Normal view

Received yesterday — 6 June 2025பெரியார் பிஞ்சு

பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

இடமிருந்து வலம்:
1. “நான் தான் திராவிடன் என நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்; வான்தான் என் புகழ்” என்ற ……………. பாரதிதாசன் பிறந்தநாள் ஏப்ரல்-29. (5)
3. ……………. மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துத் தாண்டவர் (2)
6. கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் அவுட் ஆனால் அதற்குப் பெயர் ……………. அவுட். (2)
9. மதம் பிடித்த யானையை அடக்கி கட்டுக்குள் கொண்டு வரும் யானையின் பெயர் ………….. (3)
11. வாக்காளர்கள் வாக்குச் செலுத்துவர் வாக்குச் ……………. யில். (3)
13. ……………., சோழன், பாண்டியன் (3)
15. ……………. கோட்டை – சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊர் (6)
17. மாமாவைச் செல்லமாக இப்படியும் கூப்பிடுவர். ……………. (3)
18. மாலையில் வருடும் ……………. காற்று (4)

வலமிருந்து இடம்:
5. நமக்கு அரசியல் …………….ம் தந்த மாமேதை பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல்-14.
8. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ……………. (3)
10. நடிகர்களுக்கு அலங்காரம் செய்ய ‘……………. அப்’ பாய் அவசியம் (2)
14. பாடல், கவிதை எழுதுபவர் (ஆங்கிலத்தில்) ……………. (3)
20. அறிவு (வேறு சொல்) ……………. (2)

மேலிருந்து கீழ்:
1. புதுவை (வேறு பெயர்) ……………. (6)
2. டைப் (தமிழில்) ……………. டச்சு (2)
3. சாலையைக் கடக்கும் போது ……………., வலம் பார்த்துச் செல்ல வேண்டும் (3)
4. மிதிவண்டி (ஆங்கிலத்தில்) ……………. (4)
7. புடலங்காய்க் கொடி ……………. பந்தல் அமைப்பர் (3)
9. தந்தை பெரியார் நடத்திய இதழ்களில் ஒன்று ……………. (5)
12. சர்க்கிள் (தமிழில்) ……………. (4)
14. அன்புத் தொல்லையாவது இதனால் …………. சிவ் நெஸ் (2)
14. “……………. னந்தி மாலைப் பொழுது” ஒரு திரைப் பாடல் (2)

கீழிருந்து மேல்:

5. ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு வழங்கிய பட்டங்களில் ஒன்று ……………. (2)
8. காலம் உயிர் போன்றது; ……………. த காலம் திரும்ப வராது (3)
15. “……………. என்றால் உதடுகள் ஒட்டாது. நாம் என்றால் உதடுகள் ஒட்டும்” என்றார் டாக்டர் கலைஞர் (2)
19. கா… பாதத்தில் …………….டும் ஷூ சரியான அளவில் இல்லாவிட்டால் வலிக்கும் (3)
20. மகள் X ……………. (3).

 

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஏப்ரல் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, [email protected]
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)

The post பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

ஓவியம் வரையலாம், வாங்க! – அஞ்சல் பெட்டி

தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரிமாற்றம் செய்வதாகும். கற்கால மனிதர்கள் தான் பார்த்த, அறிந்த ஒன்றைத் தொலைவில் உள்ளவருக்கோ அல்லது இனிமேல் வரப்போகும் சந்ததிகளுக்கோ குகைகளில் சித்திரமாக வரைந்து தெரியப்படுத்தினார்கள். தொலைதூரத் தொடர்பிற்கு மலை மீது நெருப்பை மூட்டி அதிலிருந்து வரும் புகையைக் கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சைகைகளின் மூலமாகவும், வாய்வழியே ஒலி எழுப்பியும், தோல் கருவிகளைக் கொண்டு (மத்தளம்) ஒலி எழுப்பி, தகவல்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

சொற்கள் வரிவடிவம் பெற்று எழுத்துகள் உருவாகிய பின்பு தகவல் தொடர்பில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. மன்னர்கள் காலங்களில் பறவைகள், விலங்குகள் மூலமாகத் தகவல்களைத் தெரிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காகிதங்களிலும், துணிகளிலும் எழுதிய தகவல்களையும் கடிதங்களையும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அல்லது நாட்டிற்குக் வான்வழியாகவும், தரை வழியாகவும், கடல் வழியாகவும் கொண்டு சென்று சேர்த்தனர்.

1786இல் சென்னையில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது. மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல்தலை 21 நவம்பர் 1947இல் வெளியிடப்பட்டது. இன்று இந்திய அஞ்சல் துறை உலகின் மிகப்பெரிய துறையாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் மற்ற எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களில் கடிதங்கள் போய்ச் சேரும்படி செய்கின்றனர்.
அஞ்சல்களை வேகமாகவும், குழப்பமின்றியும் பிரித்து குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்களைப் பயன்படுத்துகின்றனர்.

இக்குறியீட்டு எண் போடும் திட்டம் 1972இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலங்களைக் குறிக்கும். இரண்டாம் இலக்கம் துணை மண்டலத்தையும், மூன்றாம் இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும்.

கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.
இவ்வாறு சிறப்புப் பெற்ற அஞ்சல் பெட்டியைத்தான் ஆங்கில எழுத்துகளின் உதவியுடன் வரையப் போகிறோம். இதற்குத் தேவையான ஆங்கில எழுத்துகள் H,D,O மற்றும் E.

‘H’ எழுத்தை படத்தில் காண்பது போல் சற்று உயரமாக எழுதவும்.


தேவையற்ற கோட்டை அழித்த பின் ‘H’ எழுத்தின் மேற்பகுதியில் ‘D’ எழுத்தை படுக்கை வசமாக எழுதவும்.


‘D’இன் மேற்பகுதியில் படத்தில் காண்பது போல் ‘O’ எழுத்தை எழுதவும்.
‘H’இன் வலதுபுறத்தில் ‘E’ எழுத்தை படத்தில் காண்பதுபோல் எழுதவும்.


தேவையற்ற கோட்டை அழித்தபின் ‘H’இன் அடிப்பகுதியில் ‘E’ எழுத்தைப் படுக்கை வசத்தில் எழுதவும்.


படத்தில் காண்பதுபோல் ‘டிசைன்’ செய்து கொள்ளவும்.

The post ஓவியம் வரையலாம், வாங்க! – அஞ்சல் பெட்டி appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

’கெத்து’ சிம்சி!

சிம்சி பாம்பு அந்தக் காட்டில் மிகப் பிரபலம். காட்டிலேயே அட்டகாசமாகக் கணக்குப் போடும் ஒரே உயிரினம் சிம்சிதான். எல்லா வகையான கணக்குகளையும் போட்டுவிடும். காட்டில் யாருக்கு கணித உதவி என்றாலும் சிம்சியிடம்தான் போய் நிற்பார்கள். மான்கள் கூட்டமாக வந்து “சிம்சி, நாங்க குஞ்சனூர் போகணும். எந்தெந்தக் காட்டு வழியாகப் போனால் சீக்கிரம் போய்ச் சேரலாம்” எனக் கேட்பார்கள். சிம்சி சில நொடிகள் சிந்தித்து வரைபடத்தைப் பார்க்கும். உச் உச் உச்…“நேரா கஞ்சனூர் போய் இடது பக்கமா விஞ்சனூர் போய் அப்படியே நேரா போனால் ஆலமரம் வரும் அங்க வலது பக்கம் போனால் மஞ்சனூர் வரும். அங்கே தோப்புல கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு நேரா போனால் குஞ்சனூர் வந்துவிடும்” எனச் சொல்லும்.
சிம்சியிடம் வழிகேட்காத மான்கூட்டம் இவர்களைவிட ஒரு நாள் தாமதமாகப் போய்ச் சேரும். சிம்சிக்குக் குறைந்த தூரக் கணக்குப் போட நன்றாகத் தெரியும். புறாக்கள் கூட்டமாக வரும். வலையில் மாட்டிக்கொண்டால் எந்தக் கோணத்தில் பறந்தால் தப்பிக்கலாம் எனக் கேட்டுச் செல்லும். காட்டில் எந்தப் பகுதியில் விருந்து என்றாலும் சிம்சிதான் பட்ஜெட் மற்றும் உணவுப் பொருட்களின் அளவுகளைப் போட்டுக் கொடுக்கும்.

எல்லாம் நன்றாகவே இருந்தது. ஒரு நாள் பலத்த மழை. காட்டிற்கு நடுவே ஓர் ஆறு ஓடுகின்றது. இந்தக் கரையில் இருந்து அந்தக் கரைக்குச் செல்ல ஒரு பெரிய மரப் பாலத்தை விலங்குகள் கட்டி இருந்தன. மழைக்கு ஆற்றில் நீர் பெருகி பாலம் உடைந்துவிட்டது. பிள்ளை விலங்குகளுக்கு உணவு தேட வந்த பெற்றோர் விலங்குகள் இந்தக் கரையில் இருந்தனர். குழந்தை விலங்குகள் அந்தக் கரையில் இருந்தனர். சிம்சியின் உதவியைக் கேட்டு வந்தனர். “சிம்சி, இங்கிருந்து அக்கரைக்குச் செல்ல எளிமையான பாதுகாப்பான வழியைச் சொல்! குழந்தைகள் பசியால் தவிக்கின்றனர்” என புலம்பினார்கள். எல்லாமே குட்டிக் குட்டி உயிரினங்கள்தாம். வரைபடத்தினை வைத்து எங்கே எளிதாகக் கடக்க இயலும் என்று யோசித்தது சிம்சி. யோசிக்கும்போது உச் உச் உச் என்ற சத்தம் வரும். ஆனால் எதுவும் சரியான வழியாக இல்லை. மழை அதிகரித்தது.
அந்தக் கரையில் இருந்து குழந்தை விலங்குகள் அழுகின்றன. அந்தச் சத்தம் இந்தப் பக்கம் கேட்டது. உடனே சிம்சி, “உணவுப் பொருட்களைத் தாங்க, நானே நீந்திக்கொண்டு எடுத்துச் செல்கின்றேன்” எனச் சொன்னது. முதலில் எல்லாப் பெற்றோர் உயிரினங்களும் தயங்கின. ஆபத்தில் சிக்கிக்க வேண்டாம் என எச்சரித்தன. சிம்சி முதுகில் பொருட்களைச் சுமந்து கொண்டு ஆற்றில் இறங்கியது. கொஞ்ச தூரம் சென்றதும் திடீர் என நடுவழியில் ஒரு சுழல் உருவானது. அதில் சிம்சி சிக்கிக்கொண்டது. எவ்வளவோ போராடியது. இரு பக்கம் இருந்தும் உயிரினங்களின் கூச்சல். முதலை ஒன்று சிம்சியைக் காப்பாற்றி மறுகரையில் இறக்கிவிட்டது. சிம்சி மயக்க நிலையில் கரையில் இறங்கியது. உணவுப் பொருட்களைக் கொடுத்தும் மயக்க நிலையிலேயே இருந்தது.

