Normal view

Received before yesterdayலக்ஷ்மி பாலகிருஷ்ணன்

நீளும் பிரார்த்தனைகள்

நூல்: இதோ நம் தாய்

ஆசிரியர்: வயலட்

பதிப்பகம்: சால்ட்

விலை:125/-

**********************

புத்தரின் சொற்களைத் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்து, தம்ம பிடகத்தை கட்டமைத்த ஆனந்தரின் கதையிலிருந்து நாவல் தொடங்குகிறது. பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றை துக்கத்தின் காரணிகளாகக் கண்டறிந்து, அவற்றிலிருந்து விடுபடுதலையே வீடு பேறென வகுத்த புத்தரின் உடற் பிணி குறித்து கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒருவராக அவர் அறிமுகம் ஆகிறார். நிகரற்ற நினைவாற்றல், அர்ப்பணிப்புணர்வு, கருணை என நற்குணங்களால் நிரம்பியிருந்தும் பரிநிர்வாண நிலையை அடைய முடியாது தவித்த ஆனந்தரின் தவிப்பு அன்பினால் விளைந்தது. அதே அன்புதான் ஆனந்தியையும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.

ஆனந்தி, யசோதா, கௌதமி என சித்தார்த்தரின் வாழ்வில் தொடர்புடைய பெயர்களே சமகாலத்தில் நிகழும் கதையிலும் புழங்குகின்றன. மரபான கதை சொல்லலாக இல்லாமல் ஆனந்தியின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் நூலில் கடைபரப்பப் படுகிறது. மாற்றுப் பாலினத்தவரின் வாழ்வில் ஏற்படும் மகிழ்வான தருணங்கள், நொய்மையான தருணங்கள் என கலவையாகக் காட்சிகள் விரிகின்றன.

சித்தார்த்தரின் வாழ்வில் முக்கியப் பாத்திரம் வகித்த அவரது சிற்றன்னை கௌதமியின் பெயரைக் கொண்டவர்தான் ஆனந்தியின் தாய். இளம்பருவத்தில் கல்வியும், தோழமையும் மறுக்கப்பட்டதால் காயப்பட்ட கௌதமி, தனக்குப் பெண் குழந்தையே வேண்டாம் என்று நினைக்கிறார். அவர் விருப்பிற்கு ஏற்ப பிறந்த மகனே பின்னால் தன்னை ஒரு பெண்ணாக முன்வைக்கும்போது, அவ்வுறவு விருப்பும் வெறுப்பும் கலந்த கலவையாகிறது. பொதுவாகவே அம்மா மகன் உறவைப் போன்றதல்ல அம்மா மகள் உறவு. அது பெரும்பாலும் சேர்ந்திருக்கையில் வெறுப்பும், இழந்தபின் அன்புமாக விரிவடையும் வினோதமான ரசாயனம். அதிலும் மாற்றுப் பாலின அடையாளத்தை முன் வைக்கும் மகளோடு கௌதமி கொண்டிருக்கக்கூடிய உறவு மிகவும் நுட்பமான சிடுக்குகள் நிறைந்தது.

தாயுடன் மட்டுமல்லாது, துணையாக வரும் யசோதா, தோழர்களான யாஸ்மின், கவின்,சிவா என அனைவருடனுமே ஆனந்தி கொள்ளும் உறவின் சிடுக்குகளே கதையின் பேசுபொருள் எனலாம். எல்லா சிடுக்குகளும் சேர்ந்து ஆனந்தியின் மீது சுமத்தும் தனிமை மனச்சோர்வாக மாறுகிறது. மனச்சோர்வென்பது உற்சாகக் குறைவு, எதிலும் நாட்டமின்மை, குற்றவுணர்வைத் தூண்டுதல் என பல்முனைத் தாக்குதலை நம் மீது நடத்தக் கூடியது. அதே கோணங்களிலேயே கதை விரிகிறது.

நாவலில் எல்லா சம்பவங்களும் விரிவாக உரையாடலுடன் முன் வைக்கப்படுவதற்கு மாறாக, தீற்றல்களாக அங்கங்கு சிந்திச் செல்லும் முறை மிக லாகவமாகக் கைவந்திருக்கிறது வயலட்டிற்கு. கதையல்லாத கதை சொல்லல், நிகழ்காலத்திற்கு பின்னணியாக வரும் கடந்த கால விவரணைகள் என கரடுமுரடான பாதையில் மிக அனாயசமாக காற்றில் மிதப்பது போலச் செல்கிறது மொழிநடை.  வயலட் நேரடிப் புனைவுகளையும் தொடர்ந்து எழுத வேண்டும்.

