Normal view

Received today — 7 June 2025அபிலாஷ்

என்னுடைய சிறுகதை ஆங்கிலத்தில்

 என்னுடைய "மாடிப்படிகள்" சிறுகதை பேராசிரியர் ப. மங்களம் அவர்களால் நேர்த்தியாக ஆங்கிலமாக்கப்பட்டு Literary and Cultural Disability Studies: A Primer எனும் தொகைநூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் என்னுடைய புனைவெழுத்து குறித்த அலசலும் மங்களம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவருக்கு என் நன்றியும் அன்பும்.







Received before yesterdayஅபிலாஷ்

"நாவல் வகுப்பு 2025" - ஜூலை-ஆகஸ்டில்

 நீங்கள் ஒரு கவிஞராகவோ சிறுகதையாளராகவோ சமூகவலைதளப் பதிவராகவோ இருக்கலாம். மனத்தில் வரும் எண்ணங்களை, உணர்வுகளை, பிம்பங்களை உங்களால் சொற்களில் வடிக்க முடியுமெனில் உங்களால் நாவல் எழுதவும் முடியும். எல்லார் இதயத்துள்ளும் ஒரு நாவல் உண்டு, ஆனால் அது அங்கே இருப்பதுதான் நல்லது என கிறிஸ்டபர் ஹிட்சன்ஸ் சொன்னார். ஆனால் ஒரு படைப்பாளிக்குள் புதைந்திருக்கும் படைப்பை அடையாளம் கண்டு, அதை நெறிப்படுத்த வகுப்புகளும், தகுதியான ஆசிரியரும் உதவ முடியும். என்னுடைய நாவல் வகுப்பில் சேர்ந்து மூவர் தம் நாவல்களை முழுமையாக முடித்திருக்கிறார்கள். இரண்டு நாவல்கள் பிரசுரமாகி உள்ளன. மேலும் பலர் 50% மேல் எழுதியிருக்கிறார்கள். இரு மாத காலத்திற்கு இது கவனிக்கத்தக்க சாதனை.



உங்களில் எதிர்கால நாவலாசிரியர்கள் உண்டெனில் ஜூலை-ஆகஸ்டில் நிகழவிருக்கும் என் ஆன்லைன் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 9790929153 எண்ணில் வாட்ஸாப் பண்ணுங்கள். அல்லது இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளுங்கள்.



கண்கள் - ஆர். அபிலாஷ்

 Art Break: Blindness Doesn't Hinder Visual Artists | Newcity Art


கடும் தலைவலியினூடாக அவனுக்குத் தோன்றியது

கண் மருத்துவர் 

சுமாராகத்தான் இருக்கிறார் என்று.

அறை இருட்டு.

பல்லைக் கடித்து முனகும் ஏஸி எந்திரம்.

ரத்தம் வடிந்த தம் வெளிறி

உடலின் வழியாக ஆன்மாவைப் பாய்ச்சும்

நீள்சதுரக் குழல் விளக்குகளின்

ஆத்ம தரிசனம்.

வலி தன் மீது 

ராட்சதத் துளை தோண்டும் எந்திரத்தைப் போல

இறங்கி பூமிக்குள் பாய்வதாக

அவனுக்குத் தோன்றியது.

சுற்றிலும் வெளிச்சச் சிறகுகள் பறக்க

அமானுஷ்ய தோற்றங்கள்.

மரணம் நெருங்கிவிட்டதாகவும்

அன்றாடத்தின் துன்பங்களில் இருந்து விடுதலை

கிடைக்கப் போகிறதென ஒரு நம்பிக்கை,

அதைக் குறித்த அவநம்பிக்கை அடுத்து,

தப்பிக்கவே முடியாது எனும் 

எச்சரிக்கை சமிக்ஞைதான் இவ்வலி.

அம்மாவின் கையில் இருந்து பறிக்கப்படும்

குழந்தையின் கதறல்கள்.

அம்மாவிடம் செல்வதே 

முழுமையான நிம்மதியான துயில்.


கண்மருத்துவர் மீண்டும் அவனைத் தனது

மோவாவை சிறிய வளைவான தட்டில் வைத்து நேராகப் பார்க்கக் கேட்டார்.

அவர் தன் காதை கவனிக்கச் சொன்னார்.

இடக்காது.

உருகிய சுடர்.

இருளைத் திரையென அகற்றி 

முழுமையாகி நிலைகொள்ளும் சுடர்.

மலைமுகட்டில் எழுந்து 

பூமியை உயிர்கொள்ள வைக்கும் சுடர்.  

சிறிய மென்மையான சுடர்.

தெய்வத்தின் காது.

உலகத்துப் பேரழகின் மொத்த வடிவம்.

பொன்மஞ்சள் மயிர்கள் துல்லியமாகத் தெரிகின்றன

சிறு காது துளையின் அழகு.

அவனுக்கு அக்கணமே 

உலகின் மொத்த அன்பையும் அழகையும் தான்

அள்ளிக்கொள்வதாகத் தோன்றியது.

அவர் அடுத்தடுத்து ஸ்லைடுகளை மாற்றினார்.

தங்கத்தால் இழைக்கப்பட்ட காது

தன் வண்ணங்களையும் வடிவத்தையும் இழந்து

அவனைத் தடுமாற வைக்கிறது.

ஒரு பெண்ணை அடையும்போது

மெல்லமெல்ல இப்படித்தான் சிதைக்கிறோம்,

சிதைத்தலே ஸ்பரிசத்தின் பார்வை.


பரிசோதனை முடிந்தது

சோதனை லென்ஸ்களை

 அணியச் செய்து

தெளிந்த தெளிவற்ற பிம்பங்கள் காட்டப்பட்டு

அவனுக்கான சிகிச்சையும் தீர்வுகளும்

முடிவாகின்றன.


மறுசோதனைக்கான நாள்.

பழைய தலைவலி இல்லை.

மிதக்கும் தேவதைகள் 

துணைவரவில்லை.


கண்ணாடி அணிந்த கண்களுக்கு

பந்துகளாகத் துள்ளி வரும் 

தினசரி பிம்பங்களின் வண்ணங்கள் 

அள்ளிக் கொஞ்சத் தோன்றும் உலகு.

எவ்வளவு ரசித்தும் போதாத அழகு.

அதன்பிறகு 

அவனுக்கு இதெல்லாம் ஒன்றும் 

அழகில்லை என்றானது.

துல்லியமாகத் தெரிவதே அழகெனின் 

அழகின் பொருளென்ன?

இலைகள் விலகியதும்

ஒரு மலர் தெரிகிறது.

அது அங்கு இருக்கிறது,

இருந்தால் தான் என்ன?


அன்றாடத்தின் சுமையுடன் 

அவன் அடுத்தமுறை மருத்துவமனைக்கு வந்தபோது

பெண் மருத்துவர் சற்று மங்கலாகத் தெரிந்தார்.

வெளியுலகில் தன்னைக் கண்டடைந்து

களைத்துத் திரும்பியவனை வரவேற்கும் முதிர்ச்சி.

அந்நியமாக இயல்பிழந்து போன அவர் மீது

அவனுக்குத் தோன்றும் பயம்.

ஆறுதலாக அணைத்து

காலத்துயிலில் பொதிந்துகொள்ளும் கரங்கள் 

மீளமீளத் தோன்றும் சுழல் நாட்காட்டிக்குள்

அவனைத் தள்ளிவிடுகின்றன.


கண்ணில் கடுப்பு, தலைவலி, தெளிவின்மை,

 இரவிலும் பகலிலும் வாசிப்பதில் சிரமம் ... 

விசாரித்த பின்னர்

அவனை மோவாவை சிறிய வளைவான தட்டில் வைத்து 

தன் காதைப் பார்க்கச் சொல்கிறார்.


அவன் தன் மனத்தின் கண்ணாடியை எடுத்து

அணிந்துவிட்டுப் பார்க்கிறான்.




சாய் சுதர்ஷன்

B Sai Sudharsan deals with a short ball, Gujarat Titans vs Mumbai Indians, IPL 2025, Eliminator, New Chandigarh, May 30, 2025 

இந்த 2025 ஐ.பி.எல்லில் மட்டுமல்ல இதுவரையிலான ஒட்டுமொத்த ஐ.பி.எல் பருவங்களிலுமே தோன்றிய மட்டையாளர்களில் ஆகச்சிறந்தவர் சாய் சுதர்ஷன்தான். இவ்வாண்டு 156 ஸ்டிரைக் ரேட்டில் 759 ரன்கள். ஸ்டிரைக் ரேட்டோ இந்த ரன்களோ கூட அல்ல, வேறொன்றுதான் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஷ்ரேயாஸ் ஐயரையோ அபிஷேக் ஷர்மாவையோ போல பெரிய சிக்ஸர்கள் அடிப்பவர் அல்ல. ஆனால் எந்த ஆட்டத்திலும் அவர் ஆட்டச்சூழலாலோ பந்துவீச்சாளர்களாலோ ஆதிக்கம் செய்யப்படவில்லை, எதுவுமே அவரை நிலைகுலைய வைக்கவில்லை. ஓவருக்கு இரண்டு பவுண்டரிகளை எந்த ரிஸ்கும் இன்றி அவர் எடுப்பதையும் வேகவீச்சையும் சுழலையும் பிசிறின்றி ஆடுவதையும் பார்க்கையில் ஒரு நூற்றாண்டின் திறமையைப் பார்ப்பதைப் போல இருந்தது. வேகவீச்சை ஆடும்போது அவர் சில நுண் வினாடிகள் முன்பே தயாராக இருக்கிறார் - அனேகமாக எந்த விதப் பந்தையும் கணிப்பதில் அவருக்குப் பிழையேற்பட்டு நான் பார்க்கவில்லை. இசை நடத்துநர் ஒருவர் பெரிய வாத்திய கோஷ்டியை தன் சுண்டு விரல் அசைவில் கட்டுப்படுத்தி பிரம்மாண்ட இசையனுபவத்தை கட்டியெழுப்பி நம்மை மயக்கி நிறுத்துவதைப் போல எதிரணியின் கள அமைப்பு, பந்து வீச்சு, திட்டங்கள் எல்லாவற்றையும் சுதர்ஷன் தனி ஆளாக நடத்துவதாகத் தோன்றுகிறது.

மிகப்பெரிய ஸ்கோர்களை அவர் துரத்திப் போகும்போதும் சற்றும் அவசரமோ குழப்பமோ இல்லை. மும்பைக்கு எதிராக 228 எனும் இலக்கை சரியான துணை வீரர் இன்றி அவர் எடுத்துச் சென்று (தோல்வியுற்றாலும்) 163 ஸ்டிரைக் ரேட்டில் 80 அடித்ததைப் பார்த்தபோது வாவ் என்றிருந்தது. ஏதோ ஒரு போட்டியில் 200 ஸ்டிரைக் ரேட்டில் அரை சதம் / சதம் அடிப்பது பெரிய விசயமில்லை, எல்லா போட்டிகளிலும் எதிரணியை அடித்து துவம்சம் பண்ணுவது, அவுட் பண்ணுவதற்கு சிறு பழுதும் கொடுக்காமல் ஆடுவது கிட்டத்தட்ட மேதமையைதான்.

சாய் சுதர்ஷனின் வளர்ச்சியின் அடுத்த கட்டம் இன்னும் சில சிக்ஸர்களைக் கூடுதலாக அடிக்கப் பழகுவதுதான் என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கென்னவோ அவர் சிக்ஸர்களையும் ரிஸ்க் இன்றி அடிக்கத் தொடங்குவார் எனத் தோன்றுகிறது.

அப்படி நிகழாவிட்டாலும் பிரச்சினையில்லை. ஐ.பி.எல்லின் தரத்தை அவரளவுக்கு பலமடங்கு மேலே உயர்த்துகிற இன்னொரு வீரர் வரலாற்றிலேயே இல்லை. இதை நான் கெய்ல், ஜெயசூர்யா, சேவாக், டிவில்லியர்ஸ் துவங்கி பல்வேறு ஐ.பி.எல் அதிசூர பராக்கிரமசாலிகளைப் பார்த்த பிறகே சொல்கிறேன். கில்லை இப்போது இந்தியாவில் ஆடும் ஒருநாள் மட்டையாளர்களில் தலைசிறந்த திறமையாளர் என்கிறார்கள். ஆனால் பல போட்டிகளில் சுதர்ஷன் கில்லுடன் ஆடும்போது டெக்னிக்கலாகவே கில்லைவிட மேலாகத் தெரிகிறார். இதனால்தான் அவர் ஐ.பி.எல் பார்க்கும் நமது அனுபவத்தையே மகத்தானதாக்குகிறார் என்று சொல்கிறேன்.

ஆர்.ஸி.பி: வெற்றிக்குத் தகுதியான அணி

Virat Kohli couldn't hold his tears back after the win, Royal Challengers Bengaluru vs Punjab Kings, IPL, final, Ahmedabad, June 3, 2025


இந்த ஆண்டு ஐ.பி.எல்லின் கட்டுறுதியான அணிகளாக எனக்குத் தோன்றியவை மும்பையும் ஆர்.ஸி.பியும்தாம். குறிப்பாக ஆர்.ஸி.பி அணியின் தேர்வு சிறப்பாக இருந்தது - நல்ல வலுவான பந்து வீச்சு வரிசை, கீழ்வரிசை மட்டையாட்டம், சுழல் பந்து, ஆல்ரவுண்டர் என எல்லா அலகுகளிலும் சரியான ஆளை வைத்திருந்தார்கள். பழைய தென்னாப்பிரிக்க அணியைப் போல கடுமையாகப் போராடினார்கள். அனேகமாக எல்லா ஆடுதளங்களுக்கும் ஏற்ற அணி. இன்றைய போட்டியில் அவர்கள் முதலில் ஆடி 20 ரன்களாவது குறைவாக எடுத்ததாகவே நினைத்தேன். ஆனால் அடுத்தாடிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவர்களில் ரிஸ்க் எடுத்து அடிக்கத் தயங்கினார்கள். அவர்கள் அடிக்க ஆரம்பித்த போது ஐந்தாவது ஓவராகியது, ஒரு விக்கெட்டும் கொடுத்தார்கள். கடைசி 6 ஓவர்களில் பந்துகளுக்கும் ரன்களுக்கும் இடையில் இருந்த 20-30 ரன்கள் இடைவெளி முதல் ஆறு ஓவர்களில் ஏற்பட்ட சுணக்கத்தினால் விளைந்ததே. ஆர்.ஸி.பி கூட ஒன்றும் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. பத்தாவது ஓவரை எட்டும்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 5 ரன்கள் இடைவெளியே. ஆனால் பட்டிதாருக்குப் பிறகு வந்த லிவிங்ஸ்டோன் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் அடுத்தடுத்து அடித்த சிக்ஸர்கள், கோலி சரியான நேரத்தில் அவுட் ஆகி ஜித்தேஷ் ஷர்மாவும் லிவிங்ஸ்டோனுமாக ஜேமிஸன் ஓவரில் அடித்த பெரிய சிக்ஸர்கள் முக்கியமான திருப்புமுனை. அதனாலே 15வது ஓவரில் ஆர்.ஸி.பி 132 எடுத்திருக்க, பஞ்சாப் நான்கு விக்கெட்டுகளுக்கு 119க்கு மட்டுமே எடுத்தது. 17வது ஓவரில் பஞ்சாப் 144க்கு 6 விக்கெட்டுகள். ஆனால் ஆர்.ஸி.பியோ 17வது ஓவரில் 5 விக்கெட்டுகளுக்கு 168 ரன்கள். அதாவது 15வது ஓவரில் 13 ரன்கள் வித்தியாசம் எனில், 17வது ஓவரில் 24 ரன்கள் வித்தியாசம். ஆர்.ஸி.பி இன்னும் சற்று சுதாரித்து ஆடியிருந்தால் 200 எடுத்திருக்க முடியும். ஆனால் பஞ்சாப் எவ்வளவு நன்றாக ஆடினாலும் 190ஐத் தாண்டியிருக்காது. ஏனென்றால் 10வது ஓவருக்குப் பிறகு அவர்களால் ஆர்.ஸி.பி பந்துவீச்சை சிக்ஸர் அடிக்க முடியவில்லை. குறிப்பாக குரனால் பாண்டியாவின் பந்து வீச்சை அடிக்க சிரமப்பட்டார்கள். (இந்தப் போட்டியில் மட்டுமல்ல இத்தொடர் முழுக்கவே குரனால் பாண்டியா தான் ஆர்.ஸி.பியின் துருப்புச்சீட்டு.) லிவிங்ஸ்டோனும், ஜித்தேஷும் செய்ததை வதேராவால் முடியவில்லை. அவர் 18 பந்துகளில் அடித்த 15 ரன்கள் ஆட்டத்தை மாற்றின. அவருக்கு ஆர்.ஸி.பி வீச்சாளர்கள் குறைநீளத்தில் வைடாக வீசியது நல்ல உத்தி. ஷஷாங் சிங் தோனி ஸ்டைலில் கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு போக முயன்றதும் தவறாகியது. அவரது ஒற்றை ரன்னெடுக்கும் தடுப்பாட்ட பாணி பஞ்சாபை ஆட்டத்தில் இருந்து விரைவில் வெளியேற்றியது. ஆட்டம் முடிந்த நிலையில் அவர் அடித்த சிக்ஸர்கள் ஏதோ பாடையைச் சுற்றி நின்று டான்ஸ் ஆடுவதைப் போல இருந்தது. இவர்களுடைய கூட்டணியில் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடித்திருந்தால் அல்லது வதேரா தான் ஆடிய முதல் ஐந்து பந்துகளுக்குள் வெளியேறி ஸ்டாயினிஸ் அப்போது வந்து வேகமாக அடித்திருந்தாலோ 17வது ஓவரில் ஆட்டம் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். ரிக்கி பாண்டிங் துணிச்சலாக வதேராவை ரிட்டையர்ட் அவுட் ஆக்கியிருக்கலாமோ? ஒருவேளை ஆட்டத்தின் முக்கியான திருப்புமுனையாக அது அமைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கினார்கள்.

