Reading view

ஹெக்ஸகோன் – 11

ஜூலை 10, 2023

 ஜூலை ஒன்பதுடன் எங்களுடைய படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.  என்னுடைய கணவனாக குறும்படத்தில் நடித்த மேகவண்ணன் அவர் குடும்பத்துடன் பிரான்ஸின் தென் பகுதியிலிருக்கும் மோன்பெல்லியே என்ற ஊருக்கு செல்வதாகச் சொன்னார். அங்கே அவருக்கு ஒரு வீடு இருந்தது. ஜூலை மாதம் பிரான்ஸிலிருக்கும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை. ஒருவர் பாக்கியில்லாமல் அவரவருக்கு ஏற்ற இடங்களுக்கு குழந்தைகளை இட்டுச் செல்கிறார்கள். நீலவண்ணனுக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் அவளுடைய காதலனுடன் தனி வீட்டில் வசிக்கிறாள். சின்னவள் எம்மா. பத்தாவது படிக்கிறாள். மேகவண்ணனும் அவர் மனைவி மரியாவும் மகள் எம்மாவும் மோன்பெலியேவில் பதினைந்து நாட்கள் தங்கத் திட்டமிட்டிருந்தனர்.

‘நீயும் வருகிறாயா?’ என்று கேட்டார் மேகவண்ணன்.

‘ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கச் செல்லும்போது இந்தக் கரடி எதற்கு’ என்றேன்.

‘உன்னை பதினைந்து நாளும் எங்களோடு இருக்கச் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நடுவில் வரும் சனி ஞாயிறன்று எங்களுடன் இருக்கலாம். ஜூலை 15, 16 எங்களுடன் செலவழிக்கலாமே. நீ தேவதை. கரடி என்று சொல்லாதே’ என்றார் தன் மனைவியைப் பார்த்து புன்னகை செய்தபடி.

அவரும் ‘நீங்கள் வந்தால் சந்தோஷமே’ என்று உண்மையாக மனதார சொன்னதுபோல் தான் இருந்தது.

உடனே யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன். எனக்கு டி.ஜி.வி. அதிவேக ரயிலில் பயணச்சீட்டு வாங்கி அனுப்பினார் மேகவண்ணன்.

*

பாரிஸ் மெத்ரோ ரயிலில், அதாவது பாரிஸுக்குள் மட்டுமே செல்லும் மெத்ரோவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல இரண்டு யூரோ மட்டுமே என்று தெரிந்தது. நம்மூர் ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட இருநூறு ரூபாய். கிஷோர் வாங்கிக் கொடுத்திருந்த மெத்ரோ அட்டையில் பத்து முறை மெத்ரோவிலோ பேருந்திலோ பயணம் செய்யலாம். காலியானால் திரும்ப பணமேற்றிக் கொள்ள வேண்டும். பலர் பயணச்சீட்டு வாங்குவதில்லை. அட்டையைத் தேய்த்தால் திறக்கும் கதவின் மேலாக எகிறிக் குதித்து செல்வதை கவனித்தேன். அப்படிச் செல்பவர்களில் எண்பது சதவிகிதம் புலம் பெயர்ந்தவர்கள். எக்காலத்திலும் அப்படிச் செல்லக்கூடாதென்று கிஷோர் எங்களை முன்னரே எச்சரித்து விட்டார்.

‘டிக்கட் செக்கர் வந்துவிட்டால் ஃபைன். அதுகூடப் பரவாயில்லை. போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டி வந்தால் அடுத்தமுறை வீசா கிடைக்காது’ என்று பயமுறுத்தினார். அப்படியும் இரண்டு முறை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தேன், அட்டைவேலை செய்யாததால். சாந்த்ரா ‘பரவாயில்லை, என் பின்னால் வந்துவிடு’ என்று சொன்னார். அதனால் இரண்டு முறைபயத்துடன் பயணச்சீட்டில்லாமல் பயணித்தேன். ‘டிக்கட் செக்கர் வந்தால் நீ யாரோ, நான் யாரோ’ என்றார் குறும்புச் சிரிப்புடன்சாந்த்ரா.

ஷோபா சக்தியைப் பார்த்தபோது சொன்னார் ‘நானும் இப்படி எகிறிக் குதித்துதான் போவேன். தீபன் திரைப்படத்திற்கு ‘பால்ம்த’ஆர்’ (Palme d’or )விருது கிடைத்தபோது டிவியில் என் படத்தைக் காட்டிக்கொண்டே இருந்தார்கள். அந்த நாளில் நான்மெத்ரோவில் செல்ல வேண்டியிருந்தது. எல்லோரும் என்னைப் பார்த்து நட்புடன் சிரிக்கவே, எகிறிக் குதிப்பதற்கு வெட்கப்பட்டுடிக்கட் வாங்கினேன். இந்த விருதுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று நேர்காணலில் கேட்டபோதுஇதைத்தான் சொன்னேன். முந்தி டிக்கட் வாங்க மாட்டேன். இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதால் டிக்கட் வாங்கவேண்டியிருக்கிறது என்று’ என்றார்.

‘ஆனாலும் இரண்டு யூரோ அதிகம்தான். பாவம், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள்’ என்றேன் சாந்த்ராவிடம்.

‘இரண்டு யூரோவில் உங்கள் நாட்டில் என்ன வாங்க முடியும்?’ என்று சவால் விட்டார் சாந்த்ரா.

‘என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஏகப்பட்டது வாங்கலாம். இரண்டு லிட்டர் பால், தயிர், மூன்று நாளைக்குக் காய்கறி,…’ என்று வரிசையாக அடுக்கினேன்.

‘கிராமத்தில் இருக்கும் என் மாமியார் இருநூறு ரூபாய்க்குதான் கரண்ட் பில் கட்டுகிறார் ஒரு மாதத்துக்கு. ஏன்? ஒரு சல்வார்டாப்ஸோ, புடவையோ, சட்டையோ கூட வாங்கலாம்’ என்றேன். சாந்த்ரா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பேசாமல் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விடலாம் என்று நினைத்திருப்பார்.

பாரிஸில் விலைவாசி பயங்கரம். புறநகர்ப் பகுதிகளிலெல்லாம்கூட 1200 சதுர அடி வீடு ஆயிரம் யூரோ (கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்) வாடகை. மாதம் குறைந்த பட்சம் 3000 யூரோ சம்பாதித்தால் மட்டுமே மூச்சு விட முடியும். அதாவது கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கும். இந்தியாவில் இருந்து பாரிஸ் சென்று பத்து நாள் இருக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் வேண்டும். விமான டிக்கட்டே 70,000ல் இருந்து 90,000 வரை. அங்கே செலவு செய்ய ஒரு லட்சம் கட்டாயம் வேண்டும். எல்லா சுற்றுலாத் தலங்களுக்கும் குறைந்தது 1500 ரூபாய் கட்டணம் உண்டு.

*

சரியான பிளாட்பாரம் பார்த்து நின்றால் நாம் நிற்கும் பிளாட்பாரமில் வரும் எல்லா வண்டிகளும் நமக்கு வேண்டிய இடத்திற்குப் போகும். இந்த வண்டிதான் அங்கு போகும் அது போகாது என்றெல்லாம் இல்லை. சரியான பிளாட்பாரத்தில் நிற்பது மட்டும்தான் முக்கியம்.  எல்லாப் பக்கங்களிலும் வழி சொல்லும் பலகைகள் உண்டு. இரு முறை தனியாகப் போய் வந்துவிட்டால் மெத்ரோ நமக்குப் புரிபட்டு விடும். பாரிஸ் நகரத்தில் தனியாக மெத்ரோவில் ஏறி சுற்றிப் பார்ப்பது சுலபம்தான்.

‘சென்னையில் இப்படி வசதியில்லை. நான் அங்கு வந்தபோது பஸ்ஸில் ஏறி மிகவும் சிரமப்பட்டேன்’ என்றார் சாந்த்ரா.

‘முதலில் பாரிஸோடு சென்னையை ஒப்பிடுவதே தப்பு சாந்த்ரா. இந்த வானிலையும்  இப்படியான சாலைகளும் சென்னையில் இல்லை. எங்கள் மக்கள் தொகையையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாமல் எங்கள் ஊர் மக்களிடம் வழி கேட்டால் உங்களை வீடு வரை கொண்டு விட்டு வருவார்கள்’ என்றேன்.

‘அது, ஆமாம்! மக்கள் ரொம்ப அன்பானவர்கள்’ என்றார்.

‘இங்கும் மக்கள் அன்பானவர்களே. தோபாந்தோனுக்கு நான் வழி கேட்டபோது எல்லோரும் வழி சொன்னார்கள் சாந்த்ரா. அதையும் சொல்ல வேண்டும்.’

‘நீ வழி கேட்ட அனைவரும் ஆண்களா?’

‘ஒருவரைத் தவிர அனைவரும் ஆண்கள்.’

‘அதானே பார்த்தேன்!’ என்றார் கிண்டலாகப் புன்னகைத்துக்கொண்டு.

*

மேகவண்ணன் அழைப்பை ஏற்று பாரிஸிலிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மோன்பெலியே நகரத்துக்கு TGV என்ற வெகு வேக ரயிலில் மூன்றரை மணி நேரத்தில் சென்றேன். கார் த லியான் என்ற ஸ்டேஷனில் இருந்துதான் வேறு ஊர்களுக்குச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் புறப்படுகின்றன. நந்தனின் வீட்டிலிருந்து கிளம்பியதால் அவர் என்னை வழியனுப்ப வந்திருந்தார். விமான நிலையத்தைப் போலவே ஒரு கட்டத்துக்கு மேல் அவரை அனுமதிக்கவில்லை. பயணிகள் மட்டும்தான் என்று தடுத்து விட்டனர். அது இரண்டடுக்கு ரயில். சுத்தமாக இருந்தது. எனக்குக் கிடைத்த இருக்கை நடுவில் மேசையோடு இருந்தது. இந்தப் பக்கம் இருவர் அந்தப் பக்கம் இருவர் என்று உட்காரலாம். இது மாதிரியான இருக்கைகள் சதாப்தியில் பொதுவாகப் பெட்டியின் நடுவில் இருக்கும். இந்த வண்டியில் பெட்டியின் கடைசியில் இருந்தது. எனக்கு எதிரே ஸ்டைலாக, புஜங்களில் டாட்டூ வரைந்த ஒரு தந்தையும் இருபதுகளில் இருக்கும் அவரின் மகளும் அமர்ந்திருந்தனர். என் அருகே ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன்.

வண்டி கிளம்பும் நேரம் வந்ததும், டிக்கட் கலெக்டர் வந்து ‘எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா, ஏதேனும் வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள். Bon Voyage!’ என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டுச் சென்றார். எல்லோரும் ‘மெர்சி’ என்றார்கள். அதற்குப்பின் அந்தப் பெட்டியிலிருந்து சத்தமேயில்லை.

வண்டி கிளம்பியவுடன் ‘உங்கள் போனை சைலண்ட் மோடில் வைக்கவும். மற்றவருக்கு தொல்லையில்லாமல் ஹெட்போனில் பாட்டு கேட்கவும். புகை பிடிக்கவும் கூடாது. குழந்தைகளுக்கான பிரத்யேகப் பெட்டி இருக்கிறது. வேண்டுமானால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அறிவிப்பு பிரெஞ்சிலும், பிரெஞ்சைப் போன்ற உச்சரிப்புடன் ஆங்கிலத்திலும் வந்தது. சுரங்கப் பாதையினுள் செல்லும்போது விமானத்தில் போவதுபோல காதை அடைத்தது.

நம்மூர் போல ‘மத்தியானம் என்ன சமைச்சு வச்சிருக்க? கண்ணன் வந்தானா? ஊர் சுத்தாம சோறு தின்னானா இல்லியா?’ என்று அலற முடியாது. அனைவரும் இடித்து வைத்த புளிபோல் சீட்டில் ஒட்டிக் கொண்டு வீடியோ பார்க்கிறார்கள் அல்லது புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். போன் பேச வேண்டும் என்றால் பெட்டிக் கதவைத் திறந்து வெளியில் போய் கிசுகிசுத்து விட்டு வருகிறார்கள். முதல் வகுப்புப் பெட்டிக்காரர்களுக்கு தனியே வெளியில் ஒரு பெஞ்சு உண்டு. அதில் உட்கார்ந்து கதைக்கலாம், பத்து டெசிபலில். மனிதர்கள் என்ன, அந்த ரயிலில் பயணம் செய்யும் நாய் பூனைகளும் முனகுவது கூட இல்லை. அழகாக மடியில் உட்கார்ந்து கொண்டு வருகின்றன.

ரயிலின் ஒரு பெட்டி டைனிங் கார் மற்றும் பார். வேண்டுமென்றால் அங்கே போய் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் நான் பார்த்த வரை எல்லோரும் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

அப்பாவும் மகளும் வழியில் ஒரு ஊரில் இறங்கினார்கள். இறங்கும்முன் என்னிடமும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞனிடமும் ‘Bonne journee’ (‘இந்த நாள் இனிய நாளாகட்டும்’) என்று சொல்லிவிட்டு இறங்கினார்கள். ஆஹா! அருமையான மக்கள் என்று நினைத்துக் கொண்டேன். மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பி வரும்போது என் எண்ணம் சற்று மாறியிருந்தது.

மோன்பெலியேவிலிருந்து பாரிஸ் திரும்பும்போது ஸ்டேஷன் வாசலில் என்னை மேகவண்ணன் இறக்கிவிட்டுவிட்டுப் போய் விட்டார். நான் அறிவிப்பு வந்ததும் நேராக பிளாட்பாரத்துக்கு சிறிது முன்னால் நின்றிருந்த டிக்கட் சோதனை செய்பவரிடம் என் டிக்கட்டை காண்பித்தேன். அவர் ‘வலது பக்கம் செல்லுங்கள். Bonne Journee’ என்றார். நான் கோச் நம்பரைப் பார்த்து உள்ளே ஏறும்முன் என் பின்னாலிருந்து கடுமையான ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்த்தால் தள்ளுவண்டியில் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண்மணி முறைத்துக் கொண்டிருந்தார். ‘என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டேன்.

‘சீக்கிரம் ஏறு, இல்லையென்றால் எனக்கு வழியை விடு’ என்று கடுகடுவென்று சொன்னார். பிரான்ஸ் வந்தபிறகு முதல் முறையாக கடுஞ்சொல் கேட்டதால் அதிர்ச்சியுடன் உள்ளே ஏறினேன். அந்தப் பெண்மணிக்கு அந்த டபுள் டெக்கர் வண்டியின் மேலடுக்கில் இருக்கைபோல. எனக்கும் மேலடுக்கில்தான் இருக்கை. அவர் தள்ளுவண்டியை மேலே தூக்கிக் கொண்டு போக சிறிது சிரமப்பட்டார். நான் தயங்கிக்கொண்டே ‘உதவி வேண்டுமா’ என்று கேட்க ‘தேவையில்லை, எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்’ என்று கடுப்படித்தார். தேவையா இது என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

எனக்கு என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களிடம் பேசவேண்டும் என்றிருந்தது. ஆனால் தயக்கத்தினால் பேசவில்லை. பிரஞ்சு SNCF ரயில்வே, தன் பயணிகளை பக்கத்தில் உட்கார்ந்து பயணிப்பவருடன் பேச வைப்பதற்கு முயற்சி செய்கிறது. 65 சதவிகித பிரஞ்சு மக்கள் ரயிலில் தன்னுடன் பயணிப்பவரிடம் பேச விரும்புகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால் மற்றவர் பேச விரும்ப வேண்டுமே என்ற தயக்கத்தில் பேசுவதில்லை என்று அந்த ஆய்வு சொல்கிறது. சிலர் அமைதியாக ஓய்வாக இருக்கவே விரும்புகிறார்கள். தங்களுக்கான நேரமாக அதைக் கருதுவதால் யாருடனும் பேச விரும்புவதில்லை என்றும் தெரிவிக்கிறது. இதில் குழம்பிப் போய், குறைந்த பட்சம் Valentine’s Day, Christmas போன்ற சமயங்களிலாவது கூட பயணிப்பவருக்கும் ஒரு கேக்கோ பிஸ்கட்டோ எடுத்து வாருங்கள் என்று ரயில்வே சொல்கிறது. பசியில் வயிறு இறைந்தால்கூட முழு பெட்டிக்கும் கேட்குமளவு நிசப்தத்தோடு செல்கிறது TGV. நம் ரயில் பயணங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

நம்மைப் பார்த்து இவர்கள் திருந்துவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும். பாவம் என்று நினைத்துக் கொண்டேன்.

-தொடரும்

  •  

ஹெக்ஸகோன் – 10

பெப்ருவரி 1990

பத்தாவது முழுப்பரிட்சைக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. பேபி ஆறாவது. ஹரி எஞ்சினியரிங் கடைசி ஆண்டு.

ஒவ்வொரு நாளையும் சமாளிப்பது பிரம்ம பிரயத்தனமாக இருந்தாலும் எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது. அதுவும் வேகமாக. சட்டென்று அம்மாவுக்குத் தலை நரைத்து வயசானவளாகக் காட்சியளிக்கிறாள். அப்பாவும் தளர்ந்து போனது தெரிகிறது. ஹரி அப்பாவை இரு சக்கர வாகனம் ஓட்ட விடுவதில்லை. கல்லூரிக்கு செல்லும் முன் அப்பாவை அவர் அலுவலகத்தில் விட்டுவிட்டுப் போகிறான். வரும்போது அழைத்துக்கொண்டு வருகிறான். அப்பா அம்மாவை இவ்வளவு அழகாக கவனித்துக்கொள்ளும் அவனுக்கு எங்கிருந்து இந்த புத்தி வந்தது? ஏன் என்னிடத்தில் மட்டும் பிரச்சனை? நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏதாவது தப்பான சமிக்ஞை கொடுக்கிறேனா? குழப்பம் அதிகமாகியது.

சுமதியை அவ்வப்போது வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் இருந்தவள் இப்போது புருஷனைக் கூட்டிக்கொண்டு கோயமுத்தூர் சென்றுவிட்டாள். எங்களைப் பார்க்க சிரமமாக இருந்ததோ என்னவோ. திருமணமாகி ஒரு வருடத்திலேயே ஒரு ஆண் குழந்தையும் பெற்றாள். பிரசவத்துக்கு பாண்டி அண்ணா, அம்மா வீட்டிற்கு அனுப்பாமல் தானே பார்த்துக்கொண்டார். இருவரும் எங்களிடம் எந்த உதவியும் கேட்கக் கூடாதென்று வைராக்கியமாக இருந்தனர். குழந்தை பிறந்ததும் நாங்கள் போய் பார்த்துவிட்டு வந்தோம். அழகாக மொட்டுமொட்டென்று சுமதியைப் போலவே இருந்தது. அதற்குப்பின் ஓரிரு முறை குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவள், பின் கோயமுத்தூருக்கு வீடு மாற்றி சென்று விட்டாள்.

ஹரியின் நோட்டை நான்தான் கிழித்தேன் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தாலும் வீட்டில் எதுவும் சொல்லவில்லை. அடுத்து வந்த நாட்களில் தூங்காமல் வேலை செய்து கொண்டிருந்தான். அடுத்தடுத்து வந்த மாதங்களில் பிரச்சனை எதுவும் இல்லாமல் போகவே அப்பாடா என்ற ஒரு பெருமூச்சு நிலவியது. கோனா சந்தோஷப்பட்டாள்.

ஆனால் மெல்ல மெல்ல கள்ளிச்செடி வளர்வதுபோல வேறு விதமாக ஆரம்பித்தான் ஹரி.

