Normal view

Received before yesterdayரெங்கசுப்ரமணி

சிபிஐ கதைகள் - விமலாதித்த மாமல்லன்

சிபிஐ என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அரசியல் கட்சிகள் எதிர்கட்சி வரிசையில் இருக்கும் போது வேண்டும் என்றும், ஆளும் கட்சியாக இருக்கும் போது வேண்டாம் என்று எதிர்க்கும் அமைப்பு. பெரிய குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு, கொலைகளை, பெரிய ஊழல்களை விசாரிக்கும் அமைப்பு. ஆனால் பத்து ரூபாய் லஞ்சம் வாங்கும் ஒரு டிடிஆரை பொறிவைத்து பிடிக்க இறங்கும் என்றால் நம்ப முடிகின்றதா? நம்புங்கள் என்கின்றார் விமலாதித்த மாமல்லன்.

புனைவு என்னும் புதிர், விளக்கும் வெளிச்சமும் போன்ற புத்தகங்களுக்கு பின் அவர் வெளியுட்டுள்ள புத்தகம் சிபிஐ கதைகள். 

சிபிஐ கதைகள் விமலாதித்த மாமல்லனின் புதிய புத்தகம். சிபிஐ விசாரணையை மையமாக கொண்ட கதைகள். சிறுகதை தொகுப்பு என்றும் வைத்து கொள்ளலாம், அல்லது அசோகமித்திரனின் ஒற்றன் நாவல் போன்ற நாவல் என்றும் வைத்து கொள்ளலாம். நரஹரி என்னும் பாத்திரம் அனைத்து கதைகளைக்குமான சரடு. 

பெரும்பாலான கதைகள் மத்திய அரசின் வரி துறைகளை பற்றியவை. வருமான வரி, கலால் வரி, ஏற்றுமதி இறக்குமதி வரி இன்னும் என்னவோ. பணம் புகுந்து விளையாடும் இடங்கள். வாங்குவது என்றால் சிக்குவதற்கும் வாய்ப்புகள் ஏராளம் உண்டு. அப்படி சிக்கியவர்கள்,  சிக்காத அதிர்ஷடசாலிகள் பற்றிய கதைகள். அரசு அலுவலகத்தில் ஏதாவது வேலை என்றால் உடனே பயப்படுவது பணத்திற்கும், நேரத்திற்கும் வரும் சேதாரம். அதோடு சில இடங்களில் மரியாதைக்கும் சேதாரம். பெரும்பாலனவர்கள் இதை சகித்து கொண்டு போய்விடுவார்கள், சில சமயம் இந்த சேதாரம் எல்லை மீறும் போது திருப்பி ஏதாவது செய்ய தோன்றும். அப்படி சிலருக்கு தோன்றி அடித்த கதைகள். துறைகளுக்குய் இடையிலான போட்டி, அதன் கதைகள்.  இத்துறைகளுக்குள் சிபிஐ கை வைத்த கதைகள்.

சாகசகதைகள் எல்லாம் இல்லை. சினிமாவில் பார்த்த சிபிஐ வானத்தில் இருந்தால், இது தரையில் நடக்கும் சிபிஐ. வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு. மண் ஒட்டாமல் தட்டி கொண்டு அடுத்த குறிக்கு நகரவேண்டியிருக்கும். சில இடங்களில் கிடைத்த வரைக்கும் லாபம் என்று வசமாக மாட்டியவனை போட்டு தள்ளிவிட்டு மெயின் குற்றவாளியை முடிந்த வரை அலையவிட்ட அல்ப திருப்தியுடன் திரும்ப வேண்டியிருக்கும். அது போன்ற கதைகள் இவை.

அரசாங்க ஊழியர் மொழி என்று தனியாக ஒன்று உண்டோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. பல அரசு ஊழியர்கள் பேசுவதை கேட்கும் போது சம்பளம், படி, சீனியாரிட்டி, பதவி உயர்வு, ஓய்வு தேதி, பென்ஷன், ஜாதி இது இல்லாமல் இவர்களால் பேச முடியாதா என்று தோன்றும். இது எல்லாம் சென்னையில் மூன்று வருடம் மின்சார ரயில் வண்டியில் கேட்டவை. இந்த கதைகளிலும் அவை அனைத்தும் உள்ளன.  அதை தவிர சில டெக்னிகல் விஷயங்களும் உண்டு. ஒரு ரெய்ட் எப்படி நடக்கும்,  நடுநிலையை காட்ட வெளியிலிருந்து வரும் சாட்சிகள், அவர்களை எப்படி தயார் செய்வது, ரெய்ட் சொதப்பினால் என்ன செய்வது, பேப்பர் வேலைகள், எப்படி சில போர்ஜரிகள் நடக்கின்றன என்பது எல்லாம் அங்கங்கு எளிமையான வார்த்தைகளில் வருகின்றன. 

பெரும்பாலனவர்களுக்கு தெரியாத உலகத்தை கொஞ்சம் நமக்கு காட்டியுள்ளார்.  எல்லா அதிகரிகளும் அடித்து பிடுங்குவதில்லை, பொது ஜனம் எல்லாமும் வரி ஏய்ப்பு செய்வதில்லை. அதது அனுமதிக்கப்பட்ட அளவில் நடந்து கொண்டிருப்பதால்தான் அரசு ஓடுகின்றது.  நேர்மையான கொம்பன் என்பது எல்லாம் சினிமாவிற்குதான் நிஜவாழ்வில் இருப்பது எல்லாம் முடியாது. குறைந்தபட்சம் பக்கத்தில் இருப்பவன் வாங்கி போடுவதை பார்த்து கொண்டிருக்க வேண்டியது இருக்கும். 

கதைகளில் இன்னொரு விஷயம், லஞ்சம் வாங்கி ஒருவர் மாட்டி கேஸில் இருந்து வெளிவந்தாலும் வாழ்க்கை அப்படி ஒன்று சிறப்பாக இருப்பது இருக்காது போல பலருக்கு. செய்தானோ இல்லையோ இடைநீக்கம், டம்மி பதவி, பதவி உயர்வு நிறுத்தம், பென்ஷன் நிறுத்தம் என்று அனுபவிக்க வேண்டியதுதான். அடித்த கொள்ளை கையில் இருந்தால் தப்பிக்கலாம். அதை தாரைவார்த்தால் கஷ்டம்தான். ஒவ்வொரு கேஸும் வருடக்கணக்கில் இழுத்து நோகடிக்கும். 

கச்சிதமான கதைகள். சாகசக் கதைகள் எல்லாம் கிடையாது. லஞ்சம் வாங்குபவனை பிடிப்பதைப் பற்றியே பல கதைகள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு வகை, ஒரு கதை மாதிரி மற்றொன்று இல்லை. பல உண்மை சம்பவங்கள் கலந்து இருக்கலாம். உண்மை பெயர்களும் இருக்கலாம் என்று தோன்றுகின்றது.  முன்பே சொன்ன மாதிரி இந்த பதவி பெயர்களை நினைவில் வைத்து கொள்வதும், மூன்றெழுத்து, இரண்டெழுத்து வார்த்தைகளின் அர்த்தம் கண்டு பிடிப்பதுதான் கொஞ்சம் எனக்கு சவாலாக இருந்தது.   

படிக்க நினைத்தால் ஒரே இரவில் படித்துவிடலாம். ஆனால் அப்படி படிக்க விடாது. படிப்பவர்களுக்கான இடம் கதைகளில் எப்போதும் இருக்கும். 

கண்டிப்பாக படியுங்கள்.

மாமல்லன் அவரது புத்தகங்களை அவரேதான் பதிப்பித்து கொள்கின்றார். இப்போது அதிகம் ஃபேஸ்புக் பக்கம் போவது இல்லை என்பதால் இக்கதைகள் கிண்டிலில் வெளிவந்ததும் தெரியாது. அவரது வாட்ஸாப் ப்ராட்காஸ்ட் மூலம் தெரிந்தது. 

அவரது ஃபேஸ்புக் கடையில் கிடைக்கின்றது. அவரது வாட்ஸாப் கடையிலும் கிடைக்கின்றது. 

I have the streets - Ashwin

சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் 100 டெஸ்ட் ஆடுவது என்பது சாதரண விஷயம் இல்லை என்று பேசியிருந்தார். அவர் பேசியது இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பற்றி. ஸ்ரீகாந்த் பல ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டில் பல நிலைகளில் இருந்தவர். ஆட்டக்காரர், தேர்வு கமிட்டி தலைவர், வர்ணனையாளர், பயிற்சியாளர். பல உள் விவகாரங்களை அறிந்தவர் என்பதால் அந்த கூற்றிற்கு பல வண்ணங்கள் இருக்கலாம்.  

நூறு டெஸ்ட் போட்டிகள் 500 விக்கெட்கள், உலககோப்பை. ஆஸ்திரேலியாவை கலக்கியவர். சயன்டிஸ்ட் அஷ்வினின் குட்டி ஸ்டோரிஸ்தான் இந்த புத்தகம். 

இந்த புத்தகம் அஷ்வினின் வாழ்க்கை வரலாறு என்று எல்லாம் கூறி அவரை வயதானவராக்க வேண்டாம். புத்தகமும் அப்படி எல்லாம் இல்லை. இந்த புத்தகம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் பேசுகின்றது. அவரது தொழில்முறை கிரிக்கெட் இல்லை. அவது வீட்டு கிரிக்கெட், தெரு கிரிக்கெட், க்ளப் கிரிக்கெட். 

சென்னை வெஸ்ட் மாம்பலம் ராமகிருஷ்ணாபுரத்தில் திரிந்த ஒரு சிறுவன் எப்படி தொழிற்முறை கிரிக்கெட் ஆட்டக்காரராக மாறினார் என்பதை படு சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றார். அஷ்வின் என்னும் சிறுவனைப் பற்றிதான் நிறைய உள்ளது. 

தெருவில் கிரிக்கெட் ஆடிய பலருக்கும் மிகவும் நெருக்கமாகத் தோன்றும், என்னடா நம்ம கதை மாதிரியே இருக்கு என்று. எனக்கு கிரிக்கெட் பார்க்க மட்டும்தான் பிடிக்கும். ஆடியது எல்லாம் விடுமுறையில் சென்னை வரும் போது மொட்டை மாடியில் ஆடுவது மட்டும். அதுவும் அதிகம் கிடையாது, பள்ளியிலும்  விளையாட்டு நேரத்தை எப்படியாவது அமர்ந்தே ஓட்டுவதுதான் வழக்கம். சோம்பேறி. இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது.

பந்து தொலைந்தால் அவுட், மாடியிலிருந்து பந்தை கீழே அடித்தால் அவுட். லெக்ஸைட் இடம் கிடையாது அதனால் ஆஃப்ஸைட் மட்டுமே ஆடவேண்டும், ஒன் பிட்ச் கேட்ச் அவுட்,  கிடைப்பது எல்லாம் பேட், ஒரு கிரவுண்டுக்குள் பதினைந்து டீம் கிரிக்கெட் ஆடுவது, இது எல்லாம் அனைத்து சிறுவர்களும் செய்வது, அது அவர்களது கிரிக்கெட்டை எவ்வாறு மாற்றும் என்பது கொஞ்சம் நுணுக்கமானது. தூக்கி அடித்தால் அவுட் எனும் போது தரையோடு ஆடி பழக்கம் வரும், ஆப்ஸைட் மட்டுமே ரன் என்றால் அந்தப்பக்கம் திறமை வளரும். ஆனால் அதை எப்படி தொழிற்முறை கிரிக்கெட்டில் பயன்படுத்துகின்றார்கள் என்பதுதான் அவரவர்க்கான திறமை. ஸ்ட்ரீட் கிரிக்கெட் எப்படி தொழிற்முறை கிரிக்கெட்டை செம்மைபடுத்தியது என்பது இப்புத்தகத்தின் ஒரு திரி. 

இதுநாள் வரை எனக்கு தெரியாத இன்னொரு உலகத்தையும் காட்டியுள்ளது. எனக்கு தெரிந்த கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட், ஐபில், டிஎன்பில் போன்ற போட்டிகள், ரஞ்சி, துலீப், போன்று மாநில அளவிலான கிரிக்கெட். ஆனால் இதைவிட மாநில அளவில் ஏகப்பட்ட க்ளப்கள், அதற்கான பயிற்சி முகாம்கள், க்ளப்களுக்கு இடையிலான போட்டி இது எல்லாம் புதிது எனக்கு. 

ஒரு ஒப்பனிங் பேட்ஸ்மேனாக ஆரம்பித்து பல போட்டிகளில் பேட்ஸ்மேனாகவே தேர்வு செய்யப்பட்டு ஒரு பேட்ஸ்மேனாக போக வேண்டிய அஷ்வின் பெளலரானது அவரது கர்மா என்றுதான் கூறவேண்டும். அஷ்வினின் பயணம் ஒரு வகையில் பலருக்கு ஒரு தைரியத்தையும் தரும். சிறுவயதில் உடல்நிலை பிரச்சினை, ப்ரைமரி காம்பெள்க்ஸ், ஆஸ்த்மா அட்டாக் பிரச்சினைகள் இருந்தும் பேட்ஸ்மேனாக மாறும் போது முதுகுவலி. கிரிக்கெட் ஆடமுடியாத நிலை. மீண்டு வந்தாலும் உடனே ஆடமுடியாது, உடலை மிகவும் வருத்தி கொள்ளாமல் செய்யலாம் என்று ஆரம்பித்த ஆஃப்ஸ்பின், இன்று அவரை உலகில் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக மாற்றியதை கர்மா என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு திறமையான நாவல் போல ஒவ்வொரு பாத்திரங்களையும் மிகவும் நெருக்கமாக உணர வைத்துள்ளார். அஷ்வினின் அப்பா, அம்மா, தாத்தா ஒவ்வொருவரை பற்றி அவர் பேசும் போது அவர்கள் நம்முள் எழுந்து வருகின்றார்கள்.  காவலர்கள் வணக்கம் வைக்கும் தோற்றம் கொண்ட, நண்பர்கள் வீட்டிற்கு சென்று நோட்ஸை எழுதிவரும், அப்பா, சர்வதேச போட்டிகளில் எப்படி பந்துவீசியிருக்க வேண்டும் என்று ஐடியா தரும், அம்மா, தானே சமைத்து உண்டு, பேரனை கோச்சிங்கிற்கும், வெளியூர் போட்டிகளுக்கு அழைத்து செல்லும் தாத்தா, நண்பர்கள் அனைவரையும் மிகவும் தெரிந்தவர்கள் போல ஆக்கிவிட்டார். 

மாம்பலத்து தெருக்களில் இருக்கும் சாதரணர்களையும் உயிரோடு பார்க்க முடிகின்றது. அஷ்வினின் இன்றைய நிலைக்கு காரணம் அவரது அப்பா. எந்த அப்பா ஸ்கூலை கட்அடித்து விட்டு டெஸ்ட் மேட்ச் பார்க்க பையனை அழைத்து போவார், அவர் செய்திருக்கின்றார். அஷ்வினின் அப்பாவும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக இருந்துள்ளார்.  அவரால்  முடியாததை பையனை சாதிக்க வைத்துவிட்டார். 

வழக்கமான சுயசரிதைகளில் பல பிரபலர்களைப் பற்றி அதிகம் இருக்கும். அதுவும் அஷ்வின் தனக்கு தெரிந்த பிரபலங்களை பற்றி எல்லாம் விலாவரியாக எழுதியிருக்கலாம். தோனியை பற்றி ஒரு ஐம்பது பக்கம் எழுதியிருந்தால் போது புத்தகம் இன்னமும் பரபரப்பாகியிருக்கும். ஆனால அது எல்லாம் இல்லை, பிரபலங்களைப் பற்றி எவ்வளவு தேவையோ அவ்வளவே இருக்கின்றது. சச்சின், தோனி, ஷேவாக், யுவராஜ், கங்கூலி, ட்ராவிட், கார்த்திக் என பலரைப் பற்றி பல சுவாரஸ்ய குறிப்புகளாகவே வருகின்றன.

கிரிக்கெட் தொழில்நுட்ப விவரங்களும் இருக்கின்றன, அவரது ஸ்பெஷல் சொடுக்கு பாலின் வரலாறு, சில பல பிரபல போட்டிகள் பற்றிய குறிப்புகள், சில பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகள்.

வெகு சுலப நடை, பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் தாரளமாக படிக்கலாம். ஒரு புன்னகையோடு படிக்க முடிகின்ற புத்தகம். ஒரு ஃபீல் குட் படம் என்பார்களே அது மாதிரி . அஷ்வினுடன் சித்தார்த் மோங்கா பெயரும் ஆசிரியர் பெயரில் வருகின்றது, எடிட்டர் போல. சித்தார்த் மோங்கா என்பவரை பற்றி தேடினால் திரைக்கதை ஆசிரியர் என்று வருகின்றது. சுவாரஸ்யத்தை கூட்டுவதில் அவர் பங்கு இருந்திருக்கலாம்.

என்னை பொறுத்தவரை இது ஒரு பகுதிதான், இன்னமும் அவரது தொழிற்முறை கிரிக்கெட் பற்றி எழுதவேண்டும், ஓய்வு பெற்றபின் எழுதலாம். பிரச்சினை இல்லாமல் இருக்கும். 


மிளகு - இரா. முருகன்

மிளகு என்றால் நமக்கு பொங்கலில் இருந்து பொறுப்பாக பொறுக்கி தூரப்போடும் ஒரு வஸ்து, இல்லை என்றால் ஜல்தோஷம் பிடித்தால் கஷாயம் வைக்க பயன்படும் ஒரு பொருள். பாரம்பர்யத்தை காப்போம் என்று குதிரைவாலி சோறு உண்பவர்கள், வெளியில் பனங்கல்கண்டு பால் குடிக்கும் போது அதில் கொஞ்சமே கொஞ்சம் போடப்படும் வஸ்து. ஆனால் மிளகு ஒரு காலத்தில் நாடுகளின் வர்த்தகத்தையே ஆட்டி வைத்துள்ளது. மிளகை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ளார்கள், இன்றைய அரபு நாடுகள் பெட்ரோல் விற்று கொழிப்பது போல மிளகு விற்று கொழித்த குட்டி நாடுகள் இருந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு குட்டி நாட்டின் ராணி மிளகு ராணி.

இந்தியாவிலும் சரி, வேறு நாடுகளிலும் சரி ஒரு பெண் ஆட்சி செய்வது என்பது கொஞ்சம் அரிதான விஷயம், விதிவிலக்குகள் உண்டு. அப்படி வந்தாலும் மிக அதிக காலம் அவர்கள் ஆட்சி நீடித்தது இல்லை. பெரும்பாலான அரசிகள் கணவனை இழந்தபின் அடுத்த வாரிசு பட்டத்திற்கு வரும் வரை ஆட்சி பொறுப்பை பார்த்து கொண்ட கதைதான் அதிகம். சென்ன பைரவா தேவி, தந்தைக்கு பின் ஆட்சிக்கு வந்து சுமார் 54 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார்.

சாளுக்கிய வம்சத்த்தை சேர்ந்த இந்த அரசிக்கு அன்றைய போர்ட்ச்சுக்கல் அரசு மிளகு ராணி என்ற பட்டத்தை வழங்கியிருக்கின்றது. இறுதியில் நெருங்கிய நட்பு நாடுகளால் விழுங்கப்பட்டு ஆட்சியையும், நாட்டையும் இழந்தார்.  அவர் கட்டிய மிர்ஜான் கோட்டையும், சதுர் முக பஸதியும்தான் இன்று மிச்சம்.

கமலஹாசனுடன் நடந்த ஒரு உரையாடலில் தோன்றிய கருவை விரித்து மிளகு என்ற ஒரு நாவலாக எழுதியுள்ளார் இரா. முருகன். கமல் எப்போதாவது செய்யும் சில நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று போல. 

மிளகு ராணி லிஸ்பன் நகருக்கு மிளகை ஹொன்னாவர் போன்ற துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்து வந்த கதையை பலவிதங்களில் எழுதலாம். இரா. முருகன் இதை அவரது வழக்கமான பாணியிலேயே எழுதியிருக்கின்றார். அரசூர் வம்சம் என்ற அவரது நாவலின் பாத்திரங்களை இதில் உலவவிட்டு, காலப்பயணம் என்ற ஒன்றை சேர்த்து கொஞ்சம் வித்தியாசமான நாவலாக கொடுத்துள்ளார்.

நாவல் மிகப்பெரியது, 1100 பக்கங்களுக்கு மேலாக போகின்றது. அரசூர் வம்சத்தை சேர்ந்த ஒருவர் எப்படியோ ஒரு "போர்ட்டல்" வழியாக மிளகு ராணி காலத்திற்குள் போகின்றார், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வேறு ஒரு போர்ட்டல் வழி தற்காலத்திற்குள் வருகின்றார். நானூறு வருடங்களை இணைக்கும் கருவி அந்த பரமன்.

நாவல் ஒரு கதை சொல்லல் போல இல்லை. சம்பவங்களின் கோர்வை. ஒரு காட்சி அதை முழுவதும் நமக்கு நடத்தி காட்டிவிட்டு அடுத்த காட்சிக்கு போய்விடும். முதல்காட்சி மிளகு ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம், முன்கதை பின்கதை எல்லாம் கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டும், அடுத்த பகுதி தற்காலத்தில் ஒரு வீட்டில் நடைபெறும் திவசம்.

இப்படி துண்டுகளால் கோர்க்கப்பட்டாலும் இறுதியில் கிடைப்பது ஒரு தரமான நாவல். சரித்திரகதைகளை சாண்டில்யன், கல்கி வழியாக படிப்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அவர்களின் பாணி அதீத கற்பனை, நாடகத்தன்மை கொண்டது. சாமான்யர்களுக்கு இடமில்லை. சரித்திரத்தில் ராணிகளும், இளவரசர்களும் மட்டுமா இருந்தார்கள், சாதரணர்களுக்கும் பங்கு உண்டே. 

இந்த நாவலில் வரும் அரசும் பெரிய அரசு அல்ல, தேய்ந்து கொண்டிருக்கும் விஜய நகருக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி அரசு. மிர்ஜான் கோட்டை, கெருஸொப்பா, ஹொன்னாவர் முக்கிய இடங்கள்.  அதற்கு குட்டி அரசிற்கு ஏற்ற வகையில்தான் அந்த அரண்மனை சதிகளும், யுத்தங்களும் இருக்கும். இந்த நாவல் அதைத்தான் காட்டுகின்றது. வரலாற்றை தரையில் அமர்ந்து  பார்க்க சொல்கின்றது. இப்படியும் இருந்திருக்கலாமோ என்று. நடைமுறை சிக்கல்கள் என்று சில உண்டு. நாம் ராஜாக்கள் என்றால் இப்படி இருப்பார்கள் என்ற கற்பனையை வைத்துள்ளோம், அதையும் இந்த நாவல் கொஞ்சம் காட்டுகின்றது. ஆனால் அது கூட கொஞ்சம் கேலியாக கூறப்படுவது போலத்தான் உள்ளது. இதிலும் சதி, உளவு, ஒற்றர்கள் எல்லாம் உண்டு, பிரம்மாண்டமாக இல்லாமல், யதார்தத அளவில் உள்ளது.

இரா. முருகனின் பாத்திர படைப்புகள் சுவாரஸ்யமானவை, இந்த நாவலும் அது மாதிரி பல சுவாரஸ்ய பாத்திரங்களை கொண்டுள்ளது. வைத்தியர், போர்ச்சுக்கல் அரச பிரதிநிதி இம்மானுவேல் பெத்ரோ, பிஷராடி வைத்தியர்.  மிளகு ராணி பாத்திரம் அவரது நினைவுகள் மூலமே வயதின் முன், பின் சென்று முழுமையடைகின்றது. 

தற்கால பாத்திரங்கள் அரசூர் வம்ச வாரிசுகள். அவரது வழக்கமான மாயாஜாலங்களும் உண்டு. பேய்மிளகு, ஆலப்பாடு வயசன், காலப்பயணம், காலயந்திரம் எல்லாம். 

ஜெயமோகன் இந்நாவலை பற்றி எழுதும் போது /இன்று இரா.முருகனின் நடையில் ஆசிரியர் அடிக்கும் ‘ஜோக்கு’கள் இல்லை. அவை ஒருவகையான அப்பாவித்தனம் அல்லது கட்டற்றதனத்துடன் வெவ்வேறு கதைச்சூழல்கள் மற்றும் கதாபாத்திரங்களை சார்ந்தே உருவாகியிருக்கின்றன./ என்கின்றார். எனக்கு அப்படி தோன்றவில்லை. பல இடங்களில் அவை புகுத்தப்பட்டவை என்றே தோன்றுகின்றது.

முருகனின் அடுத்த நாவலில் இந்த வாடை என்ற வார்த்தை வராமல் எழுத வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கு போடலாம். புத்தகம் முழுக்க இந்த வார்த்தை வந்து படிக்கும் போதே மூச்சு திணற வைக்கின்றது. ஒரு சூழலை விவரிக்க அப்பகுதி எப்படி தோற்றமளிக்கின்றது, என்னென்ன சத்தம் வருகின்றது, எப்படிபட்ட வாசனைகள் அ நாற்றங்கள் சூழ்ந்துள்ளது என்று விவரிக்கலாம். ஆனால் அவருக்கு இந்த நாற்றங்களை விவரிப்பதில் அதீத ஆர்வம் வந்துவிட்டது போல. பக்கத்திற்கு பக்கம் அந்த வாடை, இந்த வாடை. நாவலின் தலைப்பை விட இந்த வார்த்தைதான் அதிகம்.  துர்நாற்றம், வாசனை, வாடை என்று வார்த்தைகளை மாற்றியாவது போட்டிருக்கலாம். பூக்களின் வாடை, மிளகு வாடை, கையிடுக்கு வாடை, நெய் வாடை, ஏலத்தின் வாடை, அதீதமாகி விட்டது. 

நாவலை யதார்த்தமாக எழுதுவது என்பது சில இடங்களில் அதீதமாகிவிட்டது. எல்லா பாத்திரமும் அபான வாயு பிரிவதைப் பற்றியும், கொல்லைக்கு போவதைப் பற்றி யோசனை செய்வதும், அதைப்பற்றி விளக்கமாக பேசுவதும், வாயு பிரிவதையும் விளக்கும் அளவிற்கு யதார்த்தம் தேவையா. அவசரத்தைப் பற்றி நினைக்கும் பாத்திரம் கூட "சுக்கைதின்று உடனே வாயு பிரிகின்றதா" என்று பார்க்கும் அவசரம் இல்லை என்கின்றது. யுத்த ஆலோசனை செய்யும் ஒரு அரசர் நடு கூடாரத்தில் சத்தமாக குண்டு போடுகின்றார், இன்னொருவர் இருப்பா என்று பாதியில் கொல்லைக்கு போகின்றார். ஒன்றிரண்டு இடங்களில் இருந்தால் சுவாரஸ்யம்,  ஏராளமான வாயு. படிக்கும் போது என்னடா எவனும் குண்டு போடலையா என்று யோசிக்கும் அளவிற்கு போய்விட்டது.

