Normal view

Received before yesterdayமண்குதிரை

செல்வி கவிதைகள்: நிலத்தின் நினைவுகள் மீது பீரங்கி வண்டிகள்

மரபான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, புதுக்கவிதைச் செயல்பாடே ஒரு இயக்கமாகத் தமிழில் முன்னெடுக்கப்பட்டது. தனிமனித இருப்பு, சூழலின் அரசியல் என எந்த வகைப் பொருளையும் மறைமுகமாகச் சித்தரிப்பது ஒரு பாணியாகத் தமிழகத்தில் வலுப்பெற்றது. ஆனால், இலங்கையில் இதற்கு எதிராக வெளிப்படையாகச் சித்தரிப்பதே பெரும்போக்காக இருந்தது.

தமிழகத்திலும் அம்மாதிரியான கவிதைகள் எழுதப்பட்டன; அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மார்க்சிய இயக்கங்களின் பாதிப்பு, மொழிப் போராட்டம் போன்ற உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால், இவை இலங்கையில் நடந்த இன விடுதலைப் போராட்டத்தைப் போல் காத்திரமானவையல்ல.

இலங்கையின் இன வெறுப்பு அவர்களின் இயல்பான வாழ்க்கையையே அச்சுறுத்தும் வகையில் சிதைத்துவிட்டது. இந்த அளவு தீவிரம் மிக்க சூழலைப் பிரதிபலிக்கும் மொழி தன்னளவில் வெளிப்படையாக ரெளத்திரமாகத்தான் வெளிப்படும். இந்தப் பின்னணியில்தான் இலங்கைக் கவிதைகளை அணுக வேண்டும். அப்படியான கவிதைகள் எழுதியவர்களில் கவிஞர் செல்வியும் ஒருவர்.

செல்வி, கவிஞர் சிவரமணியின் நெருங்கிய தோழி. இவர்கள் இருவரது கவிதைகளும் செல்வி-சிவரமணி கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. சிவரமணியைப் போலான எண்ணிக்கையில்தாம் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், அந்தக் கவிதைகளுக்குள் அன்றைய வட இலங்கையின் அரசியல் சூழலைப் பதிவுசெய்துள்ளார். சிவரமணியின் கவிதைகளைப் போல் செல்வியின் கவிதைகளும் வெளிப்படையானவை.

ஆனால், செல்வியின் கவிதையில் ரம்மியமான கிராமம் வருகிறது. அதுவும் நினைவில் பசுமையுடன் இருக்கும் ஒரு கிராமம். நிஜத்தில் சிதைந்து கொண்டிருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் வரப்போரம் சிறு பறவையைப் போல் அமர்ந்து ஒட்டுமொத்த இலங்கைப் போராட்டத்தையும் சித்தரிக்க அவர் முயல்கிறார்.

‘மீளாத பொழுதுகள்’ என்ற கவிதையில் ஒரு அழகான கிராமத்தை அவர் விவரிக்கிறார். சேரனின் ‘எனது நிலம், எனது நிலம்’ என்ற கூக்குரலைப் போல் இந்தக் கவிதையில் செல்வி தன் நிலத்தை விருப்பத்துடன் சொல்கிறார். சாதாரணமான காலைப் பொழுது அவர்களது கிராமத்தில் வசீகரிக்கும் காட்சியாக விரிகிறது. காகம் கரையும் ஓசையும் இனிமையான பாடலாக ஒலிக்கிறது. அந்தக் கிராமத்தின் தோட்ட வெளிகளில் தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவுகிறது.

இந்த இடத்தில் ‘எங்கும் அமைதி! எதிலும் இனிமை!’ எனச் சொல்கிறார். தேய்வழக்காகிவிட்ட இந்தச் சொற்களைத் தன் கவிதைக்குள் பிரயோகிப்பதன் மூலம் கவிதைக்குப் புது அர்த்தம் தருகிறார். துப்பாக்கிக் குண்டுகளின் முழுக்கம், ஹெலிகாப்டர்கள் பறக்கும் ஓசை, பூட்ஸ் கால்களின் அணிவகுப்பு, ராணுவ வாகனங்களின் இரைச்சல் என வட இலங்கையின் இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது இந்தச் சொற்பிரயோகத்தின் பிரயாசத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

கிராமத்தின் இந்தக் காட்சிகள் சட்டென ஒருநாள் மாறிவிட்டன. பொழுது புலராக் கருமை வேளையில் வண்டிகள் தடதடத்து உறுமியபடி நுழைந்தன. வெளியே அதிர்ந்து நடுங்கின. அங்கே அவலக் குரல்கள் கேட்டன என்கிறார் செல்வி. அவை தாய்மையின் அழுகையும் தங்கையின் விம்மலும் எனச் சொல்கிறார். இந்தப் பிரச்சினையையும் பெண்கள் பக்கம் நின்று பார்க்கிறார். ‘நேற்றுவரை அந்தக் காலைப்பொழுது அமைதியாக இருந்தது’ எனக் கவிதையை முடிக்கிறார். கடந்து சென்றுவிட்ட இறந்த காலத்தை செல்வி தனது கவிதைகள் வழியே கைகாட்டித் திரும்பத் திரும்ப அழைக்கிறார். அதற்கும் நிகழ்காலத்துக்குமான வேறுபாட்டைத் துயரம் மிக்கப் பாடலாகக் கவிதையாக்குகிறார்.

இலங்கைப் போராட்டத்தில் போராளி இயக்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் செல்வி தன் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். ‘விடைபெற்ற நண்பனுக்கு’ என்ற கவிதையில் இனப் போராட்டத்துக்குச் சென்றுவிட்ட, முகவரி அறியாத பால்ய சிநேகிதனுக்கான மடலாக அது விரிகிறது. இந்தக் கவிதையிலும் அவரது நிலத்தின் தேமாவும் கொண்டைகட்டிய குரக்கன்களும் (சோளக் கதிர்) வருகின்றன. இவற்றினூடே போராளி இயக்கங்கள் மீதான தனது புகார்களை உவமையாகச் சொல்லியுள்ளார்.

செல்விக்கும் தீர்க்கமான அரசியல் பிடிபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவை வன்முறையிலானவை அல்ல. அமைதியின் மூலம் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என நம்பியுள்ளார் என்பதை அவரது கவிதைகள் மூலம் அறிய முடிகிறது. அந்த முறைப்பாட்டில் அவருக்குச் சில தடைகள் இருந்தன என்பதையும் கவிதைக்குள் சொல்கிறார். ‘மானுட நேயம் நோக்கிய பாதை’யைக் கவிதைக்குள் அவர் சுட்டுகிறார். செல்வியும் சிவரமணியும் சில காலம் சென்னையில் இருந்துள்ளனர். தனது சென்னை அனுபவத்தை ஒரு வரியில் அவர் பதிவுசெய்திருக்கிறார்.

செல்வியின் கவிதைகளில் ஒரு கதைத் தன்மை உண்டு. அவை கவிதைக்கான திறப்பைத் தன்னகத்தே கொண்டவையல்ல. ஒரு கடிதத்தின் தொடக்கத்தைப் போலவே பெரும்பாலான கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. கவிதை எழுதுவதற்கான முன் பிரயத்தனங்கள், திணறல்கள் அற்ற மொழி அவருடையது.

தனது நெருக்கடியை, தனது நிலத்தின் அரசியல் சூழலைப் பகிர்வதே அதன் தொழில் என்பதில் அவர் தெளிவாக இருந்துள்ளார். அதே நேரம் தனது சமகாலக் கவிஞர்களின் கவிதைகள் தந்த வெளிப்பாட்டு மொழியையும் அவர் கவனத்துடன் பார்த்து உள்வாங்கிக்கொண்டுள்ளார். அந்த விதத்தில் சேரனின் தொடக்க காலக் கவிதைகளுடன் பொருத்தப்பாடுகள் கொண்டவையாகவும் செல்வியின் கவிதைகள் இருக்கின்றன.

செல்வியின் கவிதைகளில் நிலமும் காலமும் திரும்பத் திரும்ப அதன் அழகின் நினைவுகளுடன் படைக்கப்படுகின்றன. காலைப்பொழுதைப் போல அந்தியையும் அதன் அழகுடன் இன்னொரு கவிதையில் விவரிக்கிறார். அதிலும் குளம், குளத்தோரப் புல், மதகு, மதகினிடையே பாயும் நீர், வயல்வெளிகள், மாமரம், அதன் கிளையிலிருக்கும் சிறு பறவை, கூழா மரம், அதன் பசுமை என அந்தக் கிராமத்தின் காட்சிகளைத் திருத்தமாகச் சித்தரிக்கிறார்.

இந்தக் காட்சியும் இறந்த காலத்தின் நினைவுகள்தாம். நிகழ்காலத்தில் இந்தக் காட்சிகளின் மீது போர் நடந்துசெல்கிறது. ஆனால், இந்தப் போரின் பாதிப்புகளை மிஞ்சிய வன்முறையுடன் சொல்ல செல்வி விரும்பவில்லை. குளத்தோரப் புல்லின் கருகிய நுனி கொண்டு இலங்கை இன விடுதலைப் போராட்டத்தின் மோசமான வன்முறையைச் சொல்ல அவர் முயல்கிறார்.

 ....

பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூச்சிழுப்புப் போல
இந்த வாழ்க்கையும்
நாய்களின் ஊளையும்
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்கும்
வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன.
இரவின் தனிமையில்
என்னைத் தூங்கவிடாது துரத்துகின்ற நினைவுகள்
குழந்தையொன்று வீறிட்டழுகின்றது
போர்வை விலகிப்போய் குளிர் உறுத்துகிறதோ
அறையிலே,
தூங்கும் எனது தோழியின் கனவிலே
சூரியத் தேரேறி கந்தர்வன் ஒருவன் வரக்கூடும்.
இப்போது,
தூரத்தே கேட்கும் துவக்குச் சன்னங்கள் பட்டு
பரிச்சைக்காய்
புத்தகங்களை முத்தமிட்டபடி
முதிரா இளைஞனொருவன் இறக்கவும் கூடும்.

...

கவிஞர் செல்வியின் இயற்பெயர் செல்வநிதி தியாகராசா. இலங்கையின் வட மாகாண நகரான வவுனியா அருகிலுள்ள சேமமடு கிராமத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நாடகத் துறை மாணவி. அரசியல் செயற்பாட்டாளராகவும் இருந்துள்ளார். சிவரமணியின் கவிதைகளுடன் சேர்ந்து இவரது கவிதைகளை ‘செல்வி-சிவரமணி கவிதைகள்’ என்ற பெயரில் தாமரைச்செல்வி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1991-ல் அவர் இறுதியாண்டு மாணவியாக இருந்தபோது கடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்றுவரை வீடு திரும்பவில்லை.
-மண்குதிரை

கணபதி வழிபாடும் வரலாறும்



பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம் செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து வரும் வழக்கம். யானை முகமுடைய கணேசத் திருவுரு இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகவும் சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது.

இந்த கணேசக் கடவுள் உருவான வரலாறு சுவாரசியம் மிக்கது. சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாகப் பிறந்தவர் என்கிற புராணக் கதைகளுடன் நாட்டார் கதைகளும் கணபதிக்கு உண்டு. பெருந்தெய்வம், சிறு தெய்வம் ஆகிய இரு வழிபாடுகளிலும் கணேசர் இருந்திருக்கிறார். பக்திக்கு அப்பாற்பட்ட பண்பாட்டு அடையாளமுமாக முன்னிறுத்தப்படுகிறது. தாண்டவம் ஆடும் புகழ்பெற்ற நடராஜரைப் போல் கணேசக் கடவுளின் சிலைகளும் இந்திய அடையாளமாகப் பிரசித்தி பெற்றவை. நிஷ்கலங்கமான ஆனை முகமும் குள்ள உருவமும் இதற்குக் காரணம் எனலாம்.

பெளத்த சமயத்தைப் பின்பற்றிய குஷாணப் பேரரசுக் காலகட்டத்தைச் சேர்ந்த தாமிர நாணயங்களில் கணேசக் கடவுளின் உருவம் கண்டறியப்பட்டுள்ளது. பொது ஆண்டின் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள் அவை.

குப்தப் பேரரசு காலகட்டத்தைச் சேர்ந்த உதயகிரி சமணக் குடைவரைக் கோயிலில் காணப்படும் விநாயகரின் சிற்பம் இந்திய அளவில் கணேசக் கடவுளின் முதல் கற்சிற்பம் எனச் சொல்லப்படுகிறது. இது பொ..ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதற்கு முன்பே வேதத்திலேயே இந்தக் கடவுளைக் குறித்துப் பெயரளவில் குறிப்புகள் உள்ளதாகச் சொல்லப்பட்டாலும், இன்றைக்குப் பிரம்மாண்டமான அளவில் வளர்ந்துள்ள கணபதியின் தெய்விகத் திருவுரு பெளத்த, சமண விநாயகரை ஒத்தது எனலாம்.

இனவியல் பேராசிரியர் பி..குப்தே, கணேசர் உழவர்களின் கடவுள் என்றும் அவரது உருவமே அதன் அடிப்படையில் உருவானது என்றும் ஆராய்ந்து கூறியிருக்கிறார். உழவர்கள் சுமந்து செல்லும் சோளத்தட்டைதான் கணபதி உருவக் கற்பனைக்கு வித்திட்டது என்பது அவரது துணிபு. வேளாண் நிலத்தில் உள்ள எலியே அவரது வாகனமாகவும் ஆனது என்கிறார் அவர்.கணபதி வழிபாடு குப்தப் பேரரசு காலத்தில் பொ.. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டதாக இந்திய வரலாற்றறிஞர் எம்.கே. தவாலிகர் குறிப்பிடுகிறார். மார்க்சிய அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாய தனது ‘லோகாயுத’ நூலில் திராவிடப் பழங்குடியின் சூரிய வழிபாட்டுடன் கணேச வழிபாட்டுக்குத் தொடர்புண்டு எனச் சொல்கிறார். இதே கருத்தை இந்தியக் கலை தத்துவவியலாளரான ஆனந்த குமாரசாமியும் வலியுறுத்துகிறார்.

பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் பொ.. ஏழாம் நூற்றாண்டில் நடந்த போர் வழியாக இங்கே இந்தப் புதிய விநாயகர் வடிவம் வந்ததாகக் கருதப்படுகிறது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை முதலாம் நரசிம்ம பல்லவனின் படைத் தளபதி பரஞ்சோதி சாளுக்கியத் தலைநகரான வாதாபியில் வெற்றிகொண்டார். இந்தப் படையெடுப்பில் விநாயகர் சிலையை அவர் தனது ஊரான திருச்செங்கட்டான்குடியில் நிறுவினார். இவர்தான் பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருவரானார். கர்னாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் ‘வாதாபி கணபதிம்’ என்கிற கீர்த்தனையின் ஆதாரம் இந்த வரலாறுதான்.

தமிழில் திருமுறைகளில்தான் விநாயகர் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. சம்பந்தரும் நாவுக்கரசரும் விநாயகக் கடவுளைப் பற்றிய குறிப்புகளைத் தருகிறார்கள். புராணக் கதைகளை ஒட்டியே இந்தக் கருத்துகள் இருக்கின்றன. பாண்டியர், முத்தரையர் காலகட்டத்துக் குடைவரைக் கோயில்களில் விநாயகர் சிற்பங்களைக் காண முடிகிறது.

பாண்டியர் காலகட்டத்தைய பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் சுற்றுப் பிரகாரத் தெய்வமாக விநாயகர் உருவம் இருக்கிறது. இந்தக் கோயில் தொடக்கத்தில் சிவனை முதன்மைக் கடவுளாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கோகர்ணம், குன்றக்குடி, திருக்கோளக்குடி போன்ற குடைவரைகளில் விநாயகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.பல்லவ, பாண்டிய, முத்தரையர் கால கட்டத்தில் சுற்றுப் பிரகார தெய்வமாக இருந்த விநாயகர், சோழர் ஆட்சிக் காலத்தில் அஷ்டப் பரிவாரத் தெய்வமானதாக வரலாற்றாய்வாளர் இரா.கலைகோவன் தன் கட்டுரையில் சொல்கிறார்.

கணேசக் கடவுளைப் பிற்காலத்தில் பிரபலப்படுத்தியதில் பொ..14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மோரியா கோசாவி என்னும் துறவிக்கு முக்கியப் பங்குண்டு. விஷ்ணு, சிவன், சக்தி, சூரிய வழிபாட்டுடன் கணேச வழிபாட்டையும் ஓர் அம்சமாகப் பிரச்சாரம் செய்தார். இன்றைக்கும் வட இந்திய பிள்ளையார் சதுர்த்தி வழிபாட்டில் ‘கணபதி பாபா மோரியா’ எனப் பக்தி கோஷம் எழுப்பப்படுவதைக் கேட்கலாம். புனேக்கு அருகில் சிஞ்ச்வாத் என்னுமிடத்தில் கணேசக் கடவுளுக்கு இவர் கோயில் அமைத்தார். இவருக்கு முன்பே பொ..எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் நெறிப்படுத்திய இந்து மதத்தின் ஆறு பிரிவுகளில் காணபத்யம் எனப்படும் விநாயகர் வழிபாடும் ஒன்றாக இருந்தது. ஆதி சங்கரர் ‘கணேச பஞ்சரத்தினம்’ என்னும் துதிப் பாடலையும் எழுதியுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், 1893இல் மிகப் பெரிய மக்கள் திரளுடன் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டம் எழுச்சியாகப் பரவியது. ‘சர்வஜன கணேச உற்சவம்’ என இந்த எழுச்சியைத் திலகர் அழைத்தார். மராட்டிய மன்னன் சிவாஜி காலகட்டத்தில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டதாகச் சான்று இருந்தாலும் திலகரின் இந்த இயக்கம் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத்தின்வழி பரப்பப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் வட இந்திய கணேசக் கடவுள் வழிபாட்டுப் பண்பாடு பிரபலம் அடைவதற்கு முன்பே தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது. என்றாலும் இந்தக் காலகட்டத்தில் கணேசர் வழிபாடு பரவலானது. இது இயக்கமாகவும் நம்பிக்கையாகவும் வளர்க்கப்பட்டு பெரும் வழிபாடாக இன்று அச்சமூட்டும் இடத்துக்கு நகர்ந்திருக்கிறது

-மண்குதிரை (இந்து தமிழ் திசை, 25.08.2022)

கெ.ஜி.ஜோர்ஜ்: சினிமா கலைஞர்களின் இயக்குநர்!

கடந்த வாரம் இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான கெ.ஜி.ஜோர்ஜ் காலமாகிவிட்டார். புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் ‘சினிமா கம்பம்’ சிறுகதை, கெ.ஜி.ஜோர்ஜின் ‘உள்கடல்’ படத்தைப் பற்றியதுதான். அதில் ஒரு பாடல் (ஷரபிந்து மலர்தீப...). ஷோபாவும் வேணு நாகவள்ளியும் ஒரு வீட்டின் மாடியிலிருந்து பாடும் அழகான காதல் காட்சி. அதற்குப் பின்னால் ஒரு ஃபாஸ்ட் பேசஞ்சர் பேருந்து அவுட் ஆஃப் போகஸில் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்துசெல்லும். ‘காதலின் பெரும் வேதனையோடு அந்தப் பேருந்தில் நான் இருந்தேன்’ எனக் கதையில் சக்கரியா சொல்கிறார். சந்தோஷமான காதலுக்குப் பின்னால் ஒரு துக்கம் பேருந்தில் கடக்கிறது. 

பாடல் காட்சியில் வேணுவின் மூக்கு ஷோபாவின் நெற்றியில் உரசும். இருவரும் கண் மூடிக் கொள்கிறார்கள். காதலின் உன்மத்தம் அது. மீண்டும் மாடியறைக்கு வெளியே வருகிறார்கள். இன்பம் பொங்கும் பிரகாசமான சூரிய வெளிச்சம் அங்கு வீசுகிறது. ஜோர்ஜ் இந்தப் பாட்டைப் படமாக்கியிருக்கும் விதத்தைக் கதையில் சக்கரியா திருத்தமாக விவரித்திருப்பார். காதல் உணர்வுகளை மொக்கு அவிழ்வதைப் போல் மெல்லமெல்ல விவரிக்கும் சினிமா மொழி அது. அதுதான் தனி மனித உணர்வைப் பொதுவாக்குகிறது; சக்கரியாவின் கதைக்குள்ளும் ஓர் இடத்தைப் பெற்றுத் தருகிறது. ஜோர்ஜ் வாங்கிக் குவித்த விருதுகளுக்கெல்லாம் மேலானது இது. ஜோர்ஜ் என்கிற சினிமா கலையின் விற்பன்னரை நமக்கு அடையாளம் காண்பிப்பதும் இந்தத் தன்மைதான்.

ஷரபிந்து மலர்தீப... பாடல் காட்சி

கெ.ஜி.ஜோர்ஜ், மலையாள சினிமாவின் விசேஷமான இயக்குநர். பூனா திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கு முன்பே வேறுபட்ட கதைக் களத்தில் படங்களை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானித்தவர். 'ஸ்வப்னாடனம்' தொடங்கி ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட கதைக் களத்தில் அதைச் சாத்தியப்படுத்தினார். நாடக ஈர்ப்பால் அந்தப் பின்னணியில் ஒரு படம் செய்ய வேண்டும் என்று உருவாக்கிய படம்தான் ‘யவனிகா’. அய்யப்பன் என்கிற தபேலாக்காரன் காணாமல்போவதில் தொடங்கி காமம், கொலை, காதல் என விசாரித்துச் செல்லும். முன்னுக்குப் பின்னாக நகரும் இந்தப் படம், விசாரணையில் வழி துலங்கும்படி உதாரணமான திரைக்கதையை அமைத்திருப்பார்.

உளவியல் சிக்கல், கொலைப் புலனாய்வு, பெண்ணியம், காதல், அரசியல் பகடி எனப் பல உட்பொருளில் படங்கள் செய்தவர். எல்லாவிதப் படங்களிலும் ஜோர்ஜ் ஒரு விசாரணையைச் செய்திருப்பார். அது அவரது படங்களின் தனித்துவம். அது மனதுக்குள்ளானதாகவோ சமூகத்துடனானதாகவோ இருக்கும்.

மதிப்பு மிக்க அரசு அதிகாரி; சல்மான் ருஷ்டியின் நாவல்கள் படிப்பவர்; அழகான குழந்தைகள்; வீடும் காரும் பேரும் உண்டு. ஆனால், அந்த வீட்டின் குடும்பத்துப் பெண் ஒரு மெக்கானிக்குடன் சட்டனெ இறங்கிப் போய்விடுகிறாள். மெக்கானிக்குக்கோ தொடுப்புகள் அதிகம். இது ஏன் நடக்கிறது என்று அந்தப் பெண்ணின் பக்கம் நின்று, இந்தக் குடும்பத் தலைவனைக் கூண்டில் ஏற்றுகிறார் ஜோர்ஜ். இது ‘மற்றொராள்'.

