Normal view

Received before yesterdayஆசிப் மீரான்

ஹாஜியார் (சிறுகதை) – ஆசிப் மீரான்

“எவ்வளவு திமிரு பாத்தியா? இன்னமும் வரலையே அந்தப் பய” சொல்லி விட்டு சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து ஹாஜியார் உலாவத் தொடங்கினார். அடிக்கிற வெயிலுக்குக் கொஞ்சமும் சளைக்காமல், கோபம் முகத்தில் வெப்பமாக வெளிப்பட்டது. வீட்டின் கொல்லைப் புறம் இருந்த தென்னை மர நிழலில் புட்டுவம் ஒன்று கிடந்தது.


பக்கத்திலேயே கிண்ணம் ஒன்றில் தண்ணீர். அதற்குப் பக்கத்தில் செம்பில் தண்ணீர். எல்லாம் தயாராக இருக்கிறது. வர வேண்டிய பயலைத்தான் காணோம்.

“எலா, உன் மொவனப் போயிப் பாத்துட்டு வரச் சொன்னியாலா?” வீட்டின் சமையலறை நோக்கி இரைந்தார் ஹாஜியார்.

“அவன் அப்பமே போயிட்டானே?” உள்ளிருந்து வந்த குரலில் கொஞ்சம் கலக்கம் தெரிந்தது.

‘எங்க போயித் தொலஞ்சான்? இன்னைக்கு ஜும்-ஆ* இருக்குன்னு மெனக்கெட்டு சொல்லி அனுப்பியிருக்கேன். பெரிய மவராசான்னு நெனப்பு மைராண்டிக்கு” ஹாஜியாருக்குக் கோபம் தலைக்கேறத் தொடங்கியிருந்தது.

அகமது ஹாஜியார் ஹஜ்ஜுக்குப் போய் விட்டு வந்து ஐந்தாறு வருடங்களாகி விட்டது. ஹஜ்ஜுக்குப் போனவர்களுக்குப் பொறுமையும், சாந்தியும் மனசளவில் வந்து விடுமென்று சொல்வதைப் பொய்யாக்கியே தீருவது என்று சபதமெடுத்தது போலக் கோபம் வரும் ஹாஜியாருக்கு. ஹஜ்ஜூக்குப் போவதற்கு முன்னாலேயே அவரது கோபம் ஊர் முழுக்கத் தெரிந்த விசயமாகத்தான் இருந்தது. அவர் ஹஜ்ஜுக்குப் போவதாகத் தீர்மானம் செய்தவுடனேயே ஊரில் உள்ளவர்களுக்குப் பெரிய நிம்மதி.. வீட்டில் உள்ளவர்களுக்குக் கேட்கவே வேண்டாம்.. அகமது ஹாஜியாரின் மனைவி பாத்துமாயி (ஃபாத்திமா பீவி) அல்லாஹ்வையே நேரில் கண்ட மாதிரி ஆனந்தம் கொண்டாள்.

ஏற்கெனவே மெலிந்து போயிருக்கும் பாத்தும்மாம்மா கையில் “தஸ்பீஹை’க்* கீழே வைக்கவேயில்லை. க·பா*வைப் பார்த்தவர்களுக்குக் கல்மனமும் கரைந்து போகுமென்று தனது உம்மா சொன்னதை மனசுக்குள் கொண்டு வந்து மகிழ்ந்து போனாள். போதாக்குறைக்கு ஹாஜியார் பொண்டாட்டி என்று புதிய பதவியும் கிடைக்கும் என்ற நினைப்பு வேறு அவ்வப்போது உற்சாகம் தந்து கொண்டிருந்தது.

அகமது மீராசாகிப் அவ்வளவு சீக்கிரம் ஹஜ்ஜுக்குக் கிளம்புகிறவர் அல்லர்.
“அதுக்குக் காலம் கெடக்குது. இப்பத்தான பொட்டப் புள்ளயக் கர சேத்திருக்கேன். ரெண்டு மூணு வருஷமாவது போவட்டும். அதுக்குள்ள மழ கிழ வந்து தோட்டத்துல தேங்கா வெளஞ்சு, தேங்காய்க்கு வெலயும் கிடச்சுதுன்னா இன்ஷா அல்லாஹ் போவத்தான செய்யணும்?” என்று ‘ஜமா-அத்தார்’*களிடம் சொல்லித் திரிந்து கொண்டிருந்தவர்தான் அவர்.

“இன்ஷா அல்லாஹ், ஊருக்குள்ள இருக்குற பெரிய மனுசரு நீங்க, உங்களுக்கு அல்லா வாய்ப்பு தராமயா போவான்?” என்று அவருக்கு முன்னால் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், “இந்தாளு ஹஜ்ஜுக்குப் போன மாதிரிதான்” என்று அவர் இல்லாத போது சொன்னதில் நியாயம் இருப்பதாகவே பட்டது.

பின்னே, மழை பெய்யணும்,அதுவும் தோட்டத்தில்தேங்காய் நன்றாகவிளையும்படி பெய்யவேண்டும் அதுவும் நன்றாகவிளைந்த தேங்காய்க்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்க வேண்டும் என்று அவர் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த கோரிக்கைகள் குறைந்தது பத்து வருசத்துக்குள்ளாவது சாத்தியப்படுமென்று எவரும் நினைக்கவில்லை. ஆனால், அப்படிப் பேசிக்கொண்டிருந்தவரை அதிரடியாக இந்த வருசமே ஹஜ்ஜுக்குப் புறப்படப் போகிறேன் என்று சொல்ல வைத்தது நிச்சயமாக இறை சக்திதான் என்று பள்ளிவாசல் தெருவாசிகள் முழுமனதோடு நம்பினார்கள்..

இறைவன் தான் நேராக வராமல் போனாலும் பிற உருவங்களில் தனது செயலை நிகழ்த்துவான் என்பது உண்மையானால் இறைவன் அகமது மீராசாகிப்பை ஹஜ்ஜுக்கு அனுப்புவதற்காக வந்தது மேலத்தெரு சலீம்
மூசா உருவத்தில். சலீம் மூசாவும், அகமது மீராசாகிப்பும் ஒரே வயதினர்தான். ஒரு காலத்தில் நான்காம் வகுப்பு வரை ஒன்றாய் படித்தவர்களும் கூட.. ஆனால் அகமது தனது தகப்பானாருடன் கொழும்பு போய் கொஞ்சம் காசு சேர்த்து ஊருக்கு வரும்போது அந்தப் பணத்தில் தோட்டம் வாங்கிப் போட்டார். கொழும்புக்குப் போய் வந்ததில் கொஞ்சம் பட்டண வாசனை சேர்ந்ததாலோ என்னவோ தகிடுதத்தம் செய்வது அவருக்கு இலகுவாகக் கைவந்தது.

வந்த கொஞ்ச நாளில் ஊர் நிலவரத்தை ஊன்றிக் கவனித்து எங்கே எதிலே காசைப் போடலாம் என்று பார்த்துப் பார்த்து முதலீடு செய்து காசைச் சிரத்தையாகச் சேர்த்து வைத்தார். ஒரு பக்கம் தொழில் என்ற பெயரில் கருப்பட்டி மொத்த வியாபாரம்,வாழை மண்டி என்று ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து வந்தார். பணம் கிடைக்குமென்றால் எதுவும் தவறில்லை என்று உளப்பூர்வமாக நம்பியதால் வட்டிக்குப் பணம் கொடுக்கவும் தயங்கவில்லை அவர். விரைவிலேயே வட்டிப் பணம் போல பணம்காய்ச்சி மரம் உலகத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டதும் மற்ற துறைகளைக் கொஞ்சம் ஓரம் கட்டி விட்டு அதிலேயே முழுநேரமும் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

சலீம் மூசாவும் அகமது மீராசாகிப்பும் நெருக்கமாக இல்லாமல் போனாலும் முகம் பார்த்தால் சிரிப்பவர்களாகத்தான் இருந்து கொண்டிருந்தார்கள் பள்ளிவாசல் பராமரிப்புப் பற்றிய ஜமா-அத் கூட்டம் நடக்கும் வரை.

அகமது வெளியில் ‘அப்படி இப்படி’ இருந்தாலும் பள்ளிவாசலில் பாங்கு* சத்தம் கேட்டால் இருந்ததை இருந்த இடத்தில் போட்டு விட்டு ‘தொழுதுட்டு வந்து பாக்கலாம்’னு சொல்லிட்டு கிளம்பி விடுவார். கையில் காசும் இருப்பதால் அவருக்கு ஜமா-அத்தில் முக்கியத்துவம் இருந்தது. ஜமா-அத் தலைவர் கூட்டத்தைத் துவங்கி விட்டு பள்ளிவாசல் பராமரிப்புக்கு என்ன செய்யலாம் என்று கேள்வியை முன்வைத்தார். கொஞ்ச நேர
அமைதிக்குப் பின் அவரே,”அகமது காக்கா, நெனச்சா நீங்களே எல்லாம் செய்யலாம்தானே?” என்றார்.

அறுபத்து மூன்று வயதாகும் நாகூர் கனி, அகமது மீராசாகிப்பை காக்கா என்று அழைப்பதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் பணம்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..

“கனி காக்கா, வயசுல மூத்தவருங்குறதால நான் உங்கள ஒண்ணும் சொல்லல. என்னப் பாத்தா என்ன இளிச்சவாயன்னு ஒட்டியா வச்சிருக்கு?இங்க இருக்குறவங்க எல்லாம் வேற எதுக்கு இருக்காங்களாம்?”

“அவங்கவங்க அவங்களால முடிஞ்சதைச் செய்வாங்க அகமது” பள்ளிவாசல் இமாம்* குரலில் குழைவை வரவழைத்துக் கொண்டு சொன்னார். அகமது மீராசாகிப்பை காக்கா என்று அழைக்காத வெகு சிலரில் அவரும் ஒருவர். இமாம் என்பதால் அகமது மீராசாகிப்பும் அதைப் பெரிதுபடுத்துவதில்லை.

“அவங்களால முடிஞ்சதுன்னா எவ்வளவு?பத்தா, பதினஞ்சா?” அகமது சாகிப்பின் குரலில் ஏளனம். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது அங்கே. 

“என்னலெப்பை, யாரும் பேசாம இருக்காங்க?” அகமது சாகிப்பே கேள்வி மூலம் அமைதியைக் கலைத்தார்.

“பள்ளிவாசல் கிணத்துல தண்ணி குறஞ்சு போச்சுதுல்லா. தண்ணியெடுத்து “ஒளு”*ச் செய்ய கஷ்டமா இருக்கு.பம்பு ஒண்ணு வச்சுட்டா சுளுவாப் போயிடும். கூட்டிக் கழிச்சு ரெண்டாயிரம் செலவாவும்னு சுப்பையா ஆசாரி சொல்லிட்டுப் போனாரு” நாகூர் கனி இழுத்தார்.

“சுப்பையா ஆசாரி கிட்டயா கேட்டியோ? வெளங்குன மாதிரிதான். அவன் மவுத்*தானா அடக்கம் பண்ணுறதுக்கே ஐநூறு செலவாவும்பானே?” அகமது சாகிப் சொல்ல பெரிய நகைச்சுவை கேட்டது மாதிரி எல்லாரும் சிரித்து வைத்தார்கள்.

“காக்கா நெனச்சா… கொஞ்சம் பேசி முடிச்சுப் போடலாம்” நாகூர் கனி சொல்ல, “ஆமா அகமது, பள்ளிவாசல் காரியம். கொஞ்சம் பாத்து செஞ்சுப் போடுங்க” இமாம் பின்பாட்டுப் பாடினார்.

“ரெண்டாயிரம் ரூவா நானேவா குடுக்கணும்? நூறு நூத்தம்பதுன்னா பரவாயில்ல. போனாபோவுது. பள்ளிவாசல் காரியம்னு வேற சொல்லுதியோ.. இரநூறு ரூவா தரேன்.ஜமா-அத்துல மிச்சத்தை வசூல பண்ணிக்கிடுங்க. எனக்கு வேற சோலி கிடக்குது. இன்ஷா அல்லா*, பொறவு பாப்போம்.வரட்டுமா?” சொல்லிக் கொண்டே எழுந்தார்.

“காக்கா, நீங்க இப்படிச் சொல்லக்கூடாது.. நீங்களே தரலன்னா யாரு தரப் போறா?” நாகூர் கனி கெஞ்சலாகக் கேட்டார்.

“என்ன இப்படி சொல்லிட்டீங்க? நீங்க எல்லாம் இருக்கீங்கதான? உங்க பங்குக்கு ஏதாவது செய்யுங்க”

“வச்சுக்கிட்டா நாங்க வஞ்சகம் பண்ணுதோம்?” சொல்லி முடித்ததும்தான் நாகூர் கனிக்குச் சொன்னதன் பொருள் புரிந்தது.

“அப்போ, நான் வச்சுக்கிட்டே வஞ்சகம் பண்ணுதேன்னு சொல்லுதியளா?”

“இல்ல காக்கா..நான் அப்படிச் சொல்லலை”

“ஊர் கூட்டம்னு சொல்லிக் கூப்பிட்டுட்டு இப்படி என்னை இப்படி அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளா நெனச்சுக்கிட்டு இருந்திங்க? ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்காது உங்களுக்கு. போய் வேற வேலயப் பாருங்க. ஒரு பைசா கூட என் கிட்ட எதிர்பாக்காதீங்க” சொல்லி விட்டு எழுந்தார் அகமது சாகிப்

“காக்கா, இப்படிக் கோவிச்சுக்கிட்டுப் போவாதீங்க. தெரியாம சொல்லிட்டேன்” நாகூர் கனியின் குரல் மெதுவாக வந்தது.

“ஆள விடுங்க” சொல்லிக் கொண்டே அகமது சாகிப் பள்ளிவாசல் தாழ்வாரத்தை விட்டு வெளியில் நடக்க எத்தனிக்கும்போது “அவர் போனா போவட்டும் விடுங்க. ரெண்டாயிரம் ரூவாதானே? நான் தாரேன்” என்றது ஒரு குரல். எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். சலீம் மூசாதான்.

“என்ன பாக்க்குறீங்க? என் கிட்ட ஏது பணம்னுதான பாக்குறீங்க? ஹஜ்ஜு*க்குப் போறதுக்காகக் கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன். இந்த வருசம் இல்லன்னா இன்ஷா அல்லாஹ்,அடுத்த வருசம் போயிட்டுப் போறேன். அவனோட பள்ளிக்கு இங்க செலவழிச்சா என்ன, அங்க செலவழிச்சா என்ன?”

இதைக் கேட்டதும் அகமது மீராசாகிப்பிற்குக் கெட்ட கோபம் வந்து விட்டது. ஒரு வெறும் பயல் இரண்டாயிரம் கொடுக்கிறான். அதுவும் இல்லாமல் எனக்கு முன்னால் ஹஜ்ஜுக்குப் போகப் போவதாக வேறு சொல்கிறான் என்ற நினைப்பில் பெரும் கோபம் வந்து விட்டது. அந்த நினைப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஹஜ்ஜூக்குப் போவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார். பணம் நிறைய இருந்ததால் அந்த வருடமே ஹஜ்ஜை நிறைவேற்றி ‘ஹாஜியாராகவும்” ஆகி விட்டார்.

ஏற்கெனவே பணமும் இருந்து, இப்போது ஹாஜியாராகவும் ஆகி விட்டதால் ஊருக்குள் ‘ஹாஜியாருக்கு’ தனிமரியாதை. மக்காவைப் பார்த்து வந்ததாலோ என்னவோ கொஞ்ச காலம் அகமது மீராசாகிப் புதுமனிதனாக உலாவரத் தொடங்கினார். பக்தி முழுமையாக ஆட்கொண்டது போல வியாபாரத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டு பள்ளிவாசல் பக்கம் அதிகம் போகத் துவங்கினார். அவரது ஆன்மீக ஈடுபாடு கண்டு வெள்ளிக்கிழமைகளில்  ‘குத்பா’*வை அவரே செய்யத் துவங்கினார். ”ஹாஜியாராக’த் தனக்குக் கிடைத்த மரியாதையில் அவருக்கும் ஒரு ஈர்ப்பு வந்து விட்டது. ஆனால், கொஞ்ச காலத்திலேயே இந்த மரியாதை சலிக்கத் துவங்கி விட்டது அகமது சாகிப்புக்கு. என்னதான் ஹாஜியார் என்ற முறையில் மரியாதை கிடைத்தாலும் ஜமா-அத்தைச் சேர்ந்தவர்கள் தன்னை விட சலீம் மூசாவுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற கடுப்பு இருந்து கொண்டேதான் இருந்தது ஹாஜியாருக்கு.

“இந்த எளவெடுத்தவன் வருவானாமா இல்லியாமா? உன் மொவன் அவன விட வெளங்காதவனா இருக்கான். அவனப் பாக்கப் போனவன இன்னும் காணல” ஹாஜியார் உறுமத் துவங்கினார்.

“கொஞ்சம் பொறுங்களேன். இப்பம் வந்துடுவான்” பாத்துமா சொன்னதுஅவருக்குக்  கேட்டிருக்க வாய்ப்பில்லை.

“‘வெள்ளிக்கிழமை ‘கொத்துபா’வுக்குப் போவணும். சீக்கிரம் வந்து முடிவெட்டிட்டுப் போ’ன்னு நேத்து இஷா* நேரத்துல அந்தக் கிறுக்கன் கிட்ட சொல்லியிருந்தேன். ‘வெள்ளனே வந்துடுவேன் காக்கா’ன்னு சொல்லிட்டுப் போனான். இன்னும் அந்த வெளங்காத மூதிக்கு விடியலியாக்கும்?” ஹாஜியார் சொல்லி முடிக்கவும் “சலாமலைக்கும் காக்கா” என்ற குரலோடு உள்ளே நுழைந்தார் அக்பர்.

“சலாத்துக்கு ஒரு குறச்சலும் இல்ல. எப்ப வரச் சொன்னா எப்பலே வரே? நாங்க சோலியப் பாக்காம நீ எப்ப வருவேன்னு காத்துக்கிட்டு கிடக்கணுமாக்கும்?” ஹாஜியார் உரக்கப் பேசி தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

தான் சலாம் சொன்னதுக்குப் பதில் கூட ஹாஜியார் சொல்லவில்லை என்பதால் ஹாஜியார் கோபமாக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார் அக்பர்.

“கோவப்படாதிய காக்கா, மேலத்தெருல சலாம் காக்காவோட பொண்ணுக்கு மொட்டை போடச் சொல்லியிருந்தாங்க. சின்னப் புள்ள பாருங்க. மொட்ட போட நேரமாப் போச்சு. இல்லனா உங்களக் காக்க வப்பனா காக்கா.. வந்து உக்காருங்க..ஒரு நிமிசத்துல முடிச்சிடுவோம்” சொல்லிக் கொண்டே கையிலிருந்த பையை பக்கத்திலிருந்த புட்டுவத்தில் வைத்தார் அக்பர்.

