வேடன் என்றால் என்வென்று யோசிபீர்கள், சங்க இலக்கியத்தில் வேட்டுவன் என்ற சொல் பாவனையில் இருந்திருக்கிறது. வேடன் என்றால் வேட்டையாடுபவன் என்றும் பொருள் படலாம். நான் இங்கே சொல்ல வந்தது ‘வேடன்’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு பாடகனைப் பற்றியது. இவர் பாடல்களையும் எழுதியிருக்கின்றார். இன்று எங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் சொல்லாகவும் இந்த வேடன் சொல் இருக்கின்றது.
ஹிரந்தாஸ் முரளி என்று சொல்லப்படும் 30 வயதான இவரது தந்தை கேரளாவையும், தாயார் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்கள். இவர் திருச்சூரில் பிறந்தார். இவர் தனது மார்பிலே ‘அ’ என்ற தமிழ் உயிரெழுத்தின் முதல் எழுத்தைப் பெரிதாகப் பச்சை குத்தியிருப்பதால், தமிழ் இசைப் பிரியர்களின் பார்வை இவர்மீது திரும்பியது. பாலக்காட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது இதுவரை இவ்வளவு கூட்டம் எந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கும் சேரவில்லை என்று அறிவிப்பாளர் குறிப்பிட்டார். கனடாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்கூட இவரது பாடல்வரிகளுக்கு ஏற்ப பாவனை செய்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கின்றார்.
ஒரு காலத்தில் மைக்கல் ஜாக்ஸன் எப்படி பரதநாட்டியத்தை தனது காணெளியில் கலந்து வெளியிட்டுத் தமிழர்களிடையே பிரபலமானாரோ, அதேபோல இவர் தமிழர்களின் பறை இசையைக் கலந்து கேரள மக்களைக் கவர்ந்து வருகின்றார். இதைவிட ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான இவரது பாடல் வரிகளுக்காக ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தனது முதல் இசை காணெளி மூலம் அவர் பிரபலமானார். ‘பூமி என்ஜன் வாழுனிதம்’ என்ற இசைத்தட்டு அடுத்து வெளிவந்ததும் இன்னும் ரசிகர்கள் அதிகமாயினர்.
ஒருவர் தனது துறையில் வேகமாக வளர்ந்து பிரபலமாகும் போது, அவர்மீது அவதூறு சொல்லவும் சிலர் இருப்பார்கள். தங்களால் முடியவில்லையே என்ற ஆதங்கம் வெறுப்பாக மாறலாம். அதுவே பிரபலமனவரை பெண்களுடன் தொடர்பு படுத்தியோ அல்லது போதை வஸ்துவுடன் தொடர்பு படுத்தியோ சில பொது ஊடகங்களில் உள்ளவர்கள் அவதூறுகளை எழுதத் தொடங்கிவிடுவார்கள். இவர் முகநூலில் பெண்களைப் பற்றி தவறாக எழுதினார் என்றும், இவரது நண்பர்கள் போதை வஸ்;து வைத்திருந்தனர் என்றும், தனது கழுத்திலே புலிப்பல்லைக் கட்டித் தொங்கவிட்டார் என்றெல்லாம் இவர் மீது குற்றங்கள் சுமத்தப்படன.
வேடனை முளையிலே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்று சில பிரபலங்கள் முயற்சி எடுத்தார்கள், எந்தப் பொலிஸார் கைது செய்து காவலில் வைத்தார்களோ அவர்களே இப்போது பாதுகாப்பாய் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதற்குக் காரணம் மக்கள் குரல் அவருக்குப் பின்னால் இருப்பதுதான்.
இசையுலகில் நீர்க்குமிழி போல உடைந்து போவாரா அல்லது இதையெல்லாம் கடந்து இவர் செல்வாரா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க முடியும்.
இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த மன நெருக்கடிக்கு இவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. கடந்த ஒரு மாதமாக எல்லோரிடமும் விவாதங்கள் நடந்தபடிதான் இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். அடுத்து என்ன படிக்க வைப்பது அதை எங்கு படிக்க வைப்பது என்கிற ஆலோசனைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.
இவ்வளவிற்கும் பெருமாள் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர் மனைவி மல்லிகா படித்தவர். படிக்கப்போகும் மதியரசி விவரமான பிள்ளை. இங்கு அறிவாளியாக இருந்தாலும் எதிர்காலம் பற்றிய சுய கணிப்புகள் இருந்தாலும் சொந்த பந்தங்களின் ஆலோசனைகள் முக்கியம். எல்லோரும் எந்த திசை நோக்கி ஓடுகிறார்களோ அதில் ஓட வேண்டும்.
மதியரசியைவிட அவள் அண்ணன்தான் பாவம். எல்லோரையும் அனுசரித்து போகும் குணமுடையவன். அவன் படிப்பின் ஆரம்பமும் அப்படித்தான் அமைந்தது. மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று மக்கள் தீவிரமாக பைத்தியம் பிடித்த காலத்தில் அவன் பிறந்தது. பாவம் அவன் செய்த தவறில்லை.
மாநிலத்தில் முதல் இடம் பிடித்து அதனால் கல்லா கட்டிய பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் தான் அவனைச் சேர்த்தார்கள். வெளி முகப்பின் அலங்காரத்திற்கும் உள்ளே நடந்து கொண்டு இருப்பது முற்றிலும் வேறாக இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் நன்றாகப் படித்ததால் அதன் நன்மைகளை பள்ளிகள் அறுவடைகள் செய்கிறது என்பதனை மல்லிகா கொஞ்ச நாளில் புரிந்து கொண்டார்.
“எனக்கு என்னமோ தவறான பள்ளியில சேர்த்துட்டோமோன்னு கவலையாக இருக்குங்க. “
“எப்படிச் சொல்றே. “
“குறைந்த சம்பளத்துக்கு கண்ட பேரை ஆசிரியராக போட்டு வச்சிருக்காங்க.”
“அப்படி எல்லாம் பண்ண முடியாது. அதுக்கெல்லாம் ரூல்ஸ் இருக்கு. உன் மகனை ஒழுங்காப் படிக்க வைக்கிற வேளையைப் பாரூ. வீட்டில் ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுத வச்சி. வீட்டில் படிக்கிறானான்னு கவனி.”
பெருமாள் வாத்தியார் காலையில் வயலுக்குப்போவது பள்ளி முடித்து வயல் வேலைகள் நடைபெறுவதை பார்த்து கூலி கொடுத்துவிட்டு வருவது. பிறகு சமூகநலப் பணிகள் என்று நண்பர்களோடு ஏதாவது எங்காவது கூட்டங்கள் அது தொடர்பான வேலைகள் என்று இருந்ததால் அன்பரசன் படிப்பு முழுவதும் மல்லிகாவே கவனிக்க வேண்டியதாகிவிட்டது.
எல்லாப் பள்ளிகளும் மனப் பாடம் செய்வதற்கு பயிற்சி அளித்தது போல அன்பரசன் பள்ளியும் அதைத்தான் செய்தது. தேர்ந்த மனப்பாடம் செய்தவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றார்கள். அவனை அந்தப் பள்ளியில் சேர்த்த பிறகும் சிலர் சரியாக வாந்தி எடுத்ததில் மாநிலத்தின் முதல் இடங்களுக்குள் இருந்தார்கள்.
கல்யாணம், காட்சிகளுக்கு ‘பையன் எங்கே படிக்கிறான்’ என்ற கேள்விக்கு பள்ளியின் பெயரை சொல்வது அவர்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பெருமையாக இருந்தது.
விரைந்தோடி பணம் பண்ணும் உலகில் அன்பரசனைப் போன்றவர்களுக்கு தகுந்த மாதிரி சொல்லிக்கொடுக்க இங்கு யாருக்கும் நேரமும் இல்லை அதற்கான பொறுமையும் இல்லை. அவன் மத்திமத்தின் கீழேயே மதிப்பெண்கள் எடுத்தான்.
பெருமாள் வாத்தியார் அவனை மருத்துவராக்கும் பெரும் கனவில் இருந்தார். அதற்கும் காரணம் இருக்கிறது. அவர் படிக்கும்போது அவர்தான் வகுப்பின் முதல் மாணவன். அவர் பதினோராம் வகுப்பு படிக்கும் போது அன்றைய அரசின் கல்வியாளர்கள் பஸ்ட் குரூப்பில் இருந்த பயாலஜியை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக காமர்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சென்ட்ரல் மெஷினிஸ்ட் என்று வைத்து பரிசோதித்து பார்த்து அடுத்த வருடமே பழையபடி கொண்டு வந்துவிட்டார்கள்.
அப்போது அதுபோல கல்வி மாற்றம் நிகழாமல் இருந்திருந்தால் மருத்துவர் பெருமாளாக மாறி இருந்திருப்பார்.
அன்பரசன் அதற்குப் பரிகாரமாக மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். விதியை அவர் அதிகமாக நம்புவதால் தன் மகன் வாழ்க்கையில் அது சரியாக அமைந்துவிடுமென நினைத்தார்.
விதி வினோதமாக அவர் வாழ்க்கையிலும் விளையாடியது. ஆவரேஜ் மதிப்பெண்களில் அன்பரசன் வெற்றி பெற்று இருந்தான். நீட் எக்ஸாம் மார்க்கை கிராஸ் செக் பண்ணதில் மைனசில் போனாலும் ஆச்சரிப்படுவதிற்கில்லை. அவரால் பணம் கொடுத்துக்கூட மருத்துவராக்க முடியாத மனவேதனை அடைந்தார். அவன் மதிப்பெண்களைப் பார்த்து கண்ணீர் விட்டு கேவிக் கேவி அழுதார்.
மதியரசி, அன்பரசன் இருவருமே அப்பா அழுது இதுவரைப் பார்த்ததில்லை. மல்லிகா ஒரு பக்கம் அழுது கொண்டு இருந்தார். அன்பரசன் அப்பா அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் இருந்தான்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பெரும்பாலும் ஏதாவது பேசி எல்லோரையும் மாற்றுவது மதியரசிதான். மதியரசி ஏதாவது செய்தால் தேவலாமென்று அம்மாவும் மகனும் நினைத்தார்கள்.
“இப்ப உட்கார்ந்து அழுவுறீங்களே அப்பா. ஒரு நாளாவது அவன் என்னப் படிக்கிறான். எத்தனை மார்க் வாங்கிறான். ஸ்கூலுக்குள்ள என்ன நடக்குதுன்னு நீங்கள் பார்த்தீங்களாப்பா. “
அவர் மனைவியைப் பார்த்தார். மல்லிகா இதற்குப் பேச வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். மல்லிகா அழுகையை நிறுத்தாமல் இருந்தது அவருக்கு கடுப்பாக இருந்தது. உன்னை நம்பித்தானே அவனை ஒப்படைச்சேன் என்று அவர் நினைத்ததாலும் அப்படி அவருக்கு தோன்றி இருக்கலாம்.
மதியரசி பேசியதில் அன்பரசனுக்கு கொஞ்சம் பயம் குறைந்தது.
“அம்மாவை ஏம்ப்பா பாக்கிறீங்க. பயலாஜிக்கல் பேரு எதுவும் மண்டையில நிக்க மாட்டேங்குதுன்னு என்கிட்ட எத்தனை நாள் அழுது இருக்கான் தெரியுமாப்பா. “
அவர் யார் பேசினாலும் கேட்கும் மனோநிலையில் இருந்தார். மதியரசி தன் தந்தையோடு அதிகம் பழகியதால் பலமுறை அவரது அப்பா பேசுவது போல மதியரசியின் பேச்சு இருப்பதாக நினைப்பார்.
“டாக்டர் படிப்பைப் பத்தி உங்களுக்கு என்னப்பா தெரியும். நீட் வேணும்ன்னு ஒன்றிய அரசு சொல்லுது. நீட் வேண்டாம் என்று மத்திய அரசு சொல்லுது. இரண்டு பேருமே தனக்கான சரியான நியாங்களைச் சொல்றாங்க. அதுக்குள்ள நான் போக விரும்பல.அந்த நீட் கொய்ஸ்ட்டீன் பேப்பரைப் பார்த்தீங்களா. அதுக்கும் அவன் டாக்டராகுறதுக்கும் என்னப்பா சம்பந்தம். எல்லாமே ஹைப்போதட்டிக்கல் கொஸ்ட்டீன்ம்ப்பா. தற்கொலை செஞ்சுக்கிற தற்குறிகளை நினச்சாதான் வெறுப்பாக இருக்கு. முதல் அவுங்க அப்பா,அம்மாவை தூக்கில போடணும். அதெல்லாம் நமக்குத் தேவை இல்லாதது.”
“…. “
“அவன் வயசும் வாலிபமும் தொலைஞ்சுப் போயிரும்பா. இன்னைக்கு எம். பி. பி. எஸ் மட்டும் படிச்சா போதாதுப்பா. எம்.டியும் முடிக்கனும். அத முடிச்சு ப்ராக்ட்டீஸ் செய்து வெளியே வர்றதுக்குள்ள முப்பத்தி ஐந்து வயது வந்துரும். அதன் பிறகு அவன் செட்டிலாக கொஞ்ச வருசம். நாற்பது வயசுல அவன் கல்யாணம் பண்ணா . அவன் பையன் காலேஜூக்கு போகும்போது அவனுக்கு அறுபது வயசாகும்ப்பா. பொம்புளைப்புள்ளைங்க நிலமை அதைவிட மோசம்ப்பா. பணவீக்கம் மாதிரி இது கல்வி வீக்கம்ப்பா. ஒரு துறையைத் தூக்கிப்பிடிக்கிறேன்னு மற்ற அனைத்தையும் சர்வ நாசமாக்கிக்கிட்டு வர்றாங்க. முதல்ல நீட்டுக்கு எக்ஸ்ட்ரா ஒரு வாய்ப்பு மட்டும் கொடுக்கனும். இருக்கின்ற பிரைவேட் நீட் ட்ரைனிங்க் சென்டரை குளோஸ் பண்ணிட்டு பள்ளிகளில் வைக்கலாம். இல்லேன்னா இந்த நீட்டைத் …. “
அப்போது யாரோ அன்பரசன் ரிசல்ட்ப் பற்றி கேட்கப் போன் செய்தார்கள்.
“அவன் குறைச்சலாக மார்க் எடுத்ததும் ஒரு வகையில் நல்லதுதாம்பா. ஏதாவது இஞ்சினியரிங் படிச்சிட்டு. அவன் வாழ்க்கையை ஜாலியாக ஓட்டட்டும்பா. “
ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு ஆசுவாசத்துக்குள் போனது.
“டேய்… இங்க வாடா. நமக்கு என்ன மார்க் வாங்க முடியுமோ அதான்டா. தூக்கிப்போட்டுட்டு ஜாலியாக இரு. டாக்டரைவிட அதிகமாக சம்பாதிக்கனும்ன்னு ஒரு ஆசை வை. இல்லை எதிர்காலத்தில் சாதிக்கனும்ன்னு ஒரு வெறியை வச்சுக்க. ” என்றார் பெருமாள் வாத்தியார்.
“மார்க்கை கொஞ்சம் சேர்த்து சொல்வோமாங்க. ” மல்லிகா.
” இல்லை. அப்படியே சொல்வோம். அது நம்மல கூச வைக்கும் பார்த்தியா. அதுதான் அவனுக்கு வெற்றியடைனும்ங்கிற வெறியைக் கொடுக்கும். “
மதியரசன் இதற்கிடையே அவனாகவே ஒரு மார்க்கை மனதிற்குள் ரெடி செய்து அதன் கூட்டுத்தொகை போட்டு வைத்தது வீணாகிப்போனதே என்று கவலைப்பட்டான். அப்பா இந்தப் பிரச்சினையை இதோடு விட்டாரே என்பதே அவனுக்கு இப்போது பெரிய நிம்மதியாக இருந்தது.
அவர்கள் அவர்களுக்குள் எப்போதும் ஒரு சந்தோசத்தை ஒரு மகிழ்ச்சியை ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் ஊரோடு பயணிப்பது தான் சிரமத்திலும் சிரமம்.
இப்படியாக போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையின் போக்கில் வந்த இந்த வருடத்தில் ஐநூறுக்கு நானூற்றி தொன்னூற்றி ஐந்து மதிப்பெண் பத்தாம் வகுப்பில் எடுத்திருக்கும் மதியரசி பெரும் மன நெருக்கடியில் சிக்கித் தவித்தாள்.
அன்பரசனுக்கு பிறகு ஐந்து, ஆறு ஆண்டுகள் கழித்துதான் மதியரசி பிறந்தாள். மதியரசி பள்ளியில் சேர்க்கும் வயதில் மல்லிகா உடல் சுவாதீனத்தில் சிக்கிக் கொண்டதால் அவளை பெருமாள் வாத்தியாரின் அப்பாவுடன் அவளை இருக்க வைக்க வேண்டியதாகிவிட்டது பெருமாள் வாத்தியாரின் அப்பா நேர்மைக்குப் பேர் போனவர். ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்.
‘நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்’ என்ற சிவவாக்கியர் பாடலை சொல்லி தன் நண்பர்களிடம் கிண்டலாகக் கேட்பார். காட்டுக்குள்ள சிவனேன்னு இருந்த சித்தர்களை யாருப்பா கோயிலுக்குள்ள அடச்சது என்பார். இதே அவரின் இஸ்லாமிய நண்பர்களிடம் ‘தொழுகை மூமீன்களின் மெஹ்ராஜ்’ என்கிறது நபி மொழி. நீங்கள் எப்பொழுதாவது மெஹ்ராஜ் சென்று இருக்கிறீர்களா என்பார்.
இவர்களின் குடும்ப நண்பர் வீட்டிற்கு வரும் பாதர் ஒருவரிடம் ஏற்பட்ட விவாதம் அந்த பாதரின் வாழ்க்கையில் மறக்க முடியாது. ‘உங்கள் மற்றாட்டங்களில் பரலோக இராஜ்யத்திற்குள் ஏன் பிரவேசிக்கமாட்டேங்கிறீர்கள் ‘ என்று ஆரம்பித்த விவாதத்தில் பாதர் மிரண்டு போனார். பெருமாள் வாத்தியாரின் அப்பா பைபிளை இந்தளவுக்கு நுணுக்கமாக ஆராய்ந்து வைத்திருப்பார் என்று அவர் எதிர் பார்க்கவில்லை. பாதர் ‘கர்தரிடம் உங்களுக்காக ஜெபிக்கிறேன் ‘ என்றதும் அப்போது கூட இருந்த மதியரசி வாய்விட்டு பயங்கரமாக சிரித்து இருக்கிறாள்.
எழுந்து நின்ற பாதரை பெருமாள் வாத்தியாரின் அப்பா கட்டியணைத்து கொஞ்ச நேரம் கண் மூடி அமருங்கள் என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி ஏதோ சொல்லிக்கொடுத்து இருக்கிறார். அவர் கொஞ்ச நேரத்தில் அழ ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு இவரின் நெருங்கிய நண்பராகிவிட்டார்.
ஓஷோ ஆசிரமத்தில் பலமுறை தங்கி இருந்தாலும் ‘லைப் ஈஸ் செலிபிரேசன்’ என்பதை அவரின் சீடர்கள் மிகவும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பார். அங்கு இருக்கும் பல சீடர்களுக்கு அவர் சமாதி எங்கு இருக்கிறதென்றே தெரியவில்லை என்று ஒரு முறை மதியரசியிடம் சொல்லி இருக்கிறார். கடவுள் மறுப்பார்கள், காம்ரேட்கள், புத்திஸ்ட்டுகள் இப்படி பற்பல நண்பர்கள் அவருக்கு உண்டு. அவர்கள் எல்லோரிடமும் அவர்களின் கொள்கையின் எதார்த்தத்தை எளிய கேள்விகளால் ஆதி எதார்த்தப் புரிதலுகுள் தள்ளிவிடுவதில் வல்லவராகவும் ஆகச்சிறந்த புரிதலுடைவராகவும் அவர் இருந்தார். அவரைப்போலவே மதியரசி பேசுவது பெருமாள் வாத்தியாருக்கு பெருமையாக இருக்கும். இப்போது அவர் இருந்தால் இந்தக் கதையே வேறு தளத்தில் கூட நடந்திருக்கலாம். அதுவும் பெருமாள் வாத்தியாருக்கு தெரியும்.
இடைவிடாது வந்த போன் கால்களுக்கு சிரித்து பதில் சொல்லியபடியே இருந்தார் பெருமாள் வாத்தியார். மல்லிகாவும் மார்க்கை சொல்லியபடி இருந்தார்.’எல்லாத்திலையும் செண்டம் மார்க் எடுத்து அவ ஸ்டேட் பர்ஸ்ட் வருவான்னு எதிர்பார்த்தேன்’ என்று அவருடைய தோழி புதுக்கோட்டை கார்த்திகா கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்தப்பக்கம் மல்லிகாவின் கல்லூரி தோழி கோயம்புத்தூரில் இருக்கும் ஆவுடையார் கோயில் ராதாவின் மகள் பிரியாவிடம் மதியரசி ‘நான் என் பேப்பரைக் கேட்கப்போறேன். அதோட கல்வியமைச்சருக்கு தனியா லெட்டர் போடப்போகிறேன்’ என்றதும்.
பெருமாள் வாத்தியாரும் மல்லிகாவும் பேசிய போன் கால்களை பேசி முடித்துவிட்டு மதியரசி பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.
“என்னம்மா… ஆச்சு.”
“வெறுப்பாக இருக்குப்பா.”
என்று அவள் அறைக்குள் சென்றது அவர்களுக்கு கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது. வெளியே வந்த அவள் ஒரு பையிலிருந்து ஐந்து கவர்களை எடுத்து பெருமாள் வாத்தியாரிடம் கொடுத்தாள்.
“அப்பா… இது நான் ஒவ்வொரு எக்ஸாம் நான் எழுதிட்டு அன்னைக்கு வீட்டிற்கு வந்து அதே எக்ஸாம நான் வீட்டில் எழுதியது. அதை அன்றே ரிஜிஸ்டர் போஸ்ட் தாத்தாவிற்கு செய்து நான் வாங்கி வைத்து இருப்பது. நான் என் பேப்பரை வாங்கி. அதை இந்த கவர்ல இருக்கிற பேப்பரோட ஒப்பிடச் சொல்லப்போறேன். ஒரு ஒரு மார்க் எப்படி குறைச்சதுன்னு எனக்குத் தெரியும். நான் இந்த கவர்களை பிரிக்காமல் கல்வி அமைச்சருக்கு அனுப்பலாம்ன்னு இருக்கேம்பா. ஒரு விசயத்தை உங்க கிட்ட சொல்லாம விட்டேன்ம்ப்பா. ஒவ்வொரு எக்ஸாம் பேப்பர்ல கால் சூப்பர் வைசர் கையெழுத்து போடும்போது நேரத்தையும் போடச் சொன்னேன். அதே மாதிரி நான் எக்ஸாம் எழுதி முடித்த கடைசி பக்கத்துலையும் கையெழுத்து போட்டு நேரத்தையும் போடச்சொன்னேன். ஒவ்வொரு எக்ஸாமையும் இருபது நிமிடம்,இருபத்தி எட்டு நிமிடம், மேத்ஸ் எக்ஸாமை முத்தி இரண்டு நிமிடம் என்று அவர்கள் அனுமதித்த நேரத்தைவிட நான் முன்பாகவே முடித்திருக்கிறேன். நான் மாநிலத்தில் முதலாவதாக வருவேன் என்பது எனக்குத் தெரியும். இந்த நேர மேலாண்மை பேசு பொருளாக மாறவேண்டும் என்று ஆசைப்பட்டேம்ப்பா.”
பெருமாள் வாத்தியார் மனைவியைப் பார்த்தார். ஒவ்வொரு எக்ஸாம் முடிந்து ரூமை பூட்டிக்கொண்டது பிறகு சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியே போனது இதற்குத்தான் என்பது இப்போதுதான் மல்லிகாவிற்கே புரிந்தது.
“அதோட இல்லைப்பா.வீட்டில் நம்ம வீட்டில் நான் எழுதிய எக்ஸாம்ஸை அப்படியே அன்னன்னைக்கே டைமோட வீடியோவை மெயில்ல அப்லோட் பண்ணி வச்சிருக்கேப்பா.”
உண்மையிலையே பெருமாள் வாத்தியார் பயந்துதான் போய் இருந்தார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தடுமாறினார். அப்பாவிடம் வளர விட்டிருக்கக் கூடாதோ என்றும் யோசித்தார். மல்லிகா பேச ஆரம்பித்தது அவருக்கு கொஞ்சம் மன அழுத்தத்தை குறைத்தது.
“அண்ணனுக்கு போன் பண்ணி கேட்போம். மாமா ஊரிலிருந்து வரட்டும். அதன் பிறகு நாம் முடிவெடுக்கலாம்.”
“லூசாம்மா நீங்க. டீவிக்காரங்க எல்லாம் உங்க வீட்டு முன்னாடி இப்போ நிக்கனும்மா. என் உழைப்பப் பூராங் கொட்டி இருக்கேம்மா. தாத்தா எப்ப வருவாருன்னு அவருக்கேத் தெரியாதும்மா. அவர் இமய மலையிலேர்ந்து ஜெய்ப்பூர் போறதா சொன்னார்ம்மா. அவர் வர்ற வரையும் இவைகளை நாம் காத்திருந்து செய்ய முடியாது.”
அப்போது அன்பரசன் அவன் அம்மாவிற்கு போன் செய்து
‘புள்ளை என்ன குரூப் எடுக்குது’ என்றான். அவன் பேசியது வெளியேக் கேட்டதால்
“அடே…முட்டாப்பயளே…இங்கே என்ன நடக்குதுன்னு தெரியுதாடா.”
அவன் போனைக் கட் பண்ணிவிட்டான்.
இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட பெருமாள் வாத்தியார்.
“அவன் கேட்கிறதுல என்னம்மா தப்பு இருக்கு. நாம என்ன குரூப் எடுக்கிறதுங்கிறத யோசிக்கலாம். நீ சொல்லறதுக்கு என்ன ப்ரசிசர்ன்னு கேட்போம்.”
“உங்களுக்கு உங்க பிரச்சினைப்பா.”
ஹாலில் இருந்த வாஸ்பேஷனில் முகத்தைக் கழுவிவிட்டு மதியரசி தெளிவாக பேசினாள்.
“உங்கள் ஒட்டு மொத்த கனவும் நான் தான் நிறைவேத்தனும்ன்னு எனக்கு நல்லாத் தெரியுது. அது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு முதல்ல டாக்டர் ஃபீல்ட் பிடிக்காது. அந்த இரத்தம் எனக்கு சுத்தமாக பிடிக்காது.”
“அதெல்லாம் பழகினா சரியாகும்மா.”
“கொஞ்சம் நேரம் நான் பேசும் போது இடையில் எதுவும் பேசாதீங்கப்பா. போனை இரண்டு பேரும் சைலண்ட்ல போடுங்கள்.”
அப்பாவின் அதே குணம்.அதே வார்த்தைகள். அதே ஸ்டைல்.
“டாக்டரைத் தாண்டியும் ஒரு உலகம் இருக்குப்பா. ஒருத்தர் லேசா நேவு கொண்டாலே கலங்குற ஆள் நான். என்னால அதில் உட்கார்ந்துக்கிட்டு பண அறுவடை பண்ண முடியாது. அதுக்காக வயதைத் தொலைஞ்சுப் படிச்சுட்டு சர்வீஸ் பண்ணிக்கிட்டும் என்னால உட்கார்ந்திருக்க முடியாது. அதைவிட சிறப்பான அதைவிட பல மடங்கு பணம் சம்பாதிக்கிற பல துறைகள் இருக்கு.”
‘இன்ஜினியருக்காவது படிக்கலாமே’ என்று நினைத்த மல்லிகா வெறுப்பாக அது என்ன என்றுக் கேட்டார்.
“நெறைய இருக்கு. நான் எடுக்கப்போறது காமர்ஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ். பிளஸ் டூ முடிச்சிட்டு சென்னையில் ஃபைவ் ஸ்டார் ரேட்டிங்கில் இருக்கிற சிஏ கோட்சிங் சென்டர்ல சேரலாம்ன்னு இருக்கேம்பா. ஒரே அட்டம்ட்ல எப்படி பாஸ் பண்ணலாம்ன்னு நான் ஒரு பிளான் வச்சிருக்கேன்ம்ப்பா.”
“எல்லா கழுசடையும் இருக்கிற குரூப்புல்ல அது.”
“ஆமாப்பா. எல்லா ஸ்கூல்லையும். அரசு பள்ளிகளிலும் சரி தனியார் பள்ளிகளிலும் சரி. முதல் இரண்டு குரூப்பைத்தான் கவனிப்பாங்க. ஏன் அந்த டிபார்ட்மெண்ட் ஆசிரியரைக்கூட யாரும் மதிக்கமாட்டாங்க. அது எனக்குத்தெரியும். அந்த வகுப்புல ஆடிட்டர் ஆகனும்ன்னு ஒரு ஐந்து பேரோ அல்லது பத்து பேரோ அய்யர் வீட்டு பசங்க. அதே மாதிரி அய்யர் வீட்டு பசங்க மாதிரி சில பேரும் இருப்பாங்க அவுங்க கூட நான் இருந்து படிச்சுக்கிறேன்ம்ப்பா. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில சேர்ந்து படிக்கலாம்ன்னு இருக்கேன்.”
இவ்வளவு தெளிவாக பேசும் பிள்ளையிடம் அவருக்கு பேசுவது கொஞ்சம் அசௌகரியாக இருந்தது. இருவரும் சண்டை போட்டுக் கொள்ளப் போகிறார்களோ என்ற பயம் மல்லிகாவுக்கு இருந்தது.
“டாக்டர் துறை நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லைப்பா. ஒரு விசயத்தை சொல்லவா. என்னைக்கு உலகின் பெரு முதலாளிகள் மருத்துவத்தை விட வேறு துறையில் சிறப்பான வருமானம் இருக்கிறதென்று நினைக்கிறார்களோ அப்போதுதான் இந்த மனித வியாபாரம் ஒழியும். நீங்கள் கவனித்தீர்களா என்னன்னு எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஊரிலும் மருத்துவமனை பெருகிக்கிட்டே இருக்கு. இப்போது உடல் உழைப்பாளிகளை அதிகமாக காண முடியுது. அதற்கு காரணம் காப்பீட்டு திட்டங்கள். இந்த ஸ்கேம். நமக்கு சரிவராதுப்பா.நம்ம குடும்பத்துக்கும் சரி வராதுப்பா. தாத்தாவைப் பார்த்தீங்களா. செம ஜாலியாக வாழ்றாருப்பா. குடும்பம்,பேரன்,பேத்தி ஞானம் . நான் வாழனும்ப்பா.”
