தனலெட்சுமியின் இரு கவிதை நூல்கள்:
ஆசிரியர் குறிப்பு:
திருச்சியைச் சேர்ந்தவர். கவிஞர். மேடைப் பேச்சாளர். இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ‘பெருவெளி கடக்கும் சிறு துளி’ And ‘சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்’
ஆகிய இருநூல்களிலிருந்து கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன.
என்னுடன் பழகியவர்கள் பொதுவாகச் சொல்வது ‘ உங்களுக்குப் பொறுமை அதிகம்’. அதையே தனலட்சுமியைப் பார்த்து என்றாவது நான் நேரில் சொல்ல வேண்டும்.
ஒரு பெண் சமீபத்தில் கூறினார் ‘ உங்களுடன் பேசுகையில் எங்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதேயில்லை’. ஒருவேளை புத்திசாலித்தனமாக நான் கத்தியை மறைத்து வைத்திருக்கலாம்.
” பதில்தரும் உன் வார்த்தைகளில்
பாசம் கூடுவதை உணர்கிறேன்
பதற்றத்தோடு சேர்ந்து கொள்ளும்
எச்சரிக்கை என்னுள் புகுந்துவிட
முன்பிருந்த இயல்பை இழக்கிறேன்
அதற்குப் பின்னான பேச்சுகளில்”
நெருக்கமானவர் மரித்த பின்னும் அவர்கள் எண்ணை, சமூக ஊடகத் தொடர்பை அழிப்பது அவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று நம்மில் பலர் நம்புவதால் தான் மழையே பெய்கிறது.
“உறவுகள் நட்புகள் எண்களாய்
அடுக்கப்பட்ட அலைபேசியில்
மரித்தோரின் தொடர்புகள்
அறுபடாத சங்கிலிகளாய்
சரம் கோர்த்து நிற்கும்
நீக்கு என்ற பொத்தானை
அறவே தவிர்க்கும் விரல்
நீக்கினால் வலிக்குமென்று
சுழற்றுகிறேன் அவ்வப்போது”
சிறுதுளி தொகுப்பில் மூன்று வரிகளில் முடிக்க வேண்டிய அவசரத்திலும் பளிச்சென்று வந்திருக்கின்றன பல.
” பேச முடியாத பொம்மையிடம்
கேட்க நிறைய இருக்கிறது
குழந்தைகட்கு”
” எவருமில்லை நூலகத்தில்
புத்தகத்தைப் புரட்டியது
காற்று”
” கோர்த்த கொலுசுமணி
கொடிக்கம்பியில் அணிவகுப்பு
மழைத்துளி”
“உறங்கும் தறியில்
நெய்கிறது சிலந்தி
வலையை”
சிறுதுளித் தொகுப்பில் ஒன்றைச் சொல்லி உள்ளர்த்தமாய் மற்றொன்றைச் சொல்லும் கவிதைகள் பல வந்திருக்கின்றன.
எளிமையான கவிதைகள். எளிமையான Presentation. அசாத்தியமான உற்சாகம். இவையே இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளை வாசித்த உடனேயே மனதில் தோன்றியது.
நீள் கவிதைகளை விட சிறுதுளி சிறப்பாக வந்துள்ளதாக நினைக்கிறேன். காரணம், கடைசியாக வந்த தொகுப்பு என்பதை விட வடிவம் இவர் அகத்திற்கு நெருங்கியது என்று கருதுகிறேன்.
கவிதைகளில் நல்லாள்,இல்லாள் போன்ற சொற்கள் கவிதைத் தன்மையைக் கூட்டுவதான நம்பிக்கையை தனலெட்சுமி அவசரமாகக் கைவிட வேண்டும். சிறு துளிகளில் வார்த்தைகளை விடக் கற்பனைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததாலேயே அவை கூர்மையாக வந்திருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வாசியுங்கள். இலக்கியத்தோடு எப்போதும் பயணியுங்கள். உங்கள் பொறுமையைச் சோதிப்பவர்களையேனும் சின்னதாகக் கடிந்து கொள்ளுங்கள்.
சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்
மலர்க்கண்ணன் பதிப்பகம்
73055 00990
முதல்பதிப்பு ஏப்ரல் 2021
விலை ரூ.110.
பெருவெளிகடக்கும் சிறுதுளி
வாலி பதிப்பகம் 99405 08595
முதல்பதிப்பு நவம்பர் 2021
விலை ரூ.100.