Normal view

Received yesterday — 6 June 2025Ezhuna | எழுநா

1949 – 1968: ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 1

உதவி : ஜீவராசா டிலக்ஷனா

இக்காலகட்டம், 1949 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 1968 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் இயக்கம் தொடங்கியதில் முடிவடைகின்றது. இக்காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் இலங்கை என்ற ஒற்றைக்கட்டமைப்பில் இருந்து விலகி வடக்கு, கிழக்கு என்ற தமிழர் தாயகத்தை வலியுறுத்தி அதற்கு அதிகாரத்தைக் கோரும் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. இக்காலகட்டத்தில் மூன்று மாற்றங்கள் இடம் பெற்றன. ஒன்று, ஒற்றை ஆட்சியில் சமவாய்ப்புக் கோரிக்கை என்பது கைவிடப்பட்டு, சமஸ்டிக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது, தாயகம் அடையாளப்படுத்தப்பட்டதும் தமிழீழ அரசியல் தமிழத்தேசிய அரசியலாக மாற்றமடைந்தது. மூன்றாவது, இதுவரை காலமும் சட்டசபைகளில் பேசுதல் அல்லது உரையாற்றுதல், கோரிக்கை மனுக்களை அனுப்புதல் என்கின்ற அணுகுமுறைக்கு மாற்றாக மக்களை இணைத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டம், 1957 ஆம் ஆண்டு திருமலை யாத்திரை, 1957 – 58 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டங்கள், 1961 ஆம் ஆண்டு கச்சேரிகளின் முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் என்பன முக்கியமானவையாகும். அகில இலங்கை தமிழரசுக் கட்சி இப்போராட்டங்களை முன்னெடுத்தது. எஸ்.ஜே.வி செல்வநாயகம், ‘தந்தை’ செல்வா என அழைக்கப்பட்டார். அவர் இக்காலகட்டத்தை நகர்த்திய முக்கிய தலைவராகக் காணப்படுகின்றார்.

• புதிய கட்சி உருவாக்க முயற்சி இடம்பெறல் 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறிய செல்வநாயகம் குழுவினர் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்துப் பிரசாரம் செய்தனர். இதற்கான முதல் கூட்டம் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் முன்றலில் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் டாக்டர் ஈ.எம்.வி நாகநாதன், வன்னியசிங்கம் உட்பட இளைஞர்களின் சார்பில் சட்டமாணவராக இருந்த அமிர்தலிங்கமும் உரையாற்றினார். தொடர்ந்து கொழும்பில் ஒவ்வொரு வியாழன் இரவும் ஒவ்வொரு நண்பர் வீட்டில் சமஸ்டிக் கோரிக்கை தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. டாக்டர் வி.என். பரமநாயகம், எம்.திருவிளங்கம், வி.என். திருநாவுக்கரசு, பி. நல்லசிவம்பிள்ளை, வி.பி.சி. முத்துக்குமாரசுவாமி, எஸ்.பி. வேலாயுதப்பிள்ளை, வி. நவரத்தினம், எஸ்.டி. சிவநாயகம், அருள் தியாகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கப்பால் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் சமஸ்டி பற்றிய கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன. திருகோணமலையில் 1949 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 8 ஆம் திகதி சக்தி நிலைய ஆதரவில் சமஸ்டி பற்றிய கருத்தரங்கு இடம்பெற்றது. இராஜவரோதயம் இராமநாதன், விஜயநாதன் ஆகியோர் இக்கருத்தரங்கினை ஒழுங்கு செய்வதில் முன்னிலை வகித்தனர். மட்டக்களப்பில் ஆர்.ப. கதிர்காமர் தலைமையில் முதலாவது கூட்டம் இடம்பெற்றது. ஈ.ஆர். தம்பிமுத்து,  சாகுல்ஹமீது, செ. இராசதுரை,  இரா. பத்மநாதன்,  பாலசுப்பிரமணியம், சித்தாண்டி நாகலிங்கம், சிவஞானம், ஆசிரியர் கனகசபை ஆகியோரும் இதனை ஒழுங்குபடுத்துவதில் முன்னிலையில் நின்றனர்.

• நந்திக்கொடி ஏற்றல் 

1949 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் மூன்றாம் திகதி நல்லூர் சங்கிலித் தோப்பில் 1619 இல் அழிக்கப்பட்ட சங்கிலி மன்னனின் நந்திக்கொடியை புதிய அணியினர் மீளவும் ஏற்றினர். நந்திக்கொடி ஏற்றலின் பின்னர் ஊர்வலமாக நல்லூர் கைலாச பிள்ளையார் கோயில் வீதிக்குச் சென்றனர். அங்கு ப. முத்துக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற இருந்தது. போலீசார் கூட்டத்தினைத் தடை செய்தனர். அடுத்தநாள் நான்காம் திகதி நல்லூர்க் கூட்டம் தடைப்பட்டதைக் கண்டித்து நவாலியில் பண்டிதர் இளமுருகனார் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் தோற்றம் – 1949 டிசம்பர் 18

அகில இலங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களும், சமஸ்டிக் கோரிக்கைக் கருத்தினால் கவரப்பட்ட உறுப்பினர்களும் 1949 டிசம்பர் 18 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு மருதானையில் உள்ள அரசாங்க லிகிதர் சேவை கட்டிடத்தில் கூடி அகில இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன், வன்னியசிங்கம் ஆகியோர் கூட்ட அழைப்பாளர்களாக பத்திரிகைகள் மூலம் அழைப்பு விட்டிருந்தனர். டாக்டர் எம். திருவிளங்கம் வரவேற்புக்குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். செல்வநாயகம், கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

செல்வநாயகம் அவர்களின் தலைமைப் பேருரையின் சுருக்கம்

“யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாதது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்குமுன் இங்கு வசித்த மக்கள் பல நூற்றாண்டுகளாகச் சிங்களம்பேசும் இனம், தமிழ்பேசும் இனம் என இரு தேசிய இனங்களாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். தமிழ்பேசும் மக்களில் அரைப்பங்கினரைப் பிரஜாவுரிமை அற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன் அரசாங்கம் பிரஜாவுரிமைச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. 

தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம் தமிழ்பேசும் மக்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் உதாசீனம் செய்வதாக இருக்கின்றது. சிங்கக்கொடி சிங்கள மன்னரின் கொடியேயாகும். இன்று அது சிங்களவருடைய அதிகாரத்தின் சின்னமாக விளங்குகின்றது. அந்தக்கொடியே நடைமுறையில் இலங்கையின் தேசியக்கொடி எனக் கொள்ளப்படுகின்றது. பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் தேசியக்கொடியாக ஓர் இனத்தவரின் கொடியைக்கொண்ட நாடு வேறு எதுவும் உலகில் இல்லை. தேசியக்கொடி விடயத்தில் அரசாங்கத்தின் கொள்கை தமிழ்பேசும் மக்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது. அரசாங்கம் அவர்கள் இங்கு வசிப்பதைச் சகித்துக்கொண்டிருக்கிறது, அவ்வளவுதான்!

தமிழ்பேசும் மக்களின் எல்லாப் பிரிவினருக்குள்ளும் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கக்கூடிய வசதி வடமாகாண மக்களுக்கே இருந்தது. அவர்கள் இலகுவாகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேசத்தில் பெருந்தொகையினராக வாழ்ந்திருந்தது மட்டுமன்றி, அவர்களிடையே சிங்கள மக்கள் கலந்து வாழ்வதும் குறைவாக இருந்தது. அவர்களே ஆங்கிலக்கல்வியினாலும் அதிக பயன் பெற்றிருந்தனர். ஆனபடியால் இலங்கைவாழ் தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்யும் பொறுப்பு பெரும்பாலும் அவர்களையே சார்ந்திருந்தது. 

அரசாங்கத்தின் குடியேற்றக்கொள்கை எல்லாவற்றையும் விடவும் தமிழ்பேசும் மக்களுக்குக் கூடிய ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இக்கொள்கையின் ஆபத்தை கல்லோயாவில் காண்கின்றோம். கல்லோயாத் திட்டத்தின்கீழ் நீர் பாய்ச்சப்படும் பிரதேசம், தமிழ்பேசும் பகுதியாகிய கிழக்கு மாகாணமேயாகும். தமிழ்பேசும் இப்பிரதேசத்தில் அரசாங்கம் சிங்கள மக்களைக் குடியேற்றத் திட்டமிட்டுள்ளது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இது உண்மையாக இருந்தால் இன்றைய தமிழ்பேசும் பிரதேசத்தை குறைப்பதற்கே அரசாங்கம் அநீதியான முறையில் தன் அதிகாரத்தை உபயோகிக்கின்றது என்பது தெளிவு. தடுப்பார் இன்றி, இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சில வருடங்களுக்கிடையில் இந்நாட்டிலே தமிழ்ப்பிரதேசமே இல்லாதொழியும். 

ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும், ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து இரண்டிற்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள சமஸ்டி அரசு இலங்கையில் ஏற்பட வேண்டும். தமிழ்பேசும் தேசிய இனம் பெரிய தேசிய இனத்தினால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமேயானால் இவ்வித சமஷ்டி ஏற்படுவது அவசியமாக இருக்கிறது.

கிழக்கு மாகாணம் முழுவதையும் தமிழ் அரசின் பகுதியாக்க வேண்டுமென்றால் தமிழ்பேசும் தமிழர்களும், முஸ்லீம்களும் ஒன்று சேர வேண்டும். ஆனால் எங்களுடைய இயக்கம் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள் தமிழ்ப்பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? சிங்களம்பேசும் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்கு முஸ்லீம்களுக்குப் பூரண சுதந்திரம் இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. அவர்களுக்கு என்ன வேண்டும்? என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்.  

நாம் வெற்றி பெறுவதற்கு அருகதையுள்ளவர்களாக வேண்டுமென்றால், நமது சமூகத்தில் இருக்கும் குறைகளைக் களைந்து அதைத் தூய்மைபெறச் செய்ய வேண்டும். தமிழ் மக்களிடையே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் மற்றவர்களால் ஒடுக்கப்படுபவர்ளாகக் கருதுகின்றனர். ‘யாம் ஒருவருக்கு கொடுமை செய்தால் தர்ம நீதியின்படி எமக்கும் பிறர் ஒருவர் அதையே செய்வார்’. தமிழ் மக்கள் அரசியல் சுதந்திரம் பெற வேண்டுமேயானால், தம் சமுதாயத்தில் உரிமையற்றவர்களாய் இருக்கும் மக்களுக்கு அவ் உரிமை வழங்க வேண்டும். மலைநாட்டில் வாழும் தமிழ் தொழிலாளர்களது நிலைமையானது இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக்கின்றது. அவர்கள் அரசியலில் தீண்டத்தகாதவர்களாகி விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிைமை இல்லாமல் இருப்பது மாத்திரமன்றி தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாகவும் இருக்கிறார்கள். ஏனைய தமிழ்பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்காக எதிர்பார்ப்பது இந்தியாவை அல்ல. சுதந்திரம் விரும்பும் இலங்கைவாழ் மக்களிடமிருந்தே அவ் உதவி வருதல் வேண்டும்.”

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 

1. தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சி அரசை நிறுவும் வகையில் உழைப்பதற்காக தமிழ்பேசும் மக்களின் தேசிய நிறுவனமாக இயங்குதல். 

2. கட்சியின் பொருளாதாரக் கொள்கையாக, சோசலிசக் கொள்கையை ஏற்றுக்கொள்ளல். 

இரண்டாவது தீர்மானம் தொடர்பாக காராசாரமான விவாதம் நடைபெற்றது. இதன்போது சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை இளைஞர்கள் வற்புறுத்தினர். ஆனால் பெரியவர்கள் இதனை எதிர்த்தனர். கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இருபக்கத்திற்கும் சமமான வாக்குகள் கிடைத்தன. ஈற்றில் தலைவரான செல்வநாயகம் தனது வாக்கை இளைஞர் பக்கத்திற்கு அளித்து சோசலிஸப் பொருளாதாரக் கொள்கையை ஒரு வாக்கினால் வெற்றியுறச் செய்தார்.

சோசலிஸப் பொருளாதாரக் கொள்கை, தீண்டாமையை ஒழித்தல், சமூக உயர்வு – தாழ்வுகளை இல்லாமல் செய்தல் என்பவற்றை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டதை பழமை விரும்பிகள் பலர் ஏற்கவில்லை. இதனால் அவர்கள் விலகிக்கொண்டனர்.  கட்சியை ஆரம்பிப்பதற்காக உழைத்த பலர்கூட விலகிச்சென்றனர். அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தோற்றத்துடன் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சி X தமிழ்க்காங்கிரஸ் என்ற இரு சக்திகள் இயங்க ஆரம்பித்தன. தமிழிலேயே கல்விகற்ற மத்தியதர வர்க்கத்தினர் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதான ஆதரவுத்தளமாக மாறினர்.

சோல்பரியின் யாழ்ப்பாண வருகையும், பகிஸ்கரிப்பும்

சோல்பரி அரசியல் திட்டத்தினை உருவாக்கிய சோல்பரிப் பிரபுவே அவ் அரசியல் திட்டத்தின்கீழ் மகாதேசாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவர் 1950 ஆம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். தமிழரசுக்கட்சி இவரது வருகையை பகிஸ்கரிக்க முடிவு செய்தது. இதுவே தமிழரசுக் கட்சியின் முதற் போராட்டமாகவும் இருந்தது. ‘தமிழினத்தின் வைரியை வரவேற்காதீர்’ என்ற தலைப்பில் தமிழரசுக்கட்சி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு ‘வருகையைப் பகிஸ்கரியுங்கள்’ என மக்களைக் கோரியது. இது தொடர்பாக 22-1-50 இல் யாழ். நகர மண்டபத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதி நேரத்தில் அரசாங்கத்தினால் கூட்டம் தடை செய்யப்பட்டது. கூட்ட நாளன்று மண்டபத்தைச் சுற்றிப் பொலிஸ் காவலில் நிற்றனர். ஆயிரக்கணக்கில் வந்த மக்கள் அருகில் உள்ள தனியார் ‘கராஜ்’ஜில் கூடினர். அங்கு ஒரு மேசையின்மீது ஏறி நின்று தலைவர்கள் பேசினர்.

தேசியக்கொடிப் பிரச்சினை

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தேசியக்கொடியை உருவாக்குவதற்காக குழு நியமிக்கப்பட்டது. S.W.R.D. பண்டாரநாயக்கா, கலாநிதி செனரத்பரணவிதான, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, சேர்.ஜோன். கொத்தலாவல, ஜீ.ஜீ. பொன்னம்பலம், டி.பி. ஜாயா, எஸ். நடேசன் ஆகியோர் குழுவில் அங்கம் வகித்தனர்.

இதற்கு முன்னரே தேசியக்கொடி சிங்களவர்களின் சிங்கம், தமிழ் மக்களின் நந்தி, முஸ்லீம்களின் பிறை என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என ஒரு பிரேரணையை தந்தை செல்வா முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அதனை ஆமோதித்தார். ஆனால் சிங்களத்தரப்பு இதனை நிராகரித்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திரம் கிடைத்தபோது எந்தக் கொடியை ஏற்றுவது என்று பிரச்சினை வந்தது.  1835 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவப்பு நிறப் பின்னணியுடன் வாளேந்தியபடி இருக்கின்ற கண்டி அரசனின் சிங்களக் கொடியே தேசியக் கொடியாக இருக்க வேண்டுமென மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் முதலியார் சின்னலெப்பை பாராளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டுவந்தார்.

ஏ.ஈ. குணசிங்கா அதனை ஆமோதித்தார். பிரதமர் டி.எஸ் சேனநாயக்காவும் வரவேற்றார். இதனால் சிங்கக்கொடியே சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது. அனைத்து மதத்தவர்களும் வழிபடும் ‘சிவனொளிபாதமலை’ தேசியக்கொடியாக இருக்க வேண்டும் என ஹண்டி பேரின்பநாயகம் வலியுறுத்தினார். தமிழ், முஸ்லீம்களை குறிப்பதற்கு செம்மஞ்சள், பச்சை நிறக்கோடுகள் வாளேந்திய சிங்கத்திற்கு வெளியே இருக்கும்வகையில் கொடி உருவாக்கப்பட்டது. 

செனட்டர் நடேசன் இதனைக் கடுமையாக எதிர்த்தார். கொடியில் தமிழர்களும், முஸ்லீம்களும் சிங்கள தேசத்தின் எல்லைகளுக்கு வெளியே இருப்பதாகவும் அந்த இரு இனங்களையும் தடுத்து நிறுத்துவதற்காக சிங்கம் தன் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் கூறி, செனட்டர் நடேசன் எதிர்ப்புத் தெரிவித்துக் குழுவை விட்டு வெளியேறினார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலமும் டி.பி. ஜாயாவும் கொடிக்கு இணக்கம் தெரிவித்தனர். 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 14 ஆம் திகதி தேசியக் கொடிக்குழு தேசியக்கொடி பற்றிய பரிந்துரையைச் செய்தது. செனட்டர் நடேசன் இதனை ஏற்கவும் இல்லை, கையெழுத்திடவும் இல்லை. 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 15 ஆம் திகதி செனட்டர் நடேசன் இது பற்றி அறிக்கை வெளியிட்டார்.. அதில் “தேசப்பிரிவினையின் குறியீடாக கொடி இருக்கும்” எனக் கூறினார். 1952 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 02 ஆம் திகதி தேசியக்கொடி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. தேசியக்கொடிக்கு ஆதரவாக 51 பேரும் தேசியக் கொடியை எதிர்த்து 21 பேரும் வாக்களித்தனர். 

வவுனியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி. சுந்தரலிங்கம் தேசியக்கொடியை எதிர்த்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். இடைத்தேர்தல் இடம்பெற்றபோது, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபை மேஜர் குரே வவுனியாவில் போட்டியிட்டார். சுந்தரலிங்கம் பெருவெற்றி பெற்றார். அகில இலங்கை தமிழரசுக்கட்சியும் தேசியக்கொடியை நிராகரித்தது. “தமிழ்பேசும் சமூகம் புறக்கணிக்கப்பட இரண்டாம் தரப்பிரஜைகளாக இந்நாட்டில் வாழ்கின்றனர் என்பதைப் பிரகடனப்படுத்தும் ஒட்டுக்கொடி” எனப் பிரசாரம் செய்தது.

சிங்களக் குடியேற்றங்கள்

கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைந்தது. 1941 இல் உருவாக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டமும் சுதந்திரத்தின் பின்னரே நடைமுறையில் துரிதநிலைக்கு வந்தது. இக்குடியேற்றத்தின் மூலம் 44 குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 38 கிராமங்கள் சிங்களவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. 06 கிராமங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது. பட்டிப்பளையாறு என்ற தமிழ்ப்பெயர் கல்லோயா என மாற்றப்பட்டது.

மாவட்டத்தின் சனவிகிதாசாரத்தை மாற்றுவதன் மூலம் மாவட்ட அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதலே நோக்கமாக இருந்தது. இக்குடியேற்றத்தை மையமாக வைத்தே 1959 ஆம் ஆண்டு அம்பாறைத் தேர்தல் தொகுதியும், 1961 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் தலைநகராக குடியேற்றப் பிரதேசமான அம்பாறை தெரிவு செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்டம் என்ற பெயர் பின்னர் ‘திகாமடுல்ல’ மாவட்டம் என மாற்றப்பட்டது. சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகா ஓயாவும், பதியத்தலாவையும் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. சிங்களப் பிரதேச சபைகளும் உருவாக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி கல்முனை, சம்மாந்துறை போன்ற இடங்களுக்குச் சென்று குடியேற்றங்களுக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டது. இக்குடியேற்றங்கள், பின்னர் திருகோணமலை மாவட்டத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோத விவசாயக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், புனிதப் பிரதேசக் குடியேற்றம், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றம் என அனைத்துவகைக் குடியேற்றங்களும் திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்கள்தான் இவற்றில் பெரியவையாக இருந்தன. மாவட்டத்தின் சனத்தொகையை மாற்றியமைப்பதில் பெரும்பங்களிப்பினைச் செய்தனர்.

அல்லைத்திட்டம், கந்தளாய்த்திட்டம், மொறவேவாத் திட்டம், மகாதிவுல்வௌத்திட்டம், பதவியாத்திட்டம் என மிகப்பெரும் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வடக்கையும், கிழக்கையும் இணைக்கின்ற மாவட்டமாக இருப்பது திருக்கோணமலைதான். தாயக ஒருமைப்பாட்டைச் சிதைத்தலே இக்குடியேற்றங்களின் முக்கிய நோக்கமாக இருத்தது. 1970களில் இக்குடியேற்றங்களை வால்போல இணைத்து ‘சேருவல’ என்கின்ற சிங்களத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. பிரதேசசபைகளும் உருவாக்கப்பட்டன. 

‘சேருவல’ தொகுதியின் உருவாக்கத்தால் மூதூர் என்ற இரட்டை அங்கத்தவர் தொகுதி, ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இதன்மூலம் மூதூர்ப் பிரதேச தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் குறைவடைந்தது. பிற்காலத்தில் இக்குடியேற்றங்கள் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டது. வவுனியா வடக்கில் மகாவலித்திட்டத்தை இதற்காகப் பயன்படுத்தினர். இன்று வவுனியா வடக்குப் பிரதேச சபையில்கூட நான்கு வட்டாரங்கள் சிங்கள வட்டாரங்களாக இருக்கின்றன. முல்லைத்தீவில் ‘வெலிஓயா’ என்ற பெயரில் சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட்டது. 

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி வழங்கப்பட்ட சுதந்திரம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களினை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கியது. ஆட்சியாளர்கள் ஒரேநேரத்தில் தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பது, அரச அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவது என்கின்ற இரண்டு செயற்திட்டங்களை முன்னெடுத்தனர். முதலாவது செயற்திட்டத்தின் அடிப்படையில் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு, கலாசார அழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன. தேசியக்கொடி குறியீட்டு வடிவில் அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது. 1956 ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம், ஒரேநேரத்தில் தேசிய இன அழிப்பாகவும், அரசு அதிகாரக் கட்டமைப்பைச் சிங்களமயமாக்குவதாகவும் இருந்தது.

கல்லோயாத் திட்டம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தைத் தொடர்ந்து பிரதமர் டி.எஸ். சேனநாயக்க தனது நிரந்தர செயலாளர் சேர். கந்தையா வைத்தியநாதன், நீர்ப்பாசனப் பணிப்பாளர் ரி. அழகரத்தினம், நில அளவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ். புறோக்கியர் என்போரை ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். கிழக்கு மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பட்டிப்பளை ஆற்றினை பாரிய நீர்பாசனத் திட்டமாக்கப் போவதாக அறிவித்தார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி அழகரத்தினத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டிப்பளை ஆறு பதுளை மாவட்டத்தில் உள்ள மடுல்சீமை மலைத்தொடரில் ஊற்றெடுத்து 56 மைல்கள் பாய்ந்தோடி, வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. இதன் தரையில் பிரதான தமிழ்க்கிராமமான பட்டிப்பளை இருந்தது. சிறந்த விவசாய பூமி. மன்னராட்சிக் காலத்தில் இருந்தே சிறந்த விவசாயப் பிரதேசமாக இருந்தது. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இதனை வளர்க்கும் முகமாக இறக்காமம், கொண்டை வெட்டுவான், அம்பாறைக் குளங்களைப் புனரமைத்துக் கொடுத்தனர். 

அழகரத்தினம் குழுவினர் சம்மாந்துறை சென்று அங்கிருந்து மாட்டுவண்டி மூலம் பட்டிப்பளை ஆற்றின் மேல் பகுதியில் உள்ள அம்பாறை, இங்கினியாகலை ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பட்டிப்பளையாற்றை இங்கினியாகலையில் மறித்து நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்கி நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பிக்கலாம் எனச் சிபாரிசு செய்தனர்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கல்லோயா அபிவிருத்திச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பட்டிப்பளை ஆறு கல்லோயாவாக மாற்றப்பட்டது. தமிழ்க் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டும் முயற்சி இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. கல்லோயா அபிவிருத்தி வேலைகளை 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இங்கினியாகலையில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க ஆரம்பித்து வைத்தார். பட்டிப்பளை ஆற்றை இங்கினியாகலையில் மறித்து அணை ஒன்றைக் கட்டி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. டி.எஸ். சேனநாயக்க அதனை ஆரம்பித்து வைத்ததால் இதற்கு சேனநாயக்க சமுத்திரம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

கல்லோயாத் திட்டம் 12,0000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு நிலத்திலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் வயல் நிலங்களும் இரண்டு ஏக்கர் மேட்டு நிலங்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடியிருக்க வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. 40 குடியேற்றக் கிராமங்களில் 34 கிராமங்கள் சிங்களவர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டன. 6 கிராமங்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டன. 

கல்லோயாத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 20,000 சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 6 கிராமங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் குடியேற்றப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற கலவரத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கல்லோயாத் திட்டத்திலிருந்து விரட்டப்பட்டனர். மீண்டும் குடியேறிய மக்கள் 1958 இல் நடைபெற்ற கலவரத்தில் மீண்டும் விரட்டப்பட்டனர். மீண்டும் திரும்பிய ஒருசிலரும் 1990 இல் விரட்டப்பட்டனர். இறுதியில் கல்லோயாத் திட்டம் தனித்துச் சிங்களவர்களுக்கான திட்டமாகவே மாறியது. 

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமென ஒதுக்கப்பட்ட 1200 ஏக்கர் நிலங்களிலும் சிங்களவர்களே பயிர்ச்செய்கையை மேற்கொண்டனர். இதைவிட பொத்துவில் லகுகலவில் வாழ்ந்த 343 தமிழ்க் குடும்பங்களும் சிங்களவர்களினால் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் காரைதீவு, விநாயகபுரம், ஆலையடி வேம்பு போன்ற இடங்களில் அதிகளவாக வாழ்கின்றனர். 

1959 ஆம் ஆண்டு தேர்தல்தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. அதன்போது முதன்முதலாக சிங்கள மக்களுக்கு என அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இத் தேர்தல் தொகுதியிலிருந்து முதன்முதலாக 1960 ஆம் ஆண்டு சிங்களவர் ஒருவர் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டார். 1961க்கு முன்னர் இப்பிரதேசம் மட்டக்களப்புத் தெற்கு என்றே அழைக்கப்பட்டது. 1961 இல் அம்பாறை என்ற தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. குடியேற்றப் பிரதேசமான அம்பாறை இதன் தலைநகராக்கப்பட்டது. 1980களில் இதன்பெயர் திகாமடுல்ல என மாற்றப்பட்டது. இதே காலப்பகுதியில் சிங்கள மக்களின் விகிதாசாரத்தை மாவட்டத்தில் கூட்டுவதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகாஓயா, பதியத்தலாவ பிரதேச செயலாளர் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

திருகோணமலைக் குடியேற்றங்கள்

உலகின் எல்லா இடங்களிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்வதற்கு ஆதிக்கசக்திகள் குடியேற்றங்களையே ஒரு பிரதான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைகளின் அடிப்படைகளை இல்லாமல் செய்வதற்கும், போர்க்காலங்களில் போராளிகளை இலகுவாக ஒடுக்குவதற்கும், ஒடுக்கப்படும் மக்கள் தங்களிடையே நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ளாமல் கூறுபோடுவதற்கும், தீர்வு என வரும்போது குடியேற்ற மக்களைக்காட்டி தீர்வு முயற்சிகள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குச் சார்பாகச் செல்லவிடாமல் தடுப்பதற்கும், இக்குடியேற்றங்களே அவர்களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன.

பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றம், அயர்லாந்தில் புரட்டஸ்தாந்தியர்களின் குடியேற்றம், கொசேவாவில் சேர்பியர்களின் குடியேற்றம், திபெத்தில் சீனர்களின் குடியேற்றம், கிழக்குத் தீமோரில் இந்தோனேசியர்களின் குடியேற்றம், பிலிப்பைன்ஸ் மிந்தானோவில் கிறிஸ்தவர்களின் குடியேற்றம் என்பன இந்த வகையிலேயே நடைபெற்றன.

உலக நாடுகளின் நிர்ப்பந்தங்களினால் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது இக்குடியேற்றங்களே பெரும் தடைகளாக விளங்குகின்றன. கிழக்குத் தீமோர் மக்களின் சுதந்திரத்தினை அங்கு குடியேறியுள்ள இந்தோனேசியர்கள் தடுத்ததையும், பாலஸ்தீன சுயாட்சி ஒழுங்காகச் செயற்படுவதை மேற்குக்கரை, காஸா பகுதிகளில் குடியேறிய யூதக் குடியேற்றவாசிகள் தடுப்பதையும் இந்தவகையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும். 

இலங்கையிலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைச் செயலற்றதாக்குவதற்கு ஆட்சியாளர்கள் குடியேற்றங்களையே ஒரு பிரதான கருவியாகப் பயன்படுத்தினர். தமிழர்களின் தனிவழி அரசியல் 1920களிலேயே உணரப்பட்டதால் அக்காலத்தில் இருந்தே சிங்களப் பேரினவாதிகளிடம் இக்குடியேற்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியிருந்தது. 1931 இலிருந்து 1947 வரையான டொனமூர் அரசியல் யாப்புக் காலப்பகுதியில் சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டே இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த வகையிலேயே 1941 இல் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுதந்திரத்தினைத் தொடர்ந்து தமிழர் அரசியல், சமத்துவ உரிமை என்பதற்கப்பால் தாயக இறைமை என்பதனை நோக்கி வளரத் தொடங்கியது. தாயகக் குறியீடாக வடக்கு – கிழக்கு நிலப்பரப்பு என்பது எழுச்சியடைந்தது. இத்தாயக இறைமை, சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைத் தடுக்கும் வகையில் ஒரு நீண்டகால இலக்கில் குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அவர்கள் பிரதானமாக தேர்ந்தெடுத்த இடமே திருகோணமலை மாவட்டமாகும். திருகோணமலை மாவட்டத்தினை கடற்கரைப்பக்கமாக வில்போல சுற்றிவளைத்து இவை மேற்கொள்ளப்பட்டன. ஏனைய தமிழ்ப்பிரதேசங்களுடனான தொடர்புகளை துண்டித்தலே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. ஒரு வில்போல நீளமாக வளைந்திருக்கும் குடியேற்றப் பிரதேசமான சேருவல தேர்தல் தொகுதியினைப் பார்க்கும்போது இவ்வுண்மை தெளிவாகப் புலப்படும்.

இந்நிலையில் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினர் இக்குடியேற்றங்களைப் பற்றியும், அதற்குப் பின்னால் உள்ள சதி முயற்சிகளைப் பற்றியும், பேரினவாதிகளின் மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும். இவ்வறிந்து கொள்ளலே இப்புற்றுநோயை இந்த மட்டத்திலாவது இடைநிறுத்தி மேலும் வளராமல் தடுப்பதற்குரிய மார்க்கங்களைப் புலப்படுத்தும். பேரினவாதிகளின் செயற்பாட்டிற்கு மாற்றான ஒரு செயற்பாட்டுத்தளத்தையும் திறந்துவைக்கும். மாற்றுமருந்து வகைகளையும் கண்டுபிடிக்கும். 

சுதந்திரத்திற்கு முன்னர் திருமலை மாவட்டத்தில் நிரந்தரமாகக் குடியேறியிருந்த சிங்கள மக்கள் என விரல்விட்டு எண்ணக்கூடியோரே வாழ்ந்திருந்தனர். இதற்குப் புறம்பாக திருமலை நகரத்தில் மட்டும் துறைமுக வேலைகளுக்காகவும், பிரித்தானியக் கடற்படைத்தள வேலைகளுக்காகவும் தற்காலிகக் குடியேறிகள் சிலர் வாழ்ந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட விவசாயக் குடியேற்றத் திட்டங்களைத் தொடர்ந்தே, பெரும் எண்ணிக்கையானவர்கள் குடியேறத் தொடங்கினர். தொடர்ந்து இவற்றைப் பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டவிரோத விவசாயக் குடியேற்றத் திட்டங்கள், கைத்தொழில் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றங்கள், மீனவர் குடியேற்றங்கள், புனிதப் பிரதேசக் குடியேற்றங்கள், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றங்கள் என்பன சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தன. இக்குடியேற்றங்களின் வளர்ச்சியினாலேயே திருகோணமலை மாவட்டத்தில் 1827 இல் 1.3% ஆக இருந்த சிங்களவர் எண்ணிக்கை, 1981 இல் 33.62% ஆக அதிகரித்தது. அதேவேளை 1827 இல் 81.82% ஆகவிருந்த தமிழர்களின் எண்ணிக்கை 36.4% ஆகக் குறைந்தது.

இனி திருகோணமலையின் முக்கிய திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களைப் பார்ப்போம்.

தொடரும்.

The post 1949 – 1968: ஈழத்தமிழரின் அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 1 appeared first on Ezhuna | எழுநா.

Received before yesterdayEzhuna | எழுநா

மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் – பகுதி 4

கிழக்கு மாகாணம்

இலங்கையின் கிழக்கு மாகாணம், தீவின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஓர் அழகான பிரதேசமாகும். இது இயற்கை அழகு, பண்பாட்டு மரபு மற்றும் புவியியல் முக்கியத்துவம் ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் புவியியல் நிலப்பரப்பு பல்வகைமை கொண்டது. இங்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த, அழிந்துபோன மாபெரும் கண்டமான கோண்ட்வானாவின் எச்சங்களைக் காணலாம். கொண்டலைட் மற்றும் சார்னோகைட் போன்ற அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தால் உருவான பாறைகள் இப்பகுதியில் குறிப்பாக அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பாறைகளில் இல்மனைட் மற்றும் கிராஃபைட் போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் உள்ளன.

மேலும், இந்த மாகாணத்தில் குவார்ட்சைட்டுகள் மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற நீண்ட புவியியல் வரலாற்றைக்கொண்ட படிவுப் பாறைகள் உள்ளன. இவை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன; இப்பகுதியின் பழைய வாழ்விடங்கள் பற்றிய தகவல்களை வழங்குகின்றன. இந்தப் பாறைகளில் காணப்படும் புதைபடிவங்கள், இலங்கையின் தொல்பழங்கால வாழ்க்கை பற்றிய நமது அறிவை மேலும் விரிவுபடுத்துகின்றன.

இலங்கையின் கிழக்கு மாகாணம், நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணங்கள் 19 ஆம் நூற்றாண்டு முதலே இருந்துவந்தாலும், 1987 ஆம் ஆண்டில் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்படும் வரை அவற்றுக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் இருந்ததில்லை.

கிழக்கு மாகாணத்தின் மொத்தப் பரப்பளவு 9,996 சதுர கிலோமீட்டர் ஆகும். இது தீவின் மொத்தப் பரப்பளவில் 16% ஆகும். இதில் நிலப்பரப்பு 9,361 சதுர கிலோமீட்டராகவும், உள்நாட்டு நீர்ப்பரப்பு 635 சதுர கிலோமீட்டராகவும் உள்ளது. மேலும், இந்த மாகாணம் 431 சதுர கிலோமீட்டர் நீளமான கடற்கரையைக் கொண்டது.

கிழக்கு மாகாணத்தின் எல்லைகள்: வடக்கில் – வட மாகாணம், கிழக்கில் – வங்காள விரிகுடா, தெற்கில் – தென் மாகாணம், மேற்கில் – ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் மூன்று நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை. இம்மாகாணத்தின் தலைநகரம் திருகோணமலை ஆகும்.

இம்மாகாணம் முதன்மையாக விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்டது. இதனால் இது ‘இலங்கையின் நெற் களஞ்சியம்’ என்று அழைக்கப்படுகிறது. 

தேசிய உற்பத்தியில் நெல்: 25%, பால்: 17%, மீன்: 21% பங்களிப்பைச் செலுத்துகின்றன. கிழக்கு மாகாணம் பெரிய சுற்றுலா மையங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக பாசிக்குடா, நிலாவெளி, உப்புவெளி, கற்குடா போன்ற கடற்கரைகள்; கழிமுகப்பகுதிகளில் பல ஓய்வுவிடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் அமைந்துள்ளன. வரலாற்று இடங்கள் மற்றும் இயற்கை அழகுகள் (புறாத்தீவு, பவளப்பாறைகள்)போன்றன சுற்றுலாத்துறைக்கு மேலும் உதவுகின்றன. இது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.6% பங்களிக்கிறது. 2019 ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின்படி, மாகாணத்தின் செழுமைக் குறியீடு 0.168 ஆகும்; இது தேசிய சராசரியை விடக் குறைவாகும். அட்டவணை 2, முக்கியமான கிழக்கு மாகாணத்தின் குறியீடுகளைத் தருகின்றது. அட்டவணை 3, கிழக்கு மாகாணத்தில் நிலப்பயன்பாட்டின் அளவுகளைக் குறிக்கிறது. அட்டவணை 4, கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையின் மாவட்டரீதியான பரம்பலை, அண்மைய 40 ஆண்டுகளுக்குத் தருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆற்றுப்படுகைகள்

ஓர் ஆற்றுப்படுகை என்பது ஒரு நீரியல் அலகாகும். இப்பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் ஆவியாகாத வரை, அதே படுகையில் தங்கிவிடும் அல்லது ஒரே ஆற்றில் கலந்து கடலை அடையும். இதற்கு ‘நீர் வடிபகுதி’ அல்லது ‘நீர்ப்பிரிவு’ என்றும் பெயர்கள் உண்டு. ஆற்றுப்படுகைகள் பொதுவாக ஒரு பகுதியின் மிக உயர்ந்த இடங்களில் இயற்கையாக உருவான பிரிவுகளால் ஒன்றிலிருந்து ஒன்று தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

கிழக்கு மாகாணத்தில் கடலில் கலக்கும் 38 ஆறுகள் பாய்கின்றன. படம் 2 – முக்கியமான ஆற்றுப்படுகைகளின் சுருக்கத்தையும், அட்டவணை 5 – ஆற்றுப்படுகைகள் மற்றும் அவற்றின் நீரியல் தரவுகளின் சுருக்கத்தையும் தருகின்றன.

கிழக்கு மாகாணத்தின் முக்கிய ஆற்றுப்படுகைகள்

1. மகாவலி ஆற்றுப்படுகை

இலங்கையின் மிகப்பெரிய ஆற்றுப்படுகையான மகாவலி ஆற்றுப்படுகை, கிழக்கு மாகாணம் உட்பட பல மாகாணங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. இப்பகுதியில் பாசனம் மற்றும் நீர்மின்சார உற்பத்திக்கு இது ஒரு முக்கியமான நீர் ஆதாரமாகும்.

இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கை 335 கி.மீ (208 மைல்) நீளம் கொண்டது. தீவின் மொத்தப் பரப்பளவில் ஐந்தில் ஒரு பங்கை வடிநிலமாகக் கொண்ட இந்த ஆற்றுப்படுகை 10,448 சதுர கி.மீ (4,034 சதுர மைல்) பரப்பளவுடன் நாட்டின் மிகப்பெரிய வடிநிலமாகும். மகாவலி கங்கையின் உண்மையான உற்பத்தி இடம் நுவரெலியா மாவட்டத்தின் மகாவில பிராந்தியத்தில் உள்ள பொல்வத்துறை என்னும் ஒதுங்கிய கிராமமாகும். இங்கு ஹட்டன் மற்றும் கொத்மலை ஓயா ஆகியவை இணைகின்றன. திருகோணமலை விரிகுடாவின் தென்மேற்கு முனையில் இந்த ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பல கடலடிப் பள்ளத்தாக்குகளில் முதன்மையானவை இந்த விரிகுடாவில் உள்ளதால், திருகோணமலை உலகின் சிறந்த ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

2. கல் ஓயா ஆற்றுப்படுகை

கிழக்கு வறண்ட மண்டலத்தில் அமைந்துள்ள கால் ஓயா ஆற்றுப்படுகை (படம் 1 {ஆ}) இலங்கையின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான சேனானாயக்கா நீர்த்தேக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் சேமிப்புத்திறன் 950 மில்லியன் கன மீட்டர் (MCM) ஆகும். இது 90,000 ஏக்கர் பரப்பளவுக்கு பாசன வசதி வழங்கும் திறன் கொண்டது.

3. யான் ஓயா ஆற்றுப்படுகை

இலங்கையின் ஐந்தாவது நீளமான ஆறான யான் ஓயா தோராயமாக 142 கிமீ (88 மைல்) நீளம் கொண்டது. இதன் வடிநிலப் பகுதியில் ஆண்டுக்கு சுமார் 2,371 மில்லியன் கன மீட்டர் மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதில் சுமார் 17 சதவீதம் நீர் மட்டுமே கடலை அடைகிறது. இதன் வடிநிலப் பரப்பளவு 1,520 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

4. கும்புக்கன் ஓயா ஆற்றுப்படுகை

கும்புக்கன் ஓயா இலங்கையின் பன்னிரண்டாவது நீளமான ஆறாகும். 116 கிமீ நீளமுள்ள இந்த ஆறு இரண்டு மாகாணங்கள் மற்றும் இரண்டு மாவட்டங்களின் வழியாகப் பாய்கிறது. இதன் வடிநிலத்தில் ஆண்டுக்கு சுமார் 2,115 மில்லியன் கன மீட்டர் மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதில் சுமார் 12 சதவீதம் நீர் மட்டுமே கடலை அடைகிறது. இதன் வடிநிலப் பரப்பளவு 1,218 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

5. மாதுரு ஓயா ஆற்றுப்படுகை

மாதுரு ஓயா இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு முக்கியமான நீரோடையாகும். இது தோராயமாக 135 கிமீ (84 மைல்) நீளம் கொண்டது. இதன் வடிநிலப் பகுதியில் ஆண்டுக்கு சுமார் 3,060 மில்லியன் கன மீட்டர் மழைப்பொழிவு ஏற்படுகிறது. இதில் சுமார் 26 சதவீதம் நீர் கடலை அடைகிறது. இதன் வடிநிலப் பரப்பளவு 1,541 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

6. வெருங்கல் ஆறு ஆற்றுப்படுகை

வெருங்கல் ஆறு (வெருங்கல் ஆறு) எனப்படும் இந்த நீரோடை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைப் பிரிக்கிறது. புகழ்பெற்ற வெருங்கல் கந்தசுவாமி கோவில் இதன் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆறு கதிரவெளிக்கு வடக்கே அமைந்துள்ள வெருங்கல் நகரம் வழியாகப் பாய்கிறது.

கிழக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர்வளம்

மழைவளம் குறைவாக உள்ள இப்பிரதேசத்தில் நிலத்தடி நீர் வளங்கள் விவசாயம், குடிநீர்த் தேவை மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு அத்தியாவசியமானவையாக உள்ளன. கிழக்கு மாகாணத்தில் பல ஆழமற்ற மற்றும் ஆழமான நீரகங்கள் (Aquifers) உள்ளன. மேற்பரப்பு நீர் ஆதாரங்கள் குறைவாக உள்ள பகுதிகளில், பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு இந்த நீரகங்கள் முக்கியமானவையாக உள்ளன. மொத்த நீர்ப்பயன்பாட்டில் 65% நிலத்தடி நீரே பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 250 மில்லியன் கன மீட்டர் நீர் ‘பம்ப்’ செய்யப்படுகிறது. அதில் 90% விவசாயத் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. 1.2 மில்லியன் மக்களின் குடிநீர்த் தேவை நிறைவேற்றப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் நிலத்தடி நீரகங்கள் (Aquifers) கீழுள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மூன்று முக்கிய நிலத்தடி நீரக வகைகள் காணப்படுகின்றன:

அ) கரடுமுரடான படிகப்பாறை நீரகங்கள்: மாகாணத்தின் மேற்குப் பகுதிகளில் காணப்படுகின்றன. 50-100 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளன. நீர் ஊடுருவும் திறன் குறைவு.

ஆ) சுண்ணாம்புக்கல் நீரகங்கள்: திருகோணமலை, மட்டக்களப்புப் பகுதிகளில் காணப்படுகின்றன. 100-200 மீட்டர் ஆழம் வரை நீர் தேக்கம். உயர் ஊடுருவும் திறன் கொண்டவை.

இ) கடலோர மணல் நீரகங்கள்: கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 20-50 மீ ஆழத்தில் உள்ளவை. விரைவாக நிரம்பக்கூடியவை.

நிலத்தடி நீரின் அதிகப்படியான பயன்பாடு (அதிக ‘பம்பிங்’ காரணமாக, வறண்டுபோன கிணறுகளின் எண்ணிக்கை 25% ஆக அதிகரித்துள்ளது), நீர்மட்டம் குறைதல் மற்றும் கடலோரப் பகுதிகளில் உப்பு நீர் ஊடுருவல் (கடலோரப் பகுதிகளில் 45% நீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன) போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். வேளாண்மை நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் (Fertilizers and pesticides) நிலத்தடி நீரை மாசுபடுத்தும் அபாயம் உள்ளது (நைட்ரேட் அளவு WHO இனால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிகம்).

கிழக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர்வளம் பல சவால்களை எதிர்கொண்டாலும், சரியான மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகள் மூலம் இந்த முக்கியமான வளத்தைப் பாதுகாக்க முடியும். உள்ளூர்ச் சமூகங்கள், அரசு மற்றும் தனியார்துறை இணைந்து செயற்படுவது எதிர்காலத்தில் நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும்.

The post மூலோபாயப் பகுதி பற்றிய அடிப்படைத் தகவல்கள் – பகுதி 4 appeared first on Ezhuna | எழுநா.

கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 1

“அவர்களின் இந்த (யாழ்ப்பாண) மண்ணிற்கு உள்ளே, அவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியாத உள்ளத்தை உவகையாக்கும் மதிப்புமிக்க தொல்வரலாற்றுச் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.”

Paul E. Pieris
Ceylon Daily News
22-02-1919.

“பண்டைய கிரேக்கர்களும், உரோமர்களும் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த தொலமியால் கௌரூலா என்றும், பெரிப்பிளஸ்ஸின் ஆசிரியரால் கமாரா எனவும் குறிப்பிடப்படும் நகரம் கந்தரோடை என்பதில் எனக்கு எதுவிதமான ஐயப்பாடும் கிடையாது.”

C. Rasanayagam
1926.

“(கந்தரோடை அகழ்வுகளில்) ஒரு ஸ்தூபியின் கீழே அகழாய்வு செய்யப்பட்டபோது அங்கே புதைக்கப்பட்ட ஓர் ஈமக் கிண்ணத்தில் அழுகிய எலும்பு காணப்பட்டது…அந்த ஸ்தூபியின் கீழே அழுகிய நிலையில் மற்றுமொரு எலும்புத் துண்டும் காணப்பட்டது.”

C.E. Godakumbura
7th November 1967.
1968: p. 72.

“கந்தரோடையில் குடியேற்றம் பெற்ற மக்கள் தென்னிந்திய மக்களின் கலாசார சமுதாயச் சூழலின் வழித்தோன்றல்களாகவோ அல்லது அவர்களோடு நெருக்கமான கலாசார உறவைக் கொண்டவர்களாகவோ இருந்திருக்க வேண்டும்.”

