ராஜஸ்தானின் பளீர் வெயில், நடுமுற்றத்தில் பட்டு ஒளிரும் வகையில் அமைக்கப்பட்ட ஜோத்பூரின் தங்கும் விடுதி அது. வெளிநாட்டு ஓரினப் பாலுறவாளர்கள் தேடித் தங்கும் அந்த விடுதியின் உணவுக்கூட மூலை அலமாரியில்தான், யாரோ விட்டுச்சென்ற, யூகியோ மிஷிமாவின் ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ நாவலைப் பார்த்தேன். சாமுராய்களின் உடல் வலிமை, வீரம், ஆண்தன்மை மீது குழந்தைப் பருவத்திலிருந்தே கதாநாயகனுக்கு கவர்ச்சி தொடங்கி அதுதொடர்பிலான குழப்பம், பயம், இரட்டைத் தன்மை, அதை மறைப்பதற்கான பாவனை எல்லாம் அலைக்கழிக்க, ஒரு யுவதியின் காதலையும் வலியுடன் கடக்கும் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்தேன். ஊர்திரும்பிக் கொண்டிருந்த ரயில், சூரிய காந்தி வயல்களினூடாக கர்நாடக மாநிலத்தில் எங்கோ ஒரு பிரதேசத்தில் விரைந்துகொண்டிருந்தது. மிஷிமா கொடுத்த பெருமூச்சுடன், மழைக்காக மூடியிருந்த ஜன்னலைத் திறந்து வெளியை வெறித்தபோது சரட்டென்று கிளிகள் சூரியகாந்தி வயல்களிலிருந்து கூட்டமாக மேலே பறந்தன. சிறுவன் மிஷிமா அதுவரை அணிந்திருந்த முகமூடியை வலியுடன் உரித்து அகற்றியபோது உண்டான அழகு….பச்சைப்பசேல் வயலில் விருட்டென்று எழுந்து பறந்த கொக்கின் வெள்ளையில் மயங்கிய ராமகிருஷ்ண பரமஹம்சர்…குற்றாலம் பிரதான அருவியை, தேவியின் விரிகூந்தலாகப் பார்த்து நெஞ்சில் அறைந்துகொண்ட லா.ச.ராமாமிர்தம் பார்த்த அழகு.
ஈசுவரஸ்மரணையிலேயேதன்ஸ்மரணையைஉலகைவிட்டுசுழலாமல்வாழ்வைநடத்திவந்தபரமஹம்ஸரைச்
சுற்றிசிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். பிற்காலம் உலகப் பிரசித்தி
பெற்ற நரேந்திரநாத தத்தர், உலகறியாத ஆனால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி, உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர், சாஸ்திரி சிவநாத பாபு, பிரதாப சந்திர முஜும்தார், வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி, நித்தியானந்தஸ்வாமி, வைத்தியரானசசாதரபண்டிதர், கோடீச்வரரானயதுநாதமல்லீக், ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர். இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள். அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை- அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி, அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள். அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை. நினைத்துக்கொண்டு, இருந்தாற்போல் நிஷ்டை கலைவது வரையில் காத்திருப்பார்கள். நிஷ்டை நீடித்தால்-சில சமயம் நிஷ்டை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கலையாமல் இருந்தது உண்டு - கலைவது வரைக் காத்திருக்கவோ அல்லது மீண்டும் வருவதாகவோ தோதாபுரியிடம் சொல்லிவிட்டுப் போவார்கள்.
இந்த தோதாபுரி-மகான் தோதாபுரியிடமிருந்து வேறுபட்டவர். இவரும் பரமஹம்ஸர் கூட்டத்தைச் சார்ந்தவர். தக்ஷிணேச்வரத்தில் சேட் கோவிந்தஜியின் பலசரக்குக் கடையில் கணக்குப் பிள்ளையாக இருந்து வந்தார். அவர் மனைவிஒருபிள்ளையை - நவீனன், வயதுபதினாறு - வைத்துவிட்டு இறந்துவிட்டாள். தோதாபுரிக்குத் தன் மனைவி மீது அத்யந்த பிரேமை. ஏனென்றால் கல்யாணமாவதற்கு முன் அவர் கோலாகல புருஷராக இருந்து தீராத காசநோயைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் தன் மனைவியின் தீவிர தெய்வபக்தியையும் தேவநிஷ்டைகளையும் பார்த்து மனம் மாறிவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் மனைவி தன் மகன் நவீனனைப் பார்த்துக் கொள்வது அவர் கடமை என்று சொல்லிவிட்டு உயிர்நீத்தாள். அதற்குப் பிறகு தோதாபுரி தன் மகன் மீது அதிகமாக வாஞ்சையைக் காட்டாது, ஆனால் அவனைக் கண்ணை இமைகாப்பது போல் காத்துவந்தார். அவர் மனைவி இறந்தபொழுது நவீனனுக்கு வயது பத்து இருக்கும். பரமஹம்ஸர் அவனுக்குப் பதிமூன்று வயதாகும்போது அவனைப் பார்த்துவிட்டு பையன் முகத்தில் வீசிய பிரம்மதேஜஸைக் கண்டு, அவனைத் தன் தேவிபூஜை காரியத்துக்கு மலர்பறித்தல், மாலைசூட்டல், துதிபாடல் உபயோகப் படுத்திக் கொண்டு வந்தார். இது தோதாபுரிக்குத் தெரியாது. நவீனன் ஒருநாள் வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வராமலிருக்கவே தோட்டி குஞ்சன் மூலம் அவன் ஆசிரமத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்று நவீனன் கெளரங்கஸ்வாமியிடம் பரமஹம்ஸர் செத்துவிட்டாரா என்று கேட்டுக் கொண்டிருந்ததைக் கேட்டார். அவன் அதற்கு முன்னர் பரமஹம்ஸர் நிஷ்டையில் வீழ்வதைக் கண்டதில்லை. தோதாபுரி இரண்டுபட்ட மனதுடன் மகனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அன்று வீட்டிற்கு வந்ததும் அவர் மனம் நிலையில் இல்லை. அவர் போன அன்று ஆசிரமத்தில் யதுநாதமல்லிக்கும் மதுரபாபுவும் சாதுஜனங்களைவிட்டு வேறாக, மெதுவாகப் பேசிக் கொண்டும், பரமஹம்ஸரை அடிக்கடி பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். உபயஜீவியானதோதாபுரிக்குஅது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு மல்லிக்கும் மதுராபாவுவும் கொழுத்த பணக்காரர்கள் என்பது தெரியும். ஆனால் அவர்கள் ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்துபோகும் விவரம் அவருக்குப் புரியவில்லை. ஊர் ஜனங்கள் பரமஹம்ஸர் மூலமாகத் தன் பணத்தை மல்லிக் இன்னும் அதிகமாக்க விரும்புகிறானென்றும், ஆனால் அந்தப் பைத்தியக்காரச்சாமி அதற்குச் சம்மதிக்கவில்லை என்று பேசி வந்ததும் அவருக்குத் தெரியும். எனினும் ஒருதடவை சென்றுவந்த தோதாபுரிக்கு அடிக்கடி ஆசிரமத்துக்குப் போகாமல் இருக்கமுடியவில்லை. இதன் பொருட்டு அவர் வெள்ளிக்கிழமைதோறும் காலை ஒருமணிக்கு முன் கடைக்கு வந்துவிட்டு இரவு எட்டுமணிக்குப் பரமஹம்ஸர் ஆசிரமத்திற்குப் போவதற்குச் சேட் கோவிந்தஜியிடம் அனுமதி வாங்கி இருந்தார். ஆசிரமத்தில் வந்த பிறகு ராமகிருஷ்ணரைப் பற்றிய அபிப்பிராயம் மேலோங்கி வந்தது. எந்தச் சமயத்தில் யார் அங்கு வருவார் என்பது நிச்சயமில்லை. சேட் கோவிந்தஜி சபையில் யாராவது பெரிய மனிதர் வந்தால் - அவிநாத சட்டர்ஜியோ, ராம பண்டித முக்கர்ஜியோ- அவர்களுக்கு விசேஷ மரியாதை நடக்கும். அவர்களை உபசரிக்கும் கடமையெல்லாம் சேட், தோதாபுரிக்கு விட்டுவிடுவார். தோதாபுரிக்கு அதைச் செய்வதில் பரம சந்தோஷம்.
