அந்த பிம்பங்களுடன் சமரசம் செய்ய வேண்டியிருந்தது. இரண்டு, தனக்கான சுயவெளிப்பாட்டை நிகழ்த்த வேண்டியிருந்தது. 20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பெண்களின் சுய வெளிப்பாடு, இவ்விரு விசைகளின் மோதலால் நிகழ்ந்த விளைவு என்று புரிந்து கொள்ளலாம்.
பெண் எழுத்தின் ஆழ்விசைகள் என்ன, தொடர்ச்சிகள் என்ன, என்ற என் தேடலை முன்னிட்டு ‘சுரபி’ இதழ் தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக சென்றகால, சமகால பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பல பெண் எழுத்தாளர்களின் எழுத்தில் ஓர் அறிவுறுத்தும் தன்மை இருப்பதை கவனித்தேன். அதை புரிந்துகொள்ளும் நோக்குடன் ஆசிரியர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
அன்புள்ள ஜெ,
தமிழிலும் வேற்று மொழிகளிலும் சென்ற காலங்களில் எழுதிய பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் வெளிப்பாடு பல வகைகளில் இருந்துள்ளது. ஆனால் ஒன்று குறிப்பாக வந்துகொண்டே இருக்குறது. எல்லா மொழிகளிலும் சில பெண் எழுத்தாளர்கள் அந்தந்த காலகட்டத்தின் ஒழுக்கக்காப்பாளர்களாக விளங்குகிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்து இல்லையென்றாலும் மிகப்பரவலாக வாசிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.
அவர்கள் நல்லுபதேசம் செய்கிறார்கள். குடிக்காதே என்கிறார்கள். அடிமை முறையை எதிர், பெண்களை ஒழுங்காக நடத்து, குழந்தைகளை அடிக்காதே என்றெல்லாம் கூறுகிறார்கள். அக்காத்தனமாகவும் அம்மாத்தனமாகவும் மாறி மாறி கொஞ்சியும் அதட்டியும் பேசுகிறார்கள்.
இவர்களில் சிலர் மரபுவாதிகள். சிலர் இலட்சியவாதிகள். பலர் நடைமுறைவாதிகள். மரபுவாதிகளாவது ஒரு மதிப்பீட்டின் பின்புலத்திலிருந்து பேசுகிறார்கள். நடைமுறைவாதிகள் சொல்வதெல்லாம் நடைமுறை சார்ந்து மட்டுமே. அத்தகைய அறிவுரைகளுக்கு என்ன மதிப்பு என்ற கேள்வி எழுகிறது. எழுத்தாளர் அவ்வாறு அறிவுறுத்தத் தகுதி உள்ளவரா?
ஆனால் அத்தகைய அறிவுரை எழுத்துக்கு ஒரு இலட்சியத்தன்மை உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. “இப்போது யோசிக்கையில் சிவசங்கரி முதலியவர்கள் எவ்வளவு பெரிய நேர்நிலை ஆற்றல்கள் என எண்ணத் தோன்றுகிறது,” என்று சிவசங்கரியைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
என் கேள்வி, ஒரு சூழலில் ஒரு வகையான எழுத்தாளராவது இப்படி ஓர் ஒழுக்கக்காப்பாளராக (moralist), அறிவுறுத்துபவராக இருக்க வேண்டும் என்று ஏதாவது தேவை இருக்கிறதா? சூழலுக்கு இவர்களது பங்களிப்பு என்ன?
அன்புடன்,
சுசித்ரா
எழுத்தின் ஆழ்விசைகளை, வரலாற்றுத் தொடர்ச்சிகளை பற்றி ஜெயமோகன் தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடன் விவாதித்தே இந்தக் கேள்விகளை ஒட்டி என் சிந்தனைகள் கூர்மையடைந்துள்ளன . அவருக்கு என் நன்றி.
என் கடிதத்துக்கு ஜெயமோகன் எழுதிய பதிலை இங்கே வாசிக்கலாம்:
ஆரம்பகால பெண் எழுத்தாளர்கள் பெண்களின் ஒழுக்கத்தை வலியுறுத்தி எழுதியதன் வரலாற்றுச், சமூகக் காரணிகளை அவதானித்துச் சொல்கிறது அவர் பதில். இந்தச் சுட்டியில் உள்ள பெண் எழுத்தாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை வரலாறுகளும் மிக முக்கியமான ஆவணம்.
அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாக நான் எழுதிய பதிலை இங்கே பிரசுரிக்கிறேன். இந்த விவாதம் வழியாக என் சிந்தனையில் இரண்டு புதிய திரிகள் கிளைத்துத் திரண்டு வந்துள்ளன. இவற்றை வரும் இதழ்களில் மேலும் விரித்து எழுத எண்ணம் உள்ளது.
~
அன்புள்ள ஜெ,
உங்கள் பதிலுக்கு நன்றி. எப்போதும் போல, தொடங்கிய இடத்திலிருந்து பிடித்து மேலேச் செல்ல சில சிந்தனைக் கயிறுகளை அடையாளம் காட்டியுள்ளீர்கள். இதை ஒட்டி என் சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளும் வகையில் சில குறிப்புகளை எழுதுகிறேன்.
தமிழில் இலக்கியம் படைத்தவர்களில் பெண்கள் ஏன் அதிக எண்ணிக்கையில் இல்லை என்ற கேள்வியிலிருந்தே இந்த விவாதம் எனக்குள் தொடங்கியது. அதிலிருந்து, சரி இலக்கியம் என்று வேண்டாம், பெண்களின் சுய வெளிப்பாடு எழுத்தில் எவ்வாறெல்லாம் நிகழ்ந்துள்ளது என்ற கேள்விக்குள் சென்றேன். நவீன யுகம் தொடங்கி இந்த நூற்றி இருபத்தைந்து வருடங்களில் பெண்கள் தங்களை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார்கள்? அதற்கான வரலாற்று, சமூகக் காரணங்கள் என்ன? அதை விட முக்கியமாக ஆன்மீகக் காரணங்கள் என்ன? இவ்வாறு என்னை நானே கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் தங்களுடைய ‘ஆழ்நதியைத் தேடி’ என்ற நூல் ஒரு வகையில் துணையாக இருந்தது என்று இத்தருணத்தில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இதன் தொடர்ச்சியாகவே பெண்கள் ஒழுக்கம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதியதைப் பற்றிய கேள்வி எழுந்தது. உங்கள் பதிலில் நீங்கள் பெண்களுக்கான ஒழுக்கத்தைப் பற்றி எழுதிய ஆரம்பக்கால பெண் எழுத்தாளர்களைப் பற்றிக் கூறியிருந்தீர்கள். ஆம், அதுவே தொடக்கம். அதற்கான வரலாற்றுச், சமூகக் காரணிகளை நீங்கள் ஆராய்ந்து எழுதியிருந்தது பல திசைகளில் சிந்தனைகளை கிளர்த்தியது.
ஆனால் பல பெண் எழுத்தாளர்கள் அங்கிருந்து தொடங்கி, மொத்த சமூகத்துக்கும் ஒழுக்கங்களை கற்பிக்கும் இடத்தில் தங்களை வைத்துக்கொண்டுள்ளார்கள் என்பதையும் காண்கிறேன். அல்லது அவர்களுடைய செயல்பாடுகளால் அந்த அந்தஸ்தை அடைந்தார்கள். ஆங்கிலத்தில் ஹாரியெட் பீச்சர் ஸ்டோவ் போல. மலையாலத்தில் நீங்கள் குறிப்பிடும் சுகதகுமாரி போல. கன்னடத்தில் சரஸ்வதி பாய் ராஜ்வடே என்ற ஆரம்பக்கால பெண் எழுத்தாளர் உடுப்பி மடத்தின் தீர்த்தர்களை விமர்சித்து, அவர்கள் தங்கள் நடத்தையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி கதை எழுதியிருக்கிறார்.
இங்கே ‘ஒழுக்கம்’ என்பதை அதன் சாதாரண அர்த்தமான ‘morality’ என்பதைத்தாண்டி, ‘சமூகத்தில் தனிநபர் ஒழுகவேண்டியது எப்படி, சமூகம் தனிநபரை நோக்கி ஒழுகவேண்டியது எப்படி’ என்ற பொது அர்த்தம் நோக்கிக் கொண்டு செல்லலாம் என்று நினைக்கிறேன். சிவசங்கரி போன்றவர்கள் எழுதிய அன்றாட ஒழுக்க புகுட்டல்களிலிருந்து, அம்பை போன்றவர்கள் எழுதிய பெண்ணிய வலியுறுத்தல்களிலிருந்து, சுகதகுமாரி போன்றவர்கள் எழுதிய இலட்சியவாத அறிவுறுத்தல்கள் வரை இந்த நிறமாலையில் வெவ்வேறு வண்ணங்களை காண முடிகிறது.
