Normal view

Received yesterday — 6 June 2025விருட்சம் நாளிதழ்

எஸ்.கோபாலகிருஷ்ணன்/கொம்பில் புல்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 18

விகாஸ் அப்பார்ட்மெண்ட் மூன்றாவது மாடி. ஃபிளாட்டின் பால்கனியிலிருந்து
காலியாயிருந்த பக்கத்து மனையைப் பார்த்துக் கொண்டிருந்தார் நாராயணன். தினமும்
காலையில் வேலைக்குப் போகும் முன் சில நிமிஷங்கள் கவனிப்பார். சனி, ஞாயிறு
விடுமுறை நாட்களில் மணிக்கணக்கில் பார்ப்பதில் பொழுது போவதே தெரியாது.
நாராயணன் வயது 52. தலையில் முடி உதிர்காலம். கொஞ்சம் நரை. 25 வயதில் வேலை
வாய்ப்புகள் அதிகம் இருந்த ஒசூருக்கு வேலை தேடி வந்தார். மெக்கானிகல்
இஞ்சினீயரிங்கில் டிப்ளமா, சென்னையில் சில வருஷங்கள் தற்காலிக வேலை பார்த்த
அனுபவம் இரண்டும் நல்ல வேலை கிடைக்க உதவியது. பெற்றோர்கள் சிவபதவி
அடைந்துவிட்டனர். தம்பி தங்கைகள் இருந்த பெரிய குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய
பெரும் பொறுப்பு அவருக்கு இருந்தது. சென்னையில் நிரந்தரமான வேலை
கிடைக்கவில்லை. ஒசூர் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் நகரமாக மாறிக் கொண்டிருந்த
சமயம். மும்பையிலிருந்து வந்த தொழிலதிபர்கள் நிறுவிய அந்த தொழிற்சாலையில்
எதிர்பார்த்த சம்பளத்துடன் மெக்கானிக் வேலை கிடைத்தது.
ஒசூரின் இதமான தட்ப வெப்ப நிலை பிடித்திருந்தது. மளிகை, காய்கனி விலைகள்
நகரங்களை விடக் குறைவு. சிக்கனமாகக் குடும்பம் நடத்தி இரண்டு தங்கைகளுக்குத்
திருமணம் முடித்தார். தம்பிகள் பட்டப்படிப்பும் முடித்து வேலை, திருமணம் என்று பிற
ஊர்களில் வாழ்க்கை அமைத்துக் கொண்டார்கள். கடமைகள் முடிந்தபின் அவர் திருமணம்
செய்துகொண்ட போது வயது 32.
இப்போது அவர் சூபர்வைசர். மனைவி லக்ஷ்மி, மகன் ராஜன் வயது 17 மகள் ரம்யா
வயது 15. அளவான நிறைவான குடும்பம். ப்ளஸ் டூ முடிக்கப் போகும் மகனை
இஞ்சினீயரிங் படிப்பில் சேர்க்க வேண்டும், இப்போது பத்தாவது படிக்கும் மகளையும்
நன்றாகப் படிக்கவைத்து சிறப்பாகத் திருமணம் செய்ய வேண்டும். அடுத்த பத்து
வருஷத்துக்குள் பல லட்சங்களுக்குக்கான செலவுகள் காத்திருந்தன.
அப்பார்ட்மெண்ட்டுகள் அவ்வளவாக பிரபலம் ஆகாத காலத்தில் அவர் பட்ஜெட்டில்
கிடைத்த இந்த ஃப்ளாட்டுக்கான ஈ எம் ஐ இன்னும் ஐந்து வருஷங்கள் கட்ட வேண்டும்.
சேமிப்பும் ஓரளவுக்கு இருந்தது. இதே மாதிரியான நிதானமான நீரோட்டமுள்ள ஓடை
போல வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தால் பரவாயில்லை. சமாளித்து விடலாம். ஆனால்….
அப்பார்ட்மெண்ட் பக்கத்தில் ஐந்தாறு ஏக்கர் பரப்பில் ஒரு பெரிய காலி மனை
விற்பனைக்கு இருந்தது. ஒரு காலத்தில் விவசாயம் சிறப்பாக நடந்துகொண்டிருந்த நிலம்.
