எஸ்.கோபாலகிருஷ்ணன்/கொம்பில் புல்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 18
விகாஸ் அப்பார்ட்மெண்ட் மூன்றாவது மாடி. ஃபிளாட்டின் பால்கனியிலிருந்து
காலியாயிருந்த பக்கத்து மனையைப் பார்த்துக் கொண்டிருந்தார் நாராயணன். தினமும்
காலையில் வேலைக்குப் போகும் முன் சில நிமிஷங்கள் கவனிப்பார். சனி, ஞாயிறு
விடுமுறை நாட்களில் மணிக்கணக்கில் பார்ப்பதில் பொழுது போவதே தெரியாது.
நாராயணன் வயது 52. தலையில் முடி உதிர்காலம். கொஞ்சம் நரை. 25 வயதில் வேலை
வாய்ப்புகள் அதிகம் இருந்த ஒசூருக்கு வேலை தேடி வந்தார். மெக்கானிகல்
இஞ்சினீயரிங்கில் டிப்ளமா, சென்னையில் சில வருஷங்கள் தற்காலிக வேலை பார்த்த
அனுபவம் இரண்டும் நல்ல வேலை கிடைக்க உதவியது. பெற்றோர்கள் சிவபதவி
அடைந்துவிட்டனர். தம்பி தங்கைகள் இருந்த பெரிய குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய
பெரும் பொறுப்பு அவருக்கு இருந்தது. சென்னையில் நிரந்தரமான வேலை
கிடைக்கவில்லை. ஒசூர் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் நகரமாக மாறிக் கொண்டிருந்த
சமயம். மும்பையிலிருந்து வந்த தொழிலதிபர்கள் நிறுவிய அந்த தொழிற்சாலையில்
எதிர்பார்த்த சம்பளத்துடன் மெக்கானிக் வேலை கிடைத்தது.
ஒசூரின் இதமான தட்ப வெப்ப நிலை பிடித்திருந்தது. மளிகை, காய்கனி விலைகள்
நகரங்களை விடக் குறைவு. சிக்கனமாகக் குடும்பம் நடத்தி இரண்டு தங்கைகளுக்குத்
திருமணம் முடித்தார். தம்பிகள் பட்டப்படிப்பும் முடித்து வேலை, திருமணம் என்று பிற
ஊர்களில் வாழ்க்கை அமைத்துக் கொண்டார்கள். கடமைகள் முடிந்தபின் அவர் திருமணம்
செய்துகொண்ட போது வயது 32.
இப்போது அவர் சூபர்வைசர். மனைவி லக்ஷ்மி, மகன் ராஜன் வயது 17 மகள் ரம்யா
வயது 15. அளவான நிறைவான குடும்பம். ப்ளஸ் டூ முடிக்கப் போகும் மகனை
இஞ்சினீயரிங் படிப்பில் சேர்க்க வேண்டும், இப்போது பத்தாவது படிக்கும் மகளையும்
நன்றாகப் படிக்கவைத்து சிறப்பாகத் திருமணம் செய்ய வேண்டும். அடுத்த பத்து
வருஷத்துக்குள் பல லட்சங்களுக்குக்கான செலவுகள் காத்திருந்தன.
அப்பார்ட்மெண்ட்டுகள் அவ்வளவாக பிரபலம் ஆகாத காலத்தில் அவர் பட்ஜெட்டில்
கிடைத்த இந்த ஃப்ளாட்டுக்கான ஈ எம் ஐ இன்னும் ஐந்து வருஷங்கள் கட்ட வேண்டும்.
சேமிப்பும் ஓரளவுக்கு இருந்தது. இதே மாதிரியான நிதானமான நீரோட்டமுள்ள ஓடை
போல வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தால் பரவாயில்லை. சமாளித்து விடலாம். ஆனால்….
அப்பார்ட்மெண்ட் பக்கத்தில் ஐந்தாறு ஏக்கர் பரப்பில் ஒரு பெரிய காலி மனை
விற்பனைக்கு இருந்தது. ஒரு காலத்தில் விவசாயம் சிறப்பாக நடந்துகொண்டிருந்த நிலம்.