பெண் எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் ஏன் இந்த நூறு வருட வரலாற்றில் ‘வெறும்’ எழுத்தாளர்களை விட ‘எழுத்தாளர் – சமூகசெயல்பாட்டாளர்’களே அதிகமாகக் காணப்படுகிறார்கள்? இது வரலாற்றின் பரிணாமமாக விளைந்த ஒரு நிகழ்வு மட்டும் தானா? இல்லை அதை விட ஆழமான காரணங்கள் ஏதும் உள்ளதா? இந்தக் கேள்வியை பரிசீலிக்கிறேன்.
ஒழுக்கம் வலியுறுத்தும் எழுத்து தமிழுக்குப் புதியது அல்ல. குறளை அதன் பறந்துபட்ட அர்த்தத்தில் ஓர் ஒழுக்கநூலாக வாசிக்கலாம். அவை ஒரு உலகுநோக்கின், மதிப்பீட்டின் பின்னணியில் விரிவாக தொகுக்கப்பட்டவை. ஆனால் அவ்வையாரின் தனிப்பாடல்களில் வெளிப்படும் இந்தச் ‘செயல்பாட்டு’ அம்சமும், விமர்சனமும், வேறுவகையாக உள்ளது.
“அற்றதலை போக அறாததலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ- வற்றன் மரமனையானுக்கு இந்த மானை வகுத்த பிரமனை யான் காணப்பெறின்”
இந்த ஆவேசத்தின் முகங்களென இந்நூறுவருடத்தில் வெளிப்பட்ட பெண் எழுத்தாளர்களை காணலாம் அல்லவா?
ஆகவே தான் இவர்களை மொத்தமாக ‘முற்போக்கு’ என்றோ, ஒரு கருத்தியல் சார்ந்து செயல்பட்டவர்கள் என்றோ வகுத்திவிட முடியாது என்று தான் நினைக்கிறேன். ஒன்று, இந்த குரலுக்கு ஓர் ஆழ்தொடர்ச்சி இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. மேலும், நீங்கள் சொல்வது போல், பொருட்படுத்தத் தக்க எழுத்தாளர்களை தனித்தனியாகத் தான் ஆராய வேண்டியுள்ளது. அவர்களை ‘அடுக்களை எழுத்தாளர்கள்’ என்றோ ‘பெண்ணிய எழுத்தாளர்கள்’ என்று வகுப்பது எளிமைப்படுத்தும் பிழை என்ற எண்ணமே இன்று உள்ளது.
இது முதல் சிந்தனைத் திரி.
*
இரண்டாவது திரி நீங்கள் குறிப்பிடும் ஒரு புள்ளியிலிருந்து தொடங்குகிறது. இந்தியச் சூழலில் பெண்கள் பொதுவெளிக்கு வந்து பேசவும் எழுதவும் முற்பட்டது 1900-ங்களின் தொடக்கத்தில்தான் என்ற உங்கள் அவதானிப்பிலிருந்து.
இந்த யுகமாற்றத்தின் தருணம் என் உள்ளத்துக்கு மிக அணுக்கமான ஒன்று. நினைக்க நினைக்கக் கிளர்ச்சியூட்டக்கூடியது. ஒரு மாபெரும் வெடிப்பின் கணம் அது. ஒரு வகையில் ஒரு பிக் பாங்க். இந்தியப் பெண்கள் வீட்டை விட்டுக் கிளம்பி வெளிக் உலகுக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்த முதற்காலம். மானுட வரலாற்றில் இதற்கு முன் எந்த யுகத்திலாவது இந்த அளவுக்கு பெண்கள் புற உலகை அறிந்திருக்கிறார்களா?
சென்ற யுகங்களில் மனிதர்கள் அனைவருக்கும் எல்லைக்குட்பட்ட வாழ்க்கை தான், உண்மை. ஆனால் பெண்களின் வாழ்க்கை உடலை, உணவைத் தாண்டி வெளியேற வழியே இல்லாமல் இருந்தது. அந்த நிலை தீர்ந்தது. இங்கே அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நான் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தியம் இல்லை. அதைச் சாத்தியமாக்கியது வீட்டிலிருந்து வெளி நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்த பெண் முன்னோடிகள் தான். அந்த முன்னோடிகள் வீட்டிலிருந்து வெளியில் அடி எடுத்து வைத்த நிகழ்வு சமீப வரலாற்றின் முக்கியமான படிமங்களில் ஒன்று என்ற எண்ணம் எனக்கு உள்ளது.