நேஷனல் ஹைவே அருகில் இருந்ததால் அதன் மதிப்பு பல கோடிகள். நில உரிமையாளர்
நல்ல விலைக்காகப் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார். விவசாயமாவது
செய்திருக்கலாம். வளமான பூமி. புல், புதர்கள், செடி, கொடி வகைகள் நன்றாக செழித்து
வளர்ந்து கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியை வாரி வழங்கின. எங்கெங்குக் காணினும்
பசுமையடா என்று பாடலாம்.
பால்கனியில் உட்கார்ந்து அந்த பசுமையைப் பார்த்துக்கொண்டே இருப்பார்
நாராயணன். விடுமுறை நாட்களின் பெரும்பகுதி அங்கே தான். அலாதியான நிம்மதி
கிடைக்கும். முறையான வேலி இல்லாததால் பசுமாடுகள், செம்மறியாடுகள் அங்கு
மேயும். வித விதமான பறவைகளையும் பார்க்க முடியும். சில குறிப்பிட்ட மாதங்களில்
ஒட்டகங்கள் வரும். மாடுகளில் தான் எத்தனை நிறம்! தூய வெண்மை, கருப்பு, பழுப்பு,
திட்டாக கறுப்புப் புள்ளிகளுடன் டால்மேஷன் வகைகள். அவை மேயும், அசை போடும்,
மாலையில் வீடு திரும்பும். மேய்ப்பவர் யாரும் வந்ததில்லை. ‘இந்த கிருஷ்ணர்
கோகுலத்தை சூபர்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கார் போல, புல்லாங்குழல் தான் பாக்கி’
என்று மனைவியின் கிண்டலைப் புன்னகையுடன் ரசிப்பார்.
இப்போது சில நாட்களாக ஒரு கவலை மனதை அரித்துக் கொண்டிருந்தது. வேலை
பார்த்த நிறுவனத்தின் பார்ட்னர்களிடையே கருத்து வேற்றுமை. கூடுதல் முதலீடு
செய்வதா வேண்டாமா? ஒருமனதாக முடிவு எடுக்க முடியவில்லை. அவர்கள்
பிரச்சினையால் நிறுவனம் கை மாறலாம், மூடப்படலாம் அல்லது வட இந்தியாவுக்கு
மாற்றப்படலாம் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. கைமாறினால் புதிய முதலாளிகள்
ஆட்குறைப்பு செய்வார்கள். அல்லது சீரமைப்பு என்ற பெயரில் சம்பளத்தைக்
குறைப்பார்கள். மூடப்பட்டால் வேறு வேலை தேட வேண்டும்.
ஒசூரிலேயே இதே சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சில
ஆயிரங்கள் குறையலாம். மேலும் தகுதியான இளைஞர்கள் பலர் குறைந்த சம்பளத்துக்கு
வரத் தயார். வேலை மட்டும் நிரந்தரமாக வேண்டும். நாராயணனின் சீனியாரிட்டிக்கு
கொஞ்சம் மதிப்பு தரப்படலாம். அவர் பல வருஷ அனுபவத்துக்குப் பின் இப்போது
வாங்கும் சம்பளத்தில் புதியவர்கள் இரண்டு பேருக்கு சம்பளம் கொடுக்க முடியும். வட
இந்தியாவுக்கு மாற்றினால் போகும் வயதில்லை. பொருளாதார அளவில் பாதிப்பும்
உண்டு. இரண்டு இடங்களில் செலவு. மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிவதா?
அவரால் அதை கற்பனை செய்யக்கூட முடியவில்லை. வேலை இல்லை என்றால்
எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பதைக் கணிக்க முடியவில்லை. குழந்தைகள் படிப்பு,
வீட்டு ஈ எம் ஐ எப்படி சமாளிப்பது? இப்போதே உடன் பணி செய்யும் இளைஞர்கள்
