Reading view

இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி

Iphone-Tata-India

அமெரிக்காவின் புதிய வரித் திட்டத்தால் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவிலிருந்து அதிகமான ஐபோன்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

Iphone-Tata-India

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54% முதல் 108% வரையில் வரி விதித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரித் திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பு, ஆப்பிள் நிறுவனத்தை அதன் உற்பத்தி மற்றும் விநியோகத் திட்டங்களை மாற்றி அமைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதனால் ஐபோன்களின் விலை உயரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. 

ஆப்பிளுக்கு என்ன நெருக்கடி? 

உலக திறன்பேசிச் சந்தையில் தனியிடம் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் சீனா மட்டும் 80-90% திறன்பேசிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. இந்த இறக்குமதிகளுக்கு 108% வரை வரி விதிக்கும் புதிய சட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது. இந்த வரி விகிப்பு, ஆப்பிள் நிறுவனத்தை நேரடியாக பாதித்துள்ளது. இதனால் ஐபோன் விலை உயரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள திறன்பேசி வகைகளின் விலையை விட 46% விலை உயரலாம் எனக் கணிக்கப்படுகிறது. இதையடுத்து அமெரிக்காவில் பலர் ஐபோன்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறைந்த விலையில் இருக்கும்போதே அதிக திறன்பேசிகளை வாங்கிக் கொள்ளலாம் என மக்கள் நினைப்பதாக அவை தெரிவிக்கின்றன. இதுவும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆப்பிள் நிறுவனத்தைத் தள்ளியுள்ளது. 

ஆப்பிளுக்கு இந்தியா உதவிக்கரம்

ஆப்பிள் நிறுவனம் தனது மொத்த உற்பத்தியில் இந்தியாவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 10% முதல் 15% உற்பத்தியைச் செய்து வந்தது. டாடா மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்களின் உதவியுடன் உற்பத்தியாகும் ஐபோன்கள், பல நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் இந்திய உற்பத்தி ஐபோன்களுக்கு 26% மட்டுமே இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புதிய வரித் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. இந்தாண்டு இந்திய உற்பத்தியை 20% -க்கு உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய அரசுடன் இணைந்து உற்பத்தி வசதி மற்றும் மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரிச்சலுகை கோருதல் உள்ளிட்ட முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளில் உற்பத்தியை அதிகரித்து, சீனாவிலிருந்து விநியோகச் சங்கிலியை முழுவதுமாக விலக்கிக் கொள்ளும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதன்மூலம் வரி தாக்கங்களிலிருந்து தப்பி, உலகளாவிய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் மீண்டும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வழி வகைகளைச் செய்து வருகிறது. 

இந்தியாவுக்கு என்ன பயன்? 

ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிப்பதன் மூலம், தொழில்நுட்ப தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது. இந்திய அரசின் வருவாய் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது. இந்தியாவிலிருந்து அதிகமான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்படுவது, இந்தியா உற்பத்தி மூலம் உலகளாவிய சந்தையில் பொருளாதார நிலைத்தன்மைக்கு ஆதரவாக இருக்கும். இதனால், இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தி திறன் உலகளாவிய சந்தையில் உயர்ந்ததாக மதிக்கப்படும். மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தித் தொழில்நுட்பம் அத்துறையில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

The post இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி appeared first on செல்லினம்.

  •  

ஆப்பிள் 16e : நாமே பழுதுபார்க்கலாம்

apple 16e self repair

புதிதாக அறிமுகமாகியுள்ள ஆப்பிள் 16இ திறன்பேசி, ஆப்பிள் நிறுவனத்தின் நாமே பழுதுபார்க்கும் திட்டத்தில் இணைகிறது.