மகளை நெஞ்சில் அணைத்து தலையை தடவினார் மல்லிகா. பெருமாள் வாத்தியார் அறைக்குள் சென்றார். முகம், கை,கால்களைக் கழுவி கண்களை மூடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். அவரின் அப்பா அவருக்கு சொல்லிக் கொடுத்தது. பல முறை அவருக்கு இது பேருதவியாக இருந்திருக்கிறது. பிறகு அவர் அறையை விட்டு வெளியே போனுடன் வந்தார்.
“தின்னிக் கோழி. உனக்கு சிக்ஸ்டி ஃபைவ் பிரியாணி அதோட சிக்கன் லாலி பாப். அண்ணன் ஒரு அய்ட்டம் முன்னாடி வாங்கிட்டு வந்தான். அது ரொம்ப நல்லா இருந்தது. மதுரை மல்லி மட்டன். மூனு பேருக்கும் பண்ணி இருக்கேன். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவும் செஞ்சிருக்கேன். நாம் சாப்பிடும் போது யாராவது வந்தால் கொடுக்கனும் இல்லையா.”
மூவரும் சந்தோஷத்திற்கு வெகு இயல்பாக மாறிவிட்டார்கள்.
‘மாநிலத்தின் டாப்பர்களில் ஒருத்தர் காமர்ஸ் குரூப் எடுக்கனுமா.’
‘அதுக்குப் பேசாம ஜஸ்ட் பாஸ் பண்ணி இருக்கலாமே.’ ‘உங்கள் அப்பா உங்க மகளை கெடுத்து வச்சிருக்கார்.’ போன்ற கேள்விகளுக்கு அவரிடம் சிறப்பான பதில் தயாராகவே இருந்தது.
மகளின் மார்க் மறுபரிசீலனை தான் அவரின் மண்டையைக் குடைந்தது. அதுபற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாமென அவர் இப்போது ப்ரியாகிவிட்டார்.
எந்த செய்திகளிலும் மதியரசியின் மதிப்பெண்கள் பற்றிய செய்திகள் வரவில்லை. ஒரு வேளை இனி வரலாம். வரவில்லை என்றால் அதற்கும் மதியரசியிடம் ஏதாவது சிறப்பானக் காரணம் இருக்கலாம்.
காலக்ரமம் என்ற சிற்றிதழைக் கைக்காசு போட்டு நடத்தியவர். கணிசமான எண்ணிக்கையில் தரமான கவிதைகள் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆத்மாஜீவ். சமீபகாலமாக உடல்நலன் குன்றி, கூடவே மகளின் திருமணம், பிரசவகால சிக்கல்கள் ஆகியவற்றால் கடனாளியாகி, தான் செய்துகொண்டிருக்கும் கணினி தட்டச்சுவேலையையும் சரிவர செய்ய இயலாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக்’கில் வெளியாகிக்கொண்டிருக்கும் அவருடைய சமீப கால கவிதைகள் அவருடைய வாழ்வியல் சார் நெருக்கடியை, இயலாமையை, அதனால் அவர் ’ஃபேஸ்புக்’ நட்பினரிடம் உதவி யாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை, அப்படி அவருக்கு சிலர் உதவ முன்வருவதை, வேறு சிலர் அவரை அதற்காகப் பரிகசிப்பதை, மதிப்பழிப்பதையெல்லாம் கவித்துவம் குறையாத கவிதை களாக வெளிப்படுத்துகின்றன. ஆனால், அவற்றின் கவித்துவத்தைப் பூரணமாக அனுபவிக்க முடியாதபடி அவருடைய இக்கட்டான நிலை நமக்குள்ளும் ஒரு அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது. [கவிஞர் ஆத்மாஜீவை மின்னஞ்சல் மூலம் நான் கண்ட பேட்டி பதிவுகள் இணைய தளத்தில் 28 மார்ச் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு இதோ: https://www.geotamil.com/…/202…/9055-2025-03-28-18-07-45 ]
கவிஞர் ஆத்மாஜீவின் வேண்டுகோள் இது. முடிந்தவர்கள் உதவ மறவாதீர்கள்
கவிஞர் ஆத்மாஜீவ் கைகூப்பிக் கேட்கிறேன்.
நட்பினர்களுக்கு என் அன்பான வணக்கம்.
என் இதயத்திலிருப்பதை என் நட்பினரிடம் மனம்விட்டு சொல்கிறேன்.
ஓரிரு நிமிடங்கள் இந்தப் பதிவை தயவுசெய்து வாசிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படி தொடர்ந்து உதவிகேட்டு பதிவிடுவதும், அதன் லிங்கை இன்பாக் சில் அனுப்பி யாசிப்பதும், எனக்கு மிக அவமானமாகத்தான் இருக்கிறது. ஒரு குற்றவுணர்ச்சியுடன்தான் வேறுவழியின்றி நண்பர்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
எனது உடலும் மனமும் முற்றிலும் தளர்ந்து விட்டது. உணவுக்கான தேவையைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. அன்புமகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.
கழுத்தை நெறிக்கும் கடன்பிரச்சனை ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிகப் படியான மனஉளைச்சலின் காரணமாக மூன்று வாரத்திற்குமுன் நான் மூர்ச்சையிழந்து சாவை சந்தித்து, ஆக்சிஜன் மூலம் மறுஉயிர்த்தெழந்ததில் ஏகப்பட்ட மருத்துவச்செலவு. இரண்டு வாரங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் போனது. இப்போதும் நீண்ட நேரம் அமரமுடியாதநிலை. மயக்கமும், மிகுந்த அழுத்தமான மனவேதனையும் சூழ்ந்திருக்கிறது.
இப்படி உதவி கேட்டு தொடர்ந்து முகநூலில் பதிவிடுவது பெரிய அவமானமாக இருக்கிறது. முகநூலில் எனக்கான இடம் முற்றிலும் கேலிக்குரியதாகி விட்டது. வாழ்வதற்கான எந்த ஆதாரமும். பிடிப்புமின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறேன்.
முகநூல் நண்பர்கள் அவ்வப்போது அனுப்பும் உதவிப் பணத்தில்தான் மருத்துவச் செலவும், உணவுத் தேவைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நிறைவாக இல்லையென்றாலும், நட்பினரின் உதவியால்தான் ஓரளவுக்காவது சமாளித்துக் கொள்கிறேன்.
இன்பாக்சில் பலரிடம் உதவி கேட்பது சங்கடமாக இருந்தாலும், உடல் ஒத்துழைக் காத நிலையில்தான் அவமானத்துடன் இப்படி கேட்கவேண்டியதாக இருக்கிறது.
அன்பு நண்பர்களே,
கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் இன்று அதையே காரணங்காட்டி பிச்சை யெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த முகநூலை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை என்ற நிலையில் தான் இன்று இந்தப் பதிவை மிகுந்த தயக்கத்துடன் கூனிக்குறுகி பதிவிடுகிறேன்.
உங்களால் முடிந்தது சிறுதொகை என்றாலும், தயவுசெய்து பிச்சையிடுவதாக நினைத்து அனுப்பி உதவுகிறீர்களா?
கையறுநிலையில் கையேந்தும் ஒருவனுக்கு நீங்கள் அனுப்பித்தரும் சிறு அளவிலான ஆதரவும் எனக்கு, எங்களுக்கு பேருதவியாக இருக்கும்
பணிவுட னும் வணக்கத்துடனும்
இப்படி உதவி கேட்டுதான் வாழ வேண்டுமா? என்ற கேள்வி என்னை தலைகுனிய வைக்கிறது.
நான் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால், சென்ற 2024 ஏப்ரல் மாதமே “எல்லாம் முடிந்திருக்கும்”. இதுபோல, “கடன்பிரச்சனை கழுத்தை நெறிக்கிறது தயவு செய்து உங்களாலான உதவியை செய்யுங்கள்”, என்று யாசிக்கும்படியாக பதிவிட வேண்டியதிருந்திருக்காது.
எனக்கு மட்டுந்தான் கடன்பிரச்சனை, குடும்பப்பிரச்சனை. உடல் மற்றும் மனஉளைச்சல் பிரச்சனைகளா? இப்படி அசிங்கப்படும்படியாக உதவிகேட்டு கையேந்த வேண்டுமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், எனக்கு வேறுவழி தெரியவில்லை. மன்னியுங்கள் நண்பர்களே.
“உடுக்கை இழந்தவன் கைபோல…” என் மீதுள்ள அபிமானத்தில் சில நண்பர்கள் அவ்வப்போது உதவுகிறார்கள்.
“ஒருவரையொருவர் நேசிக்கிற பெருங்குணம் காரணமாக, தன்பக்க மிருக்கும் சிரமங்களுக்கிடையிலும் சிறுதொகையேனும் எனக்கு அனுப்பி உதவி செய்திருக் கிறார்கள் பலர்.
சொல்வதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது. உதவிய அனைவரும் மனிதவுருவில் தெய்வமென நன்றியுடன் வணங்குகிறேன்.
எத்தனை முயற்சி செய்தும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, நேர்மறையான சிந்தனைகளில் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித் தாலும், பசியும் கடனும் நெருக்கும்போது, தானாகவே எதிர்மறையில் போய் சிக்கிக் கொள்ள நேர்கிறது.
கடந்து போகும் என்ற நம்பிக்கையை மட்டும் கடந்துபோகாமல் இறுகப் பிடித்துக் கொண்டு போராடுகிறேன்.
இந்தப் பதிவை முழுதாக வாசித்தவர்களுக்கும், இதைப்போன்றோ, அல்லது இதைவிட சற்றுகூடுதல் குறைவாகவோதான் வாழ்க்கையிருக்கு மென அறிவேன். எனினும், எனது நட்பு வட்டத்திலுள்ள நண்பர்களின் மீதான அதீத நம்பிக்கையில், என்னை நான் வெளியரங்கப்படுத்திக் கொண்டுள்ளேன். பலர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எனது கவிதைப் பயிற்சிக்கான ஒரு அருமையான களமாக இந்த முகநூலை பயன்படுத்திக் கொண்டிருந்த நான், இன்று என்னை ஒரு கவிஞனாக முன்னிலைப்படுத்தி கையேந்திக் கொண்டிருக்கிறேன் என்பது தவிர இந்த வாழ்க்கைமீது எனக்கு எந்த புகாருமில்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.
உதவ மனமிருந்தும் உதவமுடியாத சூழலிருப்பவர்களுக்கும், இதுவரை யிலும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
உதவக்கூடிய சாத்தியமுள்ளவர்கள், தங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
உங்களின் எந்தவொரு சிறுஉதவியும் எனக்கு பேருதவியாகவே இருக்கும் நண்பர்களே.
awaamikaa’முயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை’ என்ற தலைப்பு பொருத்தமானதாகத் தோன்றியது. இதுவொரு புதிய முயற்சி. இந்த நூல் வாசிப்போருக்கு சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும், மொழிபெயர்ப்புக் கலை குறித்த சில கோணங்கள், பாணி களை அறிந்துகொள்ள வழிவகுப்பதாகவும் அமையும் என்று நம்புகிறோம்.
நன்றி
மொழிபெயர்ப்பாளர்கள்
லதா ராமகிருஷ்ணன் – எஸ்.ஆர்.தேவிகா
*
இருநூல்களிலும் வெளியாகியிருக்கும் என்னுடைய முன்னுரையிலிருந்து சில பகுதிகள்:
மொழிபெயர்ப்பு குறித்த பார்வைகள் கண்ணோட்டங்கள் – உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் மொழிபெயர்ப்பாளர்கள் முன் வைத்திருப்பவை – இணையத்தில் கூட்டமாக கொட்டிக்கிடக்கின்றன! சர்வதேச மொழி பெயர்ப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது – செப்டம்பெர் 30. இவற்றையெல்லாம் அறிந்துகொள் வதும் படித்துத் தெரிந்துகொள்வதும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மொழி பெயர்ப்புப்பணியைப் பொறுத்தவரை இரண்டு பழமொழிகளை நாம் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒன்று, சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். இன்னொன்று ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது கடந்த முப்பது ஆண்டுகளாக புனைவு அ-புனைவு பிரதிகளை ஆர்வம் காரணமாகவும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துமாறு தமிழ்மொழியின் சிறுபத்திரிகைவெளியைச் சேர்ந்த நட்பினர் அன்போடு கேட்டுக் கொண்டதற்காகவும் மொழிபெயர்த்திருக்கிறேன் தொழில் முறை மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கிவருகிறேன் இந்த அனுபவங்களின் பின்னணியில் இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
மொழிபெயர்ப்பாளர்கள் முக்கியமாக இரு வகைப்படுவர். பல்வேறு பிரதிகளை படித்து அவற்றில் சிறந்தவற்றை, மனதுக்குப் பிடித்தவற்றை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத் துக்கொண்டு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருப்ப வர்கள் இன்னொரு பிரிவினர், மற்றவர்களால் தேர்ந்தெடுத்து தரப்படும் பிரதிகளை கட்டணம் பெற்றோ கட்டணமில் லாமலோ மொழிபெயர்ப்பு செய்பவர்கள்.
ஓர் இலக்கியப் பிரதியை மொழிபெயர்ப்பதற்கும், இலக்கியம் அல்லாத பிரதியை மொழிபெயர்ப்பதற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கிறது? ஒரு பிரதியை மொழிபெயர்க்கும் போக்கில் ஒரு முட்டுக்கட்டையை _ முழுமையான அர்த்தம் அல்லது பயன் படுத்தப்பட்டிருக்கும் சூழமைவு அல்லது அதன் உள்ளர்த்தம் புரியாமல் இருக்கும் நிலை _ எதிர்கொள்ளவேண்டிவந்தால் அதை நாம் எவ்வாறு கடந்து செல்வது? மற்றவர்களின் உதவியை நாடவேண்டுமா? அப்படியெனில் யார் அந்த மற்றவர்கள் ? அல்லது, மூலப் பிரதிக்கு பாதிப்பு ஏற்படாத அளவில் நாம் சிக்கலான வார்த்தை அல்லது சொல் வழக்கை விட்டுச் சென்றுவிட லாமா? மூலப்பிரதியிடம் ஒரு மொழிபெயர்ப்பாளர் எடுத்துக்கொள்ளக்கூடிய சுதந்திரங்கள் யாவை? மொழி பெயர்ப்பின் அரசியல் என்று நாம் குறிப்பிடுவது என்ன? மொழிபெயர்ப்பு என்ற செயல் பாட்டின் வெளிப்படையான நோக்கங்கள், மறைமுகமான நோக்கங்கள் யாவை?
இத்தகைய கேள்விகள் சந்தேகங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளர் மனதைத் துளைத்துக்கொண்டேயிருக்கின்றன. இருந்தும், இவை எல்லாவற்றையும் மீறி ஒரு மொழிபெயர்ப்பாளரை தொடர்ந்து இயங்கச் செய்து மக்களை இயங்கச் செய்வது மக்களிடையே ஒரு தகவல் தொடர்பாளராகப் பணியாற்றும், வெவ்வேறு மக்கள் இடையே பாலமாக திகழும் ஒரு பிரதியை மொழிபெயர்ப்பது மூலம் தனக்குக் கிடைத்த நுண்ணுணர்வுகள், அழகியல், வாழ்க்கை குறித்த விழிப்புணர்வுகள் முதலியவற்றை சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வமும், இந்த விஷயங்கள் ஆனந்தமாக ஒருவருக்குக் கிடைக்க நம்மால் வழிசெய்ய முடியும் என்ற உண்மையும் மொழிபெயர்ப்பாளரைத் தனது பணியில் அதிக அளவு பொறுப்பேற்பு உணரச் செய்கிறது. மிக முக்கியமான ஆக்கபூர்வமான வலி நிவாரணமான பல தகவல்களையும் உணர்வுகளையும் மொழிபெயர்ப்பாளர் மற்றவர்களிடம் கொண்டு போகிறார். இந்த வகையில் பார்க்கப் போனால் மொழிபெயர்ப்பு என்ற செயல்பாடு அடிப்படையாகவே ஒரு சீர்திருத்தவாதியின் செயல்நோக்கம் கொண்டது என்றும் சொல்ல முடியும்
ஒரு படைப்பாளி தன் உள்ளிருக்கும் தேர்ந்த வாசகரை திருப்திப்படுத்திக் கொள்வதே பிரதானமாய் கதை கவிதை கட்டுரை என எழுதலாம் அதில் தவறு ஏதும் கிடையாது ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றவர்களுக்கு இருக்கும் வாசகர்களுக்கு ஆகவே முதன்மையாக செயல்படுகிறார் எனவேதான் மொழிபெயர்ப்பு என்ற செயல்பாடு அதனளவில் ஒரு சமூகச் செயல்பாடாக விளங்குகிறது எனலாம்.
இந்த செயல் பாட்டின் நோக்கம் எத்தனைக்கெத்தனை ஆக்கபூர்வமாகவும் நேர்மையானதாக இருக்க முடியுமோ அத்தனை அத்தனை அறிவுத்திறன் கொண்டதாகவும் எதிர்மறையானதாகவும் இருக்க வழியுண்டு. சிலர் மொழிபெயர்ப்பை எளிய வாசகர்களை ஏமாற்றுவதற்கான அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு ஆன கருவியாக பயன்படுத்துவதும் உண்டு சில மொழி பெயர்ப்பாளர்கள் தம் மனம் போன போக்கில் மூலப் பிரதியை திருத்தியும் சுருக்கியும் அவர்கள் அளவில் தேவை யற்ற அல்லது அவர்களுக்கு பிடிக்காத பத்திகளை வரிகளை அழுத்தம் குறித்தும் அல்லது அறவே விளக்கியும் வேறு சில பத்திகளை வரிகளை புதிதாக இணைத்தும் அல்லது இடமாற்றம் செய்து மூலப்பிரதியில் மீது அதிகாரம் செலுத்துவதும் உண்டு
மொழிபெயர்ப்பாளருக்கு அடிப்படைத் தேவை இரு மொழித் திறன். மூலப்பிரதியின் உள்ளடக்கம் குறித்த அடிப் படைப் புரிதல். மூலப்பிரதியின் தொனி,, நடை, மூலப் படைப்பாளி படைப்பாளி ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிதல் – வேறு சிலவும் உண்டு. மூலப் பிரதிக்கு ஏற்பவும் அது மொழி பெயர்க்கப்படுவதற்கான காரணம் குறித்தும், இலக்கு மொழி வாசகர்கள் எத்தரப்பினர் – அதாவது, சிறுவர் சிறுவர் சிறுமியரா, பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களா, பெரியவர்களா என்பது பற்றியும் மொழிபெயர்ப்பாளருக்குத் தெரிந்திருக்கவேண்டும். மூலப்பிரதி எழுதப்பட்ட காலத்தில் புழங்கிய அல்லது பயன்படுத்தப்பட்ட வார்த்தை கள் அதேயளவு இலக்குமொழியில் பயன்படுத்தப்படவேண்டுமா அல்லது சம காலத்தில் புழங்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற தெளிவும் தேர்வு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டும்.
தமிழ் தாத்தா உவேசாவின் என் சரித்திரத்தை சாகித்ய அகாதமிக்காக சில வருடங் களுக்கு முன்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டாக்டர் சுப்ரமணியன் மூல ஆசிரியர் ’சல்லாபிக்கும்’ என்ற வார்த்தையை உரையாடல் என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டியதை இங்கே நினைவு கூறத் தோன்றுகிறது
TRANSLATION IS APPROXIMATION என்பார்கள். அ APPROXI MATION என்பதற்கு ஒத்திருத்தல், அணுகுதல் நெருங்கிய அளவில், ஏறத்தாழ சரியாய், என அர்த்தங்கள் அகராதிகளில் தரப்பட்டிருக்கின்றன ஆனால், அதைவிட முக்கியமாக ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் இருக்க வேண்டி யது DISCRETION என்று சொல்லலாம்: ’பொருந்துமாறு அறிதல். குழந்தைகளுக் கான(க) கதைப் புத்தகத்தை மொழிபெயர்க்கும் போது – கவனிக்கவும் – கதை புத்தகம்; மொழியியல் சார் நூல் அல்ல – ’பஸ்’ என்ற சொல்லை பேருந்து என்று மொழிபெயர்ப்பது சரியா? அதுவே FISHஏஐ மீன் என்று மொழிபெயர்ப்பதே சரி! இந்தக் குழப்பமும் தெளிவும் மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டியது அவசியம்.
ஆரம்பத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களில் சில இலக்கிய படைப்பு களை நட்பினரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆர்வமாக மொழிபெயர்த்த காரணத்தால் பின்னாளில் தொழில் முறை மொழிபெயர்ப்பாளராக பலவகையான பிரதிகளை மொழி பெயர்க்கவேண்டிவந்தபோது ’இலக்கு வாசகர்களை மனதில் கொண்டு எளிமையாக மொழியாக்கம் செய்யும்’படி என்னிடம் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது! உதாரணமாக, குழந்தைகளுக்கான கதைகள், எழுத்தறிவு இயக்கத் திற்கான கையேடுகள் போன்றவை. அதேசமயம் எந்த அளவுக்கு ஒரு மூலப்பிரதி எளிமைப் படுத்தப்படலாம் என்பது பற்றிய தெளிவு ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டியது அவசியம்.
கடினமான வார்த்தைகள்தான் மொழிபெயர்க்கச் சிரமமா னவை என்று நினைப்பது சரியல்ல. மிக எளிய வார்த்தைகள் We, Our கூட நம்மைத் திகைக்கவைத்துவிடும்! We என்றால் நாமா, நாங்களா, Our என்றால் நம்முடையதா எங்களுடையதா – He என்றால் அவனா, அவரா? – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
தொண்ணூறுகளில் நடந்த சாகித்திய அகாதெமி பிராந்திய மொழி பெயர்ப்புப் பயிலரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப் புக் கிடைத்தது. My Child என்ற ஆங்கில சொற்பிரயோகத்தை ஒரு பங்கேற்பாளர் ’குழந்தே’ என்று தமிழில் மொழி பெயர்த்தார். மற்றொருவர் ‘கண்ணு’ என்று மொழிபெயர்த் தார். வேறொரு வர் ’செல்லம்’ என்றார். இன்னொருவர் பாப்பா என்றார்! ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாழ்வுச் சூழலும் அவருடைய மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படும் சொற்கள், தேர்வுகளில் ஏதோ ஒரு வகையில் வினையாற்றுகின்றன எனலாம்.
மொழிபெயர்ப்பு எனும்போது நாம் இங்கே ஆங்கிலத் திலிருந்து தமிழிலும் தமிழி லிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படுவதையே கருத்தில் கொண்டு பேசுகி றோம் என்பது குறிப்பிடத்தக்கது. பிறமொழிகளிலிருந்து அதாவது பிரெஞ்சு, ஸ்பானிஷ், ருஷ்ய மொழிகள் போன்ற மொழிகளில் எழுதப்பட்டு பின் ஆங்கிலம் வழியாகத் தமிழுக்கு வந்த இலக்கியப் பிரதிகள் நிறையவே. தமிழ்ச்சூழலில் ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து ஒரு பிரதிக்கு தமிழில் கிடைப் பது பெரும் பாலும் ஒரே ஒரு மொழியாக்கம். அதுவே அரிது. ஆனால், வேறு மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் சில படைப்புகள் ஆங்கிலத்தில் இரண்டு மூன்று மொழிபெயர்ப் பாளர்களால்கூட மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
மூலமொழியான ஆங்கிலத்திலிருந்து அப்படி இருவேறு தமிழ் மொழிபெயர்ப்புகள் கிடைக்கு மானால், அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மொழிபெயர்ப்பின் வேறு பல அம்சங்களையும் மொழிபெயர்ப்பாளர்களின் வேறுபட்ட அணுகுமுறை களையும் புரிந்துகொள்ளமுடியும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இலக்கிய நண்பரொருவரால் தரப்பட்ட WOMAN AT POINT ZERO எகிப்திய எழுத்தாளர் Nawal El Saadawi யின் தன்வரலாறுத் தன்மையான புதினம் ஒன்றை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். சூனியப்புள்ளியில் பெண் என்று தலைப்பிட்டேன். சமீபத்தில் அதே தலைப்போடு அந்தப் படைப்பு இன்னொருவரால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதை அறிந்தபோது (அதில் இந்தப் படைப்பு ஏற்கெனவே மொழிபெயர்க்கப் பட்டிருப்பது குறித்து தகவல் தரப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை!) என் மொழி பெயர்ப்பை இந்தப் புது மொழிபெயர்ப்போடு ஒப்புநோக்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், என் மொழி பெயர்ப்புப் பிரதி எதுவும் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் கேட்டி ருக்கிறேன்.
ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட மூலப்பிரதி ஒன்று இன் னொரு மொழி பெயர்ப்பாளரால் மீண்டும் மொழிபெயர்க்கப்படும்போது முதல் மொழிபெயர்ப்பின் துணையோடு தன் மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் இரண்டாம் மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கிறது. இந்த வாய்ப்பு ஒரு மூலப் பிரதியை இலக்கு மொழியில் முதன் முதலாக மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாள ருக்கு இல்லை என்பதால் அவர் தன் மொழிபெயர்ப்பை கூடுதல் கவனத்தோடு மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாத தாகிறது.
தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை ஆங்கிலம் வழியாகவோ நேரிடையாக பிரெஞ்சு முதலிய மொழிகளிலிருந்தோ உலகத் தரம் வாய்ந்த எழுத்தாக்கங்கள் பெரும்பாலும் சிற்றிதழாளர் களால் ஆர்வத் தோடு மொழிபெயர்க்கப்பட்டு தங்கள் கைக் காசைச் செலவழித்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருப்பதே அதிகம். இந்த மொழி பெயர்ப்பை ஆர்வமாகச் செய்யும் மொழி பெயர்ப்பாளருக் கும் சன்மானம் எதுவும் கிடையாது. ஆனால், இப்படி சிற்றித ழாளர்களின் மொழிபெயர்ப் பின் மூலம் ஒரு உலகத்தரம் வாய்ந்த படைப்பு/படைப்பாளி தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றதும் அந்தப் படைப்பை இன்னொருவரைக் கொண்டு சுமாராக மொழி பெயர்த்து இந்த சுமார் மொழிபெயர்ப்பே தமிழில் கிடைக்கும்படி செய்துவிடல் நடக்கிறது. அதற்குப் பின் இந்த உலகத்தரம் வாய்ந்த படைப்புக்கு வேறு மொழிபெயர்ப்புகள் தமிழில் கிடைக்கவே வழியில்லாமல் பார்த்துக்கொள்ளப் படும்! இது மொழிபெயர்ப்புலகிற்கு இழப்பே!
ஒரு பிரதியை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கையிலேயே – ஆங்கிலத்திலிருந்து தமிழில் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலத்தில் – அதற்கு இணையான மொழி பெயர்ப்புகளை நம் மனம் நம்மையறியாமல் செய்துகொண்டேயிருக்கும். சில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது அவற்றிற்கு இணையான வேறு சொற்கள் மனதில் வந்து வந்து போகும். ஒரு மொழிபெயர்ப்பு இறுதி வடிவம் பெறும்போது ’மனசில்லா மனசோடு’தான் அதற்கு இணையாக மனதிலோடிய மற்ற மொழிபெயர்ப்பு களை விலக்கிவிட வேண்டி யிருக்கிறது.
ஒரே கவிதையை இருமுறை மொழிபெயர்க்கும்போது இருவேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கிடைக்கும் வாய்ப்பு களே அதிகம்! அர்த்தம் திரியாதபடி அமையும் இரு வேறு மொழிபெயர்ப்புகள்! சில சமயங்களில் ஒரே ஒரு வார்த்தை ஒரு மொழி பெயர்ப்பு முயற்சியைக் கைவிடச்செய்துவிடும். நான் எழுதிய ஒரு தமிழ்க் கவிதைக்கு ’விழல்’ என்று தலைப்பிட்டிருந்தேன். கீழே விழுவது, விழலுக்கு இறைத்த நீர் ஆகிய இரண்டு அர்த்தங்களையும் தரும் ஒரே சொல்லாக அதை தமிழில் பயன்படுத்தியிருந்தேன். அந்தச் சொல்லுக்கு இணையான வார்த்தையை என்னால் ஆங்கிலத்தில் கண்டெடுக்கவே முடியவில்லை. இது என் மொழித்திறன் சார் போதாமையாக இருக்கலாம். அல்லது, ஒவ்வொரு மொழிக்கும் உள்ள தனித் துவம் காரணமாகவும் இருக்கலாம்.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் சில பத்திகளின் மொழி பெயர்ப்பு மூலம் மொழிபெயர்ப்பில் சிக்கல்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட முடியும்:
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கும் முதல் பத்தி பின்வருமாறு ஆங்கில மூலமும் தரப்பட்டிருக்கிறது
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பத்திகளில் ஒன்றின் முதல் வரி கீழே தரப்பட்டிருக்கிறது:
GHALIB IS NOT AN EASY POET TO TRANSLATE INTO URDU OR ENGLISH
காலிப் உருது அல்லது ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப் படுவதற்கு எளிதான கவிஞர் அல்ல என்பதுதான் பொருள்..
ஆங்கில வாக்கியப்படி ‘காலிப் உருது அல்லது ஆங்கில மொழிபெயர்ப்புக்கு எளிதாக வசப்படுபவர் அல்ல’ என்று பொருள்கொள்ளலாம்.
இதை ‘காலிபின் கவிதைகளை உருதுமொழி அல்லது ஆங்கில மொழியில் தருவது அவ்வளவு எளிதல்ல என்று மொழி பெயர்க்கலாம்.
அல்லது, மிர்ஸா காலிபின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது கடினம் என்றும் மொழிபெயர்க்க முடியும். ஆங்கில மூலத்தில் மிர்ஸா என்ற சொல் இல்லையே _ தமிழில் ஏன் அதைத் தரவேண்டும் என்றோ ஆங்கில மூலத்தில் ’எளிதல்ல’ என்று இருப்பதை தமிழில் கடினம் என்று ஏன் மாற்ற வேண்டும் என்றோ கேள்வியெழ வாய்ப்பில்லை யென்றே தோன்றுகிறது!
தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பத்திகளிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது:
கற்பித்தலில் இடைவெளி
அரசுப் பள்ளி மாணவர்களைப் பொறுத்த மட்டில் கற்றல் என்பது இன்னும் முழு முடக்கக் காலம் போலவே இருக்கிறது. இது, இணைய வழிக் கல்வியில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு அல்ல. இணையவழிக் கல்வி இடைவெளி அல்ல. கற்றல் கற்பித்தல் என்பதிலிருந்து முற்றாகத் துண்டித்துத் தூக்கி தூர வீசியெறிந்து விட்டது என்றே கூற வேண்டும். அரசுப் பள்ளிக் குழந்தைகளில் எழுத்து களை மறந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ? வேலைக்குச் சென்ற வர்கள் எத்தனை ஆயிரம் பேர் நிரந்தரமாகப் பள்ளி இடை விலகப் போகிறார் களோ? உண்மையில், கரோனா பெருந்துயரங் களில் இது நீடித்த, நிலைத்த பெருந்துயரமாக இருக்கப் போகிறது.
GAPING DISPARITIES IN TEACHING
As for the students of government schools learning is going to suffer as total lockdown period. This is not a disparity caused by “Online education’. Online education is not a disparity. It has completely cut off the children from Teaching&Learning process. Among the children studying in the government schools wonder how many thousands of them would have lost touch with reading and writing? Among those who had gone to work during the pandemic days how many of them would turn into dropouts? In fact this is going to be the great tragedy caused by Corona.
தமிழில் உள்ள பெருந்துயரம் என்ற சொற்றொடரை ஆங்கிலத் தில் great tragedy என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், மகத்தான என்ற சொல்லையும் இதே ஆங்கில வார்த்தையால் மொழிபெயர்க்க முடியும்! ஆனால், அதையே ஆங்கிலத்திலி ருந்து தமிழில் மொழி பெயர்க்கும் போது ஞ் õx great tragedy என்பதை ‘மகத்தான பேரழிவு’ என்று மொழி பெயர்க்கலாகாது!
மொழிபெயர்ப்பை STANDARDIZE செய்ய முடியாது. இந்த ஆங்கில வார்த்தைக்கு இந்தத் தமிழ் வார்த்தைதான் மொழி பெயர்ப்பில் தரப்பட வேண்டும் என்று யாரும் வரை யறுத்துவிட முடியாது. மூலப்பிரதியை எந்த அளவுக்கு சிறப்பாக இலக்கு மொழியில் பிரதிபலிக்கச்செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்யத் தேவையான இணைச் சொற்களை மொழிபெயர்ப்பாளர் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். வார்த்தை களின் தேர்விலும் அவற்றை வரிசைப்படுத்தும், வாக்கியங்க ளாகக் கட்டமைக்கும் விதத்திலும் தான் மொழிபெயர்ப் பாளரின் தனித்தன்மை அடங்கியிருக்கிறது என்று சொல்ல முடியும். மூலப்பிரதியின் அடிநாதமாகத் திகழும் ஒரு சொல்லை இலக்கு மொழியில் அதேயள்வாய் கொண்டுவர ஒரு மொழிபெயர்ப்பாளர் முழுமூச்சாய் முயற்சி செய்ய வேண்டும். அதுவே, மூலப்பிரதியில் அத்தனை முக்கியத்துவமற்ற தாய் இடம் பெறும் ஒரு சொல்லை இலக்கு மொழியில் கொண்டு செல்லும்போது அந்த அளவுக்குப் பிரயத்தனம் செய்யத் தேவையில்லை என்று தோன்றுகிறது.
ஆங்கிலத்தில் இரண்டு வரிகள்:
MANY TIMES GHALIB COMBINES TWO OR MORE MEANINGS INTO A SINGLE WORD OR EXPRESSION,
தமிழில் –
பலமுறை இரண்டு அல்லது அதிகமான அர்த்தங்களை ஒரு சொல்லாக அல்லது வெளிப்பாடாக இணைக்கிறார் காலிப்.
MANY TIMES என்பதை பலமுறை என்றோ பல நேரங்களில் என்று பல சமயங்களில் என்றோ மொழிபெயர்க்கலாம். ஆனால் அடிக்கடி ((Often) என்று மொழிபெயர்ப்பது சரியா? சரியாக இருக்காது. காரணம், MANY TIMES என்ற சொல்லில் ஒருமுறைக்கும் இருமுறைக்கும் இடையே உள்ள கால அவகாசம் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். MANY TIMES என்பதில் TIME வந்தாலும் அதன் மையம் காலக்கணக்கு அல்ல. பலமுறை என்பதில் காலக்கணக்கு பிரதானம் இல்லை. ஆனால் அடிக்கடி என்பதில் காலமே பிரதானம்
MINOR POET என்பதை தமிழில் எப்படிக் குறிப்பிடலாம்? சிறிய, எளிய அத்தனை சரி யாக இருக்குமா? ‘MAJOR POET’’ என்றால் பெருங்கவி அருங்கவி, முக்கியமான கவி, மகத்தான கவி என்று தமிழில் மொழிபெயர்த்துவிடலாம். ‘MAJOR POET’ என்றால்? ஒருவேளை இதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தமிழ் இணைச்சொல் இருக்கலாம். முக்கியத்துவம் குறைந்த கவி என்பதுதான் அதன் அர்த்தம் என்று நன்றாகவே விளங்கினாலும் அதை அப்படியே தருவது ஏதோ விதத்தில் நெருடலாகத் தோன்றும் பட்சத்தில் மொழிபெயர்ப்பாளர் (முக்கியத்துவம் குறைந்த கவியை ஏன் மேற்கோள் காட்ட வேண்டும் என்ற நினைப்பிலும் இருக்கலாம்!) மொழி பெயர்ப்பாளர் வெறுமே POET என்று மொழிபெயர்த்து விடக் கூடும் இது சிலரின் பார்வையில் தவறல்ல சிலரின் பார்வை யில் மிகப் பெரிய தவறு!
இப்படி எது சரி, எது தவறு என்று குழம்பவைக்கும் இடங்களும், சொற்களும் சொற்சேர்க்கைகளும் மொழி பெயர்ப்புப் பணியில் நிறையவே மொழிபெயர்ப்பாளரை இடறி விழச்செய்யும்!
மூலப்பிரதியில் ஒரு பழமொழி தரப்பட்டிருந்தால் அதை அப்படியே இலக்கு மொழியில் பெயர்த்துத் தர வேண்டுமா, அல்லது, மூலப்பிரதியில் தரப்பட்டுள்ள பழமொழி எதைக் குறிப்புணர்த்துவதாகத் தரப்பட்டிருக்கிறதோ, தரப்படுகிறதோ அதற்கு ஏற்ற இலக்குமொழிப் பழமொழி ஒன்றை மொழிபெயர்ப்பில் இடம்பெறச் செய்வதா? என்ற கேள்வி மொழிபெயர்ப்பு சார்ந்து எப்போதும் முன்வைக்கப்படுவது. மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு மண்ணை, மனிதர் களை, கலாச்சாரத்தை அறிமுகப்படுத் துவது; எனவே அந்தந்த மண்ணுக்கே உரிய மணம் சார்ந்த பழமொழி களைத் தமிழில் தருவதே சரி என்ற பார்வை முக்கியத்துவம் பெறுகிறது
மூலமொழிப் பிரதிகளை இலக்குமொழியில் கொண்டுவரும் போது இலக்குமொழி யின் வாசகர்களை கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டியதும் அவசியம். இலக்கியப் பிரதிகளைப் பொறுத்தவரையும் கூட அவை எளிமைப்படுத்தப்பட்டு இலக்குமொழி களில் தரப்படும் தேவை இருக்கிறது.
அப்படியெனில், மூலமொழிப் பிரதி என்றாலே அது கடின மானதுதானா என்ற கேள்வி எழுகிறது. அப்படியில்லை. மூல மொழிப் பிரதியே எளிமையாக இருக்கும் போது இலக்கு மொழியில் அதை மேலும் எளிமைப்படுத்தவேண்டிய தேவை இல்லை. அதே சமயம், எளிமை என்பது எல்லா நேரங்களிலும் எளிமையாக மொழி பெயர்த்துவிடக்கூடியது அல்ல என்பதை யும் நாம் மறக்கலாகாது !
உரையாடலும் வட்டார வழக்கும் மொழிபெயர்ப்பில் சிரம மான சிக்கலான அம்சங்களாகத் திகழ்பவை. மொழிபெயர்ப் பாளருக்கு மூலமொழியில் உள்ள வாழ்வுச் சூழல் சூழல், இடச்சூழல், புழங்குமொழி, முதலியவை பரிச்சயமாக இருந்தா லொழிய அதில் உள்ள உரையாடலையும், வட்டார வழக்கையும் இலக்குமொழியில் கொண்டுவருவதில் நிறை யவே இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
நமக்குத் தெரிந்த, நம் தாய்மொழியான தமிழிலேயே கூட எல்லா வட்டார வழக்குகளும் அவற்றில் புழங்கும் வார்த்தை களும் அவற்றில் புழங்கு வார்த்தை களின் முழு அர்த்தமும், முழுக் குறிப்புணர்த்தல் களும் நமக்குத் தெரியுமா என்ன? ஒரு கவிதையில் நீறு என்ற சொல் இடம்பெற்றிருந்தது. எனக்கு திருநீறு , விபூதி என்ற சொற்கள் மட்டுமே பரிச்சயம். தண்ணீர் தான் நீரு என்பதற்கு பதிலாக நீறு என்று பிழையாக அச்சாகி யிருக்கிறது என்று நானாக எண்ணிக்கொண்டு ஙிச்tஞுணூ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஒரு வார்த்தையின் இடப்பொருத் தத்தை வைத்து அதன் சரியான பொருளைத் தெரிந்துகொண்டுவிட முடியுமென் றாலும் அது எல்லா நேரங்களிலும் நமக்குத் துணைபுரியும் என்று சொல்லி விட முடியாது!
தொழில்முறையில் மொழிபெயர்ப்பாளர்களாக இயங்குபவர் களுக்கு ஒரு பிரதியை முடித்துக் கொடுக்க கால வரையறை உண்டு. இது சமயங்களில் மொழிபெயர்ப்பில் சில தவறுகள் இடம்பெறக் காரணமாகிவிடும். மொழிபெயர்ப்பில் ஏற்படும் தவறுகளை நான் நியாயப்படுத்தவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஒரு மொழி பெயர்ப்பாளர் இரு மொழிகளுக்கு இடையே பாலமாகத் திகழ்கிறார். பாலம் இடிந்து விழுந்தால் பாலம் கட்டிய நோக்கமே பாழாகிவிடும். எனவே தான் மொழிபெயர்ப் பாளர் கூடுதல் கவனத்தோடு இயங்க வேண்டியது அவசியம்.
TRANSLATION IS A THANKLESS JOB என்பார்கள். ஒரு பிரதியை நல்லவிதமாக மொழிபெயர்த்து முடிக்கும்போது ஒரு மொழி பெயர்ப்பாளர் உணரும் மனநிறைவை விடவா மற்றவர் களின் நன்றி பெரிது என்று கேட்கும் மொழிபெயர்ப்பாளர் கள் தமிழ் வெளியில் அன்றும் இன்றும் நிறையவே உண்டு! அவர்களுக்கு என்றுமான நம் நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்!
மொழிபெயர்ப்பாளர் should be thick-skinned, ஏனெனில் அவருடைய மொழிபெயர்ப்பு தொடர்பாக விமர்சனம் என்ற பெயரில் நிறைய வசவுகளை வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்! எந்தவொரு மொழியின் வளர்ச்சிக் கும் அதன் இலக்கிய வளர்ச்சிக்கும் விமர்சனம், ஆய்வலசல், திறனாய்வு என்பதெல்லாம் மிகவும் தேவை. அதேசமயம் திறனாய்வாளர்களிலும் இருவகையினர் உண்டு. இலக்குமொழி வாசகரை take–it-for-granted ஆக பாவிக்கலாகாது என்ற மெய்யான அக்கறையோடு ஒருவருடைய மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை ஆதாரபூர்வ மாகச் சுட்டிக் காட்டுவோர் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினர் ஒருவருடைய மொழிபெயர்ப்பில் உள்ள குறைக ளைச் சுட்டுவதன் மூலமே தம்மைப் பெரிதாக்கிக் கொள்ள முனைவோர்.
அப்படித்தான், நான் மொழிபெயர்த்த ஒரு நூலில் நான் கையாண்ட ஒரு சொற்பிரயோகம் தவறானது என்று கெக்கலித்த ஒருவர், ஆங்கிலட் மொழி பெயர்ப்பிலிருந்த மூல நூலில் இருந்து ஒரு பத்தியையும் அதற்கான என் தமிழ் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு என்னுடைய மொத்த மொழிபெயர்ப்பும் சரி யில்லை என்று சாதிக்கப் பார்த்தார். நான் மொழிபெயர்த்தது மூல நூலின் வேறொரு ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து. அவர் சுட்டியது இன்னொரு ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து. அதை சுட்டிக் காட்டிய பின்பும் தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்காமல் என் மொழிபெயர்ப்பில் உள்ள ஒரே ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அதற்கான என் மொழிபெயர்ப்பு சரியில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், நான் என்னை மொழி பெயர்ப்பு மேதை என்று என்றுமே சொல்லிக் கொண்டதில்லை
ஆயிரத்தில் ஒருவன் என்பதை ஆங்கிலத்தில் “ONE IN A MILLION’ என்று மொழிபெயர்த்தேன். இதில் ஆயிரம் 10 லட்சம் என்ற எண்ணிக்கையல்லவே முக்கியம்! அரிய மனிதர், மகத்தான மனிதர் என்பதற்கு இரண்டு மொழிகளிலும் பயன்படுத்தப்படும் சொற்றொ டர்கள் இவை, ‘இந்த அம்மாவுக்கு ஆயிரத்திற்கும் லட்சத்திற்கும்கூட வித்தியாசம் தெரியவில்லை என்று எள்ளி நகையாடியிருந்தார் ஒருவர்!
ஆங்கிலத்திலிருந்து தமிழில் நான் மொழிபெயர்த்துள்ள ஸ்டீ ஃபான் ஸ்வேய்கின் ஜெர்மானியக் குறுநாவலின் ஆங்கிலத் தலைப்பு AMOK. அதற்கு தமிழில் ‘ஆட்கொள்ளப்பட்டவன்’ என்று தலைப்பிட்டேன். அது குறித்து அந்த நூலில் இடம் பெறும் என்னுரையில் இவ்வாறு எழுதியிருக்கிறேன்:
”ஒரு படைப்பில் மொழிபெயர்ப்பாளர் அநாவசியமான சுதந்திரங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற திட்ட வட்டமான எண்ணம் எனக்கு உண்டு ஆனால் அMOஓ என்ற சொல் லுக்கு ’ஆட்கொள்ளப்பட்டவன்’ மிகச் சரியான மொழிபெயர்ப்பு அல்ல. அந்த வார்த்தை இந்தோனேஷியச் சொல். ஒருவித பித்துநிலையில் தறிகெட்டு ஓடியபடி கண் ணில் கண்டவர்களை குத்திக் காயப் படுத்தி யபடி செல்லும் உயரழுத்த மன நிலையை ((frenzied, delirious state of mind) மனநிலை யைக் குறிக்கும் சொல். என் தேடலில் தமிழில் இணைச்சொல் கிடைக்கவில்லை. ‘எத்தனை யாவது’ என்ற தமிழ் சொல்லுக்கு ஆங்கிலத் தில் இணை கிடைக்காதது போல். தவிர, இந்தடு கதையின் நாயகன் அந்த உயர் அழுத்த மனநிலையில் உள்ளபோதும் கனிவானவன்; குற்றணர்வு கொள்ளத் தெரிந்த வன்; ஒருவகையில், A MEHTOD IN MADNESS’ என்ற ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் சொற்றொ டரை நினைவு கூரத்செய்வதாய் இருக்கின்றன அவன் செய்கைகள். எனவே ஆட்கொள்ளப் பட்டவன் என்ற தலைப்பு அதிகப் பொருத்த மானதாகத் தோன்றியது.”
இந்த Discretion ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மிகவும் தேவை என்று நினைக்கிறேன் .
ஆனால், இந்த அணுகுமுறை மொழிபெயர்ப்பின் அரசியலாக மாறும் இடங்களும் உண்டு மூலப் பிரதியில் சில வரிகளை நீக்கி, சில வரிகளை திரித்து மொழிபெயர்த்து அதை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தும் போக்கு சமயங் களில் நேர்மறையான சமயங்களில் எதிர்மறையான அணுகு முறையாக இருக்கவும் வழி உண்டு.
மூலப்பிரதியை இலக்குமொழியில் மொழிபெயர்ப்பதற்கான நோக்கத்தைப் பொறுத் தும் மொழி பெயர்ப்பின் தன்மை மாறுபட வழியுண்டு. இது சரியா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஆனால், மிக நல்ல கதையில் கூட வீட்டு வேலைக்காரப் பெரியவரை அந்த வீட்டு உரிமையாளரின் பத்து வயது மகன் கெட்ட வார்த்தையில் திட்டுவதாக வரும்போது, அல்லது, பெண்ணை மதிப்பழிக்கும் வார்த்தைகள் மூலப்பிரதியில் இடம்பெறும்போது அவற்றை அப்படியே மொழிபெயர்த் துத்தானாக வேண்டுமா என்ற கேள்வி ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற அளவில் எப்போதுமே என் மனதில் தவிர்க்கமுடியாமல் எழும். அவ்வாறே, இனக்கலவரத்தைத் தூண்டும் சில சொற்றொடர்கள் இடம் பெறும் ஒரு செய்தியை அல்லது இலக்கியப் பிரதியை மொழி பெயர்க்கும் போது பரபரப்புக்காக அவற்றை அப்படியே மொழி பெயர்ப்பதை விட அதன் சாரத்தை மட்டும் மொழி பெயர்த்துத் தருவதே மேல் என்று தோன்றும்.
ஒரு பத்தியைப் படித்து உள்வாங்கி மூலத்தின் சாரம் குறை யாமல் அதை சொந்த மொழியில் தருபவர்களைப் பார்த்தி ருக்கிறேன்! மூலப் பிரதியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான சொல்லைத் தேடி எடுத்து அத்தனை அக்கறையாகச் செயல்படுபவர்கள் பார்த்திருக்கிறேன்!
மொழிபெயர்ப்பாளர்: S.R. தேவிகா
1958ஆம்ஆண்டுஜூன் 18இல்தென்னிந்தியாவில்உள்ளகும்பகோணத்தில்பிறந்தவர். சென்னைமாநிலக்கல்லூரியில்ஆங்கிலஇலக்கியத்தில்பட்டம்பெற்றார். 1980இல்மத்தியஅரசுப்பணியில் சேர்ந்தார். – 2014இல்விருப்பஓய்வுபெற்றார். பயணம்செய்வதில்விருப்பம்கொண்டவர். ஆன்மிகநூல்களைவாசிப்பதிலும்ஆன்மிகத்தலங்களுக்குச்செல்வதிலும்ஆர்வம்கொண்டவர்.
பணிஓய்வுக்குப்பிறகுமொழிபெயர்ப்புப்பணியில்ஆர்வமாகஈடுபட்டு வரும்இவர்தெலுங்கின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான விவிபி ராமாராவின் சிறுகதைகளின் தொகுதியை ஆங்கிலத்தி லிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மகத்தானஆளுமைகளானமகாத்மாகாந்தி, மதர்தெரஸா, விவேகானந்தர்போன்றவர்களின்வாழ்க்கையைஎடுத்துரைக்கும்சிறுநூல்களையும்சிறுவர்களுக்காகஎழுதியுள்ளார்.
மதங்களின்அடிநாதமாகவிளங்குவதுமனிதநேயமேஎன்பதைபகவத்கீதை–குரானிலிருந்துபலஉதாரணங்களைமுன்வைத்துஎடுத்துரைக் கும்திரு.மூஸாராஜா (பாரசீகக்கவிஞர்மிர்ஸாகாலிபின்கவிதை களைபாரசீகமொழியிலிருந்துஉருதுவிலும், ஆங்கிலத்திலும்மொழி பெயர்த்திருப்பவர்) எழுதியஆங்கிலநூல்IN SEARCH OF ONENESSதேவிகாவின்தமிழாக்கத்தில்வெளியாகியிருக்கிறது.
இந்த நூலின் இணை மொழிபெயர்ப்பாளர் தேவிகா (ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்) எப்படி மொழிபெயர்ப்புப்பணியை மேற்கொள்கிறார் என்ப தைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக பின்வருமாறு கூறுகிறார்:
”முதன்முதலாக எழுத்தாளரான Dr.VVB.. ராமராவ்-இன் தெலுங்குக் கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கும் பணியை மேற் கொண்ட போது முதலில் அந்த நூலை முழுமையாக வாசித்தேன். வாசிக்கும் போதே மனதிற்குள் ஒரு பூர்வாங்க மொழிபெயர்ப்பு ஓடியது. பின்னர் மொழிபெயர்க்கத் தொடங்கிய போது ஒவ்வொரு சொற்றொடராக மொழிபெயர்த்தேன்.
மொழிபெயர்ப்பும் மூலமும் ஒரே பொருளைத் தருகின்றனவா என்று படித்துப் பார்ப்பேன். சில சமயங்களில் தெரியாத சொற்ளுக்கு பொருள் அறிய இணையத் தின் உதவியை நாடுவேன். என் கருத்து சரியானது என்று தோன்றும் பொருளை எடுத்துக்கொள்வேன்”
மொழிபெயர்ப்பில் மிகவும் உதவுவது அந்த முயற்சியில் ஒருவரின் விருப்பம் மற்றும் எடுத்துக்கொண்ட மூலப் பிரதியில் உள்ள விஷயத்தில் ஆர்வம்”
மொழிபெயர்ப்பின் மூலம் மொழிபெயர்ப்பாளர்களுடைய சிந்தனைகள், கண்ணோட்டங் களிலும்கூட நேரிய மாற்றங்கள் ஏற்பட வழியிருக்கிறது.மொழிபெயர்ப்பாளர் மூலப் பிரதியில் ஆசிரியரை விட உயர்ந்தவர் அல்ல; தாழ்ந்தவரும் இல்லை.
மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொள்கிறவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் அதைச் செய்ய வேண்டியது அவசி யம். இன்று இணையத்தில் பல பல அகராதிகள் கிடைக்கின்றன. இணைச் சொற்கள், எதிர்ச்சொற்கள், ஒரு சொல்லுக் குரிய பல அர்த்தங்கள் என நிறைய கிடைக்கின்றன ’மிஷின் ட்ரான்ஸ்லேஷன்’ செய்ய வசதி இருக்கிறது ஆனால் அதை மட்டுமே நம்பினால் மொழிபெயர்ப்பு மிக மோசமாகவே அமையும்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஆர்வமாய் மொழிபெயர்ப் பில் தொடர்ந்து ஈடுபடும்போது நம் மொழித்திறனும் மொழி பெயர்ப்பாற்றலும் நிச்சயமாக மேம்படும். மொழி பெயர்ப் புப் பணி இன்று பலருக்கு வாழ்க்கைத் தொழிலாக, வாழ்வா தாரமாக விளங்குகிறது புனைவு அ-புனைவு எழுத்தாக்கங்கள் மட்டுமல்லாமல் திரைப்படத் துறை தொலைக்காட்சி நாளிதழ்கள் சுற்றுலாத்துறை, மருத்துவத் துறை,, கணினி சார் துறைகள் என்று பல்வேறு துறைகளில் மொழி பெயர்ப்பு களுக்கு, மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவையிருக்கிறது. இன்றைய GLOBAL VILLAGE சூழலில் இந்தத் தேவை அதிகரித்துக்கொண்டேபோகும் என்பது உறுதி.
எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை அப்படி தரப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டியது அவசியம் அரசு பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்களை விட சம்பளமும் சலுகைகளும் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல், பள்ளி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளும் அரசு பள்ளிகளில் மிகவும் நன்றாகவே உள்ளன
அப்படி இருந்தும் தங்கள் வசதியின்மையையும் மீறி அடித்தட்டு மக்கள் வட்டிக்கு கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? பிள்ளைகள் ’டாடி’, ’மம்மி’ சொல்வார்கள் என்று அல்ப சந்தோஷம் என்று அதை ஒதுக்க முடியுமா?
ஒரு பள்ளி என்ற கட்டமைப்பின் முதலும் முடிவுமான கவனக்குவிப்பு மாணாக்கர்களாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா?
அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் பலர் இருக்கலாம். அதே சமயம், அரசுப் பள்ளிகளிலான பணி நியமனங்களில் லஞ்சம் தந்து பதவி பெறும் வழக்கமும் பரவலாக இருப்பதாக பேசப்படுகிறது – அது எவ்வளவு தூரம் உண்மை? ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சிபாரிசோடு உரிய பணத்தை தந்து பணியில் இணையும் ஆசிரியர்கள், மற்ற ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களை தலைமை ஆசிரியரோ மற்ற நிர்வாகிகளோ தட்டிக் கேட்க முடிவதில்லை என்கிறார்களே – அது உண்மையா?
பள்ளி நேரங்களில் பல வகுப்புகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை என்கிறார்கள் பெற்றோர்கள். ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்; காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மற்றும் அவர்களுடைய பெற்றோர்களிடம் பள்ளி சார் குறைகளை பற்றி கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தொடர்ந்து இடைவெளிகளான கலந்துரையாடல்கள். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகத் தெரியவில்லை. அப்படி ஏதாவது குறைகளை கூற வரும் பெற்றோர்களிடம் – இவர்களில் பெரும்பாலோர் அடித்தட்டு மக்கள், குறைந்தபட்ச கல்வியறிவு பெற்றவர்கள் – ”என்ன பெரிசா கேள்வி கேட்கிறீங்க? காசு கொடுத்தா உங்க புள்ளையை படிக்க வைக்கிறீங்க?” என்று மதிப்பழிப்பதாகப் பேசி கூனிக்குறுக வைக்கும் ஆசிரியர்களும் நிர்வாகிகளும் உள்ளனர்
கூலி வேலைக்கு வீட்டு வேலைக்கு செல்லும் அடித்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் தான் ஏதேனும் எதிர்த்துச் சொல்லிவிட்டால் பள்ளிகளில் அதனால் தங்கள் பிள்ளைகளை ’கட்டம் கட்டி’ கண்டிப்பதும், தண்டிப்பதும் நடக்குமோ என்று அச்சப்படுவது வெளிப்படை.
நிறைய பள்ளிகளில், வகுப்புகளில் அவசர அவசரமாக பாடங்களை நடத்தி முடிக்கும் நிலையே உள்ளதாகத் தெரிகிறது. பாடம் மாணாக்கர்களுக்கு புரிகிறதா, சுவாரசியமாக இருக்கிறதா என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விடைகளை – கணித பாடம் உட்பட – மிகுந்த பிரயத்தனத்தோடு மனனம் செய்யப் பழகுவதே மாணாக்கர்கள் அறிந்த, அவர்களுக்கு அறிவுறுத்தப்படும், ஒரே கற்றல்வழியாக இருப்பதாகத் தெரிகிறது.
அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை வருடாந்திர இறுதித் தேர்வு என்று எதுவும் இல்லாமல் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவதால் அவர்க ளுடைய கற்றல் அளவையோ, கற்றல் தினையோ மதிப்பிட இயலாமல் இருக்கும் நிலை. தேர்வு என்பதை அவர்களுடைய கற்றல்திறனை மதிப்பிட மட்டும் பயன்படுத்தலாமே என்ற பேச்சு எழுந்ததற்கே ‘கூடவே கூடாது – அது அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்’ என்றெல்லாம் சொல்லி அநாவசியமாக அச்சுறுத்தி முட்டுக் கட்டை யிட்டார்கள் இங்கே.
அதற்கு பிறகான வருடங்களில் பொதுத்தேர்வுகள் வரும்போது பள்ளி 100% தேர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்பதற்காக கல்வி கற்பதில் சற்று பின்தங்கியுள்ள மாநகர்களை பள்ளியிலிருந்து நின்று விடுமாறு வேறு பள்ளிக்கு போய்விடும் மறைமுகமாகவும் நேரடியாகவும் வற்புறுத்துவதாகவும் சில பெற்றோர்கள் சொல்ல கேட்டதுண்டு
அரசுப் பள்ளிகளில் உள்கட்ட அமைப்புகளும் இடவசதியும் நன்றாகவே இருந்தாலும் அவற்றை சுத்தமாக பராமரித்தல் குறிப்பாக கழிப்பறைகளை பராமரித்ததில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் குழந்தைகளுக்கு சுத்தம் சுகாதாரத்தை அவற்றின் அவசியத்தை முக்கியத்துவத்தை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்கள் அவற்றில் அலட்சியமாக இருந்தால் எப்படி?
ஆரம்ப வகுப்புகளில் உள்ள சின்னப் பிள்ளைகளுக்கு சிறுநீர் கழித்தல் மலம் கழித்தல் போன்றவற்றை அடக்கிக் கொள்ளவோ உரிய நேரத்திற்கு இயற்கை உபாதைகளை கழிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவும் வராது அதற்காக அந்த குழந்தைகளை அடிப்பதும் திட்டுவதும் குற்றவாளிகளாக உணரச் செய்வதும் அடக்கிக் கொள்ளச் சொல்வதும் கொடுமை.
அரசுப் பள்ளிகளில் கணினிகள் கணினி கற்பிக்கும் அறைகள் நூலகங்கள் என்று இருந்தாலும் அவை எந்த அளவுக்கு மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்பது ஒரு கேள்விக்குறி. புத்தகங்களை கிழித்து விடுவார்கள் என்பதற்காகவே நூலகங்களை பூட்டி வைத்துள்ள பள்ளிகள் உண்டு என்று கூறுகிறார்கள். அதேபோலத் தான், கணினி கற்றுக் தரவும் நிறைய பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்கிறார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கு சரியாகத் தமிழ் படிக்க தெரியவில்லை, தமிழ் உச்சரிப்பு தெரியவில்லை, அடிப்படை தமிழ் ஆங்கிலம் கணிதம் தெரியவில்லை என்று கடந்து சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றாய்வுகளின் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன ஆனால் அது உண்மையா என்பதை சரிபார்த்து தெரிந்துகொள்ள முயலாமல் சுற்றாய்வுகளைப் பழிப்பதும், அவற்றுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும் இங்கே வாடிக்கையாக இருக்கிறது. அல்லது, நாட்டிலேயே எங்கள் மாநிலம் தான் கல்வியில் முதலிடத்தில் இருக்கிறது என்று பாமர மக்களுக்கு புரியாத தரவுகளை தந்து வாய டைத்து விடுகிறார்கள்.
அரசு பள்ளிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும் மாணாக்கர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களும் இருக்கிறார்கள். அவர்களை இனங் கண்டு அவர்கள் அவர்களை ஒவ்வொரு பள்ளிக்குமான ஆலோசனை குழுவினராக அதிகாரம் அளித்த பள்ளி நிர்வாகம் சீராக செம்மையாக நடந்தேறு அவர்களே சுதந்திரமாக கலந்த ஆலோசனைகள் மேற்கொள்ள செயல்பட ஊக்குவிக்கலாம்.