வேறு வேலை கிடைத்து போய்க் கொண்டிருந்தார்கள். அவரைப் போன்ற சீனியர்கள்
முகத்தில் ஒரு இறுக்கம். உற்பத்தி, விற்பனை பற்றி யாரும் கவலைப் படுவதாகத்
தெரியவில்லை.
இப்போதெல்லாம் மாடுகள் மேயும் அழகைப் பார்க்கும் மனநிலையில் அவர் இல்லை.
பால்கனியில் உட்காரும்போது வேலை பற்றிய சிந்தனைகளே ஓடிக் கொண்டிருக்கும்.
அந்த டால்மேஷன் புள்ளி மாடு சில நாட்கள் வராததைக் கூட அவர் கவனிக்கவில்லை.
ஒரு மன நிம்மதிக்காக லீவ் போட்டு சந்த்ரசூடேஸ்வரர் கோவில், பெருமாள்மலை,
தக்ஷிண திருப்பதி சென்று வந்தார். இன்னும் சில நாட்கள் லீவ் பாக்கி இருந்தது.
அன்று காலை பக்கத்து மனையில் வேலை படுவேகத்தில் நடந்து கொண்டிருந்தது.
புல்டோசர் டினோசர் கால மிருகம் போல புல், செடி, கொடிகளை அழித்து சீர்திருத்தும்
பணியில் ஒரு ராட்சசன் போல அதகளம் பண்ணிக்கொண்டிருந்தது. எல்லாம்
மண்ணோடு மண். மனை ஓரங்களில் சிறிய மண் குன்றுகள் உருவாகின. ஓரத்தில் இருந்த
சற்றே வளர்ந்த மரங்கள் தப்பிப் பிழைத்தன. இடம் கைமாறி விட்டது போலும். அப்போது கூட மாடுகள் கிடைத்த இடத்தில் மேய்ந்தன. பறவைகளுக்குத் தான் குஷி. புல்டோசரின் ருத்ர தாண்டவத்தில் மண்ணுக்கு வெளியே வந்த மண்புழுக்கள், பூச்சிகள் அவற்றுக்கு நல்ல விருந்து.
இப்போது நாராயணனுக்கு புதியதாக ஒரு கவலை வந்துவிட்டது. ‘நாளைக்கு மாடுகள்
எங்கே மேயும்? உரிமையாளர் வைக்கோல், புல் வாங்கிப் போடுவாரா? அல்லது
மாடுகளே வேறு இடம் தேடுமா?’ கழிவிரக்கத்தில் மனம் தாபப்பட்டது. இன்னொரு
சிந்தனை. ‘நானும் மாடுகளின் தற்போதைய நிலையில் தான் இருக்கிறேனா?’ தன்னைப்
போல் கஷ்டப்படுபவர்களைக் கண்டால் ஒரு விதமான ஆறுதல் கிடைப்பதை உணர்வது
மனித மனம். அவர் மனமும் அப்படியே.
சில நாட்கள் மாடுகள் பற்றிய கவலையில் தன் கவலையை மறந்திருந்தார். பிறகு
கொஞ்சம் கொஞ்சமாக அவரது சொந்தக் கவலை மீண்டும் முன்னுரிமை பெற்று
ஆக்கிரமித்தது. பக்கத்து மனையில் பூமி பூஜை நடந்து அஸ்திவாரப் பணிகள் துவங்கி
இருந்தன.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை. பிருந்தாவன் நகரில் நண்பர் ஒருவர் வீட்டில் விசேஷ பூஜை.
முழுவதும் இருந்துவிட்டு, பிரசாதங்கள் அருந்திய பின் மனைவியுடன் ஸ்கூட்டரில்
திரும்பிக் கொண்டிருந்தார். வேலை பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் பூதாகாரமாக
மிரட்டிக் கொண்டிருந்ததால் சுற்றுப்புறத்தைக் கவனிக்கும் மன நிலையில் அவர்
இல்லை. அனிச்சையாக, இயந்திர கதியில் ஸ்கூட்டர் நகர்ந்து கொண்டிருந்தது.
வரும் வழியில் இருந்த அந்த லேஅவுட்டில் பல மனைகள் இன்னும் விற்பனை
செய்யப்படவில்லை. பல பசுமைத் தீவுகள். அவற்றில் இருந்த புல், செடிகளை அவரது
பழைய ‘நண்பர்களான’ மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த டால்மேஷன் புள்ளி
