Normal view

Received before yesterdayதிணைகள்

திணைகள் கவிதை விருது 2025

16 April 2025 at 08:10

இயற்கைப் படிமங்களில் துலங்கும் மீமெய்மையியலும்; பண்பாட்டு வேர்களில் கருக்கொள்ளும் சர்வதேசமும்…


பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ கவிதை நூலை முன் வைத்து…

– றியாஸ் குரானா

தேர்வு என்பது எப்போதும் சிலவற்றைத் தவிர்ப்பதிலிருந்தே உருவாகிறது. எதை எழுத வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பது எல்லாம், குறித்த ஒரு நோக்கத்தின் தற்காலிகமான அவசியத்தின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன ஒன்று. ஆனால், திட்டமிட்டு தவிர்ப்பது என்பதுதான் தணிக்கையாகவும் புறமொதுக்கலாகவும் மாறிவிடுகிறது. தணிக்கை என்ற சொல் அநேகமாக தேர்வு என்பதில் பதிங்கியிருக்கும் மென்மையான வடிவம் என்பதில் இரண்டு கருத்தில்லாதபோதும், அதை அதன் மென்மையான அளவில் வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாத அவசியங்களின் அடியாக மிகக் கவனமாக தேர்வுச் செயலில் இறங்குவது இலக்கிய வெளியில் அறம்சார்ந்த ஒன்று. அந்த அறத்தை எப்போதும் தன்வசம் வைத்துக்கொண்டிருக்கும் ஒருவன் என்பதனால், விருதுக் தேர்வுக்காக என் கைவசம் கிடைத்த அனைத்து நூல்களையும் 20 முழுமையான நாட்களுக்கும் மேலாக நுணுக்கமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட முறையும், பல கோணங்களில் அணுகியும்தான் திணைகள் விருதுக்கான இறுதித் தேர்வை செய்திருக்கிறேன். அந்த வகையில், எனது இறுதித் தேர்வு என்பது ‘பூவிதழ் உமேஷ்‘ அவர்களின் ‘துரிஞ்சி’ கவிதை நூலாக இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்வின் போது சவாலாக இருந்த பல நூல்கள் இருந்தன. குறிப்பாக ஐந்து நூல்களைச் சொல்ல முடியும். அவற்றைக் குறித்து இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை. எனக்கு இந்த வாய்பைத் தந்த திணைகள் விருதுக் குழவினருக்கு மிகுந்த நன்றிகளும் அன்பும். கடந்த இரண்டாண்டுகளில் தமிழின் விரிந்த பரப்பிற்குள் வெளிவந்த அநேக கவிதை நூல்களை ஒரே மூச்சில் வாசிக்கக் கிடைத்ததென்பது, சமகால தமிழ்க் கவிதைகளையும் அவற்றின் இயங்குவெளியையும் அறிந்துகொள்ள பெருவாய்ப்பாகவும் இருந்தது.

சமகாலத் தமிழ்க் கவிதையின் பன்முகப்பட்ட நிலப்பரப்பில், பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘ (2023) ஒரு குறிப்பிடத்தக்க அதே சமயம் ஒரு சவாலான பிரசன்னத்தை நிகழ்த்துகிறது. இதுவரையிலான தமிழ்க் கவிதையின் சில பிரதான வழக்குகளிலிருந்து தன்னைத் தனித்துக் காட்டும் ஓர் அழகியல் வேட்கையையும், புனைவின் புதிய சாத்தியங்களைத் தேடும் ஒரு முனைப்பையும் இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறது. தருமபுரி நிலத்தின் பிரத்தியேக மணத்தையும், அங்கு வாழும் மனிதர்களின் அகவுலகச் சிடுக்குகளையும் வெறும் யதார்த்தப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளின் ஊடாக அணுகும் உமேஷின் கவிதைகள், தமிழ்க் கவிதை சார்ந்த சில மனநிலைகளை ஊடறுத்து, தனித்துவமான ஒரு திசைவழியை அக்கறைகொள்கின்றன. நவீனத்துவத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதையின் சில இயல்புகளான பதற்றமான அகவயத்தன்மை, கட்டமைப்புச் சிதறல், அசையும் படிமப் பெருக்கம் போன்றவற்றை நோக்கி நகரும் முனைப்பை கவனத்திற்கொள்ளும் அதே வேளையில், அவற்றைத் தனது பிராந்திய அடையாளத்தோடும் புனைவின் அதீத சாத்தியங்களோடும் இணைத்து, சமகாலத் தமிழ்க் கவிதையின் சில அடிப்படைகளைத் தகர்த்து வெளியேற வேண்டுமென்ற ஒரு தீவிரமான அவாவையும் இக்கவிதைகள் கொண்டிருக்கின்றன. இந்த அவாவின் வெற்றி, அதன் முழுமை, மற்றும் அது எதிர்கொள்ளும் விமர்சனக் கேள்விகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பார்வை, இத்தொகுப்பின் முக்கியத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள இன்றியமையாதது.

‘துரிஞ்சி‘ கவிதை நூலின் மைய உத்தி, யதார்த்தத்திற்கும் புனைவிற்குமான எல்லையைத் தொடர்ந்து கலைத்துப் போடுவதில் தங்கியிருக்கிறது. இது வெறும் அழகியல் உத்தியாக மட்டுமின்றி இருப்பையும் அறிதலையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு கருத்தியல் நிலைப்பாடாகவும் விரிகிறது. தமிழ்க் கவிதையின் சில நீரோட்டங்களில் காணப்படும் நேரடிப் பதிவுமுறை அல்லது சமூக யதார்த்தவாதச் சித்தரிப்பு முறைகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க அளவு விலகி நிற்கிறது. தருமபுரி நிலத்தின் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள் ஆகியவை மீமெய்மைப் பார்வையின் வழியே புதுப்பிக்கப்பட்டு, அந்நியமாக்கப்படுகின்றன. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘ (பக்கம்:13) ‘பாறையின் கண்கள் போல இருக்கும் வெள்ளாட்டுக் குட்டிகள்‘ (பக்கம்:13) இந்தப் பரீட்சயநீக்கம் (Defamiliarization), பழகிப்போன பார்வைகளிலிருந்து வாசகனை விடுவித்து அனுபவத்தின் புதிய பரிமாணங்களைத் திறந்து பயணிக்கச் செய்கிறது. ‘விதைப் புத்தகம் (பக்கம்:19-22) போன்ற கவிதைகள், ‘விதை’ எனும் ஒரு எளிய கருத்தை எடுத்துக்கொண்டு அதனைத் தத்துவார்த்தமான, சில சமயங்களில் விளையாட்டுத்தனமான, பல அடுக்குகளில் விரித்தெடுக்கும் விதம், நேரடியான அர்த்த உற்பத்திக்குப் பதிலாக பன்முகப்பட்ட வாசிப்புச் சாத்தியங்களை உருவாக்குகிறது. இந்தப் போக்கு, தமிழ்க் கவிதையில் பொதுவாக நிலவிவரும் சில சித்தரிப்பு முறைகளின் வரம்புகளை மீறிச் செல்ல விழையும் ஒரு முயற்சியாகவேபடுகிறது. இத்தகைய மீறல் முயற்சி என்பது தவிர்க்கவியலாமல் சில அர்த்த உருவாக்குதலின் சிக்கல்களையும் (Hermeneutic challenges) தோற்றுவிக்கும் என்பதும் உண்மையே. படிமங்களின் அடுக்குகளும், புனைவின் தாவல்களும் சில சமயங்களில் தெளிவின்மையை நோக்கி நகர்ந்து வாசகனுக்கும் பிரதியின் உள்ளடக்கத்திற்குமான இடைவெளியை அதிகரிக்கக்கூடும். இந்த விமர்சனங்கள் தமிழில் மட்டுமல்ல உலகளவிலும் பல விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பானதும் சிக்கலானதுமான நியாயங்கள் உண்டு என்றபோதும், அர்தத்தைக் கண்டுபிடிப்பதில் பங்களிப்புச் செய்வது என்பது தேவையுடன் கூடிய சவாலான வினையாற்றும் செயல் என்பதை கவிதையை முன்வைத்து வாதிடும் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

இக்கவிதைகளில் வெளிப்படும் கவிதைசொல்லியின் குரலும் ஆழமாக கவனிக்க வேண்டிய ஒன்று. அந்தக் குரலின் அழுத்தம் கிராமிய வேர்களைக் கொண்டிருந்தாலும் வெறும் மண் சார்ந்த பதிவுகளாகச் சுருங்கிவிடாமல், உலகளாவிய இருப்பியல் கேள்விகளுடனும், தத்துவார்த்தமான சிந்தனைகளுடனும் உரையாடுகிறது. இந்தப் பதற்றம் ஏறிய அகவயநிலையும், அதேசமயம் புனைவின் அதீத சாத்தியங்களுக்குள் சஞ்சரிக்கும் கவிதைசொல்லியின் குரலும் தமிழ்க் கவிதைகளில் பொதுவாகக் காணப்படும் நேரடியான சமூக விமர்சனக் குரல்களிலிருந்தோ அல்லது தீவிரமான உணர்ச்சி வெளிப்பாடுகளை முதன்மைப்படுத்தும் (பாடல் மரபின் தொடர்சியை உள்ளெடுத்த நவீன கவிதை) தன்மையிலான குரல்களிலிருந்து வேறுபடுகிறது. ‘நுணா‘ (பக்கம்:14) மற்றும் ‘அமைதியின் மீது சாய்ந்துகொள்ளுதல்‘ (பக்கம்:11-12) போன்ற கவிதைகளில் வெளிப்படும் நினைவுகள்கூட, நேரடியான கடந்தகாலப் பதிவுகளாக அல்லாமல் புனைவின் புதிர்ப்பாதை வழியே வெளிப்படுகின்றன. இந்தக் குரலின் தனித்தன்மை சில சமயங்களில் ஒருவித இருண்மைக்கு வழிவகுக்கலாம் என்றாலும் அதுவே தமிழ்க் கவிதைச் சூழலில் புதிய சாத்தியங்களுக்கான தேடலாகவும் அமைகிறது. இந்தத் தேடலின் சிக்கலான பயணத்தில் உருவாக்க வேண்டிய புனைவுகள் வாசகப் பரீட்சயத்தை எட்டும்போது மென்மைப்படுத்தும் ஒன்றாகவோ அல்லது தவிர்க்க வேண்டிய ஒன்றாகவோ மாற்றமடையலாம். அதற்கான கால எல்லை என்பது தமிழ்க் கவிதை வெளிக்கு அவசியமானது.

கருப்பொருள்களை அணுகும் விதத்திலும் ‘துரிஞ்சி‘ ஒரு விலகலை நிகழ்த்துகிறது. இயற்கை, நிலம், காதல், காமம், நினைவுகள், அரசியல், மரணம் போன்ற பொதுவான கருப்பொருள்களை இத்தொகுப்பு கையாண்டாலும், அவற்றை அணுகும் பார்வை மரபானதல்ல. இயற்கை, வெறும் அழகியல் பின்புலமாகவோ, மனித உணர்வுகளின் உவமையாகவோ பயன்படுத்தப்படாமல் அதுவே ஒரு விசித்திரமான, தன்னுணர்வு கொண்ட பாத்திரமாகப் பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. ‘எருமைக் கன்றை மேய்க்கும் சூரியன்‘, ‘பாறைகளின் கண்கள்‘ காதல் மற்றும் காமம் சார்ந்த சித்தரிப்புகள் ‘கொள்ளுக் கொடியில் ஆடும் காமம்‘ (பக்கம்:15) ‘அழிஞ்சி பழம்‘ (பக்கம்:81-82) ‘இரண்டாவது நாளில் சந்தித்தல்‘ (பக்கம்:78) நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தவிர்த்து வினோதமான படிமங்கள், விளையாட்டுத்தனம், சில சமயங்களில் ஒருவித அந்நியமாதல் ஆகியவற்றினூடாக வெளிப்படுகின்றன.

இது, காமம் குறித்த தமிழ் மனத்தின் சில தயக்கங்களையும் மரபான சித்தரிப்பு முறைகளையும் மீற விழையும் முயற்சியாகத் மேலோட்டமாகத் தோன்றுகிறது. ஆயினும், இந்த மீமெய்மை அடர்த்தி என்பது சில சமயங்களில் உணர்ச்சிகளின் ஆழத்தைத் தட்டையாக்கிவிடுகிறதா அல்லது வெறும் அழகியல் சாகசமாக நின்றுவிடுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. சமூக யதார்த்தங்கள் குறிப்பாக வறுமை, ஒடுக்குமுறை, இடப்பெயர்வு போன்றவை நேரடிப் பதிவுகளாக அல்லாமல் மீமெய்மைப் படிமங்களின் ஊடாகவே சித்தரிக்கப்படுகின்றன. ‘உங்களுக்கு ஏன் உப்புக் கரிப்பதில்லை‘ (பக்கம்:67-68) ‘தடினிக்காய் உனக்கல்‘ (பக்கம்:35-36). இந்த மறைமுகத்தன்மை அரசியல் கவிதைகள் மீதான தமிழ்ச் சூழலின் சில எதிர்பார்ப்புகளிலிருந்து விலகிச் செல்கிறது. ‘மீனவன்‘ (பக்கம்:45-46) ‘எங்கள் பிரதமர் மிக நல்லவர்‘ (பக்கம்:76) போன்ற கவிதைகளில் உள்ள அரசியல் விமர்சனம், குறியீடுகளின் வழியே செயல்படுவதால் அது நேரடியான தாக்கத்தை இழந்துவிட்டது என்று சிலருக்கு நீர்த்துப்போனதாகவும் தோன்றலாம். இது அரசியல் கவிதையின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் குறித்த ஒரு புதிய விவாதத்தைத் தூண்டக்கூடியதாக தமிழச் சூழலில் இருக்க முடியுமே தவிர, உலகளவில் அரசியல் கவிதைகளோடு நெருக்கமுள்ளவர்களுக்கு அப்படியிருக்காது என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.

