எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரனின் கவிதைத்தொகுப்பு “பாவை என்று சொல்லாதே என்னை” – மனஓசை வெளியீடு. 72 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. புகலிடத் தமிழ் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட பெண் ஆளுமைகளில் ஒருவர் சந்திரவதனா செல்வகுமாரன். எழுத்தாளர் சந்திரா இரவீந்திரனின் (செல்வி சந்திரா தியாகராஜாவாக அறிமுகமானவர்) சகோதரி. இவரது சகோதரர்கள் மூவர் இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து, போராடி மறைந்தவர்கள். தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சந்திரவதனா செல்வகுமாரன் ஆத்தியடி, பருத்தித்துறையைச் சேர்ந்தவர்.
ஐபிசி தமிழ் வானொலி, எரிமலை (சஞ்சிகை), ஈழநாடு (பாரிஸ்) பெண்கள் சந்திப்பு மலர், இணைய இதழ்களான வார்ப்பு, சூரியன், பதிவுகள், யாழ் இணையம், வளரி ஆகியவற்றில் வெளியான கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
தொகுப்பின் ‘என்னுரை’ சந்திரவதனாவின் எழுத்துலகப் பயணத்தைச் சுருக்கமாக விபரிக்கின்றது. இலங்கைத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைக்கு இவர் அனுப்பிய கவிதை அந்நாளில் பிரபல ஒலிபரப்பாளராக விளங்கியவர்களில் ஒருவரான இராஜேஸ்வரி சண்முகத்தின் பாராட்டைப் பெற்று ஒலிபரப்பானதாக (1981) ‘என்னுரை’யில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாளில் இராஜேஸ்வரி சண்முகம் நடத்திய ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரி பெண்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்று. அதில்தான் அந்த ‘வயல்வெளி’ என்னும் கவிதை ஒலிபரப்பானது. நன்கு அறியப்பட்ட பெண் எழுத்தாளர்கள் பலரின் அடித்தளமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை இருந்திருக்கின்றது. இவரது சகோதரி சந்திரா இரவீந்திரனின் எழுத்துலகப் பயணமும் 1981இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையிலேயே ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்னும் சிறுகதை மூலம் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை அவர் சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதியிருந்தார்.
அதே சமயம் இவரது எழுத்தார்வத்தைத் தூண்டியவர் இவரது தந்தையாரான தியாகராஜாவே என்பதையும் ‘என்னுரை’ எடுத்துக்காட்டுகின்றது. சிறுவயதிலேயே தியாகராஜா அவர்கள் நாட்குறிப்பேடொன்றினைச் சந்திரவதனாவுக்கு வழங்கி அவரது அன்றாட அனுபவங்களை எழுதும்படி தூண்டியிருக்கின்றார். அதுவே பின்னர் அவரது எழுதுலகப் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இச்சமயத்தில் வீடெங்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்களால் நிறைத்திருந்த என் தந்தையாரின் நினைவுகளும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுவே என் எழுத்தார்வத்துக்கும் தீனி போட்டது.
இத்தொகுப்பின் “பாவை என்று சொல்லாதே என்னை” என்னும் பெயரைப் பார்த்ததும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் கவிதைகளை மையமாகக் கொண்டு இத்தொகுப்பு அமைந்திருக்குமென்று எண்ணினேன். தொகுப்பு அதனைப் பொய்ப்பிக்கவில்லை. பல கவிதைகள் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்கின்றன. இத்தொகுப்பு பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பதோடு, நனவிடை தோய்தல்களாகவும் அமைந்திருக்கின்றன. அந்நினைவிடைத் தோய்தல்கள் சந்திரவதனா தன் வாழ்வில் சந்தித்த பல்வகை அனுபவங்களை, இழப்புகளை, அவற்றால் எழுந்த நீங்கா நினைவுகளை வெளிப்படுத்துகின்றன. அவரே ‘என்னுரை’யின் இறுதியில் கூறுவதுபோல் அவரது ‘உணர்வுகளின் வடிகால்கள்’ அவை.
தொகுப்பின் தலைப்புக் கவிதை “நான் ஒரு பெண்“. இதன் வரிகளே ‘பாவை என்று சொல்லாதே என்னை’
‘பாவை என்று சொல்லாதே என்னை நுள்ளியும் கிள்ளியும் நீ விளையாடவும் அலுப்புத் தட்டினால் தள்ளி எறியவும் நான் ஒன்றும் வாய் பேசாப் பொம்மையில்லை!’
இக்கவிதை வரிகள் அனைத்தும் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பவை.
‘வீணை என்று சொல்லாதே என்னை. நீ மீட்டுகையில் நாதமிசைக்கவும் மீட்டாதிருக்கையில் மெளனிக்கவும் நான் ஒன்றும் ஜடமில்லை!’
‘பூ என்று சொல்லாதே என்னை தேவைப்பட்டால் சூடவும் வாடி விட்டால எறியவும் நான் ஒன்றும் எந்த வண்டுக்குமாய் இதழ் விரிக்கும் மலரில்லை!’
இவ்விதம் ஆணாதிக்க சமுதாயமொன்றில் விடுதலைக்காக ஏங்கும் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதையின் இறுதி வரிகள் அன்புடன் கூடிய மென் உறவுக்காக ஏங்கும் ‘பெண் என்று மட்டும் எண்ணு என்னை, அது போதும் எனக்கு!’ என்று முடிகிறது.
“நாற்குணம்” என்னும் கவிதையில் பெண்ணை அடிமையாக்கியோர் நாணப் போராடுகின்றார்கள் தமிழீழ விடுதலைப்புலிப் பெண் போராளிகள். இருந்தும், ‘சீதனம் என்னும் சிறுமை இன்னும் சீராக அழியவுமில்லை. ஆணாதிக்கமும் அடக்குமுறையும் முற்றாக ஒழியவுமில்லை!’
“தொலைக்காதே உன்னை” என்னும் கவிதை ‘பெண்ணே! நீ, கிளர்ந்தெழு! அழுவதை மறந்திடு. போரிடவும் துணிந்திடு!’ என்று பெண்களை நோக்கி அறைகூவல் விடுக்கிறது.
“வழக்கம்போல் அடுப்படிக்குள்” என்னும் கவிதை ‘அகப்பையும் கையுமாய் அடுப்படியை வலம் வருவதும் படுக்கை விரிப்பதுவும் தான் பெண்ணுக்கு வரைவிலக்கணம் என்ற் நினைப்பை கொளுத்தி எறிந்தவள் மாலதி’
என்று சமையற்காரியாய், போகப்பொருளாய் இருப்பதுதான் பெண்ணின் வரைவிலக்கணம் என்னும் நிலையை மாற்றியவள் பெண் போராளியான மாலதி என்று கூறும் கவிஞை கவிதையைக் கீழுள்ளவாறு முடிக்கின்றார்.
‘…கடுப்போடு என் கணவன் சிடுசிடுக்க மிடுக்கும் போய் மாலதியின் நினைப்பும் போய்.. அகப்பையும் கையுமாய் அடுப்படிக்குள் நான் வழக்கம் போல..!’
மாலதி போன்ற பெண் போராளிகளின் இருப்புக் கூட சமுதாயத்தில் பெண்ணின் நிலையை மாற்றவில்லையே என்று இங்கு கவிஞை வேதனைப்படுகின்றார்.
“களிக்கும் மனங்களே கசியுங்கள்” என்னும் கவிதையை இயக்கத்துக்கு உதவும்படி வேண்டும் பிரச்சாரக் கவிதையாகக் கருதலாம்.
“புற்று நோய்” என்னும் கவிதை அலுலகத்தில் கூட பணி புரியும் பெண்ணொருத்திக்கு புற்றுநோய் காரணமாக அவளது மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்க இருக்கின்றார்கள். அப்பெண்ணுக்கு அது தரும் வேதனையை எடுத்துரைக்கும் கவிதை. அக் கவிதை ஆணாதிக்கச் சமுதாயத்தில் மார்பகத்தை வெறும் உறுப்பாக உணராமல், போகப்பொருளாகக் கருதும் நிலையும் அப்பெண்ணின் துயரத்துக்குக் காரணம் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது. இதன் மூலம் இக்கவிதையும் பெண் விடுதலைக்கவிதைகளில் ஒன்றாக இனங்காணப்பட முடியும்.
“உனக்காய் வாழ்‘ என்னுங் குறுங்கவிதையும் ‘பெண்ணே! ஊருககாய் வாழாதே! உனக்காய் வாழ்!’ என்று பெண்ணை எழுச்சி கொள்ளக் கோரிக்கை விடுக்கிறது.
இன்னுமொரு குறுங்கவிதை “உனதாய்” அது ‘உனது இருப்பு உனது விருப்போடு உனதாய் இருக்கட்டும்!’ என்று அறிவுரை கூறுகிறது.
‘உனக்கு விடுதலை வேண்டும்‘ கவிதை ‘பெண்ணே! உனக்கு விடுதலை வேண்டும்!’ முதலில் உனக்கு உன்னிடமிருந்து விடுதலை வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. கலாச்சாரம், பண்பாடு, அம்மா, அம்மம்மா வழிமுறையில், சமூகச் சங்கிலியை உடைத்தெறிய முடியாமல் அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணுக்கு முதலில் அவளிடமிருந்து விடுதலை வேண்டும் என்கின்றது.
“ரணம்” கவிதை ‘உனக்காக என் சுயத்தை எல்லாம் இழந்தது போதும்… இழப்பதற்கு என்னிடம் இனி எதுவுமே இல்லை!’ என்று தன்னை உணர்ந்து சுயபரிசீலனை செய்த பெண்ணொருத்தியின் உளநிலையினை வெளிக் காட்டுகிறது.
“பால்வினை” என்னும் இன்னுமோர் குறுங்கவிதை ஏழ்மையினால், மனிதர்களின் இச்சையினால், சூழ்ச்சியினால், பால்வினைக் கிணறுகளுக்குள் தள்ளப்பட்டு, உடல்களுடன் உள்ளங்களும் ஊனமான பெண்களைப்பற்றி வருந்துகிறது.
“உன் பலம் உணர்ந்திடு” குறுங்கவிதை தாயகத்தில் ‘வெண்கலத்துடன் போராடிய பெண்களின் கைகள் சுடுகலன்கள் ஏந்தி நிற்கையில், புகலிடத்திலோ தமிழ்ப்பெண்கள் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் ஒளிந்திருந்து தம் வலிமை உணராமல் கண் கலங்குகின்றார்கள்’ என்று விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
“பெண்ணே நீ இன்னும் பேதைதானே!” கவிதை ‘மஞ்சளில் தாலி கட்டி வேலி என்பார்!…. நுண்ணிய உணர்வுகள் உனக்கேன் என்பார். பெண்ணெனப் பிறந்ததற்காய் இன்னும் என்ன சொல்வார்?’ என்று கேள்வி கேட்கிறது.
இவ்விதம் தொகுப்பின் பல கவிதைகள், தொகுப்பின் தலைப்புக்கேற்பப் பெண் விடுதலையை வலியுறுத்துபவையாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
“சுதந்திரம்” இலங்கையின் சுதந்திரம் தமிழ் மக்களுக்குச் சுதந்திரத்தைத் தரவில்லை. மாறாக 1958 தொடக்கம் 1983 வரையில் இனரீதியிலான வன்முறைகளைத்தாம், அடக்குமுறைகளைத்தாம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்க முடியாது அந்நியநாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற கோழைகள் என்று தன்னை விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார் சந்திரவதனா.
“கொழும்பு றோட்டில்” போர்ச்சூழலில் தாயகம் திரும்பிய பெண் ஒருத்திக்கு அங்கு நிலவிய பாதுகாப்புரீதியிலான அடக்குமுறைகள் ஏற்படுத்தும் பொலிஸ் ரிப்போர்ட், திடீர் சோதனைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்… என்று பல இடர்களை விபரிக்கிறது.
“உயிரோடு திரும்புவேனா” புகலிடமான ஜேர்மன் நாட்டில் குழந்தைகளை விட்டு விட்டு, நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் தந்தையைப் பார்க்கச் செல்லும் பெண்ணொருத்தி, தாய் மண்ணில் நிலவும் அனர்த்தங்கள் கண்டு தளராமல் செல்வதை எடுத்துரைக்கும் கவிதை.
இழந்த மண்ணின், இனிய இறந்த காலத்து நினைவுகளால் எழும் கழிவிரக்கத்தை வெளிக்காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் சில உள்ளன. அவற்றிலொன்று “சுகமான நினைவு“. சிறிது நீண்ட கவிதை. வாசிக்கையில் வாசகருக்கும் சுகமான இனியதோர் உணர்வினைத்தரும் மொழி கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது. ‘செங்கொண்டைச் சேவல் குரலெடுத்துக் கூவ, செம் மஞ்சட் கதிர்களை கதிரவன் வீச, பறவையினம் சிறகடிக்க, வண்டினங்கள் ரீங்கரிக்க, குயிலினங்கள் இசைபாட, மெல்லென விடிந்தது அங்கெனது காலை’ என்று இழந்த காலத்து நனவிடைதோய்தலின் இனிமையில், அதனால் விளைந்த கழிவிரக்கத்தில் மூழ்கிக்கிடக்கும் உளத்தை இக்கவிதை விபரிக்கின்றது.
“நிமலராஜனே!” ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை பற்றிப் பேசும் கவிதை. பேச்சுரிமையற்ற சூழலில் நினைவாகிப் போன ஒருவராக அவரை விபரிக்கின்றது.
சந்திரவதனா செல்வகுமாரனின் அண்ணன், தம்பியர் இருவர் ஈழ விடுதலைப் போராளிகளாகத் தம்மை அர்ப்பணித்தவர்கள். ஒரு குடும்பத்துக்கு இது மிகப்பெரிய இழப்பு. காலத்தால் அழிக்க முடியாத பெருந்துயரம். தொகுப்பின் முதல், இறுதிக்கவிதைகள் இவ்விதம் போராட்டத்தில் அமரத்துவம் அடைந்த சகோதரர்களைப்பற்றி நினைவு கூர்கின்றன. இறுதியாக அவர்கள் நினைவுகளில்தாம் இருக்கின்றார்கள். தொகுப்பின் முதற் கவிதையான “நினைவுகள்” மூத்தக்கா என்றழைக்கும் தம்பியைப்பற்றியும், சின்ன வார்த்தைகளால் சீண்டும் அண்ணனைப்பற்றியும் நினைவு கூரும். இறுதிக்கவிதை “தம்பிமார்”, “அண்ணா!”, “தம்பியர்” பற்றிய நினைவுகளின் வெளிப்பாடு. ஒரு வகையில் இத்தொகுப்பை அவர்களுக்கான் அஞ்சலித் தொகுப்பாகவும் கருதலாம். தொகுப்பைத் தொடங்கும், முடிக்கும் வாசகர் ஒருவருக்கு அவர்களை நினைவூட்டும் வகையில் இந்த ஒழுங்கமைப்பு அமைந்திருக்கின்றது.