‘அம்மா, இவளை பக்கத்து வீட்டு குமாரோட பார்த்தேன். ஒண்ணும் இருக்காதுன்னு தெரியும். ஆனா ஏன் தேவையில்லாம அவனோட நடுரோட்டுல பேசிண்டு நிக்கறா?’

‘அம்மா, இவ போட்டுக்கற டிரெஸ் ஒண்ணும் சரியில்லை. சொல்லிட்டேன். நான் சொன்னா சண்டைக்கு வருவா. நீ கொஞ்சம் சொல்லு.’

‘அப்பா, கீதா ஸ்கூல்ல சரியா பாடத்தை கவனிக்கறதில்லன்னு கேள்விப்பட்டேன். எப்பவும் கனா கண்டுண்டே உட்கார்ந்திருக்காளாம்.’

‘அம்மா, எதுக்கு இப்ப இவ இப்படி நகம் வளர்த்தி நெயில் பாலிஷ் போட்டுக்கறா? எவனை மயக்க? சுமதி மாதிரி இன்னொரு கேஸ் நம்ம வீட்டுல வரணுமா?’

‘அப்பா, 8.30 மணி பஸ்ஸுக்கு எதுக்கு எட்டு மணிக்கே பஸ் ஸ்டாண்டுல நிக்கறா?’

இப்படி மெல்ல மெல்ல என் பெற்றோரின் மனதை விஷமாக்கினான். நன்றாகப் படிக்கும் பிள்ளை, தலைச்சன், பின்னால் குடும்பத்தை கவனித்துக் கொள்ளப் போகிறவன், இதுவரை எந்த வம்பையும், நண்பன் என்று எவனையும் கூட்டி வராத பிள்ளை, ஊரார் கெட்ட பழக்கம் என்று வரையறுத்து வைத்திருக்கும் எந்தக் கெட்டதும் இல்லாத பிள்ளை. அவன் சொன்னால் வேறு என்ன வேண்டும். அதுதான் தெய்வ வாக்கு. என்னைக் கண்டிக்க ஆரம்பித்தனர். நான் எகிற ஆரம்பித்தேன். நான் திருப்பிப் பேச ஆரம்பித்ததும் அவர்களுக்கு என்னிடம்தான் தப்பு இருக்கிறது என்று தோன்ற ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல முடிவே செய்து விட்டனர். நான் எவ்வளவோ மன்றாடினாலும் கேட்பதாயில்லை. எனக்கு நாட்டியம் கற்றுக்கொள்ள, பாட்டுக் கற்றுக்கொள்ள, இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆசை. ஆனால் இவன் என்னைப் பற்றி தோற்றுவித்திருந்த பிம்பமே வென்றது. பள்ளியை விட்டால் வீடு, வீட்டை விட்டால் பள்ளி என்றே என் வாழ்க்கை அமைந்தது. நான் வீட்டை விட்டு எங்கும் நகர முடியாதபடி வெங்கட் பார்த்துக் கொண்டான்.

ஒவ்வொரு வருடமும் எங்கள் பள்ளியிலிருந்து இரண்டு மணி நேர தொலைவிலிருக்கும் மருதமலைக்கு பத்தாவது படிக்கும் பெண்களையும் பனிரெண்டாவது படிக்கும் பெண்களையும் கூட்டிச் செல்வார்கள். முழுப் பரிட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன் இரண்டு மூன்று பேருந்துகளில் எங்களை ஏற்றி கூட்டிச் செல்வார்கள். அதுதான் எங்களுக்கு உல்லாசப் பயணம். மருதமலைக்கு சென்று நாங்கள் நல்லபடியாக தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். அந்த நாளை எதிர்பார்த்து ஒவ்வொருவரும் ஆனந்தத்துடன் இருப்போம். அதைப் பற்றிய பேச்சு பள்ளியில் ஜனவரியிலிருந்தே ஆரம்பித்துவிடும்.

எவ்வளவு கெஞ்சியும் மருதமலை பயணத்துக்கு என்னை என் வீட்டினர் அனுப்பவில்லை.

‘இவள் கண்டிப்பாக குமாருடனோ ஜாகீருடனோ ஓடி விடுவாள்’ என்று ஹரி அடித்து சொன்னான். என் வகுப்பு ஆசிரியை அனுமதி கேட்டும்கூட என் பெற்றோர் அனுப்ப மறுத்தனர். குமாரும் ஜாகீரும் என்னுடன் பிறக்காத சகோதரிகள்போல். எப்படி இவர்களுக்குச் சொல்லிப் புரிய வைப்பது?

கோனா ஒரு நாள் ஹரியைப் பார்க்க வேண்டி வந்தது. முதல் பார்வையிலேயே அவனை எரித்து விடுவதுபோல் பார்த்தாள். ஹரிக்குப் புரிந்துவிட்டது. அன்றிலிருந்து கோனா அவனுக்கு எதிரியாகி விட்டாள்.  அவள் நட்பு கூடாநட்பு என்று என் பெற்றோரை நம்ப வைத்தான்.

‘அம்மா, அவங்க குடும்பத்துக்கு புலிகளுடன் தொடர்பு இருக்கு. இவளை நாம கட்டுப்படுத்தலன்னா நிலைமை கைவிட்டுப் போயிடும்’ என்றவுடன் கோனா வீட்டுக்கு வருவதற்கும் தடை போடப்பட்டது.

என் வகுப்புத் தோழிகள் மருதமலை சென்ற அன்று எனக்கு வீட்டில் நிலைகொள்ளவில்லை. நினைவெல்லாம் அங்கேயே இருந்தது. கூட்டம் கூட்டமாக சினிமாவுக்குச் செல்லும், உணவருந்தி மகிழும் பெண்களைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. எனக்கு மட்டுமல்லாமல் பேபிக்கும் அதே நிலைமைதான். அவளை எதுவும் சொல்ல மாட்டார்கள் என்றாலும் அவள் என்னோடவே ஒட்டுவாரொட்டிபோல் ஒட்டிக்கொண்டே இருப்பாள். அவளுக்கு நான் இருந்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம். என்னால் பேபியிடம் ஓர் அளவுக்கு மட்டுமே பேச முடியும்.

எனக்கு இப்போதெல்லாம் புத்தகங்கள் மட்டுமே தோழிகள். லைப்ரரி மாமாவை வீட்டுக்கே வந்து புத்தகங்கள் தருமாறு சொல்லிவிட்டார்கள். அதனால் வாரம் ஒருமுறை அவர் வார இதழ்கள், மாத இதழ்கள், நாவல்கள் எல்லாம் கொண்டு வந்து கொடுப்பார். அடுத்த வாரம் வருவதற்குள் படித்துவிட்டு நானும் அம்மாவும் வேறு புத்தகங்களை எடுத்துக் கொள்வோம்.

டிங்கில், விஸ்டம், பாலமித்ரா, துளிர், முத்து காமிக்ஸ்,பாலகுமாரன் தவிர ஆங்கிலத்தில் அகதா கிரிஸ்டியுடன் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ராபின் குக், ஆஸ்டரிக்ஸ், ஆர்.கே. நாராயண் என்று பலரும் என் புத்தக அடுக்கில் ஏறியிருந்தார்கள். இப்போதெல்லாம் சேஸின் உலகம் மிகவும் பிடித்துப் போனது. அவருடைய நாவல்களில் வரும் பாரடைஸ் சிட்டியில் நானும் வாழ ஆரம்பித்திருந்தேன். ல்யூடினண்ட் டாம் லெப்ஸ்கியுடன் சேர்ந்து நானும் பயணித்தேன். அமெரிக்க நிலப்பரப்பில் அவர்களுடன் அவர்களைப் போல ஜீன்சும் டி ஷர்ட்டும் அணிந்து வாழ்ந்தேன்.

ஆஸ்டரிக்ஸ் புத்தகங்களும் எனக்கு ஆகப் பிடித்திருந்தன. ஆஸ்டரிக்ஸ், ஓப்லிக்ஸ், அந்தக் கிராமத் தலைவன், அவர்கள் ஊரின் பாடகன், அதில் வரும் ஜூலியஸ் சீசர்…அனைவரும் என் குடும்பத்தில் ஒருவராயினர். என்னையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஏதேனும் ஒரு விஷயத்துக்காக மனது சஞ்சலமடைந்தால் நான் அடைக்கலமாவது இவர்களிடமே. அதில் வரும் ட்ரூயிடின் மந்திர பானத்தைக் குடித்து எனக்கும் அதீத சக்தி வருவதுபோல் நினைத்துக் கொள்வேன். லுதேசியாவின் பின் நானும் ஓடுவேன். ‘வானம் தலைமேல் விழுந்துவிட்டால் என்னாவது’ என்று நானும் அவர்களுடன் சேர்ந்து பயப்படுவேன். கிராமமே கூடிச் சாப்பிடுகையில் சாகபஷிணியாக இருந்தாலும் நானும் அவர்களுடன் உட்கார்ந்து சம்பிரமமாக சாப்பிடுவேன். என் கவலை, சஞ்சலம், கிலேசம் எல்லாம் பறந்து போய்விடும்.

இவர்களே போதும் இந்த ஜென்மத்துக்கு. யாரேனும் என்னை திருமணம் செய்துகொண்டு இந்த வாழ்க்கையிலிருந்து என்னை விடுவிக்கும்வரை இப்படியே வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன்.

ஆனால் நினைப்பதுபோல் வாழ்க்கை நடந்தால் சுவாரசியம் இல்லாது போய்விடும் என்று பிறக்கும் போதே பூப்போட்டு அர்ச்சிக்கப்பட்டிருக்கிறேன் போலும். சனி விஸ்வரூபம் கொண்டு ஆக்ரோஷமாக என்னை நோக்கி வந்தது.

கோயமுத்தூரில் இருக்கும் என் சித்தப்பா, அதாவது என் அப்பாவின் தம்பி பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. என் அப்பாதான் குடும்பத்துக்குப் பெரியவர் என்பதால் திருமணத்துக்கு முன் நடக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அப்பாவையும் அம்மாவையும் வந்து நடத்திக் கொடுக்கச் சொல்லி அழைத்தார்கள் சித்தப்பாவும் சித்தியும். மனையில் உட்கார ‘கன்யா பொண்’ ஒருத்தி வேண்டும் என்பதால் பேபியையும் மறக்காமல் கூட்டிக்கொண்டு வரும்படி சொல்லியிருந்தார்கள். வியாழக்கிழமை காலை புறப்பட்டு போய் வெள்ளிக்கிழமை இரவு வருவதாக ஏற்பாடு.

நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொன்னால் அம்மா மறுத்தாள்.

‘ஹரிக்கு யாருடி சமைச்சுப் போடுவா? பேசாமல் வீட்டில் இரு’ என்று கடுப்படித்தாள் அம்மா.

‘அம்மா, எனக்கும் கல்யாணி அக்காவைப் பார்க்கணும் போல இருக்கு. ப்ளீஸ் வரேனே’ என்று காலைப் பிடித்து கெஞ்சாத குறையாகக் கெஞ்சினேன்.

‘கண்ணம்மா, அம்மா சொல்றதைக் கேளு. இதோ! ரெண்டு மாசத்துல கல்யாணம். ஒரு வாரம் அங்கதான் இருக்கப் போறோம். சமத்தா அண்ணாவுடன் இரு’ என்று அமைதியாகச் சொன்னாள் அம்மா.

‘உன் பையன் சரியில்லை. அவன் என்னை தொந்தரவு செய்கிறான். அவன் என்னை மறுபடி தொல்லை செய்தால், என் மீது கை வைத்தால் நான் என்ன செய்வேன் அம்மா. அவன் உங்களுக்கெல்லாம் நல்லவனாக இருக்கிறான். என்னைப் பார்த்தால் அவன் சாத்தானாகி விடுகிறான் அம்மா. என்னைப் புரிந்து கொள்ளேன்’ என்று மனதில் அரற்றிக் கொண்டு,

‘ப்ளீஸ்…அம்மா, அம்மா, ப்ளீஸ்…விட்டுட்டு போகாதே’ என்று கண்ணீர் மல்க கெஞ்சினேன்.

‘என்னடி குழந்தையாட்டம் ஆடற’ என்று அம்மா கோபமாகத் தொடங்கினாள். ‘ஹரிக்கு ஏதோ பரிட்சையிருக்குன்னு சொன்னான். அவனுக்கு உதவியா இரு. அடம் பிடிக்காதே’ என்று முற்றுப்புள்ளி வைத்தாள் அம்மா.

வியாழக்கிழமை காலை ஹரி கல்லூரிக்குச் செல்ல தயாராகி வெளியே வந்தபோது

‘நாங்க போயிட்டு வரோம்டா. நாளைக்கு சாயந்திர வண்டி பிடிச்சு வந்துடுவோம். கீதாவைப் பார்த்துக்கோ’ என்றாள் அம்மா.

‘சரிம்மா’ என்றவன் கீழ் உதட்டை மடித்துக் கடித்து விஷமமாக சிரித்துக்கொண்டே செருப்பைப் போட்டதைப் பார்த்தவுடன் பகீரென்றது.

அம்மா, அப்பா, பேபி எல்லோரும் கிளம்பியவுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு மணியைப் பார்த்தேன். எட்டே முக்கால். ஒன்பது மணிக்கு எனக்குப் பள்ளியில் முதல் மணி அடித்து விடும். வீட்டிலிருந்து என் பள்ளி ஐந்து நிமிட நடைதான். ஜாகீர் கவர்மெண்ட் பாய்ஸ் ஹை ஸ்கூலில் படித்தான். அவனும் ஏறக்குறைய இதே நேரத்தில்தான் சைக்கிளில் கிளம்புவான். அவசர அவசரமாக அவன் வீட்டுக்குள் ஓடினேன். ரெஜினா அத்தை அவனுக்கு டிபன் பையை கொடுத்துக்கொண்டிருந்தாள்.

‘என்னடி குட்டி? இப்ப ஓடி வர?’ என்றாள் அத்தை.

‘அத்த, ஜாகீர் நேத்தே என்னோட சயின்ஸ் நோட்டு கேட்டான். மறந்துட்டேன் கொடுக்க. அதைக் கொடுக்க வந்தேன்’ என்று சொல்லி நோட்டைக் கொடுத்தேன். கேள்விக்குறியோடு என்னைப் பார்த்த ஜாகீரை கண்களாலேயே அமைதியாக வாங்கிக் கொள் என்ற செய்தி சொன்னேன்.

அவனும் ‘குடு’ என்று வாங்கிக்கொண்டு போய் விட்டான்.

மதியம் உணவு இடைவேளையில் பள்ளிக்கு வெளியே ஜாகீருக்காக காத்துக்கொண்டிருந்தேன். அவன் பேயறைந்ததுபோல் அரக்கப் பறக்க வந்தான்.

‘என்னடி இது எழுதியிருக்க? ஹரி அண்ணாவா? நம்பவே முடியல. நீ தப்பா புரிஞ்சுக்கலயே?’ என்றான்.

‘முழு விஷயமும் உனக்கு நான் அப்பறம் சொல்றேன். இன்னிக்கு ராத்திரி என் வீட்டுல என்னால் இருக்க முடியாது. என்ன செய்யறது? உன் வீட்டுக்கு வந்துடவா? ஆனால் அத்தைகிட்ட என்ன சொல்றது?’

‘ஹ்ம்ம்… எங்கம்மா நோண்டி நோண்டி கேப்பாங்க. என்ன சொல்லுவ?  இந்த விஷயத்தை பேசாம எங்கம்மா கிட்ட சொல்லிடலாமா?’

‘உங்களுக்கெல்லாம் மூளையே கிடையாதாடா? சொல்ல முடிஞ்சா நானே அத்தைகிட்ட சொல்லிடுவேன் இல்ல? உங்கம்மா, எங்கம்மா, மல்லிகா அத்தை, கவிதா அத்தை எல்லோரும் க்ளோஸ் பிரெண்ட்ஸ். அடுத்த நிமிஷம் காலனி பூரா தெரிய வரும். ஹரியை எதுவும் சொல்ல மாட்டாங்க. என் பேருதான் நாறும்.’

என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.

‘என்னால கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி வீட்டுல இருக்க முடியாது. ஏதாவது நடந்தா நான் தற்கொலை பண்ணிப்பேன்’ என்றதும் ஜாகீர் கலவரமானான்.

‘இன்னும் பதினைந்து நிமிஷம்தான் இருக்கு ஜாகீர் பெல் அடிக்க. என்ன செய்யறது?’

‘தெரியலையேடி.’

‘சரி! நான் ஒண்ணு சொல்றேன் கேளு. நீ கொழுமம் ரோடுல இருக்கும் உன் பிரண்ட் செந்தில் வீட்டுக்கு அப்பப்போ போய் ராப்பூரா தங்கி படிப்ப இல்ல? அப்படி தங்கி படிக்கப் போறேன்னு அத்தைகிட்ட சொல்லிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடு. நானும் வந்துடறேன். பழநி போயிடலாம். ஒரு ராத்திரிக்கு மட்டும் ரூம் எடுத்து தங்கிடலாம். காலையில் சீக்கிரம் திரும்பிடலாம். என்ன சொல்ற?’

‘என்னடி பேசற? ஹரி அண்ணா உன்னைக் காணோம்னு தேட மாட்டானா?’

‘என் பிரண்டு வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வரேன்னு லெட்டர் எழுதி வெச்சுட்டுப் வருவேன். சிம்பிள். அவனுக்குத் தெரியும். கோபப்படுவான். ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்? கார்த்தாலதான் சீக்கிரம் வந்துடப் போறோமே.’

‘உங்க அம்மா அப்பாகிட்ட போட்டுக் கொடுப்பானே?’

‘அதுக்கு என்ன கதை சொல்றதுனு அப்பறம் யோசிச்சுக்கலாம்.’

‘ரூம் நமக்குத் தருவாங்களாடி? அதுக்கு காசு இருக்கா?’

‘நான் பார்த்துக்கறேன் அதை. கவலைப்படாதே. சிறுவாட்டுப் பணம் இருக்கு.’

ஜாகீர் தயங்கினான்.

‘உன்னை விட்டா எனக்கு வேற யாரும் இல்லடா. கோனாவும் ஹாஸ்டல்ல இருக்கா. வெளிய அனுப்பவே மாட்டாங்க. நீ என்னோட பெஸ்ட் பிரெண்ட் இல்லையா’ என்றதும் அவன் கண்களில் பரிவு வந்தது.

‘சரிடி. இதுல ஒண்ணும் பிரச்சனை வராதுன்னு நினைக்கறேன். அஞ்சு மணி பஸ்ஸுக்கு போயிடலாம். என்ன…’ என்றான்.

சந்தோஷமாகத் தலையாட்டிவிட்டு பிரச்சனையை தீர்த்துவிட்ட நிம்மதியுடன் என் வகுப்புக்குப் போனேன். என்னுடைய இந்த செயல் பெரிய பூகம்பத்தை இரு வீட்டிலும் ஏற்படுத்தி என் வாழ்க்கையையே மாற்றிப் போடும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

  •  

ஹெக்ஸகோன் – 8

18 ஜூலை 1986

கோனேஸ்வரி, அவ அம்மா, அப்பா எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்திருக்கா. அவளோட அண்ணன் போர்ல செத்துப் போனதுக்கு அப்பறம் அவங்க அம்மாவும் அப்பாவும் பயந்துகிட்டு அவளை மட்டும் இங்க அனுப்பிட்டாங்க. அவளோட சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க வீட்டுக்கு. அவங்க இவளை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. பாவம்! அம்மா அப்பாவை அடிக்கடி கூப்பிட முடியாது. சில சமயத்துல அவளோட கண்ணு ரெட்டா இருக்கும். அவ அழுதிருக்கான்னு தெரியும். ஆனால் நான் பேசாம அவகிட்ட போய் உட்கார்ந்துப்பேன். அவ அனுமதிச்சா அவ கையைப் பிடிச்சுகிட்டு உட்கார்ந்திருப்பேன். அந்த நொடில எனக்கான ஆதுரத்தையும் தேடிப்பேன். பல சமயம் வார்த்தைகளே வேஸ்டுன்னு தோணும். நம் கஷ்டத்தைப் புரிஞ்சுண்டு அமைதியா நம்மோட மணிக்கணக்கா உட்கார ஒருத்தர் இருந்தாலே போதும். சிட்னி கார்ட்டன் மாதிரி. லூசி மானெட் மாதிரி. ஹெர்க்யூல் பய்ரோ மாதிரி. மிஸ் மேபில் மாதிரி. அவங்களோட மணிக்கணக்கா என்னால உட்கார முடியும். எனக்கு எப்பவும் துக்கமோ பயமோ கஷ்டமோ கொடுத்ததில்லை அவங்க.