மொழியும் படிமங்களும் இத்தொகுப்பின் தனித்துவத்திற்கு முக்கியக் காரணிகளாக அமைகின்றன. வட்டார வழக்குகளை இயல்பாகப் புழங்கும்படி பாவிக்கும் அதே வேளையில் தத்துவார்த்தமான, சில சமயங்களில் அறிவார்ந்த ஒரு மொழியையும் கவிதைகள் பயன்படுத்துகின்றன. இந்த மொழி, பெரும்பாலும் உரைநடைக்கு நெருக்கமாக அதீத அலங்காரங்களைத் தவிர்த்து, அசையும் படிமங்களின் வழியாகவே தனது கவித்துவத்தை அடைகிறது. இங்கு பயன்படுத்தப்படும் அசையும் படிமங்கள், வெறுமனே காட்சிகளை விவரிப்பவையாக அல்லாமல் அறிந்துகொள்ளுதலின், அர்த்தம் உருவாக்குதலின் சவால்களையும், உணர்வுநிலைகளையும் கடத்துபவையாக பல சமயங்களில் பொருள்கோடல் சிக்கல்களைக் கொண்டவையாகவும் உள்ளன. தமிழ் மரபின் செழுமையான படிமவியல் வழக்கத்திலிருந்து (சங்க இலக்கியம் தொடங்கி) உமேஷின் படிமங்கள் வேறுபடும் இடம் எதுவென்றால், அவை பெரும்பாலும் தர்க்க ஒழுங்கைக் கலைத்துப் போடும் மீமெய்ம்மைத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இது கடந்தகால தமிழ் நவீன கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிவோம். அதே நேரம் இவற்றை கவிதைகள் முழுமையிலும் பயன்படுத்திய ஈழத்துக் கவிஞர் சோலைக்கிளியும் இருக்கிறார். ஆயினும், உமேஷ், தனது கவிதையை நகர்த்திச் செல்லும் வசன நடையின் எதிர்பாராத தருணங்களில் இந்த அசையும் படிமங்களை பாவிப்பதோடு, அது தேவையான இடமாகவும் கவிதையின் இயங்கும் போக்கில் அமைந்துவிடுவதுதான் குறிப்பிட்டுக் காட்டவேண்டியது. இந்தக் கவிதை சொல்லும் முறையை மேலும் செழுமைப்படுத்தும்போது தீர்க்கமான தனித்தன்மையை முழுமையாகக் கண்டடைந்துவிடலாம் என்பது எனது கணிப்பீடு. இந்த அணுகுமுறை, சங்கப் படிமங்களின் நேரடித்தன்மை இயற்கை சார்ந்த இயல்புநிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மாறுபடக்கூடியது. கவிதைகள் நகர்ந்து செலலும்போது ஏற்படும் உரைநடைத் தாளம் என்பது இடைக்கிடை மரபின் தொடர்ச்சியை சில நேரங்களில் மனதில் ஏதாவதொரு மூலையில் தட்டி எழுப்பிவிடுகிறது.

சமகாலத் தமிழ்க் கவிதைகளின் அடிப்படைகளை தகர்த்து வெளியேறும் ஆவல் இக்கவிதைகளில் எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கிறது என்ற கேள்வி முக்கியமானது. ‘துரிஞ்சி‘ ஒரு முழுமையான உடைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்றால் இல்லை. ஆனால், ஏற்கெனவே இருக்கும் போக்குகளின் (பின்-நவீனத்துவச் சிதறல், அகவய நோக்கு) ஒரு தீவிரமான நீட்சியாக, ஒரு புதிய அழகியல் சேர்க்கையாக அமைகிறதா என்றால் விவாதத்திற்கு இடமின்றி அதை ஏற்க முடிகிறது. மீமெய்ம்மை மற்றும் மாய யதார்த்தப் புனைவுக் கூறுகளைத் தமிழ் நிலத்தின் பிரத்யேக அனுபவங்களுடன் இணைக்கும் முயற்சியில் குறிப்பிடும் அளவு இவரது கவிதைகள் முன்னேறியுள்ளன என்பதுதான் உண்மை. இது, தமிழ்க் கவிதையை உலகளாவிய கவிதைப் பிரதிகளுடன் இணைக்கும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படலாம். இந்த பண்பாட்டுக் கலப்பு தமிழ்க் கவிதையின் தனித்துவத்தையும், உலகளாவியத் தன்மையையும் ஒருங்கே சாத்தியமாக்கும் ஒரு வழியாக அமைகிறது. ஆயினும், இந்த அடிப்படைகளைத் தானே தகர்க்கும் படியாக, சில சமயங்களில் கவிதையை வரிவரியாக நகர்திச் செல்லும் போது கவிதைச் சம்பவங்களின் சீரற்ற தன்மை, சில படிமங்களின் செயற்கைத்தன்மை அல்லது மீமெய்ம்மை உத்தியின் பாணி மிகைப்பு போன்ற விமர்சனங்களுக்கும் இடமளிக்கிறது. எந்தவொரு தீவிரமான கவிதை உருவாக்க முயற்சியும் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது இயல்பே. இந்தப் புதிய திசைவழிக்கான தேடலில், சில கவிதைகள் அடையும் வெற்றியை மற்றவை அடையாமல் போகலாம்.

முடிவாக, பூவிதழ் உமேஷின் ‘துரிஞ்சி‘, சமகாலத் தமிழ்க் கவிதை வெளியில் ஒரு அசாதாரணமான, தவிர்க்கமுடியாத தலையீட்டை நிகழ்த்த முயல்கிறது. அதன் மீமெய்மை அழகியல், மரபான தமிழ்க் கவிதை மனநிலையிலிருந்து விலகிச் செல்ல எத்தனிக்கும் பிரக்ஞை, நிலம் சார்ந்த அனுபவங்களை உலகளாவியப் புனைவு உத்திகளுடன் இணைக்கும் முயற்சி மற்றும் அது எழுப்பும் எண்ணற்ற அர்த்த உருவாக்கச் சாத்தியங்கள் ஆகியவை இத்தொகுப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன. இது முன்வைக்கும் விமர்சனக் கேள்விகளும் அதன் கலைத்துவச் சவால்களும்கூட அதன் உயிர்ப்பிற்கும், சமகாலத் தமிழ்க் கவிதைச் சூழலில் அது நிகழ்த்தும் உரையாடலின் முக்கியத்துவத்திற்குமே சான்றுகளாக நிற்கின்றன. அடிப்படைகளைத் தகர்க்கும் அதன் ஆவல் முழுமையாக நிறைவேறியதா இல்லையா என்பதைவிட, அத்தகையதொரு தீவிரமான கலைவேட்கையுடன் அது பயணிப்பதே அதன் தனித்துவமாகிறது. எனவே, ‘துரிஞ்சி‘, அதன் அனைத்துச் சிக்கல்களோடும் வெற்றிகளோடும் சமகாலத் தமிழ்க் கவிதையின் போக்கைக் கூர்ந்து அவதானிப்பவர்களால் அவசியம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய, ஆழமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு செறிவான, சவால்நிறைந்த கவிதை நூலாக நம்முன் நிற்கிறது. இது, தமிழ்க் கவிதை தேங்கிவிடாமல் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டிருப்பதன் அடையாளம்.

The post திணைகள் கவிதை விருது 2025 first appeared on திணைகள்.

மதார் கவிதைகள்

30 March 2025 at 06:26

1.
கூவிக்கொண்டும்
அகவிக்கொண்டும்
உறுமிக்கொண்டும்
கீச்சிட்டும்
குரைத்தும்
இருந்தோம்
மொழிக்கு முன்பு
மொழி வந்தது
நாசமாய்ப் போனது
பேசிக்கொண்டு மட்டும்
இருக்கிறோம்

2
காலை
மாலையைப் போல
நடிக்கிறது

மாலையால்
இரவு போல்
நடிக்க முடிகிறது

இரவு நடிப்பதில்லை

அது அதன்
இயல்பில்

அல்லது
இரவின் வேறு வேறு வேஷங்களா பொழுதுகள்

அல்லாது
இரவின் கனவுகளா பொழுதுகள்

கனவு கலைந்து விழிப்பது
இரவாய் அல்லாது
பகலாகவே அமைவது
எவ்வளவு பெரிய
ஏமாற்று வேலை

3
நலமுடன் வரலாறு

வான் பார்த்தேன்

பறந்துகொண்டிருந்த
பறவைக் கூட்டத்துக்கு
பாரதப் பெயர்களிட்டேன்

சகுனி, குந்தி, கர்ணன்,அர்ஜுனன்…

பிறகு
குகன், ராமன், சீதை…

கண்ணகி, கோவலன்
மும்தாஜ், ஷாஜஹான்
கட்டபொம்மு, தேவராயர்
அம்பேத்கர், காரன்வாலிஸ்
ஒசாமா, ஒபாமா
காந்தி, ராஜராஜசோழன்

கணக்கு வழக்கின்றி
கலந்துவிட்ட கூட்டத்தில்
அம்பேத்கரும் ராமரும்
காந்தியும் ஹிட்லரும்
ஒசாமாவும் ராஜராஜனும்
ஒன்றாய்ப் பறக்கிறார்கள்

குழல் துப்பாக்கியை
எடுத்துக் குறிபார்த்தேன்

வைத்த குறி
பிசகாது
காலத்தைச் சுட்டு வீழ்த்தினேன்

4
இரண்டு பக்கமும்
கர்ஜிக்கும் சிங்கங்களுடன்
நினைவஞ்சலி போஸ்டர்

இறந்து இரண்டே மாதம்தான் ஆகிறது

வயது இருபது இருபத்தைந்து இருக்கலாம்

கொலையாக இருக்கலாம்

நெஞ்சு நிமிர்த்தி
மீசை முறுக்கி
முறைக்குமவனைப் பார்க்க
சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது

பாவி
அவன் கெட்டது போதாதென்று
சிங்கங்களையும்
சிரிப்பாக்கிவிட்டான்

5
எதிரொலிக்கிறது

மெளனத்தை
மனனம் செய்து
ஒப்பித்தபோது
மறந்துபோய்
பேசிவிட்ட வார்த்தை

-மதார்

The post மதார் கவிதைகள் first appeared on திணைகள்.

குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்

30 March 2025 at 06:26

1.

கண்டடைய ஏதுமில்லை
தினம் ஒரு ராகத்தை எங்கிருந்து எடுக்கின்றன பறவைகள்
பாடல் மெருகேற மெருகேற
கீழ்வானம் சிவக்கிறது
வெட்கச் சிவப்பினை தின்கின்றன பறவைகள்.

2.

இரவிடம் தான் ஒப்படைத்துவிட்டு
பிரிந்தேன் சுமையை
இந்தப் புலர் பொழுதோ
சுமையோடே விடிகிறது
செல்லும் இடமெங்கும்
சுமை தாளவில்லை
சற்று இளைப்பாறலாம் எனில்
ஏந்திக்கொள்ள யாருமில்லை
தனிமையின் பாடலை
யார் கேட்பர்.
காற்றோ கேட்காமலே
அழைத்து வருகிறது மழையை.
மழையில் கரைக்கின்றன
சுமைகள்.

3.

ஊடலுடன்
உறங்குகிறாள் மகள்
புரண்டு புரண்டு படுக்கிறேன்
உறங்கும் மகளின் முகமோ
பூரண நிலவாய்ப் பொழிகிறது
சலனமற்ற முகத்தைப் பார்த்தபடியே
காலம் நகர்கிறது.
உறக்கத்தில்
நகைக்கிறாள் மகள்
கனவின் ஊடே
தொலைத்துவிட்டாள் போலும்
ஊடலை.

4.

ராஜநடை நடக்கிறது மைனா
விளிம்பு நிலையில் இருந்து
மத்திம சாலை வரை
செல்வதும் திரும்பவுதுமாய் இருக்கிறது
பறத்தலை ஒத்தி வைத்துவிட்டு
நடத்தல்
இன்னொரு பரிமாணம்
எதிலும் இழப்பில்லை
புதிய புதிய திறவுகள்
புதிய புதிய விடியல்கள்.

5.

கதவிடுக்கிலிருந்து
வெளியேறி
அங்குமிங்கும் ஓடிய கரப்பான்
மல்லாந்து கிடக்கிறது.
கரப்பான் கிடக்க
காலம் ஓடுகிறது.
ஓடுதல் மாற மாற
கரப்பானைச் சுமந்தபடி
கூட்டமாய் ஓடுகின்றன
எறும்புகள்.

🐾

6.

நிதர்சனமாக
அம்மாவின் புகைப்படம்
மேலிருந்து கத்துகிறது
வெள்ளைப் பல்லி.
வழக்கமான நாள்
இல்லையென்கிறது
அதன் குரல்
அம்மாவின் கண்களை
காணக் காண
அதில் தான் எத்தனை காருண்யம்
அந்தக் கண்களைப் போல்
இதுவரை சந்தித்ததில்லை
இந்த வெள்ளைப் பல்லியின்
கண்களோ
நிலைக்குத்தி நிற்கிறது
நேற்று
நடுநிசியின் விழிப்பில்
கொசு வலையில்
ஊர்ந்து சென்ற அதே கண்கள்
சட்டென நினைவுகளைக் கழற்றிவிடப் பழகிவிட்டது இக்காலம்.
எப்படி மறந்தேன் நேற்றை
நதிக்கரையில் நின்றபடி
உன் சாம்பலைத் தேடிய பொழுதுகள் எங்கு உள்ளன
உன் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்து விட்டு
வெள்ளைப் பல்லியைத் தேடுகிறேன்.
எங்கேயோ ஒளிந்து கொண்ட
கௌலியின் குரல்
காற்றோடு வருகிறது.