இன்னொரு பக்கம், இதைச் சாத்தியமாக்கியது ஆர்.ஸி.பியும் அற்புதமான பந்துவீச்சும்தான். ஒருவேளை அவர்கள் ஸ்குவாடை அமைக்கும்போது பந்துவீச்சை அலட்சியமாக கருதியிருந்தால் இந்த கட்டத்தில் போட்டியில் பின்வாங்கியிருப்பார்கள். கையை விட்டுப் போயிருக்கும்.

பஞ்சாபுக்கு வதேராவின் திணறல், ஆர்.ஸி.பிக்கு அவரைவிட சற்று மேலாக ஆடினாலும் பவுண்டரி கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த கோலி சரியான சமயத்தில் வெளியேறியது, குரனாலின் காயத்துக்கு தையல் போடுவதைப் போன்ற பந்துவீச்சு, இம்மாதிரி சின்னச்சின்ன விசயங்களே இறுதிப் போட்டியின் வெற்றியைத் தீர்மானித்தன.

சொல்லப்போனால் ஆர்.ஸி.பிக்கு சாதகமாக இல்லாத ஆடுதளம் இது - ஆனால் இதற்கும் ஏற்ப தகவமைத்துக்கொண்டு அவர்கள் போராடியது, உத்தியை மாற்றிக் கொண்டது பாராட்டத்தக்கது. இம்முறை கோப்பையை வெல்ல முழுமையான தகுதி கொண்ட அணிதான் ஆர்.ஸி.பி. இத்தொடர் முழுக்க விராத் கோலி மத்திய ஓவர்களில் சுழல் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பிலும் இறங்கி வந்தும் தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசி 144 ஸ்டிரைக் ரேட்டில் ஆடியது, 657 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தகுந்தது - 2024இல் அவர் கூடுதலான ரன்களை இன்னும் மேலான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்திருந்தாலும் மத்திய ஓவர்களில் அவரால் சுழலர்களை விளாச முடியவில்லை, இம்முறை இந்த வயதில் அவர் தன் ஆட்டத்தை மாற்றிக் காட்டியது அபாரமானது. அவரது ஆட்டம் கொடுத்த உத்தரவாதம் முதல் பத்து ஓவர்களுக்குள் பட்டிதாரும், அதற்குப்பின் டேவிட், லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ், ஷெப்பர்ட் ஆகியோரும் ரெண்டு கைகளிலும் மத்தாப்பு கொளுத்தி வாயில் சரவெடி வெடிப்பதைப் போல ஆட உதவியது. ஆர்.ஸி.பி யாரையும் சார்ந்திருக்கவில்லை. 11 பேர்களும் நல்ல ஆட்டநிலையில் தொடர்ச்சியாக அதிரடியாக ஆடினார்கள். எல்லா சவால்களுக்கும் யாராவது ஒருவர் எழுந்து நின்று தீர்வைக் கண்டடைந்தார்கள். பட்டிதார் அணித்தலைவராக நல்ல தேர்வல்ல என்று நான் துவக்கத்தில் நினைத்தேன். ஆனால் அது தவறான கணிப்பு என்பதை அவரது புத்திசாலித்தனத்தையும் நிதானத்தையும் பார்த்தபோது உணர்ந்தேன். தலைமையால் அவரது ஆட்டமும் மேம்பட்டது. காயமிருந்தும் கூட தயங்காமல் அதிரடியாக ஆடினார். சுயநலமற்ற ஆட்டம். பாதி தொடரில் பட்டிதார் காயமுற்றபோதும் கூட அவர்களால் பின்வாங்காமல் தளராமல் ஆட முடிந்ததைப் பார்க்கையில் அணியின் வலுவான கட்டமைப்புப் புலப்பட்டது. மயங்க் அகர்வால் பாதி தொடரில் அணிக்குள் வந்து நன்றாக ஆடினார். இதையெல்லாம் பார்க்கையில் அடிப்படையில் அவர்கள் மகிழ்ச்சியான நிம்மதியான அணியாக இருந்தார்கள் என்பது தெரிகிறது - உள்ளார்ந்த மகிழ்ச்சியும் தன்னிறைவும் தரும் தன்னம்பிக்கை அவர்களைச் செலுத்தியது. இவ்வெற்றியில் அவர்களுடைய நிர்வாகமும் பயிற்சியாளர்களின் அணியும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். இன்னொரு முறை இப்படி எல்லாம் அமைந்து வருமா எனத் தெரியவில்லை.

ஆர்.ஸி.பிக்கு வாழ்த்துகள்!

கதைக்கும் நாவலுக்குமான வித்தியாசம்

 நாவலை ஒரு நீண்ட கதையாகப் பார்க்கும் பிரச்சினை தமிழில் உண்டு. நாவலை ஒரு நீண்ட சிக்கலான கனவாகப் பார்ப்பதே சரியானது - அக்கனவில் நேர்கோட்டுத்தன்மையும் எதார்த்தமும் இருக்கலாம், அதில் சுவாரஸ்யமான கதைகள் வரலாம், ஆனால் அதன் கதையமைப்பும், கதையும் சுவாரஸ்யத்துக்கானவை அல்ல, மாறாக கதைத்தன்மைக்கு அப்பால் ஒரு புதிய உலகை, புதிய கருத்து, வாழ்க்கைப் பார்வை, முரண்களைக் குறிப்புணத்துவதே நாவலின் உத்தேசம். ஒரு கனவைக் கண்டு முடித்தபின் அதன் பொருளென்ன என்று புரியாவிடினும் அது நம்மை அன்று முழுக்க அலைகழிக்குமே அப்படியே நாவலும் செய்ய வேண்டும்.

இதற்கு முதலில் கதைக்கான அடிப்படைகளும், அதன் பிறகு கதையை கவிதையாக்கும் நுணுக்கமும் தெரிய வேண்டும். கதையை கவித்துவமான படிமமாக்க ஒரு இளம் எழுத்தாளருக்கு சரியான வழிகாட்டி அவசியம். அதற்காகத்தான் நான் ஆன்லைனில் வகுப்புகளை அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கிறேன்.
விருப்பமுள்ள நண்பர்கள் என்னை பேஸ்புக் மெஸஞ்சரில் தொடர்புகொள்ளுங்கள். அல்லது 9790929153 எனும் எண்ணிற்கு வாட்ஸாப் பண்ணுங்கள்.




"நவீன காதல்" - “உன்னை நேசிக்கிறேன்” என சொல்ல மாட்டார்களா எனும் ஏக்கம்



 

மனிதர்கள் மிகுதியாக அன்பு காட்டுகிற, சிறிது கூட அன்பை நம்பாத ஒரு காலத்தில் வாழ்கிறோம். இந்த மாற்றங்களுடன் காதலைப் பற்றின குழப்பங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வளவு ‘முற்போக்கான’, தாராளமயமான சூழலில் தான் பரஸ்பர ஐயங்களும் பயங்களும் அதிகமாக உள்ளன; யாருக்கும் யார் மீதும் வெகுசீக்கிரமாக நம்பிக்கை வருகிறது, ஆனால் வெகுசீக்கிரமாக அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. இரண்டுக்கும் இடையே யாரை எப்படி நம்புவது என அஞ்சிக்கொண்டிருக்கிறோம். நம்மைப் பற்றி சொல்லப்படும் இதயபூர்வமாகத் தோன்றும் சொற்களுக்குள் ஒரு இதயம் துடிக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் ஹார்ட்டின்கள் இருக்கின்றன. “லவ்” என்று சொல்லைக் கேட்டு முன்பு மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும். இன்று அதே மனதுக்குள் சருகிலைகள் உதிர்கின்றன. லவ் என்பது டிஷ்யு பேப்பரைப் போலாகிவிட்டதால் வாழ்தலே எடையற்றதாக இருக்கிறது; சதா ஒரு பதற்றம், யாராவது “உன்னை நேசிக்கிறேன்” என சொல்ல மாட்டார்களா எனும் ஏக்கம். நேசிக்கிறேன் எனும் சொல்லுக்கு “உன்னுடன் இருக்கிறேன்” எனும் பொருள் வந்துவிட்டது.

இந்த சிக்கல்களைப் பற்றியே இந்நூல் பேசுகிறது.

உணர்வுவயப்பட்ட உண்மை


 

தான் பிரின்ஸ்டனில் படைப்பிலக்கியம் சொல்லித் தந்தபோது மாணவர்களிடம் சொல்லியதாக முக்கியமான அறிவுரையை சிமமண்டா அடிச்சி குறிப்பிடுவார்: எழுத்தை அற்புதமாக மாற்றுவது அறிவோ தொழில்நுட்மோ அல்ல, உணர்வுவயப்பட்ட உண்மை.

அது என்ன உணர்வுவயப்பட்ட உண்மை? நம் பண்பாட்டில் அது சத்தியம், அறம் என்று அழைக்கிறார்கள். பாரதி அக்னிச் சுடர் என்றார். அந்த உண்மையை ஒருவர் புத்தகங்களில் இருந்தோ அனுபவத்தில் இருந்தோ ஒருவேளை கற்றுக்கொள்ள முடியாது போகும். ஏனென்றால் அது நம் மொழிக்குள், நம் உணர்வுக் குழப்பங்களுக்குள் புதைந்திருக்கும். அதை வெளிக்கொணர ஒரு படைப்பிலியக்கிய ஆசிரியர் தேவை. நீங்கள் எழுத முயலும் படைப்பாளியாக இருக்கும்பட்சத்தில் என் "நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" வகுப்பில் இணையுங்கள்.

விருப்பமுள்ளோர் ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் நடக்கிற ஆன்லைன் வகுப்பில் சேருங்கள். கூடுதல் விபரங்களுக்கு 9790929153 எண்ணிலோ மெஸெஞ்சரிலோ தொடர்புகொள்ளுங்கள். [email protected]க்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

நன்றாக எழுதுவது எப்படி?

 

"முதல் விதி - நீங்கள் எழுத வேண்டும். எழுதாவிடில் ஒன்றுமே நடக்காது."
எழுத்தாளர் நீல் கெய்மென்

நீங்கள் எழுதும் கனவு கொண்டவர், ஆனால் இதுவரை எழுத சந்தர்ப்பம் அமையவில்லையா, எப்படி எங்கே துவங்குவது எனத் தெரியவில்லையா? "நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்" ஆன்லைன் வகுப்பில் இணையுங்கள்.

ஆர்வமுள்ள படைப்பாளிகள் என்னை 9790929153 எண்ணிலோ மெஸெஞ்சரிலோ தொடர்புகொள்ளலாம். அதே எண்ணில் வாட்ஸாப்பும் பண்ணலாம்.

"நவீன காதல்" - கிண்டில் பதிப்பு வெளியிடப்பட்டது




காதல் இன்று வெகுவாக மாறிவிட்டது. காதல் மீதான எதிர்பார்ப்புகள், காதலின் சிக்கல்கள், குழப்பங்கள் வன்முறை முன்பை விட அதிகரித்து விட்டன. காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய கோடு அழிந்ததில் பாய் பெஸ்டிகள் எனும் புதிய வகைமை, செக்ஸுடன் கூடிய நட்பு எனும் வினோத உறவு தோன்றியிருக்கிறது. முன்பு காதல் கல்யாணத்தில் கைகூடுவது லட்சியம், இன்று அது ஒரு கனவு. “காதலித்துக் கட்டிக்கிட்டோம்” என்பது விரைவில் ஒரு பூமர் வாக்கியம் ஆகிவிடும். மின்சாரம் பாயும் சொல்லாடலாக இருந்த “ஐ லவ் யூ” இன்று முகமனைப் போல அன்றாடம் சொல்லப்படுகிறது. மிகுதியாக அன்பு காட்டி, சிறிது கூட அதை நம்பத் தயங்குகிறோம். காதல் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் இந்த யுகத்தில் காதல் செய்வது எப்படி, வாழ்வின் தத்துவத்துடன் காதலின் தத்துவம் எப்படி பின்னிப்பிணைந்திருக்கிறது எனப் பேசும் நூல் இது.

கிண்டில் பதிப்பு

 

"நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" 2025 வகுப்புகள்

 "நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்" ஆன்லைன் வகுப்புகளை கடந்த இரண்டாண்டுகளாக நடத்தி வருகிறேன். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கவுள்ளது. ஜூலை-ஆகஸ்டில் வார இறுதி வகுப்புகள். இடுபணிகள், விளையாட்டுகள் என சற்று வித்தியாசமாக இம்முறை வகுப்பை நடத்தலாம் என இருக்கிறேன்.


ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகள் (வயதைச் சொல்லவில்லை) என்னை 9790929153 எண்ணிலோ மெஸெஞ்சரிலோ தொடர்புகொள்ளலாம். அதே எண்ணில் வாட்ஸாப்பும் பண்ணலாம்.

இந்த ஆண்டு கட்டணத்தை சற்று அதிகரித்திருக்கிறேன். ஆனால் வகுப்பில் இணையும் முதல் 20 மாணவர்களுக்கு கட்டணக் கழிவு உண்டு.

