Normal view

Received yesterday — 6 June 2025எஸ். ராமகிருஷ்ணன்

விட்டோரியோ ஸ்டோராரோ : ஒளியின் ஞானம்.

உலகப் புகழ்பெற்ற சினிமா ஒளிப்பதிவாளர் விட்டோரியோ ஸ்டோராரோ தனது திரையுலக அனுபவத்தையும் ஒளி பற்றிய ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பான உரை. ஒளிப்பதிவாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை ஈடுபாடுகள், காட்சிகளை உருவாக்குவதில் வெளிப்படும் உன்னத கலையாற்றல் பற்றி விவரிக்கிறார்.

இளம் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி.

இதில் ஸ்டோராரோ இருளுக்கும் ஒளிக்குமான தொடர்பை, உணர்ச்சிகளுக்கும் வண்ணங்களுக்குமான தொடர்பை மிக அழகாக விவரிக்கிறார். பிளேட்டோவின் ஞானம் மற்றும் காரவாஜியோ ஒவியங்களிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்களைச்  சொல்கிறார். அவரது புகழ்பெற்ற திரைப்படங்களான தி கன்ஃபார்மிஸ்ட் தி லாஸ்ட் எம்பரர், ரெட்ஸ் அபோகாலிப்ஸ் நவ் படங்களின் ஒளிப்பதிவு குறித்தும் சிறப்பாக விவரிக்கிறார்.

Received before yesterdayஎஸ். ராமகிருஷ்ணன்

நடமாடும் சினிமா

நான்ஸி நிமிபுட்ரின் இயக்கியுள்ள ONCE UPON A STAR என்ற தாய்லாந்து திரைப்படத்தைக் காணும் போது எனது சிறுவயது நினைவுகள் பீறிட்டன.

எனது கிராமத்தில் பீடிக்கம்பெனி சார்பாக இலவசமாகத் திரையிடப்படும் திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன். ஒரு வேனில் பீடி விளம்பரம் செய்தபடியே கிராமத்தை சுற்றிவருபவர்கள் இரவில் ஊர் மைதானத்தில் திரைக்கட்டி படம் போடுவார்கள். 16mm ஃபிலிம் புரொஜெக்டர் பயன்படுத்துவார்கள். எம்.ஜி.ஆர் படமா, சிவாஜி படமா என்பது எந்தப் பீடிக்கம்பெனி என்பதற்கு ஏற்ப மாறுபடும்.

வா ராஜா வா, கோமாதா என் குலமாதா, காவல்காரன். தாய்க்கு தலைமகன், சவாலே சமாளி போன்ற திரைப்படங்களைத் திரையிட்டுப் பார்த்திருக்கிறேன்.

மாலை ஆறு மணிக்கெல்லாம் திரைக்கட்டி விடுவார்கள். ஆனால் என்ன படம் என்று சொல்ல மாட்டார்கள். பீடி விளம்பரத்திற்கான நோட்டீஸ். இலவச பீடி விநியோகம் நடந்து முடிந்த பின்பே படத்தைத் திரையிடுவார்கள். ஆபரேட்டர் அருகில் அமர்ந்து கொண்டு ஓடி முடித்த ரீல்களைப் பத்திரமாக மரப்பெட்டிக்குள் வைப்பதற்கு உதவி செய்வான் கூடப் படித்த முத்துராமன். இதற்காக அவனுக்கு எட்டணா கிடைக்கும்.

படம் ஆரம்பிக்கும் முன்பாக இடம் பிடிக்க ஊர்மக்கள் பாய் அல்லது சாக்குக் கொண்டு வந்து விரித்துவிடுவார்கள். மாட்டுவண்டியை ஒரமாகப் போட்டு அதில் அமர்ந்து படம் பார்ப்பவர்களும் உண்டு. சைக்கிளில் அமர்ந்து பார்ப்பவர் உண்டு. கயிற்றுகட்டிலைக் கொண்டு வருகிறவர்கள் ஒரமாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டுப்பாடு. பீடி விளம்பரத்திற்கும் கோமாதா என் குலமாதாவிற்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. அதை நிறைய முறை போட்டிருக்கிறார்கள்.

ஒருமுறை மின்சாரம் துண்டிக்கபட்ட போது இருட்டிற்குள் யாரோ ஒரு ரீலைத் திருடிக் கொண்டுபோய்விட்டார்கள். பீடிக் கம்பெனி ஆட்கள் ஊர் முழுவதும் தேடியும் அந்த ரீல் கிடைக்கவில்லை. அந்த வருஷத்தோடு அந்த பீடிக்கம்பெனி வருவது நின்று போனது.

மருந்துக் கம்பெனி விளம்பரத்திற்காக ஊர் ஊராகச் சென்று படம் காட்டும் குழுவினரைப் பற்றியதே ONCE UPON A STAR திரைப்படம்.

இன்று திரைப்படங்களில் ஒரு நடிகருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசுவது போல இவர்கள் மௌனப் படத்தைத் திரையிட்டு அதில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் குரல் கொடுக்கிறார்கள். பெண் குரலில் கூட ஆணே பேசுகிறான்.

ஒரு பழைய வேன். அதற்குள் ஒரு 16mm ஃபிலிம் புரொஜெக்டர், படப்பெட்டி, மைக், திரை மற்றும் இதர உபகரணங்கள். விற்பனைக்கான மருந்துகள். நான்கு பேர் அதில் தொலை தூர கிராமங்களை நோக்கி பயணம் செய்கிறார்கள்.

காவோ, மனித் மற்றும் மேன் என மூவர் அந்தப் பயணக்குழுவில் இருக்கிறார்கள். மூவரில் மனித் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்கிறான். அவன் திறமைசாலி. சினிமாவில் சாதிக்க வேண்டும் எனக் கனவு காணுகிறவன்.

புகழ்பெற்ற திரைப்பட நடிகர் மித்ர் சாய்பாஞ்சா படங்களை அதிகம் காட்டுகிறார்கள். அவருக்கு மனித் குரல் கொடுக்கிறான் இலவசமாகத் திரையிடப்படும் படத்தின் இடைவேளையில் தங்களின் மருந்துகளை விற்பனை செய்கிறார்கள். அதன் வசூலுக்கு ஏற்ப அவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது.

மருந்துக் கம்பெனிகளுக்குள் போட்டி என்பதால் எந்த நடிகருக்கு யார் சிறப்பாகக் குரல் கொடுப்பவர். எந்தப் படத்திற்குக் கூட்டம் அதிகமாகச் சேர்கிறது என்பதில் பலத்த போட்டி ஏற்படுகிறது.

மனித்தின் குழுவில் ருவாங்கே என்ற இளம்பெண் இணைந்து கொள்கிறாள். கதாநாயகிக்கு குரல் கொடுக்கிறாள். அது மிகுந்த வரவேற்பை பெறுகிறது. அதன்பிறகு அவர்கள் ஜோடியாகச் செயல்பட ஆரம்பிக்கிறார்கள். தன்னை யாரும் நெருங்க கூடாது என்பதற்காகத் தனக்குச் சிபிலிஸ் நோய் இருப்பதாகப் பொய் சொல்கிறாள் கே.

காவோவும் மனித்தும் கேயைக் காதலிக்கிறார்கள், அவள் யாரை விரும்புகிறாள் என்பதை அறிந்து கொள்ளத் தனித்தனியாக அணுகுகிறார்கள், கே தனது எதிர்காலத்திற்கெனத் திட்டம் வைத்திருக்கிறாள். அதை அறிந்து கொள்ளும் மனித் அவள் தனது விருப்பத்தின்படி செயல்பட அனுமதிக்கிறான்.

நால்வரின் பயண அனுபவமும், அவர்களுக்குள் ருவாங்கேயை காதலிப்பதில் ஏற்படும் போட்டியும், திரையிடுவதில் ஏற்படும் பிரச்சனையும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தீரவத் ருஜிந்தமின் ஒளிப்பதிவும் மனித் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுகோல்லாவத் கனாரோட் நடிப்பும் சிறப்பானது.

1960களின் பிற்பகுதியில் தாய்லாந்தின் கிராமப்புற பார்வையாளர்கள் எப்படியிருந்தார்கள். அன்றைய திரையுலகம் எவ்வாறு இயங்கியது என்பதைப் படம் உண்மையாக விவரிக்கிறது. திரை நட்சத்திரத்தின் வாழ்க்கையும் குரல் கொடுப்பவரின் வாழ்க்கையும் ஒரே புள்ளியில் இணைகின்றன.

தாய்லாந்தின் அழகிய கிராமப்புறப் பகுதிகள் வழியாகச் செல்லும் இந்தச் சினிமா பயணம் தாய்லாந்து சினிமாவின் புகழ்பெற்ற நட்சத்திரம் மித்ர் சாய்பாஞ்சாவுக்குச் சிறப்பான அஞ்சலியை செலுத்துகிறது

••

குற்றமுகங்கள் 14 ஜோரூ தொங்கா

கன்யாகுமரி முதல் கஞ்சம் வரையிலான பரந்த பகுதியை உள்ளடக்கிய மதராஸ் பிரசிடென்சியில் 986 காவல் நிலையங்கள் இருந்தன. அத்தனை காவல்நிலையங்களும் ஜோரூ தொங்காவை அறிந்திருந்தன. அவன் காவல் நிலையங்களில் மட்டுமே திருடுவான். அதுவும் காவலர்கள் வசூல் செய்து வைத்துள்ள தண்டத்தொகை, லத்தி, வாள், மைக்கூடு, தொப்பி, பதிவேடு போன்றவற்றைத் திருடிக் கொண்டுவிடுவான்.

போலீஸிடம் திருடுவது என்பது பகிரங்கமான சவால். அதில் வெற்றி பெறுவதைத் தனது அசாத்திய திறமையாக ஜோரூ தொங்கா நினைத்தான். போலீஸ் நிலையத்தில் திருடு போய்விட்டால் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். உயர் அதிகாரிகளுக்குத் தெரிவதற்கு முன்பாகத் திருடிய பொருளை மீட்டுவிட முயலுவார்கள். சில சமயம் ஜோரூ தொங்காவிடமே களவுக்கூலி கொடுத்து பொருளை மீட்டுப் போவதும் உண்டு.

ஜோரூ தொங்கா சித்தூரில் வளர்ந்தவன். அவனது அப்பா நாடக கலைஞர்களுக்கு ஒப்பனை செய்தவர். அம்மா ஒரு நடிகை என்றார்கள். ஜோரூவிற்கு மூன்று வயதாக இருக்கும் போது அவனது அம்மா தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். ஆகவே ஜோரூவை தன்னால் வளர்க்க முடியாது எனப் பாட்டி வீட்டில் கொண்டு போய்விட்டார் அவனது தந்தை. பின்பு அவன் தனது தந்தையைக் காணவேயில்லை. சித்தூரில் வசித்த பாட்டி இறந்த பின்பு அவன் மரம்செடி கொடிகள் போலத் தானாக வளர்ந்து விட்டான்

ஜோரூ இரண்டு மூன்று முறை காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். எங்கேயும் அவன் தனது குற்றங்களை மறுத்ததில்லை. “போலீஸ்காரர்களுக்குப் போதுமான கவனம் இல்லை. அதை நிரூபிக்கவே திருடினேன்“ என்பான். நீதிபதி தியோபால்ட் அதைக் கேட்டுச் சிரித்திருக்கிறார்.

“திருடிய பொருட்களை எங்கே வைத்திருக்கிறான்“ என வழக்கறிஞர் கேட்டபோது அதுக்குத் துப்புக்கூலி கொடுக்க வேண்டும் எனக் கையை நீட்டினான் ஜோரூ.

அந்தக் காலக் காவல்நிலையங்களில் இரண்டே அரிக்கேன் விளக்கு இருந்தன. இரவு ரோந்து சுற்ற தீப்பந்தங்களைப் பயன்படுத்தினார்கள். காவலர்களுக்குத் துப்பாக்கி வழங்கப்படவில்லை. நடந்து தான் ரோந்து சுற்ற வேண்டும். அதிகாரிகளுக்குக் குதிரை வழங்கப்பட்டிருந்தது.

சில காவல்நிலையங்களில் அவர்களே உணவு தயாரித்துக் கொள்ளவும் வேண்டும். ஸ்டேஷனிலே உறங்குவதற்கான போர்வை தலையணை வைத்திருப்பார்கள். காவல்நிலையத்தின் துப்பரவு பணிக்கென ஆட்களை வைத்திருந்தார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க மாட்டார்கள்.

புகார் கொடுக்க வரும் கிராமவாசிகளிடமிருந்து காய்கறிகள், தேங்காய் நாட்டுகோழி, வாத்து துவங்கி ஆடு மாடுகள் வரை இனாமாக வாங்கிக் கொள்வார்கள். அப்படி வாங்கிய ஆடு மாடுகளை ஸ்டேஷன் வாசலில் ஏலமிடுவார்கள். சந்தை வியாபாரி கோல்சா அதைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்வான். அப்படிக் காவலர்களால் இனமாகப் பெறப்பட்ட இரண்டு ஆடுகளைக் கூட ஜோரூ தொங்கா திருடியிருக்கிறான்.

திருடிய ஆட்டை காட்டுக்கோவிலில் வெட்டி ஊருக்கே கறிச்சோறு போட்டான். அந்தக் கறிச்சோறு சாப்பிடுவதற்காகக் காவலர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்தபின்பே அது தங்களிடம் திருடிய ஆடு என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

காட்டில் ஒற்றை யானையைப் பார்ப்பது ஆபத்து என்பது போலத் தனியே வரும் காவலருக்கு ஜோரூ தொங்காவை பார்த்தால் பயம். வாயில் ஏதோவொரு பச்சிலையை மென்று கொண்டிருப்பான். அந்த எச்சிலை காவலர் கண்ணில் துப்பிவிடுவான். அடுத்த நிமிஷம் பார்வை மறைந்துவிடும். காவலரின் பொருட்களைப் பறித்துக் கொண்டு மாயமாகி விடுவான். கண்விழித்துப் பார்க்கும் காவலர் ஒரு வெற்றிலையில் களிம்பு போல ஏதோ இருப்பது தெரியும். அதை ஜோரூ விட்டுப் போயிருப்பான். அந்தக் களிம்பை கண்ணில் போட்டுக் கொண்டால் பார்வை மீண்டும் இயல்பாகிவிடும்.

ஜோரூ எப்போதாவது பிடிபட்டு விடுவான். அப்போது வேறுவேறு ஊர்களில் இருந்து காவலர்கள் தேடிவந்து அவனை ஆசை தீர அடிப்பார்கள். அப்போது ஜோரூ வலியை மறைத்துக் கொண்டு சிரிப்பான். அத்தோடு “அடிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது, நன்றாக அடிக்கட்டும்“ என்றும் சொல்லுவான்.

“இவ்ளவு அடியும் உதையும் வாங்கிச் சிறைக்குப் போகிறாயோ. இந்தத் திருட்டில் உனக்கு என்ன லாபமிருக்கிறது“ என இன்ஸ்பெக்டர் நானாபாய்க் கேட்டிருக்கிறார். “இதெல்லாம் ஒரு விளையாட்டு, இருட்டு இல்லேன்னா நட்சத்திரத்தால ஜொலிக்க முடியாது, அப்படித் தான் திருடனும் போலீசும்“ என்றான் ஜோரூ.