அன்றிலிருந்து சிம்சிக்கு நீர் என்றால் பயம் வந்துவிட்டது. அதனைவிடக் கொடுமை என்னவென்றால் அதற்குக் கணிதம் மறந்துவிட்டது. தன் இரையைப் பிடிக்கவும் முடியவில்லை. பாலர் பள்ளியில் படிக்கும் எறும்பு ஒன்று, 1 + 1 = எவ்வளவு என்று கேட்டதற்கு சிம்சி நீண்ட நேரம் யோசித்தது. உச் உச் உச்… கொஞ்ச நேரம் கழித்து “ஆமாம் ஒன்று என்றால் எவ்வளவு?” என்றது. நாளடைவில் சிம்சி சோர்ந்துவிட்டது. சில நண்பர்கள் அவ்வப்போது உணவு வழங்குவார்கள். சிலர் கணிதம் சொல்லித்தரவும் முயன்றனர்.
அப்போது வலசைக்கு வந்த பறவை சிம்சி பாம்பினைப் பார்த்தது. சிம்சியின் கதையைக் கேட்டது. “எதைக் கண்டு பயப்படுகின்றாயோ அதை திரும்பத் திரும்பச் செய்’ என்று மக்கள் சொல்லுவார்கள். நீ முதலில் நீரில் நீச்சலடி எல்லாம் சரியாகும்” என்றது.
சிம்சி அடுத்த நாள் ஒரு சிறிய நீர்த் தேக்கத்தில் மெதுவாகத் தலையைவிட்டு சில அடி தூரம் நீந்த முயன்றது. ஆனால், முன்பு உருவான அந்தச் சுழல் நினைவிற்கு வர பயந்தது.

“எனக்குத் தைரியம் உண்டு. என்னால் முடியும்” என மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டது. முதல் நாள் 11 அடிக்கு நீந்தியது. அடுத்த நாள் 23 அடிக்கு நீந்தியது. அடுத்து 29, 43, 47 என அதிகப்படுத்தியது. பெரும் உற்சாகம் பொங்கியது.
இம்முறை மாமழையுடன் புயலும் சேர்ந்து காட்டினைத் தாக்கியது. புதிதாகப் போடப்பட்ட பாலம் மீண்டும் உடைந்தது. பிள்ளை விலங்குகள் சில பெற்றோர் விலங்குகளும் அந்தக் கரையில் இருந்தனர். பெருவாரியான பெற்றோர் விலங்குகள் உணவு தேடத் தூரமாகச் சென்றுவிட்டனர். குறைந்த தூர வழி சொல்ல சிம்சி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டனர். “நாம சிம்சிகிட்ட கணக்குக் கத்திருக்கணும்” என்றும் புலம்பினார்கள். அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என தெரியவில்லை. ஆனால், குழந்தை விலங்குகள் பயத்தில் கத்தின.
சிம்சி எதிர்முனைக்குச் சென்று ஆறுதலும் நம்பிக்கையும் கொடுக்க ஆற்றில் இறங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்ர்ர்ரென மறுமுனைக்குச் சென்றது. முன்பைவிட வேகமாகச் சென்றடைந்தது. “யாரும் பயப்பட வேண்டாம். நான் இருக்கேன். அந்தப் பக்கம் செல்ல வழி செய்யலாம்” என நம்பிக்கை கொடுத்தது.

திடீரென உச் உச் உச்… உச் உச் உச் என்று சத்தம் எழுப்பியது. கொஞ்ச நேரம் யோசித்தது. “எல்லோரும் நகருங்க, அந்தப் பெரிய மரம் சாய்ஞ்சு இந்தப் பக்கமா விழப்போகுது; நாம அந்தப் பக்கமா நகருவோம்” என்று எச்சரித்தது. சொன்னது போலவே வேகமாக வீசிய காற்றுக்கு மரம் ஆடி அசைந்து விழுந்தது. ஆனாலும் முழுவதுமாகச் சாயவில்லை. மீண்டும் உச் உச் உச் உச் என்ற சத்தம்.
“மரத்தின் மேல ஏற முடிகிற உயிரினம் எல்லாம் ஏறி இதோ தாழ்வாகத் தொங்குதே இந்தக் கிளை மீது அழுத்தம் தந்தால் மரம் விழும் கோணம் மாறும். அது விழுந்தால் மறுமுனைக்கு இதில் ஏறிச் சென்றிடலாம்” என்றது சிம்சி.
எல்லாக் குட்டி உயிரினங்களும் மரத்தின் மேலே ஏறின.

