Normal view

Received before yesterdayகாயத்ரி

ஹெக்ஸகோன் – 11

2 October 2024 at 10:19

ஜூலை 10, 2023

 ஜூலை ஒன்பதுடன் எங்களுடைய படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.  என்னுடைய கணவனாக குறும்படத்தில் நடித்த மேகவண்ணன் அவர் குடும்பத்துடன் பிரான்ஸின் தென் பகுதியிலிருக்கும் மோன்பெல்லியே என்ற ஊருக்கு செல்வதாகச் சொன்னார். அங்கே அவருக்கு ஒரு வீடு இருந்தது. ஜூலை மாதம் பிரான்ஸிலிருக்கும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை. ஒருவர் பாக்கியில்லாமல் அவரவருக்கு ஏற்ற இடங்களுக்கு குழந்தைகளை இட்டுச் செல்கிறார்கள். நீலவண்ணனுக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் அவளுடைய காதலனுடன் தனி வீட்டில் வசிக்கிறாள். சின்னவள் எம்மா. பத்தாவது படிக்கிறாள். மேகவண்ணனும் அவர் மனைவி மரியாவும் மகள் எம்மாவும் மோன்பெலியேவில் பதினைந்து நாட்கள் தங்கத் திட்டமிட்டிருந்தனர்.

‘நீயும் வருகிறாயா?’ என்று கேட்டார் மேகவண்ணன்.

‘ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கச் செல்லும்போது இந்தக் கரடி எதற்கு’ என்றேன்.

‘உன்னை பதினைந்து நாளும் எங்களோடு இருக்கச் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நடுவில் வரும் சனி ஞாயிறன்று எங்களுடன் இருக்கலாம். ஜூலை 15, 16 எங்களுடன் செலவழிக்கலாமே. நீ தேவதை. கரடி என்று சொல்லாதே’ என்றார் தன் மனைவியைப் பார்த்து புன்னகை செய்தபடி.

அவரும் ‘நீங்கள் வந்தால் சந்தோஷமே’ என்று உண்மையாக மனதார சொன்னதுபோல் தான் இருந்தது.

உடனே யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன். எனக்கு டி.ஜி.வி. அதிவேக ரயிலில் பயணச்சீட்டு வாங்கி அனுப்பினார் மேகவண்ணன்.

*

பாரிஸ் மெத்ரோ ரயிலில், அதாவது பாரிஸுக்குள் மட்டுமே செல்லும் மெத்ரோவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல இரண்டு யூரோ மட்டுமே என்று தெரிந்தது. நம்மூர் ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட இருநூறு ரூபாய். கிஷோர் வாங்கிக் கொடுத்திருந்த மெத்ரோ அட்டையில் பத்து முறை மெத்ரோவிலோ பேருந்திலோ பயணம் செய்யலாம். காலியானால் திரும்ப பணமேற்றிக் கொள்ள வேண்டும். பலர் பயணச்சீட்டு வாங்குவதில்லை. அட்டையைத் தேய்த்தால் திறக்கும் கதவின் மேலாக எகிறிக் குதித்து செல்வதை கவனித்தேன். அப்படிச் செல்பவர்களில் எண்பது சதவிகிதம் புலம் பெயர்ந்தவர்கள். எக்காலத்திலும் அப்படிச் செல்லக்கூடாதென்று கிஷோர் எங்களை முன்னரே எச்சரித்து விட்டார்.

‘டிக்கட் செக்கர் வந்துவிட்டால் ஃபைன். அதுகூடப் பரவாயில்லை. போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி வந்தால் அடுத்தமுறை வீசா கிடைக்காது’ என்று பயமுறுத்தினார். அப்படியும் இரண்டு முறை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தேன், அட்டைவேலை செய்யாததால். சாந்த்ரா ‘பரவாயில்லை, என் பின்னால் வந்துவிடு’ என்று சொன்னார். அதனால் இரண்டு முறைபயத்துடன் பயணச்சீட்டில்லாமல் பயணித்தேன். ‘டிக்கட் செக்கர் வந்தால் நீ யாரோ, நான் யாரோ’ என்றார் குறும்புச் சிரிப்புடன்சாந்த்ரா.

ஷோபா சக்தியைப் பார்த்தபோது சொன்னார் ‘நானும் இப்படி எகிறிக் குதித்துதான் போவேன். தீபன் திரைப்படத்திற்கு ‘பால்ம்த’ஆர்’ (Palme d’or )விருது கிடைத்தபோது டிவியில் என் படத்தைக் காட்டிக்கொண்டே இருந்தார்கள். அந்த நாளில் நான்மெத்ரோவில் செல்ல வேண்டியிருந்தது. எல்லோரும் என்னைப் பார்த்து நட்புடன் சிரிக்கவே, எகிறிக் குதிப்பதற்கு வெட்கப்பட்டுடிக்கட் வாங்கினேன். இந்த விருதுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று நேர்காணலில் கேட்டபோதுஇதைத்தான் சொன்னேன். முந்தி டிக்கட் வாங்க மாட்டேன். இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதால் டிக்கட் வாங்கவேண்டியிருக்கிறது என்று’ என்றார்.

‘ஆனாலும் இரண்டு யூரோ அதிகம்தான். பாவம், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்’ என்றேன் சாந்த்ராவிடம்.

‘இரண்டு யூரோவில் உங்கள் நாட்டில் என்ன வாங்க முடியும்?’ என்று சவால் விட்டார் சாந்த்ரா.

‘என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஏகப்பட்டது வாங்கலாம். இரண்டு லிட்டர் பால், தயிர், மூன்று நாளைக்குக் காய்கறி,…’ என்று வரிசையாக அடுக்கினேன்.

‘கிராமத்தில் இருக்கும் என் மாமியார் இருநூறு ரூபாய்க்குதான் கரண்ட் பில் கட்டுகிறார் ஒரு மாதத்துக்கு. ஏன்? ஒரு சல்வார்டாப்ஸோ, புடவையோ, சட்டையோ கூட வாங்கலாம்’ என்றேன். சாந்த்ரா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பேசாமல் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விடலாம் என்று நினைத்திருப்பார்.

பாரிஸில் விலைவாசி பயங்கரம். புறநகர்ப் பகுதிகளிலெல்லாம்கூட 1200 சதுர அடி வீடு ஆயிரம் யூரோ (கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்) வாடகை. மாதம் குறைந்த பட்சம் 3000 யூரோ சம்பாதித்தால் மட்டுமே மூச்சு விட முடியும். அதாவது கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும். இந்தியாவில் இருந்து பாரிஸ் சென்று பத்து நாள் இருக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் வேண்டும். விமான டிக்கட்டே 70,000ல் இருந்து 90,000 வரை. அங்கே செலவு செய்ய ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். எல்லா சுற்றுலாத் தலங்களுக்கும் குறைந்தது 1500 ரூபாய் கட்டணம் உண்டு.

*

சரியான பிளாட்பாரம் பார்த்து நின்றால் நாம் நிற்கும் பிளாட்பாரமில் வரும் எல்லா வண்டிகளும் நமக்கு வேண்டிய இடத்திற்குப் போகும். இந்த வண்டிதான் அங்கு போகும் அது போகாது என்றெல்லாம் இல்லை. சரியான பிளாட்பாரத்தில் நிற்பது மட்டும்தான் முக்கியம்.  எல்லாப் பக்கங்களிலும் வழி சொல்லும் பலகைகள் உண்டு. இரு முறை தனியாகப் போய் வந்துவிட்டால் மெத்ரோ நமக்குப் புரிபட்டு விடும். பாரிஸ் நகரத்தில் தனியாக மெத்ரோவில் ஏறி சுற்றிப் பார்ப்பது சுலபம்தான்.

‘சென்னையில் இப்படி வசதியில்லை. நான் அங்கு வந்தபோது பஸ்ஸில் ஏறி மிகவும் சிரமப்பட்டேன்’ என்றார் சாந்த்ரா.

‘முதலில் பாரிஸோடு சென்னையை ஒப்பிடுவதே தப்பு சாந்த்ரா. இந்த வானிலையும்  இப்படியான சாலைகளும் சென்னையில் இல்லை. எங்கள் மக்கள் தொகையையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாமல் எங்கள் ஊர் மக்களிடம் வழி கேட்டால் உங்களை வீடு வரை கொண்டு விட்டு வருவார்கள்’ என்றேன்.

‘அது, ஆமாம்! மக்கள் ரொம்ப அன்பானவர்கள்’ என்றார்.

‘இங்கும் மக்கள் அன்பானவர்களே. தோபாந்தோனுக்கு நான் வழி கேட்டபோது எல்லோரும் வழி சொன்னார்கள் சாந்த்ரா. அதையும் சொல்ல வேண்டும்.’

‘நீ வழி கேட்ட அனைவரும் ஆண்களா?’

‘ஒருவரைத் தவிர அனைவரும் ஆண்கள்.’

‘அதானே பார்த்தேன்!’ என்றார் கிண்டலாகப் புன்னகைத்துக்கொண்டு.

*

மேகவண்ணன் அழைப்பை ஏற்று பாரிஸிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோன்பெலியே நகரத்துக்கு TGV என்ற வெகு வேக ரயிலில் மூன்றரை மணி நேரத்தில் சென்றேன். கார் த லியான் என்ற ஸ்டேஷனில் இருந்துதான் வேறு ஊர்களுக்குச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் புறப்படுகின்றன. நந்தனின் வீட்டிலிருந்து கிளம்பியதால் அவர் என்னை வழியனுப்ப வந்திருந்தார். விமான நிலையத்தைப் போலவே ஒரு கட்டத்துக்கு மேல் அவரை அனுமதிக்கவில்லை. பயணிகள் மட்டும்தான் என்று தடுத்து விட்டனர். அது இரண்டடுக்கு ரயில். சுத்தமாக இருந்தது. எனக்குக் கிடைத்த இருக்கை நடுவில் மேசையோடு இருந்தது. இந்தப் பக்கம் இருவர் அந்தப் பக்கம் இருவர் என்று உட்காரலாம். இது மாதிரியான இருக்கைகள் சதாப்தியில் பொதுவாகப் பெட்டியின் நடுவில் இருக்கும். இந்த வண்டியில் பெட்டியின் கடைசியில் இருந்தது. எனக்கு எதிரே ஸ்டைலாக, புஜங்களில் டாட்டூ வரைந்த ஒரு தந்தையும் இருபதுகளில் இருக்கும் அவரின் மகளும் அமர்ந்திருந்தனர். என் அருகே ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.

வண்டி கிளம்பும் நேரம் வந்ததும், டிக்கட் கலெக்டர் வந்து ‘எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா, ஏதேனும் வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள். Bon Voyage!’ என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டுச் சென்றார். எல்லோரும் ‘மெர்சி’ என்றார்கள். அதற்குப்பின் அந்தப் பெட்டியிலிருந்து சத்தமேயில்லை.

வண்டி கிளம்பியவுடன் ‘உங்கள் போனை சைலண்ட் மோடில் வைக்கவும். மற்றவருக்கு தொல்லையில்லாமல் ஹெட்போனில் பாட்டு கேட்கவும். புகை பிடிக்கவும் கூடாது. குழந்தைகளுக்கான பிரத்யேகப் பெட்டி இருக்கிறது. வேண்டுமானால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அறிவிப்பு பிரெஞ்சிலும், பிரெஞ்சைப் போன்ற உச்சரிப்புடன் ஆங்கிலத்திலும் வந்தது. சுரங்கப் பாதையினுள் செல்லும்போது விமானத்தில் போவதுபோல காதை அடைத்தது.

நம்மூர் போல ‘மத்தியானம் என்ன சமைச்சு வச்சிருக்க? கண்ணன் வந்தானா? ஊர் சுத்தாம சோறு தின்னானா இல்லியா?’ என்று அலற முடியாது. அனைவரும் இடித்து வைத்த புளிபோல் சீட்டில் ஒட்டிக் கொண்டு வீடியோ பார்க்கிறார்கள் அல்லது புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். போன் பேச வேண்டும் என்றால் பெட்டிக் கதவைத் திறந்து வெளியில் போய் கிசுகிசுத்து விட்டு வருகிறார்கள். முதல் வகுப்புப் பெட்டிக்காரர்களுக்கு தனியே வெளியில் ஒரு பெஞ்சு உண்டு. அதில் உட்கார்ந்து கதைக்கலாம், பத்து டெசிபலில். மனிதர்கள் என்ன, அந்த ரயிலில் பயணம் செய்யும் நாய் பூனைகளும் முனகுவது கூட இல்லை. அழகாக மடியில் உட்கார்ந்து கொண்டு வருகின்றன.

ரயிலின் ஒரு பெட்டி டைனிங் கார் மற்றும் பார். வேண்டுமென்றால் அங்கே போய் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் நான் பார்த்த வரை எல்லோரும் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

அப்பாவும் மகளும் வழியில் ஒரு ஊரில் இறங்கினார்கள். இறங்கும்முன் என்னிடமும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனிடமும் ‘Bonne journee’ (‘இந்த நாள் இனிய நாளாகட்டும்’) என்று சொல்லிவிட்டு இறங்கினார்கள். ஆஹா! அருமையான மக்கள் என்று நினைத்துக் கொண்டேன். மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பி வரும்போது என் எண்ணம் சற்று மாறியிருந்தது.

மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பும்போது ஸ்டேஷன் வாசலில் என்னை மேகவண்ணன் இறக்கிவிட்டுவிட்டுப் போய் விட்டார். நான் அறிவிப்பு வந்ததும் நேராக பிளாட்பாரத்துக்கு சிறிது முன்னால் நின்றிருந்த டிக்கட் சோதனை செய்பவரிடம் என் டிக்கட்டை காண்பித்தேன். அவர் ‘வலது பக்கம் செல்லுங்கள். Bonne Journee’ என்றார். நான் கோச் நம்பரைப் பார்த்து உள்ளே ஏறும்முன் என் பின்னாலிருந்து கடுமையான ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்த்தால் தள்ளுவண்டியில் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி முறைத்துக் கொண்டிருந்தார். ‘என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டேன்.

‘சீக்கிரம் ஏறு, இல்லையென்றால் எனக்கு வழியை விடு’ என்று கடுகடுவென்று சொன்னார். பிரான்ஸ் வந்தபிறகு முதல் முறையாக கடுஞ்சொல் கேட்டதால் அதிர்ச்சியுடன் உள்ளே ஏறினேன். அந்தப் பெண்மணிக்கு அந்த டபுள் டெக்கர் வண்டியின் மேலடுக்கில் இருக்கைபோல. எனக்கும் மேலடுக்கில்தான் இருக்கை. அவர் தள்ளுவண்டியை மேலே தூக்கிக் கொண்டு போக சிறிது சிரமப்பட்டார். நான் தயங்கிக்கொண்டே ‘உதவி வேண்டுமா’ என்று கேட்க ‘தேவையில்லை, எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்’ என்று கடுப்படித்தார். தேவையா இது என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடம் பேசவேண்டும் என்றிருந்தது. ஆனால் தயக்கத்தினால் பேசவில்லை. பிரஞ்சு SNCF ரயில்வே, தன் பயணிகளை பக்கத்தில் உட்கார்ந்து பயணிப்பவருடன் பேச வைப்பதற்கு முயற்சி செய்கிறது. 65 சதவிகித பிரஞ்சு மக்கள் ரயிலில் தன்னுடன் பயணிப்பவரிடம் பேச விரும்புகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால் மற்றவர் பேச விரும்ப வேண்டுமே என்ற தயக்கத்தில் பேசுவதில்லை என்று அந்த ஆய்வு சொல்கிறது. சிலர் அமைதியாக ஓய்வாக இருக்கவே விரும்புகிறார்கள். தங்களுக்கான நேரமாக அதைக் கருதுவதால் யாருடனும் பேச விரும்புவதில்லை என்றும் தெரிவிக்கிறது. இதில் குழம்பிப் போய், குறைந்த பட்சம் Valentine’s Day, Christmas போன்ற சமயங்களிலாவது கூட பயணிப்பவருக்கும் ஒரு கேக்கோ பிஸ்கட்டோ எடுத்து வாருங்கள் என்று ரயில்வே சொல்கிறது. பசியில் வயிறு இறைந்தால்கூட முழு பெட்டிக்கும் கேட்குமளவு நிசப்தத்தோடு செல்கிறது TGV. நம் ரயில் பயணங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

நம்மைப் பார்த்து இவர்கள் திருந்துவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும். பாவம் என்று நினைத்துக் கொண்டேன்.

-தொடரும்

ஹெக்ஸகோன் – 10

2 October 2024 at 10:06

பெப்ருவரி 1990

பத்தாவது முழுப்பரிட்சைக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. பேபி ஆறாவது. ஹரி எஞ்சினியரிங் கடைசி ஆண்டு.

ஒவ்வொரு நாளையும் சமாளிப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தாலும் எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது. அதுவும் வேகமாக. சட்டென்று அம்மாவுக்குத் தலை நரைத்து வயசானவளாகக் காட்சியளிக்கிறாள். அப்பாவும் தளர்ந்து போனது தெரிகிறது. ஹரி அப்பாவை இரு சக்கர வாகனம் ஓட்ட விடுவதில்லை. கல்லூரிக்கு செல்லும் முன் அப்பாவை அவர் அலுவலகத்தில் விட்டுவிட்டுப் போகிறான். வரும்போது அழைத்துக்கொண்டு வருகிறான். அப்பா அம்மாவை இவ்வளவு அழகாக கவனித்துக்கொள்ளும் அவனுக்கு எங்கிருந்து இந்த புத்தி வந்தது? ஏன் என்னிடத்தில் மட்டும் பிரச்சனை? நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏதாவது தப்பான சமிக்ஞை கொடுக்கிறேனா? குழப்பம் அதிகமாகியது.

சுமதியை அவ்வப்போது வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் இருந்தவள் இப்போது புருஷனைக் கூட்டிக்கொண்டு கோயமுத்தூர் சென்றுவிட்டாள். எங்களைப் பார்க்க சிரமமாக இருந்ததோ என்னவோ. திருமணமாகி ஒரு வருடத்திலேயே ஒரு ஆண் குழந்தையும் பெற்றாள். பிரசவத்துக்கு பாண்டி அண்ணா, அம்மா வீட்டிற்கு அனுப்பாமல் தானே பார்த்துக்கொண்டார். இருவரும் எங்களிடம் எந்த உதவியும் கேட்கக் கூடாதென்று வைராக்கியமாக இருந்தனர். குழந்தை பிறந்ததும் நாங்கள் போய் பார்த்துவிட்டு வந்தோம். அழகாக மொட்டுமொட்டென்று சுமதியைப் போலவே இருந்தது. அதற்குப்பின் ஓரிரு முறை குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவள், பின் கோயமுத்தூருக்கு வீடு மாற்றி சென்று விட்டாள்.

ஹரியின் நோட்டை நான்தான் கிழித்தேன் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தாலும் வீட்டில் எதுவும் சொல்லவில்லை. அடுத்து வந்த நாட்களில் தூங்காமல் வேலை செய்து கொண்டிருந்தான். அடுத்தடுத்து வந்த மாதங்களில் பிரச்சனை எதுவும் இல்லாமல் போகவே அப்பாடா என்ற ஒரு பெருமூச்சு நிலவியது. கோனா சந்தோஷப்பட்டாள்.

ஆனால் மெல்ல மெல்ல கள்ளிச்செடி வளர்வதுபோல வேறு விதமாக ஆரம்பித்தான் ஹரி.

‘அம்மா, இவளை பக்கத்து வீட்டு குமாரோட பார்த்தேன். ஒண்ணும் இருக்காதுன்னு தெரியும். ஆனா ஏன் தேவையில்லாம அவனோட நடுரோட்டுல பேசிண்டு நிக்கறா?’

‘அம்மா, இவ போட்டுக்கற டிரெஸ் ஒண்ணும் சரியில்லை. சொல்லிட்டேன். நான் சொன்னா சண்டைக்கு வருவா. நீ கொஞ்சம் சொல்லு.’

‘அப்பா, கீதா ஸ்கூல்ல சரியா பாடத்தை கவனிக்கறதில்லன்னு கேள்விப்பட்டேன். எப்பவும் கனா கண்டுண்டே உட்கார்ந்திருக்காளாம்.’

‘அம்மா, எதுக்கு இப்ப இவ இப்படி நகம் வளர்த்தி நெயில் பாலிஷ் போட்டுக்கறா? எவனை மயக்க? சுமதி மாதிரி இன்னொரு கேஸ் நம்ம வீட்டுல வரணுமா?’

‘அப்பா, 8.30 மணி பஸ்ஸுக்கு எதுக்கு எட்டு மணிக்கே பஸ் ஸ்டாண்டுல நிக்கறா?’