இவை தவிர மனம், காதல்… என மானுட வாழ்வின் முக்கியமான ஏனைய விடயங்களைப் பற்றிய கவிதைகளும் தொகுப்பிலுள்ளன.
புயலடித்துச் சாய்ந்த மரமொன்றின் குரல் “புயலடித்துச் சாய்ந்த மரம்“. அதன் இளமைப்பருவத்தில் மரத்தை அல்லும் பகலும் தழுவிக் கிடந்த தென்றல் அதன் முதுமையில் புயலாக மாறிச் சீர்குலைத்தது ஏன் என்று கேட்கின்றது. ‘கனிதரும் காலம் போய்விட்டாலும், நீ களைப்பாக வரும்போதெல்லாம் இளைப்பாற இடம் தந்திருப்பேனே, வேரோடு சாய்த்து விட்டாயே! என்று அது வேதனையுறுகின்றது. இது மரத்தின் கவிதை மட்டுமா? அல்லது மானுடர் வாழ்வையும் கேள்விக்குள்ளாக்கும், விமர்சிக்கும் ஒரு குறியீட்டுக் கவிதையா? அர்த்தங்கள் பலவற்றை அறிந்து கொள்ள வைப்பவை எழுத்துகள். இதுவும் அவ்வகை எழுத்துகளில் ஒன்று.
சந்திரவதனா செல்வகுமாரனின் “பாவை என்று சொல்லாதே என்னை” கவிதைத்தொகுப்பு பெண் விடுதலை, பெண் போராளிகளின் மேன்மை, சமூகத்தில் தீர்க்கப்படாமலிருக்கும் சீதனம் போன்ற ஆணாதிக்கச் சின்னங்கள், போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாதுகாப்புரீதியிலான பிரச்சினைகள், காதல் போன்ற தனி மனித உணர்வுகள்… என்று பல்வேறு விடயங்களைக் கருப்பொருட்களாகக் கொண்ட, அவை பற்றிய அவரது நினைவுகளின் திரட்டு. எளிமையான, இதயத்தை இழுத்துப் பிடிக்கும் மொழி நடை அவரது முக்கிய பலம். உருவகங்கள் அதிகமில்லாவிட்டாலும், ஆங்காங்கே உவமைகள் சில உள்ளன. எதுகை, மோனைகள் நிறைய உள்ளன. கவிதையின் அடிநாதமாய் இருப்பது அது வெளிப்படுத்தும் உணர்வு. கவிதைகள் அனைத்துமே கவிஞையின் உண்மை உணர்வுகளின் வெளிப்பாடுகள். போலித்தனமான வறட்டு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் அல்ல. அதனால் வாசிக்கையில் நெஞ்சைத் தொடுகின்றன. வாழ்த்துகள்!
கப்டன் மொறிஸ் (தியாகராஜா பரதராஜன்) பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளனாக தனது பொறுப்புக்களையெல்லாம் திறம்பட ஆற்றிய அந்த வீரமறவன் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட தினம் கடந்த வருடம் மே தினம் ஆகும். 1886 ஆம் வருடம் சிக்காகோ நகர தொழிலாளர்கள் சிந்திய இரத்தம் உலகம் பூராவும் இன்று செங்கொடியாகப் பறப்பது போல மொறிஸ் போன்ற 1355 விடுதலைப் புலிகளும் 26000 பொதுமக்களும் சிந்திய குருதியில் இரத்தச் சிவப்பேறிய கொடியாக தியாகத்தின் சின்னமாக இன்று தமிழீழம் எங்கும் எங்கள் தேசியக் கொடியாகப் புலிக்கொடி பறந்து கொண்டிருக்கிறது.
கப்டன் மொறிஸ் எப்படி ஒரு போராளியானான்? 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தென்னிலங்கையில் தீயோர் இட்ட தீயின் நாக்குகள் சுவாலையாக வடிவெடுத்து தமிழர் சொத்துக்களை சாம்பல் மேடுகளுக்குச் சொந்தமாக்கின. இது வட இலங்கை வாலிபர்கள் நெஞ்சில் வெப்பக்கனலாக மூண்டெரிந்தது. இதே கலவரத்தில் தென்னிலங்கைத் தமிழர்கள் சிந்திய குருதி வட இலங்கை இளைஞர்களின் நாடி நரம்புகளில் விடுதலைத்தியாகத்திற்குச் சூடேற்றியது. போராட்டத்திற்கான இராணுவக் கட்டமைப்பு உருவானது. இந்தக் கட்டமைப்பு மொறிசையும் உள் வாங்கிக் கொண்டது.
முதல் தாக்குதல்
ஒரு நாள் 1984 ஆம் ஆண்டு பருத்தித்துறை மேற்கில் உள்ள முருகையன் கோவில் அருகில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்காக சென்றியில் நின்றிருந்த மொறிசை இலங்கை இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது. இராணுவச் சுற்றி வளைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறுவதே மிகப் பொருத்தமான நடவடிக்கை என்பது மொறிசுக்கு விளங்கியது. இவ்வாறான ஒரு சுற்றிவளைப்பின் போது ஒரு கெரில்லாப் போராளி தனக்கு முற்றிலும் பிரதிகூலமான நிலைமையில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதிலும் பார்க்க தப்பிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுதலே அனுகூலமான இராணுவநடவடிக்கையாக இருக்கும். மொறிசின் மூளை துரிதமாகச் செயற்பட்டது. ஒரு கடிகாரத்தின் பெரிய முள் ஒரு நிமிடத்தைக் கடக்கு முன் கையில் இருந்த கிரனைட்டைக் கழற்றி இராணுவத்தினர் மீது மொறிஸ் வீசினான். கிரனைட் வீச்சால் நிலைகுலைந்த இராணுவம் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மறுதாக்குதலுக்குத் தயாராகுமுன் அந்தச் சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு மொறிஸ் வெளியேறினான். அப்போது மொறிசுக்கு மார்க்கண்டேயரிலும் பார்க்க ஒரு வயது குறைவு.
இவ்வாறாகப் படிப்படியாக பல தாக்குதல்களிலும் விடுதலைப் புலிகளோடு இணைந்து ஈடுபட்ட மொறிஸ் 1986 ஆம் ஆண்டு தொண்டைமானாற்று இராணுவத்துடன் ஒரு நாள் ஒரு பெரிய மோதலில் ஈடுபட்டான். 1984 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்; அத்துலத் முதலியை, தேசிய பந்தோபஸ்து அமைச்சராக நியமித்த போது அவர் “மூன்று மாதத்தில் வடபகுதியில் அமைதியைக் கொண்டுவருவேன்“ எனச் சபதமெடுத்து இரண்டு புதிய முகாம்களை குடாநாட்டிற்குள் அமைத்தார். ஒன்று நாவற்குழியில் அமைக்கப் பட்டது. மற்றது தொண்டைமானாற்றில் அமைக்கப் பட்டது. இந்தத் தொண்டைமானாறு முகாமில் இருந்த இராணுவம் அங்கிருந்து வெளியேற முயன்ற போது அந்த இராணுவத்துடன் வீராவேசத்துடன் மோதிய விடுதலைப்புலிகளில் மொறிசும் ஒருவனாவான். இம் மோதலில் மொறிஸ் காயமுற்று விழுப்புண்களைத் தனது உடலில் சின்னமாகப் பெற்றுக் கொண்டான்.
ஒப்றேசன் லிபறேசன்
ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி நல்லூரில் இடம்பெற்ற எழுச்சி விழாவில் பேசிய விடுதலைப் புலிகளின் பிரமுகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.
“இலங்கை அரசாங்கம் வடமராட்சி மீது நடாத்திய ஒப்றேசன் லிபறேசன் தொடர்பான விபரம் முன்கூட்டியே இந்திய அரசுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இந்திய றோ அதிகாரிகளோ நயவஞ்சகமாக யாழ்ப்பாணத்தின் மீதுதான் இலங்கை அரசு ஒரு பாரிய தாக்குதலை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக எமக்கு பிழையான தகவலைத் தந்து எமது போராளிகளைப் பிரிக்கச் செய்து எமது பலத்தைக் குறைத்து எதிரிகளுக்குத் துணை போனார்கள். என்று குற்றம் சாட்டினார்.
இந்தப் பாரிய நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசுக்கு இந்தியா துணை போனதன் மூலம் இலங்கை விடயங்களில் தலையிட ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டது. இந்தப் பாரிய நடவடிக்கைக்கு எதிராக பல விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் பங்கேற்ற மொறிஸ் தனது பங்களிப்பைச் செய்தான். இந்தத் தாக்குதலின் போதுதான் மொறிஸ் தனது உயிர் நண்பனான லெப். வீமனை(நாகராசா) இழந்து வேதனைக்குள்ளானான். ஒப்றேசன் லிபறேசன் காலத்திற்குப் பின்னர் சிங்கள இராணுவவீரனைப் போல் வேடம் போட்டு சிங்களச் சிப்பாய்களைத் தேடி அலைந்த மொறிஸ் சிறந்த கண்ணிவெடித் தாக்குதல் வீரனாக (MINES OPERATER) விளங்கினான். இதனால் M. O. என்ற கௌரவப்பெயர் இவனுக்கு வழங்கப்பட்டது“
பூநகரித் தாக்குதல்
விடுதலைப்புலிகள் 1987 ஆம் ஆண்டு முற்பகுதியில் குடாநாட்டிற்குள் இருந்த பல மினி முகாம்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தகையதொரு மினி முகாம் தாக்குதல் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி மாலை 5,30 மணியளவில் பூநகரி ஒல்லாந்தர் கோட்டையினுள் தங்கியிருந்த இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்டது. இது அந்த ஆண்டில் இடம்பெற்ற எட்டாவது மினி முகாம் தாக்குதலாகும். அத்தோடு இந்தத் தாக்குதல் பல வழிகளிலும் அரசியல் முக்கியத்துவம் பெற்றதொரு இராணுவ நடவடிக்கையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் மூலம் எமது போராட்டத்தின் உறுதித் தன்மை இரண்டு அரசுகளுக்கு எடுத்துரைக்கப் பட்டது.
இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கும்படி விடுதலைப் போராட்டத் தலைவர்களை இந்தியா டில்லியில் வைத்து நெருக்குதல் செய்த வேளையில் மறுபுறம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு போராளிகள் ஆயுதங்களையும் ஒப்படைத்து போராளிகளின் கடந்தகால நடவடிக்கைகளுக்காக தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தர்மிஸ்டர் ஜே. ஆர். கூறிக்கொண்டிருந்த வேளையில் மில்லர் பாணியில் நடந்த இத் தாக்குதல் ஒரு அதிர்ச்சி வைத்தியமேயாகும்.
இத்தாக்குதலிலும் மொறிஸ் பங்கு பற்றினான். ஒரு சினைப்பர் தாக்குதல் வீரனாகப் பங்குபற்றிய மொறிஸ் எரிகாயங்களுடன் உயிர் தப்பினான். இதனால் மொறிசின் அழகிய முகத்திலும் எரிகாயத்தின் வீரவடு அவனால் பொறிக்கப்பட்டது. இத்தாக்குதலில் மேஜர் அசோக் உட்பட ஏழு விடுதலைப்புலிகள் தம்மை முழுமையாக அர்ப்பணம் செய்து வீரமரணமடைந்தனர்.
அந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு
1987ஆம் ஆண்டு உருவான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் அடிமைச்சாசனம் என்று வர்ணித்தனர். அதனைத் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் நெடுமாறன் இரண்டு அரசுகளின் கூட்டு மோசடி என்றார். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமுன்னர் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் அங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ஈழத்திற்கு வந்திறங்கிய இந்திய இராணுவம் முகாம்களை விட்டு வெளியேறி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய முயன்ற போது மக்கள் இராணுவமுகாம்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து தமது தலைவனை அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்து வீதிமறியல் போராட்டம் செய்தனர்.
அடுத்ததாக தியாகி திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் உண்ணா நோன்பை மேற்கொண்ட போது மக்கள் அவனது கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஆங்காங்கே வீதிமறியல் போராட்டம் செய்தனர். இவ்வாறான சாத்வீகப் போராட்டங்களின் போது எல்லாம் பருத்தித்துறைப் பகுதியில் மொறிஸ் மக்களுக்கு பெரும் ஆதரவு கொடுத்தான். “போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்ட இலட்சியம் மாறாது“ என்று தலைவர் பிரபாகரன் சுதுமலையில் கூறியதற்கு ஒப்ப காலத்தேவையையொட்டி மக்களை அணிதிரட்டி மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட வெகுஜன போராட்ட வடிவங்களை அவன் மக்களோடு மக்களாக முன்னின்று திறம்பட நடத்தியுள்ளான். அவ்வாறான ஒரு வீதிமறியல் போராட்டம் ஒன்றில் ஒருமுறை பருத்தித்துறை வீதி வழியாக ஏகப்பட்ட கவசவாகனங்களோடு வந்த இந்திய இராணுவ கொமாண்டர் மேஜர் அணில்ராஜ் மறிப்புப் போராட்டத்தின் போது பொதுமக்களால் திருப்பி அனுப்பப் பட்டார்.
இந்தியா விடுதலைப்புலிகள் மீது போர்தொடுத்த பின் கூடவே உண்டு உறங்கிப் பழகிய பல நண்பர்களை மொறிஸ் இழக்க வேண்டி ஏற்பட்ட போது அவன் மிகுந்த வேதனையுற்றான். ஆனால் அவர்களது அகாலமரணங்கள் அவனது உள்ளத்தில் சோர்வை ஏற்படுத்தவில்லை. மாறாக அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று உறுதியையே வளர்த்தன.
குழந்தைகள் மீது பிரியம்
போராளிகளுக்கு குழந்தைகள் மீது பிரியம் இயற்கையாகவே ஏற்படுவதுண்டு. இன்றைய குழந்தைகளின் நாளைய நல்வாழ்வுக்காகவே தமது வாழ்வைத் தியாகம் செய்பவர்கள் போராளிகள். அதே போல விடுதலைப் புலிகள் மீது குழந்தைகள் அலாதி பிரியம் வைத்து புலிமாமா என்று அழைப்பது சகஜமான விடயமாகும். தளபதி விக்டர் மடியிலும் தோளிலும் ஏறி அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியுற்ற மழலைகள் பலர். இதே போல மேஜர் அல்பேர்ட்டை ஒரு மழலைப்பட்டாளமே சுற்றி வளைத்துக் கொண்டு மகிழ்ந்து கொண்டாடுவது ஒரு சர்வசாதாரண நிகழ்வாகும். அல்பேர்ட்டும் குழந்தைகளைக் குட்டிச்சாத்தான்கள் என அழைத்து மகிழ்வான். இதே போல மொறிஸ் மாமாவை குழந்தைகள் சுற்றிவளைத்துக் கொள்வதுண்டு. அவனுக்கும் குழந்தைகள் மீது அலாதி பிரியம். ஒருமுறை பருத்தித்துறைப் பகுதியில் இந்திய இராணுவத்திற்கும் – மொறிஸ் தலைமையிலான போராளி குழுவினருக்கும் இடையில் பலத்த மோதல் நடைபெற்ற போது ஒரு நாலு வயதுக் குழந்தை பரதன் மாமாவைக் காப்பாற்றுமாறு கடவுளை வேண்டிப் பிரார்த்தனை செய்தது. இன்னுமொரு தடவை பருத்தித்துறை – தம்பசிட்டி வீதி வழியாக மொறிஸ் தலைமியாலான போராளிக்குழுக்கள் வந்து கொண்டிருந்தனர். அதே பகுதிக்குள் இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டைக்காக வந்திருந்தனர். இதனைக் கண்ணுற்ற ஐந்துவயதுப் பிள்ளையொன்று மொறிஸ் மாமா அருகில் வந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் “மாமா ஓடி ஒளியுங்கோ. அவங்கள் வாறாங்கள்“ என்று பாசத்தோடும் பற்றோடும் பதைபதைப்போடும் சத்தம் போட்டுக் கூறியதை மொறிஸ் அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வான். இவை போன்ற பல நிகழ்வுகள் மொறிஸ் குழந்தைகள் மீது பிரியத்தை வளர்த்துக் கொண்டு தானும் குழந்தைகளோடு ஒரு குழந்தையாக இணைந்து கொண்டு குதூகலிக்கக் காரணமாயிற்று.