நேஷனல் ஹைவே அருகில் இருந்ததால் அதன் மதிப்பு பல கோடிகள். நில உரிமையாளர்
நல்ல விலைக்காகப் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார். விவசாயமாவது
செய்திருக்கலாம். வளமான பூமி. புல், புதர்கள், செடி, கொடி வகைகள் நன்றாக செழித்து
வளர்ந்து கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியை வாரி வழங்கின. எங்கெங்குக் காணினும்
பசுமையடா என்று பாடலாம்.
பால்கனியில் உட்கார்ந்து அந்த பசுமையைப் பார்த்துக்கொண்டே இருப்பார்
நாராயணன். விடுமுறை நாட்களின் பெரும்பகுதி அங்கே தான். அலாதியான நிம்மதி
கிடைக்கும். முறையான வேலி இல்லாததால் பசுமாடுகள், செம்மறியாடுகள் அங்கு
மேயும். வித விதமான பறவைகளையும் பார்க்க முடியும். சில குறிப்பிட்ட மாதங்களில்
ஒட்டகங்கள் வரும். மாடுகளில் தான் எத்தனை நிறம்! தூய வெண்மை, கருப்பு, பழுப்பு,
திட்டாக கறுப்புப் புள்ளிகளுடன் டால்மேஷன் வகைகள். அவை மேயும், அசை போடும்,
மாலையில் வீடு திரும்பும். மேய்ப்பவர் யாரும் வந்ததில்லை. ‘இந்த கிருஷ்ணர்
கோகுலத்தை சூபர்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கார் போல, புல்லாங்குழல் தான் பாக்கி’
என்று மனைவியின் கிண்டலைப் புன்னகையுடன் ரசிப்பார்.
இப்போது சில நாட்களாக ஒரு கவலை மனதை அரித்துக் கொண்டிருந்தது. வேலை
பார்த்த நிறுவனத்தின் பார்ட்னர்களிடையே கருத்து வேற்றுமை. கூடுதல் முதலீடு
செய்வதா வேண்டாமா? ஒருமனதாக முடிவு எடுக்க முடியவில்லை. அவர்கள்
பிரச்சினையால் நிறுவனம் கை மாறலாம், மூடப்படலாம் அல்லது வட இந்தியாவுக்கு
மாற்றப்படலாம் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. கைமாறினால் புதிய முதலாளிகள்
ஆட்குறைப்பு செய்வார்கள். அல்லது சீரமைப்பு என்ற பெயரில் சம்பளத்தைக்
குறைப்பார்கள். மூடப்பட்டால் வேறு வேலை தேட வேண்டும்.
ஒசூரிலேயே இதே சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியாது. சில
ஆயிரங்கள் குறையலாம். மேலும் தகுதியான இளைஞர்கள் பலர் குறைந்த சம்பளத்துக்கு
வரத் தயார். வேலை மட்டும் நிரந்தரமாக வேண்டும். நாராயணனின் சீனியாரிட்டிக்கு
கொஞ்சம் மதிப்பு தரப்படலாம். அவர் பல வருஷ அனுபவத்துக்குப் பின் இப்போது
வாங்கும் சம்பளத்தில் புதியவர்கள் இரண்டு பேருக்கு சம்பளம் கொடுக்க முடியும். வட
இந்தியாவுக்கு மாற்றினால் போகும் வயதில்லை. பொருளாதார அளவில் பாதிப்பும்
உண்டு. இரண்டு இடங்களில் செலவு. மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிவதா?
அவரால் அதை கற்பனை செய்யக்கூட முடியவில்லை. வேலை இல்லை என்றால்
எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பதைக் கணிக்க முடியவில்லை. குழந்தைகள் படிப்பு,
வீட்டு ஈ எம் ஐ எப்படி சமாளிப்பது? இப்போதே உடன் பணி செய்யும் இளைஞர்கள்
வேறு வேலை கிடைத்து போய்க் கொண்டிருந்தார்கள். அவரைப் போன்ற சீனியர்கள்
முகத்தில் ஒரு இறுக்கம். உற்பத்தி, விற்பனை பற்றி யாரும் கவலைப் படுவதாகத்
தெரியவில்லை.
இப்போதெல்லாம் மாடுகள் மேயும் அழகைப் பார்க்கும் மனநிலையில் அவர் இல்லை.
பால்கனியில் உட்காரும்போது வேலை பற்றிய சிந்தனைகளே ஓடிக் கொண்டிருக்கும்.