Vimala Begley
1973.

அறிமுகம் 

யாழ்ப்பாணத்திலுள்ள 3.2 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கந்தரோடைக் கிராமம் அனைத்துமே ஒரு தொல்லியல் மையம்தான். கந்தரோடைக் கிராமத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்: (1) மக்களின் வதிவிடப் பகுதி, (2) தென்மேற்காக அமைந்த பனந்தோப்பு. இந்தக் கிராமத்தின் மிகப்பழமையான நகரம் அதன் நடுவே இரண்டு மீட்டர் உயரத்தில் 25 ஹெக்டயர் (62 ஏக்கர்) பரப்பளவில் அமைந்த மேட்டு நிலமாகும். அதன் பள்ளமான பரப்பு நெல்வளரும் செழிப்பான விளைச்சல் நிலம். அந்த விளைநிலத்தினருகே 40 ஏக்கர் பரப்பளவிலான கந்தரோடைக் குளம் காணப்படுகிறது. அக்கிராமத்தினூடாகச் செல்லும் வழுக்கை ஆறு எனப்படும் கடற்கால்வாய் தென்மேற்காக வளைந்து, மேற்கே கல்லுண்டாய் வழியாக நாவாந்துறைக்கருகே யாழ்ப்பாணக் கடலேரியில் சங்கமமாகிறது.

கந்தரோடையின் வரலாற்று முக்கியத்துவம் இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில்தான் மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இது இத்தனை பழமையான நடுவம் என்பதை எவருமே எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். 1916 ஆம் ஆண்டில் வட இலங்கையில் தொல்லியல் மேலாய்வுகளை மேற்கொண்ட வடமாகாண அரசாங்க அதிபராகவிருந்த ஜே.பி. லூயிஸ், யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களிலிருந்த புராதனக் கட்டட அழிபாடுகளைக்கொண்டு இந்த இரு இடங்களும் வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட குடியேற்ற மையங்களாக இருந்திருக்க வேண்டும் என அறிவித்திருந்தார். 1917-1919 ஆண்டுகளில் ஸேர். போல் எட்வார்ட் பீரிஸ் இங்கே அகழாய்வுகளை மேற்கொண்டு “கந்தரோடை ஒரு சிறிய அளவினதான அநுராதபுரம்” என அறிவித்தார் (Pieris, P. E. 1919).

“அழிந்து கிடக்கும் கட்டடங்களின் அடையாளங்களாலும், கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள், கற்றூண்களினாலும், பரவிக்கிடக்கும் ஓடுகளின் துண்டுகளினாலும், கதிரமலை (கந்தரோடை) எனப்படும் இப்பழைய நகரம் மிகவும் விசாலமானதும், அழகிய வீதிகளையும், மாடமாளிகைகள், கூட கோபுரங்களுமுடையதுமாய், கண்ணைக் கவரும் வனப்பு வாய்ந்ததுமாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம்” என வரலாற்றாசிரியர் முதலியார் இராசநாயகம் கந்தரோடை நகரத்தை வருணித்தார் (இராசநாயகம், செ. 1933: 14-15). அக்கால வரலாற்றாசிரியர்களான முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் இருவரும் பண்டைய யாழ்ப்பாணத்தின் தலைநகராகக் கந்தரோடையை இனம் கண்டார்கள்.

தொல்லியலாய்வுகள்

கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாகக் கீழ்க்காணும் ஆய்வாளர்கள் கந்தரோடையில் தொல்லியல் மேலாய்வுகளையும், தொல்லியல் அகழாய்வுகளையும் இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் மேற்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் சில ஆய்வுகளின் அறிக்கைகள் இதுவரை வெளிவரவில்லை. ஆய்வுகளில் கண்டெடுத்த தொல்பொருட்களில் பெரும்பாலானவை அநுராதபுர, மற்றும் கொழும்பு அருங்காட்சியகங்களுக்கும், யாழ்ப்பாண அருங்காட்சியகத்திற்கும், சில தனியாரிடமும் சென்றடைந்திருக்கின்றன.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கந்தரோடையில் தொல்லியல் மேலாய்வுகளையும், அகழாய்வுகளையும் மேற்கொண்டவர்கள்:

போல் பீரிஸ்: 1917, 1919.

கொடகும்புர, C.E: 1966-1967 – அறிக்கை 1968.

விமலா பெக்லி: பெப்ரவரி-மார்ச் 1967.

விமலா பெக்ளி, பென்னெற் புரொன்ஸன்: ஜூன்-ஆகஸ்ட் 1970.

இலங்கைத் தொல்லியல் திணைக்களம்: 1971.

இந்திரபாலா, சிற்றம்பலம், இரகுபதி: 1983.  

பொன்னம்பலம் இரகுபதி: 1987.

கிருக்ஷ்ணராஜா: 1994-1995.

புக்ஷ்பரட்ணம், நிமால் பெரேரா: 2011.

பார்பரா ஹெல்விங், நிமால் பெரேரா:  2018-19.

கந்தரோடைத் தொல்லியல் மேலாய்வுகள்

1917-1919 ஆம் ஆண்டுகளில் கந்தரோடையில் போல் பீரிஸ் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் பின்னர் அரைநூற்றாண்டுகளாகக் கந்தரோடைத் தொல்லியல் மையம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. 1956 முதல் 1967ஆம் ஆண்டுவரை இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் ஆணையாளராக (Commissioner of Archaeology) பணியாற்றிய சாள்ஸ் எட்மண்ட் கொடகும்புர (Charles Edmund Godakumbura) தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில் கந்தரோடையில் கவனம் செலுத்தினார். 1917-1919 ஆம் ஆண்டுகளில் கந்தரோடையில் தொல்லியலாய்வுகளை மேற்கொண்ட போல் பீரிஸ் முக்கியமாக மேலாய்வுகளையும், சில கிடைமட்ட அகழ்வுகளையுமே (Horizontal excavations) செய்திருந்ததை அறிந்திருந்தார். இவ்விடங்களில் முறையான அடுக்கமைவு அகழ்வுகள் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தார். இலங்கை அரசின் அனுமதியோடு, தமிழ்நாட்டில் அரிக்கமேட்டில் தொல்லியலாய்வை மேற்கொண்டிருந்த அமெரிக்க பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருட்காட்சியகத்தின் தொல்லியலாளர்களை இலங்கை வந்து பொம்பரிப்பிலும், கந்தரோடையிலும் தொல்லியல் அகழாய்வை நிகழ்த்தித்தருமாறு அழைத்திருந்தார். அத்துடன் 1966 ஆம் ஆண்டில் கந்தரோடையில் தொல்லியல் திணைக்கள அகழாய்வுகளையும் தானே ஆரம்பித்திருந்தார்.

இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளரான கொடகும்புரவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தினர் முதலில் 1967 ஆம் ஆண்டில் கந்தரோடையில் ஒரு தொல்லியல் மேலாய்வை மேற்கொள்ளுவதாகவும், அது ஆக்கவளமுடையதாக (Productive) இருப்பின் பின்னால் விரிவான அகழ்வை மேற்கொள்ளவும் முடிவடுத்தனர்.

1967 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் தலைவராக இருந்த தொல்லியலாய்வாளர் விமலா பெக்லி கந்தரோடை வந்து தொல்லியல் மேலாய்வுகளை மேற்கொண்டார்.

இலங்கையில் அதுவரை காலமும் (1967 வரை) மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் தொல்பொருட்களின் சரியான காலக்கணிப்புகளோ, அல்லது அவற்றின் பண்பாட்டு வளர்ச்சி அடுக்குகளோ (Culture sequences) வரையறுக்கப்படவில்லை. அதன் காரணமாக அதுவரை ஆய்வு செய்யப்பட்ட பிராந்தியங்களின் காலக்கிரமமான வரலாற்று வளர்ச்சியை அதுவரை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டறிவது இயலாத காரியமாக இருந்தது.

கந்தரோடைக் கிராமம் தெளிவாகப் பிரிக்கக்கூடிய இரு பகுதிகளைக் கொண்டிருந்தது: ஒன்று மக்களின் வதிவிடக் கிராமம், மற்றது அதற்குத் தெற்கேயுள்ள பனந்தோப்பு. அந்தப் பனந்தோப்பில் இருந்த மண்மேடுகள் பௌத்த தாதுகோபங்கள் இருந்த இடங்களாக இருக்கலாம் என போல் பீரிஸ் கருதினார் (Pieris, P.E. 1917: 11-30: 1919: 40-67). பீரிஸ் மேற்கொண்ட சிறிய அளவிலான அகழ்வுகளில் பளபளப்பாக மெருகிட்ட ஓடுகள், சுண்ணாம்புக் கற்கள் என்பன காணப்பட்டன. அக்கிராம மாணவர்களிடமிருந்து முத்திரை குத்திய மற்றும் ரோமாபுரி நாணயங்களையும் பெற்றுக்கொண்டதாகப் பதிவு செய்திருந்தார் (Begley, V. 1967: 23).

விமலா பெக்லி கந்தரோடையில் மேலாய்வுகளை மேற்கொண்ட மாதங்களில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆய்வாளர்கள் தெற்கேயிருந்த பனந்தோப்புப் பகுதியில் அகழ்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். அது பற்றிக் குறிப்பிட்ட விமலா பெக்லி “அந்த அகழ்வுகள் சிறிய அளவிலான தாதுகோபங்களின் அடித்தளங்களையும், அக்கட்டடங்களின் துண்டுப்பகுதிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருந்தன.” (This excavation has so far brought to light the bases and architectural fragments of several small dagobas) எனப் பதிவு செய்திருந்தார் (Vimala Begley, V. 1967:p. 23).

“எங்களது அப்பிராந்திய மேலாய்வுகளில் மக்களின் வதிவிடம் தாதுகோப மையத்திலிருந்து வடக்கே சில பர்லாங்கு தூரத்தில் கந்தரோடைக் கிராமத்தில் காணப்பட்டது. கிராமத்தின் கரையில் வெட்டப்பட்ட ஒரு கிடங்கில், அக்கிராம ஒழுங்கைகளை அமைத்தபொழுதில் பெற்றுக்கொண்ட பெருந்தொகையிலான மட்பாண்ட ஓடுகளைக் குப்பையாகப் போட்டிருந்தார்கள். இம்மட்பாண்ட ஓடுகள் இரும்புக்கால, ஆரம்ப வரலாற்றுக்கால தென்னிந்திய மட்பாண்டங்களை ஒத்திருந்தன – அவையாவன பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும், அரிக்மேட்டு வகை ரௌலெற்றெட் மட்பாண்டங்களுமாகும்.” (Vimala Begley, V. 1967: 24).

“அவ்விடத்தில் ஒரு சிறு குழியைத் தோண்டி ஆராய்ந்தபொழுது அக்குழி 12 அடி அழம்வரை வெவ்வேறு காலப்பகுதிகளுக்குரிய  மக்களின் வதிவிடக் கழிபொருட்களைக் காட்டியது. அக்குழியின் அடிமட்டக் கன்னிநிலம் வரை அகழ முடியவில்லை. அக்குழியின் மேல்  மட்டங்களிலேயே கி.பி. முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளுக்குரிய தொல்பொருட்களைக் காணமுடிந்தது. இவைதவிர இரும்புத் தாது, ‘கோறல்’ கற்கள், லக்க்ஷ்மி பதக்கவில்லைகள் (Lakshmi plaques) என்பன அக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.” (Vimala Begley, V. 1967: 24).

“கந்தரோடைக் கிராமத்திற்கு அப்பாலும் சில மேலாய்வுகளை மேற்கொண்டிருந்தோம். மேற்கே கந்தரோடைக் கிராமத்திலிருந்து கடல்வரை செல்லும் கால்வாய்க்குப் பக்கத்தில் அம்மன் கோயிலுக்குச் சமீபமாகப் பல மண்குன்றுகள் காணப்பட்டன. இன்னும் சற்றுத்தள்ளி பழைய கட்டடங்களின் இடிபாடுகள் காணப்பட்டன.” (Begley, V. 1967). இந்த மேலாய்வின் அறிக்கை பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக 1967 ஆம் ஆண்டின் கோடைகால அறிவிப்பு வெளியீடாக வெளிவந்தது.

தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்ட கந்தரோடை வரலாற்றியல்

1970 ஆம் ஆண்டு ஜீன்-ஆகஸ்ட் மாதங்களில் அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் தொல்லியலாளர்கள் கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகளும், அக்குழுவிற்குத் தலைமை தாங்கிய விமலா பெக்லி 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி-மார்ச் மாதங்களில் கந்தரோடையில் மேற்கொண்ட மேலாய்வுகளும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் 1980-1981 டிசம்பர்-பெப்ரவரி மாதங்களில் கந்தரோடைக்கு அருகாமையிலுள்ள ஆனைக்கோட்டையில், பேராசிரியர் இந்திரபாலாவின் தலைமையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகளுமே கந்தரோடை வரலாற்றியலின் (Historiography – வரலாற்று மெய்மை) கருப்பொருளாக அமைகின்றன. இந்த ஆனைக்கோட்டை அகழாய்வு அடுத்து வரும் இயலில் விரிவாகப் பேசப்படும்.

மேலே கூறப்பட்ட ஆய்வுகளோடு 1917-1919 ஆண்டுகளில் போல் பீரிஸ் கண்டெடுத்த தொல்பொருட்களும், 1967 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளராகவிருந்த கொடகும்புர அவர்களது அகழாய்வின் கண்டுபிடிப்புகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. 1980களில் கலாநிதி இரகுபதியின் தொல்லியல் மேலாய்வுகளும், 1994-1995 ஆண்டுகளில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்லையா கிருக்ஷ்ணராசா கந்தரோடையில் உச்சாப்பனை என்ற இடத்தில் இலங்கைத் தொல்லியல் திணக்களத்தினரின் அனுமதியோடு மேற்கொண்ட அகழாய்வுகளும், 2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பரமு புக்ஷ்பரட்ணம் இலங்கைத் தொல்லியல் திணைக்கள உதவி ஆணையாளராகவிருந்த நிமால் பெரேராவுடன் இணைந்து மேற்கொண்ட கந்தரோடை அகழாய்வின் கண்டுபிடிப்புகளும், 2018 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய சிட்னிப் பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர் பார்பரா ஹெல்விங் கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வின் தொல்பொருட்களும், 2018 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொறியன் புல்லர் மேற்கொண்ட கந்தரோடைத் தொல்தானியங்களின் கதிரியக்கக் கரிம ஆய்வுகளும் இங்கே கூறப்படுகிறது. இக்கண்டுபிடிப்புகள் அனைத்தும் கந்தரோடை வரலாற்றியலின் உருவாக்கத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கந்தரோடையின் சமீபகால அகழாய்வுகளில் கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அதன் பெறுபேறுகள் இலங்கை அரசின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் அறிக்கைகளில் வெளியிடப்படுவதில்லை. அவர்களில் ஒரு சிலர்தான் விதிவிலக்கானவர்கள். கந்தரோடையில் முதன்முதலாக விஞ்ஞான-அறிவியல் ரீதியிலான அகழாய்வை மேற்கொண்ட அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தின் தொல்லியளாளர்களை இலங்கைக்கு வரவழைத்ததில் கலாநிதி கொடகும்புர, கலாநிதி சத்தமங்கல கருணரத்தின இருவரினதும் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

காலப்பகுதி I: ஆதி இரும்புக்காலம் – கி.மு. 1350-600.

வரலாற்றிற்கும் முற்பட்டகாலப் பெருங்கற் பண்பாட்டுப் பரவல்

அமெரிக்காவின் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லியின் தலைமையிலான குழுவினர் 1970 ஆம் ஆண்டில் ஜூன்-ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கந்தரோடையில் மேற்கொண்ட அறிவியல்பூர்வமான அகழாய்வே வெளிநாட்டவர்களின் முயற்சியால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அகழாய்வாகும். இந்த அகழ்வில் கண்ட முக்கியமான தொல்பொருட்கள் அமெரிக்காவிற்கு கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பிற்கு (Radiocarbon C-14 Dating) அனுப்பிவைக்கப்பட்டன. விமலா பெக்லியின் விவரமான 1970 ஆம் ஆண்டின் கந்தரோடை அகழாய்வு அறிக்கை அன்றைய அரசினால் தடைசெய்யப்பட்டது. அது இன்றுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் விமலா பெக்லி, 1970 இல் கந்தரோடை அகழாய்வில் கண்டெடுத்த முக்கியமான சில தொல்பொருட்களைப் பற்றி அமெரிக்க கோர்ணல் பல்கலைக்கழகம் 1973 இல் வெளியிட்ட ஒரு நூலில் கூறியிருந்தார் (Begley, V. 1973). 

ஆரம்பகாலக் குடியிருப்புகள்: கி.மு. 1350  

தென்னாசியாவில் ‘ஹோமோ செப்பியன்ஸ்’ (Homo sapiens) எனப்படும் நவீன மனிதர்களின் சமூகங்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களுள் யாழ்ப்பாணத் தீபகற்பமும் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் இம்மனிதக் குடியிருப்புகளின் சரியான ஆரம்பகாலத்தை அறிய முடியாது போனாலும், இற்றைக்கு 3350 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கே நவீன மனிதர்களின் குடியிருப்புகள் இருந்தன என்பதை தொல்லியலாய்வுகளில் கண்டெடுத்த அம்மனிதர்களின் பாவனைப்பொருட்களின் தேதிக்கணிப்புகளைக் கொண்டு கண்டறிய முடிகிறது. இவற்றுள் ஆரம்பப் பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள் உபயோகத்திலிருந்த காலப்பகுதியை இப்பிராந்தியத்தில் மக்களின் குடியேற்றங்கள் ஆரம்பித்த காலமாகக் கொள்ளலாம். இதை அறிந்து கொள்வதற்கு இம்மட்பாண்டங்களின் காலக்கணிப்பு அவசியமாகிறது. 

1970 ஆம் ஆண்டு ஜீன்-ஜீலை மாதங்களில் கந்தரோடையில் அறிவியல்பூர்வமான அகழாய்வை மேற்கொண்ட அமெரிக்கப் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத் தொல்லியலாளர்கள், அங்கே கண்டெடுத்த தொல்பொருட்களை அமெரிக்காவின் கதிரியக்கக் கரிம ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பெறுபேறு பற்றி நீண்டகாலமாக இலங்கையின் தொல்லியல் திணைக்களத்தினர் எதுவிதமான அக்கறையும் காட்டவில்லை.

1977 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்ட பிரபல தொல்லியராளரான சிரான் தெரனியகல, 1970 ஆம் ஆண்டில் கந்தரோடை அகழ்வுகளில் பங்கு பற்றிய பென்னெற் புரொன்ஸனைத் தொடர்புகொண்டு கந்தரோடையில் கண்டெடுத்த தொல்பொருட்களின் கதிரியக்கக் கரிமக் கணிப்புத் திகதிகளைப் பெற்றுக்கொண்டார். இந்த அறிவிப்பு 08-02-1982 திகதியிட்ட இலங்கைப் பத்திரிகை ‘Weekend’ இலும், பின்னர் இரகுபதியின் 1987 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணத் தொல்லியலாய்வு நூலிலும் வெளியானது.

இத்தொல்லியல் பொருட்களில் P-2515, P-2525 என அடையாளமிட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் முறையே கி.மு. 1290±60 ஆண்டையும், கி.மு. 980±220 ஆண்டையும் தந்திருக்கின்றன. இக்காலக்கணிப்பின்படி கி.மு. 1350 ஆண்டளவில் உபயோகப்படுத்தப்பட்ட மட்பாண்டங்கள், அக்காலத்தில் இங்கே பெருங்கற்கால மக்களின் குடியேற்றங்கள் இருந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன (Ragupathy, P. 1987:205, Thiagarajah, S. 2016: 42)

இலங்கையில் பெருங்கற் பண்பாட்டின் நுழைவாயில் கந்தரோடை

கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் அவ்விடத்தில் பரவியிருந்த பெருங்கற்பண்பாட்டின் முக்கியமானதொரு அங்கமாகும். முதன்முறையாக 1970 ஆம் ஆண்டில் விமலா பெக்லியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கந்தரோடை அகழ்வாராய்ச்சியின்போது பெருங்கற்காலப் பண்பாட்டுச் சுவடுகள் பல இங்கே கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த இடத்தில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் பற்றியும், பெருங்கற் பண்பாட்டில் அவற்றின் சிறப்பிடம் பற்றியும் சில வரிகள் கூறுவது அவசியமாகிறது. முதன்முதலாக சிந்துவெளி நகரங்களில் கி.மு. 3000-2800 ஆண்டு காலங்களில் இனங்காணப்பட்ட இவ்வகையான மட்பாண்டங்கள் பின்னர் இந்தியத் துணைக்கண்டம் எங்கும் பரவி, பின்னர் கி.மு. 1800 ஆண்டளவில் கர்நாடகத்தில் பிரம்மகிரி, மஸ்கி ஆகிய மையங்களில் காணப்படும் பெருங்கற் புதையல்களில் காணப்படுகின்றன. தென்னாசியச் சூழமைவில் பெருங்கற் பண்பாடும், அதன் ஓர் அம்சமான கறுப்பு-சிவப்பு மட்பாண்டமும் திராவிட மக்களுக்குரிய தனித்துவமான பண்புகளாகும் (இது பற்றிப் பின்னொரு இயலில் விரிவாகப் பேசப்படும்).

பெருங்கற் பண்பாடானது முக்கியமாக இறந்த மக்களை அடக்கம் செய்யும் பெருங்கற்களைக்கொண்ட கல்லறைகளை உள்ளடக்கியது. இறந்தவர்களை அடக்கம் செய்த பின்னர் பெரிய கற்பாறைகளை கற்பலகைகளாக வெட்டியோ, அல்லாமலோ அடக்கத்தைச் சுற்றிவர நட்டு மேலாக மற்றொரு கற்பலகையால் மூடிவிடுவார்கள். இந்த அடிப்படை முறையிலிருந்து பலவகையான மாறுபாடுகள் காணப்படுகின்றன. தமிழகத்தின் தாழிப்புதையல்கள் இப்பண்பாட்டின் மற்றொரு அங்கமாகும். இம்மாதிரி பெருங்கற்களைக் கொண்ட சமாதிகளும், வழிபாட்டு நடுகற்களும் பண்டைய உலகின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தைப் பொறுத்தவரையில் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழிகளைப் பேசும் மக்களே இந்த அடக்க முறைகளைக் கடைப்பிடித்தவராவர். 

பெருங்கற் பண்பாடு என்பது மேற்கூறப்பட்ட பெருங்கற்களைக்கொண்ட கல்லறைகள் அல்லது தாழிப் புதையல்களோடு இரும்பின் தொழில்நுட்பம், குளம் மற்றும் அணைக்கட்டு ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன விவசாயம், உழுவதற்கான ஏர், நெற் பயிர்ச்செய்கை, மட்பாண்டம் வனையும் சில், கறுப்பு-சிவப்பு மட்பாண்டம், அம்மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்துகள் ஆகிய பண்புகளை உள்ளடக்கியதாகும். 

செக்கோசிலாவாக்கிய நாடு தந்த சமஸ்கிருத, தமிழ் மொழிகளின் மொழியியல் விற்பன்னர், பேரறிஞர் கமில் ஸ்வெலபில்லின் கூற்று இது: 

“கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் திராவிடமொழி பேசும் மக்கள் காவிச்சென்ற பண்பாட்டு அடையாளம். அதன் அகில இந்திய பரவல், இவர்கள் ஒருகாலத்தில் இந்தியா முழுவதிலும் பரவி இருந்தார்கள் என்பதற்கான சான்று. கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களும், வேதகாலப் பண்பாட்டின், தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்களும் ஒன்றாகக் காணப்படும் கி.மு. 500 ஆம் ஆண்டுகாலப்பகுதி பெருவாரியான திராவிடமொழிச் சொற்கள் சமஸ்கிருத மொழியில் உட்புகுந்த காலமாகும்” (Kamil Zvelebil 1965: 65-69).

இலங்கையின் பெருநிலப்பரப்பில் காணப்படும் பெருங்கற் சமாதிகளினதும், தாழிப்புதையல்களினதும் அவற்றோடு காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களினதும் காலக்கணிப்புகள் கி.மு. 1000 ஆண்டையும், அதற்குப் பிந்திய ஆண்டுகளையுமே தருகின்றன. இவற்றை நோக்குமிடத்து இப்பெருங்கற் பண்பாடும், அதனோடு சேர்ந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகமும் கந்தரோடை வழியாகவே இலங்கைக்குப் பரவியிருக்கின்றன என எண்ணத் தோன்றுகிறது.

பெருங்கடல் வர்த்தக – பண்பாட்டுப் பரிமாறல்கள் 

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் மூன்று கரையோரங்களிலும் அமைந்திருந்த இறங்குதுறைகள், துறைமுகங்களான யாழ்ப்பாணப்பட்டினம், யம்பு கோவளம், காயாத்துறை, கல்கோவளம் (பருத்தித்துறை) என்பன பல்வேறு நாடுகளுடன் வர்த்தக – பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பரிமாறிக்கொள்ளும் வாயில்களாக விளங்கின. யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் கரையோரங்களில் உள்ள இறங்குதுறைகளினதும், துறைமுகங்களினதும் பெயர்களைக் கவனிக்கும்போது இந்த உண்மை நன்கு புலப்படும். 

அன்றைய யாழ்ப்பாணத் தீபகத்திற்கு மிக அருகிலிருந்த தமிழகத்துடனேயே ஆரம்பகாலக் கடல் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. அதன் காரணமாக தமிழகத்தின் வரலாற்றுப்போக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரலாற்றுப் பண்புகளைப் பெருமளவுக்கு இயக்கியிருக்கிறது. கி.மு. 1350 ஆம் ஆண்டளவில் கந்தரோடையில் காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகம், ஆனைக்கோட்டையில் கண்ட தாழிப்புதையல் (பின்னர் பேசப்படும்), விவசாயத்தின் வருகை ஆகிய பெருங்கற் பண்பாட்டு அம்சங்கள், அதற்குப் பல ஆயிரத்தாண்டுகள் முன்பிருந்தே தமிழகத்திற்கும், யாழ்ப்பாணத்திற்குமிடையே எற்பட்டிருந்த கடல்வழித் தொடர்புகளின் பெறுபேறுகளாகும். 

கந்தரோடையின் நிரந்தரக் குடியிருப்புகள்; குளத்து நீரைப் பாச்சி, ஏர் பிடித்து உழுது மேற்கொண்ட நெற்பயிர் விவசாயம்; செம்பு, வெண்கலம், இரும்பு ஆகிய உலோகங்களை உபயோகித்த தொழில்நுட்பம்; உருளும் சில்லை உபயோகித்து வனைந்தெடுத்த மட்பாண்டங்கள்; நீண்டதூர நெடுங்கடல் வர்த்தகம்; சமூக அமைப்பு; எழுத்துருவாக்கம்; ஆட்சிபுரியும் ஓர் அரச வர்க்கம் என்பன பெருங்கற் பண்பாட்டு வழியாகப் பெற்றுக்கொண்ட கந்தரோடை நாகரிகத்தின் பேரெழுச்சியாகும். இந்தக் காலகட்டங்களை எடுத்துரைக்கும் தொல்லியல் சான்றுகள் இனிமேல் உரைக்கப்படும்.

கந்தரோடை உள்நாட்டு மட்பாண்டங்கள்

கந்தரோடையில் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட தெல்லியலாய்வின் அடிப்படையில் இப்பிரதேசத்து மட்பாண்டங்களின் தன்மை, தொன்மை பற்றி அறியக்கூடியதாகவுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகத் தொல்லியலாளர்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்ட வகைகளை மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்து தமது ஆய்வினைச் செய்துள்ளனர் (Orton, N. 1995; கிருக்ஷ்ணராசா, செ. 1998).

இதில் முதலாவது வகையினை ‘A’ என வகுத்துள்ளனர். இவ்வகையைச் சேர்ந்த மட்பாண்டங்களின் கழுத்து வளையங்கள் (Rim) ரோமச்சிவப்பு நிறத்தினைக் (Roman Red) கொண்டிருக்கின்றன. இவ்வகையான சிவப்பு மட்பாண்டங்கள் அரிக்கமேட்டு மட்பாண்டங்களிலிருந்து வேறானவை. இம்மட்கலன்களை இரகுபதி ‘ஆரம்ப கால சிவப்பு மட்கலன்கள்: கி.மு. 1200 – கி.மு. 300’ என வகைப்படுத்தியிருக்கிறார் (Ragupathy, P. 1987: 9).

இரண்டாவது ‘B’ வகையான மட்பாண்டங்களை கறுப்பு-சிவப்பு வண்ண மட்பாண்டங்கள் என வகுத்துள்ளனர். இவை பெருமளவுக்கு தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களுக்குரிய மட்பாண்ட வகைகள் எனவும் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வகையான மட்பாண்டங்கள் தென்னிந்தியாவில் அரிக்கமேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களை ஒத்துக் காணப்படுகின்றன எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இவ்வகையான மட்பாண்டங்களின் பரவலான உபயோகம் தென்னிந்தியாவில் இரும்பின் உபயோகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது (Orton, N. 1995; கிருக்ஷ்ணராசா, செ. 1998: 39).

மூன்றாவது ‘C’ வகையைச் சேர்ந்த மட்பாண்டங்களே அதிகளவில் கிடைத்துள்ளன. இவற்றினைச் சமையல் மற்றும் அன்றாட உபயோகங்களுக்காக மக்கள் கொண்டிருந்தமையால் இவை தடிப்பாகவும், தடிப்பான விளிம்புகளை உடையனவாகவும், பெரிய உருவத்தைக் கொண்டனவாகவும் உருவாக்கப்பட்டன. ‘சாடி’ வகையான மட்பாண்டங்களும் இவற்றில் அடங்கும். சில மட்பாண்டங்களில் ‘கிராபிற்றி’ கீறல் குறியீடுகள் காணப்பட்டன (Orton 1995; கிருக்ஷ்ணராசா 1998).

இந்த மட்பாண்டங்களின் வடிவமைப்புகளும், அவற்றில் காணப்பட்ட கீறல் குறியீடுகளும் (Graffiti marks) இலங்கையின் மற்றைய தொல்லியல் மையங்களான அநுராதபுரம், பொம்பரிப்பு, திவுல்வேவா, மகேவித்த ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்பண்பாட்டு மட்பாண்டங்களை ஒத்திருந்தன (Sitampalam, S.K. 1993: 12). இவற்றுள் காணப்பட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களைப் பற்றி கருத்துக்கூறிய விமலா பெக்லி இந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் தென்னிந்திய இரும்புக்கால மட்கலன்களை ஒத்திருப்பதாகவும், “கந்தரோடையில் குடியேற்றம் பெற்ற மக்கள் தென்னிந்திய மக்களின் கலாசார சமுதாயச் சூழலின் வழித்தோன்றல்களாகவோ, அல்லது அவர்களோடு நெருங்கிய கலாசாரத் தொடர்பு கொண்டவர்களாகவோ இருந்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார் (The people of Kantarodai have either descended from the same cultural milieu as the South Indians or have had very close cultural contacts with them) (Begley, V. 1973).

கந்தரோடையில் மிகப்பழமையான உள்ளூர், மற்றும் வெளியூர் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. அவ்விடத்தில் பெருங்கற்கால முறிவளைவு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (கி.மு. 1500 – கி.மு. 300), மற்றவகை கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் (கி.மு. 700 – கி.பி. 300), ஆரம்பகால சிவப்பு மட்கலன்கள் (கி.மு. 1200 – கி.மு. 300) என்பனவற்றோடு கி.மு. 500 ஆம் ஆண்டிற்குரிய பளிங்கு மெருகூட்டப்பெற்ற கிரேக்க ‘ரௌலெற்றெட்’ கலனொன்றும் காணப்பட்டது (Ragupathy, P. 1987: 58).

இந்த ஆதி இரும்புக்கால அகழாய்வு மட்டத்தில் இரும்பு ஆணிகள், இரும்புக் கருவிகள், மற்றும் செம்பு, வெண்கலக் கருவிகளும் காணப்படுகின்றன. வெண்கலப் பொருட்களில் திரிசூலம், இலை போன்ற வடிவில் அமைந்த வேல் என்பன குறிப்பிடத்தக்கவை. திரிசூலம், வேல் என்பன தென்னிந்தியப் பெருங்கற் புதையல்களிலும் காணப்படுகின்றன. இவை சைவ மதத்தின் முன்னோடியான பெருங்கற்காலச் சமய வழிபாட்டிற்குரிய பொருட்களாகும். (Sitampalam, S.K. 1993: 11-12).

இங்கே வெண்கலத்தினாலும் செம்பினாலும் செய்யப்பட்ட, முனைகள் சற்றுத் தடித்த உருண்டையான குச்சிகள் பல நீளங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் நீளமானவை, 4-5 அங்குல நீளம் கொண்டவை. இம் மாதிரியான குச்சிகள் அலெக்ஸாந்தர் காலத்தில் ரக்ஸிலாவில் (தக்க்ஷசீலம்) உபயோகத்தில் இருந்தன என பீரிஸ் குறிப்பிடுகிறார் (Pieris, P.E. 1919: 61). இவற்றைப் பரிசீலனை செய்த சிற்றம்பலம் இவை பெண்கள், தங்கள் கண்களுக்கு மை தீட்டுவதற்காக உபயோகித்த ‘கோலக்குச்சிகள்’ (Kohl sticks) என அடையாளம் காண்கிறார். இப்படியான ஒரு செப்புக் குச்சியில், நெல்லின் அடையாளம் பதிந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் (Sitrampalam, S.K. 1993: 11-12). இப்படியான கோலக்குச்சிகள் பண்டைய எகிப்தியப் பெண்களிடையே கி.மு. 1500 ஆம் ஆண்டுகளில் பாவனையில் இருந்திருக்கிறது.

அகழ்வாராய்ச்சியாளர் போல் பீரிஸ் தனது கந்தரோடை அகழ்வாராய்சிக்காக ரூபா 150 மட்டுமே தரப்பட்டதாகவும், அப்பணம் முடிந்ததும் தனது அகழ்வுகளை நிறுத்திவிட்டதாகவும் கூறியிருக்கிறார் (Pieris, P.E. 1919: 40). அகழ்வு செய்த இடத்தில்  கண்டுபிடிக்கப்பட்ட வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஆறு அங்குல உயரமான ஒரு பெண் தெய்வத்தின் உருவம், அதன் வலது கரம் ‘அபயஹஸ்த’ முத்திரையையும் (காத்தல் அடையாளம்), இடது கரம் ‘வரதஹஸ்த’ முத்திரையையும் (செல்வம் அளிக்கும் அடையாளம்) காட்டி நின்றது எனக் குறிப்பிட்டிருக்கிறார் (Pieris, P.E. 1919: 60). இத்தெய்வம் லக்க்ஷ்மி என அடையாளம் காணப்படுகிறது. இப்படியான செப்பு, அல்லது  வெண்கலப் பட்டயங்களை அக்கால மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வணங்கி வந்தார்கள்.

அகழ்வுகளில் பலவகையான இரும்புத் துண்டுகளும், இரும்பை உருக்கி வேலை செய்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டன. இவற்றில் மிகப்பழமையானது எது, பழமையில்லாதது எது என அடையாளம் காண முடியவில்லை. மேலும், அங்கே காணப்பட்ட சிவப்பு நிறமான இந்தியத் தங்கத்துண்டுகள் தங்க ஆபரணங்களின் உடைந்த துண்டுகள் என இனங்காணப்பட்டன (Pieris 1919: 62).

கந்தரோடையின் பெருங்கற்பண்பாட்டுக்காலம் கால்நடைகள், பசு, நாய் ஆகிய பிராணிகளை வீட்டுச்சூழலில் பழக்கியெடுத்து, அவற்றை அச்சூழலில் பற்றுக்கொள்ள வைத்த காலப்பகுதியுமாகும். அகழ்வுகளில் காணப்பட்ட பெருவாரியான கால்நடை எலும்புகள், எருதுகள் விவசாய நடவடிக்கைகளுக்காக உபயோகிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகின்றன. நாய்களின் எலும்புகள், அவை பழக்கப்பட்ட வீட்டு மிருகங்களாக வளர்க்கப்பட்டதைக் காட்டுகின்றன. பறவைகளின் எலும்புகள், மீன் முள்ளுகள் அவை உணவாக உட்கொள்ளப்பட்டதைக் காட்டிநிற்கின்றன. ஆட்டெலும்புகளில் காணப்படும் கூர்மையான வெட்டுகள், அவை உணவாக உட்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் ஆகும். அருகிலுள்ள ஆனைக்கோட்டைக் கிராமத்தில் காணப்பட்ட பெருங்கற் பண்பாட்டுப் புதையல்கள், பெருவாரியான கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகளின் இருப்பு, இரும்பின் பாவனை, வயல்கள், குளங்கள், விவசாய நடவடிக்கைகள் என்பன அனைத்தும் ஒரு பெருங்கற் பண்பாட்டின் புராதன நடைமுறைகளை எடுத்துக்காட்டுகின்றன (சிற்றம்பலம், சி.க. 1993: 10-13).

தொடரும். 

The post கந்தரோடைத் தொல்லியல் (Archaeology of Kantarodai) – பகுதி 1 appeared first on Ezhuna | எழுநா.

போரும் புதிய போக்குகளும்

முதலாம் உலகப் போர்

ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகிய அண்டைப் பிரதேசங்களிலும் நடந்த முதலாம் உலகப்போர் (1914 – 1918) யாழ்ப்பாணத்தை எந்தவிதத்திலும் தொடவில்லை என்று கூறமுடியாது. இப்போர் தென் ஆசியாவில் நடக்காவிட்டாலும் தென் ஆசியர் பிரித்தானியப் பேரரசின் படைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். பிரித்தானியர் ஆண்ட இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 160,000 போராளிகள் பிரான்ஸில் ஜெர்மன் படைகளை எதிர்த்துப் போராட அனுப்பப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. போரில் இவர்களுள் 47,000க்கு மேற்பட்ட போராளிகள் இறந்துவிட்டனர் அல்லது காணாமல்போய்விட்டனர்.

யாழ்ப்பாணத்தவரைப் பொறுத்தமட்டில் இந்த உலகப்போர் எங்கோ ஒரு தூரப் பிரதேசத்தில், ஐரோப்பாவில், நடக்கும் நிகழ்வாக இருந்திருக்கலாம். எனினும், இப்பெருநிகழ்ச்சி யாழ்ப்பாணத்தவரைத் தொடாமல் இருக்கவில்லை. ஒரு சில யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பிரித்தானியப் படையில் சேர்ந்து போராடினர் என்பது குறிப்பிடப்படவேண்டியதாகும். 

இங்கிலாந்தில் பொறியியல் படிக்கச் சென்ற A. பரமநாதன் என்ற ஓர் இளைஞர் போர் மூண்டபோது பிரித்தானியர் படையில் சேர்ந்து, 1915 இல் எகிப்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர், அங்கிருந்து அவர் துருக்கியில் போராடிக்கொண்டிருந்த பிரித்தானியர் படையுடன் சேர்ந்து துருக்கியர் படையைத் தாக்குவதற்கு அனுப்பப்பட்டார். துருக்கியின் எல்லைப்புறத்தில் இவர்களுடைய போர்க்களம் இருந்தது. இப்பகுதியை ‘Dardanelles’ என்று பொதுப்பட அழைத்தனர். இங்கு ஆயிரக்கணக்கான பிரித்தானிய, பிரெஞ்சு, இந்தியப் போராளிகள் துருக்கியை வீழ்த்தப் போராடினர். ‘Gallipoli’ என்ற ஒரு பாகத்தில் ஆஸ்திரேலிய, நியூஸீலந்துப் போராளிகள் (ANZAC படை) துருக்கியருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினர். இங்கு பல்லாயிரக்கணக்கான ‘ANZAC’ படையினர் இறந்தனர். இவர்களை நினைவுகூர ஆண்டுதோறும் ‘ANZAC’ நினைவுநாள் ஆஸ்திரேலியாவிலும் நியூஸீலந்திலும் இடம்பெறும்.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமரிலேதான் யாழ்ப்பாணத்துப் பரமநாதன் பங்குகொண்டு, இறுதியில் தன் போர்புரியும் ஆற்றலை இழந்த (Invalided) காரணத்தால் இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இவர் முதல் உலகப் போரில் பங்குகொண்ட முதலாவது யாழ்ப்பாணத்தவராக அக்காலத்தில் கருதப்பட்டார்.

இன்னொரு யாழ்ப்பாணத்தவர் பேரரசின் படையில் சேர்ந்து, ஐரோப்பாவில் நடைபெற்ற போரில் பங்குபற்றிப் போர்க்களத்தில் உயிர் இழந்தார். இவர் லான்ஸ் கோப்பரல் (Lance Corporal) ஐயாத்துரை என்பவராவர். செல்வராஜா உவிண்டம் (Windham) என்ற இன்னொருவர் ‘Middlesex Regiment’ இல் சேர்ந்து போராடினார். வேறும் பல யாழ்ப்பாணத்தவர் பிரித்தானியர் படையில் சேர்ந்திருக்கலாம்.

வேறொரு வகையிலும் யாழ்ப்பாணத்தவருக்கும் முதல் உலகப் போருக்கும் தொடர்பு இருந்தமை கவனிக்கத்தக்கது. பிரித்தானியப் பேரரசுக்கு ஆபத்து நேர்ந்த வேளையில் தாம் ஏதாவது ஒரு வகையில் உதவவேண்டும் எனச் சில யாழ்ப்பாணத்தவர் எண்ணினர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. மலாயாவில் வேலைசெய்துகொண்டு இருந்தவர்கள்.

விமானங்கள் முதல் தடவையாக போரில் பயன்பாட்டுக்கு வந்த அக்காலத்தில் பிரித்தானிய விமானப்படைக்கு ஒரு போர் விமானத்தை வாங்கி அன்பளிப்புச் செய்ய இவர்கள் திட்டம் வகுத்து, அதற்கான பணத்தை மலாயாவில் வாழ்ந்த இலங்கையரிடம் இருந்து சேகரித்து, ஒரு விமானத்தை வாங்கினர். அந்த விமானம் ‘JAFFNA’ எனப் பெயரிடப்பட்டு ‘Royal Air Force’ படைக்குக் கொடுக்கப்பட்டது. 

முதல் உலகப் போரின் மறையாத ஓர் எச்சமாகத் தமிழில் ஒரு புதுச்சொல் புகுந்தது. அதுதான் எம்டன். சென்னைத் துறைமுகத்தைத் தாக்கிச் சேதம் உண்டுபண்ணிய ஜெர்மன் போர்க் கப்பலின் பெயர் அது. அக்கப்பல் இந்து சமுத்திரத்தில் செய்த அட்டகாசங்கள் பொதுமக்கள் மனதைக் கவர்ந்தவை. பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களை ஏமாற்றி இலகுவில் கைப்பற்றப்படாது இந்து சமுத்திரத்தில் பல இடங்களில் சேதம் விளைவித்த எம்டன் கப்பலைப் பற்றிக் கேள்வியுற்ற தென்னிந்தியரும் இலங்கையரும் வியப்படைந்தனர். அப்படிப் பலரை ஏமாற்றி, இலகுவில் பிடிபடாமல் ஓடித் திரிபவனை ‘எம்டன்’ என்றனர். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் ‘எம்டன்’ ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டது.

போர்களுக்கு இடைப்பட்ட காலம்

உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்தது. ஆனால் அமைதி நீண்டகாலத்துக்கு நீடிக்கவில்லை. மீண்டும் ஓர் உலகப் போர் 20 ஆண்டுகளின்பின் மூண்டது. இந்த 20 ஆண்டுகளும் நவீன இலங்கையும் இந்தியாவும் உருவாகுவதற்கு வழிவகுத்த பல முக்கியமான நிகழ்வுகள் இடம்பெற்ற காலமாகும். சுதந்திரகாலத் தென் ஆசியாவின் வடிவத்தை நிர்ணயிப்பதற்கு இவை பல வகைகளில் உதவின.

போக்குவரத்து வசதிகளைப் பொறுத்து மெதுவாக மாற்றங்கள் ஏற்பட்டன. மோட்டார் வண்டியின் பயன்பாடு கொழும்பில் உள்ளதைப்போல் இல்லாவிட்டாலும், அது அனைவரும் அறிந்த, அதிசயிக்கத்தக்க ஒன்றாகக் கருதப்படாத சாதாரண வாகனமாக மாறிவிட்டது என்று கூறலாம். அரசாங்க அதிபர் போன்ற மேல்மட்ட அதிகாரிகள் மட்டுமல்லாது சில தனியார் நிறுவனங்களும் மோட்டார் வண்டியை வைத்திருந்திருப்பர். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணக் கல்லூரிக்கு 1914 இல் அமெரிக்காவில் இருந்து வந்த மிஷனரி ஒருவர், சாள்ஸ் மில்லர் (Charles Miller) என்பவர், அமெரிக்காவில் இருந்து ஒரு மோட்டார் வண்டியைக் கல்லூரிக்குக் கொண்டுவந்திருந்தார்.

போக்குவரத்தைப் பொறுத்து பொதுமக்களைத் தொட்ட முன்னேற்றம் மோட்டார் பஸ் (பேருந்து) வண்டியின் வருகை எனலாம். கொழும்புக்கு முதலாவது மோட்டார் பஸ் (Motor omnibus) 1907 இல் வந்திருந்தாலும், 1920 வரை பஸ் போக்குவரத்து வளர்ச்சியடையவில்லை எனலாம். உலகின் மிகப்பெரிய நகராக அக்காலத்தில் விளங்கிய லண்டனில்கூட 1919 இலேதான் குதிரைகள் இழுத்த பஸ் வண்டிகள் இல்லாது போய் முற்றிலும் மோட்டார் பஸ் சேவைகள் இடம்பெற்றன.

இலங்கையில் 1930 அளவில் 2,960 லொறி (Lorries) வண்டிகளும், 2,603 மோட்டார் பஸ் வண்டிகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. நாட்டின் பல பாகங்களிலும் இவை பயன்பாட்டுக்கு வந்திருந்தன என்பதை இதில் இருந்து அறியலாம். யாழ்ப்பாணத்திலும் இந்த வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும், மாட்டுவண்டிகளே பெரும் அளவில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை பயன்பட்டன.

போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பொதுமக்கள் வாழ்வில் செல்வாக்குப் பெறும் வலிமை உடைய இரு தொழில்நுட்ப ஆக்கங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தன. ஒன்று பேசும்படம்; மற்றது வானொலி. மௌனப்படமாக மக்களுக்கு அறிமுகமாகிய சினிமா, 1930களில் யாழ்ப்பாணத்தவர் பார்த்தும், கேட்டும் மகிழும் திரைப்படமாகியது. தமிழில் வெளியாகிய முதல் பேசும்படமாகிய ‘காளிதாஸ்’ யாழ்ப்பாணத்திலும் காட்டப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுமக்களுக்கு அவர்கள் வீட்டுக்குள்ளேயே இசையையும் செய்திகளையும் எடுத்துச் செல்லக்கூடிய தொழில்நுட்ப ஆக்கமாக வானொலி 1920களில் வந்தது. கொழும்பு வானொலி (Colombo Radio 1925), திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் (1939) ஆகியவற்றின் நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்திலும் கேட்கக்கூடியவையாக இருந்தபோதிலும், வானொலிப் பெட்டிகளைப் பொதுமக்கள் வாங்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இதனால் போருக்குப் பிற்பட்ட காலம்வரை யாழ்ப்பாணத்தில் வானொலி குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தவில்லை எனலாம்.

போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் போக்குவரத்து வசதிகள் முன்னேற்றம் அடைந்தமை யாழ்ப்பாணத்துக்கும் நாட்டின் தென்பாகத்துக்கும் இடையில் பல வகையான உறவுகளும் தொடர்புகளும் ஏற்படுவதற்கு உதவியது எனலாம். எடுத்துக்காட்டாக, கல்வித்துறையில், யாழ்ப்பாணத்துப் பட்டதாரிகள் தெற்கில் இருந்த சில பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாகச் செல்வதையும், தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருவதையும் காணலாம்.

தெற்கில் இருந்து வந்த சிங்கள மாணவர்கள் பற்றிய தகவல்களை விரிவாக அறிவது கடினம். எனினும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் வேறு செயற்பாடுகளிலும் சிறப்பிடம் பெற்ற சில சிங்கள மாணவர்களுடைய பெயர்களை யாழ்ப்பாணப் பாடசாலைகளின் சஞ்சிகைகளில் காணலாம். எடுத்துக்காட்டாக, 1930களில் இந்துக் கல்லூரியில் அமரஸிங்ஹ மற்றும் தர்மபால, St. Henry’s கல்லூரியில் விக்ரமஸிங்ஹ, St. John’s கல்லூரியில் கருணாரத்ன, St. Patrick’s கல்லூரியில் பீரிஸ் மற்றும் ஸமரவிக்ரம, யாழ்ப்பாணக் கல்லூரியில் சி. ஜயஸிங்ஹ ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணக் கல்லூரியில் 1950கள் வரை சிங்கள மாணவர்கள் இருந்தனர் (இக்கல்லூரியில் நான் படித்த காலத்தில் என் வகுப்பில் குருநாகலில் இருந்து பர்னாந்து என்பவரும், வாத்துவவில் இருந்து ஆர்.டி. பெரேரா என்பவரும், மேல் வகுப்பில் மாத்தளையில் இருந்து ஸரத் ஹேவாபதிரண என்பவரும் இருந்தனர்.) அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் படித்த ஒரு சிங்கள மாணவர் பின்னர் அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அமைச்சர் மைத்திரீபால சேனாநாயக்க ஆவார். இவர் St. John’s கல்லூரியில் படித்தவர்; தமிழை நன்கு பேசியவர். 

இக்காலகட்டத்தில் பாடசாலைகளுக்கான அனைத்து இலங்கை நிகழ்ச்சிகள் சில தொடக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்து மாணவர்கள் தெற்கு நோக்கிச் செல்வதற்கும் சிங்கள மாணவர்களுடன் உறவாடுவதற்கும் வழி திறக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, 1937 இல் கொழும்பில் ‘All Ceylon Sports Meet’ நடைபெற்றது. அதில் யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த ‘V.G. George’ என்ற மாணவன் உயரம் தாண்டுதலில் (High jump) சாதனை ஈட்டியது மட்டுமல்லாது, இங்கிலாந்துப் பாடசாலைகளின் சாதனையையும் (English Public Schools record in high jump) முறியடித்தான்.

சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு இக்காலகட்டத்தில் சாரணர் இயக்கமும் (Scouts Movement) தொடக்கப்பட்டது. இதனால் நாட்டின் தென்பாகத்தில் சாரணர் ஒன்றுகூடல் (Scouts Jamboree) நடைபெறும்போது, யாழ்ப்பாணத்து மாணவர் சிலர் சிங்களச் சாரணர்களுடன் சில நாட்கள் வாழ்ந்து கலந்துரையாட வாய்ப்பு ஏற்பட்டது. சிலவேளைகளில் இந்தியாவுக்கும் ஒன்றுகூடலுக்காகச் செல்ல முடிந்தது. எடுத்துக்காட்டாக, 1937 இல் யாழ்ப்பாணத்துச் சாரணர் கொழும்புக்குப் போய், அங்கு பிறமாணவர்களுடன் கூடி, அங்கிருந்து இந்தியாவுக்கு ஒரு சாரணர் ஒன்றுகூடலுக்குச் சென்றனர். இலங்கையில் இருந்து 61 பேர் சென்றிருந்தனர்.

வடக்கு – தெற்குப் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளும் இக்காலத்தில் தொடங்கின. யாழ்ப்பாணக் கல்லூரியின் கால்பந்து அணி 1935 இல் தர்மராஜக் கல்லூரி அணியுடன் போட்டியிடக் கண்டிக்குச் சென்றது.

யாழ்ப்பாணத்துப் பாடசாலை மாணவர்கள் தென்பாகத்துக்குச் சுற்றுலாபோகும் வழக்கமும் இக்காலகட்டத்தில் தொடங்கியது. யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் 1940 இல் கண்டிக்குச் சுற்றுலா சென்றதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்குத் தெற்கில் இருந்து பல கல்விமான்கள் பிரதம விருந்தினராகவோ சிறப்புரை ஆற்றுவோராகவோ இக்காலகட்டத்தில் வந்து செல்லும் வழக்கமும் தொடங்கியது. பிரபல பௌத்த நிறுவனமாகிய கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் அதிபராக இருந்து, பின்னர் கண்டி தர்மராஜக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிகொண்டிருந்த பி.டி.எஸ். குலரத்ன 1935 இல் யாழ்ப்பாணக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். வரலாற்று விரிவுரையாளரும் நூலாசிரியருமாக விளங்கிய கலாநிதி ஜி.சி. மெண்டிஸ் 1940 இல் யாழ்ப்பாணக் கல்லூரிக்குச் சென்று சிறப்புரைகளை வழங்கினார். இவரைப்போல கொழும்பில் இருந்த பல்கலைக்கழகக் கல்லூரியின் அதிபர் (பிற்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர்) ‘Ivor Jennings’ யாழ்ப்பாணக் கல்லூரிக்குச் சிறப்புரை ஆற்றச் சென்றிருந்தார்.

மேலும் ஒரு போக்கும் கவனிக்கத்தக்கது. யாழப்பாணத்தவர் பலர் தெற்கில் இருந்த பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாகச் செல்லும் வழக்கம் இக்காலகட்டத்தில் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, 1940 இல் மாத்தறை ‘St. Thomas’ பாடசாலைக்கு ஜே.ஏ. நவரத்தினம் என்பவரும், நுவர எலிய ‘Holy Trinity’ பாடசாலைக்கு ஜே.ரீ. செல்லையா மற்றும் லிலி செல்லையா என்பவர்களும், மட்டக்களப்பு ‘Central College’ இற்கு எஸ்.ரீ. சீவரத்தினம் என்பவரும் ஆசிரியர்களாகச் சென்றிருந்தனர்.

இவ்வாறாகக் கல்வித்துறையில் யாழ்ப்பாணத்துக்கும் தெற்குக்கும் இடையில் உறவுகள் வளரத் தொடங்கிய காலமாகப் போர்களுக்கு இடைப்பட்டகாலம் காணப்பட்டது. இது வெளித்தோற்றம். இதன்கீழ் அரசியலைப் பொறுத்துப் பல குமுறல்கள் எழத் தொடங்கியிருந்தன. இவை பின்னர் எடுத்துக்கொள்ளப்படும்.

மலாயாத் தொடர்பின் துண்டிப்பு

1942 பெப்ரவரி 15; பிரித்தானியப் பேரரசின் தென்கிழக்காசியப் படைபல மையமான சிங்கப்பூர் ஜப்பானியரால் கைப்பற்றப்பட்டது. பேரரசின் தென்கிழக்காசியப் பாகம் பிரித்தானியர் கையில் இருந்து வழுகி ஜப்பானியர் மடியில் வீழ்ந்தது. வியட்நாமில் பிரெஞ்சு ஆதிக்கத்தை 1940 இல் அடக்கிவிட்டு, மலாயாமீது கவனம் செலுத்திய ஜப்பானியர், சிங்கப்பூரைக் கைப்பற்றியதுடன் நில்லாது, ஒல்லாந்தர் ஆண்ட கிழக்கு இந்தியத் தீவுகளையும் (இன்றைய இந்தோனேசியா) 1942 இல் இலகுவில் தம்வசப்படுத்தினர். இதே ஆண்டில் பிலிப்பைன் தீவுகளில் அமெரிக்கர் தங்கள் இறைமையை இழந்து பின்வாங்க, அங்கும் ஜப்பானியர் ஆதிக்கம் நிறுவப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் மேலைத்தேச வல்லரசுகளின் ஆதிக்கம் திடீரென மறைந்தது.

இந்த நிகழ்வுகள் நடந்த 1942, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தும் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்ட ஆண்டாகும். இரண்டாம் உலகப் போர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருந்தாலும், 1942 இல் இருந்துதான் யாழ்ப்பாணம் அதன் விளைவுகளை உணரத் தொடங்கியது எனலாம்.

இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பர் 1 இல் ஜெர்மனியின் படைகள் போலந்தைத் தாக்கியதுடன் தொடங்கியது. அப்பொழுது ஆசியாவில் ஜப்பானியர், சீனக் குடியரசுக்கு எதிரான கடும் போர் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தனர். அதன் படர்ச்சியாக, 1941 இன் இறுதியில் ஜப்பானியர் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக ஆசியாவில் போர் தொடுக்க, இரண்டாம் உலகப் போர் ஆசியாவிலும் மூண்டது. 

சிங்கப்பூர் கைப்பற்றப்பட்டதும், அடுத்ததாக இந்தியாவை ஜப்பான் தாக்கும் எனப் பிரித்தானியர் எதிர்பார்த்தனர். அவர்களுடைய கடற்படையைச் சேர்ந்த கப்பல்களும் (Royal Navy) விமானப் படையைச் சேர்ந்த சில போர்விமானங்களும் (Royal Air Force) கொழும்பிலும் திருகோணமலையிலும் நின்றன. ஜப்பான் 1942 ஏப்ரல் தொடக்கத்தில் கொழும்பைத் தாக்குவதற்குத் திட்டமிட்டு இருந்ததை உளவறிந்ததும் கொழும்புத் துறைமுகத்தில் நின்ற போர்க்கப்பல்கள் வெளியே கொண்டுசெல்லப்பட்டன.

ஏப்ரல் 5 (உயிர்த்த ஞாயிறு) காலை 7:30 அளவில் கொழும்புத் துறைமுகத்திலும் ரத்மலானை விமானத்தளத்திலும் ஜப்பானியர் விமானங்கள் குண்டு வீசத் தொடங்கியதும் சில மணிநேரம் முதல் தடவையாகக் குண்டுவீச்சும் விமானப்போரும் இலங்கையில் நடைபெற்றது. இப்படியான போரை அறியாத கொழும்பு மக்கள் வெளி ஊர்களுக்கு ஓடத் தொடங்கினர். கடைகளும் உணவுச்சாலைகளும் மூடப்பட்டன; அவற்றின் சொந்தக்காரர் பலர் கொழும்பைவிட்டு ஓடிவிட்டனர். இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்போர் நடமாடினர். 

நகரவாழ்க்கை இவ்வாறு சீர்குலைக்கப்பட்டதும், மீண்டும் ஓரளவு உறுதிநிலையைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்தது. அத்தியாவசியப் பொருட்களை விற்பதற்கும் உணவைப் பெறுவதற்கும் சில கடைகளையும் உணவகங்களையும் பலாத்காரமாகத் திறந்து நடத்துவதற்குச் சிலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அப்படி அதிகாரம் பெற்று அரசாங்கத்துக்கு உதவியோருள் ஒருவர் யாழ்ப்பாணத்தவர். இவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த தில்லைநாதன் உருத்திரா என்பவராவர்; வெள்ளவத்தையில் வசித்தவர். உடற்பயிற்சியில் பெரிதும் ஈடுபட்ட இவர் ஒரு பயில்வான் போன்று கருதப்பட்டவர். மூடப்பட்டிருந்த ஆனந்தபவன் என்ற பிரசித்தி பெற்ற உணவுச்சாலையை மீண்டும் இவர் திறந்து நடத்தியும், வேறுவகைகளில் உதவியும் கொழும்பில் புகழ்பெற்றார். இப்புகழின் விளைவாகப் பின்னர், 1953 இல், கொழும்பின் ‘மேயராக’ நகரத்தேர்தலில் வெற்றிபெற்றார். அந்த ஆண்டு இலங்கைக்கு வந்த எலிஸபெத் மகாராணியை கொழும்பின் முதல்வராக வரவேற்கும் வாய்ப்பையும் பெற்றார். வெள்ளவத்தையில் உள்ள உருத்திரா மாவத்தை என்ற தெரு இவர் ஞாபகார்த்தமாக விளங்குகிறது.

மலாயாவும் சிங்கப்பூரும் ஜப்பானியர் ஆட்சிக்கு உட்பட்டதும் அந்த இடங்கள் யாழ்ப்பாணத்துடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது. என் தாயார், தன் சகோதரர் ஒருவருக்கு எழுதிய கடைசிக் கடிதம் என் கண்முன் இன்றும் நிற்கிறது. அது எழுதப்பட்ட காலம் 1941 இன் இறுதி என்று நினைக்கின்றேன். எனக்கு நாலு வயது. அம்மா ஒரு சாதாரணக் கடதாசியில் பென்சிலால் எழுதிய ஒரு கடிதம். தான் எழுதுவதை எனக்குச் சொன்னார். அம்மாவுடைய வழமையான கடிதத் தொடக்கம்: ‘அன்பும் பட்சமும் மறவாத —-’; நான் இன்னும் மறக்காத சொற்கள். இதன்பின் கடிதங்கள் மலாயாவுக்கு அனுப்பப்படவுமில்லை, அங்கிருந்து கிடைக்கவும் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்தவர்க்கும் மலாயா/ சிங்கப்பூரில் வாழ்ந்த அவர்கள் உறவினர்களுக்கும் இடையில் இருந்த தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது.

The post போரும் புதிய போக்குகளும் appeared first on Ezhuna | எழுநா.

ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும்:அறிமுகம்                           

முன்னுரை

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் முதல் இன்றுவரை பதிப்பாசிரியர் பலர் பல்வேறு வகையான பதிப்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்பனவான பல நூல்கள் வெளிவந்தமைக்கு பதிப்பாசிரியர்களின் பதிப்புப்பணியே காரணம் என்பதை எள்ளளவும் மறுக்க இயலாது. இவ்வாறான பதிப்பாசிரியர்களின் உழைப்பால்தான் பல்வேறு வகையான நூல்களும் இலக்கியங்களும் இன்றைக்கும் நம் கைகளில் தவழுகின்றன. தொடக்ககாலப் பதிப்பாசிரியர்கள் இப்பணியினை மேற்கொள்ளவில்லையெனில் சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம், கம்பராமாயணம், சிற்றிலக்கியங்கள் எனப் பலவற்றின் சிறப்பும் அதனைத் தோற்றுவித்த எழுத்தாளர்களின் பெருமையும் அவற்றிற்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் புலமையும் நமக்குத் தெரியாமலே மறைந்திருக்க வாய்ப்புகள் ஏராளம். பதிப்பாசிரியர்களின் ஆளுமைத்திறனின் மூலமே எத்தகைய சிறப்பு வாய்ந்த நூலாக இருப்பினும் அதன் சிறப்புகளை உணர்ந்துகொள்ள நம்மால் முடிகின்றது. ஒரு மொழியின் சிறப்பினையும் அதன் தனித்துவமான பண்புகளையும் புரிந்துகொள்ள இலக்கியங்கள் மிகவும் துணைபுரிகின்றன. அப்படிப்பட்ட இலக்கியங்களை உலகிற்கு வெளிக்காட்டியதில் நூலாசிரியர், உரையாசிரியரின் பங்கு எத்தகைய சிறப்பு வாய்ந்ததோ அதற்குத் துளியும் குறையாமல் சிறப்பு வாய்ந்தது பதிப்பாசிரியர்களின் பதிப்புப்பணி ஆகும்.

ஈழமும் தமிழியலும்

தொடக்க காலகட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட படைப்பிலக்கியங்கள் ஈழத்தில் தோன்றின. அவற்றில் தனிச்செய்யுள்களை இயற்றுவதில் புகழ்பெற்றவர்களாக மட்டுநகர் பூபாலபிள்ளை, க. கணபதிப்பிள்ளை, நவநீதகிருஷ்ண பாரதியார் முதலானோர் விளங்கினர். காவியப் படைப்பாளர்களாக அரசகேசரி, வரத பண்டிதர்,  சதாசிவ ஐயர், முத்துக்குமாரர் முதலானோரும்; புராண ஆசிரியர்களாக கணேசபண்டிதர், சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார், சபாபதி நாவலர் முதலானோரும் குறிப்பிடத்தக்கவர்கள். சிற்றிலக்கியங்களாக மடல், உலா, குறவஞ்சி, பள்ளு, கலம்பகம் ஆகியவற்றினை இயற்றியோரும் ஈழத்தில் பலர். வடமொழி இலக்கியங்களை செய்யுள்வடிவில் தமிழில் மொழிபெயர்த்தோராக அ. குமாரசாமிப்புலவர் உள்ளிட்ட பலர் விளங்குகின்றனர். 

வசன நூலாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக ஆறுமுக நாவலர், வ. கணபதிப்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை, ந.சி. கந்தையாபிள்ளை, அ. குமாரசாமிப்புலவர், சரவண முத்துப்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை முதலான பலரையும் குறிப்பிடலாம். இசை நூலாசிரியர்களாக பரமானந்தப் புலவர், சுவாமி விபுலானந்தர், பிரான்சிஸ்குபிள்ளை, ஆவரங்கால் நமச்சிவாயப்புலவர், விநாயகமூர்த்திச் செட்டியார், பண்டிதர் சச்சிதானந்தர் முதலானோர் விளங்குகின்றனர்.

நாடகத்துறையில் கணபதி ஐயர், இணுவைச் சின்னத்தம்பி, முத்துக்குமாரகவிராயர், கந்தப்பிள்ளை, இன்னாசித்தம்பி, மயில்வாகனப் புலவர், பொன்னையாப் புலவர், சூசைப்பிள்ளை முதலான ஐம்பதிற்கும் மேற்பட்டோரின் எழுத்துகளைக் குறிப்பிடலாம். சோதிடத்தில் புலமைபெற்றவர்களாக போசராச பண்டிதர், சோமன், இராமலிங்கையர், சின்னத்தம்பி, வி. சபாபதி ஐயர் ஆகியோரையும்; திறன்மிக்க மருத்துவ எழுத்தாளர்களாக செகராசசேகரன், பரராசசேகரன், வரதபண்டிதர், நாகேசையர், சுப்பிரமணியம் முதலானோரையும் கூறலாம்.

தருக்கவியலாளர்களாக சிதம்பரம்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், சங்கர பண்டிதர், முருகேச பண்டிதர் போன்றோரைக் குறிப்பிடலாம். கணித நூல்களை இயற்றியவர்களாக காரிவையா, சுவாம்பிள்ளைப்புலவர், கறோல் விசுவநாதபிள்ளை, ஞானச்சகோதரர் பிலிப்பு S.S.J, இளையதம்பி, சின்னத்தம்பி போன்றோரையும்; மோற்றிமர் குலசேகரரை கப்பல் சாத்திர நூலாசிரியராகவும் குறிப்பிடலாம். நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரை மொழி நூலாசிரியராகவும், புலவர் வரலாற்று நூல்களை இயற்றியவர்களாக சைமன் காசிச்செட்டி, அ. சதாசிவம்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, அ. குமாரசாமிப்புலவர், சி. கணேசையர், இரத்தினேசுவர ஐயர், அ. சிவகுருநாதன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.

இலக்கண நூலாசிரியர்களாக கூழங்கைத் தம்பிரான், சவுந்தரநாயகம்பிள்ளை, அப்பாபிள்ளைப் போதகர், வ. குமாரசாமிப்புலவர், ச. ஜகநாத ஐயர், த. கைலாசபிள்ளை, நவநீத கிருஷ்ண பாரதியார், பொன் இராமநாதன் முதலானோரைக் குறிப்பிடலாம். சமயம்சார்ந்த கண்டன நூலாசிரியர்களாக ஆறுமுக நாவலர், விசுவநாதபிள்ளை, முத்துக்குமார கவிராயர், சி.வை. தாமோதரம்பிள்ளை, அ. குமாரசுவாமிப்புலவர், சங்கர பண்டிதர், சிலம்புநாதபிள்ளை, வல்வை வயித்தியலிங்கப்பிள்ளை, அருளப்ப முதலியார், காசிவாசி செந்தில்நாதையர் முதலானோரைக் குறிப்பிடலாம்.

பலர் ஈழத்தினைப் பற்றியும் அந்நாட்டின் வரலாற்றினை அறியும் பொருட்டும் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளனர். செகராசசேகரன், வையா ஐயர், மயில்வாகனப் புலவர், சிவானந்தன், க. சுந்தரம், கதிர்காமர், முத்துக்கிருஷ்ணர், இராசநாயக முதலியார், கணபதிப்பிள்ளை, வ. சின்னத்தம்பிப் புலவர், வி. கனகசபைப்பிள்ளை, சோமன், முத்துராசகவிராயர் முதலானோர் இயற்றிய நூல்களை ஈழத்தின் தொடக்ககால வரலாற்று நூல்களாகப் பார்க்க முடியும்.

இவற்றோடு அகராதிகள், நிகண்டுகள், கலைக்களஞ்சியங்கள் ஆகியவற்றை உருவாக்கிய ஆசிரியர்களாக பண்டிதர் சந்திரசேகரம், கு. கதிரைவேற்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை, ச. சுப்பிரமணிய சாஸ்திரி, வி. கனகசபைப்பிள்ளை, சதாசிவம்பிள்ளை முதலானோரைச் சுட்டலாம்.

ஈழத்துப் பழைய உரையாசிரியர்கள்

ஈழத்தினைச் சேர்ந்த உரையாசிரியர்களாக கூழங்கைத்தம்பிரான், அம்பிகைபாகர், அருளம்பலம், ஆறுமுக நாவலர், ஆறுமுகத் தம்பிரான், ஏகாம்பரப்புலவர், சி. கணேசையர், நா. கதிரவேற்பிள்ளை, ச. கந்தையாபிள்ளை, அ. குமாரசுவாமிப்புலவர், சங்கர பண்டிதர், சிவசிதம்பர ஐயர், சிவப்பிரகாச பண்டிதர், சுப்பிரமணிய சாஸ்திரி, ஞானப்பிரகாச சுவாமி, ஞானப்பிரகாச தேசிகர், நவநீத கிருஷ்ண பாரதியார், பொன்னம்பலப்பிள்ளை, ச. பூபாலபிள்ளை, ம.க. வேற்பிள்ளை முதலானோரைக் கருதலாம்.

பழம் பதிப்பாசிரியர்கள்

தமிழ்ப் பதிப்புத்துறையில் ஈடுபட்டு மக்கி மண்ணோடு மண்ணாக மாறியிருக்கும் எத்தனையோ நூல்களை ஓலைச்சுவடிகளிலிருந்து காத்து நூலாக்கம் செய்த பழம் பதிப்பாசிரியர்களின் பணி என்றென்றைக்கும் நினைக்கத்தக்கது. பதிப்பாசிரியர் பதிப்பித்த அனைத்து நூல்களையும் குறிப்பது புறநிலை ஆகும்; அவர்தம் பதிப்பு நெறிமுறைகளைக் குறிப்பது அகநிலை ஆகும்.[1] இவ்வாய்வானது பதிப்பாசிரியரின் பதிப்புப் பணிகளை அகநிலையிலும் புறநிலையிலும் ஆராய்வதாக அமைகின்றது. பதிப்பாசிரியர்களைப் பற்றியும் அவர்தம் பதிப்பு நெறிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்வதன் மூலம் ஒரு சிறந்த நூற்பதிப்பின் மூலபாடத் திறனாய்வினையும் பதிப்பு வரலாற்றினையும் அறிந்து கொள்ள முடியும். பதிப்பு நெறிமுறைகள் என்பது மரபு வழிப்பட்ட வளர்ச்சியினை உடையதாகும். அந்த மரபு வழிப்பட்ட கோட்பாட்டு வளர்ச்சி என்பது, மூலத்தில் உள்ளதை மாறுதல் இன்றி ஆய்வு நிலையில் தெளிவுற வெளிப்படுத்தக்கூடிய மரபு வழிபட்ட பதிப்பு அறக்கோட்பாட்டினை பதிப்பாசிரியர்கள் பின்பற்றிய வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதாகும். உரையாசிரியர்கள் என்று கூறினாலே இறையானர் களவியல் உரை தொடங்கி இளம்பூரணார் உட்பட்ட தொல்காப்பிய பழைய உரையாசிரியர்களும், குறளுக்கு உரையெழுதிய பதின்மரும், சிலம்பு உரைகூறிய அரும்பத உரையாசியரும், அடியார்க்கு நல்லாரும் நினைவுக்கு எட்டுவதினைப் போல; பதிப்பாசிரியர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு எட்டுபவர்களாக உ.வே. சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சி. கணேசையர் முதலானோர் காணப்படுகின்றனர். பதிப்பாசிரியர்களை அவர்கள் பிறந்த இடத்தின் அடிப்படையில் வகைப்படுத்திப் பார்க்கும்போது தமிழுலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பதிப்பாசிரியர்கள் தோன்றியுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இத்தகைய வகைப்பாட்டினைப் பற்றியே ‘சுவடிப்பதிப்பாசிரியர்கள்’ என்ற நூலில் சி. இலட்சுமணன் வகைப்படுத்தியும் காட்டியுள்ளார்.

ஈழத்துப் பதிப்பாசிரியர்கள்

தமிழரின் மற்றொரு தாய்வீடான ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பலர் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பதிப்புத்துறையின் வாயிலாக பல்வேறு வகையில் தொண்டாற்றியுள்ளனர். அவ்வகையில் ஏறத்தாழ முப்பதிற்கும் மேற்பட்ட பதிப்பாசிரியர்களை ஈழத்தின் பழம்பதிப்பாசிரியர்களாக அடையாளம் காண முடியும். ஈழத்துப் பதிப்பாசிரியர்களின் பதிப்புப் பணிகளை பொதுவாக இலக்கிய, இலக்கணப் பதிப்புப் பணிகள் என்று சுருக்கமாக கூறிவிட இயலாது. இலக்கியம் என்பதை இசை, சோதிடம், தருக்கம், நாடகம் முதலான பல்வேறுபட்ட துறைகளை அடக்கியாளும் ஒரு சொல்லாகக் கருத முடியும். பல துறை சார்ந்த நூல்களையும் பல்வேறு வகைப்பட்ட பதிப்பு நெறிமுறைகளையும் கையாண்டு பதிப்பிக்க வேண்டியது இன்றியமையாதது. ஒரே வகைப்பாட்டினையோ அல்லது ஒரே மாதிரியான அளவுகோலையோ கொண்டு அனைத்து வகையான நூல்களையும் பதிப்பிப்பது என்பது கானல் நீரில் நீந்துவது போன்று யார்க்கும் இயலாத ஒன்றாகும். அந்தவகையில் ஈழத்துப் பதிப்புப்பணி என்பது பல்துறை ஆற்றல்மிக்க அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட  பணி ஆகும். சுவடிகளுக்குள் காணப்பட்ட முத்தமிழைப் போற்றத்தக்கதாய் பதிப்பாக்கம் செய்தவர்களுள் ஈழத்துப் பதிப்பாசிரியர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் ஆவர். படைப்பு, பதிப்பு, ஆய்வு என்னும் முப்பெரும் நிலைகளிலும் பட்டறிவும் மிகுந்த தேர்ச்சியும் பயிற்சியும் உடையவர்கள் ஈழத்துப் பதிப்பாசிரியர்கள். கோப்பாய் அம்பலவாண பண்டிதர், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் – மானிப்பாய் அருணாச்சல சதாசிவம்பிள்ளை, ஆறுமுக நாவலர், கு. கதிரைவேற்பிள்ளை, புலோலியூர் நா. கதிரைவேற்பிள்ளை, வடகோவை சபாபதி நாவலர், சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர், திருகோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை, சி. கணேசையர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சிறுப்பிட்டி சி.வை. தாமோதரம்பிள்ளை, மல்லாகம் வி. கனகசபைப் பிள்ளை, மட்டக்களப்பு விபுலானந்த அடிகள், ச. பவானந்தம் பிள்ளை முதலானோரை ஈழத்துப் பதிப்பாசிரியர்களாகக் குறிப்பிடலாம். ஈழத்துப் பதிப்பாசிரியர்களைத் தவிர்த்து தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதுதல் என்பது யார்க்கும் இயலாத ஒன்றாகும். ஏனெனில், இவர்களது தமிழ்ப்பணி என்பது பதிப்புப்பணியும் சமயப்பணியும் இணைந்தது ஆகும்.

சி.வை. தாமோதரம்பிள்ளை

சி.வை. தாமோதரம்பிள்ளை தம்முடைய வீரசோழியப் பதிப்புரையில் தமிழ்மொழி குறித்தும், தமிழுக்கும் வடமொழிக்குமான தொடர்புகள் குறித்தும்; தமிழ்மொழிக்கு ஆதியிலக்கணம் செய்தவர் மட்டுமே அகத்தியர், தமிழ் மொழியை உருவாக்கியவர் அல்ல என்பதையும்; பல்வேறு இலக்கியங்களின் மேற்கோள் பாடல்வரிகளை சான்றாதாரமாக்கி விளக்கிக்காட்டுகின்றார். அத்தோடு அன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் காணப்பட்ட தமிழர்கள் மீதான தொன்மங்களை வெளிப்படையாக மறுத்தும் வடமொழியில் திராவிடம் என்றச் சொல்லின் பொருள், கோடி மண்டலமே தவிர தமிழ் என்பது அன்று என்பதையும் விளக்கி தமது பதிப்புரையினை ஐம்பது பக்கத்திற்கும் மேற்பட்ட ஆய்வுரையாக அமைத்துச் சென்றுள்ளார். தமிழ்மொழியின் காலத்தை இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் சங்ககாலம், சங்கம் மருவிய காலம், காப்பிய காலம், பக்தியியக்க காலம், சிற்றிலக்கிய காலம் போன்ற இலக்கிய வகைகளால் பிரித்தும் மூவேந்தர் காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம் என ஆட்சியாளர்களின் பெயர்களால் வகைப்படுத்தியுமே உள்ளனர். ஆனால் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் தமிழ்மொழியின் காலத்தினை அபோத காலம், அஷர காலம், இலக்கணகாலம், சமுதாயக்காலம், சமண காலம் [2] எனப் பாகுபடுத்தி விளக்கியிருப்பது பதிப்பாசிரியர்கள் மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர்கள் என்பதை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. தனது பதிப்பிற்கு உதவிய தமிழ் அறிஞர்களோடு சமஸ்கிருத மொழி வல்லாளர்களின் பெயர்களையும் குறிப்பிடுவதை அவரது பதிப்பு அறமாகவே கருத இடமுள்ளது.

உ.வே. சாமிநாதையர்

உ.வே. சாமிநாதையர் அவர்களின் முதல் பதிப்புகளைவிட அவருடைய அடுத்தடுத்த பதிப்புகளில் அவர் மேற்கொண்ட பதிப்பு வளர்ச்சிகளைக் காண முடியும். ‘அவர் தொடக்ககாலத்தில் பதிப்பித்த சீவகசிந்தாமணியைவிட மணிமேகலைப் பதிப்பும், பத்துப்பாட்டைவிட குறுந்தொகையும் பல பாடவேறுபாட்டுப் பதிவுகளைப் பெற்றுள்ளன. பதிப்புப் பணியில் நன்கு திறமை பெற்ற பின்பு, அதனால் அடைந்த மொழித்திறனால் தொடர்ந்து வந்த பதிப்புகள் வளர்ச்சி காட்டின எனவும், அவற்றில் குறிப்புகள் மிகுதியாகி, விளக்கங்கள் அளவிற் பெருகி, பதிப்பு முதிர்ச்சியும், பதிப்புச் செய்திறனும், பதிப்புச் செம்மையும் கொண்டன’ [3] என அன்னிதாமசு அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இடைச்செருகல்கள்

பதிப்பாசிரியர்கள் அக்காலகட்டத்தில் சந்தித்த பல்வேறு இடர்பாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று இடைச்செருகல்கள் மிகுந்திருத்தல் ஆகும். எவையெவை மூலம், எவையெவை இடைச்செருகல் என்பதை எளிதில் அறிந்துகொள்ள இயலாத வகையில் இடைச்செருகல்கள் மிகுந்திருந்தன. பதிப்புத்துறையில் நன்றாகப் புலமையும் ஆழ்ந்த அனுபவமும் பெற்றிருந்தவர்களும் இத்தகைய இடர்பாடுகளைச் சந்திக்க நேர்ந்தது. அந்த வகையில் உ.வே. சாமிநாதையர் தமது சுயசரிதையில் தான்கண்ட இடைச்செருகல் பற்றிக் குறிப்பிடும்போது, பாகவதச்சுவடிகளைப் பதிப்பித்த இராசகோபாலப்பிள்ளை அவர்களிடம், தான் பாகவத்சுவடிகளில் காணாத நூலாசிரியர் பெயர், வணக்கச்செய்யுள் ஆகியவை நூலில் இருப்பதாகவும், அவை எங்கிருந்து கிடைத்தன என தான் வினவியதாகவும், அதற்கு இராசகோபாலப்பிள்ளை “அந்த நூலை நான் பதிப்பிக்கவில்லை” என்றும் “என் பெயரைப்போட்டு யாரோ பதிப்பித்து விட்டார்கள்” என்றும் கூறியதாகக் குறிப்பிடுகின்றார். பிற்காலத்தில் செவ்வைச்சூடுவார் என்பவரே பாகவத்தின் ஆசிரியர் என்பதும், அச்சிட்டவர்களால் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்தான் ‘சிந்தகத்து’ எனும் வணக்கச்செய்யுள் என்பதும் தமக்குத் தெரியவந்ததாகவும் குறிப்பிடுகின்றார் [4]. இவ்வாறு பல்வேறு இடைச்செருகல்களைக் கண்டறிந்தும் அவற்றினை நீக்கி பதிப்பிக்க வேண்டிய கடைமை பதிப்பாசிரியர்களைச் சேர்ந்ததாகும்.

பிற பதிப்பாசிரியர்களின் உதவியை நாடல்

பதிப்பாசிரியர் ஒரு நூலினை பதிப்பிக்க விரும்புகின்றார் எனில் அதற்கு பல்வேறு அறிஞர்களின் உதவியும் தேவையானதாக உள்ளது. தனது பதிப்பில் உள்ள பிழைகளைக் களைய வேண்டுமெனில் அதற்குப் பிற பதிப்பாளர்களின், அறிஞர்களின் புலமையும் இன்றியமையாததாகின்றது. சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் கலித்தொகையினை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பிக்க முற்படும்போது, கலித்தொகை முழுமைக்குமான மெய்ப்புத்திருத்தல் பணிக்காக உ.வே. சாமிநாதையரை நாடியுள்ளார். அப்பொழுது உ.வே.சா அவர்களும் அவருக்கு மெய்ப்புத்திருத்தல் பணியில் உதவியுள்ளார் என்பதையும் சுயசரிதம் வாயிலாக அறியமுடிகின்றது [5].

பதிப்புத்துறையில் புது முயற்சிகள்

ஆரம்ப காலகட்டங்களில் பதிப்புத்துறையில் ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது ஓலைச்சுவடிகளில் என்னென்ன செய்திகள் இருந்தனவோ அவற்றை அப்படியே பதிப்பிக்கும் நடைமுறைகள் வழக்கத்தில் இருந்தன. குறித்த நடைமுறைகளை மாற்றி முகவுரை எழுதும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர் உ.வே.சாமிநாதையர் ஆவார்.  முகவுரையில் நூலின் சிறப்பையும் அந்நூலால் இன்ன செய்திகள் தெரியவருகின்றன என்பதையும் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, மேற்கோள் விளக்க அகராதிகள் எனப் பலவற்றை புதியதாக உட்புகுத்தினார். அத்துடன் தம்முடைய ஆராய்ச்சி தொடர்பான செய்திகளையும், தம்மைப் பதிப்பிக்கத் தூண்டியவர்கள், பதிப்பிற்கு சுவடி கொடுத்து உதவியவர்கள், பதிப்பிக்கத் தூணாகத் துணைநின்ற நண்பர்கள் என அனைவரைப் பற்றியும் பதிப்பாசிரியர்கள் தங்களின் பதிப்புரையில் அல்லது பதிப்புகளில் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர்.

பதிப்புரையின் கூறுகள்

பதிப்புப் பணியினை மேற்கொள்ளும் பதிப்பாளர்கள் காலந்தோறும் புதிய புதிய மாற்றங்களையும் சேர்க்கைகளையும் செய்துகொண்டே வருகின்றனர். அவற்றுள் படிப்பவர்களுக்கு பொருள் எளிதில் விளங்கும் வகையில் சந்திபிரித்துப் பதிப்பித்தல், தாங்கள் பதிப்பித்த பதிப்புகளுக்கு முதன்மையாகத் தேவைப்பட்ட ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், கடிதப்பிரதிகள் எவையெவை எனவும் அதனைத் தனக்குக் கொடுத்து உதவிய நல்லுள்ளங்கள் யாவர் என்பதையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். ஆரம்பகாலகட்டப் பதிப்புகளில் உரைமேற்கோள்களைத் தனியாகப் பிரித்துக்காட்டும் தன்மை காணப்படவில்லை. சி.வை.தா போன்றோர் மேற்கோள்களை இரட்டை மேற்கோள்குறிக்குள் அமைத்திருந்தபோதும் அதற்கான சரியான இடவிளக்கங்களைக் குறிப்பிடவில்லை. அதனால் மேற்கோள்களை தனித்துக் காட்டி இடஞ்சுட்டிப் பதிப்புகளை பதிப்பிக்கத் தொடங்கினர். இதனைப் பதிப்பின் அடுத்தகட்ட வளர்ச்சியாகக் கருத முடிகின்றது.

தொடக்ககாலப் பதிப்புகளை எடுத்துப் பார்த்தோமானால் சுவடிகள் எவ்வடிவத்தில் காணப்பட்டனவோ அதேவடிவத்தில் பதிப்பிக்கப்பட்டன. இதற்குச் சான்றாக தொல்காப்பிய எழுத்ததிகார மழவை மாகாலிங்கையர் பதிப்பைக் காணலாம். அப்பதிப்பிலிருந்து பிறகு வேறுபட்டு நூற்பாக்களும், உரைகளும், மேற்கோள்களும், எடுத்துக்காட்டுகளும், குறியீடுகள் மூலம் தனித்தனியாகக் காட்டப்பட்டன. இதனை ‘‘கற்போர் எளிதில் உணருமாறு பொருட்டொடர்பு நோக்கிச் சூத்திரச் சொற்களையும் அவற்றின் பொருட் சொற்களையும் பிரித்தும், நிறுத்தியும், படிப்பதற்குரிய அடையாளங்களிட்டும் பதிப்பித்துள்ளேன். எனது சேர்ப்பிற்கு முன்னும், பின்னும், முறையே {  } இக்குறிகளை இட்டுள்ளேன்” [6] எனும் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் தொல்காப்பியப்  பதிப்புரையிலிருந்து அறியலாம்.

உரைப்பகுதிகளைப் பிரித்து எழுதுதல், பதிப்புகளில் பாயிரமாக இருந்த பகுதிகளைப் பதிப்புரைகளாக மாற்றி எழுதுதல், இடைச்செருகல்களை நீக்கிப் பதிப்பித்தல், பிற பதிப்புகளுடன் ஒப்புநோக்கிப் பதிப்பித்தல்; உதாரணமாக அகராதி, அரும்பத விளக்கம், மேற்கோள் விளக்கம், ஆகியவற்றைச் சேர்த்தும் பதிப்புகளை வெளியிட்டுள்ளமை ஆகியவற்றைப் பதிப்புகளின் வளர்ச்சி நிலைகளாகக் காணமுடிகின்றது.

பண்டைய பதிப்பாசிரியர்கள் பின்பற்றிய பதிப்பு நெறிமுறைகள் பலவாகும். இந்நெறிமுறைகளைப் பின்பற்றி தமிழ்ப் பதிப்புத்துறை வளர்ச்சியில் சிறந்த பங்காற்றியோர்களாக ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, கா. நமச்சிவாயமுதலியார், உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை போன்றோரைக் குறிப்பிடலாம். இவ்வாறான  பதிப்பாசிரியர்களின் பதிப்பு முயற்சியில் ஈழத்துப் பதிப்பாசிரியர்களின் பங்களிப்பு என்பது மிகப்பெரியது ஆகும். அவ்வகையில் தமிழ்ப் பதிப்புத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சிப் படிநிலைகளைப் பின்வருவனவாகக் கொள்ளலாம்.

  1. தொடக்ககாலப் பதிப்பு நிலைகளிலிருந்து மாறி, மூலபாடச் செய்யுள் தனியாகவும், உரை தனியாகவும் காட்டுகின்ற மரபும்; இவை இரண்டையும் தனித்தனி எழுத்து அளவிலும் வழங்குகின்ற வழமையும் ஏற்பட்டது எனலாம்.
  2. விருத்தியுரையினைப் பதிப்பிக்கும்போது பதவுரை, பொழிப்புரை, அகலவுரை, வரலாற்றுப்பகுதியில் எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் என்பவை தனித்தனியாக இனங்காணும் வகையில் அடையாளக்குறிகள் இட்டும் ஒவ்வொன்றிற்குமான இடைவெளிகள் விட்டும் பதிப்பிக்கப்பட்டன.
  3. உரைமேற்கோள்கள் எடுத்தாளப்பட்ட நூல்களின் பெயர்கள் இடஞ்சுட்டி விளக்கப்பட்டுள்ளன.
  4. இந்நூலானது மாணவர்களுக்குப் பயன்படக்கூடியதா, ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடியதா? என்பதான விளக்கங்கள் அந்நூலிலையே வழங்கப்பட்டன.
  5. இந்நூற் பதிப்பிற்கான சுவடிகள் யாரால், எந்த நிலையில், எப்படி வழங்கப்பட்டன? என்பதான செய்திகள் தெளிவுற வழங்கப்படலாயின.
  6. ஒரு நூலினைப் பதிப்பிக்கும்போது, அதற்கு முன்வந்த பிற பதிப்புகளிலிருந்து அந்நூல் எவ்வகையில் சிறப்புப் பெறுகின்றது என்பதான செய்திகள் அவ்வவ் பதிப்புகளிலேயே இடம்பெறலாயின.
  7. முன்னைய பதிப்புகளிலிருந்த பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான திருத்தங்கள் முறையான காரண – காரியத்தோடு விளக்கப்பட்டுள்ளன.
  8. ஒரு நூலினைப் பதிப்பிக்க மேற்கொண்ட ஆய்வு முயற்சிகள் யாவும் தொகுப்பாகப் பதிப்புகளில் இடம்பெற்றன. அப்பதிப்பினைப் பயன்படுத்துவோர் எவ்வகையில் அப்பதிப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயன்பாட்டுக்குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
  9. பதிப்பிற்கான பெயர்க்காரணங்கள் குறித்தும் அதற்கான இலக்கணப் பொருத்தங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.
  10. பாட வேறுபாடுகளும் வரலாற்றுக் குறிப்புகளும் அடிக்குறிப்புகளில் வழங்கப்பட்டன.

இவை மாத்திரமல்லாமல் பின்வருவனவான செய்திகளும் பதிப்புகளில் இடம்பெறலாயின:

  • நூலுக்கான முகவுரை, பதிப்புரை, அணிந்துரை என்பன இடம்பெறலாயின.
  • பின்வந்த பதிப்புகளில் முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு ஆகியவற்றின் முன்னுரைகள் இடம்பெறலாயின.
  • அந்நூலின் தொன்மை, சிறப்பு, தேவை முதலான செய்திகள் இடம்பெறலாயின.
  • அந்நூலில் இடம்பெற்றுள்ள தெய்வப் பெயர், மக்கட்பெயர், ஆட்சியாளர்கள், நாடுகள், நகரங்கள், ஊர்கள், நதிகள், தாவரங்கள், பறவைகள், விலங்கினங்கள் என்பனவான பல செய்திகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
  • இலக்கண, இலக்கிய நூல்களில் குறிப்புரைகள் இடம்பெறலாயின.
  • செய்யுள் முதற்குறிப்பு அகராதிகள், மேற்கோள் விளக்க அகராதிகள், இடம்விளங்கா மேற்கோள் விளக்க அகராதிகள், அரும்பதவிளக்க அகராதிகள், அநுபந்தம் முதலியவான விடயங்கள் இடம்பெறலாயின.
  • ஒரு நூல் வெளிவருவதற்குப் பொருளுதவி செய்தவர்களின் பட்டியல்களும், ஆய்வியல் உதவிகள் செய்தவர்களின் பட்டியலும் தொழில்நுட்ப உதவிகள் செய்தவர்களின் பட்டியலும் இடம்பெறலாயின.

மேற்கண்டவாறாக தமிழ்ப்பதிப்புலகில் ஏற்பட்ட வளர்ச்சிநிலைகளைச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

முடிவுரை        

இவ்வாறு பதிப்புத்துறையில் கண்ணிற்குப் புலனாகாமல் எத்தனையோ வளர்ச்சிகள் பதிப்பாசிரியர்களால் காலந்தோறும் புகுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஈழத்துப் பதிப்பாசிரியர்களின் பதிப்பு நெறிமுறைகளை அவர்களது பதிப்பு நூல்களை வைத்துக்கொண்டு ஆராய்வதாக இந்த ஆய்வுக்கட்டுரையின் தன்மையானது அமைந்துள்ளது.

துணைநூற்பட்டியல்

  1. F.X.C. நடராசா, 1957, ஈழமுந் தமிழும், கலைமகள் வெளியீடு, கத்தோலிக்க அனாத அச்சகம், மட்டக்களப்பு.
  2. ப. தாமரைக்கண்ணன், க, 2004, பதிப்புச்செம்பல் சி.வை. தாமோதரம்பிள்ளை (பதிப்புரைகளின் தொகுப்பு), 2 ஆம் பதிப்பு, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.
  3. உ.வே. சாமிநாதையர், 2022, என் சரித்திரம், நற்றிணைப் பதிப்பகம், சென்னை.
  4. ச. வையாபுரிப்பிள்ளை, 2001, புறத்திரட்டு, 3 ஆம் பதிப்பு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
  5. ச. வையாபுரிப்பிள்ளை, 1931, களவியற்காரிகை, 1 ஆம் பதிப்பு, சென்னை.
  6. ச. வையாபுரிப்பிள்ளை, 1955, திவ்யப் பிரபந்தம் முதலாயிரம், 1 ஆம் பதிப்பு, சாது அச்சுக்கூடம், சென்னை.
  7. ச. வையாபுரிப்பிள்ளை, 1944, நான்மணிக் கடிகை, 1 ஆம் பதிப்பு, சக்தி காரியாலயம், சென்னை.
  8. சி. இலட்சுமணன், 2011, சுவடிப் பதிப்பாசிரியர்கள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
  9. ஆறுமுக நாவலர், நன்னூல் காண்டிகையுரை, வித்தியாநுபாலன யந்திரசாலை.

