Normal view

Received yesterday — 6 June 2025பா ராகவன்

சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்

By:Para
5 June 2025 at 05:38

Pa Raghavan

தடித்த புத்தகங்களுக்கு எப்போதும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை நம்மை யதார்த்த வாழ்விலிருந்து கடந்து ஒரு வெவ்வேறு பரிணாமத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அந்த அனுபவம் சும்மா ஒரு ஓய்வு அல்ல – முழுமையான விடுதலை. ஒரு எழுத்தாளன், “இனி சொல்ல ஒன்றுமில்லை” என்ற வரைக்கும் சொல்லத் துணியும் போது, அந்தச் சொற்களுக்குள் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம்.இனி சொல்ல ஒன்றுமில்லை எனும்வரையும் சொல்லித் தீர்ப்பதற்கான சுதந்திரம் பெற்ற ஜீவிகளவை என்பதும்தான்.

முன்மாதிரிகள் ஏதுமற்ற நாவலென்பதாலேயே சலத்தின் மீது எனக்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பற்றாக்குறைக்கு பள்ளி மாணவன் போல குறிப்பெடுத்து படித்துக் கொண்டிருந்த பாராவைக் காண நேர்கையில் ஆர்வம் அதிகரித்து விட்டது.

வால்கா முதல் கங்கை வரையில் மட்டுமே இக்காலகட்டத்தை போகிறபோக்கில் கண்ட நினைவு. மற்றபடி நவீன இலக்கியவெளியில் காணாத கதைக்களம்.

முதலில் வேதங்கள் நான்கில் மற்றவைக்கும் அதர்வணத்திற்குமான வேறுபாட்டை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த உதாரணம் ஓரளவு பொருந்துமென்று நினைக்கிறேன். காலகாலமாக மன்னர்களுக்கும் வள்ளல்களுக்கும் மட்டுமே இலக்கியங்கள் என்றிருந்த நிலையை எப்படி பாரதி எளிய வடிவில் இலகுவாக மக்களை நோக்கித் திருப்பினானோ அது போல தேவர்களுக்கும் வழிபாடுகளுக்கும் மட்டுமே இருந்த வேதங்களை கடந்து மக்களுக்காக, அவர்களின் அன்றாடங்களுக்காக உருவான மந்திரங்களைக் கொண்டது அதர்வண வேதம்.

திரிவேதங்கள் என்று சொல்லி முதல் மூன்று போதுமென ஒரு கூட்டம் முயன்றும் அதர்வணத்தை மக்களிடமிருந்து அவர்களால் பிரிக்க முடியாமல் போகவே வேறு வழியின்று சதுர்வேதங்களாக்கினர் என்றொரு கருத்துமுண்டு.
மன்னர்களுக்கான யாகங்கள், வழிபாடுகள் பற்றிய முதல் மூன்று வேதங்களால் மக்களுக்கென்ன பயன்? மாறாக அதர்வணத்தில் அனைத்தும் மக்களுக்கே!

வாழ்வியல் சடங்குகளுக்கான மந்திரங்கள்
நோய்கள் நீங்கும் மந்திரங்கள்
வளமும் பசுமையும் பெற வேண்டிய மந்திரங்கள்
தினசரி வாழ்வின் பயன்படும் வழிபாட்டு முறைகள்
இவை அனைத்தும் நேரடியாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தவை.

அதுவும் மட்டும் இல்லாமல், ஆயுர்வேதம் என்ற மருத்துவ முறை கூட அதர்வண வேதத்தின் ஒரு பகுதியாகவே சொல்லப்படுகிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதிருந்த நம்பிக்கைகளுக்கு பழக்கங்களுக்கெதிராக நிகழ்ந்த கலகமாகவே அதர்வண வேதம் பார்க்கப்படுகிறது.
இன்னொரு விசயம், மற்ற வேதங்களைப் போல் பல நூறு ரிஷிகளால் அல்லாமல் பெரும்பாலும் ஒரே நபரால் உருவாக்கப்பட்டது. அதனாலேயே அதர்வன் பெயரிலேயே அழைக்கப் படுகிறது. அடுத்து இதில் அதிகம் பங்களித்தவர் அங்கீரச மகரிஷி.

இது போன்ற தகவல்களெல்லாம் கடவுளைத் தேடி “சாத்தானின் கடவுளுக்காக” பயனித்திருக்கையில் பாராவுக்கு கிடைத்திருக்கும். மேலும் உண்மையில் வேத வரிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கும் நடைமுறையிலிருப்பதற்குமான வேறுபாட்டின் அழுத்தமே அவரை சலத்தை எழுத வைத்திருக்கும் என அவதானிக்கிறேன் அது பிழையாகவும் இருக்கலாம்.

ஆதி, அந்தம் அறியாத அதர்வனைக் குறித்து பாரா உண்டாக்கியிருக்கும் சித்திரம் பிடித்திருந்தது. குறிப்பாக அவனது உயரம், எப்போதும் மூடியிருக்கும் ஒற்றைக்கண், மௌனத்தை ஆயுதமாக கையாலும் லாவகம். புரிந்துக் கொள்ளாதவர்களிடம் எதற்காக பேசிக் கொண்டு!

சாரன் – அது நாம்தான், கிட்டத்தட்ட வாசகனை பாத்திரமாக களமிறக்கியிருக்கிறார். ஏதுமறியாது ராஜனின் ஆணைக்கினங்க சர்சுதி கரையோரமாக மாறிமாறி ஒவ்வொரிடமும் கதைக் கேட்டு நடப்பது சாட்சாத் நாமேதான்.

கதிரவன் ரத்தினவேல்

(உனக்கு எப்படி Naruto பற்றி இவ்வளவெ தெரிந்திருக்கிறது என்ற கேள்விக்கு நான் அங்கே இருந்தேனே என்று அத்தொடரின் முக்கிய காட்சியில் பார்வையாளர் இடத்தில் வெகுஜனத்தில் ஒருவனை போட்டோஷாப் மூலம் அமர்த்தியிருக்கும் மீம் ஒன்று அனிமி வட்டத்தில் பிரபலமானது. அதனை சலத்திற்கும் பொருத்தலாம். நானும் நூறு நாளும் அந்த ஆத்தோரமாதாங்க நடந்துட்டுருந்தேன், என்னை பாக்கலையா நீங்க!?)

குத்சன் – சூத்திர முனி – மூட முனியென்பதே பொருந்தும். கர்ணனைப் போல் வாழ்வில் அனைத்து இடங்களிலும் தவறிழைத்து வஞ்சிக்கப்படுபவனாகத்தான் தெரிந்தான். உணர்ச்சியை மட்டும் வென்றிருந்தால் எங்கோ சென்றிருப்பான். சாரன் இவன் குறித்து அதர்வனிடம் சொல்லும் ஓரிடம் வரும். “அவனுக்கு மட்டும் நீ கற்பித்திருந்தால் உன் சொல் ஒன்று கூட இவ்வுலகில் மறையாதபடிக்கு செய்திருப்பானவன்”

மாறி மாறி நேசிக்கும் வேண்டப்பட்ட விரோதிகள். நியாயத்திற்கும் தர்மத்திற்கும் இடையேதான் எவ்வளவு தூரம்.

ஆரியவர்த்தம் ஓரளவு கங்கைக்கரையில் அமைந்து விட்ட காலகட்டம். ஆரியர்களுக்கும் பூர்வகுடிகளுக்கும் ஒப்பந்தம் ஏதுமில்லா அமைதிக்காலம். அப்போது ஒரு தேசத்தில் இருந்து தனது ராஜனின் ஆணைக்கினங்க ஒரு மகரிஷியைக் கொல்வதற்காக செல்லும் சாரனிடமிருந்து கதை துவங்குகிறது. அவன் நோக்கம் நிறைவேறுவதுடன் கதை நிறைவுறுகிறது என்று மட்டும் சொன்னால் அதைவிட பித்தலாட்டம் வேறேதுமில்லை. ஆனால் அதுதான் கதைச்சுருக்கம்.

செல்லும் சாரன் யார்,
கொல்லப்பட வேண்டிய ரிஷி யார்,
ஏன் கொல்லப்பட வேண்டும்?
எதற்கு இவனுக்கு இந்த பணி வந்து சேர்கிறது?
வழியில் இவன் காண்பவர்கள்,
அவ்வனுபவங்கள்,
அக்காலகட்டத்தில் தேசத்தில் மக்களின் நிலை,
அவர்களது வாழ்க்கை முறை,
வழிபாடுகள்,
வர்ணமுறை,
யுத்தம்,
மாயம்,
பைசாசங்கள்,
தேவதைகள்,
தெய்வங்கள்,
கந்தர்வன்,
அனைத்திற்கும் மேலாக கூடவே வரும் சர்சுதி.

இதெல்லாம் கூட சரி, நான் முற்றிலும் எதிர்பாராதது காலப்பயணம். Time traveler’s wife எனக்கு மிகவும் பிடித்த நாவல். அதை நினைவூட்டும்படி ஓரிடத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்ததை நான் எப்படி அறிந்திருப்பேன்?

சரி, ஆனால் நான் தான் இன்னும் பிறக்கவேயில்லையே? பிறக்காதவர் எப்படி அவ்வபோது அதர்வணுடன் இருந்தீர்கள்?

இறந்த பின்னும் எப்படி என்னுடன் அதர்வண் இருக்கப் போகிறானோ அப்படி!

குத்சன் பாத்திரம் தனி, அவனது வாழ்க்கையை, உணர்ச்சிகளை பற்றி மட்டுமே நிறைய எழுதலாம். எப்போதும் முதலில் அவன் பக்கமே நியாயம் இருப்பதாகத் தோன்றும். ஆனால் நியாயம் வேறு தர்மம் வேறு என்பது பின்னால்தான் புரியும்.

ரிதமென்றால் என்ன என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புரிந்தும் புரியாமலே வந்துக் கொண்டிருக்கையில் அந்த யானைக் கொலையையொட்டிய மறுபிறப்பில் அனைத்தும் தெளிந்து விடும். எதை மாற்ற முடியாததோ அதுவே ரிதம்.

பல மாயாஜாலக் காட்சிகள் குத்சனையோட்டியே நிகழ்கின்றன. வாசிப்பில் சில நேரம் கற்பனைக்கு சவால்விடும் காட்சிகள் நிகழும். விஷ்ணுபுரத்தில் இறுதியில் நிகழும் ஊழிக்கூத்தினைப் போல. அஹிர்புத்தன்யன் என்றொரு தெய்வத்தை எங்குக் கண்டடைந்தாரோ! ஆனால் போகிறபோக்கில் சொல்லியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நானும் தேடினேன்.

மாபெரும் சமுத்திரத்திலிருந்து நீரினையே உடலாகக் கொண்டு சர்ப்பமாக அஹிர்புத்தன்யன் எழுவதாகக் கண்ட கற்பனையை சாமான்யன் கண்டிருந்தால் கோவில் கட்டக் கிளம்பியிருப்பான். சர்சுதியோடு இணைக்கும்படியான தெய்வத்தைக் கொண்டுவந்ததெல்லாம் தரமான செய்கை. நீரே தெய்வமாகி!

ஆனால் நான் எதிர்பார்த்திருந்தது மக்களின் வாழ்வியல்கள் பேசும் அதிக அத்தியாயங்களை! ஊருக்கு வெளியே ஆசிரமமென்று போனதால் எனக்கு ஏமாற்றமே! என்ன செய்வது? ஜனத்திரள் இல்லாமல் சாகசங்கள் இராது, அதை எதிர்பார்க்காமல் வாசிப்பது எனக்கு சிரமமே!

இத்தனை நூறு பக்கங்களையும் வாசிக்க வைப்பதற்கான பாராட்டு, கதையைக் காட்டிலும் எழுத்து நடைக்கே சென்றடைய வேண்டும். இத்தனை எளிமையாக இல்லாவிட்டால் இவ்வளவு பக்கங்கள் வாசிக்க இயலாது.

முக்கியமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரிகளை நான் மிகவும் இரசித்தேன்.

நான் சாரன், நான் அதர்வன், நான் குத்சன்

இவ்வரிகள் வருகையில் இனம்புரியாத உவகைக்குள்ளாவேன். அதை மட்டும் மனதிற்குள் base voice ல் சொல்லிக் கொள்வேன்.

சலம் ஒரு தொடக்கம்தான். பாரா தொட்டிருக்கும் களத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினால் பற்பல சர்ச்சைகளையும் ஏன் கலவரங்களையுமே காண நேரிடலாம்.

சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.

அக்கால கட்டத்தைய மக்களது வாழ்வியல் குறித்து பல தகவல்கள் பேசப்பட்டுள்ளன. நான் அவற்றைக் குறிப்பெடுத்து வைக்காததால் விரிவாக பேச முடியவில்லை. வேறு யாரேனும் பேசக்கூடும் என்று நம்புகிறேன். குறிப்பாக என்னென்ன வகையான உணவுகள்! அதிதியாக சாரன் தங்கியிருக்கையில் கவனிப்பாக பரிமாறப்படும் உணவுகளை மட்டும் குறித்து வைத்து கற்பனை செய்துப் பார்த்தேன்.
புதினத்திற்கு புதிய களம். பக்கங்களின் எண்ணிக்கையைக் கண்டு மிரளாமல் வாசித்தால் புது அனுபவம் கிட்டும்.

சலம் – நாவல் வாங்க இங்கே செல்க.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

Received before yesterdayபா ராகவன்

மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா

By:Para
1 June 2025 at 00:30

Pa Raghavan

நண்பர்களுக்கு வணக்கம்.

மெட்ராஸ் பேப்பர் வார இதழ், மூன்று வருடங்களை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜூ 1, 2025 – இன்று  ஆண்டுவிழா.

* இது என்ன பத்திரிகை, எப்படி இருக்கும், எத்தனை நாள் தொடர்ந்து வரும் என்று எது குறித்தும் சிந்திக்காமல், என் மீது கொண்ட நம்பிக்கையினால், கேள்விப்பட்ட மறு கணமே முதல் ஆயுள் சந்தா அளித்து ஆரம்பித்துவைத்த நண்பர்கள் ஏ.எஸ். புவனேசுவரன், மாம்பலம் சந்திரசேகர்;

* தமிழ்ப் பத்திரிகை உலகில் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் தனித்துத் தெரியவும் தரத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படவும் அடித்தளம் அமைத்துத் தந்து, இன்றுவரை இடைவெளியின்றித் தம் எழுத்தால் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் விமலாதித்த மாமல்லன், எஸ். சந்திரமௌலி;

* இதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அனைத்து விதங்களிலும் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கும் பத்மா அர்விந்த், தி.ந.ச. வெங்கடரங்கன்;

* சகலவிதமான நெருக்கடி நேரங்களிலும் நிபந்தனையற்று என்னோடு நிற்கும் செல்வ முரளி, நஸீமா ரஸாக்;

* மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் என்று என் மாணவர்கள் இன்று எங்கெங்கும் கொண்டாடப்பட முக்கியமான காரணம், தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் அவர்களது புத்தகங்கள். என் சொல் அன்றி வேறெதையும் கருதாமல் மெட்ராஸ் பேப்பர் பெயரிலேயே ஒரு இம்ப்ரிண்ட் தொடங்கி அவர்களுடைய முதல் புத்தகங்கள் வெளிவர வழி செய்யும் ஜீரோ டிகிரி ராம்ஜி நரசிம்மன்;

* ஆயிரத்தெட்டு பேமெண்ட் கேட்வே இம்சைகள் இருந்தாலும் சகித்துக்கொண்டு சந்தா செலுத்திப் படிக்கும் வாசக நண்பர்கள்;

* டெட்லைன் கெடுபிடிகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு, தமது அன்றாடப் பணிகளுக்கிடையில் தொடர்ச்சி விடுபடாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள்

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இன்று மாலை ஆறு மணிக்கு ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்குகிறார். வேறு யாரும் பேசப் போவதில்லை. இந்நிகழ்ச்சி முற்று முழுதாக வாசகர் விழாவாக நடைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.

மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பார்கள். நானும் இருப்பேன். வாசகர்கள் அனைவருடனும் கலந்துரையாடலாம். கேள்விகள் கேட்கலாம். மெட்ராஸ் பேப்பர் தொடர்பான தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். எழுத்து-பத்திரிகை-வாசிப்பு சார்ந்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், பேசலாம், விவாதிக்கலாம்; காத்திருப்போம்.

கூகுள் மீட்டின் அதிகபட்சக் கொள்ளளவு 100. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை. நிகழ்ச்சி சரியாக மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். ஐந்து மணிக்கு என் வாட்சப் சேனலில் லிங்க் தருவேன்.

வருக.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

ஆன்மாவும் அவரைக்காயும்

By:Para
30 May 2025 at 00:30

Pa Raghavan

எனக்கு பீன்ஸ் பிடிக்கும். கொத்தவரங்காய் தவிர பீன்ஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான காய்களும் உவப்பானவையே. வேறு வழியில்லை என்றால் கொத்தவரங்காயையும் சாப்பிடுகிறேன். ஆனால் காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வது நானாக இருந்தால் நிச்சயமாக அதை மட்டும் வாங்க மாட்டேன்.

பொதுவாகத் தாவர உணவு மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு வேண்டுதல் வேண்டாமை கூடாது. இருக்கிற சொற்பத்தில் கிடைப்பன அதனினும் சொற்பம். இதில் தேர்வு செய்து உண்பதெல்லாம் அடாது என்று நினைப்பேன். ஆனால் நியாயங்களும் நாவும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை.