தாகூரின் புகழ்பெற்ற நாவல் ஒன்றின் பெயர் ‘வீடும் வெளியும்’. நவீன யுகத்தின் ஆதாரமான மோதலை இந்த நாவல் ஒரு படிமம் போல் சித்தரித்தது. கணவன் நிகிலுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் மனைவி விமலாவின் வாழ்க்கைக்குள் நிகிலின் நண்பன் சந்தீப் நுழைகிறான். நிகில், சந்தீப், இருவருமே சுதந்திரப்போராட்டத்தில் நாட்டம் உள்ளவர்கள். நிகில் மிதவாதி, மரபுவாதி. மாறாக சந்தீப் தீவிரமான, நேரடியான ஆக்கிரமிப்புகளில் நம்பிக்கை உள்ளவன். அவன் தீவிரத்துக்கு ஆட்பட்டு விமலா மெல்ல மெல்ல ‘வீட்டின்’ பாதுகாப்பிலிருந்து ‘வெளி’க்குச் செல்லத் தொடங்குகிறாள். சந்தீப்பின் செயல்பாடுகளுக்காக தன் வீட்டிலிருந்தே பணம் திருடிக் கொடுக்கிறாள். அந்தச் செயலின் கள்ளத்தனம் அவளை மிகுந்த குற்றவுணர்வுக்கும் அசௌகரியத்துக்கும் ஆளாக்குகிறது. வீட்டிலிருந்து விலகிவிட்டது போலத் தோன்றுகிரது. வெளியிலும் தனக்கு இடம் இல்லை என்று தெரிகிறது. இந்தியா நவீன யுகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் அதில் உண்டான குழப்பங்களை உணர்த்தும் வகையில் இந்த நாவலின் கதையை தாகூர் உத்தேசித்தார் என்று சொல்லப்படுவதுண்டு.
ஆனால் இது இந்தியப்பெண்ணின் கதையும் கூட அல்லவா? நவீன யுகத்தில் வெளியுலகம் பெண்ணை அழைத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த அழைப்பு தன் பொறையின் இழப்பு என்ற உணர்வும் அவளை விட்டு அகலாது இருந்தது. இந்தியாவை பொறுத்தவரையிலாவது, இந்த நூறாண்டு வரலாற்றில் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொண்ட முதன்மையான சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது. பெண் எழுத்தில் ஒரு பெரும் பகுதியை, அது இந்த வீடு x வெளி முரணை எப்படிக் கையாண்டது என்பதைக் கொண்டு வகுத்துவிடலாம் என்று தோன்றுகிறது. எவ்வளவு தூரம் வெளியே செல்லலாம்? என்பதே ஆதாரக் கேள்வியாக இருந்தது. இந்த விவாதத்தில் வீடு, வெளி, இரண்டையும் நேரடியாக வீடும் வெளியும் என்று பொருள் எடுக்காமல் அதன் பறந்துபட்ட அர்த்தத்தில் அகம், புறம் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வெளிக்குள், அல்லது புறத்துக்குள் நுழைந்த ஆரம்பகால பெண் எழுத்தாளர்கள் பெண் தன்னை புறத்துக்குத் தக்கவாறு எவ்வாறு வகுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ந்து வெளிப்படுத்தினார்கள். மெல்ல மெல்ல, இரண்டாம் கட்டமாக, புறம் தன்னை பெண்ணுக்கு ஏற்றவாறு எவ்வாறு மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசத் தொடங்கினார்கள்.