ஆதமிண்ட வாரியெல்லு
‘ஈ கண்ணி கூடி'யிலும் ஒரு பாலியல் தொழிலாளியின் கொலையின்வழி, அவளது துக்ககரமான வாழ்க்கையை விசாரித்துப் பார்க்கிறார். பலதரப்பட்ட சமூகப் பெண்களின் நிலையைச் சொல்லும் ‘ஆதமிண்ட வாரியெல்லு’வில் அந்தப் பெண்கள் அந்தப் படத்தைப் படமாக்கும் ஜோர்ஜின் கேமராவைத் தாண்டிச் செல்வார்கள். ஜோர்ஜ் அதிர்ச்சியுடன் இதைப் பார்ப்பார். ‘ஃபோர்த்வால் பிரேக்கிங்’ நுட்பத்துக்கான இந்திய முன்னுதாரணம் இந்தக் காட்சி.

ஜோர்ஜின் ‘இரகள்’ சினிமாவின் உச்சம் தொட்ட படம். ஒரு வீட்டை மையக் கதாபாத்திரமாக்கிக் குடும்பம் என்னும் நிறுவனத்தின் விழுமியங்களை விசாரிக்கும் படம். இது படமாக்கப்பட்ட விதம், சினிமாக் கலைஞர்களுக்கான பாடம். ஒற்றை கேமராவை வைத்து நகராத ப்ளாக்கில் படத்தைப் படமாக்கும் விதமும் அதை எடிட்டிங்கில் கோக்கும் விதமும் ஜோர்ஜின் விசேஷமான அம்சங்கள். இந்தப் படத்தின் முதல் காட்சி இருளில் தொடங்குகிறது. படத்தின் நாயகன் ஒரு சிவப்பு வயரை மிகக் கூருடன் வெட்டி எடுக்கிறான். அதை ஒரு தூக்குக் கயிறாகத் தன் கழுத்திலேயே பாவிக்கிறான்.

இரகள்

இரண்டு, மூன்று கட்களாக விவரிக்கப்படும் இந்தக் காட்சியில், அவனது அறையின் வழி அவனைக் காண்பித்திருப்பார் ஜோர்ஜ். வன்முறையின் மீது மனிதனிக்கு இயல்பிலேயே இருக்கும் பெருவிருப்பம் இதில் சொல்லப்பட்டிருக்கும். உயிரற்ற ஒரு பெரிய வீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த வீட்டின் மனிதர்களை அடுத்தடுத்த காட்சிகளில் சித்தரித்திருப்பார். காட்சிகளில் கேமரா நிலைநிறுத்தப்பட்ட இடம், கதாபாத்திரங்களுக்கான நிகழ்த்துக் களம், அவர்கள் வெளியேறும் வழி என எல்லாம் தீர்க்கமான திட்டமிடலுடன் படத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஜோர்ஜின் கேமரா நிலைநிறுத்தலுக்கு மாற்றே இல்லை என்கிற வகையிலும் அவரது சினிமா மொழி திடமானது. தொடக்கத்தில் காண்பிக்கப்பட்ட சிவப்பு வயர் துண்டு, இதெல்லாம் செய்யுமா என அதற்கு முந்தைய காட்சி வரை பார்வையாளர்கள் எதிர்பார்க்காததாக இருக்கும். படத்திலும் சிவப்பு வண்ணம் ஓர் அம்சமாகக் காட்சிகளில் துலங்கும். ஃபிரேமில் இல்லாதவர்களின் இருப்பையும் அவர்களது உடைமைப் பொருள் வழி சித்தரிப்பதையும் இந்தப் படத்தின் காட்சிகளில் உணரலாம்.

அரசியல் பகடியான ‘பஞ்சவடிப்பால’த்தில் கேலிச் சித்திரங்களைப் போல் கதாபாத்திரங்களைச் சித்தரித்திருப்பார். இதன் பிரதான கதாபாத்திரம்  சட்டையை வேஷ்டிக்குள் இன் செய்திருக்கும். பெயரோ துஷ்யந்தன். அவரது மனைவி மண்டோதரி. ஒழுங்காக இருக்கும் பாலத்தை இடித்துப் புதிய பாலத்துக்கான சதி தீட்டும் கதாபாத்திரத்தின் பெயர் சிகண்டி. இப்படி முழுப் படத்தையும் கேலிச் சித்திரமாக்கியிருப்பார். ஒரு நாடக ஆசிரியரின் கதாபாத்திரமே இறங்கி அவனிடம் உதவி கேட்கும் ‘கதைக்குப் பின்னில்’, நடிகை ஷோபாவின் தற்கொலை குறித்த ‘லேகயுட மரணம் ஒரு ஃபிளாஷ்பேக்’ என வேறுபட்ட களங்களில் பல படங்களை எடுத்துள்ளார் ஜோர்ஜ்.

அடூர் கோபாலகிருஷ்ணன், ஜோண் ஆப்ரகாம் போன்று தீவிரச் சூழலிலும் கவனிக்கப்படாத இயக்குநர் கெ.ஜி.ஜோர்ஜ். ஆனால், அவர்களைவிடவும் தனித்துவம் மிக்கவர். மலையாளத்திலும் ஜோர்ஜின் பார்வையாளர்கள், சினிமா கலைஞர்களும் அறிவுஜீவிகளும்தான். மம்மூட்டி, திலகன், ஷலஜா போன்ற முன்னணி நடிகர்களை உருவாக்கியதில் பெரும் பங்கு ஜோர்ஜுக்கு உண்டு. ஆனாலும் பொதுப் பரப்பில் ஜோர்ஜின் படங்கள் உரிய கவனத்தைப் பெறவில்லை. மலையாள எழுத்தாளரும் இயக்குநருமான பி.பத்மராஜன் ஒரு பழைய நேர்காணலில் “என்னுடைய படங்கள் இன்றைக்குக் கவனிக்கப்படாமல் இருக்கலாம். ஏனென்றால், என்னுடைய படங்களுக்கான தலைமுறை இனிமேல்தான் உருவாகப்போகிறது” எனச் சொல்லியிருப்பார். அது கெ.ஜி.ஜோர்ஜுக்கும் பொருந்தும்.


- மண்குதிரை                                                                                                    அக்டோபர் 1, 2023


ழான் லுக் கோதார்த் : சினிமா என்பது ஓர் அரசியல் பிரகடனம்

பிரான்ஸின் புகழ்பெற்ற இயக்குநர் ழான் லுக்  கோதார்த்  அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்டுவிட்டார். ஸ்டுடியோ படப்பிடிப்பு கோலோச்சிய காலகட்டத்தில், கொம்பன் யானையைப் போல் சினிமாவை இழுத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தவர் அவர். உறுதியான திரைக்கதை, புதுமையான வசனம், புதிய காட்சிக்கோணங்கள், சுதந்திரமான ஷாட்கள் ஆகிய அம்சங்களுடன் கோதார்த் தன் படங்களைத் தனித்துவப்படுத்தினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1946இல் கையெழுத்தான பிரான்ஸ் - அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ப்ளம்-பைரன்ஸ் ஒப்பந்தம், பிரெஞ்சு சினிமாவில் பாதிப்பை விளைவித்தது. இதனால் அமெரிக்கப் படங்கள் பிரான்ஸில் திரையிடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்ந்தன. இந்த மாற்றத்தின் தொடர்ச்சி என கோதார்த் படங்களை வரையறுக்கலாம். 1960இல் அவரது முதல் படம் ‘பிரெத்லெஸ்’ இதைத் திருத்தமாக எதிரொலித்தது. ‘பிரான்ஸில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த அமெரிக்கப் படங்களைப் போல் ஒரு படம்’ என்கிறரீதியில் மிக லாகவமாக இந்தப் படத்தை கோதார்த் உருவாக்கியிருப்பார். படத்தின் நாயகி, அமெரிக்கப் பெண். நாயகனோ அமெரிக்க சூப்பர் ஸ்டார் போகர்ட் போல் தன்னைக் கருதுபவன். ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக்கொண்டு, கோதார்த் இந்தத் திரைக்கதையை எழுதியிருந்தார். காவல் துறையால் தேடப்படும் ஒருவன், தன் காதலியைத் தேடிச் செல்லும்போது சுடப்பட்டு இறக்கிறான். இதுவே அந்தச் செய்தி.

பிரெத்லெஸ்
தன் முதல் படத்திலேயே சர்வதேச சினிமாவில் பெரும் தாக்கத்தை விளைவித்தவர் கோதார்த். வெகு அண்மைக் கோணம், வெகு அகலக் கோணம், ஜம்ப் கட் ஷாட்கள் என அந்தப் படத்தை ஒரு படிப்பினைபோல் உருவாக்கியிருந்தார். நாயகனும் நாயகியும் பாரீஸ் நகரச் சாலைகளில் வலம்வரும் காட்சி, ஜம்ப் கட் ஷாட்டுக்கான முன்னுதாரணமாக எடுத்துக்காட்டப்படுகிறது. இதன் நாயகன் பார்வையாளர்களை நோக்கிப் பேசும் ‘ஃபோர்த்வால் பிரேக்கிங்’ என்று சொல்லக்கூடிய நுட்பத்தையும் கோதார்த் இதில் பயன்படுத்தியிருந்தார்.

அமெரிக்கக் கலாச்சாரம் பிரான்ஸில் ஏற்படுத்திய தாக்கத்தை நாயகக் கதாபாத்திரம் வழி பகடிசெய்திருப்பார். அமெரிக்க ராணுவ அதிகாரியின் காரைத் திருடி வரும்போது, பின் தொடர்ந்துவரும் ஒரு காவலரை, அந்த காரில் உள்ள துப்பாக்கியையே எடுத்து நாயகன் சுடும் காட்சி, சினிமா உருவாக்கத்துக்கான முன்னுதாரணம். ‘சஜெஷன் ஷாட்’ இல்லாமல் ஐந்து கட் ஷாட்டுகளில் காவலர் விழுகிறார். இதில் வெகு அண்மைக் காட்சியைப் பயன்படுத்தியிருப்பார். ஒரு ஷாட்டில் துப்பாக்கி மட்டும் வெகு அண்மைக் காட்சியில் காட்டப்படும்.

பிரெஞ்சு - அமெரிக்கக் கலாச்சார முயக்கத்தை முதன்மைக் கதாபாத்திரங்கள் வழி சொன்ன வகையில், தன் அரசியல் கணக்கை முதல் படத்திலேயே தொடங்கிவிட்டார். மாவோயிஸ்ட் இளைஞர்களைப் பற்றிய ‘லா சைனீஸ்’, சர்வதேச அளவில் இளைஞர்கள் கொண்டாடிய படமாக அமைந்தது. மாவேயிஸம் மீது கோதார்த்துக்கு இருந்த பிடிப்பு இதில் வெளிப்பட்டிருக்கும். ‘வியட்நாம் எரிகிறது, நான் உரக்கச் சொல்வேன் மாவோ மாவோ/ஜான்சன் சிரிக்கிறார், நான் உரக்கச் சொல்வேன் மாவோ மாவோ’ என்கிற இந்தப் படத்தின் பாடல் இளைஞர் மத்தியில் பெரும் முழக்கமானது. படத்தில் வியட்நாம் போர் குறித்த காத்திரமான உரையாடல் மாவோயிஸ்ட் இளைஞர்களுக்கு இடையில் நடக்கிறது. அதில் நேரடியாக அமெரிக்காவை கோதார்த் விமர்சித்திருக்கிறார்.

வியட்நாம் போர் குறித்த அமெரிக்க, ரஷ்ய, ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடுகளை ஒரு நவீன நாடகத்தின் காட்சியைப் போல் விவரிக்கிறது இந்தப் படம். இதில் சீனாவின் நிலைப்பாடு ஒரு சிவப்புப் புத்தகத்தை வாசிப்பதன் வழி அரசியல் பிரகடனம்போல் பார்வையாளர்களை நோக்கிப் படமாக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் நிலையைப் போராளிகளின் பக்கம் நின்று பார்க்கிறது இந்தப் படம். ஷாட்களுக்கு இடையிலும் இந்த நாடகீயத்தை வெளிப்படுத்துவதே அவரது தனித்துவம். ஜம்ப் கட்டில் காலத்தைக் கடப்பதுபோல் ஷாட்டுகளுக்கு இடையிலான ஒழுங்கை இந்த நாடகத்தனத்தின்வழி கோதார்த் கடக்க நினைத்தார் எனலாம்.

லா சைனீஸ்

அமெரிக்க எதிர்ப்பு: ‘பெய்ரூட் தி ஃபூல்’ படத்தில் இரண்டு கதாபாத்திரங்களும் வியட்நாம் போருக்குக் காரணமான அமெரிக்காவைக் கடும் சொற்களில் விமர்சிக்கின்றன. அதுபோல் ‘தி லிட்டில் சோல்ஜர்’ படத்திலும் அர்ஜென்டினா போரை, ஒரு வீரனைச் சாரமாக எடுத்து விமர்சித்துள்ளார். இந்தப் படத்துக்குச் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டபோது, அதை அமெரிக்கா சென்று வாங்க கோதார்த் மறுத்துவிட்டார். பொருள்மய உலகைக் குறித்த மார்க்ஸியக் கருத்துகளைத் தொடர்ந்து தன் படங்களில் வெளிப்படுத்திவந்தார். ‘சினிமா அரசியல் பற்றியதாக இருக்கக் கூடாது; அரசியலாக இருக்க வேண்டும்’ என அவரே சொல்வதுபோல் அரசியலை கோதார்த் தீவிரமாக வெளிப்படுத்தினார். பிற்காலத்தியப் படமான ‘ஃபிலிம் சோசலிஷம்’ வரை தன் அரசியல் கருத்தில் உறுதியுடன் அவர் இருந்தார்.

மூன்று தலைமுறைகளில் பெருமளவு மாறிவிட்ட சினிமா ஊடகத்தில் மிகுந்த ஆர்வத்துடன் அவர் பணியாற்றினார். சினிமாவுக்காக அரசியலையும் அரசியலுக்காக சினிமாவையும் விட்டுக் கொடுக்காதவர் கோதார்த். இந்தத் தனித்துவமான அம்சம்தான் கோதார்த்தின் மரணத்தைச் சர்வதேச சினிமாவுக்கான பேரிழப்பாக்குகிறது

-மண்குதிரை

(செப், 18, 2022)

அசோகமித்திரனின் பெண்கள்

 



எழுத்தாளர் அசோகமித்திரன் காலமாகிவிட்டார். தமிழ்ப் புனைவு கதைகளில் பெரும் சாதனைகளைச் செய்தவர் அவர். அவரது கதைகள், நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடப் பாடுகளை மையமாகக் கொண்டவை. நடுத்தரவர்க்க மக்கள் கடைப்பிடித்துவரும் ஒழுக்கநெறிகள், வாழ்க்கை முறை ஆகியவற்றையும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டையும் துன்பங்களையும் அசோகமித்திரன் அளவுக்குக் கதைகளில் யாரும் சொன்னதில்லை.

இந்த நடுத்தரவர்க்க ஒழுக்கங்களில் மிகப் பெரிய பங்கு பெண்களுக்கு இருக்கிறது. இவற்றைப் பராமரிப்பவர்களாகவும் அதனால் உண்டாகும் துன்பங்களைச் சுமப்பவர்களாகவும் பெண்களே இருக்கிறார்கள். இந்த அம்சத்தையும் அசோகமித்திரன் தன் கதைகளின் மூலம் சொல்லியுள்ளார். அவரது கதைகளில் பெண்கள் காதல் தேவதைகளாகவோ தெய்வீக அவதாரங்களாகவோ இல்லை. பெண்கள் குடும்ப அமைப்பின் அங்கமாக வருகிறார்கள். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் செய்யும் அம்மாவாக, நள்ளிரவில் குழந்தை அழுவதற்காகக் கணவனிடம் முரட்டுத்தனமாக அடிவாங்கும் மனைவியாக, தாய் தவறிவிட குடும்பப் பொறுப்பை ஏற்கும் மகளாக வருகிறார்கள்.

பெண்களை அழகுப் பதுமைகளாக வர்ணிக்கும் அலங்கார வார்த்தைகள் எதுவும் அசோகமித்திரனிடம் இல்லை. சக மனுஷனாக அவள் படும் பாடுகளை அருகிலிருந்து பார்த்துப் பகிர்கிறார். மேலும், பெண்களின் உலகத்தைச் சொல்லும்போது, அவர்களது சந்தோஷங்களைவிடத் துன்பங்களையே பிரதானமாக்குகிறார். அவர்களுள் ஒருவராக இருந்து பேசுகிறார். அவள் ‘இதைப் போல இப்படிச் செய்தாள்’ என்ற ஒப்பீடுகளை அசோகமித்திரன் தவிர்க்கிறார். ஒரு பெண்ணின் தனித்துவமான இயல்புகளுடனே காட்சிப்படுத்துகிறார்.

‘தண்ணீர்’ நாவலின் ஜமுனா, ‘மணல்’ குறுநாவலின் சரோஜினி, ‘விமோசனம்’ சிறுகதையின் சரஸ்வதி ஆகிய கதாபாத்திரங்களை அசோகமித்திரனின் முன்னுதாரணப் பெண்களாகக் கொள்ளலாம். ‘விமோசனம்’ சரஸ்வதி ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் தன் கணவனுடனும் கைக்குழந்தையுடனும் வசிக்கிறாள். அரிசிக்கும் பருப்புக்கும் திண்டாடும் வாழ்க்கை ஒரு பக்கம், முரட்டுக் கணவனின் அடிகள் போன்ற துன்பங்கள் ஒரு பக்கம், என்றாலும் வாழ்க்கை போகிறது. கணவனின் அடிக்குப் பதில் பேசாமல், அடி வாங்கிக்கொண்டே இருப்பவள், ஒருநாள் லேசாக மூஞ்சியைத் திருப்பிக்கொள்கிறாள். அவ்வளவுதான் அவள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. செவிடாகும்படி அடிகளை வாங்கிக்கொண்ட பிறகுதான் என்றாலும் அவள் பாவம் செய்துவிடுகிறாள். குழந்தை, பால், அப்பளம், சாதம், வத்தல் குழம்பு, கடன், காபி என்ற இந்தக் குடும்ப அமைப்பிலிருந்து தான் வெளியேற்றப்பட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் மன்றாடுகிறாள். ஆனால், நிராகரிக்கப்படுகிறாள். கணவனே சரணாகதி என்னும் நிலையிலிருக்கும் பெண்கள் பலரின் பிரதிநிதியாக சரஸ்வதியை உருவாக்கியிருக்கிறார் அசோகமித்திரன்.

‘தண்ணீர்’ ஜமுனாவும் சரஸ்வதியைப் போல் ஒண்டுக் குடித்தன வீட்டில் வசிப்பவள். சினிமா நாயகியாக ஆசைப்பட்டவள். பாஸ்கர்ராவ் என்னும் சினிமா ஆளால் ஏமாற்றப்பட்டு, தன் தங்கை சாயாவுடன் வசித்துவருகிறாள். சாயா, ஜமுனாவின் குடும்பப் பெண் தன்மையின் மீதமாக கூடவே இருக்கிறாள். ஜமுனா ஒழுக்கத்தை மீறும்போதெல்லாம் அவளைக் கண்டித்துக் கொண்டே இருக்கிறாள். சாயாவுக்குக் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கைகள் உண்டு. அவளுக்கு ஒரு குடும்பம், ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால், அவளும் அந்த ஒண்டுக் குடித்தன வீட்டில் இருக்கிறாள். ஜமுனா எல்லாவற்றையும் மீறுபவளாக இருக்கிறாள். பாஸ்கர்ராவ் ஏமாற்றுபவனாக இருந்தாலும் அவனிடமே திரும்பத் திரும்ப செல்பவளாகவும் இருக்கிறாள். இறுதியில் சரஸ்வதிக்கு நேர்வது போன்ற ஒரு துன்பத்தைச் சந்தோஷமாக ஜமுனா முன்வந்து ஏற்கிறாள்.

‘மணல்’ சரோஜினி, பெரிய குடும்பத்தின் கடைக்குட்டிப் பெண். அண்ணன்கள், அம்மா, அப்பா, அக்கா எனக் குடும்ப அரவணைப்பில் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் இருப்பவள். ஆனால், அவளுடைய அம்மா ஒரு நாளில் தவறிவிடுகிறாள். விசேஷம் கழிந்த மறுநாள் வேலைக்குப் புறப்படும் அண்ணனுக்காக, அப்பாவுக்காகச் சமைக்கப் போகிறாள். பிறகு அவள் சமைத்துப் போடும் இயந்திரமாக மாறிவிடுகிறாள். அவளது டாக்டர் கனவு கலைந்துபோகிறது. கடைசியில் பி.எஸ்சி.கூடப் படிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இவளையும் வாழ்க்கை, குடும்ப அமைப்பிலிருந்து பிரித்துவிடுகிறது. ஒழுக்கம், நேர்மை போன்ற நெறிகளுக்கு உதாரணமானவள் அதிலிருந்து பிறழ்கிறாள். மைதானத்தில் காத்திருக்கும் போட்டோ ஸ்டூடியோக்காரனுடன் செல்லத் தயாராகிறாள்.

பல்வேறு குணநலன்கள் கொண்ட இந்த மூன்று பெண்களைக் கொண்டே அசோகமித்திரனின் மொத்தக் கதைகளின் பெண் கதாபாத்திரங்களை மதிப்பிட முயலலாம். பெண்களுக்கென்று தனித்துவமாகக் கட்டுப்பாடுகளை உருவாக்கிவைத்திருக்கும் இந்தக் குடும்ப அமைப்பின் நெறிகளையும் மறுபரீசீலனை செய்யலாம்.

(26, மார்ச், 2017)


கதையெல்லாம் தித்திப்பு

 

 
 
 
வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலான கதைகள்தாம் தமிழில் அதிகம். கி.ராஜநாரயணன், தோப்பில் முகமது மீரான் போன்ற கதைசொல்லிகள் பலரும் தன்னனுவத்தைப் பிரதானமாகக் கொண்டுதான் கதைகள் எழுதினர். இதற்கு வெளியில் அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்கள் தன்னனுபவத்தையும் கற்பனாசக்தியையும் கொண்டு கதைகள் எழுதினர். இந்த இருவிதமான போக்குக்கும் இடையில் இயங்கியவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

சிறுகதை இலக்கியத்தின் சாதனையாளர்களுள் ஒருவர் முத்துலிங்கம். எழுத்துலகில் அவருக்கு இது 60-வது ஆண்டு. இடையில் சில காலம் எழுதாமலும் இருந்திருக்கிறார். 1995 வெளிவந்த அவரது ‘திகடசக்கரம்’ தொகுப்புக்குப் பிறகு தொடர்ந்து அதே ஆற்றலுடன் இயங்கிவருகிறார். 1958-2016 காலகட்டத்தில் அவர் எழுதிய மொத்த கதைகளின் தொகுப்பு நற்றிணை வெளியீடாக இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

முத்துலிங்கம் கதைகளின் அமைப்பு, அசோகமித்திரனுடன் ஒப்பிடத்தகுந்தது. எந்தப் பின்னணியில் இருந்தாலும், எந்தவிதமான கருத்தியலைப் பேசினாலும் அவரது கதைகள் அடைய நினைக்கும் இலக்கு சுவாரசியம்தான். ‘சுவாரசியம்தான் தன் கதைகளின் லட்சியம்’ என்கிறார் அசோகமித்திரன். ஆனால் முத்துலிங்கத்தின் சுவாரசியம், வெகுளியானது. இந்தப் பூமிப் பிரதேசத்தின் ஒவ்வொரு பொருளையும் உயிரையும் பேரார்வத்துடன் அணுகும் குழந்தையின் தன்மை அதற்குண்டு. சுவாரசியத்தின் வெளிப்பாடாக இருவரும் சிரிப்பைக் கதைகளுக்குள் வைத்திருப்பார்கள். அதிலும் அசோகமித்திரனின் நகைச்சுவை, கதைகளுக்குள் புதிர்போன்றது. தேர்ந்த வாசகனால் மட்டுமே அதை அவிழ்க்க முடியும். முத்துலிங்கம் அந்தச் சிரமத்தை வாசகனுக்கு அளிப்பதில்லை.