🐾

7.

திண்மப் பொருள்களுக்கும் உயிர்களுக்கும்
என்னவொரு பிணைப்பு.
திண்மப் பொருள்கள் எப்படி இலகுவாய்
உயிருக்குள் கலந்து விடுகின்றன
அப்பாவின் கைக்கடிகாரம்
அம்மாவின் பொட்டு
தமக்கையின் ரிப்பன்
தம்பியின் கையெழுத்து
காதலியின் ஒற்றை ரோசா
நண்பனின் சட்டையென
எப்படி அவைகள்
உயிர்ப்பூத்துக்
கிளம்பி விடுகின்றன.
ஏதோவொரு பயணத்தில்
பேருந்தின்
பெயர்ப்பலகைக்கூட
நெருங்கிய உயிரின்
பிம்பமாய் எழுகிறது.
ஒரு நிமிடம்
நண்பனை என்னிடம் அழைத்து வர
அந்த ஊர்ப்பெயர் மட்டும் போதும்.
சில நேரம்
திண்மப் பொருட்கள்
மௌனத்திற்குள் அழைத்துச் சென்று விடுகின்றன.
மகள்
தூரத்திலிருந்து
ஏதோ சைகை செய்கிறாள்
அவள்
ஒரு பக்கக் காதின் சாதனமோ
என்னை முறைக்கிறது.

🐾

8.

கைக்குழந்தையோடு பிச்சை யாசிக்கும் 

சிறுமி வாகன நெரிசலுக்கிடையே 

நுழைந்து நுழைந்து மீள்கிறாள்.
சிக்னல் சிவப்பில்
ஒளிர்ந்ததும்
உள் நுழைகிறாள்
சிக்னல் பச்சையில்
ஒளிர்ந்ததும்
வெளியேறுகிறாள்
இரு வண்ணங்களுக்கிடையே சில சில்லறைகளைப் பெறுகிறாள்.
இடையே
சில முகங்கள் கைக்குழந்தையைப் பார்க்கின்றன
சில முகங்கள்
இவளைப் பார்க்கின்றன
சில பார்வைகளின் உக்கிரம் தாள முடியாது
அவளோ
சூரியனைப் பார்க்கிறாள்.
சூரியனும் முழுவீச்சில்
அவளைப் பார்க்கிறான்
அவள் விழிகளில்
சிவப்பும் பச்சையும்
மாறி மாறி விழுந்தபடியே இருக்கின்றன.
திடீரென
அவள் உடலும்
சிவப்புக்கான சிக்னல் தந்துவிட்டது.
சற்றே உணர்ந்தவள்
நெரிசலை விட்டு வெளியேற வழியின்றி பூமியை ஓங்கி உதைக்கிறாள்.
🐾

9.

உடல் ஒட்டினார் போல்
இரண்டு பனை மரங்கள்
நிற்பது அபூர்வம்.
சிறுவயதில்
பனை அருகில்
முனி இருப்பதாக உலவிய கதையை நம்பியதுண்டு.
பருவ வயதில் பழகிவிட்டது
பனையோடு தான் எங்கள் விளையாட்டு
கொழுத்தும் வெயிலில்
பனையடியில் தான் நிழலுக்காய் ஒதுங்குவோம்
காதலுக்குள் விழுந்த
மாரி அக்காவை
வெளியூர்க்காரனுடன் அங்குதான் கண்டிருக்கிறோம்.
பின்னர் அவனோடு சென்று விட்டதாய்
ஊர்க்கதை உண்டு
நாலு கழுதை வயதானபின் வெளியூர் வேலைக்குச் சென்று விட்டு
திரும்பிய ஒர் நாள்
மாலைக் கருக்கலில்
மாரி அக்காவைத்
தலைவிரிக் கோலமாய் பனை அருகில் கண்டேன்.
அவள்
முனிபோல் இருந்தாள்.

🐾
10.

மியாவ்..மியாவ்…
எனக் கத்திவிட்டு
பூனையாகிவிட்டேன்
என்கிறாள் மகள்
அவள் தோழியோ
கீ ..கீ…என்கிறாள்
அவளும் கிளியாகிவிட்டாள்
பவுடரை முகமெல்லாம்
அப்பிவிட்டு பேயாகிவிட்டேன்
என்கிறாள் ஒருத்தி
காணாத பேயைக்கண்டு
நானும் கிலி கொள்கிறேன்.
பதட்டம் தனிவதற்குள்
சிங்கத்தின் கர்ஜனை
யானையின் அம்பாரி
வண்ண மர எழுச்சியென
அதகளமாகிறது வீடு
இடையே
கிளியாய் ,பூனையாய் மாற நானும் விழைகிறேன்
குரலோ
என் சொல் கேள மறுக்கிறது
அயர்வில்
விலங்குகளோடு விலங்காய் கண் மூட
சப்தத்தை
விழுங்கிய வீட்டினுள்
கானகத்தின் அமைதி

  • குமரேசன் கிருஷ்ணன்

The post குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள் first appeared on திணைகள்.

திருச்செந்தாழை கவிதைகள்

30 March 2025 at 06:22

”இது காட்டுப்பூனை… காட்டுப்பூனை”
சுற்றுலாவாக வந்திருக்கும் சீனன் கத்துகிறான்
புனுகுப்பூனைகளின் கூட்டத்தினூடே
தனது உடலைப் பயந்து பதுக்குகிறது காட்டுப்பூனை
சந்தனக்கடை முதலாளியின் காலுக்குக்கீழே
கம்பிகளால் வரிசையிட்ட சிறியதோர்
சதுரத்திற்குள் புனுகுப்பூனைகள் வசிக்கின்றன
‘நுகர்ந்து பார்’ எனும் சலுகையோடு
முதலாளி அல்லாப்பிச்சை நீட்டுகிற
அத்தர் மணக்கும் விரலின்
வாஞ்சையைப் புறக்கணித்து
சீனன் இன்னமும் கத்துகிறான்
அல்லாப்பிச்சை மந்திரிப்பார்
நாள்பட்ட வலியோடு வருபவர்களின்
நெற்றியில் அத்தர் கலந்த கருங்களிம்பை
மனதின் மெக்காவிலிருந்து
அவர் அள்ளிப் பூசும்பொழுது
சற்றே வலிமறந்த நோயுற்ற முகத்தின்
மஞ்சள் பற்கள் சிரிக்கின்றன
சீனன் கத்துகிறான்
“காட்டுப்பூனை… காட்டுப்பூனை…”
அல்லாப்பிச்சைக்குத் தெரியும்
பொய்க்கும் ஒரு உடல் உண்டு
கூசுகின்ற மனம் உண்டு .
தனக்குக் கீழே இருக்கும்
பூனைக் கூண்டின் கம்பிவரிசையை
பாதங்களால் மெல்லத் தட்டுகிறார்
இது ரமலான் மாதம்
சொர்க்கத்தின் கதவுகளை
ஏக இறைவன் திறந்தருளும் மாதம்
பரிதவித்து ஒடுங்கிய பூனையின் கண்களை
கால் விரல் நகங்கள்
“பரவாயில்லை, விடு” எனப் பார்க்கின்றன
தன்முன்னே குன்று குன்றாக
வைக்கப்பட்டிருக்கும் சந்தனப் பாளங்களை
அவரது உள்ளங்கை பிசைந்து
சிறுசிறு வில்லைகளாக ஆக்குகின்றது
கடைச்சிறுவன் கோழித்தீவன கம்பு தானியத்தை
மாவாக அரைத்து
மூட்டை கட்டி வருகிறான்
நிறமூட்டிகளும், மணமூட்டிகளும் தெளிக்கப்பட்ட
கம்பு மாவு
மணக்கின்ற சந்தனமாக வெளியே வருகிறது
தூரத்தில் சஹர் வேளைக்கான
பாங்கொலி எழுகிறது
சந்தனமெனப் பெயரிடப்பட்ட
வழிகின்ற நீருடன் இருக்கின்ற
மஞ்சள் பாளத்தை
மலமென ஒருமுறை கண்கள் பார்க்கின்றன
பன்னெடும் ஆண்டுகளாக
கண்கள் உணருகின்ற
அந்த ஒரு கண காட்சிப் பிறழ்வை
இன்றுவரை சரிசெய்யவியலாத
அல்லாப்பிச்சை பெருமூச்சுடன் குனிந்துகொள்கிறார்
வறண்டு இறுகிவிட்ட
தாவரத்தின் வேரைப்போன்ற
அந்த நோன்பிருக்க இயலாதவனின்
பாதத்தை
கம்பிக்கூண்டுக்குள்ளிருந்து
ஒரு ஈர நாவு மென்மையாகத் தடவுகிறது.

பா. திருச்செந்தாழை

The post திருச்செந்தாழை கவிதைகள் first appeared on திணைகள்.

பாத்தேறலுக்குப் புகழஞ்சலி

30 March 2025 at 04:06

சிங்கப்பூரின் மூத்த மரபுக் கவிஞர்களில் ஒருவர், தீவிர தூயதமிழ்ப் பற்றாளர், 11 நூல்களின் ஆசிரியர், IceCream என்பதற்குப் பனிக்கூழ் என்ற சொல்லை வழங்கியவருமான பாவலர் பாத்தேறல் இளமாறன் அவர்கள் நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு தனது 80-ஆவது வயதில் சென்ற வியாழன் இரவு 27-மார்ச்-2025 அன்று இயற்கை எய்தினார்கள். அன்னாரது இறுதிச் சடங்கு  மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்றது.

மலேசியாவின் முன்னாள் அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.க / MIC) கட்சியின் தேசியத் துணைத்தலைவரும், தாப்பா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான டத்தோ மு.சரவணன் அவர்கள், பாத்தேறல் அவர்களின் மறைவுச் செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகச் சனிக்கிழமை 28 மார்ச் நண்பகல் சிங்கப்பூர் வந்திருந்தார்.  

பாசிர் ரிஸ்ஸில் இருக்கும் பாத்தேறல் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரின் நல்லுடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர் மகள் கண்ணகி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கவிமாலை நிறுவனர் பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன், கவிமாலை முன்னாள் தலைவர் இறை.மதியழகன் ஆகியோர் டத்தோ சரவணன் அவர்களுடன் கூடவே இருந்தனர். சுமார் ஒருமணி நேரம் அங்கு அமர்ந்து பாத்தேறல் ஐயாவைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.   கவிமாலைக் கவிஞர்கள் கவிஞர் கி.கோவிந்தராசு , கவிஞர் கருணாகரசு, கவிஞர் கோ. இளங்கோ, கவிஞர் பனசை நடராசன் போன்ற பல கவிஞர்களும் இல்லத்துக்குச் சென்று பாவலருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சிங்கப்பூர் கவிஞர் மறைவுக்கு டத்தோ சரவணன் அவர்கள் நேரில் வருகை புரிந்து ஆறுதல் கூறிச் சென்றது, சிங்கப்பூர் மலேசியத் தமிழ் நல்லுறவுக்கு நல்லுதாரணமாகவும், டத்தோ அவர்கள் நெஞ்சில் தமிழ் மீதும் தமிழ்ப் படைப்பாளர்கள் மீதும் உள்ள உண்மையான மதிப்பையும் அக்கறையையும் உணர்த்தும் விதமாகவும் அமைந்தது.

அவருக்கு  ‘பாத்தேறல்’ என்ற பட்டத்தை 1989 ஆம் ஆண்டு வழங்கியவர் ம.இ.க முன்னாள் தேசியத் தலைவரும் சரவணன் அவர்களின் அரசியல் வழிகாட்டியுமான, முன்னாள் மலேசியப் பொதுப் பணித்துறை அமைச்சர் அமரர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்கள் என்பதை அவர்கள் நினைவு கூர்ந்தது மேலும் நெகிழ்ச்சியாக அமைந்தது.

மாலை 6:45 மணிக்கு மண்டாய் எரியூட்டு வளாகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு இரா.தினகரன். கொள்கை ஆய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் திரு அருண்.மகிழ்நன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தமிழ்முரசு இணை ஆசிரியர் கனகலதா, எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் தமிழாசிரியர் திரு முத்துமாணிக்கம், மக்கள் கவிஞர் மன்றத்தின் சார்பாக கவிஞர் இராமசாமி, முனைவர் தேன்மொழி ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள். கவிஞர் புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் நிகழ்வை வழிநடத்தி இரங்கல் உரையாற்றினார்கள்.

பாவலரின் மகள் கண்ணகி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தி தந்தையும் நினைவுகளை வருத்தத்தோடு பதிவு செய்து, ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி கூறினார்.

தலைப்பிள்ளையான அவர் ஒரு வயதில் இருந்தபோது, தந்தையார் தனக்காக எழுதிய கவிதையை கண்ணீர் மல்கப் பாடினார். அவருடன் ஐயாவின் மகள்கள் தமிழ்க்கோதை, கலைச்செல்வி, மகன் மணிமாறச் செல்வன் ஆகியோர் இணைந்து பாடியது அனைவரையும் நெகிழச்செய்ததோடு ஒரு தந்தைக்குத் தக்க நினைவஞ்சலியாகவும் அமைந்தது.

அதன் பின் சடங்கு நிகழ்வுக்குப் பின்னர் அன்னாரது உடல் எரியூட்டப் பட்டது.