இப்படி மெல்ல மெல்ல என் பெற்றோரின் மனதை விஷமாக்கினான். நன்றாகப் படிக்கும் பிள்ளை, தலைச்சன், பின்னால் குடும்பத்தை கவனித்துக் கொள்ளப் போகிறவன், இதுவரை எந்த வம்பையும், நண்பன் என்று எவனையும் கூட்டி வராத பிள்ளை, ஊரார் கெட்ட பழக்கம் என்று வரையறுத்து வைத்திருக்கும் எந்தக் கெட்டதும் இல்லாத பிள்ளை. அவன் சொன்னால் வேறு என்ன வேண்டும். அதுதான் தெய்வ வாக்கு. என்னைக் கண்டிக்க ஆரம்பித்தனர். நான் எகிற ஆரம்பித்தேன். நான் திருப்பிப் பேச ஆரம்பித்ததும் அவர்களுக்கு என்னிடம்தான் தப்பு இருக்கிறது என்று தோன்ற ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல முடிவே செய்து விட்டனர். நான் எவ்வளவோ மன்றாடினாலும் கேட்பதாயில்லை. எனக்கு நாட்டியம் கற்றுக்கொள்ள, பாட்டுக் கற்றுக்கொள்ள, இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசை. ஆனால் இவன் என்னைப் பற்றி தோற்றுவித்திருந்த பிம்பமே வென்றது. பள்ளியை விட்டால் வீடு, வீட்டை விட்டால் பள்ளி என்றே என் வாழ்க்கை அமைந்தது. நான் வீட்டை விட்டு எங்கும் நகர முடியாதபடி வெங்கட் பார்த்துக் கொண்டான்.

ஒவ்வொரு வருடமும் எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு மணி நேர தொலைவிலிருக்கும் மருதமலைக்கு பத்தாவது படிக்கும் பெண்களையும் பனிரெண்டாவது படிக்கும் பெண்களையும் கூட்டிச் செல்வார்கள். முழுப் பரிட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன் இரண்டு மூன்று பேருந்துகளில் எங்களை ஏற்றி கூட்டிச் செல்வார்கள். அதுதான் எங்களுக்கு உல்லாசப் பயணம். மருதமலைக்கு சென்று நாங்கள் நல்லபடியாக தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். அந்த நாளை எதிர்பார்த்து ஒவ்வொருவரும் ஆனந்தத்துடன் இருப்போம். அதைப் பற்றிய பேச்சு பள்ளியில் ஜனவரியிலிருந்தே ஆரம்பித்துவிடும்.

எவ்வளவு கெஞ்சியும் மருதமலை பயணத்துக்கு என்னை என் வீட்டினர் அனுப்பவில்லை.

‘இவள் கண்டிப்பாக குமாருடனோ ஜாகீருடனோ ஓடி விடுவாள்’ என்று ஹரி அடித்து சொன்னான். என் வகுப்பு ஆசிரியை அனுமதி கேட்டும்கூட என் பெற்றோர் அனுப்ப மறுத்தனர். குமாரும் ஜாகீரும் என்னுடன் பிறக்காத சகோதரிகள்போல். எப்படி இவர்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பது?

கோனா ஒரு நாள் ஹரியைப் பார்க்க வேண்டி வந்தது. முதல் பார்வையிலேயே அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தாள். ஹரிக்குப் புரிந்துவிட்டது. அன்றிலிருந்து கோனா அவனுக்கு எதிரியாகி விட்டாள்.  அவள் நட்பு கூடாநட்பு என்று என் பெற்றோரை நம்ப வைத்தான்.

‘அம்மா, அவங்க குடும்பத்துக்கு புலிகளுடன் தொடர்பு இருக்கு. இவளை நாம கட்டுப்படுத்தலன்னா நிலைமை கைவிட்டுப் போயிடும்’ என்றவுடன் கோனா வீட்டுக்கு வருவதற்கும் தடை போடப்பட்டது.

என் வகுப்புத் தோழிகள் மருதமலை சென்ற அன்று எனக்கு வீட்டில் நிலைகொள்ளவில்லை. நினைவெல்லாம் அங்கேயே இருந்தது. கூட்டம் கூட்டமாக சினிமாவுக்குச் செல்லும், உணவருந்தி மகிழும் பெண்களைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. எனக்கு மட்டுமல்லாமல் பேபிக்கும் அதே நிலைமைதான். அவளை எதுவும் சொல்ல மாட்டார்கள் என்றாலும் அவள் என்னோடவே ஒட்டுவாரொட்டிபோல் ஒட்டிக்கொண்டே இருப்பாள். அவளுக்கு நான் இருந்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம். என்னால் பேபியிடம் ஓர் அளவுக்கு மட்டுமே பேச முடியும்.

எனக்கு இப்போதெல்லாம் புத்தகங்கள் மட்டுமே தோழிகள். லைப்ரரி மாமாவை வீட்டுக்கே வந்து புத்தகங்கள் தருமாறு சொல்லிவிட்டார்கள். அதனால் வாரம் ஒருமுறை அவர் வார இதழ்கள், மாத இதழ்கள், நாவல்கள் எல்லாம் கொண்டு வந்து கொடுப்பார். அடுத்த வாரம் வருவதற்குள் படித்துவிட்டு நானும் அம்மாவும் வேறு புத்தகங்களை எடுத்துக் கொள்வோம்.

டிங்கில், விஸ்டம், பாலமித்ரா, துளிர், முத்து காமிக்ஸ்,பாலகுமாரன் தவிர ஆங்கிலத்தில் அகதா கிரிஸ்டியுடன் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ராபின் குக், ஆஸ்டரிக்ஸ், ஆர்.கே. நாராயண் என்று பலரும் என் புத்தக அடுக்கில் ஏறியிருந்தார்கள். இப்போதெல்லாம் சேஸின் உலகம் மிகவும் பிடித்துப் போனது. அவருடைய நாவல்களில் வரும் பாரடைஸ் சிட்டியில் நானும் வாழ ஆரம்பித்திருந்தேன். ல்யூடினண்ட் டாம் லெப்ஸ்கியுடன் சேர்ந்து நானும் பயணித்தேன். அமெரிக்க நிலப்பரப்பில் அவர்களுடன் அவர்களைப் போல ஜீன்சும் டி ஷர்ட்டும் அணிந்து வாழ்ந்தேன்.

ஆஸ்டரிக்ஸ் புத்தகங்களும் எனக்கு ஆகப் பிடித்திருந்தன. ஆஸ்டரிக்ஸ், ஓப்லிக்ஸ், அந்தக் கிராமத் தலைவன், அவர்கள் ஊரின் பாடகன், அதில் வரும் ஜூலியஸ் சீசர்…அனைவரும் என் குடும்பத்தில் ஒருவராயினர். என்னையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஏதேனும் ஒரு விஷயத்துக்காக மனது சஞ்சலமடைந்தால் நான் அடைக்கலமாவது இவர்களிடமே. அதில் வரும் ட்ரூயிடின் மந்திர பானத்தைக் குடித்து எனக்கும் அதீத சக்தி வருவதுபோல் நினைத்துக் கொள்வேன். லுதேசியாவின் பின் நானும் ஓடுவேன். ‘வானம் தலைமேல் விழுந்துவிட்டால் என்னாவது’ என்று நானும் அவர்களுடன் சேர்ந்து பயப்படுவேன். கிராமமே கூடிச் சாப்பிடுகையில் சாகபஷிணியாக இருந்தாலும் நானும் அவர்களுடன் உட்கார்ந்து சம்பிரமமாக சாப்பிடுவேன். என் கவலை, சஞ்சலம், கிலேசம் எல்லாம் பறந்து போய்விடும்.

இவர்களே போதும் இந்த ஜென்மத்துக்கு. யாரேனும் என்னை திருமணம் செய்துகொண்டு இந்த வாழ்க்கையிலிருந்து என்னை விடுவிக்கும்வரை இப்படியே வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன்.

ஆனால் நினைப்பதுபோல் வாழ்க்கை நடந்தால் சுவாரசியம் இல்லாது போய்விடும் என்று பிறக்கும் போதே பூப்போட்டு அர்ச்சிக்கப்பட்டிருக்கிறேன் போலும். சனி விஸ்வரூபம் கொண்டு ஆக்ரோஷமாக என்னை நோக்கி வந்தது.

கோயமுத்தூரில் இருக்கும் என் சித்தப்பா, அதாவது என் அப்பாவின் தம்பி பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. என் அப்பாதான் குடும்பத்துக்குப் பெரியவர் என்பதால் திருமணத்துக்கு முன் நடக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அப்பாவையும் அம்மாவையும் வந்து நடத்திக் கொடுக்கச் சொல்லி அழைத்தார்கள் சித்தப்பாவும் சித்தியும். மனையில் உட்கார ‘கன்யா பொண்’ ஒருத்தி வேண்டும் என்பதால் பேபியையும் மறக்காமல் கூட்டிக்கொண்டு வரும்படி சொல்லியிருந்தார்கள். வியாழக்கிழமை காலை புறப்பட்டு போய் வெள்ளிக்கிழமை இரவு வருவதாக ஏற்பாடு.

நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொன்னால் அம்மா மறுத்தாள்.

‘ஹரிக்கு யாருடி சமைச்சுப் போடுவா? பேசாமல் வீட்டில் இரு’ என்று கடுப்படித்தாள் அம்மா.

‘அம்மா, எனக்கும் கல்யாணி அக்காவைப் பார்க்கணும் போல இருக்கு. ப்ளீஸ் வரேனே’ என்று காலைப் பிடித்து கெஞ்சாத குறையாகக் கெஞ்சினேன்.

‘கண்ணம்மா, அம்மா சொல்றதைக் கேளு. இதோ! ரெண்டு மாசத்துல கல்யாணம். ஒரு வாரம் அங்கதான் இருக்கப் போறோம். சமத்தா அண்ணாவுடன் இரு’ என்று அமைதியாகச் சொன்னாள் அம்மா.

‘உன் பையன் சரியில்லை. அவன் என்னை தொந்தரவு செய்கிறான். அவன் என்னை மறுபடி தொல்லை செய்தால், என் மீது கை வைத்தால் நான் என்ன செய்வேன் அம்மா. அவன் உங்களுக்கெல்லாம் நல்லவனாக இருக்கிறான். என்னைப் பார்த்தால் அவன் சாத்தானாகி விடுகிறான் அம்மா. என்னைப் புரிந்து கொள்ளேன்’ என்று மனதில் அரற்றிக் கொண்டு,

‘ப்ளீஸ்…அம்மா, அம்மா, ப்ளீஸ்…விட்டுட்டு போகாதே’ என்று கண்ணீர் மல்க கெஞ்சினேன்.

‘என்னடி குழந்தையாட்டம் ஆடற’ என்று அம்மா கோபமாகத் தொடங்கினாள். ‘ஹரிக்கு ஏதோ பரிட்சையிருக்குன்னு சொன்னான். அவனுக்கு உதவியா இரு. அடம் பிடிக்காதே’ என்று முற்றுப்புள்ளி வைத்தாள் அம்மா.

வியாழக்கிழமை காலை ஹரி கல்லூரிக்குச் செல்ல தயாராகி வெளியே வந்தபோது

‘நாங்க போயிட்டு வரோம்டா. நாளைக்கு சாயந்திர வண்டி பிடிச்சு வந்துடுவோம். கீதாவைப் பார்த்துக்கோ’ என்றாள் அம்மா.

‘சரிம்மா’ என்றவன் கீழ் உதட்டை மடித்துக் கடித்து விஷமமாக சிரித்துக்கொண்டே செருப்பைப் போட்டதைப் பார்த்தவுடன் பகீரென்றது.

அம்மா, அப்பா, பேபி எல்லோரும் கிளம்பியவுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு மணியைப் பார்த்தேன். எட்டே முக்கால். ஒன்பது மணிக்கு எனக்குப் பள்ளியில் முதல் மணி அடித்து விடும். வீட்டிலிருந்து என் பள்ளி ஐந்து நிமிட நடைதான். ஜாகீர் கவர்மெண்ட் பாய்ஸ் ஹை ஸ்கூலில் படித்தான். அவனும் ஏறக்குறைய இதே நேரத்தில்தான் சைக்கிளில் கிளம்புவான். அவசர அவசரமாக அவன் வீட்டுக்குள் ஓடினேன். ரெஜினா அத்தை அவனுக்கு டிபன் பையை கொடுத்துக்கொண்டிருந்தாள்.

‘என்னடி குட்டி? இப்ப ஓடி வர?’ என்றாள் அத்தை.

‘அத்த, ஜாகீர் நேத்தே என்னோட சயின்ஸ் நோட்டு கேட்டான். மறந்துட்டேன் கொடுக்க. அதைக் கொடுக்க வந்தேன்’ என்று சொல்லி நோட்டைக் கொடுத்தேன். கேள்விக்குறியோடு என்னைப் பார்த்த ஜாகீரை கண்களாலேயே அமைதியாக வாங்கிக் கொள் என்ற செய்தி சொன்னேன்.

அவனும் ‘குடு’ என்று வாங்கிக்கொண்டு போய் விட்டான்.

மதியம் உணவு இடைவேளையில் பள்ளிக்கு வெளியே ஜாகீருக்காக காத்துக்கொண்டிருந்தேன். அவன் பேயறைந்ததுபோல் அரக்கப் பறக்க வந்தான்.

‘என்னடி இது எழுதியிருக்க? ஹரி அண்ணாவா? நம்பவே முடியல. நீ தப்பா புரிஞ்சுக்கலயே?’ என்றான்.

‘முழு விஷயமும் உனக்கு நான் அப்பறம் சொல்றேன். இன்னிக்கு ராத்திரி என் வீட்டுல என்னால் இருக்க முடியாது. என்ன செய்யறது? உன் வீட்டுக்கு வந்துடவா? ஆனால் அத்தைகிட்ட என்ன சொல்றது?’

‘ஹ்ம்ம்… எங்கம்மா நோண்டி நோண்டி கேப்பாங்க. என்ன சொல்லுவ?  இந்த விஷயத்தை பேசாம எங்கம்மா கிட்ட சொல்லிடலாமா?’

‘உங்களுக்கெல்லாம் மூளையே கிடையாதாடா? சொல்ல முடிஞ்சா நானே அத்தைகிட்ட சொல்லிடுவேன் இல்ல? உங்கம்மா, எங்கம்மா, மல்லிகா அத்தை, கவிதா அத்தை எல்லோரும் க்ளோஸ் பிரெண்ட்ஸ். அடுத்த நிமிஷம் காலனி பூரா தெரிய வரும். ஹரியை எதுவும் சொல்ல மாட்டாங்க. என் பேருதான் நாறும்.’

என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.

‘என்னால கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி வீட்டுல இருக்க முடியாது. ஏதாவது நடந்தா நான் தற்கொலை பண்ணிப்பேன்’ என்றதும் ஜாகீர் கலவரமானான்.

‘இன்னும் பதினைந்து நிமிஷம்தான் இருக்கு ஜாகீர் பெல் அடிக்க. என்ன செய்யறது?’

‘தெரியலையேடி.’

‘சரி! நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நீ கொழுமம் ரோடுல இருக்கும் உன் பிரண்ட் செந்தில் வீட்டுக்கு அப்பப்போ போய் ராப்பூரா தங்கி படிப்ப இல்ல? அப்படி தங்கி படிக்கப் போறேன்னு அத்தைகிட்ட சொல்லிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடு. நானும் வந்துடறேன். பழநி போயிடலாம். ஒரு ராத்திரிக்கு மட்டும் ரூம் எடுத்து தங்கிடலாம். காலையில் சீக்கிரம் திரும்பிடலாம். என்ன சொல்ற?’

‘என்னடி பேசற? ஹரி அண்ணா உன்னைக் காணோம்னு தேட மாட்டானா?’

‘என் பிரண்டு வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வரேன்னு லெட்டர் எழுதி வெச்சுட்டுப் வருவேன். சிம்பிள். அவனுக்குத் தெரியும். கோபப்படுவான். ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? கார்த்தாலதான் சீக்கிரம் வந்துடப் போறோமே.’

‘உங்க அம்மா அப்பாகிட்ட போட்டுக் கொடுப்பானே?’

‘அதுக்கு என்ன கதை சொல்றதுனு அப்பறம் யோசிச்சுக்கலாம்.’

‘ரூம் நமக்குத் தருவாங்களாடி? அதுக்கு காசு இருக்கா?’

‘நான் பார்த்துக்கறேன் அதை. கவலைப்படாதே. சிறுவாட்டுப் பணம் இருக்கு.’

ஜாகீர் தயங்கினான்.

‘உன்னை விட்டா எனக்கு வேற யாரும் இல்லடா. கோனாவும் ஹாஸ்டல்ல இருக்கா. வெளிய அனுப்பவே மாட்டாங்க. நீ என்னோட பெஸ்ட் பிரெண்ட் இல்லையா’ என்றதும் அவன் கண்களில் பரிவு வந்தது.

‘சரிடி. இதுல ஒண்ணும் பிரச்சனை வராதுன்னு நினைக்கறேன். அஞ்சு மணி பஸ்ஸுக்கு போயிடலாம். என்ன…’ என்றான்.

சந்தோஷமாகத் தலையாட்டிவிட்டு பிரச்சனையை தீர்த்துவிட்ட நிம்மதியுடன் என் வகுப்புக்குப் போனேன். என்னுடைய இந்த செயல் பெரிய பூகம்பத்தை இரு வீட்டிலும் ஏற்படுத்தி என் வாழ்க்கையையே மாற்றிப் போடும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

ஹெக்ஸகோன் – 9

18 September 2024 at 14:39

ஜூலை 2023

‘இந்த அபார்ட்மெண்ட் ரொம்பப் பழசு, இல்லையா?’ என்று சாந்த்ராவிடம் கேட்டால் ‘இல்லையில்லை, அவ்வளவு பழசில்லை. 1860ல் கட்டியதுதான்’ என்றார்.

பாரிஸிலுள்ள பல கட்டடங்கள் மிகவும் பழமையானவை என்றாலும் அவற்றை அழகாக பராமரித்து வருகிறார்கள். 1200களில் கட்டிய கட்டடங்களையெல்லாம் புதுப்பித்து உறுதியாக வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்தைக் கேட்காமல் கட்டடங்களின் வெளியில் எந்த மாற்றமும் செய்ய இயலாது.

நாத்ருதாம் கட்ட உபயோகித்தக் கல்லில்தான் இந்த வீட்டின் இந்தப் பகுதி கட்டப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பெருமை கொள்கிறார்கள். ஈஃபில் டவர், நாத்ருதாம், மோன்மார்த்தர் போன்ற புகழ் வாய்ந்த சின்னங்கள் உங்களின் பால்கனியில் இருந்து பக்கத்தில் தெரிந்தால் உங்கள் வீட்டின் விலை சில கோடிகளுக்கு எகிறும்.

வீதியில் நடக்கும்போது அபார்மெண்ட்களின் முன் நின்று அண்ணாந்து பார்ப்பார் சாந்த்ரா. கண்கள் பளிச்சிட ‘இந்தக் கட்டடங்களுடைய கூரைகள்தான் என்னை வசீகரிக்கின்றன’ என்று புன்னகைத்துக்கொண்டே சொல்வார். கையை நீட்டி ‘இதோ பார்த்தாயா! ஓஸ்மான் (Haussmann) கட்டிய கட்டடங்களிலெல்லாம் இரண்டாம் மாடிக்கும் ஐந்தாம் மாடிக்கும் மட்டுமே பால்கனிகள் உண்டு’ என்பார். அதிசயமாக இருந்தது.

ஓஸ்மான் 1850ல் இருந்து 1870 வரை மூன்றாம் நெப்போலிய மன்னன் ஆணைப்படி நகரத்தை முழுமையாக சீரமைத்தார். ஏகப்பட்ட எதிர்ப்புக் குரல்கள் கிளம்பினாலும் பாரிஸை அதிநவீனமாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருந்த தெருவை புகழ்பெற்ற ஷான்ஸ் எலிஸேவாக (Champs Elysees) மாற்றினார். தெருவெங்கும் மரங்களை நட்டார். நகரத்தில் ஆங்காங்கே பல பூங்காக்களை அமைத்தார். இப்போது நாம் பார்த்துக்கொண்டாடும் பாரிஸ் ஓஸ்மானின் கைங்கர்யம்.

அதிலிருந்து நானும் பால்கனிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். பால்கனிகள் விஸ்தாரமாகவெல்லாம் இருக்காது. ஒரு சன்னமான ஆள் பத்து தப்படி நடக்கக் கூடிய அளவிற்குத்தான் இருக்கும். பெரிய வீடெல்லாம் பாரிஸில் கனவுதான். பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே பெரிய பால்கனி சாத்தியம்.

சாந்த்ராவினுடைய அபார்ட்மெண்ட் ஐந்தாம் மாடி. சிறிய வீடுதான். ஆனால் வசதி மிக்கது. வாசல் கதவைத் திறந்தவுடன் ஒரு திறந்த சமையலறை. அதன் வழியாகத்தான் வீட்டினுள் நுழைய முடியும். சமையலறையிலிருந்து போனால் இடது பக்கம் ஒரு படுக்கையறை, வலது பக்கம் ஒரு சிறிய சதுர லிவிங் ரூம். அங்குதான் குறுகலான ஒரு பால்கனி. படுக்கையறைக்கும் லிவிங் ரூமுக்கும் நடுவே இருக்கும் சின்னப் பாதையில் சென்றால் ஒரு வளைந்த இரும்புப் படிக்கட்டு. படிக்கட்டின் இடதுபுறம் கழிவறையுடன் கூடிய ஒரு குளியலறை. படிக்கட்டின் மேலே ஏறிச் சென்றால் ஒரு நீள அறை. நடுவில் ஒரு சிறிய படுக்கையறை.