கி.ரா.வின் கதைகள், கரிசக்காட்டு விவசாயிகளின் பாடுகள். அசோகமித்திரன், வண்ணநிலவன் ஆகிய இருவரின் கதைகளும் ஒரு குறிப்பிட்ட நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கைப் பாடுகள். அதுபோல இவர்களது கதைகளின் நிலக் காட்சிகளுக்குள்ளும் ஓர் ஒற்றுமையைக் காண முடியும். இப்படி முத்துலிங்கம் காலகட்டத்து எழுத்தாளர்களை ஒரு வரையறைக்குள் வகுத்துவிட முடியும். ஆனால் முத்துலிங்கம் இதற்குள் அடங்காதவர். பாடுபொருள்களிலும் சரி, நிலக் காட்சிகளிலும் சரி, முத்துலிங்கத்தின் கதைகள், ஒன்று மற்றொன்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுபவை.

தமிழ் வாசகனுக்கு முற்றிலும் புதிய நிலக் காட்சிகளை, மனிதர்களை முத்துலிங்கம் தனது கதைகளுக்குள் சித்தரித்துள்ளார். அவர்களுக்கும் மையமான ஓர் ஒற்றுமையைக் காண முடியாது. அவரது கதைகள், ஒரு நவீன கவிதையைப் போல் அன்றாடத்தின் ஒரு துண்டு. உண்மையில் அவை தீவிர விசாரணைக்கு உட்படுத்த முடியாத வெகுளித் தன்மை கொண்டவை.

அசோகமித்திரனின் படைப்புகளைப் போல் கட்டுரைக்கும் கதைக்கும் இடைப்பட்டவை முத்துலிங்கத்தின் படைப்புகள். இருவரும் தன்னிலையில் சொல்லும் கதைகள், ஒரு சுய அனுபவக் கட்டுரையின் தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. முத்துலிங்கம், ஐ.நா. அதிகாரியாகப் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானில் பணியாற்றியபோது உளவாளி ஒருவர், இவரைக் கண்காணிப்பதற்காக ரகசியமாகப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இஸ்லாமாபாத் தெருக்களில் வழி தடுமாறி, குழம்பிப் போய்விடுகிறார். திரும்பித் தங்குமிடம் வரத் தெரியாததால், தன்னை வெகுநேரமாகப் பின்தொடர்ந்து வரும் உளவாளியிடமே கேட்டுவிடலாம் எனக் கேட்கிறார். ‘அவரும் என்னைத் பின்தொடருங்கள், உங்கள் தங்குமிடத்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார். உலக உளவுத் துறை வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு உளவாளியை, உளவுபார்க்கப்படுவன் பின்தொடர்ந்த சம்பவம் நடக்கிறது. முத்துலிங்கம் தனது தனித்துவமான நகைச்சுவையுடன் இந்தச் சம்பவத்தை எழுதியிருப்பார். இது கட்டுரையா, கதையா என அறுதியிட்டுச் சொல்ல முடியாதபடி தங்கியிருக்கிறது.

முத்துலிங்கம் கதைகளில் தீர்க்கமான அரசியல் இல்லை என விமர்சிக்கப்படுவதுண்டு. அவரது கதைகள், உரத்துச் செல்லும் இலங்கையின் பெரும்போக்கிலிருந்து விலகியே இருந்தது, இந்த விமர்சனத்துக்கான காரணமாக இருக்கலாம். அவரது ‘நாளை’ சிறுகதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். போரால் அநாதையான சிறுவர்கள் - அண்ணனும் தம்பியும் - இறைச்சிக்காக ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு வேலி தாண்டிச் செல்லும் சம்பவம்தான் கதை. ஆனால் அவர்களுக்கு ரொட்டி மட்டும்தான் கிடைக்கிறது. நாளை இறைச்சி கிடைக்குமா, என்ற சிந்தனையில் உறங்கிப் போகிறார்கள். இதில் ஒரு இடத்தில் அண்ணன்காரன் ஒரு கட்டையை எடுத்துத் துப்பாக்கி பிடிப்பதுபோல் பாவனை செய்கிறான்.

முத்துலிங்கம், இலங்கையில் பிறந்து உலகின் பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் உடையவர். அதன் மூலம் நாம் அறியாத நிலத்தைப் பண்பாட்டுப் புலத்துடன் காட்சிப்படுத்தியுள்ளார். அவரது பல கதைகளின் மையமும் இந்தப் பண்பாட்டு முரண்தான். ஆனால் அவர் இந்த முரணை வெறுப்புடனோ கேலியுடனோ அணுகுவதில்லை. அது வாசகருக்கு அளிக்கக்கூடிய சுவாரசியத்தையே அவர் கவனத்தில் கொள்கிறார். இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என நிகழ்வதற்கும் நிகழாமைக்கும் இடையில் வாசகர் அடையும் மன எழுச்சியையும் அவர் ஓர் அம்சமாகக் கொண்டிருக்கிறார். படர்க்கையில் கதை சொன்னாலும் வாசக நெருக்கத்துக்காக அதில் ஓர் தன்னிலை விவரிப்புத் தன்மையை முத்துலிங்கத்தின் கதைகளில் உணர முடிகிறது. வாசகர்களிடம் நெருங்கிவர ஒவ்வொரு கதைகளிலும் அவ்வளவு பிரயாசம் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்று இது. அதனால் கதைகளை வாசகர்களை முன்னிறுத்தியே எழுதினார். அதனால் கதைகளுக்குள் தத்துவ விவரிப்பைத் தவிர்த்தார். அதற்கான முகாந்திரம் உள்ள கதைகளிலும் அதை ஒரு சுவாரசியமான நகைச்சுவையாக்கவே முயன்றுள்ளார். முத்துலிங்கத்தின் எழுத்துகளை ஒரு காடு எனக் கொண்டால் ஜெயமோகன் சொல்வதுபோல் அதன் ஒவ்வொரு இலையும் தித்திப்பே. அதுவே அவரது கதைகளின் லட்சியமும்கூட.
(இந்து தமிழ் திசை, 04.03.2018)

வைரஸ் வந்த கதை

ஒரு வருடத்துக்கு முன்பு மே 5 அன்று கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரவைச் சேர்ந்த முகமது சாபித், வினோதமான காய்ச்சலுக்குப் பலியானார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து இறந்த பிறகுதான் கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனை இந்த வினோதமான காய்ச்சல் குறித்து எச்சரிக்கை அடைந்தது.



அதன் பிறகு நடந்தது உலக சுகாதாரத்துறை வரலாற்றின் தீரம் மிக்கப் போராட்டம். மாநில சுகாதாரத் துறையும் மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் தன்னார்வலர்களும் இணைந்து நடத்திய உணர்ச்சியும் நிபுணத்துவமும் மிக்க இந்தப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு வந்துள்ள ‘வைரஸ்’.

ஆஷிக் அபு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன், டோவினோ தோமஸ், ஆஷிஃப் அலி, ரேவதி, பார்வதி, இந்திரஜித், பூர்ணிமா, ரீமா கலிங்கல், ரெம்யா நம்பீசன், ஜோஜூ ஜோர்ஜ், ரகுமான் என மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் அணி வகுத்துள்ளனர். ஒவ்வொரு பாத்திரமும் அதனளவில் முக்கியத்துவம் மிக்கதாகப் படம் சித்தரிக்கிறது.

இரு காட்சிகளில் மட்டுமே வரும் ரகுமான் கதாபாத்திரம்தான், ‘இது நிபாவாக இருக்கலாம்’ என முதன்முதலாகச் சந்தேகிக்கிறது. இது பேபி மெமோரியல் மருத்துவமனையின் மருத்துவர் அனூபை அடிப்படையாகக் கொண்டது. செவிலியர் லினிக்கு சிகிச்சை அளித்த டி.பி.ரஞ்சித் கதாபாத்திரத்தில் ஸ்ரீநாத் பாஸி நடித்துள்ளார். லினியாக ரீமா நடித்துள்ளார். நிபா வைரஸ் நோயாளிகள் சடலத்தை உடற்கூறு செய்ய யாரும் முன்வராத நிலையில் அதைத் தைரியத்துடன் செய்த மருத்துவர் கோபகுமாராக இந்திரஜித் நடித்துள்ளார்.

எல்லாக் கதாபாத்திரங்களும் நிஜ மனிதர்களின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கேரள சுகாதாரத்துறை அமைச்சராக நடித்துள்ள ரேவதியின் தோற்றத்தைப் பார்த்த அமைச்சர் ஷைலஜா டீச்சர் அது தனது பழைய புகைப்படம் என நினைத்துள்ளார். இந்தத் தோற்றச் சித்தரிப்பு மூலம் படத்தை உண்மைக்கு அருகில் வைக்க ஆஷிக் முயன்றுள்ளார். இந்த இடத்தில் படம் மகேஷ் நாராயணனின் ‘டேக் ஆஃ’பை நினைவூட்டுகிறது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியை முக்கியக் களமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரியில் சந்தித்துக்கொள்ளும் எண்ணற்ற கதாபாத்திரங்களின் வழி கதை விரிந்து செல்கிறது. மருத்துவர் பிஜின் – மருத்துவர் சீது பொன்னுத் தம்பி தம்பதியின் நிஜக் கதையும் இதில் வருகிறது. இத்துடன் ஆஷிஃப் – தர்ஷனா போன்ற சில கற்பனைகளையும் படம் உருவாக்கியுள்ளது. இந்தக் கற்பனையும் நிஜமும் பார்வையாளர்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அம்சங்களாக இருக்கின்றன.

தன் மனைவி லினியை, ஒரு முறை காண முடியாத கணவனின் நிலையை மின்தகன அறையிலிருந்து வெளிவரும் புகை வழி, படம் உணர்ச்சிப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. வெளியே பரபரப்பான கோழிக்கோடு நகரம் வெறிச்சோடிப் போன சூழலையும் காட்சிப்படுத்தியுள்ளது. நிபா பீதி பரஸ்பர மனித சிநேகத்தை நஷ்டப்படுத்தியதையும் கவனத்துடன் செல்கிறது. ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ படத்தின் இணைக் கதையாசிரியர் மோசின் பராரி, ஷர்பு, சுகாஸ் ஆகிய இருவருடன் இணைந்து படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.



மருத்துவர்களால் கணிக்க முடியாதபடி நிகழும் இந்த மரணங்களுக்குப் பின்னாலுள்ள வினோதம் நிபா எனக் கண்டுபிடிக்கப்பட்டதும் படம் ஒரு திரில்லராக மாறுகிறது; முதன்மை நோயாளியான முகமது சாபிதிலிருந்து ஒரு விசாரணையாக முன்னும் பின்னும் நகர்கிறது. மத்திய அரசின் பிரநிதிகள் இதை அந்நியத் தாக்குதலாகக் கருதுகிறார்கள். அதைத் தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கவில்லை என்றால் பாதுகாப்பு அமைச்சகம் இதைக் கைக்கொள்ளும் வாய்ப்பு சுட்டிக்காட்டப்படுகிறது.  
அதனால் நிவாரணம் இல்லா இந்த நோய் எப்படி வந்தது, அதன் மூலம் என்ன? எனக் கண்டறிய வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்படுகிறது. மணிப்பால் வைராலஜி நிறுவனத்தின் மருத்துவர் அருண் குமாரும் கோழிக்கோடு முதுகலை மருத்துவ மனைவி சீது பொன்னுத் தம்பியும் இந்தப் பணியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இந்த இரு கதாபாத்திரங்களிலும் முறையே குஞ்சாக்கோ போனும் பார்வதியும் நடித்துள்ளனர்.

இந்த இரு கதாபாத்திரங்கள் வழி படம் ஒரு த்ரில்லராக விறுவிறுப்படைகிறது. பார்வதி, சாபித்திடமிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பணியைத் தன்னார்வமாக மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் நிபா குழு இவரது கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கிறது. போபன் இந்த வைரஸ் சாபிதுக்கு எப்படி வந்தது என்பதைக் கண்டறிய அறிவியல் பூர்வமான விசாரணையில் இறங்குகிறார்.

சாபித் தோட்டத்தினுடைய பழங்கள், வளர்ப்பு முயல்கள் என இந்த விசாரணை தொடர்கிறது. 2018 ஜூன் 10 அன்று சுகாதாரத்துறை அமைச்சர் நிபா பாதிப்பு இல்லை என அறிவிக்கும்வரை ஒரு மாதம் காலம் தொடர்ந்த இந்தப் போராட்டத்தின் உண்மை நிலையைப் படம் வெகு அருகில் சென்று காட்சிப்படுத்தியுள்ளது. ஆனால் நாடகத்தனமான படத்தின் இறுதி மேடைக் காட்சியில் ஆஷிக் தான் ஒரு பழைய எஸ்.எஃப்.ஐ.காரன் என்ற ரீதியில் உணர்ச்சவசப்பட்டுவிட்டார்.

ஜெயகுமார்

தமிழ் இந்து, 21, ஜூன், 2019

ஜல்லிக்கெட்டு: ஒரு ஜனக் கூட்டத்தின் ஜனநாயகம்




பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருக்கிறது, ‘ஜல்லிக்கெட்டு’. அடிமாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட எருமை ஒன்று தப்பித்துவிட, அதைத் தேடி அலையும் ஒரு ஜனக் கூட்டத்தின் கதைதான் இது. ‘மாவோயிஸ்ட்’ என்னும் தலைப்பில் மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஸ் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆர்.ஜெயகுமாரும் ஹரீஸும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

மலையாள முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இதன் இயக்குநர். ‘ஆமென்’ படத்தில் இருந்து தனக்கெனத் தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட லிஜோ இதில் இன்னும் திருத்தமாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஷாட் தேர்வில் அவரது தேர்ச்சி கூடியிருக்கிறது. கடிகார முள்ளின் ஓசைக்குப் படத்தின் கதாபாத்திரங்கள் விழி திறக்கும் முதற்காட்சி அதற்கான பதம்.


கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைக் கிராமம்தான் கதையின் களம். அங்கே கறி வியாபாரம் செய்யும் வர்கியின் கடைக்குக் கொண்டுவரப்படும் எருமை, அடித்துக்கொல்லப்படும் அதிகாலை வேளையில் அவருடைய கையாள் அந்தோணியின் பிடியிலிருந்து நழுவிக் காட்டுக்குள் பதுங்கி விடுகிறது. அதன் பிறகு அந்த ஊரின் இரு பகல்களும் இரு இரவுகளும் நடைமுறை வாழ்க்கையிலிருந்து தப்பிக் காட்டுக்குள் அலைகிறது. இந்தச் சிறு காலத்துக்குள் படம், பலவிதமாகத் தன்னை வெளிப்படுத்துகிறது. இதற்கு முன்பு எருமை மாட்டிறைச்சி, அந்த ஊரின் வாழ்க்கையுடன் எவ்வளவு தொடர்பு கொண்டது என்பதைத் திட்டுத் திட்டான காட்சிகள் வழியே லிஜோ சொல்லியிருக்கிறார்.


காட்டுக்குள் தப்பிச் சென்ற எருமை மூர்க்கத்துடன் ஊருக்குள் நுழையும் ஒரு நீண்ட காட்சியில் முதலில் டீக்கடையை முட்டிச் சிதைக்கிறது. பிறகு கம்யூனிஸ்ட் கொடியை, பிறகு வங்கிக்குள் புகுந்து பெரும் சினத்துடன் வர்கியை முட்டித் தள்ளிவிட்டு மீண்டும் காட்டுக்குள் புகுந்து கொள்கிறது. இதற்குப் பிறகு தோழர்கள் வருகிறார்கள். சாய்ந்த கொடியைக் குறித்துப் பேசுகிறார்கள். ஏதோ தீர்வு சொல்ல முயன்று அதற்குள் வன்முறையில் இறங்குகிறார்கள். இதற்கு முந்தைய காட்சியில் பசு மூத்திரம் பிடிக்கும் ஒருவர் எருமையை அதன் போக்கில் வாழவிட வேண்டும் என்று ஜீவகாருண்யம் பேசுகிறார். ஆனால், எருமை அவரது காட்டைச் சிதைக்கும்போது கொதித்துப் போய் வசை பாடுகிறார். வலது, இடது அரசியலை விமர்சிக்கும் இந்தப் படம், போலீஸ் அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதையும் சொல்கிறது. மத அமைப்புகள், எளிய மனிதர்களின் நம்பிக்கைகளைக் கொண்டு தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளைச் சாதிப்பதையும் படம் காட்சிகளின் வழியே பதிவுசெய்கிறது.


படத்தின் தொடக்கத்தில் மின்னல் வெட்டுபோல் காட்சிகள் வந்துபோகின்றன. அவற்றில் ஒன்றில் தினமும் புட்டு சமைப்பதற்காக ஒருவர் தன் மனைவியை அடிக்கிறார். இதுபோல் திட்டுத் திட்டாகப் பெண் கதாபாத்திரங்கள் படத்துக்குள் வந்துபோகின்றன. ஆனால், அவை மையக் கதைக்குள் எந்தக் குறுக்கீட்டையும் நிகழ்த்த வில்லை. ஆனால், இந்தக் கதாபாத்திரங்களின் வழி அதிகார அமைப்பை படம் சித்தரிக்கிறது. இன்னொரு காட்சியில் நக்சல் தோழரின் வீட்டில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இதற்கு ஒரு தொடர்ச்சி படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கிறது. எருமை திரும்பவும் தப்பிக்கும் காட்சியில் இந்த நக்சல் தோழர் மூலம் நடப்பு காலத்தின் இடதுசாரி அரசியலைப் படம் விமர்சிக்கிறது.


அந்தோணி, வர்கியின் தங்கை, எருமையைப் பிடிக்க காட்டுக்குள் இறங்கும் வர்கியின் முன்னாள் கையாள் குட்டச்சன் இந்த மூன்று கதாபாத்திரங்களின் முரணில்தான் படத்தின் இரண்டாம் பகுதி துளிர்க்கிறது. இவர்களுக்கு வெளியே எருமையைப் பிடிக்க ஜனக் கூட்டம் மூன்று பிரிவுகளாகக் காட்டுக்குள் இறங்குகிறது. இந்தப் பிரிவுகளுக்கு இடையில் ஒன்றிற்கு ஒன்று முரண்பாடுள்ளது. இந்த ஜனக் கூட்டம் சட்டம், ஒழுங்கைக் கைப்பற்றுகிறது. ஊரின் காவல் உதவி ஆய்வாளர் ஜனத்தோடு ஜனமாகக் கைலியுடன் எருமையின் மீது காலனைப் போல் ஓடும் காட்சி அதற்கான சாட்சி. பிறகு அந்த ஊரே ஒரு ஜனக் கூட்டத்தின் ஜனநாயகத்தின் கீழ் வருகிறது. ஒருவகையில் இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகத்தின் நிலை என்பதைப் படம் சொல்ல முயன்றிருக்கிறது.


இந்தத் துரத்தல் நாடகத்தை கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும் பிரஷாந்த் பிள்ளையின் ஒலிப்பதிவும் மூர்க்கமானதாக மாற்றியிருக்கின்றன. பின்னணி இசையாகக் குரல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. நாகரிகம் தொடங்குவதற்கு முன்னான மனித சப்தங்கள். நவீன ஆயுதங்கள் இன்றி கம்பும் சுத்தியலுமாக முன்னேறும் ஜனக் கூட்டத்தின் சப்தமும் தீப்பந்தமும் அத்துடன் சேர்ந்துகொள்கின்றன.


இந்தத் தேடுதல் வேட்டையின் ஊடே அந்தக் காட்டுக்குத் தங்கள் முப்பட்டான்கள் மலை ஏறி வந்த கதையைக் கதாபாத்திரங்கள் சொல்கின்றன. வாழ வழியில்லாத, வாழ்க்கைக்குத் தப்பிய உதிரிகளின் தேசமாக அது ஆனதைப் பல காட்சிகள் ஊடே படம் சொல்கிறது. அந்த ஊரே ஒரு தேசமாக விரிவுகொள்கிறது. அந்தத் தேசத்தில் இன்னும் மீதமிருக்கும் காட்டு வாசனையைப் போல் ஜனங்களிடம் தேங்கியிருக்கும் மிருக வாசனையையும் இந்தப் படம் இறுதியாகக் கண்டடைகிறது.


- மண்குதிரை
  

இந்து தமிழ், 25, அக்டோபர், 2019


படைப்புக்கு நிகழ்காலம் முக்கியமல்ல - தோப்பில் முஹம்மது மீரான் நேர்காணல்




தோப்பில் முகம்மது மீரான், ‘சாய்வு நாற்காலி’நாவலுக்காக 1997-ல் சாகித்தியஅகாடமி விருதுபெற்றவர்.கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள -தமிழக எல்லைப் பகுதியில் வாழும் தனித்துவம் மிக்க இஸ்லாமியர்களின் வாழ்க்கையைத் தன் எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர். தற்போது திருநெல்வேலியில் வசிக்கும் தோப்பில், போர்த்துக்கீசியப் படையெடுப்பைப் பின்னணியாகக்கொண்டு புதிய நாவலை எழுதிவருகிறார்.

உங்கள் சொந்த ஊர்...

கன்னியாகுமரிமாவட்டத்தில் உள்ளதேங்காய்ப்பட்டணம். அது மலையாளம், தமிழ் என இரு மொழிகளும் பேசப்படும் ஊர். 1940-ல் பிறந்தேன். பள்ளிப் படிப்பெல்லாம் அங்கே பக்கத்திலேயேதான் படித்தேன். கல்லூரிப் படிப்பு நாகர்கோவிலில் உள்ள தென்திருவாங்கூர்  இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் படித்தேன்.

கதைகள் எழுதுவதில் நாட்டம் எப்படி வந்தது?