“அப்கேளா அப்கேளா அப்கேளா” என்று பாடியபடியே அழுத்தம் கொடுத்தன.
மரம் திட்டமிட்டபடியே சரிந்து விழுந்தது. அதன் மறுமுனை அக்கரை வரை சென்றது. ஒவ்வொருவராகக் கைபிடித்துக்கொண்டு மறுகரைக்கு வந்து சேர்ந்தனர். சிம்சி மட்டும் மரத்தின் வழியே வராமல் ஆற்றில் நீந்தியபடி வந்தது.
அதற்குள் எல்லா விலங்குகளும் ஒன்று சேர்ந்துவிட்டனர். “குஞ்சனூரில் இருந்து வர தாமதமாகிவிட்டது” என்றனர்.
“எந்த வழியில் வந்தீங்க?” என சிம்சி கேட்க,
அடடா, சிம்சி பழைய நிலைக்கு வந்துவிட்டது என அறிந்து எல்லோரும் ஆனந்தக் கூச்சலிட்டனர்.
“முதல்ல எங்களுக்கும் கணக்குச் சொல்லிக் கொடு; நீதான் காட்டிலேயே ‘கெத்து’ சிம்சி” என்றனர் எல்லோரும்.

The post ’கெத்து’ சிம்சி! appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

ஏப்ரல் 2: உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (World Autism Day): மதியிறுக்கம் உடையோரின் உரிமைக்குரலை எதிரொலிப்போம்!

மதியிறுக்கம் என்பது நோயல்ல! அது ஒரு நரம்பியல் குறைபாடு. மதியிறுக்கம் என்னும் பரப்பில் ஒருவர் எங்கேயும் இருக்கலாம். மிகக் குறைவான அளவிலிருந்து மிக அதிகமான அளவு வரை குறைபாடு உடையோரை வகைமைப்படுத்தி உள்ளனர். இத்தகைய பரப்பில் உள்ளவர்களும் மனிதர்களே எனும் புரிதல் நம்மிடையே வர வேண்டும். நாம் பேசுவதைத் தொடர்புமுறையாக வைத்திருப்பது போல, இத்தகைய பரப்பில் உள்ளவர்கள் எத்தகைய முறையைத் தொடர்புமுறையாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்வழியிலே பேசும் திறனுடையோரும் தொடர்புகொள்ள வேண்டும்.
நம்முடைய தொடர்புமுறை போல அவர்களது தொடர்புமுறை இல்லாததால், அவர்களை நம்முடைய தொடர்புமுறைக்கு கட்டாயப்படுத்ததல் கூடாது. எடுத்துக்காட்டாக, நாம் பேசுவது போல அவர்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

கருவில் இருப்பதிலிருந்தே குழந்தைக்கு நரம்பியல் குறைபாடு தொடர்பான பரிசோதனைகளை மருத்துவர் பரிந்துரையின் படி மேற்கொள்ளல் வேண்டும். எவ்வளவு குறுகிய காலத்தில் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிகிறோமோ, அவ்வளவு விரைவாக அவர்களுக்கான சிகிச்சைகளும், பயிற்சிகளும், நமக்கான பயிற்சிகளும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இக்கட்டுரையில், எழுத்தாலும், தொழில்நுட்பத்தாலும் தொடர்புகொள்ளும் 13 வயது மதியிறுக்கக் குறைபாடு உடைய குழந்தை ஸ்வரித் கோபாலன் எழுதிய கவிதைகள் குறித்தும் அதன் உள்ளடக்கக் கருத்துகள் குறித்தும் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஸ்வரித் கோபாலன் இசையையும், எழுத்தையும் விரும்பி அதையே தொழில்நுட்ப வாயிலாக தன்னுடைய தொடர்புமுறையாக வைத்திருக்கிறார்.

தனது கவிதைகள் மூலம் அவரது கோணங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் மக்களுக்குக் கடத்துவதோடு, தன்னைப் போன்று பேச்சால் தொடர்புகொள்ள முடியாதவர்களுக்குத் தனது எழுத்துகளால் உரிமைக் குரல் எழுப்பும் ஓர் உரிமைப் போராளியாக இருக்கிறார்.
மதியிறுக்கமுடையவர்களை மற்றவர்கள் (பேச்சினைத் தொடர்பு முறையாக வைத்திருக்கும் நம்மைப் போன்றவர்கள்) இரக்கத்துடனும், பரிதாபத்துடனும் அணுகாமல், நல்ல ஆழ்ந்த புரிதல்களுடன் அவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் நண்பர்களாக மாற்ற, தனது எழுத்துகள் உதவும் என நம்பிக்கையுடன் இயங்குகிறார் ஸ்வரித். அண்மையில் அவரது ஆழ்மனதின் அதிரும் எதிரொலிகளாய் விளங்கும் ‘Loud Echoes of the Soul’ எனும் கவிதைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
பேசமுடியாத மதியிறுக்கக் குறைபாடு உடையோரைப் (Non speaking Autistic person) பொதுவாகவே சிந்திக்கும் திறனற்றோர் எனும் கோணத்திலேயே அவர்களை நாம் அணுகுகிறோம். அந்தக் கோணம் எவ்வளவு பிழையானது என்பதைச் சுட்டிக் காட்டும் கவிதை தான் My Body, Not My Mind எனும் தலைப்பில் அவர் எழுதியிருப்பது.