அந்தப் படுக்கையறையை ஷார்லத் என்ற 21 வயது பெண்ணுக்கு வாடகைக்கு விட்டிருந்தார் சாந்த்ரா. அந்தப் பெண்ணின் வீடு ஒயினுக்குப் புகழ்பெற்ற நகரமான பார்தோவில் இருந்தது. அவள் எட்டு மாதத்துக்கு அப்ரெண்டிஸாக வேலை செய்ய பாரிஸ் வந்திருந்தாள்.

மேலே அந்த நீள் அறையின் இடது பக்க மூலையில் எனக்கு ஒரு கட்டிலும், வலது பக்க மூலையில் சிந்துஜாவுக்கு ஒரு கட்டிலும் போட்டிருந்தார் சாந்த்ரா.

‘மன்னிக்கவும், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். நான் பொதுவாக இங்கிருக்கும் படுக்கையறையை வாடகைக்கு எல்லாம் விடுவதில்லை. ஆனால் அடுத்த வருடம் ஜப்பான் செல்ல பணம் வேண்டியிருப்பதால் வாடகைக்கு விட்டிருக்கிறேன். அதனால் உங்களுக்குத் தர இயலவில்லை’ என்றார்.

சாந்த்ரா பல ஆவணப் படங்கள் எடுத்திருக்கிறார். பிலிம் எடிட்டராகவும் இருந்தவர். அவருக்கு இந்தியா அத்துப்படி. எம்ஜிஆர் பற்றிய டாக்குமெண்டரி கூட எடுத்திருப்பதாகச் சொன்னார். பாரிஸில் இறங்கிய அடுத்த நாள் காலையில் ‘எனக்கு தோசை இட்லி எல்லாம் செய்ய முடியாது. பிரெட்தான் உங்களுக்கு’ என்றார்.

எங்களுக்காக பகெத் (Baguette) என்ற நீள ரொட்டி, ஜாம், வெண்ணெய், முட்டை, பழங்கள், தயிர் எல்லாம் வாங்கி வைத்திருந்தார். இடுப்பளவே உள்ள ஃப்ரிட்ஜ் ஒன்று இருந்தது. அதே அளவுள்ள ஃப்ரீஸர் தனியாக இருந்தது. அந்த ஃபிரிட்ஜில் மூன்று தட்டுகள். நடுத்தட்டு ஷார்லத்தினுடையது. அதிலிருக்கும் பொருட்களை எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஷார்லத் காலையிலோ அல்லது மாலையிலோ ஏதேனும் சமைத்து சாப்பிடுவாள்.

நாங்கள் அந்த வீட்டிற்கு சென்ற பிறகு ஒரு மூன்று நாட்கள் ஷார்லத்தைப் பார்த்திருப்போம். பிறகு அவ்வளவாகப் பார்க்கவில்லை. நடுவில் அவள் இரண்டு நாள் ஊருக்குப் போய் விட்டிருந்த சமயத்தில் துணி துவைக்க வேண்டுமானால் ஷார்லத்தின் அறையில் வாஷிங் மெஷின் இருப்பதாகவும் துவைக்கலாம் என்றும் சாந்த்ரா கூறினார்.

அந்த ரூமிற்குள் நான் நுழைந்ததும் ஸ்தம்பித்து விட்டேன். எல்லா சாதனங்களும் அலங்கோலமாகக் கிடந்தன. கட்டிலில் மடிக்காத போர்வை ஒன்று சுருண்டு கிடந்தது. என் முகத்தைப் பார்த்த சாந்த்ரா ‘அது அவள் அறை. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், வீட்டிற்கு பங்கம் வராத வரை’ என்றார்.

லாவண்யா தங்கியிருந்த கீழ்வீட்டில் இருந்த குஜராத்திக் குடும்பத்தினர் பாரிஸில் ஒரு உணவகம் வைத்திருந்தார்கள். அவ்வப்போது சாந்த்ராவுக்கு சப்பாத்தியும் தாலும் பாஸ்மதி சாதமும் கொடுப்பார்கள். நாங்கள் இருந்த சமயத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எங்களுக்கு குஜராத்தி சாப்பாடு கிடைத்தது.

‘ஜப்பான் செல்கிறாயா? எப்போது? யாரோடு?’ என்று கேட்டேன்.

‘அடுத்த வருடம் செல்லலாமென்றிருக்கிறேன். தனியாகத்தான் போவதாக இருந்தேன். ஆனால் என் தோழி ஒருத்தியும் கூட வருவதாக இப்போது சொல்லியிருக்கிறாள். பார்க்கலாம்’ என்றார் சாந்த்ரா.

சில சமயம் சாந்த்ரா ஜப்பான் மேப்பை விரித்து வைத்துக்கொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருப்பார். சாந்த்ரா வயதில் உள்ளவர் யாரேனும் நம் ஊரில்  ‘உடம்பு வலிக்கிறது’ என்று சொன்னால் ‘வயசாச்சு இல்ல. அப்படித்தான் இருக்கும்’ என்று அனைவரும் சொல்லிச் சொல்லி நமக்கும் ஐம்பது வயதாகி விட்டாலே இனி சுடுகாட்டுக்கு காத்திருக்க வேண்டியதுதான் என்ற எண்ணம் உருவாகிவிட்டிருக்கும். அதனால் எனக்கு சாந்த்ராவைப் பார்த்து ஒரே பிரமிப்பாக இருந்தது.

நான் அங்கிருந்த பதிமூன்று நாட்களில் ஒரு நாள்கூட அவர் தனக்கு வயதாயிற்று என்றோ, இனிமேல் இதற்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்றோ சொல்லிக் கேட்கவேயில்லை. சுறுசுறுப்பாக இளம்வயதினரைப்போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு கட்டிலை, மேஜையை இழுத்து வீட்டை சுத்தம் செய்துகொண்டு இருப்பார்.

‘ஷார்லத் இருப்பது நல்லதுதான். உனக்கும் பேச்சுத் துணைக்கு ஆள் இருக்கும்’ என்று நான் ஒரு நாள் சொன்னதும் கோபம் வந்துவிட்டது சாந்த்ராவுக்கு.

‘பேச்சுத் துணைக்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். எனக்கென்று நண்பர்கள் படையே உண்டு. இந்தக் குட்டியிடம் பேசி எனக்கெதுவும் ஆகப்போவதில்லை’ என்றார். நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

எழுபத்தைந்து வயது அவருக்கு. 2020ல் அவருக்கு மார்பகப் புற்று நோய் வந்து மார்பகங்களை அகற்றியிருக்கிறார்கள். ஆனாலும் அதை ஏதோ ஒரு காய்ச்சல் வந்ததுபோல் அலட்சியமாக சொல்வார்.

‘இப்போது நன்றாக இருக்கிறேன். ஆறு மாதத்துக்கு ஒரு முறை செக்கப் மட்டும் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். இந்த வியாதி வருவதற்கு முன்னால் வரை சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தேன். இனிமேல் தான் மறுபடி ஆரம்பிக்க வேண்டும்’ என்றார்.

நம்மூர் ரயிலில் மேல் பெர்த் கிடைத்தால் கீழ் பெர்த்தை தரும்படி இளைஞர்களிடம் யாசிக்கும் நாற்பது வயதுப் பெண்கள் நினைவுக்கு வந்தனர்.

*

சாந்த்ராவும் நானும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்போம். முடிந்தவரை அவருடன் பிரெஞ்சிலேயே பேசுவேன். ‘உனக்கு நிறைய பிரெஞ்சு சொற்கள் தெரிந்திருக்கின்றன. நன்றாகவும் பேசுகிறாய். இன்னும் தங்குதடையின்றி யோசிக்காமல் மட்டும் பேச வேண்டும். பேசிக்கொண்டேயிருந்தால் இரண்டு மாதத்தில் சரளமாகப் பேசி விடுவாய்’ என்று உற்சாகமளிப்பார். முதன்முதலாக ஆங்கிலம் பேசும்போது எவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ அதைவிடப் பல மடங்கு ஆனந்தமாக இருந்தது பிரெஞ்சில் பேசியது.

‘உன்னோட ஓட்டை பிரஞ்சை வைத்து எப்படியோ சமாளிக்கிறாய்’ என்று என்னிடம் ஒரு வார்த்தைகூட பிரஞ்ச் தெரியாத லாவண்யா சொன்னது வேடிக்கையாக இருந்தது.

வெள்ளைக்காரப் பெண்மணிகள் (ஐரோப்பியர்கள், ஆஸ்திரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்கள்)சிலருடன் எனக்கு ஏற்பட்டிருந்த, மற்றும் கேட்கக் கிடைத்த கசப்பான சம்பவங்களினால் அசௌகரியமாகத்தான் சாந்த்ராவிடம் இருக்கப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அவர் மிகப் பெரிய ஆச்சரியம்.

2009ல் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது மெல்போர்னிலிருந்து சிட்னி வரும் வழியில் ஒரு பெட் அண்ட் பிரேக்ஃபாஸ்டில் தங்கியிருந்தோம். அங்கே சாப்பாட்டு அறையில் இருந்த ஒரு ஈஸிசேரில் என் தோழி உட்கார,உரிமையாளரான நடுத்தர வயதுப் பெண்மணி ‘எழுந்திரு! அது என் கணவரின் நாற்காலி. யாரும் உட்காரக்கூடாது ‘ என்று மிகக் கடுமையாகச் சொன்னார். அவ்வளவு கடுமையாக சொல்லவேண்டிய அவசியம் இருந்திருக்கவேயில்லை. அதேபோல் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மேஜையின் மேல் இருந்த பாட்டிலை தன்னுடையது என்று நினைத்து அதை எடுத்து என் தங்கை தண்ணீர் குடிக்க எத்தனித்தபோது ஒரு அமெரிக்கப் பெண்மணி தலைதெறிக்க ஓடி வந்து ‘என் தண்ணீர்’ என்று பிடுங்கிக் கொண்டார். ‘காபி ஆறி விடும் குடித்து விடுங்கள்’ என்று இருமுறை சொன்னதற்காக ‘என் ப்ரைவஸியில் நுழைகிறாய். நான் எப்போது எப்படிக் குடிக்க வேண்டும் என்று நீ சொல்லித் தராதே’ என்றெல்லாம் பேச்சு கேட்டதுண்டு.

என் தோழி ஒருவரையும் அவர் நண்பர்களையும் அமெரிக்கர் ஒருவர் புது வருடப் பிறப்பு அன்று இரவு சாப்பாட்டிற்கு அவர் வீட்டிற்கு அழைத்திருக்கிறார். இவள் மட்டும் அந்தக் கூட்டத்தில் முட்டைகூட சாப்பிடாத வெஜிடேரியன். இவளுக்காக அவர்கள் எதுவும் தனியாக சமைத்திருக்கவில்லை. ‘உனக்கென்று தனியாக சமைக்க எனக்கு நேரமில்லை’ என்று அந்த வீட்டுப் பெண்மணி சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார். அவள் ஏதோ பழரசத்தைக் குடித்துவிட்டு பட்டினியாக வந்திருக்கிறாள்.

அதனால் கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே சாந்த்ராவை அணுகினேன். டைனிங் டேபிளின் நாற்காலியைத் தவிர வேறு எதிலும் உட்கார மாட்டேன். டைனிங் டேபிளுக்கு அருகில் இருக்கும் சோஃபா மெத்தென்று அழகாக இருந்தாலும் உட்கார மிகவும் தயக்கமிருந்தது. ஆனால் சாந்த்ரா நம் பாட்டிகளைப்போல் வாஞ்சையுடன் இருந்தார். வா தங்கம், வா கண்ணு என்று சொல்வதுபோல் ‘மா ஷெரி’  என்று வாஞ்சையுடன் அழைத்தார். நம்மூர் பாட்டிகளைப்போல் வம்பும் உண்டு. உலக அரசியல் எல்லாம் அத்துப்படி.

‘உங்க நாட்டுல ஒரு மோடி இருப்பதுபோல் எங்கள் நாட்டிலும் ஒரு கோமாளி இமானுவேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது’ என்று படாலென்று பேசி அதிர வைப்பார்.

சாந்த்ராவுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகள். ஒரு மகன். மகன் பிரெஞ்சு சினிமா நடிகர். அவர் நடித்த Ornithologist என்ற படம் பல விருதுகள் வாங்கியிருக்கிறது. பாரிஸ் செல்லப் போகிறேன் என்றதும் Mubiல் அந்தப் படத்தைப் பார்த்தேன். அதில் பல விவிலியக் குறியீடுகள் இருந்தன. எனக்குப் படம் சரியாகப் புரியவில்லை. பாரிஸ் சென்று சாந்த்ராவிடம் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

‘ஆர்னிதாலஜிஸ்ட் படம் பார்த்தேன். உங்கள் மகன் நன்றாக நடித்திருந்தார்’ என்று சொன்னேன்.

‘படம் புரிந்ததா?’ என்று புன்னகைத்துக் கொண்டே கேட்டார்.

‘இல்லை. உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்தேன்’.

‘ஹ! எனக்கும் புரியவில்லை’ என்று கண்ணடித்துச் சிரித்தார்.

இந்தக் கண்ணடிக்கும் பழக்கமும் பல பிரெஞ்சுக்காரர்களிடம் பார்த்தேன். பாரிஸ் விமான நிலையத்தில் இமிக்ரேஷன் ஆஃபீஸர் என் பாஸ்போர்ட்டில் முத்திரை குத்திவிட்டு ‘ஹேவ் அ நைஸ் ஸ்டே’ என்று கண்ணடித்துச் சிரித்தார். ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுவிட்டு வெளியேறும்போது முன்னால் இருப்பவரிடம் ‘மெர்ஸி’(நன்றி) சொன்னவுடன் தலையசைத்துக் கண்ணடித்தார். வீதியில் வழி சொன்னதற்கு நன்றி சொன்னவுடன் கட்டை விரலை உயர்த்திக் கண்ணடித்துச் சிரித்தார் ஒரு நபர். மோனே அருங்காட்சியகத்தில் என் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னதும், அழகான பல்வரிசையுடைய ஆறடி உயரமுள்ள ஆஜானுபாகுவான அந்தப் போலீஸ்காரர் கண்ணடித்து சிரித்தபோதுதான் மனது லேசாக ஏதோ செய்தது.

*

ஹெக்ஸகோன் – 8

18 July 2024 at 07:02

18 ஜூலை 1986

கோனேஸ்வரி, அவ அம்மா, அப்பா எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்திருக்கா. அவளோட அண்ணன் போர்ல செத்துப் போனதுக்கு அப்பறம் அவங்க அம்மாவும் அப்பாவும் பயந்துகிட்டு அவளை மட்டும் இங்க அனுப்பிட்டாங்க. அவளோட சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க வீட்டுக்கு. அவங்க இவளை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. பாவம்! அம்மா அப்பாவை அடிக்கடி கூப்பிட முடியாது. சில சமயத்துல அவளோட கண்ணு ரெட்டா இருக்கும். அவ அழுதிருக்கான்னு தெரியும். ஆனால் நான் பேசாம அவகிட்ட போய் உட்கார்ந்துப்பேன். அவ அனுமதிச்சா அவ கையைப் பிடிச்சுகிட்டு உட்கார்ந்திருப்பேன். அந்த நொடில எனக்கான ஆதுரத்தையும் தேடிப்பேன். பல சமயம் வார்த்தைகளே வேஸ்டுன்னு தோணும். நம் கஷ்டத்தைப் புரிஞ்சுண்டு அமைதியா நம்மோட மணிக்கணக்கா உட்கார ஒருத்தர் இருந்தாலே போதும். சிட்னி கார்ட்டன் மாதிரி. லூசி மானெட் மாதிரி. ஹெர்க்யூல் பய்ரோ மாதிரி. மிஸ் மேபில் மாதிரி. அவங்களோட மணிக்கணக்கா என்னால உட்கார முடியும். எனக்கு எப்பவும் துக்கமோ பயமோ கஷ்டமோ கொடுத்ததில்லை அவங்க.

அடுத்த மாதம் என்ன செய்யப் போறேன்? எப்படி ஹரியை சமாளிக்கப் போறேன்னு நினைச்சேன். எனக்குப் பதட்டம் ஜாஸ்தியாச்சு. என்னாச்சு உனக்குன்னு கோனா கேட்டா. இப்பல்லாம் இரண்டு பேரும் பேசாமலேயே இன்னொருத்தர் சரியான மனநிலையில இல்லன்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டோம். பேசாம இல்ல. பேசுவோம். ஆனா கஷ்டங்களைப் பேசறதில்ல. அவள் வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. அதே போல அவளுக்கும் என் வாழ்க்கை இப்ப வரை தெரியாது குடும்பத்துல யார் யார் இருக்காங்கறத தவிர.

‘என்னாச்சு, சொல்லணும்னா சொல்லு’ ன்னு சொன்னா.

அவ்வளவுதான்! நான் அழுதுகிட்டே எல்லாக் கதையையும் சொன்னேன். அவளோட கண்ணு டார்ச் லைட் மாதிரி பெருசா ஆயிடுச்சு. ‘என்ன சொல்ற? சொந்த அண்ணனா?’

‘ஆமா! அவன் சொந்த அண்ணனான்னே சந்தேகமாயிருக்கு.’

அவளுக்கு இன்னும் நம்ப முடியலை. கொஞ்ச நேரம் தரையைப் பார்த்துண்டிருந்தா. அப்புறம் மெல்லப் பேசினா.

‘செத்துப் போன என் அண்ணன் எப்பேற்பட்டவன் தெரியுமா? என் மேல் ஒரு துரும்புகூட விழாம பார்த்துப்பான். பதினொன்றாம் வகுப்பு படிச்சுகிட்டிருந்தான். எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்தது. நானும் அண்ணாவும் ஸ்கூலில் படியேறி க்ளாஸுக்குப் போகும்போது, எங்களுக்கு மேலே படியேறிக்கொண்டிருந்த சிங்களப் பையன்கள் ‘தமிழ் நாய்களா’ன்னு சிங்களத்துல சொல்லி எங்கள் மீது எச்சில் துப்புனாங்க. அதைப் பார்த்த டீச்சர்களும் ஒண்ணும் சொல்லலை. அண்ணனுக்கு கோபம். தான் ஒண்ணும் செய்ய முடியலையேன்னு தவிப்பு. அதைவிட தனக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டு நிண்டாங்களேன்னு பதற்றம். ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.’

‘மூன்று வருடம் முன்பு இதே ஜூலை மாதம், இதே கருப்பு ஜூலை மாதம் 24ஆம் திகதி கடைக்குப் போய்விட்டு திரும்பிக்கொண்டிருந்த அவனை சிங்களக் காடையர்கள் தெருவில் அடித்துக் கொன்றார்கள். ஒரு போலீஸ் அதிகாரி ‘இவன் புலி’ என்று சொல்லி  டயர்களை அவன் மீது போட்டுக் கொளுத்தினான். எரியாத அவனுடைய ஒரு காலை அடுத்த நாள் குப்பை லாரி அள்ளிக்கொண்டு போனதாக பார்த்த ஒருவர் சொன்னார். என் பெற்றோர் என்னையும் இழக்கக் கூடாதென்று சிரமப்பட்டு இங்கு அனுப்பி விட்டாங்க.’

கோனாவின் சிவந்த கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்து எனக்கு கோவமும் அழுகையும் வந்தது. ‘என்ன கோனா, இந்த உலகத்திலிருக்கற எந்த நாடும் எதுவுமே செய்ய முடியாதா? உங்களுக்கு மட்டும் ஏனிந்த கஷ்டம்?’

‘பார்க்கலாம். யாராவது எங்களுக்கு உதவுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ என்றாள்.

கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியா இருந்தோம். அவளுடைய கஷ்டத்துக்கு முன்னாடி என்னோடது ஒண்ணுமே இல்லன்னு ஆகிடுச்சு.

மெல்ல கோனா பேசினாள்.

‘சரி! உன் விஷயத்துக்கு வரலாம். அடுத்த முறை அவன் உன்கிட்ட வந்தா என்ன பண்ணுவ?’

‘தெரியல கோனா. பயமா இருக்கு. வீட்டுலயும் சொல்ல முடியாது. ஒருத்தரும் நம்ப மாட்டாங்க.’

‘அட சீ! பயமாவது மண்ணாங்கட்டியாவது. வீட்டுல எல்லாம் சொல்ல வேணாம். நீயே ஹாண்டில் பண்ணு. அடுத்த முறை அவன் வரும்போது இதைப் பண்ணு’ என்று கோனா சொல்லச் சொல்ல எனக்கு தைரியம் வந்தது.