பத்து, பன்னிரெண்டு வயதில் இருந்தே கதைகள் எழுதுவேன். எங்கள் ஊரில் கொலைச் சம்பவங்கள் மிக அபூர்வமாகத்தான் நடக்கும். அப்படி நடக்கும்போது அதைப் பற்றிச் சுத்துப்பட்டு ஊர்களில் உள்ள கவிஞர்கள் கவிதையாகப்பாடுவார்கள் (கொலைச் சிந்து). அம்மாதிரிப் பாடல்களை அவர்களே பாடி சந்தையில் விற்பார்கள். அவற்றையெல்லாம் வாங்கிப் படிப்பேன். பக்கத்து ஊர்களில்நடக்கும் கூத்து நாடகங்களையெல்லாம் தவறாமல் பார்ப்பேன். இதுமட்டுமல்ல என் கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். எங்கள் அப்பா எல்லோரையும் சுற்றி உட்காரவைத்துக் கதைகள் சொல்வார். இவை எல்லாம்தான் காரணம் என நினைக்கிறேன். ‘ஒரு கடலோரகிராமத்தின் கதை’ முழு நாவலும் என் அப்பா சொன்ன கதைதான்.

உங்கள் முதல் படைப்பும் அதுதானா?

அதற்கு முன்பு நிறைய கதைகள் எழுதி மலையாளப் பத்திரிகைகளுக்குஅனுப்புவேன். அனுப்பிய சில நாட்களிலேயே கதைகள் திரும்ப வந்துவிடும். அப்போது தமிழ் எழுதத் தெரியாது. 1962 வாக்கில் எங்கள் பகுதியில் நடந்த மீனவர் - முஸ்லிம் கலவரத்தை ‘ஒரு ரிப்போர்டிங்’ போல முழுமையாக எழுதினேன். அதை மலையாளப் பதிப்பகங்களுக்கு அனுப்பினேன். அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்த ரிப்போர்டிங்கை மலையாள எழுத்தாளர்கள் கே. ஜி. சேதுநாத், மலையாள நடிகர் கரமணை ஜனார்த்தனன் ஆகியோர் படித்துவிட்டு ‘சிறந்த நாவல்’என்றார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது ‘கூனன் தோப்பு’ நாவலாக வெளிவந்தது.

முதலில் பிரசுரமான கதை எது?

மெட்ராஸில் (சென்னை) இருந்து வந்த‘பிறை’ என்னும் ஒரு பத்திரிகையில்1968-ல் எனது முதல் சிறுகதை ‘நரகபூமியில்’ பிரசுரமானது. அந்தக் கதைமலையாளத்தில் எழுதப்பட்டுமொழிபெயர்க்கப்பட்டது. நிலா முதீன்என்பவர்தான் மொழிபெயர்த்தார்.அந்தச் சமயத்தில் நானும் மெட்ராஸில் வேலை பார்த்ததால் ‘பிறை’யில் தொடர்ந்து எழுதினேன்.

தமிழில் நேரடியாக எழுதியது எப்போது?

இப்போதுதான். ரொம்பச் சமீபத்தில்தான். ‘சாய்வுநாற்காலி’க்கு முன்பு வரை நான் நேரடியாகத் தமிழில் எழுதியதில்லை. நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதிப் பிரதி எடுக்க வேண்டும். தமிழில் வாசிப்பும் 1990களுக்குப் பிறகுதான். 

2000 வருடத் தமிழ் எழுத்து வரலாற்றைவிட்டுவிட்டு வேறோர் இடத்தில் இருந்து நீங்கள் கதை சொல்லத் தொடங்குகிறீர்கள் எனலாமா?

எனக்குத் தமிழ் இலக்கியம் தெரியாது.எங்கள் ஊர் பெரிய கலாச்சார பூமி. அங்கு இருந்த நிலப் பிரபுத்துவ அமைப்பால் அடிமைப்பட்ட மக்களின் வாழ்க்கையைத்தான் எடுத்துக்கொண்டேன். நான் ஜெயகாந்தனை வாசித்தது கிடையாது;மெளனியை வாசித்தது கிடையாது; பிச்சமூர்த்தியை வாசித்தது கிடையாது. எனக்குத் தெரிந்த விஷயத்தை, எனக்குத் தெரிந்தபடி என்னுடைய மொழியில் சொல்கிறேன். அவ்வளவுதான்.

தமிழில் நீங்கள் வாசித்த படைப்புகளில் உங்களைப் பாதித்தவை எவை?

என்னை எந்த நூலும், ஆசிரியரும் பாதித்தது கிடையாது. 1990களுக்குப் பிறகுதான் தமிழ் வாசிக்கவே ஆரம்பித்தேன். அதற்குக் காரணம்பேராசிரியர் கி.நாச்சிமுத்துதான். “தமிழ்ல ஏதாவது படிச்சிருக்கீங்களா?”எனக் கேட்டார். “படிச்சதில்லை சார்” எனச் சொன்னேன். “இதபடிச்சுப்பாருங்கன்னு” சுந்தரராமசாமியின் ‘புளிய மரத்தின்கதை’யையும் கி.ராஜநாராயணனின்‘கோபல்ல கிராம’த்தையும் கொடுத்தார். இந்த ரெண்டும்தான் நான் முதலில் வாசித்த தமிழ் புத்தகங்கள்.

உங்கள் எழுத்துக்கு முன்னோடி என யாரையும் சொல்ல முடியாதா?

இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அவர்களுடைய மொழியைக் கொண்டே எழுதக் காரணமாக இருந்தவர் வைக்கம் முகம்மது பஷீர்தான். அவரது கதைகளைப் படித்தபோதுதான் நாமும் இஸ்லாமிய வாழ்க்கையைப் பதிவுசெய்யலாம் எனத் தோன்றியது. அவர் பெரிய மேதை. அவர் மொத்தம் எழுதியது 1900 பக்கங்கள்தாம். பாலைச்சுண்டக் காய்ச்சுவதுபோலப் பக்கங்களைச் சுருக்கிவிடுவார். அவரின் நூறு பக்கங்களைப் படித்தால், ஆயிரம் பக்கமாக விரிந்துகொள்ளும். அது பஷீரிடம் உள்ள சிறப்பு. அது நம்மால் முடியுமா?

ஒருவகையில் உங்கள் எழுத்துகளை வட்டார வழக்குக் கதைகள் என வகைப்படுத்தலாமா?

எனக்கு இதில் மாறுப்பட்ட கருத்து உண்டு. இப்படி வகைப்படுத்துவது எழுத்தைச் சிறுமைப்படுத்தும் வேலை இல்லையா? இதுமாதிரியான வகைப்படுத்துதல் மலையாளத்தில் இல்லை. பெருமாள்முருகன், பூமணி, சோ. தர்மன்  எல்லாம் தமிழின் பெரிய எழுத்தாளர்கள். அவர்களையும் வட்டார வழக்கு என்றால், பொதுக்கதைகள் எவை? அசோகமித்திரன் எழுதுவதா?

உங்கள் கதைகளில் தொடர்ந்து இஸ்லாம் அடிப்படைவாதத்தைப் பதிவுசெய்துள்ளீர்கள். இதை உங்கள் சொந்த சமூகம் எவ்வாறு எதிர்கொண்டது?

எதிர்ப்புகள் வந்தன. யாரும் புத்தகம் வாங்கமாட்டார்கள்; படிக்க மாட்டார்கள். ‘முஸ்லிம் எதிரி’ எனப் பிரச்சாரம் செய்தார்கள். இதற்குச் சகபடைப்பாளிகளும் காரணம். அதேசமயத்தில் கவி.கா.மு.ஷெரீப், அப்துல்வகாப் உள்ளிட்ட பலரிடம் இருந்து பாராட்டுகளும் வந்தன. அடிப்படைவாதிகள்தாம் என்னை எதிர்த்தார்கள். சமூகத்தில் அவர்கள்தானே அதிகம்?

இன்றைக்குள்ள இஸ்லாமியத் தமிழ் எழுத்துகளை வாசிக்கிறீர்களா?

இம்மாதிரி வகைப்படுத்துதல் மீது எனக்கு உடன்பாடில்லை. இஸ்லாம் வாழ்க்கையைப் பதிவுசெய்த வகையில் அர்ஷியா என்பவரின் முயற்சி எனக்குப் பிடித்திருந்தது. கீரனூர் ஜாகிர் ராஜா, களந்தை பீர்முகம்மது எழுத்துகளும் பிடித்திருக்கின்றன.

இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

போர்த்துக்கீசியப் படையெடுப்பின் காரணமாக எங்கள் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் இன்றைக்குப் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் வாழ்க்கையைத்தான் நாவலாக எழுதிவருகிறேன்.

உங்கள் எழுத்துகளுக்கு வரலாறுதான் ஆதாரமாக இருக்கிறதா?

நான் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் கடந்த காலத்தின் வழியாக வரலாற்றுக்குச் சென்றுவிடுவேன். வரலாறு எனக்குப் பிடிக்கும். வரலாற்றுப் புத்தகங்கள் நிறைய வாசிப்பேன். வரலாற்றை மறந்துவிட்டுப் படைப்புகள் இல்லை. என்னைப் பொறுத்தவரை படைப்பு என்பது கடந்த காலத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும். நிகழ் காலம் அதற்கு முக்கியமல்ல.
சந்திப்பு, புகைப்படம்: மண்குதிரை, (தி இந்து தமிழ், ஜூலை, 26, 2014)

வெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்




சீரும் தளையும் அறுக்கப்பட்ட வடிவம்தான் புதுக்கவிதைக்கான முதன்மையான இலக்கணம் என அதன் முன்னோடியான க.நா.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். ஆனால் பாரதிக்குப் பிறகான புதுக்கவிதையின் மற்றொரு கிளையாக இருந்த ந.பிச்சமூர்த்தியின் அபிப்ராயம் மாறுபட்டு இருந்தது. அவர் மரபின் அலங்காரங்களைத் தக்கவைக்க விரும்பினார். க.நா.சு. முன்மொழிந்த மரபற்ற தன்மையைத்தான் இன்று புதுக்கவிதை தன் இலக்கணமாகச் சுவீகரித்துக்கொண்டுள்ளது. ஆனால் இன்றைய நவீன கவிதையின் முகம் மாறியிருக்கிறது. பிச்சமூர்த்தியும்  க.நா.சு.வும் முரண்பட்ட மையத்திலிருந்து அது முளைத்தெழுந்திருக்கிறது. இந்த இடத்தில் வெயிலின் கவிதைகளை வைத்துப் பார்க்கலாம்.
வெயிலின் கவிதைகளுக்கு பிச்சமூர்த்தி முன்மொழிந்த மரபின் ஓர்மை உண்டு. அதன் சந்தங்களை நாட்டார்வழக்கின் சந்நதமாக அவர் கவிதையில் நிகழ்த்திக் காட்டுகிறார். நிகழ்வதற்கு வாய்ப்பற்ற ஒன்றைக் கவிதைக்குள் சிருஷ்டிப்பதன் மூலம் அவர் க.நா.சு.வின் விநோதத்தையும் கொண்டுவர முயல்கிறார். அவரது கவிதைகளுள் சில அலங்காரம், அசாதாரணம் ஆகிய இந்த இரு அம்சங்களையும் களைந்துவிட்டுப் பூரண சுதந்திரத்தையும் எய்திருக்கின்றன. வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் கொண்டுள்ள இந்த அம்சத்தால், அவை வரையறைக் கோட்பாட்டுக்குள்ளிருந்து திமிறுகின்றன.

தொண்ணுறுகள் வரை பெரும்பாலான கவிதைகளை இம்மாதிரியான கோட்பாட்டுக்குள் வரையறுக்க முடியும். தொண்ணுகளின் தொடக்கத்தில்தான் இந்தியா உலகமயமாக்கலுக்குள் நுழைகிறது. இந்தச் சமூக நிகழ்வு, தமிழ்க் கவிதையை வெகுவாகப் பாதித்தது. உலகமயமாக்கலால் நெருக்கடிக்குள்ளான வாழ்க்கையை வெவ்வேறுவிதமான வெளிப்படுத்தும் களமாகக் கவிதைகள் பயன்பட்டன. உலகமயமாக்கலாலின் பாதிப்பு நூதனமானதாக இருந்தது. தீர்மானிக்க முடியாததாகவும் இருந்தன. அதுவரை காத்துவந்த ஒழுக்க நெறிகள், பண்பாடு எல்லாம் கேள்விக்குள்ளாயின. இந்த இடத்தில்தான் கவிதைகளுக்கு ஒரு மூர்க்கம் தேவைப்பட்டது. அதனால் கவிதை எஞ்சிய கட்டுப்பாட்டுகளையும் தகர்த்து எறிந்தது. அதற்காக அவை எல்லாம் உலகமயாக்கலுக்கு, நகரமயமாக்கலுக்கு எதிரான கவிதைகள் எனக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் நிமித்தமாகச் செயல்பட்டது என்பதைத் திடமாகச் சொல்ல முடியும். அதன் வழியே பலதரப்பட்ட மக்களின் குரல் கவிதைக்குள் ஒலிக்கத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில்தான் அதற்கு முன்பு வரை கவிதைகளில் ஆதிக்கம் செலுத்திவந்த தனி மன வெளிப்பாடு குறைந்து சமூக மனம் வெளிப்படத் தொடங்கியது. வடிவ ரீதியில் கவிதை தனது அசாதாரணத்தைத் தளர்த்திக்கொண்டது. மாறாக மூர்க்கம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக வெயிலின் கவிதைச் செயல்பாட்டை அணுக வேண்டும்.

தொண்ணுறுகளில் தொடங்கிவிட்ட உலகமயமாக்கல் என்ற சமூக நிகழ்வின் பாதிப்பு இரண்டாயிரத்திற்குப் பிறகு தீவிரமடைகிறது. வெய்யிலும் அப்போதுதான் கவிதைகள் எழுதத் தொடங்குகிறார். அதன் விநோதமான பாதிப்புகள்தாம் அவரது கவிதையின் பாடுபொருள்களாக ஆகின்றன. குடிநீர் விற்பனைக்கு வந்துவிட்டதைச் சொல்லி வெய்யிலின் கவிதை ஒன்று விசனப்படுகிறது. தூக்க மாத்திரைகள், பொக்லைன் எந்திரங்கள், வற்றும் ஜீவ நதி ஆகியவை எல்லாம் இந்தச் சமூக நிகழ்வின் பாதிப்புகளாகக் கவிதைக்குள் வருகின்றன. மருத்துவம் ஒரு தொழிலாக வளம் பெற்றிப்பதையும் வெய்யிலின் கவிதைகளில் காண முடிகிறது. சம்சாரியின் வீடு மாத்திரை, மருந்துகளால் நிறைந்துகிடக்கிறது.

இந்த அம்சத்தில் லஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம் ஆகியோரை வெய்யிலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். யவனிகாவின் அந்நியத்தன்மை இன்றைக்குப் பெரும்பாலான கவிஞர்களைப் பாதித்திருக்கிறது. அந்தளவுக்கு மணிவண்ணனின் கூர்மையும் அசாதாரணமும் இன்றைய கவிஞர்களைப் பாதிக்கவில்லை. இன்றைக்குள்ள கவிதைகள் பெரும்பாலானவை யவனிகாவிலிருந்து வேர் பிடித்துள்ளன. அவற்றுக்கு தமிழ்ப் புதுக்கவிதை மரபுடன்கூடத் தொடர்பில்லை. ஆனால் வெய்யில் கவிதைக்கான மையமாக இந்த மூன்று அம்சங்களும் உள்ளன. பாடுபொருளின் தீவிரம் கூடியிருக்கும் கவிதைகளுக்குள் வெய்யில் அசாதாரணத்தைத் திணிப்பதில்லை. அதன் போக்கில் சுதந்திரத்தைத் தருகிறார். ஆனால் கூர்மை, அவரது கவிதைகளில் திடமாகத் தொழிற்படுகிறது.

°

அரசியல் தொடக்க காலத்திலிருந்தே கவிதையில் தொழிற்பட்டுவந்துள்ளது. ஆனால் தொடக்கத்தில் கவிதைகள் அரசியலின் பாகமாகத் தங்களைக் கருதிக்கொண்டதில்லை. இதை ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாரதியின் வரிகளுடன் ஒப்பிடலாம். அல்லது இயக்கம் சார்ந்த கூக்குரலாக வெளிப்பட்டன. ஆனால் நிலத்தை, மரங்களை, கால்நடைகளை இழந்த சம்சாரியின் குரல்கள் அதற்குப் பிறகுதான் நேரடியாக வெளிப்பட்டன. அப்படியான குரல்களுள் ஒன்று வெய்யிலினுடையது.

தொழிற்சாலை கன்வெயர் பெல்ட்டில் காத்திருக்கும் தொழிலாளியாக, நிலத்தை இழந்த சம்சாரியாக, வாழ்க்கைப்பாட்டை இழந்த ஒரு நாட்டார் கதை சொல்லியாக எனப் பல நிலைகளில் கவிதைக்குள் ஓர் அங்கமாக வெய்யில் வருகிறார். அதனால் இயல்பாக அவருக்கும் வெளிப்பாட்டுக்குமான இடைவெளி கவிதைகளில் இல்லை. இந்த இடத்தில்தான் கவிதைக்குரிய லட்சணங்களாக முன்னிறுத்தப்பட்ட சில அம்சங்களை வெய்யிலின் கவிதைகள் புறக்கணிக்கின்றன. அல்லது திட்டமிட்டு உருவாக்கவில்லை எனலாம். மறைபொருளையோ அசாதாரணத்தையோ வாசக அனுபவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு வெய்யில் உருவாக்கவில்லை. ஆனால் திறந்த சொற்களுடன் முன்னேறும் கவிதையில்  கூர்மையான உருவகத்தை உருவாக்கிக் காட்டுகிறார். அதிலே கவிதை பிரம்மாண்டமாக எழுந்துவிடும் அனுபவம், வாசகனுக்குக் கிடைக்கிறது. ஆனால் தன் தொழில் அதுவல்ல எனக் கவிதையைத் தொடர்கிறார்.

‘பாட்டாளிகளின் சூதாட்டம்’ என்ற கவிதையில் கன்வெயர் பெல்ட்டுடன் காலத்தைக் கழிக்கும் ஒரு தொழிலாளியாகக் கவிதையைச் சொல்கிறார். கன்வெயர் பெல்ட்டுகள் வல்லமையுடன் அவனை இயக்கின்றன. அவற்றிடமிருந்து விடுதலைபெற்று வீடு திரும்பும் அவன், தார்ச்சாலையை நீண்ட கன்வெயர் பெல்ட்காகக் கற்பனைசெய்கிறான். அதில் ஒரு சாதனமாக அவன் நடந்துபோகிறான். கன்வெயர் பெல்ட், ஆலை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு வீட்டுக்கு வந்து உறங்குகிறான். இந்த இடத்தில் வெய்யில், ‘ஒரு கடல் நாகம் எல்லையின்மையின் அமைதியில் நீந்துகிறது’ என்ற ஒரு உருவகத்தை எழுப்பிக் காட்டுகிறார்.

வெய்யிலின் மொழிப் பிரயோகம் சுயம்புலிங்கம், என்.டி.ராஜ்குமார் ஆகியோரின் கவிதைகளில் வெளிப்பாட்டு மொழியுடன் ஒப்பிடத்தகுந்தவை. சுயம்புலிங்கத்தின் வெள்ளந்தித்தனமும் ராஜ்குமாரின் சந்நதமும் இவரது கவிதைக்குள் விநோதமாகச் சுருண்டு கிடக்கின்றன.

அப்பா தற்கொலை செய்துகொள்ள வாங்கிய பூச்சிமருந்து பாட்டிலில் சாக்குத் தைக்கும் ஊசியால் மூடியில் துளையிட்டு கோடித்துணித் திரியும் மண்ணெண்ணெயும் கொண்டு அம்மா ஒரு விளக்கை உருவாக்குகிறார். அதுபோல் பதின் மூன்று விளக்குகள். பதின் மூன்று தற்கொலைகள் (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி). ஒரு சம்சாரியின் தற்கொலையைச் சொல்லும் இந்தக் கவிதை தாழ்ந்த குரலில் ஒரு முனகலாக வெளிப்பட்டுள்ளது. அதேசமயம் ‘என் மூதாதையின்/ திரமான முதுகெலும்பால் செய்யப்பட்ட/ கூடிய அம்பு / பெருந்தாகம் கொண்டிருக்கிறது/ …மண்டியிடு/ என் வரண்ட பூமியில் ரத்தம் சிந்து’ (குற்றத்தின் நறுமணம்)’ என்ற கவிதையில் குரலை இறுக்கிக் கட்டியிருக்கிறார். இந்தக் கவிதையின் வடிவமும் பனையேறி உடலைப் போல் முறுக்கேறியிருக்கிறது. அற்புத விளக்குகள் கவிதை, நோய்மையின் தளர்வுடன் இருக்கிறது.

இந்த இரு கவிதைகளுமே சம்சாரியிடமிருந்துதான் வெளிப்படுகிறது. ஒன்று யாதார்த்தத்துக்குச் சிரம் கொடுத்துச் சாய்கிறது. மற்றொன்று யாதார்த்துக்கு மாறாகச் சிரமெடுக்கத் துணிகிறது. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் வெய்யிலின் கவிதைகள் இந்த முரண்பாட்டில் இயங்குபவைதாம்.

அவரது கவனம்பெற்ற கவிதைத் தொகுப்பான ‘குற்றத்தின் நறுமணம்’ என்னும் தலைப்பே ஒருவிதத்தில் அவரது கவிதைகளின் ஆதாரம் எனலாம். குற்றத்தின்பால் அவரது கவிதைகளுக்கு அளவில்லாத ஈர்ப்பிருக்கிறது. குற்ற உணர்வைத் தரக்கூடிய அறத்தின் கழுத்தை ஒரு கவிதையில் அறுத்துவிடுகிறார். கை, கால்கள், அடிவயிறு, தசை, இருதயம் என உடலின் மற்ற பாகங்களும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவையெல்லாம் குற்றத்தின் பொருட்டு கவிதைக்குள் நடக்கின்றன. ஆனால் இவை சமூகப் பின்புலத்துடன் ஆராயப்பட வேண்டியவை என்பதைத் தன் கவிதைகள் மூலம் சொல்கிறார் வெய்யில்.

காமமும் குற்றத்தின் அம்சமாக வருகிறது. சேரனின் கவிதைகளின் காமத்தைப் போல் வன்முறையாக, வாதை தருவதாக வெளிப்பட்டுள்ளது. கைக்கிளை, பெருந்தினை, காரைக்கால் அம்மையார், கண்ணகி எனக் காமத்தைப் பிரயாசையுடன் பலவிதமாக அடையாளப்படுத்த முயல்கிறார் வெய்யில். அதுபோலக் காமத்தை வெய்யிலின் கவிதைகள் புனிதமானதாக, வேதாந்த ரகசியமாகப் பார்க்கவில்லை. ‘கஞ்சா புகைக்கும்போது ஏற்படும் மூளைச் சுர்’ எனத் தன் உசரத்துக்கு அதை வளைத்துப் பார்க்கிறது. அவரது இந்தக் காமத்திற்குக் குற்றவுணர்வும் கள்ளத்தனமும் உண்டு.