இப்படியே ஜோரூ தொங்காவை விட்டுவைத்தால் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என நினைத்த போலீஸ் சூப்பிரண்டன்ட் டைரெல் அவனது இரண்டு பாதங்களையும் அம்மிக்கல்லால் நசுக்கி நடக்க முடியாமல் செய்தார். அவனால் கால்களைத் தரையில் ஊன்றவே முடியாமல் போனது.

அதன்பிறகான காலத்தில் வாரம் ஒருமுறை ஜோரூ தொங்கா கைகளைத் தரையில் ஊன்றி இழுத்து இழுத்து ஊர்ந்து வந்து காவல்நிலையத்தின் முன்பாகச் சப்தமிடுவான்.

அவனது குரலைக் கேட்ட மாத்திரம் ஏதாவது ஒரு காவலர் வெளியே வந்து அவனது சோற்றுச் செலவிற்கான சில்லறைகளைக் கையில் கொடுத்து அனுப்பி வைப்பார்.

அப்போது காவலரை குனியச் சொல்லி அவரது தொப்பியை எடுத்து வானை நோக்கி வீசி “காக்கா தூக்கிட்டுப் போயிருச்சி“ என்று சிரிப்பான் ஜோரூ.

செல்லமாக அவனது தலையில் தட்டி “உன்னைத் திருத்தமுடியாதுடா“ என்று மண்ணில் விழுந்த தொப்பியை எடுத்து அணிந்து கொள்வார் காவலர்.

••

குற்றமுகங்கள்- 13 பச்சைஅங்கி பிஸ்வாஸ்

அந்த வழக்கு 1879ம் ஆண்டுக் கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நாகோஜி என்ற சாமியாரைக் கொலை செய்ததாகப் பச்சை அங்கி பிஸ்வாஸ் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பிறவி ஊமை என்றும் நாகோஜியின் சீடராகப் பல ஆண்டுகள் இருந்தவர் என்றும் சொன்னார்கள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸ் நீதிமன்றத்தில் பேசினார். அதுவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பதில் அளித்தார். ஆகவே அவர் யார். எதற்காக இப்படி ஒளிந்து வாழ்கிறார் என்பதைக் கண்டறியும் படியாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

பச்சை அங்கி பிஸ்வாஸிற்கு நாற்பது வயதிருக்கும். ஆறடிக்கும் மேலான உயரம். தீர்க்கமான கண்கள். தோள்பட்டை வரை புரண்ட சுருண்ட கேசம். கீழ் உதட்டில் ஒரு மச்சம்.

ஒரு மனிதனின் கடந்தகாலத்தைப் போன்ற புதிர்பாதை வேறு எதுவுமில்லை. அதுவும் தன்னை மறைந்துக் கொள்ள விரும்புகிறவன் தனது கடந்தகாலத்தை அழிப்பதில்லை. பல்வேறு கடந்தகாலங்களை உருவாக்கி விடுகிறான். இதில் எது உண்மை என யாராலும் கண்டறிய முடியாது.

பச்சை அங்கி பிஸ்வாஸ் என்பது இறந்துவிட்டதாகக் கருதப்படும் நீலாம்பூர் ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி என்று சொன்னார்கள். அதற்குக் காரணம் ஷியாம் சௌத்ரியின் இடது கையில் இரண்டு விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அது போலவே பச்சை அங்கி பிஸ்வாஸிற்கும் விரல்கள் ஒட்டிக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்தார்கள்.

அந்த உண்மை வெளிப்பட்டவுடன் ஷியாம் சௌத்ரியின் மனைவி பார்கவி மற்றும் மாமனார் ரதீஷ் பாபு  எவ்வளவு செலவு செய்தாவது பிஸ்வாஸை வழக்கிலிருந்து விடுவிக்க முன்வந்தார்கள். இதற்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ரோலன் ஸ்மித்தை நியமித்தார்கள்.

ஷியாம் சௌத்ரியின் வீட்டுபணியாளர்கள். கணக்கர், மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்கள். ஆனால் நீதிமன்றத்தில் பச்சை அங்கி பிஸ்வாஸ் தான் ஷியாம் சௌத்ரி இல்லை என்று உறுதியாகச் சொன்னார். அதைக் குடும்பத்தினர் நம்பவில்லை. ஷியாம் சௌத்ரி ஏன் வீட்டை விட்டு ஒடினார். அவர்கள் குடும்பத்திற்குள் என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பட்டது. அதற்குச் சௌத்ரி குடும்பம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

பணியாளர்களில் ஒருவர் மட்டும் அது ஷியாம் சௌத்ரியில்லை. அவரைக் கொல்வதற்கு ஷியாம் சௌத்ரியின் மனைவியே ஆள் அனுப்பிவைத்தார். அதை நேரில் கண்டிருக்கிறேன் என்றார்.

அந்தப் பணியாளர் பித்துபிடித்தவர் என்று சொல்லி சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்க கூடாது என வழக்கறிஞர் வாதிட்டார். ஷியாம் சௌத்ரியை ஏன் அவரது மனைவியே கொல்ல முயன்றார் என நீதிமன்றம் விசாரிக்க முற்படவில்லை.

அதே நேரம் பர்த்வானில் உள்ள கோவில்பூசாரி கங்காராம் அது தனது இளைய மகன் ராதாநாத் என்று அடையாளம் காட்டினார். அவன் கோவில்பணிகளில் தனக்கு உதவியாக இருந்த நாட்களில் மங்கள் தேப்பின் மனைவி சாரதாவோடு பழக்கம் ஏற்பட்டு அவளைக் கூட்டிக் கொண்டு ஒடிப்போனான் என்று அடையாளம் காட்டினார்.

நீதிமன்றம் சாரதாவைக் கண்டறிந்து சாட்சியம் சொல்ல அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். காசியின் படித்துறை ஒன்றில் பிச்சைக்காரியைப் போல வாழ்ந்து கொண்டிருந்த சாரதாவை அவர்கள் கண்டறிந்து நீதிமன்றம் அழைத்து வருவதற்கு ஒன்பது மாதங்களானது.

அவள் பச்சைஅங்கி பிஸ்வாஸைப் பார்த்த மாத்திரம் அது தனது காதலன் ராதாநாத் இல்லை. அவன் என் முன்னே நின்றிருந்தால் வெறும் கையால் கொன்றுவிடுவேன் என்று சொன்னாள்.

ஆனால் பச்சை அங்கி பிஸ்வாஸை தான் காசியில் படகோட்டியாகப் பார்த்திருக்கிறேன். தங்க கருடன் கொடியுடன் படகில் சுற்றியலைந்த திருடன் துலால் என்றாள். இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கங்கையில் படகோட்டுகிறவர்கள் மற்றும் வாரணாசியின் காவல் அதிகாரி இருவர் சாட்சியம் சொல்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள்.

அவர்கள் பச்சை அங்கி பிஸ்வாஸை பார்த்த மாத்திரம் அது துலால் தான் என்று உறுதியாகச் சொன்னார்கள். கங்கை நதித் திருடன் துலால் கர்ணனைப் போல நதியில் மிதக்கவிடப்பட்ட குழந்தை என்றார்கள். அவனைப் படகோட்டி விஸ்வன் வளர்த்தான். இளைஞனான துலால் படகில் செல்லும் பயணிகளைத் தாக்கி அவர்களின் நகை பொருட்களைக் கொள்ளையடித்தான். நதியில் அவனைத் துரத்திச் சென்று எவராலும் பிடிக்க முடியாது. யாரோ ஒரு பெண்ணின் காதலில் விழுந்தான். அவள் சென்ற படகு நதியில் மூழ்கியதில் அவள் இறந்துவிட்டாள்.  அதன்பிறகு  துலாலை கங்கையில் காணமுடியவில்லை.  . அவனுக்கு என்ன ஆனது, எதற்காக இப்படி ஊமை போல ஒளிந்து வாழ்ந்து சாமியாரைக் கொலை செய்தான் என அவர்களுக்குப் புரியவில்லை.

பச்சை அங்கி பிஸ்வாஸ் தனக்குப் படகோட்டத் தெரியாது என்பதோடு தான் வாழ்நாளில் காசிக்கு சென்றதேயில்லை என நீதிமன்றத்தில் பதில் அளித்தார். அவரது உண்மையான அடையாளத்தைக் கண்டறிவது எளிதானதில்லை என நீதிமன்றம் உணர்ந்து கொண்டது.

அதே நேரம் வீட்டைவிட்டு ஒடிய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரிக்கு, கோவில் பூசாரி ராதாநாத்திற்கு, திருடன் துலாலிற்கு என்ன ஆனது, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, எங்கே ஒளிந்து வாழுகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. அவர்கள் குறித்த தனி வழக்கு நீதிமன்றத்திற்கு வராதவரை அதை விசாரிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவு செய்தது.

வழக்கின் புதிய திருப்பமாகப் பச்சை அங்கி பிஸ்வாஸைப் போலவே கொல்லப்பட்ட துறவி ஏகோஜிக்கு இரண்டுவிரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன என்று அவரது சீடர்களில் ஒருவன் சாட்சியம் அளித்தான்.

துறவி நாகோஜி தான் பழைய ஜமீன்தார் ஷியாம் சௌத்ரி எனத் தெரிந்தவுடன் பச்சை அங்கி பிஸ்வாஸைத் தூக்கிலிட வேண்டும் என ஷியாம் சௌத்ரியின் மாமனார் கூக்குரலிட்டார். தான் நியமித்திருந்த வழக்கறிஞரை பிஸ்வாஸிற்கு எதிராக வழக்காடும்படி உத்தரவிட்டார்.  

ஒரு நட்சத்திரம் வானில் ஒளிந்து கொள்ள முடிவு செய்தால் யாரால் கண்டுபிடிக்க முடியும். அப்படித்தான் பிஸ்வாஸ் வாழ்க்கையும் ஆனது.

நாலரை ஆண்டுகள் இந்த வழக்கு நடந்தது, முடிவில் பச்சை அங்கி பிஸ்வாஸ் கொலை செய்ததற்கான சாட்சியம் எதுவும் கிடைக்கவில்லை என விடுதலை செய்யப்பட்டார். அவர் யார் என்ற உண்மை கண்டறியப்படவேயில்லை. வானில் செல்லும் பறவைகள் தனது தடயம் எதையும் விட்டுச் செல்வதில்லை. சில மனிதர்களின் வாழ்க்கையும் அது போலத் தான்.

இதன் நான்கு மாதங்களுக்குப் பிறகு மிர்சாபூர் படித்துறையில் ஒருவர் இறந்துகிடந்தார். யாரோ அவரை அடித்துக் கொன்றிருந்தார்கள். இறந்துகிடந்தவர் அணிந்திருந்த பச்சை அங்கியை வைத்து அவர் பிஸ்வாஸ் தானா எனச் சந்தேகம் வந்தது. ஆனால் அதையும் எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

••

புவனாவின் சமையலறை

குறுங்கதை

••

கண்ணாடி முன்னால் நின்றபடியே ஸ்ரீநாத் சப்தமாகச் சொல்வது கேட்டது.

“ நேரமாகிருச்சி.. லஞ்ச் பேக் பண்ணிட்டயா.. சாப்பிட டிபன் ரெடியா“

புவனா ரசம் வைப்பதற்காகக் கொத்தமல்லி தழைகளும் தக்காளியும் எடுத்து சமையல்மேடையின் மீது வைத்திருந்தாள். பத்து நிமிஷம் இருந்தால் ரசம் ரெடியாகிவிடும். ஆனால் நேரமாகிவிட்டது என அவசரப்படுத்துகிறார். ரசம் வைக்க வேண்டாம் என முடிவு செய்தபடியே லஞ்ச்பாக்ஸில் அவசரமாகச் சோறு, குழம்பு, முட்டைக்கோஸ் பொறியல். வெண்டைக்காய் பச்சடியை, எடுத்து வைத்தாள். மோரை பாட்டிலில் ஊற்றினாள்.

சாப்பிடுவதற்காக இட்லியும் தேங்காய் சட்னியும் தட்டில் வைத்து டேனிங் டேபிளில் கொண்டு போய் வைத்தாள். ஸ்ரீநாத் தட்டைக் கவனிக்காமலே சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்பினான்.

அலாரம் அடித்து நின்று போனது போலானது வீடு. டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்தபடியே விரல்நுனியால் தேங்காய் சட்னியை தொட்டு ருசித்தாள். உப்பு குறைவாக இருந்தது. அவர்களுக்குத் திருமணமாகி பதினாலு வருஷங்கள் ஆகிவிட்டது. குழந்தைகள் இல்லை. அடுக்கு மாடிக் குடியிருப்பில் வீடு. ஸ்ரீநாத் விடுமுறை நாளில் கூட குறித்த நேரத்தில் தான் சாப்பிடுவார். ஆகவே அவசரமில்லாமல் ஒரு நாள் கூட அவளால் சமைக்க முடியவில்லை. அடிப்பிடித்துக் கொண்ட குக்கரை கழுவும் போது தனது வாழ்க்கையும் அப்படி ஆகிவிட்டதோ என அவளுக்குத் தோன்றும்.

ஸ்ரீநாத் படிப்பதற்காக வாங்கி வெறுமனே புரட்டிவிட்டு போட்ட தினசரி பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு ஹாலிற்குச் சென்றாள். சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பேப்பர் படித்தாள். இனிமேல் தான் குளிக்க வேண்டும்.

பத்தரை மணிக்கு தான் டிபன் சாப்பிடுவாள். மதிய உணவைச் சாப்பிட மூன்று மணியாகிவிடும். அதுவும் தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவாள். சில சமயம் ஜன்னலோரமாகத் தரையிலே படுத்து பகல் உறக்கம் கொள்வதும் உண்டு.

அன்றைய மாலையில் இரவுக்கான சப்பாத்தி செய்வதற்காகக் கோதுமை மாவு எடுக்கப் போகும் போது தக்காளியும் கொத்துமல்லியும் பிரிட்ஜில் வைக்காமல் வெளியே இருப்பதைக் கவனித்தாள். கழுவிய ஈரம் கூட மாறாமல் புதிதாக இருப்பது எப்படி என யோசித்தபடியே அதைச் சமையல் மேடையிலே விட்டுவைத்தாள். அன்றிலிருந்து அவளது சமையலறையினுள் ஒரு மாற்றம் உருவானது.

கீரையோ, காய்கறியோ எதுவும் சமையலறைக்குள் வந்துவிட்டால் வாடுவதில்லை. பழங்கள் கெட்டுப் போகாமல் இருந்தன. கறிவேப்பிலை வாடவில்லை. தோசை மாவு கெட்டுப்போகவில்லை. கேரட் நிறம் இழக்கவில்லை. தனது பிரிட்ஜில் இருந்த பொருட்கள் அத்தனையும் வெளியே எடுத்து போட்டுவைத்தாள். எதுவும் கெடவில்லை. எதுவும் அழுகிப்போகவில்லை. இந்த உலகிலிருந்து சமையலறை துண்டிக்கப்பட்டுவிட்டதோ எனத் தோன்றியது.

தனது சமையலறை இப்படி மாறிப்போனதை நினைத்துப் புவனா சந்தோஷம் கொண்டாள். அந்தச் சந்தோஷத்தின் அடுத்த நிலையைப் போல அவளுக்குச் சமையலறையில் இருந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பாடிக் கொண்டிருப்பது கேட்கத் துவங்கியது.

டம்ளரின் பாடலும் கரண்டியின் பாடலும் வேறு வேறாக ஒலித்தன. கண்ணாடி பாட்டில்கள் கனத்த குரலில் பாடின. வெட்டுக்கத்தியின் குரல் விநோதமாகயிருந்தது. மாபெரும் இசைக்கூடம் ஒன்றினுள் இருப்பதைப் போல உணர்ந்தாள்.