தலையற்றுப் போகும் மனிதன்



 நான் அவளை உணவகத்தில் சந்திக்கும்போது ஒவ்வொரு முறையும் முன்கூட்டியே சென்று காத்திருப்பேன். இது அவளாக சொல்லிச் செய்ததல்ல. நானாக செய்தேன். அவள் வந்ததும் கால் மேல் காலை இட்டபடி தன் பார்வையைத் தாழ்த்தி என்னை இனி எனக்கு உயர்வதற்கு இடமே, வானையும் கடந்து வளர்ந்து சென்றுவிட்ட அடிமுடி அறியா பிறவி நான் என்பதாகப் பார்ப்பாள். அடுத்து உடனே இயல்பாகி புன்னகைப்பாள். நான் உடனே உடைந்து விடுவேன். அவள் இப்படி செய்யும்போதெல்லாம் என் கண்களில் நீர் துளிர்த்துவிடும். இப்படி அவளிடம் ஓராயிரம் பாவனைகள் உண்டு. அவள் வந்து அமர்ந்ததும் நான் அவளது காலை என் கையால் தொட்டு விரலில் முத்தமிடுவது வழக்கம். பப்களில் நான் மண்டியிட்டு அவளது கால் பெருவிரலைச் சப்புவதும் உண்டு, அவள் மெல்ல உதைக்கும்போது என் தலை மேஜையின் விளிம்பில் படும், உச்சம் பெற்றதைப்போல சிரிப்பாள், அது அவ்வளவு அற்புதமான ஒரு தருணம்.

நாங்கள் முதன்முதலாக உணவகத்தில் சந்தித்தது ஒரு மகத்தான நிகழ்வு. என்னால் அந்த நாளை ஒருபோதும் மறக்க முடியாது.
அவள் நகரத்துக்கு வந்ததும் தன் தோழியின் விடுதி அறையில் தன் பொருட்களை வைத்து உடைமாற்றிவிட்டு, புர்காவின் விளிம்புக்கு மேலாக தன் அழகான ஆடையின் அலங்காரம் தெரியும்படி எடுத்துவிட்டபடி, முகத்தில் கிளிட்டரும், இளஞ்சிவப்பு உதட்டுச்சாயமும் அணிந்து என்னை விடுதிக்கு எதிரே உள்ள மோமோஸ் கடை வாசலில் சந்தித்தபோது நாங்கள் சந்தித்த பத்தாவது நிமிடத்தின் தொடர்ச்சியே அது என அவளிடம் சொன்னேன். அவள் தானும் அப்படியே உணர்ந்ததாகச் சொன்னாள்.
இரண்டாவது நாளே அவளை ஓர் உயர்தர உணவகத்து அழைத்தேன். நான் பப்பென்றுதான் சொன்னேன். அவள் அதற்கு “உன்னை அங்கே டான்ஸ் பண்ணுகிறவர்கள் மிதித்துவிட்டால் என்ன செய்வது ஹிட்லர்?” எனச் சிரித்தாள். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன். பெண்களின் கால்கள் கவனமானவை. அப்புறம் ஸ்டாப் காலிங் மீ ஹிட்லர்.” “ஒருவேளை நீ வழுவழுப்பான காலொன்றில் தடுக்கி விழுந்து பல நடனமாடும் கால்களிடம் ஒரு புட்பாலைப்போல சிக்கிக்கொண்டால்? நான் எப்படி உன்னைக் காப்பாற்றி என் பக்கம் கொண்டு வருவது? எனக்கு பைசைக்கிள் கிக் தெரியாதே.” நான் ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்று சொன்னதற்கு “இளம்பெண்கள் உன்னைப் பயன்படுத்துவதற்காக அழைத்துப்போய் அங்கே யாரையாவது பிடித்துக்கொள்வார்கள். நான் அப்படி அல்ல. நீ வந்தால் உன் மொத்த பொறுப்பும் எனக்குத்தான்.” என்பாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்று பிரசித்தமான உணவகம் ஒன்றை சொன்னேன். நான் மெல்லமெல்ல அழுவதை முடித்தபோது பரிசாகரர் ஒரு தட்டில் முழு கோழி தந்தூரியை வெண்துணி மூடியால் மறைத்துக்கொண்டுவந்து எங்கள் முன்னால் திறந்து காட்டினார். ஆவி பறந்து மேலெழுந்து கலைகிறது. அவள் “வாவ்” என்றாள். அங்கே என் தலை வீற்றிருந்தது. நானும் அவளுமாக என் தலையைக் கத்தியாலும் முள்கரண்டியாலும் வெட்டியெடுத்து பரஸ்பரம் ஊட்டினோம். என் தசை எவ்வளவு சுவையாக இருக்கிறது, அதுவும் கன்னக் கதுப்பு, அதற்கு மேலே உள்ள சிறிய எலும்புகள், பின்னந்தலை ஆஹா ஆஹா. ஒரு மனிதன் தலையற்றுப் போகும்போது ஏன் இவ்வளவு பரவசத்தில் ஆர்ப்பரிக்கிறான்?

கனவு வாழ்க்கை, 'கனவு' வாழ்க்கை



 இன்று ஒரு நண்பர் என்னிடம் பாலிஷ் போட்ட யானைக் குட்டியைப் போன்ற காரைக் காட்டி "இந்த கார் ஒரு கோடி ரூபாய். பகத் பாஸில் வைத்திருக்கிறார். இதில் பயணிக்க அவ்வளவு சொகுசாக இருக்கும்." என்றார். இப்படி விலைமதிப்பான பொருட்கள், மின்னணு சாதனங்கள், வீடுகள் குறித்து யாராவது தொடர்ந்து தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் மற்றவர்களைவிட ரொம்ப கேவலமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனும் உணர்வு சட்டெனத் தோன்றிவிடுகிறது. நான் முன்பு மூவாயிரம் ரூ சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோது பணம் ஒரு பிரச்சினையாக, பணமின்மை போதாமையாகத் தோன்றியதில்லை. கடன் அதிகமானதால் ஒரு குடும்பத்தில் ஏழு பேர்கள் விடமருந்தி தற்கொலை பண்ணி ஒரு காருக்குள் அமர்ந்திருந்ததாக செய்தி படித்தேன். இப்படியான செய்திகளை நான் அதிகமாக முன்பு கேள்விப்பட்டதில்லை. மிக ஏழ்மையான நிலையில் சகித்துக்கொண்டு கௌரவமாக வாழ்ந்த குடும்பங்களை அறிவேன். இன்று அப்படியான வாழ்க்கை மிகவும் கடுமையாகிவிட்டது. ஏழ்மையும் கடனும் கைகோர்த்துவிட்டன. அனேகமாக எல்லாரிடமும் வீட்டு வசதிப் பொருட்கள், வாகனங்கள் இருக்கின்றன, அனேகமாக எல்லாரும் வீடு வாங்கவோ வாங்க முயலவோ செய்கிறார்கள், எல்லாரிடமும் ஏதோ ஒரு கடன் இருக்கிறது, எல்லாருமே ஒன்றுமே இல்லாததாக உணர்கிறோம், நிம்மதியற்று இருக்கிறோம். நிறைய பணமும் செல்வாக்கும் கொண்டவர்கள் இன்னொரு பக்கம் நிம்மதியற்றிருப்பதாகப் புலம்புகிறார்கள். கூடவே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தம் செல்வத்தை ஊருக்கெல்லாம் காட்டி வெறுப்பேற்றவும் செய்கிறார்கள். இவ்வளவு குழப்பமான உலகை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை.

நிறைய பணமிருந்தால் பிடிக்காத வேலையைச் செய்ய வேண்டாம், பிடிக்காதவர்களுடன் பழக வேண்டாம் எனும் தர்க்கத்தை ஏற்க முடிகிறது. பணம் = நேரம் என்பதும் நேரத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்குப் பொருந்தும் உண்மை. கார் என்பது பயணிப்பதற்கான வாகனம் என்பதைத் தாண்டி அசையாமல் செல்கிற கார், அதிர்வில்லாமல் ஓசையின்றி போகிற கார், பெரிய வீட்டைப் போன்ற கார் எனும் ஏற்பாடுகளின் தேவையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அசையாமல், சத்தமின்றி பெரிய இடத்தில் இருக்க வேண்டுமெனில் ஒரே இடத்தில் இருந்தால்போதுமே! அடுத்து எதற்கு மக்கள் இவ்வளவு அதிகமாகப் பயணிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. இருக்க நல்ல இடம், நல்ல உணவு, இலக்கியம் வாசிக்க, படைக்க நேரம், கற்பனை, விளையாட்டு, அவ்வப்போது கலவி (கவிஞர்களுக்கு கொஞ்சம் காதல்) ஆகியவற்றைத் தாண்டி எதுவும் பிரதானமாக மனிதனுக்குத் தேவையில்லை எனும் கட்சி நான். ஆனால் அதெல்லாம் ரொம்ப செலவு பிடித்ததாகிவிட்டது என்பதே நம் காலத்தின் துயரம்.
நிம்மதியான தொந்தரவில்லாத இடம் பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மற்றவர்கள் பயணிப்பதன் வழியாக இதை ஈடு கட்டத் தவிக்கிறோம். நல்ல உணவு கிடைக்காததால், தவறான உணவுத் தேர்வால் உடல் பாதிக்கப்பட்டு அதை ஈடுகட்ட பல்வேறு கேளிக்கைகள் நமக்குத் தேவையாகின்றன - உணவே மனிதனின் ஒரே மகிழ்ச்சி என பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆரோக்கியமான உணவு இல்லாதபோது அதற்கு ஈடு அதிகப்படியான காமம்தான். காமமும் கிடைக்காதபோது அதைக் குறித்த கற்பனை, வேடிக்கை பார்க்கும் இன்பம், போர்ன் போதை, மேம்போக்கான பொழுதுபோக்கைக் கொண்டு மனத்தை திருப்புகிறோம். வாசிப்பு, கற்பனை, படைப்பாக்கம் ஆகியவற்றுக்கு நிறைய நேரமும் ஓய்வும் அவசியம் - அது இன்று மத்திய வர்க்கத்துக்கு அருகி வருகிறது. வேலை நெருக்கடி, கடன், பாதுகாப்பின்மை, மிக நீண்ட வேலை நேரம், தூக்கமின்மை. அவர்களுக்கு கீழே உள்ளவர்களுக்கு கவலைப்படக் கூட நேரமில்லை. அந்த கால ஆப்பிரிக்க அடிமைகளைப் போல நாட்டில் 90% வாழ்ந்து வருகிறார்கள். கை, கால்களில் சங்கிலி இல்லை என்பதே வித்தியாசம். விளையாட்டை நீங்கள் அந்த கால அடிமையிடம் இருந்தும் பிரிக்க முடியாது. அப்படியே அவர்கள் தம் முகமையை மீட்டெடுப்பார்கள். ஆனால் இன்று நவீன சமூகம் விளையாடும் உரிமையை எடுத்துவிட்டு நமக்கு விளையாட்டை நிகழ்த்து கலையாக, கேளிக்கையாக மாற்றி அதன் முழுநேர நுகர்வோராக நம்மை மாற்றிவிட்டது. தொழில்ரீதியாக விளையாடுவோரைப் பார்த்துத் திகைத்து ரசித்துக் கிடக்கிறோம். நம்மிடம் துளி கூட விளையாட்டில்லை என்பதை யோசிக்கவே நேரமல்லை. ஏனென்றால் விளையாட இடமும் நேரமும் தேவை. நகரங்களில் இரண்டும் இல்லை.
இச்சூழலில் நமக்கு ஒரு கறுப்புக் கண்ணாடியை யாராவது ஒரு லட்சம் என்று சொன்னால், கைக்கடிகாரத்தை ஒரு கோடி என்றால் சந்தோஷமாக இருக்கிறது. இன்று நமக்கு கிடைக்கும் கண்ணாடியும் கடிகாரமும் மலிவானது எனும் எண்ணம் நம் வாழ்க்கையே மலிவானது எனும் எண்ணத்தைத் தள்ளிப் போட உதவுகிறது. அடையச் சாத்தியமே இல்லாத பொருட்களைப் பற்றி சிலாகிப்பது நிகழ சாத்தியமில்லாத நம் அன்றாட எளிய ஆசைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க உதவுகிறது. "எனக்கு அப்பெண்ணை முத்தமிட வேண்டும், எனக்கு எனக்கேயான ஒரு தனித்த இடத்தில் நிம்மதியாக வாழ வேண்டும், என்னை வலுவாக, முழுமையாக உணர வைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும்" எனும் அசாத்தியமே ஒரு கோடி மதிப்பிலான காரில், பிரைவெட் ஜெட்டில் செல்ல வேண்டும் எனப் பேச வைக்கிறது என நினைக்கிறேன். ஏனென்றால் மிகச்சாதாரணமான அனுபவங்களை விட விலைமதிப்பான வசதிகளைக் கருதுகையிலே அவை நமக்கு சாத்தியமாக, மிக அருகில் இருப்பதாகத் தோன்றுகின்றது. கொஞ்சம் பணமிருந்தால்போது, கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால்போது 'இதையெல்லாம்' அடைந்துவிடுவேன் என நினைக்கிறோம். இதற்கு நேர்மாறானதே உண்மையென நமக்கு ஏனோ தோன்றுவதில்லை.
நான் ஒரு ஆவணப்படம் பார்த்தேன் - அதில் ஜப்பானில் வாடகை செலுத்த வசதியின்றி கணினி மையத்தின் இரண்டு, மூன்று அடிகள் மட்டுமே இடமுள்ள சதுரத் தடுப்புக்குள் வாழும் மக்களைக் காட்டினார்கள். கருவறைக்குள் தூங்கும் கருவைப் போலத்தான் இரவில் படுக்க வேண்டும். அந்த நபர்களே பகலில் கேளிக்கை, கொண்டாட்டம் என ஈடுபட்டு தம் போதாமையை மறக்க முயல்கிறார்கள். எதிர்காலத்தில் பெரும்பாலான நகரங்களில் வீடுகள் இப்படித்தான் மாறும் என நினைக்கிறேன். அதில் வாழும் மக்கள் ஒரு கோடி, பத்து கோடி மதிப்பிலான வீடுகளைப் பற்றி கனவு காண்பார்கள், தாம் ஏன் இப்படி இருக்கிறோம் என யோசிக்க, கேள்வி கேட்க மாட்டார்கள்.
யார் இந்த வாழ்க்கையை இப்படி மாற்றியது? இதை ஏன் சொர்க்க உலகம் என்று சொல்கிறார்கள்? சமத்துவம், சமவாய்ப்புகள் உள்ளதாக ஏன் சொல்கிறார்கள்?
மிக நீண்ட சூப்பர் மார்க்கெட்டாக வாழ்க்கை மாறும்போது நம் டிராலி நிரம்பி வழிகிறது, நாம் அடுத்தவர்களின் டிராலியைப் பார்த்து மனம் வெதும்புகிறோம், நம் வாழ்க்கை காலியாக இருப்பதை நாமே பார்க்காமல் இருப்பது குறித்து நாம் நிம்மதியடைகிறோம்.

தாமரைக் கன்னங்கள்




பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்யும்போது வெள்ளப்பெருக்கு வருவது புதிதல்ல. முன்பு திட்டமிடப்பட்ட அழகான நகரம் என அறியப்பட்ட, பூங்கா நகரம் எனக் கொண்டாடப்பட்ட பெங்களூர் மென்பொருள் சொர்க்கமாக வளர்ந்து விரிந்தபோது சரியான திட்டமிடலோ கட்டமைப்பு வளர்ச்சியோ இல்லாமல் கொடூரமாக உருமாறிவிட்டது. துணை முதல்வர் டி.கெ சிவகுமார் பெங்களூர் "திட்டமிட்டு உருவான நகரம் அல்ல" எனச் சொல்லும் நிலை வந்துவிட்டது. இப்போதும் பெங்களூரின் சீதோஷ்ண நிலை, நவீனக் கலாச்சாரம் ரசனைக்குரியதே. ஆனால் உலகின் ஆக மட்டமான சாலைகளை பெங்களூரிலே பார்க்க முடியும் - புதிதாக சாலையை அமைத்துவிட்டுப் போவார்கள், ரெண்டு நாள் அரைமணி நேரம் தூறல் போட்டால் அந்த சாலை பிஸ்கட்டில் உள்ள கிரீமை குழந்தை நக்கியெடுத்ததைப் போல மறைந்துவிடும். இங்கு சாலையா இருந்தது என மக்கள் மூக்கில் விரலை வைக்க முடியாது, பின்னால் பெரிய டிராபிக் ஜாம் ஆகிவிடும். இந்த சாலைகளில் வாகனம் ஓட்டியும், ஆட்டோவில் பிரயாணம் செய்தும் தனக்கு கடும் முதுகுவலி ஏற்பட்டதாகவும், எவ்வளவு சிகிச்சைகள் எடுத்தும் செலவு அதிகமானதே ஒழிய வலி தீரவில்லை என்று, அதனால் பி.பி.எம்.பி தனக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் எனக் கோரி ஒரு பெங்களூர்க்காரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் இன்று நாளிதழில் செய்தி பார்த்தேன். பலராலும் உணர்வுரீதியாக ஒன்ற முடிகிற பிரச்சினை இது.