ஆனால் இது அவரது வழக்கமான பாணி என்று விடவேண்டியதுதான். இது எல்லாம் இருந்தாலும் இது தவறவிடக்கூடாத நாவல்.

ஜீரோ டிகிரி வெளியிட்டுள்ளது. சுமாரன பதிப்பு. இரண்டு முறை படித்ததற்கே அட்டை எல்லாம் கசங்கி தொங்கிவிட்டது. 1400 விலையுள்ள புத்தகம், கெட்டி அட்டை இல்லாவிட்டா மிக விரைவில் சேதமாகிவிடும்.



தில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு

 தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாகத்தான் அறிமுகம். பலமுறை பார்த்த படம். சிற்சில இடங்கலை ஓட்டிவிட்டால் சலிக்காமல் பார்க்க முடியும். காரணம் எனக்கு பாலையா, நாகேஷ் & மகாதேவன். ஒரு நாவலை அல்லது தொடரை எப்படி கதையை மாற்றாமல், ஜீவனை கெடுக்காமல் எப்படி படமாக்க வேண்டும் என்பதை ஏ.பி. நாகராஜன் காட்டியுள்ளார். 

இந்த புத்தகம் பல ஆண்டுகள் அச்சில் கிடையாது. உறவினர் வீட்டில் ஒரிஜினல் பதிப்பு இருந்தது. பல வருடம் முன்பு வாங்கி படிக்கும் போது பிடித்திருந்தது. மீண்டும் படிக்க முடியவில்லை. கொடுத்த புத்தகத்தை திருப்பி கேட்கும் கெட்ட பழக்கம் எப்போது போகுமோ தெரியவில்லை. 

சமீபத்தில் விகடன் பதிப்பித்திருந்தது. விகடன் மாதிரியே அதே அளவு, அதே மாதிரி பேப்பர் எல்லாம். 

ஆர்வி அவர் தளத்தில் எழுதிய பதிவில் கூறியிருப்பதை முழுவதும் ஏற்று கொள்கின்றேன். வளவளதான் இருந்தாலும் ஜெயமோகன் கூறியிருப்பது போல இது சமூக ரொமான்ஸ் வகையில் சிறந்த நாவல் அ தொடர்கதைதான். 

நாவல் முழுவதும் ஒரே விஷயம்தான் தன் பிறப்பு அடையாளத்திலிருந்து வெளியே வரப் போராடும் ஒரு பெண், சந்தேகப்படும் ஆண். காலங்காலமான கதை. ஆனால் படிக்க வைப்பது அந்த தஞ்சாவூர் பின்புலம்தான். தாசிகுலம், அவர்கள் சந்தித்த அவமானங்கள், இசைகலைஞர்களுக்கு அன்று இருந்த மதிப்பு, மரியாதை, அன்றைய மிராசுகள், மைனர்கள், மகராஜாக்களின் போக்கு என்று அந்த காலகட்டத்தை பார்க்கத்தான் படிக்க வேண்டும். சினிமாத்தனமான காட்சிகள் பல உண்டு. 

இரண்டாவது பாத்திரங்களின் அமைப்பு, அனைத்து பாத்திரங்களையும் உயிருள்ள பாத்திரங்களாக உலவ விட்டுள்ளார். கதையின் நாயகன், நாயகி தவிர அனைத்து பாத்திரங்களையும் முழுமையாக படைத்திருக்கின்றார். நாவல் இரண்டுபாகங்களுடன் முடிந்திருக்க வேண்டும் சினிமா போல, கடைசி பகுதி எல்லாம் வளவள. கண்ணகி நாடகம், சிந்து, பண்டைய இலக்கியம் என்று எங்கெங்கோ போய் கொஞ்சம் கொட்டாவி வரவைக்கின்றது.

நாவலை படிக்கும் போது சிவாஜி, பத்மினி எல்லாம் நினைவிற்கு வருவதில்லை. சுப்பு காட்டும் சண்முகமும், மோகனாவும் வேறு. ஆனால் இரண்டு பாத்திரங்கள் மட்டும் படத்தில் உள்ளவர்கள்தான் கண்முன் வருகின்றார்கள். வைத்தி, வடிவு. ஜில்ஜில் ரமாமணி கூட படத்தில் கொஞ்சம் வேறு மாதிரியாக வரும். ஆனால் இந்த இரண்டையும் இவர்களை நினைவில் வைத்து அவர் எழுதினாரோ என்று தோன்றும் அளவிற்கு பின்னி எடுத்துள்ளனர்.  

புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகம்தான். பழைய பதிப்பு வெறும் 250. அது கிடைத்தால் தவறாது படியுங்கள். 

மீண்டும்

 கடந்த ஒரு வருடங்களாக இதில் எதுவும் எழுதவில்லை என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. ஆடி கதையை சுட்டு சமீபத்தில் எழுதியது போலவே உள்ளது. அனைவருக்கும் வரும் அதே வியாதிதான். நேரத்தை சீரிஸ்கள் பறித்து கொண்டதன் விளைவு, அதோடு பெரும்பாலும் புதிய புத்தகங்கள் வாங்கியதும் குறைந்து விட்டது.  வாங்கிய புத்தகங்களும் பெரிய சைஸ். அதோடு கிண்டில் அன்லிமிட்டட் ஒரு மூன்று மாதம் கண்டதையும் படிக்க வைத்து விட்டது. 

அதோடு இதில் எழுதுவதை யார் படிக்கின்றார்கள் என்ற எண்ணம் தோன்றினாலும், இதில் எழுதுவது பெரும்பாலும் எனக்காக என்றாகிவிட்டது. ஒரு புத்தகத்தை மீண்டும் படிக்கும் போது, இங்கு வந்து ஒரு முறை பார்ப்பது வழக்கம். மூளை வளர்ந்திருக்கின்றதா என்று சோதனை செய்யும் முயற்சி பெரும்பாலும் தோல்விதான். பல புத்தகங்களைப் பற்றிய எண்ணம் மாறவில்லை. சில புத்தகங்களை பார்க்கும் கோணம் மாறியிருக்கின்றது. அதனால் மீண்டும் ............. 

ஆடி - மகாபாரத கதை

நண்பர்  சிலிக்கான் ஷெல்ஃப் ஆர்.வி எழுதிய மகாபாரத கதையை சொல்வனத்தில் படித்தேன். அந்த கருவும், வடிவமும் எனக்கு பிடித்திருந்தது. அதை கொஞ்சம் மாற்றி எழுதிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அவரும் இதற்கு எல்லாம் கேட்க வேண்டுமா என்றார். அவருக்கு நன்றி. இனி கதை...

பதினான்காம் நாள் போர் முடிந்த மாலை


துரியோதனனின் வார்த்தைகளால் கோபமுற்ற துரோணர் சிறிய ஓய்விற்கு பின் இரவிலும் போரை தொடர ஆணையிட்டு விட்டு கூடாரத்திற்கு வந்தார், கூடவே அஸ்வத்தாமனும் 


திருஷ்டத்யும்னன் துருபதரின் கூடாரத்துக்குள் நுழைந்தபோது துருபதர் கவசங்களை கழட்டாமல் இருப்பதை கண்டவுடன் ஒரு கணம் ஆச்சர்யம் வந்து சென்றது.


"துரோணனின் வீழ்ச்சி" என்றார் துருபதன்.


"உங்களை வீழ்த்த யாராலும் முடியாது" என்றான் அஸ்வத்தாமன்.


துருபதரின் கண்கள் கூடாரத்தின் மேல் கூரையில் நிலைத்திருந்தன, கவசங்களை பார்த்தது   "நாளை இது தேவைப்படாது" என்றார் துருபதர்.


துரோணர் கையிலிருந்த அம்பின் கூரை கையால் தடவிக் கொண்டிருந்தார், கண்கள் தூரத்தில் இரவுப் போருக்கு ஏற்றி வைத்த பந்தங்க்களில் எதையோ தேடி கொண்டிருந்தன. "நாளை இது தேவைப்படாது" என்று அழுத்தமான குரலில் சொன்னார் துரோணர்.


"நாளை அவன் என்னை தவிர்க்க முடியாது, பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாக சபதம் செய்துள்ளான்" என்றார் துருபதன்.


"அவன் ஆத்மாவை பல ஆண்டுகளுக்கு முன்பே கொன்றுவிட்டேன் அஸ்வத்தாமா! கணக்கை முடிக்கத்தான் அவன் உடல் காத்திருந்தது" என்றார் துரோணர். 


"துரோணன் கனன்று கொண்டிருக்கிறான். சினமும், வஞ்சமும், நன்றிக்கடனும், தோல்வியும், புத்திரபாசமும், ஆசிரிய கர்வமும்  அவனை எரித்துக் கொண்டிருக்கின்றன."  என்றார் துருபதன் 


"அஸ்வத்தாமா! அவன் தினமும் முன் வருகின்றான், ஒவ்வொரு முறையும் சிம்மத்தை எதிர்த்து வரும் முயலைப்  போல வருகின்றான். கொல் கொல் என்று அறைகூவுகின்றான் "


"மகா ஆசாரியன், மூன்று தலைமுறையாக க்ஷத்ரியர்களுக்கு பயிற்சி அளிப்பவன், போர் நெறிகளை போதிப்பவன், இரவில் போர் புரிகிறான்! தனியனாக நின்ற அபிமன்யுவை எந்தத் தயக்கமும் இல்லாமல் கொன்றது அவன்தான்"


"அவனை கொல்ல முடியாமல் மற்றவர்களை கொன்று குவிக்கின்றேன், தனியனாக நின்ற அபிமன்யுவை எந்தத் தயக்கமும் இல்லாமல் வீழ்த்தினேன், இரவில் போர் தொடங்க ஆணையிட்டேன்."


"அவன் மேலும் மேலும் வீழ்வதை நான் பார்க்க விரும்பவில்லை திருஷ்டத்யும்னா!, என்னோடு அவன் வேகமும் அடங்கும்"


"நாளை அவனுடன் நான் போர் புரிவதற்கும், நிராயுதபாணியான ஒருவனை கொல்வதும் ஒன்றுதான்.  இது இழிசெயல் என்று அறிந்திருந்தாலும், நாளை அவனை கொல்வேன் என்று ஆணையிட்டுள்ளேன்"


"அக்னிவேசரின் மாணவன் என்றாலும், இறந்தவன் என்ன போர் புரிவான்"


"அவனும் என் ஆசிரியரின் மாணவன், இருந்தும் ஏற்கனவே இறந்தவன் கொன்றவனுடன் என்ன போர் புரிவான்."


"ஆச்சாரியர் உங்களைக் கொல்வது என்று தீர்மானித்துவிட்டால் அர்ஜுனனால் கூட உங்களைக் காக்க இயலாது"


"போர் என்று வந்துவிட்டால் வலியவன் வெல்வதுதான் இயற்கை. வருந்துவதில் பொருளில்லை அப்பா!, அவரின் தலையை அறுத்து எறிவதுதான் செய்யக்கூடியது"


“எல்லாம் ஏற்கனவே பிரம்மனால் எழுதப்பட்டுவிட்டது மைந்தா! “ 


திருஷ்டத்துய்மனின் இடது கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.


அஸ்வத்தாமன் முகத்தில் சலிப்பு தெரிந்தது.


"துரோணரின் இறப்பு என் கையில்தான் என்ற நிமித்திகர் கூற்று துரோணருக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் அவர் என்னை பயிற்றுவிக்க ஏன் ஒப்புக்கொண்டார்? எனக்கு முழு விழைவோடு கற்பித்தார். அர்ஜுனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் இணையாக வைத்திருந்தார்"


"என் நண்பன் துருபதன் மகனுக்கு முழு வீச்சோடு பயிற்சி அளிக்காமல் வேறு யாருக்கு அளிப்பது? அவன் இன்னும் கொஞ்சம் முனைப்போடு பயின்றிருந்தால் அவனையும் உன் தரத்துக்கு, அர்ஜுனன், கர்ணன் தரத்துக்கு கொண்டு வந்திருப்பேன்! அஸ்வத்தாமா"


"அவர் உங்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் உலகறிந்தது. உங்களைக் கொல்லும் ஊழ் கொண்ட ஒரு மகன் வேண்டும் என்று யாகம் செய்து திருஷ்டத்யும்னனை மகனாகப் பெற்றார். அவனும் உங்களை கொல்ல காத்துக் கொண்டிருக்கின்றான்"


"அன்றும் சரி, இன்றும் சரி, துரோணன் என்னை உயிர்த்தோழனாகத்தான் கருதுகிறான். அதனால் என்னுடன் போர் புரிவதைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான்.  உன்னுடனும் போர் புரிவதைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான். நீ கூடவா இதைப் புரிந்து கொள்ளவில்லை?"


"நட்பும் தோழமையும் தேர்க்காலில் கட்டி இழுக்குமோ"


"அவன் பாதி நாட்டைக் கேட்டது நியாயம்தான், திருஷ்டத்யும்னா! நான் அவனை அப்படி கோபப்படுத்தி இருக்கக் கூடாது"


"அவன் பசுவைத் தர மறுத்தது நியாயம்தான், அஸ்வத்தாமா! நான் அவனை அப்படி சினமூட்டி இருக்கக் கூடாது"


" பிராமணனின் பொறுமையும் ஞானமும் அவருக்கு இல்லை.நீங்கள் அவரை நண்பராக கருதலாம். என்னுடைய ஆச்சாரியார் ஆனாலும் அவர் உங்களுடைய எதிரி மட்டுமே!" என்று திருஷ்டத்யும்னன் கூவினான். கண்ணில் வலி தெரிந்தது.


"ஷத்ரியர்களுக்கான பெருந்தன்மையும், அற உணர்வும் இல்லாத அற்பத்தனமே உருவான மனிதன்!" என்று அஸ்வத்தாமன் கூவினான். அவன் முகம் இறுகி இருந்தது. பற்கள் அறைபட்டன.


துருபதர் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தார், அவர் கை ஓங்கியது. பிறகு மெதுவாகத் தாழ்ந்தது.


இயலபாக பின் நகர்ந்த அஸ்வத்தாமன் கண்களில் சிறிய மாற்றம் வந்தது.


"உன் தந்தை மீது கொஞ்சம் கருணை காட்டு மைந்தா! அவனை இழிவாகப் பேசாதே!" 


திருஷ்டத்யும்னன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். துருபதர் அவன் தலை முடியைத் தன் கையால் மீண்டும் அளைந்தார்.


தோள்களை பிடித்த கைகளை இறுக பற்றிக் கொண்டான் அஸ்வத்தாமன்


"அவன் ஒரு பிடி மண்ணுக்கும் ஆசைப்பட்டவனில்லை. வில்லைக் கரை காண வேண்டும் என்ற ஒரே ஒரு விழைவு மட்டும்தான் அவனுக்கு இருந்தது."


"சொன்ன சொல் தவறாதவன் அவன். நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு விழைவு மட்டும்தான் அவனுக்கு இருந்தது."


"இன்று வஞ்சமும் சினமும் கொண்ட கொடுந்தெய்வமாக எழுந்திருக்கிறான், அவனை இந்த நிலைக்குத் தாழ்த்தியவன் நானே" 


"என் தவறு!" என்று திடீரென்று கூவியபடி தன் நெஞ்சில் அறைந்து கொண்டார் துருபதன்.


துரோணரின் கையை இறுகப்பற்றி தடுத்தான் அஸ்வத்தாமன் 


"சபையை விட்டுவிட்டு வெளியேறியபின் மீண்டும் வருவான், என்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்வான் என்று வெகு நாள் காத்திருந்தேன்." என்றார் துருபதர்.


"அவனும் அதே எதிர்பார்ப்புடன் எனக்காகக் காத்திருப்பான் என்று எனக்குத் தோன்றவே இல்லை" என்றார் துரோணர்.


திருஷ்டத்யும்னன் முகத்தில்  மெல்லிய பரிதாப உணர்ச்சி தோன்றியது அது மெல்லிய இளிவரலாக வெளிப்பட்டது.


அஸ்வத்தாமன் முகத்தில் கோபம் எரிந்தது.


"நீயும் புரிந்து கொள்ளவில்லையா?" என்று மன்றாடும் குரலில் கேட்டார்


"ஒரு நண்பனை காணவே பாஞ்சாலம் சென்றேன், ஆனால் அரண்மனையில் கால் வைத்ததும்  என்னுள் இருந்த துருபதனின் நண்பன் மறைந்து நான் மறைத்து வைத்த பிராமணன் வெளிப்பட்டு விட்டான்"


"நண்பனை காண விரைந்து வந்த நான் பார்த்தது என்னுடன்  சாலையில் படித்த நண்பனல்ல, யாசகம் கேட்டு வந்த ஒரு பிராமணன். அதைக் கண்டதும் என்னுள் இருந்த ஷத்திரியன் வெளிப்பட்டு விட்டான்"


"நண்பனை காண சென்றவனுக்கு யாசகம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வர வேண்டும்"


"யாசகம் கேட்கும் அளவிற்கு ஒரு நண்பனை விட்டு விட்டோமே என்று ஏன்   எனக்கு அப்போது தோன்றவில்லை"


"கிருஷ்ணனைக் காண சுதாமா அவலை எடுத்துக் கொண்டு சென்றார், அரசனுக்கு அவலைக் கொண்டு செல்கின்றோமே என்று அவருக்கு ஒரு கணமும் தோன்றவில்லை"


"சுதாமாவை கண்ட கண்ணனுக்கு தான் அரசன் என்று ஒரு கணமும் தோன்றவில்லை, தாவி ஓடி அவன் கையிலுருந்த அவலை பறித்து தின்றானே அது போல் ஏன் என்னால் முடியவில்லை"


"துவாரகையின் அதிபதி என்று சுதாமா பார்க்கவில்லை, காவியங்களின் தலைவன் என்று பார்க்கவில்லை, தன் நண்பன் என்றுதானே பார்த்தான்,அந்த சுதாமவிற்கு தோன்றியது எனக்கு தோன்றவில்லை?"


"சுதாமாவை யாசகம் கேட்க வந்த பிராமணன் என்றா பார்த்தான் கிருஷ்ணன், நண்பன் என்று தன் அரியணையில் அமர வைக்கவில்லையா, அது ஏன் எனக்கு தோன்றவில்லை, கண்ணன் என்னுடையது எல்லாம் உன்னுடையது என்றானே தவிர என்னைப் போல்  கணக்கு பார்க்கவில்லையே"


"சுதாமன் கண்ணனிடம் எதையும் கேட்க வில்லையே"


"வந்தவனை என் அரியணையில் அல்லவா அமர வைத்திருக்க வேண்டும், அவனை ராஜகுருவாக இல்லை, பாஞ்சாலத்தின் மஹா ஆசார்யனாக இல்லை இணை அரசனாக நியமித்திருக்க வேண்டும். பசு என்னடா பசு, பாதி ராஜ்யமே உன்னுடையதுதான் என்று சொல்லி இருக்க வேண்டும். சுதாமாவை கண்ட கண்ணனாக நடந்து கொண்டிருக்க வேண்டும் "


"உயிரும் நண்பனுடையதே என்று நினைத்திருந்தவனிடம் போயும் போயும் ஒரு பசுவைக் கேட்டால், அதுவும் சபை நடுவே தானமாகக் அவன் எப்படி உணர்ந்திருப்பான்? சுதாமாவாக  அல்லவா நான்  சென்றிருக்க வேண்டு"


"ஒரு நிமிஷ கோபத்தால் மறுத்தேன். அதில் எழுந்த கோபத்தால் அவன் பாதி நாட்டைக் கேட்டான். வீம்பு அதிகரித்து அவனை அவமானப்படுத்தினேன். "


"வஞ்சம் கொண்டு அவனைத் தேர்க்காலில் கட்டி இழுத்தேன்"


"அவனைக்  கொல்ல யாகம் செய்து உன்னைப் பெற்றேன்"


"கொல்லத்தான் வெல்ல அல்ல" என்றார் துரோணர்.


"கொல்லத்தான் வெல்ல அல்ல" என்றார் துருபதர்.


"இப்போது அவை அனைத்திற்கும் எவ்வித அர்த்தமும் இல்லை"


:"இருவரும் அதை எல்லாம் தாண்டி வந்துவிட்டோம்"


"இன்று வஞ்சமும் இல்லை, கோபமும் இல்லை, குற்ற உணர்வுதான்


"ஒரு காலத்திற்கு பின் மனைவியும் நம்மை விட்டு மனத்தால் விலகுவாள்"


"அடேய் என்று யாராவது அழைக்க மாட்டார்களா என்று மனம் ஏங்கும்"


"அனைவராலும் மரியாதையாக பார்ப்பது சலித்து, யாராவது அடேய் முட்டாள் எதற்கு இப்படி கேவலமான ஆடை அணிந்து வந்துள்ளாய் என்று கேட்கமாட்டார்களா என்று தோன்றும்"


"நமது செயல்களை கேலி செய்ய, விளையாட்டாய் முதுகில் அடிக்க, கை கோர்த்து நடக்க ஆள் தேவைப்படும்"


"தலை நரைத்தாலும், மனதை இளமையாக்க நட்பால்தான் முடியும்"


"அப்படி ஒரு நண்பனாக அவன் இருந்திருப்பான்"


"நண்பனாக இருந்தும் குற்ற உணர்வு விடுவதில்லை"


"செல்வத்தில் நான் அவனளவு இல்லை என்பது என்னை ஒரு படி தள்ள செய்கின்றது"


"அவனது ஞானம் என்னை அவன் முன் நிற்க விடுவதில்லை"


"ஆஸ்ரமத்தில் நாங்கள் வெறும் மாணவர்கள்"


"இன்று எங்களிடம் வாழ்வின் கறை படிந்து விட்டது"


"இருந்தும், அவனை நினைக்காத நாள் இல்லை, அதே போல் அவனும் என்னை நினைக்காமல் இருக்க மாட்டான் என்று தெரியும்"


"அவனின் அம்பு பட்டு என் உயிர் பிரிவதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும், அவனுக்கும் விடுதலையாக இருக்கு" என்ற கூறியபடி வெளியே செல்லுமாறு கை காட்டினார் துருபதன்


"அவனை கொல்வதுதான் அவனுக்கு நான் தரும் விடுதலையாக இருக்கும்,  அவன் மகனின் கையில் இறப்பதுதான் அவனுக்கு நான் செய்யும் பரிகாரமாக இருக்கும்" என்றபடி வெளியே சென்றார் துரோணர்


திருஷ்டத்தூய்மனின் கண்களில் வழிந்த நீரைத்தாண்டி வஞ்சமும், கோபமும் நிறைந்து நின்றது.


அஸ்வத்தாமன் கோபமும், வஞ்சமும் நிறைந்த கண்களில் கண்ணிர் ததும்பி நின்றது.




விளக்கும் வெளிச்சமும் - விமலாதித்த மாமல்லன்

விமலாதித்த மாமல்லன் சமீபத்தில் நேரடியாக கிண்டிலில் வெளியிட்ட சில சிறுகதைகள், குறுநாவல்களின் தொகுப்பு. கிண்டிலை தனது தளமாக வைத்துக் கொண்டுள்ளார். பலர் கிண்டிலில் புத்தகம் வெளியிடுவதற்கு பெரும் உதவி செய்துள்ளார். கிண்டிலில் எப்படி புத்தகத்தை வெளியிடுவது என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதி கிண்டிலில் வெளியிட்டு உள்ளார். அவரது அச்சுப் புத்தகங்களை நேரடியாக அவரது சத்ரபதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகின்றார். இதற்கு முன் அவர் வெளியிட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள் என்னும் சிறுகதை தொகுப்பை வாங்கியிருந்தேன். முழுவதும் படித்து முடிக்கும் முன், வீட்டில் தண்ணீர் புகுந்து பல புத்தகங்கள் நாசமாகி, பல புத்தகங்களை ஊரில் கொண்டு வைத்து அதன் பின் கொரானாவில் வீட்டை காலி செய்த கலவரத்தில் இந்த புத்தகம் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது. போன மாதம்தான் மீண்டும் கையில் கிடைத்தது. படிக்க வேண்டிய லிஸ்ட்டில் இருக்கின்றது. 

மாமல்லன் எழுதிய புனைவு என்னும் புதிர் புத்தகத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். அந்த பதிவிற்கு பின்னால் ஒரு குட்டி கதை உள்ளது அது கடைசியில். ப்ளாக் ஆரம்பித்த காலத்தில் ஒழுங்காக இருந்த பதிவுகள், என்னையறியாமல் மாற தொடங்கின. எழுத்துப் பிழைகள்,  இலக்கணப் பிழைகள் எல்லாம் அதிகமானது. காரணம் ஒரு பதிவை பல நாட்கள் எழுதுவது, அதனால் கோர்வையில்லாமல் போவது, சொன்னதையே திரும்ப வேறு வரிகளில் சொல்வது போன்றவை அதிமாக வர தொடங்கின. பெரும்பாலும் சரி செய்தாலும் தொடர்ந்தன. தற்போது வெகுவாக அது குறைந்துள்ளது என்று தோன்றுகின்றது. அதற்கு ஒரு முக்கிய காரணம் மாமல்லன். அவரது பதிவுகளில் பிழை இருந்து பார்த்த நினைவில்லை. கச்சிதமான மொழியில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு.

தொகுப்பில் இருக்கும் இரண்டு  கதைகளின் தலைப்பை இணைத்து தொகுப்பின் தலைப்பாக வைத்துள்ளார். ஒரு மனிதனின் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதைகள். அவரது சமீபத்திய கதைகள் அனைத்தும் முழுவதும் கற்பனை என்பது போல தெரியவில்லை. நிஜவாழ்வில் நடக்கும் ஏதோ ஒரு சிறிய புள்ளியை விரித்து எழுதியிருப்பது போலவே எனக்கு தோன்றுகின்றது. காரணம் அவரது ஃபேஸ்புக் பதிவுகள், அவரது டைரி குறிப்பு போல அது இருப்பதால் அப்படி தோன்றுகின்றது போல. அவரது முந்தைய கதைகளில் பல கதைகள் நேரடியானவை அல்ல. இந்த கதைகள் நேரடியான மொழியில் எழுதப்பட்டவை. மாமல்லன் கதைகள் கச்சிதமானவை. தேவையில்லாத வார்த்தை, வரி என்று எதையும் எடுக்க முடியாது. அசோக மித்திரனும் இதே போன்று எழுதினாலும் அவரது கதைகளில் கொஞ்சம் பூடகத்தன்மை ஒளிந்திருக்கும். இந்த கதைகளில் அது எல்லாம் இல்லை. ஆனாலும் கவனமாக படிக்க வேண்டியவை. சாப்பிடும் போது படிப்பது, பஸ்ஸில் படிப்பது என்று கவனச்சிதறலுடன் படித்தால் கண்டிப்பாக எழுத்தின்  அனுபவத்தை இழக்க வேண்டியிருக்கும். 