கவிமாலையில் மரபுக் கவிதை எழுதுபவர்களை ஊக்கப்படுத்துவதற்காகத் தனித்தமிழில் எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ரொக்கத் தொகையைப் பரிசாக வழங்கியவர்.  கவிமாலையின் 298ஆவது மார்ச் மாதச் சந்திப்பு 29.03.2025 மாலை 6 மணிக்கு சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.  அதில் பாத்தேறலுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  பாத்தேறல் பற்றி கவிமாலை வெளியீடு செய்த வரலாறும் வரிகளும் குறும்படம் திரையிடப்பட்டது.  கவிமாலைக் கவிஞர்கள் பாத்தேறலின் கவிதைகளை வாசித்து அவரது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது அவருக்கான புகழஞ்சலியாக அமைந்தது.   

தமிழுக்கான சிந்தனை உழைப்பை வழங்கிய சிங்கப்பூர்ப் பாவலர்கள் வரிசையில் அவருக்கு நீங்கா இடம் உண்டு. பாத்தேறல் அவர்களின் படைப்புகள் அவரது புகழ் வாழ்வை உறுதிசெய்யும். வாழ்க பாத்தேறலின் புகழ்!
.
– கவிஞர் இறை மதியழகன்

30.03.2025.

The post பாத்தேறலுக்குப் புகழஞ்சலி first appeared on திணைகள்.

தன் கவிதையை அழவைத்து, தான் உளமாரச் சிரிக்கும் கவிஞன்

 

நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிறான் தத்துவவாதி விட்கன்ஸ்டைன். மொழிக்கு முன்னால் உணரும் விம்மலைப் பேசவும் மொழிபெயர்க்கவும் முயலுகையில் கடக்கப்படும் சிறு எட்டோ, பெருவீச்சின் சாகசமோ தான் கவிதை என்று தோன்றுகிறது.

றாம் சந்தோஷ் வடார்க்காடு-வின் மூன்றாவது தொகுப்பான‘சட்டை வண்ண யானைகள்’, தமிழ் நவீன கவிதையில் வேடிக்கை பாவத்தோடு, விழிப்பின் தீவிரத்தையும் கொண்ட காத்திரமான கவிநிகழ்வு. அது கொடுக்கும் அனுபவம் என்னவென்று விசாரிக்கும்போதுதான் விட்கன்ஸ்டைனைத் துணைக்கழைக்க வேண்டி வந்தது.

 

றாம் சந்தோஷ் வடார்க்காடு கவிதையை ஒரு முகமூடியாகப் பாவிக்கிறார். முகம் கொள்ளும் சிரிப்பை, முகம் துடித்து விம்மும் அழுகையை முகமூடிக்கு தனது நடிப்பின் வழியாகப் படிப்படியாக இடம் மாற்றும் கலை அவருடையது. முகமூடிகளே நிகழ்த்துவதாகத் தோன்றவைக்கும் கவிதைகள் என்று இதற்கு முன்னர் பெருந்தேவியின் கவிதைகளைச் சொல்லமுடியும்.

எமது அந்தரங்கத்தையும் எமது அசிங்கத்தையும் எமது வெறுப்பையும் நாம் உணரும் தனிமையையும் எம் கொந்தளிப்புகளையும் எம் இரட்டை நிலைகளையும் எம் விழிப்பையும் ஒரு முகமூடிக்கு மாற்றிவிட்டால் இயற்கையின் பாறைத்தன்மையைக் கொண்ட ஒரு அனாமதேயனாக ‘நான்’ ஆகிவிடக்கூடிய உத்தேசம், ஆசுவாசத்தை றாம் சந்தோஷின் கவிதைகள் அளிக்கின்றன.

‘உன் துயருக்கும் ஒரு பலன் உண்டா கவியே
நாலு கவிதை கிடைக்கும் ப்ரோ’
இப்படித் துணுக்குத் தன்மையையும் பாவித்தபடி தீவிரத்தின் ஊஞ்சலுக்கும் அடுத்து தாவும் தன்மையையும் சமீபத்தில் சாதித்துள்ளவர் றாம்.
எதைக் கற்றும் எந்த லாபமும் இல்லை
எதைப் பயின்றும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை
எதன் பொருட்டும் நீ பலியாவதை
நான் விரும்புவதில்லை என்று
அந்தக் கண்ணாடி முன் ஒருதரம் சொன்னேன்
அது அழுதது; நான் சிரித்தேன்.

அந்த முயற்சியில் பெரிதளவு வெற்றியையும் சில தோல்விகளையும் பெரிதளவு இசைமையையும் சின்னச் சின்ன அபசுரத்தையும் கொண்டது ‘சட்டை வண்ண யானைகள்’.

பிறப்பு இனிமையானது அல்ல. பிறப்பு குணமானதும் அல்ல. பிறப்பின் அருவருப்பை அதோடு தோய்ந்த அழகை, பிறப்பின் பயங்கரத்தை அதோடு ஒட்டிக்கொண்டுள்ள புது விழிப்பை, பிறப்பின் நசநசப்பை அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பை, பிறப்பின் ரண ஓலத்தை அதோடு பிரிக்கவியலாத அநாதி துக்கத்தைத் தொட்டுத் தொட்டுச் செல்வதால் றாம் சந்தோஷ் இக்கவிதைகள் வழியாக எனக்கு நெருக்கமாகிறார். பிறப்பு அத்தனை எளிதானதுமல்ல.

நண்பனுமில்லாத நண்பியுமில்லாத காதலனுமில்லாத காதலியுமில்லாத செல்லக்குட்டிகளாக இவர் தனது கவிதைகளைப் பராமரிக்கிறார். அவர்களை யார் என்று கேட்டால் ‘என் இதயம், என் பருவம், என் குழந்தைமை, என் தாய், என் தந்தை, என் அசகோதரன், மட்டுமில்லாது என் விரோதியின் அசல் வார்ப்பென்பேன் ’ என்று சமத்காரத்துடன் கூறும்போது உள்ளேயும் வெளியேயும் உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்பை உணர்கிறோம்.

நவீன கவிதைகள், பார்த்தலாக, வெறும் பராக்காகப் பண்ணி பண்ணி தினுசு தினுசாக வனையப்படும் வஸ்துக்களாகத் தோற்றமெடுத்துவிட்ட நிலையில் றாம் சந்தோஷின் உள்ளும் புறமுமான விழிப்பு கவிதைச் செயல்பாட்டாளனான எனக்குப் புத்துணர்வை ஊட்டுகிறது.

தமிழில் வேடிக்கை என்ற சொல் இரண்டு வித்தியாசமான அர்த்தங்களில் செயல்படுகிறது. அதன் ஒரு பொருள் பார்த்தலை மட்டுமே குறிக்கிறது. நிகழ்த்திக் காட்டுவதையும் வேடிக்கை என்ற சொல் குறிக்கிறது. 

றாம் சந்தோஷின் கவிதைகளை நான் விழிப்பை உள்ளேயும் வெளியேயும் கொண்டு நிகழ்த்தும் செயல்பூர்வமான வேடிக்கை என்று சொல்வேன். தமிழில் நகுலன், கலாப்ரியா, ரமேஷ் – பிரேம், பச்சோந்தி எனக் காட்சியே கலகமாக மாறும் தீவிர வேடிக்கைக்கு ஒரு மரபு உண்டு. அந்த மரபில் மிகக் காத்திரமாக இணைந்திருப்பவர் றாம் சந்தோஷ். 

தமிழ் பக்திக் கவிதைகளின் நவீன தொடர்ச்சியாகவும் அந்த மரபின் ஒரு பகுதியான வைதீகத்தின் முதுகில் பிரம்பால் சாத்தியதுபோலச் சுளீர் தன்மை கொண்ட பதிலாக ‘மாயோன் அபிமான சர்ச்சை என்னும் மால் திரு கலகம்’ கவிதை வரிசையைச் சொல்லலாம். தமிழின் அபூர்வமான நீள் கவிதைகளில் ஒன்றாக அது திகழும்.

மைத்துனன் நம்பி
சூதனா சற்று சும்மா இரு
கோத்திரம் கேட்காதே; குலம் பொருளறியேன்
முதுகில் சாற்றிய சாதியின் வடுவுண்டு
நீ பாத்திரம் என வொன்றை நீட்டினால்
நான் இடுவேன் பத்து; போதுமா? தள்ளு.
சாலவும் தூரமிருந்து நான் வந்தேன்;

எனத் தொடங்கும் கவிதை வரிசை றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் தமிழறிஞர் பின்னணியையும், மொழி லாகவத்தையும் உணர்த்துவது. பேச்சுவழக்கை இயல்பாகத் தொனிக்க விடுதல், சமத்கார மொழி, அழுத்தமான கேலியுடன் தெலுங்கு, மலையாள விளிப்புகளையும் கவிதைக்குள் இணைத்துவிடுகிறார். இசைத்தன்மை கொண்ட கவிதைகளில் ஞானக்கூத்தனின் தாக்கத்தைப் பார்க்கமுடிகிறது.

தன்னுடனேயே விளையாடும் ஒரு சிறுவனுடைய தனி மொழி, தன் செல்லம், தன் பாவனை, தன் உரையாடலாக, ஆராட்டி, சீராட்டி, சீண்டி, பிணங்கும் அந்தரங்கமான கவிதைமொழியை தன் கவிதைகளுக்குத் தேர்ந்துள்ளார். மெனக்கெடல் தொனிக்காத ஆத்மாநாமின் அந்தரங்க உரையாடல் தன்மை றாம் சந்தோஷிடம் வேறு தீவிரத்துடன் இறங்கியுள்ளது. ஆத்மாநாமின் ‘என் ரோஜா பதியன்கள்’, ’மறுபரிசீலனை’, ‘நாளை நமதே’, ‘நன்றி நவிலல்’ கவிதைகளின் தொனி றாம் சந்தோஷில் புதுக்கப்பட்டுள்ளது.

சட்டை வண்ண யானைகள் தொகுப்பின் துவக்கத்திலுள்ள ‘பரஸ்பரம்’ கவிதையிலேயே முகத்துக்கும் முகமூடிக்கும், ஆளுக்கும் பிம்பத்துக்குமான உரையாடல், பரஸ்பரப் பரிமாற்றம் துவங்கிவிடுகிறது. புது வருடத்தை, புது அனுபவத்தைக் கொண்டாட திறக்காத சிப்பிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத் திறக்கப்படாத சொற்கள் காத்திருக்கின்றன.

குளிரும் வெயிலும் அருகருகே மாறி உட்காருமளவுக்குத் திகழ்கிறது.
அப்போது கவியின் எதிர்கால மூப்பை முகத்தில் கொண்ட மந்தி. அதன் கரத்திலோ கவிதை உரைப்பவனின் கடந்த காலப் புண்கள். அது என்னைவிடவும் அழகு. அது என்னைவிடவும் சமத்து என்று கோதிவிட்டு யாருமில்லையா உனக்கு மந்தி என்று கேட்கும்போது அந்தரங்க குரல் பிரமாண்டமான பாறைகளை உண்டாக்கி, அவற்றுக்குள் மோதி பெரும் எதிரொலியாக, அசரீரியாக, ஓலமாகத் தொனிக்கிறது. தனிமை தனது கூழாங்கல்லை உருட்டி உருட்டிப் பாறையாக்கும் சம்பவம் இந்தக் கவிதையில் நிகழ்கிறது.

யாருமில்லையா உனக்கு மந்தி
உன் மந்தை எங்கே
அது என்னைப் போலவே
என்னோடு பேசாமல் பார்க்கிறது.

கவி தனது துக்கத்தைத் திராட்சைக் கொத்தாக அந்தக் குரங்குக்கு அளித்துவிட்டான். அது பதிலுக்கு மகிழ்ச்சி என்னும் ரசமாய் மாற்றித் தருகிறது. அந்த மந்தி யார்? அண்மையிலேயே இருந்துகொண்டு அனாமதேயமாக நமக்குத் தொனித்துக் கொண்டிருக்கும் நம்மையும் உள்கொண்ட இயற்கை என்று றாம் சந்தோஷிடம் ஒரு பதில் உள்ளது.

றாம் சந்தோஷ், நல்ல கவிதைகளையும் அந்தரங்கக் குறிப்புகளோ எனத் தொனிக்கும் ஊதாரியாய் அலையும் விவரணைகளுக்கு நடுவில் வைத்துள்ளதால், வாசிப்பவன் கவிதையைத் தனியே உருவிக்கொள்ள வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது.‘வெள்ளி பார்த்தல்’ கவிதை அதற்கு ஒரு பருக்கை உதாரணம்.

‘நாங்கள் தொடர்ந்தோம்’ என்ற இடத்தில்தான் எனக்கு வெள்ளி பார்த்தல் கவிதை தொடங்குகிறது. போகும் போது இடதுகாலையும் வரும்போது வலதுகாலையும் நனைக்கும் ஏரியைப் போலவே ஓர் அல்லாத நிஜத்தில் படர்கிறதாம் குளிர்ச்சி. உண்மையின் குளிர்ச்சியில் அகம் விரிந்து உயர்ந்து குருவியாகச் சுயம் பறக்கிறது.

விண்மீன்களின் சேய்மையை உணராமல் இருக்க, பாவனை மின்மினிகள் தீண்டித் தீண்டிச் செல்கின்றனவாம். நிலைத்த மெய்மையாக, றாம் சந்தோஷ், வானத்து விண்மீன்களைச் சுட்டுகிறார் போல. மனிதனின் உயரத்திலேயே தீண்டும் அநித்தியமான நட்சத்திரங்களான மின்மினிகளைக் கவிதைகள் என்று கொள்வோமா?

இந்தக் கவிதையில் புதிய வஸ்துகள் எதுவும் இல்லை. வெள்ளி, வண்ணத்துப்பூச்சி, மலர், நிலா, நெல்லிக்கனி என எல்லாமே பழைய வஸ்துகள். ஆனால், அத்தனை வஸ்துவும் நித்தியத்தின் சுடரில் ஒளிர்கின்றன.

