தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6

இத்தொடரின் ஆதாரக் கேள்வி, எந்த உள்ளிடு முறை சிறந்தது என்பதே. ஆரம்பத்திலேயே, தமிழின் இயல்பை உணர்ந்த நுண்ணறிவுடன், பிழைகள் தவிர்க்கும்படியாக இருப்பதையும் ஒரு கூறாகக் குறிப்பிட்டிருந்தோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கொக்கிகள், உயிரெழுத்தின் மேல் புள்ளி (கிிி ஈ்) போன்ற பொருளற்ற சொற்களைத் தட்டெழுத அனுமதிக்காதவாறு உள்ளிடு முறையை அமைக்க முடியும். முரசு அஞ்சல், தமிழ்99 உள்ளிடு முறைகள் இம்மாதிரி தவறாகத் தட்டெழுத அனுமதிப்பதில்லை. தமிழுக்கான மென்பொருள் உருவாக்குவோர் தமிழராகவேதான் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் தமிழின் தனித்தன்மைகளையும் இயல்புகளையும் அறிந்தவராக இருத்தல் அவசியம். எழுத்துரு வல்லுநரும், செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனருமான முத்து நெடுமாறன், இதை இயற்கை நுண்ணறிவு, லேங்குவேஜ் அவேர்னஸ் என்று குறிப்பிடுகிறார். எழுத்துரு, உள்ளிடு முறை உருவாக்கிய பல்லாண்டு கால அனுபவம் மட்டுமின்றி தமிழை ஆழமாக ஆய்ந்து உள்வாங்கிக் கொள்வதால் ஒருவருக்குக் கிடைக்கும் அறிவு இது.
மேலே குறிப்பிட்டபடி வெளிப்படையாகத் தெரியும் தவறு கூடப் பரவாயில்லை. கண்ணில் பார்க்கும் போதும் சரி, தேடுபொறிக்கும் சரி, பொருளற்ற ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி அல்லாத பிழைகளையும் சில உள்ளிடு முறைகள் செய்கின்றன. கொற்றவை என்ற சொல்லின் முதல் எழுத்தை, பொதுவாக க ெ ா வரிசையில் தட்டெழுதுவோம். இவ்வரிசையை மாற்றி கா எழுதி ெ சேர்த்து கூகுள் உள்ளிடு முறையில் எழுதினாலும் திரையில் சரியாகக் காட்டும். இந்தத் திருத்தத்தால் பத்து காசுக்குப் பயன் இல்லை. ஏனெனில் ஆண்டிராய்டு கருவிகளில் சரியாக இருப்பது போலத் தோன்றும் இச்சொல், ஐஓஎஸ், மேக் கணினிகளில் தவறாகத்தான் காட்டும். அட, கூகுள் தேடுபொறியிலும் இது தவறான சொல்லாகவே கருதப்படும். ஆனால் பார்வைக்கு மட்டும் சரியாக இருக்கும். இதன் காரணமாகத் தரவுகளில் பெருமளவு பிழைகளை நமக்குத் தெரியாமலே செய்கிறோம். நாம் உருவாக்கும் தரவுகளைப் படித்து அறிவை வளர்க்கும் பெரிய மொழி மாதிரிகளுக்குச் சரியான தரவுகள் இருப்பது அவசியம். செயற்கை நுண்ணறிவு நுட்பத்துக்குத் தவறாகப் பாடம் புகட்டுகிறோம்.
முரசு அஞ்சல், தமிழ்99 பயன்படுத்துவதில் உள்ள கூடுதல் அனுகூலம் என்னவெனில் இதற்காக, கணினியிலோ, திறன்பேசியிலோ எவ்வகையான டிஜிட்டல் கருவிகளிலோ எழுத எந்தச் செயலியையும் நாம் நிறுவவேண்டியதில்லை. மேக், விண்டோஸ், ஆண்டிராய்டு, ஐஓஎஸ், போன்ற அனைத்து இயங்குதளங்களிலும் இயல்புநிலையிலேயே இவ்விரண்டு உள்ளிடு முறையும் இருக்கின்றன. லினக்ஸிலும் இயங்கும். எனவே, இரண்டில் நமக்கு வசதியான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் போதும்.