வில்லியம் ரைஸ் டேவிஸ், ஹெர்மன் ஓல்டன்பெர்க் , எரியும் நூலகத்தைக் கனவில் கண்டலறும் புத்த பிக்கு,  கே.எஸ் என தொடரும் வரிசையில் ஆனந்தியும் தம்மபதத்தின் பிரதிக்குள் தொலைந்து போகிறாள். தம்மபதத்தின் தத்துவச் சுழல்களுக்குள் அமிழும் ஆனந்தியின் முன் கலங்கரை விளக்காகச் சுடர்வது சிறிய குருசடியில் கடல் பச்சை நிறச் சேலையில் ஒளிரும் மேரியின் முகம்தான். அந்த முகமே கௌதமியைப் புரிந்து கொள்ள ஆனந்திக்கு உதவுகிறது.

மனம் உருகிப் பிரார்த்தனை செய்ய முயற்சிக்கும் ஆனந்தியிடம் அவள் மனம் உன்னால் அது முடியாது என்று கெக்கலி கொட்டுவதை என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. என் தோழியர் சிலருக்கும் தெய்வ நம்பிக்கையென்பது மிக பலவீனமானதொரு சரடாகத் தொடர்வதால் பல சமயங்களில் கோவிலில் சுற்றியுள்ளோரின் பக்தி பாவத்தைக் கண்டு வியந்து, நாணியதை அவர்கள் விவரித்தது படிக்கையில் நினைவில் எழுந்தது.

வழக்கமான கதை, அதற்கொரு முடிவு என்றில்லாது ஆனந்தியின் நாட்குறிப்பை எட்டிப் பார்ப்பது போன்ற வாசிப்பனுபவத்தை தந்த நாவல் இது.

மனச் சோர்விலிருந்து மீண்டெழ உளவியலில் முன்வைக்கப்படும் வழிமுறைகள் செயல்படுவது என்பதுதான். சின்னச் சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு பணியில் ஈடுபடுவது, முன்பு மனதிற்கு இன்பமளித்துக் கொண்டிருந்தவற்றை மீண்டும் கையிலெடுப்பது ஆகியவையே சிறிய அளவிலான மனச்சோர்விலிருந்து மீளும் வழிமுறைகள். எனவே ஆனந்தி யசோதாவிற்காக முன்வைத்த வேண்டுதலையே நானும் அவளுக்காக முன்வைக்கிறேன்.

அவள் மனதில் சொற்கள் தோன்றட்டும்.அவள் பாதை வெளிச்சம் அடையட்டும்.

எஞ்சுவதே கலை – டி. எம். கிருஷ்ணா

புழல் சிறைவாசிகளுக்கு கலை வடிவங்களைக் கொண்டு செல்லும் திட்டம் ஒன்றினை, பாடகர் டி.எம். கிருஷ்ணாவும், சில தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து கடந்த ஆண்டில் நடத்தியுள்ளனர். எட்டு மாத காலம் நடந்த இவர்களின் ’சிறைகளில் கலை’ எனும் திட்டத்தின் விளைவாக அங்கு சிலபல கலைஞர்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த முயற்சிகளைப் பற்றிய பகிர்வுகள் இம்மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிக் கல்வி இயக்குனரக வளாகத்தில் உள்ள மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி அரங்கில் நடைபெற உள்ளது. அதன் முதல் நிகழ்வு இன்று நடைபெற்றது. சிறையினுள் நடைபெற்ற பயிற்சிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சியோடு இத்திட்டம் குறித்த ஆவணப்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. இத்திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய பாடகர் டி.எம்.கிருஷ்ணாவும், பிராஜக்ட் 39 ஏ அமைப்பைச் சேர்ந்த மைத்ரேயி மிஸ்ராவும் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினர். அதன் இறுதியில் கேள்விபதில் பகுதியும் இருந்தது.