வீட்டின் சமையலறை அற்புதத்தின் நிகழ்வெளியாக மாறிவிட்டதை ஸ்ரீநாத்திடம் சொன்ன போது அவன் கோபித்துக் கொண்டான். இதெல்லாம் அவளது பகற்கனவு எனத் திட்டினான். அத்தோடு இதை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதே என எச்சரிக்கையும் செய்தான். புவனா தலையாட்டிக் கொண்டாள்.

ஒவ்வொரு நாளும் சமையலறைக்குள் நுழைந்தவுடன் அவள் பரவசமடைந்தாள். தேநீர்குவளையுடன் சேர்ந்து பாடினாள். தண்ணீர் பானையின் சங்கீதத்தைக் கேட்டு ரசித்தாள். வெண்கல ஸ்பூனின் உரத்த குரல் அவளுக்குப் பிடித்திருந்தது.

அதன் பிந்திய நாட்களில் தன்னிடம் ஒரு மாற்றம் உருவாகிவருவதை உணர்ந்தாள். சமையல் அறைக்கு வெளியே ஒரு வயதிலும் சமையலறைக்குள் இன்னொரு வயதிலும் இருப்பது போன்ற உணர்வது. அது நிஜமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த உணர்வு அவளுக்குச் சந்தோஷத்தையும் தந்தது. சங்கடத்தையும் தந்தது. சமையலறைப் பொருட்களைப் போலத் தானும் மாறாத இளமையுடன் இருக்க முடியுமா என ஏங்கினாள். அந்த ஏக்கம் வாடாத கீரைகளை, அழுகாத பழங்களைத் தொடும் போது வளர்ந்தது.

இந்த ஏக்கம் முற்றிய ஒரு நாளில் ஹோல்டரில் வைத்திருந்த ஒரு முட்டை தவறி தரையில் விழுந்து உடைந்து போனது. குனிந்து அதைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய போது பச்சைக்காய்கறிகள் அவள் கண்முன்னால் வாட ஆரம்பித்தன. அவசரமாகத் தண்டுக்கீரை வாடிப்போனது. கறிவேப்பிலையின் இலைகள் உதிர்ந்து போயின. பாத்திரங்கள் வாய் மூடி மௌனமாகின.

வாடிக் கொண்டிருக்கும் காய்கறிகள் பழங்களிடம் என்னடா ஆச்சு உங்களுக்கு என்று கேட்டாள். பதிலற்ற மௌனம் சமையலறையில் நிரம்பியது.

அடுத்த நாளில் அது வழக்கமான சமையலறையாக மாறியது. புவனா அதைப் பற்றி ஸ்ரீநாத்திடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை

தாகூரின் ஓவியங்கள்

தாகூரின் ஓவியங்கள் குறித்த சிறந்த ஆவணப்படம் Painter Rabindranath.

இதனை சுகந்தா ராய் இயக்கியுள்ளார்.

பன்முக ஆளுமை கொண்ட தாகூர் தனது அறுபது வயதிற்குப் பின்பாகவே ஓவியம் வரையத் துவங்கினார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

1930களில் இவரது ஓவியக் கண்காட்சி ஐரோப்பாவில் நடைபெற்றிருக்கிறது.

அவரது 1700 ஓவியங்கள் ரவீந்திர சித்ரவளி என நான்கு புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

இசையே வாழ்க்கை

சிறந்த இசைக்காக ஐந்து ஆஸ்கார் விருதுகள், 26 கிராமி விருதுகள் , ஏழு பாஃப்டா விருதுகள் , மூன்று எம்மி விருதுகள் மற்றும் நான்கு கோல்டன் குளோப் விருதுகள் பெற்றுள்ள இசைக்கலைஞர் ஜான் வில்லியம்ஸ் பற்றிய ஆவணப்படம் Music By John Williams. இதனை லாரன்ட் பௌசெரியோ இயக்கியுள்ளார்.

92 வயதான ஜான் வில்லியம்ஸ் தனது பெற்றோர் மற்றும் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஜாஸ் இசை மீதான அவரது தீராத ஆர்வம். மற்றும் பியானோ நிகழ்ச்சிகளை நடத்திய நாட்களைப் படம் அழகாக விவரிக்கிறது.

ஜான் வில்லியம்ஸின் தந்தை ஒரு இசைக்கலைஞர். ஹாலிவுட் திரைப்பட இசைக்குழுவில் பணியாற்றியவர். ஆகவே தனது மகனை சிறந்த பியானோ இசைக்கலைஞராக உருவாக்க சிறுவயது முதலே பயிற்சிகள் கொடுத்திருக்கிறார்.

திரையுலகில் ஜான் வில்லியம்ஸ் அறிமுகமான போது சந்தித்த நெருக்கடிகள் ஏராளம். ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் நட்பு அவரைத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக மாற்றியது. அவர் வழியாகவே இயக்குநர் லூகாஸ் அறிமுகமாகியிருக்கிறார். ஸ்டார் வார்ஸ் உருவாகியிருக்கிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்திற்கு அவர் எவ்வாறு தனித்துவமாக இசையமைக்கிறார் என்பதை விவரிப்பது சுவாரஸ்யமானது. Superman, Harry Potter, ET, Jaws, Indiana Jones, Schindler’s List, Saving Private Ryan, Harry Potter series. போன்ற படங்களின் இசையமைப்பு குறித்து ஜான் வில்லியம்ஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இசையமைப்பதற்காக வீட்டில் தனியறை இல்லாத காலங்களில் ஸ்டுடியோவிலே நாள் முழுவதையும் கழித்தேன். எனது மனைவி பார்பரா ரூயிக் ஒரு பாடகி. ஆகவே அவர் எனது இசை ஆர்வத்தைப் புரிந்து கொண்டார். பரபரப்பான திரையிசைப் பணிகளுக்கு நடுவே 41வயதில் திடீரென மனைவியை இழந்த போது வாழ்க்கை முற்றிலும் வெறுமையாகிப் போனது. அப்போது என்னை மீட்டது இசையே. இசை தான் எனது வாழ்க்கை. எனது மீட்சி என்கிறார் ஜான் வில்லியம்ஸ்

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தான் மிகவும் குறைவாகவே சினிமா பார்க்க கூடியவன் என்கிறார். ஜான் வில்லியம்ஸின் சிரிப்பு அத்தனை அழகானது. அவரும் ஸ்பீல்பெர்க்கும் சந்தித்துக் கொள்ளும் போது வயதைக் கடந்து இருவரும் பதின்வயது நண்பர்களாகி விடுகிறார்கள்.

கிளாசிக்கல் இசை நிகழ்ச்சி. புகழ்பெற்ற இசைக்க்குழுவை வழிநடத்தும் இசை நடத்துனர் பணி என அவரது பன்முகத்திறமையை ஆவணப்படம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையை அவர் மக்கள் முன்பாக நேரடியாக நிகழ்த்திக் காட்டும் நிகழ்வு சிலிர்ப்பூட்டுகிறது.

“Music is enough for a lifetime, but a lifetime is not enough for music.”என்கிறார் ஜான் வில்லியம்ஸ். நிகரற்ற இசையமைப்பாளரின் ஆளுமையை இந்த ஆவணப்படம் சிறப்பாக விவரித்துள்ளது.

சமையற்கலைஞரின் ஞானம்.

நீங்கள் விரும்பும் ஒரு தொழிலைத் தேர்வு செய்து அதில் உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்து உச்சநிலையை அடைய முடிந்தால் அதுவே வாழ்வின் உண்மையான வெற்றி என்கிறார் சமையற்கலைஞர் ஜிரோ ஓனோ.

ஜப்பானின் புகழ்பெற்ற உணவகம் சுகியாபாஷி ஜிரோ. தோக்கியோவில் உள்ளது. பத்து இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறியதொரு உணவகம். அங்கே சுஷி எனப்படும் மீன் உணவு புகழ்பெற்றது. ஒரு மாதகாலத்திற்கு முன்பு பதிவு செய்தால் மட்டுமே சாப்பிட இடம் கிடைக்கும்.

அங்கே உணவிற்கான கட்டணம் அதிகம். ஆனால் அதன் தரத்திற்காக அவ்வளவு பணம் கொடுக்கலாம் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

ஜிரோ தனது உணவகம் பற்றிய அனுபவங்களையே பகிர்ந்து கொள்கிறார். ஆனால் அதில் வெளிப்படும் ஞானம் நம் அனைவருக்கும் பொதுவானது. அவர் வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எதுவென அடையாளம் காட்டுகிறார். தனது வேலையை ஒருவர் எவ்வளவு நேசமிக்க முடியும் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார்.

ஜப்பானின் உயரிய விருதுகளில் ஒன்று இந்த உணவகத்தை நடத்தும் ஜிரோ ஓனோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருதுவழங்கும் நாளில் கூட அவரது உணவகத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. காலையில் விருது பெற்றுவிட்டு மதியம் தனது உணவகத்திற்க்கு வந்துவிட்டார்.

எண்பது வயதைக் கடந்த அவரது அனுபவங்களையும் அவரது இரண்டு மகன்களையும் பற்றிய ஆவணப்படம் Jiro Dreams of Sushi மிக நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கிறது

இது சுஷி  உணவகம் பற்றிய ஆவணப்படமாக இருந்தாலும் ஜிரோ ஓனோவின் வாழ்க்கை மற்றும் ஜப்பானிய உணவு முறைகள், சந்தை மற்றும் மாறிவரும் உணவுப்பழக்கம். தந்தை மகன் உறவு பற்றியதாகவும் விரிகிறது. புகழ்பெற்ற தந்தையின் நிழலில் வளரும் பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனைகளை அவரது இரண்டு மகன்களும் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார்கள்.

தனது உணவகத்திற்கு ஒருவர் பயிற்சியாளராக வந்தால் பத்தாண்டுகளுக்கு பின்பே அவருக்கான பதவி கிடைக்கும். அதுவரை அவர் உணவு தயாரிப்பதில் தனது ஈடுபாட்டினைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார் ஜிரோ.

சமைப்பதில் காட்டும் அவரது ஆர்வத்தை அதை வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவதிலும் காட்டுகிறார். சாப்பிடுகிறவர்கள் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே அவரை சந்தோஷம் கொள்ள வைக்கிறது. தியானப்பயிற்சி அளிக்கும் குருவைப் போலவே அவர் நடந்து கொள்கிறார்.

மீன் உணவுகளை சமைக்கும் அந்த உணவகத்திற்குத் தேவையான மீன்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்பதையும் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதில் டூனா மீன்களை விற்பனை செய்பவரின் நேர்காணல் சிறப்பாக உள்ளது. இது போல அவர்கள் பயன்படுத்தும் அரிசி. அதை வேக வைக்கும் விதம். உணவு சமைப்பதற்கான மரபான முறைகள், பரிமாறும் விதம் ஆகியவையும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடல் உணவுகளை மட்டுமே அவர் தனது உணவகத்தில் வழங்குகிறார். மதுவோ, வேறு சிற்றுண்டிகளோ அங்கு வழங்கப்படுவதில்லை. எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும் அதிக இருக்கைகளை அவர் உணவகத்தில் ஏற்படுத்தவில்லை. இசை நிகழ்ச்சியின் நடத்துனர் எவ்வளவு கவனமாக இசையை நிகழ்த்துவாரோ அது போலவே உணவகத்தை நடத்துகிறார். இதன் மாறாத தரத்தின் காரணமாக உலகின் 6வது சிறந்த உணவகமாக தரவரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒருவர் தனது வேலையில் முழுமையாக  மூழ்குதல்  வேண்டும். அதன் வழியே தனது திறமையை மேம்படுத்திக் கொண்டேயிருக்க முடியும்.   தொடர்ச்சியான கற்றல் மற்றும் மேம்பாடு இல்லாத எவராலும் உச்சநிலையை அடைய முடியாது. ஆகவே வணிக வெற்றிகளை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தனது திறமைகளை ஒருவர் இடைவிடாமல் மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்கு அயாரத உழைப்பும் புதியன செய்வதில் நாட்டமும் முழுமையான ஈடுபாடும் தேவை.

ஒவ்வொரு நாளும் தனது தரத்தை விட்டுக் கொடுக்காமல் உணவு தயாரிப்பது எளிதானதில்லை. ஆனால் அதில் வெற்றி அடைவதன் மூலமே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும் என்கிறார் ஜிரோ. தனது வேலையின் மீது ஒருவர் சலிப்படைந்து அதை பற்றி புகார் சொல்லிக் கொண்டேயிருந்தால் அவரால் வெற்றியை அடைய முடியாது. வாடிக்கையாளர்களின் அன்பை பெறுவதற்கு அவர்களுக்கான இருக்கை துவங்கி அவர்கள் வலது கை பழக்கம் கொண்டவர்களா இடது கை பழக்கம் கொண்டவர்களா என்பது வரை அறிந்து வைத்து அதற்கேற்ப உணவு பரிமாற வேண்டும் என்றும் சொல்கிறார். 

வெப்பநிலையைப் பொறுத்து மணமும் சுவையும் மாறுபடக்கூடியது. ஆகவே சூடான உணவை எப்படி வழங்குவது என்பதை கவனமாகத் திட்டமிட வேண்டும்.  உணவகத்தில் அனைவரும் இணைந்து ஒரே அலைவரிசையில் வேலை செய்யும் போது தான் சாத்தியமாகும், என்று சொல்கிறார் ஜிரோ

ஜிரோவின் மூத்த மகன் யோஷிகாசுவுடனான அவரது உறவு மற்றும் இளையமகனின் ஆதங்கம், தனது மரபை பிள்ளைகள் தொடர்வதில் உள்ள மகிழ்ச்சி ஆகியவற்றை ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். 85 வயதான ஜிரோ ஓனோ, உணவு சமைப்பதை கலைப்படைப்பாக மாற்றுகிறார். அதை ஆவணப்படத்தில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

••

மண்டியிடுங்கள் தந்தையே மொழியாக்கம்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் இந்தி மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்புகள் ஆண்டின் இறுதிக்குள் வெளியாக கூடும்.

வழிவிடும் வானம்

குட்டி இளவரசன் நாவலை எழுதிய பிரெஞ்சு எழுத்தாளர். அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ( Antoine de Saint-Exupery) வாழ்க்கை வரலாற்றை மையமாக் கொண்டு Saint-Exupéry திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை இயக்கியிருப்பவர் பாப்லோ அகுவேரோ. 2024ல் வெளியான திரைப்படம்.

எக்சுபெரி தபால்கள் கொண்டு செல்லும் விமானத்தின் விமானியாகப் பணியாற்றியவர். ஏர்மெயிலில் தான் பணியாற்றிய அனுபவங்களை இரண்டு நாவல்களாக எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் கதை 1930ல் நிகழ்கிறது. பிரெஞ்சு நிறுவனமான ஏரோபோஸ்டெலின் அர்ஜென்டினா கிளையில் விமானிகளாக ஹென்றி குய்லூமெட் மற்றும் எக்சுபெரி பணியாற்றுகிறார்கள்.