அப்படி என்றால் அனைவரும் முரசு அஞ்சல் அல்லது தமிழ்99 கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டுமா? அவசியம் இல்லை. நெடுங்காலம் பழகிய ஒன்றில் இருந்து புதிதாக ஒன்றுக்கு மாறுவது நமது வேலையின் வேகத்தையும் தரத்தையும் குறைக்கும் எனில் அதைச் செய்ய வேண்டாம். புதிதாகக் கற்றுக்கொள்வோர், இருப்பது சரியாக இல்லை என்று உணர்வோர் மட்டும் எதைத் தேர்ந்தெடுப்பது எனச் சிந்தித்தால் போதும்.
இரண்டில் எது என்றால், தனிப்பட்ட நபர்களைப் பொறுத்து அது மாறும் என்கிறார் முத்து நெடுமாறன்.
“இரண்டு உள்ளிடு முறையும் வெவ்வேறு வகையான பயனர்களை மனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை. அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிகம் உள்ள அயல்நாடுவாழ் தமிழர்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் ஆங்கிலவழிக் கல்வியில் படித்தவர்கள், ஆங்கிலத்தோடு அதிகம் புழங்கும் வேலையில் இருப்பவர்கள், ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தித் தமிழில் எழுதுவதை எளிமையாகக் கருதுபவர்களுக்கு அஞ்சல் எளிதாக இருக்கிறது. எனவே விரைவாகவும் தட்டெழுத முடிகிறது.
ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் படித்தாலும் தமிழில் அதிகம் பேசி தமிழிலேயே சிந்திக்கும் ஒருவருக்கு இம்முறை சவாலானதாக இருக்கும். சிக்கலானதும் கூட. அவர்களுக்கு தமிழ்99 உள்ளிடு முறையே சிறந்தது. எளிதாகவும் விரைவாகவும் இம்முறையில் அவர்களால் தட்டெழுத இயலும். ஒருவேளை தமிழ் தட்டச்சு முறையைப் பயின்று அதைப் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தி வருபவர் எனில் புதிதாக மாற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எதற்குப் பழகியிருந்தாலும் அதை அப்படியே தொடரலாம். ஆனால் புதிதாகக் கற்றுக்கொள்வோர், முரசு அஞ்சல் அல்லது தமிழ்99, இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்வதே நன்று.” என்பது அவர் கருத்து.
அவர் குறிப்பிட்டுள்ள இரண்டு மட்டுமின்றி, பிழைகள் தவிர்க்கும் நுண்ணறிவுடன் உருவாகும் எந்த உள்ளிடு முறையைப் பின்பற்றினாலும் வரவேற்கத்தக்கதே.
இறுதியாக ஒன்று. பெருநிறுவனங்கள், தங்கள் உள்ளிடு முறைகளில் இருக்கும் குறைகளை நீக்கி, தமிழ்99 அல்லது முரசு அஞ்சலில் இருக்கும் மாற்றங்களைப் பின்பற்றுவதும் அவசியம். அவர்களுக்குத் தெரியாது என்பதால்தான் பிழையுடன் வெளியிடுகிறார்களே ஒழியே வேண்டும் என்றே செய்வதில்லை. கூகுள், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்கள், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கின்றன. நாம் கேட்பதில்லை. திரளாக யாரும் கேட்கவில்லை என்றால் அந்தத் தவறுடனே அப்படியே இருக்கிறது.
வல்லுநர்கள் இம்மாதிரி பிழைகளைச் சுட்டிக்காட்டிப் பெருநிறுவனங்களைத் திருத்திக் கொள்ள வலியுறுத்துகிறார்கள். ஆனால் பொதுமக்களும் விழிப்புணர்வு பெற்று உரக்கக் குரல் எழுப்பினால் ஒழிய பெருநிறுவனங்களில் காதுகளில் விழாது. தமிழ்ப்பற்றை சங்கப்பாடலோடு நிறுத்திக் கொள்ளலாகாது. நவீன தொழில்நுட்பங்களிலும் சரியாக வரும்படி கண்காணிப்பதும் நமது கடமையே.
(முற்றும்)
தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 1
தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 2
தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 3
The post தட்டித் தட்டித் தமிழ் வளர்ப்போம் 6 appeared first on செல்லினம்.