தன் உள்ளத்திற்கும், உடலுக்கும் இடையே நடக்கும் மோதல்களை விளக்கும் கவிதை தான் இது. மதியிறுக்கமுடையோர் ஏன் எல்லா நேரங்களிலும் நம்மைப் போல இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் இந்தக் கவிதை உதவும். அவர்களே நினைத்தாலும், அவர்களது உடல் ஒத்துழைப்பது இல்லை என்பதனை உணர்ந்து கொண்டு பொதுவெளியில் மதியிறுக்கம் கொண்டோரைக் காண நேர்கையில் அவர்களைப் புரிந்துகொண்டு பழகுங்கள், பரிதாபத்துடன் பார்க்காதீர்கள் என ஸ்வரித்தின் குரலை நானும் எதிரொலிக்கிறேன்.
மதியிறுக்கம் உடையவர்களை அவர்கள் நிலையிலிருந்து, அவர்களின் புரிதல்களுடன் அணுகுவதே சமத்துவமாகும். பேச்சைத் தொடர்புமுறையாக கொண்டிராத மதியிறுக்கம் உடையவர்களுக்கு, அவர்களது தொடர்புமுறையை அறிந்து அம்முறையிலே தொடர்பு கொள்வதே அறிவுடைமையாகும். அவர்களின் உரிமைக்கு அவர்களுடன் இணைந்து குரல்கொடுப்பதே சமூகநீதியாகும்.

My Body, Not My Mind
Mind creates the perfect script
The body ruins with a meandering monologue
Nothing rolls as planned
For the body has a mind of it’s own
Go, I say; Freeze, it screams
No more, I command; Very yummy, It retorts
Forward, I plead; Just chill, it moans
Hurry up, I rush; Pipe down, it mulls
Try harder, I negotiate; Next time, it mellows
Cease, I nudge; Keep monkeying, it convinces
One is constantly fighting the other
Confusing spectacle for me, no chance for others
Not asking them to be best friends
Can they at least move to talking terms?
– Swarit Gopalan.

தமிழாக்கம்:
எனது உள்ளமல்ல, எனது உடல்
“நேர்த்தியான நாடகத்தை உருவாக்குகிறது எனது உள்ளம்
அதை எனக்குள்ளேயே பேசிக் கொள்ளும்
குழம்பிய உரையாடலாகச் சிதைக்கிறது எனது உடல்
எதுவும் நடக்கவில்லை திட்டமிட்டபடி
உடல் தனக்கென கொண்டிருக்கிறது ஓர் உள்ளத்தை!
போ, என நான் கூறுகிறேன்; உறைந்து நில் என அது கதறுகிறது
இனியும் முடியாது என கட்டளையிடுகிறேன் நான்;
அருமையாக இருக்கிறது என பதிலடி தருகிறது
முன்னேறு, என இறைஞ்சுகிறேன் நான்;
அமைதியாக இரு என முனகுகிறது.
வேகமாக என விரட்டுகிறேன்;
கூச்சலிடாதே பார்க்கலாம் என்கிறது
கடினமாக முயற்சி செய், பேச்சுவார்த்தை நடத்துகிறேன் நான்;
அடுத்த முறை என துருத்துகிறது
நிறத்து, எனத் தள்ளுகிறேன் நான்;
ஊசலாடிக் கொண்டே இரு என சமாதனப்படுத்துகிறது
ஒன்று மற்றொன்றுடன் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது
குழப்பும் காட்சியாக எனக்கே இருக்கிறது,
மற்றவர்களுக்குப் புரிய வாய்ப்பே இல்லை
அவை உற்ற நண்பர்களாக இருக்க வேண்டுமென கேட்கவில்லை
குறைந்தபட்சம் பேச்சுவார்த்தைகாவது வரலாம் அல்லவா?”
– ஸ்வரித் கோபாலன்

The post ஏப்ரல் 2: உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (World Autism Day): மதியிறுக்கம் உடையோரின் உரிமைக்குரலை எதிரொலிப்போம்! appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

நினைவில் நிறுத்துவோம் : சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம்

சிக்கனம் – தந்தை பெரியார் கடைப்பிடித்த வாழ்க்கை முறையில் முதன்மையானது. நேர்மையான முறையில் சிறுகச் சிறுகச் சேர்த்தவர் பெரியார். எனவே, செலவையும் திட்டமிட்டு, தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகவே செலவிட்டார். அதே நேரத்தில் கட்டாயத் தேவைக்கு தாராளமாகச் செலவிட்டார்.
ஒவ்வொரு பைசாவையும் யோசித்துச் செலவிட்ட பெரியார், அண்ணா உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்காவிற்குச் சென்றபோது, அவர் பிழைத்து நலமுடன் வரவேண்டும் என்பதற்காக எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருந்தார்.
கொள்கை பரப்ப, பத்திரிகைகள் நடத்துவதில் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆதரவற்ற, எளிய பிரிவுப் பிள்ளைகளுக்குக் கல்வியும், உணவும், இருப்பிடமும் கிடைக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டுக் கல்வி நிலையங்களும், விடுதிகளும் அமைத்தார்.