அடுத்த மாதம் என்ன செய்யப் போறேன்? எப்படி ஹரியை சமாளிக்கப் போறேன்னு நினைச்சேன். எனக்குப் பதட்டம் ஜாஸ்தியாச்சு. என்னாச்சு உனக்குன்னு கோனா கேட்டா. இப்பல்லாம் இரண்டு பேரும் பேசாமலேயே இன்னொருத்தர் சரியான மனநிலையில இல்லன்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டோம். பேசாம இல்ல. பேசுவோம். ஆனா கஷ்டங்களைப் பேசறதில்ல. அவள் வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. அதே போல அவளுக்கும் என் வாழ்க்கை இப்ப வரை தெரியாது குடும்பத்துல யார் யார் இருக்காங்கறத தவிர.

‘என்னாச்சு, சொல்லணும்னா சொல்லு’ ன்னு சொன்னா.

அவ்வளவுதான்! நான் அழுதுகிட்டே எல்லாக் கதையையும் சொன்னேன். அவளோட கண்ணு டார்ச் லைட் மாதிரி பெருசா ஆயிடுச்சு. ‘என்ன சொல்ற? சொந்த அண்ணனா?’

‘ஆமா! அவன் சொந்த அண்ணனான்னே சந்தேகமாயிருக்கு.’

அவளுக்கு இன்னும் நம்ப முடியலை. கொஞ்ச நேரம் தரையைப் பார்த்துண்டிருந்தா. அப்புறம் மெல்லப் பேசினா.

‘செத்துப் போன என் அண்ணன் எப்பேற்பட்டவன் தெரியுமா? என் மேல் ஒரு துரும்புகூட விழாம பார்த்துப்பான். பதினொன்றாம் வகுப்பு படிச்சுகிட்டிருந்தான். எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்தது. நானும் அண்ணாவும் ஸ்கூலில் படியேறி க்ளாஸுக்குப் போகும்போது, எங்களுக்கு மேலே படியேறிக்கொண்டிருந்த சிங்களப் பையன்கள் ‘தமிழ் நாய்களா’ன்னு சிங்களத்துல சொல்லி எங்கள் மீது எச்சில் துப்புனாங்க. அதைப் பார்த்த டீச்சர்களும் ஒண்ணும் சொல்லலை. அண்ணனுக்கு கோபம். தான் ஒண்ணும் செய்ய முடியலையேன்னு தவிப்பு. அதைவிட தனக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டு நிண்டாங்களேன்னு பதற்றம். ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.’

‘மூன்று வருடம் முன்பு இதே ஜூலை மாதம், இதே கருப்பு ஜூலை மாதம் 24ஆம் திகதி கடைக்குப் போய்விட்டு திரும்பிக்கொண்டிருந்த அவனை சிங்களக் காடையர்கள் தெருவில் அடித்துக் கொன்றார்கள். ஒரு போலீஸ் அதிகாரி ‘இவன் புலி’ என்று சொல்லி  டயர்களை அவன் மீது போட்டுக் கொளுத்தினான். எரியாத அவனுடைய ஒரு காலை அடுத்த நாள் குப்பை லாரி அள்ளிக்கொண்டு போனதாக பார்த்த ஒருவர் சொன்னார். என் பெற்றோர் என்னையும் இழக்கக் கூடாதென்று சிரமப்பட்டு இங்கு அனுப்பி விட்டாங்க.’

கோனாவின் சிவந்த கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்து எனக்கு கோவமும் அழுகையும் வந்தது. ‘என்ன கோனா, இந்த உலகத்திலிருக்கற எந்த நாடும் எதுவுமே செய்ய முடியாதா? உங்களுக்கு மட்டும் ஏனிந்த கஷ்டம்?’

‘பார்க்கலாம். யாராவது எங்களுக்கு உதவுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ என்றாள்.

கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் அமைதியா இருந்தோம். அவளுடைய கஷ்டத்துக்கு முன்னாடி என்னோடது ஒண்ணுமே இல்லன்னு ஆகிடுச்சு.

மெல்ல கோனா பேசினாள்.

‘சரி! உன் விஷயத்துக்கு வரலாம். அடுத்த முறை அவன் உன்கிட்ட வந்தா என்ன பண்ணுவ?’

‘தெரியல கோனா. பயமா இருக்கு. வீட்டுலயும் சொல்ல முடியாது. ஒருத்தரும் நம்ப மாட்டாங்க.’

‘அட சீ! பயமாவது மண்ணாங்கட்டியாவது. வீட்டுல எல்லாம் சொல்ல வேணாம். நீயே ஹாண்டில் பண்ணு. அடுத்த முறை அவன் வரும்போது இதைப் பண்ணு’ என்று கோனா சொல்லச் சொல்ல எனக்கு தைரியம் வந்தது.

***

 

18 ஜூலை 1989, ஞாயிற்றுக்கிழமை

இன்று பதினாறாவது பிறந்தநாள். இந்த மூன்று வருடங்களில் என்னென்னவோ நிகழ்ந்து விட்டது. காலம் உருண்டோடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நான் மட்டும் ஒரே இடத்தில் நின்றுவிட்டேன். ஆனாலும் ஆறு இழுத்துச் செல்லும் கூழாங்கல்லைப் போல காலம் தன்னோடு மனிதனை இழுத்துக்கொண்டு தானே போகிறது.

ஒரு வருடத்துக்குமுன், நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது முழுப் பரிட்சை நேரத்தில் ஒரு நாள் சுமதியைக் காணவில்லை. சுந்தரியக்கா வீட்டில் நேரம் காலம் தெரியாது உட்கார்ந்திருப்பாள் என்பதால் சற்று அசட்டையாக இருந்து விட்டார்கள் எங்கள் பெற்றோர். நாலு தப்படி வைத்தால் சுந்தரியக்கா வீடு. இங்கிருந்து ஒரு கூப்பாடு போட்டாலே அவர்கள் வீட்டுக்குக் கேட்கும். சுந்தரியக்காவின் அம்மாவும் சுமதியை தன் பிள்ளையைப்போல் பார்த்துக் கொள்வதால் அதிகம் என் பெற்றோர் கவலைப்படுவதில்லை.

எனக்குத் தேதி இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. அன்று மார்ச் மாதம் 8ம் நாள், 1988. அன்று ஞாயிற்றுக்கிழமை. பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென வீட்டில் ஒரு அமைதியின்மை. அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தால் எல்லோரும் பரபரப்பாக கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தனர். அம்மாவை ஏறிட்டுப் பார்த்தபோது சுமதியைக் காணோம் என்று கூறினார்.

‘சுந்தரி வீட்டுக்கு அவ போகவேயில்லையாம். கார்த்தால காபி குடிச்சுட்டு சுந்தரி வீட்டுலருந்து குமுதம் வாங்கிண்டு வரேன்னு போனா. சாப்பிடக் கூப்பிடலாம்னு போனப்போதான் தெரிஞ்சது’ என்று அம்மா கவலையானாள்.

‘மாமா வீட்டுல? ‘

‘அங்கயும் இல்லை. தெரிஞ்சவங்க எல்லார் வீட்டுலயும் பார்த்தாச்சு.’

எங்கள் தெருவிலிருந்து செய்தி பரவி காலனியின் பதினான்கு தெருவும் அக்காவைத் தேட ஆரம்பித்தது.

முதன் முதலாக சிவந்த விழிகளுடன் இருந்த என் தந்தையைப் பார்த்தேன். நாங்கள் நடுத்தர வர்க்கம்தான் என்றாலும் அப்பா எங்களுக்கு எதிலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார். பெரிதாக வசதிகள் செய்து தர முடியாவிட்டாலும் மூன்று வேளை சாப்பாடும் துணிமணியும் கிடைத்து விடும். வேறென்ன வேண்டும்? ஏழு பேர் கொண்ட குடும்பம் என் அப்பாவின் சம்பளத்தில் மட்டுமே நடந்துகொண்டிருந்தது. என் அம்மாவும் பாட்டியும் சிட்டையாக பணத்தை நிர்வகித்தார்கள். சுமதியின் திருமணம் ஏற்பாடானால் தாராபுரத்திலிருக்கும் தாத்தாவின் ஒரு ஏக்கர் நிலத்தை விற்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். மற்ற இரண்டு பெண்களின் திருமணத்துக்கு முன் ஹரி தலையெடுத்து விடுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

‘நாங்க சத்தியமங்கல ப்ருஹசரணம். நம்மாளுங்களுக்குள்ளயே பாருங்கோ. வடமா வேண்டாம். அதுவும் தஞ்சாவூர்,பாலக்காடு பிராமணாளே வேண்டாம். அந்த வாயும் கையும் நமக்கு சரிப்பட்டு வராது’ என்று ஜாதகப் பரிவர்த்தனை செய்யும் கமலா மாமியிடம் பாட்டி கையை ஆட்டி ஆட்டிப் பேசினாள்.

‘ஏன் மாமி? ஒரு நல்ல தஞ்சாவூர் வடமப் பையன் இருக்கானே’ என்றாள் மாமி.

‘யப்பா, வேணாம்மா. ஒரு தடவை எங்காத்துக்காரர் பவானி ஆறுல பரிசல்ல போயிண்டிருந்தார். கூட கே.பி. சுந்தராம்பாள் வந்திருந்திருக்கா. என்ன சார், நீங்க வடமாளா, வாத்திமாளான்னு கேக்க, இவர் ப்ருஹசரணம்னு சொல்லிருக்கார். ப்ருஹசரணமா? அது ‘பெப்பே’ ஆச்சே முகவாய்க்கட்டைல கை வச்சுண்டு எங்காத்துக்காரரைப் பார்த்தாளாம். கொங்கு மண்டல பிராமணா நாங்க. ஒழுங்கா பிராமண பாஷை கூட பேச வராது. தஞ்சாவூர்,பாலக்காட்டுக்காராளைப் பொருத்தவரை நாங்க அவா செட்டுலயே சேர்த்தியில்லை. அந்த வடம ஜம்பத்துக்கு முன்னாடி ஒப்ப நிக்க முடியாதும்மா. நாங்க பெப்பேதான். அதுக்கு இன்னொரு பெப்பேதான் சரிப்பட்டு வரும்’என்றாள்.

மாலை நான்கு மணியாயிற்று. தேடித் தேடி அனைவரும் ஓய்ந்து விட்டனர்.

‘போலீஸுக்கு போயிடலாமா?’ என்று பக்கத்துக்கு வீட்டு ஜாகீர் அப்பா கேட்டார்.

‘இல்லீங்க மொஹமத், வெயிட் பண்ணுவோம். இன்னும் சிலரோட வீட்டுல பார்த்துடுவோம்’ என்றார் அப்பா.

திருப்பூரில் என் அம்மாவின் தங்கை இருந்தார். அவர் வீட்டுக்குப் போயிருப்பாளோ என்று ஒருவரை அனுப்பியிருந்தார் அப்பா. அனுப்பிய ஆள் சுமதி அங்கே இல்லை என்பதை ஜெயந்தியின் வீட்டுக்கு போன் பண்ணி சொன்னார். பாட்டி லலிதா சஹஸ்ரநாமம் ஜபிக்க ஆரம்பித்திருந்தாள்.

‘…மராளி மந்த கமனா மஹாலாவண்ய சேவதி:….’

அம்பாளுடைய நடையழகை வர்ணிக்கும் இந்த வாக்கியம்… மந்த கமனா- மெல்ல ஒயிலான நடை. அப்படித்தான் நடப்பாள் சுமதி. வேகம் பேச்சில் மட்டுமே இருக்கும். மற்றதெல்லாம் கனவு கண்டுகொண்டே மெல்லத்தான் செய்வாள். எங்கே போயிருப்பாள்?

அப்பா நிலைகுலைந்து போய் காலனிக் கிணற்றை எட்டிப் பார்த்தார். ‘பின்னாடி தோட்டத்துல கூட ஒரு கிணறு இருக்கில்ல? அங்கயும் பார்த்துட்டு வந்துடறேன்’ என்று சொன்ன அப்பாவின் முகத்தை காணச் சகிக்கவில்லை. முகமெல்லாம் வெளிறி, பட்டனை மாற்றிப் போட்ட கசங்கிய சட்டையோடு, கண்ணீர் தளும்பிய கண்களோடு, கலைந்த தலையோடு , சட்டென்று ஒரு பத்து வயது அதிகமானதைப்போல் தோற்றமளித்தார்.

ஜாகீர் மெல்ல என்னிடம் வந்து கிசுகிசுத்தான். ‘கீதா, எனக்கொரு சந்தேகம்டி. அன்னிக்கு அனுஷம் தியேட்டர் பின்னாடி இருக்கற வயக்காட்டுல சுமதியக்காவையும் பாண்டியண்ணனையும் பார்த்தேன். சிரிச்சு பேசிகிட்டிருந்தாங்க. நான் யார்கிட்டயும் சொல்லல. ஒரு வேளை…’ என்று இழுத்தான்.

‘நீ வாய வச்சுகிட்டு சும்மா இருடா’ என்று ஜாகீரின் வாயை நான் மூடும் நேரம் ஹரி பேசினான்.

‘அப்பா, இருங்கோ. ஒண்ணும் தோட்டத்துக்குப் போக வேண்டாம். இன்னிக்கு முகூர்த்த நாள். அநேகமா யார் கூடயாவது ஓடிப்போயிருப்பா’ என்றான் உணர்ச்சியில்லாமல்.

அந்தக் கோணத்தில் யோசித்தே பார்த்திராத எல்லோரும் ஸ்தம்பித்தனர். அப்பா தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார். பாட்டி இன்னும் வேகமாக ஜபித்தார். காந்தித் தாத்தாவும் அம்மாவும் செய்வதறியாது நின்றிருந்தார்கள். ஜாகீர் அப்பாவும் குமாருடைய அப்பா ஜகதீசனும் என்ன செய்யலாம் என்று கவலையுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

‘ஒண்ணும் செய்ய வேண்டாம் மாமா. அவளே வருவா பாருங்கோ. நாளை வரை பார்க்கலாம்’ என்றான் ஹரி.

‘அப்படியெல்லாம் நம்பிகிட்டு உட்கார்ந்திருக்க முடியாது சாமி’ என்றார் மொஹமத் மாமா. ‘ஆமா, ஆமா’ என்று தலையாட்டினார் ஜகதீசன் மாமாவும். அப்பாவைக் கூட்டிக்கொண்டு இருவரும் காவல் நிலையத்துக்கு சென்றனர்.

காவல் நிலையத்திலும் அதேதான் சொல்லியிருக்கிறார்கள். யார்கூடயாவது ஓடிப் போயிருக்குமுங்க. இந்தக் காலத்துப் பசங்க சினிமா பார்த்து கெட்டழியுதுங்க என்று புலம்பி விட்டு, இருந்தாலும் தேடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்பாவை போலீஸ் ஸ்டேஷன் படியேற வைத்துவிட்டாளே இவள் என்று கோபம் வந்தது.

ஜாகீர் ‘சொல்றதுதான் பெட்டர்’ என்று கிசுகிசுத்தான். ஜாகீரின் அம்மா ரெஜினா அத்தை நாங்கள் திருட்டு முழி முழிப்பதை பார்த்துவிட்டாள்.

‘ஏய், என்ன நடக்குது? உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா உண்மையை சொல்லிடுங்க’ என்று எங்களைப் பார்த்து கண்களை உருட்டினாள். எல்லோரும் எங்களைப் பார்த்தார்கள். பூதக் கண்ணாடிக்கு அடியில் மாட்டிக்கொண்ட எறும்புகளாகத் தவித்தோம்.

‘அதுவந்து, ஜாகீரு சுமதியக்காவையும் பாண்டி அண்ணாவையும் அனுஷம் தியேட்டருக்குப் பின்னாடி பார்த்தானாம்’ என்று திக்கித் திணறி சொல்ல, ரெஜினா அத்தை வேகமாக வந்து ஜாகீரில் முதுகில் பட்டென்று போட்டாள்.

‘முன்னாடியே சொல்லித் தொலைக்கறதுக்கு என்னடா? இவ்வளவு நேரம் வீணாப் போச்சுல்ல. நீயும் நல்ல அமுக்குணிதான்’ என்று இருவரையும் திட்டினாள். ரெஜினா அத்தை திட்ட ஆரம்பித்தால் ஓய மாட்டாள். ஜாகீரின் தங்கை அமுலு சமத்தாக இருப்பாள். நானும் ஜாகீரும் சிறு வயதில் செய்யாத சேட்டைகள் இல்லை.

ஒருமுறை அவன் சமையலறையில் இருந்து ஒரு டஜன் முட்டைகளைக் கொண்டு வந்தான். எனக்கு வழவழப்பாக இருந்த அந்த முட்டைகளைப் பார்க்கவும் தொடவும் நன்றாக இருந்தது. அமுலு அப்போது எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தாள். அவளை புழக்கடையில் உள்ள வேப்பமரத்தடியில் உட்கார வைத்து ஒவ்வொரு முட்டையாக அவள் தலையில் உடைத்தோம். ஜாகீர் ஒரு முட்டை நான் அடுத்த முட்டை என்று வரிசையாக உடைத்தோம். உடைத்து உடைத்து வேப்பமரத்தினடியில் போட்டோம். அதிலிருந்து வழியும் மஞ்சள் கருவையும் பிசின் போன்ற திரவத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லையென்றாலும் அந்த உடைக்கும் செயல் சந்தோஷத்தைக் கொடுத்தது. அமுலுக்கு பிடித்ததோ என்னவோ அசையாமல் உட்கார்ந்திருந்தது. அவ்வப்போது தலையை தேய்த்து விட்டுக் கொண்டது.

அந்த சுபகாரியத்தை செய்துகொண்டிருக்கும்போதே அத்தை வந்துவிட்டாள். ஓட முயற்சி செய்த எங்களைப் பிடித்து அமுலுவை தென்னம் மாரிலிருந்து ஒரு குச்சியை உருவிக்கொண்டு வரச் சொன்னாள். இரண்டு பேருக்கும் முட்டிக்குக் கீழ் அடி விழுந்தது.

‘அவந்தான் தறி கெட்டுத் திரியறான்னா, ஐயர் வீட்டுப் புள்ள முட்டையை எடுத்துகிட்டு ஆட்டமா ஆடற’ன்னு திட்டிக்கொண்டே அடித்தாள். என்னைவிட ஜாகீருக்குத்தான் நிறைய அடி. சத்தத்தைக் கேட்டு என் வீட்டு புழக்கடைக்கு வந்த அம்மா

‘கடங்காரிக்கு இன்னும் ரெண்டு கால்ல போடு ரெஜினா’ என்று எண்ணையை வார்த்தாள்.

எல்லா ஆட்டமும் என்னுடைய பத்தாவது வயதில் முடிவுக்கு வந்தது. இந்த பரபரப்பிலும் ரெஜினா அத்தையைப் பார்க்கும்போது அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு அருமையான நாட்கள்.