இந்த இரண்டாம் நிலை மாற்றம் தான் இந்த யுகத்தின் தனித்தன்மை என்று நினைக்கிறேன். நம் மரபில் எழுதிய பெண் கவிஞர்களோ, காப்பிய கதாநாயகிகளோ, ‘புறத்துக்கு’ வந்த ‘அகப்படிமங்கள்’ தான். அவர்கள் தங்களுக்கேற்ப ‘புறம்’ மாறவேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைக்கவில்லை. காரைக்கால் அம்மைய்யார் அகத்தை விட்டு புறப்பட்ட போது தனக்கான இடத்தைச் சுடலையில் அமைத்துக்கொண்டார்கள். மணிமேகலையின் இடம் மகாயான பௌத்தத்தின் நகர்வுகள் வழியாக வெளிப்பாடு கண்டது. இவர்களை அசாதாரண தனி மனிதர்கள் என்று கொள்ளலாம். ஆனால் இன்று பெண்கள் ஒரு வகுப்பாக புறத்தின் பகுதியாகவும், புறத்தை தங்களுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளவர்களாகவும் மாறிவிட்டனர். இந்த கொடுத்தல்வாங்கலையே தங்கள் எழுத்து மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
சமூக அளவில் மட்டும் அல்ல, உளவியல் ரீதியாகவும் புறத்தில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்ற வகையில் எழுதியுள்ளார்கள். தமிழில் சூடாமணி மற்றும் அம்பையின் கதைகள் நல்ல உதாரணம். சூடாமணியின் ‘செந்திரு ஆகிறாள்’ என்ற கதையோ, ‘நான்காவது ஆசிரமம்’ என்ற கதையோ, பெண்ணின் அகம் அடைய விரும்பும் நிலைகளைப் பற்றிப் பேசுபவை. ஆனால் மறைமுகமாக அதற்கு புறம் எவ்வாறு உருமாற வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துபவை.
ஒவ்வொரு தலைமுறையும், வீட்டை மேலும் சற்று துறந்து, வெளிக்குள் மேலும் சற்று சென்றார்கள். ஒவ்வொரு தலைமுறையும் வெளியை மேலும் சற்று வீடு போல் மாற்ற முயற்சித்தார்கள்.
இன்று பெண்ணுக்கு வெளியின் பல பகுதிகள் வீடு அளவுக்கே பாதுகாப்பாக உள்ளன. வீட்டுக்குள் வெளி வரத் தொடங்கிவிட்டது. வீடும் வெளியும் அத்தனை பிரிந்த நிலைகளாக இல்லை. இன்று பெண்ணெழுத்தில் வீடும் வெளியும் என்னவாக பொருள்படுகின்றன என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. இந்த கோணத்தில் இன்றைய எழுத்தை ஒட்டி ஒரு வாசிப்பை நிகழ்த்தலாம்.
*
இந்த விஷயங்களுக்கும் படைப்பிலக்கியத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். பெண்களை சமூகத்துக்கேற்ப தயர் படுத்துவதும் சரி, சமூகத்தை பெண்களுக்கு ஏற்ப மாற்றி வடிப்பதைப் பற்றியும் சரி – இந்த விஷயங்கள் தமிழைப் பொறுத்தவரையிலாவது மிகச் சாதாரணமான வெகுஜன எழுத்தின் பகுதியாகத் தான் எழுதப்பட்டுள்ளது.
இதன் உள்ளோட்டங்களை ஆராய்ந்த படைப்புகள் தமிழில் வெகு குறைவு – அதை எழுதியவர்களும் ஆண் எழுத்தாளர்களே. அதாவது, பெண்ணுக்குத், தன் ஆழ்மனதில், வீடும் வெளியும் என்னவென்று பொருள்படுகிறது? ஏன் வெளியை அடைய நினைக்கிறாள்? வெளியில் வீட்டின் எந்த அம்சத்தை விரும்புகிறாள்? வீடே அற்ற வெளியை பெண்ணால் எதிர்கொள்ள முடியுமா? வீடு, வெளி – இரண்டுக்குமான அல்டிமேட் மீனிங் என்பது என்ன? – இந்தக் கேள்விகளை ஒட்டி ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலையோ, உங்கள் ‘கன்யாகுமரி’ நாவலையோ வாசிக்கலாம்.
ஆனால் இந்த நகர்வின் வரலாறே ஒரு படைப்பிலக்கியவாதிக்கு நல்ல கச்சா பொருள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இது ஒரு யுகத்துப் பெண்களின் மனதுக்குள் புகுந்து பார்க்க ஒரு நல்ல வாசலாக அமைகிறது.