சிறுகதையோ, நாவலோ படிக்கும் போது அந்த இடத்தில் நாமும் இருப்பது போல இருக்க வேண்டும் இல்லை அதை ஒரு இடத்திலிருந்து முழுவதும் பார்ப்பது போல இருக்க வேண்டும். சிலர் வளவள என்று ஓவராக வர்ணித்து ஒரு வண்ணக்குழம்பாலான ஒரு குழப்பமான ஓவியத்தை பார்க்கும் உணர்வை தந்துவிடுவார்கள் குத்து மதிப்பாக புரிந்து கொண்டு போக வேண்டியதுதான். சிலருக்கு புகைப்படம் போல உள்ளது உள்ளபடி காட்டுவது இயல்பாக வரும் தி.ஜானகிராமன் மாதிரி. சிலர் வெறும் பென்சிலை வைத்து கொண்டு நம் கண் முன் உலகத்தை உண்டாக்கிவிடுவார்கள். இவர் கடைசி வகை. சின்ன சின்ன குறிப்புகளால் அந்த உலகில் கொண்டு சேர்த்துவிடுகின்றார். சிறுகதைகள் என்பது கடைசி வரி திருப்பம் என்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி சில உண்டு என்பதை காட்டுவது சில எழுத்தாளர்கள் மட்டும்தான். அதில் இவரும் ஒருவர்.  இத்தொகுப்பில் இருக்கும் கதைகளில் வரும் முக்கிய பாத்திரம் ஒரே நபர் தான் என்று கொண்டால் இது ஒரு நாவலின் சிறு சிறு பகுதிகள் என்றும் கொள்ளலாம். கதைகளில் வரும் ஒரு அப்பா பாத்திரம் அனைத்து கதைகளையும் இணைக்கின்றது. இப்படியும் சிலர் இருக்க முடியும் என்பது எல்லாம் பலருக்கு இது போன்ற கதைகளை படிக்கும் போதுதான் தெரியும். ஒருவர் வாழ்வின் பலவித காலகட்டத்தின் சின்ன சின்ன ஸ்னாப் ஷாட்களாக காட்டுகின்றது. குழந்தைகளின் உலகை, அவர்களது மொழியை எழுத்தில் கொண்டுவருவது கொஞ்சம் கடினமாக இருக்கும். இவரது முந்தையகதைகளிலும் சரி இதிலும் சரி, குழந்தைகள் உலகம் அச்சாக விழுந்துள்ளது. 

அமன், மறைவு இரண்டும் குழந்தைகள் வளர்ப்பு அல்லது அவர்களின் சூழல் எப்படி மாறியுள்ளது என்பதை காட்டும் கதைகள். அந்தகாலத்துல நாங்க எல்லாம் என்ற மாதிரி அல்ல நுணுக்கமாக கூறும் கதைகள். காவி போலிச்சாமியர் கதைகள் பல படித்திருக்கலாம், அதிலிருந்து வேறு பட்ட ஒரு கதை. பயம், இன்றைய இணைய காலகட்டத்தில் பலரின் எளிய மனதில் ஒரு குறிப்பிட்ட சிந்தனைகளை வெகு எளிதாக விதைத்து விடலாம். நிஜம் அப்படியே இருக்க வேண்டியதில்லையே. இந்த ஒரு கதை மட்டும் அரசாங்க அலுவலகத்தில் நடக்கும் சில விஷயங்களை லேசாக தொட்டு விட்டு போகின்றது. கடைசி இரண்டு நெடுங்கதைகள் ஒருவர் வாழ்வின் சில பகுதிகள். பல தளங்களை தொட்டு செல்கின்றன. மேலே நாமே விரித்துக் கொள்ள வேண்டியதுதான். ஒன்றிரண்டு வரிகளில் பெரிய சம்பவங்களை ஏதோ சர்வ சாதரணமாக சொல்லி செல்கின்றார். உணர்வு பூர்வமான, கனமான விஷயங்களை உணர்ச்சி பொங்க பல பக்கங்களில் சொல்லலாம், உணர்ச்சியற்ற சாதரண வரிகளிலும் அந்த கனத்தை கடத்தலாம் என்பதை கற்றுத்தருகின்றது. அசோகமித்திரனின் மானசரோவரில் தாய் மகனை கொன்றதை ஒரே வரியில் சொல்லி செல்வது போல. இந்த தொகுப்பில் பிடித்தது காவி, விளக்கு. புனைவுகளில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 

மாமல்லனின் ஃபேஸ்புக் லிங்க். அவரது சொந்தக்கடை. அவர் வெளியிட்ட அனைத்து புத்தகங்களையும் வாங்க முடியும், எப்படி வாங்கலாம் என்பது அங்குள்ளது. 

புத்தகம் பற்றிய குறிப்பு இதோடு முடிந்தது, பின்னால் வருவது முதல் பாராவில் சொன்ன வம்பு.

மாமல்லனின் ஃபேஸ்புக் பதிவுகளை அனைத்தையும் படிப்பதுண்டு, ஆனால் பின்தொடர்வது, நட்பு அழைப்பு எல்லாம் இல்லை, லைக் போடுவதும் இல்லை. கலந்து கட்டி டைம்லைனில் வருவதை பெரும்பாலும் படிப்பதில்லை. இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை  வழக்கமாக படிப்பவர்கள் பக்கத்திற்கு சென்று பதிவுகளை தொடர்ச்சியாக படிப்பதுதான் வழக்கம். ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதும் போது அந்த புத்தகத்தை எழுதியவர்கள் ஃபேஸ்புக்கில் இருந்தால் சில சமயம் அதை அனுப்புவது வழக்கம். சில சமயம் இணைப்பு அல்லது எழுதிய குறிப்பை மட்டும் அனுப்புவேன். ஜெயமோகனுக்கும் மட்டும் மெயிலில் அனுப்புவதுண்டு. சில சமயம் அதையும் மறந்து போவதும் உண்டு. புனைவு என்னும் புதிர் புத்தகத்தைப் பற்றி எழுதிவிட்டு அந்த குறிப்பை மட்டும் மாமல்லன் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். தளத்தில் எழுதும்போது சில சமயம் இது போன்று எனக்கு தோன்றுவதை எல்லாம் சேர்த்து எழுதுவேன். இந்த பதிவிலேயே புத்தகம் பற்றி மூன்று பாராதான் மீதம் எல்லாம் சொந்தக்கதைதான்.  அதையெல்லாம் எதற்கு அவருக்கு அனுப்பி இம்சை செய்ய வேண்டும் என்று பதிவின் இணைப்பை  அனுப்பவில்லை. எழுதிய குறிப்பின் ஸ்க்ரீன் ஷாட்டை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அவர் புத்தகத்தை பற்றி ரகசியமாக படிக்கின்றார்கள் என்றோ படித்தை பொதுவில் சொல்ல மாட்டேன் என்கின்றார்கள் என்றோ எழுதியிருந்தார் சரியாக நினைவில்லை. 

அவருக்கு தளத்தில் வெளியான இணைப்பை அனுப்பலாமா என்று யோசித்தேன். ஃபேஸ்புக்கில் என்னுடைய நட்பில் இருப்பது எல்லாம் பெரும்பாலும் சொந்தக்காரர்கள், யாரும் படிக்கும் வழக்கம் கொண்டவர்களும் அல்ல. பலருக்கு புத்தகம் படித்தாலே தூக்கம் வரும்.  அவர்கள் கண்ணில் படவேண்டும், படித்தால் அவர்கள் கடுப்பாவர்கள் என்று நினைப்பதை மட்டுமே ஷேர் செய்வது, லைக் போடுவது வழக்கம். என் தளத்தில் எழுதும் பதிவுகளில் பெரும்பாலனவற்றை நான் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதில்லை. ஒன்றிரண்டை ஷேர் செய்து பார்த்தேன், யாரும் அதை திறந்து பார்த்த மாதிரி கூட தெரியவில்லை. பிறகு இது ஒரு வேலை என்று செய்வதா என்று விட்டு விட்டேன். அதனால் இந்த புத்தகம் பற்றிய பதிவையும் ஷேர் செய்யவில்லை. செய்திருந்தாலும் யாரும் படித்திருக்க மாட்டார்கள் என்று நன்றாக தெரியும். 

சொந்தக்காரர்கள் பலருக்கு ப்ளாக்கில் எழுதுவது கூட தெரியாது. நான் புத்தகங்களைப் பற்றி எழுதுவது படித்ததை எனக்குள் தொகுத்து கொள்வதற்கும், யாராவது அந்த புத்தகத்தை வாங்க விரும்பி தேடினால் புத்தகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் தான். ஒரு சினிமா பார்த்தால் அதைப் பற்றி பத்து பேரிடம் பேச முடியும் புத்தகத்தைப் பற்றி என்னால் ஒருவரிடம் கூட பேச முடியாது முயன்று தோல்வி அடைந்த அனுபவம் உண்டு.   யாரிடமாவது சொல்ல வேண்டியதை இங்கு எழுதி வைக்கின்றேன். இங்கு எழுதுவதை ஒரு பத்து பேர் படிக்கின்றார்கள், ஃபேஸ்புக்கில் எழுதினால் ஒருவர் கூட படிக்க மாட்டார்கள் அவ்வளவுதான். இதை எல்லாம் என்னத்தை விளக்க என்று விட்டு விட்டேன். அராத்து எழுதிய மொக்கை புத்தகத்தைப் பற்றியும், காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய சங்கதாராவிற்கே வேலை மெனக்கெட்டு எழுதியிருந்தேன், இது போன்ற புத்தகங்களைப் பற்றி எழுத என்ன? 

பேட்டை - தமிழ்ப்பிரபா

வட்டார வழக்கை எழுத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். வட்டார வழக்கில் முக்கிய இடம் வகிப்பது அதன் ராகமும், ஏற்ற இறக்கமும். "ஏய் என்னாப்பா" என்பது மதுரையில் ஒரு வகையிலும், கோம்பையில் வேறு மாதிரியும் ஒலிக்கும். அதை அந்த ஊர்க்காரர்கள் மட்டுமே உணர முடியும். இதை எழுத்தில் ஓரளவிற்கே கொண்டுவர முடியும். அதை பலர் வெற்றிகரமாக செய்துள்ளனர். சுகா, ஜெயமோகன், சோ.தர்மன், ஜோ.டி.க்ரூஸ், வைரமுத்து, வெங்கடேசன், கி.ரா போன்றவர்கள்  திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், நாகர்கோவில், நாஞ்சில் நாடு, கோவை, தஞ்சை,மதுரை, தேனி வட்டர வழக்குகளில் பல நாவல்களை எழுதியுள்ளனர். 

சென்னை வழக்கில் எந்த நாவலும் படித்ததில்லை இதுவே முதல். ஜெயகாந்தன் ஒன்றிரண்டு கதைகளில் எழுதியிருந்தாலும் அந்தளவிற்கு ஈர்க்கவில்லை. சோ சில அரசியல் நையாண்டிகளில் பயன்படுத்தியிருந்தது எனக்கு கொஞ்சம் செயற்கையாக தெரிந்தது. இந்த நாவலில் எங்கும் வட்டார வழக்கு செயற்கையாக தெரியவில்லை. சென்னையில் மூன்று வருடம் மின்சார ரயிலில் சென்று வரும்போது கேட்ட அந்த மொழியை படிக்க முடிந்தது.  இயல்பாக அந்த மொழியை பேசினாலும், அதை எழுத்தில் கொண்டுவருவது கடினம். அதை சிறப்பாக செய்துள்ளார்.

சிந்தாதரிப் பேட்டை எனப்படும் சின்னத்தறிப் பேட்டை, பறக்கும் ரயிலில் செல்லும் போது கண்ணில் படும் ஒரு ஸ்டேஷன். அந்த பகுதியில் இருக்கும் ஒரு ஹவுசிங்க் போர்ட் மக்களை பாத்திரங்களாக்கி எழுதப்பட்ட நாவல். சின்னதறிப்பேட்டை வரலாற்றை ஒரு சில பக்கங்களில் கூறிவிட்டு, இன்றைய காலத்திற்கு வந்துவிட்டார். 

ஆங்கிலேயர்களால், தறி போடும் நெசவாளர்களுக்காக உண்டாக்கப்பட்ட சிறிய குடியிருப்பு பகுதி, சின்னத்தறி பேட்டை. கூவம் ஆற்று நீரை குடிக்க பயன்படுத்திய காலத்தில் உண்டாக்கப்பட்ட பகுதி.  நெசவாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி, மெதுவாக வளர்ந்து சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக மாறுவதையும், தேங்காய தண்ணீர் போன்ற நீர் ஓடிய கூவம் இன்றைய கூவம் ஆவதையும் சில பக்கங்களில் முடித்துவிட்டார். பலர் கூறுவது போல, சின்னத்தறிப் பேட்டையின் வரலாறு என்று எல்லாம் நினைத்து கொண்டு படிக்க ஆரம்பிக்க வேண்டாம். ஆனாலும் அந்த சிறிய வரலாற்றில் பல சமூக விஷயங்களை தொட்டுவிட்டுதான் போகின்றார், அங்கு குடியேறியவர்களின் ஜாதி படி நிலைகள், அன்றிருந்த சமூக விஷயங்கள், துரோகங்கள் பற்றி ஒரு சின்ன சித்திரம். சென்னையின் பூர்வகுடிகள் பற்றிய நாவல் என்று யாரோ எழுதியிருந்தனர், சென்னைக்கு யார் பூர்வகுடி? பெரும்பாலனவர்கள் ஏதோ ஒரு காலத்தில் வந்த வந்தேறிகள்தான். யார் முன்னே வந்தது பின்னே வந்தது என்று வேண்டுமென்றால் பேசிக் கொள்ளலாம். 

நாவலின் களம் இன்றைய ஃபேஸ்புக் காலம்தான். மனபிளவு நோயை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல். கூவம் நதிக்கரைக்கு திருமணமாகி வரும் புதுப்பெண் ரெஜினா, அவரது மாமியாரைப் பற்றி கேட்டு கேட்டு, மாமியாராக மாறி பாஸ்டரால் குணப்படுத்தப்படுகின்றாள். அதன்பின் மாதாவை வணங்கும் கிறிஸ்துவத்திலிருந்து தீவிர கிறிஸ்துவராக மாறும் அவரின் மகன் ரூபன் அதே சிக்கலில் சிக்கி வெளியே வருவதுதான் நாவல். 

நாவலை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம், ரூபன் வளர்ந்து வேலைக்கு போகும் வரை ஒரு க்ளாசிக் போல வளரும் நாவல், ரூபன் வேலைக்கு செல்லும் இரண்டாம் பகுதியில் சராசரியாக மாறுகின்றது. நாவலின் பேச்சு வழக்கு இயல்பாக, அதை நமக்குள் கற்பனை செய்ய வைக்கின்றது. சென்னையில் மின்சார ரயிலில் செல்லும் போதும் காதில் விழும் அந்த தமிழின் இன்னும் ராவான வடிவம். சென்னைக்கே உரிய சில வார்த்தைகள், சென்னைக்காரர்களுக்கு அது சாதாரணம், தெற்கே வந்து பேசினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கலாம். அதுவும் நாவலில் வருகின்றது. ஒரு முறை இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசுவதை சென்னை ரயிலில் கேட்டு கொண்டே வந்தேன், எத்தனை முறை சென்னையில் ப்ரேத்தியேக வார்த்தை வருகின்றது என்று எண்ணிக் கொண்டே வந்தேன். எக்மோரில் ஆரம்பித்து கோடம்பாக்கம் தாண்டுமுன் நூறை தாண்டி, சைதாப்பேட்டை வரும் முன் கணக்கு தவறி விட்டது. ஒரு வார்த்தை கமா, புல்ஸ்டாப் போல பயன்படும் என்பதை அன்றுதான் அறிந்தேன். நாவல் முழுக்க அது போல பல வார்த்தைகள் விரவி கிடக்கின்றன, ஆனால் அது என்னவோ ஆபாசமாக தோன்றவில்லை. திருநெல்வேலி, கோவில்பட்டி வழக்கில் எழுதப்பட்ட நாவலில் தா...ளி என்று வந்தால் அது சாதரணமாக தோன்றும் அது மாதிரி ஆகிவிட்டது. 

முதற்பகுதியில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் ரத்தமும், சதையுமான பாத்திரங்களாக வருகின்றனர். நாவல் ஆரம்பிக்கும் போது கிட்டத்திட்ட அனைத்தையும் அருகிலிருந்து பார்ப்பது போன்றும், அனைவரும் நமக்கு மிகவும் தெரிந்த பாத்திரங்கள் போலவும் உள்ளது. நகோமியம்மாள், மாசிலாமணி, தவுடா சோறு பாலு, குட்டி குட்டி பாத்திரங்களாக வரும் ஜாண்டி, டாடி, மாசிலா, பூபாலன். பாத்திரங்களும், சித்தரிப்புகளும், சம்பவங்களும் இயல்பாக உள்ளன. சிறுவர்கள் மாஞ்சா போட அலைவது, கேரம் போர்ட் விளையாட்டின் முக்கியத்துவம், கிறிஸ்துவம் எப்படி உள்ளே நுழைந்தது என்பது எல்லாம் சுவரஸ்யமாக, ஆசிரியர் இருப்பு ஏதுமின்றி வருகின்றன. ஏழ்மையையும், வியாதியையும் எப்படி மதம்மாற்ற பயன்படுத்தி கொள்கின்றார்கள், கிறிஸ்தவராக இருந்தாலும் அங்குள்ள வேறுபாடுகள், சபைகளின் காணிக்கை வசூல், கிறிஸ்துவத்தின் மீதல்லாது, சபையின் மீதுள்ள விஸ்வாசம் என்பது எல்லாம் சிறுசிறு குறிப்புகளில் வருகின்றது. 

ஆனால் ரூபன் பாத்திரம் அலுவலகம் செல்ல ஆரம்பித்ததும், அனைத்தும் செயற்கையாக மாறுகின்றன. நாவலாசிரியர் உள்ளே வந்து அமர்ந்து கொள்கின்றார். ரூபன் ஃபேஸ்புக்கில் அலைவது, அவனது காதல்கள், நாவல் எழுத நினைப்பது எல்லாம் ஒரு வித கேலித்தனத்துடன் எழுதப்பட்டு, ஆசிரியர் இருப்புடன் வருகின்றது. அலுப்புதட்டும் ஃபேஸ்புக் நடையாகவும் மாறுகின்றது. ரூபனின் அலுவலக நண்பர்கள் பாத்திரங்கள் அனைத்தும் செயற்கையாக, ஐடி துறையினரைப் பற்றி அனைவரிடமும் இருக்கும் ஒரு கற்பனைக்கு தோதாக எழுதப்பட்டுள்ளன. படிக்க ஒரு வித அயற்சியை ஏற்படுத்தி, பக்கங்களை தாண்டினால் போதும் என்று நினைக்க வைக்கின்றது. 

ஜாதி வேறுபாடு என்றால் பிராமணர்களைப் பற்றி பேசாமல் எப்படி, நாவலில் குறிப்பிடப்படும் ஒரே ஜாதி பிராமண ஜாதி மட்டும். நல்ல பிராமணர்கள், சிந்தாதறிப் பேட்டையில் வந்து மாட்டுக்கறி தின்று விட்டு போகின்றனர், மோசமான பிராமணன் அலுவலகத்தில் இம்சை தருகின்றான். இரண்டாம் பகுதி ஃபேஸ்புக் ஸ்டைல் நாவலில்லையா அப்படி இருக்க வேண்டியதுதான்.  ரூபனின் அலுவலகம், அலுவலக நண்பர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் படு செயற்கை. 

ரூபனின் நண்பன் பாத்திரம் வெகு அழகாக வந்துள்ளது, அந்த பகுதி மக்களின் வாழ்க்கைதரத்திலிருந்து ஒரு படி முன்னேறிய ஒரு குடும்பத்தில் பிறந்தவன், அடுத்த படி முன்னேறவும் ஆசை, அதே சமயம் அவர்கள் வாழ்ந்த அந்த சூழலிலும் வாழ பயம், தயக்கம், இரண்டு பக்கமும் மாறி மாறி அலைந்து வாழ்வை தொலைக்கும் ஒரு பாத்திரம் செளமியன். இளவயதில் நெருங்கிய நண்பனின் மரணம், உறவினர்களின் மரணத்தைவிட  அதிகம் பாதிக்க கூடியது, அது ஓரளவிற்கு நாவலில் காட்டப்படுகின்றது. அது போன்ற உயிரோட்டமான காட்சிகளும், செயற்கை போலி காட்சிகளும் வரும் பகுதி சர்க்கரை பொங்கலுடன் ஊசி போன சாம்பரை சேர்த்தது போல உள்ளது. 

பேட்டை நாவலை சென்னையில் அசல் மனிதர்களை காட்டும் பகுதிகளுக்காக படிக்கலாம்.

சங்கதாரா - "காலச்சக்கரம்" நரசிம்மா

நண்பர் ஸ்ரீராம் காலச்சக்கரம் நரசிம்மா என்னும் எழுத்தாளரைப் பற்றி முன்னர் குறிப்பிடிருந்தார். இந்திரா செளந்திரராஜன் பாணி எழுத்தாளர் என்று நினைத்தேன். உறவினர் வீட்டில் அவர் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. வானதி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. நரசிம்மா, பிரபல சினிமா இயக்குனர் சித்ராலயா கோபுவின் புதல்வர், இவரின் தாயரும் அறியப்பட்ட நாவலாசிரியர். கமலா சடகோபன். 

முன்னுரையிலேயே சாண்டில்யன் வாசகர்கள் தலையில் நறுக்கென்று கொட்டி விடுகின்றார். பின்னர் வரும் பக்கங்களில் கல்கி வாசகர்களை கொட்டு கொட்டு என்று தலை வீங்கும் அளவிற்கு கொட்டி விடுகின்றார். சரித்திர கதைகளுக்கு தமிழில் முன்னுதாரணம் என்றால் கல்கியும், சாண்டில்யனும். இவர்கள் பாணியிலேயே பெரும்பாலான கதைகள் எழுதப்பட்டன. விதிவிலக்குகள் சில டணாய்க்கன் கோட்டை, வீரபாண்டியன் மனைவி, ரத்தம் ஒரே நிறம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும், காவல்கோட்டம் போன்றவை. இந்த நாவல்கள் அண்மை கால சரித்திர குறிப்புகளை வைத்து பின்னப்பட்டவை. 

ஆனால் சாண்டில்யன், கல்கி எழுதியது சோழ, பாண்டிய சரித்திரம். அந்த காலத்தில் கிடைத்த ஆதாரங்களையும், அக்காலத்து ஆய்வு முடிவுகளையும் வைத்து எழுதினார்கள். இன்று ஐம்பது வருடங்களில் பல புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம். இருந்தாலும் அக்கால சரித்திரத்தை எழுதுவது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் என்ன செய்யலாம்

ஸ்பாய்லர் அலர்ட். பல திடுக்கிடும் திருப்பங்கள், அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், யூகிக்கவே முடியாத பல முடிச்சுகளை பற்றி எழுதப்பட்டுள்ளது. அடுத்து வரும் பகுதி நடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அடிக்கடி  இது மாதிரி எழுதுவார், அந்த பாதிப்பில் எழுதியது.   நாவலும் அதுமாதிரிதானே பொன்னியின் செல்வனின் பாதிப்பில் எழுதியது. அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். 

முன்னுரையில் முன்பு எழுதிய அனைவரையும் வாரிவிட்டாயிற்று, அப்ப என்ன செய்யலாம் 

எல்லார்க்கும்  தெரிந்த ஒரு நாவலை  கொத்து புரோட்டா போடலாம். சாண்டில்யன், அவரின் அனைவருக்கும் தெரிந்த நாவல் கடல்புறா, அது வெறும் சாகசம்தான்.  அதில் கை வைத்தால் ஆபத்து. 

பெஸ்ட் பொன்னியின் செல்வன் தான். 

வித்தியாசமாக எப்படி எழுதுவது. 

யார் எல்லாம் அதில் கெட்டவர்கள் ரவிதாசன், பழுவேட்டரையர்கள், சம்புவரையர்கள். 

யார் யார் எல்லாம் நல்லவர்கள் குந்தவை, வந்தியத்தேவன், அருண் மொழி வர்மன். 

பரோட்டாவின் முதல் படி, கெட்டவர்களை நல்லவர்களாவும், நல்லவர்களையும் கெட்டவர்களாவும் மாற்று. 

குந்தவை வில்லி. சீரியல் யுகம் அல்லவா, அனைத்து சீரியலிலும் பெண்கள்தானே அனைத்து வில்லத்தனத்தையும் செய்கின்றனர், அதனால் குந்தவை எதை செய்தாலும் நம்புவார்கள் பிரச்சினையில்லை. 

அருண்மொழி வர்மனை வில்லனாக்கினால், கெட்ட பெயர் கிடைக்கும். அதனால் அவனை விட்டு விடலாம்.

வந்தியத்தேவனை கொடுர வில்லனாக்கி விட்டால் பிரச்சினையில்லை. என்ன பொ.செ வாசகர்கள் கடுப்பாவார்கள். முன்னுரையில் அந்த வாசகர்கள் கண்ணாடியை கழட்டுங்கள், மனதை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள், நாலு முறை நன்றாக மூச்சு விட்டு கொள்ளுங்கள், திறந்த மனதுடன் படியுங்கள், கதவு ஜன்னல் எல்லாம் திறந்து விட்டு படியுங்கள் என்று ஒர் டிஸ்கி போட்டால் போயிற்று.

பொன்னியின் செல்வனிலிருந்து சில சம்பவங்களை எடுத்துக் கொண்டு ரோஷமோன் அல்லது விருமாண்டி பாணியில் இன்னொரு கோணத்தில், கொஞ்சம் கோணலாக இருந்தாலும் பரவாயில்லை பார்த்து எழுதுவோம். 