தேவைக்கு அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட திறன்கருவிகளை வாங்கும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. சில திறன்பேசிகள் ஓர் ஆண்டுக்கு மேல் சரியாக வேலை செய்வதில்லை. நீடித்து உழைக்கும் தரமான திறன்பேசிகள் என்றாலும் பலர் புதுப்புது வசதிகளைப் பயன்படுத்த ஆசைப்பட்டு புதுமாதிரி திறன்பேசி சந்தைக்கு வந்தவுடன் மாற்றிவிடுகிறார்கள். கை தவறி கீழே போடுவது, தண்ணீரில் போடுவது என்று புதுத் திறன்பேசியை உடைத்துவிட்டுப் புதிதாக வாங்குவோரும் உண்டு. இதன் காரணமாக மின்னணுக் குப்பைகள் பெருகுகின்றன. இக்குப்பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

apple 16e self repair

திறன்பேசிகள் பழுதானால் அதைப் பழுது பார்த்துப் பயன்படுத்துவதை சூழலியலாளர்கள் ஊக்குவிக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனம் இதில் தனித்துவமான கட்டுப்பாடுகள் கொண்டிருந்தது. தங்கள் அங்கீகாரம் பெற்ற இடங்களைத் தவிர வேறெங்கும் ஆப்பிள் திறன்கருவிகளைப் பழுதுபார்ப்பது சாத்தியம் இல்லாது இருந்தது. ஆப்பிள் பழுதுபார்ப்பு வலையமைப்புக்கு வெளியே பழுதுபார்த்தால் வாடிக்கையாளர்கள் அந்தத் திறன்பேசியைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. இது குறித்த விமர்சனங்களையும் எதிர்கொண்டது ஆப்பிள்.

இதன் விளைவாக சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில் தங்கள் நிறுவனத்தையும் இணைக்கும் விதத்தில் நாமே பழுதுபார்க்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.  2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம் 2022ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இதில் முதலில் ஐபோன்கள் மட்டுமே நாமே பழுதுபார்க்கும் வகையில் இருந்தது. பின்னர் மேக் கணினிகளும் இணைந்தன. ஆப்பிள் திறன்கடிகாரம், ஏர்பாட் என ஒவ்வொன்றாக இதை விரிவுபடுத்தினார்கள்.

இவ்வரிசையில் தற்போது ஆப்பிள் 16இ திறன்பேசிகளும் இணைந்துள்ளன. இந்த நமக்கு நாமே திட்டத்தில் பழுதுநீக்கத் தேவைப்படும் கருவிகளை (tool kit) ஆப்பிள் நிறுவனமே வழங்கும். திருகு, திருகாணி, திறன்பேசியின் வரைபடம், எங்கெங்கே எந்தெந்த பாகங்கள் உள்ளன என்கிற விளக்கப்படம் எல்லாமே ஆப்பிள் கொடுத்துவிடும். திரை, மின்கலம் போன்றவற்றையும் ஆப்பிள் தளத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். இவை அனைத்தும் ஆப்பிள் அங்கீகாரம் பெற்றவை என்பதால் பழுது நீக்கிய பிறகு உங்கள் ஆப்பிள் அடையாளத்துடன் உள்நுழைவதற்கு ஆப்பிள் எந்தத் தடையும் சொல்லாது.

அடேங்கப்பா என்று வாழ்த்துவதற்கு முன்பு விலையையும் தெரிந்துகொள்வது நல்லது. அறுநூறு டாலர் மதிப்புள்ள ஐபோன் 16இ திறன்பேசியைப் பழுதுபார்க்கும் கருவிகள் அடங்கிய தொகுப்பை வாடகைக்குத் தருகிறது. ஒரு வார காலத்துக்கு வாடகை சுமார் ஐம்பது டாலர். திரையைச் சரிசெய்வதென்றால் அதைத் தனியாகப் பணம் செலுத்தி வாங்கவேண்டும். ஒட்டுவதற்கான பொருளும் வாங்கவேண்டும். எல்லாம் தோராயமாக முந்நூறு டாலர்கள் கணக்கு வருகிறது. திறன்பேசியின் விலையில் பாதி செலவாகிறதே என்றும் சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஒழுங்காகச் செய்யத் தெரியாமல் உடைத்தால் முந்நூறும் அறுநூறும் சேர்ந்து மொத்தமாகப் போய்விடும் என்று பயமுறுத்தவும் செய்கிறார்கள்.