சிறைவாசிகளை குணப்படுத்தும் அல்லது மேம்படுத்தும் நோக்கம் எதுவும் தங்களுக்கு இல்லை என்பதை ஆரம்பத்திலேயே கிருஷ்ணா தெளிவுபடுத்திவிட்டார். சிறைவாசிகள் என்றோ குற்றவாளிகள் என்றோ அங்கிருப்பவர்களை வரையறுப்பது தவறு என்ற கிருஷ்ணா, இல்லத்துவாசிகள் என்றே அவர்கள் தங்களவரைக் குறிப்பிடுவதாகவும், அதையொட்டி தாங்களும் இன்மேட்ஸ்(In mate) எனும் வார்த்தையையே அவர்களோடு தொடர்புபடுத்துவதாகவும் தெரிவித்தார். வாழ்வின் ஒரு கட்டத்தில், அவர்களின் செயல்கள் சட்டத்திற்கு புறம்பானவையாக அமைந்திருக்கலாம். அதற்காக அவர்கள் சட்டபூர்வமாக தண்டிக்கப்படுவதும் இயல்பே. அதைத்தாண்டி அவர்கள் மனிதர்களே அல்ல என்று நாம் முடிவு செய்துவிட முடியாது. அவர்களும் மனிதர்களே என்று உணர்ந்தால், கலையை அணுக அவர்களுக்கும் உரிமை உண்டுதானே என்ற எண்ணத்தில் எழுந்தது இத்திட்டம் என்று குறிப்பிட்டனர். நாகஸ்வரம், தவில், பறையாட்டம், கீபோர்ட், வாய்ப்பாட்டு, நாடகம், ஓவியம், சுடுமண் உருவங்கள் வனைதல் என பலவகைக் கலைகளையும் கற்பித்த ஆசிரியர்களில் சிலரும் அவர்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். கற்பித்த ஆசிரியர்களில் பெண்களும் உண்டு என்பதும், ஆரம்பத்தில் ஆண்களின் சிறைப்பகுதிக்குள் செல்ல இருந்த சிறு மனத்தடைகள் நாளடைவில் எப்படி கரைந்தன என்பதை அவர்களே சொன்னதும் நெகிழ்வாக இருந்தது. நாகஸ்வரம் பயிற்றுவித்தவரோ தனது அனுபவத்தில் இத்தனை விரைவாகக் கற்றுக் கொண்டவர்களை பார்த்ததில்லை என்றார். பெரும்பாலானவர்களுக்கு அக்கருவியில் ஒலியை எழுப்பவே சில மாதங்கள் எடுக்கும் நிலையில் இவர்கள் ஆறு மாத கால பயிற்சியில் ஓரளவு பாடல்களை வாசிக்கும் திறன் பெற்றிருப்பது குறித்த தனது வியப்பையும், மகிழ்வையும் பகிர்ந்து கொண்டார்.

பிறகு கிருஷ்ணா பக்க வாத்தியங்களின் குறுக்கீடுகளற்ற ஒரு இசை விருந்தினைப் படைத்தார். நாம் அவன் இவன் உவன் எனத்தொடங்கும் நம்மாழ்வார் பாசுரம், பெருமாள் முருகன் எழுதிய அன்பு பற்றிய குறுங்கவிதை ஒன்று, இறுதியில் அசோகரின் தம்மம் பற்றிய கூற்றுகள் சில என மூன்று பாடல்களை எடுத்துக் கொண்ட கிருஷ்ணா, அவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கிவிட்டு, மரபிசைக்கே உரிய மிக விரிவான வடிவில் பாடினார். ஒவ்வொரு பாடலுக்குப் பிறகும் அங்கிருந்த அனைவரையும் அது குறித்து உரையாடவும் அழைத்தார். மிகுந்த நட்பார்ந்த தொனியில், மற்றவர்களின் கருத்துக்களை ஒட்டி தனது பார்வையையும் விவரித்தபடியே அவர் பாடியது மிக மிகப் புதுமையான ஒரு வடிவமாக இருந்தது. இப்படியானதொரு இசை நிகழ்விற்கு முன்மாதிரிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பெருந்தொற்றுக்கால தனிமைச் சூழலில் இவ்வகை வடிவத்தை தான் கண்டடைந்ததாகச் சொன்னார் கிருஷ்ணா.
நிகழ்வு முடிந்ததும் அவரிடம் எழுதாப் பயணம் நூலை அளித்தேன். நிகழ்வு தொடங்கும் முன்னரே கனியை அவருக்கு அறிமுகம் செய்வித்திருந்தேன். கிளம்பும் முன் அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிறைவாசிகளுக்கு நூல்கள் சேகரித்துத் தருவதையும் இக்குழுவினர் செய்கிறார்கள். எனவே விரும்புவோர் மீதமுள்ள 3 சனிக்கிழமைகளில் மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டிக்கு சென்று புத்தகங்களை கொடுக்கலாம்.

பேச்சின் நடுவில் கலை என்பது என்ன என்று விவரிக்க முற்பட்ட கிருஷ்ணா “மனிதர்கள் தான் உணரும் ஒன்றை பிரதி செய்ய முயல்கின்றனர். ஆனால் ஒருபோதும் அசலை முழுமையாக பிரதி செய்ய முடியாது என்பது நம் அனைவருக்குமே தெரியும். நாம் உணர்ந்த ஒன்றின் சாரத்தை நாம் புரிந்து கொண்ட வகையில் வெளிப்படுத்துவதே கலை” என்றார். அந்த வரையரையின் ஆழத்தை வியந்தபடியே வெளியே வந்தோம்.

புத்தகக் கண்காட்சியில் இன்று 06/01/25

இன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல்வனம் அரங்கில் வானம் பதிப்பக உரிமையாளர் மணிகண்டனோடு அளவளாவினொம். அவருடன் நடந்து செல்கையில் திருக்கார்த்தியல் ராம் தங்கம் தம்பியைச் சந்தித்தோம். ராமும் மணியை கலாய்ப்பதில் எங்களோடு சேர்ந்து கொள்ளவே மணிகண்டன் நைசாக கழன்று கொண்டார். பிறகு நாங்கள் மட்டும் ஊர்வலத்தைத் தொடர்ந்தோம்.