ஒருமுறை தபால் கொண்டு செல்லும் விமானம் கடுமையான புயல்மழைக்குள் சிக்கிக் கொள்கிறது. காற்றின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் விமானி எக்சுபெரி தடுமாறுகிறார். இன்றிருப்பது போல அன்று நவீன உபகரணங்கள் விமானத்தில் கிடையாது. அவரது நண்பரான ஹென்றி குய்லூமெட் இன்னொரு விமானத்தில் பறந்தபடியே உதவிகள் செய்கிறார். இருவரும் இணைந்து முடிவில் தரையிறங்கும் பாதையைக் கண்டறிகிறார்கள். விமானம் பத்திரமாகத் தரையிறங்குகிறது. மனிதர்களை விடவும் அவர்கள் கொண்டு வந்த தபால்களே முக்கியமானது எனச் சொல்கிறது விமான நிறுவனம்.

படத்தின் இந்தத் துவக்க காட்சிகள் சிறப்பாக உள்ளன. விமான நிறுவனம் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி ஆட்குறைப்பில் ஈடுபட முனைகிறது. இதனை ஏற்க மறுத்த எக்சுபெரி ஆண்டிஸ் மலைத்தொடரைக் கடந்து வருவதற்கான மாற்றுவான்வழியை உருவாக்க முனைகிறார். விமானத்தில் புதிய விளக்குகள் பொருத்தப்படுகின்றன. புதிய வழித்தடம் திட்டமிடப்படுகிறது.

அர்ஜென்டினாவிற்கும் சிலிக்கும் இடையில் தபால்பைகளைக் கொண்டு செல்வதற்காக ஹென்றி குய்லூமெட் விமானத்தில் புறப்படுகிறார். 1930 ஜூன் 13 வெள்ளிக்கிழமை மோசமான வானிலை காரணமாக விமானம் ஆண்டிஸ் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகிறது.

மனித நடமாட்டமேயில்லாத பகுதியில் உறைபனியின் ஊடாக உயிருக்கு போராடிய நிலையில் ஹென்றி குய்லூமெட் நடக்கிறார். அவரைக் கண்டறிந்து மீட்பதற்காக எக்சுபெரி அதே பாதையில் பயணிக்கிறார். Wind, Sand and Stars புத்தகத்தில் அந்த அனுபவம் விவரிக்கபட்டிருக்கிறது

சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட அந்தத் தேடலில் எப்படி எக்சுபெரி ஈடுபடுகிறார் என்பதே படத்தின் மையக்கதை.

அந்தக் கால விமானப்போக்குவரத்து நிறுவனங்களின் செயல்பாடுகள். மின்விளக்குகள் இல்லாத ஒடுதளங்கள் மற்றும் விமான நிலையத்தின் தொடர்பு அறை, என நூற்றாண்டுகளுக்கு முந்தைய விமானசேவையைத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார்கள்.

1929 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவுக்குக் குடிபெயர்ந்த, செந்த்-எக்சுபெரி, அங்குப் பிரெஞ்சு விமான அஞ்சல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சதர்ன் மெயில் மற்றும் நைட் ஃப்ளைட் ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். தமிழில் விடியலைத் தேடிய விமானம் என வெளியாகியுள்ளது. பறத்தலின் இன்பத்தை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும்.

இதில் இரவுநேர விமானப்பயணத்தின் நிஜமான சவால்களை எழுதியிருக்கிறார். மேலும் விமானியின் மனநிலை மற்றும் வானிலிருந்து காணும் அழகிய காட்சிகள். விமானிகளுக்குள் உருவாகும் நட்பு மற்றும் நிர்வாகத்தின் கெடுபிடிகள் பற்றியும் சிறப்பாக எழுதியிருப்பார். இந்த அனுபவங்களையே இப்படமும் விவரிக்கிறது.

குறிப்பாக நண்பரைத் தேடி மேற்கொள்ளும் ஆண்டிஸ் மலைப் பயணத்தின் போது வெளிப்படும் நிலவெளிக்காட்சிகள் அபாரமானவை. விமானத்துடன் நாமும் கூடவே பறப்பது போன்று அழகான காட்சிகள். ஒளிப்பதிவாளர் கிளேர் மாதன் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எக்சுபெரியின் எழுத்துலகம் பற்றியோ, சொந்த வாழ்க்கை பற்றியோ படம் அதிகம் கவனம் கொள்ளவில்லை. மாறாக அவரது நட்பு மற்றும் துணிச்சலான பறத்தலை மட்டுமே விவரிக்கிறது.  விமானியான எக்சுபெரியின் உலகை மட்டுமே நாம் காணுகிறோம்.

விமானத்தில் பறந்தபடியே அவர் கனவு காணுகிறார். அல்லது உலகம் கனவில் வெளிப்படும் காட்சிகள் போன்று தோற்றமளிக்கிறது.  தனது சொந்த உடலை இயக்குவது போலவே விமானத்தைக் கையாளுகிறார். உறுதியான நம்பிக்கையும் தைரியமும் ஆழ்ந்த அன்புமே அவரை இயக்குகிறது.

நட்பின் பல்வேறு பரிமாணங்களையே குட்டி இளவரசனிலும் காணுகிறோம். அவன் எல்லோருடன் நட்பு பாராட்டுகிறான். அவனால் நரியுடன் கூட நட்பாகப் பழக முடிகிறது. ஹென்றி குய்லூமெட்டின் கதை நம்ப முடியாத நிஜம். ஒருவகையில் அவரும் ஒரு குட்டி இளவரசனே.

எஸ்.ரா 100 இணைய நிகழ்வு

நாளை 21.5.25 மாலை நடைபெறுகிற எஸ் ரா நூறு இணைய நிகழ்வில் எனது நான்கு நூல்கள் குறித்த உரைகள் இடம்பெறுகின்றன. இதனை முனைவர். வினோத், முனைவர் ஸ்ரீதர் மற்றும் முனைவர் நாகஜோதி இணைந்து ஒருங்கிணைப்பு செய்கிறார்கள்.

யாத்ரிக்

இயக்குநர் மணி கவுல் 1966ல் பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற நாட்களில் இயக்கிய டிப்ளமோ திரைப்படத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

இதே திரைப்படக் கல்லூரியில் பயின்ற பல்வேறு இயக்குநர்கள். ஒளிப்பதிவாளர்கள் படங்களையும் FTIIOfficial இணைப்பில் காண முடிகிறது.

மணி கவுலின் படம் அவரது பிந்தைய சாதனைகளின் துவக்கப்புள்ளியாக உள்ளது.

இப்படத்தை அஜந்தாவில் படமாக்கியிருக்கிறார். இசையும் ஒளிப்பதிவும் அவருக்கே உரித்தான தனித்துவமிக்க அழகியலும் கொண்ட இந்தப்படம் எனக்குப் பிடித்திருந்தது.

இணைப்பு :

https://www.youtube.com/watch?v=1vPpUBuXNP0

குற்றமுகங்கள் -12 கண்துஞ்சார்

கண்துஞ்சார் மனிதர்களிடம் எதையும் திருடவில்லை. அவர் கடவுளிடம் மட்டுமே திருடினார். அவர் தன்னுடைய வாழ்நாளில் முப்பத்தியாறு கோவில்களில் திருடியிருக்கிறார். அதில் நகைகள், ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவில் மணிகள் அடக்கம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதராஸ் ராஜஸ்தானியில் இருந்த பல கோவில்களில் மூன்று காலப் பூஜைகள் நடக்கவில்லை. கோவிலுக்கென இருந்த நிலமும் சொத்துகளும் பிறரால் அனுபவிக்கபட்டன. அது போலவே கோவிலின் நகைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் கோவில் நிர்வாகியாக இருந்த நிலச்சுவான்தார் வசமே இருந்தன. அவர்கள் விழா நாட்களின் போது மட்டுமே கோவிலுக்குரிய நகைகளைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதற்குப் பெரிய பாதுகாப்பு வசதிகளோ, காவலோ கிடையாது.

கோவில் நகைகள் அடக்கிய பெட்டகம் ஒன்றை நான்கு பேர் மாட்டுவண்டியில் கொண்டு வந்த போது அதைக் கண்துஞ்சார் ஒற்றை ஆளாகக் கொள்ளையடித்திருக்கிறார். இந்த வண்டிக்கு பாதுகாவலாக வந்தவர்கள் நாலு பேர். அவர்கள் கையில் குத்தீட்டி வைத்திருந்தார்கள். அவர்களைத் தாக்கி வண்டியோடு பெட்டகத்தைக் கண்துஞ்சார் கொண்டு போய்விட்டார்.

கண்துஞ்சாருக்கு கடவுள் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் கோவிலில் மட்டுமே திருடினார். கண்துஞ்சாருக்கு என்ன வயது என்றோ, எப்படி இருப்பார் என்றோ யாருக்கும் தெரியாது. அவரது உண்மையான பெயர் கண்துஞ்சார் தானா என்றும் தெரியாது.

கடவுளின் மீது கோபம் கொள்ளாதவர் யார் இருக்கக் கூடும். கடவுளிடம் போடுகிற சண்டை என்பது தண்ணீருக்குள் கைதட்டுவது போன்றது. யாரும் கேட்க முடியாது.

கண்துஞ்சார் வந்துவிடப்போகிறார் என்று பயந்து பல்வேறு கோவில்களில் இராக்காவல் போட்டார்கள். கண்துஞ்சார் பெயரைச் சொல்லி கோவில் நிர்வாகிகளே கொஞ்சம் நகைகளைத் திருடிக் கொண்டார்கள்.

வேப்பங்குடியில் இருந்த வேஷக்காரன் முனுசாமி சயனநாதர் கோவில் திருவிழாவின் போது கண்துஞ்சார் வேஷம் கட்டிக் கொண்டு களவு ஆட்டம் என்ற வேடிக்கை நிகழ்ச்சியை ஆடிக்காட்டிய போது தான் மக்கள் இப்படித் தான் கண்துஞ்சார் இருப்பார் என்று கண்டார்கள்.

உண்மையில் கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உருவாக்கியது முனுசாமியே. தனக்கு அவரை நேரில் தெரியும் என்றும். அவர் வெள்ளைக்காரர்களால் நாடுகடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை வாழ வைப்பதற்காகவே கோவில் நகைகளைக் கொள்ளையடிக்கிறார். கடவுளால் கைவிடப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அப்படி நடந்து கொள்கிறார் என்றார் முனுசாமி.

அந்தக் கதையைப் பலர் நம்பாத போதும் கண்துஞ்சாரைப் பற்றிய களவு ஆட்டம் மிகவும் புகழ்பெறத் துவங்கியது. முனுசாமியைப் போலவே தென்மாவட்டங்களிலும் சில கூத்துக்கலைஞர்கள் கண்துஞ்சார் வேஷம் கட்ட ஆரம்பித்தார்கள்.

அதன்பிறகான வருஷங்களில் கோவில் திருவிழா தோறும் கண்துஞ்சார் ஆட்டம் தவறாமல் நடைபெற்றது. இந்த வருஷம் கண்துஞ்சாராக யார் வேஷம் கட்டப்போகிறார்கள் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இந்த வேடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்ததை உண்மையான கண்துஞ்சார் அறிந்திருக்கக் கூடும். அவர் தனது திருட்டை தொடர்ந்து கொண்டேயிருந்தார்

கோவில்கொள்ளைகளைத் தடுப்பதற்காக உருவாக்கபட்ட காவல்பிரிவின் தலைவராக நியமிக்கபட்ட டக்ளஸ் ஹாமில்டன் கண்துஞ்சாரைப் பிடிப்பதற்காகக் கோவில் தோறும் மாறுவேஷத்தில் ஆட்களை உலவ விட்டிருந்தார்.

ஒராண்டிற்குப் பிறகு பெருமல்லபாடு கோவிலில் திருட முயன்றபோது கண்துஞ்சார் ஹாமில்டனின் ஆட்களால் கைது செய்யப்பட்டார். அது கண்துஞ்சார் தானா என அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் கைது செய்யப்பட்ட நபருக்கு நாற்பது வயதிருந்தது. மீசையில்லாத முகம். ஏறு நெற்றி. வழுக்கை தலை. ஒரு கண்ணில் பூ விழுந்திருந்தது. சாய வேஷ்டி கட்டியிருந்தார். உறுதியான உடற்கட்டு. இவரால் எப்படி இத்தனை கோவில்களைக் கொள்ளையடிக்க முடிந்தது என ஹாமில்டனுக்கு வியப்பாக இருந்த்து.

இது உண்மையான கண்துஞ்சாரில்லை. அவரது நகல். அவர் இப்போது வெளியே வருவதில்லை என்று பலரும் சொன்னார்கள். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடந்தது. அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அது ஹாமில்டனின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

ஒருவேளை கண்துஞ்சார் தன்னைத் தேடும் நாடகத்தை முடித்து வைக்க இப்படி ஒரு ஆளை அனுப்பியிருக்கிறாரோ என்றும் நினைத்தார்.

கண்துஞ்சாரைப் பற்றிய கதைகளை உடைக்க வேண்டும் என்பதற்காகவே அவரை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றி ஊர் ஊராக அழைத்துப் போய்ப் பிடிபட்ட கரடியை வேடிக்கை காட்டுவது போலச் செய்தார்கள். சில ஊர்களில் மக்கள் விரும்பும் தண்டனையை அவருக்கு அளிக்கலாம் என்று சொன்னார்கள். கல்லெறிவது முதல் சாணத்தைக் கரைத்து ஊற்றுவது வரை பல்வேறு தண்டனைகளை மக்கள் அளித்தார்கள். கண்துஞ்சார் தனது வலியை தாங்கிக் கொண்டார்.

முடிவில் பெருமல்லபாடு கோவிலின் முன்பாக நரிக்கூண்டு போலப் பெரிய இரும்புக்கூண்டு ஒன்றை உருவாக்கி அதற்குள் கண்துஞ்சாரை அடைத்தார்கள். கடவுளின் கருணை இருந்தால் நீ உயிர்வாழ்வதற்காக உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள். குடிப்பதற்குத் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. நாவுலர்ந்து பட்டினி கிடந்து எலும்புகள் துருத்திக் கொண்டு புடைத்த நேரத்தில் கூடக் கண்துஞ்சார் ஒரு வார்த்தை பேசவில்லை. எவரிடமும் மன்றாடவில்லை. அது தான் அவர் கண்துஞ்சார் என்பதை அடையாளப்படுத்தியது.

ஹாமில்டன் கண்துஞ்சார் ஆட்டத்தை எங்கும் இனி நிகழ்த்தக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார்

கண்துஞ்சார் தண்ணீரும் உணவும் இன்றி மரணத்துடன் போராடிய போது ஒரு நாள் இடியுடன் கூடி பெருமழை பெய்தது. வாயைத் திறந்து மழைத்தண்ணீரை குடித்தபடி கண்துஞ்சார் சிரித்துக் கொண்டார். கடவுளுடன் அவரது கோபம் தீர்க்கபட்டது போலிருந்தது. மறுநாள் சிரித்தமுகத்துடன் கண்துஞ்சார் இறந்து கிடந்தார்.

••

வரலாற்றின் சாட்சியம்

சிப்பாய் எழுச்சியின் போது முக்கியப் போராளியாக விளங்கிய மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட இடத்தைக் காணுவதற்காகப் பரக்பூர் சென்றிருந்தேன்.

மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்ட மரம்

காலனிய வரலாற்றில் பரக்பூர் முக்கிய ராணுவ மையமாக விளங்கியது1772 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கன்டோன்மென்ட்டாகப் பரக்பூர் மாற்றப்பட்டது

அங்குள்ள காவல்துறையினருக்கான பயிற்சிக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆலமரத்தில் மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அந்த மரம் இப்போதும் உள்ளது.