இருக்கட்டும், சொல்ல வந்தது வேறு. எனக்குக் கொத்தவரங்காயை எப்படிப் பிடிக்காதோ, அதே போலப் பித்தகோரஸுக்கு அவரைக்காய் பிடிக்காது. பீன்ஸ் குடும்பத்தில், கொத்தவரங்காயாவது மெல்லிய கசப்புச்சுவை கொண்டது. அவரை என்ன பாவம் செய்ததென்று தெரியவில்லை. ஆனால் என்னைப் போலவே மிகத் தீவிரமான தாவர உணவுக் கொள்கை கொண்ட ஒரு மனிதர், வாழ்நாள் முழுவதும் அவரைக்காயை வெறுத்து வந்திருக்கிறார் என்றால் அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

படிக்கிற காலத்தில் பித்தகோரஸ் தியரம் என்ற பதம் என் வாழ்வின் குறுக்கே வந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இவ்வாறு எது எதிர்ப்பட்டாலும் நகர்த்திவிட்டு நகர்ந்துவிடுபவனாக இருந்ததால் அப்போது நான் பித்தகோரஸைப் பொருட்படுத்தவில்லை. அது பெரும்பிழை என்று பின்னாள்களில் உணர்ந்தேன்.

அவர் கணித மேதை மட்டுமல்ல. தத்துவவாதி. தன்னைப் பின்பற்றவும் வழிபடவும்கூட ஆயிரக் கணக்கானவர்களைக் கொண்டிருந்தவர். பித்தகோரியம் என்று அவரது கொள்கைகளின் அடிப்படையில் அக்குறுங்குழுவினர் ஒரு மதத்தையே உருவாக்கி, பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். அப்பேற்பட்டவரின் வாழ்க்கையில் அவரைக்காய் ஏதோ விளையாடியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர் அதை அவ்வளவு வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டியதில்லை.

கிமு 570இல் கிரேக்கத்தில் பிறந்த பித்தகோரஸ், எகிப்திலும் இராக்கிலும் தனது இளமைக்காலத்தைக் கழித்திருப்பதாகத் தெரிகிறது. கணிதம், தத்துவம், வானியல், விவசாயம் என்று ஏகப்பட்ட துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ஆர்வம் இருந்த அனைத்துத் துறைகளிலும் தீவிரமாக இறங்கி அகழ்ந்தெடுக்கப் பார்த்திருக்கிறார். என்ன எடுத்தார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்திலும் அவருக்கு ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து இருந்திருக்கிறது. தனது கருத்துகளை வாழ்நாள் முழுதும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.

எனவே அவருக்கு எல்லா துறைகளிலும் ஏராளமான எதிரிகளும் இருந்திருக்கிறார்கள். பித்தகோரஸ் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேச எங்கும் எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருந்திருக்கிறது. எப்போது அவர் தனது சித்தாந்தங்களைத் தொகுத்து ஒரு மதமாக்கப் பார்த்தாரோ, அப்போது அந்த எதிரிகள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு எதிர்க்கத் தொடங்கினார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்தபடி (க்ரோடொனா என்ற நகரில் குடியிருந்திருக்கிறார்) மரணம்-மறுபிறப்பு குறித்தெல்லாம் அவர் பேசியிருக்கிறார் என்பதைப் படித்தபோது வியப்பாக இருந்தது. இறந்தவரின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிற இந்து மதக் கொள்கைதான் பித்தகோரஸுக்கும் இருந்திருக்கிறது. அழிவற்ற ஆன்மா உடனடியாக இன்னொரு உடலைத் தேடிக்கொண்டு விடுகிறதென்று அவர் சொன்னார். அன்றைய ஐரோப்பாவில் இதையெல்லாம் யாரும் நம்பத் தயாராக இல்லை. அவரைப் பைத்தியம் என்றும் பித்தலாட்டக்காரன் என்றும் இடைவிடாமல் எதிர்ப்பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

பித்தகோரஸ் அதையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இசைக்குள்தான் கணிதம் வாழ்கிறது என்றார். எண்கள்தாம் எல்லாம்; அவற்றுக்கு மாய சக்தி உண்டு என்றார். கணிதத்தையும் இசையையும் ஒரு காக்டெய்ல் ஆக்கி வானியல் சார்ந்த தரிசனங்களைப் பெற முடியும் என்று வாழ்நாள் முழுதும் தீவிரமாக அவர் நம்பியிருக்கிறார். அது சார்ந்த பல பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்து பார்த்திருக்கிறார். அவை என்னவென்ற விவரம் சரியாகக் கிடைப்பதில்லை.

இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப் படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும். இவ்வளவு ஆர்வங்கள் உடைய ஒருவர், எழுதலாம் என்று நினைக்காமல் மதம் தொடங்கி போதிக்க நினைத்ததைப்  புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அப்புறம் அந்த அவரைக்காய்.

பித்தகோரஸுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரைக்காய் ஒரு கெட்ட காய். அசப்பில் அது மாமிசம் போலவே தோற்றமளிக்கிறது. என்றால், அது தாவரமே என்றாலும் உண்ணத்தகுந்ததல்ல என்று தீர்மானமாகச் சொன்னார். பித்தகோரஸுக்கு இந்து மதத்தில் உள்ளதைப் போல மேல் உலகம்-பூமி-கீழ் உலகம் என்கிற கருத்தக்கத்தில் தீவிர நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த அவரைக்காய், பூமிக்கும் அதற்குக் கீழான உலகங்களுக்கும் வேர்களின் வழியே பாதை அமைக்கிறதென்று அவர் மனப்பூர்வமாக நம்பினார். தாம் நம்பியதைத் தமது சீடர்களுக்கும் சொல்லி, போகிற இடங்களில் பார்க்கிற அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்; யாரும் அவரைக்காயைச் சாப்பிட வேண்டாம் என்று அச்சுறுத்தி அனுப்பி வைக்கும் அளவுக்கு அதில் அவர் தீவிரம் கொண்டிருந்தார்.

அவரது மரணம் குறித்துத் தெளிவான சரித்திரத் தகவல்கள் இல்லை. ஆனால் பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவற்றுள் அவரைக்காய் கதையும் ஒன்று.

பித்தகோரஸின் கருத்துப்படி, அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் குறுக்கே கடந்து போகக் கூடாது. அந்த வயலைக் கடப்பது என்பது முன்னோர்களின் ஆன்மாவை மிதித்துச் செல்வது போன்றது என்று அவர் சொன்னார்.

அப்படிப்பட்டவர் ஒரு சமயம் அவரது எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார். வாழ்க்கை முழுவதும் பல்வேறு தரப்பட்ட எதிரிகளால் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த பித்தகோரஸை அவரது சீடர்கள்தாம் ஆபத்தின்றி பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பம். எங்கோ ஓரிடம். சீடர்களுடன் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள். கைது செய்து இழுத்துச் சென்று அடைத்து வைத்தார்கள்.

விடிந்தால் கொன்றுவிடுவார்கள். எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று சீடர்கள் முடிவு செய்து, ஏதோ ஓர் உபாயத்தைக் கண்டறிந்து பித்தகோரஸின் கட்டுகளை அவிழ்த்து, அவரைத் தப்பித்து ஓடிவிடச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஓடிக்கொண்டிருந்த பித்தகோரஸ், ஓரிடத்தில் மிகப்பெரிய அவரைத் தோட்டம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.

அதைக் கடந்தால், உயிர் பிழைத்துவிடலாம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கொள்கை என்ன ஆவது? அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் கடந்தால் அது முன்னோரின் ஆன்மாவை மிதிப்பதற்குச் சமமல்லவா?

செய்வதறியாமல் பித்தகோரஸ் குழப்பத்துடன் அப்படியே நின்றுவிட்டார். இப்போது, துரத்தி வந்த எதிரிகள் தாவிப் பிடித்து அவரைக் கொன்றுவிட்டார்கள்.

இது வெறும் கதையா, உண்மையிலேயே பித்தகோரஸின் முடிவு இப்படித்தான் நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் சாகவிருக்கும் தறுவாயிலும் கொள்கையை விட்டுத்தர மனமில்லாத ஒரு மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்திருப்பான்!

எனக்குக் கணக்கு வராது. அறிவியல் பிடிக்காது. வானியலெல்லாம் மழை வருமா வராதா என்று வெதர் ஆப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவோடு சரி. தத்துவங்களை முற்றிலுமாக வெறுப்பவன். மதத்தின் மீது  அறவே நம்பிக்கை இல்லாதவன். எனவே, எந்த விதத்திலும் பித்தகோரஸை நினைத்துக்கொள்ள நியாயமே இல்லாதவன் ஆகிறேன். ஆயினும் இந்த ஒரு கதை என்னை அவர்பால் சுண்டி இழுத்துக்கொண்டே இருக்கிறது.

என்றைக்காவது பித்தகோரஸை அல்லது அவரைப் போன்ற ஒருவனை வைத்து ஒரு நாவல் எழுதலாம். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், ஒருவேளை அது நடக்குமானால் என் நாவலின் நாயகன் அவரைக்காயை வெறுக்க மாட்டான்.  கொத்தவரங்காயைத்தான் வெறுப்பான்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

uFOCUS: விசுவாமித்திர கோத்திரத்தில் ஒரு செயலி

By:Para
24 May 2025 at 08:05

Pa Raghavan

எழுதுவதற்கு நான் பயன்படுத்தும் simpleText என்னும் செயலி (Writeroom இறந்துவிட்ட பின்பு) உண்மையிலேயே சிறப்பானது, எளிமையானது. கண்ணை உறுத்தும் எந்தக் கொசகொசவும் கிடையாது. அதன் ஒரே சிக்கல், word count சொதப்பும். முதல் பன்னிரண்டு சொற்கள் வரை ஒழுங்காகக் கணக்குக் காட்டும். பிறகு இஷ்டத்துக்குக் குறைத்துக்கொண்டே போகும். ஐந்நூறு சொற்கள் எழுதியிருக்கிறோம் என்று அது காட்டும் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. காப்பி செய்து கூகுள் டாக்கிலோ, வேர்டிலோ போட்டுப் பார்த்தால் கூசாமல் ஆயிரத்து நூறு என்று காட்டுவான்.

இந்த இம்சையினாலேயே அதற்கும் ஒரு மாற்று கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன். iA writer என்றொரு செயலி அகப்பட்டது. மிகத் தரமான ப்ளைன் டெக்ஸ்ட் எடிட்டர். தேவைப்பட்டால் மார்க் டவுன் வசதி வாய்க்காலைத் திறந்துகொள்ளலாம். வேண்டாமென்றால் விறுவிறுவென்று எழுதிக்கொண்டே செல்லலாம். Word count துல்லியமாக இருக்கும். மைக்ரோசாப்ட் வேர்ட், ஆப்பிள் பேஜஸ் காட்டும் எண்ணிக்கையுடன் ஒத்துப் போகும். (இவனெல்லாம் சரியாகத்தான் காட்டுகிறானா என்பது இன்னொரு தனி வினா. நான் அதைக் குடைந்ததில்லை. ஆனால் லிப்ரே ஆபீசுக்கும் மைக்ரோசாஃப்ட் வேர்டுக்கும் சொல் எண்ணிக்கை வித்தியாசம் வரும். அதிகமில்லை என்றாலும் அவசியம் இருக்கும்.)

iA writer இல் என்ன ஒரு சிக்கலென்றால், விலை அதிகம். தவிர மேக்குக்கு ஒன்று, ஐபேடுக்கு ஒன்று, ஐபோனுக்கு ஒன்று என்று தனித்தனியே வாங்க வேண்டும். நாம் என்றைக்கு ஒரே இடமாகக் குப்பை கொட்டியிருக்கிறோம்? கொட்டுகிற குப்பையை சாத்தியமுள்ள எல்லா இடங்களிலும் கொட்டி வைப்பதே தமிழர் மரபு. மரபு மீறாத மறத் தமிழனுக்கு இதனாலேயே இந்த iA writer வேண்டாம் என்று தோன்றியது.

iA writer போலவே இருக்க வேண்டும். அதிலுள்ள அனைத்து வசதிகளும் வேண்டும். வேர்ட் கவுண்ட்டும் சரியாக இருக்க வேண்டும். கண்ணை உறுத்தாத எளிமை அவசியம். செயலிக்குள் இருந்தபடியே லைப்ரரி ஆக்சஸ் வேண்டும். Preview mode அவசியம். மூட் மாறும்போது தடதடவென சத்தமாகத் தட்ட வசதியாக டைப்ரைட்டர் மோட் கூடுதலாக இருந்தால் நல்லது. எக்ஸ்போர்ட் ஆப்ஷன்கள் தேவை. நேரடியாக பிடிஎஃப் ஆக்க முடிவது நல்லது.

இப்படியெல்லாம் மணல் கயிறு எஸ்.வி. சேகர் திருமணத்துக்குப் பெண் தேடப் போடும் நிபந்தனைகள் போல நான் எதிர்பார்க்கும் அனைத்துக் கல்யாண குணங்களுடனும் இன்று ஒரு செயலி அகப்பட்டது.

uFocus.

அச்சு அசல் iA Writer போலவே உள்ளது. அனைத்து வசதிகளும் அப்படி அப்படியே. எடிட்டரின் நிறம், நீள அகலங்கள், எழுத்துரு, அதன் அளவு எதை வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு மாற்றிக்கொள்ள முடிகிறது. Focus குலையாதிருக்க எழுதுகிற வரி மட்டும் பளிச்சென்று தெரிகிறது. எழுதி முடித்த வரிகள், பத்திகள் அனைத்தும் மப்பாகிவிடுகின்றன. எங்கே கொண்டு கர்சரை வைக்கிறோமோ, அந்த இடத்தில் வெளிச்சம் விழுகிறது. மார்க் டவுன் சௌகரியம் உள்ளது.

இதெல்லாமா பெரிது? இந்த நல்ல செயலி இலவசமாகவே ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.

இப்படி கவனம் கவரும் செயலி ஏதாவது அகப்படும்போது அதை உருவாக்கியவர் யார் என்று தேடிச் சென்று பார்ப்பேன். uFocusஐ உருவாக்கியவர் பெயர் நிக்கோலஸ் கிக். எது அவரை இந்தச் செயலியை உருவாக்கத் தூண்டியது என்று பார்த்தால், மனிதர் நமது சாதிக்காரராக இருக்கிறார்.

‘I created uFocus because I couldn’t find my ideal (and affordable) writing environment.’

என்று அவரது இணையத்தளத்தில் எழுதி வைத்திருக்கிறார்.

சொர்க்கம் உனக்கில்லை, நரகம் உனக்கு வேண்டாமெனில் உனக்கென ஒரு சொர்க்கத்தை நான் உருவாக்கித் தருவேன் என்று சூரிய வம்சத்துத் திரிசங்குவுக்கு நம்பிக்கையளித்த விசுவாமித்திரரின் தீவிர விசிறியாக, நிக்கோலஸ் கிக்கின் இம்மானுட குலச் சேவையை மானசீகமாகப் பாராட்டிவிட்டு இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

வேர்ட் கவுண்ட் 383 என்று காட்டுகிறது. தூக்கி pages இல் போட்டுப் பார்த்தாலும் அதையேதான் காட்டியது.

எனவே, இனி uFocus. நன்றி, Nicolas Kick.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்

By:Para
17 May 2025 at 00:30

Pa Raghavan

இது காலம் கருதி ஆரம்பிக்கப்படுகிற தொடர். வரலாற்றால் துரோகம் இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் மறுமலர்ச்சி சரித்திரம்.

நமக்குப் பாலஸ்தீனப் பிரச்னை தெரிந்த அளவுக்குக் குர்திஸ்தான் பிரச்னை தெரியாது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அறிவோம். ஆனால் உய்குர் படுகொலைகள் பற்றி அறியமாட்டோம். அப்படித்தான், காஷ்மீர் பிரச்னையில் செலுத்தும் கவனத்தை பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் செலுத்தத் தவறினோம்.

இரண்டுக்கும் சம வயது. இரண்டுக்கும் காரணம் பாகிஸ்தான். ஒரே வித்தியாசம், காஷ்மீர் ஒன்றுபட்ட இந்தியாவின் ஓர் அங்கம். பலூசிஸ்தான் வஞ்சகத்தால் பாகிஸ்தானுடன் ஒட்ட வைக்கப்பட்ட, தனித்துவம் மிக்க ஓர் இனத்தவரின் மண். தனது சுதந்தரத்துக்குப் பிறகு 1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான், காஷ்மீர் மீது படையெடுத்து எப்படி அதன் ஒரு பகுதியை அபகரித்ததோ, அதையேதான் பலூசிஸ்தானிலும் செய்தது. ஆனால்  ஒரு பகுதியல்ல. பலூச் மக்களின் மொத்த நிலத்தையும் எடுத்து விழுங்கிவிட்டது.

ஒரு வகையில் அது பிரிட்டனின் கூட்டுச் சதி. இன்னொரு வகையில் பாகிஸ்தானின் பிரத்தியேக சூழ்ச்சி வலை. எப்படியானாலும் இன்றுவரை பலூசிஸ்தான் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியா தம் பக்கம் நிற்க வேண்டும் என்று இன்றைக்குக் கோரிக்கை வைத்து, சுதந்தரப் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.