[1] சுவடிப் பதிப்பாசிரியர்கள், பக்.4.

[2] பதிப்புச்செம்பல் சி.வை.தா – வீரசோழியப் பதிப்புரை, ப.31.

[3] பதிப்பியல் – அன்னிதாமசு, ப.18.

[4] என் சரித்திரம் – உ.வே.சா., ப.559.

[5] என் சரித்திரம் – உ.வே.சா., ப.560.

[6] தொல்காப்பியம் – மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை.

The post ஈழத்துப் பதிப்பாசிரியர்களும் பதிப்பு நெறிமுறைகளும்:அறிமுகம்                            appeared first on Ezhuna | எழுநா.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் சமூக நலத்துறையும் அவற்றின் பொருளாதார ரீதியிலான பங்களிப்பும்

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களில் மனிதமூலதனத்தையும் நிதிமூலதனத்தையும் அதிக நலிவுக்குள்ளாக்கும் காரணிகளாக சமூகநலத்துறைச் செலவீனங்கள் இருந்து வருகின்றன. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை அரசியலில் இலவசமாக வழங்குதல் என்பதுவே சுதேசிய அரசுகளின் பொறுப்பு என்ற எண்ணம் வலுப்பெற்றிருந்ததால், மக்களின் நெருக்கடிகளைத் தீர்ப்பதில் அரசின் இலவச உதவி வழங்கல் மிக முக்கியமானது எனக் கருதப்பட்டது. அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு உருவாக்கப்பட்ட சுதேச அரசு, மக்கள் நலனில் கவனம் செலுத்தும் நலஅரசு (Welfare State) என்ற கொள்கையை முன்வைத்தது. இதன் அடிப்படையில், அரசின் வருமானத்தை மக்கள் நலனுக்காக இலவச விநியோக வடிவில் பகிரும்முறை இலங்கையில் நிலைபெற்றது. இலவச அரிசி, இலவச மருத்துவம், இலவசக்கல்வி, இலவச உதவியளிப்புகள் என சுதந்திரத்துக்கு பிற்பட்டகால அரசுகள் போட்டிபோட்டுக் கொண்டு செயற்பட ஆரம்பித்தன. ஜனநாயகத்தின் அடிப்படையில் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் அரசுமுறைமைக்குச் சாதகமாக இந்த உதவியளிப்புகள் மக்களுக்கு வழங்கப்படத் தொடங்கியதால், ஒவ்வொரு வருடத்திலும் வெளியிடப்படும் அரசின் வரவு-செலவுத் திட்டமானது ஏதாவதொரு சலுகையை மக்களுக்கு வழங்கத் தொடங்கியது. அது மக்கள் நலனைப் பேணவில்லை என்பதற்குப் பதிலாக அது அதிக மக்கள் கவர்ச்சியை ஆட்சியரசாங்கத்துக்குப் பெற்றுக்கொடுத்து, வாக்கு வங்கியை அதிகரித்துக்கொண்டது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். பொருளாதாரரீதியில் இச்செயன்முறையானது மக்களின் தங்கியிருப்புத் தன்மையை (Dependency Mentality)  அதிகரித்து, அரசுநோக்கிக் கையேந்தும் நிலையை உருவாக்கிக் கொண்டது என்பதே வரலாறாகியது. உணவு நிவாரணம் தொடர்பில் அரைக் கொத்து அரிசி, 8 கிலோ அரிசி, உணவுக்காப்பான், உணவு முத்திரை, மண்ணெண்ணை முத்திரை, சமுர்த்தி, திவிநெகும ஆகியவை அரசின் மக்கள் நலக் கொடுப்பனவுகளாகச் செயற்பட்டுள்ளன. இந்த நலத்திட்டங்களை எந்த அரசாங்கமும் முழுமையாகக் கைவிட்டதில்லை. இலங்கையில் ஒருவர் பிறப்பதற்கு முன்னரே, கருவில் வளரும் குழந்தைக்குப் ‘போசாக்கு’ உணவும், தாய்க்கு ஒரு ஆண்டிற்குரிய சத்துணவுகளும் வழங்கப்படுகின்றன. அரசு வைத்தியசாலையில் ஒருவர் பிரசவிக்கப்பட்ட பின்னர், பிறப்புச் சான்றிதழும் இலவசமாகப் பதிவு செய்யப்படுகிறது. பின்னர், திரிபோசா உள்ளிட்ட போஷாக்கு உணவுக் கூப்பன்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. இதற்குப் பிறகு, இலவச வைத்திய சேவை, இலவசக் கல்வி, மற்றும் இலவச உயர்கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, முழுமையாக இலவச உதவிகளுடன் உருவாக்கப்படும் இம்மனித மூலதனம், பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்பும், வேலைவாய்ப்பின்றி, அரச வேலையை எதிர்பார்த்துப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்பதை இங்கே புறக்கணிக்க முடியாதுள்ளது. மறுபுறம், இலகுவில் பாதிப்படையும் இலக்குக் குழுக்கள் (Vulnerability target group) அரசினால் பராமரிக்கப்பட வேண்டும் என்ற உண்மைநிலையை நிராகரிக்கவும் முடியாது. இந்நிலையில சமூகப் பாதுகாப்பு தொடர்பில் வடக்கு – கிழக்கு மாகாணங்களை நோக்கும் போது, மாற்றாற்றல் உள்ளோர், அவயவங்களை இழந்தோர், பிறப்பின் போதான இயலாமைக்கு ஆளானோர், போரினால் ஊனமுற்றோர் போன்ற வெளிப்படையான இயலாமை கொண்டோர் ஒரு தரப்பாகவும்; போரினாலும், இயற்கை நிகழ்வுகளாலும் விதவைகளாக்கப்பட்டு, அவர்களால் தலைமை தாங்கப்படும் குடும்பங்கள் மற்றொரு பகுதியாகவும்; பெற்றோர், பராமரிப்பாளர்கள் இல்லாமல் சிறுவர் மற்றும் முதியோர் காப்பகங்களில் பராமரிக்கப்படுபவர்கள் பிறிதொரு வகையானவர்களாகவும், மூன்று வகையான பிரதான இலகுவில் பாதிப்படையும் குழுவினர்கள் காணப்படுகின்றனர். உள்நாட்டுப்போரின் விளைவுகளால், வடக்கு – கிழக்கில், இந்தப் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை மிக அதிகமாகவும் வேறுபட்ட சமூகத்தாக்கங்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இவ்விரு மாகாணங்களிலும் சமூகநலத்துறையின் பணிகள் மிக அதிகளவில் வேண்டியதாகவுள்ளது.

இந்தவகையில் வெளிப்படையான இயலாமைக்குட்பட்டோர் பற்றி ஆராயும்போது, வடக்கு மாகாணத்தில் 21,668 பேரும், கிழக்கு மாகாணத்தில் 18,337 பேரும் முழு அளவிலும், பாதியளவிலுமாக இயலாமைக்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். பிரதான இயலாமைத் தன்மையின் அடிப்படையில் ஆராயும்போது, பார்வைக்குறைபாடுடையவர்கள் என்ற வகைப்பாட்டில் வடக்கு மாகாணத்தில் 1,826 பேரும், கிழக்கு மாகாணத்தில் 1,598 பேரும் காணப்படுகின்றனர். செவிப்புலன் இழந்தோர், வாய்பேச முடியாதோர் என்ற வகைப்பாட்டின்கீழ் வடக்கில் 3,083 பேரும், கிழக்கில் 2,509 பேரும் உள்ளனர். அங்கங்களை இழந்தவர்கள் என்றவகைப்பாட்டில், கால் மற்றும் கைகளை இழந்தவர்கள் வடக்கில் 10,581 பேரும், கிழக்கில் 4,228 பேரும் காணப்படுகின்றனர். மனநலப் பாதிப்புக்குட்பட்டோர் என்றவகையில் வடக்கில் 6,182 பேரும், கிழக்கில் 4,887 பேரும் காணப்படுகின்றனர். இந்த நபர்களில், முழுமையாக இயலாமைக்குட்பட்டோராக இல்லங்களில் பராமரிப்புச் செய்யப்படுபவர்கள் எனப்பார்க்கும்போது, கிழக்கு மாகாணத்தில் 8 பராமரிப்பு நிலையங்களில் 221 பேரும், வடக்கு மாகாணத்தில் 3 பராமரிப்பு நிலையங்களில் 193 பேரும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இயலாமைக்குட்பட்டோரின் வெளிப்படையான தகவல்களுக்கிடையில், உட்கிடையாக இருகால்களை இழந்தவர்கள், இருகைகளை இழந்தவர்கள், முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தோர், வலிப்புநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு வகையான உப பாதிப்புகளுடன் கூடிய நபர்களும் காணப்படுகின்றனர். இவ்வகையினருக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஏனைய வகை மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளைவிட வேறுபட்டதும் சிக்கலானதுமாகக் காணப்படுகின்றன.

பராமரிப்பாளர்கள் இல்லாதநிலையில், காப்பகங்களில் தங்கியுள்ள முதியோர் எனப்பார்க்கும்பாது, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் 4 தனியார் நிர்வகிப்பு நிலையங்களில் 73 பேரும், மட்டக்களப்பில் 5 தனியார் நிர்வகிப்பு நிலையங்களில் 106 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 2 அரசநிலையங்களில் 40 பேருமாக, 219 பேர் காப்பகங்களில் பராமரிக்கப்படுகின்றனர். வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் 6 இல்லங்களில் 26 பேரும், கிளிநொச்சியில் 01 இல்லத்தில் 18 பேரும், மன்னாரில் 04 இல்லங்களில் 524 பேருமாக, 985 பேர் காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் .

காப்பகங்களில் பராமரிக்கப்படும் பெற்றோர், பாதுகாவலர்கள் இல்லாத பிள்ளைகள் என்ற வகைப்பாட்டில் நோக்கும்போது, கிழக்கு மாகாணத்தில் 57 சிறுவர் இல்லங்களில் 310 பிள்ளைகள் பராமரிக்கப்படுவதுடன், வடக்கு மாகாணத்தில் 37 சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் 1,475 பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இருவகையான இல்லங்களிலும் பெருமளவிலானவை, தனியாரினாலும் தொண்டு நிறுவனங்களாலும் நடாத்தப்படுவதுடன், சமூக சேவைத்திணைக்களம், சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்புத் திணைக்களத்தினது மேற்பார்வையின் கீழும் இயங்கி வருவனவாகும். சிறுவர் மற்றும் முதியோர் பராமரிப்புத் தொடர்பிலாகப் பேணப்படவேண்டிய தரங்களின் நிர்ணயம், இடவசதி, உணவுமுறை, விடுமுறையளித்தல், சுகாதார நடைமுறைகள், உரிமை சார்ந்த விடயங்கள் அனைத்தும் இவ்விரு திணைக்களங்களினால் வழங்கப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் என்ற இலகுவில் பாதிக்கப்படும் குழு (Vulnerability group) ஆனது, பாரிய சமூகத் தாக்கங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகின்றது. இயற்கையினாலும் யுத்தத்தினாலும் உருவாக்கப்படும் குடும்பத் தலைவர்களின் (Breadwinner) இழப்பானது, பெண்களின் தலைமைத்துவத்திற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி, அவர்களை பொருளாதாரச் சுமையைதாங்கும் பிரதான பிரிவினராக மாற்றிவிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மாவட்ட அடிப்படையில், வயதுரீதியாக நோக்கும்போது, அதன் விபரம் கீழேயுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

மாவட்டம்20க்கும் குறைவு21-2526-3031-3536-4041-4546-5051-5556-6060க்கு மேல்மொத்தம்
 யாழ்ப்பாணம்382056131,1311,8532,2823,6284,3476,1083,75343,958
 கிளிநொச்சி161102314295857948601,0391,0793,7508,893
 முல்லைத்தீவு1632063474146078938249871,2343,0468,721
 மன்னார்5921022592655605638858913,0336,651
 வவுனியா81302294125647537997951,2283,2178,135
  2267481,5222,6453,8745,2826,6748,05310,54036,79976,358

வட மாகாணத்தின் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் 30 சதவீதமானவை, 50 வயதுக்குக் குறைந்த இளம் விதவைகளைக் கொண்டிருப்பது, பல்வேறு சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. மறுமணம் புரிதல் என்பது சமூக  நியமங்களின்படி பெருமளவு வரவேற்புப் பெறாத சமூக அமைப்பினால், இளவயதில் கணவர்களை இழந்தவர்கள் தமது இளமையைத் தியாகம்செய்து வாழ வேண்டியுள்ளது. யுத்தத்தின்போது காணாமற்போனவர்கள் மீண்டும் திரும்பக்கூடும் என்ற எதிர்பார்ப்புத் தொடரும் காரணத்தால், பலர் ‘மறுமணம்’ செய்ய எண்ணுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன், வாழ்வாதாரத்திற்காக உழைத்து, பிள்ளைகளையும் வளர்க்கவேண்டிய இரட்டைச்சுமை இவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டோராக 5,268 பேரும், கிழக்கு மாகாணத்தில் 6,577 பேரும் காணப்படுகின்றனர். குடும்ப முரண்பாடுகள் காரணமாக கணவனால் கைவிடப்பட்டவர் என்ற வகையடிப்படையில், வடக்கு மாகாணத்தில் 9036 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தில் 9504 குடும்பங்களும் காணப்படுகின்றன. இவ்விரு வகைப்பாடுகளிலும் உள்ளடங்குபவர்கள் பெருமளவுக்கு இளம் தாய்மார்களாகக் காணப்படுவதனால், இவர்கள் பல்வேறு சமூக நெருக்குவாரங்களுக்கும் உட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இயற்கையான இறப்புக் காரணமாக குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் வடக்கு மாகாணத்தில் 51,360 பேரும், கிழக்கு மாகாணத்தில் 56,340 பேரும் காணப்படுவதுடன், ஏனைய காரணங்களால் பெண்தலைமைக்கு உட்பட்டவர்கள் என்றவகையில் வடக்கு மாகாணத்தில் 10,654 பேரும், கிழக்கு மாகாணத்தில் 9,509 பேரும் காணப்படுகின்றனர். இந்தவகையில் மாவட்ட அடிப்படையில் இத்தகவல்களை நோக்கும்போது,

இலமாவட்டம்20<21-2526-3031-3536-4041-4546-5051-5556-6060>மொத்தம்
1திருகோணமலை1143068936509071474187519552847705318020
2மட்டக்களப்பு867961453182723112857306637964112968229986
3அம்பாறை9938937891239148619452283309140001396030675
4மொத்தம்11931995308137164704627672248842109593069178681

மூலம் : சமூக சேவை திணைக்களம், கிளிநொச்சி

மாவட்ட அடிப்படையில் இந்த எண்ணிக்கையை ஆராயும்போது யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அதிக பெண்தலைமைக் குடும்பங்கள் காணப்படுகின்றன. வயதுவாரியாகப் பரிசீலிக்கும்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே இளம் பெண் தலைமையாளர்கள் அதிகமாகக் காணப்படுவதனை அவதானிக்கலாம். இந்தவகையில், ஏனைய மாகாணங்களைவிட வடக்கிலும் கிழக்கிலும் தோன்றியுள்ள இளம்வயதான விதவைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மிகச் சிக்கலானவையாக உள்ளன. அவர்களின் பருவத் தேவைகள் மற்றும் அதனால் உருவாகும் உளவியல் சுமைகள், குடும்பத்தை நடத்தவேண்டிய பொருளாதாரத் தேவை, வேலைக்குச் செல்லும் கட்டாயம் ஆகியவை ஒருபுறமிருக்க, அதனால் பிள்ளைகளை முறையாகப் பராமரிக்க முடியாதநிலையும் உருவாகிறது. இத்துடன், தனிமை, பாதுகாப்புப் பற்றாக்குறை, சமூக நச்சரிப்பு, உட்தொந்தரவு மற்றும் தேவையற்ற அழுத்தங்கள் எனப் பல்வேறு பிரச்சினைகள், இந்தக் குடும்பங்களை ஒரு சங்கிலித் தொடராகத் தொடர்ந்து துரத்திக்கொண்டே செல்கின்றன. வடக்கு மாகாணத்தில் காணப்படும் 76,358 பெண்தலைமைக் குடும்பங்களையும், கிழக்கில் காணப்படும் 78,681 பெண்தலைமைக் குடும்பங்களை உள்ளடக்கிய 155,039 குடும்பங்கள்சார்ந்த விசேட இலக்குக்குழு நோக்கிய தேசிய திட்டங்கள் எதுவும் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். போருக்கு பின்னரான நிலைமாறுகால நீதி என்ற வகையில் (Transitional Justice) சர்வதேச அமைப்புகளால் வலியுறுத்தப்பட்ட கருத்துகளுக்கு அமைய பெண்களுக்கான தேசிய நிலையம் (National Women Centre) உருவாக்கப்பட்டு, அதன் தலைமை நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டபோதும், அதனூடாக இவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தேசிய வரவு-செலவுத்திட்டத்திலும் கூட இம்மாதிரியான முதன்மை இலக்குக்குழு நோக்கிய கருத்திட்டங்கள் செயலுருப் பெறுவதில்லை.

அரசாங்கத்தின் நிதியளிப்பு மற்றும் உதவி வழங்கல்கள் என்றவகையில் நோக்கும்போது, பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு, காச நோய்க்கான கொடுப்பனவு, புற்றுநோயாளருக்கான கொடுப்பனவு, தொழுநோய்க் கொடுப்பனவு, குருதி உறையா நோய்க் கொடுப்பனவு, முள்ளந்தண்டுவடம் பாதித்தோருக்கான கொடுப்பனவு என்பன நேரடியாகப் பாதிப்புக்குட்பட்டோருக்கு சமூக சேவைத் திணைக்களமூடாக வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் இதற்காக வழங்கப்படும் தொகைகளும் அது விநியோகிக்கப்பட்டு வரும் முறைகளும் பல நெருக்கடிகளைக் கொண்டே இயங்கி வருகின்றன. பொதுசன மாதாந்த உதவித்தொகையாக ரூ.250 முதல் ரூ.500 வரை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அஞ்சலகங்களின் வாயிலாகவே மாதந்தோறும் வழங்கப்படுகிறது. ஆனால், பல கிராமங்களில் அஞ்சலகங்களே இல்லாத காரணத்தால், இதைப் பெறுவதற்காக பயணிக்கும்போது, பெறும் தொகையைவிட அதிக செலவு செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. காசநோய், புற்றுநோய், தொழுநோய், குருதி உறையா நோய், முள்ளந்தண்டு வடம் பாதிப்பு ஆகிய கொடுப்பனவுகளுக்கு மாதாந்தம் 5000 ரூபாவே வழங்கப்படுகிறது. அதுவும் பிரதேச செயலர் பிரிவுவாரியாகவுள்ள ஒதுக்கு எண்ணிக்கைக்கமையவே வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்துள்ள இலக்குக் குழுக்களுக்கு வழங்கப்படும் ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் சமூகப் பாதுகாப்புச் சபை (Social Security Fund) இனால் வழங்கப்படுகின்றன. இதன்கீழ் மதிப்பாய்வு செய்யப்பட்ட அனைத்து வறுமைக் குடும்பங்களும் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. மிக வறுமை (Extremely Poor) 
  2. வறுமை (Poor)
  3. ஆபத்துக்குட்பட்டோர் (Vulnerable)
  4. நிலைமாறுதல் (Transitional) 

மிக வறுமை என்ற வகைப்பாட்டினுள் வருபவர்கள் 17,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2026 – யூன் மாதம் வரை பெற்றுக்கொள்வர். வறுமை வகைப்பாட்டில் உள்ளடங்குவோர் 10,000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2026 – யூன் வரை பெற்றுக்கொள்வர். ஆபத்துக்குட்பட்டோர் 5000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2025 – டிசம்பர் வரை பெற்றுக்கொள்வர். நிலைமாறு வகைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட மாதாந்தக் கொடுப்பனவான ரூபா 5000, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்ததால், அவர்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இத்துடன், சமூக சேவைத் திணைக்களத்தால் உதவித் தொகை பெறாமல் உள்ள மாற்றாற்றல் உள்ள நபர்களுக்கு மாதாந்தம் ரூபா 10,500 மற்றும் வயது முதிர்ந்தோருக்கு ரூபா 5,000 என இந்தத் திட்டத்தின்கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தில் சேர்க்கப்படாதவர்கள், இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பின் கீழ் உள்வாங்கப்பட்டு, அதற்கான பரிசீலனைகள் முடிவடைந்த பின், பிரதேச செயலாளர்களின் அனுமதி வழங்கும் செயன்முறை நடைபெற்று வருகிறது. இதற்கமைய புதிய தொகுதியினரை விரைவில் இத்திட்டத்தில் மேலதிகமாக இணைந்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எனினும், ‘அஸ்வெசும’ நலன்தொகை நிகழ்ச்சியில் ‘நிலைமாறு கட்டத்தில்’ இனங்காணப்பட்ட பலர், குறுகிய காலத்திலேயே பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் விண்ணப்பித்து மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இல்லாத சூழலில், உதவி வழங்கப்பட வேண்டிய சிலர் தவறவிடப்பட்டுள்ளனர் என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். 

கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பணவீக்கம், பாரிய தாக்கங்களை இலங்கைமக்கள் மீது, குறிப்பாக வடக்கு – கிழக்கு மக்கள் மீது ஏற்படுத்தியுள்ளதனை, அண்மையில் புள்ளிவிவரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக, அதிகரித்த பணவீக்கம் காரணமாக உயர்ந்துள்ள வாழ்வாதாரச் செலவுகளை எதிர்கொள்வதற்காக, மக்கள் தமது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சொத்துகளை விற்றல், அடகு வைத்தல், கடன் பெறல் போன்ற பல்வேறு வழிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, பலர் கடனாளிகளாக மாறியுள்ளனர். நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 54.9% பேர் கடன்சுமையைக் கொண்டவர்களாகவும், 31% பேர் சொத்துகளை அடமானம் வைத்தவர்களாகவும், 21.9% பேர் வங்கிகளில் கடன் பெற்றவர்களாகவும், 9.37% பேர் வட்டிக்குப் பணம் வாங்கியவர்களாகவும் காணப்படுகின்றனர். கடந்த ஆண்டில் வருமான அதிகரிப்பைக்கொண்ட குடும்பங்கள், 3.4% ஆக மட்டுமே காணப்படுவதுடன், 36.6% ஆன குடும்பங்களின் வருமானத்தில் எவ்வித மாறுபாடுகளும் இடம்பெறவில்லை. 

இவ்வகையில் பொருளாதார நலிவு காரணமாக இலகுவில் பாதிப்படைவோரது எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதால், வலுவூட்டல் வேலைத்திட்டங்களின் உண்மை நோக்கம் அடையப்படாதுள்ளது. வறுமை வீதம் உயர்ந்து வரும்போது, நலன்புரி சேவைக் கொடுப்பனவுகளைக் குறைக்கவோ, நிறுத்தவோ தீர்மானம் மேற்கொள்ள முடியாதநிலை காணப்படுகிறது. சமூக அபிவிருத்திப் பொறிமுறையின் உதவியளிப்பும் ஆதரவும் தொடர்ந்தும் வரப்போகிறது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், இந்த நிலைமை மேலும் பாதிப்பை ஏற்படுத்தி, மக்கள் இயல்பான வாழ்க்கை முறையை நோக்கித் திரும்ப முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதனால், அவர்கள் அரசின் நிதியுதவியில் தொடர்ந்தும் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாததாக உருவாகியுள்ளது.

The post வடக்கு – கிழக்கு மாகாணங்களின் சமூக நலத்துறையும் அவற்றின் பொருளாதார ரீதியிலான பங்களிப்பும் appeared first on Ezhuna | எழுநா.

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 2

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன

1895 முதல் 1910 வரை தொடர்ந்த அரசியல் மோதல்கள்

பழமைவாதிகளுக்கும், காலனித்துவ ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கவும், எழுச்சிபெறும் புதிய முதலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை முன்வைத்து வாதம் செய்வதற்கும் ஆற்றல் உடையவர்களான ஆளுமைமிக்க புதிய தலைவர்கள் பலர் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றினர். இவர்களில் பெரும்பான்மையினர் உயர்தொழில்களில் சிறப்பெய்தியவர்கள்; சாராயக்குத்தகை முதலாளிகளதும், பெருந்தோட்டங்களினதும், காரீயச் சுரங்கங்களினது முதலாளிகளதும் புத்திரர்களாகவும், மருமக்களாகவும் விளங்கினர். சிலர் பிரித்தானியாவிற்குப்போய் சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளில் உயர்பட்டங்களைப் பெற்று நாடு திரும்பியவர்களாய் இருந்தனர். அக்காலத்தில் உலகில் மிகவும் முன்னேறிய நாடான பிரித்தானியாவில் வாழ்ந்து அச்சமூகத்தின் மனப்பாங்குகளையும் நடத்தை முறைகளையும் உள்வாங்கியவர்களாய் இருந்தனர். பிரித்தானியா 1832 ஆம் ஆண்டுகாலத்துச் சீர்திருத்தங்களுக்கு முன்னர் என்ன நிலையில் இருந்ததோ அப்படியான பின்னடைவான நிலையில் இலங்கை இருப்பதை நாடு திரும்பிய இவர்கள் கண்டனர். தம்மிடம் பணம் இருந்தும், வெளிநாட்டுப் படிப்பு இருந்தும் தாம்திட்டமிட்டு ஒதுக்கப்படுவதையும் அடிப்படை அரசியல் உரிமைகளான வாக்குரிமையும், பிரதிநிதித்துவ உரிமையும் திட்டமிட்டமுறையில் மறுக்கப்படுவதையும் கண்டனர். அத்தோடு முதலாளித்துவ வகுப்பின் பழமைவாதப் பிரிவினர், அரசியல் நிலப்பிரபுத்துவ சமூக மனப்பாங்குகளை வெளிப்படுத்துவதையும் தமக்குப் பாரபட்சம் காட்டுவதையும் தம்மைக் கண்டிப்பதையும் தொழிலாகக்கொண்டு நடந்து கொள்வதையும் கண்டு மனம் கொதித்தனர்.

சட்டசபையில் சிங்களவருக்கான பிரதிநிதியை 1895 இல் மீண்டும் நியமிக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கான போட்டி வேட்பாளர்களின் ஆதரவுப்பிரசாரம் 1894 இல் தொடங்கியது. இத்தடவை ஜேம்ஸ் பீரிஸ், சி.எம். பெர்னாண்டோ என்ற இருவர் முதலியார் குழுமத்திற்கு எதிரான போட்டியாளர்களாக முன்வந்தனர். இவர்கள் இருவரும் புதிதாக எழுச்சி பெற்றுவரும் முதலாளித்துவ வகுப்பின் மிகச்சிறந்த பிரதிநிதிகளாக இருந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற டிமெல், டி சொய்சா என்ற இரு முதலாளிகளின் குடும்பங்களுக்குள் திருமணம் செய்வதன்மூலம் முக்கியஸ்தர்களாயினர். ஜேம்ஸ் பீரிஸ் (1856-1930), தெல்கே மார்ட்டினஸ் பீரிஸ் என்பவரின் மகன். ஜேம்ஸ் பீரிஸின் தந்தை 1850களிலும் 1860களிலும் பிரபலமான சாராயக் குத்தகைக்காரர் (பின்னர் வியாபாரத்தில் நொடித்துப்போனார்). அவரின் பாட்டன் ஆகிய பாணந்துறையைச் சேர்ந்த தெல்கே டேவிட் பீரிஸ் குத்தகைக்காரர், கப்பல் சொந்தக்காரர், நில உடைமையாளர் என்ற வகையில் 1820க்கள் முதல் 1840க்கள் வரை பிரகாசித்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சென்ற் யோன்ஸ் கல்லூரியில் அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்றுப் படிப்பதற்காக ஜேம்ஸ் பீரிஸ் பிரித்தானியாவுக்குச் சென்றார். அங்கு கற்று 1882 இல் சட்டத்துறையில் முதலாம் வகுப்புச் சித்தி பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலையின் சட்ட மாணவர் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். பிரித்தானியாவில் சிறிதுகாலம் நியாயதுரந்தரராக தொழில்செய்த பின் இலங்கைக்கு வந்து 1887 இல் சட்டத்தொழிலில் ஈடுபடத் தொடங்கினார் (கெபிள் மற்றும் சூரியசேன 1950: அத்தியாயம் 11). 1889 இல் ஜேம்ஸ் பீரிஸ், கிறேஸ் டி மெல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இப்பெண்மணி யாக்கோப் டி மெல் என்ற பிரபல வர்த்தகரின் புத்திரியாவார். யாக்கோப் டி மெல், யேம்ஸ் பீரிஸின் வெளிநாட்டுக் கல்விச் செலவுக்கு உதவி செய்தவர். யாக்கோப் டி மெல்லின் தந்தை (கிறேஸ் டி மெல் உடைய பாட்டன்) பிரபல்யம்பெற்ற சாராயக் குத்தகைக்காரராக இருந்தவர் (ஈ பெர்னாண்டோ, 1989:78). ஜேம்ஸ் பீரிஸ் சாதாரண குடும்பத்தில் தோன்றியவராயினும், டி மெல் குடும்பத்துப் பெண்ணை மணந்து பெற்றுக்கொண்ட சீதனச் சொத்துகளால் செல்வந்தரானார். இச்செல்வம் அரசியலில் இறங்குவதற்கு அவருக்கு உதவியது.

சாள்ஸ் மத்தியூ பெர்னாண்டோ (1866-1909), 1895 இல் சட்டசபை நியமனத்திற்கு போட்டியாளராக பிரேரிக்கப்பட்ட இன்னொரு பிரமுகர். இவர் அன்ட்ரூ பெர்னாண்டோவின் (சிறு வர்த்தகர்) மகன் ஆவார். பீரிஸ் போன்றே பெர்னாண்டோவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சென்ற் யோன்ஸ் கல்லூரியில் அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்று, படிப்பதற்குச் சேர்ந்தார். சட்டத்தில் பட்டமும் (Law Tripos), எல்.எல்.பி பட்டமும் பெற்று 1888 இல் லண்டனில் நியாயதுரந்தரராகப் பணியாற்றினார். இலங்கை திரும்பிய சி.எம். பெர்னாண்டோ இலங்கை தேசிய கழகத்தின் செயலாளராக 1892 முதல் 1895 வரை கடமையாற்றினார். 1897 வரை நியாயதுரந்தரராகப் பணியாற்றிய பின் பதில் மாவட்ட நீதிபதியாகவும் அரச நியாயதுரந்தரராகவும் பணியாற்றினார். சாள்ஸ் டி சொய்சாவின் புத்திரியும் முன்னோடிகளான முதலாளிகள் யெரொனிஸ் சொய்சா, செவலியர் யுசி டி சில்வா ஆகியோரின் பேர்த்தியுமான யேன் மரியா டி சொய்சாவை திருமணம் செய்ததன் மூலம் சி.எம். பெர்னாண்டோ பெரும் செல்வத்திற்கு அதிபதியானார். முன்னேறி வரும் கராவ சாதியின் பெருமைக்குரிய தலைமக்களாக யேம்ஸ் பீரிஸ், சி.எம். பெர்னாண்டோ ஆகிய இரு நியாயதுரந்தரர்களும் விளங்கினர். இவர்கள் இருவரும் பிறப்பால் அல்லது திருமண பந்தத்தால் 19 ஆம் நூற்றாண்டின் நான்கு பெரும் வர்த்தக முதலாளித்துவக் குடும்பங்களான தெல்கே பிரிஸ், வருஷ கென்னடிகே சொய்சா, விதானலாகே டி மெல், லிண்டா முலாகே டி சில்வா ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டிருந்தனர்.

கரைநாட்டுச் சிங்களவர்களுக்கான பிரதிநிதித்துவத்தினைக் கோரும் வேட்பாளர்களாக ஜேம்ஸ் பீரிஸ், சி.எம், பெர்னாண்டோ ஆகிய இருவரும் நிறுத்தப்பட்டனர். இப்பிரேரணை சிறந்த திட்டத்துடன் முன்வைக்கப்பட்டது. அவர்களது கொள்கைப் பிரகடனங்களில் ரயில் போக்குவரத்தை விஸ்தரித்தல், கல்வி வசதிகளை மேம்படுத்தல் ஆகிய பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களது எதிர்ப்போட்டியாளராகிய எஸ்.சி. ஒபயசேகர கிராமத் தலைமைக்காரர்களின் அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை மட்டும் முக்கியத்துவப்படுத்தினார். பீரிஸின் கொள்கைப்பிரகடனம் தாம் முற்போக்கு சிந்தனையுள்ள முதலாளித்துவ வகுப்பின் கருத்துகளை ஆதரிப்பதாகவும் நிலப்புரபுத்துவ சலுகைகளையும், மனப்பாங்குகளையும் தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டது.

“அவர் பிறப்பு, விவாக பந்தம் என்ற இரு வழிகளிலும் சிங்களச் சமூகத்தில் சுதேசத் தொழில்களில் முன்னோடிகள் எனக் கருதப்படும் பிரிவினர்களுடன் தொடர்புடையவர். பரம்பரை உரிமைகள், குடும்பத் தொடர்பு ஆகிய விடயங்கள் நவீன முன்னேற்றத்திற்கு ஒவ்வாதனவாக இருந்தன (மேலது: 134).

பீரிஸை ஆதரித்து நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவரின் வர்க்க அந்தஸ்தும், கல்வித்துறைச் சாதனைகளும் அழுத்திக் கூறப்பட்டன. கரைநாட்டுச் சிங்களவர்களுக்குள் ஆகக்கூடிய கல்வித்தகைமை பெற்ற ஒருவர் பீரிஸ் என்றும், எந்த ஒரு இலங்கையர்களும் இதுவரை அடையாத சிறப்பை பெற்றவர் என்றும் இக்கூட்டத்தில் பேசிய ஒருவர் குறிப்பிட்டார். இன்னொரு கூட்டத்தில் ஜேம்ஸ் பீரிஸிடம் உள்ள பெரும் செல்வம், அவருக்கு இருந்த குடும்பத் தொடர்புகள் பற்றிப் புகழ்ந்து பேசப்பட்டது. அவருக்கு ‘இந்நாட்டின் மிகப் பெரும் சொத்துடைமையாளர்களுடனும், வர்த்தகர்களுடனும் குடும்பப் பிணைப்பும் உறவும் உள்ளது’ என்று கூறப்பட்டது. புதிய முதலாளி வகுப்பின் இவ்வாறான பிரசார அழுத்தத்திற்கு அரசாங்கம் மசிந்துபோகவில்லை. வழமையான தனது கொள்கையையே அரசாங்கம் தொடர்ந்தது. ஏ.டி. அல்விஸ் செனிவிரத்னவின் நியமனத்தை நீடிப்பதன்மூலம் அவர் கரைநாட்டுச் சிங்களவர்களின் பிரதிநிதியாக 1900 ஆம் ஆண்டுவரை பதவி வகிக்க அரசாங்கம் வழி செய்தது. பிரித்தானிய அரசு 1900 ஆம் ஆண்டில் தானும் தன் கொள்கையை மாற்றவில்லை. இலங்கையின் மேற்தட்டு வர்க்கத்தின் ஆளுமைப்பலம் இல்லாத நபர்களைச் சட்டசபைக்கு நியமிப்பதை அரசாங்கம் விரும்பியதே அல்லாது, புதிய பணக்காரர்களில் இருந்து தோன்றிய கல்விகற்ற விமர்சன நோக்குடைய படிப்பாளிகளை நியமிப்பதில் அக்கறை காட்டவில்லை.

1900 ஆம் ஆண்டில் மீண்டும் வெற்றிடம் ஏற்பட்டபோது ஜேம்ஸ் பீரிஸ் மீண்டும் வேட்பாளராக முன்வந்தார். 20 ஆம் நூற்றாண்டு உதயமாகிய வேளையில்கூட தம் மனதை மாற்றிக்கொள்ளாத ஆட்சியாளர்கள் கரைநாட்டுச் சிங்களவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக சொலமன் கிறிஸ்ரோபல் ஒபயசேகர என்பவரை நியமித்தனர். 1848 இல் பிறந்த ஒபயசேகர டி.பி.எவ். ஒபயசேகர, சுசன்னா கொர்னிலியா பண்டாரநாயக்க தம்பதியரின் புத்திரராவார். இவர்களது குடும்பம் யேம்ஸ் டி அல்விஸ், பிலிப்ஸ் பண்டிதரட்ன, யே.பி ஒபயசேகர, யே.ஜி. டயஸ், ஹரி டயஸ் ஆகிய முன்னாள் சட்டசபை உறுப்பினர்களின் நெருங்கிய சொந்தக்காரக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தினர் மாறிமாறி ஒன்றுக்குள் ஒன்றாக விவாகம் செய்துகொள்ளும் அகமண உறவு முறையைக் கடைப்பிடித்து வந்தனர். யேம்ஸ் டி அல்விஸின் மகள் எஸ்லின் மரியாவை ஒபயசேகர திருமணம் செய்தார். யேம்ஸ் டி அல்விஸின் மனைவி புளோரன்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ஜே.ஜி. டயஸ், ஹரி டயஸ் ஆகிய இருவரதும் சகோதரியாவார். ஒபயசேகரவின் மூத்த சகோதரியான டெய்சி எஸ்லின், சொலமன் டயஸ் பண்டாரநாயக்க (1862-1946) அவர்களைத் திருமணம் செய்தார். சொலமன் டயஸை அரசாங்கம் 1895 இல் மஹா முதலியாராக நியமனம் செய்தது (சொலமன் டயஸின் மகன் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க 1956-58 காலத்தில் இலங்கையில் பிரதமராக இருந்தவர்). இவ்வாறாக சலுகை பெற்றிருந்த இக்குடும்பம் சட்டசபை ஆசனத்தை தனது ஏகபோக உடைமையாகக் கொண்டிருந்ததைக் கண்டு புதிய முதலாளித்துவ வகுப்பு மனக்கொதிப்புற்றது இயல்பான தொன்றாகும்.

ஜேம்ஸ் பீரிஸ் ஆதரவாளர்களுக்கும் கிறிஸ்ரோபல் ஒபயசேகர ஆதரவாளர்களுக்குமிடையில், சட்டசபை ஆசனம் 1905 ஆம் ஆண்டில் மீண்டும் வெற்றிடமானபோது, கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு வேட்பாளர்களதும் தகைமைகளும், நடத்தைப்பாங்குகளும் மீண்டும் விவாதப்பொருள் ஆயின. எஸ்.சி. ஒபயசேகர நியாயதுரந்தரராக (புறக்டர்) இருந்தவர். உல்லாசமாக வாழ்க்கை நடத்தக்கூடிய அவருக்கு ‘உயர் குடிப் பிறப்பு’டைய கனவான் என்ற தகுதி இருந்தது. றைட் எழுதிய நூலில் (1907: 521) அவர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையின் தென்பகுதியின் பழமையும் புகழும் வாய்ந்த குடும்பம் ஒன்றின் குலக்கொழுந்து இவர். இக்குடும்பத்தின் உறுப்பினர்கள் உயர்பதவிகளை வகித்து வந்தவர்கள். சுதேச சமூகத்தின் தலைவர்களாக தலைமுறை தலைமுறையாக இருந்து வந்தவர்கள். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் இவரது பொழுது போக்கு. இலங்கையின் பல பாகங்களிலும் இவருக்கு பெருந்தோட்டங்களும், காணிகளும் உள்ளன. நகரத்தில் இவருக்கு ‘ஹில் காஸ்ரில்’ (Hill Castle) என்ற பெயரில் ஒரு பிரபலமான் வாசஸ்தலம் இருக்கிறது. பதுளையில் இவருக்கு நாட்டுப்புற உறைவிடம் ஒன்று உள்ளது. அது உண்மையில் பழைய நிலமானியக் கனவான் ஒருவரின் மாளிகை என்றே கூறப்படத்தக்கது.”

ஜேம்ஸ் பிரிஸ் உடைய உயர் தகைமைகள் கவனிப்பைப் பெறவில்லை. 1905 ஆம் ஆண்டில் எஸ்.சி. ஒபயசேகர நியமிக்கப்பட்டார். அத்தோடு 1908 இலும் அவரது நியமனம் நீடிக்கப்பட்டது. ‘பழைய நிலமானியக் கனவான் ஒபயசேகர 1910 வரை கரைநாட்டுச் சிங்களவர்களின் பிரதிநிதியாகத் தொடர்ந்து பதவி வகித்தார். அது மட்டுமல்லாமல் 1911-12 காலத்தில் சட்டசபை சீர்திருத்தி அமைக்கப்பட்டபோதும் அவரது நியமனம் தொடர்ந்தது. அவர் 1917 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பதவி வகித்தார். தனது குடும்பத்தையும் முதலாளித்துவத்தின் பழமைவாதப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக எஸ்.சி. ஒபயசேகர 17 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தார்.

இலங்கையில் இக்காலத்தில் சீர்திருத்தக்குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் சட்டசபையில் சிங்களப் பிரதிநிதித்துவத்திற்கான உரிமையை ஒரு குடும்பத்திற்கே வழங்கிய அரசு அதை நீடிக்க விரும்பியதே அல்லாமல் இக்குரல்களிற்கு செவி சாய்க்கவில்லை. மஹா முதலியார் பரம்பரைக் குழுமத்தின் சுய அடையாளம், தாம் உயர்குடிப் பிறப்பாளர் என்பதாக இருந்ததென்பதும் முக்கியமானது. ஒபயசேகர குடும்பக் குழுமம் இலங்கைச் சமூகத்தின் மேதகு குடியாகவே தம்மைக் கருதியது. சாதியால், அந்தஸ்தால், பட்டங்களால், ராச கௌரவத்தால், கணிப்பால், நில உடைமையால், மாளிகை வீடுகளின் உடைமையால், நகரச் சொத்துகளால், மலிவானதும் கூலி வழங்கத் தேவையற்றதுமான வீட்டு வேலைக்காரர் பட்டாளத்தை வைத்திருப்பதால், தம் குடியினர் ஒப்பாரும் மிக்காரும் அற்றவர்கள் என்று இவர்கள் கருதினர். ஆகையால் சிங்களவருக்கான சட்டசபைப் பிரதிநிதித்துவம் தமக்கே உரியது என்றும் எண்ணலாயினர். பணக்காரக் கராவக்களும், கொய்கம சாதிக்குள் இருந்து முளைத்த இதுவரை அறியப்படாதவர்களான பெருந்தோட்ட முதலாளிகளும், குத்தகைக்காரர்களும் முன்னரங்குக்கு வந்ததும் நிலைமை மாறலாயிற்று. குணரட்ண பின்வருமாறு எழுதுகிறார்:

“சட்டசபை விவாதத்தின்போது சேர் கிறிஸ்ரோபல் ஒபயசேகர, இவர்கள் வெறும் அநாமதேயங்கள். அறியப்பட்டவர்களாக ஆவதற்குத் துடிக்கிறார்கள் என்ற சொல்லம்பைச் சடாரென வீசினார். ‘அறியப்பட்டவர்கள்’ என்றதன்மூலம் அவர் தன்னையும் தன் உறவினர்களையுமே கருத்தில் கொண்டார் (1986:17).”

“புதிய பணக்காரர் வகுப்பினர் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் பந்தியில் இரண்டு வரிசை பின்னுக்கு உட்கார்ந்துகொள்வதில் திருப்திப்பட்டுக் கொண்டவர்கள். இப்போது அவர்கள் முன்வரிசைக்கு முந்திக்கொள்ளும் துணிச்சல் கொண்டுள்ளார்கள்” (மேலது: லுடோவைக்) என்று லுடோவைக்கை மேற்கோள் காட்டும் குணரத்தின புதுப்பணக்காரர்களின் இச்செய்கை முதலியார் வகுப்புக்கு எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது என்றும் தொடர்ந்து எழுதுகிறார். மது ஒழிப்பு பிரசார இயக்கத்தில் முன்னின்ற சேனநாயக்காக்களையும், ‘முறைகேடான வழிகளில் தம் செல்வத்தைத் திரட்டிக்கொண்ட’ கராவ குத்தகைக்காரர்களையுமே குத்திக் காட்டுவதாகவே இது அமைந்தது (ஜயசேகர 1970: 212-13).

அரசியல் சீர்திருத்தமும் புதிய வர்க்கமும்

முதலியார்கள் குழுமத்தினர்தான் அறிவாளர் சமூகத்திற்குரிய பண்பட்ட இயல்புகள் இல்லாத ‘அநாமதேயங்கள்’ என்று புதுப்பணக்காரர்கள் கருதியதும், புதுப்பணக்காரர்கள் மத்தியில் இருந்து தோன்றிய ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் ‘தாரகைகள்’தான் உண்மையில் ‘அறியப்பட்டோர்’ என்று புதுப்பணக்காரர்கள் எண்ணியதும்தான் இந்த ‘அநாமதேயங்கள்’ என்ற சர்ச்சையின் நகைமுரண். புதிய பணக்காரர்களின் கோரிக்கைகள் தயவுதாட்சண்யமின்றி நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்தான், 1907 ஆம் ஆண்டில் அரசியல் சீர்திருத்தக்கோரிக்கை எழுந்தது. தமது பெரும்சிறப்புடைய தனிநபர்களிற்கு இடங்கொடுக்காமல், நிறுவனமாகிப் போய்விட்ட முதலியார் குடும்பங்களுக்கு அரசாங்கம் சலுகை காட்டிக்கொண்டிருந்த வேளையில் அரசியல் சீர்திருத்தத்திற்கான பரவலான ஆதரவை வேண்டிப் பிரசாரம் தொடங்கப்பட்டது. அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெற்ற பிரசாரத்தை சாதியடிப்படையில் கொவிகமச் சாதியினருக்கும் கராவச் சாதியினருக்கும் நடந்த விவாதமாகவும் போட்டியாகவும் சிலர் விளக்கம் தந்துள்ளனர். உண்மை யாதெனில், புதுப்பணக்காரர்களான சீர்திருத்தவாதிகளுக்குள் எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள்; எல்லா இனங்களையும் சேர்ந்தவர்களாகவும் இவர்கள் இருந்தனர். சீர்திருத்தத்தை எதிர்த்த பழமைவாதிகளுள்ளும் சமூகத்தின் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தோர் இருந்தனர். சீர்திருத்தவாதிகளின் பிரசாரம் ‘சிலோன் ஸ்ராண்டர்ட்’ என்ற பத்திரிகை வாயிலாக முதலில் தொடங்கப்பட்டது. இப்பத்திரிகை டி சொய்சா குடும்பம், என்.பி.டி. சில்வா, யோன் குளோவிஸ் டி சில்வா ஆகிய சாராயக்குத்தகை முதலாளிகளின் உடைமையாக இருந்தது. பின்னர் இதற்குப் பதிலாக ‘மோணிங் லீடர் (Morning Leader) என்ற பத்திரிகை சீர்திருத்தப் பிரசாரத்தைத் தொடர்ந்தது. இப்பத்திரிகையும் புதிய முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தது. இப்பத்திரிகை சமத்துவ உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை வலியுறுத்தித் தீவிரப்பிரசாரத்தில் இறங்கியது.