***

 

18 ஜூலை 1989, ஞாயிற்றுக்கிழமை

இன்று பதினாறாவது பிறந்தநாள். இந்த மூன்று வருடங்களில் என்னென்னவோ நிகழ்ந்து விட்டது. காலம் உருண்டோடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நான் மட்டும் ஒரே இடத்தில் நின்றுவிட்டேன். ஆனாலும் ஆறு இழுத்துச் செல்லும் கூழாங்கல்லைப் போல காலம் தன்னோடு மனிதனை இழுத்துக்கொண்டு தானே போகிறது.

ஒரு வருடத்துக்குமுன், நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது முழுப் பரிட்சை நேரத்தில் ஒரு நாள் சுமதியைக் காணவில்லை. சுந்தரியக்கா வீட்டில் நேரம் காலம் தெரியாது உட்கார்ந்திருப்பாள் என்பதால் சற்று அசட்டையாக இருந்து விட்டார்கள் எங்கள் பெற்றோர். நாலு தப்படி வைத்தால் சுந்தரியக்கா வீடு. இங்கிருந்து ஒரு கூப்பாடு போட்டாலே அவர்கள் வீட்டுக்குக் கேட்கும். சுந்தரியக்காவின் அம்மாவும் சுமதியை தன் பிள்ளையைப்போல் பார்த்துக் கொள்வதால் அதிகம் என் பெற்றோர் கவலைப்படுவதில்லை.

எனக்குத் தேதி இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. அன்று மார்ச் மாதம் 8ம் நாள், 1988. அன்று ஞாயிற்றுக்கிழமை. பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென வீட்டில் ஒரு அமைதியின்மை. அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தால் எல்லோரும் பரபரப்பாக கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தனர். அம்மாவை ஏறிட்டுப் பார்த்தபோது சுமதியைக் காணோம் என்று கூறினார்.

‘சுந்தரி வீட்டுக்கு அவ போகவேயில்லையாம். கார்த்தால காபி குடிச்சுட்டு சுந்தரி வீட்டுலருந்து குமுதம் வாங்கிண்டு வரேன்னு போனா. சாப்பிடக் கூப்பிடலாம்னு போனப்போதான் தெரிஞ்சது’ என்று அம்மா கவலையானாள்.

‘மாமா வீட்டுல? ‘

‘அங்கயும் இல்லை. தெரிஞ்சவங்க எல்லார் வீட்டுலயும் பார்த்தாச்சு.’

எங்கள் தெருவிலிருந்து செய்தி பரவி காலனியின் பதினான்கு தெருவும் அக்காவைத் தேட ஆரம்பித்தது.

முதன் முதலாக சிவந்த விழிகளுடன் இருந்த என் தந்தையைப் பார்த்தேன். நாங்கள் நடுத்தர வர்க்கம்தான் என்றாலும் அப்பா எங்களுக்கு எதிலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார். பெரிதாக வசதிகள் செய்து தர முடியாவிட்டாலும் மூன்று வேளை சாப்பாடும் துணிமணியும் கிடைத்து விடும். வேறென்ன வேண்டும்? ஏழு பேர் கொண்ட குடும்பம் என் அப்பாவின் சம்பளத்தில் மட்டுமே நடந்துகொண்டிருந்தது. என் அம்மாவும் பாட்டியும் சிட்டையாக பணத்தை நிர்வகித்தார்கள். சுமதியின் திருமணம் ஏற்பாடானால் தாராபுரத்திலிருக்கும் தாத்தாவின் ஒரு ஏக்கர் நிலத்தை விற்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். மற்ற இரண்டு பெண்களின் திருமணத்துக்கு முன் ஹரி தலையெடுத்து விடுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

‘நாங்க சத்தியமங்கல ப்ருஹசரணம். நம்மாளுங்களுக்குள்ளயே பாருங்கோ. வடமா வேண்டாம். அதுவும் தஞ்சாவூர்,பாலக்காடு பிராமணாளே வேண்டாம். அந்த வாயும் கையும் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று ஜாதகப் பரிவர்த்தனை செய்யும் கமலா மாமியிடம் பாட்டி கையை ஆட்டி ஆட்டிப் பேசினாள்.

‘ஏன் மாமி? ஒரு நல்ல தஞ்சாவூர் வடமப் பையன் இருக்கானே’ என்றாள் மாமி.

‘யப்பா, வேணாம்மா. ஒரு தடவை எங்காத்துக்காரர் பவானி ஆறுல பரிசல்ல போயிண்டிருந்தார். கூட கே.பி. சுந்தராம்பாள் வந்திருந்திருக்கா. என்ன சார், நீங்க வடமாளா, வாத்திமாளான்னு கேக்க, இவர் ப்ருஹசரணம்னு சொல்லிருக்கார். ப்ருஹசரணமா? அது ‘பெப்பே’ ஆச்சே முகவாய்க்கட்டைல கை வச்சுண்டு எங்காத்துக்காரரைப் பார்த்தாளாம். கொங்கு மண்டல பிராமணா நாங்க. ஒழுங்கா பிராமண பாஷை கூட பேச வராது. தஞ்சாவூர்,பாலக்காட்டுக்காராளைப் பொருத்தவரை நாங்க அவா செட்டுலயே சேர்த்தியில்லை. அந்த வடம ஜம்பத்துக்கு முன்னாடி ஒப்ப நிக்க முடியாதும்மா. நாங்க பெப்பேதான். அதுக்கு இன்னொரு பெப்பேதான் சரிப்பட்டு வரும்’என்றாள்.

மாலை நான்கு மணியாயிற்று. தேடித் தேடி அனைவரும் ஓய்ந்து விட்டனர்.

‘போலீஸுக்கு போயிடலாமா?’ என்று பக்கத்துக்கு வீட்டு ஜாகீர் அப்பா கேட்டார்.

‘இல்லீங்க மொஹமத், வெயிட் பண்ணுவோம். இன்னும் சிலரோட வீட்டுல பார்த்துடுவோம்’ என்றார் அப்பா.

திருப்பூரில் என் அம்மாவின் தங்கை இருந்தார். அவர் வீட்டுக்குப் போயிருப்பாளோ என்று ஒருவரை அனுப்பியிருந்தார் அப்பா. அனுப்பிய ஆள் சுமதி அங்கே இல்லை என்பதை ஜெயந்தியின் வீட்டுக்கு போன் பண்ணி சொன்னார். பாட்டி லலிதா சஹஸ்ரநாமம் ஜபிக்க ஆரம்பித்திருந்தாள்.

‘…மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:….’

அம்பாளுடைய நடையழகை வர்ணிக்கும் இந்த வாக்கியம்… மந்த கமனா- மெல்ல ஒயிலான நடை. அப்படித்தான் நடப்பாள் சுமதி. வேகம் பேச்சில் மட்டுமே இருக்கும். மற்றதெல்லாம் கனவு கண்டுகொண்டே மெல்லத்தான் செய்வாள். எங்கே போயிருப்பாள்?

அப்பா நிலைகுலைந்து போய் காலனிக் கிணற்றை எட்டிப் பார்த்தார். ‘பின்னாடி தோட்டத்துல கூட ஒரு கிணறு இருக்கில்ல? அங்கயும் பார்த்துட்டு வந்துடறேன்’ என்று சொன்ன அப்பாவின் முகத்தை காணச் சகிக்கவில்லை. முகமெல்லாம் வெளிறி, பட்டனை மாற்றிப் போட்ட கசங்கிய சட்டையோடு, கண்ணீர் தளும்பிய கண்களோடு, கலைந்த தலையோடு , சட்டென்று ஒரு பத்து வயது அதிகமானதைப்போல் தோற்றமளித்தார்.

ஜாகீர் மெல்ல என்னிடம் வந்து கிசுகிசுத்தான். ‘கீதா, எனக்கொரு சந்தேகம்டி. அன்னிக்கு அனுஷம் தியேட்டர் பின்னாடி இருக்கற வயக்காட்டுல சுமதியக்காவையும் பாண்டியண்ணனையும் பார்த்தேன். சிரிச்சு பேசிகிட்டிருந்தாங்க. நான் யார்கிட்டயும் சொல்லல. ஒரு வேளை…’ என்று இழுத்தான்.

‘நீ வாய வச்சுகிட்டு சும்மா இருடா’ என்று ஜாகீரின் வாயை நான் மூடும் நேரம் ஹரி பேசினான்.

‘அப்பா, இருங்கோ. ஒண்ணும் தோட்டத்துக்குப் போக வேண்டாம். இன்னிக்கு முகூர்த்த நாள். அநேகமா யார் கூடயாவது ஓடிப்போயிருப்பா’ என்றான் உணர்ச்சியில்லாமல்.

அந்தக் கோணத்தில் யோசித்தே பார்த்திராத எல்லோரும் ஸ்தம்பித்தனர். அப்பா தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார். பாட்டி இன்னும் வேகமாக ஜபித்தார். காந்தித் தாத்தாவும் அம்மாவும் செய்வதறியாது நின்றிருந்தார்கள். ஜாகீர் அப்பாவும் குமாருடைய அப்பா ஜகதீசனும் என்ன செய்யலாம் என்று கவலையுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

‘ஒண்ணும் செய்ய வேண்டாம் மாமா. அவளே வருவா பாருங்கோ. நாளை வரை பார்க்கலாம்’ என்றான் ஹரி.

‘அப்படியெல்லாம் நம்பிகிட்டு உட்கார்ந்திருக்க முடியாது சாமி’ என்றார் மொஹமத் மாமா. ‘ஆமா, ஆமா’ என்று தலையாட்டினார் ஜகதீசன் மாமாவும். அப்பாவைக் கூட்டிக்கொண்டு இருவரும் காவல் நிலையத்துக்கு சென்றனர்.

காவல் நிலையத்திலும் அதேதான் சொல்லியிருக்கிறார்கள். யார்கூடயாவது ஓடிப் போயிருக்குமுங்க. இந்தக் காலத்துப் பசங்க சினிமா பார்த்து கெட்டழியுதுங்க என்று புலம்பி விட்டு, இருந்தாலும் தேடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்பாவை போலீஸ் ஸ்டேஷன் படியேற வைத்துவிட்டாளே இவள் என்று கோபம் வந்தது.

ஜாகீர் ‘சொல்றதுதான் பெட்டர்’ என்று கிசுகிசுத்தான். ஜாகீரின் அம்மா ரெஜினா அத்தை நாங்கள் திருட்டு முழி முழிப்பதை பார்த்துவிட்டாள்.

‘ஏய், என்ன நடக்குது? உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா உண்மையை சொல்லிடுங்க’ என்று எங்களைப் பார்த்து கண்களை உருட்டினாள். எல்லோரும் எங்களைப் பார்த்தார்கள். பூதக் கண்ணாடிக்கு அடியில் மாட்டிக்கொண்ட எறும்புகளாகத் தவித்தோம்.

‘அதுவந்து, ஜாகீரு சுமதியக்காவையும் பாண்டி அண்ணாவையும் அனுஷம் தியேட்டருக்குப் பின்னாடி பார்த்தானாம்’ என்று திக்கித் திணறி சொல்ல, ரெஜினா அத்தை வேகமாக வந்து ஜாகீரில் முதுகில் பட்டென்று போட்டாள்.

‘முன்னாடியே சொல்லித் தொலைக்கறதுக்கு என்னடா? இவ்வளவு நேரம் வீணாப் போச்சுல்ல. நீயும் நல்ல அமுக்குணிதான்’ என்று இருவரையும் திட்டினாள். ரெஜினா அத்தை திட்ட ஆரம்பித்தால் ஓய மாட்டாள். ஜாகீரின் தங்கை அமுலு சமத்தாக இருப்பாள். நானும் ஜாகீரும் சிறு வயதில் செய்யாத சேட்டைகள் இல்லை.

ஒருமுறை அவன் சமையலறையில் இருந்து ஒரு டஜன் முட்டைகளைக் கொண்டு வந்தான். எனக்கு வழவழப்பாக இருந்த அந்த முட்டைகளைப் பார்க்கவும் தொடவும் நன்றாக இருந்தது. அமுலு அப்போது எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தாள். அவளை புழக்கடையில் உள்ள வேப்பமரத்தடியில் உட்கார வைத்து ஒவ்வொரு முட்டையாக அவள் தலையில் உடைத்தோம். ஜாகீர் ஒரு முட்டை நான் அடுத்த முட்டை என்று வரிசையாக உடைத்தோம். உடைத்து உடைத்து வேப்பமரத்தினடியில் போட்டோம். அதிலிருந்து வழியும் மஞ்சள் கருவையும் பிசின் போன்ற திரவத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லையென்றாலும் அந்த உடைக்கும் செயல் சந்தோஷத்தைக் கொடுத்தது. அமுலுக்கு பிடித்ததோ என்னவோ அசையாமல் உட்கார்ந்திருந்தது. அவ்வப்போது தலையை தேய்த்து விட்டுக் கொண்டது.

அந்த சுபகாரியத்தை செய்துகொண்டிருக்கும்போதே அத்தை வந்துவிட்டாள். ஓட முயற்சி செய்த எங்களைப் பிடித்து அமுலுவை தென்னம் மாரிலிருந்து ஒரு குச்சியை உருவிக்கொண்டு வரச் சொன்னாள். இரண்டு பேருக்கும் முட்டிக்குக் கீழ் அடி விழுந்தது.

‘அவந்தான் தறி கெட்டுத் திரியறான்னா, ஐயர் வீட்டுப் புள்ள முட்டையை எடுத்துகிட்டு ஆட்டமா ஆடற’ன்னு திட்டிக்கொண்டே அடித்தாள். என்னைவிட ஜாகீருக்குத்தான் நிறைய அடி. சத்தத்தைக் கேட்டு என் வீட்டு புழக்கடைக்கு வந்த அம்மா

‘கடங்காரிக்கு இன்னும் ரெண்டு கால்ல போடு ரெஜினா’ என்று எண்ணையை வார்த்தாள்.

எல்லா ஆட்டமும் என்னுடைய பத்தாவது வயதில் முடிவுக்கு வந்தது. இந்த பரபரப்பிலும் ரெஜினா அத்தையைப் பார்க்கும்போது அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு அருமையான நாட்கள்.

அதற்குள் பாண்டி அண்ணா வீட்டுக்கு ஆட்கள் ஓடியிருந்தார்கள். பாண்டி அண்ணாவின் வீடு பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அண்ணா எங்களுக்கு வழக்கமாக ஆட்டோ ஓட்டுவார். யாருக்காவது உடம்புக்கு முடியவில்லை என்றாலோ, கடைவீதிக்குப் போக வேண்டும் என்றாலோ அப்பா பாண்டி அண்ணாவின் ஆட்டோவைத்தான் அழைப்பது வழக்கம்.

பாண்டி அண்ணாவும் வீட்டிலில்லை என்று தெரிந்தவுடன் அவருடைய நண்பர்களை விசாரித்தார்கள். இருவரும் மாசாணியம்மன் கோயிலில் அன்று காலை திருமணம் செய்துகொண்டது தெரிந்தது. இரவு ஒன்பது மணி சுமாருக்கு சுமதியும் பாண்டி அண்ணாவும் (இனிமேல் அத்திம்பேர்) மாலையும் கழுத்துமாக வந்து நின்றனர். வீட்டில் என்னையும் பேபியையும் தவிர அனைவரும் உடைந்துபோய் விட்டனர். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை அவளைப் பார்த்து. அப்பாவைப் பார்க்கத்தான் சங்கடமாக இருந்தது.

கடைசியில் எங்களுக்கு பெப்பே காண்பித்து விட்டாள் சுமதியக்கா.

சினிமாவில் வருவதுபோல் அப்பாவின் காலில் விழுந்து அழுதாள் சுமதி. ஏனோ எனக்கு அவள் செய்வதெல்லாமே அவளுக்குப் பிடித்த நடிகையின் நடிப்பைப் போலவே இருக்கும். அழும்போது கூட அந்த நடிகை அழுவதுபோல இருந்தது. ‘வே’வென்று வாயைத் திறந்து அழாமல் நாசூக்காக நளினமாக அழுது மன்னிப்புக் கேட்டாள்.

அம்மா ஆத்திரத்தில் அடிக்க வந்தபோது காந்தித் தாத்தா (என் அம்மாவின் அப்பா) தடுத்து நிறுத்தி ‘மாப்பிள்ளை,நம்ம மனுஷாளுக்கு ஓடினது தெரியறதுக்கு முன்ன நீங்களே கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கோ’ என்றார்.

‘என்னப்பா சொல்றேள்?’ என்று தன் பர்சை எடுத்துப் பிரித்து அதிலிருந்து நான்கு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காண்பித்து ‘இவ்வளவுதான் இருக்கு என்கிட்ட. இந்த மாச மளிகை சாமானுக்கு அம்மாகிட்ட கொடுக்க வச்சிருக்கேன். எப்படிப்பா நானூறு ரூபால கல்யாணம் பண்றது?’ என்று மனதின் பெருவலியை முகத்தில் தேக்கிக்கொண்டு கேட்ட என் தந்தையின் முகத்தை என் கடைசி மூச்சுவரை மறக்க மாட்டேன்.

மாமாவும் இன்னும் சில உறவினர்களும் பண உதவி செய்ய, ஒரு வழியாக அடுத்த முஹூர்த்தத்தில் நெருக்கமான உறவினர்களை மட்டும் அழைத்து அவளுக்கு திருமணம் செய்து அனுப்பிவிட்டார் அப்பா. வீடே இழவு விழுந்த வீடுபோல் இருந்தது.

எதிர் வீட்டு மல்லிகா அத்தைக்கு கடும் கோபம். ‘எங்க வீட்டுப் புள்ள இப்படி ஒரு ஜாதிக்காரன கட்டிகிட்டு வந்திருந்தா, புள்ளயே வேணாம்னு ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டிருப்போம். ஐயருங்க உங்களுக்கு தைரியமில்ல. எல்லாத்துக்கும் பயம். அவனோட வீட்டப் பாத்திருக்கீங்களா? அவங்க அம்மா, இதோ, அடுத்த தெரு சுந்தர்ராஜன் டாக்டர் க்ளீனிக்க பெருக்கி தொடைக்குது. மொறவாசல் பண்ற குடும்பம். என்ன மாதிரி குடும்பத்துலருந்து எங்க போயிருக்குது பாரு. நாங்களா இருந்தா அவன் கையக் கால முறிச்சுப் போட்டுப் போடுவோம்’ என்று பொரிந்து தள்ளினார்.

‘அப்புறம் என்ன மல்லிகா பண்றது? எல்லாரோட வாழ்க்கையும் நாசமாகிடும். அவா அவாளுக்கு என்ன கர்மாவோ அது படிதான் வாழ்க்கை. நம்மால ஒண்ணும் செய்ய முடியாது. அவ சந்தோஷமா இருப்பா. இருக்கணும். அவ எல்லாம் தெரிஞ்சு தேடிண்ட வாழ்க்கைதான?’ என்றார் காந்தித் தாத்தா.

‘என்னவோ சொல்லுங்க. மனசுதா ஆறல’ என்று முணுமுணுத்தார் மல்லிகா அத்தை.

இது நடந்து ஆறே மாதத்தில் பாட்டி தவறி விட்டாள். காலையில் இரண்டு தோசை தின்று ஹார்லிக்ஸ் குடித்தவள் என் அம்மாவிடம் என்னவோ போலிருக்கிறது என்று சொல்லியிருக்கிறாள். என் அம்மா அவள் பக்கத்தில் உட்கார்ந்ததும் அவளின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு உயிரை விட்டாள். என்னையும் பேபியையும் மல்லிகா அத்தை மதிய நேரத்தில் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார். என் அம்மா கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். மாமியாரானாலும் தன் அம்மாவைவிட அவளோடுதான் பல வருடம் இருந்திருக்கிறாள். அப்பா இறுகிய முகத்துடன் காரியம் செய்தார். எனக்கு ஏனோ அழுகையே வரவில்லை. எதுவும் தோன்றவில்லை. சுமதி மட்டும் வந்து அரைமணிக்கூறு இருந்தாள். அவள் கழுத்தில் வெறும் மஞ்சக்கயிறு மட்டுமே இருந்ததைப் பார்த்தேன். இளைத்துப் போன மாதிரி இருந்தது. என்னைப் பார்த்து சிறு புன்னகை செய்துவிட்டுப் போய் விட்டாள்.

எழுவர் ஐவராகி விட்டோம்.

***

கோனா சொல்லிக் கொடுத்தபடி அடுத்த மாதத்தின் நாட்கள் வந்ததும் நான் தைரியமாக தயாராக இருந்தேன். முதல் நாள் ஹரியின் வருகைக்காக காத்திருந்தேன். பனிரெண்டரை மணி வரை அவன் வரவில்லை. பிறகு ஆழ்ந்த நித்திரை அணைத்துக் கொண்டது. சுமார் அதிகாலை இரண்டு மணியளவில் என்னை யாரோ ஸ்பர்சிக்கும் உணர்வு வந்து உடம்பை உதறிக்கொண்டு எழுந்தேன். இளித்தபடி அவன்.