இந்த இடம் தற்போது போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தினுள் இருப்பதால் முன் அனுமதி பெற வேண்டும். நண்பர் சுரேஷ்குமார் இதற்கு உதவி செய்தார்.

மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட ஆல மரத்தடியில் நின்றேன். அந்த மரம் வரலாற்றின் சாட்சியமாக மாறியுள்ளது. அதன் இலைகள் அசையும் போது கடந்தகாலத்தின் கதைகள் உயிர்பெறவே செய்கின்றன. பரக்பூரில் மங்கள் பாண்டே நினைவாக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவரது உருவச்சிலை உள்ளது. மகாத்மா காந்தியின் அஸ்தியின் மீது கட்டப்பட்ட நினைவுச்சின்னத்துடன் கூடிய, காந்தி படித்துறையும் பரக்பூரில் உள்ளது. கங்கை நதியின் அழகினை படித்துறையில் நின்றபடியே ரசித்தேன்.

••

கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்தில் தாமஸ் டேனியல் (1749-1840) மற்றும் வில்லியம் டேனியல் (1769-1837) வரைந்த அரிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன. அந்த ஓவியங்கள் அடங்கிய புத்தகம் வைத்திருக்கிறேன். ஆனால் நேரில் காணும் அனுபவம் பரவசமூட்டியது. நண்பர் கோபால்சுவாமி எங்களுடன் வந்திருந்தார். வரலாற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.

வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பார்வையாளர்கள் பலரும் கையிலும் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் நுழைவாயிலில் உள்ளே தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாது எனப் பறித்துவிடுகிறார்கள். அவரவர் பெயர் எழுதி பாட்டிலை வெளியே வைத்துவிட்டுப் போய் திரும்ப வரும் போது எடுத்துக் கொள்ள வேண்டுமாம். எதற்காக தண்ணீரைத் தடுக்கிறார்கள் என்று ஒரு பெண் ஆத்திரப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக என்று ஒரு காவலர் விளக்கினார். அந்தப் பெண் தனது பாட்டிலில் இருந்த தண்ணீர் முழுவதையும் அவர் கண்முன்னே குடித்து முடித்து காலி பாட்டிலை வீசி எறிந்தார்.

1784ல் தாமஸ் டேனியல் மற்றும் அவரது மருமகன் வில்லியம் டேனியல் இருவரும் ஓவியர்களாக இந்தியாவிற்கு வந்தார்கள். பின்பு வில்லியமின் தம்பி சாமுவேல் அவர்களுடன் இணைந்து கொண்டார். இந்தியா முழுவதும் பயணம் செய்து அவர்கள் வரைந்த வண்ண ஓவியங்கள் பேரழகானவை.  

இந்த ஓவியங்களின் வண்ணம் மற்றும் துல்லியமான சித்தரிப்பு வியப்பூட்டக்கூடியது. தமிழகத்தின் முக்கிய நிலக்காட்சிகள் மதுரை தஞ்சை நகரக்காட்சிகளை இவர்கள் வரைந்திருக்கிறார்கள்.

தாமஸ் தனது தேவைக்களுக்காகக் கொல்கத்தாவில் ஒரு அச்சுக்கூடத்தை உருவாக்கினார். வில்லியம் நீர்வண்ண ஓவியங்களை வரைந்து வந்தார். இவர்கள் இந்திய ஓவியர்களுடன் இணைந்து ஓவியங்களை அச்சிட்டு வெளியிட முனைந்தார்கள்.  கொல்கத்தாவின் பழைய நீதிமன்றம், எழுத்தர்களின் மாளிகை, தேவாலயம். கிளைவ் தெரு உள்ளிட்ட முக்கியமான இடங்களை வரைந்து அவற்றை அச்சிட்டு விற்பனை செய்தார்கள்

மதுரை

இந்தியா முழுவதும் சுற்றிவந்த வில்லியம் தனது பயணவிபரங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு நாட்குறிப்பு வைத்திருந்தார், அதில் அவர்கள் சந்தித்த மக்கள், சென்ற இடங்கள் மற்றும் ஓவியம் வரைந்த அனுபவம் பற்றி நிறையத் தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார்.

டேனியல்ஸ் மார்ச் 29, 1792 அன்று மதராஸிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து தங்களின் தென்னிந்திய பயணத்தை மேற்கொண்டார்கள். அவர்களுடன் பல்லக்குத் தூக்கிகள். பணியாளர்கள். சுமை தூக்குபவர்கள் என ஒரு குழுவே இணைந்து பயணம் செய்தது. அவர்கள் ஜூலை 3 ஆம் தேதி மதுரையை அடைந்தார்கள். மதுரையின் பழைய அரண்மனை மற்றும் தெப்பக்குளம் குளம் உள்ளிட்ட அருகிலுள்ள இடங்களை வரைந்தார்கள். பின்பு ராமேஸ்வரத்தில் உள்ள கோயில்களைக் கண்டார்கள். அங்கிருந்து தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்டு பாபநாசம் வரை சென்றார்கள். திரும்பி வந்து தஞ்சை பகுதியினைப் பார்வையிட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் வரையப்பட்டதே திருச்செங்கோடு கோவிலின் ஓவியம்.

அந்த ஓவியம் கொல்கத்தா விக்டோரியா நினைவகத்தில் இடம்பெற்றுள்ளது. ஒவியத்தின் கீழே தரப்பட்ட தகவல் சரியானதாகயில்லை. காலனிய ஆட்சியின் அடையாளமாக உள்ள விக்டோரியா நினைவகத்தினுள் ஆள் உயர கிளைவ் சிலை உள்ளது. மைய மண்டபத்தின் நடுவே விக்டோரியா ராணி சிலை காணப்படுகிறது. பிரம்மாண்டமான இந்த வளாகம் பத்து ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகள் நடந்த விதம் பற்றிய புகைப்படத் தொகுப்பினை பார்வையிட்டேன்.

••

பால்தசார் சோல்வின்ஸ் வரைந்த வங்காள ஓவியங்களின் சிறப்புக் கண்காட்சியைக் கொல்கத்தாவில் கண்டேன். இதில் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தியாவில் அச்சுத் தயாரிப்பின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவருமான பிரான்சுவா பால்தசார் சோல்வின்ஸ் 1760ல் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் பிறந்தவர்.

கடல் ஓவியராகப் பயிற்சி பெற்ற சோல்வின்ஸ் 1791-1803 வரை கொல்கத்தாவில் வசித்திருக்கிறார். இந்த நாட்களில் இந்தியவியலில் ஆர்வம் கொண்ட வில்லியம் ஜோன்ஸின் நட்பு உருவானது. அவரது உத்வேகத்தால் தான் கண்ட கேட்ட மனிதர்களை வரைந்திருக்கிறார்.

கிழக்கிந்திய கம்பெனியின் சார்பில் அந்தமான் மற்றும் நிகோபார் மக்களையும் நிலப்பரப்பினையும் ஒவியமாக வரைந்திருக்கிறார். இருநூறுக்கும் மேற்பட்ட தனி ஓவியங்களை தொகுத்து தனிநூலாகவும் வெளியிட்டிருக்கிறார்

இருநூறு ஆண்டுகளுக்கு முந்திய வங்களாத்தின் சமூகக் கட்டமைப்பு. சாதிய படிநிலைகள். ஒடுக்குமுறை, திருவிழா மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து இவரது ஓவியங்களின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய சமூகத்தின் அன்றாட வாழ்வையைப் பால்தசார் சோல்வின்ஸ் திறம்பட வரைந்திருக்கிறார். குறிப்பாகக் கிராமியக் கலைகள் மற்றும் கலைஞர்களை அவர் வரைந்துள்ள விதம் பாராட்டிற்குரியது.

சோல்வின்ஸ் தான் கேட்டு அறிந்த விஷயங்களை வரையும் போது தவறு செய்திருக்கிறார். அதில் ஒன்று தஞ்சாவூர் ராஜா என ஒருவரை வரைந்திருப்பது. அது ஒரு தவறான சித்தரிப்பு. சரபோஜி மன்னர்கள் பற்றிய தகவலை வைத்துக் கொண்டு அவர் வரைந்திருக்கலாம்.

சோல்வின்ஸின் ஓவியங்களில் காணப்படும் பெண் நடனக் கலைஞர்கள், மிளிர்கிறார்கள். அவரது ஓவியத்தின் பின்னே எழுதப்படாத கதைகள் மறைந்திருக்கின்றன

பதினெட்டாம் நூற்றாண்டு வங்காளத்தில் கணவன் இறந்தவுடன் பெண்களைச் சிதையில் இறங்கச் செய்யும் பழக்கம் இருந்தது. இந்த நிகழ்வை சோல்வின்ஸ் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் சிதைபுக இருக்கும் பெண் முகத்தில் தனக்குச் சதியில் விருப்பமில்லை என்பது அழுத்தமாக வெளிப்படுகிறது. அதை உணர்ந்தவர்கள் போலப் பெண்ணின் உறவினர்கள் அழுகிறார்கள்.

தனது காலகட்டதை ஆவணப்படுத்தும் விதமாகச் சோல்வின்ஸ் வரைந்த ஓவியங்களை  கண்காட்சியில் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.

••

எஸ்.ரா 100 தொடர் நிகழ்வுகள்

எனது நூறு நூல்களுக்கான விமர்சனக்கூட்டங்கள் வாரந்தோறும் இணையத்தில் தொடர் நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் சார்பில் பேராசிரியர் வினோத் இதனை ஒருங்கிணைப்பு செய்கிறார்

இன்றைய நிகழ்வில் ஐந்து நூல்கள் குறித்து உரையாற்றுகிறார்கள்.

விருப்பமான அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

குற்றமுகங்கள் 11 பட்லர் லெஸ்லீ

பட்லர் லெஸ்லீ என்று அழைக்கப்பட்ட ராமேந்திரன் மதராஸ் ராஜஸ்தானியின் பகுதியாக இருந்த கண்ணனூரில் வாழ்ந்தவர். கல்கத்தாவிற்குச் செல்லும் போது அவரது பெயர் லெஸ்லீ. மதராஸில் அறை எடுத்து தங்கும் போது அவரது பெயர் சுகுமார். மூன்று பெயர்களில் வாழ்ந்த அவர் இறந்த போது வயது 39.

ஜேனி என்ற ஆங்கிலோ இந்தியத் தாயிற்கும் வணிகரான வி.வி.சந்திரனுக்கும் பிறந்த மகன் என்கிறார்கள். விவிசியின் குடும்பத்தினர் இதனை ஏற்கவில்லை. காற்றில் அடித்துச் செல்லப்பட்ட விதை எங்கே விழுந்து முளைத்தாலும் அதற்கு மரம் பொறுப்பாகாது என்றார்கள்.

ராமேந்திரனுக்குச் சிறுவயது முதலே சரியாகப் பேச்சுவரவில்லை. ஆகவே எதையும் எழுதிக்காட்டச் செய்தார். இதற்காக எப்போதும் பென்சிலும் காகிதமும் வைத்திருந்தார். எட்டு வயதில் தந்தையால் பாரக்பூர் அழைத்துச் செல்லப்பட்ட ராமேந்திரன் அங்கே ராணுவ அதிகாரி வீட்டில் சில ஆண்டுகள் பட்லராகப் பணியாற்றியிருக்கிறார்.  அதனால் பட்லர் லெஸ்லீயாக மாறினார்.

1886 ஆம் ஆண்டு ராமேந்திரன் மீது ஒரு நீதிமன்ற வழக்குத் தொடுக்கபட்டது. அதன்படி அவர் ஆங்கிலேயர்களிடம் சாராயம் மற்றும் கள் விற்பதற்கான உரிமை பெற்றதாகவும் அந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்திக் கள்ளவணிகம் செய்ததோடு அரசிற்குச் செலுத்த வேண்டிய இருபத்திமூன்றாயிரம் ரூபாயைச் செலுத்தமாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கிற்கு வாதடுவதற்காகப் ராமேந்திரன் மும்பையிலிருந்து வழக்கறிஞர் கே.சி.மசானியை வரவழைத்தார். நாலரை ஆண்டுகள் நடைபெற்ற அந்த வழக்கில் ராமேந்திரன் மீது தவறில்லை என்றும் அவர் அபாரதமாக ஆயிரம் ரூபாய்க் கட்டினால் போதும் என்று தீர்ப்பளிக்கபட்டது கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது. அத்தோடு ராமேந்திரன் கவர்னர் வரை எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதையும் தெளிவாக்கியது.

ராமேந்திரன் மாதம் ஒருமுறை வங்காளத்திற்குப் பயணம் செய்துவந்தார். அவர் கிழக்கு இந்திய கம்பெனியின் அபின் வணிகத்திற்கு ரகசியமாக உதவினார், அதன் காரணமாகவே அவருக்கு நிறையப் பணம் கிடைத்தது என்று சொல்கிறார்கள். கல்கத்தாவில் அவரது பெயர் லெஸ்லீ. பத்திரிக்கையாளர். ஒரே விடுதியில் ஒரே அறையில் தான் எப்போதும் தங்குவது வழக்கம்.

ராமேந்திரன் தனது வாழ்நாள் முழுவதும் நிலம் வாங்கிக் கொண்டேயிருந்தார். எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலங்களை வாங்கினார் என்று முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. இவ்வளவு வாங்க எப்படிப் பணம் கிடைத்தது. யாரை வைத்து எப்படி வாங்கினார் என்பது குறித்த விவாதங்கள் வழக்கின் போது பேசப்பட்டன. அவரது குடும்பத்திற்கே அந்த விபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை.

ராமேந்திரன் நிலம் மற்றும் வீடுகள் வாங்குவதற்கென்றே பனிரெண்டு பேர் கொண்ட குழுவை வைத்திருந்தார். அவர்கள் அபயகாரிகள் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யாருக்கு கடன் கொடுத்தால் எளிதாக நிலத்தைக் கைப்பற்ற முடியும் என அறிந்திருந்தார்கள். பழைய திவான்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களின் நிலத்தைக் கைப்பற்றினார்கள். கோவில் நிலத்தினைப் பெயர் மாற்றித் தனதாக்கிக் கொண்டார்கள். கணவனை இழந்த பெண்களுக்குச் சொந்தமான நிலத்தைச் சொற்ப பணத்தில் பெற்றார்கள். ஒரு பசுவை விலைக்கு வாங்கிவிட்டுப் பசு கட்டப்பட்டிருந்த நிலமே தங்களுடையது எனப் பத்திரம் பதிந்து கொண்டார்கள். இப்படியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தமாகியது.

ராமேந்திரனுக்குச் சொந்தமாக 121 வீடுகள் இருந்தன என்கிறார்கள். தனது தந்தையைப் போலவே அவரும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அதே நேரம் உள்ளூரில் மரியாதை வேண்டும் என்பதற்காகத் தாணுப்பிள்ளை குடும்பத்து பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். மொத்தம் 32 படுக்கைகளுடன் 20 குளியலறைகள் கொண்ட பெரிய வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தார்.

இரண்டு மனைவிகள் மூலமாக அவருக்குப் பதினாறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் நால்வர் பிறந்த சில மாதங்களில் இறந்து போனார்கள். ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் ராமேந்திரன் வாழ்ந்து வந்தார். அதிகமாக நிலமுள்ளவன் ஆயிரம் கைகள் கொண்டவனாகப் பலம் பெறுகிறான் என்று ராமேந்திரன் நம்பினார். எந்த ஊரில் இடம் வாங்குகிறாரோ அதன் பெயரை தனது உடம்பில் பச்சைகுத்திக் கொண்டார். அவரது முதுகு, கைகள், தொடை, கழுத்து என எங்கும் எழுத்துக்களாக இருந்தன.