புதுப்பணக்காரர் என்ற புதிய வகுப்பினர் தமது பொருளாதார, அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக வேறு பல அமைப்புகளையும் உருவாக்கினர். செயற்பாடுகளை இழந்ததாய் இருந்த இலங்கைத் தேசிய கழகம் என்ற அமைப்பை ஜேம்ஸ் பீரிஸ் தலைமையில் புனரமைத்தனர். பிராந்தியங்களிலும் சீர்திருத்தம் கோரிய அமைப்புகள் உருவாகின. இக்காலத்தில் தான் சிலாபம் கழகம் (Chilaw Association) என்ற அமைப்பு உருவானது (இது கொறயா குடும்பத்துடன் தொடர்புடைய அமைப்பு). ஏனைய அமைப்புகள் குறித்தவகைப் பொருளாதார நலன்களின் அடிப்படையில் உருவானவை. 1905 இல் தொடங்கப்பட்ட காரீய வர்த்தகர் சம்மேளனம் (Plumbago Merchants Union) இவற்றுள் ஒன்று (இச்சம்மேளனம் இதற்கு முன்பிருந்த ‘பிளம்பாகோ டீலேர்ஸ் அசோசியேசன்’ என்பதைக் கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக ஆரம்பிக்கப்பட்டது). 1907 இல், இச்சம்மேளனத்தில் 82 காரீயச் சுரங்க உடைமையாளர்கள் அங்கத்தவர்களாய் இருந்தனர். இதன் தலைவராக எச். பஸ்ரியன் பெர்னாண்டோவும், உப தலைவராக ஆர்.ஏ. மிறாண்டோவும் பணியாற்றினர். சம்மேளனத்தின் முக்கிய உறுப்பினர்களாக அமடோரிஸ் மென்டிஸ், யாக்கோப் டி மெல், என்.டி.பி. சில்வா, யூ.டி.எஸ். குணசேகர, டபிள்யூ.ஏ. பெர்னாண்டோ, யோன் குளோவிஸ் டி சில்வா, எச். யோசப் பீரிஸ், யோன் கொத்தலாவல (மூத்தவர்), டொன் ஸ்பேட்டர் சேனநாயக்க, டி.டி. பெத்திரிஸ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் கராவ, கொவிகம, சலாகம, வகும்புர ஆகிய சாதிகளைச் சேர்ந்தோராவர் (றைட் 1907; 588,624). சுதேச பெருந்தோட்ட முதலாளிகளின் அமைப்பாக தாழ்நில உற்பத்திகளுக்கான கழகம் (Low Country Products Association) 1908 இல் தொடங்கப்பட்டது. இக்கழகத்தில் ஜேம்ஸ் பீரிஸ், எச்.ஜே.சி. பெரேரா, ஈ.ரி.டி. சம்பாயோ, ஹென்றி எல். டி மெல், என்.டி.பி. சில்வா, மார்கஸ் பெர்னாண்டோ, டொன் ஸ்பேட்டர் சேனநாயக்க என்போர் அங்கத்தவர்களாயிருந்தனர். இங்கும் கராவ, கொவிகம, துராவ, நவண்டன ஆகிய சாதிகளின் பிரதிநிதிகள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டதைக் காண்கிறோம். பல சாதிகளின் பிரதிநிதிகளான இவர்கள் தமது முதலீடுகளைப் பரவலாக்கிக் கொண்டுள்ளதையும் காண்கிறோம் (ஜயசேகர 1970: 149 மற்றும் 241-42).

பல்வேறு அமைப்புகளில் இருந்தும் மனுக்களும் விண்ணப்பங்களும் கிடைக்கத்தொடங்கியது (தாழ்நில உற்பத்திகள் கழகம், சிலாபம் கழகம், இலங்கைத் தேசிய கழகம் என்பன). தனிநபர்களான ஜேம்ஸ் பீரிஸ், எச்.ஜே. டி மெல், (இருவரும் கராவ சாதியினர்) எச்.ஜே.சி. பெரேரா (துராவ சாதி) ஆகியோரும் இவ்வாறான மனுக்களையும் விண்ணப்பங்களையும் அரசுக்கு அனுப்பினர். இவை முதலாளிகளான தோட்டச்சொந்தக்காரர், குத்தகைக்காரர், வர்த்தகர்கள், உயர்தொழில்களில் இருந்தோர் ஆகிய பலரதும் அபிலாசைகளைப் பிரதிபலிக்கலாயின. இது அரசியல் சீர்திருத்த இயக்கத்தில் புதியதொரு கட்டமாக அமைந்தது. முக்கிய சீர்திருத்தக் கோரிக்கைகளாவன: i) நிர்வாக சபைக்கு இரண்டு உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் (Unofficial) நியமிக்கப்பட வேண்டும் ii) இனக்குழுமத்தை அடிப்படையாகக்கொண்ட பிரதிநிதித்துவமுறை ஒழிக்கப்பட வேண்டும் iii) சட்டசபைக்கு பிரதிநிதிகளை ‘தேர்தல்’ மூலம் தெரிவு செய்ய வேண்டும். இத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் மத்தியதர வகுப்புக்கு உரியதாகவும் இருத்தல் வேண்டும். 

1907 ஆம் ஆண்டில் யாக்கோப் டி மெல் அவர்களின் மகனான எச்.ஜே. டி மெல் இனக்குழும அடிப்படையிலான பிரதிநிதித்துவம் பழமையானதும் தீங்கானதும் எனக் கண்டனம் செய்தார். சட்டசபையில் உத்தியோகச்சார்புடையவர்கள் பெரும்பான்மையாக இருக்கலாம். பிற உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களை தேர்தல்மூலம் தெரிவு செய்ய வேண்டும் என்றார் (மேலது 144). 1908 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பீரிஸ் இது பற்றி ஒரு ஆலோசனையை முன்வைத்தார். உத்தியோகத்தர்கள் 13 பேரும் உத்தியோகப்பற்றற்றோர் 12 பேரும் இருக்கலாம் என்றும், இப் 12 பேரில் 7 பேர் பிராந்திய அடிப்படையில் வாக்காளர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இக்கோரிக்கைகள் யாவும் மிதவாதப்போக்கை தெளிவாக எடுத்துக்காட்டுபவை. முதலாளித்துவ வகுப்பு, சுய ஆட்சியையோ, சர்வசன வாக்குரிமையையோ கேட்பதற்குத் தயாராக இருக்கவில்லை. இவ்வகுப்பு சட்டசபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட விடுப்பதற்கு தயாராக இருக்கவில்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. காலனித்துவ ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத மனப்பாங்கும், இலங்கையின் பழமைவாத சமூகப்பிரிவினரான ‘அறியப்பட்டோரின்’ (Somebodies) அகங்காரமும், பாசாங்குத்தனமும் முதலாளித்துவ வகுப்பின் புதிய பணக்கார வகுப்பிற்கு விரக்தியுணர்வை வளர்ப்பதாக இருந்ததையே இது எடுத்துக்காட்டுகிறது.

தமது கோரிக்கைகளை முன்வைத்து கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மிதவாதிகள் ஆதரிக்கவில்லை. இது வெளிப்படையானது. எச்.ஜே.சி. பெரேரா “இந்தியாவில் அண்மையில் நிகழ்ந்தது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களான கிளர்ச்சி, அமைதியின்மை என்பனவற்றை ஏற்படுத்தக்கூடாது” என்று கூறினார். புதிய முதலாளி வர்க்கம் இவ்வகையில் தனது வர்க்க உணர்வுகளையே வெளிப்படுத்தியது. சுதேசிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கைத்தொழில்களும் வர்த்தக முயற்சிகளும் விரிவடைந்திருப்பதால், ‘முற்போக்குடைய அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களைச் செய்வதற்குரிய காலம்’ கனிந்துள்ளது என்று இவ்வகுப்பினர் கருதினர் (இலங்கை தேசிய கழகத்தின் கைந்நூல் 1929: 15 மற்றும் 22). பெரேரா இந்தியாவின் ‘இராஜதுரோக’ நடவடிக்கையாளர் போன்றவர் அல்லர். இருப்பினும் அவர் கடுமையான சொற்களில் தன் கருத்துகளை 1909 ஆம் ஆண்டில் தெளிவாகக் கூறினார். பழைய இலங்கை மனப்பாங்கினரின் பழமைவாதம், பொறாமையுணர்வு, சாதியை முக்கியப்படுத்துதல், சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தவறு இழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை, பிறழ்வுப் போக்குடைய இனக்காழ்ப்பு ஆகிய இயல்புகளை அவர் சாடினார் (ஜயசேகர 1970: 158). அரசியல் சீர்திருத்தத்திற்கான பிரசார இயக்கத்திற்கு கவர்னர் சாதகமான பதிற்குறி எதனையும் காட்டவில்லை. புதியபணக்காரர்களான ‘கராவக்களின்’ பேராசைகளையே இவை வெளிப்படுத்துவன என்று அவர் குறிப்பிட்டார். பிரடரிக் பவுஸ் (Frederick Bowes) என்ற பிரித்தானிய அதிகாரி இப்பிரசார இயக்கம் ‘பணம் படைத்த தாழ்சாதிக் குழுக்களின் பொறாமையின் வெளிப்பாடு’ என்றும் ‘சட்டசபை ஆசனங்களை ஒரு பீரிஸிற்கும் ஒரு பெர்னாண்டோவுக்கும் கொடுத்துவிட்டால்போதும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசியல் சீர்திருத்தம் பற்றிய பேச்சு இருக்காது’ என்றும் கூறினார் (மேலது: 164).

1911-12 காலத்தின் குறூமக்கலம் அரசியல் யாப்புத் திருத்தம் சில அற்பசலுகைகளை வழங்கியது. மிதவாதிகளின் கோரிக்கைகள் ‘அப்போது நிராகரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு கொதிப்படைந்தவர்கள் கண்டனம் செய்தனர். புதிய சட்டசபை, உத்தியோகத்தர்களே பெரும்பான்மையினராக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. 11 உத்தியோகச்சார்புடையவர்களும், 10 உத்தியோகப்பற்றற்றவர்களும் இச்சட்டசபையில் இருப்பர் என்றும், உத்தியோகப்பற்றற்றவர்கள் 10 பேரில் 7 பேர் வெவ்வேறு இனக்குழுமங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நியமிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டது. 4 பேர் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதான வாக்குரிமையின்படி தெரிவு செய்யப்படவிருந்தனர். இவ்வாறு தெரிவு செய்யப்படுவோரில் ஐரோப்பியர் இருவர், பறங்கியர் ஒருவர், ‘படித்த இலங்கையர்’ ஒருவர் என்றவகையில் இனக்குழுக்களின் பிரதிநிதிகள் இருப்பர் என்றும் கூறப்பட்டது. சட்டசபையில் சீர்திருத்தம் பற்றிய விவாதம் முதலாளி வகுப்புக்குள் இருந்த இரு பிரிவினர் தமக்குள் மோதிக்கொள்வதற்கான சந்தர்ப்பமாக அமைந்தது. எஸ்.சி. ஒபயசேகர சீர்திருத்த ஆலோசனைகளை எதிர்த்துப்பேசினார். தேர்தலின்மூலம் சிலரைத் தெரிவு செய்வதான சலுகையை லண்டனில் உள்ள காலனிகளுக்கான அலுவலகமே வழங்க முன்வந்த வேளையில் எஸ்.சி. ஒபயசேகர அதனைக்கூட எதிர்த்தார். பிரித்தானியர்களான இலங்கை உத்தியோகத்தர்களும், எல்லா இனக்குழுமங்களைச் சேர்ந்த பழமைவாதிகளும் ஒபயசேகரவின் கருத்தை ஏற்கவில்லை. சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் ஒபயசேகர பழமைவாதக் கண்ணோட்டத்தை வெளியிட்டார். நாடு தேர்தல்மூலமான தெரிவுக்கு ‘இன்னும் பக்குவப்படவில்லை’ என்றார்.

சில அமைப்புகளையும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில கபடம்மிக்க நபர்களையும் கொண்டதும், தமது தீய நோக்கங்களை அடைவதற்காக செயற்படுவதுமான இந்த இயக்கம் பற்றி இராஜாங்கச் செயலாளருக்குச் சரியாக எடுத்துக்கூறப்பட்டிருந்தால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கமாட்டார். இந்தியாவில் நடந்ததுபோன்று இங்கேயும் அமைதியின்மையும் பிரச்சினையும் தோன்றும் என்று அவரை நம்பச் செய்துள்ளார்கள். அப்படி ஒன்றும் இங்கே நிகழப்போவதில்லை. இலங்கையரைப் போன்று விசுவாசம்மிக்க மனிதர்களைக் கொண்ட இடம் உலகில் எங்குமே கிடையாது. இலங்கையர்கள் தேர்தல் முறையை ஆதரிக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பான்மையான சிங்களவர்களும் பிற இலங்கையர்களும் அதனை ஒரு வரப்பிரசாதம் என்று நினைக்கவில்லை. மாறாகப் பேராபத்து என்றே கருதுகிறார்கள் (ஹன்சார்ட், 28 செப். 1910: 312-13).

இவ்விதமாக பழமைவாதக் கண்ணோட்டத்தை மிகத்தெளிவாக ஒபயசேகர எடுத்துக்கூறியது பலரையும் கொதிப்படையச் செய்தது. அப்போது பதில் சட்ட அதிபதி நாயகமாக இருந்த வால்டர் பெரேரா, சீர்திருத்தத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஒருவர். அவர் ஒபயசேகரவிற்கு எதிராகக் காரசாரமான கண்டனத்தைத் தொடுத்தார். “ஒபயசேகரவின் மனப்பாங்கு, தேர்தல்முறையை உடனடியாகவே அறிமுகப்படுத்த வேண்டும், நியமனமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்குப் பலம் சேர்க்கும் ஒன்றாகவே உள்ளது” என்று குறிப்பிட்டார். சட்டசபையில் இந்த விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 11 பேர் தேர்தல்முறைக்கு ஆதரவாகவும் 5 பேர் எதிராகவும் வாக்களித்தனர். எதிராக வாக்களித்தோர்: ஐரோப்பியர் – 3 பேர், முஸ்லிம் உறுப்பினர் அப்துல் ரகுமான் மற்றும் ஒபயசேகர ஆகியோராவர்.

படித்த இலங்கையர் ஆசனத்திற்கான முதலாவது தேர்தல் 1911 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தல் முதலாளித்துவ வர்க்கத்தின் இரு பிரிவினர்களுக்கும் இடையிலான மோதலை மீண்டும் புதுப்பிப்பதற்கான சந்தர்ப்பமாக அமைந்தது. இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையோர் மிகக்குறைந்த தொகையினராக (2,957) இருந்தனர். ஆங்கிலம் கற்ற இச்சிறுதொகை வாக்காளர்களுக்கு வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டது. பொ. இராமநாதன், மார்கஸ் பெர்னாண்டோ என்ற இரு வேட்பாளர்களே களத்தில் நின்றனர். பெர்னாண்டோ ‘சுய முயற்சியால் முன்னேறிய மனிதர்’ (Self made man) என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். பரீட்சைகளில் திறமையைக் காட்டிச் சாதனை படைத்தும், பெரிய இடத்து விவாக சம்பந்தம் மூலமும் பொருளாதார – சமூக அந்தஸ்தில் மிக விரைவாக உயர்ந்து சென்றவர். 1864 ஆம் ஆண்டில் அன்றூ பெர்னாண்டோ என்பவரின் மகனாகப் பிறந்த மார்க்கஸ் பெர்னாண்டோ சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பாடசாலைக் கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் ‘அதீத விவேகம் மிக்கவர், இவ்வாறான சாதனைகளைப் படைத்த இலங்கையர் வேறு யாருமில்லை’ என்ற புகழ்ச்சிக்குரியதாக இருந்தது. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரிக்குப் புலமைப்பரிசில் பெற்று, 1883 ஆண்டில் அங்கு சென்ற பெர்னாண்டோ 1888 இல் எம்.பி. (M.B) பட்டத்தையும் 1889 இல் எம்.டி. (M.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1891 இல் இலங்கை திரும்பியதும் இலங்கை மருத்துவக் கல்லூரியின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கொழும்புப் பொதுமருத்துவமனையின் மருத்துவராக நியமிக்கப்பட்டார். 1891 ஆம் ஆண்டிலேயே இவரின் திருமணமும் நடைபெற்றது. சாள்ஸ் டி சொய்சாவின் மகள் மேரி பிரான்சிஸை பெர்னாண்டோ மணம் முடித்தார் (இதே ஆண்டில் இவருக்கு முன்பதாக இவரது தமையனார் சி.எம். பெர்னாண்டோ, சாள்ஸ் டி சொய்சாவின் இன்னொரு மகளை திருமணம் செய்தார்). மார்கஸ் பெர்னாண்டோவுக்கு ரூ 200,000 காசும் பிற சொத்துகளும் சீதனமாகக் கிடைத்தது. பெர்னாண்டோ பின்னர் பக்டீரியா ஆராய்ச்சி நிலையத்தின் (Bacteriological Institute) பணிப்பாளராக நியமனம் பெற்றார். இந்த நிறுவனம் டி சொய்சா குடும்பம் வழங்கிய நன்கொடைகொண்டு ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது (றைட், 1907:549-50). அக்காலத்தில் பெரிய இடத்து திருமணப் பந்தங்களைச் செய்து கொண்ட பிற உயர்தொழில் உத்தியோகத்தர்கள் போன்றே பெர்னாண்டோவும் பெருந்தோட்ட உடைமையாளரானார். உயர் தொழில்தகைமைகள், நில உடைமை, முக்கிய குடும்பங்களோடு உறவுமுறைத் தொடர்புகள் என்ற தகுதிகளைக் கொண்டிருந்த பெர்னாண்டோவைப் புதிய பணக்காரர் குழுமம் தமது வேட்பாளராகத் தேர்ந்து கொண்டது.

1911 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரான பொ. இராமநாதன் சிங்களவரான மார்கஸ் பெர்னாண்டோவைத் தோற்கடித்தார். மேலோட்டமான பார்வையில் இந்நிகழ்வு படித்த சிங்களவர்களின் முற்போக்குச் சிந்தனையைக் காட்டுவதாகத் தோற்றலாம். ஒரு சிங்களவருக்குப் பதிலாக தமிழர் ஒருவருக்கு அவர்கள் வாக்களித்ததன் மர்மம் யாது? இந்த புதிரை விடுவிக்கும் விளக்கம் ஒன்று அடிக்கடி கூறப்பட்டு வந்துள்ளது. சிங்கள கொவிகம சாதியினருக்கும் கராவ சாதியினருக்கும் இடையிலான சாதிப்போட்டியின் விளைவே இதுவெனவும், கொவிகம சிங்களவர்கள், சிங்கள கராவ ஒருவரைவிட தமிழ் வேளாளர் ஒருவரைத் தேர்ந்து கொள்வதற்கு விரும்பினர் (வேளாளர், கொவிகமவுக்குச் சமதையான தமிழ்ச் சாதி) என்பதாக இவ்விளக்கம் அமைந்தது. இந்த விளக்கத்தின்படி கொவிகம – கராவ என்ற சாதிகளிடையே கசப்புணர்வு தீவிரமாக இருந்தது. இத்தேர்தல் போட்டி பற்றிக் கருத்துரைக்கும் கே.எம்.டி. சில்வா “விறுவிறுப்பும் உயிர்ப்பும் கொண்டதான மிக வித்தியாசமான தேர்தல், சாதிப்போட்டி உச்சத்திற்குச் சென்றது (1973b:387)” என்று குறிப்பிடுகிறார்.

கொவிகம சாதியினரில் பலர் கராவமீது விரோதம் பாராட்டினர் என்பது உண்மைதான். ஆயினும் 1911 ஆம் ஆண்டுத் தேர்தல் முழுமையாகச் சாதியடிப்படையிலான போட்டியாக இருந்தது என்று கூறுவது தவறு. வேட்பாளர் இருவருக்கும் அரசியல் அடிப்படையில் பல வேறுபாடுகள் இருந்தன. இராமநாதன் இளமைக்காலத்தில் முற்போக்கான விடயங்களுக்காக குரல் கொடுத்தவர். இத்தேர்தல் நடந்தவேளை அவருக்கு 60 வயது ஆகியிருந்தது. அவர் ஒரு பழமைவாத அரசியல்வாதி என்பது நாடறிந்த தொன்றாகியிருந்தது. இதனால் அவர் எல்லாச் சமூகத்திலும் இருந்த பழமைவாதிகளுக்கு ஏற்புடைய ஒருவராக இருந்தார். இராமநாதனின் கொள்கைப் பிரகடனத்தில் எவ்விதமான தீவிர முற்போக்கு கருத்துகளும் இடம்பெறவில்லை. அவர் வரிச்சீர்திருத்தம், கிராமத் தலைமைக்காரர்களுக்குக் கூடிய சம்பளம், நாட்டில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் செய்யப்படுதல் ஆகிய விடயங்களை மட்டும் குறிப்பிட்டிருந்தார். பெர்னாண்டோவின் கொள்கைப் பிரகடனமும் தீவிரத்தன்மையைக் கொண்டிராதபோதும், முதலாளித்துவ வகுப்பின் தேவைகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அவர் ரயில் சேவைகளை விஸ்தரித்தல் பற்றியும், கைத்தொழில் கல்விக்கான வசதிகளை வழங்குதல் பற்றியும் குறிப்பிட்டார். தாம் கல்வியறிவால் மேம்பட்ட அறிவாளி வகுப்பைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் ‘ஐக்கியப்பட்ட இலங்கைச் சமூகம், அரசியல் விடுதலை ஆகிய மக்களின் அபிலாசைகளையும் நம்பிக்கைகளையும்’ பிரதிநிதித்துவம் செய்பவன் என்றும் தன்னைக் குறிப்பிட்டார் (ஜயசேகர 1970: 181-82). இராமநாதனுக்கு தேர்தலில் 1645 வாக்குகள் கிடைத்தன. அவர் 664 மேலதிக வாக்குகளைப்பெற்று சட்டசபையின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார்.

1911 ஆம் ஆண்டுத் தேர்தல் சிங்களவர், தமிழர் என்ற இரு இனத்தவர்களிடையேயும் இருந்த பழமைவாதிகள் இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டிருந்ததைக் காட்டுகிறது. இதன்பொருள் சிங்கள கொவிகம, சிங்களவரான கராவவைவிட தமிழ் வேளாளரை விரும்பி ஏற்றனர் என்பதன்று. பெரும்பாலான சிங்களப் பழமைவாதிகள் சீர்திருத்தவாதியான சிங்களவர் ஒருவரைவிடப் பழமைவாதியான தமிழர் ஒருவரையே விரும்பினர் என்பதே இத்தேர்தல் முடிவு எடுத்துக்கூறும் உண்மையாகும். அத்தோடு கண்டியின் உயர்குடி நிலப்பிரபுக்களும் இராமநாதனுக்கே தமது ஆதரவை வழங்கினர். இந்நிலப்பிரபுத்துவக் குடும்பங்களுக்கு சீர்திருத்தவாதியான பெர்னாண்டோவைவிட பழமைவாதியான இராமநாதனின் கருத்துகள் ஏற்கத்தக்கனவாய் இருந்தன. பௌத்தர்களும் பௌத்தர்களது நலன்களுக்காகவும் வாதாடிய இந்துவான இராமநாதனை ஆதரித்ததும், கிறிஸ்தவரான மார்க்கஸ் பெர்னாண்டோவை நிராகரித்ததும் இயல்பானதே. தமிழ் மத்தியதர வகுப்பும் இராமநாதனையே ஆதரித்தது. யாழ்ப்பாணத்தின் 440 வாக்குகளில் 410 வாக்குகள் இராமநாதனுக்குக் கிடைத்தன (வைத்திலிங்கம் 1977: 584).

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோர் மத்தியில் இருந்த பழமைவாதிகள் தமது வர்க்க நலன்களோடு ஒத்துப்போகக்கூடிய ஒருவரையே விரும்பினர். அத்தகையவர் இன்னொரு இனத்தை அல்லது சாதியைச் சேர்ந்தவராய் உள்ளார் என்பது இரண்டாம் பட்சமான காரணமாகும். பெர்னாண்டோ முதலாளித்துவ வகுப்பின் உயர்தொழில் பிரிவினர்களின் ஆதரவைப் பெற்றார். உயர்தொழில்களில் இருந்த கொவிகம சாதியினரும் பிறசாதியினரும் இராமநாதனைவிட பெர்னாண்டோ முற்போக்கான வேட்பாளர் என்பதைக் கண்டனர். ஈ.ஜி. ஜயவர்த்தன, டாக்டர் சி.ஏ. ஹேவவித்தாரண, எட்மண்ட் ஹேவவித்தாரண, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, டி.டி. பெட்ரிஸ், எச்.ஜே.சி. பெரேரா ஆகியோர் பெர்னாண்டோவை ஆதரித்தனர். இறுதியாகக் குறிப்பிட்ட எச்.ஜே.சி. பெரேரா அக்காலத்தின் தலைசிறந்த நியாயத்துரந்தரராவார்; 1908 ஆம் ஆண்டில் அவர் சீர்திருத்தப் பிரசார இயக்கத்தை நடத்துவதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர். “பெர்னாண்டோ முன்னேற்றம், விடுதலை ஆகியவற்றை வேண்டி நிற்கும் சக்திகளை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்றும், கல்விபெற்ற வாக்காளர்கள் கீழைத்தேயத்தின் சிந்தனை முறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்கள்” என்றும் பெரேரா கூறினார் (ஜயசேகர 1970: 181-82).

புதுப்பணக்காரர்களான முதலாளி வகுப்பினர் தமக்குச் சட்டசபையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று தொடர்ச்சியாக விடுத்துவந்த கோரிக்கைக்கு 1912 ஆம் ஆண்டிலேயே பயன் கிடைத்தது. அவ்வாண்டில் சாள்ஸ் டி சொய்சாவின் இரண்டாவது மகன் ஏ.ஜே.ஆர்.டி. சொய்சா கரைநாட்டுச் சிங்களவர்களிற்கான இண்டாவது பிரதிநிதியாக நியமனம் பெற்றார். முதலாவது பிரதிநிதியாக எஸ்.சி. ஒபயசேகர நியமனம் பெற்றார். பிரித்தானிய ஆட்சியாளர்கள் இவ்விதம் புதுப்பணக்காரர்களான முதலாளி வகுப்பின் இருப்பை ஏற்று அங்கீகரித்து அவர்களுக்கென ஒரு பிரதிநிதியை நியமனம் செய்தபோது, ஆட்சியாளர்கள் அவ்வகுப்பின் திறமை வாய்ந்த அரசியல் பிரசாரகர்களையும் ஆளுமைமிக்க நபர்களையும் ஒதுக்கிவிட்டனர் என்பது முக்கிய கவனத்திற்குரியது. ஜேம்ஸ் பீரிஸ், மார்கஸ் பெர்னாண்டோ போன்றவர்களை ஒதுக்கிவிட்டு அவர்களிலும் குறைந்த தகைமையை உடையவரான ஏ.ஜே.ஆர்.டி. சொய்சாவை அரசாங்கம் சட்டசபைக்கு நியமித்தது. 1869 இல் பிறந்தவரான ஏ.ஜே.ஆர்.டி. சொய்சா கொழும்பிலும், இங்கிலாந்திலும் கல்வியைத் தொடர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரினிட்டி ஹாலில் இரு வருடம் படித்த சொய்சா தமது பல்கலைக்கழகக் கல்வியைப் பூர்த்திசெய்யாமல் 1890 இல் அவரது தந்தையார் இறந்தபோது நாடு திரும்பினார். குடும்பத்தின் பேரளவு சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். லிண்டா முலாகே டேவிட் டி சில்வா என்னும் பணக்கார சாராயக் குத்தகைக்காரரின் மகளை விவாகம் செய்தார். 1907 ஆம் ஆண்டில் அவருக்கு 3000 ஏக்கர் தேயிலை, ரப்பர், தெங்குத் தோட்டங்கள் இருந்தன (றைட் 1907: 543). இவ்வாறாக ஏ.ஜே.ஆர்.டி. சில்வா சாராயக் குத்தகையாளர்கள், பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள், சொத்துடைமையாளர்கள் என்ற வகையினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருந்தார். அவர் ஆட்சியாளர்களின் கண்ணில் ஆபத்தான பேர்வழியாகத் தோற்றவில்லை என்பது முக்கியம். சொய்சா ஏன் நியமிக்கப்பட்டார் என்பதற்குரிய அரசாங்கத்தரப்புக் குறிப்பின்படி ‘அவர் எந்தவொரு விடயத்தையும் தர்க்கமுறையில் எடுத்துச்சொல்ல இயலாதவர்’ என்று கூறப்பட்டது. இது ஆட்சியாளர் பார்வையில் நல்ல தகுதியாக மதிக்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் ஏ.ஜே.ஆர்.டி. சொய்சாவின் சகோதரர் எல்.டபிள்யூ.ஏ. (வில்பிரட்) டி சொய்சா சிங்களவர் பிரதிநிதியாக சகோதரரின் இடத்திற்கு நியமிக்கப்பட்டார். 1884 இல் பிறந்த வில்பிரட் சொய்சா கொழும்பிலும், இங்கிலாந்தின் கிளவ் செஸ்டர் றோயல் விவசாயக்கல்லூரியிலும் கல்விகற்ற பின் நாடு திரும்பி குடும்பச் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். இவரும் தன் தமையனைப் போன்றே சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நபராக இருந்தார்.

1917 ஆம் ஆண்டில்தான் டாக்டர் மார்கஸ் பெர்னாண்டோவிற்கு சட்ட சபை நியமனம் கிடைத்தது. அவ்வாண்டில் கரைநாட்டுச் சிங்களவருக்கான பிரதிநிதியாக முதன்முதல் நியமனம் பெற்றார். அதன்பின் 1920-1925 வரை உத்தியோகப்பற்றற்ற நியமன உறுப்பினராக மாற்றியமைக்கப்பட்ட புதிய சட்டசபையில் நியமனம் பெற்றார். சட்டசபை உறுப்பினரான இக்காலத்தில் மார்கஸ் பெர்னாண்டோ முற்போக்கு சீர்திருத்தவாதி என்ற நிலையில் இருந்து விலகி வெகுதூரம் சென்றிருந்தார். அவரது அரசியல் எதிரியாக முன்னர் இருந்த பொ. இராமநாதனுடன் கூட்டுச்சேர்ந்து கொண்டு 1919 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸை ஆதரிப்பதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். 1921 இல் காங்கிரஸின் கொள்கைகள் மாறியிருந்தன. ‘பழமைவாதக் கராவ தலைவர்களான மார்கஸ் பெர்னாண்டோ போன்றவர்களே அதன் கூட்டங்களில் பங்குபற்றும் அளவுக்கு’ காங்கிரஸ் மாறிவிட்டது (மேலது 484 மற்றும் 497). 1920க்களில் பெர்னாண்டோவுக்கு சேர் பட்டம் கிடைத்தது. அவர் தீவிர வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக ஆகினார். சீர்திருத்தங்களையும், சர்வசன வாக்குரிமையையும் எதிர்ப்பதற்கு உருவாக்கப்பட்ட யூனியனிஸ்ட் கட்சியின் (Unionist Party) உபதலைவராக அவர் செயற்பட்டார். இக்கட்சியின் தலைவராக மஹா முதலியார் சேர். சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இருந்தார். மஹா முதலியார் குடும்பத்தின் ஏனைய முக்கியஸ்தர்களான பீலிக்ஸ் டயஸ், வெஸ்லி டி சேரம், டொனல்ட் ஒபயசேகரம் என்போரும் பழமைவாதிகளான அப்துல் ரகுமான், கேட் முதலியார், ஏ.ஈ. ராஜபக்ச ஆகியோரும் யூனியனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். ‘காங்கிரஸின் கருத்துகளோடு உடன்பாடில்லாத பலம்மிக்க அரசியல் சிந்தனைக்கூடம் ஒன்று இந்த நாட்டில் உள்ளது’ (பண்டாரநாயக்க 1929: 290) என்பதை அரசியல் சீர்திருத்தம் பற்றி ஆராய வந்திருந்த டொனமூர் ஆணைக்குழுவினருக்கு எடுத்துக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது (பண்டாரநாயக்க 1929: 290).

ஜேம்ஸ் பீரிஸின் சரித்திரமும் ஏறக்குறைய மார்கஸ் பெர்னாண்டோவுடையதைப் போன்றே அமைந்தது. அவரும் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் பேசியது கிடையாது; மிதவாத சீர்திருத்தங்களையே கேட்டார். முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில், இலங்கை தேசிய கழகத்தின் தலைவராக இவர் இருந்தார். அவர் அக்காலத்தில் சீர்திருத்தக் கோரிக்கைகளை கைவிடுவதற்கும் யுத்தம் முடியும் வரை இப்பிரச்சினையை ஒத்திப்போடுவதற்கும் சம்மதித்தார். பிரித்தானிய அரசின்மீது தான் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தும் முகமாகவே இவ்வாறு செய்தார் (ஜயசேகர 1970: 450-1). மனிங் சீர்திருத்தங்களின்படியான புதிய சட்டசபை 1920 இல் அமைக்கப்பட்டபோது, அச்சபையில் 14 உத்தியோகத்தர்களுக்கும் 23 உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களுக்கும் இடம் கிடைத்தது. ஜேம்ஸ் பீரிஸ் கொழும்பு நகரத்தின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு, சட்டசபையில் தொடர்ந்து பதவி வகித்தார். அவ்வாண்டில் அவருக்கு சேர் பட்டம் கிடைத்தது. அப்பட்டம் கிடைத்தமையை அவர் பெரும்பேறாகக் கருதினார் போலும்; லண்டனில் உள்ள கொலிஜ் ஒவ் ஹெரல்ரிக்கு விண்ணப்பித்து பிரபுக்களுக்குரிய படை அணிகலன்களை அணிந்துகொள்ள விண்ணப்பித்தார். 1913 இல் ஜேம்ஸ் பீரிஸ் ‘நிலப்பிரபுத்துவத்தின் சரிவு’ பற்றிப் பேசியவர் (கெபிள் மற்றும் சூரியசேன 1950:82, ஜயசேகர 1970:425). இறுதிக்காலத்தில் பீரிஸ் மிகுந்த பழமைவாதியாக மாறினார். அவர் சர்வசன வாக்குரிமைக்கு எதிராகப் பேசினார். இலங்கைத் தேசிய காங்கிரஸின் அரசியல் சீர்திருத்தச் சிபார்சுகளை ஏற்றுக்கொள்ளாத ஜேம்ஸ் பீரிஸ் அவ்வமைப்பிலிருந்து விலகினார் (கெபிள் மற்றும் சூரியசேன 1950:88). கூடிய அளவிலான சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜேம்ஸ் பீரிஸ் பின்வருமாறு கூறினார்:

“நாடு சுயாட்சிக்கு இன்னும் பக்குவப்படவில்லை. பொதுத்திணைக்களங்களின் பொறுப்பையும் நாட்டின் பொதுவான நிர்வாகத்தினையும் ஒப்படைக்கக்கூடிய பயிற்சிபெற்ற தகுதியுடைய ஆட்களின் குழு இந்நாட்டில் உருவாகவில்லை (மேலது).”

சமத்துவம், முன்னேற்றம், சட்டசபைச் சீர்திருத்தம், வாக்களிக்கும் உரிமையைப் பரவலாக்கல் ஆகிய விடயங்களின் முன்னணிப் பிரசாரகர்கள் என்று சொல்லக்கூடியவர்களாய் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் விளங்கிய பெருமக்கள் இருவர் (மார்கஸ் பெர்னாண்டோ, ஜேம்ஸ் பீரிஸ்) பழமைவாதிகளின் பக்கத்தில் சேர்ந்துகொண்டு சுயாட்சி, சர்வசன வாக்குரிமை ஆகியவற்றை எதிர்ப்பவர்களாக விரைவில் மாறினர் என்பது தெளிவாகிறது. 1920களின் பிற்பகுதியில் புதுப்பணக்காரர்களதும் பழைய பணக்காரர்களான முதலியார் குழுமத்தினதும் அடிப்படை நலன்கள் ஒன்றுபடுவதையும் வேறுபாடுகள் மறைவதையும் காண்கிறோம். வடிகட்டிய பழமைவாதிகளின் முகாமுக்குள் மிதவாத சீர்திருத்தவாதிகள் இக்காலத்தில் புகுந்துகொள்வதையும் காண்கிறோம். 1920களின் பின்னர் முன்னைய காலகட்டத்தின் அரசியல் முரண்பாடுகள் முடிவுக்கு வருவதையும், வர்க்க நலன்கள் மேலோங்கி முரண்பாடுகள் உள்ளடங்கிப்போவதையும் காண்கிறோம். இக்காரணத்தினால் முதலாளி வர்க்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் சட்டசபையில் இடம் பிடித்துக்கொண்டனர். 1931 இல் சர்வசன வாக்குரிமை கிடைத்த பின்னரும் முதலாளித்துவ வகுப்பின் பிரதிநிதிகளே சட்டசபையை ஆக்கிரமித்தனர்.  

The post காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 2 appeared first on Ezhuna | எழுநா.

போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும்

தொடக்கக் குறிப்புகள்

இலங்கையில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. போருக்குப் பிந்தைய இக்காலப்பகுதியில் தமிழ்ச்சமூகம் எதிர்நோக்கிய முக்கிய சவால் அறம் பற்றியது. அது அரசியலில், ஆக்க இலக்கியத்தில், பொருளாதாரத்தில், அன்றாட சமூக அசைவியக்கத்தில் என அனைத்திலும் தாக்கம் செலுத்திய ஒன்றாக – இன்னும் சரியாகச் சொல்வதாயின் விமர்சனத்திற்குரியதாக – இருந்து வந்திருக்கிறது. ஒருவருக்கு அறமாகத் தெரிகின்ற ஒன்று இன்னொருவருக்கு அறமாகத் தெரிவதில்லை. ஒருவர் அறமற்றதாகக் கருதும் ஒரு செயலை இன்னொருவர் அறம் என்ற வியாக்கியானத்தோடு நியாயப்படுத்துகிறார். இதுவே போருக்குப் பிந்தைய கடந்தகால அனுபவமாகும்.

நாட்டின் வடக்குக் கிழக்கில் போருக்குப் பிந்தைய ஒன்றரைத் தசாப்தகாலத்தில் மேற்கொண்ட பல்வேறு களஆய்வுகளில் பல்வேறு தரப்பினர் பல்வேறு சூழ்நிலைகளில் அறம் என்கிற வினாவைத் தொடர்ச்சியாக எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதில் பெரும்பான்மையானவை அரசியல் அறம் சார்ந்த கேள்விகள். ஆனாலும் அதற்குமப்பால் சமூகம்சார்ந்த, பொருளாதாரம்சார்ந்த அற நிலைப்பாடுகள், விழுமியங்கள், நெறிமுறைகள் குறித்த வினாக்கள், விசாரணைகள் மக்களிடமிருந்து எழுந்துள்ளன. ஆனால் அவை கவனத்திற்குரியனவாக அமையவில்லை. அக்கேள்விகளை, விசாரணைகளை இக்கட்டுரை கவனத்திற்கொள்கிறது.

இரண்டு கேள்விகளுடன் இதைத் தொடங்குவது பொருத்தம். போருக்குப் பிந்தைய சமூகங்களில் அறம்சார் சிக்கல்கள் ஏன் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகின்றன என்ற வினா முக்கியமானது. இரண்டாவது, அறம்சார் வேறுபட்ட வியாக்கியானங்கள் எவ்வாறு சமூகத்தின் மீள்எழுச்சியைப் பாதிக்கின்றன. இவ்விரண்டு வினாக்களும் சற்று விரிவான விளக்கத்தை வேண்டுவன.

போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் கடுமையான மோதல்களின் காலகட்டங்களிலிருந்து உருவாகின்றன; உடைந்த சமூகங்கள், சிதைந்த நம்பிக்கை மற்றும் நீதி மற்றும் ஒழுக்கம் பற்றிய முரண்பாடான கதைகளை விட்டுச்செல்கின்றன. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காரணிகளால் அறம் என்பது சிக்கலுக்குரியதாகிறது. இதற்கு அடிப்படையாக நான்கு காரணிகளை நாம் இனங்காணலாம்.

1. தார்மீகத் தெளிவின்மை மற்றும் அதிர்ச்சி: போர் பெரும்பாலும் சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்குகிறது; ஏனெனில் போர்க்காலங்களில் உயிர்வாழ்வது என்பது தனிநபர்களையும் குழுக்களையும் அமைதிக்கால நெறிமுறை விதிமுறைகளுக்கு முரணான செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, சியரா லியோன் உள்நாட்டுப் போரில் (1991–2002) குழந்தைப் போராளிகள் பாதிக்கப்பட்டவர்களாகவும் குற்றவாளிகளாகவும் இருந்தனர்; இது பொறுப்புக்கூறல் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளைச் சிக்கலாக்கியது. இலங்கை நிலவரத்தில் விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் போராளிகளாகப் பயன்படுத்தியமை, தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் அக அறச்சங்கடங்களை உருவாக்கியதால், போர் தார்மீகக் கோடுகளை மங்கச் செய்தது. அதே நேரத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை போன்ற அரசு அட்டூழியங்கள் அறம்சார் அவலத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துரைத்தன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு மற்றும் அரசாங்க வன்முறைக்கு இடையில் சிக்கிய தமிழ்ப் பொதுமக்கள், உயிர்வாழ்வினால் இயக்கப்படும் தார்மீக சமரசங்களை எதிர்கொண்டனர்; பொறுப்புக்கூறலைச் சிக்கலாக்கினர்.

2. போட்டியிடும் கதையாடல்கள்: வெவ்வேறு குழுக்கள் – பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பார்வையாளர்கள் – நீதி மற்றும் பொறுப்புக் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். நிறவெறிக்குப் பிந்தைய தென்னாபிரிக்காவில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் தண்டனை நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுடன் மறுசீரமைப்பு நீதியைச் சமநிலைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டது, மன்னிப்புக்கும் பழிவாங்கலுக்கும் இடையிலான பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்குள், விடுதலைப் புலிகள் மீதான மாறுபட்ட கருத்துகள் – சிலரால் சுதந்திரப் போராளிகளாகவும், மற்றவர்களால் ஒடுக்குமுறையாளர்களாகவும் – அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. வெளிப்புறமாக, சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசின் ‘வெற்றி’ மற்றும் போர்க்குற்றங்களை மறுப்பது பற்றிய கதையாடல்கள் இதை இன்னொரு தளத்திற்கு நகர்த்துகின்றன.

3. வளப் பற்றாக்குறை: போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வளங்களை எதிர்கொள்கின்றன. புனரமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு அல்லது இழப்பீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கடினமான தேர்வுகளைக் கட்டாயப்படுத்துகின்றன. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு சிங்களவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்புகள், புத்த விகாரைகளின் கட்டுமானம் மற்றும் தொல்லியல்துறை மூலம் அரசு ஆதரவுடன் ‘சிங்களமயமாக்கல்’ மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்ச் சமூகங்களுக்கான வரையறுக்கப்பட்ட வளங்கள் பொருளாதார மீட்சிக்கு எதிராக நீதிக்கு முன்னுரிமை அளிப்பதைவிட அறம்சார் விவாதங்களை அதிகரிக்கின்றன.

4. நிறுவனரீதியான அவநம்பிக்கை: போர் பெரும்பாலும் நிர்வாகக் கட்டமைப்புகளை அழித்து, அறம்சார் முடிவெடுப்பதில் சட்டபூர்வமான தன்மை இல்லாத ஒரு வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. குறிப்பாக போரின் முடிவு ஒரு தரப்புக்கு வெற்றியைத் தருகின்றபோது தோல்வியடைந்த தரப்பின் மக்கள்கூட்டம் நிறுவனரீதியாக ஒதுக்கப்படுகிறது. அதிகளவான இராணுவப் பிரசன்னம், கண்காணிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன்னிச்சையான கைதுகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை உள்ளிட்டவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்கிறது. இது அரசு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையைச் சிதைத்து, அறம்சார் நிர்வாகத்தை மழுப்பலாக்குகிறது.

அகமுரண்பாடுகள்சார் அறம்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகம், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், ஆழமான அறம்சார் சவால்களை எதிர்கொண்டுள்ளது. போருக்குப் பிந்தைய சூழலில் தார்மீகத் தெளிவின்மை, போட்டியிடும் கதையாடல்கள் மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டல் ஆகியவை பல்பரிமாணரீதியில் அறம் என்கிற விடயத்தை  ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாற்றியுள்ளது. தமிழ்ச்சமூகத்தில் நிலவும் அக முரண்பாடுகளைப் புற முரண்பாடுகள் மேவியுள்ளதால், அகமுரண்பாடுகள் சார்ந்த விடயங்கள் பேசப்படுவது குறைவு. இந்த விடயங்கள் மூன்று முக்கியமான தளங்களில் சிக்கலானவை. இதனாலேயே தமிழ்ச் சமூகம் அறம்சார் அம்சங்களைச் சவாலுக்குட்படுத்தும் உள் முரண்பாடுகளுடன் போராடுகிறது:

1. விடுதலைப்புலிகளின் மரபு மற்றும் பொறுப்புக்கூறல்: விடுதலைப் புலிகளின் எதேச்சதிகாரத் தந்திரோபாயங்கள், எதிர்ப்பை அடக்குதல் மற்றும் அவர்களின் அரசியல் எதிராளிகளை – தமிழர்களை குறிவைத்தல் உட்பட்டவை ஒரு சிக்கலான சித்திரத்தை வழங்குகின்றன. இது அவர்களின் போராட்டத்தை மகிமைப்படுத்துவதற்கும் அவர்களின் துஷ்பிரயோகங்களை ஒப்புக்கொள்வதற்கும் இடையிலான அறம்சார் கேள்விகளை எழுப்புகின்றன. எடுத்துக்காட்டாக, 1980களில், போட்டியாளர்களான தமிழ்ப் போராளிக் குழுக்களை விடுதலைப்புலிகள் ஒழித்தது; இது சமூகத்திற்குள் தொடர்ந்து பிளவுகளை உருவாக்கியது. இந்த முரண்பாடுகள் ஒரு பகிரப்பட்ட அறம்சார் கட்டமைப்பைச் சுற்றி ஒன்றிணைவதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்குகின்றன.