விஷ்ணுபுரம் அரங்கில் ஜெயமோகனை சந்தித்தோம். அவரது சிறுகதைத் தொகுப்பான படையல் நூலில் அவரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

அரங்கிற்கு வெளியே ஒரு காபி குடித்தோம். கிளம்பும் நேரத்தில் என்.ஸ்ரீராமைச் சந்தித்தோம்.

இன்று வாங்கிய நூல்களின் பட்டியல் சிறியதுதான். இன்னமும் நாட்கள் இருக்கின்றன, பார்த்துக் கொள்ளலாம்.

தேசாந்திரியோடு ஒரு புகைப்படம்

புத்தக வெளியீட்டு விழாவில் எஸ்.ரா தம்பதியினரோடு ஒரு புகைப்படம் எடுக்க நினைத்திருந்த போதும், வழக்கம் போல் மறந்துவிட்டோம். எனவே இன்று புத்தகக் கண்காட்சியில் தோழர் எஸ். ராவை தேசாந்திரி அரங்கில் கண்டு, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

கவலைக் கடலைக் கடியும் வடிவேல்

வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘நான் கண்ட நால்வர்’ எனும் நூலில் மகா கவியைப் பற்றி ‘கவிக்குலக் கோன்’ எனும் தலைப்பில் தான் கண்டும், கேட்டும் அறிந்த நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். அதிலிருந்து ஒரு நிகழ்ச்சி…

*********
பாரதியார், இனிமையான சாரீரம் படைத்தவரல்லர்; ஆனால் உணர்ச்சியோடு பாடுவார்; கேட்டுக் கொண்டிருக்கிறவர்களையும் உணர்ச்சி வசப்படுத்திவிடுவார். காரணம், அவர் உணர்ச்சிமயமாய் இருந்தார்.

பாரதியார் ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மோபரீஸ் ரோடிலுள்ள குகானந்த நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கலியாண சுந்தர முதலியாரும் நானும் வேறு சில நண்பர்களும் அங்கிருந்தோம். மாலை நேரம். நிலையத்து மண்டபத்தில் குமரக் கடவுளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் பாரதியாரின் உள்ளத்தை பெரிதும் கவர்ந்துவிட்டது. “முருகா, முருகா, முருகா” என்று தொடங்கும் பாடலை உணர்ச்சி ததும்பப் பாடினார். மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்தப் படத்தின் மீது லேசாகப் படிந்து, முருகனுடைய திருவுருவத்திற்குத் தனிச் சோபை கொடுத்தது. “வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்” என்ற சரணத்தை அவர் பாடி, அதையே திரும்பத் திரும்பச் சொன்னபோது, அந்தக் குமர வடிவம் அவரை நோக்கி மெதுமெதுவாக வருவது போலவே இருந்தது. நாங்கள் அனைவரும் பரவசர்களானோம். அந்தக் காட்சி என் நெஞ்சத்தை விட்டு அகலவே அகலாது. முதலியார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி கூறி ஆனந்தப்பட்டிருக்கிறார்.
*******
நாளை திருக்கார்த்திகைத் திருநாளில், குமரனின் புகழ்பாடும் பாடலைக் கேட்டு மகிழ, கனியின் குரலில் அப்பாடலை இன்றே கனி மியூசிக் வோர்ல்ட் சேனலில் ஏற்றியுள்ளோம்.

செல்லிடத்துக் காத்தல்

இன்று(டிச 10) மனித உரிமைகள் தினம். ஒரு மனிதன் மனிதனாகப் பிறந்ததனாலேயே அடையும் அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத உரிமைகளே மனித உரிமைகள் எனலாம்.

· உயிர் வாழும் உரிமை

· சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படுவதற்கான உரிமை

· நீதி கோரும் உரிமை

· மதம் சார்ந்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் உரிமை

· நடமாட்டத்திற்கான உரிமை

· சமமான வேலைக்கு சமமான ஊதியம் கோருதல்

· பாலியல் சமத்துவம்

· குழந்தைகள் நலம்

ஆகிய பல்வேறு அடிப்படை உரிமைகளின் தொகுப்பே மனித உரிமைகள். சட்ட அமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றவாளியென்று தீர்மானிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் என மனிதர்கள் எந்நிலையில் இருந்தாலும் மேற்சொன்ன உரிமைகள் அவர்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகளைப் பேணுவதில் இருக்கும் அடிப்படையான சிக்கலே இதில் பெறுனர் உதிரி மனிதனாகவோ அல்லது பலவீனமான கூட்டமாகவோ இருப்பதும், இவற்றை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் அரசு/சமூகம்/நிறுவனங்கள் போன்ற பலமான அமைப்புகள் இருப்பதும்தான். குறிப்பாக காவல் துறை, ராணுவம் போன்ற வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளுக்கும் எளிய மனிதர்களுக்குமான ஊடாட்டங்கள் எல்லாமே மனித உரிமை மீறலுக்கான களமாக அமைந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது.

