Reading view

அச்சிலிருந்து திரைக்கு - தியடோர் பாஸ்கரன்

ஜெயகாந்தனின் திரை உலகம்

பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு அரசியலுடன் சினிமா பிணைந்திருக்கும் தமிழ்ச் சூழலில், இடதுசாரி தரப்பிலிருந்து சில தற்காலிக இடையீடுகள் நடந்துள்ளன. அவற்றுள் ஜெயகாந்தனின் முயற்சிகள் நாம் கவனிக்கவேண்டிய தகுதிவாய்ந்தவை. அதிக தாக்கத்தை உண்டாக்கிய அவரது விரிவான இலக்கியப் படைப்புகளின் வெளிச்சத்தால், தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு பலசமயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. தமிழ் சினிமாவுக்கும் வெள்ளித் திரைக்குமான அர்த்தப்பூர்வ உரையாடலை தொடங்கி வைத்ததே அவர்தான். அவ்வப்போது நிகழும் சில தெறிப்புகளை தவிர அவ்வுரையாடல் தொடர்ந்து நிகழவில்லை என்பது வேறு விஷயம். அவருடைய பல கதைகள் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில், தன் சொந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு, அவர் இயக்கிய இரு படங்களுமே தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கியமானவை. 1965 இல் அவர் உருவாக்கிய உன்னைப் போல் ஒருவன், பின்னர் அடுத்த வருடமே அவர் இயக்கிய யாருக்காக அழுதான் (1966) ஆகிய படங்கள், ஒரு எழுத்தாளர் தன் சொந்த இலக்கிய ஆக்கங்களை தானே படமாக்கிய அரிய நிகழ்வுகளுள் முக்கியமானவை.

  •