அருண்மொழி வர்மன் தண்ணீரில் விழுந்து பிழைத்தான் அதனால் அவனுடைய பெயர் பொன்னியின் செல்வன்.

இது கல்கியின் புனைவு ஆச்சே

இருந்தாலும் கல்கி எழுதி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டதால், அதையும் ஒரு ஆதாரமாக கொள்ளலாம். தப்பில்லை. சரி.

ஒரு திடுக்கிடும் திருப்பம் வேண்டுமே, சரி தள்ளி விட்டது குந்தவை. 

பயங்கர திருப்பமாக உள்ளதே. 

இன்னொரு திருப்பத்தையும் வைப்போம், விழுந்தது ஒரு குழந்தை, கிடைத்தது இன்னொரு குழந்தை. 

யாரும் கண்டுபிடிக்க மாட்டார்களா, 

அது எப்படி, அரண்மனையில் அரசனுக்கு ஏகப்பட்ட மனைவிகள், குழந்தைகள். எல்லார் முகத்தையும் நினைவில் வைக்க முடியுமா, கண்ணாடியை கழட்டி விட்டு படியுங்கள். இன்னொரு பகீர் திருப்பம் உள்ளது.

தண்ணீரில் மாறிய குழந்தை குந்தவையின் குழந்தை. 

வெய்ட். குந்தவை சிறு பெண்ணல்லவா எப்படி குழந்தை. 

குந்தி இல்லையா, குந்திக்கு துர்வாசர் கொடுத்த மந்திரம் ஓலை வழி குந்தவைக்கு கிடைத்தது. 

கரெக்ட் லாஜிக். 

இப்பதான் கண்ணாடி இல்லாமல் கண் தெரிகின்றது. 

அப்பா யாரு, 

குந்தவையின் கணவன்தான், 

யாரு வந்தியத்தேவனா, 

ஆமாம் அது குந்தவைக்கே தெரியாது. குந்தவையை ஆட்கொண்டது அவன்தான். 

ஆட்கொண்டது அப்படின்னா, 

யோவ் இது டீசன்டான சரித்திர கதை, அவ்வளவுதான் சொல்ல முடியும். போய் முன்னுரைய படி. அது மாதிரி கதைன்னு நினைச்சியா. முதல்ல இது உனக்கு எழுதின கதையேஇல்லை. பின்ன, கரிகாலனுக்கு எழுதினது.போனா போகுதுன்னு படிக்க சொன்னா, 

சாரி சாரி

பரோட்டாவின் அடுத்த படி

கரிகாலன கொன்னது ரவிதாசன் இல்லை. குந்தவையும் வந்தியத்தேவனும்

அப்ப ஏன் ரவிதாசனனின் சொத்துக்களைப் பறித்து விரட்டுனாங்க. 

அது வந்து ராஜராஜனுக்கு அவன பிடிக்கல, அண்ணன கொன்னிருந்தா அவன ராஜராஜன் கொன்னிருப்பானில்ல கொல்லலியே, அப்ப அவன் கொலைகாரன் இல்லையே. 

அப்ப குந்தவை கொன்னிருந்தா குந்தவைய கொன்னிருப்பான் அப்ப குந்தவையும் கொலைகாரி இல்லையே. 

ரவிதாசன் கொன்னிருந்தா அவனுக்கு ஏன் சோழ அரசுல பதவி கொடுத்தாங்க, பிரும்மராயர் பட்டம் பிராமணனுக்கு தான கொடுப்பாங்க, 

ஆமாம். 

ரவிதாசன் முதலாம் ஆதித்த சோழனின் வாரிசு அதனாலதான் பதவி கொடுத்தாங்க, 

அப்ப பிராமணன்னு சொன்னது 

அதுவும்தான் பஞ்சவன் பட்டம் இருந்த அரச குடும்பம், பிரம்மராயன் பட்டமிருந்தா பிராமணன். எது சவுகரியமோ அத எடுத்துக்குவோம். 

இது மாதிரி சரித்திர கதைகள்ல ஒற்றர்கள் எல்லாம் உண்டுதானே, 

இது என்ன வழக்கமான சரித்திர கதையா, இது ஒரு சிபிஐ ரிப்போர்ட், ஃஎப்.ஐ.ஆர் மாதிரி. அது எல்லாம் கிடையாது, ஆழ்வார்க்கடியானே ஒரு ஓரத்துல மரதடியில நின்னு துண்ட ஆட்றதோட சரி. டயலாக் எல்லாம் கிடையாது. 

இது என்ன ஒரு பைத்தியம் முருங்கை, முருக்கை எல்லாம் சொல்லுதே. 

இதுதான் கதையோட ஆப்த வாக்கியம்,முருங்கை முருக்கை இல்லாம கதையே இல்ல, முழுசா படி புரியும்

அப்ப ஆதித்த கரிகாலன காப்பத்துற மர்ம உருவம் எல்லாம்.  ,

யார் கண்ணாடிய போட சொன்னது, கண்ணாடிய கழட்டு முதல்ல. 

கண்ணாடிய கழட்டி பத்து பாரா ஆச்சு

அப்படியா சரி சரி, சரித்திரப்படி பாத்தா ஆதித்த கரிகாலன் கடம்பூர்ல சாகனும், அவன் பாட்டுக்கு வைர வியாபாரி வீட்டுல செத்து தொலைஞ்சா என்ன செய்ய, அதுதான் காப்பத்த வேண்டியதா போச்சு. 

இந்த நந்தினி பாத்திரம், 

அப்படியேவா வைக்க முடியும், நந்திபுரகுல விளக்கு. நந்தினி மாதிரி இல்ல. இது யார் தெரியுமா ராஜாதித்தயரோட காந்தர்வ மனைவிக்கு பிறந்த மகள், இவளுக்கு ஒரு மகள் நந்தாவிளக்கு, கடைசில எரியப் போகும் என்பதற்கான குறிப்பு, 

இதுல யார் நந்தினி, 

யாரா வேண்டுமானாலும் இருக்காலாம். கல்கியத்தான் கேக்கனும். 

இது எல்லாம் அந்த மர்ம உருவத்துக்கு எப்படி தெரியும், 

அது எப்படி தெரியாம  போகும், அந்த உருவம் தான் கண்டராதித்தர் இது வழக்கமான சரித்திர கதை இல்லன்னு எத்தன தடவ சொல்றது. 

ஒரே குழப்பமா இருக்கே, கதைய ஒரு தடவை முழுசா சொல்

குந்தவைக்கு பத்து வயசு இருக்கும் போது அவளுடைய வயத்துல சங்கு ரேகை இருப்பதால் அவள் ஆழ்வார்ன்னு அழைக்கபடுறா, தன் அண்ணன அரசனாக்க சூர்ய மந்திரத்தை ஜபிச்சு ஒரு  வருஷம் சண்டி விரதம் எடுத்து மறைவா போய்ட்டு குழந்தைய பெத்துக்குறா. அந்த் குழந்தைக்கு அப்பா ஆதி சோழ வம்ச இளவரசன்னு குந்தவை நினைச்சுக்குறா, 

அப்ப அவளுக்கு என்ன வயசு இருக்கும்? 

வருஷ கணக்கு போட்டா பன்னிரெண்டு, பன்னென்டு வயசுல குழந்தையா? கதை ஓடும் போது அது எல்லாம் பாக்க கூடாது. 

ஓகே. 

நல்லவேளையா அதே சமயம் குந்தவை அம்மாவுக்கும் குழந்தை பிறக்குது. அது மட்டு பிறக்கலன்னா கதையே நடந்திருக்காது. அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் கண்டராதித்தர் காணம போறார், ஆனா அவர் காணம போகல, எல்லா இடத்துக்கும் வர்றார், போறார், எல்லாம் அவருக்குதான் தெரியும். அப்படி மாறு வேஷத்துல வர்றது கண்டராதித்தர்ன்னும் எல்லார்க்கும் தெரியும். இருந்தாலும் அவர் காணமல் போனவர்தான்.  அவருக்கு அவருக்கும் ஒரு குழந்தை பிறக்குது மதுராந்தகன். அந்த குழந்தையும் கொஞ்ச நாள்ல காணோம் அதனால் அதைப் பத்தி கவலை இல்ல. சுந்தர சோழர் குடும்பத்தோட  படகுல போகும் போது தம்பிய தண்ணில தள்ளி விட்டுட்டு  தன் பையன தண்ணியில இருந்து எடுத்து இதுதான் தம்பி பொன்னியின் செல்வன்னு சொல்றா குந்தவை. ஆனா யாருக்கும் அது தெரியாது, குழந்தை முகத்தை பாத்த கூட கண்டு பிடிக்க முடியாது. 

எப்படி, 

ஏன்னா குழந்தையை வளர்க்றதே குந்தவைதானே. அப்பா அம்மா பாக்கவே மாட்டாங்க, பாத்தாலும் அடையாளம் தெரியாது. 

கதைதான பரவாயில்லை. 

பன்னிரெண்டு வருஷம் கழிச்சு வீரபாண்டியன் மரணம். சம்புவரையர், மணிமேகலை, கந்தன்மாறன், பார்ந்திபேந்திரன், மலையமான் எல்லாம் துணைநடிகர்கள் மாதிரி ஒரு ஓரமா வந்து போறாங்க. ட்விஸ்ட். வீரபாண்டியனை கொன்னது குந்தவை,அதை  பழுவேட்டரையர் கண்டு பிடிச்சி, அருண்மொழிக்கு பதிலா  கண்டாரதித்தன் பையன அரசனாக்குனா விட்டுறேன்னு சொல்றார். குந்தவை ஒத்துக்குறா. ஆனா கண்டராத்தர் பையன் யார்ன்னு பாத்தா அது கண்டராதித்தர் பையன் இல்லை.  அந்த குழந்தையும் மாறியிருக்கு, யார்ன்னு கேட்டா பழுவேட்டையர் பதில் சொல்லாமல் எங்கயோ போய்ட்றாரு.

உண்மையான மதுராந்தகன் என்ன ஆனான்?

யாருக்கு தெரியும்? இல்ல யாருக்கு தேவை? ஆனா, அந்த  கண்டாராதித்தன் பையன் கண்டாராதித்தன் பையனே இல்லை, அது ஒரு டூப்பு. அது கண்டராதித்தர் குழந்தை இல்லை, செம்பியன் மாதேவி குழந்தையும் இல்லை. கண்டராதித்தருக்கு குழந்தையே இல்லை, செம்பியன் மாதேவி கர்பமே ஆகலை.  டூப்பு குழந்தையா பிறந்து, பின்னாடி காணமல் போகி  மாறி வந்த பையன் யாருன்னா அது சுந்தர சோழனோட பையன், அப்ப அருண்மொழி வர்மன், குந்தவையோட பையன். குந்தவை சுந்தர சோழன் பையனுக்கு பதிலா தன் பையன மாத்தினா, அந்த பையன பழுவேட்டரையர் கண்டுபிடிச்சி மதுராந்தகனுக்கு பதிலா மாத்திட்டாரு.  தெளிவா இருக்கு இல்ல

ஓரளவுக்கு இருக்கு, மேல மேல 

இது எல்லாமே காணமல் போய், எல்லார் கூடயும் பேசிட்டு இருக்குற கண்டராதித்தருக்கு தெரியும். அவர் ஒரு சித்தர் ஆனா எல்லார் கண்ணுக்கும் தெரிவார். கதை அவ்வளவுதான். அதுக்கு அப்புறம் ஒன்னு ரெண்டு பக்கம் எல்லாரும் என்ன் ஆனாங்கன்னு ஒரு குட்டி மான்டேஜ். கடைசி ஐம்பது பக்கம், குந்தவையோட வாக்கு மூலம். 

அப்ப இந்த சங்கதரான்னா என்ன, 

அது சங்கு இருக்குற மாளிகை. 

அதுக்கும் புத்தக தலைப்புக்கும் என்ன சம்பந்தம், 

கதைல வருது இல்ல. 

கதைக்கு அதுக்கும் என்ன சம்பந்தம், 

அது சரித்திர உண்மை. எல்லார்க்கும் தெரிய வேண்டாமா, 

சரி சரி.

அடுத்த நாவல் என்ன

ராஜேந்திரன் இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சிகிட்டு அப்பா கட்டுன பெரியகோவிலுக்கு போகாம, தானே ஒரு கோவில் கட்டி கும்புட்டான்னு எழுத வேண்டியதுதான். முடிஞ்சா ராஜேந்திரன் ராஜராஜன் பையனில்ல தம்பி அப்பிடின்னு சேர்த்துக்கலாம். 

படுதிராபையான ஒரு கதையை இதுவரை படித்தது இல்லை. படிக்கும் போது நேர்ந்த கடுப்புதான் மேலே. முன்னுரையில் பல எழுத்தாளர்களை மட்டம் தட்டுவது போல எழுதியிருப்பதே முதல் கடுப்பு, அவ்வளவு மட்டம் தட்டுபவர் எழுதியிருக்க வேண்டியது சிக்கவீர ராஜேந்திரன் மாதிரியான நாவல். இதுவல்ல.  நாவலில் நம்பகத்தன்மை என்பது கடுகளவும் இல்லை, கற்பனை என்றாலும் தர்க்கத்தில் அடங்க வேண்டும்.  சாண்டில்யன் சரித்திர கதைகள் என்பது ஃபேண்டசி டைப். பாகுபலி மாதிரி, அவரை கிண்டலடித்து விட்டு இவர் எழுதியிருப்பது, சுத்த அரைவேக்காட்டு நாவல். பன்னிரெண்டு வயது பெண், யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்று கொள்வது எல்லாம் படிக்கும் போது எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் என்றுதான் தோன்றுகின்றது. பன்னிரெண்டு வயதிலேயே ஆள் மாறாட்டம், கொலை. 

கரிகாலன் கொலையில் பல அரச குடும்பத்தவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம், ஏன் குந்தவை, அருண்மொழியே செய்திருப்பார்கள் என்று கூட கற்பனை செய்யலாம். அவர்கள் செய்தார்கள், செய்யவில்லை என்பதற்கு எவ்வித சான்றுமில்லை. பதவி என்பது எதையும் செய்ய வைக்கும். அதை எழுதுவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இது வரை எழுதியவர்கள் எல்லாம் முட்டாள்கள், தான் எழுதியது தான் 100 லாஜிக்கலான தியரி, நடந்திருக்க கூடும், படித்தவர்கள் எல்லாம் இதுதான் உண்மை, குந்தவையை சிறையில் அடைக்க வேண்டும், முடிந்தால் மரண தண்டனை தர வேண்டும் என்று அவரிடம் வந்து வேதனைப்படுவதாக எழுதுவது எல்லாம் ஓவர். அந்தளவிற்கு ஒர்த் இல்லை. 

மாறுபட்ட கோணம் அவசியம், ஆசிரியரின் உரிமை. ஆனால் இந்த நாவல் அதை சொன்ன விதம் தலைவேதனை. ராஜராஜனை கெட்டவனாக்க முடியாது, குந்தவை - ராஜராஜன், குந்தவை - ராஜேந்திரன் பந்தம் என்பது வாசகர்கள் மனதில் ஆழப் பதிந்த ஒன்று. குந்தவையை மட்டும் கெட்டவளாக காட்ட இறங்கி,   இறுதிப் பகுதியில் வாசர்களை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே வளவளவென்று எழுதி தள்ளியிருக்கின்றார். பல புத்தகங்களை படித்திருப்பார் போல, தகவல்களை எல்லாம் எங்காவது கொட்ட வேண்டும் என்று கொட்டி தள்ளிவிட்டார். சோழ குல சடங்குகளி புரசமரத்தின் பங்கு, அவர்கள் பயன்படுத்தும் சங்கு, இன்றைய மலேசியா அன்றைய கடாரத்திற்கும் சோழ தேசத்திற்குமான தொடர்பு, இன்றும் அங்கு கிடைக்கும் சோழ குல மிச்சங்கள், அடிகள், பிரான், ஆழ்வார் என்று பெண்கள் அழைக்கப்படுதல் என்று சில சரித்திர ஜிகினாக்களை தூவி அலங்கரிக்கப்பட்ட பழைய பிரியாணி. 

முருங்கை, முருக்கை என்பதை வைத்து கொண்டு பக்கத்தை கொன்றிருக்கின்றார். அதே போன்று அரச குடும்பத்து கிளைகளும், அவர்கள் கை விடப்படுவது, வேட்டையாடப்படுவதும் எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள், அதை எல்லாம் எப்படி கையாண்டிருக்கின்றார் என்று படித்தால் கொட்டாவிதான் வருகின்றது. 

இது போன்ற சஸ்பென்ஸ் டைப் நாவல்களில், வாசகனுக்கு கொஞ்சம் இடம் வேண்டும். அவனின் புத்திசாலித்தனத்திற்கு கொஞ்சம் தீனி வேண்டும். சம்பந்தமேயில்லாமல் சம்பவங்களை கொண்டுவந்து, இறுதிப்பகுதியில் அவனை முட்டாளாக்கினால் எரிச்சல்தான் வரும். இது அப்படித்தான் இருக்கின்றது. நாவலின் முடிச்சுகளை போடுவது ஒரு கலை என்றால், அதை வாசகனுக்கும் கொஞ்ச கொஞ்சமாக அதை அவிழ்த்து இறுதியில் ஒரு சின்ன திருப்பத்துடம் முடிக்க வேண்டும், அப்போதுதான் சுவாரஸ்யம். நாவல் முடிவதற்கு பத்து பக்கம் வரை இழுத்துவிட்டு, கடைசி பத்து பக்கம்  குற்றவாளி  வந்து ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி அனைத்தையும் ஒப்பிப்பது எல்லாம் அமெச்சூர்கள் செய்வது. எப்படி முடிப்பது என்று தெரியாமல், ஆசிரியரே வந்து பேசி சரிசெய்வது, நீ என்ன செய்தாய் தெரியுமா என்று ஒரு  பாத்திரம் வந்து பேசுவது. இது எல்லாம் தாத்தா காலத்து டெக்னிக். துப்பறியும் கதைகிளிலாவது ஒன்றிரண்டு பக்கம் இருக்கும்,  இதில் வரிசையாக வந்து பக்கம் பக்கமாக வாக்குமூலம் தருகின்றார்கள், க்ளைமாக்ஸ் முடிந்த பின்னரும் க்ளைமாக்ஸ் சரி முடிந்தது என்று பார்த்தால் மறுபடியும். 

பழுவேட்டையரையர் குந்தைவையிடம்  வந்து நீ என்ன செய்தாய் தெரியுமா என்று முடிக்கின்றார், குந்தவை நான் என்ன செய்தேன் தெரியுமா என்று முடித்து இறக்கின்றாள், குந்தவையின் வேலைக்காரி வந்து குந்தவை என்ன செய்தாள் தெரியுமா என்று ஆரம்பித்து முடிக்கும் முன்னரே, வந்தியத்தேவன், அவள் செய்ததை விடு நான் என்ன செய்தேன் தெரியுமா என்று ஒரு பத்து பக்கம். ஒரு வழியாக முடிந்தது என்றால், அருண்மொழி வர்மன் கடல் கடந்து சென்று கொடுத்த வாக்குமூலத்தை ராஜேந்திரன் பார்க்கின்றார். அடுத்த நாவலில், ராஜேந்திரன் கொளுத்திய ஓலைசுவடிகளை குலோத்துங்க சோழன் படிக்கலாம், இல்லை அவன் தெலுங்கன் இல்லையா, சரி ஆசிரியர் நினைத்தால் அவன் வீரபாண்டியனின் கொள்ளு பேரன் என்று இன்னொரு நாவல் எழுதிவிடலாம்.

முன்னுரையில் முன்முடிவுகளுடன் படிப்பவர்களுக்கு அல்ல என்கின்றார், அப்படி என்றால் பொ.செ நாவலின் சில அம்சங்களை இதில் சேர்த்திருக்கவே கூடாது. மணிமேகலைக்கு என்ன சரித்திர ஆதாரம் இருக்கின்றது.

சரித்திர நாவல்களில் எதை கற்பனை செய்யலாம் என்ற தெளிவு வேண்டும். உரையாடல்களை கற்பனைதான் செய்ய முடியும், சில சம்பவங்களை சரித்திர உண்மைகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்து கொள்ளலாம். சில புதிய பாத்திரங்களை சேர்க்கலாம். ஆனால் ஒருவனின் அப்பனை மாற்றுவதற்கு எல்லாம் இந்த நாவலாசிரியர்களுக்கு எவன் உரிமை தந்தது. சுந்தர சோழனின் மகன் ராஜராஜன் அவ்வளவுதான். இதுதான் சரித்திர உண்மை. ராஜராஜன் பிறந்த ஆண்டு, மாதம், நட்சத்திரம் அனைத்தயும் கல்வெட்டுகள் என்று பல சான்றுகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டுள்ளனர்.  இதை கற்பனை உரிமை என்ற பெயரில் மாற்றுவது என்பது வக்கிரம், ஆபாசம். இதை ஒரு சாதனையாக, பெருமையாக பேசிக் கொள்வது அதைவிட வக்கிரம். உண்மையை கண்டுபிடித்து மக்களுக்கு சொல்வது எல்லாம் சரித்திர பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆதரங்கள் அடிப்படையில் செய்யவேண்டியது, விட்டத்தை பார்த்து கற்பனையில் அடித்துவிட்டு அதைப் பற்றி பெருமிதம் கொள்ளவும் ஒரு அசட்டு துணிச்சல் வேண்டும். இது கற்பனை நாவல் என்ற வகையில் விட்டு விடலாம் என்றாலும், அந்த முன்னுரையில் தென்படும் அசட்டு துணிச்சல்தான் இவ்வளவு எழுத வைத்துவிட்டது. 

முன்னுரையில், "சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலின், பெர்முடா முக்கோணம் ஆதித்த கரிகாலன் கொலைதான், பல எழுத்தாளர்களும், சரித்திரப் பேராசிரியர்களும் நுழைய மறுத்த இந்த பகுதிக்குள் சங்கதாரா என்னும் தோணியில் சென்றுவிட்டு பத்திரமாக திரும்பி வந்துள்ளேன்" என்கின்றர். அவர் வந்துவிட்டார், அதை பிடித்து சென்ற வாசகர்கள்தான் சொற்களின் மழையில் சிக்கி, தர்க்க மீறல்களில் தடுக்கி விழுந்து, பயங்கர திருப்பங்களில் உருண்டு, கடைசி பக்கங்களில் வரும் வாக்குமூல மழையில் நனைந்து சிக்கி, சின்னாபின்னமாகி வரவேண்டியுள்ளது. 

எதற்கு படித்தோம் என்று நொந்து கொண்ட நாவல், நன்மையே, இனி இவரின் மற்ற நாவல் பக்கம் போகமலிருப்பேன். நல்லவேளை காசு கொடுத்து வாங்கவில்லை, வாங்கிய எவருக்கோ  என் ஆழ்ந்த நன்றிகள். 

படிக்கலாமா வேண்டாமா என்பதை இனி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பனி உருகுவதில்லை - அருண்மொழி நங்கை

பெரும்பாலான எழுத்தாளர்களின் குடும்பம் பற்றி நமக்கு பெரிதும் தெரியாது, மிக நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் ஜெயமோகன் பல கட்டுரைகளில் அவரது குடும்பத்தைப் பற்றி வெகு விரிவாக எழுதியிருக்கின்றார். அவரது தாய், தந்தை, அண்ணன், மனைவி, குழந்தைகள் அனைவரும் நமக்கு மிகவும் தெரிந்தவர்கள் போல ஆகிவிட்டனர். அவரது மாமனார் கூட தெரிந்தவர் போல ஆகிவிட்டார். இந்த புத்தகத்தைப் படிக்கும் போது நமக்கு மிகத் தெரிந்த ஒருவரின் எழுத்தை படிக்கப் போகின்றோம் என்பது போலத்தான் இருந்தது. அவரது மனைவி மிகச் சிறந்த வாசகி என்பது நன்கு தெரிந்தது. 

ஜெயமோகன் தளத்தில் அருண்மொழி நங்கை எழுதிவரும் தளத்தின் இணைப்பை ஒரு கட்டுரையில் கொடுந்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஜெயமோகன், இரா. முருகனின் தளம் மிக மோசமாக வடிவைக்கப்பட்டது என்று எழுதியிருந்தார், அதற்கு போட்டி போடும் அளவிற்கு இதுவும் இருந்தது. அந்த இணைய தளத்தில் அமைப்பு என்னை ஏனோ படிக்கும்படி செய்யவில்லை. ஒரு இணைய பக்கத்தில் ஒரு பக்கம் மட்டும் அதிக வெற்றிடம் இருக்கும்போது அது கவனத்தை பெரிதும் சிதறடிக்கும். 

கட்டுரை, முகப்பு படம், தலைப்புகள், பதிவு வகைகள் போன்றவைகள் எல்லாம் கோடு போடாத பேப்பரில் எல்லாப்பக்கமும் எழுதி வைத்தது போல இருந்தது. தற்போது பெரும்பாலான தளங்கள் ஸ்மார்ட்  போனில் படிப்பதற்கு ஏதுவாகவே அமைக்கப்படுகின்றது. என்னைப் போல கம்ப்யூட்டர் ப்ரெளசரில் படிப்பவனுக்கு கஷ்டம். தளத்தின் பின்புல வண்ணமும் ஒரு மாதிரியாக இருந்ததால் படிக்க முடியவில்லை. படிப்பவனுக்கு உள்ளடக்கம்தானே முக்கியம், வடிவம் எல்லாம் எதற்கு என்று கேட்டால் அது அப்படித்தான் தொழில் புத்தி. ஜெயமோகன் தளத்தில் பதிவுகள் நடுவில் இருக்கும், பதிவுச் சுருக்கம் அளவாக இருக்கும், மற்ற பகுதிகள் சிறிய கோடு அல்லது தலைப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும். அது படிக்க எளிதாக இருக்கும். சரி எப்படியும் புத்தகமாக வரும் படித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

ஜெயமோகன் ஒரு கட்டுரையில் "உன்னை மாதிரியே என்னாலும் எழுத முடியும் தெரியுமில்ல" என்று அவர் மனைவி சொன்னதாக எழுதியிருந்தார், அது உண்மையோ, புனைவோ தெரியாது, ஆனால் அருண்மொழி நங்கை ஜெயமோகன் போல எழுதவில்லை, அவருக்கென்று ஒரு தனி நடையை உண்டாக்கி கொண்டுள்ளார். பலர் அருண்மொழியை பற்றி கூறும் போது ஜெயமோகனின் பாதிப்பு அவரிடம் இல்லை என்பதை முக்கியமாக கூறியிருந்தனர். அவர் ஜெயமோகனை படிப்பதற்கு முன்பே பல எழுத்தாளர்களை படித்திருக்கின்றார், ஜெயமோகனை சந்திக்கும் முன்பே அவரிடம் ஒரு எழுத்தாளர் உருவாகியிருப்பார் போல. 