தப்பி வந்த சீக்கியன்
ஒருமுறை வடமராட்சிப் பகுதி இராணுவமுகாம் ஒன்றிலிருந்து தப்பி வந்த சீக்கியச் சிப்பாய் ஒருவன் குடிமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களிடம் தன்னை மொறிஸிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டான். அவனது கோரிக்கை நிறைவேற்றப் பட்டு அவன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டான்.
இறுதிப்போர்
1989 மே மாதம் முதலாம் திகதி பருத்தித்துறை இராணுவமுகாம், புலோலி இராணுவமுகாம், வியாபாரி மூலை இராணுவமுகாம் என மூன்று முகாம்களிலிருந்து அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் ஆத்தியடி என்ற கிராமத்தை மூன்று புறங்களாலும் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்பாவி மக்களைப் பிடித்து மனிதக் கேடயங்களாக்கிக் கொண்டு அவர்கள் பின்னால் நின்று கொண்டு இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளோடு யுத்தம் நடாத்த முற்பட்டது. மனிதக் கேடயங்களாக நிற்கும் அப்பாவி மக்களைக் காப்பாற்ற விரும்பிய கப்டன் மொறிஸ், லெப். றம்போ, போராளி சிறீ ஆகியோர் தாக்குதலைத் தவிர்க்கவே விரும்பினார்கள். ஆனால் இராணுவத்தினரின் அடாவடித்தனத்தால் போர் தொடங்கியது. மொறிஸ் குறிபார்த்து துப்பாக்கி விசையை அழுத்திய போது ஒரு இராணுவக் கப்டன் அந்த இடத்திலேயே இறந்தான். இதனால் வெறி கொண்ட மதயானைகளைப் போல் இந்திய இராணுவச் சிப்பாய்கள் கண்டபடி சுட்டுத் தள்ளினார்கள். மரங்கள், வீடுகள் எல்லாம் குண்டுகள் துளைத்த வண்ணம் இருந்தன. ஆங்காங்கே கொமாண்டோ மோட்டார் ஷெல் தாக்குதல்களும் இடம் பெற்றன. பெரும் யுத்தம் ஒன்றே அங்கே நிகழ்ந்தது. ஒரு புயலினால் சீரழிக்கப் பட்ட பிரதேசம் போல் அப்பகுதி காணப்பட்டது. யுத்தம் முடிந்து திரும்பி வந்த நண்பர்கள் மொறிஸ் அண்ணாவைத் தேடினார்கள்.
மக்களும் போராளிகளும் யுத்தம் நடந்த இடத்திற்கு விரைந்து மொறிசையும் இரண்டு நண்பர்களையும் தேடினார்கள். மொறிஸ் அணிந்திருந்த கைக்கடிகாரமும் அவனது பாதணி ஒன்றுமே மொறிசைத் தேடிய மக்கள் கண்களில் பட்டன. மொறிஸ் இறந்த இடத்தில் அவன் சிந்திய குருதியில் தோய்ந்து போயிருந்த மணலை அள்ளி மக்கள் தமது நெற்றியில் பூசிக் கொண்டனர். அவனது உடலை புலோலி இராணுவமுகாமுக்கு சிப்பாய்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.
அவனது உடலை மீட்டு எடுத்து இறுதிச் சடங்குகள் செய்ய முகாமுக்குச் சென்ற மொறிசின் தாயிடம் ஒரு இராணுவக்கப்டன் பின்வருமாறு சொன்னான்
உங்கள் மகன் ஒரு சுத்த வீரன் கண்ணியமான மக்கள் விசுவாசி இதையிட்டு நீங்கள் பெருமையடையுங்கள்…
அவனது தாய் அடிக்கடி “நீ இராணுவத்திடம் பிடிபட்டு விடாதே“ என்று அறிவுரை கூறுவதுண்டு. இதனால் மொறிசும் தனது தாயைப்பற்றி நண்பர்களிடம் கூறிப் பெருமைப் படுவதுண்டு. தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து, மண்ணுக்காக மண்ணின் விடுதலைக்காக மரணத்தைத் தழுவிய மொறிசும் மற்றும் றம்போவும் சிறீயும் போராட்ட வரலாற்றுக் களஞ்சியத்தில் புதிய அத்தியாயங்களாகியுள்ளனர்.
கப்டன் மொறிசுடன் அன்றைய தினம் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட லெப். ரம்போ (தணிகாசலம் ஜெகதீசன்) போராளி வெள்ளை சிறீ (வடிவேலு சிறீதரன்) ஆகியோருக்கும் எமது வீரவணக்கங்கள்.
சருகு விழும் உக்கும் மரத்திற்கே உரமாகும் மீண்டும் மரம் துளிர்விடும் மண்ணை நேசிப்பவர்களின் மரணம் இன்னொரு ஜனனம் மறந்து விட்ட மாவீரர்களே! உங்கள் பாதச் சுவடுகள் சுதந்திரத்தின் படிக்கற்கள்
நான் என் பிள்ளையின் வித்துடலை எடுப் பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக இராணுவ முகாம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
இராணுவ சென்றிப் பொயின்ற்றுகளிலிருந்து துப்பாக்கிமுனைகள் என் பக்கம் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அடுத்து வரும் நிமிடங்களில் எதுவும் நடக்கலாமென்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். ஆனாலும் என்னைத் தைரியமாக இயங்க வைக்கும் ஏதோ ஒரு சக்தி அப்போது என்னை ஆட்கொண்டிருந்தது. எதற்கும் முகம் கொடுக்கத் தயாராகவே நான் முகாம் நோக்கி நடந்துகொண்டிருந்தேன். அரைவாசித்தூரம் நடந்து கொண்டிருக்கும் போதே இராணுவக் கொமாண்டர் கள் முகாம் வாசலுக்கு வந்து, என் வருகையைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன். வாசலை அண்மித்ததும் “நான் மொறிஸின் அம்மா” என்றேன்.
அவ்வளவுதான். இராணுவக் கொமாண்டர் ஒருவர் அவசரமாக என் முன்னால் வந்து, என் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்று என்னை ஒரு கதிரையில் அமர்த்தினார். உடனே சுடச் சுட தேநீர் தயாரித்து வந்து எனக்குப் பரிமாறினார்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் போலத் தோன்றிய மூவர் என் முன்னால் வந்து நின்று குனிந்து என்னை வணங்கினார்கள். பிறகு என்னைப் பார்த்து,
“அம்மா… உங்கள் மகன் ஒரு பெரிய வீரன். அவனின் திறமையைக் கண்டு அவன் ஒரு வயதான பெரிய மனிதன் என்றுதான் இத்தனை நாளும் நாம் நினைத்திருந்தோம். ஆனால் அவன் வயதில்குறைந்த ஒரு இளைஞன் என்று அறியும் போது எங்களால் நம்பவே முடியவில்லை. அவன் மிகவும் நல்லவன். அதனால்தான் அவனை எல்லா மக்களும் நேசிக்கி றார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. இத்தனை வீரமும் துணிச்சலும் மிக்க ஒருவனைப் பிள்ளையாகப் பெற்றதற்காக நீங்கள் பெருமைப் படுங்கள். உங்களுக்கு நாங்கள் மரியாதை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். நீங்கள் ஒரு வீரத்தாய். உங்களை நாங்கள் வணங்குகிறோம்…” என்று ஆங்கிலத்தில் கூறிய படி இரு கைகளையும் குவித்து என்னை வணங்கினார்கள்.
என்னால் அந்த நிமிடத்தை நம்பவே முடியவில்லை!
என் உடல் என்னையறியாமல் மெல்ல மெல்ல நடுங்கத் தொடங்கியது. அவ்வளவு நேரமும் எனக்குள் இறுகிப் போயிருந்த அத்தனை உணர்வு களும் பொங்கியெழுந்து என் கண்களைக் கண்ணீ ரால் மறைக்கத் தொடங்கியது! அந்தக் கணம் வரை நான் கட்டிக்காத்த என் தைரியம் அத்தனையும் ஒரு மேகம் நொருங்குவது போல் கீலம் கீலமாய் சிதறிப் போகத் தொடங்கியது!
நான் எழுந்து நின்றேன். பாதையைக் கண்ணீர் மறைத்தது. நான் அந்தக் கண்ணீரைத் துடைக்கவில்லை. அவர்களோடு சேர்ந்து என் மண்ணின் மைந்தனது வித்துடலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்!
ஊருக்குள் பலரும் மொறிஸின் அம்மா, மயூரனின் அம்மா, சுந்தரியம்மா என்றெல்லாம் அவரை அன்பாக அழைப்பார்கள். மொறிஸூக்கு மட்டும் அவர் அம்மா இல்லை. மயூரனுக்கு மட்டும் அவர் அம்மா இல்லை. தான்பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும் அவர் அம்மா இல்லை. எங்கள் விடுதலைப் போராட்டத்தில் போராளிகளாக இருந்த எங்கள் அத்தனை பேருக்கும் அவர் ஒரு உன்னதமான அம்மாவாக இருந்தார்.
காணும் போதெல்லாம் நெஞ்சு நிறைந்த அன்பை எங்களில் சொரிந்து கொண்டிருந்த அம்மா! நாம் துவளும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து எம்மை உயிர்ப்புடன் செயற்பட வைத்துக் கொண்டிருந்த அம்மா! பசியோடு நாம் அவரின் வீடுதேடிச் செல்லும் போதெல்லாம் பரிவோடு உணவளித்த அம்மா! கண்ணை இமை காப்பது போல் எம்மைக் காத்திட்ட அம்மா! தான் பெற்ற பிள்ளைகள் போல் கட்டியணைத்து எமக்கு ஆறுதல் தந்த அம்மா!
அம்மாவைப் பற்றி இன்னுமின்னும் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.
விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் போராட்டம் ஒரு கொரில்லாப் போர் வடிவிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. அச்சமயம் அதற்கு ஆதரவு தருவதற்கு பலரும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவ் வேளையிலும் தைரியமாக, நம்பிக்கையோடு எங்களை வாரியெடுத்தணைத்து மலர்ந்த முகத்தோடு உபசரித்து, தன் பாசத்தைக் கொட்டி உணவளித்து ஆதரித்த அம்மா!
மாவீரன் டேவிட் அண்ணை அம்மாவைத் தேடி எப்போது வந்தாலும் “எணை பசிக்குது… சாப்பாடு தாணை” என்று கேட்டபடியே சமையலறைக்குள் நுழைந்து விடுவார். கடற்புலி வெங்கடேசனும் அப்படித்தான். சிலவேளைகளில் சாப்பாடு அங்கே முடிந்திருக்கும். வேறு யாராவது போராளிகள் வந்து சற்றுமுன்னர்தான் அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால் அது பற்றி அவர் எதுவுமே சொல்லாமல் அடுத்த சமையலுக்கு அவசரமாக அடுப்பை மூட்டுவார். மொறிஸின் இளையக்கா(சந்திரா), பிரபாக்கா, தங்கை பாமா (பாமாச்சி) எல்லோரும் தமது பசியினைக் காட்டிக் கொள்ளாமல் எங்களை உபசரித்து அன்பாக அளவளாவிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் பல சமயங்களில் அங்கு சாப்பாடு இருக்காது. ஆனால் அம்மாவோ இருப்பவற்றையெல்லாம் கொட்டி அவசரமாகச் சமைத்து வந்து எமக்குப் பறிமாறத் தொடங்கி விடுவார்.
நான் எத்தனையோ தடவைகள் மிகுந்த களைப்புடன் மொறிஸின் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் பெடியளுக்காகவே வாங்கி வைத்திருக்கும் கொர்லிக்ஸ், போன்விற்றா எல்லாம் கலந்து, சுவையான தேநீர் தயாரித்து வந்து என்னிடம் தருவார் அம்மா. நாங்கள் பசிக்களையோடு இருக்கக் கூடாது என்பதில் அம்மா எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்.
இந்திய இராணுவக்காலத்தில் மொறிஸ் வீடு எப்போதும் இராணுவ அட்டகாசங்களில் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டேயிருக்கும். அங்கு போகவே உறவினர்களும் அயலவர்களும் அச்சப் படுவார்கள். ஆனால் அட்டகாசங்கள் முடிந்து அங்கிருந்து இராணுவம் வெளியேறிய மறுகணமே நாங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவோம். அம்மா அடுத்த கணமே மகிழ்ச்சியோடு எங்களுக்குச் சமைக்கத் தொடங்கி விடுவார். எவ்வளவு இராணுவக் கெடுபிடிகள்,ஊரடங்குகள் இருந்தாலும் அம்மாவின், முகம் நிறைந்த புன்னகை எப்போதும் போல எங்களை உற்சாகமாக வரவேற்கும்.
நாங்கள் சில நாட்கள் அங்கு செல்லவே முடியாமல் எங்காவது ஒளிந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ தடவைகள் வந்திருக்கின்றன. அச் சமயங்களில் எங்களைத் தேடி யாராவது வருவார்கள். “வந்து சாப்பிட்டு விட்டுப் போங்கள்” என்று அவர்களிடம் அம்மா தூது அனுப்பி விட்டிருப்பார்.
எண்பதுகளின் நடுவில் மொறிஸ், மயூரன் குடும்பத்தினர் இராணுவக் கெடுபிடிகள் தாளாமல் யாழ்ப்பாணத்திற்குப் போய் விட்டார்கள். அப்போது அவர்கள் மொறிஸின் அப்பாவின் உத்தியோக மனையில் குடியிருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருந்தோம்.
நீண்ட மாதங்கள் அம்மாவையும் அவரின் குடும்பத்தினரையும் காணாமல் நாங்கள் உள்ளூரப் பெருந் துயருற்றிருந்தோம்.