அக்பரை ஹாஜியார் ஒருமையில் அழைத்தாலும் அக்பருக்கு அறுபத்தைந்து வயதுக்கு மேலாகிறது. ஊருக்குள் வீடு தேடிச் சென்று ஆண்களுக்குச் சவரம் செய்யும் வேலை அவருக்கு. பார்வை முன்பு போல இல்லை என்பதால் கண்ணாடி போட்டிருக்கிறாரே தவிர கையில் நடுக்கம் இல்லாமல் கத்தி பிடிக்கத் தெரிந்தவர். வீட்டிலேயே சவரம் செய்து கொள்ளலாம் என்பதாலும், கடையில் கொடுப்பதை விடக் குறைச்சலாகக் கொடுத்தால் போதும் என்பதாலும், அதைக் கூட தவணை முறையாகக் கொடுத்தால் போதும் என்பதாலும் அக்பரிடம் தலையைக் கொடுக்க ஆட்கள் தயாராகவே இருந்தார்கள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் அக்பர் தன் குடுமபத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்

“பாத்து வெட்டு. அவசரமில்லாம நிதானமா வெட்டு. கேட்டியா? போன தடவ கரப்பான் பூச்சி தலயக் கரம்புன மாதிரி வெட்டிட்டு போயிட்ட”

‘அப்படில்லாம் இல்ல காக்கா. நம்ம ஒழுங்காத்தான் வெட்டுவோம். நீங்கதான் அவசரத்துல இருந்தீங்கோ”

“ஆமா. அப்புறம் உன்ன மாதிரி வேல சோலி இல்லாதவங்களா நாங்க? சீக்கிரம் சோலியப் பாரு. ஜுமாக்குப் போவணும்”

“சரிதான் காக்கா” சொல்லிக் கொண்டே தனது வேலையில் மூழ்கினார் அக்பர். நாற்பதாண்டுகளாகக் கையில் புழங்கிய கத்தரிக்கோல் அவர் கைகளின் இயக்கத்திற்கு இசைந்து கொடுத்தது. பத்து நிமிடத்துக்குப் பிறகு அவரது கைகளின் இயக்கம் ஓய்ந்த போது ஹாஜியாரின் முடியில் தேவையில்லாத பகுதிகள் நீக்கப்பட்டு ஒரு ஒழுங்கிற்குள் வந்திருந்தது.

அக்பர் செம்பு நீரில் தனது ஆயுதங்களைக் கழுவி பையில் வைத்திருந்த துணியில் அவற்றைத் துடைத்து அதற்குள்ளிருந்த அழுக்குத் தோல் பையில் அவற்றை அடுக்கி வைத்தார்.

“பாத்துமாம்மா. செம்பை உள்ள எடுத்து வச்சிருங்கோ” உள் நோக்கிக் குரல் விடுத்த அக்பர், “சரி ஹாஜியார். அப்ப நான் கெளம்புறேன்” என்று புறப்பட ஆயத்தமானார்..

“கொஞ்சம் இரு., கை நகத்தைக் கொஞ்சம் வெட்டிட்டுட்டுப் போ”

“ஹாஜியார், தப்பா நெனக்காதீங்கோ. கொஞ்சம் வேலயிருக்கு. ஊட்டுக்கு மொவனும் மருமவளும் வந்திருக்காங்கோ. நான் போயி கறி ஏதாவது வாங்கிக் குடுத்துட்டுத்தான் ஜும்மாவுக்கு வரணும். நாளைக்கு வந்து வெட்டி வுடுறேன் ஹாஜியார்”

“என்னது நாளைக்கா? என் சவுரியத்துக்கு நீ வெட்டுவியா உன் சவுரியத்துக்கு நான் வெட்டணுமால பிச்சக்காரப் பயலே, கொஞ்சம் உட்டா உன் வூட்டுக்கு வந்து வெட்டணும்னு சொல்லுவ போலிருக்கே” ஹாஜியார் குரலில் இப்போது அனல் பறந்தது. பக்கத்திலிருந்த புட்டுவத்தை எட்டி உதைத்தார் ஹாஜியார். அதில் இருந்த கிண்ணம் தெறித்து சென்று விழுந்தது. அக்பர் நடுங்கிப் போனார். ஹாஜியாரின் கோபம் பழக்கமானதுதான் என்றாலும் இம்முறை அவரது கோபம் வழமைக்கும் அதிகமாக இருந்தது போலத்தோன்றியது.

“சரி ஹாஜியார்.. சத்தம் போடாதீங்கோ.. அதயும் செஞ்சுட்டே போறேன்” அக்பர் மீண்டும் தனது பையைத் திறந்து ஹாஜியாருக்கு நகம் வெட்டி திருத்தி விடை பெறுவதற்கு அரை மணி நேரமானது. வேண்டுமென்றே நகம் வெட்டுவதற்கு இடையில் ஹாஜியார் வீட்டிற்குள் ஏதோ அவசர காரியம் போல எழுந்து போய் வந்ததை அக்பரால் பெரிதுபடுத்த முடியவில்லை. அவரது தயவும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்ற யதார்த்தத்தை அவர் புரிந்து வைத்திருந்தார்.

அக்பர் வேலை முடித்து வீட்டிற்குப் போய் தனது பையை வைத்து விட்டு கடைக்குப் போய் சாமான்களையும் வாங்கிக் கொடுத்துக் குளித்து ஜும்-ஆவுக்குக் கிளம்புவதற்குள் ஹாஜியார் ‘குத்பா’வைத் துவங்கி விட்டார்.

“..ஆகவே அல்லாஹ்வின் நல்லடியார்களே!! நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நம் இறைவன் நமக்குள்ளே எந்தப்  பேதமையையும் உருவாக்கவில்லை. குலத்தாலோ, பிறப்பாலோ, தொழிலாலோ ஒரு மனிதனை விட இன்னொரு மனிதன் உயர்வானவனில்லை. எல்லா மனிதர்களையும் இறைவன் ஒருபோலத்தான் படைத்திருக்கிறான் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நல்லடியார்களே!! கூலி வேலை செய்பவனாக இருந்தாலும் அவனையும் உங்கள் சகோதராக எண்ணிப் பாருங்கள் என்றுதான் இறைவன் நமக்குச் சொல்லியிருக்கிறான்” ஒலி பெருக்கி வழியாக ஹாஜியாரின் பிரசங்கம் தெரு முனை வரையிலும் கேட்டது.

தொழுவதற்காகப் பள்ளிக்குள் அப்போதுதான் நுழைந்து கொண்டிருந்த அக்பர் கண்ணுக்குள் தெறித்து விழுந்த கிண்ணமும், ‘பிச்சக்காரப் பயலே’வும் நிழலாடியது. அவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

******************************************************

* ஜும்-ஆ தொழுகை -வெள்ளிக்கிழமை மதியத் தொழுகை
* தஸ்பீஹ் – ஜெபமாலை
*க·பா – மக்காவில் இருக்கும் இறை இல்லம்
* ஒளுச் செய்வது – தொழுகைக்கு முன்னர் உடலை நீரால் சுத்தம் செய்வது
*மவுத் – மரணம்
*ஹஜ்ஜுப் பயணம் – இஸ்லாமியர்கள் மக்காவிற்கு மேற்கொள்ளும் புனிதப் பயணம்

*இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்

*குத்பா – வெள்ளிக்கிழமை மதிய தொழுகைக்கு முன்னால் நடத்தப்படும் சொற்பொழிவு

**

மாலனின் ‘திசைகள்’ மின்னிதழில் பிரசுரமானது, வட்டி கொடுக்காமல்!

**

நன்றி : ஆசிப் மீரான் | https://www.facebook.com/asifmeeran

காந்தி புன்னகைக்கிறார் (சிறுகதை ) – மு. சாகுல் ஹமீது

நன்றி : காலச்சுவடு & சாகுல் ஹமீது

“சிந்திப்பதைக் குறை சொல்ல மாட்டேன். ஆனால் பெயரைக்கூடச் சொல்லாமல் வெறுமனே இப்படி உட்கார்ந்திருக்கும்போது எழுகிற சிந்தனைகள் ஆபத்தானவை. சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்” மீண்டும் அதே புன்னகை.

“என் பெயர் நாதுராம்… உங்கள் நகைச்சுவையுணர்வைப் பாராட்டுகிறேன் காந்தி. ஆனால் இதற்கு மேல் வேண்டாம்.”

“பெயர் நாதுராமென்றா சொன்னீர்கள்?”

“ஆம்.”

“நாதுராம்… ராம்… என் ராமனின் பெயர்.”

“உங்கள் ராமனா… எப்போதிருந்து? நீங்கள்தான் இந்து மதத்திலிருந்தே விலகிவிட்டீர்களே. ராமன் மட்டும் எப்படி உங்களவன் ஆனான்?”

“மன்னிக்கவும் நாதுராம். என் ராமனுக்கு எந்த மதமுமில்லை. ஏனென்றால் அவன் ஆலயங்களில் வசிப்பதில்லை. எல்லோருக்குள்ளும் இருக்கிறவன் நாதுராமுள்ளும் இருக்கிறான். இந்தக் கிழவனுக்குள்ளும் இருக்கிறான்.”

“உங்களால் எப்படி இப்படியெல்லாம் இருக்க முடிகிறது காந்தி? இந்த நாட்டின் மொத்த இந்துக்களுக்கும் துரோகம் செய்வதில் உங்களுக்கென்ன அவ்வளவு ஆனந்தம்?”

“இந்தக் கேள்வியை ஆயிரம் முறை கடந்துவந்துவிட்டேன் நாதுராம். இனி லட்சம் முறைகூடக் கேட்கப்பட்டாலும் பரவாயில்லை. பதில்களால் மனிதர்கள் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள். பொய்க்குத்தான் தேவையே தவிர உண்மைக்குத் தர்க்கம் அவசியமில்லை. என் உண்மைக்குப் பல முகங்களுண்டு. ஆனால் முசல்மானின் முகம், பார்ஸியின் முகம், இந்துவின் முகம், சீக்கிய முகம் என்று எந்தப் பேதமும் அதிலில்லை. நீங்கள் என்னை இந்துவின் பக்கமா இல்லை முகமதியன் பக்கமா என்று கேட்டால், நான் மனிதர்களின் பக்கம்தான். எனக்குத் தெரிந்ததும் அது மட்டும்தான்.”

“இது வெறும் வார்த்தை ஜாலம். இதை நான் நம்ப மாட்டேன்.”

“என்னை நம்ப வேண்டுமென்று நான் யாரிடமும் சொல்லவில்லையே… இங்கு தன்னைத் தவிர வேறு யாரையும் யாராலும் முழுமையாக நம்பிவிட முடியாது.”

*

மேலும்
https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/303/articles/15-gandhipunakaikirar

*

மு. சாகுல் ஹமீது: மூன்றாமாண்டு இளங்கலைத் தமிழ்த்துறை மாணவர், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம், தேனி. மின்னஞ்சல்: [email protected]

ஜெமீலா தாத்தா (சிறுகதை) – நஸீமா

’மணல் வீடு’ இதழில் வெளியான சகோதரி நஸீமா பர்வீனின் ‘ஜெமீலா தாத்தா’ கதை நன்றாக இருந்தது. இந்தச் சிறுகதை பற்றி நண்பர் ஜமாலனின் சிறு விமர்சனத்தை பின்னூட்டத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாசித்து வயதை உயர்த்திக் கொள்க!

ஆபிதீன் தாத்தாவின் வலைப்பக்கத்தில் வெளியாக அனுமதி வாங்கித்தந்த சென்ஷி மாமாவுக்கும் யாழினி மாமிக்கும் நன்றி. – AB


ஜெமீலா தாத்தா – நஸீமா

கோட்டைமேடு இடியாப்பச் சிக்கல்போல சந்துகளால் குறுக்கும் நெடுக்குமாகப் பாவிக் கிடந்தது. அங்கு நாங்கள் வசித்த பகுதி உள்ளங்கையை விரித்து வைத்ததுமாதிரி மலர்ந்து இருந்தது. அகன்ற சந்துக்குள் ஒரு மைதானம். அதைச் சுற்றிலும் குறுகலான நான்கு சந்துகள் நேராகவும் ஒரு சந்து மட்டும் கிடையாகவும் இருந்தன. நதிகள் கடலில் கலப்பதுபோல எல்லாச் சந்துகளின் முடிவும் வாலாங்குளத்தோடு கலந்தன. உள்ளங்கையின் ஆயுள்ரேகைபோல மைதானத்தில் ஒரு கொடிக்கம்பம். அதன்கீழே எப்போதும் பெண்கள் கூட்டமாய் அமர்ந்து ஊர்ப்பாடுகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்தக் குறுகிப் பரந்த உலகத்தின் ஜாம்பவிகள் பலரை நான் அங்கு கண்டிருக்கிறேன். உப்புத் தண்ணீர் குழாயடியில் தன் ஆளுமை காட்டுபவளையும், பழக்காரக் கடை வாசலில் பஞ்சாயத்துச் செய்பவளையும் தம் வீட்டுத் திண்ணையிலிருந்தபடியே பார்வையால் எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருப்பவளையும் பார்த்திருக்கிறேன். இந்தப் பெண்களின் வரிசையில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட ஜெமீலா தாத்தாவின் தலைமை அந்தக் கொடிக் கம்பத்தின்கீழ் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. ஏதாவதொரு அடர்ந்த நிறத்தில் கழுத்து முதல் தொப்புள் வரைக்கும் பட்டன் வைத்து தைக்கப்பட்ட முழுக்கைக் குப்பாயமும் பொடிப் பூக்கள் நிறைந்த வெளிர் நிறப் புடவையும் அணிந்த பூச்சைக் கண்ணி ஜெமீலா தாத்தாவை அந்தப் பகுதியில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவள் மந்திரித்துக் கொடுத்தால் சகல நோயும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை சந்துக்குள் துடிப்புடனிருந்த எல்லா இதயங்களின் ஆழத்திலுமிருந்தது. ஜெமீலா தாத்தாவுக்குப் பதிமூன்று பிள்ளைகள். கடைசி இரண்டு குழந்தைகள் அவளின் பேரக்குழந்தைகளை விடவும் இளையவர்கள். கடைக்குட்டி ஜான்சாவின் பசிக்காகச் சந்துக்குள் சில இளவட்டங்கள் ஏங்கியதுண்டு. தம் நண்பர்களோடு விளையாடிக் களைத்தவுடன் நேராகத் தாயின் மடி தேடி வரும் அந்தக் கன்றுக்குட்டிக்காக அவள் தன் குப்பாயத்தின் இறுதி ஐந்து பட்டன்களைப் பூட்டாமலே வைத்திருப்பாள். குழந்தை அவனாகவே வருவான். தன் பசியை நீக்கி அவனாகவே அங்கிருந்து போய் விடுவான். ஜெமீலா தாத்தாவுடைய பேச்சின் மும்முரத்தை இது எந்த வகையிலும் பாதிக்காது. உள்ளங்கை முகம் தவிர எல்லாப் பாகங்களும் மூடியபடி தோற்றம் தருபவள். ஒரு முடியின் நுனி கூட வெளியே தெரியாதபடியிருக்கும் அவள் தன் முலைகளைக் குறித்துக் கவனமில்லாமலிருப்பது சந்துக்குள் ஏனைய பெண்களினுடைய மனக்குறையாக இருந்தது. பசிக்கிற பிள்ளைக்கு உணவூட்டி உயிர் வளர்க்கிற செயல்தானே; ஒளிவு மறைவில் செய்யக் கூடிய அளவு அப்படியொன்றும் ஆபாசமானது இல்லையே என்பது ஜெமீலா தாத்தாவின் எண்ணமாகயிருந்தது. உம்மா கூட ஒருமுறை அவ நல்ல பொம்பள தான். ஆனா இது ஒன்னு தான் அவகிட்ட அசல்கேடு என்று முகம் சுளித்தாள். உம்மாவின் முகச் சுளிப்புக்குள் ஏளனச்சிரிப்பு புதைந்திருந்ததைப் பார்த்தேன்.

ஜெமீலா தாத்தாவின் மூத்த மருமகன் வேறு யாரோ ஒருத்தியுடன் சினிமாவிற்குப் போன சேதி தெரிந்து ஒருமுறை பெரிய களேபரம் ஆனது. ஜெமீலா தாத்தா பெரிய ரகளையே செய்து விட்டாள். எதுக்குக் கண்டவளோட சினிமாவுக்குப் போனே என்று கேட்டு விட்டு அவள் ஒரு இங்கிலீஷ் படமே காட்டிவிட்டாள் என்பது சந்துக்குள் பல நாட்கள் பேச்சாயிருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவளது முந்தைய செயல்கேடு ஒன்னுமில்லாமல் போனது சந்துவாசிகளுக்கு.

எதுவான போதிலும் ஜெமீலாவிற்கு ஜால்றா போடுபவளும், ஏவிய பணியைச் சிரமேற் கொண்டு முடிப்பவளும் அவளுக்கு வலதும் இடதுமாயிருந்தார்கள். இந்தக் குழுவை இயக்கத்தில் வைத்திருக்கின்ற முக்கியஸ்திரியாக இருந்தவள் மொம்மும்மா (மஹ்மூதா பெரியம்மா என்று விளிக்கப்பட்டு நாள்போக்கில் மொம்மும்மாவாகிவிட்டது). நாலா பக்கத்திலிருந்து செய்திகளைச் சேகரித்து வருபவளும், இந்தப் படையிலிருந்து வேவு பார்த்துப் பிற குழுக்களில் தண்டோரா போடுபவளுமாகத் தானும் இயங்கி சந்துகளையும் இயக்கிக் கொண்டிருந்தாள். தண்டோரா என்றா சொன்னேன் இல்லை இல்லை. அவ்வளவு சத்தமாக வெளிப்படுத்துபவளில்லை. அவள் சொம்புத் தண்ணீரில் கடலினை மொண்டு வருபவள். நான்கு சொற்களிலிருந்து நானூறு செய்திகளை உருவாக்கும் வல்லமை அவளுக்கிருந்தது. எப்போதும் அவளுடைய வாயிலிருந்து வெளிவரும் மாறாத வாசகம் “ளா தெரியுமா” என்பது தான். இந்த வாசகத்தை அவள் தன் கரகரத்த குரலில் ஏதோ ஒரு ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்கிற நிதானத்தோடு சொல்வாள்.

உம்மா எனக்கு விருப்பமான முட்டைப்பாலாடை சமைத்துக் கொண்டிருந்தாள். மிகவும் லேசான மஞ்சள் பெளர்ணமியாய் பாலாடைகளைச் சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தாள். நானும் அண்ணனும் சர்க்கரை, தேங்காய்ப் பூ தூவி பாலாடையை ஊதுகுழல்போலச் சுருட்டிக் கொண்டிருந்தோம். மொம்மும்மா வழக்கம் போல, லேடி எம்.ஆர். ராதா குரலில் “ளா தெரியுமா” என்றபடி வந்து நின்றாள். ப்ரு காப்பி குடித்த சுறுசுறுப்பை உம்மாவுக்குள் உண்டாக்கிவிடும் மந்திரச் சொல் அது. உம்மாவின் முகபாவத்தில் ஒரே ஆவலாதி. இந்தக் கோட்டைமேட்டுப் பெண்களின் செருக்கான இருப்பையும் இடிபோன்ற பேச்சையும் உம்மா தூரத்திலிருந்து ரசித்தாள். அருகில் செல்ல அஞ்சினாள். ஓங்கிய குரலிலல்லாமல் கள்ளச் சந்தைப் பொருள் விற்பன்னர் மாதிரி பதுக்கிப் பேசும் மொம்மும்மாவைத் தவிர யாரோடும் அவள் ஒட்டி உறவாடியதாக என் நினைவிலில்லை. ஒரு வட்டிலெடுத்து ஏழெட்டு முட்டைப்பாலாடையை அடுக்கி, மொம்மும்மாவிடம் நீட்டியபடி விளக்கிலிருந்து வெளிவரும் பூதத்துக்குக் காத்திருந்தாள்.