இங்குதான் பிஞ்சுகள் சிக்கனம் என்றால் என்ன என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். தேவைக்குச் செலவு செய்ய வேண்டும். அதைத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும். தேவைக்குக் கூட செலவு செய்யாமல் முடிந்து (சேமித்து) வைத்தால் அதற்கு கஞ்சத்தனம், கருமித்தனம் என்று பெயர்.
சிக்கனம் வேறு; கருமித்தனம் அல்லது கஞ்சத்தனம் வேறு. தேவைக்குச் செலவு செய்ய வேண்டும் என்னும் போது நாம் விருப்பப்படுவதற்கெல்லாம் செலவு செய்தல் என்று பொருள் அல்ல. ஒரு மனிதனின் ஆசை, விருப்பங்கள் அளவற்றவை. ஒன்று நிறைவேறினால் இன்னொன்று வரும். அதுவும் நிறைவேற்றப்பட்டால் மற்றொன்று வரும். ஆசைக்கு அளவில்லை; விருப்பங்கள் எல்லையற்றவை.

சரியானதைத் தேர்வு செய்தல்:
எண்ணற்ற விருப்பங்கள், தேவைகள் நமக்கு இருப்பினும் அதில் எது சரியானது, எது தப்பானது என்று முதலில் முடிவு செய்ய வேண்டும். பழம் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் சரியானது, உடலுக்கு நலம் தருவது. புகைபிடித்தல், போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல் தப்பானது, தீயது, உடலுக்குக் கேடு தரக் கூடியது. எனவே, நல்லதைத் தேர்வு செய்தால் நமக்கு நன்மை கிடைப்பதோடு செலவும் குறையும். இது சிக்கனத்தைக் கடைப்பிடிக்கப் பின்பற்றும் வழிகளில் ஒன்று.
விரயம் (வீண்) செய்யாமல் இருத்தல்:
உணவு, உடை, நீர், இயற்கை வளங்கள் எதுவாயினும் அவற்றை ஒரு சிறு அளவு கூட வீணடித்தல் கூடாது. தண்ணீர்தானே என்று அதைக் கண்டபடி, தேவைக்கும் அதிகமாகச் செலவிடுவது குற்றம்; இந்தச் சமுதாயத்திற்கு நாம் செய்யும் கேடு.

திட்டமிடல்:
திட்டமிட்டுச் செய்தால் எதுவும் வீணாவதைத் தடுக்க முடியும். எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன், அதை எந்த அளவிற்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று திட்டமிட்டுப் பயன்படுத்தினால் அது வீண் ஆகாது. திட்டமிடாமல் பயன்படுத்தினால் வீண் ஆகும். 5 பேருக்குச் சமைக்கிறோம் என்றால் அதற்கு ஒவ்வொரு பொருளையும் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று கணக்கிட்டுப் பயன்படுத்தினால் வீணாகாது. கணக்கிடாமல் பொருளைப் பயன்படுத்தினால் சமைத்தவை மிகுந்து பாழாகும்.

நேரச் சிக்கனம்:
பொருள்களைச் சிக்கனமாகச் செலவிடுவது போலவே நேரத்தையும் சிக்கனமாகச் செலவிட வேண்டும். அதற்கு நேர மேலாண்மையும், திட்டமிடலும் கட்டாயம். படிக்கின்ற மாணவர்களுக்கு நேரச் சிக்கனம் கட்டாயம்.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும். விளையாடுவதற்கு எவ்வளவு நேரம், தொலைக்காட்சி பார்க்க எவ்வளவு நேரம், குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசி மகிழ எவ்வளவு நேரம், உறங்க எவ்வளவு நேரம் என்று கணக்கிட்டு நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நேர வீணடிப்பு நிகழாது. இல்லையென்றால் நேரம் பற்றா நிலை ஏற்படும். விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் அதிக நேரம் செலவிட்டு விட்டு, படிக்க நேரம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவது நேரக் கணக்கீடும், ஒதுக்கீடும் செய்யாததால் வரும் விளைவாகும்.

எழுத்திலும் பேச்சிலும் சிக்கனம்:
எந்தவொன்றையும் எவ்வளவு சுருக்கமாகவும் விளக்கமாகவும், ஆழமாகவும், செறிவாகவும் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல வேண்டும், எழுத வேண்டும். மாறாக, தேவையற்ற பேச்சும் எழுத்தும் சலிப்பை ஏற்படுத்துவது போலவே, வெறுப்பையும் ஏற்படுத்தும். இன்றைக்குச் சமூக ஊடகங்களில் கூட இரண்டு நிமிடம், அய்ந்து நிமிடங்களில் சுருக்கமாகச் சொல்வது – பின்பற்றப்படுவது இந்த உண்மை அறிந்து தான். வள்ளுவர் அறிவார்ந்த, ஆழமான, செறிவான கருத்துகளை இரண்டு அடிகளில் கொடுத்துள்ளதைப் பிஞ்சுகள் நெஞ்சில் நிறுத்த வேண்டும். சொற்சிக்கனத்தில் உலகிலேயே சிறந்தவர் வள்ளுவர் தான். அவரை மாணவர்கள் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

