Reading view

க.நா.சு. பரிந்துரை – ஜடாவல்லவர்

இருபது இருபத்திரண்டு வயது வரை தமிழில் படிக்க பெரிதாக எதுவுமில்லை என்றுதான் எண்ணி இருந்தேன். நற்றிணையையும், நல்ல குறுந்தொகையையும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் கம்ப ராமாயணத்தையும் என்னால் அந்த வயதில் படிக்க முடியவில்லை. (திருக்குறளை இன்னமும் படிக்க முடியவில்லை.) புதுமைப்பித்தன் மேதை என்ற முடிவுக்கு வந்திருந்தாலும், சாயாவனம், கோபல்ல கிராமம், சில நேரங்களில் சில மனிதர்கள் மாதிரி சிலவற்றைப் படித்திருந்தாலும் தமிழ் வாசிப்பு என்றால் சுஜாதாவும் கல்கியும் விகடனும் குமுதமும்தான், டைம் பாஸ் வாசிப்புதான், தமிழில் படித்து பழகிவிட்ட ஒரே காரணத்தால்தால் நிறுத்த முடியவில்லை, படித்து தொலைக்க வேண்டி இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். அந்த மாதிரி வாசிப்புக்கும் பெர்னார்ட் ஷாவுக்கும் இப்சனுக்கும்  ஹ்யூகோவுக்கும் ஹெமிங்க்வேக்கும் மார்க்வசுக்கும் ஆலன் பேடனுக்கும் ஹார்பர் லீக்கும், ஏன் டிக்கன்சுக்கும், தாக்கரேவுக்கும், எமிலி ப்ரான்டேவுக்கும் கூட நிறைய தூரம் இருந்தது.

அப்போது செகந்தராபாத்தில் (முதல்) வேலை. மாரட்பள்ளியில் கீஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி என்று கேள்விப்பட்டேன். நான் வசித்ததும் மாரட்பள்ளிதான். கையில் முதல் முறையாக புத்தகம் வாங்கும் அளவுக்கெல்லாம் காசு இருந்தது. சுப்ரபாரதிமணியன் கஷ்டப்பட்டு வருஷாவருஷம் அதை நடத்தி வந்தார். போனவன் வழக்கமான சுஜாதா புத்தகங்களோடு சாயாவனத்தையும் வாங்கினேன். அவர் கண்ணில் பல்ப் எரிந்தது. சின்னப் பையனுக்கு சாயாவனம் பற்றி தெரிந்திருக்கிறதே என்று அவருக்கு சின்ன சந்தோஷம். அவருடைய பரிந்துரையில் சில பல புத்தகங்களை வாங்கினேன்.

அப்போது கண்ணில் பட்ட புத்தகம் க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தை வாங்கிய கையோடு அங்கேயே பள்ளி வராந்தாவில் படித்து முடித்தேன். எனக்கு அந்தப் புத்தகம் பெரிய கண்திறப்பு. எந்த உலக மொழிக்கும் இணையான நவீன இலக்கியம் தமிழில் உண்டு என்று உணர்ந்த தருணம். அவர் போட்டிருந்த பட்டியலில் ஒன்றோ இரண்டோ கூட அப்போது படித்திருக்கவில்லை. ஆனாலும் அவரது விவரிப்பிலிருந்தே தமிழ் வாசிப்பு பற்றிய எனது எண்ணம் வெறும் அறியாமை என்று தெரிந்தது. இன்னும் கூட கிழிந்த ஒரு பிரதி என் அலமாரியில் எங்கோ இருக்கிறது, வாங்கி முப்பது வருஷமாவது இருக்கும்.

க.நா.சுவின் பரிந்துரை பாணி – இது என ரசனைக்கு ஒத்து வருகிறது, இந்த மாதிரி புத்தகம் – என்னைப் பொறுத்தவரை மிகச் சரியான அணுகுமுறை. எனக்கு ஏற்ற அணுகுமுறை. ஆனால் பின்னால் அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் பல என் ரசனைக்கு ஒத்தே போகாது என்பது புரிந்தது. அவர் பரிந்துரைத்த இதயநாதம், உல்லாச வேளை, கரித்துண்டு போன்றவை எனக்கு சரிப்படாது. படிக்கலாம், ஆனால் க.நா.சு. பரிந்துரைக்காவிட்டால் படித்திருக்கமாட்டேன், படிக்கவில்லை என்றால் எந்த வருத்தமும் இராது. அதாவது அவரது அணுகுமுறை எனக்கு சரிப்படுகிறது, அவரது ரசனை எனக்கு ஒத்துப் போகவில்லை. அவர் பரிந்துரைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றோ இரண்டோ எனக்கு நல்ல இலக்கியமாக இருந்தால் அதிகம். அனேகம் வெறும் fluff மட்டுமே. என் கண்ணைத் திறந்த பரிந்துரைப் பட்டியல், ஆனால் பரிந்துரைகளில் வெகு சிலவே எனக்குத் தேறும் என்பது பெரிய நகைமுரண்.