இங்குள்ள சாலைகள் உடனுக்குடன் பெயர்ந்து பள்ளமாகிவிடுவதற்கு காரணம் அதிகப்படியான வாகனங்கள் எனும் அரசாங்க வாதத்தை நான் ஏற்கவில்லை. அதிகப்படியான வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு தரமான சாலைகளை இங்குள்ள காண்டிராக்டர்கள் அமைப்பதில்லை. மிகமிக மலினமான பொருட்களாலே சாலையமைக்கிறார்கள். ஒரு மேடுபள்ளமான சாலையில் பேட்ச் போடவரும் ஒப்பந்த ஆட்கள் அரைமணியில் ஜல்லியும் கீலும் போட்டு உருளை வாகனத்தை ஓட்டி ஏதோ மாஸ்டர் பரோட்டோ போடுவதைப் போல முடித்துவிடுவார்கள். ரெண்டே நாட்களில் தோனியின் கன்னத்தில் உள்ள மேடுபள்ளங்கள் அந்த சாலைப் பகுதியில் தோன்றும். அவை சில வாரங்களில் அலியா பட்டின் கன்னக்குழிகள் ஆகும். சிலநேரங்களில் டூவீலர் சக்கரங்கள் உள்ளே போனால் வண்டி சரிந்துவிடும். இந்த குழிகளில் விழாமல் வாகனம் ஓட்ட ஒடிஸி நடனமே ஆடவேண்டும்.
2015இல் மழையினால் கொத்துப்பரோட்டாவாகும் இச்சாலைகளைக் கலாய்ப்பதற்காக நஞ்சுண்டசாமி என்பவர் சாலை நடுவே உள்ள பள்ளத்தில் வண்ணமடித்து அதில் ஒரு பெரிய முதலை பொம்மையை மிதக்கவிட்டார். ஆனாலும் அதிகாரிகள் அதைப் பார்த்து சிரித்தபடி ஊர் சூலெ மகா என்று போய்விட்டார்கள்.
பி.பி.எம்.பி ஒருபக்கம் வரி போதாமையால் கடன் சுமையால் தவிக்கிறது. ஜப்பானிடம் எட்டாயிரம் கோடிகள் அண்மையில் கடன் வாங்கியிருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். இன்னொரு பக்கம் இந்த ஆயிரக்கணக்கான கோடிகளை பல வருடங்களாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலங்களில், மட்டமாக அமைக்கப்படும் சாலைகளில் செலவிட்டு வீணடிக்கிறார்கள், தொலைநோக்குத் திட்டமின்றி செயல்படுகிறார்கள் என விமர்சிக்கிறது பெங்காவால்க் ஆவணப்படம் (The never ending construction of Bengaluru). பிரச்சினை கர்நாடக அரசாங்கங்கள் வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல தற்காலிக லாபங்களை மட்டுமே சிந்திக்கின்றன என்பதே - எந்த திட்டத்தையும் அமைச்சர், உள்ளூர் தலைவர், அதிகாரி, ஒப்பந்தக்காரர்கள் சேர்ந்து தமக்குள் பங்குபோடுவதையே முதலில் செய்கிறார்கள். சில திட்டங்களில் அதிகாரிகளின் பினாமிகளே நேரடியாக முதலீடு செய்து சம்பாதிக்கிறார்கள். இவர்கள் தின்று மீதம் வைக்கும் பணமே சாலையாகவோ பாலமாகவோ தோன்றுகிறது. நீங்கள் சிக்கன் குழம்புக்கு பொருள் வாங்க முன்னூறு ரூபாய் எடுத்துப் போய் அதில் சரக்கு வாங்கி ஊற்றிக்கொண்டு கடைசியில் முப்பது ரூபாய்க்கு வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு மட்டும் வாங்கி வந்து குழம்பு வைத்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இங்குள்ள கட்டமைப்புகளும் இருக்கும். ஊழலும் பயனர்களான மக்களின் நேரடியான கட்டுப்பாடும் இன்றி அரசு, அதிகாரி, ஒப்பந்தர்க்காரர் மாபியாவிடம் நகரம் போனால் இப்படித்தான் இருக்கும். இதன் விளைவை மக்கள் நேரடியாகக் காண்பது மழை வெள்ளத்தின்போதுதான்.
தமிழ்நாட்டின் கிராமங்களிலும், சென்னைப் புறநகரங்களிலும் உள்ள சாலைகள் பெங்களூர் சாலைகளைவிட பலமடங்கு தரத்திலானவை. நம்மூரிலும் ஊழல் உண்டு என்றாலும் கொஞ்சமாவது தரமாக அமைக்க வேண்டும் எனும் அழுத்தம் அங்கு இருக்கிறது. இப்படியே பத்தாண்டுகள் போனால் பெங்களூருக்கு வரவேண்டிய வளர்ச்சி சென்னைக்கும் ஹைதராபாதுக்கும் போய்விடும். பெங்களூரை இந்த மாபியா உள்ளிருந்து தின்று அழிக்கிறது.
மழை இன்னும் சில நாட்கள் பெய்து முடித்தபின் இந்த சாலைகளில் வண்டியோட்ட வேண்டுமே என நினைத்தால் திகிலாக இருக்கிறது.

இனிவரும் காலம் இருளின் காலம்

 


அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான அலி கான் முகமதாபாத் மீதான வேடிக்கையான குற்றச்சாட்டுகளைப் பற்றி இன்று ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் ஒரு விரிவான கட்டுரையைப் படித்தேன். அலி கான் ஒன்றும் சாதாரண பேராசிரியர் அல்ல - அவர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர். அவரது தாத்தா ஜின்னாவுடன் சேர்ந்து முஸ்லீம் லீக்கை நடத்தினார், அதன் பொருளாளராகவும், நிதியாளராகவும் இருந்தார், அதன்பின் பாகிஸ்தான் அரசுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு லண்டனில் வாழ்ந்து இறந்து போனார். இந்திய அரசு அதன்பிறகு இஸ்லாமிய ராஜ குடும்பங்களின் சொத்துக்களை அரசு உடைமையாக்க எதிரிச் சொத்து சட்டத்தைக் கொண்டு வந்தது. (சயிப் அலிகான் இது சம்மந்தமான வழக்கை தள்ளிவைப்பதற்காக தன் மீது கொலை முயற்சி நடந்ததாக பெரிய டிராமாவே போட்டார்.) அலி கானின் அப்பா இம்முயற்சிக்கு எதிராக நாற்பது ஆண்டுகளாகப் போராடி உச்சநீதிமன்றம் போய் வென்றார். அலி கானின் மனைவி முன்னாள் ஜம்மு காஷ்மீர் அமைச்சரின் மகள். அலி கானும் சமஜ்வாதி கட்சியில் இருக்கிறார்.

அலி கான் தன் பேஸ்புக்கில் எழுதிய பதிவு ரொம்ப கண்ணியமாக அரசை விமர்சிக்கிற குறிப்பு - அதில் அவர் கர்னல் சோபியா குரேஷியாவை பாஜக அரசு பயன்படுத்தி மத ஒற்றுமையைக் காட்டுவதைப் பாராட்டிவிட்டு அது வெறும் டோக்கனிஸம் தானே, மதக்கலவரத்தின் பெயரிலும் கும்பல் வன்முறையிலும் கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்கு இதனால் நீதி கிடைக்கப் போகிறதா என்று கேட்டார். அடுத்து அவர் போருக்காக கூவுகிற சங்கிகளைச் சாடினார். இதைவிட நூறு மடங்கு கடுமையாக பாஜகவை விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால் அலி கான் ராணுவத்தை அவமதித்து, நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாக எழுதியதாக ஹரியானாவில் இருந்து பாஜககாரர் ஒருவர் புகார் அளித்தார். அடுத்து நடந்ததுதான் நேசமணி டைப் காமிடி - ஆணியைப் பிடுங்கச் சொன்னால் சுத்தியலைப் போட்ட கதையாக மகளிர் அமைப்பைச் சேர்ந்த ரேணு பாட்டியா "அலி கான் பெண்களின் கௌரவத்தை அவமதித்ததாக, மானத்துக்கு பங்கம் விளைவித்தகாக" இன்னொரு பக்கம் பொய்ப் புகார் அளித்தார். அதாவது பெண்களைப் பாலியல் ரீதியாக அசிங்கப்படுத்துவது, சீண்டுவதற்கு எதிராகத் தொடுக்கப்படும் சட்டப்பிரிவில் அலி கான் மீது வழக்குப் பதிவாகிவிட்டது. இந்த குற்றச்சாட்டுகளை அலி கான் தன் பணத்தினால் சுலபத்தில் எதிர்கொள்வார் என்றே நினைக்கிறேன். மேலும் அவர் எழுதியதை வைத்து குற்றத்தை நிரூபிக்கவே முடியாது. வழக்கு பொலபொலவென உதிர்ந்துவிடும். அவரை கொஞ்ச நாள் உள்ளே வைத்து தொந்தரவு பண்ணுவதே ஹரியானா பாஜகவின் நோக்கம் என நினைக்கிறேன். இதற்கு ஒன்றிய அரசின் பாஸிஸப் போக்குடன் உள்ளூர் அளவிலான அரசியல் விரோதமும் காரணமாக இருக்க வேண்டும். அல்லது அவரது குடும்பப் பின்னணி மீதான வெறுப்பும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

பாஜக அரசும் மைசூர் 'பாக்' என்று கடைசியில் கேட்டவர்களைக் கூட பாக் ஆதரவாளர்கள் என மானாவரியாகக் கைது பண்ணிக்கொண்டுதான் இருக்கிறது. தேசத்தின் ஒற்றுமையைக் குலைத்தல், எதிரி நாட்டுக்கு உதவும் நோக்குடன் பேசுதல் போன்ற ஆங்கிலேயர் காலத்து தேசவிரோதத் தடுப்புப் பிரிவில் கையில் கிடைத்தவர்கள் மீதெல்லாம் வழக்குப் பதிவு பண்ணி உள்ளே தள்ளுகிறார்கள். இதற்கு சற்று காலம் காங்கிரஸ் பாஜகவை தன் பதின்பருவக் காதலியைப் போலக் கொஞ்சிக் கொண்டிருந்ததும் காரணம். எதிர்க்க யாருமில்லாதபோது ஆளுங்கட்சி உடனே சர்வாதிகார அட்டூழ்யங்களை அரங்கேற்றும். இப்போதுதான் காங்கிரஸ் மயக்கம் தெளிந்து இம்மாதிரி பொய் வழக்குகளைக் கண்டிக்கத் தொடங்கியுள்ளது. "I have read and re-read the entire tweet of Prof Ali Khan Mahmudabad.Which portion of the statement did Haryana Police find objectionable and violative of law? Will someone from Haryana Police please enlighten us?" என்று பா. சிதம்பரம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரஸ் தலைமை அவ்வப்போது போர் குறித்து கேள்விவெழுப்பி ஒன்றிய அரசை லேசாக கன்னத்தில் தட்டுவதைப் போல விமர்சிக்கவும் தொடங்கியிருக்கிறது (அதற்கே பாஜக 'நகரம்' படத்தில் பெண் வேடத்தில் தோன்றும் வடிவேலு ஐயோ கையைப் பிடிச்சு இழுத்திட்டான் எனக் கதறுவதைப் போல கதறுகிறது.)

மோடி ஒருபக்கம் தரூரை திருவனந்தபுரத்தில் அன்புப் பார்வையுடன் கைகுலுக்கியபோதே காங்கிரஸ் சுதாரத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் தினமும் பூமியில் இவரைப் போல பிரதமர் இல்லை, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று சுற்றிசுற்றி நடனமாடி பாடிய போதாவது சுதாரித்திருக்க வேண்டும். ஆனால் கடைசியில் ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி குழுவை உருவாக்கி ஐரோப்பிய உல்லாசப் பயணத்திற்கு (அதாவது நாட்டின் பிம்பத்தை வலுப்படுத்தவாம்) அனுப்ப முடிவெடுத்தபோது காங்கிரஸ் அளித்த பட்டியலுக்கு விரோதமாக தரூரை பட்டியலில் முதலிடத்தில் தேர்வு செய்து குழுத்தலைவராகவும் நியமித்தது. அப்போதுதான் காங்கிரஸுக்கு தேசபக்தியின் பெயரில் பாஜக பக்தி ஓவராகிவிட்டதன் ஆபத்து புரிந்தது, பாஜக ஆடிப்பாடி இப்போது தன் மடியிலே கைவைத்து விட்டது விளங்கியது. ஷஷி தரூரைப் போன்ற வெட்கங்கெட்ட அரசியல்வாதியை புவியில் பார்க்க முடியாது என்று சொல்ல மாட்டேன். ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறர்கள். ஆனால் அவரது சிந்தனைத் திறன், ஆளுமைக்கு இந்த வீழ்ச்சி ரொம்ப மலினமாகத் தெரிகிறது. அவர் காங்கிரஸ் கட்சிக்குள் அதிகாரத்துடன் அமெரிக்க மாப்பிள்ளை போல வந்தவர், அவரால் அதிகாரம் இல்லாமல் ரொம்ப காலம் சும்மா இருக்க முடியாது. அவரது மனைவியின் மரணம் சம்மந்தமாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் என்றும், உளவாளி என்றும் சொல்லப்பட்ட பெண்ணுடன் அவருடைய உறவைப் பற்றியும் தொடரப்பட்ட வழக்கில் பாஜக அவருக்குச் சார்பாக தீர்ப்பு வர உதவியதுதான் திருப்புமுனை என நினைக்கிறேன். அதன்பிறகு அவர் மோடியைப் பார்த்தால் விரைப்பாக நின்று சலூட் அடிக்கத் தொடங்கினார். தேர்தலுக்காக கொஞ்ச நாள் பொறுத்தாலும் அது ரொம்ப நாள் நிலைக்கவில்லை.
ராகுல் காந்தி மூத்த தலைவர்களில் இப்படியான அதிகார மோகிகளைப் பின்னுக்குத் தள்ளும்போது அவர்கள் அப்படியே நைசாக பாஜக மீது போய் விழுந்துவிடுகிறார்கள். இத்தனைக்கும் சில வாரங்களுக்கு முன்புவரை தனக்கு பாஜகவின் கொள்கையுடன் உடன்பட முடியாது என்றெல்லாம் சொன்னார். இப்போது பார்த்தால் வெளியுறவுத் துறை அமைச்சரை விட பயங்கரமாக பாகிஸ்தானுக்கு சவால் விடுகிறார், பல்டி அடித்து பாஜகவைப் பாராட்டுகிறார். பெரிய சர்க்கஸ் வித்தைக்காரராக இருக்கிறார் மனிதர். பா சிதம்பரமும் கிட்டத்தட்ட இந்த பாணியில்தான் பாஜகவுக்கு தூதுவிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது மாறிவிட்டார். அவர் ரொம்பத் திறமையான மனிதர். பொருளாதார அறிவு மிக்கவர். அவரை தரூரைப் போல விட்டுவிடக் கூடாது.