“ஜெமீலா ஏர்வாடிக்குப் போயிட்டு வந்தாளல்லோ. ஏதோ முரீது கெடச்சிருக்குதாம்புளா.”

“அப்..பி..டியா”- குரல் வெளியே வராத படி உம்மா ரகசியமாகக் கேட்டாள்.

“தேரு… எல்லோரும் போய் பார்த்துட்டும் வந்துட்டும் இருக்காங்க. உனக்குத்தாம்புளா ஒரு மயிரும் தெரியாது”

“காலையில தானே நபீஸக்கா கடைக்குப் போயிட்டு வந்தேன். ஒருத்தரும் ஒன்னுஞ் சொல்லலியே” கொஞ்சம் சலிப்போடு சொன்னாள் உம்மா.

“போளா நீ கொஞ்சம் மூடிட்டு.. இப்பப் போயிப் பாரு அங்கே.. ஒரே பெருநாளாக் கெடக்குது”

“அப்டீனா.. வர்றீங்களா மொம்மும்மா.. நமக்கும் போய் ஒன்னு எட்டிப் பார்த்துட்டு வரலாமா”

“நான் இப்பத்தாம்ளா போய்ப் பார்த்துட்டு வாரேன். இரி…பல்கீஸ் வீட்டுலயும் போய்ப் பார்த்துச் சொல்லிட்டு வரேன். அந்தப் புள்ளக்கும் உன்ன மாதிரித்தான்.. நான் சொல்லாம ஒன்னுந் தெரியாது…” – என்றபடியே எழுந்து கையைச் சேலையிலேயே துடைத்துக் கொண்டு போனாள்.

மொம்மும்மா இனி இப்போதைக்கு வரப் போவதில்லை என்று உம்மாவுக்கு நன்றாகத் தெரியும். அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எங்கள் பக்கம் திரும்பி “ஜெமீலா தாத்தாட்டப் போயி ஒன்னு மந்திரிச்சுட்டு வரலாம் ரெண்டு பேரும் வறீங்களா…” என்று கேட்டாள். அண்ணனுக்கு ஏறிமேட்டில் கிரிக்கெட் மேட்ச் இருந்தது. வலது புற மூலையில் சாய்த்து வைத்திருந்த தென்னை மட்டையைக் கண்சாடை காட்டியபடி அதைச் சொல்லி அவன் நழுவினான்.

உம்மாவின் தைரியம் பற்றி எனக்குத் தெரியும். உம்மாவின் முகத்தில் யோசனை அப்பிக் கிடந்தது. நான் கொஞ்சம் பெரிய மனுஷித்தனத்தை அணிந்து கொண்டு “என்னத்த யோசிச்சிட்டிரிக்குற வா போவலாம் நான் வாரேன் உன்கூட” என்றேன். உம்மாவின் கண்களில் ஆச்சர்யம் விரிந்தது.

நான் ஒன்னும் உன்ன மாதிரி பயந்தாங்கோளியில்ல வா போவலாம் என்று நான் மிடுக்காக நின்றபடி வாயை நேராக வைத்துச் சொன்னேன். எல்லாம் காரணமாகத்தான்.

பரீட்சை விடுமுறைகளில் அந்தந்த சீஸனைப் பொறுத்து கோட்டைமேட்டு சந்துகள் கலகலத்துக் கிடந்தன. கால் பரீட்சை விடுமுறையில் சாபிராவோடு பம்பரம் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். சாபிரா, ஜெமீலா தாத்தாவின் மகள். என் வயதொத்தவள். சாட்டையின் கட்டிலிருந்து விடுபடும் போதெல்லாம் பம்பரம் சுழன்று தன் சுதந்திரத்தைக் கொண்டாடித் தீர்த்தது. சாபிராவைக் கூப்பிட வந்த  ஜான்சா பம்பரத்தைக் கேட்டு ஓரியாடினான். நான் என் உள்ளங்கைக்குள்ளாகப் பொத்திப் பிடித்துக் கொண்டேன். அவனுக்கு வந்த ஆங்காரத்தில் என் புறங்கையில் கடித்து வைத்துவிட்டான். இரண்டு பற்கள் சதையில் அழுத்தி இரத்தம் துளிர்த்திருந்ததை உம்மாவிடம் காட்டியபோது அவள்முகம் வாடியதே  தவிர ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அழுகை முட்டி நின்ற நான், “ஏளா ஒன்னுஞ் சொல்லாம நிக்குற.. நானே ஜெமீலா தாத்தாட்ட போய்ச்  சொல்லிக்குறேன்” என்று வீறாப்பாகக் கிளம்பியபோது “வேண்டாளா, அந்தப் பொம்பள உன்ன எடுத்து ஜாக்கிட்டுக்குள்ள போட்டு இறுக்கீருவா என்றாள். அதைச் சொல்லும்போது உம்மா, வலதுகையின் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையுமாகச் சேர்த்துப் பிடித்து ஏதோ கரப்பான்பூச்சியைப் பிடித்து தூக்குவது போன்ற பாவனையில் காட்டினாள்.   எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. நான் கொடிமரத்தடிக்கு ஓடினேன். “ஜெமீலா தாத்தா… ஜான்சா எனைக் கடிச்சு வச்சுட்டான்.. பல் பூந்து ரத்தம் வருது பாத்தீங்களா…” என் கையைத் திருப்பிக் காண்பித்தபடி அலறினேன். தன் பரிவாரங்களோடு உரையாடிக் கொண்டிருந்த அவள் என் குறுக்கீட்டை விரும்பவில்லை. அவளின் கண்கள் என்னை ஓரப்பார்வையாகக் கூர்ந்து நோக்கின. “பூச்சைக்கு இருட்டுலயும் கண்ணு தெரியுற மாதிரி ஜெமீலா தாத்தாவோட பூச்சைக் கண்ணுக்குப் பேயி நல்லாத் தெரியுதுளா.. அதோட கண்ணப் பார்த்தாலே மந்திரவாதியோட கண்ணு மாரிதானே இருக்கு” என் அண்ணன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. என் இறுக்கம் தளர்ந்து அச்சம் எனைக் கவ்வத் தொடங்கியது. என் இதயத்துடிப்பு காதுக்கு அருகில் கேட்பதை உணர்ந்தேன். ஆனாலும் அங்கேயே நின்றேன். நிற்க வேண்டும் என்ற பிடிவாதமில்லை. கால்கள் நகரும் வலுவிலில்லை என்பதே உண்மை. ஜெமீலா தாத்தாவுடைய பார்வையில் பிடிபட்டு சதாம் மேல் சேர்ந்த முத்தும்மா ஊமச்சியின் சைத்தான் வெளியே குதித்ததாக என் அண்ணன் சொல்லிய நிகழ்வு ஓர்மைக்கு வந்ததும் நான் பயந்தேபோனேன். பயத்தில் எனக்கு ஒன்னுக்கு வந்துவிடும்போல இருந்தது. அவளின் பார்வையில் பிடிபட்டு எனக்குள்ளிருந்து ஏதாவது ஒரு சைத்தான் குதிக்கப் போகிறதா? கருத்த குகைக்குள் இரண்டு வேட்டை மிருகங்கள்போல என்னைப் பார்த்துக் கொண்டிருந்த கருவளைத்த அவளுடைய கண்களை அவள் மிகச் சாவகாசமாக திருப்பிக் கொண்டு ஒரு மகாராணி போன்ற தோரணையில் “ப்பூ… இவளோவுதானா..சாரமில்ல…போ” என்றாள். இல்லை இல்லை உத்தரவிட்டாள். நான்கு எட்டில் இருக்கும் வீடு, அன்றைக்குப் பார்த்து நடக்க நடக்க எட்டாததுபோல தூரமாய்த் தெரிந்தது. வீட்டிற்குள் வந்தபோது ஏதோ கேட்க வந்தவளாக உம்மா என் முகத்தையே பார்த்தாள். நான் விசும்பலோடு மூச்சிழுத்தேன். விசும்பலில் ஒரு கணம் என் வாய் சற்று கோணியது. அவ்வளவுதான்.. பளிச்சென்று சிரித்தபடி கொன்னாவாய்ச்சி…. நான் தான் போவாதே…ன்னேனே… கேட்டாத்தானே.. போயி இப்ப மூக்குப் போய் வந்தியா.. இதெல்லாம் தேவையா”.. என்றாள். மூக்கும் போயி வாயும் கோணியதாக உம்மாவால் கேலிப்படுத்தப்பட்ட அவலட்சணத்தைச் சிறு பிள்ளையாக இருந்த என்னால் தாங்க முடியுமா. நான் என் தைரியத்தை நிரூபிக்க இப்போது நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கோணவாய் என்று உம்மா செய்த கிண்டலை நேர் செய்ய நல்லதொரு சந்தர்ப்பம்… அதனால் தான் “வா ளா, போலாம். நான் வாரேன்.. மந்திரிச்சிட்டு வருவோம்” என்றேன்.

“ஒத்தைக்குப் போவனுமேன்னு மடிச்சிட்டிருந்தேன். நல்ல காலம்.. பெரிய மனுஷி துணைக்கு வாராங்கோ. வாடி கொமுரிப்புள்ள” என்றபடி சேலை முந்தானையைத் தலையிலும் தோளிலுமாகப் போர்த்திக் கொண்டு மெதுவாக வெளியே வந்தாள். பஞ்சுமிட்டாய் கலரில் சைனா சில்க் பாவாடையும் குப்பாயமும் அணிந்திருந்த நான் உம்மாவை ஒட்டிக்கொண்டு நடந்தேன். புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஜாக் பள்ளிவாசலுக்கு ளுஹர் தொழுவதற்காகப் போய்க் கொண்டிருந்த இபுராஹிம் அண்ணன் ஜெமீலா தாத்தாவின் வீட்டை நோட்டம் விட்டபடியே போய்க்கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல் உம்மா ஜெமீலா தாத்தா வீட்டுக்குள் போனாள். சந்து பரபரப்பாக இருந்தது. ஜெமீலா தாத்தாவின் வீட்டுக்குள் நுழைகையில் ஊதுபத்திக் கற்றைகளின் புகையும் மணமும் நம்மைச் சுற்றி வளைத்து உள்ளுக்குள் அழைத்துப்போனது. வீடு ஒரு குட்டித் தர்காவாக மாறியிருந்தது. இரும்புக் கட்டில்மீதிருந்த பிய்ந்த பெட்டின்மேல் வழுவழுப்பான பச்சைத் துணி விரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பேரரசிபோல ஜெமீலா தாத்தா உட்கார்ந்து ஏதோ வாய்க்குள்ளாக ஓதிக் கொண்டிருந்தாள். அவள் கழுத்து முதல் கணுக்கால் வரை மறைக்கும் தொழுகைக் குப்பாயமும் தலையில் ஒரு பச்சை மக்கனாவும் (முக்காடு) அணிந்திருந்தாள். அவளுக்கு முன்பாக ஒரு டீப்பாய், அதன் மீதும் பச்சைத் துணி விரிக்கப்பட்டிருந்தது. அதன் ஒருபுறம் ரஹாலும் அதன்மீது குர்ஆன் கிதாபும் விரித்து வைக்கப்பட்டிருந்தன. மறுபுறம் நிறைய தாயத்துகள் கோர்க்கப்பட்ட கயிறுகளும் தஸ்பீஹ் மணிச் சரங்களும் கொத்துக் கொத்தாக இருந்தன. இரண்டு வாழைப்பழங்களில் ஊதுபத்திக் கற்றைகள் புகையை உமிழ்ந்து கொண்டிருந்தன. சந்துவாசிகள் ஒவ்வொருவராக தத்தம் பிள்ளைகளை அழைத்து வந்து மந்திரித்துப் போய்க் கொண்டிருந்தார்கள். அவளுடைய மக்கள் பன்னிரண்டு பேரும் ஒவ்வொரு வேலையில் பணிக்கப்பட்டிருந்தார்கள். ஜான்சா இடையில் பால்குடித்துவிட்டுப் போவான் என நான் நினைத்தேன். ஆனால் அவனை மட்டும் அங்கு காணவில்லை. வெளியே விளையாடப் போயிருந்தானோ என்னவோ. மூன்றாவது மகன் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில சிறார்களை விரட்டுவதிலே மும்முரமாக இருந்தார். இரண்டு பிள்ளைகள் சத்தமாக குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள். மூத்த மகள் பயபக்தியோடு தாயத்து பிணைக்கப்பட்ட கயிறுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஜெமீலாவிடம் நீட்ட அவள் ஊதுபத்தி புகையில் காட்டி ஓதியும் ஊதியும் கொடுத்துக் கொண்டிருந்தாள். அடுத்தவள் வருபவர்களுக்குத் தாயத்தில் ஒன்றும் தஸ்பீஹ்மாலையில் ஒன்றுமாகக் கொடுத்தாள். கூடவே வெள்ளை நிறத்தில் பூ போன்ற இனிப்பு மிட்டாய்களையும் கொடுத்தார்கள். எங்கள் முறை வந்தபோது உம்மா என் முதுகின்பின் கைவைத்து முன்னோக்கித் தள்ளினாள். சதுரங்கக் கட்டங்களில் ராஜாவின் கம்பீரத்திற்கு எதிரில் பதுங்கிப் பதுங்கி ஒவ்வொரு அடியாக நகரும் சிப்பாய் கணக்காக நான் தயங்கித் தயங்கி முன் நடந்தேன். அவள் நிரம்பவும் அழகாகக் குர்ஆன் வசனமொன்றை ஓதினாள். அவளுடைய மிரட்டலான குரல் அடுப்பின் சூட்டில் உருகிக் கரையும் வெண்ணெயாக இளகி வழிந்தது. அந்தக் குரலில் வெளிப்பட்ட இசையையும் காருண்யத்தையும் நினைக்கையில் இப்போதும் மனதுக்குள் ஈரம் துளிர்க்கிறது. ஜெமீலா தாத்தா என் தலைமீது அவளின் பரந்த கைகளை வைத்து அவள் பக்கமாக இழுத்தாள். அவளின் மறு கையில் பால்பச்சை நிற தஸ்பீஹ் மணிகள் உருண்டு கொண்டிருந்தன. தஸ்பீஹ் மணியின் ஒளி அவளின் பூனைக் கண்களில் மினுங்கியது. ஓதி முடித்ததும் என் தலையில் ஊதிவிட்டு வெடுக்கென என்னைப் பின்புறமாக நகர்த்திவிட்டாள். “கொஞ்சம் மெதுவாத் தள்ளினாத்தான் என்னவாம்” நான் மனதுக்குள் பொருமிக்கொண்டேன். உம்மாவிடம் தஸ்பீஹ் மணியும் சீரணையும் கொடுத்தாள். உம்மா அதை வாங்கிவிட்டு மெதுவாக நகர்ந்து விட்டாள். நான் என் தோழமைகளோடு சேர்ந்து கொண்டு ஓரமாக நின்றேன்.

நேரமாக ஆக ஜெமீலா தாத்தா வீட்டுக்குள் ஜனங்களும் சுவாரஸ்யமும் கூடிக் கொண்டேயிருந்தது. திடீரென ஒரு கட்டத்தில் கட்டிலின்மீது ஏறி நின்று அவள் உடலை சிலுப்பியபடி ஓதலானாள். பிறகு ஓதுகிற முறைமையிலிருந்த காருண்யம் நீங்கி வெறுமனே ஓதினாள். பிறகு சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தாள். அங்கிருந்த பெண்கள் ஜெமீலா தாத்தாவுக்குக் கணக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள். நானும் என் சகாக்களும் ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தோம். ஜெமீலா தாத்தா சாடுவதும் மோதுவதும் சந்துவாசிகள் பலரைக் குறித்த முறைப்பாடுகளை உரத்துச் சொல்வதுமாக அமர்க்களப்படத் தொடங்கினாள். அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் சிலர் கள்ளத்தனமாகச் சிரித்தார்கள். சிலர் பதற்றமாகிக்  கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் ஒரு நாற்பது ஐம்பது இளவட்டங்கள் கட்டையும் கையுமாக திபுதிபுவென்று வந்தார்கள். கட்டைகள் கரடுமுரடாக இருந்தன. அதிகாரத்தின் அரிதாரம் பூசப்பட்ட அவற்றிற்குள் மிரட்டலைத் தவிர்த்து வேறு ஒன்றுமில்லா  வெறும் கட்டைகளாக மட்டுமே இருந்தன. வீட்டிற்குள் வேடிக்கைச் சுடர்விடும் முகங்களோடு நின்று கொண்டிருந்த எல்லோரையும் வெளியேறுமாறு கட்டளையிட்டார்கள். நாங்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடினோம். ஜெமீலா தாத்தாவின் வீட்டுப் பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். நூற்றுக்கும் மேலான வேகத்தில் போய்க் கொண்டிருந்த அவளின் கணக்கு சட்டென்று பூஜ்யத்திற்கு வந்து நின்றது. ஜெமீலா தாத்தாவும் மக்களும் சீறினார்கள். ஆனாலும் வந்திருந்தவர்களின் எண்ணிக்கைக்கு முன்னால் இவர்களின் சீற்றம் ஒன்றுமில்லாமல் உடைந்தது. வந்திருந்த கூட்டத்தில் முதல்வனாக இருந்தவன் வெள்ளிக்கிழமை பயான் தொனியில் பிரசங்கிக்கத் தொடங்கினான்.

“என்ன வேலை செய்றீங்க.. இதுக்கெல்லாம் இஸ்லாத்துல இடமில்ல. நீங்க சொல்ற மாதிரி அவுலியாமாரும் இல்லை. அம்பிகாமாரும் இல்லை. இதெல்லாம் அல்லாஹ்வுக்கு இணைவைக்குற  பாவம். அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்க” என்று சொன்னதோடு இனி இந்த மாதிரி ஏதாவது செஞ்சீங்கன்னா குடும்பத்தோட அடிச்சி வெரட்டீருவோம் என்று மிரட்டவும் செய்தான். பின்னர் மொத்தமாகக் கலைந்து போனார்கள். சைத்தானையும் பேயையும் மனிதருக்குள்ளிருந்து வெளியேற்றி விரட்டியடிக்கும் ஜெமீலா தாத்தாவின் பார்வையினுடைய சக்தி ஊடுருவ முடியாத இந்தக் கட்டைகளின் வரவுக்குப் பிறகு ஜெமீலா தாத்தா வீட்டிலிருந்த பசுமை நீங்கி இரண்டு நாட்கள் கருமை சூழ்ந்திருந்தது. மற்ற வீடுகளில் வியப்புகளும் வேடிக்கைகளும் முணுமுணுத்துக் கிடந்தன. அந்தச் சந்துக்குள் கலர் டீவியின் சங்கீதம் ஒலித்த ஒரே வீடு செவிட்டுக்காதர் வீடு. மறுநாள் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி பார்க்க நாதியற்று அது அவிந்து கிடந்தது.

இந்த முஜாயிது பசங்களிடம் தகவல் சொல்லி அவர்களை ஏவிவிட்டது சாலவூட்டு இபுராஹிம் தான் என்பதை மூன்றாவது நாளில் முறம் சுத்திக் கண்டுபிடித்திருந்தாள் ஜெமீலா தாத்தா. பிறகு முட்டை மந்திரித்துக் கொண்டிருந்ததாகச் சந்துக்குள் பரவலாகப் பேசினார்கள். அடுத்து வந்த நாட்களில் நான் எதிர்பார்த்தபடி “ளா தெரியுமா” என்ற மொம்மும்மாவின் குரல் எங்கள் வீட்டுக்குள் மெல்ல நுழைந்தது.