அண்ணன்கள் கதை 1

நாங்கள் பாலகர்களாக இருந்தோம்
ஓர் அண்ணனுக்கே உரிய
வழமைபோல் இந்தத் தம்பியை ஏமாற்றி
என் தீனி மொத்தத்தையும் அவனே தின்றான்…
என்னை விட்டுவிட்டு
கிரிக்கெட் விளையாடப் போவான்…
என்னை ஒரு நாளும்
அவனுடைய சைக்கிளில் ஏற்றியதே இல்லை…
ஒரு நாள் காம்பஸ் அம்பால்
என் பாதத்தைக் காயப்படுத்திவிட்டான்
அப்பா அதற்கு அவனுக்கு அடி கொடுத்தார்
நான் தேம்பித் தேம்பிய அழுகையினூடே
ஒரு கையளவு சிரித்தேன்.

அண்ணன்கள் கதை 7

அவ்வப்போது தோன்றும்
அழுகை முட்டிக்கொண்டு வரும்
ஆண் மகன் அழுதால் ஆகுமா… என்றான் ஒருவன்…
அந்தத் தடியை எடுத்து அவன் தாடையை உடை என்றேன்.
பொறுப்பெல்லாம் கூடிப்போன பின்னே,
உறவுகள் விரிசல் காண்பதுறுதி…
மறுமுறை ஒட்ட நினைத்தால்…
பணமொரு பாம்பு போல் நெளியும் குறுக்கே…
அதைத்தாண்டி அண்ணனை நினைக்க…
ஆயிரம் காரணங்கள் வேண்டியதில்லை…
இரு பாலகர்கள் போனால் போதும் முன்னை
ஒரு வண்ணச் சட்டைப் போட்டு…
(உலகின் மொத்த அண்ணன்களுக்கும்
என் அண்ணன் கோபிக்கும்)

பொதுக்கழிப்பறைகளின் தேவபாதைகள்
அடைக்கப்படும்போது…

மகள்:
கழிப்பறைகளுக்கான
தேவ பாதைகள் அடைக்கப்படும் போது
நான் என்ன செய்வேன் அம்மா..
ஓர் ஆணைப்போல
கொட்டும் இப்பெரு மழையில்
பாதைகளோரமோ, ராத்திரியிலோ,
மந்தப் பகலிலோ,
கண்கள் ஆயிரம் பரப்பும் வெளிச்சத்தில்
கூச்சத்தை விலக்கியேனும்
யாரை நம்பி எதன் துணியில்,
நான் கழிப்பேன்; என் கால்களை விலக்கி…

தாய்:

துயரின் மகளே
பழகுவது எழுதி தான் என் பாசப்பெண்டே!
ராத்திரிகள் உனக்கு அருளப்படும் மட்டும்
கொஞ்சம் போல் அடக்கி வைத்திருப்பது கடினம் தான்
என்றாலும், அதுவரை நீ
தனித்திரு! விழித்திரு!
பிறகு இது வேணும் வாய்த்திருக்கிறதே என
அக்குளியலறைக்குள் செல்…
அங்கேயே கழி!
கழிக்கப்பட்ட அந்த வரிய தேவதையின் தங்க எச்சத்தைத்
தரையில் மஞ்சள் கிழங்கெனத் தேய்த்து வெளியேற்று
இப்பெத்தாம் பெரிய சமத்துவச் சாக்கடையில்,
ஆனால், சில நாட்கள் மட்டும்
என் மகளே…
தங்க மகளே…
கொஞ்சம் கொஞ்சம் போல்
உன் உடம்பில் மிளிரும் அந்த நிஜ மஞ்சளில் மட்டும்
துர் மலத்தின் நாற்றம் மாறாது மணக்கும்
அதையும் நீ பழகுவாயாக …
என் துயரின் மகளே!
வருங்காலப் பறவையே!

(உதயேந்திரம் பேரூராட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும்…)

பெரும்பொழுது: இருபத்தியோரம் நூற்றாண்டு
சிறுபொழுது: மழைக்காலம்
நித்ய பொழுது: கழிவறையறு காலம்.

 

 

 

சட்டை வண்ண யானைகள்

றாம் சந்தோஷ் வடார்க்காடு

கொம்பு வெளியீடு
விலை: 150 ரூபாய்.

The post தன் கவிதையை அழவைத்து, தான் உளமாரச் சிரிக்கும் கவிஞன் first appeared on திணைகள்.

நான் எழுதவே விரும்புகிறேன் – லி சிங் சாவ்

8 February 2025 at 14:28

இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது லி சிங்சோவ் (Li QingZhou) பற்றிய தகவல்களைப் படிக்க நேர்ந்தது. சமீபத்தில் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதார்த்தமாகக் கண்ணில் பட்ட பண்டைய சீனக் கவிஞரான லி சிங்சோவ் பற்றிய நூல் வாசிப்பதற்குச் சுவாரசியமாக இருக்க உடனே எடுத்துவந்தேன். கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுகிறார். 

பண்டைய காலச் சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீனா தொடர்ச்சியாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்துச் சொங் வம்சம் நிறுவப்பட்டது. சீனாவின் வர்த்தகம் செழித்து மக்கள் ஓரளவு மகிழ்வாக இருந்தபோதும் நாட்டிற்கு அச்சுறுத்தல்கள் அதன் அண்டை நாடுகளிலிருந்து வரத்தொடங்கின. ஒவ்வொரு அரச மரபும் நாட்டின் அரசியல், கலாச்சார வளர்ச்சியை வலியுறுத்தி அண்டை நாடுகளுடன் சமாதானத்தை நாடினர். அப்போது மிங் டைனாசிடி, சொங் டைனாசிடி, தாங் டைனாசிடி, ஷாங் டைனாசிடி எனப் பல முக்கிய அரச வம்சங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அரசியல் அமைப்பினை உருவாக்கின. சீன அரச வம்சங்கள் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என நாட்டைப் பராமரிப்பதை நோக்கமாகக்கொண்டு நாட்டின் எல்லைகள் பிரிக்கப்பட்டன. அதில் ஆயிரமாண்டுகளில் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக இவர் அறியப்படுகிறார்.

லி சிங்சோவ் கி.பி 1084 ஆம் ஆண்டில் பிறந்தவர். அவரது தாய் வசதியான மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவள். சிங்சோவ் பலவகையான புத்தகங்களையும் படிக்கத்தொடங்குகிறாள். தன் குடும்பத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிக் கல்வியைக் கற்கும்படி லியை ஊக்குவிக்கிறார். ஒரு நாள், டாங் வம்சத்தின் நூலொன்றில் வேடிக்கையான கதை ஒன்றைப் படிக்க நேர்கிறது. அதில் விருந்தினர்களுக்கு இரவு உணவிற்கான அழைப்பிதழ்களை அனுப்பிவிட்டு விருந்திற்காக ஒரு பிரபலப் பாடகரைப் பாட அழைக்கிறார்கள். ஆனால் அதை வேடிக்கையாகச் செய்ய வேண்டுமெனத் திட்டமிடுகிறார்கள். ஒரு வேலைக்காரனைப் போலப் பாடகரை உடை அணியச் செய்து, அவர் அறைக்குள் நுழைந்தபோது யாரும் அவரைக் கவனிக்கவில்லை கீழ் வகுப்பைச் சேர்ந்தவரென நினைத்து உதாசீனப்படுத்துகிறார்கள். அவர் அறையின் பின்புறத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். விருந்தின் இறுதியில் தொகுப்பாளர் மேடையில் ஏறி, நகைச்சுவையாக “எனது நண்பர்களில் ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் நமக்காக விருந்தில் பாடல்களைப் பாடுவார் என்றவுடன் எல்லோரும் அமைதியாக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர், பாடகர் யார் என்று பார்க்கிறார்கள். அனைவரும் வியக்கும் வகையில், மோசமான ஆடை அணிந்த வேலைக்காரர் முன்னே வருகிறார்.

மேடையில் ஏறியவுடன் பாடலுக்கு இசையமைத்து, பார்வையாளர்களைப் பார்த்து உரக்கப் பாடத் தொடங்குகிறார். அந்த அறை அலறத் தொடங்கியது, காந்தக் குரலில் பாடல் ஒலிக்க, முதலில் அவர்கள் நகைச்சுவை நினைத்துச் சிரித்தனர். விரைவில் அவர்கள் பாடல் ஆழமாகத் தொட்டதால் அமைதியாகி, பாடல் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டல் பலமாக ஒலிக்கிறது. வேலைக்காரன் போல் உடையணிந்தவர் உண்மையில் டாங் வம்சத்தின் சிறந்த ஆண் பாடகர் வாங் பாயோஷன் என்று அறிந்து பலத்தக் கைத்தட்டலில் அறை அதிர்ந்தது. இக்கதையைப் படித்து முடித்ததும் அவள் வெடித்துச் சிரித்தாள். உலகம் எவ்வளவு பாசாங்குத்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதைப் புத்தகத்தின் அட்டையைப் போல மனிதர்களை மதிப்பதாக எண்ணி வருந்துகிறாள்.

அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட சிங்சோவ் கவிதைகளை எழுத ஆசைப்பட்டாள். ஏற்கனவே பலவிதக் கவிதைகள் புழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலானவை மோசமாக எழுதப்பட்டவை, குறிப்பாக அவை ஆண்களால் எழுதப்பட்டவை. கவிதையின் நடை மிகவும் ஆடம்பரமாகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. போரைப் பற்றியோ அவர்களின் தனிப்பட்ட லட்சியங்கள் பற்றியோ மட்டுமே இருந்தது. சிங்சோவ் தன்னால் கவிதைகளை எழுத முடியுமா, ஒரு புதிய வகைக் கவிதை நடையை உருவாக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தாள். கவிதைகள் புத்துணர்ச்சியாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்றும் உணர்ந்தாள். தன் பார்வைகளை வெளிப்படுத்த ஆடம்பர வார்த்தைகளைப் பயன்படுத்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

பிரபல அறிஞரும் சொங் வம்சத்தின் பிதாமகனாகவும் விளங்கிய வாங் அன்ஷியுடன் செல்வத்தின் மீது பேராசை கொண்ட பழங்குடியினரின் அச்சுறுத்தலையும், குறுக்கே உருண்ட கருமேகம் போல் வன்மம் திரண்டிருக்கிறதெனவும் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது தன் தந்தையிடம் கவிதை எழுதுவதைப் பற்றிக் கேட்க விரும்பினாள். அவள் அறைக்குள் நுழைந்து அவர்களின் உரையாடலைத் துண்டித்து,
“அப்பா, நான் எழுத விரும்புகிறேன்.” என்கிறாள், அவளது தந்தை லி கெஃபி அமைதியாகச் சிரித்தார். இருப்பினும், சிங்சோவ்வின் லட்சியத்தைக் கேட்டு வாங் அன்ஷி வியந்தார். அவளின் புத்திசாலித்தனத்தை மெச்சினாலும் மனரீதியாகப் பழமைவாத கொள்கைகளை ஏற்றிருந்தவர்.

“ஓ, சிங்சோவ் நீ எழுத விரும்புகிறாயா?” என ஆச்சரியத்துடன் கேட்டார். அவரது குரலில் சிறிய மறுப்பு இருந்தது.

“நான் விரும்பும் போது எழுதுகிறேன்.” என வாங் அன்ஷியின் கேள்விக்குச் சிங்சோவ் நேரடியாக அவரது கண்களைப் பார்த்து புத்திசாலித்தனமாகவும் தைரியமாகவும் பதில் சொன்னாள்.

“எனக்குப் புரிகிறது, நீ அப்படிப்பட்ட சரியான குடும்பத்தில்தான் பிறந்திருக்கிறாய்.” என வாங் அன்ஷி அவளது தந்தையைப் பார்த்து வெடித்துச் சிரித்தார். அவளது தந்தை வெட்கப்பட்டதோடு அவர்களது பேச்சுத் தொனியில் இருந்த முரண்பாட்டை உணர்ந்து முகத்தைச் சுழித்தபடிச் சென்றுவிட்டாள்.

அவளுடைய தாயார் எப்போதும் புத்திசாலித்தனமான கருத்துகளைக் குடும்பத்தினரிடம் கூறும்போது தாத்தா பரிதாபமாகப் பார்ப்பார், நீ ஆண் குழந்தையாக இருந்தால் மட்டும்தான் இதெல்லாம் சொல்ல முடியுமெனச அலட்சியப்படுத்திச் சென்றுவிடுவார். தாயாரின் திருமணத்திற்குப் பிறகும் சுவரில் ஒரு சுருளைத் தொங்கவிட்டு இங்கேயே படித்து மகிழ்ச்சியாயிரு என்று சொல்லி அவள் எழுதுவதற்கு யாரும் ஆதரவளிக்கவில்லை.
“நான் தனியாக இல்லை! படிக்க விரும்பும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். கவிதைகள் எழுத வேண்டும் என்ற என் விருப்பத்தை இப்போதே தொடங்குகிறேன்.” என்று சொல்ல, ஏளனச் சிரிப்பில் வாங் அன்ஷி வெடித்தார். அவளது வார்த்தைகளைச் சிறு பெண்ணின் ஆசை, ஏதோ உளறுகிறாள் எனத் தவறாக உணர்ந்து, அறையை விட்டு வெளியேறிச் செல்கிறார்.

சிங்சோவ் வீட்டை விட்டு வெளியில் சென்று இயற்கையை ரசிப்பதையே பெரிதும் விரும்பினாள் குடும்பத்திற்கு இளையவள் என்பதால் பெரிதாகக் கட்டுப்பாடுகளின்றிச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தாள். தனக்கு விருப்பமானவர்களுடன் நட்பு கொள்ளும் சுதந்திரத்திடன் இருந்தாள்.