கடைசியாக, மொறிஸ் 1989இல் வீர மரணமடைந்த கொடுந் துயரமான நிகழ்வுகள் யாவும் நடந்து முடிந்த பின்னர், நான் யாழ்ப்பாணத்தில் சில இரகசிய விடுதலைப் பணிகளிற்காக நியமிக்கப் பட்டிருந்தேன். இந்திய இராணுவத்துடன் இணைந்து மாற்றியக்கங்களும் எம்மைத் தேடியலைந்து கொண்டிருந்த நேரமது.
ஒரு நாள்,மொறிஸ் குடும்பத்தினர் குடியிருந்த யாழ்ப்பாண வீட்டை சைக்கிளில் கடந்து செல்ல வேண்டிய சந்தர்ப்பம் எனக்கேற்பட்டது. அப்போது, ஒரு முறையேனும் அவர்களைப் பார்க்காமல் கடந்து செல்ல என் மனம் இடம் தரவில்லை. அம்மாவையும் இளையக்கா, பாமாச்சி எல்லோரையும் ஒரு தடவையேனும் கண்டு ஒரு வார்த்தையாவது பேசி விட்டுப் போகலாமே என்றெண்ணி, என் மனம் என்னை அந்த வீட்டின் பக்கம் இழுக்கத் தொடங்கியது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டினைச் சுற்றி இராணுவ முகாம்களும் சென்றிப் பொயின்ற்றுகளும் நிறைந்து வழிந்திருந்தன. எவருமே போக அச்சப்படும் அந்த இடத்தில் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் துப்பாக்கிகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே மனசு அஞ்சியது.
நான் சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டுக்குள் திடீரென்று நுழைந்தேன். வாசலுக்கு வந்த அம்மா கண்கள் விரிய வியப்போடு என்னைப் பார்த்தார். அடுத்த கணமே மகிழ்ச்சி பொங்க, புன்னகையோடு, இரகசியக் குரலில் என்னை வரவேற்றார். உடனேயே ஓடிச் சென்று சுடச்சுடப் புட்டும், கத்தரிக்காய்க்குழம்பும் முட்டைப்பொரியலும் கொண்டு வந்து தந்து “களைச்சிருக்கிறாய் அப்பு. முதல்ல சாப்பிடு. பிறகு கதைக்கலாம்” என்றார்.
எனக்குக் கண்களில் கண்ணீர் நிறைந்து பொங்கியது. நான் பொங்கிய கண்ணீரைத் துடைக்கவில்லை. எனக்கு ஏற்கெனவே பசி. தலை சுற்றுவது போல் உணரத் தொடங்கியிருந்த நான் கைகளைக் கழுவிவிட்டு மளமளவென்று சாப்பிடத் தொடங்கினேன். அந்நேரம் அவ்வுணவு எனக்கு அமிர்தம் போலத் தோன்றியது. அம்மா என்னைப் பரிவோடு பார்த்தபடி இருந்தார்.
திடீரென்று வெளியில் ஏதோ சத்தங்கள் கேட்கத் தொடங்கின. நான் பரபரப்பானேன்.
“நீ… சாப்பிடப்பு. நான் போய் என்னெண்டு பார்த்துக் கொண்டு வாறன்” என்றார் அம்மா.
நான் “இப்பப் போக வேண்டாம்” என்று கையைக் காட்டித் தடுத்தேன்.
ஆரியகுளச் சந்திப்பக்கம் கேட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைத் தொடர்ந்து இராணுவ `றக்´ ஒன்று வேகமாக அவர்களின் வீட்டைக் கடந்து போனது. எனக்கு நெஞ்சு திக்கென்றது. நான் உயிரோடு இருக்கும் கடைசித் தருணம் அதுதான் என நினைத்தேன்.
வீட்டின் பின்புறம் யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய இராணுவமுகாம். பின்வழியாக நான் ஓடித் தப்பவே முடியாது.
சத்தங்கள் மெல்ல மெல்லக் குறைந்ததும் அம்மா வெளியில் இறங்கி, கேற்வாசல் வரை போய் வீதியை இருபுறமும் பார்த்து விட்டு வந்தார்.
“இப்பச் சந்தடி ஒண்டும் இல்லை. எல்லாரும் போயிட்டான்கள். றோட் வெறிச்சோடிப் போய்க் கிடக்கு” என்றார்.
நான் கைகளைக் கழுவிவிட்டு, தண்ணீரை மடமடவென விழுங்கியபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு “போட்டுவாறன் அம்மா..” என்றேன். என் வாய்க்குள்ளிருந்து சத்தம் வர மறுத்தது. கண்கள் என்னையும் மீறி, பொங்கி வழியத் தயாராக இருந்தன.
அம்மா தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார் “எல்லாம் நல்ல படி நடக்கும் அப்பு. தைரியமாய், கவனமாய் போயிட்டு வா” என்று. அதுதான் நான் அம்மாவைக் கண்ட கடைசி நாள்!
இப்போது எங்கள் அன்பு அம்மா மேலை நாடொன்றில் எங்கள் மண்ணை நினைந்த படியே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். நானோ அவரை நேரில் சென்று சந்திக்க முடியாத நிலையில் வேறொரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எங்கள் மேல் அம்மா வைத்திருந்த அளவற்ற அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும்தான் இத்தனை அழிவுகளின் பின்னும் இத்தனை இழப்புகளின் பின்னும் இத்தனை துயரங்களின் பின்னும் என்னை இன்னும் உயிரோடு வாழ வைத்துக்கொண்டிருக்கிறதென்று நான் நம்புகிறேன்.
விடுதலையே தன் உயிர்மூச்சென எண்ணி எங்கள் எல்லோருக்குமாகவே வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் அன்பு அம்மா இன்னும் நெடுங் காலம் நீடூழி வாழ வேண்டும்!
உங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் பரிவுக்கும் நெஞ்சுறுதிக்கும் முன்னால் நான் என்றும் தலை வணங்கி நிற்கிறேன் அம்மா!
-றியோ நிலவன் மார்கழி 2020
விடுதலைப்புலிப் போராளிகளில் ஒருவரான றியோ நிலவன் அவர்கள் எழுதிய இம் மாண்புரை அம்மாவின் “பெருநினைவின் சிறு துளிகள்” நூலில் இடம் பெற்றது.
திரு.க.ஜெயவீரசிங்கம் BA (ஆசிரியர்) அவர்கள் “தீட்சண்யம்” நூலுக்கு எழுதிய முன்னுரை
Theedchanyam – Theedchanyan
கவிஞர் தீட்சண்யன் எனது நெருங்கிய நண்பர். பிறேம் மாஸ்ரர் என்று அறியப்படுகின்ற அந்த இனிய மனிதரின் உள்ளக்கிடக்கைகளின் சில பக்கங்களை அறிந்தவன் என்ற தகுதியில் இந்த தீட்சண்யத்துக்கான முன்னுரையை எழுத விளைகிறேன்.
தீட்சண்யன் ஒரு யதார்த்தவாதி. தமிழீழத் தேசிய விடுதலைப் போரில் இரண்டு மாவீரர்களை அர்ப்பணித்த ஒரு குடும்பத்தின் மகன். அவரது மும்மொழிப் புலமை விடுதலைக்கு அவர் ஆக்கபூர்வமான பணியாற்ற அவருக்குத் துணை நின்றது. அவரோடு தொடர்பு பட்டவர்களுக்கு மட்டுமே அவரது பணிகள் தெரியும். தனது பணிகளின் நெருக்கடிகளிற்கு இடையில், தனது கால் இழப்பின் பாதிப்பின் மத்தியிலும் அந்த அற்புதமான கவிஞன் பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும் என்று சொல்கின்ற அளவுக்கு ஆழமான கவிதைகள் ஊற்றெடுக்கும்.
தனது அங்கவீனத்தை எண்ணி நொந்து கொள்ளும் சில மாலைப்பொழுதுகளில் – அந்த நெஞ்சத்தின் வேதனை என்னையும் பாதித்ததுண்டு. அந்தப் பொழுதுகளில் அந்தக் கவிஞன் – ஒரு குழந்தையைப் போல தேம்பியதுண்டு. எனினும் மறுகணமே தன்னைச் சுதாரித்துக் கொள்ளும் ´மீண்டும் தொடங்கும் மிடுக்கு´ அவனிடம் இருந்த படியால்தான் காலத்தால் அழியாத கவிதைகளையும் விடுதலைப் போருக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பையும் அவனால் வழங்க முடிந்தது.
´தீட்சண்யம்´ என்ற இந்த நூலில் தீட்சண்யன் சிங்களத்தின் எறிகணை வீச்சுக்கு காலை இழக்க முன்னும் பின்னும் எழுதிய கவிதைகள் உள்ளன. ´அன்னைக்கோர் கடிதம்´ என்ற கவிதை தீட்சண்யனின் சோகத்தை எங்கள் இதயங்களிலும் ஊடுருவ வைக்கிறது.
கொள்ளிக்கும் கொடுப்பனவு இல்லாமற் போய் விட்ட ´ஷெல்`லின் பாற்பட்ட வெறும் ஊனனாகி விட்டேனே என்ற வரிகள் அவரது துயரத்தை கோடிட்டுக் காட்டுகின்றன.
தீட்சண்யனின் ´எங்கே போகிறோம்…?` என்ற கவிதை அன்றைய வன்னியின் அவல நிலையை ஒவ்வொரு வன்னித்தமிழனும் சொல்ல நினைத்து முடியாமல் போய் விட்ட வார்த்தைகளை மிக அழகாகச் செப்புகிறது. குப்பி விளக்கிற்கு எண்ணெய் தேடி குடும்பக் காட்டுடன் கியூவில் நிற்கிறோம் உண்மையில் நாம் எங்கே போகிறோம்…? என்று கேட்கின்ற தீட்சண்யனின் கேள்வி யதார்த்தமானது.
´போராட்டமே வாழ்வாக..´ என்ற கவிதையில் பெண்ணுக்கு அவர் விடுக்கும் அழைப்பு பாரதியின் பரம்பரை ஈழத்திலும் தொடர்கிறது என்பதை எடுத்தியம்புகிறது. குனிந்து நடந்து குரல் வளையது நலிந்து நின்றது போதும் நிமிர்ந்து தோளில் போர்க்கலனைச் சுமந்து வந்திடு தோழி! என்று அவர் விடுக்கும் அழைப்பு அவரின் பெண்கள் தொடர்பான கருத்தோட்டத்திற்கு சான்று பகர்கின்றது.
´திரும்புங்கள்.. வாருங்கள்.. ஏந்துங்கள்..´ என்ற கவிதை இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலப்பகுதியில் எழுதப்பட்டது. அதில் கவிஞர் சொல்கிறார் …சொந்த மண்ணிலே வீதியிலே எங்கள் காணிகள் மனைகளில் மனைவிகளில் கூடவா மாற்றானின் விரல்கள்..? எவ்வளவு நாசூக்காக எம்மீது திணிக்கப்பட்ட அடக்கு முறை சித்தரிக்கப் பட்டிருக்கிறது.
´கரும்புலிகள்´ என்ற கவிதையொன்றில் முகம் தெரியாமலே மறைந்து போன இவர்கள் சில சமயங்களில் சுவரொட்டிகளிலும் கூடத் தலை காட்டுவதில்லை… என்ற வரிகள் எவ்வளவு தூரம் ஆழமானவை..!
கவிஞர் தீட்சண்யனின் கவிதைகள் அர்த்தம் நிறைந்தவை மட்டுமல்ல. சந்தம் நிறைந்தவையும் கூட. ´இந்த நூற்றாண்டில் இவன் போல் யார் உளர்´ என்ற கவிதையில் உடலைக் கருக்கியுன் குடலைச் சுருக்கி நீ கடலைப் பிளந்திடும் தியாகப் போர் தொடுத்தாய் விடலைப் பருவத்து விருப்புகளைத் துறந்தாய் குடலைப் பருவத்தில் குலத்துக்காய் மடிந்தாய்… என்ற வரிகள் இதற்குச் சான்று பகர்வன.
புரட்சிக் கனலாக சுடரும் இவன் மார்கழிப் பனியாக குளிரும் கவிதைகளையும் எழுதுவதில் வல்லவன். ´ரசனை´, ´லயம்´ என்ற கவிதைகள் இதற்குச் சான்று பகர்கின்றன.
இறுதியாக… இங்கே தயவு செய்து மலர் போட வேண்டாம் தமிழீழத்துக்கு கொஞ்சம் உரமேற்றுங்கள்… என்ற வேண்டுகோளுடன் தீட்சண்யனின் பேனா மௌனித்து விட்டது. என்றாலும் அவன் கவிதைகள் ஊடாக காலமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பதை ´தீட்சண்யம்´ உங்களுக்கு உணர்த்தும்.
ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன்.
பிறேமராஜன் (தீட்சண்யன்) 30.01.1958-13.05.2000 ஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை
பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள், தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பதென்றே தெரியவில்லை. நான் எழுதியதில் ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்பதே உண்மை. நடுவில பல பக்கங்களைக் காணோம் என்ற நிலையும் உண்டு. ஏதோ என்னுடைய நினைவிற்கும் அறிவிற்கும் தெரிந்த சிலவற்றையாவது பகிர்ந்து கொள்வதில் ஆறுதலடைகிறேன்.
வரலாறு என்பது தனிநபரின் பார்வைக்குள் அடக்கி விட முடியாதது. 1988 களில் எனது அப்பா மூலம் முதற் தடவையாக பிறேமராஜன் மாஸ்டரைப் பற்றி அறிந்திருந்தேன். அவருடைய அப்பாவும் எனது அப்பாவும் நெருங்கிய உறவினராக(அத்தான் முறை ) இருந்ததோடு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தார்கள். இருவருக்கும் ஒரே வயது (1933). ஒன்றாகப் படித்திருந்தார்கள். அழகு(அழகரத்தினம்), தியாகு( தியாகராஜா) ஆகிய இருவருடைய நாட்டுப் பற்றும் ஒன்றாகவே இருந்து வந்திருந்தன. இருவருடைய குடும்பங்களும் அதற்காகப் பல தியாகங்களையும் செய்துள்ளன
1988 காலப்பகுதியில் எமதூரில் விடுதலைப்புலிகளின் முதல் நின்ற அணி செல்ல, புதிய அணியொன்று வந்திருந்தது. அவர்கள் தும்பளை நாற் சந்தியில் அமைந்திருந்த சதாசிவம் பரியாரியரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவ் வீடு எமது வீட்டுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்றது. அவ்வணிக்கு மொறிஸ் அவர்கள் தலைமை தாங்கி வந்திருந்தார். அவர் என்னை முதன்முதலாகக் கண்டபோது யார் என்று வினவினார். நான் என்னுடைய பெற்றோரையும் சகோதரர்களையும், எனது வீட்டையும் அவருக்கு அடையாளப் படுத்தினேன். உடனே அவர், தான் எனது உறவினன் என்றும், என்னுடைய வீட்டில் தான் இங்கு இருப்பதாக சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் பருத்தித்துறையில் இருந்த புலிகளின் அணி, சுழற்சி முறையில் எமது ஊரிலிருக்கும் எல்லோருடைய வீட்டிலும் தங்குவார்கள். அதை அவர்கள் வழமையாகவே வைத்திருந்தார்கள். ஒருவேளை, யாராவது இவர்களை இராணுவத்துக்கு காட்டிக் கொடுக்காமல் இருப்பதுக்காகவோ தெரியாது.