சிக்கனமின்மையின் பாதிப்பு:
திட்டமின்றி, சிக்கனமின்றிச் செலவு செய்வதால் இழப்பு மட்டும் அல்ல; பாதிப்பும் ஏற்படும். அய்ந்து வரிகளில் பதில் எழுத வேண்டிய வினாவிற்கு 20 வரிகளில் பதில் எழுதினால் நேர வீணடிப்பு, உழைப்பு வீணடிப்பு மட்டுமல்ல, தேர்வு எழுதும் மாணவனுக்குப் பாதிப்பு ஏற்படும். அய்ந்து வரியில் எழுத வேண்டிய பதிலுக்கு அதிக நேரத்தைச் செலவிட்டு விட்டதால், விரிவான விடை எழுத வேண்டிய கேள்விகளுக்கு நேரம் போதாமல் போகும். அதனால் மதிப்பெண் இழப்பு ஏற்படும். எனவே சிக்கனமின்மை இழப்பை மட்டும் தராது, பாதிப்பையும் தரும்.
எனவே, எந்தவொன்றிலும் சிக்கனமாக (தேவையான அளவு) பயன்பாடு இருக்க வேண்டியது கட்டாயம். இதைப் பிஞ்சுகள் இளம் வயதில் இருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.

வருவாய் அறிந்து செலவு
சிக்கனம் பற்றி நாம் அறியும்போது இக்கருத்தையும் ஆழமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். பணக்கார வீட்டுக் குழந்தை அதிகம் செலவிடுவதைப் பார்த்து, ஏழை வீட்டுக் குழந்தை அதிகம் செலவு செய்யக் கூடாது.
பணக்காரப் பையன் மாதுளை, ஆப்பிள் சாப்பிடுகிறான் என்றால், ஏழையும் செலவு செய்ய முடியாது. அப்போது கீரை, நெல்லிக்காய், சப்போட்டா, கம்பு, கேழ்வரகு போன்ற விலை மலிவான, ஆனால் சத்தான உணவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக நன்மை பெற முடியும்.
சிக்கனம் செய்வதே பின்னாளில் எந்த அவசியத் தேவைக்கும் நாம் பயன்படுத்திக் கொள்ளத்தான்.
சிக்கனத்தில் மிக முதன்மையாக நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியது, வருவாய் குறைவு என்று கவலைப்படாது, செலவை வருவாய்க்குள் செய்யத் திட்டமிட வேண்டும் என்பது தான். இதையே வள்ளுவர்,
“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை”
என்றார். சிந்தையில் கொள்ளுங்கள்.

The post நினைவில் நிறுத்துவோம் : சிறப்பான வாழ்வுக்கு சிக்கனம் அடித்தளம் appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

உலகப் புத்தக நாள்: ஏப்ரல்-23 – புத்தாக்கக் கூடங்கள்

அடப்பாவிகளா? சேர்த்துப்படிங்க கடி புரியும்!

“அது ஒரு சிகப்புக் கலர் புத்தகம் சார்!
பெயரை மறந்துட்டேன்!’னு எத்தனை தடவை நூலகரை தொந்தரவு பண்ணிருப்போம்.

Over Booking இங்க பிரச்சினையே இல்லை!

Pleasure your Shelf
என்றால் உங்களை நீங்கள் மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொருள்.
இங்கே இருப்பது
Pleasure your (Book) Shelf!

Dino‘Saurs’ இல்லாட்டி என்ன?
The‘Saurus’ இருக்கே!
(Thesaurus ஒரு சொல்லுக்குத் தொடர்புடைய பல சொற்களைத் தரும் ஏடு. ‘‘இணைப் பொருள் சொற் களஞ்சியம்’’ என்று பொருள்)

‘‘ரசனைல்ல!’’ இருந்தாலும் இவ்வளவு உயரம் too much!

Mystery — மர்மக்கதை புத்தகங்கள்தான் — சரி! அதுக்காக என்ன புத்தகம்னு கூடவா தெரிஞ்சுக்க முடியாம திருப்பி வைப்பீங்க?

எலக்ட்ரானிக் கருவிகளைத் தவிரவும் உரிய பொழுதுபோக்குக் கருவிகள் இருக்கு…. உள்ளே வாங்க!

புத்தக வாசிப்பு என்பது அறிவுக்கும், அமைதிக்கும், புரிதலுக்கும் வழிவகுக்கக்கூடியது. புத்தக வாசிப்பாளர்கள் அதற்குள்ளேயே அமிழ்ந்து போகக்கூடியவர்கள் அல்ல! ரசனைக்குரியவர்களும்கூட!
நூலகங்களை தலைப்பு வாரியாக அடுக்கி வைத்திருக்கும் கூடங்களாக இல்லாமல், இங்கே எவ்வளவு ரசனையாக நூலக வளாகங்களை வைத்திருக்கிறார்கள் பாருங்கள்!