இம்மாதம் (மே 2025) இரண்டாம் தேதி தொடங்கிய பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் ஒன்பதாம் தேதி அதன் உச்சத்தைத் தொட்டு, சுதந்தர பலூசிஸ்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகம் திகைக்க ஒரு நாளாக அன்று ஆகிப் போனது. உண்மையில் பலூசிஸ்தானை நாம் பொருட்படுத்திக் கவனிக்கத் தொடங்கியதே அதன் பிறகுதான். ஆனால் அந்த ஓர் அறிவிப்பின் பின்னால் எழுபத்தேழு ஆண்டுக் கால அடக்குமுறையும் மிதிபட்ட வேதனையும் வதைபட்ட வலியும் இழப்பின் கண்ணீர்க் கறையும் உண்டு.

பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம் அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது. நியாய தருமங்களைச் சற்றும் கருதாதது. பலூசிஸ்தான் மக்கள் அதைத்தான் இத்தனை ஆண்டுக் காலமாகவும் கண்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். இது அவர்கள் விடுபடத் துடிக்கும் காலம்.

இருபதாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானின் வரலாற்றை எழுத நேர்ந்தபோது பலூசிஸ்தான் விவகாரம் குறித்துப் படிக்கத் தொடங்கினேன்.  ஆனால் காஷ்மீரை மையப் புள்ளியாக வைத்து இந்தியா-பாகிஸ்தான் உறவு மற்றும் பகையின் கதையாக அது விரிந்தபோது பலூசிஸ்தான் பிரச்னை இயல்பாகவே அந்தக் கண்ணியில் விடுபட்டுப் போனது. இப்போது அதற்கு நேரம் அமைகிறது.

வரும் திங்கள்கிழமை முதல் (மே 19) மெட்ராஸ் பேப்பரில் நாள்தோறும் இதனை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். எப்போதும் என் உடன் இருக்கும் வாசக நண்பர்களை இப்போதும் வாசித்துக் கருத்துச் சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

வாசன் மலர்

By:Para
12 May 2025 at 04:30

Pa Raghavan

நேற்று எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலரைச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். படித்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டதால் சில விவரங்கள் மறந்திருந்தன. ஒரு கட்டுரையை முழுக்கப் படித்தேன். செய்ய இருந்த வேலையெல்லாம் மறந்து போய் அடுத்தடுத்து எட்ட கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நிறுத்தவே மனம் வரவில்லை.

உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப் புத்தகத்தினும் சிறப்பானது, வீரியம் மிக்கது. வாசன் என்ற ஆளுமையை நேரில் கண்டு பழகியவர்களின் அனுபவங்கள்தாம். ஆனால் எதுவுமே வெறும் துதிக் கட்டுரைகள் அல்ல. ஒரு வெற்றியாளரைக் குறித்து எழுதும்போது அவர் வெற்றியடைந்த கதையைச் சொல்வதினும், அவரது எந்தெந்தத் திறமைகள், குணங்கள் வெற்றியை நோக்கி நகர்த்தின என்பதைச் சுட்டிக் காட்டுவதுதான் சரியான எழுத்தாக இருக்கும். இம்மலர் அதனைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.

வாழ்க்கை வரலாறுகள், தன்னம்பிக்கை நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், வெற்றிக் கதைகள் எழுத விரும்புகிறவர்கள் இதனை மனத்தில் கொள்ள வேண்டும். சும்மா ஒருவர் போராடினார், கஷ்டப்பட்டார், இரவு பகலாக உழைத்தார், புதிதாக யோசித்தார், நிறைய தோற்றார், இறுதியில் ஜெயித்தார் என்று எழுதுவது எந்த வகையிலும் படிப்பவர்களுக்கு உத்வேகம் தராது. உபயோகமாகவும் இராது.

ஒவ்வொரு மனிதருக்கும் நூற்றுக் கணக்கான நிறங்கள் இருக்கும். இந்த நிறம் என்பது குணத்தையும் உள்ளடக்கியதுதான். நல்லவர் என்பது பொதுவான பண்பு. ஒருவர் எல்லோரிடத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா காலக் கட்டத்திலும் நல்லவராகவே இருக்க முடியாது. அவருக்குக் கோபமே வராது என்பது சரியான கணிப்பு அல்ல. கோபமே இல்லாமல் ஒரு முழு வாழ்வை வாழ்ந்து முடிக்க முடியாது. அதே போலத்தான் அவர் இரக்க சுபாவமுள்ளவர், அவர் நகைச்சுவையாகப் பேசுவார், அவர் எப்போதும் சிந்தனை வயப்பட்டிருப்பார் என்பன போன்ற விவரிப்புகளும்.

ஒரு சராசரி மனிதன் சாதனையாளன் ஆவதற்கு (அது நோக்கமாக இல்லாவிட்டாலும்) சில பயிற்சிகளை அவசியம் மேற்கொண்டாக வேண்டியிருக்கும். தெரிந்து செய்யலாம், இயல்பாகவும் செய்யலாம். அதுவல்ல முக்கியம். ஆனால் குறிப்பிட்ட பயிற்சிகளில் மனம் ஒருமுகப்படுவதற்கு அவரை உந்தித் தள்ளும் இயல்புகள் எவை என்று பார்ப்பது முக்கியம்.

இந்த மலரில் அசோகமித்திரன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வாசனுக்கு திறமைமிக்க ஊழியர்கள் பலர் தாமாகவே கிடைத்தார்கள் என்று அதில் சொல்கிறார். நாம் உடனே என்ன நினைப்போம்? அது அவரது அதிர்ஷ்டம்.

ஆனால் வேறொரு கட்டுரையில் வாசன் தமது ஊழியர்களை எப்படிக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார் என்பதை இன்னொருவர் எழுதுகிறார். திறமையை இனம் காண்பது – கிடைத்த திறமைசாலிகளைத் தக்க வைத்துக்கொள்வது என்று இரண்டு விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.

ஒரு வட நாட்டு நடிகை இங்கே நடிக்க வந்தபோது அவரை ஒரு மதன மாளிகையில் தங்க வைத்து, பிரமித்துப் போகும் அளவுக்கு உபசரித்த கதையை ஒருவர் எழுதியிருக்கிறார். அடுத்தப் பக்கத்திலேயே இன்னொரு நடிகைக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் கொடுத்து மிரட்டிய கதை வருகிறது. இரண்டுக்குமே தொழில் சார்ந்த காரணங்கள்தாம். நியாயமான காரணங்கள். ஆனால் இரண்டு சம்பவங்களின்போதும் தனிப்பட்ட ஆர்வமோ, விருப்போ, வெறுப்போ இல்லாமல்தான் அவர் நடந்துகொண்டிருக்கிறார். எப்போதும் சமநிலையில் இருப்பது வெற்றிக்கு மிக முக்கிய சூட்சுமம் என்பார்கள். அதை நேரடியாகச் சொல்லாமல் இந்த இரு சம்பவங்களும் வாசன் என்னும் ஆளுமையின் சமநிலை குலையாத மனப்பாங்கைப் புரியச் செய்துவிடுகின்றன.

அந்நாளில் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் நடிக்கும் படங்களில் அவரது நகைச்சுவைப் பகுதிகளை அவரே எழுதி, இயக்கிக் கொடுத்துவிடுவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. வாசனும் அவரைத் தமது ஒரு படத்துக்கு அழைத்தார். என்.எஸ்.கே. தனது பாணியில் ஒரு நகைச்சுவைப் பகுதியை எழுதி, இயக்கிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் போட்டுப் பார்த்தபோது வாசனுக்கு நிறைய விஷயங்கள் இடித்தன. எனவே கிருஷ்ணன் கொடுத்த மொத்தப் படச் சுருளில் பாதியை வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணனுக்குக் கோபம் வந்துவிட்டது. அது எப்படி நான் எடுத்துத் தந்ததை நீங்கள் வெட்டலாம்?

வாசன் அவரை உட்கார வைத்து முழுப் படத்தையும் போட்டுக் காட்டியிருக்கிறார். நீக்கப்பட்ட காட்சிகளை ஏன் நீக்கினேன் என்று விளக்கியிருக்கிறார். சும்மா சுற்றி வளைத்துத் தனது செயலை நியாயப்படுத்துவதல்ல. ஒரு வரி. ஒரே ஒரு விளக்கம். அவ்வளவுதான். நீங்கள் செய்தது சரி என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் எழுந்து சென்றுவிட்டார்.

அந்த ஒரு வரி விளக்கம் வாசன் எவ்வளவு பெரிய திரைக்கதை வல்லுநர் என்பதை விளக்கிவிடுகிறது.

இந்தக் கட்டுரை முடியும் இடத்தில், வாசன் சினிமா கற்றுக்கொண்ட ஆரம்பக் காலம் குறித்த வேறொரு கட்டுரை இருக்கிறது. இரண்டையும் இணைத்து சிந்தித்தால், நேர்த்தியாகக் கற்றுக்கொள்ளும் ஒரு தொழில் தருகிற தன்னம்பிக்கை, எம்மாதிரி நெருக்கடி சமயங்களில் எவ்வளவு சிறப்பாக வேலை செய்யும் என்பது விளங்கிவிடும்.

தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு வெற்றியாளரின் வாழ்வும் இந்த மலருக்கு நிகரானதல்ல. இத்தனைக்கும் இது ஒரு தொகுப்பு நூல்தான். கால வரிசைப்படுத்தலோ, வெற்றி சூட்சுமங்களை விளக்கும் நோக்கமோ இதில் கிடையாது. வாசன் என்னும் ஆளுமையின் நினைவைப் போற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்டதுதான். ஏராளமான நபர்கள், ஆளுக்கொரு விதமாக அவரவர் மொழியில், அவரவர் அனுபவத்தை எழுதியிருப்பதுதான். எந்த ஒழுங்கு வட்டத்துக்குள்ளும் அடங்காது.

இருப்பினும் ஒரு சிறந்த வெற்றி நூல் / வாழ்க்கைச் சித்திர நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க இது ஒரு மகத்தான கையேடு. இப்போது அச்சில் இருக்கிறதா, கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

குறிப்புகளைப் பற்றிய ஒரு குறிப்பு

By:Para
8 May 2025 at 03:23

Pa Raghavan

கையால் எழுதிக்கொண்டிருந்த நாள்களில் என் கையெழுத்து நன்றாக இருந்தது. எவருக்கும் புரியும்படி இருந்தது. குறிப்பாக, பவுண்டன் பேனாக்களைப் பயன்படுத்தி எழுதிக்கொண்டிருந்தபோது உண்மையிலேயே அச்செழுத்தைப் போலவே இருக்கும். பார்க்கர், பைலட் பேனாக்கள், எழுதுபவனின் கையெழுத்தை மெருகூட்டுவதற்கென்றே உருவாக்கப்படுபவை என்று தோன்றும்.

என் கையெழுத்து கெடத் தொடங்கிய புள்ளி, பால்பாயிண்ட் பேனாக்களில் எழுத ஆரம்பித்ததுதான் என்று நினைக்கிறேன். அதிலிருந்து கம்ப்யூட்டருக்கு மாறிய பின்பு, கையால் எழுதுவது அறவே நின்று போனது. எப்போதாவது எழுத நேரும்போதுதான் அது கெடத் தொடங்கியிருக்கிறது என்பது உறைக்கும். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இனிமேல் கையால் எதற்கு எழுதப் போகிறோம் என்கிற அலட்சியம். அப்படியே விட்டுவிட்டதால் அது தன் இஷ்டத்துக்கு மோசமாகிப் போனது.

சென்ற மாதம் ஆன்லைன் கீதை வகுப்பு ஒன்றனில் சேர்ந்தேன். பதினெட்டு நாள் வகுப்பு. வகுப்பு நடத்தியவர் நல்ல ஞானஸ்தர். பேசும்போதே பத்தி பிரித்துத் தெளிவாகப் பேசுபவராக இருந்தார். கீதையை நான் அணுகும் விதமும் அவர் அணுகிய விதமும் முற்றிலும் வேறு வேறாக இருப்பினும் புதிதாகச் சில தரிசனங்கள் அந்த வகுப்பில் எனக்குக் கிடைத்தன.

விஷயம் அதுவல்ல. அந்த வகுப்பில் கலந்துகொண்ட பதினெட்டு நாள்களும் தவறாமல் அவர் பேசும்போது குறிப்பெடுத்தேன். அவர் என்னவோ நிறுத்தி நிதானமாகத்தான் ஒவ்வொரு சுலோகத்தையும் விளக்கினார். ஆயினும் என்னையறியாமல் கிறுக்கித் தள்ளித்தான் எழுதிக்கொண்டேன். மொத்த வகுப்புகளும் முடிந்த பின்னர் அந்த நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தால் எனக்கே என் கையெழுத்து அவமானமாக இருந்தது. ஒரு அவசர ஆத்திரத்துக்குக் கூட இன்னொருவரிடம் எடுத்துக் காட்ட முடியாது என்று தோன்றியது. நல்ல வேளையாக நான் எழுதுவது எனக்கே புரியாமல் போவதில்லை. அதை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டேன்.

ஒருவரது கையெழுத்து அவரது குணத்தை வெளிக்காட்டும் என்பதை நான் நம்பவில்லை. மிக அழகான கையெழுத்தைக் கொண்ட மிக மோசமான மனிதர்களை நான் அறிவேன். அதைப் போலவே மிக மோசமான கையெழுத்துடைய நல்லவர்களையும் அறிவேன். ஆனால், என் கையெழுத்தைக் கொண்டு என்னால் அறிய முடிந்ததெல்லாம் ஒன்றுதான். பழக்கம் விட்டுப் போனால் எதுவானாலும் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

கடிதங்கள் வழக்கில் இருந்த காலத்தில் கையெழுத்து, பேசுபொருளாக இருந்தது. இன்று அதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மிகவும் மோசமாக எழுதப்படும் கையெழுத்து மட்டும் எப்போதாவது சுட்டிக்காட்டப்படுகிறது. சமீபத்தில் சலம் நாவல் பிரதியில் வாசகர் ஒருவருக்கு ‘அன்புடன்’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்த லட்சணத்தைச் சுட்டிக்காட்டி நண்பர் ரமேஷ் வைத்யா ஃபேஸ்புக்கில் கிண்டல் செய்திருந்தார். சிறிது வெட்கமாக இருந்தது.

சில சமயம் தோன்றும். முயற்சி செய்தால் முடியாத செயல் என்ற ஒன்றில்லை. ஆனால் முழு மூச்சாக இறங்க வேண்டும். அப்படிச் சாதித்தவை பல உண்டு. கணிசமான நேரத்தையும் உழைப்பையும் கோரும் விஷயங்களை இப்போதெல்லாம் இது நமக்குத் தேவையா, எடுப்பதா வேண்டாமா என்று தீரப் பரிசீலிக்காமல் கை வைப்பதில்லை. எத்தனை மூட்டைகளைத்தான் முதுகில் ஏற்றிக்கொண்டே போவது?

கையெழுத்து சார்ந்து எனக்குள்ள கவலையெல்லாம் ஒன்றுதான். இப்போது நேரம் இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் என் மகள் அவற்றைப் படித்துப் பார்க்க நினைக்கலாம். என் கதைகள், கட்டுரைகள் என்று எதுவும் கையெழுத்துப் பிரதியாக இப்போது இல்லை. பிறர் எழுதியவை, பேசியவை, நான் படித்தவை சார்ந்து எழுதி வைத்த குறிப்புகள்தாம் உள்ளன. அவற்றை அவள் எப்போதேனும் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். நான் ஒரு தரமான ‘நோட்ஸ்’ தயாரிப்பாளன். என் குறிப்புகளைக் கொண்டு மிக நிச்சயமாக அந்தக் கருப்பொருள் சார்ந்து நான் அறிந்தவற்றின் முழுமையை எட்டித் தொட்டுவிட முடியும் என்று நம்புகிறேன். அதனைப் பிடித்துக்கொண்டு இன்னும் பரந்த வெளியில் தேடிச் செல்லவும் ஆங்காங்கே வழி சொல்லியிருப்பேன்.

சலம் எழுதுவதன் பொருட்டு சுமார் இரண்டாண்டுக் காலம் அதர்வ வேதத்தையும் அதன் உபநிடதங்களையும் மட்டும் படித்துக்கொண்டிருந்தேன். வீட்டிலும் அலுவலகத்திலுமாகக் கையால் எழுதிய குறிப்புகள், கணினியில் டைப் செய்து வைத்த குறிப்புகள், போனில் எழுதி வைத்த குறிப்புகள், பிடிஎஃப்பில் ஹைலைட் செய்து, கமெண்ட் பாக்ஸில் எழுதியவை, பிடிஎஃப்களிலேயே பக்கவாட்டில் ஆப்பிள் பென்சில் கொண்டு எழுதிய குறிப்புகள், தொடர்பான இணையச் சுட்டிகள் என்று அவற்றை மட்டும் தொகுத்தால் இன்னொரு சலம் அளவுக்குப் புத்தகமே தேறும்.

எக்காலத்திலாவது என் மகள் அவற்றையெல்லாம் எடுத்துப் பார்ப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சில குறிப்புகள் அவளுக்குப் புரியும். பெரும்பாலும் புரியாமல் போகப் போகிறதென்பதுதான் வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கை முழுதும் ஒரு மனிதன் அப்படி என்ன கிறுக்கித் தள்ளியிருக்கிறான் என்கிற ஆர்வத்தை மட்டும் தனக்கென வைத்துக்கொண்டு அந்தப் பிரதிகளைத் தனக்கடுத்த தலைமுறைக்கு அவள் விட்டுச் செல்லக்கூடும்.

