ஒரு நாள் சின்னு நாய்க்குட்டிக்கும்
நாய்க்குட்டி பூனைக்குட்டிக்கும்பூனைக்குட்டி காக்காவுக்கும் காக்கா கல்யாணிப்பசுவுக்கும் தலையில் பேன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது,
“ கதைப்பாட்டி! கதைப்பாட்டி! ” என்று அழைத்தபடி
சூசனா என்ற ஆட்டுக்குட்டி ஓடி வந்தது. நல்ல உச்சிப்பொழுது. கதைப்பாட்டி துள்ளி
எழுந்தார்.
“ என்னாச்சு சூசனா..” என்று கதைப்பாட்டி
பரபரப்புடன் கேட்டார். நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் காக்காவும் சூசனாவைச்
சுற்றி நின்றார்கள். சூசனா மூச்சிரைத்தபடி,
“ நான் சிங்கத்தின் வாயிலிருந்து
கஷ்டப்பட்டு தப்பித்து வருகிறேன்..”
என்றது.
“” நீ எப்படி சிங்கத்தின் வாயில் போய்
விழப்போனே? “ என்று பூனைக்குட்டி கேட்டது.
“ நானாய் போய் விழலை.. ஆல்பெர்ட் எல்லா
ஆடுகளையும் ஆற்றங்கரையில் மேய்ப்பதற்காகக் கொண்டு போனான்.. நான் ஆற்றில் தவறி
விழுந்து விட்டேன்.. ஆல்பெர்ட் கவனிக்கவில்லை..”
“ முதலில் மூழ்கி எழுந்தபோது ஒரு உழக்கு
கிடைத்தது.. இரண்டாவது தடவை மூழ்கி எழுந்த போது ஒரு தொரட்டி கிடைத்தது. மூன்றாவது
தடவை மூழ்கி எழுந்த போது ஒரு கொட்டு கிடைத்தது. நான்காவது தடவை மூழ்கி எழுந்தபோது
ஒரு நீர்க்கோழி கிடைத்தது.
அப்படியே ஆற்றின் அக்கரைக்குப் போய்
விட்டேன். இதை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் ஒரு குகைக்குள் போய் விட்டேன்.
குளிரைப் போக்குவதற்காக தீ மூட்டிக் காய்ந்து கொண்டிருக்கும் போது வெளியிலிருந்து
ஒரு சத்தம்.
“ உள்ளே யாரு? “
“ அப்புறம் ? “ என்று நாய்க்குட்டி
கேட்டது.
“ யார் வெளியே? ” என்று நானும் கேட்டேன்.
அப்போது சிங்கம் வெளியிலிருந்து
முழங்கியது,
“ நான் சிங்கராஜா..”
நான் சொன்னேன்,
“ அப்படியா.. நான் சூசனா ராணி..”
“ எங்கே உன்னுடைய கையைக் காட்டு..” என்று
சிங்கம் வெளியிலிருந்து கேட்டது. நான் தொரட்டியை நீட்டினேன்.
“ உன் வயிறைக் காட்டு..”என்ரது சிங்கம். நான் கொட்டை வெளியில்
காட்டினேன்.
“ உன் குரலைக் கேட்கட்டும்..” என்றது
சிங்கம். நான் நீர்க்கோழியின் கழுத்தைப் பிடித்து இறுக்கினேன்.
அது “ க்வா க்வா க்வா க்வா..” என்று
அலறியது.
சிங்கம் பயந்து ஒரே ஓட்டமாய் ஓடி
விட்டது. நான் அந்த நேரத்தில் ஆற்றின் இக்கரைக்கு நீந்தி வந்தேன். மூச்சிரைத்துக்
கொண்ட சூசனாவை சின்னு கட்டிப்பிடித்தாள். நாய்க்குட்டி சின்னுவைக் கட்டிப்பிடித்தது.
நாய்க்குட்டியை பூனைக்குட்டி கட்டிப்பிடித்தது.
பிறகு எல்லாரும் வட்டமாக நின்று ரிங்கா
ரிங்கா ரோசஸ் பாடி விளையாடினார்கள்.
ஒரு நாள் உச்சிவேளையில் சின்னுவும்,
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் மண்ணைக் குழைத்து அப்பம் சுட்டு விளையாடிக்
கொண்டிருந்தனர். அப்போது கசுமலா காக்கா ஆலமரத்தின் கிளையில் வந்து உட்கார்ந்து,
“ கா கா கா கா கா கா..” என்று கரைந்தது..