அதைப் போலவே ஆசிரமத்தில் இவர் வந்திருக்கும் சமயத்தில் யாராவது பெரிய மனிதன் வந்தால் - சந்திரஸேனரோ, சசாதரபண்டிதரோ - பரமஹம்ஸர் இவரைப் பார்த்துச் சிரிப்பார். உடனே தோதபுரியும் அவர்களைக் கவனித்துக் கொள்வார். இது ஒரு மாமூலாகிவிட்டது. அங்கு வருபவர்களெல்லாம் இதைக் குறித்துத் தோதாபுரியைப் பரிகசித்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
தோதாபுரி பார்ப்பதற்கு நெட்டையாக, நன்றாக உணங்கிய கருவாடு நிறத்தை உடையவராக இருந்தார். தலை முழுவதும் ரோமம் வளர்த்துக் கொண்டு உச்சியில் மாத்திரம் ஒரு சிறுகடுகத்தனை குடுமி வைத்திருந்தார். மெல்லிய அழுக்கடைந்த மல்லைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு மேலே ஒரு அங்கவஸ்திரம் மாத்திரம் அணிந்து கொண்டிருப்பார். அவர் மடியில் ஒரு வெள்ளிப்பொடி டப்பி எப்பொழுதும் முளைத்திருக்கும். அவர் மனம் உணர்ச்சிப் பெருக்கு அடையும் பொழுதெல்லாம் அவர் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சுவார். இதைக்குறித்தும் ஆசிரமவாசிகள் அவரைப் பரிகசிப்பார்கள். ஆனால் தோதாபுரி கொஞ்ச நாட்கள் பரமஹம்ஸர், ஒரு திருஷ்டாந்தக் கதையில் எவ்வாறு தான் மூக்குப்பொடி போட்டுக்கொள்வதை, ஒரு திருஷ்டாந்தமாக உபயோகித்தார் என்று போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
இப்பொழுது தோதாபுரி ஆசிரமத்திற்கு வரத் தொடங்கி மூன்று வருடங்களாகி விட்டன. இந்த மூன்று வருடங்களும் அவர் மனதில் ஒரு உருத்தெரியாத ஆனால் கலவரப்படுத்தும் எண்ணம் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளமுடியவில்லை என்பதை அவரால் கூட நம்பமுடியவில்லை. இதைப் பற்றி நினைக்கையில் அவருக்கு ஒருதடவை பரமஹம்ஸர் தன் தாஸர்களிடை அவரால்(தோதாபுரியால்) பரமஹம்ஸரிடம் மூன்று வருஷம் நெருங்கிப்பழகிய பின்னும் ஒருமுறையாவது பொடிபோடுவதை நீக்க முடியவில்லை என்று சொன்னது ஞாபகம் வந்தது. நவீனனிடம் மாலை ஆசிரமத்தில் இருந்த அவன் ஸ்கூலில் இப்பொழுது இறுதி வகுப்புப் படித்துத் தேறிவிட்டான். திரும்பி வருகையில் தனக்குத் தினம் ஒரு அணாவுக்குப் பொடி வாங்கி வரச் சொல்வார். நவீனனும் ராமகிருஷ்ணர் கூறியபடி அவன் நல்ல பிள்ளை - அதை ஒழுங்காய்ச் செய்து வந்தான். அந்த நவீனன் இப்பொழுது படிப்பை முடித்துவிட்டான். அப்பொழுது கல்கத்தாவில் புதியதாக சர்வகலாசாலையைத் தொடங்கியிருந்தார்கள். தோதாபுரிக்குத் தன் மனைவி சொன்னது மாத்திரமல்லாமல் அவர் பொருட்டும் மேல்படிப்புக்குச் சென்று பெரிய பதவியில் வரவேண்டுமென்று ஆசை,இதற்கு அவர் ஆசிரமத்தில் முதல் தடவை வந்தபோதே அவருக்குத் தெரியாமலேயே ஆயத்தமாக இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அது அவருக்குக் கூட இப்பொழுதுதான் தெளிந்த மனதின் மேல்பரப்பில் சிந்தனை உருவாகத் திரண்டு வந்தது. ஏனென்றால் முதல் முறை அவர் ஆசிரமத்திற்கு வந்த அன்று, நிஷ்டையிலிருந்த பரமஹம்ஸரின் நினைவே அவருக்கு இல்லை. அவர் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தவர்கள் மல்லிக்கும் மதுரபாபுவும்தான். பரமஹம்ஸரை நன்றாகப் பார்க்காமல் வந்ததைக் குறித்துக் கலவரப்பட்டார். ஆனால் அன்று ஆரம்பித்தது இன்று தன் மனதில் உருப்பெற்று கையும் காலும் பெற்றுவிட்டது என்று நினைத்ததும் அவருக்கு மீண்டும் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. எனினும் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு புறப்பட்டார். முதல் நாளே இன்றைக்கு அவர் சேட்டிடம் லீவ் வாங்கியிருந்தார்.
நல்ல உச்சிவேளை, வெயில் எரித்துக் கொண்டிருந்தது. போவதற்கு முன் தன் மன உளைச்சலை நிறுத்த ஒரு சிட்டிகை நல்ல பொடியை உறிஞ்சிவிட்டு, தன் தலையை அங்கவஸ்திரத்தால் மூடிக்கொண்டு, போதமில்லாமல் என்று சொல்லும்படியாக நடந்தார். நடந்து செல்லும் பொழுதே தான் செல்லும் காரியத்தைப் பற்றி நினைக்கக் கூடாது என்று நினைத்தும், அதைப் பற்றி நினைக்காமலிருந்தும் மீண்டும் அதைக் குறித்துத் தாவ, அவஸ்தைப் பட்டுக் கொண்டே நடந்த வேகத்தில், அவர் ஆசிரமத்தை விட்டு நாலு அடி தாண்டிய பின்னர், உணர்வு மீண்டும் தன்னைப் பின்னிழுக்க ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.
அவர் நினைத்தபடி ஆசிரமத்தில் ஒருவருமில்லை. ராமகிருஷ்ணர் மாத்திரம் இருந்தார். ஹிருதயன் கூட இல்லை. அவர் நிஷ்டையில் இல்லை என்பதை அறிந்ததும் அவருக்கு ஒரு நிம்மதி. பிறகு தன் மேல் துண்டால் முகத்தை விசிறிக் கொண்டுவிட்டு. ஆசிரமத்தில் உள்ள கிணற்றை நோக்கிச் சென்றார். இவையெல்லாவற்றையும் அவர் வேண்டுமென்றே மெதுவாகச் செய்தார்.
பிறகு, பரமஹம்ஸரிடம் வந்து அவரை வணங்கிட பின்னர், வாளாஉட்கார்ந்திருந்தார். இதைப் பார்த்த பரமஹம்ஸர் சிரித்த வண்ணம்,
"என்ன தோதா, இன்று கடை இல்லையா?'' என்றுகேட்டார்.
“இருக்கு''
''எஜமானருக்கு உடம்பு சரியாக இல்லையா?''
"அவரும் சௌக்கியம்தான்."
"நவீனனைத் தேடிக் கொண்டு வந்தாயா? அவன் இப்போது சிறு பிள்ளை இல்லை என்றாலும், அவனைத் தேடிக் கொண்டு வருவாயா, என் மூளை துருப்பிடித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அந்தக் காலத்திலேயே அண்ணா சொன்னதைக் கேட்டுக் கொண்டு பேசாமல் கல்கத்தா சென்று சர்வகலாசாலையில் சேர்ந்திருந்தால் இந்த மாதிரி கேள்வி கேட்டிருக்கமாட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார். இதைக் கேட்ட தோதாபுரி உள்ளம் மேலும் கலவரமடைந்தது.
இருந்தாலும் முகத்தில் ஒரு பிடிவாதத்தின் சாயைபடர, வெள்ளிடப்பியிலிருந்து ஒரு சிட்டிகைப் பொடியைப் போட்டுக் கொண்டு விட்டு மெள்ளப் பேசத் தொடங்கினார்.
“நவீனன் விஷயமாக வந்தேன்.''
“நவீனன் நல்ல பிள்ளை.”
"என்னுடன் நீங்கள் ராய்மஹாசயர் வீட்டிற்கு வரவேண்டும்."
"எனக்குஅவரைத்தெரியாதே."
''உங்களுக்குத் தெரிய வேண்டாம் எனக்குத் தெரியும். அவர் மதுரபாபுவின் சிநேகிதர்.'
''ஏன், இன்னும் நவீனனுக்கு வயதாகவில்லையே" என்று சொல்லி பரமஹம்ஸர் சிரித்தார்.
"அதற்கில்லை, ராய் மஹாசயர் கோடீஸ்வரர். ஆனால் அவருக்குப் புத்திர பாக்கியம் கிடையாது நவீனனைப் பற்றிக்கூட அவர் என்னிடம் கடைக்கு வருகையில் பராபரியாக விசாரிப்பார். நவீனன் மேல்படிப்புக்குப் போகவேண்டுமென்று முன்னுக்கு வரவேண்டுமென்று எனக்கு ஆசை. என்னுடைய நிலையில் அவனுக்கு இந்த உதவி செய்யமுடியாது. அதனால்தான் அவரிடம் சென்று இதற்காகப் பொருள் உதவியையும் அவருடைய ஆதரவையும் கோரவேண்டும். நவீனன் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.''
"ஆனால்?''
“க்ஷமிக்க வேண்டும். நான் சொல்லி முடித்து விடுகிறேன். நவீனன் பெரியவனாகி பெரிய பதவியில் அமர்ந்து சிஷ்யனாக இங்கே வர நானே அவனை உபசரித்து எதிர்கொண்டு அழைக்க வேண்டுமென்று எனக்கு ஒரு ஆசை."
"ஆனால் நான் என்ன செய்யமுடியும்?"
"நீங்கள் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லவேண்டாம். என்னுடன் வந்து உட்கார்ந்தால் போதும்" என்று சொல்லிவிட்டு தோதாபுரி ஒரு ஆர்வத்துடனும், ஆவலே உருவாகவும் அவர் முகத்தைப் பார்த்தார்.
பரமஹம்ஸர் அவரை அதிக நேரம் காக்க வைக்கவில்லை. கொடியில் போட்டிருந்த தன் ஒற்றை மேல் துண்டைக் கையில் பிடித்துக் கொண்டு அவருடன் வெளியே இறங்க ஆயத்தமானவர், திரும்பித் தோதாபுரியிடம் “உங்கள் வெள்ளி டப்பியில் போதிய பொடி இருக்கிறதா" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வேறு நினைவில் மூழ்கியிருந்த தோதாபுரியிடமிருந்து "இருக்கிறதே" என்ற பதில் வந்தது. இதன்பின் அவர்கள் ஒன்றும் பேசவில்லை. இருவரும் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு நாலு தெரு தாண்டி ராய்மஹாசயர் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பொழுது ராய்மஹாசாயர் தன் வீட்டு வாசலில் விசிறியால் தனக்குத்தானே விசிறிக்கொண்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தார். அவருக்குத் தோதாபுரியைத் தெரிந்ததும் அவரை வரவேற்காமல் நின்று கொண்டிருந்தார்.
தோதாபுரியே வலிந்து அவரைக் கும்பிட்டு அவரிடம் சென்றார். அவராகவே வலிந்து, சற்று எட்டி நின்று கடுமையாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த பரமஹம்ஸரைச் சுட்டிக் காட்ட ராய் மஹாசயர் அவர்கள் இருவரையும் உள்ளே வரச் சொல்லி தான் முன்னே போனார்.
உள்ளே சென்றதும் கூடத்தில் சார்த்தி வைத்திருந்த இரு பலகைகளில் ஒன்றைத் தரையில் வைத்து, அதில் பரமஹம்ஸரை அமரும்படி தோதாபுரி வேண்டிக்கொண்டார். பரமஹம்ஸர் அவ்வாறே செய்தார். அவர் தன் மேல் துண்டை இப்பொழுது மடியில் வைத்துக்கொண்டார். தோதாபுரி பேச ஆரம்பித்தார்.
''நீங்கள் சில நாட்கள் முன் கேட்ட குங்குமப்பூ கடையில் வந்திருக்கிறது."
