மதுரை சித்திரைத் திருவிழா வீதிநாடக வடிவில்: “ஊர் கூடித் தேர் இழு”

திருவிழாக்காலங்களில் நாடகங்கள் போடுவதைப் பார்த்திருக்கிறோம். திருவிழா குறித்தே வீதி நாடகம் ஒன்றைப் பார்த்த கதையைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். மதுரை சித்திரைத் திருவிழா தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் பெருந்திருவிழா. இந்தத் திருவிழாவை மையமாகக் கொண்டு “ஊர் கூடித் தேர் இழு” என்ற வீதி நாடகத்தை திகழ் குழவினர் நிகழ்த்தி வருகின்றனர்.

சமீபத்தில் பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் பவளவிழாவை முன்னிட்டு மார்ச் 23 மற்றும் மார்ச் 24 என இரண்டு நாட்கள் முறையே பாளையங்கோட்டையிலும் மதுரை தியாயராசர் கல்லூரியிலும் இந்நாடகத்தை நடத்தினர். பாளையங்கோட்டையில் இந்நாடகத்தின் 50வது அரங்கேற்றம் என்பதும் கூடுதல் சிறப்பு. மார்ச் 2024இல் சென்னையில் ஊர்கூடித் தேர் இழு முதல் அரங்கேற்றம். அதைத்தொடர்ந்து மதுரை, கோயம்புத்தூர், சென்னை, செங்கல்பட்டு, ஆனைக்கட்டி, பெங்களுரு, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருப்பூர், கொல்லம், திரிச்சூர், எர்ணாகுளம் ஒரு வருடத்தில் இருபது ஊர்களில் 50 காட்சிகளை நிகழ்த்தியுள்ளனர் திகழ் குழுவினர்.

திருவிழாக்கள் கொண்டாட வேண்டியதன் அவசியம், மதுரை சித்திரைத் திருவிழாவின் தனிச்சிறப்பு, அழகர் வைகை எழுந்தருளும் காரணம், மீனாட்சி திருக்கல்யாணம், திருமலை மன்னர் சித்திரைத் திருவிழாவை ஒருங்கிணைக்கக் காரணம், பதினெட்டாம்படிக்கருப்பு கதை இவைதான் இந்த நாடகத்தின் மையக்கரு. இந்நாடகத்திற்கான கதையை நந்தகுமார் எழுதியிருக்கிறார். பெலிக்ஸ், சஹானா, நந்தகுமார் என மூன்றுபேரும் இந்த வீதிநாடகத்தை நிகழ்த்துகின்றனர்.