கோடைக்காலம் தொடங்கியபின் பூக்கத் தொடங்கிய பூக்களைப் பார்க்க விரும்பினாள். மலைகள், மலர்களால் மூடப்பட்டிருந்தன, தூரத்திலிருந்த பனியின் புகை பிடித்தது அவளுக்கு. சிங்சோவ் காற்றின் இனிமையான நறுமணத்தை விரும்பினார். வளைந்து நெளிந்த பாதையில் வெகுநேரம் தவித்தவள், மணிக்கணக்கில் தங்கியிருக்க ஆசைப்பட்டாள். அவள் சிறுவயதில், தன் தோழிகளுடன் தாமரை மலர்களுக்கு நடுவே ஒளிந்து விளையாடுவதும் ஆற்றங்கரைக்குச் செல்வதும் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

அவள் பெற்றோருடன் அடிக்கடி ஒரு கோப்பை வைன் அருந்துவாள். ஒரு நாள், அவள் தந்தை அரசவைக்குச் சென்றபின் சமையலறையிலிருந்த மது போத்தலை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். பல வருடங்களாக நெருங்கிய நண்பன் ஜாவோ மிங்செங்கைச் சந்திக்க, அருகில் இருந்த மேற்குப்புற மண்டபத்திற்குச் செல்கிறாள்.

சிறிது நேரம் கழித்து, உயரமான, அழகான இளைஞன் அங்கு வருகிறான். சிங்சோவ் சிரித்துக்கொண்டே அவனுக்கு ஒரு கோப்பை மதுவை ஊற்றிக் கொடுக்கிறாள். அதை வேகமாகக் குடித்துவிட்டு நீண்ட சிரிப்புக்குப் பிறகு, அவர்கள் கவிதை எழுதுவதைப் பற்றிப் பேசுகிறார்கள். உங்களுக்குப் பிடித்த கவிஞர் யாரெனக் சிங்சோவ் அவனிடம் கேட்கிறாள். மிங்செங் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “நிச்சயமாக, அது உன் தந்தையின் குருவான சு ஷியாக இருக்க வேண்டும். அவருடைய பாணி பிரமாண்டமானது. “சு ஷியின் சகோதரியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என ஆர்வத்துடன் கேட்கிறாள். “அவள் திறமையானவள். அந்தக் குடும்பத்தில் அவளால் நல்ல கல்வியைப் பெற முடிந்ததில் ஆச்சரியமில்லை என்கிறான். இவளுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியவள்.

ஒரு பலகையில் படுத்துக்கொண்டே சிங்சோவ், “நான் அவளைப் போல அல்லது அவளை விட நன்றாகவே இருக்க விரும்புகிறேன்” என்று தளர்வான குரலில் கூறினாள். மிங்செங் அவளிடம் சவால் விடுகிறான், வரலாற்றில் பல பிரபலமான மற்றும் திறமையான பெண்கள் உள்ளனர், அவர்களைப் போலவே நீயும் நன்றாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்கிறான்.

மிங்செங் அரச வம்சத்தில் பிறந்தவன். தனது வயதிற்கு ஏற்றவாறு உயரமாக, அழகான அடர்ந்த கருமையான கூந்தலுடன் இருந்தான். எல்லாவற்றையும் தீவிரமாக எடுத்துக் கொண்டான். வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தான். அவனுக்குக் கற்கள் மீது ஈர்ப்பு இருந்தது. முன்பு ஆற்றங்கரையில் இருந்து சேகரித்த ஒன்றைத் தன் பைக்குள் வைத்து எடுத்துவந்தான். அதைச் சிங்சோவ்விடம் காட்டினான். “அதன் வடிவத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றாள். சிங்சோவ் அதைக் கவனமாகப் பார்த்துவிட்டு ஆர்வமில்லாமல், “இது வெறும் கல்” என்றான். ” கற்பனை செய்து சொல்லுங்கள் என்கிறாள். சிங்சோவ் கல்லை அவள் கைகளில் பிடித்துக் கொண்டு, “ஒரு முத்தைப் போல இருக்கிறதா? அதுதான் கற்களைப் பற்றிய ஆச்சரியமான விஷயம். கலை இயற்கையில் இருந்து உருவானது. கற்களின் வெவ்வேறு வடிவங்கள் வெவ்வேறு தொனிகளைக் கொண்டுள்ளன. எனது பரம்பரையில் கற்கள், ரத்தினங்கள் அதனுடைய அழகிய வண்ணங்களுக்காகவும், வடிவங்களுக்காகவும் சேகரிப்பதை விரும்புகிறார்கள். கற்களின் பின்னால் உள்ள படைப்பாற்றலை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று சொல்கிறாள்.

“ஆனால் அது இன்னும் ஒரு கல்தானா?” என்று சிரிக்கிறாள். அவன் எரிச்சலாகி வேகமாகக் கல்லைப் பையில் போட்டுக் கொண்டு, “பெண்கள் எப்பொழுதும் குறுகிய பார்வை கொண்டவர்கள். உங்களுக்குக் கலை, அழகு பற்றி எதுவும் தெரியாது. கல்லில் நீங்கள் நினைப்பதை விட அதிகம் இருக்கிறது. கல்லை உன்னிப்பாகக் கவனித்தால் ஜென் தத்துவம் பொதிந்திருப்பதைக் காணலாம். கல்லையோ ரத்தினத்தையோ கையில் எடுத்தால் இயற்கையின் காலநிலையில் வெவ்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்ட பருவ நிலைகள் புரியும், என்கிறான்

சிங்சோவ் ஆர்வம் காட்டுவது போல் தலையை ஆட்டினாள். அவள் கண்கள் பாதிச் சிரித்துப் பாதி ஏளனம் செய்தன. அவளுக்கு எரிச்சல் வரக்கூடாது என்பதற்காக ஆற்றில் படகில் செல்வோம் என்று கிளம்பிச் செல்கிறார்கள். சிங்சோவ்வைப்போல உற்சாகமாக இல்லாவிட்டாலும் படகில் செல்வதில் மிங்செங் மகிழ்ச்சியடைகிறான். ஏரியின் ஓரத்தில் ஒரு படகைக் கண்டுபிடித்து அதை வெளியே எடுத்தார்கள். பூக்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற வண்ணங்களில் மலர்ந்திருந்தன. பசுமையான ஏரி நேர்த்தியான கம்பளம் போல் இருக்கிறது, என்கிறாள்.

மதுவின் நெடியில் தூண்டப்பட்ட சிரிப்பு ஆற்றில் எதிரொலித்தது, நைட்டிங்கேல்களின் சிரிப்புடன் மிங்செங் படகை ஓட்டினான். தண்ணீரில் கைகளை நனைத்து மகிழ்கிறாள். மிங்செங் அவளை முட்டாள்தனமாகப் பார்ப்பதைக் கண்டு, அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள். அவள் கண்களில் குறும்பு தெரிந்தது.

தாமரை மலர்கள் நிறைந்த கால்வாயில் படகை வேகமாக ஓட்டினான். அவன் படகோட்டியை நிறுத்தி, துடுப்புகளை இழுத்துப் படகை அதன் விருப்பப்படி நகர்த்த அனுமதித்தான். தாழ்வான படகில் அமர்ந்து செல்ல மலர்கள் அவர்கள் மீது உரசின. ஒரு பெரிய தாமரை மலருக்குள் தன் முகத்தைப் புதைத்துச் சிரித்தாள். அவர்கள் படகில் படுத்து, வானத்தின் குறுகிய வில்லை அமைதியாகப் பார்த்தார்கள். வளிமண்டலம் வசீகரமாக இருந்தது, இயற்கையின் போதையில் மிதந்தனர்.

அந்தி சாயும் நேரத்தில் வானம் ஒருபுறமாகச் சரிந்தது. திரும்பிச்செல்லும் நேரம் வந்துவிட்டதென எழுந்து அமர்ந்து படகை மீண்டும் மேற்கு மண்டபத்திற்குத் தள்ளத் தொடங்கினான். இருப்பினும் அதிகமாக மது அருந்திவிட்டு மங்கலான வெளிச்சத்தில் தாமரைப் பூக்களைப் பார்க்கிறாள்.

                தாமரை மலர்கள் ஆற்றில் நடனமாடுகின்றன
                அந்தி வெளிச்சம் நிலத்தைச் சிவப்பாகக் குளிப்பாட்டுகிறது

இது டாங் டைனாசிட்டியின் கவிதை என்று சொல்கிறான் மிங்.

நான் சொந்தமாகக் கவிதை எழுதுவேன் என்கிறாள். பெண்களால் கவிதை எழுத முடியுமென நான் நம்பவில்லை என்கிறான்.

படகை இழுத்துத் தள்ளிக் கோபமாக இறங்கி வெளியில் வருகிறாள். வீட்டிற்கு வந்தவுடன் எதிரில் தன் தந்தை வருகிறார். எனக்கொரு கோப்பை வைன் வேண்டுமென்கிறாள். உடைகள் ஏன் நனைந்திருக்கின்றன என்கிறார். நான் மதியம் வெளியில் சென்றேன். அதைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேனெனத் தனது முதல் கவிதையை வாசிக்கிறாள்.

நான் எப்போதும்
மேற்கு மண்டபத்திற்குப்
படகில் சென்றதை நினைவில் வைத்திருப்பேன்
மகிழ்ச்சியாய்க் குடித்தோம்
தடங்கள் தொலைந்துபோய்
எங்கே செல்வது? எங்கே செல்வது?
கடல் சிணுங்கியபடி நீரைத் தெளித்தது,
இன்னும்…

தந்தை கவனமாக இக்கவிதையைப் படித்துவிட்டு வித்தியாசமாக எழுதியிருப்பதைப் பார்க்கிறார். சில வரிகளால் தனது மகிழ்வான மதியப் பொழுதை அவளால் சித்திரம் போல் வரைய முடிந்ததை எண்ணி ஆச்சரியப்படுகிறார். கடலையும், அந்தி மறைவதையும் பார்த்து கடல் சிணுங்குவதையும் அழகாகச் சொல்லமுடிகிறது. எளிமையான வரிகள் புதிய பார்வையுடன் அவளுக்குள் இயற்கையாகவே ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்டு மெச்சுகிறார்.
அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தவளுக்கு இதை வெளியிட வேண்டுமெனச் சொன்னதும் மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்கிறாள். தன்னுடைய சகோதரனைவிட நன்றாக எழுதி மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென நம்புகிறாள்.


அக்காலத்தில் சொங் டைனசிட்டி அச்சுத் தொழிலில் வளர்ந்திருந்தது, இலக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அவளுடைய முதல் கவிதை வெளியானவுடன் உண்மையிலேயே உன் மகள் எழுதிய கவிதைதானா எனப் பலரும் அவரிடம் கேட்டார்கள். பொதுமக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை சிறுமி வயதுக்கேற்ப ஏதோ எழுதியிருக்கிறாள் என விட்டுவிட்டார்கள்.
வருத்தத்துடன் வெளியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து வேகமாக ஆடுகிறாள். அவசரமாக இறங்கி அறைக்குள் ஓடிவந்து ஒரு கவிதை எழுதுகிறாள்.

நான் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தேன்
விருந்தினர் வந்திருப்பதாகச் சொன்னார்கள்
சோவ் மிங் செங்கின் தந்தைதான்
கைகளைக் கழுவ நேரமில்லை
நெற்றியில் இன்னும் வியர்த்திருந்தது
காலில் காலணியின்றி அவசரமாக ஓடினேன்
என் கூந்தலிலிருந்து தங்க ஊசி தரையில் விழுந்தது
நான் வெட்கத்துடன் வேகமாகச் சென்றேன்
திடீரென என் மனத்தை மாற்றிக்கொண்டு
திரும்பிப் பார்க்கிறேன்
பசுமை நிற பிளம்ஸின் நறுமணம்
என் முதத்தில் தெளித்தது…

தாளை முகத்தில் வைத்து மறைத்துக்கொண்டு திரும்பிப் பார்க்கிறாள். அவளுடைய மனத்தில் மிங்செங்கின் முகம் நினைவுக்கு வருகிறது. அவன் தந்தையைச் சந்தித்த பிறகு, சிங்சோவ் உணர்ச்சிவசப்பட்டுப் படுக்கையில் படுத்தபடி அவனுடைய நினைவில் மூழ்குகிறாள். அவளால் காதலைப் பற்றிப் பெற்றோரிடம் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. இயற்கையின் அழகையும் ரகசியக் காதலையும் எண்ணியபடியே தூங்கிவிடுகிறாள்.

அன்றிரவு அவளுக்குக் கனவு வருகிறது. அதில் அவள் சென்றுகொண்டிருந்த வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் அடர்ந்த மூடுபனியில் நடந்துசெல்கிறாள். இறுதியாக மூடுபனியிலிருந்த ஒரு வழியைக் கண்டடைகிறாள். அதன் திசையில் நடக்கிறாள், மக்கள் நிறைந்த இடத்திற்கு வருகிறாள். சாலை வெள்ளை நிற எலும்புகளைப்போல் பனியால் மூடப்பட்டிருந்தது. திகிலுடன் திரும்பி ஓடி வருகையில் திடீரென ஓர் இளைஞன் அவள் கனவில் தோன்றுகிறான். அவன் மிங்செங்கைப் போலவே இருக்கிறான்.