‘யூஸ் ஆயிட்ட போலிருக்கே! உனக்கும் பிடிச்சுடும் கொஞ்ச நாள்ல’ என்றான். இப்போது எனக்கு பயமிருக்கவில்லை. அருவருப்பின் உச்சகட்டத்தில் சீறினேன்.

‘கைல என்ன இருக்கு பார்த்தியா? நாயே! இனி பக்கத்துல வந்த…இதுதான் உனக்கு’ என்று கத்தியைக் காண்பிக்க ஒரு கணம் ஸ்தம்பித்த அவன் சிரித்துக்கொண்டே அநாயாசமாக என் கையை முறுக்கி கத்தியை வீசினான். அவன் உயரத்தும் பலத்துக்கும் நான் உறை போடக் காண மாட்டேன்.

‘ஓ! வீராங்கனை ஆகறீங்களோ! என்னை பயமுறுத்த முடியாதுடீ. என்னை வெட்டுவாளாம்’ என்று ஆக்ரோஷமாக கிசுகிசுத்துக் கொண்டே செய்ய வேண்டியதை செய்து விட்டு வெளியேறினான்.

இந்த முறை எனக்கு கையாலாகாத்தனத்துடன் கோபமும் வந்தது. என்னால் கோனாவின், அவள் அண்ணனின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.

சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் ஹரியின் அறைக்குச் சென்றேன். அவன் கதவைத் தாழிடவில்லை. பூனைபோல் மெதுவாக அடியெடுத்து வைத்து அவன் அறையைச் சுற்றி நோட்டமிட்டேன். அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் மேஜை மேல் கல்லூரியில் அவன் ஒப்படைக்க வேண்டிய குறிப்புகள் அடங்கிய ரெகார்ட் நோட்டை எடுத்துக் கொண்டேன். அவனுடைய ஸ்டாம்ப் கலெக்ஷன் ஆல்பத்தையும் எடுத்துக் கொண்டேன். மேஜை மேல இருந்த இன்னும் இரண்டு நோட்டுப் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டேன். ஓசைப்படாமல் என் இடத்துக்கு வந்தேன். புழக்கடைக் கதவைத் திறந்து குளியல் அறைக்குச் சென்று நிதானமாக எல்லாவற்றையும் கிழித்தேன். ‘க்ளாஸ் ஃப்ர்ஸ்ட் தான நீ சனியனே! சாவு!’ என்று கறுவிக்கொண்டே எல்லவற்றையும் கிழித்தேன். ஸ்டாம்ப் ஆல்பத்தை கிழிக்க முடியாமல் அதைக் குளியலறை தொட்டிக்கு மேல் விறகு வைக்கும் பரணுக்குள் வைத்தேன். கிழித்த குப்பைகளை ஒரு பைக்குள் போட்டு மூட்டைகட்டி குமுட்டி அறைக்குக் கொண்டு வந்து அதன் மேல் என் துணிகள் சிலவற்றை அடைத்து அலமாரியில் வைத்தேன். காலையில் குப்பைத் தொட்டியில் போடலாம் என முடிவு செய்தேன். பிறகு பேய்த் தூக்கம் தூங்கினேன். அம்மா காலையில் ‘கீதா, ஸ்கூலுக்கு நேரமாச்சு, எழுந்திரு’ என்று பல முறை அலறிய பிறகு எழுந்தேன். புழக்கடையில் பல் தேய்த்துக்கொண்டே மெல்ல நோட்டம் விட்டேன். ஹரி அங்கேயும் இங்கேயும் அலைந்துகொண்டிருந்தது தெரிந்தது.

‘நாங்க ஏண்டா உன் நோட்டை எடுக்கப் போறோம். சரியாப் பாரு’ என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தது கேட்டது.

நான் சீக்கிரம் குளித்துவிட்டு பின்பக்கம் வழியாக முன் வாசலுக்கு வந்து படியில் நின்றபடி ‘என்னவாம் பிரச்சனை?’ என்றேன். அலாவுதீன் பூதம் போல என் குரல் கேட்டு சட்டென்று ஹாலுக்கு வந்தான் ஹரி. ‘அவனோட இரண்டு முக்கியமான நோட்டைக் காணலியாம். நீ பார்த்தியா?

‘நான் எப்படி என் ரூமை விட்டு வெளியே வருவேன்? எனக்கென்ன தெரியும். ராப்பூரா ஒரே கொசுக்கடி. சரியா தூங்கவேயில்ல’ என்றதும் என்னை குரோதத்துடன் பார்த்தான் ஹரி. கோண வாய் சிரிப்பை நான் இப்போது சிரித்தேன். திரும்பி நடந்தேன்.

அதற்குப் பிறகு ஹரி என் அறைக்கு வருவதை நிறுத்திவிட்டான்.

ஆனால் மூன்று வருடங்களாக வேறு விதமான சித்திரவதை செய்ய ஆரம்பித்திருக்கிறான்.

*

‘ஹாப்பி சிக்ஸ்டீந்த் பர்த்டே டு மீ!!!’

-தொடரும்

 

ஹெக்ஸகோன் – 7

3 July 2024 at 15:44

29  ஜூன் 2023, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சத்தம் மனதை என்னவோ செய்தது. நியூஸில் காண்பித்த அந்த சிசிடிவி பதிவில் துப்பாக்கியை காரின் உள்ளே வைத்து பாயிண்ட் ப்ளாங்கில் சுடுகிறார் அந்தக் காவலர். கார் சிறிது தூரம் சென்று ஒரு கம்பத்தில் அடித்து நின்றது.

‘பஸ் வராது, பஸ்ஸை எல்லாம் எரிக்கிறார்கள்’ என்று ஒரு பெண்மணி நாங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது சாந்த்ராவிடம் சொன்னார். சிந்துஜா, லாவண்யா, நான் மூவரும் சாந்த்ராவுடன் மோன் மார்த்தர் போகலாம் என்று முடிவு செய்தோம். பக்கத்திலேயே பேருந்து நிறுத்தம் இருந்ததால் அங்கு நின்று கொண்டிருக்கும்போது இப்படி ஒரு செய்தி.

நாங்கள் பாரிஸில் இறங்கியதற்கு முந்தைய நாள் நாஹேல் என்ற பதினேழு வயது அல்ஜீரிய வம்சாவளி சிறுவனை ஊரின் புறநகர் பகுதியான நான்தெர்ரில் (Nanterre) ஒரு காவலர் சுட்டுக் கொன்றிருந்தார். அந்தச் சிறுவனின் காரை நிறுத்தி பேப்பர்களைக் கேட்க, அவன் காவலர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வண்டியைக் கிளப்பியிருக்கிறான். அதனால் அவனைச் சுட்டிருக்கிறார் காவலர்.

புறநகர்ப் பகுதியிலெல்லாம் ஒரே கலவரம். பேருந்துகளைக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். பிரான்ஸ் முழுக்கக் கலவரம் பரவி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியில் அடிக்கடி நாஹேலின் அம்மாவைக் காண்பித்து எல்லோரையும் வெறியேற்றிக் கொண்டிருந்தார்கள். நல்ல சுபயோக சுபதினத்தில் வந்திறங்கியிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். சில இடங்களில் போலீசாரைத் தாக்கினார்கள்.

நாஹேலைச் சுட்ட காவலரை கைது செய்து விட்டார்கள். அவருக்கு ஆதரவாக ஒரு மந்திரி குரல் கொடுத்து பல மில்லியன் டாலர்களை அந்தக் காவலரின் குடும்பத்துக்காக சேகரித்தார். பிரான்ஸே இரண்டுபட்டு நின்றது.

சாந்த்ராவுக்குக் கோபம் பொங்கியது.  ‘இந்த நாடு எங்குதான் போய்க்கொண்டிருக்கிறது?’ என்று முகம் சுளித்தார்.

நம்மூர்க்காரர் ஒருவர் ‘இந்த வெள்ளைக்காரன்களை இப்படித்தான் அடிக்கடி கலவரம் செய்து பதட்ட நிலையிலேயே வச்சிருக்கணும். இல்லைன்னா நம்மையெல்லாம் ஊரக் காலி பண்ணச் சொல்லிருவான்’ என்றார். இவரென்ன மாற்றிச் சொல்கிறார்? எனக்கு இந்த தாரதம்யங்கள் எல்லாம் புரிவதேயில்லை. புரியவும் வேண்டாம்.

‘சரி! வாருங்கள் மோன்மார்த்தருக்கு (Montmartre) நடந்தே போய் விடலாம். அதோ தெரிகிறதே கதீட்ரலின் கோபுரம்’என்றார்.

சாந்த்ராவின் வீடு ஒன்பதாவது அரோந்தீஸ்மோவில் (arrondissement) இருந்தது. Ile-de-Paris என்று சொல்லக் கூடிய பாரிஸ் நகரம் இருபது அரோந்தீஸ்மோக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பாரிஸின் நடுவில் ஓடும் லா ஸென் (La Seine)நதியின் வலதுபுறத்தில் இருக்கும் அரோந்தீஸ்மோக்கள்தான் இடது பக்கத்தைவிட பிரபலமான பகுதி. ஏழாவதில் ஈஃபில் (Eiffel) டவர் இருக்கிறது.  இந்தப் பகுதிதான் பாரிஸின் ஆடம்பரமான பகுதி. சாதாரண மக்கள் வசிக்க இயலாது. அரசியல்வாதிகளும், பெரும் பணக்காரர்களும் வசிக்கும் இடம். லூவ்ர் அருங்காட்சியகம் முதலாம் அரோந்தீஸ்மோ. மோன்மார்த்தர் பதினெட்டாவதில் இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மேயர் உண்டு. ஒன்று,இரண்டு, மூன்று மற்றும் நான்காம் அரோந்தீஸ்மோக்களை பார்த்துக்கொள்வது மட்டும் ஒரே ஒரு மேயர்.

நடக்கலாம், பக்கம்தான் என்று சாந்த்ரா சொன்னதும் ஏதோ மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து லஸ் கார்னர் வரை தூரம்தான் இருக்குமென்று நினைத்தோம். ஆனால் அது மூன்றரை கிலோமீட்டர் என்று தெரிந்திருந்தால் வேறு இடம் போகலாம் சாந்த்ரா என்று சொல்லியிருப்போம்.

பாரிஸ் மக்கள் வேகவேகமாக நடந்துகொண்டே இருக்கிறார்கள். பஸ் நிறுத்தத்தில் பஸ் எத்தனை நிமிடத்தில் வரும் என்று ஒரு பேனல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதில்  பத்து நிமிடத்துக்கு மேல் காட்டினால் சாந்த்ரா நடக்க ஆரம்பித்து விடுவார். அவர் மட்டுமல்ல. எல்லோருமே அப்படித்தான். சினிமாவில் காண்பிப்பதுபோல் பாரிஸில் ஹை ஹீல்ஸ் எல்லாம் போட்டுக்கொண்டு நடக்கவே முடியாது. மேலும் கீழுமாக இருக்கும் சாலைகள், கற்கள் பதித்த சாலைகள் பிரசித்தம். இப்போதெல்லாம் அந்த பெருமைமிகு கற்கள் பதித்த சாலைகளில் இருக்கும் கற்களை எடுத்துவிட்டு நல்ல சாலையே போடுகிறார்கள் என்றார் சாந்த்ரா. ஏதாவது ஸ்டிரைக் என்றால் அந்தக் கற்களை நோண்டி எடுத்து போலீஸார் மேலும் பேருந்துகளின் மேலும் வீசுகிறார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஒரு வழியாக மூன்று கிலோமீட்டர் மூச்சு வாங்கிக்கொண்டு நடந்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்ததால் சிரமம் தெரியவில்லை. வானிலையும் ஒத்துழைத்தது. அது கோடைக் காலம் என்று அவர்கள் சொன்னாலும் சென்னைவாசிகளாகிய எங்களுக்கு அந்த 21 டிகிரி வானிலை ஊட்டியைபோல் இருந்தது. ஆனால் பாரிஸ் வானிலை இன்று இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. திடீரென்று வெயிலடிக்கும், அல்லது மழை பெய்யும். மாலையானால் குளிரும். அதனால் அடுக்கடுக்காக உடுத்திக்கொண்டு செல்கிறார்கள். தேவையானால் கோட்டைப் போட்டுக் கொள்ளலாம் அல்லது கழற்றி விடலாம்.

மோசமாக உடை உடுத்தியவரை என்னால் பார்க்கவே முடியவில்லை. அந்தந்த இடத்துக்குத் தகுந்தாற்போல் உடுத்துகிறார்கள். முக்கியமாக இன்னொரு விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரிய கழுத்து உள்ள உடைகளை பெண்கள் அவ்வளவாக அணிந்து நான் பார்க்கவில்லை. அவர்கள் உடலுக்குத் தகுந்தாற்போல் அட்டகாசமாக ஆடை அணிகிறார்கள். மிகவும் குட்டியான ஷார்ட்ஸோ, அல்லது மினி ஸ்கர்ட்டோ அதிகம் காணப்படவேயில்லை. அப்படி யாராவது அணிந்திருந்தால் அவர்கள் சுற்றுலாப் பயணிகள். மிகவும் பாந்தமாக அழகாக உடலுக்குத் தகுந்தாற்போல் உடையணிவதில் வித்தகர்கள் பாரிஸ்காரர்கள். நான் காலையில் உடை உடுத்தி, அலங்காரம் செய்துகொண்டு கூடத்துக்கு வந்தால் சாந்த்ரா தலையிலிருந்து பாதம்வரை பார்ப்பார். அவர் முகமே சொல்லிவிடும் நாம் சரியாக உடுத்திக்கொண்டிருக்கிறோமா இல்லையா என்று.

ஒருநாள் அவருடைய ஒட்டக நிற கைப்பையைக் கொண்டு வந்து ‘இந்த டாப்ஸோடு இது ஒத்துப் போகிறதா’ என்று கேட்டார்.’ நான் சந்தேகமாக தலையை ஆட்டியதும், உள்ளே போய் மாற்றிக்கொண்டு வந்தார்.

நான் ஒருநாள் ‘இந்த ஸ்கர்ட் போட்டுக் கொள்ளலாமா?’ என்று கேட்டேன். ‘அதற்கான கால்கள் உனக்கு இருந்தால் போட்டுக்கொள்ளலாம்’ என்றார்.

அவர்கள் உயரமெல்லாம் நம்மைப் போல்தான் என்றாலும் உடல் பெருத்த மனிதர்களை பெரிதாகப் பார்க்க முடிவதில்லை. இப்படி வேகுவேகுவென்று தினமும் மைல் கணக்கில் நடந்தால் எங்கிருந்து உடம்பு வரும்?

மோன்மார்த்தர் போகும் வழியில் ஜான் ரெனுவார் (Jean Renoir) வீட்டைத் தாண்டிச் சென்றோம். அந்த வீட்டின் வெளியே ஒரு பலகையில் ‘இங்கு ஜான் ரெனுவார், திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், 1937 – 1969 வரை வசித்தார்’ என்று எழுதியிருந்தது. ஒரே சந்தோஷமாகி விட்டது எனக்கு. அடுத்த தெருவில்தான் ஃப்ரான்ஸுவா த்ரூஃபோ (François Truffaut) வசித்தார். அங்கு நாளை கொண்டு போய் காட்டுகிறேன் என்றார் சாந்த்ரா என் முகத்தைப் பார்த்து. ஃப்ரான்ஸுவா த்ரூஃபோவின் Quatre cents coups (400 blows) நாம் இருக்கும் தெருவில்தான் எடுத்தார் என்று சாந்த்ரா சொன்னவுடன் எனக்கு எப்படி என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.

என் உற்சாகத்தைப் பார்த்து ஜான் ரெனுவார் வீட்டின் வழியே என்னைக் கூட்டிச் சென்று விடவேண்டும் என்று சாந்த்ரா நினைத்தார். ஆனால் அந்த ரோடு தனியார் ரோடு என்பதால் அங்கிருந்த காவல்காரி எங்களை அனுமதிக்கவில்லை. அந்த சாலையிலிருந்து வெளியே வந்து ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் பின்னால் ஓடி விடலாம் என்று சாந்த்ரா நினைத்தாலும் அந்தக் கண்கொத்திப் பாம்பு காவல்காரி ‘சாரி! உள்ளே விட முடியாது’ என்று சொல்லி விட்டார். சாந்த்ராவுக்கு வருத்தம்.

‘பழைய வாட்ச்மேனாக இருந்தால் விட்டிருப்பான்’ என்று சுணங்கினார்.

நாங்கள் படித்தபோது எங்கள் புத்தகத்தில் கோதிக் பாணியில் மோன்மார்த்தர் படங்கள் இருக்கும். அப்படித்தான் இருக்கப் போகிறது என்று நினைத்த எனக்கு ஏமாற்றம். கனவுலகத்திலேயே வாழும் எனக்கு இத்தனை வருடத்தில் அவற்றையெல்லாம் சரி செய்திருப்பார்கள் என்று என் மூளையில் உறைக்காதது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் வழியில் Le Bateau Lavoir ஐப் பார்த்தவுடன் மறுபடி சந்தோஷம் ஊற்றெடுத்தது. அந்த இடத்தில்தான் இருபதாம் நூற்றாண்டின் பெரிய அறிஞர்களும், எழுத்தாளர்களும், ஓவிய மேதைகளும் தங்கியிருந்தார்கள். ஒரு காலத்தில் அந்த அழுக்கு வீட்டின் அறைகளில் தங்கியிருந்துதான் உலக சாதனை படைத்தார்கள் பல  மேதைகள். அன்று இந்த மோன்மார்த்தர் முழுவதும் இவர்கள் ஆட்சி தான்.

அப்போலினர்(Apollinaire), ஹென்ரி மதிஸ்(Henri Matisse), பிக்காஸோ (Picasso)(இங்கிருக்கும்போது தான் அவர் Young girl with a flower Basket, Les Demoiselles d’Avignon போன்ற படங்களை வரைந்தாராம்), வான் கோக் (Van Gogh)(வான் கோ என்று அவர்கள் உச்சரிப்பதில்லை) ஜார்ஜ் ப்ராக் (Georges Braque), மார்க் ஷகால்(Marc Chagall)மற்றும் பலர் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வாசலில் கீழே விழுந்து கும்பிட வேண்டும் என்று தோன்றினாலும் ‘ரொம்ப டிராமா போடாம வா’ என்று என்னுள் இருக்கும் பெனாத்தா என்னை அமுக்கினாள்.

ஒரு இடத்தில் சாலையின் ஓரத்தில் வான் கோக்கின் படத்தை வைத்து எழுதியிருந்ததன் சுருக்கம்:

 

இவர் 1886 இல் பாரிஸுக்கு வந்தபோது  பல நூறு ஓவியர்களில் ஒருவர். பிரெஞ்சு தலைநகர் அப்போது கலைஞர்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் செல்வத்தையும் புகழையும் தேடுவதற்காக வெகு தொலைவில் இருந்து வந்தனர். வின்சென்ட், தனது சகோதரர் தியோவுடன் இங்கு வசித்து வந்தார்.

வின்சென்ட் வான் கோக் பாரிஸ் நகர கவர்ச்சியின் அதீதத்தில் மயங்கிக் கிடந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 1888இல், அவர் உடல் மற்றும் ஆன்மா இரண்டையும் அதிக அழுத்தத்திற்கு தான் உட்படுத்துவதை உணர்ந்தார்.

பின்னர் மோன்மார்த்தர் வந்து மற்ற ஓவியர்களுடன் பழகத் தொடங்கிய பிறகு, அடர்த்தியான வண்ணங்களில் வரைவதை விட்டுவிட்டு இம்ப்ரெஷனிஸ்ட் முறையை பரிசோதிக்கத் தொடங்கினார். ஓவியங்களைப் பற்றி விவாதிக்கக் கூடிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு விவாதித்தார்.

வான் கோக் மறக்க முடியாத கலைப் படைப்புகளை உருவாக்கினார். இந்த மோன்மார்த்தர் காலகட்டத்தை அவரது கலை வளர்ச்சியில் ஒரு முக்கியமான ஆயத்த கட்டமாகக் காணலாம். பின்னாளில் பிரபலமடையப்போகும் ப்ரோவென்ஸ்(Provence) காட்சிகளை அவர் வரைவதற்கு இங்கு அவர் மேற்கொண்டது ஒரு பயிற்சி ஆய்வு.

 

‘போதும் படித்தது. சீக்கிரம் வா, இன்னும் நிறைய இருக்கிறது’ என்ற குரல் கேட்டவுடன் அதை போட்டோ எடுத்துக்கொண்டு ஓடினேன்.