நவீனம் தோன்றியபோது ஒவ்வொரு இனக்குழுவும், மதக்குழுவும் தங்கள் இடத்துக்காகப் போறாடினர். புதிதாக உருவாகி வந்த நவீன புறவுலகில் தங்களுக்கான இடத்தை பெயர்த்து எடுத்துக் கொண்டனர். பெண்கள் அவ்வாறு செய்யவில்லை. ‘பெண்கள் கட்சி’ என்று ஒன்று இல்லை. தத்தம் ஆண்களின் உலகின் பகுதியாகவே அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர். நூறு வருடங்களில் இந்த நிலை மாறவில்லை. ‘பெண் விடுதலை’ என்பதே இங்கே அளவுக்குட்பட்ட ஒன்றாகத்தான் வகுக்கப்பட்டுள்ளது – அந்த அளவு என்ன, எதுவரை, என்பது தான் ஒவ்வொரு தலைமுறையும் விவாதிப்பது. அப்படியென்றால் பெண்களுக்கு உண்மையிலேயே சுதந்திர நாட்டம் உள்ளதா என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.
ஒருவேளை இன்றைக்கு எழுதும் ஒரு பெண் எழுத்தாளர் – அல்லது நாளைக்கு எழுதப்போகிறவர் – இந்தக் கேள்விகளை நேர்மையாக எழுப்பி ஆராய முடியும். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அதற்கு முன்னால் அவர் வீடு, வெளி – இரண்டிலிருந்துமே அந்தரங்கமாக விலக்கம்கொண்டிருக்க வேண்டும். அந்த விலக்கத்திலிருந்து தான் நல்ல இலக்கியம் உருவாகும் என்று நினைக்கிறேன்.
சமகால பெண் எழுத்தாளர்களில் நுண்ணுணர்வு கூடி சில கதைகளை படைத்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் ஜா. தீபா. தமிழ் இலக்கியச் சூழலில் அவருடைய ‘மறைமுகம்’ கதை அதிகம் பேசப்பட்டது. சுதந்திரப் போராளி வாஞ்சிநாதனின் மனைவியின் உலகத்துக்குள்ளிருந்து விரியும் இந்தக் கதை தமிழில் பெண் எழுதிய முதன்மையான கதைகளில் ஒன்று என்ற எண்ணம் எனக்கு உள்ளது. இந்தக் கதை குறித்தும், ஜா. தீபாவின் மற்ற படைப்புகள் குறித்தும், அடுத்த இதழில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளிவரும்.
மறைமுகம் சிறுகதை, மற்றும் ஜா. தீபாவின் கதையுலகத்தை பற்றிய நல்ல வாசிப்புக் குறிப்புகள் இங்கே காணலாம். சுட்டிகள் [1], [2], [3], [4]
ஆனால் இவ்விதழில், ‘மறைமுகம்’ கதையை ஒட்டி ஒரு விமர்சனப்பார்வை முன்வைக்கப்படுகிறது. எழுதுபவர் விமர்சகர் தாரா.
பாராட்டப்பட்ட ஒரு கதையை விமர்சித்தபடி உரையாடலைத் தொடங்குவதன் காரணம் என்ன? எதிர்மறைத்தன்மை, குதர்க்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். பல்வேறு வகையான வாசிப்புகள் ஒரு கதை மேல் படியும் போது அந்தக் கதை அந்தச் சூழலில் மேலும் முக்கியத்துவம் பெருகிறது என்பதே உண்மை. விமர்சனம் வந்தால் தான் எதிர்விமர்சனத்துக்கான சாத்தியம் உள்ளது. ஒரு கதை விவாதிக்கப்படுகிறது என்றால் அது பொருட்படுத்தத்தக்கக் கதை என்று அச்சூழல் நினைக்கிறது என்று அர்த்தம்.
ஒரு நல்ல விமர்சகர் சூழலுக்கும் வாசகருக்கும் ஒரு கதையை எப்படியெல்லாம் வாசிக்கலாம் என்று அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். கதையின் அழகியல் எங்கே கைக்கூடுகிறது, எங்கே தோல்வியடைகிறது என்று அவர் சுட்டிக்காட்டுவது வாசகர்களுக்கும், மற்ற எழுத்தாளர்களுக்கும் சில வாசல்களை திறக்கக் கூடியது. குறிப்பாக, நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்து அதன் பாதைகளை வெவ்வேறு வகைகலில் கண்டடைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், இது போன்ற கூரிய விவாதங்கள் அவசியம் என்று நினைக்கிறேன்.