நீண்ட கால நோக்கில் பார்த்தால் இம்மாதிரி முயற்சிகள் வரவேற்கத் தக்கதே. பழுதுநீக்கத் தெரியாது எனில் அங்கீகாரம் பெற்ற முகவர்களிடம் கொடுப்பதே சிறந்தது. தெரியும் எனில் நாமே செய்து கொள்ளலாம். புதிதாக வாங்குவதைவிட இது நிச்சயம் மேலானது. சுற்றுச்சூழல் கேடுகளைக் குறைக்க நம்மால் இயன்றதைச் செய்த திருப்தியும் கிட்டும். ஆப்பிள் திறன்பேசிகளில் விலை குறைவானது என்பதால் ஆப்பிள் 16இ பழுதுநீக்கும் பணத்துக்கும் புதிதாக வாங்கும் பணத்துக்கும் இடைவெளி குறைவாக உள்ளது. மற்ற ஆப்பிள் திறன்கருவிகளில் நாமே பழுதுநீக்கும் திட்டம் இன்னும் கூடுதல் பலன் உள்ளதாகவே இருக்கும். 

2030ஆம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு கார்பன் நடுநிலைமை (Carbon Neutrality) என்பதை இலக்காக வைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். உற்பத்தி, போக்குவரத்து அனைத்திலும் தான் வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்தல். காடு வளர்ப்பு, கார்பன் பிடிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தல். மறுசுழற்சி, பழுதுநீக்கும் திட்டங்களை ஊக்குவித்தல். இப்படிப் பல முயற்சிகளை முன்னெடுத்து சுழிய நிகரக் கரியமில உமிழ்வை (net-zero carbon emissions) சாத்தியப்படுத்த முயல்கிறது ஆப்பிள்.

The post ஆப்பிள் 16e : நாமே பழுதுபார்க்கலாம் appeared first on செல்லினம்.

  •  

தூங்கவைக்கும் ஒலிப்பெட்டி

sleeping

தூக்கமின்றி அவதிப்படுவோர், சிறிய அளவு ஒலிபெட்டிகள் (Speakers) மூலம் உதவி பெற முடியும். தூக்கம் ஓரளவுக்கு சீரடைந்துள்ளதாகப் பயன்படுத்தியோர் தெரிவிக்கின்றனர்.

மார்ச் ஒன்பதாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை தூக்க விழிப்புணர்வு வாரம் என்பதைச் செய்திகளில் பார்த்திருப்போம். உடலும், மூளையும் சோர்வடைந்தால், சரியாக வேலை செய்வதில்லை. தேவையான அளவு ஓய்வு கொடுத்துக் கிடைக்கும் புத்துணர்ச்சியால் மட்டுமே நம்மால் கவனத்துடன் பணியாற்ற முடியும்.

sleeping

தூக்கமின்மை மிகச் சிலருக்கே உரிய சிக்கலாக இருந்தது ஒருகாலம். தற்காலத்தில் திறன்கருவிகள் வருகை கூடியிருப்பதால் கிட்டத்தட்ட அனைவருமே தூக்கமின்மையை எதிர்கொள்கிறோம். கையடக்கக் கருவியாக இருப்பதால் படுக்கையில் படுத்துக்கொண்டே திறன்பேசியைப் பார்க்கும் வழக்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. வெளிச்சம் குறைவாக வைத்துக் காட்சிகளைப் பார்த்தாலும் கூட தூக்கம் தடைபடும். தூங்கினால் அடிக்கடி விழிப்புத்தட்டும். 68 விழுக்காடு மக்கள் போதுமான அளவுக்குக்குத் தூங்குவதில்லை என்கிறது ஓர் ஆய்வு.