அதற்குள் பாண்டி அண்ணா வீட்டுக்கு ஆட்கள் ஓடியிருந்தார்கள். பாண்டி அண்ணாவின் வீடு பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் இருந்தது. அண்ணா எங்களுக்கு வழக்கமாக ஆட்டோ ஓட்டுவார். யாருக்காவது உடம்புக்கு முடியவில்லை என்றாலோ, கடைவீதிக்குப் போக வேண்டும் என்றாலோ அப்பா பாண்டி அண்ணாவின் ஆட்டோவைத்தான் அழைப்பது வழக்கம்.

பாண்டி அண்ணாவும் வீட்டிலில்லை என்று தெரிந்தவுடன் அவருடைய நண்பர்களை விசாரித்தார்கள். இருவரும் மாசாணியம்மன் கோயிலில் அன்று காலை திருமணம் செய்துகொண்டது தெரிந்தது. இரவு ஒன்பது மணி சுமாருக்கு சுமதியும் பாண்டி அண்ணாவும் (இனிமேல் அத்திம்பேர்) மாலையும் கழுத்துமாக வந்து நின்றனர். வீட்டில் என்னையும் பேபியையும் தவிர அனைவரும் உடைந்துபோய் விட்டனர். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை அவளைப் பார்த்து. அப்பாவைப் பார்க்கத்தான் சங்கடமாக இருந்தது.

கடைசியில் எங்களுக்கு பெப்பே காண்பித்து விட்டாள் சுமதியக்கா.

சினிமாவில் வருவதுபோல் அப்பாவின் காலில் விழுந்து அழுதாள் சுமதி. ஏனோ எனக்கு அவள் செய்வதெல்லாமே அவளுக்குப் பிடித்த நடிகையின் நடிப்பைப் போலவே இருக்கும். அழும்போது கூட அந்த நடிகை அழுவதுபோல இருந்தது. ‘வே’வென்று வாயைத் திறந்து அழாமல் நாசூக்காக நளினமாக அழுது மன்னிப்புக் கேட்டாள்.

அம்மா ஆத்திரத்தில் அடிக்க வந்தபோது காந்தித் தாத்தா (என் அம்மாவின் அப்பா) தடுத்து நிறுத்தி ‘மாப்பிள்ளை,நம்ம மனுஷாளுக்கு ஓடினது தெரியறதுக்கு முன்ன நீங்களே கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கோ’ என்றார்.

‘என்னப்பா சொல்றேள்?’ என்று தன் பர்சை எடுத்துப் பிரித்து அதிலிருந்து நான்கு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காண்பித்து ‘இவ்வளவுதான் இருக்கு என்கிட்ட. இந்த மாச மளிகை சாமானுக்கு அம்மாகிட்ட கொடுக்க வச்சிருக்கேன். எப்படிப்பா நானூறு ரூபால கல்யாணம் பண்றது?’ என்று மனதின் பெருவலியை முகத்தில் தேக்கிக்கொண்டு கேட்ட என் தந்தையின் முகத்தை என் கடைசி மூச்சுவரை மறக்க மாட்டேன்.

மாமாவும் இன்னும் சில உறவினர்களும் பண உதவி செய்ய, ஒரு வழியாக அடுத்த முஹூர்த்தத்தில் நெருக்கமான உறவினர்களை மட்டும் அழைத்து அவளுக்கு திருமணம் செய்து அனுப்பிவிட்டார் அப்பா. வீடே இழவு விழுந்த வீடுபோல் இருந்தது.

எதிர் வீட்டு மல்லிகா அத்தைக்கு கடும் கோபம். ‘எங்க வீட்டுப் புள்ள இப்படி ஒரு ஜாதிக்காரன கட்டிகிட்டு வந்திருந்தா, புள்ளயே வேணாம்னு ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டிருப்போம். ஐயருங்க உங்களுக்கு தைரியமில்ல. எல்லாத்துக்கும் பயம். அவனோட வீட்டப் பாத்திருக்கீங்களா? அவங்க அம்மா, இதோ, அடுத்த தெரு சுந்தர்ராஜன் டாக்டர் க்ளீனிக்க பெருக்கி தொடைக்குது. மொறவாசல் பண்ற குடும்பம். என்ன மாதிரி குடும்பத்துலருந்து எங்க போயிருக்குது பாரு. நாங்களா இருந்தா அவன் கையக் கால முறிச்சுப் போட்டுப் போடுவோம்’ என்று பொரிந்து தள்ளினார்.

‘அப்புறம் என்ன மல்லிகா பண்றது? எல்லாரோட வாழ்க்கையும் நாசமாகிடும். அவா அவாளுக்கு என்ன கர்மாவோ அது படிதான் வாழ்க்கை. நம்மால ஒண்ணும் செய்ய முடியாது. அவ சந்தோஷமா இருப்பா. இருக்கணும். அவ எல்லாம் தெரிஞ்சு தேடிண்ட வாழ்க்கைதான?’ என்றார் காந்தித் தாத்தா.

‘என்னவோ சொல்லுங்க. மனசுதா ஆறல’ என்று முணுமுணுத்தார் மல்லிகா அத்தை.

இது நடந்து ஆறே மாதத்தில் பாட்டி தவறி விட்டாள். காலையில் இரண்டு தோசை தின்று ஹார்லிக்ஸ் குடித்தவள் என் அம்மாவிடம் என்னவோ போலிருக்கிறது என்று சொல்லியிருக்கிறாள். என் அம்மா அவள் பக்கத்தில் உட்கார்ந்ததும் அவளின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு உயிரை விட்டாள். என்னையும் பேபியையும் மல்லிகா அத்தை மதிய நேரத்தில் பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார். என் அம்மா கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். மாமியாரானாலும் தன் அம்மாவைவிட அவளோடுதான் பல வருடம் இருந்திருக்கிறாள். அப்பா இறுகிய முகத்துடன் காரியம் செய்தார். எனக்கு ஏனோ அழுகையே வரவில்லை. எதுவும் தோன்றவில்லை. சுமதி மட்டும் வந்து அரைமணிக்கூறு இருந்தாள். அவள் கழுத்தில் வெறும் மஞ்சக்கயிறு மட்டுமே இருந்ததைப் பார்த்தேன். இளைத்துப் போன மாதிரி இருந்தது. என்னைப் பார்த்து சிறு புன்னகை செய்துவிட்டுப் போய் விட்டாள்.

எழுவர் ஐவராகி விட்டோம்.

***

கோனா சொல்லிக் கொடுத்தபடி அடுத்த மாதத்தின் நாட்கள் வந்ததும் நான் தைரியமாக தயாராக இருந்தேன். முதல் நாள் ஹரியின் வருகைக்காக காத்திருந்தேன். பனிரெண்டரை மணி வரை அவன் வரவில்லை. பிறகு ஆழ்ந்த நித்திரை அணைத்துக் கொண்டது. சுமார் அதிகாலை இரண்டு மணியளவில் என்னை யாரோ ஸ்பர்சிக்கும் உணர்வு வந்து உடம்பை உதறிக்கொண்டு எழுந்தேன். இளித்தபடி அவன்.

‘யூஸ் ஆயிட்ட போலிருக்கே! உனக்கும் பிடிச்சுடும் கொஞ்ச நாள்ல’ என்றான். இப்போது எனக்கு பயமிருக்கவில்லை. அருவருப்பின் உச்சகட்டத்தில் சீறினேன்.

‘கைல என்ன இருக்கு பார்த்தியா? நாயே! இனி பக்கத்துல வந்த…இதுதான் உனக்கு’ என்று கத்தியைக் காண்பிக்க ஒரு கணம் ஸ்தம்பித்த அவன் சிரித்துக்கொண்டே அநாயாசமாக என் கையை முறுக்கி கத்தியை வீசினான். அவன் உயரத்தும் பலத்துக்கும் நான் உறை போடக் காண மாட்டேன்.

‘ஓ! வீராங்கனை ஆகறீங்களோ! என்னை பயமுறுத்த முடியாதுடீ. என்னை வெட்டுவாளாம்’ என்று ஆக்ரோஷமாக கிசுகிசுத்துக் கொண்டே செய்ய வேண்டியதை செய்து விட்டு வெளியேறினான்.

இந்த முறை எனக்கு கையாலாகாத்தனத்துடன் கோபமும் வந்தது. என்னால் கோனாவின், அவள் அண்ணனின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.

சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் ஹரியின் அறைக்குச் சென்றேன். அவன் கதவைத் தாழிடவில்லை. பூனைபோல் மெதுவாக அடியெடுத்து வைத்து அவன் அறையைச் சுற்றி நோட்டமிட்டேன். அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் மேஜை மேல் கல்லூரியில் அவன் ஒப்படைக்க வேண்டிய குறிப்புகள் அடங்கிய ரெகார்ட் நோட்டை எடுத்துக் கொண்டேன். அவனுடைய ஸ்டாம்ப் கலெக்ஷன் ஆல்பத்தையும் எடுத்துக் கொண்டேன். மேஜை மேல இருந்த இன்னும் இரண்டு நோட்டுப் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டேன். ஓசைப்படாமல் என் இடத்துக்கு வந்தேன். புழக்கடைக் கதவைத் திறந்து குளியல் அறைக்குச் சென்று நிதானமாக எல்லாவற்றையும் கிழித்தேன். ‘க்ளாஸ் ஃப்ர்ஸ்ட் தான நீ சனியனே! சாவு!’ என்று கறுவிக்கொண்டே எல்லவற்றையும் கிழித்தேன். ஸ்டாம்ப் ஆல்பத்தை கிழிக்க முடியாமல் அதைக் குளியலறை தொட்டிக்கு மேல் விறகு வைக்கும் பரணுக்குள் வைத்தேன். கிழித்த குப்பைகளை ஒரு பைக்குள் போட்டு மூட்டைகட்டி குமுட்டி அறைக்குக் கொண்டு வந்து அதன் மேல் என் துணிகள் சிலவற்றை அடைத்து அலமாரியில் வைத்தேன். காலையில் குப்பைத் தொட்டியில் போடலாம் என முடிவு செய்தேன். பிறகு பேய்த் தூக்கம் தூங்கினேன். அம்மா காலையில் ‘கீதா, ஸ்கூலுக்கு நேரமாச்சு, எழுந்திரு’ என்று பல முறை அலறிய பிறகு எழுந்தேன். புழக்கடையில் பல் தேய்த்துக்கொண்டே மெல்ல நோட்டம் விட்டேன். ஹரி அங்கேயும் இங்கேயும் அலைந்துகொண்டிருந்தது தெரிந்தது.

‘நாங்க ஏண்டா உன் நோட்டை எடுக்கப் போறோம். சரியாப் பாரு’ என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தது கேட்டது.

நான் சீக்கிரம் குளித்துவிட்டு பின்பக்கம் வழியாக முன் வாசலுக்கு வந்து படியில் நின்றபடி ‘என்னவாம் பிரச்சனை?’ என்றேன். அலாவுதீன் பூதம் போல என் குரல் கேட்டு சட்டென்று ஹாலுக்கு வந்தான் ஹரி. ‘அவனோட இரண்டு முக்கியமான நோட்டைக் காணலியாம். நீ பார்த்தியா?

‘நான் எப்படி என் ரூமை விட்டு வெளியே வருவேன்? எனக்கென்ன தெரியும். ராப்பூரா ஒரே கொசுக்கடி. சரியா தூங்கவேயில்ல’ என்றதும் என்னை குரோதத்துடன் பார்த்தான் ஹரி. கோண வாய் சிரிப்பை நான் இப்போது சிரித்தேன். திரும்பி நடந்தேன்.

அதற்குப் பிறகு ஹரி என் அறைக்கு வருவதை நிறுத்திவிட்டான்.

ஆனால் மூன்று வருடங்களாக வேறு விதமான சித்திரவதை செய்ய ஆரம்பித்திருக்கிறான்.

*

‘ஹாப்பி சிக்ஸ்டீந்த் பர்த்டே டு மீ!!!’

-தொடரும்

 

  •  

ஹெக்ஸகோன் – 7

29  ஜூன் 2023, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சத்தம் மனதை என்னவோ செய்தது. நியூஸில் காண்பித்த அந்த சிசிடிவி பதிவில் துப்பாக்கியை காரின் உள்ளே வைத்து பாயிண்ட் ப்ளாங்கில் சுடுகிறார் அந்தக் காவலர். கார் சிறிது தூரம் சென்று ஒரு கம்பத்தில் அடித்து நின்றது.

‘பஸ் வராது, பஸ்ஸை எல்லாம் எரிக்கிறார்கள்’ என்று ஒரு பெண்மணி நாங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது சாந்த்ராவிடம் சொன்னார். சிந்துஜா, லாவண்யா, நான் மூவரும் சாந்த்ராவுடன் மோன் மார்த்தர் போகலாம் என்று முடிவு செய்தோம். பக்கத்திலேயே பேருந்து நிறுத்தம் இருந்ததால் அங்கு நின்று கொண்டிருக்கும்போது இப்படி ஒரு செய்தி.

நாங்கள் பாரிஸில் இறங்கியதற்கு முந்தைய நாள் நாஹேல் என்ற பதினேழு வயது அல்ஜீரிய வம்சாவளி சிறுவனை ஊரின் புறநகர் பகுதியான நான்தெர்ரில் (Nanterre) ஒரு காவலர் சுட்டுக் கொன்றிருந்தார். அந்தச் சிறுவனின் காரை நிறுத்தி பேப்பர்களைக் கேட்க, அவன் காவலர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வண்டியைக் கிளப்பியிருக்கிறான். அதனால் அவனைச் சுட்டிருக்கிறார் காவலர்.

புறநகர்ப் பகுதியிலெல்லாம் ஒரே கலவரம். பேருந்துகளைக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். பிரான்ஸ் முழுக்கக் கலவரம் பரவி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியில் அடிக்கடி நாஹேலின் அம்மாவைக் காண்பித்து எல்லோரையும் வெறியேற்றிக் கொண்டிருந்தார்கள். நல்ல சுபயோக சுபதினத்தில் வந்திறங்கியிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். சில இடங்களில் போலீசாரைத் தாக்கினார்கள்.

நாஹேலைச் சுட்ட காவலரை கைது செய்து விட்டார்கள். அவருக்கு ஆதரவாக ஒரு மந்திரி குரல் கொடுத்து பல மில்லியன் டாலர்களை அந்தக் காவலரின் குடும்பத்துக்காக சேகரித்தார். பிரான்ஸே இரண்டுபட்டு நின்றது.

சாந்த்ராவுக்குக் கோபம் பொங்கியது.  ‘இந்த நாடு எங்குதான் போய்க்கொண்டிருக்கிறது?’ என்று முகம் சுளித்தார்.

நம்மூர்க்காரர் ஒருவர் ‘இந்த வெள்ளைக்காரன்களை இப்படித்தான் அடிக்கடி கலவரம் செய்து பதட்ட நிலையிலேயே வச்சிருக்கணும். இல்லைன்னா நம்மையெல்லாம் ஊரக் காலி பண்ணச் சொல்லிருவான்’ என்றார். இவரென்ன மாற்றிச் சொல்கிறார்? எனக்கு இந்த தாரதம்யங்கள் எல்லாம் புரிவதேயில்லை. புரியவும் வேண்டாம்.

‘சரி! வாருங்கள் மோன்மார்த்தருக்கு (Montmartre) நடந்தே போய் விடலாம். அதோ தெரிகிறதே கதீட்ரலின் கோபுரம்’என்றார்.

சாந்த்ராவின் வீடு ஒன்பதாவது அரோந்தீஸ்மோவில் (arrondissement) இருந்தது. Ile-de-Paris என்று சொல்லக் கூடிய பாரிஸ் நகரம் இருபது அரோந்தீஸ்மோக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பாரிஸின் நடுவில் ஓடும் லா ஸென் (La Seine)நதியின் வலதுபுறத்தில் இருக்கும் அரோந்தீஸ்மோக்கள்தான் இடது பக்கத்தைவிட பிரபலமான பகுதி. ஏழாவதில் ஈஃபில் (Eiffel) டவர் இருக்கிறது.  இந்தப் பகுதிதான் பாரிஸின் ஆடம்பரமான பகுதி. சாதாரண மக்கள் வசிக்க இயலாது. அரசியல்வாதிகளும், பெரும் பணக்காரர்களும் வசிக்கும் இடம். லூவ்ர் அருங்காட்சியகம் முதலாம் அரோந்தீஸ்மோ. மோன்மார்த்தர் பதினெட்டாவதில் இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மேயர் உண்டு. ஒன்று,இரண்டு, மூன்று மற்றும் நான்காம் அரோந்தீஸ்மோக்களை பார்த்துக்கொள்வது மட்டும் ஒரே ஒரு மேயர்.

நடக்கலாம், பக்கம்தான் என்று சாந்த்ரா சொன்னதும் ஏதோ மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து லஸ் கார்னர் வரை தூரம்தான் இருக்குமென்று நினைத்தோம். ஆனால் அது மூன்றரை கிலோமீட்டர் என்று தெரிந்திருந்தால் வேறு இடம் போகலாம் சாந்த்ரா என்று சொல்லியிருப்போம்.

பாரிஸ் மக்கள் வேகவேகமாக நடந்துகொண்டே இருக்கிறார்கள். பஸ் நிறுத்தத்தில் பஸ் எத்தனை நிமிடத்தில் வரும் என்று ஒரு பேனல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதில்  பத்து நிமிடத்துக்கு மேல் காட்டினால் சாந்த்ரா நடக்க ஆரம்பித்து விடுவார். அவர் மட்டுமல்ல. எல்லோருமே அப்படித்தான். சினிமாவில் காண்பிப்பதுபோல் பாரிஸில் ஹை ஹீல்ஸ் எல்லாம் போட்டுக்கொண்டு நடக்கவே முடியாது. மேலும் கீழுமாக இருக்கும் சாலைகள், கற்கள் பதித்த சாலைகள் பிரசித்தம். இப்போதெல்லாம் அந்த பெருமைமிகு கற்கள் பதித்த சாலைகளில் இருக்கும் கற்களை எடுத்துவிட்டு நல்ல சாலையே போடுகிறார்கள் என்றார் சாந்த்ரா. ஏதாவது ஸ்டிரைக் என்றால் அந்தக் கற்களை நோண்டி எடுத்து போலீஸார் மேலும் பேருந்துகளின் மேலும் வீசுகிறார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஒரு வழியாக மூன்று கிலோமீட்டர் மூச்சு வாங்கிக்கொண்டு நடந்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்ததால் சிரமம் தெரியவில்லை. வானிலையும் ஒத்துழைத்தது. அது கோடைக் காலம் என்று அவர்கள் சொன்னாலும் சென்னைவாசிகளாகிய எங்களுக்கு அந்த 21 டிகிரி வானிலை ஊட்டியைபோல் இருந்தது. ஆனால் பாரிஸ் வானிலை இன்று இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. திடீரென்று வெயிலடிக்கும், அல்லது மழை பெய்யும். மாலையானால் குளிரும். அதனால் அடுக்கடுக்காக உடுத்திக்கொண்டு செல்கிறார்கள். தேவையானால் கோட்டைப் போட்டுக் கொள்ளலாம் அல்லது கழற்றி விடலாம்.