ஒருவிதத்தில் பார்த்தால் பாவமான யதார்த்தைக் கவிதைக்குள் மீண்டும் மீண்டும் நிகழ்த்துவதை வெய்யிலின் கவிதைகள் விரும்பவில்லை. ஒரு மந்திரவாதியைப் போல் யதார்த்திற்கு மாறான குரூரமான அபூர்வங்களைக் கவிதையின் மூலம் நிகழ்த்த முயல்கிறார். கவிதைக்குள்ளிருக்கும் ஈர்ப்பூட்டும் கொலைகள், குருதி சொட்டும் ஒரு புரட்சி, கைகூடாக் காமங்கள் என எல்லாம் அந்தப் பிரயாசைகளின் வெளிப்பாடுகள் எனலாம்.

- மண்குதிரை                                                                                                                                                  

                                                                                                                                                                         அம்ருதா, செப்டம்பர், 2018

கோட்சே ஜனநாயகம் vs காந்திய ஜனநாயகம்



மூன்றாண்டுகளுக்கு முன்பு ‘டெமாக்ரசி’ என்னும் மலையாளக் குறும்படம் ஒன்று யூடியூப்பில் தனிக் கவனம் ஈர்த்தது. காதல், த்ரில்லர் எனக் குறும்பட முயற்சிகளும் எல்லைகளுக்குள் சுருங்கிவரும் காலகட்டத்தில் இந்தப் படம் சுதந்திரத்துடன் வெளிப்பட்டிருந்தது. பேருந்துப் பயணம் ஒன்றை உருவகமாகக் கொண்டு உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தை விமர்சித்திருந்தது அந்தப் படம். அதன் இயக்குநர் ஜூபித் நம்ராடத். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அது முழுநீளத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதுதான் ‘ஆபாசம்’. இந்துத்துவம் முன்னிறுத்தும் ஆர்ஷ பாரத சம்ஸ்காரம் ஆர்ஷ பாரத சம்ஸ்காரம் (Aarsha Bharatha Samskaram) என்பதன் சுருக்கம்தான் ‘ஆபாசம்’.
பெங்களூரில் இயங்கும் டெமாக்ரசி (ஜனநாயகம்) என்னும் தனியார் பேருந்து நிறுவனம், காந்தி, கோட்சே, அம்பேத்கர், ஜின்னா, மார்க்ஸ் ஆகிய பெயர்களில் கேரளத்துக்குப் பேருந்துகளை இயக்குகிறது. இந்தப் பேருந்துகளும் அவற்றின் பயணிகளும்தான் கதைக் களம்.
ஜின்னா பேருந்து தொடக்கக் காட்சிகளிலேயே படத்திலிருந்து வெளியேறிவிடுகிறது. மிச்சமிருக்கும் காந்தி, மார்க்ஸ், அம்பேத்கர், கோட்சே ஆகிய பேருந்துகளுக்காக ஜனநாயக ஆட்காரர்கள் ஆள் பிடிக்கிறார்கள்.
காந்தியப் பேருந்தின் வயதான ஓட்டுநர், கிடைக்கும் நேரத்திலெல்லாம் ஸ்மார்ட் போனில் ஆபாசப் படம் பார்க்கிறார். எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் ஜியோ சிம்மை அவர் வாங்கியிருக்கிறார். அவரது கிளீனருக்குப் பெண் பித்து. கையில் மஞ்சள் கயிறு கட்டியிருக்கும் அவர், கோட்சே ஜனநாயகப் பேருந்தில் ஓட்டுநராக முயன்றுவருகிறார். கோட்சே ஜனநாயகத்தினர், காந்திய ஜனநாயகத்தின் நேரடிப் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். காந்தியைத் தோற்கடிக்கப் புதிய பேருந்து வாங்கும் திட்டமும் அவர்களுக்கு இருக்கிறது.

எல்லாப் பேருந்துகளும் போன பிறகு கடைசியாகத்தான் காந்திய ஜனநாயகப் பேருந்து வருகிறது. முழுக் குடிகாரர், மத்திய சர்காரால்தான் நாடு நலமாக இருக்கிறது என நம்பும் ஒரு இந்து பக்தர், கிறிஸ்துவப் பிரச்சாரத் தம்பதி, ஒரு திருநங்கை, சொந்த மாமாவால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் ஒரு சிறுமி, பொதுக் கலாச்சாரத்தில் தனித்திருக்கும் ஒரு யுவதி, எஸ்.எஃப்.ஐ.லிருந்து டி.ஒய்.எஃப்.ஐக்குப் போய்க் கடைசியில் சோத்துக் கட்சியிலிருக்கும் ஒரு குடும்பஸ்தன், கிறித்துவரான உம்மன் சாண்டி ஆட்சி இன்னும் நடந்துவருவதாகவும் அதனால்தான் கேரளம் நன்றாக இருப்பதாகவும் நம்பும் ஒரு கிறித்துவ மூதாட்டி, ஒரு ஐடி இளைஞன், விருப்பமில்லாத தனது திருமண நிச்சயத்துக்குச் செல்லும் ஐடி பெண், கடும் பசி இருந்தும் நோன்பிலிருப்பதால் சாப்பிடாமல் இருக்கும் ஆச்சாரமான முஸ்லிம் கணவன், (அவனது மனைவியைப் பிறர் பார்ப்பதை விரும்பாத அவன் அவர்களிடம் கோபப்படாமல் மனைவியிடம் சீறுகிறான்.) சில வெளிநாட்டவர்கள், அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் ஒரு மாணவர், ஒரு நோயாளித் தொழிலாளி இவர்கள்தாம் காந்திய ஜனநாயகப் பேருந்தின் பயணிகள்.

இவர்களுள் தொழிலாளிக் கதாபாத்திரம் கடைசியாக வந்து சேர்கிறது. காந்திக்கும் முன்பு சென்ற மார்க்ஸ் ஜனநாயகப் பேருந்தில் அவருக்கு இடம் கிடைக் காமல் போய்விடுகிறது. முறையில்லாத வேலையாலும் கூலியாலும் கடும் உடல், மன உளைச்சலுக்கு உள்ளான அவர் அம்பேத்கரில் முன்புபதிவு செய்துவைக்கிறார். ஆனால், அம்பேத்கர் பேருந்துக்கு ஆட்கள் சேராததால் அதை நிறுத்திவிடுகிறது ஜனநாயக நிறுவனம். வேறு வழியில்லாமல் ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுத்து காந்திய ஜனநாயகப் பேருந்தில் ஏறிக்கொள்கிறார்.
காந்திய ஜனநாயகப் பேருந்துக்குள் நடக்கும் சம்பவங்களும் குழப்பங்களும் படத்தின் மையக் கதை. இந்தப் பல தரப்பட்ட மனிதர்கள் ஒரே குடையின் கீழ் கூடும்போது இயல்பாக ஏற்படும் முரண்பாடுகளை அப்படியே இயக்குநர் விவரிக்கிறார்.
இந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பின்னணி இருக்கிறது. அவர்கள் பயணத்தின் ஊடே அதைத் துழாவிப் பார்க்கிறார்கள். திருநங்கை, தனது துணிச்சலான முடிவால் சமூகத்தில் சந்திக்க நேர்ந்த அவமானங்களை நினைத்து விசனப்படுகிறார். ஐடி பெண்ணுக்கு ஒரு தமிழ்ப் பையன் மீது மையல் இருக்கிறது. அந்த ‘சொல்லாத’ காதல் வந்துபோகிறது. பயணியான பழைய கம்யூனிஸ்டுகாரனின் ஓட்டலில் மாட்டுக் கறி விற்பதால், பிரச்சினை வரலாம் என அவனுடைய சமையல்காரன் தொலைபேசி வழியாக எச்சரிக்கிறான். இனி மாட்டுக்கறியை ‘மாயாமோகினி’ (பேருந்தில் காட்டப்படும் திலீபின் படம்) எனப் பெயர் மாற்றி மெனு கார்டில் அச்சிடச் சொல்கிறான்.
ஜூபித் நம்ராடத்

இவர்கள் அல்லாது காந்திய ஜனநாயகப் பேருந்தில் மாறுவேடமிட்டு இரு நக்சலைட்கள் ஏறிக்கொள்கிறார்கள். அவர்களைத் தேடிவரும் போலீஸ் பேருந்தைப் பாதி வழியில் நிறுத்திவிடுகிறது. ஆனால் வழக்கம்போல் அதற்கு முன்பே அவர்கள் தப்பிவிடுகிறார்கள். அப்போது அங்கு வரும் ‘கோட்சே’வில் ஐடி இளைஞர், ஐடி பெண், இந்து பக்தர் எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். காந்திய ஜனநாயகம் மட்டும் நடு வழியில் நிற்கிறது.
சமகால அரசியலை இவ்வளவு துணிச்சலாகச் சொன்ன படம் சமீபத்தில் இல்லை எனலாம். தணிக்கைக்காக ஓராண்டுக்கு மேல் காத்திருந்தது என்பதிலிருந்தே இதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும். தெறிப்புகளாக இந்தப் படம் ஜனநாயகத்தின் முன் வலுவான கேள்விகளை எழுப்புகிறது. ஆனால், கதையாக அது சொல்லும் தீர்வு, இந்திய ஜனநாயகத்தைப் போல் பலவீனமானதாக இருக்கிறது.

(20, ஜூலை, 2018, இந்து தமிழ் திசை)

மொழிபெயர்ப்புக் கோட்பாட்டில் நான் பழைய பள்ளி- மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமார்

லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் என்ற 1986-ல் வெளிவந்த மொழிபெயர்ப்புத் தொகுப்பின் மூலம் கவனம் பெற்றவர் ஆர்.சிவகுமார். ‘மீட்சி’ இதழ் வழியாகத் தொடர்ந்து இயங்கியவர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் மொழிபெயர்த்த மொத்த சிறுகதைகளின் தொகுப்பு ‘இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்’ என்ற தலைப்பில் ‘பாதரசம்’ பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. ஆர்.சிவகுமாருடன் பேசியதிலிருந்து...

உங்கள் முதல் மொழிபெயர்ப்பு எப்போது வெளிவந்தது?

1982-ல் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸுக்கு நோபல் பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து அவருக்கு உலகமெங்கும் பரவலாக ஒரு வாச கவனம் கிடைத்தது. அப்படித்தான் நண்பர்கள் மணிக்கண்ணன், பிரம்மராஜன், நான் எல்லோரும் அவரது கதைகளை மொழிபெயர்க்க முடிவெடுத்தோம். அப்படித்தான் 1983-ல் ‘செவ்வாய்க் கிழமை மதியத் தூக்க’த்தை மொழிபெயர்த்தேன்.

பிரான்ஸ் காஃப்காவின் ‘உருமாற்றம்’ உங்களுக்கு அடையாளமாக ஆனது இல்லையா?

கிட்டத்தட்ட எனக்கு நெருக்கமான கதைதான். நான் அப்போது வேலையில்லாமல் இருந்தேன். சகோதரிகள் இருந்தார்கள். மற்ற சூழல்களையும் தொடர்புபடுத்திக்கொண்டேன். ஆனால், அந்த அப்பா மாதிரி இல்லை என் அப்பா. அது ஒன்றுதான் வித்தியாசம். இந்த நெருக்கம்தான் என்னை மொழிபெயர்க்க வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மொழிபெயர்த்தேன். அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

வெவ்வேறு விதமான கதைகளை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். கதைகளைத் தேர்வுசெய்ய என்ன அளவுகோல் வைத்துக்கொண்டீர்கள்?

முதலில் கதை எனக்குப் பிடிக்க வேண்டும். நம்முடைய கதைகளிலிருந்து வேறுபட்டு ஏதோ ஒரு அம்சத்திலாவது புதிதாக இருக்கிறதா என்று பார்ப்பேன். அப்படியான கதைகளைத் தமிழுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கடமை உணர்வு எனக்குத் தோன்ற வேண்டும். இவைதாம் என் அளவுகோல். சில சமயங்களில் நண்பர்கள் தேர்வுசெய்து அனுப்புவார்கள். அப்படியும் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.

உங்கள் மொழிபெயர்ப்புகள் தமிழ்ப் படைப்பு மொழியில் என்ன மாதிரியான மாற்றத்தை விளைவித்தது?

‘மீட்சி’யின் மொழிபெயர்ப்புகள் பெரிய சலசலப்பை விளைவித்தன. ‘மீட்சி’ வெளியீடாக வந்த என்னுடைய ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ நூலும் அந்த அளவுக்குக் கவனிக்கப்பட்டது.

எழுத்தாளர்கள் பலரும் என் மொழிபெயர்ப்புகள் வழியாக விவரிப்புமொழியின் மாற்றத்தைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அது தமிழ் விவரிப்புமொழி வளர்ச்சி அடைய ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால், அதை நான் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுக் காலத்தில் மொழிபெயர்த்த கதைகளின் தொகுப்புக்கு இப்போதைய தேவை என்ன?

இன்றைக்குத் தமிழ்ப் படைப்புமொழி வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அது ஏற்கெனவே இருந்த மொழியின் தொடர்ச்சிதான். அந்த வகையில் இந்த மொழிபெயர்ப்புகளையும் தமிழ்ப் படைப்புமொழி வரலாற்றின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும்.

மொழிபெயர்ப்பதில் எந்த எழுத்தாளர் உங்களுக்கு சவாலாக இருந்தார்?

அமெரிக்க எழுத்தாளர் கான்ரட் எய்க்கின் ‘மெளனப் பனி ரகசியப் பனி’ கதை உணமையில் சவால்தான். ஒரு கனவு உலகத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். சற்றுப் பின்தங்கிவிட்டாலும் கதை நம்மை விட்டு விலகிவிடும். இந்தச் செயல்பாட்டில் மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ். எனக்கு உதவினார்.

பொதுவாக வாசிக்கும்போது கதையின் தொனி ஒரு 50% பிடிபட்டுவிட்டாலே போதும். மொழிபெயர்க்கத் தொடங்கிவிடலாம். மொழிபெயர்ப்பாளர்கள் பலரும் மரபுத் தொடர்களை (idioms) மொழிபெயர்க்கும்போது சறுக்கிவிடுவார்கள். நமக்கு எவ்வளவு தெரிந்தாலும், சலித்துக்கொள்ளாமல் அகராதிகளைப் புரட்ட வேண்டும்.

மூல மொழி அல்லது மொழிபெயர்ப்பு மொழி எதற்கு விசுவாசம் காட்டுவீர்கள்?

மொழிபெயர்ப்புக்குப் பல புதிய கோட்பாடுகள் இன்றைக்கு வந்திருக்கின்றன. பின்நவீனத்துவத்தில் மூலமொழிக்கு விசுவாசம் காட்ட வேண்டிய அவசியமில்லை எனக் கூறுகிறார்கள். இதில் நான் பழைய பள்ளியைச் சேர்ந்தவன்தான். மூல மொழிக்குத்தான் விசுவாசம் காட்டுவேன். மொழிச் சிக்கல் வரும் இடங்களில் ஒரு வார்த்தைக்கு, இரு வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மொழிபெயர்ப்பு மொழிக்கு நியாயம் செய்வதற்காக மூல மொழியின் பிரதியை விட்டு விலகிச்செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

எழுத்தாளருக்கு இணையானவர் மொழிபெயர்ப்பாளர் என்ற கோட்பாடும் வந்திருக்கிறது?

அதில் எனக்கு உடன்பாடில்லை. படைப்புகள் வாசிக்கும்போதும் ஏற்படும் பிரமிப்பு இன்றைக்கும் நீங்குவதில்லை. அவர்கள்தான் அதை உருவாக்குகிறார்கள். மொழிபெயர்ப்பாளர்கள் அதை நகலெடுக்கத்தான் செய்கிறார். என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பாளர்கள் ஒருபடி கீழ்தான்.

ஆங்கில இலக்கியம் இன்றைக்கு எப்படி இருக்கிறது?

விவரிப்பு மொழியில் நிறையவே மாறியிருக்கிறது. விவரிப்பு மொழி, உரைநடையிலிருந்து பேச்சு வழக்காக மாறியிருக்கிறது. இது கதைகளில் மட்டுமல்ல. கட்டுரைகளிலும் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. எழுத்தாளருக்கும் வாசகருக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக இந்த மாற்றத்தைப் பார்க்கலாம்.

எழுத வேண்டும் எனத் தோன்றியதுண்டா?

அது எப்படித் தோன்றாமல் இருக்கும்? ‘அஃக்’ இதழில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ‘ரெண்டுபேர்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறேன். அதற்குப் பிறகு தொடரவில்லை. 

(தி இந்து,  20, ஜனவரி, 2018)

யாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்



இலங்கையைப் பொறுத்தவரை 80-கள் முக்கியமான காலகட்டம். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தக் காலகட்டத்திலதான் வலுப்பெற்றது. திருநெல்வேலித் தாக்குதல்களைத் தொடர்ந்து கறுப்பு ஜூலைச் சம்பவமும் நடந்தது. கொழும்பில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்திய அமைதிப்படையும் அப்போதுதான் இலங்கைக்குள் நுழைந்தது. இவற்றுக்கெல்லாம் முன்பு பழமையான யாழ்ப்பாணம் நூலகம் கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டது. வட இலங்கையின் நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் கவிதைகள் எழுதியவர் சிவரமணி. இந்த அரசியல் சூழலே அவரது கவிதைக்கான ஆதாரமாகவும் இருந்தது.
இலங்கைத் தமிழ்ப் புதுக்கவிதை, இந்தியத் தமிழ்க் கவிதைகளிலிருந்து வேறுப்பட்டவை. ஆனால், தமிழ் மரபுக் கவிதையுடன் தொடர்புடையவை. உணர்ச்சியை அணுகும் விதத்திலும் விவரிப்பு மொழியின் ஓசை வெளிப்பாட்டிலும் மரபின் தன்மையை இலங்கைப் புதுக் கவிதைகள் இப்போதும் கைக்கொண்டுள்ளன. ஆனால், சிவரமணியின் கவிதைகள் அழகுணர்வுக்கு அப்பாற்பட்டுப் பாடுபொருளில் வேரூன்றியவை. அவரே தனது ஒரு கவிதையில் ‘கவிதை வெறிமுட்டி / நான் கவிஞன் ஆகவில்லை. இருபதாம் நூற்றாண்டின் வசந்த தென்றல் அல்ல நான்’ என்கிறார்.
சிவரமணி மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகக் குறைந்த கவிதைகளே எழுதியிருக்கிறார். 30-க்கும் குறைவான கவிதைகள்தாம் இதுவரை பிரசுரிக்கப்பட்டுள்ளன. 23 கவிதைகள் மட்டுமே வெளியாகியுள்ளதாக சிவரமணி குறித்த கட்டுரை ஒன்றில் இலங்கை எழுத்தாளர் சித்திரலேகா குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கவிதைகளின் காத்திரம் தமிழ்க் கவிதை வரலாற்றில் அவரைத் தவிர்க்க முடியாத ஆளுமையாக ஆக்கியுள்ளது.
அவரது ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ என்ற கவிதை, போர் எப்படித் தலைமுறைகளைப் பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது. உளவியல்ரீதியிலான அதன் பாதிப்புகள் எப்படிக் குழந்தைகள் மனத்தைச் சிதைக்கின்றன என்பதையும் திருத்தமாகச் சித்தரிக்கிறது. போர்க் கால இரவில் திடீரெனத் துப்பாக்கிக் குண்டின் சப்தம் வந்து விழுகிறது. நுங்கு எடுத்த பனங்காயில் வண்டி செய்வது, கிளித்தட்டு விளையாடுவது, சதா கேள்வி கேட்பது எனக் குழந்தைகள் தங்கள் இயல்புகளை மறந்துபோகின்றனர்.
கிடைக்கும் மரக் குச்சிகளைத் துப்பாக்கியாகப் பாவித்து எதிரிகளைச் சுட்டு விளையாடும் புதுக் களியைக் கற்கிறார்கள். ‘எங்கள் குழந்தைகள் வளர்ந்தவர்கள் ஆயினர்’ என இந்தக் கவிதையை சிவரமணி முடிக்கிறார். ‘ஒரு சிறிய குருவினுடையதைப் போன்ற அவர்களின் அழகிய காலையின்’ மீது வீசப்படும் குருதி தோய்ந்த முகமற்ற மனித உடல்களால் ‘எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களாயில்லாது போயினர்’ என மற்றொரு கவிதையிலும் சொல்கிறார்.
அகவயமான கவிதைகளும் சிவரமணி எழுதியிருக்கிறார். அந்தக் கவிதைகளில் அவரது ஆளுமை தீர்க்கமாக வெளிப்பட்டுள்ளது. தனது இருப்பைக் கவிதைக்குள் திரும்பத் திரும்ப வலியுறுத்திவந்துள்ளார். ஆனால், அந்தக் கவிதையின் உட்பொருள் அதற்கு மாறான தனி மனித இருப்பு சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகிறது. இந்த இடத்தில் தனி மனித இருப்பு குறித்த ஆங்கில, 70 காலகட்ட இந்தியத் தமிழ்க் கவிதையுடன் இவரது கவிதைகளை ஒப்பிடலாம்.
‘கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்’
என்கிறது அவரது ஒரு கவிதை.
இலங்கையின் இந்தப் போர், அந்த மக்களின் அன்றாடங்களை அசாதாரணமானவையாக ஆக்கிவிட்டது. இதைத் தனது சில கவிதைகளில் திரும்பத் திரும்பச் சித்தரிக்கிறார். ‘எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண முயற்சி’ எனத் தன் கவிதையில் சொல்கிறார். ‘எனக்கு உண்மைகள் தெரியவில்லை. பொய்களைக் கண்டுபிடிப்பதும் இந்த இருட்டில் இலகுவான காரியமில்லை’ என மனிதர்களுக்குள் நிலவிய நம்பகமில்லாத் தன்மையைச் சொல்கிறார்.
இன வெறுப்பால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் குரலாக ஒரு கவிதையைப் புனைந்துள்ளார். ஆனால், ‘இருள் நிறைந்த பயங்கரங்களின் ஊடாக’ அவள் வாழ்கிறாள் என்பதில் சிறு நம்பிக்கையை விதைக்கக் கவிதை முயல்கிறது. ஆனால், ‘கூனல் விழுந்த எம் பொழுதுகளை நிமிர்த்தத் தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை’ என்றும் தன் கவிதையில் விசனப்படுகிறார்.
1991-ல் தற்கொலை செய்துகொண்ட சிவரமணியின் கவிதைகள் பல, தற்கொலைக்கு முன்பு அவரால் கொளுத்தப்பட்டுவிட்டன எனச் சொல்லப்படுகிறது. ‘எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்’ என எழுதியிருக்கிறார் அவர். அவற்றுள் எஞ்சிய கவிதைகளுள் சில பின்னாளில் பிரசுரம் கண்டன. இப்போது நமக்கு வாசிக்கக் கிடைக்கும் கவிதைகள் 1985-1989 கால இடைவெளியில் எழுதப்பட்டவை. ஆனால், அவற்றுள் பெரும்பாலானவை 1985-1986 கால இடைவெளியில் அவரது 17-வது வயதில் எழுதப்பட்டவை என சித்திரலேகா குறிப்பிடுகிறார். இந்த 23 கவிதைகளுக்குள் இன விடுதலை குறித்த தன் லட்சியத்தை சிவரமணி வெளிப்படுத்தியிருக்கிறார்.
தன் இருப்பு நிலை குறித்த மனப் பிரயாசத்தைச் சொல்லியிருக்கிறார். ‘என் இனிய தோழிகளே/இன்னுமா தலைவார/கண்ணாடி தேடுகிறீர்?’ எனப் பெண்களைப் போராட அழைத்துள்ளார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன விடுதலை குறித்த யதார்த்த முகத்தையும் சித்தரித்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்துத் தனக்கு இருந்த கருத்து வேறுபாடுகளையும் துணிச்சலுடன் முன்வைத்திருக்கிறார். அவரது தற்கொலை ஒருவகையில் அவரது நம்பிக்கைகளின் தோல்வி எனலாம். ‘நான் எனது நம்பிக்கைகளை தோற்றுக் கொண்டிருக்கிறேன்.’ என ஒரு கவிதையில் சொல்லியுள்ளார். இந்தத் தோல்வி இலங்கை விடுதலைப் போராட்டத் தோல்வியுடன் ஒப்பிடத் தகுந்தது.
...
என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?

சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.

ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.

வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.
வாருங்கள் தோழிகளே

நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
வாருங்கள் தோழிகளே.

சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.
சிவரமணி, யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்தவர். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி யிலும் வேம்படி மகளிர் கல்லூரியிலும் படித்தவர். சிவரமணியின் கவிதைகளும் அவரது தோழியான கவிஞர் செல்வியின் கவிதைகளும் சேர்த்து ‘செல்வி சிவரமணி கவிதைகள்’ என்ற பெயரில் சென்னை தாமரைச்செல்விப் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. சிவரமணி, 1991 மே 19-ல் யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
(தி இந்து, பெண் இன்று, 03.06.18)

எழுத்தாளர் குந்தவை கதைகள்: போருக்கு இடையே பெண்கள்


இந்தியத் தமிழ் இலக்கியங்களிலிருந்து ஊக்கம் பெற்றது இலங்கைத் தமிழ் நவீன இலக்கியம். ஆனாலும் இங்குள்ள இலக்கியத்தின் தொடர்ச்சி என்று அதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. தங்களுக்கெனத் தனித்த மொழியை இலங்கைத் தமிழ் இலக்கியம் சுவீகரித்துக்கொண்டிருக்கிறது. வேதனை நிரம்பிய அவர்களது வாழ்க்கையைச் சித்திரிக்க உணர்ச்சிகரமான மொழியே அந்த இலக்கியத்தை முதன்மையாக இயக்கியது. கவிதைகள், பாடல்களுக்கு அருகில் இருந்தன. ஆனால், சில அபூர்வமான விதிவிலக்குகள் உண்டு. புதிய சொல்லில், புதிய சுவையில் தமிழின் மிகச் சிறந்த கதைகள், இலங்கையிலிருந்து வந்துள்ளன. அம்மாதிரியான கதைகளை எழுதியவர்களுள் ஒருவர் எழுத்தாளர் குந்தவை.
குந்தவையின் முதல் கதை ‘ஆனந்த விகடன்’ இதழில் 1963-ல் வெளிவந்தது. தொடர்ந்து ‘கணையாழி’, ‘சக்தி’ போன்ற தமிழக இதழ்களில் எழுதியிருக்கிறார். தமிழின் முன்னோடிப் பெண் எழுத்தாளர் என அவரை முன்னிறுத்தலாம்.
இந்தியத் தமிழ் வாழ்க்கைமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இலங்கை வாழ்க்கை. அசெளகரியங்கள் நிறைந்தது. அந்த வாழ்க்கை முறையிலிருந்து கதைகள் துளிர்ப்பது எளிது. ஆனால், அந்தத் துயரம் கதை சொல்லும் பாங்கில் ஒரு முடுக்கத்தைத் தந்துவிட அதிக வாய்ப்பிருக்கிறது. உணர்ச்சி வேகமும் மூர்க்கமும் கூடிவிடும். இந்த இடத்தில் குந்தவை விலகி நின்று பார்க்கிறார். ஒரே ஒரு கதாபாத்திரத்தைக்கொண்டு நம் காலத்தின் மிகக் கொடிய சண்டையைச் சித்திரித்துவிடுகிறார். இன உணர்வுக்கு அப்பாற்பட்டு சாமானிய மனுஷியைக் கொண்டு இதைச் சித்திரிக்க முயல்கிறார். 
அவரது ‘பெயர்வு’ கதையில் போரால் ஒரு ஜனக் கூட்டம் ஒற்றைப் படகில் இரவில் சிக்கிக்கொள்கிறது. யாழ்குடா பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து கிளிநொச்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதற்குள் சிவரஞ்சனி தன் மகனுடன் இருக்கிறாள். படகிலிருந்தவர்கள் மீது அலை நீரை வாரி இரைத்துக்கொண்டிருக்கிறது. முதலில் விளையாட்டாக இருந்த அது, அவளது சிறு பையனுக்குச் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்தப் படகுப் பயணத்துக்குச் சில நாட்கள் முன்பு சாம்பார் சமைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களது சகஜமான வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
அவளது கணவன் ராணுவம் நெருங்கிவிட்டதாகச் சொல்கிறான். பிறகு ஒரே ஓட்டம்தான். நின்ற இடத்தில் உறங்கி, பறக்கும் ஹெலிகாப்டருக்குக் கீழே பதற்றத்துடன் உறங்கி, இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இடையில் இரு சிறு பிள்ளைகளின் உடல்களை வேறு இவள் பார்த்திருக்கிறாள். அவளால் கண்களை மூட முடியவில்லை. மூடும் அவள் கண்கள் வழிக் காட்சிகள்மூலம் இலங்கைப் போரின் பாதிப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் குந்தவை.
குண்டுகள், கண்ணிவெடிகள் எதுவும் இல்லை. காவியத்தன்மையான விவரிப்புகளும் இல்லை. மக்களின் புழங்குமொழியில்தான் கதைகளைச் சொல்கிறார். கனமான சொற்களின் பயன்பாட்டால் வாசகனுக்குச் சுமை ஏற்ற அவர் விரும்பவில்லை. அதுபோல அவர் தேர்ந்தெடுக்கும் கதையில் அவருக்கு நல்ல பிடிபாடு இருக்கிறது. அதனால் கதையைப் பிரயாசம் இல்லாமல் சட்டெனச் சொல்லிவிடுகிறார். 
ராணுவச் சோதனைச் சாவடி அருகே பேருந்துக்காகக் காத்திருக்கும் இளம் பெண்ணின் மனத் திட்டுகளை ‘இறுக்கம்’ கதை சொல்கிறது. பதற்றம் மிக்க சூழலுக்கு இடையே இருக்கும் ஒரு சகஜமான வாழ்க்கையைச் சித்திரிக்க முயல்கிறது கதை. பேருந்து வரவே இல்லை. அவள் தனியாகச் சோதனைச் சாவடிக்கு அருகில் நிற்கிறாள். ராணுவத்தினரின் சோதனையைத் தனக்குள் கேலிசெய்து சிரித்துக்கொள்கிறாள். கோயிலடிவரை நடந்தால் அங்குப் பேருந்துகள் கிடைக்கும் என நடக்கிறாள். அங்கு நடக்கும்போது எல்லாவற்றையும் கேலியாகப் பார்க்கும் அந்தச் சின்னக் குமரிக்கு பதற்றம் வந்துவிடுகிறது. இதற்கு முன்பு அங்கு நடந்த சம்பவங்களின் நினைவு தரும் பதற்றம் அது. போரும் அதன் வன்முறைகளையும் இம்மாதிரி நினைவுகளாகவே பெரும்பாலான கதைகளில் வெளிப்படுகிறது. குருதிக் கரை படிந்த குழந்தைளின், பெண்களின் ஆடையை மட்டும் ஒரு போரின் குரூரத்தைச் சொல்ல விளையும் காணொளிக் காட்சிக்கு இணையாக குந்தவை கதைகளின் இந்த அம்சத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இலங்கை இலக்கியத்தைப் பொறுத்தவரை புலம்பெயர் இலக்கியம் என்ற தனிக் களமும் அதற்கு உண்டு. புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கையைப் பார்ப்பது, புறச் சூழலின் பண்பாட்டு முரண்களை எழுதுவது என அதையும் இரு வகைப்படுத்தலாம். இவற்றுக்கு முறையே எழுத்தாளர்கள் ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம் ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம். குந்தவை, புலம்பெயரவில்லை என்றாலும் புலம்பெயர் கதாப்பாத்திரங்களைக் கொண்டு அந்தப் பண்பாட்டு முரண்களையும் தன் கதைகளில் சித்திரிக்கிறார்.
‘திருவோடு’ கதையில் ஒரு பூப்புனித நீராட்டு விழா காணொளிமூலம், புலம்பெயர் வாழ்க்கையை விவரிக்கிறார். கனடாவில் நடந்த விழா அது. கதை சொல்லியின் சித்தியினுடைய பேத்திக்குத்தான் சடங்கு. அவர்கள் ‘வீடியோ பிளேயர்’ வழி அதைப் பார்க்கிறார்கள். பேத்தியான சிறுமி கட்டியிருக்கும் பட்டுச் சேலையை எடுக்க கனடாவில் தாங்கள் பட்ட பாட்டை சித்தி பெருமையாகச் சொல்கிறார். புலம்பெயர்ந்துவிட்டாலும் ‘பண்பாட்டைக் காக்க’ அவர்கள் படும் பாட்டை அவல நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார். காஸெட்டில் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் கதைசொல்லி சொல்கிறாள், ‘விட்டுவிடு, ஸ்கிப்பிங் விளையாடப் போக வேண்டும் என்பது போன்ற பார்வை’ என்று. குந்தவையின் எல்லாக் கதைகளுக்குள்ளும் இம்மாதிரியான கேலிப் பேச்சுகள் உண்டு. வாழ்க்கையின் அபத்தங்களை ஒரு மேலான எள்ளல் வழியாகப் பார்க்கிறார். இதை அவரது விசேஷமான பண்பு என முன்மொழியலாம்.
இலங்கையின் போர் தந்த துயரம், புலம்பெயர் வாழ்க்கையின் பண்பாட்டுச் சிக்கல் என எல்லாவற்றையும் இந்தக் கதைகள் வழியாகப் பெண்கள் பக்கம் நின்று குந்தவை பார்க்கிறார். ஆனால், இதையெல்லாம் பெருங்கோபத்துடன் வெளிப்படுத்தவில்லை. மேலும் ஒருசார்பாகப் புரட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. பெண்களின் அன்றாடச் செயல்களுக்குள் புகுந்து அது நிகழ்த்திய மாற்றம் என்ற ரீதியில், அதை அவர்களின் பார்வையில் சொல்ல முயல்கிறார். விசேஷமான இந்த அம்சம் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து அவரை தனித்துவப்படுத்துகிறது.
...
யாழ்ப்பாணம் மாவட்டம் தொண்டைமானாறு கிராமத்தில் பிறந்தவர் குந்தவை. அவரது இயற்பெயர் சடாட்சரதேவி. ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய ‘யோகம் இருக்கிறது’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, சென்னை எழுத்தாளார் சண்முகம் பொன்னுதரையின் (எஸ்.பொ.) முயற்சியால் அவரது ‘மித்ர பதிப்பக’ வெளியீடாக வந்துள்ளது. இவரது எழுத்து முயற்சிகளுக்கு லண்டன் பத்மநாப ஜயரும் ஊக்கியாக இருந்திருக்கிறார்.
                                                                                        (மே 06 2018, தி இந்து, பெண் இன்று)

பசி பசி என்கிற மானுடக் கதைகள்

ண்ணநிலவனின் முதல் சிறுகதை 1970-ம் ஆண்டு ‘தாமரை’இதழில் வெளிவந்தது. அவரது சமீபத்திய சிறுகதை 2011-ல் ‘ஆனந்த விகட’னில் வெளிவந்தது. இந்த இடைவெளிக்குள் அவர் தொண்ணூற்றிரண்டு கதைகளை எழுதியிருக்கிறார். சில கதைகள் தொகுக்கப்படாமலிருக்கக்கூடும். அவரது முதல் கதையான ‘யுகதர்ம’த்துக்கும் சமீபத்தியான கதையான ‘மழைப் பயண’த்துக்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுக் காலகட்டத்தில் வெளியேயும் உள்ளேயும் நிகழ்ந்த மனப் பிரயாசங்களின் வெளிப்பாடுதான் அவரது கதைகளுக்கான ஆதாரம் எனலாம். இந்த இரு கதைகளுக்கும் இடையில் பல்வேறு விதமான பரந்துபட்ட வாழ்க்கை முறைகளையும் மனிதப் பாங்குகளையும் வண்ணநிலவனின் கதைகள் சொல்லிச் செல்கின்றன. இந்தச் சித்திரிப்பு மொழி வழியாக வறுமை கோடைக்காலச் சூரியனைப் போல் பிரம்மாண்டமாக எழுகிறது. பல கதைகளில் சோறு அரிய பண்டமாக வருகிறது. அதற்காக மனிதர்கள் பெரும்பாடுபடுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குக் கோதுமைக் கஞ்சியும், கேப்பைக் கூழும்தான் உண்ணக் கிடைக்கின்றன.
1970-களில் 80-களில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்தின் மனக் கிலேசத்தை இவரது பல கதைகள் நேடியாகவும் மறைமுகமாகவும் சித்திரிக்கின்றன. இந்த வேலையில்லாத் திண்டாட்டம், ஜவுளிக் கடைகள் ஊழியர்கள் போன்ற உதிரித் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மோசமான விளைவுகளையும் சில கதைகள் உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கின்றன. மேலும் இந்த வறுமையான காலகட்டத்தில் தென்பகுதியில் கிறிஸ்துவ சமயம் வேர் பிடித்ததும், அதனால் குடும்பங்களில் நடந்த சச்சரவுகளும் சில கதைகளில் உபதொழிலாக வெளிப்பட்டிருக்கின்றன.
தொழிலற்றுப் போன வெட்டியான், பனையேறும் தொழிலாளி, சாராயம் கடத்துபவர்கள், தலைமறைவுப் போராளி, சர்க்கஸ் போடுபவன் எனப் பலதரப்பட்ட மனிதர்களை வண்ணநிலவன் கதைகள் சித்தரித்தாலும் அவரது கதைகளின் பிரதான பாத்திரங்கள் மூன்று பத்தி வாடகை வீடுகளின் வசிக்கும் கீழ் நடுத்தர வீட்டு மக்கள்தான். தார்சாவிலிருந்து (வரவேற்பறை) காண முடியாத அவர்களின் பட்டாளைகளின் (நடுப்பகுதி) சங்கதிகளை, மனக் கிலேசங்களை விவரிப்பின் வழியே இந்தக் கதைகள் மூலம் அவர் அம்பலப்படுத்துகிறார்.
குறிப்பாகத் திருநெல்வேலியில் வாழும் சைவப்பிள்ளைமார் சமூகத்தினர் குறித்த சித்திரிப்புகளே இந்தக் கதைகளில் அதிகம். திருநெல்வேலி டவுன் பகுதியின் ஒடுங்கிய தெருக்களைப் போன்ற அவர்களின் வாழ்க்கையையும் இந்தக் கதைகளில் காணலாம். வாழ்க்கை குறித்து அவர்களுக்குள்ளே இருக்கும் மதிப்பீடுகள், வெளியே நிகழும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக நிகழ்வுகளால் சிதறடிக்கப்படுகின்றன. அவர்களின் வரட்டு ஐதீகங்களும் இந்தப் பெருவெள்ளத்தில் ஒன்றுமில்லாமல் போகின்றன. தலைமுறை தலைமுறைகளாக இருக்கும் குடும்பப் பெருமையும் கேலிக்குரிய ஒன்றாகிறது. இவற்றை எந்தச் சார்புமின்றிக் காட்சிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். வக்கீல் குமஸ்தாவாக இருக்கும் ஒரு பிள்ளைவாளின் பாடுதான் அவரது முதல் கதையான ‘யுகதர்மம்’. தினக் கூலியாக இருபது ரூபாய் சம்பாதிக்கும் குமஸ்தாவுக்கு மூன்று பிள்ளைகள். கல்யாண வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள். அன்றைக்குள்ள கூலியில் மூத்தவளுக்கு ரிப்பனும் இளையவளுக்குக் கண்ணாடிக்கல் மாலையும் சின்னவனுக்கு பென்சிலும் வாங்கிப் போகிறார். அதனால் அரிசி வாங்குவதில் பாதி மண். ‘இந்த நிலையில் மூத்தவளுக்குக் கல்யாணம் எங்கு பண்ணிவைப்பது? உடனொத்த பிள்ளைகள் எல்லாம் காதலித்துக்கொண்டு ஓடிப் போகின்றன. இவளுக்கும் அப்படி ஒரு காதல் வந்து ஓடிப் போகமாட்டாளா?’ எனப் பிரயாசைப்படுகிறார். இன்னும் பல கதைகள் இம்மாதிரியான குடும்பங்களைச் சித்திரிக்கின்றன. இக்கதைகளின் தொகுப்பு என இவரது ‘கம்பா நதி’ நாவலைச் சொல்லலாம்.
ஞ்சம் பிழைக்கப் போவது’ என்பது சில பத்தாண்டுகள் முன்பு இங்கு நடந்த ஒரு துயரமான சமூக நிகழ்வு. அடுத்த மழைக்காலம்வரை சாகாமல் உயிரைப் பிடித்துக்கொள்வதற்கான இடப்பெயர்வு. சோறுதான் இதன் பிரதான நோக்கம். இதுபோல் பஞ்சம் பிழைக்கப்போகும் குடும்பம் ஒன்றை வண்ணநிலவன் ‘எஸ்த’ரில் விவரிக்கிறார். எல்லோரும் பஞ்சம் பிழைக்கப்போய்விட்ட ஊரில் தனியாக இருக்கிறது அந்தக் குடும்பம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு ஓட மரமாக இருக்கிறாள் எஸ்தர். அவள் அவர்களுக்குச் சித்தி. படுத்த படுக்கையாக இருக்கும் பாட்டியைத் தனியே விட்டுவிட்டுப் போக முடியாததால் அவர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் கம்பும் கேப்பையும் ஒரு தீப்பெட்டியும்தான் சேமிப்பில் இருக்கின்றன. தினமும் எல்லோருக்கும் அரை வயிற்றுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறாள். கால்நடைகளை அழித்துவிடுகிறார்கள். கடைசித் தீக்குச்சியும் தீர்ந்த பிறகு சுள்ளிகளைக் கொண்டு தீயைக் காப்பாற்றி வருகிறாள். நாளுக்குநாள் வெயில் கூடுகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு. இரவில் இருட்டு அடர்த்தியாகிறது. இனியும் இங்கு இருப்பது நல்லதல்ல என நினைக்கிறாள். பாட்டியும் வேண்டும். பிள்ளைகளும் முக்கியம். இறுதியில் எஸ்தர் என்னதான் செய்வாள்? அவள் தைரியமான முடிவை எடுப்பதுடன் முடிகிறது கதை. மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்தக் கதை, உணர்ச்சிகரமான குடும்ப உறவுகள், அதற்கான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் வறுமை பாளம் பாளமாகச் சிதறடிப்பதை அப்பட்டமாகச் சித்திரிக்கிறது.
ண், பெண் உறவுகளின் முரண்களைச் சொல்லும் கதைகளையும் வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். அவரது தொடக்ககாலக் கதையான ‘அயோத்தி’யை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். வாழ்க்கைத் துணை குறித்து பரஸ்பரம் இருக்கும் புகார்களைக் குறித்த கதை இது. காதல் திருமணங்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எல்லாவற்றிலும் இந்தச் சலிப்பைப் பார்க்க முடியும். வறுமையிலிருக்கும் மனைவி, கைகூடாமல் போன வேறொரு வாழ்க்கையைப் பற்றி நொந்து கணவனைக் கரித்துக்கொட்டுகிறாள். இதன் மற்றொரு பக்கமாக ‘பலாப்பழம்’ கதையையும் சொல்லியிருக்கிறார். இவை அல்லாமல் அசோகமித்திரனைப் போல் சினிமா பின்புலத்தில் சில கதைகளையும் சமீபத்தில் எழுதியிருக்கிறார்.
ண்ணநிலவனின் கதைகள் பெரும் பாலும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டவை; தீப்பந்தம்போல் வெயில டிக்கும் தெருக்களையும் தாமிபரணியின் படித்துறைகளையும் சித்திரம்போல் எழுப்பிக் காட்டும் ஆற்றல் பெற்றவை.
வண்ணநிலவனின் மொழி அலங்காரங்கள் அற்றது; அப்பட்டமானது. அளந்து வைத்தாற்போல் கதைகளில் சொற்களைப் பயன்படுத்துகிறார். வாசகனை மிரட்டும் பிரயோகங்கள் இல்லை. கதைகளைத் திருத்தமான சம்பவங்களைக்கொண்டு சிருஷ்டிக்கிறார். விவரிப்பு மொழியிலேயே கதைகள் சொல்லப்படும் இந்தக் காலகட்டத்திலிருக்கும் பார்க்கும்போது, இது அரிய குணாம்சம். பெரும்பாலான கதைகள் போதுமான உரையாடல்களால் ஆனவையாக இருக்கின்றன.
இவை அல்லாமல் பாம்பும் பிடாரனும், காட்டில் ஒருவன் போன்ற சில கதைகள் அவரது கதை சொல்லும் முறையிலிருந்து வேறுபட்டவை. உரையாடலின்றி முற்றிலும் கதை சொல்லியின் விவரிப்பிலேயே இந்தக் கதைகளை உருவாக்கியிருப்பார். மேலும் இவை ஒன்றுக்கு மேற்பட்ட கதைப் பொருளை யும் கொண்டவையாகவும் இருக்கின்றன.
மேலும் கதாபாத்திரங்களின் மனநிலைக்கு, கற்பனாசக்திக்கு உள்பட்டு சிந்திக்கும்படியே எழுதியுள்ளார். கதைசொல்லியின் குரல் உயர அவர் அனுமதிக்கவில்லை. உதாரணமாக ‘மயான கண்டம்’ கதையின் வெட்டியான், சுடலை மாடசாமி சிலையின் அழகை வியக்கும்போது, “என்னமா துடிப்போட செஞ்சிருக்கான்” என அவனுடைய எல்லைக்குள் நின்றுதான் வண்ணநிலவன் விவரிக்கிறார்.
மிழ்ச் சிறுகதையின் வரலாறு இருபதாம் நூற்றாண்டில் சுப்பிரமணிய பாரதியிலிருந்தே தொடங்கிவிட்டது. ஆனால், சிறுகதை ஆற்றல் மிக்க வடிவமாக அந்த நூற்றாண்டின் மத்தியில்தான் வலுப்பெற்றது. தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தன்தான் அதைச் சாத்தியப்படுத்தினார். திருத்தமான வடிவம், திடகாத்திரமான உள்ளடக்கம், அலங்காரமற்ற விவரிப்பு மொழி எனத் தமிழின் முன்மாதிரியான நவீனச் சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தார். புதுமைப்பித்தனுக்குப் பிறகு அந்த மரபில் தமிழின் முன்னுதாரணக் கதைகளை உருவாக்கி வருபவர் வண்ணநிலவன்.
(தலைப்பு, விக்கிரமாதித்யன் கவிதையின் ஒரு வரியிலிருந்து பெறப்பட்டது)
( நற்றிணை வெளியிட்ட வண்ணநிலவன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு) தொகுப்புக்காக எழுதிய மதிப்பீடு) 
தி இந்து, 13, நவம்பர், 2016