மாடும் அதில் உண்டு.
“என்ன உங்க ஃபிரெண்ட்சைக் கவனிக்கலையா?” லக்ஷ்மி அவர் கவனத்தைத்
திருப்பினாள். “அதுகளுக்கு மேயப் புது இடம் கிடைச்சிருக்கு” அவள் குரலில் உற்சாகம்.
வண்டிய நிறுத்திய நாராயணன் “ஆமாம். அதுக்கென்ன?” என்று அசிரத்தையாக
சொன்னவருக்கு சட்டென விளங்கியது.
“அப்படின்னா”
“மாடுகளுக்குக் கொம்புலயா புல்லைக் கட்டி அனுப்புவாங்க? அந்த கால்நடைகளே வேற மேய்ச்சல் நிலம் தேடிக்கும். அதுபோல உங்களுக்கும் வேற மேய்ச்சல் நிலம், அதாவது ஃபேக்டரி கிடைக்கும். தேடணும். மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு நான்
நம்பிக்கையாகத் தான் எப்பவும் இருக்கேன். நீங்க தான் அதைர்யப் படறீங்க”
வீடு திரும்பியதும் லக்ஷ்மி அல்வா கிளறாத நிதியமைச்சராக மாறினாள். அவருக்கு
வேலை போவதாக வைத்துக்கொள்ளலாம். அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை
கிடைக்கலாம். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அவள் தயார். வேலை போவதாக
இருந்தால் பி.எஃப்., கிராச்சுடி பணப்பலன்கள் கிடைக்கும். அதை ஃபிக்ஸட் டெபாசிட்
போட்டு வட்டி மாத செலவுக்கு உதவும். வீட்டின் கடன் எண்பது சதவீதம் முடிந்துவிட்டது.
மகன் படிப்புக்கு எஜுகேஷன் லோன் வாங்க வீடு செக்யூரிட்டியாக உதவும். அவன்
படிப்பைப் பற்றிய கவலை இல்லை. இரண்டு வருஷம் சென்ற பின் மகள் படிப்புக்கும்
அப்படியே செய்ய முடியும். கையில் இருக்கும் சேமிப்பு, தேவையானால் நகைக்கடன்,
இவை மற்ற நிதி ஆதாரங்கள். இவற்றை வைத்து சம்பளமே இல்லாமல் ஒரு வருஷம்
வரை கூட சமாளிக்கலாம். நாராயணன் திறமை, அனுபவத்திற்கு ஒசூரில் கட்டாயம் வேறு
வேலை கிடைக்கும். இதுவரை லக்ஷ்மி சொன்னது கஷ்டங்கள் வந்தால் எப்படி
சமாளிப்பது என்று. ஆனால் இப்போதிருக்கும் நிலையே தொடர்ந்து அவர் வேலைக்குப்
பாதிப்பு வராது என்ற நேர்மறை சிந்தனையும் வேண்டும். கம்பெனி பார்ட்னர்கள் சமரசம் செய்து கொள்ளலாம். கூடுதல் முதலீடுகளுடன் முழுவீச்சில் மீண்டும் இயங்கலாம்.
நம்பிக்கை தானே வாழ்க்கை!
இது வரை நாராயணன் எதிர்மறை எண்ணங்களில் உழன்று கலங்கிக் கொண்டிருந்தார். வேலை, வேலை, வேலை. வேலை போய்விடுமோ என்ற பயம். அந்த ஒரே சிந்தனை.
பசுமைப் பக்கத்தை பார்க்கவில்லை. லக்ஷ்மி அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டாள்.
அவர் கண்களுக்கு லக்ஷ்மி தெரியவில்லை. வானுக்கும் பூமிக்குமாக ஒரு தைர்யலக்ஷ்மி
தான் தெரிந்தாள். அவளுக்கு இருந்த பரிபூரண நம்பிக்கை அவருக்குத் தான் இல்லாமல்
போய்விட்டது. அவள் கைகளுடன் தன் கைகளை இணைத்த போது அவர் நன்றி
வெளிப்பட்டது. இப்போது அவர் முகத்தில் நம்பிக்கை, மனைவி பற்றிய பெருமிதம்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