அவளது ஓய்வுக் காலத்தில், அதைப் படிக்க முடியாவிட்டாலும் இந்தக் குறிப்பைப் படிப்பாள் அல்லவா? என் புத்தகங்களில் என்னையும் என் நோட்டுப் புத்தகங்களில் என் அக்கறைகளையும் சேமித்து வைத்திருக்கிறேன் என்பதாவது அப்போது அவளுக்குப் புரியும்.

இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள குறுகிய இடைவெளியில்தான் வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

பயண இலக்கியம்

By:Para
4 May 2025 at 07:54

Pa Raghavan

குலசேகரபுர க்ஷேத்திரமென்னும் குரோம்பேட்டையிலிருந்து தெற்கே பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள காட்டாங்குளத்தூர் என்னும் தலத்துக்கு, பாலிய சிநேகிதன் ஒருவனது குமாரத்தியினுடைய கலியாண நிமித்தம் சென்று வர வேண்டியிருந்தது. முன்னொரு காலத்தில் வேதாசலபுரமென்றும் பின்னொரு காலத்தில் மறைமலை நகரென்றும் அழைக்கப்பட்ட காட்டாங்குளத்தூருக்கு சாலை மார்க்கமாக அல்லாமல் மின்சார இரயில் வண்டி மார்க்கமாகப் பயணப்பட முடிவு செய்தேன்.

இந்நாள்களில் புறநகர் இரயிற் பயணங்களை மேற்கொள்வதென்பதே எனக்கு அரிதாகிப் போய்விட்டது. எங்கு செல்வதென்றாலும் இரு சக்கர வாகனத்திலோ ப்ளெசரிலோ செல்லும் வழக்கம் உண்டான பின்பு புறநகர் இரயிற் பயணம் நினைவை விட்டே அகன்றுவிட்டிருந்தது. ‘நீங்கள் அவ்வாறு இருத்தல் ஆகாது. மக்களோடு மக்களாகப் பயணஞ்செய்து திரும்புவதன் சந்தோஷத்தினை இழக்கின்றீர்கள். தவிர பிரயாண நெரிசலில் சிக்காது சென்று வரவும் அதுவே சரியான உபாயமுமாகும்’ என்று மனையாளும் பரிந்துரைத்தபடியினாலே காட்டாங்குளத்தூர் கலியாண வைபவத்துக்கு இரயில் பயணம் மேற்கொள்வதென்று தீர்மானஞ் செய்துகொண்டேன்.

விடிகாலை சூர்யோதயத்துக்கு மிகவும் முன்னால் ஐந்து மணி அளவிலேயே எழுந்து ஸ்நானபானஞ்செய்து, ஐந்தே முக்காலுக்குத் தயாரானேன். என் மனையாளே இரு சக்கர வாகனத்தில் என்னை ஏற்றிச் சென்று இரயிலடியில் இறக்கிவிட்டார். முன்னொரு காலத்திலே நான் குரோம்பேட்டை என்னும் குலசேகரபுரத்தின் இரயிலடிக்கு நாடோறும் படியேறி இறங்குபவனாக இருந்ததெல்லாம் நினைவைக் கவ்வி ஆக்கிரமித்துக் குதியாட்டம் போடத் தொடங்கியது. மூன்று பத்தாண்டுகள் கழிந்த பிற்பாடும் ரயிலடியின் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதைக் காண அதிசயமாயிருந்தது. இடப்புறமொன்றும் வலப்புறமொன்றுமாக இரண்டு நடைமேடைகள் புதிதாக எழுப்பப்பட்டிருந்தன. ஜனங்கள் விண்ணளாவிய படிகளில் ஏறி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவதிப்படாதிருக்கும் பொருட்டு சர்க்கார் எப்போதோ தானியங்கி மின்சாரப் படிக்கட்டுகளைக் கட்டுவித்திருக்க வேண்டும். அதை நமது கலாசாரப்படிப் பயன்கொள்ளத் தகாததாக உருமாற்றிக் கழட்டி வைத்திருந்தனர். நான் நீண்ட பெரும் படிகளேறி மேலே சென்று பயணச் சீட்டு வாங்குமிடத்தை அடைந்தேன்.

காட்டாங்குளத்தூருக்குச் சென்று திரும்பும் விதமான சீட்டொன்றைக் கோரி, நூறு உரூபாத் தாளினைச் சீட்டுப் பணியாளரிடம் நீட்டியபோது, ‘சில்லறையாக இருபது உரூபா இருந்தால் கொடுங்கள்’ என்று சொன்னார். இது எனக்குச் சிறிது வியப்பையும் மேலதிகக் குழப்பத்தையும் விளைவித்து, ‘எத்தனை உரூபா?’ என்று கேட்டு உறுதி செய்துகொள்ளப் பார்த்தேன்.

‘போகப் பத்தும் திரும்பி வருவதற்குப் பத்துமென ஆக மொத்தம் இருபது உரூபா’ என்று சீட்டுப் பணியாளர் மீண்டும் சொல்லவே, இருபது உரூபாக்களை எண்ணிக் கொடுத்துச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, இரயில் வண்டி வந்து நிற்கும் நடைமேடையை நோக்கி இறங்கத் தொடங்கினேன்.

கால மாற்றத்தில் விலைவாசி எல்லாம் ஆகாசத் தொலைவினை நோக்கிச் சென்றுவிட்டிருந்தாலும் சாமானிய மக்கள் செலவுச் சுமையின்றிப் பயணஞ் செய்வதன் பொருட்டு இரயிற்பாதைக் கட்டணத்தை மட்டும் பெரிய அளவினிலே உயர்த்தாது விட்டு வைத்திருக்கும் சர்க்காரின் பெரிய மனத்தினை எண்ணிச் சிலாகித்த வண்ணம் இரயில் வருவதற்காகக் காத்திருக்கலானேன்.

சில மணித்துளிகளில் சென்னை கடற்கரையிலிருந்து திருக்கச்சி மாநகர் வரை செல்லும் இரயில் வண்டியொன்று வந்து நின்றது. ஏறியதும் சன்னலோர இருக்கை சித்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இவ்வாறு சன்னலோர இருக்கையில் அமர்ந்து இரயிற் பிரயாணஞ்செய்து நெடுங்காலமாகிவிட்டதை நினைத்துக்கொண்டேன். காலைச் சூரியனின் முதற் கிரணங்கள் படரத் தொடங்கிவிட்டிருந்தன. புள்ளினங்கள் வானில் விரைய, சில்லென்ற காற்று மேனியில் மோத, இரயிற் பயணம் ஆரம்பமானது.

வண்டி சானடோரியம், தாம்பரம் என்கிற இரண்டு நிறுத்தங்களைக் கடந்து பயணப்படத் தொடங்கியபோது, காலை நேர ஆரோக்கிய உணவெனச் சொல்லி அவித்த நிலக்கடலை விற்றுக்கொண்டு வந்தார் ஒரு நாரி. முன்பெல்லாம் பழைய செய்தித் தாளில் பொட்டணம் மடித்துத் தருவார்கள். இன்றோவெனில் காகிதக் கிண்ணத்தில் அவித்த நிலக்கடலையைக் குவித்துத் தருகிறார்கள். அந்த விடிகாலைப் பொழுதினிலும் அவித்த கடலையை விரும்பி உண்ணும் மக்கள் இருப்பதைக் கண்டு மனத்தின்கண் குறித்துக்கொண்டேன். அவ்வண்ணமே புஷ்பங்கள் விற்கும் பெண்களும் பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்குப் பயன்படும் பென்சில், பேனாக்களை விற்போரும் கூவி விற்றுச் சென்றதைக் கண்டேன். அவர்களைப் பொருட்படுத்தாது, பெட்டியிலிருந்தோர் அவரவர் கைப்பேசியில் கண்ணுங்கருத்துமா யிருந்ததையுங் கண்டேன்.

இரயில் வண்டி பெருங்களத்தூர் நிறுத்தத்தை நெருங்கியது. பண்டொரு காலத்தில் பிற்காலப் பல்லவர்களுக்கும் மிச்சம் மீதமிருந்த பிற்காலச் சோழர்களுக்கும் யுத்தம் மூண்டபோது அது நிகழ்ந்த பெரும் களமாக இருந்தபடியினாலே அந்தத் தலத்துக்குப் பெரும் களத்தூர் என்ற பெயர் உண்டானது. (இதனைத் திரித்து, சோழர்கள் ஆண்ட காலத்திலே பெரிய குளமொன்று இந்த இடத்தினில் இருந்தபடியினாலே இது பெருங்குளத்தூர் என அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அது மருவி பெருங்களத்தூரானதாகவும் சொல்வர். ஆயினும் அதற்கு சரித்திர சாட்சியங்கள் கிடையா. சரிதான், பல்லவ-சோழ யுத்த களேபரத்துக்கேனும் சரித்திர சாட்சியம் உண்டாவென்பீரானால் அதுவும் கிடையா.) ஆனால் இந்த ஊரினையும் கமலகாசன் என்னும் கலாவிற்பன்னர் உருக்கொண்ட களத்தூரினையும் போட்டுக் குழப்பிக்கொள்ளல் ஆகாது. வெறும் களத்தூர், முதுகளத்தூர், பெருங்களத்தூர், சிறுகளத்தூர் என மாகாணமெங்கும் பல போர்களின் நினைவாகக் களப்பெயர் பூண்ட தலங்கள் உண்டு.

பெருங்களத்தூரினின்று புறப்பட்ட இரயில் வண்டி அடுத்தபடியாக வண்டலூர் நிறுத்தத்தில் நின்றது. சுற்றிலும் வனம் அடர்ந்த மலைகளும் சிறியதொரு நதியும் ஓடிய பிராந்தியமாகப் பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் இத்தலம் திகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு வனம் சுருங்கி, மலைகள் நாலாபுறமும் பெயர்க்கப்பட்டு, நதி சேர்த்த வண்டலெல்லாம் கட்டுமானப் பணிகளுக்கென்று எடுத்துச் செல்லப்பட்ட பின்பு, நதியும் தீர்ந்துபோய் விடவே, சிறியதொரு கானுள்ள பிராந்தியமாகச் சுருக்கி வடிவமைக்கப்பட்டது. கால மாற்றத்தில் இவையெல்லாம் தவிர்க்க இயலாததன்றோ? இருப்பினும் நமது சரித்திரம் வேர் கொண்ட புவியியலினை முற்றிலுமாக மறந்துவிடுதல் தகாதென்ற எண்ணத்தில் சர்க்கார் இந்தத் தலத்தினிலே கானுயிர்களுக்கென ஒரு பூங்கா அமைத்துச் செம்மையாகப் பராமரித்து வருகின்றார்கள். சிங்கம், புலி போன்ற கொடுமிருகங்களிலிருந்து நாய் பூனை போன்ற மென்மிருகங்கள் ஈறான ஐயறிவினங்கள் இந்தப் பூங்காவிலே சௌக்கியமாக வாசஞ்செய்து வருகின்றன.

வண்டலூர் நிறுத்தத்தினை அடுத்து வந்தது ஊரப்பாக்கம் இரயில் வண்டி நிறுத்தம். இது காலத்தால் மிகவும் பிற்பட்ட குடியிருப்புப் பிராந்தியமென அறியப்படுவது. மக்கட்தொகைப் பெருக்கம் மிகத் தொடங்கி, வடக்கே சென்னை மாநகரமும் தெற்கே செங்கற்பட்டு மாநகரமும் இடுப்பூதிப் போக ஆரம்பித்தபோது இரு பெரும் நகரங்களுக்கு இடைப்பட்ட மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பரப்பும் கானிழந்து ஆங்காங்கே மேகத் திட்டுகளைப் போலே கான்கிரீட்டெனும் கவின்மிகு கற்கோலம் பூணத் தொடங்கியதன் விளைவாக உற்பத்தியான நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இதனையடுத்த கூடுவாஞ்சேரி என்கிற இரயில் நிறுத்தப் பிராந்தியமும் அப்படியே உருவானது என்பதும் நினைவிற் கொள்ளத் தக்கது. இப்புதிய நகரங்களின் இறுதியொட்டாக வருகின்ற பாக்கம், சேரி போன்ற பதங்களைக் கூர்த்து நோக்குவோமானால் ஆதியிலே இவ்விடங்கள் எவ்விதமாக இருந்தனவென்பது தெள்ளெனப் புலப்படும்.

ஏழு மணி ஆவதற்கு எட்டு மணித்துளிகள் இருந்தபோது ஒரு வழியாக இரயில் வண்டி காட்டாங்குளதூர் நிறுத்தத்துக்கு வந்து சேர்ந்தது.

இறங்கும்போதே காட்டாங்கொளத்தூர் என்ற பிழைபட்ட பெயர்ப்பலகை கண்ணில் தென்படவே, சிரித்துக்கொள்ளும்படியானது. பெருங்களத்தூரைப் பெருங்குளத்தூராக்கியதைப் போலவே காட்டாங்குளத்தூரைக் காட்டாங்கொளத்தூராக்கிவிட்டிருக்கின்றார்கள்!

முன்னொரு காலத்தில் இந்த ஊரின் சிறப்பைச் சொல்வதற்குச் சிவானந்த குருகுலம் எனும் ஓர் ஆசிரமம் இருந்தது. ஆசிரமம் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பெருங்காடாக மட்டுமே இருக்கும். மாலைப் பொழுதில் நரிகளைப் பார்வையிடலாம். சற்று உள்ளடங்கிச் சென்றால் வேறு சில காட்டு மிருகங்களும் காணக் கிடைக்கும் என்றாலும் மிருகங்களைத் துன்பப்படுத்தலாகாது என்னும் எண்ணத்தில் நான் சென்றதில்லை. பிற்பாடு மக்கள் இங்கெல்லாம் குடியேறத் தொடங்கிய பின்பு வீடுகளும் சாலைகளும் விளக்குகளும் வணிக வளாகங்களும் கலாசாலைகளும் இதர நவீனங்களும் ஆமைபோலப் புகுந்து நிறைந்துவிட்டிருக்கின்றன. மிருகங்கள் இருந்த இடமும் தெரியாமல், சென்ற இடமும் தெரியாமல் போய்விட்டன.

காணாத காட்சியெல்லாம் கண்டு ரசித்த வண்ணம் இரயில் நிலையத்தினின்றும் வெளியேறிச் சாலையை அடைந்தேன்.

கண்ணெட்டும் தொலைவிலேயே நான் போகவிருந்த கலியாண மண்டபம் இருந்தது. மகிழ்ச்சியுடன் அதனை எட்டிப் பிடித்து, வைபவத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு, பாலிய நண்பர்களையெல்லாம் சந்தித்துச் சிறிது நேரம் சல்லாபித்துக்கொண்டிருந்தேன். பிரிய மனமின்றிப் பிரிந்து மீண்டும் காட்டாங்குளத்தூர் இரயில் நிலையத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதாகியிருந்தது. செங்கற்பட்டிலிருந்து சென்னைக் கடற்கரை நோக்கிச் செல்லும் இரயில் வண்டி வந்ததும் ஏறிக்கொண்டேன்.

ஒன்றரை நாழிகைப் பொழுதுக்குள் குரோம்பேட்டை இரயில் நிலையத்தை வந்தடைந்துவிட முடிந்தது. பேசி வைத்திருந்தாற்போலே மனையாள் மீண்டும் இரு சக்கர வாகனத்துடன் இரயிலடிக்கு வந்து காத்திருந்தாள். எனவே அதிலேறி இல்லம் வந்தடைந்து, சென்று வந்த சங்கதிகளையும் க்ஷேமலாபங்களையும் அவளிடம் சொல்லிக் களித்தேன். குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு அவளொரு முத்தாய்ப்பு வைத்தாள். அதுவாவது:-

‘இருவது ரூவாய்ல மேட்டர் முடிஞ்சதுல கிளுகிளுப்பாகி இவ்ள பேசுற. இதே கார் வெச்சிகிட்டுப் போயிருந்தேன்னா ஆயிர்ருவா பழுத்திருக்கும். அப்ப இந்த வாயி திறக்கும்?’

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

பிரதி கர்ப்பம்

By:Para
29 April 2025 at 00:30

Pa Raghavan

எப்போதாவது எழுதுபவர்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எப்போதாவது மட்டும் எழுதாமல் இருப்போருக்கு மட்டுமே இந்த வலியின் தீவிரம் புரியும்.

ஒரு பெரிய நாவல் அல்லது ஏதாவது ஒரு புனைவல்லாத நூலை எழுத ஆரம்பிப்பேன். முன்னதாகப் பல மாத காலம் – சில சமயம், சில வருட காலம் அதற்காக உழைத்திருப்பேன். தகவல்கள் தேடித் திரட்டித் தொகுத்து, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்த பின்புதான் எழுதலாம் என்றே தோன்றும். அதன் பிறகு நல்ல நாள் பார்த்து, ஊர் உலகத்தில் வசிக்கும் அனைத்து தெய்வங்களையும் சகாயத்துக்குக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு, என்னைக் காக்கும் சித்தர்களைத் தொழுது, மனத்துக்கண் தாற்காலிக மாசிலனாகி, செயலொன்றே சித்தம் என்று ஆரம்பித்திருப்பேன். பத்திருபது நாள்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எழுதி நூறு, நூற்றைம்பது பக்கங்கள் அல்லது பதினையாயிரத்தில் தொடங்கி இருபதாயிரம் சொற்கள் வரை எழுதி முடித்திருப்பேன். ஏதாவது ஒரு காரணத்தினால் ஒன்றிரண்டு நாள்களுக்கு எழுத முடியாமல் போகும். பிறகு எனக்கே தெரியாமல் சுதி பிசகி நின்றுவிடும்.