2. சாதி மற்றும் பாலினம்: சாதிப் படிநிலைகள் மற்றும் ஆணாதிக்க விதிமுறைகள் போன்ற உட்சமூகக் கட்டமைப்புகள், அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. போருக்குப் பிந்தைய காலத்தில், தமிழ்ப் பெண்கள், குறிப்பாக முன்னாள் போராளிகள், களங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 49% பேர் பதட்டத்தையும் 42% பேர் மனச்சோர்வையும் அனுபவிக்கின்றனர். இது பெரும்பாலும் சமூக எதிர்பார்ப்புகளால் அதிகரிக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்குள் சாதி அடிப்படையிலான பாகுபாடு, ஒற்றுமையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அதேவேளை போருக்குப் பிந்தைய சமூகத்தில் சாதிய மீளெழுச்சி சிக்கலான சமூகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

3. புலம்பெயர்ந்தோர்/ உள்ளூர் முன்னுரிமைகள்: புலம்பெயர்ந்த தமிழரில் ஒரு தொகுதியினர், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் இனப்படுகொலை அங்கீகாரத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால் உள்ளூரில் தமிழ் மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருத்தாலும்கூட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நில உரிமைகள் போன்ற உடனடித் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த வேறுபாடு கவனத்திற்குரியது. இது யாருடைய நலன்கள் முக்கியமானவை, யார் யாருக்காகப் போராடுவது போன்ற அறம்சார் விவாதங்களை உருவாக்குகிறது.

இந்தப் பின்புலம் மிகவும் முக்கியமானது. இம்மூன்று விடயங்களும் இன்றும் தமிழ் மக்களின் அறம்சார் செயலின்மைகளின் மையமாக உள்ளன. ஒரு சமூகமான எமது கடந்தகாலத்தை சுயவிமர்சன நோக்கில் பார்ப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற வினாவை இங்கு எழுப்புவது முக்கியமானது. போரின் முடிவின் 16 ஆண்டுகளின் பின்னர் ஈழத்தமிழரின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்பதை யோசித்தால் அரசியல் அரங்கிலும் பொருளாதார அரங்கிலும் அதற்கான பதிலைப் பெறுவது சிரமம் என்பதை நாமறிவோம். அதற்கப்பால் அறம்சார்ந்த சமூகமாக, அகமுரண்பாடுகளை அடையாளங்கண்டு ஏற்றுக்கொண்ட சமூகமாக நாம் இல்லை என்பதே இன்றைய முக்கிய சவாலாகும். இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் பேசுவதற்குச் சிரமமான சங்கடமான ஒரு விடயமாகும்.

தமிழ்த் தேசியத்தின் எதிர்காலமும் தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமும் பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்குக் கடந்தகாலம் பற்றிய தெளிவான புரிதல் தேவை என்பதையும், விடுதலைப் புலிகளைப் பற்றிய விவாதங்கள் தவிர்க்க இயலாதன என்பதையும் நாம் ஏற்கவேண்டும். அதேவேளை நடந்து முடிந்த அனைத்தையுமே விடுதலைப் புலிகளின் சாதனைகளாகவோ மாறாக அவர்களது குற்றங்களாகவோ நோக்குகின்ற தன்மையினின்று விடுபடுவதும் முக்கியமானது. இது முக்கியமான ஒரு சமூகச் சவாலாகும். அறம் குறித்த பார்வைகள் இங்கு ஆழமான நேர்மையான பார்வையை வேண்டி நிற்கின்றன.

விடுதலைப் புலிகளை போராட்டத்தின் மையச்சக்தியாக ஆக்கிய அகக் காரணிகளையும் புறக் காரணிகளையும் விளங்கிக் கொள்வது முக்கியமானது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனங்களை, மூர்க்கத்தனமான, நேர்மையற்ற நியாயப்படுத்தல்களைத் தவிர்த்து நோக்க வேண்டியுள்ளது. இதை வழிப்படுத்துவதற்கு அறம்சார்ந்த பார்வை முக்கியமானது.  ‘இன ஒற்றுமை’ என்ற கருத்தாக்கம் விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு மிக முந்தியது. இது தமிழ்த்தேசிய அரசியலின் முக்கிய கருவியாகும். இது அகமுரண்பாடுகளை மறைத்து தமிழர் என்ற பொது இனத்துவ அடையாளத்துக்குள் அனைத்தையும் கரைக்கும் ஒரு தந்திரமாகவே செயற்பட்டது என்பது உண்மை. அதேவேளை மாற்று அரசியல் ஒன்று உருவாவதற்கெதிராகப் பழமைவாதம் ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கருவியைப் பலவாறாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. அதன்விளைவாக, மக்கள் அரசியல் என்ற கருத்தாக்கம் தமிழ் அரசியற் பரப்பில் வேரூன்றத் தவறியது. அதைவிடவும் சாதி, பால், பிரதேசம் என்பன சார்ந்த முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அப்பிரச்சினைகளை இல்லை என மறுப்பதுடன் அவற்றைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் என வாதிப்பதும் தமிழ்த் தேசியவாதிகட்கு வழமையாகிவிட்டது. அவற்றை மறுத்ததால் அவை இல்லாமல் போய்விடவில்லை. இன்று அவை, முன்பு நாம் அறிந்திருந்த அதேயளவு உக்கிரத்துடன் தொடருவதை நாம் அறிவோம்.

ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண்பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். தேசியத்தினுள் செயற்படும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாதபோது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் போராட்டத்தை மட்டுமன்றித் தேசிய இன அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பது நம் கவனத்துக்குரியது. விடுதலைப் புலிகளின் போரின்போது தமது உயிர்களை ஈந்தோரும் வேறுபலவாறான தியாகங்களைச் செய்தோரும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளுமே. அவர்களது வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தோரே இன்று தமது வீடுகட்டும் நிலங்கட்கும் தொழில்கட்கும் மீள இயலாமல் அல்லற்பட்டுக்கிடப்போரில் பெரும்பாலானோராக உள்ளனர். இவை ஒவ்வொன்றும் ஆழமாகப் பேசப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும். விடுதலைப் போராட்டம் என்பது அறம்சார்ந்தது என்ற புரிதலை நோக்கி நகர்தலும் அதை ஆழமாக விமர்சன நோக்கில் பார்க்கப் பழகுதலும் இன்றைய சூழலில் தவிர்க்கவியலாதது.

சமூக அசைவியக்கங்களில் அறம்சார் கேள்விகள்

போருக்குப் பிந்தைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அறம் குறித்த பார்வைகள் மிகவும் சிக்கலானவை. போரின் வீரமரபையும் விடுதலைப்போராட்டத்தையும் மையப்படுத்திய அறம்சார் பார்வை ஒருபுறமும், சமூகத்தின் பண்பாடு, மாண்பு, மானம், மரியாதை நோக்கிலான அறம்சார் பார்வை மறுபுறமுமாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏராளமான வினாக்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. ஆனால் இவ்வினாக்கள் ஒரு விடயத்தைத் தொடர்ச்சியாகத் தவறவிடுகின்றன. அது களயதார்த்தம் பற்றியது; அம்மக்களின் வாழ்நிலை பற்றியது. நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட சிந்தனைமுறை பற்றியது. ஆழமாக ஊறிப்போன பண்பாட்டு வரைமுறைகள் பற்றியது. 

முன்னாள் போர் வலயங்களுக்கு மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு சில ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் கள ஆய்வுக்காக கிளிநொச்சியில் இருந்து அரச பேரூந்தில் பயணமொன்றை மேற்கொண்டிருந்தேன். ஒரு தரிப்பிடத்தில் பேரூந்து நின்றது. இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் பேரூந்தில் முன்பக்கமாக ஏறினார்கள். அவர்களின் தோற்றம் ஏழ்மையை உறுதிசெய்தது. வாடி மெலிந்த தேகம், ஆனால் முகத்தில் நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளும் இருந்தன. யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார்கள். எனக்குப் பின்னால் இரண்டு ஆண்குரல்களின் உரையாடலைத் தற்செயலாகக் கேட்கக் கிடைத்தது. அந்த உரையாடல் இவ்வாறு தொடர்ந்தது:

“இதுகள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருந்திருக்கலாம். போராடப் போறம் என்று போய் எல்லாத்தையும் சீரழிச்சு இண்டைக்கு நடுத்தெருவில நிக்கிதுகள்.”

“இவயின்ர அப்பா, அம்மாவைச் சொல்லோனும். அவையள் எல்லோ கண்டிச்சிருக்கோணும்”.

“அப்படிச் சொல்லேலா, இவையளுக்கு அறிவெங்க போனது.”

“இதுகள் இயக்கத்துக்குப் போகேக்க 16 வயதுகூட இராது”.

“எல்லாம் முடிஞ்சுபோச்சு. இப்ப இவையளுக்கு யாருமில்லை”.

இதற்கு மேல் அந்த உரையாடலைக் கேட்க மனமில்லாமல், அவ்விடத்தில் இருந்து எழுந்து பேரூந்தின் பின்னால் நடக்கத் தொடக்கினேன். அப்போது அக்குரல்களுக்கு உரியவர்கள் யார் என்பதை அறியும் நோக்கில் அவர்களை நோட்டமிட்டேன். அக்குரல்களிற்குரியவர்கள் கிட்டத்தட்ட 60 வயதை உடையவர்கள்; உள்ளூர்க்காரர்கள்; சாரமும் பழைய சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். அவர்களுக்கு இப்பெண்களை நன்கு தெரிந்திருந்தது என்பதையும் என்னால் உணர முடிந்தது.

இந்நிகழ்வு அறம்சார் கேள்விகள் பலவற்றை எழுப்புகிறது. முதலாவது, இந்தப் பெரியவர்களின் விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது. அந்தப் பெரியவர்கள் வெளிநபர்கள் அல்லர். அவர்களும் போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, மீளக்குடியேறி அதேசமூகத்தில் வாழ்பவர்கள். அவர்களின் கருத்துகள்தான் அச்சமூகத்தின் பொதுக்கருத்து என்று எடுத்துக்கொள்வதா? அல்லது இரண்டு தனிநபர்களின் கருத்து என்று ஒதுக்கிவிடுவதா? விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு இருந்தது என்ற கருத்தை இந்த உரையாடல் தகர்க்கிறது. அவ்வாறு இருந்திருக்குமாயின், இவ்வாறான குரல்கள் எழுந்திருக்காதல்லவா? விடுதலைப் போராட்டம் குறித்த மக்களின் எண்ணவோட்டம் என்னவாக இருந்தது? இன்றும் பெண்கள் குறித்த எம்சமூகத்தின் பார்வை என்ன?

இரண்டாவது, முன்னாள் போராளிகள் இவ்வாறு அனாதரவாய் விடப்பட்டமையை எவ்வாறு புரிந்துகொள்வது. உலகெங்கும் கோலாகலமாக ஈழத்தமிழர்கள் நிகழ்வுகளைச் செய்கிறார்கள். மாவீரர் தினங்கள், மே 18 எனப்பல நிகழ்வுகள் நடக்கின்றன. மில்லியன் கணக்கான பணம் சேர்க்கப்படுகிறது. ஆனாலும் வன்னி நிலப்பரப்பில் வாழும் ஒரு தொகுதி மக்கள் இவ்வாறு திக்கற்றவர்களாக விடப்பட்டிருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இவ்விடத்தில் அறத்தின் அளவுகோல் என்ன? வன்னியில் ஒருதொகுதி மக்கள் அன்றாட வாழ்வுக்கே அல்லலுறும்போது, இவ்வாறான கொண்டாட்டங்கள் அறமா? அல்லது இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டுமா? பொறுப்புக் கூறவேண்டியவர்கள் புலம்பெயர்ந்த தனிமனிதர்களா? அமைப்புக்களா? அல்லது விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளைத் தொடர்ந்து பேணுகிறோம் என்று அறிவித்துக் கொண்டவர்களா?

இந்த உதாரணம் அறம்சார்ந்த அம்சங்களின் சிக்கல்தன்மையைப் புலப்படுத்துகிறது. அதேவேளை இந்தக் கேள்விகளுக்கு நாம் சமூகமாக முகம் கொடுத்தாக வேண்டும். இந்த மனநிலை ஈழத்தமிழரிடம் இல்லை என்று அப்பால் நகர்ந்துவிட முடியாதபடியே நிகழ்வுகள் நடக்கின்றன. அதை நாம் ஏற்றாக வேண்டும். போரின் வடுக்களைச் சுமந்த ஒரு சமூகத்தின் அடிப்படை அறம் யாது? அதன் அளவுகோல்கள் என்ன? அவை சரியானவையா? போன்ற பதிலில்லாக் கேள்விகள் இன்றும் எம்மிடமுண்டு.

மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டபோது உயர் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்துவந்த காலப்பகுதியில் அம்மக்கள் குறித்த ஏராளமான கதைகள் உலாவின. அவை கதைகள் என்பதைவிட நிகழ்வுகளின் பொதுமைப்படுத்தல்கள் என்று சொல்வது பொருத்தம். அவ்வாறான ஒரு கதைதான் ‘மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களில் வலுவற்றோர் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்’ என்பது. இந்தக்கருத்து பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக புலம்பெயர்தேசங்களில் இது பாரிய பேசுபொருளானது. இது மிகக்கொடுமையான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதன் செயற்படு தன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று நினைத்தேன். எனது பணியிடத் தேவையின் பொருட்டு, இந்த விடயத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக, அதன் ஆழ – அகலங்களை விளங்கிக்கொள்வதற்காக வன்னிக்குச் சென்றேன்.

எனக்கு நன்கு பழக்கமான மனிதாபிமானப் பணியாளர்கள் பலரைச் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் சொன்ன ஒரு விடயம், ‘இது பேசப்படுவதைவிட மிகச் சிக்கலான ஒன்று’. ஒற்றைப் பரிமாணத்தில் இதைப் பார்க்க முடியாது. அதேவேளை பலர் இது குறித்து விரிவாகப் பேசுவது சரியாக இராது என்று கருதினர். இன்னும் சிலர், இராணுவப் பிரசன்னத்தை அகற்றுவதற்கு இந்தக் கதையாடல் அவசியமானது, எனவே இப்போது சொல்லப்படுகின்ற அதேகதையாடல் தொடர வேண்டும் என்று விரும்பினர். பெரும்பாலானோரது கருத்து, ‘இந்த அதிர்ச்சி வைத்தியம் ஏற்படுத்தும் கவனயீர்ப்பு ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு முக்கியமானது’ என்பதாகும். அவர்கள் குறித்த விடயத்தை ஆழமாக ஆராயாமல் இப்படியே விட்டுவிடுவது நல்லது என்று கருதினர்.

சிலருக்கு அதில் மாற்றுக்கருத்து இருந்தது. உண்மை முக்கியமானது. அதேவேளை திரிக்கப்பட்ட உண்மை, நன்மையைவிடத் தீமையையே அதிகம் செய்யவல்லது என்று அவர்கள் கருதினர். ஒரு நண்பர் என்னிடம் சொன்னார், “நான் உங்களை இதனோடு தொடர்புடைய சிலரிடம் அறிமுகப்படுத்துகிறேன். அவர்களுடன் நீங்கள் பேசுங்கள். பிறகு நீங்களே முடிவெடுங்கள்.” அதன்படி பலருடன் பேசக் கிடைத்தது. அதில் ஒரு உரையாடல் மட்டும் இன்றும் மனதை உலுக்கும் ஒன்றாக இருக்கிறது. அதைமட்டும் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

அது வன்னியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு வீடு. அதை வீடு என்று சொல்வதைவிட தங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக இருப்பிடம் என்று சொல்வது பொருத்தம். மரம், தடிகள், தகரம் கொண்டு அமைக்கப்பட்டது. அங்கு ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் இருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு வயதல்ல. 25 வயதினைத் தாண்டியிருக்காது. அப்பெண் மிகவும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசினார். வாழ்க்கை குறித்த அச்சவுணர்வு அப்பெண்ணிடம் இருக்கவில்லை. அப்பெண் சொன்னவற்றைச் சுருக்கமாகத் தருகிறேன்:

“நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சண்டை மீண்டும் தொடங்கிவிட்டது. இயக்கம் மீண்டும் ஆள்சேர்க்கத் தொடங்கியிருந்தது. என்னையும் கூட்டிப்போய்விடுவார்கள் என்று அப்பா பயந்தார். கலியாணம் கட்டிவைத்தால் பாதுகாப்பு என்று கருதினார். எனக்குத் திருமணம் நடந்தது. எனது கணவர் சிறுவியாபாரமும் விவசாயமும் செய்துவந்தார். மெதுமெதுவாக இடப்பெயர்வுகள் தொடங்கின. திருமணமானவர்களையும் இயக்கத்தில் இணைக்கத் தொடங்கினர். அதிலிருந்து தப்புவதற்காக நான் கர்ப்பமானேன். எனது கணவரை அழைத்துச் சென்றுவிட்டார்கள். யுத்தம் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் திரும்பி வந்தார். நாம் ஒன்றாகப் பாதுகாப்புத்தேடி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள்மீது விழுந்த குண்டில் எனது கணவர், எனது அப்பா, அம்மா என எல்லோரும் கொல்லப்பட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக நான் உயிர்தப்பிவிட்டேன். எனது குழந்தையை முகாமில் பெற்றெடுத்தேன். என் அம்மாவுக்கு சொந்தமான நிலத்தில் மீளக்குடியமர்ந்தேன். தரப்பாள் வீடுதான். எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனது பிள்ளையை யாரிடமும் விட்டுவிட்டு கனதூரத்திற்கு வேலைக்குப் போகவும் இயலாது. கொஞ்சக்காலம் நிறுவனங்களின் உதவியில் வாழ்ந்தேன். பின்னர் வறுமையில் வீழ்ந்தேன். எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. ஆண்துணையற்ற பெண்ணாக குழந்தையோடு வாழ்வது மிகவும் பாதுகாப்பற்றது. எனது சமூகமே என்னை ஒதுக்கியது. எனது ஊர் ஆண்களே என்னை அணுகினார்கள். உதவி செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னால் இருந்த நோக்கம் இரகசியமானதல்ல. ஒவ்வொரு இரவும் அச்சத்துடனேயே கழிந்தது. யாராவது இரவில் வலுக்கட்டாயமாக வந்துவிடுவார்களோ என்ற பதட்டம் இருந்தது. எங்கள் ஊர் ஆண்கள் ஒருபுறம் என்றால் இராணுவச் சிப்பாய்கள் மறுபுறம். அவர்களின் பார்வையும் விசாரணைகளும்கூட உறுத்தலாய் இருந்தது. ஒருநாள் குழந்தையுடன் நான் நடந்துசெல்லும்போது, தற்செயலாக எமது பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி என்னைக்கண்டார். என்னைப் பற்றி விசாரித்தார். குழந்தைக்கு உணவு வாங்கும்படி சிறுதொகைப் பணத்தைத் தந்துவிட்டுப் போனார். இப்போதும் அடிக்கடி அவர் என் வீட்டுக்கு வருகிறார். என்னை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அவர் என்னிடம் வருவதால் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நலவிசாரிப்புகள் இல்லை. அவ்வளவு பயம். எங்கள் ஊர் ஆண்களின் சொறிச்சேட்டைகள் இல்லை. நான் இப்போதுதான் பாதுகாப்பாக உணர்கிறேன்.”

இது ஆழமான அதேவேளை பேசப்படாத, பேசப்படவிரும்பாத ஒரு பேசுபொருளை உடையது. சமூக அறம், மானம், போன்ற மறைப்புகளுக்கு அப்பால் போரின் பின்னான சமூகங்களில் வாழ்வோரின் நித்திய போராட்டத்தின் ஒரு சிறுதுளிதான் இது. இந்த விடயத்தில் அறம்சார் உயர்நிலை என்ற பெயரில் அந்தப் பெண்ணைக் குற்றம் சொல்லமுடியமா? இதைப் பாலியல்தொழில் என்ற வரையறைக்குள் கொண்டுவர இயலுமா? அந்தப் பெண்ணையோ, அவரின் நடத்தையையோ மதிப்பிடும் அதிகாரத்தை யார் தந்தது? இவ்வாறு பல கேள்விகளைத் தொடர்ச்சியாக நாம் எழுப்பிய வண்ணமே இருக்கலாம்.

போருக்குப் பிந்தைய சூழலில் அறம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன இரு உதாரணங்களும் போதுமானவை. இந்தப் பின்புலத்திலேயே தமிழ்ச் சமூகத்தின் அறம் பாடுதல், அறம் பறைதல் ஆகிய இரண்டையும் நோக்கியாக வேண்டும்.

போருக்குப் பிந்தைய சூழலில், பல குழுக்கள் தங்களது கொடுமைகளை, நஷ்டங்களை மற்றும் நினைவுகளை தம்மோடு சுமந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒருவரோ ஒரு குழுவோ “நாங்கள் அறமானவர்கள்” என்று கூறுவது மற்றவர்களுக்கு எரிச்சலையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தலாம். இது உணர்வுபூர்வமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே அறம்சார் உயர்நிலையை எடுப்பதென்பது சிக்கலானது. அதேவேளை இது பல சமயங்களில் அதிகாரமிக்கவர்களின் ‘மதிப்பீட்டுச் சிதைவான பார்வை’ (Biased perception) ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்; இது நீதிக்கு எதிரானதாகவும் இருக்கலாம். போரினால் சிதறுண்ட சமூகங்களில் பலநிலை உண்மைகள் (Multiple truths) உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். போர்க்காலங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு சமூகத்துக்கும், குழுவுக்கும் தங்கள் பார்வை இருக்கிறது. “நாங்கள்தான் நியாயம் பேசுகிறோம்” என்று ஒருபக்கம் சொல்வது, மற்ற உண்மைகளை நிராகரிப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் கொள்ளப்படும். “நாங்கள் அறத்தோடு இருக்கிறோம்” என்று ஒருவர் சொல்வது, உண்மையான வருத்தங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்கும். இது சமூகப் பிணைப்பைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

நிறைவுக் குறிப்புகள்

மோதல்களால் பாதிக்கப்பட்ட பிளவுபட்ட சமூகங்களில் போருக்குப் பிந்தைய சூழலில் அறம்சார் நிலைப்பாட்டை எடுப்பதானது பல முக்கிய சவால்களைக் கொண்டது. போருக்குப் பிந்தைய சமூகங்களில், வெவ்வேறு குழுக்களுக்கு இடையே ஆழமான நம்பிக்கையின்மை இருக்கும். அறவிழுமியம்சார் நிலைப்பாடு எடுக்க முயல்பவர்கள், ஒரு தரப்பினரால் சந்தேகத்துடன் பார்க்கப்படலாம் அல்லது அவர்களது நோக்கங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது ஒரு தரப்பை மற்றொரு தரப்பிடமிருந்து மேலும் தனிமைப்படுத்தலாம்.

போருக்குப் பிந்தைய சமூகங்களில், அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், மற்றும் பாதுகாப்பு ஆகியன முன்னுரிமையாக இருக்கும். இதனால், உயர்ந்த அற நிலைப்பாட்டை எடுப்பது பல சமயங்களில் அடிப்படைத் தேவைகளையே கேள்விக்குட்படுத்தும். இந்நிலையில் அறமா? உணவா” என்ற கேள்வி எழும்போது, உணவே பிரதானம். இந்த நிலைப்பாட்டை எடுத்தவர்களை அறமற்றவர்கள் என்று சொல்ல முடியுமா?

இலங்கைச் சூழலில் போருக்குப் பிந்தைய தமிழ்ச்சமூகம் மீது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் ஒருபிரிவினர் வைக்கிற ஒரு குற்றச்சாட்டு, ‘இவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்கள், மாறிவிட்டார்கள், விடுதலைப் போராட்ட உணர்வற்றவர்கள்.’ இந்தப் பிரிவினர் சோறா, சுதந்திரமா? என்ற வினாவுக்கு சுதந்திரமே பிரதானம் என்பவர்கள். ஆனால் வன்னியில் மக்களைப் பொறுத்தவரை முதலில் சோறு. ஏனெனில் அன்றாட உயிர்வாழ்க்கையே அவர்களுக்குச் சவாலானதாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, அறம்சார் உயர்ந்த நிலைப்பாடு எடுப்பது ‘பயனற்ற’ அல்லது ‘எதார்த்தமற்ற’ ஒன்றாகவே கருதப்படுகிறது.

தமிழ்ச்சமூகமாக நாம் கேட்கவேண்டிய சில கேள்விகள் உண்டு. நாம் அறம்பாட முதல் இந்த வினாக்களுக்கு இதயசுத்தியுடன் பதில்தேட விளைவது பயனுள்ளது:

போருக்குப் பிந்தைய இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்கு, ஏன் அறம்சார் சிக்கல்கள் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன?

தமிழ்ச் சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் மீட்சிக்கு எவ்வகையான உள் மற்றும் வெளிப்புற அறப்பிரச்சினைகள் சவால் விடுகின்றன?

தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள அக முரண்பாடுகள் அறம்சார் நெறிமுறைகளை எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன?

அறம்சார் முன்னுரிமைகளை வடிவமைப்பதில் நீதி, நல்லிணக்கம் மற்றும் வள ஒதுக்கீடுகள் எவ்வகையான பங்கை வகிக்கின்றன?

தமிழ்ச் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் குணப்படுத்துதலை வளர்ப்பதற்கு, தமிழ்ச் சமூகம் இந்த அறம்சார் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?

The post போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும் appeared first on Ezhuna | எழுநா.

காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 1

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன

காலனித்துவ அரசியலில் வர்க்கமும் சாதியும் (Class and Caste in National Politics) என்னும் தலைப்பில் அமையும் இக்கட்டுரை ‘Nobodies to Somebodies: The Rise of Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூலின் 18 ஆவது அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பாகும். 1833 முதல் 1948 வரையான காலத்தில் இலங்கையின் தேசிய அரசியலில் வர்க்கம், சாதி என்பனவற்றின் வகிபாகம் பற்றி ஆராயும் இக்கட்டுரையை பொருத்தம் கருதி இத்தொடரில் வெளியிடுகின்றோம்.

இலங்கை முதலாளிகளிடையே பழமைவாதிகள், மிதவாதிகள் என்ற இரு பிரிவினர் இருந்தனர். இவ்விரு பிரிவினரும் ஏகாதிபத்தியத்தில் தங்கியிருப்போராகவும் அதன் விசுவாசிகளாகவும் இருந்தனர். இவ்விடயத்தில் அவர்களிடையே பிரதான முரண்பாடுகள் என்று எவையும் இருக்கவில்லை. ஆயினும் இவ்விரு பிரிவினர்களிடையே அரசியல் விடயத்தில் சில பிளவுகள் ஏற்பட்டன. கொய்கம சாதியினரான சிங்கள முதலியார்கள் பிரிவு, ஏனைய சமூகங்களின் பழமைவாதிகளுடன் ஒன்று சேர்ந்து, இருந்துவரும் நிலையில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல், தமது நலன்கள் தொடர்ந்து பேணப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் விரும்பினர். இப்பழமைவாதிகள் கொய்கம, கராவ, சலாகம, துராவ, வகும்புர, நவண்டன ஆகிய சாதிகளில் இருந்தும் பிறசாதிகளில் இருந்தும் தோன்றிய புதுப்பணக்காரர்களை வெறுத்தனர். இச்சாதிகளில் இருந்து தோன்றிய புதுப்பணக்காரர்கள் ஏகாதிபத்திய ஆட்சி என்ற வரைசட்டகத்துள் நின்றுகொண்டே கொய்கம முதலியார் வகுப்பின் ‘நிலமானிய’ப் பகட்டையும், அவர்கள் அனுபவித்த சலுகைகளையும் கேள்விக்கு உட்படுத்தியதோடு அல்லாமல், தமக்கும் சமத்துவ அந்தஸ்தைக் கோரினர்; மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தையும், ஆண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் வாக்குரிமையுடன்கூடிய அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தையும் கோரலாயினர்.

ஐரோப்பாவில் புதிதாக எழுச்சி பெற்ற முதலாளித்துவ வகுப்பு நிலமானிய வகுப்பின் சலுகைகளுக்கு எதிராகவும், சர்வாதிகார முடியாட்சிக்கு எதிராகவும் போராட வேண்டி ஏற்பட்டது. தமது வர்க்கத்தின் அரசியல் உரிமைகளையும் அரசியல் பங்கேற்பையும் இவர்கள் கோரினர். தமது பொருளாதாரநிலையை ஸ்திரப்படுத்திக்கொண்டதும் புதிய பணக்காரர்கள் தமக்கு அரசியல் உரிமை வேண்டும் என்று கூறத் தொடங்கினர். இருந்தபோதும் இலங்கையில் அரசியல் மட்டத்தில் தேசியவாத இயக்கம் தோன்றவில்லை. காரணம், முதலாளித்துவ வகுப்பு சாராம்சத்தில் சமரசப் போக்குடையதாயும் பிரித்தானிய ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காததாயும் இருந்தது. முதலாளித்துவ வகுப்பால் முன்னெடுக்கப்பட்ட இயக்கங்கள் கூடிய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் எழுச்சி பெறும் புதிய முதலாளிகளுக்கு சமத்துவமான வாய்ப்புகளை வழங்குவதையுமே கோரிக்கைகளாக முன்வைத்தன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான சமூகச் சீர்திருத்தத்தையும் கோரின. அவர்களின் எதிர்ப்புக்குரிய பிரதான இலக்காக முதலியார் வகுப்பு இருந்தது. முதலியார்கள் பெற்றிருந்த சலுகைகளும், சுதேசிகளுக்கு காலனிய நிர்வாகத்தில் உத்தியோகப் பதவிகள் வழங்கியபோது, முதலியார் வகுப்பு அதனைத் தனது ஏகபோகமாக ஆக்கியதும், சட்டசபைப் பிரதிநிதித்துவத்தை முதலியார் வகுப்புக்குக் கொடுத்ததையும் புதிய பணக்காரர்கள் எதிர்த்தனர்.

காலனித்துவப் பின்னணியில் மதிப்புமிக்க தொழில்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆங்கிலக்கல்வியைப் பெறுவதன்மூலம் இத்தொழில்களைப் பெற்று சமூகப்படித்தரத்தில் உயர முடிந்தது. வெளிநாடு சென்று கல்வி கற்றும் செல்வந்த வகுப்பினர் இப்பதவிகளைப் பெற்றுத் தம் சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள முடிந்தது. இதனால் யாவருக்கும் உத்தியோகங்களில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. கல்விகற்ற முதலாளித்துவ வகுப்பினரும் சட்டம், மருத்துவம் போன்ற உயர்தொழில்களில் புகமுடிந்ததேயன்றி பிறவகையான உத்தியோகங்களில் புக முடியவில்லை. பறங்கியர் தவிர்ந்த பிற இனத்தவர்களான சுதேசிகளிற்கு அரசாங்க உத்தியோகங்கள் வழங்கப்படவில்லை. பறங்கியரும் எழுது வினைஞர்களாகவும், கீழ்நிலைப் பதவிகளிலுமே இணைத்துக் கொள்ளப்பட்டனர். உயர்பதவிகள் அவர்களுக்கும் வழங்கப்படவில்லை. 

புதிய பணக்காரர் வகுப்பினர் சொத்துகளைச் சேர்ப்பதன்மூலம் சமூகநிலையில் உயர்ந்தனர். ஆயினும் கல்விமூலம் உயர்பதவிகளைப் பெற்றுத் தமது சமூக அந்தஸ்தை உயர்த்த முடியவில்லையே என்ற மனக்குறை அவர்களுக்கு இருந்தது. கண்டியின் உயர்குலப் பிரபுக்கள் வம்சம் தமது சமூக மதிப்பை கல்வியாலும் உத்தியோகத்தாலும் மேலும் உயர்த்த வேண்டும் என்று ஆசைப்படவில்லை. இதுபோன்றே பழைய நிலஉடைமைக் குடும்பங்களைச் சேர்ந்த சிங்களவரும், முஸ்லிம்கள், போராக்கள், செட்டிகள் போன்ற குழுக்களும் உயர்தொழில்கள் மூலம் தம்மை உயர்த்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள் இருக்கவில்லை. ஆனால் சிங்களவர்களிடையும், தமிழர்களிடையும் தோன்றிய குட்டி முதலாளி வகுப்பினருக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் போதியளவு இல்லாதநிலையில் கல்வியொன்றே சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரே ஒரு வழியாக இருந்தது. கல்வி முன்னேற்றம் ஏற்பட்டபோது உத்தியோகங்களிற்கு ஆட்களைச் சேர்ப்பதில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்றும் தொழில்களில் திறமைக்கு முதன்மை அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மொறட்டுவவைச் சேர்ந்த அலக்சாண்டர் தர்மரட்ன என்ற நியாயத்துரந்தரர் 1890 இல் ஒரு முக்கியமான விவாதத்தைத் தொடக்கினார். படித்த இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று தர்மரட்ன கூறினார். பிரித்தானிய உத்தியோகத்தர்களின் கர்வத்தையும், தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பாவனையையும் தர்மரட்ன கேலி செய்தார். கவர்னர் பதவி, குடியேற்ற நாட்டுக் காரியதரிசி பதவி, இராணுவத் தளபதி பதவி போன்ற ஒருசில பதவிகள் பிரித்தானியர் வசம் இருக்க வேண்டும் என்று கூறிய தர்மரட்ன பூரண அரசியல் சுதந்திரத்தைக் கோரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ‘தகைமை, திறமை, அடைவும் தேர்ச்சியும் ஆகியவற்றால் தம்தரத்தை வெளிப்படுத்திய சுதேசிகளுக்கு உரிய பதவிகளை வழங்கலாம்’ என்பதே தர்மரட்னவின் கருத்தாகும். சிவில் சேவைப் பரீட்சைக்கு சிங்களமும் தமிழும் பாடங்களாக வைக்கப்பட வேண்டும் என்றும் தர்மரட்ன குறிப்பிட்டார்.

சட்டத்துறையில் உள்ள நிலைமையைச சுட்டிக் காட்டி நியாய துரந்தரர்களது கருத்தை எடுத்துக் கூறிய தர்மரட்ன “நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்கள், பறங்கியர்கள், கல்வி, திறமை, நேர்மை, செல்வம் என்பவற்றைக் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் நீதித்துறைப் பதவிகளை நிரப்புவதற்குப் பொருத்தமானவர்கள்” என்றும் “ஏனைய காலனிகளில் இலங்கை நியாய துரந்தரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை; இலங்கையில் அரச வழக்கறிஞர் பதவிக்கு இலங்கையர்களை நியமிக்க வேண்டும்” என்றும் தமது கருத்துகளைக் கூறினார்.

இலங்கையில் உத்தியோகத்தர்களாயிருந்த ஐரோப்பியர்கள் விசேட சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். தமக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதை கல்விகற்ற முதலாளித்துவ வகுப்பு உணர்ந்தது. இதனால் அவர்கள் மத்தியில் அதிருப்தி உணர்வு வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை தர்மரட்னவின் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன. அரசுத்துறையில் பணியாற்றும் கீழ்நிலைப் பணியாளர்களும், எழுதுவினைஞர்களும் மிகவும் குறைந்த சம்பளத்தையே பெறுவதையும், பிரித்தானிய உத்தியோகத்தர்களின் ஆடம்பர வாழ்க்கையையும் ஒப்பிட்டு தர்மரட்ன நையாண்டி செய்தார். “பிரித்தானியாவில் இந்த உத்தியோகத்தர்களுக்கு குதிரையோ, பயணிப்பதற்கு வண்டியோ கிடைப்பதில்லை. இவ்வளவு எண்ணிக்கையான வேலையாட்களை அவர்களால் அங்கு வைத்திருக்க முடியுமா? இங்குள்ளதுபோல் அங்கு வைன் குடித்துக் களிக்கலாமா?” என்று கிண்டல் செய்தார். இளம் உத்தியோகத்தர்களான பிரித்தானியர்களுக்கு சட்டப்படிப்பு இல்லாவிடினும் நீதிவான் உத்தியோகம் கொடுக்கப்படுகிறது. ‘ஐரோப்பிய நீதிபதிகள் ஒரு ஐரோப்பியனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி சுதேசி ஒருவனுக்கு நியாயம், வழங்கிய’ உதாரணங்கள் குறைவு. பாடசாலை விடுதிகளில் சுதேசிப் பெண் பிள்ளைகள் ‘ஐரோப்பிய பெண் பிள்ளைகளுடன் உடன் இருந்து உணவு உட்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இவை போன்ற பல அநீதிகளை தர்மரட்ன சுட்டிக்காட்டினார் (தர்மரட்ன, 1890). சமத்துவ வாய்ப்புகள் இன்மை, பாரபட்சம் காட்டுதல் என்ற இரு விடயங்களும் புதிய பணக்காரர்களிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியவை. வழமையான இந்த முறைப்பாடுகளைவிட இன்னொரு முறைப்பாடும் இவர்களால் முன்வைக்கப்பட்டது. இது முதலாளித்துவ வகுப்புக்கு உள்ளே ஏற்பட்ட அரசியல் பிரதிநிதித்துவம் என்ற சிக்கல் வாய்ந்த பிணக்கு ஆகும். அரசியல் பிரதிநிதித்துவம் என்ற இந்தப் பிணக்கை சாதிச்சச்சரவாக அல்லது சாதிப் போராட்டமாக சிலர் விளக்க முயன்றனர். ஆகையால் இது பற்றித் தனியாகப் பார்ப்போம்.

சட்டசபைப் பிரதிநிதித்துவம் தொடர்பான சர்ச்சைகள்

சட்டசபைப் பிரதிநிதித்துவம் 1833 முதல் 1912 வரை ஏறக்குறைய எவ்வித சீர்திருத்தமும் இல்லாமல் தொடரப்பட்டது. புதிய பணக்காரர்களினால் எழுப்பப்பட்ட முக்கிய சச்சரவாகவும் சண்டையாகவும் இது விளங்கியது சட்டசபையில் 15 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 9 பேர் உத்தியோகத்தவர்களாவர். 6 பேர் உத்தியோகத்தவர் அல்லாதோராவர். உத்தியோகத்தவர் அல்லாதோரை கவர்னர் நியமிப்பார். வெவ்வேறு குழுக்களில் இருந்தும் ‘பிரதான வர்த்தகர்களையும்’, ‘சுதேசிகளின் உயர் வகுப்பினரையும்’ கவர்னர் நியமித்தார். 1889 வரை சிங்களப் பிரதிநிதி ஒருவர் இருந்தார். அவ்வாண்டு முதல் கண்டியச் சிங்களவர் ஒருவரும், கரைநாட்டுச் சிங்களவருக்கு மேலதிகமாக நியமிக்கப்பட்டார். 1830களில் இருந்து 1889 வரை சிங்களவரைப் பிரதிநிதித்துவம் செய்தவர்கள், 1889 இல் நியமிக்கப்பட்ட கரைநாட்டுச் சிங்களவர் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் பண்டிதரட்ண(1839-43)
யே.ஜி. டயஸ்(1843-60)
ஹென்றி (ஹரி) டயஸ்(1861-65)
ஈ.எச். டெகியாகம(1865-75)
யேம்ஸ் டி அல்விஸ்(1875-78)
யே.பி. ஒபயசேகர(1878-81)
ஏ.எல்.டி. அல்விஸ்(1881-88)
ஏ.டி.அல்விஸ் செனிவிரத்ன(1888-1900)
எஸ். கிறிஸ்ரோபல் ஒபயசேகர(1900-11)

இப்பட்டியலில் உள்ளவர்களில் டெகியாகம தவிர்ந்த பிறயாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். ஒன்றிற்குள் ஒன்று திருமணம் செய்துகொள்ளும் உறவுக் குழுமமான இந்தக் குடும்பத்தில் இருந்தே மஹா முதலியார் என்ற பதவிக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இக் குடும்பத்தினர் அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுமாவர் இவர்களுள் யே.ஜி. டயஸ், ஹரி டயஸ் என்போர் சகோதரர்கள். இவர்களின் சகோதரி ஒருவரைத் திருமணம் செய்தவர், உறவுக்காரரான ஜேம்ஸ் டி அல்விஸ்; ஜே.பி. ஒபயசேகர, அவரின் சகோதரர் எஸ்.சி. ஒபயசேகர ஆகியோர் டயஸ் சகோதரர்களின் உறவினர்களாவர். இவ்விதம் பட்டியலின் ஐந்து உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் மிகநெருங்கிய உறவினர்களாய் இருந்தனர். சட்டசபை நியமனம்பெற்ற சிங்கள உறுப்பினர்கள், நில உடைமையாளர்களான இந்தக் கொவிகம நிலப்பிரபுத்துவ அந்தஸ்தை தமக்கு வரித்துக்கொண்டதோடு ‘முதல் தர கொவிகம’ என்று தம்மைக் கருதலாயினர்.

“சட்டசபையின் சிங்களவருக்கான ஆசனம் என்பது எமது குடும்பத்துக்குரியது என்றாகிவிட்டது. இப்படியிருந்தபோது அவர்கள் ஒரு வெளியாளான தெகியாகம என்ற கண்டியைச் சேர்ந்த புறர்டரை நியமித்தார்கள். அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைதானும் பேசவராது. அவர் கல்வி அறிவில் குறைந்தவராயினும் அடக்கம் உடையவர். அவர் கவர்னரிடம் சென்று தம்மை நியமிக்க வேண்டாம் என்று சொன்னார். கவர்னர் அவருடைய முதுகில் தட்டிக்கொடுத்துச் சொன்னார் ‘எனது பிரியமான தெகியாகம அவர்களே, உம்மையொத்த ஒருவர்தான் எங்களுக்கு சட்டசபை நியமனத்திற்குத் தேவை!’ கவர்னர் தெகியாகமவையே நியமித்தார். இருந்தாலும் மீண்டும் அந்த ஆசனம் எங்கள் குடும்பத்து யேம்ஸ் டி அல்விஸ்க்கு வந்தது. அதையடுத்து யே.பி. ஒபயசேகரா…. அதற்குப்பின் அல்பேர்ட். டி அல்விஸ் என்ற எமது இன்னொரு உறவினர்.”

-லயனல் வெலிங்டன் டியூக் சேரம் எழுதிய கடிதம் ஒன்றில் உள்ள பகுதி (குணரத்ன 1986: 39:40. மேற்கோள்).

60 வருடங்களுக்கு மேலாக சிங்களவருக்கான சட்டசபை ஆசனத்தை தம் குடும்பச்சொத்தாக வைத்துக்கொண்டிருந்த இக்குழுமத்திற்கு, முதலாளித்துவத்தின் புதுப்பணக்காரர் பிரிவில் இருந்து எழுந்த எதிர்ப்பு இயல்பானதொன்றே. 1878 இல் இப்பதவி வெற்றிடமானபோது புதுப்பணக்காரர் பிரிவு தம்மவரில் ஒருவரை இப்பதவிக்கு நியமிக்கும்படி சிபார்சு செய்து கோரிக்கைவிட்டது. இக்கோரிக்கை கவனிப்பைப் பெறாமல் போனதும் அடுத்த 30 வருடகாலத்தில் பதவி வெற்றிடம் ஏற்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் இப்பிரிவினர் கரைநாட்டுச் சிங்களவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று சிபார்சுடன் கோரிக்கைகளை வைத்து, நியமனத்தை தம்மவருக்கு வழங்கும்படி வாதாடிவந்தனர். இவர்கள் சிபார்சு செய்தவர்கள் மிகுந்த கல்வியறிவு படைத்தவர்களாயும் கராவ முதலாளித்துவப் பிரிவைச் சார்ந்தவர்களாயும் இருந்தனர். பல தடவைகளில் இந்த எதிர்ப்பு இயக்கம் கசப்புணர்வும் தீவிரமும் மிக்கதாய் இருந்தது. வரலாற்றாசிரியர்கள் சிலர் இதனை கொவிகம – கராவா சாதிச்சண்டையாக விளக்கம் கொடுத்தனர். தர்மரட்ன 1890 இல் வெளியிட்ட சிறுநூல் ‘கரா – கொய் போட்டி’ (Kara – Goi Contest) என்ற தொடரைத் தலைப்பில் கொண்டிருந்தது.

முதலியார் குழுமத்திலிருந்த சட்டசபையின் சிங்கள ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டோருக்கும் புதுப்பணக்காரர் சிபார்சு செய்தவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் வெளிப்படையானவை. முதலியார்களின் பிரதிநிதிகள் ஆளுமைக் கவர்ச்சியற்றவர்கள், அவர்களின் ஒரே ஒரு ‘தகுதி’ குடும்பத் தொடர்புகள் ஆகும். அவர்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டவர்கள் உயரிய கல்வியும், திறன்களும் உடைய இளைஞர்கள்; வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள். பிரித்தானியர்கள், நல்ல குடும்பப் பின்னணியையும், சட்டசபையில் அதிகம்பேசாது, வாய்திறக்காமல் இருக்கக்கூடியவர்களையும் நியமிக்கவே விரும்பினர். புதிய பணக்காரர்கள் செய்த முறைப்பாடுகள் நியாயமானவை. யே.ஜி. டயஸ் சிங்களவர் பிரதிநிதியாகச் சட்டசபையில் 17 வருடங்கள் இருந்தார். ‘இவரைப் பற்றிக் குறிப்பிட்டுச்சொல்ல எதுவும் இல்லை. இவரது சகோதரர்களின் விவேகமும், புத்திக்கூர்மையும் இவரிடம் காணப்படவில்லை’ என்று வெயின்மன் குறிப்பிட்டிருக்கிறார். டெகியாகம 1865 முதல் 1875 வரை நீண்டகாலம் உறுப்பினராக இருந்தார். இப்பத்து வருடகாலத்தில் அவர் சட்டசபையில் வாய் திறந்ததில்லை. ஆனால் ஒரே ஒரு தடவை மட்டும் அவர் பேசினார். ‘இப்பேச்சுதான் உலகின் சட்டசபையின் சரித்திரத்தில் உறுப்பினர்களில் ஒருவர் பேசியிருக்கக்கூடிய மிகச்சிறிய உரை. ஒரு தீர்மானத்திற்கு அவர் ‘ஐ ஓல் சோ’ (I also) என்ற சொற்களைக்கூறி வழிமொழிந்தார் (வெயின்மன், 1947. P. 10-11). இருந்தபோதும் முதலியார் குழுமத்தின் சில புத்திசாலிகளான உறுப்பினர்கள் தம்திறமையை சட்டசபையில் வெளிப்படுத்தத் தவறவில்லை. ஹென்றி டயஸ் மிகச் சிறந்த நியாய துரந்தரராக விளங்கியவர்: பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். யேம்ஸ் டி அல்விஸ் ஒரு புலமையாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார். ‘அக்காலத்தில் பெரும் ஆளுமைகளுள் ஒருவர்’ (மேலது: 11). 