அந்த டால்மேஷன் புள்ளி மாடு சில நாட்கள் வராததைக் கூட அவர் கவனிக்கவில்லை.
ஒரு மன நிம்மதிக்காக லீவ் போட்டு சந்த்ரசூடேஸ்வரர் கோவில், பெருமாள்மலை,
தக்ஷிண திருப்பதி சென்று வந்தார். இன்னும் சில நாட்கள் லீவ் பாக்கி இருந்தது.
அன்று காலை பக்கத்து மனையில் வேலை படுவேகத்தில் நடந்து கொண்டிருந்தது.
புல்டோசர் டினோசர் கால மிருகம் போல புல், செடி, கொடிகளை அழித்து சீர்திருத்தும்
பணியில் ஒரு ராட்சசன் போல அதகளம் பண்ணிக்கொண்டிருந்தது. எல்லாம்
மண்ணோடு மண். மனை ஓரங்களில் சிறிய மண் குன்றுகள் உருவாகின. ஓரத்தில் இருந்த
சற்றே வளர்ந்த மரங்கள் தப்பிப் பிழைத்தன. இடம் கைமாறி விட்டது போலும். அப்போது கூட மாடுகள் கிடைத்த இடத்தில் மேய்ந்தன. பறவைகளுக்குத் தான் குஷி. புல்டோசரின் ருத்ர தாண்டவத்தில் மண்ணுக்கு வெளியே வந்த மண்புழுக்கள், பூச்சிகள் அவற்றுக்கு நல்ல விருந்து.
இப்போது நாராயணனுக்கு புதியதாக ஒரு கவலை வந்துவிட்டது. ‘நாளைக்கு மாடுகள்
எங்கே மேயும்? உரிமையாளர் வைக்கோல், புல் வாங்கிப் போடுவாரா? அல்லது
மாடுகளே வேறு இடம் தேடுமா?’ கழிவிரக்கத்தில் மனம் தாபப்பட்டது. இன்னொரு
சிந்தனை. ‘நானும் மாடுகளின் தற்போதைய நிலையில் தான் இருக்கிறேனா?’ தன்னைப்
போல் கஷ்டப்படுபவர்களைக் கண்டால் ஒரு விதமான ஆறுதல் கிடைப்பதை உணர்வது
மனித மனம். அவர் மனமும் அப்படியே.
சில நாட்கள் மாடுகள் பற்றிய கவலையில் தன் கவலையை மறந்திருந்தார். பிறகு
கொஞ்சம் கொஞ்சமாக அவரது சொந்தக் கவலை மீண்டும் முன்னுரிமை பெற்று
ஆக்கிரமித்தது. பக்கத்து மனையில் பூமி பூஜை நடந்து அஸ்திவாரப் பணிகள் துவங்கி
இருந்தன.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை. பிருந்தாவன் நகரில் நண்பர் ஒருவர் வீட்டில் விசேஷ பூஜை.
முழுவதும் இருந்துவிட்டு, பிரசாதங்கள் அருந்திய பின் மனைவியுடன் ஸ்கூட்டரில்
திரும்பிக் கொண்டிருந்தார். வேலை பற்றிய கவலைகள் நாளுக்கு நாள் பூதாகாரமாக
மிரட்டிக் கொண்டிருந்ததால் சுற்றுப்புறத்தைக் கவனிக்கும் மன நிலையில் அவர்
இல்லை. அனிச்சையாக, இயந்திர கதியில் ஸ்கூட்டர் நகர்ந்து கொண்டிருந்தது.
வரும் வழியில் இருந்த அந்த லேஅவுட்டில் பல மனைகள் இன்னும் விற்பனை
செய்யப்படவில்லை. பல பசுமைத் தீவுகள். அவற்றில் இருந்த புல், செடிகளை அவரது
பழைய ‘நண்பர்களான’ மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த டால்மேஷன் புள்ளி
மாடும் அதில் உண்டு.
“என்ன உங்க ஃபிரெண்ட்சைக் கவனிக்கலையா?” லக்ஷ்மி அவர் கவனத்தைத்
திருப்பினாள். “அதுகளுக்கு மேயப் புது இடம் கிடைச்சிருக்கு” அவள் குரலில் உற்சாகம்.