அப்படி நிற்கும் பிரதிகளைச் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடரப் பார்ப்பேன். பெரும்பாலும் முடியாது. எனவே மீண்டும் முதலிலிருந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி எழுதி நிறைவு செய்த நூல்கள் சில உண்டு.

உதாரணமாகக் கபடவேடதாரி. இந்த நாவலை மூன்று முறை கிட்டத்தட்ட முழுமைக்கு அருகே கொண்டு சென்று நிறுத்தி, நிறுத்தி, மீண்டும் முதலில் இருந்து தொடங்கி, நான்காவது முறைதான் எழுதி முடிக்க முடிந்தது. என்ன காரணம் என்று கேட்டால், தெரியாது. பூனைக்கதையின் இரண்டாம் பாகத்தை மட்டும் முழுதாக இரண்டு முறை எழுதியிருக்கிறேன். இறவானில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தை மட்டும் பதினேழு முறை மாற்றி மாற்றி எழுதிப் பார்த்தேன். முற்றிலும் வேறு வேறு வடிவங்களில்.

அரசியல் நூல்கள் எழுதும்போது இது அடிக்கடி நடக்கும். 9/11, ஐ.எஸ்.ஐ., காஷ்மீர் (நினைவுப் பிசகால் மாற்றிச் சொல்லியிருக்கிறேன்.)  சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு – மூன்றையும் முழுதாகவே இரண்டு முறை எழுதியிருக்கிறேன். வட கொரியா எழுதும்போது குறைந்தது இருபது முறையாவது வேலை தடைப்பட்டு நின்றது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என் மனைவிக்குக் கூடச் சொல்லாமல் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்துவிட்டு, இறுதியில் அவளது ஆலோசனை இல்லாமல் அதை எழுதி முடிக்கவே முடியாது என்று தோன்றிய பின்புதான் ஒருநாள் காலை நடையின்போது நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னேன். பிறகு எழுத்துக்கான திட்டத்தை அவள் சொன்னபடி வகுத்துக்கொண்டு மீண்டும் எழுதத் தொடங்கி, ஐந்து மாதங்களில் முற்றிலும் புதிய பிரதி ஒன்றை எழுதி நிறைவு செய்து அச்சுக்குக் கொடுத்தேன். இவையெல்லாம் எப்படியாவது முடித்துவிட்ட புத்தகங்கள்.

ஆனால் இன்று வரை ஏன் நின்றது என்றும் தெரியாமல், எப்படித் தொடர்வது என்றும் புரியாமல் போட்டு வைத்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை இருபதுக்கு மேலே (மேலே உள்ள படத்தில் இருக்கும் கோப்புகளை எண்ணிக்கொள்ளுங்கள்). இதில் மூன்று நாவல்களும் அடங்கும்.

எழுதும் விஷயத்தில் நான் மிகுந்த கவனமும் கூர்ந்த அக்கறையும் கொண்டவன். மனத்துக்குள் முற்றிலும் தயாராகாமல் எழுதத் தொடங்கியதே இல்லை. கருவும் மொழியும் உருத் திரண்டு, ஒத்திசைவாய் வருவதை உறுதி செய்துகொள்ளாமல் ஆரம்பிக்க மாட்டேன். நாவல் என்றால் களமும் மொழியும். கதாபாத்திரங்களையோ சம்பவங்களையோ சிந்திக்க மாட்டேன். அது எழுத எழுதத் தன்னால் வந்துவிடும். சலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் அதர்வன் அதன் கதாநாயகனாக இருப்பான் என்றுதான் நினைத்தேன். ஆனால், எழுதத் தொடங்கிய பத்தாவது அத்தியாயத்தில், ‘நீ யார் அதை முடிவு செய்வது?’ என்று நாவல் குத்சனை யானை மீது ஏற்றிக்கொண்டு போய்விட்டது.

அப்படி நடப்பது சாதாரணமான விஷயம். எல்லோருக்கும் எப்போதும் நடக்கும். அதுவல்ல என் சிக்கல். எவ்வளவுதான் உரிய ஆயத்தங்களுடன் எழுத உட்கார்ந்து, காலமும் நேரமும் சகாயம் செய்தாலும்கூடச் சில புத்தகங்கள் பாதியில் நின்றுவிடும். இறுதிவரை அதைத் தொடர்ந்து முடிக்க வழி புலப்படாது.

‘முதல் நாவலைத் தொடங்கினேன். பாதியில் நின்று, மிகுந்த மனச்சோர்வாகிவிட்டது’ என்று சொல்லிக்கொண்டு பலபேர் வருவார்கள். அப்படிப் பாதியில் நின்றதற்கெல்லாம் சோர்ந்து போவதென்றால் இந்நேரம் நான் மனநோய் விடுதியில்தான் இருந்திருப்பேன் என்று சொல்வேன். எழுதுபவனுக்கு அடிப்படையில் ஓர் எருமைமாட்டுத்தனம் தேவை. எழுத்து தொடங்கி வாழ்க்கை வரை எதையும் உணர்ச்சிவசப்படாமல், நிதானம் குலையாமல் அணுகத் தெரிவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். சொல்கிறேனே தவிர, வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் தடுமாறி விழுந்திருக்கிறேன். ஆனால் எப்போதும் எழுத்தில் அப்படி நிதானம் தவறியதில்லை. அப்படியும் சில பிரதிகள் தேங்கிவிடுகின்றன.

இவ்வாறு நின்றுபோன புத்தகங்களைக் குறித்து ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சொக்கனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். எழுதி முடித்து இன்னும் அச்சாகாத புத்தகங்களைக் குறித்து அவன் சொன்னான். அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏதுமில்லை. பல வருடங்கள் காத்திருந்து இரண்டு சிறுவர் நூல்கள் பிரசுரமாயின. நானே வேண்டாம் என்று நிறுத்தி வைத்த ஓர் அரசியல் நூலை (ஹமாஸ்), இப்போது வெளியிடலாம் என்று நினைத்து, சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்தேன். வேறு வருந்தத்தக்க அனுபவங்கள் ஏதும் பதிப்பு சார்ந்து எனக்கு ஏற்பட்டதில்லை.

ஆனால், இந்த நின்று போன புத்தகங்கள் அடங்கிய ஃபோல்டரைப் பார்க்கும் போதெல்லாம் சிறிது துக்கம் எழும். உடனே அதை மூடி வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஏனென்றால், அத்துக்கத்தைப் பெருக அனுமதித்தால் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

இரண்டு, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஒரு நாவலை எழுத ஆரம்பித்தேன். அது மட்டும் வெளிவருமானால் அநேகமாக அனைத்து உலக மொழிகளுக்கும் செல்லக்கூடிய தகுதியுடன் இருக்கும் என்று தீர்மானமாகத் தோன்றியது. கருவாக மனத்தில் அது விழுந்தபோதே அதிலிருந்த சர்வதேசத்தன்மையைக் கண்டுகொண்டேன். வாழ்வில் வேறெதற்குமே தராத உழைப்பினை அதற்குச் செலுத்தியிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுக் காலம், தரவு சேகரிப்புக்கும் ஆய்வுக்குமே செலவானது. எனக்கு வருமானம் தரக்கூடிய அனைத்துப் பணிகளையும் உதறிவிட்டு (எழுத்துப் பயிற்சி வகுப்புகள் உள்பட.) முழு மூச்சாக அந்நாவலை எழுத ஆரம்பித்தேன்.

வழக்கத்துக்கு விரோதமாக அதன் ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு குறுநாவல் அளவுக்குப் பெருகிக்கொண்டே சென்றது. அது நான் எண்ணிப் பார்த்திராதது. அத்தியாயங்களை ஆகக் கூடியவரை சிறிதாக அமைப்பதையே எப்போதும் விரும்புவேன். ஆனாலும் என் கட்டுப்பாட்டை மீறி, ஒவ்வோர் அத்தியாயமும் ஐயாயிரம், ஆறாயிரம் சொற்களுக்கெல்லாம் சென்றுகொண்டிருந்தது.

சரி, என்னதான் ஆகிறதென்று பார்ப்போம் என்று எழுதிக்கொண்டே இருந்தேன். ஒன்பது அத்தியாயங்கள் ஓடி, ஓரிடத்தில் முட்டிக்கொண்டு நாவல் நின்றது.

எழுதிய வரை புத்தகமாக்கினால் நிச்சயமாக அறுநூறு பக்கங்கள் வரும் என்று தோன்றியது. ஆனால் அது நான் எழுத நினைத்திருந்த நாவலின் இருபது சதம்கூட இல்லை. என் மொத்த சக்தியையும் திரட்டி அடுத்த அத்தியாயத்துக்குள் நுழைந்துவிடப் பல மாதங்கள் முயற்சி செய்தும் நடக்கவில்லை. எத்தனையோ நாள் இரவெல்லாம் துக்கம் பொங்கிக் கண்ணீர் வரும். என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கும் சித்தர்களெல்லாம் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களோ என்றெல்லாம் அஞ்சி நடுங்கி, உறக்கத்தில் அலறி எழுந்திருக்கிறேன். நான் அப்படி உறக்கத்தில் அலறி எழுந்துகொள்வதற்கு என் மனைவியும் மகளும் வேறு பல குடும்பக் காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லிக்கொண்டிருந்ததை வைத்தே ஒரு கதை எழுதலாம் போலிருந்தது.

இது இப்படியே நீடித்தால் உண்மையிலேயே பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. ஒருநாள் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதிக்குச் குடும்பத்துடன் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வந்தேன். அன்றிரவு உறக்கத்தில் சலத்தின் ஊற்றுக்கண் திறந்துகொண்டது. அது, யதி எழுதுவதற்கு முன்னால் மனத்தில் உதித்த கரு.

எழுத ஆரம்பித்து முடிக்க முடியாதிருப்பவை பற்றிய வருத்தங்கள் நிச்சயமாக எனக்குண்டு. முடித்தவை குறித்த நினைவுகளால் அதனை மறைத்து வைத்துக்கொள்கிறேன். பிரதிகளின் கர்ப்பகாலம் தெரிந்துவிட்டால் எழுதுவதில் உள்ள புதிர்த்தன்மை நீர்த்துவிடும் என்று இதற்கு சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

மகாத்மா காந்தி சிகரெட்

By:Para
24 April 2025 at 18:03

Pa Raghavan

ஒருவர் பிரபலமாக இருந்தால் அவரை விளம்பரப் படங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். இக்காலத்தில் பெரும்பாலும் திரைப்படத் துறையினர். அல்லது கிரிக்கெட் வீரர்கள். வேறு துறைப் பிரபலங்கள் வருவதை அபூர்வமாகவே பார்க்கிறோம்.

ஆனால் யோக்கியமாக ஒப்பந்தம் செய்து, உரிய தொகை கொடுத்தே விளம்பரங்களில் நடிக்கச் சொல்கிறார்கள். அத்துமீறல்கள் இதில் இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இது விஷயத்தில் முன்னொரு காலத்தில் அநியாய அழிச்சாட்டியமெல்லாம் நடந்திருக்கும் போலிருக்கிறது.

பெயர் தெரியாத ஒரு சிகரெட் கம்பெனி, ‘மகாத்மா காந்தி சிகரெட்’ என்றொரு பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எந்த வருடத்திலிருந்து எப்போது வரை அது இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான யங் இந்தியாவில் காந்தி இது குறித்து ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். மது, சிகரெட் இரண்டின் மீதும் தனக்குள்ள ஒவ்வாமையை விரிவாக எடுத்துச் சொல்லி, சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த பிராண்டை நிறுத்திக்கொள்ளவோ, மக்கள் அதைப் புறக்கணிக்கவோ செய்தால் மிகுந்த நன்றி சொல்வேன் என்று பணிவுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் குறிப்பில் இருந்து நான் எடுத்துக்கொண்ட விஷயங்கள் இரண்டு.

1. 1921லேயே காந்தி, மகாத்மா என்று அறியப்பட்டிருக்கிறார்.

2. காந்தியை விளம்பர மாடலாகக் கொண்டால் பொருள் விற்கும் என்று அப்போதே வியாபாரக் கணக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காந்தியின் மறுப்பைப் பாருங்கள். மறுப்பு-எதிர்ப்பு-கண்டனம்தான் சாரம். ஆனால் சற்றும் பதறாத இயல்பும் நிதானம் தவறாத மொழியும் நிச்சயமாகத் திகைப்பூட்டும்.

யங் இந்தியா, ஜனவரி 12, 1921 இல் வெளியானது.

நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பில் வெற்றிமாறன் ஒரு படம் எடுக்கிறார் என்று தெரிய வந்தபோது எவ்வளவு எரிச்சலடைந்தேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். வெட்கத்துடன் இம்மனிதரின் தாள் பணிவதல்லாமல் செய்வதற்கு வேறொன்றுமில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

சலுகை வாரம்

By:Para
24 April 2025 at 05:35

Pa Raghavan

உலகுக்கெல்லாம் புத்தக தினக் கொண்டாட்டம் ஒரு நாள் என்றால் என் பதிப்பாளர்கள் இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) அனைத்துப் புத்தகங்களுக்கும் இருபத்தைந்து சதவீதச் சலுகை அறிவித்திருக்கிறார்கள். இது என் புத்தகங்களுக்கு மட்டுமல்ல. ஜீரோ டிகிரி வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் என்றாலும் நமது வாசகர்களுக்குத் தனியே எடுத்துச் சொல்வது கடமை அல்லவா?

நேற்று வெளியான சலம் தொடங்கி, ஜீரோ டிகிரி இதுவரை வெளியிட்டுள்ள என்னுடைய 79 புத்தகங்களையும் இந்த வாரம் முழுவதும் (ஏப்ரல் 30 வரை) 25 சதவீதம் சிறப்புச் சலுகை விலையில் பெறலாம். மீண்டும் ஒருமுறை இந்த வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. அவர்களுடைய இணையத்தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும்போது check out பக்கத்தில் தள்ளுபடித் தொகை காட்டப்படும். எனவே…

ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் என்னுடைய புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள பக்கம் இது.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

உருப்படாதது

By:Para
23 April 2025 at 07:23

Pa Raghavan

புத்தக அடுக்கை எப்போதெல்லாம் சுத்தம் செய்கிறேனோ, அப்போதெல்லாம் புதைபொருள் ஏதாவது கிடைக்கும். அவை என் முந்தைய காலத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை நிச்சயமாக நினைவூட்டும். எண்ணிப் பார்த்தால் சிறிது வியப்பாகவே இருக்கிறது. புத்தக அடுக்குகள் தவிர, வீட்டில் வேறெங்கும் எதிலும் என் தடயங்களை என்றுமே கண்டெடுத்ததில்லை.

முன்பெல்லாம் அடிக்கடி ரயில் டிக்கெட்டுகள் எந்தப் புத்தகத்திலிருந்தாவது கீழே விழும். ஓரிரு முறை சீசன் டிக்கெட்டைக் கண்டெடுத்திருக்கிறேன். அவை குமுதம் காலத்துப் பொருள்கள். போஸ்ட் கார்ட்கள், இன்லண்ட் லெட்டர்கள் அகப்பட்ட காலமும் முடிந்துவிட்டது. போஸ்ட் கார்டுகள் பெரும்பாலும் திகசி அல்லது லாசராவிடமிருந்து வந்தவையாக இருக்கும். தொடக்க காலத்துக் கதை நிராகரிக்கப்பட்ட கடிதங்கள், பிரசுரத்துக்குத் தேர்வான கடிதங்கள், ஆஃபர் லெட்டர்கள் எனப் பலவற்றையும் புத்தகங்களுக்குள்ளேயே வைத்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிறக்கும்.

இந்தக் கடிதங்கள் எல்லாம் சாதுவானவை. அவை போக பான்பராக் கவர்கள், மானிக்சந்த் கவர்கள், மாவாத் தூள், மாவா பாக்கெட்டுகள் எப்போது புத்தக அடுக்கைக் கலைத்தாலும் எதிலிருந்தாவது கீழே விழும். பான்பராக் ஒரு ரூபாய்க்குக் கிடைத்த காலத்தில் அதை மென்றிருக்கிறேன். பிறகு மானிக்சந்த். அது சற்று விலை அதிகமென்றாலும் ருசியின் பொருட்டு அங்கே சிறிது காலம். இவை இரண்டுமே வாங்க முடியாத விலைக்குச் சென்றதும் ஃபூல்சந்த் சூப்பர் என்றொரு பிராண்டை சில காலம் பயன்படுத்தியிருக்கிறேன். அதற்கும் பிறகுதான் மாவா.

பதினெட்டு வயதில் தொடங்கிய இந்தப் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி இரண்டாண்டுகள் ஆகின்றன. கொடுமை என்னவென்றால், சென்ற வாரம் புத்தக அடுக்கைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஏதோ ஒரு புத்தகத்துக்கு உள்ளே இருந்து ஒரு ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட் கீழே விழுந்தது. 1996 முதல் 2000 ஆவது ஆண்டு வரை அது என் பக்கத்துணையாக இருந்திருக்கிறது. இரண்டாயிரமாவது ஆண்டு குமுதத்தில் வேலைக்குச் சேர்ந்தபோதுதான் புரசைவாக்கம் சேட்டுகளின் மாவாவுக்கு ரசிகனாகிப் போனேன்.