“என்ன கதையாக இருக்கிறது, தோதாபுரி! இதைச் சொல்லவா இந்தப் பட்டை உரிக்கும் வெயிலில் இந்தக் கிழவனையும் அழைத்துக் கொண்டு வந்தாய்.''
தோதாபுரிக்குக் கலவரம் கூடியது. திரும்பிப் பார்த்தார். பரமஹம்ஸர் சுவரில் சாய்த்த பலகையைப் போல அரையாக மூடிய கண்களுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவருக்கு நிம்மதியாக இருந்தது. மேலும் தன்னைத் தைரியப்படுத்திக் கொள்ள ஒரு சிட்டிகைப் பொடியை உறிஞ்சி விட்டுச் சற்றுத் தயங்கிவிட்டு, க்ஷமிக்கணும் இதற்காக நேற்றுக் கடைக்குக் கல்கத்தாவிலிருந்த ரோஜாமணி அம்மையார் ஆள்விட்டிருந்தார்கள்."
இதுகாறும் அசட்டையாக இருந்த ராய்மஹாசயர் எழுந்து உட்கார்ந்தார். தாசிரோஜாமணியுடன், தன் மனைவி இறந்த பிறகு அவர் நிரந்தரமான தொடர்பு வைத்திருந்தும், அவள் தேவைகளை இவர் கணக்கில் எழுதிக் கடையிலிருந்து அனுப்புவதும் தோதாபுரிக்குத் தெரியும்.
"???" இவ்வாறு ராய்மஹாசயர் அவர் பேச்சைத் தொடர எதிர்பார்த்தார்.
"குங்குமப்பூ இப்பொழுதுதான் வந்திருக்கிறது என்று தகவல் கிடைத்தது. நான் இன்று லீவ் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நவீனன் மூலம் உங்களிடமே கொடுத்தனுப்பலாம் என்றுதான் நினைத்தேன். இன்று சேட்டும் கடையைச் சீக்கிரமாக அடைத்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இருந்தாலும் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."
ரோஜாமணியின் பெயரைக் கேட்டதால் சந்தோஷமடைந்திருந்த ராய்மஹாசயர் "நவீனன் பெயர் எனக்குப் பிடித்திருக்கிறது. அவன் யார்? கடைவேலைக்காரனா?"
"இல்லை அவனுக்கு உங்கள் அனுக்கிரகம் வேண்டும்.''
ராய்மஹாசயர் பரமஹம்ஸரைப் பார்த்துக்கொண்டே “என்னுடைய அனுக்கிரகமா" என்றார். பரமஹம்ஸர் இன்னும் அதே நிலையில் வீற்றிருந்தார்.
“நல்லபையன். என் ஒரே புத்திரன், ஆசிரமத்தில் புண்ணிய கைங்கரியம் செய்கிறான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டான். அவன் மேலே படிக்க வேண்டுமென்றும் பெரிய பதவியில் அமரவேண்டும் என்றும் என் ஆசை. இந்த சிந்தனை உதித்தவுடன் உடனே இங்குவந்தேன்.''
இப்பொழுது ராய்மஹாசயர் தோதாபுரியைத் தனியே வேறு அறைக்கு வருமாறு அழைத்துச் சென்றார். தோதாபுரியும் மூன்று வருஷத்திற்கு முன் தன் உள்ளத்தில் எற்பட்ட அதே ஒரு உருத்தெரியாத உணர்ச்சியுடன் அவரைப் பின் தொடர்ந்தார். கூடத்தில் பரமஹம்ஸர் பலகையைப் போல் உட்கார்ந்திருந்தார்.
"தோதாபுரி, நான் உனக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நாம் இருவரும் மனைவியை இழந்தவர்கள். இருவரும் நிறைய லோகானுபவம் நிறைந்தவர்கள். நான் பரமஹம்ஸர் ஆசிரமம் பக்கமே போவதில்லை என்பது உனக்கு தெரியும். நீயும் மூன்று வருஷங்களாக அங்கு போய் பழகிக் கொண்டிருந்தவன். இன்று அவரையும் அழைத்துக் கொண்டு என்னிடமும் வந்திருக்கிறாய்."
இதைக் கேட்டுக் கொண்டேயிருந்த தோதாபுரி மேலே அவர் என்ன சொல்வாரோ என்ற பயத்தால், அவரைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிட்டிகைப் பொடி உறிஞ்சிவிட்டு, தன்மூக்கைத் துடைத்துக்கொண்டு அவரைத் தொடரச் சொன்னார்.
"நான் அங்கு வராவிட்டாலும் எனக்கும் பரமஹம்ஸரைத் தெரியும். மல்லிக் முதலியவர்கள் ஏன் அவரைச் சுற்றி வருகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும், ஆனால் அதைப் பற்றியெல்லாம் நான் பேசவில்லை. எனக்கு வம்பு பேசுவதில் வெறுப்பு. ஆனால் ஒன்று. நான் அதிகமாகப் படித்ததில்லை. பரமஹம்ஸரும் படிக்கப் பிடிவாதமாக மறுத்தவர் என்பது உனக்குத் தெரியும். ஆனால் எங்கள் நிலையென்ன, உண்மையான ஞானம் பதவியெல்லாம் வேண்டுமென்றால் அதற்கு மேல்படிப்பு வேண்டாம். என்ன, நான் சொல்வதைக் கேட்கிறாயா?''
வரும் அழுகையை அடக்கிக் கொள்வதாலும், வரம்புமீறிய உணர்ச்சியால் கட்டுண்டபோதும் மக்கள் பெறும் ஒரு உணர்ச்சியால், தோதாபுரி தன் வாய் வலித்ததால், வாய்பேச முடியாமல் தலையை அசைத்தார். மீண்டும் அவர் உள்ளத்தின் உருத்தெரியாத வெளியில் தன் மனைவியின் உருவமும், கூடத்தில் நிர்விசாரமாக உட்கார்ந்திருந்த பரமஹம்ஸர் உருவமும் வீட்டிலிருந்த களங்கமற்ற நவீனன் உருவமும் ஒருசேர மின்னிப் பாய்ந்தன.
''எனக்குத்தெரியும். நீ உலகம் தெரிந்தவன். எனக்கு நவீனன் என்ற பெயர் பிடித்திருக்கிறது. எனக்கும் அவனுக்கு உதவிபுரிந்து அவனை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசையிருக்கிறது. ஆனால் அவனை நான் படிப்பினால் வீணாக்க விரும்பவில்லை. அவனுக்குக் காரியத்திறமையையும், பொருள் சேகரிப்பு முறையையும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் - நீ சம்மதித்தால்."
மோர் மீது திரண்டு வரும் வெண்ணெயைப் போல் தன் உள்ளத்தில் மிதந்து தன் மென்னியைப் பிடிக்க உயர்ந்து எழும்பி வரும் ஒரு பயத்தினால் தோதாபுரி மீண்டும் தலையை அசைத்தார்.
'பரமஹம்ஸரைப் பற்றி எனக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் பெண்களைப் பற்றிச் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் தோதாபுரி, விந்துவை ஒரு பொழுதும் விரயமாக்கக் கூடாது என்று அந்தப் பேயனே வந்து சொன்னாலும் நம்மால் முடியுமா, தோதாபுரி? ரோஜாமணியைப் பற்றி நான் பராபரியாகப் பல கேள்விப்படுகிறேன். நானும் சட்டவரம்புக்குட்பட்டவன் தான். என் மனதைச் சாந்திப்படுத்த ஒருவன் இருந்தால் இந்த அவஸ்தையில்லை. உன்னிடம் நான் சொன்னது பொய், எனக்கு நவீனனைத் தெரியும். அவன் மிகவும் நல்ல பையன் என்றும், பிரம்மதேஜஸ் உடையவன் என்றும் என்னிடம் மதுரபாபு சொல்லியிருக்கிறான். நவீனன் ரோஜாமணி வீட்டில் அவள் வீட்டுக் காரியத்தைக் கவனித்துக் கொண்டு என்னுடைய ஆளாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு இந்த அவஸ்தையிலிருந்து விடுதலை பெறமுடியும். அவனைப்பற்றி நீ ஒன்றுக்குமே கவலைப்பட வேண்டாம். தோதாபுரி, அவன் காரியத்தை என்னிடத்தில் விட்டுவிடு. என்ன சொல்கிறாய்?''
தோதாபுரி உருத்தெரியாத தனது உள்ள வெளியிலிருந்து எழுந்த சூறைக்காற்றைப் போன்ற கோபத்தை அடக்க வெகுவாகக் கஷ்டப்பட்டுக்கொண்டு அவரிடம் "நாளை வருகிறேன்" என்று எழ “நன்றாக யோசித்து முடிவுக்கு வா" என்று சொல்லிக்கொண்டே அவரும் அவனைப் பின்தொடர, இருவரும் கூடத்திற்கு வந்ததும், அதுகாறும் வீற்றிருந்த பரமஹம்ஸர் எழுந்திருந்ததும் ஒரே சமயத்தில் நடந்தது.
இருவரும் பரமஹம்ஸரும் தோதாபுரியும் மௌனமாக நடந்து, ஆசிரமத்திற்கு வந்ததும் விடை பெற்றுக் கொள்ளத் தயங்கி நின்ற தோதாபுரியைப் பார்த்து பரமஹம்ஸர், "தோதாபுரி, நீ ஒன்றும் சொல்லவேண்டாம். இந்த மூன்று வருஷங்களில் நீ என்னிடம் கற்றுக்கொண்டதைவிட, கற்றுக் கொள்ளத் தவறியதை, ராய்மஹாசயர் உனக்கு மூன்று மணி நேரத்தில் கற்றுக் கொடுத்திருப்பார். நாம் இருவரும் அவரை வணங்குவோம். இப்பொழுது நான் உன்னுடன் வந்ததின் தாத்பரியம் உனக்குப் புரிந்திருக்கும்"என்று சொல்லிப் பரமஹம்ஸர் அவருக்கு விடைகொடுத்தனுப்பினார்.
அடுத்த நாள் காலையில் தக்ஷிணேசுவரத்தின் காளி கோயிலில் நவீனன் அர்ச்சகனாகிவிட்டான் என்ற செய்தியைக் கேட்ட ராய்மஹாசயர் ஆச்சரியப்பட்டாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை.
அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட் செங்கலை எடுத்து, முன் சக்கரத்தில் போட்டு ஆட்டோவை நிறுத்துவதற்காக நானும் குப்பை ஆட்டோவுக்குப் பின்னால் குப்பைக்காரருடன் ஓட, தெருவின் முனையில் முன்சக்கரம் இடதுபக்கமாக திரும்பி, அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் ஏற்றத்தில் வேகம் தடைபட்டு நின்றது வண்டி. அதற்குள் தெரு முழுவதும் பரபரப்பாகிச் சிறுவனின் அப்பா ஓடிவந்து அவன் முதுகில் ரெண்டு மொத்து போட்டு அழைத்துச் சென்றார். முட்டைக் கண்ணாடி போட்டிருந்த குண்டுச் சிறுவனோ தனக்கு இந்த தண்டனையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல சாவகசமாகப் போனான். சார் எந்தப் பிரச்சனையும் ஆகவில்லை. அவன்தான் பாதுகாப்பாக நிறுத்திவிட்டானே என்று சொல்லி, அவரையும் அப்போதுதான் சம்பவ இடத்துக்குள் நுழைந்து, அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம் அம்மாவையும் ஆறுதல்படுத்தினேன். அசோகமித்திரன் வழக்கமாக நின்றுகொண்டிருக்கும் பால்கனியைப் பார்த்தபடி வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடுதிரும்பினேன். அசோகமித்திரன் விஷமத்துடன் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிறான் தத்துவவாதி விட்கன்ஸ்டைன். மொழிக்கு முன்னால் உணரும் விம்மலைப் பேசவும் மொழிபெயர்க்கவும் முயலுகையில் கடக்கப்படும் சிறு எட்டோ, பெருவீச்சின் சாகசமோ தான் கவிதை என்று தோன்றுகிறது.
றாம் சந்தோஷ் வடார்க்காடு-வின் மூன்றாவது தொகுப்பான‘சட்டை வண்ண யானைகள்’, தமிழ் நவீன கவிதையில் வேடிக்கை பாவத்தோடு, விழிப்பின் தீவிரத்தையும் கொண்ட காத்திரமான கவிநிகழ்வு. அது கொடுக்கும் அனுபவம் என்னவென்று விசாரிக்கும்போதுதான் விட்கன்ஸ்டைனைத் துணைக்கழைக்க வேண்டி வந்தது.
றாம் சந்தோஷ் வடார்க்காடு கவிதையை ஒரு முகமூடியாகப் பாவிக்கிறார். முகம் கொள்ளும் சிரிப்பை, முகம் துடித்து விம்மும் அழுகையை முகமூடிக்கு தனது நடிப்பின் வழியாகப் படிப்படியாக இடம் மாற்றும் கலை அவருடையது. முகமூடிகளே நிகழ்த்துவதாகத் தோன்றவைக்கும் கவிதைகள் என்று இதற்கு முன்னர் பெருந்தேவியின் கவிதைகளைச் சொல்லமுடியும்.
எமது அந்தரங்கத்தையும் எமது அசிங்கத்தையும் எமது வெறுப்பையும் நாம் உணரும் தனிமையையும் எம் கொந்தளிப்புகளையும் எம் இரட்டை நிலைகளையும் எம் விழிப்பையும் ஒரு முகமூடிக்கு மாற்றிவிட்டால் இயற்கையின் பாறைத்தன்மையைக் கொண்ட ஒரு அனாமதேயனாக ‘நான்’ ஆகிவிடக்கூடிய உத்தேசம், ஆசுவாசத்தை றாம் சந்தோஷின் கவிதைகள் அளிக்கின்றன.
‘உன் துயருக்கும் ஒரு பலன் உண்டா கவியே
நாலு கவிதை கிடைக்கும் ப்ரோ’
இப்படித் துணுக்குத் தன்மையையும் பாவித்தபடி தீவிரத்தின் ஊஞ்சலுக்கும் அடுத்து தாவும் தன்மையையும் சமீபத்தில் சாதித்துள்ளவர் றாம்.
எதைக் கற்றும் எந்த லாபமும் இல்லை
எதைப் பயின்றும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை
எதன் பொருட்டும் நீ பலியாவதை
நான் விரும்புவதில்லை என்று
அந்தக் கண்ணாடி முன் ஒருதரம் சொன்னேன்
அது அழுதது; நான் சிரித்தேன்.
அந்த முயற்சியில் பெரிதளவு வெற்றியையும் சில தோல்விகளையும் பெரிதளவு இசைமையையும் சின்னச் சின்ன அபசுரத்தையும் கொண்டது ‘சட்டை வண்ண யானைகள்’.
பிறப்பு இனிமையானது அல்ல. பிறப்பு குணமானதும் அல்ல. பிறப்பின் அருவருப்பை அதோடு தோய்ந்த அழகை, பிறப்பின் பயங்கரத்தை அதோடு ஒட்டிக்கொண்டுள்ள புது விழிப்பை, பிறப்பின் நசநசப்பை அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பை, பிறப்பின் ரண ஓலத்தை அதோடு பிரிக்கவியலாத அநாதி துக்கத்தைத் தொட்டுத் தொட்டுச் செல்வதால் றாம் சந்தோஷ் இக்கவிதைகள் வழியாக எனக்கு நெருக்கமாகிறார். பிறப்பு அத்தனை எளிதானதுமல்ல.
நண்பனுமில்லாத நண்பியுமில்லாத காதலனுமில்லாத காதலியுமில்லாத செல்லக்குட்டிகளாக இவர் தனது கவிதைகளைப் பராமரிக்கிறார். அவர்களை யார் என்று கேட்டால் ‘என் இதயம், என் பருவம், என் குழந்தைமை, என் தாய், என் தந்தை, என் அசகோதரன், மட்டுமில்லாது என் விரோதியின் அசல் வார்ப்பென்பேன் ’ என்று சமத்காரத்துடன் கூறும்போது உள்ளேயும் வெளியேயும் உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்பை உணர்கிறோம்.
நவீன கவிதைகள், பார்த்தலாக, வெறும் பராக்காகப் பண்ணி பண்ணி தினுசு தினுசாக வனையப்படும் வஸ்துக்களாகத் தோற்றமெடுத்துவிட்ட நிலையில் றாம் சந்தோஷின் உள்ளும் புறமுமான விழிப்பு கவிதைச் செயல்பாட்டாளனான எனக்குப் புத்துணர்வை ஊட்டுகிறது.
தமிழில் வேடிக்கை என்ற சொல் இரண்டு வித்தியாசமான அர்த்தங்களில் செயல்படுகிறது. அதன் ஒரு பொருள் பார்த்தலை மட்டுமே குறிக்கிறது. நிகழ்த்திக் காட்டுவதையும் வேடிக்கை என்ற சொல் குறிக்கிறது.
றாம் சந்தோஷின் கவிதைகளை நான் விழிப்பை உள்ளேயும் வெளியேயும் கொண்டு நிகழ்த்தும் செயல்பூர்வமான வேடிக்கை என்று சொல்வேன். தமிழில் நகுலன், கலாப்ரியா, ரமேஷ் – பிரேம், பச்சோந்தி எனக் காட்சியே கலகமாக மாறும் தீவிர வேடிக்கைக்கு ஒரு மரபு உண்டு. அந்த மரபில் மிகக் காத்திரமாக இணைந்திருப்பவர் றாம் சந்தோஷ்.
தமிழ் பக்திக் கவிதைகளின் நவீன தொடர்ச்சியாகவும் அந்த மரபின் ஒரு பகுதியான வைதீகத்தின் முதுகில் பிரம்பால் சாத்தியதுபோலச் சுளீர் தன்மை கொண்ட பதிலாக ‘மாயோன் அபிமான சர்ச்சை என்னும் மால் திரு கலகம்’ கவிதை வரிசையைச் சொல்லலாம். தமிழின் அபூர்வமான நீள் கவிதைகளில் ஒன்றாக அது திகழும்.
மைத்துனன் நம்பி
சூதனா சற்று சும்மா இரு
கோத்திரம் கேட்காதே; குலம் பொருளறியேன்
முதுகில் சாற்றிய சாதியின் வடுவுண்டு
நீ பாத்திரம் என வொன்றை நீட்டினால்
நான் இடுவேன் பத்து; போதுமா? தள்ளு.
சாலவும் தூரமிருந்து நான் வந்தேன்;
எனத் தொடங்கும் கவிதை வரிசை றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் தமிழறிஞர் பின்னணியையும், மொழி லாகவத்தையும் உணர்த்துவது. பேச்சுவழக்கை இயல்பாகத் தொனிக்க விடுதல், சமத்கார மொழி, அழுத்தமான கேலியுடன் தெலுங்கு, மலையாள விளிப்புகளையும் கவிதைக்குள் இணைத்துவிடுகிறார். இசைத்தன்மை கொண்ட கவிதைகளில் ஞானக்கூத்தனின் தாக்கத்தைப் பார்க்கமுடிகிறது.
தன்னுடனேயே விளையாடும் ஒரு சிறுவனுடைய தனி மொழி, தன் செல்லம், தன் பாவனை, தன் உரையாடலாக, ஆராட்டி, சீராட்டி, சீண்டி, பிணங்கும் அந்தரங்கமான கவிதைமொழியை தன் கவிதைகளுக்குத் தேர்ந்துள்ளார். மெனக்கெடல் தொனிக்காத ஆத்மாநாமின் அந்தரங்க உரையாடல் தன்மை றாம் சந்தோஷிடம் வேறு தீவிரத்துடன் இறங்கியுள்ளது. ஆத்மாநாமின் ‘என் ரோஜா பதியன்கள்’, ’மறுபரிசீலனை’, ‘நாளை நமதே’, ‘நன்றி நவிலல்’ கவிதைகளின் தொனி றாம் சந்தோஷில் புதுக்கப்பட்டுள்ளது.
சட்டை வண்ண யானைகள் தொகுப்பின் துவக்கத்திலுள்ள ‘பரஸ்பரம்’ கவிதையிலேயே முகத்துக்கும் முகமூடிக்கும், ஆளுக்கும் பிம்பத்துக்குமான உரையாடல், பரஸ்பரப் பரிமாற்றம் துவங்கிவிடுகிறது. புது வருடத்தை, புது அனுபவத்தைக் கொண்டாட திறக்காத சிப்பிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத் திறக்கப்படாத சொற்கள் காத்திருக்கின்றன.