கதைப்பாட்டி காக்கா கவலையோடு
கரைவதைக் கவனித்தார். கதைப்பாட்டி எழுந்து எழுந்து சென்று,
“ என்ன கசுமலா.. உனக்கு என்ன கவலை? “
என்று கேட்டார். காக்காவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதைப்
பார்த்த நாய்க்குட்டியும், சின்னுவும், பூனைக்குட்டியும் விளையாட்டை
நிறுத்திவிட்டு கதைப்பாட்டியின் அருகில் சென்றார்கள்.
கசுமலா காக்கா தாழப்பறந்தபடியே,
“ கா கா கா கா கா “ என்று கூப்பாடு போட்டபடி கதைப்பாட்டியைச் சுற்றிச்
சுற்றி சிறகுகளடித்து பறந்தது.
கதைப்பாட்டிக்கு பறவைகள் விலங்குகள்
பேசுகிற மொழி தெரியும். நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் சின்னுவும் ஒரே
குரலில்,
“ ஏன் காக்கா இப்படி கரையுது
கதைப்பாட்டி..” என்று கேட்டார்கள்.
“ கசுமலா காக்காவின் முட்டைகளை ஒரு
நல்லபாம்பு முட்டைகளைத் தின்று விட்டுப் போய் விட்டதாம்..”
“ அட..பாவமே! “ என்று சின்னு சொன்னாள்.
“ ஐய்யய்யோ..” என்று நாய்க்குட்டியும்
சொன்னது.
அப்போது கதைப்பாட்டி கசுமலா காக்காவிடம்
சொன்னார்,
“ நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன்..
அமைதியாக இரு..” என்று சொல்லி விட்டு சின்னுவின் கழுத்திலிருந்து
தங்கச்சங்கிலியைக் கழற்றி பாம்பின் புற்றில் போடுமாறு கதைப்பாட்டி கசுமலா
காக்காவிடம் சொன்னாள்.
கசுமலா காக்கா அதைச் செய்தது.
சின்னுவிடம் வீட்டுக்கு ஓடிப்போய் விவரம் சொல்லச் சொன்னார் கதைப்பாட்டி.
தங்கச்சங்கிலியைக் கழற்றி விளையாடும்போது காக்கா கொத்திக் கொண்டு போய் விட்டது
என்று சின்னுவும் வீட்டில் சொன்னாள்.
தங்கச்சங்கிலியைத் தேடி வந்த சின்னுவின்
வீட்டுக்காரர்கள் அந்த நல்லபாம்பை அடித்துக் கொன்று விட்டார்கள்.
கசுமலா காக்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
பறந்து வந்து கதைப்பாட்டியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.
இப்போதும் கதைப்பாட்டியின் கன்னத்தில்
ஒரு கரும்புள்ளி இருக்கிறது... பாருங்கள்!
சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி
விளையாடும் இடத்திற்கு வந்து சும்மா விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது நீலகண்டன்
நரிக்கு வழக்கமாகி விட்டது.. மெஹெர்பா கோழி பற்றிய எண்ணம் எப்போதும் மனதில் உண்டு.
அவளைக் கொன்று சாப்பிட எப்போது வாய்ப்பு கிடைக்கும்? அதுதான் கவலை.
அப்படியே கல்யாணிப்பசு அசைபோட்டுக்
கொண்டு படுத்திருந்த இடத்திற்கு வந்து சென்று கல்யாணியுடன் நட்பாகி விட்டது.. எல்லா பழைய கதைகளையும் சொல்லும்.. கல்யாணிப்பசு
புல் சாப்பிட எங்கு சென்றாலும், அது நரியைத் தன் முதுகில் சுமந்து செல்லும்.
அதைப் பார்த்த கதைப்பாட்டி சொன்னாள்:
" கல்யாணி வேண்டாம்.. அது ஒரு குள்ளநரி,
அது ஏமாற்றிவிடும்..."
கல்யாணப் பசுவின் காதில் குள்ளநரி
சொன்னது.
" கதைப்பாட்டிக்கு வயதாகி
விட்டதல்லவா.. அதனால் அதையும் இதையும் சொல்லும்..”
கல்யாணிப்பசுவும் அப்படி நினைத்தாள்,
ஒருவேளை நீலகண்டன் நரி சொல்வது சரியாக இருக்கலாம். குள்ளநரி ஒரு சாது என்று
நினைத்தாள்.