இரு துர்காக்கள்


நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ‘செக்ஸி துர்கா’வுக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ‘எஸ் துர்கா’ எனப் பெயர் மாற்றப்பட்டுத் திரைக்கு வந்திருக்கிறது. ‘ஒழிவு திவசத்த களி’ படத்தின் மூலம் கவனம்பெற்ற சனல்குமார் சசிதரனின் அடுத்த படம் இது.
‘எஸ் துர்கா’, ஆவணப் புனைவு (Docufiction) வகையைச் சேர்ந்த திரைப்படம். அதாவது ஒரு கதையைச் சொல்வதன் வழி ஒன்றை ஆவணப்படுத்தல் எனச் சொல்லலாம். ஒரு கதையின் வழி துட்டி வீட்டை ஆவணப்படுத்திய விக்ரம் சுகுமாரனின் ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மலையாளத்தில் டாக்டர் பிஜூவின் ‘வலிய சிறகுள்ள பட்சிகள்’ உள்ளிட்ட பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
இந்தப் படம், கேரளத்தின் பிரசித்திபெற்ற அம்மன் வழிபாட்டுச் சடங்கான கருடன் தூக்கத்தை ஆவணப்படுத்துகிறது. கேரளத்தின் நெடுஞ்சாலையில் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை இன்னொரு பக்கமாகத் தொகுத்துள்ளது. இந்த இரண்டு காட்சிகளும் அடுத்தடுத்த அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
படத்தின் மையக் கதாபாத்திரமான துர்காவும் கபீரும் நள்ளிரவில் நெடுஞ்சாலையில் பரபரப்புடன் நிற்கிறார்கள். சாலையில் வேகமாக நடந்துகொண்டே வாகனங்களுக்குக் கைகாட்டிக்கொண்டு நடக்கிறார்கள். ஒரு வாகனம் நிற்கிறது. அது ஒரு ஆம்னி வேன். அதற்குள் இளைஞர்கள் இருவர். இந்தப் பயணம்தான் படம்.
துர்கா, கபீர், ஆம்னியில் ஏறிக்கொள்ளும் மேலும் இளைஞர்கள் இருவர், துர்க்கை ஆகிய இவர்கள்தாம் படத்தின் மையக் கதாபாத்திரங்கள். இவர்கள் அல்லாமல் வெள்ளைச்சட்டைக்காரர்கள் இருவர், போலீஸ்காரர் மூவர், வாகன ஓட்டி ஆகியோர் வந்துசெல்கின்றனர். இந்தக் கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை அமானுஷ்யமானவை. த்ரில்லர் படத்தின் கொலைகாரனைப்போல், பக்திப் படத்தின் தெய்வத்தைப் போல் சட்டென்று இதில் அவதரிக்கின்றன. பின்னணியைச் சொல்லாமல் கதையிலிருந்து மறைந்தும் போகின்றன. துர்கா, கபீர் உள்பட இந்தக் கதாபாத்திரங்கள் எங்கிருந்து வருகின்றன, என்ன செய்கின்றன, என்ன செய்யப் போகின்றன எல்லாமும் அமானுஷ்யம்தான். இது பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய அம்சமாகப் படத்தில் வெளிப்பட்டுள்ளது.
துர்கா என்ற மையப் பாத்திரம் வட இந்தியாவைச் சேர்ந்ததாக வடிவமைக்கப்பட்டிருப்பது படத்துக்குக் கூடுதல் பலத்தைத் தருகிறது. துர்கா உணரும் அந்நியத்தன்மை அவளது பதற்றம் ஆகிறது. அது பார்வையாளர்களின் பதற்றமாகவும் மாறுகிறது.
சனல் குமார் சசிதரன்

படத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ஒரு கதையைப் படிக்கக்கூடிய அனுபவம்போல் இருக்கிறது. நெடுஞ்சாலையில் துர்காவும் கபீரும் நடந்துசெல்லும்போது கேமரா சாலையில் ஒரு பக்கமாகப் பின்தொடர்கிறது. இது பார்வையாளர் சாலையில் நின்று இந்தக் காட்சியைப் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது. ஆம்னி வேனுக்கும் இதுபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
வேனிலிருந்து இறங்கி, நடுச்சாலையில் கபீரும் துர்காவும் ஓடும் காட்சிகளில்செயற்கை விளக்குகள் உபயோகிக்கவில்லை. அதனால் பார்வையாளர்களுக்கு சப்தம் மட்டும் கேட்கிறது. அது தரும் பதற்றம் கூடுதலாக இருக்கிறது. இந்த ஒளிப்பதிவுக்காக ரஷ்யாவில் தர்க்கோவெஸ்கி சர்வத் தேசத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை இதன் ஒளிப்பதிவாளர் பிரதாப் ஜோசப் பெற்றிருக்கிறார்.
நெதர்லாந்து, அர்மெனியா, மெக்சிகோ, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட 50 சர்வதேசத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது இந்தப் படம்.
நெடுஞ்சாலையில் மக்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸார், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிப்பதில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். ஒரு காட்சியில் தனியாக நெடுஞ்சாலையில் நடப்பவர்களைத் தடுத்து கேள்வியாகக் கேட்கிறார்கள் வெள்ளைச்சட்டைகாரர்கள் இருவர்.
துர்கா, கபீரின் சப்தம் கேட்டு விளக்கிட்டு, வீட்டுக்கு வெளியே வந்து பார்க்கும் ஒரு வயதான தம்பதியினர், கொட்டாவியுடன் மீண்டும் தூக்கத்துக்குத் திரும்புகிறார்கள். இந்தக் காட்சிகள் வழியே ஜனநாயக அமைப்பின் காவலர்கள், கலாச்சாரக் காவலர்கள், மிஸ்டர் பொதுஜனம் என சமூகத்தின் எல்லா அவலங்களையும் வசனமில்லாமல் படம் விமர்சிக்கிறது.
இருக்கும் வசனங்களும் யதார்த்தமாக வெளிப்பட்டுள்ளன. கதையில்லாத படம் எனச் சொல்லப்படும் இதற்கு முடிவும் இல்லை. தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சினிமா முடிந்த பிறகும் துர்கா ஆம்னியில் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
ஒரு துர்கா நள்ளிரவில் துணிச்சலான ஒரு சாகசப் பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்க, இன்னொரு துர்கா, கடவுளாக வலம்போக அலங்காரம்செய்துகொண்டிருக்கிறாள். பயபக்தியுடன் ஆண்கள் நூற்றுக்கணக்கானோர் நேர்த்திக் கடனுக்காக தங்கள் உடல்களை ஊசியால் துளைத்துச் சன்னதம் கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம் நெடுஞ்சாலைத் துர்க்கையை ஆண்கள் ‘செக்ஸியாக’ பார்த்துக் கடக்கிறார்கள்.
இந்த இரு துர்க்கைகளையும் ஆண் சமூகம் எதிர்கொள்வதில் உள்ள வேறுபாட்டைத் தான் ‘எஸ் துர்கா’ சித்திரிக்க முயன்றுள்ளது. அதில் அபூர்வமான வெற்றியையும் பெற்றுள்ளது.
(30, மார்ச், 2018, தி இந்து)

அம்பை கதைகள்: ஒழுக்கங்களுக்கு இடையிலான குறுக்கீடுகள்


தமிழ்ச் சிறுகதைக்கு நூறு வயதாகிவிட்டது. இந்த நூறாண்டு காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். ஆனால், பெண்ணியம் என்ற லட்சிய நோக்கமெல்லாம் தொடக்கத்தில் பெண் எழுத்துகளில் தீவிரம் பெறவில்லை. அனுபவங்களை எழுதினார்கள். இன்றைக்கு விருட்சமாகியிருக்கும் பெண்ணிய எழுத்துகள், பிற்காலத்தில் வேர்பிடித்தவைதாம். அப்படியான எழுத்துக்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தவர்களுள் ஒருவர் எழுத்தாளர் அம்பை.
அம்பை, 1944-ல் கோயம்புத்தூரில் பிறந்தவர். பதின்ம வயதில் எழுதத் தொடங்கினார். தன் எழுத்துகளைத் தானே மதிப்பிட்டுத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். ஆடுகளும் மாடுகளும் லட்சக்கணக்கான சிற்றுயிர்களும் ஆண்களும் வாழும் இந்தச் சமூகத்தில் பெண்களின் இடம் என்ன என்ற கேள்வியை அவர் தன் கதைகளின் மையமாகக் கொண்டார். ஆனால், அந்தக் கேள்விகளை தீப்பந்தம்போல் தன் தொடக்க கால கதைகளுக்குள் உரத்துத் தூக்கிப் பிடிப்பதில்லை. பாட்டியால் வளர்க்கப்பட்ட அம்பை, அந்தப் பெரிய மனுஷியின் பழைய நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் சிறு பெண்ணாகத் தன் கதைகளில் குரலை உயர்த்துகிறார். அம்பை எழுதுவதற்கு முன்பே பெண் சுதந்திரம், புரட்சி போன்றவை வெகுஜனத் தளத்தில் பேசப்பட்டாலும் அதற்கும் சில எல்லைகள் இருந்தன. அம்பை அந்த எல்லைகளைத் தாண்டினார்.
“அன்றைய வெகுஜன வாசிப்பின் வழியாகவே கதை சொல்வதற்கான ஒரு மொழியையும் வடிவையும் எடுத்துக்கொண்டேன்” என ஒரு நேர்காணலில் அம்பை சொல்கிறார். இதன் மூலம் மொழியை ஒரு உன்னத வடிவமாகத் தூக்கிக் கொண்டாடவில்லை எனத் தெளிவாகிறது. கதையைச் சொல்வதற்கு ஒரு மொழி, அவ்வளவுதான் அவரது லட்சியம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஏனெனில் அம்பை எழுதவந்த காலகட்டக் கதைகளில் மொழிக்கு அழகியல் முக்கியத்துவம் இருந்தது. அம்பை அதைத் தவிர்த்தார். ஒரு கற்பனையாளராகத் தன் கதைகளுக்குள் அழகியல் விவரிப்புகளைச் சொல்வதைவிட, ஒரு பெண்ணாக அவர்களின் பிரச்சினைகளைச் சொல்வதில்தான் அம்பைக்கு விருப்பம் அதிகம். ஒரு பெண்ணின் நிலையைச் சொல்லும் கதைகளில் சொற்கள், எல்லைகளை மீறித் திரண்டுவருகின்றன.

வெகுஜன பெண்களுள் ஒருவராக இந்தச் சமூக அமைப்பை அணுகுவது, இவற்றிலிருந்து விடுபட்டவராக இந்தப் பிரச்சினைகளுக்குள் குறுக்கீடுசெய்வது என அம்பையின் மொத்தச் சிறுகதைகளையும் இருவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். இந்த இரு தன்மைகளும் அவர் கதைகளுக்குள் இருக்கின்றன. அவரது ‘காட்டில் ஒரு மான்’ கதை, தங்கம் அத்தை என்ற பாத்திரத்தை உதாரணப் பெண்ணாகக் கொண்டது. இதில் கதை சொல்லி, குட்டிப் பெண்ணாக வருகிறாள். அத்தை ஒரு பூக்காத பெண். அவளுக்கு மாதச் சுழற்சி வரவே இல்லை. கதை சொல்லியைப் போன்ற குட்டிப் பெண்களுக்கு இது விளங்கவே இல்லை. வயதுக்கு வந்த ஒரு மூத்த குட்டிப் பெண், வெட்டிக் கீழே விழுந்த பட்டுப்போன மரத்தைக் காட்டி விளக்க முயல்கிறாள். அந்த மரம் உள்ளீடற்று இருக்கிறது. “அதுதான் பொக்கை” என்கிறாள் அவள். ஆனால், அத்தையின் மினுக்கு மேனியை இந்தப் பொக்கை மரத்துடன் அவளால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘எந்த ரகசியத்தை அந்த மேனி ஒளித்திருந்தது, அவள் உடம்பு எவ்வகையில் வித்தியாசப்பட்டது?’ எனக் கதையின் இடத்தில் கேட்கிறாள். பருவமெய்தாத பெண்கள், சமூகத்தில் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்வார்களோ அதைவிட அதிகமான பிரச்சினைகள் தங்கத்துக்கு. ஒரு கட்டத்தில்தான் இவையெல்லாம் தங்கம் என்ற தனி மனுஷியின் பிரச்சினைகள் அல்ல. சமூகத்தின் பிரச்சினைகள் எனக் கதை சித்தரிக்கிறது. ஆனால், இது எதையும் பிரச்சாரமாகச் சொல்லவில்லை. தன் கூட்டத்தைவிட்டு வந்த மான், ஒரு புது காட்டில் முதலில் பயந்து பிறகு அதிலேயே வாழப் பழகிக்கொள்ளும் கதையைச் சொல்லி கதை முடிகிறது. ஆனால், தங்கம் அழுதுகொண்டிருக்கிறாள்.

அவரது ‘வெளிப்பாடு’ சிறுகதையில் ‘வெகுஜனப் பெண்’ணிலிருந்து வெளியேறிவிட்ட டெல்லிவாசிப் பெண் வழியாகக் கதை சொல்லப்படுகிறது. இந்தக் கதைக்குள் பெண்கள் இருவர் வருகிறார்கள். இருவரும் கதை சொல்லிக்குத் தோசை சுட்டுப் போடுகிறார்கள். ஒருத்தி, திருமணம் முடிந்து, தோசைகள் சுட்டு, கணவனிடம் அடிகள் வாங்கி, குழந்தைகள் பெற்று, பேரன் பேத்தி எடுத்துத் தன் வாழ்க்கையைச் சமையலறைக்குள் ஒடுக்கிக்கொண்ட மனுஷி. அவள், நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள் சுட்டிருக்கிறாள். இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள், சோறு எல்லாம் தனிக் கணக்கு என்கிறார் கதை சொல்லி. இன்னொருத்தி கைநீட்டாத, கடை கண்ணிக்குக் கூட்டிப் போகும் கணவனைக் கனவு காணும் இளம் பெண்.
மூத்த மனுஷிக்கு பிள்ளைபெறுவதற்கும் சமைப்பதற்கும் அப்பால் ஒரு வாழ்க்கை இருக்கிறது. சமுத்திரம் மீது தீரா ப்ரியம் இருக்கிறது. கண்ணாடி மாதிரி கிடக்கும் ஒரு சமுத்திரத்தைச் சின்ன வயதில் பார்த்திருக்கிறாள். அதைச் சமுத்திர சாபம் என்கிறாள் அவள். அதனால் கணவரிடம் அடியும் வாங்கியிருக்கிறாள். இளம் பெண்ணுக்கு எல்லாவற்றையும் சுயமாகச் செய்ய விருப்பம். தனியாகக் கடைக்குப் போகவும் ஆசை. ஆனால், கதவு வரைதான் அவள் எல்லை. இந்த இரு பெண்களும் குடும்ப அமைப்புக்குள் எப்படித் தொலைந்துபோயிருக்கிறார்கள் என்பதை, டெல்லிவாசியான கதைசொல்லி அவர்களின் ஒரு நாளுக்குள் நிகழ்த்தும் குறுக்கீடு மூலம் இந்தக் கதை நமக்குச் சொல்கிறது.
அம்பையின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சினிமாக்களில், கதைகளில் இதுவரை பார்த்துப் பழக்கப்பட்ட காவிய நாயகிகள் அல்ல. அவர்கள் மதிப்பீடுகளுக்குள் வாழ்கிறார்கள். அதைக் காக்க முனைப்புக் காட்டுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையிலும் எந்த அதிசயமும் நிகழவில்லை. ஆனால் அம்பை கதைகள் வழியாக ஒரு குறுக்கீட்டை நிகழ்த்துகிறார். அம்பையின் மொத்தக் கதைகளும் பெண்களுக்கென உருவாக்கப்பட்ட ஒழுக்க விதிகள், மதிப்பீடுகள் ஆகியவற்றின் மீது நிகழ்த்தப்படும் குறுக்கீடுகள் என வரையறுப்பது பொருத்தமாக இருக்கும்.
...
அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. ஆங்கிலத்தில் இதே பெயரில் கட்டுரைகள் எழுதிவருகிறார். மும்பையில் வசிக்கிறார். ‘அம்பை சிறுகதைகள்’ முழுத் தொகுப்பும் ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ குறுநாவலும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. ‘காட்டில் ஒரு மான்’ கதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ஆங்கில இலக்கியத்தின் உயரிய விருதுகளுள் ஒன்றான ‘க்ராஸ் வேர்டு’ விருதைப் பெற்றுள்ளார்.
(ஏப்ரல் 22, 2018, தி இந்து, பெண் இன்று)

தனியறைக்கு வெளியே - சுகந்தி சுப்ரமண்யம் கவிதைகள்


தமிழில் பாரதி காலத்திலிருந்தே வசனக் கவிதை முயற்சிகள் தொடங்கின. அதற்குப் புதுக் கவிதை எனப் பெயரிட்டவர் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியன். அதற்கான உத்தேசமான இலக்கணங்களும் இந்தக் காலக்கட்டத்தில் முன்மொழியப்பட்டன. இதே காலகட்டத்தில் பெண்களும் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டனர். பூரணி, மீனாட்சி, திரிசடை என அந்தத் தொடர்ச்சி வரிசை இன்றுவரை நீண்டுவருகிறது. இவர்களுள் விசேஷமான கவிஞர் சுகந்தி சுப்ரமணியன்.
புதுக் கவிதை தொடங்கிய காலத்தில் அதன் வடிவமைப்பு குறித்துத் தீவிரமான விழிப்புணர்வு இருந்தது. கவிதைக்குள் என்னவெல்லாம் சொல்ல முடியும், அதைச் சொல்வதற்கான மொழி, ஓசை போன்றவை எல்லாம் விவாதிக்கப்பட்டன. அதனால் கவிதைக்குள் ஒரு வெகுளியான தன்மை இல்லாமல் ஆனது. கவிதையை விழிப்புணர்வுடன் எழுதுவதால் அதன் உண்மை ஒளி குன்றிப்போனது.
இந்தப் பின்ணியில் அணுகும்போது சுகந்தியின் கவிதைகள் பறவையின் சுதந்திரத்தையும் குழந்தைகளின் வெகுளித்தன்மையையும் ஆதாரமாகக் கொண்டவை. அவர் தன் வீட்டு ஜன்னல் வழியாகக் காணும் காட்சிகளை எல்லாம் கவிதைக்குள் ஆவலுடன் சொல்ல முயன்றிருக்கிறார். 
சுகந்தி, கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஆலந்துறையில் பிறந்தவர். அங்கு உயர்நிலைக் கல்வி பயின்றுகொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்குத் திருமணம் நடந்தது. கணவருக்கு, செகந்திராபாத்தில் வேலை. பள்ளிக் கல்விகூட முடித்திராத ஒரு சின்னஞ்சிறு கிராமத்துப் பெண், மொழியறியாத ஒரு பிரதேசத்துக்குப் புலம்பெயர்கிறார். புது இடத்தை அணுகுவதில் உள்ள சுவாரசியம், பதற்றம் இரண்டும் இவரது கவிதைகளில் இருக்கின்றன.
மொழியறியாத அந்த ஊரில் அவருக்கு சிநேகிதிகள் கிடைத்ததை, சந்தோஷத்துடன் அவரது கவிதையில் சொல்கிறார். ‘பச்சை மிளகாய் இல்லாத எதிர் வீட்டுக்காரி அவளின் பாஷையுடன் அறிமுகமானாள்’ எனத் தொடங்கும் அந்தக் கவிதையில், சர்க்கரை, காபித் தூள், தக்காளி என ஒவ்வொரு பொருளையும் கேட்டுத் தோழிகள் பெருகுகிறார்கள். ‘பாஷைகளை மீறி பேச நிறைய இருக்கிறது’ என முடிகிறது அந்தக் கவிதை. இதில் பெண்களுக்குள் எனச் சேர்த்து வாசித்துப் பார்த்தால் அவரது உணர்வைப் புரிந்துகொள்ள முடியும்.
சுகந்தியின் கவிதைகளின் தனித்துவம், ஒரு மாபெரும் புரட்சியைக்கூட தாழ்ந்த தொனியில் சொல்வது. ஒரு சாதாரண பெண் காய்கறி நறுக்கும்போது பகிரும் விஷயத்தைப் போல் சுகந்தி தன் கவிதைகள் வழியாக பெண்ணின் பிரச்சினைகளைப் பகிர்ந்திருக்கிறார். பெண்களுக்கு இயற்கையாக வரும் மாதவிடாய் காலத்தில் அவள் நடத்தப்படும் விதத்தை, ‘தனியிடம் உருவானது இங்கே, நீ புதிதாய் வயதுக்கு வந்ததற்கு. குறைந்தபட்சம் நீ ஒரு குட்டிப் பிச்சைக்காரி ஆகிவிடுகிறாய்’ என்ற அவரது ஒரு கவிதை, அதனால் ஏற்படும் நிவாரணமில்லாத வயிற்றுவலியையும் கால்குடைச்சலையும் அவல நகைச்சுவையுடன் சொல்கிறது.
கணவர், பாட்டி, தோழிகள் என அவரது கவிதைக்குள் மனிதர்கள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் அல்லாமல் பிச்சைக்காரி, பெரியம்மா போன்ற சில கவிதை மாந்தர்களும் வருகிறார்கள். நிஜமான மனிதர்களைக் கவிதைக்குள் சுகந்தி அழைத்துவந்திருப்பது வாசகர்களுக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. கவிதைக்கும் உண்மை ஒளியை ஏற்றுகிறது. பொதுவாகக் கவிதைகள் என்றவுடன் அந்நியமான கற்பனைகளை வார்த்தைகளாகத் தொடுக்காமல் தன்னையும் தன் சுற்றத்தையும் எளிய மொழியில் சுகந்தி சொல்லியிருக்கிறார். கவிதையை ஒரு குரோட்டன்ஸ் செடியைப் போல் தன் அறைக்குள்ளேயே வளர்த்திருக்கிறார்.
பெண்களின் உலகைச் சொல்லும் ஒரு கவிதையில், அவரது ஊரின் ஆறு எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனக் கேட்கிறார். அவரது பாட்டி ஆற்றங்கரைக்குக் கூட்டிப் போயிருக்கிறார். ஆனால் பெரிய பெண்ணானதும் சுவருக்குள் மட்டும் என்றாகிவிடுகிறது வாழ்க்கை. ஆற்றை வேடிக்கைகூடப் பார்க்க முடிவதில்லை. திருமணம் ஆனவுடன் சிறு சுதந்திரம் கிடைக்கிறது. ஆறு எதுவரை போகிறது எனக் கணவரிடம் கேட்கிறார். அவரும் ஒரு 50 மைல் தள்ளி ஆற்றின் அணையைக் காட்டுகிறார். ஆறு அதுவரை மட்டுமா போகிறது? ‘ஆனாலும் ஆறு போய்க்கொண்டிருக்கிறது’ என்கிறார். சுகந்தியின் கவிதைகள் பெண் என்ற தன்னியல்பை மீறியும் சில இடங்களில் பாய்ந்திருக்கின்றன. பொதுவாக அவரது கவிதைகளில் காணப்படும் கதைத்தன்மை, அவரது இம்மாதிரியான கவிதைகளில் இல்லை. அவை முழு வீச்சுடனும் திடகாத்திரமான மொழியுடனும் வெளிப்பட்டுள்ளன. சுகந்தியின் இந்த வகைக் கவிதைகள் தம் இருப்பையே கேள்வி கேட்பவை.
எழுதுவது அவருக்கு மாபெரும் சுதந்திரத்தை அளித்திருக்கிறது என்பதை அவரது கவிதைகள் மூலம் உணர முடிகிறது. அவரது அறையைத் தாண்டி, கவிதையின் வழியாகப் பயணிக்க முடிந்திருக்கிறது. ‘சுதந்திரம் என்பது கலை, கவிதைகளை உருவாக்கும்’ என்கிறது அவரது ஒரு கவிதை.
இருத்தல் குறித்த கேள்விகளை எழுப்பிய அவரது கவிதைகளுக்கு, அதற்கு ஏதுவாக மரணத்தைக் குறித்த ஆவலும் இருந்திருக்கிறது. ‘சுத்தமான மனசுக்குள் சங்கல்பமாகும் சுதந்திரம் நம்மை நம்மிடமிருந்து விடுவிக்கும்’ என்கிற அவரது கவிதைபோல் 2009-ல் ஒரு மனநல விடுதியில் இந்த உலக இருப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் சுகந்தி.
...
ஒரு கவிதை முழுக்க ஒரே விஷயம்
எத்தனை வீர சாகசம் பெண்ணே!
முதல் வரியில் வந்தது
குழந்தைச் சிரிப்பு மனதில்
இரண்டாவதில் தண்ணீர் பிடிச் சண்டைகள்
மூன்றாம் வரியில் குளிரில் விறைத்துச்
செத்த லட்சுமி கிழவி
நான்காவதில் கேஸ் தீர்த்த அலுப்பில்
ஸ்டவ்வின் உதவியான இம்சைகள்
ஐந்தாம் வரியில்
ஓசியில் டிவி சினிமாவுக்கு
அலைந்து கதவு தட்டும் குழந்தைகள்
ஆறாவதாய் சின்னம்மாவின்
மெனோபாஸ் கஷ்ட அழுகைகள்
ஏழாவது வரியில்...
இன்னும் சமையல் ஆகவில்லை
இன்னொரு கடைசி வரியாய்
கவிதையை முடிக்க ஒரு வரி
சொல்லேன் பெண்ணே!
...
(புதையுண்ட வாழ்க்கை (அன்னம்), மீண்டெழுதலின் ரகசியம் (தமிழினி) ஆகிய இரு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. அவரது வெளிவராத கவிதைகள், சிறுகதைகள், டைரிக் குறிப்புகளை ஆகியவற்றைச் சேர்த்து மொத்த தொகுப்பாக சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் என்ற பெயரில் டிஸ்வரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது.)
- மண்குதிரை
(தி இந்து, 15, ஏப்ரல், 2018)