இதெல்லாம் போகட்டும் - இன்றைய கதியில் நாம் இரண்டாம் உலகப் போருக்கு முன்பான ஜெர்மனியைப் போல மாறி வருகிறோம். வருகிறோம் என்ன மாறியே விட்டோம். வணிக நிர்பந்தங்கள் இல்லாமல் ஒரு மாத காலம் போர் நடத்த முடிந்தால், அந்தப் பதற்றச் சூழலை பயன்படுத்தி முழுமையான சர்வாதிகாரத்தை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் என இந்த சில நாட்களில் பார்த்தோம். நல்லவேளை டிரம்ப் தலையிட்டார். தெரிந்தோ தெரியாமலோ ஒரு அமெரிக்க சர்வாதிகாரி நம் நாட்டின் குடியாட்சியைக் காப்பாற்றிவிட்டார். இந்த அரசு எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இப்போது நடந்துவரும் 'அரசை எதிர்த்தால்' தேச துரோக வழக்கு, சிறை எனும் போக்கு சான்றாக உள்ளது.

இன்று சில நண்பர்களிடம் இதைக் குறித்து உரையாடும்போது எனக்கு ஒன்று தோன்றியது - மிலன் குந்தெரா தனது "ஜோக்" போன்ற நாவல்களில் காட்டுவதைப் போல, சர்வாதிகாரத்தை இனி தனிமனிதர்களால் நேரடியாக விமர்சிக்க இடமிருக்காது. புனைவின் ஊடாகவும், புனைப்பெயர், மறைமுகப் பகடி வழியாகவும்தான் இனி அரசை யாராலும் விமர்சிக்க முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற ஜனநாயகபூர்வமான போராட்டச் சூழலோ கருத்துரிமையைக் காப்பாற்றும் அரசியல் சட்டமோ நமக்கில்லை. ஆஷிஸ் நந்தி தனது "அந்தரங்க எதிரி" (The Intimate Enemy) நூலில் சொல்வதைப் போல 1947க்குப் பிறகு நம்முடைய ஆட்சியாளர்கள் வரித்துக் கொண்டது காலனிய ஆட்சியாளர்களின் ஆட்சி அமைப்பையும் சட்டங்களையுமே. காலனிய பிரஜைகளைப் போன்றே இந்திய அரசுகளும் இதுவரை நம்மைச் சந்தேகத்துடன் விரோதத்துடன் பார்த்து வந்தன. நெருக்கடிக் காலத்தில் பாஜக அரசு அதன் உச்சபட்ச சர்வாதிகாரச் சாத்தியங்களை வெளிக்கொணர்கிறது. ஆகையால் இனிமேல் மக்கள் நேரடியாக எதையும் சொல்ல இடமிருக்காது.

என் TEFL வகுப்பு அனுபவம்



கடந்த ஆண்டு இறுதியில் ஏஷியன் காலேஜ் ஆப் டீச்சர்ஸ் நிறுவனத்தில் 120 Hour InternationalTESOL/TEFL In-Class Certification Programஇல் சேர்ந்து அயல் மொழியாளர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் முறைகளைக் கற்றேன். இது ஒரு பட்டயப் படிப்பு. வகுப்பிலேயே நிறைய இடுபணிகள், நேரடி வகுப்பெடுக்கும் சவால்களை முடித்துவிட்டு கடைசியில் கனடிய நிறுவனமான TCBE நடத்தும் டெஸோல் கேனெடா போர்ட் தேர்வையும் எழுதினேன். என் வாழ்வின் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இந்த வகுப்பும் அதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அமைந்தன.
நான் பள்ளிக்கல்வி அளவில் பயிற்றுவித்ததில்லை என்றாலும் முன்பு ஒரு நண்பரின் தூண்டுதலால் இளங்கலை கல்வியல் பயின்று பட்டம் பெற்றேன். பயிற்றுவித்தல் குறித்த கோட்பாடுகள், மாணவர்களின் உளவியல், பயிற்சி என அமைக்கப்பட்ட அந்த வகுப்பில் "இதெல்லாம் தெரிஞ்சதுதானே" எனும் அனுபவம் பெற்ற ஆசிரியரின் அலட்சியம் எனக்கு இருந்தது. ஏனென்றால் என்னுடன் இருந்த மாணவர்கள் இளங்கலை முடித்துவிட்டோ பள்ளிக்கல்வி முடித்தோ நேரடியாகப் பயில வந்தவர்கள். அவர்களைப் பயிற்சி வகுப்பெடுக்கச் சொன்னால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தைப் போல ததிங்கிணத்தோம் பண்ணுவார்கள். நான் பெரிய சவால்கள் இன்றி ஒருமாதிரி ஜாலியாக அப்பட்டத்தை முடித்தேன். ஆனால் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு நான் அதே போன்ற வகுப்பில் அமர்ந்தபோது பயிற்றுவித்தல் குறித்த கோட்பாடு, நம்பிக்கைகள் மட்டுமல்ல வகுப்பின் அமைப்பு, வசதிகள், மாணவர்களின் எதிர்பார்ப்பு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. அதாவது நான் கற்றதும், கற்றுவித்ததும் சம்பிரதாயமான வகுப்புகளில். அங்கு 70-100 மாணவர்கள் இருப்பார்கள். "சொல்லிக் கொடுப்போம்", "அறிவுறுத்துவோம்", கரும்பலகையை, நுண்பலகையை பயன்படுத்துவோம், குறிப்புகள் அளித்து தேர்வெழுத வைப்போம். ஆசிரியரின் போதனைதான் முக்கியமாக இருக்கும். இன்று மாணவர்களை மையமிட்ட பயிற்றுவித்தல் முறை வந்துவிட்டது. பள்ளி வகுப்புகளில் உள்ள வசதிகளோ ஏராளம். மாணவர்கள் கலைந்து அமரும் வகுப்பு, பயிலரங்கு பாணி வகுப்பு, 20க்கும் உட்பட்ட மாணவர்கள் அமரும்வகுப்புகள் அதிகமாகிவிட்டன (வசதியான நகரங்களில்). இவ்வகுப்புகளில் மாணவர்கள் ஆசிரியர் தம்மை ஆர்வமூட்டி கற்றலுக்குள் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தாமே கற்றுக்கொள்ளும் அறிவு படைத்தவர் என்பதால் ஆசிரியர் தனக்கு கற்றலுக்கான வசதிகளை ஏற்படுத்தினால், அவர் வகுப்பை ஒருங்கிணைத்தால் போதும் என நினைக்கிறார்கள். ஆசிரியர் எனும் இடத்தில் இன்று செயலாக்குநர் எனும் பெயரையே பரிந்துரைக்கிறார்கள். 360 பாகை மாற்றம் இது. உதாரணமாக, 40 நிமிட / 120 நிமிட வகுப்பை நீங்கள் 6-8 பகுதிகளாகப் பிரித்தால் எப்படி ஒரு பாடத்தை அறிமுகப்படுத்தி அதன் முடிவில் முழுமையாக கற்றுக்கொள்ள வைப்பது என்பதற்கு உத்திகளை வகுத்திருக்கிறார்கள். விளையாட்டுகள், ரசனையான இடுபணிகள், இணைநிலையினர் பயிற்றுவித்தல், செயலிகளின் பயன்பாடு, மீளச் சொல்லுதல், மீளச் செய்தல் என வழிமுறைகள் வகுப்பை வெகுசுவாரஸ்யமாக்குகின்றன.
எங்கள் TEFL வகுப்புகள் ரொம்ப ஜாலியான, களேபரமான அனுபவமாக அமைந்தன. ஆடுவது, பாடுவது, சவாலான பணிகளைச் செய்வது, புதிர்களை விடுவிப்பது, வரைவது என. அப்போதுதான் எனக்கு நான் ஏதோ விட்டராச்சார்யா காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனப் புரிந்தது. நான் எந்த கல்லூரியிலும் இத்தகைய வண்ணமயமான வகுப்புகளைக் கண்டதில்லை.
உயர்நிலை கல்வி நிறுவனங்களில் இன்று மிக அதிகமான பாடங்களை, சிரமமான பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டியிருப்பதால், காலக்கெடுவைத் துரத்திக்கொண்டே இருப்பதால், 400-500 மாணவர்களை சமாளித்து தேர்வுத்தாள்களைத் திருத்தி பல நிர்வாகப் பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதால் இவ்வளவு ரசித்து, கற்றலின் சுவாரஸ்யத்தை, ஒவ்வொரு மாணவரும் பயன்படும்படி வகுப்பை நடத்த முடிவதில்லை. 100-200 மாடுகளை ஒற்றை ஆள் ஓட்டிக்கொண்டு போவதைப் போலத்தான். ஆனால் இந்த TEFL வகுப்புகள் குறைவான பங்கேற்பாளர்களுக்கு நெருக்கமாக அமர்ந்து பயிலரங்கு நடத்துவதைப் போல உள்ளன. அதனால்தான் இன்றைய சில தனியார் பள்ளிகள் கல்லூரிகளைவிட நான்கு மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. உயர்நிலைக் கல்வியை விட பள்ளிக்கல்வியில் அதிகமாக நவீனமும் பரிசோதனை முயற்சிகளும் நிகழ்கின்றன. உயர்கல்வி வகுப்புகள் இன்றும் ராஜ்கிரண் தலையில் அடித்து பாடையை நோக்கி அழுவதைப் போலத்தான் உள்ளன.
நான் இந்த வகுப்பில் கலந்துகொண்டபோதுதான் என் பயிற்றுவித்தலை முழுக்க மாற்ற முடியும், மாற்றவும் வேண்டும் எனப்புரிந்து கொண்டேன். ஆனால் சிக்கலான கோட்பாடுகளை நாம் ஆங்கில உரையாடலை சொல்லித் தருவதைப் போல விளையாட்டு, புதிர், இடுபணி எனச் சொல்லித் தரவும் முடியாது. 300-400 பக்க கட்டுரைகளை நம் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு முன் படித்துக்கொண்டு வருவதில்லை. ஆசிரியர்தான் கரண்டியில் எடுத்து ஊட்ட வேண்டும். ஆனாலும் warmer, context setting, இடுபணிகளை ஒவ்வொரு வகுப்பிலும் விதவிதமாக முயன்று பார்த்தேன். அதில் வரும் பிரச்சினைகளை TEFL வகுப்பில் என் ஆசிரியரிடம் குறிப்பிட்டு தீர்வு கேட்பேன். கடந்த செமஸ்டரில் என் வகுப்புகள் மேம்பட்டதை உணர்ந்தேன். போனதும் இலக்கிய கூட்டத்தில் பேசுவதைப் போல ஆரம்பிக்காமல் முடிந்தளவுக்கு சுயகற்றலுக்கான வெளியாக வகுப்பை மாற்றினேன். ஆங்கிலப் பாடத்தைப் பொறுத்தவரையில் நான் இலக்கணம், சொல்வளம், எழுதும் முறை போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினேன் (ஏனென்றால் பாடத்திட்டமும் அதையே அனுமதிக்கும்). ஆனால் அவற்றைத் தாண்டி மிக எளிமையாக வாசிப்பு, கவனித்தல், பேச்சு, எழுத்து ஆகிய திறன்களை நேரடியாகச் 'சொல்லித் தராமலே செய்ய வைத்து' பயிற்றுவிக்க முடியும் என அறிந்த்கொண்டேன். இந்தப் பயிற்சியை உயர்கல்வியில் எப்படிச் செயல்படுத்துவது என்பதே சவால் என்று தோன்றுகிறது. அங்குதான் ஆசிரியரின் திறன், கற்பனை முக்கியமகிறது.
நான் விசாரித்தவரையில் இந்தியாவில் இளங்கலை கல்வியியல் வகுப்புகள் கூட இந்தளவுக்கு நவீனமாக, புத்துணர்ச்சியாக நடப்பதில்லை. அதனாலே இப்போது கல்வி நிறுவனங்களே தமது முதுகலைப் படிப்பில் TEFT சான்றிதழ்ப் படிப்பையும் இணைத்து விடுகிறார்கள்.
எங்கள் ஆசிரியர் ஷாலினி ஜோன்ஸ் நான் பார்த்ததில் மிகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் -அவர் ஒரு அறிஞரோ சிந்தனையாளரோ அல்லர். நான் அத்தகையோரையே கல்லூரியில் கண்டிருக்கிறேன். இவர் செயல்பாட்டுநர் - முழுக்க வேறுவிதமான கல்வியியல் ஆசிரியர். என்னைவிட வயதில் குறைவானவர். ஈகோவை விடுத்து அங்கு அவர் முன் வெறும் மாணவராக அமர்ந்தது, திட்டு வாங்கியது, திருத்தங்களைப் பெற்றது, இடுபணிகளைச் செய்தது நல்லனுபவம். என்னை வெகுவாக புத்துணர்ச்சியூட்டிய அனுபவம் அது. இன்னொன்று மாணவராக இருக்கையில் நமது மனநிலை எப்படி இருக்கும் எனப் புரிந்தும் கொண்டேன் - மாணவர்களுக்கு சுதந்திரம் உள்ளதைப் போன்றே கடுமையான நெருக்கடியும் உள்ளது. மாணவர்களின் அடிப்படையான தேவையே தாம் தமது நடத்தை காரணாமாக ஆசிரியரால் எதிர்மறையாக மதிப்பிடப்படக் கூடாது, ஆசிரியர் தம்மைப் பொருட்படுத்த வேண்டும், சமமாக நடத்த வேண்டும் என்பதே. ஒரு வகுப்பில் தற்செயலாக சில மாணவர்களை அதிகமாகக் குறிப்பிட்டா கூட அது மற்றவர்களை பாதிக்கும். மாணவர்கள் அடிப்படையில் குழந்தைகளைப் போன்றவர்களே. வயதெல்லாம் பொருட்டில்லை - தன் பலவீனத்தை ஒப்புக்கொண்டு அமையாமல் ஒருவரால் படிக்க முடியாது. ஆசிரியரின் அறம் என்பது தொடர்ந்து தன் சமத்துவப் பண்பை பேணுவதுதான். என் மனநிலையை ஒரு மாணவராக உற்று கவனித்தபின்னர் என் மாணவர்கள் என் வகுப்பில் எப்படி உணர்கிறார்கள் என ஊகிக்க முடிந்தது. ஒரு கனெடிய ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து உரையாடியபோது மாணவர்களை நண்பர்களாக நடத்தலாமா, கூடாதா, வரம்பு என்ன ஆகிய விசயங்களை விவாதித்தார். நான் நிறைய யோசிக்கவும் கற்றுக்கொள்ளவும் உதவிய வகுப்பு அது.
என் சக ஆசிரியர்களுக்கு இந்த வகுப்பை பரிந்துரைக்கிறேன். இணையத்தில் Asian College of Teachers எனத் தேடிப் பாருங்கள். இணையவழியிலும் நேரடி வகுப்பிலும் படிக்கலாம்.