காவிரிக்கரையின் இசைப் பற்றி எழுத ஆரம்பித்து அவரது சிறுவயது நினைவுகளைத் தொடர் கட்டுரைகளாக எழுதியுள்ளார். அனைத்து கட்டுரைகளும் சிறுகதை வடிவில் கச்சிதமாக அமைந்துள்ளன, ஒரு நாவலின் பகுதியாகவும் கொள்ளலாம். அதற்கு காரணம் அங்கங்கு தோன்றும் சிறுசிறு புனைவு தருணங்கள். இது போன்ற வாழ்க்கை குறிப்புகள் எப்பொழுதும் எனக்கு பிடித்தமானவை. புனைவு கலந்து இருந்தாலும் அதுவும் சுவாரஸ்யமானதுதான். எது புனைவு என்பதை கண்டறிவது கூட சுவாரஸ்யமானது. 

திருச்சியை தாண்டி காவேரி பாயும் ஊர்க்காரர்களுக்கு இசை ரசனை என்பது இயல்பாக இருக்கும் போல. அங்கு வாழ்ந்தால் மட்டுமே வரும் என்று நினைக்கின்றேன். உறவினர்களில் தஞ்சாவூரிலிருந்து வந்தவர்களுக்கு அந்த இசை ரசனை இருக்கும், திருமணமான பின் அல்லது  தொழில் நிமித்தம் வேறு எங்கோ இருக்க வேண்டியிருக்கும். அதில பலருக்கு அவர்களின்  அடுத்த தலைமுறைக்கு அந்த ஞானம் இருப்பதில்லை. மரபணு வழியாக வரும் இசை ரசனை போல, இது மண்ணும், நீரும் வழியாக வருவது போல. கட்டுரையில் ஏழு வயது முதல் பத்து வயது வரை கேட்கும் இசை நம் மனதில் பதிவாகின்றது என்கின்றார். உண்மைதான், என் பக்கத்து வீட்டு பாட்டி தஞ்சாவூர். நன்றாக பாடவும் செய்வார்கள். அவர்கள் வீட்டில் நான் கேட்ட, மகாராஜபுரம் சந்தானமும், பாலமுரளி கிருஷ்ணாவின் ராமதாச கீர்த்தனைகளுமே என்னுடைய இசை ரசனைக்கு அடிப்படை. அருண்மொழியின் இசை ரசனை, ஒரு தஞ்சாவூர் அய்யரிடம் இருந்து ஆரம்பிக்கின்றது. அருண்மொழியின் ரங்கண்ணா. 

ஒவ்வொருவருக்கும் ரசனைகள் என்பது அவர்களது சிறுவயது சூழலில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக வளரும். சிலரின் ரசனை மேலே எழுந்து செல்லும் அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று. சிலருக்கு தேங்கிவிடும். அருண்மொழியின் இசை, இலக்கியம், சினிமா ரசனைகள் எப்படி ஆரம்பித்து, எப்படி வளர்ந்தது என்பதை அழகாக எழுதியுள்ளார். பலருக்கு இதில் அனைத்திலும் தேங்கிப் போகும் அபாயம் உண்டு. எனக்கு சினிமா இசையில் இளையராஜாவை விட்டு வேறு எதையும் கேட்கப் பிடிப்பதில்லை. இந்துஸ்தானி சுத்தம். கர்நாடக இசையும் ஒரு குறிப்பிட்ட பாடகர்கள் என்றே நின்று விட்டது. இருந்தும் சில சமயம் திடீரென்று புதிதாக யாரையாவது தொடர்ந்து கேட்கத் தோன்றும். பண்டிட் பீம்சேன் ஜோஷியின் கன்னடப்பாடல்கள், வெங்கடேஷ் பண்டிட், ஜஸ்ராஜ் பண்டிட்டின் ஸ்லோகங்கள் என்று ஒரு இரண்டு மாசம் ஓடும். ஆனால் படிப்பதில் தடை ஏதுமில்லை. என்ன சிலரின் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குவதில்லை, ஓசியில் கிடைத்தால் படிப்பது இல்லை விடுவது. 

சினிமாவை பற்றி ஒரு கட்டுரையில் ஜாலியான சினிமாவிலிருந்து எப்படி சீரியஸான சினிமாவிற்கு மாறினார் என்பதை பற்றி எழுதியிருக்கின்றார். இலக்கியம். ஜெயமோகனின் ஐயாயிரம் புத்தகம் என்னும் புனைவை நம்பியவர்க்கு 500 புத்தகங்கள் பரவாயில்லை தானே. ரஷ்ய இலக்கியங்களைப் பற்றி வெகுவிரிவாக எழுதியுள்ளார். சிறுவயது புரட்சி நம்பிக்கைகளைப் பற்றி எழுதும் போது ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்திருக்கின்றார்களே என்று தோன்றியது. அருண்மொழி நங்கை என்னை விட பன்னிரெண்டு வயது மூத்தவர். அவர் குறிப்பிடும் அந்த வயதில் எங்களுடைய ரசனைகள் எல்லாம் மாறியிருந்தன. புரட்சி எல்லாம் பக்கம் ஒதுங்கி கழகங்கள் ஒரு பக்கம், சினிமா ஒரு பக்கம் என்று மாறிவிட்டது. நான் வளர்ந்தது எல்லாம் துக்ளக் படித்து.  ஒரு பத்தாண்டு பெரிய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. 

அவரின் ரசனைகள் பற்றிய கட்டுரைகள் தவிர்த்த கட்டுரைகள் அவரது குடும்பத்தாரைப் பற்றியும் அவரின் ஊரார் பற்றியும். அவரது குடும்பம் பற்றிய அழகான சித்திரத்தை நமக்குள் உருவாக்குகின்றார். திராவிடர் கழக பற்று கொண்ட அப்பா, அதை கண்டு கொள்ளாமல் கோவிலுக்கு செல்லும் பாட்டி. அந்த பாட்டி ஜாலியான பாட்டி போல, இரவில் தலையணையை செட் செய்து விட்டு பேத்தியோடு திருவிழாவில் படம் பார்க்க செல்லும் பாட்டி எல்லாம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த பெண்பார்க்கும் படலம் கட்டுரை பிரமாதம், ஒரு சிறுகதைக்கான திருப்பங்களை கொண்டது. நிஜவாழ்வில் நடக்கும் பல சம்பவங்கள் கற்பனைக்கும் எட்டாது. அரசி என்னும் தலைப்பில் வரும் கட்டுரையில் வரும் பாட்டியும், மற்ற கட்டுரைகளில் வரும் பாட்டியும் ஒன்றா என்று தெரியவில்லை. அந்த கட்டுரையை படிக்கும் போது எனக்கு என் பாட்டி நினைவுதான் வந்தது. அந்த தலைப்பு என் பாட்டிகும் பொருந்தும். என்றாவது என் பாட்டியை பற்றி எழுதினால் அதுதான் தலைப்பு. 

இந்த கட்டுரைகளில் ஒன்றிரண்டு இடங்களைத் தவிர அந்த வயதிற்கு எது தோன்றுமோ அவ்வளவே காட்டப்பட்டுள்ளது. சிறுவயது சம்பவங்களை எழுதும் போது எழுதுபவரின் வயது தரும் கற்பனை புதிய கோணங்களைத் தந்துவிடும். அது பெரும்பாலும் இல்லை. அதுதான் இக்கட்டுரைகளில் அந்த போலியான ஏக்கத்தை இல்லாமல் செய்திருக்கின்றது. தீபாவளி, பொங்கல் போன்ற நல்ல நாட்களில் அனுப்புவதற்கு என்றே ஒரு டெம்ப்ளேட் இருக்கும், நாங்க சின்னப்புள்ளையா இருந்தப்ப எப்படி கொண்டாடினோம் இப்ப பாரு என்ற புலம்பல், படிக்கும் போதே ஒரு எரிச்சல்தான் வரும். அதற்கு காரணம் அதில் தொனிக்கும் அந்த போலித்தனமான ஏக்கம். இந்த கட்டுரைகளில் அது சுத்தமாக இல்லை. 

சில சொற்பிரயோகங்கள், வரிகளைப் படிக்கும் போது அவை எழுதப்பட்டவை போல எனக்கு தோன்றவில்லை. வாய்மொழியாக கதை சொல்லும் போது வரும் ஏற்ற இறங்கங்களுடன் படிக்கும் போதுதான் அதுபோன்ற வரிகள் வரும். அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எனக்கு. அந்த வயது பெண் சொல்வது போன்றும் வைத்துக் கொள்ளலாம். பழகிய ஊரை விட்டு செல்வது என்பது மிக கடுப்பான விஷயம், அதையும் வெகு இயல்பாக யார் மீதும் குற்றம் சொல்லாமல், புலம்பாமல் அந்த சோகத்தை சில பாராக்களில் கடத்துகின்றார். 

இது போன்ற கட்டுரைகள் நம்முடைய இளமை பருவத்தையும் கொஞ்சம் திரும்பி பார்க்க வைக்கும். நம்முடைய அனுபவங்களை இந்தப் பக்கங்களோடு உரசிபார்த்து கொள்ளலாம். சிறுவயதில் நமக்கு புரியாத பல விஷயங்கள் இன்று புரியலாம். 

அருண்மொழி நங்கையைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் முதல் புத்தகம் என்று முன்னுரையில் சொன்னதை வைத்துதான் நம்ப வேண்டியிருக்கும். அனைத்து பாத்திரங்களையும் குறைவான வர்ணனைகள் மூலமே நம்முள் வரைகின்றார். காலை ஐந்து மணிக்கே எழுந்து சமைக்கும் அம்மா, பல் பொடி டப்பாவில் தேதி குறிக்கும் அப்பா, அருண்மொழியின் அடிப்பொடி, மனோகர் வாத்தியார், ராவுத்தர், பட்டாணி, சாமியார். குறைவான வர்ணனைகள், உரையாடல்கள் மூலம் ஓவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டும் திறமை பலருக்கு கிடையாது. 

பெரும்பாலான கட்டுரைகள் சிறுவயது நினைவுகளில் ஆரம்பித்து மெதுவாக வளர்ந்து ஒரு சிறுகதைக்கான முடிவுடன் முடிகின்றது. மொத்த கட்டுரையின் சாரத்தையும் ஒன்றிரண்டு வரிகளில் கொண்டு வந்து முடிக்கின்றார். பனி உருகுவதில்லை என்னும் வரி, ருஷ்ய இலக்கியத்திலிருந்து, புரட்சி வேகம், ரஷ்யாவின் உடைவு என்று பலவற்றை இணைக்கின்றது. அந்த முடிவு வரிகளிலிருந்து, கட்டுரையை ஒரு புதிய கோணத்தில் வாசிக்க முடியும். கண் கவர் பூக்களும், சுவையான கனிகளும் இல்லை என்றாலும் அரச மரம் எழுந்து நின்றால் அதுதான் ஊரின் மையம் என்ற பொருளில் முடியும் கட்டுரை பேசுவது பட்டாணி என்பவரைப் பற்றி, ஒன்றிரண்டு துணி மூட்டைகள், சில பாத்திரங்கள், கண் தெரியாத மனைவி. ஊரில் கூலியாக தரும் உணவாலும், ஒன்றிரண்டு ரூபாய் கூலியாலும் வாழும் பட்டாணியின் கதை.   

அடுத்து ஒரு நாவல் எழுதப்போவதாக படித்தேன். தஞ்சாவூர் கதையாக இருக்கட்டும். இதுவே ஒரு முன்னூறு பக்க புத்தகம். நாவல் அதை விட பெரிதாக இருந்தாலும் துணிந்து வாங்கலாம். 


கு.ப.ரா கதைகள்

கு.ப.ராஜகோபாலன் நாற்பதுகளில் எழுதிவந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகளை தொகுத்து அழிசி பதிப்பகம் கிண்டில் பதிப்பாக வெளியிட்டது. வெளியிட்டதை சில நாட்கள் இலவசமாகவும் தந்தது. மாதொருபாகன் புத்தகத்தால் உலகப்புகழ் பெற்ற பெருமாள் முருகன் என்னும் பேராசிரியர் ஏற்கனவே கு.ப.ராவின் கதைகளை தொகுத்து, அதை காலச்சுவடு புத்தகமாக வெளியிட்டுள்ளது. அவர் தொகுத்த அதே கதைகளை அழிசியும் வெளியிட்டதால் பிரச்சினையாகி அமேசான் அழிசி வெளியிட்டதை நீக்கி விட்டது. ஏற்கனவே நாட்டுடைமை ஆக்கப்பட்ட க.நா.சு நூல்களுக்கும் இதே கதிதான். அழிசி குபராவின் கதைகளை ரிவர்ஸ் ஆர்டரில் வெளியிட்டு இருக்கலாம். இலவசமாக கிடைத்த ஒன்றிரண்டு நாட்களில் வாங்கியது. 

குபரா தெலுங்கு பேசும் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். கவிஞர் நா. பிச்சமூர்த்தியின் நெருங்கிய நண்பர்.சொந்த ஊர் கும்பகோணம், திருச்சியில் படிப்பு, மதுரை மேலுரில் வேலை. பின் பார்வைக் குறைபாடால் அரசு வேலையை விட நேர்ந்தது. பார்வை குறைபாடு இருந்த காலத்தில்  குபரா சொல்ல சொல்ல  அவரது சகோதரி எழுதுவாராம். பின்னர் மணிக்கொடி ஆசிரியர் வேலை, புத்தகக்கடை என்று அலைந்து திரிந்து காங்கரின் நோயால் 42ம் வயதில் மறைந்தார். குபரா, கும்பகோணத்தில் வாழ்ந்து வரும் போது தி.ஜா அவருடன் நெருங்கி பழகினார். மோகமுள்ளில் வரும் எழுத்தாளர் பாத்திரம் குபராதான் என்று எங்கோ படித்த நினைவு. தி.ஜாவின் நாவல்களை விட எனக்கு அவரது சிறுகதைகளே அதிகம் பிடிக்கும், அவரே குபரா எழுதுவது போன்று ஒரு வரி எழுதிவிட்டால் போதும் என்கின்றார். அந்தளவு அவர் குபரா மீது மதிப்பு வைத்துள்ளார். 

தமிழின் முதல் சிறுகதை என்று வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் கதையை சொல்வார்கள். நாவல் எழுதுவதை விட சிறுகதை எழுத அதிக திறமை வேண்டும். சிறுகதைகளில் பலர் பலவித பரிசோதனை முயற்சிகளை செய்துள்ளனர். கல்கி, புதுமைபித்தன், குபரா அனைவரும் கிட்டத்திட்ட ஒரே காலகட்டத்தில் எழுதி வந்தனர். கல்கி எழுதிய அனைத்து சிறுகதைகளையும் படித்துள்ளேன். கல்கி எழுதியது அனைத்தையும் பெரும்பாலும் பிரச்சார வகையிலேயே சேர்க்க வேண்டும். ஒன்றிரண்டு கதைகள் தேரலாம். புதிய முயற்சிகள் என்று பெரும்பாலும் இல்லை. குபரா எந்தளவிற்கு அக்காலத்தில் பிரபலமாக இருந்தார் என்று தெரியவில்லை. அவரும் கலைமகள் போன்ற இதழ்களிலும் எழுதியுள்ளார். ஆனால் அவர் பெயர் இன்றுள்ள பலருக்கு தெரியுமா என்று சந்தேகம். 

குபராவின் சரித்திரக் கதைகளையும், சமூகக் கதைகளையும் எழுதியுள்ளார். சரித்திரக்கதைகள் அந்தளவு பெரிதாக கவரவில்லை. புத்தர் கால அரசர்கள், நாயக்கர் காலம், ராஜபுத்திரர்கள் பற்றியவை என்று அனைத்தும் கலந்து உள்ளது. 

சமூகக்கதைகள் என்றாலும் பெரும்பாலும் அவை பேசுவது ஆண் பெண் உறவு. இழந்த காதல் பற்றிய ஏக்கத்தையே பல வித வடிவங்களில் எழுதியுள்ளார். ஆனால் சிறுகதை என்ற வடிவத்தில் மிகக் கச்சிதமாக அமர்கின்றது. ஆண் பெண் உறவு என்றாலும், சித்தரிப்புகளிலோ, உரையாடல்களிலோ எங்கும் வக்கிரமோ, ஆபாசமோ கிடையாது. சிக்கலான இடங்களை லாவகமாக தாவி செல்கின்றது. ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போல தோன்றுகின்றது. ஒரு சிக்கலான கட்டத்தை காட்டி நின்று விடுகின்றது. மனித மன ஏக்கங்களை, வக்கிரங்களை ஒரு கோடு காட்டிவிட்டு என் பணி முடிந்தது என்று கதை முடிகின்றது. புதுமைப்பித்தனின் சில கதைகளில் கூட ஆசிரியர் குரல் ஒலிக்கும், குபராவின் கதைகளில் அது கிடையாது. ஆனால் படிக்கும் போது புதுமைப்பித்தனின் நினைவு வந்தது. அவரிடம் இருக்கும் குசும்பு எல்லாம் இல்லை. தேவையில்லாத சொற்களே இல்லை என்பது மாதிரியான கதைகள்தாம். நாற்பதுகளில் இது போன்று எழுதுவது என்பது சர்ச்சைக்குரியதாக இருந்திருக்கும், ராஜாஜியே சில விஷயங்களை எழுதுவது சரியானதல்ல என்று குபராவை குறிப்பிட்டு சொன்னதாக செய்தி. இருந்தும் அதை சொன்னவிதத்தில்தான் அவரது மேதமை வெளிப்படுகின்றது. பெரும்பாலும் பிராமண மேல்தட்டு குடும்பங்களை மையமாக கொண்டே எழுதப்பட்ட கதைகள். பல கதைகள் பால்ய விவாக காலத்தவை, சிறுவயதில் திருமணம் செய்து கொண்ட பின் மனைவியை காண காத்திருப்பது, இடைப்பட்ட காலத்து கலகங்கள், முறைப்பையன் , முறைப்பெண் என்று உருவேற்றி பின்னால் வேறு எங்கொ கொடுப்பது இவற்றிற்கெல்லாம் இன்று காலமில்லை. ஆனால் அவை உண்டாக்கும் உணர்வுகள், சிக்கல்கள் வேறு வகையில் வந்து கொண்டிருக்கலாம். 91 சிறுகதைகள் உள்ளன அனைத்தையும் என்னால் மிகச்சிறந்தவை என்று கூற முடியாது. குறைந்தது ஒரு 20 கதைகள் மிகச்சிறப்பானவை என்று கூற முடியும். சிறிது வெளிச்சம், திரை போன்றவை.

ஜெயமோகன் குபராவின் பெண்கள், வங்க இலக்கியத்தின் பாதிப்பு என்கின்றார். கணவன் இல்லாத நேரத்தில், கணவனின் நண்பன் இருக்கும் அறைக்கு வந்து படுக்கையை போடும் பெண்கள் எல்லாம் வங்க இலக்கியத்தில் வருவது போன்ற பெண்க என்கின்றார். வங்க நாவல்கள் பற்றி ஏதும் தெரியாது, இருக்கலாம். இன்றும் அது மாதிரி நடப்பது அரிதுதான். திரும்ப திரும்ப எழுதினாலும் அவருக்கு எழுதத் தீராமல் இருந்திருக்கின்றது. 

சாரு நிவேதிதா அவரது பழுப்பு நிறப் பக்கங்கள் நூலில் அவரைப் பற்றி எழுதப்பட்ட பல குறிப்புகளை தொகுத்துள்ளார்.

கிண்டிலில் அழிசி மீண்டும் வெளியிட்டால் வாங்கலாம்.

குபராவின் வாழ்க்கைக் குறிப்பு

ஜெயமோகனின் குறிப்புகள் - பகுதி 1 , பகுதி 2     

அழிசி பதிப்பகம் இலவசமாக வெளியிட்டதன் பின்கதை

குபரா எழுதிய பல கதைகள் அழியாச்சுடர்கள் தளத்தில்

எஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்பு

நெஞ்சம் மறப்பதில்லை - சித்ரா லட்சுமணன்

சித்ரா ராமு-லட்சுமணன் திரைப்படத்துறையில் பிரபலமானவர்கள். சித்ரா லட்சுமணன், தற்போது டூரிங்க் டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு யூட்யூப் சானல் நடத்தி வருகின்றார். அதில் வரும் பேட்டிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. பிரபலமானவர்களுடன், அட இவர்தானா அது என்று வியக்கும் சிலரையும் பேட்டி எடுப்பதுதான் இவரின் சிறப்பு. அதோடு பேட்டி எடுக்கும் விதமும் சிறப்பானது, குறுக்கே விழுந்து பேசாமால், விருந்தினரை பேச வைத்துப் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளி கொண்டு வருகின்றார். அவரின் பத்திரிக்கை உலக அனுபவமும், மக்கள் தொடர்பாளர் பணியும் அவருக்கு பெரிய உதவி செய்கின்றது. படத்தில் பணிபுரிந்தவரே மறந்து போன பல விஷயங்களை இவர் நினைவு படுத்துவதைப் பார்க்கும் போது ஆச்சர்யம்தான் வருகின்றது. 

அவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் எழுதிய தொடரை ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் புத்தகமாக வெளியிட்டுள்ளது. நல்ல டிஸ்கவுண்ட் கிடைத்ததால் வாங்கி விட்டேன். மூன்று பாகம், கிட்டத்திட்ட 150 கட்டுரைகள்.

சினிமா உலகம் என்று அல்ல, பொதுவாக வாழ்க்கை வரலாறு, வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை படிப்பது எனக்கு பிடிக்கும். அடுத்தவர் டைரியை எட்டிப்பார்ப்பது போன்ற ஒரு அல்ப குஷி என்றும் வைத்துக் கொள்ளலாம். நிஜவாழ்வில் நடக்கும் பல விஷயங்கள் நம் கற்பனையில் கூட வராது. நிஜத்தில் நடக்கும் பல சம்பவங்கள் எவ்வித தர்க்கத்திலும் அடங்காது. 

சினிமா உலகை சேர்ந்தவர்கள் என்னும் போது இன்னமும் கொஞ்சம் சுவாரஸ்யம், பிரபலம் என்பதால் மட்டுமல்ல. அங்கு இருக்கும் நிலையற்ற தன்மை வேறு எந்த தொழிலும் இருக்காது. உதாரணம், எம்ஜிஆர், சினிமா உலகை ஆட்டிப்படைத்தவர். அவருக்காக அனைவரும் காத்து கிடந்தனர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவரே ஒரு காலத்தில் தன் சினிமா வாழ்வை தக்க வைக்க போராடினார் என்றும், ஒரே ஒரு வெற்றியை சந்திக்க தடுமாறினார் என்பது நமக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. அதில் புழங்கும் பெரும் பணம், கருப்பு பணம், பலரின் கூட்டு முயற்சியால் நடப்பது, மற்ற தொழில் மாதிரி ஒரு திட்டம் போட்டு வைத்தால் அப்படியே நடக்காமல் போகும் வாய்ப்பு அதிகம். அது மாதிரியான துறையில் நடக்கும் சம்பவங்கள் அதிக சுவாரஸ்யமானவையாகத்தான் இருக்கும்.

பெரும்பாலும் ரஜினி, கமல் காலத்திற்கு முற்பட்ட தகவல்களே அதிகம். சர்ச்சைகளை பெரும்பாலும் தவிர்த்திருக்கின்றார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி கதை எல்லாம் கேள்வி பட்டிராதது. எம்.ஆர். ராதா சினிமாவை விட நாடகமே முக்கியம் என்றிருந்தவர், ஒரு கட்டத்தில் சினிமா தேவை என்று தன்னுடை நாடகத்தை எல்லாம் விட்டு சினிமாவில் முழு கவனம் செலுத்தியிருக்கின்றார், அஞ்சலிதேவி ஒரு அழுகாச்சி நடிகை என்றுதான் தெரியும், ஆனால் அவர் நடிகர் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தியிருப்பது எல்லாம் ஆச்சர்ய தகவல். அன்றிருந்த கலைஞர்களின் அர்பணிப்பே அவர்களுக்கு அந்த உயரத்தை தந்துள்ளது.  சில கலைஞர்களைப் பற்றிய சித்திரமும் நமக்கு உருவாகின்றது, அவச்சொல் பேசாத தங்கவேலு, அனைவருக்கும் உதவி செய்யும் ஜெய்சங்கர், திரைவாழ்விற்கு எதிரான நிஜ வாழ்க்கை கொண்ட நம்பியார், எப்போது அலுப்புடனே இருக்கும் வி.கே.ராமசாமியின் ஆரம்ப காலங்கள், நாடக உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யங்கள்.  

இந்த கட்டுரைகளுக்கான பல தகவல்களை அவர் வெவ்வேறு புத்தகங்களில் இருந்தே பெற்றிருக்கின்றார். அதை சில இடங்களில் காணமுடிகின்ற்து. எனக்கு தெரிந்த சில புத்தகங்கள் என் பெயர் நாகேஷ், அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள், என் நாடக உலக சிந்தனைகள், சொன்னால் நம்பமாட்டீர்கள். இவை பெரும்பாலும் சுய சரிதைகள், இதில் இருக்கும் தகவல்களில் சுவாரஸ்யமானவற்றை தொகுத்திருக்கின்றார். இந்த தொடருக்காக சுமார் 500 புத்தகங்களை படித்ததாக கூறியிருக்கின்றார்.  இன்னமும் இரண்டு மூன்று பாகங்கள் எழுதலாம், அந்தளவிற்கு விஷயங்கள் இருக்கும். படித்ததை எழுதுவதை விட அவரது அனுபவங்களை எழுதினாலே அதுவே மிக சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும்.

கிடைத்தால் வாங்கி ஜாலியாக படியுங்கள். தமிழ் திரைப்பட உலகைப் பற்றிய மற்றொரு சித்திரம் கிடைக்கும்.

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் அவர்களது மூன்றவது ஆண்டு நிறைவை ஒட்டி அளித்த 30% தள்ளுபடி விலையில் வாங்கியது. புத்தகத்தின் தரம் மிக சிறப்பாக உள்ளது. பா.ரா புத்தகங்களை அச்சிட்டது போக நேரம் கிடைக்கும் போது அச்சடித்த சில புத்தகங்களில் இதுவும் ஒன்று. அடுத்து விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் வாங்கி பார்க்க வேண்டும்.  