நிற்க. அந்த ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட்டைப் பார்த்ததும் ஒரு தருணம் நினைவுக்கு வந்தது. நியாயமாக ஒரு கதையாகவே எழுதக்கூடிய சம்பவம்.

நான் அவ்வளவு ஒன்றும் யோக்கியமில்லை என்று என் பெற்றோருக்குத் தெரியும். ஆனால் எவ்வளவு அயோக்கியன் என்று சரியாகத் தெரியாத காலம் ஒன்று இருந்தது. அப்போது நாங்கள் குடியிருந்த வீட்டின் மாடியில் குடியிருந்தவர்களுக்கு மூன்று பெண்கள். அந்த மூவரில் ஒருத்தி பார்க்கக் கொஞ்சம் ஸ்டைலாக இருப்பாள். இரவெல்லாம் ஸ்டீரியோவில் பாட்டுப் போட்டு அலறவிடுவாள். படியிறங்கி வரும்போதும் போகும்போதும் அவளது ஹீல்ஸ் செருப்பு பிரத்தியேகமாக ஒரு சத்தமெழுப்பும். வாரப்படாத கூந்தலும் தொளதொளவென்ற சட்டைக்காரிச் சட்டையும் தொடையை இறுக்கிப் பிடிக்கும் ஜீன்ஸ் பேன்ட்டுமாக, அவள் எப்போதும் என் அம்மாவின் கண்களுக்கு ஒரு ‘உருப்படாதது’.

உண்மையில் அந்தப் பெண் பரம சாது. தங்கமான குழந்தை. ஆனால் உலகம் தோற்றத்தைக் கொண்டல்லவா யாரையும் மதிப்பிடுகிறது?

சரி, எனக்கென்ன. நான் ஒரு ஃபூல்சந்த் சூப்பரை உரித்து வாயில் கொட்டிக்கொண்டு ஜன்னல் வழியே வெளியே குப்பையை வீசிவிடுவேன். வீடு பெருக்க வருகிற பெண்மணி காம்பவுண்டுக்கு உட்புற இடைவெளியையும் பெருக்கித் தள்ளுவார் என்கிற நம்பிக்கையில் செய்தது அது.

ஆனால் அவரோ, நமது பண்பாடு மீறாத பெண்மணியாக இருந்திருக்கிறார். அந்த ஓரடி இடைவெளியில் யார் வரப் போகிறார்கள், என்ன பெரிய குப்பை இருந்துவிடப் போகிறது என்று அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டார் என்பது மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது.

என்றைக்கோ எதற்கோ அந்தப் பக்கம் சென்ற என் அம்மா, ஜன்னலுக்கு வெளியே குவிந்து கிடந்த ஃபூல்சந்த் சூப்பர் பொட்டலங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இயல்பாக அவரது தலை உயர்ந்து மாடி ஜன்னலைப் பார்த்தது. அதுதான் அந்த ‘உருப்படாதது’ வசிக்கும் அறை. அங்கிருந்துதான் ஸ்டீரியோ அலறும்.

‘நான் சொல்லல, அது உருப்படாதுன்னு? பாரு. பான்பராக் போட்டு, பாக்கெட்டை வெளிய கொட்டிக் குவிச்சிருக்கா. இதெல்லாம் நாளைக்கு இன்னொருத்தன் வீட்டுக்கு வாழப் போயி என்ன பாடு படுத்தப் போகுதோ?’ என்று புலம்பிக்கொண்டே குப்பைகளை அள்ளிக் கொட்டிவிட்டு வந்தார்.

அதன் பிறகு வீட்டில் நான் பாக்குப் போடுவது இன்னும் எளிதாயிற்று. எத்தனை பாக்கெட்டுகளை ஜன்னலுக்கு வெளியே வீசினாலும் அது நான் போட்டதல்ல. மாடி வீட்டு உருப்படாதது போட்டது. அந்தப் பெண்ணை என்னைக் காக்க வந்த பெண் தெய்வமாகவே எண்ணிக்கொண்டேன்.

பிறகு எங்கள் வீட்டுக்கு ஒரு பெண் தெய்வம் வந்தது. இது சற்று உக்கிரமான தெய்வம். அநீதிகளுக்கு அடிபணியாததும், சுட்டிக்காட்டினால் பிரச்னையாகும் என்று தெரிந்தால், அழுத்தந்திருத்தமாகவே சுட்டிக்காட்டும் இயல்பு கொண்டதுமானது.

வீட்டுக்குத் தெரியாமல் நான் செய்துகொண்டிருந்த காரியத்தை முதல் முதலில் போட்டுக் கொடுத்து மாட்டிவிட்ட புண்ணியவதி என் மனைவியே.

‘பாக்குப் போட்டுத் துப்பறதும் குப்பைய வெளிய கொட்றதும் மாடி வீட்டு சுப்ரியா இல்ல. உங்க புள்ளதான்’ என்று அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிரே போட்டு உடைத்தாள்.

இல்லவே இல்லை, இருக்கவே இருக்காது என்று அப்போதும் என் அம்மா சொல்லத்தான் செய்தார். ஆனால் உண்மைக்கென்று ஒரு வாசனை உண்டு. அது ஃபூல்சந்த் சூப்பர் குட்காவின் வாசனையைக் காட்டிலும் வீரியம் மிக்கது.

இருபத்தேழு, இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது அந்த ஃபூல்சந்த் சூப்பர் பாக்கெட் ஒன்று ஒரு புத்தகத்தினுள் பதுங்கியிருந்து வெளிப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மாடி வீட்டு சுப்ரியா இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ தெரியாது. அவளுக்கே ஒரு குழந்தை பிறந்து, அது வளர்ந்து பெரிதாகியிருக்கும். ஃபூல்சந்த் சூப்பர் என்றொரு குட்கா பிராண்ட் ஒரு காலத்தில் இருந்ததென்ற தகவல்கூட அவளுக்குத் தெரிந்திருக்காது. அவ்வளவு ஏன்? எந்தக் காலத்திலோ கீழ் வீட்டில் குடியிருந்த என் முகமே அவளுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. என் அம்மா அவளை உருப்படாதவற்றின் பட்டியலில் வைத்திருந்த சரித்திரக் குறிப்பும் தெரிந்திருக்காது.

எல்லாவற்றையும் இருபத்தெட்டு வருடங்களாகத் தனக்குள் சேகரித்து வைத்திருந்த அந்தப் பழைய குட்கா பாக்கெட்டை ஒருமுறை முகர்ந்து பார்த்துவிட்டுக் குப்பையில் போட்டேன். பிறகு இதை எழுதினேன்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

அபினுக்கு அப்பால்

By:Para
20 April 2025 at 01:36

Pa Raghavan

கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற பொதுத் தலைப்பில் சீனி விசுவநாதன் பாகம் பாகமாக பாரதியின் படைப்புகளைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். அவை வெளியான காலத்தில் உடனுக்குடன் ஒவ்வொரு பாகத்தையும் ஆர்வமுடன் வாங்கினேன். ஆயினும் எப்படியோ சில பகுதிகள் விடுபட்டுவிட்டன. இந்தக் காலவரிசைப்படுத்தலின் முக்கியத்துவம் என நான் கருதுவது, ஒரு கலைஞனின் சிந்தனை காலக்கட்டம் தோறும் எப்படி வளர்ந்து, இறுதியில் என்னவாக மலர்ந்து நிறைந்திருக்கிறது அல்லது வாடிச் சுருங்கியிருக்கிறது என்பதை அறிய முடிவதுதான்.

நேற்று, என்னுடைய புத்தக அடுக்குகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சீனி விசுவநாதன் பதிப்புகளை எடுத்துச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். தனது வாழ்வில் மூன்று சித்தர்களை பாரதி நேரில் சந்தித்துப் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் அவருக்கு உண்மை ஞானம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வதற்கான பாதையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தத் தருணங்களுக்குப் பிறகு பாரதி எழுதிய பாடல்களில் மட்டுமே ‘ஆன்மிகம்’ வருகிறது. அதற்கு முன்பு அவர் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்தும் வெறும் துதியாக உள்ளன. கண்ணன் மீது, விநாயகர் மீது, முருகன் மீது, இதர பல தெய்வங்களின்மீது அவர் பாடிய எதுவும் ‘தேறித் தெளிந்தவனின்’ சொற்களாக அல்லாமல் உணர்ச்சிமயத்துக்கு அப்பால் வேறெதையும் அறியாத வேறொரு கவிஞனையே சுட்டிக்காட்டுகின்றன.

பாரதி சந்தித்த மூன்று சித்தர்களைப் பற்றிய குறிப்புகள் அவரது சுய சரிதையில் வருகின்றன. குள்ளச்சாமி என்றொரு சித்தர். கோவிந்தசாமி என்றொரு சித்தர். பிறகு யாழ்ப்பாணச் சாமி என்பவர்.

இதில் குள்ளச்சாமி, பாரதியை மிகவும் பாதித்தவர் என்று எண்ண முடிகிற விதமாக அவரைக் குறித்துச் சற்று நிறையவே எழுதியிருக்கிறார்.

‘சாமி, நீங்க யாருன்னு எனக்குப் புரியல. ஒரு பார்வைல பரமசிவனா தெரியறிங்க. இன்னொரு பார்வைல பைத்தியக்காரனாட்டம் தெரியறிங்க. சின்னப் பசங்களோட ரோட்ல திரியறிங்க. சொறிநாய்ங்க கூடல்லாம் விளையாடிட்டிருக்கிங்க. உங்கள கேடகரைஸ் பண்ண முடியல. நீங்களே சொல்லிடுங்க, யார் நீங்க?’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கேட்கிறார்.

சித்தர் அப்போது நல்ல மூடில் இருந்திருக்கிறார். சரி, வா என்று ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். புராதனமான, இடிபாடுகள் மிகுந்த, யாரும் வசிக்காத இடம். அங்கே ஒரு கிணறு இருந்திருக்கிறது. அதனருகே பாரதியை அழைத்து வரும் குள்ளச்சாமி, ‘மேல பாரு’ என்று சொல்லவும் பாரதி அண்ணாந்து பார்த்திருக்கிறார்.

‘என்னா தெரியுது?’

‘சூரியன்.’

‘குனி. அப்புடியே கிணத்துத் தண்ணியப் பாரு.’

பாரதி பார்க்கிறார்.

‘இப்ப என்னா தெரியுது?’

‘அதே சூரிய வெளிச்சம்தான் தண்ணில விழுது.’

‘அவ்ளதான் மேட்டர். போ.’

சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். பாரதி எழுதுகிறார்:

தேசுடைய பரிதிஉருக் கிணற்றினுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தச் சித்தர் எப்போதும் சுமந்து வரும் அழுக்கு மூட்டை குறித்து பாரதி அவரிடம் கேட்டிருக்கிறார்.

‘எதுக்குங்க இந்த கப்படிக்கற மூட்டைய எப்பம்பாரு தூக்கிட்டுத் திரியறிங்க? சித்தர்னா இப்படித்தான் இருந்தாகணும்னு எதாச்சும் ரூல் இருக்குதா?’

அதற்குக் குள்ளச்சாமி சொல்கிறார், ‘டேய் நானாச்சும் வெளிய, முதுகுல தூக்கிட்டு சுத்தறேன். நீ உள்ளார இல்ல குவிச்சி வெச்சிருக்கற?’

புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தினுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ

– என்பது பாரதியின் விவரிப்பு. சம்பவங்களை, அவை நடந்த விதத்திலேயே கவிதையில் அவர் விவரிப்பதைப் படிப்பது பேரனுபவமாக இருக்கிறது.

பாரதி சந்தித்த இன்னொரு சித்தர், கோவிந்த சாமி. இவர் சற்று வேறு மாதிரி போலிருக்கிறது. கவிஞரை முதலில் திகைக்க அடித்துவிட்டு, அதன் பிறகுதான் உபதேசிக்கத் தொடங்கியிருக்கிறார். அதாவது, பாரதியின் (மறைந்த) தாய் தந்தையின் உருவத்தைத் தான் ஏந்தி அவர்முன் காட்சியளித்திருக்கிறார்.

‘செத்துப் போன உன் அப்பன் ஆத்தாள பாத்துக்க.’

இது எப்படி சாத்தியம்? பாரதியின் பெற்றோரை சித்தருக்குத் தெரியாது. அவர்கள் வாழ்ந்தது வேறு காலம். இறந்தவர்களின் உருவைத் தன் முகத்தில் ஏந்தி, அவர்களது பிள்ளைக்கு ஒரு மனிதன் காட்டினால் அவன் சுருண்டு காலில் விழுந்துவிட மாட்டானா?

அதுதான் நடந்திருக்கிறது.

… இறந்த எந்தை
தன்னுருவம் காட்டினான் பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி உடையனென்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனைக் குருவென நான் சரணடைந்தேன்
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்.

இதில் ‘மரணபயம் நீங்கினேன்’ என்கிற சொற்கள்தாம் சாரம். எதுவும் அழிவதில்லை; உடலைத் தவிர என்கிறது கீதை. இந்த சாமி அதை பாரதிக்குப் புரிய வைத்த விதத்தில் சிறிது மேஜிக் கலந்திருந்தாலும் சொல்ல நினைத்தது சரியாகச் சென்று சேர்ந்துவிட்டதுதான் முக்கியம்.

யாழ்ப்பாணச் சாமி என்ற மூன்றாவது சித்தரைக் குறித்து எழுதும்போது, தங்கத்தால் இழைத்துக் கோயில் கட்டி, லிங்கப் பிரதிஷ்டை செய்து நீங்கள் கும்பிடுகிறீர்கள். எனக்கு இவன் கண்கள் போதும். இவனைப் பார்ப்பதும் சிவனைப் பார்ப்பதும் எனக்கு ஒன்றுதான் என்று சொல்லிவிடுகிறார்.

பாரதியின் சித்தர் தொடர்புகளைத் தொட்டால் உடனே நம் நினைவுக்கு வருவது குள்ளச்சாமி அவருக்கு அபின் கொடுத்தார் என்கிற விவரம்தான். அதைத்தான் பல ஆய்வறிஞர்கள் விரித்து விவரித்துக் களித்திருக்கிறார்கள். வ.உ. சிதம்பரம் பிள்ளைகூடத் தனது புத்தகம் ஒன்றில் இது குறித்து மிக விரிவாகச் சொல்லி, அந்தக் கருமத்தை விட்டுத் தொலையப்பா என்று நண்பருக்கு அக்கறையுடன் அறிவுரை சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

குள்ளச்சாமியிடம் பாரதி பெற்றது அபின் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக பாரதியின் வாழ்வில் அந்தக் கட்டத்தைத் தோண்டி எடுத்து நாம் பெறுவது அது ஒன்றைத்தான்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

என்றும் இருக்கும் இனம்

By:Para
16 April 2025 at 04:00

Pa Raghavan

உங்களுக்கு இது மிகவும் சாதாரண விஷயமாகத் தோன்றலாம். தவறில்லை. ஆனால் எனக்கு அப்படியல்ல. முப்பது வருடங்களுக்கு மேலாக எழுதுவதைத் தவிர வேறெதையும் கருதாதவனுக்கு இது ஒரு சரித்திரத் தருணம். பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு பல விதங்களில் இது எனக்கு நிகழ்ந்திருக்கிறது என்றாலும் இந்தத் தருணம் முற்றிலும் வேறு விதமானது.

வாட்சப் சேனலில் மிருது என்றொரு கதையை எழுதத் தொடங்கினேன். சலம் போன்றதொரு உக்கிரமான நாவலை எழுதி முடித்த பிறகு நான் சமநிலைக்கு வருவதன் பொருட்டு ஆரம்பித்த மிக எளிய, நகைச்சுவையுடன் கூடிய காதல் கதை. எழுதிப் பிரசுரிப்பதில் இருந்து எட்டு மணி நேரம் மட்டுமே அத்தியாயம் சேனலில் இருக்கும். அதன் பிறகு டெலிட் செய்துவிடுவேன் என்று சொல்லியிருந்தேன். பெரிய காரணங்கள் ஏதுமில்லை. எழுதுவதில் எனக்கு இருக்கும் கமிட்மெண்ட், படிப்பதில் வாசகருக்கு இருக்க வேண்டுமென்கிற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. அவ்வளவுதான்.

பன்னிரண்டு அத்தியாயங்கள் அப்படித்தான் வெளியாயின. வெளியான வேகத்தில் படித்துவிட்டு வாசகர்கள் மதிப்புரைகளையும் கேலிச் சித்திரங்களையும் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சில நாள் பகல் பொழுதில் எழுதுவேன். சில நாள் மாலை வேளைகளில். சில நாள் இரவு. இதர வேலைகள் முடியும்போது மிருதுவை எழுதுவது என்று வைத்துக்கொண்டிருந்தேன்.

நேற்றிரவு மெட்ராஸ் பேப்பர் வெளியீடு தொடர்பான பணிகள் மிகவும் நேரம் இழுத்துவிட்டதால் மிருது அத்தியாயத்தை எழுத முடியவில்லை. ‘தாமதமாகும்; நள்ளிரவுக்குள் பிரசுரித்துவிடுவேன்’ என்று அறிவித்திருந்தேன். சொன்னபடி நள்ளிரவுக்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அத்தியாயத்தைப் பிரசுரித்தேன்.