நாவலில் பத்திகளை எழுதுவது - மெக்-இவன்

 இந்த நேர்முகத்தில் இயன் மெக்-இவன் புனைவில் வரும் ஒரு பத்திகளை கவிதையின் வரிகளுடன் ஒப்பிடுகிறார். கவிதையில் வரிகள் இடையே ஓசையளவிலும் கருத்து, தொனி, அர்த்தங்களின் அளவிலும் மாற்றங்களும், முரண்களும் அவசியம், இவை ஒரு சீராக வரும்போது தாளமாகிறது. அது வாழ்க்கையின் பாய்ச்சலுக்கு, நமது பிரக்ஞையின் உள்ளோட்டத்துக்கு நெருக்கமாக கவிதையைக் கொண்டு வருகிறது. ஆனால் கவிதையின் தீவிரத்தை, மிக நுட்பமான விவரிப்பை புனைவில் நம்மால் கொண்டு வர முடியாது. செய்தாலும் அது வாசகருக்குத் திகட்டும். கதை ஒழுங்குக்கு வராமல் அலைவதாகத் தோன்றும். கவிதையின் தீவிரத்தையும் அழகையும் புனைவுக்கு கொண்டு வந்து அதேநேரம் அது ரொம்பவே கவிதைத்தனமாக ஆகாமல் இருக்க மெக்-இவன் ஒரு உத்தியைச் சொல்கிறார் - இது ஏற்கனவே ஸ்டைலிஸ்டுகள் பலமுறைச் சொன்னதுதான்: ஒவ்வொரு பத்தியையும் தன்னளவில் முழுமையான ஒரு வாக்கியமாகக் கருதி உருவாக்குவது. ஒரு அத்தியாயத்தில் பத்து பத்திகள் இருந்தால் ஒவ்வொன்றும் கதையின் வளர்ச்சியில், போக்கில் ஒருவிதமான மாற்றத்தின் ஒழுங்குவரிசையை உருவாக்குவதில் பங்களிக்கும். அவை ஒருங்கே ஒருவித தாளத்தை, மனநிலையைக் கட்டமைக்கும். தனித்தனியாக அவற்றுக்கு மதிப்பிருக்காது. இப்படியான அத்தியாங்களைப் படிக்கையில் தன்னளவில் மிகுந்த அழகு கொண்டவையாக, நம் மனத்தில் ஆழமாகப் படிவனவாக இருக்கும். கோயில் பிரகாரத்தில் தீட்டப்படி தனி ஓவியங்களைப் போல, சிற்ப வரிசையைப் போல. கலவியின் போது தரப்படும் முத்தங்களைப் போல.


மெக்-இவன் இதைச் சொல்லக் கேட்டபோது எனக்கு என் புனைவிலும் அத்தியாயங்களை மிகவும் ஈடுபாட்டுடன் ரசனையுடன் அமைக்க வேண்டும், கதையை நகர்த்துவது மட்டுமே அத்தியாயங்களின் நோக்கமல்ல என்று தோன்றியது. இப்போது எழுதிவரும் நாவலைத் திருத்த இது உதவியது.

சினிமா நடிகர்களின் பேட்டிகளைவிட இத்தகைய பேட்டிகள் அர்த்தபூர்வமானவை. எழுத்தாள நண்பர்கள் இதைப் பாருங்கள். 


பாஜக அரசின் இஸ்லாமிய வெறுப்பரசியல் எப்படி மோசமான போர்த்தந்திரமாகியது

 






எதிர்க்கட்சிகள் பாஜகவின் காலாட்படையாகிவிட்ட நிலையில் இப்போது காங்கிரஸின் இடத்தில் இருந்து பாஜகவின் மோசமான போர்த்திட்டம், தவறுகளை அம்பலப்படுத்தி விமர்சிப்பது கரன் தாப்பரின் The Wire தான். அருண் ஷௌரியின் பேட்டியில் வரும் விமர்சனம் அவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது (தொடுவழியை முடிவில் போடுகிறேன்):

1) அருண் ஷௌரி முதலில் சொல்வது மோடி அரசு போர் நிறுத்தம் செய்வதாகச் சொல்லிவிட்டு எப்போது வேண்டுமானாலும் இது நடக்கும் எனக் கூறுவது தவறு என்பது. எப்போதுமே ஒரு தேசத்தால் போர்த் தயார் நிலையில் இருக்க முடியாது. மேலும் நாளையே ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்து அப்போது நம்மால் போர்த் தொடுக்க இயலாவிடில் இந்திய அரசின் மீதான உலகளவிலான நம்பிக்கை குலையும். எப்படிப் பார்த்தாலும் முன்கூறாக ஒன்றை அறிவிப்பது, பஞ்ச் டயலாக் விடுவது அரசின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும். அது நல்லதல்ல.

2) இந்திய அரசு மிதமிஞ்சி அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறது. அமெரிக்கா நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல. அது பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் நிதியை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இந்தியாவையும் சமாதானப்படுத்தும். வணிக உறவை ரத்து செய்வேன் என மிரட்டிப் பணிவைத்தேன், குருவி ரொட்டி வாங்கிக் கொடுத்து அமைதிப்படுத்தினேன் என்று சொல்லி அவமானப்படுத்தும். அதற்கு சீனா மேலான நம்பத்தகுந்த பங்காளி என்கிறார் அவர் (சீனா இன்னும் ஆபத்தானது என்பதே என் கருத்து). அதனால் பரவலான கூட்டாளிகளின் வலைத்தொடர்பில் இருந்தபடி இந்தியா பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பதே நல்ல பயனளிக்கும்.

3) இந்தியா யுத்தம் தொடுப்பதற்குப் பதிலாக உளவுத்துறையைப் பலப்படுத்த வேண்டும். பெஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தீவிரவாதிகள் இங்கு வந்து தங்கியிருந்தார்கள், தாக்குதலுக்குப் பின்பும் அவர்கள் அப்பகுதியிலேயே இரு மணிநேரங்கள் ராணுவ உடையில் இருந்தார்கள் எனப்படுகிறது. எனில் ஏன் உளவுத்துறை எச்சரிக்கவில்லை? (அவர்கள் இரண்டு நாட்கள் மாமனார் வீட்டில் இருந்து உண்டு விழாவைச் சிறப்பித்துவிட்டு எதிரி மன்னன் போர்த் தொடுக்கப் போகிறான் மன்னா என்று வந்து சொன்னபோது இங்கே விமானப்படைத் தாக்குதல் ஆரம்பித்துவிட்டது.) இதைச் சரி செய்யாமல் போர்த்தொடுப்போம் என்றால் அதற்கு முடிவே இருக்காது. பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் கடன் தேவைப்படும்போதெல்லாம், அங்கு ராணுவம் நம்பிக்கை இழக்கும்போதெல்லாம் இங்கு தீவிரவாதிகளை அனுப்புவார்கள். சீனாவின் பலம்பொருந்திய ஆயுதங்களும் படைகளும் இருக்கும்வரை பாகிஸ்தான் அஞ்ச வேண்டியிருக்காது. கடைசியில் வந்து காப்பாற்ற பிக்பாஸ் அமெரிக்காவும் உள்ளதே. ஆக சரியான தீர்வு நம்மை நமது உளவுத்துறையை பலப்படுத்துவதுதான்.

4) தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது உலகம் முழுக்கவிருந்து அதைக் கண்டித்தார்கள். இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக கண்டித்தார்கள், காஷ்மீர மக்கள் பேரணி நடத்தினார்கள். அரசின் முடிவுக்கு துணை நிற்பதாகச் சொன்னார்கள். இதுவரைச் சரி - ஆனால் அரசு தயங்கி நேரத்தை வீணடித்து கடைசியில் விமானத் தாக்குதலை பாகிஸ்தான் மீது தொடுத்தபோது அதை என்னதான் ஊடகங்கள் மிகையாகப் பெருக்கினாலும் மக்கள் நம்ப மறுத்தார்கள். மக்களின் பரவலான உணர்ச்சிகரமான ஆதரவு இருக்கவில்லை (சங்கிகள் எப்போதும் போல கத்திக்கொண்டுதான் இருந்தார்கள்.). அதனாலே போர்த்தளபதிகளை - குறிப்பாகப் பெண்களை - வைத்து ஊடக சந்திப்பை மோடி அரசு நடத்தியது, அவராக வந்து அறிவிக்கவில்லை, அவர் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது என்கிறார் ஷௌரி. இது ஏற்கத்தக்கதாக உள்ளது.

5) ஒரு நல்ல அரசானது எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். அதுவே ராஜதந்திரம் - நாம் இந்நாட்டின் இஸ்லாமியர்களை விரோதிகளாகப் பாவித்தால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. மேலும் பாகிஸ்தான் சொல்வது உண்மையெனும் பிம்பம் ஏற்படும். இந்தியா ஒரு இந்துத்துவ அரசு எனும் எதிர்மறைப் பிம்பம் ஒழியாமல் இந்திய அரசால் தீவிரவாதத்துக்கு எதிராக வலிமையாகப் போர்தொடுக்க முடியாது. இதேபோலத்தான் மோடி தன் குஜராத்தைத் தாண்டி பிற மாநிலங்களையும், பிற மக்களையும் தன் மக்களாக நினைக்க வேண்டும், சமத்துவமாகப் பாவிக்க வேண்டும், தமிழர்களை ஒதுக்கக் கூடாது என்கிறார். இதை மிக முக்கியமான பார்வையாகக் கருதுகிறேன். உ.தா., காஷ்மீர மக்கள் தீவிரவாதத்தைக் கண்டித்து நடத்திய பேரணியை மோடியின் அரசுப் பாராட்டி அரவணைத்திருக்க வேண்டும். நம் எதிரிகள் தீவிரவாதிகளே, இஸ்லாமியர் அல்லர் என வலியுறுத்தியிருந்தால் உலகின் ஆதரவு நமக்குக் கிடைத்திருக்கும். மேலும், தன் மக்களை பாரபட்சமின்றி நேசிப்பதே ஒரு அரசின் தர்மம். இந்த அரசு காஷ்மீரத்து ஜனங்களை ஏதிலிகளாக மாற்றிவிட்டது. காஷ்மீர் நமது என்று சொல்வதற்குப் பதில் காஷ்மீரிகள் நம்மவர்கள் எனத் திரும்பத்திரும்பக் கோர வேண்டும். அதுவே சிறந்த அரசியல், அதுவே அசலான போர்த்தந்திரம்.

விடா முயற்சி விஸ்வரூபத் தோல்வி (இது முழுக்க முழுக்க ஒரு சினிமா விமர்சனம்)