தேங்கா எண்ணெய் (தென்னா), கடலை எண்ணெய் (கண்ணா), மண்ணெண்ணெய் (மன்னா) என மூன்று பேரும் தங்கள் பெயர்களை வைத்துக்கொண்டு பட்டயக்கிளப்புகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதிமத வேறுபாடின்றி அனைவரும் பார்க்கும் வகையில் இந்த நாடகத்தை நிகழ்த்துகின்றனர். ஒரு மணிநேர கால அளவில் மிகச்சுவையாக சித்திரைத் திருவிழா கதையை எடுத்துரைக்கின்றனர். பார்வையாளர்கள் தன்னை மறந்து உற்சாகமாக சிரிக்கும் வகையில் கதைப்போக்கும் வசனங்களும் அமைந்திருப்பது குறிப்பிட வேண்டிய விசயம். மூவரின் நடிப்பும் அட்டகாசம். யாரைப் போற்றுவதெனத் தெரியாத அளவிற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
பண்பாட்டு அறிஞர் தொ.பரமசிவன் ஐயாவின் அழகர்கோயில், தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் ஐயாவின் மாமதுரை மற்றும் சித்திரவீதிக்காரனின் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை இந்த மூன்று புத்தகங்களும் இந்த வீதிநாடகம் உருவாக்க உதவியாக இருந்ததை நாடக இறுதியில் குறிப்பிடுகின்றனர். என் ஆசான்களோடு நானும் திருவிழாக்களின் தலைநகரம் எழுதியதால் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பை மதுரை வழங்கியிருக்கிறது. நன்றி.
பாளையங்கோட்டையில் மார்ச் 23 ஊர்கூடித் தேர் இழு நாடகத்தை நிகழ்த்தவிருப்பதாக நந்தகுமார் தெரிவித்தபோது நானும் செல்லத்திட்டமிட்டேன். பசுமை நடை நண்பர் சேவற்கொடி செந்திலும் உடன்வர இருவரும் காலை இரயிலில் திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டோம். இரண்டரை மணிநேரப் பயணம் உரையாடலோடு கடந்தது. நெல்லையில் இறங்கி பொருநைக்கரையை நோக்கிப் பயணமானோம். பொருநையின் படித்துறை மற்றும் மண்டபங்களை பார்ப்பதற்காக சென்றோம். சுலோச்சன முதலியார் பாலத்தில் இறங்கி ஆற்றை நோக்கி நடந்தோம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் நெல்லை மாவட்டத்தின் சிறப்புகளை பறைசாற்றும்விதமாக ஓவியங்களை வரைந்துள்ளனர். ஒவ்வொரு ஓவியத்தையும் அற்புதமாக வரைந்துள்ளனர். அதைப்பார்த்துவிட்டு ஆற்றிலுள்ள மண்டபத்தை நோக்கி நடந்தோம். உச்சிவெயிலில் மண்டபம் குளுமையாக இருந்தது. கொஞ்சம் சுத்தமாக இருந்தது. உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆற்றின் மறுகரையில் படித்துறையும் இன்னும் கொஞ்சம் மண்டபங்களும் தெரிய அதைப்பார்க்க மீண்டும் பாலம் ஏறிச்சுற்றிவந்தோம்.
படித்துறை மண்டபங்களை நோக்கி நடந்தோம். ஆற்றுக்குள் மாடன் கோயில்கள் பங்குனி உத்திரத்திற்கு தயாராகிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். மண்டபத்திற்கு அருகில் சென்றால் எல்லாம் சிதிலமடைந்து குப்பைச் செடிகள் மண்டிக் கிடக்கிறது. காண்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆற்றில் கால்நனைத்தபடி அமர்ந்துவிட்டு பாளையங்கோட்டைக்கு பேருந்து ஏறினோம்.
பாளையங்கோட்டையில் எச்சமாக உள்ள கோட்டையைப் பார்க்க பேருந்து நடத்துனரிடம் வழிகேட்டால் தெரியவில்லை என்றார். இறங்கிவிசாரித்துக் கொள்ளலாம் என பாளை மார்க்கெட்டில் இறங்கிவிட்டோம். நல்ல வெயில். ஒரு கிலோமீட்டருக்கும் மேல் நடந்திருப்போம். அரசு அருங்காட்சியகம் செல்லும் வழி என்ற பதாகையைப் பார்த்தோம். சரி, வந்த வேலையைப் பார்ப்போம் என அங்கு சென்றோம்.
அரசு அருங்காட்சியகத்தில் நாடகக்குழுவினரை சந்தித்தோம். ஏற்கனவே ஓரிருமுறை நாடகம் பார்க்கச் சென்றிருந்ததால் அவர்களுக்கும் நம்மைத் தெரிந்திருந்தது. மேலும், நந்தகுமார் பசுமை நடைப் பயணங்கள் வழியாக நண்பராகிவிட்டார். வெயிலுக்கு அருங்காட்சிய கல்மண்டபம் கொஞ்சம் இதமாக இருந்தது. ஊமைத்துரையை ஆங்கிலேயர்கள் சிறைவைத்தது இங்குதான். (அருங்காட்சியகம் குறித்து அடுத்த பதிவில் காணலாம்)
தொ.ப. பவளவிழாவை சிறப்பிக்கும் விதமாக அவருடைய சிறப்பான மேற்கோள்களை பதாகைகளாக திகழ் குழவினர் அமைத்திருந்தனர். நாடக நடிகர்கள் மட்டுமல்லாமல் திரைக்குப்பின்னால் இயங்கக்கூடிய மற்ற கலைஞர்களையும் சந்தித்தோம். நான்குமணிப்போல தொ.ப.வின் இல்லத்திற்குச் சென்றோம். தொ.ப.வின் துணைவியாரைச் சந்தித்தோம். அவரிடம் உரையாடி அருங்காட்சியகம் திரும்பினோம்.
மாலை கொஞ்சம்கொஞ்சமாக கூட்டம் வரத்தொடங்கியது. தொ.ப.வின் மகள் விஜயலட்சுமி அவருடைய மகனுடன் வந்திருந்தார். அவருடன் அய்யாவைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம் நானும் செந்திலும். நாட்டார் வழக்காற்றியல் துறை பேராசிரியர்கள், தொ.ப.வின் நண்பர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். நாடகம் நடத்துவதற்கு ஏற்றதாக அந்த திறந்தவெளி அரங்கு அமைந்திருந்தது.