மோசமாக உடை உடுத்தியவரை என்னால் பார்க்கவே முடியவில்லை. அந்தந்த இடத்துக்குத் தகுந்தாற்போல் உடுத்துகிறார்கள். முக்கியமாக இன்னொரு விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரிய கழுத்து உள்ள உடைகளை பெண்கள் அவ்வளவாக அணிந்து நான் பார்க்கவில்லை. அவர்கள் உடலுக்குத் தகுந்தாற்போல் அட்டகாசமாக ஆடை அணிகிறார்கள். மிகவும் குட்டியான ஷார்ட்ஸோ, அல்லது மினி ஸ்கர்ட்டோ அதிகம் காணப்படவேயில்லை. அப்படி யாராவது அணிந்திருந்தால் அவர்கள் சுற்றுலாப் பயணிகள். மிகவும் பாந்தமாக அழகாக உடலுக்குத் தகுந்தாற்போல் உடையணிவதில் வித்தகர்கள் பாரிஸ்காரர்கள். நான் காலையில் உடை உடுத்தி, அலங்காரம் செய்துகொண்டு கூடத்துக்கு வந்தால் சாந்த்ரா தலையிலிருந்து பாதம்வரை பார்ப்பார். அவர் முகமே சொல்லிவிடும் நாம் சரியாக உடுத்திக்கொண்டிருக்கிறோமா இல்லையா என்று.

ஒருநாள் அவருடைய ஒட்டக நிற கைப்பையைக் கொண்டு வந்து ‘இந்த டாப்ஸோடு இது ஒத்துப் போகிறதா’ என்று கேட்டார்.’ நான் சந்தேகமாக தலையை ஆட்டியதும், உள்ளே போய் மாற்றிக்கொண்டு வந்தார்.

நான் ஒருநாள் ‘இந்த ஸ்கர்ட் போட்டுக் கொள்ளலாமா?’ என்று கேட்டேன். ‘அதற்கான கால்கள் உனக்கு இருந்தால் போட்டுக்கொள்ளலாம்’ என்றார்.

அவர்கள் உயரமெல்லாம் நம்மைப் போல்தான் என்றாலும் உடல் பெருத்த மனிதர்களை பெரிதாகப் பார்க்க முடிவதில்லை. இப்படி வேகுவேகுவென்று தினமும் மைல் கணக்கில் நடந்தால் எங்கிருந்து உடம்பு வரும்?

மோன்மார்த்தர் போகும் வழியில் ஜான் ரெனுவார் (Jean Renoir) வீட்டைத் தாண்டிச் சென்றோம். அந்த வீட்டின் வெளியே ஒரு பலகையில் ‘இங்கு ஜான் ரெனுவார், திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், 1937 – 1969 வரை வசித்தார்’ என்று எழுதியிருந்தது. ஒரே சந்தோஷமாகி விட்டது எனக்கு. அடுத்த தெருவில்தான் ஃப்ரான்ஸுவா த்ரூஃபோ (François Truffaut) வசித்தார். அங்கு நாளை கொண்டு போய் காட்டுகிறேன் என்றார் சாந்த்ரா என் முகத்தைப் பார்த்து. ஃப்ரான்ஸுவா த்ரூஃபோவின் Quatre cents coups (400 blows) நாம் இருக்கும் தெருவில்தான் எடுத்தார் என்று சாந்த்ரா சொன்னவுடன் எனக்கு எப்படி என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.

என் உற்சாகத்தைப் பார்த்து ஜான் ரெனுவார் வீட்டின் வழியே என்னைக் கூட்டிச் சென்று விடவேண்டும் என்று சாந்த்ரா நினைத்தார். ஆனால் அந்த ரோடு தனியார் ரோடு என்பதால் அங்கிருந்த காவல்காரி எங்களை அனுமதிக்கவில்லை. அந்த சாலையிலிருந்து வெளியே வந்து ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் பின்னால் ஓடி விடலாம் என்று சாந்த்ரா நினைத்தாலும் அந்தக் கண்கொத்திப் பாம்பு காவல்காரி ‘சாரி! உள்ளே விட முடியாது’ என்று சொல்லி விட்டார். சாந்த்ராவுக்கு வருத்தம்.

‘பழைய வாட்ச்மேனாக இருந்தால் விட்டிருப்பான்’ என்று சுணங்கினார்.

நாங்கள் படித்தபோது எங்கள் புத்தகத்தில் கோதிக் பாணியில் மோன்மார்த்தர் படங்கள் இருக்கும். அப்படித்தான் இருக்கப் போகிறது என்று நினைத்த எனக்கு ஏமாற்றம். கனவுலகத்திலேயே வாழும் எனக்கு இத்தனை வருடத்தில் அவற்றையெல்லாம் சரி செய்திருப்பார்கள் என்று என் மூளையில் உறைக்காதது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் வழியில் Le Bateau Lavoir ஐப் பார்த்தவுடன் மறுபடி சந்தோஷம் ஊற்றெடுத்தது. அந்த இடத்தில்தான் இருபதாம் நூற்றாண்டின் பெரிய அறிஞர்களும், எழுத்தாளர்களும், ஓவிய மேதைகளும் தங்கியிருந்தார்கள். ஒரு காலத்தில் அந்த அழுக்கு வீட்டின் அறைகளில் தங்கியிருந்துதான் உலக சாதனை படைத்தார்கள் பல  மேதைகள். அன்று இந்த மோன்மார்த்தர் முழுவதும் இவர்கள் ஆட்சி தான்.

அப்போலினர்(Apollinaire), ஹென்ரி மதிஸ்(Henri Matisse), பிக்காஸோ (Picasso)(இங்கிருக்கும்போது தான் அவர் Young girl with a flower Basket, Les Demoiselles d’Avignon போன்ற படங்களை வரைந்தாராம்), வான் கோக் (Van Gogh)(வான் கோ என்று அவர்கள் உச்சரிப்பதில்லை) ஜார்ஜ் ப்ராக் (Georges Braque), மார்க் ஷகால்(Marc Chagall)மற்றும் பலர் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வாசலில் கீழே விழுந்து கும்பிட வேண்டும் என்று தோன்றினாலும் ‘ரொம்ப டிராமா போடாம வா’ என்று என்னுள் இருக்கும் பெனாத்தா என்னை அமுக்கினாள்.

ஒரு இடத்தில் சாலையின் ஓரத்தில் வான் கோக்கின் படத்தை வைத்து எழுதியிருந்ததன் சுருக்கம்:

 

இவர் 1886 இல் பாரிஸுக்கு வந்தபோது  பல நூறு ஓவியர்களில் ஒருவர். பிரெஞ்சு தலைநகர் அப்போது கலைஞர்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் செல்வத்தையும் புகழையும் தேடுவதற்காக வெகு தொலைவில் இருந்து வந்தனர். வின்சென்ட், தனது சகோதரர் தியோவுடன் இங்கு வசித்து வந்தார்.

வின்சென்ட் வான் கோக் பாரிஸ் நகர கவர்ச்சியின் அதீதத்தில் மயங்கிக் கிடந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 1888இல், அவர் உடல் மற்றும் ஆன்மா இரண்டையும் அதிக அழுத்தத்திற்கு தான் உட்படுத்துவதை உணர்ந்தார்.

பின்னர் மோன்மார்த்தர் வந்து மற்ற ஓவியர்களுடன் பழகத் தொடங்கிய பிறகு, அடர்த்தியான வண்ணங்களில் வரைவதை விட்டுவிட்டு இம்ப்ரெஷனிஸ்ட் முறையை பரிசோதிக்கத் தொடங்கினார். ஓவியங்களைப் பற்றி விவாதிக்கக் கூடிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு விவாதித்தார்.

வான் கோக் மறக்க முடியாத கலைப் படைப்புகளை உருவாக்கினார். இந்த மோன்மார்த்தர் காலகட்டத்தை அவரது கலை வளர்ச்சியில் ஒரு முக்கியமான ஆயத்த கட்டமாகக் காணலாம். பின்னாளில் பிரபலமடையப்போகும் ப்ரோவென்ஸ்(Provence) காட்சிகளை அவர் வரைவதற்கு இங்கு அவர் மேற்கொண்டது ஒரு பயிற்சி ஆய்வு.

 

‘போதும் படித்தது. சீக்கிரம் வா, இன்னும் நிறைய இருக்கிறது’ என்ற குரல் கேட்டவுடன் அதை போட்டோ எடுத்துக்கொண்டு ஓடினேன்.

பின்னர் நந்தனுடன் ஒரு நாள் வான் கோக்கின் அமைதியான அந்த எழில் கொஞ்சும் கிராமத்துக்குப் போனேன். அந்த ஊர் இடுகாட்டின் ஒரு மூலையில் இருந்தது வான் கோக்கின் கல்லறை. பக்கத்தில் அவனுடைய சகோதரன் தியோவினுடைய கல்லறை. இருவரின் கல்லறை மேலும் அலங்காரமாக செடியை வளரவிட்டிருந்தார்கள். மோன்மார்த்தரிலிருந்த கூட்டம் இங்கில்லை. ஏன், யாருமே இல்லை. நானும், நந்தனும், அந்தக் கல்லறையைப்பராமரிப்பவரும் மட்டுமே இருந்தோம். அவருடைய கல்லறைக்கு பின்னால் சாலையில் இருந்த மரத்தில் ஹிரோன்தெல் பறவைகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன.

‘ ஹிரோந்தெல் பறவைகள்’ என்றார் நந்தன்.

‘ஹும். பிரெஞ்சில் ஒரு பழமொழி உண்டு. Une hirondelle ne fait pas le printemps !’

‘அப்படியென்றால் ?’

‘ஒரு ஹிரோந்தெல் பறவை வசந்தத்தின் அறிகுறியல்ல என்பது நேரடி மொழிபெயர்ப்பு. அதாவது வெளித்தோற்றங்களை நம்பக்கூடாது என்றும் ஒரு தனிப்பட்ட உண்மையிலிருந்து பொதுவான முடிவுகளை எடுப்பது நியாயமல்ல என்றும் சொல்கிறது.’

‘ஓ! வான்கோக்கிற்கு இது பொருந்துமோ ?’

‘இருக்கலாம்.’

‘ஏன் க்ளாத் மோனேவின் வீட்டைப் பார்க்க வரும் கூட்டத்தைப் போல் இங்கு யாரும் வருவதில்லை?’ என்று நந்தன் கேட்டபோது என்னிடம் பதில் இல்லை.

வான் கோக் வாழ்ந்த 37 வருடங்களில் 38 இடங்களில் இருந்திருக்கிறார். அவர் தன் வாழ்நாளின் கடைசி 70 நாட்களைக் கழித்த Auberge Ravoux என்ற விடுதியைப் பார்க்கும்போது கண்டிப்பாக மனம் பிசையும். அந்த விடுதியின் ஐந்தாம் நம்பர் அறையில் அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அந்த அறையை அதற்குப்பின் யாருக்கும் தராமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். வான் கோக் தன் படங்களை மாட்டுவதற்காக அடித்த ஆணிகள் கூட அப்படியே இருக்கிறதாம். நான் சென்ற அன்று அந்த விடுதி மூடியிருந்தது. அடுத்த நாள்தான் திறப்பார்கள் என்று சொல்லி விட்டார்கள். ஏமாற்றமாக இருந்தது.

இந்தப் பயணத்தில் பல இடங்களை பார்க்கத் தவறினேன். ஒன்று சரியான நாளில் சென்றிருக்க மாட்டேன். அல்லது சரியான நேரத்தில் போயிருக்க மாட்டேன்.

‘இந்த 75 அடி அறையில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் உணர்வதற்கு நிறைய இருக்கிறது’ என்று எழுதி வைத்திருந்தார்கள்.  இந்த அறை 1985 முதல் வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மோனேவைப் போல் வின்சென்ட் வான் கோக், தான் வாழ்ந்த காலத்தில் புகழடையவேயில்லை. ஏழ்மையில் வாடினார்.  கடைசியாக தன் சகோதரன் தியோவுக்கு எழுதிய கடிதத்தில் அங்கேயிருக்கும் கஃபேயில் என்னுடைய படங்களைக் காட்சிப்படுத்தலாம் என்றிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து அரசு அவர் ஆசையைப் பூர்த்தி செய்தது.

‘இந்த வழியாக எத்தனை முறை சென்றிருப்பாய், இந்தக் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றிருப்பாய், இதோ தெரியும் இந்த வெட்டவெளியை வரைந்திருப்பாய், இல்லையா? லட்சக்கணக்கான மக்கள் இந்த வாசல் வழியாக வந்து உன் வெற்று அறையைப் பார்ப்பார்கள் என்று கிஞ்சிற்றும் நினைத்திருக்க மாட்டாய். நீ கால் பதித்த இந்தச் சாலைகள் முழுக்க Vincent, Vincent, Vincent என்று பெயர் பொறித்த தங்கக் குமிழ்களைப் பதிப்பார்கள் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டாய்.’

‘க்ளாத் மோனே உயிருடன் இருந்த காலத்திலேயே புகழுடன் ஆர்ப்பரித்து வாழ்ந்ததுபோல் இன்று அவர் இடம் மக்களால் ஆர்ப்பரிக்கிறது. உன் மணற்கடிகையின் கடைசித் துகள்களை இங்கு செலவழித்தாய். உனக்கு அங்கீகாரம் அளிக்காமல் கொன்று விட்டோமே என்ற அவமானத்தால் இந்தக் கிராமமே மயான அமைதியை அப்பிக்கொண்டிருக்கிறது. என்ன செய்ய! இருக்கும்போது வைதுகொண்டு இகழ்ந்துகொண்டு பாராமுகமாக இருந்து, இல்லாதபோது மாரில் அடித்துக்கொள்வதுதானே மானுட வழமை’ என்று என்னென்னவோ நினைத்தபடிநடந்துகொண்டிருந்தேன்.

கிராமத்தின் சாலையில் ஆங்காங்கே Vincent என்று எழுதியிருந்த தங்கநிற குமிழ்களைத் தடவிப் பார்த்தேன்.

நின்று, மூடியிருந்த அந்த ஐந்தாம் நம்பர் அறையைத் திரும்பிப் பார்த்தேன். துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

நல்லவேளை! அந்த விடுதி மூடியிருந்தது. இல்லையென்றால் நான் வெடித்துச் சிதறியிருப்பேன்!

  • அடுத்த அத்தியாயம் அடுத்த புதன்கிழமை

  •  

கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம்

கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம் நாவல் 610 பக்கங்கள், விலை 750 ரூபாய் என்பதாலோ என்னவோ கிடைக்குமிடம், போன் நம்பர் இவை இடம் பெறவில்லை! காதலில் புகுந்தும் வெளியேறியும் தடுமாறும் ஒரு இளைஞனின் பார்வையில் அந்தக் கம்யூனிஸ்ட் காதலியும்,…

The post கொடை மடம் (நாவல்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

சஞ்சலம் 

சந்துருவைச் சந்தித்துவிட்டு வந்த சில வாரங்களுக்குப் பிறகு அவனே அகல்யாவை செல்பேசியில் அழைத்துப் பேசினான். அப்போதுதான் அவனுடைய திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது பற்றிக் கூறினான்.   சந்துருவின் முன்னாள் மனைவியும் ஆட்சியர்தான். ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு...

The post சஞ்சலம்  first appeared on Her Stories.

  •  

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன்

சர்வதேசத் தாயான நீலவ்னா… பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2 – எழுத்தாளர் ம.மணிமாறன் நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனிநபர் சொத்துரிமைக்கு (சொத்துரிமையின் பெயரால் மக்கள் சமுதாயத்தை பிளவுபடுத்தி,மக்களை ஒருவக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும்…

The post பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 2:- சர்வதேசத் தாயான நீலவ்னா – எழுத்தாளர் ம.மணிமாறன் appeared first on Book Day.

  •  

கசாப்புக் கூடம்  ஐந்து (Slaughterhouse-Five) – போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –11 போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல் இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம். ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் ஒரு பழைய தொழிற்கூடம். அதுவோர் இறைச்சித் தயாரிப்புக் கூடம். ‘கசாப்புக் கூடம்  ஐந்து’ (Slaughterhouse-Five)…

The post கசாப்புக் கூடம்  ஐந்து (Slaughterhouse-Five) – போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல் appeared first on Book Day.

  •  

புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago)

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 8  புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) அ. குமரேசன் 1958ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago). ஆனால்…

The post புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) appeared first on Book Day.

  •  

அது இது எது – Crime Novel

அந்த நள்ளிரவு வேளையில் சோகையாக இயங்கிக்கொண்டிருந்த கெட் வெல் ஹாஸ்பிடலின் அமைதியை குலைக்கும் வகையில் ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய ஒரு தம்பதி(ஜானகிராமன்- கனகம்) தங்களுடைய மகள் சூடாமணியை ஸ்ட்ரெச்சரில் வைத்தனர்.

அவசரமாக ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற ஜானகிராமனும், கனகமும் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு டியூட்டி டாக்டர் மகேந்திரனை அணுகினர். பாத்ரூமில் வழுக்கி விழுந்த சூடாமணியின் தலையில் டாக்டர் பெரிய பேண்டேஜ் கட்டைப் போட்டார்.

சூடாமணியின் நிலையை உணர்ந்த டாக்டர் உடனடியாக சீஃப் டாக்டர் வராகசாமியை அழைக்கிறார். தூக்கம் கெட்ட கண்களுடன் வந்த வராகசாமி கோமா நிலைக்குச் சென்றுவிட்ட அந்தப் பெண்ணைப் பார்த்தார்.

கதறி அழுத இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு, பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்க்க செல்கிறார் டாக்டர். ரிப்போர்டைப் பார்த்த அவர் அதிர்ந்து போனார்.

காரணம் சூடாமணியின் ரத்தத்தில் காட்மைன் எனும் போதைப் பொருள் கலந்திருக்க, அடுத்த திடுக்கிடும் தகவலாக சூடாமணியின் பெற்றோர் காணாமல் போயினர்.

அதே சமயம்..

தன்னுடைய இரண்டு தங்கைகளான ஹேமா & ஜமுனாவை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, அப்பா ரங்கநாதனிடம் சொல்லிவிட்டு இன்டர்வியூவிற்குக் கிளம்பினாள் குமுதா. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவளுக்கு, ரெயின் ட்ராப் கம்பெனி மூலமாக வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.

இன்டர்வியூ லைனில் காத்திருந்த அவளை, அந்தக் கம்பெனியைச் சேர்ந்த ஆள் வந்து டைரக்டர் சங்கர் பாபுவின் அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே பதற்றத்துடன் அமர்ந்திருந்த சங்கர் பாபுவைப் பார்த்தாள் குமுதா.

நேரடியாகவே விசயத்திற்கு வந்த சங்கர் பாபு, யார் அந்த மெகாபோன் மைக்கேல் என்று கேட்டு, உன்னிடம் இருக்கும் என்னைப் பற்றிய வில்லங்கமான ஆதாரம் என்ன..? என்று கேட்கிறார்.

அதே புன்னகை முகத்துடன் தன் கையில் வைத்திருந்த போனில் வீடியோ ஆப்ஷனைத் தட்டி, அவர் முன் நீட்டுகிறாள் குமுதா. அதில் கையில் துப்பாக்கியுடன் இருந்த சங்கர் பாபு ஒருவனை சுடும் வீடியோ பதிவாகியிருக்க..அதிர்ந்தார் அவர்.

பணத்தைக் கொடுத்து பேரம் பேச முடிவு செய்த சங்கரை நிறுத்திய குமுதா, தனக்கு பணம் வேண்டாம் எனக் கூறி இந்தக் கம்பெனியில் வேலை தான் வேண்டும் என்கிறாள். மேலும் நீங்கள் நியாயமாக இருந்தால் என்றைக்கும் வீடியோ ஆதாரம் போலீஸ் கைக்கு போகாது என்று கூறுகிறாள்.

ஒரு வழியாக சங்கரை மிரட்டி வேலையை வாங்கிய குமுதா, ஒரு மாதத்தைக் கடந்த நிலையில் வீட்டிற்குச் செல்ல இருந்த அவளுக்கு ஒரு பார்சலில் கேசட் வந்து சேர்கிறது. கேசட்டைப் போட்டுப் பார்த்த குமுதா அதிர்ந்து போகிறாள்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் மயங்கிய நிலையில் கிடக்கிறாள் அவளின் தங்கை ஹேமா. இதற்கு காரணம் சங்கர் என்பதை அறிந்த அவள் அவனை மிரட்ட, பதிலுக்கு அந்த கொலை வீடீயோவைக் கேட்டு அவன் மிரட்டுகிறான்.