தாரா இந்தக் கட்டுரையில் ஜா.தீபாவின் எழுத்தோடு ஒப்பிடும் இரு படைப்புகள், Edith Wharton எழுதிய ‘The House of Mirth’ என்ற நாவலும், Kate Chopin எழுதிய ‘The Awakening’ என்ற நாவலும். ஒரு விமர்சகர் ஓர் எழுத்தாளரை வாசித்து, அவருடன் ஒப்பிடக்கூடிய, அவர் களத்தை மேலும் நுட்பமாக எழுதிய மற்ற எழுத்தாளர்களை கண்டடைந்து சொல்வது மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்று நினைக்கிறேன். மூலக் கதையின் ஆசிரியர் இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம், நிராகரிக்கலாம், அது அவர் தேர்வு. ஆனால் சூழலில் மற்றவர்கள் இந்தப் பரிந்துரைகளை வாசித்துச் சிந்தித்துப் பார்க்கலாம். இவ்விரு நூல்களும் இன்னும் தமிழில் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆர்வமுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் முயன்று பார்க்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.
ஜா. தீபாவின் மறைமுகம் என்னும் கதையை வாசிக்கும்போது இது வரலாற்றில் எங்கு நிகழ்கிறது என்னும் கேள்வியே முதலில் ஒரு வாசகனை வந்தடைகிறது. இது ஒரு உண்மை சம்பவத்தை சார்ந்து புனையப்பட்டது என்பதால் மட்டுமே அதன் காலம் கதையில் தெளிவாக புலப்படுகிறது. அதை தாண்டி இக்கதையின் விவரணைகள், கதை புலம் ஆகிய எதன் வழியாகவும் காலகட்டத்தை நிர்ணயிக்க முடியாது. இது எழுத்தாளர் வேண்டுமென்றே எடுத்த முடிவாக இருக்கலாம். ஆணின் ஒரு முகம் பெண்ணுக்கு நிரந்தரமாகவே மறைக்கப்பட்டுள்ளது அதன் மூலம் புற உலகும் மறைக்கப்படுகிறது. இவ்வாறு மறைவில் வாழும் பெண்களின் நித்தியமான நிலை குறித்து கூற முயல்வதாக எடுத்து கொள்ளலாம். ஆனால் அவ்வாசிப்பு என்னை பெரிதாக கவரவில்லை.
மறைமுகம் என்ற இக்கதை வரலாற்று சித்திரத்தை கோருகிறது என்றே உணர்கிறேன். அது கதையில் வரும் நிகழ்வை வரலாற்றில் நாம் பொறுத்தி பார்ப்பதற்காக மட்டுமல்ல. இந்திய சமூகத்தில் அவ்வரலாற்று காலம், அதாவது விடுதலைக்கு முந்தைய காலம், ஒட்டுமொத்தமாக எல்லோருக்குள்ளும் ஒரு பிளவாளுமையை உருவாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. லட்சியவாதத்திற்கும் தனிவாழ்க்கைக்கும் இடையில், சமூகத்திற்கும் குடும்ப அமைப்பிற்கும் இடையில், அதன் நீட்சியாக பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையில் ஏற்பட்ட பிளவு. அல்லது ஏற்கனவே இருந்த இடைவெளி பெரிதானதன் வரலாறு. இவ்வகையில் கதையை பார்க்கும்போது மேலும் விரிவடைகிறது.
கதையின் உணர்ச்சி மையமாக தன் கணவன் உண்மையில் யார்? அவன் எப்படிப்பட்டவன்? அவனது உலகில் என்ன உள்ளது? எதை விரும்புகிறான்? எதன்மீது பற்று கொண்டுள்ளான்? என்று அறிந்துகொள்ள மட்டுமே விரும்பும் மனைவி காமாட்சி இருக்கிறாள். அவள் அவனது உலகத்திற்குள் நுழைய விரும்புகிறாள். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவனுக்கு கடிதங்கள் வந்து சேர்கின்றன. ஆனால் வாசிக்க தெரியாத அவளுக்கு அவை வெற்று தாள்களாக உள்ளன. அவனை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் சக்தியாக மட்டுமே சமூகத்தையும் அதன் பிரச்சனைகளையும் அவள் காண்கிறாள். அவளது வாழ்க்கை சிறு சிறு அன்றாட வலிகளால் ஆனது. அவள் அம்மா அவளுக்கு கையளித்து சென்றவை அவை. வலிகளை தாங்கிக் கொள்வது அன்றி அதிலிருந்து தறுக்கியெழுவது குறித்து அவள் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. கதையின் இறுதி தருணம் வரை.