விக்ரம் மிஸ்ரி யாருக்காக தாக்கப்பட்டார்? ஏன் காங்கிரஸ் மோடிங்கிரஸாக மாறியது?
வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்திய-பாகிஸ்தான் யுத்த நேரத்தில் அரசு, ராணுவத்துக்கும் ஊடகத்துக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டார் (அவர் வேறு பணிகளையும் ஆற்றினாலும் அவரது ஊடகச் சந்திப்புகளே கவனம் பெற்றன). பாலத்தின் மீது யார் போனவர்கள் மோடி, பாகிஸ்தான் ராணுவ தளபதி அஸிம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். காஷ்மீரில் நடத்தப்பட்ட பெஹல்காம் தாக்குதல் துவங்கி போர் நிறுத்தம் வரை இவர்களில் சிலருக்குப் பங்குண்டு. இதன்பின் வணிக ஒப்பந்தம், லாபக்கணக்குகளை முடிவு செய்வது, இந்திய எல்லை மீதான ஆதிக்கம், தெற்காசியாவில் இந்தியாவின் ராணுவ ஆகிருதி ஆகிய விசயங்களைத் தீர்மானிப்பது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான வணிக முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட நோக்கங்கள் இருந்தன. ஆபரேஷன் சிந்தூர் என்பதற்குப் பதில் ஆபரேஷன் பிக்பாஸ் என்று வைத்திருக்கலாம் - யார் இங்கு பிக்பாஸ் அமெரிக்காவா, சீனாவா என இந்தியாவும் பாகிஸ்தானுமாக மோதிப் பார்த்து கடைசியில் மொத்தமாக டிரம்பில் காலில் பணிந்து நீங்கதான் எப்பவுமே எங்க பாஸ் என ஒப்புக்கொண்டார்கள். டிரம்பும் சீனாவுடனான லடாயை முடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து தன் வரி யுத்தத்தை சமரசம் பண்ணி நிறுத்தலாம் எனச் சொல்லியிருக்கிறார். அத்துடன் சிந்தூர் விளம்பரம் முடிவுற்றது.
எஸ்.எல் பைரப்பாவின் “பர்வா” நாவலில் ஒரு காட்சி வரும் - மத்சய தேசத்தின் விராத மன்னர் பாண்டவர்களுக்கு நெருக்கமானவர். ஆனால் அவரது மகனோ கௌரவர்களுக்கு நெருக்கமாக இருப்பான். குருட்சேத்திரப் போரில் எப்படியும் நாங்கள்தாம் ஜெயிக்கப் போகிறோம், எங்களுக்கே உத்தராவை மணமுடியுங்கள் என துரியோதனனின் தூதன் கேட்க, பாண்டவர்களுக்கான நியாயங்களையும் விராத மன்னர் பரிசீலிப்பார். துரியோதனின் நோக்கம் விராத மன்னரின் உறவையும் படைகளையும் இந்த மணவுறவின் வழியாகப் பெறுவதல்ல, அவற்றை பாண்டவர்கள் அடையாமல் தடுப்பது மட்டுமே. இதற்கு நடுவில் விராத மன்னர் தன் மகளுக்கு தம் கலாச்சாரப்ப்படி ஒரு வலுவான மணமகனுக்குக் கொடுக்கவா அல்லது பணம் செலவழித்து பல நாட்டு மன்னர்களை அழைத்து சுயம்வரம் நடத்தவா, இதன் லாபநட்டக் கணக்கென்ன, நியாய தர்மம் என்ன என்று குழம்பிக்கொண்டிருப்பார். யாரும் அப்பெண்ணுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க மாட்டார்கள். எனக்கு ஆபரேஷன் சிந்தூரின்போது பைரப்பாவின் நாவலின் இந்தப் பகுதியே நினைவுக்கு வந்தது - யாரும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் உயிரா சீன அமெரிக்க உறவா, மக்களின் உயிரா பாஜக அரசின் மானமா, உயிரா பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிப்பதா, உயிரா தேசபக்தியா என்று கேட்கவில்லை. யாரும் என்றால் ஊடகங்கள், யாரும் என்றால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். அரசியல், வணிகம், தேசபக்தி என்று வந்துவிட்டால் அரசியல்வாதிகள் மக்களின் உயிரை துச்சமாக மதிப்பார்கள், அவர்கள் இடையே கட்சி வேறுபாடு இல்லை எனப் புரிந்துகொண்டேன். பல்வேறு ஆட்டுத்தோல்களை போர்த்திய ஓநாய்கள் இவர்கள். இவர்களுடைய பற்கள் எப்போதும் மக்களின் தொண்டையை நோக்கியே திறந்திருக்கின்றன. ஆபரேஷன் சிந்தூருக்கு முன் இப்படியான ஆளுங்கட்சியுடனான எதிர்க்கட்சியின் ‘கைகுலுக்கல்’ இந்தியா-பாக் பிரிவினையின்போது நடந்தது. அவ்வளவு அவசரமாக பத்தே வாரங்களில் தேசத்தைப் பிரிப்பதை, எல்லையைக் கடந்து மக்களை சில மாதங்களில் அனுப்புவதை அபத்தம் என கான் அப்துல் கபார் கான், சோஷியலிஸ்ட் கட்சியின் லாம் மனோகர் லோஹியா, கம்யூனிஸ்ட் கட்சி வேறு காரணங்களுக்காக ஹிந்து மகா சபையின் ஷியாம பிரசாத் முகர்ஜியும் மட்டுமே எதிர்த்தார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் (காந்தி அப்போது காங்கிரஸின் நிர்வாகத்தில் இல்லை, அவர் வெளியில் இருந்து எதிர்த்துவிட்டு உடனே சமாதானமானார்) மொத்தமாக கண்மூடி ஏற்றுக்கொண்டார்கள். சீக்கிரமாக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் எனும் அவசரத்தில் லட்சக்கணக்கான பேர் கலவரத்தின்போது கொல்லப்படுவதை மனதளவில் ‘அனுமதித்தார்கள்’. ஆபரேஷன் சிந்தூரின்போது எதிர்க்கட்சிகள் விழுந்து புரண்டு ஆளும் ஒன்றிய அரசின் துதிபாடிகளாக மாறுவதைப் பார்க்க 1940களின் எதிர்க்கட்சிகள் இன்னும் சற்று கூடுதல் முதுகெலும்பு கொண்டவர்களாக இருந்தார்கள் எனப் படுகிறது. என்.டி.டிவியில் பா. சிதம்பரத்துடன் நேர்முகம். கேள்வி: “2009இல் நீங்கள் உள்துறை அமைச்சராக ஆவதற்கு முன்பு நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் அமைதியான முறையில் நடவடிக்கை எடுத்தது. போருக்குப் போகவில்லை. அதைவிட மோடியின் யுத்த முடிவு மேலான விளைவுகளை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?” அதற்கு அன்றைய 1940கள் துவங்கி 70கள் வரையிலான போர்களை ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிடலாகாது, இன்று தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது என்ற சிதம்பரம் மோடி அரசின் போர் முடிவு மேலானது என்று நம்புவோம் என்று சொல்லி முடித்தார். அதாவது மறைமுகமாக மன்மோகன் சிங் அரசின் அமைதிவழியிலான பேச்சுவார்த்தையை தான் ஏற்கவில்லை என்கிறார். விஷ்வகுரு பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி ஆண்மகனாகத் தன்னை நிரூபித்தார் என சங்கிகள் பெருமைப்படுவதை அங்கீகரிக்கிறார். போர் நடத்தப்பட்ட விதம், அதன் கோளாறுகளைப் பற்றி காங்கிரஸ் கட்சி விமர்சிக்குமா என்றால் நாங்கள் இப்போதைக்கு அதைச் செய்ய மாட்டோம், அரசுக்கு உறுதியான ஆதரவைக் கொடுப்போம் என்கிறார். அதுதான் போர் முடிந்துவிட்டதே, இனிமேலும் எதற்காக மோடியின் காலடியை முத்தமிட வேண்டும்? அதான் காங்கிரஸ் தன் தேசபக்தியை நிரூபித்துவிட்டதே, இனிமேலும் ஏன் பாஜகவின் பீரங்கியாகச் செயல்பட வேண்டும்? ஏனென்றால் மோடி போர் நிறுத்தத்தை அறிவித்தபின்னரும் “இன்னும் போர் முடியவில்லை” என்று பாகிஸ்தானை எச்சரித்துவிட்டாரே. எப்போது வரைக்கும்? அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு. அப்படியெனில் இவர்களால் வாயையே திறக்க முடியாது போல. ஷஷி தரூர் இவரைவிட மோசம் - அவர் தினம் ஒரு பேட்டியாகக் கொடுத்து அதில் பாஜகவை மறைமுகமாகப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்.
விக்ரம் மிஸ்ரிக்கு வருவோம் - பாலத்தைக் கடந்து வாகனங்கள் போய்விட்டன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலில், சீன-அமெரிக்க மோதலும், ஆசிய துணைக்கண்டத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்த மேற்கத்திய நாடுகளின் கவலையும். பாகிஸ்தானைத் தொடர்ந்து போரில் ஆதரித்துவரும் சீன அரசு சற்று எல்லை மீறிப் போய்விட்டால், இந்தியாவுடன் நேரடிப் போராக இது மாறினால் அமெரிக்காவும் களத்தில் இறங்க முடியுமா? இதுவே டிரம்பின் கவலை. தமது ராணுவம் இனி நேரடியாக அடுத்தவர்களின் போரில் ஈடுபடாது என அமெரிக்கா திரும்பத் திரும்பக் கூறிவருகிறது. அதற்காக சீனாவை அத்துமீறவும் அனுமதிக்கவும் முடியாது. ஆட்டத்தைக் கலைப்பதே சரி என டிரம்ப் நினைத்திருக்கக் கூடும். அதனால் போர் நிறுத்தம் கொண்டு வரக் கேட்கிறார். அடுத்து, இந்தியாவுக்கு இந்த போர் எதிர்பாராத கிலியை ஏற்படுத்தியதாகவும், சுட்டு வீழ்த்தப்பட்ட ரபேல் விமான இழப்புகளை மேலும் தவிர்க்கும் நோக்கத்திலே இந்தியா போர் நிறுத்தத்தை விரும்பியது எனும் பார்வை. “Humbled and humiliated, India should look beyond Modi” என ஏஷியா டைம்ஸ் பத்திரிகையில் பீம் பூர்த்தல் எழுதிய கட்டுரையில் பாகிஸ்தான் ஏவிய சீன ஏவுகணைகளும் பைட்டர் ஜெட்களும் இந்தியாவின் ரபேல் போர் விமானங்களை வீழ்த்திய நிலையில் இந்தியா அதிர்ச்சியாகி தம் மானத்தைக் காப்பதற்காக அமெரிக்காவை அணுகியது என்கிறார். இதை ஒட்டியே சமாதானப் பேச்சுவார்த்தையை மே 12 அன்று நடத்தினார்கள் என்றும், இது இந்தியாவுக்குப் பின்னடைவே என்றும் கூறுகிறார். அவர் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களில் இச்செய்தி பரவலாக விவாதிக்கப்படுகிறது.
Despite the bombing of nearly a dozen sites in Pakistan, with significant damage observed, India was forced to acknowledge the loss of at least three fighter jets during this operation. These major losses reveal the weaknesses of the Indian Air Force என்று லெ மொண்டெ எனும் பிரெஞ்சு செய்தித்தளமும் கூறுகிறது. டெலிகிராப் பத்திரிகையிலும் இச்செய்தி வந்துள்ளது - How China helped Pakistan shoot down Indian fighter jets.
ரயட்டர்ஸ் இணையதளத்தில் வந்த Exclusive: Pakistan's Chinese-made jet brought down two Indian fighter aircraft, US officials say எனும் கட்டுரையில் இவ்வாறு சொல்கிறார்கள்: One U.S. official, speaking on condition of anonymity, said there was high confidence that Pakistan had used the Chinese-made J-10 aircraft to launch air-to-air missiles against Indian fighter jets - bringing down at least two.
Another official said at least one Indian jet that was shot down was a French-made Rafale fighter aircraft. Both officials said Pakistan's F-16 aircraft, made by Lockheed Martin were not used in the shootdown. ஆனால் இந்தியா இச்செய்திகளை வழக்கம்போல மறுத்துள்ளது. இந்திய ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் அரசின் அதே ஊதுகுழலில்தான் துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்ப்பதால் நாம் என்ன நடந்ததென்றே புரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம்.
ஆனால் இன்றைய சமூக ஊடக உலகில் இச்செய்திகள் பரவுவதைத் தடுக்கவும் முடியாதே. தேசபக்தர்களால் இச்செய்திகளைப் பொறுத்துக்கொள்ளவே முடியாதுதானே. ஆனால் அதற்காக அவர்கள் மோடியையோ டிரம்பையோ திட்ட முடியாதே. அவர்களுக்கு சீன மொழி வேறு தெரியாது. பாகிஸ்தானைத் திட்டினால் அவர்கள் சொன்னது உண்மையென நிரூபிப்பதைப் போலாகிவிடும். அவர்களில் பாஜக சார்பினர் ‘நாங்கள்தாம் ஜெயித்தோம், பாகிஸ்தானை ஓடவிட்டோம்’ என தூக்கத்தில் கால்களை மேல்நோக்கித் தூக்கி ஒன்றுக்கடிக்கிறார்கள். ஆனால் பெரும்பகுதி மக்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். ஒன்று இந்த யுத்தத்தை ஆரம்பித்திருக்கக் கூடாது. ஆரம்பித்த நிலையில் ஒழுங்காக முடித்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். உலகின் எந்த எல்லைக்குப் போய் ஒளிந்தாலும் நாங்கள் துரத்திப் போய் அடிப்போம் என்று சவால் விட்ட மோடி இப்போது பால்குடித்த பூனையைப் போல இருக்கிறார். ஆனால் அவரைத் திட்டினால் அக்கவுண்டை தடைசெய்வார்கள், கைது பண்ணுவார்கள். மேலும் அவர்தான் விஷ்வ குரு ஆயிற்றே. ஆகையால்தான் ‘பாலத்தைக்’ குமுறுவதாக அவர்கள் முடிவெடுத்து பாவப்பட்ட வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியை இலக்காக்கினார்கள். அவரது டிவிட்டர் கணக்கில் டுரோல்கள் படையெடுத்துப் போய் அவரை மிக மோசமாகத் தாக்கி எழுதியிருக்கிறார்கள். அவரது மகள் வெளிநாட்டில் படித்து அங்கே வேலை செய்கிறார். அவரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஒருகட்டத்தில் மிஸ்ரி தன் கணக்கைப் பூட்டிவிட்டு கிளம்பிவிட்டார். அதனாலே அவர் மே 12 அன்று வழக்கம்போல வெள்ளைச் சாமி இரவில் தோன்றி விரலை மடித்துமடித்து பாகிஸ்தானை மிரட்டியிருக்கிறார். “யுத்தம் முடியவில்லை” என்றிருக்கிறார். முடியவில்லை என்றால் ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் போரை நடத்தி வெற்றிபெற்று விட்டீர்கள் என்றால் பாகிஸ்தானுக்கு இதற்கு மேல் தீவிரவாதிகளை அனுப்பும் திராணியே இருக்கக் கூடாதே? ஆக நீங்கள் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை என ஒப்புக்கொள்கிறீர்கள். இப்போது மோடியின் மிரட்டல் அஜித்குமாரின் “விடாமுயற்சி” போல ஆகிவிட்டது - சின்னக் குழந்தைகள் கூட இனி இந்த எச்சரிக்கையைப் பார்த்து பயப்பட மாட்டார்கள். பா.சிதம்பரத்தையும் தரூரையும் தவிர தவிர யாரும் “விடாமுயற்சிக்கு” கைதட்டுவதாக இல்லை.
மக்கள் எந்தளவுக்கு மோடியிடம் வெறுத்துப் போயிருக்கிறார்கள் என்றால் ராகுல் காந்தி சில வருடங்களுக்கு முன்பு மோடி அரசு காஷ்மீர் பிரச்சினையைக் கையாள்வதில் உள்ள குளறுபடிகளையும், பாகிஸ்தானுடனான அவர்களது தவறான வெளியுறவுக் கொள்கைகளையும் விமர்சித்துப் பேசியதை இப்போது சமூகவலைதளங்களில் சுற்றலில் விட்டிருக்கிறார்கள். திரும்பவும் ராகுல் காந்தியாகுங்கள் என கேட்கிறார்கள். ஆனால் ராகுல் காந்தி தற்காலிகமாக மோடி காந்தியாக இருப்பதால் அதுவும் சாத்தியமில்லை. அவர் "Dear Prime Minister, I reiterate the unanimous request of the Opposition to convene a special session of Parliament immediately. It is crucial for the people and their representatives to discuss the Pahalgam terror attack, Operation Sindoor and today's ceasefire, first announced by US President Trump. This will also be an opportunity to demonstrate our collective resolve to meet the challenges ahead. I trust that you will consider this demand seriously and swiftly,” என்று தலைமை ஆசிரியருக்கு ஒழுங்கான பள்ளி மாணவன் அனுப்புவதைப்போல கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். மல்லிகார்ஜுன கார்கே வேறு மதிப்புக்குரிய ஐயா, நாங்கள் ஏற்கனவே அனுப்பிய கடிதத்துக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என நினைவுறுத்துகிறோம் என அறிக்கை விடுகிறார். “எனக்கு அம்பாள் என்றைக்கடா பேசினாள்?” வசனம் நினைவுக்கு வருகிறது. மோடி பிரதமரான பிறகு எப்போதாவது பாராளுமன்றத்துக்கு வந்து எதிர்க்கட்சிக்கு பதிலளித்திருக்கிறாரா? இல்லை. எப்போதும் செய்யாதவர் இப்போது மட்டும் வந்து ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி விவாதிக்கப் போகிறாரா? ராகுல் காங்கிரஸைக் கலைத்துவிட்டு அதை பாஜகவுடன் இணைத்துவிட்டால் ஒருவேளை சாத்தியப்படலாம்.
காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் “போர் நிறுத்தத்திற்கான உத்தரவாதங்களை பாகிஸ்தான் அளித்ததா?” எனக் கேட்பது இன்னும் அபத்தமாக உள்ளது - ஏனென்றால் போர் நிறுத்தம் அறிவித்த ஒரு மணிநேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது. இந்தியா அமைதியாக கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. பாகிஸ்தானோ “இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினாலும் நாங்கள் அமைதியாக இருப்போம்” என என விடா முயற்சி வில்லன் திரிஷாவைக் கடத்தியதைப் போல நம் அஜித்குமாரை அசிங்கப்படுத்தியது. ஏன் இப்படி அவமானகரமாக பாதியில் கிளம்பி வந்தீர்கள்? ஏன் நமது ஆயிரங்கோடி மதிப்பிலான விமானங்கள் சுலபத்தில் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டது? அதெப்படி சர்வதேச ஊடகங்கள் அமெரிக்க ராணுவவத்தின் மேற்கோளுடன் சொல்லும் செய்தி பொய்யாக முடியும்? நமது போர்த் தளவாடங்களின் ஆற்றல்தான் என்ன? ஏன் பாகிஸ்தான் தாக்கிய பூஞ்ச் உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் இருந்து மக்களை முன்கூட்டியே அகற்றி அவர்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு கொடுத்தாமல் பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை விட அதிகமான பேர்களை காவு கொடுத்தது? ஏன் பெண்களையும் குழந்தைகளையும் பாகிஸ்தான் கொல்ல அனுமதித்தது? இக்கேள்விகளையே ராகுல் காந்தி, சாரி மோடி காந்தி, எழுப்ப வேண்டும். அவர்கள் ராணுவத்தைக் கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ வேண்டாம், ஆனால் அரசைக் கேள்வி கேட்கலாம் தானே? அதன்பெயர் தானே தேசபக்தி?
ஏன் இப்படி மொத்த எதிர்க்கட்சியும் இருட்டுக்கடை அல்வா வாடிக்கையாளர்களைப் போல பாஜக வாசலில் நிற்கிறார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது (Why Opposition’s Backing Of ‘Operation Sindoor’ Marks A Shift From 2016 And Balakot Reactions). அதில் 2019 புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையும், பாலகோட் தாக்குதலின் நிஜமான புள்ளிவிபரங்களையும் காங்கிரஸ் விமர்சித்ததை பாஜக தேசதுரோகமாகச் சித்தரித்தது தமக்கு தேர்தலில் பலத்த அடிகிடைக்க காரணமாகிவிட்டது என காங்கிரஸ் தலைமை நம்புவதாகக் கூறும் குறிப்புகள் உள்ளன. ஏனென்றால் இம்முறை அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துமுன்னரே எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூருக்காக ராணுவத்தைப் பாராட்டிப் பேசத் தொடங்கினர். மோடி யாரங்கே எனுமுன்பே அவரது வாசலில் போய் வரிசை கட்டி நின்றனர். கர்நாடக காங்கிரஸின் டிவிட்டர் பக்கத்தில் காந்தியின் படத்தைப் போட்டு அமைதியைப் போற்றும் டிவீட் வந்திருந்தது. அதையும் உடனே அழித்து ராணுவத்தைப் புகழ்ந்து ட்வீட் போட்டனர். அதாவது காந்தியைத் தூக்கில் பரணில் போடு, மோடிஜியின் மொழியில் பேசு என காங்கிரஸ் தலைமையிடம் இருந்து உத்தரவு வந்திருக்கிறது (ராணுவம் என்றாலே அதைத் தம் சொத்து என பாஜகக் கோரும்போது ராணுவத்தைப் புகழ்வது மோடியைப் புகழ்வதாகிறது.) இதை காங்கிரஸின் பிரமாதமான யுக்தி என்று என்னால் ஏற்க முடியவில்லை - போரை அது நடக்கும்போது பாதுகாப்பு கருதி ஆதரிக்கலாம். அல்லது அமைதி காக்கலாம். அதைவிட முக்கியமாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் பாதுகாப்பு வழங்க வற்புறுத்தியிருக்க வேண்டும், அவர்களுக்கு கட்சி சார்பில் உதவியிருக்க வேண்டும். ஏன் போரில் கொல்லப்பட்டவர்கள் முஸ்லீம்கள் என்பதாலா? முஸ்லீம் உயிர்களுக்காக இரங்கினாலோ அவர்களுடைய வீட்டுக்குச் சென்று ஆதரித்தாலோ அதுவும் இந்துத்துவ விரோதமாகிவிடும் என்பதாலா? கடந்த தேர்தலில் காங்கிரஸ் கிட்டத்தட்ட பாஜகவை நெருக்கிவிட்டது, அதாவது அவர்களுடைய இந்துத்துவ எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது. இருந்தாலும் இம்முறை தன்னம்பிக்கை இல்லாமல் ஓவர்ரியாக்ட் பண்ணிவிட்டர்கள். கடைசியில் மோடி காங்கிரஸையும் ஏமாற்றிவிட்டார். இவ்வளவு அடிவாங்கிய பின்னர் நீங்கள் ராணுவத்தைப் பாராட்டவும் முடியாது, மோடியை எதிர்க்கவும் முடியாது. டெலிகேட் சிச்சுவேஷன். எதிரியின் மொழியில் பேசி எதிரியின் சட்டையை அணிந்து எதிரியை பணிந்து வணங்கிய பின் எதிரியை ஒழிக்க முடியாது. அதற்கு மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? 2019இல் இருந்த நிலைமை வேறு - அன்று நடந்தது போர் அல்ல (பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் மட்டுமே. அன்று சீனா களத்துக்கு வராததால் பிரச்சினை இல்லை.). அப்போது நம் நாட்டில் குண்டு விழவில்லை, அப்போது நம் விமானங்கள் வீழ்த்தப்படவில்லை, அப்போது நாம் பாதியில் கைகட்டிக்கொண்டு வெளியேறவில்லை. மேலும் இது இந்தியா பாகிஸ்தான் போர் அல்ல, இது இந்தியா சீனா போர். இதை நான் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஏழாம் வகுப்பு மாணவனிடம் கேட்டபோதே சொன்னான், “இது சீனா பாகிஸ்தானை முன்வைத்து நடத்தும் போர்”. எனக்கு ஆச்சரியமாகியது. ஆனால் குழந்தைக்குப் புரிந்தது இவர்களுக்குத் தெரியவில்லை. நான் சீனாவிடம்தான் தோற்றிருக்கிறோம், இதன் விளைவுகள் வருங்காலத்தில் மோசமாக இருக்கும். நாம் அமெரிக்காவை நம்பி சீனாவை பாகிஸ்தான் பக்கம் நகர்த்தினோம். ஆனால் போரென்று வந்தால் அமெரிக்கா திரிஷாவைப் போல “நாம பிரிஞ்சிரலாம்” என்று இந்தியாவிடம் சொல்கிறது. ஏஷியா டைம்ஸ் பத்திரிகையில் மோடியின் மிகப்பெரிய பலவீனம் அவர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தன்னை மேம்போக்காகப் புகழ்வதை முழுக்க நம்பிவிடுகிறார், ராஜதந்திரம் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதாவது, பொதுவாக மேற்கத்திய தேசங்கள் தம்மால் கட்டுப்படுத்த முடிகிற நாட்டின் தலைவர்களையே புகழ்வார்கள், அதன்பொருள் “உன்னை நாங்கள் மதிக்கவில்லை, உன்னைப் பயன்படுத்திவிட்டு வீசிவிடுவோம்” என்பதே. நம்மால் சீனாவை நேரடியாகத் தாக்கவும் முடியாது. இதற்குப் பதிலாக சீனாவிடம் முன்பே டீல் பேசி பாகிஸ்தானை அடக்கி வைத்திருக்கலாம்.
இன்று மக்களின் கோபம் பாஜக பக்கம் தாவியுள்ளது. அதை அறுவடை செய்ய களத்தில் காங்கிரஸ் இல்லை. விடாமுயற்சி விஸ்வரூபத் தோல்வியாகிவிட்டது. போரைத் தீவிரமாக ஆதரித்த ஜனங்களின், எதிர்க்கட்சிகளின் நிலைமை சங்கடத்துக்குரியதாகி விட்டது. விடா முயற்சி நாயகனோ கவலைப்பட மாட்டார், அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கப் போய்விடுவார்.