அப்படி ஒரு நாள் அவர்கள் இருவரும்
ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். கல்யாணிப்பசு புல்லைச் சாப்பிட ஆரம்பித்தது. குள்ளநரி
ஒரு காட்டுக் கோழியைக் கொன்று சாப்பிட்டது. நரிக்கு வயிறு நிரம்பி விட்டது.. உடனே குள்ளநரி
திரும்பிப் போகலாம் என்று ரகளை செய்தது.. புல் சாப்பிட்டுக் கொண்டிருந்த்
கல்யாணிக்கு பாதி வயிறு கூட நிரம்பவில்லை.. நரிக்கு கோபம் வந்தது.
இந்தப் பசுவின் அகங்காரத்தை இன்றுடன்
முடிவுக்குக் செய்ய வேண்டும்..
குள்ளநரி சொன்னது.
" எனக்கு சாப்பிட்ட பிறகு ஊளையிடணும்..."
கல்யாணிப்பசு பயந்து விட்டது.-
"ஐயோ, வேண்டாம், குள்ளநரி,"
கல்யாணிப்பசு பணிவுடன் கெஞ்சினாள் –
" ஊளையிட்டால், சிங்கம்
வரும், இல்லையா? ஒரே அடியில் என்னைக் கொன்று உடனே சாப்பிட்டு விடுமே?"
குள்ளநரி, அதைக் கேட்காதது போல நடித்தது.
பிறகு பெரும் ஊளையிட்டது.. உடனே, காடதிர சிங்கத்தின் கர்ஜனை கேட்டது., நரியைத்
தூக்கிக்கொண்டு பசு, ஆற்றில் நீந்தத் தொடங்கியது. இருப்பினும், நரி செய்த சதியை
நினைத்து கல்யாணிப்பசுவுக்குக் கோபம் வந்தது.
ஆற்றின் முக்கால்வாசி தூரம் நீந்திச் சென்றதும்,
பசு,
"எனக்குக் குளிக்க வேண்டும் போலிருக்கிறது,
உன் உடல் முழுவதும் காட்டுக் கோழியின் நாற்றம் வீசுகிறது" என்றது.
நரி பயத்தில் கத்தியது.
" ஐயோ, பசுத்தாயே, நான் மூழ்கிச் செத்துப்
போய் விடுவேனே..”
கல்யாணிப்பசு அதைக் கேட்காதது போல,
வசதியாக ஆற்றில் முங்கி எழுந்தது. நரி ஆற்றில் விழுந்து நிறைய தண்ணீரைக்
குடித்தது. கடைசியில், கதைப்பாட்டி சின்னுவும்
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சேர்ந்து வீசிய கயிற்றைக் கடித்துக் கொண்டு
கரைக்கு வந்து சேர்ந்தது.
கரைக்கு
ஏறிய நரிக்கு கதைப்பாட்டி கம்பினால் ஒரு அடி கொடுத்தார். பூனைக்குட்டி அதன் வாலைக் கடித்தது. நரி
காட்டுக்குள் ஒரே ஓட்டம் ஓடியது. அதைப் பார்த்து, மெஹெர்பா கோழி
ஒரு நாள், சின்னு ஒரு அழகான, வண்ணமயமான
சட்டையில் ஓடி வந்தாள். விளையாடத் தயாராக இருந்த நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும்
பார்த்து சின்னு,
"அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு மண்ணில்
விளையாடக் கூடாதுன்னு சொன்னாங்க"
என்றாள். நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும்
அதிர்ச்சியடைந்தன. இருவரும் ஒரே குரலில்
" ஏன் அப்படி?" என்று கேட்டனர்.
"நான் கல்யாணவீட்டுக்குப் போகணும். அதுதான்
நல்ல உடை உடுத்திட்டு வந்தேன்"
என்றாள் சின்னு.
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சின்னுவைச் சுற்றி நடந்து அவளுடைய
ஆடைகளைப் பரிசோதித்தன. அது சரி தான். சிவப்பு பூக்கள் கொண்ட வெள்ளை உடை. அழகான உடை.. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
நாய்க்குட்டிக்கும் பூனைக்குட்டிக்கும் உடைகள் இல்லை. அப்போது
மெஹெர்பாகோழி வந்து சொன்னது.
"வீட்டுக்குப் போ, சின்னு. நீ இவர்களோட விளையாடுனா
அழுக்காகிடுவ."