முதலியார் குழுமத்திற்கும், கராவப் பணக்காரர்களுக்கும் இடையிலான சண்டை அரசியல் அரங்கில் இடம்பெற்ற சாதிச்சண்டையாகத் தோற்றலாம். இது உண்மையல்ல. முதலியார் வகுப்பு ‘முதல் தர கொவிகம சாதியின் அறியப்பட்டோராக’ (First Class Govigama Somebodies) இருந்தனர். அவர்களின் சமூக அந்தஸ்து நில உடைமையையும், சாதியின் உயர்படி இருப்பையும் ஆதாரமாகக்கொண்டது. பணக்காரர்களான கராவ ‘அநாமதேயங்கள்’ (Nobodies), பணத்திலும் கல்வியிலும் முதலியார் வகுப்பைவிட முன்னணிக்கு வந்திருந்தனர். அத்தோடு காணிகளை பெருமளவில் கொள்வனவு செய்து காணி உடைமையாளர்களும் ஆயினர். முன்பு காணி உடைமை என்றால் அது முதலியார்களுக்கு உரிய சிறப்பாக இருந்தது. இப்பின்னணியில் இவ்விரு தரப்பினருக்குமான சண்டையை நுணுகி ஆராய்ந்தால் உருவத்தில் சாதிச்சண்டையாக தென்படும் இச்சண்டை உள்ளடக்கத்தில் ஒரே வர்க்கத்தின் இரு பிரிவினருக்கிடையிலான முரண்பாடு என்பதைக் கண்டுகொள்ளலாம்.

முதலாளித்துவ வகுப்பின் பழைய பிரிவினர் நில உடைமையால் வரும் சமூகத்தகுதியைக் கொண்டு சலுகைகளை அனுபவித்து வந்தனர். புதுப்பணக்காரர்கள் தொடக்கத்தில் வர்த்தக நடவடிக்கைகள்மூலம் பணத்தைச் சேர்த்து, அப்பணத்தைக்கொண்டு உயர் சமூகத்தகுதிக்குத் தேவையான காணி உடைமையையும் ஏனைய அடையாளச்சின்னங்களையும் பெற்றுக்கொண்டனர். இதனால் பழைய முதலாளிகளிற்கு ஏற்பட்ட பகைமையுணர்வும் போட்டியும் இரு தரப்பாருக்கும் இடையிலான மோதல்களுக்குக் காரணமாயிற்று.

வர்க்கமொன்றிற்கு உள்ளே நடந்த மோதல்

சட்டசபையில் சிங்களவருக்கான ஆசனம் தொடர்பான பெரும்மோதல் 1878 ஆம் ஆண்டில் புதிய முதலாளி வகுப்பால் தொடக்கி வைக்கப்பட்டது. அவ்வாண்டில் யேம்ஸ் டி அல்விஸ் இறந்ததால் இப்பதவி வெற்றிடமாயிற்று. இந்த ஆசனம் அதற்குப் பின்னர் 1881, 1888, 1895, 1900, 1905 ஆகிய ஆண்டுகளில் வெற்றிடமாகிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இம்மோதல் மீண்டும் மீண்டும் இடம் பெற்றது. 1878 இல் முதல் தடவையாக முயற்சியாளர்குழு சட்டசபை நியமனம் தமது தரப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரியபோது மொரட்டுவவின் கராவ முதலாளியாகிய ஜோர்ஜ் அலெக்சாண்டர் தர்மரட்னவை முன்னிறுத்தியது. பிரித்தானியாவில் கல்விகற்ற தர்மரட்ன 1874 இல் பாரிஸ்டராக தொழில்புரியும் தகைமையை பெற்றார். இவரது தந்தை எச்.ஏ. தர்மரட்னவும் 1820களில் இங்கிலாந்துச் சென்று கல்விகற்றவர். பின்னர் இலங்கையில் அரசாங்கத் திணைக்களங்களில் பணியாற்றினார். 1878 இல் ஜி.ஏ. தர்மரட்னவின் பெயர் சட்டசபை நியமனத்திற்காகச் சிபார்சு செய்யப்பட்டவேளையில் கராவ சாதியினரில் அதி உயர் கல்வித்தகைமை உடையவராக அவர் கருதப்பட்டார். அக்காலத்தில் முன்னணியில் திகழ்ந்த முதலாளிகளும், நிலச்சொத்துகளின் உடைமையாளர்களுமான சுசூ சொய்சா, சாள்ஸ் டி சொய்சா, யெரொனிஸ் பீரிஸ், லின்டாமுலாகே யாக்கோப் டி சில்வா என்ற நான்கு பேர்கள் ஜி.ஏ. தர்மரட்னவின் நியமனத்தை முன்வைத்து ஆதரித்தனர். இந்நான்கு முதலாளிகளும் தமது ஆரம்ப மூலதனத்தை சாராயக்குத்தகை வியாபாரம்மூலம் தேடிக்கொண்டனர். பின்னர் பெருந்தோட்டங்களிலும் முதலீடு செய்தனர். பெரும்செல்வம் என்ற தகுதி மட்டுமல்லாமல் பிறதகுதிகளையும் அவர்கள் தேடிக்கொண்டனர். கிறிஸ்தவத்தை தழுவுதல், மேற்குமயமாதல்மூலம் நாகரிகத்தை விரைந்து ஏற்றல் ஆகிய தகுதிகளையும் பெற்றனர். இந்நான்கு பேரும் தர்மரட்னவின் சார்பில் குடியேற்ற நாட்டுக்காரியதரிசிக்கு விண்ணப்பம் செய்தனர். சட்டசபையின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அதி உச்சமான தகுதிகளைப்பெற்ற ஒருவர் என்றால் அது தர்மரட்னதான் என்று தம்விண்ணப்பத்தில் குறிப்பிட்டதோடு தர்மரட்னவின் தந்தையார் பிரித்தானிய அரசாங்கத்தில் விசுவாசம்மிக்க உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பதையும் பதிவு செய்தனர். இருப்பினும் இப்புதிய வர்க்கத்தின் இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. பழைய முதலாளி வகுப்பின் மிக விருப்புக்குரிய குடும்பத்தின் உறுப்பினரான ஜேம்ஸ் பீட்டர் ஒபயசேகர 1878 இல் சட்ட சபைக்கு நியமிக்கப்பட்டார்.

சிங்களவருக்கான சட்டசபை ஆசனத்தை கிறிஸ்தவ, கொய்கம, முதலியார் குடும்பம் ஒன்றின் ஏகபோகமாக ஆக்கும் கொள்கை தொடரப்பட்டது. இது சிங்கள சமூகத்தின் பிறபகுதியினர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. பணக்காரர்களான கிறிஸ்தவ முதலாளிகள் மட்டுமல்லாது எல்லா வர்க்கங்களையும் சேர்ந்த பெளத்தர்களும் தம் அதிருப்தியை வெளியிட்டனர். 1881 இல் களுத்துறையில் புறக்டராகப் பணியாற்றிய ஏ.எல்.டி. அல்விஸ் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டார். இது வெளிப்படையான பாரபட்சமான செயலாகக் கருதப்பட்டது. அல்விஸ் ‘பழைய தலைமுறையின் மிகச் சிறந்த கனவான். ஆயினும் குடும்பத் தொடர்பு என்ற விடயம்தான் அவரைத் தெரிவு செய்ததில் பிரதானம் பெற்றது என்பது யாவரும் அறிந்த ஒன்று’ என்று வெயின்மன் (1947: 11) குறிப்பிட்டார். 1883 முதல் 1890 வரை கவர்னராக இருந்த சேர் ஆர்தர் கோர்டன் இதனைத் திட்டமிட்டே செய்து வந்தார்; பிரித்தானிய அரசுக்கு ஒத்துழைப்பை வழங்கும் முதலியார் குழுவிற்கு நியமனங்களைத் தொடர்ந்து வழங்குவதே அவரது கொள்கை என்பது தெளிவாகத் தெரிந்தது. “பிரித்தானியருக்கு முதலியார்கள் பதவியில் இருந்து விசுவாசத்துடன் சேவை செய்த குடும்பம் என்பதுதான் முக்கியம். அறிவிலும் திறமைகளிலும் மட்டமானவர்கள் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதல்ல.” என்று கே.எம்.டி. சில்வா குறிப்பிட்டுள்ளார் (1973: 243)

1880களின் பத்தாண்டுகாலத்தில் முதலாளிகளின் கழகங்களும், உயர்தொழில் துறையினரின் சங்கங்களும் உருவாக்கப்பட்டன. இவற்றில், பல இனங்களையும் பல சாதிகளையும் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். 1882 இல் இலங்கை விவசாயக்கழகம் (Ceylon Agricultural Association) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. நாட்டின் முன்னணி முதலாளிகளில் ஒருவரான சாள்ஸ் டி சொய்சா இக்கழகத்தின் தலைவராக இருந்தார். அக்காலத்தின் முக்கிய முதலாளிகளான பி. ஆனல்ட் டயஸ், எல்.யூசி.டி. சில்வா, வி. யாக்கோப் டி மெல், எச். யெரொனிஸ் பீரிஸ் ஆகியோர் உள்ளடங்கிய முக்கிய பிரமுகர்களும் இக்கழகத்தின் செயற்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். பொ. இராமநாதன் (சட்டசபை உறுப்பினர்) ஹெக்டர் வான் குல்யன்பேர்க் மற்றும் யோன் பெர்குசன் (இவ்விருவரும் முன்னணிப் பத்திரிகைகளின் உடைமையாளர்கள்), பிரான்சிஸ் பெவன், எவ்.சி. லூஸ், எஸ்.ஆர்.டி. பொன்சேக, லூயிஸ் டி சொய்சா, பொ. குமாரசுவாமி ஆகியவர்களும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்த பிரமுகர்களாவர். 1888 இல் இலங்கை விவசாயிகள் கழகம் இலங்கைத் தேசியக் கழகம் (Ceylon National Association) என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்பெயர்மாற்றம் கழகத்தை ஓர் அரசியல் நிறுவனமாக ஆக்கும் துணிச்சலான செயல் எனக் கூறப்பட்டது. ஆனால் சாள்ஸ் டி சொய்சா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர் பதவி விலகினார். பெயர்மாற்றத்தை வால்டர் பெரேரா, டெல்கே சாள்ஸ் பீரிஸ், எஸ்.ஆர்.டி. பொன்சேக ஆகியோர் பிரேரித்தனர் (ஜயசேகர 1970: 126). 1890களில் யேம்ஸ் பீரிஸ் (யாக்கோப் டிமெல்லின் மருமகன்), சி.எம். பெர்னாண்டோ (சாள்ஸ் டி சொய்சாவின் மருமகன்) ஆகிய இளந்தலைவர்கள் இலங்கைத் தேசியக் கழகத்தில் மிகத்துடிப்போடு செயற்பட்டனர் (த சேர்ச் லைட், கிறிஸ்மஸ் இதழ், 1916).

1888 இல் சட்டசபையின் சிங்களவருக்கான ஆசனம் வெற்றிடமானபொழுது புதிய பணக்காரர்குழு தம்மவர் ஒருவருக்கு நியமனம்பெறும் முயற்சியில் மீண்டும் தோல்விகண்டது. கவர்னர் பழைய கொள்கையில் விலகாமல் நின்று, அலக்சாண்டர் டி அல்விஸ் செனிவிரத்தின என்ற நியாய துரந்தரரை சட்டசபைக்கு நியமித்தார். இவரும் குறிப்பிட்ட முதலியார் குடும்பத்தின் உறுப்பினரே ஆவர். 1889 இல் கண்டியச் சிங்களவருக்கு ஒரு பிரதிநிதியும், முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு சட்டசபைப் பிரதிநிதிகள் எண்ணிக்கையைக் கூட்டியதுதான் இக்காலத்தின் ஒரேயொரு முக்கிய மாற்றம். நியமிக்கப்பட்டோரின் பதவிக்காலம் 3 இல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டது. விரும்பினால் ஒருவரை மீண்டும் நியமனம் செய்யலாம் என்றும் விதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கை காரணமாக புதிய முதலாளிகள் மத்தியில் ஏற்பட்ட கசப்புணர்வின் தீவிரத்தை, இக்காலத்தின் கண்டன நூல்களின்மூலம் தெரிந்து கொள்ளலாம். இவை சாதியச் சொல்லாடலைக் கொண்டிருந்தன. இருப்பினும் இவை பணமும் கல்வியும் இருந்தபோதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள்கூட மறுக்கப்பட்டதால் எழுந்த விரக்தியின் வெளிப்பாடு என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜி.ஏ. தர்மரட்ன, “எழுந்தமானமானது; திருப்தியற்றது.” என்று கண்டித்ததோடு “சட்டசபையை, தேர்தல்மூலம் தெரியும் முறையின்படி திருத்தியமைத்தல் வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

“இலங்கையின் சட்டசபையின் சிங்களப் பிரதிநிதித்துவத்திற்கு நியமிக்கப்பட வேண்டியவருக்கு இருக்கவேண்டிய தகைமைகள் என்ன? என்பதைப் பிரசுரம்செய்து பகிரங்கப்படுத்த வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். இங்கிலாந்து சென்று கல்விகற்றவர்களும், உயர்ந்த கல்வித்தகைமைகளை உடையவர்களுமான சிங்களக் கனவான்கள் பலர் வேட்பாளர்களாக முன்வந்தபோதும் அவர்களை ஒதுக்கிவிட்டு கொவிகம சாதிக் கனவான்களே பல்லாண்டுகளாக இப்பதவிக்கு நியமிக்கப்படுகின்றனர். ‘கராவக்களுக்கும் இந்தக் கொவிகமக்களுக்கு இடையிலான பணக்கார அந்தஸ்து பற்றிய வேறுபாட்டை நாம் விளக்கமாகத் தந்துள்ளோம். அத்தோடு இங்கிலாந்தில் கல்விகற்றவர்களாக கொவிகமவைவிட அதிக எண்ணிக்கையிலான கராவ இருக்கின்றனர்.” (தர்மரட்ன, 1890: 63-64. ரூ. 74).

தர்மரட்னவின் கடுங்கோபம் இங்கே வெளிப்படுகிறது. ஏ.டி. அல்விஸ் செனிவிரத்தின வெளிநாடு சென்று படித்தவரல்லர்; ஏனைய போட்டியாளர்கள் அளவுக்குப் பணக்காரரும் அல்லர். 1849 இல் பிறந்த செனிவிரத்தின சென்ற் தோமஸ் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். 1883 இல் கொழும்பு முனிசிப்பல் சபை உறுப்பினரானார். 39 வயதில் நியாயதுரந்தரர் வேலையைச் செய்யத் தொடங்கினார் (றைட், 1907: 102). பிரித்தானியர்கள் செனிவிரத்தினவை அடக்கமும், விசுவாசமும் உள்ள டாம்பீகமற்ற பேர்வழியாகக் கருதி 1888 இல் அவரைச் சட்டசபை உறுப்பினராக நியமித்தனர். புதிய பணக்காரர்கள், செனிவிரத்தின மட்டமான திறன்களை உடைய ஒருவர் என்பதையும், தாம் பிரேரித்தவர்களின் மேதாவித்தனத்தையும், உயர்தகைமைகளையும் ஒப்பீடுசெய்து காட்டினர். தர்மரட்னவின் நூலின் கருத்துகள் சாதிய உள்ளடக்கத்தையுடையனவாகப் பார்க்கப்பட்டன. அவர் ‘முதல்தர கொவிகம’க்களின் பாசாங்கினை எடுத்துக்காட்டினார். புதிய பணக்காரர்களின் கோரிக்கைகளை முன்வைத்தார். கராவ சாதியினர் சத்திரிய வம்சத்தினர் என்பதை தம்நூலில் விவரித்துச் சொல்கிறார். கொவிகம தாழ்ந்த நிலையினரான சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டார். அவர் ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய உயர் லட்சியங்கள் பற்றியும் எழுதியுள்ளார். குறிப்பாக தொழில்வாய்ப்புகளில் இனவாத பாரபட்சம் காட்டப்படுவதை எதிர்த்தார். பிரித்தானிய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார, சமூகச் சலுகைகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார். வரிகளைக் குறைக்க வேண்டும்; சுதேச முயற்சியாளர்களுக்கு கடன்வசதிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை விடுத்தார். அவ்வகையில் சுதேசிய வர்த்தக முதலாளித்துவத்தின் உள்ளக் குமுறல்களை தர்மரட்ன வெளிப்படுத்தினார்.

தர்மரட்னவின் சிறுநூல் பிரஞ்சுப் புரட்சி, அடம்சிமித், முதலாளித்துவ சிந்தனையாளர் என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. இது அவரது கோரிக்கைகளின் வர்க்க உள்ளடக்கத்தினை எடுத்துக்காட்டுவதாகும். முதலாளித்துவச் சீர்திருத்தங்கள் விரைவாகப்பரவி முன்னேறும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். அரசாங்க உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் பற்றிக் கூறுமிடத்து அவர் சாதி என்பதைப் பேசாது பொதுவாகவே பேசுவது முக்கியமானதொரு விடயம். “முதலியார்கள், ரட்டே மஹாத்தயாக்கள், முகாந்திரங்கள் ஆகிய பதவிகளில் இருப்போர் சிங்களவர்களே ஆதலால் அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.” என்று அவர் எழுதினார். வறுமையின் தாக்கத்திற்கு உள்ளான பகுதிகளில் தானிய வரி, வீதி வரி போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ‘செவிடர், ஊமை, ஊனமுற்றோர், பிச்சைக்காரர்’ ஆகியோருக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். அவர் நூலில் இருந்து மேற்கோளாகத்தரப்படும் பின்வரும் பகுதி எழுச்சி பெற்றுவரும் முதலாளித்துவ வர்க்கத்தின் உலகப்பார்வையை எடுத்துக்காட்டுவதாய் உள்ளது.

“தவறான சட்டங்களை இயற்றுதல், நீதியற்ற வரி விதிப்பு, அறவிட்ட வரிப்பணத்தைத் தவறான முறையில் செலவிடுதல் ஆகியவற்றால் நேர்ந்த துன்பங்கள்தான் பிரஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தன. ஆளும்குழுவின் உறுப்பினர்களான சிலர், ஆளப்படுவோர் தங்களுக்காகவே உருவாக்கப்பட்டவர்கள்; ஆளுவோரின் நன்மைக்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றனர். அறிவற்றவர்களான பலர் கபடபுத்தியுள்ள சிலர் உண்டு கொழுப்பதற்கு உழைத்துக் கொடுக்கத்தான் இருக்கிறார்கள் என்றும் கருதுகின்றனர். சனப்பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மக்களுக்காகத்தான் அரசாங்கம் இருக்கின்றது என்ற எமது கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். (தர்மரட்ன, 1890)”

விவாதமுறையில் அமையும் தர்மரட்னவின் கருத்துகள் உள்ளடக்கத்தில் புதிய முதலாளித்துவ வகுப்பின் பொருளாதார, அரசியல், சமூகக் கோரிக்கைகளையும், அவர்தம் மனக்குறைகளையும் வெளிப்படுத்துவனவாய் இருந்தன. புதிதாக எழுச்சிபெற்ற முதலாளித்துவ வகுப்பு அரசியல்ரீதியில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஒன்று திரளவில்லை. ஆயினும் முதலியார் வகுப்பின் ஆழவேரூன்றிய நலன்களைக் கேள்விக்கு உட்படுத்தியும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சுட்டிக்காட்டியும் எதிர்ப்பை வெளியிட்டது.

தொடரும். 

The post காலனித்துவகால அரசியல்: வர்க்கமும் சாதியும் – பகுதி 1 appeared first on Ezhuna | எழுநா.

மறுவாசிப்பில் நாவலர்

இன்று நாம் கடந்தவாறிருக்கும் சமூகநியதிகளில் கடந்தகாலத்தின் தாக்கங்கள் உள்ளன. இப்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் களைந்தெறிந்து திடமான முன்னேற்றத்தை எட்டுவதற்குத் தடையாகச் சில தவறுகள் முன்னரே ஏற்படுத்தப்பட்டவையாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. மறுதலையாக, கடந்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆரோக்கியமான செயல்முறைகளைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க முனையாமல் திசைமாறிச்சென்ற இடைக்காலத்தின் வரலாற்று ஓட்டம் காரணமாகவும் இன்றைய பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கலாம்.

இன்றைய வாழ்வியலில் கணிசமான தாக்கத்தை விளைவித்த காலப்பரப்பான நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எமது இருப்பு எவ்வாறு இருந்தது? அன்று நிலவிய இடர்பாட்டை மாற்றியமைத்து மேல்நிலை எய்தவென எடுக்கப்பட்ட எத்தனங்கள் எவை? அவற்றில் ஊடாடிய ஆரோக்கியமான அம்சங்கள், தவறான பண்புகள் என்பவை இன்றைய வாழ்நிலையில் எத்தகைய தாக்குறவுடன் உள்ளன? இத்தகைய கணிப்பினை அன்று செயற்பட்ட முதல்நிலை ஆளுமையாகிய ஆறுமுக நாவலரை முன்னிறுத்தி மேற்கொள்ள முயல்வோம்!

ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் குடியேற்றவாதத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டம் முன்னெடுத்தாக வேண்டியிருப்பது குறித்த ஈடுபாடு தொடர்ந்தபடிதானுள்ளது. அன்று பிரித்தானியக் காலனியாக இருந்தநிலை மாறியபோதிலும் சிங்களத் தேசத்தின் காலனியாகத் தமிழர் தாயகம் அடிமைப்பட்டதான கணிப்புப் பெரும்பான்மையான தமிழ்த் தேசியர்களிடம் உள்ளது. இந்தப் புரிதல் பிரித்தானிய ஏகாதிபத்தியப் பிணைப்பை நீடித்தபடி இருந்த டொமினிக்கன் அந்தஸ்துடன் கூடிய குடியரசாக இலங்கை இருந்தவரை தமிழ்த் தேசியர்களிடம் ஏற்பட்டிருக்கவில்லை. அவ்வகைப்பட்ட அரைச் சுதந்திர நாடாக இருப்பதில் சுகம்கண்ட ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கி வந்த தமிழ்த் தேசியத்துக்கு உரியதான கொங்கிரஸ் – தமிழரசு என்ற பிளவுபட்ட இரு கட்சிகள் 1972 ஆம் ஆண்டில் பூரண சுதந்திரக்குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் ஒன்றிணைந்து ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ என்று செயற்படலாயினர். முன்னதாகத் தமிழ்த் தேசியம் என்ற சொல்லைக்கூட அவர்கள் உச்சரித்ததில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பின் வடிவமாக அமைந்திருந்த தேசியம் முழு இலங்கையைக் குறிப்பதாக இருந்தது. எழுபதாம் ஆண்டுகளில் ‘சிங்கள ஏகாதிபத்தியத்தை’ எதிர்ப்பதாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த தமிழ்த் தேசியம் காலப்போக்கில் ‘தேசியம்’ என்பதை உருச்சிதைத்தது. தேசியம் என்றாலே தமிழினத்துக்கானதாகப் புரிந்துகொள்ளப்படும் இன்றையநிலை ஏற்பட்டபோது, உலக ஏகாதிபத்தியத்தின் பகுதியாக அது இணைவு பெற்றுவிட்டமைக்கு அன்று விடுதலைத் தேசிய உணர்வற்று முன்னெடுக்கப்படுவதாய் அமைந்த முதல்கோணல் நடவடிக்கைகள் காரணங்களாகின.

ஏகாதிபத்தியத்திடம் இருந்து மீட்சிபெற முனைந்த சிங்களத் தேசியம், தம்மால் புறக்கணிக்கப்படுவதாக அமைந்த இடைவெளியைத் தமிழினத்  தேசியத்துக்கு ஏற்படுத்தும் செயலொழுங்குகளைத் தவிர்த்து இயங்கி இருப்பின் மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் விருத்திபெற்று ஏகாதிபத்திய அணிக்குள் சங்கமமாவதனைத் தடுத்திருக்க இயலும். மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்தை ஒடுக்கியவாறு ஒன்றிணைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டமைத்தல் எனும் பேரில் முன்னெடுக்கப்பட்டு முப்பது வருடங்கள் நீடித்த யுத்தம் சிங்களத் தேசியத்தையும் ஏகாதிபத்தியக் கைப்பொம்மையாக இயங்க வழிப்படுத்தி உள்ளது. உலகவங்கி ஊடாக ஐக்கிய அமெரிக்காவும் அயலவர் என்ற உரிமையுடன் இந்தியாவும் தமக்குரிய மேலாதிக்க நலன்சார்ந்த விடயங்களையே சிங்களத் தேசியம் செயற்படுத்த இயலுமானதாக வழிப்படுத்தி உள்ள இன்றைய சூழல் என்பது ஏனைய இனத்தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்ததன் விளைவு எனும் புரிதல் இன்னமும் சிங்களத் தேசியத்திடம் தேவையான அளவுக்கு ஏற்பட்டுவிடவில்லை. சொந்த நாட்டை ஏகாதிபத்தியத்திடம் மென்மேலும் காட்டிக்கொடுக்கும் அரசியல் செயற்பாடுகளை வளர்க்கிறோம் என்ற உணர்வற்று தமிழினத் தேசியமும் இயங்கியவாறுள்ளது.

ஏகாதிபத்தியம் தனது நேரடிக் காலனித்துவப் பிணைப்பை 1948 ஆம் ஆண்டில் கைவிடும்போது இங்குள்ள இனத்தேசியங்கள் ஒன்னுடனொன்று தமக்குள் மோதுவதற்கான ஏற்பாடுகளை விதைத்துச் சென்றிருந்தது. அதன் வலைக்குள் இடர்பட்டு இரு இனத்தேசியங்களும் சுயநிர்ணயப் பிரயோகத்தைப் பூரணவிடுதலை நோக்கி முன்னெடுக்க இயலாத தப்பாட்டங்களில் ஈடுபட்டன. ஏகாதிபத்தியத் தகர்ப்புடன் இனத்தேசியத்தின் சமூக – பொருளாதார – அரசியல் விடுதலையை வென்றெடுக்கும் இலட்சியம் முனைப்புடையதாக இருந்திருப்பின் ஏகாதிபத்திய அரவணைப்புக்குள் சென்றடைந்து மேலும் தவறான பாதையில் இயங்குவதனைத் தமிழினத் தேசியம் தவிர்த்திருக்க இயலும். எம்மை ஆயுதநுகர்வில் சாகடித்து ஓய்ந்த பின்னர் வேறுகளங்களில் ஆயுத முழக்கங்களுக்கான வாய்ப்பு அந்த மரண வியாபாரிகளுக்குத் தடையின்றிக் கிடைத்து வருகிறது. இன்னமும் யுத்தங்களால் உலகைத் தமது கட்டுக்குள் வைத்திருக்க முனையும் ஏகாதிபத்தியப் பிணைப்பைத் துண்டிக்கவியலாத துர்ப்பாக்கிய நிலையிலேயே மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் உள்ளது. எமது நாட்டினுள் வாழும் ஏனைய இனத்தேசியங்கள் இடையே உள்ள உழைக்கும் மக்கள் முன்னெடுக்கும் விடுதலைப் போராட்டங்களுடன் கைகோர்க்காமல் பிரிவினை மனப்பாங்குடன் தனிவழி காணும் அரசியல்போக்கு ஏற்படுத்தி உள்ள பாதக விளைவுகள் பல; அவற்றில் இருந்து கற்றுக்கொள்ள மறுக்கும்போக்கு நீடிக்கிறது. அண்மையில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் மிக மோசமான இனவாதம் தமிழர் தரப்பிடமே வெளிப்பட்டு இருந்தது. 

தேசியவாதப் பிளவு மனப்பாங்கானது ஏகாதிபத்தியத்தின் கபட நாடகங்களுக்கு இரையாக்கிவிடும் என்பதற்கு இந்திய – பாகிஸ்தான் யுத்தக் கொண்டாட்டங்கள் அண்மைக்கால வெளிப்பாடாகும். ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு மாறாக ருஷ்யாவுடனும் சீனாவுடனும் நட்புப்பாராட்டும் இந்தியாவின் தலையில் அவசியமற்ற ஆயுதங்களை ஜனாதிபதி ட்ரம்ப் திணித்ததன் பேரில் பாகிஸ்தானுடன் வலிந்த யுத்தம் ஒன்றை இந்தியா மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஆயுத வியாபாரம் அமோகமாக நடந்தேறிய பின்னர் இருதரப்பாருக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்திய புனிதப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் இந்தச் சந்தர்ப்பத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது. இவ்வகையில் கிடைத்த ‘வெற்றி’ தமக்கான மீளெழுச்சியைச் சாத்தியப்படுத்தப் போதுமானதல்ல என்பது ஏகாதிபத்தியத் திணை அறியாத ஒன்றல்ல. எவ்வளவு முயன்றும் இந்திய – சீன முரண்பாட்டை யுத்தமாக்கிவிட இயலவில்லை. முன்னதாக ஒடுக்கப்பட்ட தேசங்களாக இருந்து விடுதலையின் பின்னர் நிதானமாக வளர்ச்சித்திசையில் முன்னேறி வருகின்ற இருபெரும் தேசங்கள் எத்தகைய முரண்பாடுகளை முகங்கொண்டபோதிலும் சுய விருத்தியின் பொருட்டு வர்த்தக உறவை வளர்த்தெடுத்து வருவதாக மட்டுமன்றி, தம்மிரு நாடுகளின் எல்லையில் நிலைகொண்டிருந்த  இராணுவங்களை விலக்கிக்கொண்டும் உள்ளன (அவசியமற்ற அந்தச்செலவை அபிவிருத்தி நோக்கித் திருப்பும் வாய்ப்பைப் பயன்படுத்தி உள்ளன). விடுதலைத் திணை அரசியலுக்கு உரியதாக மக்கள் சீனம் முன்னெடுக்கின்ற அரசியல் பிரயோகமானது மேலாதிக்கத் திணை அரசியலைத் தொடருகின்ற இந்தியாவை இவ்விடயத்தில் இணங்கிப்போக வழிப்படுத்தி இருக்கும் இந்த அம்சம் கவனிப்புக்கு உரியது; ஐக்கிய அமெரிக்காவுக்குப் பணிந்ததுபோலக் காட்டிக்கொண்டு அதனை மேவியவாறு உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக விருத்திபெறும் எத்தனத்தில் இந்தியா!

சைவத் தமிழின் ஐந்தாம் குரவர்

வெளியுலக வணிக நாட்டத்துடன் பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் ‘நாடுகாண் வீரர்களை’ உத்வேகமூட்டி அனுப்பியவாறு இருந்த வேளையில், தமது இருண்ட யுகப் பின்தங்கியநிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியனவாய் இருந்தன. அன்றைய சாகசப் பயணங்களை இலகுபடுத்தவும் வர்த்தக நலனுக்கான தொடர்பாடல் திறனை விருத்தி செய்ய முன்னெடுத்த அறிவியல் தேடல்களும் செயல்முனைப்புகளும் தொழில் புரட்சியைச் சாத்தியப்படுத்திய பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறில் ‘மேலைத் தேசம்’ என்ற திமிருடன் ஆளும் தரப்பாகத் தம்மை அடையாளம் காட்டினர். நான்கு நூற்றாண்டுகளின் முன்னர் அதியுச்சநிலைக்குரிய நாடுகள் எனப் பார்த்து வியந்த இந்தியா, சீனா, அரபுலகு என்பவற்றை ஒட்டச் சுரண்டி ஒட்டாண்டி நிலைக்கு ஆளாக்கியது தாமே எனும் உண்மையை மறந்து – மறைத்து, ‘ஆசிய உற்பத்திமுறைக்குரிய இந்தத் தேசங்கள் என்றென்றும் மூட நம்பிக்கைகளில் மூழ்கித் திளைத்த பிற்போக்கான வாழ்முறைகளைக் கொண்டிருந்தன, கொண்டிருப்பன’ என்றனர்.

தம்மைப்போல எம்மையும் நாகரிகப்படுத்தும் பொருட்டு கிறிஸ்தவ வேதாகமத்தை (பைபிளை) எம்மத்தியில் பரப்புரை செய்ய வேண்டியுள்ளது என, இறை தொண்டாற்றும் பாதிரிகளைக் கடல் கடந்து பயணப்பட ஊக்கப்படுத்தினர் மேலைத்தேச வணிக (வைசிய) ஆட்சியாளர்கள். கல்வி விழிப்புணர்வூட்டலுடன் இணைந்ததாக அவர்களது மதப்பரப்புரை அமைந்தது. இவ்வாறு அமெரிக்க மிசனரியால் நடாத்தப்பட்ட யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் தனது மாணவனாகக் கற்ற ஆறுமுகத்துடன் இணைந்து வேதாகமத்தைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியை பேர்சிவல் பாதிரியார் முன்னெடுத்திருந்தார். இலக்கிய நயத்தையும் இறை நம்பிக்கையையும் ஒருங்கே கொண்டுருந்த பைபிளை மொழிபெயர்ப்பது மகிழ்வூட்டும் விவகாரமாக ஆறுமுகத்துக்கு அமைந்திருக்கும். இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு முக்கால் நூற்றாண்டுக்குப் பின்னர் மகாகவி பாரதிக்கும் அவ்வாறான ஒரு மொழிபெயர்ப்பை முன்னெடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது என்பதனை வி. சக்கரைச்செட்டியார் வாயிலாக அறிகிறோம் (பேர்சிவல் பாதிரியார் தமது மாணவருடன் இணைந்து மேற்கொண்ட தமிழாக்கம் மிகச் சிறப்பானதெனப் பாராட்டப்பட்டபோதிலும் பயன்படுத்தப்படவில்லை என்பர்). பிரெஞ்சு இந்தியாவாக அமைந்த பாண்டிச்சேரியில் பத்து வருடங்கள் ‘தலைமறைவு’ வாழ்வை முன்னெடுத்த பாரதி, அதனைத் தொடர விரும்பாமல் பிரிட்டிஷ் இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் மொழிபெயர்க்கும் அந்த விருப்பம் குறித்துத் தனது நண்பரிடம் கூறியுள்ளார். 

“புதுவையினின்று பாரதியார் திரும்பியதும் நான் அவரைச் சந்தித்தபோது தாம் விவிலிய வேதத்தை (Bible) நூதனமுறையில் மொழிபெயர்க்க உத்தேசித்திருப்பதாகக் கூறினார். அப்பணிக்குச் ஶ்ரீமான் திரு வி. கலியாணசுந்தர முதலியார் முதலான வேறு தமிழறிஞர்களுடன் நமது பாரதியாரும் பெரிதும் யோக்யதை படைத்தவரென்று கூறுவேன். அவர் மட்டும் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்திருப்பின், அத்தகைய ஓர் பணியை தேசிய உணர்ச்சியுள்ள இந்திய கிருஸ்தவர்கள் அவர்பால் ஒப்புவித்திருப்பாரகள் என்பதில் ஐயமில்லை” (கடற்கரய் மத்தவிலாச அங்கதம் {பதிப்பாசிரியர்}, 2017. பாரதி விஜயம் – மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள், வி. சக்கரைச்செட்டியார், ‘ராஜீய வாழ்வு’. சென்னை – 83. ப. 620). கல்வி – உயர் தொழில் வாய்ப்பு என்பவற்றை முன்னிறுத்தியவாறு வலிமைமிக்க கருவியாக மதமாற்ற நடவடிக்கையை ஏகாதிபத்திய அரசு கையாள்வதற்கு எதிராகக் காத்திரமான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தவர் பாரதி; ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அடிநிலை மக்களையும் பரந்தளவில் அணிதிரட்டலுக்கு ஆட்படுத்தி இருந்த கட்டத்தை முதல் தடவையாக எட்டியிருந்த இரண்டாவது தேசிய எழுச்சிக்கான (1919 – 1922) சூழலில், அதனை ஆதரித்து வளர்ந்தபடியே எதிரியால் பயன்படுத்த இயலாத பண்புடன், மக்களுக்கான மத நம்பிக்கைத் தளம் சார்ந்து பைபிள் மொழிபெயர்ப்பைச் செய்யும் ஆவல் கொண்டவராக பாரதி இருந்துள்ளார். 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறில்தான், ஐரோப்பியர்களான தாமே முழு உலகையும் ஆளப்பிறந்த மக்கள் கூட்டத்தினர் எனக் கருதத் தொடங்கியதுடன் அதற்கெனக் கடவுளால் தேர்ந்தெடுத்துப் படைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதான எண்ணப்பாங்கினை உருவாக்கி வளர்க்க ஆரம்பித்திருந்தனர். அதே வெள்ளையர்கள் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறி நிரந்தரமாக வாழ்ந்துவந்த நிலையில் தமது ஐரோப்பியத் தாயகத்தில் இருந்து வீரசுதந்திரம் வேண்டிப் போராடி 1776 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றிருந்தனர்; அந்த ஐக்கிய அமெரிக்காவின் கிறிஸ்தவ மிசனரியினரிடம் காலனித்துவ எதிர்ப்புணர்வும் ஜனநாயக நாட்டமும் அப்போது மேலோங்கி இருந்த சூழலில், அவர்களால் ஆகர்ஷிக்கப்பட்டுக் கல்வி கற்ற ஆறுமுகமும் பைபிள் மொழிபெயர்ப்பை மேற்கொண்டது முற்றிலும் வேறுபட்ட கால – தேச நிலைமைகளுக்கு உரியது. இந்தக் கவர்ச்சியில் கிறிஸ்தவமயப்பட்டு, தான் தடம்புரண்டால் என்னவாகும், தாம் அதனை மீறித்தப்பினாலும் தமது உதவியுடன் தமிழாக்கப்பட்ட பைபிள் வேறுபலரைக் கிறிஸ்தவராக்கப் பயன்படுமாயின் அதனை ஏற்பது சரியானது தானா? என்ற கேள்விகள் ஆறுமுகத்தை வருத்தி இருக்க வேண்டும். இவ்வகையில் ஈடுபாட்டுடன் தமிழ்ப்படுத்திய ஆறுமுகம் கிறிஸ்தவராக மதம் மாறிவிடவில்லை என்பதனைப்போல உயர் சாதியினர் எனப்படுவோரில் பலர் மதமாற்றத்துக்கு இணங்க மறுக்கின்றனர் எனும் நிதர்சனத்தையும் அமெரிக்க மிசனரியினர் காணத் தவறவில்லை. ஆதிக்க சாதிப் பிரிவினருடன் அதீதமாக மெனக்கிடுவதோடு அடங்கிவிடாமல் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினரைக் கல்வியூட்டி மத மாற்றத்துக்கு ஆட்படுத்துவதையும் இணைப்பது அவசியம் எனக் கருதினர்.

அவ்வாறு ஒடுக்கப்பட்ட மாணவர் மத்திய கல்லூரியில் சேர்க்கப்பட்ட போது, சைவத் தமிழ்ப் பண்பாட்டை பாதுகாக்கும் அவசியம் ஆறுமுகத்தை உந்தித்தள்ளியதன் பேரில், அங்கிருந்து வெளியேறிச் செயற்பட்டதன் வாயிலாக நாவலர் எனப் பரிணமித்தார் என்பதை அறிவோம். முந்திய நிலவுடைமைச் சமூக முறைமையில் உலகின் முதல்நிலை வல்லரசாகத் திகழ்ந்த தமிழ்ச் சைவத்தின் பரம்பொருள், உலகெலாம் ஓதுதற்கரியவன் என்ற பீடத்தினின்றும் வீழ்த்தப்படுவதனை, ஒருப்பட இயலாதென்று உணர்ந்த ஆறுமுக நாவலர் சைவத்தின் மீளெழுச்சிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். புதிய மதம் நவீனப் பயன்பாட்டு வல்லமை பொருந்திய மொழிப்பிரயோகத்துடன் மேலெழுகிறது எனில் பழம் பெருமை வாய்ந்த தமிழின் மகிமையையும் மீட்டுயிர்ப்புச் செய்யும் பணி இணைக்கப்பட வேண்டும் என உணர்ந்தார். கவனம்பெறாமல் அழிந்தொழியும் ஓலைச்சுவடிகளை நவீன உலகின் நீடித்த உயிர்ப்புக்கு மடைமாற்றி அச்சு நூல்களாக்கினார்.

தமிழ் வணிக ஊடாட்டம் வாயிலாக அன்று ஆற்றலோடு இயக்கம் கொண்டிருந்த நாடுகள்தோறும் பரப்புரை செய்யப்பட்ட சைவத்தின் மேன்மை சமஸ்கிருதத்துடன் இணைக்கப்பட்டதாக இருந்தது. முன்னதாக வளவழிபாட்டு மேலாண்மைக்கு முந்திய அறிவியல் மனப்பாங்கு மேலோங்கியிருந்த தமிழ் தன்னூடாக அனைத்து மதங்களையும் வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தது; பக்திப் பேரியக்கம் வாயிலாகச் சைவம், வைணவம் ஆதிய வைதிக மதங்கள் மேலோங்க உதவும் கருவியாகவும் இருந்தது. பௌத்தத்துக்குப் பாளி, சமணத்துக்குப் பிராகிருதம், வைதிக மதங்களுக்குச் சமஸ்கிருதம் போல ஒருதனி மதத்துக்கான மொழியாகத் தமிழ் ஒடுங்கிப்போக இயலாத காரணத்தால் உலகமொழி ஊடாட்டத்தைப் பெறத் தவறியது; அன்றைய உலக மொழிகளாக பாளி, சமஸ்கிருதம் என்பனவே தொடர்பாடல் பயன்பாட்டில் இருந்தன. 

முன்னதாகப் பிராமணருக்கும் சமஸ்கிருதத்துக்கும் தம்மை அறியாமல் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாகப் பட்ட அடி யாழ்ப்பாணத் தமிழர் அடிமனதில் உறைந்துள்ள ஒன்று; யாழ்ப்பாணத்தை மத்தியகாலக் கட்டமைப்பில் வடிவமைத்தபோதே தமிழ்த் தத்துவ நெறியான சைவசித்தாந்த மேலாதிக்கத்துடன் வாழ்வைத் தொடங்கியவர்கள் இரண்டொரு நூற்றாண்டுகளாக மாற்றுமொழியினரது மதத்துக்கு அடிமைப்பட நேர்ந்துள்ளது. நவீன உலகமொழியாக விருத்திபெற்றுவந்த ஆங்கிலம் எமது பண்பாட்டு அடித்தளத்தை முற்றாகத் தகர்க்க வாய்ப்புள்ளது எனக் கண்டபோது சைவத் தமிழைப் பேணும் பணியைப் பழைய பாணியில் முன்னெடுப்பது போதுமானதல்ல என்பதனை நாவலர் புரிந்துகொண்டார். ஆதிக்கநிலையில் பண்பாட்டுச் சிதைவை எட்டியிருந்த பிரபுக்களின் சிற்றின்பக் களியாட்ட நிறுவனங்களாகத் திகழ்ந்த கோயில்களின் சடங்காசாரக் கையாளுகைகளை விட்டொழிப்பது அவசியமெனக் கண்டார். வெற்றிபெற்ற புதிய வாழ்வியலுக்கான மிஷனரிமார்களது கிறிஸ்தவமதப் பரப்புரை நடைமுறைகளைப் பிரயோகிக்க முனைந்தார். முன்னதாகத் தத்துவத்தளத்தில் பௌத்தத்தை வெற்றிகொள்ள ‘மறைவான பௌத்தர்’ எனக்கூறத்தக்க வகையில் இயக்கம் கொண்டு அதன் அம்சங்களை உட்படுத்திய நுட்பத்தாலேயே வைதிகத் தத்துவத்தைச் சங்கரரால் மேன்மைபெற வைக்க இயலுமாக இருந்தது. நாவலரும் நவீன புரட்டஸ்தாந்தக் கிறிஸ்தவ நடைமுறைகள் சிலவற்றைக் கையேற்று இயங்குவதன் வாயிலாகவே கிறிஸ்தவத்தை வெற்றிகொள்ள வேண்டியவராக இருந்தார். இந்துக் கோயில்களின் பன்முகப்பணிகளில் கலை விருத்தியும் முதன்மைக்குரியதாகத் துலங்கியது; அதன் விருத்திக்கென அமர்த்தப்பட்ட தேவரடியார் பெண்களைக் காமக்களியாட்டத்தின் கருவிகளாக்கி இருந்ததனை எதிர்த்தார். நடனக்கலையைச் சின்னமேளம் எனக் கீழிறக்கம் செய்வதுடன், வாணவேடிக்கைக் களங்களாகக் கோயில்கள் மாற்றப்பட்டு இருப்பதனைக் கண்டித்து, மாற்றுச் செயற்பாடாக சமயப் பிரசங்கங்கள் – புராணப்படிப்பும் உரை விளக்கங்களும் என்பவற்றினூடாக மத விழிப்புணர்வு மேலோங்க வழிகாட்டினார்.

தமிழகத்தில் பெற்றிருந்த மேலாதிக்க உச்சத்தைப் பிராமணருடன் பங்குபோட்டதன் விளைவை ஏற்கனவே கண்டுணரந்து, அவ்வகைப் பாகப்பிரிவினை ஏற்படாத தனி ஆளுகைக்கு உரியதாக கட்டமைத்திருந்த யாழ்ப்பாணக்களத்தில் சைவசித்தாந்தம் மட்டுமே புழங்கும் தத்துவமாக நிலவுவதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாவலர் மேற்கொண்டார்; அதன் பிழிசாறாக அமைந்து மக்களுக்கானதாக மேற்கிளம்பிய கந்தபுராண படனம் நாவலரால் முன்னெடுக்கப்பட்டு, இன்றுவரை தொடர்வதனைக் காண்கிறோம். இலக்கியப் பரிச்சயமற்ற பாமர மக்கள் எனப்படுவோரும் கந்தபுராணப் பிரசங்கங்களைக் கேட்டு வளர்ந்ததன்பேரில் யாழ்ப்பாணம் ‘கந்தபுராணக் கலாசாரக்’ களம் என்ற அடையாளத்தைப் பெற இயலுமாயிற்று!

ஒரு கடவுள் மட்டுமே உண்மைப் பொருள் என்பதற்கு மாறாக சைவர்கள் பல கடவுளர்களை வழிபடுவதாகப் பாதிரிமார் பரப்புரை செய்தபோது, அவர்களது சுதா – பரிசுத்த ஆவி என்பவற்றைக் கூட்டுச்சேர்க்க அவசியமுடைய பிதாவைவிடவும் அதியுச்சப் பரம்பொருளான பதி மட்டுமே சர்வமல்லமை பொருந்திய ஒரே இறையெனக் கொண்டது சைவசித்தாந்தம் என எடுத்துரைத்தார்; அதனைப் பல்வேறு ரூபங்களில் கொண்டாடும் மக்களுக்கான நடைமுறையை நியாயப்படுத்தும் கந்தபுராணத்தைப் பயன்படுத்தலானார். கந்தபுராணத்திலேயே காட்டப்பட்டவாறு, முருகன் தனியொரு கடவுளல்ல; சிவனின் ஒரு மூர்த்தமே அவரென எடுத்துரைக்க இயலுமாக அமைந்ததில், கிறிஸ்தவம் முன்னிறுத்துவதைக்காட்டிலும், சைவசித்தாந்தமே ஒரு கடவுள் கோட்பாட்டின் வெளிப்பாட்டை உடையதென்றார்!