பின்னர் நந்தனுடன் ஒரு நாள் வான் கோக்கின் அமைதியான அந்த எழில் கொஞ்சும் கிராமத்துக்குப் போனேன். அந்த ஊர் இடுகாட்டின் ஒரு மூலையில் இருந்தது வான் கோக்கின் கல்லறை. பக்கத்தில் அவனுடைய சகோதரன் தியோவினுடைய கல்லறை. இருவரின் கல்லறை மேலும் அலங்காரமாக செடியை வளரவிட்டிருந்தார்கள். மோன்மார்த்தரிலிருந்த கூட்டம் இங்கில்லை. ஏன், யாருமே இல்லை. நானும், நந்தனும், அந்தக் கல்லறையைப்பராமரிப்பவரும் மட்டுமே இருந்தோம். அவருடைய கல்லறைக்கு பின்னால் சாலையில் இருந்த மரத்தில் ஹிரோன்தெல் பறவைகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன.

‘ ஹிரோந்தெல் பறவைகள்’ என்றார் நந்தன்.

‘ஹும். பிரெஞ்சில் ஒரு பழமொழி உண்டு. Une hirondelle ne fait pas le printemps !’

‘அப்படியென்றால் ?’

‘ஒரு ஹிரோந்தெல் பறவை வசந்தத்தின் அறிகுறியல்ல என்பது நேரடி மொழிபெயர்ப்பு. அதாவது வெளித்தோற்றங்களை நம்பக்கூடாது என்றும் ஒரு தனிப்பட்ட உண்மையிலிருந்து பொதுவான முடிவுகளை எடுப்பது நியாயமல்ல என்றும் சொல்கிறது.’

‘ஓ! வான்கோக்கிற்கு இது பொருந்துமோ ?’

‘இருக்கலாம்.’

‘ஏன் க்ளாத் மோனேவின் வீட்டைப் பார்க்க வரும் கூட்டத்தைப் போல் இங்கு யாரும் வருவதில்லை?’ என்று நந்தன் கேட்டபோது என்னிடம் பதில் இல்லை.

வான் கோக் வாழ்ந்த 37 வருடங்களில் 38 இடங்களில் இருந்திருக்கிறார். அவர் தன் வாழ்நாளின் கடைசி 70 நாட்களைக் கழித்த Auberge Ravoux என்ற விடுதியைப் பார்க்கும்போது கண்டிப்பாக மனம் பிசையும். அந்த விடுதியின் ஐந்தாம் நம்பர் அறையில் அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்த அறையை அதற்குப்பின் யாருக்கும் தராமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். வான் கோக் தன் படங்களை மாட்டுவதற்காக அடித்த ஆணிகள் கூட அப்படியே இருக்கிறதாம். நான் சென்ற அன்று அந்த விடுதி மூடியிருந்தது. அடுத்த நாள்தான் திறப்பார்கள் என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றமாக இருந்தது.

இந்தப் பயணத்தில் பல இடங்களை பார்க்கத் தவறினேன். ஒன்று சரியான நாளில் சென்றிருக்க மாட்டேன். அல்லது சரியான நேரத்தில் போயிருக்க மாட்டேன்.

‘இந்த 75 அடி அறையில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உணர்வதற்கு நிறைய இருக்கிறது’ என்று எழுதி வைத்திருந்தார்கள்.  இந்த அறை 1985 முதல் வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மோனேவைப் போல் வின்சென்ட் வான் கோக், தான் வாழ்ந்த காலத்தில் புகழடையவேயில்லை. ஏழ்மையில் வாடினார்.  கடைசியாக தன் சகோதரன் தியோவுக்கு எழுதிய கடிதத்தில் அங்கேயிருக்கும் கஃபேயில் என்னுடைய படங்களைக் காட்சிப்படுத்தலாம் என்றிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அரசு அவர் ஆசையைப் பூர்த்தி செய்தது.

‘இந்த வழியாக எத்தனை முறை சென்றிருப்பாய், இந்தக் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றிருப்பாய், இதோ தெரியும் இந்த வெட்டவெளியை வரைந்திருப்பாய், இல்லையா? லட்சக்கணக்கான மக்கள் இந்த வாசல் வழியாக வந்து உன் வெற்று அறையைப் பார்ப்பார்கள் என்று கிஞ்சிற்றும் நினைத்திருக்க மாட்டாய். நீ கால் பதித்த இந்தச் சாலைகள் முழுக்க Vincent, Vincent, Vincent என்று பெயர் பொறித்த தங்கக் குமிழ்களைப் பதிப்பார்கள் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டாய்.’

‘க்ளாத் மோனே உயிருடன் இருந்த காலத்திலேயே புகழுடன் ஆர்ப்பரித்து வாழ்ந்ததுபோல் இன்று அவர் இடம் மக்களால் ஆர்ப்பரிக்கிறது. உன் மணற்கடிகையின் கடைசித் துகள்களை இங்கு செலவழித்தாய். உனக்கு அங்கீகாரம் அளிக்காமல் கொன்று விட்டோமே என்ற அவமானத்தால் இந்தக் கிராமமே மயான அமைதியை அப்பிக்கொண்டிருக்கிறது. என்ன செய்ய! இருக்கும்போது வைதுகொண்டு இகழ்ந்துகொண்டு பாராமுகமாக இருந்து, இல்லாதபோது மாரில் அடித்துக்கொள்வதுதானே மானுட வழமை’ என்று என்னென்னவோ நினைத்தபடிநடந்துகொண்டிருந்தேன்.

கிராமத்தின் சாலையில் ஆங்காங்கே Vincent என்று எழுதியிருந்த தங்கநிற குமிழ்களைத் தடவிப் பார்த்தேன்.

நின்று, மூடியிருந்த அந்த ஐந்தாம் நம்பர் அறையைத் திரும்பிப் பார்த்தேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

நல்லவேளை! அந்த விடுதி மூடியிருந்தது. இல்லையென்றால் நான் வெடித்துச் சிதறியிருப்பேன்!

  • அடுத்த அத்தியாயம் அடுத்த புதன்கிழமை

ஹெக்ஸகோன் – 6

26 June 2024 at 16:12

” La guerre; c’est la guerre des hommes; la paix, c’est la guerre des idées.”

                           – Victor Hugo

18 ஜூலை 1986, வெள்ளிக்கிழமை

 

இன்று பதிமூன்று வயது முடிகிறது. என் பிறந்தநாள் வந்தாலே டயரி ஞாபகம் வரும். குண்டு தமிழ் டீச்சர் ஞாபகம் வரும். என் சந்தோஷம் நாசமான நாள் என்று ஞாபகம் வரும். அதனால டயரி எழுதறதே இல்லை. சாமிகிட்ட மட்டும்தான் பேசுவேன்.

‘இவ்வளவு கஷ்டப்படறியே, சாமி இருந்தா உன்னைக் காப்பாத்தி…’ என்று பெனாத்தா முடிக்கறதுக்கு முன்னாடி அவ வாயை மூடிடுவேன். அடுத்த முறை அவளை ஆரம்பிக்கவே விடக்கூடாதுன்னு நினைச்சுப்பேன்.

‘கல்கண்டு தாத்தா சொல்லிருக்கா நாம படற கஷ்டமெல்லாம் நம்ம கர்மா. அதை இப்படிக் கஷ்டப்பட்டு தீர்த்துதான் ஆகணும். நாம செய்ய வேண்டியதெல்லாம் மென்மேலும் கர்மாவைச் சேர்க்காமல் இருக்கறது மட்டுமே’ என்று அவளுக்கு பதில் சொல்வேன். பெனாத்தா வாயை மூடிப்பா. பதில் பேச மாட்டா.

நாலாம் நாள் தலைக்குக் குளிச்சு வீட்டுக்குள் வந்தேன். குமுட்டி ரூம்ல நான் இருந்த மூணு நாளும் படாத பாடு. ஒரு ராத்திரி கூட நிம்மதியாத் தூங்கலை. புழக்கடை கதவு திறக்கும்போதெல்லாம் தூக்கி வாரிப்போட்டு எழுந்திருப்பேன். காலடிச் சத்தம் கேட்கும்போதெல்லாம் விருட்டுன்னு முழிப்பேன்.

குமுட்டி ரூமில் முதல் நாள் இரவு, பிரான்ஸ் ஜெயிலில் சிட்னி கார்ட்டனுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். டின் டின்னின் கேப்டன் ஹேடாக்குடன் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பூனைபோல் நடந்து ஒரு உருவம் வந்தது அரைத்தூக்கத்தில் தெரிந்தது. பயந்தது சரியாப் போச்சு. ஹரிதான். வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்து ‘பக்கத்துல வந்தே கத்திக் கூப்பாடு போடுவே’ன்னு நடுங்கிண்டே சொன்னேன்.

‘என்னடி மெரட்டறியா? நான் இங்கிருந்து புக் எடுக்க வந்தேன்னு சொல்லுவேன். உன்னை யாரும் நம்பப் போறதில்ல. புரியறதா?’ ன்னு சொல்லி பக்கத்துல வந்து இளிச்சான். எனக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சது.

‘போயிடு, போயிடு’ன்னு அழுதேன். என் மாரில் கை வச்சான். ‘என்னடி கொசு கடிச்சு வீங்கினாப்ல இருக்கு? ஆனா இதுவும் ஒரு மாதிரி கிளுகிளுப்பாதான் இருக்கு’ன்னு சொல்லி சிரிச்சுண்டே எழுந்து போனான். எனக்கு திடீர்னு ரத்தப் போக்கு அதிகமாச்சு. முகமெல்லாம், உடம்பெல்லாம் வேர்த்து அழுகைக்கு மேல ஏதோ ஒண்ணு வந்தது.

‘அம்மா’ன்னு ஆங்காரமா அழுதுண்டே கத்தினேன். உடனே வீடு முழுக்க கடகடன்னு விளக்கு எரிஞ்சுது. அம்மாவும் அப்பாவும் ஓடி வந்தா.

‘என்னாச்சுமா, என்னாச்சு’ன்னா அம்மா. என்னால கேவிக் கேவி அழ மட்டும்தான் முடிஞ்சுது. என் சட்டையெல்லாம் கறையாகியிருப்பதைப் பார்த்த அம்மா ‘பயந்துட்டா போல. நீங்க போய்த் தூங்குங்கோ. நான் வரேன்’ ன்னு அம்மா அப்பாகிட்ட சொன்னா. மெல்ல என்னை பாத்ரூமுக்கு கூட்டிண்டுப் போனா. உடையெல்லாம் மாத்திண்டு வந்ததும் ஹரி வந்தான்.

‘நடுராத்திரில என்ன கூப்பாடு போடறீங்க’ன்னான். எனக்கு ஆத்திரமா வந்தது. கார்த்தால அம்மாகிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்.

‘நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால இந்த ரூமுக்கு வந்தேன்மா. எனக்கு ஒரு புக்கு வேணுமா இருந்தது. இருட்டுல இவ மேல பட்டுட்டேன். அப்பவே கொஞ்சம் பயந்துட்டா போல. பயப்படாம தூங்குன்னு சொல்லிட்டுப் போனேன்’ன்னு பொய் சொன்னான்.

‘ஏதாவது ஹெல்ப் வேணுமா?’ன்னு கேட்டான்.

‘ஓ! அதானா?’ன்னு அம்மா சிரிச்சா. நீ தூங்கு கண்ணா. நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லிட்டா.

நான் வாயடைச்சுப் போயிட்டேன். இனி அம்மாகிட்ட என்ன சொல்றது? என்னை நம்புவாளா? யாருமே வீட்டுல நம்ப மாட்டா. ஏன்? கல்கண்டு தாத்தாவே நம்ப மாட்டார். சாமி, நீ நம்புவேல்ல? நீ பார்த்துண்டு தான இருந்த? ஏன் தடுக்கல? என்னோட கெட்ட கர்மாவைத் தீர்க்க ஆரம்பிச்சுட்டேனா? இன்னும் எவ்வளவு பார்க்கணும்?

போன மாசம் ரொம்ப விசனப்பட்டு ‘ஏன் தாத்தா, நிலா மாதிரி சாமி உன் கூடவே வராருன்னு சொன்னீங்களே. எனக்கு ஏதாவது ஒரு கஷ்டம்னா பார்த்துண்டு நிக்கறாரே. உதவிக்கு ஏன் வரதில்ல’ என்று கேட்டேன்.

‘அதெல்லாம் கர்மா குழந்த, கர்மா. மூணு வகை கர்மா… சஞ்சித, ஆகாமி, ப்ராரப்தன்னு. பழைய மூட்டை ப்ராரப்தம், தினப்படி மூட்டை சஞ்சிதம் . இனிமே கட்டப்போற மூட்டை ஆகாமி’ அப்படீன்னு சொன்னார் கல்கண்டு தாத்தா.

திருதிருன்னு முழிச்சுண்டு நின்னப்போ, புன்முறுவலோட ‘ஒரு வேட்டைக்காரன் முதுகுக்குப் பின்னாடி அம்பறாத்தூணியில் வெச்சுண்டிருக்கற அம்புகள் சஞ்சிதம். அவன் ஏற்கனவே எய்த அம்புகள் ப்ராரப்தம். எய்யப் போறது ஆகாமி. புரியறதா? இதுல சஞ்சிதமும் ஆகாமியும் நம்ம கையிலதான் இருக்கு. ப்ராரப்தத்த இப்படிக் கஷ்டப்பட்டு கழிச்சுதான் ஆகணும். கடவுளை நினைச்சுண்டே நல்ல மனசோட நம்மள சுத்தி இருக்கறவா எல்லாருக்கும் நல்லதே நினைச்சா இதோட பாதிப்பு கம்மியாகும். ஆனா தப்பிக்கறது கஷ்டம். பகவானை என்னிக்குமே கெட்டியாப் பிடிச்சுக்கோ. அவ்வளவுதான்’ என்று முடித்தார் தாத்தா.

இந்த ஹரி எந்த வகை கர்மா?

‘சரி! கொசு கடிக்காம இருக்க கொசுவத்தி சுருள் வச்சுக்கோ’ ன்னு சொல்லி எனக்கு மட்டும் தெரியற மாதிரி கண்ணடிச்சுட்டு போனான் ஹரி.

உடம்பே எனக்கு கூசித்து. ஏன் நான் பொண்ணாப் பொறந்தேன்னு யோசிச்சேன். பொண்ணாப் பொறந்ததுக்கு முதல் முதலா வருத்தப்பட்டேன்.

இரண்டாவது நாள் ராத்திரி என்னோட படுக்கச் சொல்லி அம்மாவைக் கட்டாயப்படுத்தினேன். அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் நான் கேக்கல. சரின்னு அவளும் அவளோட ஒரு ஜோடித் துணியைக் கொண்டு வந்து வெச்சுண்டா. கார்த்தால சீக்கிரமே எழுந்து தலைக்குக் குளிச்சாதான் அடுத்த ரூமுக்கே அம்மா போக முடியும். எல்லாருக்கும் அவ சமைக்கணும். பாவமா இருந்தது அவளைப் பார்க்க. ஆனா எனக்கு வேற வழி தெரியலை.

அடுத்த நாள் அம்மா, ஒவ்வொரு மாசமும் நான் இப்படி வந்து உன்னோட படுக்க முடியாது. நீதான் தைரியமா இருக்கணும். உனக்கு பதிமூணு வயசாயாச்சு. பயந்தா பொம்மனாட்டியா வாழவே முடியாதுன்னு சொன்னா.

மூணாவது நாள் நான் எவ்வளவு கெஞ்சியும் அம்மா படுக்க வரலை. தினமும் தலைக்குக் குளிச்சுட்டு உள்ள போனா எனக்கு ஆகாதுடி. நான் படுத்துப்பேன் அப்பறம்னு சொன்னா. பாட்டியும் திட்டினா. அன்னிக்கும் ஹரி வந்தான். அதேபோல செஞ்சான். இந்த முறை இன்னும் தைரியமா தடவினான். அவன் உடம்பு பூரா என் மேல படறாப்புல அழுத்திக் கட்டிண்டான். எனக்கு அருவருப்பும் வாந்தியும் வந்தது. ஆனா நான் சத்தமே போடலை. பயத்துல நாக்கு மேலண்ணத்துல ஒட்டிப் போச்சு. அவன் கொஞ்ச நிமிஷம்தான் இருந்தான். என்ன நடக்கறதுன்னு தெரியறதுக்கு முன்னாடி போயிட்டான். அவன் தொட்ட இடத்தையெல்லாம் தீயில பொசுக்கினா என்னன்னு தோணித்து.

நாலாம் நாள் குளிச்சுட்டு வீட்டுக்குள்ள போனதும்தான் நிம்மதியாச்சு. இனிமே அடுத்த மாசத்து கஷ்டத்த அடுத்த மாசம் பார்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனாலும் மனசு வேற எதையுமே நினைக்க மாட்டேங்கறது. சந்தோஷமா சுத்திண்டிருந்த மனச யாரோ பிழிஞ்சு வச்சாப்ல இருக்கு. இந்த விஷயத்த என்னால கண்டிப்பா வீட்டுல யார்கிட்டயும் சொல்ல முடியாது. சுமதி கிட்ட இவன் இப்படியா நடந்துப்பான்? எனக்கு அப்படித் தெரியல. அவள் பஜாரி மாதிரி கத்தற கத்துக்கு வீடே பயந்துக்கும். மட்டுமில்லாம அவளுக்கு ஏகப்பட்ட தோழிகள். சதா சுந்தரி வீட்டுலயேதான் குடியிருப்பா. எங்க வீட்டுல நடக்கற எல்லா விஷயமும் சுந்தரிக்குத் தெரியும்.

‘அது என்னடி குசுவோ கேடுன்னு இப்படி ஓடி ஓடிப்போய் அவாத்துல உட்கார்ந்துக்கறது?’ என்று பாட்டி அங்கலாய்த்தாலும் சுமதி கேட்பதாயில்லை.

‘என்ன கீதா, இன்னிக்கு அம்மா உனக்கு குஞ்சம் வெச்சு தலைபின்னி விட்டாளாமே?’ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாம கேப்பா சுந்தரியக்கா.

ப்ளஸ் டூ வுக்குப் பிறகு படிக்க மாட்டேன்னு சுமதி சொல்லிட்டா. வீட்டுலயும் யாரும் ஒண்ணும் கண்டுக்கல. அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டா.

உமா, மீனா, ஜோதி, தேனு, நான்… நாங்க எல்லாரும் ஒரே ஸ்கூல்தான். ஆனா வேற வேற க்ளாஸ். அவங்களோட இண்டர்வெல்ல பேசுவேன். ‘கோமதி சனியன் எப்பவும் என்கிட்ட சண்டைக்கு வருது. என் பேனாவை எடுத்து வெச்சுட்டு அதோடதுன்னு சொல்லுது. நான் என்னடி பண்றது? என் வாழ்க்கையே இவளால பாழாப் போகுது’ன்னு தேனு சொன்னப்ப எனக்கு விசித்திரமா இருந்தது. இவங்க கிட்ட எப்படி என்னோட நிலமையை சொல்றது? புரிஞ்சுப்பாங்களான்னு தெரியலையேன்னு கவலையா இருந்தது. அவங்ககிட்ட சொல்லலாம்ங்கற நினைப்பையும் கைவிட்டேன்.

அப்பத்தான் பகவான் தான் இருக்கேன்னு நிரூபிச்சார். என் க்ளாஸ்ல கோனேஸ்வரின்னு ஒரு பொண்ணு வந்து சேர்ந்தா. இலங்கைல இருந்து வந்திருக்கா. ரொம்ப அழகா மீன் மாதிரி கண்ணோட அட்டகாசமா இருப்பா. ரொம்ப நாகரிகமாகவும் டிரெஸ் போடுவா. எங்க ஊர்லயெல்லாம் சல்வார் கமீஸ் போட்டாவே மாடர்ன் டிரெஸ் போடறான்னு வாயப் பொளந்து பார்ப்பாங்க.

எங்க ஊர் பத்தி சொல்லவே இல்லைல? உடுமலைப்பேட்டை. அழகான சின்ன ஊர். ஏழைகளின் ஊட்டினு சொல்லுவா. எங்க எஸ்.வி.ஜி. ஸ்கூல்தான் அந்த ஊர்லயே பெரிய கேர்ல்ஸ் ஸ்கூல். பொள்ளாச்சி, பழனி, அப்புறம் பக்கத்துல இருக்கற எல்லா கிராமங்களிலிருந்தும் பொம்பளைப் பிள்ளைங்க இங்க வந்து படிப்பா.

முதல் தடவையா இலங்கைல இருந்து ஒரு பொண்ணு, அதுவும் அழகான பொண்ணு. அவ போட்டுண்டு வரும் பாவாடை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கொஞ்ச நாளைக்கப்பறம் அவளையும் ரோஸ் பாவாடை தாவணி யூனிபார்முக்கு மாத்திட்டாங்க.

எல்லாரைப் பார்த்தும் கொஞ்சமே கொஞ்சமா சிரிப்பா. அவள் தமிழ் பேசினா ஒண்ணுமே புரியாது. உன்னிப்பா கேட்டால்தான் புரியும். கதைக்கிறென் கதைக்கிறென்னு சொல்லும்போது அவ்வளவு க்யூட்டா இருக்கும். ஆனா யார்கிட்டயும் பேசாம ஒதுங்கியே இருப்பா.