தொ.ப.வின் தென்புலத்து மன்பதையும் என்னுடைய திருவிழாக்களின் தலைநகரம் மதுரை நூலையும் விற்பனைக்கு வைத்திருந்தனர். நிறையபேர் இரண்டையும் வாங்கிச் சென்றது மகிழ்ச்சி. நாடகம் ஆறரை மணியளவில் தொடங்கியது. நாடகத்தின் கதை மற்றும் சிறப்புகளை மேலே பார்த்தோம். சிறுவர்கள் உற்சாகமாகப் பார்த்தனர். நிறைவாக இந்த நாடகத்திற்கான தோல்பாவைகளை வரைந்துதந்த தோல்பாவைக்கலைஞர் முத்து சந்திரராவ் அவர்களுக்கு நினைவுப்பரிசாக புத்தகங்களும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது. மீனாட்சியம்மன் மற்றும் அழகரை தோல்பாவையில் அற்புதமாக இந்நாடகத்திற்காக வரைந்தளித்திருக்கிறார்.

நாடகம் முடிந்ததும் வந்திருந்தவர்கள் நாடகக்கலைஞர்களை வாழ்த்தி விடைபெற்றுக் கொண்டிருந்தனர். நாங்களும் ஒன்பது மணிவரை அங்கிருந்தோம். பிறகு அருகிலிருந்த தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு இரயில் நிலையத்திற்குச் செல்ல பேருந்து ஏறினோம். திருநெல்வேலி பெரியார் நிலையத்தில் இறங்கி அருகிலிருந்த உணவகத்தில் சாப்பிட்டு இரயில் ஏறினோம். தொ.ப.வின் பிறந்தநாளான மார்ச் 24 அன்று தொடங்கும்வேளையில் மதுரை வந்தோம்.

மார்ச் 24 அன்று மாலை தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் நாடகம் பார்க்க என் மனைவியோடு சென்றேன். அரங்கம் மாணவர்களால் நிரம்பியிருந்தது. மீண்டுமொருமுறை நாடகம் பார்த்து உற்சாகமானேன். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், பேராசிரியர் சுந்தர்காளி ஐயாவும் வந்திருந்தனர். பசுமை நடை நண்பர் ரகுநாத்துடன் உரையாடிவிட்டு புறப்பட்டோம். ஊர்கூடித் தேர் இழு நாடகத்தை மதுரை விழாவில் நிகழ்த்தியபோது பாதியிலே மழைவந்துவிட்டது. மீண்டுமொருமுறை பார்க்கும் வாய்ப்பு மதுரையிலே அமைந்தது. இந்நாடகம் நிகழ்த்த 20க்கு 20 இடம் போதும் என்கிறார்கள். ஊர் கூடித் தேர் இழுக்க திகழ் குழுமத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கான இணைப்பு கீழேயுள்ளது: https://www.instagram.com/thigazhproductions/