குற்றப்பரம்பரை - வேல.ராமமூர்த்தி

குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ப்ரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ஒரு சில ஜாதி மக்களை குற்றப்பரம்பரையினர் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு என ஒரு தனிச்சட்டத்தை கொண்டு வந்தனர். அந்த ஜாதி ஆண்கள் அனைவரின் கை ரேகைகளையும் பதிவு செய்து கொண்டு அவர்களை காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்க வைத்தனர். 

இதில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளர், சேர்வை, அம்பலகாரார் போன்ற ஜாதியினர்கள் என்று கூறப்படுகின்றது. வடஇந்தியாவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் களவுக்கு போனவர்கள், போகாதவர்கள் என்று அனைவரும் பாதிக்கப்பட்டனர். காவல் கோட்டம் நாவலில் ஒரு பகுதியும் இதை அடிப்படையாகக் கொண்டது. 

வேல.ராமமூர்த்தி, இன்று திரைப்படங்கள் மூலம் இன்று பலருக்கு நன்கு தெரிந்தவர். பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார் என்று நினைக்கின்றேன். பெரும்பாலும் ஒரே மாதிரி நடிப்பதால் எந்தப் படம் என்ற குழப்பம் வேறு. பட்டத்து யானை திரைப்பட கதை இவருடையதா என்று தெரியவில்ல அதே பெயரில் இவர் ஒரு நாவலும் எழுதியுள்ளார். தனது தாய், தந்தை இருவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து வேல என்று வைத்துக் கொண்டுள்ளார். தன் சமூகத்தின் கதையை எழுதுவதை விட, இன்று அவர்கள் மீது தேவையில்லாது சுமத்தப்பட்ட ஒரு களங்கத்தை களைய வேண்டும் என்பதே அவரது எண்ணம் என்று தோன்றும்படியான முன்னுரை. 

பள்ளி, கல்லூரி படிக்கும் போது 90களின் இறுதிப்பகுதியில் அடிக்கடி பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்கும். காரணம் ஜாதிக்கலவரங்கள். எங்கள் பகுதிக்கு அருகில் சில சென்சிட்டிவான பகுதிகள் உண்டு. அந்த கலவரங்களைப் பற்றிதான் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். தற்காலத்தில் அடித்தக் கொள்ளும் இரண்டு சமூகங்கள் ஒரு காலத்தில் எப்படி ஒற்றுமையாக இருந்தனர், ஒரு சமூகத்தவனுக்கு பிரச்சினை என்னும் போது இன்னொருவன் ஆயுதம் எடுத்தான், அவன் இன்று எப்படி மாறினான் என்று குமுறுகின்றார். தூர்வை, சூல் நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகளை காணலாம். 

நாவலின் ஆரம்பம் ஆங்கிலேயர்களின் குதிரைப்படை வீரர்களிடமிருந்து தப்பித்து ஒடும் மக்களிடம் ஆரம்பிக்கின்றது. வேயன்னா அக்கூட்டத்தின் தலைவர், அவரது மகன் அக்கூட்டத்திலிருந்து குதிரைக்காரனால் தூக்கி செல்லப்பட்டு, ஒரு ஆங்கிலேய அதிகாரியிடம்  ஒப்படைக்கப்பட்டு அங்கு வளர்கின்றான். மீதமிருக்கும் கூட்டம் பெரும்பச்சேரி என்னும்  ஊரைச் சேர்ந்த வையத்துரை என்னும் சிறுவனால் கொம்பூதி என்னும் கிராமத்தில் குடியமர்த்தப்படுகின்றார்கள். அவர்களின் தொழில் களவு. களவை தடுக்க வரும் ஆங்கிலேயர்களுக்கும் வேயன்னா கூட்டத்திற்குமான போர்தான் நாவல். இறுதியில் வேயன்னாவின் மகனே அவருக்கு எதிரில் நிறுத்தப்படும் போது என்னவாகின்றது என்பதோடு நாவல் முடிகின்றது.

காவல்கோட்டத்தை முதலில் படித்ததால் அந்த நாவலின் நினைவு வராமல் படிப்பது எளிதாக இல்லை. முதல் சில பகுதிகள் தாண்டிய பின்னரே, இந்த நாவல் மனதில் உருக்கொள்ள ஆரம்பிக்கின்றது. ஒரு களவு மிக விரிவாக சித்தரிக்கப்படுகின்றது, தங்க பெட்டியை களவாடுபவர்கள் கடைசியில் அதற்கு ஈடாக பெருவது உணவு தவசங்கள். இவர்கள் களவில் வாழ்பவன் எவனோ ஒருவன்.  திருடுவது என்பது ஒரு வகையான வேட்டையாடுதல் என்பது போலத்தான் நினைக்கின்றார்கள். அக்கம் பக்கம் ஊர்களில் அவர்களுக்கு இருப்பது பயம், அது மரியாதை என்று பரவலாக கொள்ளப்படுகின்றது. 

பெரும்பச்சேரி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதை யூகித்து கொள்ளும்படி விட்டிருக்கின்றார். பெருநாழி என்னும் ஊரில் இருக்கும் நிலங்களில் அவர்கள் வேலை செய்துவருகின்றார்கள். அவர்களுக்காகவே கொம்பூதி மக்கள் பெருநாழியுடன் சண்டையில் இறங்குகின்றார்கள். இன்று எதிர் எதிராக நிற்பவர்கள் ஒரு காலத்தில் தோளோடு தோள் நின்றவர்கள், ஒரு வேளை அன்று அவர்கள் இருந்த பொருளாதார நிலையும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ என்னவோ?

கொம்பூதி மக்களும் வேயன்னாவும் திருட்டு என்னும் ஒரு குற்றத்தை தவிர்த்து பார்த்தால், நேர்மையானவர்கள், வெள்ளந்தி மக்கள். கொடுத்த வாக்கை காக்க களவுக்கு செல்லாமல் பட்டினியாக கிடக்கின்றார்கள், கோவில் திருவிழாவிற்கு மாடு அணைய செல்கின்றார்கள் அதில் உயிர் போனாலும் அது கடவுள் காரியம் என்றே அவர்களுக்கு படுகின்றது, வீடு தீ பற்றி எரியும் போது தங்கள் உயிரை மதிக்காமல்  துணிச்சலாக உள்ளே இறங்கி சிக்கியவர்களை காக்கின்றார்கள். ஊருக்கு உள்ளே நுழைந்த காவலர்களை கொடுரமாக கொலையும் செய்கின்றார்கள். 

தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது, எப்படி சூழல் மாறுகின்றது என்பதை உணராமல் இருக்கும் ஒரு சமூகம் எப்படி பட்ட வீழ்ச்சியை சந்திக்கும், கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்றுதான் நினைக்க வைக்கின்றது. தங்களை ஏமாற்றி ஒருவன் பிழைக்கின்றான் என்பதைக் கூட உணராமல் இருப்பது வெள்ளந்திதனமல்ல. ஆனால் அப்படித்தான் இருந்துள்ளார்கள் என்றால் என்ன செய்ய

நாவலில் வரும் ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவர்கள் ஒரு வேட்டை சமூகம் என்கின்றார். ஆதியில் அனைவரும் அப்படித்தானே, அதில் இவர்கள் மட்டும் எப்படி களவில் இறங்கினார்கள் என்பது அழுத்தமாக இல்லை. காவல்கோட்டத்தில் இருக்கும் அதே பிரச்சினைதான், அவர்கள் ஏன் கள்வர்களாக ஆனார்கள் என்பதைப் பற்றி சொல்லாமல், அது அவர்களின் தொழில் என்றே சொல்லும் போது களவை தடுக்க ஆங்கிலேயர்கள் எடுக்கும் முயற்சி நேர்மையானது என்றே தோன்றுகின்றது.  

களவை தடுக்க ஆங்கிலேயர்கள் கை கொண்ட முறைகள் மீதுதான் விமர்சனங்களை வைக்க முடியும். இரண்டு கிராமத்தவர்களை மோத விடுவது, வன்முறை மூலம் அடக்க முற்படுவது, இது எல்லாம் ஒரு முரட்டு சமூகத்தை அடக்குவதற்கு பதிலாக தூண்டுவதாகவே இருக்கின்றது. இறுதிப்பகுதியில்தான் அந்த கள்வர்கள் மீது பரிதாபம் தோன்றுகின்றது, அந்த வகையில் ஆசிரியருக்கு வெற்றிதான்.   நாவல் ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானமாக போனாலும் பின்னால் விறுவிறுப்பாக செல்கின்றது, ஆனால் இன்னமும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என்றே இறுதியில் தோன்ற வைக்கின்றது. சம்பவங்கள் எல்லாம் அழுத்தமாக இல்லாமல் மேம்போக்காக இருப்பது போன்றே தோன்றுகின்றது.

இந்த கிராமத்து நாவலில் சம்பந்தமேயில்லாத ஒரு கிளைக்கதை வஜ்ராயினி கதை, நாகமுனி, ஹசார் தினார், புதையல் என்று அது ஒரு பாட்டையில் போகின்றது. ஆசிரியர் எதை நினைத்து அதை எழுதினாரோ, என்னைப் பொறுத்தவரை அவர் நினைத்ததை வாசகனிடம் சேர்க்கவில்லை அல்லது எனக்கு அது சுத்தமாக புரியவில்லை. அது பாயசத்தில் விழுந்த கடுகு மாதிரி கிடக்கின்றது.  

ஜூனியர் விகடனில் தொடராக வந்த நாவல், அது சில இடங்களில் தெரிகின்றது. பாரதிராஜா, பாலா போன்றவர்கள் திரைப்படமாக எடுக்க நினைத்த நாவல், காரணம் தெரிந்ததுதான். 

தவறவிடக்கூடாத நாவல் என்று இல்லை, ஆனால் என் படித்தோம் என்று நொந்து கொள்ள வைக்காத நாவல். வாங்கியதற்கு வருத்தப்பட வைக்காது. கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள். 

சிக்க வீர ராஜேந்திரன் - மாஸ்தி ஐயங்கார்

கன்னடத்திலிரிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல். பொதுவாக எனக்கு மொழி மாற்ற நூல்களைப் பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது. சில பல மோசமான மொழி பெயர்ப்பு நூல்கள் செய்த வினை. ஆனால் இந்த நாவல் எங்கும் இது ஒரு மொழி பெயர்ப்பு என்பதை நினைவு படுத்தவில்லை. 

கர்நாடகாவின் குடகு மலை காவிரி நதியின் பிறப்பிடம். மலைகள் சூழ்ந்த பகுதி. இன்று பெரும்பாலும் காபி தோட்டங்களால் நிறைந்த பகுதி. நல்ல மழை உண்டு. குடகின் கலாச்சாரமும், பண்டிகைகளும் தனித்தன்மையானவை. கன்னடர்களிடமிருந்து அவர்களின் கலாச்சாரம் கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அவர்களுக்கு என்று பல பண்டிகைகள் உண்டு. அதில் பெரும்பாலனவை விவசாயம் சார்ந்தவை. விதை விதைக்க ஒரு பண்டிகை, அறுவடைக்கு ஒரு பண்டிகை. குடி என்பது அவர்களின் வாழ்வில் ஒரு அங்கம். வீட்டில் செய்து விற்கப்படும் மதுவகைகளை அங்கு காணலாம். ஹோம் மேட் ஒயின். விதவிதமான ஒயின்களை அங்கு கண்டேன். பலவித பழங்களில் செய்யப்பட்டவை, பூக்களில் செய்யப்படுபவை, வெற்றிலையில் தயாரிக்கப்பட்டதை கூட பார்த்தேன். வேட்டையும், போரும் அவர்களது கலாச்சாரம். நாட்டு துப்பாக்கிகளும் புழக்கத்தில் உண்டு என்றும் கேள்வி. அவர்களுக்கு என்று தனிச் சின்னமும் உண்டு. அதில் இருப்பது விவசாயக்கருவிகள், சூரியன், கதிர். பொதுவாக வேட்டையயையும் விவசாயத்தையும், அடிப்படையாக கொண்ட சமூகம். 

குடகும் பெரும்பாலும் தனித்தே இருந்து இருக்கின்றது. எந்த மன்னரும் அதை முழுவதும் தன் ஆளுமைக்கு கீழே கொண்டு வர  முடிந்ததில்லை. அவர்களது நிலப்பரப்பே அவர்களை பாதுகாத்து கொண்டு வந்துள்ளது. குடகை சுற்றி பல அரசுகள் இருந்தாலும், குடகர்கள் சுதந்திரமாகவே இருந்து வந்துள்ளனர். அப்படி இருந்த குடகு கடைசியில் ஆங்கிலேயர் கைவசம் சென்றது. குடகின் கடைசி மன்னர் சிக்க வீர ராஜேந்திரன். அவனது மோசமான ஆட்சியினால், அதைக் காரணமாக வைத்து ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து ஆட்சியை கைப்பற்றினர். அந்த சரிவைப் பற்றி பேசுவது இந்த நாவல்.

வழக்கமாக நாம் படிக்கும் சரித்திரக் கதைகள், ஒரு அரசனின் சாதனையை, பொற்கால ஆட்சியை போற்றுவதாக இருக்கும். அதுவும் பெரும்பாலும் கற்பனையாகவே இருக்கும். புலிகேசியை நரசிம்மன் வென்றான் என்ற ஒரு வரி ஒரு நாவலை உண்டாக்கலாம். கல்கி, சாண்டில்யன் வகுத்த வழியிலேதான் பெரும்பாலன சரித்திர கதைகள் வந்துள்ளன. விலக்குகள் சில பிரபஞ்சனின் வானம் வசப்படும், மானுடம் வெல்லும், ரத்தம் ஒரே நிறம், டணாய்க்கன் கோட்டை போன்றவை. இந்த நாவல் சரித்திரம் வீழ்ந்த மனிதர்களைப் பற்றியும் பேசலாம் என்று காலத்தாலும், சூழ்நிலையாலும் வீழ்ந்த ஒருவனின் கதையைப் பேசுகின்றது.

குடகின் அரசு என்பது அங்கிருக்கும் குடகு மக்களால் அமைக்கப்படுவது. குடகின் அரசர்கள் லிங்கம் கட்டிக் கொண்ட சைவர்கள். லிங்காயத்துகள். ஆனால் அங்கு பெரும்பாலனவர்கள் குடகர்கள், குடகர்கள் ஆட்சி பொறுப்புக்கு வருவதில்லை. குடகர்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அரசானாக இருந்தது இல்லை என்பது கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம். குடகின் கடைசி சக்தி வாய்ந்த அரசன் தொட்ட வீர ராஜேந்திரன். அவரது காலத்தில் மிகச்சிறப்பாக ஆட்சிமுறை இருந்து வந்துள்ளது. அவருக்குப் பின்னால் அவரது மகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அவரது எண்ணம், ஆனால் அதற்கு பதிலாக அவரது சகோதரன் லிங்கராஜன் ஆட்சிக்கு வருகின்றார், அதற்கு பின்னர் அவரது மகன் சிக்க வீர ராஜேந்திரன். பெரும்பாலான சம்பவங்களுக்கு சரித்திர ஆதாரங்கள் உண்டு. கதைக்காக சில  கற்பனை பாத்திரங்களும் உண்டு.

சமீபத்திய சரித்திரம் என்பதாலும், ஆங்கிலேயர்களின் அனைத்தையும் ஆவணப்படுத்தும் நடைமுறையாலும் பல சம்பவங்கள் சரித்திர பூர்வமானவை என்று நம்பலாம். 

ஹைதர் அலி, திப்பு சுல்தான் இருவரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார்கள் என்றே கற்று கொடுக்கப்பட்டிருக்கும், ஆனால் அவர்கள் மைசூர் மன்னரின் கீழ் பணியாற்றி, பின்னர் மைசூரை கைப்பற்றினார்கள். குடகின் மீது படையெடுத்து அங்கு பல அட்டூழியங்களை செய்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. மைசூர் மன்னர்கள் சார்பாக நிற்பதாக உள்ளே வந்த ஆங்கிலேயர்கள், மைசூரை தங்கள் வசம் வைத்து கொண்டனர், பின்னர் உடையார் வம்சம் அதை பெற்றது. 

குடகில் நடந்தது கிட்டத்திட்ட அதே. ஆங்கிலேயர் உதவியுடன் தொட்ட வீர ராஜேந்திரன் ராஜ்ஜியத்தைப் பெற்றாலும்,ஆங்கிலேயர்கள் அங்கு அதிகாரம் செலுத்தவில்லை. நட்பாக இருந்து வந்துள்ளனர். சிக்க வீர ராஜேந்திரனின் மைத்துனன் சென்ன பசவன் ஆங்கிலேயர் உதவியை நாட, உள்ளே நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றி கொண்டனர். இதற்கு மிகவும் உதவியாக இருந்தது சிக்க வீர ராஜேந்திரன்தான். அவனது துர்நடத்தை மக்களிடமும், உறவினர்களிடமும், அதிகாரிகளிடமும், குடகர்களிடமும்  அவனிடமிருந்து தப்பினால் போதும் என்ற எண்ணத்தை உண்டாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் குடகை கைப்பற்றி சிக்க வீரனை வேலூருக்கு நாடு கடத்துகின்றனர். பின்னர் அங்கிருந்து காசிக்கு அனுப்புகின்றனர். அங்கு அவன் மனைவி காலமாகின்றாள். சிக்க வீர ராஜனின் மகள், கிறிஸ்துவ மதத்திற்கு மாறி லண்டன் சென்று ஒரு ஆங்கிலேய கேப்டனை மணந்து கொள்கின்றாள். அந்த கேப்டன் இவர்களின் ராஜ குடும்பத்து நகைகளுடன் செல்லும் போது மாயமாகின்றான்.  புட்டவ்வா என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த பெண்ணின் மகள் எடித் சாது, அவளது அத்தையால் வளர்க்கப்படுகின்றாள்.

நாவலில் வரும் பல கடிதங்கள் ஆவணப்படுத்தப்பட்ட கடிதங்களாக இருக்க வேண்டும், அந்த காலத்தில் ஆங்கிலேயர்களிடம் மக்களுக்கு எப்படி ஒரு மரியாதை வந்தது என்பதை அந்த கடிதங்கள் விளக்குகின்றன. மிக மரியாதையான மொழியில், தேன் தடவி எழுதப்பட்ட கடிதங்கள், அவர்கள் செய்வது எல்லாம் மக்களின் நன்மைக்கே என்று அனைவரையும் நம்ப வைத்திருக்கும். அதிகார கைப்பற்றலுடன், அவர்களின் மதமாற்ற வெறியும் நாவலில் நன்றாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. விவாதத்திற்கு வரும் பாதிரியார், கேள்விகளை கேட்டுக் கொண்டே வரும் போது, அவரை பதில் கேள்வி கேட்கும் போது தடுமாறுகின்றார், கிறிஸ்துவத்தை கேள்வி கேட்க அவர்களது ஒரு நூலை முழுவதும் படித்தால் போதும், ஆனால் இந்து மதத்தை கேள்வி கேட்க எத்தனை நூல்களை படித்து தேற வேண்டும். ஒன்றுமில்லாமல் அரைகுறையாக உளறுவதும் இன்றும் தொடர்கின்றது.

இந்திய ஆட்சிமுறையில் பெண்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. மகாபாரத காலத்திலிருந்து பெண்கள் ஆட்சியில் பங்கு வகித்தே வந்துள்ளனர். சமீபத்திய ஜமின்தார் காலம் வரை, பெண்களுக்கான பங்கு உண்டு. இதிலும் பல பெண்கள். தொட்ட வீரன் தன் மகளுக்கே ஆட்சியை தர எண்ணுகின்றான், லிங்கராஜனின் மகள் தேவம்மாவும் ஆட்சியை அடைய எண்ணுகின்றாள். சிக்க வீரனின் தொல்லை தாங்காமல், மந்திரிகள் அவனது மனைவியை ஆட்சி பொறுப்பை ஏற்க அழைக்கின்றனர், ஆங்கிலேயர்களும் சிக்க வீரனின் மகளை ஆட்சி பொறுப்பில் அமர்த்துவதாக கூறியே உள் நுழைகின்றனர். இறுதியில் அதுவும் நடக்காமல் அந்த பெண் லண்டனில் சென்று வாழ்கின்றாள்.

சிக்க வீர ராஜேந்திரம் மீது ஒரு பரிதாபத்தை உண்டாக்கிவிடுகின்றது. ஒரு காலகட்டத்தின் கடைசி திரி. காலம் மாறிக் கொண்டு வருவதை முன்னரே உணர்ந்து மாறுபவனே பிழைக்க முடியும். சிக்க வீரன் அந்த மாற்றத்தை உணராது தவறு மேல் தவறு செய்வதைப் பார்க்கும் போது ஒரு பரிதாபம் வருகின்றது. 

நாவலில் அதீதமான வர்ணனைகள், காடு மலை பற்றிய விவரிப்புகள் எல்லாம் கிடையாது. வெகு இயல்பாக ஒரு கதையை சொல்லும் நடை, இயல்பான உரையாடல்கள், சின்ன சின்ன விஷயங்கள்தான் இது மொழிபெயர்ப்பு என்பதை உணரச்செய்யும். சரித்திர பாத்திரங்களுடன் உண்மை பாத்திரங்களும் கலந்துதான் நாவல் படைக்கப்பட்டிருகின்றது. வழக்கமான சரித்திர கதைகளில் வரும் இரும்பு சலாகை மார்பு கொண்ட நாயகன் கிடையாது, வெகு இயல்பான பாத்திரங்களே. 

நமது கற்பனைப்படி அரசன் நினைத்தால் எதுவும் செய்யலாம், இருண்ட நிலவறைகளில் பொன்னும் மணியும் கொட்டி கிடக்கும், கை தட்டினால் நூறு பேர் வருவார்கள். இந்த நாவலைப் படித்தால் அது எல்லாம் மறையும், அரசனுக்கு கடன் தரவும் செட்டியார்கள் தேவை (கட்டபொம்முவின் தம்பி ஊமைத்துரை ஆங்கிலேயர்கலை எதிர்க்க பலரிடம் கடன் வாங்கினார் என்று எங்கோ படித்த நினைவு), அரசாங்கத்தின் செலவு தனி, அரசனின் செலவு தனி. ராணி வாசத்தின் செலவுக்கு அரசு குறிப்பிட்ட அளவே பணம் தரும், அதிகம் போனால் நகையை விற்க வேண்டியதுதான், அரசனாக இருந்தாலும் பெரியவர்கள் பேச்சுக்கு காது கொடுத்து கேட்கத்தான் வேண்டும், மந்திரிகளிடம் முறைத்து கொண்டாலும், அவர்கள் மீது கோவப்பட்டாலும் ஆட்சி நடத்த அவர்களின் தயவு தேவை. இது எல்லாம் சரித்திர நாவகளில் புதிதான விஷயம் இல்லையா?

தமிழில் ஹேமா ஆனந்த தீர்த்தனால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சிறப்பான மொழி பெயர்ப்பு. விலை..., விலையை கேட்டால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். 32, சரியாகத்தான் உள்ளது முப்பத்திரண்டு ரூபாய். மிகப்பழைய பதிப்பு, இப்போது எங்காவது கிடைத்தால் உடனே வாங்கி வைத்து கொள்ளுங்கள். 

முன்னுரையில் கன்னட இலக்கியத்தின் வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ளது.

நாவலின் பிற்சேர்க்கை சுவாரஸ்யமானது, மாஸ்தி ஐயங்கார் அவரது நண்பருடன் இந்த நாவலைப்பற்றி விவாதித்துள்ளார், அந்த நண்பர் லண்டன் சென்ற போது அவர் மைசூரைப் பற்றி பேசுவதை கேட்ட ஒருவர் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவர் சிக்க வீர ராஜேந்திரனின் வாரிசு. நண்பரிடம் பல ஆவணங்களை காட்டியிருக்கின்றார் அவர். அவர் கூறியது "அனைத்தும் சரியாக நடந்திருந்தால் குடகு என்னுடையதாக இருந்திருக்கும்". 

ஜெயமோகனின் மதிப்புரை இன்னமும் பல விஷயங்களை விளக்குகின்றது. 

எழுத்தாளர் வா.மணிகண்டனின் மதிப்புரை


வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்

 வயது வந்தவர்களுக்கு மட்டும் - கி.ராஜநாராயணன்

தலைப்பே சொல்லும் என்ன மாதிரியான புத்தகம் என்று. பின்னடித்து ரகசியமாய் தொங்கவிடும் புத்தகமல்ல. 

மெலிதான காமம் கலந்த கதைகள் பல படித்திருப்போம், காமத்தை அடிப்படையாக கொண்டும் கொஞ்சம் பலான புத்தகங்களுக்கு நெருங்கி வரக்கூடிய புத்தகங்களும் உண்டு, படிப்பவர்களை அதிர்ச்சியாக்கவே வலிய புகுத்திய கதைகளும் உண்டு. இவை அந்த மாதிரியல்ல.

கிராமத்து பக்கங்களில் சில வசவுகள், சில பழமொழிகளை ஆராய்ந்தால் அதன் பின்னால் ஏதாவது ஒரு விவகாரமான கதை இருக்கும். விக்கிரமாதித்யன் கதைகளில் பல கதைகள் ஆண் பெண் உறவை அடிப்படையாக கொண்டவை. கிராமப்பக்கம் இருக்கும் இது போன்ற கதைகளை தொகுத்து புத்தகமாக்கியிருக்கின்றார் கி.ரா.

ஆண் - பெண் உறவை மையமாக கொண்ட குட்டி குட்டி கதைகள். பச்சையான வார்த்தைகள் இல்லாமல், குறிப்பு மொழியில் சொல்லப்படும் கதைகள். கெட்ட வார்த்தை கதைகள் என்று அழைக்கின்றார்.

பல கதைகள் பெண்களை மையப்படுத்தியே இருக்கின்றது. கணவனை விட்டு வேறு ஆண்களுடன் தொடர்பு கொள்ளும் பெண்கள், கல்யாணம் கட்டியும் ஒன்றும் தெரியாத ஆண்கள் என்று. இது மாதிரியான கதைகளின் உண்மையான மூல கதை சொல்லி ஆணா, பெண்ணா என்பது சுவாரஸ்யமான கேள்வி. பெரும்பாலான கதைகள் நகைச்சுவை கதைகள்தான். கொஞ்சம் விரிவாக்கப்பட்ட அடல்ட் ஜோக்.