சீன, அமெரிக்க, இந்தியப் பெருமுதலாளிகளின் சதுரங்கம்

 



இந்த போர் நிறுத்தம் எத்தனை நாட்கள் நீடிக்கும் எனத் தெரியவில்லை, ஆனால் ஏதோ அஜித்குமாரின் GBU போல கன்னாபின்னாவெனப் போய்க்கொண்டிருந்த யுத்தம் கரெண்ட் போனதைப் போல நின்றுவிட்டது. தாக்குதல், மறுதாக்குதல், நான் தாக்கவில்லை, அவன்தான் முதலில் தாக்கினான், மொத்தமா அழிச்சிட்டு போட்டியை ஆரம்பித்தலில் இருந்தே ஆடுவோம் எனப் போய்க்கொண்டிருந்த கொடுங்கனவை அமெரிக்காவும், பின்னணியில் சீனாவுமாக போதும் விடுங்க புரோ எனச் சொல்லி நிறுத்தியிருக்கிறார்கள். நிம்மதியாக இருக்கிறது. திரும்ப அடிப்போம், பாடம் கற்றுக்கொடுப்போம், ராணுவத்துடன் நிற்போம், பேரணி நடத்துவோம் என்பதெல்லாம் கேட்க நன்றாக இருக்கும், ஆனால் குண்டு விழுந்து சாகும் மக்களுக்கு இப்போர் ஈடுகட்ட முடியாத பெரும் இழப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது.

அடுத்து, இதன்பின்னுள்ள வணிகச் சக்திகளின் நோக்கம். இந்தப் போர் ஆரம்பித்ததும் சீனாவின் ராணுவப் பங்குகள் எழுச்சி கண்டன. அதாவது இப்போரை ஆயுத நிறுவனங்களில் முதலீடு பண்ணுபவர்கள் உற்று கவனிக்கிறார்கள். ஆயுதச் சந்தைக்கு இது உத்வேகம் அளித்திருக்கிறது. சீனா பாகிஸ்தானுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுப்பதன் ஒரு நோக்கம் இது. அடுத்ததாக, சீனா பாகிஸ்தானில் செய்துவருகிற பல ஆயிரம் மில்லியன் மதிப்புள்ள கட்டமைப்புப் பணிகளுக்கு அங்கு மக்களிடையே எதிர்ப்புள்ளது. ராணுவத்துக்கு நற்பெயரை உருவாக்கி அரசாங்கத்தைக் காப்பற்றி போராட்டங்களையும் மட்டுப்படுத்த இப்போர் உதவியிருக்கக் கூடும். அதற்கு அடுத்ததாக, இப்போரில் ஒருவேளை அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் இரண்டாவது, மூன்றாவது கட்டங்களுக்கு பாக்-இந்திய ராணுவங்கள் சென்றிருந்தால், அது சீனாவுக்கே உதவியிருக்கும் என மேற்கத்திய ஊடகங்கள் கருதுகின்றன - ஏனென்றால் சீனாவின் ராணுவம் இந்திய ராணுவத்தைவிட பலம்பொருந்தியது. இந்தியாவை ஒரு நெருக்கடியில் தள்ளி எல்லையில் உள்ள தம் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தவும் தம் கூட்டாளியான பாகிஸ்தானை உத்வேகப்படுத்தவும், இந்தியாவின் வணிக முடிவுகளில் தலையிடும் சட்டாம்பிள்ளையாக அமெரிக்காவின் இடத்தை எடுக்கவும் இப்போரை சீனா பயன்படுத்திருக்கும். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. அது உள்ளே புகுந்து ஆட்டத்தைக் கலைத்துவிட்டது. இந்தியாவுக்கும் முதலீடு சார்ந்து சீனா முக்கியமான பங்காளியாக இருப்பதால் சீனாவுடன் போர் என்பது இந்திய பெருமுதலாளிகளுக்குப் பாதகமாகும். அதனால் இந்திய அரசும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.

எப்படிப் பார்த்தாலும் சீனா-பாகிஸ்தான்-இந்தியா-அமெரிக்கா எனும் நால்முனை யுக்தி விளையாட்டாகவே இப்போர் இருக்கிறது. சதுரங்கத்தைப் போல எதிராளி எடுக்கப்போகும் நகர்வை முன்னிறுத்தி நாம் ஒரு நகர்வைச் செய்தால் அவர் இன்னொரு முடிவெடுத்தாலும் கடைசியில் இருவருமே எங்குமே நகர முடியாதபடிக்கு கள அமைப்பு மாறியிருக்கிறது. பெல்ஹாம் தீவிரவாதத் தாக்குதல் இந்த ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியதே தவிர இது அதற்கான போர் அல்ல. ஒருவேளை இந்த வணிக நகர்வையும் பேச்சுவார்த்தையும் ஆரம்பிப்பதற்காகக் கூட பாகிஸ்தானை சீனா தூண்டிவிட்டு தீவிரவாதிகளுக்கு ஆணையிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பாகிஸ்தான் அரசுக்கு எந்தளவுக்கு பயன்கிடைத்தது எனத் தெரியவில்லை. சர்வதேச நாணய நிதியம் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு 7 மில்லியன் டாலர்களை கடனாகக் கொடுத்திருக்கிறது. அதாவது பாகிஸ்தான் இப்போரை முன்னிட்டு சீனாவின் பக்கம் அப்பட்டமாய் சாய்வதால் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து அவர்களுடைய நன்றியுணர்வை தம் பக்கம் திருப்ப அமெரிக்கா முயல்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் இந்தக் கன்னத்தில் சீனா முத்தமிட்டாலும் வாங்கிக்கொள்கிறது, டிரம்ப் உதட்டைக் குவித்தாலும் இன்னொரு கன்னத்தை உடனடியாகக் கொடுக்கிறது. இரண்டு காதலர்களின் பொறாமையையும் தூண்டிவிட்டால் தனக்கு நிறைய பரிசுகள் கிடைக்கும் என அது நம்புகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு கற்பனைத் தெலுங்கு வில்லன். தெருவில் சும்ம போய்க்கொண்டிருந்த இந்தியாவைப் பார்த்து "என் கையைப் பிடிச்சு இழுத்திட்டான்" எனக் கூச்சலிட்டு சண்டைக்கும் இழுத்தத்தில் அது முதல்வெற்றியைப் பெற்றது. அதைக் கொண்டு அது சீனாவையும் அமெரிக்காவையும் தன் வசம் வைத்துக்கொள்ள முயல்கிறது. சீனாவுக்கு தான் அமெரிக்காவுக்கு இணையாகப் போட்டியில் இருப்பதே லாபம் தான். அதுவும் 200% இறக்குமதி வரியை டிரம்ப் அறிவித்து சீனாவின் சந்தையை உருக்குலைத்த பிறகு இது அமெரிக்காவைச் சீண்டும் ஒரு கௌரவச் சண்டையாகி விட்டது.

அமெரிக்காவின் ஐ.எம்.எப் கடன், சீனாவின் ராணுவ உதவியையும் கருத்திற்கொண்டால் இப்போரில் பாகிஸ்தானுக்கு நட்டத்தைவிட லாபமே அதிகம். பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் தம்மை வலுப்படுத்தி இருக்கிறது. இந்திய அரசின் பிம்பத்துக்கு இது மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது, மோடி நாயகனாகிவிட்டார், எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியை மிமிக்றி செய்யும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். காங்கிரஸை பாஜக கிட்டத்தட்ட தன் பாடி சோடாவாகியது. ஷஷி தரூர் மருவொன்றை வைத்துக்கொண்டு பாஜகவின் கட்சி பீரங்கியாக முழங்கினார். ஊடகங்கள் முழுநேர பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இந்தியா என்றால் அது ஆளுங்கட்சி, இந்தியா என்றால் அது மோடி எனும் பிம்பத்தை மீண்டும் நிறுவ எதிர்க்கட்சியும் ஊடகங்களும் கைகோர்த்தன. எதிர்க்கட்சியின் யுக்தியில் மிகப்பெரிய சறுக்கல் இது.

உயிரை இழந்தவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்துக்கும் தாம் இந்த பொருளாதார சதுரங்க ஆட்டத்தில் ஈடுசெய்ய முடியாத நட்டம் ஏற்பட்டது. இதை இவர்கள் முழுக்க தேசபக்தியின் பெயரில் ஆடியதால் பகுத்தறிவுடன் யாரும் கேள்விகேட்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் அது எப்படி இப்போரின் முடிவில் சீன நிறுவனங்களின், சீனாவில் முதலீடும் பண்ணப்போகும் இந்திய பெருமுதலாளிகளின் வங்கிக்கணக்குகளில் பணம் குவியும், ஐ.எம்.எப் கடனை முழுங்கப்போகும் பாகிஸ்தான் ராணுவமும், அரசியல்வாதிகளும் விருந்தில் மகிழ்ச்சியாக சியர்ஸ் சொல்ல்லப் போகிறார்கள் எனும் கேள்விக்கு தேசபக்தர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். இந்தப் போரை உலகப் பெருமுதலாளிகள் தம் அவகாசத்துக்கும் தேவைக்கும் ஏற்ப நடத்தி முடித்துவிட்டார்கள். போர் நிறுத்த அறிவிப்பு வந்ததுடன் பாகிஸ்தான் சீனா, அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு குறிப்பாக நன்றிசொல்லி இந்தியாவை எதிரி நேசம் என அறிவித்தது இதனால்தானோ எனத் தோன்றுகிறது. இந்த 'பெரியண்ணன்களைத்' தம் மேஜைக்கு வரவழைக்க, அவர்களுடைய நிதியுதவியைப் பெற, அவர்களுடைய வணிகப் பேச்சுவார்த்தைக்கு தம்மை சைட் டிஷ்ஷாக மாற்றிக்கொள்ளும் மானமற்ற பிறவி தானெனக் காட்டிக்கொள்ள பாகிஸ்தானுக்கு இப்போர் உதவியது. அதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா என்றும் 'எதிரி நாடாக' நீடிக்க வேண்டும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இந்த போருக்கான சந்தர்ப்பம் நீடித்தாலே இந்தியாவின் எல்லை சார்ந்த முடிவுகளில் தலையிடவும், வணிக முடிவுகளைத் தீர்மானிக்கவும் அவசியம். சொல்லப்போனால் இந்தியாவிடம் யாருக்கு அதிக அதிகாரம் எனும் கேள்வியில் அமெரிக்கா தனக்கே எனச் சொல்லி துண்டு போட்டிருக்கிறது, ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை, எதிர்காலத்தில் நாங்களும் அவ்விடத்துக்கு வருவோம் என சீனா அமெரிக்காவுக்கு உணர்த்திருக்கிறது. அப்படித்தான் முன்பு (அமெரிக்க சார்பு அரசுக்கும் வியட்நாமிய படைகளை எதிராகவும்) கம்போடியா போரிலும், அதன்பிறகு இலங்கையின் உள்நாட்டுப் போரிலும் சீனா தலையிட்டு ஆயுதங்களை வழங்கி அந்நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்றி கடனாளி ஆக்கியது.
இந்த ஆதிக்க நாடுகளின் அரசுகள் பேசுவதும் தம் நாட்டு முதலீடுகளின் வசதிக்காகத்தான். நாம் இவர்களுடைய வலையில் எலிகளாக இருக்கிறோம்.

❌