குளிரும் வெயிலும் அருகருகே மாறி உட்காருமளவுக்குத் திகழ்கிறது.
அப்போது கவியின் எதிர்கால மூப்பை முகத்தில் கொண்ட மந்தி. அதன் கரத்திலோ கவிதை உரைப்பவனின் கடந்த காலப் புண்கள். அது என்னைவிடவும் அழகு. அது என்னைவிடவும் சமத்து என்று கோதிவிட்டு யாருமில்லையா உனக்கு மந்தி என்று கேட்கும்போது அந்தரங்க குரல் பிரமாண்டமான பாறைகளை உண்டாக்கி, அவற்றுக்குள் மோதி பெரும் எதிரொலியாக, அசரீரியாக, ஓலமாகத் தொனிக்கிறது. தனிமை தனது கூழாங்கல்லை உருட்டி உருட்டிப் பாறையாக்கும் சம்பவம் இந்தக் கவிதையில் நிகழ்கிறது.
யாருமில்லையா உனக்கு மந்தி
உன் மந்தை எங்கே
அது என்னைப் போலவே
என்னோடு பேசாமல் பார்க்கிறது.
கவி தனது துக்கத்தைத் திராட்சைக் கொத்தாக அந்தக் குரங்குக்கு அளித்துவிட்டான். அது பதிலுக்கு மகிழ்ச்சி என்னும் ரசமாய் மாற்றித் தருகிறது. அந்த மந்தி யார்? அண்மையிலேயே இருந்துகொண்டு அனாமதேயமாக நமக்குத் தொனித்துக் கொண்டிருக்கும் நம்மையும் உள்கொண்ட இயற்கை என்று றாம் சந்தோஷிடம் ஒரு பதில் உள்ளது.
றாம் சந்தோஷ், நல்ல கவிதைகளையும் அந்தரங்கக் குறிப்புகளோ எனத் தொனிக்கும் ஊதாரியாய் அலையும் விவரணைகளுக்கு நடுவில் வைத்துள்ளதால், வாசிப்பவன் கவிதையைத் தனியே உருவிக்கொள்ள வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது.‘வெள்ளி பார்த்தல்’ கவிதை அதற்கு ஒரு பருக்கை உதாரணம்.
‘நாங்கள் தொடர்ந்தோம்’ என்ற இடத்தில்தான் எனக்கு வெள்ளி பார்த்தல் கவிதை தொடங்குகிறது. போகும் போது இடதுகாலையும் வரும்போது வலதுகாலையும் நனைக்கும் ஏரியைப் போலவே ஓர் அல்லாத நிஜத்தில் படர்கிறதாம் குளிர்ச்சி. உண்மையின் குளிர்ச்சியில் அகம் விரிந்து உயர்ந்து குருவியாகச் சுயம் பறக்கிறது.
விண்மீன்களின் சேய்மையை உணராமல் இருக்க, பாவனை மின்மினிகள் தீண்டித் தீண்டிச் செல்கின்றனவாம். நிலைத்த மெய்மையாக, றாம் சந்தோஷ், வானத்து விண்மீன்களைச் சுட்டுகிறார் போல. மனிதனின் உயரத்திலேயே தீண்டும் அநித்தியமான நட்சத்திரங்களான மின்மினிகளைக் கவிதைகள் என்று கொள்வோமா?
இந்தக் கவிதையில் புதிய வஸ்துகள் எதுவும் இல்லை. வெள்ளி, வண்ணத்துப்பூச்சி, மலர், நிலா, நெல்லிக்கனி என எல்லாமே பழைய வஸ்துகள். ஆனால், அத்தனை வஸ்துவும் நித்தியத்தின் சுடரில் ஒளிர்கின்றன.
அவள் பெயர் தான் இந்த உலகில் நான் கேட்ட ஒலிகளிலேயே அழகானது- இத்தனை துயரங்களை அந்தப் பெயர் கொண்டவள் அளித்தபிறகும். அவள் உருவம், உடை, குரல், அவளைப் பற்றி வரும் செய்திகள். எல்லாம் என்னைக் கழுமுனைக் கூர்மையில் இருத்துவதாக இருப்பினும், அவள் பெயரை வாயில் மெல்லும்போதெல்லாம், எனது கபாலச்சுவர்கள் எரிவது உண்மைதான். எனினும், அவள் பெயர்தான் இந்த உலகத்திலேயே இனிமையானது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.
தின்னத் தெவிட்டாது வயிறும் கனக்காத தின்பண்டத்தின் தீராத மென்சுவை அவள் பெயர். கருத்தின் எடையில்லாமல் காற்றில் மயங்கிக் குழையும் இறகு அந்தப் பெயர். மென் குறில், மென் நெடிலாய் உணர்வுக்கு ஏற்பச் சுருக்கி விரிக்க இயலும் அந்தப் பெயர்.
அவள் என்னிடமிருந்து எத்தனையோ தொலைவு சென்றபின்னும் அவளை எண்ணும்தோறும்- சுயம், இழியும் வாதையாக என் மேல் ஒழுகும்போதும்- தித்திக்கின்றதே அவள் பெயர்.
இப்படிச் சொல்வதில் எனக்கு வெட்கமேயில்லை. அவள் பெயரைப் போன்ற ஒன்றை நான் இக்கணம் வரைக் கடக்கவில்லை. பகலின் விளிம்புகளில் பொன்னின் ஜரிகையாகச் சுடரும் பெயர். அந்தியின் செந்தைலம். கடற்கரை மணலோடு குழையும் போது என்னுடன் சேர்ந்து சேர்ந்து குழைந்தது அந்தப் பெயர்.
ஆனால், அந்தப் பெயரை என்னால் வெளிப்படுத்த முடியாது. அதை உரிமையோடு சத்தமாகச் சொல்ல முடியாது. அந்தப் பெயரை வெளியே கூறினால் நான் மரித்துவிடுவேன்.
பள்ளியெனவும் நூலகமெனவும் தொனித்த ஒரு பாழடைந்த மாளிகைக்குள் நுழைந்தேன். படிகளேயில்லாமல் நிர்மாணத்தில் உள்ள ஓர் அந்தரப்பட்டிணத்துக்கு ஏறிவந்து விட்டேன். பூமியில் உள்ள கட்டிடங்களை வாகனங்களை அலையும் மனிதர்களை எல்லாம் பார்க்கும் வகையில் கண்ணாடித் தளத்தில் அந்தரப்பட்டிணம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்தரப்பட்டிணத்தின் சுவர்கள் உயர்ந்துகொண்டிருந்தன. கல் தச்சர்கள், நவீன சிற்பங்களை தூசிப்புகை சூழ செதுக்கிக் கொண்டிருந்தனர். சிறு உணவங்கங்கள் அந்தரப்பட்டிணத்தில் மூலைகளில் தெரிந்தன. அந்தரப்பட்டிணத்துக்கு ஏறி வந்துவிட்டேன். ஆனால் இறங்கும் வழி தெரியவில்லை. கீழே குதிக்கும் அளவுக்கான உயரத்திலும் இல்லை. மதிய வெயில் ஏறியபோது மேற்பார்வையாளர்கள் கட்டுமானத்திலிருக்கும் அந்தரப்பட்டிணத்தைப் பார்வையிட வந்தனர். ஒரு தண்டனை போல, ஒரு திறந்த சிறையைப் போல அந்தரப்பட்டிணம் ஆகிவருவதை உணர்ந்தேன். அந்தரப்பட்டிணத்தின் தொழிலாளிகள் எல்லாரும் நேசபாவமின்றி அன்னியமாக அச்சமூட்டக்கூடியவர்களாகத் தெரிந்தனர். இருப்பதிலேயே சாமானியமாகத் தெரிந்த ஒரு தொழிலாளியிடம் தரையில் இறங்குவதற்கு வழி உண்டா என்று கேட்டேன். பீடி குடித்துக் கொண்டிருந்த அவரிடம் ரகசியத்தைக் கேட்கும் குழைவைச் சேர்த்தேன். இங்கே மேலேறி எளிதாக வந்துவிடலாம். எனக்குத் தெரிந்தவரை இறங்குவதற்கு வழியே இல்லை என்றார். வீட்டில் என் அம்மா தேடிக்கொண்டிருக்கும் ஞாபகம் உறுத்தலாக ஆரம்பித்தது. நான் அந்தரப்பட்டிணத்தில் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டேன். வீட்டுக்கு திரும்பிப் போகவேண்டும். அம்மா தூர தொலைவில் வீட்டில் என்னைக் கடிந்தபடி காத்திருக்கிறாள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிதொலைந்து போகும் கனவுகளை வேறுவேறு விதமாக கண்டுவருகிறேன். தொலைந்துபோகும் எல்லா கனவிலும் அம்மா வீட்டில் காத்திருப்பது மட்டும் மாறாமல் தொடர்கிறது.
(இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஃபாவிய கலை இயக்கத்தின் முதன்மையான ஓவியர்களில் ஒருவராக கருதப்படும் பிரெஞ்சு ஓவியர் ஹென்றி மத்தீஸ். அவரது போர்ட்ரெய்ட் ஆஃப் மேடம் மத்தீஸ் புகழ்பெற்ற ஓவியம்.)
ஒரு இலக்கியப் படைப்பு
மீது 30 வருடங்களாகத் தீராத வன்மம் கொண்டு அலைந்த பழியின் வடிவம், கடைசியில் ஒரு கத்தியாக
உருமாறி, அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனின் மீது, கிட்டத்தட்ட தன் பழியை நிறைவேற்றிக்
கொண்டது. அந்தக் கத்தியிலிருந்து, உயிர்தப்பி மீண்ட நினைவுகளின் பதிவுதான் சல்மான்
ருஷ்டியின் ‘கத்தி’. கருத்தியல் ரீதியான,
கலாசார
அடிப்படையிலான, அடையாள
அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறிய பயங்கரத்தைத் தான் இந்நூல்
விவரிக்கிறது.