1988களில் இந்திய இராணுவத்துடனான மோதல்கள் தீவிரம்பெற்றிருந்த வேளையில் எனது இரண்டாவது அண்ணன் ரவி (மேஜர் தாகூர் ) திருகோணமலைக் காட்டிலிருந்து மணலாற்றுக்கு தலைவரிடம் வந்திருந்தார். அவ்வேளை அவர், முள்ளியவளைக்கு பணியின் நிமித்தம் வந்து போவதுண்டு. அப்போது பிறேமராஜன் அத்தான் வீட்டிற்கும் அவர் வந்து போவதுண்டு.
1988களில் மிகக் கடினமான பயணங்களை மேற்கொண்டு என் அப்பா, என் அண்ணா( ரவி-மேஜர் தாகூர்) வைச் சந்திப்பதற்காக வற்றாப்பளையிலிருக்கும் பிறேமராஜன் மாஸ்ரர்(அத்தான்) வீட்டுக்கு வந்து போவார். 1996 இல் நாங்கள் புதுக்குடியிருப்பில் இருக்கும் பொழுது பிறேமராஜன் மாஸ்ரருடன் மேலும் அதிகமாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வாய்த்தன. அவருடன் அவருடைய வீட்டில் சில காலங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தேன். அவ்வேளை நானும், அவருடைய உறவினரான ரூபன் மற்றும் வாசு ஆகியோரும் ஒன்றாக அங்கு தங்கி இருந்தோம். அவர் மட்டுமே வீட்டிலிருப்பார். மற்றைய குடும்ப உறுப்பினர்கள் வவுனியாவுக்குச் சென்றிருந்தார்கள்.
அவருடைய வீட்டு வெளிவாசலில், வற்றாப்பளைச் சந்தியில், நீண்ட பனங்குற்றி ஓன்று இருக்கையாகப் போடப்பட்டிருந்தது. பின்னேரம் 5 மணியளவில் அவர் வெளியே சென்று அக்குற்றியில் அமர்ந்து அவ்வூர் மக்களோடு அளவளாவுவார். அவர் சாதாரண பாமரமக்கள் தொடக்கம் புத்திஜீவிகள், போராளிகள், ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோருடனும் சாதி மத பேதமேதுமின்றி, எந்தவித பாகுபாடும் காட்டாது மிகவும் அன்பாகவும் அவ்வூராருக்கான நகைச்சுவைப் பாணியிலும், தனக்கேயுரிய நகைச்சுவைப்பாணியிலும் அவரவர்க்கேற்ப பேசிக் கொண்டிருப்பார். ஒவ்வொருவருக்கேற்ற மாதிரி அவர்களின் பாணியிலேயே கதைப்பார். அவருடன் இருக்கும் போது என்னை மறந்து சிரித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன்.
அவருடன் தங்கியிருந்தவேளையில், அவருடைய தமிழ், ஆங்கிலப் புலமை, பொது அறிவு, அறிவியல் என எல்லாப் புலமைகளையும் அந்த ஒரு மனிதரில் ஒன்றாகக் கண்டு வியந்திருக்கிறேன்.
அப்போது பிறேமராஜன் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் பல ஆங்கிலப் புத்தகங்கள் (போராட்டம், புலனாய்வு, போரியல், அறிவியல், அரசியல்) தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தக வடிவில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. அத்தோடு இல்லாமல் பல ஆங்கிலத் திரைப்படங்கள் கூட தமிழ் மொழிபெயர்ப்போடு அங்கு வெளிவருவதற்கு அவருடைய பணிகள் காத்திரமாக அமைந்திருந்தன.
அவருடைய கவிதைகள், பட்டிமன்றம் போன்ற சிறப்பான நிகழ்வுகள் புலிகளின் குரல் வானொலியில் அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இவர் அதிகம் வெளியில் தெரியாதவராகவே `தீட்சண்யன்´ என்ற புனைபெயரிலேதான் தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டு வந்திருந்தார்.
இவர் ஓர் சிறந்த ஆங்கில ஆசிரியராகவேதான் பருத்தித்துறையிலிருந்து முள்ளியவளைக்கு வந்திருந்தார். பின்னர் அங்கேயே தனது நிரந்தர வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருடைய மனைவியும் அவருக்கேற்ற ஒரு சிறந்த துணைவியராகவே இருந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையும் பிறந்திருந்தார்கள். மூன்றாவது மகன் பரதன் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் படையணியில் இணைந்து, கப்டன் தரத்தில், இறுதியுத்தத்தில் இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரமரணத்தைத் தழுவியிருந்தார். தனது தம்பியரில் ஒருவனான மொறிஸ் இன் இயற்பெயரான பரதராஜன் என்னும் பெயரையே சுருக்கி பரதன் என இந்த மகனுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.
பிறேமராஜன் அத்தான் குடும்பம் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று சொன்னால் மிகையாகாது. இடப்பெயர்வால் நாங்கள் புதுக்குடியிருப்புக்கு வந்த போது அங்கு உறவினர்கள் என்று சொல்ல அவர் குடும்பம் மாத்திரமே இருந்தது.
அவருடைய இரு சகோதரர்கள் எம் மண்விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்து களமாடி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டவர்கள்.
அவர்களில் ஒருவர் கப்டன் மொறிஸ் இவர் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார்.
மற்றையவர் கப்டன் மயூரன் இவர் தலைவரின் நேரடி ஜாக்கெட் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். 1993 இல் தவளைப்பாய்ச்சல் என்று புலிகளினால் பெயர்சூட்டி நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகம் தாக்குதலில் சைவர் படையணியில் இருந்து தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார். இவருடைய நினைவாகவே பதுங்கிச் சுடும் படையணிக்கு “மயூரன் பதுங்கிச் சுடும் படையணி” என்று விடுதலைப்புலிகளினால் பெயரிடப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படையணியானது விடுதலைப்புலிகளின் முதன்மையான பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பெரும் வலுச் சேர்த்திருந்தது. கூடவே இப்படையணியானது வெளியே அதிகம் தெரியாதவகையில் தங்களது காத்திரமான பணிகளையும் செய்து முடித்திருந்தது.
ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட, மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன், பிரேமராஜன்-மாஸ்டர் (தீட்சண்யன்-நாட்டுப்பற்றாளர்) அவர்களின் தாயாரான திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள் தனது 88வது வயதில் ஜேர்மனியில் இன்று(18.05.2022) காலமானார்.
கப்டன் மொறிஸ் – பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989இல் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடிமோதலின் போது வீரமரணத்தை அடைந்திருந்தார்.
கப்டன் மயூரன் – இவர் எமது தேசியத் தலைவரின் பிரத்தியேக மெய்ப்பாதுகாவலராக பல வருடங்கள் சேவையாற்றி 1993இல் விடுதலைப் புலிகளால் திட்டமிடப்பட்ட பூநகரி இராணுவமுகாம் மீதான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையின்பொழுது இம்பிரான்- பாண்டியன் படையணியில் பங்காற்றி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார். இவரின் பெயரால் `மயூரன் பதுங்கிக் குறி பார்த்துச் சுடும் படையணி´ உருவாக்கம் பெற்றிருந்தது.
பிறேமராஜன் மாஸ்டர் – இவர் ஒரு சிறந்த இலக்கியவாதியாகவும் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப் பாளராகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் ´கவிஞர் தீட்சண்யன்` என்னும் புனை பெயரில் இலக்கிய வட்டத்தில் பெரிதும் பேசப் பட்டவர். இவருடைய படைப்புகளாக கவியரங்கம், சிறுகதைகள், கட்டுரைகள், மொழி பெயர்க்கப்பட்டபுலனாய்வு நூல்கள்.. என்று பலவிடயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரோடு தனது பெரும் காலத்தைக் கழித்திருந்தார். ஆதலால் பொது வெளியில் அவர் அதிகம் அறிமுகமாகியிருந்தவரில்லை
இவர்களின் அப்பாவுடன் இணைந்து அம்மாவின் போராட்டப் பங்களிப்பு என்பது பிள்ளைகளை நாட்டுக்காக உவந்தளித்தது மட்டுமல்லாமல்இன்னும் பலவழிகளிலும் இருந்தது. வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இராணுவ நெருக்கடிக்கு மத்தியிலும் PLOTE தேசவிரோத அணியினரின் முகாமுக்கு முன் வீட்டில் இருந்து கொண்டு புலனாய்வுப் போராளிகளை உபசரித்து இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த போராளிகளைப் பாதுகாத்து அனுப்பியுமிருந்தார்.
அம்மாவும் சில காலத்துக்கு முன்னர் தனது வாழ்வியலின் அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். அவரும் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை அப்புத்தகம் வாயிலாக நிறுவியுமிருந்தார். ஜேர்மனி நாட்டில் எமது தமிழ் குழந்தைகளுக்கு பல காலமாக ஜேர்மன் தமிழாலயம் ஊடாக எமது தாய்மொழியை சிறப்பாக போதித்தும் வந்திருந்தார்.
மேலும் அம்மாவின் இரு பெண்பிள்ளைகள் எமது தேசம் சார்ந்த படைப்புகளை (கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், IBC யில் வானொலி நிகழ்ச்சிகள்) படைத்திருந்ததோடு தாயகம் சார்ந்து தமிழர்புனர்வாழ்வுக்கழகம் – ஜேர்மன் கிளையினுடாக பல தாயகம் சார்ந்த தன்னார்வத் தொண்டுகளையும் சிறப்பாக ஆற்றியிருந்தனர்.
அம்மாவின் இழப்பு என்பது எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும். அம்மாவின் குடும்பத்தி னர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒவ்வொரு பெரும் கதை இருக்கும். சில போராளிகள் காவியம் போன்றவர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்தவர்கள் எழுதும் பொழுது மனம் சற்று சிலிர்த்துக் கொள்ளும். கப்டன் மொரிஸ் என் நிர்வாகத்துள் தனது போராட்ட வாழ்வை தொடங்கினார், என்று எழுதும் பொழுது என் கண்கள் பனித்து மனதில் அவன் முகம் நேராக தன்னில் வந்து தோன்றுகின்றது.
ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு சிங்கள இராணுவம் எங்கும் எப்பொழுதும் திடீர் திடீர் என்று சுற்றி வளைக்கும். அன்று கப்டன் ரஞ்சன் லாலா வடமராட்சியில் தொண்டைமானாறு பகுதியில் தங்கி இருந்த போராளிகளுக்கு (பைலட்டின் ) வழிகாட்டியாக முன் இருசக்கர வாகனத்தில் வல்வட்டித்துறை நோக்கி செல்கின்றார். எதிர்பாராத விதமாக இராணுவத்தை சந்திக்கின்றார். அவர் பின்னால் மிக முக்கிய தளபதிகள் கிட்டு உட்பட வந்து கொண்டு இருக்க இராணுவம் வந்து விட்டது. உடனடியாக இராணுவம் வந்து விட்டது என்று தனது சக போராளிளுக்கு சமிக்கை செய்ய, துணிந்து தனது உயிரை துச்சமாக கருதி இராணுவத்துடன் தனித்து மோதுகின்றார். ஏறக்குறைய ஐந்து நிமிடம் தனித்து நின்று தாக்கி பின் தொடர்ந்த போராளிகளை தப்பி செல்லும் அளவுக்கு நேரத்தை கொடுத்து பின் இராணுவத்தின் போக்கை திருப்பி வேறு திசையில் தனது பின்னே வேறு திசையில் இழுத்து செல்கின்றார். அவரை பின்தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இராணுவம் அவரை நோக்கி சுட்டவாறு செல்கின்றது. ஏனைய போராளிகள் மற்றைய வீதி ஊடாக தப்பித்து செல்கின்றார்கள். கப்டன் லாலா வீரமரணம் அடைந்து தனது சக போராளிகள் அனைவரையும் காப்பாற்றி இருந்தார்.
அந்த மாவீரனுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டத்தை தம்பசிட்டி பள்ளிக்கூடம் பின் உள்ள நிலத்தில் நாம் நடத்தி பொதுமக்களுக்கு அவரின் தியாகம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தோம். அங்கு பல இளம் தம்பிகள் கூடி இருந்தார்கள். மிக இரகசியமாக நடக்கும் கூட்டங்களுக்கு நம்பிக்கையான மக்களை மட்டும் தான் எமது பகுதி நேர போராளிகள் அழைத்து வருவார்கள்.
அங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான். அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில் ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில் ஒருவித பாசம் உருவாகியது. என் உடன்பிறந்த தம்பிகளின் ஞாபகம் வந்து போனது.
அவனது தலையைத் தடவி “எத்தனாம் வகுப்பு படிக்கிறீங்க?” என்று கேட்டேன். “ஒன்பதாவது” என்றான். “பரதன் (மொரிஸ்) தனது இயற்பெயர்” என்றான் .
காவியங்கள் மனதில் வந்தன. அவன் பரதன் தான்… “தம்பி இப்போ படியுங்க, நாங்க கட்டாயம் உங்களை எடுப்போம். முதலில் உதவிகளை வீட்டில் இருந்து செய்யுங்கள். இயக்கம் எல்லோரையும் உடனே உள்ளுக்குள் எடுக்காது தெரியும்தானே. ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைய இருக்கணும். நாங்க உங்களைப் பார்ப்போம். சிலகாலம் உங்க செயல்பாடு எல்லாம் எப்படி இருக்கு என்று பார்போம்” என்று சொல்லி அனுப்பி விட்டேன். பாக்கியும், சஞ்ஜீவனும் அவனிடம் பேசினார்கள். பின் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். பின் சிறிது காலம் நியாயவிலைக் கடைகள் தொடங்கி மக்களுக்கான சேவையை நாம் செய்து கொண்டு இருந்தோம் .
அப்பொழுது மீண்டும் அவன் வந்தான். “சரி பாடசாலை முடிந்து வந்து உதவிகள் செய்யுங்கள்” என்று சொல்லி வைத்தோம். நியாயவிலைக் கடை ஒன்று தம்பசிட்டியில் லேப்டின்ட் சங்கர் (தொண்டைமானறு வீரமரணம்), மேஜர் கேசரி (ஆனையிறவு)அவரின் தம்பி, அவரின் நிர்வாகத்தில் வைத்து இருந்தோம். “அந்தக் கடையில் பகுதி நேரமாக வந்து உதவிகள் செய்யுங்கோ” என்று சொன்னேன் . பரதன் (மொரிஸ்) சங்கருடன் ஆத்தியடியில் கடையில் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்தான். தயாநிதி மாஸ்டரும் அங்கு சில உதவிகளைச் செய்தார். சங்கரும், கேசரியும், தயநிதி மாஸ்டரும், பரதனும் இன்னும் முரளி(சார்ல்ஸ், கணேஷ் எல்லோரும் உறவுகள் போல், அது ஒரு நல்ல குழுவாக எங்கள் ஆலோசனைகளை செய்யல் படுத்தும் குழுவாக செயல்பட்டார்கள். அப்படி சொல்லி ஒரு மாதத்துக்குள் அவனின் செயல்பாடுகள் பிரமிக்க தக்கதாக இருந்தது. தனது நண்பர்கள் முரளி, கணேஷ் ஆகியோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து “அவர்களும் இருந்தால் இன்னும் ஒரு கடையை சிறப்பாகச் செய்யலாம்” என்றான் அவன். சரி உனக்கு புதிதாக ஒரு கடை தரலாம் என்று மாஸ்டரும் சொனார்.