அதே நேரம் தனிமனிதர்களும் கூட்டமாகச் சேர்ந்து தாக்கத் துவங்கினாலும் அங்கும் மாட்டிக் கொள்ளும் பலவீனரின் உயிர், உடைமை, கண்ணியம் ஆகியவை காணாமல் போய் விடக் கூடும். திருடுகையில் மாட்டியவர்கள், திருடர்களாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகத்துக்கு உட்பட்டவர்கள் என எத்தனையோ உயிர்கள் இது போன்ற கூட்டு வீரத்தினால் பலியாகியுள்ளதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? தன் கோபம் செல்லுபடியாகக் கூடியவர்களிடம், எதிர்த்துப் பேச முடியாத நிலையில் இருப்பவனிடம் வீரத்தைக் காட்டுவது இழுக்கு என்கிறது நம் தமிழ்மறை. ’செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான்’ எனும் குறளை மனிதர்கள் அனைவரும் பின்பற்றினாலே போதும், மனித உரிமை மீறல்கள் அற்ற சமுதாயம் உருவாகிவிடும்.

2024ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தினத்திற்குரிய கருப்பொருளாக “நமது உரிமைகள், நமது எதிர்காலம் – இக்கணமே” என்பதனை ஐநா அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தினத்திற்குரிய கருப்பொருளாக “நமது உரிமைகள், நமது எதிர்காலம் – இக்கணமே” என்பதனை ஐநா அறிவித்துள்ளது.

இசையெனும் இறை

கனியின் திரை நேரம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது எனினும் அந்த குறுகிய நேரத்திற்குள் அவன் எப்படியாவது சில அபூர்வ முத்துக்களை கண்டடைந்துவிடுவது வழக்கம். அப்படித்தான் சென்ற வாரத்தில் ஒரு நாள் ‘ஆரோக்கிய தாயே ஆதாரம் நீயே’ எனும் பாடலை கண்டெடுத்தான்.

பெசண்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் பேராயர் சின்னப்பா அவர்கள் பாடிய பாடல் அது. அவன் உபயத்தில் அப்பாடலைக் கேட்ட எனக்கும் மனம் நெகிழ்ந்தது.

ஒரு பாடல் பிடித்துவிட்டால் திகட்டத் திகட்ட அதை மீண்டும் மீண்டும் கேட்டு, மனதில் பதித்துக் கொள்வது கனியின் வழக்கம். இந்தப் பாடலுக்கும் அதையே செய்யத் தொடங்கினான்.

இவ்வளவு தூரம் அவனை ஈர்த்த அந்தப் பாடலைப் பாடியவரிடமே அவனை அழைத்துப் போனால் என்ன என்று தோன்றியது. நெருக்கமான சில தோழர்களிடம் வழி கேட்டோம். அவர்களின் உதவியோடு,

பேராயரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டோம்.

இன்று மதியம் வரச் சொன்னார். நானும் கனியும் மட்டும்தான் சென்றிருந்தோம். அவரது உதவியாளர்கள் அன்புடன் வரவேற்றனர். சிறிது நேரத்தில் வயதினால் உடல் சற்று தளர்ந்தாலும், குன்றாத மன ஊக்கத்தோடு ஐயா அவர்கள் வந்தார்.

பேச ஆரம்பித்ததுதான் நான். பின்னர் இரு இசை ஆர்வலர்களும் அவர்களின் மொழியில் உரையாடியபடியே இருக்க, நான் ஆங்காங்கு சிற்சில மொழிபெயர்ப்பு வேலைகள் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.

சிறியதொரு பிரார்த்தனையுடன் மதிய உணவிற்கு அமர்ந்தோம். அட்டகாசமான விருந்து.

வயிற்றுக்கு ஈயும் நேரத்திலும் ஐயாவும், கனியும் மாறி மாறி பாடிக் கொண்டும், சிலாகித்துக் கொண்டுமிருந்தார்கள்.

சாப்பிட்டு முடித்து மீண்டும் வரவேற்பரைக்கு வந்தபோது கனியிடம் கானடா ராகம் தெரியுமாப்பா என்றார் ஐயா.

இவன் அதற்கான ஆரோகண அவரோகணத்தைப் பாடியதும், அலைபாயுதே கண்ணா பாடுவியா, பாடேன் கேட்போம் என்றார். இவனுக்கு பாடல் வரிகளில் கொஞ்சம் ஐயமிருப்பினும், பாட ஆரம்பித்துவிட, அவரும் பாடலில் ஆங்காங்கு இணைந்து கொண்டார்.