“ளா, உம்மா வாப்பாயும் மக்களும் ரண்டு நாளாச்சு வெளியில காணோம். உள்ளாறயே என்னமோ ப்ளான் பன்னுறாளுங்கோலாட்டம் இரிக்குது. என் வூட்டுக்கும் ஜெமீலா வூட்டுக்கும் எடையில ஒரு செவுரு தானே.. என்னதான் நடக்குதுன்னு எட்டிப் பாத்தேன். அரிசி மாவை ஜெமீலா கொலச்சுட்டிருந்தா. அரிசி ரொட்டிக்குத் தான் மாவு கொளய்க்குறானு நான் நெனச்சேன்…. மாவுல பொம்மயச் செஞ்சு உள்ளாற சொவப்புக் கலருல என்னுமோ வச்சு மந்திரிக்கிறா. இன்னுட்டு அதையெடுத்து  எளநிக்குள்ள வச்சு மூடிம்போட்டு ஆணி அடிச்சா. பின்ன அதயெடுத்துத்துட்டு தொடிக்கு வந்தா. நானும் மெதுவ்வா என் வூட்டுத் தொடியில வந்து நின்னு என்ன செய்யுறான்னு பார்த்தேம்புளா.. கொளத்துல அவ வீசுன எளநி மெதந்துட்டிருக்கு.. என்னென்னமோ செஞ்சிட்டிருக்குறா. அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம். எதயாவது மந்திரிச்சு என் வூட்டுக்குள்ள வீசுவாளோன்னு எனக்கு திக்குதிக்குன்னு இருக்கு” என்று பயந்த பாவனைபோல நடித்துச் சொன்னாள். பின் உம்மாவும் மொம்மும்மாவும் வாயைக் கைகளால் பொத்திக் கொண்டு சிரித்தார்கள். போகையில் மொம்மும்மா எப்போதும் போல “ளா உன் மனசுலயே கெடக்கட்டும் யாருட்டயும் எதுவும் சொல்லிக்கிடாத” என்று மறவாமல் சொல்லிப் போனாள்.

சரியாக நாற்பதாவது நாளில் இபுராஹீம் கை கால் வராமல் படுக்கையிலானபோது ஜெமீலா தாத்தாவுக்கு மவுசு கூடியிருந்தது. அவள் மந்திரிப்பதைக் கொஞ்சம் மறைத்தும் ஒளித்தும் தொடர்ந்தாள். என்றாலும் ஜெமீலாவின் பெருமிதமான கண்களுக்குள் விழுந்த துரும்பாகக் கட்டைகள் உறுத்திக் கொண்டேயிருக்க ஒருநாளில் இரவோடு இரவாக அவர்கள் அங்கிருந்து வீட்டைக் காலிசெய்து கண்களுக்கு அகப்படாத தொலைவிற்குப் பெயர்ந்தார்கள்.

குளத்து நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் கருதி புறம்போக்கு வீடுகளை அகற்றுகிற புல்டோசர் வாகனத்தின் இரும்புக் கரம் கோட்டை மேட்டுக்குள் நுழையும்வரை யாருமற்று சிதிலமடைந்து இருண்டு கிடந்தது ஜெமீலா தாத்தாவின் வீடு. ஏதோ அவமானத்தில் நாணியதுபோல.

முப்பது வருடத்திற்குப் பிறகு குடியுரிமை  பாதுகாப்பு மாநாட்டில் அவளைப் பார்த்து அடையாளம் கண்ட உம்மா என்னிடம் திரும்பிக் கேட்டாள். யாருன்னு தெரியுதா?. என் ஓர்மைத் தடத்தில் நான் அந்த முகத்தைப் புரட்டிப் பார்த்தேன். எனக்கு எந்தப் பிடியும் கிடைக்கவில்லை. கண்கள் மட்டும் எங்கோ பார்த்தவைபோல ஒரு குறிப்பை உணர்த்தின. உம்மா என் யோசனையைப் புரிந்து கொண்டு ஜெமீலா தாத்தா என்றாள். மெலிந்து ஒட்டிய தேகமும் கூன் நடையுமாக இறகுகள் உதிர்ந்த பறவை போல இருந்தாள். ஒரு குறிப்பிட்ட இஸ்லாமியக் கட்சியில் ஜான்சா ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கிறானாம். அவன் தான் எல்லாரோடும் தன்னையும் வேனில் ஏற்றிக் கூட்டி வந்ததாகச் சொன்னாள். என் பால்யத்தில் பச்சைக் கொடிக்கம்பத்தின் கீழும் வழுவழுப்பான பச்சை நிறத் திரைச்சீலைகள் சூழ ஓதிக் கொண்டும் பேரரசியாக வீற்றிருந்த ஜெமீலா தாத்தாவின் சாயலை என்னால் அந்த முதிர்ந்து தளர்ந்த உருவத்துக்குள் பொருத்திப் பார்க்க முடியவில்லை. கருப்பு நிற பர்தாவும் முக்காடும் அணிவித்து அழைத்து வரப்பட்டிருந்த அந்த எண்பது வயது மூதாட்டியின் கண்கள் கிழட்டுக்கழுகு ஒன்றின் கண்களை ஒத்திருந்ததை மட்டுமே என்னால் காண முடிந்தது.

*

நன்றி : நஸீமா பர்வீன் , மணல் வீடு

*

உயிர்மை இதழில் வெளியான நஸீமாவின் ’குஸக்கம்’ சிறுகதை (குஸ்கா தின்ற மயக்கம் என்று நினைக்கிறேன் :-)) விரைவில் இங்கே வெளியாகும், இன்ஷா அல்லாஹ்.

அகந்தையின் அளவு – ஜெ.பிரான்சிஸ் கிருபா

அகந்தையின் அளவு

கரையை விட்டிறங்கிக் கடலுக்கருகில் சென்று

இரண்டு கைகளையும் இடுப்பில் குத்திக்கொண்டு

எடுப்பான முகத்துடன் நான் நின்றபோது

குடுகுடுவென்று ஓடிவந்து ஒரு குஞ்சு அலை

என் கணுக்காலை வளைத்துச் சுற்றி
அளவெடுத்துவிட்டு திரும்பிச் சென்று

கடலுக்குள் அவசரமாகக் குறிப்பெழுதியது;
கடல் எனக்கொரு செருப்பு தைத்துத் தர

விரும்பியதை நானறிந்தேன்

அடுத்த அலை வந்து
என் முழங்காலை வளைத்துத் தழுவி

அளவெடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றது;
அந்தச் செருப்பு சராசரியானது அன்று
அரச லட்சணமுடையது என்றறிந்தேன்

இன்னொரு அலை வந்து
என் இடுப்பைத் தழுவிவிட்டுக்
குறிப்புக்களுடன் திரும்பியது;
இடுப்பில் ஆடையில்லாத ஒரு அரசனை
யார்தாம் நினைத்தும் பார்க்க முடியும்!

அடுத்து அந்த அலை
ஆளை ஒரு குலுக்குக் குலுக்கி
மார்பை அளந்துவிட்டுப் போனது;
கவசத்திற்கான கட்டாயத்தை
நானும் உணர்ந்துகொண்டேன்

கிரீடத்துக்கான அளவுகள்
மிக நுட்பம் வாய்ந்தவைபோல
அதற்கென்று வந்த அலை
தலையைத் திருகியெடுத்துக்கொண்டு போயிற்று.

*

நூல் : ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
*
நன்றி : சென்ஷி & டிஸ்கவரி புக் பேலஸ்

சோறு (சிறுகதை) – விழி.பா. இதயவேந்தன்

அம்மா சின்ன வயதில் எங்களை எப்படியெல்லாம் கவனித்தார்கள் என்று நினைத்தால் இன்னமும் அதிர்ச்சியாய்த்தான் இருக்கிறது. ஏழ்மை வாழ்விலும் ஒரு முன்னேற்றம். கேட்கும் பொருளையோ தின்பண்டங்களையோ தவறாமல் வேலையைவிட்டு வரும்போது வாங்கிவருவார்கள்.

அம்மாவின் வருகைக்காகவே நானும் தங்கையும் விசேஷமாய் காத்திருப்போம். வரும் சமயத்தை அறிந்து நின்றுகொண்டே தூரத்தில் கண்களைத் துழாவுவோம். அம்மாவின் பொட்டு பூவில்லாத தோற்றமும் எண்ணெய் இல்லாத தலையும் மங்கிய நகராட்சிப் புடவையும், மற்றவர்களைக் காட்டிலும் தனித்துக் காட்டிக் கொடுக்கும். மடியில் கனத்து முடுக்காய் இருக்கிறதா எனத் துருவிப் பார்ப்போம்.
அப்படி இருந்தால் என்னைக் காட்டிலும் தங்கைக்கு அதிக மகிழ்ச்சி. பூமியிலிருந்து. கைகளைத் தட்டிக்கொண்டு அம்மா கிட்ட நெருங்க நெருங்க எகிறித் தவிப்பாள். கண்களில் ஒருவித ஒளி மின்னல் கீற்றுக்களாய்ப் படரும்.

நோயும் படுக்கையுமாய்க் கிடந்த அப்பாவைக் குணப்படுத்த அம்மா எவ்வளவோ செலவு செய்தும் தீர்க்க முடியவில்லை. அக்கடாவென்று விட்டுவிட்டாள். தன் சக்திக்கு மீறி பெரிய பெரிய ஆஸ்பத்திரிக்கு என்று கூப்பிட்டுப்போக முடியவில்லை. எனக்கு நினைவுதெரிந்த நாள் முதல் அம்மா பொட்டு வைத்து பூவைத்துப் பார்த்ததில்லை.

நகரில் கடைவீதியில், சினிமா கொட்டகையில் பஸ் நிலையத்தில், இரயில் நிலையத்தில் இப்படி எங்கும் பெண்கள் எப்படியெல்லாம் சீவி சிங்காரிச்சுப் போகிறார்கள். அம்மாவிற்கு வசதிகளும் வாய்ப்பும் இல்லாவிட்டாலும் சாதாரணமாய் எண்ணெய் தடவிகூடத் தலையை முடிந்துகொள்ள அக்கறையில்லாமல்போனது. அம்மாவாகவே அப்படியே வளைத்து சுருட்டிக்கொள்வாள். முடிகள் கறுத்தும் பழுத்தும் இருக்கும்.

எனக்கும் தங்கைக்கும் என்று எண்ணெய் வாங்கி வைத்திருப்பாள். தங்கை தடவிவிட்டாலும் மிரட்டி மறுப்பாள். அவளுக்கென்று சொந்த விருப்பங்கள் என்று எதையும் செய்துகொண்டதாய் நான் பார்த்ததில்லை.

காலையில் அய்ந்து மணிக்கு எழுந்து ஓடுவாள். ஆறு மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு மேஸ்திரியிடம் வருகைப் பதிவேட்டில் கைரேகை
வைத்துவிட்டு வேலை செய்யும் தெருவிற்குப் போவாள். சின்னதும் பெரியதுமாய் ரெண்டு வாளியில் தட்டு சுரண்டியைப் போட்டுக்கொண்டு பீ வண்டியைத் தள்ளிக்கொண்டு வருவாள். மருதூர் பக்கம்தான் அவள் வேலை செய்யும் தெரு.

புடவையைத் தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு பீ வண்டியைத் தெருவில் நிறுத்திவிட்டு வீட்டுக்குத் தகுந்த மாதிரி வாளி சுரண்டியுடன் கக்கூசுக்கு மலம் அள்ளப்போவாள். ஒன்றிரண்டு வீடாய் இருந்தால் சின்னவாளி; அய்ந்தாறு குடித்தனம் இருந்தால் பெரியவாளி. வீட்டுக்கு வீடு வாரி வந்து பீ வண்டியில் கொட்டுவாள். பனியோ, காற்றோ, மழையோ வெயிலோ சிட்டாய்ப் பறப்பாள்.

மருதூர் பகுதியில் அம்மா வேலை செய்கிறாள் என்றுதான் பெயர். சமயத்தில் அவசர ஆத்திரத்திற்கு அம்மாவைத் தேடிப் பிடிக்க முடியாது.

ஒரு சமயம் அப்படித்தான். தங்கராசு மாமா செத்துப்போய்விட்டாரென்று வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடிவந்தேன். அம்மா வேலை செய்யும் இடமெல்லாம் தேடினேன். ரெண்டொரு தெருவில் அம்மா கிடைக்கவில்லை. தெருவில் தண்ணி அடித்துக்கொண்டிருந்த பொம்பளையிடம் விசாரித்தேன்.

“ஏங்க எங்க அம்மாவப் பாத்தீங்களா?” “யாருப்பா உங்கம்மா?”

“பாக்கியம்.”

“பாக்கியமா, எந்த பாக்கியம்?”

“அதாண்டி கக்கூஸ்காரி பாக்கியம்.”

பக்கத்தில் சில்வர் தவலையுடன் நின்றிருந்தவள் உசுப்பினாள். இவள் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். ஏன் அப்படிப் பார்க்கிறாள் என்று எனக்குக் கேட்க வேண்டும் போலிருந்தது. சட்டை கிழிந்திருந்தாலும் தைத்துத் துவைத்துப் போட்டிருந்தேன். தலையில் எண்ணெய் தேய்த்து அப்பா கற்றுக்கொடுத்த மாதிரி இடதுபக்கம் வகிடெடுத்து வலது பக்கம் தூக்கி வாரியிருந்தேன்.

“கக்கூஸ்காரி மவனா நீ?”

‘ஏன் பாக்கியம் மவனா நீ’ என்று கேட்கக்கூடாது; என் மனம் சஞ்சலப்பட்டது.

“வந்து எடுத்துட்டுப் போயிட்டா, அந்தத் தெருவுல போய்ப்பாரு”

நான் நகர்ந்தேன்.

“படிக்கிறயாடா?”

மரியாதை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆகிப்போனது. வந்தபோது ‘யாருப்பா’ என்றவள் போகும்போது, ‘டா’ என்கிறாள். இது அம்மாவின் அடிமைச் சின்னம். அம்மாவிலிருந்து தலைமுறைக்கும் தொடரும். அப்டீதான் அவுங்க பேசுவாங்க. நான் சுதாரித்துக்கொண்டேன்.

“ம்”

“என்ன படிக்கிறடா?”

“எஸ்.எஸ்.எல்.சி.”

நான் தொடர்ந்து பேச்சுக்கொடுக்காமல் நகர்ந்தேன். திருவள்ளுவர் தெரு, குப்புசாமி தெரு, பாரதியார் தெரு, மாரியம்மன் கோயில் தெரு என்று சுற்றினேன்.

கோடித்தெருவில்தான் அம்மாவைப் பிடித்தேன். வெய்யில் உச்சிக்கு எட்டியிருந்தது. அகோரமாய் மண்டையைப் பிளக்கும் அளவிற்கு உஷ்ணம். அம்மாவைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. உதடுகள் காய்ந்திருந்தது. உடல் முழுக்க வியர்வையால் நனைந்துவிட்டது. வாளியைப் போட்ட கையோடு இடுப்பிலிருந்த வெற்றிலைப் பாக்குப் பையை எடுத்துப் பிரித்தாள். ஒரு பாக்கை எடுத்து மென்றாள். அரை வெற்றிலையைக் கிழித்தெடுத்து லேசாய் சுண்ணாம்பு தடவி திணித்தாள்.

“ஏம்ப்பா பள்ளிக்கொடம் போவலயா?”

“இல்லம்மா”

“ஏன், போவுல, ங்கொப்பா திட்டியிருப்பாரே.” “தங்கராசு மாமா செத்துருச்சு; அப்பா கூப்டாரச் சொன்னாரு.”

“தங்கராசு அண்ணனா ஏன்?”

அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“தெருவுல சண்ட வந்திச்சு. அவரு குடிச்சிட்டு இருந்தாரு. பேச்சுவாக்குல சுவர நெட்டித் தள்ளிட்டாரு அந்த நொள்ள செங்கேணி. பாராங்கல்லு மேல உழுந்து மார வலிக்குது மார வலிக்குதுன்னாரு; அதுக்குள்ள போயிடுச்சு”

அவள் சற்று நேரம் திகைத்தாள்.

“வாம்மா போலாம்.”

“தே இரு இன்னும் நாலு ஊடுதாம். எடுத்துட்டு வந்துடறேன்.”

“நாளைக்கு செய்யலாம் வாம்மா.”

“அட அவ மோசமானவப்பா, அதிகாரிக்கு சும்மாவாச்சும் எழுதிப் போடுவா; தோ வந்துடறேன். நீ சாப்டயா, இந்தா இத அப்டீ தின்னமேல உக்காந்து சாப்டு.”

நான் பசித்து அழுதால், அம்மா ஏதாவது தின்பதற்கு வாங்கிக் கொடுத்து அழுவாள். சின்ன வயதிலேர்ந்து அம்மாவுக்கு அப்படி ஒரு சுபாவம்.

அவள் மடியை அவிழ்த்து இலையோடு இழுத்து திண்ணை மேல் வைத்தாள். பழய சோற்றைப் பிழிந்து வைத்து காரக்குழம்பு ஊற்றி இருந்தார்கள். அம்மாவின் மடி ஈரமாக இருந்தது.

“அம்மா, இன்னிக்கு அம்மாவாச ஆச்சே, மதியானம் எப்டீம்மா”

“அதான்ப புரியல. பேசாம விமலாவ உட்டு தெருவுல சோறு வாங்கச் சொல்ல வேண்டியதுதான்”.

அவனுக்கு சாவு ஒரு பக்கம் இருந்தாலும் மனதுக்குள் பெருத்த சந்தோசம் ஏற்பட்டது. அமாவாசை கிருத்திகைன்னா பொதுவாக வீட்டில் எல்லோருக்கும் கொண்டாட்டந்தான். மதிய வேலைக்குப் போகும் போது அலுமினிய தாளாவை எடுத்து அதனுள் கிண்ணம் தேக்சாவைப் போட்டுக் கொண்டு மூடுவதற்காக துணி ஒன்றையும் எடுத்துக் கொள்வாள். மதிய வேலை செய்துவிட்டு மேஸ்திரியிடம் சொல்லிவிட்டு அவரவர் மலமெடுக்கும் தெருவிற்குப் போவது போல் அம்மாவும் அம்மாவாசை கிருத்திகைக்கு வீடு வீடாகச் சோறு வாங்க வந்து விடுவாள். பொழுது நேரம் சாய்ந்து இருட்டத் தொடங்கியதும் நாங்கள் சோற்றுக்காக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு அம்மா அரிசி கடன் வாங்கி வந்து ஆக்கமாட்டாள். மறுநாள் குழம்பும் வைக்கமாட்டாள். மீந்த குழம்பைச் சுடவைத்து வைப்பாள். வேண்டுமட்டும் பரிமாறுவாள். சோற்றில் மீந்ததைத் தண்ணீர் ஊற்றி வைப்பாள்.

தீபாவளி, பொங்கல் என்றால் படு குஷி. தீபாவளிக்கு வேலை செய்யும் இடங்களில் பட்டாசு சத்தம், புதுச் சட்டையும் சந்தோசமும் நிறைந்து இருக்கும். எனக்கு அவற்றின் மேலெல்லாம் ஆசை கிடையாது. தங்கை கூட அம்மா எப்ப வருவாங்க என்று காத்திருந்து என்னை நச்சரிப்பாள். தெருவில் ‘இட்லிக்காரம்மா’ கிழவியிடம் வாங்கித் தின்று காலமெல்லாம் வயிறுக்கு மாளாது.