சவனைப் பகுதியில் ஒரு இடத்தில் கடை அமைத்துக் கொடுத்தோம். அப்படி படிப்படியாக அவன் போராட்ட வாழ்வு தொடங்கியது. தபால்கார நண்பர் ஒருவரின் மிதி வண்டி ஒன்றை கடைக்குத் தேவையான பொருள்களை கொண்டு வருவதற்கு பயன் படுத்தினான். பருத்தித்துறை வீதிகளில் கணேஷ் மிதிக்க மொரிஸ் அந்த முன் கூடைக்குள் இருந்து செல்வது வேடிக்கையாக இருக்கும். பாடசாலை ஒன்பதாவது முடித்து பத்தாவது தொடங்கும் பொழுது அவன் “காவலுக்கு தானும் செல்லவேண்டும்”(Centryக்கு) என்றான். அப்பொழுது சிங்கள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு அடிக்கடி சண்டை நடக்கும். அப்பொழுதெல்லாம் கடையில் யாரையாவது விட்டு விட்டு களத்தில் வந்து நிற்பான்.
கடையில் அவன் நண்பர்கள் எல்லோரும் வந்து நிற்பார்கள். ஒருநாள் எங்கோ ஒரு தவறு நடந்து விட்டது. கடைக்கணக்கில் சில சிக்கல்கள். மொரிஸ்தான் கடைக்கு பொறுப்பு. சூசை வந்து மொரிசிடம் சொல்லிவிட்டார் “இனி உனக்கு கடை சரிவராது” என்று. “எல்லோரையும் கடையில் விட்டுப்போட்டு உன் பாட்டுக்கு நீ போனால் இப்படித்தான் நடக்கும். நண்பர் என்றாலும் பொறுப்பு உன்னுடையது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். “வீட்டுக்குப் போ. ஒருமாதம் இங்க வரகூடாது” என்று. நான் சூசையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். சூசை முடிவு எடுத்தால் அண்ணன் சொன்னலும் மாற்றாது. அவ்வளவு உறுதியானவர். என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மொரிஸ் அழுதான். சிறு போராளி அவன். “சதா அண்ணா, நான் பிழைவிட்டு இருப்பன் என்று நீங்க நினைகிறீங்களோ” என்று கேட்கும் பொழுது எனக்கே கண் கலங்கியது .
“இது ஒரு பயிற்சி உனக்கு. இயக்கம் அப்படித்தான். உன்னை ஒரு மாதம் வீட்டில் இரு என்றுதானே சூசை சொன்னார். அதைச் செய்” என்று சொலிவிட்டு நான் கடைப் பொறுப்பை கணேஸிடம் ஒப்படைத்தேன். ஆனால் மொரிஸ் எங்கள் எல்லோரையும் திணறடித்தான். உண்ணாவிரதம் இருந்தான். முதல் நாள் நான் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. “நான் வீட்டுக்குப் போகப் போவதில்லை” என்று கடையின் பின்பக்கம் ஒரு மூலையில் இருந்து கொண்டான். மூன்று நாள் அவன் ஏதும் அருந்தவில்லை. சாப்பிடவில்லை. சோர்ந்து போய் இருந்தான். நிலைமையைச் சூசைக்கு அறிவித்தேன். சூசை உடனடியாக வந்தார். அவனை அப்படியே தூக்கி, ஒரு குழந்தையைப் போல அரவணைத்து, சாப்பிட வைத்தார். “சரி கடையை நடத்து” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
பின் அண்ணனின் நேரடிப் பார்வையில் ஒரு சிறப்புப்படை அணிக்கான பயிற்சிக்கு ஆட்கள் தெரிவு நடந்தது. அதில் மொரிசும் இடம் பெற்றான். அதற்கான மனதிடம் அவனிடம் இருந்தது. அண்ணனின் பாதுகாப்பு அணியில் சொர்ணத்தின் நிர்வாகத்தில் மொரிஸ் சாதனை படைத்தான்.
மொரிஸ் சிங்கள இந்திய இராணுவத்துக்கு சிம்ம சொப்பனம். ரவி ராஜின் வீரமரணம் அவனை வெகுவாகப் பாதித்து இருந்தது. பின்னாளில் மொரிசுடன் நின்று இறுதிக் களமாடிய பெரியண்ணா என்னைச் சந்தித்து மொறிஸின், என் மீதான பாசத்தைச் சொன்ன பொழுது நான் கண் கலங்கினேன். என் பார்வையில் வளர்ந்த பல போராளிகளில் மொரிஸின் அந்தச் சிரித்த முகம் என் மனதில் இன்னும் நிலையாக இருக்கிறது.
இந்தத் தருணத்தில் கப்டன் மொரிஸ் மேஜர் கேசரி லேப்டிநெட் சங்கர் மேஜர் மலரவன் வேலன் லேப்டிநெட் சிறி கப்டன் நாதன் லேப்டிநெட் இன்பன் லெப்டினென்ட் காந்தன் லேப்டிநெட் ரமணன் லேப்டிநெட் முரளி லேபதினெட் வெள்ளை கப்டன் ரஞ்சன் சித்தப்பா என்று ஆயிரம் ஆயிரம் போராளிகளை நினவு கூருகின்றேன்.
ஒவ்வோருவரும் ஒவ்வொரு காவியம் இன்னும் எழுதுவேன் என் ஆயுள் போதுமோ தெரியவில்லை!
அப்போதெல்லாம் ஈழத்தில் ஆண்பிள்ளைகளை, பெற்றோர்கள் பெருந்தூணாகத்தான் நம்பி இருந்தார்கள். ஆண்பிள்ளை கூடவே வளர்வான், உறுதுணையாக இருப்பான், படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தைத் தாங்குவான், தோள் கொடுப்பான், வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளைக் கரைசேர்ப்பான்… என்றெல்லாம் அவர்கள் கனவுகள் கண்டார்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் அந்தக் கனவுகளை எல்லாம் அப்படியே சிதறடித்து, அம்மா, அப்பா, அக்கா… தங்கை என்று எல்லோரையும் தூக்கி எறிந்து விட்டு ஓடும் தைரியம் எங்கள் நாட்டில் எத்தனையோ ஆயிரம் இளைஞர்களிடம் வந்தது.
பாடசாலைக்குப் போன பிள்ளைகள் பசியோடு வீடு திரும்புவார்கள் என்று அன்போடும் அவதியோடும் சமைத்து வைத்து விட்டுக் காத்திருந்த அம்மாமாரையெல்லாம் சைக்கிளையும் புத்தகப் பையையும் யாரோ ஒருவரிடம் கொடுத்தனுப்பி ஏமாற்றிய தைரியம் அது. அக்காமாருடனும் தங்கைமாருடனும் சண்டை பிடித்து, அடம் பிடித்து, அன்பைப் பொழிந்து… வாழ்ந்து விட்டு ஒரு பொழுதில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்ட பயங்கரத் தைரியம் அது.
ஈழத்தில் எத்தனையோ ஆயிரம் குடும்பங்களில் இது நடந்திருக்கிறது. அது வலியாக, தாள முடியாத சோகத்தின் சுமையாக ஒட்டுமொத்தக் குடும்பத்தையே ஆட்டிப் படைத்திருக்கிறது. வாட்டி வதைத்திருக்கிறது.
2000 ஆண்டளவில் ஜெயரூபன் மைக்கேல் பிலிப் என்பவர் ‘ஜடாயு‘ என்றொரு சிறுகதையை எழுதியிருந்தார். ‘ஜடாயு‘ மீன்பிடித் தொழிலைச் சீவனமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. கல்லூரி விடுமுறைநாட்களில், எடுபிடியாகக் கடலுக்குப் போய் உழைத்து, ஐந்தோ பத்தோ தாயிடம் கொடுக்கும் அவர்களது அன்பு மகன், அம்மாவையும் அப்பாவையும் அக்காவையும் விட்டு விட்டு போராடப் போய் விடுகிறான். பாடசாலைக்குப் போனவனின் சைக்கிளும் புத்தகப்பையும்தான் வீட்டுக்குத் திரும்பி வந்தன. கைவிளக்குப் போல இருந்த ஒற்றை மகன் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்ட ஏமாற்றத்திலும் ஏக்கத்திலும், மனதாலும் உடலாலும் சாய்ந்து போன அவனது தந்தை அவனை மீண்டும் காணாமலே இறந்து போய் விடுகிறார்.
அப்படியொரு பெருந் துயரை தனது குடும்பத்துக்குக் கொடுத்து, அவர்களையெல்லாம் தவிக்க விட்டு விட்டு ஓடி, அலைக்கழிந்து, மீண்டு திரும்பிய ஒருவரின் கதைதான் குமிழி.
‘குமிழி‘ என்ற பெயர் அழகு. அதற்குக் கதாசிரியர் ரவி அவர்கள் சொல்லும் விளக்கமும் அழகு. ஆனால் அது துயரம் தோய்ந்த ஒருவித ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கின்ற அழகு.
ரவி ஈழத்தின் வடபுலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1986இலிருந்து சுவிசில் வாழ்ந்து வருகிறார். 1989 இலிருந்து 1994 வரையான காலப்பகுதியில் மனிதம் என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டதன் மூலமும் வேறு பல இலக்கியச் செயற்பாடுகள், சமூகநலச் செயற்பாடுகள் மூலமும் நன்கு அறியப்பட்டவர். 1995இல் ‘செட்டை கழற்றிய நாங்கள்‘ என்றதொரு அழகிய கவிதைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார்.
PLOT (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) அமைப்பில் இணைந்து, செயற்பட்டுக் கொண்டிருந்த இவர் ஆயுதப் பயிற்சிக்காக, தான் இணைந்த அந்த அமைப்பின் வழிகாட்டலில் இந்தியா வரை பெரும் கனவுடன் சென்றவர். அங்கு பின்தளத்தில் கண்ட, எதிர்கொண்ட கொடுமைகளையும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றங்களையும் அச்சத்தையும் உயிர்தப்பினால் போதுமென்றான நிலையையும் இந்தக் ‘குமிழி‘ நாவலில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்துள்ளார் என்று சொல்வதை விட 2020ம் ஆண்டு வரை, 35 ஆண்டுகளாகத் தன்னோடு காவித் திரிந்த அந்த ஆதங்கம், ஏமாற்றம், கோபம், வேதனை… எல்லாவற்றையும் இந்நாவலின் மூலம் இறக்கி வைத்திருக்கிறார். முழுமையாக இறக்கி வைக்க முடியாது போயிருந்தாலும் இந்நாவலின் மூலம் அவர் கண்டிப்பாக ஒருவித விடுதலை உணர்வைப் பெற்றிருப்பார்.
நாவலில் ரவி தானாக நின்று தன்னிலையிலும் வேறொருவராகத் தள்ளி நின்று படர்க்கையிலும் கதையைச் சொல்கிறார். கதை ஒரு பயங்கரக் கனவுடன் ஆரம்பிக்கிறது. சுவிசின் அழகிய மலைகளுக்கூடாகத் தொடரும் கதையை ரவி தனக்கேயுரிய கவித்துவமான வரிகளால் அழகாக நகர்த்துகிறார். கொஞ்ச நேரத்துக்குத்தான் அந்த அழகும் பசுமையும். அதன் பின் கதை நெடுகிலும் ஒரு வித கோபமும் சோகமும் தவிப்பும் நெருடல்களும் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாமல் உள்ளது.
ஆரம்பத்தில் ரவி கண்ட கனவும் அதில் வரும் சவுக்கம் கொட்டனும் அந்த மரணபயமும் ஆழ்மனதில் உறங்கியிருக்கும் ஏதோ ஒரு பயங்கரம் நாவலினுள்ளே புதைந்துள்ளது என்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறது.
ரவியின் அப்பா ஒரு ஆசிரியர். மனிதநேயம் மிக்க ஆசிரியர். பாடசாலையில் பிள்ளைகள் யாராவது காற்சட்டையை அழுக்காக்கி விட்டால் கிணற்றடிக்கு கூட்டிச் சென்று அவர்களைக் கழுவி விடுமளவுக்கு அன்பும் அக்கறையும் நிறைந்தவர். பிள்ளைகள் பசியோடு இருப்பதைக் கண்டால் உணவு வாங்கிக் கொடுக்கவும் அவர் தயங்குவதில்லை. பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களில் மூலிகைச்செடிவளர்ப்பு, ஆயுர்வேத மருத்துவம், வீட்டு முற்றத்தில் பெருவிருட்சமாக வளர்ந்திருந்த வேப்பமரத்தின் பூக்கள், இலைகள், பட்டைகள்… போன்றவற்றிலிருந்தும் மூலிகைச் செடிகளிலிருந்தும் மருந்துகள், குளிகைகள் தயாரிப்பது, மருந்துக்கடையை நடாத்துவது, சாஸ்திரம் பார்ப்பது… என்று எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தவர்.
அவரது இயக்கம் 1970 இல் நின்று போயிற்று. சாதாரணமாக யாழ் வாழ் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் இருக்கக் கூடிய பிரச்சனைகளும் தேவைகளும் ரவியின் குடும்பத்திலும் இருந்தன. தந்தையில்லாத அந்தக் குடும்பம் சிறீமா காலத்துப் பஞ்சத்தோடு போராடியபடியே வாழத் தொடங்கியது. ஆறு சகோதரர்கள். அவர்களில் திருமணமாகாத அக்காமாரும் அடக்கம். சீதனம் கொடுத்தால்தான் பெண்பிள்ளைகளைக் கரைசேர்க்க முடியும் என்ற எங்கள் யாழ்ப்பாண வாழ்க்கை முறைமைக்கு மத்தியில் அம்மாவுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ரவிதான். ரவி படித்துப் பட்டம் பெற்றுக் குடும்பத்தைத் தாங்குவான் என்பது அம்மாவின் பெருங்கனவு.
ரவியும் அந்தக் கனவுடன்தான் மொறட்டுவப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தார். இரண்டு வருடங்கள்தான். ஒரு கட்டடக்கலைஞனாக வெளியே வரவேண்டியவரின் கனவு, வேட்கை எல்லாவற்றையும் 1986 ஜூலைக் கலவரம் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டது. சொந்த நாட்டிலேயே அகதியாகி, கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார்.
அதன் பின்னான காலத்தில் இயக்கம்-போராட்டம்-விடுதலை என்றொரு புதியபாதையை அவர் தேர்ந்தெடுத்தார்.