மதிப்பெண்கள் அதிகம் வாங்கும் மாணாக்கர்களைப் புகழ்ந்து பேசி அதில் பெருமை கொள்வதைப் போலவே சரியாக படிக்காதம் நிலவும் பள்ளிச் சூழல், வகுப்புச் சூழலில் கற்கவியலாப் பிள்ளைகளுக்கும் உரிய அதிகார அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும். அதற்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகளை, நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், எதற்கெடுத்தாலும் தனியார் பள்ளி மட்டும் மேலானதா?’ என்றவிதமாகப் பேசி, பிரச்சனையை திசைதிருப்புவது எந்த வகையிலும் அரசுப் பள்ளிகளின் பயனாளிகளான எதிர்காலக் குடிமக்களுக்குப் பலன் அளிக்காது.
பள்ளி நிர்வாகத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரசியல்வாதிகளின் ஆக்கப்பூர்வமான தலையீடு இருக்கலாம். எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளிகள் நடக்கும் விதத்தை நேரில் சென்று பார்வையிடலாம். அதற்கு அரசு அவர்களுக்கு அனுமதி அளிப்பதே சரி. வாக்கு வங்கிகள் அல்ல என்பதால் மாணாக்கர்களை, குறிப்பாக அரசுப் பள்ளி மாணாக்கர்களின் கல்வி சார் அக, புற தாக்கங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல.
சில வருடங்களுக்கு முன், அரசுப் பள்ளி ஆசிரியர்களே அவர்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள் என்பது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. “என் பிள்ளை அங்கே படிக்கிறான்” என்று ஒரு பிரபல தனியார் பள்ளியின் பெயரை கர்வத்தோடு சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியர்களே அதிகம்.
சமீபத்தில் பேஸ்புக்கில் ஆசிரியராக பணிபுரியும் படைப்பாளி ஒருவர் அரசு ஊழியர்கள் ஏன் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். கூடவே, அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு அரசுப் பணி தரலாம், வேறு சில சலுகைகளை அரசு தரலாம் என்று அபத்தமான ஆலோசனையையும் அளித்திருந்தார். இது என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான தீர்வு?
சமீபத்தில் மறைந்த நடிகர் ஒருவர் அரசு ஆசிரியராக வேலை பார்த்ததாகவும் அந்த வேலையை அவர் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் ஆசிரியப்பணியில் நிறைய விடுமுறை கிடைக்கும் திரைப்படங்களில் நடிக்க, நடிக்க முயற்சி செய்ய அது நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆசிரியர் பணி என்பது மிகுந்த அர்ப்பணிப்பு மனோபாவமும், சமூகப் பிரக்ஞையும் தேவைப்படும் ஒன்று. அதை வெறும் வாழ்வாதாரத்திற்கான இன்னொரு பணியாக பாவிப்பது மாணாக்கர்களை தான் பாதிக்கும்
கல்விக்கூடம் என்பதில் ஆசிரியர் பெருமக்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் பணியாற்றினாலும் அதன் முதலும் முடிவுமான நோக்கமும் இலக்கும் மாணாக்கர்களாகவே, அவர்களின் நலம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இடமில்லை.
குமரகுருபரர் 1625-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்ற ஊரில் சைவ மரபில் பிறந்தார். சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிள்ளைப் பிராயத்தில் பேசும்வயதை அடைந்தும் அவர் பேசும்திறன் பெறவில்லை. எனவே இவர் பெற்றோர் திருச்செந்தூர் முருகனைவேண்டி கோயிலில் தங்கி உப்பில்லாத உணவை உண்டு 40 நாட்கள் விரதம் இருந்தனர். 45-ஆம் நாள் பேசும் ஆற்றலை அடைந்தான். இறைவனுக்கு நன்றி சொல்லிக் கடன்பட்டனர். சிறுவயதிலேயே இறைவன்மீது கந்தர்கலிவெண்பா பாடி அருளினார். இறைவன்மீது கொண்ட பக்தியின் காரணமாக தலயாத்திரை மேற்கொண்டு பலதளங்களும் சென்றுவர புறப்பட்டுச் சென்றார். அப்பொழுது தருமபுரம் ஆதீனம் வந்தார். ஆதீனகர்த்தரிடம் இவர் வாக்குத் தடைபட்டது அதனால் மாசிலாமணி தேசிகரையே தனது குருவாக ஏற்றார். சைவ சமயத்தை அழித்து இஸ்லாத்தைப் பரப்பும் பணியில் இஸ்லாமியர் பாடுபட்டனர். இதனை உணர்ந்த மாசிலாமணி தேசிகர் இஸ்லாத்துக்கு எதிராகநின்று சைவத்தை நிலைநாட்டும் திறன்பெற்றவர் குமரகுருபரே ஆவார் என்பதை உணர்ந்து அவரை காசிக்கு ச் சென்று வரும்படி பணித்தார். அதனையேற்று குமரகுருபரரும் காசியாத்திரை சென்றார். அங்கே டில்லியை ஆண்ட முகலாய மன்னனான பாதுஷாவிடம் காசி மாநகரில் இடம்வேண்டிப் பெற்று பரமசிவனுக்கு ஒரு கோயில் கட்ட நினைத்தார். ஆனால் இந்துஸ்தானி மொழி தெரியாததால் பாதுஷாவிடம் தனது கோரிக்கையை எடுத்துக் கூற முடியாமல் தவித்தார். அம்மொழி தெரிந்த சிலர் இவருக்கு உதவுவதாகக் கூறி சாக்குப் போக்குகள் சொல்லி, பாதுஷாவை சந்திக்கவிடாமல் தடுத்து வந்தனர். அதனால் வருந்திய குமரகுருபரர், எல்லாம் வல்ல சரசுவதி தேவியைத் துதித்து சகலகலாவல்லிமாலை என்னும் பிரபந்தத்தைப் பாடினார். உடனே வாணியின் அருளினால் அவருக்கு இந்துஸ்தானி மொழியில் சரளமாகப் பேசும் ஆற்றல் கிட்டிற்று. பாதுஷாவிடம் எப்படிச்செல்வது என குமரகுருபரர் யோசித்துக் கொண்டிருந்தபோது வாணியின் அருளால் சிங்கம் ஒன்று அவர் முன் வந்து நின்றது. குமரகுருபரர் அச்சிங்கத்தின் மீதமர்ந்து நேரே பாதுஷாவின் சபைக்குச் சென்றார். திடீரென்று சபைக்கு வந்த சிங்கத்தையும் அதன்மீது கம்பீரமாக அமர்ந்துவந்த குமரகுருபரரையும் கண்ட சபையோர் அச்சமும் ஆச்சரியமும் அடைந்தனர்.
பாதுஷாவோ குமரகுருபரரை வணங்கி வரவேற்றான். பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் கூடியிருந்த சபையில் குமரகுருபரரை உரை நிகழ்த்த வேண்டினான் பாதுஷா. குமரகுருபரரும் கலைமகளின் அருளால் இந்துஸ்தானி மொழியில் சைவ சித்தாந்தத் தத்துவத்தை மடை திறந்த வெள்ளம் போல் எடுத்துரைத்தார். அதனைக்கேட்ட பிற சமயகுருமார்கள் இந்து மதத்திலும் சைவசமயத்திலும் ஆர்வங்கொண்டனர். பாதுஷாவும் குமரகுருபரரின் சைவசித்தாந்த உரையைக் கேட்டு அகம் மகிழ்ந்தான். அவருக்கு யாதுசெய்ய வேண்டும் எனக்கேட்டான். உடனே குமரகுருபரர் காசியிலேயே தான் இருப்பதற்கு ஒரு மடம் அமைப்பதற்கு கேதார கட்டடத்தில் இடம் வேண்டினார். அப்படியே பாதுஷா அவருக்கு கேதார கட்டத்தில் இடம் தந்து உதவினார். பின்பு குமரகுருபரர் அங்கே மறைக்கப்பட்டுக்கிடந்த விசுவலிங்கப்பெருமானை வெளிப்படுத்தி சிறுகோயில்கட்டி நித்திய பூஜைகள் சைவ நியமனப்படி நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். கேதார கட்டடத்தில் உள்ள கேதாரலிங்த்தை வெளிப்படுத்தி கோயில் கட்டுவித்தவர், இம்மடத்தின் கிளையைநத் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் என்ற ஊரிலும் குமரகுருபர ஸ்வாமிகள் அமைத்தார். சகலகலாவல்லி மாலை 10 எளிய தமிழ்ப்பாடல்கள் கொண்டது. இதன் முதற்பாடல்
“வெண்டாமரைக்கன்றி நின்பதம்.
தாங்க
என் வெள்ளை உள்ளத்
தண்டாமரைக்குத் தகாது கொலோ!
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க
ஒழித்தான் பித்
தாக
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே
சகல கலா வல்லியே!
ஏழு உலகங்களையும் உண்டு பாதுகாத்தவனான திருமால் உறங்கவும், அவ்வுலகங்களை அழிக்கின்ற தொழிலையுடைய சிவபெருமான் பித்தனாகி அலையவும் செய்தவனான நான்முகன் இனியதென எண்ணிச் சுவைக்கும் கரும்பைப் போன்றவளே! வெள்ளைத்தாமரையே அன்றி உனது திருவடிகளை எனது தூய்மையான வெள்ளை உள்ளம் தாங்கத்தகுதியற்றதோ? என்பதாகும். இதில் பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெருந் தொழில்கள் குறிக்கப்படுகின்றன. பிரும்மாவே சரஸ்வதி கடாட்சம் வேண்டித் துதித்தபாடல் இது என்பதால் மற்ற கலைமகள் தோத்திரங்களுக்கு இல்லாத மகிமை இப்பாடலுக்கு உண்டு.
சைவ உலகின் முதன்மையர் காரைக்காலம்மையார். தமிழ்ச் சைவ நெறிக்கும், தமிழிசைக்கும், பதிக வடிவிற்கும், நடராச காட்சிக்கும், இறைவனைத் தரிசித்த பெண்மைக்கும் அம்மையாரே முதலானவர். முதன்மையானவர் ஆவார். அவரின் பாடல்களில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துகளும் அமைந்திருப்பதால் அவரே சைவ சித்தாந்தத்தின் முன்னோடியாகவும் விளங்குகிறார். அவர் இயற்றிய மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவற்றில் செழுமை மிகுந்த சைவ சிந்தாத்தக் கருத்துகள் நிறைந்து நிற்கின்றன. அம்மையாரின் பாடல்களைச் சைவ சித்தாந்த நோக்கில் ஆராய்கையில் பல சைவ சிந்தாந்த கருத்துகள் அவர் காலத்திலேயே கருக்காண்டு இருந்ததை உணரமுடிகின்றது.
முதலும் முடிவும்
சைவ சிந்தாத்தின் முதன்மை நூலான சிவஞான போதத்தின் முதல் நூற்பா
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர் (சிவஞான போதம் 1)
என்பதாகும். சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்று ஐயமறக் கூறுகின்றது. அழிக்கும் சங்கரனே தோற்றுவிப்பவனாகவும் இருக்கிறான் என்பதே இதன் மையப் பொருள். இந்நூற்பா என்மனார் புலவர் என்று தொல்காப்பிய நெறியைக் கையாள்கிறது. மெய்கண்டார் பல புலவர்கள் சொன்ன செய்திகளை முன்வைத்து இக்கருத்திற்கு வருகிறார். என்மனார் புலவர் என்ற புலவர் வரிசையில் பல புலவர்கள் இருக்கிறார்கள். காரைக்கால் அம்மையாரும் இருக்கிறார்.
இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் – இறைவனே
எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான். (அற்புதத் திருவந்தாதி -1)
என்பது காரைக்காலம்மையாரின் பாடல். இறைவனே உயிர்களைத் தோற்றுவிக்கிறான். இறைவனே உயிர்களை இறக்கம் செய்கின்றவனும் ஆகின்றான். அவனே வெந்துயரம் வந்தால் காப்பவனும் அருள்பவனும் அவனே ஆகான். வெந்துயரம் வரச் செய்பவனும் இறைவனே ஆவான். இறைவனின் ஐந்தொழில் அருமையையும் காரைக்கால் அம்மையார் சுட்டி அவனே அழித்துத் தோற்றி மறைத்து அருள் செய்துக் காப்பவனும் ஆகின்றான்.
இவ்வாறு சைவ சித்தாந்த தத்துவத்தின் தோற்றுநராகவும் காரைக்கால் அம்மையார் விளங்குகிறார். பற்பல சைவ சிந்தாந்த செய்திகள் அவரின் பாடல்களில் ஆங்காங்கே விரவிக்கிடக்கின்றன.
நடன நாயகன்
காரைக்காலம்மையாரே நடன நாயகனாக சிவபெருமானை முதன் முதலாக நடராச உருவத்தில் கண்டு மகிழ்கிறார். பாடி மகிழ்கிறார். ஆண்டவன் ஆடல் வல்லானாய் ஆடி மகிழ்கிறார். சிவபெருமானின் ஞான நடனம், ஊன நடனம், ஆனந்த நடனம் அனைத்தைமுய் கண்ட முன்னவர் காரைக்காலம்மையார்.
முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே
(திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு, பாடல் 7)
என்று இறைவனின் நடனத்தைக் கண்டவர் காரைக்காலம்மையார்.
தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம்-ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு
(உண்மை விளக்கம் பாடல் எண். 35)
என்ற உண்மை விளக்கப் பாடலில் அங்கியிலே சங்காரம் என்று அனல் கை ஏந்தி ஆடும் அழகனின் ஆடல் குறிக்கப்பெற்றுள்ளது. ஆடல்வல்லானின் வலப்புற மேற்கரத்தில் உடுக்கை படைப்புத் தொழிலின் அடையாளமாக விளங்குகின்றது. கீழ்ப்புறத்தில் உள்ள அபயக் கரம் காத்தல் தொழிலைச் செய்கிறது. இடது புறத்தில் உள்ள மேல் உள்ள கரம் தீயினைத் தாங்கி அழித்தல் தொழிலைச் செய்கின்றது. இடது புறத்தில் உள்ள மற்றொரு கரம் தூக்கிய திருவடியைக் காட்டி அருளல் தொழிலைச் செய்கின்றது. காரைக்காலம்மையார் கண்ட நடனம் இந்த நடனமே ஆகும்.
ஐந்தெழுத்து மந்திரம்
காரைக்காலம்மையார் ஐந்தெழுத்து மந்திரத்தை வெளிப்பட உரைக்காமல் பூடகமாக தன் இரட்டை மணிமாலைப் பாடலில் உரைக்கின்றார். வெளிப்பட மந்திரத்தைச் சொல்வது இயல்பல்ல.
தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினஉணர்ந்தோர் காண்பர் – தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற்கழல்
(திருவிரட்டை மணிமாலை பாடல்எண் 10)
என்ற இந்தப் பாடலில் காரைக்காலம்மையார் குறிப்பாக மந்திரச் சொல்லை உணர்த்துவதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். தலையாய ஐந்து என்பது ஐந்தெழுத்தினைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். தலையாய ஐந்து என்பது எந்த மந்திரத்தைக் குறிக்கும் என்பது அறியப்பட வேண்டிய செய்தியாகும். நமசிவாய என்பதையா, அல்லது சிவாயநம என்பதையா என்பதில் தெளிவு காண வேண்டியுள்ளது.
தலையாய, தலையாயின, தலையாய என்ற சொற்களைச் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்தச் சொற்களில் உள்ள குறிப்பு மேற்சொன்ன வினாவிற்கு விடையளிக்கும்.
ஐந்தெழுத்து மந்திரங்கள் இரண்டும் நடராச உருவத்தில் பொருந்தும் தன்மையன.
ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம் – கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகருமுகம் வாமுடியப் பார். ( உண்மை விளக்கம் பாடல்- 33)
தங்கும்மகரம்அதுதான். ( உண்மை விளக்கம் பாடல் – 34.)
என்ற பாடலில் நடராச உருவத்தில் சிவாயநம பொருந்தும் பாங்கினை அறியமுடிகின்றது. இறைவனின் துடி ஏந்திய கரத்தில் ‘சி’ வீசிய திருக்கரத்தில் ‘வ’, அபயகரத்தில் ‘ய’, தீ ஏந்திய கரத்தில் ‘ந’, திருவடியில் ‘ம’ என்பதாக சிவாயநம என்ற ஐந்தெழுத்தும் நடராச வடிவத்தில் பொருந்துகிறது.
இந்நிலையில் தலையாய ஐந்து என்று காரைக்காலம்மையார் சொல்வது நமசிவாய என்பதையா? சிவாயநம என்பதையா? என்ற வினா வினாவாகவே நிற்கிறது. இதற்குப் பதில் காண
‘‘எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே ”
என்ற உண்மை விளக்கத் தொடர் உதவுகின்றது. எட்டும் இரண்டும் என்பது ஒரு குறிச்சொல்லாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளது. எட்டு அதனோடு இரண்டைச் சேர்க்க பத்து என்ற கூட்டுத் தொகை கிடைக்கும். அத்தொகைக்கான தமிழ் எழுத்து ௰ என்பதாகும். இது ஏறக்குறைய ‘ ய’ என்ற உயிர்மெய் எழுத்தின் வடிவத்தை ஒத்துள்ளது.
நமசிவாய என்ற மந்திரத்தில் உள்ள ‘ ய’ என்பதனை எட்டும் இரண்டும் சேர்ந்ததால் கிடைத்த பத்து என்ற எண்ணிக்கையின் குறியீட்டுடன் ஒப்புமைப் படுத்தினால் தெளிவு பிறக்கிறது.
தலையாய ஐந்து, தலையாயின உணர்ந்தோர், தலையாய அண்டத்தான் என்பதில் உள்ள ‘ய’ என்ற எழுத்து தலை என்பதோடு இணைத்துச் சொல்லப்பெற்றுள்ளது. இதனை முன்வைத்து தலையில் ‘ய’ என்ற எழுத்து அமைந்த நடராச நிலையில் பொருந்துவது நமசிவாய என்ற மந்திரத்தால் மட்டுமே.
எனவே காரைக்கால் அம்மையார் சுட்டும் தலையாய ஐந்து என்ற குறிப்பில் உள்ள மந்திரம் நமசிவாய என்பதே ஆகும் என உறுதியாகக் கூறமுடிகின்றது. காலில் ந தொடங்கி வளர்ந்து, தலையில் ய என்பதாக முடிகின்றது.
காரைக்காலம்மயார் பாடல்களில் சைவ சித்தாந்த அடிக்கருத்துகள் பல புதைந்துள்ளன. சாத்திரக் கருத்துகளுக்கு மூலம் திருமுறைகளே என்பதை உணர காரைக்கால் அம்மையாரின் பாடல்களின் கருத்துகளும் துணை நிற்கின்றன. சைவ வாழ்வு வாழ திருமுறைகளையும் ஓதுவோம். சாத்திர நூல்களையும் தெளிவோம்.
துணைநூற்பட்டியல்
நடராசன்.பி.ர. புலவர், (உ.ஆ) பதினோராம் திருமுறை, உமா பதிப்பகம், சென்னை 2005
மனவாசகம் கடந்தார் திருவதிகை, உண்மை விளக்கம், தருமபுர ஆதீனம், 1946
மெய்கண்ட தேவ நாயனார், சிவஞான போதம், திருவாவடுதுறை ஆதீனம், 1949
வெள்ளைவாரணனார்.க. (உ. ஆ) திருவருட்பயன், சைவ சித்தாந்த சமாஜம், சென்னை, 1965
தமிழ் என்னும் சொல் மொழியை மட்டும் குறிப்பதன்று. தமிழ் என்னும் சொல் மக்களின் வாழ்க்கை, பண்பாடு, மொழி, வரலாறு, நாகரீகம், கலை, இலக்கியம், அறிவியல், வணிகம் ஆகிய அனைத்ததையும் உள்ளடக்கிய இன அடையாளக் குறியீடாகும். தமிழ் உணர்ச்சி என்பதும் தமிழ் வளர்ச்சி என்பதும் மொழியின் தன்மையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டது அன்று. தமிழ் இனத்தின் அடையாளங்களை உள்ளடக்கியது.
தமிழ் மொழி வளரவும், ஓங்கவும் பல்வேறு சிந்தனைகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டாம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழ் உணர்ச்சி என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றினை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை இராமச்சந்திரபுரத்தில் இருந்த அன்பு நிலையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் வரலாறு, உணர்ச்சி, வளர்ச்சி பற்றிய பல அரிய சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னதான தமிழ் நிலையை இந்நூல் எடுத்துரைக்கின்றது. பெரும்பாலும் அதே தமிழ் உணர்வு நிலைதான் தற்போது உள்ளது என்பதை நூலை வாசிக்கையில் உணரமுடிகின்றது.
சிவகங்கையைப் பிறப்பிடமாகவும், சிவகங்கையை அடுத்த சோழபுரத்தைத் தனது நிறைவிடமாகவும் கொண்டு வாழ்ந்த துறவி ஆவார். இவர் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, வடமொழி அறிந்த பன்மொழி வித்தகரும் ஆவார். இவர் பல்வகை இலக்கிய வகைமைகளைப் படைத்தவர். இவரின் சிந்தனைகளைச் சிவகங்கை சார்ந்த சிந்தனைகளாகக் கொண்டு அவற்றைத் தமிழுலகச் சிந்தனைகளாக ஏற்பது சிறப்பாகும்.
தமிழ் உணர்ச்சி
தமிழின் வளர்ச்சியே தமிழரின் வளர்ச்சி என்று உரைக்கிறார் கவியோகி சுத்தானந்த பாரதிாயர். அவரின் தமிழ் உணர்வு கொள்ளச் செய்யும் கருத்துரைகள் கவனிக்கத்தக்கன.
‘‘நான் தமிழன். தமிழ் எனது தாய்மொழி. நான் தமிழுக்கே, தமிழர் உயர்விற்கே, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கே வாழ்வேன். நான் எதைச் செய்தாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய இவை பெருமை பெறவே செய்வேன். தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழருக்கும் கேடு சூழும் எதனையும் துணிந்தெதிர்த்து வெல்லுவேன். என்னுயிரை மறந்தாலும் தமிழை மறவேன். என்னுடைலைச் செகுத்தாலும் தமிழைக் கைவிடேன். எனது தமிழ் மொழிதான் உலகில் முதன்முதல் தோன்றிய முதுமொழி. தமிழ் மொழியே இந்நாடெல்லாம் பரவி விரிந்த பழமொழி. காலக்கோளால் எமது தமிழரசி இன்று மூலையில் ஒதுக்குண்டு, பிறமொழிகளால் இடிப்புண்டு தனது அரியணையிழந்து, வெறுந்தரையில் சிறுமையுற்றுக் கிடக்கிறாள். எனது அன்னையை மீண்டும் மொழியரசியாக அரியணையேற்றவே நான் உயிர் வாழ்வேன். என்னுயிர் உள்ளமட்டும் ஒவ்வொரு நாளும், தமிழ் முன்னேற்றத்திற்காகவும், தமிழர் தலை நிமிர்ந்து உலகில் ஓங்கவும், இரண்டுமணி நேரமாவது ஏதாயினும் பயனுள்ள ஒரு தொண்டு செய்வேன். அத்தொண்டு செய்தாலன்றி, நான் உணவு கொள்ளேன். காலையும் மாலையும் எனது தமிழ் நாட்டைத் தமிழாலயமாகக் கருதித் தமிழ் வாழவே திருவருளை வணங்குவேன்.. எனது தமிழகத்திற் பிறந்த எல்லோரும், எங்கிருப்பினும் என்னவரே. சாதி, மத வேறுபாடுகளை நான் பாராட்டமாட்டேன். *நீயார் என்றால், அந்தச் சாதி, இந்தச் சாதி, அந்த மதம், இந்தமதம் என்னாமல் ‘‘ நான் தமிழன்!’’ என்றே பெருமையுடன் சொல்லுவேன். தமிழன் எவனையும் நான் வெறுக்க மாட்டேன். என்னை ஒரு தமிழன் வெறுத்தாலும், அவனை அன்புரை கூறி மாற்றுவேன். எனது தமிழ்நாட்டில் தோன்றிய நாவலரையும், பாவலரையும் அருளாளரையும், பெரியாரையும் நான் வணக்கமுடன் போற்றுவேன். ‘‘ எந்தாய் வாழ்க!’’ என்ற மந்திரத்தை எப்போதும் நினைப்பேன். என்னை எதிர்த்த அன்னியருக்குத் தமிழின் பெருமையை, தமிழ்ப் பெரியாரின் சிறப்பை, தமிழ் நாட்டின் மாண்பை விளக்குவேன். இன்றியமையாத சமயமன்றி, மற்றெப்போதும் தமிழிலேயே பேசுவேன், எழுது வேன்… தமிழன் பிற மொழியிற் பேசினாலும் நான் தமிழிலேயே பதிற் சொல்லுவேன். தமிழ்ப் பெரியார் செய்யும் அரும்பணிகளுக்கு என்னால் ஆன உதவி செய்வேன். தமிழன் முன்னேற்றத்திற்காகத் தோன்றிய எல்லா நிலையங்களையும் நான் மகிழ்வுடன் போற்றுவேன். தமிழர் ஒற்றுமைக்காக நான் வேண்டிய பணி புரிவேன். ‘‘எந்தாய் வாழ்க, எந்தாய் வாழ்க.” இவ்வுறுதி தமிழன் உயிர்ப்பாகுக’’ என்று தமிழன் பெறவேண்டிய தமிழ் உணர்வினைக் காட்டுகிறார் சுத்தானந்த பாரதியார். தமிழர் ஒவ்வொருவரும் இதனை ஏற்று உறுதி மொழியாகக் கைக்கொள்ளுதல் வேண்டும். இது எல்லாக் காலத்திற்கும் தேவையான தமிழ் உணர்ச்சிக் கொள்கையாகும்.
தமிழ் வளர்ச்சி
கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழ் உணர்ச்சிக்கான இருபத்தாறு வழிகளைத் தமிழ் உணர்ச்சி என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். அவற்றைத் திட்பமாக அறிந்தால் உணர்ந்தால் அவற்றின்படி நடந்தால் தமிழ் வளர்ச்சி உறுதியாக ஏற்படும்.
தமிழில் பேசுவோம், எழுதுவோம்
தமிழன் தமிழனுடன் தமிழில் பேசுக, தமிழனுக்குத் தமிழன் தமிழில் கடிதம் எழுதுக, பிறமொழியாளருடன் பேசுகையில் தமிழின் பெருமையைச் சொல்லுக. கொச்சைத் தமிழில் பேசவேண்டாம். தமிழைப் பிழையின்றிப் பேசிப் பயில்க! பிறமொழிகளில் பேசும்போதும் எழுதும் போதும் தமிழ்ப் பெரியார் திருமொழிகளை மேற்கோள் காட்டி உரைத்து விளக்குக. பேச்சு நடை எழுத்து நடை பேதமின்றி ஒன்றாக வேண்டும். ஆழ்ந்த கருத்து, இனிய சொற்கள், தெளிந்த நடை உள்ள தமிழே வெற்றிபெறும்.
தமிழ் இலக்கணக் கல்வி
காலத்திற்கேற்ற விதிகளைக் கூட்டி இனிய தமிழ் இலக்கணம் சிறுவர்களும் பயிலும் வகையில் எழுதப்பட வேண்டும். (இனிய தமிழ் இலக்கணம் என்ற பெயரில் சுத்தானந்த பாரதியார் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சிந்தனை இவர் காலத்திலேயே இவராலேயே நிறைவேறியுள்ளது. இது மறுபதிப்பாக வெளிவரவேண்டும்) . தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை ஐரோப்பிய செய்யுளிலக்கணம் போன்று தெளிவாக எழுத வேண்டும்.
தமிழிசை வளர்ச்சி
புதிய தமிழிசை இலக்கணம் வகுக்க வேண்டும். ஐரோப்பிய சங்கீதத்தில் வழங்குவதுபோல இசைக்குறிகள் தமிழில் உண்டாக வேண்டும்.
அகராதியியல்
தமிழில் இலட்சம் வார்த்தைகளுக்கு பொருள் விளக்கும் அகராதிகளே உள்ளன. வரலாறு, தரைநூல், வான நூல் , பௌதிகம், இரசாயனம், மருத்துவம், செடிநூல், பயிர் நூல், உயிர் நூல், உடல் நூல் முதலிய பலவகையான இயற்கைச் சொற்களைப் படப் பொலிவுடன் விளக்கும் அகராதிகள் வெளியிடப்பெற வேண்டும். தமிழர் நடத்தும் நாடகங்களில் இசை விருந்துகளில் தமிழ்ப்பாடல்களே முழங்க வேண்டும். நாடகங்களிலும், ஒலிப்படங்களிலும் தமிழர் வரலாறும், நாகரிகமும், தமிழின் பெருமையும், தமிழருக்குப் புதிய உணர்வைத் தரும் காட்சிகளும் துலங்க வேண்டும். இசை, சிற்பம், சித்திரம், கூத்து நாடகம் முதலிய நுண்கலைகளை வளர்க்கும் வண்ணம் தமிழில் புதிய கலை நூல்கள் தோன்ற வேண்டும்.
புதியன படைத்தல்
பிறநாட்டார் மெச்சிக் கற்கும்படியான காவியங்களும், கதைகளும் நாடகங்களும் தமிழில் தோன்ற வேண்டும். நம்முடன் உள்ள நாவலரையும், பாவலரையும், அருட்கவிகளையும் ‘அதை யெழுதுங்கள், இதை யெழுதுங்கள்’’ என்று இடைவிடாது, தூண்டி, அவர்கள் மூலம் தமிழிலக்கியங்களைப் புதிது புதிதாகச் செய்து குவிக்கவேண்டும். தக்க புலவர்கள் யாத்த நூல்களை அரங்கேற்றி வெகுமதி நல்க வேண்டும். தமிழறிஞர் சங்கம் ஒப்புக் கொண்ட நூல்களையே அரங்கேற்றி அச்சிட்டுப் பல மொழிகளிலும் பெயர்த்து உலகளாவச் செய்யவேண்டும். பிற மொழியிற் சிறந்த புலவர் நூல்களை எளிய நடைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். மொழிபெயர்ப்புக்கென்றே சில தமிழன்பர் உழைக்க வேண்டும். எளிய நடையில் விரிவான தமிழர் வரலாறு ஒன்று தொகுக்கப்பட வேண்டும்.