குறைந்தபட்சம் அவள் கேட்பது தன் குழந்தை மூலமாகவாவது கணவனுடன் எதோ ஒரு உறவை. பிறந்து சில நாட்களே ஆன அவள் மகளிடம் இதையெல்லாம் கூறுகிறாள். குழந்தையை அவன் கையில் வாங்கிக் கொள்ளும் போது அவன் முகத்தை ஒரு முறை நல்ல வெளிச்சத்தில் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கும் தருணம் காமாட்சியின் கதாபாத்திரத்தை அணுக்கமாக்குகிறது.
இறுதி வரை குழந்தையை காண அவன் வருவதில்லை. முடிவில் காமாட்சியால் அவனது முகத்தை சடலத்தில் அடையாளம் காணமுடியாத இடத்தில் கதையின் உணர்ச்சி உச்சத்தை அடைகிறது. இந்த தருணத்தின் எடையை மறுக்க முடியாது, ஆனால் அது எந்த நுட்பமும் இல்லாமல் கையாளப்பட்டுள்ளது.
கதையின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று அதன் மிகையான நாடகத்தன்மை கொண்ட உரையாடல்கள். குறிப்பாக கதையின் இறுதியில் வரும் உரையாடல். கதாபாத்திரங்களின் வலி இயல்பாக வெளிப்பட அனுமதிப்பதற்கு பதிலாக, இவ்வுரையாடல்கள் இடைவிடாமல் ஆசிரியரின் கருத்தை நிலைநாட்ட முந்துகிறது.
நுட்பங்களுக்கு சிறிதும் இடமளிக்காத விவரணைகளும் கதையின் போதாமைகளில் ஒன்றாக கூறலாம். இறந்து போன தன் ஒரு மாத குழந்தையை கையில் வைத்திருக்கும் காமாட்சியில் இருந்து கதை துவங்குகிறது. இரவு முழுக்க அழுதுமுடித்து விடியல் நெருங்கும் நேரம். அந்த தருணத்தின் வெறுமையை நுட்பமான உடலுணர்வு, தொடுகை ஆகியவற்றால் மட்டுமே விவரித்து கொண்டுசெல்ல முடியும். அவ்வாறு தான் கதை தொடங்குகிறது. ஆனால் விரைவில் ஆசிரியர் இடைமறித்து வாசகன் அங்கு என்னென்ன உணரவேண்டும் என விளக்குகிறார்.
Kate Chopin-ன் The Awakening என்னும் நூலில் கதாநாயகி தன்னை அறிந்து கொள்ளும் தருணம், Edith Wharton எழுதிய House of Mirth என்னும் நாவலில் லில்லி அவளது பாதுகாக்கப்பட்ட சிறு உலகின் எல்லைகள் உடைவதை உணரும் தருணம் என பெண் கதாபாத்திரம் இயல்பென்று நம்பியிருந்த வாழ்க்கை சித்திரம் உடைபடும் இடங்கள் பல பெண்ணெழுத்தில் உள்ளன. இப்படி ஒரு பெரிய நிரையில் இக்கதையையும் பொறுத்தி பார்க்கலாம்.
ஆனால் இத்தருணங்களின் நுட்பம் அவை எந்த அளவிற்கு ஒரு தனிமனத்தின் அகத்திற்குள், ஆழத்திற்குள் செல்கிறது என்பதில் உள்ளது. அந்நாவல்களில் வரும் இது போன்ற தருணங்கள் அனைத்திலும் அந்த முதல் உலுக்கல் உடலில் நிகழ்ந்து பின் தர்க்கத்தில், அடியாழத்தில் நிகழ்கிறது. அகவயமான நுட்பமும் பின் புலத்தில் அதன் வரலாற்று சித்திரமும் இணைந்து வரும்பொழுதே இக்கதையில் நிகழ்ந்திருக்க வேண்டிய கலை உச்சம் உருவாகியிருக்கும்.
*
ஆசிரியர் குறிப்பு:
தாரா தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், விமர்சகர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், தொடர் பதிவுகள் மற்றும் பிரதிபலிப்புகள் எழுதி வெளியிடுவதற்காக பிரக்ஞாதாரா (pragnatara.com) என்னும் வலைப்பதிவு தளத்தை தொடங்கியுள்ளார். விரைவில் தொடர்ச்சியான பதிவுகள் இங்கு வலையேற்றப்படும்.