தங்கை ஹேமாவின் மானத்தைக் காப்பாற்ற வீடியோ ஆதாரங்களை குமுதா ஒப்படைத்தாளா..? கொலை நடந்த வீடீயோவை எடுத்தது யார்..? சூடாமணி யார்..? விலையுயர்ந்த போதை மருந்து அவள் ரத்தத்தில் இருந்ததன் பின்னணி என்ன..? சூடாமணியின் பெற்றோர் எங்கே..?

want to buy : https://amzn.in/d/awe6P28

  •  

தேடினாலும் கிடைக்காது – Crime Novel

(இந்தக் கதை நடக்கும் காலக்கட்டம் (1980’s) என்பதால் சில விஷயங்கள் இந்தக் காலக்கட்டத்திற்குப் பொருந்தாததாக இருக்கலாம்.)

யோகேஷும் நீரஜாவும் புதுமணத் தம்பதிகள். இருவரும் தங்கள் ட்ரிப்பை முடித்துவிட்டு, நீலகிரியின் ரிச்சி ரிசார்ட்டிலிருந்து கிளம்பியபோது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. அன்றைக்கு பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், யோகேஷ் காரை ஜாக்கிரதையாக கையாண்டான்.

நீரஜா காரில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வர, திடீரென காரை சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் யோகேஷ். பார்த்தால் அங்கே லிப்ட் கேட்டு நின்றிருந்தான் யோகேஷின் கல்லூரி கால நண்பன் சேதுபதி. காரில் அவனை ஏற்றிக்கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டபடி மூவரும் பயணத்தை தொடர்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக கொஞ்ச நேரத்திலேயே காரின் டயர் பஞ்சர் ஆகிறது.

வானம் இருட்டிக்கொண்டு வர, மூவரும் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சேதுபதி தான்  மெக்கானிக்கை அழைத்து வருவதாகச் சொல்லிச் செல்கிறான். இதற்கிடையே தங்களுக்காக காத்திருக்கும் அப்பா கேசவ்விடம், டயர் பஞ்சர் விஷயத்தை போனில் சொல்லச் சொல்லி நீரஜா கூற, போன் நம்பரை வாங்கிச் செல்கிறான் சேது.

ஆனால் கதையின் திருப்புமுனையாக, கேசவ்விற்கு போன் செய்த சேது, யோகேஷையும் நீரஜாவையும் தான் கடத்தி உள்ளதாகக் கூறுகிறான். மேலும்  பணம் 5 லட்ச ரூபாயை யாருக்கும் தெரியாமல், அவன் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து வைக்காவிட்டால், அன்று இரவே இருவரையும் கொன்று விடுவதாகவும் மர்ம நபரைப் போல பேசி மிரட்டுகிறான்.

கேசவ்விற்கு பேசிவிட்டு அடுத்ததாக தன்னுடைய நண்பன் கதிரவனுக்கு போன் செய்த சேது, திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு அவனைத் தயார் படுத்துகிறான். நீண்ட நேரம் ஆகியும் தன்னுடைய மகளும், மருமகனும் வந்து சேராததால் ஏற்கனவே அயர்ந்து போயிருந்த கேசவ், பணத்தை சேது சொன்ன இடத்தில் வைக்கிறார்.

அடுத்ததாக மெக்கானிக் உடன் திரும்பிய சேது, காரை சரி செய்த பிறகு, மூவரும் இரவு ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறான். அடுத்த நாள் காலையில் யோகேஷும் நீரஜாவும் வீட்டிற்குச் சென்ற பிறகு, மர்ம நபர் மிரட்டிய விஷயம் இருவருக்கும் தெரியவர, கேசவ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸ் நண்பனை உதவிக்கு அழைக்கிறார்.

இன்ஸ்பெக்டர் தனபால் உடனே கேசவ் வீட்டிற்கு வந்து, நடந்த அனைத்து விஷயங்களையும் கேட்ட பிறகு, விசாரணையைத் தொடங்குகிறார். முதலில் கேசவ்வின் ஆபீஸில் இருந்து விசாரணையைத் தொடங்க, அங்கே பெரிய பதவியில் இருந்த பத்மநாபன் மேல் போலீசின் சந்தேகப்புள்ளி விழுகிறது.

காரணம், திடீரென 15 நாட்கள் முறையாக விண்ணப்பிக்காமல் லீவ் எடுத்தது தான். ஆனால் வெகு சீக்கிரமே கேஸின் கோணம் மாற, போலீஸின் பார்வை சேதுபதியின் மேல் விழுகிறது. ஒரு வழியாக சேதுவின் வீட்டை போலீஸ் அடைந்த போலீசிற்கு காத்திருந்தது அதிர்ச்சி சம்பவம்.

அங்கே பூட்டப்பட்டிருந்த வீட்டில், சேதுபதி இறந்து கிடந்தான். சேதுபதியின் நண்பர்களை லிஸ்ட் எடுத்து போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்க…

தப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனரா..? சேதுபதியைக் கொலை செய்தது யார்..? யோகேஷ்-நீரஜாவை வைத்து சேதுபதி மிரட்டியது எதற்கு..? கேசவ் வைத்த பணத்தை எடுத்துச் சென்ற சேதுவின் நண்பன் கதிரவனின் திட்டம் என்ன..?

உங்களை மிரட்ட வரும் தேடினாலும் கிடைக்காது..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=387

  •  

மறக்காதே மன்னிக்காதே – Crime Novel

கம்பெனி நஷ்டத்தில் ஓடியதை மறைத்து, வினயாவைத் தனக்கு திருமணம் செய்து வைத்த மாமனாரைப் பழி வாங்க முடிவெடுக்கிறான் விஷ்வா. பணக்கார பெண்ணான அருணாவைக் காதலித்துக் கொண்டிருந்த விஷ்வா, மனைவி வினயாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறான்.

ஆரம்பத்தில் இருந்தே வினயாவை வெறுத்துக் கொண்டிருந்த விஷ்வாவின் அம்மா இந்திராதேவியும் இந்தத் திட்டத்திற்கு உடந்தையாக இருக்கிறாள். மேலும் வினயாவின் கொலையைத் தற்கொலையாக காட்டுவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான் விஷ்வா.

அதை செயல்படுத்தும் நோக்கத்தில் ஷெரினாவை மும்பையில் இருந்து வரவழைக்கிறாள் அருணா. ஷெரினா – கொலையைத் திட்டம் போட்டு பிசிறில்லாமல் செய்து முடிப்பவள்.

இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தன்னுடைய அப்பாவைப் பார்க்க பெங்களூர் செல்கிறாள் வினயா. வினயா பயணிக்கும் அதே ரயிலில் சென்று அவளின் கதையை முடிக்க முடிவு செய்கிறாள் ஷெரினா. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, வினயா சென்ற ரயிலில் பாம் வெடித்து ரயில் விபத்துக்கு உள்ளாகிறது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வினயாவை, ஹாஸ்பிடலில் இருந்து கடத்தி தன்னுடைய கெஸ்ட் ஹவுசில் அடைத்து வைக்கிறாள் அருணா. அன்றிரவு வினயாவின் கதையை முடிக்க அருணா முடிவு செய்கிறாள். ஆனால் திடீர் திருப்பமாக பணக்காரர்களின் கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்க எல்லோருடைய கெஸ்ட் ஹவுஸையும் போலீஸ் சோதனையிட்டு வருகிறது.

இதற்கிடையில் ஒரு பெண்ணின் இறந்த உடல் பீச்சில் கிடப்பதாகப்  போலீசிற்குத் தகவல் கிடைக்கிறது. அருணாவின் கெஸ்ட் ஹவுஸைப் போலீஸ் சோதனையிடச் செல்ல, பயத்துடன் உடன் செல்கிறாள் அவள். ஆனால் அவள் சந்தோசப்படும் விதமாக வினயா அங்கே இல்லை.

கெஸ்ட் ஹவுசின் கதவு பூட்டிய நிலையில் இருக்க..வினயா எங்கே..? பீச்சில் இறந்து கிடந்த பெண் யார்..? வினயா இவர்களிடம் இருந்து தப்பிப்பாளா..? விஷ்வா-அருணாவின் திருமணம் நடந்ததா..?

அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகரும் மறக்காதே மன்னிக்காதே..!

  •  

கற்கண்டு ஆயுதம் – Crime Novel

மேகாவும் செல்வியும் நெருங்கிய தோழிகள். தினமும் இருவரும் போனில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பவர்கள். செல்வி இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் ஆகி அமெரிக்காவிற்கு பறக்க இருப்பவள்.

மேகாவின் அப்பா ஆதித் உயிர்தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளர். எதிர்காலத்தில் மனிதனுக்கு வரவிருக்கும் நோய்களை மரபணு மூலம் சரிசெய்யும் நான்-வோலடைல் மெமரி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் சில சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர். ஆதித்தின் உதவியாளர் பிரசாத். மேகாவை ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருப்பவன்.

அன்றைக்கு மேகாவிற்கு போன் செய்த செல்வியின் குரல் நடுக்கத்தில் இருந்தது. மேகாவை உடனே தன்னுடைய வீட்டிற்கு அழைத்தாள் செல்வி. அங்கே சென்ற அவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. தனக்கு நாள் தள்ளி போயிருப்பதாகவும், கர்ப்ப காலத்தில் இருக்கும் அறிகுறிகள் இப்போது தனக்கு இருப்பதாகவும் கூறி மேகாவை திடுக்கிட வைத்தாள்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும், இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை எனவும் செல்வி புலம்ப, மெடிக்கல் கிட்டை வைத்து மேகா செக் செய்ய ரிசல்ட் பாசிட்டிவ்வாக வருகிறது. ஷாப்பிங் போவதாகப் பொய் சொல்லிவிட்டு இருவரும் மேகாவிற்கு தெரிந்த கைனகாலஜிஸ்ட்டிடம் செல்கின்றனர்.

செல்வியைப் பரிசோதித்த டாக்டர், அவளின் உடலில் எந்த விதமான கருவளர்ச்சிக்கான அறிகுறியும் இல்லை. ஆனால் அவள் கன்சீவ்வாக இருப்பதை உறுதி செய்கிறார். டாக்டர் பேசிக்கொண்டே போக, செல்வி அப்படியே மயங்கி கோமா நிலைக்குச் செல்கிறாள்.

இதையறிந்த மேகாவின் அப்பா ஆதித், மருத்துவத் துறையில் தான் கண்டுபிடித்த ராக்கெட் கேண்டி ஆயுதம் என அழைக்கப்படும், மரபணு சிகிச்சை மூலம் செல்வியை குணப்படுத்த முன்வருகிறார். ஆனால் மருத்துவ முறைப்படி, நடைமுறைக்கு வராத டிரீட்மெண்ட்டை பேஷண்ட்டிற்கு கொடுக்க கூடாது.

அதே சமயம் வேறு இடத்தில்..

போலீஸ் இன்பார்மர் என்ற போர்வையில், தனக்கு வேண்டாத எதிரிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டு, அண்டர் கிரௌண்ட்டில் தாதாவாக வாழ்ந்துகொண்டிருந்த சிக்கந்தரை சந்திக்க வந்திருந்தார் ஏ.சி. நமோ நாராயணன்.

நேரடியாக விஷயத்திற்கு வந்தார் ஏ.சி. வழக்கமாக பிரதமரும், ஜனாதிபதியும் வரும் இடங்களில் பாதுகாப்பு காரணமாக ரவுடிகளை சிறையில் அடைத்து வைப்பதைக் கூறிய அவர், இந்த முறை சமூக விரோதிகள் லிஸ்டில் சிக்கந்தர் பெயரும் இருப்பதாகக் கூறுகிறார். தவறுதலாக இது நடந்துவிட்டதாகவும், மூன்று நாட்கள் மட்டும் சிறையில் இருக்கும்படி கேட்கிறார் ஏ.சி. ஒரு வழியாக சம்மதிக்கிறான் அவன்.

அவர் சென்ற பிறகு அவனுக்கு ஒரு போன் வருகிறது, பேசியது ஒரு பெண்.  தன்னுடைய பெயர் தன்யா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவள், தனக்கு வேண்டாத ஒருவனைக் கொலை செய்யும் வேலையை அவனிடம் ஒப்படைக்கிறாள். முன்பணமாக பேசிய மொத்தப் பணமான பத்து லட்சத்தையும் உடனே தர முன்வருகிறாள்.

யோசித்த சிக்கந்தர், தன்யாவின் வேலையை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறான். அடுத்த நாள் அவன் போலீசில் சரணடைய வேண்டி இருப்பதால், தன்னுடைய சகாவான போஸிடம் அந்த வேலையை மாற்றிக் கொடுக்கிறான் சிக்கந்தர். தன்யா சொன்ன ஆளை முடிக்கச் செல்கிறான் போஸ். ஒரு வழியாக அந்த போட்டோவில் இருந்த ஆளைக் கண்டுபிடிக்கிறான். போஸ் கொல்ல வேண்டியது ஆதித்தின் உதவியாளர் பிரசாத்.

யாரந்த தன்யா..? அவளுக்கும் பிரசாத்திற்கும் என்ன சம்பந்தம்..? கோமாவில் இருந்து செல்வி உயிர் தப்பினாளா..? செல்வியின் இந்த நிலைக்கு யார் காரணம்..? ராக்கி கேண்டி வெப்பன் என்பது என்ன..? ஆதித்-பிரசாத்தின் சுயரூபம் என்ன..?

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=86

  •  

குட் நைட் குரோதம் – Crime Novel

ஆளும்கட்சியைச் சேர்ந்த மினிஸ்டர் வெற்றிச் செல்வன், தனக்கும் மாடலிங் கேர்ள் ஆன மம்தாவிற்கும் உள்ள ரகசியத் தொடர்பு வெளியே கசிவதை அறிகிறார். இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒரு நாள், மம்தா தனது அரசியல் வாழ்க்கைக்குப் பிரச்சனையாக வருவாள் என்று உணர்ந்த அமைச்சர் அவளைக் கொல்ல முடிவு செய்கிறார்.

மம்தாவின் பிறந்தநாள் அன்று அவளை வீட்டிற்கு வரவழைத்து, தனது பிஏ-வான ரத்னத்தை வைத்து அவளை சுட்டுக் கொல்கிறார் அமைச்சர். பிணத்தை டிஸ்போஸ் செய்யும் வேலையை ரத்னத்திடமே ஒப்படைக்கிறார்.

அடுத்த சில நாட்களில் மம்தாவை மறந்துவிட்டு அரசியல் வேலைகளில்  இருந்த அமைச்சருக்கு, கர்நாடகாவில் இருந்து ஒரு போன் வருகிறது. போனில் பேசிய பசவப்பா, சிபாரிசு செய்து தன்னுடைய வேலையை முடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறார்.

மேலும் பெங்களூரில் இருந்த மம்தாவிடமும் தன்னுடைய சிபாரிசு பற்றி அமைச்சரிடம் பேசும்படி கூறியதாக பசவப்பா கூறுகிறார். இதைக் கேட்ட அமைச்சர் வெற்றிச் செல்வன் அதிர்ந்து போகிறார். அன்றிரவே மம்தாவைப் புதைத்த இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கே அவளின் பிணம் இல்லை.

ஒரு வாரத்திற்கு முன்பு தன்னுடைய கண் முன்னால் ரத்தம் சிந்தி உயிர் விட்ட மம்தா எப்படி உயிருடன் இருக்க முடியும் என்று யோசித்த அவர் தன்னுடைய அடியாள் வடிவேலுவுடன் பெங்களூர் செல்கிறார். உயிருடன் இருப்பது மம்தாவோ இல்லை, மம்தா உருவத்தில் யாரோ, யாராக இருந்தாலும் உயிருடன் விட்டுவைக்க கூடாது என்று முடிவு செய்து அவளைத் தேடுகிறார்.

தேடலின் முடிவில் அச்சு அசலாக மம்தாவைப் போல இருக்கும் அஸ்வினி என்ற பெண்ணைக் கண்டுபிடிக்கிறார். சினிமா பட வாய்ப்புக்காக அழைப்பது போல், அவளைத் தனியே வரவழைத்து அஸ்வினியையும் கொலை செய்கிறார். போன தடவை புதைத்ததைப் போல் அல்லாமல் இந்த முறை பிணத்தை எரிக்கச் சொல்கிறார்.

அதே சமயம் செமினார் அட்டென்ட் செய்வதற்காக விவேக்-ரூபலாவுடன் பெங்களூரில் தங்கியிருந்தான். தன்னுடைய போலீஸ் நண்பன் வாசனை மீட் பண்ணுவதற்காக விவேக் ஸ்டேஷன் வந்த சமயம், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பிணத்தைக் காரில் கொண்டு போன விஷயம் அவர்களை எட்டுகிறது. விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் அஸ்வினி என்று தெரிய வருகிறது.

இந்த இடத்தில் கேஸிற்குள் நுழைகிறான் விவேக். அடுத்த நாள் கொலை செய்யப்பட்ட அஸ்வினியின் போட்டோ பத்திரிக்கையில் வருகிறது. விவேக் பத்திரிக்கையைப் புரட்டி, அஸ்வினியின் போட்டோவைத் தேடிக் கண்டுபிடிக்க.. எதிரில் ஒரு ஆட்டோ செல்கிறது. அந்த ஆட்டோவில், போட்டோவில் இருந்த அதே அஸ்வினி..

அஸ்வினி எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தால், ஆட்டோவில் சென்ற அந்தப் பெண் யார்..? மம்தாவின் பிணம் எங்கே..? மம்தா தான் அஸ்வினியா..?

தேடலுடன் இப்படிக்கு குட் நைட் குரோதம்..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=972

  •  

டிசம்பர் இரவுகள் – Crime Novel

வேலை விஷயமாக ஏர்போர்ட் செல்ல இருந்த அண்ணன் பார்த்திபனை எழுப்புவதற்காக மாடியில் இருக்கும் அவனது அறைக்குச் செல்கிறாள் மேகலா.  ஆனால் ஏற்கனவே எழுந்திருந்த பார்த்திபன், பணத்தைக் கொண்டு வருவதாகவும், விஷயம் வெளியே தெரிய வேண்டாம் எனவும் போனில் யாருடனோ பயத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனியின் ஓனரான கங்காதருக்கு மூன்று வாரிசுகள். முதல் மனைவிக்கு பிறந்தவன் பார்த்திபன், இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் – ஜீவா, மேகலா.

பார்த்திபனின் பேச்சை இண்டர்காமில் ஒட்டுக்கேட்ட மேகலா, போனில் ப்ளாக்மெயிலர் சொன்ன இடத்திற்குத் தன்னுடைய காதலன் பிரகாஷை அனுப்புகிறாள். பிரகாஷ்-மேகலா இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் ஆறு மாதங்களாகத் தங்கள் காதலை வளர்த்து வருபவர்கள்.

பார்த்திபனுக்கு முன்னமே அந்த ஹோட்டலுக்குச் சென்ற பிரகாஷ், ப்ளாக்மெயிலருக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அதே சமயம் பார்த்திபனும் அங்கு வந்து சேர, கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தச் செல்கிறான். நீண்ட நேரமாகியும் பார்த்திபன் வெளியே வராததால், பார்க்கிங் இடத்திற்கே செல்கிறான் பிரகாஷ்.

அங்கே கழுத்தில் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் பார்த்திபன். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விவேக்கும், கோகுல்நாத்தும் SOC பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் விவேக் அந்த விஷயத்தை கவனித்தான். காரைத் திறந்தவுடன் உள்ளே இருந்து ஒரு பெர்ஃபியூம் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது.