ஆசிரியர் குறிப்பு

வயது 73

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் . இவர் 2014கல்கி நினைவு சிறுகதை போட்டியில் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு பெற்றவர். இவரது சிறுகதைக்கு 2018 அசோகமித்ரன் பரிசு கிடைத்தது. பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதை போட்டியில் ,ஆறுதல் பரிசு பெற்றார். தினமலர் வாரமலரில் கதைகள்.
பிரசுரமான நாவல்கள் 4

துரை.தனபாலன்/துயரம் – விருட்சம் நாளிதழ்

சாந்தி சந்திரசேகரன்/வேடந்தாங்கல்..!

அசோகமித்திரனின் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 16

நுழைவாயில் முழுவதும் நேற்று பெய்த மழையில் சகதியாயிருந்தது. ஆங்காங்கே வருவோர் செல்வோர் முகம் பார்க்க, சாலையின் பள்ளங்களில் நீர் நிரம்பி கண்ணாடிகளை உருவாக்கியிருந்தது. சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் அவை தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தன.பயணிகளின் கால்தட சகதிகளைக் கோலங்களாக அரிதாரம் பூசியபடி திருவாரூர் ரயில் நிலையம் சிவப்பு நிற விளக்குகளில் மினுமினுத்தது.“டீ.. காபி.. டீ …காபி… டீ காப்ப்ப்ப்பி” போன்ற வியாபாரக் கோஷங்களுக்கு மத்தியில்.. பல தரப்பட்ட மக்களின் பேச்சு சத்தத்திற்கு மத்தியில், “வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கன்னி வரை செல்லும் மேடகான் எக்ஸ்பிரஸ்.. இன்னும் சற்று நேரத்தில்.. மூன்றாம் நடைமேடைக்கு வந்து சேரும்.. என்று எதிர்பார்க்கப்படுகிறது” தேனாய் மும்மொழிகளில் இனித்தது, தென்றலாய் பேசிய வருணாவின் குரல்.திடீரென கருத்த வானம் மழையைக் கட்டவிழ்த்தது போல இடித்துப் பெய்ய, வண்டியேறக் காத்திருந்தவர்கள் அனைவரும் நிழற்கொடையின் கீழ் ஒதுங்க ஓடி வர.. ரயில் நிலையமே நொடியில் மீன் சந்தையாய் மாறியிருந்தது.தேங்கிய தண்ணீரைக் கண்டவுடன் ஒரு சில குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். கைக்குழந்தையின் பெற்றோர்கள் குல்லா சகிதமாக உடை அணிவித்து, மாரோடு பிள்ளைகளை அணைத்து குளிரிலிருந்து காக்கலாகினர். இளைஞர்கள் சிலர் கையிலிருந்த பையைக் குடை போல வைத்தவாறு கொட்டகையின் கீழ் ஒதுங்கினர். இளம் பெண்டிரோ..தன் முந்தானை மற்றும் துப்பட்டாவின் முனையை ஏந்தியவாறு &#39ஓடு ஓடு”என்று கிளி போல கீசிப் பறந்தனர். வயதான பெரியவர்களும் முதியவர்களும் நடையில் வேகத்தைக் கூட்டினாலும் கால் வழுகிடாமல் கவனமாய் ஒதுங்கிடம் தேடிப்புகுந்தனர். ஒரு மழை, ரயில் நிலையத்தை சில நிமிடங்களில் தேன்கூடாய் மாற்றியிருந்தது.இவையனைத்தையும் சன்னலோரத்தில் வருணா அமர்ந்து வேடிக்கை பார்க்க, மழைச்சாரலாய் வந்தது அவனது நினைவுகள்.
அவன்.. நாஞ்சில் குமரன்.
கண்ணகி கலைக் கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டில் வருணா சேர்ந்திருந்த தினம்.முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொகுத்து நோக்கல் நிகழ்வுக்கான கட்டடம் எதுவென பூக்களை மேயும் தேனீ போல அவள் வட்டமிட
“என்ன தேடுறீங்கன்னு சொன்னா.. உதவசுலபமா இருக்கும்” என்றது மனதை வசீகரிக்கும் ஒரு குரல்.
குரல் வந்த திசையில் அவள் நோக்க.. தேவதூதன் போல வெள்ளை அங்கி
அணிந்திருந்தான் அந்த இளைஞன் . தேன் சொட்டும் குரல். கூரான கண்கள். நேரான பார்வை. குறும்பு அரும்பாய் மலர்ந்த ஒரு வீசீகரப் புன்னகை. பார்த்தவுடன் அவனிடம் ஒரு பிடித்தம் வந்ததன் காரணம் ஒன்றும் பெரிதாய் இல்லை வருணாவிற்கு. பதிலற்று அவள் நிற்கவே குமரனே தொடர்ந்தான்.
“முதல் வருட மாணவி தான நீங்க..? நான் நாஞ்சில் குமரன். இரண்டாம் வருட கணிதத்துறை மாணவன். நீங்க இப்போ நேரா போய் வலது கைப்பக்கம் திரும்புங்க. மஞ்சள் நிறக் கட்டடம் நூலகம். அதுக்கு எதிர்புறக்கட்டடம் தான் நீங்க போக வேண்டியது. நிறைய பேர் நிப்பாங்க. அத வச்சே நீங்க சுலபமா கண்டு பிடிச்சிடலாம்.” பேசி முடிக்கும் வரை அவன் புன்னகை குறையவில்லை. இவள் மூச்சி விட மறந்து அவன் முக அசைவுகளை ரசித்துக்
