Reading view

தொல்லை இல்லை

Do Not Disturb

திறன் பேசிகளில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் தொல்லை தாராதீர் (DND – Do Not Disturb) அம்சத்தை, மீண்டும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை கூகுள் மேற்கொண்டுள்ளது. அதன் விரிவாக்க முயற்சிக்கு பயனர்களின் கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Do Not Disturb

என்னதான் ஆச்சு? 

‘தொந்தரவு செய்யாதே’ என்ற நேரடி மொழியாக்கம் கொண்ட ‘டு நாட் டிஸ்டர்ப்’ அம்சம், திறன்பேசிகளில் வரும் அழைப்புகள், செய்திகள் மற்றும் தகவல்களின் ஒலி அமைப்பைத் தானாகக் குறைத்து, அமைதியான சூழலை உருவாக்குகிறது. அன்றாடம் திறன்பேசிகளில் வந்து குவியும் நூற்றுக் கணக்கான தகவல் அறிவிப்புகளால் தொல்லை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இவ்வம்சம் வரமாகச் செயல்படுகிறது. விமானப்பயன்முறை (Airplane mode), அறிவிக்கைகளை (Notifications) அணைத்து வைப்பது, திறன்பேசியை அமைதியான நிலையில் வைப்பது (Silent mode) போன்ற வழக்கமான வழிகள் இதற்கு இருந்தாலும், தொல்லை தராதீர் (DND) என்பது எளிதில் உதவும் கண்கண்ட மருந்தாக அமைகிறது. வாகனம் ஓட்டுபவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் இவ்வம்சம், ஒரே தொடுதலில் பயனளித்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இவ்வம்சத்தை விரிவாக்க முயன்ற ஆண்டிராய்டு, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மோட்ஸ் (Modes) என்ற புதிய தொகுப்பைக் கொண்டு வந்தது. பொதுவாக அமைப்புகள் பகுதியில் ஒரே தொடுதலில் இயக்கக் கூடியதாக இருக்கும். அதில் தொல்லை தராதீர் அம்சத்தை, ஆண்டிராய்டு 15 இயங்குதளங்களில் மோட்ஸ் என்ற தொகுப்புக்குள் கொண்டு வந்தனர். இதன் மூலம் பொதுவாக இருந்த இந்த அம்சத்தை,  வாகனம் ஓட்டுதல், தூக்கம், பணிச்சூழல் எனப் பல செயல்பாடுகளுக்கு தனிப்பயனாக்கும் வசதி உருவாக்கப்பட்டது.

சிக்கல் வந்தது

ஆண்டிராய்டு 15 மேம்படுத்தலைப் பயன்படுத்திய பயனர்களிடமிருந்து இந்தப் புதிய மாற்றம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கு முன்னர் ஒரே தொடுதலில் இயக்கும் வகையில் விரைவுச் சுட்டியாக இருந்த தொல்லை தராதீர் அம்சம், மோட்ஸ் என்ற தொகுப்புக்குள் வைக்கப்பட்டது. இதனால், இவ்வசதியை அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு இதை இயக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படிகள் தேவைப்பட்டன. இது கடினமாக இருப்பதாக பயனர்கள் தெரிவித்தனர். பலரிடமிருந்தும் இதே வகையான புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் கூகுள் நிறுவனம் தொல்லை தராதீர் அம்சத்தைப் பழைய நிலைக்கு மாற்றும் முடிவுக்கு வந்துள்ளது. 

மீண்டும் எளிமையாகிறது

ஆண்டிராய்டு 16 மேம்படுத்தலின் பீட்டா பதிப்புகளில், தொல்லை தராதீரு் அம்சத்தைப் பழைய படி விரைவுச் சுட்டியாக அமைத்து கூகுள் சோதித்து வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்ஸ் அம்சத்துடன் சேர்த்து பொதுவானதொரு தொல்லை தராதீர் அம்சத்தை விரைவுச் சுட்டியாக வைக்கும் முயற்சி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பயனர்கள், புதிய விரைவுச்சுட்டியை, தற்போதைய மோட்ஸ் விரைவுச்சுட்டியுடன் சேர்த்தோ தனியாகவோ இயக்க முடியும். முன்னோட்ட நிலையில் உள்ள இந்த வசதி, விரைவில் ஆண்டிராய்டு 16 இன் முதன்மை வெளியீட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், கூகுள், பயனர்களின் பின்னூட்டங்களை கவனித்து, தொல்லை தராதீர் விரைவுச்சுட்டியை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், பயன்பாட்டை எளிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த மாற்றம், ஆண்டிராய்டு பயனர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • விவேக்பாரதி

கூகுள் மோட்ஸ் பற்றிய செய்தி

டிஎண்டியின் புதிய மாற்றம் பற்றிய செய்தி

The post தொல்லை இல்லை appeared first on செல்லினம்.

  •