வீரயுகக் காலத் தமிழில் காட்டப்பட்ட முருகனை மேவியதாக நிலப்பிரபுத்துவக் கொடுமுடிக்கு உரிய கடவுளாகச் சிவனைக் காட்ட நேர்ந்தது. ஆலமர் செல்வனும் பேசப்பட்டமையாலும், முருகனுக்கான பல அடையாளங்களை சிவனுக்கும் பொருத்த இயலுமாக இருந்தமையாலும், 14 ஆம் நூற்றாண்டின் பின்னர் ஆட்சியாளரது பரம்பொருளாக விஷ்ணு மேற்பட்டபோது, சைவ – வைணவச் சமரசத்தின் பொருட்டு, சிவனின் மைந்தனாகவும் விஷ்ணுவின் மருமகனாகவும் புராணிக்கப்பட்ட முருக வழிபாடு தமிழில் மேலோங்கும் அவசியம் ஏற்பட்டிருந்தது. அந்த முருகன் வேறெவருமல்ல, சிவனின் மூர்த்தமே என்று சொல்லும் வாய்ப்பையும் கந்தபுராணம் பயன்படுத்திக் கொண்டது. உலக மேலாதிக்கக் காலனித்துவக் கொடுமுடியில் சைவத்தை மீளெழுச்சிபெற வைக்கும் வகையில் இந்த அம்சங்களைச் சிறப்புறக் கையாண்ட நாவலர் பக்திப் பேரியக்கத்தின் நான்கு குரவர்களின் (நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்போரையடுத்த) வழித்தோன்றலாக, ஐந்தாம் குரவராகப் பின்னர் போற்றப்படலானார்!

சாதியின் காவலர்

இலங்கைச் சட்டசபையில் ஒரு கிறிஸ்தவத் தமிழர் பிரதிநிதித்துவம் பெறுவதனை மறுத்து சைவத் தமிழரான சேர். பொன். இராமநாதன் தெரிவுசெய்யப்படுவதில் நாவலருக்கு இருந்த வகிபாகம் வரலாற்றில் ஆழப்பதிந்துள்ளது. எமக்கான ‘இலக்கிய வழி’ துலங்கும் வகையில் அதனைப் பதிவு செய்தவரான பண்டிதமணி கணபதிப்பிள்ளை, ஆறுமுக நாவலரூடாகக் கந்தபுராணக் கலாசாரம் எம்மிடையே அழுத்தம் பெற்றிருந்த வரலாற்றையும் எடுத்துக்காட்டியவர். அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படுவதனை மறுத்து சேர். பொன். இராமநாதன் கருத்துரைத்ததில், ‘படிப்பறிவு அற்ற ஒருவர் அரசியல் தெளிவற்றவர்’ எனும் எடுகோள் மட்டுமன்றி, மலிந்த கூலிகளாக வாழவைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கக்கூடாது என்ற உணர்வுதான் உள்நோக்கமாக அமைந்திருந்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க இயலாது. ஆதிக்க சாதியினரது நலன்கள் பேணப்பட வேண்டுமென்ற அரசியல் செயற்பாட்டுக்கு உரியவரான இராமநாதனை அரசியலாளராக முன்னிறுத்திய நாவலரது சாதி அபிமானமும் இவ்விடத்தில் இணைத்துப் பேசப்படுவதனை அறிவோம்.

பக்திப் பேரியக்கம் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுக்கு உரியதான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. சமூகம் ஒன்றின் அதியுச்ச மேலாதிக்கச் சக்தியாக நிலப்பிரபுத்துவம் விளங்குவதன் மத நிறுவன வெளிப்பாடுதான் ஒரு பரம்பொருள் ஏனைய அனைத்தையும் தனது கட்டுக்குள் ஆளுகை செலுத்துதல்; அத்தகைய மூல முழுமுதல் கடவுளான சிவனை ஏகப்பிரதிநிதியாக நாவலர் வலியுறுத்துவதில் கிறிஸ்தவப் பரப்புரையாளர்களை முறியடிக்கும் எத்தனம் மட்டுமே செயற்பட்டிருக்கும் எனக் கூறிவிட இயலாது. எமது சமூகத்தின் ஆதிக்கத் தரப்பினரது ஆளுகைக்குள் ஏனைய பகுதியினர் கட்டுப்பட்டு ஒழுக வேண்டும் என்ற அக்கறையும் இணைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்றைய ஆதிக்கத்தரப்பினரான காலனித்துவவாதிகளது பிடியைப் பண்பாட்டுத்தளத்தில் பலவீனப்படுத்துவதற்கான கருத்தியல் போராட்டத்துக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் முற்பட்டுவரும் வாய்ப்பு இருந்தநிலையில் நாவலர் செயற்பட்ட பாங்கு அமைந்திருப்பின் இன்றைய கணிப்புக்குரிய ஒருவராக ஆகியிருக்க மாட்டார். சமூக இயங்குதளத்தில் உலக மேலாதிக்க உச்சத்தைப் பலவீனப்படுத்தும் அம்சமாக ஆதிக்க சாதியினரின் மதமாற்றம் தடுக்கப்பட வேண்டிய வரலாற்றுக் கட்டம் அன்று நிலவியது; அதன்பேரில் சைவ ஆசாரங்களை விட்டுப் பிற மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதைக் கண்டிக்க வேண்டி இருந்தபோது ஒவ்வொரு சாதியினரும் அவரவரது சாதியாசாரங்களைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என வலியுறுத்துகிறவராக நாவலர் அமைந்தார்!

இவ்வாறு கூறும்போது சாதி வெறியர்களின் ஒடுக்குமுறைக்கருத்துகள் அனைத்துடனும் பூரண உடன்பாடு கொண்டிருந்தார் எனப் பொருள்கொள்ள இயலாது. ஆதிக்கச் சாதி நலன்சார்ந்த ஒருவர் தனது மத மேலாதிக்கம் நிலைநிறுத்தப்படும் நடைமுறைகளில் ஏனைய சாதியினர் குறுக்கீடு செய்வதற்கு எதிராக இருப்பார். செயலொழுங்கு தொடர்பான விவகாரம் ஒன்றில் ‘பள்ளர்’ ஒருவர் இதழொன்றில் அபிப்பிராயம் தெரிவித்ததனை நிராகரித்து, ‘கருத்துரைக்கும் தகுதிக்கு உரிய சாதியினரல்ல’ எனும் மறுப்புரை எழுந்தபோது அதற்கு எதிராக மறு இதழில் எதிர் கருத்தை நாவலர் பதிவு செய்திருந்தார். அந்தச் சாதிப்பிரிவினரும் சைவ சமயத்தையே சேர்ந்தவர் என்ற வகையில் கருத்துரைக்க உரித்துடையவர் என்று கூறிய நாவலர், அதன் ஏற்புடைமைக்கான நூலாதாரங்களை வெளிப்படுத்தும் ஆற்றலுடன் திகழ்ந்தார். சமூக அமைப்பு மாற்றங்களின் தவிர்க்க இயலாமைகளை ஏற்றாக வேண்டியிருப்பதனை, சுரண்டும் அபிலாசையுடன் உள்ளவரது கண்ணோட்டத்தில் நாவலர் அணுகுபவராக இருக்கவில்லை; மாற்றத்துக்கான அங்கீகாரத்தை சைவ அனுஷ்டானங்கள் ஊடாகத் தேடினார் என்பதே கவனிப்புக்கு உரியது. மாறிவரும் நியதிகள் அனைத்தையும் நிராகரித்துப் பழமைவாதத்தை அப்படியே பேண விழைந்திருப்பின் ‘புரட்டஸ்தாந்தச் சைவப்’ பரப்புரை முயற்சியையும் அவர் கையேற்றிருக்க இயலாமல், வரலாற்றில் தடம்பதிக்கும் ஆற்றலைப் பெற இயலாதவராக ஆகியிருப்பார்!

புதிய பண்பாட்டு எழுச்சிக்கான வித்தாகப் பண்பாட்டுத் தேசியம்

அண்ணமார் வழிபாட்டுக்கு உரிய பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் சிவவழிபாட்டு அனுஷ்டானம் குறித்து அபிப்பிராயம் தெரிவிக்கக்கூடாது என்பது தனிவழி மேலாதிக்கத் தேசியவாத நிலைப்பாடு; மதவாத அடையாள அரசியல் கூறுடையவராக அன்றி ஒன்றுபடுத்த வேண்டிய அனைத்தையும் அரவணைத்து இயங்கும் திணை அரசியல் நோக்குடைய நாவலருக்கு அண்ணமார் போன்ற தெய்வங்களைப் பரிவாரமாகக் கொண்டொழுகும் சிவன் பற்றிய புரிதல் முதன்மையானது. உயர்சாதிகள் எனப்படுவோரது சிறுதெய்வ வழிபாடுகளை நிராகரித்த நாவலர் ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரது கடவுள் இருப்பை மறுத்து இயக்கம் எதனையும் முன்னெடுக்க இயலவில்லை. கோயில்களினுள் நுழையத்தக்கோரது சிறுதெய்வங்கள் அனைத்தையும் சிவனின் மூர்த்தங்களில் ஒன்றாகவோ, இராஜராஜேஸ்வரியாகவோ மாற்றும் அவசியம் அவருக்கு இருந்தது. கோயிலினுள் அனுமதிக்காமல், மலிந்த கூலிகளாகவும் நடாத்த வேண்டும், சைவராகவும் அங்கீகரிக்க வேண்டும் என்றால் அத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த வழிபாட்டினை எப்படி விலக்க இயலும்?

அவ்வாறு ஒடுக்கப்பட்டு இருந்த மக்களுக்கான கடவுளர்களை ‘சிறுதெய்வங்களாக’ நாவலர் வரையறுக்க முற்படவில்லை; புராணங்கள் வாயிலாக மதுரைவீரன், காத்தவராயன், கருப்பசாமி, அண்ணமார் போன்ற தெய்வங்கள் பரம்பொருளுடன் அல்லது அவருக்கான சமூகத்தளத்தின் கதை மாந்தர்களுடன் முடிச்சுப்போடப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளமையை எடுத்துக்காட்டாக முன்வைப்பதில் நாவலருக்குத் தயக்கமிருந்திருக்காது. காலனித்துவ ஒடுக்குமுறையின் பண்பாட்டு வெளிப்பாட்டுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்த வரலாற்றுக்கட்டத்தில் அத்தகைய சமாதானங்களுடன் பாரம்பரிய சைவ மீளுருவாக்கத்துக்கு அவசியப்பட்ட நடைமுறைகளை முன்னெடுத்த நாவலர் குறித்த தெளிவான கணிப்புப் பின்னர் தேசிய விடுதலைக்கான அரசியல் இயக்கச் செயற்பாட்டாளர்களாக இயங்கியோரிடம் இருந்தது. 

இன்றைய அடையாள அரசியலுக்கான தலித்தியவாத நோக்குடன், ஆதிக்கசாதிக் கடவுளாகச் சிவனைக் கணித்து ‘ஒடுக்கப்பட்டோர் சைவர்களல்ல’ எனக் காணும் பிரிவினை மனப்பாங்கு ஐம்பதாம், அறுபதாம் ஆண்டுகளின் சாதியத் தகர்ப்புப் போராட்ட சக்திகளிடம் இருந்திருக்கவில்லை. அதன் காரணமாகவே சைவப் பெருங்கோயில்களினுள் பிரவேசிப்பதற்கான ‘கோயில் நுழைவுப் போராட்டங்கள்’ பிரதான வடிவத்தை இங்கே பெற்றிருந்தது. 

தனக்குரிய வரலாற்றுக் கடமையில் திணை அரசியல் பண்பை நாவலர் வெளிப்படுத்தி இருந்ததைப்போன்றே விடுதலைத் தேசிய அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்ட இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சிகள் சாதியத் தகர்ப்பைச் சாதிவாத – வர்க்கவாதக் கண்ணோட்டங்களில் அணுகாமல், திணை அரசியல் செயலொழுங்குப் பிரகாரம் முன்னெடுக்கலாயினர். காலனித்துவக் கையாளுகைகளினால் அடையாள அரசியல் வடிவத்தை இந்தியாவின் சாதித் தளப் போராட்டங்கள் முப்பதாம் ஆண்டுகளில் இருந்து தோற்றம்பெற்று வளர்ந்ததைப்போல இங்கு இருந்திருக்கவில்லை என்பது பற்றிப் பேசிவந்துள்ளோம். பின்னர் எமக்கான மார்க்சியப் பிரயோக வாய்ப்பினை வழங்கிய நாவலரின் இத்தகைய வரலாற்றுப் பங்களிப்புக்கான சமூகத் தளக்கட்டமைவு பற்றிய தேடலை அடுத்த அமர்வில் அலசுவோம்!

The post மறுவாசிப்பில் நாவலர் appeared first on Ezhuna | எழுநா.

ஒற்றையாட்சி அரசின் தோற்றம் – பகுதி 3

ஆங்கில மூலம்: ஏ.ஜே. வில்சன்

வடக்கு மாகாணத் தமிழர்கள் பங்கேற்றிருந்தால், மாகாணத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு தமிழராவது சபையில் இடம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது என்றாலும் உண்மையில் இது கேள்விக்குரியது. ஏனென்றால், கிழக்கு மாகாணத்தில் உள்ள இரண்டு தமிழ் இடங்களுக்கும் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அமைச்சரவைக்குத் தேர்ந்தெடுக்க இரண்டு கிழக்கு மாகாணத் தமிழர்கள் இருந்தனர். ஆயினும் இந்த இருவரும் அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அமைச்சர்கள் குழுவில் இருந்த அந்த இரண்டு சிறுபான்மை இனப் பிரதிநிதிகளும், அரசியலமைப்பை மேலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற ஒருமித்த கோரிக்கையைக் காலனிகளுக்கான வெளியுறவுத்துறைச் செயலாளரிடம் முன்வைக்கும் முயற்சியில், தங்களது சிங்கள சகாக்களுடன் ஒத்துழைக்கவில்லை. எதிர்காலத்தில்  கொண்டுவரப்படும் சீர்திருத்தப்பட்ட எந்தவொரு அரசியலமைப்பிலும், சிறுபான்மையினருக்குச் சரியான பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே இந்த இரண்டு அமைச்சர்களும் உறுதிப்படுத்த விரும்பினர். இத்தகைய மாறுபட்ட கருத்துகளைத் தவிர்க்க, 1936 பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஒரு பரந்த சிங்கள (Pan-sinhala) அமைச்சர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்மூலம் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு செயற்கையான,  பொதுக்கருத்துப் பெற்றுக்கொள்ளப்பட்டது. கூடவே இதன்மூலம், இந்த ‘அகன்ற சிங்கள’ சபையானது, கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட எல்லா வளங்களிலும், பொதுச் சேவைகளுக்கான நியமனங்களிலும் முடிந்தளவுக்குப் பெரும்பான்மை இனத்தவர்களுக்குகே அவை கிடைக்ககக்கூடிய விதத்திலான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. ஆயினும் வெள்ளையர்களுக்கோ, இந்த நடவடிக்கைகள் எவையும் பாரபட்சமானவை என்பதற்கான போதுமான சான்றுகளாகப் படவேயில்லை.

இருப்பினும், பிரச்சினை தொடர்பாக இன்னும் பல அடிப்படையான கேள்விகள் இருந்தன. சர்வஜன வாக்குரிமை, பிராந்தியரீதியாக அமைக்கப்பட்ட தேர்தற் தொகுதிகள் மூலமான சிங்கள இனப் பெரும்பான்மையினரின் ஆட்சி என்பவை அறிமுகப்படுத்தப்பட்டன. இனப் பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளிடம், சிறுபான்மை இனத்தினரைச் சமரசம் செய்து மீளிணைத்துக் கொள்ளும் அதேவேளை, தங்கள் சொந்தத் தொகுதியினரான பெரும்பான்மை மக்களை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது. சர்வஜன வாக்குரிமை உருவாக்கப்பட்ட ஆண்டுகளில் இந்தப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை; அதற்குப் பதிலாக, 1505 ஆம் ஆண்டு முதல் மேற்கத்தியர்களான போர்த்துகீசியர்கள் வந்ததிலிருந்து காலனித்துவச் சக்திகளின் ஒடுக்குமுறை காரணமாகப் பாதிக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வைச் சரிசெய்யத் தாம் முயற்சிப்பதாகக் கூறி, சிங்களத் தலைவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்தனர். இரண்டு பெரிய இனக்குழுக்களின் உயரடுக்கினருக்கும் இடையேயான ‘சமூக- கூட்டுறவு’ தொடர்பாகச் செய்யப்படும் ஓர் ஆய்வு முயற்சியினூடாக, முன்னர் இருந்த உரசல்களையும், கசப்புகளையும் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்தது. ஆனால், மாறாக, ‘தனித்தனியான சுயாட்சி’யோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் பெரும்பான்மை இன சமூகத்தின் உயரடுக்கினரால் கடுமையாக எதிர்க்கப்படுவதே நடந்தது.

இனரீதியாக ஒரே இனத்தவர்களைக் கொண்ட குழுவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைச் சிங்கள அமைச்சர்கள் குழு தெரிவித்தபோது, (அதன் நோக்கம் பற்றிய) சந்தேகமோ ஊகிக்கும் திறமையோ அற்ற ஆளுநரான சேர். அன்ரூ கல்டேகொட், அது தொடர்பாக எத்தகைய மறுத்துரைப்புமின்றி வாளாவிருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம், இந்த அமைச்சர்கள் குழுவின் (1931-6) கோரிக்கைகளை, அவர்களிடையே எந்தவகையான உடன்பாடோ கருத்து ஒருமித்ததன்மையோ இல்லாத காரணத்தால், ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்று அவர்கள் கூறினர்.

சோல்பரி கமிஷன், ‘பெரும்பான்மையினரின் செயல், சிறுபான்மையினருக்குத் தீங்குவிளைவிக்கும் வகையில், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு கொள்கையை வெளிப்படுத்தியிருப்பதாகவே குறிப்பிடப்படலாம்’ என்று கூறியது. அதேநேரத்தில் கமிஷனின் உறுப்பினரான சேர். பிரடெரிக் ரீஸ், சில ஆண்டுகளுக்குப் பிறகு, “சிங்களவர்கள் ஆதிக்கத்தையே நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை சிறுபான்மையினர் இயல்பாகவே முன்னெப்போதையும்விட அதிகமாகவே புரிந்துகொண்டிருந்தனர்” என்று குறிப்பிட்டார். தவிரவும், டொன் ஸ்ரிபன் சேனநாயக்காவின் அரசியலமைப்பு ஆலோசகராகச் செயல்பட்ட சேர். ஐவர் ஜென்னிங்ஸ் எழுதினார்: “1936 ஆம் ஆண்டு சிங்களவர்களைக்கொண்ட ‘பரந்த-சிங்கள’ அமைச்சரவையைவிடக் குறைவான, அவர்களைத் திருப்திப்படுத்தும் எதையும் கற்பனை செய்வது கடினம். இவை அனைத்தும், எங்களுக்கு 1921 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் சிதைவுண்டபோது சேர். பொன்னம்பலம் ராமநாதன் வெளிப்படுத்திய கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் விடக்கூடிய நிலைமையைக் கடினமாக்கிவிட்டுள்ளது:

“இந்த [சிங்களத்] தலைவர்கள், அமைச்சகங்கள், அதிக சம்பளம், ஏராளமான ஆதரவுடனான சுயராச்சியம் என்பவற்றிற்கான சாத்தியங்களைக் கண்டபோது, சிறுபான்மைச் சமூகங்கள் போதுமான பிரதிநிதித்துவத்தையும்,  நிர்வாகத்தில் அவர்கள் பங்குபெற்றுக் கொள்வதையும் தவிர்க்கவே முயன்றனர்.”

1954 இல் சேர் பிரடெரிக் ரீஸ் துல்லியமாக இதுபற்றி இவ்வாறு எழுதினார்: “டொனமூர் ஆணைக்குழுவினர்கள் பிராந்தியப் பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவான ஒரு முடிவுக்கு வந்தததற்கான காரணம், ஒருவகையில் ஒரு பாரம்பரியக் கட்டமைப்பில் மேற்கத்திய யோசனையொன்றின் தாக்கம் எப்படி அமையும் என்பதைப்பற்றிய முழுமையான உணர்திறன் அவர்களிடம் இருக்கவில்லை என்பதாலாக இருக்கக்கூடும்.”

முன்மொழியப்பட்டிருந்த ஒற்றையாட்சி அரசியல்முறைமை காரணமாக ஏற்படக்கூடிய பரந்துபட்ட மக்கள் கிளர்ச்சிகளைச் (அல்லது எழுச்சிகளைச்) சுட்டிக்காட்டக்கூடிய ஏராளமான சான்றுகள் இருந்தபோதிலும், ஏகாதிபத்தியவாத விசாரணை நடுவர் ஒரு மிக இலேசான, ஒருவகை அலட்சியப்போக்கையே கடைப்பிடிக்க விரும்பினார். 1937 நவம்பர் மாதம், காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளர் ஓசம்ஸ்பி கோர் (Ormsby Gore), ஆளுநர் கல்டெகட்டிடம், ஏனைய பலவிடயங்களுடன் சேர்த்து (1) மேலதிக விளக்கங்களுக்காக, ஆளுநருக்கான விசேட அதிகாரங்கள் (2) நிறைவேற்றுக்குழுக்களும், மாநில சபைகளும் (3) சிறுபான்மைச் சமூகங்களும் அவர்களின் பிரதிநிதித்துவமும் (4) வாக்குரிமை – ஆகியவற்றையும் கவனத்துக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த நேரத்தில் கல்டேகொட் அவர்கள், ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களாலும் அவரது தமிழ் ஆதரவாளர்களாலும் தொடங்கப்பட்டிருந்த சமச்சீரான பிரதிநிதித்துவத்திற்கான (‘ஐம்பதுக்கு ஐம்பது’ என்று அழைக்கப்பட்டது – சட்டமன்றத்தில் 50 சதவீத இடங்கள் சிங்களப் பெரும்பான்மையினருக்கு ஒதுக்கப்படுவதையும், மீதமுள்ள 50 சதவீதம் சிறுபான்மை சமூகங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுவதையும் இது குறிக்கிறது.) பிரசாரத்தின் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெரும்பான்மைச் சிங்கள இன மக்களின் ‘கோபத்தை’க் கட்டுப்படுத்த இதுவே ஒரே வழி என்று பொன்னம்பலம் நம்பினார். ஆயினும், அவரது இந்தத் கோரிக்கையின் தர்க்கத்தால்  கல்டேகொட்டோ அல்லது சோல்பரி ஆணைக் குழுவினர்களோ ஈர்க்கப்படவே இல்லை. கூடவே, இந்த அதிகாரத்தின் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற ஓர் உறுதியான வழியைப் பரிந்துரைப்பதற்கு இந்த ஏகாதிபத்திய நடுவர்களும் தயாராக இருக்கவில்லை. சுதந்திரங்களுக்கான சாசனம், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணுவதற்கான அதிகபட்சப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் பயனுள்ள சோதனைகளாக இருந்திருக்க முடியும். ஆனால் கல்டேகொட்டும் சோல்பரி ஆணைக்குழுவினர்களும் வித்தியாசமாகச் சிந்தித்தார்கள். நிறைவேற்றுக்குழு அமைப்பை, சற்று மாற்றியமைக்கப்பட்ட ஓர் அமைச்சரவை அரசாங்கத்துக்கு மாற்றுமாறு, கல்டேகொட் பரிந்துரைத்தார். சமச்சீர்ப் பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைக்கு அவர் தனது முழுமையான எதிர்ப்பையும் தெரிவித்தார். ஆனால், டொனமூர் அரசியலமைப்புக்குப் பின்னான அரசியலமைப்பு உருவாக்குதலில் ஈடுபட்டவர்களுள், ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கைக்குப் பதிலான ஒரு மாற்றாக சிறுபான்மையினது பிரதிநிதித்துவத்தில் ஒரு வகையான அதிகப்படுத்தல் (Weightage) என்ற யோசனையை முதன்முதலில் கொண்டுவந்தவரும் அவர்தான். கல்டேகொட்டின் இந்தப் பரிந்துரை பின்னர் அரசியலமைப்புத் திட்டத்தை வகுக்கும்படி அமைச்சர்கள் குழுவிடம் கேட்கப்பட்டபோது, சேர். ஐவர் ஜென்னிங்ஸ் அவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு மாற்றப்பட்டது. 1943 மே 26 அன்று மாட்சிமை தங்கியவரது (பிரித்தானிய மன்னர்) பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில், அது மாநிலச் சபையின் அதிகாரிகள், சபாநாயகர் அல்லது பிற தலைமை அதிகாரிகளைத் தவிர்த்து, சபையின் உறுப்பினர்களில் 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், அந்தத் திட்டத்தைச் செயற்படுத்த முடியும் என்று பிரித்தானியா ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் மாநில கவுன்சிலின் தலைவருமான சேர். டொன் பரோன் ஜெயதிலகா 1943 இல் புது டில்லியில், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாகச் செல்வதற்காகப் பதவி விலகியபோது, ‘பரந்த-சிங்கள’ அமைச்சர்கள் குழுவில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக, இலங்கைத் தமிழரான (சேர். பொன்னம்பலம் அருணாசலத்தின் மகன்) அருணாசலம் மகாதேவா, முதன்மையான இலங்கைத் தமிழ் யாழ்ப்பாணத் தொகுதியின் மாநில சபை உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாதேவாவின் தெரிவை, அவர்களது மனமாற்றத்திற்கான ஒரு சான்றாகக் கொள்ளமுடியாது. இன ஒற்றுமை தொடர்பான குற்றச்சாட்டைத் திசை திருப்புவதிலேயே சபை ஆர்வமாக இருந்தது. 

1943 மே 26 ஆம் திகதியப் பிரகடனத்தால் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைய ஓர் அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் அமைச்சரவை இப்போது இறங்கியது. சேர். ஐவர் ஜென்னிங்ஸ் ஆலோசகராகவும், சட்ட வரைவாளராகவும் செயற்பட்டார். அமைச்சர்களது வரைவுத் திட்டம் (அமர்வு அறிக்கை – XIV, 1944) என்று அழைக்கப்பட்ட அந்த அறிக்கையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பொது ஊழியர்கள், நீதிபதிகள் போன்ற வேலைகளுக்கான ஆட்சேர்ப்பை மேற்கொள்ளவும், நியமிக்கவும் சுயாதீன அமைப்புகள் பொறுப்பாக இருக்கும். இவற்றின்மூலம், சிறுபான்மைச் சமூகங்களுக்கான பல்வேறு பாதுகாப்புகள், அரசியலமைப்பில் எந்தவொரு திருத்தத்தையும் இயற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் ஒரு கடுமையான அரசியலமைப்பு, இனச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்திற்கான எடையை வழங்கும் பிரதிநிதித்துவத் திட்டம் ஆகியவை இந்த வரைபில் அடங்கியிருந்தன. 101 உறுப்பினர்களைக்கொண்ட இந்தச் சபையில் இலங்கைத் தமிழர்களுக்கு 12-14 இடங்களும், இந்தியத் தமிழர்களுக்கு 10-8 இடங்களும், முஸ்லிம்களுக்கு 6-4 இடங்களும் வழங்கப்பட்டிருக்கும்.

இருப்பினும், சுதந்திரம் அடைந்த சில மாதங்களுக்குள், டொன் ஸ்டீபன் சேனநாயக்காவின் அரசாங்கம் (1947-52) 1948 ஆம் ஆண்டுக் குடியுரிமைச் சட்டத்தையும், 1949 ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடியிருப்பாளர்கள் (குடியுரிமை) சட்டத்தையும் இயற்றியது. இவை இரண்டும் பிரதிநிதித்துவத்துக்கான நிலைமையை முற்றிலுமாக மாற்றியமைத்தன. சிங்கள அரசியல் விஞ்ஞானி ஐ.டி.எஸ். வீரவர்த்தன, ‘சிறுபான்மையினர்களும் குடியுரிமைச் சட்டமும்’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியர்களின் வாக்குரிமைப் பறிப்பு “அனைத்துச் சிறுபான்மையினருக்கும் மறுக்கப்பட்ட ஓர் உறுதிமொழியே” என்று சரியாகவே குறிப்பிட்டிருந்தார். தவிரவும், “சோல்பரி அரசியலமைப்பின் தார்மீக அடிப்படை ஒற்றையாட்சி அரசாக இருந்து வருகிறது.” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

வளர்ந்து வரும் அரசியற் சூழ்நிலை குறித்த வீரவர்த்தனவின் யதார்த்தமான மதிப்பீடு இதுவாக இருந்தபோதும், பிரதிநிதித்துவத்தில் அதிக முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பது சிறுபான்மைச் சமூகங்களுக்கு இன்னும் அதிக சிறப்பாக இருக்கும் என்று நம்பிய சோல்பரி ஆணையாளர்கள், உண்மையில் ஏமாற்றப்பட்டிருந்தனர். அவர்களின் அறிக்கையின் பத்தி 270 இல், அவர்கள் இவ்வாறு எழுதினார்கள்:

“இந்தத் திட்டத்தின் செயற்பாட்டை விளக்குவதற்குப் புள்ளிவிவரங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் எங்களுக்கு முன் வந்த பல சாட்சிகளின் உதவியுடன் நாங்கள் அதை ஆராய்ந்தோம். இதன் விளைவாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 95 இடங்களில், 58 சிங்கள வேட்பாளர்கள், இலங்கைத் தமிழர்கள் 15, இந்தியத் தமிழர்கள் 14, முஸ்லிம்கள் 8 பிரதிநிதித்துவம் செல்லும் என்றும், 6 பரிந்துரைக்கப்பட்ட இடங்களுடன் 101 பேர் கொண்ட சபையில் 43 பேர்களைக் கொண்ட சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் இருக்கும் என்றும் அதன் பரிந்துரைப்பாளர்கள் மதிப்பிடுகின்றனர்”.

இத்தகைய திட்டத்தின்கீழ், சிறுபான்மையினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், சிறுபான்மை குழுக்கள் ஒன்றிணைந்து, இனப் பெரும்பான்மையினர் தங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்கலாம் என்று நிச்சயமாக வாதிடலாம். சிறுபான்மையினர் ஒற்றுமையாகச் செயற்பட முடிவு செய்திருந்தால், சட்டமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது சிங்களப் பெரும்பான்மைக்குக் கடினமாக இருந்திருக்கும்.

இருப்பினும், இது நடக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில், சிங்களவர்கள்சார்ந்த ‘தேசிய’ கட்சிகள் (சிங்களவர்களைப் பெரும்பான்மையகக் கொண்ட தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் என்று பொருள் கொள்கிறோம்.) இந்தியத் தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்த பிறகு, அவர்களுக்குச் செல்லவிருந்த 8-14 இடங்களை இணைத்து, பின்னர் இனப் பெரும்பான்மையினருக்குச் சாதகமான வாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை இயற்றியதற்கான சான்றுகள் உள்ளன.

இது மட்டுமே ஒரு வழியாக இருக்கவில்லை. சோல்பரி கமிஷன், பிரதமரைக்கொண்ட முறைமையிலான ஓர் அரசாங்கத்தினை வழங்கியது. இதன் காரணமாக, ஒரு பிரதமர் அவரின்கீழ் இயங்கும் அமைச்சரவை இலாகாக்கள், பொதுச் சேவைகள், பொதுத் துறைகளுக்கான முக்கியமான நியமனங்கள் உள்ளிட்ட அனைத்தினதும் ஆதரவைப் பெறுகிறார். அவரே, கௌரவங்களும் பட்டங்களும் பதவிகளும் வழங்கும் ஒரு பேரூற்றாகவும் மாறுகிறார். சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த முன்னணி உறுப்பினர்களை, அரசாங்கப் பதவிகளில் இணைத்துக் கொள்வதற்கு இதைவிடச் சிறந்த வழி எதுவும் இல்லை.

இந்தியத் தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின்கீழ், சிறுபான்மை இனக்குழுக்களுக்கு இருந்த கூடுதல் இடங்களுக்கான ஏற்பாடு இல்லாமலாகிவிட்டது. இது அரசியலமைப்பில் இருந்த, இணக்கப்பாட்டுடன் கூடிய செயற்பாடுகள் மூலமாக உருவாகியிருக்கக்கூடிய, நல்லிணக்கச் சூழலையும்  சீர்குலைவுக்கு உள்ளாக்கியிருந்தது. ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ (Westminster) மாதிரியைத் தழுவுவதில் தீவு வெற்றிபெறும் என்று சோல்பரி ஆணையர்கள் நம்பியதற்கு நான்கு காரணங்கள் இருந்தன:

1. அரசியலமைப்பின் பிரிவு 29 (2) ‘அமைச்சரின் வரைவுத் திட்டத்தி’லிருந்து எடுக்கப்பட்டு, சிறுபான்மையினருக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்க ஆணைக்குழுவினர்களால் மறுசீரமைக்கப்பட்டமை. பிரிவு 29 (2) இனை, ஒட்டுமொத்தமாக ஓர் உரிமைகள் குறித்த மசோதா எப்படி இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் பார்த்தால், அது முற்றிலுமே வலுவிழந்த ஒரு வடிவமாகும். இலங்கை நாடாளுமன்றம், வேறெந்த இன, மதக் குழுக்களுக்கும் இல்லாத வகையில், ஒரு குறிப்பிட்ட இன அல்லது மதக் குழுவிற்கு மட்டும் எதிராகவோ பாரபட்சமாகவோ சட்டம் இயற்றுவதைத் தடுத்தது. ஒரு சக்திவாய்ந்த பௌத்த அழுத்தக் குழுவான ‘பௌத்த ஜாதிக பலவேகய’, பிரிவு 29 (2) (d) இன் விதிமுறை, “ரோமன் கத்தோலிக்கர்களின் கருத்துகளைத் திருப்திசெய்வதற்காக இறுதி வரைவின்போது இலேசாகத் திருத்தப்பட்டது’ என்று குற்றம் சாட்டியது. இறுதியாக, பிரிவு 29 (2), 1972 இல் ஒரு புதிய குடியரசுக்கான சுதந்திரமான அரசியலமைப்பு இயற்றப்பட்டபோது நீக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பின் VI ஆம் அத்தியாயத்தில் ‘அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்’ என்ற அறிக்கை அமுலுக்கு வந்தது. ஆனால் பிரிவு 18 (2) இல் உள்ள ஒரு முழுமையான அறிக்கையால் அதன் மதிப்பு இவ்வாறு குறைக்கப்பட்டது:

அடுத்துவந்த 1978 அரசியலமைப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத்திற்கு இதேபோன்ற அதிகாரங்களை வழங்கியது (பிரிவுகள் 120-6). கோட்பாட்டளவில், இந்த நீதிமன்றம் 1972-8 அரசியலமைப்பின் போதான நீதிமன்றத்தைவிட, அரசியல் தலையீட்டிலிருந்து அதிகளவு சுதந்திரமாக இருந்தது. இருப்பினும், அடிப்படையில் நீதிமன்றத்தின் முடிவுகள் விவாதத்திற்குத் உள்ளாக்கப்படக் கூடியவையாக இருந்ததன் விளைவாக, நாட்டின் உச்சநீதிமன்றம் அரசியல்ரீதியாக சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டிருந்தது. 

2. பெரும்பான்மைக் குழுவினரின் தலைவர், இனச் சிறுபான்மையினர்களுக்குச் சாதகமாகச் செயற்படுவார் என்று சோல்பரி ஆணைக்குழுவினர் நம்பிக்கை கொண்டிருந்தனர். உண்மையில், பிரிட்டன், டொன் ஸ்டீபன் சேனநாயக்காவுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது என்று அவர்கள் நம்புவதற்கான காரணம் அவர்களிடம் இருந்தது. தவிரவும், அவர் இலங்கையில் பிரிட்டிஷ் நலன்களுக்கு ஒரு பாதுகாப்பான நண்பர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். தங்கள் அறிக்கையில் அவர்கள் இவ்வாறு எழுதினர்:

“மேற்கத்திய மாதிரிகளைப்போன்று இலங்கையில் கட்சிகள் உருவாகும்வரை, பெரும்பான்மைக்குழுவின் தலைவர், அரசாங்கத்தை அமைக்கும்போது, சிறுபான்மையினர்களின் பிரதிநிதிகளுக்கு அரசாங்க இலாகாக்களில் ஒரு பகுதியை வழங்குவார் என்றும், அந்தப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில், அவர்களைச் சேர்ந்த குழுவின் அல்லது குழுக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கலந்தாலோசித்துச் செயற்படுவார் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”

சேனநாயக்காவால்கூட தனது அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான பிரதிநிதிகளுக்காக இலங்கைத் தமிழர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்களைக் கொண்ட யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு வெளியே உள்ள தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தனிநபர்களை (மன்னாரும், வவுனியாவும் – இந்த இரண்டு இலங்கைத் தமிழர்களும் ஒன்றில் விசித்திரமானவர்கள் அல்லது சுயநலவாதிகள்.) இலாகாக்களை ஏற்பதற்காக அவர் நியமித்தார். 1948 ஆம் ஆண்டில், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் சேவைகளைப் பெறுவதில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் 1956 முதல் இன்றுவரை எந்தவொரு இலங்கை அரசாங்கத்திலும், தமிழர் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இலங்கைத் தமிழர்கூட இருக்கவில்லை.1

3. இடதுசாரிக் கருத்துகளின் வளர்ச்சி ஏற்கனவே இன அல்லது மத ஒற்றுமைக்கான ஒரு கரைப்பானாக உள்ளது என்று சோல்பரி ஆணைக்குழுவினர்கள் நம்பினர். ஆயினும், அவர்களின் நம்பிக்கைகளை நனவாக்குவதற்கான எந்த வாய்ப்பும் கிட்டவில்லை. கட்சிகள், இன, மத அடிப்படையில் ஒன்றிணையும் முனைப்பிலேயே இருந்தன; ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி, தமிழ் கூட்டாட்சிக் கட்சி (இப்போதைய தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஓர் அங்கம்), தொழிற்சங்கங்களை அடிப்படையாகக்கொண்ட இந்தியத்தமிழ் அரசியல் அமைப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவற்றுடன் இன அடிப்படையில் ‘வர்ணம் பூசப்பட்ட’ பல சிறிய கட்சிகள் என்றவகையில் இருந்தமை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இடதுசாரிக்கட்சிகள்கூட சிங்கள – பௌத்த சார்பு நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டிருந்தன; இவற்றில், ஒருகாலத்தில் இனப்பிரச்சினையில் தாராளவாத அணுகுமுறையைக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிச, கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட அடங்கும்.

4. இறுதியாக, பொதுச் சேவைகள் ஆணையகம், நீதித்துறைச் சேவைகள் ஆணையகம், இரண்டாவது சபையான செனட்சபை ஆகியவை, ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட விருப்புரிமை அதிகாரங்களைக்கொண்டு (உள் சுயராச்சியத்தின் வரையறுக்கப்பட்ட கட்டமைப்பில்), சுயாதீனமாக இயங்கும் என நம்பக்கூடிய நியமனங்களைக் கொண்டிருக்கும் என்று சோல்பரி ஆணைக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால், பின்னர் வைற்ஹோல் (Whitehall) இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்ததன் காரணமாக, ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், ஒரு மாநிலத் தலைவராக ஆக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் தனது பிரதமரின் ஆலோசனையின்படி வழிநடத்தப்படும் ஒருவராகச் செயற்பட வேண்டியிருந்தது.

இதனால், சோல்பரி ஆணைக்குழுவினால் கற்பனை செய்யப்பட்ட ஒற்றையாட்சி அரசு, தமது தவறான வரலாற்று நியாயங்களின் அடிப்படையில், தமக்கானவை எனக்கருதிய உரிமைகளைக் கோரிநின்ற இனப் பெரும்பான்மையினரிடமிருந்து பெரும் அலைபோலத் திரண்டுவந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, அதன் பாதுகாப்புப் பொறுப்புகளிலிருந்து பறிக்கப்பட்டது. அதன் இடத்தில், முதலில் அமைச்சரவையின் சர்வாதிகாரமும் (1948-77) பின்னர் (ஜனாதிபதி ) நிறைவேற்றதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவரின் (1977) அதிகாரமும் என மாற்றப்பட்டமையானது, இலங்கைத் தமிழ் இனச் சிறுபான்மையினரை, அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பரிச்சயமற்றிருந்த ஒரு பெரும்பான்மை இனத்தவரின் தயவில் இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டிருந்தது.

ஒற்றையாட்சி அரசின் வரலாற்றுரீதியான தோற்றங்கள், சமூக மட்டத்தில், மொழியின் ஒருமைப்பாட்டையும் மதப் பெரும்பான்மை வாதத்தையும் அங்கீகரிப்பதாகும். பிரிட்டனில் ஒற்றையாட்சி அரசு தோன்றியபோதும் இது நடந்தது. ஆனால் அந்தக்கருத்து காலப்போக்கில் மாற்றமடைந்துள்ளது. ஒற்றையாட்சி அரசு பல சந்தர்ப்பங்களில் மதச்சார்பற்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, ஒற்றைமொழியைக் கொண்டதாகவோ அல்லது அரசு அங்கீகரித்த ஒரு பெரும்பான்மை மொழிக்குப் பதிலாக, பன்மொழிப் பயிலுகையை ஏற்றுக்கொண்டதாகவோ இருக்கிறது. உண்மையில் ஒற்றையாட்சி அரசின் கருத்து சில சந்தர்ப்பங்களில் கூட்டாட்சி அரசுக்கான விடயங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. அரசுகளது முயற்சிகளின் முதன்மையான குறிக்கோளாக இருப்பதெல்லாம் தேசிய ஒற்றுமையைப் பேணுவதேயாகும்.

ஏகாதிபத்திய ஆட்சியாளரின் வசதிக்காக, இலங்கை ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டது. பல ‘இனங்களையும்’, மதங்களையும் கொண்ட அத்தகைய ஓர் அமைப்பை, ஒரு நடுநிலையான ஏகாதிபத்தியசக்தி போன்ற ஒரு வெளியாரின் மேற்பார்வையின்கீழ் ஒன்றாக வைத்திருக்க முடியும் என்றாலும், ஏகாதிபத்தியசக்தி பின்வாங்கியதன் பின்னாக, தனித்துவமான குழுக்களின் ‘இனம்’, மொழி, மதம் போன்ற பாரம்பரியக் கருத்துகள் மீண்டும் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ளத் தொடங்குகின்றன. வெளியேறும் சக்தியால் விட்டுச்செல்லப்பட்ட மேலோட்டமான தேசிய ஒற்றுமை பராமரிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் ஆளுமை, அரசியல்ரீதியான இணக்கப்பாடு என்பவை அவசியம். ஆனால் அதற்குப் பதிலாக அதிகாரம் மாற்றப்பட்ட குழுவும் அதன் தலைவர்களும் சிங்கள மன்னர்களின் காலத்திற்குச் செல்ல விரும்பினர். நவீன ஒருமைப்படுத்தப்பட்ட பிரிட்டனை (இதற்கான) ஒரு மாதிரியாகப் பயன்படுத்தினர். இந்தக்கருத்தை வலுப்படுத்த வரலாற்றுரீதியான புராணங்களும் புனைவுகளும் மீண்டும் உருவாக்கப்பட்டன. இருப்பினும், ஆதிகாலம் பன்முகத்தன்மை கொண்டது. மேலும் சிங்கள – பௌத்த இனப் பெரும்பான்மை நவீன உடைகளில் கடந்த காலத்தைப் புதுப்பிக்க முயன்றதுபோலவே, தமிழ் சிறுபான்மையினரும் தம்பங்கிற்கு இலங்கையில் ஒரு காலத்தில் ஒரு தனித்தமிழ் இராச்சியம் இருந்ததை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர்.

1947 பொதுத்தேர்தலுக்குப் பிறகு, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளருக்கு ஒரு தந்தி அனுப்பியது. வேறு பல விடயங்களுடன், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் கோரிநிற்கும் ஒரு தந்தியாக அது இருந்தது. இந்தக் கோரிக்கையை, தமிழ் காங்கிரஸின் தேசியவாதப் பிரிவின் தலைவராக 1947 நவம்பரில், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மேலெழுந்து வந்தபோது மேலும் தெளிவாக எடுத்துரைத்திருந்தார். அதாவது, ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு வடிவம் ஒன்று உருவாக்கப்படும் போதுதான், தமிழ்ச் சமூகத்தின் கோரிக்கைகள் அதன்கீழ் நிறைவேற்றப்படுதல் சாத்தியமாகும் என்பதுதான் அது.

தமிழ் சமஷ்டிக் கட்சி (Tamil Federal Party) 1949 டிசம்பர் மாதம் முறைப்படி ஓர் அரசியற் கட்சியாகத் தொடங்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1951 ஏப்ரல் 13, 14, 15 ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடந்த அதன் முதலாவது தேசிய மாநாட்டில், முன்வைத்த கோரிக்கைகளில் அது மிகத்தெளிவாக இருந்தது. தனது முதல் தீர்மானத்தில், கனடா, இந்தியா, சுவிட்சர்லாந்து, சோவியத் யூனியன் ஆகிய வெற்றிகரமான ‘பன்முக, பன்மொழி நாடுகள்’ என்ற கவனத்தை மாநாடு ஈர்த்தது. அவை ஒரு கூட்டாட்சி அரசாங்க அமைப்பை நிறுவுவதன்மூலம் தங்கள் ‘சிக்கலான பிரச்சினைகளை’த் தீர்த்துக்கொண்டன. அதுபோலவே  ‘தமிழ் மக்களுக்குரிய, சவாலுக்கு இடமில்லாத வகையிலான தேசிய உரிமையையும்’, சிங்கள மக்களுடனான கூட்டாட்சி ஒன்றியத்திற்கான அவர்களுக்குரிய உரிமையையும் விருப்பத்தையும்’ வலியுறுத்தச் செய்ததுடன், அதன்பின் இருபத்தேழு மாதங்களே வாழமுடிந்த டொன் ஸ்ரிபன் சேனநாயக்காவின் ஓர் ‘இறையாண்மை கொண்ட ஒற்றையாட்சி அரசு’ என்ற அவரது செல்வாக்குமிக்கதாக இருந்த கருத்தைச் சவால் செய்யவும், ஒரு புதிய கட்சி எழுந்தது.

அடிக்குறிப்பு

1. 1965-70 இல் பதவியேற்ற அரசாங்கத்தில், டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியில் இணைந்த தமிழ் சமஷ்டிக் கட்சி, உள்ளாட்சி அமைச்சராக பணியாற்ற எம். திருச்செல்வத்தை பரிந்துரைத்தது. திருச்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. அல்ல; அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக அவர் செனட்சபைக்கு நியமிக்கப்பட்டார்.

தொடரும்.

The post ஒற்றையாட்சி அரசின் தோற்றம் – பகுதி 3 appeared first on Ezhuna | எழுநா.

❌