கொண்டிருந்தாள்.
“ஏய்.. இருடா.. கீழே போட்டுடாத..!! இரு ஒரு பக்கம் நான் பிடிச்சிக்கிறேன்” நூலகத்திற்கு சென்ற ஒரு மாணவனுக்கு உதவச் சென்ற அவன் அவள் மனதில் மருதாணி போல ஒட்டிக் கொண்டான்.
தேடிச்சென்று உதவி செய்வது என்பது அவனுக்கு இயல்பாக இருந்தது. அந்த இயல்பினால் கல்லூரியின் பெரும்பான்மை அவனது நட்பு வட்டத்தில் இருந்தது.
ஆனால் வருணாவிற்கு, கண்ட நாள் முதலே.. நட்பினைத் தாண்டிய ஒரு பாசம் அவன் மீது.
‘அவன் அறிவானா?’ என்றே தெரியாமல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் பட்டாம்பூச்சியாய் அவள் மனதினில் ஒரு சிறகு முளைக்கும். உலகமே அழகாய் மாறும் அவள் கண்களுக்கு. அவனால், அவளும் கூட மாறிப்போனாள். தன் கடன்களை மட்டுமே கருத்திலேந்தும் அவள் கண்களுக்கு, பேருந்தில் நிற்க சிரமப்படும் மூதாட்டி தெரிந்தார். தன் இருக்கையை அவருக்கு கொடுத்த போது குமரன் நினைவுக்கு வந்தான்.முதல் மதிப்பெண் எடுக்கத் தீவிரமாய் தன்னைத் தயார்படுத்தும் அவளுக்கு,
வணிகக்கடிதத்தில் சிரமப்படும் கவிதா தெரிந்தாள். தேர்ச்சி பெறுவதே சிரமம் என்றெண்ணியவளை அறுபது விழுக்காடு வாங்க வைத்த போது அவள் சிரிப்பிலும் குமரனைக் கண்டாள்.
இப்படி அவனுடன் பழகிய ஒவ்வொரு தருணத்திலும் அவள் அவனாகிப் போனாள். ஒரு வருடம் அவனால் ஒரு மாதம் போல ஓடிப்போனது.
அன்று கல்லூரியில் ஒரு பெரும் கலை நிகழ்ச்சி. வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு கல்லூரி ஒரு திருவிழாக்கூடமாக உருமாறியிருந்தது. பல கல்லூரி மாணவ மாணவியரின் ஊர்வலம் அரங்கேற கல்லூரி ஒரு வண்ணமயமான ரங்கோலி கோலம் போல பொலிவாயிருந்தது. போதாக்குறைக்கு மழை மேகமாயிருந்தது. அதிகாலை மழைச்சாரல் அதிசயமாய் எட்டிப்பார்த்த சூரியனால் அழகான வானவில் ஓவியம் தீட்டியிருந்தது. அதை அந்த பழங்கட்டிடத்தின் தாழ்வாரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் வருணா. காற்றின் குழுமை, அவளது உடலை லேசாக நடுக்கியது.
“அட.. வருணாக்கே மழை குளிருமா?” அவள் விரும்பும் வானம்பாடி அவள் காதுகளில் ரீங்கரித்தது.
“குமரன்.. இங்க வந்து பாருங்களேன்” அவனை ஏறெடுத்தும் பாராமல் கூறினாள்.
“ பரவால்லயே.. குரல்லயே என்னை சரியா கண்டுபிடிச்சிட்டியே..!” என்றவன் அவள் காட்டிய திசையை நோக்க, அங்கு வெயில் காயக் காத்திருந்தன காக்கைகள், சிட்டுக்குருவிகள், மாடத்துப்புறாக்கள், அக்காகுயில்கள் தவிட்டுக்குருவிகள் மற்றும் மைனாக்கள் என ஒரு பெரும் பட்டாளம். “இந்த நாவல் மரத்துக்கு வயசு நூறு இருக்கும் வருணா. எப்பவுமே இது தான் நம்ம கல்லூரியோட வேடந்தாங்கல். இப்படி ஒரு மரம் போல.. வாழ்க்கையில சிலருக்காச்சும் உதவியா இருக்கனும்ன்றது தான் என் ஆசையே.”
அவன் புன்னகை ஆதவன் போல ஔி வீசியது.
“நீ தான் என்னோட வேடந்தாங்கல்” யோசனையின்றி சட்டென மனதினில் உள்ளது வார்த்தையாய் வெளி வர.. அவளே ஒரு கனம் நாக்கினைக் கடித்துக் கொண்டாள்.
“என்ன.. என்ன சொன்ன?” ஆச்சரியத்தில் அவன் புன்னகை பெரிதாய் விரிய.. வெட்கத்தில் அவள் கண்கள் குறுகியது.
அந்த நொடி, அவள் தாழ்வாரத்தில் சாய்ந்திருந்த பழைய மரப்பிடிமானம் ஒடிந்து சரிய, அவள் கைகளைப் பற்றி இழுத்துக் காப்பாற்றினான் குமரன். இரண்டு கண்களும் ஒரு நொடி சந்தித்தன. அடுத்த நொடி, அவன் கால்கள் நிலைதடுமாற, அங்கிருந்து கீழே விழுந்தவன், இல்லாமலே போனான்…!
அவன் கல்லூரிப்பையில் அவளுக்காக எழுதப்பட்ட ஒரு கவிதைப் புத்தகம். காதல் சொட்ட சொட்ட பல அழகான கவிதைகள். அவளிடம் பேசாத அவன் மனதை, எழுத்துருவில் கொட்டியிருந்தான். வாசிக்க வாசிக்க அவன் அவளை எத்தனை நேசித்தான் என அறிந்து வியந்து போனாள்.
இறந்தவனை எண்ணி, காற்றற்ற மழை போல கண்ணீரைக் கொட்டித் தீர்த்தது அவள் இதயம்.
“ரயில் நிலைய அறிவிப்பாய் உன் குரல் ஒலித்தால்.. வருணா.. மாடப்புறாவாய் நான் அங்கு வாழ்ந்திடுவேன்.” அவள் மேடையில் வாசித்த ஒரு கவிதைக்கு அவன் எழுதிய குறிப்பு அது.