ஆங்கிலக் கல்வி
ஒவ்வொரு தமிழனும் ஆங்கிலம் பயிலத்தான் வேண்டும். தமிழில் விளக்கமுடியாத சொற்களை ஆங்கிலத்திலேயே வழங்குதல் நலம். பல கலைப் புலவரின் கூட்டுறவோடு, காலத்திற்கேற்ற கலை நூல்களை உண்டாக்கல் மிகவும் பெரிய வேலையாகும். அவ்வாறு உண்டாக்கிய சாத்திரங்களையே தமிழ்நாட்டு மாணவர்கள் பயில வேண்டும். இத்துறையில் வெற்றி பெற்றால் தமிழ் ஆங்கிலம் போல விளங்கலாம். வெளிநாடுகள் சென்று பயனுள்ள தொழில் முயற்சிகளைத் தமிழர் பயின்று இங்கே நடத்த வேண்டும்.
தமிழ் எழுத்துக்கள்
உலக எழுத்துக்களில் தமிழ் மிகவும் எளிதாக எழுதக் கூடியது. ஹிந்துஸ்தானி, ஆங்கிலம் முதலிய பிற மொழிகளையும் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுத வழியுள்ளது. இப்போதுள்ள எழுத்துக்களுடன் ஆங்காங்கு புள்ளியும் கோடும் சேர்த்து உலக மொழிகளையெல்லாம் தமிழில் எழுதலாம். தமிழ் மூலமே பள்ளிப் பாடங்கள் நடக்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள அரசியல் சபைகளிலும், கச்சேரிகளிலும், சட்டசபைகளிலும் தமிழிலேயே நடவடிக்கைகள் நிகழவேண்டும். தமிழ்க் கலையை உலகிற் பரப்ப தமிழ்ப் பத்திரிகைகள் உழைக்க வேண்டும். தமிழ்ச்சுடர் என்ற ஒரு மாசிகை படப்பொலிவுடன் ’’மாடன் ரிவ்யூ’’ போல வெளிவரல் வேண்டும்.
தமிழ்க் கல்வி
3 வயது முதல் ஆறு வயது வரை -குழந்தைச் சாலை அமைத்துக் கல்வி வழங்கவேண்டும்
6 வயது முதல் 12 வயது வரை – தமிழ்க்கணக்கு, சரித்திரம், செடி, உயிர், உடல் நூல் கல்வி வழங்கவேண்டும்
12 வயது முதல் 15 வயதுவரை தமிழறிவு, ஆங்கிலம், இந்துஸ்தானி, கணிதம், அறிவியல்கல்வி வழங்கவேண்டும்.
15 வயது முதல் 18 வயது வரை தொழில்கல்வி, இராணுவக் கல்வி வழங்க வேண்டும்.
18 வயது முதல் 20 வயது வரை கிராமங்களில் பொதுநலப்பணி வழங்க வேண்டும்.
அதன்பிறகு இலக்கியப் புலவர்,தொழிற்புலவர், அருங்கலைப் புலவர் பட்டங்கள் பெறவேண்டும் என்றும் அதன் பிறகே இல்லறம் என்று ஒரு கல்வித்திட்டத்தைச் சுத்தானந்த பாரதியார் அறிவிக்கிறார்.
தொழில் வளம்
நாட்டில் ஓர் அங்குலம்கூட தரிசாக இல்லாது பொன்னும் பசுமையும் குலுங்கச் செய்ய வேண்டும். தமிழர் செல்வம் தமிழர் முன்னேற்றத்திற்குப் பயனாக வேண்டும். ஒரு தமிழனும் பசியால் வருந்துதல் கூடாது. தமிழர் பிற நாடுகள் சென்று கூலிகள் அடிமைகள் போல வாழும் இழிவை நீக்கவேண்டும். உப்பு முதல் கற்பூரம் வரை தமிழ்நாட்டில் உண்டாக்கப்பட வேண்டும்.
தமிழர் படை
தமிழர் படை ஒன்று ஊருக்கு ஊர் இருக்க வேண்டும். தமிழர் சமுதாயம் திருக்குறள் வடிவாகவே அமையவேண்டும். சாதி மத வேறுபாடுகள் எல்லாம் வீட்டுடன் கட்டிவைத்துவிட்டு நாட்டில் ஒரே குலமாகத் தமிழர் ஒன்றுபட்டு வாழ வேண்டும். தீண்டாமை, பாராமை, பெண்பழிப்பு, கைம்பெண் கண்ணீர், குழந்தை மணம், பொட்டுக் கட்டல் முதலிய தீமைகள் எல்லாம் ஒழிய வேண்டும். தைப் பொங்கலை தமிழர் கூட்டத் திருவிழாவாகக் கொண்டாடலாம். தமிழர் தெருக்கள் பெரியார் பெயராலும் அறமொழிகளின் பெயராலும் விளங்க வேண்டும்.
தமிழ்நாடு
தமிழ் நிறைவான வளர்ச்சிபெற வேண்டுமாயின் அதற்கு உரித்தான தமிழ்நாடு ஒன்று உண்டாக வேண்டும். (இந்த சிந்தனை தமிழ்நாடு தோன்றுவதற்கு முன்னதானது) தென்னாடு, வடநாடு, பர்மா, மலேயா, தென்னாஃபிரிக்கா, இலங்கை முதலிய இடங்களிலெல்லாம் உள்ள தமிழர் அனைவரும் கூட்ட உணர்வுடன் ஒன்றுபட வேண்டும். தமிழன் எங்கிருந்தாலும், தமிழன்பையும் தமிழரன்பையும் வளர்க்க வேண்டும்.
தமிழின் தாய்த்தன்மை
திராவிடர் பெருங்கூட்டமொன்று கூடி தமிழிற் பிறந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழியினர் தமிழைத் தாயென மதிக்கச் செய்யவேண்டும். உண்மையான தமிழ் நாகரிகப் பான்மையைத் தாய்மொழி வாயிலாகவும் ஆங்கிலத்தின் வாயிலாகவும் ஹிந்தியின் வாயிலாகவும் தென்னாட்டவரும் வடநாட்டவரும் விளக்க வேண்டும். காலத்திற்கேற்ற முன்னேற்ற இயக்கங்களில் தமிழர் உரிய பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்’’என்று தமிழ் உணர்வு முன்னேற பல கட்டளைகளை சுத்தானந்த பாரதியார் வெளியிட்டுள்ளார். இவ்வாறு உரைக்கப்பெற்ற இருபத்தாறு கட்டளைகள் இன்றும் (2026) தொட்டுத் துலங்கிட வேண்டிய நிலையிலேயே உள்ளது என்பது தமிழ் வளர்ச்சிக்கான சவால்களாக உள்ளது.
தமிழ் வழிக் கல்வி, அகராதிகள் உருவாக்கம், ஆட்சி மன்றங்களில் தமிழ், அலுவலகங்களில் தமிழ், பிறமொழிச் செல்வம் தமிழுக்கு வருதல், தமிழ்ச் செல்வம் பிறமொழிகளுக்குச் செல்லல், சாதி இனம் வேறுபாடு அற்ற தமிழ்ச்சமுதாயம், தமிழில் பேசும் தமிழ்ச்சமுதாயம், கடிதங்கள் போன்ற தகவல் பரிமாற்றங்கள் தமிழில் செய்தல், தமிழ் இசைப் பெருக்கம், தமிழ் இதழ் வளர்ச்சி, தமிழ்ப்படை என எல்லா நிலைகளிலும் பெருத்த தமிழ் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டிய நிலைதான் உள்ளது என்பதை சுத்தானந்த பாரதியார் வழி உணரமுடிகின்றது.
தொகுப்புரை
சிவகங்கையைச் சார்ந்த சிந்தனைத் துறவி சுத்தானந்த பாரதியார் ஆவார். இவர் பன்மொழிகளை பல்மொழி இலக்கியங்களைக் கற்றவர். இவர் இந்திய விடுதலைக்கு முன்னதான காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் உணர்ச்சிக்குமான சிந்தனைகளை முன்வைத்திருப்பது கருதத்தக்கது. இவர் தமிழைத் தலைமை, சிறப்பு, பெருமை போன்ற பல தகுதிகளைப் பெற பல அரிய சிந்தனைகளை வழங்கியுள்ளார். இருப்பினும் அவை இன்னமும் எட்டப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணரமுடிகின்றது. தமிழர் படை, தமிழ்நாடு, தமிழ்க்கல்வி, தமிழ் அகராதி, தமிழில் அறிவியல் நூல்கள், தொழில் வளர்ச்சி போன்றன குறித்த இவரின் தமிழ் வளர்ச்சிச் சிந்தனைகள் கருத்தில் கொள்ளத்தக்கன. படைப்பாளர்களையும், அவர்களின் படைப்புகளையும் ஊக்குவிக்கும் அவரது சிந்தனைகள் தமிழக மக்களால் அரசால் ஏற்கத்தக்கனவாகவும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டியனவாகவும் உள்ளன.
நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவராக மற்றவர்களுக்குக் காட்சியளித்தார். அவர் இது போன்று என்றுமே இருந்ததில்லை, ஆனால் இன்று கணேசனின் மனதில் ஒருவித படபடப்பு.
ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்தவர் அன்று காலையில் நிறுவனத்தில் நடந்தவற்றை எண்ணிய வண்ணமாகத் திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தார். என்றும் போல் அன்று கணேசன் அலுவலகம் சென்ற போது, அங்கிருந்த நண்பர்கள் சக உத்தியோகஸ்தர்கள் கணேசனைப் பார்த்து ஏதோ சூசகமாகப் பேசினார்கள். கணேசனுக்கு அலுவலகம் என்றால் நான்கு போரு நான்கு விதமாகத்தான் பேசுவார்கள் அதையெல்லாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தனகுதானே எண்ணிக்கொண்டு தனது அன்றாட வேலையைச் செய்ய முற்படத் தொடங்கிய பொழுது. சிங்க முத்துக் குமாஸ்தா கணேசனிடம் சார் மேல் அதிகாரி உங்களைத் தனது அறைக்கு அழைக்கிறார் எனச் சொல்ல.
சரி சிங்கம் அப்போது நான் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு எனது மற்ற பணிகளைக் கவனிக்கிறேன். ஓக்கே சார் போங்க சீக்கிரம் இல்லையென்றால் அதற்கும் அவர் எனத்தான் சத்தம் போடுவார். கணேசனைத் தனது அறையின் நுழைவாயிலில் பார்த்தவுடன் மேல் அதிகாரி வா கணேசா இப்படி நாற்காலியில் அமர்ந்து கொள். மேற்கொண்டு நாம் பேசலாம். சார் எதற்கு என்னை அழைத்தீர்கள்? அது ஒன்றுமில்லை, அப்படியென்றால் நான் திரும்பி எனது சீட்டுக்கே போய்விடவா! உனக்குத் தெரிந்ததே! எனக்குத் தெரிந்த விஷயமா? என்ன சார் அது.
அதான் கணேசா உன் ரிடையர்மென்ட்! என்னுடைய ரிடையர்மென்டைப் பற்றி இப்போது என்ன சார்? கணேசா உணக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளன, நீ இப்போது வீ.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டால் உணக்கு கணிசமான தொகையை நிறுவனம் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். உன் வேலை இனி இளைய வயது நபர் ஒருவர் வந்து பார்த்துக்கொள்வார். நீ சற்று யோசித்துச் சொல். மேலும், கணேசனிடம் மேல் அதிகாரி எனக்கு நல்லது என்று என்ன தோன்றுகிறது என்றால் நீ வீ.ஆர்.எஸ் வாங்கிக்கொள்வது தான் சரி. நீ மூன்று வருடம் உழைத்தாலும் இப்போது கிடைக்கும் சம்பளத்தைக்காட்டிலும் அதிகமாகக் கிடைக்கும். கூட்டிக் கழித்துப் பாரத்தால் மொத்தத்தில் உனக்கு லாபம்தான். சரி உன் வீட்டில் கலந்து பேசி ஒரு நல்ல முடிவாக நாளை வந்து என்னிடம் சொல் என்று கூறினார் மேல் அதிகாரி. அன்று முழுவதும் கணேசனின் மனதில் இதே எண்ணம்தான் என்ன செய்வது,யாரிடம் கேட்பது, நாம் வேலையை விட்டுவிடலாமா? அப்படி வேலை விட்டால் சாப்பாட்டிற்கு என்ன வழி. சங்கர் எப்போதுதான் பட்டப்படிப்பு முடித்திருக்கிறான், இன்னும் அவன் வேலைக்குப் போக வில்லை இந்த நிலையில் எப்படி முடிவெடுப்பது என்று பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்த கணேசன் யோசித்த வண்ணமாக இருகையில். பேருந்தின் நடத்துநர் மயிலாப்பூர் இருந்தால் இறங்கிவிடுங்கள் மயிலாப்பூர் என்று கத்திக்கொண்டிருந்தது கணேசனின் காதுகளில் விழ சுய நினைவிற்கு வந்த கணேசன் வேக வேகமாகப் பேருந்திலிருந்து இறங்கி மயிலாப்பூரில் இருக்கும் தனது வீட்டிற்கு மெதுவாக நடக்க முற்பட, பத்து பதினைந்து நிமிடத்தில் வீடு வந்தடைந்தவுடன்.
லட்சுமி, கணேசனின் மனைவி வாங்க என்ன ஒருமாதிரியா காணப்படுகிறீர்களே, என்ன விஷயம் என்றால். ஒன்றுமில்லை முதலில் ஒரு டம்ளர் காப்பிக் கொண்டுவா. சரி சரி கத்த வேண்டாம் காப்பிதானே இதோ கொண்டுவருகிறேன் என்றாள் லட்சுமி. சிறிது நேரம் கழித்துக் காப்பி வந்து சேர்ந்தது, டம்ளரை லட்சுமியிடமிருந்து வாங்கித் தனது வாய் அருகில் கொண்டு போய் டம்ளரில் வழிய வழிய இருந்த காப்பியை ஊதி ஊதிக் குடித்த பிறகு கொஞ்ச நிதானம் அடைந்த கணேசன் காலையில் தனது நிறுவனத்தில் நடந்தவற்றை மனைவி லட்சுமியிடம் சொல்ல முதலில் பயந்த லட்சுமி பிறகு நிதானமாக யோசனை செய்தபடி இருந்தாள். சிறிது நேரம் கழித்துப் பொறுமையாகத் தனது கனவிடம் யோசித்துப் பார்த்ததில் நீங்கள் உங்கள் வேலையை வீ.ஆர்.எஸ் கொடுப்பதே சிறந்தது. இதனால் நமது வீட்டு நிலைமை தற்போது இருக்கும் நிலையிலிருந்து சற்று மாறுபட்டுவிடும். இன்னும் சில மாதங்களில் சங்கர் வேலைக்குப் போய்விடுவான் பிறகு என்ன அவன் தலையெடுக்க ஆரம்பித்துவிடுவான் பிறகு நமக்கு என்ன கவலை. இந்தப் பதிலைக் கணேசன் எதிர் பார்க்கவில்லை லட்சுமியிடமிருந்து, ஆனால் அவள் சொன்னதை அன்று இரவு முழுவதும் திரும்பத் திரும்ப யோசித்து எப்போது துக்கம் வந்தது என்று தெரியாமல் தூங்கி அடுத்த நாள் காலை விடியற்காலையில் தான் விழிப்பு வந்தது.
மேல் அதிகாரி கணேசனிடம் சொன்னமாதிரி வீட்டிலுள்ள அனைவரிடமும் கலந்து பேசிய பிறகு ஒரு தெளிவு வந்தது கணேசனுக்கு. அதிகாரியிடம் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்தினார். வீ.ஆர்.எஸ் பெறுவதாகச் சம்மதம் தெரிவித்தார் கணேசன். வீ.ஆர்.எஸ் பணத்தில் குடும்பத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவந்த பெருமிதம் இருந்தது கணேசனுக்கு. மகன் சங்கர் பொறியில் பட்டப் படிப்பைப் படித்துவிட்டு. மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறான். நல்ல வருமானம், ஆடம்பரமான வாழ்க்கை எனச் சங்கர் தனது வாழ்கையைத் தொடங்கி ஓடிக்கொண்டிருந்தான். கணேசனின் மனைவி சிறிது காலத்தில் திடீரென்று நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்து இறந்தும் விடுகிறார். கணேசனுடைய வாழ்கையில் ஒரு வெற்றிடம் உருவானது, ஒரு மனிதன் முழுமையான ஆளாக மாறுகிறான் என்றால் அவனுக்கு மனைவி வந்த உடன் தான். தற்போது கணேசன் ஒற்றையாளாக உணர்கிறார். என்னதான் பெற்ற பிள்ளை சங்கர் இருந்தாலும் கட்டின மனைவி தன்னுடன் இல்லை என்ற நிதர்சனம் தினந்தினம் வாட்டி எடுத்தது.
சங்கர் தான் வேலை செய்யும் நிறுவனத்திலே ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தனிக் குடித்தனம் சென்றுவிட்டனர். மேலும் கணேசன் தனிமையில் தள்ளப்பட்டார். தன் மனைவி இருக்கும் போது தான் குடித்த காப்பி டம்பளரைக் கூட எடுத்துக் கழுவாத கணேசன். இன்று தானாகப் பால் அடுப்பில் காய்த்துக் குடிப்பது. சின்னச் சின்ன வேலை தானே செய்வது என்று மாறிவிட்ட கணேசனால் சாப்பாடு மட்டும் மூன்று வேலை கடையிலிருந்து வாங்கிச் சாப்பிட்டு வந்தார்.கூட இருந்த ஒரு நபர் இல்லையென்றால் அருவரிடம் எவ்வளவு மாற்றங்கள் தென்படுகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணம் கணேசனே. சங்கர் பல முறை கூப்பிட்டும் கணேசன் சங்கரின் வீட்டிற்குப் போய்த் தங்குவதில்லை.சங்கர் இதைப்பற்றிக் கேட்டால். உனக்கு ஏன் அப்பா கஷ்டம், நீ சந்தோசமாக உன் மனைவியுடன் இரு நான் இங்கு நமது வீட்டில் நன்றாகத்தானே உள்ளேன். வேண்டுமானால் உனக்குப் பார்க்கவேண்டுமானால் நீயும் உன் மனைவியும் ஞாயற்றுக் கிழமை வந்து பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்று சங்கரிடம் பதிலைக் கூறினார் கணேசன்.அந்த வீட்டில் கணேசனுக்கு ஒரு துணை அந்தத் தொலைக்காட்சிதான். அதில் ஒளிபரப்பட்டும் நாடகங்களில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் பேச ஆரம்பித்தார் கணேசன். காலையில் எழுந்தவுடன் தனது அன்றாட வேலையை முடித்தவுடன் தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்வது வழக்கமாக வைத்திருந்தார். காலை சுமார் பதினோர் மணியளவில் தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்க்க ஆரம்பித்தார் என்றால் சுமார் இரவு பத்து மணிவரை பார்த்துக்கொண்டே இருப்பார். இடையிடையில் தனது வேலைகளை முடித்துக்கொள்வார். ஒரு கட்டத்தில் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமானதால் வீட்டினுள் மயங்கி கீழே விழுந்தவர். அப்படியே அடுத்த நாள் மத்தியம் வரை அப்படியே அவரது வீட்டிலிருந்துவந்தார். சங்கர் தொலைப்பேசியில் அழைத்துப் பார்த்து, தொலைப்பேசியை எடுக்காததால் தனது அப்பாவைத் தேடி அவனது வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் தெரியவருகிறது அவர் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்துப் பதறினான். அவரை மீட்டு எடுத்து மருத்துவமனையில் சேர்த்தபிறகு ஒரு வாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் கணேசன் அனுமதிக்கப்பட்டார். அவரது நினைவு சற்றுத் தடுமாறிக் காணப்பட்டது அதாவது கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொண்டு நிகழ்காலத்தை நினைவில் கொள்வதில் சிரமப்படுபவர்களுக்கு ஆன்டிரோகிரேட் மறதி நோய் (anterograde amnesia) என்பார்கள். அதாவது கடந்த கால நினைவுகளை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு நிகழ் காலத்தில் நடப்பதை மறந்துவிடுவது. சங்கரின் மருத்துவ நண்பர் ஒருவரால் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு ரெகுலர் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மன நல மருத்துவரிடமும் ஆலோசனை பெற்ற பிறகு கணேசனை சங்கர் அவனது வீட்டிற்கு அழைத்து வந்தான். ஆனால் கணேசனால் அங்குச் சிறிது காலம் கூட இருக்க முடியவில்லை, சங்கர் நல்ல படியாகத்தான் பார்த்துக்கொண்டான். இருந்தும் கணேசனின் வயது சாப்பிடும் திறன் இவை சற்று மங்கிக் காணப்பட்டதால் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. மூப்பின் காரணமாக யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து தொற்றிக்கொண்டது. இரவு நேரங்களில் வீடு முழுவதும் திடீர் திடரென்று கணேசன் மூத்திரத்தை அடக்க முடையாத காரணத்தால் கணேசன் இருந்த இடத்திலே மூத்திரம் போய்விடுவார். சங்கர் வேறு வழியில்லாமல் தரையைச் சுத்தம் செய்து விட்டு அவரது துணிகளை வாஷிங் மிஷினில் போட்டுவிட்டு அலுவலகம் செல்லுவான். ஆனால் தினம் தினம் அவனால் இதைச் செய்ய இயலவில்லை அதனால் குழந்தைகள் அணிவார்களே அதே போல்! பெரியவர்களுக்குப் பிரத்தியேகமாக விற்கிறார்களே அடல்ட் டயப்பர் அதை வாங்கிப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு கணேசனைச் சமாதானம் செய்து அணிவித்தான் சங்கர்.
இதற்குப் பிறகு கணேனுடைய அன்றாட வேலையைக் கூடச் சங்கர்தான் செய்ய வேண்டிய நிலை. படுக்கையிலிருந்து எழுப்பி அமர வைப்பதிலிருந்து, தாங்கி பிடித்துத் தூக்கி நிறுத்திவைத்து குளியல் அறைக்குக் கூட்டிக்கொண்டு போய்க் குளிக்க வைப்பது, குளித்த பின் டயப்பர் மாற்றிவிடுவது மற்றும் கணேசனை பின் அவரது படுக்கைக்குக் கூட்டிவந்து அமர வைப்பது என்று எல்லா வேலைகளையும் அவன் செய்துவந்தான். சில சமயங்களில் கணேசனின் ஒத்துழைப்புக் கிடைக்காத பட்சத்தில் சங்கர் சிறிது கோபம் அடைவது வாஸ்தவமே. சில நாட்களில் இதும் நடப்பதுண்டு வேலைக்குச் செல்லும் முன்னர்த் தனது அப்பாவுக்குச் செய்ய வேண்டிய வேலையைச் செய்துவிடலாம் என்று அவரிடம் வந்தால். கணேசன் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து விடவே என்ன செய்வது என்று தெரியாமல் தனது ஆதங்கத்தைக் கணேசனிடமே கூறுவான் சங்கர். எல்லா வேலைகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால் ஏன் உங்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை மனசு வலிக்கிறது அப்பா என்பான், சில சமயங்களில் கடிந்து கொள்வான். ஒரு பழமொழி உள்ளது அல்லவா கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகுமா? என்பது போல் கோபத்தின் உச்சத்தில் தன் அப்பாவைக் கடிந்து கொண்ட சங்கருக்கு அன்பு பாசம் எல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது. அவரிடமிருந்த அன்பின் வெளிப்பாடே கோபமாக மாற்றியது கணேசன் ஒத்துழைக்கவில்லை என்ற போது. புரிந்து புரியாத நிலையில் கணேசன் தன் பார்வையைச் சங்கரின் கண்களைப் பார்த்துக்கொண்டே இருப்பார். இந்த மாதிரி தருணங்களில் சங்கர் தன்மனதில் நினைப்பதுண்டு இருக்கும் வரை நல்லபடியாக இருந்துவிட்டுப் போக வேண்டும். யாருக்கும் இடையூறாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் அவனது மனதில் வந்து மறையும். ஆனால் என்றுமே தவிர்க முடியாத உண்மை என்னவென்றால் முதுமையே என்று அவன் அறிவான்.
இரயில் கிளம்ப நேரம் சமீபித்திருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கீழே உள்ள படுக்கையில் நான் உட்கார்ந்து இருந்தேன். ஆறாவது நபர் மேலே ஏறி படுத்து விட்டார். நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த புத்தகத்தை வாங்கி ஆறு மாதமாக படிக்க நேரம் இல்லாததால் இந்தப் பயணத்தில் படித்துவிட வேண்டும் என்று பாதிக்கு மேல் படித்து அந்த புத்தகத்திற்குள் நான் பயணித்துக் கொண்டு இருந்தேன்.
அவர்கள் அவசரமாக பெட்டி மற்றும் பைகளை கொண்டு வந்து கீழே தள்ளினார்கள் . குளிர்சாதன பெட்டியானாலும் அவர்களுக்கு நன்றாக வேர்த்திருந்தது.
“நம்ம சீட்டு தானே. பார்ந்துண்டேளா. “
“ஆமாம். ஆமாம். சித்த உட்காரு. சுந்தர் வெளியே நீட்டிகிட்டு இருக்கப் பேக்கை உள்ளார தள்ளிவிடு. போறவாளுக்கு தொந்தரவா இருக்கப் படாது. “
அந்தப் பையன் சரி செய்தான். அவன் பக்கத்தில் அவனது சகோதரி அமர்ந்து இருந்தாள். அவள் வீடியோ கேம் ஆடிக்கொண்டு இருந்தாள். இருவரும் பள்ளிகளில் படிக்கும் வயதில் இருந்தார்கள்.
இரயில் புறப்பட்டு விட்டது. அறிவிப்புகள் தூரமாக கேட்டது. தாம்பரம் தாண்டுவதற்குள் இந்தப் புத்தகத்தை படித்து விடலாம் என்று தோன்றியது.
“எக்கியூஸ்மி சார். “
நான் திரும்பி அவரைப் பொதுவாகப் பார்த்து பின்னர் கொஞ்சம் உள்ளார்ந்துப் பார்த்துபோதுதான் தெரிந்தது. இது நாம் திருவண்ணாமலையில் சந்தித்த சங்கரன் தானே. அவர்தான்.
என்னை அவரின் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. என் முக அமைப்பு மாறிவிட்டது. நான் அவரையேப் பார்த்துக்கொண்டு இருந்ததில் மீண்டும் என்னை அழைத்தார்.
“சொல்லுங்கள் சார். “
“பொம்மணாட்டியா இருக்கா. அப்பர்லே சீட்டு ஒதுக்கி இருக்கா. இப்பதானே பெண்களுக்கு லோயர் பர்த் அலாட்மெண்ட் கொடுக்கிறா. இந்த டிக்கெட் முன்னாடியே போட்டது. நீங்க சித்த பெரிய மனசு பண்ணி கொஞ்சம் ஹெல்ப் பண்றேளா. இவாளோடது அப்பர் சீட்டு.”
நான் பேசியதைக் கவனித்த படி பதில் சொல்லாமல் இருந்தேன்.
“ஸார். நான் எது கேட்டாலும் நீங்க என்னையே ஏன் சார் பார்ந்துண்டு இருக்கேள். மனுஷாலுக்கு மனுஷா ஒதவக்கூடாதா.”
“ஒண்ணும் பிரச்சினை இல்லை. நான் மேல போறேன். தாம்பரம் கிராஸ் பண்ணதும் மேலப்போயிக்கிறேன் சார். அதுக்குள்ள இதைப் படிச்சு முடிச்சுருவேன் சார். “
“பேஷா… படியுங்கோ. நீங்க செங்கல்பட்டுல இல்ல விழுப்புரத்தில கூட கொடுங்கோ. நோ பிராப்ளம் சார். “
படிக்கிறதுதானேடா படுபாவி. மேலே இப்பவே போனா என்னவாம் என்று அவர் நினைத்திருக்கலாம். நெற்றியில் திலகமிட்டு நேர்த்தியான அழகில் இருந்தார்.
“நான் சொன்னேனோ இல்லியோ. பகவான் நமக்கு உதவி செஞ்சுருவர். நாம நல்லவாளா இருந்தா. பகவான் நம்மை சுற்றி நல்லவாளா வைச்சுண்ருவார். உன் தோப்பனாருக்குதான் இது புரிய மாட்டேங்கிறது. நல்லவாளா இருந்து என்ன சாதிச்சேள்ங்கிறா. ஏன் தோப்பனார் இருக்கிறவரை மூஞ்சூறு வலையில ஒண்டுனது மாதிரி கிடந்தா. அவா இல்ல இவா துள்ளுறா. பகவான் எல்லாத்தையும் பார்த்துண்டுதான் இருக்கார். “
சங்கரனின் மனைவி அவர் அப்பாவின் மேல் பிரியமாக இருக்கவேண்டும். இல்லை பொதுவெளியில் அவரை இப்படி பேசியது பிடிக்காமல் இருக்க வேண்டும். அவர் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தார். அதைப் பார்த்ததும் சங்கரனும் முகம் வாடிவிட்டார்.
ஒரு வித இறுக்கமான சூழல் மன நெருக்கடியை அளித்ததால் நான் மேலே செல்கிறேன் என்றேன். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அது போதுமானதாக இருந்தது.
சங்கரன் மனைவியையேப் பார்த்துக்கொண்டு இருந்தார். அதில் மனைவியின் மேல் பாசம் பொங்கியது. அப்படி பேசி இருக்கக்கூடாதோ என்றும் தோன்றி இருக்கலாம். நோ… நோ…. நான் சொன்னதுதான் சரி. அந்தாள் ஒரு துஷ்டன். அந்தாளுக்காக இவளை முகத்துக்கு நேரே பேசியிருக்கப்படாது என்றும் நினைத்திருக்கலாம்.
‘ஸாரி டி.’ என்று சங்கரன் கேட்டது என் காதுக்கே கேட்டது. பிள்ளைகள் வீடியோ கேம்மில் மும்முரமாக இருந்தார்கள்.
நான் பேனாவை எடுத்து முதல் பக்கத்தில் எழுதிவிட்டு மீண்டும் படிக்கலாமென புத்தகத்தை பிரிந்தபோது திருவண்ணாமலை சிந்தனைகள் தொந்தரவு செய்தது. புத்தகத்தை வைத்து விட்டு கண்களை மூடிக்கொண்டேன். இரயில் மாம்பலத்தில் நிற்பதாக அறிவிப்புக் கேட்டது.