மஞ்சள் வருத்தம், மஞ்சள் சந்தோஷம்


உலகத்து இருளையெல்லாம் ஒன்று திரட்டிய பேரிருள் போன்றது மனத்தின் இருட்டு. அதன் சஞ்சலங்கள், தாபங்கள் போன்ற வெளிப்பாட்டு உணர்ச்சிகள் எல்லாம் மின்னல் கீற்றுகள். இந்த இருளிலிருந்து விடைபெற்று விடியலில் சாசுவதம் கொள்ளத் துடிக்கும் மன எழுச்சியை மெளனியின் கதைகள் எனலாம்.
தமிழில் உரைநடை பதமாகிவந்த காலகட்டத்தில் கதைகள் எழுதத் தொடங்கியவர் மெளனி. 1936-ல் அவரது முதல் கதை வெளிவந்தது. அவரது கடைசிக் கதை 1971-ம் ஆண்டு வெளிவந்தது. சில காலம் மெளனி எழுதாமலும் இருந்திருக்கிறார். மொத்தம் 24 கதைகளே அவரது இலக்கியப் பங்களிப்பு. ஆனால் அவற்றுக்குள் தன் புழங்கு மொழியை நெருப்பிலிட்ட பொன்னைப் போல் பொலிவேற்றியிருக்கிறார். கதை வடிவத்தையும் புடம்போட்டிருக்கிறார். நேராகக் கதை சொல்லும் பாங்கிலிருந்து விலகி ஒரு அரூபத்தை விதைத்துப் பார்த்திருக்கிறார். இந்தத் தன்மைகள் அவரது கதைகளுக்கு விநோதத்தை அளித்திருக்கின்றன. இந்த விநோதம் வாசகனை விலகச் செய்வதல்ல; உள் நோக்கி ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
மெளனியின் கதைகள் பெரும்பாலானவை மனத்திற்குள்ளேயே நிகழ்பவை; ஒற்றைத்தன்மையிலானவை. ஆனால் படர்க்கையில் மொழியப்பட்டிருக்கும் கதைகளும் தன்னிலை விவரிப்பாக மாறக்கூடிய விசேஷ குணம் கொண்டவை. உதாரணமாக ‘காதல் சாலை’, ‘ஏன்’, ‘பிரபஞ்ச கானம்’ ஆகிய கதைகள் வேறு ஒருவரின் கதையைச் சொல்வதுபோலத்தான் தொடங்குகின்றன. ஆனால் கதையோட்டத்தில் கதைசொல்லிக்கும் கதைமாந்தருக்குமான இடைவெளி குறைந்து, படர்க்கை, தன்னிலையாக ஆகிவிடுகிறது.
மெளனிக்குக் கதைகளை உரையாடல் மிக்கதாக உருவாக்க விருப்பமில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் தாக்கத்தால் பரவலான இந்த மாற்றத்தை மெளனி முன்பே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். உரையாடல்களால் ஆன கதைகளையும் மெளனி எழுதியிருக்கிறார். ஆனால் அதன் வெளிப்பாடு பலவீனமானது. மன எழுச்சியை விவரிப்புகளுடன் சித்திரிப்பதில்தான் மெளனி சுதந்திரமாக உணர்கிறார் எனலாம். அதில்தான் அவரது ஆற்றலும் வெளிப்படுகிறது.
மெளனியின் கதைகள் நடுத்தரவர்க்கக் குடும்பச் சூழலைப் பின்னணியாகக் கொண்டவை. ஆனால் ஜீவிதக் கவலைகள் எல்லாம் அவற்றுக்குப் பெரிதாக இல்லை. அந்தக் காலகட்டத்தின் சமூக நிலை சார்ந்த கதைகளையும் மெளனி எழுதியிருக்கிறார். ஆனால் அவரது கதைகள் அகப் பாய்ச்சலுக்கானவை என்பது என் துணிபு. காக்கை கரைவது, மரங்களின் நிழல்கள் நீரில் ஆடுவது போன்ற வெளியுலகச் சூழலைத் தன் மனநிலையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் விதத்தில் மெளனியின் கதைகள் தமிழ்ச் சங்க இலக்கியக் காட்சிகளுடன் ஒப்பிடத்தகுந்தவை. அக்ரஹார இருட்டில் உள்ள பெண்களை, ஜன்னல்வெளி ஒளியைப் போல் சித்திரிக்கிறார். பெண்கள், நோவு தரும் அழகுப் பதுமைகள் மட்டும்தானா? என இந்த நூற்றாண்டில் கேள்வி எழுப்பினால், அவர்களின் பாடுகளையும் மெளனி விவரித்திருக்கிறார். ‘சாவில் பிறந்த சிருஷ்டி’ அதற்கு ஓர் உதாரணம்.
மெளனியின் ‘பிரபஞ்சகானம்’ அவரது சிறந்த கதைகளுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. மனப் பிரவாகத்தின் ஆவேசமான வெளிப்பாட்டைக் கொண்டது இக்கதை. அவள் எதிர் வீட்டிலிருக்கிறாள். நன்றாகப் பாடக்கூடியவள். வீணையும் வாசிப்பாள். இவன் இங்கு இருக்கிறான். அவளைப் பார்க்கிறாள். அவள் எப்போதாவது இவனைப் பார்த்தாளா?
பிரபஞ்சத்தின் கானமான அவள் பாடக் கூடாது என டாக்டர் சொல்லிவிடுகிறார். அவள் பாடாமல் இயற்கையே குறைவுபட்டதுபோல் ஆகிவிடுகிறது என்கிறார் மெளனி. இங்கே மனத்தின் குறை இயற்கையின் குறையாக ஆகிறது. பாடினால் இறந்துபோய்விடுவாள் என்றாலும் இயற்கை சாசுவதம் கொள்ள அவள் பாட வேண்டும். இயற்கையின், மனத்தின் சாசுவதத்துக்காக அவள் பாடத் தொடங்குகிறாள். அவளது சங்கீதம், பிரபஞ்சம் கானமாக எங்கும் வியாபகம் கொள்கிறது. இந்தக் கதையின் காட்சிகள் செவ்வியல் தன்மை கொண்டவை. அவள் ஆற்றில் குளித்துவிட்டு, ஆடைகளை நனைத்துக் கொண்டிருக்கும்போது இவன் செல்கிறான். ஒரு குடியானவள் சாணி தட்டிக்கொண்டிருக்கிறாள். இவன் தலைக்கு மேலாகப் பறக்கும் மீன்கொத்தியொன்று, மீனைக் கொத்தி எழுகிறது. மறு கரையில் நாரைகள் நீரில் தங்கள் உருவம் பார்த்துக்கொண் டிருக்கின்றன. இந்தப் புறக் காட்சிகளை மெளனி தன் மன எழுச்சியின் ஸ்தூல வடிவாகக் கதையில் பிரதிஷ்டை செய்கிறார்.
‘ஏன்’ கதையிலும் ஒரு எதிர் வீட்டுப் பெண் வருகிறாள். அவள் மீதும் இவன் காதல் கொள்கிறான். காலங்கள் கடக்கின்றன. அவன் மேற்படிப்புக்காக வெளியூர் போய்விடுகிறான். அவளுக்குக் கல்யாணமும் ஆகிவிடுகிறது. ஒரு விடுமுறைக் காலத்தில், திண்ணையில் அவள் குழந்தையுடன் அவளைப் பார்க்கிறான். அவளும் புருவம் உயர்த்திப் பார்க்கிறாள். அவன் குழம்பிப் போகிறான். அவனது சந்தோஷம் போய்விடுகிறது. அவன் ஜுரம் கொண்டு படுக்கையில் விழுகிறான். அவன் பிரேதத்தைக் கொண்டுபோகும்போது அவள் அதே திண்ணையில் அதேபோல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கவிதைக்குரிய விநோதங்களைக் கொண்டவை இந்தக் கதைகள்.
இறுக்கமும் உவமைக் கட்டுகளும் நிறைந்த மொழிநடை மெளனியுடையது. மரபிலிருந்து விலகிய கவிதைகளை முன்மொழிந்த க.நா.சுவையும் மரபின் பாதிப்பை ஆழமாகப் பிரதிபலித்த பிரமிளையும் கவர்ந்தவராக மெளனி இருந்திருக்கிறார். இது கவனிக்கதக்கது. மெளனியின் மொழிக்கு அந்த ஆற்றல் இருந்திருக்கிறது. பிரபஞ்சப் பூவைப் போல உதயத்தையும் அந்தியையும் விவரிக்கிறார். இது பிரமிளைக் கவரக்கூடியது. சொல் வண்ணத்தில் புதுமையைப் புகுத்திப் பார்க்கிறார். இது, க.நா.சு.வை அபிப்ராயப்படவைப்பது.
மெளனியின் கதைகளில் சித்திரிக்கப்படும் இயற்கை விவரிப்புகள் விஷேசமானவை. மேகங்களைக் கூட்டி வைத்த தீ என அந்தியைச் சொல்கிறார். காட்சி மயக்கம் கொண்ட அந்தியும் புலரியும் அவருக்கு ஒன்றுதான். அவற்றை அவர் பாணியில் மஞ்சள் வருத்தம், மஞ்சள் சந்தோஷம் எனலாம். அவற்றைத் திரும்பத் திரும்பக் காட்சிப்படுத்துகிறார். அந்தியின், புலரியின் காட்சி மயக்கத்துடன் மெளனியின் மொத்த கதைகளின் விநோதத்தையும் ஒப்பிடலாம். அவரது கதைகளின் இந்தச் சூழ்ச்சி வாசகனை வசீகரிக்கக்கூடியது.
இந்த மேகக் குவியல்கள் போன்ற மனத் திணறல்களிலிருந்து சூரியனைப் போல் வெளிப்படுவதுதான் மெளனி என்னும் கதை மனத்தின் பிரயாசம். ஆனால் அந்த மனத்தின் நோக்கம், சூரியோதயம் என்னும் சாசுவதம் அல்ல; மேக மூட்டத்திலேயே உழலும் அசாசுவதம்தான்.
- மண்குதிரை (ஜூன் 12, 2016)

ஆதிக்கங்களின் கதை


ஈழத் தமிழ் இலக்கியத்தைப் போல் தனித்துவம்கொண்டது மலையகத் தமிழ் இலக்கியம். இலங்கைச் சுதந்திரத்திற்குப் பிறகுதான் வடக்கில் பிரச்சினை. ஆனால் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோட்டப் பயிரிடுதலுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்ட காலத்திலிருந்தே தொடங்குகிறது மலையகத்தின் பிரச்சினை. அங்கு நிலவுடைமை ஆதிக்கத்தில் அடிமைப்பட்ட தங்கள் தினப்பாட்டை பாட அங்கு இலக்கியம் பாடலாக வடிவெடுத்தது.
...
20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் மலையகம் என்னும் பதம் பரவலான பயன்பாட்டுக்கு வருகிறது. ஆனால் மலைநாட்டின் இலக்கியத்தின் வரலாறு முன்பே தொடங்கிவிட்டது. 1869-ல் பிரிட்டிஷாருக்காக ஆப்ரஹாம் ஜோசப்பால் இயற்றப்பட்ட கோப்பிக் கிருஷிக் கும்மி மலையகத்தின் முதல் நூல்.
மலையக உரைநடை இலக்கிய நூல்கள் 1920 வாக்கில் வெளிவரத் தொடங்கிவிட்டன. அடுத்த சில பத்தாண்டுகளுக்குள் நாவல்களும் வெளிவந்தன. ஆனால், மலையகத்தின் நாவல் எனச் சொல்லிக்கொள்ளும் யோக்கியதை உள்ள நாவல் என சி.பி.வேலுப்பிள்ளையின் ‘வாழ்வற்ற வாழ்’வை (1959) ஆய்வாளர்கள் சாரல் நாடன், க. அருணாசலம் ஆகியோர் முன்மொழிகிறார்கள். இதற்கு அடுத்து முன்மொழியப்படும் நாவல் கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சை’.
இந்த இரு எழுத்தாளர்களுக்குப் பிறகு மலையக இலக்கியத்தில் முன்னிலைப்படுத்தக்கூடிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப். 1960-களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர் ஜோசப். தற்காலச் சமூக நிகழ்வுகளைக் கதைப் பின்னணியாகக் கொண்டு சிறுகதை இலக்கியத்தின் தேர்ந்த நுட்பங்களுடன், தன் கதைகளை இவர் சிருஷ்டித்தார். இந்தத் தன்மை தமிழ் இலக்கியத்தில் தனிக் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இவரது ‘குடை நிழல்’ 2010-ம் ஆண்டு வெளிவந்த நாவல். ஆனால், இந்த நாவல் அதற்கு முன்பே வீரகேசரியில் தொடராக வெளிவந்துள்ளது.
...

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள இனவாத எழுச்சி, ஆட்சியாளர்களால் உருவாக்கப்படுகிறது. இதற்கு எதிராக வடக்கில் போராட்டக் குழுக்கள் ஆயுதங்களை எடுக்கத் தொடங்குகின்றன. இந்த இரு சமூக நிகழ்வுகளும் எப்படி ஒரு சாமானியனின் அன்றாடத்திற்குள், மலையகக் காட்டு விலங்குகளைப் போல் இறங்குகின்றன, என்பதைச் சித்திரிப்பது ‘குடை நிழ’லின் பிரதான நோக்கம்.
கொழும்பு நகரத்தில் புலம்பெயர்ந்து வாழும் மலையகத் தமிழ்க் குடும்பத்தின் கதையாக இந்த நாவல் விரிவுகொள்கிறது. ஆனால், இதன் பகைப்புலன் கொழும்பையும் தாண்டி நீள்கிறது. சிங்கள அரசின் ஆதிக்கத்தையும் மலையகக் கங்காணிகளின் ஆதிக்கத்தையும் காட்சிப்படுத்துகிறது. சொந்த வீட்டுக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தையும் சொல்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் இதை ஆதிக்கத்தின் கதை என்கிறார்.
நல்லுறக்கத்தில் இருக்கும் ஒரு சாமானியன் வீடு, பலமாகத் தட்டப்படுவதில் சட்டெனக் கதையைத் தொடங்கிவிடுகிறார் ஜோசப். தட்டுவது இலங்கைப் போலீசார். சந்தேகப்படும் நபராக கதைசொல்லி கைதுசெய்யப்படுவதில் இருந்து, கதை பின்னோக்கி தன் சிறகை விரிக்கிறது. ஒருவகையில் வாடகைக்கு வீடு தேடி அலைந்த சாமானியனின் கதையாகத்தான் ஜோசப் நாவலை நகர்த்திச் செல்கிறார். அவன் திராணிக்கு ஏற்றபடியான விஷயங்களைத்தான் கதையும் சொல்கிறது. ஆனால், அவை அந்தச் சூழலின் தன்மையால் முக்கியமான கருத்தாக வெளிப்படுகிறது.
பிள்ளைகளைத் தமிழ்வழிப் பள்ளியில் சேர்ப்பதற்காக வீடு மாற நினைக்கிறான் கதைசொல்லி. வீடு மாறியிருந்தால் இந்தப் போலீஸிடம் பிடிபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வீடு தேடும் பிரச்சினைதான், இலங்கையின் வெலிகடாச் சிறைவரை கொண்டுபோய் அவனை நிறுத்திவிடுகிறது. இதற்கிடையில் இந்தச் சித்திரிப்பில் திகிலூட்டும் விவரிப்போ வன்முறையோ இல்லை. ஆனால் இவை எல்லாம் கதைசொல்லிக்கு அருகிலேயே நிகழ்கின்றன; எந்த நேரமும் அவனுக்கும் நிகழலாம் என்பதைப் போல.
...
இலங்கைக்கு வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு ‘தமிழர்-சிங்களவர்’ என்னும் இரு அடையாள மோதல்கள் மட்டுமே. ஆனால் உள்ளே தமிழர் என்னும் அடையாளத்துக்குள்ளே ஈழத் தமிழர், மலையகத் தமிழர், தமிழ் இஸ்லாமியர் என்னும் மூன்று முரண்கள் உள்ளன. அவற்றை இந்த நாவல் பதிவுசெய்துள்ளது. வெலிகடா சிறையில் தமிழில் பேசும் போலீசிடம் கதைசொல்லி கேட்கிறான், ‘நீங்கள் தமிழா?” என்று, “இல்லை, முஸ்லீம்…” என்று அதற்குப் பதில் வருகிறது. யாழ்ப்பாணப் பிரச்சினையில் மலையகத் தமிழருக்கு அவ்வளவு கவனம் இல்லை என்ற தொனியும் நாவலில் உண்டு. ஆனால் அதன் பின்விளைவுகள் தமிழ் பேசும் எல்லோருக்கும் பொதுவானது என்பதையும் நாவல் உணர்த்துகிறது.
கதை தொடங்கியதில் இருந்து, சாமானியனான கதைசொல்லி தன் இயல்புகளையே பகடிசெய்துகொண்டே இருக்கிறார். இது அவல நகைச்சுவையாக வெளிப்பட்டுள்ளது. சரியாகப் பூட்டாத வாசல் கதவை போலீசாருக்காகத் திறந்துவிடுவதில் இருந்து, வெலிகடா சிறைக் கம்பிகளுக்கு இடையில் ஒரு பன்றியைப் போல் ‘மூஸ் மூஸ்’ என்று மூச்சை விட்டுக்கொண்டு காத்திருப்பதுவரை, இதைப் பார்க்க முடிகிறது. இந்த அம்சத்தில் அசோகமித்திரனின் விவரிப்புடன் ஜோசப்பின் மொழியை ஒப்பிடலாம்.
...
ஜோசப் கதைச் சம்பவங்களை ஒன்றபின் ஒன்றாக அடுக்கிச் செல்வதில் உள்ள தெளிவு விஷேசமானது. அதனால் கதை, விவரிப்புகளின் கோவையாக அயர்ச்சி தராமல், சம்பவங்களின் கோவையாக வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன. மிகப் பெரிய வன்முறையை சிறு சம்பவங்கள், சொற்கள் கொண்டு உருவாக்கும் திராணியும் இந்த நாவலின் கவனிக்கத்தக்க அம்சங்கள். இந்த நூற்றாண்டின் பெரிய வன்முறையை தன் வீட்டின் சமையற்கட்டில் நடக்கும் ஒரு காட்சியாகச் சொல்ல அவரால் முடிகிறது. சந்தையிலிருந்து வாங்கி வந்த மீனின் வயிற்றில் ஒரு துண்டு விரல் இருக்கிறது. ஓர் அதிர்ச்சியூட்டும் காட்சி, அவர்களது அன்றாடத்திற்குள் நிகழ்கிறது. மகள் அதுமுதல் மீனே சாப்பிடுவதில்லை எனக் கடக்கிறார் கதை சொல்லி.
மலையகத்தைப் பாகற்காய் என்கிறார். அதன் உள்ளே கிடந்த பூச்சி நான் என்கிறார். இந்த உருவகம் மலையகத்தின் மொத்த இன்னலையும் ஒரு உமிழ்நீர்ச் சுவைப்பில் உணர்த்திவிடுகிறது எண்ணுக்கும் எழுத்துக்குமான வாழ்க்கைத் தொடர்பை விவரிக்கும் விதத்தில், இந்தப் படைப்பு வாசகனுக்கு மிகுந்த மனவெழுச்சியைத் தருவதாக உயர்ந்துவிடுகிறது.
...
வெலிகடா சிறையில் இரண்டாவது தளத்திலிருக்கும் அப்பாவியான கதைசொல்லி, பத்திரிகைகளில் வருவதுபோல மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பும் கதையில் இருக்கிறது. ஆனால், குற்றமற்ற அவன் முறையாக வெளிவரும் வாய்ப்பு இருக்கும் என நம்புகிறான். அதற்கான ஜனநாயக நம்பிக்கையை விதைப்பதுடன் நாவல் முடிகிறது. ஆனால், அது துளிர்விட்டதாகத் தெரியவில்லை.

❌