தீபாவளி அன்று அம்மா தெருவில் வாங்கி வரும் இட்லி பூப்பூவாய், பெரியதாய், சில கனத்தும், தடித்தும், விதவிதமாய் இருக்கும். ஜவ்தாளொன்றில் முறுக்கு, அதுரசம், இனிப்புப் பலகாரம் என்று ஒரு பக்கம். வடை, குழம்பு, சீசாவில் எண்ணெய், சீயக்காய்ப் பொட்டலம் என்று ஒரு சேர வாங்கி வருவாள்.

கொடுக்க மனம் வராத ஒரு சிலர் புலம்புவார்கள். ஒரு முறை குழம்பு தேக்சாவைத் தூக்கிக் கொண்டு அம்மாவுடன் உதவிக்காக வீடு வீடாக வந்து கொண்டிருந்தேன்.

“ஏன்டி, கெவர்மெண்ட்டுல உனக்கு சம்பளம் குடுக்கல.”

அந்தப் பொம்பளை அவளை மாதிரியே தடிப்பாய்க் கேட்டாள்.

“குடுக்கறாங்கதான்.”

“பின்ன சும்மா எனாம் கேக்க வந்துட்ட?”

“விக்கிற வெலவாசி தெரிமா; நாங்க எப்படி பொழைக்க முடியும்?”

“அதுக்கு சம்பளம் அதிகமா வேணும்னு அரசாங்கத்துல போராடுங்க.”

“நாங்க போராடனா குடுக்கவாப் போறாங்க, போராடிப் பாத்துட்டம், இன்னும் போராடிக்கிட்டுதான் இருக்கிறோம்.”

“அங்க உட்டுட்டு, பின்ன இங்க வந்துடற, அமாவாசைக்கு சோறு, கிருத்திகைக்கு சோறு, தீபாவளிக்கு, பொங்கலுக்கு, இன்னாதான்-“

“தேம்மா, கஷ்டப்பட்டு உம் பீய காலம் பூறா வார்றமே, நெஞ்சில எங்கனா ஈரம் இருக்காஉனுக்கு. எங்க வறுமைக்கு உன்கிட்ட பிச்ச எடுக்கறம். இஷ்டம் இருந்தா குடு இல்லாட்டி உடுமா.”

“குடுக்கலைன்னா இன்னாடி செய்வ? நாலு நாள் கக்கூஸ் எடுக்க வரமாட்ட; நாறிப் போயிடும்னு பாக்குறியா; எங்க வூட்டுக்காரரு யாரு தெரிமா. அதிகாரிகிட்ட சொல்லி உன் வேலைக்கு ஒலவெச்சுடுவன் சாக்கிரத.”

“தேம்மா ரொம்பதான் சில்த்துக்காத; உம் புத்தி உன்னோட வெச்சுக்கோ – காசுக்கு பீத்தின்ற ஆளில்ல நாங்க. எங்க வேலைய நாங்க செய்வோம். அதிகாரி கிதிகாரின்னு மெரட்டாத. எங்களுக்கும் சங்கம் இருக்கு.”

அம்மாவும் விடாமல் உரிமையாய்ப் பேசுவாள்.

தீபாவளிப் பலகாரங்களைக் கொண்டு வந்ததும் எனக்கு பஞ்சு பஞ்சாய் உள்ள இல்லியை அழுத்திப் பார்த்து வைப்பாள். கறிக்குழம்பு தனியாய் வாங்கி வந்ததை ஊற்றுவாள். வடை சாம்பாரோடு வேண்டுமட்டும் பரிமாறுவாள். முறுக்குப் பலகாரங்களை அடுக்குப் பானையில் ஜவ்தாள் உறையோடு வைத்து அவ்வப்போது ஒவ்வொன்றாய் எடுத்துத் தருவாள்.

பொங்கலுக்கும் அப்படித்தான். விதவிதமாய்ப் பொங்கல் சோறு வாங்கி வருவாள். எனக்கு இனிப்புப் பொங்கல் பிடிக்காது. தங்கை பிரியமாய் சாப்பிடுவாள். பால் நிறம் போன்ற வெண்பொங்கலை வைத்து சாம்பார் ஊற்றுவாள். பழம் நழுவிப் பாலில் விழுந்து வாயில் விழுந்தாற்போல் லாவகமாய் இறங்கும்.

ஊரெல்லாம் தீபாவளி, பொங்கல்னா எங்களுக்கும் இந்தவிதமாய் ஒருவித சந்தோசம்.

நான் அம்மாவை உட்கார வைத்துக் கொண்டு தெருவிற்கு வந்தேன். சைக்கிளை விட்டு இறங்கியதும் சொல்லாமல் கொள்ளாமல் அழுகை பீறிட்டு வந்தது அம்மாவுக்கு. பறையொலி ரொம்ப தூரம் கேட்கும் அளவிற்குக் காதைக் கிழித்தது. அழுது முடித்து கொஞ்ச நேரத்தில் அம்மா எழுந்து வந்து விமலாவின் காதில் கிசுகிசுத்தாள்.

மாலை முழுவதும் டன் டன்னக்கர, டன் டன்னக்கர பறையொலி ஆட்டம் பாட்டத்துடன் ஒலித்தது. மாமாவின் சாவிற்கு உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். மறுநாள்தான் எடுப்பதாய் இருந்தது. அம்மா மட்டுமில்லை தெருவில் பலர் வேலைக்கு விடுமுறை சொல்லியிருந்தார்கள்..

பொழுது சாய்ந்து செங்கல் மங்கலாய் இருந்தது. விமலா சோற்றுக் கூடையுடன் வந்ததும் அம்மா அவள் வீட்டிற்குப் போய்ப் பார்த்தாள்.

“இன்னாடீ சோறு ரவதான் கீது”

“ஏன்கா, நீ இல்லாம சோறே எவளும் தர்ல; இன்னா பேசுறாங்க தெரிமா. வாயில வந்தத திட்டீட்டு கெடைச்சத வாங்கியாந்தன்.”

அம்மாவுக்குப் பார்க்க பகீர் என்றது. விமலாவைப் பாதி சோறு குழம்பு எடுத்துக்கொண்டு, மீதியை எங்கள் வீட்டில் வைக்கச் சொன்னாள். எனக்கும் தங்கைக்கும் உள்ளுக்குள் ஏராளமான சந்தோசம்.

லோல்பட்டு லொங்கழிஞ்சி அம்மா எங்களைக் காப்பாற்றியதை நினைத்தால் இன்னமும் அதிர்ச்சியாய்தான் இருக்கிறது. அதிர்ச்சிகள் சில வரலாறு தருவது.

*

நன்றி : தினமணிசுடர் (டிசம்பர் 3 ,1994)

இமைக்கும் நேரத்தில்… (சிறுகதை) – மௌலானா அபுல் கலாம் ஆஸாத்

1958-ஆம் வருட ‘கல்கி’ இதழிலிலிருந்து, நன்றியுடன்

asad - story - imaikkum nerathile

இமைக்கும் நேரத்தில்…- மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
(தமிழாக்கம் : ரா. வீ)

பாக்தாத் நகரத்திலே, ஹஜரத் ஷேக் ஜுனைத் பாக்தாதி’யின் பெருமையும் எளிமையும் எவ்வளவுக் கெவ்வளவு பிரசித்தமோ, அவ்வளவுக் கவ்வளவு இப்னு-சாபாத்’தின் திருட்டும் துஷ்டத்தனமும் பெயர் போனவை.

கடந்த பத்து ஆண்டுகளாக ‘மதாயன்’ சிறையில் இப்னு-சாபாத் அடைபட்டிருத்தான், மக்கள் அவனது பயங்கரக் கிடுக்கித் தாக்குதலிலிருந்து தப்பித் தைரியமாக வாழ்ந்து வந்தனர். ஆயினும் அவனது அச்சமின்மை, ஆணவச் செயல் சம்பந்தமான கதைகள் அவர்களுக்கு மறக்கவில்லை. எப்பொழுதாவது, ஏதாவது துணிகரத் திருட்டைக் கேள்விப்பட நேர்ந்தால், ‘இதென்ன, இன்னொரு இப்னு-சாபாத் பிறந்துவிட்டானா, என்ன ?’ என்றே பேசிக் கொள்வார்கள். இப்னு-சாபாத்’தின் குடும்ப விவரங்கள் முழுவதும் யாருக்கும் சரிவரத் தெரியாது. ஆம், அவன் முதன் முதலாகத் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, தச்சர் தெருவில் பிடிக்கப்பட்டபொழுது. போலீஸ் ஸ்டேஷனில் அவனைப் பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவன் பாக்தாத் நகரத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பது வெளியாகியது. அவன் தாய் தந்தையர் ‘தூஸ்’ என்னும் இடத்திலிருந்து ஒரு வியாபாரிகள் கூட்டத்துடன் வந்து கொண்டிருந்தார்கள் என்றும், வழியிலே நோய்வாய்ப்பட்டு மரித்து விட்டார்கள் என்றும் தெரிய வந்தன. வியாபாரிகள் கூட்டம் அவன்மீது இரக்கம் கொண்டு, பாக்தாத் நகரத்திலே கொண்டு வந்து சேர்த்ததாம். இது அவன் சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி.

அந்த இரண்டு ஆண்டுகளையும் அவன் எப்படி எங்கே கழித்தான் என்பது யாருக்கும். தெரியாது. கைது செய்யப்பட்டபொழுது அவனுக்கு வயது பதினைந்து. போலீஸ் ஸ்டேஷன் திண்ணையில் அவனைப் படுக்க வைத்துக் கசையடி கொடுத்தார்கள்; அப்பொழுதே விடுதலையும் செய்து விட்டார்கள்.

முதல் தண்டனை அவனிடம் அதிசயமான மாறுதல் ஒன்றை நிகழச் செய்தது. இதுவரை அவன் பயங்கொள்ளிப் பையனாக இருந்தான்; அடக்க ஒடுக்கமுள்ளவனாக இருந்தான். ஆனால் கசையடி வாங்கியபின் அச்சந் தவிர்த்த குற்றவாளியின் ஆன்மா அவன் உள்ளத்திலே குடி கொண்டு விட்டது. சிறிது காலத்துக்குள்ளேயே அவன் மிகுந்த துணிச்சல்காரனாகவும், தேர்ந்த திருடனாகவும் மாறி விட்டான்.

இப்பொழுது அவன் சிறுசிறு திருட்டுக்களை விட்டொழித்தான். முதன் முதலில் அவன் திருட முற்பட்டபொழுது இரண்டு நாட்கள் பட்டினி, அவனை ரொட்டிக் கிடங்குக்கு இழுத்துச் சென்றது. ஆனால் இப்பொழுதெல்லாம் அவன் பசியால் வாடி வயிற்றுத் தீயை அணைப்பதற்காகத் திருடப் போவதில்லை. திருட்டுத் தொழிலிலே ஒரு ஆர்வம் பிறந்து, அந்த ஆர்வத்துக்கு அடிபணிந்தவனாகித் திருடப் போனான். அதனால் அவன் கண் இப்பொழுது ரொட்டிக் கிடங்குகளைச் சல்லடை போட்டுச் சலிப்பதில்லை; நகைக் கடைகளின் இரும்புப் பெட்டிகளையும், பெரிய வியாபாரிகளின் கிடங்குகளையும் சூறையாடத் திட்டம் போட்டது.

அவன் உள்ளத்தை வெற்றியின் வெறி, படைத் தலைவனின் உறுதி, போர்வீரனின் ஆண்மை, அறிவாளியின் ஆற்றல் ஆகியவை ஆட்கொண்டிருந்தன.

ஆயினும் உலகம் அவனைப் பாக்தாத் நகரத் திருடனாகவே வைத்துப் பார்க்கத்தான் விரும்பியது. அதனால், இந்தக் கலையில் அவனது இயல்பான அத்தனை குணங்களும் பரிமளிக்கத் தொடங்கின; பட்டை தீட்டப் பெற்ற வைரத்தின் மெருகுடன் பளீரென்று பிரகாசிக்கத் தொடங்கின.

சில நாட்களில், இப்னு-சாபாத்’தின் கொடுஞ் செயல்கள் அவன் விஷயத்தில் ஆட்சி பீடம் அதிக அக்கறை செலுத்தும்படியான அளவுக்கு எல்லைமீறி அதிகரித்தன.

கடைசியில் ஒரு நாள் அவன் கைது செய்யப் பட்டான். நியாய ஸ்தலத்தின் தீர்ப்புப்படி கொலையாளியின் கொடுவாள் அவனது ஒரு கையைப் பதம் பார்த்து அகற்றியே விட்டது. இப்னு-சாபாத்’தின் கை துண்டிக்கப் பட்டதே, உண்மையில் அது துண்டிக்கப் பட்டதா? சூரபதுமனின் தலைபோல, ஒரு கை போகப் பல கைகள் முளைத்துவிட்டன. ஒரு கைக்குப் பலம் கொடுக்க பல கைகள் தோன்றி, இப்னு-சாபாத்’தின் வெட்டுண்ட கைக்குப் பெருமையளித்தன. அவன் ஈராக் கில் உள்ள எல்லாத் திருடர்களையும் துஷ்டர்களையும் ஒன்று சேர்த்துவைத்து ஒரு நல்ல குழு அமைத்துக் கொண்டான். ராணுவத் தளவாடங்களுடன் கொள்ளையடிக்கக் கூட முற்பட்டு விட்டான். கொஞ்ச காலத்துக்குள்ளேயே அவன் ஈராக் முழுவதையும் ஆட்டிப்படைத்து அயர அடித்துவிட்டான்.

ஆனால் ஒரு தடவை அவன் தோழர்கள் அனைவரும் வெளியே போலிருந்த பொழுது, அவனும் ஓடத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த பொழுது, ஆட்சியினர் வந்து விட்டனர்; அவனைக் கைது செய்து விலங்கும் மாட்டி விட்டனர்.

இந்தத் தடவை அவன் ஒரு கொள்ளைக்காரன் என்ற முறையில் சிறைப்பட்டிருந்தான், அதற்கான தண்டனை மரணம் ஒன்றே. தனக்கு மரண தண்டனை அளிக்கப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்தால், தனது தோழர்கள் அனைவரையும் பிடித்துத் தந்து விடுவதாக அவன் கோர்ட்டார் அவர்களிடம் கூறினான்,

இவ்விதமாக அவன் தப்பிவிட்டான். ஆனால் நூற்றுக்கு மேற்பட்ட அவனது தோழர்கள் மரண தண்டனைக்கு உள்ளாயினர். அப்படியும் அவனுக்கு ஆயுள் முழுவதும் சிறையில் செக்குமாடாக உழைத்து வாடி மடியும்படியான தண்டனை அளிக்கப்பட்டது.

கோடைகாலம். நள்ளிரவு கழிந்திருந்தது, கறுப்புப் போர்வையில் தன்னை மூடி மறைத்துக் கொண்டு ஒருவன் மௌனமாக மெதுவாக நடந்து கொண்டிருந்தான். அவன் ஒரு சந்து திரும்பி இன்னொரு சந்தில் நுழைந்ததும் ஒரு வீட்டை ஓட்டினாற் போலிருந்த ஆளோடிக்கு அடியில் போய் நின்று கொண்டான், அப்புறம் நீண்ட நெடிய மூச்சு விட்டான், எத்தனையோ நேரமாக அடங்கிக் கிடந்த மூச்சுக்குச் சுகந்திரமாக வெளிவர இடம் கிடைத்தது போலிருந்தது.அவன் மூச்சு விட்ட விதம். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான் :

”மூன்றாம் யாமமும் கழிந்து விட்டது. இன்றைக்கென்று என்ன சோதனை? எங்கு போனாலும் நமது காரியம் இன்று நிறைவேறுவதாகக் காணோமே!”

இவன் யார் என்று சொல்லவும் வேண்டுமா? இப்னு-சாபாத் தான், பத்து ஆண்டுகள் சிறையிலே அடைபட்டுக் கிடந்தவன், எப்படியோ சிறையை விட்டு வெளியேறி ஓடி வந்திருந்தான்; வந்ததும் வராததுமாகத் தன் தொழிலைத் தொடங்க மறுபடியும் முற்பட்டிருந்தான்.

இது அவன், புதிய திருட்டு வாழ்க்கையின் முதல் இரவு. அதனால் தன் நேரம் வீணாவதைக் கண்டு அவன் மனம் பொருமலாயிற்று. அவன் பூமியிலே காது வைத்து ஒவ்வொரு பக்கத்து ஓசையையும், தூர தூரத்து ஓசையையும் கவனமாகக் கேட்டான். பிறகு தைரியமாக முன்னேறினான். ஆளோடியை ஒட்டிச் சென்ற சுவர் மிக நீண்டு சென்று கொண்டிருந்தது. அதன் நடுவே ஒரு பெரிய வாசற்படியிருந்தது.

’கரக்’ என்னும் இந்தப் பகுதியில் பெரும்பாலும் செல்வந்தர்களின் தோட்டம், துரவுகள் இருந்தன; அல்லது வியாபாரிகளின் கிடங்குகள் இருந்தன.

இரண்டில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவன் முடிவு கட்டினான். அவன் அந்த வாசற்படியை அடைந்து கதவின் மேல் கை வைத்தான். அது உடனே திறந்து கொண் டது. அடுத்த விநாடி இப்னு-சாபாத்’தின் கால்கள் கட்டடத்தின் முற்றத்துக்குள்ளே அடி எடுத்து வைத்து விட்டன. முற்றத்தை மையமாகக் கொண்டு நாற்புறமும் பற்பல சிறிய அறைகள் இருந்தன. நடுவிலே சற்றுப் பெரியதாக ஒரு கட்டடம் இருந்தது.

அவன் நடுவிலே இருந்த அந்தக் கட்டடத்தை நோக்கி நடந்தான். ஆனால் அதிசயம் என்ன வென்றால், அந்தக் கட்டடத்தின் கதவு உள்பக்கமாகத் தாளிடப்படவில்லை. உள்ளே நுழைந்த இப்னு-சாபாத் அது பெரும் ஹாலாக இருப்பதைக் கண்டான். ஆனால் அந்த அறை பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கவும் இல்லை : அதிலே விலையுயர்ந்த பொருள் இருப்பதற்கான அறிகுறியும் தோன்றவில்லை. ஒரு பக்கம் பேரீச்சை ஓலையினால் முடையப்பட்ட பாய் மட்டும் விரித்திருந்தது. அதன் ஒருபுறத்தில், தோலாலான தலையணை ஒன்று போடப்பட்டிருந்தது.

ஒரு மூலையில் மட்டும் கனத்த கம்பளித் துணிகள், அவசரத்தில் தூக்கியெறியப்பட்டவை போலச் சிதறிக் கிடந்தன. அவற்றுக்கு அருகிலேயே தோல் தொப்பிகள் கிடந்தன.