கண்ணனும், ஏசுவுமாகிய மேய்ப்பர்கள் இருவருக்கும் பொதுவான பாலமாக கானடா ராகம் அங்கே பொங்கிப் பிரவாகித்தது. கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே நெகிழ்ந்துவிட்டிருந்தோம்.

கனியின் தலை தொட்டு ஆசிர்வதித்து, வேளாங்கண்ணி மாதாவின் அழகிய திருவுருவச் சிலை ஒன்றினையும் தந்ததோடு மீண்டும் வாருங்கள் என்று அன்புடன் சொல்லி வழியனுப்பினார் பேராயர்.

பொம்மலாட்டம் – சிறார் கதை

நேற்று(நவம்பர் 08) தினமலர் பட்டம் மாணவர் இதழில் வெளியான என் சிறார் கதை.

பொம்மலாட்டம்

லதா பரபரப்பாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது தனது ஜியோமெட்ரி உபகரணங்கள் வைத்திருக்கும் சிறு பெட்டியைத் திறந்து சரி பார்த்துக் கொண்டாள். அவள் தன் பள்ளிப் பையைத் திறந்து திறந்து மூடுவதைக் கண்ட அவள் அம்மா செல்வி,  சற்று கோபமானார்.

“தினமும் முந்தின நாள் நைட்டே ஸ்கூல் பேக்ல எல்லாம் பாத்து எடுத்து வச்சுருன்னு சொன்னா கேக்கறயா? காலைலதான் எடுத்து வைப்பியா? ஸ்கூலுக்கு லேட் ஆகுது, வேன் வந்துரும் சீக்கிரமா கிளம்பு” என்றார்.

பதற்றமான லதா “இதோ நான் கிளம்பிட்டேன்மா. நீங்க ரிப்பன்ல கங்கு போட்டு விட்டுட்டா போதும்.” என்றபடியே அம்மாவிடம் சென்றாள்.

அப்போதும் அவள் பார்வை அவ்வப்போது பையைத் தொட்டுத் தொட்டு மீண்டது. செல்வி அவளது ரிப்பனை அழகாய் முடிந்துவிட்டதும், பள்ளிப் பையை முதுகில் ஏற்றிக் கொண்டு, உணவுக் கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றாள். அம்மாவுக்கு கையசைத்துவிட்டு, பள்ளி வேனில் சென்று ஏறிக் கொண்டாள்.

பள்ளிக்குச் சென்றதும் முதல் வேலையாக தன் ஜியோமெட்ரி பாக்சைத் திறந்து அதிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கீழே வைத்தாள். அதன் அடியில் பெட்டியின் அளவுக்கே ஒரு வழவழப்பான காகிதம் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காகிதத்தைத் தூக்கியதும், அடியில் முழுதாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்து வேறு எங்கு வைக்கலாம் என சிறிது நேரம் யோசித்தாள்.

அதற்குள்ளாக காலைப் பிரார்த்தனை மணி அடிக்கவும், மீண்டும் பணத்தை அங்கேயே வைத்து, அதே போல பெட்டியை அடுக்கி மூடினாள். அதை அப்படியே பைக்குள் தள்ளி, ஜிப்பை மூடி விட்டு, மற்ற மாணவியருடன் இணைந்து மைதானத்திற்குச் சென்றாள்.

தன் வகுப்புக்கான வரிசையில் சென்று நின்ற லதா, சரியாக தனக்கு முன்னால் ரெஜினா நிற்பதைக் கண்டாள். எல்லாம் சென்ற வார வெள்ளிக்கிழமை அன்று ரெஜினாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்றதில் ஆரம்பித்தது. கேக் வெட்டிய பிறகு, லதாவையும், கதீராவையும் மட்டும் தன் அறைக்கு அழைத்துப் போனாள்.

“டொட்டடொய்ங்…” என்று ஒலியெழுப்பியபடி அவள் தனது அலமாரியில் இருந்து எடுத்துக் காட்டியது ஒரு அழகிய டெடி பியர் கரடி பொம்மை.

“எங்க மாமா எனக்காக வாங்கித் தந்த பிறந்த நாள் பரிசு, எப்படி இருக்கு?”

கண்கள் விரிய அந்த பொம்மையைப் பார்த்து இருவரும் “சூப்பரா இருக்குடி. எஞ்சாய்” என்று சொல்லி பூரித்தார்கள். அந்த நேரத்தில் கலப்படமில்லா மகிழ்ச்சியுடம் சிரித்து விளையாடினாலும் தனக்கும் அதே போல ஒரு பொம்மை வேண்டும் என்ற எண்ணத்தை லதாவால் தவிர்க்கவே முடியவில்லை. மெல்லமாக அதைத் தொட்டுப் பார்த்தாள். பஞ்சுப் பொதி போல மிருதுவாக இருந்தது. அதன் விலை ஆயிரம் ரூபாயைத் தொடும் என்றாள் ரெஜினா.