சின்னு சோகமாக அங்கேயே நின்றாள். கதைப்பாட்டியும் சொன்னார்.
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் இரண்டு கால்களில் எழுந்து நின்று,
" நாங்களும் கல்யாணத்துக்கு வருவோம் " என்றன..
"ஐயோடா!" என்று கசுமலா காக்கா ஏளனம் செய்தது..
புல்லைத் தின்றுகொண்டிருந்த கல்யாணிப்பசு கூட அதைக் கேட்டுச் சிரித்தது.
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சோகமாக இருந்தன.
"சின்னு திருமணத்திற்கு எங்களை
ஏன் அழைத்துச் செல்லவில்லை, கதைப்பாட்டி?"
என்று அவை கேட்டன.
"நம் அனைவருக்கும் இருப்பதற்கும்
வாழ்வதற்கும் ஒவ்வொரு இடங்கள் உள்ளன அங்கேயே இருப்பது நல்லது." என்று
கதைப்பாட்டி சொன்னார். அதைக் கேட்ட, நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் அப்படியே
நின்று விட்டன.
" விலங்குகளுக்குக் காடும், மனிதர்களுக்கு, நாடும் இருக்கின்றன "
என்றார் கதைப்பாட்டி.
"நான் கல்யாணத்துக்குப் போகணும்"
என்று நாய்க்குட்டி பிடிவாதம் பிடித்தது. அப்போது, பிரகாசமான வெயிலில், மழை பெய்யத்
தொடங்கியது. கதைப்பாட்டி அதை நாய்க்குட்டிக்குக் காட்டி,
"பார், இது நரிக்குக் கலியாணம் நடக்குது.. அது தான், மழையும் வெயிலும்
சேர்ந்து வருது நீங்க எல்லாரும், நீலகண்டன் நரியோட கல்யாணத்துக்குப் போங்க."
என்று கதைப்பாட்டி சமாதானப்படுத்தினார்
"ஐயோ, நான் மாட்டேன்!" என்று கூறிவிட்டு மெஹெர்பா ஓரே ஓட்டம்........!
குழந்தைமை என்பதே மனிதனோ விலங்குகளோ
பறவைகளோ மூளையின் செயல்பாடுகளான அறிவும் மனமும் உருப்பெரும்போது நிகழும் அற்புதங்கள்.
அனுபவங்களின் வழியே கிடைக்கும் உணர்வுகள் திரண்டு அறிவாக மாறுகிறது. ஆனால் உணர்வுகளின்
வெளிப்பாடென்பது வெகுளித்தனமாகவும், கவித்துவமாகவும் அபத்தமாகவும் அர்த்தமில்லாததாகவும்
தர்க்கமில்லாதாதாகவும் முக்கியத்துவமில்லாததாகவும் இருக்கும் நிலையையே நாம் குழந்தைமை
என்கிறோம். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடும்
தீவிர ஒருமை நிலையில் தான் குழந்தைமை தன்னை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிலையில்
குழந்தைகளின் சொல்லும் நடவடிக்கைகளும் கணநேரத்தரிசனங்களைத் தரும். அவற்றைப் பார்ப்பதற்கோ
உணர்வதற்கோ அறிவதற்கோ நேரமில்லாத பெரியவர்கள் அலட்சியப்படுத்திக் கடந்து போய்விடுவார்கள்.
கவிஞர்களும், எழுத்தாளர்களுமே அந்தக் கணநேரத்தரிசனங்களைக் கவிதைகளாக, கதைகளாக மாற்றுகிறார்கள்.
அப்படி கணநேரத்தரிசனங்களின் தொகுப்பு தான் கவிஞர். சலோனியா லியோ கமலத்தின் கவிதைகள்.
பொதுவாக சிறார் இலக்கியத்தை மூன்று
வகைமைகளாகப் பிரிக்கலாம். குழந்தைகளே எழுதுகிற குழந்தைப்படைப்புகள், குழந்தைகளுக்காகப்
பெரியவர்கள் எழுதுகிற படைப்புகள், குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு எழுதுகிற
படைப்புகள் என்று சொல்லலாம். இதில் மூன்றாவது வகையான குழந்தைகளை மையமாக வைத்து பெரியவர்களுக்கு
எழுதுகிற இலக்கியப்படைப்புகளை கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, என்று
தொடங்கி தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் வரை நீளும். இதில் குழந்தைகளை
மையப்படுத்தி நவீன கவிதைகளை எழுதுபவர்களாக, பழ.புகழேந்தி, முகுந்த்நாகராஜன், அ.வெண்ணிலா,
ந.பெரியசாமி, ஆகியோரை முக்கியமானவர்களாகச் சொல்ல முடியும். அந்த வரிசையில் இந்தச் சிறப்பான
கவிதைத்தொகுப்பின் மூலமாக சலோனியா லியோ கமலமும் இணைகிறார்.