பத்து ஆண்டுகளுக்குப் பின் இன்றுதான் தன் தொழிலைச் சுதந்திரமாகச் செய்யும் வாய்ப்பு மீண்டும் இப்னு-சாபாத்’துக்குக் கிடைத்திருந்தது. இந்தக் கட்டடத்தில் தனக்குத் தேவையானது ஒன்றும் கிடைக்கவில்லை என்பதைக் கண்டபொழுது அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

கம்பளித் துண்டுகள் இருந்தன. அவற்றுக்கு உகந்த விலையும் கிடைக்கக் கூடுத்தான் ஆயினும் என்ன பயன்? அதோடு இப்னு-சாபாத்’தோ ஒன்றிக் கட்டை ; அவனுக்குக் கையும் ஒன்றே, ‘இந்தக் ‘கரக்’கும் இந்தக் ‘கரக்’கில் வசிப்பவர்களும் நாசமாய்ப் போக!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். அத்தனை பெரிய வீட்டிலே கழுதை கூடப் போர்த்திக் கொள்ளக் கூசும் மோட்டா கம்பளித் துணிகளை அடுக்கி வைத்திருக்கும் வியாபாரிக்கு லட்சார்ச்சனை செய்தான்.

இரவோ ஓடிக் கொண்டிருந்தது. இன்னொரு இடத்துக்குப் போகலாம் என்றலோ, அதற்குப் பொழுதில்லை. எனவே அவன், ஒரு கம்பளியை எடுத்துக் கீழே விரித்தான். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கம்பளிகளை எடுத்துப்போகும் முயற்சியில் ஈடுபட்டான். கம்பளித் துண்டுகளோ மிகக் கனமாகவும் மோட்டாவாகவும் இருந்தன. அவற்றைச் சுருட்டிக் கட்டி முடிச்சுப் போடுவது என்பது எளிய காரியமாக இல்லை. இரண்டு கைகள் உள்ளவர்கள் செய்வதே சிரமம். இப்னு-சாபாத்’ ஒரு கையை வைத்துக் கொண்டு என்ன செய்வான், பாவம்! அவன் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டபின் பற்களை உபயோகித்தான், வெட்டுண்ட கையின் முழங்கையை உபயோகித்து ஒரு முனையை அழுத்திப் பிடித்தான். ஆனால் என்ன முயன்றும் அவனால் முடிச்சுப் போட முடியவில்லை. அவன் அந்த முயற்சியில் அலுத்துச் சலித்துக் களைத்துப் போய்விட்டான்.

இச்சமயத்தில்தான் திடீரென்று அவன் துணுக்குறும்படியான ஒரு காரியம் நடந்தது. அவனது கூரிய செவிகள் தூரத்தில் யாரோ மெதுவாக அடியெடுத்து நடந்து வரும் ஓலி யைக் கேட்டன.

ஒரு வினாடி மெளனம் நிலவியது. பிறகு வாசற்படியில் யாரோ நிற்பதுபோன்ற ஒரு தோற்றம். இப்னு-சாபாத் பதற்றமுற்று எழுத்து நின்றான். ஆனால் நகருவதற்கு முன் கதவு திறந்தது. ஒருவன் கையிலே விளக்கேந்தியவாறு அவன் எதிரே வந்து நின்றான். அவன் உடலைப் பழுப்பு நிறமுள்ள ஒரு நீண்ட சட்டை அலங்கரித்தது. அதைச் சுற்றி இடுப்பிலே பட்டை கட்டியிருந்தது. தலையிலே ஒரு கூரான தளர்வான தொப்பி: அது புருவத்தை மூடி மறைத்தவாறு காட்சியளித்தது. உடல் மிகவும் பலவீனமுற்றுத் தோற்றம் அளித்தது. உயரமான உருவம் காரணமாக இடுப்பு கொஞ்சம் வளைந்திருந்தது. ஆனால் அவன் முகத்திலே உடல் பலவீனத்தினால் உண்டாகும் உணர்ச்சி நெகிழ்வு பிரதிபலிக்கவில்லை. நீண்ட எலும்புக் கூட்டிலே, கம்பீரமான அழகிய முகம் வைத்தது போன்றிருந்தது. கன்னம் சதைப்பற்று அற்றிருந்தது. ஆயினும் முகத்திலே வீசிய காந்தி, பார்ப்பவர்களைப் பிரமிக்க வைத்தது, பக்தி பூணச் செய்யும் சக்தி பெற்றிருந்தது; உடல்பலம் இல்லாவிட்டாலும் உள்ள பலம் உரம் பாய்ந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. ஒளிச் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் இரு விழிகளைப் பார்க்கும்பொழுது, உலகத்தின் அமைதியும் ஆனந்தமும் இவ்விரு ஆழங் காண இயலாத கண்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றனவோ என்று சொல்லும்படியாக இருந்தன.

சில நிமிஷங்கள் அவன் விளக்கைச் சற்று உயரத் தூக்கிப் பிடித்து, இப்னு-சாபாத்’தைப் பார்த்தவாறு தின்றான். பிறகு, புரிந்து கொள்ள வேண்டியதைப் புரிந்து கொண்டு விட்டவன்போல் முன்னேறினான்.

விளக்கை ஒரு புறமாக வைத்துவிட்டு, முறுவலித்தவாறே அவன் சொன்னான்: ”நண்பா! ஆண்டவன் உனக்கு அருள் புரிவாராக, நீ செய்ய நினைக்கும் வேலை வெளிச்சமும், தோழனும் இன்றிச் செய்ய முடியாது. இதோ விளக்கு இருக்கிறது. தோழன் ஸ்தானத்தில் நான் இருக்கிறேன். விளக்கு வெளிச்சத்தில் நாம் இருவரும் தைரியமாக இந்த வேலையைச் செய்து முடிப்போம்!”

அவன் சிறிது நேரம் நின்று ஏதோ யோசனை செய்தான். பிறகு, இப்னு-சாபாத்’தைப் பார்த்து, “நீ மிகவும் களைப்புற்றுக் காணப் படுகிறாய். நெற்றி முழுவதும் வியர்வையினால் நனைந்திருக்கிறது. அப்பப்பா.. அறை மூடிக் கிடக்கிறது. அதனால்தான் இத்தனை புழுக்கம்! என்ன கஷ்டம் பார்! மனிதன் வயிற்றுப் பாட்டுக்காக எத்தனை பெரிய ஆபத்துக்களையெல்லாம் விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டி வருகிறது! அதோ பாய் விரித்திருக்கிறது. தலையணையும் பக்கத்தில் இருக்கிறது. கொஞ்ச நேரம் இளைப்பாறு. அதற்குள் நீ அரைகுறையாகச் செய்திருக்கும் இந்த வேலையைச்செய்து முடித்து விடுகிறேன் !”” என்றான்.

இதைச் சொல்லி முடித்ததும், அவன் இப்னு-சாபாத்’தை உட்காருமாறு ஜாடை காட்டினான். தன் கைக்குட்டையை எடுத்து அவனது நெற்றி வியர்வையைத் துடைத்தான். அதுமட்டும் அல்ல : உட்காராமல் நின்று கொண்டிருந்தவனைத் தோள்பட்டையில் கை வைத்து அழுத்திப் பாயில் உட்காரவும் வைத்து விட்டான்,

இச் சம்பவங்களெல்லாம் வெகு விரைவில் நடந்தன. இப்னு-சாபாத்’தின் மூளை வேலை செய்து என்ன ஏது என்று அறிய வாய்ப்பே அளிக்கவில்லை. தன் நினைவு இழந்த மனிதனைப் போல் அந்த வேற்று மனிதன் சொன்னபடி யெல்லாம் ஆடி. இப்னு-சாபாத் பாயில் படுத்து விட்டான்.

அப்புறம்தான் அந்தப் புதிய மனிதன், தான் சொன்னபடி வேலையைத் துவங்கி விட்டான் என்பதை அவன் கண்டான்.

அந்த மனிதன், இப்னு-சாபாத் கட்டி மூடிச்சு போட முயன்ற மூட்டையில் இன்னும் இரண்டு கம்பளித் துண்டுகளை எடுத்து வைத்தான். அதை இரண்டாக்கி இரண்டு மூட்டையாக-ஒன்று சிறியது. ஒன்று பெரியது – கட்டினான், பிறகு திடீரென்று ஏதோ நினைவு வந்தவன் போல், தனது போர்வையையும் எடுத்து அந்த மூட்டையில் வைத்துக் கட்டினான். பிறகு இப்னு-சாபாத்’தினிடம் சென்று, “நண்பா! உள் வாடிய முகம் நீ மிகவும் பசித்திருக்கிறாய் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. அதனால் நீ புறப்படுவதற்கு முன்பாகக் கொஞ்சம் பால் அருந்தினால் நன்றாக இருக்கும்” என்றான். இப்னு-சாபாத் வாய் திறந்து ஒன்று சொல்வதற்கு முன்பாகவே, அவன் அங்கிருந்து வெளியே போய் விட்டான்.

இப்பொழுது இப்னு-சாபாத் தனியனாகி விட்டான்.

அந்தப் புது மனிதனின் தோற்றமும் அவன் நடந்து கொண்ட முறையும், அவன் அங்கிருந்த வரையில், இப்னு-சாபாத்’தை ஒன்றுமே யோசிக்க விடவில்லை. அவன் மட்டும்தான் அந்த அறையில் என்று ஆகி விட்ட பொழுது, அவன் மூளை மீண்டும் சிறுகச் சிறுகத் தன் யோசிக்கும் சக்தியைப் பெற்றது. நிகழ்ந்த நிகழ்ச்சியை, அவன், தான் பார்த்துப் பழக்கப்பட்டுப் போன முறையிலேயே சிந்தித்தான். அவன் தன் மனத்துள் நினைத்தான்: ‘இவனும் நமது சகதொழிலாளியாகத் தான் இருக்க வேண்டும். இங்கேயே எங்கேயாவது பக்கத்தில் இருப்பான் போலிருக்கிறது. இவனுக்கு இந்த வீட்டில் ஆள் நட மாட்டம் கிடையாது என்பது தெரிந்திருக்கும். அதனால்தான் தைரியமாக வெளிச்சத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான். ஆனால் நான் அவனுக்கு முன்னதாகவே இங்கே வந்திருக்கிறேன் என்பதைக் கண்ட பொழுது, எனக்கு ஒத்தாசை செய்து பங்கு பெறலாம் என்ற ஆசையிலேயே இப்படிக் காரியத்தில் முனைந்திருக்கிறான்.’

இப்படி இப்னு-சாபாத் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அந்தப் புதிய மனிதன் மரக் கோப்பை ஒன்றில் பால் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து விட்டான். “இந்தா! உனக்காகப் பால் கொண்டு வந்திருக்கிறேன். பருகிப் பசியையும் தாகத்தையும் தணித்துக் கொள் !'” என்றான்.

இப்னு-சாபாத் ஒரேமூச்சில் கோப்பையைக் காலி செய்து விட்டான். உடல் ஒரு நிலைக்கு வந்ததும், அவனை காரிய கவலை பற்றிக் கொண்டது. “இதோ, பார்! நான் உனக்கு முன்னால் வந்து விட்டேன். காரியத்தையும் துவங்கி விட்டேன். அதனால் சட்டப்படி பார்க்கப் போனால் இதில் உனக்கு ஒரு பங்கும் கிடையாது; உரிமையும் கிடையாது. இருந்தாலும் உன் கெட்டிக்காரத்தனத்தையும் சாமர்த்தியத்தையும் கண்டு, உன்னையும் என்னுடைய கொள்ளையில் கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்வதில் எனக்குத் தடையில்லை உனக்கு விருப்பம் இருக்குமானால் எப்பொழுதுக்குமே உன்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூட நான் தயார். ஆனால் இன்றைப் பொருளில் உனக்குச் சம பங்கு தர முடியாது. இப்பொழுதே சொல்லி விட்டேன். பின்னால் தகராறு கிகராறு செய்யக் கூடாது. ஏனென்றால் இன்றைய வேலை…” அவன் வார்த்தையை முடிப்பதற்கு முன்பாகவே, அந்தப் புது மனிதன் பேசலுற்றான் : “நண்பா! எதற்காக உன் மனத்தைப் போட்டு உளைத்து கொள்கிறாய்! முதலில் வேலையை முடிப்போம். இரண்டு மூட்டைகளாகக் கட்டியிருக்கிறேன். பெரியதை நான் எடுத்துக் கொள்கிறேன். சிறிய மூட்டையை நீ எடுத்க் கொள், என் பங்கு உன் பங்கு என்ற பேச்சு அப்புறம் ஆகட்டும். இடபொழுதே இதைத் தீர்த்து கொள்வானேன்? நீ என்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயாராயிருப்பதாக நீதான் சொன்னாயே எனக்கும் சம்மதம் தான். நீ நிரத்தரமாக ஒப்பந்தம் ஏதாவது செய்து கொள்ள விரும்பினால், நானும் கட்டுப்பட்டு நடக்கத் தயாராயிருக்கிறேன்!”

“ரொம்ப சரி ! நான் யார் என்று உனக்கு இன்னும் தெரியாது. தெரித்தால், அப்புறம் சந்தோஷப்படுவாய். நாடு முழுவதிலும் தேடினாலும் கூட என்னைப் போன்ற தலைவன் உனக்குக் கிடைக்க மாட்டான்”

இவ்விதம் கூறியவாறே இப்னு-சாபாத் தன் மூட்டையைத் தூக்கிக் கொண்டான். அது மிகவும் இலேசாக இருந்தது. இருவரும் வெளியே வந்தார்கள். முன்பே புது மனிதனின் முதுகு கூனியிருந்தது. சுமையைத் தூக்கிக் கொண்டதும், இன்னும் வளைந்துவிட்டது. இருட்டில் நடப்பது இயல்பாகவே சிரமம். அதோடு சுமையுடன் நடப்பதென்றல் கேட்க வேண்டுமா?

இப்னு-சாபாத்’தின் சுமையோ இலேசாக இருந்தது. அதனால் அவன் வேகமாக நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி அந்தப் புது மனிதனைத் திரும்பிப் பார்த்து, வேகமாக நடக்கும்படி கட்டளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அத்தனை பெரும் சுமையைத் தூக்கிக் கொண்டு நடப்பது அந்த மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. அதனால் அவன் அடிக்கடி தடுமாறினான். தடுக்கிக் கீழே விழுந்து விடுவான் போலிருந்தது.

இருட்டில் கல் தடுக்கிக் கால் சதையைப் பெயர்க்க வேறு செய்தது. ஒரு தடவை நல்ல அடி பட்டுக் கிறங்கினான். ஆயினும் அவன் நிற்கவோ இளைப்பாறவோ முயலவில்லை. இப்ன-சாபாத்’துடன் நடந்து செல்லவே முயன்றான்.

ஆனால் இப்ன-சாபாத் அதனாலெல்லாம் திருப்தி அடையவில்லை. கட்டளை பிறப்பித்தவன் கடைசியில் பலமான வசவிலேயே இறங்கி விட்டான்.

இதற்குள் ஆற்றுப் பாலம் வந்து விட்டது. அது கொஞ்சம் மேல், பலவீனமான உடல்; நடந்து வந்த களைப்பு: சுமையோ அழுத்தியது. புது மனிதனால் சமாளிக்க முடிய விலலை. இந்தத் தடவை தன்னையும் மீறிக் கீழே விழவே விழுந்து விட்டான்.

உடனே அவன் எழுந்திருக்கவும் முயன்றான். ஆனால் அதற்குள்ளாக இப்னு-சாபாத் அவனைக் காலால் ஒரு உதை கொடுத்துத் திட்டி, “இத்தனை சுமையைத் தூக்க முடியாது என்று தோன்றினால் எதற்காகக் கொண்டு வந்தாய்?” என்று சீறி விழுந்தான். மூச்சுத் திணறியவாறே அம்மனிதன் எழுந்தான். அவன் முகத்திலே வலியோ சிரமமோ தோன்றுவதற்குப் பதிலாக வெட்கம் தோன்றியது. அவன் உடனே மூட்டையைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.

நகரத்தின் அதிக ஜன சந்தடியற்ற இடம் ஒன்றை அடைந்ததும் இருவரும் நின்றனர். அங்கே பாழடைந்த கட்டடத்தின் முற்றம் இருந்தது. அந்த முற்றத்தை அடைந்ததும் இப்னு-சாபாத் நின்று விட்டான். அந்தப் புது மனிதனைக் கூப்பிட்டு மூட்டையைக் கீழே இறக்குமாறு பணித்தான், பிற ஒரே தாண்டலாகத் தாண்டி வீட்டினுள் நுழைந்தான். அப்புது மனிதன் அந்த இரண்டு மூட்டைகளையும் தூக்கி உள்ளே விட்டெறிந்தான். பிறகு அவனும் தாவி அந்தக் கட்டத்துக்குள் சென்றான்.

அந்தக் கட்டடத்தில் ஒரு கீழ் அறை இருந்தது. அதில்தான் இப்னு-சாபாத் சிறைச் சாலையிலிருந்து தப்பி ஓடி வந்தபின் ஒளிந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் அந்தக் கீழ் அறைக்குள் போகவில்லை ஏனென்றால் அந்தப் புது மனிதனுக்கு அவன் தன் ரகஸிய அறையைக் காட்ட விரும்பவில்லை.

ஒரு பக்கத்தில் கிடந்த கருங்கற்களில் ஒன்றைத் தேடி இப்னு-சாபாத் உட்கார்ந்து கொண்டான் அந்தப் புது மனிதன் ஒருபுறம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வானான், திடீரென்று அந்த வேற்று மனிதன் ‘இப்னு-சாபாத்`தின் அருகில் வந்து. “நண்பா! நான் என் பணியை முடித்து விட்டேன், போய் வருகிறேன், இந்தக் காரியத்தைச் செய்யும்பொழுது என்னிடத்திலே தோன்றிய பலவீனத்தையும், சோம்பலையும், அவற்றின் காரணமாக உனக்கு உண்டான சிரமத்தையும் கண்டு மிகவும் வெட்கமுறுகிறேன்; அதற்காக நான் உன்னிடம் மன்னிப்பும் கோருகிறேன். கடவுள் செயலும் நம் செயலும் ஒன்றாக இருக்கக் கூடிய செயல் இந்த உலகத்தில் ஒன்றே ஒன்றுதான். அது ஒருவரை யொருவர் மன்னிப்பது என்பதாகும். ஆனால் விடை பெற்றுக் கொள்வதற்கு முன்பாக நான் உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நீ நினைக்கும் ஆள் நாள் அல்ல. இன்று நீ என்னைப் பார்த்தாயே, அந்த வீட்டில்தான் நான் இருக்கிறேன். நீ இருட்டில் உட்கார்ந்து சிரமப்படுவதைப் பார்த்தேன். நீ என் வீட்டுக்கு வந்த பின் என் விருந்தினனாகி விட்டாய். விருந்தினனுக்கு உதவ வேண்டியது வீட்டானாகிய என் கடமை. ஆனால் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றல், நான் உனக்குப் போதுமான மட்டு மரியாதைகள் செய்ய முடியவில்லை; கௌரவிக்க முடிய வில்லை. நீதான் என் வீட்டைப் பார்த்து விட்டாய். உனக்கு ஏதாவது எப்பொழுதாவது தேவையிருக்குமானால், சங்கோசமின்றி நீ வரலாம். ஆண்டவனின் அருளும் .ஆசியும் உனக்குப் பரிபூரணமாய் எப்பொழுதும் கிடைத்த வண்ணம் இருக்கட்டும்.”

இதைச் சொன்னதும் அவன் இப்னு-சாபாத்’தின் கையைத் தன் கையில் ஏந்தி வணக்கம் தெரிவித்தான். அடுத்த கணமே அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டான்.

வேற்று மனிதன் வெளியேறி விட்டான். ஆனல் இப்னு-சாபாத்’தை வேறு உலகத்தில் வீட்டுச் சென்று விட்டான்.