ஒவ்வொரு புதுவருடம் தொடங்கும்போதும் நான் ரமணா ஆஸ்ரமத்தில் தங்குவது வழக்கம். கடிதம் எழுதி அனுமதி வாங்கி டிசம்பர் 28 லிருந்து ஜனவரி 2ந்தேதிக்குள் இரண்டு நாள், மூன்று நாள், ஐந்து நாள் என்று சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அந்த பயண நாளின் அளவுகள் மாறும். நான் கடைசியாக சென்ற வருடத்தில் நான் சங்கரனைச் சந்தித்தேன்
எனக்குப் பெரும்பாலும் தங்குவதற்கான இடம் ஆஸ்ரமத்தின் எதிர்ப்புறம் உள்ள குடியிருப்புகளில் ஒரு வீடு ஒதுக்கித்தருவார்கள். இங்கு பெரும்பாலும் தங்கிறவர்கள் குறைவு. சிலமுறை அந்த வளாகத்திலையே நான் மட்டும் தங்கி இருக்கிறேன். அழகான அமைதியான இடம்.
நான்கு மணிக்கு எழுந்து டிசம்பர் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அப்படியே ரமணரின் சமாதி ஹால் பெரியதாக இருக்கும் அதில் கண்களை மூடி அமர்ந்தால் நேரம் போவது தெரியாது. ஆறு மணிக்கு காலை உணவு தருவார்கள். அதை முடித்து ஆஸ்ரமத்தின் பின்புறம் வழியாக நீண்ட தூரம் மேலே நடந்தால் ரமணர் தியானம் செய்த விருபாஷ குகை வரும் அங்கு மதியம் வரை தியானம் செய்துவிட்டு பனிரெண்டு மணிக்கு கீழே வந்து மதிய உணவுவை முடித்து கொஞ்ச நேரத் தூக்கம். மாலை குளித்துவிட்டு அவரின் சமாதி ஹாலுக்கு பக்கத்தில் அவர் இருந்த அறையில் தியானம் செய்ய அனுமதிப்பார்கள் அங்கு தியானம் செய்துவிட்டு இரவு உணவை முடித்து மீண்டும் தியானம் பிறகு தூக்கம் இப்படியாக அந்த நாட்கள் கழியும்.
விருபாஷ குகையிலிருந்து ஸ்கந்தாஸ்ரமம் சென்றால் அங்கு தியானம் முடித்து மதியம் வெளியே ஹோட்டலில் சாப்பிடுவதாக அன்றைய தினம் இருக்கும்.
இப்படியான நாள் ஒன்றின் காலையில் விருபாஷ குகைக்கு காலையில் நான் சென்று கொண்டிருந்தபோது வெண்மை நிற வேஷ்டி உடம்பில் வெண்மை நிற துண்டை சுற்றி இருந்த ஐம்பது வயது உள்ள சாமியார் என்னை அழைத்தார்.
“சாமீ…”
நான் தியானம் பயில வரும்போது குனிந்த தலை நிமிராமல் செல்லும் வழக்க முடையவன். யாரிடமும் தேவைகள் ஏற்படாதவரை பேசக்கூடாது என்ற கொள்கையுடையவன். தெரிந்தவர்கள் இருந்தால் முடிந்த மட்டும் தவிர்த்துவிடுவேன் இல்லை நானே அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்துவிடுவேன். குறைந்தபட்சம் இன்றைய நாட்களில் வாய்ப்பேச்சையாவது குறைக்க வேண்டும் என்ற புரிதலில் இதை நான் வழக்கமாக்கி இருந்தேன்.
“சாமீ… ”
நாங்கள் இருவரும் மட்டுமே அங்கு இருந்ததாலும் இரண்டாவது முறை அவர் கூப்பிட்டதாலும் நான் திரும்ப வேண்டியதாகிவிட்டது. நான் அவர் நோக்கி மேலே கையைக் காட்டி செய்கை செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.
“சாமீ… ”
மூன்றாவது முறையும் அவர் அழைத்ததால் நான் பக்கத்தில் சென்றேன். என் வயதை விட இரண்டு மடங்கிற்கு அதிகமான வயதுடையவர் என்பதால் என்னால் தவிர்த்துவிட்டுச் செல்ல முடியவில்லை.
என் பெயர் மற்றும் ஊர் சொல்லிவிட்டு கிளம்ப நினைத்தேன். என்னை உட்காரச் சொல்லி வற்புறுத்தினார். அவர் உட்கார்ந்திருந்த குன்றானப் பகுதிக்கு சற்று தள்ளி உட்காருவது போன்றதாக சாய்ந்து நின்றேன். அது பார்ப்பவர்களுக்கு குருவிடம் சீடன் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். நான் போக வேண்டிய தூரமும் என் வேலையும் இதுபோன்ற நேர விரயங்களில் சிக்கவிடாமல் என்னை எப்போதும் துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. வெள்ளைத் தாடியில் வீதியில் இருப்பவர் எல்லாம் ஞானி என்ற புரிதல் மாறி வெகு காலமாகி இருந்தது. ஆத்ம விஷாரம் மற்றும் நான் யார் என்று ரமணர் சொல்வது எதுவென்ற தெளிவை நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்தவர்களும் எனக்குள் விதைத்திருந்தார்கள்.
நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து திருவண்ணாமலையைப் பார்த்தால் இரண்டு மலைகளுக்கு முடிவில் நேர்த்தியாக அடுக்கப்பட்ட கட்டிடங்களாக நகரம் விரிந்து அழகாக தெரியும். கோயிலின் கோபுரங்கள் மேலும் அழகாக்கியது.
இந்த கோணத்தில் மணியன் செல்வன் படம் வரைந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். இதையே தேர்ந்த புகைப்படக்காரர் படம் எடுத்தால் எப்படி இருக்குமென்ற சிந்தனை மின்னல் வெட்டியதாக வந்து போனது.
“சாமி… எத்தனை ஆண்டுகளாக இங்கு இருக்கிறீர்கள். ”
“அண்ணாமலையார் புண்ணியத்தில் பதினைந்து ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன்.”
“இங்கு வந்து நீங்கள் என்ன அறிந்தீர்கள் இல்லை தெரிந்தீர்கள் என்பதை எந்த பாடல்கள் எதோட துணையும் இல்லாம. நாம் இப்போது பேசிக்கொண்டது போல எளிய தமிழில் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்.”
அவர் ஆழ்ந்த யோசனையில்.
“நாம் என்பது ஆத்மா. ரமணர் இதை ஆத்ம விசாரம் என்று சொல்லுவார்.”
“ஆத்மா, வீடு பேற்றை அடைவது,ஞானமடையிறது,
ஆத்ம விஷாரம்,அஹம் பிரம்மாஸ்மிங்கிறதை எல்லாம் விட்டு. நான் கேட்கிறது. உங்கள் அனுபவத்தை அதற்கு முன் சொன்னவர்களின் எந்த மேற்கோளும் தேவையில்லை. இப்போது சொல்லுங்கள்.”
அவர் என் கேள்வியின் தீவிரத்தைப் புரிந்தாரா என் முகத்தின் உக்கிரத்தைப் புரிந்தாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் முகம் சிறுத்து விட்டது. அதிகாலை குளிர்ந்த காற்றில் மலையின் மேல் பகுதி அலாதியான பூரித்தலைக்கொடுத்தது. அது இங்கு வந்து தங்கியதன் பலனாகவும் இருக்கலாம்.
என்னை இடைமறித்த கடுப்பு என்னிடமிருந்தாலும் அந்த மனிதரின் மேல் நான் கொண்ட அன்பு அலாதியானது. என் சக பயணி என்ற வாஞ்சைகள் மேலோங்கி இருந்தது.
“அதோ திருவண்ணாமலை தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. நாம் இருவரும் அது வேண்டாம் என்று இங்கு அமர்ந்திருக்கிறோம். உங்கள் அனுபவம் என்ன என்று கேட்டால் மௌனமாக இருக்கிறீர்கள். இந்த பதினைந்து வருடம் மனைவி,பிள்ளைகளோட இருந்திருந்தால் அவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்.”
“எத்தனைக் தெளிவு.இந்த சின்ன வயசில. எவ்வளவு தீட்சண்யம் உங்கள் பார்வையில. உங்கள் நாவில் அந்த அண்ணாமலையாரே
என் குரல் மாறியதில் அவர் முற்றிலும் நிலை தடுமாறிப்போனார்.
“நான் இதுமாதிரியான ஆள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களை கடந்து சென்றுவிட்டேன். நீங்கள் தான் என்னை வற்புறுத்தி அழைத்தீர்கள். இப்போது நான் செல்கிறேன். மறுமுறை நான் இங்கு வரும்போது இதேக் கேள்வியைத் கேட்பேன். இப்போது கேட்டது மாதிரி கேட்கமாட்டேன்.அப்போதும் இதேபோல் இருந்தீர்கள் என்றால்…”
அவர் கழுத்தில் போட்டிருந்த துண்டைத் தொட்டுக்காட்டி ‘அதைக் கழுத்தில் முறுக்கிக்கேட்பேன்’ என்றேன்.
“…”
“என் வழியில் குறுக்கிட்டு நீங்கள் தான் அழைத்தீர்கள். தவறு உங்களுடையது. அடுத் முறை என்னைப் பார்த்தால் அனுபவம் பெறவில்லை என்றால் ஒளிந்து கொள்ளுங்கள் இல்லை ஊருக்கு ஓடிப்போய் விடுங்கள். யாரை ஏமாத்துவதற்கு இந்த வேசம். உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா.”
அவரிடம் நான் எந்தப்பதிலையும் எதிர்பார்க்காமல் மலையின் மேலே ஏறத்துவங்கிவிட்டேன்.
“ஸார்…. இந்த புஷ்தகத்தைக் கொஞ்சம் தர்றேளா. நான் படிச்சிட்டு தர்றேன். நாங்க இராமேஸ்வரம் போறோம். நீங்கள் எங்க போறேள்.”
நான் சிந்தனையிலிருந்து இயல்பிற்கு வருவதற்குள் சங்கரன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.
நான் சிரித்துக்கொண்டே புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.
“ஸார். நீங்கள் எங்கே இறங்கிறேள்.”
“பட்டுக்கோட்டை.”
“ இவா அண்ணாவோட ஆத்துக்காரியும் பட்டுக்கோட்டை பக்கத்தில் ஏதோவொரு வில்லேஜ்தான். எனக்கு சரியா பிடிபடல. என் ஓய்ப் தூங்கிண்டிருக்கா.”
எனக்குப் பேச்சை தொடர விரும்பமில்லை என்பதாக திரும்பி படுத்துவிட்டேன். சங்கரன் கீழே ஒரு சிறிய சதுரமான கோரைப் பாயை விரித்து கண்கள் மூடி ஏதோ முணு முணுத்தார். பிறகு மூச்சுப் பயிற்சி செய்தார்.
இரவு தியானத்தை முடித்துவிட்டு நான் எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்குள் நுழையும்போது எதிரில் இருந்த வீட்டில் இருவர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. நான் வரண்டாவில் நின்றபடி திரும்பிப் பார்த்தேன். ஒரு வயதான பெரியவரும் இன்னொரு பையனும் அந்த வீட்டின் வரண்டாவில் உட்கார்ந்து இருந்தார்கள்.
“ஸார். கோவிச்சுக்காம செத்த நாழி இங்க வந்துட்டுப் போறேளா. நோக்கு புண்ணியமா போவும். இந்த புள்ளையாண்டான் என் பிராணனை வாங்காம ஓயமாட்டான் போல.”
நான் எந்த மறுப்பும் சொல்லாமல் அங்கு சென்று அவர்களுக்கு எதிரில் இடுப்பு உயரம் இருந்த சுவரில் உட்கார்ந்தேன். அப்பா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இருவரும் வேதம் படித்தவர்கள். மகன் பி.காம் முடித்திருக்கிறார். இவர் ஒரே மகன் திருமணமாகி ஒரு வருடத்தில் துறவறம் பூணுகிறேன் என்று இங்கு வந்து இருக்கிறார். ரமணரிடம் சொல்லிவிட்டு இமய மலைப்பக்கம் போவதுதான் அவரின் திட்டமாம். சொந்தமாக வீடு நகை பணம் என ஓரளவு வசதிகளை அப்பா வைத்து இருக்கிறார். கல்யாணமே வேண்டாம் என்றவரை சமாதானப்படுத்தி கல்யாணம் கட்டி வைத்து இருக்கிறார்கள்.
அவர் படித்த புத்தகங்கள் மற்றும் அவர் தொடர்பு வைத்திருந்தவர்கள் பேசியவைகளை இவர் புரிந்ததன் விளைவால் துறவறம் பூண்டுவிடும் அவரின்
தனியாத ஆசையில் யாவையும் விட்விட்டு ஓடி வந்துவிட்டார்.
“இங்கு நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.அதற்குள் நான் போகா விரும்பவில்லை. புத்தர், மகாவீரர்,ரமணர் இதுபோன்ற இன்னும் எத்தனையோ பேர்களை முன்னுதாரணமாக எடுத்து பலபேர் சந்நியாசம் மேற்கொள்கின்றனர். எல்லாவற்றையும் துறத்தல் என்பது ஒரு உணர்வுத் தூண்டல் அதன் அடிப்படையில் நீங்கள் வரவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். நீங்கள் பயணித்தப் பாதையை விட்டு கொஞ்சம் வேறு மதத்தில் வேண்டாம் வேத காலங்களுக்கு
முன்பு உள்ள புத்தகங்கள் இல்லை சம்பவங்கள் தெரிந்தால் அதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது மனைவி மக்களோடு சேர்ந்து பயணித்து நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் அல்லது இங்கு வந்தால் வாங்கிச் சென்று விடலாம் என்று தேடி வந்திருக்கும் ஒன்றை அறிந்து குடும்பத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள்.”
“அப்போ… ரமணர் ஏன் சார் அவா குடும்பத்தை விட்டு இங்கு வந்தார்.”
“அதுதான் ஒரு உணர்வின் வெளிப்பாடுன்னு சொல்லிட்டேனே.”
“உங்களை சாப்பிடும்போது கவனித்தேன். அந்த ஆந்திராப் பெண்ணை அரை மணி நேரத்தில் எட்டு முறை பார்த்தீர்கள்.”
அவர் என்னை கண்களால் வேண்டாம் என்று கெஞ்சினார்.
“இலையில் தண்ணீர் தெளிக்கும் போது ஒரு முறை. உருளைக் கிழங்கு கூட்டு வாங்கும்போது ஒரு முறை..”
“நீங்கள் யாரு சார். இதை எல்லாம் கேட்கிறதுக்கு. பகவானே… நீங்க நம்பாதீங்கோ.”
அவரின் அப்பா அவரை முறைத்தார்.
‘கிராதகா. யாருடா நீ. எங்கேர்ந்துடா வந்தே. துஷ்டப்பயலே. பகவானே செத்த நாழி இவாளை ஊமையாக்கப்பிடாதா.’ அவரின் கண்கள் கலங்கியதை நான் கவனித்தேன்.
“ப்ளீஸ் சார். நீங்க சொல்லுங்கோ.”
“அது தவறில்லை.அது ஒரு இயற்கைத் தூண்டல். அந்த பெண் அழைத்து வந்த ஆந்திரா இளைஞர் சாமியார் ஆடையணிவதன் ஒழுக்கத்தைக்கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். நான் இருந்தாலும் ஒரு இரண்டு முறை பார்த்து இருப்பேன். ஏன் சாரை வேண்டுமானால் காலையில் அந்தப் பெண்ணிற்கு முன்னால் உட்கார வைப்போம் அவரும் பார்க்கத்தான் செய்வார்.”
அவர் என்னை அடிக்கப்பாய்ந்தார். அவரின் அப்பா அவரைத் தடுத்தார்.
“யாருய்யா. நீ. இவர் என் தோப்பனார். எனக்கு வேதம் கற்றுக்கொடுத்த குரு. சந்தியா வந்தனம் விடாம ஓதிண்டிருக்கிற ஆச்சார சீலர்.”
பட்டென்று அவரின் அப்பா காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.
“என்னைய மன்னிச்சுருங்கோ.
கண்டவா கிட்டே உங்களை கேவலப்பட வச்சுட்டேனே. பகவான் என்னைய மன்னிக்கமாட்டான்.”
ஏதோ மந்திரத்தை ஓதியவாறு தேம்பி தேம்பி அழுதார்.
‘பகவானே.ஏன் எனக்கு எதையுமே சரியாச்செய்யத் தெரியலே. நீ பார்த்துண்டுதானே இருக்கே.
எனக்கு ஒரு வழியைக்காட்டக்கூடாதா. கண்டாவா கிட்டே அசிங்கப்பட வைக்கனுமா.”
“நான் தான் சொன்னேனே.”
என்று சொன்னதும் அவர்கள் இருவரும் ஒரு சேர திரும்பி என்னைப்பார்த்து திகைத்து நின்றார்கள். அது நான் பேசுவதற்கு தோதாக அமைந்தது.
“இது என் தூக்க நேரம். நான் காலையில் நான்கு மணிக்கு ஆஸ்ரமம் செல்ல வேண்டும். அதற்கு மூன்று மணிக்கு பிறகு முழிக்க வேண்டும். அதை விடுங்கள். நான் நேரடியாக விசயத்திற்கு வந்துவிடுகிறேன்.”
அவர்கள் ஏன் எதுவுமே குறுக்கிடாமல் இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருந்தது.
“நான் சத்தியகாம் ஜபலைப்பற்றி சொல்லவா. இல்லை நான்கு வேதங்களுக்கு முன்பிருந்த தவசீலரைப் பற்றி சொல்லவா இல்லை புத்த மடாலயத்தில் இருந்த டோயோங்கிற சிறுவனைப்பற்றிச் சொல்லவா.”
அவர் பட்டென்று
“டோயோ…” என்றார்.
அவரின் அப்பா இரண்டு கைகளையும் தொங்கவிட்டபடி முன்பக்கம் கோர்த்த படி நின்றார்.
“அந்த மடாலயத்தின் குரு ‘ஒரு கை ஓசை’ பற்றி தன் சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட டோயோ தனக்கு கற்றுத்தருமாறு கேட்கிறான். அவர் மறுத்துவிட. அவன் ஆஸ்ரமத்தின் ஒரு இடத்தில் கண்களை மூடி அமர்ந்து விட்டு பிறகு ஓடி வந்து அது பறவைகளின் சத்தம் தானே என்கிறான். குரு இல்லை என்கிறார். கொஞ்சம் நேரம் கழித்து வந்து அது வண்டின் ரீங்காரம் தானே என்கிறான் குரு மறுக்கிறார். பிறகு அவன் கண்களை மூடி நீண்ட இருந்தபோது தூரத்தில் ஓடிய அருவியின் சத்தம் கேட்டது. குரு அதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். அந்த சிறுவனை நீண்ட நாட்களாக காணவில்லை. குரு கவலைகள் கொண்டார். பிறகு அவனைத் தேடலானார். அவனை ஒரு இடத்தில் பார்த்தார். அவன் அந்த ஒரு கை ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தான். இல்லை அவன் அந்த ஓசையாக இருந்தான்.”
கதையை அவர்கள் உள்வாங்கி உறைந்துபோனதை என்னால் காண முடிந்தது.
“இந்த கதை மற்றும் அதன் பெயர்களை ஆராய்வதை விட்டு விட்டு. அதன் அர்த்தத்தை தியானமாக்குங்கள். எதைப் படித்தாலும் பார்த்தாலும் அதன்
அர்தத்திற்குள் பயணிக்க பழகுங்கள். விளிம்புகள் உங்களை வீடடை விடாது. ஓஷோ ஒரு இடத்தில் சொல்வார். ‘வென் டிசிபில் ரெடி. மாஸ்டர் வில் அப்பியர். சீடன் தயாரானால் குரு அங்கு வந்துவிடுவார் ’ என்பார். அதனால் இனி நீங்கள் தேடி ஓடாதீர்கள். உங்களுக்குள் இருப்பதை அறிய இங்கு ஏன் ஓடிவர வேண்டும் என்பதை புரிந்து குடும்பத்துடனும் தனியாகவும் இதுபோன்ற இடங்களுக்கு வாருங்கள்.”
“சார்… நீங்கள் ரமண மகரிஷி மாதிரியே உட்கார்ந்து இருக்கீங்க.”
ஒரு காலைக் குத்துக்காலிட்டு ஒரு காலை மடக்கி நான் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் நானும் கவனித்தேன். இதுதான் அவர்களை என்னை ஆச்சரியமாக பார்க்க வைத்து இருக்கிறது.
“இதெல்லாம் வச்சி என்னைய சாமியாரா ஆக்கிடாதீங்க. உங்கப்பா செயல் உங்கம்மாவிடம் இருக்கும் உங்கம்மாவின் செயல் உங்க அப்பாவிடம் இருக்கும் அவ்வளவு தான். இதை பெரிதாக எடுக்கத்தேவை இல்லை.”
இதைக் கேட்டதும் அவர்கள் என்னுடன் நெருங்கிப் பழகவும் நான் யாரென்று அறியவும் ஆசைப்பட்டார்கள். பிறகு கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவர்கள் பெயர் ஊர்களை அவர்களே சொன்னார்கள்.வழங்கம்போல இதுபோன்ற இடங்களில் சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்வது போல் இங்கும் நான் தூங்க கிளம்பிவிட்டேன்.
அதன் பிறகு சங்கரன் சாரை இப்போதுதான் இரயிலில் பார்க்கிறேன்.
இரயில் நான் இறங்க வேண்டிய ஊரில் வந்து நின்றதால் நான் இறங்கி விட்டேன். பெட்டியின் அடுத்த கதவுக்கு எதிரில் அவர் நின்று படித்துக்கொண்டு இருந்ததால் ஊர் பெயரைப் பார்த்ததும் என் இருக்கையில் தேடி நான் இறங்கிய கதவுக்கு பக்கம் வழி நிற்பவர்களை விளக்கி வருவதற்குள் இரயில் கிளம்பி விட்டது.
“சார். உங்க புஸ்தகம்.”
“சங்கரன். அது உங்களுக்கு தான்”என்றேன்.
அவர் ஏதேதோ சொல்லி கத்துவது எதுவும் கேட்காத தூரத்திற்கு இரயில் சென்று கொண்டிருக்க என்னை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே கை கூப்பி வணங்கியபடியே மறைந்து போனார்.
நான் எக்மோரில் அவரைப் பார்த்ததும் அந்த புத்தகத்தின் அட்டைக்கு அடுத்துள்ள வெற்று ஏட்டில்
‘நமஸ்காரம் சங்கரன் சார்.
ஒரு கை ஓசை கேட்டீங்களா.
கேட்டால்.
டோயோவை நான் விசாரித்ததாக சொல்லவும்.
அகம் பிரம்மாஸ்மி.
வாழ்த்துகள்
வாழிய நலம் சூழ.’ என்று எழுதி இருந்தேன்.
அவர் கும்பிட்டதைப் பார்த்தால் வினாடி நேரத்தில் இதை படித்திருப்பார் என்று தோன்றியது. ரமணா ஆஸ்ரமம் அன்று செல்லும்போது சங்கரன் சாரை சந்திப்பேன் என்று எனக்குத் தெரியாது. இந்தப் புத்தகம் வாங்கும்போதும் இதை சங்கரன் சாரிடம் கொடுப்பேன் என்றும் எனக்குத் தெரியாது.
என் பயணத்தின் போது இது போன்ற பல பேர்களை சந்தித்து இருக்கிறேன் . உலகம் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் யாரென்று தெரிவதற்கு அவர்கள் முன்பு ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் யாரும் அதைச் செய்யவே இல்லை. அதுதான் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பு. எனக்கு பெரிய ஆச்சரியம் இரண்டாவது முறையாக நான் சந்திக்கும் முதல் நபர் சங்கரன் சார் தான். அதனால்தான் நான் அந்த புத்தகத்தில் அங்கேயே எழுதினேன். இரவு முழுவதும் நான் இறக்கும்வரை சங்கரன் சார் நான் எழுதியதைப் படிக்காததற்கு நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்.
எஞ்சிய நாளின் வழித்துணைக்கு அந்த புத்தகமே அவருக்கு போதுமானது. என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு முன்னால் என் பெயரெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டில்லைதான். பேரன்பு கொண்டு நேசிக்க பெயர் எனக்கும் எப்பொழுதும் ஒரு பொருட்டில்லைதான்.
பிறகெப்பொழுதாவது பயணத்தில் நாம் சந்திக்க நேர்ந்தால் என்னை ஆராய முற்படாமல் உங்களை என் மீது அன்பு செலுத்த வைத்துவிடுவதில் நான் கில்லாடியாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் அப்போது மறந்துவிடுவீர்கள் என்பதை உங்களிடம் இப்பொழுதே என்னால் உத்திரவாதமாக சொல்ல முடியும்.
இந்தப் போர்ச்சூழலில் இந்திய அரசு, ராணுவத்தின் பக்கம் நிற்பதாக நம் தமிழக அரசு சென்னையில் ஒரு பேரணி நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இதை காரியார்த்த மானது என்றும், பாவனை என்றும் இன்னும் வேறாகவும் சிலர் சொல்லக்கூடும்; சொல்ல முடியும். ஆனால், இந்தப் பேரணி இன்றைய இந்திய அரசின் மீதுள்ள வெறுப்புக்கும், இந்தியா என்ற நாட்டின் மீதே உள்ள வெறுப்புக் குமான பிரிகோட்டை கவனமாக வெளிப்படுத்துகிறது. இது அவசியமானது.
இந்தியா என்ற நாட்டின் ஒரு மாநிலமாக இருந்துகொண்டு எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைசொல்வதும், எதிர்த்துநிற்பதும், மதிப்பழிப்பதாய் பேசுவதும், தனித்தமிழ் நாடு கேட்கிறார்களோ, அதற்கான கலவரங்கள் ஊக்குவிக்கப்படுமோ என்ற அச்சத்தை நிறைய பேர் மனங்களில் ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய கலவரங்களை விரும்பும், ஊக்குவிக்க விரும்பும் (இத்தகைய கலவரங்களில் பெரிதும் பாதிப்படைவோர் எளிய மக்களே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) தரப்பினருக்கும் இந்தப் பேரணி மாநில அரசுக்கு அப்படியெதுவும் எண்ணமில்லை என்று தெளிவுபடுத்தியிருக் கிறது. அவ் வகையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ‘மாநில சுயாட்சி’ என்ற சொற் றொடர் இங்கே இரண்டுவிதமான அர்த்தங்க ளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, அதைத் தெளிவுபடுத்தல் அவசியமாகி றது.
இது மக்களாட்சி நாடு. ஆளும் அரசு பிடிக்கவில்லை யென்றால் அடுத்த தேர்தலில் அவர்களைத் தோற்கடிப்ப தற்கான நியாயமான ஆயத்தங்களை, பரப்புரைகளை மேற் கொள்ளலாம். ஆனால், ஒரேயடியாக ஆளுங்கட்சி செய்வதையெல்லாமே திட்டித்தீர்த்த வாறிருந்தால் எதிர்க்கட்சியென்றாலே இப்படித்தான் என்று மக்கள் அதைப் பொருட் படுத்த மாட்டார்கள்.
ஆனால், படைப்பாளி என்றாலே ‘அரசு’ என்ற கட்ட மைப்பை எதிர்க்கக் கடமைப் பட்டவர் என்பதாக இங்கே ஒரு பார்வை நிலவுகிறது. (ஆனால், இந்தக் கண் ணோட்ட முடைய இலக்கியவாதிகளும் மாநில அரசுக்கு எதிராக இதுவரை முணுமுணுப்பாகக்கூட குரல் எழுப்பியதில்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக் கிறது).
மாறாக, பாராட்ட வேண்டியவற்றை பாராட்டினால், பின் அரசின் மீது – அது மத்திய அரசோ, மாநில அரசோ – நாம் வைக்கும் எதிர்விமர்சனங்களைப் பொருட்படுத்தி கவனத்தில் கொள்வார்கள். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ‘ இப்போ தைய போர்ச்சூழல் தொடர்பான மத்திய அரசின் முயற்சிகளை மிகத் தெளிவாக அலசி பாராட்டியிருப்பது ஓர் உதாரணம்.
ஒரு போர்ச்சூழலைப் பயன்படுத்தி தம்மை மனிதநேய, பெண்ணுரிமை, மனித உரிமை ஆர்வலராக, போராளியாக முன்னிலைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பவர் களைப் பற்றி என்ன சொல்ல? எழுத்தாளர்கள் கூடவா இப்படி இருப்பார்கள்? ஒரு போரை உரிமைப்போர் என்று சொல்லி உயர்த்திப்பிடிப்பார்கள் -ஒரு போரை வன் முறை என்று வரையறுப்பார்கள். பல நேரங்களில், வசதிக்கேற்ப வேறு வேறு அளவுகோல்களை, தரநிர்ண யங்களைப் பயன்படுத்தி.
பஹல்காம் படுகொலைகள் அரசின் பாதுகாப்பு நிர்வாகத் தில் நேர்ந்த குறைபாடு என்பது உண்மை. உளவுத்துறை யிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவல், திடீர்த் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இரண்டு வாரங் கள் முழுக்கத் தேடி அப்படி எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பை விலக்கிக்கொண்ட அதே நாள் (ஏப்ரல் 22) பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வாசிக்கக் கிடைக்கின்றன. இன்னொரு செய்தி தாக்குதல் நடந்த இடத்தில் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துத் தான் பாதுகாப்பு வளையமிட்டு சுற்றுலாவாசிகள் அனுமதிக் கப்படுவார்கள் என்றும் ஆனால் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள் அதை அறிந்தும் அங்கே ’ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்தவர்களை அழைத்துச்சென்றார் கள் என்று இன்னொரு செய்தி. எப்படியிருந்தாலும் இது அரசின் பாதுகாப்புநிர்வாகஞ்சார் குறைபாடு என்றே வைத்துக்கொள்ளலாம். அதற்காக, இந்திய அரசு தன்னைத் தானே குற்றவாளியாக உணர்ந்து கூனிக்குறுகி நின்றுகொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? இதற்கு முன்பாகவும்கூட அந்தப் பகுதியில் தீவிரவாதத் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதானிருந்தன.
இன்னொருவர் ‘ஆபரேஷன் ஸிந்தூர்’ என்ற பெயரைக் குறைகூறுகிறார். பெண் ணுக்கு ஸிந்தூர்(குங்குமம்) மங்கலச்சின்னம் என்று பேசுவதே பெண்ணடிமைத் தனம் என்று பழிக்கிறார். பஹல்காமில் குடும்பத்தோடு சென்ற ஆண்களை சுட்டுக் கொன்றவர்களால் கணவனை இழந்த பெண்களை இவர் மதிப்பழிக்கிறார் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.இந்த மாதிரி வெறுப்புப் பேச்சுகளால் பெண்ணுரிமை எங்ஙனம் மேலோங்க முடியும்? வெறுப்பு தான் விரிந்து பரவும்.