குழந்தைகள் எதையும் திட்டமிடுவதில்லை.
ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பதில்லை. பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. இருப்பதை ஏற்றுக்
கொள்கிறார்கள். இருப்பதில் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். அதில் சமாதானமடைகிறார்கள்.
வெற்றிடங்களை வேறொன்றால் நிரப்புகிறார்கள். அந்தக் குழந்தையின் மனதை கவிஞர் துல்லியமாக
வரைகிறார்.
கங்காரு படம் வரைந்த
அனாதைக் குழந்தை ஒன்று
கங்காருவின் பையில்
தனது உருவத்தை வரைந்து
மகிழ்கிறது.
தாய்மைக்கான ஏக்கத்தை குழந்தையின்
வரைதலின் மூலம் நிரப்பிக்கொள்கிறது. பெரியவர்கள் எதையும் பயன் நோக்கில் தான் அணுகுகிறார்கள்.
ஆனால் குழந்தைகள் வெகுளியாய் எல்லாவற்றின் மீதும் அன்பாய் இருக்கிறார்கள்.
‘ ச்சீ போ ‘ என நான் துரத்திவிடும்
காக்கையிடம்
காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு
வா எனச்
சொல்லி அனுப்புகிறது குழந்தை.
அனைத்தையும் அழகாகப்பார்க்கும்
குழந்தைகளிடம் பெரியவர்கள் தானே பேதங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம்.
குழந்தைகளின் விரல்களால்
வரையப்படும்போது
பூக்கூடையும் மீன்கூடையும்
ஒரே மணத்தைப் பெற்று விடுகிறது.
குழந்தைகளின் விளையாட்டில் பொம்மைகளும்
ஒன்று தான் சோப்பும் ஒன்று தான். பொம்மைகளைக் குளிப்பாட்டுவதைப் போலச் சோப்பையும் குளிப்பாட்டுகிறார்கள்.
சோப்பு கரையக் கரைய அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால்
மட்டுமே இத்தகைய அவதானிப்புகளைக் கண்டடைய முடியும்.
குளியல் சோப்புகளைக்
குளிப்பாட்டி
குளிப்பாட்டி
மகிழ்ச்சியில்
கரைந்து போகின்றன
குழந்தைகள்.
எப்போதுமே குழந்தைகள் மகிழ்ச்சியாக
இருப்பதற்குக் காரணம் இல்லாமையை அவர்கள் வார்த்தைகளால், செயல்களால், பாவனைகளால் மாற்றி
இருப்பதாக நினைக்கிறார்கள். தன்னிடம் இல்லையென்றாலும் மற்றவர்களிடம் இருப்பதை நினைத்து
திருப்தியடைகிறார்கள்.
குருவிக்கூட்டை
குருவி வீடு என்றும்
எலிப்பொந்தை
எலி வீடு என்றும்
சிங்கக்குகையை
சிங்கவீடு என்றும்
எறும்புப்புற்றை
எறும்பு வீடு என்றும்
சொல்லி மகிழ்கின்றன
தெருவோரம் படுத்துறங்கும்
திக்கற்ற குழந்தைகள்.
இந்த உலகினைப் படைக்கும் வல்லமை
மிக்கதாய் கடவுளைக் கற்பனை செய்த மனிதன் இத்தனை கடவுள்களையும் மதங்களையும் படைத்திருக்கிறான்.
ஆனால் குழந்தை என்ன நினைக்கிறது தெரியுமா?
அம்மாவின் இடுப்பில்
இருக்கும் குழந்தை
பல்லக்கில் வலம் வரும்
தெய்வங்களைப்
பெரிது படுத்துவதே
இல்லை.
உண்மையான தெய்வம் அருகில் இருக்கும்போது
எதற்காக பொம்மைகளை வணங்க வேண்டும்?