அதில் சிறப்பேதுமில்லை. ஆனால், ‘நள்ளிரவு நெருங்குகிறது; அத்தியாயம் இன்னும் வரவில்லை’ என்று அதே நேரத்தில் ஒரு மின்னஞ்சல் வருகிறது. அத்தியாயம் பிரசுரமானதும், ‘அத்தியாயம் வந்துவிட்டது’ என்று அதே வாசகர் அக்னாலட்ஜ் செய்கிறார். அந்நேரத்தில் விழித்திருந்து அத்தியாயத்தைப் படித்துவிட்டு மூன்று பேர் மதிப்புரை எழுதுகிறார்கள். நான்கு மீம்கள் வருகின்றன. என்ன நடக்கிறது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.

ஒரு கதை நன்றாக இருக்குமானால் எங்கிருந்தாவது எப்படியாவது வாசகர்கள் தேடி வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நள்ளிரவுப் பொழுதில் உறக்கத்தை மறந்து காத்திருந்து படித்துவிட்டுக் கையோடு கருத்தும் எழுதுவார்கள் என்பது இக்காலக்கட்டத்தின் தன்மைக்குப் பொருந்தாதது. இது நிச்சயமாகவே நான் எதிர்பாராதது. எழுதுவதில் எனக்குள்ள கமிட்மெண்ட்டைக் காட்டிலும் படிப்பதில் வாசகர்களுக்கு இருக்கும் தீவிரம் உண்மையிலேயே என்னைத் திகைப்புறச் செய்தது.

முன்னொரு காலத்தில் கல்கி பத்திரிகையில் அலை ஓசை முதல் முறை தொடராக வெளிவந்தபோது, தனது கிராமத்து மக்கள் கல்கி பார்சல் வருவதற்காக ரயிலடியில் சென்று காத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். ஏதோ ஓர் அத்தியாயத்தில் யாரோ ஒரு கதாபாத்திரம் இறந்துவிட்டபோது, ‘அடியே, சீதா போயிட்டாடி…!’ என்று ஒரு கையில் கல்கியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு யாரோ ஒரு பெண் வீதிக்குள் கதறியபடியே ஓடி வந்த காட்சியை அவர் விவரிக்கும்போது பேச்சு மூச்சற்றுக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன்.

அது, கதைகள் கட்டி ஆண்ட காலம். இன்று அதெல்லாம் கற்பனையில் கூடச் சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. ஆனால் நமது எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் திரும்பத் திரும்பப் பாடும் ‘வாசகர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்’ என்னும் சோகப் பாடல் பொருளற்றது என்பதை நேற்று திடமாகக் கண்டுணர்ந்தேன். எழுதுபவனும் எழுத்தும் சரியாக இருக்குமானால் படிப்பதற்கு வாசகர்கள் எல்லா தலைமுறையிலும் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களைச் சரியாகச் சென்றடைகிறோமா என்பதுதான் விஷயம்.

சலம் புத்தக ஆக்கம் முடிந்து, அச்சுக்குப் போனபின்பு, அத்தனை பெரிய நாவல், அவ்வளவு விலைகூடிய புத்தகத்தை எத்தனை பேர் உடனே வாங்கிப் படிக்க நினைப்பார்கள் என்று சிறிது கவலைப்பட்டேன். கெட்டி அட்டைப் பதிப்பைக் குறைவாகவும் சாதாரண பதிப்பைச் சிறிது அதிகமாகவும் வெளியிட்டுப் பார்க்கலாம் என்று என் பதிப்பாளரிடம் சொன்னேன். ஆனால் முன்பதிவு அறிவிக்கப்பட்டபோது நடந்தது முற்றிலும் வேறு. என் கணிப்புக்கு நேர் மாறாக, விலை கூடிய கெட்டி அட்டைப் பதிப்பினைத்தான் வாசகர்கள் அதிக அளவில் விரும்பிப் பதிவு செய்திருந்தார்கள். இரு விதப் பதிப்புகளுக்கும் ஆர்டர் செய்திருந்த மொத்த வாசகர்களின் எண்ணிக்கை அதைக் காட்டிலும் ஆச்சரியமளித்தது. இப்போது நான் அதை வெளியிடப் போவதில்லை. புத்தகம் வெளியாகும் நாளில் புகைப்படங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

சொல்ல வந்தது இதுதான். வாசகன் இறந்துவிட்டான் என்பது இலுமினாட்டிகளின் பொய்ப் பிரசாரம். உலகுள்ள வரை அவன் இருப்பான். இனி என்றென்றும் எனக்கு இக்கவலை இராது.

நேற்றைய எனது நள்ளிரவுப் பொழுதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி செய்துவிட்ட வாசகர்கள் ரவி அர்விந்த், காந்தி பாபு, வினோத்குமார் சுப்பிரமணியன், வெங்கடேசன் சிங்கபுத்திரன், சத்தியநாராயணன் ஆகியோருக்கு என் தீரா அன்பு.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

கண்டெடுத்த வரிகள்

By:Para
13 April 2025 at 17:35

Pa Raghavan

ஒரு நாவலை எழுதியவன் எதிர்கொள்ளும் வினாக்களுள் ஆகக் கொடூரமானது, இந்நாவல் எதைப்பற்றிப் பேசுகிறது? சுருக்கம் என்ன?

எல்லா நாவல்களுக்கும் இது வரத்தான் செய்கிறது. தவிர்க்க முடியாது. வாசிப்பு என்னும் செயல்பாடு ஒரு கிரகத்திலும் மக்கள் இன்னொரு கிரகத்திலும் வசிக்கும் வினோதமான தீபகற்பத்தில் நாம் வாழ்வதில் உள்ள சிக்கல் இது.

கீழே உள்ள வரிகள், சலம் நாவலில் இருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை என் பதிப்பாளர் ராம்ஜி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தினமும் ஒன்றிரண்டாகப் பிரசுரித்து வந்தார். இந்த வரிகள் இந்நாவலின் தன்மையை ஓரளவு உங்களுக்குச் சுட்டிக்காட்டலாம். ஓரளவுக்குத்தான். நாவல் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது. முன்பதிவு செய்தோர் அனைவருக்கும் அன்றே அனுப்பிவைக்கப்பட்டுவிடும். படித்தவர்கள் பேசத் தொடங்கும்போது சர்சுதி மீண்டும் ஊற்றெடுத்துப் பாயத் தொடங்கும்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

இடமும் இருப்பிடமும்

By:Para
11 April 2025 at 05:08

Pa Raghavan

யதியின் முதல் பதிப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு புதிய பதிப்பகம் தொடங்கி, அதன் வாயிலாக வெளியிட்டது. பொதுவாக எனக்கு இந்தப் பத்திரிகைகள் பதிப்பகம் தொடங்குவது சார்ந்து, கசப்புணர்வு உண்டு. கூடாது என்பதல்ல. ஆனால் தெரியாத ஒன்றில் கை வைத்துக் கெடுப்பது தொழில் என்ற அளவில் அவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதைப் பத்திரிகை நிறுவனங்கள் உணர்வதேயில்லை.

எல்லாம் காலச்சுவடு-விகடனைப் பார்த்துத்தான் செய்ய ஆரம்பித்தார்கள். விகடன் வென்றதன் காரணம், பதிப்புக்கென்று அவர்கள் பொருத்தமான ஆசிரியர்களையும் விற்பனை அதிகாரிகளையும் கண்டறிந்து நியமித்தது. காலச்சுவடு குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இரண்டையும் ஒரே தரத்தில் வைத்துக் காக்க முதல் நாளிலிருந்தே மெனக்கெடுபவர்கள். ஆனால், அச்சடிக்கும் இயந்திரம் பொதுவானது என்கிற கருத்தின் அடிப்படையில் மட்டும் பதிப்பகம் தொடங்கும் தினசரி, வார, மாத இதழ்கள் ஆரம்பிக்கும் எந்தப் பதிப்பகமும் பெரிய அளவில் வென்றதற்கு இங்கே வரலாறில்லை. புத்தகக் கண்காட்சிகளில் அந்தப் பத்திரிகைகளின் வாசகர்கள் அரங்குக்கு வருவார்கள். தொடராக வந்தபோது விரும்பிப் படித்திருந்தால் புத்தகமாகவும் வாங்குவார்கள். மற்றபடி ஆண்டு முழுவதும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் தேங்கிக் கிடக்கும். விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னாலும் வாங்கிப் படித்தேன் என்று சொல்ல யாரும் தென்பட மாட்டார்கள்.

எனக்கு மூன்று முறை இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறது. தினமலரில் வெளியான ஒரு தொடரை அவர்களே புத்தகமாக வெளியிட்டார்கள். காணாமல் போனது. ஆனால் விற்ற வரை ராயல்டி கொடுத்தார்கள். இந்து நாளிதழில் ஒன்று. அதுவும் அப்படியே. தினமணியில் யதி. எவ்வளவு விற்றதென்றும் தெரியவில்லை; ராயல்டி என்ற ஒன்று அங்கிருந்து இக்கணம் வரை வந்ததில்லை. இந்த மூன்று புத்தகங்களின் பதிப்புரிமையைத் திரும்ப வாங்கி இரண்டாம் பதிப்பாக என் வழக்கமான பதிப்பு நிறுவனம் மூலமாகக் கொண்டு வந்தபோதுதான் அவை நியாயமான விற்பனையையும் வரவேற்பையும் கண்டன. பரவலாகவும் செய்தன.

இதனாலேயே பத்திரிகைத் தொடர் என்று யார் கேட்டாலும் இப்போதெல்லாம் மிகவும் யோசிக்கிறேன். தொடர் முடிந்ததும் நாங்களேதான் புத்தகம் போடுவோம் என்பதைத்தான் இரண்டாவது வரியாகச் சொல்கிறார்கள். ஒரு புத்தகம் வந்தால் போதும் என்று நினைக்கும் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கு இது சரி. எல்லோருக்கும் உகந்ததல்ல.

சலம் எழுதவிருக்கிறேன் என்று அறிவித்ததும் யதியை நினைவுகூர்ந்து இதைத் தொடராக வெளியிடுகிறோம் என்று உடனே ஒரு பத்திரிகை நிறுவனம் கேட்டது. அதே நிபந்தனைதான். புத்தகத்தை நாங்களே வெளியிடுவோம். மறுத்துவிட்டேன். அம்மாதிரி நிபந்தனை ஏதுமில்லாமல் தொடராக வெளியிடுவதாக நண்பர் பரிசல் கிருஷ்ணா சொன்னார் (புதிய தலைமுறை இணையம்). ஆனால் சலத்தை மெட்ராஸ் பேப்பரில் வெளியிடுவது பத்திரிகைக்கு நல்லது என்று சொன்னவர் என் மனைவி. அது நியாயமென்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன். உங்களுக்கென்று ஒரு பத்திரிகை இருக்கும்போது இன்னொரு பத்திரிகைக்கு உங்கள் எழுத்தைக் கொடுக்காதீர்கள் என்று மாமல்லனும் சொன்னார்.

உண்மையில் மெட்ராஸ் பேப்பர் நான் எழுதுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை அல்ல. அது முற்றிலும் என் மாணவர்களுக்கும் நான் மதிப்பவர்களுக்கும் மட்டுமானது. அது அவர்களுடைய களம். அப்படி நினைத்துத்தான் தொடங்கினேன். அதில் தினசரிப் பகுதி ஆரம்பிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்தமாக சலத்தை அதில் வெளியிட்டுப் பார்க்க நினைத்தேன். அப்போது அத்தியாயக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் மனம் இழுத்துச் சென்ற திசையெல்லாம் பரவி எழுதிக்கொண்டிருந்தேன். அன்றாடப் பிரசுரத்துக்கு அதிலிருந்து பகுதி பகுதியாகப் பிய்த்துக் கொடுத்ததுடன் சரி. பிறகு புத்தகமாக்க அமர்ந்த போதுதான் முறையாக எடிட் செய்து நியாயமான அத்தியாய எல்லைகளை வகுத்தேன்.

இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. சொந்த வீட்டில் வசிப்பவனின் சொகுசுகளோடு இதனை ஒப்பிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் எழுதும்போது எழுத்துக்கு அப்பாற்பட்ட கவலைகளும் அச்சங்களும் இல்லாதிருப்பது பெரிதென்று நினைக்கிறேன்.

இனி பத்திரிகைத் தொடர் என்றால் மெட்ராஸ் பேப்பர் போதும் என்று தோன்றிவிட்டது. முன் சொன்ன காரணம்தான். மிகப்பெரிய பத்திரிகைகள் தொடங்கி, சின்னஞ்சிறு பத்திரிகைகள் வரை எல்லோருமே ஆளுக்கொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். வெளியாகும் தொடர்களை அதில்தான் புத்தகமாக வெளியிடுவோம் என்கிறார்கள். எனக்கு இதில் அணுவளவும் உடன்பாடில்லை. ஓர் எழுத்தாளனின் புத்தகங்கள் ஒரே இடத்தில் எப்போதும் வாங்கக் கிடைப்பதுதான் சரி. அது, அவனைத் தேடிப் படிக்க வரும் வாசகருக்கு அவன் செய்துதரும் குறைந்தபட்ச வசதி. எழுதுகிற ஒவ்வொரு நூலையும் வேறு வேறு பதிப்பகங்களுக்குத் தருகிற எழுத்தாளர்கள், புத்தகக் காட்சி சமயம் எந்தெந்தப் புத்தகங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று நீளமாகப் பட்டியல் போடுவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படும். தமிழைத் தவிர வேறெங்கும் இந்த அபத்தம் நிகழ்வதில்லை என்று நினைக்கிறேன். நமக்கென உள்ள சிறுபான்மை வாசகர் சமூகத்தை வீதி வீதியாக அலையவிடுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.

புத்தகப் பதிப்பு என்பது வேறு; பத்திரிகைப் பதிப்பு என்பது வேறு. இரண்டின் வாசகர்களும் வர்த்தகமும் முற்றிலும் வேறு. நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் இரண்டும் புத்தகமாக வெளிவந்து எத்தனை பதிப்புகள் கண்டன என்ற எண்ணிக்கையே எனக்கு நினைவில்லை. இன்று வரை ஆண்டு தவறாமல் அவை மறு அச்சு கண்டுகொண்டேதான் இருக்கின்றன. நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகமாக எழுதிய கணை ஏவு காலம் தமிழ் இந்துவில் தொடராக வந்தபோது நிலமெல்லாம் ரத்தம் அளவுக்கே பேசப்பட்டது; பாராட்டப்பட்டது. ஆனால் அவர்களே அதைப் புத்தகமாக வெளியிட்டபோது போகவேயில்லை. 1993 ஆம் ஆண்டு என் முதல் புத்தகத்துக்குக் கிடைத்ததைக் காட்டிலும் குறைவான ராயல்டி வந்ததில், திகைத்துவிட்டேன். புத்தகத்தை அவர்களிடமிருந்து வாங்கி, ஜீரோ டிகிரியில் இரண்டாம் பதிப்புக்குக் கொடுத்தபோதுதான் கணை சரியாகச் செலுத்தப்பட்டது உறுதியானது.

பத்திரிகைகளால் ஏன் வெற்றிகரமாகப் பதிப்பகப் பணியைச் செய்ய முடிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, பத்திரிகை என்பது அன்றில் வாழ்வது. புத்தகம் என்பது என்றும் இருப்பது. அதை மனத்தில் கொண்டு உள்ளடக்கம் முதல் உருவம் வரை வடிவமைக்கப்பட வேண்டும். இது பத்திரிகை ரத்தம் ஊறியவர்களால் நிச்சயமாக முடியாது. அதைப் போலவே, புத்தக விற்பனை என்பது பத்திரிகை விற்பனையைப் போல உடனே நிகழ்வதல்ல. நீடித்த பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். அது இங்கே கிடையாது. அனைத்தினும் முக்கியம், புத்தகத்துக்கான வாசகர்கள் யாரென்று தெளிவாகத் தெரிந்திருப்பது. பல லட்சம் பேர் பத்திரிகை படிப்பவர்கள் இருக்கலாம். புத்தகம் படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்கள்தாம். அவர்களைத் துல்லியமாகச் சென்றடைவது என்பது கலையும் நுட்பமும் கலந்ததொரு தனி இயல்.

எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன். முன்பெல்லாம் எந்தப் பத்திரிகையிலாவது தொடர் எழுத அழைத்தால் அக்கணம் என் உறக்கம் தொலைந்துவிடும். திட்டமிடுவதில் தொடங்கி, எழுதி நிறைவு செய்வது வரை மறு சிந்தனையே இல்லாமல் அதிலேயே மூழ்கிப் போய்விடுவேன். இனி அந்த எண்ணம் இல்லை; எனவே அக்கவலையும் இல்லை. ஒன்று மெட்ராஸ் பேப்பரில் எழுதுவேன். அல்லது இங்கே எழுதுவேன். அல்லது நேரடியாகப் புத்தகமாக.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

விழாதவன்

By:Para
6 April 2025 at 00:30

Pa Raghavan

சலம் வெளியீட்டு விழா எங்கே? எப்போது?

முன்பதிவு ஆரம்பமானதிலிருந்து பலபேர் தொடர்ச்சியாக இதனைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். விழாவின்போது நேரில் சந்தித்துப் பெற விரும்புவதாகவும் சிலர் சொன்னார்கள். அனைவருடைய அன்புக்கும் என் நன்றி.