இன்று ரயில் நிலைய அறிவிப்பாளினியாய் அவள் பணியாற்றும் ஒவ்வொரு நாளும் அவனது அந்த ஒற்றை வரி.. அவள் கேசம் வருடிச் செல்லும் காற்றாய் அவனை நினைவுறுத்தி ஒரு புன்னகையை அவள் இதழ்களில் சூட்டிச் செல்லும்.

“மேடம்.. மழைன்னால என் வேலை முடிய ரொம்ப நேரமாகிடுச்சி. ரயில விட்டுட்டேன். இப்ப திருச்சிக்கு எப்பிடி போறது..? ஏதாச்சும் வண்டி இருக்கா..? இல்ல பஸ்ல தான் போகனுமா?” கைக்குழந்தையுடன் வந்த யுவதியின் குரலில், நினைவுகளிலிருந்து மீண்டாள்.
மணி இப்போதே பத்தாகியிருந்தது. யுவதியின் கண்கள் சிவந்திருந்தது. அழுதிருக்கிறாள்…!
நன்றாக நனைந்திருந்தார்கள் இருவரும். இரண்டு வயதிருக்கும் அந்த குழந்தைக்கு. குளிரில் நடுங்கியது. அவள் கேட்ட தகவல் மட்டும் சொல்லியனுப்ப முடியாமல் ஏதோ தடுத்தது.
கோவா-வேளாங்கன்னி எக்ஸ்பிரஸ் சென்றதால்.. பெரும்பான்மையான கூட்டம் குறைந்து, ரயில் நிலையம் சற்று இளைப்பாறிக் கொண்டிருந்தது. அடுத்த ரயில் அறிவிப்பிற்கு அரை மணி நேரம் இருந்தது. மனதிற்குள் ஒரு முடிவிற்கு வந்தவள் அருகிலிருந்த ரவியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாள்.
யுவதி மற்றும் குழந்தையை பயணிகள் காத்திருப்பு அறையில் அமரச் செய்தாள். தனது கைப்பையிலிருந்த ஒரு துண்டு கொடுத்து துவட்டச் சொன்னாள். இருவரும் உடை மாற்ற காவல் இருந்தாள்.
தன்னிடமிருந்த ஒரு சால்வையை கொடுத்தவள்,”குழந்தைக்கு துணி மாத்தினாலும் மழைல நனைஞ்சதுல குளிரும். இத வச்சி இறுக்கமா பொத்திக்குங்க.” என்ற போது யுவதியின் கண்கள் குளமாகின.
“என் பேரு ரதி. வீட்ல ஒரு பிரச்சனை மேம். மழைன்னும் பாக்காம வெளிய போ”ன்னு சொல்லிட்டாரு. கோவத்துல எதுவும் யோசிக்கத் தோணல . அதான் அப்டியே மழைல நனைஞ்சிக்கிட்டே பாப்பாவ தூக்கிட்டு வந்துட்டேன். பஸ்க்கு போகற அளவு காசு எடுக்காம வந்துட்டேன். அதான் ஏதாச்சும் ரயில் இருந்தா அம்மா வீட்டுக்கு போய்டுவேன்.” குனிந்த தலை நிமிராமல் பேசினாள்.
“இன்னும் ஒரு மணி நேரங்களிச்சி அடுத்த ரயில் இருக்கு. அதுல போக ஏற்பாடு பண்றேன். குழந்தைய கைல வச்சிருக்கீங்க. எதுன்னாலும் ஒருதடவைக்கு இரண்டு தடவை..அவசரப்படாம.. கொஞ்சம் யோசிச்சி செய்ங்க. இப்ப டீ, காபி ஏதாச்சும் சாப்பிடுறீங்களா?”
அவள் கை தாங்கி இதமாய் பேசினாள் வருணா.
அப்போது முகத்தில் படபடப்புடன் ஒரு இளைஞன் ரயில்நிலையத்தில் இங்கும் அங்கும் தேட.. “அது உங்க கணவரா ரதி?” வருணா.
“ம்ம்.. ஆமா..!” சிறிய ரயில் நிலையம் என்பதால் சட்டென தெரிந்தது. ரதியின் முகத்தில் அச்சமும், ஆறுதலும் ஒரு சேரத் தெரிய.. “Excuse me sir. கொஞ்சம் இங்க வாங்க.” என்று சத்தமாகக் கூப்பிட்டாள்.
ரதியைப் பார்த்தவுடன் பெருமூச்செறிந்தவன் விரைந்து வர “நீங்க பேசிட்டு.. பயணச்சீட்டு வாங்குற இடத்துல வந்து பாப்பாவ வாங்கிக்குங்க” குழந்தையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
சிறிது நேரத்தில், “ரொம்ப நன்றி மேம்.” மூவரும் சிரித்தவாறு கரம் கோர்த்து அவளிடம் விடைபெற்றார்கள்.
அவள் அடுத்த ரயிலுக்கான அறிவிப்பை வாசித்த நேரம்.. எங்கிருந்தோ பறந்து வந்த மாடப்புறா ஒன்று.. அவளருகினில் பயமின்றி நின்று கொண்டது. உடல் சிலுப்பி ஈரமாகியிருந்த தன் உடலைக் காய வைத்துக் கொண்டது.
“ரயில் நிலைய அறிவிப்பாய் உன் குரல் ஒலித்தால்.. வருணா.. மாடப்புறாவாய் நான் அங்கு வாழ்ந்திடுவேன்.” அவள் மனதினில் மீண்டும் விரிய.. திருவாரூர் ரயில் நிலையம்..
வேடந்தாங்கலாய் அரிதாரமிட்டுக் கொண்டது.