திறன்பேசி உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் படுக்கை அறைக்கு வெளியே வைப்பதன் மூலம் மட்டுமே பலருடைய தூக்கச் சிக்கல் சரியாகிவிட வாய்ப்புள்ளது. எனினும் சிலருக்கு அதைவிடக் கூடுதலாக உதவி தேவைப்படும். சிறு ஒலி கேட்டாலும் விழிக்கச் சொல்லும் மூளை வாய்த்தவர்களும் இருக்கிறார்கள். அறையில் மின்விசிறி, குளிர்சாதனக் கருவியை ஓடவிட்டுத் தூக்குவதன் மூலம் உருவாகும் குறைந்த அளவு ஒலியானது இந்தச் சிக்கலைத் தீர்க்கச் சிலருக்குப் பயன்படும். அறையில் மின்விசிறியின் ஒலி இருந்துகொண்டே இருந்தால் அதைவிடப் பெரிய ஒலி கேட்டால் மட்டுமே விழிப்புதட்டும்.

கண்களை உறுத்தும் காட்சிகளை இரவில் பார்ப்பதற்குப் பதில், வலைபரப்பு (Podcast) கேட்கும் வழக்கத்தையும் சிலர் வைத்திருக்கிறார்கள். புத்தகங்களைப் படித்துக்காட்டுதல், கதை சொல்லுதல், தகவல்களை, ஆய்வுகளைப் பேசுதல் எனப் பலவகை வலைபரப்பு சேவைகள் உள்ளன. அவற்றைக் கேட்டுக்கொண்டே கண்ணைமூடிப் படுத்திருந்தால் இவர்களுக்குத் தூக்கம் வரும். சில மணிநேரத்தில் விழிப்பு வந்தால் மீண்டும் ஒலிக்கவிட்டுத் தூங்க முயலலாம். ஆனால் இப்படி எழுந்து திறன்பேசித் திரையைப் பார்த்து ஒலிக்கவிட்டுத் தூங்க முயன்றால் அந்த வேலையை செய்து முடிப்பதற்குள் அரைகுறையாக வந்த விழிப்புநிலை முற்றிலும் விழித்துக்கொள்ளும்படியாகும்.

இதைத் தவிர்க்கவும் கருவிகள் உள்ளன. ஆப்பிள் இன்சைடர் தளத்தில் பயனர் ஒருவர் குறிப்பிட்ட ஒலிப்பெட்டியைப் பற்றிய தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். குட்டி ஒலிப்பெட்டி அது. ஜாபிஸ் பீஸ் ஸ்பீக்கர் எனும் அக்கருவியை ஐபோன் உடன் இணைக்க முடியும். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று தானாகவே நின்றுபோக வேண்டிய நேரத்தையும் முன்கூட்டியே அமைத்துவிடலாம். இதெல்லாமே அரைத்தூக்கத்தில் சில பொத்தான்களை அழுத்துவதன் மூலமே செய்யலாம் என்பதே இதன் சிறப்பு. இதன் மூலம் நீண்ட நேரத் தூக்கம் கிடைப்பதுடன், தகவல்களை மூளைக்குள் ஏற்றிவிடும் நல்லதும் நடக்கிறது.

சந்தையில் இதுபோன்ற நிறைய ஒலிப்பெட்டிகள் உள்ளன. தலையணை உடன் இணைந்த ஒலிப்பெட்டிகள், மேசையில் வைக்கும் சிறிய அளவிலான ஒலிப்பெட்டிகள் எனப் பலத் தீர்வுகள் உள்ளன. தூக்கமின்மை என்ற நிலைக்குச் சென்றுவிடாமல் இருக்க, திறன்கருவிகளின் பயன்பாட்டைக் குறைப்பதும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதும் அவசியமானது. எளிய உடற்பயிற்சிகள், மனத்தை ஒருநிலைப்படுத்தும் முயற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் போன்றவையும் உதவும். தூக்கமின்மை வந்துவிட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று முடிவெடுப்பதும் செயல்படுத்துவதும் நல்லது.

The post தூங்கவைக்கும் ஒலிப்பெட்டி appeared first on செல்லினம்.

  •