சல்மான் ருஷ்டியின் புத்தகத்
தலைப்பு கூறுவதைப் போலவே, கொலை முயற்சி மீதான ஆழ்தியானங்களே இப்புத்தகம். சல்மான் ருஷ்டி
மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சர்வதேச அளவில் குரோதம் ஏற்படுவதற்கும் கோமேனியின்
மரண ஆணைக்கும் காரணமான ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை இரண்டு பக்கங்களுக்கு மேல், அவரைக்
கத்தியால் குத்திய இளைஞன் ஹதி மதார் படிக்கவில்லை. சல்மான் ருஷ்டியை கொலை செய்வதற்கு
அவனுக்கு அவரைப் பற்றிய இரண்டு யூ டியூப் காணொளிகள் போதுமானதாக இருந்திருக்கிறது.
சாத்தானின் வசனங்கள்
நூல் பிரசுரமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையிலும் உலக மக்களின்
வாழ்க்கையிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. சுதந்திரமான சிந்தனைகளுக்கும்
அதை வெளிப்படுத்தும் கலைஞர்கள், சிந்தனையாளர்களுக்கும் பாதுகாப்பான இடமென்று கருதப்படும்
அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் ஷெடாக்வ வட்டரங்கத்தில்
பெரிய பாதுகாப்போ அச்சுறுத்தலோ இல்லாத அந்தரங்கமான சூழலில் ஹதி மதாரின் கத்தி தன்னை
நோக்கி விரைந்துவருவதைக் கூர்ந்து சல்மான் ருஷ்டி பார்ப்பதன் வழியாக இந்த நினைவுப்
பதிவு தொடங்குகிறது.
சல்மான் ருஷ்டி பல நொடிகளுக்கு
முன்பாகவே தன்னைக் கொலைசெய்ய வருபவனைப் பார்த்துவிடுகிறார். ஆனால், முதுகைக் கூடத்
திருப்பாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். “சரி, நீதான் அது. இந்தத் தருணம்தானே உனக்கு
வேண்டும், எடுத்துக்கொள். ஆக, இறுதியில் அது வந்துவிட்டது. மேன்மைமிக்க அந்த நிகழ்வு”
என எதிர்கொள்கிறார்.
விதிவசப்பட்டது போல சல்மான்
ருஷ்டி, அந்தக் கொலைமுயற்சியை எதிர்கொள்கிறார்.
தாக்குதலுக்கு வந்தவன் தனது உடலில் இயங்கிய 27 நொடிகள்
அந்தரங்கமானது என்கிறார். கத்திக்கு இருக்கும் அந்தரங்கம் துப்பாக்கிக்கு இல்லை என்றும்
நம்மிடம் பகிர்கிறார்.
தாக்குதலைச் சற்று முன்னரே
அறிந்திருந்தும் சல்மான் ருஷ்டி ஏன் செயல்படவில்லை என்று உறவினர்களும் நண்பர்களும்
சம்பவத்துக்குப் பிறகு அவரிடம் கேட்கின்றனர். ஒரு திடமான நிச்சயமான எதார்த்தத்துக்குள்
வன்முறை என்னும் நிகழ்ச்சி அரங்கேறும்போது அங்கேயிருப்பவர்களை புதிய எதார்த்தத்தை புரிந்துகொள்ள
முடியாதவண்ணம் குழப்பிவிடுகிறது என்ற பதில் தவிர ருஷ்டிக்கு வேறெந்த பதிலும் இல்லை.
எழுத்தாளர்கள், வாசகர்கள்
கூடியிருக்கும் மேடையில் உரை நிகழ்த்துவதற்காக காத்திருந்த சல்மான் ருஷ்டியின் உடல்
மீதும் இப்படித்தான் வன்முறை ஏற்கெனவே இருந்த எதார்த்தத்தை நொறுக்கி முன்னேறியது.
சல்மான் ருஷ்டியின் வலதுபக்கத்
தாடை அவன் கையால் முதலில் தாக்கப்படுகிறது. அடுத்து கழுத்தில் கத்தி இரண்டு முறை பாய்கிறது.
அடுத்து மார்பில் காயம். நெற்றியில் காயம். கல்லீரலைக் கிட்டத்தட்ட சேதாரப்படுத்தி
விட்டது. மூளையில் இன்னும் ஒரு மில்லிமீட்டர் கூடுதலாக இறங்கியிருந்தால் ‘கத்தி’ என்ற
இந்தப் படைப்பே கிடைத்திருக்காது. வலது கண் நிரந்தரமாகப் பறிபோகும் அளவுக்கு கண்ணில்
சேதம்.
மருத்துவமனையில் நினைவு
திரும்பியவுடன் அந்தக் கொலையாளியுடன் அந்தரங்கமாகச் செலவிட்ட 27 நொடிகள் மீதான தியானத்தை
நம்மிடம் பகிர்கிறார் ருஷ்டி. அந்த 27 வினாடிகளில் பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே
என்ற மந்திரத்தைச் சொல்லிவிடலாம். மத ரீதியானதைத் தவிர்த்தால், சேக்ஸ்பியரின் 14 வரிக்கவிதைகளில்
ஒன்றை எளிதாகப் படித்துவிடலாம். கொலைக்கு முயற்சித்த தாக்குதலாளியுடன் தான் செலவிட்ட
அந்தரங்கத்தையும் தனக்கு நெருக்கமான வாசகன் தன் எழுத்தின் மீது செலுத்தும் அந்தரங்கத்தையும்
நினைவுகூர்கிறார்.
கத்தியை ஒரு கருத்துருவமாக
பல தூக்கமற்ற இரவுகளில் யோசித்துப் பார்த்திருக்கிறார் ருஷ்டி. மொழியும் ஒரு
கத்திதான் ;அது உலகத்தை வெட்டி அதன்
அர்த்தத்தை, அதன் அகத்தில் நடக்கும் வேலைகளை, அதன் ரகசியங்களை, அதன் உண்மைகளை வெளிக்காட்டக்கூடியது
என்கிறார். படிப்பவர்களின் கண்களைத் திறந்து அழகை உருவாக்கக் கூடியது மொழி என்கிறார்.
அத்துடன் மொழிதான் என்னைத் தாக்கவரும் ஆயுததாரியுடன் சண்டையிடுவதற்கான கத்தி என்றும்
குறிப்பிடுகிறார்.
போர்ஹேயின் சிறுகதை ஒன்றில்
வருவதுபோல, கையில் வைத்திருப்பவனுடையதல்ல; ஆயுதத்திலேயே வன்மமும் பழியும் காலம்காலமாக
உறைந்திருக்கிறதென்பதைப் போல, தனக்கென்று உயிர்வந்ததைப் போல, சல்மான் ருஷ்டியின் உடலின்
மீது குத்தியும் வெட்டியும் தனது ஆட்டத்தை கத்தி நிகழ்த்திக் கொண்டிருந்திருந்ததாகச்
சொல்கிறார் ருஷ்டி.
கடவுளோ மதமோ ஏதுமற்ற
வேசிமகன் என்று தன்னைப் பற்றிக் கேலியாக விவரிக்கும் சல்மான் ருஷ்டி, மரணத்தின் முனையில்
இயற்கையை மீறிய எந்தப் புலன்கடந்த அனுபவமும் நிகழவில்லை என்று கூறுகிறார். “என் உடல்
இறந்துகொண்டிருந்தது, தன்னோடு என்னையும் எடுத்துக்கொண்டு போகிறது. உடல் சார்ந்த தீவிரமான
உணர்வு அது.” என்றே குறிப்பிடுகிறார். ஆன்மாவின் அழிவின்மையில் நம்பிக்கை இல்லாதவனான
தனக்கு இந்த கொலைமுயற்சி சம்பவம் அதை உறுதிப்படுத்தியதென்றும் கூறுகிறார். உடலும்,
‘நானும்’ மரணத்தின் விளிம்பிலேயே அந்தச் சம்பவத்தில் இருந்ததாக ருஷ்டி குறிப்பிடுகிறார்.
அற்புதங்கள் என்று எதிலுமே
நம்பிக்கை இல்லாத சல்மான் ருஷ்டி தனது மறுபிழைப்பு ஒரு அற்புதம் என்று சொல்லப்படுவதை
முரண்நகையாகத் தெரிந்தாலும் நம்புகிறார்.
கலையும் எழுத்தும் தொடர்ந்து
வைதீகத்துக்கு சவால் விட்டு வெல்லும் அற்புதம் என்கிறார். தனது மறுபிறப்பை தான் எழுதிய
சொற்களின் வெற்றி என்றும் தனது விஜயநகரம் நாவலின் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டிக்
குறிப்பிடுகிறார்.
“காலம் ஒப்புக்கொண்ட
கருத்துகள் தன்னுடைய எதிரிகள் என்பதைக் கலை அறியும். ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துகள்
என்பவை அர்த்தமிழந்த தேய்வழக்குகளே. அவற்றைப் போன்றவையே சித்தாந்தங்களும். கண்ணுக்குத்
தெரியாத வானத்துக் கடவுள்களின் ஒப்புதலைச் சார்ந்தவை, அப்படிச் சாராதவை என்று அவை இரண்டு
வகைகளில் உள்ளன. சிந்திக்கவும் ஒன்றைப் புதுக்கிளர்ச்சியோடு பார்க்கவும் நம்முடைய உலகத்தைப்
புதுப்பிக்கவுமான நமது திறன், கலை இல்லாவிட்டால் வாடி உதிர்ந்துவிடும்”
அந்தக் கொலைத் தாக்குதல்
நடைபெற்று சுற்றியிருந்த விருந்தினர்கள் பார்வையாளர்களால் தாக்குதலுக்கு வந்தவன் தடுக்கப்பட்டு
ரத்த வெள்ளத்தில் தரையில் சல்மான் ருஷ்டி கிடக்கும்போது சத்தம்போட்டு அழுததை எல்லாரும்
பார்த்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் தனக்கு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை
நினைவுகூரும் ருஷ்டி, உடல் வலி எதையும் உணராத தன்மை தனக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
தனது நினைவில் வலியின் பதிவு மட்டும் இல்லாமல் போனதை விந்தையோடு குறிப்பிடுகிறார்.