நிச்சயமாக அம்மாவோ அப்பாவோ இவ்வளவு விலையுள்ள பொம்மையை விளையாட வாங்கிக் கொடுக்க மாட்டார்கள் என்று லதாவுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் கேட்டு, திட்டு வாங்க வேண்டாம் என்று ஆசையை அடக்கிக் கொண்டு வளைய வந்தாள்.

****

நேற்று மாலை சலவை இயந்திரத்தில் துணிகளை பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். குறிப்பாக அப்பாவின் சட்டை, பேண்ட் போன்றவற்றின் பாக்கெட்டுகளை நன்றாகப் பார்த்துவிட வேண்டும் என்று அம்மா சொல்லியிருந்தார். ரூபாய் நோட்டுக்களோ, முக்கியமான குறிப்பெழுதிய தாள்களோ ஏதேனும் தென்பட்டால் அம்மாவிடம் தனியாக எடுத்துக் கொடுக்க வேண்டும்.

அப்படித்தான் நேற்றும் அந்த கருநீல நிற முழுக்கைச் சட்டையின் பையில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் சுருளாக இருப்பதைப் பார்த்தாள். எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு மீதித் துணிகளைப் போட்டு, இயந்திரத்தை ஓட விட்டாள். அந்தப் பணத்தை அம்மாவிடம் கொடுத்துவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தாள்.

அந்த நேரம் பார்த்து அம்மா கடைக்குச் சென்றிருந்ததார். தனியே இருந்த லதாவின் மனத்தின் ஒரு மூலையில் ஒரு வெளிச்சம் தோன்றியது. இந்தப் பணத்தை நாமே எடுத்துக் கொண்டு, ரெஜினாவுடையதைப் போல அழகான டெடி பேர் பொம்மை ஒன்று வாங்கிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றி, நொடிக்கு நொடி வளர்ந்தது. அப்படித்தான் வீட்டுப்பாடம் செய்வதற்காக எடுத்துப் பரத்தியிருந்த புத்தகங்களுக்கு நடுவில் இருந்த ஜியோமெட்ரி பெட்டியின் அடியில் அந்த ரூபாய் நோட்டுக்கள் தஞ்சமடைந்தன.

***********

மதிய இடைவேளையின் போது அம்மா கட்டித் தந்திருந்த உணவை எடுத்து உண்ணும்போது மனம் உறுத்தியது. அம்மா, தினமும் அதிகாலையில் எழுந்து, ஒவ்வொரு வேளைக்குமாகப் பார்த்துப் பார்த்து சமைத்துத் தருகிறார். அப்பாவும் சமையலுக்கான உதவிகளைச் செய்வார். பிறகு அவருக்கும் தனக்குமான டப்பாக்களில் உணவுகளை அடைத்து வைப்பது என காலையில் பரபரப்பாக இருப்பார். லதாவுக்கான வேலை என்பது, காலையில் எழுந்து படிப்பதும், குளியல், சாப்பாடு என தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்வதும் மட்டும்தான். மாலையில்தான் அவள் கொஞ்சம் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பாள்.

தனக்காகவே என அம்மாவும் அப்பாவும் செய்யும் வேலைகளின் பட்டியல் ஒவ்வொன்றாய்த் தோன்றி மறைந்தது. அப்பா அம்மாவிடம் கேட்டால், இப்போது இல்லாவிட்டாலும் காசு சேர்ந்த பிறகாவது வாங்கித் தருவார்கள். அதை விடுத்து அவர்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்து வந்தது தவறு என்று எண்ணினாள். அதை அப்பா எதற்காக வைத்திருந்தாரோ என்ற குற்ற உணர்வும் அவள் மனதில் எழுந்தது.

தான் செய்த செயல், அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. மதிய உணவை வேண்டா வெறுப்பாக விழுங்கி வைத்தாள்.

இந்தப் பணத்தைக் கொண்டு ஒரு பொம்மையை வாங்கினாலும், அதனை பகிரங்கமாக வீட்டில் வைத்து விளையாட முடியாது. கதீராவையோ, மற்றவர்களையோ அழைத்துப் போய் பெருமையாகக் காட்ட முடியாது. அப்படியென்றால் அந்த பொம்மையின் பொருள்தான் என்ன? தான் செய்த ஒரு தவறின் சாட்சியம் என்பது தவிர அப்பொம்மை தனக்கு எந்த விதத்திலும் பயன் தர முடியாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டாள் லதா.

மாலை பள்ளி வேனில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் லதா. முதல் வேலையாக அம்மாவிடம் சென்று பணம் எடுத்ததைச் சொல்லிவிட வேண்டும். என்ன இருந்தாலும் தான் அம்மா, அப்பாவின் செல்லம் இல்லையா? தங்கள் செல்லங்கள் தெரியாமல் செய்த தவறுகளை பொறுத்துக் கொள்வார்கள்தானே அம்மா, அப்பாக்கள்? அவள் மனம் அமைதி அடைந்தது.