ஆசிரியர் குறிப்பு

சாந்தி சந்திரசேகரன். வயது 37. சொந்த ஊர் சிவகாசி. வசிப்பது திருவாரூர். ஆசிரியராக பணியாற்றிய இவர், தற்போது பல்வேறு பத்திரிகைகளுக்கு கதை மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். கல்கி ‘படம் சொல்லும் கதை’ போட்டியில் சிறப்புப் பரிசும், பேசும் புதியசக்தியின் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். இவரது சிறுகதை அன்னை ஸ்வர்ணாம்பாள் சிறுகதை போட்டியில் தேர்வு பெற்று ‘கரையேற்றம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. மின்மினிகள் என்னும் நூலில் இவரது இரண்டு கதைகள் பிரசுரமாகியுள்ளன.

ஷைலஜா/மாயச்சூது – விருட்சம் நாளிதழ்

இசை புதிது ஆண்டு விழாவில் இந்திரா ராமநாதன் அவர்கள் தொகுத்து வழங்கிய திரை இசை நிகழ்வு

அழகியசிங்கரின் இசை புதிது வாட்ஸ் அப் குழுவின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவில் இந்திரா ராமநாதன் அவர்களின் தொகுப்புரையோடு நடந்த இசை புதிது உறுப்பினர்களின் திரைப் படப் பாடல்களின் காணொளிப் பதிவு, 27 – 03 – 2025 அன்று நடந்த நிகழ்வு

அதிரன்/ஜூன் 2

வண்ண வண்ண சீருடை அணிந்து
முதுகில் ஒரு மூட்டை சுமந்து
சிறகில்லாம் பறந்து செல்கிறது
சின்ன பட்டாம்பூச்சி ஒன்று

அதை டாட்டா காட்டி
வழியனுப்பி வைக்கிறது
ஒரு பெரிய பட்டாம்பூச்சி

சசிகலா விஸ்வநாதன்/ஒரு மிடறு

ஒரு மிடறு நீர் போதும்
என் விடாய் தணிந்து விடும்.

ஒரே ஒரு சொல் போதும்
என் வெறுமை களைய,

ஒரே ஒரு பார்வை போதும்
என் உயிர் துளிர் விட,

ஒரே ஒரு தொடுகை போதும்
என் நம்பிக்கை நீள,

நீ நீயாக இருந்தால் மட்டும்.

❌