*

(முக்கியமான கடைசிப்பகுதி இமேஜில். க்ளிக், கண்ணெரிய நான் டெக்ஸ்ட்-ஆக மாற்றியது உங்களுக்குப் புரியணும். காப்பி செய்வதானால் வலைப்பக்கத்திற்கு கிரெடிட் கொடுங்க. நன்றி!- ஆபி)

asad story page 6 end

’நவநீத்’திலிருந்து..

இஸ்மத் அருமையானவள் – மண்ட்டோ

இஸ்மத் பற்றி மண்ட்டோ

’எதிர்’ வெளியிட்ட இஸ்மத் சுக்தாய் கதைகள் என்னும் நூலிலிருந்து, நன்றியுடன்.. (ஆங்கிலத்தில் : அசாருதீன் . தமிழில் : G. விஜயபத்மா)
*

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நான் பாம்பேயில் இருந்தபோது, யாரோ முகமறியா வாசகனிடருந்து அந்தக் கடிதம் வந்திருந்தது. அந்த கடிதம் தாங்கி வந்த விசயம் இப்படி ஆரம்பித்தது, “நீங்களும் இஸ்மத் சுக்தாயும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? எழுத்துலகில் பலம் வாய்ந்த இரு ஆளுமைகள் மண்ட்டோ, இஸ்மத் இருவரும் வாழ்விலும் இணைந்திருந்தால்? எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்? இஸ்மத், ஷாஹித் லத்திஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதை கேட்கவே நாராசமாக இருக்கிறது.” இப்படியாக வாசகங்களுடன் நீண்டது அந்தக் கடிதம். அதே நாட்களில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநாடு ஹைதராபாத்தில் நடந்தது. நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனினும், அங்கு நடந்த சம்பவங்களின் விரிவான கட்டுரையை பல பத்திரிகைகளிலும் படித்தேன். மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்மத்திடம் பல கல்லூரிப் பெண்கள் முற்றுகையிட்டு நீங்கள் மண்ட்டோவை திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்று கேட்டார்களாம். அந்த பத்திரிகைச் செய்தி உண்மையா பொய்யா என்று எனக்குத் தெளிவாகத் தெரியாது.

ஆனால், மாநாட்டில் இருந்து திரும்பி பாம்பே வந்த இஸ்மத் என் மனைவி சஃபியாவிடம், ஹைதராபாத்தில் ஒரு பெண் மண்ட்டோ இன்னமும் திருமணம் ஆகாதவரா என்று கேட்டதாகவும், “நல்ல வேளை உண்மையில் இல்லை” என்று தான் பதில் கூறியதாகவும் கூறினாராம்.

இதைக் கேள்விப்பட்டவுடன் என் மனைவி, மிகவும் அமைதியிழந்து பதில் ஏதும் கூறாமல் மவுனமாகி விட்டார். உண்மை என்னவாக இருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஹைதராபாத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் போலவே எனக்கும் இஸ்மத்திற்குமான உறவைப்பற்றி அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது வியப்புக்குரியது. அந்த நேரத்தில் நான் என் கருத்துகளை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை எனினும் இன்றும் அது எனக்கு வியப்பான ஒன்றாகவே தெரிகிறது.

ஒருவேளை நானும், இஸ்மத்தும் கணவன் மனைவியாக இருந்து இருந்தால்… அதன் பிறகு? யூகம்! யூகங்களுக்கு முடிவே இல்லை. இதேபோல வரலாற்றிலும் ஒரு ‘இருந்திருந்தால்’ என்ற யூகம் என்ன விளைவை ஏற்படுத்தி இருக்கும்? ஒருவேளை கிளியோபாட்ராவின் மூக்கு ஒரு அங்குலம் அதிக நீளமாக இருந்திருந்தால்? அதனால் நைல் நதியின் வரலாற்றில் ஏதேனும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்குமா என்ன? எது எப்படியாயினும் இன்றைய விஷயத்தில் இஸ்மத் ஒன்றும் கிளியோபாட்ரா அல்ல. மண்ட்டோவும், மார்க் ஆண்டனி அல்ல. ஆனால், நிச்சயமாக ஒருவேளை, மண்ட்டோவும், இஸ்மத்தும் திருமண பந்தத்தில் இணைந்திருந்தால், சமகால புதின இலக்கியச் சூழலில் அது ஓர் அணுகுண்டின் விளைவை ஏற்படுத்தியிருக்கும். சிறுகதைகள் கடந்த காலத்தின் பதிவுகளாக ஆகியிருக்கும். கதைகள் புதிர்களாக தரமிறங்கி இருக்கும். எழுத்து நடையின் சாரம் அபூர்வத்துகள்களாக காய்ந்து போயிருக்கும். அல்லது சாம்பலாக எரிந்து போயிருக்கும். ஒருவேளை அப்படி நடந்திருக்குமானால்? எங்களது திருமண ஒப்பந்த பத்திரமே நாங்கள் எழுதிய கடைசி எழுத்தாகக் கூட இருந்திருக்குமோ என்னவோ? அது சரி, திருமண ஒப்பந்தம் என்ற ஒன்றே இருந்திருக்குமா என்று யாரால் உறுதியாகச் சொல்ல முடியும்?

சோட்டெய்ன் என்ற ஒரு நூலின் முன்னுரையில், கிருஷன் சந்தர் இப்படி எழுதியிருக்கிறார். “இஸ்மத்தும் மண்ட்டோவும், அவரவர் கற்பனைத் திறனில் இதைவிட ஒற்றுமையாக இருக்க முடியாது. வாசகர்களைக் குழப்பிவிட்டு, முடிவை அவர்களின் யூகங்களுக்கே விட்டுவிடும் இவர்களது பாணியில் எழுத ஒரு சில உருது எழுத்தாளர்களால் மட்டுமே இயலும். வாசகர்களுக்கு இவர்கள் முதலில் ஆச்சரியங்களையும், ஆர்வங்களையும் தூண்டிவிட்டு என்ன நடக்குமோ என்ற தீர்மானமின்மையுடன் பயணித்து, முடிவில் எல்லாவற்றையும் மாற்றி நகைச்சுவையாக, கொண்டாட்டத்துடன் கதையை முடித்து விடுவதே இவர்களது எழுத்துத் தந்திரமாக இருக்கிறது. ஒருவேளை நாங்கள் திருமணம் செய்து கொள்ள எண்ணியிருந்தால், மற்றவர்களைக் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்கடிப்பதற்கு பதிலாக, நாங்களே அதில் மூழ்கியிருப்போம். மேலும் திருமணத்தின் ஆரம்ப இன்ப அதிர்ச்சிக்குப் பிறகு நாங்கள் யதார்த்த உணர்விற்கு வரும் பொழுது, எங்களது ஆர்வம், வியப்பு, கிளர்ச்சி எல்லாமே மகிழ்ச்சியானதாக இல்லாமல் மீளஇயலாத துக்கமாக மாறியிருக்கும். இஸ்மத்தும் மண்ட்டோவும் தம்பதிகள் என்ற இந்தக் கற்பனை என்ன ஒரு கேலிக்கூத்தான சிந்தனை என்றே கருதுகிறேன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்பதே இந்தச் சமூகத்திற்கு நல்லது.

இஸ்மத் பற்றி நான் எழுதுவது எதுவானாலும், அதில் அவமானம் ஒன்றும் இல்லை. மாறாக, அது நான் அவருக்கு பட்ட கடனை திரும்ப செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே. அவர் எழுதியதில் எந்தக் கதையை நான் முதலில் படித்தேன் என்பதை என்னால் இன்று சரியாக நினைவுபடுத்தி குறிப்பிட இயலவில்லை. இங்கு குறிப்பிட்டு சில வரிகளை எழுத வேண்டும் என்று நினைவுபடுத்திப் பார்க்கிறேன், முடியவில்லை. என் சிந்தனா சக்தி அத்தனைப் பலவீனமாக இருக்கிறது. அவை எழுதுவதற்கு முன்பே எனக்குத் தெரிந்த கதைகள் என்பதைத்தான் இதிலிருந்து நான் புரிந்து கொள்கிறேன். அதனால்தான் என்னால் நிச்சயமாகக் குறிப்பிட்டு எழுத இயலவில்லை போலும்.

எது எப்படியோ முதன் முதலாக இஸ்மத்தை நான் சந்தித்தபோது, மிகவும் ஏமாற்றமடைந்தேன். பாம்பே கிளேர் சாலையில் உள்ள அடேலி சேம்பரில் இருந்த முசாவிர் அலுவலகத்தில், ஷாஹித் அவர் மனைவியுடன் உள்ளே வந்தார். அது ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். மகாத்மா காந்தியில் இருந்து அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டிருந்த நேரம். நகரத்தின் எல்லா பக்கங்களும், கலவரமும், துப்பாக்கிசூடுமாக அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு வீசும் காற்றில்கூட அரசியல் மிகவும் அடர்த்தியாக நிறைந்து, நாடே மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. நாங்கள் அனைவரும் சிறிது நேரம் சுதந்திரப் போராட்டத்தின் வீச்சு பற்றி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் எங்களது பேச்சு திசைமாறி,சிறுகதைகள் பற்றி தொடர்ந்தது. அந்த நாளில் இருந்து சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான், அடேப் -இ- லதீப் பத்திரிகையில் இஸ்மத்தின் லிகாஃப் என்ற சிறுகதை பிரசுரம் ஆகியிருந்தது. அப்பொழுது நான் டெல்லி வானொலியில் பணி புரிந்து கொண்டிருந்தேன். அந்தச் சிறுகதையை வாசித்த பின் நான் கிருஷன் சந்தரிடம் கூறினேன். அந்தச் சிறுகதை மிகவும் அருமையாக இருந்தது.
ஆனால், அதன் கடைசி சில வரிகள் அந்த அழகான சிறுகதையின் தரத்தைச் சிதைத்துவிட்டதாக நான் கருதுகிறேன். அந்த வரிகளில், நுணுக்கமான உணர்வுகள் எதுவும் இல்லாமல் ஜீவனற்று இருந்தது. அஹமத் நசீம் ஹாசிமிற்கு பதில் நான் ஆசிரியராக இருந்து இருந்தால், அந்த இரண்டொரு வரிகளை அந்தக் கதையில் இருந்து நீக்கி இருப்பேன். இப்பொழுது நாங்கள் சிறுகதைகள் பற்றி பேசிக் கொண்டிருந்ததால், இந்த நிகழ்வை நான் இஸ்மத்திடம் கூறினேன். மேலும் தொடர்ந்து, “இஸ்மத், உன் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. உன்னுடைய எழுத்தின் சிறப்பு நீ உன் கதைகளுக்காக தேர்ந்தெடுத்து உபயோகிக்கும் வார்த்தைகளும், உன் புதுமையான உதாரணங்களும்தான். ஆனால், அதைத் தவிர்த்துவிட்டு இந்தக் கதையில், எனக்கு யாரவது ஒரு லட்சம் கொடுத்தாலும்கூட, நான் அந்தப் போர்வை ஒரு அங்குலம் உயர்ந்தபோது என்ன பார்த்தேன் என்று கூற மாட்டேன் என்ற அர்த்தமில்லாத வரிகளை ஏன் இணைத்தாய்?” என்று கேட்டேன். உடனே தயக்கமே இல்லாமல் இஸ்மத் என்னிடம் திருப்பிக் கேட்டார், “அந்த வரிகளில் என்ன குற்றம் கண்டீர்கள்?” நான் அவருக்குப் பதில் சொல்ல எத்தனித்து அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தேன். அவர் முகத்தில், குடும்பத்தில் இருக்கும் அப்பாவிப் பெண்கள், தாங்கள் ஏதோ குற்றம் செய்துவிட்டோமோ என்று சங்கடப்பட்டு பதிலுக்காகக் காத்திருப்பதைப் போன்ற ஒரு தவிப்பான உணர்வைக் கண்டேன். நான் சிறிது ஏமாற்றமடைந்தேன். ஏனென்றால், நான் அவரிடம் இதைக் குறித்து மிகவும் விவரமாக விவாதிக்க விரும்பினேன். லிகாஃப் கதையை பற்றிய என் கருத்துகளை எல்லாக் கோணங்களிலும் அந்தப் புரட்சிகரமான பெண் எழுத்தாளரிடம் அலசி விவாதிக்க விரும்பினேன். ஆனால், அது எதுவும் நடக்காமல் அவர் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றதும் நான் எனக்குள் சொல்லி கொண்டேன், “இது துயரமாக, பாவம் இஸ்மத் ஓர் அப்பாவிப் பெண் என்றளவில் முடிந்து போனது” என்று.

எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. அப்பொழுது நான் டெல்லியில் இருந்த என் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன், “நான் இஸ்மத்தைச் சந்தித்தேன். நீ அவள் போன்ற பெண்ணைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்படுவாய். அவள் அப்படியே சுபாவத்தில் உன்னைப் போலவே இருக்கிறாள். எனக்குதான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.ஆனால், நீ அவளை நிச்சயமாக விரும்புவாய். அந்த லிகாஃப் சிறுகதையின் கடைசி வரிகள் பற்றி நான் மறைமுகமாகக் கூறியதற்கே அவள் சங்கடப்பட்டாள்.”

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, மீண்டும் நான் மிகவும் தீவிரமாக என் கருத்துகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தபோது, காலம் கடந்த கலைப்படைப்பை உருவாக்க வேண்டுமானால், ஒருவர் தனது இயல்பான வரம்புக்குள்ளேயே இருப்பது அவசியம் என்பதை பலமாக உணர்ந்தேன்.

நான் சிந்தித்துப் பார்த்தேன். பெண்கள் ஆண்களோடு சேர்ந்து போர்க்களத்தில் போரிடட்டும். மலைகளை குடையட்டும். இஸ்மத் சுக்தாய் போல கதாசிரியர்களாகட்டும். ஆனால், அவர்கள் தங்கள் உள்ளங்கைகளை ஹென்னாவால், அலங்கரித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மணிக்கட்டுகளில் இருந்து வளையல் சத்தம் எழ வேண்டும் என்பதே யதார்த்தமாக இருக்கிறது. நான் இஸ்மத் சுக்தாய் பற்றி அந்த சமயத்தில் அப்படிக் கருத்துச் சொன்னதற்காக வருத்தப்படுகிறேன். அவர் எல்லாவற்றுக்கும் மேல், அப்படி ஒரு சாதாரண பெண்ணாக இல்லாதிருந்தால், புல்புலையான், டில், லிஹாஃப் மற்றும் கைந்தா போன்ற அருமையான, உணர்ச்சிமிகு கதைகளை நாம் அவரிடம் இருந்து பெற்றிருக்க முடியாது. அவருடைய கதைகளும் சரி, அவருடைய கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் சரி தூய்மையாக, பாசாங்கற்ற வெளிப்படைத்தன்மையுடன் யதார்த்த வாழ்வின் இயல்பான பெண்ணின் பன்முகங்களில் பிரதிபலித்தது. இவற்றில் எல்லாம் ஆண்களை வெல்ல கையாளும் லீலைகளோ, நளினங்களோ, தந்திரங்களோ இல்லை. உடலின் முரட்டு செய்கைகளுக்கு உள்ளுணர்வுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு பெண்ணின் உலகமறியா வெகுளித்தனமும், மென்மையும் உண்மையான ஆத்மார்த்தமான அவளின் ஈடுபாட்டைக் கண்டு அவளை அரவணைத்து கொள்ளும் ஆணின் மனம் என்ற வாழ்வின் உண்மையை நான் இஸ்மத் படைப்புகளில் கண்டேன்.

இஸ்மத் தனது அன்புச் சகோதரனின் நினைவாக தோசாக்கி (நரகத்தை நோக்கி) என்ற கதையை எழுதியிருந்தாள். ஷாஜஹான் தனது காதல் தேவதையின் பூத உடலுக்காக மற்றவர்களை கற்களை சுமக்க வைத்து, ஒரு பெரிய சமாதியைக் கட்டினான். ஆனால், இஸ்மத் தனது சகோதர உணர்ச்சிகளைத் திரட்டி, பாசத்தைக் கொண்டு, ஒரு உயர்ந்த சாரத்தை எழுப்பி, பின்னர் அதன் மேல் தனது சகோதரனின் உடலைக் கவுரவமாக வைத்தார். தாஜ்மஹால் ஷாஜஹானின் அன்பை பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டும் பளிங்கு மாளிகைதான். ஆனால், மாறாக, தோசாக்கி இஸ்மத்தின் அன்பின் காரணமாக விளைந்த ஒரு நேர்த்தியான மிக மென்மையான படைப்பு. அதன் தலைப்பு, அதில் பொதிந்து கிடக்கும் உள்ளடக்கத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ள சொர்க்கத்தைப் பற்றி உரக்கப் பறைசாற்றும் விளம்பரமல்ல.

இஸ்மத்துக்கு ஐஸ் கட்டி மெல்லும் பழக்கம் உண்டு. ஒரு கையில் ஒரு துண்டு வைத்துக்கொண்டு, மற்றொன்றை வாயில் வைத்து சத்தமாக மென்று கொண்டிருப்பார். அவர் பல சிறுகதைகளை இப்படித்தான் எழுதினார். ரேடியோ கேட்டுக்கொண்டும், ஐஸ் கட்டிகளை பற்களால் நறநறவென கடித்துக்கொண்டும் பேனாவை கையில் பிடித்து எழுதித்தள்ளுவது அவர் பாணி. இஸ்மத் மாதக்கணக்கில் எழுதவே மாட்டார். ஆனால், எழுத ஆரம்பித்துவிட்டால் சாப்பிட, குளிக்க, குடிக்க என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல், பேனாவில் தனது கருத்துகளை மையாக்கி, நூற்றுக்கணக்கான காகிதங்களில் மளமளவென எழுத்துப் பிழை பற்றியும் அக்கறையில்லாமல் எழுதித் தள்ளுவார். எனக்குத் தெரிந்தவரை, ஒரு ஏழெட்டு அமர்வுகளிலேயே, ஒரு நீண்ட நாவலான டெர்ஹி லகீர்யை அவர் எழுதி முடித்துவிட்டார்.