அவர் பட்டியலில் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்த புத்தகம் ஜடாவல்லவர் (1918).

ஏதோ ஒரு தஞ்சாவூர் கிராமத்தில் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன். ஆங்கிலம் படிக்கவில்லை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி. விவசாயம், ஆனால் தங்கைகள் திருமணம், செலவுகள் என்று சொத்து கரைந்து கொண்டிருக்கிறது. முன்சீப் வேலை, கடன், திருமணம், மாமியார்-மருமகள் தகராறு, கடன் தீர்வது, மகள், மகளுக்குத் திருமணம், சுபம் என்று போகிறது.

மகா மோசமான கதை. ஒவ்வொரு அத்தியாயத்தில் முதல் இரண்டு பக்கம் உபதேசம், மேற்கோள்கள். திடீரென்று கதாநாயகன் காசிக்கு குடும்பத்தோடு போகிறான். அதனால் கதை எப்படி நகர்கிறது என்றால் ஒன்றுமில்லை. பாத்திரங்களோ வெறும் தேய்வழக்குகள். மாமியார் மோசமானவள்; “நாகரீக” மாற்றங்களால் வைதிக பழக்கங்கள் சிலவற்றை கைவிடும் மாப்பிள்ளை முட்டாள், மூர்க்கன். நாயகனும் நாயகியும் உலக மகா உத்தமர்கள். கொடுமை செய்யும் மாமியார் கிணற்றில் மருமகளை பிடித்துத் தள்ளப் போனால் அவள் தலையில் சரியாக தேங்காய் விழுகிறது. பிரதாப முதலியார் சரித்திரம் எத்தனையோ ramble ஆகும். அதற்கு ஐம்பது வருஷம் கழித்து வெளியான புத்தகம் கொஞ்சமாவது முன்னேற வேண்டாமா? இது பின்னேறி இருக்கிறது!

கதையின் சுவாரசியம் இன்று ஒன்றுதான். என்னவெல்லாம் ஆசிரியருக்கு தவறாகத் தெரிகிறது! மீசை வைத்த பிராமணன்; குருக்கள் தாழ்ந்த ஜாதி (பிராமணர்களுக்குள் தாழ்ந்தவர்களா? எனக்குத் தெரியவில்லை); காப்பி குடிப்பது, அதிலும் சீப்பிக் குடிப்பது; ஆங்கிலக் கல்வி; சுருட்டு பிடிக்கும் மேலதிகாரி. சொல்லிக் கொண்டே போகலாம்.

க.நா.சு. தன் சிறு வயதில் பார்த்த தஞ்சாவூர் கிராமங்களை, வைதிகப் பிராமணர் குடும்பங்களை ஓரளவு உண்மையாகப் பிரதிபலிக்கும் நாவல் என்று நினைக்கிறேன். மெய்நிகர் அனுபவம் என்று நினைத்து பரிந்துரைத்துவிட்டார் என்று தோன்றுகிறது.

நாவலை எழுதியவர் வரகவி என்று பட்டம் பெற்ற அ. சுப்ரமணிய பாரதி. இவர் கவிஞர் பாரதியின் நண்பர். அவரோடு சுதேசமித்திரனில் பணியாற்றி இருக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படித்தான் ஒத்துப் போயிற்றோ தெரியவில்லை. இவர் இந்தப் புத்தகத்தில் நாகரீக வளர்ச்சியின் பின்விளைவுகள் என்று சொல்லும் அத்தனையும் கவிஞருக்கு உண்டு – மீசை, ஜாதி ஆசாரம் பார்க்காமல் இருத்தல்…

அ. சுப்ரமணிய பாரதியைப் பற்றி க.நா.சு. தவிர வேறு யாரும் குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. நீங்கள் யாராவது ஏதாவது கேள்விப்பட்டிருந்தால் சொல்லுங்கள்!

அவர் எழுதிய மாயாவதி (1911) என்ற நாடகமும் கிடைத்தது. பிரத்யும்னன் – சம்பராசுரன் கதை. 1911க்கு நிறைய உரைநடை. அன்று வெற்றி பெற்றிருக்கலாம். பக்த மஹிமை (1920) புண்டரீகன், நாம்தேவ், கோரா கும்பார் ஆகியோர், இரண்டு பக்த சிரோன்மணிகள் (1925) மாணிக்கவாசகர், பத்ராசல ராமதாஸ் ஆகியோரின் சுருக்கமான “வரலாறு”. பாண்டவ வனவாசம் (1923), பாலகோபால லீலை (1925), வனஜாட்சி (1911) என்றும் சில புத்தகங்களைப் படித்தேன்.

தஙகளைத் தாங்களே வருத்திக் கொள்ள நினைக்கும் masochist-களுக்காக – ஜடாவல்லவர், மாயாவதி இரண்டும் இணையத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

  •