தான் ஒரு கட்டடக்கலைஞனாகி தனது உழைப்பில் குடும்பத்தைத் தாங்குவது, சகோதரிகளுக்கு சீதனம் கொடுத்து திருமணத்தை நடாத்தி வைப்பது… போன்றவற்றிற்கான சாத்தியங்களை விட ஒரு சுதந்திர சோசலிச தமிழீழம் உருவாகினால் தன் போன்ற எல்லோருக்கும் மீட்சி கிடைக்கும் என்பதை ரவி முழுமையாக நம்பினார். கட்டிடக்கலைஞனாகும் கனவை உடைத்துப் போட்ட ஜூலைக்கலவரத்தினால் மனதில் ஏற்பட்டிருந்த விசனமும் இன்னும் பலவும் அந்த நம்பிக்கையுடன் சேர்ந்து அவரை அந்தத் துணிச்சலான முடிவை எடுக்க வைத்தன.
அதை ரவி இப்படிக் குறிப்பிடுகிறார்.
படிப்பு, குடும்பச்சுமை எனக் காய்ந்து போன வரப்பில் சிறு ஓடையாக ஓடிக் கொண்டிருந்த என் பால்ய கால வாழ்வை மடைமாற்றி புதிய பாதையில் திறந்து விட்டேன். துணிச்சலா, அப்பாவித்தனமா, விடுதலை வேட்கையா எதுவோ தெரியாது. புலனாகாத அந்தப் பாதையில் முழு நம்பிக்கையுடன் பரவினேன் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. (அத்தியாயம்:1, பக்கம்:12)
அத்தான் வேலை செய்யும் கடையில், ஒருவரிடம் கடிதத்தைக் கொடுத்து வீட்டில் கொடுக்கச் சொல்லிவிட்டு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார்.
வல்லைவெளி தாண்டிச் சென்று கடலில், வள்ளத்தில் பின்தளம் என்னும் இந்தியாவை நோக்கிச் செல்லும் அந்தக் கடற்பயணம் சவால் நிறைந்த பெரும் ஆபத்தான பயணம். பழுதடைந்த மோட்டார்கள், ஆழ்கடல், அலை, நேவி, ரோந்து… என்று பலவற்றைக் கடந்து ரவியும் இன்னும் பதினெட்டுப் பேரும் ‘மண்ணுக்காய் உழைக்கச் செல்கிறோம்‘ என்ற அர்ப்பணிப்பு மனநிலையுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் இந்தியக்கரையில் கால் வைக்கிறார்கள். அவர்களில் ரவியின் நண்பர்களான யோகன், பாலன் இருவரும் அடக்கம். முதல்நாளே சாப்பாடு கிடைக்கவில்லை. வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு பயண அலுப்புத் தீரத் தூங்கி விடுகிறார்கள்.
அதன் பின்னான இயக்க(கழக) நடைமுறைகளில், ஒரு மொட்டைமாடிக் கட்டிடத்தில் ரவி, யோகன், பாலன் மூவரும் ரகு, ஆனந்தன், கரன் ஆகிறார்கள்.
அங்கிருந்து ஒரு நடுநிசியில் எல்ப் ரக ட்றக் வண்டியில் ‘பி‘ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். முகாம் பற்றிய பெரியதும் சிறியதுமான பல கற்பனைகளை வளர்த்த படி ரகு ஆகி விட்ட ரவி முகாமை வந்தடைந்தான். தலையில் தொப்பி, கட்டைக் காற்சட்டை, பெனியனுடன் எஸ்.எம்.ஜீ போன்ற ஆயுதம் தாங்கிய இருவர் சம்பிரதாய முறைப்படி எல்லோரையும் நோட்டம் பார்த்து, பரியரைத் திறந்து உள்ளே போக விடுகிறார்கள்.
சுமார் பத்துக் கொட்டில்கள் வரை ஒரு சவுக்கம் காட்டுக்குள் ஒளிந்திருந்தன. நடுவிலே ஒரு பெரிய வெளி. அந்தக் கொட்டில்களுக்குள் ஏற்கெனவே பயிற்சிக்கென வந்தவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் ஊரிலிருந்த பொழுது கழகத்தின் அரசியற் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ரவியே, பின் தளப்பயிற்சிக்கென் அனுப்பி வைத்த இந்திரன், சந்திரன் ஆகியோரும் இருந்தார்கள்.
அடுத்தநாளே முகாம் ஒழுங்கு விதிகள் இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன. முதல் நாளைய இரவின் இருட்டில் ‘எஸ்.எம்.ஜீ‘ என்று ரவி நினைத்த ஆயுதம் வெறும் சவுக்கம் கொட்டனாக இருந்தது. அந்தச் சவுக்கம் கொட்டனை வைத்துக் கொண்டுதான் சென்றிக் காவலாளிகள் கூட அங்கு காவலுக்கு நின்றார்கள். ஆயுதங்களைப் படங்களாக மட்டும் கொப்பிகளில் பிஸ்ரல், ஏகே-47, எஸ்எல்ஆர், எல்எம்ஜீ, ஆர்பிஜி… என்று கீறிவைத்துப் பாடமெடுத்தார்கள். பின்தளப் பயிற்சிகளும் சவுக்கம் கொட்டன்களுடன்தான் அங்கு நடந்தன.
எல்லாமாக 320 பேர் வரை அங்கிருந்தார்கள். பயிற்சிகள் புழுதியிலும் வெயிலிலும் தொடர்ந்தன. சாப்பாடு ஒரு சிறைச்சாலையில் கிடைக்கும் சாப்பாடு போல எல்லோருக்கும் கிடைத்தது. முகாம் முழுக்க ஏதோவொரு அவிழ்க்க முடியாத புதிர் மெளனித்திருந்தது. மனம் விட்டுப் பேசவோ ஏன், எதற்கு, எப்படி என்று கேட்கவோ முடியாத ஒருவித அந்தரமான சூழ்நிலையை ரவியால் உணர முடிந்தது.
தொடர்ந்த நாட்களில்புதிதாக முகாமுக்கு வந்தவர்களும் சென்றிக்கு நிற்கும் வேலையைச் செய்யப் பணிக்கப் பட்டார்கள். முகாமின் முன்வாசலிலும் பின் வாசலிலும் இருக்கும் உயரமான பரண்களில் மேலேயும் கீழேயுமாக இருவர் நின்று காவல் புரிவார்கள். முகாமின் மற்றைய மூலைப்பகுதிகளிலும் நான்கு பக்க வியூகம் இருக்கும். சக தோழர் ஒருவர் இவர்களைக் கண்காணித்த படியே திரிவார். அவர்கள் எல்லோருக்குமான ஆயுதங்கள் சவுக்கம் கொட்டன்கள்தான்.
அன்று அதிகாலை இரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரை ரவியின் முறை. முன் வாசல் பரணின் மேலே ரவி. கீழே, இலங்கையில் தீயணைப்புப்படையில் வேலை செய்த பரம். சவுக்கம் தோப்பை மூடியிருந்த இருள், அதற்குள் நிலவிய பேரமைதி எல்லாமே முதல்நாள் காவல் என்பதால் ரவியை அச்சுறுத்த முனைந்து கொண்டிருந்தன.
திடீரென, காற்றும் உறைந்து போகிற அந்தப் பேரமைதியைக் கிழித்துக் கொண்டு சவுக்கம் காட்டுக்குள்ளிருந்து ஒரு அலறல் கேட்டது. மனதில் ஆழ இறங்குகிற அலறல் அது. நரம்புகளைக் கைப்பிடியாய்ப் பிடித்து உலுக்கியது. மரணஒலி என்று கதைகளில் படித்த அந்த ஒலி இப்போ ரவிக்குக் கேட்டது. மனிதர்களின் ஒலி இப்படிக் குரூரமாகவும் ஒலிக்க முடியுமென்பதை அன்றுதான் ரவி உணர்ந்தான். அங்கிருந்து ஒரே உரப்பல் ஒலிகளும் உங்களுக்கு அண்ணா இல்லையா… தம்பி இல்லையா என்ற நடுங்கி எழும் ஈனக்குரலும் அதைச் சிதைக்கும் அதட்டல்களும் கேட்டுக் கொண்டிருந்தன. சவுக்கம் தோப்பின் அமைதி உடைந்து சின்னா பின்னமாகியது. ரவிக்குப் பதட்டமும் என்ன நடக்கிறது என்று தெரியாத திகைப்பும். பரம் மயங்கி வீழ்ந்து விட்டான்.
இந்தச் சம்பவம் ரவியைப் பெரிதும் பாதித்தது. ரவி மனதளவில் நொருங்கிப் போனான். அடுத்தநாள் பயிற்சிக்கு வெளியில் போகும் போது சத்தம் வந்த இடத்தை உற்று நோக்கினான். ஒரு சிறு கொட்டில் அங்கு ஒளிந்திருந்தது.
அதன் பின் ஒருநாள் உமா மகேஷ்வரன் அங்கு, அந்த முகாமுக்கு வந்தார். அந்த நாள் அந்தக் கொட்டில் காணாமல் போயிருந்தது. வேய்ந்திருந்த கிடுகுகள் மட்டும் முகாமின் முன்வாசல் வழியில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உமா மகேஸ்வரன் போன பின், அடுத்தநாள் மீண்டும் அக்கொட்டில் அந்த இடத்தில் முளைத்திருந்தது.
ரவியின் மனதில் அமைதியின்மையும் சந்தேகமும் தலை விரித்தாடின. எந்த உண்மையையும் அங்கிருக்கும் யாரிடமும் கேட்டு அறியவோ, தெளியவோ, வெளிப்படையாகப் பேசவோ முடியாதபடி ‘இராணுவ இரகசியம்‘ என்றதொரு பெருஞ்சுவர் ஒவ்வொருவரையும் தடுத்து நிறுத்தியது. எல்லோரும் அச்சம் கலந்த மெளனத்துடன் அங்கு உலவினார்கள்.
தொடர்ந்த நாட்களலும் அந்த விசாரணைக் கொட்டிலுக்குள் யாராவது ‘புலிகளின் உளவாளி‘, ‘காட்டிக் கொடுத்து விட்டான்‘, ‘துரோகி‘ என்பதான அடைமொழிகளுடன் உளன்றியில் தலைகீழாகத் தொங்கினார்கள். விசாரணை என்ற பெயரில் உடலில் சதையைக் கீறி உள்ளே மிளகாய்த்தூள் வைக்கப்பட்டார்கள். செத்தல் மிளகாய்ச்சாக்கால் முகத்தை மூடிக் கட்டப்பட்டார்கள். உயிர் போகும் வரை சவுக்கம் கொட்டனால் அடித்து நொருக்கப் பட்டார்கள். எதிர்த்துக் கதைப்பவர்களும் ஏன், எதற்கு, எப்படி? என்று கேள்வி கேட்பவர்களும் அதே உளன்றியில் தொங்கிச் சிதைந்தார்கள். அந்த முகாமிலிருந்து தப்பியோட முனைந்தவர்களில் ஒருவர் கூடத் தப்பாது இழுத்து வரப்பட்டு எல்லோர் முன்னிலையிலும் வைத்து உடல் கிழிந்து, உயிர் பிரியும் வரை அடித்து, உதைத்துக் குதறப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் அந்தச் சவுக்கம் காட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டார்கள். பின்னர் பொறுப்பாளர்கள், உளவுப்படை என்ற பெயர்களில் அராஜகம் செய்து கொண்டிருந்தவர்களால் “அவனைக் காணவில்லை. தப்பியோடி விட்டான்“ என்று இலகுவாகச் சொல்லப் பட்டார்கள்.
ஈழவிடுதலை, மண்ணின் விடுதலை, சோசலிசதமிழீழம்… என்ற கனவுகளோடு வந்தவர்கள் அந்த முகாமுக்குள் அடிமைகள் போலவும் குற்றம் புரிந்தவர்கள் போலவும் கைதிகள் போலவும் சற்றேனும் சுதந்திரம் அற்றவர்களாய் நடாத்தப்பட்டார்கள். அவர்களுக்கான வெளியுறவுத் தொடர்பு என்பது அறவே இல்லாமற் செய்யப்பட்டிருந்தது.
“எதற்காக இங்கு வந்திருக்கிறேன்?“ என்று தன்னையே தான் கேள்வி கேட்டுச் சோர்ந்து போகும் ரவியை கழகம் பற்றிய உற்சாகமான செய்திகளை வழங்கும் ‘தமிழீழத்தின் குரல் வானொலி‘ தான் மீண்டும் மீண்டுமாய் உற்சாகப்படுத்தி, போராளியாக மாற்றிக் கொண்டிருந்தது.
முகாம் வாழ்க்கை பல மாதங்களைக் கடந்து விட்டிருந்தது. ரவிக்கு நெஞ்சுச்சளி, இருமல் போன்ற உபாதைகள் வரத் தொடங்கியிருந்தன.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. கழகத்தின் தொலைத்தொடர்புப் பயிற்சிக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் படலம் ஆரம்பமானது. அந்தப் பயிற்சிக்காக ரவி இருந்த இந்தப் ‘பி‘ முகாமிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நால்வரில் ஆனந்தன், டாக்குத்தன், சிங்கப்பூர் உட்பட ரவியும் ஒரு ஆள்.
உண்மையில் ரவி படித்திருந்தது தான், நெஞ்சை உறைய வைக்கும் கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த அந்த முகாமிலிருந்து வெளியேறும் பெரும் வாய்ப்பை ரவிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. குறைந்த பட்சம் க.பொ.த உயர்தரம் வரை படித்தவர்களைத்தான் அந்த வேலைக்கு அவர்கள் தேர்வு செய்தார்கள். அதன் பின்னான போராட்ட வாழ்க்கை ரவிக்கு சற்று நம்பிக்கையைக் கொடுத்தது.
தஞ்சாவூரிலிருந்த ஒரந்தராயன்குடிக்காடு என்ற இடத்தில் கழகத்தின் தொலைத்தொடர்பு முகாம் இருந்தது. தென்னந்தோப்புகள், வீடுகள், ஆறு… என்பவற்றிற்கிடையே இருந்த அந்த முகாம், சவுக்கம் காட்டுடன் ஒப்பிடும் போது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி போன்றதான பிரமையை ரவிக்குக் கொடுத்தது. 40பேர் அங்கு வேலையில் இருந்தார்கள். சுவையான சாப்பாடு, தென்னைமர நிழலில் ஓய்வு, ஆற்றுக் குளிப்பு, கிராமியவாசனை, கலகலப்பு… என அந்த வசதியான வாழ்க்கையும் வகுப்புகளும் அந்நியோன்யமான, மனந்திறந்த உரையாடல்களும் ரவிக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தன. ரவி அங்கு ‘ஜோன்‘ ஆக மாறியிருந்தான்.