ஒவ்வொரு நாளும் முறை வெச்சு எங்களோட வகுப்பிலிருக்கற மூணு பேர் கார்த்தால மணியடிக்கறதுக்கு முக்கால் மணி நேரம் முன்னால வகுப்புக்கு வந்து க்ளாஸ்ரூமை பெருக்கித் துடைக்கணும். சாக்பீஸ் கொண்டு வந்து வைக்கணும். போர்டை நல்லா ஈரத் துணியால துடைச்சு, Roll on: No. present: Date: அப்பறம் ஒரு பொன்மொழி எழுதணும். குப்பையைக் கொட்டிட்டு வரணும். ரெண்டு பேர் பெஞ்சையெல்லாம் நகர்த்த ஒருத்தர் பெருக்குவோம். சரியாகப் பெருக்கலைன்னாலோ ஒட்டடை இருந்தாலோ க்ளாஸ் டீச்சர் கிழிச்சுடுவார்.

‘எரும மாடுங்களா! இந்த வேல கூட சரியாப் பண்ணத் தெரியாம என்னடி படிச்சுக் கிழிக்கப் போறீங்க. சுத்தத்துக்கு அப்பறம்தான் எல்லாம்.’

கோனேஸ்வரியின் முறை வந்தபோது நானும் நாகலக்‌ஷ்மியும் அவளோட இருந்தோம். நானும் கோனாவும் பெஞ்சுகளை நகர்த்த நாகலக்‌ஷ்மி கூட்டினா. ஒரு பக்கம் நானும் இன்னொரு பக்கம் கோனாவும் பெஞ்சை ஒப்பப் பிடித்து நகர்த்திக் கொண்டிருந்தபோது கொஞ்சம் பிசகி என் கணுக்காலில் பட்டது. வலியில் அப்படியே உட்கார்ந்துட்டேன். கோனாவும் நாகுவும் கவலையுடன் காலைப் பார்த்தாங்க. கொஞ்சம் கன்னிப் போயிருந்தது.

அன்னிக்கு முழுசும் கோனா என் காலைப் பற்றி விசாரித்து அந்த இடத்தைப் பார்த்துண்டு இருந்தா. ஸ்கூலுக்கு உள்ளயே இருந்த ஹாஸ்டலில் அவள் இருந்ததால ஓடிப் போய் ஏதோ களிம்பை எடுத்து வந்து தடவினா. அன்னிலருந்து நானும் கோனாவும் ஸ்கூல்ல ஒண்ணும் மண்ணுமா எல்லா இடங்களுக்கும் அலைஞ்சோம்.

இன்னிக்கு என் பர்த்டேங்கறதால கோனாக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு போனேன். நானும் அவளும் 12 சி க்ளாஸுக்குப் பின்னாடி இருக்கற பூவரசு மர நிழல்ல உட்கார்ந்து சாப்பிட்டோம்.

உங்க அப்பா, அம்மா இலங்கைல தான் இருக்காங்களான்னு கேட்டேன். ஆமான்னு தலையை மட்டும் ஆட்டினா.

இலங்கைல நடக்கற போர்னால எங்களுக்கு கொஞ்ச மாசம் முன்னாடி லீவு விட்டாங்க. அங்க ஏதோ தமிழர்களுக்கும் சிங்களவங்களுக்கும் போர்னு மட்டும் தெரியும். என்னன்னு சரியாத் தெரியாது. காந்தித் தாத்தாவும் அப்பாவும் இதே வேலையா பேசிண்டே இருப்பா. ஆனா முன்ன மாதிரி யாரோட பேச்சும் காதுக்குள்ள நுழையறதில்ல. முந்தியாயிருந்தா என்னவாம், ஏதாம்னு அப்பாக்கும் தாத்தாக்கும் நடுவுல உட்கார்ந்து கேப்பேன். ஆனா இப்ப எதுலயுமே இண்டரஸ்ட் இல்ல. என்னோட தனி உலகம்தான் எனக்குப் பிடிச்சிருக்கு.

 இங்க தமிழ்நாட்டுல ஏகப்பட்ட நாள் ஸ்கூலுக்கு லீவு விட்டு ஏன் இவங்க எல்லாரும் போராட்டம் பண்றாங்கன்னு நினைப்பேன். டுவல்த் ஸ்டாண்டர்ட் அக்காவெல்லாம் வீராவேசமா பேசிண்டு இருப்பா. பிரபாகரன் பிரபாகரன்னு பெயர் காதுல விழும்.

நமக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? மொழியைத் தவிர என்ன சம்பந்தம்? அவங்க வேற நாடு இல்லையா? இவால்லாம் எதுக்கு இப்படி கத்திண்டு இருக்கா? ஸ்டிரைக் பண்றா? சும்மா இந்த அக்காக்களுக்கெல்லாம் லீவு வேணும். அதான்னு நினைச்சேன் கோனா ஃப்ரெண்ட் ஆகற வரைக்கும்.

 

 

  • அடுத்த அத்தியாயம்அடுத்த புதன்கிழமை

ஹெக்ஸகோன் – 5

19 June 2024 at 13:20

28 – 30 ஜூன் 2023

ஆளாளுக்கு இரண்டிரண்டு பெரிய சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு நாங்கள் நான்கு பேர் சென்னையிலிருந்து பிரான்ஸுக்கு பயணித்தோம்.

முதலாமவர் எல்லோருக்கும் தெரிந்த, எண்பதுகளில் ஹீரோயினாக நடித்த, இப்போது பல படங்களில் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கும் சிந்துஜா ராஜா. அவர் என் அம்மாவாக நடிக்க இருந்தார். அவருக்கும் எனக்கும் எட்டு வயதுதான் வித்தியாசம். சினிமாவில் இந்த சகஜங்களையெல்லாம் ஏற்று திறமையாக அப்பா வேடங்களில் கலக்கும் ஶ்ரீதர் அருணாச்சலம்தான் இரண்டாவது நபர்.

‘என்ன சார், இவ்வளவு யங்கா இருக்கீங்க, உங்களைவிட பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் அப்பாவா நடிக்கிறீங்க’என்று சீண்டினால் தெய்வீக சிரிப்பு சிரித்தார். அவர் வாயிலிருந்து எதுவும் வெளியில் வராதாம். ஒரு வேளை உனக்கே மாமனாரா நடிக்கறேனே என்ற எகத்தாளமாகக் கூட இருக்கலாம். அவருக்கு 65 வயது. மூன்றாமவர் எங்கள் இயக்குனரின் தோழி. அவருக்கு பிரான்ஸ் செல்ல வேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை. ஆனால் தனியாகச் செல்ல, ஒற்றையாளாக அங்கு மொழி தெரியாத இடத்தில் தங்க பயம். ஆதலால் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக நினைத்து எங்களுடன் பயணித்தார். பெயர் லாவண்யா. வயது: 52.

ஆக, 50,52, 58, 65வயதாகிய நான்கு பூமர் உருப்படிகளும் ஒரு வழியாக சென்னையிலிருந்து இரண்டு மணி நேரம் டில்லி, அங்கிருந்து எட்டு மணி நேரம் பயணித்து பாரிஸ் வந்து சேர்ந்தோம். நானும் சிந்துஜாவும் சாந்த்ரா என்பவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டோம். சாந்த்ராவுக்கு 75 வயது. அவர் தன் வீட்டின் மாடியில் இருந்த ஒரு ரூமை ஷார்லத் என்ற இளம் பெண்ணுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அந்தப் பெண் பார்தோ என்ற ஊரைச் சேர்ந்த பெண்.  சில மாதங்கள் ஒரு நிறுவனத்தில் தொழில்முறைப் பயிற்சி செய்வதற்காக பாரிஸில் வந்து தங்கியிருந்தாள். அதனால் இருவருக்கு மட்டுமே சாந்த்ரா வீட்டில் தங்க இடமிருந்தது. லாவண்யாவை சாந்த்ராவின் அபார்ட்மெண்டின் நேர் கீழே இருந்த குஜராத்தி ஒருவரின் அபார்ட்மெண்டில் ஒரு வாரத்துக்கு அனுமதி பெற்று தங்க வைத்திருந்தார் எங்கள் இயக்குனர் கிஷோர். அந்த குஜராத்திக் குடும்பம் எண்பதுகளிலேயே பாரிஸ் வந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். அங்கே அவர்களுக்கு நான்கு உணவகங்கள் இருக்கின்றன. வட இந்திய உணவு பரிமாறும் உணவகங்கள்.  ஶ்ரீதருடைய அண்ணன் மகன் பாரிஸில் இருப்பதால் அவர் அங்கு சென்று விட்டார்.

ஷூட்டிங் ஜூலை ஒன்பதாம் தேதி முடிவடைகிறது. நாங்கள் மூன்று பெண்களும் இன்னும் ஒரு பத்து நாட்கள் அதிகப்படியாக இருந்து ஊர் சுற்றிப் பார்க்கவிருந்தோம். ஆனால் மூவரும் வெவ்வேறு திசையில். சிந்துஜா பெல்ஜியம் செல்கிறார் தன் மகனைப் பார்க்க. லாவண்யா தன் தோழியைப் பார்க்க ஸ்ட்ராஸ்பூர்க் போவதாக இருந்தார். நான் நந்தனுடன் ஒன்பதாம் தேதி இரவு கிளம்பி அவர் இருக்கும் ஊரான மோலியான் செல்வதாக ஏற்பாடு.  சென்னைக்குக் கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள் எல்லோரும் நந்தனின் வீட்டில் கூடுவதாக ஏற்பாடு. ஶ்ரீதர் மட்டும் ஷூட்டிங் முடிந்தவுடன் சென்னைக்குக் கிளம்பப் போவதாகச் சொன்னார்.

‘எனக்கு ஊர் சுத்திப் பார்க்கிற ஆசையெல்லாம் இல்லை. நம்மூருக்குப் போய் இட்லி சாப்பிட்டா தான் நிம்மதி’ என்றார்.

பாரிஸ் போய் இறங்கி இரண்டு நாட்கள் ஆயிற்று. ஊர் சுற்றிக் காண்பிக்கிறேன் என்று சொன்ன ஸ்டாலின் ‘வந்திறங்கியாச்சா’ என்று கூட கேட்கவில்லை.

மூன்றாம் நாள் நான் கடுப்பாக அவருக்குக் குறுந்தகவல் அனுப்பினேன்.

‘சாரிங்க, என் வைஃப் கிட்ட நீங்க வரப் போறீங்கன்னு சொல்லியிருக்கவே கூடாது. அதனால்தான் பிரச்சனை… அதக்கொண்டு வா, இதக்கொண்டு வான்னு’ என்றார். கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ ‘இன்னும் ஒரு மணி நேரத்தில் தயாராக இருங்கள். நான் உங்களை ஜிவர்னி (Giverny)கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்றார்.

சிந்துஜா, நான், லாவண்யா, நாங்கள் மூவரும் அவருடன் ஜிவர்னி என்ற, ஒன்றரை மணி நேர பிரயாணத்தில் இருக்கும் க்ளாத் மோனேவின் (Claude Monet) ஊருக்குச் சென்றோம். போகும் முன்னரே சாந்த்ரா அந்த இடம் மாலை ஆறு மணி வரைதான் திறந்திருக்கும் என்று சொல்ல, அதற்குள் சென்று விடலாம் என்று ஸ்டாலின் நம்பிக்கை கொடுத்தார்.

பாரிஸிலிருந்து ஜிவர்னிக்குப் போகும் பாதையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கிராமத்து வீடுகள் அவ்வளவு அழகு. Monopoly houses என்பார் சாந்த்ரா. மோனோபோலி விளையாட்டில் அட்டைகள், தாயத்தோடு சிறு சிறு வீடுகள் கொடுத்திருப்பார்கள். அந்த வீடுகளைப் போலவே இந்த வீடுகள் இருக்கின்றன என்பார்.

நாங்கள் ஐந்தரை மணிக்கு அங்கு இருந்தோம். மூடும் முன்னர் வந்துவிட்டோம் என்று சந்தோஷமாக டிக்கட் வாங்கும் இடத்துக்குச் சென்றால், இனி விட மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். ஆறு மணியாகவில்லையே இன்னும் என்றதற்கு ஆறு மணிக்குப் பூட்டி விடுவோம். அதற்குள் உள்ளே சென்றவர்கள் திரும்ப வேண்டும். அதனால் டிக்கட் ஐந்தரையோடு முடித்து விடுவோம் என்றனர். ஐந்தரை தானே இப்போது என்றால் ஐந்து முப்பத்தைந்து என்று புருவம் தூக்கினார்கள். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறோம், தயவு பண்ணுங்கள் என்று கெஞ்சினாலும் அவர்கள் மசியவில்லை.

மிகவும் ஏமாற்றமாகப் போயிற்று. அவருடைய அந்த வீட்டின் தோட்டத்தில் ஒரு பெரிய குளம் உண்டு. குளத்தில் பூத்திருக்கும் அல்லி மலர்களை தோட்டத்திலிருக்கும் ஒரு பெஞ்சில் அமர்ந்துதான் வரைவார் என்று படித்திருக்கிறேன். அவர் வரைந்த ‘Water Lilies’ படங்கள் நிறைய. அது மட்டுமல்லாமல் அந்தக் குளத்தின் மேல் இருக்கும் ஒரு சிறிய வளைந்த பாலத்தின் மேல் நின்று அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகவும் புகழ் வாய்ந்தது. அந்தத் தோட்டத்தையும் அந்தக் குளத்தையும் நன்றாகப் பராமரிக்கிறார்கள் என்றும் கேட்டிருந்தேன். சரி, இப்போது பார்க்க முடியவில்லையென்றாலும் மறுபடி இந்தியா செல்வதற்குள் திரும்பி வரலாம் என்று நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டேன்.

‘சரி! திரும்ப பாரிஸுக்குப் போவோம். இப்போது நேரமிருப்பதால் உங்களை லத்தீன் கார்த்தியருக்கு (Latin Quartier)கூட்டிப் போகிறேன். அப்படியே சோர்போன் யுனிவர்சிட்டியும் (Sorbonne University)பார்க்கலாம்’ என்றார் ஸ்டாலின்.

நேராக முதலில் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி புத்தகக் கடைக்குச் சென்றோம். அங்கேயும் கடையை சாத்தும் நேரமாகிவிட்டது. விட மறுத்தனர். உள்ளே சென்று புத்தகங்களைப் பார்க்க மாட்டோம். இந்த புகழ்மிக்க கடையின் உள்ளே ஒரு இரண்டு நிமிடம் இருந்துவிட்டுப் போகிறோம் என்றதும் விட்டனர். உள்ளே பணம் செலுத்துமிடத்தில் ஒரு நிமிடம் நின்றுவிட்டு வந்துவிட்டோம். ஒரே பிரமிப்பாக இருந்தது. வெளியே வந்து எதுவும் பேச முடியவில்லை. பெரிய புகழ் மிக்க எழுத்தாளர்கள் பலர் வந்து சென்ற இடம். வில்லியம் பர்ரோஸ் அவருடைய The Naked Lunch எழுத இங்கிருந்த புத்தகங்களிலிருந்துதான் குறிப்பெடுத்தாராம்.

ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி புத்தகக் கடையாக மட்டுமில்லாமல் எழுத்துப் பயிற்சி பட்டறை, எழுத்தாளர்கள் சந்திப்பு என்று பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அங்கு ஒரு கஃபேவும் உண்டு.

வளரும் எழுத்தாளர்கள் தங்களைப்பற்றி ஒரு பக்கத்துக்கு எழுதிக் கொடுத்து, கடை நடத்துபவர்களுக்குப் பிடித்திருந்தால் இந்தக் கடையினுள் தங்கலாம். பகலில் புத்தகம் அடுக்கியிருக்கும் நீள பெஞ்சுகள் இரவில் கட்டில்களாக மாறிவிடும். அவ்வளவு புத்தகங்களின் மத்தியில் இரவு தங்கலாம். பக்கத்தில் சென் நதி, நடந்தால் இருபது நமிடத்தில் ஐஃபில் டவர். காலை எட்டு மணிக்கு  நாத்ர்தாம் தேவாலயத்தின் மணியோசையைக் கேட்கலாம். எப்பேற்பட்ட கொடுப்பினை! அதற்குக் கைமாறாக செய்ய வேண்டியதெல்லாம் காலையில் கடையைத் திறக்க வேண்டும். இரவில் மூட வேண்டும். பகலில் இரண்டு மணி நேரம் கண்டிப்பாக கடையில் வேலை செய்ய வேண்டும். மற்ற நேரங்களில் கடையிலிருந்து எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். ஊர் சுற்றலாம். ஆறு நபர்கள் ஒரே சமயத்தில் தங்குவதற்கான வசதி இருக்கிறது. 1951ல் இருந்து இன்றுவரை சுமார் 40,000 பேர் தங்கியிருக்கின்றனர். ஒரு வாரத்திலிருந்து ஏழு வருடங்கள் வரை தங்கியவர்கள் கூட உண்டு.

இதற்கு ‘டம்பில்வீட்’ (Tumbleweed) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆலன் கின்ஸ்பர்க், ஹென்றி மில்லர், ரே ப்ராட்பரி போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இங்கே டம்பில்வீடாக தங்கியிருந்தவர்கள்தாம்.

அடுத்து சோர்போன் யுனிவர்சிட்டி சென்றோம். சாலையின் இரு மருங்கிலும் நீண்டிருந்த அந்தப் பல்கலைகழகத்தைப் பார்த்தேன். எப்பேர்ப்பட்ட ஆட்கள் படித்த, கற்பித்த இடம்! மேரி க்யூரி, பியர் க்யூரியின் சோதனைக் கூடங்களை வெளியிலிருந்து பார்த்தோம். அப்படி சட்டென்று யாரையும் உள்ளே விடுவதில்லை அவர்கள். ரோட்டிலேயே வேலியில் மேரி, பியரின் படங்கள் அவர்களின் சாதனைகள் என்று ஒட்டியிருந்தார்கள்.

‘என்னங்க இது? உங்கள் ஊரில் எதையுமே ஒழுங்கா பார்க்க விட மாட்டீர்களா? நல்ல வேளை ஏர்போர்ட் வாசலில் இருந்து உங்கள் ஊரை காண்பிக்காமல் போனீர்கள்’ என்று சலித்துக் கொண்டேன்.

‘ஷூட்டிங் ஆரம்பித்தால் அப்புறம் எதையுமே பார்க்க முடியாது. பூட்டறதுக்கு முன்னால கூட்டிட்டு போய் எதையாவது காண்பியுங்க. இப்படி ஒவ்வொரு இடத்தையும் வெளியில் இருந்து பார்ப்பதற்காகவா சென்னையிலிருந்து வந்தோம்’ என்று புலம்பினேன்.

‘அப்படியெல்லாம் இல்லீங்க. நாளைக்கு நைன்டீந்த் அரோந்தீஸ்மோல ரொம்பப் பெரிய கான்செர்ட் இருக்கு, டிக்கெட் ஏற்பாடு பண்ணிடலாம். வரீங்களா?’ என்றார் ஸ்டாலின் திடீரென்று.

கண்கள் மலர, ஐயோ Maître Gims, Dadju, Lara Fabian, Stromae இப்படியான பாடகர்களுடைய நிகழ்ச்சியாக இருந்தால் அட்டகாசமாக இருக்கும். சென்னைக்குப் போய் பீற்றிக் கொள்ளலாம்.  பிரான்ஸிலேயே Maître Gimsகான்செர்ட்டைக் கேட்டது பற்றி சென்னைத் தோழி ஒருவர் ஒரு நாள் முழுக்கப் பேசிக்கொண்டிருந்தார்.

‘அது ஒரு அற்புதங்க. அந்தந்த ஊரில் அந்தந்த பாடகர்களின் நிகழ்ச்சியின் வைப்ரேஷன்ஸே தனி’ என்றார்.

‘அட்டகாசம் ஸ்டாலின். யாரோட கான்செர்ட்’ என்று சந்தோஷமாகக் கேட்டேன்.

 என்னை விசித்திரமாகப் பார்த்தவர், ‘இளையராஜாதுங்க, கார்த்திக், ஸ்வேதா மோஹன், மனோ எல்லாரும் வராங்க’ என்றார்.

  • இனி அடுத்த புதன்கிழமை

ஹெக்ஸகோன் – 4

12 June 2024 at 09:51

10 ஜூலை  1986, வியாழக்கிழமை

 

என் பதிமூணாவது பிறந்தநாளுக்கு இன்னும் எட்டு நாள்தான் இருக்கு. என்னோட பத்தாவது பிறந்தநாளன்னிக்கு ஆரம்பிச்ச டயரி அன்னிக்கு ஒரு நாள்லயே முடிஞ்சு போச்சு. அதுக்கப்பறம் எழுதலை. எனக்கு அந்த சம்பவத்துக்கு அப்புறம் எழுதப் பிடிக்கல. அன்னிக்குதான் கடைசியா ரொம்ப சந்தோஷமா இருந்தது. என்னால ஹரி செஞ்சதை யார் கிட்டயும் சொல்ல முடியல. எப்படி சொல்றது? அப்படி சொல்ற மாதிரி யாரும் என்கிட்ட க்ளோஸ் இல்ல. சுமதி அக்காவும் என்கிட்ட அவ்வளவா பேச மாட்டா. அவளுக்கு பிரண்ட்ஸ் கூட்டம் ஜாஸ்தி. நான் அந்த சம்பவத்துக்கு அப்புறம் வீட்டில் தனியா இருக்கும் வாய்ப்பில்லாமல் பார்த்துண்டேன். வீட்டிலும் யாராவது ஒருத்தர் எப்பவும் இருந்ததனால் இதுவரை பிரச்சனை எதுவும் பெருசா இல்லை. ஆனாலும் ஹரியைப் பார்க்கும் போதெல்லாம் பயமா இருந்தது. என்னைப் பார்த்தாலே அவன் கோண வாய் சிரிப்பு சிரிக்கறான்.