வெறுப்பு, பகை, விரோதம், குரோதம்,
மனமாச்சரியங்களைப் போற்றிப்பாதுகாப்பது பெரியவர்கள் மட்டுமே. குழந்தைகள் ஒரே கணத்தில்
வெறுப்பின் இடத்தில் அன்பை கொண்டு வந்து வைப்பார்கள். பகையை நேசமாக மாற்றி விடுவார்கள்.
காய் விடும்போதே பழத்துக்கான விரல்களையும் சேர்த்தே வைத்திருப்பார்கள்.
பேய்களின் கொம்புகளை
எரேசர் கொண்டு
அழித்து விட்டு
பென்சில்களால்
இறக்கைகள் வரைந்து
பேய்களை
தேவதைகளாக்கி விடுகின்றன
குழந்தைகள்
மிகச்சுலபமாக.
என்று எழுதும் கவிஞரின் மனது குழந்தையின்
மனது தானே. அதனால் இத்தனை அழகாகக் கவிதைகளை எழுத முடிகிறது.
குழந்தையைத் தூங்க வைத்து விட்டு
எப்போதும்போல்
விழித்திருக்கிரது நிலவு
இயற்கையும் கூட தாய்மையின் குணங்களைக்
கொண்டிருப்பதாக அதுவும் குழந்தைகளின் பார்வையில் சொல்லும் போது கூடுதல் அழகு பெறுகிறது.
இப்படி அனிச்சம் தொகுப்பு முழுவதும்
புதிய தரிசனங்கள், கண்டடைதல்கள் உணர்வுகள், காட்சிகள், படிமங்கள் நிறைந்திருக்கின்றன.
சின்னஞ்சிறு குழந்தைகளைப் போல சின்னஞ்சிறு கவிதைகள் குழந்தைகளைப் பற்றிய நம்முடைய புரிதல்களை
மேன்மையுறச் செய்கின்றன.
இன்னும் நிறைய எழுதுங்கள்.
குழந்தைகளின்
மெசையாவாக இந்த உலகத்துக்கு நிறையச் சொல்லுங்கள்
சிறார் இலக்கியம் இலக்கிய வானில் சிறகுகள்
விரித்து பறக்கத் தொடங்கியிருக்கிற காலமிது. இதுவரை சொல்லப்பட கதைகளையே மறுபிரதியோ,
மலிவான பிரதியோ எடுத்து இதுதான் சிறார் இலக்கியம் என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்த
காலத்தில் புதிய காற்றென பல எழுத்தாளர்கள் புதிய கதைகளை எழுத வந்தார்கள். அவர்களில்
மிகவும் குறிப்பிடத்தக்க கதைகளுக்குச் சொந்தக்காரர் ஞா.கலையரசி. தன்னுடைய தனித்துவமான
கதைகளால் சிறார்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர்.
அவருடைய சூரியனைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள
கதை சமகாலச் சூழலியலைப் பேசுகின்றன. பழங்காலக் கதையை சமகாலத்துக்கேற்ப மறுவாசிப்பு
செய்து அவசியமான வழிகாட்டுதலைச் செய்கின்றன. எது அழகு? எது உயர்வு? என்பதைக் குறித்து
விவாதிக்கின்றன. உருவத்தில் சிறியதாயினும் செய்யும் காரியத்தில் பெரியதாவதைக் குறித்துப்
பேசுகின்றன. தனக்குக் கிடைத்த சிறப்பை மற்றவர்களுக்கும் பகிர்வதைப் பற்றிப் பேசுகின்றன.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதீதபுனைவையும் சமகால அறிவியலையும்இணைத்துப் பேசுகின்றன. கானுயிர் நலன் குறித்து,
வலசை வரும் பறவைகளின் சரணாலயம் அழிவதைக் குறித்துப் பேசுகின்றன.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் வானவில்லின்
வண்ணங்களைப் போல குழந்தைகளின் மனதில் பல உணர்வுகளைத் தூண்டும். அவை ஆனந்தம் தரும்.
அறிவூட்டும். ஆற்றுப்படுத்தும். நம்பிக்கையளிக்கும். குதூகலப்படுத்தும்.
மனிதகுலத்திற்கு குழந்தைகளின் மகிழ்ச்சியைத்
தவிர வேறு என்ன வேண்டும்?
இந்தக் கதைகள் குழந்தைகளிடம் மகிழ்ச்சியை
நிச்சயம் ஏற்படுத்துமென்று சொல்லி முடிக்கலாம்.