இவ்வளவு சொத்திற்கு அதிபதியாக இருந்த ராமேந்திரனுக்குத் திடீரென ஒரு நாள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. எதைச் சாப்பிட்டாலும் குமட்டிக் கொண்டு வாந்தி வந்தது. அவரால் வாழைப்பழத்தைக் கூடச் சாப்பிட முடியவில்லை. இதற்கான வைத்தியம் செய்வதற்காக அவர் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களிடம் சென்றார். அவர்கள் கொடுத்த மருந்தால் சற்று குணமானது. ஆனால் காகம் சாப்பிடுகிற அளவைப் போல உணவைக் கொறிக்க முடிந்ததேயன்றி வயிறு நிறையச் சாப்பிட முடியவில்லை.

ஆங்கில வைத்தியம் செய்து கொள்வதற்காக அவர் மதராஸிற்குச் சென்றார். டாக்டர் டெகார்ட்டிடம் சிகிட்சை எடுத்துக் கொண்டார். இரண்டரை மாத சிகிட்சைக்குப் பிறகு நலமடைந்து சொந்த ஊர் திரும்பினார்.

அதன் மறுநாள் அவரது வீட்டில் பெரிய விருந்து நடைபெற்றது. நூற்றியெட்டு வகைப் பதார்த்தங்கள் அதில் இடம்பெற்றன. இலையின் முன்னால் அமர்ந்த போது ராமேந்திரனுக்குத் தன்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அவர் ஒரு வாய்ச் சோறு சாப்பிட்டிருப்பார். அப்படியே மயங்கி இலையில் விழுந்து இறந்து போனார்.

ராமேந்திரன் சொத்துக்கு அவரது இரண்டு மனைவியர் மற்றும் உறவினர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். வழக்கு தொடுத்தார்கள். கோர்ட் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு நிலம் அவரது பெயரில் இருந்த்து எனக் கணக்கெடுக்கும்படி உத்தரவிட்டது. அந்தக் கணக்கெடுப்பிற்கு முன்பாகவே அவரது அபயகாரிகள் பத்திரங்களைத் தங்களின் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டார்கள். பல வீடுகள் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கே சொந்தமானது.

ராமேந்திரன் பலரையும் ஏமாற்றி நிலங்களைக் கையகப்படுத்திய விபரம் வழக்கின் போது தெரிய வந்தது. அதில் மூன்று கொலைகளும் சம்பந்தப்பட்டிருந்தன ஆகவே அவரது சொத்து முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டது.

நூறு வீடுகளின் அதிபதியாக இருந்த ராமேந்திரனின் பிள்ளைகள் குடியிருக்க வீடின்றி வீதிக்கு வந்தார்கள். அதில் ஒரு பையன் மனநிலை பாதிக்கபட்டு கிழிந்த சட்டையோடு பஜாரைச் சுற்றிக் கொண்டிருந்தான்.

ராமேந்திரனுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை. அவர் ஆடம்பரமாக வாழ்ந்த வாழ்க்கையை விடவும் கையில் சோற்றோடு இறந்த நிகழ்வு தான் மக்கள் மனதில் அழியாமலிருந்தது.

தேசிய நூலகத்தினுள்

கொல்கத்தாவின் தேசிய நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். பிரிட்டிஷ் காலத்தில் இம்பீரியல் நூலகமாகச் செயல்பட்டது. இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழிகளின் நாளிதழ்கள்,வார இதழ்கள், புத்தகங்கள் இங்கே சேமித்து வைக்கபடுகின்றன.

தமிழ்நாட்டு நூலகங்களுக்கு நாம் புத்தக விநியோகம் செய்யும் போது அதன் ஒரு பிரதியை இங்கே அனுப்பி வைக்க வேண்டியது கட்டாயம். அலிப்பூரில் உள்ள தேசிய நூலக வளாகம் மிகப்பெரியது. முப்பது ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஒரு காலத்தில் இது கவர்னரின் மாளிகையாகச் செயல்பட்டிருக்கிறது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த பெரிய பெரிய கட்டிடங்கள். நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனை நடைபெறுகிறது.

பிரம்மாண்டமான நூலகக் கட்டிடம். அதன் முகப்பில் தாகூரின் சிலை. அவரது குடும்பம் பொதுநூலகத்துறை உருவாகப் பெரிதும் உதவியிருக்கிறது.

இது அரிய நூல்களுக்கான ஆவணக்காப்பகமாகவும், நூலகர்களுக்குப் பயிற்சி தரும் இடமாகவும், ஆய்வாளர்களுக்கான ஆய்வு மையமாகவும், அரசு வெளியீடுகள் அறிக்கைகளுக்கான காப்பகமாகவும் செயல்படுகிறது. இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

சர்வதேச அளவிலான ஏழாயிரம் கல்விசார்ந்த இதழ்கள், ஆய்வறிக்கைகள் இங்கே அனுப்பி வைக்கபடுகின்றன. அரிய நூல்களை மின்வடிவத்திற்கு மாற்றிப் பொதுப்பகிர்வு செய்து வருகிறார்கள். பிரம்மாண்டமான வாசிப்பு அறை, மொழி வாரியாகத் தனித்தனிப் பிரிவுகள், ஆய்வாளர்களுக்கான தனிப்பகுதி, போட்டிதேர்வு எழுதுகிறவர்கள் அதிகம் வந்து படிக்கிறார்கள்.

நூலகத்தின் நான்கு கட்டிடங்களிலும் குளிரூட்டப்பட்ட தனித்தனி வாசிப்பு அறைகள் உள்ளன. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு நூலகத்தைப் பயன்படுத்த விரும்பும் வாசகர் அதற்கென உள்ள தற்காலிக உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். தேசிய நூலகத்தில் குழந்தைகளுக்கெனத் தனிப் பிரிவு உள்ளது.

தேசிய நூலகத்தின் தமிழ்ப்பிரிவை காணச் சென்றிருந்தேன். 1963 ஆம் ஆண்டுத் தமிழ்ப் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவில் வையாபுரி பிள்ளை சேமிப்பில் இருந்த நூல்கள் யாவும் பாதுகாக்கபட்டுவருகின்றன. இங்கே 1723 ஆண்டு அச்சிடப்பட்ட தமிழ் பைபிள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் பிரிவினுள் ஆயிரக்கணக்கான தமிழ்நூல்கள் கட்டுக்கட்டாகக் கட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் பகுத்து அட்டவணை செய்வதற்குப் போதுமான பணியாளர்கள் இல்லை என்றார்கள்.

தமிழ்ப்பிரிவின் நிர்வாகியாக இருப்பவர் விடுமுறையில் இருப்பதால் ஒரேயொரு பணியாளர் மட்டுமே இருந்தார். தமிழ்நூல்களைப் பிரித்து வகைப்படுத்தி அட்டவணைப்படுத்தும் பணிக்கு நிறையப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார். தமிழகத்தில் நூலகக்கல்வி பயிலுகிற மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்து இன்டென்ஷிப் முறையில் இந்தப் பணிக்கு அனுப்பி வைக்கலாம்.

 தேசிய நூலகம் நிறையக் கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துகிறது. அரிய நூல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கற்றுத் தருகிறது. அதன் இணையதளம் வழியாக மின்நூல்களை பார்வையிட முடியும். வெளிமாநில உறுப்பினர்களுக்கு அஞ்சல் வழியாகவும் நூல்களை கடன்தருகிறார்கள்.

••

கொல்கத்தாவின் காலேஜ் ரோடு புத்த கடைகளால் நிரம்பியது. சாலையின் இருபுறமும் வரிசை வரிசையாகப் புத்தகக் கடைகள். அதுவும் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள் அதிகம் உள்ளன. நடைபாதையிலும் பழைய புத்தகங்களைக் குவித்துப் போட்டிருக்கிறார்கள். அறுபது விழுக்காடு புத்தகக் கடைகள் பாடப்புத்தகங்கள் மற்றும் போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுநூல்கள் விற்கும் கடைகளே. சுற்றிலும் கல்லூரிகள் இருப்பதால் நிறைய மாணவர்களைக் காண முடிந்தது.

வங்காள இலக்கியம் சார்ந்த பழைய புத்தகங்கள் விற்பவர்களே அதிகமிருக்கிறார்கள். பழைய புத்தகம் என்றாலும் அதன் விலையை அதிகமாகவே கேட்கிறார்கள். எந்தக் கடையில் ஒரு புத்தகத்தைக் கேட்டாலும் உடனே அவர் தொலைபேசியில் அழைத்து மற்றகடைகளில் விசாரித்து அதைப் பெற்றுத் தந்துவிடுகிறார்.

இந்தச் சாலையில் தான் கொல்கத்தாவின் புகழ்பெற்ற இந்தியன் காபி ஹவுஸ் உள்ளது. இது 300 ஆண்டுகள் பழமையான கஃபே ஆகும், இங்கே எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடுகிறார்கள். மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகிறார்கள்.

மதியம் பனிரெண்டு மணிக்கு தான் இந்தக் காபி ஹவுஸ் திறக்கபடுகிறது. அதற்கு முன்னதாகவே வெளியே ஆட்கள் காத்திருக்கிறார்கள். சென்னையின் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் போலவே இருந்தது.

காபி ஹவுஸ் உள்ளே புகழ்பெற்ற எழுத்தாளர்களின் உருவப்படங்களை வரைந்திருக்கிறார்கள். கையில் புத்தகங்களும் வந்து சேர்ந்த இளைஞர் பட்டாளம் எங்கள் அருகில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து அமர்ந்து முழுத்திரைக்கதையினையும் எழுதிவிடுவார்கள் என்றார்கள். கொல்கத்தாவின் மற்ற இடங்களுடன் ஒப்பிடும் போது இங்கு வழங்கப்பட்ட காபி நன்றாகவே இருந்தது. இங்கேயே புத்தக வெளியீடுகள் நடப்பது உண்டு. மாலை நேரம் வந்திருந்தால் இந்த இடம் புகைமண்டலமாக இருந்திருக்கும். அவ்வளவு சிகரெட் பிடிப்பார்கள் என்றார் உடன்வந்த ரவி.

தமிழகத்தோடு ஒப்பிடும் போது வங்கமொழி நூல்களின் அச்சாக்கம் சிறப்பாக இல்லை. விலையும் அதிகமாக உள்ளது. தமிழ்பதிப்புத் துறை அச்சாக்கத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. குறிப்பாகப் புத்தக உருவாக்கத்திலுள்ள நேர்த்தியும் அழகும் சர்வதேச தளத்தில் உள்ளது. இதனைப் பிற மாநிலங்களில் வெளியிடப்படும் நூல்களைக் காணும் போது நன்றாக உணர முடிகிறது.

ஆங்கில இலக்கியம் சார்ந்த நூல்களை மட்டுமே விற்கும் பழைய புத்தகக் கடை ஒன்றினைக் கண்டேன். அதனை நடத்துகிறவர் ஆங்கிலப் பேராசிரியர் போல அத்தனை நூல்களையும் பட்டியிலிட்டு விவரித்தார். தமிழ்நாட்டினை விடவும் வங்கத்தில் சிறார்களுக்கு நிறையப் புத்தகங்கள் அழகிய வண்ணத்தில் வெளியிடப்படுகின்றன. நேரடியாக வங்கமொழியில் வெளியான காமிகஸ் புத்தகங்களைக் கூடக் காண முடிந்தது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பழைய புத்தகச் சந்தை இதுவென்றார்கள். நடக்க நடக்க முடிவற்று கடைகள் வந்து கொண்டேயிருப்பது அதனை உணரச் செய்தது.

சுவை புதிது

எரிக் பெஸ்னார்ட் இயக்கிய Delicious ஒரு சமையற்கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கிறது. பாரீஸின் முதல் உணவகமாகக் கருதப்படும் Delicious உருவான விதம் பற்றியதாகக் கதை அமைந்துள்ளது. வரலாற்றுப்பூர்வமாக இது முதல் உணவகமில்லை. திரைக்கான கற்பனையில் உருவாக்கபட்டிருக்கிறது.

பிரான்சின் உயர்தட்டுவாழ்க்கையில் விருந்து மிகவும் முக்கியமானது. அதிகப்படியான உணவு என்பது அதிகாரத்தின் அடையாளமாகவும் அந்தஸ்தை வெளிப்படுத்த கூடியதாகவும் பிரபுக்கள் கருதினார்கள். அப்படிப்பட்ட ஒரு விருந்து தயாரிக்கபடுவதில் தான் படம் துவங்குகிறது.

வெள்ளிப்பாத்திரங்கள். கரண்டிகள், உணவுமேஜையில் செய்யப்படும் அலங்காரம், உணவு தயாரிக்கபடும் போது ஏற்படும் மணம், விருந்து பரிமாறப்படும் விதம் என உண்மையான விருந்துக்கூடத்திற்குள் நாமிருப்பது போன்ற நெருக்கத்தைப் படம் ஏற்படுத்துகிறது.

சமையல்காரர் பியர் மான்செரோன் திறமையானவர். ஆனால் தற்பெருமை மிக்கச் சாம்ஃபோர்ட் பிரபுவிடம் பணிபுரிகிறர். ஒரு நாள் பிரபு தனது விருந்தினர்களுக்காக ஆடம்பரமான இரவு உணவைத் தயாரிக்கும்படி உத்தரவிடுகிறார்.

மான்செரோனும் அவரது சமையற் குழுவும் நாற்பது விதமான உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள். அதில் புதிய ருசியாக உருளைக்கிழங்கு துண்டுகள் மற்றும் ட்ரஃபிள்ஸுடன் கலக்கப்பட்ட பேஸ்ட்ரியை உருவாக்குகிறார். அதற்கு தி டெலிசியஸ் என்று பெயரிடுகிறார். புதிய உணவின் ருசியை அவர்கள் ஏற்றுக் கொண்ட போதும் பொய்யாகப் பாராட்டுகிறார்கள். உருளைக்கிழங்கு பன்றிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவு என்கிறார் ஒரு விருந்தினர். அதைப் பியர் ஏற்கவில்லை.

விருந்தினர்களின் முன்பாகவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். இச்செயல் விருந்தினர்களைக் கோபம் கொள்ள வைக்கிறது. பியர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சாம்ஃபோர்ட் உத்தரவிடுகிறார். பியர் மறுக்கவே, அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

தனது தந்தை நடத்திய பழைய விடுதிக்கு திரும்பும் பியர் அதனைச் சரிசெய்து புதிய பயண விடுதியாக மாற்றுகிறார். பயணிகளின் தேவைகளை இலவசமாகச் செய்து கொடுக்கிறார்.

பியரின் மகன் உருவாகிவரும் சமூக மாற்றங்களை கவனிக்கிறான். பிரபுகளுக்கு எதிரான மனநிலை உருவாகி வருவதை அறிந்து கொள்கிறான்.

ஒரு நாள் அங்கே வரும் இளம்பெண் லூயிஸ் பியரிடம் உதவியாளராகப் பணியாற்ற ஆசைப்படுகிறாள். பியர் அதை ஏற்கவில்லை.. அவள் யார், எதற்காக அங்கே வந்து சேர்ந்தாள் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விவரிக்கபடுகிறது.