கொலை மூர்க்கத்தோடு கத்தியால்
தாக்கிக் கொண்டிருப்பவனை நிராயுதபாணிகளாக இருந்த விருந்தினர்களும் பார்வையாளர்களும்
பாய்ந்து பின்விளைவு எதையும் பொருட்படுத்தாது தடுத்த நடவடிக்கையை மாபெரும் வீரச்செயல்
என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். கூட்டத்துக்குப் பாதுகாவலாக வந்த முன்னாள் தீயணைப்புப்
படை வீரர், ருஷ்டியின் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை தனது கட்டைவிரலால் பொத்தி
அடைக்கிறார். கழுத்து தமனியிலிருந்து வெளியே பாயும் ரத்தம் உயிர் ரத்தம் என்பதை உணர்ந்து
அந்தக் காரியத்தைச் செய்கிறார். அவரை ருஷ்டி, திரு.கட்டைவிரல் என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.
நவீன உலகின் மகத்தான
ஆயுதங்களோடு உலகம் முழுவதும் மற்றமை மீது உயிர் பெற்றிருக்கும் மாபெரும் வெறுப்புக்கும்
அதை முறியடித்த பயன்கருதாத நேசத்துக்கும் இடையில் மீட்கப்பட்ட ஒரு எழுத்துக் கலைஞனின்
கதைதான் ‘கத்தி’.
சாத்தானின் வசனங்கள்
மீதும் அதை எழுதியவன் மீதும் வைக்கப்பட்ட அவதூறைப் பற்றி அவர் சொல்லும்போது, நகைச்சுவை
உணர்வு கொண்டவர்களுக்கும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கும் இடையேயான சண்டை என்று
குறிப்பிடும் ருஷ்டி, தன்னைக் கொலை செய்தவனுக்கு சிரிக்கத் தெரியாததனாலேயே கத்தியை
எடுத்து கொல்ல முயல்வது சாத்தியமானது என்று விமர்சிக்கிறார்.
“கலை, தன்னை ஒடுக்குபவர்களைக்
கடந்து அது நீடித்து நிற்கிறது. கவிஞர் ஓவிட், அகஸ்டஸ் சீஸரால் நாடுகடத்தப்பட்டார்;
ஆனால் ஓவிட்டின் கவிதை ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்து வாழ்கிறது. கவிஞர் மாண்டல்ஸ்டாமின்
வாழ்க்கையை ஜோசஃப் ஸ்டாலின் சிதைத்தார்; ஆனால் அவருடைய கவிதை சோவியத் யூனியனைத் தாண்டி
நிற்கிறது. ஜெனரல் ஃபிராங்கோவின் அடியாட்களால் கவிஞர் லோர்கா கொலை செய்யப்பட்டார்;
ஆனால், அவருடைய கலை ஃபிராங்கோவின் அரசியல் கட்சியான ஃபலாஞ்சின் பாசிசத்தைத் தாண்டி
நிலைத்திருக்கிறது.”
நாம் கதைகள் ஒன்றுக்கொன்று
நடத்தும் உலகப்போர் காலகட்டத்துக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ருஷ்டி உரைக்கிறார்.
எதார்த்தம் குறித்த மாறுபட்ட விளக்கங்களுக்கிடையிலான போர் என்று வலியுறுத்தும் ருஷ்டி
அதனுடன் எப்படி போராடுவது என்பதை நாம் பயிலவேண்டிய அவசியமுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
ரஷ்யாவில் ஒரு கொடுங்கோலன்
தோன்றி உக்ரைனை அந்தக் கொடூரம் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். உக்ரைன் மக்களை
நாஜிக்கள் என்று குற்றம்சாட்டுமளவுக்கு அந்த கதை சென்றுவிட்டது. அமெரிக்காவோ மத்திய
கால மனநிலைக்குச் சென்று கருப்பின மக்கள், பெண்களின் உடல் மீது வல்லாதிக்கத்தைச் செலுத்த
தொடங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மதவெறுப்புக் கருத்துகளை
இந்தக் கதைகள் நியாயப்படுத்துவதைக் குறிப்பிட்டு, இந்தியாவில் எழுச்சிபெறும் இந்து
மதவாதம் மற்றும் அதன் அரசியல் சர்வாதிகாரம், வன்முறை மூலம் ஜனநாயகத்தை படிப்படியாகச்
சிதைத்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாறு இதனால் பொய்யான கதைகளுக்குள்
சிக்கிக் கொண்டுள்ளதைத் துயரத்துடன் குறிப்பிடுகிறார்.
சர்வாதிகாரிகள், ஜனரஞ்சகத்
தலைவர்கள், முட்டாள்கள் சொல்லும் கதைகளை எப்படி எதிர்கொள்வது?
அவர்கள் சொல்லும் கதைகளை
செல்லாமல் போகச் செய்யும் வலுவான கதைகளை நாம் சொல்ல வேண்டும். மனிதர்கள் வாழ விரும்பும்
கதைகளை நாம் சொல்லவேண்டும்.
சல்மான் ருஷ்டி தன் மீது
நடந்த கொலைமுயற்சிக்கு முன்பு டிஷானிதோஷிக்குக்
கொடுத்த நேர்காணலொன்றின் வழியாக நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்னொரு நெருக்கடியையும்
சுட்டிக்காட்டுகிறார்.
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சீமுர்க் சிறுகதைத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதும் கதையான ‘சீமுர்க்’ கதையைப் படிக்கும்போது புனைவும், மெய்யியலா என்ற கேள்வியை என்னால் தவிர்க்க இயலவில்லை.
சிந்தனையும் புனைவும் விமர்சனப் பார்வையும் மேலோங்கிய பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளை போர்ஹே கதைகளை வரையறுப்பது போல ஹைப்ரிட் கதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம்.
போர்ஹேசின் சிறுகதையொன்றில் ஒரு வாக்கியம் வரும். அவன் தன்னைப் பற்றி பிறர் கருதும்போது தனது வருங்கால சாதனைகளையும் சேர்த்து வைத்து மதிப்பிட வேண்டுமென்று விரும்புபவனாகவும், பிறரை அவர்களது கடந்தகாலச் செயல்களை வைத்து மதிப்பிடுபவனாகவும் இருந்தான் என்று போர்ஹெஸ் எழுதியிருப்பார்.
இந்த வாக்கியம் போர்ஹெசின் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தக்கூடிய பொதுவான மனித இயல்பு குறித்த கண்டுபிடிப்பு அதில் இருக்கிறது.
மெய்யியலும் அறிவியலும் போலவே இந்தப் பூமியில் நமது உயிர் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும் மாற்று முறைமைகளாகவே கவிதையும், சிறுகதையும், நாவலாக இருக்கிறது.
மூளை நரம்பியல் துறை 21ஆம் நூற்றாண்டில் பெருமளவு வளர்ந்துள்ள சூழலில், இன்றும் உலகின் தீர்க்கமுடியாத புதிர்களில் ஒன்றாக இருக்கும் மனித மூளைக்குள் உள்ள ரகசியங்களை, போர்ஹெஸ் சென்ற நூற்றாண்டில் சிறுகதைகள் வாயிலாக தொட்டுச் சென்றிருக்கிறார் என்று நரம்பியல் விஞ்ஞானி ரோட்ரிகோ குயின் ஆச்சரியப்படுகிறார். நினைவு, மறதி என்பதை தனது படைப்பின் முக்கியமான விவகாரமாக்கிய போர்ஹெஸ், தனது “funes the memorius” கதையின் மூல கதாபாத்திரம், தனக்கு நடப்பது எல்லாவற்றையும் சித்திரம் போல ஞாபகம் இருப்பதால் எதையும் மறக்க இயலாமல் அவதிப்படும் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தால் அரூபமான கருத்துருவங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. விஞ்ஞானி குயினும் மூளை பற்றிய தனது ஆராய்ச்சியில் இதே இடத்துக்குத்தான் வந்து சேர்கிறார். மனித மூளையில் உள்ள நியூரான்கள் அரூப கருத்துருவங்களால் தூண்டப்படுகின்றன. ஆனால் விவரங்களை விட்டுவிடுகின்றன என்று போர்ஹெஸ் எழுதிய இடத்துக்கு வந்துசேர்கிறார். மூளை நரம்பியலில் பிற்காலத்தில் அறியப்பட்ட ஒரு விஷயத்தை போர்ஹெஸ் கனவாக தனது புனைகதையில் கண்டுள்ளார்.
அந்த அடிப்படையில் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தன்’, ராபர்ட்டோ கலாஸோவின் நாவலான ‘க’, எம். வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’, சம்பத்தின் ‘இடைவெளி’ எல்லாம் ஒரு புனைவு மட்டும்தானா? பஷீரையும் காஃப்காவையும் சாதத் ஹசன் மண்டோவையும் ஹாருகி முராகமியையும் வெறும் புனைவெழுத்தாளர்கள் என்று மட்டும் யாராவது சொல்ல முடியுமா?
தத்துவம், மெய்யியல் சிந்திக்கும் பாதையில் செல்வதுபோலச் சென்று, மினுங்கித் தோன்றி மறையும் கணத்தோற்றங்கள் என்று புனைவின் கண்டுபிடிப்புத் தருணங்களை நாம் வகுத்துப் பார்க்கலாம். ஜே. கிருஷ்ணமூர்த்தி சத்தியத்துக்கு ‘பாதையற்ற பாதை’ என்ற படிமத்தை வரையறுப்பதிலிருந்து கடன்வாங்கி புனைவின் வழிகளைப் பாதையற்ற பாதை என்று சொல்லிப் பார்க்கலாம்.
சீமுர்க் கதையில் பெயரில்லாமல் ஒட்டகத்தில் அலையும் அந்த ஞானி உறக்கத்தில் விழுந்த ஆழமான குளம்தான் புனைவு என்று கருதுகிறேன். விரைகளால் உருவான அன்றாடத்தின் உலகம் ஒன்றிருக்கிறது. சிமூர்க் கதையில் வரும் அந்த ஞானியோ புனைவென்னும் கனவின் விதைகளை, அன்றாடம் தந்த தனது உடலிலும் தனது ஒட்டகத்திலும் புதைத்து அதிலிருந்து ஒரு உலகத்தை உருவாக்குகிறான்.
இந்த உலகம் அழிந்தபிறகும், அதை மறுபடைப்பு செய்வதற்கான உயிர்கள், தாவரங்கள் அனைத்தையும் வைத்திருக்கும் நோவா கப்பல்தான் புனைவு.