சில கதைகளை படிக்கும் போதே அதன் வேறு திரிபுகளை நாம் கேள்விப் பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது புராணங்களில் இருந்த கதையை கொஞ்சம் மாற்றி பரப்பியிருக்கலாம்.இவை பெரும்பாலும் வாய் மொழியாகவே வளர்ந்த கதைகள், ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் போகும் போது மாறுதலடைந்து செல்லும். கி.ராவே தாத்தா, அவர் யாரோ ஒரு தாத்தாவிடம் கேட்ட கதைகள் என்கின்றார். நாட்படு தேறல் போல. 

முன்னுரையில் ஏன் இந்த புத்தகத்தை தொகுத்தேன் என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். படிப்பவர்கள் பலரும் இதை வெளியில் சொல்ல மாட்டார்கள், ரகசியமாக வைத்து கொள்வார்கள் என்கின்றார். முன்பு இருக்கலாம். இது கேம் ஆஃப் த்ரோன்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் காலம். கிண்டிலில் தமிழ் புத்தகங்களை தேடினால், ஏராளமாக கண்ணில் படுகின்றது. அந்த குப்பைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இதில் உள்ள ஒரிஜினாலிட்டி, பல ஆண்டுகாலம் புழங்கியதன் தரம். 

பொன்னியின் செல்வன் - கல்கி

பொன்னியின் செல்வனைப்பற்றி யாரும் எழுதாத ஒன்றை எழுதிவிடுவது கடினம். பொன்னியின் செல்வனை வருடம் ஒருமுறையாவது படிப்பது வழக்கம். எப்போது படிப்பது என்பது மனநிலையை பொறுத்தது. ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றால் பொன்னியின் செல்வன் நினைவு வராமல் போகாது. இந்த முறை மணிரத்னம் எடுக்கும் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகர்கள் பற்றி வெளிவந்த செய்திகள் மீண்டும் படிக்க வைத்தது. 

பொன்னியின் செல்வனை முதல்முதலில் படிக்கும் போது வயது பதினொன்று. ஏழாம் வகுப்பு, ட்யூஷன் முடித்து வரும் வழியில் நூலகம். பொன்னியின் செல்வன்,வீட்டிற்கு கொண்டுவந்து படித்தேனா இல்லை அங்கேயே படித்தேனா என்று நினைவில் இல்லை. கடைசி அத்தியாயத்தை எவனோ ஒரு பரதேசி கிழித்து வைத்திருந்தான். பிறகு பல ஆண்டுகள் படிக்க முடியாமல், பத்தோ, பதினொன்றோ படிக்கும் போது நண்பனின் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்தது என்று கேள்விப் பட்டு சென்று கேட்டேன். யாரிடமும் எதையும் இரவலாக கேட்டதில்லை. இரண்டே புத்தகங்கள் இது ஒன்று, தில்லானா மோகனாம்பாள் இன்னொன்று. பயங்கர பிகு. ஒவ்வொரு பாகமாகத்தான் கொடுப்பேன், ஒன்றை படித்து முடித்து தந்தால்தான் அடுத்த பகுதியை தருவேன். நல்லவேளை படித்த பகுதியில் பரிட்சை வைப்பேன் என்று சொல்லவில்லையே என்று சந்தோஷமாக இருந்தது. ஒரே வாரத்தில் படித்து முடித்தேன். சில புத்தகங்கள் படிக்கும் போது மனதில் ஒரு ஜிலுஜிலுப்பு உண்டாகும், அதில் ஒன்று பொன்னியின் செல்வன். மோகமுள் மற்றொன்று. 

கல்லூரி படிக்கும் போது தொடராக கல்கியில் வந்து கொண்டிருந்தது. எனக்காகவே என் மாமா வாங்கினார். அதிலும் பிரச்சினை இரண்டாம் பாகம் பாதி சென்றபிறகு வாங்க ஆரம்பித்தார். அவரே எனக்காக முதல் பாகம், கல்கியில் வந்த தொடரே பைண்ட் செய்யப்பட்டதை மதுரையில் வாங்கி தந்தார். உள்ளே ஒரே ஒரு அத்தியாயம் மட்டும் பத்மவாசனின் படங்கள் இல்லாமல், முதன் முதலாக தொடர் வெளிவந்த போது வரைந்த மணியத்தின் படங்களுடன். முதல் முறை கல்கியில் வந்த அத்தியாயத்தை எப்படியோ அதில் சேர்த்திருந்தனர். ஆழ்வார்க்கடியான் பழையாறை அரண்மனையில் இருக்கும் பகுதி. கல்லூரி முடிந்து சென்னை வந்த பின்னும் ஊருக்கு வரும் போது எல்லாம் அனைத்தையும் சேர்த்து வைத்து பைண்டிங் செய்த புத்தகம்தான் இன்றும் இருக்கின்றது. இரண்டாம் பாகம் அதே கல்கி பைண்டிங்க் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எங்காவது பழைய புத்தக கடையில் தேட வேண்டும். அந்த புத்தகத்தை எடுத்து படிக்கும் போதே ஒரு குஷி, அந்த பழைய பேப்பரின் வாசனை, படங்கள் என்று தனி உலகில் சில நாட்கள் திரிய முடியும். அவை அனைத்தும் பெங்களூரில் மாட்டிக் கொண்டதால், கிண்டிலில் தான் படிக்க முடிந்தது. 

சில புத்தகங்களை திரும்ப திரும்ப படிக்க முடியாது. குறிப்பாக துப்பறியும் நாவல்கள், அவற்றின் பலமே அந்த திருப்பங்கள், முடிவுதான். இதுவும் கிட்டத்திட்ட அப்படித்தான் என்றாலும், சுமார் 25 தடவைக்கு மேல் படிக்க முடிகின்றது. ஒன்றிரண்டு தடவை, கடைசி பாகம் முடிந்த கையோடு, முதல் பாகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்திருக்கின்றேன். இந்த பிரம்மாண்ட நாவலில் சரித்திரம் என்பது சும்மா கையளவுதான். ராஜராஜன் மக்கள் அபிமானம் இருந்தும் தனக்கு கிடைத்த சிம்மாசனத்தை உத்தம சோழனுக்கு விட்டு கொடுத்தது, ஆதித்த கரிகாலன் ரவிதாசன் முதலியவர்களால் கொல்லப்பட்டது. 

கல்கி ஒரு காந்தி பக்தர். காந்தி சுதந்திரத்திற்கு பின் நேருவை பிரதரமாக்கியது அவர் பார்வையில் ஒரு மிகப்பெரிய தியாகமாக இருந்திருக்கலாம். நாவலின் உச்சம் என்பதே அந்த தியாக நிகழ்வு என்று கல்கியே குறிப்பிடுகின்றார். காந்தியை மனதில் வைத்தே எழுதியிருப்பார் போல.

வந்தியத்தேவன் சரித்திர பாடங்களில் ஒரு ஓரமாக வந்துசெல்லும் பாத்திரம். அவனின் வாணர் குலம், சில பல பாடல்கள் மூலம் இன்றும் வாழ்ந்து வருகின்றது. வந்தியதேவனின் மனைவி குந்தவை என்று கல்வெட்டுகளில் குந்தவையுடன் அறியப்படும் ஒரு சோட்டா பாத்திரம். கல்கி என்னும் ஒரு எழுத்தாளன் மூலம் இன்று தனக்கென ஒரு குணாதிசயம், தனித்துவம் அனைத்தும் பெற்று ஒரு மிகப்பெரிய சரித்திர புருஷனாகி விட்டான். (ர் என்ன வேண்டியிருக்கின்றது, நமது வந்தியதேவனுக்கு). நேரடியாக வாசகனுடன் பேசும் நடைதான், இலக்கிய தரிசனங்கள், வாழ்வின் சிக்கல்கள் பற்றிய கோணங்கள், அன்றைய வாழ்க்கை முறை போன்றவை ஏதுமில்லை. நேரடியாக சொல்லப்படும் கதை. இருந்தும் இத்தனை ஆண்டுகாலம், பலர் படிப்பதே போதும் தமிழகத்தின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக கொண்டாட.

பலர் பொன்னியின் செல்வன் எல்லாம் போரடிக்கும் என்று சொல்வதை படித்துள்ளேன். அவர்களின் மற்ற கருத்துக்களை படிக்கும் போது தெரிவது அவர்களுக்கு இருப்பது ஒருவித உயர்வுணர்ச்சி (சுப்பீரியர் காம்ப்ளெக்ஸ்), அவர்களுக்கு பொன்னியின் செல்வன் மிகவும் வெகுஜன எழுத்து அது பிடிக்கும் என்று சொன்னால் க்ரீடம் விழுந்து விடும். பலர் எம்.ஜி.ஆர், ரஜினி படம் பிடிக்காது என்பார்கள் இதே காரணம்தான்.  

கல்கி ஆராய்ச்சி இல்லாமல் எனோதானோ என்றும் எழுதவில்லை. ஆதாரங்களுடனேதான் எழுதியுள்ளார். அனிருந்தர் சரித்திரத்தில் இருந்தவர், ரவிதாஸன் முதலானோர் உண்மையில் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள். ரவிதாஸன் ஒரு பிராமணன், அதை கல்கி மாற்றி மந்திரவாதியாக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு, பிராமணனாக காட்டுவதில் அவருக்கு தர்மசங்கடம் இருந்திருக்கலாம். ராஜராஜன் பல பெண்களை திருமணம் செய்தவன் அதையும் மனதில் வைத்தே எழுதியுள்ளார். (சிவகாமியின் சபதம் நாவலில், நரசிம்மர் ராமர் மாதிரி ஏகபத்தினி விரதர் என்று கூறுவது போன்று வரும், இதில் அது போன்ற புகழ்ச்சிகளை கவனமாக தவிர்த்துள்ளார்). திருவயிறு உதித்தவர் என்று வரும் ஒரு கல்வெட்டு வரிகளை வைத்தே ஒரு மிகப்பெரிய முடிச்சை போட்டிருப்பது எல்லாம் அவரின் கற்பனை வளத்திற்கு சான்று.

கதை நடப்பதே மொத்தம் ஆறு மாதகாலம். ஆடி பதினெட்ட்டில் ஆரம்பித்து, பங்குனியில் முடிவடைகின்றது. இது தொடராக வெளிவந்த காலம் மூன்றரை வருடம். ஆதித்த கரிகாலன் கொலையுண்ட இரவு, அதற்கு முந்தைய இரண்டு நாள் மட்டுமே கிட்டத்திட்ட ஒரு வருடம் வந்திருக்கும். அவரது எழுத்தில் எந்தளவு ஆற்றலிருந்தால் ஜனங்களை அந்தளவிற்கு இழுத்து பிடித்து வைத்திருக்க முடியும். 

இது சினிமாவாக எப்படி வரப்போகின்றது என்ற ஆர்வம் பெரிதாக உள்ளது. ஜெயமோகன், இதன் மூலம் நம் தமிழர் பெருமையை உலகிற்கு கொண்டு செல்ல முடியும் என்கின்றார். (பிரதமர் தனது பல உரைகளில் சோழர்கள் பற்றி, அவர்களின் கடற்படை பற்றி, ராஜேந்திரன் பற்றி பேசியிருப்பதை எல்லாம் கண்டு கொள்ள தேவையில்லை. முதல்வர் ஏதாவது பேசினால் பாரட்டலாம்.) பொன்னியின் செல்வன் அப்படிப்பட்ட நாவல் இல்லை, கதை நடக்கும் கட்டத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் அப்படி ஒன்றும் பெரிதாக இருந்து விடவில்லை. சோழ சாம்ராஜ்ஜியம் உச்சத்தில் இருந்தது, ராஜேந்திர சோழன் காலத்தில், ராஜராஜன் அதற்கு பாதை போட்டிருந்தாலும் பொன்னியின் செல்வனில் அந்த நிகழ்வுகளும் இல்லை. முழுக்க முழுக்க சதி, சஸ்பென்ஸ் என்றே போகும் நாவல். போர்க்கள காட்சிகள் எடுப்பதாக செய்தி வந்தது, பொன்னியின் செல்வனில் நேரடி போர்களே கிடையாது. ராஜாதித்யர் கலந்து கொண்ட தக்கோல போரும், விஜயாலயச் சோழன் கலந்து கொண்ட போரும் சிறு காட்சி துண்டுகளாக வந்து போகும். வீரபாண்டியனை கொன்றதை காட்டும் போதும் பெரும் போரை காட்டுவதில்லை. எந்த போரை மணிரத்னம் காட்ட போகின்றாரோ. 

மருந்தை நினைக்கும் போது குரங்கை நினைக்காத கதையாக, படிக்கும் போது திரைப்படத்தில் இது எப்படி வரும், கார்த்தியின் கேனச்சிரிப்பு எப்படி இருக்கும், ஜெயம்ரவி தன் கீச்சு குரலில் கம்பீரமாக பேசினால் என்னவாகும், அவரின் அக்காவாக திரிஷா. கொஞ்ச பக்கங்களுக்கு இம்சையாக இருந்தது. ஆனால் பத்து அத்தியாயம் தாண்டியவுடன், வழக்கமான வந்தியதேவனும், ஆழ்வார்க்கடியானும் வந்துவிட்டார்கள். கல்கியின் எழுத்து வன்மை அப்படி. 

ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான் இந்த இரண்டு பாத்திரங்களுக்கான நடிகர்கள் மட்டுமே ஓரளவு நம்பிக்கை அளிக்கின்றார்கள். பார்த்திபன் சின்ன பழுவேட்டரையராம் கஷ்டம். கார்த்தி அந்த கேனச்சிரிப்பை விட்டால் ஓரளவிற்கு தேறலாம். பார்ப்போம்.   

இந்த தொல்லைக்கு நடுவில் ஆர்வக்கோளாறுகள் ஒரு பக்கம், ராவணன் படத்திற்கு வேறு தலைப்பை வைத்து எடுத்திருந்தால் பலருக்கு பிரச்சினை இருந்திருக்காது. ஸ்டால்க்ஹொம் சின்ட்ரோம் பிரச்சினை, அதை ராமன்-ராவணன் என்று குழப்பிக் கொண்டார்கள். அதை வைத்து கொண்டு பொன்னியின் செல்வனை கிறிஸ்துவ படமாக எடுப்பார், தாமஸ் வருவார், சிலுவை இருக்கும், விபூதி இருக்காது என்பது எல்லாம் அதீதம். இந்த ஆர்வக்கோளாறுகள் தங்களின் மேதாவித்தனத்தை காட்ட உளறுவதை தாங்கமுடியவில்லை. அவர் ஒரு நல்ல இயக்குனர் என்பதை மறந்து விடுகின்றார்கள். சுகாசினி யாருக்கும் குரல் கொடுக்காதவரை நல்லது. சிலபல திரிபு வேலைகளை செய்யலாம் என்பதை மறுக்க முடியாது. பொன்னியின் செல்வனுள் பல ஆழ்வார் பாடல்களும், சைவ பாடல்களும் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மூன்று அத்தியாயங்கள் முழுவதும் இந்து மதப் பெருமைகளை பேசுகின்றன. கல்கி எழுதிய சைவ-வைணவ மோதல்களை எல்லாம் இன்று காட்சியாக வைக்க முடியாது. ஆழ்வார்க்கடியான் பேசுவதை அப்படியே வைத்தால் கூட கோர்ட்டுக்கு யாராவது போக வாய்ப்புண்டு. இதில் மணிரத்னம் எப்படி எடுத்தாலும் குறைவாகத்தான் இருக்கும். 

படத்தை எப்படியும் உடனே சென்று பார்க்க போவதில்லை. என்னதான் படத்தை பார்த்தாலும் நமக்குள் இருக்கும் வந்தியதேவனையும், ஆழ்வார்க்கடியானையும் மாற்ற முடியாது. உச்சகட்ட திறனை காட்டி நடித்தால் தவிர. (தில்லானா மோகனாம்பாள் படிக்கும் போது சிவாஜி எல்லாம் மறைந்து வேறு ஒரு சண்முகம் எழுந்து வந்தான், ஆனால் வைத்தி மட்டும் நாகேஷ்தான், அதை மாற்ற முடியவில்லை, அப்படி நடிப்பவர்கள் யாரும் இதில் இல்லை)


பயம் (அவருக்கு வராதது)

குளிக்க போகலாமா, இல்லை வெயில் வந்த பிறகு குளிக்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தார் நமச்சிவாயம். எப்படியும் நல்ல வெயில் வர பதினொன்று மணியாகும், அதுவரை எப்படி சாப்பிடாமல் இருப்பது, குளிக்காமல் சாப்பிட மனசு ஒப்பவில்லை. சாப்பிடாவிட்டால் காலை மாத்திரைகள் போட முடியாது, மாத்திரை போடாவிட்டால் கொஞ்சம் கட்டிற்குள் இருக்கும் சர்க்கரை எப்படி ஆகுமோ. ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று சோபாவில் அமர்ந்தார்.

"சகுந்தலா, எனக்கு டிபன் கொடுத்துடு, சாப்பிட்டு மாத்திரைய போட்டுக்கிறேன்"

மாத்திரை டப்பாவை எடுத்து, சாப்பாட்டிற்கு முன் பின் என்று பிரித்து வைத்துக் கொண்டார். சகுந்தலா கொடுத்த தண்ணீரில் சில மாத்திரைகளை விழுங்கினார். இட்லியில் கை வைக்கும் போது "விநாயகனே வினை தீர்ப்பவனே" என்று சீர்காழியின் கம்பீர குரல் எழுந்தது. பதறி அடித்து எழுந்தவர், தண்ணீரை தட்டி, தட்டை உருட்டி கைபேசியை எடுத்து பார்த்தார். அவரது அண்ணன் மகன் குமார்.

"சித்தப்பா, சித்தப்பா போய்ட்டாரு"

"என்னடா சொல்ற, யேய் இங்க வா அவன் என்னவோ சொல்றான், எனக்கு புரியல"

"குமாரு, என்னடா என்ன ஆச்சு"

"சித்தி, சித்தப்பா போய்ட்டாரு"

"மூதேவி, இப்ப அவர்கிட்டதான பேசுன, என்ன உளர்ற, எழவு தண்ணி எதுவும் போட்டுட்டு உளர்றியா"

"அவரோட, சித்தப்பா பையன் சிவசங்கரன். கொரானா, காச்ச இருந்துக்கு மூணுநாளு, மனோகரு ஏதோ மாத்திரைய வாங்கி கொடுத்து இருக்கான், குறையல. அப்புறம் ஹோமியோபதி மாத்திரை வாங்கி கொடுத்து இருக்காங்க. ஒன்னும் கேக்கல. அப்புறம் ஆஸ்பத்திரில சேத்து பத்து நாள் இருந்து ஒன்னும் பலனில்ல. போய்ட்டாரு"

"ஏன்டா, பத்து நாளா ஒடம்பு சரியில்ல ஒருவார்த்த சொல்லல"

"தெரிஞ்சு என்ன பண்ண போறிங்க, போய் பாக்கவா முடியும். கொரனா"

"இப்ப எப்படிடா போறது"

"போறதா ஒன்னும் போக தேவையில்ல, பேசாம தலைல தண்ணிய ஊத்திட்டு பேசாம இருங்க"

"அது எப்படிடா போகாம இருக்குறது, அண்ணன் முறையில்ல, கொரானா எல்லாம் நமக்கு வராதுடா"

"அவரே கொரானா வந்து போயிருக்காரு,  போனவங்க போய்டாங்க, உள்ளவங்கள பத்திரமா பாத்துக்க வேண்டமா, பேசாம இருங்க, பக்கதுலயும் இல்ல 3 மணி நேரம் பஸ்ல வேற போகனும்"

"கார் பிடிச்சி போய்க்கலாம்"

குமார் வீட்டிற்கே வந்து விளக்கினான், "அவரே யாரோ கொரானா பேஷண்ட பாக்க போய் வாங்கிட்டு வந்தாரு, அவரு பண்ண தப்ப பண்ணாத நீயும்". பல மணி நேரம் பேசிய பின்னரே நமச்சிவாயத்திடம் கொரனா பயத்தை விதைக்க முடிந்தது.

ஒரு வாரம், நமச்சிவாயத்தின் புலம்பலுக்கு பயந்து ஐயப்பனே எட்டிப் பார்க்கவில்லை.இரண்டு முறை டாக்டர்தான் வந்துவிட்டு சென்றார்.

ஒருமாதம் கழித்து, ஐயப்பன் வீட்டிற்கு வரும் போது நமச்சிவாயம் கண் நிறைய நீர். அருகில் குமார்.

"என்னடா அழுதுட்டு இருக்க"

"திவாகர் போன் பண்ணினான், அவன் வீட்டு க்ருகப்ரவேசத்துக்கு கூப்பிட. கூப்பிட்டவன் அதோட இருந்திருக்கலாம், சாவுக்கு வராம இதுக்கு வந்தா எப்படி எங்க மூஞ்சில முழிப்பீங்கன்னு கேட்டுட்டான். உங்களுக்கு எவ்வளவு செஞ்சிருக்காரு எங்க பெரியப்பா , அப்படி என்ன உங்களுக்கு உசிரு பயம், அப்படி பயந்துகிட்டு இருக்கனுமா, உங்களுக்கு எல்லாம் கொரனா வராதா அப்படி இப்படின்னு. ஏதோ பாரதியார் கவிதை எல்லாம் சொல்லி திட்றாண்டா. நிதம் சோறு திருடி தின்று அப்படி இப்படின்னு. நான் எங்கடா திருடி தின்னேன்"

"யாருடா திவாகர், தப்பு தப்பா பாட்ட சொல்லிட்டு" என்றார் ஐயப்பன். 

"செத்துப் போனாரே சிவசங்கரன் அவரோட தம்பி பையன். மனொகரோட ஒண்ணு விட்ட தம்பி, அவன் பெரியப்பா, பெரியப்பான்னு உருகுவானேடா. பத்துவருஷம் முன்னாடி இவனுங்க குடும்ப சண்டைய தீர்த்து வைக்க நானும் உங்கப்பனும் அந்த பாடு பட்டோம்"

"சித்தப்பா, திவாகர் அவங்க பெரியப்பா  பத்தி பேசினது எல்லாம் இப்ப சொன்னா, அந்தாள் சமாதியில இருந்து வெளிய வந்து தற்கொலை பண்ணிக்குவாரு, அவன் ஒரு ஆளு அவன் பேசுறான்னு அலட்டிக்கிறயே"

"ரொம்ப பேசிட்டான்டா"

"உனக்கு ஒன்னு தெரியுமா, திவாகரோட சம்சாரம் குழந்தைகளே வரல"

"ஆமா, அவன் மட்டும் பெங்களூர்ல இருந்து தனியாத்தான் வந்தான், அவங்க மாமனார் மாமியா பக்கத்து ஊரு அவங்க எட்டி கூட பாக்கல, அவன் தங்கச்சி ஆளு அட்ரசே இல்ல. பெங்களூர்ல கொரானானு கேள்விப்பட்டதுக்கே பயந்து போய் பொண்டாட்டி , பிள்ளைங்கள மாமியார் வீட்டுக்கு அனுப்பிட்டான். அந்தாள் ஹாஸ்பிட்டல்ல இருந்த பத்து நாளும் எட்டி கூட பாக்கல, செத்தவங்க கிட்ட இருந்து கொரானா பரவாது ன்னு தெரிஞ்ச பின்னாடிதான் தைரியமா வந்திருக்கான்."

"யோவ், நமச்சிவாயம். எல்லாம் தெளிவாத்தான்யா இருக்கானுங்க. அவனவன் வீட்ல இருக்குற எல்லாரையும் பத்திரமா வச்சிட்டு, உன்ன மாதிரி ஆளுங்க கிட்ட இப்படி பேசி குற்ற உணர்ச்சியை தூண்டி விடுறானுங்க. நீ இங்க பொலம்பிட்டு இருக்க அவன் என்னவோ தன் பெரியப்பா மேல அப்படியே பாசம் வழுக்கி விழுகிற அளவு உன்கிட்ட ஊத்திட்டான். அப்படி அவங்க பெரியப்பா மேல பாசம் பொத்துகிட்டு வந்தா, பொண்டாட்டி பிள்ளைங்கள எல்லாம் கூட்டிட்டு வரவேண்டியதுதான. உன்கிட்ட இவ்வளவு பேசினான் இல்ல, உங்கண்ணன் கிட்ட என்ன சொன்னான், ஒன்னும் சொல்லி இருக்க மாட்டான்"

"ஆமா, ஒன்னுமே பேசல" என்றான் குமார்

"நீ ஒரு ஏமாந்த சோணகிரின்னு எல்லார்க்கும் தெரிஞ்சிருக்கு" என்றபடி குமாரைப் பார்த்தார்

"ஆமா, மாமா, இவர் அப்படித்தான் எல்லாரையும் நம்பிடுவாரு" என்றபடி ஐயப்பனை கூர்ந்து பார்த்தான். ஐயப்பனுக்கு கொஞ்சம் திக்கென்று இருந்தது.

நமச்சிவாயம் கொஞ்சம் தெளிந்தார். "ஆனா க்ருகப்பிரவேசத்துக்கு போகனுமில்ல"

"சித்தப்பா இவ்வளவுக்கு அப்புறமும் போகனுமா"

"ஆமாடா, கூப்டிருக்கான் இல்ல"

"வர சொல்லி கூப்டானா என்ன?" என்றார் ஐயப்பன்.


எம்.எல் - வண்ணநிலவன்

வண்ணநிலவன் சமீபத்தில் கி.ரா மறைந்த போது ஏதோ எழுதி அனைவரிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். வண்ணநிலவனின் புனைவுகள் எதையும் படித்ததில்லை. வண்ணநிலவன் துர்வாசர் என்ற பெயரில் துக்ளக் இதழில் எழுதிவந்த அரசியல் கட்டுரைகளை மட்டுமே படித்திருக்கிறேன். துர்வாசரின் கட்டுரைகள் கொஞ்சம் கடுகடு ரகத்திலேயே இருக்கும், கோபம், கடுப்பு, வயதானவர்களுக்கு வரும் இயல்பான எரிச்சல் கலந்தது போலவே இருக்கும். அதுவே இவரின் புனைவுகளை படிக்க கொஞ்சம் தடையாக இருந்தது. இதோடு சேர்ந்து ஜெயமோகனும் இவரை மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலைப் பற்றியும், எஸ்தர் சிறுகதையை பற்றியும் பலர் சிறப்பாகவே கூறியிருந்தனர். எம்.எல் நாவலே நான் படிக்கும் வண்ணநிலவனின் முதல் நாவல். 