ஏறக்குறைய நாங்கள் மறந்து போய்க்கொண்டிருக்கிற Morse Code பயிற்சியும் அங்கு ரவிக்குக் கிடைத்தது. வேற்று மனிதர்களுடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைத்தன. Morse Code செய்திப் பரிமாற்றத்திற்கு ஆங்கிலம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டுமென்பதால் பெண் தோழர்களுக்கு ஆங்கில வகுப்பெடுக்கும் வாய்ப்பும் பெண்தோழர்களின் முகாமுக்குப் போவதற்கான அனுமதியும் கூட ரவிக்குக் கிடைத்தன. அங்கிருந்த பத்துப் பெண்களுக்கும் ஒவ்வொரு கதை இருந்தாலும் அவர்களில் ஒருத்தியான மாலிக்கும் ரவிக்கும் இடையில் காதலும் முகிழ்த்தது. கண்களால் மட்டும் பேசிக் கொண்ட காதல் அது.
தொடர்ந்த நாட்களில் புதுக்கோட்டையிலிருந்த சுடுதல் பயிற்சிக்கான முகாமில் துப்பாக்கியால் சுடும் பயிற்சிகளும் கிடைத்தன. ஆயுதங்களைப் பார்க்கவும் தொட்டுணரவும் முடிந்த அந்தப் பொழுதில் தான் முழுமை பெற்றுவிட்டதான உணர்வு ரவிக்கு வந்தது. இருவாரகால இராணுவப்பயிற்சியை முடித்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் புறப்படும் போது ரவி மட்டுமல்ல பயிற்சி எடுத்த எல்லோருமே தாம் போராளிகளாக முழுமைபெற்று விட்டதாக உணர்ந்தார்கள். அந்த உற்சாகத்துடன்தான் தொலைத்தொடர்பு முகாமுக்குத் திரும்பினார்கள்.
ஒரு சிலநாட்கள்தான் கடந்திருக்கும். எல்லா உற்சாகத்தையும் தகர்த்தெறியும் செய்தியொன்று முகாமுக்குள் பரவியது. “விடுதலைப்புலிகளின் பிரச்சார எழுத்துப்பிரதிகளை மதில்களில் ஒட்டிக்கொண்டிருந்த ஆறு இளைஞர்கள் சுழிபுரத்தில் வைத்து கழகத்தின்(PLOTE) உளவுப்படையால் கைதுசெய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டார்கள்.“ ரவி அதிர்ந்து போனான். அவனால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‘நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எமது எதிர்காலம் என்னவாக இருக்கும்? எமது இயக்கத்துக்குள் என்ன நடக்கிறது? ஏன் எதையுமே அவர்களுடன் வெளிப்படையாகப் பேசமுடியாதிருக்கிறது? என்று பல கேள்விகள் ரவியின் மனதில் எழுந்து, அவனை அலைக்கழித்தன.
அதன் பின்னான சந்ததியார் பிரச்சனை, தொடர்ந்த உட்பூசல்கள்… எல்லாமே கழகம் தமிழீழத்தை வென்று தரும் என்ற நம்பிக்கையை உடைத்தெறிந்தன. இறுதியில், உயிர்தப்பினால் போதும் என்ற நிலையில் சொல்லாத காதல், போராளிக் கனவு… எல்லாவற்றையும் விட்டு விட்டு ஊருக்கு ஓடி விட ரவி தீர்மானித்தான். பொறுப்பாளர்கள் என்ற பெயரில் சர்வாதிகாரத்தைத் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டு அராஜகம் புரிந்தவர்கள் மத்தியில் நேசம் மிகுந்தவர்களும் இருந்தார்கள். ரவி ஊர் வந்து சேர்ந்தான்.
ஊரிலும் ரவியின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கவில்லை. ‘தப்பியோடியவன்‘ என்ற பெயரில், இணைந்து கொண்ட PLOT (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) அமைப்பினாலேயே தேடப்பட்டுக் கொண்டிருந்தான்.
இந்த நிலையிலும் ரவி தப்பிப் பிழைத்து, சுவிசுக்கு வந்து சேர்ந்து விட்டது பெரும் அதிசயம். ரவியின், எதையும் ஆழ்ந்து, அறிவார்ந்து நோக்கும் தன்மை, தன்னம்பிக்கை, உறுதி… போன்றவை அந்த அதிசயத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
இந் நாவல் ஓகஸ்ட் 2020 இல் விடியல் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 220 பக்கங்களையும் 0 இலிருந்து 30 வரையான அத்தியாயங்களையும் கொண்ட இந்நாவலுக்கு விடியல் பதிப்பகத்தினால் பதிப்புரையும் ரவி அவர்களால் என்னுரையும் எழுதப் பட்டுள்ளன. அட்டைப்படம் ரவியின் மகள் ஆரதியினால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான படத்தை அவரது இன்னொரு மகளான நிறமி எடுத்துள்ளார். ISBN:978-81-89867-24-5
இதில் 71 பக்கங்களுக்கு அந்த ‘பி‘ முகாம் வாழ்க்கை பற்றி, விபரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பதினொரு அத்தியாயங்கள். ரவியின் தேர்ந்த எழுத்திக்களினூடு, ‘பி‘ முகாமும் அதைச் சுற்றியுள்ள சவுக்கம் தோப்பும் அங்கு நடைபெறும் அராஜகங்களும் வாசகரின் மனங்களில் காட்சிப்படிமங்களாகப் பதிந்து விடுகின்றன. உளன்றியில் தலைகீழாகத் தொங்கிச் சிதறிச் சின்னா பின்னமாகுவோர் ஒருவித அதிர்வையும் அச்சத்தையும் ஏற்படுத்தி மனசை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறர்கள்.
‘எனது கதையையே எழுதுகிறேன்‘ என்றும் இந்த நம்பிக்கைகளையெல்லாம் பின்தளம் கிளிசலாக்கியது. உயிர் தப்பி ஊர் வந்து சேர்தலே வாழ்வின் மிகப்பெரும் பாக்கியமாகிப் போனது. (அத்தியாயம்:1, பக்கம்:12)
என்றும் ஆரம்பத்திலேயே ரவி குறிப்பிட்டு விட்டதால், இந்த ‘பி‘ முகாம் வாழ்க்கையிலிருந்து ரவி தப்பி விட்டார் என்பது வாசகர்களுக்குத் தெரிகிறது. இருந்தாலும் அது ஒரு பெரிய குறையாகத் தெரியவில்லை. ‘எப்படித் தப்பினார்?‘‘ என்ற கேள்வி கதை நெடுகிலும் கூடவே வந்து கொண்டிருக்கிறது.
நாவலில் ஊருப்பட்ட கதை மாந்தர்கள். அது ஒரு நாவலுக்குப் பலமா பலவீனமா என்று தெரியவில்லை. ஆனால் இந்நாவல் ஒரு உண்மையின் சாட்சி. வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளனின் எழுத்தாக இல்லாமல் உள்ளிருந்து பார்த்தும் அநுபவித்தும் நொந்து, வெந்து போன ஒருவனின் வாக்குமூலம். அப்படிப் பார்க்கும் போது அத்தனை மாந்தர்களும் கதைக்குத் தேவையானவர்கள் தான்.
பின்தளம் என்னும் இந்தியாவில், ரவி போகுமிடமெல்லாம் வேம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த வேம்புகள் ஒவ்வொன்றும் ரவியை அணைக்கின்றனவா, உறுத்துகின்றனவா அல்லது ஏங்க வைக்கின்றனவா என்பது தெரியவில்லை. ஆனால் அவை ஒரு தாயைப் போல ரவியை வாஞ்சையுடன் நோக்குகின்றன. ஒரு குறியீடு போல நம்பிக்கையின் ஒளிர் போல ரவியை உற்சாகப்படுத்துகின்றன. சைபர் அத்தியாயத்தில் கூட ரவியின் சுவிஸ் வீட்டினுள்ளே அறையின் மூலையில் ஒரு வேப்பங்கன்று அசையாமல் நிற்கிறது.
இந் நாவலின் மூன்றாவது அத்தியாயம் ஒரு வேம்பு கதைப்பது போலப் படர்க்கையில் அமைந்துள்ளது. ரவியின் வீட்டு முன்றலில் வானத்துக்கும் தரைக்குமாய் தோகை விரித்திருந்த அந்த வேம்பு ரவியின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. ஆத்மார்த்தமாக ஒன்றியிருப்பது. அது சொல்லும் அந்தக் கதை உணர்வு பூர்வமானது. மனசைத் தொடுவது. குறிப்பாக ரவியின் அம்மாவின் உணர்வலைகளையும் மகன் போராடப் போய் விடுவானோ என்ற அச்சத்தையும் தவிப்பையும் வேம்பினூடாக ரவி விபரிக்கும் விதம் அற்புதமானது. ஆனாலும் இந்த அத்தியாயம் நாவலின் அமைப்பைக் குழப்புவது போலவே தோன்றுகிறது. இதை வேம்பு கதை சொல்வது போல இல்லாமல் வேம்புக்கும் தனக்குமான பிணைப்பை ரவியே சொல்வது போல அமைத்திருந்தால் ஒரு வேளை இன்னும் பொருத்தமாகவும் அழகாகவும் இருந்திருக்கலாம்.
போராட என்று எமது நாட்டு இளைஞர்கள் வீட்டை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் போன போதும் அதன் பின்னான காலங்களிலும் எல்லோரையும் விட துயரில் தோய்ந்து மனம் நைந்து போனவர்கள் அம்மாமார்கள் தான். அவர்களது சோகத்தை எழுத்தில் வடிக்க யாரிடமும் வார்த்தைகளில்லை. கதை நெடுகிலும் அம்மாவைப் பற்றிய அந்தச் சோகம் இழைந்தோடிக் கொண்டேயிருக்கிறது.
ரவியின் ‘செட்டை கழற்றிய நாங்கள்‘ கவிதைத் தொகுப்பில் தோய்ந்து போயிருந்த சோகத்துக்கு இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிப்பதுதான் காரணம் என்று எண்ணத் தோன்றியது. இந் நாவல் அந்தச் சோகத்துக்கு அது மட்டும் காரணமல்ல என்பதை உணர்த்தி நிற்கிறது.
ரவியின் சுவிஸ் வாழ்க்கையைக் கூறும் முதலாவது அத்தியாயம் வாசகர்களைக் கண்டிப்பாகக் கவர்ந்திருக்கும். துயரும் அழகும் நம்பிக்கையும்… என்று உணர்வோடொன்றியதொரு அத்தியாயம் அது.
அதிலே, மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணரும் படியாக ரவி கூறுகிறார்,
மலையுச்சியொன்றில் சுற்றுலா விடுதியில் முதல் வேலை கிடைத்தது. வேலையும் அறையும் எனது உலகமாகியது. தனிமையில் இருந்தேன். அப்படியென்றும் இல்லை. அறையில் ஒரு பாடல் என்னுடன் சகவாசம் செய்தது. அப்போதெல்லாம் சி.டி இல்லாத காலம். கசற் இல் இரண்டு பக்கமும் இந்த ஒரே பாடலைத் திரும்பத் திரும்ப ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தேன். அதன் ஒலியை உதறி விடுகிற போது ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..‘ என்று அது பாடலாகிக் கொண்டிருக்கும். அதைக் கேட்டுக் கொண்டே நான் உறங்கிப் போன நாட்கள் பல. இன்றும் கூட அந்தப் பாடலைக் கேட்டால் நான் பழசாகி விடுகிறேன்.
மேலும் அழகாகத் தொடர்கிறார்,
மும்முனை என்று நேரடி மொழிபெயர்ப்பில் அழைக்கப்படுகிற அந்த முடிவில் ஒரு பெரிய பாறைக்கல் இருக்கிறது. உலகம் முடிகிற இடமாக அது தோன்றவில்லை. உலகம் உனக்காக விரிந்தே இருக்கின்றது என்பதாக அது பசுமை மேவிய இளங்காற்றை உயிர்ச்சுவாசத்திடம் தூதுவிட்டு வருடிக் கொண்டிருக்கும். அதில் நான் குந்தியிருக்கிற போது காலடியின் கீழ் பெரும் பள்ளமாகப் பதிந்திருக்கிற சரிவு ஓர் பச்சை ஏணை போலக் குழிவாகி மறுமுனை மலையுச்சியில் முடிந்திருக்கும். அந்த ஏணைக்குள் நீல ஏரி உறங்கிக் கொண்டிருக்கும். சுற்றிவர மலைகளதும் அது விரித்துப் போட்டிருக்கிற மலையடிவார மடிப்புகளினதும் பிடிக்குள் மரக்கூட்டங்களிடையே அழித்தழித்து நிறங்களால் வரையும் முகில்களைக் கண்டு இரசிக்கிற குழந்தையாய்ப் போவேன். (அத்தியாயம்:1 பக்கம்:13)
இதைப் போல நாவலில் பல உள்ளன. ரவியின் இயற்கையை ரசிக்கும் தன்மையும் அதைக் கவித்துமாக வெளிப்படுத்தும் மொழிநடையும் எளிமையான வார்த்தைப் பிரயோகங்களும் சமயத்தில் எள்ளல் கலந்த எழுத்துக்களும்… என்று அவை சுவாரஸ்யமாகவும் பிரமிப்பூட்டுபவையாகவும் வியக்க வைக்கின்றன. இருந்தாலும் இந்த முதலாவது அத்தியாயம் நாவலோடு பொருந்தியும் பொருந்தாமலும் நிற்பது போன்றதான ஒரு பிரமையையும் தோற்றுவிக்கின்றது. சற்று மெருகேற்றினால் இதுவே ஒரு அழகிய தனிச் சிறுகதையாகப் பரிணமித்திருக்கலாம்.
மற்றும் 35 ஆண்டுகாலமாகத் தன்னோடு கொண்டு திரிந்ததை கொரோனா காலத்தில் தொகுத்து நூலுருவாக்கி முடித்த அவசரம் ஆங்காங்கு நூலில் தெரிகிறது. ரவிக்கு உள்ள எழுத்தாற்றலுக்கும் எத்தனையோ நூல்களைத் தொகுத்த அனுபவத்துக்கும், ரவி இன்னும் கொஞ்சம் நேரமெடுத்துச் செயற்பட்டிருந்தால் நாவலின் அமைப்பு இன்னும் அழகாகவும் நேர்த்தியாகவும் அற்புதமாக அமைந்திருக்கும்.
இந்த நேரத்தில் தவிர்க்க முடியாமல் ஒரு விடயம் ஞாபகத்தில் வந்து கொண்டேயிருக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழவிடுதலை இயக்கங்கள் பல தோன்றின. அவை கையெழுத்துப் பிரதிகளாகவும் அச்சுப்பிரதிகளாகவும் பலவிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டன. வீடுவீடாகக் கொண்டு சென்று அவைகளை ஒரு ரூபா, இரண்டு ரூபா என்று விற்றன. அப்போதெல்லாம் அவர்கள் எந்த இயக்கத்திலிருந்து வருகிறார்கள் என்று நாங்கள் பார்க்கவேயில்லை. எங்கள் பிள்ளைகள், எங்கள் அண்ணமார், எங்கள் தம்பிமார், எங்களுக்குச் சுதந்திரத் தமிழீழம் எடுத்துத் தரப் புறப்பட்டிருக்கிறார்கள்… என்றுதான் அன்போடும் புனிதத்தோடும் அவர்களை நோக்கினோம். மிகுந்த மனநிறைவோடு அவைகளை வாங்கிப் படித்தோம்.