ஆரம்பத்தில் அவளை ஏற்க மனமில்லாத பியர் கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் புரிந்து கொள்கிறார். அவர்கள் இணைந்து புதியதொரு உணவகத்தை நடத்த திட்டமிடுகிறார்கள். அதை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதே படத்தின் பிற்பகுதி.

உணவகம் முதன்முதலில் எப்படி ஆரம்பிக்கபட்டது. உணவிற்கான கட்டணம் மற்றும் உணவுப்பட்டியலை எழுதிப்போடும் முறை எவ்வாறு அறிமுகமானது என்பதையும் இப்படத்தில் நேரடியாக காணுகிறோம்

உணவு தயாரிப்பதும் ஒரு கலையே. சமையற்கலையினையும் சமையற்கலைஞர்களையும் பற்றி நிறைய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் முதல் உணவகத்தின் கதையை விவரிப்பதோடு பிரெஞ்சுப் புரட்சியால் ஏற்பட்ட கொந்தளிப்புகளையும் கவனப்படுத்துகிறது. ஜீன்-மேரி ட்ரூஜோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

இன்று உலகமே கொண்டாடும் உருளைக்கிழங்கு ஒரு காலத்தில் சாப்பிட உகந்த ஒன்றாகக் கருதப்படவில்லை என்ற உண்மையைப் படம் சுட்டிக் காட்டுகிறது. சமையற்கலையின் வழியாகப் பிரெஞ்சு சமூகத்தின் கடந்தகால நிகழ்வுகளையும் வரலாற்றையும் படம் அழகாக வெளிப்படுத்துகிறது.

••

சாந்திநிகேதனின் மணியோசை

கொல்கத்தாவிலிருந்து மூன்றரை மணி நேர தூரத்திலுள்ளது சாந்திநிகேதன். இந்தியாவின் தனித்துவமிக்கக் கல்வி வளாகத்தைத் தாகூர் உருவாக்கியிருக்கிறார். கலைகளும் இசையும் இலக்கியமும் அனைத்து மொழிகளும் அறிவியலும் பொருளாதாரமும் கற்றுக் கொடுக்கபடும் சர்வதேசக் கல்வி நிலையமாகச் செயல்படுகிறது சாந்தி நிகேதன். இன்று அதன் பெயர் விஸ்வபாரதி பல்கலைகழகம்.

இயற்கையான சூழல். மரத்தடி வகுப்பறைகள். சிறந்த ஆசிரியர்கள். பெரிய கலைக்கூடங்கள். மரபும் நவீனமும் இணைந்த கல்விமுறை, இங்கே வடகிழக்கிலிருந்து நிறைய மாணவர்கள் வந்து கல்வி பயிலுகிறார்கள். சீன. ஜப்பானிய, கொரிய மாணவர்களும் கூட இங்கே வந்து பயிலுகிறார்கள். சாந்தி நிகேதனில் நடைபெறும் மேளா மிகவும் புகழ்பெற்றது.

கொல்கத்தாவிலிருந்து காரில் அதிகாலையில் புறப்பட்டேன். கொல்கத்தாவை விட்டு வெளியேறி போல்பூர் செல்லும் பர்த்வான் நெடுஞ்சாலையைப் பிடிப்பதற்கே ஒரு மணி நேரமாகிவிட்டது. புறவழிச்சாலைகள் யாவும் ஒன்று போலவேயிருக்கின்றன. சாலையோரம் மண்வீடுகளைக் காண முடிந்தது. சில இடங்களில் பனங்கூட்டங்கள் தொலைவில் தென்பட்டன.

நமது நெடுஞ்சாலையோர வாழ்க்கை போலச் சாலையோர விற்பனையாளர்களைக் காண முடியவில்லை. பெட்ரோல் நிலையங்களும் கூட அரிதாகவே தென்பட்டன. கார் டிரைவர் கூகுள்மேப் உதவியோடு வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தார். வழக்கம் போலவே அந்த மேப் தவறான பாதையைக் காட்டவே வழிமாறி வேறு பாதையில் பயணிக்கத் துவங்கிவிட்டோம்.

காரோட்டி ஒரு இடத்தில் காரை நிறுத்தி மெக்கானிக் ஷாப் ஒன்றில் பர்த்வான் செல்லும் வழியை விசாரித்தார். நாங்கள் வந்த பாதையிலே திரும்பி போய்ப் பாலத்தின் அடியில் சென்று வலதுபுறம் போக வேண்டும் என்று மெக்கானிக். ஆலோசனை சொன்னார் அதன்படி காரைத் திருப்பினோம். பர்த்வான் பகுதியில் முந்திய நாள் மழைபெய்திருக்கிறது. ஆகவே காற்றில் ஈரமிருந்தது. வானில் நிறைய மேகக்கூட்டங்களைக் காண முடிந்தது.

தமிழகத்தின் நாற்கரசாலையைப் போல அதிக வாகன நெருக்கடியில்லை. ஆனால் சீரற்ற சாலைகள். குறுகலான பாலத்தின் அடியினைக் கடந்து செல்ல வேண்டிய தேவை. பெயர்பலகைகள் இல்லாத சாலைத்திருப்பங்கள் எனக் குழப்பமாக இருந்தது.

இரவில் திரும்பி வரும் போது உண்மையான நெருக்கடியைக் கண்டோம். வரிசை வரிசையாக லாரிகள். கார்கள் அதுவும் ஒவ்வொரு சிக்னலிலும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டிய நீண்ட வரிசை. காலை பார்த்த அந்தச் சாலை தானா என வியப்பாக இருந்தது.

சாந்தி நிகேதனைப் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது. அங்கே பணியாற்றிய ஒவியர்கள். இசைக்கலைஞர்கள். கல்வியாளர்கள் தங்கள் நினைவுகளை எழுதியிருக்கிறார்கள். தாகூரும் தனது நினைவுக்குறிப்பில் எழுதியிருக்கிறார். சாந்திநிகேதனும் ஸ்ரீநிகேதனும் தாகூரின் இரண்டு சிறகுகள் எனலாம்.

மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. இன்றும் அது கிராமப்பகுதியே. தாகூர் குடும்பம் பிரம்மசமாஜத்தைச் சார்ந்தது. ஆகவே தாகூரின் தந்தை தேவந்திரநாத் இயற்கையோடு இணைந்த ஆசிரமம் ஒன்றை உருவாக்க விரும்பினார். அதற்காக அவர் வாங்கிய இடமே சாந்தி நிகேதன்.

ஏழு ஏக்கர் நிலத்தில் தேபேந்திரநாத் தாகூர் தியானத்திற்காக ஒரு சிறிய ஓய்வறையைக் கட்டினார், மேலும் 1888 ஆம் ஆண்டில் பிரம்மவித்யாலயா மற்றும் சிறிய நூலகத்தை உருவாக்கினார். 1925 முதல் இந்தப் பள்ளி பாத-பவனா என்று அறியப்பட்டது.

பூபந்தங்கா என்ற கிராமம் தான் சாந்திநிகேதனாக உருமாறியது. பூபந்தங்கா என்பது வழிப்பறிக் கொள்ளைக்காரனின் பெயர். அவன் மனம்மாறி சரண் அடைந்த காரணத்தால் அந்தப் பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.

சாந்திநிகேதனின் தெற்கு எல்லை நெல் வயல்களின் பரந்த சமவெளியில் இணைகிறது. ஒரு பக்கம் காடு. சுற்றிலும் விவசாயப் பண்ணைகள். சாந்தி நிகேதனுள் நிறைய மரங்கள் காணப்படுகின்றன. கரடுமுரடாக இருந்த இந்தப் பகுதியினைத் திருத்தி வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட வளமான மண்ணால் அழகான தோட்டங்களை உருவாக்கிறார்கள்.

சிற்பி ராம்கிங்கர் பைஸ் உருவாக்கிய அழகிய சிற்பங்கள் இயற்கையோடு இணைந்து காணப்படுகின்றன. பேரழகான இச்சிற்பங்களை இயற்கையின் அங்கமாகவே பார்வையாளர்கள் கருதுகிறார்கள். குறிப்பாகச் சந்தால் குடும்பம் ஒன்றின் சிற்பம் மிகவும் அழகாக உருவாக்கபட்டிருக்கிறது.

சாந்திநிகேதனில் மழைக்காலத்தின் முதல் நாளில் இன்றும் வெறுங்காலுடன், குடை இல்லாமல், மாணவர்கள் வருகை தந்து மழையைக் கொண்டாடுகிறார்கள்.

சாந்தி நிகேதன் ஆரம்பத்தில் சிறிய பள்ளியாக விளங்கியது. நோபல் பரிசு பெற்ற பின்பு தாகூர் இதனை இந்தியாவின் உயரிய கல்வி மையமாக உருவாக்க முனைந்தார். ஆகவே மொழிகளுக்கான மையம், கலைப்பள்ளி, இசைப்பள்ளி. எனப் பல்வேறு துறைகளை உருவாக்கி அதற்காக நந்தலால் போஸ் போன்ற புகழ்பெற்ற ஒவியக்கலைஞர்கள். இசைக்கலைஞர்கள், சிற்பிகள், மொழியியல் அறிஞர்களை வரவழைத்துப் பாடம் கற்றுதரச் செய்தார். கேரளாவிலிருந்து கதகளிகலைஞரை வரவழைத்து அக்கலையைக் கற்பிக்கச் செய்திருக்கிறார்.

சாந்திநிகேதனுள் தாகூரின் பூர்வீக வீடு. பருவ காலத்திற்கு ஏற்ப அவர் தங்குகின்ற வேறு வேறு வடிவமைப்பில் கட்டப்பட்ட வீடுகள். அவரது ரோஜா தோட்டம், தியான மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. கலாபவன் என்ற பெரிய ஓவியக்கூடம் மற்றும் அச்சுக்கூடம், நூலகம் அமைந்துள்ளது. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் வீடும் சாந்திநிகேதனுள் இருக்கிறது.

தேபேந்திரநாத் தாகூர் மற்றும் தாகூர் தியானம் செய்த சாத்திம் மரங்களின் கீழ் உள்ள இடம் அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது. விஸ்வபாரதியின் எல்லா முக்கிய நிகழ்வுகளும் இங்கே தான் துவங்குகின்றன. இந்தப் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஏழு இலைகள் கொண்ட சாத்திம் மரத்தின் கிளையே பட்டமாக அளிக்கபடுகிறது

பழைய கட்டிடங்கள் எதையும் மாற்றாமல் அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். சாந்திநிகேதனை ஒருவர் முழுமையாகப் பார்ப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும். அத்தனை சிறப்புப் பகுதிகள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இயற்கையோடு இணைந்த கல்வி வழங்குதல் இதன் தனிச்சிறப்பாகும் இதற்காகத் திறந்தவெளி வகுப்பறைகள் காணப்படுகின்றன. மரத்தடியில் அமைக்கபட்ட அந்த வகுப்பறைகளைக் காணுவது மகிழ்ச்சி அளித்தது. எனது சிறுவயதில் அப்படி ஒரு வேப்பமரத்தடி வகுப்பில் படித்திருக்கிறேன்.

ஸ்ரீநிகேதன் என்பது கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படும் பகுதியாகும். அங்கே இயற்கை வேளாண்பொருட்கள். கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறிப்பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

தாகூரின் ஐந்து வீடுகள் கூட்டாக உத்தராயண வளாகம் என்று அழைக்கப்படுகிறது, உபாசனா கர் என அழைக்கப்படும் பிரார்த்தனை மண்டபம் பெல்ஜிய கண்ணாடிகளால் உருவாக்கபட்டது. இது சாந்திநிகேதனின் மிகவும் அழகிய இடங்களில் ஒன்றாகும்

தாகூரின் பூர்வீக இல்லம் இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கே அவருக்கு அளிக்கபட்ட பரிசுப்பொருட்கள் யாவும் காட்சிக்கு வைக்கபட்டிருக்கின்றன. தாகூர் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஜப்பானியக்கலைப்பொருட்கள். சீனக்கலைப்பொருட்கள் கண்ணாடி அலமாரி முழுவதும் காணப்படுகின்றன. இன்னொரு அலமாரியில் லியோ டால்ஸ்டாயின் டெத்மாஸ் காணப்படுகிறது.

இது 1910 ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாய் இறந்தவுடன் அவரது முகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டர் வார்ப்பாகும். ரஷ்ய சிற்பி செர்ஜ் மெர்குரோஃப் என்பவரால் இந்த முகமூடி உருவாக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டுச் சோவியத் ஒன்றியத்திற்கு விஜயம் போது ரவீந்திரநாத் தாகூருக்கு இதனைப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். தாகூர் டால்ஸ்டாயை (1828-1910) ஒருபோதும் சந்தித்ததில்லை என்றாலும், அவர் டால்ஸ்டாயின் புத்தகங்களை வாசித்திருக்கிறார். தாகூர் பதிமூன்று நாட்கள் சோவியத் ஒன்றியத்தில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இந்திய இலக்கியவாதிகளில் அதிக நாடுகளுக்குப் பயணம் செய்தவர் தாகூராகத் தான் இருக்கக் கூடும். நாம் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைக் கொண்டாடுவது போல அர்ஜென்டினாவில் தாகூரைக் கொண்டாடுகிறார்கள்.

தாகூரின் ஆடைகள், அவரது கைத்தடி, பேனா, படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள், அவர் பயன்படுத்திய காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தாகூர் மிகவும் அழகான ஆடைகளை அணியக்கூடியவர். அவரது பயணத்தின் போது முப்பது பெட்டிகளில் உடைகள் கொண்டு செல்வார்களாம். அது போல அவர் ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொள்ளக்கூடியவர். அந்த மருந்துப்புட்டிகள் அங்கே காணப்படுகின்றன. தாகூரின் விதவிதமான மூக்குக் கண்ணாடிகள் காணப்படுகின்றன.

தாகூர் பயன்படுத்திய WBA 8689 எண் உள்ள செடான் கார் ஒன்று வெளியே காட்சிக்கு வைக்கபட்டிருக்கிறது. இந்தக் காரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஜெகதீஷ் சந்திர போஸ் போன்ற ஆளுமைகள் ஏறியிருக்கிறார்கள். 1938 ஆம் ஆண்டில் தாகூர் இரண்டு செடான் கார்கள் வாங்கியிருக்கிறார். ஒன்று கொல்கத்தாவிலும் மற்றொன்று சாந்தி நிகேதனிலும் பயன்படுத்தபட்டிருக்கிறது. அன்று ஒரு செடான் காரின் விலை £400.

தாகூர் எழுதிய கடிதங்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவரது கையெழுத்து அச்சிடப்பட்டது போலிருக்கிறது. தாகூருக்கு வழங்கப்பட்ட நோபல்பரிசு சில ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. அதைக் காவல்துறை உதவியோடு மீட்டார்கள். ஆகவே அவரது நோபல்பரிசு விருதின் நகல்வடிவத்தை வைத்திருக்கிறார்கள். அவரது கீதாஞ்சலி நூலின் முதற்பதிப்பை அங்கே காணலாம். தாகூர் நோபல் பரிசு பெறக் காரணமாக இருந்த கவிஞர் யேட்ஸ் மற்றும் கீதாஞ்சலி பற்றி எழுதிய கவிஞர் எஸ்ரா பவுண்ட் ஒவியங்களையும் இங்கே காண முடிகிறது.

