
கடும் தலைவலியினூடாக அவனுக்குத் தோன்றியது
கண் மருத்துவர்
சுமாராகத்தான் இருக்கிறார் என்று.
அறை இருட்டு.
பல்லைக் கடித்து முனகும் ஏஸி எந்திரம்.
ரத்தம் வடிந்த தம் வெளிறி
உடலின் வழியாக ஆன்மாவைப் பாய்ச்சும்
நீள்சதுரக் குழல் விளக்குகளின்
ஆத்ம தரிசனம்.
வலி தன் மீது
ராட்சதத் துளை தோண்டும் எந்திரத்தைப் போல
இறங்கி பூமிக்குள் பாய்வதாக
அவனுக்குத் தோன்றியது.
சுற்றிலும் வெளிச்சச் சிறகுகள் பறக்க
அமானுஷ்ய தோற்றங்கள்.
மரணம் நெருங்கிவிட்டதாகவும்
அன்றாடத்தின் துன்பங்களில் இருந்து விடுதலை
கிடைக்கப் போகிறதென ஒரு நம்பிக்கை,
அதைக் குறித்த அவநம்பிக்கை அடுத்து,
தப்பிக்கவே முடியாது எனும்
எச்சரிக்கை சமிக்ஞைதான் இவ்வலி.
அம்மாவின் கையில் இருந்து பறிக்கப்படும்
குழந்தையின் கதறல்கள்.
அம்மாவிடம் செல்வதே
முழுமையான நிம்மதியான துயில்.
கண்மருத்துவர் மீண்டும் அவனைத் தனது
மோவாவை சிறிய வளைவான தட்டில் வைத்து நேராகப் பார்க்கக் கேட்டார்.
அவர் தன் காதை கவனிக்கச் சொன்னார்.
இடக்காது.
உருகிய சுடர்.
இருளைத் திரையென அகற்றி
முழுமையாகி நிலைகொள்ளும் சுடர்.
மலைமுகட்டில் எழுந்து
பூமியை உயிர்கொள்ள வைக்கும் சுடர்.
சிறிய மென்மையான சுடர்.
தெய்வத்தின் காது.
உலகத்துப் பேரழகின் மொத்த வடிவம்.
பொன்மஞ்சள் மயிர்கள் துல்லியமாகத் தெரிகின்றன.
சிறு காது துளையின் அழகு.
அவனுக்கு அக்கணமே
உலகின் மொத்த அன்பையும் அழகையும் தான்
அள்ளிக்கொள்வதாகத் தோன்றியது.
அவர் அடுத்தடுத்து ஸ்லைடுகளை மாற்றினார்.
தங்கத்தால் இழைக்கப்பட்ட காது
தன் வண்ணங்களையும் வடிவத்தையும் இழந்து
அவனைத் தடுமாற வைக்கிறது.
ஒரு பெண்ணை அடையும்போது
மெல்லமெல்ல இப்படித்தான் சிதைக்கிறோம்,
சிதைத்தலே ஸ்பரிசத்தின் பார்வை.
பரிசோதனை முடிந்தது
சோதனை லென்ஸ்களை
அணியச் செய்து
தெளிந்த தெளிவற்ற பிம்பங்கள் காட்டப்பட்டு
அவனுக்கான சிகிச்சையும் தீர்வுகளும்
முடிவாகின்றன.
மறுசோதனைக்கான நாள்.
பழைய தலைவலி இல்லை.
மிதக்கும் தேவதைகள்
துணைவரவில்லை.
கண்ணாடி அணிந்த கண்களுக்கு
பந்துகளாகத் துள்ளி வரும்
தினசரி பிம்பங்களின் வண்ணங்கள்
அள்ளிக் கொஞ்சத் தோன்றும் உலகு.
எவ்வளவு ரசித்தும் போதாத அழகு.
அதன்பிறகு
அவனுக்கு இதெல்லாம் ஒன்றும்
அழகில்லை என்றானது.
துல்லியமாகத் தெரிவதே அழகெனின்
அழகின் பொருளென்ன?
இலைகள் விலகியதும்
ஒரு மலர் தெரிகிறது.
அது அங்கு இருக்கிறது,
இருந்தால் தான் என்ன?
அன்றாடத்தின் சுமையுடன்
அவன் அடுத்தமுறை மருத்துவமனைக்கு வந்தபோது
பெண் மருத்துவர் சற்று மங்கலாகத் தெரிந்தார்.
வெளியுலகில் தன்னைக் கண்டடைந்து
களைத்துத் திரும்பியவனை வரவேற்கும் முதிர்ச்சி.
அந்நியமாக இயல்பிழந்து போன அவர் மீது
அவனுக்குத் தோன்றும் பயம்.
ஆறுதலாக அணைத்து
காலத்துயிலில் பொதிந்துகொள்ளும் கரங்கள்
மீளமீளத் தோன்றும் சுழல் நாட்காட்டிக்குள்
அவனைத் தள்ளிவிடுகின்றன.
கண்ணில் கடுப்பு, தலைவலி, தெளிவின்மை,
இரவிலும் பகலிலும் வாசிப்பதில் சிரமம் ...
விசாரித்த பின்னர்
அவனை மோவாவை சிறிய வளைவான தட்டில் வைத்து
தன் காதைப் பார்க்கச் சொல்கிறார்.
அவன் தன் மனத்தின் கண்ணாடியை எடுத்து
அணிந்துவிட்டுப் பார்க்கிறான்.