ஆனால் முன்பே பலமுறை சொல்லியிருக்கிறேன். எனக்குப் புத்தக விழாக்களில் நம்பிக்கை இல்லை. நான் வெளியீட்டுக்கு விழாவெல்லாம் வைப்பதில்லை. என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு விழா நடந்தது. அது என் மனைவியின் ஏற்பாடு. அதன் பிறகு எப்போதும் விழா நடந்ததில்லை; நான் அதை விரும்புவதும் இல்லை. சம்பந்தமில்லாத யாரோ ஒரு பிரபலம் வந்து வெளியிட, இன்னொரு பிரபலம் முதல் பிரதி பெற, மூன்றாவது பிரபலம் இன்னும் நான் படிக்கவில்லை என்று ஆரம்பித்துப் பத்து நிமிடங்கள் பேச, அதையும் கேட்டுத் தொலைக்க வாசகர்களுக்கு என்ன தலையெழுத்து?

எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் இடையில் புத்தகம் மட்டும் போதும். பிரசாரகர்கள் தேவையில்லை. ஒரு புத்தகத்துக்கு நேர்மையாகப் பிரசாரம் செய்யத் தகுதி படைத்தவர்கள் இரண்டு பேர். எழுதியவரும் வெளியிட்டவரும். மூன்றாம் தரப்பென்பது எப்போதும் இடைஞ்சலே. நான் இங்கே எழுதுகிறேன். ராம்ஜி தொடர்ந்து சலத்தில் அவரைக் கவர்ந்த வரிகளை அவரது பக்கத்தில் பிரசுரம் செய்து வருகிறார். போதுமே? எனவே சலத்துக்கு வெளியீட்டு விழாவெல்லாம் கிடையாது.

எப்போதும் போலப் புத்தகம் அச்சாகி வந்ததும் முன்பதிவு செய்யும் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டு அனுப்புவதற்கு ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் செல்வேன். என்னைப் பொறுத்தவரை விழா என்பது அதுதான். வெறும் விழா அல்ல அது. திருவிழா. எழுத்தாளனுக்கும் அவனை விரும்பும் வாசகர்களுக்கும் இடையிலுள்ள உள்ளார்ந்த உறவு நிகரற்றது. மூன்றாவது மனிதர்களால் புரிந்துகொள்ள இயலாததும்கூட. எனக்கு அது போதும். இன்றல்ல. என்றென்றும்.

ஒரு விழா என்பது வாசகர்களும் எழுத்தாளரும் நேரில் சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பில்லையா என்று ஒருவர் கேட்டிருந்தார். அது உண்மைதான். ஆனால் என்னைச் சந்திப்பதெல்லம் ஒரு பெரிய விஷயமா? யாரும் எப்போது வேண்டுமானாலும் சொல்லிவிட்டு, நேரம் குறித்துக்கொண்டு என் அலுவலகத்துக்கு வரலாம். சந்தித்துப் பேசலாம்.

அவ்வளவு ஏன், புத்தகம் தயாரானதும் முன்பதிவு செய்திருப்போரின் பிரதிகளில் கையெழுத்திட என்றைக்கு ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் செல்லவிருக்கிறேன் என்பதை நிச்சயமாக இங்கே அறிவிக்கத்தான் போகிறேன். ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அன்றைக்கு அங்கே நேரில் வந்து சந்தித்துப் பெற்றுக்கொண்டால் போயிற்று.

வாசகர்களைச் சந்திக்க எப்போதும் விரும்புகிறேன். எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கவே செய்கிறேன். ஆனால் என்றைக்குமே புத்தக வெளியீட்டு விழா மட்டும் வைக்க மாட்டேன்.

அது வெறும் நேர விரயம். சமோசா விரயம்.

நிற்க. ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சலத்தின் இரு பதிப்புகளுக்கும் முன்பதிவு செய்யலாம். முப்பது சதவீதச் சலுகை விலையில் புத்தகம் உங்களை வந்தடையும். முன்பதிவு செய்வோர் அனைவருக்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டு அனுப்பி வைப்பேன். இதில் மாற்றமில்லை. முன்பதிவுச் சுட்டிகள் கீழே உள்ளன.

சலம் முன்பதிவுச் சுட்டிகள்:

Paperback Edition
HardCover Edition

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

சலம் முன்பதிவு ஆரம்பம்

By:Para
4 April 2025 at 15:27

Pa Raghavan

சலம் முன்பதிவை நேற்று தொடங்கி வைத்த வாசக நண்பர்களுக்கு நன்றி.  ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் இயக்குநர் சமுத்திரக்கனி இதன் முன்பதிவுச் சுட்டிகளை வெளியிட்டு வாழ்த்தினார். மகிழ்ச்சியாக இருந்தது.

எவ்வளவோ எழுதுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். எல்லாமே இருப்பதன் பொருட்டு நிகழ்வது. ஆனால், நாம் இருந்ததன் நியாயத்தை நமது காலத்துக்குப் பிறகு சொல்வதற்கு ஒவ்வோர் எழுத்தாளனும் ஒன்றை எதிர்பார்த்து நிச்சயமாகத் தவமிருப்பான். எனக்கு இது, அது.

ஆகக் கூடியவரை பிழையற்ற பதிப்பாக, இம்மியளவும்  நேர்த்தி குலையாத பதிப்பாக, தூக்கி வைத்துக்கொண்டு பிரித்துப் படிக்கையில் ஓரங்களில் எழுத்து ஒளிந்துகொண்டு  சிரமம் தராத பதிப்பாக, அனைத்தினும் முக்கியமாகக் கண்ணை உறுத்தாத வடிவத்தில் இது அமைவதற்கு என்னால் முடிந்த வரை முயற்சி செய்திருக்கிறேன். தயாரிப்புப் பணிகளின்போது ஜீரோ டிகிரி ஊழியர்களைக் கிட்டத்தட்ட சித்திரவதையே செய்திருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வருத்தமாகவும் சிறிது வெட்கமாகவும்கூட இருக்கிறது. வேறு எந்த எழுத்தாளரும் ஒரு பதிப்பாளரை இவ்வளவு இம்சிக்க இயலாது. எதற்குமே முகம் சுளிக்காமல் கேட்ட அனைத்தையும் செய்தளித்த ராம்ஜியை இந்நேரத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். உடன் இருந்து உதவிய வித்யா, செல்வகுமார், மகேஷ், விஜயன், ராஜன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

ஆயிரம் ரூபாய்க்கு மேலே விலை கூடிய ஒரு நாவலை எத்தனை பேர் ஆர்வமுடன் வாங்கிப் படிக்க நினைப்பார்கள் என்கிற – கவலையல்ல – சிறிய யோசனை நேற்று காலை வரை இருந்தது. கெட்டி அட்டைப் பதிப்பினும் வழக்கமான பதிப்பைத்தான் அதிகம் பேர் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. நேற்றிரவு ராம்ஜி அளித்த புள்ளி விவரம் வேறு விதமாக இருந்தது. நேற்று நாளெல்லாம் நண்பர்கள் முன்பதிவு செய்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். எல்லோருக்கும் என் அன்பு.

இரண்டு வினாக்கள் நேற்று அதிகம் கேட்கப்பட்டன.

1. இந்த முப்பது சதவீத விலைக் குறைப்பு இந்தப் பத்து நாள்களுக்கு மட்டும்தானா? பிறகு இருக்காதா?

2. வெளியீட்டு விழா எப்போது, எங்கே? நேரில் சந்தித்துக் கையொப்பமுடன் பிரதியைப் பெற விரும்புகிறேன்.

இதில் முதல் வினாவுக்கு மட்டும் இப்போது பதிலளித்துவிடுகிறேன். விலைச் சலுகை இந்தப் பத்து நாள்களுக்கு மட்டும்தான். அதன் பிறகு வழக்கமான பதிப்பின் விலை ரூ. 1000 ஆக இருக்கும். கெட்டி அட்டைப் பதிப்பின் விலை ரூ. 1200. முப்பது சதவீதத் தள்ளுபடி விலை என்பது முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே.

இரண்டாவது வினாவுக்குச் சிறிது விளக்கமாக பதிலெழுத நினைக்கிறேன். எனவே தனியாக, பிறகு.

சலம் முன்பதிவுச் சுட்டிகள் கீழே உள்ளன. ஏப்ரல் 13 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். சித்திரை பிறந்ததும் நூல் உங்களை வந்தடையும்.

  1. Paperback Edition
  2. HardCover Edition

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

தொடர்பு எல்லைக்கு அப்பால் வசித்தல்

By:Para
28 March 2025 at 05:21

Pa Raghavan

ஜெயமோகனின் இந்தக் குறிப்பும் இதன் கீழே தரப்பட்டுள்ள இளங்கோ கிருஷ்ணனின் குறிப்பும் மிகவும் முக்கியமானவை. சொல் ஊன்றிப் படித்துப் பாருங்கள். சமூக ஊடகங்களின் மீது கலைஞர்களுக்கு வரக்கூடிய இயல்பான விலகலும் அச்சமும் சந்தேக உணர்வும் சேதாரங்கள் சார்ந்த வருத்தமும் புரிந்துகொள்ளப்படக்கூடியவைதாம். படைப்பூக்கத்தைக் கெடுக்கும் எவ்வித சக்தியானாலும் விட்டு விலகிச் சென்றுவிட விரும்புவதே எந்தக் கலைஞனும் விரும்பக் கூடியது.

ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளமும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இதர கலைஞர்கள் செயல்படுவதற்கான இடமல்ல. மாறாக, செய்தவற்றை, செய்பவற்றைப் பற்றிய தகவல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. அதற்காக அவற்றைக் கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டுமா என்றால், இன்றைய சூழ்நிலையில் வேறு வழியில்லை. ஓர் எழுத்தாளன், சிறுபான்மை சமூகத்தவரான வாசகர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ள உதவும் ஒரே வழி அதுதான். அதை எதற்கு மூடி வைக்க வேண்டும்?

எழுத்தாளன் என்பவன் ஒரு மனிதனும் கூட. அவன் ஒரு மகன். கணவன். தந்தை. வேலை பார்த்து சம்பளம் வாங்கும் ஊழியன். அதிகாரி. அறிவாளி. அசடன். மூடன். ஞானி. சோம்பேறி. தலைவன். தொண்டன். நண்பன். எதிரி. நல்லவன். கெட்டவன். வாழ்வில் எவ்வளவோ சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப, இடங்களுக்கேற்ப, மனநிலைக்கேற்பத் தயாரித்து அணிந்துகொள்ளும் முகங்களில் ஒன்றாக இதனையும் கருத முடிந்துவிட்டால் போதும். சிக்கலே இல்லை. சமூக வெளியில் கலைஞன் ஒரு வேடிக்கை பார்ப்பவன் மட்டுமே.

நான் சமூக வெளியை எப்படிக் கையாள்கிறேன்?

1. மிக நிச்சயமாக ஒரு ஷோ-கேஸாக மட்டும்.

2. இளைப்பாறலுக்காக மட்டும்.

3. மொழி சார்ந்த சில எளிய பயிற்சிகளைச் செய்து பார்க்க மட்டும்.

4. பொது மனநிலையை அவ்வப்போது மென்மையாகக் கிளறிப் பார்த்து, விளைவுகளைக் கவனிப்பதற்கு மட்டும்.

5. நான் வாழும் காலம் எவ்வாறெல்லாம் உருமாறி வருகிறது என்று தெரிந்துகொள்வதற்காக மட்டும்.

தீவிரமாக எதையும் நான் சமூக வெளியில் எழுதுவதில்லை. முக்கியமாக அரசியலை அறவே தவிர்க்கிறேன். என்னை மீறி ஒரு சில சந்தர்ப்பங்களில் அரசியல் பேசப் போகும்போது பெரும்பாலும் அது கொதிநிலையைத் தாண்டி வெடிநிலையைக் கண்டுவிடுவதை விழிப்புணர்வுடன் கவனித்திருக்கிறேன். அதனாலேயே தவிர்ப்பதில் கவனம் செலுத்துகிறேன்.

அதேபோல, மறுமொழிகளைப் பொருட்படுத்துவதில்லை. பொருட்படுத்தத்தக்க எதிர்வினை என்பது எப்போதாவது வருவது. அவற்றுக்கு உடனடியாக பதிலளிக்கிறேன். மற்றபடி அருமை, சூப்பர், கண்கள் பனித்தன வகையறாக்களை அப்படியே விட்டுவிடுகிறேன். இதை அகம்பாவமாகக் கருதும் பலர் என்னை விட்டு விலகிச் சென்றிருக்கிறார்கள். அது குறித்தும் கவலை கொள்வதில்லை. மிக மிகச் சிறிய இவ்வாழ்வில் நாம் செயலாற்றுவதற்கான நேரம் அதனினும் சொற்பமானது. அதையும் இப்படி வீணடிப்பது பாவமென்றே கருதுகிறேன்.

இன்னொன்று. அல்காரித அடிப்படையில் ஃபேஸ்புக்கில் பொருத்தமில்லாத நபர்களுக்கு என் குறிப்புகள் சென்று சேரும்போது வருகிற தடாலடி மறுமொழிகள் சம்பந்தப்பட்டது. உண்மையில் அவை எனக்கு ஸ்டிரெஸ் பர்ஸ்டர். அவற்றை வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது எப்படி அனுபவிப்பேனோ அப்படி அனுபவித்து ரசிக்கிறேன்.

இந்த விஷயத்தில் நகைச்சுவை அம்சத்துக்கு அப்பால் மிகப்பெரிய லாபம் ஒன்றும் உள்ளது. நாம் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்கிற எண்ணம் எல்லா எழுத்தாளர்களுக்கும் எப்போதாவது நிச்சயமாக வரும். அது கணப் பொழுது அகம்பாவமாக உருவெடுத்து நிற்கும். அப்படி அது உருவெடுக்கும்போதெல்லாம் மேற்படி அறியாத வட்டத்துப் புதிய மறுமொழிஞர்களின் சொற்கள் எனக்கு ஞானமளிக்கின்றன.

‘டேய், யார்றா நீ’ என்று தொடங்குவார்கள். சட்டென்று சாதியைத் தாவிப் பிடிப்பார்கள். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் ‘போடா சங்கி’ என்பார்கள். அல்லது இருநூறு ரூபாய் உபி என்பார்கள். ‘யோவ் பெரிசு, அடங்குய்யா’ என்பார்கள். அவர்களிடம் உள்ளதெல்லாம் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று வசைகள்தாம். அவர்கள் வாசகர்கள் அல்லர். தினத்தந்திகூடப் படிக்காதவர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஒவ்வொருவருக்கும் சொரிந்துகொள்வதற்கு ஏதோ ஒரு சுவர் இருக்கும். அதற்கு முதுகையும் நமக்கு முகத்தையும் கொடுத்து நிற்பார்கள்.

உண்மையில் பெரும்பான்மை சமூகம் என்பது அதுவே. ‘என் வாசகர்கள், என் ரசிகர்கள், என் வட்டம்’ என்பதெல்லாம் வெறும் மாயை அன்றி வேறல்ல. மனிதர்களில் சிறுபான்மையினரான வாசகர்களின் கூட்டத்தில் என்னைப் படிக்கவும் ஓரிருவர் உள்ளார்கள் என்ற அளவோடு நிறைவடைந்து விலகிக்கொள்கிறேன். இந்த ஞானம் பெரிதல்லவா? இது சமூக வெளியை அன்றி வேறெங்கும் கிடைக்காது.

என்னுடைய மாணவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இவைதாம்:

1. சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டிருங்கள். ஆனால் உங்கள் செயல்பாடென்பது எழுத்து சார்ந்த உங்களுடைய பயிற்சியாகவும் பரீட்சைகளாகவும் மட்டுமே இருக்க வேண்டும். கோடிக்கணக்கான மனிதர்களால் நிறைந்த அவ்வெளியில் உங்களுடைய பிரத்தியேக வாசகர்கள் வந்து சேரும்வரை பொறுமை காப்பது அவசியம்.

2. விமரிசனம் செய்யாதீர்கள். அரசியல், சினிமா, புத்தகங்கள் எதுவானாலும் சரி. விமரிசன மனோபாவம் எழுத்தாளனைக் கொல்லும். செய்தே தீர வேண்டுமென்றால் சமூக ஊடகங்களில் செய்யாதீர்கள். தனியே வேறெங்காவது ரகசியமாகச் செய்துகொள்ளுங்கள்.

3. நீங்கள் எழுதிப் பார்க்க / பயிற்சி செய்யத்தான் சமூக ஊடகம். அதில் வருகிற பிறவற்றைப் படித்துப் பொழுதை நாசம் செய்யாதீர்கள். அப்படியானால் உன்னை மட்டும் நான் ஏன் படிக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் எகிறும். கண்டுகொள்ளாதீர்கள். பயிற்சியாக நீங்கள் எழுதுவது சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்குமானால் திருட்டுத்தனமாகவேனும் வந்து படித்துவிட்டுப் போகத்தான் செய்வார்கள்.

4. யாருமே உங்களைப் படிக்காவிட்டாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் அங்கே இருப்பது, உங்கள் பயிற்சிக்குத்தானே தவிர, அடுத்தவர் அபிப்பிராயத்துக்கல்ல.

5. இறுதியாக. கும்பல் என்றால் இரைச்சல் இருக்கத்தான் செய்யும். சாமர்த்தியம் இருக்குமானால் அதை ஒரு சிறந்த தியானப் பொருள் ஆக்கிக்கொள்ள முடியும்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

❌