The post உலகப் புத்தக நாள்: ஏப்ரல்-23 – புத்தாக்கக் கூடங்கள் appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

அடேயப்பா…! – 13 : வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வித்தியாசமான வாகனங்கள்

நம்ம வீட்டுல சில பேருக்கு மெக்கானிக் மூளை இருக்கும்னு சொல்லுவோம். கையில கிடைக்கிற எதையாவது வச்சு, மோட்டார் ஓட்டுறது, ரிப்பேர் பண்றது, பேட்டரியை வைச்சு எதையாவது செஞ்சு பார்க்கிறது, கெட்டுப் போன பொம்மைகளை எடுத்து செயல்பட வைக்கிறதுன்னு எதையாவது செஞ்சுக்கிட்டே இருப்பாங்க. அப்படி. வீட்டிலேயே உருவாக்கப்பட்ட சூப்பரான வாகனங்களைப் பற்றித் தான் இந்த இதழ்ல பார்க்கவிருக்கிறோம்.
இந்த வகையான வாகனங்களை விட, அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தி இருக்கும் பொருட்களைப் பார்த்தால் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்.
முதலாவது, ஒரு மனிதரை மட்டும் சுமந்து செல்லும் வகையிலான ‘Human Drone’ எனப்படும் ஒருவகையான வானூர்தி. துபாயில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Flying Car’ஆன இதன் விலை சுமார் 2 கோடி இருக்கும். ஆனால், இதனை மார்ஸிலோ லாவரேடர் என்பவர் வீட்டிலேயே தயாரித்துள்ளார். அதுவும் மிகவும் குறைந்த செலவில் அலுமினியக் கம்பிகளையும், 4 மோட்டார்களையும் கொண்டே தயாரித்துள்ளார்.

அடுத்தது, ‘Crazy Car.’ இப்படி ஒரு காரை இதுவரை நாம் எங்குமே பார்த்திருக்க மாட்டோம். அன்சின் பில்ட்ஸ் என்பவர் பழைய மாடல் ஃபோர்டு காரை மூன்று சக்கரங்கள் கொண்ட வித்தியாசமான காராக மாற்றி வைத்துள்ளார். இதற்கு “டேஞ்சர் ரேஞ்சர்” என்ற பெயரும் வைத்துள்ளார். ஆனால், சரியாக யோசித்து இதனை வடிவமைக்காததால் இதனை இயக்குவது கடினம்.

அடுத்தது, ‘Jet Car.’ ரேஸ் கார்களுடைய விலை ஏறிக்கொண்டே இருக்கின்றது. அதனால் ஜெட் என்ஜினைப் பயன்படுத்தி கார்ட்ஸ் கிரேசி ஃபீல் என்பவர் இந்த ஜெட் காரை உருவாக்கி இருக்கின்றார். 4 பூஸ்டர்களுடைய ஜெட்டின் என்ஜினைக் காருக்கு ஏற்றாற்போல மாற்றி இந்த வாகனத்தை உருவாக்கி இருக்கின்றார். இந்த என்ஜினையும் அவரே தான் உருவாக்கியுள்ளார். இந்த வண்டியை அவர் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை ஓட்டி இருக்கின்றாராம்.

கடைசியாக, ‘Shark Boat.’ ஸுபர் போட்ஸ் என்பவர் அச்சு அசலாக சுறா மீனைப் போலவே தோற்றமளிக்கும் இந்த வாகனத்தை உருவாக்கியிருக்கிறார். இது தண்ணீரில் மிகவும் வேகமாகப் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரிப்பதற்காக ஆற்றோரங்களில் வீணாகக் கிடந்த படகுகளின் பாகங்களை மாற்றி பழைய என்ஜினைப் பழுது பார்த்து புதிய என்ஜின் போல மாற்றி அதன் மேல் சுறா வடிவமைப்பைப் பொருத்தி இதைத் தயாரித்துள்ளார். இதே போல நீரில் பயணம் செய்யக் கூடிய வகையில் பல வித்தியாசமான வாகனங்களை இவர் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனங்களையே விநோதமாகப் பார்த்த காலம் போய், இப்போது விலையேற்றத்தின் காரணமாகவும், எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் இருப்பதாலும். நாமே விநோதமான வாகனங்கள் தயாரிக்கும் அளவு வளர்ந்திருக்கின்றோம்.

அடுத்தது, ‘Mono Bike.’ கேஜி கரேன்ஜ் என்பவர் தனது வழக்கமான பைக்கை தனித்தனியாகப் பிரித்து ஒற்றைச் சக்கரம் கொண்ட வித்தியாசமான பைக்காக மாற்றி வைத்துள்ளார். இந்த வகையான வாகனம் தற்போது பலரால் விரும்பப்படுகிறது.

நம்மூரிலும் இவர்களைப் போல நிறைய கண்டுபிடிப்பாளர்கள், மெக்கானிக் மூளைக்காரர்கள் இருப்பார்கள் அல்லவா? நீங்கள் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் இப்படி ஏதாவது செய்திருக்கிறீர்களா? எங்களுக்கு விவரமாக எழுதுங்கள்!

The post அடேயப்பா…! – 13 : வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வித்தியாசமான வாகனங்கள் appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

❌