அனைத்து பூக்களையும் கொண்டு செய்த வாசமாக அது இருந்தது. மேலும் அங்கு கிடைத்த சேறு படிந்த பூட்ஸ் தடயங்கள் மிகவும் பெரிய அளவில் வித்தியாசமாக இருந்தது. கேஸ் இவ்வாறாக போய்க்கொண்டிருக்க, வேலைக்குச் சென்ற தன்னுடைய பெண் தேவியை நாலு நாட்களாக காணவில்லை என கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனிற்கு வருகிறார் ரிடையர்டு ஆர்மிமேன் ஜலபதிராவ்.

தேவி வேலை பார்த்துக்கொண்டிருந்த இடம், “கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனி. நேரடியாக விசாரணையை கம்பெனியில் ஆரம்பித்த விவேக், உரக்கிடங்கில் இருந்து ஒரு பெண்ணின் பர்ஸைக் கண்டுபிடிக்கிறான். அந்தப் பர்ஸ் தேவியுடையது என கண்டுபிடிக்கப்பட, மேற்கொண்டு போலீஸ் நாய் சீஸரை வரவழைத்து தேடலைத் தொடங்குகிறான் விவேக்.

சீஸர் பர்ஸை மோப்பம் பிடித்துவிட்டு காட்டுக்குள் ஓடி, ஒரு கட்டத்தில் ஓய்ந்து நிற்கிறது. அங்கே மண்ணில் காலால் பிராண்டி போலீசை அழைக்க, தோண்டிப் பார்த்தால் அழுகிய நிலையில் தேவியின் பிணம் கிடைக்கிறது.

தேவியின் கொலைக்கு பார்த்திபன் காரணமாக இருந்து, தேவிக்கு நெருக்கமானவர்கள் பார்த்திபனைக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் கேஸ் நகர்ந்துகொண்டிருக்க, ஜலபதிராவ் வீட்டிற்கு விசாரணைக்குச் செல்கிறான் விவேக். தேவியின் மரணத்தைப் பற்றித் துப்பு துலங்க அங்கே  சென்றவனுக்குக் காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

மாலைக்கண் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜலபதிராவ், கேன்சரால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவரின் மனைவி, மேலும் பித்துப் பிடித்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தேவியின் தங்கை அர்ச்சனா என குடும்பமே மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் பார்த்திபனுக்கு வந்த மாதிரியே இன்னொரு போன் கால் ஜீவாவிற்கு வர, அவனும் பயந்து போய் யாருக்கும் தெரியாமல் பணத்துடன் வெளியே செல்ல, இதைக் கண்டுபிடித்த மேகலா, விவேக்கிற்கு விஷயத்தைச் சொல்கிறாள்.

ஆனால் விவேக் செல்வதற்கு முன்னமே பார்த்திபன் கொலை செய்யப்பட்டதைப் போலவே ஜீவாவும் கொலை செய்யப்படுகிறான். மேலும் ஜீவாவின் காரிலும் அதே பெர்ஃபியூம் நறுமணம். அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் ஒரு லெட்டர் இருக்க, அதில் தேவியின் ஆவி என்ற பெயரில் கடிதம் ஓடியிருந்தது.

அடுத்தது நீ.. என தேவியின் ஆவி என்ற பெயரில் ஒரு லெட்டர் மேகலாவிற்கும் வந்திருக்க..

தேவியைக் கொலை செய்தது யார்..? தேவியின் ஆவி என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் கேஸை திசைதிருப்புவதற்காகவா..? போலீசிடம் இருந்து ஜலபதிராவ் மறைக்கும் உண்மை என்ன..? குற்றவாளி பிடிபட்டானா..? மேலும் தெரிந்துகொள்ள வாசியுங்கள் டிசம்பர் இரவுகள்..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=319

  •  

தீமையைச் சுடு – Crime Novel

ஆபிசில் இருந்து வீட்டிற்கு வந்த போலீஸ் கமிஷனர் கனகசபாபதி  அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தார். அன்று அவருடைய நெருங்கிய நண்பர் மைக்கேல்ராஜின் ஒரே பெண்ணான ஜெனிஃபருக்கு நிச்சயதார்த்தம்.

கனகசபாபதி, மனைவி சிவகாமி, மகன் பிரபு மற்றும் மருமகள் ப்ரியம்வதாவுடன் அனைவரும் குடும்பத்துடன் நேரத்திற்கு நிச்சயதார்த்த பங்க்ஷனுக்கு கிளம்பி காரில் ஏறிய நேரம் வீட்டில் தொலைபேசி அழைக்கிறது.

டெல்லியில் இருந்து கமிஷனரிடம் அவசரமாகப் பேச அழைப்பு வந்திருப்பதாக வேலைக்காரி வள்ளியம்மை கூற, கமிஷனர் காரில் இருந்து மீண்டும் வீட்டிற்குள் சென்று ரிசீவரை எடுக்கிறார். அதில் மர்ம நபர் ஒருவன் பேசுகிறான். டெல்லியில் இருந்து பேசுவதாகச் சொன்னால் தான் உடனே உங்களிடம் பேச முடியும் என்று பொய் சொன்னதாகச் சொன்ன அவன், சித்தர் பாடல் ஒன்றைப் பாடி விட்டு போனை வைத்துவிடுகிறான்.

ஒருவழியாக நிச்சயதார்த்தம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தது  கமிஷனர் குடும்பம். ஆனால் கமிஷனரின் மனதிலோ வீட்டிற்கு திரும்பும் வரையிலும் அந்த சித்தர் பாடலே ஒலித்துக் கொண்டிருந்தது. ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்ற எண்ணம் அவருக்கு வலுப்பட்டுக் கொண்டே இருக்க, நள்ளிரவில் அவருக்கு ஒரு போன் வருகிறது.

மைக்கேல்ராஜ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விஷயம் கனகசபாபதியை எட்ட அதிர்ந்தார் அவர். உடனே அனைவரும் குடும்பத்துடன் மைக்கேல்ராஜின் வீட்டிற்குச் செல்ல, அங்கே மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடக்கின்றனர்.

அதேசமயம்..

தஞ்சையை அடுத்த ராஜகம்பீரம் என்ற ஊருக்கு புகழ்பெற்ற நாடி ஜோதிடர் ஜலகண்டரைப் பார்ப்பதற்காக வெற்றிவேல் என்பவன் வருகிறான். அவனை குதிரை வண்டிக்காரன் பொன்னுசாமி ஜலகண்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வண்டியில் போகும் வழியில் வெற்றிவேலின் பிரச்சனைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

நாடி பிடித்து பார்த்து அவர்களுக்கேற்ற ஏடு எடுத்து பார்த்து, அதில் குறிப்பிட்டுள்ள சித்தர் பாடலை வைத்து, நமக்கான பரிகாரத்தை ஜலகண்டர் கண்டுபிடித்து சொல்வதாக நாடி ஜோதிடத்தின் பெருமைகளை வெற்றி வேலுக்கு எடுத்து சொல்கிறான் வண்டிக்காரன் பொன்னுசாமி.

வெற்றிவேலின் பிரச்சனைகளை ஜலகண்டர் அவனிடம் அப்படியே கூற, அசந்து போன அவன் அதை சரிசெய்ய பரிகாரம் கேட்க, ஏடு எடுக்க உள்ளே செல்கிறார் ஜலகண்டர். அதே சமயம் அவர் பின்னே சென்ற வெற்றிவேல் அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்கிறான்.

மைக்கேல்ராஜூம் அவன் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைத்த போலீஸ் கமிஷனர் கனகசபாபதி, கொலைக்கான மோட்டிவ்வை தேட யத்தனிக்கையில் மைக்கேல்ராஜ் எழுதியிருந்த கடிதம் கனகசபாபதியை வந்து சேர்கிறது.

அடுத்ததாக சம்பந்தமே இல்லாமல், புகழ்பெற்ற அமிர்தா குளிர்பான நிறுவனர் யோகானந்த் அவருடைய வீட்டு மொட்டைமாடியில் வைத்து கொலை செய்யப்படுகிறார். போலீஸ் விசாரணையில் மாதத்தில் இரண்டு முறையாவது நாடி ஜோதிடர் ஜலகண்டரை சந்திப்பதற்கு யோகானந்த் வருவது தெரிய வருகிறது.

மைக்கேல்ராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தின் தற்கொலையின் பின்னணி என்ன..? மைக்கேல்ராஜ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது என்ன..? வெற்றிவேல் யார்..? ஜலகண்டர், யோகானந்த் கொலைகளுக்கான மோட்டிவ் என்ன..? போனில் கமிஷனரிடம் சித்தர் பாடலைப் பாடியது யார்..? குற்றவாளி யார்..?

Casting : போலீஸ் கமிஷனர் கனகசபாபதி, மனைவி சிவகாமி, மகன் பிரபு, மருமகள் ப்ரியம்வதா, வேலைக்காரி வள்ளியம்மை, கனகசபாபதியின் நண்பன் மைக்கேல்ராஜ், மகள் ஜெனிஃபர், மர்ம நபர் வெற்றிவேல், குதிரை வண்டிக்காரன் பொன்னுசாமி, நாடி ஜோதிடர் ஜலகண்டர், அமிர்தா குளிர்பான ஓனர் யோகானந்த்.

  •  

ரோஜா முள் துரோகம் – Crime Novel

கல்யாண மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பித்த விஷயம் நீண்ட நேரத்திற்கு பிறகே அவளுடைய மாமா சிகாமணிக்கு தெரிய வந்தது. பெற்றோரை சிறு வயதிலேயே இழந்திருந்த வைஜெயந்தியை தாய்மாமா தான் வளர்த்து படிக்க வைத்திருந்தார். ஆனால், வைஜெயந்திக்கு அவர் பாத்திருந்த மாப்பிள்ளைக்கோ வயது நாப்பத்திரெண்டு.

புகழ்பெற்ற கம்பெனியில் ஜி.எம் ஆக இருந்த யதுநந்தன் தான் மாப்பிள்ளை. எப்பாடு பட்டாவது வைஜெயந்தியைத் திருமணம் செய்ய பிரம்மபிரயத்தனம் செய்து கொண்டிருந்த யதுநந்தன் போலீசிற்கு பணம் கொடுத்து அவளைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறார்.

அடுத்த நாள் காலை கல்யாணம் நடக்க இருந்த வேளையில், திட்டம் போட்டு வைஜெயந்தி நள்ளிரவு நேரத்தில் மண்டபத்தில் இருந்து தப்பிக்கிறாள். வைஜெயந்தி தப்பிக்க மாப்பிள்ளையின் வயது மட்டும் காரணம் இல்லை. அவள் ப்ரணேஷைக் காதலித்துக் கொண்டிருந்தாள்.

ப்ரணேஷ் – பணக்கார வீட்டு பையன், தாய் வள்ளியம்மைக்குத் தெரியாமல் தன்னுடைய காதலை வளர்த்து வருபவன். திட்டப்படி ப்ரணேஷின் நண்பன் பாண்டியுடன் மண்டபத்தில் இருந்து வைஜெயந்தி தப்பிக்க வேண்டியது. அதற்குப் பிறகு ப்ரணேஷும் வைஜெயந்தியும் கல்யாணம் செய்து கொள்வது.

எதிர்பாராத விதமாக, போலீஸ் விசாரணையில் வைஜெயந்தி மாருதி காரில் தப்பித்த விஷயம் தெரிய வருகிறது. மேற்கொண்டு விசாரித்ததில் ஒரு திடுக்கிடும் தகவல் போலீசிற்கு கிடைக்கிறது. வைஜெயந்தியைத் தான் காதலிப்பதாகச் சொல்லிய பாண்டி, மெக்கானிக்கல் ஷாப் நண்பனிடம் இருந்து, ஒரு காரை இரவல் வாங்கிச் சென்றதாக நண்பன் சொல்கிறான்.

இதற்கிடையில் ப்ரணேஷின் காதல் விஷயம் அவனுடைய அம்மா வள்ளியம்மைக்குத் தெரியவர, மேனேஜர் மற்றும் குடும்ப வக்கீலுடன் சேர்ந்து வைஜெயந்தியை விரட்ட திட்டம் போடுகின்றனர் மூவரும்.

யதுநந்தனிடம் பணத்தை வாங்கிய இன்ஸ்பெக்டர், பாண்டி வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றபோது அவனும் வைஜெயந்தியும் வீட்டில் இல்லை. மேற்கொண்டு போலீஸ் வீட்டை அலச, வைஜெயந்தி எழுதிய டைரி அங்கு கிடைக்கிறது. டைரி முழுக்க காதல் கவிதைகள்.

அந்த நள்ளிரவு நேரத்தில் அக்கம்பக்கத்து ஆட்களை எழுப்பி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, திடீரென இன்ஸ்பெக்டரின் பார்வை பாண்டி வீட்டு பரண் மேலே செல்ல, அதிர்ந்தார் அவர். அங்கு கொலுசு அணிந்த ஒரு பெண்ணின் கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

அதிர்ஷ்டவசமாக கொலை செய்யப்பட்டிருந்த பெண் வைஜெயந்தி இல்லை. வைஜெயந்தியின் காதலன் ப்ரணேஷிடம் போலீஸ் விசாரித்த போது, வைஜெயந்தியைக் கூட்டி வரும்படி அவன் தான் பாண்டியிடம் கூறியதாகவும், ஆனால் இதுவரை தன்னிடம் அவளை அழைத்து வரவில்லை எனவும், பாண்டி வீட்டு பரண் மேல் இறந்து கிடந்த பெண் வைஜெயந்தியின் தோழி மோகினி எனவும் ப்ரணேஷ் கூற..

பாண்டி எதற்காக வைஜெயந்தியைக் கடத்தினான்..? யதுநந்தன்-வைஜெயந்தி திருமணம் நடந்ததா..? வைஜெயந்தி காணாமல் போனதற்கு காரணம் ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மையா..? பரண் மேல் இறந்து கிடந்த மோகினியைக் கொலை செய்தது யார்..? வைஜெயந்தி உயிருடன் இருக்கிறாளா..?

விறுவிறுப்புடன் நகரும் அடுத்தடுத்த நிமிடங்கள்..இன்றே வாசியுங்கள் ரோஜா முள் துரோகம்.

Casting : வைஜெயந்தி, தாய்மாமா சிகாமணி, மாப்பிள்ளை யதுநந்தன், ப்ரணேஷ், பாண்டி, மோகினி, மெக்கானிக் ஜோசப், ப்ரணேஷின் அம்மா வள்ளியம்மை.

  •  

எனி டைம் MONEY மர்டர் – Crime Novel

போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து, கவசம் பத்திரிக்கையில் கடந்த வாரம் வெளிவந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்திருந்தார் ஏ.சி. டேனியல் மாணிக்கம். அவரது மிரட்டலைப் பொருட்படுத்தாத ஆடலரசும் அருணாவும் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறார் ஏ.சி டேனியல் மாணிக்கம்.

கவசம் பத்திரிக்கையைத் தரைமட்டம் ஆக்குவதற்காக எதிராளிகளிடம் காசு வாங்கிய உதவியாசிரியர் கமலப்பித்தன், யாரும் அறியாத நேரத்தில் பிரிண்டிங் அறையில் டைனமைட்டைப் பொறுத்துகிறார். கமலப்பித்தனின் உண்மையான ரூபத்தை அறியாமல் முக்கியஸ்தர் ஒருவரை பேட்டி எடுக்க வெளியில் அனுப்புகிறார் ஆடலரசு. இதை சாக்காக வைத்து வெளியில் இருந்து டைனமைட்டை இயக்க முடிவு செய்கிறார் கமலப்பித்தன்.

மறுபக்கம், மத்திய சிறைச்சாலையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலை அமோகமாக செய்து வருகிறார் மாஜி மந்திரி ராஜாங்கம். அவருக்கு பின்னணியில் உதவியாக ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் இன்பமணி, ஜெயிலர் உபயதுல்லா, வார்டன் சண்முகராஜன் மற்றும் சிறைத்துறை ஐ.ஜி ஈஸ்வர் உள்ளனர். மேலும் சிறையில் அவருக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றனர்.

ராஜாங்கத்தின் சுயரூபத்தை அறிந்த அருணா, அவரைப் பேட்டி எடுக்க வாய்ப்பு கேட்கிறாள். அவரோ பேட்டி கொடுக்க மறுப்பு தெரிவிக்க, சிறையில் அவருக்கு கிடைக்கும் ராஜபோக வாழ்க்கையைப் பற்றிக் கூறி பேட்டிக்கு அவரை சம்மதிக்க வைக்கிறாள் அருணா.

இதற்கிடையில் உபயதுல்லா – சண்முகராஜன் இருவரும் கைதிகளுடன் கல் குவாரிக்கு கைதிகளை வேலைக்கு அழைத்துச் செல்லும் சாக்கில் போதைப் பொருளைக் கடத்த, மறைந்திருந்து அவர்களை போட்டோ எடுக்கிறாள் அருணா. இதையறிந்த இருவரும் அவளைக் கொலை செய்து அங்கிருக்கும் கல் குழிக்குள் அருணாவைத் தள்ளுகின்றனர்.

அருணாவைத் தேடி அவளுடைய அண்ணன் விக்னேஷ், ஆடலரசுக்கு போன் செய்கிறான். அருணாவை முக்கியமான ஒரு வேலைக்கு அனுப்பியிருப்பதாக ஆடலரசு கூற, சமாதானமடைந்த அவன் அருணாவிற்காக காத்திருக்க ஆரம்பிக்கிறான். நேரம் நாட்களாக மாற ஆரம்பிக்க அருணா வீடு திரும்பவேயில்லை.

நிலைமை இவ்வாறிருக்க மாஜி மந்திரி ராஜாங்கம், ஏ.சி டேனியல் மாணிக்கம் என வரிசையாக ஒவ்வொருவராக இருதயத்தில் ஓட்டை போடப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அடுத்ததாக உபயதுல்லா & சண்முகராஜன் கொலை செய்யப்பட போவதாக மிரட்டல் கடிதம் வருகிறது.

கொலையாளி யார்..? டைனமைட் வைக்கப்பட்ட கவசம் பத்திரிக்கை அலுவலகத்தின் நிலை என்ன..? இருதயத்தில் ஓட்டை போட்டு கொலை செய்யப்பட காரணம் என்ன..? பரபரப்பு திருப்பங்களுடன் உங்களுக்காக காத்திருக்கிறது எனி டைம் மர்டர்.

One Minute One Book-இன் புதிய முயற்சியாக கதையில் வரும் கதாப்பாத்திரங்களைத் தனியாக கொடுத்துள்ளோம்.

Casting : கவசம் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடலரசு, உதவியாசிரியர் கமலப்பித்தன், பத்திரிக்கையின் சீஃப் ரிப்போர்ட்டர் அருணா, அருணாவின் அண்ணன் விக்னேஷ், அஸிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் டேனியல் மாணிக்கம், மத்திய சிறைச்சாலையின் ஜெயில் சூப்பரின்டெண்டெண்ட் இன்பமணி, ஜெயிலர் உபயதுல்லா, ஜெயில் வார்டன் சண்முகராஜன், மாஜி மந்திரி ராஜாங்கம், சிறைத்துறை ஐ.ஜி ஈஸ்வர்.

  •  

காகிதப் பூ தேன் – Crime Novel

வழுக்குப்பாறை கிராமத்தில் அரசாங்கத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்குகிறது மலைவாழ் மக்கள் கூட்டம். நாகரிக வாசனையே அறியாத மனிதர்களும், அங்கு நடக்கும் விசித்திர சடங்குகளும் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உண்டு. அவர்கள் எல்லைக்குள் அத்துமீறி உள்ளே வருபவர்களை அடித்துக் கொன்று விடுவர் அங்கு வாழும் மக்கள்.