அவள் கைகளை நீட்டி, அவனது கைகளைப் பிடிக்க முயல்கிறாள். ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு அவர்களைப் பிரித்துவிடுகிறார்கள். . கனவிலிருந்து எழுந்து , “தயவுசெய்து, என்னைக் காப்பாற்றுங்கள்!” சட்டெனக் கத்துகிறாள். அது வெறும் கனவாகவே இருந்தது. கோப்பையில் வைனை ஊற்றிக் குடித்துவிட்டு, அந்தக் கனவு எவ்வளவு தீர்க்கதரிசனமாக இருக்கப் போகிறது எனத் தெரியாமல் எழுந்து வந்து, வெளியே எட்டிப் பார்க்க கதவைத் திறக்கிறாள். பலத்த மழைக்குப் பிறகு நிலம் ஈரமாக இருந்தது. நேற்று புத்துணர்ச்சியோடும், உயர்ந்தும் இருந்த பூக்கள் இப்போது மௌனமாக வாடி, சேதமடைந்து தரையில் கிடந்தன. தரை சிவப்பு கம்பளம்போல் மூடப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் புயலின் சீற்றம், பூக்கள் வாடியது, மஞ்சள் நிறக் கிளைகள் உயரம் குறைந்து காற்றில் ஊசலாடின.

நேற்றிரவு சூறைக்காற்றுப் பலமாக வீசியது.
அதிகாலை குளிர்காற்று என்னைத் தீண்டவில்லை
இரவு நான் அதிகமாகக் குடித்திருந்ததால்
என்னுடைய பணிப்பெண்ணிடம் கேட்டேன்
கதவை யார் மூடியது?
தோட்டமெல்லாம் சோகமாகக் காட்சியளிக்கிறது
சீன கிராப் ஆப்பிள் மலர்கள்
இன்னும் பூத்துக்கொண்டிருக்கின்றன
யாருக்குத் தெரியும்? யாருக்குத் தெரியும்?
இலைகள் பசுமையாக இருந்திருக்க வேண்டும்
பூவிதழ்கள் சிவப்பு நிறத்தில் இருந்திருக்க வேண்டும்.

மீண்டும் இக்கவிதையைத் தன் தந்தையிடம் காட்டுகிறாள். அவர் தனது மகளைப் பற்றி ரகசியமாகப் பெருமிதமடைகிறார், அவளிடம் சொல்லாமல், அவளுடைய சமீபத்திய இரண்டு கவிதைகளையும் அச்சிட உத்தரவிடுகிறார். பதினேழு வயதிலேயே திறமையான இளம் பெண்ணை அனைவரும் பாராட்டினர். இந்த இரண்டு கவிதைகளும் திருமணமாகாத ஓர் இளம் பெண்ணின் துயரங்களை வெளிப்படுத்தின. அவள் இயற்கையிலும் காதலிலும் உணர்வுபூர்வமாக இருந்தாள். வாங் அன்ஷி கவிதைகளைப் படித்துவிட்டு தனது கருத்தை மாற்றிக் கொண்டு சிங்சோவ்வின் தந்தையிடம், “லி சிங்சோவ் ஒரு புதிய நடையை உருவாக்குகிறார். நம் வம்சத்தில் திறமையான ஓரிருவரால் மட்டுமே இவ்வளவு சுத்தமாகப் புதிய நடையில் எழுத முடிகிறது. இது போன்ற கவிதைகள் ஓர் இளம் பெண் எழுதியது என்று நம்புவது மிகவும் கடினம்.” என்கிறார்.

சிங்சோவ்வின் வயதைப் பொருட்படுத்தாமல் அவரது திறமையைப் பொதுமக்கள் அங்கீகரிக்கத் தொடங்கினர். அன்றைய கவிதைச் சமூகம் முரண்பாடுகள் நிறைந்த சமூகமாக இருந்தது. பெண்கள் கல்வி கற்பது சரியல்ல என்ற நெறிமுறைகளை விதித்தாலும், அரிய திறமை கொண்ட பெண் எப்போதும் ஆண்களால் மிகவும் மதிக்கப்பட்டாள். சிங்சோவ் நன்கு அறியப்பட்டதிலிருந்து, இலக்கியம், தத்துவம் மற்றும் சில சமயங்களில் அரசியல் பற்றி விவாதிப்பதற்காக, பல எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் அவளை நேரில் வந்து சந்தித்தனர்.
விருந்தினர்களை அன்புடன் வரவேற்று இலக்கியம், அரசியல் பற்றிப் பேசுகிறாள்.

சில ஆண்டுகளுக்குப் பின் மிங்செங்கையே மணந்து கொள்கிறாள். அவளுடைய கவிதைகளைக் கணவனிடம் காட்டுகிறாள். அவளைக் கண்டு ஏளனமாகச் சிரிக்கிறான். பிறகு அவளது ஆர்வத்தைப் பாராட்டி இருவரும் கவிதைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். சில சமயம் உறங்கச் செல்வது முதல் விடியற்காலை வானம் ஒளிரும் வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறாள். இந்த உத்வேகம் அவளது கவிதைகளுக்கான தனித்துவமான பாணியை வளர்க்க உதவியது என்பதை உணர்ந்தாள். நாள்தோறும் மிங்செங் அவளுக்குக் கதைகள் சொல்கிறான். கிழக்கு மலைப் பகுதியில் உள்ள ஓர் அழகான கல்லைப் பற்றிய கதை ஒன்றைச் சொல்கிறான். ஒரு நாள், இரண்டு கடவுள்கள் ஆட்சி அதிகாரங்களுக்குச் சண்டையிட்டு வானத்தில் ஒரு துளையைப் போட்டதால் வானம் அதிர்ந்தது. ராணி கிழக்கு மலையில் உள்ள கல்லை எடுக்க முயற்சி செய்தார். அந்தக் கல் திமிர் பிடித்து வர மறுத்தது ராணியை மதிக்கவில்லையெனக் கோபமாகச் சென்றுவிட்டாள். பல ஆண்டுகளாகப் பாழடைந்த மண்டபத்தில் பரிதாபமாகக் கிடந்த அந்தக் கல் அந்த ராணியிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டது. இன்னொரு கடவுள் கல்லின் நிலையை உணர்ந்து அந்தக் கல்லை ஓர் அழகிய பெண்ணாக மாற்றினார். அவள் தான் எனக்கருகில் படுத்திருக்கிறாள் என்று சொன்னதும் அவள் மகிழ்ந்து அவர்களது காதல் மேலும் தீவிரமாக வளர்ந்தது, இன்னும் கூடுதல் அன்போடு காதலித்தனர்.

ஆனால் திருமணவாழ்வில் அவர்களுக்கு மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பத்து வருடங்கள் கடந்தும், அவளுக்குக் குழந்தையில்லை போன்ற குற்றங்களைச் சுமத்தி ஒவ்வொரு நாளும் சின்னஞ்சிறு தேவைகளுக்காகத் தகராறுகள் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும், அவள் மீதான காதல் குறையவில்லை. புத்திசாலித்தனமான மனைவியைப் பெற்றதற்கான அழுத்தத்தை மிங்செங் உணர்ந்தான். மக்கள் அவரை சிங்சோவ்வின் கணவர் என்றே அறிந்திருந்தனர். அவனைப் பெரிதாக யாரும் மதிக்கவில்லை. அதையெல்லாம் மறைத்துக்கொண்டு பண்டைய வெண்கலப் பொருட்களையும், கல்வெட்டுகளின் மறு உருவாக்கங்களையும் சேகரித்தனர். உலோகம் மற்றும் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகளைச் செய்தான்.

மிங்செங்கின் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நான்ஜிங்கிற்குத் தனியாகச் சென்றாள். பதினைந்து வண்டிகள் நிறையப் புத்தகங்களைத் தன்னுடன் எடுத்துச் சென்றாள். அதனால் வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. அங்கிருந்து திரும்பிச் சென்றபோது பத்து அறைகள் கொண்ட புத்தகங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவளுடைய உலகம் அழிந்து போவதையும், முன்னால் நிறைய வலியும் மகிழ்ச்சியின்மையும் இருப்பதையும் அவளால் பார்க்க முடிந்தது. மிங்செங் மனைவியை உதாசீணப்படுத்தினான், அவளைச் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினான். அவளால் பொறுக்க முடியாமல் கடிதம் ஒன்றை எழுதுகிறாள்.

மிங்செங்கின் தந்தை தனது மேஜையில் இருந்த கடிதத்தைப் பார்த்தார். அக்கடிதம் அவரது மருமகளால் எழுதப்பட்டது, ஆனால் அவரது மகன் அனுப்பிவைக்கிறார். கடிதத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தார். “அன்புள்ள மாமனார் எனத் தொடங்கும் கடிதம், உங்கள் மகள் என்ற முறையில், அரசியல் விவகாரங்களில், குறிப்பாக ஒரு பெண்ணாக நான் உங்களிடம் கருத்துத் தெரிவிப்பது முறையற்றது என்று எனக்குத் தெரியும். ஆனால் என் தந்தை சம்பந்தப்பட்டதால், நான் என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமெனத் தொடங்கித் தனது பிரச்சனைகளைக் கடிதமாக எழுதுகிறார். ஒரு பெண் எப்படி என்னுடைய அரசாட்சியைப் பற்றிக் கருத்துச் சொல்லமுடியுமெனக் கடிதத்தைக் கிழித்து விட்டு, தன் குடும்பத்திற்கும் அவளுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லையென அவருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான சலுகைகளையும் தடைசெய்கிறார்.

பிறகு மிங் நலம் குன்றிப் படுத்த படுக்கையாக இருக்கிறான். அவனைச் சந்தித்து அப்படியொரு கடிதம் எழுதியதற்காக வருந்துகிறாள். நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட அரசியலைப் பற்றிக் கருத்தினைச் சொன்னதற்கு மிங்கிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறாள். மிங் கடைசியில் தான் இறந்தபின் அவளை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வலியுறுத்து, ஒரு பெண் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறாள் என இந்த உலகம் அறிய வேண்டுமெனச் சொல்கிறான். அவளது மடியில் தலையைச் சாய்த்தபடி கடைசியில் இறந்து போகிறான்.

அவன் கேட்டுக்கொண்டது போல் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு தொடர்ந்து எழுதினாள். இரண்டாவது திருமண வாழ்வு சரியாக அமையாமல் அதிலிருந்து விவாகரத்து பெற்று நாடு திரும்புகிறாள். அவளது கவிதைகள் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்தன. ஒரு வயதான பெண்மணியாக இருந்தாலும் தொடர்ந்து சமூகத் தாக்கங்களைப் பெருமிதத்துடனும் ஆணவத்துடனும் எழுதினாள். மறையும் சூரியனின் மகிமையையும் உருகும் தங்கம் போன்ற மலையில் விழும் கதிர்களையும் மாலையில் மேகங்கள் தைரியமாக உலா வருவதையும் வசந்தத்தின் நறுமணத்தையும். விளக்குத் திருவிழாவின் அழகிய பருவ நிலையைப் பற்றியும் எழுதுகிறாள்.

 

பெண் குழந்தையாக அறையில் இருந்தோம்.
நாங்கள் நகைகளை அணிந்தோம்,
எங்கள் கூந்தலில் வைரங்களை அணிந்தோம்,
எங்கள் கழுத்தில் தங்க நெக்லஸை அணிந்தோம்,
ஒவ்வொரு பெண்ணையும் கவனமாக உருவாக்கினோம்.
இப்போது வயதாகிச் சோர்வாக இருக்கிறேன்.
என் கூந்தலை அலங்கரிப்பதில் அக்கறை இல்லை.
நான் திரைச்சீலைக்குப் பின்னால்
சன்னலுக்கருகில் ஒளிந்துகொண்டு
கடந்து செல்லும் மற்றவர்களின் சிரிப்பை
என் காதுகளில் எதிரொலிப்பதைக்
கேட்கவே விரும்புகிறேன்.

என்று எழுதி தா வயதாகிவிட்டதாக உணர்ந்தாள். கவிதைகளுக்காகச் செலவிட்ட பொழுதுகளை எண்ணி முதுமையில் நிம்மதி கண்டாள். அவள் தன் கடந்தகாலப் புகழ், திருமணம், துரோகம், காதல் என அனைத்தையும் எண்ணிப்பார்த்தாலும் அவள் தனது செயல்களில் தவறிழைத்திருக்கிறாளா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். முதுமையில் மனம் நிறைவாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக உணர்ந்தாள்

கி.பி 1155 இல் அவள் இறந்தபோது அவளுக்குச் சுமார் எழுபது வயது. மரணத்திற்குப் பிறகு, அவரது கவிதைகள் பிற்கால நூற்றாண்டுகளில் அறிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பெண் என்ற காரணத்தில் முறையான கல்வி கற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டவளுக்கு ‘ஆயிரம் ஆண்டுகளில் முதல் பெண் கவிஞர்’ என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். பிறகு அவருடைய கவிதைகளைத் தொகுத்தனர், அதில் பல கவிதைகள் காணாமல் போயின, கிடைத்தவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டனர். லி சிங்சோவ் சுமார் நூறு கவிதைகளை மட்டுமே விட்டுச் சென்றுள்ளார். எல்லா வகையிலும் சிறந்த எழுத்தாளர், இருப்பினும், குறிப்பாக இலக்கணம் படித்த ஆண்கள் மட்டுமே நாள்தோறும் வேலையின் ஒரு பகுதியாகக் கவிதை எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் லி சிங்சோவ் எழுதினார் என்பது பெருமைக்குரியது.

கவிதையை நேர்மையாக அணுகியவர். லி சிங்சோவ் பெண்ணாக இருந்து, மாறுபட்ட வாழ்வியல் முறையில் அரச வம்சத்தைச் சார்ந்த பணக்கார, படித்த குடும்பத்தில் பிறந்தாலும் கவிதையில் நேர்மையையும் அதன் தரநிலைகளில் எந்தவிதச் சலுகையுமின்றிச் சிறந்த கவிஞராக வலம் வந்தவர்.