+++++++++++

குற்றவுணர்வில்லாக் கொலைகள்

தோழி ஒருத்தியிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும்போது தன் ஆன்மீக குரு சொன்னதாக ஒரு விஷயத்தை மிகுந்த சிலாகிப்புடன் சொன்னாள் – ”ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி அரிசிய அரசமரத்தடில கொண்டு போய் போடச் சொல்லிருக்கார். ஒரு நூறு எறும்பாவது அதை சாப்பிடும் இல்லயா? அப்ப அத்தனை ஜீவனுக்கு அன்னமிட்ட புண்ணியம் நமக்கு கிடைக்கும்”னு அவர் சொல்றார் என்றாள்.

ஆமாம் தானே என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அதே எறும்புகள் வீட்டு சமையலறைக்குள் வந்துவிட்டால் ஒரு கைப்பிடி எறும்பு மருந்தள்ளித் தூவுகிறாயே, அப்போதும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்ற பாவம் வரும்தானே என்றொரு கேள்வி உள்ளுக்குள் எழுந்தது. வெளிப்படையாகச் சொல்லி விவாதிக்குமளவு நெருங்கிய நட்பல்ல என்பதால் மையமாய்ச் சிரித்து வைத்தேன்.

**

தெருவில் ஒரு முதிய தம்பதியினர் தனி வீட்டில் வசிக்கின்றனர். வீட்டைச் சுற்றிலும் மரங்களும் செடிகளும் அதிகம் என்பதால் குளுமையான வீடு. நிழலதிகம் என்பதால் கொசுத் தொல்லையும் அதிகம். மாலையானால் அந்த அங்கிள் கொசு பேட்டை டென்னிஸ் வீரனைப் போல் உற்சாகமாக சுழற்றிக் கொண்டிருப்பார். சிறு பிள்ளைகள் கேப் வெடிப்பதுபோல சீரான டப் டப் ஒலி கேட்பது எங்களுக்கு தினசரி பழக்கம். இத்தனைக்கும் அவர்களிருவரும் மிகுந்த கனிவான மனிதர்கள்தான். ஆனால் என்றேனும் தினமும் இத்தனை உயிர்களைக் கொல்கிறோமே என்று அவர்களுக்குத் தோன்றியிருக்குமா என்ன?

சிற்றுயிர்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது நமக்கு ஒரு பொருட்டாகவே தோன்றுவதில்லை. உயிரின் அளவும், அவை நம்மோடு கொள்ளும் உறவின் ஆழமுமே நம் குற்றவுணர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்று தோன்றலாம். ஆனாலும் அதுவும் முழு உண்மையில்லை.

ஆதிகாலம் முதல் இன்று வரை குரலெழுப்ப வாய்ப்பில்லாத சக மனிதர்களையும் இதே போல்தான் கொத்துக் கொத்தாக எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி கொன்றழித்து வருகிறோம். பாகுபலி படத்தில் சிலை சரியும்போது நசுங்கும் மனிதர்களைக் கண்டு மகிழ்ந்து சிரிக்கும் ‘பிங்கல தேவனை’ப் போல் இல்லாவிட்டாலும் சற்று குற்றவுணர்வோடேனும் கூட்டக் கொலை செய்யாத ஆட்சியாளர்கள் இங்கு யாருமில்லை.

அதிலும் கிளிக்குள் இருக்கும் மந்திரவாதியின் உயிர் போல சாம்ராஜ்யங்களின் கௌரவமெல்லாம் அரச குலப் பெண்களின் யோனியில்தான் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதால், போர்க்களங்களில் யார் தோற்றாலும் முதலில் வெந்து தணிய வேண்டியது அந்தப்புரங்கள்தான்.

ஜோஹர் என்ற கூட்டுத் தீக்குளிப்பை, கௌரவத் தற்கொலை என்றோ, கௌரவக் கொலை என்றோ என்னென்ன பெயரிட்டு அழைத்தாலும் அது கொலை மட்டுமே.

செய்தவனுக்கு குற்றவுணர்வு வராத கொலை என்பதோடு சாகிறவர்களுக்கும் ஏதோவொரு வகையில் மன நிறைவு அடையலாம் என எண்ணத்தைத் தரும் வினோதமான விபரீதம் அது.

அப்படி நூற்றுக் கணக்கான பெண்களின் கொடூர மரணம் பற்றிய கதைகளில் ஒன்றினை எழுதியுள்ளேன். இந்து தமிழ் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள அக்கதையை வாய்ப்புள்ளோர் படித்து, கருத்துரைக்க வேண்டுகிறேன்.

❌