இந்நிலையில் மலையின் உச்சியில் வாழும் அந்த மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் ஆராய்ச்சி செய்ய, சோசியாலஜி மாணவர்களைக் கொண்ட ஒரு குழு அங்கு வந்து சேர்கிறது. 12 மாணவ மாணவிகளைக் கொண்ட அந்தக் குழுவில் இந்தக் கதையின் கதாநாயகி அஜந்தாவும், கதாநாயகன் பாலமுரளியும் உள்ளனர்.

எதையுமே துணிச்சலுடன் எதிர்கொள்ளும் அஜந்தா அன்று இரவு அந்த மலை உச்சிக்குச் செல்ல முடிவு செய்கிறாள், உடன் பாலமுரளி. குழுவினர் யாரும் அறியாமல், இருவரும் மலையுச்சியை அடைந்து நேரில் கண்ட காட்சி அவர்களை அதிர வைத்தது. அங்கு சென்றதன் விளைவாக பாலமுரளிக்கு கண்பார்வை பறிபோகிறது.

அஜந்தா கட்டாயப்படுத்தியதால் தான் பாலமுரளிக்கு கண்பார்வை போன குற்றவுணர்ச்சியில் வாழ்க்கை முழுவதும் அவனுடன் வாழ முடிவெடுக்கிறாள் அவள். இதற்கிடையில் மருமகள் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார் அஜந்தாவின் அம்மா. அவளுடைய வாழ்க்கையின் அடுத்த திருப்பமாக, அஜந்தாவின் அண்ணன் வேலை பார்க்கும் கம்பெனியின் பாஸின் மகன் தினேஷ்குமார் அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். கோபத்துடன் திருமணப் பேச்சை முடித்து வைத்தவள், பாலமுரளியைக் காதலிப்பதை தினேஷிடம் தெரிவிக்கிறாள்.

பாலமுரளி கண்பார்வை இழந்ததால் திருமணத்தை மறுத்த போதும் அவனிடம் பேசி சமாளித்து ஒரு வழியாக இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். சென்னையில் இருந்த ஒரு கம்பெனி மூலமாக பம்பாயில் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் வேலை அஜந்தாவிற்கு கிடைக்கிறது. அந்த ஹோட்டலின் ஓனரின் உதவியால் தங்குவதற்கு வீடும் கிடைக்கிறது.

ஆனாலும் மனித நடமாட்டமே அதிகம் இல்லாத தெருவில் இருக்கும் அந்த வீட்டில் இருவரும் தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். ஹோட்டலில் வேலை செய்து கொண்டே பாலமுரளி கண்பார்வையைத் திரும்ப கொண்டு வருவதற்காக நிறைய முயற்சி செய்கிறாள் அஜந்தா.

இந்நிலையில் 2 லட்சம் ரூபாய் இருந்தால், பாலமுரளிக்கு பார்வை மீண்டும் கிடைத்துவிடும் என்று அறிந்த அஜந்தா பணத்திற்காக அவனுக்குத் தெரியாமல், ஹோட்டலில் கிளாசிக்கல் டான்ஸ் ஆட ஒப்புக்கொள்கிறாள். ஆனால் ஹோட்டல் ஓனரின் திட்டமோ?! வேறு மாதிரி இருக்க..

பாலமுரளிக்குப் பார்வை கிடைத்ததா..? அஜந்தாவிற்கு ஆபரேஷனுக்கான பணம் கிடைத்ததா..? மனித ஓநாய்களிடம் மாட்டிக்கொண்டிருந்த அஜந்தாவின் நிலை என்ன..?

want to buy : https://www.panuval.com/kaagitha-poo-thaen-10015552

  •  

அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரட்டும் !

      உயர்ரக கறுப்புத் தோலில் செய்யப்பட்ட, உயர்ந்த முதுகுச் சாய்மானம் உள்ள சுழல் நாற்காலி அது.  அதற்கு முன்னால்  நூற்றாண்டுப் பழமையான ஓக் மர மேஜை.  அதன் பெயர் புசானன் மேஜை.  இதுவரை 35 பேர் மட்டுமே அமர்ந்த நாற்காலி அது.  ‘அதில் உட்காருங்கள்.  அதிபரின் நாற்காலி தரும் உணர்வை உங்கள் எழுத்தில் கொண்டு வாருங்கள்’, என்கிறார் அதிபரின் பத்திரிக்கைச் செயலாளர் பியரி சாலிங்கர்.  அமெரிக்க அதிபரின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு.  எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத உயர்ந்த மரியாதை.  மோசிகீரனாருக்கு அடுத்தபடியாக அரசுக் கட்டிலில் அமர்ந்த அந்த ஒரே படைப்பாளி இர்விங் வாலஸ். கென்னடி கவரி வீசாமல் குட்டித் தூக்கம் போடப் போய்விட்டார்.

      வாலஸ் மெல்ல அமர்கிறார்.  எதிரே பிரும்மாண்டமான மேஜை.  அதில் வலதுபுறம் பெரிய மேஜைவிளக்கு.  அதிபரின் குடும்பப் படங்கள்.  ஒன்றிரண்டு சிறு நினைவுப்பரிசுகள்.  விளக்கிற்கு அருகே ஆறு புத்தகங்கள். அதில் ஒன்று அந்த அதிபர் எழுதியது.  மேஜையின் நடுவே ஹோட்டல் மெனு அட்டை போன்ற அட்டையில் அதிபரின் அன்றைய நிகழ்ச்சிகள்.

      பக்கத்தில் அவரது கையெழுத்திற்குக் காத்திருக்கும் கோப்புகள்.  எழுதுபலகை. இடதுபக்கம் ஒரு பச்சை தொலைபேசி.  அருகே இரண்டு  சாதா கறுப்பு தொலைபேசிகள்.  அதில் ஒன்றுதான் கதைகளில் அடிக்கடி சொல்லப்படும் ஹாட்லைன்.

      நாற்காலியை மெல்ல இடப்பக்கமாகச் சுற்றுகிறார் வாலஸ்.  அதிபரின் நிகழ்ச்சி நிரல் செயலாளரின் அறை தெரிகிறது.  பக்கத்தில் திறந்த கதவு. குறுக்கே சங்கிலி கட்டப்பட்டு, அதற்கப்பால் அதிபரின் மெய்க்காப்பாளர் வாலஸைப் பார்த்துக் கொண்டு டென்ஷனாக நிற்கிறார்.  இன்னும் திரும்பினால் கனல் அடுப்பு.  அதன் மேல் இரு கப்பல்களின் மாதிரி பொம்மைகள்.  ஒரு கடற்போர் சித்திரம்.  அமெரிக்க போன்ஹோம் கப்பலும், பிரிட்டனின் செராபிஸ் கப்பலும் போரிடும் காட்சி.  அருகில் சின்னதாக அதிபரின் அந்தரங்கச் செயலாளரின் அலுவலகம்.  இன்னும் சற்றுத் திரும்பினால் மூன்று பெரும் பிரஞ்சுக் கதவுகளின் வழியே ரோஸ் தோட்டம் தெரிகிறது.

      நாற்காலிக்கு நேர் பின்னால் பெரும் மேஜை ஒன்றில் ஏழெட்டு நாளிதழ்கள், ஒரு டிக்டாஃபோன். மேஜைக்கு ஒருபுறம் அமெரிக்கக் கொடி. மறுபுறம் அதிபரின் கொடி.  அதன் பின்னால் மூன்று பெரும் ஜன்னல்கள்.  வெளியே பாதுகாவலர்கள்.  நிற்கும் அறை.  அதைத் தாண்டி ஐசனோவர் உருவாக்கிய தென்பகுதித் தோட்டம்.  அதில் அதிபரின் சிறுகுழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  நாற்காலி ஒரு சுற்று முடித்து நேராகிவிட்டது.

      ஒரு அசாதாரண விபத்தில், அதிபர் பதவிக்கு அடுத்தடுத்து யார் வரலாம் என்பதைக் கூறும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு வினோதமான ஷரத்தால், ஒரு எளிய கறுப்பினத்தவர் அதிபராகி விட்டால்?  அதை அமெரிக்க சமூகம், அதன் வெள்ளை மேட்டுக்குடி எப்படி ஏற்றுக் கொள்ளும்? அந்தக் கறுப்பு மனிதனுக்கு என்னென்ன சோதனைகள், வேதனைகள் வரும்? என்று யோசித்து, ஒரு நாவல் எழுத வாலஸ் முடிவு செய்ததன் பின்னணியில்தான் மேற்படி சம்பவம்.  அந்த நாள் 1963 செப்டம்பர் 16.

      அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், அங்கு கறுப்பர்களின் நிலை பற்றி ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்துவிட்டு, வெள்ளை மாளிகை ஆய்வுக்காக வந்த வாலஸின் அனுபவம்தான் இது.  இன்றும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் ‘தி மேன்’ என்ற அற்புதமான, அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய அந்த நாவலை எழுதும்போது, வாலஸ் வெள்ளை மாளிகையை கூட்டத்தோடு கூட்டமாக ஒரு பார்வையாளனாகச் சென்று பார்ப்பதை விரும்பவில்லை. தனது சொந்த அலுவலகத்தில் ஒரு அதிபர் எப்படி உணர்வார் என்ற அனுபவத்தைப் பெற விரும்பினார்.  பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தயங்கினார்கள்.  ஆனால் அதிபர் கென்னடி, மதியம் நான் குட்டித்தூக்கம் போடும் நேரம் என் அலுவலகம் காலியாகத்தானே இருக்கும், வாலஸ் அந்த நேரத்தில் என் நாற்காலியில் அமர்ந்து அதிபராக உணர்ந்து எழுதட்டும் என்றார்.  நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் வண்டு முருகனின் நாற்காலியில் உட்காரவாவது அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ள நிலையில் இது எத்தனை பெரிய ஆச்சரியம் !

      மற்றொரு ஆச்சரியமும் இருக்கிறது.  தனது கதாநாயகன் அதிபராகப் பதவியேற்கும்போது சொல்லப் போகும் பைபிள் வாசகத்தை, அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த மேஜையில் வைத்து மனதுக்குள் முடிவு செய்கிறார் வாலஸ்.  ‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா ;  கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா’ (சங்கீதம் 127 :1 , 2).

      நேரம் முடிந்துவிட்டது.  அதிபர் அலுவலக அறையிலிருந்து கீழே இறங்கும் மாடிப்படிகளை எண்ணியவாறு இறங்குகிறார் வாலஸ்.  உங்கள் நாவலில் உங்கள் வர்ணிப்புகளை எல்லாம் நாங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். உங்கள் நாவலைப் படித்து அலுவலக அமைப்பைத் தெரிந்து கொண்டு அவரைக் கொல்ல யாரும்   நுழைந்து விடாமல் இருக்க வேண்டும் என்கிறார் பாதுகாப்பு அதிகாரி சிரித்தபடி.  ஆனால் சம்பவம் வேறு இடத்தில் நடந்து விட்டது!

      நாவல் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, ஒன்பது வாரத்தில், 1963 நவம்பர் 22 அன்று கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார். வேதனையோடு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் வாலஸ்.  டல்லஸ் சிடிசன் கவுன்சிலில் கென்னடி பேச இருந்த, அவரது  கடைசி உரையை செய்தியாளர் வாசித்துக் கொண்டிருக்கிறார்.  கென்னடியின் வாசிக்கப்படாத அந்த உரை, ‘கர்த்தர் நகரத்தைக் காவாராகில், காவலாளர் விழித்திருக்கிறது விருதா’, என்ற பைபிள் வாசகத்தோடு முடிகிறது.  வாலஸுக்கு புல்லரித்துப் போகிறது.

      நாவல் வெளியாகிவிட்டது.  வாலஸுக்கு சர்வதேச அளவில் புகழ் சேர்க்கிறது.  கென்னடியின் முதலாண்டு நினைவு நாள் வருகிறது. தாம் கென்னடியின் நாற்காலியில் அமர்ந்த அனுபவத்தை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புகிறார் வாலஸ்.  பத்திரிகைகளின் மேட்டுக்குடி முதலாளிகள் அதை நிராகரிக்கிறார்கள். கதையில் கூட ஒரு கறுப்பினத்தவன் அதிபராவதை விரும்பாத அமெரிக்க இனவெறி முதலாளித்துவப் பத்திரிகைகள், அந்த  நாவலை எழுதிய வாலஸை மௌனமாகப் புறக்கணித்தார்கள்.

      பல வருடங்கள் கழித்து இர்விங் வாலஸ் ‘தி சண்டே ஜெண்டில்மேன்’ என்ற தமது கட்டுரை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில் தமது கென்னடி நாற்காலி கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார்.  அதிபரின் நாற்காலியில் தாம் அமர்ந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை மிக அருமையாகப் பதிவு செய்யும் இர்விங் வாலஸ் கட்டுரையை, ‘ மிகவும் சக்தி வாய்ந்த அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரவேண்டும்’, என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறார். அதைப் படித்த போது,

      ஒரு தட்டில்

      பழங்களும், பிரார்த்தனைகளும்

      வைக்கப்பட்டன.

      பழத்தைத் தின்றார் கடவுள்.

      பழுக்கட்டும் என்று

      விட்டு வைத்தார்

      பிரார்த்தனைகளை.

என்ற சுந்தர்ஜியின் கவிதை நினைவிற்கு வந்தது.  ஐம்பது வருடங்களாகப் பழுக்காத பிரார்த்தனை !

பின்னி​ணைப்பு

இது ஒரு நாள் சம்பவமல்ல.  பத்து நாட்கள் இது​போல் தினமும் மதியம் 2.30லிருந்து 4.30 வ​ரை ​கென்னடி ஓய்​வெடுக்கும் ​போது அவரது அலுவலக அ​றையில் இது ​போல் சுற்றித் திரிந்து ‘அதிபராக’ உணர்ந்திருக்கிறார் இர்விங் வாலஸ்.

இர்விங் வாலஸின் பு​னைவுக​ளைப் ​போல​வே அவரது கட்டு​ரை நூல்களும் மிகமிக முக்கியமான​வை.  இக்க​ட்டு​ரை அவரது சண்​டே ​ஜெண்டில்​மேன் என்ற கட்டு​ரைத் ​தொகுப்பிலிருக்கிறது – ஆம், ​வே​றெரு கட்டு​ரையில் நாம் ஏற்கன​வே பார்த்தது ​போல அவர் ஞாயிற்றுக்கிழ​மைக் கனவானாகத் திரிந்த காலத்தில் எழுதிய கட்டு​ரைகளின் ​தொகுப்பு அது.  1965ல் ​வெளிவந்த இந்தத் ​தொகுப்பில் அவர் அ​மெரிக்கா ​தொடர்பாக எழுதிய​வை, ​வெளிநாடு ​சென்று பார்த்த​தை எழுதிய​வை என இரு ​பெரும் பிரிவாகத் தந்திருக்கிறார்.  இந்தக் கட்டு​ரை மட்டும் the sunday gentleman on monday என்று தனியாக தரப்பட்டிருக்கும். Two nice old ladies என்ற சிகா​கோவின் புகழ் ​பெற்ற எவர்​​லே விடுதி​யை நடத்திய ​இரு பெண்கள் பற்றிய கட்டு​ரை பின்னாளில் the golden room என்ற நாவலுக்கு அடித்தளமானது.

இந்த the sunday gentlemanல் வாலஸ் எழுதியிருக்கும் முன்னு​ரை மிகமிக முக்கியமானது.  புகழ்​பெற்ற எழுத்தாளராவதற்கான அவரது உ​ழைப்​பைப் ​போகிற​போக்கில் ​சொல்வார்.  பத்திரி​கைகளில் ​வே​லை பார்த்துக் ​கொண்டு முதலாளி ​சொன்ன​தை எழுதிக் ​கொண்​டே ஞாயிற்றுக்கிழ​மைகளில் அவர் எழுதிய கட்டு​ரைகள், நாவல்கள் உடனடியான அங்கீகாரம் ​பெற்றுவிடவில்​லை.  அவரது புகழ் ​பெற்ற ப​டைப்புகளின் எண்ணிக்​கைக்கு சமமாக அவரது நிராகரிக்கப்பட்ட ப​டைப்புகளும் உண்டு. அவர் ​சொல்வ​தை அப்படி​யே தருகி​றேன் – பாருங்கள்.

என் பதி​னேழாவது வயதில் நான் மிகவும் மதித்த ஐந்து ஆளு​மைகள் பற்றி ( இதில் கிளாரன்ஸ் டா​ரோவும், வால்டர் ரீடும் உண்டு) ஹீ​ரோஸ் ஆஃப் டு​டே என்று ஒரு நூல் எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பதி​​​னெட்டாவது வயதில் மக்களின் ​பொதுவான மூடநம்பிக்​கைக​ளை ​வைத்து, ஸாரி யு ஆர் ராங் என்று ஒன்று எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பத்​தொன்பதாம் வயதில் ​ஹோண்டூராஸ் காடுகளில் நான் ​மேற்​கொண்ட சாகசப் பயணம் பற்றி ​​மை அட்​வென்சர் டி​ரெய்ல் என்று ஒன்று எழுதி​னேன்.  நிராகரிப்பு.  ​டேனியல் ​டெஃ​போவின் வாழ்க்​கை வரலாற்​றை தி சண்​டே ​ஜென்டில்​மேன் ( அதுதான் ஒரிஜினல் ​போலும்!) என்று இருபதாவது வயதில் எழுதி, அதுவும் நிராகரிக்ப்பட்டது.  இருபத்தியிரண்டாவது வயதில் முதல் பன்னிரண்டு சீசர்களின் வாழ்க்​கை வரலாற்​றை ​ரோமன் ஹாலி​டே என்று ஆரம்பித்து பாதி எழுதி நா​னே நிறுத்திவிட்​டேன்.  அப்​போது பல பத்திரி​கைகளிலும் பிரசுரமாகி இருந்த பல கட்டு​ரைக​ளை திருத்தி எழுதி புத்தகமாகத் ​தொகுத்​தேன்.  அது பிரசுரமாகவில்​லை.  இருபத்தி ஐந்தாம் வயதில் தனகா நி​னைவுச் சின்னம் பற்றி ஜப்பான்ஸ் ​மெய்ன் காம்ஃப் ​என்று ஒன்​றை எழுதி​னேன்.  நிராகரிப்புதான்.   இருபத்தி​யேழாவது வயதில் நான் ​பத்திரி​கை வாழ்வில் பேட்டி கண்ட ஆளு​மைக​ளைப் பற்றி வித் ​​தெயர் ​பேண்ட்ஸ் டவுண் என்று ஒரு நூல்.  பிறகு ​கேப்ரியல் என்று ஒரு நாவலுக்கு முதல் இரண்டு அத்தியாயங்கள். இந்தக் காலகட்டத்தி​லே​யே அ​ரைடஜன் நாவல்களுக்கு ஓரிரு அத்தியாயங்கள். எல்லாம் ​தோல்விதான். முப்பத்தி​யேழாவது வயதில் பத்திரி​​கை ​வே​லை​யை விட்டுவிட்டு சீரியஸாக முழு​நேர எழுத்தாளனாக உட்கார்ந்து எழுதிய​போதுதான் முதல் புத்தகம் வந்தது.

பிரசுரமாகாத இந்த நூல்க​ளை யாராவது ​தேடி எடுத்துப் பிரசுரித்தால் எப்படி இருக்கும்! ஆனால் என்​றேனும் ஒரு நாள் அ​வை பிரசுரமாகும் என்ற நம்பிக்​கை எனக்கு இருக்கிறது.

எப்படி எழுத​வேண்டும் என்ப​தை மட்டுமல்ல, எப்படி விடாமுயற்சி​யோடு எழுத​​வேண்டும் என்ப​தையும் நாம் இர்விங் வாலஸிடம் ​சேர்த்துக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

  •