கிருஷன் சந்தர் அவர் கதை சொல்லும் வேகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இஸ்மத்தின் கதைகள் குதிரைப் பந்தயங்கள் போல வேகமாக நகரும். அவர் கதைகள் மட்டுமல்ல, அவற்றில் வரும் வாக்கியங்கள், உருவங்கள், உருவகங்கள், கதாபாத்திரங்களின் உணர்வுகள், ஒலிகள்கூட புயல் வேகத்தில் நகரும். இஸ்மத்தின் பேனா, நாக்கு, இரண்டுமே வேகமாக ஓடும்” என்று கூறுவார். இஸ்மத்தின் இயல்பிலேயே வேகம் இருப்பதால், சப்பாத்திக்கு மாவு பிசையும்போதே, சப்பாத்தி செய்து முடித்துவிட்டதாக கற்பனை செய்து கொள்வார். உருளைக்கிழங்கு தோலுரிக்கும் போதே, அதை வைத்துக் குழம்பு சமைத்துவிட்டதாக நினைத்துக் கொள்வார். சமையலறைக்கு உள்ளே போய் வெளியே வந்து, தனது கற்பனையில் சாப்பிட்டுவிட்டதாக திருப்திபட்டுக் கொள்வார் என்று கூட தாம் நினைப்பதுண்டு என்று கிருஷன் சந்தர் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட இஸ்மத் தன் பெண் குழந்தைக்கு துணிகள் தைக்கும்போது மட்டும், பொறுமையாக, ஊசி இப்படி அப்படி நகராமல் அதன் வேலையை அது நேர்த்தியாக செய்யும் வண்ணம், அவ்வளவு அழகாக தைத்து முடிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்மத் பிடிவாத குணம் கொண்டவர். அது அவரது இரண்டாம் இயல்பு. இந்த விஷயத்தில் அவர் குழந்தை போன்றவர். அவர் எந்த கருத்தையும் ஏன் இயற்கை விதியைக்கூட ஒரு சின்ன மறுப்புகூட இல்லாமல் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். முதலில் திருமணமே மறுத்தவர், பின்னர் மணமானதும் குழந்தை பெற்று கொள்ள மறுத்தார். துன்பப்பட்டாலும், எதிர்ப்பை சந்தித்தாலும் அதற்காக பிடிவாதத்தை விடவே மாட்டார். அதில் அவர் பிடிவாதமாக இருந்தார். அதுதான் வாழ்க்கையின் உண்மைகளை அவற்றுடன் தர்க்கம் செய்து சோதித்துப்பார்க்க அவர் கையாண்ட உத்தி என்று நினைக்கிறேன். அவர் பாணியே தனி. வித்தியாசமானதும்கூட. அவருடைய ஆண், பெண் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே இதே போன்ற பிடிவாதம், மறுப்புக் குணங்களைக் கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

இஸ்மத் மீது சக எழுத்தாளரான ஒரு வயதான மனிதருக்குக் காதல் வந்தது. அவர் அதனை இஸ்மத்திடம் கடிதங்கள் மூலம் தெரிவித்தார். முதலில் அதனை ஏற்றுக்கொண்டவர் போலிருந்த இஸ்மத் பின்னர் அந்த நபருக்கு சரியான பாடம் புகட்டினார். இந்தத் தகராறு எல்லாம் வேண்டாம் என்றுதான், நானும் இஸ்மத்தும் மிகக் குறைவாகவே பேசிக்கொள்வோம்.

எனது கதை எப்போது வெளிவந்தாலும், அதனை அவர் பாராட்டுவார். நிலம் பிரசுரமான போதும், அவர் உணர்ச்சிவசப்பட்டு என்னை பாராட்டினார். அவர் என்னை ‘மண்ட்டோ பாய்’ என்று தான் அழைப்பார். நான் அவரை ‘இஸ்மத் பெஹென்’ என்றுதான் அழைப்பேன். கடவுள் சித்தம். எங்கள் ஐந்தாறு வருட நட்பில் எந்த அசாதாரண சம்பவமும் நிகழவில்லை. ஒரு முறை, நாங்கள் இருவரும் ஆபாச எழுத்துகளை எழுதினோம் என்று கூறி கைது செய்யப்பட்டோம். இதுபோன்ற குற்றச்சாட்டு என்மீது ஏற்கனவே இரு முறை வந்திருந்தாலும் இஸ்மத்துக்கு அதுவே முதல் முறை. அவர் மிகவும் மனம் வருந்தினார். அதிர்ஷ்டவசமாக பஞ்சாப் போலீஸ் வாரண்ட் இல்லாமல் எங்களை கைது செய்து விட்டதால், அந்தக் கைது நடவடிக்கை சட்ட விரோதமாகி விட்டது. இஸ்மத்துக்கு மகிழ்ச்சி.

தொல்லையே வாழ்க்கையாய் இருப்பவர்கள் எவ்வளவு நாள் தான் பாதுகாப்பாய் இருக்க முடியும்? இறுதியாக லாஹூர் நீதிமன்றத்தில் இஸ்மத் ஆஜர் ஆக வேண்டியிருந்தது. பம்பாயிலிருந்து லாஹூருக்கு ஒரு நீண்ட பயணம். ஷாஹிதும் என் மனைவியும் கூட வந்தார்கள். நாங்கள் உற்சாகமாக இருந்தோம். சபியாவும் ஷாஹிதும் சேர்ந்துகொண்டு, கைதானால் ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றெல்லாம் பேசி எங்களைப் பயமுறுத்தினர். இறுதியாக இஸ்மத் கொதித்தெழுந்து, “எங்களுக்குத் தூக்கு தண்டனை கூட கொடுக்கட்டும். நாங்கள் உண்மையின் பக்கமே நிற்போம்” நாங்கள் இந்த வழக்கு சம்பந்தமாக இரு முறை லாஹூர் செல்ல வேண்டியிருந்தது. இருமுறையும், எங்களைப் பார்க்க ஏராளமான மாணவர்கள் அருகாமையிலுள்ள கல்லூரிகளிலிருந்து வந்து கூடி விட்டனர். இதைக் கவனித்த இஸ்மத், “மண்ட்டோ பாய்… சவுதரி நஸிர்கிட்டே சொல்லி நம்மை பார்க்க விரும்புவர்களிடம் இருந்து பணம் வாங்கச் சொல்லுங்க… கைச்செலவுக்காவது உதவும்” என்றார். இரு முறை லாஹூர் சென்றபோதும், கர்னல் பூட் ஷாப்பில் நாங்கள் பத்துப் பன்னிரண்டு செருப்பு, ஷூக்கள் வாங்கினோம். இஸ்மத்திடம் யாரோ ஒருவர் பம்பாயில் கேட்டார்கள்:

“கேஸ் விஷயமாகவா லாஹூர் சென்றீர்கள்?” அதற்கு இஸ்மத் சொன்ன பதில்: “இல்லை. ஷூ வாங்கப் போனோம்.”

இஸ்மத்தின் பெண்ணென்ற அடையாளம், அவருடைய எல்லா எழுத்துகளிலும் பிரதிபலித்தது. அவருடைய படைப்புகளின் மீதான நமது ஆய்வுகளிலும், விமர்சனங்களிலும் ஒவ்வொரு அடியிலும் நம்மை அது வழிநடத்தியது. ஓர் எழுத்தாளராய், அவருடைய பலம், பலவீனம் இரண்டையும் அவருடைய பாலினத்திலிருந்து நம்மால் பிரித்துப்பார்க்க முடியாது. அஜிஸ் அஹ்மத் என்பவர், இஸ்மத்தைப் பற்றிக் கருத்துக் கூறும்போது, “உடலை அனுபவித்து அறிவதற்கு இஸ்மத்துக்கு ஒரு வழி இருக்கிறது. அது தழுவுதல் மூலம்தான். அவருடைய புதினங்களில் வரும் எல்லா ஆண்களுமே- ரஷீதிலிருந்து டெய்லர் வரை -அவர்களுடைய உடல் ரீதியான, மன ரீதியான, பாலியல் செயல்களின் மூலமே கணிக்கப்படுகிறார்கள்” என்று கூறுகிறார்.

இஸ்மத் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர். மென்மையான தொடுதலே அவருக்குப் போதும். அவருக்குள் மேலும் பல உணர்வுகள் அதே அளவுக்கு உள்ளன. உதாரணமாக அவருடைய கேட்புத் திறன் மற்றும் நுகர்தல் திறன். அதிலும் அவருடைய படைப்புகளில் கேட்புத் திறனின் பங்கு எனக்குத் தெரிந்தவரை மிகவும் அதிகம். கர்ர்ர்ர். பாட்… ஷூன்… பாஷ்… கார் கார்போர்டுக்கு வெளியே உறுமிக் கொண்டிருந்தது. அவன் ரேடியோவினை திருகிக்கொண்டே இருந்தான். – காரர்… கான்… சவுத்… ஷாஷி…காரும்… எனது கண்கள் கண்ணீர் குளமானது. தனன்… தனன்… – சைக்கிள் பெல் அடித்தது… என்றெல்லாம் ஒலிகளை எழுதி சூழலை நமக்குச் சரியாகப் புரிய வைப்பார்.

அவருடைய எல்லாப் புலன்களும் சரியான இடத்தில் வேலை செய்யும். காமம் அவருடைய எழுத்துகளில் ஒரு நோய் போல நீக்கமற நிறைந்திருக்கும் என்ற அஜிஸ் சாஹேபின் கருத்து அவருடைய பார்வையின்படி சரியாக இருக்கலாம். ஆனால், அந்த நோய்க்கான மருந்தை அஜிஸ் பரிந்துரைக்க அஜீஸ் அஹ்மத், ‘இஸ்மத்தின்’ கதாநாயகிகள் யாரையுமே ஆண்கள் ஆழமாகக் காதலிப்பதில்லை. அல்லது அவர்கள் எந்த ஆணையும் காதலிப்பதில்லை என்று கூறுவார். இதுபோல இஸ்மத்தைப் பற்றி ஏராளமானோர் ஏராளமான கருத்துகளைச் சொல்வர்.

இஸ்மத்தின் நாடகங்கள் வலுவற்றவை. அவருடைய கதைகள் சரியாகப் புனையப்படுவதில்லை. காட்சிகள் கோர்வையாக இல்லாமல் ஒட்டுப் போட்டதைப்போல உள்ளன. அவருக்குக் காமம் தான் எல்லாம். அது அவருக்கு ஒரு நோய் போல… அவர் விருந்து நிகழ்ச்சிகளில் விசித்திரமாக நடந்துகொள்வார். அவருக்குத் திரைக்குப் பின்னால் நடப்பதை விவரிப்பதில் அபாரத் திறமை. அவருக்குச் சமூகத்தின் மீது அக்கறை இல்லை. மக்களின் மீதுதான். மக்களின் மீது என்றுகூடச் சொல்ல முடியாது. தனிப்பட்ட மனிதர்கள் மீதுதான். அவருடைய கதைகளுக்குத் திசையோ திக்கோ கிடையாது. அவருடைய ஆழ்ந்து நோக்கும் திறனும் அபாரமானது. அவர் ஓர் ஆபாச எழுத்தாளர். அவர் ஒரு நகைச்சுவை எழுத்தாளர். கத்தி முனையில் நடக்கக் கூடியவர். இப்படி பல ஹேஷ்யங்கள் இஸ்மத் பற்றி செய்திகளாக உலா வந்தன. இவை எதுவும் இஸ்மத் என்ற ஆளுமையை எள்ளளவும் பாதிக்கவில்லை. அவர் பாட்டுக்கு இயங்கிக்கொண்டே இருந்தார்.

ஒருமுறை டெல்லியைச் சேர்ந்த தேஷ் என்பவர் எங்கள் அனுமதியின்றி எங்கள் இருவர் கதைகளையும் பிரசுரித்து விட்டார். இஸ்மத் வெகுண்டெழுந்து விட்டார். “நாம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நான் அவரிடம், “லாஹூரில் சவுதரி முஹம்மது உசைன் இருக்கிறார். அவரிடம் சொன்னால், அவர் தேஷ் மீது வழக்குப் போட்டுவிடுவார்” என்று சொன்னேன். அதற்கு இஸ்மத் சிரித்தபடி, “யோசனை நன்றாகத் தான் இருக்கிறது. உண்மை என்னவென்றால், அவரோடு சேர்த்து நம்மையும் வளைத்துக் கொள்வார்களே” என்றார்.

நான் சொன்னேன். “அதனால் என்ன? நீதிமன்றம் வேண்டுமானால் சுவாரசியமான இடமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கர்னல் பூட் ஷாப் அப்படி இல்லையே… அவரை நாம் அங்கு கூட்டிச் சென்று…”

நான் சொல்லி முடிப்பதற்குள், இஸ்மத்தின் கன்னத்தில் இருந்த குழிகள் மேலும் ஆழமாகின. இஸ்மத் என்ற தோழி அருமையானவள்

*
நன்றி : எதிர் வெளியீடு

*

தொடர்புடைய பதிவு :

மண்ட்டோ – என் நண்பன் என் எதிரி / இஸ்மத் சுக்தாய்

துயிலும் பெண் – ஜகரியா தமேர்

அரேபிய மொழியில் இருந்து இக்கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர், மாயா அபு-தீப். தமிழில் : அனுஜன்யா.

அம்ருதா (Jan’2009) இதழிலிருந்து பகிர்கிறேன், நன்றியுடன்..
*

zakariya temer pic2

துயிலும் பெண் – ஜகரியா தமேர்

தன் தந்தை, தாய் மற்றும் மூன்று இளைய சகோதரர்கள் முன் தலை தாழ்த்தி சுவாத் அழுதாள். தான் அவமானத்தால் களங்கப்பட்டதை துடைத்திட வேண்டி, தன்னை வெட்டிப் போட்டு விடும்படி அழுதபடியே இறைஞ்சினாள். அவள் தந்தை கண்டிப்பான தொனியில் அவளுக்கு நடந்ததை முழுவதும் விவரமாகக் கூறும்படி கோரினார்.
சுவாத் உடைந்த குரலில், “எனக்கு நடந்தது நம்பமுடியாதது; நம்ப முடியாதது எனினும் அது நடந்தேறியது” என்றாள்.

தந்தை மேலும் கண்டிப்பான குரலில், எதையும் மறைக்காமல் தங்களுக்குச் சொல்லும்படி ஆணையிட அவள் எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினாள்.

முந்தைய இரவில் வழக்கம் போல் கதவை இறுகச் சாத்தி, தாளிட்டபின் தனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். துயிலுகையில் யாருமற்ற பூங்காவில் தான் நடந்து சென்றதைக் கண்டகள், திடீரென்று ஒரு இளைஞன் அவளைத் தாக்கினான்; அவன் யாரென்றோ. அவன் எங்கு மறைந்திருந்தானென்றோ அவளுக்குத் தெரியவில்லை; அவளைக் கீழே தரையில் வீசி, அவள் ஆடைகளைக் கிழித்தபடி அவள் மேல் மடிந்து, அவளிடம் தனக்குத் தேவையானதை பிடுங்கிக்கொண்டான்; அவளது கெஞ்சல்களையும் கேவல்களையும், அவர்கள் இருவரின் முகத்தையும் மூழ்கடித்த அவளது கண்ணீரையும் அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை.

பிறகு, அவள் இரண்டாவது கனவு கண்டாள். ஒரு தெரிசல் மிகுந்த சாலையில் அவள் நடந்து கொண்டிருக்கையில் திடீரென அதே இளைஞன் அவள் மீது பாய்ந்து, அங்கிருந்த அனைவர் முன்னிலையிலும் கற்பழித்தான். ஒருவர்கூட என்ள நடக்கிறது என்று நின்று கவனிக்கவில்லை.

இப்போது அவள் மூன்றாவது கனாக் கண்டாள். அவள் பாட்டனாரின் கல்லறைக்குச் சென்றிருந்தாள்; குரானின் துவக்க அதிகாரமான ‘சூரா அல் ஃபாத்திஹா’ படித்து, இறந்த ஆன்மாவுக்குப் பிரார்த்திக்கையில், அதே இளைஞன் அவளைத் தாக்கி, மூன்று முறை வன்புணர்ந்ததில் திடுக்கிட்டாள். சிரித்தபடியே, சுற்றியிருக்கும் சூழலின் அழகு தனக்கு இத்தகைய சக்தி தருவதாகச் சொன்னான்.

அந்தத் தந்தை கேட்டார்: ‘யார் இந்த இளைஞன்?”

அவள் சொன்னாள்: “எனக்கு அவனைத் தெரியாது; இதற்கு முன் என் வாழ்வில் அவனை தான் பார்த்ததே இல்லை; கனவில் மட்டும் கண்டிருந்த அவனை நான் எங்ஙனம் அறியக்கூடும்? ஆனால், அவனைத் திரும்பக் காண நேர்ந்தால், உடனே அவனை அறிவேன்; ஏனெனில், என்னால் அவன் முகத்தை மறக்க இயலாது.”

தந்தை, “நீ விழித்ததும் உனக்கு என்ன ஆயிற்று ” என்றார்.

அவள், “கிழிக்கப்பட்ட உடைகளுடனும், சிராய்ப்புகளுடன் குருதி தோய்ந்த உடலில் நகங்களும் பற்களும் ஏற்படுத்திய தழும்புகளுடனும் படுக்கையில் வீழ்ந்திருந்தேன்” என்றாள்.

அவள் தாய். “இந்தப் பெண் என்னுடைய மகள்; அவளை எனக்கு நன்றாகத் தெரியும். இவள் பீரங்கிக் குண்டுகள் வெடித்தாலும் விழிக்காத ஆழ்துயிலில் இருப்பவள். உறக்கமும் கனவுகளும் ஆன விசயமில்லை இது. இந்தச் சந்தில் திரிகின்ற இளைஞர்களில் ஒருவன் இவள் அறையில் புகுந்து, இவள் துயில்கையில் சேதப்படுத்தியிருக்க வேண்டும்” என்றாள்.

தந்தையார், ‘இப்படி நான்கு ஆண் மகன்கள் இருக்கும் வீட்டில், இரவில் நுழையக்கூடிய புத்தி கெட்டவன் யார்?” என்றார்.

சுவாத்தின் சகோதரர்கள் கோபத்துடன் கூச்சலிடத் தொடங்கினர். அவர்கள் அந்த இளைஞன் யார் என்று தெரிந்தால் அவனைக் கொன்று, அவனைக் கண்டந்துண்டமாக்கி விடுவதாகச் சூளுரைத்தனர்.

சுவாத், தன் தாயிடம், “நீங்கள் சொல்வது சரியானால், எனக்கு அந்த இளைஞனைத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், இந்த சந்தில் இருக்கும் ஒவ்வொரு இளைஞனையும் எனக்குத் தெரியும் ” என்றாள்.

பிறகு தந்தையார், ‘ஒரு கண்ணியமான பெண் செய்ய வேண்டியதான மறுப்பைக் காட்டினாயா?” என்று கேட்டார்.

சுவாத், “நான் மறுக்கவும் சப்தமாகக் கூச்சலிடவும் செய்தேன் ஆனால், அவன் சிரித்தபடியே நாங்கள் கனவுலகில் இருப்பதாகவும் விழித்திருப்பவர்கள் உறங்குபவர்களின் உலகை அறிய முடியாது என்றும் சொன்னாள்” என்று பதிலளித்தாள்.

அவள் தந்தை நெடுநேரம் யோசித்து, பின்னர் நடுங்கும் குரலில் தனக்கு நேர்ந்ததை யாருக்கும் சொல்லக்கூடாதென்று மகளை எச்சரித்தார். ஆனால், சுவாதுக்கு நடந்தது அந்த சந்திலிருந்த மேலும் பல பெண்களுக்கும் நடக்கும்; ஆண்கள் ஒன்றும் செய்வதறியாது முழிப்பர்; அவர்களின் கர்வத்திற்கு பங்கம் விளைவித்தவர்களை பழி வாங்க இயலாதவர்களாக இருப்பார்கள்; தங்கள் பெண்டிரை உறங்கவிடாது தடுக்க முனைவர்; ஆயினும், அவர்கள் முயற்சி தோல்வியுறும்; அப்பெண்கள் துயிலுற்றே தீர வேண்டும்; கற்பழிப்புக்கும் ஆளாக வேண்டும்; பிறகு, கிழிக்கப்பட்ட தங்கள் உடைகளுடன் விழித்தெழுவார்கள்.

*
The Sleeping Woman – Zakaria Tamer

***

ஜகரியா தமேர், சிரியா நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். அரேபிய இலக்கிய உலகில் மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளராகவும் சிறுவர்கள் இலக்கியப் படைப்பாளியாகவும் மதிக்கப்படுகிறார். 1931-ம் ஆண்டு பிறந்த தமேரின் முதல் சிறுகதை தொகுப்பு 1957-ம் ஆண்டு வெளியானது. இலக்கியத்துக்கான பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

❌