000
துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை, சீமுர்க் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்த வகையில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் என்ற சிறுகதை எழுத்தாளனின் இடம் என்ன என்ற கேள்வியை எனக்கு நான் கேட்டுக் கொண்டு ஒரு தூண்டிலைப் போட முயல்கிறேன்.
அதற்கான பதில் ‘எத்திசை செலினும் அத்திசை சோறே’ என்ற கதையில் இருக்கிறது. சிந்திக்கிற காலத்தை எட்டி, அதன் வியர்த்தத்தையும் உணர்ந்து பாடல்களின் காலத்தில் நுழைந்துவிட்ட பிரக்ஞையைக் கொண்ட சிறுகதை எழுத்தாளர் இவர் என்று தோன்றுகிறது.
லட்சியம் நழுவிய காலத்தில், சிந்தனைகளும், ரத்தம் தோய்ந்த வரலாறுகளும் வெறும் கதைகளாக எஞ்சிவிட்ட ஒரு நூற்றாண்டுக்குள் நுழைந்துவிட்ட ஓர்மையைக் கொண்ட அபூர்வமாகிவிட்ட விமர்சனக் குரல் இவரது சிறுகதைகளில் கேட்கிறது.
லட்சியம் என்ற ஒன்று இருந்த ஞாபகத்தை வைத்திருப்பதால் இவர் கதைகளில் சித்தரிக்கப்படும் நிகழ்வுகளுக்கும், அதை நிகழ்த்துபவனுக்கும் ஒரு இடைவெளி இயல்பாகச் சாத்தியமாகிவிடுகிறது. நடைமுறைக்கும் விருப்பத்துக்கும் லட்சியத்துக்கும் எதார்த்தத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை உணரும் அபத்த உணர்வு இவர் கதைகளின் தொனியில் தோன்றிவிடுகிறது.ந. முத்துசாமி, ராஜேந்திர சோழன், எம்.டி.முத்துக்குமாரசாமியின் சிறுகதைகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
சுஜாதா, சுந்தர ராமசாமி, அசோகமித்திரனின் கச்சிதம், சுவாரசியத்தில் போர்ஹேவிய கதை சாத்தியங்களை பாலசுப்ரமணியன் பொன்ராஜில் எட்டமுடிகிறது.
வளமான தமிழ் சிறுகதை மரபுக்கு பாலசுப்ரமணியன் பொன்ராஜ் போல ஒரு ஸ்டைலிஸ்ட் இன்றும் தேவையாக மட்டும் அல்ல நிவாரணமாகவும் ஆறுதலாகவும் உள்ளார். இன்று பல தன்மைகளில், புலங்களில் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. ஆனால், செம்மையாக, இலக்கு பற்றிய பிரக்ஞையுடன் எழுதும் சிறுகதை ஆசிரியர்கள் அரிதாகிவிட்டனர். தமிழின் சிறந்த புனைகதையாளர்களில் ஒருவர் என்று சொல்லக்கூடியவரின் சிறுகதைகளை அவ்வப்போது படிக்கும்போது இப்படித் தோன்றுகிறது. உங்களுக்கு எப்போது உத்தேசமோ அப்போது நீங்கள் கதையை விட்டு வெளியேறலாம் என்ற உத்தேசத்தில் அவர் கதை எழுதுகிறார். அவருக்குத் தனது கதை பற்றி குறிப்பிட்ட திட்டம் எதுவும் இல்லை என்று உணர்ந்தேன். இங்கேதான் விமர்சன உணர்வு என்ற ஒன்றை திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு அனுபவத்தை, ஒரு நிகழ்ச்சியை, ஒரு கதாபாத்திரத்தை கவிதையில், கதையில், நாவலில் எந்த விமர்சனமும் இல்லாமல், புதுமைப்பித்தனிலிருந்து தொடங்கிய ஒரு செம்மையான இலக்கிய மரபு நமது படைப்பையும் பார்த்துக் கொண்டிருக்கிறதென்ற போதமில்லாமல் எல்லாவற்றையும் மகோன்னப்படுத்திவிடுவதைக் கலை என்று கருதும் காலத்துக்கு வந்திருக்கிறோம். அங்கே கலை பரட்டைத்தன்மையை அடைந்துவிடுகிறது.
இறந்த காலத்தையோ, வரலாற்றையோ, கருத்தையோ, காதலையோ, நவீனத்தையோ எதையும் மகத்துவப்படுத்தும் கதைகள் அல்ல பாலசுப்ரமணியன் பொன்ராஜூடையது.
கனகாம்பரம் அணியும் தமிழ் பெண்கள் பற்றி ஒரு வாக்கியத்தை ஒரு குறிப்பாக அருமையாக கடந்துவிடுகிறார் பாலசுப்ரமணியன் பொன்ராஜ். சில சிறுகதையாசிரியர்கள், சில கவிஞர்கள் கண்களில் கனகாம்பரம் தென்படக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். ஒரு முடிக்கவே இயலாத சிறுகதையாக கனகாம்பரம் ஆகிவிடும்.
கவிதை எழுதுபவனின் கூர்மையான அவதானங்களுடன், மிகச் சிக்கலானதையும், சங்கடமானதையும் துல்லியமாகச் சொல்லும் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் மொழியும் நோக்கமும் வாசக அனுபவமும் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை சிறுகதைத் தொகுப்பை ஒப்பிடும்போது கூடுதல் மிருதுத்தன்மையை அடைந்துள்ளது.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே லா. ச. ராமாமிர்தம், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ந. முத்துசாமி போல காதாலும் வாசிக்கக்கூடிய உரைநடையாளர்களை இழந்துவிட்டோம். எம். டி. முத்துக்குமாரசாமி போன்ற சிலர் விதிவிலக்குகள். அவரது புனைவையும் கட்டுரையையும் காதாலும் வாசிக்க இயலும். இங்கே இயங்கும் மிமிக்ரி கலைஞர்களையும், ஜிம்னாஸ்டிக் வித்தைக்காரர்களையும் நான் இங்கே கருதவில்லை.கவிதை, சிறுகதை, நாவல் என்று அவர்கள் ஏராளமாக ஆக்கிரமித்திருக்கின்றனர், இடத்தை.
000
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளில் தொடர்ந்து வரும் பூனை சீமுர்க் தொகுப்பில் உள்ள ‘பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும்’ கதையில் நெகிழும் உருவகமாக மாறியிருக்கிறது. துரதிர்ஷ்டம் பிடித்த கதைத் தொகுதியில் விவரங்களின் கச்சாத்தன்மையில் நவீன பொருட்களை கதைகளுக்குள் அடுக்குவதில் உள்ள மோஸ்தரில் உணர்ந்த ஒரு இறுக்கமான அனுபவம் சிமூர்க்கில் நெகிழ்ந்திருக்கிறது.
நிகழ்ச்சிகளின் மீது விழிப்பும், அதை தனது கலைக்குள் நிகழ்த்துபவனின் நிதானமும் இணைந்திருக்கும் கதைகள் இவை.
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளில் பூனையும் பெண்ணும் வசீகரமும் பேய்த்தன்மை கொண்டவர்களாகவும் தொடர்ந்து வருகிறார்கள். பெண்களின் உடைகள் வழியாக பாலசுப்ரமணியன் பொன்ராஜ் காலம் மாறுவதை அவதானிக்கிறார். மாறும் பாலியல் நடத்தைகளின் வழியாக நாகரிகங்களின் தடய எச்சங்களைப் பரிசீலிக்க முடியுமென்ற நம்பிக்கை கொண்டவன் நான்.
பாலசுப்ரமணியன் பொன்ராஜின் பூனைகளின் தன்மைகள் அவர் படைத்த பெண்களிடமும் நீட்சியடைபவை. ரகசியம், அரூபம், தர்க்கத்துக்கு எட்டாத அவர்களின் ஆழம், அதற்கும் அடியிலுள்ள தனிமை, ஆணுடன் பெண்ணும், பெண்ணுடன் ஆணும் சேர்ந்து முயங்கி முரண்பட்டு தனித்து வாழ நேர்ந்திருக்கும் விசித்திரம் இவற்றை பாலசுப்ரமணியன் தீராமல் வியாக்கியானம் செய்தபடியிருக்கிறார்.
டால்ஸ்டாயிலிருந்து மௌனி வரை பாடாய்படுத்திய பெண்கள் பாலசுப்ரமணியன் பொன்ராஜையும் காலத்திலும், காலத்துக்கு அப்பாற்பட்ட வகையிலும் தொடர்ந்து தொந்தரவூட்டுகின்றனர்.
‘விடுமுறை தினத்தில் ஒரு அனார்கிஸ்ட்’ சிறுகதையில் வரும் ஆய்வுப் பேராசிரியரின் மனைவி ஒரு பூனையைப் போலவே சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். அந்த உரையாடல் நடைபெறும் வீட்டில் அவள் அவ்வப்போதே தோன்றினாலும் அவள் சுரீரென வீடு முழுவதும் படர்ந்திருக்கிறாள்.
காலம், கலாசாரத்தின் மாற்றங்கள் சகலவற்றையும் உட்கொண்ட அதிநவீன களம்தான் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகள் என்றாலும், அந்த மாற்றத்தின் திருப்பங்களில் வலிகளையும் உடைவையும் வாழ்க்கை முழுக்க துரத்தும் வடுக்களையும் அதனால் விளைந்த அச்சங்களையும் சுமப்பவர்கள் இவரது கதாபாத்திரங்கள். அந்த வகையில் டால்ஸ்டாய் எத்தனை நவீனமானவரோ, வள்ளலார் எத்தனை நவீனமானவரோ பாலசுப்ரமணியன் பொன்ராஜையும் அத்தனை நவீனமானவர் என்றே சொல்வேன்.
நீத்தார் சிறுகதை முழுமையாக உரைநடையில் எழுதியிருந்தாலும் கவிதை என்று எனக்குச் சொல்ல இயலும். பெட்ரோ ப்ரோமோ நாவலைப் போன்ற ஒரு காவியத்தன்மையை விவரணைகளின் வழியாக இக்கதைகளில் சாதிக்க முயன்றிருக்கிறார் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.
000
பாலா ஒரு நாவலை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று இந்தச் சிறுகதைகளைப் பற்றி எழுதும்போது சங்கேதமாகத் தோன்றுகிறது.