விஸ்வபாரதி பல்கலைகழகத்தின் தமிழ்துறை தலைவராக இருப்பவர் முனைவர் செந்தில் பிரகாஷ். எனது நீண்டகால வாசகர். அவர் எனது வருகையை அறிந்து கொண்டு வரவேற்றுச் சாந்திநிகேதனைச் சுற்றிக்காட்டியதோடு சிறந்த மதிய உணவினையும் ஏற்பாடு செய்திருந்தார். எனது சிறுகதைகள். கட்டுரைகளை அவரது வகுப்பறையில் அறிமுகம் செய்துள்ளதாகவும் இடக்கை நாவலின் சில பகுதிகளை வங்கமொழியில் மொழிபெயர்த்து அறிமுகம் செய்துள்ளதாகவும் செந்தில் தெரிவித்தது மகிழ்ச்சி அளித்தது. அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன்.

இந்தப் பயணத்தில் எங்களுடன் பிலிம் டிவிசன் ரவி உடன் வந்திருந்தார். நீண்டகாலம் கொல்கத்தாவில் வசிப்பவர். சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்றவர். அவர் சாந்திநிகேதனின் பவுஷ்மேளாவைக் கண்டிருக்கிறார். புகழ்பெற்ற அந்தத் திருவிழா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

பேராசிரியர் செந்திலுடன் வளாகத்திலுள்ள பசுமையான தோட்டங்கள், புகழ்பெற்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைப் பார்வையிட்டேன். சாந்திநிகேதனின் முதல் மாணவர்களில் ஒருவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட சந்தோஷாலயா, இளம் மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்படுகிறது

வெண்கல மணி மற்றும் ஸ்தூபி போன்ற வடிவமைப்பைக் கொண்ட கண்டதாலாவைக் காட்டினார். அங்குள்ள மணி ஒலிப்பதன் வழியாகவே இன்றும் வகுப்பு முடிவதை அறிவிக்கிறார்கள் என்றார்.

சாந்திநிகேதனிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் கோபாய் ஆற்றின் கரையில் அமர் குடிர் அமைந்துள்ளது. இது ஒரு கூட்டுறவு சங்கம். இங்கே கலைப்பொருட்கள், உடைகள் மலிவு விலையில் விற்பனை செய்கிறார்கள்.

இந்த வளாகத்தில் பவுல் எனப்படும் கிராமிய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சியைப் பார்த்தேன். மெய்மறக்கச் செய்யும் இசை.

சாந்திநிகேதனிலிருந்து கொல்கத்தா திரும்பி வரும் பயணத்திலும் வழிமாறிவிட்டோம். சின்னஞ்சிறிய கிராமச்சாலைகளில் கார் சென்றது. கிராமவாழ்க்கையில் பெரிய மாற்றமில்லை. வங்கநாவல்களில் படித்திருந்த கிராமத்தின் சாயலில் தானிருக்கிறது. தலைவர்களின் சிலைகள் மற்றும் சினிமா விளம்பரங்களை எங்கேயும் காண முடியவில்லை. சிற்றூர் ஒன்றின் தேநீர் கடையில் மண்கலயத்தில் தேநீர் அருந்தினோம். கத்திரிக்காயில் பஜ்ஜி போடுகிறார்கள். அதையும் ருசித்தேன்.

கொல்கத்தா நெடுஞ்சாலையைக் கண்டுபிடித்துச் சேர்வதற்கு நிறைய நேரமானது. அந்தச் சாலையில் கடுமையான வாகன நெருக்கடி. சிக்னலில் நின்றால் இன்னும் நேரம் அதிகமாகிவிடும் என ஏதேதோ குறுக்குவழிகளில் காரை செலுத்தினார்.

கொல்கத்தாவின் டான்குனி டோல் பிளாசா நெருங்கியதும் மாநகரின் ஒளிரும் விளக்குகள் கண்ணில் பட்டன, அப்போது போது தான் களைப்பை உணரத் துவங்கினேன். அன்றைய கனவில் நிறைய அன்னங்கள் நீந்தும் ஏரியைக் கண்டேன். ஒன்று இரண்டில்லை. நூற்றுக்கணக்கான அன்னங்கள் நீரில் நீந்துகின்றன. காலை கண்விழித்தபோது அந்தக் கனவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.. சாந்திநிகேதனில் எனது மனம் லயத்துப் போயிருந்தது. அதன் வெளிப்பாடு தான் இந்தக் கனவு போலும் என நினைத்துக் கொண்டேன்.

தாகூரின் சொந்த வாழ்க்கை துயரத்தின் இழைகளால் பின்னப்பட்டது. அவரது அம்மா சாரதா தேவி புகைப்படத்தை அருங்காட்சியத்தில் பார்த்தேன். அவர் பதினைந்து குழந்தைகளின் தாய். ஆகவே பிள்ளைகளைச் சரியாகக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. தாகூரின் 14 வது வயதில் அம்மா இறந்து போய்விட்டார். சிறுவயது முதலே தாயின் அன்பிற்காகத் தாகூர் ஏங்கியிருக்கிறார்.

தாகூரின் மனைவியும் இளவயதில் இறந்து போய்விட்டார். மிருணாளினி தேவி பத்து வயதாக இருந்தபோது ரவீந்திரநாத்தை மணந்தார். அப்போது தாகூரின் வயது 22. அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மிருணாளினி தேவி தனது 29வயதில் இறந்து போனார்.

காதம்பரி

சகோதரர் ஜோதிரிந்திரநாத் தாகூரின் மனைவி காதம்பரி தேவி. அவருக்கும் தாகூருக்கும் இடையில் ரகசியக் காதல் இருந்தது என்கிறார்கள். காதம்பரி 1884 இல் தற்கொலை செய்து கொண்டார். அது தாகூரின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. காதம்பரியின் நினைவாக நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

தாகூரின் மகள் மதுரிலதா. இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். பதினைந்து வயதில் அவளுக்குத் திருமணம் செய்துவைக்கபட்டது. காசநோயின் காரணமாகத் தனது 32வது வயதில் அவள் இறந்து போனாள். இப்படித் துயரத்தின் சுழிக்காற்றில் சிக்குண்டவராகவே தாகூர் வாழ்ந்திருக்கிறார்.

தாகூரின் Stray Birds மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பு. அந்தக் கவிதைகளில் அவரது அகம் முழுவதும் வெளிப்படுகிறது. துக்கத்தின் அணையா சுடரை அக்கவிதைகளில் காணமுடிகிறது.

தாகூர் நாடகப்பயிற்சி மேற்கொள்ளும் அறையினுள் நின்றிருந்தேன். அந்த நாடகக் காட்சிகள் உலகிலிருந்து மறைந்துவிட்டன. காலம் மாறிவிட்டது. ஆனாலும் தாகூரின் புகழ் மறையவில்லை. தாகூரின் இசையும் இலக்கியமும் கலைகளும் இன்று வங்கத்தின் பண்பாட்டு அடையாளமாக மாறியிருக்கின்றன. தலைமுறைகள் தாண்டியும் தாகூரின் பெயரை உச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவரை வணங்குகிறார்கள். அதனைச் சாந்திநிகேதனில் கண்கூடாகவே காண முடிகிறது.

.

குற்றமுகங்கள் 10 பூச்சா ஜக்காரி

1871ம் ஆண்டு மதராஸின் கார்டன் சாலையில் வசித்த பூச்சா ஜக்காரி கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் 1650 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. அத்தனையும் திருட்டுச் செருப்புகள். இத்தனை செருப்புகளைத் திருடிய போதும் ஜக்காரி தன் வாழ்நாளில் செருப்பு அணிந்ததில்லை.

ராபர்ட் லோகன் துரையின் குதிரை மீது வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டதற்காகவே அவரைக் கைது செய்தார்கள். அதன் பிறகே அவர் பதினெட்டு வருஷங்களாகச் செருப்பு திருடி வந்தவர் என்பது தெரிய வந்தது

கைக்குழந்தையை வைத்திருக்கும் பெண்ணைப் போல எப்போது தனது கையில் பூனையொன்றை வைத்திருப்பார் ஜக்காரி. அதனாலே அவரைப் பூச்சா ஜக்காரி என்று அழைத்தார்கள். எழுபது வயதிருக்கும் அடர்ந்த வெள்ளைதாடி வயிறு வரை விழுந்திருக்கும். வட்ட தலைக்குல்லா. இடது கையில் சிறிய மரப்பெட்டி, வலது கையில் பூனை. தூக்கத்தில் நடப்பவர் போன்ற மெதுவான நடை.

மதராஸின் எம்பயர் லாட்ஜ் வாசலில் அமர்ந்தபடி காதில் குரும்பு எடுக்கும் வேலையைச் செய்து வந்தார். இதற்காக ஒரு மரப்பலகையை வைத்திருப்பார். காது சுத்தம் செய்ய வருபவரை அந்தப் பலகையில் உட்காரச் சொல்லி தனது மரப்பெட்டியை திறந்து அதிலிருந்த மூன்று விதமான காது குடைப்பானை வெளியே எடுப்பார். எதிரிலிருப்பவர் காதை இழுத்துப் பிடித்துக் கொண்டு கிணற்றில் எட்டிப் பார்ப்பது போலப் பார்ப்பார். காது சுத்தம் செய்வதற்கு முன்பாக அவரது கையில் இரண்டு அணா காசினைக்  கொடுத்துவிட வேண்டும்.

அதன்பிறகே தனது குடைப்பானைக் கொண்டு காதிலுள்ள அழுக்குகளைச் சுத்தப்படுத்துவார். காதின் தோற்றம் தாயின் கர்ப்பத்திலுள்ள சிசுவைப் போன்றது. ஆகவே அதைப் பிறந்த குழந்தையைப் போலக் கையாள வேண்டும் என்பார்.

சில நேரம் குழந்தைகள் காதுக்குள் எறும்பு அல்லது பூச்சி புகுந்துவிடும். வலியில் துடித்துப் போய்விடுவார்கள். அப்போது சிறிய புட்டியில் வைத்திருந்த மஞ்சள் தைலத்தில் ஒரு சொட்டு விட்டு அந்த எறும்பை வெளியே எடுத்துவிடுவார். இதற்காக அவர் கட்டணம் வாங்குவதில்லை.

திருமணம் செய்து கொள்ளாத ஜக்காரி வைத்திருந்த பூனையின் பெயர் லோலி. அதன் கழுத்தில் சிவப்பு நிற துணிப்பட்டை ஒன்றை கட்டியிருப்பார். பூனைகளுக்கு ரகசிய வழிகள் யாவும் தெரியும். அவை ஒரு நாள் தன்னை சொர்க்க லோகத்திற்கு அழைத்துப் போய்விடும் என நம்பினார்.

பூச்சா ஜக்காரிக்கென நண்பர்களோ, உறவினர்களோ எவருமில்லை. அவரைத் திருடினாக்கியது பூனையே. தனக்குத் தேவையில்லாத ஜரிகைத்துணி, சோப் டப்பா, கிழிந்த தொப்பி, முட்டை ஒடு, மரக்கரண்டியை லோலி கொண்டு வந்து அவரது வீட்டில் போட்டது. தனக்குத் தேவையில்லாத ஒன்றை கொண்டு வருவதில் பூனை காட்டிய ஆர்வமே அவரைச் செருப்புத் திருடனாக்கியது.

கோவில்வாசலில் கழட்டிவிடப்பட்ட செருப்புகளில் விருப்பமானதைத் திருடிக் கொண்டு போய்விடுவார். அந்தப் பழக்கம் மெல்ல வளர்ந்து மக்கள் கூடும் இடங்களில் தனக்கு விருப்பமான செருப்பினைத் தேர்வு செய்து அதைத் திருடுவதைச் சவாலாகக் கருதினார். அப்படி ராலே துரையின் மனைவி செருப்பைத் திருடியிருக்கிறார். பார்சி வணிகரான ருஸ்தம் அணியும் வெள்ளைச் செருப்பைத் திருடியிருக்கிறார். கப்பல் மாலுமிகள் அணியும் விசேச தோல்செருப்புகளைக் கூட திருடியிருக்கிறார்.

தனது வீட்டில் திருடிய செருப்புகளைத் துணி காயப்போடுவது போல ஒரு கொடிக்கயிற்றில் தொங்க விடுவார். செருப்புகளின் எண்ணிக்கை அதிகமானவுடன் மரப்பெட்டி ஒன்றை செய்து அதில் போட்டு வைக்கத் துவங்கினார். சில நாட்கள் அந்தக் காலணிகளை வைத்து விசித்திரமான விளையாட்டுகளை விளையாடினார்.

பெண்கள் அணியும் ரோஜா நிறக் காலணியில் ஒன்றையும் கறுப்பு நிறமுள்ள ஆண்கள் அணியும் காலணி ஒன்றையும் சேர்த்து நடனமாடச் செய்வார். இரண்டு காலணிகளுக்குள் திருமணம் செய்து வைப்பார். ஒன்றின்மீது ஒன்றாகக் காலணியை அடுக்கிக் கோபுரம் செய்வார். தனக்கு மிகவும் பிடித்த காலணிகளுக்குச் செல்லப் பெயர் கூட வைத்துக் கொண்டிருந்தார். இந்த வேடிக்கைகள் அவரை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தன.

செருப்புத் திருடுவதைப் பெரிய குற்றமாக அவர் நினைக்கவில்லை. பெரும்பாலும் செருப்பைத் திருட்டு கொடுத்தவர்கள் தன்னைவிட்டுப் பாவம் நீங்கிவிட்டதாகவே கருதினார்கள். ஆனால் வெள்ளைக்கார நீதிபதிகளும் ராணுவ அதிகாரிகளும் அப்படி நினைக்கவில்லை. அதிலும் வெள்ளைக்காரச் சீமாட்டிகள் தங்கள் செருப்பு திருடு போனதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதினார்கள்.

ஒரு நாள் எம்பயர் லாட்ஜ் வாசலில் வேலையில்லாமல் பூச்சா ஜக்காரி வெற்றிலை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார். எச்சிலைத் துப்புவதற்காக எழுந்து கொள்ள முயன்ற போது கால்தடுமாறவே. பக்கத்தில் நின்றிருந்த லோகன் துரையின் குதிரை மீது எச்சிலைத் துப்பிவிட்டார். அதை யாரும் கவனிக்கவில்லை. ஆனாலும் அவருக்குக் கைகால்கள் நடுங்கியது. அடிவயிற்றைக் கலக்கிக் கொண்டு வந்தது. அவசரமாகத் தனது வீட்டிற்கு நடக்கத் துவங்கினார். அன்று மாலையே இரண்டு காவலர்கள் அவரைக் கைது செய்ய வந்திருந்தார்கள். அப்போது தான் அவர் ஒரு செருப்புத் திருடர் என்பது கண்டுபிடிக்கபட்டது

நீதிமன்றத்தில் பூச்சா ஜக்காரி தனது திருட்டை ஒத்துக் கொண்டதோடு சிறையில் தன்னோடு பூனையை வைத்துக் கொள்ள அனுமதிக்கும்படி கேட்டார். நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. பூச்சா ஜக்காரி சிறையில் அடைக்கபட்டார்.

ஆனால் அதன்பிறகு விசித்திரமான நிகழ்வு உருவானது. தங்கள் துரதிருஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக மக்கள் பழைய செருப்புகளைப் பூச்சா ஜக்காரி வீட்டு ஜன்னல் வழியாகவும், கூரையின் மீதும் எறிய துவங்கினார்கள். அந்த வீடு பழைய செருப்புகளால் நிறைந்து போனது. பாவம் அந்தப்பூனை, வீசி எறியப்படும் செருப்புகளுக்குப் பயந்து அந்த வீட்டிற்குத் திரும்ப வரவேயில்லை.

••

❌