வண்டிய நிறுத்திய நாராயணன் “ஆமாம். அதுக்கென்ன?” என்று அசிரத்தையாக
சொன்னவருக்கு சட்டென விளங்கியது.
“அப்படின்னா”
“மாடுகளுக்குக் கொம்புலயா புல்லைக் கட்டி அனுப்புவாங்க? அந்த கால்நடைகளே வேற மேய்ச்சல் நிலம் தேடிக்கும். அதுபோல உங்களுக்கும் வேற மேய்ச்சல் நிலம், அதாவது ஃபேக்டரி கிடைக்கும். தேடணும். மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு நான்
நம்பிக்கையாகத் தான் எப்பவும் இருக்கேன். நீங்க தான் அதைர்யப் படறீங்க”
வீடு திரும்பியதும் லக்ஷ்மி அல்வா கிளறாத நிதியமைச்சராக மாறினாள். அவருக்கு
வேலை போவதாக வைத்துக்கொள்ளலாம். அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை
கிடைக்கலாம். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அவள் தயார். வேலை போவதாக
இருந்தால் பி.எஃப்., கிராச்சுடி பணப்பலன்கள் கிடைக்கும். அதை ஃபிக்ஸட் டெபாசிட்
போட்டு வட்டி மாத செலவுக்கு உதவும். வீட்டின் கடன் எண்பது சதவீதம் முடிந்துவிட்டது.
மகன் படிப்புக்கு எஜுகேஷன் லோன் வாங்க வீடு செக்யூரிட்டியாக உதவும். அவன்
படிப்பைப் பற்றிய கவலை இல்லை. இரண்டு வருஷம் சென்ற பின் மகள் படிப்புக்கும்
அப்படியே செய்ய முடியும். கையில் இருக்கும் சேமிப்பு, தேவையானால் நகைக்கடன்,
இவை மற்ற நிதி ஆதாரங்கள். இவற்றை வைத்து சம்பளமே இல்லாமல் ஒரு வருஷம்
வரை கூட சமாளிக்கலாம். நாராயணன் திறமை, அனுபவத்திற்கு ஒசூரில் கட்டாயம் வேறு
வேலை கிடைக்கும். இதுவரை லக்ஷ்மி சொன்னது கஷ்டங்கள் வந்தால் எப்படி
சமாளிப்பது என்று. ஆனால் இப்போதிருக்கும் நிலையே தொடர்ந்து அவர் வேலைக்குப்
பாதிப்பு வராது என்ற நேர்மறை சிந்தனையும் வேண்டும். கம்பெனி பார்ட்னர்கள் சமரசம் செய்து கொள்ளலாம். கூடுதல் முதலீடுகளுடன் முழுவீச்சில் மீண்டும் இயங்கலாம்.
நம்பிக்கை தானே வாழ்க்கை!
இது வரை நாராயணன் எதிர்மறை எண்ணங்களில் உழன்று கலங்கிக் கொண்டிருந்தார். வேலை, வேலை, வேலை. வேலை போய்விடுமோ என்ற பயம். அந்த ஒரே சிந்தனை.
பசுமைப் பக்கத்தை பார்க்கவில்லை. லக்ஷ்மி அதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டாள்.
அவர் கண்களுக்கு லக்ஷ்மி தெரியவில்லை. வானுக்கும் பூமிக்குமாக ஒரு தைர்யலக்ஷ்மி
தான் தெரிந்தாள். அவளுக்கு இருந்த பரிபூரண நம்பிக்கை அவருக்குத் தான் இல்லாமல்
போய்விட்டது. அவள் கைகளுடன் தன் கைகளை இணைத்த போது அவர் நன்றி
வெளிப்பட்டது. இப்போது அவர் முகத்தில் நம்பிக்கை, மனைவி பற்றிய பெருமிதம்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
ஆசிரியர் குறிப்பு
வயது 73
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் . இவர் 2014கல்கி நினைவு சிறுகதை போட்டியில் சிறுகதைக்கு மூன்றாம் பரிசு பெற்றவர். இவரது சிறுகதைக்கு 2018 அசோகமித்ரன் பரிசு கிடைத்தது. பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதை போட்டியில் ,ஆறுதல் பரிசு பெற்றார். தினமலர் வாரமலரில் கதைகள்.
பிரசுரமான நாவல்கள் 4