பஹல்காம் படுகொலைச் சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் பயங்கர வாதிகள் சொல்லச் சொன்னதாகச் சொன்னதை அப்படியில்லவேயில்லை என்று இங்கே சிலர் அடித்துச்சொல்லவேண்டிய அவசியமென்ன? பஹல்காம் படு கொலையில் கணவரை, ஆண் உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள் ஒரு மதத்தின் பெயரால் தாம் அப்படி நடத்தப்பட்டதை எடுத்துரைத் திருக்கிறார்கள். அவர்களைப் பேட்டி கண்டவர்கள், களத்திற்கு சென்று நிலவரம் அறிந்த ஊடகவியலாளர்கள் (இவர்கள் மோடி ஆதரவு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல) கொலையாளிகளின் இந்த அணுகு முறையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அன்று அந்த இடத்தில் இருந்த உள்ளூர்வாசிகள் இதைக் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், இங்கேயுள்ள சில அறிவுசாலிக் குழுமங்கள் அப்படியொன்று நடக்கவேயில்லை என்று இங்கிருந்தே எப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.
ஊரில், நாட்டில் நடக்கும் கொலை கொள்ளைகளிலெல் லாம் பல்வேறு சாதி, மதம் சார்ந்த மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். அதற்காக அந்தப் பிரிவுகளைச் சார்ந்த அத்தனை பேரையும் மக்கள் குற்றவாளிகளாக பாவிப்ப தில்லை; குறைத்துப் பேசுவதில்லை. அப்படிச் செய்பவர்கள் (எடுத்துக்காட்டாக, எங்காவது ஒரு பார்ப் பனர் குற்றச் செயலொன்றில் ஈடுபட்டால் உடனே அதை ஒட்டுமொத்த பார்ப்பனகுலத்தின் தலைமீது ஏற்றிவிடுபவர்கள் இங்கே சாதாரண மக்களில்லை; தம்மை மனிதநேயவாதிகளாக, சமூகப்பிரக்ஞையாளர்களாக பிரகடனம் செய்து கொள்ளும் அறிவுசாலிகளே).
இந்த நேரத்தில் அரசியல்வாதிகளான ஒமார் அப்துல்லா, ஒவைஸி போன்றோர் கூட கவனமாகப் பேசுகிறார்கள். பாகிஸ்தானின் தொடர் அத்துமீறலைக் கண்டிக்கி றார்கள். ஆனால், காகிதக் கிளர்ச்சியாளர்களுக்கு அந்தப் பொறுப்புணர்வு கொஞ்சமும் இல்லை. இது வருத்தத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.
இன்னும் சிலர் மதரீதியான வெறுப்பை வளர்க்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்ப டுத்திக்கொள்கிறார்கள். மிகவும் வேதனையளிக்கும் விஷயம் இது.
இன்னும் சிலர் போர்நடவடிக்கைகளை romanticize செய்கி றார்கள். வன் முறையை நம் சினிமாக்களும் , சீரியல்க ளும் தொடர்ந்தரீதியில் Heroismஆக வரையறுத்துக் கொண்டேயிருப்பதுபோல். (சமீபகாலமாக ஊரில் நடக்கும் வெட்டு குத்துக்களையும், கோர விபத்துகளை யும் காட்சி ஊடகங்கள் எல்லா நேரமும் காட்டிக்கொண் டேயிருக்கின்றன; இதற்கென்றே தனி ‘க்ரைம் டைம்’ நிகழ்ச்சிகள் பரபரப்பாக, ஏற்ற இறக்க தொனிகளிலான விவரிப்புடன் தினமும் எல்லா செய்தி ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. இது நீடிக்கலாகாது; நிறுத்தப்பட வேண் டியது.
வெளிநாடுகளுக்குப் பயணமாகும் படைப்பாளிகள் பலர் இந்தியாவை மதிப்பி றக்கிப் பேசுவதும், இந்துமத நம்பிக்கைகள், நியமங்கள், நெறிமுறைகளை நிந்திப் பதும் வழக்கமாக இருக்கிறது. அதற்கென்றே அயல்நாடுகளில் இயங்கிவரும் அமைப்புகள் சிலவற்றால் அவர்கள் அழைக்கப்படுவதும் நடக்கிறது.
’எம்மைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் ஊரில் நடக்கும் சாதிக்கொடுமை களுக்குக் குரல் கொடுப்பதில்லை – நிலா, மழை என்று மட்டுமே எழுதிக்கொண்டி ருக்கிறார்கள்’ என்று சக படைப்பாளிகளைச் சாடுபவர்கள் என்றேனும் சாதிக் கலவரப் பகுதிகளுக்குச் சென்று ஆதிக்கசாதி யினரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தாகவோ, அல்லது அங்கே நிகழ்ந்த சாதிக்கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவோ, அல்லது, சட்டம்-ஒழுங்குக்கு நேரடி பொறுப்பான மாநில அரசிற்கு எதிராக போர்க்குரல் எழுப்பியதாகவோ தெரியவில்லை.
போர் வேண்டாம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதேபோல்தான், நிஜமான போர்ச்சூழல் நில வும் இந்நேரத்தில் இந்த மேம்போக்கு மனிதநேய வாதிகளுக்கும் ‘காகிதக் கிளர்ச்சியாளர்களுக்கும் காரியார்த்தக் கலகக்காரர்க ளுக்கும்’ இடமளிக்கலாகாது.
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி – 3 (2025) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை.
முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா
பெரியகுளம், தேனி.தமிழ்நாடு.
குரு அரவிந்தனின் சிறுகதைகள் பன்முகப்பார்வை
முன்னுரை
குரு அரவிந்தனின் தாயகக் கனவுடன், சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும், பனிச் சறுக்கல், நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம் ஆகிய நான்கு கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள் பன்முக நோக்கில் திறனாய்வுக்கு உட்படுவதாக அமைகிறது.
வாழ்வியல் விழுமியங்கள்
படைப்பாளர்களின் முக்கிய நோக்கம் படைப்பு வழியாக மனித வாழ்வியலை வடித்தெடுப்பதே ஆகும். விழுமியம் என்பதற்கு மதிப்பு, சிறப்பு, உயர்வு போன்ற பொருள்களையே அகராதிகள் தருகின்றன. குரு அரவிந்தனின் சிறுகதைகளிலும் வாழ்வியல் விழுமியங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.
காதலும் அன்பும்
‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் தன் அத்தை மகள் பிரியா மேல் ஏற்பட்ட காதல் உணர்வை அப்பா தனது மகளுக்குக் கூறுவதிலிந்து இளம் வயதில் ஏற்படும் அன்பும் பாசமும் காலங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்பதை அறிய முடிகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதை, கதைக்கு உயிரூட்டம் அளிப்பதாக உள்ளது.
“உயிரோடு அவள் அருகே இருந்தபோதே அவர் தனது அன்பைக், காதலை மனப்பூர்வமாகப் பலவிதமான முறையில் அவளிடம் வெளிக்காட்டியிருந்தார். மேலை நாடுகளில் புரிந்துணர்வோடு ஒருவருக்கொருவர் துணையாகக் கடைசிவரை வாழ்வதென்பது ஆச்சரியமானதுதான், அப்படியான புரிந்துணர்வுள்ள ஒரு வாழ்க்கையைத்தான் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்” என்பதன் மூலம் மேலைநாட்டினரின் குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மத்தியிலும், இணைந்து வாமும் குடும்பத்தினரின் மேன்மையையும், நோய்நொடியிலும் இறுதிவரை அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்துப் பாதுகாக்கும் உறவின் உன்னத நிலைகளை ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
குடும்ப வாழ்வு
குடும்ப சூழல் காரணமாக, திருமணம் செய்து தாய் நாட்டிலிருந்து அயலகம் சென்ற பெண்ணின் குடும்ப வாழ்வு ‘பனிச் சறுக்கல்’ என்ற சிறுகதையில் வெளிப்படுவதை, “வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கிராக்கி அதிகம் என்பதால் கனடா மாப்பிள்ளை என்றதும் எல்லோரும் வாயைப் பிளந்தனர். … தங்கைகளைக் கரைசேர்க்க வேண்டுமே என்று தியாகம் செய்வதாக நினைத்து அவள் கண்ணை மூடிக்கொண்டு ராஜனுக்கு வாழ்க்கைப்பட்டாள்”, என்று புதிய வாழ்க்கை, புதிய நாடு என்று எல்லாமே கொஞ்ச நாட்களுக்கு இரசிக்கக் கூடியதாக அமைந்தாலும், பின்பு கணவன் ஒரு பெரும் குடிகாரன் என்பதை அறிந்து வருந்தும் பெண்ணின் அவல நிலை புலப்படுகிறது. குடும்பம் என்பது ‘சரஸ்வதி இருக்க வேண்டிய இடம்’ என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதோடு, குடும்பத்தைக் கவனமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கவும், தங்களின் எதிர்காலம் மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவம் இக்கதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வியின் சிறப்பு
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் கலிஸ்ரா எனும் பண்ணை வீட்டுக்கார மகள் ஓய்வு நேரத்தில் வண்டி ஓட்டுவதையும், படிக்கச் செல்வதையும், ஆண்கள், படிக்கும் பெண்களை ஊக்குவிப்பதையும், படிக்கவில்லை என்றால் அதனைச் சுட்டிக்காட்டுவதை, “உன்னைப் போலவா அவள், அவள் உன்னைவிட உயர் வகுப்பில் படிக்கிறாள், ஓய்வு நேரத்தில் மட்டும்தான் வருவதாகச் சொன்னாள், படிக்கிற பிள்ளைகளைக் குழப்பக்கூடாது, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” எனும் வரிகள் கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.
‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் தவறு நேர்ந்தது என்று அறிந்தபின்பு “படித்தவள், புத்திசாலி என்பதால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் செயல்பட்டாள்” என்பதன் மூலம் பெண் தான் பெற்ற கல்வியின் அறிவால் தனது அவலமான நிலையில் முடிவெடுப்பதும், தன்னைச் சமநிலைப்படுத்தி, தெளிவாக நடந்து கொண்ட போக்கும், பெண்கள் தங்கள் தன்மானத்தைத் தவறாகப் பயன்படுத்தும் சூழலுக்கு உட்படும் நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு துணிந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இச்சிறுகதை உணர்த்தியுள்ளது.
“நான் படித்துக் கொண்டிருந்தேன். மாணவப் பருவம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது”… “மாணவர்கள் போராட்டம் என்றால்தான் உலகமே திரும்பிப் பார்க்கும்” என்று ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையும் கல்வியின் சிறப்பை வலியுறுத்தி அமைகின்றது.
தொழிலின் மேன்மை
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் வரும் விவசாயக் குடும்பத்திலுள்ள நிக்கோலாஸ் என்பவர் பிக்கப், டிராக்டர், பெரிய வண்டிகள் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் பெரியதொரு விவசாயப் பண்ணையில் வண்டி ஓட்டும் வேலை செய்ததையும், நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ரா இருவரும் கனடா வந்தபின்பு இயற்கை விவசாயம் செய்து நல்ல வருமானம் பெற்று பூந்தோட்டங்களையும், காய்கறித் தோட்டங்களையும் பராமரித்து வாழ்ந்துள்ள தகவல்களும், கற்ற தொழில் முறையைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த நாட்டிலும் நல்ல முறையில் வாழ்ந்துள்ள வாழ்க்கை அனுபவங்களும், தொழில் பயணமாகப் பிற நாடுகளுக்குப் பயணிப்போர்க்கு அனுபவப் பதிவாக அமைந்துள்ளது.
தாய் மண்மேல் பற்று
ஈழப்போரின் விளைவாக ஆண்களும் பெண்களும் நாட்டிற்காக உழைக்க வீட்டை விட்டு செல்வதைத் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “பிரியா வீட்டைவிட்டுப் போய்விட்டதாகவும், விடுதலைப் போராட்டத்தில் அவளுக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவள் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. பிரியாவா.. எப்படி..? தாய்மண்ணை நேசித்த வயது வந்த ஒரு பெண் என்பதால் அவளது விருப்பத்தை யாராலும் தடுக்க முடியவில்லை”எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன. புலம்பெயர்ந்து பிறநாடுகளில் குடியேறினாலும், தாய்மண்மேல் கொண்ட பற்றும் பாசமும் நீங்காத நினைவுகளாக உள்ளன.
பெண்ணின் பெருமை
குரு அரவிந்தன் தனது சிறுகதைகளில் பெண் பாத்திரப் படைப்புக்களை உயர்வாகப் படைத்துள்ளார். ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் வயது பெண் நாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும்இ ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பெண் என்பவள், “பள்ளியின் பாட்மின்டன் குழுவுக்குத் தலைமை தாங்கியவர். பல மாணவிகளுக்குப் பயிற்சியாளராக இருந்திருக்கின்றார். வலைப்பந்தாட்டக் குழுவுக்கும் பயிற்சியாரளாரக் கடமையாற்றி வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவர்” என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. மேலும், இக்கதையில் வரும் கலிஸ்ரா எனும் பெண் வண்டி ஓட்டக்கூடியவராகவும், ஆண்கள், படிக்கும் பெண்களுக்கு மதிப்புக்கொடுப்பதையும் ஆசிரியர் எடுத்துரைக்கும் விதம் சிறப்புக்குரியது.
‘பனிச் சறுக்கல்’ கதையில் வீட்டில் நடந்த விருந்தில் விஜி என்ற பெண் களங்கப்படுத்தப்பட்டாலும், குடும்பம் என்ற வாழ்விற்குள் நுண்ணறிவோடு செயல்படுபவளாகப் பெண் பாத்திரப்படைப்பு அமைந்துள்ளதை, “நல்லவளாய் நடந்து கொண்டு தனது எதிர்கால வாழ்க்கையில் சேற்றைப்பூச அவள் தயாராகவில்லை. தான் தவறு செய்யாவிட்டாலும், பெண் என்பதால் நடந்தது வெளியே தெரிந்தால் தன்மீது தீராப்பழி சுமத்தக் கணவனே தயங்க மாட்டான் என்பதை அனுபவ மூலம் அவள் அறிந்தே வைத்திருந்தாள். காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பத் தன்னை காப்பாற்றிக் கொண்டுஇ இருத்தலுக்காய் வாழ்வதே இப்போதைய தேவை என்ற நிலைப்பாட்டோடு அவள் செயற்பட்டாள்” எனும் வரிகள் இதனை எடுத்துரைக்கின்றன.
மூத்தோர்களின் வாழ்வியல் நெறி
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் முதியோர்களின் வாழ்வைக் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. “நிக்கோலாஸ்இ உரையாடிக் கொண்டிருக்கும் போது, தனக்கு என்ன வயது இருக்கும் என்று சொல்லுங்க பார்க்கலாம் என்றார். என்ன, ஒரு 73 – 74 -க்குக் கிட்ட இருக்கும் என நினைக்கிறேன் என்றேன். அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் இல்லை எனக்கு 84 ஆச்சு என்று. அவரை இளமையாகப் பத்து வயது குறைத்து நான் காட்டியதில் அவருக்குள் மகிழ்ச்சி இருந்தது. அவரது மனைவி கலிஸ்ராவுக்கு 78 வயது ஆகிறது என்றார்” இதன்மூலம் முதிர் வயதிலும் கணவன், மனைவியைக் கவனித்துக் கொள்ளும் நற்பண்பும், நட்புறவோடு பழகும் பண்புகளும் வெளிப்படுகின்றன. வயது போகும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்தும், அதனால் ஏற்படும் வேதனைகள்இ இளமையில் அழகுடன் இருந்த உறுப்புக்களின் மாற்றங்கள் குறித்தும் இச்சிறுகதை எடுத்துரைக்கிறது. மேலும், “பிறப்பு என்று ஒன்றிருந்தால், இறப்பு என்றும் ஒன்றிருக்கும், உலகே மாயம், இதுதான் இந்த உலகம்” என்ற வாழ்வியல் படம் இம்மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தியாக அமைந்துள்ளது.
‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ எனும் சிறுகதையில் 80 வயது ஆப்பிரிக்கா நாட்டு முதியவர், “ஆரோக்கியமானவர் போல இருந்தார். அன்று சரித்திரத்தை மாற்றிப் படைத்த போராளிகளில் ஒருவர் என்பதால் என் மதிப்பில் உயர்ந்து நின்றார்”எனும் வரிகளும், அந்த முதியவர் வெள்ளை இனத்து மக்களிடம் தாங்கள் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாற்றைப் பதிவு செய்யும் விதமும், கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்காகப் போராடி பெற்றுக் கொண்ட உரிமைகளை எடுத்துரைக்கும் விதமும் வரலாற்று உண்மைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
பண்பாடும் பழக்கவழக்கமும்
பண்பாடென்பது ஒரு தலைமுறையினர், சென்ற தலைமுறையினரிடம் பெற்றுக் கொண்ட வாழ்க்கை முறையாகும். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை அறிந்து கொள்வதற்குப் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் அடிப்படைக் கருவிகளாக அமைகின்றன.
உணவு
இலங்கை மக்கள் உண்ணும் உணவு குறித்த தகவலை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை வெளிப்படுத்துவதை, “அத்தை பிட்டு பரிமாறினாள். பிட்டுக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ச் சம்பல். வறுத்த மிளகாயை இடித்து தேங்காய்த் துருவலுடன் உப்பும் புளியும் கலந்து தயாரிப்பதுதான் சம்பல்”,எனும் வரிகளால் அறியலாம்.
பூப்பெய்தல்
பெண்களைப் பூப்பெய்த பின்பு வீட்டின் இருட்டறையில் அமரவைத்தல், அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகள், பூப்பெய்த பின்பு முன்பு போல் குழந்தைகளோடு இணைந்து விளையாடக் கூடாது, பெரியபிள்ளையானல் தனிமைப் படுத்தப்படுதல், குமரப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற சமூக நிலையை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “அவளைக் கிணற்றடிக்குக் கொண்டு சென்று தலையிலே தோயவார்த்தனர். இன்று இவள் இந்த அறையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாள். அத்தை நல்லெண்ணையும், முட்டையும் எடுத்துக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குப் போவதை அவதானித்தேன்” எனும் வரிகள் எடுத்துரைக்கின்றன.
விளையாட்டு
சண்டிலிப்பாய் வயல் வரம்பு வழியே ஓடிப்பிடிப்பது, இலுப்பங்கொட்டை பொறுக்குவது, வானரப்படைகளோடு ஒல்லித்தேங்காய் கட்டிப் பூவல் குளத்திலே தாமரைக் கொடிகளில் சிக்காமல் நீச்சலடிப்பது, ஐயர் வீட்டு வளவிலே கொய்யாப்பழம் பறிப்பது, வேப்பமர நிழலில் மாங்கொட்டை அடிப்பது, மாட்டுவண்டில் சவாரி விடுவது, இப்படி குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளாக ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை வெளிப்படுத்துகிறது.
கொண்டாட்டம்
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பண்ணை வீட்டுப்பெண்ணின் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டாம் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுடன் நடந்துள்ளதையும், அக்கொண்டாட்டத்தில் இடம் பெற்ற கேக்வெட்டுதல், மதுஅருந்துதல், நடனம் ஆடுதல் போன்ற மேலைநாட்டுக் கலாச்சாரத்தை அறிய முடிகிறது.
‘பனிச் சறுக்கல்’ சிறுகதையிலும் வீட்டில் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதையும், மதுபானங்களுடன் விருந்து பருமாறும் நிகழ்வு நடைபெற்றாலும், அயல்நாட்டில் வாழ சென்ற வீட்டின் இல்லத்தரசி விஜி மதுபானங்களை வெறுப்பதையும், ஆனாலும் அவர்கள் வீட்டில் நடைபெற்ற விருந்தில் ஆடல் பாடல்களுடன் அவளையும் குடிக்கவைத்து, அலங்கோலப்படுத்திய மேலைநாட்டு கலாச்சார சீரழிவை ஆசிரியர் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
பொழுதுபோக்கு
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் பிசியோதொரப்பி வைத்தியரிடம் தனது மனைவியை அழைத்து வந்த நிக்கோலாஸ் என்பவர் ‘றீடேஸ் டையஸ்ட்’ என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த தகவல் இடம் பெற்றுள்ளது. மேலும். இக்கதையில் புலம் பெயர்ந்த பெண்கள் பலர், கனடாவில் பொழுது போக்குவதற்காகத் தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் சங்கீதம், நடனம், விளையாட்டு என்று ஈடுபடுவதையும் அறிய முடிகிறது.
“குடும்பமாக வந்து நீச்சல் உடையோடு பலவகையான வண்ணக் குடைகளின் கீழ் இருப்பவர்களும், மறுபக்கம் வெய்யில் காய்பவர்களுமாய் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்குமிங்குமாய் நிரம்பியிருக்கச் சிறுவர், சிறுமியர் ஆங்காங்கே மணல்வீடு கட்டி ஆரவாரமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையின் மூலம் மேலை நாட்டு மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.
போரின் அவல நிலை
போருக்குப் பின் ஈழ நாட்டின் அவல நிலையை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை“ஏனைய வீடுகள் போல அத்தையின் வீடும் யுத்தத்தின் அவலத்தை எடுத்துக் காட்டியது. செல் குண்டுகள் வந்து விழுந்ததில் கூரை முற்றாகவே தூர்ந்து போயிருந்தது. செடி கொடி பற்றைகளுக்கு நடுவே வீடு ஒன்று இருந்ததற்கு அடையாளமாய் ஆங்காங்கே இடிந்து போன சுவர்கள் தலை தூக்கி நின்றன” எனும் வரிகள் எடுத்துரைகின்றன.
புலம்பெயர்தல்
ஈழப் போரின் காரணமாகப் புலம்பெயர்ந்துள்ளதை ‘தாயகக் கனவுடன்’ சிறுகதை எடுத்துரைப்பதை, “மகளின் பிரிவால் மட்டுமல்ல, யுத்தம் காரணமாக அவர்களின் குடும்பமும் சொல்லெனாத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு சொந்த வீட்டைவிட்டு இடம் பெயரவேண்டி வந்தது” எனும் வரிகளால் அறியலாம். ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ், கலிஸ்ரா இருவரும் காதலால் கனடாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த செய்தி இடம் பெற்றுள்ளது.
அடிமை நிலையும் போராட்ட உணர்வும்
‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ சிறுகதையில், ஆப்பரிக்கா மக்கள் எவ்வாறு வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு, சுதந்திரம் பெற்றார்கள் என்ற வரலாற்றைக் கூறும்போது, “எமது முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இவர்களுக்கு அடிமைகளாக இருந்ததால், எங்களையும் அப்படியே நடத்தினார்கள். எங்களால் என்ன செய்யமுடியும், சட்டம் அவர்கள் பக்கம் இருந்தது. 1600 -களில் தொடங்கிய அடிமை முறை 1865 வரை நடந்தது. கறுப்பினப் பெண்களை வேலைக்காக மட்டுமல்ல, அடிமைகளின் இனப்பெருக்கத்திற்காகவும் அவர்கள் பாவித்தார்கள். ஆறு, ஏழு தலைமுறையினர் அடிமைகளாகவே இருந்தார்கள்”என்று கறுப்பின மக்களின் அடிமை வரலாற்றைக் கூறுவதோடு, அவர்கள் கண்டு மகிழ்ந்த நாட்டிய நாடகத்தின் கருத்துக்கள் போராட்ட உணர்வினை ஏற்படுத்தியுள்ளதை, “அந்த நாட்டிய நாடகத்திலே வந்த பாடலில் சில வரிகள் எங்கள் உணர்வுகளை எழுப்பிவிட்டன. … எங்களுக்குள் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எங்க உரிமையை நாங்கதானே வென்று எடுக்க வேண்டும், முடியாது என்று நினைத்தால் எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடும்” என்ற உணர்வுடன் போராடி, 1962 ஆம் ஆண்டு ரெட் காபோட் என்பவர், “கறுப்பினத்தவர் கடலில் குளிப்பது குற்றமாகாது, இந்த மண்ணில் அவர்களுக்கு அதற்கான சுதந்திரமிருக்கிறது என்று அவர் தீர்ப்பு வழங்கியது சரித்திரத்தில் முக்கியமாக எழுதப்பட வேண்டியது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
“இதனால் இன்று நாங்கள் எல்லாம் சுதந்திரமாகக் கடலில் இறங்கிக் குளிக்க முடிகின்றது. 60 வருடங்களுக்கு முன் ஆபிரிக்க அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் அமைதியான வழியில் போராடி வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்தத் தீர்ப்பினால்தான் இன்று பிறவுண் நிறத்தவர்களான நாங்களும் மியாமிக் கடலில் குளிக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த எங்களுக்கு இந்த வரலாறு தெரியாவிட்டாலும், அவர்கள் பெற்றுத் தந்த இந்த சுதந்திரம் மிகவும் முக்கியமானதாகும், இல்லாவிட்டல் நாங்களும் மியாமிக் கடற்கரையில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்க வேண்டி வந்திருக்கும்” என்ற வரலாற்று உண்மை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். எங்குச் சென்றாலும் ஒவ்வொரு இடத்திலும் நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், யாரோ எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்ததுதான். இது போன்ற சில விடயங்களை வரலாறு பதியத் தவறிவிடுகின்றது. சுதந்திரம் என்பது இலவசமாகக் கிடைப்பதில்லை, போராடித்தான் பெறவேண்டும் என்ற உண்மையும் இக்கதையில் பதிவு செய்துள்ள விதம் சிறப்புக்குரியதாகும்.
உத்தி
படைப்பாளன் தான் சொல்ல வரும் கருத்தையும், படிப்போர் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு படைக்கும் இலக்கிய முறைகளே உத்திகள் எனப்படும்.
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் தலைப்பை ஓட்டியே கதையின் போக்கு அமைந்துள்ளது. ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் பனிச் சறுக்கல் ஏற்பட்டு எதிர்படும் விபத்துக்கள் போன்று குடும்ப வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ கதையில், “ஆபிரிக்க கறுப்பின அடிமைகள் தப்பி ஓடினால் வேட்டை நாய்களை வைத்துத்தான் வெள்ளையின முதலாளிகள் அவர்களைத் தேடிப் பிடித்தார்கள். தண்ணீரில் மோப்ப நாய்களால் மோப்பம் பிடிக்க முடியாது.” “தண்ணீரைக் கண்டால் விலகிநில் என்று எமது பெற்றோர் அறிவுறுத்துவார்கள். தண்ணீரைக் கண்டால் விலகிப் போகாதே, நீச்சலடிக்கக் கற்றுக் கொள் என்று வெள்ளையினப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவார்கள்” எனும் வரிகளைக் கொண்டு கதையின் தலைப்புப் பொருத்தம் சிறப்பாக அமைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்.
முன்னோக்கு உத்தி
கதையின் பிற்பகுதியில் நடக்கும் ஒன்றைக் கற்போர் ஏற்றுக்கொள்ளும் வகையில் கதையின் முற்பகுதியிலே கூறுவது முன்னோக்கு உத்தியாகும். “முளைத்துப் பூத்திருந்த கார்த்திகைச் செடியின் பூதான் … மஞ்சள் சிகப்பு நிறத்தில் பளீச்சென்று கண்ணில் பட்டது. பழைய நினைவுகள் எல்லாம் திடீரெனக் கண்முன்னால் வந்து நின்றன. … குடியிருந்த அந்த வீட்டைப் பார்க்கவே எவருக்கும் அழுகை வரும், ஆனால் நான் அழுதது அதற்காக அல்ல, என் அத்தை மகள் பிரியாவுக்காகத்தான்” எனும் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையின் வரிகள்; முன்பு நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டுவதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள கனிகளில் மாம்பழத்தின் வகைகளைக் குறிப்பிட்டுக் கூறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் மற்றும் கலிஸ்ராவின் காதல் கதையைக் கூறும் நிகழ்வு, முன்பு நடந்த நிகழ்வை நினைவுக் கூர்ந்து மகிழ்வதாக உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த பழைய நினைவுகளை மீண்டும் மீள்பதிவு செய்வதாக ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகத்தின்’ சிறுகதை அமைந்துள்ளது.
இலக்கிய இன்பம்
படைப்பாசிரியர் இலக்கியங்களைத் தனது படைப்புகளுக்குள் பயன்படுத்துவதன் மூலம் படைப்பாசிரியரின் இலக்கிய ஆர்வத்தை அறிந்து கொள்ள முடிகிறது. “எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிவ்வீடே.. அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே..” என்று ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் இலக்கிய வரிகளின் பயன்பாட்டைக் காண முடிகிறது.
“யானைக்கும் ஒரு நாள் அடிசறுக்கும்” என்று பழமொழிகள் பயன்படுத்தியுள்ளதை ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் காண முடிகிறது.
“சாக்கடையில் தவறி விழுந்து விட்டது போன்ற உணர்வில் ஒரு கணம் நிலை குலைந்தாள்” என்பதன் மூலம் உவமை பயன்படுத்தியுள்ளதோடு ‘பனிச் சறுக்கலை’ குடும்ப வாழ்வோடு ஒப்புமைப்படுத்தி ஆசிரியர் தான் கூறவந்துள்ள கருபொருளைக் குறித்துக் கூறியுள்ள விதம் படிப்போரின் சிந்தனைத் திறனைத் தூண்டுவதாக உள்ளது.
மெய்பாடுகள்
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப” (தொல்.மெய். 3)
என்று தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்பாடுகள் குருஅரவிந்தனின் சிறுகதைகளில் வெளிப்படுகிறது.
“அழாதீங்கப்பா, அத்தைப் பாட்டியோட வீடு மட்டுமல்ல, இங்கே எல்லா வீடும்தான் சிதைந்து போச்சு, மெல்ல மெல்லத் திருத்தியிடுவாங்க” எனும் ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் அழுகை மெய்பாடு வெளிப்படுவதைக் காணலாம். மகிழ்ச்சி என்பது எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்றாகும்.
“போருக்கு முன்னைய நாட்கள், மனதைவிட்டகலாத எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை என்பதால் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தேன்” என்று ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையின் வரிகள் எடுத்துரைப்பதைப் போன்று ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் தனது வயதையும், தனது மனைவியின் வயதையும் குறித்துக் கூறும் போது மகிழ்ச்சியை வெளிப்டுத்துகின்றார். தனது காதல் கதையைக் கூறும் நிகழ்விலும் மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
மெய்ப்பாடுகளில் கோபம் என்பது, வெகுளி என்றும் சொல்லப்படும், எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்றாகும். ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் நிக்கோலாஸ் கலிஸ்ராவைக் காதலிக்கும் முன் அவளைக் குறித்து முழுமையாக அறியாமல் கோபம் கொள்வதைக் காண முடிகிறது.