எம்.எல். மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட். கம்யூனிசம் என்பதே நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை இன்று அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். அதிலும் ஆயுதப்போராட்டம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதும் மிகத்தெளிவாக புரிந்திருக்கும். கம்யூனிசத்தின் கோர முகத்தை பஞ்சம் படுகொலை பேரழிவு என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஆதரங்களுடன் விவரித்திருக்கின்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சில முகங்களை பற்றி ஜெயமோகன் பல கட்டுரைகளில் எழுதியிருக்கின்றார், அவரது பின்தொடரும் நிழலின் குரல், கட்சி தொண்டர்களின் பரிதாப நிலையைப் பற்றி பேசுகின்றது. ஒநாய் குலச்சின்னம், புலிநகக் கொன்றை போன்ற நாவல்களிலும் கம்யூனசத்தின் கோரமுகத்தை காணலாம்.

இளவயதில் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பலரை வெகு எளிதாக ஈர்ப்பது வன்முறைப் பாதையே. நமது இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றிலேயே நாம் பலரைக் காணலாம். இளமையின் வேகம் வன்முறை எளிதாக அனைத்தையும் முடிக்கும் என்று எண்ண வைக்கும். எதிர் தரப்பின் வலிமை தெரியாமல் ஆயுதம் ஏந்தியவன் கதை அவ்வளவுதான். இந்திய போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காவது ஒரு தெளிவான நோக்கம் இருந்தது, நாட்டு விடுதலை. ஆனால் கம்யூனிசத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு வன்முறையை கையில் எடுப்பவர்களிடம் எவ்வித நோக்கமும் இல்லை, எதை நோக்கி போவது என்பதே தெரிவதில்லை. புரட்சிக்கு பின் என்ன என்பதே கேள்விக்குறி. பலர் ஆவேசமாக இறங்கி பின்னர் நிலை உணர்ந்து சாதரண வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர், பலர் வாழ்க்கையை அழித்துக் கொண்டுள்ளனர்.


அதுமாதிரி இரண்டு திசைகளில் சென்றவர்களைப் பற்றிய ஒரு நாவல். கோவைக்கு வரும் சாருமஜூம்தாரை சந்திக்கும் அப்பு அவரை மதுரைக்கு அனுப்பி வைக்கின்றார். அங்கு அவர் இளைஞர்களிடம் தனது கொள்கைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, ஆள்திரட்டுகின்றார். அவரின் பிராச்சரத்திற்கு ஈர்க்கப்பட்டு பலர் இணைகின்றனர். சாருமஜூம்தார் ஆதரவு தேடி வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தொண்டர், ஆயுதவழி எல்லாம் கதைக்குதவாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தவர். அவர் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்து, ஒருவன் மனம்திருந்துகின்றான், மற்றொருவன் மாட்டி அழிகின்றான்.


ஒரு சிறுகதையாகவோ, இல்லை மிகப்பெரிய நாவலாகவோ இருந்திருக்க வேண்டும். இரண்டிற்கும் மந்தியில் ஒரு குறுநாவலாக அமைந்துவிட்டது. ஒரு பெரிய நாவலுக்குரிய அளவிற்கான பாத்திரங்களை படைத்து, அனைத்து பாத்திரங்களுக்கும் சில காட்சிகள், சம்பவங்களை வைத்து பின்னி கொண்டே வருகின்றார். ஆனால் அவற்றில் பல நாவலின் முக்கிய கருவிற்கு எவ்விதமும் பயன்படவில்லை. கதையின் மைய முடிச்சை தொடவே வெகுநேரம் ஆகின்றது, தொட்டவுடன் சில பக்கங்களில் நாவல் முடிகின்றது. நாவலின் பல திரிகளில் இதுவும் ஒன்று என்றும் எண்ண முடியவில்லை, ஏனென்றால் மற்ற சம்பவங்கள் எவ்வித மதிப்பையும் பெறவில்லை. எம்.எல் பக்கம் செல்லும் ஒருவனின் வீடு, அவன் மனைவி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அத்தை, மாமா என்று அனைவரைப் பற்றியும் பக்கம் பக்கமாக விரிகின்றது. ஒரு சில சம்பவங்கள்  அவன் எப்படி கம்யூனசத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டான் என்பதற்காக சொல்லப்பட்டாலும் பல சம்பவங்கள் ஏன் என்றே தெரியவில்லை. அதே போல் கம்யூனிச கட்சி தலைவர் குடும்பமும். ஏகப்பட்ட உப பாத்திரங்கள்.


2018ல் எழுதப்பட்டிருக்கின்றது. இப்போது நாவலின் கருப்பொருளின் தேவை அந்தளவிற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையான வெறு வகை பைத்தியங்கள் உருவாகி வருகின்றார்கள். அவர்களுக்கு ஓரளவிற்கு பித்தம் தெளிய பயன்படலாம். 


நாவல் என்ற வகையில் அந்தளவிற்கு ஓகோ என்று இல்லை. வன்முறையையும், பிரிவினையையும் கையில் எடுக்க தொடங்கினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இன்னும் விளக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வன்முறை பாதையை விட்டு ஒருவன் விலக அவன் சந்திக்கும் சம்பவங்களை காரணமாக்காமல், மற்றொரு தொண்டரின் வார்த்தைகளை காரணமாக்கியது அந்தளவிற்கு தாக்கத்தை உண்டாக்கவில்லை. 


சுமாரான நாவல். படிக்கலாம். கிண்டலில் 49ற்கு கிடைக்கின்றது. அவரே வெளியிட்டு இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.

எனது நாடக வாழ்க்கை - அவ்வை சண்முகம்

இந்த பெருந்தொற்று அனைவரையும் வீட்டில் அடைத்து வைத்து இருக்கும் நேரத்தில் நமக்கு உதவுவது தொழில்நுட்பம். பிழைப்பிற்கும், பொழுதுபோக்கிற்கும். பொழுதுபோக்கு இன்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கையில் வேண்டிய திரைப்படங்கள், தொடர்கள், ஆவணப்படங்கள். தூங்கும் நேரம் தவிர பார்த்தால் கூட பல வருடங்கள் பார்த்து கொண்டே இருக்கலாம். கொஞ்சம் பின்னால் சென்றால் டீவி தொடர்கள், திரைப்படங்கள், நாடகங்கள், தெருக்கூத்து. இவற்றில் தெருக்கூத்து அழிவின் விளிம்பில் இருக்கின்றது. நாடகங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாடகங்களும் விதவிதமாக மாறியிருக்கின்றன. இன்று நாடகம் என்றவுடன் பட்டென்று நினைவிற்கு வருவது க்ரேஸி மோகனும், எஸ்.வி.சேகரும். துணுக்கு தோரணங்களால் கட்டப்பட்ட நாடகங்கள். பார்க்க கூட வேண்டாம். கேட்டாலே போதும். இன்னும் சில சீரியஸ் நாடகங்களும் நடக்கின்றன. பொன்னியின் செல்வன் எல்லாம் நாடகமாக வருகின்றது. பரிக்‌ஷா மாதிரியான குழுக்கள் வேறுவிதமான நாடகங்களை நடத்துகின்றன. பெங்களூரில் பலர் வீதி நாடகங்களை நடத்துவதுண்டு. 

ஆரம்பத்தில் நாடகங்கள் எப்படி இருந்தன? நாடக நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? எப்படிப்பட்ட நாடகங்கள் நடிக்கப்பட்டன? எப்படி நாடகங்கள் வளர்ந்தன? சினிமா எந்தளவிற்கு பாதிப்பை உண்டாக்கியது? நாடக துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவ்வை சண்முகம் எழுதிய இந்த அனுபவ நூல், இந்த கேள்விகளுக்கு கொஞ்சம் பதிலை தருகின்றது.  

டி.கே.எஸ் ப்ரதர்ஸ், நாடக உலகில் மிகவும் பிரலமானவர்கள். டி.கே.எஸ் சண்முகம் , அவ்வை சண்முகம் என்று அழைக்கப்பட்டவர். இவரது தம்பி டி.கே.எஸ்.பகவதி. பல திரைப்படங்களில் நடித்துள்ளவர். சம்பூர்ண ராமாயணத்தில் ராவணேஸ்வரனாக நடித்தவர். அவ்வை சண்முகத்தின் நினைவாகத்தான் கமல் தன் படத்திற்கு அவ்வை சண்முகி என்று பெயர் வைத்தார், மற்றொரு முக்கிய நாடக உலக பிரமுகர் பம்மல் சம்பந்தம் பெயரை மற்றொரு படத்திற்கு வைத்தார்.

அக்கால நாடகங்கள் முழுவதும் பாடல்களால் நிறைந்தவை, பாடல்கள் பாட தெரிந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. எம்.ஆர்.ராதாவே மிகச்சிறந்த பாடகர் என்றால் நம்புவது கடினம்தான். அந்த குரலில் பாடலை கேட்பதை நினைக்கவே முடியவில்லை. சண்முகம், மிகச்சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கின்றார். அங்கிருந்து ஆரம்பமாகும் அவரின் நாடக வாழ்க்கை, ஐம்பது வருடங்களுக்கு மேலாக போகின்றது. அவர் நாடகத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது அவரது இரண்டு மூத்த சகோதரர்களும் ஏற்கனவே நாடகத்தில் நடித்து கொண்டிருந்திருக்கின்றர். அவரின் தந்தை பாடகராக இருந்துள்ளார். 

நூலின் பெரும்பாலான பக்கங்களில் அவர்களின் நாடக குழு சென்ற ஊர்கள், அங்கு கிடைத்த வசூல், அங்கிருந்து சென்ற ஊர் என்றே போகின்றது, எப்படி சென்றார்கள், என்ன கஷ்டம் வந்தது, யாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு நடுவேதான் நாடக உலகை பற்றிய பல தகவல்களை நாம் படிக்க முடிகின்றது. 

நாடக நடிகர்களாக ஆரம்பித்து பிறகு சொந்தமாக நாடகங்கள் நடத்தி, சினிமாவிற்கு சென்று நடித்து, சினிமா தயாரித்து வெற்றி பெற்றவர்கள். முதல் பகுதிகளில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக குழுவில் அவர்களது அனுபவங்களை விவரித்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகின்றது. ஒரே இரவில் ஒரு நாடகம் முழுவதையும் எழுதும் திறன் படைத்தவராக இருந்திருக்கின்றார். 4 மணிநேரத்திற்கு மேலாக நடக்கும் நாடகம், அதற்கான காட்சிகள், பாடல்கள், வசனங்கள் அனைத்தையும் ஒரே இரவில் எழுதுவது அசாத்திய திறமைதான். பிற்பகுதிகளில் அவர்களது சொந்த நாடக குழுவைப் பற்றி விவரங்கள். அவர்கள் தயாரித்த நாடகங்கள் பற்றிய விவரணைகள்.

அனைத்து வியாபரங்களில் இருப்பது போலவே ஏமாற்றம், துரோகம், பண மோசடி, ஒரு குழுவை விட்டு இன்னொரு குழுவிற்கு ஓடுவது போன்றவை நாடக உலகிலும் மிக சகஜமானதாக இருந்திருக்கின்றது. காமேஸ்வய்யர் என்னும் சுவாரஸ்ய பாத்திரம், புத்தகம் நெடுக வருகின்றது. பண கையாடல், மோசடி என்று இருந்தாலும் அவரை விட முடிவதில்லை. மக்களிடையே ஒரு காலத்தில் அவ்வளவு வரவேற்பு இருந்த நாடக மோகம், சினிமா வந்தவுடன் மங்கலாகின்றது. ஆனால் அதுவே நாடகத்தை வேறு தளத்திற்கு நகர்த்துகின்றது. 

டி.கே.எஸ் சகோதரர்கள் நாடக உலகில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி பார்த்திருக்கின்றனர்.ஒரே சமயம் வறுமையையும், செல்வத்தையும் கண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். மாத சம்பளம் என்று பார்த்தால் பெரிய பணம், ஆனால் சில சமயம் அது கைக்கு வராது. நஷ்டம் அதிகமாகி, குழுவையே மற்றொருவரிடம் ஒப்படைக்கும் நிலைக்கு சென்றிருக்கின்றனர், நாடக காட்சியமைப்பு பொருட்களை கொட்டைகையிலேயே விட்டுவிட்டு வந்திருக்கின்றனர். இருந்தாலும் நாடகத்தை விடவில்லை, சினிமாவில் கிடைத்த பணத்தையும் நாடகத்திலேயே முதலீடு செய்திருக்கின்றார்கள். அண்ணாத்துரை, ஈ.வெ.ரா, என்.எஸ்.கிருஷ்ணன், ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், எஸ்.ஜி.கிட்டப்பா, பாகவதர் போன்ற பல புகழ் பெற்ற மனிதர்களுடன் நல்ல தொடர்பு இருந்திருக்கின்றது. 

சில தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை, நாவல்களை உரிமை பெற்று நாடகங்களாக்கி, நாடக ஆசிரியர்களுக்கு ராயல்டியும் வழங்கி கொண்டிருக்கின்றார்கள். பாவம் இன்றைய நாவலாசிரியர்கள். ஈ.வே.ரா , காசு விஷயத்தில் கறார் என்று பெயர் பெற்றவர், டி.கே.எஸ் குழுவினரிடம் தாரளமாக நடந்து கொண்டிருக்கின்றார், பாரதிதாசன் பாடல்களை பயன்படுத்த அனுமதி வேண்டி பல கடிதம் அனுப்பியும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். நடிக்க தெரியாத தியாகராஜ பாகவதர், குழுவை விட்டு ஓடுபவர்கள் மீது போலிஸ் கேஸ் கொடுக்கும் நாடக முதலாளி, நாடக கொட்டைகளில் கலட்டா செய்யும் உள்ளூர் ரவுடிகள், மகரக்கட்டால் பாதிக்கப்படும் நடிகர்கள், பெண் வேடத்தில் பிரமாதப்படுத்திய ஏ.பி.நாகராஜன், சண்முகம் மறுத்த வேடத்தில் நடித்து புகழ் பெற்ற கிட்டப்பா, என்.எஸ்.கே உடன் பல சம்பவங்கள், ராஜா சாண்டோவுடனான சினிமா அனுபவங்கள். 

இது மாதிரியான நூல்களால் என்ன பயன் என்றால், சில புதிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம், ஒரு காலகட்டத்தைப் பற்றி நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கின்றது. நம் தாத்தா பாட்டி எல்லாம் எப்படி இருந்தனர் என்று தெரிந்து கொண்டு கொஞ்சம் வயிறெரியலாம் இல்லை சந்தோஷப்படலாம். 


சார்த்தா - எஸ்.எல்.பைரப்பா

பருவா, ஆவரணா நூல்களின் ஆசிரியர் பைரப்பாவின் மற்றொரு நாவல் சார்த்தா. பைரப்பாவின் ஒவ்வொரு நாவலுக்கு பின்னாலும் அவரின் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. பருவா நாவலுக்காக மகாபாரத நிகழ்ச்சிகள் நடந்த இடங்களுக்கு எல்லாம் நேரில் சென்று பார்த்திருக்கின்றார், ஆவரணாவிற்காக அவர் படித்த நூல்களின் வரிசை மிகப் பெரியது. ஒவ்வொரு நூலையும் ஆராயந்து எழுதும் பைரப்பா, இந்த முறை பருவா - ஆவரணா காலகட்டத்திற்கு இடைப்பட்ட ஒரு காலத்தை நாவலுக்கான காலமாக எடுத்துக் கொண்டுள்ளார். 

வடபகுதிகளில் யார் யார் ஆண்டார்கள், அவர்களின் வம்ச வரிசை எல்லாம் நமக்கு சரித்திரப் பாடத்தில் பரிட்சைக்கு மட்டும் படிப்பதால் மறந்து போகின்றது. அசோகர், சந்திரகுப்தர், சாளுக்கியர்கள், பாடலிபுத்திரம், ஹர்ஷர், பிம்பிசாரர், கன்யாகுப்தம் என்று சில பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அந்த காலகட்டத்தை பற்றிய புத்தகம். இப்புத்தகம் அசோகரின் காலத்திற்கு பின்னால், புத்தமத எழுச்சி காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஆதி சங்கராச்சாரியர் காலத்தில் நடக்கின்றது. 

ஆதி சங்கரரின் காலம் ஒரு சிக்கலான காலகட்டம். தமிழர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொண்டு நிம்மதியாக இருந்த காலம். விந்திய மலைக்கு வடக்கே, நிலையற்ற அரசுகள். புத்த, சமண மதங்களின் எழுச்சி. அவர்களின் சில தத்துவங்கள் மக்களிடையே உண்டாக்கிய செயலற்றதன்மை. புத்த, சமண மதத்தவர்கள் தங்கள் மதத்தை வெகு தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த காலம், அவர்களுக்கு வணிகர்களின் ஆதரவும் இருந்தது, வடமேற்கில் எழுந்த அரேபியர்களின் மதமாற்ற தீவிரம். இதற்கு நடுவே சிக்கி சுழலும் ஒருவனின் கதைதான் இது. 

சார்த்தா. சார்த்தா என்றால் வணிக குழு. அன்றைய வணிகம் என்பது ஒரு படை கிளம்பல் போல. பல நாடுகளை தாண்ட வேண்டும். நாட்டை தாண்டும் போது சுங்கம் தர வேண்டும், கள்வர்களை சமாளிக்க வேண்டும், உணவு வேண்டும். அப்படி என்றால் அந்த குழு என்னவெல்லாம் எடுத்து செல்ல வேண்டியிருக்கும்? அவர்கள் விற்க வேண்டிய பொருட்கள், அதை ஏற்றி இறக்க ஆட்கள், சுங்கம் போன்ற வழி செலவுக்கான பணம், அங்கு கிடைக்கும் பொருட்களை வாங்க பணம், அனைவருக்கான உணவு தானியங்கள், மாமிச தேவைக்கான பிராணிகள், இவற்றை எல்லாம் கொண்டு செல்ல வண்டிகள், வண்டிகளுக்கு ஏதாவது ஆனால் சரி செய்ய அதற்கான ஆட்கள், வழிகாட்டிகள், இவையனைத்தையும் பாதுகாக்க படை வீரர்கள், ஆய்தங்களை சரி செய்ய ஆட்கள். 

ஒரு காலத்தில் இந்த சார்த்தாக்கள் பாரதம் முழுக்க சென்று கொண்டிருந்தன. வடமேற்கு காந்தாரம் தாண்டியும் சென்று கொண்டிருந்தன. அரேபியர்களின் எழுச்சிக்கு பின்னால் தடைபட்டன. எப்படி ஒரு சார்த்தா செயல்படுகின்றது என்பது ரகசியம். அதன் உள்வட்ட நுணுக்கங்கள் வெளியே தெரிவதில்லை. வியாபார ரகசியம். அந்த ரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டி ஒரு சார்த்தாவுடன் இணையும் நாகபட்டன் என்னும் பிராமணனின் பயணம்தான் இந்த நாவல்.

தலைப்பிற்கேற்ப சார்த்தாவுடன் ஆரம்பிக்கும் நாவல், மிக விரைவில் சார்த்தாவை விட்டு வேறு பக்கம் நகர்கின்றது. சார்த்தா என்பது படிப்பவனை நாவலின் உள்ளே இழுக்க வைக்கப்பட்ட கொக்கி அவ்வளவே. இது முழுக்க சார்த்தாக்களை பற்றிய நாவல் இல்லை. இது நம் பாரத தேசத்தின் பல தத்துவங்களை பற்றிய நாவல். 

நாகபட்டனை சார்த்தாவுடன் சேர்ந்து அதன் ரகசியங்களை அறிய அனுப்பும் அரசனின் துரோகத்தால் நாகபட்டனின் மனம் தடுமாறுகின்றது. மதுராவிற்கு வரும் நாகபட்டனின் வழி விதவிதமாக போகின்றது. நாடக நடிகனாகும் அவன், யோகமார்க்கத்தின் வழி சென்று, தாந்திரீகனாகி, புத்தமதத்தின் தத்துவங்களால் கொஞ்சம் குழம்பி, நாளந்தா சென்று சேர்கின்றான். இதுவரை வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் கற்பனை, இதன் பின்னால் குமரில பட்டர், மண்டனமிஸ்ரர், ஆதி சங்கரர் ஆகிய பெரியவர்களும் பாத்திரங்களாக வருகின்றனர். அவர்களின் கதைகள் வழி, பல தத்துவங்கள் விவாதிக்கப்படுகின்றன. இதை ஒருவகை சரித்திர நாவல் என்றுதான் சொல்ல வேண்டும். 

வேறு எந்த நாட்டானுக்கும் இல்லாத ஒரு பிரச்சினை இந்தியனுக்கு உண்டு. தத்துவக் குழப்பம். பாரதத்தின் பாரம்பர்ய தத்துவங்களே ஏராளம். அனைத்திற்கும் மூலமாக இருப்பன வேதங்கள், வேதங்களை விளக்கும் வேதாந்தங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள். வேதங்கள் சொல்வது என்ன என்பதை பலவகையில் பலர் புரிந்து கொண்டு விளக்குகின்றனர். வேதங்களில் கூறப்பட்ட கர்மங்களே முக்கியம் என்பவர்கள் ஒரு பக்கம், வேதங்கள் கூறுவது யோகத்தைப் பற்றியும் முடிவில் கிடைக்கும் ஞானத்தை பற்றியும் என்று ஒரு பக்கம், எல்லாத்தையும் விட்டு அவனை சரணடையுங்கள் என்று ஒரு பக்கம், த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம். ஒரே ஒரு தெய்வத்தை மட்டும் உபாசனை செய்பவர்கள், சக்தியை மட்டுமே வழிபடுபவர்கள், தாந்த்ரீகர்கள். இது போதாது என்று இதிலிருந்து கிளைத்து வேறு பக்கம் சென்ற புத்தம், சமணம். நாத்திகம். இதன் நடுவே நாகபட்டன் சிக்கி அலைகின்றான். எது அவனுக்கான வழி என்பது அவனுக்கே தெரிவதில்லை. அனைத்தையும் தொட்டு பார்த்து இறுதியில் ஒரு தெளிவை அடைகின்றான். 

நாவல் வழி அவர் பல தத்துவங்களைப் அறிமுகம் செய்கின்றார். தியானம். தியானம் செய்வது என்பது ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டது. மெடிடேஷன் பண்றேன். சொல்லும் போதே ஒரு யோகி களை தோன்றுகின்றது அல்லவா. உணரவேண்டிய பல விஷயங்களை, புரிந்து கொண்டதாக நினைத்து ஒரு தனி உலகத்தில் வாழ்கின்றனர். சிலர் அதில் வெற்றியடைந்திருக்கலாம், ஆனால் வெற்றி அடைந்தவர்கள் அதிகமாக வெளியே சொல்லிக் கொள்வதில்லை என்பதால், பெருமை பாடும் பலரை நம்புவதில்லை. தியானம் பற்றிய அறிமுகம். அதோபோன்று யோகசாதகம். யோகம் என்பது எளிதான் விஷயமல்ல, அதற்கும் சில பின் விளைவுகள் உண்டு, அனைவருக்கும் அது கூடி வருமா? யோகத்தில் இலக்கு என்ன, அதை அடையும் செல்லும் போது வழியில்கிடைக்கும் சக்திகளையே ஒரு சாதனை என்று எண்ண தொடங்கும் போது பெரிய சக்திகள் கிடைக்காமல் போகலாம். தாந்த்ரீகம், எதுவும் தவறில்லை, எதுவும் விலக்கமில்லை, என்று பல சக்திகளை எளிதாக பெற வைக்கின்றது. பெளத்தம். அனைவரையும் துறவிகளாக்க விரும்பும் பெளத்த மத துறவிகள். இறுதியாக வருவது, பாரதத்தில்  ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய சங்கரரின் தத்துவம். 

பைரப்பா தத்துவங்களை அதிகம் திணிக்கவில்லை, பெரிய விவாதங்களுக்குள்ளும் செல்லவில்லை. வாசகனுக்கு ஒரு சிறிய ஆசை காட்டுகின்றார். இது எல்லாம் இருக்கு பாரேன் என்று. உண்மையில் பல தத்துவ விளக்கங்கள் எல்லாம் எனக்கு முழுவதும் புரியவில்லை. இந்த ஒரு நாவல் அனைத்தையும் புரிய வைக்கவும் நினைக்கவில்லை. நம்முடைய தேசம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது, முன்னோர்கள் எப்படி எல்லாம் சிந்தித்தனர் என்று ஒரு சிறிய அறிமுகத்தை செய்கின்றார். என்ன இது என்று யோசிப்பவர்கள் மேற்கொண்டு போகலாம்.

மதமாற்றத்தை பற்றி வரும் பகுதிகள் பல இன்றைய மதமாற்ற ஏஜண்டுகளை நினைவுபடுத்தாமல் இருக்காது. பெளத்தமும், சமணமும் நமது புராணங்களிலிருந்து எடுத்துக் கொண்ட கதைகளைப் போல, இன்று ஹிந்து மதத்திலிருந்து பல விஷயங்கள் திருடப்படுகின்றன. கிரிவலம், பூஜை, ஜெபம், வேதம், ஆராதனை என்று ஆரம்பித்து அமாவாசை தர்பணம் வரை செல்கின்றது. 

இறுதிப்பகுதிகள், அரேபியர்கள் அன்றைய மூலஸ்தானை, இன்றைய முல்தான் நகரை கைப்பற்றும் நிகழ்ச்சியுடன் முடிகின்றது. பாரதத்தின் அடுத்த ஆக்கிரமிப்பாளர்கள் கையில் போவதை பார்ப்பதுடன் நாகபட்டன் ஒரு வழியாக தன் தேடல்களை விட்டு அமர்கின்றான்.

குறைவான பாத்திரங்கள் நாகபட்டன், சந்திரிகை, ஜெயசிம்மர்,சிற்பி போன்ற பாத்திரங்களுடன் சங்கரர், மண்டனமிஸ்ரர் அவரது மனைவி, அவரின் குரு குமரில பட்டர்.  குமரில பட்டர் தன் தவறுக்கு பிராயச்சித்தமாக நெருப்பில் இறங்கியது, ஆதி சங்கரர் மண்டன மிஸ்ரரை வாதத்தில் வென்றது, ஆதிசங்கரர் பரகாயப் பிரவேசம் செய்தது, முலஸ்தானத்தை அரேபியர்கள் கைப்பற்றியது, அங்கிருந்த ஹிந்துக்களை மதம்மற்றியது போன்ற உண்மை சம்பவங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

சரித்திரமும், தத்துவமும் கலந்த ஒரு நல்ல நாவல். படியுங்கள்.
❌