 

The post நான் எழுதவே விரும்புகிறேன் – லி சிங் சாவ் first appeared on திணைகள்.

கார்த்திக் திலகன் கவிதைகள்

8 February 2025 at 14:28

1)
குளத்தின் மேற்பரப்பில் சொற்களைப் பரப்பி வைத்து
கரையில் அமர்ந்து கல்லெறிகிறேன்
அழகழகாய்த் தெறிக்கின்றன
சொற்கள்

2)
பூமி ஓர் இடத்தில் துக்கத்தில் கசிந்தது
மரங்களின் எல்லா இலைகளும் துக்கமாக இருந்தன
வானம் லேசாகத் தூரலிட்டு
அழத் தொடங்கியது
ஏனின்று உலகம் துக்கமயமாக இருக்கிறது என்று கேட்டேன்
சந்தோஷங்கள் அனைத்தும் இன்று துக்கத்தின் வேடம் தரித்து
நடித்துக் கொண்டிருக்கின்றன என்றார்கள்
சந்தோஷங்களுக்கு
இப்படி ஓர் ஆசையா

3)
அ)
புயல் காற்றையும் இளங்காற்றையும் அந்த மரம்
ஒரே மாதிரி வரவேற்கிறது
எனக்குத் தெரிந்து நிச்சயமாக
அந்த மரம் புத்தனாகிவிட்டது

ஆ)
ஒரு பட்டாம்பூச்சி
என் வீட்டு வாயில் படிக்கு
உள்ளேயும் வெளியேயும் பறந்து கொண்டிருக்கிறது
நான் வெகு நேரமாக வாசலிலேயே காத்திருக்கிறேன்

இ)
பறவையின் வயிற்றில் அமர்ந்து
விதைகளாகப் பறந்து செல்கிறது மரத்தின் கனவு

ஈ)
உறவுக்கு முன்பான கணங்கள்
உறவுறும் கணத்தை விட மகத்தானவை

உ) இந்தத் தோட்டத்து மலர்கள் ஒவ்வொன்றும்
தண்னொளி வீசி தனிமையில் மூழ்கி இருக்கிறது
பூப்பதை விட ஒரு நற்செயலை செடியால் செய்ய முடியாது

4) வெறிச்சோடி கிடக்கும்
மதியத்தின் வீதியில்
சொர்க்கத்தில் இருந்து தப்பி வந்த
பொன்னிற நிழல்கள் நடந்து செல்கின்றன
அதன் பாத சுவடுகளை உருகி உருகி
காதலிக்கிறது மஞ்சள் வெயில்

5)
நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது
திடீரென நான் காணாமல் ஆகிவிட்டேன்
வெட்டவெளியில் இருந்து ஓர் உருவத்தை
அழிப்பான் கொண்டு அழிக்க முடியும்
என்பதை அவரால் நம்ப முடியவில்லை
மாய உலகத்தின் புதிர் பாதையில்
என்னை உடைத்து உடைத்து
வழியெல்லாம் போட்டுக் கொண்டே செல்கிறேன்
காத்திரு நண்பனே
சரியாக வழி கண்டுபிடித்து
உன்னிடம்
திரும்ப வந்து விடுகிறேன்

6)
புல் நுனி ஒரு பனித்துளியின்
மதிப்பை உயர்த்திப் பிடிப்பதைப்போல
நானுன்னை
உயர்த்திப் பிடிக்கிறேன்
சிந்தி விடாதே கண்ணே
வெறும் நீர் தீற்றலாக

7)
நான் விழித்திருக்கும் போது
கனவு தோன்றுகிறது உறங்கும்போது
நினைவு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது
நான் கனவிழந்து
மருத்துவ மனையில்
அனுமதிக்கப் பட்டிருந்தேன்
என்னைப் பரிசோதித்து
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள்
மனநிலையிலும்
நல்ல முன்னேற்றம் இருக்கிறது விரைவில் இவருக்கு
கனவு திரும்பி விடும் என்று

8)
அவ்வளவு கோபமாகச் சொல்ல
வேண்டிய விஷயத்தை
இவ்வளவு செல்லமாக உன்னால்
எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்கிறாய்
ஒன்று உனக்குச் சொல்லட்டுமா
என் மனக்காட்டின்
சொல் விலங்குகள் அத்தனையும்
அவ்வளவு இளங்குட்டிகள்
அவற்றை அப்படியெல்லாம்
அழுத்தி உச்சரிக்க முடியாது

9)
என் உயிர்ப்பும் துடிப்பும் கண்டு
ஒரு படகுக்குரிய மரியாதையை
நீர் எனக்கு வழங்குகிறது
நான் மிதக்கிறேன்
நீரில் ஏற்றப்பட்ட
திருவிளக்கை நோக்கி
கிழக்கு முகமாக நீந்துகிறேன்
எதையும் நனைக்கும் நீரால்
எனக்குள் மிதக்கும் எண்ணங்களை
நனைக்க முடியவில்லை

10)
இளம் காலை நேரம் படுக்கையை
விட்டு எழுந்து அமர்கிறாள்
பௌர்னிகா
அருகில்
ஆடை கலைந்து
குழந்தையைப் போல
படுத்திருக்கும்
கணவனைப் பார்த்து
புன்னகைத்தாள்
அவன் மார்பில்
ஒட்டி இருந்த
ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில்
வைத்துக் கொள்கிறாள்.

 

The post கார்த்திக் திலகன் கவிதைகள் first appeared on திணைகள்.

வேல் கண்ணன் கவிதைகள்

1.முகவாதம்

நேற்றிலிருந்து
இடப்பக்க முகம் வலிக்கிறது
முகவாதம் பீடித்த
அப்பாவை மருத்துவமனைக்கு
தனியாக அனுப்பிய நாட்கள்
கடந்து பல வருடங்கள் ஆகின்றன

2.ஒவ்வொரு முறையும்

உன்‌ வாசல் தேடி
பிச்சை கேட்டு வந்த போதும்
மறுத்த போதும்
கதவுகளை அறைந்து சாத்திவிட்டு
சென்ற போதும்
நிறைந்து போன‌ எனக்கு
நீ காணாமல் சென்ற போது
பசித்தது

3.

உச்சியில் மலர்ந்த
பூவின் மீது
உனக்கு அலாதி பிரியம்
வாசத்தைக் கொய்ய
மலையேறத் துவங்கினேன்
ஏற‌ ஏற‌
வெளிச்சம் பாய்ச்சுகிறது

உச்சியில்
எனக்கும்
வானத்தில் பூத்திருக்கும்
மலருக்குமிடையே
தூரம் பூத்திருந்தது

4.
நாமொன்றைத் தொடங்கினோம்
எவ்வளவு அழகாய் இருக்கிறது
பின் நடந்தவைகளைத் தவிர்க்கிறேன்
இது போதுமானது
“நாமொன்றைத் தொடங்கினோம்”

5. இந்திரியம்

தொலைந்து போன
பெரியண்ணன்
நீண்ட நாள் கழித்து வீடடைந்தான்
அறைக்குள் ஆடை களைந்தான்
அம்மணமாய்க் குளித்தான்
சேலைத் தலைப்பை வாயில் பொத்திக் கொண்டாள் அம்மா
பயந்து பக்கத்து வீட்டில் ஒளிந்தாள் சின்னத் தங்கை

ஈரத்துடன்
கால்களைப் பரப்பிய படி உறங்கியவன்
வலப்புறம் ஒருக்களித்தான்

இம்முறை படுக்கை விரிப்பை
துவைக்கும்போது
அம்மாவை துணைக்கு
கூப்பிடக் கூடாது

The post வேல் கண்ணன் கவிதைகள் first appeared on திணைகள்.

கதிர்பாரதி கவிதைகள்

8 February 2025 at 14:28
சலோமியின் மீன் பருவக் கண்கள்

1
யேசுவின் மூன்று சீடத்திகளில் ஒருவள்
சலோமி.
யேசு உயிர்த்துவிட்ட பிற்பாடும்
‘கல்லறையில் யேசுவைக் காணவில்லையே’ எனக்
கலங்கிய மூவருள் ஒருவள் சலோமி.

இல்லையில்லை
யேசுவின் காதலிகளில் ஒருத்தியே சலோமி.

அவையெல்லாம் கிடையாது,
சலோமி என்பவள் யேசுவின் பன்னிரு சீடர்களில்
இருவருக்கு அம்மா.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
யேசுவின் தாய் அருள்நிறைக் கன்னி மரிக்கு
நேரிளையத் தங்கையவள்.
ஆக, அவள் யேசுவுக்கு அருள்நிறைச் சித்தி.

இவையெதுவும் உண்மையல்ல
கன்னி மரிக்குப் பிரசவத் தொண்டுசெய்த
மருத்துவத் தாதி சலோமி.
ஆண் வாசம் அறியாமால் பிள்ளையீன்ற கன்னி மரிக்கு
இரண்டாம் சாட்சியானவள் சலோமி.
யேசுவை முதன்முதலில் கிறிஸ்துராஜா என
மனத்தில் கண்டுகொண்டவள் சலோமி.
கொதியெண்ணெய்க் கொப்பரைக்குள் விழுந்து
எரிக் காயங்களின்றி மீண்ட
புனித யோவானைப் பெற்றவள் சலோமி.

மேக்தலீனாவின் பரிமளத் தைலத்துக்குத்
தன்னிரு பாதங்களைக் கொடுத்தார் யேசு.
வெரோனிக்காவுக்குத் தன் பாடுகளின் ரத்தமுகத்தை
ரோஜாவாக்கிக் கொடுத்தார்.
சலோமிக்கு ஏன் ஒன்றும் தரவில்லை?

இவற்றையெல்லாம்விட முக்கியம்
எங்களூரிலும் ஒரு சலோமி வாழ்ந்தாள்.
அகலக் கால் எட்டவைத்து நடக்கும் ஆண்மூச்சுக்காரி.
அவளின் மீன் பருவக் கண்களில் மூழ்கி
எதிர்மீன்கள் பிடித்து மண்ணுக்குள் போனார்
ஜான் கார்ல் மாக்ஸ் மாமா.
அவர் கல்லறைக்கு மாதா சாம்பிராணி தூபமிடத்தான்
நான் இப்போது போய்க்கொண்டிருக்கிறேன்.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

2.

சலோமியிடம் ஒரு மனக் கடிகாரம் உண்டு.

உலைக்கால் விண்மீன்கள் வானில் பூக்கும்
‘மீ’அதிகாலையில் கண் விழிப்பாள்.
அவித்த நெல்லை தலைச்சுமைந்து அரிசியாக்க
கால் மணிக் காலத்தில் அரைக் கி.மீ. கடப்பாள்.
இரு வருடங்களுக்கு ஒரு பிள்ளை கணக்கில்
நான்கு வருடங்களில் மூன்று பிள்ளைகள்.
ஆம்… அதொலொன்று ரெட்டைப் பிரசவம்.

எப்போதும்
புயல் வேகம் புயல் வேகம்.
மரணத்தையும் தாண்டிப் பாய்ந்துவிட்டாள்.
ஆனால், அவள் பனியீர நத்தை.

அவளின் மீன்கள்
கண்ணீரை உண்டு தண்ணீரைச் சுவைத்த கதை
உங்களுக்குத் தெரியாமல் இருக்கட்டும்.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

3

சலோமியின் கண்களில்
மீன் பருவம் துள்ளிய தொடக்கத்தில்
தூண்டில்களை வெறுத்தாள் இல்லை.
அவற்றைத் தாண்டிப் போய் நீந்தினாள்.
நீந்தினாள் எனவும் சொல்வதற்கில்லை.
பொறிகளுக்கு ஒதுங்கினாள்.
ஒதுங்கினாள் என வரையறுக்க முடியாது
அவள் நீரிலேயே இல்லை.
‘சலோமி இல்லை’ என்று சொல்லிவிட முடியாது
இருக்கிறாள் ஒரு விரியனுக்கு இணைவியாக.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

4

சலோமி பிறந்தபோது
அவள் வீட்டுக் கூரையில்
இரு எரிவிண்மீன்கள் இறங்கின.

அவ்விண்மீன்களே
பருவத்தில் கண்களிலும் ரவிக்கைக்குள்ளும்
ஒளிரும் தனிமமாக அவளை மாற்றின
இரவில்.

சலோமியின் மீன்பருவக் கண்கள்

5

சலோமியும் மலர்க்கொடியும்
மனம் நெருங்கிய தோழிகள்.
இருவரும்
சிறுபாவாடை கட்டிய பொன்வண்டுகளாகப்
பறந்து பறந்து சுற்றிவந்தார்கள்
பால்ய வனத்தில்.

ஒரே ஊர்தான் என்றாலும்
பதின்பருவத்தில் இருவரும்
தனித்தனியே பிரிந்திருக்கப் பழகினார்கள்.
அவர்கள் இருந்த இடம்
அவரவர் வீடுகளாய் இருந்தன.
வாசல் தாண்டி வெளிவருவதற்குள்
பொன்வண்டுகளை ஈசல்பூச்சிகளென
நம்பவைத்தனர்.

பிறகுதான்
கல்யாணத் தீப்பெட்டியில்
பொன்வண்டுகள் தனித்தனியே அடைந்தன
வெவ்வேறு ஊர்களில்.

பொன்வண்டுகளுக்கு
மரக்கிளையில் வாழ்வதைவிட
தீப்பெட்டிக்குள் வாழ்வது சலித்தபோது
சலோமிக்கு இரண்டு குட்டிப்பொன்வண்டுகள்.
மலர்க்கொடிக்கு
மூன்றாமாண்டு நினைவு அஞ்சலி நாள்

The post கதிர்பாரதி கவிதைகள் first appeared on திணைகள்.

❌