“ஏமாற்றப்பட்ட இனத்தைச் சேர்ந்த இவள் இருக்கிறாளா இல்லையா என்பது கூட உறவுகளுக்குத் தெரியாத ஒரு அவலம்” என்பது ‘தாயகக் கனவுடன்’ சிறுகதையில் அவலச்சுவை வெளிப்படுகிறது. ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ சிறுகதையில் மனைவியின் இறப்பு அவலச் சுவையை வெளிப்படுத்துகிறது. ‘பனிச் சறுக்கல்’ சிறுகதையில் விஜிக்கு நேர்ந்த இழிவான செயல் மூலம் அவலச் சுவையைக் காணலாம். ‘நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்’ கதையில் ஆப்பிரிக்க மக்களின் வரலாற்றைக் கூறும் நிகழ்வில் மூன்று தலைமுறைகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அவல நிலை வெளிப்படுகிறது.
முடிவுரை
பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட, குரு அரவிந்தனின் சிறுகதைகளில் தான் வாழும் நாடுகளில் நடக்கின்ற நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டு சிறுகதைகளைப் படைக்கும் திறன் வெளிப்படுகிறது. சிறுகதைகளில் வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்வியல் விழுமியங்களை இலக்கிய சுவையுடன் அனைவரும் படிக்கும் விதத்தில் எடுத்துரைக்கும் ஆசிரியரின் நடையமைப்பு சிறப்புக்குரியதாகும். சங்க இலக்கியத்தில் இருந்து அறிவியல் வரை, ஆய்வுகளை மேற்கொள்வோருக்குப் பயன்பெறும் விதத்திலும், சமூகத்திற்குப் பலவித நற்கருத்துக்களை அறிவிக்கும் போக்கிலும், தீமைகளைச் சுட்டிக்காட்டும் பண்புகளிலும் இவரது சிறுகதை இலக்கியம் இவ்வுலகிற்குப் பயனுள்ள படைப்பாக அமைந்திருப்பது பாராட்டுகுரியது.
குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தியதிறனாய்வுப் போட்டி – 3 (2025) முதற்பரிசு பெற்ற கட்டுரை.
எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள் பற்றிய ஓர் ஆய்வு
சிவகலை சிவப்பிரகாசம், வவுனியா.
ஆய்வுச்சுருக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த புதிய வரவு புனை கதைகளாகும். ஆனால் இருபதாம் நூற்றாண்டில் தான் இதன் வளர்ச்சி பல பரிணாமங்களைப் பெற்றது. சிறுகதை வளர்ச்சியால் கன்னித்தமிழ் மறுமலர்ச்சியடைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டில் எடுத்துக் கொண்ட முயற்சியால் சிறுகதைத் துறை மேலும் வளர்ச்சியடைந்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியமும் முக்கிய அடித்தளமாக அமைந்திருக்கின்றது. இப் புலம்பெயர் இலக்கியம் விசைகொள்ள பலவகைப்பட்ட ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட, பரந்துபட்ட வாசகர்களின் எழுத்தாளர் குரு அரவிந்தனின் பங்களிப்பு தனித்துவமானது. இவர் எழுதிய புல்லுக்கு இறைத்த நீர், நங்கூரி, பனிச்சறுக்கல், உறவுகள் தொடர்கதைஆகிய நான்கு சிறுகதைகள் மட்டும் இவ் ஆய்வுக்காக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் நோக்கமானது மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதுடன் இவரது சமூகம் பற்றிய பிரக்ஞையையும் வெளிக்கொணர்வதாகும். பண்புநிலை அடிப்படையில் விபரண ஆய்வு முறையினூடாக இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாய்வுக் கட்டுரைக்குரிய தரவுகள் ஆசிரியருடைய சிறுகதைகள், நூல்கள், இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன. திறவுச் சொற்கள்:- குரு அரவிந்தன், புல்லுக்கு இறைத்த நீர், பனிச்சறுக்கல், நங்கூரி, உறவுகள்
தொடர்கதை.
அறிமுகம்
குரு அரவிந்தன் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், புலம்பெயர் தேசமாகிய கனடாவில் வசிப்பவருமாகிய கணக்காளர், ஆசிரியர் குரு அரவிந்தன் அவர்கள் படைப்பிலக்கியத்தில் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளியாவார். ஆழ்ந்த புலமைப் பின்புலம் கொண்ட மகாஜனாக் கல்லூரியின் அறிவேற்றமும், ஆழ்ந்த புலமையும், ஆழ்ந்த வாசிப்பும் இவரின் ஆக்கங்களின் வேர்களோடு தொடர்புபட்டுள்ளன. எட்டுச் சிறுகதைத் தொகுப்புக்கள், ஏழு நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், சினிமாக் கதை, வசனம், சிறுவர் இலக்கியம், நாடகங்கள் என்ற பன்முகத்தளங்களில் கால்பதித்து நிற்கும் அவரது ஆளுமையின் உறுபண்பு (trait ) அறிவு நிலையிலும், ஆக்க நிலையிலும் அவர் மேற்கொண்ட செறிவான ஊடாட்டங்களின் வெளிப்படுத்துகையாயின. சர்வதேச தமிழர் மட்டத்தில் இவரது வாசகர் வட்டம் மிகப்பெரிய அளவில் பரிணாமம் அடைந்து கொண்டிருப்பதற்கு இவரின் கனதியான இலக்கியப் பங்களிப்பே காரணமாகின்றது.
இவரது புனை கதைகள் பல பிறமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டும், குறும் படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. கலைமகள் விருது, விகடன் விருது, உதயன் தங்கப்பதக்க விருது, தமிழர் தகவல் விருது, தமிழ்மிரர் விருது, ஞானம் விருது, சிறுகதைவித்தகர் விருது, சிறந்த ஊடகவியலாளருக்கான கவர்னர் விருது, சிறந்த திரைக்கதை வசனத்திற்கான ஜனகன் பிச்சேஸ் விருது, வடஅமெரிக்க தமிழ்ச்சங்க விருது, மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவருக்கான சாதனையாளர் விருது போன்ற பல பரிசுகளையும் விருதுகனையும் பெற்றிருக்கிறார். உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலும் ஒளியுண்டாதற் போல அவர் நோக்கம் தெளிவுற அமைவதனால் அவர் ஆக்கங்களும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டவையாக அமைகின்றன.
சிறுகதை
சிறுகதை என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்பு. அதில் நிறைய நிகழ்ச்சிகள்,விபத்துக்கள், திடீர்த்திருபப்ங்கள், எதிர்பாராத வளர்ச்சி மூலம் உச்சக்கட்டத்தை அடைதல், நிறைவான முடிவு போன்றவை இருக்க வேண்டும் என்பார் ஹியூக் வாவ்போல். ஒரு சிறுகதை மூலக்கருத்து ஒன்றையும் ஓரே ஒரு கதைப் பொருள் கூறையும் கொண்டிருப்பதால் அது நாவலிலிருந்து வேறுபடுகின்றது. கதாாசிரியரின் சிந்தனையில் பிறந்து அது வாசகனின் சிந்தகனையில் நிறைவு பெறுகிறது . சிறுகதையின் அமைப்புச் சிறப்படைவதற்கு சிறந்த தலைப்பு, தொடக்கம், நேர்த்தியான கருப்பொருளும் கதைப்பின்னலும், மனத்தினின்று அகலாத பாத்திரங்கள், நுட்பமாகக் கதைகூறல், சிறுகதையின் கால இடஅமைவு, பாத்திரப் பேச்சு, சிறந்த முடிவு என்பவை இன்றியமையாதவை. இவற்றின் தளங்களில் நின்றே ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுகதைகளும் திறனாய்வு செய்யப்படுகின்றன.
முதலாவதாக குரு அரவிந்தனின் ‘புல்லுக்கு இறைத்த நீர்’ என்பதனை எடுத்துக் கொள்வோம். தள்ளாத வயதிலுள்ள ஆசிரியர் தான் கற்பித்த சிறந்த மாணவர்களைச் சந்திக்கும் போது ஏற்படும் விகசிப்பையும், எதேச்சையாக சமூகப் பிறழ்வுகளுக்குள் அகப்பட்டுக் கொண்ட மாணவனைச் சந்தித்ததால் அவரடைந்த ஆதங்கத்தையும் எடுத்தியம்புகிறது. அந்த மாணவனின் சமூகப்பிறழ்வுக்கு யார் காரணமென்பதே கதையின் கருவூலம்.
அடுத்த கதையாகிய ‘நங்கூரி’என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டால் இக்கதை 1983ம் ஆண்டு சிங்கள இனவாதத்தால் தமிழினத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரத்தால் அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களைச் சுமந்து கொண்டு தமிழ்க் கரையோரப் பிரதேசங்களூடாகக் காங்கேசன்துறையைச் சென்றடையும் நங்கூரி எனும் கப்பலில் நிகழும் சோகக்கதையைப் பேசுகிறது. பயணக் காலமான அந்த இரண்டு நாட்களில் தான் எத்தனை பாத்திரங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், எத்தனை விவாதங்கள், எப்படிப்பட்ட தீர்வுகள், அது ஓர் துன்பியல் நாடகம் என்பதை ஆசிரியர் யதார்த்தபூர்வமாக எழுதியுள்ளார்.
மூன்றாவது சிறுகதையாகிய ‘பனிச் சறுக்கல்’ என்பது, பனிச்சறுக்கல் விளையாட்டை புலம்பெயர் மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட்டுப் புனையப்பட்டதாகும். மனவிருப்பமன்றிக் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஈழத்துப் பெண் புலம்பெயர் நாட்டு மணமகனைத் திருமணம் செய்து அந்த நாட்டிற்குச் சென்ற பின் அங்குள்ள இயற்கைச் சூழலுக்கு மேலாக, சமூகச் சூழலுக்கு இசைவாக்கமடையும் போது அவள் பட்ட துன்பத்தையும், அவளுக்கேற்பட்ட சோக நிகழ்வையும் எடுத்தியம்புகிறது.
நான்காவது சிறுகதையாகிய ‘உறவுகள் தொடர் கதை’ என்பதாகும். ஈழத்தில் நடந்தேறிய யுத்ததாண்டவத்தின் கோரப்பிடியில் சிக்கிய தனயன் உயிரைக் காப்பாற்ற தாயின் விருப்பத்துடன் கனடாவில் தஞ்சமடைகிறான். ஈழத்தில் தனியாக வாழ்ந்த தாய் யுத்தம் காரணமாக நிகழ்ந்ந இடப்பெயர்வுகளில் எங்கு போனாள் என்றறியாத தனயன் பல காலங்கள் கழித்து யுத்தம் தளர்த்தப்பட்ட சூழ்நிலையில் அவளைத் தேடித் தனது குடும்பத்தாருடன் தாய் நாட்டிற்கு வருவதையும் அதன் பின் நடந்தேறிய தொடர் சம்பவங்களையும் சித்தரிப்பதாகும்.
கதைகளின் தலைப்புகள்
சிறுகதைக்குப் பொருத்தமான பெயரும் அதன் கவர்ச்சியுமே வாசகர்களுக்கு முதலில் அறிமுகமாகின்றன. ஒரு கதைக்கு ஒரே ஒரு சரியான பெயர்தான் இருக்க முடியும். அந்தப் பெயரைத் தேடிப் பிடிப்பதில் தான் சிறுகதையாசிரியரின் தனித்திறமை அடங்கியிருக்கிறது.சிறுகதைக்குத் தலைப்பிடும்போது அதன் தொடக்கம், அதன் முடிவு, அதன் பிரதான பாத்திரம், அக்கதை கூறும் பொருள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக்கொண்டு தலைப்பிடலாம். குரு அரவிந்தனின் புல்லுக்குிறைத்த நீர் சிறுகதையானது அங்கு கூறப்படும் பொருளை வைத்து உட்கருத்தை உள்ளடக்கித் தலையிடப்பட்டுள்ளது. நங்கூரி, பனிச்சறுக்கல் ஆகிய சிறுகதைகளின் தலைப்பானது கதையின் தொடக்கமாக அமைந்திருக்கின்றது. உறவுகள் தொடர்கதை என்ற கதை அக்கதையின் முடிவைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. ஆக, சிறுகதைகளுக்குப் பெயரிடுவதில் குரு அரவிந்தன் அவர்கள் தனது தனித்திறமையை நிலைநிறுத்தியுள்ளார்.
சிறுகதையின் தொடக்கம்
மேற்கூறப்பட்ட நான்கு சிறுகதைகளுக்குமே கதைப் பொருளுக்கும் கதைக்கருவிற்கும் ஏற்ற தொடக்கங்கள் அமைந்துள்ளன. கதாசிரியர் சிறுகதைகளின் ஆரம்பத்திலேயே வாசகரின் கவனத்தையும் ஆவலையும் தூண்டுவதாகவே கதைகளைப் புனைந்துள்ளார் .
கதைக்கருவும் கதைப் பின்னலும்
எந்தவொரு நிகழ்ச்சியின் மேல் சிறுகதை பின்னப்பட்டுள்ளதோ அந்த நிகழ்வு சிறுகதையின் கருவாகும். கரு கதையின் சிறப்புக்கு மூல காரணமாக அமைகின்றது. கருவில் திரு இல்லையேல் கதையிலும் வளமிருக்காது. சிறுகதை, ஆசிரியரின் அனுபவத்திலிருந்து முகிழ்கின்றது. ஆசிரியர் எங்கோ எப்போதே பார்த்த ஒரு நிகழ்ச்சி கேட்ட சம்பவம் அவருக்கு நேரிட்ட சில அனுபவங்கள் இவையே நினைவாகிச் சிறுகதையாகின்றன. வேறு வேறு காலங்களில் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் கதாசிரியர் கற்பனையுடன் கலந்து அவற்றைக் கோர்த்து விடுகிறார். இதுவே கதைப்பின்னலாகும்.
விகடனில் வெளிவந்த ‘புல்லுக்கு இறைத்த நீர்’ மனதைத் தொடும் கதை. கதைத் தலைவனாக தள்ளாத வயது ஆசிரியர் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறார். இவரின் வாழ்வின் நிகழ்காலத்திலிருந்து சம்பவங்கள் பின்னோக்கிப் பின்னப்பட்டிருக்கின்றன. தன்னிடம் கல்வி பயின்று சமுதாயப் பிறழ்வில் சிக்குண்ட மாணவனொருவனைச் ஏதேச்சையாக கதைத்தலைவன் சந்திக்கும் போது அவரிடம் ஏற்படும் உணர்வுகளின் ஆதங்கத்தை கதாசிரியர் நுட்பமாக விபரித்திருக்கின்றார். . பிள்ளைகள் தமது இலக்குகளை அடையாளம் காணும் போது பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொள்வதே முக்கியம். மாறாகத் தமது சொந்த இலக்குகளைப் பிள்ளை மீது திணித்ததால் அப்பிள்ளை எவ்வாறு சீரழிந்துள்ளான் என்பதனையும் ஆசிரியரும் தானும் அதற்கொரு காரணமாக இருக்குமோ என்று ஏங்குவதையும் கதாசிரியர் சமூகத்திற்கு இக்கதையின் வாயிலாக எடுத்தியம்புகின்றார்.
விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த ‘நங்கூரி’ என்ற கதையை எடுத்துக் கொண்டோமானால் இக்கதையானது 1983ம் ஆண்டு பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டதாகும். காடையர்களால் கற்பழிக்கப்பட்ட் பெண்ணும் அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவளில் பழிபோடும் கையாலாகாத கணவனும், அவர்களை ஆற்றுப்படுத்தும் பெண் ஆசிரியரும் நங்கூரி என்ற கப்பலில் அகதிகளோடு அகதிகளாகக் காங்கேசன்துறைக்குக் கொழும்பிலிருந்து இரண்டு நாட்கள் பயணிக்கிறார்கள். மனைவி காடையர்களால் கற்பழிக்கப்பட்டமை அருவருப்போடு நோக்கும் கணவன் மானங்கெட்டுவிட்டதாகத் தற்கொலைக்கு முயல்கின்றான். மனைவியம் கணவனின் சுடுசொற்கள் தாங்காமல் தற்கொலைக்கு முயல்வாள் என்று பீதியுற்ற பெண் ஆசிரியர் அவர்களை ஆற்றுப்படுத்தி அனைவரும் கரையைச் சென்றடைகின்றனர். நெருக்கீட்டிற்குப் பின்னரான மனவடுவால் கணவன் மனநோயாளியாகிவிடுகிறான். மனைவி தான் பட்ட அவலத்திலிருந்து மீண்டு வந்து முதியோர் இல்லத்தில் கடமையாற்றுகின்றாள். ஆசிரியரின் மகள் இனப் பிரச்சினையால் ஏற்பட்ட அவலங்களைக் கேள்வியுற்று விடுதலைப் போராளியாகி மாவீரராக மரணிக்கிறாள்.
கதை ஆரம்ப கட்டத்திலிருந்து முன்னோக்கிப் பின்னப்பட்டுள்ளது. கதாசிரியர் இங்கு பெண் கதாப்பாத்திரங்களை எந்தச் சவால்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் உயிர்ப்பான பாத்திரங்களாகச் சிருஷ்டித்துள்ளார் .ஆற்றுகைப்படுத்திய ஆசிரயர் தனது மகள் மரணிப்பிலும் பெருமை கொள்கிறாள் எனக் கூறுமவர் அப்பெண் பாத்திரத்தின் மன வலிமையை இறுக்கமாகச் சித்தரித்துள்ளார்.
பனிச்சறுக்கல் சிறுகதையில் சித்தரிக்கப்படும் பெண் பாத்திரம் தாய் நாட்டிலிருந்து புலம் பெயர் நாட்டுக்குத் திருமணமாகிச் செல்கிறாள். அங்குள்ள பண்பாட்டுச் சூழலுக்கு இசைவாக்கமடைய எண்ணி அருந்திய மென்பானத்தில் யாரோ கலந்து கொடுத்து மதுபானத்தால் அவள் தன்னிலை மறக்கக் கணவனல்லாத யாரோ ஒருவனால் பாலியல் பலாத்காரத்துக்கு இரையாகி கின்றாள். கதையின் உச்சம் அடுத்து அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதுதான். எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் இப் பாத்திரத்தைப் படைத்துள்ளார். செய்யாத குற்றத்திற்குத் தண்டனையாக ஒரு பாத்திரத்தை நசுக்க முடியாது. பாதிரத்தைப் படைப்பது பெரிதல்ல, அதில் எழுத்தாளரின் பரிவுணர்ச்சியும் இருக்க வேண்டும். அந்த வகையில் கதாசிரியர் அப் பெண் பாத்திரத்தின் உள்ளக்கிடக்கையை பனிச்சறுக்கல்களால் ஏற்படும் விபத்துக்கள் குடும்ப எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதுடன் ஒப்பிட்டு அப்பாத்திரத்துக்கு புதிய வலிமையையும், நம்பிக்கையையும் அளித்து வாழ வைத்திருக்கிறார்.
அடுத்து உறவுகள் தொடர்கதை என்ற கதையை எடுத்துக் கொண்டால் தாய் நாட்டில் நிகழ்ந்த யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து உயிர் பிழைக்க புலம்பெயர் நாட்டில் தஞ்சமடைந்த தனயன், தனியாக விட்டுச் சென்ற தாயைத் தேடும் படலமாகும். தனியாக இருந்த தாய் இடம்பெயர்ந்து எங்கு சென்றிருப்பாள்? அல்லது உயிருடன் இருக்கின்றாளா? என ஏங்கிய தனயன் யுத்தம் தளர்வடைந்த போது தாய் நாட்டிற்குத் தனது குடும்பத்துடன் புறப்படுகிறான். அவனுடைய அன்பு மகள் புலம்பெயர் நாட்டில் பிறந்திருந்தாலும் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றால் அங்கு கருணை இல்லத்திலுள்ள உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறாள். தனயன் எல்லா இடங்களிலும் தாயைத் தேடி இறுதியாகக் கருணை இல்லத்துக்கு வருகிறான். அங்கும் தாய் இல்லாமையால் ஆதங்கப்படுகிறான். ஆனால் அந்தக் கருணை இல்லத்தில்தான் தாய், எல்லாம் மறந்த நிலையில் இருந்தாலும் தனயனால் அடையாளம் காணப்படவில்லை. அவனது மகள் அடையாளம் காணுகிறாள். உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை என்பது போல் தனயனின் தாய் பற்றிய உணர்வலைகளை எழுத்தாளர் எட்ட நின்று விபரித்தது போல் தோன்றுகிறது. தனயன் பாத்திரத்தின் உணர்வுகளை அவருடைய மனதினூடாகவும் காட்டியிருந்தால் கதை இன்னும் மிக நன்றாக இருந்திருக்கும்.
புலம்பெயர் நாட்டில் பிறந்த மதலையின் மனிதத்துவம் மெச்சத்தக்கது. இச் செயற்பாடு அங்கு பிறந்த ஏனைய குழந்தைகளுக்கு முன்னுதாரமாகும் என்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். மேற்கூறப்பட்ட கதைகளில் ஆசிரியர் கதைகளின் கருப்பொருளை விரித்துக் கூறி அவர் உணர்த்த விரும்பும் இலட்சியத்தை அக்கருப் பொருட்களினூடாக அதனின்று மாறுபடாமல் வெளிக்கொணர்ந்துள்ளார். வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களைக் கோர்வையாக்கி ஒழுங்குபடுத்தி மையக்கருவுடன் பின்னிக் கதைகளை நகர்த்தியது மட்டுமல்லாமல் கதைகளை எங்கே உச்சம் தொட வைப்பது, எங்கே திடீரென்று ஆச்சரியத்தைப் புகுத்துவதென்று துல்லியமாகக் கணித்து வாசகர்களின் மனதைத் தொட்டுள்ளார்.
கதையின் கால அமைவு
நவீன உலகம் இயந்திரமாகிவிட்டது. இத்தகைய வாழ்க்கைச் சூழலில் ஆழ்ந்து படித்கது அனுபவிக்கக்கூடிய பொறுமை மக்களுக்கில்லை. கதைகள் படிப்பது பொழுதுபோக்கு என்ற நிலைமாறி அவர்கள் குறுகிய நேரத்தில் புதுமையைக் காணத்துடிக்கின்றனர். சிறுகதையில் காலம் – அக்கதையை வாசிக்க எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதென்பது மட்டுமல்ல அது அதிலமைந்த உட்பொருளைப் பொறுத்ததாகவும் கையாளும் விதத்தைப் பொறுத்ததாகவும் அமையும் . சிறுகதையின் காலம் கற்பனையாகவே கையாளப்படுவது ஆசிரியரின் திறமைக்குச் சான்றாகும்.
கதாசிரியர் இந்தவகையில் மேற்கூறப்பட்ட நான்கு கதைகளையும் வாசகர் குறைவாகவும் இல்லை, மிகையாகவும் இல்லை என்று கூறுமளவிற்கு தான் சொல்ல வந்த கதையின் கருப்பொருளை கலைக்காமல் காலத்தைக் கற்பனையாகக் கையாண்டு செம்மையாக அதிக நீட்சியில்லாமல் நிறைவு செய்திருக்கிறார்.
பாத்திர அமைப்பு
படைப்பில் முன்னிலை வகிப்பது பாத்திரங்களாகும். சிறுகதை என்பது சிறியகதை. ஆதலால் அதில் அவசியமற்ற பாத்திரங்களைப் படைக்க முடியாது. ஆசிரியர் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தே படைக்க வேண்டும். சிறுகதையில் குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்கள் அமைவதே சிறப்பு. படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களுக்காக அநேக விதமான மனித இயல்புகளையும் தெரிந்த வைத்திருக்க வேண்டும். குரு அரவிந்தன் அவர்கள் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நான்கு கதைகளிலும் பாத்திரங்களை கச்சிதமாகக் கையாண்டுள்ளார்.
புல்லுக்கிறைத்த நீர் என்ற கதையில் ஆசிரியர், மாணவன் ஆகிய இரண்டு பாத்திரங்களும், நங்கூரியில், அக்கா, கணவன், மனைவி அவர்களின் மகன் மற்றும் அக்காவின் மகள் ஆகிய ஐந்து பாத்திரங்கள் படைக்கப்பட்டாலும் அக்கா என்ற பாத்திரத்தைத் தவிர மற்றைய பாத்திரங்களின் இயங்கு நிலைகளை மட்டுப்படுத்திக் கதையை திறம்பட நகர்த்தியுள்ளார். பனிச்சறுக்கல்கள் கதையில் கணவன், மனைவி பிரதான பாத்திரங்களாகக் காண்பிக்கப்பட்டு அதேநேரம் நண்பர்கள் பாத்திரங்களை தேவைக்கேற்ப கையாண்டு கதையை நிறைவு செய்திருக்கிறார். உறவுகள் தொடர்கதை என்ற கதையில் தாய், மகன், மனைவி இவர்களின் மகள் என்றவாறு நான்கு பாத்திரங்களுடன் கதையை நகர்த்தியுள்ளார். மேற்கூறப்பட்ட பாத்திரங்களுக்கு ஏற்ப அவர்களுக்குரிய குணச்சித்திரங்களையும் எடுத்துக் காட்டி ‘இந்த மனிதரை எங்கோ பாத்திருக்கிறோம்’ என்று வாசகர் சொல்லுமளவுக்கு பாத்திரங்களைச் சிருஷ்டித்துள்ளார்.
பாத்திரப் பேச்சு
ஒரு பாத்திரத்தின் பண்பை விளக்கிக்காட்டும் சிறந்த கருவிதான் பேச்சாகும். ஆசிரியர்கள் பாத்திரங்களின் தரத்துக்கு ஏற்ப பேச்சை அமைக்க வேண்டும். படிக்கின்றவர் இந்தப் பாத்திரம் இப்படித்தான் பேசும். இதைத் தவிர வேறு வகையாகப் பேச முடியாது என்று கருத வேண்டும். மேற்குறிப்பிட்ட நான்கு கதைகளிலும் பாத்திரப் பேச்சானது யாழ்ப்பாணப் பேச்சு வழக்காக இருந்த போதும் கதாசிரியர் இலக்கணம் சார்ந்த பேச்சு முறையே அதிகமாகக் கையாண்டுள்ளார். இந்த மொழிநடையைத் தமிழ் அறிஞர்கள் தாயகத் தமிழ்நடை, புலம்பெயர் தமிழ்நடை என வகைப்படுத்துகின்றனர். (சதிவிரதன், ப – 15 முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்). இது தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சி நிலையெனக் கருதப்படுகின்றது. வாசகர்களும் புரிந்து கொள்ளக்கூடிய இவரது இத்தகைய வகைப்பாட்டை ஊடகங்களும் பேணிவருகின்றன.
கதை கூறும் முறை
பெரும்பாலும் யார் மூலமாகக் கதை கூறப்படுகிறது? ஆசிரியனுக்கும் கூறுகிறவருக்குமுள்ள தொடர்பு என்ன? என்பதே கதை கூறும் முறையாகும். ஆசிரியர் கதை கூறும் போது தான் எங்கேயும் உரைதராமல் படர்க்கையில் நின்று கதை கூறுவது சிறந்த முறையாகும். பனிச்சறுக்கல்கள் கதையில் கதாசிரியர் இந்த முறையைக் கையாண்டுள்ளார். புல்லுக்கிறைத்த நீர் என்ற கதையில் கதாசிரியர் தான் ஆசிரியர் என்ற பாத்திரமாகவும், நங்கூரியில் தம்பி என்ற பாத்திரமாவும், உறவுகள் தொடர்கதையில் தனயன் என்ற பாத்திரமாகவும் நின்று கதைப்போக்கிற்கு உதவுகிறார்.
சிறுகதை முடிவு
ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கதைகள் அதன் வளர்ச்சிக்கேற்ப நிறைவு செய்யப்பட்டுள்ளன. இப்படித்தான் முடியப்போகிறது என்று படிப்போர் தெரிந்து கொள்ளாத வகையிலும், முடிந்த பின்னர் சிந்தித்து இது தான் சரியான முடிவென்று அவர்கள் ஒப்புக் கொள்ளும் வகையிலும் கதைகளை ஆசிரியர் நிறைவு செய்துள்ளது சிறப்பானது. சிறுகதைகள் என்றால் எப்படி அமையவேண்டும் என்பதற்குக் குரு அரவிந்தனின் இந்தச் சிறுகதைகள் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
முடிவுரை
புலம்பெயர் தமிழர் இலக்கியத்துக்கு குரு அரவிந்தனின் பங்களிப்பு இன்றியமையாதது. இவருடைய சிறுகதைகள் இவருடைய நேரான அனுபவத்தின் சித்திரிப்பாகத் திகழ்கின்றன. இவர் கதைகளில் கையாளும் கதைமாந்தர்கள் நமது அன்றாட வாழ்க்கையில் காணப்படுகிறார்கள். பெண்களின் பாத்திரச் சித்தரிப்பை மிகவும் கச்சிதமாகச் செய்திருக்கிறார் . ஆசிரியர் புலம்பெயர் நாட்டுச் சூழல்கள் கதைக் களங்களாகும் போது அங்கு சித்தரிக்கப்படும் பெண் பாத்திரங்களை முன்னேற்றச் சிந்தனையுள்ளவர்களாகப் படைத்தாலும், அவர்கள் மனிதவிழுமியங்களின் பெறுமானத்தை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டுமெனக் கூறாமல் கூறும் பண்பு நியாயிக்கத்தக்கது.
‘நங்கூரி’ என்ற கதை தாயகத்தின் முக்கியமான வரலாற்று ஆவணமாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. ஆக, சிறுகதை ஆக்கம் என்பது பொறுப்புள்ள சமுதாயப் பணி என்ற கருத்தை முன்னிறுத்தி எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தமது கதைகளால் வாசகர்களுக்கு உணர்வலைகளை ஏற்படுத்தும் அதேசமயம் இதுபோன்ற இன்னும் பல புதிய யுக்திகளைப் புகுத்தினால் மேலும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. புலம்பெயர் நாட்டுத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினருக்கு இவருடைய படைப்புகள் ஓர் ஆவணமாக, தாயக வரலாற்றை எடுத்தியம்புவனவாகவும், இவரது ஆக்கங்கள் மேலும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தி முக்கிய பங்காற்றுவதில் துணை நிற்பனவாகவும் அமைந்திருக்கின்றன என்பதற்கு இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
உசாத்துணை நூல்கள்:
குரு அரவிந்தன் (2019 ), சதிவிரதன்.மணிமேகலைப் பிரசுரம்-சென்னை