எங்கள் வீட்டில் ஹரிக்கு மட்டும் ஒரு தனி ரூம். அம்மா, அப்பாவுக்கு ஒரு சின்ன ரூம். பாட்டி, சுமதி, பேபி, எனக்குன்னு எல்லாருக்குமா ஒரு பெரிய ரூம். பல வருஷத்துக்கு முன்னால உடுமலைப்பேட்டைல  இளங்கோ காலனி கட்ட ஆரம்பிச்சப்போ அப்பா பத்தாயிரம் ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்கிக் கட்டினாராம் . வாசல்ல செருப்பெல்லாம் வைக்க ஒரு சின்ன வராண்டா, அப்புறம் ஹால், வலது கைப்பக்கம் ஹரியோட ரூம், இடது பக்கம் அம்மா, அப்பா ரூம், ஹால்ல இருந்து நேரா வந்தா இடது கைப்பக்கம் சமையலறை, அதுக்கு நேரா எங்க ரூம். எங்களோட ரூமை ஒட்டி இன்னொரு ரூம். அங்கதான் அம்மாவும் சுமதியும் மாசத்துல மூணு நாள் உக்காருவா. அதுக்கப்பறம் புழக்கடைதான். அங்கதான் குளிக்கற ரூமும் டாய்லட்டும் தனித்தனியா இருக்கு. புழக்கடைல முருங்கை, வாழை, மாமரம் அப்பறம் கொஞ்சம் காய்கறிச் செடிகள் போட்டு வெச்சிருந்தா அம்மா.

சுமதி சண்டையான சண்டை பிடிப்பா அம்மா அப்பா கிட்ட.

‘ஒரு கண்ணுல வெண்ணையும், ஒரு கண்ணுல சுண்ணாம்பும் வெக்கறம்மா நீ. ஹரிக்கு மட்டும் தனி ரூம், கேக்கறதெல்லாமும் கிடைக்கறது. என்னையென்ன தவிட்டுக்கு வாங்கிண்டு வந்தியா?’ என்று அலறுவாள்.

‘அவன் ஆம்பளைடி. அவந்தாண்டி உங்க மூணு பேரையும் கரையேத்தப் போறான். இந்தக் குடும்பத்த வழி நடத்தப் போறான். அவன் எல்லாத்துலயும் பர்ஸ்ட். இப்ப கூட ஸ்காலர்ஷிப்லதான் படிக்கறான். எஞ்சினியரிங். அவ்வளவு சீக்கிரம் அந்தப் படிப்பு எல்லாருக்கும் கிடைச்சுடுமா? உன்ன மாதிரி பிரெண்ட்ஸோட பொழுதன்னிக்கும் ஊரச் சுத்தி ஊளையிடறதில்ல. இதோ, இன்னும் கொஞ்ச நாளுல வேறாத்துக்குப் போகப் போற. இந்த வாய் உனக்கு ஆகாது. இன்னொரு தடவ இதப்பத்தி பேசின கால ஒடச்சுடுவேன்’ என்று பதிலுக்கு பாட்டி திட்டுவாள். அந்தக் காலத்துலயே ஏழாவது வரை படித்த பாட்டி. இங்கிலீஷும் படிப்பாள். பாட்டி ரொம்ப ஸ்டிரிக்ட். அவளுடைய முதல் மற்றும் ஒரே பேரனான ஹரி மேல அவளுக்கு ஒரு அலாதி பிரியம்.

சுமதியக்கா பாவம். அழுது ஓஞ்சுடுவா. அப்பக்கூட அவளைப் பத்தி மட்டுமே பேசுவா. நானும் பேபியும் அந்த வீட்டுல இருக்கறதே… அவளுக்கு மட்டும் இல்ல, ஒருத்தருக்கும் தெரியாது. எடுபிடி வேலைக்கு மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவோம். பேபியையாவது அப்பப்போ எல்லாரும் கொஞ்சுவா. நான் சுத்தமா கண்ணுக்குத் தெரிய மாட்டேன். இரும்புக்கை மாயாவிக்காவது கை தெரியும். நான் இன்விசிபிள் இந்த வீட்டுல.

அம்மா தன்னோட உலகத்துல இருப்பா. அவ்வளவா பேச மாட்டா. கார்த்தாலயிருந்து அவளுக்கு வேலை சரியாயிருக்கும். வேலை இல்லாத நேரத்தில் அனுராதா ரமணன், லக்‌ஷ்மி, எல்லாம் படிச்சிண்டிருப்பா. ராஜேஷ் குமார்னு ஒரு புது ரைட்டர் எழுதிண்டிருக்கார். அம்மா அவரோட எழுத்து மேல பைத்தியம். ‘வாடகைக்கு ஒரு உயிர்’னு அவரோட அந்த நாவலைப் பத்தி அப்படி சிலாகிப்பா. மாதாமாதம் அவரோட நாவல் முக்குக் கடைல வந்திருக்கான்னு பார்த்துட்டு வரச் சொல்லுவா.

பேபி மட்டும்தான் எப்பவும் அக்கா அக்கான்னு என்னோடவே சுத்துவா. அவ சின்னவ. அவகிட்ட எதுவும் பேச முடியாது. எனக்கு இருந்த பிரெண்ட்ஸ் எல்லாம் சாமியும், மத்தவங்களும். மத்தவங்கன்னா, இரும்புக்கை மாயாவி, மாண்ட்ரேக், ப்ளாஷ் கார்டன், ஜேம்ஸ் பாண்ட், ஃபாந்தம். அம்மாவுக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியலைன்னு குறை. அதுனால நாங்க கத்துக்கணும்னு நிறைய இங்கிலீஷ் காமிக்ஸும், புக்ஸும் அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தருவா. பாட்டி திட்டினாலும் கண்டுக்க மாட்டா.

அதுனால டின்டின், ஹார்டி பாய்ஸ்,ரிச்சி ரிச், அகதா க்ரிஸ்டி கிடைச்சுது. போன வாரம் அம்மா பெங்களூர் ஒரு கல்யாணத்துக்காக போயிட்டு வரும்போது சார்லஸ் டிக்கன்ஸோட A Tale of Two Cities (Illustrated Classic Edition) வாங்கிட்டு வந்தா. குட்டியா குண்டா இருந்தது அந்த புக். அவ்வளவு அழகா ஒரு புக்கை அதுவரை நான் பார்த்ததில்ல. பக்கத்துக்கு பக்கம் படம் போட்டிருந்ததால நல்லாருக்கும்னு நினைச்சு வாங்கிட்டு வந்தா அம்மா.

ஒரே நாள்ல அதைப் படிச்சு முடிச்சேன். சுமாரா புரிஞ்சது. ஆனாலும் எனக்கு பிரமிப்பா இருந்தது. பிரம்மாண்டமா இருந்தது கதை. பிரெஞ்ச் ரெவல்யூஷன்ல நடந்த கொலைகள், கில்லடின்ல யாரையெல்லாம் போடணும்னு எம்பிராய்டரி பண்ற மேடம் டேஃபார்ஜ், எல்லாமே ரொம்ப அட்டகாசமா இருந்தது. மேடம் டேஃபார்ஜ் படத்தைப் பார்த்தாலே பயமா இருக்கும்.முதல் தடவையா ஒரு புக் என்னை சர்பிரைஸ் பண்ணுச்சு. முதல்முதலா அன்னிக்குதான் நான் லவ் பண்ண ஆரம்பிச்சேன். அந்த புக்ல வரும் சிட்னி கார்டன் மேல ஒரே லவ் எனக்கு. எப்பேர்ப்பட்ட தியாகம் செய்யறார் சிட்னி. ஒரு வாரமா நான் சிட்னியோட வாழ ஆரம்பிச்சிருக்கேன்.

ஏன் உனக்கு சிட்னிய பிடிச்சிருக்கு? அவன் குடிகாரன். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதவன். சார்லஸ் டார்னேவை ஏன் பிடிக்கல? அவன் நல்லவன். லூசியை அருமையா பாத்துக்கறவன். ஏன் பிடிக்கல?’

 உள்ளிருந்து ஒரு கேள்வி வேகமா வந்தது. தோ! அந்த நிமிஷம்தான் எனக்குள்ளிருக்கும் பெனாத்தாவையும் நான் கண்டுபிடிச்சேன். எனக்குள்ள இருந்து எப்பவும் கேள்வி கேப்பா. சண்டை போடுவா. இனிமே நான் தனியா இல்லைன்னு சந்தோஷமா இருந்தது. ஆனா அப்பப்போ அவ ரொம்ப பேசறதாலதான் அவளுக்கு பெனாத்தானு பேர் வச்சேன். அவளுக்கு அந்தப் பெயர் பிடிக்கலன்னாலும், சரியா பொருந்தற பெயர் அதுதான்னு தீர்மானமா அவகிட்ட சொல்லிட்டேன்.

ஏன் பிடிக்கலன்னு கேட்டா எனக்கு சொல்லத் தெரியல. குடிச்சு வாழ்க்கைய நாசம் பண்ணிகிட்டாலும் சிட்னி கிட்ட ஏதோ ஒரு பெரிய நல்லது இருந்தது தெரிஞ்சது. எனக்கு சொல்லத் தெரியல. லூசிக்காக, அவள் மேல இருந்த லவ்வுக்காக சிட்னி தன்னையே தியாகம் பண்ணறார். பாவம் அவர். அவருக்குன்னு சொல்லிக்க, என்னைப் போல அவருக்காக பேச, யாருமே இல்லை. நான் அவரை புரிஞ்சுக்கறேன். எந்தத் தப்புமே செய்யாம கில்லடின்ல அவரோட தலையைக் கொடுக்கும்போது என்ன நினைச்சிருப்பார்? பிரான்ஸில் அப்ப நான் இருந்திருந்தா கண்டிப்பா அவரைக் காப்பாத்தியிருப்பேன். I love him!

ஹரி கூடத்தான் அப்படி பூஜை பண்றான். கோவிலுக்கு இரண்டு வேளை போறான். கோவில் குருக்கள் கிட்ட புருஷ ஸூக்தம் கத்துக்கறான். ரோட்டில் யாரையும் ஏறெடுத்து பார்க்கறதில்ல. யார் கூடவும் பேசறதில்ல. எல்லாரும் அவனை சிலாகிக்கறாங்க. என்ன புண்ணியம்? அவன் எப்பேர்ப்பட்டவன்னு எனக்குத் தான தெரியும்!

வெளியில எல்லாருக்கும் தெரியற மாதிரி பூஜை பண்ணி, விரதம் இருந்து, சாமிய வேரோட பிடுங்கறதெல்லாம் ஒண்ணும் வேணாம்னு கல்கண்டு தாத்தா சொன்னார். மனசார சாமியை எந்த ரூபத்துல வேணுமோ அப்படி நினைச்சுக்கோன்னு சொன்னார். நான் அன்னிலருந்து கோவிலுக்கு அடிக்கடி போறதில்ல. சாமிகூட தான் நான் தினமும் பேசறேனே.

நான் இப்பெல்லாம் உமா, மீனா கூடவும் அவ்வளவா விளையாடப் போறதில்ல. போன வருஷத்துலேர்ந்து தேனு பெரியவளாயிட்டானு அவளையும் அவங்க வீட்ல விளையாட வெளியில விடமாட்டேங்கறாங்க. பெரியவளாறதுன்னா என்னன்னு அம்மாகிட்ட கேட்டேன். நானும் சுமதியும் ஒவ்வொரு மாசமும் மூணு நாள் தனியா குமுட்டி ரூமில உக்காருவோமே. அந்த மாதிரி உக்காரணும் பெரியவளானா. அது எப்படி கண்டுபிடிப்பீங்க நான் பெரியவளாயிட்டேன்னு அப்படின்னு கேட்டேன். சிரிச்சுண்டே உனக்கு ஒரு நாள் தெரியும்னு சொன்னா அம்மா.

அம்மாவும் சுமதியும் மூணு நாள் அந்த ரூமுக்குள் போயிட்டா எனக்கு வேலை அதிகம். அம்மா அந்த மூணு நாள் வந்தா வட்டப் பொட்டுக்கு பதிலா திலகப் பொட்டு வச்சுப்பா. அம்மா ரொம்ப சந்தோஷமா நாள் முழுக்க படிச்சுண்டே இருப்பா. சுமதிதான் எரிச்சலா இருப்பா. அவளுக்கு சுந்தரி வீட்டுக்கு போக முடியலன்னு கோவமா வரும். பெரிசா அவ படிக்க மாட்டா. ஏதோ குமுதம், ஆனந்த விகடன் கொஞ்சமா படிச்சுட்டு நிறைய ரேடியோ கேப்பா. எனக்கு லீவாயிருந்தா அவளோட தாயக்கட்டை, பல்லாங்குழி விளையாடுவேன். சொல்லப் போனால் அந்த ரூமே எனக்குப் பிடிக்காது. பாத்ரூமுக்கு போற வழியில வலது கைப்பக்கம் இருக்கும் அந்த ரூம். கொஞ்சம் சின்ன ரூம்தான். ரூமுக்குள் ஒரு அலமாரியிருக்கும். அதில் கொஞ்சம் துணிமணிகளும் சில வேண்டாத சாமான்களும் கிடக்கும். ஆனாலும் அந்த ரூம் அலங்கோலமாக இல்லாமல் அழகாக வைத்திருப்பாள் அம்மா. அப்புறம் பரமபதம், பல்லாங்குழி, ஸ்க்ராபிள், மோனோபொலி மாதிரி விளையாட்டு சாமான்களும் இருக்கும். ஒரு தடவை நான் மணலில் விளையாடிட்டு வரும்போது நிறைய களிமண் உருண்டைகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து வெச்சிருந்தேன். பாட்டி நான் ஸ்கூலுக்கு போயிருந்தபோது அதை வைத்து ஒரு குமுட்டி அடுப்பு செஞ்சுட்டா. அதுவும் அந்த ரூமில் ஒரு ஓரமா இருக்கும். ஸ்கூல் விட்டு வந்து பாட்டிகிட்ட சண்டைப் போட்டேன், அழுதேன் என் களிமண்ணை எடுத்ததுக்காக. ஆனால் அப்பறம் எனக்கு அந்த குமுட்டி அடுப்பை பாக்கறப்பெல்லாம் பாட்டியை நினைச்சு பெருமையா இருக்கும். அவ்வளவு அழகா பண்ணியிருப்பா பாட்டி.

அந்த ரூமை ஒட்டித்தான் புழக்கடைக் கதவு இருக்கும். அந்தக் கதவைத் திறந்துதான் கொல்லையில் இருக்கும் பாத்ரூமுக்குப் போகணும். நானும் பேபியும் ராத்திரி பாத்ரூம் போகணும்னா அம்மாவை எழுப்புவோம். நானும் பெரியவளானா அந்த ரூமுக்குள்ள தனியா படுக்கணுமேன்னு நினைச்சா பயமா இருக்கு. ஆமா! எப்ப, எப்படி பெரியவளாவோம்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்.

அது இன்னிக்கு எனக்கு தெரிஞ்சு போச்சு. காலைல எழுந்திருக்கும்போதே எனக்கு லேசா வயறு வலிச்சுது. என்னத்த தின்னேன் நேத்துன்னு யோசிச்சிண்டிருக்கும்போதே பாத்ரூம் போகணும்னு தோணித்து. போய்ப் பார்த்தா ஒரே ரத்தம். ஐய்யய்யோ, பெரும் வியாதி வந்திருக்கு எனக்கு. பக்கத்து வீட்டு ரமா அக்கா மாதிரி கேன்சர் வந்துடுத்தோ? நான் செத்துப் போகப் போறேன் போலிருக்கேன்னு நினைச்சப்போ அழுகை தாங்கல. என்ன பண்றது? யார் கிட்டயும் சொல்ல வேணாம். அப்படியே அலம்பிண்டு துணியை துவைச்சுட்டு வந்துடலாம்னு நினைச்சேன். பாத்ரூமை விட்டு வெளியில் வந்து மாத்துத் துணி எடுக்க என் அலமாரிக்குப் போனேன்.

சுமதியக்கா என்னைப் பார்த்தாள். ஏய், இங்க வாடி! என்னாச்சு, என்ன கறை இங்கன்னு கேட்டா. கேட்ட உடனே எனக்கு அழுகை வந்தது. இரு இங்கயேன்னு சொல்லி அம்மா அம்மான்னு கத்திகிண்டு ஓடினா. ஒண்ணும் புரியாம குழப்பத்தோட வெலவெலத்து நின்னேன். அம்மாவும் பாட்டியும் வந்தா. ரெண்டு பேர் முகத்துலயும் சந்தோஷம், கண்ணுல கண்ணீர். என் ராசாத்தின்னு பாட்டி என்னைத் தடவி சொடக்கெடுத்தா.

சுமதியக்கா நான் பெரியவளாயிட்டேன்னு சொல்லி அடுத்து என்ன செய்யணுங்கறத சொல்லிக் கொடுத்தா.

‘சனியன் ஆரம்பிச்சாச்சா, இன்னும் பல வருஷம் இதைக் கட்டிண்டு அழணும்’னு எரிச்சலா சொன்னா சுமதியக்கா.

எதுக்குதான் சுமதியக்கா எல்லாத்துக்கும் சலிச்சுக்கறான்னு தெரியல. கேட்டால் இந்த வீட்டை விட்டு சீக்கிரமா போகணும்டி. என் புருஷன் வீட்டுக்குப் போய் ஜம்முன்னு வாழணும்னு சொல்லுவா. அவளுக்குப் படிக்கறதுல ஆசையில்ல. ரேடியோல எப்பவும் பாட்டு கேட்டுண்டு முணுமுணுத்துண்டே இருப்பா. அழகழகா தாவணி போட்டுண்டு கண்ணாடில இப்படியும் அப்படியும் பார்த்துண்டே இருப்பா.

‘நாலு வருஷத்துக்கு முன்ன எம்.ஜி.ஆர். மதிய உணவுத் திட்டத்த திருச்சில ஆரம்பிச்சு வெச்சது நன்னாப் போயிண்டிருக்கு. நம்ம பேச்சி அதனாலேயே குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்பறா. நல்ல இனிஷியேட்டிவ் இல்ல?’ என்று காந்தித் தாத்தாவும் (என் அம்மாவின் அப்பா) அப்பாவும் பேசிக்கொண்டிருந்தபோது பாட்டி போய் கீதா பெரியவளாயிட்டான்னு சொன்னது கேட்டது. தாத்தாவும் அப்பாவும் என்னைப் பார்க்க குமுட்டி ரூமுக்கு வந்தா. ஆசீர்வாதம் பண்ணினார் தாத்தா.

‘சௌக்கியமா இரு கண்ணே!’

எனக்கு வெட்கமா இருந்தது. இதையெல்லாம் போய் எதுக்கு பாட்டி ஆம்பளைங்க கிட்ட சொல்றான்னு ஒரு மாதிரி இருந்தது.

அப்பா, தாத்தா கிட்ட சொன்னது பரவாயில்ல. ஹரி ராத்திரி வீட்டுக்குள்ள வந்ததும் பாட்டி இந்த விஷயத்த சொன்னது எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் வேற தனியா ரூமுல இருந்தேன். ஏகப்பட்ட புக்ஸ் அலமாரில இருந்தது. ஆனாலும் A Tale of Two Cities புக்கை மறுபடி படிச்சுண்டு, படங்களை ரசிச்சுண்டு இருந்தப்போ ரூம் வாசல்ல யாரோ நிக்கற மாதிரி இருந்தது. தலைய நிமிர்த்தி பார்த்தேன். ஹரி!

கோணலாக சிரிச்சுண்டு, கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தான். புருவங்களை மேலே தூக்கி ‘அப்பறம்’…னு சொன்னது அசிங்கமா இருந்தது. நான் தலையை குனிஞ்சுண்டு ஒண்ணும் பேசலை.

ஹரி கொஞ்ச நேரம் என்னைப் பார்த்துட்டுப் போயிட்டான். ராத்திரி பூரா தனியா இருக்கணுமேன்னு நினைச்சா பகீர்னு இருக்கு. இந்த ரூமுக்கு கதவு வேற இல்லை. இது நல்லதா, கெட்டதான்னு எனக்குத் தெரியல…

 

 

 

– அடுத்த அத்தியாயம், அடுத்த புதன்கிழமை

❌